இயற்கை மதம்

ஆசிரியர்: அல்குர்ஆனின் முதல் தமிழ் மொழிபெயர்ப்பாளர், அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) (1876 - 1955), வெளியிடு : தாருல் ஹுதா

உள்ளே:

பதிப்புரை.
மதிப்புரைகள்.
ஹிஃபாஜத்துல் இஸ்லாம்.
ஸைஃபுல் இஸ்லாம்.
சுதேசமித்திரன்.
திருவாளர் ஈ.வெ.ரா. பெரியார்.
ஜுட்டி, எம். கிருஷ்ணமாச்சாரி.
முன்னுரை.
இயற்கை மதம்.
இயற்கை மதமும் அது ஏற்பட்ட காலமும்.
அல்குர்ஆன் போதிப்பவற்றின் தன்மைகள்.
அல்குர்ஆன் போதிப்பவையும், அவற்றால் ஏற்பட்ட நன்மைகளும்.
மெய்யான சமத்துவமும் சகோதரத்துவமும்.
பெண்களுக்குச் சுதந்தரமளித்தல்.
ஹிந்துப் பெண்களும் மெய்யான உரிமைகளும்.
ஹிந்துப் பெண்களின் விடுதலைக்குள்ள இடையூறுகள்.
ஹிந்துப் பெண்களின் கோரிக்கைகளில் உள்ள குறைகள்.
அதிகமாகக் கோருவது.
குறைவான கோரிக்கை.
தீங்கிழைக்கும் கோரிக்கை- விவாகரத்துக் கோருதல்.
ஃபஸ்கு - பெண்கள் விவாகரத்து செய்யும் முறை.
தலாக் - ஆண்கள் விவாகரத்து செய்யும் முறை.
பலதார மணம்.
மேனாட்டுப் பெண்கள்.
மதுபானம், விபசாரம், சூதாட்டம்.
பொருள்.
வட்டி.
ஸோவியத்.
பொது உடைமைக் கொள்கை.
ஜகாத் - பொருள் வரி.
நில வரி.
நாத்திகம்.
படைப்பாளன்.
நாத்திகர் கூற்று.
மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை.
வேதங்கள்.
அழியாத வேதம் அல்குர்ஆன்.
அல்குர்ஆனின் சட்டங்கள்.
அரசியல்.
அல்குர்ஆனால் ஏற்பட்ட நன்மைகள்.
விபசாரம்.


பதிப்புரை

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனே மனிதனைப் படைத்து அவனுக்குத் தெளிவான வழியைக் காண்பித்தான். அதை ஏற்று நடந்தவர் வெற்றி அடைந்தார். அதைப் புறக்கணித்தவர் தனக்குத் தானே நஷ்டம் விளைவித்துக் கொண்டார். அவன் அனுப்பிய இறுதித் தூதர் முஹம்மது அவர்களுக்கு இறையருளும் ஈடேற்றமும் உண்டா கட்டும்! அவர்கள் மக்களை சத்தியத்தின் பக்கம் அழைத்தார்கள். உண்மையை உரைத்தார்கள். இறைவனின் மார்க்கத்தை ஒளிவு மறைவின்றி, பாரபட்சமின்றி, பாகுபாடின்றி, விருப்பு வெறுப்பின்றி அனைவருக்கும் போதித்தார்கள். அவர்களை ஏற்றவர்கள் ஏற்றம் கண்டனர். அவர்களை ஏற்க மறுத்தவர்கள் பெரும் நஷ்டமடைந்தனர்.

எனது தந்தைவழி முப்பாட்டனார் எழுதிய இது, ஒப்புநோக்கு பார்வை கொண்ட ஓர் ஆழமான ஆய்வு நூல்.

''மார்க்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டும் மக்களை இஸ்லாமின் பக்கம் அழைக்க வேண்டும் இறை மார்க்கத்தின் இனிய கொள்கை கோட்பாடுகளை உலக மக்கள் ஒவ்வொருவரிடமும் சேர்க்க வேண்டும்'' என்ற ஆர்வமும் ஆசையும் பாகவி அவர்களது உள்ளத்தில் எவ்வளவு அதிகம் இருந்தன என்பதற்கு இந்நூல் நல்ல சான்றாகும். அல்லாஹ், அன்னாரின் ஆசையை நிறைவேற்றுவானாக! அவர்கள் அவனது மார்க்கத்திற்கும் வேதத்திற்கும் செய்த சேவைகளை ஏற்றருள்வானாக!

இன்று வெளிவருகின்ற இஸ்லாமிய நூற்களைக் குறிப்பாக, இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, இஸ்லாமின் ஆன்மிக நம்பிக்கை சார்ந்த அடிப்படை நூற்கள். மற்றொன்று, இஸ்லாம் போதிக்கும் அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் போன்றவற்றை விமர்சிப்பவர்களுக்குப் பதிலளிக்கும் நூற்கள்.

ஏறத்தாழ, 75 ஆண்டுகளுக்கு முன்பே அல்லாமா பாகவி அவர்களால் எழுதி, வெளியிடப்பட்ட இந்நூல் இரண்டு வகைகளையும் உள்ளடக்கியதாகும். இஸ்லாம் முன்வைக்கும் ஆன்மிக நம்பிக்கை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எப்படிப்பட்ட விடுதலை அளிக்கிறது என ஆரம்பித்து, பெண்களின் உரிமை குறித்து இன்றைய சீர்திருத்தவாதிகள் விரும்புகிற புரட்சிகளை இஸ்லாம் எப்போதோ செய்துவிட்டது என விவரித்து, தலாக் (விவாகரத்து), பலதார மணம், சொத்துப் பங்கீட்டில் பாரபட்சம் போன்ற விமர்சனங்களுக்கு பதிலளித்து, பொதுவுடைமைக் கொள்கையால் உலகம் எதிர் நோக்கியிருக்கும் ஆபத்துகளையும் இஸ்லாமின் பொருளாதாரக் கொள்கையால் உலகம் அடைந்த நன்மைகளையும் தெளிவாக விவரித்து....

இணை வைத்தல், நாத்திகம், மறுமையை மறுத்தல் போன்றவற்றின் விளைவுகளையும் கூறி, வேதங்கள் என்றால் என்ன, குர்ஆன் என்பது என்ன, குர்ஆன் உண்மை வேதம் என்பதற்கு என்ன சான்றுகள் - என அனைத்திற்கும் விடை அளித்து, நோன்பு ஏன் நோற்கிறோம் என்பதையும் விளக்கியபடி முடிவுறுகிறது. நூலைப் படித்தவுடன் அதன் நடையில் இருக்கும் உயிரோட்டத்தையும், தடங்கலின்றி செய்திகளைச் சொல்லும் நயத்தையும் உணர்வுப்பூர்வமாக அறிவீர்கள்.

உறுதியாக, இந்நூல் முன்வைக்கிற மகத்தான செய்தியை, சுருக்கமாக இப்படிக் குறிப்பிடலாம்: இறைவனின் மார்க்கமான இஸ்லாமின் வாழ்க்கை நெறி, பின்பற்றுவதற்கு இலகுவானது சாத்தியமானது எந்தவித குறைகளோ குற்றங்களோ இல்லாதது இயற்கைக்கு உகந்த முறையில், அறிவார்ந்த சீர்திருத்தங்களுக்கு எல்லாம் முன்னோடியாக, எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானது. எனவே, இஸ்லாம் ஓர் இயற்கை மதமே!

இறுதியாக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்: அல்லாஹ்வே! உன் அன்பை, அருளை எங்களுக்கு வழங்கு! உன் மார்க்கத்திற்குச் சேவை செய்வதையே எங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக்கிவிடு! எங்கள் வாழ்க்கையில் உன் மார்க்கத்தை முழுமையாகப் பின்பற்ற வழி செய்! இந்நூலை உனது அடியார்களுக்கு நற்பலன் தரக்கூடியதாக ஆக்கியருள்! எங்கள் பணியை ஏற்றுக்கொள்!

நீயே பதிலளிப்பவன்! வாரி வழங்கும் மகா கொடையாளன்! உனக்கே எல்லாப் புகழும்! உனது தூதர் முஹம்மது அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும், உனக்கு வழிபடும் அனைவருக்கும் ஈடேற்றத்தையும் அருள் வளங்களையும் வாரி வழங்கிடு! ஆமீன்!

அ. உமர் ஷரீஃப், பணியாளர்கள்,
தாருல் ஹுதா
ஷவ்வால் 1, ஹிஜ்ரி 1425


மதிப்புரைகள்

ஹிஃபாஜத்துல் இஸ்லாம் (அக்டோபர் 1930):

இயற்கை மதம் என்னும் இந்த உயரிய நூல் மவ்லவி, ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களால் எழுதப்பட்டது. இந்த உயரிய ஆசிரியரை இத்தமிழகமும், சிறப்பாக முஸ்லிம் சமூகம் அனைத்தும் நன்கு அறியும் என்பதால் இவரது சிறப்பும் எழுத்து வன்மையும் பாராட்டுக்குரியன என்று கூறுவது மிகையாகாது.

நிற்க! இந்நூல் இஸ்லாமின் உறுதியான உண்மைகளைப் பற்றி ஆழ்ந்த கருத்துகளோடு சுருங்கக் கூறுகின்றது. ஏனைய மதங்கள் எல்லாம் இயற்கைக்கு முரண்பட்டதாக இருக்க, இஸ்லாம் ஒன்றே இயற்கையுடன் இணைந்து நிற்கின்றது என்னும் நிதர்சன உண்மையினை இந்நூல் கற்பிக்கின்றது. இஸ்லாமில் வேற்றுமையில்லை கள்ளமில்லை வஞ்சகமில்லை ஏமாற்றுதல் இல்லை தரகரில்லை தாழ்ந்தோரில்லை என்பதையும்,சத்தியம் நீதம் சகோதரத்துவம் பெருந்தன்மை; கண்ணியம் ஒழுக்கம் அன்பு; இறை அச்சம் ஞானம் முதலிய அனைத்தும் உள்ளன என்றும் தெளிவுபடுத்துகிறது. முஸ்லிம்களை இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதிப்படுத்தி, மாற்று மதத்தினரை இஸ்லாமை ஏற்கும்படி தூண்டுகிறது.

எனவே, இந்நூலின் அருமை பெருமையினை முழுமையாக எடுத்துரைக்க முடியாது. இந்நூலின் பொருட்டால் இத்தமிழ் உலகமும் இஸ்லாமிய உலகமும் மௌலவி அவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளது என்றுகூறுவது ஏற்றமானதே!

ஸைஃபுல் இஸ்லாம் (20.9.1930):

இயற்கை மதம் என்ற இந்த ஆராய்ச்சி நூல், தர்ஜமதுல் குர்ஆன் பி அல்தஃபில் பயானின் ஆசிரியர்,மவ்லவி ஆ. கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களால் எழுதப்பட்டது. இதில் உலகிலுள்ள மனித வர்க்கத்தினர்களில் நாடாளுபவர்கள், மத போதகர்கள் முதலியோர் தற்கால நாகரீகத்தையும் மனித வர்க்கத்தினரின் நன்மையையும் முன்னேற்றத்தையும் கருதி அவர்கள் விரும்பும் சீர்திருத்தங்கள் அனைத்தும் நமது பரிசுத்தக் குர்ஆன் என்னும் வேதத்தில் அமைந்திருக்கின்றன என்பதை தெளிவாகவிளக்கப்பட்டுள்ளது.

இந்நூலில் தீண்டாமை, மது அருந்துதல், விபசாரம் முதலிய தீயசெயல்களை இஸ்லாம் மார்க்கத்தினால் மட்டுமே ஒழிக்க முடியும் என்பதை அறிவுக்கும் நடைமுறைக்கும் ஏற்றவாறு விளக்கி போதிக்கப் பட்டிருக்கின்றது.

இந்நூல், தமிழ் தெரிந்த ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் படித்துணருவது தற்கால நிலைமைக்கு மிக்க அவசியம் என நாம் அபிப்பிராயப்படுகின்றோம்.

சுதேசமித்திரன் (தினப்பதிப்பு 30.9.1930):

இயற்கை மதம் - இதன் ஆசிரியர் மவ்லானா மவ்லவி ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி என்பார்.

இப்புத்தகத்தில் ஆசிரியர், மனிதன் விரும்பக்கூடிய சமூக முன்னேற்றமெல்லாம் அல்குர்ஆனில் முன்கூட்டியே கூறப்பட்டிருப்ப தாகவும், இந்தளவு விளக்கங்கள் வேறு மதங்களில் இல்லையென்றும் தெளிவான தமிழில் எழுதியிருக்கிறார்.

இக்காலத்தில் பல்வேறு நாடுகளில் இருந்துவரும் பழக்க வழக்கங்கள் எல்லாம் தெரிந்தே இது எழுதப்பட்டிருக்கிறது.

திருவாளர் ஈ.வெ. ரா. பெரியார் (குடி அரசு 26.10.1930):

எமது பார்வைக்கு அனுப்பப்பட்ட ‘இயற்கை மதம்’ என்ற இந்நூல் ஆசிரியர், மவ்லானா மவ்லவி, ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களால் எழுதப்பட்டது.

இப்புத்தகம், ‘இயற்கை மதம்’ என்னும் அதன் பெயருக்கேற்ப, இஸ்லாமிய மதக் கொள்கைகள் இயற்கைத் தன்மைக்கு முற்றிலும் பொருந்தியவை என்பதை அதன் ஆசிரியர் அதில் தெளிவுபட விளக்கிக் காட்டியிருப்பதுடன், இஸ்லாமிய மதச்சட்டங்கள் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் பொருத்தமானவை, அனுபவ சாத்தியமானவை, எந்நாட்டிலும் உள்ளவர்கள் எளிதில் அனுசரிக்கக் கூடியவை என்பதாகவும் விளக்கிக் காட்டுகின்றார். தவிர, தற்காலமுள்ள தீவிர சீர்திருத்தவாதிகள் விரும்பும் சீர்திருத்தங்கள் அனைத்தும் இஸ்லாம் மதத்தில் ஏற்கனவே இடம் பெற்றுள்ளதாகவும் எடுத்து காட்டுகின்றார்.

இவையன்றி, மக்களுக்கிடையில் தீண்டாமையை ஒழித்து சமப்பந்தி விருந்தையும், கலப்புத் திருமணத்தையும் அடிப்படையாகக் கொண்ட மெய்யான சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டுபண்ணி ஆண்களுக்கு சமமான உரிமைகள் பெண்களுக்கும் அவர்களின் இயற்கைக்குத் தக்கவாறு பூரணமாக அளித்து அவர்களைப் பராமரித்தும், கள், காமம், சூது முதலிய தீய காரியங்களை மனித வர்க்கத்திலிருந்து ஒழித்து மெய்யான ஜீவகாருண்யம் (மனித நேயம்) என்னும் ஜாதிமத பேதமற்ற நீதியையும், நியாயத்தையும், கைக் கொள்வதுதான் இஸ்லாம் மதத்தின் முக்கியக் கொள்கை என்பதாகவும் எடுத்துக் காட்டுகின்றார்.

தவிர, அரசியல் விஷயத்திலோபூரண சுயேச்சைதான் இஸ்லாமின் கொள்கை என்பதையும் தெளிவுபடுத்துகின்றார். அன்றி, இவற்றை மற்ற மதங்கள் அடியோடு புறக்கணித்து விட்டதென்பதையும் ஆங்காங்கு எடுத்துக் காட்டியிருப்பதுடன், மற்ற மதங்களிலுள்ளவை தற்காலம் கைக்கொள்ளத் தகுதியற்றவை என்பதையும் தெளிவுபட விளக்கிக் காட்டுகின்றார்.

மேலும், உடன்கட்டை ஏறுவதை அரசாங்கம் தடை செய்தும் விதவை மறுமணம், பெண்களுக்கு பாகம் (சொத்துரிமை), விவாகரத்து முதலிய சுதந்தரங்கள் ஹிந்துப் பெண்களுக்கு இல்லாததினால் அவர்களின் கஷ்டங்கள் நிவர்த்தியாகவில்லை என்பதையும் எடுத்துக் காட்டி, ஹிந்து மதத்திலுள்ள இத்தகைய கொடிய சட்டத்திட்டங்கள்தான் ஹிந்துக்களை தங்கள் மதத்தைப் புறக்கணிக்கும்படி நிர்ப்பந்திக்கின்றது என்பதையும் தெளிவுபடுத்துகின்றார்.

கடைசியாக, அல்குர்ஆனின் மேன்மையைப் பற்றியும் பல உதாரணங்களைக் கொண்டு தெளிவுபடுத்துகின்றார். எனவே, ‘இயற்கை மதம்’ என்னும் இந்நூல் இந்து மக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்ற சமய வித்தியாசமின்றி அனைவரும் வாங்கி வாசித்துப் பார்க்க வேண்டியதொரு நூலாகும். நம் போன்றவர்களுக்கும், மற்றும் சில கொள்கைக்காரருக்கும் மாறான சிற்சில விஷயங்கள் அதில் காணப்பட்ட போதிலும், விஷய ஞானம் பெறவேண்டியவர்கள் அறிய வேண்டிய அநேக அரிய விஷயங்கள் இதில் இருக்கின்றன. பொருளில் பெண்களுக்கு பாகம், விவாகரத்து, பலதார மணம், மேல் நாட்டுப் பெண்களின் நிலைமை, சோவியத் கொள்கை ஏற்பட்டதன் காரணம், பொது உடைமைக் கொள்கையின் நன்மை தீமைகள், பூமிவரி முதலியவற்றைப் பற்றி இந்நூலில் கூறப்பட்டுள்ள விஷயங்களைப் பார்ப்பது ஒவ்வொரு சீர்திருத்தக்காரர்களுக்கும் மத விஷயத்திலோ, தேசிய விஷயத்திலோ அரசியல் விஷயத்திலோ தங்கள் திட்டங்களைத் தயார் செய்வதில் மிக்க பயனளிக்கும் என்றே அபிப்பிராயப் படுகின்றேன்.

மத விஷயங்களைப் பற்றி இஃதொரு ஆராய்ச்சி நூல், ஒவ்வொரு மதத்தின் தத்துவங்களையும், தத்துவ சாஸ்திரமுறைப்படி பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

ஜுட்டி, எம். கிருஷ்ணமாச்சாரி - 195, தெற்கு மாசி வீதி, மதுரை (5.10.1930):

மவ்லானா மவ்லவி, ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களால் நல்ல தமிழில், தெளிவுறு முறையில் ‘இயற்கை மதம்’ எனும் ஒரு நூல் எழுதப்பட்டு வெளியாகியிருக்கின்றது. இந்நூல், இஸ்லாம் மதத்தில் காணப்படும் சிறந்த கொள்கைகள் அனைத்தும் எவ்வாறு இயற்கைக்குப் பொருத்தமாக ஒத்துப் போகின்றன என்பதை கதை, புராணம் முதலிய பொய்யுரைகளின் துணையைச் சிறிதேனும் பெறாது பகுத்தறிவிற்குப் பொருந்தியவாறும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் செவ்விய (செம்மையான) உரைகளால் நிலை நிறுத்துவதுடன், எவருடைய சாபத்தாலோ கேடுகெட்ட முறைகளைக் கைக்கொண்டு மக்களைச் சிதைக்கின்ற ஹிந்து மதக் கொடுமைகளில் தலையாய தீண்டாமை, ஆலய வழிபாடு, விவாக விடுதலை, பெண்ணுரிமை ஆகியவற்றின் தன்மைகளையும் பணம், பதவி போன்ற பேய்களால் எங்ஙனம் தாழ்த்தப்பட்ட மக்கள் கிறிஸ்தவ மதத்தில் ஞானஸ்நானம் செய்யப்பட்ட பின்பு நடத்தப்படும் முறையையும், உலகத்திலே பெரியாரென புகழப்பட்டாரின் அஹிம்ஸா தர்மத்தின் ஒத்துவராத தன்மையையும் திறம்பட விளக்கி, சீர்திருத்தக்காரரின் தூண்டுதலால் இன்றைய தீண்டப் படாதார் விழையும் ஆலயப் பிரவேசம் எத்தகைய கெடுதல்மிக்கது என்பதையும் சுட்டிக் காண்பித்து, அதன் மர்மத்தையும் நன்கு விளக்குகின்றது.

அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்நூலை அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும், முக்கியமாக ஹிந்துக்கள், குறிப்பாகக் கூறின் தீண்டப்படாதோர் ஒவ்வொருவரும் இதனைக் கற்கவேண்டும் என்பதே எமது ஆவல். உடம்புடன் மோட்சத்திற்குப் போகவேண்டுமென்ற நினைப்புடைய வைதீக ஹிந்துக்கள் இதனைக் கற்க விழைவாராயின் உணர்ச்சியுடன் கற்று நல்ல கொள்கைகளைக் கைக்கொள்வாராக! இன்றேல் நினைப்பு கடந்து இஸ்லாமைத் தழுவுவாரென்பது உறுதி. அங்ஙனமாயின், அதையே நாமும் விழைகின்றோம். நம் ஜனாப் மவ்லானா அவர்களின் உரைநடையும் போற்றுவதற்கு உரியதே. ‘யாருமொன்றே; யாவரும் கேளிர்!


முன்னுரை

ஒவ்வொரு அந்நிய மதத்தினரும் தங்கள் தங்கள் மதங்கள்தான் மேலானதென்றும், அதுவே மனித வர்க்கத்திற்குச் சன்மார்க்கத்தை மேலான விதத்தில் போதித்து, மனித அபிவிருத்திக்குரிய நேரான வழியில் தவறாமல் செலுத்தவல்லது என்றும் இதுவரையில் கூறிக் கொண்டிருந்தனர்.

எனினும், கல்வி, அறிவு அபரிமிதமாக அபிவிருத்தியாகி வரும் இக்காலத்தில் இவ்வாறு கூறிக் கொண்டிருந்தவர்களே, தங்களுடைய மத வரம்புக்குள் வாழ்வது தற்காலத்தில் சாத்தியமல்ல என்பதை வெளிப்படையாகக் கண்டுகொண்டு தங்களுடைய மதத்தை தற்கால நிலைமைக்கும், மனித அபிவிருத்திக்கும், இயற்கைக்கும் பொருத்தமான விதத்தில் திருத்தி அமைக்க வேண்டுமென்று கூறுகின்றனர்.

இவ்வாறு கூறுகின்றவர்கள் இன்றைய தினம் அவர்கள் விரும்பு கின்ற சீர்திருத்தங்களை அடைந்துவிட்ட போதிலும் அவற்றைக் கொண்டு அவர்கள் திருப்தியடைந்துவிட முடியாது. ஏனென்றால், தற்காலத்தில் அவர்கள் கோருகின்ற சீர்திருத்தங்கள் பூர்த்தியானவை அல்ல. அவற்றிலும் பல குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆகவே, பின்னும் வேறு பல சீர்திருத்தங்களை அவர்கள் கோர வேண்டியுள்ளது.

இவ்வாறு பல சீர்திருத்தங்களைப் படிப்படியாக பின்பற்றி இவர்கள் என்றைய தினம் முற்றிலும் திருந்துகின்றார்களோ அன்றைய தினம் தங்களை முஸ்லிம்களென பெயர் கூறிக்கொள்ளாவிடிலும் இஸ்லாமிய சட்டத்திட்டங்களையே முற்றிலும் பின்பற்றி நடப்பவர்களாகக் காணலாம்.

இவ்வாறு நாம் மட்டும் கூறவில்லை. தற்காலத்தில் இவ்வுலகத்தின் பற்பல பாகங்களிலும் அரசாங்க விஷயத்திலும், தேசிய விஷயத்திலும், மத விஷயத்திலும், ஆசார அநுஷ்டான விஷயத்திலும் அதிதீவிரமாக ஏற்பட்டுவரும் மாறுதல்களை வெகு நுட்பமாக ஆழ்ந்து ஆராய்ந்து பற்பல சீர்திருத்தக்கார மேதாவிகளும் இதே கருத்தையே கூறுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறுவதன் காரணம் என்ன? மனித இயற்கைக்கும், இயற்கைப் பொருளாராய்ச்சிக்கும், தத்துவ சாஸ்திரத் திற்கும், அல்குர்ஆன் என்னும் வேதத்தில் கூறப்பட்டுள்ள தத்துவங்கள் முற்றிலும் பொருத்தமானவையாக இருப்பதுடன், அரசன் முதல் ஆண்டி வரையிலும் எக்காலத்திலும் எந்நேரத்திலும் உள்ளவர்கள் எளிதில் பின்பற்றக் கூடியவையாகவும், ஆண், பெண், ஏழை, பணக்காரன், கற்றான் கற்காதவன் என்ற எவ்வித வித்தியாசமுமின்றி மனிதர்கள் யாவருக்கும் மனித இயற்கைக்குத் தக்கவாறு சமமான உரிமைகளை நியாயமான முறையில் அளித்து, மனித அபிவிருத்திக் குரிய நேரான வழியில் மனித வர்க்கத்தைச் செலுத்தக் கூடியவையாகவும் இருப்பதே அதற்குக் காரணமாகும்.
அபரிமிதமாக கல்வி அபிவிருத்தியாகிவரும் இக்காலத்தில் உலக மக்களின் எதிர்பார்ப்பு என்ன? தலைவனென்ற ஒரு விஷயத்தைத் தவிர அரசனுக்கும் மக்களுக்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது. பிறப்பைக் கொண்டு ஒருவன் மேலென்றோ, கீழென்றோ கூறுவதும் கூடாது. நடத்தையைக் கொண்டே மனிதனின் மேன்மையை நிதானிக்க வேண்டும். இவ்வுலகிலுள்ள பொருட்களை அனுபவிக்க மனிதர்கள் அனைவருக்குமே சமமான உரிமைகள் வேண்டும்.

ஆண்களுக்குள்ள சகல உரிமைகள் பெண்களுக்கும் வேண்டும், பெண்ணை விரும்பவோ, வெறுக்கவோ, ஆணுக்கிருப்பது போலவே கணவனை விரும்பவோ, வெறுக்கவோ பெண்ணுக்கும் உரிமை வேண்டும்.

மனைவியை இழந்த கணவன் மறு திருமணம் செய்து கொள்வதைப் போல் கணவனை இழந்த மனைவிக்கும் மறு திருமணம் செய்து கொள்ளும் உரிமை வேண்டும்.
கணவன் மனைவிக்கிடையில் நிவர்த்திக்க முடியாதவாறு பிணக்கு ஏற்பட்ட சமயத்தில், இருவரும் பிரிந்து தாங்கள் விரும்பிய மற்ற எவரையும் திருமணம் செய்து கொள்ள உரிமை வேண்டும்.

மனைவியுடைய சொத்தில் கணவனுக்கு பாகமிருப்பதைப் போல், கணவனுடைய சொத்திலும் மனைவிக்கு பாகம் வேண்டும்.

தாய் தந்தையுடைய சொத்தை, ஆண் குழந்தைகள் அடைவதைப் போல் பெண் குழந்தைகளும் அடைய வேண்டும்.

ஆண்கள் தங்களுடைய பொருளைத் தங்கள் விருப்பப்படி செலவு செய்வதைப் போல் பெண்களுக்கும் தங்களுடைய பொருளைத் தங்கள் விருப்பப்படி செலவு செய்ய உரிமை வேண்டும்.

பல தெய்வ வணக்கம், மதுபானம், சூதாட்டம், விபசாரம், வட்டி, லஞ்சம் முதலிய மனித வர்க்கத்திற்கே தீங்கிழைக்கும் தீய காரியங்களை மனித வர்க்கத்திலிருந்து வேருடன் களைந்தெரிய வேண்டும்.

தீண்டாமையை நீக்கி அனைவரையும் சமமாக சகோதரத்து வத்துடன் பாவிக்க வேண்டும் என்பவையே ஆகும்.

மேற்கூறிய இவற்றைத்தான் தற்காலமுள்ள மதவாதிகள் சமய, சமூக சீர்திருத்தம் என்று கூறுகின்றனர்.

இவையன்றி இனி இவ்வுலகத்தில் சமாதானமும் அமைதியும் நிலை பெறாது. இவையன்றி இனி இவ்வுலகிலுள்ள எந்த ஒரு சமூகமும் மேலான பதவியை வகிக்க முடியாது.

ஆகவே, தற்காலம் இவ்வுலகிலுள்ள அரசியல்வாதிகளென்ன? தேசியவாதிகளென்ன? மதவாதிகளென்ன? சமய, சமூக சீர்திருத்தக் காரர்களென்ன? இவர்கள் யாவரும், மனித வர்க்கத்தின் நன்மையையும், அபிவிருத்தியையும் கருதி விரும்புகின்ற சீர்திருத்தங்கள் என்னென்ன உண்டோ அவை அனைத்தையும் ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு, அல்குர்ஆன் என்னும் வேதத்தை நோக்கின், அவர்கள் விரும்புகின்ற சீர்திருத்தங்கள் அனைத்தும், அவர்கள் விரும்புவதை விட மிக்க மேலான விதத்தில் ஒருங்கே திரட்டி அதுவும் இனி என்றென்றைக்கும் சீர்திருத்த வேண்டிய அவசியமேற்படாத விதத்தில் 1400 வருடங்களுக்கு முன்னதாகவே அல்குர்ஆன் என்னும் வேதத்தில் கூறப்பட்டுள்ளது என்ற விஷயத்தை இச்சிறிய நூலில் சிறிது தெளிவுபட விளக்கிக் காட்டப்பட்டுள்ளது.

ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி


இயற்கை மதம்

புகழடங்கலும் அல்லாஹுத் தஆலாவுக்கே தகும். அவன் எண்ணிறந்த வகைகளையும், தொகைகளையும் உடைய படைப்புகளை படைத்திருக்கின்றான். இவ்வுலகில், தான் படைத்திருக்கும் பொருட்களில் எல்லாம் மனிதனை மேலான படைப்பாக அமைத்திருப்பது மட்டுமின்றி, மற்ற படைப்புகளின் மீது ஆதிக்கமும் வகித்து அவற்றை நன்மையான வழிகளில் உபயோகித்து இன்பமடையும் படியாகவும் ஆக்கியிருக்கின்றான்.

ஆகவே, அப்பொருட்களை மனிதன் நியாயமான வழியில் அவற்றுக்குரிய முறைப்படி அவசியத்திற்கு வேண்டிய அளவு உபயோகித்து வந்தால், இம்மையிலும் மறுமையிலும் நன்மையை அடையலாம். அதற்கு மாறாக தவறான முறையில் அவற்றை உபயோகித்து வந்தால், இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமே உண்டாகும். அவ்வாறு மனிதர்கள் நஷ்டமடையாமல் இருக்கும் பொருட்டு அப்பொருட்களின் படைப்பாளனாகிய இறைவனே அவற்றை உபயோகிக்கும் முறைகளையும் ஒழுங்கையும், அளவையும் ‘அல்குர்ஆன்’ என்னும் வேதத்தின் மூலமாக நமக்கறிவித்து அருள் புரிந்திருக்கிறான்.

அல்குர்ஆன் என்னும் வேதத்தின் மூலம் இறைவன் நமக்கு அறிவித்திருப்பவை அனைத்தும் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் முற்றிலும் பொருத்தமானவையாகவும், அனுபவ சாத்தியமானவையாகவும், இயற்கையை அடிப்படையாகக் கொண்டவையாகவும், எக்காலத்திலும் எந்நாட்டிலும் உள்ளவர்கள் எளிதில் பின்பற்றக் கூடியவையாகவும், மனித வர்க்கத்திற்கிடையில் மெய்யான சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், மெய்யான நீதியையும் நியாயத்தையும் நிலைநிறுத்தி, இவ்வுலகத்திலேயே சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்டக் கூடியவையாகவும் இருக்கின்றன.

இத்தகைய அல்குர்ஆன் என்னும் மேலான வேதத்தை இறைவன், நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் நமக்கு அளித்து அருள் புரிந்திருக்கின்றான்.

அவ்வளவு மேலான வேதத்தைப் போதிக்க ஆரம்பித்த நபி (ஸல்) அவர்களுக்கு, அக்காலத்தில் அறியாமையில் ஆழ்ந்து கிடந்தோர் அளவிலா இடையூறுகளை விளைவித்துத் துன்புறுத்த முற்பட்டனர். எனினும், நபி (ஸல்) அவற்றை ஒரு சிறிதும் பொருட்படுத்தாது, அவ்வேதத்தை மனித வர்க்கத்திற்கு எடுத்துரைத்தார்கள். மேலும், அதில் கூறியவற்றை எவ்வாறு கைக்கொண்டு நடக்க வேண்டுமென்பதையும் தாங்களே நடந்து காண்பித்தார்கள்.

ஆகவே, அந்நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அறிவித்த பிரகாரம், அவ்வேதத்தைப் பின்பற்றி நடந்த அவர்களுடைய தோழர்கள், கிளையார்கள் மீதும் அவ்வாறே அவ்வேதத்தைப் பின்பற்றி நடக்கும் யாவர் மீதும் இறைவனுடைய அருள் எந்நாளும் மேன்மேலும் உண்டாவதாக! ஆமீன்!


இயற்கை மதமும் அது ஏற்பட்ட காலமும்:

‘‘ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் அல்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக் கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமழான் அல்லாத) மற்ற நாட்களில் (விட்டுப்போன நாட்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்ப வில்லை. மேலும் (தவறிய நாட்களைக் கணக்கிடும்படி கட்டளை இட்டதெல்லாம், உங்கள் மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும் (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற் காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும் (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்!'' (அல்குர்ஆன் 2:185)

என்று இறைவன் அல்குர்ஆனின் மகத்துவத்தைப் பற்றி மிக மேலாகப் போற்றிப் புகழ்ந்து கூறி, அது அருளப்பட்ட ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கும்படியும் கட்டளையிடுகின்றான்.

இவ்வுலகத்தில் பெருநாளாகவும், திருநாளாகவும், பற்பலர் வருடா வருடம் கொண்டாடி வருகின்ற நாட்களைப் பற்றி அவர்கள் கூறும் சரித்திரங்களைக் கவனித்தால் ஏதோ ஒரு கஷ்டத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அவர்களுடைய மூதாதைகள் அந்நாளில் விடுதலை அடைந்திருப்பார்கள் அல்லது மகத்தானதொரு நன்மையையேனும் அந்நாளில் அடைந்திருப்பார்கள். ஆதலால்தான், அவர்களுடைய சந்ததிகள் இந்நாள் வரையில் அந்நாளைப் பெருநாளாகவும், திரு நாளாகவும் கொண்டாடி வருகின்றனர் என்று தெரிய வருகின்றது.

அல்குர்ஆன் என்னும் வேதம் அருளப்பட்ட ரமழான் மாதத்தைக் கொண்டாடும்படி கட்டளையிட்ட இறைவன், அவ்வாறான எந்த ஒரு விஷயத்தையும் அறிவிக்கவில்லை. எனினும், அல்குர்ஆனாகிய வேதம் அம்மாதத்தில்தான் அருளப்பட்டது என்று கூறி, இந்தக் காரணத்தையே குறிப்பிட்டு அதற்காக அம்மாதம் முழுவதும் அதனை அவ்வாறு கொண்டாடும்படி கட்டளையிடுகின்றான்.

தவிர, அம்மாதத்திலும் இவ்வேதம் அருளப்பட்டதொரு இரவுக்கு ‘லைலத்துல் கத்ர்’ என்று பெயரிட்டு அது ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானது’ என்றும் அறிவித்து 97வது அத்தியாயம் முழுவதும் அதன் சிறப்பைப் பற்றியே கூறுகின்றான்.

ஆகவே, அல்குர்ஆன் என்னும் வேதம் போதிக்கும் தத்துவங்கள் எவை? அவை எவ்வாறானவை? அவற்றால் மனித வர்க்கம் அடைந்துள்ள நன்மைகள் யாவை?

அல்குர்ஆன் ‘லைலத்துல் கத்ர்’ என்னும் இரவில் அருளப் பட்டதென்றால் அதற்காக அவ்விரவு ஆயிரம் மாதங்களை விட எவ்வாறு மேலானதாகிவிடும்? அதற்காக ரமழான் ஒரு மாதம் முழுவதையுமே கொண்டாட வேண்டிய காரணம் என்ன?

அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டிய அவசியம் என்ன? அவ்வாறு நோன்பு நோற்பதால் மனித வர்க்கம் அடையும் நன்மைகள் யாவை? என்பவற்றைச் சிறிது கவனிப்போம்.


அல்குர்ஆன் போதிப்பவற்றின் தன்மைகள்:

அல்குர்ஆன் போதிப்பவை யாவும் இரு வகைப்படும்.
1) கொள்கை சம்பந்தப்பட்டவை. 2) நடத்தை சம்பந்தப்பட்டவை.

அல்குர்ஆன் போதிக்கும் இவ்விரு வகைப்பட்ட விஷயங்களும் ஒன்றுக்கொன்று இன்றியமையாத சம்பந்தமுள்ளவையாகவும், இயற்கையை அடிப்படையாகக் கொண்டவையாகவும், அனுபவ சாத்தியமானவையாகவும், அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் முற்றிலும் பொருத்தமானவையாகவும், மனிதனாகப் பிறந்த எவனுக்கும், எவ்வித வித்தியாசமுமின்றி சமமான உரிமைகளை அளித்து அவர்களை, மனித அபிவிருத்திக்கு உரிய வழியில் தவறாமல் செலுத்தக் கூடியவையாகவும் இருக்கின்றன.

ஏனென்றால், அல்குர்ஆன் போதிப்பவை எவை? அவற்றால் மனிதர்கள் அடைந்துள்ள நன்மைகள் எவை? என்பதை பரிசீலனை செய்வது கொண்டு அவ்வாறே தெளிவாகத் தெரிய வருகின்றது.


அல்குர்ஆன் போதிப்பவையும், அவற்றால் ஏற்பட்ட நன்மைகளும்:

மெய்யான சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் அளித்தல்:

ஹிந்துக்களில் தீண்டப்படாதார் என ஒரு வகுப்பார் இருக்கின்றனர். அவர்களின் தொகை ஆறு கோடியாகும்.1

அந்த ஆறு கோடி மக்களின் நிலைமை இவ்வுலகத்தில் எவ்வாறு இருக்கின்றது என்பதைச் சிறிது கவனிப்போம். இயற்கையாக மனிதர்களுக்குள்ள எவ்வித உரிமையுமே அவர்களுக்குக் கிடையாது எனக் கூறி, மற்ற ஹிந்துக்கள் அவர்களை தாழ்ந்த நிலைமையில் ஆழ்த்தி வைத்திருக்கின்றனர்.

இவ்வாறு இவர்களை ஆழ்த்தி வைத்திருக்கும் அந்த ஹிந்துக்கள் ‘இந்த ஆறு கோடி மக்களும் தங்களது ஹிந்து மதத்தையே சார்ந்தவர்கள்’ எனவும் கூறுகின்றனர்.

எனினும், அந்தத் தீண்டப்படாதார் என்போர், மிக்க தாழ்ந்த நிலைமையில் உள்ள ஒரு ஹிந்து அனுபவித்து வரும் உரிமைகளில் சாதாரணமான ஒன்றை அடைய ஆயிரக்கணக்கான வருடம் முயற்சி செய்தும் இன்றளவும் அடைய முடியாமல் இருக்கின்றனர்.

ஆகவே, தாழ்ந்த நிலைமையில் ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆழ்ந்து கிடக்கும் அவர்களைக் கேவலமான அடிமைத் தனத்திலிருந்து விடுவித்து, மற்ற எம்மனிதர்களுக்கும் எவ்விஷயத்திலும் நீங்கள் சமமானவர்களே; மற்ற மனிதர்கள் அடைந்திருக்கும் மேலான எப்பதவியையும் நீங்களும் உங்களுடைய முயற்சியைக் கொண்டு அடையலாம் உங்களுக்கும் மற்ற மனிதர்களுக்கும் எவ்விஷயத்திலும் எவ்வித வித்தியாசமுமில்லை உங்களுடைய பொருள், கவுரவம், உயிர் முதலியவை மற்றவர்களின் பொருள், கவுரவம், உயிர் முதலியவற்றைப் போலவே மதிக்கப்படும்.

ஓர் அரசனுடைய பொருளுக்கோ, கவுரவத்திற்கோ, உயிருக்கோ தீங்கிழைத்தவனுக்கு என்ன தண்டனை விதிக்கப்படுமோ அதே தண்டனைதான் உங்களுடைய பொருளுக்கோ, உயிருக்கோ, கவுரவத்திற்கோ தீங்கிழைத்தவனுக்கும் விதிக்கப்படும்.’

‘இவ்வாறு உங்களுக்குத் தீங்கிழைத்தவன் ஓர் அரசனாக இருந்த போதிலும், அதற்குரிய தண்டனையிலிருந்து அவன் தப்ப முடியாது.’

‘ஓர் அரசனுக்கேற்பட்ட இடையூறை நிவர்த்திப்பது மற்றவர்கள் மீது எவ்வாறு கடமையோ அவ்வாறே உங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நிவர்த்திப்பது உங்கள் அரசன் மீதும் மற்றவர்கள் மீதும் கடமையாகும்.’

‘தலைவன் என்ற ஒரு விஷயத்தைத் தவிர அரசனுக்கும் உங்களுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை.’

‘பிறப்பைக் கொண்டு ஒருவன் மேலென்றோ கீழென்றோ கூறுவதற்கில்லை. நடத்தையைக் கொண்டே மனிதனின் மேன்மையை நிதானிக்க வேண்டும்.’

‘இவ்வுலகிலுள்ள பொருட்களை உபயோகிக்க மற்றவர்களுக்கு என்ன உரிமை உண்டோ, அதே உரிமை உங்களுக்கும் உண்டு.’

‘மனிதர்களுக்கு இயற்கையாகவுள்ள உரிமைகளில் அரசன் என்றோ, அடிமை என்றோ, ஆணென்றோ, பெண்ணென்றோ, ஏழையென்றோ, பணக்காரனென்றோ எவ்வித வித்தியாசமும் பாவிக்க முடியாது.’

-என்றதொரு சட்டத்தை இயற்றி, அமலுக்குக் கொண்டு வரும் பட்சத்தில், தீண்டப்படாதவர்கள் என்னும் இந்த ஆறு கோடி மக்களும் அந்நாளை எப்படிப்பட்ட நாளாக மதிப்பார்கள்?

கேவலமான அடிமைத்தனத்தில் இத்தீண்டப்படாதார் ஆழ்ந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான வருடங்களை விட இச்சட்டம் இயற்றப்பட்டு அமலுக்கு வந்த அந்நாளை மிக மேலான நாளாக கொண்டாடுவார்கள் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?

இவ்வுலகத்தின் பற்பல நாடுகளிலும் பற்பல மொழிகள் பேசி வாழ்ந்து வரும் ஐம்பது கோடி முஸ்லிம்களில் தீண்டப்படாதாரென யாதொரு வகுப்போ, நபரோ இருக்கின்றனரா?

அவர்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவதற்கு முன்னதாக, அவர்களுக்குள்ளும் இத்தீண்டப்படாதாரைப் போல் மிக்க கேவலமான நிலைமையில் பலர் இருந்தனர். அவர்களை அக்கேவலமான நிலைமையிலிருந்து உயர்த்தி அவர்களும் உலகத்திலுள்ள மற்ற யாவருக்கும் சமமெனக் கொள்ளும்படியும் பாவிக்கும்படியும் செய்தது, அல்குர்ஆன் என்னும் வேதம்தான்!

