உமர் பின் கத்தாப் (ரலி) வாழ்க்கை வரலாறு

இரண்டாம் கலீஃபா

உமர் பின் கத்தாப் (ரலி) வாழ்க்கை வரலாறு


உள்ளடக்கம்:

ஆரம்ப கால வாழ்வு

அறியாமைக் காலத்தில் உமர்

உமர் (ரலி) அவர்களும் இஸ்லாமும்

தாஹா

இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளுதல்

உமர் அல் ஃபாரூக்

மக்காவிலிருந்து மதீனாவிற்கு

ஆரம்ப கால மதீனா வாழ்வு

பத்ருப் போர்

பத்ருப் போர்க் கைதிகள்

உமைர் பின் வஹ்ப்

தொழுகைக்கான அழைப்பு (பாங்கு)

தீர்ப்பை மாற்றக் கோரியவரைத் தீர்த்துக் கட்டிய உமர் (ரலி)

உஹதுப் போர்

உமர் (ரலி) அவர்களைப் பொறாமைப்பட வைத்த மனிதர்

ஹஃப்ஸா (ரலி)

யூதர்கள்

அகழ்ப் போர்

ஹுதைபிய்யா உடன்படிக்கையும் அதன் விளைவுகளும்

அபூஜந்தல் (ரலி) அவர்களின் விவகாரம்

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்பு

பனீ முஸ்தலக் மீது நடவடிக்கை

ஆயிஷா (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும்

பெண்களுக்கான ஹிஜாப்

மக்காவின் வெற்றிக்கு முன் நடைபெற்ற போர்கள்

துர்பா யுத்தம்

கைபர் யுத்தம்

மக்கா, தபூக்

மக்கா வெற்றி

ஹுனைன் மற்றும் தாயிஃப் யுத்தம்

தபூக் யுத்தம்

மக்காவின் வெற்றிக்குப் பின்..

விவாகரத்து பற்றி ஊகங்கள்

அப்துல்லா இப்னு உபை - ன் அடக்க நிகழ்ச்சி

வானவர் தூதர் மனித உருவில் தோன்றிய பொழுது

இறுதி ஹஜ்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறுதிப் பயணம்

பேரருளாளனை நோக்கி..!

அபுபக்கர் (ரலி) அவர்கள் கலிஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்படுதல்

முதல் கலிஃபா அபுபக்கர் (ரலி)

முதல் நடவடிக்கை

உஸாமா (ரலி) தலைமையில் சிரியாவின் மீது படையெடுப்பு

மதீனாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள்

உமர் (ரலி) மற்றும் காலித் பின் வலீத் (ரலி)

அபுபக்கர் (ரலி) மற்றும் உமர்(ரலி)

உமர் (ரலி) கலிஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்படுதல்

அறிமுக உரை

தன்னைப் பற்றி சுயவிமர்சனம்

அமீருல் முஃமினீன்

உமர் (ரலி) அவர்களின் உதவித் தொகை

அரேபியாவை விட்டும் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் வெளியே அனுப்புதல்

மரணமும், படிப்பினையும்

தராவீஹ் தொழுகை

உமர்(ரலி) அவர்களும் திருமறையும்

உமர் (ரலி) அவர்களும் பள்ளிவாசல்களும்

ஹிஜ்ரி வருடம்

உமரும் மதுவும்

அடிமை

பாலியல் மோகத்திற்குக் கட்டுப்பாடு

திம்மிக்கள்

முஸ்லிம்களுக்கான உதவித் தொகை

பஞ்சம்

அரசியல் மற்றும் அரச நிர்வாகத் திறமை

கவர்னர்கள் நியமனம்

அரசியல் நிர்வாகம்

சிரியா


இஸ்லாமிய வரலாற்றில் உமர் (ரலி) என்ற பெயருக்கு தனிச் சிறப்பு உண்டு. அவரது ஆரம்ப கால வாழ்க்கை அஞ்ஞானத்தில் ஆரம்பித்தாலும், இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் பின்பு அவர்களது வாழ்வு எந்தளவு தலைகீழ் மாற்றம் பெற்றது என்பது மட்டுமல்ல, அவர்களின் தூய வாழ்வு இன்றைய முஸ்லிம்களும், இன்னும் இஸ்லாத்தை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட உமர் (ரலி) அவர்களது வாழ்வைப் பற்றியும், அவரது ஆட்சி முறைகளைப் பற்றியும் அறிந்து மனதார பாராட்டுகின்றார்கள். அத்தகைய உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கையை இன்ஷா அல்லாஹ் நாம் இனி தொடராகப் பார்ப்போம்.



ஆரம்ப கால வாழ்வு

உமர் (ரலி) அவர்களின் பிறந்த தேதி பற்றிய சரியான குறிப்புகள் இல்லை எனினும், சற்றேறக்குறைய கி.பி.580 ஆம் ஆண்டு பிறந்திருக்கக் கூடும் என்றும், இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை விட 10 வயது இளையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உமர் (ரலி) அவர்கள் மக்கத்துக் குறைஷிகளில் மிகவும் பிரபல்யமான கோத்திரமான அதீ என்ற குலத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். உமர் பின் கத்தாப் பின் நுஃபைல் பின் அப்துல் உஸ்ஸா பின் ரிஸா பின் ரிபான் பின் குரத் பின் அதீ பின் கத்ப் என்ற பரம்பரைபியில் வந்தவராவார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஒன்பதாவது பரம்பரையினரும், அபுபக்கர் (ரலி) அவர்களின் 8 வது பரம்பரையினரும் உமர் (ரலி) அவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அந்தளவு இவர்களுக்கிடையே தொப்புள் கொடி உறவு என்பது குறிப்பிடத்தக்கது.

உமர் (ரலி) அவர்களின் முன்னோர்களில் ஒருவரான அதீ என்ற கோத்திரத்தவர்கள், மக்காவில் குறைஷிகளிடையே எழக் கூடிய பிரச்னைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய மத்திஸ்தர்களாகவும் செயல்பட்டு வந்தார்கள். ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களுக்கும், ஹர்ப் பின் உமைய்யா அவர்களுக்கும் இடையே, 'யார் கஃபாவை நிர்வகிப்பது என்ற பிரச்னை எழுந்த பொழுது, அதனைத் தீர்த்து வைப்பதற்கு உமர் (ரலி) அவர்களுடைய பாட்டனாரான நுஃபைல் தான் மத்தியஸ்தராக இருந்து, அந்தப் பிரச்னையைத் தீர்த்து வைத்தார். அப்துல் முத்தலிப் கஃபாவின் நிர்வாகியாக்கப்பட்டார். உமர் (ரலி) அவர்களுடைய தந்தையார் கத்தாப் அவர்கள், பனீ அதி குலத்தவர்களின் மிகவும் பிரபல்யமான நபராகத் திகழ்ந்தார். உமர்(ரலி) அவர்களுடைய வீடு ஸஃபா மற்றும் மர்வாவுக்கு இடையே அமைந்திருந்தது. உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது, அந்த வீடு அகற்றப்பட்டு, மக்கள் தங்கும் இடமாக மாற்றப்பட்டது.

உமர் (ரலி) அவர்களுடைய தாயார் கந்தமா அவர்கள், ஹிஸாம் பின் முகீரா என்பவருடைய மகளுமாவார். இந்த ஹிஸாம் பின் முகீரா பல தடவைகள், குறைஷிகளின் படைகளுக்கு தலைமை தாங்கிச் சென்றுள்ளார். இந்த தாய்வழிப் பாட்டனாரான ஹிஸாம் அவர்களும், காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தந்தை வலீத் - ம் சகோதரர்களாவார்கள். எனவே, இதன் மூலம் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் உமருடைய தாயாருக்கு மைத்துனர் முறையும், உமர் (ரலி) அவர்களுக்கு தாய் வழி சிறிய தந்தையாருமாவார்.

அபூ ஜஹ்ல் என்ற அம்ர் பின் ஹிஸாம் அல் முகீரா - இவர் உமர்(ரலி) அவர்களுடைய தாயாருக்கு சகோதரராவார். எனவே, இதன் மூலம் அபூ ஜஹ்ல் உமர் (ரலி) அவர்களுக்கு தாய் மாமன் உறவுடையவராகின்றார். உமர் (ரலி) அவர்களுடைய தாயாரின் ஒரு தங்கையை - அதாவது உம்மு ஸல்மா (ரலி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மணமுடித்திருந்தார்கள்.

உமர் (ரலி) அவர்களுக்கு பல சகோதர, சகோதரிகள் இருந்தனர். அவர்களில் மிகவும் சிறப்புடையவர்கள் : ஜைத் மற்றும் ஃபாத்திமா ஆகியோர்களாவார்கள். ஜைத் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் ஒரு தகப்பனாருக்குப் பிறந்த, வெவ்வேறு தாய்க்குப் பிறந்த சகோதரர்களாவார்கள். இருப்பினும், அந்த மாறுபாடும், வேறுபாடும் அறியாத ஒருதாய் மக்களாகவே இருவரும் வளர்ந்தனர். அபுபக்கர் (ரலி) அவர்களுடைய ஆட்சியின் பொழுது நடந்த யமாமா போரில் ஜைத் (ரலி) அவர்கள் உயிர்த்தியாகியாக ஆனதன் பின்பு, சகோதரனை இழந்த உமர் (ரலி) அவர்கள் கடுமையான மனவேதனைக்கு ஆளானார்கள். அதன் காரணமாக, ''யமாமா பகுதியிலிருந்து வீசுகின்ற தென்றல் காற்றில் எனது சகோதரனின் சுகந்தத்தை உணர்கின்றேன்””, என்று அடிக்கடி கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுடன் பிறந்த சகோதரியாவார். இவர் ஸயீத் பின் ஜைத் பின் அம்ர் (ரலி) அவர்களுக்கு மணமுடிக்கப்பட்டிருந்தார்கள். இவர் தான் உமர்(ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதற்கு முக்கிய காரணகர்த்தாகவாக இருந்தார்.

உமர் (ரலி) அவர்களின் மைத்துனரான ஸயீத் (ரலி) அவர்கள் குறைஷிகளில் மிகவும் மதிக்கத்தக்க ஒருவராகத் திகழ்ந்தார். இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் மக்காவைத் தரிசிக்கும் முன்பிலிருந்தே, இவரது தந்தையான ஜைத் அவர்கள் சிலை வணக்கத்தை வெறுத்தொதுக்கியவர், இன்னும் ஓரிறைக் கொள்கையின் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர். இவர் சிறந்த புலவரும் கூட. அவரது பாடல் வரிகள் அவரது ஓரிறைக் கொள்கையை எடுத்தோதக் கூடியவையாக இருந்தன :

நான் ஒரு கடவுளை நம்புகின்றேன்,

என்னால் ஆயிரம் கடவுள்களை நம்ப முடியாது.

லாத்தையும், உஸ்ஸாவையும் மறந்தவன் நான்

ஞானமுள்ள மற்றும் அறிவுள்ள மனிதன் இதனை விட வேறு எதனைச் செய்ய முடியும்.

ஸயீத் (ரலி) அவர்களின் தந்தையான ஜைத் அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் பற்றி பேசியதன் காரணமாக, உமர்(ரலி) அவர்களின் தந்தையான கத்தாப் அவர்கள் ஜைத் அவர்களைக் கொலை செய்து விட்டார்கள். இவர், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தூதுத்துவப் பணிகள் ஆரம்பிக்கு முன்னமேயே கொலை செய்யப்பட்டு விட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை மக்காவில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த அந்த நாட்களில், தனது தந்தையைப் போலவே தானும் ஓரிறைக் கொள்கையை உடனே உவந்தெடுத்துக் கொண்டவர் தான் உமர் (ரலி) அவர்களின் மைத்துனரா ஸயீத் (ரலி) அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



அறியாமைக் காலத்தில் உமர்

உமர் (ரலி) அவர்களது ஆரம்பகால வாழ்வு அவ்வளவு சிறப்பானதாக இல்லை. சாதாரண, நடுத்தர குடும்பமாகத் தான் அவரது குடும்பம் இருந்தது. அவர் தனது இளமைப் பருவத்தை ஆடு, ஒட்டகம் மேய்ப்பதில் கழித்தார். அந்த ஆரம்ப கால நாட்களில் தான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதை உமர் (ரலி) அவர்கள் அடிக்கடி நினைவு கூறக் கூடியவராக இருந்தார். மக்காவின் புறவெளிப்பகுதியாகிய தஜ்னான், மக்காவை விட்டும் 10 மைல் தள்ளி இருந்தது. அங்கு கொண்டு போய்த் தான் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டு வருவார். களைப்புடன் உட்கார நேரும் பொழுது, அவரது தந்தை சாட்டையால் உமரை அடித்து, உட்கார விடாமல், கால்நடைகளை மேய்க்கச் சொல்வாராம். இந்த தஜ்னான் பகுதியைக் கடக்கும் பொழுதெல்லாம், இந்த சம்பவத்தை நினைவு கூறக் கூடியவராக உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.

அன்றைக்கு நான் களைப்படைந்து உட்காரும் பொழுதெல்லாம் என்னை எனது தந்தையார் சாட்டையால் அடித்து எழுப்பி விடுவார். இப்பொழுது காலம் மாறி விட்டது. எனது இறைவனைத் தவிர வேறு யாரும் என்னைக் காப்பாற்றி விட முடியாது என்று கூறுவாராம்.

அன்றைய காலத்தில் கல்வியும், எழுத்தறிவும் மிகவும் அரிதானது. ஆனால் உமர்(ரலி) அவர்களோ, எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார்கள். அன்றைய மக்காவில் எழுதப்படிக்கத் தெரிந்த மக்கள் 17 நபர்களே இருந்தனர், அவர்களில் ஒருவராக உமர்(ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். அன்றைய காலப்பிரிவை நோக்கும் பொழுது இதுவே, ஒரு மிகப் பெரிய சாதனை தான்.

உமர் (ரலி) அவர்களுடைய தகப்பனார், ஒருவருடைய பரம்பரையைத் தொகுத்து வழங்குவதில் மிகவும் பிரசித்தி பெற்றவர். தந்தையாருடைய அந்த திறமையின் அடிப்படையில், தந்தையாரிடம் ஆரம்பக் கல்வியைக் கற்றார். இன்னும் குறைஷியர்களில் ஒவ்வொருவருடைய பரம்பரையையும் மிகவும் அறிந்தவராகத் திகழ்ந்தார். இன்னும் அரேபியாவின் வரலாற்றையும் அறிந்தவராகவும் திகழ்ந்தார்கள்.

கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவராகத் திகழ்ந்தார். வெறுங் காலுடன் பல மைல்கள் நடக்கக் கூடியவராகவும், சிறந்த ஓட்ட பந்தய வீரராகவும், மல்யுத்த வீரராகவும் திகழ்ந்தார். உகாஸ் சந்தையில் வருடா வருடம் திருவிழாவில் நடக்கும் மல்யுத்தப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு, வெற்றிப் பரிசுகளையும் பெற்றுள்ளார். இதன் மூலம் மல்யுத்தத்தில் அவர் சிறப்புப் புலமையைப் பெற்றிருந்தார். நல்ல குதிரை ஏற்ற வீரர். எப்படிப்பட்ட குதிரையையும் அடக்கி, அதனை லாவகமாக ஓட்டக் கூடியவர். அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடியவராகவும் திகழ்ந்தார்.

இன்னும் பிரச்னைகளில் சரியான தீர்வு சொல்லக் கூடிய மத்தியஸ்தராகவும் திகழ்ந்தார். பல சமயங்களில் குறைஷிகளின் சார்பாக, பல கோத்திரத்தவர்களுடன் பேச்சுவார்த்தைக்காகப் பிரதிநிதியாகவும் சென்றுள்ளார்.

அவரைச் சுற்றியிருந்த பாலைப் பெருவெளியைப் போலவும், வறண்ட கற்பாறைக் குன்றுகளைப் போலவும் அவர் கடுமையானவராகவும், எதிரிக்கு எதிரியாகவும், நண்பனுக்கு நண்பனாகவும் திகழ்ந்த போதிலும், எதிரியிடம் கடுமையைக் காட்டக் கூடியவராக இருந்தார். ஆனால் நல்ல இதயம் அவரிடம் காணப்பட்டது.

அவரது இளமைக் காலத்தில் வியாபார நிமித்தமாக சிரியா, ஈராக், எமன் போன்ற பிரதேசங்களுக்குச் சென்ற அனுபவம் கொண்டவர். வெற்றிகரமான வியாபாரியாகவும், அதன் காரணமாக அதிக லாபங்களைக் கொண்டு வரக் கூடியவராகவும் திகழ்ந்தார். உமர் (ரலி) அவர்கள் மக்காவை விட்டுக் கிளம்பும் பொழுது, குறைஷிகளில் இருந்த மிகப் பெரிய பணக்காரர்களில் அவரும் ஒருவராகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உமர் (ரலி) அவர்களுக்கு மூன்று மனைவிமார்கள் இருந்தனர். முதலாவது மனைவியின் பெயர், கரிபா பின்த் அபீ உமைய்யா அல் மக்சூமி. இவர் உமர் (ரலி) அவர்களுடைய தாய் வழிச் சொந்தமுடையவர். இவர் அன்றைய தினம் மக்காவில் இருந்த பெண்களிலேயே மிகவும் அழகானவர். இரண்டாவது மனைவியின் பெயர் ஜைனப் பின் மாஸியுன். இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆரம்ப காலத் தோழரான உதுமான் பின் மாஸியுன் (ரலி) அவர்களின் தங்கையாவார். இவருக்கு அப்துல்லா மற்றும் ஹஃப்ஸா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர். மூன்றாவது மனைவியின் பெயர் மலைக்கா பின்த் ஜாருல் அல் குஸைய். இவர் உம்மு குல்தூம் என்றும் அழைக்கப்பட்டார்கள்.





உமர் (ரலி) அவர்களும் இஸ்லாமும்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப் பணியை மக்காவில் ஆரம்பித்த பொழுது, மக்கமா நகரமே இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராகக் கிளம்பியது. இந்த எதிர்ப்பில் இணைந்து கொண்ட உமர் அவர்கள், தனது கடவுள்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தூதுத்துவப் பிரச்சாரம் அவமதித்து விட்டதாகக் கருதினார். எனவே, குறைஷிகளிடமிருந்து எதிர்ப்புகள் உருவான பொழுது, அதில் முன்னணியில் இருந்து செயல்பட ஆரம்பித்தார் உமர் அவர்கள்.

உமரும் இன்னும் சில அரபுக்களும் ஒரு ஜோதிடக் காரனிடம் சென்று, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தூதுத்துவம் குறித்து குறி பார்த்துச் சொல்லும்படி கூறினார்கள். அவன் மிக நீண்ட நேரம் வானத்தைப் பார்த்து விட்டு,

மனிதர்களே, முஹம்மதை இறைவன் ஆசிர்வதித்துள்ளான்

அவருடைய இதயத்தைப் பரிசுப்படுத்தியும் உள்ளான்

அவர் உங்களுடனேயே இருப்பார்,

மனிதர்களே அது மிக விரைவில் நடந்தேறும்..!

என்று கூறினான். இதனைக் கேட்ட உமரும் மற்றவர்களும் அந்த ஜோதிடக் காரனைத் திட்டி விட்டு வந்தனர்.

லுப்னா என்பவர் உமர் (ரலி) அவர்களுடைய பணிப் பெண்ணாவார். இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறைத்தூதுத்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள். இந்தச் செய்தி உமருக்குக் கிட்டிய போது, இஸ்லாத்தைக் கைவிட்டு விட்டு மீண்டும் தாய் மதத்துக்கு வந்து விடும்படி உமர் அவர்கள் கூறினார்கள். ஆனால் லுப்னா (ரலி) அவர்களோ, இஸ்லாத்தைக் கைவிடுவதாக இல்லை. எனவே, தினம் தினம் உமர் அவர்கள் லுப்னா (ரலி) அவர்களை களைப்படையும் மட்டும் அடிக்கத் துவங்கினார். ஆனால் இஸ்லாத்தை கைவிட்டு விடாத அந்த அம்மையார், இன்னும் உறுதியாக இஸ்லாத்தைக் கடைபிடிக்க ஆரம்பித்தார்.

உம்மு அப்துல்லா பின்த் கதமா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு உறவு முறை உள்ளவர். இவர் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர். இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது, உமர் க்கு மிகவும் சினத்தை உண்டு பண்ணியது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுப்படி இவரும் இவரது கணவருமான அம்ர் பின் ரபீஆ (ரலி) அவர்களும் அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்து கிளம்புவதற்காகத் தயாராக இருந்தனர். அப்பொழுது உம்மு அப்துல்லா (ரலி) அவர்களைக் காணச் சென்ற உமர் அவர்கள்,

நீங்களுமா அபிசீனியா செல்கின்றீர்கள்? என்று கேட்டார்.

ஆம்! உங்களால் இந்த மக்கா வாழ்க்கை எங்களுக்கு மிகவும் கடினமாகி விட்டது. உயிர் வாழ்வதே இயலாத நிலை ஏற்பட்டு விட்டதால், நாங்கள் புறப்படத் தயாராகி விட்டோம் என்று உம்மு அப்துல்லா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

உடனே உமர் அவர்கள்,

உம்மு அப்துல்லாவே! இறைவன் உங்களைப் பாதுகாக்கட்டும்..! நல்லபடியாகச் சென்று வாருங்கள்..! என்று பிரியாவிடை கொடுத்தார்.

கடுமையான எதிர்ப்பு வரும் என்று எண்ணிய உம்மு அப்துல்லா (ரலி) அவர்கள், உமர் ன் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வந்ததையிட்டு, என்றாவது ஒருநாள் உங்களிடமும் இந்த மாற்றம் நிகழும், அப்பொழுது நீங்களும் இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளத் தான் போகின்றீர்கள் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார்.

ஒரு நாள் உமர் அவர்கள் கஃபாவின் அருகில் சென்று கொண்டிருந்த பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஃபாவில் இருந்தார்கள். அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திருமறைக் குர்ஆனில் இருந்து சில வரிகளை ஓதிக் கொண்டிருந்ததை உமர் அவர்கள் செவிமடுத்தார்கள்.

''இது இறைவனிடமிருந்து அருளப்பட்ட வேதமாகும்.

இது கவிஞனின் வார்த்தையுமல்ல

இருந்தும் இந்த மக்கள் நம்பிக்கை கொள்வதில்லை””.

உமர் அவர்கள் அந்த வசனத்தைச் செவி மடுத்து விட்டு, ஓ..! இது நிச்சயமாக கவிஞனின் வார்த்தை தான் என்று எண்ணிக் கொண்டார்.

பின்பு வசனம் தொடர்ந்தது, ஓ..! இது நிச்சயமாக ஜோதிடனின் வார்த்தைதான் என்று எண்ணினார்.

''இது எந்த ஜோதிடனின் வார்த்தையுமல்ல,

இது (இறைவனிடமிருந்து) ஜிப்ரில் (அலை) மூலமாக அருளப்பட்டது””

என்று இறைத்தூதர் (ஸல்) ஓதி முடித்தார்கள்.

இந்த வசனத்தைக் கேட்ட உமர் அவர்கள் சற்று நிதானமாகச் சிந்திக்க ஆரம்பித்து, சற்று நேரம் அங்கேயே நின்று விட்டார்கள். அப்பொழுது முதல், முஹம்மது (ஸல்) அவர்களிடம் சத்தியம் இருக்கின்றது என்று எண்ணங் கொள்ள ஆரம்பித்தார்கள்.

இந்த எண்ணம் மிக நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அந்த எண்ணத்தைத் துடைத்தெறிந்து விட்டு, மீண்டும் இஸ்லாத்தை எதிர்ப்பதில் மும்முரம் காட்ட ஆரம்பித்தார். இஸ்லாத்திற்கு எதிராக குறைஷிகள் நடத்திய சதி ஆலோசனைக் கூட்டங்களுக்குச் சென்று வர ஆரம்பித்தார்.

அப்பொழுது, இஸ்லாம் என்ற விஷம் குறைஷிகளுக்குள் மிக வேகமாகப் பரவி வருகின்றது, இந்த விஷத்தை முறியடிக்க வேண்டுமானால், அது வெளிவரும் வாசலை அடைத்தாக வேண்டும், அதற்கு ஒரே வழி முஹம்மது (ஸல்) அவர்களைக் கொல்ல வேண்டும் என்று அந்த சதி ஆலோசனையில் முடிவாகியது.

நானே அவரைக் கொலை செய்ய முன் வருகின்றேன், என்று முன் வந்த உமர் அவர்கள், இதன் மூலம் எனது மூதாதையர்களின் மார்க்கத்திற்கு நேர்ந்த களங்கத்தைத் துடைக்கப் போகின்றேன் என்று சூளுரைத்தார்கள்.



தாஹா

ஒருநாள் (கி.பி.616) கடுமையான கோடையின் உச்சி வெயில். அந்தப் பாலை வெயிலில் உக்கிரத்தை விட உமர் - ன் உள்ளத்தில் ஒரு எரிமலை வெடித்துக் கிளம்பிக் கொண்டிருந்தது. தனது உடை வாளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய உமர் அவர்கள், முஹம்மது (ஸல்) அவர்களைக் கொலை செய்து விட வேண்டும் என்ற கொலை வெறி அவரது உள்ளத்தில் நெருப்பாய் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது.

அவர் சென்று கொண்டிருந்த தெரு வழியாக, அவரது நண்பர் நுஐம் பின் அப்துல்லா (ரலி) அவர்கள் வருகின்றார்கள். இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை உமர் அறிந்திருக்கவில்லை.

உமரைச் சந்தித்த நுஐம் (ரலி) அவர்கள், உமரின் முகத்தில் தெறித்துக் கொண்டிருந்த கோபக் கனலைப் பார்த்து விட்டு,

என்ன உமரே..! எங்கே இவ்வளவு வேகம்..!

முஹம்மதைக் கொன்று விட்டு, கஃபாவில் உள்ள நமது கடவுள்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கப் போகின்றேன், என்றார் உமர் பதிலுக்கு..!

உமரே..! எச்சரிக்கை..! முஹம்மதை நீர் கொலை செய்தால், பனூ ஹாஸிம் கோத்திரத்தாரின் கொடிய கோபப் பார்வைக்கு நீர் ஆளாக நேரிடும், ஜாக்கிரதை..! உம்முடைய நன்மைக்காகத் தான் நான் சொல்கின்றேன், கேட்டுக் கொள்வீராக..! என்றார், நுஐம் (ரலி) அவர்கள்.

நீர் சொல்வதைப் பார்த்தால் நீரும் முஸ்லிமாகி விட்டது போலல்லவா தெரிகின்றது என்றார் உமர் அவர்கள்,

நான் முஸ்லிமாவது, ஆகாதது...! இருக்கட்டும். என்னைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். நீர் உமது சகோதரியையும், உமது மைத்துனரையும் போய் பார்..! அவர்கள் ஏற்கனவே முஸ்லிம்களாகி விட்டார்கள். இப்பொழுது அவர்கள் திருமறைக்குர்ஆனை வாசித்துக் கொண்டு கூட இருக்கலாம், அவர்களைப் போய் கவனியும் என்றார் நுஐம் (ரலி) அவர்கள்.

என்ன..? எனது சகோதரியும், மைத்துனரும் முஸ்லிம்களாகி விட்டார்களா? என்று உறைந்து போய் நின்ற உமர் அவர்கள், முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கிச் சென்ற தனது பயணத்தை மாற்றி, தனது தங்கை ஃபாத்திமாவையும், அவரது கணவர் ஸயீத் பின் ஜைத் (ரலி) அவர்களின் வீடு நோக்கிச் சென்றார்கள். உமர் தனது தங்கையான ஃபாத்திமாவின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்கள். தனது தங்கையும், தங்கையின் கணவரும் இஸ்லாத்தில் சேர்ந்து விட்டதை, கனவிலும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை. இந்தச் செய்தியில் உண்மையிருக்காது. இதனை நான் நம்ப மாட்டேன், எனினும் இந்தச்செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவரது மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது.

உமர் அவர்கள் தனது தங்கையின் வீட்டு வாசலை அடைந்த பொழுது, அங்கே அவரது தங்கை ஃபாத்திமா (ரலி) அவர்களும், அவரது கணவர் ஸயீத் பின் ஜைத் (ரலி) அவர்களும் குர்ஆனில் இருந்து சில வசனங்களை ஓதிக் கொண்டிருந்தார்கள். சகோதரனைப் பார்த்து விட்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள், தனது கையிலிருந்து குர்ஆன் எழுதப்பட்டிருந்த ஓலையை மறைத்து விட்டு, அண்ணனை வரவேற்பதற்காக எழுந்தார், புன்னகையுடன் உமரை வரவேற்றார். ஆனால் உமருடைய முகத்திலோ இருள் மண்டிக் கிடந்தது.

எதனை வாசித்துக் கொண்டிருந்தீர்கள்..! உமர் கேட்டார்.

ஒன்றுமில்லை..! ஃபாத்திமா (ரலி) அவர்களிடமிருந்து பதிலாக வந்தது.

தனது மைத்துனரின் சட்டையின் கழுத்துப் பகுதியை இறுக்கிப்பிடித்த உமர், உமது மூதாதையர்களது மார்க்கத்தை வெறுத்து விட்டீர்களோ..! என்றார்.

நாங்கள் சத்தியத்திற்காக அசத்தியத்தைத் தூர எறிந்தோம் என்றார் அஞ்சாத குரலில் ஸயீத் (ரலி) அவர்கள்.

இந்த வார்த்தையைக் கேட்ட உமர் ன் கண்களில் கோபக் கனல் தெறித்தது, மைத்துனரை நையப் புடைக்க ஆரம்பித்தார். தனது கணவரை விடுவிப்பதற்காக இடையில் புகுந்த ஃபாத்திமா (ரலி) அவர்கள்,

உமரே..! எனது கணவரை விட்டு விடும்..!

நீர் என்ன கூற வந்தீரோ அதனை என்னிடமே கூறுங்கள், அதனை விட்டு விட்டு எனது கணவர் மீது கை வைப்பது சரியில்லை..! என்று தனது சகோதரரை எச்சரித்தார் ஃபாத்திமா (ரலி) அவர்கள்.

நீங்கள் முஸ்லிம்களாகி விட்டீர்களாமே..! உண்மையா?

ஆம்..! நாங்கள் முஸ்லிம்களாகி விட்டோம்.

இதற்காக நீர் எங்களைக் கொலை செய்ய வந்திருப்பீரென்றால், எங்களைக் கொன்று விடுங்கள். உங்களது மிரட்டலுக்கெல்லாம் பயந்து இஸ்லாத்தை நாங்கள் விட்டு விட மாட்டோம் என்று உறுதியாகக் கூறினார்.

இப்பொழுது உமர் சற்று நிதானத்திற்கு வந்தவராய்..! சரி..! நீங்கள் வாசித்த அந்த ஓலையை என்னிடம் காண்பிக்கக் கூடாதா? நான் பார்க்க வேண்டும் என்றார்.

நீங்கள் தூய்மையானவராக ஆகும் வரைக்கும், இந்த புனிதக்குர்ஆனை நீங்கள் தொட முடியாது. முதலில் சென்று உங்களது கரங்களைக் கழுவிக் கொண்டு வாருங்கள் என்றார் ஃபாத்திமா (ரலி) அவர்கள்.

கையைக் கழுவி விட்டு திரும்பிய உமரிடம், அந்தத் திருமறையின் பாகங்கள் கொடுக்கப்பட்டன. அதன் பக்கங்கள் இவ்வாறு ஆரம்பமாகின. உமர் வாசிக்க ஆரம்பித்தார் :

    தாஹா.

    (நபியே!) நீர் துன்பப்படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை.

    (அல்லாஹ்வுக்கு) அஞ்சுவோருக்கு நல்லுபதேசமே அன்றி (வேறில்லை).

    பூமியையும், உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து அது இறக்கி அருளப் பெற்றது.

    அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.

    வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.

    (நபியே!) நீர் உரக்கச் சொன்னாலும் நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதை விட) மறைவானதையும் அறிகிறான். அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை.

    அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. (தாஹா : 1-8)

திரும்பி.. திரும்பி..! ஓதிக் கொண்டெ இருந்தார். இந்த வசனங்கள் என்னை நோக்கி உரையாடுவது போலல்லவா இருக்கின்றது. உமர் என்ற இந்த தனிப்பட்ட மனிதனை நோக்கி அல்லவா இதன் வசனங்கள் உரையாடுகின்றன. என்ன அற்புதம். தாஹா என்ற பெயர் கூட என்னை நோக்கி விளிப்பதாகவே உணர்கின்றேனே..!

சத்தியத்தின் தாக்குதலால் அசத்தியத்தின் கதவுகள் தனது இதயதத்தில் மூடு விழா நடத்திக் கொண்டிருப்பதை உணர ஆரம்பித்தார். சற்று நிலைகுலைந்த நிலையில்...! உமரே..! நீர் எவ்வளவு நாட்கள் தான் சத்தியத்தின் வெளிச்சப் பாதையை விட்டு விட்டு, அசத்தியத்தின் அந்தகார இருளில் தவித்துக் கொண்டிருக்கப் போகின்றாய் என்ற கேள்வியைத் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள ஆரம்பித்த உமர் அவர்களிடம், இன்னும் சத்தியத்தை ஏற்றுக் கொள்ள உமக்கு நேரம் வரவில்லையா? என்று அவரது உள்மனம் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது.

புயலாய் வந்த கோபம் தென்றலாகக் கரையைக் கடந்தது.

இனி ஒரு கணமும் நான் தாமதிக்கப் போவதில்லை...!

சத்தியத்தின் சுவடுகளை நான் தரிசிக்க வேண்டும்.

தனது தங்கையின் பக்கமும், மைத்துனரின் பக்கமும் திரும்பிய உமர்,

இஸ்லாத்தின் பரம விரோதியாக இங்கே நுழைந்தவன்...!

இப்பொழுது,

இஸ்லாத்தின் உற்ற நண்பனாக உங்கள் முன் நிற்கிறேன்.

எனது கையில் இருக்கும் இந்த உடைவாள்

முஹம்மதின் கழுத்தைத் துண்டிக்கத் தயாரானது.

என்ன மாற்றம்..!

அந்த முஹம்மதின் கரங்களால் நான்

சத்தியத்திற்குச் சான்று பகரச் சென்று கொண்டிருக்கின்றேன், என்றார் உமர்.

உணர்ச்சியின் விழிம்பில், உரத்து முழங்கினார்...! அல்லாஹு அக்பர்..! என்று ஃபாத்திமா அவர்கள்.

ஆம்..! படைத்தவனின் விதியின் எழுத்துக்கள் இல்லாதிருந்தால், வெளிச்சப் புள்ளிகள் கூட பலருக்கு இருட்டுலகமாகத் தானே ஆகி விடும்.

விட்டில் பூச்சியாய் எரிநெருப்பில் விழக் காத்திருந்த சகோதரனுக்கு, விடியலைக் காட்டுவது, இறைவனையன்றி வேறு யாரால் முடியும்..! உரத்து முழங்கினார். இறைவா! நீ மிகப் பெரியவன்..! அல்லாஹு அக்பர்.

இதனை அல்லாமா இக்பால் அவர்கள் தனது கவிதைத் தொகுதியான, ''உங்களின் ரகசியங்கள்”” என்னும் நூலில் சகோதரிகளுக்கு இவ்வாறு அறிவுரை வழங்குகின்றார்கள் :-



ஓ..! இஸ்லாமியப் பெண்களே..!

அந்தி மாலைப் பொழுதில்

அதிகாலைச் சூரியனைப் பிரசவியுங்கள்..!

உண்மை அடியார்களே..!

திருமறையை ஓதுங்கள்..!

அதன் அர்த்தங்களுக்கு

செயல் வடிவம் கொடுங்கள்.

தெரியுமா உங்களுக்கு..!?

உமரின் விதியை மாற்றியதே - அந்தத்

திருமறையின் வாசிப்புதானே..!





இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளுதல்

உமர் அல் ஃபாரூக்

தனது சகோதரியின் வீட்டில் நடந்த சம்பவத்திற்குப் பின்னால் ஏற்பட்ட உள மாற்றத்திற்குப் பின்பு, உமர் (ரலி) அவர்கள் நேராக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்கியிருந்த ஸஃபா குன்றினை நோக்கி, அதாவது தாருல் அர்க்கம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

தாருல் அர்க்கத்தின் வாசலில் உமர் (ரலி) அவர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள்.

கதவைத் தட்டுகின்றார்கள்.

வந்திருப்பது யார்? உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது.

நான் தான் உமர் இப்னு அல் கத்தாப்..!

கதவின் இடுக்கு வழியாகப் பார்த்த அந்த பாதுகாவலர், உமர் தனது வாளை இடுப்பில் உள்ள உறையில் செருகி வைத்து, நின்று கொண்டிருப்பதைக் காண்கின்றார். எனவே, அவர் கதவைத் திறப்பதற்கு சற்று அச்சப்பட்டு நின்று கொண்டிருந்தார்.

இப்பொழுது பாதுகாவலரை நோக்கி ஹம்ஸா (ரலி) அவர்கள் கூறினார்கள், கதவைத் திறந்து விடுங்கள், அவர் சமாதானத்தின் பால் வந்திருந்தால் என்றால் அவரது வரவு நல்வரவாக இருக்கட்டும். அதுவல்லாமல், ஏதாவது சங்கடங்களை ஏற்படுத்த வந்தால், அவரைத் தடுத்து நிறுத்துவதற்குப் போதிய பலத்துடனேயே நாம் இருக்கின்றோம் என்று கூறினார்.

இப்பொழுது உமர் அவர்கள் தாருல் அர்க்கத்தினுள் அனுமதிக்கப்பட்டு விட்டார். ஹம்ஸா (ரலி) அவர்கள் உமர் ன் கழுத்துச் சட்டையைப் பிடித்துக் கொண்டவராக, ''உமரே..! எதற்காக இங்கு வந்தீர்? நீங்கள் இங்கு வர வேண்டிய அவசியமென்ன?””, இந்த சம்பாஷனை நடந்து கொண்டிருக்கும் பொழுதே, அங்கிருந்த முஸ்லிம்கள் அனைவரும் தங்களது வாட்களை தயாராக தங்களது கைப்பிடிக்குள் அழுத்திப் பிடித்துக் கொண்டு, எந்த சூழ்நிலையையும் சமாளிப்பதற்குத் தயாராக இருந்தார்கள்.

அங்கே நடந்து கொண்டிருந்த சம்பாஷணைகள் மற்றும் கலவரச் சூழ்நிலையை பக்கத்து அறையில் இருந்து செவிமடுத்துக் கெண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ''அவரை விட்டு விடுங்கள், என் முன்பு அவரை வர விடுங்கள்””, என்று கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்த உமரைப் பார்த்து, உமரே..! சத்தியத்தின் வெளிச்சப் புள்ளிகள் விடியலைக் காண்பித்துக் கொண்டிருக்கும் பொழுது, அறியாமைக்கால இருட்டிலேயே எவ்வளவு காலம் தான் இருந்து கொண்டிருப்பீர்கள்?

நிச்சயமாக, சத்தியத்தை காணும் நேரம் வந்து விட்டது. நான் சத்தியத்திற்குச் சான்று பகரவே இங்கு வந்திருக்கின்றேன், என்று உமர் அவர்கள் கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது கரங்களை உமரை நோக்கி நீட்டினார்கள். உமரும் தனது கரங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களில் வைத்து, ''வணக்கத்திற்குரிய இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை”” என்று சத்தியத்திற்குச் சான்று பகர்ந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தினை தனது வாழ்வியல் ஏற்றுக் கொண்டதை அடுத்து, அங்கு கூடியிருந்த நபித்தோழர்கள் அனைவரும் உற்சாக மிகுதியால், அல்லாஹு அக்பர், அல்லாஹ் மிகப் பெரியவன் என்று குரல் எழுப்பினார்கள். ஒவ்வொருவராக வந்து உமர் (ரலி) அவர்களைக் கட்டித் தழுவி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். இப்பொழுது மக்காவில் இஸ்லாத்தைத் தழுவியர்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடி, எண்ணிக்கை நாற்பதைத் தொட்டது.

அன்றைய தினம் வானவர் தூதர் ஜிப்ரில் (அலை) அவர்கள் கூட, உமர் (ரலி) அவர்களின் இஸ்லாமியப் பிரவேசத்திற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! உமரின் இஸ்லாமியப் பிரவேசம் காரணமாக வான மண்டலத்தில் உள்ளோர் அனைவரும் சந்தோஷமடைந்துள்ளார்கள், இந்த நற்செய்தியை உமருக்கும் தெரிவித்து விடுங்கள் என்று, ஜிப்ரில் (அலை) அவர்கள் கூறினார்கள்.

இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டபின், அதனை மறைத்து வைக்க விரும்பாத உமர் (ரலி) அவர்கள், தனது மாற்றத்தை மக்காவின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று தெரிவித்த வண்ணம் இருந்தார்கள். அவர் தனது தாய் வழி மாமாவான அபூ ஜஹ்ல் டம் சென்று, அவனது வீட்டுக் கதவைத் தட்டினார்கள்.

யாரது? உள்ளிருந்து கொண்டு அபூஜஹ்ல் கேட்டான்.

நான் தான் உமர் வந்திருக்கின்றேன், என்ற உமரின் சப்தத்தைக் கேட்டவுடன், அபூஜஹ்ல் தனது வீட்டுக் கதவைத் திறந்தான்.

வாருங்கள், மருமகனாரே..! என்ன விஷயம்?

உங்களுக்குத் தெரியுமா? நான் முஸ்லிமாகி விட்டேன்..! என்று உமர் (ரலி) அவர்கள் கூறவும், அபூஜஹ்ல் கூறினான் :

அப்படிக் கூறாதே..! உங்களைப் போன்ற தொலைநோக்குப் பார்வை உள்ளவர்கள் என்றைக்கும் முஸ்லிமாக மாட்டார்கள். உமர் பதில் கூறினார்,

இல்லை..! நான் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டு விட்டேன் என்பது சத்தியமானது. இதனைக் கேட்ட அபூஜஹ்ல்,

நீர் சொல்வது உண்மையாக இருக்குமென்றால், உமக்கு நாசம் உண்டாகட்டும் என்று கூறி விட்டு, தனது வீட்டுக் கதவை இழுத்துச் சாத்தி விட்டு, உமரின் முகத்தில் அறைந்தது போல் வீட்டினுள் சென்று விட்டான்.

அபூஜஹலை அடுத்து, மக்காவின் ஏனைய முக்கியப் பிரமுகர்களைச் சந்திக்க உமர் (ரலி) அவர்கள் புறப்பட்டார்கள். அவர்கள் அனைவரிடமும் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாகக் கூறினார்கள். அபூஜஹலைப் போலவே, அவர்கள் அனைவரும் உமர் (ரலி) அவர்களின் மீது நாசம் உண்டாகட்டும் என்று சாபமிட்டதோடு, தங்கள் வீட்டுக் கதவுகளை இழுத்து அடைத்துக் கொண்டார்கள்.

இப்பொழுது உமர் (ரலி) அவர்கள் கஃபாவை நோக்கிச் செல்லலானார்கள். அங்கே இஸ்லாத்தினைப் பற்றிய அவதூறுகளைப் பரப்பிக் கொண்டு, அதில் சந்தோஷமடைந்து திரியும், ஜமீல் பின் மாமர் அல் ஜமாஹி என்பவனைக் கண்டார்கள். அவனிடமும் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டதாக, உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இதனைக் கேட்ட ஜமீல் உரத்த குரலெடுத்து, அழத் தொடங்கியதோடல்லாமல், அவன் கூறினான் :

குறைஷிகளோ வாருங்கள்..! உமர் செய்ததைப் பார்த்தீர்களா, அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டாராம், நம்முடைய முன்னோர்களின் மார்க்கத்தை விட்டு விட்டு வேறொரு கொள்கையை ஏற்றுக் கொண்டு விட்டாராம், என்று குரலெடுத்துக் கத்த ஆரம்பித்தான்.

இதனைக் கேட்ட மக்காவின் இளைஞர்கள், கஃபாவை நோக்கி விரையலானார்கள், அங்கே சிறிய கூட்டமும் சேரலாயிற்று.

இதனைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

ஜமீல் சொல்வதில் உண்மை இல்லை. நான் நம்முடைய முன்னோர்களை மறுத்தொதுக்கவில்லை, ஆனால் சத்தியத்தைக் கண்டு கொண்டேன், இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டேன் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட மக்காவின் இளைஞர்கள் பட்டாளம் உமர் (ரலி) அவர்களைத் தாக்கும் நோக்கத்துடன் அவரை நோக்கி விரைந்தார்கள்.

அந்த வழியாக எமனி உடையணிந்து சென்று கொண்டிருந்த அல் ஆஸ் பின் வலீ என்பவர், இங்கு என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞர்கள், உமர் நம்முடைய முன்னோர்களின் மார்க்கத்தைப் பழித்து விட்டு, புதிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு விட்டார். அதற்கு தண்டனை வழங்கத் தான் நாங்கள் விரைந்து சென்று கொண்டிருக்கின்றோம் என்று கூறினார்கள். இப்பொழுது, அந்த நபர் அவர்களைப் பார்த்து,

''ஒரு மனிதர் தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட மார்க்கத்தை ஏற்றுப் பின்பற்றுவதற்குச் சுதந்திரம் பெற்றவராவார். அதற்காகவா அவரைத் தண்டிக்கச் செல்கின்றீர்கள்? இப்பொழுது அந்த வழியாக அபூஜஹ்லும் வந்து கொண்டிருந்தான். குரைஷிகளின் இளைஞர் பட்டாளத்தைப் பார்த்த அவன் கூறினான்,

என்னுடைய மருமகனான உமரைப் பாதுகாக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன் என்று கூறினான்.

மாமனாரே..! உங்களது பாதுகாப்பு எனக்குத் தேவையில்லை. என்னைப் பாதுகாக்க அல்லாஹ்வும், அவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர் (ஸல்) அவர்களுமே போதுமானவர்கள் என்று கூறினார் உமர் (ரலி) அவர்கள்.

இப்பொழுது உமர் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, தான் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டு விட்டதாக பொதுமக்கள் முன்னிலையில் அறிவித்து விட்டு வந்து விட்டதாகக் கூறினார்கள். இதுநாள் வரை குறைஷிகளின் வன்கொடுமைகளுக்குப் பயந்து, இஸ்லாத்தினைத் தழுவுபவர்கள் தங்களது நம்பிக்கையை மறைத்தே வைத்திருந்தார்கள். இன்னும் மிகவும் மறைவாகவே தங்களது தொழுகைகளை நிறைவேற்றி வந்தார்கள். இப்பொழுது, மக்களின் இந்த நிலையைக் கண்ணுற்ற உமர் (ரலி) அவர்கள், தூதர் (ஸல்) அவர்களே :

நாம் சத்தியத்தைத் தானே பின்பற்றிக் கொண்டிருக்கின்றோம்? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் :

அதிலென்ன சந்தேகம், நாம் சத்தியத்தைத் தான் பின்பற்றிக் கொண்டிருக்கின்றோம்.

பின் நாம் ஏன் வெளிப்படையாகத் தொழக் கூடாது? சத்தியத்திற்குச் சான்று பகர்ந்திருப்பதை வெளிப்படையாகக் கூறும் நேரம் இன்னும் நமக்கு வரவில்லையா? என்று உமர் (ரலி) அவர்கள் கேட்கலானார்கள்.

இஸ்லாத்தை வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற உமர் (ரலி) அவர்களின் கோரிக்கையை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அடுத்த நாள் முஸ்லிம்கள் அனைவரும் தாருல் அர்க்கத்தை விட்டும் வெளியே வந்து, மக்காவை நோக்கி இரண்டு வரிசைகளில் அணிவகுத்துச் செல்லலனார்கள். ஒரு அணிக்கு உமர் (ரலி) அவர்களும், இன்னொரு அணிக்கு ஹம்ஸா (ரலி) அவர்களும் வழிநடத்திச் செல்லலனார்கள். இப்பொழுது முஸ்லிம்கள் கஃபாவில் மிகவும் வெளிப்படையாக நின்று தொழலானார்கள். முஸ்லிம்கள் தொழுவதை சுற்றி நின்று கொண்டு குறைஷிகள் பார்க்கலானார்கள், இன்னும் நிச்சயமாக உமர் அவர்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் மூலமாக, இந்த முஸ்லிம்கள் நமக்கு எதிராக பழிதீர்த்துக் கொள்கின்றார்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

முஸ்லிம்கள் முதன்முதலாக, கஃபாவில் தொழுது முடித்தவுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு அல் ஃபாரூக் என்ற புனைப் பெயரை வழங்கினார்கள், உமர் (ரலி) அவர்களின் இந்த தூய எண்ணத்தின் காரணமாகவும், அவரது முயற்சியின் காரணமாக, இஸ்லாத்தினை வெளிப்படையாக அறிவிக்கும் நாள் வந்தது.

மக்காவிலிருந்து மதீனாவிற்கு

கி.பி. 622 ல் முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகள் உச்ச கட்டத்திற்குச் சென்று விட்ட பொழுது, முஸ்லிம்களை மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் - நாடு துறந்து செல்ல அனுமதித்து விட வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். எனவே, அதன்படி குழு குழுவாக முஸ்லிம்கள் மக்காவை விட்டும் வெளியேறி மதீனாவை நோக்கிச் செல்லலானார்கள்.

அபூ ஸலமா பின் அஷால் (ரலி) அவர்கள் தான் முதன் முதலில் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்றவர்களாவார்கள். அவர்களைத் தொடர்ந்து, பிலால் (ரலி), அம்மார் (ரலி), யாஸிர் (ரலி) போன்றவர்கள் வெளியேறினார்கள். அதன் பின் உமர் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்து வெளியேறி மதீனாவிற்குப் பயணமானார்கள்.