ஆகவே, இவ்வளவு மேலான பரிசுத்த வேதத்தை இவ்வுலகத்தில் இறைவன் அருள் செய்த ‘லைலத்துல் கத்ர்’ என்னும் அவ்விரவை ஆயிரம் மாதங்களைவிட மேலென்று அவன் கூறியது மிகைபடக் கூறியதாகுமா?
ஆயிரம் மாதங்கள் என்ன? ஆயிரம் வருடங்களை விட மேலென்று கூறிடினும், அது மிகைபடக் கூறியதாகாது.

தீண்டப்படாதாரென தாழ்ந்த நிலைமையில் ஆழ்த்தப்பட்டு தவித்துக் கொண்டிருக்கும் சகோதரர்களே! அடுத்து வரும் விஷயங்களைச் சிறிது நிதானமாகக் கவனியுங்கள்.

என்றைய தினம் நீங்கள் மனிதராகப் பிறந்தீர்களோ! அன்றைய தினமே மற்ற மனிதர்களுக்குள்ள சகல உரிமைகளும் இறைவனால் உங்களுக்கு அளிக்கப்பட்டு விட்டன.

உங்களுடைய இந்த அடிமைத்தனத்திற்குக் காரணம் உங்களுடைய பிறப்பல்ல. உங்களுடைய அறியாமையும் முயற்சியின்மையுமே காரணமாகும்.

உங்களுடைய அடிமைத்தனத்தை நீக்கிக் கொள்ள, தற்காலத்தில் நீங்கள் செய்யும் முயற்சிகளும் உங்களுக்குப் பலனளிக்கக் கூடியவை அல்ல.

ஹிந்து ஆலயங்களுக்குள் சென்று விட்டால் நீங்கள் விடுதலை அடைந்து விடலாமென்று எண்ணிக்கொண்டு அதற்காகப் பெரு முயற்சியும், கிளர்ச்சியும் செய்து வருகின்றீர்கள். அது உங்களால் சாத்தியமானதா?

அந்த ஆலயங்களுக்குள் நீங்கள் சென்றுவிட்ட போதிலும் அதனால் அடையக்கூடிய பயன் என்ன?

அந்த ஆலயங்களில் இருப்பவைதான் என்ன? அங்கிருப்பவை உங்கள் கையால் செய்த பொம்மைகள்தான்.

அவற்றை நீங்கள் உருவாக்கினீர்களே தவிர, உங்களை அவை படைக்கவில்லை.

உங்களுடைய குறைகளில் எதையும் அவற்றால் நீக்க முடியாது.

ஆலயப் பிரவேசத்தால் நீங்கள் உங்களுக்கு இயற்கையாக உள்ள உரிமைகளில் எதையும் அடைந்துவிட மாட்டீர்கள்.

ஆலயப் பிரவேசத்தால் நீங்கள் மற்ற ஹிந்துக்களுடன் சமப்பந்தி விருந்தையும், கலப்புத் திருமணத்தையும் அடைந்துவிட மாட்டீர்கள்.

ஆலயப் பிரவேசத்தால் உங்களுக்குப் பிராமணர்கள், ஹிந்துக்கள் வசிக்கின்ற அக்கிரகாரம் முதலிய நகரப் பகுதிகளில் தாராளமாக வசிக்க இடம் கிடைத்து விடாது.

ஆனால், உங்களுக்கு வேண்டியவையோ இவைதான். ஆலயப் பிரவேசமல்ல இவையன்றி உங்களுடைய குறைகள் நிவர்த்தியாகாது. வெறும் ஆலயப் பிரவேசத்தை அடைவது கொண்டு நீங்கள் சுதந்தரத்தையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் அடைந்துவிட்ட தாகக் கருத வேண்டாம்.

இயற்கையாக, மனிதர்களுக்குரிய சாதாரனமான எந்த உரிமையும் உங்களுக்கு இல்லை என்றும், கேவலமான இத்தாழ்ந்த நிலைமையில் தான் உங்களை ஆழ்த்தி வைத்திருக்க வேண்டுமென்றும் ஹிந்து மதமே கட்டளையிடுகின்றது.

ஆகவே, அந்த ஹிந்து மதத்தை நீங்கள் பின்பற்றுவதாகக் கூறும் வரையில் உங்களுடைய இழிவான இந்நிலைமையில் இருந்து விடுதலை அடைய நீங்கள் என்ன முயற்சி செய்தபோதிலும் அது உங்களுக்குப் பயனளிக்காது.

அல்லது மற்ற ஹிந்துக்களால்தான் உங்களுக்கு விடுதலை அளித்து மேற்கூறிய சுதந்தரங்களை அளித்துவிட முடியுமா?

அவ்வாறு செய்யப் போவதாகப் பல ஹிந்து தலைவர்கள் கூறுகின்றனரே, அது ஆகக் கூடியதா?

அப்பெரியார்களின் அனுதாபத்திலும், வீரத்திலும், தீரத்திலும் எவருக்கும் எள்ளவும் சந்தேகமில்லை. அவர்கள் அரும்பெரும் தியாகங்களையே செய்து வருகின்றனர் செய்யவும் தயாராக இருக் கின்றனர். எனினும், துர்ப்பாக்கியமான உங்களுடைய கொள்கையே அதற்குத் தடையாக இருக்கின்றது.

‘ஹிந்து’ என்னும் பதத்தின் அர்த்தமே எவரும் விரும்பத்தக்கதாக இல்லை.

ஆகவே, நீங்கள் உங்களை ஹிந்துக்கள் என்று கூறும் வரையில் விடுதலை அடையப் போவதுமில்லை.

அவர்களும் ஹிந்துக்களாக இருக்கும் வரையில் உங்களுக்கு விடுதலை அளிக்கப் போவதுமில்லை.

அவர்கள் செய்யும் அரும்பெரும் முயற்சிகளை எல்லாம் ஹிந்து மதமும், ஹிந்து பதமும் பலனற்றதாக்கி விடுகின்றது.

அவர்கள் உங்களுக்கு விடுதலையளிப்பதென்ன? தங்களின் இனத்தாராகிய பிராமணரல்லாத மற்ற எவருக்குமே விடுதலை அளித்து அந்த சுதந்தரத்தையும் சமத்துவத்தையும் அளிக்க முடியாது.
பிராமணர் அல்லாதவர்களின் நிலைமைதான் என்ன? அவர்கள் தங்களைப் பிராமணர்களுக்கு சமமெனக் கூற முடியுமா?

அவ்வாறு கூறினாலும் அதனை அவர்களுடைய மதம் அங்கீகரிக்குமா?

பிராமணர்களுடைய நன்மைக்காகவே இந்த பிராமணர் அல்லாதவர் இவ்வுலகத்தில் வாழ வேண்டும். இவர்களுடைய பொருள், பெண், ஆவி அனைத்தையும் பிராமணர்களுக்கு அர்ப்பணித்தே இவர்கள் மோட்சத்தை அடைய வேண்டும். இவ்வாறே பிராமணர்களுடைய மதம் கூறுகின்றது.

அவர்கள் தங்களை ஹிந்துக்கள் என்று கூறும் வரையில் இவ்வாறு பிராமணர்களுக்கு அடிமைப்பட்டிருக்க வேண்டியதுதான்.

பிராமணர்களுக்கு இவ்வாறு அடிமைப்பட்டு அடிபணிந்து நடக்கும் இவர்களுக்கும் அந்த பிராமணர்களுக்குமிடையேனும் சமப்பந்தி விருந்தாவது, கலப்புத் திருமணமாவது உண்டா?

அல்லது இந்த பிராமணர் அல்லாதவர்களுக்கு இடையிலாவது கலப்புத் திருமணமும் சமப்பந்தி விருந்தும் உண்டா?

அவர்கள் தாங்களும் ஹிந்துக்கள் என்று கூறிக் கொண்டிருக்கும் வரையில் இவ்வாறே சிதறுண்டு மற்றவர்களுக்கு அடிமைப்பட்டு கிடக்க வேண்டியதுதான்.

அல்லது உங்களையும் அந்த பிராமணர் அல்லாதாரையும் இவ்வாறு அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அந்த பிராமணர்கள்தான் உங்களை விடுதலை செய்துவிட முடியுமா? அவ்வாறு செய்யப் போவதாகச் சில பிராமணத் தலைவர்களும் கூறுகின்றனரே, அது ஆகக் கூடியதா?

அவர்கள் இதுவரையில் உங்களில் எத்தனை பேர்களை (பிராமணர்களோ அல்லது மற்ற ஹிந்துக்களோ) தங்களுக்குச் சமமாக உங்களைப் பாவித்து சமப்பந்தி விருந்து, கலப்புத் திருமணம் செய்து கொள்ளும்படி செய்திருக்கின்றனர்?

இந்த பிராமணத் தலைவர்களின் அனுதாபத்திலும், ஜீவ காருண்யத்திலும், பரோபகாரத்திலும் எவருக்கும் எள்ளளவும் சந்தேகமில்லை. இவர்கள் மிக நல்லவர்கள்தான் அரும்பெரும் தியாகங்களையும் செய்கின்றனர் தங்களைப் பற்றி தங்கள் இனத்தார் கூறும் குறைகளையும் பொருட்படுத்தாது உங்களுடைய சேரிகளுக்கும் நேரே வருகின்றனர் உங்களுடன் சமமாகவே உட்கார்ந்து கொள்கின்றனர் உங்களுடைய குறைகளையும் மிக்க அனுதாபத்தோடு கேட்கின்றனர் உங்களுடைய தீண்டாமையை நீக்கி விட்டதாகக் கூறி, உங்களைத் தொட்டும் கொள்கின்றனர். உங்கள் வீட்டில் நீங்கள் சமைத்த சாதத்தையும் புசித்து விடுகின்றனர்.

எனினும், இதுவரையில் அவர்கள் உங்களுடைய எத்தனை பெண்களை திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர்? தங்களுடைய எத்தனை பெண்களை உங்களுக்கு திருமணம் செய்து கொடுத் திருக்கின்றனர்? இச்சம்பந்தமின்றி, அவர்கள் உங்களுக்கு அளிக்கும் சமத்துவம் நிலைக்குமா? அவர்களுக்கும் உங்களுக்கும் மெய்யான சகோதரத்துவம் ஏற்படுமா? அவர்களுக்குள்ள சகல உரிமைகளையும் நீங்கள் அடைந்து கொள்ளத்தான் முடியுமா?

இக்காரியத்தைத் துணிவுடன் செய்ய அவர்கள் முன் வந்தால் அவர்கள் இனத்தாரே அவர்களை ஒதுக்கி அவர்களையும் உங்களுடன் சேர்த்து விடுவார்கள்.

அந்த பிராமணர்களின் மதம் உங்களுக்கு இவ்வுலகில் என்ன மதிப்பளித்திருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா?

ஒரு பிராமணர் உங்களில் எவரையும் கொலை செய்து விட்டால் அவருடைய தலையை மொட்டையடித்து விட்டுவிட வேண்டுமே அன்றி வேறொன்றும் செய்யக் கூடாது என்று கூறி உங்களுடைய உயிர் பிராமணர்களின் மயிருக்குத்தான் சமம் என்பதை மிக்க தெளிவாகவே அறிவித்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு உங்களை இழிவுபடுத்தியும், மற்ற ஹிந்துக்களை சிதறடித்தும் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அந்த பிராமணர்களின் நிலைமைதான் என்ன? அவர்களுக்குள்ளேனும் மெய்யான சமத்துவமும் சகோதரத்துவமும் உண்டா?

அவர்களிலும் ‘வைஷ்ணவர்கள்’ என்றும் ‘ஸ்மார்த்தர்கள்’ என்றும் ‘மாத்வர்கள்’ என்றும் மூன்று பிரிவுகள் இருக்கின்றன.

இதிலும், வைஷ்ணவர்களுக்குள் ‘தென்கலை’ என்றும் ‘வடகலை’ என்றும் நாதமுனி சிஷ்யர்கள் என்றும் ஆச்சார்ய பரம்பரை என்றும் ஆழ்வார் அடிகள் என்றும் பிரிவுகள் இருக்கின்றன.

ஸ்மார்த்தர்களுக்குள் ‘வடமர்கள்’ என்றும் ‘வாத்திமர்கள்’ என்றும் ‘அஷ்டலஹஸ்ரர்’ என்றும் ‘பிரஹசரணர்’ என்றும் பிரிவுகள் இருக்கின்றன.

மாத்வர்களுக்குள் ‘மஹாராஷ்டிரர்கள்’ என்றும் ‘கன்னடர்கள்’ என்றும் பிரிவுகள் இருக்கின்றன.

இவர்களைத் தவிர சவ்ராஷ்டிரர்கள் தாங்களும் பிராமணர்கள் என்கின்றனர். அவ்வாறே விஸ்வகர்மரும், சாத்தானியரும் தங்களை பிராமணர்கள் என்கின்றனர். மலையாளத்தில் மீன் பிடிக்கும் ஒரு வகுப்பாரும் தங்களைப் பிராமணர்கள் என்கின்றனர். இன்னும் யாரெல்லாம் இவ்வாறு கூறுகின்றனரோ? யாமறியோம்!

ஆகவே, இவர்களில் எவருக்குமே மன வருத்தம் ஏற்படாத விதத்தில் இவர்கள் அனைவரையும் பிராமணர்கள் என்றும், பிறப்பைக் கொண்டே மேலானவர்கள் என்றும் அங்கீகரித்துக் கொள்வோம்.

எனினும், இவர்களுக்குள்ளாகவே ஒரு வகுப்பாருக்கு மற்றொரு வகுப்பாருடன் சமப்பந்தி விருந்தாவது கலப்புத் திருமணமாவது உண்டா?

அல்லது பிராமணர்களாகிய இவர்களிலெல்லாம் தாங்களே மேலென்று கூறுகின்ற வைஷ்ணவர்கள், ஸ்மார்த்தர்கள், மாத்வர்கள் என்றும் இம்மூன்று வகுப்பு பிராமணர்களுக்கு இடையிலாவது மெய்யான சமத்துவமும், கலப்புத் திருமணமும் உண்டா?

அல்லது இம்மூன்று வகுப்புகளில் ஒவ்வொன்றுக்குள்ளேயே இருக்கும் உட்பிரிவினர்களுக்கு இடையிலேனும் மெய்யான சமத்துவமும், கலப்புத் திருமணமும் உண்டா? அதுவுமில்லை.

இவர்களில் ஒவ்வொருவரும் தாங்களே மேலென்றும், மற்றவர்கள் தங்களுக்குத் தாழ்ந்தவர்கள் என்றுமே கூறுகின்றனர்.

ஆகவே, தங்களையல்லாத மற்ற தங்கள் இனத்தாரையே தங்களை விட தாழ்ந்தவர்கள் என்று கூறும் இந்த பிராமணர்கள்தானா, தீண்டப்படாதார் என்னும் உங்களுக்கும் மற்ற ஹிந்துக்களுக்கும் மெய்யான சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் அளிக்கப் போகின்றனர்?உங்களை உங்களுடைய இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துவிடப் போகின்றனர்?

அல்லது கிறிஸ்தவ மதமேனும் உங்களை உங்களுடைய இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து விடுமா?

கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய தீண்டப்படாதாரின் நிலைமைதான் என்ன? அவர்கள் இன்றைய தினம் மெய்யான சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அடைந்திருக்கின்றனரா?

அல்லது இவ்வுலகத்தைச் சீர்திருத்துவதற்காகவே நாங்கள் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று கூறுகின்ற மேனாட்டினரேனும் உங்களை, உங்களுடைய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து உங்களுடன் சமப்பந்தி விருந்து, கலப்புத் திருமணம் செய்து கொள்வார்களா?

ஆகவே, இந்த அடிமைத்தனத்திலிருந்து மெய்யாகவே உங்களை விடுவித்து மனித வர்க்கத்திற்குரிய சகல உரிமைகளுடன் கூடிய மெய்யான சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உங்களுக்கு அளிக்கக் கூடியது நீங்கள் விரும்பும் ஹிந்து ஆலயப் பிரவேசமுமல்ல பிராணமர்களுமல்ல பிராமணர் அல்லாதவர்களுமல்ல ஹிந்து மதமும் அல்ல கிறிஸ்துவ மதமும் அல்ல அந்த கிறஸ்தவ மதத்தைப் பின்பற்றும் கீழ் நாட்டினருமல்ல மேல் நாட்டினருமல்ல.

உங்களை விடுவித்து அந்த சுதந்தரங்கள் அனைத்தையும் பூரணமாக அளிக்கக் கூடியதெல்லாம் ‘அல்குர்ஆன்’ என்னும் பரிசுத்த வேதம்தான்!

அது அவ்வாறே செய்தும் இருக்கின்றது. செய்தும் வருகின்றது.

மெய்யான சமத்துவமும் சகோதரத்துவமும்:

ஆகவே, தீண்டப்படாதார் என்னும் நீங்கள் உங்களுடைய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடையக் கருதி எந்நேரத்தில் அல்குர்ஆன் எனும் இவ்வேதத்தை பின்பற்றுகின்றீர்களோ, அதே நேரத்தில் நீங்கள் உங்களுடைய அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு விடுகின்றீர்கள். ‘ஹுர்ரூன்’ (சுதந்தரன்) என்ற பட்டத்தையும் அடைந்து விடுகின்றீர்கள்.

மெய்யான இறைவனை வணங்குவதற்கு இவ்வுலகில் ஏற்படுத்தப் பட்ட எந்த ஆலயத்திற்குள்ளும் நீங்கள் எந்நேரத்திலும் செல்லலாம். உங்களைத் தடை செய்ய எவருக்கும் உரிமையில்லை.

அந்த ஆலயத்தில் தொழுது கொண்டிருப்பவர் இவ்வுலகம் அனைத்தையும் ஆளும் ஏகச் சக்கரவர்த்தியாக இருந்தபோதிலும் நீங்கள் அவருடைய தோளோடு தோள் சேர்த்து நின்று தொழலாம். அந்த அரசன் உங்களில் எவரையும் நோக்கி ‘நீ தீண்டப்படாதவன் நீ எனக்கு சமமாக நிற்காதே’ என்று கூறவும், தடை செய்யவும் அறவே முடியாது.

பாரபட்சமின்றி மனிதர்களாகப் பிறக்கும் எவருக்குமே சமமான உரிமைகளை அளித்திருக்கும் மெய்யான இறைவன் அந்த ஆலயத்தில் உங்களையும் அந்த அரசனையும் தன் முன் சமமாகவே நிறுத்தி அந்த அரசனை நோக்கி,

‘‘மக்களுடைய நன்மைக்காக நீ அரசனாக ஆக்கப்பட்டாயே அன்றி உன்னுடைய நன்மைக்காக மக்கள் இல்லை. மக்களுக்கிடையில் ஏழை என்றேர் பணக்காரர் என்றேர் அடிமை என்றேர் சுதந்தரன் என்றேர் ஆண் என்றேர் பெண் என்றோ எவ்வித வித்தியாசமும் பாவிக்காமல் மெய்யான நீதியையும் நியாயத்தையும் செலுத்தி இயற்கையாக மனிதர்களுக்குள்ள சகல உரிமைகளையும் அவர்களுக்கு அளித்து, மனித அபிவிருத்திக்குரிய நேரான வழியில் அவர்களை செலுத்துவது அரசனாக ஆக்கப்பட்ட உன் மீது சுமத்தப்பட்ட கடமை ஆகும். என்றைய தினம் நீ, உன் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்தக் கடமைகளைப் பொருட்படுத்தாது மக்களின் நன்மையைப் புறக்கணிக்கின்றாயோ அன்றைய தினமே உன்னுடைய ஆட்சியைப் பறித்து மக்களின் நன்மையை நாடக்கூடியவனை அரசனாக்கிக் கொள்ள மக்களுக்கு அனுமதி அளித்திருக்கின்றேன். மேலும், எவன் மனிதர்களில் எவரையும் தீண்டப்படாதான் எனக் கூறி கேவலமாக மதிக்கின்றானோ அவன் என்னுடைய ஆலயத்திற்குள் வரக் கூடாது’’ என்றும் கட்டளையிடுகின்றான்.

நீதியும், நியாயமும் நிறைந்துள்ள இவ்வாறான கட்டளைகளை இறைவன் மனித வர்க்கத்திற்கு அடிக்கடி ஞாபகமூட்டும் பொருட்டே ஒவ்வொரு நாளிலும் ஐந்து வேளை பள்ளிவாயில்களில் ஆஜராகி அவர்கள், இறைவன் சந்நிதியில் நிற்பதாகக் கருதி, அரசன் முதல் சாதாரண மக்கள் வரை யாவரும் சமமாக நின்று தொழும்படியாகவும் அந்த ஐந்து வேளை தொழுகையிலும் இறைவனுடைய இத்தகைய கட்டளைகளைச் சுமந்துள்ள அல்குர்ஆன் என்னும் வேதத்தை ஓதும் படியாகவும் கட்டளையிட்டிருக்கின்றான்.

ஆகவே, தீண்டப்படாதார் என்னும் சகோதரர்களே! இவ்வுலகில் இரு வகையான ஆலயங்கள் இருக்கின்றன.

ஒன்று: மனிதர்களுக்குரிய யாதொரு உரிமையும் உங்களுக்கு இல்லையென்றும், தாழ்ந்த நிலைமையிலேயே உங்களை ஆழ்த்தி அடிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டுமென்றும் கட்டளையிடுகிறது.

மற்றொன்று: உங்களை இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, அரசனும் உங்களைத் தனக்குச் சமமாகவே பாவிக்க வேண்டும், மனிதர்களுக்குள்ள சகல உரிமைகளையும் உங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகின்றது.

இவ்விரு ஆலயங்களில் எதற்குள் செல்ல நீங்கள் விரும்பு கின்றீர்கள்?

எந்த ஆலயம் உங்களை அடிமைப்படுத்தியே வைத்திருக்க வேண்டுமென்று கட்டளையிடுகின்றதோ அதே ஆலயத்திற்குச் சென்றால் உங்களுக்கு விடுதலை கிடைக்குமா?

அந்த ஹிந்து ஆலயங்களுக்குள் செல்ல நீங்கள் முயல்வதானது, உங்களுடைய அடிமைத்தனத்தின் விலங்கை நீங்களே பின்னும் பலப்படுத்திக் கொள்ள முயல்வதாகும்.

உங்களை அடிமைப்படுத்தியே வைத்திருக்க வேண்டுமென்று கட்டளையிடும் ஆலயத்தில் உங்களைப் படைத்து பாதுகாப்பவனாகிய மெய்யான இறைவன் இருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்களா?

உங்களைப் படைத்த இறைவன் அங்கிருந்தால், உங்களை அடிமைப்படுத்தியே வைத்திருக்க வேண்டுமென்று அந்த ஆலயத்தில் இருந்து கட்டளை பிறக்குமா?

ஆகவே, தீண்டப்படாதார் என்னும் சகோதரர்களே! உங்களுடைய இழிவான இந்த அடிமைத்தனத்திலிருந்து மெய்யாகவே நீங்கள் விடுதலை அடையக் கருதினால், எந்த ஆலயம் உங்களுக்கு விடுதலை அளிக்கின்றதோ அந்த ஆலயப் பிரவேசத்தையே நீங்கள் விரும்புங்கள்.

அந்த ஆலயத்தில்தான் உங்களைப் படைத்து பரிபாலிக்கும் இறைவன் இருக்கின்றான். ஆதலால்தான், உங்களை விடுவிக்கும்படி கட்டளை அங்கிருந்து பிறக்கின்றது.

இரவு பகல் எந்நேரமும் உங்களுடைய வரவுக்காக அது திறக்கப் பட்டிருக்கின்றது. எந்நேரத்திலும் நீங்கள் அங்கு செல்லலாம்.

அந்த ஆலயப் பிரவேசத்தையோ அல்லது நீங்கள் அங்கு சென்று விடுதலை அடைவதையோ தடை செய்ய எவருக்கும் அவர் எவ்வளவு பெரிய அரசனாக இருந்த போதிலும் எள்ளளவும் சக்தியில்லை.

அந்த ஆலயப் பிரவேசத்திற்காக உங்களுக்கு ஒரு பைசாவும் செலவில்லை. நீங்கள் சத்தியாக்கிரகம் செய்து கஷ்டப்பட வேண்டியதும் இல்லை.

உங்களுடைய விடுதலையைப் பற்றி உங்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பவர்களின் அனுமதியைக் கோர வேண்டிய அவசியமும் இல்லை.

உங்களை விடுவிக்கும்படி நீங்கள் விண்ணப்பம் கொடுக்க வேண்டிய அவசியமுமில்லை வக்கீலும் வேண்டியதில்லை.

உங்களுடைய விடுதலைக்கு எந்த ஓரு வாயிதாவுமில்லை காலத் தாமதமுமில்லை.

எந்நேரத்தில் நீங்கள் அங்கு செல்கின்றீர்களோ அந்நேரத்தில் விடுதலையடைந்து விடுகின்றீர்கள். உங்களுடைய இழிவான இந்த அடிமைத்தனத்திலிருந்து நீங்கி மனிதர்களுக்குரிய சகல உரிமைகளையும் நீங்கள் பூரணமாகவே அடைந்தும் விடுகின்றீர்கள்.

இவ்வுலகிலுள்ள ஐந்து கோடி முஸ்லிம்களுக்கும் நீங்கள் மெய்யான சகோதரர்களாகவும் ஆகிவிடுகின்றீர்கள்.2

இன்றைய தினம் உங்களைத் தீண்டப்படாதார் எனக் கூறிக் கொண்டிருக்கும் 24 கோடி ஹிந்துக்கள் என்ன? இவ்வுலகத்தின் மற்ற பாகங்களில் வசிக்கும் எவருமே உங்களைத் தீண்டப்படாதார் எனக் கூறவும், பாவிக்கவும் முடியாது.

இது உலகமறிந்த உண்மை.

மெய்யான இத்தகைய சமத்துவத்தையும், சுதந்தரத்தையும், தன்னைப் பின்பற்றுவோர்களுக்குத்தான் இவ்வேதம் அளிக்கின்றது என்பதல்ல. மனிதனாகப் பிறந்த யாவருக்குமே, அவர்கள் எந்த வகுப்பாராயினும், எந்த நாட்டினராயினும், எந்த மதத்தாராயினும், எந்த நிறத்தாராயினும், இந்த சுதந்தரங்கள் அனைத்தையும் பூரணமாகவே அளிக்கின்றது.

ஆகவே, மனிதராகப் பிறந்த எவருக்கும் இந்த சுதந்தரங்களில் எதையும் இல்லை என்று இந்த வேதத்தைப் பின்பற்றும் எவரும் மறுக்கவும் முடியாது அவ்வாறு கூறவும் கூடாது என்று இவ்வேதம் வெகு கண்டிப்பாக உத்தரவிடுகின்றது.

ஆதலால்தான், முஸ்லிம் நாடுகளில் வசிக்கின்ற அந்நிய மதத்தினர், அவர் எந்த நாட்டினராயினும், எந்த சாதியினராயினும் அவருக்கு ‘திம்மீ’ (பிணையேற்கப்பட்டவர்) ‘முஸ்தஃமன்’ (அபயம் பெற்றவர், அச்சமற்றவர், பயமற்றவர்) என்றும் பெயர் கூறப்படுகின்றது.

இவ்வாறு மனித வர்க்கம் யாவுக்குமே எல்லாச் சுதந்தரங்களையும் அளித்துக் காப்பது இவ்வேதத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவரின் மீதும் சுமத்தப்பட்ட கடமையாக இருப்பதால், அவனுக்கு ‘முஃமின்’ (அபயமளிப்பவன், அபயமளிக்கக் கடமைப்பட்டவன், இரட்சிப்பவன், இரட்சிக்கக் கடமைப்பட்டவன், மெய்யான கடவுளை நம்புபவன், மெய்யாகவே இறைவனை நம்பிக்கை கொண்டு அவனுடைய கட்டளைகளுக்கு அடிபணிபவன்) என்ற பெயரை இவ்வேதம் அளிக்கின்றது.

இவ்வாறு மற்றவர்களை இரட்சிக்கக் கடமைப்பட்ட இவனால் எவருக்கும் எவ்விதத் தீங்குமே ஏற்படக் கூடாது. ஆதலால், இந்த வேதத்தைப் பின்பற்றுகின்றவருக்கு ‘முஸ்லிம்’ (தீங்கிழைக்காதவன், சமாதானத்தை விரும்பக் கூடியவன்) என்ற பெயரையும் இவ்வேதம் அளிக்கின்றது.

ஆதலால்தான், எவன் மற்றவர்களுக்குத் தன்னுடைய கையைக் கொண்டோ, நாவைக் கொண்டோ தீங்கிழைக்கின்றானோ அவன் முஸ்லிமல்ல என்ற பொருள்பட நபி முஹம்மது (ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்தருளி இருக்கின்றார்கள். (நூல்:ஸஹீஹுல் புகாரி)

பெண்களுக்குச் சுதந்தரமளித்தல்:

ஹிந்துப் பெண்களின் நிலைமை:

இந்தியாவிலுள்ள மக்களில் (1930ல்) ஹிந்துக்கள் ஏறக்குறைய 24 கோடி பேர். அவ்வாறிருக்க ஹிந்துப் பெண்களின் தொகை சுமார் பன்னிரண்டு கோடி எனக் கொள்ளலாம்.

ஹிந்துக்கள் ‘தங்களுடைய பெண்களுக்கும் ஆத்மா உண்டு அவர்கள் செய்யும் நன்மை தீமைகளின் பலன் அவர்களுக்குண்டு’ என்றே கூறுகின்றனர்.

எனினும், ஹிந்துக்களிலுள்ள இப்பன்னிரண்டு கோடி பெண்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையில் எவ்வித சுதந்தரமுமில்லை.

ஏனென்றால், எந்த ஹிந்துப் பெண்ணும் அவள் பிறந்ததிலிருந்து அவளுக்குத் திருமணமாகும் வரையில் தன் பெற்றோரிடம் அடிமையைப் போலவே வாழ வேண்டும்.

ஆண்களுக்கு இன்பமளிக்கக் கூடிய ஆடல், பாடல்களைத் தவிர அறிவை விருத்தி செய்யக் கூடிய எக்கல்வியும் கற்கக் கூடாது. அதிலும், தங்களுடைய வேதத்தை நெருங்கவும் கூடாது. அதிலுள்ள யாதொரு சுலோகத்தை உச்சரிக்கவும் கூடாது.

ஹிந்துப் பெண்களும் மெய்யான உரிமைகளும்
பெற்றோர் தங்கள் இஷ்டமான எவனுக்கும் அவளைத் திருமணம் செய்து கொடுத்து விடலாம். அவனையே இவளும் கணவனாகக் கொள்ள வேண்டும்.

இவளுக்குக் கணவனாக வரும் அவன் எவ்வளவு துர்க்குணம் படைத்தவனாயினும், கொடிய நோயில் சிக்கி மரணத்தருவாயில் இருப்பவனாயினும், முதிர்ந்த வயதடைந்து தள்ளாடிய கிழவனாயினும், ‘அவனைக் கணவனாக ஏற்க மாட்டேன்’ என்று மறுக்க இவளுக்கு எந்தவித உரிமையுமில்லை.

இவ்வாறு கணவனிடம் ஒப்படைக்கப்பட்ட அப்பெண், தனது பெற்றோரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தன்னுடைய கணவனுக்கு அடிமையாகி விடுகின்றாள்.

தன் கணவனின் முதுமையைப் பற்றியோ, அவனுடைய கொடிய நோயைப் பற்றியோ, அவனுடைய துர்க்குணத்தைப் பற்றியோ அவளுக்கு எவ்வளவு வெறுப்பேற்பட்டாலும் அவனுடைய திருமணப் பந்தத்திலிருந்து நீங்க முடியாது.

தவிர, அக்கணவன் அவளை எவ்வளவு துன்புறுத்திச் சித்திரவதை செய்த போதிலும் அவள் தற்கொலை புரிந்து கொள்வதைத் தவிர அவனுடைய திருமணப் பந்தத்திலிருந்து விடுதலையடைய அவளுக்கு எவ்வித வழியுமில்லை.

இத்தகைய கணவன் இறந்ததன் பின்னரேனும் இவளுக்கு விடுதலையுண்டா? அதுவுமில்லை.

இவள் எந்த ஜாதி வாலிபப் பெண்ணாயினும் மறு திருமணம் செய்து கொள்ள இவளுக்கு உரிமையுமில்லை.3

அக்கணவனின் பிள்ளைகளிடமோ அல்லது அவனுடைய பந்துக்களிடமோ அடிமைப் போலிருந்தே இவளுடைய காலம் முடிவு பெற வேண்டும்.

தங்கள் சுதந்தரத்தை இவ்வாறு முற்றிலும் இழந்து காலங்கழிக்கும் துர்ப்பாக்கியமான இந்த ஹிந்துப் பெண்களுக்கு தங்கள் தந்தையுடைய சொத்திலோ, கணவனுடைய சொத்திலோ யாதொரு பாகமுண்டா? அதுவுமில்லை.

ஆகவே, இத்தகைய கொடிய சட்டங்களுக்குட்பட்டு தவிக்கும் துர்ப்பாக்கியமுடைய ஹிந்துப் பெண்களில் எவர்கள் தங்களுடைய கஷ்டத்திலிருந்து விடுதலையடையக் கருதுகின்றார்களோ அவர்களுக்கு தற்கொலை புரிந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆதலால்தான், அநேகப் பெண்மணிகள் இறந்துபோன தங்கள் கணவன்மார்களுடன் உடன்கட்டையேறி மாண்டு கொண்டிருந்தனர்.

உடன்கட்டை ஏறும் அப்பெண்மணிகள் உயிருடனிருந்தால் அவர்களுடைய பிற்கால வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படக் கூடிய கஷ்ட நஷ்டங்களை நிவர்த்திக்க ஹிந்து மதம் எவ்விதத்திலும் இடமளிக்கவில்லை.

ஆதலால்தான், அப்பெண்களைச் சார்ந்த பெற்றோர் முதலிய வர்களே உயிரோடு அவர்களை எரித்துச் சாம்பலாக்கி விட்டு, தாங்கள் ஏதோ பெரிய புண்ணிய கைக்கரியம் (காரியம்) செய்து விட்டதாக எண்ணிக் கொள்வார்கள்.

உடன்கட்டை ஏறும் பெண்கள், நெருப்பின் அனல் தாவியவுடன் எழுந்து வெளியில் ஓடிவிடுவதுண்டு. அவ்வாறவர்கள் ஓடித் தப்பித்துக் கொள்ளாதிருக்கும் பொருட்டு பெரிய பெரிய விறகுக் கட்டைகளை அடுக்கி அவற்றின் மீது அப்பெண்களை இருத்தி, அவர்களுடைய கை, கால் முதலியவற்றை அக்கட்டைகளுடன் சேர்த்து பலமாகக் கட்டி அவர்கள் மீது நெய், எண்ணெய் முதலியவற்றையும் ஊற்றி அந்தக் கட்டைகளுக்கு நெருப்பு மூட்டுவார்கள்.

மேலும், எரியும் அப்பெண்களின் அபய சப்தம் எவருடைய காதிலும் விழாதிருக்கும் பொருட்டு மேளவாத்தியங்களை மிக்க பலமாக வாசிப்பார்கள்.

இவ்வாறு தாங்கள் செய்தது நியாயம்தான். ஏனென்றால், கணவன் மனைவி இருவரின் உடல்கள் வெவ்வேறாக இருந்த போதிலும் ஆவி ஒன்றே. ஒருவர் இறந்து மற்றவர் இவ்வுலகில் வாழ்வதில் இன்பமில்லை எனக் கருதியே பெண்கள் உடன்கட்டை ஏறி மாண்டனர் என்று சில ஹிந்து நண்பர்கள் சமாதானம் கூறுவதுண்டு.

அவ்வாறாயின், இந்த ஹிந்துக்களில் எத்தனை பேர்கள் இறந்து போன தங்கள் மனைவிகளுடன் உடன்கட்டை ஏறி மாண்டனர்?

ஆகவே, உடன்கட்டை ஏறி மாண்டு கொண்டிருந்த பெண்களை விட, அவர்களுடைய கை, கால் முதலியவற்றை விறகு, கட்டைகளுடன் சேர்த்துக் கட்டி, அவர்கள் மீது நெய், எண்ணெய் முதலியவற்றையும் ஊற்றி உயிரோடிருந்த அவர்களை எரித்துச் சாம்பலாக்கிக் கொண்டிருந்த ஹிந்துக்களின் மனப்பான்மைதான் இங்கு கவனிக்கத்தக்கது.

ஹிந்து மதத்தின் ஈவிரக்கமற்ற தன்மைக்கு அநேக உதாரணங்கள் இருக்கின்றன. சமணர்களின் சரித்திரமும் ஓர் உதாரணம். இந்தியாவில் இருந்த புத்தர்களின் சரித்திரமும் ஓர் உதாரணம். பஞ்சமரின் பரிதாப கரமான நிலைமையும் ஓர் உதாரணம். எனினும், இவை அனைத்தையும் விட தங்கள் பெண்களை உடன்கட்டை ஏறும்படி செய்து அவர்களின் மீது நெய், எண்ணெய் முதலியவற்றை ஊற்றி எரித்துக் கொண்டு இருந்ததுவே சிறந்த உதாரணமாகும்.

ஏனென்றால், மற்ற உதாரணங்களிள் எல்லாம் இந்த ஹிந்துக்களுக்கும், சமணர், புத்தர் முதலியவர்களுக்கும் பூர்வ காலத்தில் ஏற்பட்டிருந்த பகைமைதான் காரணம். இந்த ஹிந்துக்கள் அவர்களை ஒரு சிறிதும் ஈவு இரக்கமற்ற விதத்தில் துன்புறுத்திச் சித்திரவதை செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் தங்கள் பெண்களையே உடன்கட்டை ஏறும்படி செய்து உயிருடனிருந்த அவர்களை இவ்வாறு எரித்துச் சாம்பலாக்கிக் கொண்டருந்ததன் காரணம்தான் என்ன? அவர்கள் இவர்களுடைய பிள்ளைகளாகவோ, சகோதரிகளாகவோ, தாய்மார்களாகவோ தானே இருந்தார்கள்.

இவ்வாறெல்லாம் செய்து கொண்டிருந்த நம் ஹிந்து நண்பர்களில் சிலர் தங்களுடைய மதத்திற்கு நிகரான கருணையுள்ள மதம் இவ்வுலகில் வேறொன்றுமில்லை என்று கூறுவதுடன், இஸ்லாம் வாளின் பலத்தைக் கொண்டே இவ்வுலகில் பரவியது என்றும் கூறுகின்றனர்.

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி முடிவுற்று 150 வருடங்களுக்கு மேலாகின்றது. அவர்களுடைய ஆட்சி முடிந்தவுடன் அவர்களுடைய வாள் பலமும் போய்விட்டது. தற்காலம் முஸ்லிம்களிடம் இருப்பது எல்லாம் மெய்யான சகோதரத்துவம், ஜாதி பேதமற்ற நீதி, நியாயம் முதலியவைதான்.

இத்தகைய நிலைமையில் இந்த பத்து வருடங்களுக்குள்ளாகவே சற்று ஏறக்குறைய ஒரு கோடி இருபது லட்சம் ஹிந்துக்கள் இஸ்லாமைத் தழுவியிருக்கின்றனர்.

ஆகவே, இஸ்லாமைத் தழுவும்படி இந்த ஒரு கோடி இருபது லட்சம் ஹிந்துக்களையும் நிர்ப்பந்தித்தது இஸ்லாமின் வாளா? அல்லது அவர்கள் பின்பற்றியிருந்த இந்த ஹிந்து மதத்தின் ஈவிரக்கமற்ற கொடிய சட்ட திட்டங்களா? என்பதை நேயர்களே, கவனிக்கவும்!

தவிர, தற்கால ஹிந்துக்களிலுள்ள பெரிய பெரிய கல்விமான்களும், அறிவாளிகளும், மேதாவிகளும் பின்பற்ற வேண்டுமென்று கூறுகின்ற சீர்திருத்தங்கள் யாவும் இஸ்லாமியச் சட்டத் திட்டங்களா? அல்லது ஹிந்து மதச் சட்டங்களா?

மேலும், இந்த மேதாவிகள் தங்கள் ஹிந்து மதச் சட்டத் திட்டங்களைப் புறக்கணித்து விட்டுஇஸ்லாமியச் சட்டத் திட்டங்களையே பின்பற்றும்படி அவர்களை நிர்ப்பந்திப்பதும் இஸ்லாமிய வாளா?

இவ்வாறு பல சீர்திருத்தங்களைப் படிப்படியாகப் பின்பற்றி இவர்கள் என்றைய தினம் முற்றிலும் திருந்துகின்றார்களோ அன்றைய தினம், அவர்கள் தங்களை ‘முஸ்லிம்கள்’ எனப் பெயர் கூறிக்கொள்ளா விட்டாலும் இஸ்லாமியச் சட்டத்திட்டங்களையே முற்றிலும் பின்பற்றி நடப்பவர்களாகக் காணலாம்.

ஆகவே, இவ்வாறு ஹிந்துக்களில் உள்ள பெரிய பெரிய மேதாவிகளையும் இஸ்லாமியச் சட்டங்களைப் பின்பற்றி நடக்கும்படி நிர்ப்பந்திப்பது முஸ்லிம்களின் வாளல்ல.

அவ்வாறு நிர்ப்பந்திப்பதெல்லாம் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஒரு சிறிதும் பொருந்தாததும், இயற்கைக்கு முற்றிலும் மாறானதும், மனிதனை மனிதன் சித்திரவதை செய்யும்படித் தூண்டக் கூடியதுமான ஹிந்து மதத்தின் கொடிய சட்டத்திட்டங்கள்தான் என்பதைத் தெளி வாகவே அறிந்து கொள்ளலாம்.

இதனைஇந்த அளவுடன் நிறுத்திக் கொண்டு ஹிந்துப் பெண்கள் உடன்கட்டை ஏறிக்கொண்டிருந்த விஷயத்தை மேலும் சிறிது கவனிப்போம்.

ஹிந்துப் பெண்கள் உடன்கட்டை ஏறி மாண்டு கொண்டிருந்ததை அரசாங்கத்தார் 1829-ம் வருடத்தில்தான் தடை செய்தனர். அவ்வாறு அதனைத் தடை செய்தும், விதவை மறுமணம் ஹிந்துக்களில் இல்லாததுடன், பொருட்களிலும் விதவைகளுக்குப் பாகம் கிடைக்காத தனால், எந்த ஒரு நன்மையும் ஏற்படவில்லை.

ஆதலால், ஹிந்து விதவைகள் மேலும் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் பலவாறான துன்பங்களுக்குள்ளாக வேண்டியதாக இருக்கின்றது. அந்தத் துன்பங்களின் காரணமாகத் தற்காலத்திலும் அநேக விதவைகள் பலவாறாகத் தற்கொலை புரிந்து கொண்டுதான் வருகின்றனர்.

ஆகவே, இவ்வாறு தற்கொலை புரிந்து கொள்ளும்படி ஹிந்துப் பெண்களை நிர்ப்பந்தித்து வந்த அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்திலிருந்தும் நிவாரணமளித்து, ‘‘இவ்வுலக வாழ்க்கையில் ஆண்களுக்கு என்னென்ன சுதந்தரங்கள் இருக்கின்றனவோ அந்தச் சுதந்தரங்கள் அனைத்தும் உங்களுக்கும் இருக்கின்றன. அவற்றை நீங்களும் உங்களுடைய இயற்கை அமைப்புக்குத் தக்கவாறு பூரணமாக அனுபவிக்கலாம்.’’

‘‘உங்களுடைய அறிவை விருத்தி செய்யக் கூடிய கல்வியைப் போதிப்பது உங்கள் பெற்றோர் மீதும், அதனைக் கற்றுக் கொள்வது உங்கள் மீதும் கடமையாகும்.’’

‘‘நீங்கள் விரும்பாத எவரையும் நீங்கள் கணவனாகக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் கிடையாது.’’

‘‘உங்கள் பெற்றோரே நீங்கள் விரும்பாத எவரையும் உங்களுக்குக் கணவனாக்கிய போதிலும் அதனை மறுக்க உங்களுக்குச் சுதந்தரம் உண்டு.’’

‘‘உங்களைக் கண்ணியமாக நடத்தாத கணவனின் திருமணப் பந்தத்திலிருந்து நீங்கி, நீங்கள் விரும்பும் கணவனைத் திருமணம் செய்து கொள்ளலாம்.’’

‘‘மனைவியை இழந்த கணவன் மறுமணம் செய்து கொள்வதைப் போல், கணவனை இழக்கும் நீங்களும் மறுமணம் செய்து கொள்ளலாம்.’’

‘‘உங்கள் தந்தையின் சொத்திலும் உங்களுக்குப் பாகமுண்டு.’’
‘‘உங்கள் தாயியின் சொத்திலும் உங்களுக்குப் பாகமுண்டு.’’
‘‘உங்கள் கணவனின் சொத்திலும் உங்களுக்குப் பாகமுண்டு.’’
‘‘உங்கள் பிள்ளையின் சொத்திலும் உங்களுக்குப் பாகமுண்டு.’’
‘‘உங்கள் சகோதரரின் சொத்திலும் உங்களுக்குப் பாகமுண்டு.’’
‘‘உங்கள் சகோதரியின் சொத்திலும் உங்களுக்குப் பாகமுண்டு.’’
‘‘உங்களுடைய பந்துக்களில் இன்னும் பலருடைய சொத்திலும் உங்களுக்குப் பாகமுண்டு.’’

என்ற சட்டங்கள் இயற்றி அமலில் கொண்டு வரும் பட்சத்தில், துர்ப்பாக்கியமான இந்நிலைமையிலுள்ள கோடிக்கணக்கான ஹிந்துப் பெண்கள், அந்நாளை எப்படிப்பட்ட நாளாக கொண்டாடுவார்கள்?

மிக்க கேவலமான நிலைமையில் ஹிந்துப் பெண்கள் ஆழ்ந்து கிடந்த ஆயிரக்கணக்கான வருடங்களை விட அச்சட்டம் இயற்றப்பட்டு அமலில் வந்த நாளை மேலாகக் கொண்டாடுவார்கள் என்பதில் என்ன சந்தேகம்?

முஸ்லிம் பெண்களின் நிலைமையும் இஸ்லாமிற்கு முன்னர், இந்த ஹிந்துப் பெண்களின் நிலைமையை விட மிக்க இழிவானதாகவே இருந்தது. அவ்வாறு இழிவான நிலைமையிலிருந்த அப்பெண்களை மேற்கூறிய சுதந்தரங்கள் அனைத்தையும் பூரணமாக அவர்களுக்கு அளித்தது அல்குர்ஆன் என்னும் வேதம்தான்!

ஆகவே, இவ்வளவு மேலான பரிசுத்த வேதத்தை இவ்வுலகில் இறைவன் அருள் செய்த லைலத்துல் கத்ர் என்னும் இரவை ஆயிரம் மாதங்களை விட மேல் என்று அவன் கூறியது மிகைப்படக் கூறியதாகுமா?

ஆயிரம் மாதங்கள் என்ன? ஆயிரம் வருடங்களை விட மேலென்று கூறினும் அது மிகைப்படக் கூறியதாகாது.
அல்குர்ஆன் என்னும் பரிசுத்த வேதம் பெண்களுக்கு அளித்திருக்கும் இந்த சுதந்தரங்களில் எதையேனும் ஹிந்து மதம் அதைப் பின்பற்றும் பெண்களுக்கு அளித்திருக்கின்றதா? அது ‘இல்லை’ என்றே மறுத்து விட்டது.

ஆகவே, ஹிந்துப் பெண்கள் தங்களுடைய துர்ப்பாக்கியமான இந்நிலைமையிலிருந்து விடுதலை அடைய எவ்வித மார்க்கமுமில்லை என்று இதுவரையில் எண்ணிக் கொண்டிருந்ததனால் தங்களுடைய இக்கஷ்டங்களை நீக்கிக் கொள்ள அவர்கள் எவ்வித முயற்சியும் செய்யாதிருந்து விட்டனர்.

எனினும், கல்வி அறிவு அபரிமிதமாக அபிவிருத்தியாகி வரும் இக்காலத்திலோ ஹிந்துக்களில் உள்ள பெண்கள் அனைவரும் என்று இல்லாவிட்டாலும், அவர்களில் எவர்கள் இயற்கைப் பொருளாராய்ச்சிக் கல்வியின் வாடையைச் சிறிதேனும் நுகர்ந்து, தங்கள் சமீபமாக வசிக்கும் முஸ்லிம் பெண்கள் இந்த சுதந்தரங்களைத் தாராளமாக அனுபவித்து வருவதையும் கவனித்தார்களோ, அவர்கள் தங்களுடைய துர்ப்பாக்கிய மான இந்நிலைமைக்கு இயற்கைக்கு மாறான தங்கள் மதச் சட்டங்களும், அவற்றை நீக்க தங்களுடைய முயற்சியின்மையுமே காரணம் என்பதை உணர்ந்து கொண்டு தற்காலத்தில் அவர்கள் கூறுவதாவது:

‘‘எங்களுடைய இயற்கை உரிமைகளை நாங்கள் அடைந்தே தீருவோம். அதனைத் தடை செய்யும் எதனையும் நாங்கள் பொருட் படுத்த மாட்டோம்.’’

‘‘எங்களுடைய அறிவை விருத்தி செய்யக் கூடிய கல்வி எங்களுக்கும் வேண்டும்.’’

‘‘நாங்கள் வெறுப்போரைக் கணவனாகக் கொள்ளும்படி எங்களை எவரும் நிர்ப்பந்திக்கக் கூடாது.’’

‘‘எங்களைக் கண்ணியமாக மதித்து நடத்தாத கணவனின் திருமணப் பந்தத்திலிருந்து நீங்கி, நாங்கள் விரும்புபவரைத் திருமணம் செய்து கொள்வோம்.’’

‘‘மனைவியை இழந்த கணவன் மறுமணம் செய்து கொள்வதைப் போல் கணவனை இழக்கும் நாங்களும் மறுமணம் செய்து கொள்வோம்.’’

‘‘எங்கள் தந்தையுடைய பொருளில் எங்களுக்குப் பாகம் வேண்டும்.’’

‘‘எங்கள் கணவனுடைய பொருளிலும், எங்களுக்கு பாகம் வேண்டும்’’ என்று இவ்வாறு இன்னும் பல சுதந்தரங்களையும் கோருகின்றனர்.

தற்காலம், ஹிந்துப் பெண்கள் கோருகின்ற இந்த சுதந்தரங்கள் அனைத்தையும் இவர்கள் கோருவதைவிட மிக்க மேலான விதத்தில் அல்குர்ஆன் என்னும் பரிசுத்த வேதம் 1400 வருடங்களுக்கு முன்னதாகவே பெண்களுக்கு அளித்திருக்கின்றது. எனினும், இந்த ஹிந்துப் பெண்கள் அதனை உணர்ந்து கொள்வதற்குத்தான் இவ்வளவு காலமானது.

இவ்வளவு காலத்திற்குப் பின்னரும் இந்த ஹிந்துப் பெண்கள், அல்குர்ஆன் என்னும் வேதம், என்னென்ன சுதந்தரங்களைப் பெண்களுக்கு அளித்திருக்கின்றது என்பதையும், அவற்றை அவர்கள் அடைவதற்கு எவ்வளவு சிறந்த முறைகளைக் காண்பித்திருக்கின்றது என்பதையும் உணர்ந்து கொண்டதாகவும் தெரியவில்லை.

ஏனென்றால், தற்காலம் ஹிந்துப் பெண்கள் கோருகின்ற சுதந்தரங்களையும் அவற்றை அடைவதற்கு அவர்கள் கைக்கொள்ளவிருக்கும் முறைகளையும் கவனித்தால், அவற்றில் பல குறைகளிருப்பதுடன், அச்சுதந்தரங்களை அவர்கள் அடைவதில் பல தடைகள் இருப்பதையும் காணலாம்.
ஆகவே, அத்தடைகள் எவை என்பதை முதலாவதாகக் கூறிவிட்டு, அவர்கள் கோரும் கோரிக்கைகளில் உள்ள குறைகளைப் பின்னர் கூறுவோம்.


ஹிந்துப் பெண்களின் விடுதலைக்குள்ள இடையூறுகள்:

தற்கால ஹிந்துப் பெண்கள் கோரும் சுதந்தரங்களில் பெரும் பாலானவை அவர்களுடைய ஆண்களுக்கும் சம்பந்தப்பட்டவையாகவே இருக்கின்றன. ஆகவே, அவர்களுடைய ஆண்கள் சம்மதமின்றி அவற்றை அவர்கள் அடைவதற்கில்லை.

தற்காலம், ஹிந்துக்களில் பல சீர்திருத்தக்காரர்கள் இந்தச் சுதந்தரங்களை ஹிந்துப் பெண்களுக்குக் கொடுக்க விரும்புகின்றார்கள் என்பதில் சந்தேகமில்லை.இவ்வாறு விரும்புகின்றவர்களின் தொகை இதற்கு எதிராக இருப்பவர்களின் தொகையில் இலட்சத்தில் ஒரு பாகமென்றும் கூறுவதற்கில்லை.

இந்த சொற்பத் தொகையினர் தங்களுடைய அரும்பெரும் முயற்சியைக் கொண்டு தங்களுக்கு இடையூராக இருக்கும் பெரும் தொகையினரைச் சம்மதிக்கும்படி செய்துவிட்ட போதிலும், அதனை அவர்கள் பின்பற்றும் ஹிந்து மதம் சம்மதிக்காது.

ஹிந்து மதம், தன்னைப் பின்பற்றும் எவரும் அந்த சுதந்தரங்களில் எதையும் தங்கள் பெண்களுக்கு அளிக்கக் கூடாது என்றே கூறுகின்றது.

இவ்வாறு தங்களுடைய மதம் தடை செய்வதையும், பொருட் படுத்தாது நம் ஹிந்து நண்பர்கள் அந்த சுதந்தரங்களைத் தங்களுடைய பெண்களுக்கு அளித்துவிட்ட போதிலும் அதனை அரசாங்கம் அங்கீகரிக்காத வரையில் யாதொரு பயனுமில்லை.

ஏனென்றால், சொத்துகளில் பாகம் அடைவது, விவாகரத்து ஆவது போன்ற சுதந்தரங்களைப் பெண்கள், அரசாங்க உதவியின்றி பூரணமாக அனுபவிக்க முடியாது.

ஆதலால்தான், இந்த சுதந்தரங்களைத் தங்கள் பெண்களுக்கு வழங்க விரும்பும் ஹிந்து சீர்திருத்தக்காரர்கள் அவற்றை அரசாங்கம் அங்கீகரிக்கும்படி செய்ய பெரும் முயற்சியும், கிளர்ச்சியும் செய்து வருகின்றனர்.

எனினும், நம் ஹிந்து நண்பர்கள் தங்களுடைய பெண்களுக்கு அளிக்க விரும்புகின்ற இந்த சுதந்தரங்களில் எவ்வளவை அரசாங்கம் இதுவரையில் அங்கீகரித்துக் கொண்டிருக்கின்றது?

அவற்றில் ஒரு சிலதை அங்கீகரிக்கவே, எத்தனையோ இடங்களில் எத்தனையோ மாநாடுகள் கூட்டி, எத்தனையோ தீர்மானங்களை நிறைவேற்றி, எவ்வளவோ காலம் வரையில் முயற்சி செய்து இவர்கள் அரசாங்கத்தோடும் போராட வேண்டியதாயிற்று.

ஆகவே, இவர்கள் அளிக்க விரும்பும் மற்ற சுதந்தரங்களையும் அரசாங்கம் அங்கீகரித்துக் கொள்ளும்படி செய்ய எவ்வளவு காலம் செல்லுமோ! இவர்கள் என்னென்ன செய்ய வேண்டியதிருக்குமோ!

இவ்வளவு கஷ்டங்களுக்கெல்லாம் காரணமென்ன? ஹிந்து மதம் அந்த சுதந்தரங்கள் பெண்களுக்கு இல்லை என்று மறுப்பதும், அவர்கள் தங்களை ஹிந்துக்கள் என்று கூறுவதுமே ஆகும்.

ஆகவே, இவ்வாறு அரசாங்கத்தோடும், தங்கள் மதத்தோடும் போராடி அந்த சுதந்தரங்களைத் தங்கள் பெண்களுக்கு அளிக்க விரும்பும் இவர்கள் பின்னும் தங்களை ‘ஹிந்துக்கள்’ என்று கூறுவதானது தங்களுடைய சீர்திருத்தங்களுக்கே பெரும் தடை விளைவிப்பதாகும்.


ஹிந்துப் பெண்களின் கோரிக்கைகளில் உள்ள குறைகள்:

தவிர, ஹிந்துப் பெண்கள் தற்காலத்தில் கோருகின்ற சுதந்தரங்களைக் கவனித்தால் அவற்றில் சில அதிகமானதாகவும், சில குறைவான தாகவும், சில அவர்களுக்கே தீங்கிழைக்கக் கூடியதாகவும் இருக்கின்றன. அவற்றையும் முறையே கூறுவோம்.

அத்துடன், அல்குர்ஆன் என்னும் வேதம் அந்தச் சுதந்தரங்களை எவ்வளவு சிறந்த முறையில் பெண்களுக்கு அளித்திருக்கின்றது என்பதையும் தெளிவுபட விளக்கிக் காண்பிப்போம்.

அதிகமாகக் கோருவது:

ஹிந்துப் பெண்கள் தங்களுடைய தந்தை முதலியவர்களுடைய சொத்தில் தங்களுக்கும் பாகம் வேண்டுமென்று கோருகின்றனர். அது அவசியம்தான். அவர்களுக்கு வேண்டியதும் நியாயமே!

எனினும், மொத்தச் சொத்தில் ஆண்கள் எவ்வளவு பாகம் அடைகின்றனரோ அதே அளவு தங்களுக்கும் வேண்டுமென்று கோருகின்றனர். அது நியாயமான கோரிக்கையல்ல அதிகப்படியானது ஆகும். ஏனென்றால், பெண்கள் பிறந்ததிலிருந்து அவர்களது திருமணம் வரையில் அவர்கள் வாலிபப் பருவத்தையடைந்து விட்ட போதிலும் அவர்களை வளர்த்துக் காப்பது பெற்றோர் மீது கடமையாக இருக்கின்றது.

ஆனால், அவர்களுக்குத் திருமணமான பின்னர் அவர்களுக்கு வேண்டிய உணவு, உறைவிடம், ஆடை முதலியவற்றை அளித்து அவர்களை வளர்த்துக் காப்பது அவர்களுடைய கணவர் மீது கடமையாகி விடுகின்றது.

மேலும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை வளர்த்துக் காப்பதும் அவர்கள் கணவர் மீதே கடமையாக இருக்கின்றது.

ஆண்களின் நிலைமை அவ்வாறன்று ஆண்கள் பிறந்ததிலிருந்து அவர்கள் வாலிபப் பருவத்தை அடையும் வரையில்தான் அவர்களை வளர்த்துக் காப்பது பெற்றோர் மீது கடமையாகும்.

ஆண்கள் வாலிபப் பருவத்தை அடைந்து விட்டாலோ அவர்களுக்குத் திருமணமாகாதிருந்த போதிலும் அவர்களை வளர்த்துக் காப்பது பெற்றோர் மீது கடமையல்ல.

தவிர, ஆண்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் தங்களுடைய மனைவிகளையும் வளர்த்துப் பாதுகாப்பதுடன், அந்த மனைவிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளையும் வளர்த்துப் பாதுகாப்பது அவர்கள் மீதே கடமையாகி விடுகின்றது.

ஆகவே, மேற்கூறியவற்றைக் கொண்டு பெண்களை விட ஆண்களுக்குத்தான் அதிகச் செலவேற்படும் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆதலால்தான், அல்குர்ஆன் என்னும் வேதம், சொத்தில் ஆண்களுக்கு இரண்டு பாகங்களையும், பெண்களுக்கு ஒரு பாகத்தையும் கொடுக்கும்படி கட்டளையிடுகின்றது.

குறைவான கோரிக்கை:

ஹிந்துப் பெண்கள், தங்கள் தந்தையுடைய சொத்திலும், கணவனுடைய சொத்திலும்தான் பாகம் வேண்டுமென்று கோரு கின்றனர். ஆகவே, அவ்விருவரும் ஏழைகளாக இருந்து விட்டாலோ, இவர்கள் வறுமை நிலைமையிலிருந்து கஷ்டப்பட வேண்டியதுதான்.

அவ்வாறு பெண்கள் கஷ்டப்படாதிருக்கும் பொருட்டு அல் குர்ஆன் என்னும் வேதம் அவர்களுக்குத் தந்தையுடைய சொத்திலும் பாகமளிக்கின்றது தாயினுடைய சொத்திலும் பாகமளிக்கின்றது கணவனுடைய சொத்திலும் பாகமளிக்கின்றது பிள்ளைகளுடைய சொத்திலும் பாகமளிக்கின்றது சகோதரனுடைய சொத்திலும், சகோதரியுடைய சொத்திலும், இன்னும் அவர்களுடைய பந்துக்களில் பலருடைய சொத்திலும் பாகமளிக்கின்றது.

ஆகவே, பெண்களுடைய பந்துக்களில் எவரேனும் செல்வந்தர்களாய் இருந்தபோதிலும் அவர்களுடைய சொத்தில் போதுமான அளவை இவர்கள் பாகமாக அடைந்து, சுகமாகக் காலம் கழிக்கலாம். வறுமை நிலைமையில் இருந்து கொண்டு கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை.

எந்த ஒரு பெண்ணின் பந்துக்கள் அனைவருமே ஏழைகளாக இருக்கிறார்களோ அந்நேரத்தில் அவளும் அந்நிலைமையில் இருப்பது குற்றமல்ல.

தீங்கிழைக்கும் கோரிக்கை- விவாகரத்துக் கோருதல்
எக்காரணத்தைக் கொண்டும் விவாகரத்து கூடாதென்றே ஹிந்து மதம் கூறுகின்றது. எனினும், தற்காலமுள்ள ஹிந்துப் பெண்களோ, எக்காரணமுமின்றி விவாகரத்து என்ற சுதந்தரம் தங்களுக்கு வேண்டும் என்று கோருகின்றனர்.
இவ்வாறு, விவாகரத்தை முற்றிலும் நிராகரிப்பதும் தவறு. எந்தக் காரணமுமின்றி அந்த சுதந்தரத்தைக் கோருவதும் தவறு. அதனைச் சிறிது தெளிவுபடுத்துவோம்.

இவ்வுலக வாழ்க்கையில் ஏற்படும் சம்பந்தங்களில் எல்லாம் திருமணச் சம்பந்தமே சிறப்புமிக்கதும் அன்னியோன்னியமானதும் ஆகும்.

திருமணச் சம்பந்தத்தில் கணவன், மனைவி இருவரின் மனமொப்பிய வாழ்க்கையே மணவாழ்க்கை. இன்றேல், அதுவே இவ்வுலகில் நரக வாழ்க்கை.

இவ்வுலகத்தில் நிகழ்கின்ற திருமணச் சம்பந்தங்களில் எல்லாம் கணவனும், மனைவியும் மனமொப்பி வாழ்க்கையை நடத்தி விடுவார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. இருவருக்கிடையில் அபிப்பிராய பேதமேற்பட்டு மணவாழ்க்கை நடத்த முடியாமலாகி விடுவதும் சாத்தியமானதே!

அவ்வாறான நிலைமையில் மேலும் அவ்விருவரையும் ஒன்று சேர்ந்து மணவாழ்க்கையை நடத்தும்படி நிர்ப்பந்திப்பதானது அந்த இருவரின் வாழ்க்கைக்கே மகத்தான தீங்கிழைத்துவிடும்.

ஆகவே, இருவரும் மனமொப்பி வாழ்க்கையை நடத்த சாத்தியப்படாத சந்தர்ப்பங்களில் விவாகரத்தை அனுமதிப்பதுதான் நியாயனமானதும் அவசியமானதும் ஆகும்.

அவ்விதம் அனுமதிப்பதிலும் கணவன், மனைவி இவ்விரு வருக்குமே அந்த சுதந்தரம் இருந்தாக வேண்டும். அவ்விதமின்றி, அந்த இருவரில் ஒருவருக்கு மட்டும் அந்த சுதந்தரமிருந்து மற்றவருக்கு இல்லாதிருக்கும் பட்சத்தில் அந்த சுதந்தரமுள்ளவர் சுதந்தரமில்லாதவரை துன்புறுத்த வழியேற்பட்டு விடும். ஆகவே, இருவருக்குமே கட்டாயம் அச்சுதந்தரம் இருந்தாக வேண்டும்.

ஆதலால்தான், விவாகரத்தை அனுமதித்த அல்குர்ஆன் என்னும் வேதம் கணவன், மனைவி இருவருக்குமே அந்த சுதந்தரத்தை அளித்திருக்கின்றது.

அவ்வாறு இருவருக்கும் அந்த சுதந்தரம் இருந்தபோதிலும் அற்ப விஷயங்களுக்கெல்லாம் இருவரும் பிரிந்துவிடக்கூடிய விதத்தில் அது இருப்பதும் கூடாது.

இவ்வுலக வாழ்க்கையில் மனிதர்களுக்குள் ஏற்படும் சம்பந்தங்களிளெல்லாம் திருமணமே சிறப்புமிக்கதாக இருக்கின்றது. இதே போல் அதன் பிரிவினையினால் ஏற்படக் கூடிய தீங்கும் மகத்தான தாகவே இருக்கின்றது.

அதிலும், பிள்ளைகள் உருவான பின்னர் ஏற்படும் பிரிவினையால் விளையக் கூடிய தீங்கு மிகக் கொடியது.

ஆகவே, போதுமான காரணங்கள் இருக்கும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் பிரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் விவாகரத்து முறையை நடைமுறைப்படுத்துவதும் அவசியமாகும்.

ஆதலால்தான், அல்குர்ஆன் என்னும் வேதம் விவாகரத்தை அவ்வாறான முறையில் ஏற்படுத்தியும் இருக்கின்றது.

தவிர, அம்முறையை ஆண், பெண் இரு பாலருக்கும் ஒரே மாதிரியாகவும் ஏற்படுத்தி விடவில்லை. அவரவர்களின் இயற்கைக்குத் தக்கவாறே பெண்களுக்கு ஒருவாறும், ஆண்களுக்கு ஒருவாறுமாக ஏற்படுத்தியிருக்கின்றது. அவற்றை முறையே கூறுவோம்.

ஃபஸ்கு - பெண்கள் விவாகரத்து செய்யும் முறை:

எவள் தன் கணவனின் திருமணப் பந்தத்திலிருந்து நீங்கிக் கொள்ள விரும்புகின்றாளோ அவள் ‘காஜி’ (இஸ்லாமிய நீதிபதி)யுடைய உத்தரவைப் பெற்றே பிரிவினையாக வேண்டும்.

காஜி இல்லாத இடங்களில், தன்னைச் சார்ந்தவர்களையும், தன் கணவனைச் சார்ந்தவர்களையும் கொண்டதொரு பஞ்சாயத்தின் உத்தரவைப் பெற்ற பின் பிரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு, பெண்கள் பிரிந்து கொள்வதற்கு ‘ஃபஸ்கு’ என்று பெயர் கூறப்படும்.

ஆகவே, விவாகரத்தை விரும்பும் பெண், தானாக தன் விருப்பப்படி பிரிந்து கொள்ள முடியாது. அவள் ‘காஜி’யிடமோ, பஞ்சாயத்திடமோ சென்று அவர்களுடைய அனுமதியைப் பெற்றுத் தான் பிரிவினையாக வேண்டும்.

ஆகவே, விவாகரத்தைக் கோரும் பெண் அவர்களிடம் சென்ற சமயத்தில், அவர்கள் இவளுடைய கணவனையும் அழைத்து இருவருக்கிடையில் ஏற்பட்ட மன வருத்தத்தை நிவர்த்தி செய்து சமாதானத்தை உண்டு பண்ணவே முதலாவதாக முயல்வார்கள். அது சாத்தியப்படா விட்டால்தான் பிரிவினைக்கு அவர்கள் அனுமதி அளிப்பார்கள்.

ஆதலால்தான், விவாகரத்தைக் கோரி காஜி அல்லது பஞ்சாயத்திடம் சென்ற பெண்களில் அநேகர் அவர்களின் முயற்சியைக் கொண்டு பின்னும் தங்கள் கணவன்மார்களுடன் அன்னியோன்னியமாக சீர்சிறப்புடன் வாழ்கின்றனர்.

தலாக் - ஆண்கள் விவாகரத்து செய்யும் முறை:

ஆண்கள் விவாகரத்தை விரும்பினால், அதற்காக அவர்கள் காஜியிடமோ பஞ்சாயத்திடமோ செல்ல வேண்டுமென்ற அவசியம் இல்லை.

ஏனென்றால், காஜியிடமோ அல்லது பஞ்சாயத்திடமோ சென்றுதான் ஆண்களும் விவாகரத்தைச் செய்ய வேண்டுமென்று நிபந்தனை இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் செல்லும் ஆண்கள் தங்கள் மனைவிகளின் மீது பல அபாண்டமான குற்றங்களைச் சுமத்தக் கூடும். அவை வெளியில் பரவி அப்பெண்களை மற்றெவரும், மறுமணம் செய்து கொள்ள முடியாமல் தடை செய்து அவர்களுடைய பிற்கால வாழ்க்கைக்கே தீங்கிழைத்து விடும்.

ஆதலால், விவாகரத்தை விரும்பும் ஆண்கள் தானாகவே தங்கள் மனைவிகளைத் ‘தலாக்’ (உன்னை என் திருமணப் பந்தத்திலிருந்து நீக்கி விட்டேன்’) என்று கூறி அவர்களை நீக்கி விடலாமென்று அனுமதித்திருப்பதுடன், அம்மனைவிகளின் மீது எவ்விதக் குற்றத்தையும் அவர்கள் சுமத்தக் கூடாதென்றும் வெகு கண்டிப்பான உத்தரவு செய்திருக்கின்றது.

இவ்வாறு தானாகவே மனைவிகளை நீக்கிவிட ஆண்களுக்கு அனுமதியளித்திருந்த போதிலும், அதைப் பற்றி அவர்கள் மறு ஆலோசனை செய்வதற்காக, மூன்று மாதத் தவணையும் அவர்களுக்கு அளிக்கின்றது.

அம்மூன்று மாதத் தவணை வரையில் அவளை, கணவனே பராமரித்து வருவதுடன், தன்னுடைய இல்லத்திலேயே அவள் இருக்கவும் அனுமதியளிக்க வேண்டும். அவளும் அவனுடைய இல்லத்திலேயே அம்மூன்று மாதம் வரையில் இருக்க வேண்டும்.

அம்மூன்று மாதத் தவணைக்குள் அவன் மறுஆலோசனை செய்து, பின்னும் அவளை மனைவியாக வைத்துக் கொள்ளக் கருதினால், அவ்வாறே செய்யலாம். இதற்கு ‘ரஜஈ’ (திரும்ப மீட்டுக் கொள்ளல்) என்று பெயர் கூறப்படும்.

அத்தவணைக்குள், அவளை இவன் மனைவியாக்கிக் கொள்ளா விட்டால் அவள் இவனுடைய திருமண உறவிலிருந்து முற்றிலும் நீங்கி விடுகின்றாள். அதற்குப் பின் அவள் தனக்கு விருப்பமான யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம்.

திருமணம் சம்பந்தமாகவும், விவாகரத்து சம்பந்தமாகவும் நுட்பமான இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. அவை யாவும் இருவருக்கும் நன்மை பயக்கக் கூடியவையாகவும், இயற்கையை அடிப்படையாகக் கொண்டவையாகவுமே இருக்கின்றன. அவற்றை அவற்றுக்குரிய நூற்களில் காண்க!

பலதார மணம்:

‘பலதார மணம் கூடாது ஒரே மனைவியைக் கொண்டுதான் ஆண்கள் வாழ்க்கை நடத்த வேண்டும்’ என்று ஹிந்துப் பெண்களில் பலர் தற்காலம் கூறுகின்றனர்.

அவ்வாறு ஒரே மனைவியைக் கொண்டு வாழ்க்கை நடத்துவது மிக்க அவசியமானதே!

எனினும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒரே மனைவியைக் கொண்டுதான், வாழ்க்கை நடத்த வேண்டுமென்று கூறுவது இயற்கைக்கு மாறான கூற்றாகும்.

பொதுவாக, பெண்கள் ஆண்களை விட பலவீனமானவர்களாகவே படைக்கப்பட்டிருக்கின்றனர். அதிலும் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்கள், பின்னும் அவர்களைப் பலவீனர்களாக்கி விடுகின்றன.

மாதவிடாயாகும் பெண்களின் தேகம், மாதத்திற்கு ஒருமுறை நொடிக்கின்றது. அவர்கள் கர்ப்பமாகி விட்டாலோ, மற்ற காலத்தில் அவர்கள் சாதாரணமாகச் செய்து கொண்டிருந்த வேலையையும் செய்யச் சக்தியற்றவர்களாகி விடுகின்றனர்.

பிரசவ காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் துன்பத்தை அவர்கள்தான் நன்கறிவார்கள். பிரசவ வேதனையைத் தாங்க முடியாமல் எத்தனையோ பெண்கள் இறந்து விடுகின்றனர்.

பிரசவமான பின்னரும் பிரசவக் கழிவு (நிஃபாஸ்) நீங்கும் வரையில் அவர்களால் நடமாடுவதற்கு முடியாமல் இருக்கின்றது.

இவ்வாறு நொடித்த இவர்களுடைய உடல், அதற்குப் பின்னும் சீக்கிரத்தில் தேறுவதில்லை. ஏனென்றால், இரத்தமே பாலாக மாறு கின்றதனால், குழந்தைகளுக்குப் பாலூட்டும் வரையில் அவர்கள் பலவீனர்களாகவே இருக்கின்றனர்.

ஆகவே, குழந்தை பெறும் பெண்கள் கர்ப்பமானதிலிருந்து பிரசவமாகி, குழந்தைக்குப் பால் மறக்கடிக்கும் வரையில், சற்று ஏறக் குறைய மூன்று வருடக் காலம் இவர்களுடைய உடல் படிப்படியாக பலவீனமடைந்து கொண்டே வருகின்றது.

குழந்தைக்குப் பால் மறக்கடித்த பின்னரும் அவர்கள் தங்களுடைய முந்திய நிலைமையை அடைந்து விடுவார்கள் என்று எதிர்பார்ப்பதற்கு இல்லை.

அடுத்து, கர்ப்பமாகி விட்டாலோ முன்னர் கர்ப்பமான காலத்தில் இருந்ததை விட மேலும் அதிகப் பலவீனர்களாகவே ஆகி விடுகின்றனர்.

சில பெண்கள், தங்களுடைய குழந்தைகளுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் போதே கர்ப்பமாகி விடுகின்றனர். அந்நேரத்தில் அவர்களுடைய நிலைமை மிகவும் மோசமடைந்து விடுகின்றது.

அவர்களிடம் பால் குடிக்கும் குழந்தைகளும் பல துன்பங்களுக்கு உள்ளாகி விடுகின்றன.

இவ்வாறு பல விதத்திலும் பலவீனமடைந்துவிடும் பெண்கள், முற்றிலும் சுகவாசிகளாக உள்ள தங்கள் கணவன்மார்களின் இச்சையை எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும்.

இத்தகைய பெண்கள், தங்களுடைய பலவீனத்தையும், சுகக் குறைவையும் பொருட்படுத்தாது, தங்கள் கணவன்மாரின் விருப் பத்தைப் பூர்த்தி செய்ய முற்பட்டாலோ அவர்களுடைய நிலைமை அபாயகரமாகி விடுகின்றது.

இதற்கு ஆளான பெண்களில் எத்தனையோ பேர்கள் தங்கள் உடல் சுகத்தை, பின்னும் கெடுத்துக் கொண்டதுடன் தங்கள் உயிரையும் இழந்திருக்கின்றனர்.

ஆகவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆண்கள், மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாலோ அவனுடைய முந்திய மனைவி கஷ்டம் நீங்கி பலவீனமான தன்னுடைய உடலைத் தேற்றிக் கொள்வதற்கும் அவளுக்குப் போதுமான அவகாசம் கிடைக்கின்றது.

ஆகவே, இத்தகைய சந்தர்ப்பங்களில் பல மனைவிகளைத் திருமணம் செய்து கொள்வதானது, ஆண்களை விட பெண்களுக்கே மிக்க நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கின்றதென்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

தவிர, பெண்களின் கர்ப்பப் பையில் ஏற்படும் பலவித நோய்களின் காரணமாக, சில பெண்கள் கர்ப்பம் தரிப்பதில்லை. கர்ப்பம் தரித்தாலும் அவர்களுடைய குழந்தைகள் நிலைப்பதுமில்லை. இக்காரணத்தைப் பற்றியும் மற்றொரு மனைவியை விவாகம் செய்து கொள்வது அவசியமாகி விடுகின்றது.

வேறு பல சந்தர்ப்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளைத் திருமணம் செய்து கொள்வது மிக்க அவசியமாகி விடுகின்றது.

இவ்வுலகத்தில் இதுவரையில், எந்த நாட்டிலும், எக்காலத்திலும் ஆண்களை விட பெண்களின் தொகையே அதிகமாக இருந்து வருகிறது.

சில சமயங்களில், சில இடங்களில், ஆண் பெண் இரு பாலரின் தொகை சமமாகத் தோன்றிய போதிலும், அவர்களில் திருமணப் பருவமடைந்தவர்களின் தொகையைக் கவனித்தாலோ, பெண்களின் தொகையே அதிகமாக இருப்பதைக் காணலாம்.

தவிர, இதுவரையில் உலகத்தில் ஏற்படும் யுத்தங்களிளெல்லாம், ஆண்கள் மடிகின்றனரே அன்றி பெண்கள் மடிவதில்லை. ஆகவே, ஆங்காங்கு நிகழ்கின்ற யுத்தத்தின் தகுதிக்குத் தக்கவாறு பெண்களின் தொகை அவ்விடங்களில் அதிகரித்து வருகின்றது.

சமீபத்தில் நிகழ்ந்த முதல் உலகப் போரின் காரணமாக அந்த நாடுகளில், பெண்களின் தொகை எவ்வளவு அதிகரித்து விட்டது என்பதையும், அதனால் அந்த நாடுகளில் என்ன நிலைமை ஏற்பட்டது என்பதையும் கவனிக்கவும்.

பல மனைவிகளைத் திருமணம் செய்து கொள்வது ஆகுமானது என்பதற்கு இவ்வளவு காரணங்களிருக்க, தற்காலமுள்ள ஹிந்துப் பெண்களோ ஒரு மனைவிக்கு மேற்பட்டு ஆண்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாதென்று வாதாடுகின்றனர்.

எனினும், அவர்கள் பின்பற்றியிருக்கும் ஹிந்து மதமோ, பலதார மணத்தை அனுமதிப்பதுடன், ஒருவன் இத்தனை பெண்களைத்தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அதற்கு யாதொரு வரையறையும் ஏற்படுத்தவில்லை.

இவ்வாறிருக்க, இந்த ஹிந்துப் பெண்கள் பலதார மணத்தைத் தடை செய்ய விரும்புவதன் காரணமெல்லாம், மேல் நாட்டு நாகரிகத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற மோகம்தான் என்பதில் என்ன சந்தேகம்?

மேல் நாட்டைத் தவிர இவ்வுலகில் வேறெந்த நாட்டிலும், எந்த மதத்திலும் பலதார மணம் தடை செய்யப்படவே இல்லை.

மேல் நாட்டில் மட்டும்தான் ‘பலதார மணம்’ சட்டம் மூலமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அது, அந்த மேல் நாட்டினர் பின்பற்றும் கிறிஸ்தவ மதச் சட்டத்திற்கும் விரோதமாக இருப்பதுடன், இயற்கைக்கும் மாறானதாகவே இருக்கின்றது.

இயற்கைக்கு எவர்கள் மாறு செய்கின்றார்களோ அவர்களை இறைவன் இவ்வுலத்திலேயே தண்டித்து அறிவுறுத்தியும் விடுகின்றான்.

பலதார மணத்தைச் சட்டம் மூலமாகத் தடை செய்த இந்த மேல் நாட்டினருக்குப் பலதார மணம் புரிந்து கொள்வது இன்றைய தினம் எவ்வளவு அவசியமாகி விட்டதோ அந்தளவு இதுவரையில் இவ்வுலகில் வேறு எவருக்கும் அவசியமேற்பட்டதே இல்லை.

ஏனென்றால், சமீபத்தில் நிகழ்ந்த ஐரோப்பிய மஹா யுத்தத்தின் காரணமாக பிரான்ஸ் ஒரு நாட்டில் மட்டிலும் திருமணப் பருவத்தை அடைந்து கணவனில்லாமலிருக்கும் கன்னிகைகளின் தொகை இருபது லட்சமாம்.

இங்கிலாந்திலும் அவ்வாறான கன்னிகைகள் சற்றேறக்குறைய இருபது லட்சமிருப்பதாகவே கூறுகின்றனர்.

இனி, ஜெர்மன், ஆஸ்ட்டிறியா, ரஷ்யா, இத்தாலி, பெல்ஜியம், பல்கேரியா, ஸர்வியா, ருமேனியா, கிரீஸ் முதலிய நாடுகளில் இத்தகைய கன்னிகைகள் எத்தனை இலட்சம் இருக்கின்றனரோ?

இவை யாவும் அந்த நாடுகளில் திருமணமாகாத கன்னிகைகளின் தொகைகளாகும். ஆகவே, திருமணமாகி யுத்தத்தில் தங்கள் கணவன்மார்களை இழந்த விதவைகள் அந்நாடுகளில் எத்துணை லட்சம் இருக்கின்றனரோ?

இத்தகைய விதவைகளின் தொகையும் அந்நாடுகளில் குறைந்த பட்சம் அக்கன்னிகைகளின் தொகையில் பகுதியேனும் இருக்கலாம். இவ்வாறான நிலைமையிலுள்ள அந்நாடுகளில் ஒரு கணவன் பல மனைவிகளைத் திருமணம் செய்து கொள்வது எவ்வளவு அவசியமாக இருக்கின்றது? என்பதைக் கவனிக்கவும்.

மற்றும் பல காரணங்களைக் கொண்டே ஆண்கள் தங்களுடைய சக்திக்கும் தகுதிக்கும் தாங்கள் வசிக்கும் நாட்டின் நிலைமைக்கும் தக்கவாறு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இவ்வேதம் அனுமதியளித்திருக்கின்றது.

எனினும், நான்குக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொண்டு, அவர்களுக்கிடையில் வித்தியாசமின்றி நீதியாகவும் நியாயமாகவும் அவர்களைப் பாதுகாத்து பராமரிப்பது ஒருவனால் சாத்தியமானதல்ல. ஆதலால், எச்சமயத்திலும் ஏகக் காலத்தில் ஒருவன் நான்குக்கு அதிகமான பெண்களை மனைவிகளாக வைத்திருக்கக் கூடாதென்று ஓர் எல்லையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த எல்லைக்கு உட்பட்டு ஒருவன் ஒரு மனைவியிருக்க, மற்றொரு மனைவியைத் திருமணம் செய்து கொள்வதானாலும், முந்திய மனைவிக்கு எவ்விதக் பாதகமேற்படாத விதத்தில் மனைவிமார்களை எவ்வாறு பாதுகாத்து பராமரிக்க வேண்டுமென்ற முறைகளையும் தெளிவாக அறிவித்திருக்கின்றது.

அவையாவன:

திருமணம் செய்து கொள்ள விரும்புபவன், பெண் கோரும் ஒரு தொகையை அவளுக்கு அளிப்பது அவன் மீது கடமையாகும். அதற்கு ‘’மஹர்’’ எனப் பெயர் கூறப்படும்.

அத்தொகை பத்தாகவும் இருக்கலாம், நூறாகவும் இருக்கலாம், ஆயிரமாகவும் இருக்கலாம், இலட்சமாகவும் இருக்கலாம். அதனை இவ்வளவு என்று குறிப்பிடுவது பெண்ணின் விருப்பத்தைப் பொறுத்திருக்கின்றது.

தவிர, அத்தொகை முழுவதும் பெண்களுக்குச் சொந்தமாகும். ஆதலால், அதனை இந்த வகையில்தான், செலவு செய்ய வேண்டுமென்று அவளை எவரும் நிர்ப்பந்திக்கக் கூடாது. அவள் தனக்கு விருப்பமான விதத்தில் அதனைச் செலவு செய்து கொள்ளலாம்.

பெண் சம்மதித்தால் அத்தொகையைப் பின்னர் தருவதாகக் கூறியும் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம். இன்றேல், அத்தொகை முழுவதும் அதே சமயத்தில் செலுத்தியாக வேண்டும்.

இவ்வாறு, திருமணம் செய்து கொள்ளும் சமயத்தில் பெண் கோரும் ஒரு தொகையை அவளுக்கு (மஹராக) கொடுத்துவிட வேண்டியதுடன், அவளுடைய தகுதிக்கும் அந்தஸ்துக்கும் தக்கவாறு உணவு, ஆடை முதலியவற்றையும் அவளுக்கு அளித்து வருவது கணவன் மீது கடமையாகும்.

இதனையன்றி, அவளுடைய தகுதிக்கும் அந்தஸ்துக்கும் தக்கவாறு இருப்பிடமும் அவளுக்கு அளிக்க வேண்டும். தவிர, அவள் பெற்றெடுக்கும் குழந்தைகளைப் பராமரித்து பாதுகாப்பதும் அவள் மீது கடமையல்ல கணவன் மீதே கடமையாகும்.

அக்குழந்தைகளுக்குப் பாலூட்டும்படி அவளை நிர்ப்பந்திக்கக் கூடாது. அவள் விரும்பினால்தான் குழந்தைகளுக்கு அவள் பால் ஊட்டலாம். இன்றேல் குழந்தைகளின் பாலுக்காகவும் வேறு ஏற்பாடு செய்வது கணவன் மீதே கடமை.

இவையன்றி அக்கணவன் இறந்து விட்டால் அவனுடைய சொத்திலும் இவளுக்குப் பாகமளிக்க வேண்டும்.

இவ்வாறே இன்னும் பல விதிகளிருக்கின்றன. அவை யாவும் பெண்களுக்கு மிக்க நன்மை பயக்கக் கூடியவையாகவும், இயல்பாகவே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை ஆண்கள் திருமணம் செய்து கொள்வதைக் கூடுமான அளவு தடை செய்யக் கூடியவையாகவும் இருக்கின்றன.