மேலே நாம் குறிப்பிட்டவர்களும், இன்னும் ஏனையோர்களும் மிகவும் ரகசியமாக, குறைஷிகள் அறியாத வண்ணம் மதீனாவிற்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், உமர் (ரலி) அவர்களோ மிகவும் பகிரங்கமாக அறிவிப்புச் செய்து விட்டு, உங்களில் எவருக்காவது துணிவு இருக்கும்பட்சத்தில் என்னைத் தடுத்து நிறுத்திப் பாருங்கள், என்று சவால் விட்ட வண்ணம் மக்காவை விட்டு வெளியேறினார்கள். உமர் (ரலி) அவர்களுடன் பலப்பரிட்சை செய்வதற்கு அங்குள்ள குறைஷிகள் எவருக்கும் துணிவு பிறக்கவில்லை, அவரைத் தடுக்கும் துணிவின்றியும், அவரது சவாலை ஏற்றுக் கொள்வதற்கும் எவரும் முன்வரவில்லை.

இப்னு அசாகீர் என்ற வரலாற்று ஆய்வாளாரின் கூற்றுப்படி, உமர் (ரலி) அவர்களின் ஹிஜ்ரத்தை இவ்வாறு விவரிக்கின்றார்கள் :

ரகசியமாக ஹிஜ்ரத் செய்தவர்களைத் தான் நான் பார்த்திருக்கின்றேன், ஆனால் உமர் (ரலி) அவர்களைத் தவிர, பகிரங்கமாக ஹிஜ்ரத் செய்து சென்றதொரு மனிதரை நான் பார்த்ததில்லை. அவர் ஹிஜ்ரத் செய்வது என்ற முடிவெடுத்தவுடன், தனது வாளை தனது இடுப்பில் தொங்க விட்டுக் கொண்டு, வில்லையும் தொங்க விட்டுக் கொண்டு, அதில் அம்பையும் பூட்டி நேரே கஃபாவுக்குச் சென்றார். அங்கு உட்கார்ந்திருந்த குறைஷிகளுக்கு முன்பாகவே கஃபாவை ஏழு முறை வலம் வந்தார். இப்றாஹீம் (அலை) அவர்கள் நின்ற இடமான மகாமே இப்றாஹீமில் இரண்டு ரக்அத் தொழுதார், பின் அங்கு அமர்ந்திருந்த குறைஷிகளில் ஒவ்வொருவரிடமும் சென்று, மக்காவின் வெளிப்புறப்பகுதிக்கு வந்து நான் செல்வதை உங்களில் எவராவது தடுத்துப் பார்க்கட்டும், அத்தகையவனின் முகம் புழுதி படியட்டுமாக..! அவனது தாய் அவனை இழப்பாளாக, அவனது குழந்தைகள் அநாதையாக்கப்பட்டும், அவனது மனைவி விதவையாகவும் ஆக்கப்படுவளாக..! என்று கூறினார்கள். ஆனால், எவரும் அவரைத் தடுக்கும் சக்தி பெற்றிருக்கவில்லை. முன்வரவுமில்லை.

ஸஹீஹ் புகாரியின் கூற்றுப்படி, 20 முஸ்லிம்கள் உமர் (ரலி) அவர்களைத் தொடர்ந்து மதீனாவிற்கு பயணமானார்கள். உமர் (ரலி) அவர்களின் சகோதரர் ஸைத் பின் கத்தாப் (ரலி), ஸைத் பின் ஜைத் (ரலி), ஹஃப்ஸா (ரலி) அவர்களின் கணவரும், உமர் (ரலி) அவர்களின் மருமகனுமாக ஹுனைஸ் பன் ஹுதைபா (ரலி) ஆகியோர்களும் இந்தக் குழுவில் அடங்குவர். இன்னும் அப்ர் பின் சுரகா (ரலி) அப்துல்லா பின் சுரகா (ரலி) வகீத் பின் அப்துல்லா தமீமீ (ரலி), கவ்லா பின் அபீ கவ்லா (ரலி), மாலிக் பின் அபீ கல்லா (ரலி) அய்யாஷ் பின் புகைர் (ரலி), அகில் பின் புகைர் (ரலி), அமீர் பின் புகைர் (ரலி) மற்றும் காலித் பின் புகைர் (ரலி) ஆகியோரும் இந்தக் குழுவினருடன் சென்றவர்களாவார்கள்.

அய்யாஷ் பின் அபூ ராபீஆ அல் மக்சூமீ (ரலி) மற்றும் ஹிஸாம் பின் அல் ஆஸ் பின் வாயில் அல் சஹ்மி (ரலி) ஆகியோரும் உமர் (ரலி) அவர்களுடன் மதீனாவிற்குச் செல்வது என முடிவெடுத்தனர். எனவே, மக்காவிற்கும் பத்து மைல் தொலைவில் இருந்த பனூ கிஃபார் கோத்திரத்தவர்களின் வயல்வெளியில் உள்ள ஆதத் என்ற முள் மரத்தடியில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சந்திப்பது என முடிவெடுத்தார்கள். இன்னும் இந்தக் குறிப்பிட்ட இடத்திற்கு, சூரியன் உதிக்கும் நேரத்திற்குச் சரியாக வந்து விடுவதென்றும், நம்மில் யாராவது குறிப்பிட்ட அந்த நேரத்திற்கு வரத் தவறும்பட்சத்தில், அவர் வரவில்லை என்பதாக முடிவு செய்து வந்திருப்பவர் தனது பயணத்தைத் தொடர்வது என்றும் அவர்களுக்குள் முடிவு செய்து கொண்டனர்.

இந்த அடிப்படையில் உமர் (ரலி) அவர்களும், அய்யாஷ் (ரலி) அவர்களும் குறிப்பிட்ட அந்த நேரத்தில், குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சரியான நேரத்தில் வந்து விட்டார்கள், ஆனால், ஹிஸாம் அவர்களால் வர இயலவில்லை, குறைஷிகளால் தடுத்து வைக்கப்பட்டார்கள். எனவே, உமர் (ரலி) அவர்களும் மற்றவர்களும் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். இறுதியாக மதீனாவின் புறவெளிப்பகுதியாகிய கூஃபா விற்கு வந்து சேர்ந்து, பனூ அம்ர் பின் அவ்ஃப் கோத்திரத்தார்களுடன் தங்கிக் கொண்டார்கள்.

ஒருநாள் அபூஜஹ்ல் ம், அல் ஹாரிதா என்பவரும் கூஃபா சென்று, அபூஜஹ்ல் ன் தம்பியாகிய அய்யாஷ் (ரலி) அவர்களைச் சந்தித்து, நீங்கள் மதீனாவிற்கு வந்து விட்டதன் காரணமாக, தங்களைப் பார்க்காத சோகத்தில் நமது தாயார் அவர்கள் உங்களைக் காணும் வரையிலும், தலைமுடியை வாரிக் கொள்வதில்லை என்றும், நிழல் தேடி ஒதுங்காமல் வெட்ட வெயிலில் நின்று காய்வது என்றும் சபதம் செய்திருக்கின்றார்கள். எனவே, நீங்கள் திரும்பி மக்கா வருவதன் மூலமே அவர்களது உயிரைக் காக்க முடியும் என்று கூறுகின்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், அய்யாஷ் (ரலி) அவர்களே..! உங்களை ஏமாற்றி மார்க்கத்தில் இருந்து வெளியேற்றுவதற்காகவே இந்த தந்திரத்தைக் கையாளுகின்றார்கள். எனவே, நீங்கள் ஏமாந்து விட வேண்டாம். உங்களது தாயாரின் தலையில் பேன் தொந்தரவு அதிகரித்து விட்டால் தானாக தலையை வாரி முடிந்து கொள்வார்கள், இன்னும் மக்காவில் வெயில் நீங்கள் அறிந்தது தானே, வெயில் உக்கிரத்திற்கு வந்து விட்டால் நிழல் தேடி வீட்டுக்குள் சென்று விடுவார்கள் என்றும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

ஆனால், அய்யாஷ் (ரலி) அவர்களோ, தனது தாயின் மீதிருந்த பாசத்தின் காரணமாக மக்காவிற்கு திரும்பிச் சென்று விடுவதென்று முடிவு செய்து விட்டு, உமர் (ரலி) அவர்களே..!

நான் மக்காவிற்குச் சென்று, எனது தாயின் சபதத்தை நிறைவேற்றி வைத்து விட்டு உடனே திரும்பி விடுகின்றேன். இன்னும் மக்காவில் உள்ள சிலரிடம் எனது பணம் கடனாக நின்று கொண்டிருக்கின்றது, அதனையும் பெற்றுக் கொண்டு வந்து விடுகின்றேன் என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

குறைஷிகளில் உள்ள பணக்காரர்களில் நானும் ஒருவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது செல்வத்தில் பாதியைத் தருகின்றேன், நீங்கள் மக்காவிற்குச் செல்ல வேண்டாம் என்றார்கள்.

ஆனால் அய்யாஷ் (ரலி) அவர்கள் மக்காவிற்குச் சென்று திரும்புவது என்று முடிவெடுத்து விட்டார்கள்.

பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் மக்காவிற்கு திரும்பிச் செல்வது என்று முடிவெடுத்து விட்டால், இதோ என்னுடைய ஒட்டகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது உயர் ஜாதியும், இன்னும் பயணத்திற்கு உகந்ததுமாகும். அதிலிருந்து நீங்கள் இறங்கவும் வேண்டாம், எந்த நிலையிலாவது அவர்கள் உங்களை மடக்க நினைத்தால், இந்த ஒட்டகத்தைக் கொண்டு நீங்கள் மிகவும் எளிதாகத் தப்பிக் கொள்ளலாம் என்று கூறினார்கள். பின் அய்யாஷ் (ரலி) அவர்கள் மக்காவை நோக்கிப் பயணப்பட்டார்கள். சற்றுத் தொலைவு தான் மதீனா சென்றிருப்பார்கள், அய்யாஷ் (ரலி) அவர்களை நோக்கிய அபூஜஹ்ல் கூறினான் :

அய்யாஷே..! என்னுடைய ஒட்டகத்தை ஒட்டி வருவது மிகவும் கடினமாக இருக்கின்றது..!

எனவே, என்னை உனது ஒட்டகத்தின் பின்னால் அமர்த்திக் கொள்ள மாட்டாயா? என்று கேட்டான்.

சரி என்று ஒப்புக் கொண்ட அய்யாஷ் (ரலி), தனது ஒட்டகத்தை முழந்தாழிட வைத்தார்கள். அபூ ஜஹ்ல் ம் தனது ஒட்டகத்தை முழந்தாழிட வைத்தான். இருவரும் கீழே இறங்கியவுடன் அய்யாஷின் மீது அபூஜஹ்லம், ஹிஸாமும் விழுந்து அவரை மடக்கி, கைகால்களைக் கட்டப்பட்ட நிலையிலேயே மக்காவிற்குக் கொண்டு வந்தார்கள். மக்கத்துக் குறைஷிகளைப் பார்த்து அபூஜஹ்ல் கூறினான் :

பாருங்கள்..! எங்களது மடையர்களிடம் நாங்கள் எவ்வாறு நடந்து கொண்டோம் என்பதை..! அவ்வாறே நீங்கள் உங்களது மடையர்களிடம் நடந்து கொள்ளுங்கள், என்றான்.

அய்யாஷ் (ரலி) அவர்களை அபூஜஹ்ல் கடத்திக் கொண்டு சென்று விட்டதை அறிந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அய்யாஷையும் இன்னும் ஹிஸாமையும் இங்கு கொண்டு வர உங்களில் யார் முன் வருகின்றீர்கள்? என்று கேட்டார்கள்.

அல் வலீத் பின் முகீரா (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கோரிக்கையை ஏற்று, அய்யாஷ் (ரலி) அவர்களையும், ஹிஸாம் (ரலி) அவர்களையும் கொண்டு வரும் பொறுப்பை ஏற்றார்கள். அல் வலீத் (ரலி) அவர்கள், மக்காவை நோக்கிப் பயணப்பட்டார்கள். அங்கு இருவரும் கூரையில்லாத ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிகின்றார்கள். இரவில் யாரும் அறியாத வண்ணம் சுவரேறிக் குதித்து, கட்டப்பட்ட நிலையில் கிடந்த இருவரது சங்கிலிகளையும் வாளால் வெட்டி, உடைத்து.., இருவரையும் மதீனாவிற்கே அழைத்து வந்து விடுகின்றார்.

இதுதான் இஸ்லாமிய உலக வரலாற்றிலேயே முதன் முதலாக நடத்தப்பட்ட கமாண்டோ ஆபரேஷன் எனலாம்.

ஆரம்ப கால மதீனா வாழ்வு

உமர் (ரலி) அவர்கள் மதீனாவிற்கு வந்தவுடன், மதீனாவின் புறநகர்ப் பகுதியான கூஃபா வில் தங்கினார்கள். உமர் (ரலி) அவர்களுடன் மொத்தம் 20 நபர்கள் வந்திருந்தார்கள், அவர்களில் அவரது சகோதரர் ஸைத், மருமகன் குனைஸ் பின் ஹுதைபா (ரலி) மற்றும் வாகித் பின் அப்துல்லா அல் தமீமீ (ரலி), அய்யாஷ் (ரலி) ஆகியோரும் வந்திருந்தனர். கூபா வில் உமர் (ரலி) அவர்களும், அவர்களுடன் வந்திருந்தவர்களும், அன்ஸாரித் தோழரான ரிஃபா பின் அப்துல் முன்திர் என்ற பனூ அம்ர் கோத்திரத்தைச் சேர்ந்தவரின் இல்லத்தில் தங்கினார்கள். அவர்கள் தங்கியிருந்த வீடு, அவர்களது சொந்த வீடு போல மிகவும் வசதியாக இருந்தது. இன்னும் கூபா வில் ஏற்கனவே பள்ளிவாசலும் இருந்தபடியால், நேரத்திற்கு தொழவும் அவர்களுக்கு வசதியாக இருந்தது.

இப்பொழுது கூபா வில் உள்ள அனைவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வருகைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்கள். இன்னும் சிலர் மக்காவிலிருந்து பயணிகள் வரக் கூடிய சாலையை நோக்கிய வண்ணம், கூபா வின் புறநகர்ப் பகுதியில் எதிர்பார்த்துக் காத்திருக்க ஆரம்பித்தார்கள். பல நாட்கள் காத்திருந்தும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இன்னும் வரக் காணவில்லையே என்று மக்கள் கவலை கொள்ள ஆரம்பித்தார்கள். அதிலும் உமர் (ரலி) அவர்கள், தனது உற்ற தோழரது வருகை தாமதமாவதைக் கண்டு, கவலையுற்றவராக மக்காவிற்குச் சென்று நிலமை என்னவென்பதை அறிந்து வர முடிவு செய்தார்கள்.

இதற்கிடையில், ஒருநாள் பகல் வேளையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள் சகிதம் பகல் பொழுதில் மதீனாவின் புறநகர்ப் பகுதியான கூபா வை வந்தடைந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் காண மக்கள் குழுமினார்கள். அந்த மதீனத்து மக்கள் ஏற்கனவே இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் காணவில்லையாதலால், வந்திருந்த இருவரில் யார் இறைத்தூதராக இருக்கக் கூடும் என்று மக்கள் அறிய முடியாமல் தவித்தார்கள். மக்களின் தவிப்பை அறிந்து கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், தனது போர்வையால் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு குடை பிடித்தவர்கள் போல நகரில் நுழைய ஆரம்பித்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்து விட்டதை அறிந்த உமர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் காண விரைந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது ஆருயிர்த் தோழர் உமர் (ரலி) அவர்களை ஆரத் தழுவி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூபாவில் சில நாட்கள் தங்கியிருந்தார்கள், கூட்டுத் தொழுகையை அவர்களே முன்னின்று நடத்தினார்கள். பின்பு சில நாட்கள் கழித்து, மதீனாவிற்குள் சென்றார்கள். உமர் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களை நிழல் போலத் தொடர்ந்து சென்றார்கள். மதீனாவில் நுழைந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடன் புலம் பெயர்ந்து வந்த அனைவருக்கும் மதீனா மக்கள் அன்பான வரவேற்பை அளித்தார்கள். இன்னும் மதீனாவில் உள்ள மகளிர்கள் அனைவரும் தங்களது வீட்டின் மாடத்தில் அமர்ந்து கொண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களை வரவேற்றுப் பாடல்களைப் பாடலானார்கள்.

    'விதா மலைக் கணவாய்களின் ஊடேயிருந்து பௌர்ணமி நிலவு முழுமதி, முகிலைக் கிழித்துக் கொண்டு எங்களுக்கு ஒளி தருவதற்காக உதயமாகிவிட்டது! இறைவனிடம் ஒரு கரமேந்தி இறைஞ்சுவோர் உலகில் இருக்கும்வரை (உலகம் உள்ளவரையும்) நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியது நம் மீது கடடையாகி விட்டது!”

சின்னஞ்சிறுமிகள் முரசு கொட்டிப் பாடினார்கள்:

    'நாங்கள் பனீ நஜ்ஜார் குலத்துச் சிறுமிகள், முஹம்மத் (ஸல்) அவர்கள் (எங்களுக்கு கிடைத்திருக்கும்) எத்துணை நல்ல அண்டை வீட்டார்!”

    அண்ணலார் (ஸல்) அச்சிறுமிகளை நோக்கி, 'அன்புச் சிறுமிகளே! நீங்கள் என்னை நேசிக்கீர்களா?” என்று வினவினார்கள். அச்சிறுமிகள் 'ஆமாம்! அல்லாஹ்வின் தூதரே! உங்களை நாங்கள் மிகவும் நேசிக்கின்றோம் என்றனர். இதனைச் செவியுற்ற அண்ணலார், 'நானும் உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறேன்” என்று கூறினார்கள்.

மக்காவை விட மதீனா முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இருந்தது. மக்காவில் முஸ்லிம்கள் அடக்குமுறைக்கும், அவலத்திற்கும், சித்ரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், மதீனாவிலோ பூரண வரவேற்பும் முழு மரியாதையும் கிடைத்ததோடு, மண்ணின் மைந்தர்கள் போல மக்கத்து மக்கள் மதீனாவில் வலம் வந்தார்கள். எனவே மதீனா வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. கடந்த காலங்கள், கனவுகளாகிப் போயின. கொடுமைகள் இல்லை, சித்ரவதைகள் இல்லை, கொலைச் சதிகளும் இல்லை. இப்பொழுது வாழ்க்கையை பூரண சுதந்திரத்துடன் வாழ ஆரம்பித்தார்கள் முஸ்லிம்கள். அதன் காரணமாக முற்றிலும் அரபகத்திற்கும் இன்னும் முழு உலகத்திற்கும் எடுத்துக் காட்டானதொரு சமூகத்தை, ஒரு வாழ்க்கை அமைப்பை உருவாக்கிட ஆரம்பித்தார்கள்.

மதீனாவில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் கட்டப்பட்டு விட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்களும் கூட இந்தப் பணியில் கலந்து கொண்டு, கட்டடப்பணிகளில் மக்களுடன் மக்களாக இருந்து வேலை செய்தார்கள். உமர் (ரலி) அவர்கள் கூபாவிலிருந்து தினமும் மதீனாவிற்குச் சென்று இந்த கட்டடப்பணிகளில் பணியாற்றி விட்டு, மீண்டும் கூபாவிற்குத் திரும்பி வரக் கூடியவராக இருந்தார். இந்தப் பணிகளுக்கிடையில் தங்களது வேலைப்பளுவை மறப்பதற்காக முஸ்லிம்கள் கீழ்க்கண்ட பாடலைப் பாடுபவர்களாக இருந்தார்கள் :

மறுஉலக வாழ்க்கையை விட இன்னொரு வாழ்க்கை இல்லை

இறைவா! (மக்கத்து) முஹாஜிர்கள் மீதும், (மதீனத்து)அன்ஸாரிகள் மீதும் கருணை பொழிவாயாக!

ஏற்கனவே, நாம் சொன்னது போல முன்மாதிரி மிக்க சமுகத்தை உருவாக்க விளைந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், மக்காவிலிருந்து புலம் பெயர்ந்து வந்திருந்த முஹாஜிர்களுக்கு வாழ்வாதரத்தையும், இன்னும் மறுவாழ்வையும் அளிக்க விரும்பி, மதீனாவின் அன்ஸாரி ஒருவருடன் மக்கத்து முஹாஜிர் ஒருவரை சகோதரராக இணைத்து விட்டு, உலக மனித வரலாற்றில் சகோதரத்துவம் என்றால் என்ன என்பதற்கு எடுத்துக்காட்டானதொரு வாழ்க்கை முறையை வகுத்தளித்தார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இவர்களின் சகோதரத்துவம் உடன்பிறந்த சகோதரனின் மீது கொண்டு பாசத்தையும் வென்று நின்றது. இதனடிப்படையில் உமர் (ரலி) அவர்கள், இத்பான் பின் மாலிக் என்ற பனூ அல் கஜ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அன்ஸாரித் தோழருடன் இணைத்து விடப்பட்டார்கள்.

மக்காவின் தட்ப வெப்பம் வறட்சியானது, மதீனாவிலோ அதிகப்படியான ஈரப்பதம் காணப்பட்டது. எனவே, இந்த தட்ப வெப்ப மாற்றம், மதீனாவிற்கு வந்து குடியேறிய மக்கா வாசிகளைப் பாதிக்க ஆரம்பித்தது, உடல்நலக் குறைவை ஏற்படுத்தியது. மக்காவிலிருந்து வந்த பலர் மதீனாவில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அல்லாஹ்வினுடைய கருணையினால் ஒருசிலர் மட்டும், எந்தவித அசௌகரியங்களுக்கும் ஆட்படாமல், மிகவும் உடல்நலத்துடன் இருந்தார்கள். அத்தகையவர்களுள் உமர் (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் பூரண உடல் நலத்தை அளித்திருந்தான்.

மக்காவில் உமர் (ரலி) அவர்கள் ஒரு வியாபாரியாக இருந்தார்கள். ஹிஜ்ரத்திற்காக அவர் பயணப்பட்டு, மதீனாவிற்கு வரும் பொழுதே தன்னுடன் தன்னுடைய பொருளாதாரத்தையும் கொண்டு வந்திருந்தார். எனவே, அந்தப் பொருளாதாரத்தைக் கொண்டு மதினாவில் புதிதாக வியாபாரத்தைத் தொடங்க ஆரம்பித்தார்கள்.

கூபாவில் தனது தலைமையகத்தை வைத்துக் கொண்டு, மதீனாவில் வியாபாரத்தை நடத்தி வந்த உமர் (ரலி) அவர்களின் வியாபாரம், மதீனாவில் மிகவும் ஆமோகமாக நடந்து வந்தது. தனது வியாபாரத்தில் செலவிட்ட நேரம் போக மீதமுள்ள நேரங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து தனது நேரத்தைச் செலவழிப்பவர்களாக இருந்தார்கள். முக்கியமான விஷயங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களிடமும், உமர் (ரலி) அவர்களிடமும் ஆலோசனை செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். இத்தகைய கலந்தாலோசனைகளின் பொழுது, அபுபக்கர் (ரலி) அவர்களது மற்றும் உமர் (ரலி) அவர்களது கருத்துக்களில் வேறுபாடுகள் காணப்பட்டால், இரண்டையும் தனது கவனத்தில் எடுத்துக் கொண்டு, தனது இறுதி முடிவை எடுக்கக் கூடியவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். இரண்டு பேர்களுடைய கருத்துக்களும் ஒத்து இருந்தால், அதனை மாற்றுக் கருத்தில்லாமல் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.

இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் தனது, ''கலீபாக்களின் வரலாறு”” என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள் :

அப்துர் ரஹ்மான் பின் கனம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ''அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகிய இருவரும் ஆலோசனையில் ஒத்த கருத்தைக் கொண்டிருப்பார்களேயானால், அவர்களது (கருத்தை) நான் மறுக்க மாட்டேன்.

பத்ருப் போர்

சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான போர், மதீனாவிலிருந்து அறுபது மைல் தொலைவில் உள்ள பத்ரு என்னும் இடத்தில் நடந்தது. இது சிரியாவிற்கான வியாபாரப் பாதையாகவும் இருந்தது. இந்தப் போருக்காகத் தயாராகும்படி இறைவன் முஸ்லிம்களுக்கு தனது இறைவசனம் மூலம் அறிவுறுத்தினான்.

உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (2:190)

கி.பி.624 ஆம் ஆண்டு, ஒரு குளிர்நாளின் பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் பத்ர் என்னும் சமவெளிப்பகுதியை அடைந்தனர். எதிரிகள் அதே பகுதியின் இன்னொரு மணற்பாங்கான சமவெளிப் பகுதியில் தங்களது பாசறையை இறக்கியிருப்பதாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஒற்றர்கள் வந்து தகவல் தெரிவித்தனர்.

எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவரது தோழர்களும் அந்தப் பகுதியில் இருந்த ஒரே நீர்ப் பிடிப்புப் பகுதியொன்றைக் கைப்பற்றி, அதற்குப் பக்கத்தில் தங்களது பாசறையை அமைக்க விரும்பினார்கள். இறைவனுடைய உதவியை அதற்கு நாடினார்கள்.

இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனிடம் பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள் :

''இறைவா! நீ எங்களுக்கு உதவி செய்வதாக வாக்களித்திருக்கின்றாய் என்பதை மறந்து விடாதே, இந்தச் சின்னஞ்சிறு கூட்டமும் அழிந்து போய் விட்டால், உன்னை வணங்குவதற்கென இந்தப் பூமியில் யாரும் இருக்க மாட்டார்கள்””.

முஸ்லிம்களின் தரப்பில் 313 ஆண்கள் இருந்தனர். இவர்களிடம் இரண்டு குதிரைகளும், 70 ஒட்டகங்களும் இருந்தன. அதேநேரத்தில் குறைஷிகளின் தரப்பில், ஆயிரம் நபர்களும், 200 குதிரைகளைக் கொண்டதொரு குதிரைப் படையும், 100 ஒட்டகங்களும் இருந்தன. மக்கத்துக் குறைஷிகளுடன் ஒப்பிடும் பொழுது, முஸ்லிம்களின் நிலை, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருந்தது, அவர்கள் பூரண ஆயுதத் தரிப்பில் இருந்தனர்.

அதிகாலை நேரம் போர் ஆரம்பமாகியது. குறைஷிகளின் ஒரு குழு இப்பொழுது முன்வந்து முஸ்லிம்களின் மீது சொல்லொண்ணா வசைகளைப் பாடிக் கொண்டிருந்தது, முஸ்லிம்களை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. இதற்கு முஸ்லிம்கள், 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்”, என்றே முழக்கமிட்டார்கள்.

இப்பொழுது குறைஷிகளின் பெருந்தலைகளான உத்பா, ஷைபா, வலீத் ஆகிய மூவரும் முன் வந்து, அன்றைய கால வழக்கப்படி போர் ஆரம்பிக்கு முன் நடக்கும் தனிநபர் யுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். முஸ்லிம்கள் அவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டனர். இவர்களின் இந்த சவாலை முஸ்லிம்களின் தரப்பில் இருந்த அலீ (ரலி), உபைதா (ரலி), மற்றும் ஹம்ஸா (ரலி) ஆகியோர் ஏற்றுக் கொண்டார்கள். அலீ (ரலி) அவர்கள் வலீதையும், உபைதா (ரலி) அவர்கள் ஷைபாவையும், ஹம்ஸா (ரலி) அவர்கள் உத்பாவையும் கொன்றார்கள். தங்களது மிகப் பெருந் தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டதன் காரணமாக, குறைஷிகள் உறைந்து போய் நின்றார்கள்.

குறைஷிகளின் கோபம் தலைக்கேற போர் ஆரம்பமாகியது. முஸ்லிம்கள் நின்று கொண்டிருக்கின்ற பகுதியானது உறுதியான நிலப்பரப்பாகவும், மலைச்சரிவாரமாகவும் இருந்தது. குறைஷிகள் மணற்பாங்கான பகுதியில் நின்று கொண்டிருந்தனர். போர் துவங்குவதற்கு முதல் நாள் மழை பெய்திருந்தது. அதன் காரணமாக, குறைஷிகள் நின்று கொண்டிருந்த நிலப்பரப்பானது, சற்று நெகிழ்ந்து போயிருந்தது. மண்ணின் நெகிழ்ந்து போன தன்மையானது அவர்களின் போராட்ட வேகத்தை மட்டுப்படுத்துவதாகவும் இருந்தது. ஆனால் முஸ்லிம்களின் பக்கமே மழையின் காரணமாக மண் இறுகிப் போய், உறுதியாக இருந்தது. இன்னும் தண்ணீர் தரக் கூடிய அத்தனை வழிகளையும் முஸ்லிம் துண்டித்து விட்டு, தங்களது பகுதியில் மட்டும் தண்ணீர் தரக் கூடிய கிணறு ஒன்றை வசப்படுத்திக் கொண்டார்கள். இதன் காரணமாகவும் குறைஷிகள் மிகுந்த இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். காலை வெயிலானது குறைஷிகளின் முகத்தில் அறைந்தது. ஆனால் முஸ்லிம்களின் தரப்புக்கு சூரியனானது முதுகுப் புறமாக இருந்தது. வெளிச்சம் குறைஷிகளின் முகத்தில் பட்டதும், மிகுந்த சஞ்சலத்துக்கும், பத்தட்டத்திற்கும் ஆளானார்கள். அவர்களால் முஸ்லிம்களைக் குறிபார்த்துத் தாக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். குறைஷிகள் பக்கம் எங்கும் குழப்பமே நீடித்தது.

போர் உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருந்த பொழுது, தனது திருக்கரங்களால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிறிது மண்ணை அள்ளி, ''குழப்பம் அவர்களைச் சூழட்டும்”” என்று கூறி அந்த மண்ணை குறைஷிகள் பக்கம் வீசி எறிந்தார்கள்.

மண்ணை அள்ளி வீசியவுடன், கடுமையானதொரு மணற்காற்று வீச ஆரம்பித்தது. குறைஷிகளின் முகத்தில் மண்ணை வாறி இரைக்க ஆரம்பித்தது. அந்த கட்டத்தில் விரைவான தாக்குதலைத் தொடுக்குமாறு தனது தோழர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். வீசிய புயற்காற்றையும் தோற்கடிக்கும் அளவுக்கு இப்பொழுது முஸ்லிம்கள், குறைஷிகளின் மீது பாய்ந்து தாக்க ஆரம்பித்தார்கள். வெகு சீக்கிரத்திலேயே குறைஷிகள் தங்களது தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. அங்கு அவர்கள் வேரறுக்கப்பட்டார்கள். முஸ்லிம்களுக்கு இறைவன் வெற்றியை அருளினான். குறைஷிகளில் 70 பேர் கொலை செய்யப்பட்டார்கள், முஸ்லிம்களின் தரப்பில் 14 பேர் ஷஹீதானார்கள். இன்னும் 70 குறைஷிகள் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்கள். பலர் உயிர் பிழைத்தால் போதுமென்று மக்காவின் திசையை நோக்கித் தப்பித்து ஓடினார்கள். கனீமத்துப் பொருட்களாக 11 ஒட்டகங்களும், 14 குதிரைகளும் கிடைத்தது. இன்னும் ஏராளமான ஆயுதங்களும் கிடைத்தன.

இந்தப் பத்ருப் போர் முழுவதும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வலது பக்கம் நின்று உமர் (ரலி) அவர்கள் போரிட்டார்கள். இந்தப் பத்ருப் போர் குறைஷிகளின் மிகப் பிரபலமான குலங்கள் அத்தனையும் கலந்து கொண்டிருந்த நிலையில், உமர் (ரலி) அவர்களின் குலமான பனூ அதீ மட்டும் கலந்து கொள்ளாமல் விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்தப் போரில் பனூ அதீ குலத்தைச் சேர்ந்த எவரும் முஸ்லிம்களை எதிர்த்துப் போர் புரிய வரவில்லை. இதுவே உமர் (ரலி) அவர்களினால் முஸ்லிம்களுக்கு விளைந்த மிகப் பெரும் சாதகமாக இருந்த அதேவேளையில், பனூ அதீ குலத்தைச் சேர்ந்த பலர் இஸ்லாத்தைத் தழுவி இருந்த காரணத்தினால், உமர் (ரலி) அவர்களின் தலைமையில் அவர்கள் அனைவரும் பத்ருக் களத்திற்கு வந்ததோடல்லாது, முஸ்லிம்களின் சார்பில் நின்று குறைஷிகளை எதிர்த்துப் போர் புரியவும் வந்திருந்தார்கள்.

குறைஷிகளின் சார்பாக முஸ்லிம்களை எதிர்த்துப் போரிட வந்தவர்களில், உமர் (ரலி) அவர்களின் தாய் மாமனாரான அதி பின் ஹிஷாம் பின் முகீரா என்பவரும் ஆவார். இவர் உமர் (ரலி) அவர்களின் தாயாரினுடைய உடன் பிறந்த சகோதரரும் ஆவார். இருப்பினும், உறவுக்கும் இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கும் மத்தியில் தெளிவானதொரு பிரி கோடு ஒன்றை வரைந்து வைத்திருந்ததோடு, இணை வைப்பாளர்கள் என்றுமே முஸ்லிம்களுக்கு உற்றவர்களாக ஆக முடியாது என்ற கொள்கையை உவந்தெடுத்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள், தனது தாய் மாமனார் என்றும் பாராது, பத்ருக் களத்தில் அவரை நேருக்கு நேர் சந்தித்தார். அதி பின் ஹிஷாம் பின் முகீரா - வை இந்த உலகத்தை விட்டே அனுப்பியும் வைத்தார்.

மேலும், இந்த பத்ருப் போரில் முதல் முதல் ஷஹீதான பெருமைக்குரியவர் யாரென்றால், உமர் (ரலி) அவர்களின் அடிமையான மஹ்ஜா (ரலி) ஆவார்கள். இவர் உமர் (ரலி) அவர்களின் அடிமை என்பதால் அதுவும் உமர் (ரலி) அவர்களுக்குப் பெருமையாக அமைந்தது.

போர் முடிவுற்று, பிடிபட்ட கைதிகளுடன் முஸ்லிம்கள் வெற்றி வீரர்களாக மதீனாவிற்குள் நுழைந்தார்கள். அவ்வாறு கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டவர்களில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சிறிய தந்தையார் அப்பாஸ் அவர்களும், அலீ (ரலி) அவர்களின் சகோதரர் அகில் அவர்களும், அபுல் ஆஸ், வலீத் பின் அல் வலீத் ஆகிய மிகப் பெரும் பிரபலமானவர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மிகப் பெரும் குறைஷித் தலைவர்களான இவர்கள் இப்பொழுது பணிந்த நிலையில் கைதிகளாக மதீனாவிற்குள் நுழைந்தார்கள். இந்தக் காட்சி மக்களின் மனதை நெருடுவதாகவும் இருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவியர்களுள் ஒருவரான, அன்னை சௌதா (ரலி) அவர்கள் இந்தக் காட்சியைப் பார்த்து விட்டு,

''கைதியாகப் பிடிபடுவதை விட, போர்க் களத்தில் உயிர் நீத்திருக்கலாமே?”” என்று கூறினார்கள்.

இப்பொழுது பிடிபட்ட கைதிகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் ஆலோசனை நடத்த ஆரம்பித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் நல்லது, இல்லையெனில் அவர்களைக் கொன்று விடுவதே நல்லது என்ற கருத்தைக் கூறினார்கள். இன்னும் ஒவ்வொரு முஸ்லிமும் தனது குலத்தைச் சேர்ந்த கைதியை கொலை செய்ய வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்தார்கள். அதாவது, ஹம்ஸா (ரலி) அவர்கள் அப்பாஸ் அவர்களைக் கொல்வது, அலீ (ரலி) அவர்கள் தனது சகோதரரான அகீல் அவர்களைக் கொல்வது என்ற கருத்தைத் தெரிவித்தார்கள்.

ஆனால், அபுபக்கர் (ரலி) அவர்கள் சற்று இளகிய, மற்றும் கனிவானதொரு முடிவைக் கூறினார்கள். அவர்களிடம் இருந்து பணயத் தொகையாக ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு, விடுதலை செய்வது விடுவது என்ற கருத்தைக் கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இறைவன் நம் மீது கொண்ட கருணையின் காரணமாக நமக்கு இந்த வெற்றியை அருளினான். எனவே, பிடிபட்ட கைதிகளிடம் நாமும் இரக்கத்துடன் நடந்து கொள்வோம் என்று கூறி, பணயத் தொகையைப் பெற்றுக் கொண்டு, கைதிகளை விடுவித்து விடுவது என்ற முடிவை எடுத்தார்கள்.

பத்ருப் போர்க் கைதிகள்

கைதிகளின் நிலையைத் தீர்மானிக்கும் விஷயத்தில் அபுபக்கர் (ரலி) அவர்கள் நெகிழ்ந்து கொடுத்துப் போகும் முடிவு ஒன்றைக் கூறிய அதேவேளையில், உமர் (ரலி) அவர்களோ மிகவும் கடுமையானதொரு முடிவைக் கூறினார்கள். இதன் மூலம் இருவரது கருத்துக் கூறலிலும் மிகப் பெரிய வித்தியாசம் ஏற்பட்டிருந்தது.

பல்வேறு கருத்துக்களைச் செவிமடுத்து விட்டு, இறுதியில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது முடிவுக்கு வந்தார்கள்.

இறைவனைப் புகழ்ந்தவர்களாக, இறைவன் சிலரது இதயத்தை பாலை விட மிருதுவாக ஆக்கி வைத்துள்ளான், இன்னும் சிலரது இதயத்தை பாறையை விடக் கடினமானதாகவும் ஆக்கி வைத்திருக்கின்றான் என்று கூறி விட்டு,

அபுபக்கர்(ரலி) அவர்களின் பக்கம் திரும்பிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள்,

அபுபக்கரே..!

நீங்கள், இப்றாஹீம் (அலை) அவர்களைப் போன்றவர்கள். ''(உனது வழியில் செல்கின்ற) என்னைப் பின்பற்றுகின்றவர் நம்மில் ஒருவராக இருக்கின்றார், இன்னும் யார் (நமக்குக்) கட்டுப்பட வில்லையோ, இறைவா, அவர்களை மன்னித்தருள நீயே போதுமானவன் என்று இப்றாஹீம் (அலை) அவர்கள் இறைவனைப் பார்த்துக் கூறினார்கள்.

இன்னும் நீங்கள் ஈஸா (அலை) அவர்களைப் போன்றவர்கள், அவர் கூறினார், இறைவா..! நீ அவர்களைத் தண்டித்தால் அவர்கள் உனது அடிமைகளே, அவர்களை நீ மன்னித்தருளினால், நீயே சக்தி வாய்ந்தவனும், மிகைத்தவனும், நீதவானுமாக இருக்கின்றாய் என்று கூறினார்.

பின்பு, உமர் (ரலி) அவர்களின் பக்கம் திரும்பிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள்,

உமரே..!

நீங்கள் நூஹ் (அலை) அவர்களைப் போன்றவர்கள், அவர் கூறினார், இறைவா..!

இந்தப் பூமிப் பந்தின் மீது ஒரு நிராகரிப்பாளரையும் உயிருடன்; விட்டு வைக்காதே.

இன்னும் உமரே..!

நீங்கள் முஸா (அலை) அவர்களைப் போன்றவர், அவர் கூறினார் :

இறைவா..! அவர்களது சொத்துக்களை அழித்து விடுவாயாக, இன்னும் அவர்களது இதயங்களை கடினமாக்கி வைப்பாயாக, அதன் மூலம் அவர்கள் தங்களுக்குரிய தண்டனையைப் பார்க்கும் வரைக்கும் மனம் மாறாதிருப்பதற்காக, என்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அபுபக்கர் (ரலி) அவர்களின் ஆலோசனையை எடுத்துக் கொண்டார்கள்.

மறுநாள் காலையில், உமர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், அபுபக்கர் (ரலி) அவர்களையும் சந்தித்த வேளையில், இருவரும் அழுது கொண்டிருக்கக் கண்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்து,

இறைத்தூதர் (ஸல்) அவர்களே உங்கள் இருவரையும் அழ வைத்தது எது. என்னிடம் கூறுங்கள். எந்தத் துக்கம் உங்களை அழ வைத்ததோ, அதனை என்னிடமும் கூறுங்கள், நானும் அழ வேண்டும், உங்களது துக்கத்தில் நானும் பங்கு கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உமரே..!

இங்கே உம்மைக் கவலை கொள்ளச் செய்யக் கூடியது எதுவும் நடைபெறவில்லை. மாறாக, கைதிகளின் விஷயத்தில் உமது கருத்தை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதன் காரணமாக, உம்மை கௌரவித்திருக்கின்றான் என்ற சந்தோஷத்தைச் செய்தியைக் கேள்விப்பட்டு உவகை கொள்ளுங்கள் உமரே என்று கூறினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். உமது கருத்துக்கு எதிராகக் கருத்துக் கூறியவர்களின் கருத்துக்கு இறைவன் எச்சரிக்கையும் செய்திருக்கின்றான் என்று கூறி முடித்தார்கள்.

என்ன..! என் பொருட்டு இறைவன் தனது திருவசனங்களை இறக்கியருளியிருக்கின்றானா? அந்த வசனங்களை அச்சொட்டாக நான் உங்களது வதனங்களில் இருந்து செவி மடுக்க வேண்டும் யா.. ரசூலுல்லாஹ்..! எனக்கு அதனை ஓதிக் காட்டுங்களேன் என்று உமர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டி நின்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக் காட்டினார்கள் :

(விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை. நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (8:67)



உமைர் பின் வஹ்ப்

மக்கத்துக் குறைஷிகளில் மிகப் பிரபலமான குலத்தலைவர்களுள் ஒருவராக உமைர் பின் வஹ்ப் அவர்கள் திகழ்ந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த ஆரம்ப கால நாட்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு சொல்லொண்ணாக கொடுமைகளைத் தந்து கொண்டிருந்தவர் தான் இவர்.

பத்ருப் போர்க்களத்தில், இவரது குலத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டார்கள், இன்னும் அவரது மகன்களில் ஒருவரான வஹ்ப் முஸ்லிம்களால் சிறை பிடிக்கப்பட்டார்.

பத்ருப் போர் முடிந்து விட்ட சில நாட்கள் கழித்து, கஃபாவில் உட்கார்ந்து கொண்டிருந்த அபூ சுஃப்யான் மற்றும் உமைர் ஆகிய இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த பொழுது, இந்தப் போரில் குறைஷிகள் தோற்று விட்டது குறித்து தங்களுக்குள் இருவரும் கருத்துப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, இறைவன் மீது சத்தியமாக, நம்மவர்கள் அனைவரையும் நாம் இழந்து விட்டதன் பின் இந்த வாழ்க்கையில் என்ன தான் இருக்கின்றது..! என்று அபுசுஃப்யான் சலிப்புடன் கூறிக் கொண்டார்.

உமைர் கூறினார், நீங்கள் சொல்வது சரி தான். எனக்கு மட்டும் கடன் பளு இல்லாமல் இருந்திருந்தால், இன்னும் எனது குடும்பத்திற்குரிய தேவையை நிறைவேற்றும் நிலையும் இல்லாதிருந்தால், நான் மதீனாவிற்குச் சென்று அந்த முஹம்மதின் கழுத்தைக் கொய்து வந்து விடுவேன் என்று உறுமினார்.

அபூசுஃப்யான் கூறினார், உமக்கு இவ்வளவு உயர்ந்த நோக்கமொன்று இருக்குமென்றால், அது பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். உமது கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பை நான் ஏற்கின்றேன். உமது குடும்பத்திற்குத் தேவையான வாழ்க்கை வசதிகளையும் நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன், நான் அவர்களை என் குடும்பத்தவர்கள் போலக் காப்பாற்றுவேன் என்று கூறினார்.

இருவருக்குமிடையே இந்த ரகசிய ஒப்பந்தம் நிறைவேறிய பின்னர், இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் உமைர் மதீனாவை நோக்கிப் பயணப்படலானார். நன்கு தீட்டப்பட்ட, விஷம் தோய்க்கப்பட்ட வாளொன்றையும் தன்னுடன் எடுத்துச் செல்லலானார்.

ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவின் பள்ளியில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் தனது தோழர்களுடன் அந்த பத்ருப் போர் குறித்தும், அதில் இறைவன் புரிந்த பேரருள் குறித்தும் பேசிக் கொண்டிருந்த பொழுது, மதீனாவின் பள்ளிவாசலின் கதவருகே, உமைர் ன் நிழல் அசைவை உமர் (ரலி) அவர்கள் கண்டு விட்டார்கள். உமைர் தனது இடையில் வாளொன்றைச் சொறுகி வைத்திருப்பதையும் அவர், கவனிக்கத் தவறவில்லை.

உமைரைப் பார்த்த மாத்திரத்திலேயே, 'அல்லாஹ்வின் எதிரியாகிய இந்த உமைர் பின் வஹ்ப் என்ற நாய் இங்கெதற்காக வந்திருக்கின்றது, இறைவன் மீது சத்தியமாக...! இவன் ஏதாவது கெடுதல் புரியும் எண்ணத்துடன் தான் வந்திருக்க வேண்டும்” என்று எண்ணிக் கொண்ட உமர் (ரலி) அவர்கள்,

நேராக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, இறைத்தூதர் (ஸல்) அவர்களே..!

அல்லாஹ்வின் எதிரியாகிய உமைர் பின் வஹ்ப், வாளுடன் இங்கு வந்திருக்கின்றான் என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களோ..! உமரே..! அவரை உள்ளே வர விடும் என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள், நேரே உமைரிடம் சென்று, அவரது கழுத்தில் இறுக்கமான துணி ஒன்றைச் சுற்றி இறுக்கிப் பிடித்துக் கொண்டவர்களாக, தனது தோழர்களை அழைத்து, தோழர்களே இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றிலும் பாதுகாப்பு அரண் போல அமர்ந்து கொள்ளுங்கள், இவனை நாம் நம்ப முடியாது, இவன் மிகப் பெரும் விஷமியாவான் என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் உமைரை அழைத்து வரும் நிலையைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்,

உமரே..! முதலில் அவரை விடுங்கள், அவர் முன்னே வரட்டும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்த உமைர், அந்தக் கால வழக்கப்படி காலை வணக்கம் கூறினார்.

அல்லாஹ், இதனை விடச் சிறந்த வாழ்த்தும் முறையை எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றான்,, உமைரே..! அது தான் ''ஸலாம்””, சொர்க்க வாசிகளினுடைய வாழ்த்துப் பொக்கிஷம் என்றார்கள்.

உமைர் கூறினார்..!

நான் எனது மகனை விடுதலை செய்து அழைத்துப் போகவே இங்கு வந்திருக்கின்றேன்..!

பின் உமது கழுத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த வாள் எதற்கு.., இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உமைரைப் பார்த்துக் கேட்டார்கள்.

இறைவன் இந்த வாளினை நாசமாக்கட்டும்..! இந்த வாளினைக் கொண்டு எங்களுக்கு என்ன தான் நல்லது நடந்திருக்கின்றது? என்று உமைர் எரிச்சலுடன் கூறினார்.

நீர் இங்கு வந்ததன் காரணமென்ன? மீண்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேள்வி ஒன்றை உமைரை நோக்கி வீசினார்கள்.

எனது மகனுக்குரிய பணயத் தொகையைச் செலுத்தி விட்டு, அவனை மீட்டுச் செல்வதற்காகவே வந்தேன் என்று கூறினார்.

உமைரே..!

நீரும், அபூசுஃயானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அர்த்தமென்ன? அவர் உனது கடன்களையும், உமது குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளவில்லையா? உமது வாளைத் தீட்டி, அதன் மீது விஷத்தையும் தோய்த்து எடுத்து வரவில்லையா?

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உமைரைப் பார்த்து கேள்விக் கணைகளை வீசிக் கொண்டிருந்தார்கள், தான் நன்றாகத் தீட்டி, விஷத்தைத் தோய்த்து எடுத்து வந்த வாளின் கூர்மையை விட, அதன் விஷத்தை விட அதிகமான கூர்மையையும், கடுமையையும் கொண்டிருந்தது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தைகள், அதனைத் தாங்கவியலாத உமைர்,

போதும்.., போதும்.. நீங்கள் கூறிய அனைத்தும் எங்கள் இருவருக்குள் மட்டும் பேசிக் கொண்ட ரகசியங்கள், இதனை இறைவன் மட்டுமே அறிந்தவன். நிச்சயமாக..! நீங்கள் இறைவனது தூதர் தான் என்று முழங்கிய உமைர் அவர்கள்,

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்பாகவே, திருக்கலிமாவை மொழிந்து இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவரது மகனும் விடுதலை செய்யப்பட்டார். அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அதன் பின் மக்காவிற்குத் திரும்பிய உமைர் (ரலி) அவர்கள், தான் ஏற்றுக் கொண்ட சத்தியத்தின் பக்கம் வருமாறு மக்கத்துக் குறைஷிகளுக்கு அழைப்பு விடுக்க ஆரம்பித்தார்கள்.

தொழுகைக்கான அழைப்பு (பாங்கு)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் குடியமர்ந்து விட்ட பின், சில அடிப்படையான விஷயங்களை அறிமுகம் செய்தார்கள். தொழுகையை நிலைநாட்டுவது, ஸகாத் வழங்குவது, நோன்பு நோற்பது மற்றும் தண்டனைச் சட்டங்களை நிறைவேற்றுதல், இதில் ஆகுமானது - ஹலால் மற்றும் விலக்கப்பட்டது ஹராம் போன்றவைகள் பற்றிய சட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டன.

இஸ்லாமிய பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்தில் தொழுகைக்கான அழைப்பு எதுவும் விடுக்கப்படாமலேயே, அந்தந்த நேரங்களில் மக்கள் பள்ளிவாசலுக்கு வந்து கூட ஆரம்பித்து விடுவார்கள். இஸ்லாம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய, மக்கள் தொகையும் அதிகமாகி வந்து கொண்டிருந்த பொழுது, தொழுகைக்கு மக்களை அழைப்பதற்குண்டான புதிய வித முறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிந்திக்கலானார்கள்.

யூதர்கள் செய்வது போல மத்தளம் போன்ற பெரிய கருவியைக் கொண்டு ஒலி எழுப்பி மக்களை தொழுகைக்கு அழைக்கலாமே என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யோசித்தார்கள். மேலும், இது யூதர்களைப் பின்பற்றுவது போல் உள்ளதால், இது ஒரு சிறந்த வழி முறை கிடையாது என்று நினைத்து அவர்கள், அந்த முடிவைக் கை விட்டார்கள். பின் கைகளைத் தட்டி ஓசை எழுப்பி, அதன் மூலம் மக்களைத் தொழுகைக்கு அழைக்கலாமே என்றொரு யோசைனையும் பிறந்தது.