ஆதலால்தான், கோடிக்கணக்காக முஸ்லிம்கள் வசிக்கின்ற நாடுகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை உடையவர்கள் வெகு சொற்பத் தொகையினராகவே இருக்கின்றனர். அவ்வாறு இந்த சொற்பத் தொகையினரே பல மனைவிகளைத் திருமணம் செய்து கொண்ட போதிலும் கணவன் மீது பல கடமைகளை விதித்து மனைவிகளுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாதவாறு அவர்களைப் பாதுகாக்கப்படுகின்றது.

இவ்வாறெல்லாம் இருந்தும், எந்த ஒரு பெண்ணுக்குத் தன் கணவனுடன் வாழ்க்கையை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டால் அவள் அவனிடமிருந்து விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். அந்த சுதந்தரத்தையும் பெண்களுக்கு அல்குர்ஆன் என்னும் இந்த வேதம் அளித்தே இருக்கின்றது.

ஆகவே, அல்குர்ஆன் என்னும் இவ்வேதத்தைப் பின்பற்றி நடப்பவர்களில் எவரேனும் பலதாரமணம் புரிந்து கொண்டால் அதனால் பெண்களுக்கு நன்மை ஏற்படுமே தவிர எவ்விதத்திலும் தீங்கு ஏற்படுவதற்கில்லை.

ஹிந்துக்கள் நிலைமை அவ்வாறன்று. ஏனென்றால், அவர்கள் பின்பற்றும் மதம், பெண்களுக்கு எவ்வித சுதந்தரமுமில்லை என்று முற்றிலும் மறுத்துவிட்டதுடன், விவாகரத்து பெறுவதையும் அது எச்சமயத்திலும் அனுமதிக்கவே இல்லை.4

1) அவ்வாறிருக்க, பலதார மணத்தை அம்மதம் அனுமதித்து இருப்பதானது பெண்களுக்கு பின்னும் பல துன்பங்களையே உண்டுபண்ணக் கூடியதாக இருக்கின்றது.

ஹிந்து மதத்தைப் போலவே கிறிஸ்தவ மதமும் பெண்களின் சுதந்தரத்தை முற்றிலும் நிராகரித்து விட்டு பலதார மணத்தை அனுமதித்திருக்கின்றது.

தவிர, கிறிஸ்தவ மதம் பெண்களை பின்னும் மிக்க கேவலப் படுத்தியே இருக்கின்றது. இவ்வுலகத்தில் நிகழக்கூடிய பாவங்களுக்கு எல்லாம் பெண்கள்தான் காரணம் என்பது கிறிஸ்தவ மதச் சித்தாந்தம்.5

2) பெண்களால் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகவே, அவர்களுடைய இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டு பலியானார் என்றும் கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர்.

ஆகவே, தங்களுடைய இயேசு நாதரைப் பலி கொடுக்காமல் பெண்களால் ஏற்பட்ட பாவங்களுக்கு பரிகாரம் கிடைக்காதென்று கிறிஸ்தவ நண்பர்கள் கருதுகிறார்கள் என்றால், பெண்களின் மதிப்பு அவர்களிடத்தில் எவ்வாறிருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.


மேனாட்டுப் பெண்கள்:

எனினும், அந்தக் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றியுள்ள மேல் நாட்டில் தற்காலம் பெண்களின் நிலைமை முற்றிலும் மாறியிருக்கின்றது.

மேல் நாட்டினர் முழுமையான சுதந்தரத்தை தங்கள் பெண்களுக்கு அளித்து விட்டதாகக் கூறி, அவர்களைத் தெருக்களில் நின்று திண்டாடித் தவிக்கும்படி செய்து விட்டனர்.

முன்னர் பெண்கள் முற்றிலும் அடிமைகளாக இருந்த போதிலும் ‘கணவன்’ என்ற மெய்யானதொரு பாதுகாவலன் அவர்களுக்கு இருந்தான். தற்காலத்திலோ, கணவன் என்பது அவர்களுக்கு வெறும் கனவாகவே இருக்கின்றது.

திருமணமாகாத கன்னிகையாயிருந்த போதிலும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான எவருடனும் தனித்து, எங்கு சென்றும் உல்லாசமாக உறவாடித் திரியலாம். கன்னிப் பெண்கள் தங்களுக்குக் கணவனாகக் கூடியவனின் திறமையையும், தன்மையையும் சோதிப்பதற்காக (ஊழரசவளாip) அவர்களுடன் தனித்து, மாதக் கணக்காகவும் உல்லாசமாகக் காலம் கழிக்கலாம்.

இவ்வாறு திரியும் கன்னிகைகளில் பலர் கர்ப்பமானதன் பின்னரே திருமணம் செய்து கொள்கின்றனர்.

இவ்வாறு கர்ப்பமான கன்னிகைகளிலும் பலர் வேறு கணவனையே தேட வேண்டியதும் ஏற்பட்டு விடுகின்றது. கன்னிகைகள் இவ்வாறு கர்ப்பமாகி இருப்பதை அறியாது அவர்களைத் திருமணம் செய்து கொண்டவர்களில் பலர் திருமணமாகி நாலைந்து மாதத்தில் தங்கள் மனைவி ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதைக் கண்டு, அது தனக்குப் பிறந்த குழந்தையல்ல என்று கூறி தங்கள் மனைவியையும் நீக்கி விடுகின்றனர்.

ஹாலெந்து போன்ற நாடுகளிலும் கன்னிகைகள் குழந்தைகள் பெற்ற பின்னரே திருமணம் செய்து கொள்வதும், இவ்வாறான தொல்லையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் பொருட்டே போலும்!

இத்தகைய திருமண உறவின்றியும் ஆயிரக்கணக்கான பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டே இருக்கின்றனர். இக்கன்னிகைகள் பெற்றெடுக்கும் குழந்தைகளில் அநேகருக்கு தங்கள் தந்தை இன்னாரின் என்பதும் தெரியாது.

மேல் நாட்டிலுள்ள பெண்கள் அனைவருடைய வாழ்க்கையும் இத்தகையதுதான் என்று நாம் கூறவில்லை. எனினும். இவ்வாறான வாழ்க்கை நடத்தும் பெண்களின் தொகைதான், தற்காலம் அதிகரித்து வருகின்றது.

பெண்கள், இவ்வாறான வாழ்க்கையை நடத்தக் கூடாதென்று தடை செய்ய அவர்களுடைய நாட்டில் யாதொரு சட்டமும் கிடையாது. ஏனென்றால், கற்பு என்னும் பதத்திற்கு நாம் கொள்ளும் அர்த்தம் அவர்களுடைய அகராதியில் இல்லை.

கன்னிகைகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை நிர்பந்திப்பதுதான் அவர்களிடம் குற்றமாகும். கணவனாக இருந்த போதிலும் மனைவியுடைய அனுமதியின்றி அவளுடைய சமீபமாகச் செல்வதும் கண்ணியக் குறைவாம்.

இத்தகைய சுதந்தரத்தினால் பெண்களுக்கு எத்தகைய துன்பங்கள் நேரிடுமென்பதை நீங்களே கவனிக்கவும்.

அவர்களுடைய வாலிபக் காலம் சிரமமின்றி கழிந்து விடலாம். எனினும், அதற்குப் பின்னரே அவர்கள் பெற்றெடுத்திருக்கும் குழந்தைகளை அவர்கள் பாதுகாக்க வேண்டியதிருப்பதுடன், தங்களுடைய வாழ்க்கைக்கும் வழிதேட வேண்டியதாகி விடுகின்றது.

பெண்கள், தங்கள் வாலிபத்தையும் இழந்து குழந்தைகளுக்குத் தாய்மார்களாக இருக்கும் சமயத்தில் அவர்களையும், அவர்களுடைய குழந்தையையும் பாதுகாக்கக் கூடிய மெய்யான கணவன்மார்கள் இல்லாவிடில் அவர்கள் எத்தகைய துன்பங்களுக்குள்ளாக வேண்டும் என்பதைக் கவனிக்கவும்.

ஆலைகளில் பாய்லர்கள் முன்பாகவும், சுரங்கங்களில் ஆயிரக் கணக்கான அடிகளுக்குள்ளாகவும் லட்சக்கணக்கான பெண்கள் மேல் நாட்டில் இரவு பகலாக உழைப்பதின் காரணமெல்லாம் மெய்யான கணவன் என்றதொரு பாதுகாப்பவன் இல்லாததே ஆகும்.

தங்கள் வாலிபத்தை இழந்து ஆலைகளில் கூலி வேலை செய்ய வந்த இப்பெண்கள் தங்கள் தேகப் பலத்தை இழந்து விட்டாலோ, அவ்வாலைகளில் வேலை செய்து சம்பாதிப்பதற்கும் வழி இல்லை.

அவர்கள் யாதொரு அனாதை ஆசிரமத்தில் சரண் புகுந்து அனாதையாகவே இருந்து அனாதையாகவே உயிர் துறக்க வேண்டியது தான்.

சுதந்தரம் என்னும் பெயரைக் கொண்டு தற்காலம் மேல் நாட்டிலுள்ள பெண்கள் அனுபவித்து வரும் துன்பங்கள், அவர்கள் முற்றிலும் சுதந்தரமிழந்து அடிமைகளாக இருந்த காலத்திலும் அனுபவித்ததே இல்லை.

ஆதலால், மேல் நாட்டினர் முன்னர் தங்கள் பெண்களுக்கு இந்தச் சுதந்தரங்களை அளிக்க எவ்வளவு முயன்றார்களோ அதைவிட அதிகமாகவே தற்காலம் இந்த சுதந்தரத்தையும், இந்த சுதந்தரத்தினால் ஏற்பட்ட தீங்கையும் தவிர்க்க முயல்கின்றனர்.

எனினும், பெண்களின் இயற்கை அமைப்பை அடிப்படையாகக் கொண்டு அல்குர்ஆன் ஏற்படுத்தியிருக்கும் சட்டத் திட்டங்களை எந்த ஒரு மாறுதலுமின்றி அவ்வாறே அவர்கள் பின்பற்றாத வரையில், அவர்கள் தலைமேல் சூழ்ந்து கொண்டிருக்கும் ஆபத்திலிருந்து அவர்கள் தப்பித்துக் கொள்ளவே முடியாது.

மேல் நாட்டிலுள்ள பெண்களின் வாழ்க்கை முறையைப் பற்றி நாம் இதுவரையில் கூறியவை யாவும் மிகைப்படக் கூறியவையல்ல கூற வேண்டிய விஷயங்கள் இன்னும் அநேகமுண்டு.

அவர்களுடைய கூந்தலைச் சிறிது கவனிக்கவும். மங்கையரின் அழகில் கூந்தலே பிரதானம். எனினும், மேல் நாட்டுப் பெண்கள் தங்கள் கூந்தலையும் கத்தரித்தெறிந்து விடுவதைக் காணலாம். கத்தரித்தது போதாதென்று பல பெண்மணிகள் ஆண்களைப் போலவே மொட்டையும் அடித்துக் கொள்கின்றனர்.

அவர்களுடைய ஆடையைச் சிறிது கவனிக்கவும். மேல் நாட்டிலுள்ள பெண்களில் பலர் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் யாதொரு ஆடையுமின்றியே திரிந்தார்கள். எனினும், அவர்கள் ஆடை அணிய ஆரம்பித்ததிலிருந்து அதன் அளவு சிறிது சிறிதாக அதிகரித்தே வந்தது.

சிறிது காலத்திற்கு முன் வரையில் மேல் நாட்டுப் பெண்கள் விசேஷமாக நடமாடும் தெருக்களை தோட்டிகள் கூட்டவேண்டிய அவசியமும் ஏற்படாது. அப்பெண்மணிகள் அணியும் கவுன்களே, அத்தெருக்களிலுள்ள குப்பை கூளங்களைச் சுத்தப்படுத்தி விடும். அந்தளவுக்கு அவர்களுடைய கவுன்கள் நீண்டு விரிந்திருந்தன.

சில சீமாட்டிகள் அணியும் கவுன்களை நாலைந்து பணியாளர்கள் சுமந்து கொண்டு அவர்கள் பின் செல்ல வேண்டிய அளவுக்கும் அவை நீண்டு கொண்டு வந்தன. இந்த ஐரோப்பிய யுத்தம் மட்டும் ஏற்படாமல் இருந்தால் இதுவரையில் அவை எவ்வளவு தூரம் நீண்டிருக்குமோ?

இந்த யுத்தம், அவற்றின் வளர்ச்சியைத் தடை செய்து விட்டதுடன், அவர்கள் தங்கள் ஆடையின் அளவைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு வரும்படியும் செய்து விட்டது.

இடுப்பிலிருந்து மார்பு வரை மாத்திரம் மறைக்கக் கூடிய சொற்பத் துணியைக் கொண்டதொரு சட்டைதான் தற்கால நாகரிகத்தில் முதிர்ச்சி அடைந்த பெண்களின் ஆடை. அந்த அளவுக்கும் உடலை மறைப்பது கூடாதென்று முற்றிலும் நிர்வாணமாகவே இருக்கவும், நிர்வாணமாகவே தெருக்களில் திரிந்தலையவும் பல பெண்கள் விரும்புகின்றனர்.

இவ்வாறு விரும்புபவர்களின் தொகையும் நாளுக்கு நாள் மேல் நாட்டில் அதிகரித்தே வருகின்றது.

மேல் நாட்டு பெண்களின் இத்தகைய வாழ்க்கைகளை அநாகரிகம் என்று வெறுக்கக் கூடிய உத்தமர்களும் அந்த மேல் நாட்டில் பலர் இருக்கின்றனர்.

எனினும், ஒருவனுடைய மனைவியை மற்றொருவரின் மார்போடு மார்பணைத்துக் கொண்டு, அதுவும் மது அருந்தியபடி பலர் முன்பாக அவர்கள் ஆடும் டான்ஸ் கூட்டத்தை வெறுப்போர் மேல் நாட்டில் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை.

இதுதான் மேனாட்டு நாகரிகம். இதுதான் மேனாட்டுப் பெண்கள் அனுபவித்து வரும் சுதந்தரம்.

ஆகவே, சுதந்தரத்தைக் கோரும் ஹிந்துப் பெண்களே! இத்தகைய சுதந்தரம் உங்களுக்கு நன்மை அளிக்கக் கூடியதா? அல்லது அல்குர்ஆன் பெண்களுக்கு அளித்திருக்கும் சுதந்தரம் உங்களுக்கு நன்மை அளிக்கக் கூடியதா? என்பதை உங்களுடைய நன்மையின் பொருட்டு நீங்கள் விருப்பு வெறுப்பின்றி நிதானிக்குமாறு மிக்க அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.


மதுபானம், விபசாரம், சூதாட்டம்:

இயற்கைப் பொருளாதார ஆராய்ச்சிக் கல்வியின் மூலம் மனிதர்களின் அறிவு எந்தளவு முன்னேறி இருக்கின்றதோ அந்தளவு மற்ற மதத்தினரும் அல்குர்ஆனின் சட்டத் திட்டங்களையே பின்பற்ற முன்வருகின்றனர்.

தீண்டாதோரைப் பற்றியும், பெண்களின் உரிமைகளைப் பற்றியும் இதுவரையில் கூறியவையே இதற்குப் போதுமான உதாரணங்களாகும். அன்றி, இவ்வேதம் எவற்றை அனுமதித்திருக்கின்றதோ அவையே மானிட வர்க்கத்திற்கு நன்மை பயக்கக் கூடியவையாக இருக்கின்றன. எவற்றைத் தடை செய்திருக்கின்றதோ அவை, மானிட வர்க்கத்திற்குத் தீங்கிழைக்கக் கூடியவையாகவே இருக்கின்றன. இதன் உண்மையையும், இயற்கைப் பொருளாதார ஆராய்ச்சிக் கல்வி வளர்ந்து வரும் இந்தக் காலத்தில் பொதுவாக மனித வர்க்கமே நேரடியாக உணர்ந்து கொண்டு தான் வருகின்றது.

மதுபானம், விபசாரம், சூதாட்டம் முதலியவற்றை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

இவ்வுலகில் மானிட வர்க்கத்தில் நிகழ்கின்ற பற்பல கொடிய பாவங்களுக்கெல்லாம் இம்மூன்றுமே முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. ஆதலால், இம்மூன்றையும் அல்குர்ஆன் என்னும் வேதம் பலமாகக் கண்டித்து முற்றிலும் தடை செய்து விட்டது.

இம்மூன்றையும் அல்குர்ஆன் எந்தளவு கண்டித்துத் தடை செய்திருக்கின்றதோ அந்தளவு மற்ற எந்த வேதமும் தடை செய்யவே இல்லை.

மற்ற மதங்கள் இவற்றை பாவமெனக் கூறிய போதிலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்தில், ஒவ்வொரு விதத்தில் இவற்றை அனுமதித்தே இருக்கின்றன.6

விபசாரத்தை ஹிந்து மதம் பற்பல விதத்திலும் எந்தளவு ஆதரிக்கின்றதோ அந்தளவு வேறு எம்மதமும் அதனை ஆதரித்து இருப்பதாகத் தெரியவில்லை.

‘பௌண்டரீக யாகம்’ ஹிந்து மதப் பிரகாரம் மிகப் புண்ணிய மானதொரு காரியம். எனினும், அதனை இன்னதென்று வர்ணிக்கவும் நம் ஹிந்து நண்பர்கள் நாணுகின்றனர்.7

தவிர, ‘‘விதவை மறுமணம் கூடாது நியோகம்தான் வேதத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது’’8 என்று ஆரிய சமாஜிகள் தங்கள் ‘‘சத்தி யார்த்தப் பிரகாசம்’’ என்னும் நூலின் மூலம் எவ்வளவோ பிரயாசப் பட்டு பிரச்சாரம் செய்தும், அதனை ஹிந்துக்கள் வெறுத்து, விதவை மறுமணத்தை விரும்புவதும் போற்றத்தக்கதே.

தவிர, கல்வியறிவில் தங்களுக்கு நிகரில்லை என்று கூறுகின்ற மேல்நாட்டினரோ ‘இம்மூன்றும் நாகரிகத்திற்குரிய சின்னங்கள் முன்னேற்றமடைய விரும்பும் மனிதர்களுக்கு இன்றியமையாத சாதனங்கள் இவற்றை வெறுப்போர் நாகரிகமடையாத காட்டு மிராண்டிகளே’ எனக் கூறி, அவர்கள் எங்கு சென்ற போதிலும் அந்த இடங்களிலெல்லாம் மதுபானக் கடை, டான்ஸ் ஹால், சூதாட்டக் கிளப் இம்மூன்றையும் முதலாவதாக நிர்வகித்து வந்தனர்.

இம்மூன்றையும் குற்றமாகப் பாவித்து அவற்றுக்குத் தண்டனை விதித்து வந்த இஸ்லாமிய நாடுகளில், எங்கெல்லாம் இந்த மேல் நாட்டினர் ஆதிக்கம் வகித்தனரோ அங்கெல்லாம் இம்மூன்றும் சர்வ சாதாரணமான விஷயங்களாகி விட்டன. அந்நாடுகளில் இவற்றுக்குக் கொடுத்து வந்த தண்டனைகளும் தடைப்பட்டு விட்டன.

எனினும், இவ்வாறு செய்து வந்த இந்த மேல்நாட்டினர்களே இம்மூன்றும் மனித வர்க்கத்தையே மனிதத் தன்மையிலிருந்து நீக்கி மிருகத் தன்மையில் ஆழ்த்தக் கூடிய கொடிய விஷங்கள் என்பதை அனுபவத்தில் கண்கூடாக கண்டுகொண்டு ‘இம்மூன்று கொடிய விஷயங்களையும் இவ்வுலகத்திலிருந்தே எடுத்துவிட வேண்டும்’ என்று முயல்கின்றனர். எனினும், இதுவரையில் அது அவர்களால் சாத்தியப்படவில்லை.
இவ்வாறான நிலைமையில், இம்மூன்று கொடிய விஷயங்களில் இருந்தும் எந்த ஒரு சமூகத்தினரைப் பாதுகாத்துக் கொள்ளும் பட்சத்தில் பாதுகாக்கப்பட்ட சமூகத்தினர் அந்நாளை எவ்வாறு கொண்டாட வேண்டும்? மெய்யாகவே, முஸ்லிம்களை இக்கொடிய விஷயங்களில் இருந்து பாதுகாத்தது அல்குர்ஆன்தான்.

ஆகவே, அவ்வாறான இவ்வேதம் அருளப்பட்ட ‘லைலத்துல் கத்ர்’ என்னும் இரவை ஆயிரம் மாதங்களைவிட மேல் என்று இறைவன் கூறியது மிகைப்படக் கூறியதாகுமா? ஆயிரம் மாதங்கள் என்ன? ஆயிரம் வருடங்களைவிட மேல் எனக் கூறினும் அது மிகைப்படக் கூறியதாகாது.


பொருள்:

பொருளில்லாதாருக்கு அருளில்லை என்றதற்கொப்ப, மனிதனின் வாழ்க்கையில் பொருள் மிக்க முக்கியமானதாக இருக்கின்றது.

எனினும், பொருள் எந்தளவு மானிட வர்க்கத்திற்கு நன்மை பயக்கக்கூடியதாக இருக்கின்றதோ அந்தளவிற்கு அது மானிட வர்க்கத்தின் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் குலைத்து தீமை பயக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.

ஆதலால், அல்குர்ஆன் பொருளைப் பற்றியும் பல விதி விலக்குகளை விதித்தே இருக்கின்றது. பொருள் சம்பாதிப்பது குற்றமல்ல. எனினும், தப்பான வழியில் ஈவு, இரக்கமற்ற முறையில் பொருள் சம்பாதிப்பது அறவே கூடாது.

ஆதலால்தான், விபசாரத்தின் மூலமும், சூதாட்டத்தின் மூலமும் பொருள் சம்பாதிப்பதைச் சொற்ப அறிவுடையவர்களும் வெறுக்கின்றனர்.

வட்டியின் மூலம் பொருள் சம்பாதிப்பது, சூதாட்டத்தின் மூலம் பொருள் சம்பாதிப்பதைப் போன்றதே!

சூதாட்டத்தின் மூலம் பிறருடைய பொருளை, எவ்வாறு நயவஞ்சக மாகக் கவரப்படுகின்றதோ அவ்வாறே, வட்டியின் மூலமாகவும் கஷ்டத்தில் சிக்கியவர்களின் பொருள் கவரப்படுகின்றது.

வட்டிக்குக் கடன் வாங்கியவன் அதனைக் கொண்டு எவ்வித லாபமும் அடையாமல் முற்றிலும் நஷ்டமடைந்து விட்டபோதிலும் அவன் வாங்கிய கடனைக் கொடுப்பதுடன், அதற்காக ஏற்பட்ட வட்டியையும் கொடுத்தாக வேண்டியதிருக்கின்றது.

சில சமயங்களில் இவன் வாங்கிய கடனை விட வட்டித் தொகை பல மடங்கு அதிகமாகவும் பெருகி விடுகின்றது.

ஒவ்வொரு வருடத்திலும் வட்டிக்குக் கடன் வாங்கி கடன்பட்ட வர்கள் செலுத்துகின்ற வட்டித் தொகையைக் கணக்கிட்டாலோ அது மதுபானம், சூதாட்டம், விபசாரம் முதலியவற்றால் வருடா வருடம் மக்கள் அடைகின்ற நஷ்டத்தை விட, பல மடங்கு அதிகமாகவே இருக்கும்.

லட்சக்கணக்கான மதிப்புள்ள சொத்துடைய எத்தனையோ பேர்கள் சொற்பத் தொகையை வட்டிக்குக் கடன் வாங்கி தங்களுடைய சொத்துகள் யாவற்றையும் இழந்திருக்கின்றனர். லட்சக்கணக்கான வருமானமுள்ள செல்வந்தர்கள் சொற்பத் தொகையை வட்டிக்குக் கடன் வாங்கி தங்களுடைய செல்வங்களையும் இழந்திருக்கின்றனர்.

இவ்வாறெல்லாம் ஒரு சிறிதும் ஈவு இரக்கமின்றி பிறருடைய பொருளை அபகரித்துக் கொள்வதற்கு வட்டி இடமளிப்பதுடன், உண்மையான சகோதரத்துவத்திற்கு முற்றிலும் முரண்பட்டதாகவும் இருக்கின்றது.

ஏனென்றால், பணமுடையினால் கஷ்டத்தில் சிக்கியவர்கள்தான் வட்டிக்குக் கடன் வாங்குகின்றனர். இவ்வாறு கஷ்டத்தில் சிக்கியவர்களுக்குப் பொருள் உதவி புரிந்து, அவர்களுடைய கஷ்டத்தை நிவர்த்திப்பதுதான் மனிதனாகப் பிறந்தவன் மீதுள்ள கடமை.

மெய்யான சகோதரத்துவத்தைக் கைக்கொண்ட மனிதன், இத்தகைய கஷ்டத்தில் சிக்கியவனுக்குத் தானமாகவே பொருள் கொடுத்து உதவி செய்ய வேண்டும்.

எனினும், தானம் செய்வதற்கும் ஓர் எல்லை உண்டு.9

ஆகவே, தானம் செய்பவனும் அத்தகைய கஷ்டத்தில் சிக்கிக் கொள்ளக் கூடிய விதத்திலோ அல்லது யாசகம் கேட்கக் கூடிய நிலைமைக்கு வரும் விதத்திலோ இருக்கும் போது தன்னுடைய பொருளைத் தானம் செய்வது கூடாது. ஏனென்றால், யாசகமும் மனித வர்க்கத்திற்குத் தீங்கிழைக்கக் கூடியதே!

ஆகவே, பொருளைத் தானமாகக் கொடுக்க சாத்தியப்படாதவர்கள் கடனாகவேனும் அவர்களுக்குக் கொடுத்து உதவி செய்யலாம்.

கடனாகக் கொடுத்த பொருளை இவன் திரும்ப அடைந்துவிட்ட போதிலும், கடன் வாங்குபவனின் கஷ்டம் அதனால் நிவர்த்தி ஆகி விடுகின்றது. ஆதலால், இவ்வாறு கொடுக்கப் பெற்ற கடனையும் ஒரு வகை தானமென்றே மதிக்கப்படும்.

இவ்வாறு கடன் கொடுக்கவும் சாத்தியப்படாவிட்டால் கூட்டு வர்த்தகம். அதாவது, கடன் வாங்குபவர்கள் செய்யும் தொழிலில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பாகத்தைத் தனக்குக் கொடுக்க வேண்டுமென்று ஏற்பாடு செய்து கொண்டு அவர்களுக்குப் பொருள் உதவி செய்யலாம்.

இவ்வாறு இவன் கொடுக்கும் பொருளுக்காக அவர்கள் செய்யும் தொழிலில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பாகத்தை இவன் அடைந்த போதிலும் அத்தொழிலில் ஏற்படக்கூடிய நஷ்டத்தையும் இவன் அடைந்து கொள்கின்றான். ஆதலால், இதனையும் ஒருவகை தானமென்றே மதிக்கப்படும்.

லிமிடெட் கம்பெனியும் கூட்டு வர்த்தகத்தைப் போன்றதே. இவை யாவும் மெய்யான சகோதரத்துவத்திற்கு முரண்பாடில்லாது, பிறருக்குப் பொருள் உதவி செய்யக்கூடிய முறைகளாகவே இருக்கின்றன. ஆதலால், இவை அனைத்தும் அனுமதிக்கப்பட்டவையாகும்.

வட்டி:

வட்டிக்குக் கடன் கொடுப்பது கூடாது. வட்டிக்குக் கடன் வாங்கியவன், அதனைக் கொண்டு எவ்வித லாபமும் அடையாமல் முற்றிலும் நஷ்டமடைந்து விட்டபோதிலும், அவனுக்குக் கொடுக்கப் பட்ட கடனை வசூல் செய்வதுடன், அதற்காக ஏற்பட்ட வட்டியையும் அவனிடமிருந்து வசூல் செய்யப்படுகின்றது.

இவ்வாறு கடன் வாங்கியவனின் கஷ்ட நஷ்டத்தை ஒரு சிறிதும் பொருட்படுத்தாது, அவன் வாங்கிய கடனையும், அத்துடன் அதற்கு ஏற்பட்ட வட்டியையும் அவனிடம் வசூல் செய்வதானது மெய்யான சகோதரத்துவத்திற்கு முற்றிலும் மாறானது என்பது வெளிப்படை!

ஆதலால்தான், மெய்யான சகோதரத்துவத்தை ஆழமாக போதிக்கும் மேன்மைமிகு அல்குர்ஆன் வட்டியை முற்றிலும் தடை செய்து விட்டது.

இவ்வாறு மெய்யான சகோதரத்துவத்திற்கு அந்த வட்டி முற்றிலும் மாறாக இருப்பதனால்தான், சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையுமே அடிப்படையாகக் கொண்டு ஆட்சி புரிவதாகக் கூறும் ரஷ்யாவிலுள்ள ஸோவியத் அரசாங்கமும் வட்டியைச் சட்டம் மூலமாகவே தடை செய்து விட்டது.10

ஸோவியத்11:

அந்த ‘ஸோவியத்’ ஆட்சியைப் பற்றி தூற்றியும் போற்றியும், பத்திரிகைகளில் பலவாறாக வரும் விஷயங்களைத் தவிர, அந்த ‘ஸோவியத்’ ஆட்சியின் தன்மை என்ன? அதன் சட்டத் திட்டங்கள் என்ன? என்ற விஷயங்களை இதுவரையில் நாம் தெளிவாக அறிந்து கொள்ளவில்லை.

ஆயினும், பத்திரிகைகளில் இதுவரையில் வெளியான விஷயங்களைக் கொண்டே அந்த ‘ஸோவியத்’ அரசாங்கம் இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி புரிவதாகத் தெரிய வருகின்றது.

ஒன்று:- பொருள் அனைவருக்கும் பொதுவானதென்பது அதன் கொள்கை. ஆதலால்தான், அவர்களுக்கு ‘பொது உடைமைக் கட்சியினர்’ என்று பெயர் கூறப்படுகின்றது.

இரண்டு:- அவர்களுக்கு யாதொரு மதமும் கிடையாது. ஆதலால் தான் அவர்களுக்கு ‘நாத்திகர்கள்’ என்று பெயர் கூறப்படுகின்றது.

இவ்விரு விஷயங்களைப் பற்றி சிறிது பரிசீலனை செய்வோம்.


பொது உடைமைக் கொள்கை:

பொருள் அனைவருக்கும் பொதுவானது. ஆதலால், பொருளை எவர் தேடிய போதிலும் அது அவருக்கு மாத்திரம் சொந்தமாகி விடாது. அந்நாட்டிலுள்ள யாவருக்கும் அதில், சமமான பாத்தியமுண்டு என்பது தான் பொது உடைமைக் கொள்கை.

இக்கொள்கையைப் பின்பற்றுபவர்கள் தம் நாட்டிலுள்ள அரசாங்கம் மற்றும் செல்வந்தர்களிடம் இருக்கும் பொருட்களை எல்லாம் கொள்ளையடித்து தம் வசமாக்கிக் கொண்டு தம் நாட்டிலுள்ள ஏழை முதல் பணக்காரர் வரையில், யாவருமே சமமாக அப்பொருளைக் கொண்டு பலனடையக் கூடிய விதத்தில் அதனை உபயோகித்து வருவார்கள்.

ஆகவே, எந்த நாட்டிலுள்ள செல்வந்தர்களோ, அரசாங்கமோ தன் நாட்டிலுள்ள ஏழைகளின் கஷ்ட நஷ்டங்களைப் பொருட்படுத்தாது, தங்களுடைய சுகப் போகத்திலேயே மூழ்கிக் கிடக்கின்றார்களோ அந்நாட்டில் கஷ்டத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் ஏழைகள் இத்தகைய பொது உடைமைக் கொள்கையை மிக்க ஆவலோடு வரவேற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ரஷ்ய நாடு ஏழைகள் மிகுந்ததொரு அரசாங்கம். அது ஜாரின் கொடுங்கோல் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் அங்கிருந்த ஏழைகளின் பொருளைப் பணக்காரர்கள் யாதொரு கஷ்டமுமின்றி வட்டியின் மூலம் கொள்ளையடித்து தங்கள் பொருளை ஏராளமாகப் பெருக்கித் தங்களுடைய சுகப் போகத்திலேயே ஆழ்ந்து கிடந்தனர்.

இரத்தத்தை அட்டை உறிஞ்சுவதைப் போல் இந்த பணக்காரர்களும் வட்டியின் மூலம் ஏழைகளின் பொருளைக் கொள்ளையடிப்பதை அரசாங்கம் தடை செய்யாமல், அந்தப் பணக்காரர்களையே ஆதரித்தும் வந்தது.

இத்தகைய சந்தர்ப்பத்தில் ஐரோப்பா மஹா யுத்தமும் (முதலாம் உலகப் போர்) ஆரம்பமாயிற்று. யுத்தம் முற்றவே, அங்கிருந்த ஏழைகளை எல்லாம் அரசாங்கம் ராணுவத்தில் சேர்த்துக் கொண்டது.

யுத்தம் முடிவடையும் தருவாயில் ராணுவத்திலிருந்த ஏழைகள், யுத்தம் முடிவு பெற்றால், தாங்கள் முந்திய கஷ்ட நிலைமையைத்தான் பின்னும் அடைய நேரிடுமென்று அஞ்சி ஜாரையும், ஜாரின் ஆட்சியையும் புரட்சியின் மூலம் கவிழ்த்து விட்டு, வட்டியின் மூலம் முன்னர் தங்கள் பொருளைக் கொள்ளையடித்து வந்த பணக்காரர்களின் பொருட்களை எல்லாம் கைப்பற்றிக் கொண்டு பொது உடைமைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ‘ஸோவியத்’ ஆட்சியை எளிதில் ஸ்தாபித்துக் கொண்டனர்.

ஆலைகளில் பாய்லர்கள் முன்பாகவும், சுரங்கங்களில் ஆயிரக் கணக்கான அடிகளுக்குக் கீழ் இரவு பகலாக உழைத்தும், உண்ண சரியான உணவின்றியும், உடுக்கப் போதுமான ஆடையின்றியும், இருக்க வசதியான வீடின்றியும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஆயிரக் கணக்கான தொழிலாளர், ஒன்று சேர்ந்து வசிக்கக் கூடிய தொழிற் சாலைகள் உள்ள பகுதிகளிலெல்லாம் இந்த பொது உடைமைக் கொள்கை மிக்க எளிதில் பரவிவிடும்.

இத்தகைய ஆலைகளும், சுரங்கங்களும் மற்ற நாடுகளை விட மேல் நாட்டில் அதிகம்.

ஆதலால், மேல் நாட்டினர் தற்காலம் இந்த பொது உடைமைக் கொள்கைக்கு எந்தளவு பயப்படுகின்றனரோ அந்தளவு மற்றெதற்கும் அவர்கள் பயப்படுவதில்லை.

ஆதலால்தான், பொது உடைமைக் கொள்கை தங்கள் நாட்டில் பரவாமல் தடை செய்துவிட வேண்டுமென்று இந்த மேல் நாட்டினர் பெரும் முயற்சி எடுக்கின்றனர். எனினும், அது அவர்களால் சாத்தியப்படுமா?

லட்சக்கணக்கான தொழிலாளிகள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பொருளை அங்குள்ள பணக்காரர்கள் எளிதில் வட்டியின் மூலம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் வரையில், பொது உடைமைக் கொள்கை அந்த மேல் நாட்டில் பரவாது தடை செய்து விடுவது எவ்வாறு அவர்களால் சாத்தியப்படும்?

இந்த மேல் நாட்டில் தோன்றியிருக்கும் தொழிலாளர்கள், முதலாளிகள் போராட்டமும் ஸோவியத் கொள்கையின் மாறுபட்ட உருவம்தான். தவிர, நாளுக்கு நாள் தொழிலாளர்களின் ஆதிக்கமே அங்கு மேலோங்கி வருவதையும் காண்கின்றோம்.

ஆகவே, இந்த ஸோவியத் கொள்கை தங்கள் நாட்டில் பரவாமல் முற்றிலும் தடை செய்துவிட வேண்டுமென்று இந்த மேல் நாட்டினர் கருதினால், வட்டியை முற்றிலும் தடை செய்துவிட்டு, பொருள் விஷயத்தில் அல்குர்ஆன் கூறியிருக்கும் சட்டத் திட்டங்களை அப்படியே அவர்கள் கையாள வேண்டியது அவசியம். அதனையும் தெளிவுபடுத்துவோம்.

எனினும், பொது உடைமைக் கொள்கையினால் விளையக்கூடிய நன்மைகள் எவை? தீமைகள் எவை? என்பதை கூறிய பின்னரே, அதனை கூறுவது பொருந்தும்.

பொருள் யாவருக்குமே பொதுவானது. அது எவருக்கும் சொந்த மானதல்ல என்ற சட்டம் அமலில் இருக்கும் நாட்டில் வட்டிக்குக் கடன் கொடுக்கவும் தேவைப்படாது. வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.

இவ்வாறு வட்டிக்குக் கடன் கொடுப்பதும், வாங்குவதும் அவசியம் ஏற்படாத விதத்தில் ஆட்சி புரியும் அந்த ஸோவியத் அரசாங்கம் மிக்க போற்றத்தக்கதே.

எனினும், அந்த ஸோவியத் அரசாங்கம் பின்பற்றும் பொது உடைமைக் கொள்கையானது அதன் ஆட்சிக்குட்பட்ட மக்களை வெகு சீக்கிரத்தில் மிக்க தாழ்ந்த நிலைமைக்குக் கொண்டு வந்து அவர்கள் கேவலம் அடையும்படி செய்யும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை.

ஏனென்றால், மனிதன் என்ற முறையில் மனிதர்கள் அனைவரும் சமமாக இருந்த போதிலும் மனிதர்கள் அனைவருடைய தன்மையும் சமமானதல்ல. தேகப் பலத்திலும், அறிவின் நுட்பத்திலும், மன ஊக்கத்திலும், வீரத்திலும், தீரத்திலும் மனிதர்களுக்குள் பெரும் வித்தியாசங்கள் இருக்கின்றன.

ஒரு மனிதன் ஒரு மடங்கு எடையுள்ள பொருளை மட்டுமே தூக்க சக்தியுடையவனாக இருக்கின்றான். அதற்கதிகமாகத் தூக்க அவனால் சாத்தியப்படாது. எனினும், மற்றொருவனோ அதேபோல் ஐந்து மடங்கு எடையுள்ள பொருளையும் எளிதில் தூக்கி விடுகின்றான்.

இவ்வாறான நிலைமையில் ஐந்து மடங்கைத் தூக்கியவனுக்கு ஒரு மடங்குக்குரிய கூலியைக் கொடுத்தால், அவன் ஐந்து மடங்கைத் தூக்க மாட்டான் ஒரு மடங்கைத்தான் தூக்குவான்.

ஆயினும், ஐந்து மடங்குக்குரிய கூலியைக் கொடுத்தாலோ, அவன் ஐந்து மடங்கையும் தூக்குவான். அதற்கதிகமாகவும் தூக்க முயற்சிப்பான்.

தவிர, ஒரு மடங்கை தூக்கக் கூடியவனும் அதற்கு அதிகமாகத் தூக்க வேண்டுமென்று முயல்வான்.

இவ்வாறு அவரவர்கள் தூக்கிய பொருட்களின் எடைக்குத் தக்க கூலியை அளித்து வந்தால் மனிதர்களுக்குள் போட்டி ஏற்பட்டு ஒவ்வொருவரும் அதிகமான பளுவைத் தூக்க முயல்வார்கள். அதனால், அவர்களுடைய உடல் வலிமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும்.

தவிர, ஐந்து நாளில் செய்யக் கூடியதொரு வேலையை ஒருவன் ஒரே நாளில் செய்து முடித்து விடுகின்றான். அவ்வாறு செய்தவனுக்கு ஐந்து நாள் கூலியைக் கொடுத்தாலோ அவன் பின்னும் அவ்வாறே ஐந்து நாள் வேலைகளை ஒரே நாளில் செய்து வருவதுடன், அதற்கதிகமான வேலைகளையும் ஒரே நாளில் செய்ய முயல்வான்.

மற்றவர்களும் அவனைப் போலவே ஒரே நாளில் பலநாள் வேலைகளைச் செய்ய முயல்வார்கள். இவ்வாறு, மனிதர்கள் செய்யும் வேலைக்குத் தக்க கூலியை அளித்து வந்தால், மனிதர்களுக்குள் போட்டி ஏற்பட்டு ஒவ்வொருவரும் அதிகமான வேலைகளைச் செய்ய முயல் வார்கள். அதனால், அவர்களுடைய சோம்பேறித்தனம் நீங்கி சுறுசுறுப்பும், ஊக்கமும் அவர்களுக்குள் அதிகரிக்கும்.

அதே பிரகாரம், சாத்தியமல்ல என்று பலரால் கைவிடப்பட்ட ஒரு வேலையை ஒருவன் தன்னுடைய அறிவின் நுட்பத்தைக் கொண்டு மிக்க எளிதில் செய்து காண்பிக்கின்றான். அவ்வாறு செய்தவனுக்கு அவனுடைய ஆராய்சிக்குத் தக்கவாறு சன்மானத்தை அளித்தால் அவன் மற்றொரு விசேஷமான வேலையைச் செய்ய முயல்வான்.

அதனைக் காணும் மற்றவர்களும் அவனைப் போல் பல அரிய வேலைகளைச் செய்ய முயல்வார்கள்.

இவ்வாறு மனிதர்களுடைய அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் தக்க சன்மானத்தை அளித்து வந்தால் மனிதர்களுக்குள்ளாக போட்டி ஏற்பட்டு ஒவ்வொருவரும் தங்களுடைய அறிவையும், ஆராய்ச்சி யையும் மேன்படுத்த செய்ய முயல்வார்கள்.

இத்தகைய போட்டி எவ்வகுப்பில் எவ்வளவு தூரம் அதிகரிக் கின்றதோ அந்தளவுக்கு அவர்களுடைய தேகப் பலமும் அதிகரிக் கின்றது. அவர்களுடைய சோம்பேறித்தனம் நீங்கி சுறுசுறுப்பும், ஊக்கமும் உண்டாகின்றது. அவர்களில் பெரிய பெரிய அறிவாளிகளும், ஆராய்ச்சியாளர்களும் உருவாகின்றனர்.

இத்தகைய போட்டியைக் கொண்டுதான் இவ்வுலகம் இந்தளவு வளர்ச்சி அடைந்திருக்கின்றது. இத்தகைய போட்டியைக் கொண்டுதான், மனிதர்களால் சாத்தியமல்ல என்று முன்னர் கருதப்பட்டு வந்த பல விஷயங்களையும் தற்காலம் மேல் நாட்டினர் சர்வ சாதாரணமாகச் செய்து காண்பிக்கின்றனர்.

ஆகவே, மனித அபிவிருத்திக்குரிய நேரான வழியில் மனித வர்க்கத்தைச் செலுத்தக் கருதினால், அவர்களுக்குள் இத்தகைய போட்டியை உண்டுபண்ண வேண்டியது அவசியம்.

இத்தகைய போட்டி மனித வர்க்கத்தில் ஏற்பட வேண்டுமென்றால், ஒவ்வொரு மனிதனும் அவன் சம்பாதிக்கும் பொருளுக்கு அவனே சொந்தக்காரனாக இருக்க வேண்டும். அல்லது அப்பொருளில் அவனுக்கு விசேஷ உரிமையேனும் இருக்க வேண்டும்.