ஒருநாள் இரவு நபித்தோழர்களில் ஒருவரான அப்துல்லா பின் ஜைத் (ரலி) அவர்கள், தொழுகைக்கு மக்களை எப்படி அழைப்பது என்பது பற்றியதொரு கனவைக் காண்கின்றார்கள், அதனை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் பின்வருமாறு கூறுகின்றார்கள் :

''எனது கனவில் இறையச்சமுள்ள மனிதர் ஒருவர் பச்சை ஆடைகளை அணிந்த நிலையில் தோன்றினார். அவரது கையில் கைக்கொட்டு ஒன்றை வைத்திருந்தார். நான் அந்த கைக்கொட்டை எனக்குத் தருமாறு கேட்டேன். அதற்கு அவர் எதற்காக அதனைக் கேட்கின்றீர்கள் என்று என்னிடம் கேட்டார், அதற்கு நான் முஸ்லிம்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக எனக்கு இது தேவைப்படுகின்றது என்று கூறினேன். அதற்கு அந்த மனிதர், தொழுகைக்கு அழைக்கும் நோக்கத்திற்கு இது பயன்படாது என்று கூறினார். அதற்கு நான், பின் எந்த முறையில் தான் மக்களை தொழுகைக்கு அழைப்பது என்று கேட்டேன். அதற்கு அந்த மனிதர், பள்ளியின் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் நின்று கொண்டு, உரத்த சப்தமிட்டு, அல்லாஹ் மிகப் பெரியவன் (அல்லாஹு அக்பர்) என்றும், இன்னும் நான் அல்லாஹ்வைத் தவிர வணக்கதிற்குரிய இறைவன் வேறு இல்லை என்றும், தொழுகைக்கு வாருங்கள் என்றும் கூறி மக்களைத் தொழுகைக்கு அழையுங்கள் என்று கூறினார்””.

அப்துல்லா பின் ஜைத் (ரலி) அவர்கள் கூறிய வண்ணம், மக்களைத் தொழுகைக்கு அழைக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். தொழுகைக்கான நேரம் வந்ததும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை அழைத்து, அப்துல்லா பின் ஜைத் (ரலி) அவர்கள் கூறியவாறு, மக்களைத் தொழுகைக்கு அழைக்குமாறு கூறினார்கள்.

மக்களைக் கிளர்ந்தெழச் செய்யக் கூடிய அளவில் பிலால் (ரலி) அவர்கள் பாங்கின் அழைப்பை அழகுபடுத்திக் கூறியவுடன், மதீனாவில் அந்த பாங்கின் ஓசையைக் கேட்ட மக்கள் அனைவரும், மின்சாரம் பாய்ந்தவர்களாக அந்த அழைப்பை ஏற்று பள்ளியை நோக்கி விரைந்து வந்தார்கள். உமர் (ரலி) அவர்களும் இந்தப் புதிய பாங்கின் ஓசையைத் தனது வீட்டிலிருந்து செவிமடுத்து விட்டு, தனது ஆடை இழுபட பள்ளியை நோக்கி விரைந்து வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வருவதற்காக சற்று தாமதித்த உமர்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! இவ்வாறு மக்களை பாங்கின் மூலம் அழைக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது” என்று வினவினார்கள்.

அப்துல்லா பின் ஸைத் (ரலி) அவர்களின் கனவு தான், இந்த மாதிரியான முறையைப் பின்பற்றி மக்களைத் தொழுகைக்கு அழைக்க வேண்டும் என்ற உதிப்பைத் தந்தது, அதனை நானும் ஏற்றுக் கொண்டு, அவ்வாறே மக்களைத் தொழுகைக்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக் கொண்டேன் என்று, அப்துல்லா பின் ஸைத் (ரலி) அவர்கள் கண்ட கனவினைப் பற்றியும் எடுத்துக் கூறினார்கள்.

நானும் இதே போன்றதொரு கனவைத் தான் கண்டேன், ஆனால் அப்துல்லா பின் ஸைத் (ரலி) அவர்கள் இந்த விஷயத்தில் என்னை முந்திக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் கண்ட கனவிற்கும் நான் கண்ட கனவிற்கு ஒரு வித்தியாசம் இருக்கின்றது என்று கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த வித்தியாசம் என்ன என்று கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டதும், உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அப்துல்லா பின் ஸைத் (ரலி) அவர்களின் கூற்றுப்படி, ''அல்லாஹ்வைத் தவிர வணங்கத்தக்க இறைவன் வேறு ஒருவன் இல்லை”” என்று நான் சாட்சி கூறுகின்றேன், என்ற வாசகத்துடன், இன்னும் நான் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர்”” என்றும் நான் சாட்சி கூறுகின்றேன், என்ற வாசகத்தையும் நான் செவிமடுத்தேன் என்று கூறினார்கள்.

இதற்குப் பின், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களை அழைத்து, பாங்குடன் மேற்கண்ட ''நான் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர்”” என்றும் நான் சாட்சி கூறுகின்றேன், என்றும் சேர்த்துக் கூறுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

பின்னர், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லா பின் ஸைத் (ரலி) மற்றும் உமர்(ரலி) அவர்களின் பக்கம் திரும்பி, ''இறைவனுக்கே எல்லாப் புகழும். என்னைப் பின்பற்றும் என்னுடைய சத்தியத் தோழர்களுக்கு அல்லாஹ் கனவின் வழியாக உண்மையை அருள் செய்கின்றான்”” என்று கூறினார்கள்.

தீர்ப்பை மாற்றக் கோரியவரைத் தீர்த்துக் கட்டிய உமர் (ரலி)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்து விட்ட பின், யூதர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அவர்களில் அநேகர் இஸ்லாத்தின் மீது மிகவும் பிடிப்பாகவும், தீவிர நம்பிக்கை கொண்ட மக்களாகவும் இருந்தே அதேவேளையில், சிலர் நயவஞ்சகர்களாக தங்களையும் முஸ்லிம்கள் என்று காட்டிக் கொண்டு நாவில் ஏறிய இறைநம்பிக்கை, இதயத்துக்குள் இறங்க மறுத்து விட்டிருந்தது. இவர்கள் இஸ்லாத்தின் வளையத்திற்குள் இருந்து கொண்டே, இஸ்லாத்திற்கு எதிரான பல வேலைகளையும் செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் இஸ்லாத்தை அரைகுறையாகத் தெரிந்து வைத்திருந்ததோடு, இஸ்லாத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மதிப்பு என்னவென்றே தெரியாமல் இருந்தனர்.

அபுல் அஸ்வத் (ரலி) அவர்களின் மூலமாக இந்தச் சம்பவம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதீனாவில் வாழ்ந்த இரண்டு மனிதர்கள் இஸ்லாத்தை தழுவியிருந்தும், அவர்கள் இஸ்லாத்தின் போதனைகள் பற்றி முழுமையான அளவில் உணராதவர்களாக இருந்தனர், இந்த நிலையில், அந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில், அதற்கான தீர்வை வழங்குமாறு அந்தப் பிரச்னையை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றார்கள். இருவரது வாதங்களையும் கேட்டுக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவர்களில் ஒருவரது வாதம் தான் சரியானது என்று தீர்ப்புக் கூறி விடுகின்றார்கள். இதனால் எவருக்கு எதிராகத் தீர்ப்பு அமைந்ததோ, அவருக்கு அந்தத் தீர்ப்பின் மீது திருப்தி ஏற்படவில்லை, எனவே, அந்த வழக்கை உமர் (ரலி) அவர்களிடம் கொண்டு சென்று, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்புக்கு மாற்றமான தீர்ப்பை எதிர்பார்ப்பதாகக் கூறுகின்றார்.

இருவரது வழக்கையும் கேட்டுக் கொண்ட உமர்(ரலி) அவர்கள், உங்களில் மறுபரிசீலனையைக் கோருவது யார்? என்று கேட்டு விட்டு,

ம்.. ம்..! ''இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பின் மீது உங்களுக்கு திருப்தி ஏற்படவில்லை, அந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்கின்றீர்கள்””.

அந்த மனிதர் அதற்கு, 'ஆம்” உமர் அவர்களே..! என்று கூறினார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் வழக்கை ஆய்வு செய்து தீர்ப்புக் கூறிய பின்னர், அவரது தீர்ப்பை மாற்றும்படிக் கோருகின்றீர்கள்.

''நீங்கள் முஸ்லிம் தானே””, என்று கேட்டுக் கொண்டார் உமர் (ரலி) அவர்கள்.

''ஆம், நான் முஸ்லிம் தான்”” அந்த மனிதர் பதில் கூறினார்.

கொஞ்ச நேரம் சற்றுப் பொறுத்திருங்கள். விரைவில் நான் என்னுடைய முடிவைக் கூறுகின்றேன், அது உங்களைத் திருப்திப்படுத்தக் கூடியதாக இருக்கும்””, என்று கூறி விட்டு,

உமர் (ரலி) அவர்கள் தனது வீட்டிற்குள் சென்று, தனது கையில் ஒரு வாளை எடுத்து வந்து, அந்த மனிதரை ஒரே ஒரு போடு போட்டு விட்டு, ''உம் மீது நாசம் உண்டாகட்டும், ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக என்னை தீர்ப்புக் கூறச் சொல்கின்றீரா? நீ இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பாவி, இஸ்லாத்தை விட்டு வெளியேறியதன் தண்டனை, இந்தச் சாவு தான்”” என்று கூறினார்கள்.

மற்ற மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஓடிச் சென்று, இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! உமர் அவர்கள்..! எனது தோழரைக் கொலை செய்து விட்டார்கள் என்று கூறினார்.

உமர் (ரலி) அவர்களை அழைத்து வரும்படி ஆள் அனுப்பி வைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம் இந்தக் கொலைக்கான விளக்கத்தைக் கூறுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், ''உங்களிடம் பெற்று விட்ட பிறகு, உங்களது தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பை வழங்குமாறு இவர்கள் என்னிடம் வந்து தங்கள் வழக்கைக் கூறினார்கள், உங்களது தீர்ப்பில் திருப்தி கொள்ளாத அவரைக் கொலை செய்தது, சரியான தண்டனை தான் என்று கூறினார்கள்””.

இந்தப் பிரச்னையில் இறைவன் தெளிவான வழிகாட்டலைத் தரும் வரைக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பு வழங்காமல், தீர்ப்பை ஒத்தி வைத்தார்கள்.

உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (4:65)

யார் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீது முழு நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்கள் நம்பிக்கையாளர் அல்ல என்ற வசனத்தை இறைவன் இறக்கி அருளினான். இஸ்லாத்தில் இறைநம்பிக்கை கொள்வதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீதும் முழு நம்பிக்கை கொள்வது அவசியமானதொன்று என்ற இறைவசனத்தின் கட்டளையின்படி, உமர் (ரலி) அவர்கள் அந்த மனிதரைக் கொலை செய்தது சரியானது தான் என்று தீர்வாகியது. உமர் (ரலி) அவர்களை நம்பிக்கையாளர்களைக் கொலை செய்த குற்றத்திலிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள், மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் விடுதலை செய்தார்கள்.

உஹதுப் போர்

பத்ருப் போரை அடுத்து நடந்த போர் தான் உஹதுப் போர்.

முஸ்லிம் எதிர்த்து களம் காணுவதற்காக 3000 பேர் கொண்ட படைகளுடன் குறைஷிகள் பத்ரு என்னும் இடத்தில் கூடி நின்றனர். இதற்குப் பதிலடி கொடுப்பதற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 1000 பேர் கொண்ட முஸ்லிம்களின் படையைத் தயார் செய்தார்கள். இதில் கடைசி நேரத்தில் நயவஞ்சகனான அப்துல்லா இப்னு உபை தனது ஆதரவாளர்களை விலக்கிக் கொண்டது போக, எஞ்சியோர் 700 பேர்களை குறைஷிகளைக் களம் காண உஹதுப் போர் முகத்துக்கு வந்திருந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் படையை சீர் செய்து தயார் செய்து வைத்திருந்தார்கள். அதில் ஒரு பிரிவை முஸ்லிம்களின் படை அமைத்திருந்த பகுதிக்குப் பின்புறமுள்ள கணவாய்ப் பகுதியில் வில் வித்தைக் காரர்களை நிறுத்தி, எக்காரணம் கொண்டு எனது உத்தரவின்றி அந்த இடத்தை விட்டும் அகலக் கூடாது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் குழுவினருக்குக் கட்டளையிட்டிருந்தார்கள்.

குறைஷிகள் தங்களுடன் பெண்களையும் அழைத்து வந்திருந்தார்கள். அவர்கள் கொட்டுகளை அடித்துக் கொண்டு, பாட்டுப் பாடிக் கொண்டு தங்களது ஆண்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இவ்வாறு பாடிக் கொண்டிருந்தார்கள் :

நாங்கள் அதிகாலை நட்சத்திரத்தின் மகள்கள்

எங்களது பாதங்கள் புற்களின் மேல் நடந்து பழகியவை

நீங்கள் முன்னேறினால் உங்களை அணைத்துக் கொள்வோம்

நீங்கள் புறமுதுகிட்டுத் திரும்பினால் உங்களை விட்டும் சென்று விடுவோம்

என்று பாடிக் கொண்டிருந்தார்கள்.

குறைஷிகள் தங்களது முழு பலத்துடன் முஸ்லிம்களுடன் மோதினார்கள், ஆனால் அதற்கு எதிர்த்தாக்குதலை வேகத்துடனும், விவேகத்துடனும் முஸ்லிம்கள் தொடுத்தார்கள். முஸ்லிம்களின் எதிர்த்தாக்குதலின் காரணமாக, எதிரிகளைத் துவம்சம் செய்து அவர்களது அணிகளை சிதறடித்துக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையையும் மீறி, கணவாயின் மீது நிற்க வைத்திருந்த வில் வித்தை வீரர்கள், எதிரிகள் பயந்தோடி விட்டார்கள் என்பதாகக் கணித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டும் அகன்று விட்டார்கள். இந்தச் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட, அப்பொழுது இஸ்லாத்தைத் தழுவாமல் எதரிகளின் தரப்பில் இருந்த காலித் பின் வலீத் அவர்கள், முஸ்லிம்களைக் கணவாய் வழியாகத் தாக்கிக் கொண்டு வந்ததோடல்லாமல், முஸ்லிம்களுக்குக் கடுமையான சேதத்தையும் ஏற்படுத்தி விட்டார்.

வில் வித்தைக் காரர்கள் நின்று கொண்டிருந்த இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டதோடு, முஸ்லிம்களுக்கு முன்பிருந்தும், பின்னால் இருந்தும் குறைஷிகள் தாக்கத் தொடங்கினார்கள். இந்தக் குழப்பத்தின் காரணமாக பல முஸ்லிம்கள் வீரத் தியாகிகளானார்கள். இந்தத் தாக்குதலில் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சிறிது நேரம் படுகாயம் காரணமாக விழுந்து விட்டார்கள், இதனைக் கண்ட அவர்களது தோழர்கள் கூட இறந்து விட்டதாகவே நினைத்தார்கள். அப்போது எதிரிகளின் தரப்பில் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கொலை செய்து விட்டதாக சப்தமிட்டு புரளியைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டதாகக் கிளம்பி புரளியானது, முஸ்லிம்களை அச்சம் கொள்ளச் செய்தது, எங்கும் குழப்பம் தலைவிரித்தாடியது. சில முஸ்லிம்கள் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு, மதீனாவை நோக்கி விரைய ஆரம்பித்தார்கள். உமர்(ரலி) அவர்கள் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதுடன், 'இனி போரிடுவதில் என்ன பயன் இருக்கின்றது”, என்று கூறி வாளைத் தூக்கி எறிய முடிவு செய்து விட்டார்கள்.

அனஸ் பின் நத்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களைக் கடந்து செல்கின்றார்கள், அப்பொழுது உமரே..!

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நிலை என்னவென்று வினவுகின்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் வருகின்றனவே என்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டால் என்ன, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதனின்றும் உங்களைத் தடுப்பது எது, அல்லாஹ் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றவனில்லையா..! என்றார்கள். இவ்வாறு அனஸ் (ரலி) அவர்கள் கூறிக் கொண்டே எதிரிகளை நோக்கிக் களம் புகுந்த அவர், எழுபது காயங்களைப் பெற்றுக் கொண்டு வீரத் தியாகியாக ஆனார். அவரது உயிர் களத்திலேயே பிரிந்தது.

பின்னர், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு இடத்தில் காயம்பட்டு வீழ்ந்து கிடப்பது தெரிந்து. அந்த இடத்தைச் சுற்றிலும் அலி (ரலி) அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), தல்ஹா (ரலி), சுபைர் (ரலி) மற்றும் ஹாரித் (ரலி) ஆகியோர் சுற்றி நின்று கொண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினார்கள்.

அபூசுஃப்யான் அவர்கள் இப்பொழுது ஒரு குன்றின் மீது ஏறி நின்று கொண்டு, ''முஹம்மது இன்னும் உயிருடன் இருக்கின்றாரா?”” என்று கேட்டு சப்தமிட ஆரம்பித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இதற்கு மறுமொழி பகர வேண்டாம் என்று தனது தோழர்களைக் கேட்டுக் கொண்டார்கள்.

அபூ சுஃப்யான் பின் அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோர்களைப் பெயர் கூறி அழைத்தார். எந்த மறுமொழியும் கொடுக்கப்படவில்லை. பின் அபூ சுஃப்யான் சப்தமிட்டு, ''அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்களா”” என்று கூறினார்.

அந்த நேரத்தில், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாத உமர் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் எதிரியே, நாங்கள் அனைவரும் உயிருடன் தான் இருக்கின்றோம்”” என்றார்கள்.

சிறிது உணர்ச்சிக் கொந்தளிப்பிற்குப் பின் அபூசுஃப்யான் கத்த ஆரம்பித்தார், ''ஹுப்பலுக்கே புகழனைத்தும்”” என்றார்.

இப்பொழுது, உமர் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வே உயர்ந்தோனும், மிகப் பெரியவனுமாவான்”” என்று கூறினார்கள்.

இப்பொழுது, அபூ சுஃப்யான், ''உஸ்ஸா எங்களுடன் இருக்கின்றது, இன்னும் உங்களுடன் எந்தக் கடவுளுமில்லை”” என்று கூறினார்.

இப்பொழுது உமர் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வே எங்களது இறைவன், உங்களுக்குத் தான் வணங்கும் இறைவன் இல்லை”” என்று கூறினார்.

இரண்டு படைகளும் போர் முகத்தை விட்டும் தங்களது பாசறைகளுக்குத் திரும்பிய பொழுது, முஸ்லிம்களின் தரப்பில் 70 பேர் இறந்திருந்தனர். இந்தப் போரில் குறைஷிகளின் கையே ஓங்கியிருந்தது. பத்ரில் ஏற்பட்ட தோல்விக்கு பழிக்குப்பழி வாங்கி விட்டதாக அவர்கள், திருப்திபட்டுக் கொண்டார்கள். இன்னும் மதீனாவை நோக்கி படை எடுத்துச் செல்லும் நோக்கமும் அவர்களிடம் இல்லாதிருந்தது. மக்காவிற்குத் திரும்பிச் செல்லவே அவர்கள் விரும்பினார்கள்.

உமர் (ரலி) அவர்களைப் பொறாமைப்பட வைத்த மனிதர்

வஹப் பின் காபூஸ் (ரலி) அவர்கள் ஒரு ஆடு மேய்க்கும் இடையராக இருந்தார். ஒருநாள் அவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக மதீனாவிற்குள் வருகின்றார்கள். அவருடன் அவருடைய மருமகனும் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வருகின்றார்கள்.

வஹப் (ரலி) அவர்கள் மதீனாவை வந்தடைந்ததும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உஹதுப் போர்க் களத்திற்குச் சென்றிருப்பதாக அறிகின்றார்கள். இதனைக் கேள்விப்பட்ட வஹப் (ரலி) அவர்கள், தனது மருகனையும், ஆட்டு மந்தையையும் மதீனாவிலேயே விட்டு விட்டு, அவரும் குறைஷிகளைச் சந்திப்பதற்காக உஹதுப் போர்க்களத்தை நோக்கி விரைகின்றார்கள்.

உஹதை வஹப் (ரலி) அவர்கள் அடைகின்ற நேரத்தில், போர் உச்ச கட்ட நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது. குறைஷிகளின் ஒரு குழு முன்னேறிக் கொண்டிருந்தது, அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை தாக்குதவற்காக விரைந்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். இத்ததகைய மிகவும் மோசமான நிலையில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களைப் பார்த்து இவ்வாறு கூறினார்கள் :

''இந்தக் குறைஷிக் கூட்டத்தை யார் விரட்டி அடிக்கின்றார்களோ, அவர் என்னுடன் சுவனத்தில் இருப்பார்”” என்ற நற்செய்தியை அறிவிக்கின்றார்கள்.

இந்த நற்செய்தியைச் செவிமடுத்த வஹ்ப் (ரலி) அவர்கள் போர்க்களத்திற்குள் விரைகின்றார்கள். சிலரைக் கொன்றும், சிலர் விரண்டோடும் நிலையையும் ஏற்படுத்துகின்றார்கள். தனியொரு ஆளாக நின்று கொண்டு குறைஷிகளுடன் வஹப் (ரலி) அவர்கள் போரிடும் அந்தக் காட்சியை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களை நெருங்கிய அந்தக் குறைஷிக் கூட்டத்தை விரட்டி அடித்து விட்ட பின், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகாமையில் வந்த வஹப் (ரலி) அவர்களுக்கு, சுவனத்திற்கான நன்மாராயத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழங்குகின்றார்கள். சுவனத்திற்கான நற்செய்தியைப் பெற்றுக் கொண்ட வஹப் (ரலி) அவர்களது உள்ளம் உணர்ச்சி மேலிட சந்தோஷ எல்லையையே தொட்டு நின்றது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது வதனங்களிலிருந்து எப்பொழுது சுவனத்திற்கான நற்செய்தியைப் பெற்றுக் கொண்டார்களோ, அப்பொழுதே தனது கையில் வாளை எடுத்துக் கொண்டு, எதிரிகளை நோக்கிக் களம் புகுந்தார்கள். மேகத்தைக் கிழித்துக் கொண்டு செல்லும் மின்னல் போல, குறைஷிகளின் அணியை ஊடறுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். எதிர்ப்படும் குறைஷிகளைத் தனது வாளுக்கு இரையாக்கிச் சென்று கொண்டிருந்த அவர்களை, குறைஷிகளின் கூட்டம் சுற்றி வளைத்துக் கொண்டது. எதிரிகளுக்கு மத்தியில் அகப்பட்டுக் கொண்ட வஹப் (ரலி) அவர்களின் மேனியில்பட்ட காயங்களிலிருந்து இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. காயங்களிலிருந்து இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தாலும், இடைவிடாது போரிட்டுக் கொண்டிருந்தார்கள். இரத்தம் அதிகமாக வெளியேறி விடவே, உயிரற்ற சடமாக நிலத்தில் வீழ்ந்தார்கள் வஹப் (ரலி) அவர்கள்.

போர் முடிந்தவுடன், முஸ்லிம்கள் இறந்து போன தங்களது தோழர்களின் உடல்களைத் தேடிச் சேகரித்தார்கள். இஸ்லாத்திற்காக உயிர் துறந்த அந்த உத்தமர்களின் முன்பாக நின்று கொண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

''ஓ வஹப்..! நீங்கள் என்னைப் பொருந்திக் கொண்டீர்கள், அல்லாஹ் உங்களைப் பொருந்திக் கொள்வானாக..!””

அந்த நேரத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களும், காயமடைந்திருந்தார்கள். இருந்த போதிலும் வஹப் (ரலி) அவர்களுக்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள், தனது திருக்கரங்களால் வஹப் (ரலி) அவர்களது உடலை, மண்ணறையில் வைத்தார்கள். வஹப் (ரலி) அவர்களின் வீரத்தைத் தனது கண்களால் கண்டு, ஆச்சரியப்பட்டுப் போன உமர்(ரலி) அவர்கள் அடிக்கடி இவ்வாறு கூறக் கூடியவர்களாக இருந்தார்கள் :

''வஹப் பைக் காட்டிலும் இன்னொருவர் மீது நான் இந்தளவு பொறமைப்பட்டதில்லை. இதனைக் காட்டிலும் சிறந்த நற்செயல்களுடன் நாளை இறைவனைச் சந்திக்க நான் நாடுகின்றேன்””.



ஹஃப்ஸா (ரலி)

ஹஃப்ஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் மகளாவார். உஸ்மான் பின் மசூர் (ரலி) என்ற பிரபலமான நபித்தோழரின் தங்கை ஸைனப் (ரலி) அவர்கள் தான் இவருடைய தாயார் ஆவார்.

மக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த இவர், குனைஸ் பின் ஹுதைஃபா என்ற பனூ ஷஹ்ம் என்ற குறைஷிக் குலத்தைச் சேர்ந்ததொரு தோழருக்கு மணமுடிக்கப்பட்டிருந்தார். இவர், ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தழுவியவராவார். இவர் அபீஸீனிய்யா மற்றும் மதீனா ஆகிய இரண்டு ஹிஜ்ரத்துக்களிலும் இடம் பெற்ற, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெருமதிப்பிற்குரிய தோழாராவார்.

மதீனாவில் இருந்து கொண்டிருந்த கால கட்டத்தில் பத்ர் மற்றும் உஹதுப் போர்களிலும் இவர் கலந்து கொண்டார். உஹதுப் போரில் கலந்து கொண்டிருந்த பொழுது, கடுமையான காயங்களுக்கு உள்ளானார். அந்த காயங்களின் காரணமாகவே அவர் மரணத்தையும் தழுவ நேர்ந்தது. இதன் மூலம் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் இளமையிலேயே விதவையானார்கள்.

தனது மகள் இளமையிலேயே விதவையானது குறித்து உமர் (ரலி) அவர்கள் மிகவும் கவலை கொண்டார்கள். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் இத்தா என்ற காத்திருப்புக் காலத்தை நிறைவு செய்தவுடன், தனது மகளுக்கு மறுமணம் செய்விக்க உமர் (ரலி) அவர்கள் விரும்பினார்கள். இயற்கையில், தந்தையாரைப் போலவே, ஹஃப்ஸா (ரலி) அவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராக இருந்தார்கள். எனவே, இதற்கு ஈடு கொடுத்துச் செல்லக் கூடிய வயதான ஒருவருக்கு மணமுடித்துக் கொடுப்பதே சிறந்தது என்று உமர் (ரலி) அவர்கள் கருதினார்கள்.

எனவே, உமர் (ரலி) அவர்கள் தனது மகளுக்கான சரியான இணையாக, அபுபக்கர் (ரலி) அவர்கள் இருக்கக் கூடும் என்று நினைத்து உமர் (ரலி) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களை அணுகி, தனது மகள் ஹஃப்ஸா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றார்கள். தனது கோரிக்கை மறுப்பேதும் சொல்லாமல் அபுபக்கர் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இதற்கு பதிலேதும் சொல்லாமல் அபுபக்கர் (ரலி) அவர்கள் மவுனம் சாதிப்பது குறித்து, உமர் (ரலி) அவர்கள் ஏமாற்றமடைந்தார்கள். கையறு நிலையிலிருக்கும் நண்பருக்கு உதவும் மனம் கொண்டவராக அபுபக்கர் (ரலி) அவர்கள் இல்லையே என்று உமர் (ரலி) அவர்கள் மனம் வெதும்புகின்றார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதனை அறிந்த உமர் (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களை அணுகுகின்றார்கள். உதுமான் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகளாரான ருக்கையா (ரலி) அவர்களை மணந்திருந்தார்கள். ருக்கையா (ரலி) அவர்கள் மரணமடைந்ததுடன், ஹஃப்ஸா (ரலி) அவர்களை மணந்து கொள்ளுமாறு உமர் (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களிடம் கோருகின்றார்கள். சில நாட்கள் கழித்து உதுமான் (ரலி) அவர்களைச் சந்தித்த உமர் (ரலி) அவர்களிடம், ருக்கையா (ரலி) அவர்களது மரணத்தினால் ஏற்பட்ட கவலை தன்னை மிகைத்திருப்பதாகக் கூறிய உதுமான் (ரலி) அவர்கள், சிறிது காலம் செல்லட்டும் என்று கூறி விடுகின்றார்கள்.

தனது கோரிக்கையை அபுபக்கர் (ரலி) அவர்களும், உதுமான் (ரலி) அவர்களும் நிராகரித்து விட்டார்களே என்று மனம் வெதும்பிய உமர் (ரலி) அவர்கள், நேரடியாக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். கவலை தோய்ந்த முகத்துடன் தன்னை நோக்கி வருகின்ற தனது தோழரைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், உமரே..! உங்களைக் கவலைப்பட வைத்தது எது? என்று வினவுகின்றார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களும், உதுமான் (ரலி) அவர்களும் எனது நேசக் கரத்தை உதறித் தள்ளி விட்டார்கள், என்று தனது மனதிற்குள் மறைத்து வைத்திருந்த அத்தனையையும் கொட்டித் தீர்த்து விட்டார்கள்.

உமரே..! உங்களது மனதைச் சூழ்ந்து கவ்விக் கொண்டிருக்கும் கவலை மேகங்களைப் பற்றி நானறிவேன். நீங்கள் இஸ்லாத்திற்காகச் செய்த சேவைகளைப் பற்றியும் நானறிவேன். கவலையைக் கைவிடுங்கள் என்று கூறிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ''உதுமானை விடச் சிறந்ததொரு துணையை உங்களது மகள் ஹஃப்ஸா பெற்றுக் கொள்வார். ஹஃப்ஸாவை விடச் சிறந்த துணையை உதுமான் பெற்றுக் கொள்வார்”” என்று நன்மாராயங் கூறினார்கள்.

இதனுடைய அர்த்தம் என்னவெனில், ஹஃப்ஸா (ரலி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களே மணக்க விரும்பினார்கள். இந்தச் செய்தியைத் தனது காதால் கேள்விப்பட்ட உமர் (ரலி) அவர்கள், உணர்ச்சியின் விளிம்பிற்கே சென்று விட்டார்கள். தனது நன்றியைத் தெரிவிக்கு முகமாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கரங்களில் முத்தமிட்ட உமர் (ரலி) அவர்கள், விரைந்து வீட்டிற்குச் சென்று இந்த நற்செய்தியை தனது மகளுக்கு அறிவித்தார்கள்.

பின்னர் உமர் (ரலி) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். தனது தோழரின் முகத்தில் சந்தோஷத்தின் ரேகைகள் அரும்பியிருப்பதைக் கண்டார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களைப் பார்த்துக் கூறினார்கள், உமரே..! உங்களது மகள் ஹஃப்ஸா (ரலி) அவர்களை, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மணக்க விரும்பியிருந்த காரணத்தினால் தான், உங்களது கோரிக்கையை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஆனால் உங்களது அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதையே நான் மிகப் பெரும் கண்ணியமாக நினைத்திருந்தேன் என்றும் கூறினார்கள்.

அதன் பிறகு உமர் (ரலி) அவர்கள் உதுமான் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். உமர் (ரலி) அவர்களுடைய கோரிக்கையைத் தான் ஏற்றுக் கொள்ள இயலாததற்கான வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்ட உதுமான் (ரலி) அவர்கள், ''உங்களது மகள் விவகாரம் குறித்து ஏற்கனவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் பேசியிருக்கின்றார்கள். இன்னும் ருக்கையா (ரலி) அவர்கள் இறந்ததன் பின்னாள், தனது இளைய மகளான உம்மு குல்தூம் (ரலி) அவர்களை மணந்து கொள்ளும்படி என்னிடம் கூறி விட்டு, ஹஃப்ஸா (ரலி) அவர்களைத் தானே மணக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்கள். இதன் காரணமாகவே, நான் உங்களது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள இயலாமலிருந்தது என்றும் கூறினார்கள்.

அதன் பின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். இதன் காரணமாக, அபுபக்கர் (ரலி) அவர்களுடன், உமர் (ரலி) அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மாமனார் என்ற சிறப்புத் தகுதியைப் பெற்றுக் கொண்டார்கள்.

யூதர்கள்

மதீனாவில் ஒரு குறிப்பிட்ட அளவில் யூதர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வசதிமிக்கவர்களாகவும் மற்றும் மதினாவின் சூழ்நிலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். இந்த யூதர்களைப் பொறுத்தவரை, ''வாழ்ந்து விட்டுப் போகட்டும்”” என்ற கொள்கையைக் கொண்டவர்களாக இருந்தார்கள். இந்த அடிப்படையில், யூதர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் யூதர்கள் முழுமையான மதச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வார்கள், இதில் முஸ்லிம்கள் எந்தவிதத்திலும் தலையிட மாட்டார்கள். மற்றும் முஸ்லிம்களும் யூதர்களும் பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில் பொதுவான தங்களது நலன்களில் ஒருவர் மற்றவருக்கு உதவிக் கொள்வது என்றும், மதீனாவை எதிரிகள் தாக்க வந்தால் இருவரும் இணைந்தே நகரத்தைப் பாதுகாப்பது என்றும் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள். முஸ்லிம்களும், யூதர்களும் இணைந்து மதீனா நகரைப் பாதுகாப்பும் பொறுப்பை ஏற்றிருக்கும் பட்சத்தில், குறைஷிகளுக்கு உதவுவதற்கென்று யாரும் இருக்க மாட்டார்கள் என்ற நிலையை இந்த ஒப்பந்தம் மூலம் எதிர்பார்க்கப்பட்ட முதற் பலனமாகும்.

இன்னும், தங்களது வேத வாக்கியங்களின்படி அரேபியாவில் ஒரு இறைத்தூதரொருவர் வந்துதிக்கப் போகின்றார் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர். இன்னும் அந்தத் தூதர் தங்களில் இருந்தே உதிக்க இருக்கின்றார் என்றும் அவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், இவர்களது நம்பிக்கைக்கு மாறாக, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிக் குலத்திலிருந்து வந்துதித்தவுடன், யூதர்கள் அனைவரும் தங்களது வேதத்தில் இறைத்தூதர் பற்றிய அடையாளங்கள் அனைத்தையும் மீளாய்வு செய்ய ஆரம்பித்தனர். இன்னும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தவுடன், அவர் தங்களது மேலாண்மையை ஒடுக்கப் போகின்றார் என்றும் நினைக்க ஆரம்பித்தனர். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கென தனித்துவமான கொள்கையை வகுத்தெடுத்து வழங்கியவுடன், காழ்ப்புணர்வு கொண்ட யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும், இஸ்லாத்திற்கு எதிராகவும் பற்பல கட்டுக் கதைகளையும், இன்னும் பழிவாங்கும் செயல்களையும் துவங்க ஆரம்பித்தனர்.

உமர் (ரலி) அவர்கள் யூதர்கள் பேசக் கூடிய ஹீப்ரூ மொழியை அறிந்தவராகவும், அதனைப் பேசக் கூடியவராகவும் இருந்தார். அடிப்படையில் உமர் (ரலி) அவர்கள் ஒரு வியாபாரியாக இருந்த காரணத்தினால், யூதர்களுடன் நல்லதொரு பரிச்சயம் அவருக்கிருந்தது. முஸ்லிம்களிடம் மட்டுமல்ல, யூதர்களிடமும் கூட உமர்(ரலி) அவர்கள் செல்வாக்கு வாய்ந்தவராக இருந்தார். ஒருநாள், யூதர்கள் தங்களது வேதமான தௌராத்தின் பிரதி ஒன்றை, உமர் (ரலி) அவர்களிடம் வழங்கினார்கள். அந்த தௌராத்தின் பிரதியை எடுத்துக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சமூகம் வந்தடைந்த உமர் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களே, இது தௌராத் வேதத்தின் பிரதியாகும் என்றார்கள். அப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களும் மற்ற சில தோழர்களும் அங்கு அமர்ந்திருந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்களோ.., உமர் (ரலி) அவர்கள் கூறுவதைக் கவனிக்காதவர் போல இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தன்னைக் கவனிக்காதிருப்பதை உணர்ந்த உமர் (ரலி) அவர்கள், அந்தப் பிரதியிலிருந்து சில வாசகங்களைப் படிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலையில், உமர் (ரலி) அவர்கள் பக்கம் திரும்பி அபுபக்கர் (ரலி) அவர்கள், ''உமரே நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருக்கின்றீர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உங்களை எவ்வாறு கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அவர்களது முகத்தைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள்? என்றார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், ''இறைவனதும், அவனது தூதர் (ஸல்) அவர்களது கோபத்திற்கு ஆளாவதனின்றும் நான் பாதுகாவல் தேடுகின்றேன்””. அல்லாஹ்வே வணங்கத்தக்க இறைவன் என்றும், இஸ்லாத்தை அவனது மார்க்கமாகவும், முஹம்மது (ஸல்) அவர்களை அவனது திருத்தூதராகவும் நாங்கள் ஏற்றுக் கொண்டோம், அதில் திருப்தியும் கண்டோம் என்று கூறினார்கள்.

அப்பொழுது உமர் (ரலி) அவர்களைப் பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உமரே..! இந்த முஹம்மதினுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நீர் அவர்களைப் பின்பற்றியவராக, இந்த முஹம்மதைக் கை விடுவீர் என்று சொன்னால், நீர் வழி தவறியராவீர், இன்னும் நேர்வழியைத் தவற விட்டவராவீர். இந்த சமயத்தில் (மூஸா (அலை) அவர்கள் உயிரோடு இருக்கும் பட்சத்தில், அவரும் என்னையே பின்பற்றக் கூடியவராக இருப்பார். பின்பு யூதர்களைக் குறிப்பிட்டு இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ''அந்த யூதர்கள் (தங்களுக்கு நேர்வழி காட்ட வந்த) தூதரையே கொலை செய்து விட்டார்கள், இத்தகையவர்கள் எவ்வாறு உங்களுக்கு நண்பர்களாக இருக்க முடியும்? என்றார்கள்””.

உமர் (ரலி) அவர்கள் தன்னுடைய நண்பர்கள் சிலரிடம், தௌராத்தில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி ஏதேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்று வினவினார்கள். அவர்கள் ஆம்..! என்று ஆமோதித்தார்கள். பின் ஏன் நீங்கள் அவரைத் தூதரென்று ஒப்புக் கொள்ள மறுக்கின்றீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ''இறைவன் தனது செய்திகளை (வானவர் தலைவரான) ஜிப்ரில் அவர்கள் மூலமாக முஹம்மது அவர்களுக்கு வழங்குகின்றான், அத்தகைய ஜிப்ரில் எங்களுடைய எதிரியாவார்”” என்று கூறினார்கள். இதனை உமர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள், இதனை அடுத்து கீழ்க்கண்ட வசனத்தை இறைவன் இறக்கியருளினான் :

யார் ஜிப்ரிலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரிலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான். (2:97-98)

மேற்கண்ட இந்த வசனம் இறங்கியவுடன், யூதர்களுடனான அனைத்துத் தொடர்புகளையும் உமர் (ரலி) அவர்கள் முறித்துக் கொண்டார்கள், நிறுத்திக் கொண்டார்கள்.

யூதர்களின் ஒரு குலத்தவரான பனீ கைனுகா குலத்தவர்கள் முஸ்லிம்களுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டவுடன், இது குறித்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, தனது தோழர்களுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கலந்தாலோசனை செய்தார்கள். அப்பொழுது சில தோழர்கள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்ற பொழுது, ''அவர்களை மதீனாவை விட்டும் அப்புறப்படுத்துவதே மேலானது”” என்று உமர் (ரலி) அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.

பனூ நுளைர் கோத்திரத்தைச் சேர்ந்த யூதர்களை மதீனாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்களது சதித் திட்டங்கள் எல்லை மீறிப் போகவும், இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அவர்களையும் மதீனாவை விட்டும் வெளியேற்றி விட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முடிவெடுத்தார்கள்.

அதாவது ஒரு முஸ்லிமை யூதர் குலத்தைச் சேர்ந்த ஒருவன் கொலை செய்து விட்டான். இதற்கான இரத்த இழப்பீட்டுத் தொகையை யூதர்களிடமிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கோரினார்கள். அதற்கு, இறைத்தூதர் (ஸல்) அவர்களால் விதிக்கப்படும் எத்தகைய சட்ட திட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம் என்று அவர்கள் அறிவித்தார்கள். ஆனால், இந்த அறிவிப்புக்குப் பின் தங்களில் ஒருவரை ரகசியமான முறையில் நியமித்து, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வரும் வழியில் வீட்டின் கூரை மீது அமர்ந்து கொண்டு, அங்கிருந்து ஏதேச்சையாக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீது கல்லை உருட்டி விட்டுக் கொலை செய்யத் தீர்மானித்தார்கள். இந்த சதித்திட்டம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு தெரிய வந்தவுடன், உமர் (ரலி) அவர்களை அழைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், பனூ நுளைர் கோத்திரத்தாரையும் மதீனாவில் இருந்து வெளியேற்றும்படி உத்தரவிட்டார்கள். ஆனால், மதினாவில் இருந்து நாங்கள் போக மாட்டோம் என்று அடம் பிடித்த யூதர்களை, முஸ்லிம்கள் நிர்ப்பந்தத்தின் போரில் வெளியேற்றினார்கள். இவ்வாறு வெளியேறிய இவர்கள் கைபர் மற்றும் சிரியாவில் தஞ்சம் புகுந்தார்கள்.



அகழ்ப் போர்

ஷவ்வால் மாதம் ஹிஜ்ரி 5ல் அகழ் போர் நிகழ்ந்தது. இந்தப் போர் ஒரு மாத காலம் நீடித்தது. குறைஷிகளையும் மற்ற அரபுக்குடி மக்களையும் திரட்டி முழுப்பலத்தோடு மதீனாவைத் தாக்கும் முயற்சியில் யூதர்கள் ஈடுபட்டார்கள். ஆனால் அவர்கள் படைகளைத் திரட்டுவதில் மட்டுமே வெற்றிபெற்றனர். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் ஒட்டுமொத்தமாக அழித்திடும் அளவுக்கு ஒரு பெரும் படை திரட்டப்பட்டது. யூதர்களான ஸலாம் இப்னு அபுல் ஹாகைக் அந் - நத்ரி, ஹுயாய் இப்னு அக்தாப் அந் - நத்ரி, கினானா இப்னு அபுல் ஹுகைக் அந் - நத்ரி, பனூ அந் - நதிர், பனூ அல் - வாயேல் இவர்களில் பலர் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு எதிராக ஒன்றுபட்டு மக்காக் குறை»களிடம் சென்று தங்களோடு சேர்ந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் தாக்கி முஸ்லிம்களை அழித்து விடஅழைப்புவிடுத்தனர். அதன் காரணமாகப் பன்னிரண்டாயிரம் வீரர்களோடும், இரண்டாயிரத்து ஐநூறு ஒட்டகங்களோடும் மதீனாவை நோக்கி ஒரு பெரும் படை புறப்பட்டது. அவர்கள் ரூமா ஆற்றுப் படுகைகளில் முகாமிட்டனர். பனூ கினானா, மற்றும் திஹாமாவின் மக்களும் உட்பட மொத்தம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் அல் - ஜுருஃப் மற்றும் ஜுகாபாவுக்கு இடையே முகாமிலிருந்தனர். நஜ்திலிருந்து கத்ஃபான் கூட்டத்தாரும் வந்து தானாப் நக்மாவில் உஹதின் திசையை நோக்கி நிலை கொண்டிருந்தனர்.

உண்மையிலேயே படையெடுத்தவர்கள் யூதர்கள்தான், அவர்களால் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோரைத் திரட்ட முடிந்தது. யூதர்கள் தம் முழு அணியோடும் வந்திருந்ததால் அக்கூட்டணியின் பலம் 24000 வீரர்களாக உயர்ந்தது. பெரும் அணியைத் திரட்டி மதீனாவுக்கு வெளியே நிறுத்திவிட்டு யூதத் தலைவர்கள் மதீனாவின் யூதர்களிடம் வந்து தம் கூட்டணியில் இணையும்படிக் கேட்டுக் கொண்டார்கள்.

எனவே, இத்தகைய பெரும் படையுடன் நேருக்கு நேர் மோதுவது இயலுமானதொரு காரியமல்ல என்பதைப் புரிந்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், பாதுகாப்பாக இருந்து கொண்டு எதிரிகளை எதிர்ப்பது என்று முடிவெடுத்து மதீனா நகரைச் சுற்றிலும் அகழ் வெட்டத் துவங்கினார்கள்.

இப்பொழுது முழு மதீனாவுமே மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்பொழுது களைப்புத் தீர முஸ்லிம்கள் கீழ்க்கண்ட பாடலைப் பாடிக் கொண்டே குழியை வெட்டிக் கொண்டிருந்தார்கள் :

யா அல்லாஹ்! நீ இல்லை என்றால் (நாங்கள்) நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்.

நாங்கள் ஜகாத் கொடுத்திருக்க மாட்டோம்

தொழுதிருக்க மாட்டோம். எனவே,

எங்களுக்கு நிம்மதி இறக்கியருள்வாயாக!

நாங்கள் போரைச் சந்தித்தால்

எங்களுடைய பாதத்தை உறுதிப்படுத்துவாயாக!

முன் உண்டான எதிரிகள் எங்களை மிகைத்து விடடார்கள்.

அவர்கள் குழப்பத்தை நாடினால்,

எங்களுக்காகத் தடுத்து விடு

நாங்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம், இஸ்லாத்தின் மீது நிரந்தரமாக இருப்போம் என பைஅத் (உறுதிமொழி) செய்தோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்தவர்களாக பதில் அளித்தார்கள்.

யா! அல்லாஹ்!! நன்மை என்பது மறு உலக நன்மை தான். எனவே, யா! அல்லாஹ்! அன்ஸார்களுக்கும், முஹாஜிர்களுக்கும் பரக்கத் செய்வாயாக!

அகழ் தோண்டுவதற்குண்டான இடங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தான் நிர்ணயம் செய்தார்கள். பத்துப் பத்துப் பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் 10 கெஜ நீள அகலமுள்ள குழியைத் தோண்டப் பணிக்கப்பட்டார்கள். அவ்வாறு அமைக்கப்பட்டதொரு குழுவிற்கு உமர் (ரலி) அவர்கள் தலைமையேற்றார்கள். பின்னாளில் இந்த இடத்திற்கு அருகே ஒரு பள்ளி கட்டப்பட்டு, அதனை மக்கள் உமர் பள்ளிவாசல் என்றே அழைத்து வந்தார்கள்.

முஸ்லிம்களால் வெட்டப்பட்ட இந்த குழியை குறைஷிகளும், அவர்களது கூட்டுப் படைகளும் வந்து பார்த்து விட்டு, மலைத்துப் போய் நின்றனர். ஏனெனில், அரபுப் பிரதேசத்தில் இத்தகைய போர் முறை கொண்ட வழிமுறைகள் புதியனவாக இருந்தமையால், அந்தக் குழிக்கும் அப்பால் தான் அவர்கள் தங்களது படையினருடன் நிற்க முடிந்ததே தவிர, மதீனாவின் எல்லைக்குள் நுழைய முடியாதிருந்தது.

இன்னும் இந்தக் குழிகளையும் கூட பல பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி, பாதுகாப்பு வளையத்தையும் அமைத்து, பாதுகாவலர்களையும் நியமித்திருந்தார்கள். இவ்வாறு அமைக்கப்பட்டதொரு பாதுகாப்பு வளையம், உமர் (ரலி) அவர்களின் தலைமையின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. ஒருநாள், இந்த பாதுகாப்பு வளையத்தைத் தகர்தெறிந்து விட்டு, முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்காக குறைஷிகள் முயற்சி செய்தனர். உமர் (ரலி) அவர்கள் சுபைர் (ரலி) அவர்களது தலைமையில் அமைக்கப்பட்ட படையை அனுப்பி வைத்ததோடு, குறைஷிகளுக்கு அந்தப் படை மூலம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தினார்கள். இதில் குறைஷிகள் பலர் கொல்லப்பட்டனர்.

ஒரு சமயம், குறைஷிகளுடன் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக உமர் (ரலி) அவர்களால் மதிய வேளைத் தொழுகையான லுஹர் தொழுகையை அதன் குறித்த நேரத்தில் தொழ முடியாமல் போய் விட்டது. குறைஷிகளை விரட்டி அடித்து விட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்த உமர் (ரலி) அவர்கள், குறைஷிகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக குறித்த நேரத்தின் பொழுது தொழுக வேண்டிய தொழுகை தவறி விட்டது, நேரமும் கடந்து விட்டதே என்று வருத்தப்பட்டுக் கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களோ..! உமரே..! நானும் உங்களது நிலைமையில் தான் இருந்து கொண்டிருக்கின்றேன். உங்களைப் போலவே நானும் இன்னும் தொழவில்லை என்று கூறி, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இமாமாக முன்னிற்கு உமர் (ரலி) அவர்கள் தனது லுஹர் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

இந்த அகழ் போரின் முற்றுகை ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்தது, இதன் காரணமாக முஸ்லிம்கள் மிகப் பெரும் சங்கடங்களை எதிர் கொள்ள நேர்ந்தது. உணவுக் கையிருப்பும் குறைந்து கொண்டே வந்தது, மற்ற அத்தியவசியப் பொருட்களின் இருப்பும் கூட பிரச்னைக்குள்ளாகி வந்து கொண்டிருந்தது. ஆனால் முஸ்லிம்கள் எந்தவித நம்பிக்கையீனத்திற்கும் ஆளாகமல், இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

இறைவன் முஸ்லிம்களுக்கு நிம்மதியையும், நிவாரணத்தையும் வழங்கினான். எதிரிகளினுடைய முகாமில் பலவித கருத்து முரண்பாடுகள் ஏற்படத் துவங்கின. அவர்களது அத்தியாவசியத் தேவைகளும் கூட குறைந்து கொண்டே வந்தன. இவற்றிற்கும் மேலாக பலமான புயல் காற்று வீசத் துவங்கியதும், அவர்களது மன உறுதியை இழக்கச் செய்வதற்குக் காரணமாக அமைந்தது. முஸ்லிம்கள் தங்களது வீடுகளில் பாதுகாப்பாக இருந்து கொண்டிருந்த அதேவேளையில், குறைஷிகளும் அவர்களது தோழர்களும் புயற்காற்றினால் அழைக்கழிக்கப்பட்டார்கள். இறுதியாக, அபூசுஃப்யான் தனது படை முகாம்களை காலி செய்ய உத்தரவிட்டதுடன், வாபஸ் பெற்றுக் கொண்டு மக்காவுக்குத் திரும்பி விட்டார்கள். அவர்களது கூட்டுப் படைகளும் கூட இடத்தைக் காலி செய்து விட்டார்கள்.

இறைவனின் மாபெரும் கருணை மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தெளிந்த வழிகாட்டுதல்களின் மூலமாக முஸ்லிம்கள் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றார்கள்.



ஹுதைபிய்யா உடன்படிக்கையும் அதன் விளைவுகளும்

கி.பி.628 ன் ஆரம்பத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உம்ராச் செய்யும் நிமித்தமாக மக்காவை நோக்கிப் பயணப்பட்டார்கள். அவர்களுடன் கிட்டத்தட்ட 1400 தோழர்களும் உடன் சென்றார்கள். இவர்களுடன் உமர் (ரலி) அவர்களும் சென்றார்கள். மேலும், மக்காவைத் தரிப்பதற்கான தங்களது நோக்கத்தை குறைஷிகளுக்குத் தெரியப்படுத்துவதற்காக வேண்டி, இந்தப் பயணம் அமைதிப் பயணம் என்பதை அவர்களுக்கு அறிவிக்குமுகமாகவும் தங்களுடன் போருக்கான ஆயுதங்கள் எதனையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் உடன் எடுத்துச் செல்லவில்லை.

இவ்வாறாக உம்ராவுக்காக வேண்டி பயணப்பட்ட முஸ்லிம்கள் மதீனாவின் புறவெளிப்பகுதியாக துல்குலைஃபா என்ற இடத்தில் சற்று தாமதித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காகக் காத்திருந்தார்கள். அப்பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்களை அண்மித்த உமர் (ரலி) அவர்கள், குறைஷிகளை நாம் நம்ப இயலாது, மேலும் ஆயுதங்கள் ஏதுமின்றி மக்காவை நோக்கிச் செல்வது பாதுகாப்பற்றது என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். தற்காப்பிற்காகவேனும், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்திச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். உமர் (ரலி) அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தங்களது தோழர்களில் சிலரை அனுப்பி வைத்து, ஆயுதங்களைக் கொண்டு வரச் செய்தார்கள்.

இப்பொழுது முஸ்லிம்கள் மக்காவை நோக்கி வந்து கொண்டிருப்பதை அறிந்து கொண்ட குறைஷியர்கள், காலித் பின் வலீத் மற்றும் இக்ரிமா பின் அபூ ஜஹ்ல் ஆகியோர் தலைமையில் இருநூறு குதிரை வீரர்களை அனுப்பி, மக்காவை நோக்கி வந்து கொண்டிருக்கின்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் மற்றும் அவர்களது தோழர்களையும் மேலும் முன்னேறி வரவிடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மக்காவை நோக்கிய தங்களது பயணம் தடை படாமல் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம் கலந்தாலோசனையில் ஈடுபட்டார்கள். அப்பொழுது, அநேகமான தோழர்கள் தங்களது முயற்சியில் பின்னடைவு தேவையில்லை, நாம் முன்னேறிச் செல்வோம், நாம் தடுக்கப்படுவோமேயானால் அதனை எதிர்த்துப் போரிடுவோம் அல்லது அவர்களது தடுக்கவில்லையென்றால் நாம் அமைதியாக உம்ராச் செய்து விட்டு வந்து விடுவோம், போர் செய்ய வேண்டியதில்லை என்ற கருத்தைக் கூறினார்கள்.

இந்தக் கலந்தாலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, மக்காவை நோக்கிய இந்த நமது பயணம் இடையில் குறைஷிகளால் வழி மறிக்கப்படாமல் இருக்க, மக்காவிற்கான மாற்று வழியை அறிந்தவர்கள் நம்மில் யாராவது இருந்தால் முன்வாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்பொழுது, ஒரு தோழர் முன்வந்ததோடு, முஸ்லிம்களை மக்காவை நோக்கி அழைத்துச் செல்ல ஆரம்பித்தார், இன்னும் அவர் அழைத்துச் சென்ற பாதையானது, கற்பாறைகளைக் கொண்ட மேடு பள்ளம் நிறைந்த பாதையாக இருந்தது. மக்காவை நோக்கிய இந்தப் புதிய பாதை முத்னியா என்ற இடத்தைத் தாண்டி, இப்பொழுது ஹுதைபிய்யா என்ற மக்காவின் கீழ்ப்பகுதியை அடைந்தது, இதுவும் மக்காவிற்கு உட்பட்ட புனிதப்பகுதியாகவே கருதப்பட்டது.

இப்பொழுது முஸ்லிம்கள் இந்த ஹுதைபிய்யா என்ற இடத்தில் கூடாரம் அடித்துத் தங்கினார்கள். இந்த சமயத்தில் உர்வா பின் மஸ்ஊத் என்பவர் குறைஷிகளின் பிரதிநிதியாக வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தார். இந்தப் பேச்சுவார்த்தையின் ஊடாக, குறைஷிகள் மிகவும் பலம் வாய்ந்தவர்கள், உங்களை மக்காவிற்குள் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்ற தொணியில், முஸ்லிம்களது மனதில் குறைஷிகளைப் பற்றி அச்ச உணர்வை ஊட்டும் வகையில் பேச ஆரம்பித்தார். மேலும், பிரச்னை முற்றியவுடன் உங்களது தோழர்கள் உங்களுக்கு கை கொடுக்க மாட்டார்கள், உங்களைக் கைவிட்டு ஓடி விடவும் தயாராகி விடுவார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் கூட அவர் மிரட்டும்பாணியில் பேச ஆரம்பித்தார். இவரின் பேச்சைச் செவிமடுத்துக் கொண்டிருந்த நபித்தோழர்கள், ''அல்லாஹ்வின் சாபம் உன்மீது உண்டாகட்டுமாக””, ''இறைத்தூதர் (ஸல்) அவர்களை நாங்கள் கைவிட்டு விடுவோம் என்று நீர் எவ்வாறு சொல்வதற்கு உமக்கு என்ன தைரியம்”” என்று கோபத்தில் உச்சியில் நின்று கொண்டு, அவரை நோக்கி சூடான வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டார்கள். இன்னும், ''நாங்கள் அவரைக் கைவிட மாட்டோம், இறுதி வரை நின்று அவருக்காகப் போராடுவோம்”” என்று சூளுரைத்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்து விட்டு, குறைஷிகளிடம் திரும்பிய உர்வா அங்கு தான் கண்ட அனுபவங்களை அவர்களிடம் விவரிக்கத் துவங்கினார் :

''குறைஷிகளே..! நான் மன்னாதி மன்னர்களைப் பார்த்திருக்கின்றேன். முஹம்மது – அவரது தோழர்களுக்கிடையில் மன்னரைப் போல வாழுகின்ற ஒருவரை நான் பார்த்ததேயில்லை. அவர் தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள ஒலுச் செய்கின்றார் எனில், வழிந்தோடக் கூடிய தண்ணீரைக் கூட அவரது தோழர்கள் தரையில் விழ அனுமதிப்பதில்லை. ஏன்.. அவரது உடம்பிலிருந்து விழக் கூடிய முடியைக் கூட அவர்கள் எடுத்து வைத்துக் கொள்கின்றார்கள். இப்படிப்பட்ட அவரை, அவர்கள் எந்த நிலையிலும் நம்மிடம் சரணடையச் செய்து விடுவார்கள் என்று எவ்வாறு தான் எதிர்பார்க்க இயலும்””, என்று கூறி முடித்தார்.

இந்த நிலையில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கிடையில் கலந்தாலோசனை செய்து கொண்டிருந்த பொழுது, உமர் (ரலி) அவர்களை குறைஷிகளிடம் அனுப்பி வைத்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம் என்றதொரு முடிவை எடுத்த பொழுது, 'தன்னுடைய விட்டுக் கொடுக்காத பண்பு, குறைஷிகளிடம் நடைபெறப் போகும் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி வைக்காது” என்று கூறிய உமர் (ரலி) அவர்கள், குறைஷிகளின் பெருமதிப்புக்குரியவரான, இன்னும் அமைதியான சுபாவம் கொண்டவரான உதுமான் (ரலி) அவர்களை அனுப்பி வைப்பது சிறந்தது என்ற ஆலோசனையை உமர் (ரலி) அவர்கள் முன் வைத்தார்கள். உமர் (ரலி) அவர்களுடைய இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், குறைஷிகளிடம் பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கான உதுமான் பின் அஃப்பான் (ரலி) அவர்களை அனுப்பி வைத்து, தாங்கள் உம்ராச் செய்யும் நோக்கத்துடன் மட்டுமே மக்காவில் வர விரும்புவதாக அவர்களுக்குத் தெளிவுபடுத்தி விட்டு, அதற்குரிய பேச்சுவார்த்தைகளை நடத்தி விட்டு வரும்படி அனுப்பி வைத்தார்கள்.

இவ்வாறாக அனுப்பி வைக்கப்பட்ட உதுமான் (ரலி) அவர்கள் மூன்று நாட்களாக திரும்பி வராத காரணத்தால், குறைஷிகளால் உதுமான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தியை இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவரது தோழர்களும் நம்ப வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். உமர் (ரலி) அவர்கள் கோபத்தில் எரிமலையாக நின்று கொண்டு, தனது ஆயுதங்களைத் தயாராக வைத்துக் கொண்டவராக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவிற்காகக் காத்திருந்தார்கள். ''அதாவது, உதுமான் (ரலி) அவர்கள் குறைஷிகள் கொலை செய்திருப்பார்களென்று சொன்னால், அத்தகையவர்களுடன் போர் தொடுத்துப் பழிக்குப் பழி எடுப்பது அவசியம் என்று உமர் (ரலி) அவர்கள் ஆலோசனை கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களும் உமர் (ரலி) அவர்களின் கருத்தில் உள்ள நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டவராக, தன்னுடைய தோழர்களை அழைத்து நிராகரிப்போருக்கு எதிராகப் போர் புரிய வேண்டியதிருப்பதையிட்டு கலந்தாலோசனை செய்ததோடு, அவர்கள் அனைவரிடமும் உறுதிப் பிரமாணம் வாங்கிக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சத்தியப் பிரமாணத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களது தோழர்களின் இந்த தியாகத்தை மெச்சி இறைவன் கீழ்க்கண்ட வசனத்தை இறக்கி அருளினான் :

நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத்து(வாக்குறுதி) செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே பைஅத்(வாக்குறுதி) செய்கின்றனர் - அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது; ஆகவே, எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகிறானோ, நிச்சயமாக அவன் தனக்குக் கேடாகவே (அதை) முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை விரைவில் வழங்குவான். (48:10)

இந்த இறைவனுடைய திருப்பொருத்தத்தை மட்டுமே எதிர்பார்த்துச் செய்யப்பட்ட இந்த சத்தியப் பிரமாணம் பிந்தைய நாட்களில் ''பைஅத்துர் ரிழ்வான்”” என்று சிறப்பித்துக் கூறப்பட்டது.

1.முஸ்லிம்கள் இந்த ஆண்டு திரும்பிச் சென்று விட வேண்டும்.

2.அடுத்த ஆண்டு வர வேண்டும். மூன்று நாட்கள் மட்டுமே தங்கி திரும்பிச் சென்று விட வேண்டும்.

3.ஆயுதங்களோடு வரக்கூடாது. வெறும் வாளுடன் மட்டும் வரவேண்டும். அதுவும் வெளியே எடுக்கப் படாமல் உறைக்குள் போட்டு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

4.மக்கா நகரில் எஞ்சியிருக்கும் முஸ்லிம்களில் ஒருவரையும் முஸ்லிம்கள் தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. முஸ்லிம் ஒருவர் மக்கா நகர் திரும்பி வர விரும்பினால் அவரைத் தடுக்கக் கூடாது.

5.இறை மறுப்பாளர்கள் அல்லது முஸ்லிம்களில் எவரேனும் மதீனா நகருக்கு வந்து விட்டால் அவரை மக்கா நகருக்குத் திருப்பியனுப்பிட வேண்டும். ஆனால் முஸ்லிம்களில் எவராவது மக்கா நகருக்குச் சென்றால் அவர் திருப்பி அனுப்பப்பட மாட்டார்.

6.அரபுக் குலங்கள் விரும்பினால் முஸ்லிம்கள் அல்லது இறை மறுப்பாளர்கள் இருவரில் எவரிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ள உரிமையுண்டு.

7.இந்த ஒப்பந்தம் பத்தாண்டுகள் வரை நீடித்திருக்கும். (அதாவது பத்தாண்டுகளுக்குப் போர் புரிய மாட்டோம்)

இந்த நிபந்தனைகள் (ஷரத்துகள்) அனைத்தும் வெளிப்படையாகப் பார்க்கும்போது முஸ்லிம்களுக்கு எதிரானவையாக இருந்தன. இவற்றிலிருந்து முஸ்லிம்கள் விட்டுக் கொடுத்து, பணிந்து போய் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெளிவாகத் தெரிந்தது.

எனவே, இந்த வருடம் முஸ்லிம்கள் உம்ராச் செய்யாமலேயே திரும்ப வேண்டியிருந்தது. வருகின்ற வருடத்தில் ஹஜ்ஜுச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டதோடு, அந்த காலகட்டத்தில் மக்காவில் மூன்று நாட்கள் தங்கியிருக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.

மேற்கண்ட ஒப்பந்தங்கள் வெளிப்படையாக குறைஷிகளுக்கு சாதகமாக இருந்த காரணத்தினால், இந்த பாதகமான போக்கை ஜீரணித்துக் கொள்ள இயலாதவர்களாக உமர் (ரலி) அவர்கள் காணப்பட்டார்கள். மேலும், இந்த விவகாரத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டே தீருவது என்று தீர்மானித்தவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்ற உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு முறையிட்டார்கள் :

இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பி வைக்கப்பட்டவர்களல்லவா? நிச்சயமாக..! என்றார் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். நம்முடைய எதிரிகள் இணைவைப்புப் பழக்கத்தில் இருக்கின்ற சிலைவணங்கிகள் அல்லவா? என்று கேட்டார் உமர் (ரலி). அதில் சந்தேகமென்ன.. நிச்சயமாக..! என்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். பின்னர், ''நீங்கள் ஏன் நம்முடைய மார்க்கத்தை தாழ்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்? என்றார் உமர் (ரலி). இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்பொழுது பதில் கூறினார்கள், ''நான் இறைவனது தூதராவேன், இன்னும் அவனது கட்டளைகளுக்கு மாற்றமாக என்னால் செயல்பட முடியாது””.

இந்த பதிலைக் கேட்ட உமர் (ரலி) அமைதியாக இருந்து விட்டார்கள், ஆனால் இந்த ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு பாதகமானதாக ஆகி விட்டதே என்று அவர்கள் வேதனைப்பட்டார்கள். அடுத்ததாக, அபுபக்கர் (ரலி) அவர்கள் பக்கம் திரும்பிய உமர் (ரலி) அவர்கள், இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யும்படி வேண்டுங்களேன் என்றார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களோ..,

''நம்மைக் காட்டிலும் இதன் சாதக பாதகங்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிக அறிந்தவர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எதனைச் செய்தாலும் அது முஸ்லிம்களின் நல்வாழ்விற்காகவே அமைந்திருக்கும்”” என்றார்கள். இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். முரண்பாடான கருத்துகளை முன்வைத்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு நிர்ப்பந்தமளிக்காதீர்கள் என்றும் அறிவுரை கூறினார்கள்.

இதன் பின்னர் ஹுதைபிய்யா உடன்படிக்கையில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டார்கள். இந்த ஒப்பந்தத்தில் முஸ்லிம்களின் தரப்பில் கையெழுத்திட்ட பலரில் உமர் (ரலி) அவர்களும் அடங்குவார்கள்.

அபூஜந்தல் (ரலி) அவர்களின் விவகாரம்

இப்போதுதான் சமாதான உடன்படிக்கைப் பத்திரத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தற்செயலாக குறைஷிப் பிரதிநிதி சுஹைலின் மகனார் அபூஜந்தல் (ரலி) அவர்கள் மக்கா நகரிலிருந்து எப்படியோ தப்பியோடி அந்த இடத்திற்கு வந்து விட்டார்கள். விலங்குகளை அணிந்து கொண்டு முஸ்லிம்களின் முன்னால் வந்து விழுந்து விட்டார்கள்! அனைவருக்கும் தன் பரிதாப நிலையை எடுத்துரைத்தார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட குற்றத்திற்கு தண்டனையாக அவர்களுக்கு எப்படிப்பட்ட கொடுமைகள் இழைக்கப்பட்டு வந்தன என்று எடுத்துக் கூறினார்கள்.

அபூஜந்தல் அண்ணலாரிம், 'நாயகமே! என்னை இறைமறுப்பாளர்களிடமிருந்து விடுவித்து தங்களுடன் அழைத்துச் சென்று விடுங்கள்” என்று வேண்டினார்கள். இதனைக் கண்ட சுஹைல், 'சமாதான ஒப்பந்தத்தை நிறைவேற்றிட இதுவே முதல் சந்தர்ப்பமாகும். ஒப்பந்தத்தின் படி தாங்கள் அபூஜந்தலை தங்களுடன் அழைத்துச் செல்ல முடியாது” என்று கூறினார்.

இது மிகச் சிக்கலான ஒரு நேரமாக இருந்தது. ஒருபுறம் உடன்படிக்கை மதித்து நடக்க வேண்டியிருந்தது. மற்றொரு புறம் நிரபராதியான ஒரு முஸ்லிமின் மீது அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக கொடுமையிழைக்கப்படும் பிரச்சனை முன் நின்றது. மேலும் அவர் 'என் முஸ்லிம் சகோதரர்களே! நீங்கள் என்னை இறை மறுப்பாளர்களின் கரத்தில் ஒப்படைக்க விரும்புகிறீர்களா?” என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார். முஸ்லிம்கள் அனைவரும் இந்தப் பரிதாப நிலையைக் கண்டு கொதித்தெழுந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் 'தாங்கள் உண்மையான இறைத் தூதராயிருப்பின் நாங்கள் இந்த இழிவை ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்?” என்று கூடக் கேட்டு விட்டார்கள்.

ஆனால் அண்ணலார் 'நான் இறைவனின் திருத்தூதரேயாவேன், அவனது கட்டளைக்கு நான் மாறு செய்ய முடியாது. இறைவன் எனக்கு உதவி புரிவான்” என்று கூறினார்கள். ஆக, சமாதான உடன்படிக்கை எழுதி முடிக்கப்பட்டது. அபூஜந்தல், உடன்படிக்கையின் விதிமுறைப்படி திரும்பிச் செல்ல நேரிட்டது. இஸ்லாத்தின் தொண்டர்கள் இறைத் தூதருக்குக் கீழ்ப்படிவதற்கான கடும் சோதனை ஒன்றில் வெற்றி பெற்றார்கள். ஒருபுறம் வெளிப்படையில் இஸ்லாம் இழிவுபடுத்தப்பட்டிருந்தது. அபூஜந்தலின் பரிதாப நிலை இருந்தது. மற்றொரு புறம் இறைத் தூதருக்கு எந்தக் கேள்வியும் மறுப்புமின்றி கீழ்ப்படியும் பண்பும் இருந்தது.

அண்ணலார் அபூஜந்தலிடம் கூறினார்கள். 'அபூஜந்தலே! நீர் பொறுமையைக் கடைப்படியும். இறைவன் உங்களுக்கும் மற்ற நிரபராதிகளுக்கும் உங்களைப் போல் கொடுமைக்குள்ளானவர்களுக்கும் ஒரு வழியைக் காட்டுவான். இப்போது சமாதான உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டது. இனி நாம் அவர்களிடம் ஒப்பந்தத்தை முறிக்கவோ அதற்கு எதிராகச் செயல்படவோ முடியாது” என்று கூறினார்கள். அபூஜந்தல் (ரலி) அவர்கள் எப்படி அங்கு வந்தார்களோ அப்படியே விலங்குகளை அணிந்த வண்ணம் திரும்பிச் சென்று விட்டார்கள்.

இப்பொழுது முஸ்லிம்கள் தங்கள் தங்கள் கூடாரத்தைக் களைத்து விட்டு மதீனாவை நோக்கிப் பயணப்பட ஆரம்பித்தார்கள். உமர் (ரலி) அவர்களோ.. மிகவும் கவலையுடையவராக இருந்தார்கள். இந்த ஒப்பந்தத்தில் குறைஷிகளின் கை ஓங்கி விட்டதே என்று வேதனைப்பட்டார்கள். இந்த நிலையில் சூரா அல் ஃபத்ஹ் ன் வசனங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்டது.

(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம். உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும். மேலும், அல்லாஹ் ஒரு வலிமை மிக்க உதவியாக உமக்கு உதவி செய்வதற்காகவும் (தெளிவான இவ்வெற்றியை அவன் அளித்தான். (48:1-3)

உமர் (ரலி) அவர்களை அழைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், உமரே..! இந்த ஒப்பந்தம் ஒரு தெளிவான வெற்றி என்று இறைவனே தன்னுடைய வசனங்கள் மூலம் தெளிவுபடுத்தி விட்டான், இந்த ஒப்பந்தம் நமக்கு வெற்றியே ஒழிய தோல்வியல்ல என்றார்கள். இதனைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள்.

நடந்து முடிந்த ஹுதைபிய்யா பற்றி கணக்கீடு செய்வதில் அபுபக்கர் (ரலி) அவர்களது நிலை உமர் (ரலி) அவர்களை விட மாறுபட்டதாக இருந்தது. அதாவது :

ஹுதைபிய்யா உடன்படிக்கையை போன்றதொரு மிகப் பெரிய வெற்றி இஸ்லாத்தில் இல்லையென்று சொல்லும் அளவுக்கு, அதன் பின்விளைவுகள் அமைந்திருந்தன. மனிதர்கள் எப்பொழுதும் அவசரக்காரர்களாக இருக்கின்றார்கள், ஆனால் இறைவன் எல்லாவற்றிற்கும் தகுந்த நேரத்தையும், காலத்தையும் நிர்ணயித்தே வைத்திருக்கின்றான். உடன்படிக்கைக்கு முன்பதாக, முஸ்லிம்களுக்கும், இன்னும் ஏனைய மனிதர்களுக்குமிடையே ஒரு தடைச்சுவர் இருந்து வந்தது, ஒருவர் மற்றவருடன் பேச மாட்டார்கள், எப்பொழுதெல்லாம் இரு குழுக்களும் சந்தித்துக் கொண்டார்களோ உடனே சண்டையும் அவர்களுக்குள் ஆரம்பமாகி விடும் என்ற நிலையும் நிலவி வந்தது. உடன்படிக்கைக்குப் பின்பு, முன்பு நிலவி வந்த பகையுணர்வு மறைந்து, இரு குழுக்களுக்குமிடைய பரஸ்பர புரிந்துணர்வு ஏற்பட ஆரம்பித்தது. நடுநிலையோடு இஸ்லாத்தினைப் பார்த்த மக்கள் உடனடியாக இஸ்லாத்தின்பால் கவரப்பட்டார்கள், உடன்படிக்கைக்குப் பின்னராக இருபத்தி இரண்டு மாத கால அவகாசத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு மக்கள் இஸ்லாத்திற்குள் பிரவேசிக்க ஆரம்பித்தார்கள், இன்னும் இஸ்லாத்தின் கொள்கைகள் அரேபியாவையும் தாண்டி எல்லாப் பகுதிகளிலும் பரவ ஆரம்பித்தது.

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்பு

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்பு ஏற்பட்ட சில மாற்றங்கள் உமர் (ரலி) அவர்களை நேரடியாகவே பாதித்தன.

உடன்படிக்கையின்படி, குறைஷிகளில் எந்த ஆணாவது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வாரென்றால், அவ்வாறு ஏற்றுக் கொண்ட நபரை மீண்டும் குறைஷிகளிடம் ஒப்படைத்து விட வேண்டும். இந்த நிலையில், சில குறைஷிகள் இஸ்லாத்தினைத் தழுவிய பொழுதும், ஒப்பந்தத்தின்படி அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது, திருப்பியும் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் மேலும் மேலும் மாற்றங்கள் ஏற்பட்ட பொழுது, பெண்களும் கூட தங்களது பெற்றோர்கள் மற்றும் கணவர்களின் விருப்பத்திற்கு மாறாக இஸ்லாத்தினைத் தழுவ ஆரம்பித்தார்கள். அவ்வாறு இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்ட பெண்கள் முஸ்லிம்களிடம் அடைக்கலம் கோரினார்கள். இந்த நிலையில், பெண்களையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிகளிடம் திருப்பி ஒப்படைக்க இருந்த நேரத்தில் கீழ்க்காணும் இறைவசனத்தை அல்லாஹ் இறக்கி அருளினான் :

ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள்; அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன்; எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள்; ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. (60:10)

இந்த நேரத்தில் மேலும் ஒரு வசனம் இறக்கியருளப்பட்டது. அதன்படி,

மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம்;.

இணைவைப்பில் உள்ள பெண்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளும் வரைக்கும் அவர்களை மணமுடித்துக் கொள்ள வேண்டாம். அதே போல இணைவைப்பாளர்களுக்கு உங்களது பெண்களையும் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்”” என்று அந்த வசனம் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியது.

உமர் (ரலி) அவர்களுக்கு மூன்று மனைவியர் இருந்தனர், அவர்களாவன :

ஸைனப் பின்த் மாஸுன் ஜமீஆ

மலைகா பின்த் ஜாருல் ஹுஸைய், மற்றும்

கரிபா பின்த் அபீ உமைய்யா மக்சூமி

இவர்களில் ஸைனப் பின்த் மாஸுன் ஜமீஆ (ரலி) மட்டுமே இஸ்லாத்தினை ஏற்றிருந்ததோடு, மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்து வந்திருந்தார்கள். மற்ற இரண்டு மனைவியர்களும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளாதிருந்ததோடு, மதினாவிற்கும் அவர்கள் ஹிஜ்ரத் செய்து வரவில்லை. ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்னர், மற்ற இரண்டு மனைவிமார்களையும் உமர் (ரலி) அவர்கள் விவாகரத்துச் செய்து விட்டார்கள். இவர்களும் முறையே, மலைக்கா என்பவர் அபூ ஜஹ்ம் பின் ஹஸீஃபா என்பவரையும், கரிபா அபுபக்கர் (ரலி) அவர்களின் மகனும் இன்னும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளாதவருமான அப்துர் ரஹ்மான் என்பவரையும் மறுமணம் செய்து கொண்டார்கள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்னர், பெண்களிலிருந்து முதன் முதலாக மக்காவிலிருந்து மதீனாவிற்குத் தப்பி வந்து இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார், ஸாஹிபா பின்த அல் ஹாரிஸ். இவரது கணவர் இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை அறிந்த குறைஷிகள் ஸாஹிபா (ரலி) அவர்களை தங்களிடம் திருப்பி அனுப்பி வைக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கோரிய பொழுது, அவ்வாறு திருப்பி அனுப்பி வைக்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மறுத்து விட்டதோடு, நமக்கிடையே உள்ள ஒப்பந்தமானது ஆண்களை மட்டுமே கட்டுப்படுத்தக் கூடியது, பெண்களை அல்ல என்று கூறிவிட்டார்கள். ஸாஹிபா (ரலி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள்.

மதீனாவில் வைத்து, அன்ஸாரிப் பெண்ணான ஆஸியா பின்த் ஸபத் அன்ஸாரி (ரலி) என்பவரை உமர் (ரலி) அவர்கள் மணமுடித்துக் கொண்டார்கள். மணமுடித்துக் கொண்டதன் பின் இவரது பெயரை ஜாமீலா என்று உமர் (ரலி) மாற்றியமைத்துக் கொண்டார்கள். உமர் (ரலி) அவர்கள் இவருடன் கூஃபாவில் வசித்து வந்தார்கள். சில வருடங்களுக்கு, ஜமீலா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் மிகவும் விருப்பத்திற்குரிய மனைவியாகத் திகழ்ந்ததாக அறிவிப்புகள் கூறுகின்றன. சில வருடங்கள் கழித்து இவரை விவாகரத்துச் செய்து விட்ட உமர் (ரலி) அவர்கள், தன்னுடைய இல்லத்தை மதீனாவில் அமைத்துக் கொண்டார்கள். அவரை விவாகரத்துச் செய்ததன் காரணம் என்னவென்பது அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பனீ முஸ்தலக் மீது நடவடிக்கை

கி.பி.628 ல், பனீ முஸ்தலக் கோத்திரத்தார்கள் முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு செய்தி எட்டுகின்றது. முஸ்லிம்களின் மீது பனீ முஸ்தலக் கோத்திரத்தார்கள் தாக்குதலைத் தொடுப்பதற்கு முன்பாகவே அவர்களது முதுகெலும்பை உடைத்து விட வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தீர்மானித்தார்கள்.

எனவே, இந்தப் போரை இறைத்தூதர் (ஸல்) அவர்களே முன்னின்று தலைமையேற்று நடத்தினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமையேற்று நடத்திய அந்தப் படையில், உமர் (ரலி) அவர்களும் இடம் பெற்றிருந்தார்கள். மேலும், இந்தப் படையில் மதீனாவின் முந்தைய தலைவனாக இருந்தவனும், முஸ்லிமாக இருந்து கொண்டே நயவஞ்சக வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனுமான அப்துல்லா இப்னு உபை - யும் இடம் பெற்றிருந்தான்.

இப்பொழுது பனீ முஸ்தலக் கோத்திரத்தார்களை கடல் மார்க்கத்திற்கு மிக அருகில் உள்ள இடமான முரைஸி என்ற இடத்தில் வைத்து முஸ்லிம்கள் சந்தித்தார்கள். இந்தப் போரில் பனீ முஸ்தலக் கோத்திரத்தார்கள் படுதோல்வி அடைந்ததோடு, கடுமையான இழப்புகளையும் சந்தித்தார்கள், முஸ்லிம்களுக்கு கனிசமான அளவில் போர்ப் பொருட்கள் கிடைத்தன, அவற்றில் கைதிகளாகச் சிறை பிடிக்கப்பட்ட ஆண்களும் மற்றும் பெண்களும் அடங்குவர்.

பனீ முஸ்தலக் வெற்றி கொள்ளப்பட்டவுடன், தண்ணீர் துறைப் பகுதியாகப் பார்த்து முஸ்லிம்கள் கூடாரமடித்துத் தங்கினார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்களின் பணியாளரான ஜஹ்ஜா பின் மஸ்ஊத் என்பார் தனது குதிரைக்குத் தண்ணீர் காட்டுவதற்காக அந்தத் தண்ணீர்த் துறைப் பக்கமாக அழைத்துச் சென்றார். அப்பொழுது, இவருக்கும் சினான் பின் வபார் அல் ஜுஹானி என்ற அன்சாரித் தோழருக்குமிடையே சிறு வாய்த் தகராறு ஏற்படுகின்றது. இந்த நிலையில் சினான் தனக்கு ஆதரவாகச் சில அன்ஸாரித் தோழர்களை அழைத்தார், அதே நேரத்தில் ஜஹ்ஜா வோ தனக்கு ஆதரவாக முஹாஜிர்களை அழைத்தார்.

இந்த சம்பவத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த அப்துல்லா இப்னு உபை, முஹாஜிர்களைப் பார்த்து தகாத வார்த்தைகளைப் பேச ஆரம்பித்தான். அவன் கூறினான் :

''முஹாஜிர்கள் நம்முடைய முன்னுரிமைகள் குறித்து விவாதம் செய்கின்றார்கள். நம்முடைய நகரத்திலேயே இருந்து கொண்டு இவர்கள் நம்மை அதிகாரம் செலுத்தப் பார்க்கின்றார்கள். அவர்கள் என்றைக்கும் நமக்கு ஈடாக முடியாது, முந்தைய காலத்து மக்கள் அவர்களைப் பற்றி சும்மாவா சொல்லி வைத்தார்கள், ''நாய்க்கு என்ன தான் உணவளித்தாலும், அது குரைக்கத் தான் செய்யுமென்று”” என்றும் மக்காவின் முஹாஜிர்கள் பற்றி ஏளனமாகக் கூறினான்.

இவன் கூறிய இந்த இழி சொற்களைச் செவியுற்ற அன்ஸாரிச் சிறுவரான ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், நடந்த சம்பவத்தையும் அதில் அப்துல்லா இப்னு உபை கூறிய வார்த்தைகளையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தெரிவித்து விடுகின்றார்கள். அது சமயம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அருகில் உட்கார்ந்திருந்த உமர் (ரலி) அவர்கள் வெகுண்டெழுந்து, ''இறைத்தூதர் (ஸல்) அவர்களே.., எனக்கு உத்தரவு தாருங்கள், அவனது தலையைக் கொய்து வருகின்றேன்”” என்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களோ..,

''உமரே சற்று அமைதி அடையும்.”” அப்துல்லாவைக் கொல்வதற்கு நான் உங்களுக்கு அனுமதி தந்தால், பாருங்கள், முஹம்மது அவரது தோழர்களைக் கொலை செய்கின்றார் என்று மக்கள் கருத மாட்டார்களா? என்று கேட்டார்கள்.

இதனையடுத்து, உடனே மதீனாவை நோக்கி முஸ்லிம்களை பயணப்படுமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரைவுபடுத்தினார்கள். பயணம் புறப்பட்ட அந்த நேரம் நல்ல மதிய வேளையாக இருந்ததோடு, பயணத்திற்கு உகந்த நேரமாகவும் அது இருக்கவில்லை. ஆனால் அனைவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவிற்குக் கட்டுப்பட்டவர்களாக, ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கின்றது, எனவே தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த நேரத்தில் பயணத்தை ஆரம்பித்துள்ளார்கள், அதன் நோக்கத்தை அல்லாஹ்வின் தூதரே அறிவார்கள் என்று மக்கள் தங்களுக்குள் சமாதானம் கூறிக் கொண்டு பயணப்படலானார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சென்று சந்தித்த அப்துல்லா பின் உபை தன் மீது கூறப்படுகின்ற குற்றச்சாட்டுகள் உண்மையல்ல, நான் அவ்வாறு கூறவில்லை என்று கூறினான். இன்னும் அவனுக்கு ஆதரவாகச் சில அன்ஸார்களும் வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், அவர் அவ்வாறு கூறியிருக்க மாட்டார் என்று கூறினார்கள். ஆனால் இது விசயத்தில் அமைதியாக இருப்பதே நல்லது என்று முடிவெடுத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்தக் கருத்தையும் கூறாது அமைதியாக இருந்து விட்டார்கள்.

முஸ்லிம்கள் மதீனாவை அடைந்ததும், மதீனாவெங்கும் இதே பேச்சாகத் தான் இருந்தது. பல கருத்துக்களின் அடிப்படையில் அப்துல்லா இப்னு உபையையே பொதுவாக மக்கள் குற்றஞ்சாட்டினார்கள். இந்தக் குற்றச்சாட்டினைக் கேள்வியுற்ற அப்துல்லா இப்னு உபையுடைய மகன், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து :

''நான் எதனைக் கேள்விப்பட்டேனோ, அதற்காக என்னுடைய தந்தையை நீங்கள் கொல்ல விரும்புவதாக நான் அறிய வருகின்றேன். அதுவே உங்களது நோக்கமாக இருந்தால், அந்த உத்தரவை எனக்குத் தாருங்கள், அவரது தலையை நான் கொய்து வருகின்றேன். என்னைத் தவிர வேறு யாருக்காவது இந்த சந்தர்ப்பத்தை வழங்கி விடுவீர்களோ என்று நான் அச்சப்படுகின்றேன், இன்னும் அந்தக் கொலையாளி மக்களுடன் கலந்து நடமாடிக் கொண்டிருப்பதைப் பார்க்க எனது மனதும் பொறுக்காது, அதன் காரணமாக நான் அவரைக் கொன்று விட்டால், ஒரு இறைநிராகரிப்பாளரைக் கொன்றதற்காக நான் ஒரு இறைநம்பிக்கையாளரைக் கொன்றதாகி விடும், ஆகையால் நான் நரகத்திற்கு போக வேண்டியதாகி விடும்”” என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்த உரையைக் கேட்டவுடன், இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக, ''இஸ்லாத்திற்காக வேண்டி தங்களது தந்தைமார்களைக் கூட அர்ப்பணம் செய்வதற்குத் தயாராக முஸ்லிம்களில் சிலர் இருக்கின்றார்கள்”” உனக்கே எல்லாப் புகழும் யா அல்லாஹ் என்று கூறினார்கள்.

அப்துல்லா இப்னு உபை அவர்களின் மகனாரின் பக்கம் திரும்பிய கருணையின் தாயகம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் :

''உங்களது அர்ப்பணங்களுக்கு நன்றிகள் பல. உங்களது தந்தைக்கு எதிராக நான் எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன்”” என்று உறுதி கூறுகின்றேன் என்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கருணையைப் போற்றி புகழ்ந்தார் அப்துல்லா இப்னு உபையின் மகனார். அவர் அங்கிருந்து நகர்ந்ததும், தனக்கு அருகில் இருந்த உமர் (ரலி) அவர்களைப் பார்த்து :

''உமரே..! இப்பொழுது நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். நீங்கள் அவரைக் கொல்வதற்கு அனுமதி கேட்ட நாளில் நான் உங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கும் பட்சத்தில், இந்த மக்களே அவனுக்கு ஆதரவாகத் திரும்பி இருக்கக் கூடும். இன்றைக்கு பாருங்கள், அவருடைய சொந்த மகனே அவரைக் கொல்வதற்கு முன் வந்திருக்கின்றார்.””

இதனைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள், '' நிச்சயமாக, நீங்கள் அறிவதை நான் அறிய மாட்டேன்””, உங்களது தொலைநோக்குச் சிந்தனை தீர்க்கமானது, இன்னும் அருள்செய்யப்பட்டது”” என்று கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும்

பனீ முஸ்தலக் போர், இன்னுமொரு துரதிருஷ்டமானதொரு சரித்திரச் சம்பவத்தை ஏற்படுத்தியது, அது சில காலங்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களது தோழர்களுக்கும் மிகவும் தர்ம சங்கடமான நிலையைத் தோற்றுவித்தது. ஒவ்வொரு சமயமும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவை விட்டும் வெளிக் கிளம்பும் பொழுதும், போருக்காக வெளிக்கிளம்பும் பொழுதும் அவர்களுடன் அவர்களது துணைவியார் ஒருவர் உடன் செல்வது வழக்கம். அந்த அடிப்படையில், பனீ முஸ்தலக் போரின் பொழுது ஆயிஷா (ரலி) அவர்கள் உடன் வந்தார்கள். பனீ முஸ்தலக் முற்றுகை முடிவடைந்தவுடன், மதீனாவிற்குத் திரும்பி வந்து கொண்டிருக்கும் பொழுது ஒட்டகையின் மீது வைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் அமர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அப்துல்லா உபை யினால் எழுந்த எதிர்பாராத சம்பவம், மற்றும் திடீர் பயணப் புறப்பாடு ஆகிய அனைத்தும் ஏற்கனவே திட்டமிருந்தபடி பயணம் அமையாமல், ஒருவித குழப்பமான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் மதீனாவிற்குச் சற்றுத் தொலைவில் இரவில் கூடாரமடித்து முஸ்லிம்கள் ஓரிடத்தில் தங்கினார்கள். அதிகாலை நேரம் வந்தவுடன் அந்த இடத்தை விட்டும் கிளம்புமாறு மக்களுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஆயிஷா (ரலி) அவர்கள் தனது இயற்கைத் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு சற்றுத் தொலைவான இடத்திற்குச் சென்று வந்தார்கள். அவர்கள் தனது ஒட்டகைக்கு அருகில் வந்ததும், தனது கழுத்தில் இருந்த முத்து மாலை காணாததை அறிந்து கொண்டார்கள். தனது இயற்கைத் தேவையை நிறைவு செய்த இடத்தில் அது விழுந்திருக்கக் கூடும் என நினைத்த ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த முத்து மாலையைத் தேடிக் கொண்டு மீண்டும் அந்த இடத்திற்கு விரைகின்றார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில், அவர்கள் பயணம் செய்து வந்த ஒட்டகத்தில் இருந்த கூடாரம் மூடி இருந்ததன் காரணமாக, அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த கூடாரத்திற்குள் இருக்கின்றார் என நினைத்துக் கொண்டு ஒட்டகத்தை நடத்திக் கொண்டு சென்று விட்டார். முத்து மாலையைத் தேடிக் கொண்டு திரும்பி வந்த ஆயிஷா (ரலி) அவர்கள், தனது ஒட்டகை பயணப்பட்டு விட்டதையும், மக்கள் அனைவரும் சென்று விட்டதையும் அறிந்து, அந்த இடத்திலேயே தனது உடைகளை நன்கு போர்த்திக் கொண்டு தூங்கி விடுகின்றார்கள்.

இந்த நிலையில், தூங்கிக் கொண்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களின் காதுகளில், ''இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”” என்ற சொற்கள் காதில் விழுகின்றன. விரைந்து கண் விழித்துப் பார்த்த ஆயிஷா (ரலி) அவர்கள், அங்கு ஒரு இளைஞர் ஒட்டகத்துடன் நிற்பதைக் காண்கிறார்கள். சஃப்வான் இப்னு முஅத்தல் (ரலி) என்ற அந்த இளைஞர், மக்கள் இடத்தைக் காலி செய்து கொண்டு சென்ற பின்னர், அந்த இடத்தில் ஏதேனும் பொருட்கள் விடப்பட்டு சென்று விட்டனவா என்பதைக் கவனிப்பதற்காக வந்தவர், அந்த இடத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆருயிர்த் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களைக் காண்கிறார்கள். தனக்கு முன்னால் சஃப்வான் இப்னு முஅத்தல் (ரலி) அவர்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்ட ஆயிஷா (ரலி) அவர்கள் தனது உடையால் தன்னை விரைந்து போர்த்திக் கொள்கின்றார்கள். இப்பொழுது சஃப்வான் (ரலி) அவர்கள் தனது ஒட்டகத்தை கீழே அமர வைத்து, அதன் கூடாரத்தில் ஆயிஷா (ரலி) அவர்கள் அமர்ந்ததுடன், அந்த ஒட்டகத்தின் மூக்குக் கயிற்றைப் பிடித்துக் கொண்டவராக தனது பயணத்தைத் தொடர்கின்றார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைச் சென்றடைந்ததன் பின்னர் சில மணி நேரங் கழித்து மதிய வேளையில் சஃப்வான் (ரலி) அவர்களும், அவர்களுடன் ஒட்டகத்தில் பயணம் செய்த ஆயிஷா (ரலி) அவர்களும் மதீனாவை அடைகின்றார்கள். இந்தச் சம்பவம் அப்துல்லா இப்னு உபைக்கும், இன்னும் சில நயவஞ்சகர்களுக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எதிராக கட்டுக் கதைகளைப் புனைந்து விடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி விட்டது. இந்தச் செய்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களை மிகவும் பாதித்தது, ஆயிஷா (ரலி) அவர்களை விவாகரத்துச் செய்து விடுவதற்காக வேண்டி, தனக்கு நெருங்கிய தோழர்களிடம் ஆலோசனையும் நடத்தினார்கள். அலி (ரலி) அவர்களோ.., ஆயிஷா (ரலி) அவர்களை விவாகரத்துச் செய்து விடுமாறு ஆலோசனை கூறுகின்றார்கள்.

ஆனால் உமர் (ரலி) அவர்களோ.., இறைத்தூதர் (ஸல்) அவர்களே.., இந்த நயவஞ்சகர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா, இவர்கள் பொய்யர்கள் என்றார்கள். இது விசயத்தில் இறைவன் நல்ல தீர்ப்பு வழங்குவான். அவர்கள் விசயத்தில் சந்தேக மேகங்களைச் சூழ விட மாட்டான், பேதையான அந்தப் பெண்ணின் மீதான களங்கத்தைப் பற்றிய தீர்ப்பை அவனே வழங்குவான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

பின்னர், உமர் (ரலி) அவர்கள் எதிர்பார்த்தது போலவே இறைவன் புறத்திலிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹி - இறைச் செய்தி வெளிப்பாடு வந்திறங்கியது, ஆயிஷா (ரலி) அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பாகியது. இந்தப் பிரச்னை இவ்வாறு தீர்க்கப்பட்டவுடன், குழப்பான அந்த நேரத்தில் உறுதுணையாக இருந்தமைக்காக உமர் (ரலி) அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நன்றி கூறினார்கள். இந்தச் சம்பவத்தை எப்பொழுதும் அசை போட்டுப் பார்க்கும் ஆயிஷா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவிக்கக் கூடியவர்களாக இருந்ததோடு, உமர் (ரலி) அவர்கள் இறந்து விட்டபின், தனது அறையில்.., இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கு மனமுவந்து அனுமதி வழங்கினார்கள்.

பெண்களுக்கான ஹிஜாப்

ஆரம்ப கால மதீனாவில் பெண்கள் ஹிஜாப் அணியும் பழக்கமில்லாதவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஆண்களுக்கு மத்தியில் சென்று வர வந்தார்கள். மதீனாவில் வாழ்ந்த இறைநம்பிக்கையாளர்கள் நிறைந்த இறைநம்பிக்கை கொண்டவர்களாதலால், பெண்கள் விசயத்தில் மிகவும் கவனமாக நடந்து கொண்டார்கள். இன்னும் முஸ்லிம்களுடன் வசித்து வந்த சில நயவஞ்சகர்கள் மற்றும் யூதர்கள் மூலமாக பெண்கள் விசயத்தில் சில சங்கடமான நிகழ்வுகள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பிருந்தது. இந்த நயவஞ்சகர்கள் மற்றும் யூதர்கள் விசயத்தில் அவர்கள் பெண்களிடம் ஏதாவது தகாத செயல்களைக் காட்டி இறைவனும் அதனை தடுக்காதிருந்தால், அது முஸ்லிம் சமூகத்தில் மிகப் பெரும் பாதகமான விளைவை ஏற்படுத்தி விடும் என்று உமர் (ரலி) அவர்கள் கருதினார்கள்.

இந்தக் கருத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துக் கூறிய உமர் (ரலி) அவர்கள், பெண்கள் தங்கள் இல்லங்களிலிலேயே இருந்து கொள்வது நல்லது என்றார்கள். இன்னும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாது, வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்றும், அவர்களது கண்ணியம் என்பது முஸ்லிம் சமூகத்திற்கு மிகப் பெரியதொரு மதிப்பு வாய்ந்தது என்றும் கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்களின் இந்த ஆலோசனையைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் ஒருவரான ஸைனப் (ரலி) அவர்கள் :

'உமரே..! நீங்கள் இறைத்தூதருடைய உள்வீட்டுப் பிரச்னையில் தலையிடுகின்றீர்கள். இறைச் செய்தி (வஹி) எங்களது வீட்டிற்கு வருகின்றது, நீங்களோ உங்களது சொந்தக் கருத்தினை இங்கு கொண்டு வருகின்றீர்களே..”” என்றார்கள்.

உமர் (ரலி) அவர்களின் கருத்தினை ஆதரித்து, அவர்களை தட்டிக் கொடுத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இது விஷயமாக இறைச் செய்தி வரட்டும் முடிவெடுப்போம் என்றார்கள்.

இது விஷயமாக இறைச்செய்தியும் இறங்கியது. அந்த இறைவசனமாவது :

நபியே! உம்முடைய மனைவிகளிடம்; ''நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன். ''ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலியை நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்”” என்றும் கூறுவீராக! (33:28-29)

இன்னுமொரு இறைவசனத்தில்,

நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்! அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம். (33:30-31)

இன்னுமொரு இறைவசனத்தில்,

நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல. நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கி விடவே அல்லாஹ் நாடுகிறான். (33:32-33)

மேற்கண்ட இறைவசனங்களின் வெளிப்பாடானது, உமர் (ரலி)அவர்களின் கருத்தினை ஆதரித்து அதனை உறுதிப்படுத்துவது போலமைந்து விட்டது. மேற்கண்ட வசனங்கள் அருளப்பட்டதன் பின்னர், ''உமரே நீங்கள் எதனை விரும்பினீர்களோ, அதனை அல்லாஹ்வும் உங்கள் விசயத்தில் விரும்பி விட்டான், என்று உமர் (ரலி) அவர்களைப் பார்த்துத் திரும்பிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள், ''உமரே..! மீண்டும் ஒருமுறை உமது நாவின் வழியாக அல்லாஹ் பேசியுள்ளான்”” என்று கூறினார்கள்.



மக்காவின் வெற்றிக்கு முன் நடைபெற்ற போர்கள்

துர்பா யுத்தம்

மக்காவிலிருந்து இரண்டு நாள் பயண தொலைவில் அமைந்திருந்த துர்பா என்ற பகுதியில் பனூ கவ்ஸான் என்ற கோத்திரத்தார்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான பல நடவடிக்கைகளில் பங்கு கொண்டிருந்தார்கள். எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த கோத்திரத்தவர்களுக்கு எதிராக ஒரு நடவடிக்கை அவசியம் என்று கருதி, கி.பி.629 ல் ஒரு போர் நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.

பனூ கவ்ஸான் களுக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு உமர் (ரலி) அவர்களை தலைமைப் பொறுப்பேற்க வைத்து, அவரது தலைமையில் ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். போர் நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர், அவர்களை இஸ்லாத்தின்பால் அழையுங்கள், அவர்கள் அதற்கு மதிப்பளித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் சரி, இல்லை என்றால் உங்களது வலிமையைப் பயன்படுத்தி, அவர்களை அவர்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றி விடுங்கள், துர்பாவினை விட்டும் அவர்களை விரட்டி அடியுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்கள்.

இந்த நடவடிக்கைக்கு முப்பது பேர் கொண்ட படை தயாரானது. இவர்களுக்கு வழிகாட்டியாக பனூ ஹிலால் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டார், அவர் துர்பா சமவெளிக்குச் செல்லக் கூடிய யாரும் எளிதில் கண்டு பிடித்து விடாதபடி, மாற்றுப் பாதை வழியே அழைத்துச் சென்றார்.