அவ்வாறன்றி, எவ்வளவு கஷ்டப்பட்டு ஒருவன் ஒரு பொருளைத் தேடிய போதிலும் அது அவனுக்கு சொந்தமுமாகாது அப்பொருளில் அவனுக்கு யாதொரு விசேஷ உரிமையும் ஏற்படாது அப்பொருளைத் தேடுவதில் அவனுக்கு எவ்வித உதவியும் புரியாமலிருந்தவர்களுக்கு என்ன பாகமுண்டோ, அதே பாகம்தான் அப்பொருளைத் தேடிய வனுக்கும் உண்டு என்ற சட்டம் அமலில் இருந்தால், பொருளைத் தேடுவதில் மனிதர்களுக்குள் எவ்வித போட்டியும் ஏற்படாதென்பது உறுதி.

இத்தகைய போட்டி எவ்வகுப்பாரில் இல்லையோ அவ்வகுப் பாரின் உடல் வலிமை குறைந்துவிடும். அவர்களுடைய ஊக்கமும், சுறுசுறுப்பும் எடுபட்டு சோம்பேறித்தனம் அவர்களுக்குள் குடிகொண்டு விடும். அறிவாளிகளும் ஆராய்ச்சியாளர்களும் அவர்களில் உருவாகாமல் தடைப்பட்டு அவ்வகுப்பார் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து மற்றவர்களுக்கு அடிமையாகவும் ஆகிவிடுகின்றனர்.

ஆகவே, பொது உடைமைக் கொள்கையானது மனித வளர்ச்சிக்கு இன்றியமையாத இத்தகைய போட்டியை முற்றிலும் தடை செய்யக் கூடியதாகவே இருக்கின்றது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆகவே, அந்த ஸோவியத் அரசாங்கம் இந்த பொது உடைமைக் கொள்கையைப் பின்பற்றியதன் காரணமாக அது, தன் ஆட்சிக்குட்பட்ட மனிதர்களின் பிற்கால வளர்ச்சியை முற்றிலும் தடை செய்து மகத்தான ஒரு தீங்கையே தனக்கு விளைவித்துக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய தீங்கின்றியே, மனித வர்க்கத்திற்குள் மெய்யான சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டுபண்ணுவதற்குள்ள சிறந்த முறையை அல்குர்ஆன் போதித்திருக்கின்றது.

பொருள் விஷயத்தில் அல்குர்ஆன் அறிவித்திருக்கும் முறையைப் பின்பற்றுவதனால் இத்தகைய தீங்கின்றியே மனித வர்க்கத்திற்கிடையில் மெய்யான சகோதர சமத்துவத்தை உண்டுபண்ணி விடலாம்.

அல்குர்ஆன் என்னும் வேதச் சட்டப் பிரகாரம் பொருளைத் தேடியவனே அதற்குச் சொந்தக்காரன். ஆகவே, அவன் தன்னுடைய வாழ்க்கைக்குரிய சகல செலவுகளையும் அதிலிருந்து செய்து கொள்ளலாம். தவிர, பல தான தர்மங்களையும் செய்யலாம்.

இவ்வாறு பொருள் தேடியவனே அதற்குச் சொந்தக்காரனாக ஆவதால், பொருள் தேடுவதில் மனிதர்களுக்குள் ஏற்பட வேண்டிய போட்டி எவ்விதத்திலும் தடைபடுவதில்லை.

தவிர, பொருளைத் தேடியவனே அதற்குச் சொந்தக்காரனாக இருந்த போதிலும் அவனும் அப்பொருளில் தன்னுடைய அவசியத் திற்கு அதிகமான (இஸ்றாஃபாக) செலவு செய்யக் கூடாது.

பலருடைய உதவியைக் கொண்டுதான், எவனும் தன்னுடைய பொருளைத் தேடுகின்றான். ஆகவே, பொருளைத் தேடுவதில் அவனுக்கு உதவி புரியக் கூடியவர்களுக்கெல்லாம் அப்பொருளில் பாகமிருக்கின்றது.

இதில், அவனுடைய குடும்பத்தார்கள்தான் முதன்மையானவர்கள். ஆதலால், இவன் உயிரோடிருக்கும் வரையில் இவனுடைய பெற்றோர், மனைவி, பிள்ளைகள் முதலிய இவனுடைய குடும்பத்தினரைப் பராமரிப்பது இவன் மீது கடமையாகிவிடுகின்றது.

இவன் இறந்த பின்னரும் இவனுடைய பொருளை இவனுடைய வாழ்க்கைக்குத் துணையாக இருந்த இவர்களுக்கே, அதுவும் துணையாக இருந்த விகிதாச்சாரப் பிரகாரம் அவர்களின் தகுதிக்கும் அவசியத்திற்கும் தக்கவாறு பங்கு வைத்துக் கொடுக்கப்படுகின்றது.

தவிர, இவனுடைய வாழ்க்கைக்கு இவனுடைய குடும்பத்தினர் உதவி புரிகின்ற இதே பிரகாரம் அப்பொருளைத் தேடுவதற்கும் அந்த நாட்டிலுள்ள பொது மக்களும், அந்நாட்டை ஆளும் அரசாங்கமும் அவனுக்கு உதவி புரிகின்றனர்.

ஆகவே, பொது மக்களின் நன்மைக்காகவும், அரசாங்க நிர்வாகத் திற்காகவும் இவனுடைய பொருளில் ஒரு பாகத்தை வருடா வருடம் அளித்து வருவதும் இவன் மீது கடமையாகும்.


ஜகாத் - பொருள் வரி:

அரசாங்க நிருவாகம் போன்ற பொது மக்களின் நன்மைக்காக பொருளுடையவன் தன் பொருளிலிருந்து செலுத்தும் பாகத்திற்கு ‘ஜகாத்’ என்று பெயர் கூறப்படும்.

இந்த ஜகாத் வரி, வருமான வரியைப் போன்றதல்ல.

ஏனென்றால், வருமான வரியோ ஆதாய வரி. ஆதலால்தான், ஒருவன் எவ்வளவு பொருளுடையவனாக இருந்த போதிலும் அவன் எந்தத் தொழிலும் செய்யாவிட்டால் அவனிடம் வருமான வரி வசூல் செய்வதில்லை.

தவிர, அவன் செய்யும் தொழிலில் குறிப்பிட்ட தொகைக்குக் குறைவாக லாபம் கிடைத்தாலும் அவனிடம் வருமான வரி வசூலிக்கப் படமாட்டாது. அவ்வாறு லாபம் கிடைத்தாலும் கிடைத்த லாபத்திற்கு மட்டும் வரி வசூலிக்கப்படுமேயன்றி அவனிடமுள்ள அனைத்து பொருளுக்கும் அல்ல.

ஜகாத் அவ்வாறன்று! செல்வந்தன் எந்தத் தொழில் செய்யா விட்டாலும் அவனிடமுள்ள பொருளைக் கணக்கிட்டு ஜகாத் வசூல் செய்யப்படும்.

இது ஏழை சகோதரர்களாகிய பொது மக்களின் நன்மைக்காக செலுத்த வேண்டிய வரியாகும். ஆகவே, செல்வந்தன் தன்னுடைய பொருளைக் கொண்டு எந்த ஒரு தொழில் செய்தாலும் செய்யா விட்டாலும் அவன் தன்னுடைய சொந்தச் செலவை நிறுத்திக் கொள்வதில்லை. அதே பிரகாரம் அவன் தன்னுடைய ஏழை சகோதரர் களாகிய பொது மக்களின் நன்மைக்காக செலுத்த வேண்டிய இந்த ஜகாத் வரியையும் வருடா வருடம் அவன் செலுத்தியே தீர வேண்டும்.

தவிர, செல்வந்தன் தன்னிடத்திலுள்ள பணத்திற்கு மட்டும்தான், இவ்வாறு ஜகாத் வரி செலுத்த வேண்டுமென்பதல்ல. அவனுடைய அத்தியாவசிய வாழ்க்கைத் தேவைக்குப் போக அதிகமாக அவனிடத்திலுள்ள எல்லாப் பொருளுக்கும் அவன் இவ்வாறு வருடா வருடம் ஜகாத் வரி செலுத்தியாக வேண்டும்.

அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணங்கள் மனிதனுடைய வாழ்க் கைக்கு அவசியமானவையல்ல. ஆதலால், ஆபரணங்கள் வைத்திருப்ப வர்கள் அவற்றையும் கணக்கிட்டே ஜகாத் வரி செலுத்த வேண்டும்.

வர்த்தகத்திற்குரிய வீடு, கடை முதலிய கட்டடங்களுக்கும் ஜகாத் வரி செலுத்த வேண்டும். வர்த்தகத்திற்குரிய வண்டி முதலிய வாகனங்களுக்கும் ஜகாத் வரி செலுத்த வேண்டும்.

விவசாயத்திற்குரிய ஆடு, மாடு, பூமி முதலியவற்றுக்கும் ஜகாத் வரி செலுத்தியாக வேண்டும். இவ்வாறே அவனிடமுள்ள சகல பொருட்களுக்கும் வருடா வருடம் ஜகாத் வரி செலுத்த வேண்டியது அவசியம்.12

இவ்வாறு தனவந்தர்களிடமிருந்து வருடா வருடம் வசூலிக்கப் படும் இந்த ஜகாத் வரியை அவர்கள் வசிக்கும் பகுதியில், பொது நிதியில் சேகரித்து வைக்கப்படும்.

அதற்கு, ‘பைத்துல்மால்’ பொது மக்களின் பொக்கிஷம் (சேர்த்து வைத்த பொருள்) என்று பெயர் கூறப்படும். அப்பொக்கிஷத்திலிருந்து பொது நன்மைக்குரிய பல காரியங்களுக்கும் செலவு செய்யப்படும்.

கல்வி, விவசாயம், கைத்தொழில், வர்த்தகம் முதலியவற்றின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் அதிலிருந்தே செலவு செய்யப்படும். தவிர, அப்பகுதியில் வசிக்கும் ஏழைகளிலுள்ள கூன், குருடு, நொண்டி, முடவன், அநாதை, விதவை முதலியவர்களையும் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு ஒவ்வொரு பகுதியிலுள்ள ஏழைகளின் கஷ்ட நஷ்டங்களை நிவர்த்திப்பதற்குப் போதுமான பொருள் இந்த ஜகாத் வரியின் மூலமாகவே சேர்ந்து விடுவதுடன், அப்பகுதியை ஆட்சி புரியும் அரசாங்கத்தின் நிருவாகத்திற்கு வேண்டிய பொருளும் சேர்ந்து விடுகின்றது.

இத்தகைய ஜகாத் வரியைக் கொண்டுதான், முற்காலத்திலிருந்த முஸ்லிம் அரசர்கள், தங்கள் ஆட்சிக்குட்பட்ட ஏழை மக்களுக்கு எவ்வித கஷ்ட நஷ்டமும் ஏற்படாமல் பாதுகாத்து வந்ததுடன், தங்கள் ஆட்சியையும் மிக்க திறமையாகவே நிருவகித்து வந்தனர்.

தற்காலம், நம் நாட்டை ஆண்டு வரும் அரசாங்கமோ, எத்தனையோ விதங்களில் பற்பல வரிகளை விதித்து, ஏராளமான பொருளை வசூலித்தும், அதன் நிர்வாகத்திற்கு வேண்டிய செலவுகளுக்குப் போதாமல், புதிய புதிய வரிகளையே விதித்து வருகின்றது.

இந்த அரசாங்கம் இத்தகைய நிலைமைக்கு வந்ததற்குக் காரணமெல்லாம் வரி வசூலிப்பதிலும் அதனைச் செலவு செய்வதிலும் அது பின்பற்றும் தவறான முறைதான். நம் அரசாங்கம் பின்பற்றி வரும் தவறான அணுகுமுறையினால் அதன் செலவு இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் குடிமக்களும் வரி பளுவைத் தாங்காமல் நாளுக்கு நாள் நசிந்தே வருகின்றனர்.

நம் அரசாங்கம் வரி விதிப்பதிலும் அதனைச் செலவு செய்வதிலும் இஸ்லாமிய முறையைக் கையாளும் பட்சத்தில் வீணான இத்தகைய வரிகளை விதிக்கும் அவசியமும் அதற்கேற்படாது. குடிமக்களும் இவ்வாறு நசிந்துக் கொண்டு போகமாட்டார்கள்.

உதாரணமாக, விவசாயப் பூமியின் மீது வரி விதிக்கும் முறையையும், அதனை வசூலிக்கும் முறையையும் சிறிது கவனிக்கவும்.


நில வரி:

நிலங்கள் அனைத்தும் ஒரே தரமானவையல்ல. பல தரங்களாகவே இருக்கின்றன. ஒரே தரமான நிலத்திலும், ஒரு தானியத்தை விதைத்தால் கிடைக்கக் கூடிய மகசூல், மற்றொரு தானியத்தை விதைத்தால் கிடைப்பதில்லை. அதிலும் ஒரு வருடம் கிடைக்கும் மகசூல் மறு வருடம் கிடைப்பதில்லை. இதற்காகவே சில நிலங்களில் ஒரு வருடம் விட்டு மறு வருடம் பயிர் செய்யப்படுகின்றது.

இத்தகைய நிலைமையில், நம் அரசாங்கம் நிலத்தின் தரத்தை மட்டிலும் நிதானித்துக் கொண்டு இன்ன தரத்திலுள்ள நிலத்தில், ஏக்கர் ஒன்றுக்கு இவ்வளவு என்று வரி வசூலித்து வருகின்றது. ஆகவே, இந்த நிலத்தின் தரத்துக்குக் குறைவான மகசூலே கிடைத்திருந்தாலும், அல்லது அந்த நிலத்தில் எந்த பயிரும் செய்யாதிருந்தாலும், விவசாயிகள் அந்நிலத்துக்கு ஏற்பட்ட வரியைச் செலுத்தியே தீரவேண்டும் என்று இருக்கின்றது.

அதிலும், அவர்கள் செலுத்த வேண்டிய வரியைப் பணமாகவே செலுத்த வேண்டும் என்று விதித்திருப்பதனால் வரி செலுத்த வேண்டிய காலத்தில், தானியத்தின் விலை எவ்வளவு குறைவாக இருந்தபோதிலும், அதை விவசாயிகள் விற்பனை செய்தே தீரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகின்றது.

இதனாலும், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டமும் கஷ்டமும் ஏற்படுவதுடன், அங்கு விளைந்த பொருளும் உடனுக்குடன் வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்து, நாட்டின் நலனிற்கும் பங்கமேற்படுகின்றது.

விவசாயிகளுக்கும் நாட்டிற்கும் இவ்வாறு பல கஷ்ட நஷ்டங்கள் ஏற்படுவதுடன், அரசாங்கத்திற்கும் ஏராளமான பொருள் வீணாக செலவாகின்றது. ஏனென்றால், நிலத்தின் தரம் அடிக்கடி மாறுதல் அடைவதனால், அரசாங்கமும் நிலத்தின் தரத்தை அடிக்கடி பரீசலித்து வரியை நிருணயம் செய்ய வேண்டியதிருக்கின்றது. இதற்கு ‘ரெவின்யூ செட்டில்மெண்ட்’ என்று பெயர் கூறப்படுகின்றது. ஒவ்வொரு செட்டில் மெண்டுக்கும் கோடிக்கணக்கான பொருள் செலவாகின்றது.

தவிர, ஒவ்வொரு வருடமும் ‘சமாபந்தி’ (ஆண்டின் நிலவரி தணிக்கை) செய்தும் நில வருமானக் கணக்கை சரிசெய்ய வேண்டிய அவசியமும் ஏற்படுகின்றது.13 இதற்காகவும் வருடா வருடம் லட்சக் கணக்கான பொருள் செலவாகின்றது.

செட்டில்மெண்டுக்காகவும் சமாபந்திக்காகவும் ஏற்படும் ஏராளமான இந்த செலவு அரசாங்கம் கையாளும் தவறான அணுகுமுறையினால் ஏற்படும் செலவேயன்றி, அரசாங்க நிருவாகத்திற்கு அவசியமான செலவல்ல.

எனினும், வீணே செலவாகும் இந்த ஏராளமான பொருளையும் விவசாயிகளிடமிருந்தே அரசாங்கம் வசூலிக்கின்றது. இதனாலும் விவசாயிகள் பெரும் கஷ்ட நஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.

ஆகவே, நிலத்தைக் கணக்கிடாது, அந்தந்த நிலத்தில் விளையும் பொருட்களைக் கணக்கிட்டு வரி வசூலித்து வந்தாலோ, சமாபந்திக்காக வருடா வருடம் செலவாகும் கோடிக்கணக்கான பணமும், செட்டில் மெண்டிற்காக செலவாகும். கோடிக்கணக்கான பணமும் அரசாங்கத்திற்கு மீதமாவதுடன் அதனை வரியாகச் செலுத்தும் விவசாயிகளும் பல கஷ்ட நஷ்டங்களிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள்.

அதிலும், அந்த வரியைப் பணமாகவே செலுத்த வேண்டுமென்கிற அவசியமில்லை. அவர்களிடமுள்ள பொருளையும் செலுத்தலாம் என்று அனுமதியிருந்தால் விவசாயிகள், தங்களிடமுள்ள தானியங்களைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து அடையும் நஷ்டத்திலிருந்தும் தப்பித்துக் கொள்வார்கள்.

ஆதலால்தான், இத்தகைய வரிகளை நிலத்தைக் கணக்கிட்டு வசூலிக்கக் கூடாது. அதில் விளையும் பொருளையே கணக்கிட்டு வசூலிக்க வேண்டும் என்று இஸ்லாமில் விதிக்கப்பட்டதுடன், அதனைச் செலுத்துவோரும் பணமாகவே செலுத்த வேண்டிய அவசியமில்லை. விளைந்த பொருளையே வரியாகச் செலுத்தலாம் அல்லது அன்றைய நிலவரப்படி அதன் விலையையும் வரியாகச் செலுத்தலாம் என்று விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அரசாங்கமும் நிலவரி வசூலிக்கும் விஷயத்தில், தன்னுடைய தவறான கொள்கையை மாற்றி, நிலத்தில் விளைந்த பொருளையே கணக்கிட்டு வரி வசூலிக்க வேண்டுமென்கிற இஸ்லாமிய முறையைக் கையாண்டால், அதன் செலவில் எந்தளவு குறைவு ஏற்படுமென்பதை கவனிக்கவும்.

அதே போல், அரசாங்கமும் தன்னுடைய நிருவாகத்திற்காகப் பொருளைச் செலவு செய்யும் விஷயத்திலும் இஸ்லாமியக் கொள்கை யைப் பின்பற்றும் போது அதனாலும் ஏராளமான பொருள் மீதப்படும்.

ஆகவே, நம் அரசாங்கமும் இஸ்லாமிய முறைப்படியே வரி வசூலித்து இஸ்லாமிய முறைப்படியே அதனைச் செலவு செய்து வந்தால், இந்த ஜகாத் வரியினால் வசூலாகும் பொருளே அரசாங்க நிருவாகத்திற்கும், அங்குள்ள ஏழைகளைப் பாதுகாப்பதற்கு வேண்டிய செலவுகளுக்கும் போதுமாகிவிடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

எனினும், ஒழுங்கான முறையில் வரி வசூலித்து, முறையாகச் செலவு செய்தும், செலவுக்குப் போதாத சந்தர்ப்பத்தில் ஏழைகளைப் பாதிக்காதவாறு மேலும் செல்வந்தர்களிடமிருக்கும் பொருள் மீதே வரி விதித்து வசூலித்துக் கொள்ளலாம்.

செல்வந்தர்கள் தங்கள் அவசியத்திற்குத் தக்கவாறு தங்களுடைய பொருளை மேலும் மேலும் செலவு செய்து கொள்வது எவ்வாறு தவறல்லவோ அவ்வாறே அவர்களுடைய சகோதரர்களாகிய பொது மக்களின் அவசியத்திற்கு வேண்டிய பொருளை, பின்னும் அவர் களிடமே பெற்றுக் கொள்வதும் தவறல்ல. இதுதான் உண்மையான சகோதரத்துவத்திற்குரிய அத்தாட்சியாகும்.

தவிர, அரசாங்கம் தம்முடைய நிருவாகத்திற்காக வேறு பற்பல விதங்களில் வசூலிக்கும் வரிகளுக்கும் இந்த இஸ்லாமிய ஜகாத் வரிக்குமுள்ள மற்றொரு வித்தியாசமும் கவனிக்கத்தக்கது.

அரசாங்கம், தன் குடிமக்களின் அறிவை விருத்தி செய்வதற்கென ஏற்படுத்தியுள்ள பள்ளி, கல்லூரிகளின் நிருவாகத்திற்காக, அங்கு பயிலும் மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூல் செய்கின்றது. இது ஏழைகள் கல்வி பயில்வதைத் தடை செய்வதுடன், ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இருக்க வேண்டிய உண்மையான சகோதர சமத்துவத்தையும் குலைத்து அரசாங்கத்தின் மீதும் அவர்களுக்கு வெறுப்பை உண்டுபண்ணக் கூடியதாகவே இருக்கின்றது.

அதே போல், அரசாங்கம் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட குடி மக்களுக்கு நீதி வழங்குவதற்காகவும், முத்திரை கட்டணம் வசூலிக் கின்றது. இதுவும் ஏழைகள் நியாயமடைவதைத் தடை செய்து, அரசாங்கத்தின் மீது அவர்களுக்கு அதிருப்தியை உண்டு பண்ணக் கூடியதாகவே இருக்கின்றது.

தவிர, பொதுமக்கள் செல்லக்கூடிய சாலைகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தி ‘சுங்கவரி’ வசூலிக்கின்றது. இதுவும், அவ்வழியாக பொதுமக்கள் செல்வதைத் தடை செய்து, பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் மீது அதிருப்தியை உண்டுபண்ணக் கூடியதாகவே இருக்கின்றது.

இந்த ஜகாத் வரி அவ்வாறன்று. இது ஏழைகளை ஒரு சிறிதும் பாதிப்பதே இல்லை. பணக்காரர்களின் பொருள் மீதே வரி விதித்து, வசூலித்து பொது நன்மைக்குரிய வேலைகளுக்கு அதிலும் ஏழைகளின் வசதிகளை முக்கியமானதாகவும், பிரதானமானதாகவும் கவனித்து, செலவு செய்யப்படுகின்றது.

ஆகவே, இவ்வாறு அப்பகுதியிலுள்ள ஏழைகளின் கஷ்டங்களை முற்றிலும் நிவர்த்தி செய்து விடக்கூடிய பொருளை அப்பகுதியிலுள்ள செல்வந்தர்கள் ஜகாத் வரியாக வருடா வருடம் செலுத்தி வருவதினால் அவர்களுக்கும் ஏழைகளுக்குமிடையில் மெய்யான சகோதரத்துவமும் சமத்துவமும் உண்டாகின்றது. அங்குள்ள பணக்காரர் மீது ஏழைகளுக்கு எவ்வித வெறுப்பும் ஏற்படாது.

இவ்வாறு ஏழைகளை ஒரு சிறிதும் பாதிக்காதவாறு பணக்காரர் களிடமுள்ள பொருள் மீதே வரி விதித்து வசூலித்து ஏழைகளை பாதுகாத்து வரும் அரசாங்கத்தின் மீது, அங்குள்ள ஏழைகளுக்கு எந்த வித அதிருப்தியும் ஏற்படாதென்பதுடன் அவர்கள் பொது உடைமைக் கொள்கையைக் கையாள வேண்டிய அவசியமும் ஏற்படாதென்பது வெளிப்படை!
எனினும், அவ்வரசாங்கம் வட்டியைச் சட்டம் மூலமாக தடை செய்து விடவேண்டியதும் அவசியம். இல்லையென்றால் மேற்கூறிய இவற்றைக் கொண்டெல்லாம் ஏழைகளுக்கு எவ்வித நன்மையும் ஏற்படாது.

ஏனென்றால், வட்டி அனுமதிக்கப்படும் பட்சத்தில் இந்தப் பணக்காரர்கள் தாங்கள் செலுத்தும் ஜகாத் வரியை விட பலமடங்கு அதிகமாகவே அந்த ஏழைகளிடமிருந்து வட்டியின் மூலமாக கொள்ளையடித்து விடுவார்கள்.

ஆகவே, எந்த அரசாங்கம் மெய்யாகவே ஏழைகளைப் பாதுகாக்கக் கருதுகின்றதோ அது வட்டியை முற்றிலும் சட்டம் மூலமாகத் தடை செய்தாக வேண்டியது அவசியம்.

ஆகவே, எந்த அரசாங்கம் வரி விதிப்பதிலும், அதனை வசூலிப் பதிலும், அதனைச் செலவு செய்வதிலும் அல்குர்ஆனில் கூறியிருக்கும் சட்டத் திட்டங்களை அப்படியே கையாண்டு, வட்டியையும் சட்டம் மூலமாக தடை செய்து விடுகின்றதோ அந்த அரசாங்கத்திற்கு கீழ் வாழும் மக்களுக்குள் பொது உடைமைக் கொள்கை எவ்விதத்திலும் பரவாது என்பது நிச்சயம்!

ஆகவே, ஸோவியத் கொள்கையினால் விளையக்கூடிய மகத்தான தீங்குகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த மேல் நாட்டினர் கருதினால், பொருள் விஷயத்திலேனும் அல்குர்ஆனில் கூறியிருக்கும் சட்டத் திட்டங்களை எந்த ஒரு மாறுதலுமின்றி அப்படியே கையாள வேண்டும்.

தவிர, அந்த ‘ஸோவியத்’ அரசாங்கம், தன் பொது உடைமைக் கொள்கையினால் விளையக்கூடிய தீங்கிலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்பினால், அல்குர்ஆனில் கூறப்பட்ட சட்டத் திட்டங்களையே கையாள்வது அவசியமாகும்.

தற்காலத்தில் வளர்ந்துவரும் விஞ்ஞான முன்னேற்றம் பற்பல மதத்தினரையும் அல்குர்ஆன் என்னும் வேதத்தில் கூறப்பட்டுள்ள சட்டத் திட்டங்களையே பின்பற்றும்படி எவ்வாறு நிர்ப்பந்திக்கின்றதோ, அவ்வாறே தற்காலத்தில் தோன்றியிருக்கும் இந்த ஸோவியத் கொள்கையும் இவ்வுலகத்திலுள்ள வல்லரசுகளையும் அல்குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் சட்டத் திட்டங்களையே பின்பற்றும்படி நிர்பந்தித்துக் கொண்டிருக்கின்றது.


நாத்திகம்:

உண்மையில், படைத்துப் பாதுகாக்கும் இறைவனை மறுப்போருக்கு ‘நாத்திகர்’ என்றும், ‘நிரீஸ்வரர்’ என்றும் கூறப்படுகிறது.

கல், மண், பொன் முதலியவற்றால் தங்கள் கையினால் செய்த சிலைகளையே தெய்வங்களாகப் பாவித்து வணங்கும் சிலை வணக்கக்காரர்களும் உண்மையிலேயே படைத்து பாதுகாப்பவனைப் புறக்கணித்து விட்டதனால் ஒருவகை நாத்திகர்கள்தான்.

எனினும், சிலை வணக்கம் செய்யும் நம் ஹிந்துக்களோ தங்களை ‘ஆத்திகர்’ என்றே கூறுகின்றனர்.

தவிர, முற்றிலும் இயற்கைக்கு மாறான விஷயங்களை அவர்கள், தங்கள் தெய்வத்தின் பெயரால் கூறி, அவை நம்முடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் எட்டாமலிருப்பதுவே அவை தெய்வக் கட்டளைகள் என்பதற்கு அத்தாட்சியாகுமென்று கூறுகின்றனர்.

இத்தகைய கூற்றுகளை நம்புவோர் தற்காலத்திலும் இல்லாமல் இல்லை அதிகமானவர்கள் இருக்கின்றனர்.

எனினும், இத்தகைய கூற்றுகளை நிராகரித்து சிலை வணக்கத்தை வெறுப்போரின் தொகை நம் ஹிந்துக்களில் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றது. இத்தகையோரையும் மற்ற ஹிந்துக்கள் ‘நாத்திகர்’ என்றே கூறுகின்றனர்.

ஆகவே, ஸோவியத் கவர்ண்மெண்டாரும் நாத்திகர்தான் என்று கூறப்படுகின்றது. அவர்கள் எத்தகைய நாத்திகர்கள்?

ஆலயங்களையும் அதைப் பராமரிப்பவர்களையும் அவர்கள் அழித்து நாசமாக்கி வருவதாகவும், அனுதினமும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. எனினும், எதற்காக? எத்தகைய ஆலயங்களை அவர்கள் அழிக்கின்றனர்?

பொதுவாகவே எல்லா ஆலயங்களையும் அழிக்கின்றனரா? அல்லது மனித வர்க்கத்திற்குத் தீங்கிழைக்கும் கட்டளைகளைத் தெய்வத்தின் பெயரால் வெளியிடும் ஆலயங்களை மாத்திரம் அழிக்கின்றனரா?

பொதுவாக எல்லா ஆலயங்களையும் அவர்கள் அழிப்பதாயின், மெய்யான இறைவனை மறுக்கும் நாத்திகர்தான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மெய்யான இறைவனை மறுப்போர், மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கையையும் நிராகரிக்கின்றனர்.

ஆகவே, அந்த ஸோவியத் அரசாங்கமும் இவ்வாறு மெய்யான இறைவனை மறுத்து பிற்கால வாழ்க்கையையும் நிராகரிக்கும் பட்சத்தில், அதனால் மனித வர்க்கத்திற்கு ஏற்படக் கூடிய தீங்கை எவராலும் வருணிக்க முடியாது.

இவ்வுலகத்திற்கு மகத்தான நன்மைகளைச் செய்த உத்தமர்கள் அனைவரும், மனித வர்க்கத்தின் நன்மைக்கென தங்களுடைய வாழ்க்கையை முற்றிலும் தத்தம் செய்து அவர்கள் உயிரோடிருக்கும் வரையில் இரவு பகலாக உழைத்திருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய பொருட்கள் அனைத்தையும், தானம் செய்து விட்டதுடன் தங்களுடைய சுகபோகங்களையும் முற்றிலும் துறந்து விட்டனர். தவிர, தங்களுடைய லட்சியத்தை அடைவதில் மிக்க தீரத்தோடு தங்களுடைய உயிர்களையும் இழந்திருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் செய்வதற்குரிய காரணம் எல்லாம், இவற்றுக்குத் தக்க பலனைப் பிற்கால வாழ்க்கையில் தாங்கள் அடைவோமென்று அவர்களுக்கிருந்த நம்பிக்கைதான்.

ஆகவே, பிற்கால வாழ்க்கையில் எவர்களுக்கு நம்பிக்கை இல்லையோ அவர்களில் இத்தகைய நன்மைகளில் எதையும் எதிர் பார்ப்பதற்கில்லை. பிற்கால வாழ்க்கையில் நம்பிக்கையில்லாதவர்கள், தாங்கள் உயிரோடிருக்கும் வரையில் இவ்வுலகில் அனுபவிக்கும் இன்பங்கள்தான் தங்களுடைய பாக்கியமென்று கருதுவார்கள்.

ஆகவே, இவ்வுலகில் அவர்களுக்கு சாத்தியமான இன்பங்களை எல்லாம், சாத்தியமான முறையில் முடிந்த வரையிலும் அவர்கள் உயிருடன் இருக்கும்போதே அனுபவித்துவிட விரும்புவார்கள் என்பது நிச்சயம்.

ஆதலால், அவர்கள் எவ்விஷயத்திலும் தங்கள் சுயநலத்தையே முன்னிலைப்படுத்துவார்கள். ஆகவே, ஈவிரக்கம், பரோபகாரம் முதலிய மனிதத் தன்மைகளையும் பொறுமை, சகிப்பு, உறுதி, ஊக்கம், தீரம் முதலிய வீரத் தன்மைகளையும் இவர்களில் காண்பதரிது.

மேலும், அவர்கள் செய்யும் பாவங்களுக்குப் பிற்காலத்தில் எவ்வித தண்டனையும் கிடையாதென்று அவர்கள் கருதுவதனால் எத்தகைய பாவங்களையும் செய்ய அவர்கள் துணிவார்கள்.

ஆகவே சூது, வாது, பொறாமை, அகங்காரம், குரோதம், விரோதம், கொலை, களவு, விபசாரம் முதலிய தீய காரியங்களிலிருந்து அறவே விலகிய பரிசுத்தவான்களை இந்த நாத்திகர்களில் காண்பதரிது. இவ்வுலகில் தண்டனை கிடைக்கக் கூடிய குற்றங்களுக்குத்தான் இவர்கள் அஞ்சுவார்கள். அவற்றையும் நிரூபிக்க முடியாத விதத்தில் ரகசியமாகச் செய்ய தயங்க மாட்டார்கள்.

ஆகவே, இத்தகைய நாத்திகக் கொள்கை எந்நாட்டில் பரவு கின்றதோ அந்நாட்டில் சகோதரத்துவமும், அமைதியும் எடுபட்டு அராஜகமே மேலோங்கி நிற்கும்.

ஏனென்றால், சகோதரத்துவத்தையும் அமைதியையும் குலைக்கக் கூடிய குற்றங்களுக்கு அரசாங்கம் கடினமான தண்டனைகளை விதித்த போதிலும், அது தன்னிடம் நிரூபணமாகும் குற்றங்களைப் பற்றித் தண்டிக்குமேயன்றி, நிரூபிக்க முடியாத விதத்தில் ரகசியமாகச் செய்யும் குற்றங்களைப் பற்றி ஒன்றும் செய்வதற்கில்லை.

ஆகவே, இத்தகைய நாத்திகர்கள் அரசாங்கத்திடம் பிடிபடாத விதத்தில் அத்தகைய குற்றங்களை ரகசியமாகச் செய்துவிட்டு அதற்குரிய தண்டனையிலிருந்தும் தப்பித்துக் கொள்கின்றனர்.

எனினும், எவர்களில் மெய்யாகவே இறை அச்சம் இருக்கின்றதோ அவர்கள் தாங்கள் ரகசியமாகச் செய்யும் இத்தகைய குற்றங்களுக்கும் இறைவன் அவற்றுக்குரிய தண்டனை அளித்து விடுவான் என்று அஞ்சி அக்குற்றங்கள் புரியாது விலகி விடுகின்றனர்.

இவ்வாறு அவர்களை அக்குற்றங்களிலிருந்து விலக்குவது அவர்களின் இறை அச்சமே அன்றி அவர்களை ஆளும் ஆட்சியல்ல.

ஆகவே, எவ்வளவு வல்லமை பொருந்திய அரசாங்கமாக இருந்த போதிலும், அதிலுள்ள மக்கள் இறை அச்சமற்ற நாத்திகர்களாக இருக்கும் பட்சத்தில், அது தன் நாட்டில் சகோதரத்துவத்தையும் அமைதியையும் நிலைநிறுத்த முடியாது. ஆகவே, அந்த ஸோவியத் அரசாங்கம் பொது உடைமைக் கொள்கையைக் கொண்டு தேடிக் கொண்டிருக்கும் தீங்கை விட மகத்தானதொரு தீங்கையே அது இந்த நாத்திகக் கொள்கையைக் கொண்டு தேடிக் கொண்டிருக்கின்றது.

இந்த நாத்திகக் கொள்கை ரஷியாவில்தான் பரவியிருக்கின்றது என்பதல்ல. தற்காலம் இவ்வுலகம் எங்குமே பரவி வருகின்றது.

கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் மேல்நாடென்ன? புத்த மதத்தைப் பின்பற்றும் சீனாவென்ன? ஜப்பானென்ன? அங்குள்ளவர்களும் தங்கள் தங்கள் மதங்களை முற்றிலும் புறக்கணித்து விட்டு நாத்தி கத்தையே பின்பற்றுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் நாத்திகர்களாவதற்குரிய காரணம், அவர்கள் ஏற்கனவே பின்பற்றிவரும் வேதமும், அதில் கூறப்பட்ட விஷயங்களும்தான்.

கல்வி அறிவில்லாது அவர்கள் அறியாமையில் ஆழ்ந்து கிடந்த வரையில் எவற்றை எல்லாம் தெய்வங்கள் எனக் கூறிய போதிலும் அவற்றை எல்லாம் தெய்வங்கள் என்று அங்கீகரித்தனர். எந்த விஷயங்களைத் தெய்வக் கட்டளைகளெனக் கூறியபோதிலும், அவற்றை எல்லாம் எந்த ஓர் ஆட்சேபனையுமின்றி பின்பற்றி நடந்தனர்.

எனினும், விஞ்ஞான முன்னேற்றம் அவர்களில் பரவிய பின்னரோ, எவ்விஷயத்தையும் தங்களுடைய அறிவைக் கொண்டு பரிசீலனை செய்ய முற்பட்டனர். அவ்வாறே அவர்கள் தங்கள் வேதத்தையும் அதில் கூறப்பட்ட விஷயங்களையும் பரிசீலனை செய்ய ஆரம்பித்தனர்.

அவர்களுடைய வேதங்களில் தெய்வங்களைப் பற்றி கூறப் பட்டிருந்த விஷயங்களோ, தெய்வத் தன்மைக்கு முற்றிலும் மாறான வையாக இருக்கின்றன.

சாதாரண மனிதர்களில் காணப்படும் குற்றங்குறைகளெல்லாம் அத்தெய்வங்களிலும் காணப்பட்டன. இவ்வாறிருந்தும், அந்தத் தெய்வங்கள்தான் இவ்வுலகைப் படைத்தன என்று கூறப்பட்டன. எனினும், அவற்றின் கட்டளைகளோ, படைப்பினங்களின் இயற்கை அமைப்புக்கே முற்றிலும் மாறானவையாகவும், அறிவுக்கும் ஆராய்ச் சிக்கும் ஒரு சிறிதும் பொருந்தாதவையாகவும் இருக்கின்றன.

தவிர, அக்கட்டளைகள் மனிதச் சுதந்தரத்தையும், மனித அறிவின் சுதந்தரத்தையும் அபகரித்து மனித வர்க்கத்தையே மிருகத் தன்மையில் ஆழ்த்தக் கூடியவையாகவும் இருக்கின்றன.

ஆகவே, அவை உண்மையில் படைக்கும் ஆற்றலுள்ளவையாக இருந்தால், இத்தகைய கட்டளைகளை விதிக்காது. இத்தகைய கட்டளைகளை விதித்திருக்கும் அவையும் உண்மையான கடவுள்களாக இருக்க முடியாது. இத்தகைய விஷயங்களைப் போதிக்கும் நூலும், உண்மையான கடவுளால் அருளப்பட்ட வேதமாக இருக்காதென்று விளங்கி, தங்களுடைய தெய்வத்தையும் வேதத்தையும் அதில் கூறப் பட்டிருந்த விஷயங்களையும் முற்றிலும் புறக்கணித்து விட்டனர்.
விஞ்ஞானம் இவ்வுலகில் எங்கெங்கு பரவுகின்றதோ அங்குள்ள இத்தகைய மதங்களும் அவற்றைப் பின்பற்றுபவர்களாலேயே இவ்வாறு புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.


படைப்பாளன்:

ஆக்கல்:

உதாரணமாக, ஒரு மண் பாத்திரம் தன்னை உருவாக்கியவன் இருக்கிறான் என்பதை அறிவிப்பதைப் போல், இவ்வுலகமும் இதிலுள்ள ஒவ்வொரு பொருளும் தங்களைப் படைத்த ஒருவன் உண்டென்பதை மிக்க தெளிவாகவே அறிவித்துக் கொண்டு இருக்கின்றன.

தவிர, ஒரு கட்டடம் தன்னைக் கட்டிய சிற்பியின் அறிவையும், ஆற்றலையும் அறிவிக்கின்றபடியே, இவ்வுலகிலுள்ள உயிரினங்கள் முதலியவையும், தங்களை உற்பத்தி செய்து பாதுகாப்பவனின் அறிவையும், ஆற்றலையும் அறிவிக்கின்றன.

கேவலம் சிறியதொரு எறும்பின் அமைப்பிலுள்ள நுட்பமான விஷயங்களையே இதுவரையில் நம்மில் எவராலும் அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் இவ்வுலகிலுள்ள எண்ணிறந்த வகைகளையும், எண்ணிறந்த தொகைகளையும் உடைய கோடிக்கணக்கான உயிரினங்களை உற்பத்தி செய்திருக்கும் படைப்பாளனின் அறிவையும், ஆற்றலையும் எவரால்தான் வருணிக்க முடியும்?

இப்பூமியில் வசிக்கும் மிக்க சிறியதொரு எறும்புக்கும், இப்பூமியை விட பல லட்சம் மடங்கு பெரிதாகவும், கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் சூரியனுக்குமுள்ள சம்பந்தத்தையும் நாம் சிந்திக்க வேண்டும்.

அவ்வளவு தூரத்தில் இவ்வளவு பெரிதாக இருக்கும் அச்சூரியன் இன்றி, இச்சிறிய எறும்பு வாழ முடியாது.

ஏனென்றால், அந்த எறும்புக்கு வேண்டிய ஆகாரம், இப்பூமியில் முளைக்கும் புற்பூண்டு முதலியவற்றிலிருந்தே கிடைக்கின்றது. அந்தப் புற்பூண்டுகளோ வித்துக்களைக் கொண்டே உற்பத்தியாகின்றன. அவ்வித்துகளும் மழைத் தண்ணீரின் உதவியாலேயே முளைக்கின்றன. அம்மழைத் தண்ணீரோ கடலிலிருந்து உற்பத்தியாகின்றது.

இந்த கடல் நீரை ஆவியாக மாற்றி, மேகத்தில் உயர்த்தி, அதனை மழைத் தண்ணீராக்குவதெல்லாம் கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் சூரியனின் வெப்பம்தான்.

இவ்வாறு பூமியில் உற்பத்தியாகும் புற்பூண்டுகளுக்கும் அந்த சூரியனுக்குமுள்ள சம்பந்தத்தைக் கவனித்தால் இப்பூமியையும் இதிலுள்ள எறும்பு முதலிய உயிரினங்களையும் படைத்தவனே சூரியனையும் படைத்திருக்கின்றான் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

தவிர, மழை பெய்வதற்கும், வித்துகள் முளைத்துத் தழைவதற்கும், இச்சூரியனின் உதவி எவ்வளவு அவசியமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு அவ்வித்துகளால் முளைக்கும் செடிகள், மரங்கள் முதலியவை பலன் தருவதற்குச் சந்திரன் முதலிய வானத்திலுள்ள மற்ற கோள்களின் உதவியும் அவசியமாகவே இருக்கின்றது.

வானத்திலுள்ள இத்தகைய கோள்கள், நட்சத்திரங்கள் எத்தனை கோடி? என்று இதுவரையில் வானிலை ஆராய்ச்சியாளர்களாலும் கணக்கிட முடியவில்லை.

வானத்திலுள்ள கோள்கள், நட்சத்திரங்கள், இப்பூமியிலிருந்து கோடிக்கணக்கான மைல்களுக்கப்பால் இருப்பதினால், அவை எவற்றைக் கொண்டு எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன? அவற்றில் என்னென்ன இருக்கின்றன? என்பது போன்ற விஷயங்களை இதுவரை எவராலும் அறிந்து கொள்ள முடியவில்லை.