முஸ்லிம்களின் படை துர்பா பகுதியை நோக்கி வருகின்றது என்பதனை எப்படியோ கேள்விப்பட்டு விட்ட பனூ கவ்ஸான்கள், தங்களது கால்நடைகளை ஓட்டிக் கொண்டும் தங்களது இருப்பிடத்தை காலி செய்து விட்டு வெளியேறிச் சென்று விட்டார்கள். அந்த இடத்திலேயே முஸ்லிம் படைகள் சிறிது நாட்கள் தங்கினார்கள். அதே நேரத்தில் பனூ கவ்ஸான்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு வருவதற்கு உளவுப்படையும் பல்வேறு பாகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களது இருப்பிடம் பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை, இன்னும் மக்காவிற்கு மிக அருகில் இருந்து கொண்டு முஸ்லிம்களுக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த மக்களை, எந்தவித பலப்பிரயோகமும் இல்லாமல் வெற்றி ஈட்டப்பட்டது, இதன் பின்னர் முஸ்லிம் படைகள் மதீனா திரும்ப முடிவெடுத்தார்கள்.

அவர்களது படை மதீனாவிற்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், மதீனாவிற்கும் சற்று 6 மைல் தொலைவில் ஜியல்ஜஸா என்ற இடத்தை நெருங்கிக் கொண்டிருந்த பொழுது வழிகாட்டியாக வந்த பனூ ஹிலால் கூறினார் :

பனூ கவ்ஸான் களுக்கு எதிரான நடவடிக்கையில் உங்களுக்கு எந்த கனீமத்துப் பொருட்களும் கிடைக்கவில்லை, மதீனாவிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஏதாவது ஆதாயமாக கனீமத் பொருட்கள் வேண்டுமெனில், இதே அருகில் இருக்கும் பனூ குஸாம் ஐத் தாக்கினால் உங்களுக்கு கனீமத்துப் பொருட்கள் கிடைக்கலாம். அவர்களை எதிர்பாராதவிதமாக தாக்கும் விதமாக, அதற்கான பாதையையும் நான் உங்களுக்குக் காட்டுகின்றேன் என்றார். அவர்கள் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், அவர்களிடம் நல்ல செல்வ வளங்கள் உள்ளன,அதுவே உங்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்றார்.

இதனைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னை பனூ கவஸான் கோத்திரத்தார் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே அனுப்பி வைத்தார்கள். நம்முடைய நோக்கம் இஸ்லாம் தானே ஒழிய, உலக ஆதாயங்கள் அல்லவே என்றார்கள். இன்னும் வேறு எந்த கோத்திரத்தார்களையும் தாக்குவதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதி வழங்கியிருக்கவில்லை, எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அனுமதி இல்லாத நிலையில், போர்ப் பொருட்களுக்கு ஆசைப்பட்டு நான் தாக்குதல் தொடுக்க அச்சப்படுகின்றேன் என்றார்கள். மதீனாவிற்குத் திரும்பிய பின்பு, நடந்த விபரங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். இதனைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ''உமரே..! நீங்கள் நல்லதையே செய்தீர்கள், அவரது சொல்படி நீங்கள் நடந்திருப்பீர்கள் என்றால் நான் சந்தோசப்பட்டிருக்க மாட்டேன்”” என்றார்கள்.



கைபர் யுத்தம்

மதீனாவிலிருந்து யூதர்கள் விரட்டியடிக்கப்பட்டதன் பின்னர், அவர்கள் கைபர் என்ற இடத்தில் தங்கி வரலானார்கள். யூதர்கள் எப்பொழுதும் சூழ்ச்சி செய்வதிலும், வஞ்சகமாக நடப்பதிலும் வல்லவர்கள், இன்னும் முஸ்லிம்கள் விஷயத்தில் அவர்கள் எப்பொழுதும் மூக்கை நுழைத்த வண்ணமே இருப்பவர்கள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையின்படி, முஸ்லிம்களுக்கும் மக்கத்துக் குறைஷிகளுக்குமிடையே ஒரு பத்து ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று உடன்பாடாகியிருந்தது. எனவே, வெளிப்படையாக குறைஷிகள் முஸ்லிம்களுக்கு எதிராக யூதர்களுக்கு உதவ இயலாது. இதன் காரணமாக, யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நேரடி நடவடிக்கையில் இறங்க முடியாது போனதன் காரணமாக, அவர்கள் தந்திரமாக இன்னொரு கூட்டணியை முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கினார்கள்.

யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்து வருவதை அறிந்துகொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், கி.பி.629 ல் யூதர்களுக்கு எதிராக கைபரை நோக்கி, 1400 தோழர்களுடன் புறப்பட்டார்கள். முஸ்லிம்கள் படையுடன் வருவதை அறிந்துகொண்ட யூதர்கள், தங்களது கோட்டைகளைத் தாழிட்டு விட்டு கோட்டைக்குள் ஒழிந்து கொண்டார்கள். இந்தக் கோட்டை மிகவும் உறுதி வாய்ந்த மதில் சுவர்களால் கட்டப்பட்டிருந்தது.

நீண்ட நாள் முற்றுகையைத் தாக்குப் பிடிப்பதற்குத் தேவையான உணவுகளும், இன்னும் ஆயுதங்களும் கூட அந்தக் கோட்டைக்குள் இருந்தன. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்கு அழைப்புக் கொடுத்தார்கள். அந்த அழைப்பை அவர்கள் உதாசினம் செய்தார்கள். அதன் பின் அவர்களுக்கு எதிராக யுத்தத்தைத் தொடங்குமாறு இறைத்தூதர் (ஸல்)அவர்கள் தனது தோழர்களைப் பணித்தார்கள்.

முதல் நாள் அன்று, அபுபக்கர் (ரலி) அவர்களது தலைமையின் கீழ் முதல் தாக்குதல் தொடுக்கப்பட்டது. யூதர்கள் தங்கள் கோட்டைகளுக்கு உள்ளிருந்து கொண்டார்களே தவிர, முஸ்லிம்களை எதிர்த்து எதிர் தாக்குதல் தொடுக்க முன்வரவில்லை.

இரண்டாவது நாள், உமர் (ரலி)அவர்களின் தலைமையில் தாக்குதல் தொடுக்கப்பட்டது, அப்பொழுதும் அவர்கள் எதிர்தாக்குதலில் ஈடுபடவில்லை, கோட்டைகளுக்குள் இருந்து கொண்டார்கள்.

மூன்றாவது நாள், அலி (ரலி) அவர்களின் தலைமையில் தாக்குதல் தொடுக்கப்பட்டது, யூதர்கள் தங்களது கோட்டையை விட்டும் வெளியே வந்தார்கள், போர் ஆரம்பமானது. நேருக்கு நேர் நடந்த யுத்தத்தில், யூதர்கள் வெற்றி கொள்ளப்பட்டார்கள்.

இறுதியில், இருவருக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், முஸ்லிம்களுக்கு ஜிஸ்யா வரி கட்டுவது என்றும், நில விளைச்சலில் ஒரு பாதியை முஸ்லிம்களுக்கு வரியாகத் தந்து விடுவது என்றும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

கைபர் போர் பல்வேறு விதங்களில் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமைந்தது. யூதர்கள் இப்பொழுது முஸ்லிம்களின் ஆட்சிப் பகுதியில் முஸ்லிம்களுக்குக் கட்டுப்பட்டு வாழக் கூடியவர்களாக ஆனார்கள். இன்னும் குறைஷிகள் யூதர்களின் ஆதரவை இழந்து போனார்கள், இன்னும் மக்காவின் வெற்றிக்கு கைபர் யுத்தம் தான் அடிப்படையாகவும் அமைந்தது.

கைபர் ல் முஸ்லிம்கள் தங்கி இருந்த பொழுது, ஸைனப் பின்த் ஹாரித் என்ற யூதப் பெண்மணி இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், அவரது தோழர்களையும் விருந்துக்கு அழைத்திருந்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் அபுபக்கர் (ரலி) அவர்களும், அவர்களை அடுத்து உமர் (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள்.

விருந்தின் பொழுது பரிமாறப்பட்டதொரு, இறைச்சித் துண்டை எடுத்து கடித்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதனைத் தூக்கி எறிந்து விட்டு, அதில் விஷம் தடவப்பட்டிருக்கின்றது என்று கூறி, அதை உண்ண வேண்டாமென்று தனது தோழர்களையும் தடுத்து விட்டார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் அந்த இறைச்சியை வாயில் வைக்காமல், அந்த நேரத்தில் வாய்க்கு சற்று தொலைவிலேயே வைத்திருந்து, தூக்கி எறிந்து விட்டார்கள். ஆனால் பிஷர் பின் ப்ரா (ரலி) என்ற தோழர், அந்த இறைச்சியை உண்டதன் காரணமாக, சிறிது நேரத்தில் மரணத்தைத் தழுவி விட்டார்.

விருந்து குழப்பத்தில் முடிந்தது. ஸைனப் என்ற அந்த யூதப் பெண்மணி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாள், அவள் தனது தவறை ஒப்புக் கொண்டாள். விஷம் தடவப்பட்ட இறைச்சியை உண்பவர் இறைத்தூதராக இருக்கும்பட்சத்தில், அது அவருக்குத் தெரிந்து விடும், அவர் இறைத்தூதராக இல்லாதபட்சத்தில், அவர் இந்த உலகத்தை விட்டே சென்று விடுவார் என்று நினைத்து, வந்திருப்பது இறைத்தூதர் தானா என்பதைச் சோதித்துப் பார்க்கவே அதில் விஷத்தைத் தடவிப் பரிசோதித்தேன் என்றாள்.

இறுதியில், அவள் மன்னிக்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவி விட்டாள் என்று ஒரு அறிவிப்பும், அவள் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று இன்னொரு அறிவிப்பும் கூறுகின்றன.

உமர் (ரலி) அவர்கள் வாயிலாக, இந்தப் போர் குறித்ததொரு அறிவிப்பில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் தங்களுக்குள் இறந்த தோழர்களைப் பற்றி, இன்னார் இன்னார் என்று அவரது பெயரைச் சொல்லி, இவர் இறைவழியில் உயிர் துறந்த தியாகி.., என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, ஒரு தோழர் ஒரு தோழரது பெயரைச் சொல்லி, ''இவர்.., தியாகி”” என்றார். இதனைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ''அவ்வாறல்ல, அவர் நேர்மையற்ற முறையில் ஒரு ஆடையை எடுத்துக் கொண்டதன் மூலம் அவரை நான் அந்த ஆடையுடன் நரகத்தில் பார்த்திருக்கின்றேன்”” என்றார்கள். பின்னர், ''இப்னு கத்தாபே..! அந்த மக்களிடம் சென்று, 'இறைநம்பிக்கையாளர்கள் மட்டுமே சுவனம் செல்வார்கள்” என்று மூன்று முறை பிரகடனப்படுத்துவீர்களாக..!”” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களது உத்தரவுக்குக் கட்டுப்பட்ட உமர் (ரலி) அவர்கள், அந்த மக்களிடம் சென்று ''இறைநம்பிக்கையாளர்கள் மட்டுமே சுவனம் செல்;வார்கள்”” என்று மூன்று முறை அறிவித்தார்கள்.



மக்கா, தபூக்

மக்கா வெற்றி

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் அடிப்படையில், அரபுக்குலத்தவர்கள் ஒன்று முஸ்லிம்களுக்கு சார்பானவர்களாக அல்லது குறைஷிகளுக்குச் சார்பானவர்களாக மட்டுமே இருக்க முடியும். இதனடிப்படையில் பனூ பக்கர் கோத்திரத்தார் குறைஷிகளின் பக்கமும், பனூ கவஸான் கோத்திரத்தார் முஸ்லிம்களின் பக்கமும் இருந்தனர்.

ஆனால் இந்த உடன்படிக்கைக்குப் பாதகமான முறையில், பனூ பக்கர் கோத்திரத்தார் பனூ கவஸான் கோத்திரத்தார்களைத் தாக்க ஆரம்பித்ததோடு மட்டுமல்லாது, கஃபாவினுள் அடைக்கலம் புகுந்த அந்தக் கோத்திரத்தவர்களையும் கூட பிடித்து, கொலை செய்து விட்டார்கள்.

இந்தச் சூழ்நிலையில், ஹுதைபிய்யா உடன்படிக்கையின் அடிப்படையில் பனூ கவஸான்கள் முஸ்லிம்களிடம் உதவ கோரினார்கள். இந்த விவகாரத்தில் உடனே தலையிடாத நிலையில், குறைஷிகளின் மீது முஸ்லிம்கள் போர் நடவடிக்கையைத் தவிர்க்க வேண்டும் எனும்பட்சத்தில், குறைஷிகள் மூன்று நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு அதனை நிறைவேற்றியாக வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்கள். அதாவது,

    இறந்த பனூ கவஸான்களின் குடும்பத்தவர்களுக்கு இரத்த இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்

    பனூ பக்கர் கோத்திரத்தவர்களுடைய உறவினைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். அல்லது (மேற்கண்ட இரண்டையும் நிறைவேற்றாதபட்சத்தில்)

    ஹுதைபிய்யா உடன்படிக்கை செல்லத்தகாததாக ஆகி விடும்

குறைஷிகளுக்கே உரிய அந்த வன்மம் தலைக்கேற, எங்களால் இரத்த இழப்பீட்டுத் தொகையையும் வழங்க முடியாது, பனூ பக்கரின் உறவையும் துண்டித்துக் கொள்ள இயலாது, இன்னும் ஹுதைபிய்யா உடன்படிக்கை செல்லத்தகாததாக ஆகி விட்டதாகவே நான் கருதிக் கொள்கின்றோம் என்றார்கள்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை செல்லத்தகாததாக ஆகி விட்டது, குறைஷிகளே முன்வந்து அதனைச் செய்திருக்கின்றார்கள் என்பதில் முஸ்லிம்கள் சந்தோஷப்பட்டார்கள், அதில் குறிப்பாக உமர் (ரலி) அவர்கள் மிகவும் சந்தோஷமடைந்தார்கள்.

ஆனால், நான் விவேகமற்ற முறையில் ஹுதைபிய்யா உடன்படிக்கையை முறித்துக் கொண்டு விட்டோமே என்று விரைவிலேயே குறைஷிகள் உணரத்தலைப்பட்டார்கள். மக்கத்துக் குறைஷிகளின் தலைவராக இருந்த அபுசுஃப்யான், மதீனாவிற்கு வந்து மீண்டும் அந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்காக வந்தார். இன்னும் தனது மகளும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவியுமான உம்மு ஹபீபா (ரலி) யிடம்  சென்று தனக்காகப் பரிந்து பேசும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள். இன்னும் அபுபக்கர் (ரலி) மற்றும் அலி (ரலி) அவர்களையும் சந்தித்தார், ஆனால் இவரது கோரிக்கையை அவர்கள் செவி மடுக்கக் கூடத் தயாராக இல்லை. பின்னர் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தார், உமரோ.., நிலைமையின் விபரிதத்தை அவருக்குப் புரிய வைத்து, இனி குறைஷிகள் இஸ்லாத்தைத் தழுவுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறி விட்டார். சமாதானத்தை வேண்டி வந்த அபூசுஃபயான் அவர்களுக்கு அதற்காக எந்தவழியும் கிடைக்காததால், வந்த வேலை நிறைவு பெறாமல் பயனற்றவராக மக்காவை நோக்கித் திரும்பினார்.

அபுசுஃபயான் மதீனாவை விட்டும் கிளம்பி விட்டபின், படைகளைத் தயாரிக்குமாறு தனது தோழர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். தனது மகளாரான அன்னை ஹஃஸா (ரலி) அவர்களைக் காண வந்த உமர் (ரலி) அவர்கள், அன்னையவர்கள் சில பொருட்களை தயார் செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்தப் பொருட்களை தயார் செய்யும்படி உங்களுக்கு உத்தர விட்டார்களா என்றார்கள், அன்னையவர்களும் ஆம் என்றார்கள். அதன் பின்னர் உமர் (ரலி) அவர்களைத் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று, நாம் இப்பொழுது மக்காவின் மீது படை நடத்தப் போகின்றோம், என்னுடன் நீங்களும் வருகின்றீர்கள் என்று கூறினார்கள்.

பத்தாயிரம் பேர் கொண்ட வலிமை மிக்க படையொன்று மக்காவை நோக்கி, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் கிளம்பியது. மக்காவை அண்மித்த முஸ்லிம்கள், தங்களது படையை மர் அல் ஸஹ்ரான் என்ற இடத்தில் சிறிது தங்கினார்கள்.

இங்கு வைத்து, அப்பாஸ் (ரலி) அவர்களை மக்காவிற்குத் தூதராக அனுப்பி வைத்தார்கள். அபூசுஃப்யான் அவர்களைச் சென்று சந்தித்த அப்பாஸ் (ரலி) அவர்கள், இப்பொழுது குறைஷிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சென்று சந்தித்து, அவர்களது கருணையைப் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள். அபூசுஃப்யான் அவர்களும் இதற்குச் சம்மதித்து, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்பதைப் பார்ப்போம் என்று கூறினார்கள்.

இப்பொழுது அபூசுஃப்யான் அவர்களும், அப்பாஸ் (ரலி) அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இருப்பிடத்திற்குள் நுழைவதைக் கண்ணுற்ற உமர் (ரலி) அவர்கள், விரைந்து அங்கே சென்று, இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பார்த்து, ''இஸ்லாத்தின் இந்த எதிரியின் தலையைத் துண்டிக்க எனக்கு அனுமதி தாருங்கள்”” என்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், உமரே.., சற்றுப் பொறுத்துப் பாருங்கள்”” என்றார்கள்.

அந்த இடத்தில் வைத்து அபுசுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அதன் காரணமாக குறைஷிகளின் எதிர்ப்பு வலுவிழந்து ஒரு முடிவுக்கு வந்து விட்டது.

அதனை அடுத்த தினம், முஸ்லிகள் வெற்றி முகத்துடன் மக்காவிற்குள் நுழைந்தார்கள். அவ்வாறு அணிவகுத்து மக்காவிற்குள் பிரவேசித்த ஒரு அணிக்கு உமர் (ரலி) அவர்கள் தலைமையேற்று நடத்திச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்காவின் வெற்றி என்பது சத்தியத்திற்குக் கிடைத்த வெற்றியாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்பாக இதே நகரம் முஸ்லிம்களைப் படுகொலைக்கு உள்ளாக்கிய நகரமாக இருந்தது, இப்பொழுது முஸ்லிம்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானதாக மாறி விட்டது.

மக்கா வெற்றிக்குப் பின்னர், யார் யாரெல்லாம் இஸ்லாத்திற்கு எதிரிகளாக இருந்து சொல்லொண்ணா துன்பங்களை முஸ்லிம்களின் மீது வாறி வழங்கினார்களோ, அவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பை வழங்கினார்கள்

இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களுடைய தோழர்கள் கஃபாவிற்கு பிரவேசித்தார்கள். கஃபாவில் இருந்த சிலைகள் அகற்றப்பட்டு உடைத்து நொறுக்கப்பட்டன. அதன் பின்னர் திருமறையிலிருந்து கீழ்கண்ட வசனத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓத ஆரம்பித்தார்கள் :

''சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது, நிச்சயமாக அசத்தியம் அழியக் கூடியதே”” என்றார்கள்.

இப்பொழுது மக்கள் அனைவரும் கஃபாவில் ஒன்று கூடினார்கள், ஒன்று கூடிய மக்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட உரையை நிகழ்த்தினார்கள் :

''வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவனுக்கு இணை துணை எதுவுமில்லை. அல்லாஹ்.., அவனது அடியாருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிக் கொடுத்தான், அதனை நிறைவேற்ற உதவினான், இன்னும் அதன் மூலம் அனைத்து அசத்தியங்களையும் வேரறுக்க உதவினான். நினைவில் கொள்ளுங்கள், எல்லாவிதமான முன்னுரிமைகளும், அது இரத்த இழப்பிடாகவோ அல்லது சொத்து சார்ந்ததாகவோ இருப்பினும் அது அழிக்கப்படுகின்றது, இன்னும் கஃபா வின் உரிமை மற்றும் ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுதல் இவற்றைத் தவிர. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், எவர் கொல்லப்படுகின்றரோ அவருக்குப் பிரதியீடாக இனி நூறு ஒட்டகங்களை இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட வேண்டும். குறைஷிகளே.., அறியாமைக்காலத்தில் நீங்கள் கொண்டிருந்த பெருமைகள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து விட்டான், இன்னும் உங்களது மூதாதையர்களது குலப் பெருமையும் கூட, ஏனென்றால் அனைத்து மனிதர்களும் ஆதம் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களாவார்கள், இன்னும் ஆதம் (அலை) அவர்கள் களிமண்ணால் படைக்கப்பட்டவராவார்கள்.”” பின்னர் மக்களின் பக்கம் திரும்பிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

''ஓ குறைஷிகளே.., உங்களது விவகாரத்தைப் பொறுத்தவரை நான் உங்களிடம் எந்த மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்? ..”” என்றார்கள்.

கருணை.., காட்டுங்கள், இறைவனுடைய தூதரவர்களே என்று மறுமொழி பகர்ந்தார்கள். நாங்கள் உங்களிடம் நல்லதைத் தவிர வேறெதனையும் எதிர்ப்பார்க்கவில்லை என்றார்கள், குறைஷிகள்.

அதன் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு அறிவிப்புச் செய்தார்கள் :

''யூசுப் (அலை) அவர்கள் தனது சகோதரர்களிடம் கூறிய அதே வார்த்தைகளை உங்களிடம் நான் கூறுகின்றேன். இன்றைய தினத்தில் உங்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை, உங்கள் வழியில் நீங்கள் செல்லலாம், நீங்கள் சுந்திரமானவர்கள்”” என்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பு மிகுந்த உற்சாகத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உமர் (ரலி) அவர்களின் உதவியுடன் ஸஃபா குன்றின் மீது ஏறிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளும் மக்களிடமிருந்து வாக்குறுதி பெற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்திற்குள் நுழைந்தார்கள். இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளும் ஆண்களின் வரிசை முடிந்து போன பின், உமர் (ரலி) அவர்களை அழைத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்களிடம் வாக்குறுதி வாங்கும் பொறுப்பை அன்னாரிடம் வழங்கினார்கள். மக்காவில் வாழ்ந்த அனைத்துப் பெண்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றோம் என்று வாக்குறுதி வழங்குவதற்குப் பதிலாக, உமர் (ரலி) அவர்களிடம் வாக்குறுதி தந்தார்கள்.

ஹுனைன் மற்றும் தாயிஃப் யுத்தம்

மக்காவின் வெற்றிக்குப் பிறகு, மக்காவினை அடுத்து வாழ்ந்த கோத்திரத்தவர்களான ஹவாஸின் மற்றும் ஸாஜெப் ஆகியோர்களுக்கு ஒன்று இஸ்லாத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் அல்லது போரை எதிர்கொள்ளுங்கள் என்ற இரண்டு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. அவர்கள் போரையே விரும்பினார்கள், மேற்கண்ட இரண்டு கோத்திரத்தவர்களுடன் இன்னும் சில கோத்திரத்தவர்கள் இணைந்து கெண்டு முஸ்லிம்களுக்கு எதிராகத் திரண்டார்கள். இந்தக் கூட்டுப் படைக்கு போர்க் குணம் படைத்தவரான மாலிக் பின் அவ்ஃப் என்பவர் தலைமை தாங்கினார்.

எதிரிகளின் நோக்கத்தை அறிந்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவர்களின் நோக்கத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்கள். கி.பி.630 ஜனவரி மாதத்தின் ஒரு குளிர்நாளில் மக்காவிலிருந்து முஸ்லிம்கள் படைகள் எதிரிகளைக் களம் காண இறங்கினார்கள். இந்தப் படையில் 12 ஆயிரம் முஸ்லிம் படைவீரர்கள் இருந்ததோடு, இவர்கள் அனைவரும் முழு ஆயுதத்தரிப்பில் இருந்தார்கள். இவர்களில் 10 ஆயிரம் பேர் மக்காவின் வெற்றியின் பொழுது மதீனாவிலிருந்த வந்தவர்களும், மீதி இரண்டாயிரம் பேர்கள் மக்காவில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களும் அடங்குவர்.

முஸ்லிம்களின் படைகள் ஹுனைன் என்ற பள்ளாத்தாக்கு வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த பொழுது, முஸ்லிம் வில் வித்தை அணியிடம் காணப்பட்ட சிறு கவனஈனத்தைப் பயன்படுத்திக் கொண்ட எதிரிகள், முஸ்லிம்களின் மீது வில் மழை பொழிய ஆரம்பித்தனர். இந்தத் திடீத் தாக்குதலை எதிர்ப்பாக்காத முஸ்லிம் படையினர் சற்று கலவரமடைய ஆரம்பித்தார்கள். தாக்குதலிலிருந்த தப்பித்துக் கொள்ளத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அங்குமிங்கும் ஓட ஆரம்பித்ததும், அங்கே சற்று குழப்பம் நிலவியது. ஒட்டகங்களும், குதிரைகளும், மனிதர்களும் திசைக்கொருவராய் ஓட ஆரம்பித்திருந்தார்கள்.

அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் குழப்பத்திற்கு இடங்கொடாமல் அசையாது, உறுதியாக நின்றார்கள். அப்பொழுது அவர்களைச் சுற்றிலும் ஒன்பது தோழர்கள் நின்று கொண்டிருந்தார்கள், அவர்களில் உமர் (ரலி) அவர்களும் அடங்குவார்கள். ஏனைய தோழர்கள் அங்கிருந்து ஓட ஆரம்பித்திருந்தார்கள். அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவின் போரில் அப்பாஸ் (ரலி) அவர்கள் தனது உயர்ந்த குரல் வளத்தைக் கொண்டு, ஓடிக் கொண்டிருக்கும் மக்களைப் பார்த்து, ''ஓ.. முஸ்லிம்களே..! அல்லாஹ்வின் தூதரிடத்திலே வாருங்கள்”” என்று கூவினார்கள்.

இதனைக் கேட்ட முஸ்லிம் வீரர்கள், இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றிலும் குழும ஆரம்பித்தார்கள். முஸ்லிம்கள் போதுமான அளவில் கூடிய பின்னர், எதிரிகளை நோக்கித் தாக்குதல் தொடுக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அதனை அடுத்து நேருக்கு நேர் யுத்தம் தொடங்கியது, எதிரிகள் வேரறுக்கப்பட்டதுடன், அவர்கள் தங்கள் இருப்பிடமான அவ்தாஸை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள்.

அப்பொழுது ஹுனைன் ஓடையைப் பாதுகாப்பதற்காக ஒரு பாதுகாப்பு வீரர்களைக் கொண்ட அரணை நியமித்ததன் பின்னர், ஏனைய வீரர்களை அவ்தாஸ் நோக்கிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். அவ்தாஸ் என்ற இடத்தில் நடந்த அந்தப் போரில், முஸ்லிம்களை எதிர்த்து நிற்க இயலாமல் எதிரிகள் தோற்றனர். அவர்கள் தங்களது கூடாரங்களைக் காலி செய்து கொண்டு, தாயிஃப் நகரத்திற்குச் சென்று விட்டனர்.

அவ்தாஸ் லிருந்து முஸ்லிம்கள் தாயிப்பிற்கு அவர்களை விரட்டிச் சென்றார்கள். தாயிஃப் கோட்டைக்குள் ஒழிந்து கொண்ட அவர்கள், வெளியே வர மறுத்தார்கள். முஸ்லிம்கள் கவன் கற்களைப் பயன்படுத்தி கோட்டைக்குள் எறிந்த பொழுதும் எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை. இன்னும் முஸ்லிம்கள் செய்த சில யுத்த தந்திரங்களும் பலனளிக்கவில்லை. இரண்டு வாரங்களாக முற்றுகை நீடித்தது, கோட்டை முஸ்லிம்களின் கைவசம் வீழ்ந்ததாகத் தெரியவில்லை. அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம் இனி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசனை செய்த பொழுது, உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், முற்றுகையை விலக்கிக் கொள்வோம், அந்தக் கோட்டையை நம் கைவசம் கொண்டு வருவதற்கு இறைவன் நமக்கு நல்லதொரு வழியை ஏற்படுத்துவான் என்று ஆலோசனை கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்களது ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. கி.பி.630 பிப்ரவரி மாதத்தில் கோட்டையின் மீதான முற்றுகை கைவிடப்பட்டது, இன்னும் முஸ்லிம்கள் மக்காவிற்குத் திரும்பினார்கள். சில நாட்கள் கழிந்தது, மாலிக் பின் அவ்ஃப் என்பவர் அவராகவே மக்காவிற்கு வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிமானார். இதன் மூலம், இறைவனே அவர்களைச் சரணடைய வைத்தது மட்டுமல்லாது, அவர்களை இஸ்லாத்தையும் ஏற்க வைத்தான்.

தபூக் யுத்தம்

கி.பி.630 ல் சிரியாவின் எல்லையோரத்தில் அமைந்த தபூக் என்ற பகுதிக்கு படையெடுத்துச் செல்ல வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். அந்தப் படையெடுப்புக் தேவையான பொருளாதாரங்களை நன்கொடையாகத் தரும்படி தன்னுடைய தோழர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள்.

உமர் (ரலி) அவர்களிடம் அப்பொழுது போதுமான அளவு செல்வம் இருந்தது, இன்னும் இந்த சந்தர்ப்பத்திலாவது அல்லாஹ்வின் வழியில் செலவழிப்பதில் அபூபக்கர் (ரலி) அவர்களை மிஞ்சி விட வேண்டும் என்று உமர் (ரலி) அவர்கள் முடிவெடுத்துக் கொண்டார்கள்.

வீட்டிற்குச் சென்ற உமர் (ரலி) அவர்கள், ஒரு குறிப்பிட்ட அளவு செல்வத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்பொழுது, உமரே..! நீங்கள் உங்களுக்கும் உங்களது குடும்பத்தார்களுக்கும் எதனை விட்டு வந்திருக்கின்றீர்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு என்னிடம் உள்ளதில் பாதியை அல்லாஹ்வின் வழியில் செலவழிப்பதற்காகவும், இன்னும் மீதிப் பாதியை எனக்கும் என்னுடைய குடும்பத்தவர்களுக்காகவும் விட்டு வந்திருக்கின்றேன் என்று கூறினார்கள். அதனைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சந்தோஷப்பட்டவர்களாக, உமர் (ரலி) அவர்களை வாழ்த்தினார்கள்.

உமர் (ரலி) அவர்களை அடுத்து வந்த அபூபக்கர் (ரலி) அவர்களும், கணிசமான அளவு தொகையை நன்கொடையாகக் கொண்டு வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தர்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்களிடம் கேட்ட அதே கேள்வியை அபூபக்கர் (ரலி) அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட பொழுது, அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள், ''என்னிடம் உள்ளதோ எதுவோ அவை அனைத்தையும் கொண்டு வந்து விட்டேன், இறைத்தூதர் (ஸல்) அவர்களே.., என்று கூறினார்கள். இன்னும் நான் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் தான் எனக்காகவும் என்னுடைய குடும்பத்தவர்களுக்காகவும் விட்டு வந்திருக்கின்றேன் என்று கூறி முடித்தார்கள்.

அபூபக்கர் (ரலி) அவர்களை விட முந்தி விட வேண்டும் என்று எண்ணிய உமர் (ரலி) அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தபூக் யுத்தத்திற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களை அழைத்த பொழுது, அன்றைய காலச் சூழ்நிலையானது மிகவும் வெப்பமாக இருந்தது. இன்னும் பயிர்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராகவும் இருந்தது. இன்னும் சிரியாவின் எல்லைப் புறத்திற்குப் பயணம் செய்வது என்பது மிகவும் நீண்டதாகவும் சிரமமானதாகவும் இருந்தது. அநேகர் இந்த யுத்தத்திற்குச் செல்லாமல் தங்கி விடுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். தடைகள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியிலும், முப்பது ஆயிரம் வீரர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த போர் முஸ்தீபுக்குத் தயார்படுத்தி விட்டார்கள்.

நீண்ட பயணத்திற்குப் பின் முஸ்லிம் படைகள் தபூக்கை மார்ச் மாதத்தின் ஓர் நாளில் சென்றடைந்தது.

பைஸாந்தியப் படைகள் எதுவும் முஸ்லிம்களை எதிர் கொள்வதற்காக அங்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. முஸ்லிம் படைகள் மிகவும் முன்னேறி வந்து விட்டதன் காரணமாக, பைஸாந்தியப் படைகள் பின்வாங்கி, சிரியாவிற்கு உள்ளேயே முடங்கிக் கொள்ள வேண்டியதிருந்தது. எந்தவித போர் நடவடிக்கைகளும் இல்லாமல் முஸ்லிம்கள் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெற்றார்கள்.

ஒரு நேரத்தில் முஸ்லிம்களின் பிரதேசத்திற்குள் படை நடத்திச் சென்று அவர்களை அச்சுறுத்த வேண்டும் என்று முடிவு கட்டியிருந்த பைஸாந்தியப் பேரரசுக்கு, இந்த தபூக் யுத்த முஸ்தீபு மூலமாக, முஸ்லிம்களின் வாட்களை எதிர்கொள்வது என்பது அவ்வளவு சுலபமான வேலையல்ல என்பது தெளிவாக்கப்பட்டது. பைஸாந்தியப் பேரரசுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து வந்த சிரியா எல்லைப் பகுதி மக்கள் இப்பொழுது, முஸ்லிம்களிடம் ஒப்பந்தங்கள் செய்து கொண்டு முஸ்லிம்களின் ஆதரவாளர்களாக மாறிக் கொண்டார்கள்.

தபூக்கில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு உரையை ஆற்றினார்கள். இன்றளவும் அந்த உரையானது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :



மக்காவின் வெற்றிக்குப் பின்..

விவாகரத்து பற்றி ஊகங்கள்

மதீனாவில் உமர் (ரலி) அவர்கள், மதீனாவின் உயரமான பகுதி ஒன்றில் வசித்து வந்தார்கள். இவரது அண்டை வீட்டுக்காரராக பனூ உமைய்யா பின் ஸைத் அன்ஸாரி (ரலி) என்ற நபித் தோழர் வசித்துவந்தார்கள். இந்த இரண்டு அண்டை வீட்டுக்காரர்களது ஒப்பந்தப்படி, ஒருநாளைக்கு ஒருவர் என்ற அடிப்படையில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு ஒருவர் மாற்றி ஒருவர் சென்று அன்றைய தினத்தில் நடந்தவைகள் பற்றி வந்தவர் வராதவருக்குச் சொல்லி விட வேண்டும் என்று தீர்மானித்து செயல்படுத்தி வந்தனர். இந்த அடிப்படையில் உமர் (ரலி) அவர்கள் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் செல்வார், அன்றைய தினம் நடந்தவைகள் பற்றி பனூ உமைய்யா (ரலி) அவர்களிடம் வந்து சொல்வார். அதே போல பனூ உமைய்யா (ரலி) அவர்கள் சென்ற அன்றைக்கு நடந்தவைகள் பற்றி உமர் (ரலி) அவர்களுக்குச் சொல்லி விடுவார்.

மக்காவில் உள்ள ஆண்கள் பெண்களை மிகைத்திருந்தார்கள், ஆனால் மதினாவிலோ நிலைமை தலைகீழாக இருக்கின்றதே என்று உமர் (ரலி) அவர்கள் ஒரு சமயம் கருதினார்கள். ஒருநாள் உமர் (ரலி) அவர்களுக்கு அவரது மனைவிக்கும் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது, அப்பொழுது அமைதியாக இருந்து விட வேண்டிய நிலையில் இருந்த உமர் (ரலி) அவர்களின் மனைவி, நீங்கள் எப்படி என்னிடம் கோபமாகப் பேசலாம் என்று பதிலுக்குப் பேசி விட்டதோடு, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வாக்குவாதம் செய்வதைச் சென்று பாருங்கள், அப்பொழுது புரியும் உங்களுக்கு என்று கூறி விடுகின்றார்கள். இன்றைய தினம் அவரது மனைவியர்களில் ஒருவர் இரவு முழுவதும் அவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார் என்றும் கூறினார்.

இதனைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவியும் தனது மகளுமான அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்று, நீங்கள் ஏதும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வாக்குவாதம் ஏதும் செய்தீர்களா? என்று வினவுகின்றார்கள். அதற்கு அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள், தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வாக்குவாதம் செய்ததாகக் கூறிய பொழுது, நீங்கள் மிகப் பெரிய நஷ்டவாளியாகி விட்டீர்களே..! என்று உமர் (ரலி) அவர்கள் கூறி விட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோவினை செய்வது அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்றுத் தந்து விடாதா என்று கேட்டார்கள். தனது மகளை கடுமையான முறையில் எச்சரித்து விட்டு, வீடு திரும்பினார்கள் உமர் (ரலி) அவர்கள்.

அன்றைய தினம் இரவில், அண்டை வீட்டுக்காரரான அன்ஸாரித் தோழர் உமர் (ரலி) அவர்களது வீட்டுக் கதவினைத் தட்டுகின்றார்கள், உமர் (ரலி) அவர்கள் எழுந்து என்ன விஷயமாக இருக்கும் என்று அறியச் சென்ற பொழுது, அவரது நண்பர் கூறினார், மிகவும் கவலைப்படத்தக்க விஷயம் ஒன்று நடந்து விட்டது என்று கூறினார்.

அப்போதைய நாளில் பனூ கவஸான் கோத்திரத்தவர்கள் மதீனாவைத் தாக்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தி மதீனாவில் பரவி இருந்தது. எனவே, ஒருவேளை பனூ கவஸான்கள் மதீனாவைத் தாக்க வந்து கொண்டிருக்கின்றார்களா தோழரே.. .., என்று தனது தோழரைப் பார்த்து உமர் (ரலி) அவர்கள் கேட்ட பொழுது, ''அதனையும் விட மிகவும் பாரதூரமான நிகழச்சி ஒன்று நடந்து விட்டது”” என்று கூறினார் அவர். அப்பொழுது அவரைப் பிடித்து உலுக்கி உமர் (ரலி) அவர்கள், என்ன நடந்தது விரைந்து சொல்லுங்கள் என்றார்கள். அப்பொழுது அந்த அன்ஸாரித் தோழர், 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மனைவியர்களை விவாகரத்துச் செய்து விட்டார்கள்” என்ற செய்தியைத் தான் கேள்விப்பட்டதாகக் கூறி விடுகின்றார்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட உமர் (ரலி) அவர்கள் மிகவும் கவலைப்பட ஆரம்பித்தார்கள். அன்றைய தினம் இரவு முழுவதும் தொழுகையிலேயே கழித்தார்கள். மறுநாள் அதிகாலையில், நேராக அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றார்கள். அப்பொழுது, அன்னையவர்கள் அழுது கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உங்களை விவாகரத்துச் செய்து விட்டார்களா? என்று கேட்டார்கள். அதற்கு, இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது என அன்யைவர்கள் பதிலளித்தார்கள்.உணர்ச்சி வசப்பட்ட உமர் (ரலி) அவர்கள், ''இது பற்றி நான் முன்னரே உங்களை எச்சரிக்கவில்லையா, இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோவினை செய்ததன் மூலம் நீங்களாகவே பிரச்னையை வரவழைத்துக் கொண்டீர்களே? என்றார்கள். அதனைக் கேட்ட அன்னையவர்களின் மனமுடைந்து அழ ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை அழுத நிலையிலேயே விட்டு விட்டு, நேராக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த பள்ளிக்குச் சென்றார்கள். அங்கு நபித் தோழர்கள் பலர் கூட்டம் கூட்டமாக அங்குமிங்கும் அமர்ந்து கொண்டே இது குறித்து தங்களுக்குள் கவலையுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது, பள்ளிவாசலுடன் ஒட்டிக் கட்டப்பட்டிருந்த தனது அறையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அந்த அறையில் வாசலுக்குச் சென்ற உமர் (ரலி) அவர்கள், அங்கு காவலுக்கு நின்று கொண்டிருந்தவரிடம் தான் உள்ளே வர இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கோருமாறு கேட்டுக் கொண்டார்கள். உள்ளே சென்று திரும்பி வந்த அந்தக் காவலாளி தாங்கள் வந்திருப்பதை தெரிவித்தும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறாமல் அமைதியாக இருந்து விட்டார்கள் என்று பதில் கூறினார்.

உமர் (ரலி) அவர்கள் பள்ளியின் முக்கியப் பகுதிக்குத் திரும்பி வந்தார், அங்கு ஒரு மூலையில் கவலை தோய்ந்த மனதுடன் அமர்ந்து கொண்டார். சற்று நேரங் கழித்து மீண்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் காணச் சென்றார்கள். மீண்டும் அந்த காவலாளியிடம் கூறி தான் உள்ளே வர அனுமதி பெற்று வருமாறு கூறி அனுப்பி வைத்தார்கள். இந்த முறையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் ஏதும் கூறவில்லை என்று அந்த காவலாளி திரும்பி வந்து சொன்னார்.

மீண்டும் உமர் (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்குள் திரும்பி வந்து அமர்ந்து கொண்டார். இப்பொழுது மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார், இறைவன் தன் மீது கருணை புரியுமாறு பிரார்த்தித்துக் கொண்டார். மீண்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் காண அவரது அறைக்குச் சென்றார்கள்.இந்த முறை உள்ளே வர அனுமதி கிடைத்தது. அறைக்குள் உள்ளே நுழைந்த உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

''இறைத்தூதர் (ஸல்) அவர்களே, எனது மகள் ஹஃப்ஸாவுக்காகப் பரிந்து பேச நான் இங்கு வரவில்லை.

இது தான் உங்களுக்கு விருப்பம் என்றிருந்தால், அவரது கழுத்தை எனது கைகளாலேயே நெறித்து விடுகின்றேன்.

இதனைக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களது இதயம் இளகியது, உமர் (ரலி) அவர்களைப் பார்த்து புன்னகை பூத்தார்கள்.

மீண்டும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், மக்காவில் நமது பெண்கள் அமைதியாக இருந்தார்கள், மதீனாவின் சூழ்நிலை அவர்களை இவ்வாறு எதிர்த்தும் பேசும் நிலைக்கு ஆளாக்கி விட்டது என்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களே.., ''இந்தக் காரணத்திற்காக உங்கள் மனைவிமார்களை நீங்கள் விவாகரத்துச் செய்திருப்பீர்கள் என்று சொன்னால், அல்லாஹ்வும், அவனது வானவர்களும், இன்னும் உங்களது தோழர்களாகிய நாங்கள் உங்களுடனிருக்கின்றோம்”” என்றார்கள்.

உமர் (ரலி) அவர்களை நோக்கி புன்னகை பூத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ''உண்மையாக, நான் எனது மனைவிமார்களை விவாகரத்துச் செய்யவில்லை”” என்று கூறினார்கள். ஒருமாத காலத்திற்கு அவர்களிடமிருந்த நான் பிரிந்து தனித்திருக்கவே விரும்பினேன் என்று கூறினார்கள்.

இதனை நான் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சொல்லட்டுமா, என்று கேட்டார்கள் உமர் (ரலி) அவர்கள்.

'நீங்கள் விரும்பினால், அவ்வாறே சொல்லாம்” என்று இறைத்தூதர் (ஸல்)அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.

அவர்கள் தங்கி இருந்த அறையைச் சற்று நோட்டமிட்ட உமர் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெறும் பாயில் தான் அமர்ந்திருந்தார்கள். கட்டில் போன்ற எதுவும் அங்கில்லை. உண்பதற்கு ஒரு ரொட்டித் துண்டுதவிர வேறொன்றும் அங்கு இல்லை. இந்த அசாதரணமாக நிலையைப் பார்த்த உமர் (ரலி) அவர்களது கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோட ஆரம்பித்தது.

உமர் (ரலி) அவர்கள் அழுவதைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்)அவர்கள், 'இப்னு கத்தாபே உம்மை அழ வைத்தது எது? என்று கேட்டார்கள்.

'நீங்களோ அல்லாஹ்வின் தூதர், எந்த வசதிகளுமற்ற அசாதராண சூழ்நிலையைத் தேர்வு செய்து வாழ்ந்து கொண்டிருப்பதை நினைத்துத் தான் நான் அழுகின்றேன். பாரசீக மக்களும், பைஸாந்தியப் பேரரசும் வளமான வசதியான ஆடம்பரமாக வாழ்க்கையை வாழுகின்றார்கள். இவ்வாறிருக்கையில், உங்கள் மீது அருள்வளங்களின் வாயில்களைத் திறந்து விடுமாறு நீங்கள் ஏன் வல்ல ரஹ்மானிடத்தில் கையேந்திப் பிரார்த்தித்துக் கேட்கக் கூடாது? என்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என்னை தூதராக அனுப்பி வைத்தவன் என்னை செல்வங்களுக்குச் சொந்தக்காரனமாக ஆக்கவில்லை என்றா எண்ணுகின்றீர்கள். இருந்த போதிலும், இந்த உலகத்தின் அருள்வளங்களை எனக்கு அவன் வாக்களித்தான், ஆனால் அவற்றை நான் மறுத்து விட்டு மறுஉலகின் அருள் வளங்களை அதற்கு ஈடாகப் பெற்றுக் கொண்டு விட்டேன். இந்த அற்பமான உலக வளங்களை விட நிச்சயமாக மறு உலக வளங்களையே தேர்வு செய்வதற்குச் சிறந்தது. பாரசீகம் மற்றும் பைஸாந்தியப் பேரரசுகளின் வளங்களைப் பொறுத்தவரை, அந்த வளங்கள் யாவும் முஸ்லிம்களின் காலடியில் வந்து விழும் என்று இறைவன் வாக்களித்து விட்டான். அந்த நேரத்தில் நான் உயிரோடிருக்க மாட்டேன், ஆனால் அது உங்களுடைய வாழ்நாளில் நிகழும், பாரசீகத்தையும், பைஸாந்தியப் பேரரசையும் முஸ்லிம்கள் அப்பொழுது வெற்றி கொள்வார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்துல்லா இப்னு உபை - ன் அடக்க நிகழ்ச்சி

அப்துல்லா இப்னு உபை மதீனாவின் தலைவனாக இருந்தான். இன்னும் மதீனாவின் மணிமுடியை அலங்கரிக்க வேண்டும் என்ற ஆசையுடன் அவன் இருந்த காலத்தில் தான், மதீனாவின் அன்ஸார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவில் அகபா என்னும் இடத்தில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து, அவர்களை மதீனாவில் வந்து தங்கி விடுமாறு அழைப்பு விடுத்தார்கள். அந்த அழைப்பினை ஏற்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவினை விட்டு வெளியேறி, ஹிஜ்ரத் செய்து மதீனாவில் வந்து தங்கி வரலானார்கள். தான் ஆட்சியாளராக வரவிருந்த நிகழ்வு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வருகையால் கெட்டு விட்டதை அறிந்து வெறுப்பிற்குள்ளானான் அப்துல்லா இப்னு உபை. மதீனாவின் அனைத்து குலங்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் காரணமாக, அப்துல்லா இப்னு உபையும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். இஸ்லாம் அவனது மனதில் மிகவும் அரிதாகவே குடியேறியது, எனவே இஸ்லாத்திற்கு எதிரான பல்வேறு செயல்களில் மறைமுகாக ஈடபடலானான்.

உஹத் போரின் பொழுது, போர் ஆரம்பிக்க இருந்த கடைசி நேரத்தில் தனது குழுவினரை போர் செய்ய விடாமல் தடுத்து, தனது குழுவினருடன் மதீனாவிற்குத் திரும்பி வந்து விட்டான். இன்னும் பனீ முஸ்தலக் போரின் சமயத்தில், போரின் கலந்து கொண்ட இறைப் போராளிகளுக்கு எதிராகவும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீதும் தகாத வார்த்தைகளைக் கூறினான். இன்னும் ஆயிஷா (ரலி) அவர்களின் மீது களங்கம் சுமத்திய சம்பவத்தில், இவன் தான் முன்னணி வகித்தான்.

இந்த நிலையில் இவனைக் கொல்வதற்கு தனக்கு அனுமதி தருமாறு உமர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) கேட்டார்கள், கருணை உருவான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதற்கு அனுமதி தர மறுத்து விட்டார்கள்.

அப்துல்லா இப்னு உபையின் நயவஞ்சகத்தை அறிந்திருந்த வல்ல அல்லாஹ்வும், ''இத்தகைய நயவஞ்சகர்கள் எழுபது முறை பிரார்த்தனை செய்தாலும் அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது”” என்ற வசனத்தை இறக்கி அருளினான்.

அப்துல்லா இப்னு உபை இறந்த பொழுது, இறைத்தூதர் (ஸல்)அவர்கள் அவனது அடக்க நிகழச்சியில் கலந்து கொள்வது என்று தீர்மானித்தார்கள், தொழுகையை முன்னின்று நடத்தவும் தீர்மானித்தார்கள். இந்த நிலையில், இறைத்தூதர் (ஸல்)அவர்களின் வருகைக்காக அங்கு காத்திருந்த உமர் (ரலி) அவர்கள் அவர்களை வழி மறித்து, அப்துல்லா இப்னு உபை யின் அடக்க தொழுகையில் கலந்து கொள்வதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டார்கள். அப்துல்லா இப்னு உபையின் பல்வேறு நயவஞ்சகச் செயல்களை அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஞாபகப்படுத்திக் காட்டியதோடு, 'இத்தகைய நயவஞ்சகர்கள் எழுபது தடவை பாவமன்னிப்புக் கோரினாலும் அவர்களது பாவத்தை அல்லாஹ் மன்னிப்பதில்லை” என்று கூறி விட்டதையும் ஞாகப்படுத்திக் காட்டினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உமரே, பின்னுக்கு நில்லுங்கள், என்னைத் தொழ வைக்க விடுங்கள் என்றார்கள். இந்த விஷயத்தில் எனது சொந்த விருப்பப்படி நடந்து கொள்ளும் இறைவன் எனக்கு அனுமதி வழங்கி இருக்கின்றான், எனவே நான் இந்த விஷயத்தில் இரக்கத்தோடு நடந்து கொள்ள விரும்புகின்றேன் என்று கூறினார்கள்.

அதன் பின்பு உமர் (ரலி) அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பின் நின்று இறுதி அடக்கத் தொழுகையில் கலந்து கொண்டார்கள். இன்னும் அப்துல்லா இப்னு உபை யின் உடல் அடக்கம் செய்யப்படுவதை வரைக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்தார்கள். வீடு திரும்பு முன்பாக அங்கு நின்று அப்துல்லா இப்னு உபைக்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்து விட்டு, வீடு திரும்பினார்கள்.

அதன் பின் சில நாட்கள் கழித்து பின்வரும் இறைவசனத்தை தனது தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இறக்கி அருளினான் :

அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவகளாகவே இறந்தார்கள். (9:84)

இறைவன் அருளிய இந்த வசனங்களை உமர்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்த பொழுது, இறைவன் தன்னுடைய வாதத்தில் நியாயமிருப்பதை சுட்டிக் காட்டு விட்டான் என்று உமர் (ரலி) அவர்கள் மிகவும் சந்தோசப்பட்டார்கள்.

வானவர் தூதர் மனித உருவில் தோன்றிய பொழுது

ஒருநாள் நானும், இன்னும் ஏனைய சில தோழர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம், அப்பொழுது வெள்ளை உடை உடுத்திய கருகருவென்று வளர்ந்திருந்த தலைமுடியைக் கொண்டதொரு மனிதர் அங்கு வந்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னங்ககால்களோடு ஒட்டி வைத்தது போன்று நேருக்கு நேர் பார்த்தபடி தனது இரு கரங்களையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தொடையின் மீது வைத்த வண்ணம் அமர்ந்து, ''முஹம்மதே..! இஸ்லாம் என்றால் என்ன”” என்று எனக்குக் கூறுங்கள் என்று கூறினார் என்று கூறி விட்டு நடந்த சம்பவத்தை உமர்(ரலி) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள் :

ஒருநாள் நாங்கள் எல்லோரும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது எங்கள் முன் ஒருவர் வந்து நின்றார். அவருடைய ஆடைகள் மிகைத்த வெளுமையுடன் காணப்பட்டன. அவருடைய தலைமுடி மிகைத்த கருமை நிறத்துடன் காணப்பட்டது. பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. எங்களில் யாருக்கும் அவரைத் தெரியாது. அவர் நடந்து சென்று பெருமானர் (ஸல்) அவர்களின் முன் அமர்ந்தார். அவரது முழங்கால்களை பெருமானார் (ஸல்) அவர்களின் முழங்கால்களுக்கு எதிராகவும் கைகளைக் கால்களின் மீதும் வைத்து அமர்ந்தார். பின்னர் பெருமானார் (ஸல்) அவர்களை நோக்கி 'முஹம்மதே, இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்றார். பெருமானார் (ஸல்) அவர்கள் 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது இறைவனின் தூதர் என்று சாட்சியம் கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது. ஜகாத்2 கொடுப்பது, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது, உங்களால் முடிந்தால் ஹஜ் (இறைவன் இல்லத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்வது) செய்வது இவைகளாகும் என்றார்கள். இதற்கு அவர் நீங்கள் சரியாகவே சொன்னீர்கள் என்றார். நாங்கள் அவர் அப்படி வினவியது குறித்தும் அவரே உண்மைப்படுத்தியது குறித்தும் ஆச்சரியம் கொண்டோம். பின்னரவர் ஈமான் குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். ''அது அல்லாஹ்வின் மீதும் அவனது வானவர்கள், அவனது வேதங்கள், அவனது தூதர்கள், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொள்வதும், நல்லவைகளும் தீயவைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்று நம்புவதுமாகும்”” என்பதாக பெருமானார் (ஸல்) அவர்கள் பதில் தந்தார்கள். இதைக் கேட்ட அவர் நீங்கள் சரியாகவே பேசினீர்கள் என்றார். தொடர்ந்து அவர் இஹ்ஸான்4 (நல்ல செயல்கள்) பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்றார்.

''நீங்கள் அல்லாஹ்வை பார்க்காத போதும் அவனை நேரில் பார்த்து தொழுவது போல் தொழுவதாகும். நீங்கள் அவனைப் பார்க்காத போதிலும் அவன் மெய்யாகவே உங்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றான்”” எனச் சொன்னார்கள். பின்னர் அவர் எனக்கு அந்த நேரம் (நியாயத் தீர்ப்பு நாள்) குறித்துச் சொல்லுங்கள் என்றார். அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் 'இந்தக் கேள்வி கேட்கப்படுபவர் கேட்பவரை விட அதிகமாக அறிந்தவர் அல்லர்” என்றார்கள். (அல்லாஹ் அதை அறிவான் என்பது கருத்து). பின்னர் அவர் அதன் அடையாளங்கள் குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாவது, ''அடிமைப்பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள். அப்போது காலணிகளில்லாத, ஆடைகளற்ற, ஆதரவற்ற கூட்டத்தினர் ஆடம்பரமாக கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள். பிறகு அவர் போய் விட்டார். நான் அங்கேயே தாமதித்தேன்.

பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள், 'உமரே கேள்விகளைக் கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா” எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள்” என்றேன் நான். பெருமானார் (ஸல்) அவர்கள், அவர் ஜிப்ரில் (அலை) ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக வந்தார்”” என்று கூறினார்கள். - முஸ்லிம்

இறுதி ஹஜ்

கி.பி.632 ம் ஆண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்கான தயாரிப்புகளில் இறங்கினார்கள். அதுவே அவர்களது இறுதி ஹஜ்ஜாகவும் அமைந்தது. ஹஜ்ஜுக்கான ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டமாகவே நடந்தன. அரபுப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் அழைப்புக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் மதினா நகருக்கு வந்து குழுமுமாறு வேண்டுகோள் கொடுக்கப்பட்டார்கள். இந்த அழைப்பினைக் கேள்விப்பட்டு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து மதீனாவில் கூடினார்கள்.

அதன் பின்னர் ஹஜ்ஜுக்காக மக்காவை நோக்கி இந்த ஒரு லட்சம் பேரும் பயணப்பட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்தப் பயணத்திற்குத் தலைமை தாங்கினார்கள். அவர்களது மனைவிமார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிளம்பினார்கள். அவர்களைத் தொடர்ந்து அபுபக்கர் (ரலி), உமர் (ரலி) அவர்களும், அவர்களது குடும்பத்தார்களும் கிளம்பினார்கள்.

துல் குலைஃபாவில் வைத்து ஹாஜிகள் அனைவரும் இஹ்ராம் என்னும் வெள்ளுடையயை அணிந்து கொண்டார்கள். இஹ்ராம் அணிந்திருக்கும் நிலையில் உள்ள அனைவரும் ''லப்பைக்கல்லாஹும்ம லப்பைக்” என்ற முழக்கத்தை முழங்குமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். இந்த முழக்கத்தை அங்கு குழுமியிருந்து ஒரு லட்சம் பேரும் உரத்து ஒருமித்த குரலில் முழங்கினார்கள்.

அதாவது 19 நாட்கள் பயணத்திற்குப் பின்பாக, இந்தப் பயணக் குழுவினர் மக்காவை துல்ஹஜ் பிறை 4 வந்தடைந்தனர். துல்ஹஜ் 8 ம் நாளன்று ஹாஜிகள் அனைவரும் மக்காவிலிருந்து வெளியேறி அன்றைய இரவை மினாவை கழித்தார்கள். அதற்கு அடுத்த நாள் அவர்கள் அரஃபாவை நோக்கிக் கிளம்பினார்கள். அன்றைய தினம் மதிய லுஹர் வேளைத் தொழுகைக்குப் பின்னர், வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு உரையை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நிகழ்த்தினார்கள்.

இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்னர், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

'அறிந்து கொள்ளுங்கள் அஞ்ஞானக் கால வழக்கங்கள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுவிட்டன”.

'ஓர் அரபிக்கு, அரபியல்லாதவரை விடவோ, ஓர் அரபியல்லாதவருக்கு ஓர் அரபியை விடவோ எந்தச் சிறப்பும் மேன்மையும் இல்லை, நீங்கள் அனைவரும் ஆதமின் வழித் தோன்றல்களே! ஆகமோ மண்ணால் படைக்கப்பட்டவராவார்”

'முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள்”

'உங்கள் அடிமைகள் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். (அதாவது உங்கள் அடிமைகளுக்குரிய உரிமைகளைப் பேண்க்காப்பதில் கண்ணுங்கருத்துமாக இருங்கள்). நீங்கள் உண்பதையே அவர்களுக்கு ஊட்டுங்கள், நீங்கள் அணிவதையே அவர்களுக்கும் அணிவியுங்கள்.”

'அறியாமைக் காலத்தின் இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இனி பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. அனைவருக்கும் முதலாக நான் என் குடும்பத்தாரின் ரபூஆ பின் ஹர்ஸ் உடைய மகனுக்கான ரத்தப் பழியை ரத்து செய்கின்றேன். சொல்லாதென அறிவிக்கின்றேன்”.

'அறியாமைக்கால வட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. (இனி எவரும் எவரிடமும் வட்டி தரும்படி கோர உரிமை இல்லை) அனைவருக்கும் முதலாக நான் என் குடும்பத்தாரின் வட்டியை அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபிற்குரித்தான வட்டியை செல்லாதது ஆக்குகின்றேன்.”

'பெண்கள் விஷயத்தில் இறைவனை அஞ்சுங்கள். பெண்கள் மீது உங்களுக்கும் உங்கள் மீது பெண்களுக்கும் உரிமையுள்ளது.”

'இந்த நாளும் இந்த மாதமும் இந்த நகரும் கண்ணியத்திற்குரியனவாய் விளங்குவது போன்றே உங்கள் இரத்தமும் உங்கள் செல்வமும் இறுதித் தீர்ப்புநாள் வரை கண்ணியத்திற்குரியவை. ஒருவருக்கொருவர் அதனை மதித்து கண்ணியப்படுத்த வேண்டும்”.

'நான் உங்களிடம் ஒரு பொருளை விட்டுச் செல்கின்றேன். நீங்கள் அதனை வலுவாகப் பற்றிப் படித்துக் கொண்டால் வழிபிறழ்ந்து போக மாட்டீர்கள். அதுவே அல்லாஹ்வின் திருமறையாகும்”.

இதன் பிறகு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஷரிஅத்தின் அடிப்படைச் சட்டங்களை எடுத்துரைத்தார்கள். பின்னர் மக்கட் திரளை நோக்கி வினவினார்கள்:

'உங்களிடம் இறைவன் என்னைப் பற்றி விசாரித்தால் என்ன சொல்வீர்கள்?”.

'தாங்கள் இறைவனின் செய்தியை எடுத்துரைத்தது விட்டீர்கள். உங்கள் கடமையை நிறைவேற்றி விட்டீர்கள்” என்று நாங்கள் சொல்வோம் என்று நபித்தோழர்கள் கூறினார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி விரலை உயர்த்தி மூன்று முறை 'இறைவா! நீயும் சாட்சியாக இரு!” என்று கூறினார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் திருக்குர்ஆனின் இந்த வசனம் இறக்கியருளப்பட்டது:

'இன்று உங்களுக்காக உங்கள் நெறியை நிறைவு படுத்திவிட்டோம். நமது அருளை முழுமையாகப் பொழிந்து விட்டடோம். உங்களுக்காக இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக அங்கீகரித்துக் கொண்டோம்.”

இந்த ஹஜ்ஜின் போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹஜ் எப்படிச் செய்ய வேண்டுமென்று ஹஜ்ஜின் வழிமுறைகள் அனைத்தையும் தாமே நிறைவேற்றிக் காட்டினார்கள். இந்த சந்தர்ப்பத்தில்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் 'என்னிடமிருந்து ஹஜ்ஜின் சட்டங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். இதற்குப் பிறகு இன்னொரு ஹஜ் செய்ய எனக்கு வாய்ப்புக் கிடைக்குமா? கிடைக்காதா என்று நான் அறிய மாட்டேன்” என்று கூறினார்கள்.

இதே சந்தர்ப்பத்தில்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடம், 'இங்கே இருப்பவர்கள் அனைவரும் (இந்த அறிவுரைகள் அனைத்தையும்) இங்கில்லாதவர்களுக்கு எடுத்துரைக்கட்டும்” என்றும் கூறினார்கள்.

இந்த உரைக்குப் பின்னர், இறைவன் தனது தூதருக்கு கீழ்க்கண்ட வசனத்தை இறக்கியருளினான் :

இன்றைய தினம் உங்களுக்காக உங்களது மார்க்கத்தை நாம் பூர்த்தியாக்கி விட்டோம், எமது அருட்கொடையையும் பூர்த்தியாக்கி விட்டோம், இன்னும் உங்களுக்கு இசைவான மார்க்கமாக இஸ்லாத்தை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டோம்”” என்ற பொருளைக் கொண்ட வசனம் இறக்கியருளப்பட்டது.

இந்த வசனத்தைக் கேள்விப்பட்ட உமர் (ரலி) இறைவன் நம்முடைய மார்க்கத்தைப் பூர்த்தியாக்கி விட்டான் என்று சந்தோஷப்பட்டார்கள். ஆனால், அபுபக்கர் (ரலி) அவர்களைப் பார்த்த உமர் (ரலி) அவர்களுக்கு அவர் சோகமாக இருப்பது மிகவும் வித்தியாசமாகப்பட்டது.

நமக்கு இசைவான மார்க்கமாக இஸ்லாத்தைத் தேர்வு செய்து பூர்த்தி செய்து விட்டதாக இறைவனே அறிவித்திருக்க அபுபக்கரே நீங்கள் ஏன் சோகமயமாக உட்கார்ந்திருக்கின்றீர்கள் என்று கேட்டார் உமர் (ரலி) அவர்கள். இந்த வசனத்தில் ஒரு எச்சரிக்கை பொதிந்திருக்கின்றது, அது தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக வந்தார்களோ அந்தப் பணி நிறைவு செய்யும் காலம் வந்து விட்டது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது அந்திமக் காலத்தை அண்மித்துக் கொண்டிருக்கின்றார்களோ, நம்மை விட்டும் பிரிந்து போக இருக்கின்றார்களோ, என்ற அச்சம் தான் என்னை மேலிட்டுக் கொண்டிருக்கின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நம்மோடு மிக நீண்ட நாட்களுக்கு இருக்க மாட்டார்கள் போலத் தோன்றுகின்றது என்று தனது அச்சத்தை உமர் (ரலி) அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.

ஹாஜிகள் அன்றைய தினம் மாலையில் அரஃபாவை விட்டும் கிளம்பி முஸ்தலிபாவிற்கு வந்து சேர்ந்தார்கள். அதற்கு அடுத்த நாள் தங்களது பலிப் பிராணிகளுடன் மினாவை அடைந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மொத்தம் 63 பிராணிகளைப் பலியிட்டார்கள், அவை ஒவ்வொன்றும் அவர்களது வாழ்நாளில் ஆண்டு ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இருந்தது. உமர் (ரலி) அவர்கள் 52 பிராணிகளைப் பலியிட்டார்கள். அதனை அடுத்து ஆண்கள் தங்களது தலை முடியை மழித்துக் கொண்டதுடன், ஹஜ் கிரியைகள் இனிதே நிறைவேறின. இதனை அடுத்து இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் மதீனாவிற்குத் திரும்பி வந்தார்கள்.



இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறுதிப் பயணம்

பேரருளாளனை நோக்கி..!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது ''இறுதி ஹஜ்ஜை”” நிறைவேற்றி விட்டு மதீனாவிற்கு வந்ததன் பின்னாள் சுகவீனம் அடைந்தார்கள். கைபரில் வைத்து யூதப் பெண்மணி ஒருத்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அளித்த விருந்தில் கலந்து வைத்த நஞ்சு தனது வேலையை ஆரம்பித்து விட்டிருந்தது. இதனை அடுத்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தான் தன்னுடைய பேரருளாளனைச் சந்திக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டதையும், தனது தூதுத்துவப் பணி நிறைவடைந்து கொண்டிருப்பது குறித்தும் அறிந்து கொண்டார்கள்.

ஒருநாள் இரவு நேரம், தனியே எழுந்து உஹத் போரில் கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த தனது தோழர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஜன்னத்துல் பக்கீ என்ற மண்ணறைக்குச் சென்றார்கள். அதன் பின்னர், தனது மனைவியருள் ஒருவரான அன்னை மைமூனா (ரலி) அவர்களது இல்லத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது காய்ச்சல் உச்சத்துக்கு ஏறியது. அப்பொழுது தனது அனைத்து மனைவிமார்களையும் அழைத்து, தனது சுகவீனம் வலுவடைந்து சென்று கொண்டிருக்கின்ற இந்த நிலையில், இனி ஒவ்வொருவரையும் தனியாகத் தம்மால்  சந்திக்க இயலாது என்ற நிலையினை விளக்கிக் கூறினார்கள். சுகவீனம் நீங்கி, நிவாரணம் அடையும் வரைக்கும் ஆயிஷா (ரலி) அவர்களது இல்லத்திலேயே தங்கிக் கொள்வதற்கு நீங்கள் அனைவரும் அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்களிடம் விடுத்தார்கள். அவர்கள் அனைவரும் தங்களது சம்மதத்தை உடனே தெரிவித்தார்கள், அலி (ரலி) அவர்கள் அவர்களைத் தாங்கிப் பிடித்திருக்க அப்பாஸ் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை ஆயிஷா (ரலி) அவர்களது இல்லத்திற்கு கொண்டு சென்றார்கள்.

ஒருநாள் கழிந்தது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சற்று குணமடைந்தது போலத் தெரிந்தவுடன், குளித்தார்கள். புத்துணர்வு கொண்டவர்களாக அன்றைய தின மதிய வேளைத் தொழுகையை நடத்துவதற்காக பள்ளிக்கு வந்தார்கள். அந்தத் தொழுகை முடிந்ததும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறி அமர்ந்து கொண்டு மக்களுக்கு உரையாற்ற ஆரம்பித்தார்கள்:

அல்லாஹ்., தன்னுடைய அடியார் ஒருவருக்கு இந்த உலக வாழ்க்கையையும், தனக்கு அருகாமையில் இருக்கும் வாய்ப்பையும் வழங்கி இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளுமாறு கூறினான், அந்த அடியாரோ அவனைச் சந்திக்கும் பாக்கியத்தையே தனக்கு விருப்பமானதாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். உங்களது தூதர் இறப்பைச் சந்திக்கவிருக்கின்றார் என்பது குறித்து நீங்கள் அச்சமடைந்திருப்பதாக நான் அறிய வருகின்றேன். இதற்கு முன் வாழ்ந்த எந்தத் தூதராவது மரணிக்காமல் இருந்திருக்கின்றார்களா? அல்லது உங்களில் எவருமே மரணத்தைச் சந்திக்கமால் இருந்திருக்கின்றார்களா? அறிந்து கொள்ளுங்கள், நான் எனது இறைவனைச் சந்திக்க இருக்கின்றேன். நீங்களும் எனக்குப் பின் விரைவிலோ அல்லது தாமதமாகவோ வர இருக்கின்றீர்கள் என்று உரையாற்றினார்கள்.

இந்த உரைக்கும் பின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது உற்ற துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்களது அறைக்குச் சென்று விட்டார்கள். அன்னாரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அன்றைய இரவுக்குப் பின் அவர்களது நோயின் வேதனை அதிகரித்தது. இறைவனிடம் அருட்கொடைகளை வழங்குமாறு பிரார்த்தித்த வண்ணம் இருந்தார்கள். மறுநாள் காலையில் அவர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. தனது அறையில் திரைச் சீலையை விலக்கிப் பார்த்த பொழுது, மக்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அலி (ரலி) அவர்கள் கைத்தாங்கலாக அழைத்து வர இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிக்குள் நுழைந்தார்கள். தொழுகையை நிறைவேற்றிய பின்னர், மிம்பரின் மீது அமர்ந்து கொண்டு தன்னுடைய தோழர்களைப் பார்த்து உரை நிகழ்த்த ஆரம்பித்தார்கள் :

இறைவன் மீது சத்தியமாக..! இறைவன் எனக்கு ஆகுமாக்கிய ஒன்றைத் தவிர வேறொன்றை நான் எனக்கு ஆகுமாக்கிக் கொள்ளவில்லை, இன்னும் இறைவன் தடுத்தவற்றைத் தவிர வேறொன்றையும் எனக்குத் தடுத்துக் கொள்ளவில்லை.

இந்த உரைக்குப் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீண்டும் ஆயிஷா (ரலி) அவர்களது அறைக்குச் சென்று விட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நிலை முன்பைக் காட்டிலும் மோசமாகிக் கொண்டே வந்தது. இறுதியில் அவர்கள் வல்லோனைச் சந்திக்கப் புறப்பட்டு விட்டார்கள். இந்த உலகை விட்டுப் பிரிந்தார்கள்.

இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் பள்ளியில் ஒன்று கூடினார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக குழுக்கள் குழுக்களாக அமர்ந்திருந்தார்கள். இன்னும் அங்கே ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவியது. காதோடு காதாக கிசுகிசுத்த குரலில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள், பலர் அழுது கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நம் மத்தியில் இல்லையென்றால் இனி இந்த முஸ்லிம் உம்மத்தின் நிலை என்னவாகும் என்பது குறித்த அச்சத்தை அவர்கள் வெளிப்படுத்தியவர்களாக இருந்தார்கள்.

அனைவரது கண்களும் ஆயிஷா (ரலி) அவர்களின் அறையை நோக்கியே இருந்தது. அந்த அறை இன்னும் சற்று நேரத்தில் திறந்து விடும்.., இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது ஒளி பொருந்திய வதனைக் கொண்டு வந்து நம் முன் காட்சி தந்து விடுவார் என்றே அவர்கள் எண்ணிக் கொள்ளலாயினர்.

அப்பொழுது அந்த பகுதிக்கு வந்த உமர் (ரலி) அவர்கள் மக்கள் மத்தியில் உலாத்திக் கொண்டிருந்தவர்களாக,

''இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்;டார்கள் என்று யார் சொன்னது.., அவரது குரலில் கடுமை தெரிந்தது. நான் சத்தியமிட்டுச் சொல்கிறேன் அவர்கள் உயிரோடு தான் இருக்கின்றார்கள், மூஸா (அலை) அவர்கள் போல தனது இறைவனைச் சந்திக்கச் சென்றுள்ளார்கள், சிறிது காலம் கழித்து அவர்கள் மீண்டும் வருவார்கள்”” என்று முழங்கினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களது அறை இப்பொழுது திறந்து கொண்டது. சோபை இழந்தவராக ஒரு மனிதர் அங்கிருந்து வெளிப்பட்டார். அவரது கண்கள் சிவந்திருந்தன, சோகத்தால் அவை கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன. அவர் தான் அபுபக்கர் (ரலி).., இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உற்ற தோழர். குகையில் இருந்த இன்னொருவர். மக்களுக்கு மத்தியில் சோகமான குரலில் உரை நிகழ்த்த ஆரம்பித்தார்கள் :

அவரிடமிருந்து வார்த்தைகள் அளந்து அளந்து வந்தன. என்னருமை மக்களே..! எனது உரையைச் செவிடுத்துக் கொள்ளுங்கள்..!

அறிந்துகொள்ளுங்கள், ''உங்களில் யார் முஹம்மதை வணங்கினீர்களோ, அவர் ஏனைய மனிதர்களைப் போலவே இறந்து போகக் கூடியவராக இருக்கின்றார். ஆனால் உங்களில் யார் முஹம்மதினுடைய இறைவனை வணங்கினீர்களோ அந்த இறைவன் தான் என்றென்றும் உயிர் வாழக் கூடியவன் மற்றும் என்றென்றும் நிலைத்திருப்பவன்.””

அந்த நெடியதொரு கூட்டத்தில் மிகப் பெரும் நிசப்தம் நிலவியது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மரணச் செய்தியைக் கேட்ட அனைவரும் நிலைகுலைந்தவர்களாக அதிர்ச்சியில் உறைந்து போய்க் கிடந்தார்கள். தனது கண்ணில் இருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துப் போட்டவராக அபுபக்கர் (ரலி) அவர்கள் கீழ்க்கண்ட வசனத்தை ஓதிக் காட்ட ஆரம்பித்தார்கள் :

முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது. அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.

என்று அபூபக்கர் (ரலி) அவர்கள் அந்த கூட்டத்தினரிடையே ஓதிக் காட்டினார்கள். முஹம்மது ம் கூட மரணிக்கக் கூடியவரே..! அவர் அல்லாஹ்விடமிருந்தே வந்தார், அவனிடமே திரும்பிச் சென்று விட்டார் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அபுபக்கர் (ரலி) அவர்களது அந்த உரை அங்கிருந்தோரிடையே மின்சாரத்தைப் பாய்ச்சியது போன்றதொரு உணர்வை ஏற்படுத்தியது. இப்படியொரு வசனம் இறைமறையாம் திருக்குர்ஆனில் இருக்கின்றது என்பதை நாங்கள் அப்பொழுது தான் அபூபக்கர் (ரலி) அவர்களின் வாயிலிருந்து செவிமடுத்து அறிந்து கொண்டோம். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

இறைவன் மீது சத்தியமாக.., அபூபக்கர் (ரலி) அவர்கள் ஓதிக்காட்டிய அந்த வசனத்தைச் செவிமடுத்த பின்பு, எனது உணர்வுகள் என்னை விட்டும் அகன்று விட்டன, எனது பாதங்கள் நிலை கொள்ளவில்லை, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்களே என்பதை அறிந்தவுடன் நினைவற்ற நிலையில் நான் கீழே விழுந்த விட்டேன் என்று கூறினார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் கலிஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்படுதல்

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உடல் நல்லடக்கத்திற்காகத் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருந்த பொழுது, ஸகிஃபா பனீ ஸஃதா என்ற தங்களது ஒன்று கூடும் இடத்தில் அன்ஸார்கள் ஒன்று கூடி, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின் நம்முடைய தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற கலந்தாலோசனையில் ஈடுபட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களே இறுதித் தூதராவார்கள், அவருக்குப் பின் யாரும் தூதராக வர முடியாது. இன்னும் அவர் தலைவராகவும் இருந்தார்கள், அவரது மறைவுக்குப் பின்னர் அவரது தலைமைப் பதவியை இன்னொருவர் இட்டு நிரப்பியாக வேண்டும் என்பதே அவர்களது ஆவலாக இருந்தது.

அப்பொழுது அங்கே கூடியிருந்தவர்களில் ஒருவரான ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்கள், முஸ்லிம் உம்மத்தின் அனைத்துத் துறைகளையும் நிர்வகிக்கின்ற பொறுப்பு - தலைமைப் பதவிக்கு அன்ஸார்களில் இருந்து ஒருவர் தான் வர வேண்டும் என்று கூறினார். அவர் தனது கருத்துக்கு ஆதரவாக, அன்ஸார்கள் தான் இஸ்லாத்தினைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள், இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள், இன்னும் அவர்களது உறவுகளே அவர்களைக் கொலை செய்ய முற்பட்ட நேரத்தில் அன்ஸார்கள் தான் அவர்களுக்குப் பாதுகாப்பும் வழங்கினார்கள். இன்னும் அன்ஸார்களின் கடுமையான முயற்சியின் காரணமாக இஸ்லாம் நாலா பக்கமும் பரவியது, ஆட்சிப் பொறுப்பிற்கும் வந்தது. அவர் உரை நிகழ்த்தி முடித்தவுடன், அவரது உரைக்கு நல்லதொரு வரவேற்பு இருந்தது, அந்த வரவேற்பைப் பார்த்தால் இனி இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்களைத் தான் அன்ஸார்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் போகின்றார்கள் என்று யூகிக்க வேண்டிய நிலை வந்தது.

அங்கு ஒருபுறம் கூட்டம் நடந்து கொண்டிருக்க இன்னொரு புறம் முஹாஜிரின்கள் மஸ்ஜித்துந் நபவியில் கூடி இருந்தார்கள், அப்பொழுது அங்கு வந்த ஒருவர் அன்ஸார்கள் ஸகிஃபா பனீ ஸஅதா வில் கூடி இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்ற ஆலோசனையில் இருக்கின்றார்கள் என்று கூறினார். இன்னும் இது மிகவும் கடுமையான சிக்கலான தருணமாகவும் இருந்தது. இப்பொழுது நபித்தோழர்களுக்கிடையே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நல்லடக்கப் பணியைக் கவனிப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டிய நிலையில் இருந்தார்கள், ஆனால் இந்த நிலையில் யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்ற பிரச்னையில் முஸ்லிம்கள் தீவிரமாக ஈடுபட்டு விட்டார்கள் என்று சொன்னால், அதில் எடுக்கப்படும் எந்த ஒரு தவறான முடிவும் முழு முஸ்லிம் உம்மத்தையும் மீட்க இயலாததொரு பிரச்னையில் மாட்ட வைத்து விடும், எதிர்காலம் மீண்டும் ஜாஹிலிய்யக் காலத்துக்குச் சென்று விடும். இருப்பினும் நிலைமையை உணர்ந்த உமர் (ரலி) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு முன்பே பனீ ஸஅதா வுக்குச் சென்ற போதிலும், அவர்கள் சென்றடைந்த நேரம் மிகவும் தாமதமானதாக இருந்தது.

அபுபக்கர் (ரலி), உமர் (ரலி), அபூ உபைதா (ரலி) ஆகியோர்கள் அன்ஸார்கள் கூடியிருந்த பனீ ஸஅதாவுக்கு வந்த பொழுது, அன்ஸார்கள் ஏறக்குறைய ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின் உள்ள ஆட்சித்தலைவராகத் தேர்வு செய்து விடக் கூடிய நிலைக்கு வந்து விட்டார்கள். அவரது பெயரை அறிவிப்பது ஒன்றே இறுதியாக இருந்தது. அப்பொழுது, அவர்களிடையே உரை நிகழ்த்த ஆரம்பித்த அபுபக்கர் (ரலி) அவர்கள், குறைஷிகள் மக்காவின் பாதுகாவலர்களாக உள்ளார்கள், எனவே இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின் வரக் கூடிய ஆட்சியாளர் குறைஷிகளில் இருந்து தான் வர வேண்டும் என்று கூறினார். இன்னும் அன்ஸார்களை முன்னோக்கியவர்களாக கூறினார்கள் :

ஓ என்னருமை அன்ஸாரித் தோழர்களே, உங்களது முன்னுரிமையை யாரும் மறுத்து விட முடியாது, அல்லது இஸ்லாத்திற்கு நீங்கள் செய்த சேவையையும் யாரும் நிராகரித்து விட முடியாது. அல்லாஹ்வே தனது மார்க்கத்திற்கும், இன்னும் தனது தூதருக்கும் உதவியாளர்களாக உங்களைத் தேர்வு செய்துள்ளான். இறைத்தூதர்(ஸல்) அவர்களையும் மக்காவிலிருந்து கிளப்பி உங்களிடம் வர வைத்திருக்கின்றான், இன்னும் அவரது தோழர்களிலும், அவரது மனைவியர்களிலும் நீங்களே முன்னணியில் இருக்கின்றீர்கள். இருப்பினும், அந்த முன்னணித் தோழர்களுக்கு அடுத்துத் தான் உங்களது தகுதி நிலை உள்ளது. எனவே, ஆட்சித் தலைவர் பொறுப்பானது குறைஷிகளுக்குச் செல்வதே நியாயமானதாக இருக்கும். உங்களது நிலையில் உறுதியைக் கடைபிடிக்காது, சற்று தளர்வோடு விட்டுக் கொடுத்து செயல்படுங்கள், எந்த விஷயத்திலும் உங்களைக் கலந்தாலோசிக்காது நாங்கள் செயல்பட மாட்டோம் என்றும் கூறினார்கள்.

ஆனால், இந்த உரை அன்ஸார்களைத் திருப்திப்டுத்தவில்லை. ஹபாப் பின் மன்தர் (ரலி) என்ற அன்ஸாரித் தோழர் எழுந்து, தலைமைத்துவம் அன்ஸார்களைச் சார்ந்தது, அதனை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறினார். இறுதியாக, இப்படி வேண்டுமானால் ஒன்று செய்து கொள்ளலாம், எங்களில் ஒருவரும், உங்களில் ஒருவரும் தலைவராக இருந்து கொள்ளலாம் என்றார்கள்.

இவ்வாறு இரண்டு தலைவர்கள் இருப்பது நமக்குள் பிரிவினையை உண்டு பண்ணி விடும், இன்னும் இது இஸ்லாத்திற்கு உகந்ததுமன்று என்று உமர் (ரலி) அவர்கள் கருத்துக் கூறினார்கள். இஸ்லாம் ஓரிறையையும், ஒரு நபியையும், ஒரு மறையையுமே அடித்தளமாகக் கொண்டுள்ளது. இந்த அடிப்படையில் முஸ்லிம் உம்மத்தானது ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டு இயங்குவது தான் சிறந்தது என்று கூறினார்கள். முஹாஜிர்களில் இருந்து ஒரு தலைவரையும், அன்ஸார்களிலிருந்து ஒரு தலைவரையும் தேர்ந்தெடுத்துக் கொள்வது என்ற முடிவுக்கு நாம் வந்தோமானால், பிற்காலத்தில் ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கூட பிரச்னை எழ வாய்ப்பிருக்கின்றது. இவ்வாறான பல தலைமைத்துவத்தின் கீழ் செயல்பட ஆரம்பித்தோமானால், இஸ்லாம் அழிவுப் பாதையை நோக்கித் தான் செல்லும் நிலை ஏற்பட்டு விடும். இஸ்லாத்தின் நன்மையைக் கருத்தில் கொண்டு நாம் செயல்படுவோமானால், நம்மில் ஒரே ஒரு தலைவர் மட்டுமே இருக்க வேண்டும், அந்த தலைவரும் கூட குறைஷிக் குலத்திலிருந்து தான் தேர்வு செய்ய வேண்டும், ஏனெனில் அதுவே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குலமுமாகும் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்களுக்கும், ஹபாப் (ரலி) அவர்களுக்கும் இடையே சூடான வாக்குவாதங்கள் நடைபெற்ற தன் பின்னர், அபுபக்கர் (ரலி) அவர்கள் மீண்டும் பேச ஆரம்பித்தார்கள் :

தலைமைத்துவத்திற்கு நாங்கள் குறைஷிகளில் ஒருவரை முன்னிறுத்துவது என்பது எங்களது சுயநலத்திற்காக அல்ல. இஸ்லாத்தின் ஒருமைப்பாட்டைக் கருதியே இந்த முடிவுக்கு வந்துள்ளோம். எங்களது நோக்கம் தூய்மையானது என்பதை உறுதிப்படுத்துவதற்காக, கொல்லைப் புறமாக வந்து தலைமைப் பதவியை அபகரிப்பதற்கு நான் திட்டமிட மாட்டேன் என்று உறுதி கூறிக் கொள்கின்றேன். இங்கே உங்கள் முன் உமரும், அபூ உபைதாவும் நிற்கின்றார்கள். இவர்களில் ஒருவரை நீங்கள் தேர்வு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.

இது அன்ஸார்களிடையே மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸைத் பின் தாபித் (ரலி) என்ற முன்னணி அன்ஸாரித் தோழர் எழுந்து,

உண்மையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஹாஜிர்களில் ஒருவராக இருக்கின்ற காரணத்தினால், தலைவரையும் அவர்களிலிருந்தே தேர்வு செய்ய வேண்டும். இறைவன் நம்மை உதவியாளர்களாகத் தான் தேர்வு செய்துள்ளான், இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னரும் உதவியாளர்களாகவே, எவ்வாறு நாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு உதவினோமோ அதுபோலவே உதவியாளர்களாகவே இருப்போம் என்று கூறினார்கள்.

அவரது கருத்தை ஆமோதிக்கும் வகையில் இன்னொரு அன்ஸாரித் தோழரான பஷீர் பின் ஸஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : என்னருமை அன்ஸார்களே..! இறைநிராகரிப்பாளர்களை எதிர்த்து நாம் போர் புரிந்தோம், மார்க்க விகாரங்களில் முன்னணியில் இருந்தோம் என்பதனை இட்டு நம்முடைய தகுதியை முன்னிறுத்துவோமானால், இது அல்லாஹ்வின் திருப்பொருதத்திற்காக நாம் அத்தகைய தியாகத்தில் ஈடுபட்டோம் என்ற நோக்கத்திற்கு எதிரானது, இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு கட்டுப்பட்டு நடந்தோம் என்பதற்கும் முரணானது. நமது தியாகத்தை சுயநல நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகப் பயன்படுத்தலாகாது. நமக்குக் கிடைக்க வேண்டிய கூலி அல்லாஹ்வினடத்தில் பெற்றுக் கொள்வோம். ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிகளில் இருந்தே வந்தார்கள், எனவே தலைமைத்துவத்திற்கான உரிமை கோருவதில் அவர்களுக்கே முன்னுரிமை இருக்கின்றது என்று கூறி விட்டு, இந்த விஷயத்தில் நாம் தர்க்கம் செய்வது நல்லதல்ல என்று கூறி உரையை முடித்தார்கள்.

இப்பொழுது அன்ஸார்களின் கருத்தை அறிவதற்காக அனைவருடைய எதிர்பார்ப்பும் அன்ஸார்களை நோக்கியே இருந்தது, அன்ஸார்கள் இப்பொழுது குறைஷிகளில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்யும் மனநிலைக்கே வந்து விட்டவர்கள் போல மௌனமாக இருந்தார்கள். பின்னரும் அபுபக்கர் (ரலி) அவர்கள் அங்கு கூடியிருந்தவர்களிடையே, உங்களுக்கு முன் உமரும், அபூ உபைதா வும் நிற்கின்றார்கள், இவர்களில் ஒருவரை நீங்கள் தேர்வு செய்யுங்கள் என்று கூறினார்கள்.

எழுந்த நின்ற உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் ..,

ஓ.. அபுபக்கர்..! உங்களை விட நானோ அல்லது அபூ உபைதாவோ எந்த வகையில் சிறந்தவர்கள்..!

குகையில் இரண்டாவது மனிதர் நீங்கள். ஹஜ்ஜிற்கான பயணக் குழுவிற்கு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றீர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சுகவீனம் அடைந்த பொழுது உங்களை தொழுகைக்கான இமாமாக முன்னிறுத்தினார்கள். எங்கள் அனைவரையும் விட நீங்கள் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் நெருங்கி உற்ற தோழராக இருந்தீர்கள், எனவே நீங்கள் தான் எங்களது மிக விருப்பத்திற்குரிய நபர் என்று கூறி விட்டு, உங்களது கைகளை நீட்டுங்கள், நாங்கள் உங்களை எங்களது தலைவராகத் தேர்வு செய்து விட்டோம் என்பதனை உறுதிப்படுத்த சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும் என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்கள்.

அபுபக்கர் அவர்களே ம்.. எழுந்திருங்கள் என்று கூறி, அவரது கரங்களை முதன் முதலாகப் பற்றிப் பிடித்து, ஆட்சித்தலைவராகத் தேர்வு செய்திருப்பதனை உறுதிப்படுத்துமுகமாக உமர் (ரலி) அவர்கள் முதன் முதலாக சத்தியப்பிரமாணம்; செய்து, அதனை ஆரம்பித்து வைத்தார்கள். அதன் பின்னர் ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்களைத் தவிர அனைத்து அன்ஸார்களும் வந்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.

முதல் கலிஃபா அபுபக்கர் (ரலி)

இறைத்தூதர் (ஸல்) அவர்களை நல்லடக்கம் செய்த மறுநாள், நபித்தோழர்கள் அனைவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களது பள்ளியில் ஒன்று கூடினார்கள்.

அப்பொழுது அங்கு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்கள் :

இறைநம்பிக்கையாளர்களே..! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார் என்று யார் சொன்னது என்று நான் உங்களிடம் கூறினேன், நான் சொன்னது சரியானதன்று, அது குறித்து நான் அச்சப்படுகின்றேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறக்காமல் நம்மிடையே வாழ்ந்து வரக் கூடியவர் என்தபதற்கான எந்த ஆதாரமும் திருமறைக் குர்ஆனில் இல்லை. இன்னும் அவர்களும் கூட தான் மரணிக்காது எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியவன் என்று நம்மிடம் கூறவும் இல்லை. ஆனால், அவர் நம்மிடையே எப்பொழுதும் வாழ்ந்து நமக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பார்கள் என்றே நான் கருதினேன். ஆனால் நான் நினைத்தது தவறானது. இறைமறை கூட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கக் கூடியவர்களே என்று தான் கூறுகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனிடமிருந்தே வந்தார்கள், அவனிடமே திரும்பச் சென்று விட்டார்கள். அவர் மீது பொறுப்புச் சுமத்தப்பட்ட பணியை நிறைவு செய்தவர்களாக இறைவனிடம் மீண்டு விட்டார்கள். இறைவன் நம்முடைய மார்க்கத்தைப் பூரணப்படுத்தி விட்டான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலமாக அவன் நமக்கு வேதத்தை வழங்கி இருக்கின்றான், இன்னும் அதன் வழியாக அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களை வழி நடத்துவான். நம்முடைய பணி என்னவென்றால், நம்முன் இருக்கின்ற இந்த இறைமறைக் குர்ஆனைப் பற்றிப் பிடித்து வாழ்வது தான். நாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களை இழந்து விட்டோம். ஆனால், இறைத்தூதர் (ஸல்) அவர்களோ ஒரு செய்தியை அறிவிக்கும் தூதராகவே வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த செய்தியை நம்மிடையே அறிவித்தார்கள், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணி நிறைவேறியதன் பின்னர் தன்னுடைய எஜமானனை நோக்கிச் சென்று விட்டார்கள். அவர்கள் கொண்டு வந்த செய்தியான வேதம் - திருமறைக் குர்ஆன் நம்மிடையே இருக்கின்றது. அல்லாஹ்வை தன்னுடைய ரப்பாக ஏற்றுக் கொண்டுள்ளவர்கள் அறிந்து கொள்ளட்டும், அவனே மரணம் என்பதே அணுகாத நீடித்து வாழ்பவன், மரணம் என்பதே அவனுக்குக் கிடையாது. இறைத்தூதர் (ஸல்) அவர்களோ மரணத்தைச் சந்திக்கக் கூடிய மனிதராகவே வாழ்ந்தார்கள், தன்னுடைய எஜமானனை நோக்கிச் சென்றும் விட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழித்தடத்தை நாம் பின்பற்ற வேண்டும், அவர்களது பூத உடலன்றி அவர்களது வழிகாட்டலைக் கொண்டு நம்முடைய வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது அவர்கள் உயிரோடு இல்லாத நிலையில், அவர்கள் விட்டுச் சென்ற தலைமைத்துவப் பணியை நிறைவேற்றி நமக்கு வழிகாட்டுவதற்கு ஒரு தலைமை தேவை. இந்த வகையில் அபூபக்கரை விடச் சிறந்தவர் நம்மில் யார் இருக்கின்றார், அவரே இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாள் முழுவதும் உடன் வந்த நண்பர், அந்தக் குகையில் தஞ்சமடைந்த இருவரில் ஒருவராக அல்லாஹ் அவரையே தேர்ந்தெடுத்தான். இறைநம்பிக்கையாளர்களே..! எங்கே எழுந்திருங்கள்..! அபுபக்கர் (ரலி) அவர்களுக்கே நீங்கள் சத்திப்பிரமாணம் செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்கள்.

தனது உரையை நிறைவு செய்த பின்னர், அபுபக்கர் (ரலி) அவர்களை எழுந்திருக்கச் செய்து மிம்பரில் ஏறி அமரும்படிக் கூறினார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களும் மிம்பரின் மீது ஏறி அமர்ந்தார்கள், அதுவும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வழக்கமாக அமரும் படியை விட்டும் ஒரு படி கீழாக இறங்கி அமர்ந்து கொண்டார்கள். இப்பொழுது அங்கிருந்த அனைவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்கள்.

இதனை அடுத்து உரை நிகழ்த்த ஆரம்பித்தார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்..,

இறைவனைப் புகழ்ந்து விட்டு, என்னுடைய மக்களே..! இறைவன் மீது சத்தியமாக இந்தப் பதவிக்காக இரவிலும் சரி அல்லது பகலிலும் சரி.., நான் என்றுமே குறுக்கு வழியில் செயல்பட்டது கிடையாது, இதனை விரும்பியதும் கிடையாது, இன்னும் இந்தப் பதவியை வேண்டி இறைவனிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரார்த்தித்ததும் கிடையாது. ஆனால், சில வேண்டத்தகாத விளைவுகள் ஏற்பட்டு விடுமோ என்று தான் நான் அஞ்சுகின்றேன். இப்பொழுது என் மீது நீங்கள் மிகப் பெரிய சுமையைச் சுமத்தியுள்ளீர்கள், இது என்னுடைய சக்திக்கு அப்பாற்பட்டது, இறைவனுடைய உதவியின்றி என்னால் இதனை நிறைவு செய்ய இயலாது. இந்த இக்கட்டான கால கட்டத்தில் என்னை விட சக்தி வாய்ந்ததொரு மனிதரைத் தான் இந்த இடத்தில் நான் பார்க்க விரும்பினேன் என்று கூறினார்கள்.

சந்தேகமில்லாமல், இப்பொழுது நான் உங்களால் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பினும், நான் உங்களை விடச் சிறந்தவனல்லன். நான் நேர்வழியில் இருப்பதற்கு எனக்கு நீங்கள் உதவுங்கள், நான் தவறிழைக்கும் பொழுது என்னை நீங்கள் நேர்வழிப்படுத்துங்கள், சீர்திருத்துங்கள். சத்தியம் என்பது அமானிதம் போன்றது, பொய் என்பது அபகீர்த்தியானது.

உங்களில் பலவீனர்கள் என்னிடம் கடுமையைக் காட்டட்டும், அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்படும் வரை.., இன்னும் உங்களில் வலிமையானவர்கள் என் மீது இரக்கம் காட்டட்டும்.

அல்லாஹ்வின் பாதையில் போராடுவதனின்றும் விலகி இருக்க எந்த சமுதாயத்தினாலும், ஆனால் படுபாதகக் கொலையில் ஈடுபடுவதைத் தவிர்த்து, அல்லாஹ்வின் பாதையில் போராடுவதனைக் கை விடுவதற்கு எந்த சமுதாயத்திற்கும் அனுமதி கிடையாது. எவரொருவர் மானக் கேடான விஷயத்தை செய்தாலும், அவரை சத்தியத்தின் பால் கொண்டு வரப்பட்டு இறைவனின் தண்டனையை அவர் மீது நிறைவேற்றி வைக்கப்படும்.

நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்படும் வரைக்கும் எனக்கும் கட்டுப்படுங்கள். எப்பொழுது அவர்களுக்குக் கட்டுப்படுவதனின்றும் நான் தவிர்ந்து விடுகின்றேனோ அப்பொழுதிலிருந்து நீங்களும் எனக்குக் கட்டுப்பட வேண்டாம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததன் பின் அரசு நிர்வாகம் சரியான முறையில் இயங்குவதற்கு முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகம் ஒன்று தேவை என்பது அவசியமாக இருந்தது, இப்பொழுது அது அபுபக்கர் (ரலி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் காரணமாக நிறைவேறியது.

இவ்வாறாக அபுபக்கர் (ரலி) அவர்களைக் கலிஃபாவாகத் தேர்வு செய்யப்பட்ட சம்பவத்தின் பொழுது உமர் (ரலி) அவர்கள் முக்கியப் பங்காற்றினார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் பொழுது அவர்களின் பிரதான ஆலோசகராக உமர் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



முதல் நடவடிக்கை

உஸாமா (ரலி) தலைமையில் சிரியாவின் மீது படையெடுப்பு

ஹிஜ்ரி 8 ம் ஆண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த அந்த காலகட்டத்தில், முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வந்த ரோமப்படைகளை, முஅத்தா என்ற இடத்தில் வைத்து எதிர்ப்பதற்காக உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படையைத் தயார் செய்தார்கள். இதில் மதீனாவைச் சேர்ந்த 700 இளைஞர்கள் இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சுகவீனம் அடைந்ததன் காரணமாக, இந்தப் படை மதீனாவை விட்டும் இன்னும் கிளம்பாத நிலையில் இருந்தது.

இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணித்ததன் பின்பு, அபுபக்கர் (ரலி) அவர்களும் ஆட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்பு, அபுபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்து, முதன் முதல் உத்தரவாக, உஸாமா (ரலி) அவர்களுடன் ரோமர்களை எதிர்ப்பதற்காக தயார் செய்யப்பட்ட படை கிளம்பத் தயாராகட்டும், அந்தப் படையுடன் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எவரும் மதீனாவில் தங்கக் கூடாது, அந்தப் படையுடன் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஜுர்ஃப் என்ற இடத்தில் போய் படையுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) இறந்ததன் பின்பு, மதீனாவின் சமூகச் சமநிலை பாதிக்கப்பட்டது, அமைதி அழிந்து காணப்பட்டது, புதிதாக பொய்த் தூதர்கள் பலர் தோன்ற ஆரம்பித்தார்கள். இதனை சாக்காக வைத்துக் கொண்டு, கிறிஸ்தவர்களும், யூதர்களும் திட்டமிட்ட முறையில் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில், அபூ மஸ்ஊத் (ரலி) போன்ற முன்னணி நபித்தோழர்கள், உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் இப்பொழுது ஒரு படை வெளிக்கிளம்பிச் செல்வது அவ்வளவு உகந்ததல்ல. கடுங்குளிர் நேரத்தில், ஆட்டிடயனைத் தொலைத்த ஆட்டு மந்தை போல, இப்பொழுது முஸ்லிம்களின் நிலை இருக்கின்றது. சுற்றிலும் அந்த ஆட்டைக் காவு கொள்ளக் காத்திருக்கும் ஓநாய் கூட்டத்திற்கு மத்தியில் முஸ்லிம்கள் அகப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தப் படையெடுப்பு சரிதானா? என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

ஆனால்; அபுபக்கர் (ரலி) அவர்களோ, இது என்னுடைய உத்தரவல்ல, இது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவு. என்னுடைய உயிர் எவன் கை வசம் இருக்கின்றதோ, அவன் மீது சத்தியமாக..! இந்த உத்தரவில் நான் எந்த மாற்றத்தையும் செய்ய மாட்டேன். படை புறப்படுவது என்பதுஉறுதியானது. இந்த உங்களது கருத்தில் நான் உடன்படுவதை விட, ஒரு ஓநாய் என்னைக் கவர்ந்து சென்று விடுவதையே நான் பெரிதும் விரும்புகின்றேன், நான் இந்த மதீனாவில் தன்னங்தனியாக தனித்து விடப்படினும் சரியே..! என்று கூறி முடித்தார்கள்.

சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததன் பின், படையுடன் செல்ல நியமிக்கப்பட்டவர்களை உடன் கிளம்பத் தயாராகும்படி அபுபக்கர் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். அனைத்துப் படையினரும் இப்பொழுது ஜுர்ஃப் என்ற இடத்தில் கூடி விட்டனர். படையினர் அங்கு முகாமிட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில், உமர் (ரலி) அவர்கள் மூலமாக ஒரு செய்தியை உஸாமா (ரலி) அவர்கள் கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு அனுப்பி வைக்கின்றார்கள்.

கலீஃபா அவர்களே..!

நமது படை கிளம்பியவுடன், இந்த குழப்பக்காரர்கள் கலீஃபாவையும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இடத்தையும், இன்னும் பொதுவாக மக்களையும் சூழ்ந்து தாக்கத் துவங்கி விடுவார்கள். எனவே, நீங்கள் அனுமதித்தால் நான் மதீனாவில் இருக்கவே விரும்புகின்றேன் என்ற செய்தியை அனுப்பி வைத்தார்கள்.

இந்த நேரத்தில் அங்கு கூடியிருந்த அன்ஸார்கள் இந்த ஆலோசனையை உமர் (ரலி) அவர்களின் முன்பாக வைத்தார்கள். உஸாமா (ரலி) அவர்களுக்குப் பதிலாக, அவரை விட வயதில் மூத்த அனுபவமிக்க ஒருவரை தலைமைப் பொறுப்பில் நியமிக்கலாமே என்று ஆலோசனை கூறி, இதனை அபுபக்கர் (ரலி) அவர்களிடம் தெரிவிக்குமாறு கூறினார்கள்.

உஸாமா (ரலி) அவர்களின் வேண்டுகோளுக்கு பதிலளித்த கலீஃபா அவர்கள், அவ்வாறெல்லாம் தேவையில்லை, படை புறப்படுவது என்பது நிச்சயமானது என்று கூறினார்கள்.

அதன் பின் உமர் (ரலி) அவர்கள் அன்ஸார்கள் கூறிய ஆலோசனையை கலீஃபா அவர்களிடம் முன் வைத்தபொழுது, இதனைக் கேட்ட கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் சினந்தவர்களாக..,

உங்கள் மீது அழிவு உண்டாவாதாக..! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நியமித்த ஒருவரை என்னைக் கொண்டு நீக்க முனைகின்றீர்களே..!? என்று கேட்டு விட்டு, கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் படையினரை வழியனுப்பி வைப்பதற்காக ஜுர்ஃப் என்ற இடத்திற்கு விரைந்தார்கள்.

இந்த நேரத்தில், படைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்ட உஸாமா (ரலி) அவர்கள் குதிரையில் அமர்ந்து வருகின்றார்கள். கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் நடந்துவர, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தனது குதிரையின் மீது அமராமல் அதனை நடத்திக் கூட்டி வருகின்றார்கள்.

இப்பொழுது, உஸாமா (ரலி) அவர்கள், உங்களது குதிரையை நீங்கள் ஓட்டி வாருங்கள் அல்லது என்னை நடந்து வர அனுமதியுங்கள் என்று கூறினார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் குதிரையில் ஏறியும் வர முடியாது, உங்களை இறங்கி நடக்கவும் அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டு, அல்லாஹ்வின் பாதையில் போரடக் கிளம்பியவரின் பாதங்களில் படக் கூடிய தூசி பட்டதனால் என்னுடைய அந்தஸ்து என்ன குறைந்தா போய்விடும்?

அல்லாஹ்வின் பாதையில் சேவை செய்யக்கூடிய ஒருவரின் அந்தஸ்தை 700 மடங்கை உயர்த்துகின்றான், இன்னும் 700 பாவங்களை போக்குகின்றான், 700 நன்மைகளை அவன் கணக்கில் எழுதி விடுகின்றான்.

பின்பு, படையினரின் பக்கம் திரும்பிய அபுபக்கர் (ரலி) அவர்கள், வீரர்களே..! உங்களுக்கு நான் பத்து கட்டளைகளை இடுகின்றேன். அவற்றை மனதினுள் பதித்துக் கொள்ளுங்கள்..!

மோசடியில் ஈடுபடாதீர்கள், உங்களில் தலைவருக்குக் கட்டுப்பட மறுக்காதீர்கள், உடலை அங்கவீனப்படுத்தாதீர்கள். வயதானவர்களையும், பெண்களையும் அல்லது குழந்தைகளையும் கொலை செய்யாதீர்கள். ஈச்ச மரங்களை வெட்டவோ அல்லது எரிக்கவோ அல்லது கனிதரக் கூடிய மரங்களை வெட்டவோ செய்யாதீர்கள். உணவுக்கா அன்றி ஆடு, மாடு அல்லது ஒட்டகங்களை வெட்டிக் கொல்லாதீர்கள். மடங்களில் தங்கி தங்களது இறுதிக்காலத்தைக் கழிக்கக்கூடிய மக்களை ஒன்றும் செய்யாதீர்கள், அவர்களை அவர்களது வழியிலேயே விட்டு விடுங்கள். நீங்கள் செல்லும் பாதைகளில் விதவிதமான பாத்திரங்களில் உணவு கொண்டு வரக் கூடிய மக்களைக் காண்பீர்கள். அவைகளை நீங்கள் உண்ண ஆரம்பிக்கும் பொழுது, இறைவனது திருப்பெயரை மொழிந்து கொள்ளுங்கள். இன்னும் உச்சந்தலையில் சிரைத்து, அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் முடிகளை வளர விட்டு சடை போலத் தொங்க விட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்ப்பீர்கள். அவர்களை உங்களது வாளால் தாக்குங்கள். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு முன்னேறுங்கள். எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக இன்னும் கொடிய நோயிலிருந்தும் உங்களைப் பாதுகாப்பானாக..! என்று கூறி முடித்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து 19 நாட்கள் கழித்து, ரபீஉல் ஆகிர் மாதம் இறுதியில் படை கிளம்ப ஆரம்பித்தது.

அப்பொழுது உஸாமா (ரலி) அவர்களின் பக்கம் திரும்பிய அபூபக்கர் (ரலி) அவர்கள், படைத்தளபதி அவர்களே..! உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றேன் என்றார்கள். உங்களோடு உமர் (ரலி) அவர்களை அழைத்துச் செல்லாதீர்கள், என்னுடைய உதவிக்காக அவரை இங்கே விட்டு விட்டுச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக வேண்டி உமர் (ரலி) அவர்களை மதீனாவிலேயே இருக்க அனுமதித்தார்கள், உஸாமா (ரலி) அவர்கள்.

இன்னும் இந்தப் படை கிளம்பியதன் மூலம், அரேபியாவைச் சுற்றிலும் உள்ள மக்களின் மனதில் முஸ்லிம்களைப் பற்றி அச்சத்தை ஊட்டியது. அதாவது, மதீனாவில் மிகவும் குழப்பமான நிலை நிலவும் இந்தச் சூழ்நிலையில், படை ஒன்று வெளிக்கிளம்புவது என்பது இயலாத காரியம். அப்படி கிளம்புகின்றதென்றால், முஸ்லிம்கள் மிகவும் வலிமை மிக்க நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது அர்த்தமாகும் என்று அவர்கள் மதிப்பீடு செய்து கொண்டார்கள்.



 மதீனாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள்

பனீ அஸத் என்ற கோத்திரத்தார் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிச் செல்லக் கூடிய பாதையின் ஆரம்பப் பகுதியில் சுமைரியா என்ற பகுதியில் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள். பனூ கதஃபான்கள் மதீனாவின் தெற்குப் பகுதியில் வாழ்ந்து வந்தார்கள். இன்னும் பனூ தைபா, பனூ கர்ரா மற்றும் பனூ அப்பாஸ் ஆகிய கோத்திரத்தார்கள் அப்ரக் என்ற இடத்தில் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள். இன்னும் மதீனாவிலிருந்து நஜ்து நோக்கிச் செல்லும் பாதையின் ஆரம்ப எல்லையில் இருந்த துல் கிஸ்ஸா என்ற இடத்தில் பனூ துனையன் என்ற கோத்திரத்தார்கள் மிகுதியாக வாழ்ந்தார்கள்.

உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் சிரியாவை நோக்கிப் படைகள் சென்று கொண்டிருந்த நேரம் அது. அந்த நேரத்தில் இந்தக் கோத்திரத்தார்கள் அனைவரும் தங்களது பிரதிநிதிகளை அபுபக்கர் (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்து, ''தாங்கள் இஸ்லாத்தை ஏற்கத் தாயராக இருக்கின்றோம், ஆனால் ஸகாத்தை எங்களிடம் வசூலிக்கப்படுவதிலிருந்து எங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்”” என்ற இந்த நிபந்தனை முன் வைத்தனர்.

இந்த நிலையில் அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது தோழர்களிடம் இது குறித்து கலந்தாலோசனை செய்த பொழுது, கலிஃபா அவர்களே..! இப்பொழுது நமக்கு பல பக்கங்களிலிருந்தும் நெருக்குதல்கள் அதிகரித்து விட்டன, முஸ்லிம்கள் பல பக்கங்களிலிருந்தும் ஆபத்தை எதிர்நோக்கிய வண்ணம் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களது கோரிக்கையை நாம் ஏற்றுக் கொண்டு அவர்களை இஸ்லாத்திற்குள் இணைத்துக் கொண்டால், இஸ்லாத்திற்கு எதிராகத் தோன்றியுள்ள ஆபத்துக்களும், பிரிவினைகளும் சற்று குறைந்தது போலிருக்குமல்லவா என்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சற்று முன் தான் மரணமடைந்திருந்தார்கள், இந்த நிலையில் இஸ்லாத்தை விட்டும் பல கோத்திரத்தார்கள் வெளியேறியும், பொய்த்தூதர்கள் உருவாகியும் வந்த காலகட்டமது. இந்த நிலையில் சிலர், 'நாங்கள் தொழுகின்றோம், ஆனால் ஸகாத்தைக் கொடுக்க முடியாது” என்றார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள், ஓ.. கலிபா அவர்களே..! இவர்களிடம் சமாதானமான முறையில் நடந்து, நடுநிலைப் போக்கைக் கைக் கொள்ளுங்களேன் என்றார்கள்.

அதற்கு, உமரே..! நான் உங்களது உதவியை எதிர்பார்க்கின்றேன், உண்மையில் நீங்கள் அதில் உறுதியாக இருப்பதையும் நான் விரும்புகின்றேன். உமரே..! அந்த ஜாஹிலிய்யாக் காலத்தில் நீங்கள் கண்டிப்பானவராக இருந்தீர்கள். அந்தக் கண்டிப்பும், கடின சித்தமும் இப்பொழுது இல்லாமல் போனதேன்? இஸ்லாம் வலியுறுத்தும் அம்சங்களை மறந்து விட்டு நான் எப்படி சமாதானமான போக்கைக் கைக் கொள்ள முடியும்? இறைவனும், அவனது தூதரும் தீர்மானித்து விட்டதொரு விஷயத்தில், அவர்கள் இஸ்லாத்திற்குள் வர வேண்டும் என்பதற்காக உங்களுடைய அறிவுரையை நான் எற்றுக் கொண்டு ஸகாத் வரியை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து நான் விதிவிலக்களிக்க வேண்டும்..? இந்த விஷயத்தில் அல்லாஹ்வும், அவனது தூதரும் தெளிவாகவே கூறியிருக்க, சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அதில் நாம் சமாதானம் செய்து கொள்ள வேண்டுமா? என்னே வேதனை.., அல்லாஹ்வினுடைய தூதர் இறந்து விட்டார்கள், அவர்கள் மூலமாக கிடைத்துக் கொண்டிருந்த இறைச் செய்தியும் நின்று போய் விட்டது.

அல்லாஹ்வின் தூதரினுடைய பிரதிநிதி என்ற வகையில், அவர்கள் எதனைக் கொண்டு உத்தரவிட்டார்களோ அதனை செயல்படுத்துவதைத் தவிர வேறொரு பணி என்மீது இல்லை. நான் இஸ்லாமியச் சட்டங்களை அமுல்படுத்துகின்றவனேயன்றி, அதனை மாற்றியமைப்பதற்கோ அல்லது திருத்தியமைப்பதற்கோ உரிமை படைத்தவனல்லன் என்று கூறினார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.

இதனைக் கேட்ட உமர் (ரலி).., அபுபக்கரே..! உங்களை நான் பாராட்டுகின்றேன், எனது முழு ஒத்துழைப்பையும் உங்களுக்கு நான் வழங்குகின்றேன் என்று கூறினார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்களது பதிலுக்காக அந்தக் கோத்திரத்துப் பிரதிநிதி காத்திருந்தார்கள். உமர்(ரலி) அவர்களிடம் செய்து கொண்ட ஆலோசனைக்குப் பின்னர், ''இஸ்லாத்தை நீங்கள் எப்பொழுது ஏற்றுக் கொள்கின்றீர்களோ, அப்பொழுதிலிருந்து அது வலியுறுத்தும் அம்சங்களையும் நீங்கள் கடைபித்தாக வேண்டியது கட்டாயமாகும். இஸ்லாத்தில் ஒருகால், ஜாஹிலிய்யத்தில் ஒருகால் என்று வைத்துக் கொண்டிருக்க முடியாது. உங்களது மன இச்சைகளுக்குத் தகுந்தமாதிரி இஸ்லாத்தின் சில அம்சங்களை ஏற்றுக் கொண்டு, சில அம்சங்களை ஒதுக்கித் தள்ளி விட முடியாது. ஒன்று நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், அல்லது இஸ்லாத்திற்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் அதன் அடிப்படைச் சட்டங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு இன்னொன்றை விட்டு விடுவது என்ற 'விட்டுக் கொடுத்துப் போவது” என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி விட்டார்கள். இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று ஸகாத், அதனை நீங்கள் கொடுக்க மறுத்தால் இஸ்லாத்தினை விட்டும் வெளியேறிவராவீர்கள். இஸ்லாத்தின் அம்சங்கள் என்னவென்பதை விளக்கி விட்டு இறுதியாக அந்த தூதுக் குழுவிடம் உறுதியான குரலில் கூறினார்கள் :

நான் ஏற்கனவே உங்களுக்கு அளித்திருக்கும் விளக்கத்தின் அடிப்படையில், ஸகாத் தைப் பொறுத்த விரையில் ஒட்டகத்தின் மூக்கணாங் கயிறு அளவுக்கு நீங்கள் ஸகாத் கொடுக்க வேண்டும் என்ற நிலை இருப்பின், அல்லாஹ்வின் தூதரது கலிஃபா என்ற அந்தஸ்தில் இருக்கும் நான், அதனை உங்களிடமிருந்து வசூலிப்பதற்காக உங்கள் மீது போரிடுவதும் கூட என்மீது கடமையானதாகும், அதனால் எத்தகைய பாதகங்கள் விளைந்தாலும் சரியே..! என்று கூறினார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் வந்திருந்த பிரதிநிதிகளிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது, உமர் (ரலி) அவர்கள் அங்கு தான் இருந்தார்கள். கலிபா அவர்களின் அறிவிப்பைக் கேட்ட அந்தப் பிரதிநிதிகள், எங்கே உங்களது சவாலை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம், உங்களால் முடிந்ததைப் பாருங்கள் என்று கூறி விட்டுச் சென்று விடுகின்றார்கள்.

மதீனாவில் இருந்த முக்கியமான நபர்கள் அடங்கியதொரு படை இப்பொழுது தான் மதீனாவை விட்டுக் கிளம்பி சிரியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. உஸாமா (ரலி) அவர்களின் படைகள் இப்பொழுது நாட்டை விட்டும் வெளியே இருந்து கொண்டிருக்கின்ற நிலையில், மதீனாவைச் சுற்றியுள்ள கோத்திரங்களிலிருந்து வரும் எதிர்ப்பை எப்படிச் சமாளிப்பது என்ற கேள்வி எழுந்தது.

சவால் விட்டுப் போனவர்கள், போன மாத்திரத்திலேயே அவர்களுக்குள் கலந்தாலோசனை செய்து மதீனாவின் மீது படையெடுக்க இது தான் தருணம் என்று படைகளோடு கிளம்பி வந்து, ஒருநாள் இரவில் மதீனாவின் மீது போர் தொடுக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.

நடக்கப் போகின்ற விபரிதங்களின் விளைவுகள் எவ்வாறு இருக்குமென்பதை அபுபக்கர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் உணர்ந்தே இருந்தார்கள். எனவே மதீனாவின் பாதுகாப்பிற்கான முன்நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்கள். மதீனாவில் இருக்கின்ற ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவுக்கு பாதுகாப்புப் பணிக்கான ஆயத்தங்களோடு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. முஸ்லிம்கள் தங்களால் இயன்ற அத்தனை தயாரிப்புகளோடு எதிரிகளைச் சந்திக்கத் தயாரானார்கள். எதிரிகள் கிழிந்த தண்ணீர்ப் பைகளை முஸ்லிம் படைகளின் மீது எறிந்தார்கள், அதன் காரணமாக முஸ்லிம்கள் பயணித்து வந்த ஒட்டகங்கள் பீதியடைந்து மதீனாவை நோக்கி ஓட ஆரம்பித்தன. முஸ்லிம்களை எதிர்ப்பதில் அவர்கள் ஆரம்பித்தில் வெற்றி பெற்றனர்.

இப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் முஸ்லிம் படைகளுக்கு தலைமையேற்று முன்னே சென்றார்கள். இரவின் கடைசி நேரத்தில், முஸ்லிம் படைகள் நகருக்கு வெளியே வந்து எதிரிகளின் மீது கடுமையாக தாக்குதலைத் தொடுத்தார்கள். இதனை எதிர்பார்க்காத எதிரிகள் என்ன நடக்கின்றது என்பதையே அறியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அவர்களிடையே குழப்பம் மிகைத்தது. விடுவதற்கு முன்பாகவே எதிரிகள் வேறருக்குப்பட்ட நிலையில், மதீனாவிற்கு நேரவிருந்த மிகப் பெரிய ஆபத்து நீங்கியது. முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே..!



உமர் (ரலி) மற்றும் காலித் பின் வலீத் (ரலி)

காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த வீரர் என்பதில் உமர்(ரலி) அவர்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, ஆனால் சில நடத்தை விஷயத்தில் காலித் பின் வலீத் (ரலி) அவர்களோடு உமர் (ரலி) அவர்கள் முரண்பட்டார்கள்.

தலீஹா என்ற கோத்திரத்தார்களை புஸுகா என்ற இடத்தில் வைத்து வெற்றி பெற்றதன் பின்னர், காலித் பின் வலீத் அவர்கள் பனீ தமீம் என்ற கோத்திரத்தார்கள் வாழுகின்ற பெர்ஸியன் வளைகுடா பகுதியை நோக்கி தன்னுடைய படைகளைத் திருப்பினார்கள். இந்த பனீ தமீம் கோத்திரத்தார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின்பு, இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்களோடு இவர்களும் இணைந்து கொண்டார்கள் இந்த கோத்திரத்தவர்களில் ஒருசிலர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய போதும், இன்னும் சிலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நிலையில் தான் இருந்தார்கள்.

பனீ தமீம் கோத்திரத்தவர்களது தலைநகரான பதஹா வை நோக்கி தனது படையை நகர்த்தினாகள் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள். இந்த படையெடுப்பிற்கு கலிஃபா அவர்களது உத்தரவு இல்லாததால், படையில் இருந்த சிலர் பனீ தமீம் களுக்கு எதிராக படையெடுப்பு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆனால் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் அவர்களது எதிர்ப்பைப் பொருட்படுத்தாது படையை நகர்த்தினார்கள்.

எந்த ஒரு கூட்டத்தார் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்களோ, அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் கூடாது என்று கலிஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் கடுமையான உத்தரவு இட்டிருந்தார்கள். அவர்கள் இஸ்லாத்தை எதிர்க்கும் போது மட்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்கள். நடவடிக்கைக்கு முன்பதாக ஒரு யுக்தி பின்பற்றப்பட்டது. அதாவது, எதிரிகள் என்று கருதுபவர்களது குடியிருப்புகளுக்குச் சென்றவுடன், பாங்கு சொல்வது. அந்தப் பாங்கிற்கு பதில் சொல்லு முகமாக பள்ளியை நோக்கி விரைபவர்கள் முஸ்லிம்களாகவும், அதனைப் பொருட்படுத்தாதவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று கணிக்கப்படும். அத்தகையவர்கள் எதிரிகளாக கருதப்படுவார்கள்.

காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் பனீ தமீம் களது இருப்பிடத்தினை அடைவதற்கு முன்பாகவே பனீ தமீம்களது குழுவொன்று அவரது வருகையை எதிர்பார்த்து நகர்ப்புறத்துக்கு வெளியே காத்திருந்தது. முஸ்லிம்களுக்குச் செலுத்துவதற்காகவென்றே தங்களுடன் கணிசமான அளவு பணத்துடன் அவர்கள் வந்திருந்தனர். காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னரும், அந்தக் கோத்திரத்தார்களது இருப்பிடத்தை நோக்கி முன்னேறினார்கள். அங்கு சென்று சேர்ந்த பின்னரும், காலித் பின்வலீத் (ரலி) அவர்களது படையை எதிர்ப்பதற்கென்று எவரும் வரவில்லை. காலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்கு குழப்பமே மிஞ்சியது. ஒன்று அவர்கள் எதிர்க்க வேண்டும் அல்லது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். எதுவுமே அங்கு நடைபெறவில்லை.

பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் பனீ தமீம்களது தலைவர் மாலிக் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவியை சிறைபிடித்தார்கள். பின்பு, மாலிக் அவர்களது மனைவியை காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் மணந்து கொண்டார்கள். இந்த விஷயம் படையிலிருந்து சில முஸ்லிம்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. மாலிக் ஒரு முஸ்லிமாக இருக்கின்ற நிலையில் அவரை கொலை செய்தது சரியல்ல. அவரைக் கொலையும் செய்து விட்டு, அவரது மனைவியை மணந்து கொண்டது இஸ்லாத்திற்கு முரணானது என்று அவர்கள் வாதாட ஆரம்பித்ததோடு, அவ்வாறு எதிர்த்தவர்கள் படையிலிருந்து விலகி மதீனாவுக்குத் திரும்பி வந்து, கலிஃபா அவர்களிடம் புகார் செய்தார்கள். அவ்வாறு புகார் செய்தவர்களில் ஒருவர் அபூகதாதா (ரலி) ஆவார்கள்.

இதற்கிடையில் மாலிக் அவர்களது சகோதரர் இந்த அபூகதாதா (ரலி) அவர்களோடு மதீனாவிற்கு வந்து தனது சகோதரருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து, அபுபக்கர் (ரலி) அவர்களிடம் புகார் செய்தார்கள். ஏற்கனவே, மாலிக் ன் சகோதரர் முஃதமீம் மிகச் சிறந்த பாடகர். அவரது பாடல்கள் பிரபல்யமானவை. அவர் தனது சகோதரருக்கு இழைக்கப்பட்ட கொடுமையை பாடல் வரிகளாகவே வடித்தார். அது மதீனா மக்களின் உள்ளங்களை அசைத்தது.

காலித் (ரலி) அவர்கள் மதீனாவிற்கு வந்து நடந்தவைகள் பற்றி விளக்கமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களினால் 'அல்லாஹ்வின் வாள்” என்ற பெயர் சூட்டப்பட்ட நான், எப்படி எனது வாளை ஒரு முஸ்லிமிற்கு எதிராகப் பிரயோகிப்பேன்? என்றார் காலித் பின் வலீத் (ரலி). காலித் (ரலி) அவர்களின் இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். இந்த நிலையில், இஸ்லாத்திற்கு எதிராக போர் அறிவித்து முஸ்லிம்களை இரண்டு முறை தோற்கடித்திருந்த முஸைலமாவுக்கு எதிராக நடக்கவிருக்கின்ற போரில் காலித் பின் வலீத் (ரலி)அவர்களது சேவை தேவையாக இருப்பதால், அபுபக்கர் (ரலி) அவர்கள் நடுநிலைப் போக்கைக் கைக் கொண்டார்கள். இறந்த மாலிக் அவர்களது குடும்பத்தார்களுக்கு பைத்துல் மாலிலிருந்து இரத்த இழப்பீட்டுத் தொகையை வழங்கினார்கள். ஆனாலும் உமர்(ரலி) அவர்கள் இதில் திருப்தியடையவில்லை.

பின்னர் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் முஸைலமாவை எதிர்த்து யமாமா வில் போர் புரிந்தார்கள். இந்தப் போரில் முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்திருந்தாலும் முஸ்லிம்கள் கணிசமான அளவுக்கு உயிரிழைப்பைச் சந்தித்தார்கள். எதிரிகளின் தரப்பில் 14 ஆயிரம் பேர்களும், முஸ்லிம்களின் தரப்பில் 12 ஆயிரம் பேர்களும் மரணமடைந்திருந்தார்கள். முஸ்லிம்களின் தரப்பில் இறந்தவர்களில் உமர் (ரலி)அவர்களின் சகோதரர் ஸைத் அவர்களும் ஒருவர். தனது சகோதரனின் பிரிவுத் துயரால் வாட்டமுற்ற உமர்(ரலி) அவர்கள், 'யமாமாவின் திசையிலிருந்து வரும் காற்றில்.. ஸைத்.. உமது வாசனையை நான் உணர்கின்றேன்” என்று கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இதனையடுத்து மஜாஅ என்ற பனூ ஹனீஃபா கோத்திரத்து தலைவருடன் செய்து கொண்டதொரு உடன்படிக்கையில், அவரது மகளைத் தனக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதையும் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் இணைத்துக் கொண்டார்கள். இதற்கும் உமர் (ரலி) அவர்கள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

ஓ.. காலித்.. உங்களுக்கு என்ன நேர்ந்தது? உங்களைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் வீரர்கள் இரத்தம் ஆறாக ஓடிக் கொண்டிருக்க, எப்படி நீங்கள் ஒரு பெண்ணுடன் திருமணம் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று கேட்டு கடிதம் எழுதினார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.

தமாதுல் ஜன்தல் போரிலும், பனூ ஜுதி பின் ரபீஆ கோத்திரத்துத் தலைவனது மகளை மணந்து கொண்டார்கள். இதற்கும் உமர் (ரலி) அவர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்கள். உமர் (ரலி) அவர்களின் புகாரை தள்ளுபடி செய்த அபுபக்கர் (ரலி) அவர்கள்.

ஈராக்கின் முஸைய்யா என்ற இடத்தில் நடந்த போரில் அப்துல்லா மற்றும் லபித் என்ற இரண்டு முஸ்லிம்களை காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் கொலை செய்து விட்டார்கள். இரண்டு முஸ்லிம்கள் படுகொலையான இந்தச் சம்பவமும் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. உமர் (ரலி) அவர்கள் கடுமையாக கோபமடைந்ததோடு, காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று கலிஃபா அவர்களை வலியுறுத்த ஆரம்பித்தார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களோ.., எதிரிகளுக்கு மத்தியில் முஸ்லிம்கள் கலந்திருக்கும் பொழுது நடவடிக்கைகளின் பொழுது முஸ்லிம்களும் பாதிக்கப்படக் கூடும் என்று கூறியதோடு, அந்த இரண்டு பேருடைய குடும்பத்திற்கும் இரத்த இழப்பீட்டுத் தொகையை பைத்துல் மாலிலிருந்து வழங்கினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் சிறந்த ஆலோசகர்

அபுபக்கர் (ரலி) அவர்களது காலத்தில் உமர் (ரலி) அவர்கள் கலிஃபா அவர்களின் முதன்மை ஆலோசகராக திகழ்ந்தார்கள்.

ஒருமுறை அயனயா பின் ஹஸன் மற்றும் அக்ரா பின் ஹபஸ் என்ற இரண்டு கோத்திரத்துத் தலைவர்கள் இருவரும் ஒரு நிலத்தை தங்களுக்காக பெற்றுக் கொள்வதில் முறையீடு செய்தவற்காக அபுபக்கர் (ரலி) அவர்களுக்காகக் காத்திருந்தார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களும் வந்தார்கள். அவரிடம் எங்களது இருப்பிடத்திற்கு அருகில் பாறைகள் நிறைந்த எதற்கும் பயன்படாத நிலம் இருக்கின்றது. அதனைப் பண்படுத்தி எங்களது தேவைக்கு நாங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கிச் செல்வதற்காக வந்திருக்கின்றோம் என்றார்கள்.

அப்பொழுது தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் கலந்தாலோசனை செய்த அபுபக்கர் (ரலி) அவர்கள், எதற்கும் பயன்படாத நிலத்தை பண்படுத்தி பயன்படுத்திக் கொள்வது நல்லது தானே என்று அங்கிருந்தவர்கள் ஆலோசனை கூறினார்கள். எனவே, அவர்கள் கேட்டுக் கொண்டபடி அந்த நிலத்தை நான் உங்களக்குத் தருகின்றேன் என்று வாக்குறுதி அளித்து, அதற்கான ஒப்பந்த பத்திரம் ஒன்றும் எழுதப்பட்டது. அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் அங்கு இல்லாததால், அவர் வந்ததும் அவரிடமும் சாட்சிக் கையெழுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறி விட்டார்கள்.

வந்தவர்களும், உமர் (ரலி) அவர்கள் மட்டும் தானே கையெழுத்துப் போட வேண்டும், அது வெறும் ஒரு சடங்கிற்காகவே தான் இருக்கும், இந்த நிலத்தைப் பெற்றுக் கொள்வதில் நமக்கு எந்தப் பிரச்னையும் இருக்கப் போவதில்லை என்று அவர்கள் கருதிக் கொண்டார்கள். உமர் (ரலி) அவர்களும் வந்தார்கள். அவரிடம் அந்தப் பத்திரத்தைக் காண்பித்து, மேற்படி நிலத்தை எங்களுக்குத் தருவதாக அபுபக்கர் (ரலி) அவர்கள் ஒப்புதல் அளித்து விட்டார்கள், நாங்கள் உங்களிடமும் கையெழுத்துப் பெற்றுக் கொள்ளும்படி கலிஃபா அவர்கள் கூறியதால், நீங்களும் இதில் ஒரு சாட்சியாக கையெழுத்துப் போட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

அந்த ஒப்பந்தத்தைப் படித்துப் பார்த்த உமர் (ரலி) அவர்கள், இந்த ஒப்பந்தத்தில் என்னால் கையெழுத்துப் போட முடியாது என்று கூறி அதனைத் திருப்பி அனுப்பி விட்டார்கள்.

வந்தவர்கள் கடுமையான கோபத்துடன் அபுபக்கர் (ரலி) அவர்களைச் சந்தித்து, நடந்த விபரங்களைக் கூறினார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் எதுவும்பதில் கூறாது அமைதியாகஇருக்கவும், ''நீங்கள் கலிஃபாவா? அல்லது உமர் கலிஃபாவா? என்றார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள், ''உங்களது ஆட்சியாளராக இருப்பதற்கு மிகவும் சிறந்தவர் அவரே”” என்றார்கள்.

பின்னர் உமர் (ரலி) அவர்கள் கலிஃபாவின் முன்னிலையில் வந்தார்கள். வந்த ஒப்பந்தத்தை கையெடுத்திடாமல் திருப்பி அனுப்பியதன் நோக்கம் என்ன? உமரே..! என்றார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.

உமர் (ரலி).., கேட்டார்கள்.., கலிஃபா அவர்களே.., இந்த நிலம் உங்களுடைய சொத்தா, அல்லது முஸ்லிம் சமுதாயத்திற்குச் சொந்தமான சொத்தா?

இது என்னுடைய சொத்தல்ல, இது முஸ்லிம் உம்மத்திற்கான சொத்து.

பின்னர், இது முஸ்லிம் உம்மத்தின் சொத்தாக இருக்க.., நீங்கள் விரும்பியவாறு இவருக்கும் அவருக்கும் எப்படி தானமாகக் கொடுக்கலாம். அவர்கள் அதனைக் குத்தகைக்கு வேண்டுமானால் எடுத்துக் கொண்டு போகட்டும், ஆனால் அது என்றைக்குமே அரசின் பொதுச் சொத்தாகவே இருக்கட்டும் என்றார்கள்.

வந்தவர்கள் பக்கம் திரும்பிய கலிஃபா அவர்கள்.., உமர்.. உண்மையையே சொன்னார். நான் சட்டத்தை மீற முடியாது என்று கூறி விட்டார்கள்.

பின்னர் உமர் (ரலி) அவர்களின் பக்கம் திரும்பிய அபுபக்கர் (ரலி) அவர்கள், ''நான் ஏற்கனவே உம்மிடம் கேட்டுக் கொண்டது போல நீங்களே அரசின் நிர்வாகியாக .. கலிஃபாவாக ஆகி இருக்கலாம், ஆனால் நீங்கள் தான் இந்தச் சுமையை என்மீது சுமத்தி விட்டீர்கள்”” என்றார். நான் உங்களுடன் மிக நீண்ட நாட்களுக்கு இருக்க மாட்டேன், இந்தப் பொறுப்புக்களெல்லாம் விரைவாகவே உங்களது தோள்களுக்கு மாற்றப்பட இருக்கின்றன என்றார்கள்.

அபுபக்கர் (ரலி) மற்றும் உமர்(ரலி)

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கும் இடையே உள்ள பிணைப்பு எவ்வாறிருந்ததெனில், பின்னவரை ''இரண்டு போரில் இரண்டாமவர்” என்றழைப்பதுண்டு. அதனைப் போலவே அபுபக்கர் (ரலி) அவர்களுக்கும் மற்றும் உமர் (ரலி) அவர்களுக்கும் இருந்தது. அபுபக்கர் (ரலி) அவர்கள் கலிஃபாவாக பதவியேற்றுக் கொண்டதன் பின்னாள், ''இரண்டு போரில் இரண்டாமவர்” ஆக உமர் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். இரண்டு பேருக்கும் இடையே நிலவி நட்பும், பாசப் பிணைப்பும் அலாதியானவை. ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவரை சிறப்பாக நேசித்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததன் பின்னாள், உமர் (ரலி) அவர்களே கலிஃபாவாக வர வேண்டும் என்று அபுபக்கர் (ரலி) அவர்கள் விரும்பினார்கள். இருப்பினும் உமர் (ரலி) அவர்கள் முந்திக் கொண்டவர்களாக எழுந்து அபுபக்கர் (ரலி) அவர்களை கலிஃபாவாக ஆமோதித்துக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் முன் சமூகமளிக்கும் நேரங்களிலெல்லாம், ஒருபக்கம் அபுபக்கர் (ரலி) அவர்களும், மறுபக்கம் உமர் (ரலி) அவர்களும் இப்பார்கள்.

இன்னும் இருவரும் நன்மையான விசயங்களில் போட்டி போட்டுக் கொள்வார்கள். யார் யாரை முந்துவது என்ற போட்டி அவர்களிடையே காணப்படும். இது அபுபக்கர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையே நடந்ததொரு சுவாரஸ்யமானதொரு போட்டி.

சிரியாவின் எல்லையோரம் இருந்த தபூக் என்ற இடத்தின் மீது படையெடுத்துச் செல்ல இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். அந்தப் போருக்குத் தேவையான பொருளாதாரத்தை அன்பளிப்பாக வழங்குமாறு தனது தோழர்களைக் கேட்டுக் கொண்டார்கள். உமர் (ரலி) அவர்களிடம் அப்பொழுது ஒரு குறிப்பிட்டதொரு தொகை இருந்தது. சரி.. இது தான் தருணம் இந்த முறை அபுபக்கர் (ரலி) அவர்களை எப்படியாவது முந்தி விட வேண்டும் என்று உமர் (ரலி) அவர்கள் விரும்பினார்கள். வீட்டிற்குச் சென்ற உமர் (ரலி) அவர்கள் கணிசமான தொகையோடு வந்தார்கள்.

உமர் (ரலி) அவர்களைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.., உமரே..! உங்களது குடும்பத்திற்காக எதனை விட்டு வந்திருக்கின்றீர்கள் என்றார்கள். என்னுடைய செல்வத்தில் பாதியை அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கொண்டு வந்திருக்கின்றேன், அடுத்த பாதியை எனது குடும்பத்தவருக்காக விட்டு வந்திருக்கின்றேன் என்றார்கள்.

பின்னர், அபுபக்கர் (ரலி) அவர்கள் வந்தார்கள், அவரிடமும் அதே கேள்வியைக் கேட்டார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

எனது வசம் இருந்த அனைத்து செல்வத்தையும் அல்லாஹ்வுக்காகவும், அவனது தூதருக்காகவும் கொண்டு வந்து விட்டேன். எனது குடும்பத்தவருக்காக அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விட்டு வந்திருக்கின்றேன் என்றார்கள்.

இனி ஒரு போதும் அபுபக்கரை நாம் மிஞ்சி விட முடியாது என்ற முடிவுக்கு வந்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மூலமான அபூ யஃலா அவர்கள் பதிவு செய்திருக்கின்றதொரு நிகழ்வில், ''நான் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களுடனும், உமர் (ரலி)அவர்களுடனும் பள்ளியில் நுழைந்தார்கள். அவர்கள் என்னை தொழுகையில் பார்த்தவுடன், 'கேளுங்கள், பிரார்த்தியுங்கள்.., உங்களுக்கு அதனை அவன் அருட்செய்யும் வரைக்கும்” என்று கூறினார்கள். பின்னர், யாரொருவர் குர்ஆனை புதிதாகவும், உற்சாகத்துடனும் ஓத விரும்புகின்றாரோ அவர், இப்னு மஸ்ஊத் அவர்களுடன் (அவர்கள் ஓதும் முறையில்) ஓதட்டும் என்று கூறினார்கள். பின்னர் நான் வீட்டிற்குத் திரும்பி விட்டேன், என்னுடைய வீட்டிற்கு வந்த அபுபக்கர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பற்றிக் கூறிய நற்செய்தியை என்னிடம் தெரிவித்து விட்டுச் சென்றார்கள், பின்னர் உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள், அவர்கள் வந்ததற்கு முன்பதாகவே அபுபக்கர் (ரலி) அவர்கள் வந்து விட்டுப் போய் விட்டதை அறிந்து, நிச்சயமாக நன்மையான விஷயங்களில் அபுபக்கரை மிஞ்சி விட முடியாது என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கலிஃபாவாக ஆட்சிப் பொறுப்பில் அமர்வதற்கு முன்பும் கூட, மதினாவிற்கு வெளியே வந்து தேவைப்பட்டவர்களுக்கு உதவுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

மதீனாவிற்கு வெளியே ஒரு கண் தெரியாததொரு பெண் வாழ்ந்து வந்தாள், அவளுக்கு உதவுவதற்கென்று யாரும் கிடையாது. எனவே அந்தப் பெண்ணுக்கு உதவுவதற்காக அடிக்கடி சென்று வரக் கூடியவர்களாக இருந்தார்கள், அவர்கள் சென்று அந்தப் பெண்ணின் வீட்டினை அடைவதற்கு முன்பாகவே வேறு யாரோ ஒருவர் அங்கு வந்து அந்தப் பெண்ணுக்குத் தேவையான உதவிகளை வழங்கி விட்டுச் சென்று விடுவதைப் பார்த்தார்கள்.

இந்தக் கண் தெரியாத பெண்ணுக்கு நாம் உதவலாம் என்ற நன்னோக்கத்தில் இங்கு வந்தால், நமக்கு முன்பாகவே ஒருவர் வந்து உதவி விட்டுப் போய் விடுகின்றாரோ என்றதொரு விரக்திக்குத் தள்ளப்பட்டார் உமர் (ரலி)அவர்கள். சரி.., இந்த நன்மையான விஷயத்தில் நம்மை விட முந்திக் கொண்டு செயல்படுபவர் யாராக இருக்கும் என்பதையாவது நாம் கண்டு பிடித்தாக வேண்டும் என்று களத்தில் இறங்கினார் உமர் (ரலி) அவர்கள்.

ஒருநாள், வழக்கமாகச் செல்லும் நேரத்தை விட முந்திச் சென்று ஒரு மறைவான இடமாகப் பார்த்து ஒளிந்து கொண்டு வருவது யாராக இருக்கும் என்று நோட்டம் விட்டார்கள்.

உமர் (ரலி) அவர்கள் ஒன்றும் மிக அதிக நேரம் அங்கு மறைந்திருக்கவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு மனிதர் அங்கு வந்தார், அந்த பெண்ணுக்குத் தேவையான உதவிகளைச் செய்தார், அந்த மனிதர் வேறு யாரும் இல்லை, அபுபக்கர்(ரலி) அவர்களாகத் தான் இருந்தார்கள்.

இத்தகைய சமூக உதவிகளில் நம்மையும் மிஞ்சிச் செயல்படுபவர் அபுபக்கராகத் தான் இருக்கும், நிச்சயமாக அவர் என்னை விட அனைத்திலும் முந்திக் கொண்டவரே என்றார்கள்.

கலீஃபாவாக..

உமர் (ரலி) கலிஃபாவாகத் தேர்ந்தெடுக்கப்படுதல்

ஹிஜ்ரி 13 ஜமாதுல் ஆகிர் ஏழாம் நாள் குளிர்நாளில், அபுபக்கர் (ரலி) அவர்கள் குளித்த பொழுது, கடுமையான குளிரை உணர்ந்தார்கள். அதுவே காய்ச்சலாக உருவெடுத்தது. படுத்தை படுக்கையாகிப் போனார்கள், அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்த அந்த நாட்களில் உமர் (ரலி) அவர்களை அழைத்து, தொழுகைக்கு இமாமாக நின்று தலைமையேற்று நடத்தும்படி கூறினார்கள். அவர்களது உடல்நிலை மேலும் மேலும் மோசமானது, தனது இறுதிநிலை நெருங்கி விட்டதை உணர்ந்தார்கள். அப்பொழுது அங்கிருந்தவர்கள், மருத்துவரை அழைத்து வரும்படிக் கூறினார்கள். அதனைக் கேட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், ''எல்லாம் முடிந்து விட்டது”” என்றார்கள்.

தனது முடிவு அண்மித்து விட்டதை உணர்ந்து கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், தனக்குப் பின்னால் யார் ஆட்சியாளராக வர வேண்டும் என்பதைத் தேர்வு செய்து அறிவித்து விட வேண்டும். அவ்வாறில்லா விட்டால் அதுவே மக்களிடையே பிளவையும், பிரிவினையையும் உண்டு பண்ணி விடும் என்பதனை உணர்ந்தவர்களாக, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை அழைத்து, உமர் (ரலி) அவர்களை நான் தேர்வு செய்யலாம் என்று இருக்கின்றேன், தங்களது கருத்து என்னவென்று கூறுங்களேன் என்றார்கள். இதனைப் போலவே வேறு சில நபித்தோழர்களையும் அழைத்து கருத்துக் கேட்டார்கள்.

பலரது ஆலோசனையின் முடிவுகள் உமர் (ரலி) அவர்களையே கலிஃபாவாகத் தேர்வு செய்ய வேண்டும் என்றும், அவரே அதற்குப் பொருத்தமான நபராக இருப்பார் என்றும் கருத்துக் கூறினார்கள். இன்னும், உமர் (ரலி) அவர்கள் முன்கோபக்காரர், கடுமையானவர் என்ற கருத்தையும் தெரிவிக்கப்பட்டது, இன்னும் தலைமைக்குத் தேவையான நெகிழ்ந்து கொடுத்துப் போகும் போக்கும் தேவை, ஆனால் அவரால் அது இயலாதது என்றும் கருத்துக் கூறினார்கள்.



உமர் (ரலி) அவர்களின் கடுமையான போக்கு மட்டுமே தனக்கு அடுத்த கலிஃபாவாக அவரை நியமிக்கப்படுவதற்குத் தடையாக இருக்கின்றது என்பதனை அபூபக்கர் (ரலி) அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அரசின் முழுப் பொறுப்பும் அவரைச் சார்ந்து விட்டதன் பின்னாள், அவர் தானாகவே நெகிழ்ந்து கொடுக்கும் போக்கைக் கைக் கொள்வார் என்ற நம்பிக்கை அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு இருந்தது.

எனவே, அதனை மனதில் வைத்துக் கொண்டவராக அபூபக்கர் (ரலி) அவர்கள் மக்களிடம் உரையாற்ற ஆரம்பித்தார்கள் :

மக்களே..! நான் என்னுடைய சொந்த அனுபவத்தை உங்களிடம் கூறுகின்றேன், நான் உணர்ச்சி வசப்படும் பொழுதெல்லாம் உமர் (ரலி)அவர்கள் என்னை சாந்தப்படுத்தி இருக்கின்றார்கள். எனவே தான் நான் கூறுகின்றேன்.., நேரம் வரும்.., அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் உங்களிடம் நெகிழ்ந்து கொடுத்துப் போகும் போக்கைக் கைக் கொள்வார்கள் என்று கூறினார்கள்.

தலீயாஹ் என்பவர் அதனை எதிர்த்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் ஆட்சிக்கு வந்தவரே.., உமர்(ரலி) அவர்களுடைய கடும் போக்கு பற்றி நீங்கள் முற்றிலும் அறிவீர்கள், அதனை உங்களது ஆட்சியின் பொழுதும் பார்த்திருக்கின்றீர்கள், நீங்கள் எங்களிடமிருந்து விடை பெற்றுப் போனதன் பின்னர், இவர் எங்களை என்ன பாடு படுத்தப் போகின்றார் என்பதனை அல்லாஹ்வே மிக அறிந்தவன். நீங்களோ எங்களை விட்டும் நிரந்தரமாகச் செல்லக் கூடியவராக இருக்கின்றீர்கள், மிகவும் கடுமையான சித்தம் கொண்ட ஒருவரிடம் எங்களை ஒப்படைத்து விட்டுச் செல்கின்றீர்களே. நீங்கள் உங்களது முடிவினை மறுபரிசீலனை செய்யுங்கள், இது குறித்து உங்களது இறைவனிடம் நீங்கள் என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள் என்றார்.

அவரது பேச்சைக் கேட்ட அபூபக்கர் (ரலி) அவர்கள், படுத்த படுக்கையிலிருந்து தனது முழு பலத்தையும் திரட்டிக் கொண்டவராக எழுந்திருக்க முயன்றவராக.., அவரை நோக்கி..,

நீர் என்னை பயமுறுத்தாட்டுகின்றீரா? எனது இறைவனைச் சந்திக்கும் பொழுது நிச்சயாக நான் மிகவும் சந்தோசமாகச் சொல்வேன்., ''மனித வர்க்கத்தில் மிகச் சிறந்ததொரு மனிதரை எனது மக்களை நிர்வகிப்பதற்காக நியமித்து விட்டு வந்திருக்கின்றேன் என்று நான் சொல்வேன்”” என்றார்கள்.

அப்பொழுது அங்கு அலி (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர்கள் எழுந்து நின்றவராக, அபுபக்கர் (ரலி) அவர்களே.., உமரை விட்டால் இந்த ஆட்சிப் பொறுப்பிற்குச் சிறந்த மனிதர் வேறு எவருமில்லை என்றார்கள்.

தன்னை நியமிக்க வேண்டும் என்று கூறுவதற்குத் தகுதி படைத்தவராக அலி (ரலி) அவர்கள் இருந்த பொழுதிலும், அந்த இடத்தில் தன்னை முன்னிறுத்தாமல் உமர் (ரலி) அவர்களை ஆட்சித் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தியது கண்டு உளம் பூரித்தார்கள் அபூபக்கர் (ரலி) அவர்கள். அலி (ரலி) அவர்கள் தனது சுயநலத்தைப் பற்றி பாராமல், சமுதாயத்தின் நலனையே முன்னிறுத்தினார்கள். எனவே, அலி (ரலி) அவர்கள் பக்கம் திரும்பிய அபுபக்கர் (ரலி) அவர்கள் :

அலியே..! நீங்கள் மனிதர்களில் மிகச் சிறந்தவர், உங்களுக்கு முன்னர் மற்றவர்கள் எல்லோரும் சாதாரணமானவர்களே..!

உமர் (ரலி) அவர்களுக்கு ஆள் அனுப்பி வைத்து, அவரை கலிஃபாவாக நியமித்திருப்பதாக அறிவிக்கச் சொன்னார்கள்.

உமர் (ரலி) அவர்களோ.., எனக்கு இதிலெல்லாம் விருப்பமில்லை என்றார்கள். அதன் பிறகு அபூபக்கர் (ரலி) அவர்கள் சொன்னார்கள் :

ஆனால் பொறுப்பு உங்களுக்காக காத்திருக்கின்றதே. எனக்கு அடுத்ததாக மிகச் சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க உதவுமாறு இறைவனை நான் வேண்டிக் கொண்டேன், எனது தேர்வு மக்களின் ஒற்றுமையை அடிப்படையாகவும், இன்னும் முஸ்லிம் உம்மத்தின் வலிமைக்காவுமே இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.

உமர் (ரலி) அவர்களது சம்மதத்திற்குப் பின்னர், உமர் (ரலி) அவர்களை நியமிப்பதற்கான உத்தரவை தயார் செய்யும்படி உதுமான் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

உத்தரவும் தயார் செய்யப்பட்டு விட்டது, தனது மனைவியாராக அஸ்மா (ரலி) அவர்களின் உதவியோடு எழுந்து கதவருகே வந்தார்கள், அங்கே கூடியிருந்த மக்களிடம் உரையாற்ற ஆரம்பித்தார்கள். எனக்குப் பின்னர் வரக் கூடிய ஆட்சியாளராக உமர் (ரலி) அவர்களை நியமனம் செய்திருக்கின்றேன் என்று கூறியவுடன், மக்கள் அனைவரும்.. அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டோம் என்றார்கள்.

பொதுவான முறையில் அவர்களிடம் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், தனது படுக்கையில் படுத்துக் கொண்டவராக அல்லாஹ்விடம் பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள் :

இறைவா..! எனது மக்களுக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை முன்னிட்டு, சமுதாயத்தின் நலனுக்காகவே இந்த முடிவை நான் எடுத்தேன். எனது நோக்கம் என்னவென்பதை நீயே அறிந்தவனாக இருக்கின்றாய். எனது தேர்வு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் கவனமாகவே செயல்பட்டேன். இறைவா..! முஸ்லிம்களைப் பாதுகாக்கும் பொறுப்பை உன்னிடமே வழங்குகின்றேன். இறைவா..! ஆட்சியாளரை நேர்வழியில் நடத்துவாயாக..! இறைவா..! மிகுந்த இறையச்சமிக்க ஆட்சியாளராக அவரை நீ ஆக்குவாயாக.., முஸ்லிம்களுக்கு மத்தியில் அமைதியை நிலைநாட்டுபரவாகவும் அவரை ஆக்கியருள்வாயாக..!