ஆயினும், அவற்றில் பல இப்பூமியை விட எத்தனையோ லட்ச மடங்கு பெரிதாகவும், அவற்றில் பலவற்றில் நம்மைப் போன்ற உயிரினங்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

தவிர, அவை ஒவ்வொன்றுக்கிடையிலும் இன்றியமையாத தொடர்புகள் இருக்கின்றன. அவற்றுக்கு இடையிலிருக்கும் இந்தச் சம்பந்தம் ஒரு சிறிதளவும் நீங்கும் பட்சத்தில் அவை ஒன்றோடொன்று மோதி அழிந்துவிடும்.

இவ்வாறு, வானத்திலுள்ளவை ஒவ்வொன்றுக்குமிடையில் இருக்கும் தொடர்புகளைப் போல், அவற்றுக்கும் நாம் வசிக்கும் இந்தப் பூமிக்கிடையிலும் இன்றியமையாதத் தொடர்புகள் இருக்கின்றன.

இவை யாவற்றையும் கவனித்தால் நம்மையும், நாம் வசிக்கும் இந்தப் பூமியையும் எவன் படைத்தானோ அவனே வானத்திலுள்ள கோடிக்கணக்கான இந்த நட்சத்திரங்கள், கோள்கள் முதலியவற்றையும் படைத்திருக்கின்றான் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

காத்தல்:

தவிர, காற்றால் அசையும் மரம், செடி, கொடிகள் தங்கள் அசைவைக் கொண்டு தங்களை அசைத்த காற்று இருக்கிறதென்பதை அறிவிப்பது போல், இவ்வுலகில் நிகழக்கூடிய நிகழ்ச்சிகளும் இவற்றை நிகழ்த்தும் ஒருவன் உண்டென்று அறிவிக்கின்றன.

ஆகவே, மரங்களை அசைத்த காற்றை நாம் நம்முடைய கண்ணால் காண முடியாவிட்டாலும், அக்காற்றை இல்லையென்று மறுப்பதில்லை. அவ்வாறே இவ்வுலக நிகழ்ச்சியைக் காணும் நாம், அவற்றை நிகழ்த்து பவனை நம்முடைய கண்ணால் காணாவிட்டாலும் அவனை இல்லை என்று மறுக்க முடியாது.

தவிர, இப்பூமியில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகள் யாவும், வானத்திலுள்ள சூரியன், சந்திரன் முதலியவற்றின் நிகழ்ச்சிக்கு தொடர்புடையதாகவே இருக்கின்றன. ஆகவே, அவற்றையும் சிறிது கவனிக்க வேண்டும்.

இந்த வானத்திலுள்ள நட்சத்திரங்கள், கோள்கள் முதலிய ஒவ்வொன்றுக்கும் குறிப்பான ஒவ்வொரு தொழில் இருக்கின்றது. ஆதலால்தான், அவை ஒரு சிறிதும் தவறாமல் குறித்த நேரத்தில் உதயமாகி, குறித்த நேரத்தில் மறைகின்றன.

இவ்வாறு, அவை புரியும் இயக்கங்களில் ஒரு சிறிதேனும் தவறு ஏற்படும் பட்சத்தில் இப்பூமியும், இப்பூமியிலுள்ள பொருட்களும் அழிந்துவிடும். வானத்திலுள்ள கோள்களும் ஒன்றோடொன்று மோதி அழிந்துவிடும்.

ஆகவே, இவை அனைத்தும் அவற்றுக்குரிய வேலைகளை ஒரு சிறிதும் தவறாமல் செய்து வரும்படி கட்டுப்படுத்தி, தன் விருப்பப்படி அவற்றை இயக்கும் அளவுகடந்த ஆற்றலுடைய ஒருவன் இருக்கின்றான் என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

தவிர, இவ்வாறு நிகழும் இவ்வுலக நிகழ்ச்சியில் படைத்த ஒருவனின் அதிகாரமின்றி, மற்றெவரின் அதிகாரம் ஒரு சிறிதேனும் கலக்கும்போது அவற்றின் இயக்கத்தில் முரண்பாடு ஏற்பட்டு இவ்வுலகம் எல்லாம் அழிந்துவிடும்.

ஆகவே, இவ்வுலகங்கள் அனைத்திலும் நிகழும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் இவ்வாறு இயக்குபவன் ஒருவனேயன்றி பலரல்ல என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆக்கியவனே காக்கின்றான்:

தவிர, வானத்திலுள்ள கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் ஒழுங்கான நிகழ்ச்சியைக் கொண்டே இப்பூமியிலுள்ள பொருட்கள் உற்பத்தியாவதனால், இவ்வாறு அவற்றை நிகழ்த்துபவனே படைப்பு களின் இறைவன் என்று சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

ஆகவே, படைப்புகளின் படைப்பாளன் ஒருவனென்றும், அவற்றைப் பாதுகாத்துப் பராமரிப்பவன் மற்றொருவன் என்று கூறுவது முற்றிலும் தவறு. எவன் பொருட்களைப் படைக்கின்றானோ அவனே அவற்றைக் காத்துப் பாதுகாக்கின்றான் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆக்கியவனே அழிக்கின்றான்:

இவ்வுலகிலுள்ள பொருட்கள் உற்பத்தியாவதையும் இதிலுள்ள உயிரினங்கள் உயிர் வாழ்வதையும் கவனித்தால், ஒரு பொருள் அழிந்தே மற்றொரு பொருள் உற்பத்தியாகின்றது. பல பொருட்களை தனக்கு உணவாக உண்டு அழித்தே உயிரினங்கள் வாழ்கின்றன. ஆகவே, எவன் படைப்பினங்களை உற்பத்தி செய்கின்றானோ அவனே மீண்டும் அவற்றை அழிக்கின்றான். ஆகவே, படைப்பினங்களின் படைப்பாளன் ஒருவன் என்றும், அவற்றை அழிக்கின்றவன் மற்றொருவரின் என்றும் கூறுவது தவறு.

ஆக்கல், அழித்தல், காத்தல் யாவும் ஒருவனின் செயலே!

படைத்தவனே படைப்பினங்களை அழிப்பதைப் போல், அவனே அவற்றைக் காக்கின்றான் என்ற விஷயமும் இதற்கு முன் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, பொருட்களை எவன் படைக்கின்றானோ அவனே அவற்றைக் காக்கின்றான். அவனே அவற்றை அழிக்கின்றான்.

ஆகவே, இவ்வுலகிலுள்ள பொருட்களைப் படைப்பவன் ஒருவன் என்றும், அவற்றைக் காக்கின்றவன் மற்றொருவரின் என்றும், அவற்றை அழிக்கின்றவன் வேறொருவரின் என்றும் நம் ஹிந்துக்கள் கூறுவது முற்றிலும் தவறு.

ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் இம்மூன்று செயலும் ஒருவனுக்குரியதே. இம்மூன்று செயலும் ஒருங்கே எவனிடம் இருக்கிறதோ அவன்தான் மெய்யான இறைவன்.

இம்மூன்று செயல்களுக்கும் சொந்தமான அந்த உண்மை இறைவனின் அறிவையோ, ஆற்றலையோ யார்தான் வருணிக்க முடியும்?

கேவலம்! சிறியதொரு எறும்பின் அமைப்பிலுள்ள நுட்பமான விஷயங்களையே அறிந்து கொள்ள முடியாத நாம், இப்பூமியிலுள்ள எண்ணற்ற வகைகளையும், எண்ணற்ற தொகையுடைய உயிரினங்கள் போன்ற எண்ணற்ற பொருட்களையும், வானத்திலுள்ள எண்ணற்ற கோள்கள், நட்சத்திரங்கள் முதலியவற்றையும் படைத்து, நம்முடைய அறிவுகளுக்கெல்லாம் ஒரு சிறிதும் எட்டாத மிக்க மேலானதொரு ஒழுங்குமுறையில் அமைத்து, தன் விருப்பப்படி அவற்றைக் கட்டுப் படுத்தி நிருவகிக்கும் அந்த உண்மையான இறைவனின் ஆற்றல், அறிவு முதலிய தன்மைகளில் எதைத்தான் (முழுமையாக) வருணிக்க முடியும்?

இந்த உண்மையான இறைவன், தன்னைப் புறக்கணித்து விட்டு மற்றவற்றைத் தெய்வமெனப் பாவித்து வணங்கும் சிலை வணக்கக் காரர்களை நோக்கி ‘அல்குர்ஆனில்’ கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (அல்குர்ஆன் 22:73)

நாத்திகர் கூற்று:

பொய்யான தெய்வங்களை வணங்கிக் கொண்டிருந்தோரில் பலர் தங்களுடைய கொள்கை தவறென்று உணர்ந்து, அவை தெய்வங்களல்ல என்று மறுக்க முற்பட்டிருப்பது போற்றத்தக்கதே!

எனினும், பொய்யான தெய்வங்களை இவ்வாறு மறுக்க முன்வருவோரில் சிலர், உண்மையான இறைவனையும் மறுக்க முற்படுகின்றனர்.

உண்மையான இறைவனை மறுக்க முற்படும் இவர்கள் தங்களுக்கு ஆதாரமாகக் கூறும் விஷயங்களெல்லாம் இவர்கள் முன்னர் அங்கீகரித் திருந்த பொய்யான தெய்வங்களை தெய்வங்களல்லவென்று மறுக்கக் கூடியவையே அன்றி மெய்யான இறைவனை மறுக்கக் கூடியவையல்ல.

ஆகவே, மெய்யான இறைவனை மறுக்கும் இவர்கள், தங்களுக்கு ஆதாரமாகக் கூறும் அவ்விஷயங்களையும் இங்கு கூறுவோம்.

தற்காலத்தில் மேல் நாட்டில் உள்ளோர் பறவைகளைப் போல் ஆகாயத்தில் பறந்துச் செல்கின்றனர். மீன்களைப் போல் சமுத்திரத் தினுள் நீந்திச் செல்கின்றனர். அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்திற்குக் கம்பியில்லா தந்தியின் மூலம் போட்டோ படங்களையும் செய்திகளையும் அனுப்புகின்றனர். ஒருவர் பேசும் வார்த்தைகளைப் பல ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ளவர்களும் கேட்கும்படி செய்கின்றனர். இத்தகைய அற்புதங்களெல்லாம் தெய்வத்தினால் செய்யக் கூடியவையே அன்றி மனிதர்களால் செய்யக் கூடியவையல்ல என்றும். இத்தகைய விஷயங்களைச் செய்வோரை தெய்வத்தின் அவதாரங்கள் என்றும் இதுவரை நாம் கருதி வந்தோம்.

எனினும், மேல் நாட்டினரோ இவற்றையெல்லாம் தற்காலத்தில் சர்வ சாதாரணமாகவே செய்து காண்பிப்பதுடன், செத்தவனையுமே உயிர்ப்பிக்க முயன்று வருகின்றனர் என்று அவர்களுடைய அறிவையும் ஆராய்ச்சியையும் மிக வெகுவாகப் போற்றிப் புகழ்ந்து, ‘இத்தகைய மேல் நாட்டினரே, கடவுள் மறுப்புச் சங்கங்களைக் கூட்டி, கடவுளே இல்லை என்று கூற ஆரம்பித்து விட்டனர்’ என்றும் கூறுகின்றனர்.

மெய்யான இறைவனை மறுக்க இவர்கள் கூறும் இக்கூற்றைக் கவனித்தால் அந்த மேல் நாட்டினர் கடவுளை மறுப்பதாகக் கேள்விப் பட்டு, இவர்களும் மறுக்க முற்பட்டிருக்கின்றனரே அன்றி, ‘கடவுள் இல்லை’ என்பதற்கு இவர்களிடத்தில் எந்த ஓர் அத்தாட்சியுமில்லை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். எனினும், இந்த மேல் நாட்டினரைப் பற்றி இவர்கள் கூறிய விஷயங்களையும் சிறிது கவனிப்போம்.

செத்தவனையும் பிழைக்கச் செய்ய அவர்கள் முயல்வது மெய்தான். எனினும், எத்தனை நபர்களை இதுவரையில் அவர்கள் பிழைக்கச் செய்து விட்டனர்? செத்தவனைப் பிழைக்கச் செய்வதென்ன? அவ்விதம் செய்ய முயல்வோரேனும் சாகாதிருக்கின்றனரா?

பறவைகளைப் போல் அவர்கள் ஆகாயத்தில் பறப்பதும் உண்மை தான். மீன்களைப் போல் கடலுக்குள் நீந்திச் செல்வதும் உண்மைதான். அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்திற்குப் போட்டோ படங்களையும், செய்திகளையும் அனுப்புவதும் உண்மைதான். ஒருவன் பேசும் வார்த்தைகளைப் பதினாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ளவர்களும் கேட்கும்படி செய்வதும் உண்மைதான். எனினும், இவற்றையெல்லாம் சர்வ சாதாரணமாகச் செய்யும் இவர்களால் கேவலம் சிறியதொரு கொசுவைப் போலவோ அல்லது ஒடிந்து போன அதன் இறக்கையைப் போலவோ அவ்வாறே உயிரோடு படைத்துவிட முடியுமா?14

ஆகாயத்தில் பறவைகளைப் போலவும், கடலில் மீன்களைப் போலவும் செல்லும் இவர்கள் இதுவரையில் செய்திருப்பதெல்லாம். இறைவன் படைத்திருக்கும் பொருட்களின் உதவியைக் கொண்டே அன்றி வேறில்லை.

முன்னர் இல்லாத எந்த ஒரு பொருளையோ அல்லது முன்னிருந்த பொருளில் இல்லாத எந்த ஒரு விசேஷ சக்தியையோ இவர்கள் நூதனமாக உண்டுபண்ணி விடவில்லை.

எப்பொருளின் உதவியைக் கொண்டு இவர்கள் இத்தகைய காரியங்களைச் செய்கின்றார்களோ அப்பொருளும் பூர்வ காலத்திலிருந்தே இருக்கின்றது. அப்பொருளில் உள்ள இத்தகைய சக்தியும் அப்பொருள் உற்பத்தியான காலத்திலிருந்தே இருந்து வருகின்றது.

எனினும், அப்பொருளில் இத்தகைய சக்தி இருக்கின்றது, அதை இவ்வாறெல்லாம் உபயோகித்தால் மனிதன் இத்தகைய விஷயங்களைச் செய்யலாம் என்பதை இவர்கள் அறிந்து கொள்வதற்குத்தான் இவ்வளவு காலமாயிற்று.

அப்பொருட்களைப் பற்றி இவர்கள் இதுவரையில் அறிந்திருக்கும் விஷயங்களும் மிகக் குறைவுதான். ஏனென்றால், அவற்றை ஆராய்ச்சி செய்ய செய்ய பின்னும் அற்புதமான விஷயங்கள் வெளியாகிக் கொண்டே போகின்றன.

ஆகவே, இவ்வுலகிலுள்ள கோடிக்கணக்கான பொருட்களில் ஒன்றையேனும் இவர்கள் இதுவரையில் முற்றிலும் ஆராய்ச்சி செய்து முடிக்கவில்லை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இதே போல் உலகிலுள்ள எண்ணற்ற மற்ற பொருட்களில் இவ்வாறு இறைவன், என்னென்ன சக்திகளை அமைத்திருக்கின்றானோ! அவற்றை எவ்வாறு ஆராய்ந்தால் அதிலுள்ள விஷயங்களை நாம் அறிய முடியுமோ! அவற்றைக் கொண்டு என்னென்ன விஷயங்களை இன்னும் நாம் செய்ய முடியுமோ என்பதை எல்லாம் எவரால்தான் கூறி முடிக்க முடியும்.?
இந்த மேல் நாட்டினர் இவ்வுலகிலுள்ள படைப்பினங்களின் தன்மைகளை முற்றிலும் அறிந்து கொள்ளாவிடினும், இப்பூமியில் என்னென்ன பொருட்கள் இருக்கின்ற என்பதையேனும் முற்றிலும் அறிந்து கொண்டனரா? அல்லது பொதுவாக பூமியையேனும் முற்றிலும் சுற்றிப் பார்த்து ஆராய்ச்சி செய்து விட்டனரா?

கடலில் மீன்களைப் போலவும், ஆகாயத்தில் பறவைகளைப் போலவும் செல்லும் இவர்கள் கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள் முதலியவற்றிலும் தேடிப் பார்த்துவிட்டோம், கடவுள் என்றதொரு பொருள் இல்லவே இல்லை என்று கூறுவதும் அக்கூற்றை நம்பி மெய்யான இறைவனை இல்லை என்று மறுக்க சிலர் முன்வருவதும் மிக்க விந்தையாகவே இருக்கின்றது.

சூரியனைப் பார்க்க சக்தியற்ற வெளவால் சூரியனே இல்லை என்று மறுப்பதற்கு ஒப்பாகவே இவர்களுடைய கூற்றும் இருக்கின்றது.

அதே மேல் நாட்டிலுள்ள மிக்க அறிவாளிகளான வானிலை ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறுகின்றனர் என்பதை இந்த நாத்திகர்கள் கவனிப்பார்களா?

‘‘வானத்திலுள்ள கோடிக்கணக்கான கோள்கள், நட்சித்திரங்களுக்கு இடையில் ஒன்றுக்கொன்று இன்றியமையாத சம்பந்தங்கள் இருக் கின்றன. தவிர, வானத்திலுள்ள இவற்றுக்கும், நாம் வசிக்கும் இந்த பூமிக்கிடையிலும் இன்றியமையாத சம்பந்தங்கள் இருக்கின்றன. மேலும், வானத்திலுள்ள இவை ஒவ்வொன்றுக்கும், குறிப்பிட்ட ஒவ்வொரு வேலைகள் இருக்கின்றன. ஆதலால்தான், அவை ஒரு சிறிதும் தவறாமல் குறித்த நேரத்தில் உதயமாகின்றன. குறித்த நேரத்தில் மறைகின்றன. இவ்வாறு அவை புரிந்து வரும் செயல்களில் சிறிதேனும் தவறு ஏற்படும் பட்சத்தில் இவ்வுலகம் அழிந்தே விடும். ஆகவே, ஒரு சிறிதும் தவறாமல் செய்து வரும்படி இவற்றைக் கட்டுப்படுத்தி நிருவகிக்கும், அளவு கடந்த ஆற்றலுடையதொரு சக்தி இருந்தே ஆகவேண்டும்’’ என்று இந்த மேல் நாட்டிலுள்ள வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை:

தாங்கள் பின்பற்றியிருந்த கிறிஸ்தவ மதம் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் முற்றிலும் மாறானதாக இருக்கின்றது என்பதை இந்த மேல் நாட்டினர் தங்களுடைய மதத்தைப் புறக்கணித்த பின்னர் அவர்களுடைய நிலைமை எவ்விஷயத்திலும் மிக்க குழப்பமாகவே இருக்கின்றது.

ஒரு நாள் ஒரு விஷயத்தை இல்லை என்று மறுக்கின்றனர். மறுநாள் அதே விஷயத்தை அவர்களே உண்டென்று கூற முற்படுகின்றனர்.

சிறிது காலத்திற்கு முன் வரையில் மேல் நாட்டிலுள்ள தத்துவ மேதைகள், ‘‘மரணத்திற்குப் பின் யாதொரு வாழ்க்கையுமில்லை ஏனென்றால், மற்ற உயிரினங்களைப் போலவே மனிதனும், இந்த உலகத்தில் வாழும் வரை பல இன்பத் துன்பங்களை அனுபவித்து இறந்து அழிந்து விடுகின்றான்’’ என்று கூறினார்கள். மேலும், மனிதன் இறந்த பின்னர் அவனுடைய ஆத்மா என்ற ஒன்று அழியாதிருக்கின்றது அதன் வாழ்நாளில் செய்த நன்மை தீமையின் பலாபலன்களை அவனுடைய ஆத்மா அனுபவிக்கின்றது என்று கூறுவது முற்றிலும் தவறு என்பதாக மறுத்துக் கூறினர்.

எனினும், ‘மெஸ்மரிஸம்’ என்னும் ஆத்மா சம்பந்தமான கல்வி அவர்களிலும் பரவிய பின்னரே ஆத்மாவையும், மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கையையும் நிராகரித்துக் கொண்டிருந்த அவர்கள் தங்களுடைய கொள்கை முற்றிலும் தவறானது என்று உணர்ந்து, மனிதனில் ஆத்மா என்ற ஒரு பொருளுண்டு மனிதன் வாழ்நாளில் செய்யும் நன்மை தீமையின் பலாபலனை அவனுடைய ஆத்மா, மரணத்திற்குப் பின் அனுபவிக்கின்றது இதனை நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என்று இப்போது கூறுகின்றனர்.

எனினும், ஆத்மாவைப் பற்றியும், மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கையைப் பற்றியுமுள்ள இவர்களுடைய இந்த ஆராய்ச்சியும் பூர்த்தியானதல்ல. அதிலும் அநேக குறைகளிருக்கின்றன. எனவேதான் தங்களுடைய ஆராய்ச்சி இவ்விஷயத்திலும் மிக்க ஆரம்பத் திசையில் இருப்பதாகவே அவர்களும் கூறுகின்றனர். எனினும், மறுமையை மறுத்தது முற்றிலும் தவறென்பதை மட்டும் சந்தேகமில்லாமல் அறிந்து கொண்டனர்.


வேதங்கள்:

உண்மையான இறைவனை மறுப்போர் அந்த இறைவனால் அருளப்பட்டது என்று கூறப்படும் வேதங்களில் எதைத்தான் அங்கீகரிப்பார்? ஆகவே, படைத்த இறைவனையே மறுக்கும் நாத்திகர், வேதங்கள் அனைத்தையும் மறுப்பதைப் பற்றி நாம் ஆச்சரியப்படு வதற்கில்லை.

எனினும், உண்மையான இறைவனை அங்கீகரிப்பதாகக் கூறுவோரும் தங்களுடைய வேதத்தைத் தவிர எந்த ஒரு வேதமும் அந்த இறைவனால் அருளப்படவே இல்லை என்று கூறுவதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது.

மனித வர்க்கம் உற்பத்தியானதிலிருந்து அந்தந்த காலத்திற்குத் தக்கவாறு மனிதர்களின் நன்மைக்கென இறைவனால் பற்பல வேதங்கள் அருளப்பட்டே இருக்கின்றன. எனினும், அவை நிரந்தரமானவையாக இருக்கவில்லை.

ஏனென்றால், தற்காலத்தில் நாமிருக்கும் இதே நிலைமையில் ஆரம்பக் காலத்திலிருந்தே நம்முடைய மூதாதைகள் இருக்கவில்லை. தற்காலத்தில் உள்ள மக்கள் தொகையும் ஆரம்பக் காலத்தில் இருக்க வில்லை. படிப்படியாக அவர்களுடைய தொகை பெருகி, அவர்களின் அவசியங்களும் அதிகரித்து, அதற்கேற்றவாறு அவர்களுடைய அறிவும், ஆராய்ச்சியும் அபிவிருத்தியாகியே இந்நிலைமையை நாம் அடைந்தோம்.

ஆகவே, மனிதர்களின் நன்மைக்கென வேதங்களை அருள் செய்த இறைவனும் அந்தந்த காலத்திலிருந்த மனிதர்களின் தொகைக்கும் நிலைமைக்கும் தக்க சட்டத் திட்டங்களையுடைய வேதங்களையே அருள் புரிந்துள்ளான்.

ஆரம்பக் காலத்தில் மனிதர்களின் தொகை வெகு சொற்பமாகவே இருந்தது. ஆதலால், சகோதரியையும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. மக்கள் தொகை அதிகரிக்கவே அதனைத் தடை செய்து சகோதரியுடைய மகளைத் திருமணம் செய்து கொள்ள கட்டளையிடப்பட்டது. பிறகு மக்கள் தொகை அதிகரிக்கவே அதுவும் தடை செய்யப்பட்டது. சகோதரியுடைய மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் நம் ஹிந்துக்களுக்கு இருப்பதனால் ஹிந்து மதம் மிக பழமையானதென்றே தெரிய வருகின்றது.15

இவ்வாறு மக்கள் தொகை அதிகரித்து ஒரு குடும்பம் பல குடும்பங்களாகப் பிரியவே, பாக விஷயமும் தீர்மானிக்க வேண்டியதாயிற்று.

இவ்வாறு பிரிந்த குடும்பங்களின் தொகையும் அதிகரித்து அவர்கள் வசித்த இடம் ஓர் ஊராக மாறிவிடவே, பல குடும்பத் தினருக்கு இடையில் ஏற்படக்கூடிய விவகாரங்களைத் தீர்ப்பதற்கு ஒரு தலைவனை ஏற்படுத்திக் கொள்ளும்படி கட்டளையிட வேண்டியதுடன், பல குடும்பங்களுக்கிடையில் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் தீர்மானிக்க வேண்டியதாயிற்று.

ஓர் ஊரில் வசித்திருந்த குடும்பங்களின் எண்ணிக்கையும் பெருகி, அவர்கள் பிரிந்து பல இடங்களில் வசிக்க ஆரம்பித்துப் பல கிராமங்களாக ஏற்படவே, பல கிராமங்களிலுள்ள மனிதர்களுக்கிடையில் சம்பந்தப்பட்ட பொதுப்படையான பல விஷயங்களையும் தீர்மானிக்க வேண்டியதாயிற்று.

இப்படி நாளுக்கு நாள் மனிதர்களுடைய தொகை பெருகி, ஒரு குடும்பம் பல குடும்பங்களாகவும், ஓர் ஊர் பல ஊர்களாகவும் ஏற்பட்டு, மனிதர்களின் அவசியங்களும் அதிகரித்து, அவர்களின் நிலைமையும் படிப்படியாக மாறுதலடைந்து வரவே, மாறுதலடைந்த அவர்களுடைய நிலைமைக்குத் தக்க சட்டத் திட்டங்களையுடைய வேதத்தையே அந்தந்தக் காலத்தில் இறைவன் அருள்புரிந்து வந்தான்.

இவ்வாறு இறைவன் அருள் புரிந்த வேதங்கள் எத்தனை? அவற்றின் பெயர்கள் எவை? என்ற விவரங்களைத் தெளிவாக நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை.

எனினும், இவ்வாறு இறைவனால் அருளப்பட்ட வேதங்களில் எல்லாம் அல்குர்ஆன் என்னும் வேதம்தான் இறுதியாக அருளப் பட்டது என்பதிலும் அதற்குப் பின் எந்த ஒரு வேதமும் இதுவரையில் அருளப்படவே இல்லை என்பதிலும் சந்தேகமில்லை.

இதற்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களில் எதுவுமே தற்காலம் உள்ள மனிதர்கள் பின்பற்றி நடக்கக் கூடியவையாக இருக்கவில்லை.

உதாரணமாக: கிறிஸ்தவ மத வேதத்தைக் கவனிக்கவும். ‘‘ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் திருப்பிக் கொடுப்பதுதான் எங்கள் மத தர்மத்தின் அடிப்படை’’ என்று நம் கிறிஸ்தவ நண்பர்கள் கூறுகின்றனர். (ஆதாரம்:பைபிள் - மத்தேயு 5:39, லூக்கா 6:29)

அவர்கள் கூறும் இந்தத் தத்துவம் மிக மேலானதாகவும் கேட்பதற்கு மிக்க இனிமையாகவும் இருக்கின்றது.

எனினும், இவ்வளவு மேலான ஒப்பற்ற இந்தத் தத்துவத்தை நம் கிறிஸ்தவ நண்பர்களில் எத்தனை பேர்கள் தற்காலம் பின்பற்றி நடக்கின்றனர்? மேல் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களும் மெய்யாகவே இந்த தத்துவத்தைப் பின்பற்றி நடக்கின்றனரா? அங்குள்ள வல்லரசுகளும், ஒப்பற்ற இந்தத் தத்துவத்தையே அடிப்படையாகக் கொண்டு ஆட்சி புரிகின்றனரா? அவ்வாறு ஆட்சி புரிய முற்பட்டாலும் அவர்களுடைய ஆட்சிதான், ஒரு நாளேனும் நிலைத்திருக்குமா?

சமண மதம், புத்த மதம் ஆகியவற்றின் தத்துவங்களும் இத்தகைய இரக்கச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவைதான் என்று கூறப்படுகின்றது. ஆகவே, அவற்றையும் பின்பற்றி நடக்க தற்காலத்தில் எவரால்தான் சாத்தியப்படும்?

அவ்வாறே தற்காலம் ஹிந்து மத தர்மத்தையும் பின்பற்றி நடக்க எவராலும் முடியாது. ஏனென்றால், அதன் சட்டத் திட்டங்கள் அனைத்தும் மனுதர்ம சாஸ்திரத்தில் வெகு தெளிவாகக் கூறப்பட்டு உள்ளன. எனினும், ஹிந்துக்களில் எவர்தான் தற்காலம் இந்த மனுதர்ம சாஸ்திரத்தைப் பின்பற்றி நடக்கின்றனர்?

தீண்டப்படாதோர் போன்ற மற்ற ஹிந்துக்கள் என்ன? ஜாதி பிராமணர்களேனும் அந்த மனு தர்மச் சாஸ்திரத்தைப் பின்பற்றி நடக் கின்றனரா? மெய்யாகவே அதனை அவர்கள் பின்பற்றி நடப்பதாக இருந்தால் இந்த அரசாங்கத்தின் உத்தியோகத்திலோ அல்லது அதற்கு சம்பந்தப்பட்ட வக்கீல் தொழிலிலோ யாதொரு பிராமணரையும் காண முடியுமா?16

ஆகவே, ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், புத்தர்கள் ஆகிய இவர்களின் வேதங்களைக் கவனித்தால் முற்காலத்தில் எப்பொழுதாவது மனிதர்கள் அவற்றைப் பின்பற்றி நடந்திருக்கலாமே தவிர, தற்காலம் உள்ள நம்முடைய நிலைமையோ அவற்றைப் பின்பற்றி நடக்கத்தக்க தாக இல்லவே இல்லை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
ஆதலால்தான், இவ்வேதங்கள் எல்லாம் அவற்றைப் பின்பற்றி நடக்கவேண்டிய காலம் முடிந்தவுடன் அவ்வேதங்களும் அழிந்து விட்டன. இவ்வாறு ‘அல்குர்ஆன்’ என்னும் வேதத்திற்கு முன்னர் அருளப்பட்ட வேதங்கள் அனைத்தும் அழிந்து விட்டதைப் போலவே அவ்வேதங்கள் அருளப்பட்ட மொழிகளும் அழிந்து விட்டன.

அம்மொழிகள் எல்லாம் சில நூற்களில் காணப்படுகின்றனவே அன்றி, அவற்றை பேசக்கூடியதொரு நாடோ, நகரமோ, சிறியதொரு கிராமமோ தற்காலம் இவ்வுலகில் காணப்படவில்லை.
யூதர்கள் இன்றைய தினமும் லட்சக்கணக்காகவே இருக்கின்றனர். எனினும், அவர்களுடைய வேத மொழியாகிய ‘எப்ரூவைப்’ பேசக் கூடிய சிறியதொரு கிராமமும் இவ்வுலகில் இல்லை.

கிறிஸ்தவர்களும் கோடிக்கணக்காகவே இருக்கின்றனர். எனினும், அவர்களுடைய வேத மொழியாகிய ‘லத்தீனைப்’ பேசக்கூடிய சிறியதொரு கிராமமும் இவ்வுலகில் இல்லை.

ஹிந்துக்களும் கோடிக்கணக்காகவே இருக்கின்றனர். எனினும், இவர்களுடைய வேத மொழியாகிய ‘ஸமஸ்கிருதத்தைப்’ பேசக்கூடிய சிறியதொரு கிராமமும் இவ்வுலகில் இல்லை.

எவ்வாறு, இவர்களுடைய வேதங்களின் அசல் பிரதிகளில் ஒன்றுமே தற்காலம் இவ்வுலகத்தில் இல்லாதவாறு அழிந்து விட்டதோ அவ்வாறே அவ்வேதங்களின் மொழிகளும் அவற்றைப் பேசக்கூடிய எந்த ஒரு கிராமமும் தற்காலத்தில் இவ்வுலகில் இல்லாதவாறு அழிந்து விட்டன.

ஆதலால்தான், இவர்களுடைய வேதங்களின் மொழிகளுக்கு எல்லாம் ‘இறந்துபோன மொழிகள்’ என்று பெயர் கூறப்படுகின்றது.


அழியாத வேதம் அல்குர்ஆன்:

‘அல்குர்ஆன்’ என்னும் வேதத்திற்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களெல்லாம் தற்காலத்திற்கு உதவாதவையாக இருந்ததால் அவ்வேதங்கள் யாவும் அழிந்து விட்டதுடன், அவற்றின் மொழிகளும் அழிந்து விட்டன என்பதை, இதுவரையில் கூறிய விஷயங்களைக் கொண்டு தெளிவாக அறிந்து கொள்ளலாம். ஆகவே, இனி கடைசியாக அருளப்பட்ட ‘அல்குர்ஆன்’ என்னும் வேதத்தைப் பற்றி அஃது எவ்வாறு இருக்கின்றது? இன்றைக்கும் அவ்வேதம் அழியாமல் இருக்கின்றதா? அதன் மொழியும் அழியாமல் இருக்கின்றதா? அதன் சட்டத் திட்டங்களும் தற்கால நிலைமைக்கு பொருத்தமானவைதானா? என்ற விஷயங்களைக் கவனிப்போம்.

இதில், அதன் மொழியைப் பற்றி முதலாவதாக கூறி, பின்னர் அவ்வேதம் அழியாமல் இருக்கின்றதென்பதையும் அதன் சட்டத் திட்டங்கள் தற்கால நிலைமைக்கு பொருத்தமானவை என்பதையும் முறையே கூறுவோம்.

‘அல்குர்ஆன்’ என்னும் வேதத்தின் மொழி உயிரோட்டமுள்ள மொழியாகவே இருக்கிறது. ஏனென்றால், அதன் மொழியாகிய அரபி பேசக்கூடியவர்கள் மெஸபடோமியா, எகிப்து, ஃபலஸ்தீன், ஸிரியா, ஸவூதி, யமன், ஸுடான் மற்றும் பல நாடுகளிலெல்லாம்17 இன்றைய தினம் கோடிக்கணக்காகவே இருக்கின்றனர். இந்த கோடிக்கணக்கான மக்களும் அரபியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆதலால், அரபி மொழியை ‘உயிரோட்டமுள்ள மொழி’ என்றும், அதிலும் அதிக மக்கள் தொகையுடைய மொழி என்றும் கூறப்படுகின்றது.

இனி, அல்குர்ஆன் என்னும் வேதம், அது அருளப்பட்டவாறே இருக்கின்றதா? என்பதைக் கவனிப்போம்.

எனினும், அதனைக் கவனிப்பதற்கு முன்னர், நம் ஹிந்துக்களும், கிறிஸ்தவர்களும் தங்களுடைய வேதங்களென தற்காலம் கூறுகின் றனரே, அவை என்ன நிலைமைகளில் இருக்கின்றன? அவற்றை வேதமெனக் கூறத் தகுமா? என்பதைப் பற்றி பின்னும் சில விஷயங்கள் அறிந்து கொள்வது அவசியம்.

இதில் முதலாவதாக, நம் ஹிந்துக்களின் வேதத்தையே சற்று கவனிப்போம். ஹிந்துக்களுடைய வேதத்தைப் பற்றி தாழ்த்தப்பட்ட மற்றும் ஜாதி ஹிந்துக்களை ஒன்றும் கேட்பதற்கில்லை.

ஏனென்றால், அதனைத் தங்களுடைய வேதமென அங்கீகரிக்கும் இவர்கள் கோடிக்கணக்காகவே இருக்கின்றனர். எனினும், ஆயிரக் கணக்கான வருடங்களாகியும், இவர்கள் தங்களுடைய வேதம் இன்னது தான். அதில் என்ன கூறப்பட்டிருக்கின்றது? அது கருப்பா? சிவப்பா? என்பதையும் அறிந்து கொள்ள முடியாத நிலைமையில் இருக்கின்றனர்.

அவ்வளவு தூரம் நம் ஹிந்துக்களை பிராமணர்கள், தங்கள் வேதத்திலிருந்து அப்புறப்படுத்தி விட்டனர்.18
இந்த பிராமணர்கள் வேதத்தின் பெயரால் எதைக் கூறிய போதிலும் அதனை அங்கீகரிக்க நம் ஹிந்துக்கள் கடமைப்பட்டவர்களே அன்றி, அந்த பிராமணர்கள் கூறும் விஷயம் வேதத்தில் எவ்விடத்தில் கூறப்பட்டிருக்கின்றது என்று கேட்கவும் அல்லது வேதத்திலும் இத்தகைய விஷயங்கள் கூறப்பட்டிருக்குமா? என்று சிந்திக்கவும் அவர்களுக்கு உரிமையில்லை.

ஆகவே, இவ்வாறு தங்களுடைய வாழ்க்கையின் நன்மை, தீமை, மோட்சம் ஆகிய அனைத்தையும் அந்த பிராமணர்களிடம் ஒப்படைத்து விட்டு, தங்களுடைய வேதம் கருப்பா? சிவப்பா? என்பதை கண்ணாலும் பார்க்க முடியாத நிலைமையிலிருக்கும் நம் ஹிந்துக்களை நோக்கி, உங்களுடைய வேதம் எவ்வாறிருக்கின்றது? எவ்வித மாறுதலுமின்றி இன்றைய தினமும் அஃது இருக்கின்றதா என்று கேட்க எவருக்குத்தான் உரிமையுண்டு?

எனினும், வேதத்தைப் பாதுகாப்பதற்காகவே நாங்கள் படைக்கப் பட்டிருக்கிறோம் என்று கூறும் அந்த பிராமணர்கள் இவர்களுடைய வேதம் இன்றைய தினம் என்ன நிலைமையில் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்வதும் கஷ்டமில்லை.

ஏனென்றால், ஒரு பிராமணன், தீண்டப்படாதவர்களில் எவரையும் கொலை செய்து விட்டால் அந்த பிராமணனுடைய தலையை மொட்டையடித்து விட்டுவிட வேண்டுமேயன்றி அவனை ஒன்றும் செய்யக் கூடாது.

இதுதான் வேதக் கட்டளை என்று அந்த பிராமணர்கள் கூறு கிறார்கள் என்றால் அந்த வேதம் பிராமணர்களால் உருவாக்கப்பட்டதா? அல்லது மனித வர்க்கத்தின் நன்மைக்கென இறைவனால் அருளப் பட்டதா? என்பதை நம் ஹிந்துக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

இத்தகைய கட்டளைகள் உள்ள ஒரு நூலை எவரும், இதுதான் எங்களுடைய வேதமென்றும், எங்களுடைய இவ்வேதம் இறைவனால் தான் அருளப்பட்டது என்றும் கூறுவார்களேயானால், அவர்கள் தாங்கள் மனிதர்களாகப் பிறக்கவில்லை என்றே கூறுகிறார்கள்.
ஏனென்றால், மனிதர்களைப் படைத்த அருளாளனாகிய இறைவன், பிறவியைக் கொண்டு மனித வர்க்கத்திற்கிடையில் இத்தகைய வித்தி யாசத்தைக் கற்பிக்கவில்லை என்பதை மனிதராகப் பிறந்த எவருமே எளிதில் அறிந்துகொள்ளலாம்.

ஆகவே, மனிதனைப் படைத்த அருளாளனாகிய இறைவன், அந்த மனிதர்களின் நன்மைக்கென அருள்புரிந்த எந்த ஒரு வேதத்திலும், இத்தகைய கட்டளைகளும் இருக்குமா? ‘பவுண்சீக யாகம்’, ‘அசுவமேத யாகம்’ போன்ற யாகங்களைச் செய்யும் படியாகவும் கூறப்பட்டிருக்க லாமா? விதவைத் திருமணம் கூடாது, நியோகம்தான் செய்து கொண்டிருக்க வேண்டுமென்றும் கூறப்பட்டிருக்குமா? இத்தகைய கட்டளைகளுடைய ஒரு நூலை வேதமென்றுதான் கூறத்தகுமா?

ஆகவே, அவற்றில் கூறப்பட்டுள்ள இத்தகைய விஷயங்களைக் கொண்டே அவை வேதங்களல்ல என்பதையும், முன்னர் ஒரு காலத்தில் அவை வேதங்களாக இருந்திருந்திருக்கலாம் என்று வைத்தக் கொண்டாலும் இப்போது அவற்றை இந்த பிராமணர்கள் தங்கள் விருப்பப்படியெல்லாம் முற்றிலும் தலைகீழாகப் புரட்டி விட்டனர் என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இனி, கிறிஸ்தவர்களின் வேதமாகிய பைபிளைக் கவனிப்போம். ஈஸா நபி (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட ‘இன்ஜீல்’ என்னும் வேதம் தற்காலம் இவ்வுலகில் இல்லை.19

பைபிளின் புதிய ஏற்பாட்டில் இருப்பவை எல்லாம் ஈஸா நபி (அலை) அவர்களைப் பற்றி அவர்களுடைய சிஷ்யர்களால் எழுதப்பட்ட சரித்திரங்களேயன்றி ஈஸா நபி (அலை) அவர்களுக்கு இறைவனால் அருளப்பட்ட வேதமல்ல. அந்த சரித்திரங்களும் எவர்கள் பெயரால் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றனவோ அவர்களாலும் எழுதப் பட்டவையல்ல. அவர்களுடைய காலத்திற்குப் பின்னரே வேறு பலரால் எழுதப்பட்டு அவர்கள் பெயரால் பிரசுரிக்கப்பட்டவையாகும். அவற்றின் அசல் பிரதிகளும் இன்றைய தினம் இவ்வுலகில் இல்லை. அவற்றின் மொழிபெயர்ப்பென கூறப்பட்டவையே பல மொழிகளிலும் இருக்கின்றன. இவ்வாறு பல மொழிகளிலுள்ள மொழிபெயர்ப்புகளும் ஒரே விதமாக இருக்கவுமில்லை. ஒரு மொழியிலுள்ளதை மற்றொரு மொழியில் உள்ளதுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலோ ஒன்றுக்கொன்று அநேக வித்தியாசங்கள் இருக்கின்றன.

அல்லது ஒரே மொழியிலுள்ள பல பிரதிகளை ஒப்பிட்டுப் பார்த்த போதிலும், அவையேனும் ஒரே மாதிரியாக இருக்கின்றனவா? அதுவும் இல்லை. புராடெஸ்டண்ட் கிறிஸ்தவர்களிடமுள்ள தமிழ் பைபிளுக்கும், கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடமுள்ள தமிழ் பைபிளுக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கின்றன.

அல்லது குறைந்த பட்சம் புராடெஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் ஒரே மொழியில் அச்சிடும் பல பிரதிகளிலாவது வித்தியாசம் இல்லாமல் இருக்கின்றதா? அதுவுமில்லை.

ஒரே மொழியில் புராடெஸ்டண்ட் கிறிஸ்தவர்களே, ஓர் இடத்தில் அச்சிட்ட பிரதி ஒரு விதமாகவும், மற்றொரு இடத்தில் அச்சிட்ட பிரதி மற்றொரு விதமாகவுமே இருக்கின்றது.

இவ்வாறு, இவற்றுக்குள் வித்தியாசங்கள் ஏற்படுவதற்குரிய காரணமெல்லாம் இவை பலரால் மொழிபெயர்க்கப்பட்டவை ஆகும். இவ்வாறு பலரால் மொழிபெயர்க்கப்பட்டவைக்கு இடையில் இத்தகைய வித்தியாசங்கள் ஏற்படுவது சகஜம்தான் என்று நம் கிறிஸ்தவர்கள் கூற முன்வரலாம்.20 அவ்வாறு கூறுவதாயின், ஒருவராலேயே மொழி பெயர்க்கப்பட்ட பிரதியிலும் ஒரு தடவை அச்சிட்ட பிரதி ஒரு மாதிரியும், மறுதடவை அச்சிட்ட பிரதி மற்றொரு மாதிரியும் இருப்பதன் காரணமென்ன?

பைபிளிலுள்ள யாதொரு விஷயத்தைப் பற்றி எவரேனும் யாதொரு ஆட்சேபனை கிளப்பினால், மறு தடவை அதனை அச்சிடும் போது அந்த ஆட்சேபனைக்கு இடமில்லாதவாறு அதனை முன்னர் அச்சிட்ட வர்களே திருத்தி அச்சிடுகின்றனர்.

கிறிஸ்தவப் பாதிரிகள் இவ்வாறு தங்களுடைய வேதத்தை தங்களுடைய விருப்படியெல்லாம் புரட்டி வருவது உலகமறிந்த உண்மை.

இவ்வாறெல்லாம் புரட்டியும், ஒரு சுவிசேஷத்திலுள்ள விஷயத்திற்கு மற்றொரு சுவிசேஷத்திலுள்ள விஷயம் முரண்பாடு இல்லாமலேனும் இருக்கின்றதா? அதுவுமில்லை. அவற்றுக்குள் எவ்வளவோ முரண்பாடுகள் இருக்கின்றன.

தற்காலம் கிறிஸ்தவர்களிடமுள்ள பைபிளில் இத்தகைய வித்தியாசங்கள் மலிந்து கிடக்கின்றன என்பதை மேல் நாட்டிலுள்ள கிறிஸ்தவ மேதாவிகளே பரிசீலனை செய்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆகவே, இந்நிலைமையில் கிறிஸ்தவ நண்பர்களில் எவர்தான் தங்களுடைய பைபிள் இறைவனால் அருளப்பட்ட வேதம் என்றும், அருளப்பட்டவாறே இருக்கின்றது என்றும் கூற முடியும்?

ஈஸா நபி (அலை) அவர்களுக்கு அருளப்பட்டிருந்த இன்ஜீல் என்னும் பரிசுத்தமான வேதம் இன்றைய தினம் இவ்வுலகில் இருந்திருந்தால், ஏகதெய்வக் கொள்கைக்குப் பதிலாக ஒன்றுதான் மூன்றென்றும், மூன்றுதான் ஒன்றென்றும் யாருடைய அறிவிலும் இதுவரையில் நுழையாத இத்திருத்துவக் கொள்கையை இன்றைய கிறிஸ்தவர்களிடம் காணமுடியுமா?

தவிர, இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டதனால்தான், எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதென்றும் நம் கிறிஸ்தவ நண்பர்கள் கூற முன்வருவார்களா? இவர்களுடைய இக்கூற்று உண்மையாயின் அந்த இயேசு நாதரை சிலுவையில் அறைய இவர்களுக்கு எவ்வளவோ விருப்பம் இருந்திருக்க வேண்டும் என்றுதான், தெளிவாக அறிய முடிகின்றது. இதனையும் நம் கிறிஸ்தவ நண்பர்கள் அங்கீகரிக்க முன்வருவார்களா?

தவிர, இவர்களுடைய இயேசு நாதரைச் சிலுவையில் அறைந்ததாக இவர்கள் கூறும் அந்த யூதர்களுக்கு இவர்கள் நன்றி செலுத்தக் கடமைப் பட்டவர்களல்லவா? அவ்வாறு அவர்களுக்கு இவர்கள் நன்றி செலுத்தவும் முன்வருவார்களா? தவிர, ஒருவன் என்ன பாவம் செய்த போதிலும் சிலுவைக் கொள்கையை அங்கீகரித்தால் அவனுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டுவிட்டன என்றும் நம் கிறிஸ்த வர்கள் கூறுவார்களா?

அவர்களுடைய இக்கூற்று மனிதனைப் பாவத்திலிருந்து விலக்கக் கூடியதா? அல்லது பின்னும் பாவம் செய்யும்படி அவனைத் தூண்டக் கூடியதா? என்பதையும் நம் கிறிஸ்தவ நண்பர்கள்தான் கூறவேண்டும்.

ஆகவே, பைபிளில் கூறப்பட்டுள்ள இத்தகைய விஷயங்களைக் கொண்டே அது வேதமல்ல என்பதையும், அந்த இயேசு நாதரைக் கொலை செய்ய முயன்ற யூதர்களாலேயே எழுதப்பட்டு, இயேசு நாதரின் உண்மை சிஷ்யர்கள் பெயரால் பிரசுரிக்கப்பட்டு விட்டது என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆகவே, நம் கிறிஸ்தவர்களிடமும், ஹிந்துக்களிடமும் தற்காலம் உள்ளவற்றை வேதங்கள் எனவும் கூறுவதற்கில்லை. முன்னர் ஒரு காலத்தில் இவை, வேதங்களாக இருந்தன என்று வைத்துக் கொண்டாலும் பலருடைய கையாடலின் காரணமாக அவை முற்றிலும் மாறுதலடைந்து விட்டன என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இனி, ‘அல்குர்ஆன்’ என்னும் வேதம் எவ்வாறிருக்கின்றது என்பதைக் கவனிப்போம். இவ்வேதம் அருளப்பட்டு இன்றைக்கு 1400 வருடங்களுக்கு மேலாகின்றன.

இது அருளப்பட்ட காலத்தில், அருளப்பட்ட மொழியில் எழுதப்பட்ட அசல் பிரதிகளும் இருக்கின்றன. அதற்குப் பின்னர் பற்பல காலங்களில், பற்பல நாடுகளில், பற்பலரால் எழுதப்பட்ட பிரதிகளும் இருக்கின்றன. இவ்வாறு இன்றைய தினம் இவ்வுலகில் இருக்கும் கோடிக்கணக்கான இதன் பிரதிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒப்பிட்டு நோக்கும் பட்சத்தில் இவற்றுக்கிடையில் யாதொரு எழுத்தோ, புள்ளியோ வித்தியாசப்பட்டிருப்பதைக் காண முடியாது.

இவ்வளவு காலம் வரையில் ஒரு சிறிதும் மாறுதலடையாமல் இருக்கக்கூடிய நூல் இவ்வுலகில் இவ்வேதத்தைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. ‘அல்குர்ஆன்’ என்னும் வேதம் இவ்வாறு ஓர் எழுத்து கூட மாறுதலடையாமல் இருப்பதற்குரிய காரணம், அது அருளப்பட்ட காலத்திலிருந்து இதுவரையிலும் எழுதப்பட்ட லட்சக்கணக்கான ஏட்டுப் பிரதிகள் இன்றைய தினமும் இவ்வுலகில் இருப்பதுதான் என்று சிலர் கருதலாம். எனினும், அதனையே இதற்குக் காரணமாக கூறுவதற்கு இல்லை.

ஏனென்றால், தற்காலம் இவ்வுலகத்தில் இருக்கும் கோடிக் கணக்கான ஏட்டுப் பிரதிகளையும் ஒன்றுமே மீதமில்லாதவாறு எரித்து அழித்துவிட்ட போதிலும் இவ்வேதம் அழிந்து விடாது. மறுநாளே லட்சக்கணக்கான பிரதிகள் இவ்வுலகில் தோன்றிவிடும்.

ஏனென்றால், இதிலுள்ள 6,666 வசனங்களையும் உள்ளது உள்ளவாறே அதே ஒழுங்கின் முறைப்படி முற்றிலும் மனனம் செய்த ஹாஃபிழ்கள்21 இருக்கின்றனர்.

இத்தகையோர் ஒன்றிரண்டல்ல. எத்தனையோ லட்சம் இருக் கின்றனர். தென்னிந்தியா, வட இந்தியா, எகிப்து, ஸிரியா, ஸவூதி அரபியா முதலிய முஸ்லிம்கள் வசிக்கும் ஒவ்வொரு தேசத்திலும் இத்தகைய ஹாஃபிழ்கள் லட்சக்கணக்காகவே இருக்கின்றனர்.

தென்னிந்தியாவிலுள்ள இத்தகையதொரு ஹாஃபிழ்கள் மனனமாக ஒப்பிக்கும் இவ்வேதத்தை எழுதிக் கொண்டு ஸிரியா, எகிப்து, ஸவுதி அரேபியா முதலிய எந்த இடத்திற்கும் சென்று, அங்குள்ள ஒரு ஹாஃபிழ் மனனமாக ஒப்பிப்பதை இத்துடன் ஒத்திட்டுப் பார்த்தால் இதற்கும் அதற்கும் எந்த ஒரு எழுத்திலும் வித்தியாசம் காணமுடியாது.

இவ்வளவு திருத்தமாக அதனை மனனம் செய்திருக்கும் ஹாஃபிழ்கள் ஆண்களில்தான் இருக்கின்றனர் என்பதல்ல. பெண் களிலும் லட்சக்கணக்காக இருக்கின்றனர். பெரியோர்களில்தான் என்பதல்ல, பத்து வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகளிலும் அநேகர் இருக்கின்றனர்.

சென்ற வருடத்தில், வடநாட்டிலுள்ள நான்கு வயதுடைய சிறியதொரு குழந்தை இந்த 6,666 வசனங்களையும் மனப்பாடமாக ஒப்பித்தது இவ்வுலகம் அறிந்த விஷயம்!

இதனை அறிந்த மாட்சிமை மிக்க நிஜாம் மன்னர் அவர்கள், அக்குழந்தையையும் அதன் பெற்றோரையும் அழைத்து, தன்னுடைய சமஸ்தானத்தில் அமர்த்திக் கொண்டு அவர்களின் குடும்ப செலவுக்கு உரியதொரு தொகையை மான்யமளித்து வருகின்றனர். இன்றைய தினமும் அக்குழந்தை அதே நிஜாம் சமஸ்தானத்தில்தான் இருக்கின்றது.

இத்தகைய ஹாஃபிழ்கள் தற்காலத்தில்தான் இருக்கின்றனர் என்பதல்ல இவ்வேதம் அருளப்பட்ட காலத்திலிருந்தே இருந்து வருகின்றனர்.

ஏனென்றால், இவ்வேதம் முதலாவதாக மனிதர்களுடைய உள்ளங்களில்தான் எழுதப்பட்டது. அதற்குப் பின்னரே எழுத்து வடிவில் எழுதப்பட்டது. ஆகவே, இதன் அசல் ஏட்டுப்பிரதி மனிதர்களுடைய உள்ளங்களேயன்றி எழுதி வைக்கப்பட்டுள்ள பொருட்களல்ல.

மனிதர்களுடைய உள்ளங்களில் எழுதப்படுவதிலும் அநேக தவறுகள் ஏற்படலாம். ஆகவே, அத்தகைய தவறுகளும் இதில் ஏற்படாமலிருக்கும் பொருட்டு இவ்வேதத்தில் இறைவன் இரண்டு விசேஷ அம்சங்களை அமைத்திருக்கின்றான். அதன் காரணமாக, மனிதர்களுடைய இதயங்களில் இவ்வேதம் எழுதப்படுவதிலும் எவ்வித மாறுதலும் ஏற்படுவதற்கில்லை.

ஒன்று, இதன் நடையின் அற்புதத் தன்மை. இரண்டு, இதன் அமைப்பின் மேலான ஒழுங்குமுறை.

1) இதன் நடையின் அற்புதத் தன்மை

மற்ற வேதங்களில் எல்லாம் மனிதர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த விஷயத்தையும் கலந்து எழுதிவிடலாம். அவ்வாறு எவரும் எழுதி விட்டால் அதனைக் கண்டறிவது சாத்தியமல்ல.
‘அல்குர்ஆன்’ என்னும் வேதம் அவ்வாறன்று. எவ்வளவு சாமர்த்தியமாகவும் இதன் மத்தியில் ஏதாவது ஒரு வசனத்தை எவரேனும் கலந்துவிட்டாலும், அது அல்குர்ஆனைச் சார்ந்ததல்ல என்று மிக்க எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஏனென்றால், இந்த வேதத்தின் வசனங்களைப் போல் மனிதர்களால் அமைக்க முடியாது. அவ்வளவு மேலான விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் வசனங்கள் ஒவ்வொன்றும் ஆழிய கருத்துகளையுடைய அழகிய பொருட்களைக் கொண்டு மிக்க மேலானதொரு ஒழுங்கு முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

இது கவியுமல்ல, காவியமுமல்ல, அற்புதமானதொரு நூதன நடையில் இருக்கின்றது.

கவிகளைப் பாடுவதற்கு சங்கீதக்கலை என்றதொரு பிரத்தியேக மான கல்வி இருப்பதைப் போல் (வரத்திலில் குர்ஆன தர்தீலா ழூ) இந்த வேதத்தை ஓதுவதற்கும் ‘இல்மெ கிராஅத்’ என்றதொரு கல்வியுண்டு.

இதனைக் கேட்கும் எவருடைய மனதையும் இது கவரக்கூடியது. ஆதலால்தான், இதன் விரோதிகள் இதனை எவரும் தங்கள் காதாலும் கேட்கக் கூடாதென்று தடை செய்து கொண்டிருந்தனர்.

இத்தகைய நடையிலும், இவ்வளவு மேலான விதத்திலும் எந்த ஒரு நூலும் இதற்கு முன்னர் இயற்றப்படவில்லை. இதற்குப் பின்னரும் இதுவரையில் எவராலும் இயற்ற முடியவில்லை இயற்றவும் முடியாது.

இது அருளப்பட்ட காலத்தில், இஸ்லாமை எதிர்ப்பவர்களை நோக்கி, இவ்வேதம் இறைவனால் அருளப்பட்டதென்பதில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் இவ்வேதத்திலுள்ள மூன்று வசனங்களையுடைய ஏதேனும் சிறியதொரு அத்தியாயத்தைப் போல் அமைத்துக் கொண்டு வாருங்கள் என்று அறைகூவி அழைக்கப்பட்டது. அவர்களும் தங்களுடைய உடல், பொருள், ஆவி இம்மூன்றையும் செலவு செய்து இதற்கு எதிராக முயன்றனர். எனினும். இவ்வேதத்திலுள்ள எந்த ஒரு சிறிய அத்தியாயத்தையும் அமைக்க அவர்களால் முடியாமல் ஆகிவிட்டது.

அக்காலத்தில் இருந்தவர்களால்தான் அவ்வாறு அமைக்க முடிய வில்லை என்பதல்ல. இது அருளப்பட்டு இன்றைக்கு 1,400 வருடங்களுக்கு மேல் ஆகின்றன. இதுவரையிலும், எதிர் மதவாதிகளில் எத்தனையோ பேர்கள் எவ்வளவோ முயன்று பார்த்தனர். எனினும், அவர்களாலும் இது சாத்தியப்படவில்லை.

என்றுமே நாம் கேட்டறியாத ஆச்சரியமான அநேக விஷயங்களை எல்லாம் இந்த மேல் நாட்டினர் தற்காலம் சர்வ சாதாரணமாகவே செய்து காண்பிக்கின்றனர். எனினும், இறைவனால் படைக்கப்பட்ட சிறியதொரு கொசுவைப் போலவோ அல்லது ஒடிந்துபோன அதன் இறக்கையைப் போலவோ அவ்வாறே உயிரோடு படைக்க அவர்களால் முடியாமல் இருக்கின்றது. அதே போல், இவ்வுலகத்திலுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து முயன்ற போதிலும் இறைவனால் அமைக்கப்பட்டுள்ள இதன் வசனங்களைப் போல் அமைக்க முடியாது.

இன்று வரை இவ்வேதம், எதிர் மதவாதிகளை நோக்கி அவ்வாறே அறைகூவி அழைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகவே, விரும்பிய எவரும் முயன்று இதனைப் பரிசீலித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

இவ்வேத வசனங்களைப் போல் அமைக்க மனிதர்களால் சாத்தியப் படாததால், இதன் மத்தியில் எவரேனும் வேறு ஏதேனும் ஒரு வசனத்தைக் கலந்து விட்டாலும் அது அல்குர்ஆனுடைய வசனமல்ல என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

அவ்வாறே, அரபி மொழியில் எழுதப்பட்டதொரு நூலில் இடையிடையே இவ்வேத வசனங்களில் எதையும் கலந்து விட்டால் இதன் நடையைக் கொண்டே அது அல்குர்ஆனின் வசனங்கள்தான் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

2) இதன் அமைப்பின் மேலான ஒழுங்குமுறை

இவ்வளவு மேலான விதத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்வேதத்தில் 6,666 வசனங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் 3 முதல் 286 வசனங்கள் வரையிலுள்ள சிறிதும் பெரிதுமான 114 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த 114 அத்தியாயங்களின் முன் பின் அமைப்பும் அவற்றில் அடங்கியுள்ள வசனங்களின் முன் பின் அமைப்பும் இவ்வேதத்தை அருளிய இறைவனின் அமைப்பேயன்றி வேறல்ல. இந்த அமைப்பின்படி இதனை மனனம் செய்தால்தான், மனனம் ஆகின்றது. அவ்வாறு மனனம் செய்தவர்கள்தான் லட்சக்கணக்காக இருக்கின்றனர்.

இந்த அமைப்பில் ஒரு சிறிதளவு மாறுதல் செய்தாலும் அதனை எவராலும் மனனம் செய்ய முடிவதில்லை.

முஸ்லிம்களில் ஒரு வகுப்பார் இருக்கின்றனர். அவர்களும் ஓர் எழுத்து கூட வித்தியாசமின்றி இவ்வேதத்தை முற்றிலும் அங்கீகரிக் கின்றனர். எனினும், இதன் தெய்விக அமைப்பை மாத்திரம் அவர்கள் அங்கீகரிப்பதில்லை. ஆதலால், இதன் வசனங்களில் பலவற்றையும் இதன் அத்தியாயங்களில் பலவற்றையும் முன்னுள்ளதைப் பின்னும், பின்னுள்ளதை முன்னுமாக எழுதி வைத்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகையோர் ‘பர்ஷியா’ நாட்டில் லட்சக்கணக்காக இருக்கின்றனர்.

எனினும், அவர்கள் தாங்கள் எழுதி வைத்திருக்கும் ஒழுங்கு முறைப்படி இதனை மனப்பாடம் செய்ய எவ்வளவோ முயன்றும், இதன் தெய்விக அமைப்பை அவர்கள் மாற்றியதன் காரணமாக அவர்களுக்கு மனப்பாடம் ஆவதில்லை.22

ஆயினும், இதன் தெய்விக அமைப்பின்படி மனனம் செய்ய முற்பட்டாலே மிக எளிதில் மனனம் ஆகிவிடுகிறது. ஆதலால்தான், இதன் தெய்விக அமைப்பின்படி மனனம் செய்தவர்கள் நான்கு வயதுடைய சிறியவர்கள் முதல் ஆண், பெண் இருபாலரிலும் லட்சக் கணக்காக இருக்கின்றனர்.

ஆகவே, இத்தகைய ஹாஃபிழ்கள் லட்சக்கணக்காக இன்றைய தினம் இவ்வுலகில் இருப்பதே இவ்வேதம் இறைவனால் அருளப்பட்ட வாறேதான் இன்றைய தினமும் இருக்கின்றது என்பதற்கு சாட்சியாகும்.

இதனையன்றி, இவ்வேதம் அருளப்பட்ட காலத்திலிருந்து இது வரையில் பற்பல காலத்தில் பற்பலரால் எழுதப்பட்ட லட்சக்கணக்கான பிரதிகளும் இருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்தாலும் அல்லது இவ்வேதத்தை மனனம் செய்த ஹாஃபிழ்கள் ஓதுவதுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தாலும் எந்த ஓர் எழுத்தும், வித்தியாசமில்லாமல் இருப்பதைக் காணலாம். ஆகவே, இதனைக் கொண்டும் இவ்வேதம் இறைவனால் அருளப்பட்டவாறே இன்றைய தினமும் இருக்கின்றது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

அல்குர்ஆனின் சட்டங்கள்:

இதுவரையில் கூறிய விஷயங்களைக் கொண்டு அல்குர்ஆன் என்னும் வேதம் இறைவனால் அருளப்பட்ட அன்று எவ்வாறு இருந்ததோ அவ்வாறே இன்றும் இருக்கின்றது. அதன் மொழியும் அழியாமல் உயிரோட்டமாக இன்றும் இருக்கின்றது என்பதைத் தெளிவாக நன்கறிந்து கொள்ளலாம். ஆகவே, அதிலுள்ள சட்டத் திட்டங்கள் எவ்வாறானவை? அவை தற்கால நிலைமைக்குப் பொருத்த மானவைதானா? என்பதை இனி கவனிப்போம்.

அல்குர்ஆனைத் தவிர மற்ற வேதங்களெல்லாம் முன்னர் ஒரு காலம் வரையில்தான், பின்பற்றி நடக்கக் கூடியவையாக இருந்தனவே அன்றி நிரந்தரமானவையாக இருக்கவில்லை. ஆதலால்தான், அவற்றின் காலம் முடிந்தவுடன் அந்த வேதங்களும் அழிந்து விட்டன. அதன் மொழிகளும் அழிந்து விட்டன.

தவிர, அவற்றைத் தற்காலத்தில் எவர் பின்பற்ற விரும்பிய போதிலும் அவற்றைச் சரிவர பின்பற்றவும் அவர்களால் சாத்தியப் படுவதில்லை. அவற்றைப் புறக்கணிக்கும்படியே காலச்சக்கரம் அவர்களை நிர்ப் பந்திக்கின்றது.

இவ்வாறு தங்கள் மதங்களைப் புறக்கணிக்கும்படி அவர்களை நிர்ப்பந்திக்கும் காலச் சக்கரம் அல்குர்ஆன் என்னும் வேதத்தின் சட்டத் திட்டங்களையே பின்பற்றும்படியும் அவர்களை நிர்ப்பந்திக்கின்றது.

ஒரு நாட்டில் வசிப்பவர்கள், அந்நாட்டையாளும் அரசாங்கச் சட்டத்துக்குட்பட்டு நடக்காமல் அந்நாட்டில் வசிப்பது எவ்வாறு சாத்தியப்படாதோ அவ்வாறே தற்கால மனிதர்களுக்கென இறைவனால் அருளப்பட்ட அல்குர்ஆனின் சட்டத் திட்டங்களைப் பின்பற்றாது தற்காலத்தில் இவ்வுலகில் எவரும் வாழ்வது சாத்தியப்படாது.

ஆகவேதான், பற்பல மதத்தினரும் சீர்திருத்தம் என்னும் பெயரை வைத்துக் கொண்டு இவ்வேதத்திலுள்ள சட்டங்களையே முழுமையாக இல்லாவிட்டாலும் அரைகுறையாகவேனும் பின்பற்றுகின்றனர்.

எனினும், இந்தச் சீர்திருத்தக்காரர்கள் இவ்வேதத்தின் சட்டத் திட்டங்களை எவ்வித மாறுதலுமின்றி அதில் உள்ளவாறே முற்றிலும் பின்பற்றாத வரையில் அவர்களுடைய சீர்திருத்தம் பூர்த்தியடையாது.

இதன் உண்மையைப் பெண்களுக்குப் பாகம், திருமணம், பிரிவினை, பலதாரமணம் முதலிய தலைப்புகளின் கீழ் இந்நூலில் கூறிய விஷயங்களைக் கொண்டே நன்கறிந்து கொள்ளலாம்.

ஆகவே, எவ்வாறு இவ்வேத வசனங்களின் அமைப்பு, இதன் தெய்விகத் தன்மைக்கு நிரந்தர சாட்சியாக இருக்கின்றதோ அவ்வாறே இதில் கூறப்பட்டுள்ள சட்டத் திட்டங்களும் இவ்வேதத்தின் தெய்விகத் தன்மைக்கு நித்திய சாட்சியாக இருக்கின்றன.

இவ்வேதத்திலுள்ள யாதொரு வசனத்தைப் போல் மனிதர்களால் அமைக்க முடியாமல் இருக்கின்ற இதே பிரகாரம், இவ்வேதத்திலுள்ள சட்டத் திட்டங்களைப் போலும் மனிதர்களால் இதுவரையில் நிர்ணயிக்க முடியாமல் இருக்கின்றது.

இதில் கூறப்பட்டவை அனைத்தும், அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் முற்றிலும் பொருத்தமானவை!

இயற்கையை அடிப்படையாகக் கொண்டுள்ள அனுபவ சாத்தியமானவை. எக்காலத்திலும், எந்நாட்டிலும் உள்ளவர்கள் எளிதில் அனுசரிக்கக் கூடியவை!

இயற்கையாக மனிதர்களுக்குள்ள சகல உரிமைகளையும் மனிதனாகப் பிறந்த எவருக்கும் அளிக்கக் கூடியவை. ஆண்களுக்கு உள்ள சகல உரிமைகளையும் பெண்களுக்கும் அளித்து, அவர்களின் கற்புக்கும் யாதொரு பங்கமேற்படாது காக்கக் கூடியவை!

மனித வர்க்கத்திற்கிடையில் மெய்யான சகோதர சமத்துவத்தை உண்டுபண்ணக் கூடியவை.

கல்வி அறிவின் சுதந்தரத்தை ஒவ்வொரு மனிதனுக்கும் பூரணமாக அளித்து, மனித அபிவிருத்திக்குரிய நேரான வழியில் தவறாமல் செலுத்தக் கூடியவை!

ஆணென்றோ பெண்னென்றோ ஏழையென்றோ பணக்காரன் என்றோ எவ்வித வித்தியாசமும் இன்றி மெய்யான நீதியையும், நியாயத்தையும் அளித்து இவ்வுலகத்திலேயே சகோதரத்துவத்தையும் அமைதியையும் நிலைநிறுத்தக் கூடியவை.

பல தெய்வ வணக்கம், விக்கிரக ஆராதனை முதலிய மூடக் கொள்கைகளை வேருடன் களைந்து, மெய்யான ஏகதெய்வக் கொள் கையைப் புகட்டக் கூடியவை என்பதை இதுவரையில் இந்நூலில் கூறிய விஷயங்களைக் கொண்டு தெளிவாக அறிந்து கொள்ளலாம்.


அரசியல்:

எனினும், இவ்வேத சட்டத் திட்டங்கள் அரசாங்கமும் கைக் கொண்டு ஆட்சிபுரிய தகுதியுடைவைதானா? என்பதும் கவனிக் கத்தக்கதொரு முக்கிய விஷயம்.

எந்த மதத்தின் சட்டத் திட்டங்கள் ஆட்சி புரியத் தகுதியற்ற வையாய் இருக்கின்றனவோ அம்மதம் உயிரற்ற பிரேதத்திற்குச் சமமானதாகும். அதிலும், அம்மதத்தின் சட்டத் திட்டங்கள் பொது மக்களின் நன்மைக்குப் பங்கம் விளைவிக்கக் கூடியவையாகவும், மனித வர்க்கத்திற்கிடையில் எந்த ஒரு வித்தியாசமுமின்றி மெய்யான நீதியையும் நியாயத்தையும் செலுத்துவதற்கு இடையூறு உண்டுபண்ணக் கூடியவையாகவும் இருக்கும் பட்சத்தில் அம்மதத்தைப் பின்பற்று வோருக்கு, தங்கள் மதச் சட்டத் திட்டங்களைப் புறக்கணிக்கும்படியான நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடும்.

உதாரணமாக, ஹிந்துமதச் சட்டங்களைக் கவனிக்கவும். அதில் பஞ்சமரைப் பற்றியும், பெண்களைப் பற்றியும் என்ன கூறப் பட்டிருக்கின்றது?
ஹிந்துமத தர்மத்தைப் பின்பற்றி ஆட்சி புரிந்தால் ஜாதிபேதமற்ற மெய்யான நீதியையும், நியாயத்தையும் மனித வர்க்கத்திற்கிடையில் செலுத்த முடியுமா? தீண்டாமையை ஒழித்து மெய்யான சகோதரத்து வத்தை உண்டுபண்ண முடியுமா? ஆண்களுக்குள்ள சமமான உரிமைகளைப் பெண்களுக்கு அளிக்க முடியுமா? மதுபானம், விபசாரம், சூதாட்டம் முதலிய தீய காரியங்களை மனித வர்க்கத்திலிருந்து ஒழித்துவிட முடியுமா?

யூதமதச் சட்டத் திட்டங்களை கவனிக்கவும். அவையும் சற்று ஏறக்குறைய ஹிந்துமதச் சட்டங்களைப் போன்றவைதான். ஆகவே, அவற்றைப் பின்பற்றி தற்காலத்தில் ஆட்சி புரிய முடியுமா?

‘கிறிஸ்தவ மதச் சட்டங்களும், யூதமதச் சட்டங்கள்தான்’ என்று மத்தேயு 5வது அதிகாரம் 17,18,19 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களைக் கொண்டு தெரிய வருகின்றது.

எனினும், நம் கிறிஸ்தவர்களோ அதனை மறுத்து, ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைத் திருப்பிக் கொடுப்பதுதான் எங்கள் மத தர்மத்தின் அடிப்படை என்று கூறுகின்றனர்.

நம் கிறிஸ்தவர்களின் இக்கூற்றின் பிரகாரமுள்ள தர்மத்தைக் கையாண்டு எந்த ஓர் அரசாங்கமாவது தற்காலத்தில் ஆட்சி புரிய முடியுமா?

தற்போது மேல் நாட்டிலுள்ள கிறிஸ்தவ வல்லரசர்களும் இத்தகைய தர்மத்தைக் கைகொண்டுதான், தம் நாட்டை ஆளுகின்றனரா?

இத்தகைய தர்மத்தைக் கொண்டதொரு அரசாங்கம் எந்தக் காரணத்தைக் கொண்டும், எந்த அந்நிய நாட்டின் மீதும் படையெடுத்துச் செல்ல முடியுமா?

அல்லது, தன் மீதே படையெடுத்து வரும் எவரையேனும் தடை செய்ய முடியுமா?

ராணுவம், ஆயுதம் முதலிய எதிரிகளை அழிக்கக் கூடிய எத்தகைய கருவிகளையும் சேகரிக்க முடியுமா? அல்லது தன் மக்களில் குற்றம் செய்யும் எவரையேனும் தண்டிக்க முடியுமா?

இத்தகைய சட்டத்தைப் பின்பற்றி ஆட்சி புரியும் நாட்டில் சகோதரத்துவமும், அமைதியும் நிலைபெறுமா? மெய்யான நீதியையும், நியாயத்தையும் காணமுடியுமா? அல்லது அந்த அரசாங்கம்தான் தற்காலத்தில் ஒரு நாளேனும் நிலைத்திருக்குமா?

புத்தமதச் சட்டங்களும், ஜைனமதச் சட்டங்களும் ஜீவ காருண்யத்தில் கிறிஸ்தவமதச் சட்டங்களை விட முதிர்ந்தவை என்றே கூறப்படுகின்றன. ஆகவே, அவற்றைப் பின்பற்றி எவ்வாறு ஆட்சி புரிய முடியும்?

இவ்வாறு நம் ஹிந்துக்கள் கிறிஸ்தவர்கள் முதலானவர்களின் மதச் சட்டத் திட்டங்கள், அரசாங்கம் பின்பற்றி ஆட்சி புரிவதற்கு முற்றிலும் தகுதியற்றவையாக இருப்பதுடன், முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பதனால்தான், ஹிந்துக்கள் கிறிஸ்தவர்கள் முதலான மற்ற எல்லா மதத்தினர்களும் நாடு வேறு, தேசியம் வேறு, மதம் வேறு, இவற்றில் ஒன்றை மற்றொன்றுடன் சம்பந்தப்படுத்தக் கூடாது என்று கூறுகின்றனர்.

இவர்களுடைய இக்கூற்று அவர்களுடைய மதங்களைப் பொருத்த மட்டில் மிக்க பொருத்தமானதுதான். எனினும், முஸ்லிம்களுக்கும் இவ்வாறே அவர்கள் உபதேசம் செய்ய முற்படுவதுதான் விந்தையாக இருக்கின்றது.

அவர்கள் தங்கள் தங்கள் மதங்களைப் புறக்கணித்து விட்டு பின்பற்ற விரும்பும் சட்டத் திட்டங்கள் அனைத்தும் ‘அல்குர்ஆன்’ என்னும் வேதத்தில் உள்ளவைதான்.

‘அல்குர்ஆன்’ என்னும் வேதத்தில் கூறப்பட்ட சட்டத் திட்டங்களையன்றி வேறெந்த சட்டத் திட்டங்களைக் கொண்டும் இவர்கள் அரசாங்க விஷயத்திலும், தேசிய விஷயத்திலும், ஆன்மிக விஷயத் திலும் முன்னேற முடியுமா?

இவர்கள் தங்கள் தங்கள் மதங்களைப் புறக்கணித்து விட்டு வேறு எப்படிப்பட்ட சீர்திருத்தங்களைப் பின்பற்ற விரும்புகிறார்கள்? அந்த சீர்திருத்தங்கள்தான் என்ன?

தலைவன் என்ற ஒரு விஷயத்தைத் தவிர அரசனுக்கும் மக்க ளுக்கும் எவ்வித வித்தியாசமும் இருக்கக் கூடாது. பிறப்பைக் கொண்டு ஒருவன் மேலென்றோ அல்லது கீழென்றோ கூறுவதும் கூடாது. நடத்தை யைக் கொண்டே மனிதனின் மேன்மையை நிதானிக்க வேண்டும்.

இவ்வுலகத்திலுள்ள பொருட்களை அனுபவிக்க மனிதர்கள் அனை வருக்கும் சமமான உரிமை வேண்டும். ஆணுக்குள்ள உரிமைகள் பெண்ணுக்கும் வேண்டும். பெண்ணை விரும்பவோ, வெறுக்கவோ ஆணுக்கு இருப்பது போலவே, கணவனை விரும்பவோ, வெறுக்கவோ பெண்ணுக்கும் உரிமை வேண்டும்.

மனைவியை இழந்த கணவன் மறு திருமணம் செய்து கொள் வதைப்போல், கணவனை இழந்த பெண்ணும் மறு திருமணம் செய்து கொள்ள உரிமை வேண்டும்.

கணவன் மனைவிக்கிடையில் சரிசெய்ய முடியாத கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டால், இருவரும் பிரிந்து தாங்கள் விரும்பிய மற்றெவரையும் திருமணம் செய்து கொள்ள உரிமை வேண்டும்.

மனைவியுடைய சொத்தில் கணவன் பாகம் அடைவதைப் போல் கணவனுடைய சொத்தில் மனைவி பாகம் அடைய வேண்டும்.

தாய் தந்தையுடைய சொத்தை ஆண் குழந்தைகள் அடைவதைப் போல் பெண் குழந்தைகளும் அடைய வேண்டும்.

ஆண்கள் தங்களுடைய பொருளை, தாங்கள் விரும்பிய பிரகாரம் செலவு செய்வதைப் போல், பெண்களும் தங்களுடைய பொருளைத் தாங்கள் விரும்பியபடி செலவு செய்ய உரிமை வேண்டும்.

மதுபானம், சூதாட்டம், விபசாரம் முதலிய மனித வர்க்கத்திற்கே தீங்கிழைக்கும் தீய காரியங்களை வேருடன் ஒழிக்க வேண்டும்.

தீண்டாமையை நீக்கி யாவரையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்பவையே ஆகும்.

இவற்றைத்தான் தற்காலமுள்ள அரசியல்வாதிகளும் தேசியவாதிகளும் ‘சகோதரத்துவம்’, ‘சுதந்தரம்’ என்று கூறுகின்றனர்.

மேற்கண்ட இவையன்றி, இனி இவ்வுலகில் சகோதர சமத்துவமும் அமைதியும் நிலைபெறாது இவையன்றி இனி இவ்வுலகில் எந்த ஒரு சமூகமும் மேலான பதவியை வகிக்க முடியாது.

எனினும் மற்ற மதத்தினர், தங்கள் தங்கள் மத வரம்புக்குள்ளிருந்து கொண்டே இவற்றை அடைவது சாத்தியமல்ல. ஆதலால்தான், அவர்கள் அரசாங்கம் வேறு, தேசியம் வேறு, மதம் வேறு என்றும் அரசாங்க தேசிய விஷயங்களில் மதத்தைக் கலக்கக் கூடாது என்றும் கூறி, தங்கள் மதங்களைப் புறக்கணித்து விட்டு, மேற்கூறப்பட்டவற்றைத்தான் அவர்கள் பின்பற்ற விரும்புகின்றனர்.

எனினும், இந்த அரசியல்வாதிகள், தேசியவாதிகள், மதவாதிகள் பின்பற்ற விரும்பும் இவை அனைத்தும் இவர்கள் விரும்புவதை விட மிக்க மேலான விதத்தில் ‘அல்குர்ஆன்’ என்னும் வேதத்தில் ஒருங்கே கூறப்பட்டுள்ளன.

ஆகவே, இக்காலத்தில் மனித வர்க்கத்தில் தோன்றியிருக்கும் சீர்திருத்த உணர்ச்சி இவ்வாறு அபிவிருத்தியாகி வரும்போது, இன்னும் சிறிது காலத்திற்குள் இச்சீர்திருத்தக்காரர்கள் தங்களை ‘முஸ்லிம்கள்’ எனப் பெயர் கூறிக் கொள்ளாவிடினும், இவர்கள் அனைவரையும் இஸ்லாம் மார்க்க சட்டத் திட்டங்களையே பின்பற்றி நடப்பவர்களாகக் காணலாம்.

இவ்வாறு நாம் மட்டிலும் கூறவில்லை. இப்போது, இவ்வுலகத்தில் உள்ள பற்பல பாகங்களிலும் அரசாங்க விஷயத்திலும் மத விஷயத் திலும், ஆன்மிக விஷயத்திலும் வெகு தடபுடலாக ஏற்பட்டுவரும் மாறுதல்களை வெகு நுட்பமாக ஆழ்ந்து ஆராய்ந்து வரும் மேல் நாட்டிலுள்ள நாத்திகர்களும் அவ்வாறே கூறுகின்றனர்.

கல்வி, அறிவு அபரிமிதமாக அபிவிருத்தியாகிவரும் இக்காலத்தில் இவ்வுலகத்தின் பற்பல பாகங்களிலுமுள்ள அரசியல்வாதிகளென்ன? தேசியவாதிகளென்ன? சமூக சீர்திருத்தக்காரர்களென்ன? இவர்கள் அனைவரும் மனித வர்க்கத்தின் அபிவிருத்தியையும், நன்மையையும் கருதி விரும்புகின்ற சீர்திருத்தங்கள் என்னென்ன உண்டோ அவை அனைத்தையும் ஒன்றுதிரட்டி வைத்துக்கொண்டே, இவ்வேதத்தைப் பார்த்தாலும் அவர்கள் விரும்புவதைவிட மிக்க மேலான விதத்தில் ஒருங்கே திரட்டி, அதுவும் இனி என்றென்றைக்குமே சீர்திருத்த வேண்டிய அவசியமும் ஏற்படாத விதத்தில் 1400 வருடங்களுக்கு முன்னதாகவே இவ்வேதத்தில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஆகவே, மனித வர்க்கத்தின் நன்மைக்குரிய சகல விஷயங்களும் இவ்வாறு பரிபூரணமாக அல்குர்ஆன் என்னும் வேதத்தில் அமைந்து இருப்பதும், அதன் தெய்விகத் தன்மைக்கும், அது உண்மையான இறைவனால்தான் அருளப்பட்ட வேதம் என்பதற்கும் மேலான சாட்சியாக இருக்கின்றது.

இவ்விடத்தில் கவனிக்கத்தக்க மற்றொரு விஷயமும் உண்டு. அது யாதெனில், மனிதர்களால் நிர்ணயிக்கப்படும் சட்டத் திட்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் பயனளிப்பதாக இருந்தால், மற்றொரு காலத்தில் பயனற்றவையாகி விடுகின்றன. ஒரு நாட்டிற்கு நன்மை பயக்கக் கூடிய வையாக இருந்தால், மற்றொரு நாட்டிற்குத் தீங்கிழைக்கக் கூடியவையாக இருக்கின்றன. ஒரு வகுப்பார் பின்பற்றக் கூடியவையாக இருந்தால் மற்றொரு வகுப்பார் புறக்கணிக்க வேண்டியவையாகி விடுகின்றன.

எக்காலத்திலும், எந்நாட்டினருக்கும், எவ்வகுப்பாருக்கும் அதுவும், குடிமக்கள் முதல் அரசர்கள் வரையில் அனைவருக்குமே நன்மை பயக்கக்கூடிய இத்தகைய சட்டத் திட்டங்களை இதுவரையில் மனிதர்கள் எவராலும் நிர்ணயிக்க முடியவில்லை நிர்ணயிக்கவும் முடியாது.

இந்த ‘அல்குர்ஆன்’ என்னும் வேதம் அருளப்பட்டு இன்றைக்கு 1400 வருடங்களுக்கு மேலாகின்றன. இதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சட்டமும், இது அருளப்பட்ட அன்று எவ்வாறு மனித வர்க்கத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாக இருந்ததோ அவ்வாறே அது இன்றைக்கும் நன்மை பயக்கக் கூடியதாகவே இருக்கின்றது.

இதுவும், ‘அல்குர்ஆன்’ உண்மையான இறைவனால்தான் அருளப் பட்டது என்பதற்கு மற்றொரு சாட்சியாகும்.


அல்குர்ஆனால் ஏற்பட்ட நன்மைகள்:

இவ்வேதத்தில் கூறப்பட்ட தத்துவங்கள் அனைத்தும் எவ்வாறு அவற்றுக்கு உதாரணம் காணமுடியாதவையாக இருப்பதைப் போல் இதனால் இவ்வுலகில் ஏற்பட்ட நன்மைகளும் இவ்வுலக சரித்திரத்தில் உதாரணம் காணமுடியாதவையாகவே இருக்கின்றன.

பல தெய்வ வணக்கம், மதுபானம், சூதாட்டம், விபசாரம் முதலிய தீயகாரியங்களை மனித வர்க்கத்திலிருந்து மெய்யாகவே வேருடன் களைந்தெறிந்த வேதம், இவ்வேதத்தைத் தவிர வேறு எவ்வேதமும் இவ்வுலகில் உண்டோ?

சகோதரத்துவம், சுதந்தரம், சுயராஜ்யம், ஜீவகாருண்யம், பரோப காரம், நீதி, நியாயம் முதலிய தர்மங்களை மெய்யாகவே மனித வர்க்கத்தில் நிலைநிறுத்திய வேதம் இவ்வேதத்தைத் தவிர வேறு எவ்வேதமும் இவ்வுலகில் உண்டோ?

இது இவ்வுலகிலுள்ள எந்நாட்டினராலும், எவ்வகுப்பாராலும், எம்மதத்தாராலும் மறுக்க முடியாத உண்மை.

ஆகவே, இவ்வளவு மகத்துவம் பொருந்திய ‘அல்குர்ஆன்’ என்னும் வேதம் அருளப்பட்ட ‘லைலத்துல் கத்ர்’ என்னும் இரவைப் பற்றி அது ஆயிரம் மாதங்களைவிட மேல் என்று இறைவன் கூறியது மிகைப்படக் கூறியதாகுமா?

ஆயிரம் மாதங்கள் என்ன? ஆயிரம் வருடங்களை விட மேல் எனக் கூறினும் அது மிகைப்படக் கூறியதாகாது.
பெருநாட்களிலெல்லாம் பெரிய நாள் லைலத்துல் கத்ரின் நாள்

ஆகவே, இவ்வுலகத்திலுள்ள பற்பல நாடுகளிலும், பற்பல மதத் தினர்கள் கொண்டாடி வரும் பெருநாட்களைப் பற்றி அவர்கள் கூறும் சரித்திரத்தையும், ‘லைலத்துல் கத்ர்’ என்ற இரவைப் பற்றி அல் குர்ஆனாகிய இவ்வேதம் அன்றுதான் அருளப்பட்டதென்று இறைவன் கூறியிருப்பதையும் கவனித்தால், உலகத்தில் கொண்டாடப்பட்டு வரும் பெருநாட்களிலெல்லாம் மிக்க மகத்துவம் பொருந்திய பெரிய நாள் ‘லைலத்துல் கத்ர்’ என்னும் இரவுடைய நாள்தான் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

பெருநாட்களிலெல்லாம் மிக்க பெரிய நாளாகிய இந்த ‘லைலத்துல் கத்ர்’ என்னும் மகத்துவம் பொருந்திய இரவின் மேன்மையைப் பற்றி அறிவித்த இறைவனே அதனை எவ்வாறு கொண்டாட வேண்டுமென்ற விஷயத்தையும் நமக்கு அறிவித்து அருள் புரிந்திருக்கின்றான்.

அவ்வளவு மகத்துவம் பொருந்திய ‘லைலத்துல் கத்ர்’ என்னும் இரவின் நாளை மற்ற பெருநாட்களைப் போல் ஒருநாள் மட்டும் கொண்டாடுவது போதுமானதல்ல. ஆயிரம் மாதங்களை விட மேலான தாக அது இருப்பதால் அதன் ஆயிரத்தில் ஒரு பாகமேனும், அதாவது அவ்விரவைப் பொதிந்துள்ள ரமழான் என்னும் ஒரு மாதம் முழு வதையும் கொண்டாடும்படியாகக் கட்டளையிடுகிறான்.

அவ்விதம் கொண்டாடுவதிலும், அம்மாதத்தின் பகல் காலங்களில் எல்லாம் நோன்பு நோற்று, நம்முடைய உணவு, குடிப்பு, மனைவி முதலியவற்றைக் கொண்டு நாம் சுகமடைவதையும் தவிர்த்து கொண்டாடும்படியாகவும் கூறுகின்றான்.

ஆகவே, மற்ற மதத்தினர்கள் தங்களுடைய பெருநாட்களை வெவ் வேறு விதத்தில் கொண்டாடி வருகையில், நாம் நம்முடைய இப்பெரு நாளை இவ்வாறு நோன்பு நோற்று கொண்டாடும்படி இறைவன் நமக்குக் கட்டளையிட்டதன் காரணமென்ன? இவ்வாறு ஒரு மாதம் முழுவதையும் நோன்பு நோற்பதால், நாம் அடையக்கூடிய பலாபலன் என்ன? என்பதை இனி கவனிப்போம்.


நோன்பு நோற்பதின் நோக்கம்:

எவ்வளவு மேலான ஓர் ஆயுதத்தை ஒரு மனிதன் பெற்றிருந்த போதிலும், அதனை உபயோகிக்கும் திறமையும் ஆற்றலும் அவனுக்கு இல்லாவிட்டால் அதனால் அவன் அடையக்கூடிய பலன்கள் ஒன்றுமே இல்லை.

அந்த ஆயுதத்தை உபயோகிக்கும் ஆற்றலையும், திறமையையும் அவன் அடைய விரும்பினால் அதற்குரிய முறையில் சிறிது காலம் அவன் பயிற்சி பெறவேண்டியது அவசியம். ஆகவே, அவ்வாறான பயிற்சியின்றியும் அந்த ஆயுதத்தைக் கொண்டு அவன் எவ்வித நன்மையும் அடைய மாட்டான்.

அதேவிதம் அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள தத்துவங்கள் எவ்வளவு மேலானவையாக இருந்த போதிலும் அவற்றைக் கொண்டு மனித வர்க்கம் பலனடைய வேண்டுமானால், அத்தத்துவங்களை உபயோகிக்கக்கூடிய திறமையும் ஆற்றலும் அவர்கள் அடைய வேண்டியது அவசியம்.

தவிர, அந்த ஆற்றலையும் திறமையையும் அடைவதற்கு உரிய முறையிலும் அவர்கள் சிறிது காலம் பயிற்சி அடைய வேண்டியதும் அவசியமே!

அவ்வாறான பயிற்சியை ரமழானில் ஒரு மாதம் நோன்பு நோற்பதைக் கொண்டுதான் அடைய முடியும். இப்பயிற்சியின்றி அல் குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் தத்துவங்களை சரிவர அனுசரிக்கும் திறமையையும் ஆற்றலையும் எவரும் அடைந்துவிட முடியாது.

இவ்வேதத்தில் கூறப்பட்டுள்ள கட்டளைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1) விபசாரம், மதுபானம், சூதாட்டம், கொலை, களவு, பொய், பொறாமை முதலிய தீயகாரியங்களிலிருந்து விலகிக் கொள்வது.

2) மனிதராகப் பிறந்த எவரையும் தன்னுடைய சகோதரனாகப் பாவித்து, தன்னுடைய உடல், பொருள், ஆவி முதலியவற்றைத் தியாகம் செய்து மனித வர்க்கத்திற்கு உதவி புரிவது போன்ற நன்மையான காரியங்களைச் செய்வது.

முந்தியதற்குப் பாவமான காரியங்கள், செய்யத் தகாதவை என்றும் பிந்தியதற்கு நன்மையான காரியங்கள், செய்ய வேண்டிய கடமைகள் என்றும் கூறப்படுகின்றது.

மனிதன் எந்தளவு தன்னுடைய உடல் இச்சையை அடக்கிக் கொள்ளும் ஆற்றலை அடைகின்றானோ அவ்வளவு தூரம்தான், பாவங்களிலிருந்து விலகிக் கொள்ளவும், நன்மையான காரியங்களில் ஈடுபடவும் அவனால் சாத்தியப்படும்.

எவன் தன்னுடைய உடல் இச்சையை அடக்கிக் கொள்ள ஒரு சிறிதும் சக்தியற்றவனாக இருக்கின்றானோ அவனால் எந்த ஒரு பாவமான காரியத்தை விடவும் முடியாது. எந்த ஒரு நன்மையான காரியத்தைச் செய்யவும் முடியாது.

ஆகவே, எவன் தன்னுடைய உடல் இச்சையை முற்றிலும் தன் விருப்பப்படி அடக்கிக் கொள்ள சக்தி பெற்றிருக்கின்றானோ அவன் தான் பாவமான காரியங்களிலிருந்து முற்றிலும் விலகிக் கொள்ளவும், நன்மையான காரியங்களில் எதையும் செய்யும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.

ஆகவே, நன்மையான காரியங்களைச் செய்யவும், பாவமான காரியங்களிலிருந்து விலகிக் கொள்ளவும் விரும்பும் எம்மனிதனும், முதலாவதாக தன்னுடைய உடல் இச்சையைத் தன் விருப்பப்படி அடக்கிக் கொள்ளும் ஆற்றலை அடைவது அவசியம்.

உடல் இச்சையை தன் விருப்பப்படி அடக்கிக் கொள்ளும் ஆற்றலை அடைவதற்கு நோன்பை விட எந்த ஒரு மேலான செயலுமில்லை.

பகல் காலங்களில் எல்லாம் மனிதன் தன்னுடைய உணவு, குடிப்பு, மனைவி முதலியவற்றைக் கொண்டு சுகமடைவதை விட்டொழித்து ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்பதால் அவனுடைய உடல் இச்சை முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டு விடுகின்றது. அதனால் அவன் பாவங்களில் இருந்து விலகிக் கொள்வதும், நன்மையான காரியங்களில் ஈடுபடுவதும் அவனுக்கு மிக்க எளிதாகவும் இருக்கின்றது. உதாரணமாக, விபசாரத்தைக் கவனிக்கவும்.


விபசாரம்:

விபசாரம் கொடியதொரு பாவம். அதனால் மனிதர்கள் இம்மை மறுமையில் அனுபவிக்கக்கூடிய கஷ்ட நஷ்டங்கள் அநேகம்.

அதிலும் செல்வாக்குள்ள செல்வந்தன் ஒருவன் விபசாரத்தில் இறங்கி விடுவானாகில், எத்தனையோ பத்தினிகளின் கற்பு அழிந்து விடுகின்றது. அவனுடைய விருப்பத்திற்கிணங்காத பத்தினிகளுடைய உயிருக்கும், பொருளுக்கும் ஆபத்தும் நேரிடுகின்றது.
விபசாரிகள் தங்களுடைய உடல் இச்சையை நிறைவேற்றிக் கொள்ள மேற்கொள்ளும் தவறான இத்தகைய முறைகளின் காரணமாக இவர்களில் பலர் சிறைக்கும் செல்கின்றனர். சிலர் தூக்கிலிடவும் படுகின்றனர். இத்தகைய தண்டனைகளிலிருந்து இவர்கள் தப்பித்துக் கொண்ட போதிலும் இவர்களுக்கு ஏற்படும் பொருள் கஷ்டத்திற்கோ எல்லையில்லை.

விபசாரத்தின் காரணமாக எத்தனையோ மனிதர்கள் தங்களுடைய லட்சக்கணக்கான பொருட்களையும் இழந்து தெருக்களில் நின்று தவிக்கின்றனர். இவ்வாறு பொருள் நஷ்டமடைவதன்றி, இவர்களுக்கு ஏற்படும் நோய்களோ மிகவும் கொடியவை!

அக்கொடிய நோய்களின் காரணமாக இவர்கள் தங்கள் ஆயுள் முழுவதும் பற்பல துன்பங்களுக்கு உள்ளாவதுடன் பலரின் நகைப்புக்கும் வெறுப்புக்கும் ஆளாகின்றனர்.

அது மட்டுமா? குற்றமற்ற இவர்களுடைய மனைவி, மக்களும் அக்கொடிய நோய்களுக்கு ஆளாகின்றனர்.ழூ

தவிர, அந்நோய்கள் பரம்பரையாகவும் இவர்களுடைய சந்ததிகள் அனுபவிக்கக் கூடியவாறு இவர்களுடைய குடும்பத்திற்கே சொந்த நோய்களாகவும் ஆகிவிடுகின்றன.

சற்று நேரத்தின் இன்பத்திற்காக காலங்காலமாக துன்பத்தைக் கூலியாக அடைகின்றனர். இத்தகைய துன்பங்களுக்கு உள்ளாகும் விபசாரிகளும், தாங்கள் விபசாரம் புரியாது தப்பித்துக் கொள்ளவே விரும்புகின்றனர். எனினும், அது அவர்களால் முடிவதில்லை.

வாலிபமான ஆண், பெண் இரு பாலருக்குமுள்ள சம்பந்தம், நெருப்புக்கும் வெடிமருந்துக்குமுள்ள சம்பந்தத்தைப் போன்றது.

மலை போல் குவிந்திருக்கும் வெடிமருந்தின் ஒரு பாகத்தில் நெருப்பின் சிறியதொரு கங்கு படும்போது குபீரென்று அவை அனைத் திலும் நெருப்பு தாவி, பெரும் அபாயத்தை விளைவித்து விடுகின்றது.

இதற்காகவே வெடிமருந்துச் சாலைகளை வெகு திறமையாக அமைப்பதுடன், அதன் சமீபமாக நெருப்பு அணுகாதும் பாதுகாக்கப் படுகின்றது.

இதற்காகவே வெடிமருந்துச் சாலைகளிலிருந்து வெகு தூரம் வரையிலும் எவருமே நெருப்பை உபயோகிக்கக் கூடாதென்று அரசாங்கத்தினர் வெகு கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளனர்.

இவ்வாறு முழு எச்சரிக்கையுடன் காவல் புரிந்தும் பல சமயங்களில் பலருடைய அஜாக்கிரதையினால் அவற்றில் நெருப்பு தாவி, பெரிய ஆபத்துகளை விளைவித்திருப்பதை நாம் அறிகின்றோம்.

வாலிபமான ஆண், பெண் இருபாலருக்கும் இயற்கையாக உள்ள காதல் சம்பந்தமும், நெருப்புக்கும் வெடிமருந்துக்குமுள்ள சம்பந்தத் தைப் போன்றதாகவே இருப்பதனால் அவ்விருவரையும் எந்த ஒரு தடையுமின்றி உல்லாசமாகக் கலந்துறவாடும்படி விட்டு வைத்து, அவ்விருவரும் தங்களுடைய கற்பைப் பாதுகாத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது இயற்கையை அறியாத முட்டாள்களின் செயலாகும்.

ஆதலால், விபசாரத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும்படி கட்டளை இட்ட இறைவன், விபசாரம் மிகக் கொடிய பாவம் என்று அறிவித்து இருப்பதுடன் அதற்கு மிக்க கடினமான தண்டனையை விதித்தும் இருக்கின்றான்.

எனினும், அதற்காக விதிக்கப்படும் தண்டனை எவ்வளவு கொடிய தாயினும் அத்தண்டனையையும் பொருட்படுத்தாது விபசாரத்தில் ஈடுபடும்படி தூண்டக்கூடிய உணர்ச்சி சிலரில் இயற்கையாகவே இருக்கின்றது.

ஆதலால், விபசாரத்திற்குத் தண்டனை விதித்த இறைவன் அதற்கு சந்தர்ப்பம் அளிப்பவற்றையும், அதனைத் தூண்டக் கூடியவற்றையும் விட்டொழிக்கும் பொருட்டு விபசாரத்தின் பக்கமே நெருங்காதீர்கள் என்றும் கட்டளையிடுகின்றான். (அல்குர்ஆன் 17 :32)

பெண்ணுடன் உல்லாசமாகக் கலந்துறவாடுவதுதான், விபசாரத்தைத் தூண்டக்கூடியது என்பதல்ல, அவள் பாடுகின்ற அழகிய பாடல்கள் அவள் அணியும் அழகிய ஆடை ஆபரணங்கள் அவள் பேசும் இனிய வார்த்தைகள் இவையும் விபசாரத்திற்குத் தூண்டுபவையாக இருக்கின்றன.

இக்காரணத்தினால்தான் அந்நிய ஆண்களின் முன் அழகிய ஆடை ஆபரணங்களை அணிந்து, பெண்கள் செல்லக் கூடாது. ஆண்களுடைய சபையில் பெண்கள் பாடக் கூடாது. அந்நிய ஆண்களுடன் பெண்கள் இனிமையான வார்த்தைகள் பேசி உறவாடக் கூடாது என இஸ்லாம் தடை செய்துள்ளது.

இவ்வாறு பாதுகாப்பான பல தடைகளிருந்த போதிலும் இயற்கைக் காதல் இவற்றையும் மீறி விபசாரத்தில் ஈடுபடும்படி செய்து விடவும் கூடும்.

ஆகாரத்தைக் கண்ணால் காணாமலும், அதன் வாடையை நுகராமலும் அதன் பெயரைக் கேளாமலும் தனித்த இடத்தில் மனிதன் வசித்து வந்த போதிலும், பசி ஏற்பட்டு, அந்த பசி அதிகரிக்கவும் செய்தால், எவ்விதத்திலேனும் உணவை அடையவே இவனுக்கு விருப்பம் உண்டாகின்றது. அதே போல, விபசாரத்தைத் தூண்டக் கூடிய சகல காரியங்களில் இருந்தும் விலகி மனிதன் தனித்திருந்த போதிலும் இயற்கையாக மனிதர்களிலுள்ள காம இச்சை ஒரு பெண்ணை அடையவே விரும்பும்.

பசி தாகத்தைச் சகித்துக் கொள்ள ஒரு சிறிதும் சக்தியற்றவன் தனக்குக் கிடைக்கும் எந்த ஆகாரத்தைக் கொண்டும், எவ்விதப் பானத்தைக் கொண்டும் தன்னுடைய பசி, தாகத்தைத் தீர்த்துக் கொள்ள எவ்வாறு முற்படுவானோ, அவ்வாறே காம இச்சையை அடக்கிக் கொள்ளும் ஆற்றலற்றவனும் தனக்குக் கிடைக்கும் எந்தப் பெண்ணைக் கொண்டும் தன்னுடைய இச்சையை நிறைவேற்றிக் கொள்ளவே விரும்புவான்.

ஆகவே, விபசாரத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் பொருட்டு, அதனை தூண்டக் கூடிய வழி, வகைகளிலிருந்தும் விலகிக் கொள்வது எவ்வாறு அவசியமாக இருக்கின்றதோ அவ்வாறே காம இச்சையை அடக்கிக் கொள்ளும் ஆற்றலை அடைவதும் அவசியமாகவே இருக்கின்றது.

காம இச்சையை அடக்கிக் கொள்ளும் ஆற்றல் நோன்பு நோற்பது கொண்டுதான் ஏற்படுகின்றது. ஏனென்றால், நோன்பு நோற்பவன் பகல் காலங்களில் ஆகாரம் முதலியவற்றை முற்றிலும் விட்டொழிப்பதுடன் இராக்காலங்களிலும் அதனைக் குறைத்துக் கொள்வதனால், இயற்கையாக அவனுக்கு ஏற்படக்கூடிய காம இச்சை அநேகமாகத் தணிந்து விடுகின்றது. அத்துடன் அவன் தன்னுடைய மனைவியைக் கொண்டு சுகமடைவதையும், பகல் காலங்களில் விட்டொழிப்பதனால் காம இச்சையை அடக்கக் கூடிய சக்தியும் இவனில் ஏற்பட்டு விடுகின்றது.

ஆகவே, ரமழான் ஒரு மாதம் முழுவதும் இவ்வாறு நோன்பு நோற்பதனால் விபசாரத்தைப் பற்றிய எண்ணமே மனிதனுடைய மனதிலும் உண்டாவதில்லை. உண்டான போதிலும் காம இச்சையைத் தடுத்துக் கொள்ளும் சக்தி நோன்பின் பொருட்டால் இவனில் ஏற்பட்டு இருப்பதால் விபசாரத்தில் ஈடுபடாமல் தப்பித்துக் கொள்ளவும் இவனால் சாத்தியப்படுகின்றது.

ஆதலால்தான், ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கும்படி இறைவன் கட்டளையிடுகின்றான். இவ்வாறு ரமழான் மாதம் நோன்பு நோற்பதனால் விபசாரத்திலிருந்து விலகிக் கொள்வது மட்டும்தான் முடியும் என்பதல்ல. மதுபானம், சூதாட்டம், கொலை, களவு, பொய், பொறாமை முதலிய தீய காரியங்களிலிருந்தும் விலகிக் கொள்வதும் இவனுக்கு மிக்க எளிதாகி விடுகின்றது.

இவை அனைத்தும் விருப்பு, வெறுப்பு முதலிய தன்னுடைய உடல் இச்சையை நிறைவேற்றிக் கொள்ள மனிதன் பின்பற்றும் வழிமுறை களாகவே இருக்கின்றன.

தன்னுடைய உடல் இச்சையை அடக்கிக் கொள்ளும் சக்தி எவனிடம் இருக்கின்றதோ அவனே இத்தகைய பாவங்களிலிருந்து விலகி நன்மையான காரியங்களைச் செய்வதற்கு சக்தி பெறுகிறான்.

உடல் இச்சையைத் தன் விருப்பப்படி தடுத்துக் கொள்ளும் ஆற்றலை அடைவதற்கு நோன்பைவிட மேலான யாதொரு அமலும் இல்லை. ஆகவே, நோன்பு நோற்பதைக் கொண்டுதான், மனிதன் ‘அல் குர்ஆன்’ என்னும் வேதத்தில் கூறப்பட்டுள்ள சட்டத் திட்டங்களைப் பின்பற்றும் ஆற்றல் உடையவனாகின்றான்.

ஆதலால் தான், ‘அல்குர்ஆன்’ என்னும் வேதத்தை அருள் புரிந்த இறைவன், அது அருளப்பட்ட ரமழான் மாதம் நோன்பு நோற்கும் படியும் கட்டளையிட்டிருக்கின்றான்.

அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள தத்துவங்கள் எவ்வளவு மேலான வையாக இருந்த போதிலும், அதன் பலாபலனை நடைமுறைக்கு கொண்டு வந்து அவற்றின் பலாபலனை முழுமையாக அடைவது ரமழான் மாதம் நோன்பு நோற்காமல் சாத்தியப்படாது என்பதை இதுவரையில் கூறிய விஷயங்களைக் கொண்டு தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இதுவரை நாம் கூறிய ஆய்விலிருந்து, இஸ்லாமே இயற்கை மதம் மனிதன் மனிதனாக வாழ, சகோதரத்துவம் மலர, எல்லோருக்கும் அவரவர் உரிமைகள் கிடைக்க, அந்த இஸ்லாமைத் தவிர வேறு மார்க்கமில்லை என்பதை அறிஞர் பெருமக்கள் தெளிவாக விளங்கிக் கொள்வார்கள். அத்துடன் அதை ஏற்று ஈடேற்றம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்நூலை நிறைவு செய்கிறோம்.

அல்லாஹ்வின் அருளால் முடிவுற்றது.


குறிப்புகள்:

1. இது கி.பி. 1930ல் கணிக்கப்பட்டதாகும். தற்போது சுமார் நாற்பது கோடிக்கும் மேல் அவர்கள் இருப்பதாக கணிக்கப்படுகிறது.

2. ஐம்பது கோடி என்பது இந்நூல் எழுதப்பட்ட காலத்திலிருந்த கணக்காகும். இன்றோ அது 120 கோடிக்கும் மேலாகி விட்டது.

3. கற்பரசிகளுக்கு மறுமணம் எங்கும் விதிக்கப்பெறவில்லை - மனு தர்ம சாஸ்திரம் 5: 162

4. இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றை உடையவ னாயினும் கற்பினளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக! - மனுதர்ம சாஸ்திரம் 5:154.

5. பைபிளின் ஆதியாகமத்தில், ‘விலக்கப்பட்ட கனியை உண்டு, கர்த்தரின் கட்டளைக்கு மாறு செய்வதை ஆதாமுக்குத் தூண்டியதே ஏவாள்தான்’ என்று (3: 12)எழுதப்பட்டுள்ளது.

6. கிறிஸ்தவ மதமும் ஹிந்து மதமும் போட்டி போட்டுக் கொண்டே மதுவை ஆதரிக்கின்றன.

எவர்கள் ‘மாலை உணவில்’ (கர்த்தருடைய உணவு) ரொட்டியுடன், திராட்சை மதுவையும் அருந்துகிறார்களோ, அவர்கள் இயேசு கிறிஸ்துவின் மாமிசத்தைப் புசித்து அவருடைய இரத்தத்தையும் அருந்திய புண்ணியவான்களாவார்கள் என்பது கிறிஸ்தவ மதச் சித்தாந்தம்.

ஹிந்து மதமும், மதுவுக்கு ‘ஸோம ரசம்’ என்றதொரு சிறப்புப் பெயரையும் அளித்து, பல யாகங்களில் உபயோகிக்க வேண்டிய முக்கியமானதொரு பொருளாகவும் ஆக்கி, மதுவை உற்பத்தி செய்வதற்காகவே நாடார்களென்ற ஒரு வகுப்பை உருவாக்கி விட்டது.

இவ்வாறெல்லாம் ஹிந்து மதமும், கிறிஸ்தவ மதமும் மதுவை ஆதரித்து இருந்தும், நம் ஹிந்துக்களும், கிறிஸ்தவர்களும் தற்காலத்தில் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்ய முன் வந்திருப்பது போற்றத்தக்கதே.
இவ்வாறு, பௌண்டரீக யாகத்தையும், நியோகத்தையும் இக்காலத்தில் நம் ஹிந்துக்கள் வெறுத்துவிட்ட போதிலும் தேவதாசி வர்க்கம் அவர்களில் இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த தேவதாசி வர்க்கத்தையும் தொலைத்து விடவே ஹிந்துக்களிலுள்ள அறிவாளிகள் தற்போது முயல்கின்றனர்.

எனினும், மெய்யாகவே விபசாரத்தை முற்றிலும் தடை செய்துவிட அவர்கள் கருதினாலும் ஆண், பெண் இருபாலரின் கற்பையும் சமமாகவே பாவிக்க வேண்டும்.

கற்பிழந்த பெண் எவ்வாறு கேவலமாக மதித்து ஒதுக்கித் தள்ளப்படுகின்றாளோ அவ்வாறே கற்பை இழக்கும் ஆணையும் கேவலமாக மதித்து ஒதுக்கித் தள்ள வேண்டும்.

தவிர, இவ்வுலக வாழ்க்கைக்குரிய ஒவ்வொரு துறையிலும் யாதொரு பேதமுமின்றி ஆண், பெண் இருபாலரும் கலந்தே உழைக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் விட்டொழித்து, அவரவர்களின் இயற்கைக்குத் தக்க தொழிலில் இயற்கைக்குத் தக்க முறையில்தான் உழைக்க வேண்டுமென்பதையும் அங்கீகரிக்க வேண்டும்.

சூதாட்டத்தை ஹிந்து மதம் எவ்வளவு தூரம் ஆதரித்திருக்கின்றது என்பதை ஹிந்துமத தர்மத்தை ஒரு சிறிதும் வழுவாது நடந்ததாகக் கூறப்படும் தர்ம ராஜருடைய சரித்திரத்தைக் கொண்டு நன்கறிந்து கொள்ளலாம். தர்மராஜா அவர்கள் சூதாடி தம்முடைய நாட்டை இழந்தது மட்டுமின்றி தம்முடைய நான்கு இளைய சகோதரர்களையும் அடிமைகளாக்கி வைத்தாராம்.

இது மட்டுமா? தம்முடைய மனைவி, உத்தமபத்தினி திரவ்பதியையும் சூதாடியே இழந்து துரியோதனனிடம் ஒப்படைத்தாராம்.

7. ‘பௌண்டரீக யாகம்’ எனச் சொல்லப்படுவதாவது, பால்ய விவாகம் செய்யப்பட்டு இளமையிலேயே கணவனை இழந்த ஓர் இளம் கைம்பெண்ணையும் ஒரு வாலிபனையும் யாக குண்டத்தின் முன்பு நிர்வாணமான நிலையில் உறவு கொள்ள வைத்து, அந்தத் தருணத்தில் வெளியாகும் வாலிபனின் இந்திரியத்தை குண்டத்தில் விழச் செய்வார்கள். பின்பு, உயிரோடுள்ள ஒரு கன்றுக்குட்டியை அந்த குண்டத்தில் எறிந்து, வெந்த அதன் மாமிசத்தை அனைவரும் பங்கிட்டுப் புசிப்பார்கள். இந்த யாகம் வெளி உலகுக்கு பகிரங்கப்படுத்தப்படாமல், உயர்ந்த பிராமண பூசாரிகள் முன்னிலையில் ரகசியமாகவே அரங்கேறும்.

8. ‘நியோகம்’ எனில் இறந்த கணவனின் உடன் பிறந்தானுடன் கூடுவதற்கு பெண்ணை அனுமதிப்பது. இதற்கு பெற்றோர் சம்மதம் வேண்டும். இதில் குறிப்பாக - குழந்தை இல்லாவிட்டால் மட்டுமே நியோகம் அனுமதிக்கப்படும்.

9. எவ்வாறு தானம் செய்வதற்கு ஓர் எல்லை உண்டோ அவ்வாறே தானம் செய்யும் பொருளைப் பற்றியும், எவற்றைத் தானம் செய்யலாம்? எவற்றைத் தானம் செய்யக்கூடாது? என்ற விதிவிலக்குமுண்டு. ஆகவே, தானம் என்னும் பெயரைக் கூறி, கொடுக்கத் தகாத பொருளைக் கொடுக்கக் கூடாது.

ஹிந்து மதத்தில் இவ்வாறான கட்டுப்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. வள்ளலான மகாராஜா அவர்கள் தன்னுடைய மனைவியையும் ஒரு சந்நியாசிக்குத் தானமாகக் கொடுத்து விட்டதாக காணப்படுகிறது.

10. பொருளை யார் தேடிய போதிலும் அந்நாட்டிலுள்ள அனைவருக்கும் அதில் சமமான பாத்தியமுண்டு. அந்த ஸோவியத் ஆட்சி கைக்கொண்டிருக்கும் கொள்கைக்கு, வட்டிக்குக் கடன் கொடுப்பதும், வாங்குவதும் மாறானதாக இருப்பதனால் அந்த ஸோவியத் ஆட்சி வட்டியைச் சட்டம் மூலமாகவே தடை செய்து விட்டது.

11. ‘சமத்துவம்’ என்னும் அர்த்தத்தையுடைய ‘ஸவிய்யத்’ என்னும் அரபிப் பதம்தான் ‘ஸோவியத்’ என்று மாறியதாக பலர் கூறுகின்றனர்.

பாகவி அவர்களின் இந்த தொலை நோக்குப் பார்வை தற்காலத்தில் எவ்வளவு உண்மையாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

12. எனினும் எல்லா வகைப் பொருட்களுக்கும் ஒரே விகிதாச்சாரப் பிரகாரம் இந்த ஜகாத் வரி செலுத்த வேண்டியதில்லை. அந்தந்த பொருளின் தகுதிக்குத் தக்கவாறே செலுத்த வேண்டும்.

தவிர, அப்பொருளுக்குத் தக்கவாறு அவற்றின் மீது விதிக்கப்படும் வரிகளுக்கு ஜகாத் என்றும், ‘உஷ்ரு’ என்றும் ‘ரிகாஜ்’ என்றும் பற்பல பெயர்கள் கூறப்படுகின்றன.

13. விளையும் பொருள் மீது வரி விதித்து வசூலித்தால், மகசூல் அறுவடையாகும் சமயங்களிலேயே அதன் கணக்கு முழுவதும் தீர்ந்து விடுவதனால் அந்தக் கணக்கைச் சுத்தப்படுத்துவதற்கென ‘சமாபந்தி’ செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.

14. இவர்கள் ஒரு கொசுவைப் படைப்பதென்ன? இவ்வுலகில் எத்தனை கொசுக்கள் இருக்கின்றன என்பதையேனும் அறிந்து கொள்ள முடியுமா? அதன் தொகையை அறியாவிடினும், அதன் வகைகளையேனும் அறிந்துகொள்ள முடியுமா? அதன் வகைகளையும் அறிந்துகொள்ள முடியாவிடில் அதன் கடியினால் ஏற்படும் மரணத்தையேனும் தடை செய்துவிட முடியுமா?

இரண்டாயிரத்திற்கும் அதிகமான வகைகள் கொசுக்களில் இதுவரையில் கண்டிருக்கிறோம். இன்னும், எத்தனை வகைகள் இருக்கின்றனவோ? என்றும், இச்சிறிய கொசுக் கடியினால் இவ்வுலகில் எவ்வளவு மக்கள் இறக்கின்றனரோ அவ்வளவு வேறெந்த நோயினாலும் இறப்பதில்லை என்றும், இவ்வுலகில் வருடா வருடம் இறக்கும் மக்கள் தொகையில் மூன்றிலிரண்டு பாகத்தினர் கொசுக் கடியினால் ஏற்படும் காய்ச்சலினாலோ அல்லது அந்த காய்ச்சலினால் ஏற்படும் காமாலை, கட்டி, சோகை போன்ற நோய்களினாலோதான், இறக்கின்றனர் என்றும் இந்த மேல் நாட்டினரே கூறுகின்றனர்.

15. ஆயினும், உடன்பிறந்த சகோதரியையே திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் ‘ஸயாம்’ நாட்டு அரச குடும்பத்திலிருக்கின்றது. ஆகவே, இந்த ஹிந்து மதத்தை விடவும் ஸயாமியரின் மதமே பூர்வீகமானதென்று தெரிய வருகின்றது.

எனினும், இந்த ஸயாமியரும் தங்கள் சொந்தச் சகோதரியை திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்தை சமீபக் காலத்தில் நிறுத்தி விட்டனர். பாரசீகர்களில், தகப்பன், தன் சொந்த மகளையும் திருமணம் செய்து கொள்ள அனுமதியுண்டு. எனினும், தற்காலத்தில் அவர்கள் அவ்வாறு செய்கின்றனரா என்பது தெரியவில்லை.

சகோதரியையோ, சகோதரியுடைய மகளையோ திருமணம் செய்து கொள்ள அவசியமேற்பட்டதன் காரணமெல்லாம் அக்காலத்தில் மக்கள் தொகை மிக்க குறைவாக இருந்ததுதான் என்று மேற்கூறிய விவரங்களைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

எனினும், இந்தப் பாரசீகர்களில், தான் பெற்றெடுத்த மகளையே திருமணம் செய்து கொள்ளும் அவசியம் ஏற்பட்டதன் காரணத்தை நாம் அறிந்து கொள்ள முடியவில்லை.

‘லோத்து’ என்பவர் தன்னுடைய இரு குமாரத்திகளுடன் சேர்ந்து குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக பைபிளில் ஆதியாகமம் 19வது அதிகாரத்தில் ஒரு கதை உண்டு. அதனைப் பாரசீகர்களுடைய வழக்கத்திற்கு ஆதாரமாகக் கூற சிலர் முன்வரலாம். எனினும், அக்கதை முற்றிலும் தவறானது. ஏனென்றால், ‘லோத்து’ கூடிக் குழந்தைகளைப் பெற்றதாகக் கூறப்படும் அப்பெண்கள் இருவரும் அவரின் சொந்தக் குமாரத்திகள் அல்ல. அவர் எடுத்து வளர்த்த பெண்கள்தான்.

எனினும், சிறு பிராயத்திலிருந்தே அவ்விருவரையும் இவர் வளர்த்ததனால் அப்பெண்கள் அவரைத் தகப்பனென்று அழைத்து வந்தனர். இத்தகைய வழமை தற்காலத்திலும் இருப்பதைக் காணலாம்.

இதனை உணர்ந்து கொள்ளாது, பைபிளை மொழிபெயர்த்தவர்கள், அப்பெண்கள் இருவரும் அந்த ‘லோத்து’டைய சொந்தக் குமாரத்திகளென்றே எழுதிவிட்டனர்.

அந்தப் பைபிளைப் பின்பற்றும் யூதர்களே இதனைத் தெளிவுபட விளக்கியுள்ளனர். தவறுகள் பைபிளில் மலிந்து கிடக்கின்றன.

16. வேதம் ஓதுதல், ஓதுவித்தல், வேள்வி (யாகம்) செய்தல், செய்வித்தல், தானம் கொடுத்தல், தானம் பெறுதல் இவை ஆறும் பிராமணர் செய்தொழிலாம். இவற்றில் வேதம் ஓதுவிப்பதாலும் வேள்வி செய்விப்பதாலும் தானம் பெறுவதாலும் பிராமணர் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ள வேண்டும். - மனு தர்ம சாஸ்திரம் 1: 88, 10:75, 76

17. இன்னும் முஸ்லிம்கள் பரந்து வாழ்கிற அரபு அல்லாத பல நாடுகளிலும் அரபி மொழியை எழுத, படிக்க, பேச தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.

18. இந்த பிராமணர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக இவ்வாறு மறைத்து வைத்திருந்த அவ்வேதங்கள் அனைத்தும் தற்காலம் அவர்களுடைய பொக்கிஷத்திலிருந்து வெளிப்பட்டு பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு விட்டன. அவற்றின் அசல் பிரதிகளையோ அல்லது மொழிபெயர்ப்புகளையோ, எவர் விரும்பிய போதிலும் தற்காலம் வாங்கிப் பார்க்கலாம்.

எனினும், அதனைத் தொடுவதற்கும், பார்ப்பதற்கும் தாங்கள் தகுதியற்றவர்கள் என்று கருதக்கூடிய ஆத்திக ஹிந்துக்கள் தற்காலத்திலும் இல்லாமலில்லை. அவற்றைப் பார்க்கும் எவருமே, அவற்றை வேதமென்று கூறத்தகுதியானது தானா? என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். இக்காரணத்தைப் பற்றியேதான் அவற்றை மற்ற ஹிந்துக்கள் பார்க்கக் கூடாதென்று பிராமணர்கள் தடைசெய்து விட்டனர் போலும்.

19. மார்க்கு 1வது அதிகாரம் 14,15 ஆகிய வசனங்களிலும், மத்தேயு 4வது அதிகாரம் 23வது வசனத்திலும் கூறப்பட்டுள்ள இறைவனால் ஒரு வேதம் அருளப் பட்டுள்ள விஷயங்களைக் கொண்டு. இயேசு கிறிஸ்துவுக்கு இறைவனால் ஒரு வேதம் அருளப்பட்டிருந்தது என்றும், அவர் ‘கலிலேயா’வென்னும் ஊருக்கு வந்து அந்த வேதத்தை நம்பிக்கை கொள்ளும்படி அங்குள்ள மக்களை அழைத்தார் என்றும் தெரிய வருகின்றது,

தவிர, அப்போஸ்தலர் 24வது அதிகாரம் 6வது வசனத்திலும், கலாத்தியர் 1வது அதிகாரம் 6,7,8,9 ஆகிய வசனங்களிலும் கூறப்பட்டவற்றைக் கொண்டு அப்போஸ்தலர்களிடமும், கலாத்தியர்களிடமும் அவ்வேதம் இருந்ததாகவும், எனினும் அக்காலத்தில் பலர் அதனைத் தங்கள் இஷ்டப்படி புரட்டி அசல் சுவிசேஷத்திற்குப் பதிலாக புரட்டப்பட்ட அவற்றைக் கூறி வந்ததாகவும், அதனைக் கண்ட காலத்தியர் மிக்க வருந்தி, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் ஒன்றைத் தவிர மற்றெவரால் கூறப்படும் எந்த சுவிசேஷத்தையும் அது மூலத்தில் கூறப்பட்டதாயினும் சரியே, அதனை அங்கீகரிக்க வேண்டாம் என்று மிகமிக வருந்திக் கேட்டுக் கொண்டதாகவும், வேறு சுவிசேஷத்தை உபதேசிப்பவர்களை மிக்க கடிந்து சபித்ததாகவும் தெரிய வருகின்றது.

இவ்வாறு இந்த கலாத்தியர், வேறு சுவிசேஷங்கள் பரவாமலிருக்க எவ்வளவோ முயன்றும், அவற்றைத் தடை செய்ய அவர்களால் முடியவில்லை. பொய்யான அநேக சுவிசேஷங்கள் பரவிவிட்டன.

இவ்வாறு பொய்யான சுவிசேஷங்களைப் பரப்பியவர்களே இயேசு கிறிஸ்துவின் அசல் சுவிசேஷத்தையும் அழித்து விட்டனர். ஆதலால்தான், இயேசு கிறிஸ்துவின் அசல் சுவிசேஷம் தற்போது இவ்வுலகத்தில் இல்லை.

மத்தேயு, மார்க்கு, லூகா, யோவான் முதலியவர்கள் பெயரால் தற்போது பைபிலிலுள்ள சுவிசேஷங்களெல்லாம் இயேசு கிறிஸ்துவின் காலத்திற்குப் பின்னர் அவருடைய பிறப்பு, வளர்ப்பு முதலியவற்றைப் பற்றி பலரால் எழுதப் பட்ட சரித்திரங்களேயன்றி இயேசு கிறிஸ்துவின் மெய்யான சுவிசேஷமல்ல. எனினும், இவற்றையே தற்காலம் நம் கிறிஸ்தவப் பாதிரிகள் இயேசு கிறிஸ்துவின் அசல் சுவிசேஷமென்று உபதேசிக்கின்றனர்.

இவ்வாறு இந்த பாதிரிகள் இவற்றை அசல் சுவிசேஷம் என்று உபதேசிப்பதைப் பற்றி கலாத்தியர் என்ன கூறியிருக்கின்றனர் என்பதை நம் கிறிஸ்தவ நண்பர்கள் கவனிப்பார்களா? அதாவது:-

நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த (கிறிஸ்துவின்) சுவிசேஷத்தை அல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக் கடவன். முன் சொன்னது போல் மறுபடியும் சொல்கிறேன். நீங்கள் ஏற்றுக் கொண்ட (கிறிஸ்துவின் அசல்) சுவிசேஷத்தை அல்லாமல் வேறொரு சுவிஷேசத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்ட வனாய் இருக்கக்கடவன் (கலாதியர் 1வது அதிகாரம் 8,9 வசனங்கள்)

20. இத்தகைய வித்தியாசங்கள் எல்லாம் பொருள் நயத்தில் காணப்படுமேயன்றி, அதன் அசல் கருத்தில் காணமுடியாது என்று சில கிறிஸ்தவ நண்பர்கள் கூறுவது உண்டு. மெய்யாகவே அவ்வாறிருந்தால் அதைப் பற்றி எவரும் குறைகூறுவதற்கு இல்லை. எனினும், கருத்தை மாற்றுவதற்காகவே வெகு சாமர்த்தியமாக பொருள் நயத்தில் இத்தகைய மாறுதல்கள் செய்யப்படுகின்றது என்பதை நம்மால் வெளியிடப் பட்டுள்ள ‘தர்ஜமதுல் குர்ஆன் பி அல்தஃபில் பயான்’ என்னும் அல்குர்ஆனின் மொழிபெயர்ப்பின் முதல் வெளியீட்டின் 108, 119 ஆகிய பக்கங்களிலுள்ள குறிப்புகளில் பல உதாரணங்களைக் கொண்டு மிக்க தெளிவாக எடுத்துக் காண்பித்துள்ளோம்.

21. முழு குர்ஆனையும் முறையாக மனனம் செய்தவருக்கு ‘ஹாஃபிழ்’ என்று சொல்லப்படும்.
பொருள்: இந்தக் குர்ஆனை நன்கு திருத்தமாக ஓதுங்கள். (அல்குர்ஆன் 73:4)

22. எவ்வாறு இவ்வேதத்தின் தெய்விக அமைப்பை மாற்றிய காரணமாக இதனை மனப்பாடம் செய்வது சாத்தியப்படாமல் இருக்கின்றதோ அவ்வாறே, வேதம் அல்லாததொரு நூலை இறைவனால் அருளப்பட்ட வேதமெனக் கூறிடினும் அதனையும் மனப்பாடம் செய்ய சாத்தியப்படாது.

ஹிந்துக்கள் தற்காலம் 24 கோடி இருப்பதாகக் கூறப்படுகின்றது. எனினும் அவர்களுடைய வேதத்தை முற்றிலும் மனனம் செய்தவர்கள் எத்தனை பேர்கள் இருக்கின்றனர்?

கிறிஸ்தவர்கள் 50 கோடி இருப்பதாக கூறப்படுகின்றது. அவர்களுடைய ஆட்சியே தற்காலம் இவ்வுலகத்தில் மேலோங்கியும் நிற்கின்றது. எனினும், அவர்களுடைய வேதமாகிய பைபிளை முற்றிலும் மனனம் செய்தவர்கள் எத்தனை பேர்கள் இருக்கின்றனர்?

பைபிலிலுள்ள சில பாகங்களை; மனனம் செய்தவர்களைக் காணலாமேயன்றி அதன் ஆரம்பத்திலிருந்து கடைசி வரையிலும் மனனம் செய்த எவரையும் காண்பதற்கில்லை. ஏனென்றால், பைபிளை விட பெரியதொரு நூலையும் மனப் பாடம் செய்து விடலாம். எனினும் வேதமல்லாததொரு நூலை இறைவனால் அருளப்பட்ட வேதமெனக் கூறினால், அது சிறியதாகவே இருந்த போதிலும் அதனை மனப்பாடம் செய்ய எவராலும் சாத்தியப்படாது.

பாகவி அவர்களின் இந்த தொலை நோக்குப் பார்வை இன்றைய காலத்தில் தோன்றி உலக மக்களை அச்சுறுத்தும் எய்ட்ஸ் போன்ற நோயை குறிக்கிறது எனலாம்.


Previous Post Next Post