உமர் (ரலி) அவர்களின் அறிமுகஉரை

உமர் (ரலி) அவர்கள் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளியில் கூடியிருந்த மக்களை நோக்கி உரையாற்ற ஆரம்பித்தார்கள். தனது உரையில் :

இறைநம்பிக்கை கொண்டவர்களே..! அபூபக்கர் (ரலி) அவர்கள் இப்பொழுது நம்மிடம் இல்லை. அவர் கடந்த இரண்டு வருடமாக வழிநடத்திய பின்னர், தன்னுடைய இறைவன் பக்கம் மீண்டு விட்டார். கொந்தளிக்கும் கடலுக்குள் கப்பலை மிகச் சாதுர்யமாகச் செலுத்திக் கரை சேர்த்து விட்ட மாலுமியைப் போல அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது பதவிக் காலத்தில் மிகச் சிறப்பாக, பாதுகாப்பாக இந்த சமுதாயத்தை வழி நடத்தி விட்டுச் சென்றிருக்கின்றார்கள். பொய்த்தூதர்களுக்கு எதிரான போரை மிகச் சிறப்பாக வழிநடத்தினார்கள், அதற்கு அவருக்கு நன்றி கூறிக் கொள்கின்றோம், இப்பொழுது அரேபியாவில் தலைநிமிர்ந்து இஸ்லாம் நின்று கொண்டிருக்கின்றது. இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து கொண்டே போகின்றது, நாம் இப்பொழுது பைஸாந்தியம் மற்றும் பாரசீகப் பேரரசுகளுக்கு எதிராக போர் தொடுக்கக் காத்திருக்கின்றோம்.

அபுபக்கர் (ரலி) அவர்களுக்குப் பின்னால், ஆட்சி என்ற சுமை என் மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்தப் பதவியை அடைந்து கொள்வதற்காக குறுக்கு வழியினை நான் கடைபிடிக்கவில்லை என்பதனை இறைவன் மீது சத்தியமிட்டுச் சொல்கின்றேன். என்னை விடச் சிறந்த வேறு யாராவது இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்றே நான் நினைத்தேன். நம்முடைய மக்களின் நலனை முன்னிட்டு, என்மீது பொறுப்புச் சுமத்தப்பட்டு விட்டது, என்னுடைய பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டு ஓட மாட்டேன் என்று உறுதி கூறுகின்றேன், இன்னும் என்னால் இயன்ற வரை இஸ்லாமிய வழிகாட்டுதல்களின் கீழ் என்று என்னுடைய பொறுப்புகளை நிறைவேற்றுவேன் என்று உறுதி கூறுகின்றேன்.

என்னுடைய பொறுப்பினை நிர்வகிப்பதற்கு, இறைமறையிலிருந்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வியலிலிருந்தும், அபுபக்கர் (ரலி) அவர்களின் வழிமுறைகளிலிருந்தும் நான் வழிகாட்டலைப் பெற்றுக் கொள்வேன். இந்தப் பணியை செவ்வனே நிறைவேற்றுவதற்கு உங்களுடைய உதவியை நாடுகின்றேன். நான் நேர்வழியில் சென்றால் என்னைப் பின்பற்றுங்கள். நான் நேர்வழியிலிருந்து தவறினால், என்னை நெறிப்படுத்துங்கள். எனவே, அதன் மூலம் நாம் அனைவரும் வழிதவற மாட்டோம்.

உமர் (ரலி) அவர்களின் உரையில்..,

உமர் (ரலி) அவர்கள் எப்பொழுது கலிஃபா என்ற முறையில் தனது பணிகளைக் கவனிக்க ஆரம்பித்தார்களோ, அப்பொழுது தான்.., தன்னை மக்கள் விரும்புவதை விட அதிகம் அச்சமடைவதை உணர்ந்தார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களோ மிகவும் இளகிய மனதுடையவராக இருந்தார். அவர் எப்பொழுதெல்லாம் மதீனத்துத் தெருக்களில் நடந்து வருகின்றாரோ அப்பொழுது அங்கிருக்கும் குழந்தைகள் அவரை நோக்கிப் பாசமாக வலம் வரக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆனால் உமர் (ரலி) அவர்கள் கலிஃபாவாக ஆனதன் பின்னர், உமரைத் தெருவில் கண்டதும்.., ஓ.., உமர் வருகின்றார்.. எல்லோரும் ஓடுங்கள் என்று சிறுவர்கள் அவரை விட்டும் விரண்டோடக் கூடியவர்களாக இருந்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் பதவியேற்ற முதல் வெள்ளிக் கிழமை அன்று பள்ளியில் கூடியிருந்த மக்களை நோக்கி இவ்வாறு உரையாற்ற ஆரம்பித்தார்கள் :

சகோதரர்களே.., மக்கள் என்னைக் குறித்து அச்சமடைவதாக நான் உணர்கின்றேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே உமர் மிகவும் கடினமாகவே நடந்து கொண்டார், இன்னும் அபுபக்கர் (ரலி) அவர்களது காலத்திலும் கூட கடின சித்தமுடையவராகவே நடந்து கொண்டார், இப்பொழுது அவரே கலிஃபாவாக ஆகி விட்டார், இனி அவர் எந்தளவு நம்மிடம் கடினமாக நடப்பாரோ.., ம்.. இறைவன் தான் அறிவான் என்று மக்கள் பேசி வருவதை நான் செவிமடுக்கின்றேன். என்னைப் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் தவறானது, அவ்வாறு நினைப்பவர்களின் நினைப்பும் தவறானது.

உண்மை என்னவென்றால், நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பணியாளன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகவும் இரக்க குணமுடையவர்கள், நெகிழ்ந்து கொடுத்துப் போகின்றர்கள், தாராளத் தன்மை படைத்தவர்கள். அதற்கு மாற்றமாக, நானோ உறையிலிருந்து வெளியிலெடுக்கப்பட்ட தீட்டப்பட்ட வாள் போன்ற கடினமானவன். அந்த வாளை தனக்குத் தேவைப்படும் பொழுதெல்லாம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். சில வேளை அதனைக் கொண்டு வெட்ட வேண்டியதை வெட்டினார்கள், இன்னும் சில வேளைகளில் அதனை பயன்படுத்தியும் கொண்டார்கள்.

சில வேளைகளில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய கருத்தை அங்கீகரித்துக் கொண்டார்கள். இன்னும் சில வேளைகளில் என்னுடைய கருத்தை நிராகரித்திருக்கின்றார்கள். அவர்கள் மரணமடையும் வரைக்கும் இந்தச் சமநிலை எனக்கும் அவர்களுக்கும் மத்தியில் நீடித்தது. அல்லாஹ்வுக்கே நன்றிகள் உரித்தாகட்டும்..! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னுடன் நல்லமுறையிலேயே நடந்து கொண்டார்கள். சிலவேளைகளில் அவர்கள் (ஸல்), என்னுடைய அறிவுரையை ஏற்றுக் கொண்டார்கள், சிலவேளைகளில் நிராகரித்துமிருக்கின்றார்கள், இருப்பினும் அவர்கள் அதில் எனது கருத்தை மதித்தார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்களது காலத்திலும் கூட இது தொடர்ந்தது. அபுபக்கர் மிகவும் இளகிய மனதுடையவர். ஒரு விவகாரத்தின் மறுபக்கத்தை அவருக்கு நான் கோடிட்டுக் காட்டினேன். அவர் எப்பொழுதும் என்னுடைய அறிவுரையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக் கூடியவராக இருந்தார், ஆனால் இறுதி முடிவு அவர் கையில் தான் இருந்தது. சில நேரங்களில் அவர் எனது கருத்தை அங்கீகரித்திருக்கின்றார், சில வேளைகளில் நிராகரித்துமிருக்கின்றார். அவ்வாறான சமயங்களில் நான் அமைதி காத்து வந்திருக்கின்றேன். அவர் வாழும் காலத்தில் என்னுடைய நடத்தை குறித்து திருப்தியுற்றவராகவே இருந்தார், இன்னும் அவரது வாரிசாக ஆட்சித் தலைவராக என்னை நியமித்திருக்கின்றார், இந்தப் பதவியை அடைந்து கொள்வதற்காக நான் எந்தநிலையிலும் குறுக்கு வழியினைக் கடைத்தவனில்லை என்று கூறினார்கள்.

இப்பொழுது முழு நிர்வாகமும் என்தோள்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது, என்னுடைய சகோதரர்களே.., இந்த உமரில் நீங்கள் மாற்றத்தைக் காண்பீர்கள். இனி எப்பொழுதுமே பிடிவாதமாகவும், கடிமாகவும் நான் இருக்கப் போவதில்லை. யார் கடின சித்தமாக அடக்குமுறையாளனாக நடந்து கொள்கின்றார்களோ, இன்னும் பிறரது உரிமைகளின் மீது கைவைக்கின்றார்களோ அவர்கள் மீது நான் கடினமாகவே நடந்து கொள்வேன், இன்னும் யார் யாரெல்லாம் சட்டத்தின்படி வாழ்ந்து, மார்க்கத்திற்கு தன்னை அற்பணித்துக் கொள்கின்றார்களோ அவர்கள் மீது நான் இதமாகவும், இன்னும் நெகிழ்ந்து கொடுத்தும் நடந்து கொள்வேன் என்றார்கள்.

வரம்புமீறுகின்றவர்களை நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன், யார் அடக்குமுறையாக நடந்து கொள்கின்றார்களோ.., அவர்களை இறைவேதத்தின் பக்கம் இழுத்து வருவேன். அவ்வாறான அடக்குமுறையாளர்கள் மீது நான் கடினமாகவே நடந்து கொள்வேன், ஆனால் பலவீனமானவர்களுக்குத் தூணாகவும், தாங்கும் விழுதாகவும் இருப்பேன். அத்தகையோர்கள் என்னைத் தங்களது சிறந்த நண்பனாகக் காண்பார்கள்.

தோழர்களே.., என்மீது உங்களுக்குச் சில உரிமைகள் உள்ளன, அந்த உரிமைகள் என்னவென்பதை நான் உங்களுக்கு அறிவிக்கின்றேன், அதன் மூலம் என்னை நீங்கள் இறுகப்பிடித்து, உங்களது உரிமைகளைக் கேட்டுப் பெறலாம். அவையாவன :

முதலாவதாக, சட்டத்திற்கு உட்படாத வகையில் எந்தவித வரியும், சந்தாக்களும் உங்களிடமிருந்து அறவிடப்பட மாட்டாது.

இரண்டாவதாக, அவ்வாறு பெறப்படுகின்ற வரிகள் யாவும் உங்களது நலன்களுக்காகவே செலவழிக்கப்படும்.

மூன்றாவதாக, உங்களது நிலங்களைப் பாதுகாப்பது என்பது என்மீதான தவிர்க்க முடியாத கடமையாகும்.

நான்காவதாக, உங்களது வளமான வாழ்வுக்காக பணியாற்றுவதும், உங்களது நலன்களைப் பேணுதும் என்மீதுள்ள கடமையாகும்.

ஐந்தாவதாக, நீதியுடன் நடந்து கொள்வதும் என்மீதுள்ள கடமையாகும்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே..! அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களது சுயநலன்களை மூட்டைகட்டி வைத்து விடுங்கள், முழு உம்மத்திற்காகவும் பாடுபடுங்கள். இந்த அரசைத் திறம்பட நடத்துவதற்கு நீங்கள் அனைவரும் பங்குதாரர்களே. உங்களது நல்ல அறிவுரைகள் மூலம் எனக்கு உதவுங்கள். நான் வழிதவறினால் என்னை நெறிப்படுத்துங்கள். உங்களது புத்திமதிகள் மற்றும் ஆலோசனைகள் மூலம் என்னைப் பலப்படுத்துங்கள். இஸ்லாத்தின் ஒளி வீசிப் பிரகாசிக்க வேண்டும் என்று எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.



அமீருல் முஃமினீன்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததன் பின்னர், கலிஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்களை மக்கள் 'கலீஃபத்துர் ரசூல்” - அதாவது ''இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பிரதிநிதி”” என்றழைக்கப்பட்டார்கள்.

அபூபக்கர் (ரலி) அவர்கள் இறந்ததன் பின்னர் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த உமர் (ரலி) அவர்கள் 'கலிஃபா” என்றழைக்கப்பட்டார்கள், ஆனால் அவர் யாருடைய பிரதிநிதி என்ற கேள்வி தொக்கி நிற்கின்றது. மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால்.., அவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பிரதிநிதி கிடையாது. அவர் 'கலிபத்துர் ரசூல்” என்றழைக்கப்பட்டவரின் 'கலிஃபா” பிரதிநிதியாவார்.

நான் கலிஃபா என்று என்னை அழைத்துக் கொண்டால் எனக்குப் பின்னால் தொடர்ச்சியாக வரக் கூடிய அனைவரும் 'கலிஃபா” என்றழைக்கப்படுவார்கள். இது சரியல்ல, இருப்பினும் ஆட்சிப் பொறுப்பேற்கக் கூடியவருக்கு, அவரது ஆட்சியமைப்பைப் பற்றி அறிவதற்கென்று ஒரு அடையாளம் தேவை என்பதை உணர்ந்த உமர் (ரலி) அவர்கள், இது விசயத்தில் தனக்கு உதவுமாறு அங்கிருந்தவர்களைக் கேட்டுக் கொண்டார்கள்.

ஒருநாள் லபித் பின் ராபிஆ மற்றும் அதி பின் ஹாதிம் என்ற இருவர் கூஃபாவிலிருந்து மதீனாவிற்கு வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளியைப் பார்த்து அதிசயித்து நின்ற அவர்களைக் கடந்து அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் சென்றார்கள். அவர்களிடம் தங்களது வருகையைப் பற்றி 'அமீருல் முஃமினீன்” அவர்களிடம் தெரிவித்து விடுமாறு வந்தவர்கள் கூறினார்கள்.

அவர்கள் 'அமீருல் முஃமினீன்” என்று இலக்கிய நயத்துடன் கூறிய அந்த வார்த்தை அம்ருப்னுல் ஆஸ்(ரலி) அவர்களுக்குப் பிடித்து விட்டது. லபித் மற்றும் அதி ஆகியோர்களிடம் இதனை நாம் உமர் (ரலி) அவர்களுக்குச் சூட்டினால் என்ன, இதன் விளக்கம் என்ன என்றார்கள். அதற்கு, 'நாம் அனைவரும் முஸ்லிம்கள்.., முஸ்லிம்கள் அனைவரும் முஃமின்கள், உமரோ முஸ்லிம்களின் தளபதியாக இருக்கின்றார். எனவே அவர் 'அமீருல் முஃமினீன்” என்று விளக்கமளித்தார்கள்.

உண்மையிலேயே மிகவும் அருமையான விளக்கத்தைக் கூறி என் மனதைக் கவர்ந்து விட்டீர்கள். இறைவனின் ஆசி உங்கள் மீது உண்டாகட்டுமாக..!

உடனே உமர் (ரலி) அவர்களைக் காணச் சென்ற அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள்.., அமீருல் முஃமினீன் அவர்களே..! உங்களைக் காண கூஃபாவிலிருந்து இருவர் வந்திருக்கின்றார்கள், உங்களைப் பார்க்க உங்களது அனுமதியைக் கேட்கின்றார்கள் என்று கூறினார்கள்.

'அமீருல் முஃமினீன்” என்ற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே, இந்த வார்த்தையை நீங்கள் கண்டுபிடித்தது எவ்வாறு என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள். கூஃபாவிலிருந்து வந்தவர்கள் தான் இந்த வார்த்தையைக் கூறி உங்களைப் பார்க்க அனுமதி கோரினார்கள், அவர்கள் கூறிய வாசகம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது, எனவே அதனை நான் பயன்படுத்தி உங்களை 'அமீருல் முஃமினீன்” என்றழைத்தேன் என்றார்கள்.

நம்முடைய பதவி குறித்து அழைப்பதற்காக பொறுத்தமானதொரு வாசகத்தைத் தான் தேடிக் கொண்டிருந்தோம். இதுவே நல்லதாகவும் இருக்கின்றது. இந்த வாசகம் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களைப் பார்த்து.., உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள்.

இந்த வாசகம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.., இறைவனால் அருள் செய்யப்பட்டது, நாமனைவரும் முஸ்லிம்கள், நீங்கள் எங்களது அமீர் - தளபதி என்றார்கள். இன்னும் இந்த வாசகம் மிகவும் கவர்ச்சிகரமாகவும், குறிப்பிடத்தக்கதாகவும் இருக்கின்றது என்றும் கூறினார்கள்.

பின்னர், இந்த வாசகத்தைப் பயன்படுத்துவது குறித்து மக்களிடம் கலந்தாலோசித்தார்கள் உமர் (ரலி) அவர்கள். மக்களும் அங்கீகரிக்கவே.., அன்றிலிருந்து உமர் (ரலி) அவர்களை மக்கள் 'அமீருல் முஃமினீன்” என்றழைக்கலானார்கள்.

உமர் (ரலி) அவர்களின் மாதாந்திர உதவித்தொகை

உமர் (ரலி) அவர்கள் கலிஃபா பொறுப்பினை ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக அவர்கள் வியாபாரம் செய்து அதன் மூலம் தன்னுடைய வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்து கொண்டார்கள். ஆனால் அவர்கள் கலிஃபா பொறுப்பினை ஏற்றுக் கொண்ட நாள் முதல் வியாபாரத்தில் ஈடுபட இயலவில்லையாதலால், பைத்துல்மால் என்ற பொதுநிதியத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு உதவித் தொகையைப் பெற்றுவரலானார்கள். இவர்களுக்கான உதவித்தொகையை எவ்வளவு நிர்ணயம் செய்வது என்ற ஆலோசனை முன் வைக்கப்பட்ட பொழுது, அலி (ரலி) அவர்கள் கூறினார்கள், மிகவும் வசதி படைத்தவரது செலவினங்களைப் போலவும் அல்லாமல், மிகவும் வறியவரின் செலவினைப் போலவும் அல்லாமல் நடுநிலையானதொரு தொகையை நிர்ணயம் செய்யும்படி அறிவுரை பகர்ந்தார்கள். மற்றவர்களது கருத்துக்களை விட அலி (ரலி) அவர்களின் கருத்து நிறைவாக இருந்ததால், அதனை உமர் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள், நடுநிலையானதொரு தொகை நிர்ணயம் செய்யப்பட்டது, ஆனால் எவ்வளவு என்பதை எந்த அறிவிப்புகளிலும் குறிப்பிடப்படவில்லை.

பின்னர் காலப் போக்கில் உமர் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற படித்தொகை போதாக்குறையாக இருப்பதை உணர்ந்த சில நபித்தோழர்கள்.., அலி (ரலி), உஸ்மான் (ரலி), ஸுபைர் (ரலி) மற்றும் தல்ஹா (ரலி) ஆகியோர், இது விஷயத்தில் தலையிட்டு உமர் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டனர். ஆனால், இந்த விஷயத்தை உமர் (ரலி) அவர்களிடம் நேரடியாகத் தெரிவிக்கப் பயந்தனர். எனவே, இது விஷயத்தில் உமர் (ரலி) அவர்களின் மகளும், இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவியுமான அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களை தலையிடுமாறு கோரினார்கள்.

அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் இந்த விஷயத்தை உமர்(ரலி) அவர்களிடம் எடுத்துச் சொன்ன பொழுது உமர் (ரலி) அவர்கள் கடுமையான கோபம் கொண்டார்கள், அதுமட்டுமல்ல இதனை உங்களிடம் தெரிவித்தவர்கள் யார் என்பதை எனக்குச் சொல்லுங்கள் என்றும் கேட்டு விட்டார்கள்.

பின்னர் உமர் (ரலி) அவர்கள் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களைப் பார்த்து.., ஹஃப்ஸாவே.., இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உடை எவ்வாறிருந்தது என்றார்கள்.

அதற்கு, இரண்டு ஜோடி உடைகள் இருந்தன, அவற்றில் சிவப்பு நிற உடையை ஜும்ஆ நாட்களிலும், இன்னும் வெளிநாட்டுத் தூதுவர்கள் வரும் பொழுது அவர்களை வரவேற்கவும் அணிந்து கொள்வார்கள் என்றார்கள்.

பின்னர், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சாப்பிட்ட மிகச் சிறந்த உணவு எது என்றார்கள்.

அதற்கு, சாதாரண கோதுமை ரொட்டியே என்றார்கள்.

பின்னர், அவர்கள் விரித்துப்படுத்த மிகச் சிறந்த விரிப்பு என்ன என்றார்கள்.

அதற்கு, முரடானதொரு துண்டுப் போர்வை. கோடை காலத்தில் அதனை நான்காக மடித்து அதன் மீது படுத்துக் கொள்வார்கள், இன்னும் குளிர்காலத்தில் இரண்டாக மடிப்புகளை கீழாகவும், இரண்டு மடிப்புகளை போர்வையாகவும் போர்த்திக் கொள்வார்கள் என்று கூறினார்கள்.

இதனைக் கேட்ட பின்னர்.., உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

ஹஃப்ஸாவே..! யார் உங்களை அனுப்பி வைத்தார்களோ அவர்களிடம் சென்று, ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான முன்னுதாரணத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விட்டு விட்டுத் தான் சென்றுள்ளார்கள் என்று போய்ச் சொல்லுங்கள். அவரை நான் பின்பற்ற விரும்புகின்றேன். என்னுடையதும், இறைத்தூதர் (ஸல்) அவர்களதும், அபுபக்கர் (ரலி) அவர்களதும்.., நோக்கங்கள் ஒன்றே.., எங்களுக்கான உதாரணம் என்னவென்றால் ஒரே பாதையின் பயணிக்கின்ற மூன்று பயணிகள் போன்றது. முதலாவது மனிதர் கட்டுச் சாதனங்களுடன் பயணத்தை ஆரம்பித்து, தனது குறிக்கோளை அடைந்து கொண்டார். இரண்டாவது மனிதரும் அவ்வாறே.., அவரும் தன்னுடைய குறிக்கோளை அடைந்து கொண்டார். இப்பொழுது மூன்றாவதாக நான் அதே பயணத்தைத் தொடர்ந்துள்ளேன். உமராகிய நான்.., அவர்கள் சென்ற பாதையின் வழியாகவே சென்றேனென்றால் அவர்களை நான் அடைந்து கொள்வேன், அவ்வாறில்லாது போனால் அவர்களை என்றைக்கும் நான் கண்டு கொள்ள முடியாது என்றார்கள்.

உமர் (ரலி) அவர்களது இந்தப் பதிலை அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அந்தத் தோழர்களிடத்தில் கூறிய பொழுது.., ''இறைவன் உமருக்கு அருள் பாலிக்கட்டும். இறையச்சத்தில் எங்கள் எல்லோரையும் விட அவர்கள் முந்திக் கொண்டு விட்டார்கள்”” என்று கூறினார்கள்.

அரேபியாவை விட்டு யூதர்களும், கிறிஸ்தவர்களும் வெளியேற்றப்படல்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணத் தருவாயை நெருங்கிய பொழுது, அரபுப் பிரதேசம் முழுவதும் முஸ்லிம்களைக் கொண்டதொரு பிரதேசமான மலர வேண்டும் என்று ஆசை வைத்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அரபுக்கோத்திரங்கள் பல இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டன. கைபர்மற்றும், நஜ்ரான் பகுதிகளில் மட்டுமே ஒருசில கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தனர்.

அபுபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தின் பொழுது, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பல கோத்திரத்தார்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறினர். அப்பொழுது நடந்த போரில் பல கோத்திரங்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள்மீண்டும் இஸ்லாத்திற்குள் நுழைந்து கொண்டார்கள். அவர்கள் ஆட்சி செய்த அந்த குறுகிய காலத்தில்.., யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடையே நல்லிணக்கத்தை தொடர்ந்தும் கடைபிடித்து வந்தார்கள்.

அப்பொழுது நடந்த போரில் கைபர் வெற்றி கொள்ளப்பட்டது. அதன் பின் யூதர்கள் முஸ்லிம்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், யூதர்கள் விளைவிக்கின்ற தானியங்களில் பாதியை இஸ்லாமிய அரசுக்கு வழங்கி விடுவது என்றும், தேவைப்படும் நேரத்தில் கைபரை முஸ்லிம்களிடத்தில் திருப்பி ஒப்படைப்பது என்று அந்த ஒப்பந்தத்தில் முடிவாகியது.

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததன் பின்னர் ஒருமுறை தன்னுடைய மகன் அப்துல்லா அவர்களை கைபருக்கு அனுப்பி வைத்து, யூதர்களிடமிந்து வரிப் பணத்தை வசூல் செய்து வருமாறு அனுப்பி வைத்தார்கள். அப்பொழுது கைபருக்கு வந்த அப்துல்லா (ரலி) அவர்கள், ஒரு வீட்டுக் கூரையின் கீழ் படுத்துக் கொண்டிருந்த பொழுது யூதர்கள் சதி செய்து அவரது படுக்கையை கீழே தள்ளி விட்டு காயமேற்படுத்தி விட்டார்கள். இந்த வழக்கை ஆய்வு செய்த உமர் (ரலி) அவர்கள் யூதர்கள் கொலைச் சதியில் ஈடுபட்டிருந்ததை அறிந்து கைபரை விட்டும் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை வெளியேறும்படி உத்தர விட்டார்கள். அசையும் சொத்துக்களை மட்டும் அவர்களுடன் எடுத்துச் செல்ல அனுமதித்த உமர் (ரலி) அவர்கள், அசையாச் சொத்துக்களை அங்குள்ள முஸ்லிம்களிடத்தில் பங்கிட்டு விட்டார்கள்.

இன்னும், யமன் தேசத்திற்கு அருகில் இருந்த நஜ்ரான் பிரதேசத்தில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், எந்தவித எதிர் நடவடிக்கைகளிலும் கிறிஸ்தவர்கள் ஈடுபடாத வரைக்கும் அவர்களை அங்கு தங்கி வாழ்ந்து வருவதற்கு அனுமதி வழங்கினார்கள். இன்னும் இந்த சட்டத்தின் அடிப்படையில் 'வட்டி”யையும் அங்கு தடை செய்திருந்தார்கள். ஆனால் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், வட்டி முறை அவர்களிடத்தில் புளங்கி வருவதையும் அறிந்து கொண்டார்கள்.

அவர்களைச் சந்திக்க வந்த கிறிஸ்தவ பிரதிநிதிகளிடம், செய்து கொண்ட ஒப்பந்தத்தை நீங்கள் மீறி விட்டீர்கள் என்று நிரூபித்த பின்னர், அவர்களை அங்கிருந்து வெளியேற்றி ஈராக் அருகில் வசித்துக் கொள்ள உத்தரவு பிறப்பித்தார்கள். அவர்களும் யூதர்களைப் போலவே அசையும் சொத்துக்களை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். அசையாச் சொத்துக்களை விட்டு விட்டுச் செல்லும்படி பணிக்கப்பட்டார்கள். அசையாச் சொத்துக்கள் அனைத்தும் இஸ்லாமிய அரசுடைமையாக்கப்பட்டு விட்டன.

நஜ்ரானிலிருந்து வெளியேறி அகதிகளாக வரும் கிறிஸ்தவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி அவர்கள் அங்கு தங்கிக் கொள்வதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்யும்படி ஈராக் கவர்னருக்கு உத்தரவு ஒன்றையும் உமர் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இன்னும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் ஜிஸ்யா என்ற வரியிலிருந்து விலக்கும் கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்டது.

யூதர்களும், கிறிஸ்தவர்களும் அரேபியாவிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர், அரேபியா முழுவதும் முஸ்லிம்களை மட்டுமே கொண்டதொரு தேசமாக மாறி விட்டது. உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின் பொழுது தான் அரேபியா முழுமையான முஸ்லிம் பிரதேசமாக மாறிய வரலாற்றுச் சாதனையைப் படைக்கப்பட்டது.

மரணமும்? படிப்பினையும்

உமர் (ரலி) அவர்களது வாழ்க்கை எந்தளவு இறையச்சம் மிகுந்ததாக இருந்தது என்பது பற்றி கீழ்க்கண்ட சம்பவம் நமக்கு மிகுந்த படிப்பினையாக உள்ளது. ஸூபைர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், என்னுடைய சுற்றுப்புறங்களின் மீதும், அவற்றின் தாக்குதல்கள் என்னைப் பாதித்து விடாத அளவுக்கு, நான் மிகவும் கவனமுள்ளவனாக இருப்பேன், அப்படி இருக்கக் கூடிய நிலையில், உமர் (ரலி) அவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அளித்த துன்பத்தைப் போல வேறு எந்தத் துன்பமும் எங்களைப் பாதித்ததில்லை. உமர் (ரலி) அவர்கள் லுஹர், அஸர், மக்ரிப், இஷா ஆகிய நேரத் தொழுகைகளை முன்னின்று நடத்தியது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் அளித்துக் கொண்டிருந்த நிலையில், அன்று அதிகாலை பஜ்ர் நேரம், ஒரு மனிதர் வித்தியாசமான முறையில் அந்த பஜ்ர் நேரத் தொழுகைக்கான தக்பீர் கூறினார். (ஆனால் அவர் உமர் இல்லை என்பதை அவரது குரல் மூலமாக உணர்ந்து கொண்டோம்.).; எங்களுக்குத் தொழுகை வைத்தவர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் என்பதை அறிந்து கொண்டோம். பின் மக்கள் தொழுது முடித்ததும், மூஃமின்களின் தலைவர் உமர்(ரலி) அவர்கள் தாக்கப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. மக்கள் தொழுகையை முடித்திருந்த நிலையில், உமர் (ரலி) அவர்கள் இன்னும் தொழுகையை நிறைவேற்றியிருக்காத நிலையில், இரத்தம் அவர்களது உடம்பிலிருந்து வழிந்து கொண்டிருந்தது. அந்த நிலையில், ஓ! மூமின்களின் தலைவர் அவர்களே! தொழுகை! தொழுகை! (நீங்கள் இன்னும் தொழவில்லையே!) என்று மக்கள் கூறவும், ஆம்! இறைவன் மீது சத்தியமாக! தொழுகையை மறந்தவனுக்கு இஸ்லாத்தில் எந்தவிதப் பங்கும் கிடையாது என்று கூறி விட்டு, தொழுகைக்காக எழுந்திருக்க முயற்சி செய்தார்கள், ஆனால் இரத்தம் அதிகமாக வழிந்து கொண்டிருந்தது. அங்கு குழுமியிருந்த மக்களைப் பார்த்து, நீங்கள் அறிந்திருந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ததா? என்று கேட்டார்கள். அலி பின் அபுதாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள், நாங்கள் அறிந்திராத நிலையில் தான் நடந்தது, இறைவன் மீது சத்தியமாக! இறைவனுடைய படைப்பினங்களில் உங்களைத் தாக்கியவர் யார் எனபதை நாங்கள் அறிய மாட்டோம் என்று பதில் உரைத்தார்கள். உங்களுக்காக நாங்கள் எதையும் செய்யத் தாயாராக இருக்கின்றோம். உங்களது இரத்தம் எங்களது இரத்தமாகும். (அதாவது உங்களைத் தாக்கியவர், உங்களை மட்டும் தாக்கவில்லை எங்களையும் தாக்கியுள்ளார். உங்கள் உடம்பிலிருந்த வழிந்து கொண்டிருப்பது உங்களது இரத்தம் மட்டுமல்ல, எங்களது இரத்தமும் இணைந்தே வழிகின்றது என்ற பொருள்படி அலி (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்). பின் உமர் (ரலி) அவர்கள் அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்களைப் பார்த்து, வெளியில் சென்று மக்களுக்கு (நடந்திருப்பவைகள் பற்றிய) உண்மையைச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். வெளியில் சென்று விட்டுத் திரும்பிய அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள்: அமீருல் முஃமினீன் அவர்களே! இந்த நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்! என்று கூறி, சொர்க்கத்திற்கான நன்மாராயத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்ற நற்செய்தியை உமர் (ரலி) அவர்ளுக்கு அறிவித்தார்கள். இறைவன் மீது சத்தியமாக! ஆணோ அல்லது பெண்ணுக்குரியதோ! அசைகின்ற ஒவ்வொரு கண்களும் உங்களுக்காக கண்ணீரைச் சொரிந்து அழுது கொண்டிருக்கின்றன. கண்ணீரைச் சிந்தாத, அழாத கண்களை என்னால் காண முடியவில்லை. ஒவ்வொருவரும் உங்களுக்காக தங்களது தாய்மார்களையும், தந்தைமார்களையும் அர்ப்பணம் செய்வதற்குத் தயாராக இருக்கின்றார்கள். நெருப்பு வணங்கியான முகீரா பின் சுப்பாவினுடைய அடிமை தான் உங்களைத் தாக்கியது என்பதை அறிந்து கொண்டோம், அவனும் இன்னும் பன்னிரண்டு நபர்களும் இப்பொழுது இரத்தம் வழிந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் இருக்கின்றார்கள், அவர்களது நிலை  எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதை இறைவன் திர்மானித்துக் கொள்வான் என்று அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் தெரிவித்து விட்டு, ஓ! அமீருல் முஃமினீன் அவர்களே! சொர்க்கம் உங்களுக்கு! என்று நாங்கள் வாழ்த்துகின்றோம் என்று கூறியவுடன், இத்தகைய வார்த்தைகள் மூலம் யார் உங்களை வழிகெடுத்தது ஓ! இப்னு அப்பாஸ்! அவர்களே! இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள், ஏன்? நான் அவ்வாறு கூறக் கூடாது, இறைவன் மீது சத்தியமாக! நீங்கள் இஸ்லாத்தைத் தழுவியது எங்களுக்கு பலத்தைத் தந்தது, உங்களது ஹிஜ்ரத் வெற்றியைத் தந்தது, உங்களது ஆட்சி நீதி வழுவாத ஆட்சியாக இருந்தது, ஆனால் நீங்கள் அநீதியான முறையில் தாக்கப்பட்டிருக்கின்றீர்கள். இப்னு அப்பாஸ் அவர்களே! சற்று முன் என்னிடம் கூறியவைகளை, நாளை மறுமை நாளில் இறைவன் முன்னிலையில் எனக்காக நீங்கள் சாட்சி சொல்வீர்களா?! அலி பின் அபுதாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள், நிச்சயமாக! ஆம்! அமீருல் முஃமினீன் அவர்களே! இந்த வார்த்தைகளை நாளை மறுமை நாளிலே இறைவன் முன்னிலையில் உங்களுக்காக நாங்கள் சாட்சி சொல்வோம் என்று கூறினார்கள். பின் உமர் (ரலி) அவர்கள் தன்னுடைய மகன் அப்துல்லாவைப் பார்த்து, என்னுடைய மகனே! என்னுடைய நெற்றியை இந்த நிலத்தில் வைப்பீராக! என்று கூறினார்கள். இந்த சம்பவம் நடந்து முடிந்து, பின்பு ஒரு நாள் அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். என்னுடைய தந்தையார் தாக்கப்பட்டுக் கிடந்த அந்த வேளையில், முதலில் அவர்கள் அவர்களுடைய நெற்றியைத் தரையில் வைக்குமாறு என்னை நோக்கிக் கூறினார்கள். அந்த பரபரப்பான அந்த நிலமையில், என் தந்தையார் என்னை நோக்கிக் கூறியவற்றை நான் கவனிக்கவில்லை. எனவே மீண்டும் அவர்கள் என்னை நோக்கி, அவர்களது நெற்றியைப் நிலத்தில் வைக்குமாறு உத்தரவிட்டார்கள். அப்பொழுதும் நான் அதைச் செய்யவில்லை. மீண்டும் மூன்றாம் முறையாக அவர்கள் என்னை நோக்கி, உன்னுடைய தாயார் உன்னை இழப்பாளாக! என்னுடைய நெற்றியை நிலத்தில் வை! என்று எனக்கு உத்தரவிடவும், சுயநினைவற்று நான் நின்றிருந்ததை விட்டும் உணர்வு பெற்றவனாக, என்னுடைய தந்தையின் நெற்றியை நிலத்தில் வைத்தேன். இறைவன் என்னை மன்னிக்கா விட்டால், உமருக்குக் கைசேதமே! உமருடைய தாயுக்கும் கைசேதமே! என்று கூறியவர்களாக, அவர்களது கண்களை மண் மறைக்கும் அளவுக்கு உமர் (ரலி) அழுதார்கள்.

அடுத்து அமீருல் முஃமினீன் என்று நம்மால் மிகவும் கண்ணியமாக அழைக்கப்படும் உமர் (ரலி) அவர்களது சம்பவம் அனைத்து மக்களுக்கும் நல்லதொரு படிப்பினையாகும். உமர் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டு மரணதருவாயில் இருந்து கொண்டிருக்கும் பொழுது, அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கச் செல்கின்றார்கள். உமர் (ரலி) அவர்கள் இருந்த நிலையைப் பார்த்த அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள், நம்பிக்கையாளர்களின் தலைவரே! யா அமீருல் முஃமின் அவர்களே!! நீங்கள் நன்மாராயத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்! மக்கள் நிராகரிப்பாளர்களாக இருந்த பொழுது நீங்கள் நாயகம் ரசூலே கரீம் முஹம்மது (ஸல்) அவர்களது திருக்கரங்களில் நம்பிக்கை தெரிவித்து இஸ்லாத்தில் நுழைந்தீர்கள், அந்த முஹம்மது (ஸல்) அவர்களை அந்த நிரகரிப்பாளர்கள் தாக்கிய பொழுது, முஹம்மது (ஸல்) அவர்களுடன் தோளோடு தோள் நின்று போர் புரிந்தீர்கள், அந்த முஹம்மது (ஸல்) அவர்கள் தங்களுடன் நல்லமுறையில் இருந்து கொண்டிருக்கும் பொழுது அவர்கள் தங்களது மரணத்தைச் சந்தித்துக் கொண்டார்கள், நீங்கள் கலீபாவாக நியமிக்கபட்ட பொழுது எந்த மனிதரும் உங்களுக்கெதிராக எழுந்ததில்லை. இதைக் கேட்டுக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள், நீங்கள் கூறியவற்றைத் திருப்பிக் கூறுங்கள் என்று கூறி விட்டு, உங்களை யார் இந்த தப்பெண்ணம் கொள்ளச் செய்தானோ அவனே வழிகேடன் என்று கூறி விட்டு, இந்த பூமி முழுவதும் தங்கமும் வெள்ளியும் எனக்குச் சொந்தமாக இருப்பின், வரவிருக்கின்ற வேதனைக்கெதிராக நான் அவற்றைக் கைமாறாகக் கொடுத்து விடுவேன் என்று பதில் கூறினார்களாம். 

சமூக விவகாரங்களில் இஸ்லாமிய நடவடிக்கைகள்

தராவீஹ் தொழுகை

ரமளான் மாதங்களில் இஷாத் தொழுகைக்குப் பின்னர், அதிகப்படியான தொழுகைகளை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுது வந்தார்கள். ஒருநாள் இரவு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இஷா முடிந்தபின்னும் தொழுது கொண்டிருப்பதைப் பார்த்த அவரது தோழர்கள், அவர்களும் சேர்ந்து தொழலானார்கள். அடுத்த நாளும் இஷாத் தொழுகைக்குப் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழலானார்கள், முந்தைய நாளை விட அதிகமான தோழர்கள் கூடலானார்கள். மூன்றாவது நாள்.., தொடர.., தோழர்கள் இன்னும் அதிகமான அளவில் கூடலானார்கள். நான்காவது நாளும்.. இன்னும் அதிகப்படியான தோழர்கள் கூடியதுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களோ அன்றைய இரவுத் தொழுகையை பள்ளியில் தொழாமல் வீட்டிற்குச் சென்று விட்டார்கள். இவ்வாறாக சில நாட்கள் நீடித்ததுடன், இரவுத் தொழுகைக்கு வந்த தோழர்களின் எண்ணிக்கையும் குறைந்து வரலாயிற்று. ஒருநாள் மீண்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.., இஷாத் தொழுகைக்குப் பின்னர் இரவுத் தொழுகையை தொழலானார்கள்.

அப்பொழுது.., முதலில் தொழுது கொண்டிருந்த நீங்கள் பின்னர் இடை நிறுத்தினீர்கள். இப்பொழுது மீண்டும் தொழுகின்றீர்களே என்று தோழர்கள் வினவிய பொழுது.., அவ்வாறு நான் தொடர்ந்து தொழும்பட்சத்தில் அது எனது உம்மத்தவர்களின் மீது கட்டாயமாகத் தொழ வேண்டிய கட்டாயமானதாகி விடும். அவ்வாறு தொழ வேண்டியது கட்டாயம் என்ற சட்டமாகி விடுமெனில், அது கட்டாயமாகி விடுவதோடு, எனது சமுதாயத்தவர்களுக்கு மிகவும் பளுவானதாக ஆகி விடும் என்று பதில் கூறினார்கள். அதன் பின்னர் வந்த ரமளான் நாட்களில் விரும்பியவர்கள் இரவுத் தொழுகையைத் தொழுதார்கள், ஏனையோர்கள் ஓய்வுக்காக வீட்டிற்குச் சென்று விடலானார்கள்.

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில், ஏராளமான முஸ்லிம்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பள்ளியில் இரவுத் தொழுகையை தொழுது வரலானார்கள். ஒவ்வொரு நபரும் அவர் விருப்பப்பட்டபடி, எண்ணிக்கை இத்தனை என்று இல்லாமல் விரும்பியவாறு தொழுது கொண்டிருந்தார்கள். எனவே, தனித்தனியாக தொழுது கொண்டிருந்த நிலையை மாற்றி, கூட்டுத் தொழுகையாகவும், இன்னும் அதே நேரத்தில் குறிப்பிட்ட இத்தனை ரக்அத் துகள் என்றும் நிர்ணயித்து விடுவது என்று உமர் (ரலி) அவர்கள் முடிவெடுத்தார்கள். அதன்படி ஏனைய தோழர்களிடம் கலந்தாலோசனை செய்து விட்டு, ரமளான் மாதங்களில் இஷாத் தொழுகைக்குப் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய இரவுத் தொழுகையை, கூட்டாக - ஜமாத்தாக நிறைவேற்றும்படியும், இன்னும் இது யார் மீதும் கட்டாயமாக நிறைவேற்றிட வேண்டிய கடமையானதுமல்ல என்றும், எவர்கள் விரும்புகின்றார்களோ அவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அரேபியா முழுவதும் அறிவிப்புச் செய்தார்கள். இந்த அறிவிப்புக்கு சிலரிடம் எதிர்ப்புகள் வந்த போதிலும், முஸ்லிம்களின் நலனை முன்னிட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இது யார் மீதும் கட்டாயமான கடமையல்ல, தனித்தனியாக நின்று தொழுவதை விட ஒரு இமாமின் கீழ் நின்று தொழுவது சிறந்தது என்ற அடிப்படையில் தொழுவது சிறந்தது என்று விளக்கமளித்தார்கள்.

இன்னும் இதனையே இன்றைக்கு தராவீஹ் தொழுகை என்றழைக்கப்படுகின்றது.



உமர் (ரலி) அவர்களும், குர்ஆனும்

திருமறைக் குர்ஆனானது 23 வருட காலமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹியாக - வேத வெளிப்பாடாக இறைவனால் அருள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. எப்பொழுதெல்லாம் இறைமறைக் குர்ஆனின் வசனங்களைப் பெற்றுக் கொள்கின்றார்களோ, அதனை எழுத்தர்களிடம் அறிவித்து அதனை தோல், மரப்பட்டை, எலும்பு, கற்கள் போன்றவற்றில் எழுதி வைத்துக் கொள்ளுமாறு உத்தரவிடுவார்கள்.

அவ்வாறு வேதவெளிப்பாட்டை எழுதுகின்ற பணியில் தன்னை முன்னிறுத்திக் கொண்டவர், ஸைத் பின் தாபித் (ரலி) ஆவார்கள். ஏராளமான நபித்தோழர்கள் திருமறைக் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்திருந்தார்கள். அவ்வாறு எழுதப்பட்ட குர்ஆனினுடைய வசனங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னிடம் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் தொடர்ச்சியாக இறைமறை வசனங்கள் இறங்கிக் கொண்டிருந்த காரணத்தால், அவற்றை தொகுக்க இயலாதிருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்த பின்னர், குர்ஆனைத் தொகுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஏனெனில் யமாமா போரின் பொழுது, குர்ஆனை மனனம் செய்திருந்த பல நபித்தோழர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். இவ்வாறாக தொடர்ந்து குர்ஆனை மனனம் செய்திருக்கும் தோழர்கள் மரணத்தைத் தழுவிக் கொண்டிருக்கும்பட்சத்தில், குர்ஆனைப் பாதுகாப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகி விடும் என்று உமர் (ரலி) அவர்கள் உணர்ந்தார்கள். இன்னும் நாட்கள் செல்லச் செல்ல கூட்டல், குறைத்தல்கள் ஏற்பட்டு விடவும் வாய்ப்புள்ளது என்பதையும் உணர்ந்தார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொழுது, குர்ஆனை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியம் குறித்து கலிஃபா அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் எடுத்துக் கூறிய பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னெடுக்காததொரு பணியை நான் முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை என்று அபுபக்கர் (ரலி) அவர்கள் மறுத்து விட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில், தொடர்ச்சியாக இறைவசனங்கள் இறங்கிக் கொண்டிருந்த காரணத்தால் அவற்றை முறையாகத் தொகுக்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை. ஆனால் இப்பொழுது நிலைமை விபரிதமாகிக் கொண்டிருக்கின்றது, இப்பொழுது நாம் அதனைத் தொகுக்காது விட்டால் பின்னர் குர்ஆன் ஆபத்துக்குள்ளாகி விடும் என்று தனது கருத்தை அபுபக்கர் (ரலி) அவர்களிடம் வலியுறுத்தி வந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். உமர் (ரலி) அவர்களின் இந்தக் கருத்து அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு ஏற்புடையதாக இருந்தது. மிகப் பிரபலமான நபித்தோழர்களிடம் கலந்தாலோசனை செய்து விட்டு, உமர் (ரலி) அவர்களின் கருத்தை கலிஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதன்படியே, குர்ஆனைத் தொகுக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.

இந்த மாபெரும் பணியை குர்ஆனைப் பதிவு செய்யும் பொறுப்பை ஏற்றிருந்த ஸைத் பின் தாபித் (ரலி) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைக் கேட்ட மாத்திரத்தில், ஒரு மலையை அதன் இடத்திலிருந்து நகர்த்தி வைக்க நீங்கள் உத்தரவிட்டிருப்பின் அது எனக்கு மிக எளிதாக இருந்திருக்கும், ஆனால் குர்ஆனின் வசனங்களை ஒருங்கிணைக்கும் பணியை என்மீது சுமத்தப்பட்டிருப்பது எனக்கு மிகவும் பாராமானதொரு பணியாக இருக்கும் என்று கருத்துரைத்தார்கள் ஸைத் பின் தாபித் (ரலி) அவர்கள். உங்களது இந்தப் பணி மிக்க சிரமமிக்க பணி என்பதை நாங்கள் அறிவோம், இருப்பினும் எந்த விலை கொடுக்கப்படினும் அடுத்து வரும் சந்ததிகளுக்கு குர்ஆனை நாம் தொகுத்து வழங்கி விட்டுச் செல்ல வேண்டும். எனவே, முழு முயற்சியுடன் இதில் ஈடுபடுங்கள் என்று அவருக்கு உமர் (ரலி) அவர்கள் ஆர்வமூட்டினார்கள்.

எனவே, யாரெல்லாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிந்து இறைவசனங்களைச் செவிமடுத்திருக்கின்றீர்களோ, நீங்கள் செவிமடுத்த வசனத்தை வந்து ஒப்படைக்குமாறு பொது அறிவிப்பு விடப்பட்டது. ஒவ்வொரு வசனம் ஒப்படைக்கப்படும் பொழுதும், அந்த வசனத்தைக் கேட்ட சாட்சியங்களாக இரண்டு சாட்சியங்களும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. குர்ஆன் வசனங்களைத் திரட்டியதன் பின்னர் உமர் (ரலி) அவர்கள் உறுப்பினராக இருக்க, ஒரு குழு ஒன்று அதனை மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்டது. ஸஅத் பின் அல் ஆஸ் (ரலி) அவர்களும், ஸைத் பின் தாபித் (ரலி) அவர்களும் எழுத்தர்களாக நியமிக்கப்பட்டார்கள். இதனை மேற்பார்வை செய்யும் கமிட்டியில் உமர் (ரலி) அவர்களும் ஒருவராக இருந்தார்கள்.

குர்ஆனை ஒருங்கிணைக்கும் பணி இனிதே நிறைவேறியவுடன், அதனை அபுபக்கர் (ரலி) அவர்கள் மேலாய்வு செய்தார்கள், இறுதியில் அதனை அங்கீகரித்து தன்னுடைய சொந்தப் பொறுப்பில் வைத்துக் கொண்டார்கள். இந்த புனிதமிக்க திருமறைக் குர்ஆனின் ஒருங்கிணைப்பைத்தான்.., 'முஸ்ஹபஃப்” என்றழைக்கப்படுகின்றது.

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த பொழுது, குர்ஆனை பரப்புவதில் மிகவும் ஆர்வம் காட்டினார்கள். குர்ஆனை மனனம் செய்தவர்களின் எண்ணிக்கை பெருகியது. அது குறைகளின்றிப் பாதுகாக்கப்பட்டது.

உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் தேசமெங்கும் நூற்றுக்கணக்கான பள்ளிகள் துவங்கப்பட்டு குர்ஆனைக் கற்றுக் கொடுக்கப்பட்டது. இதற்கென்று கற்றறிந்த உலமாக்கள் தேர்வு செய்யப்பட்டு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டார்கள், அவர்களுக்கு நல்ல சம்பளமும் வழங்கப்பட்டது.

அவ்வாறு நன்கு கற்றறிந்து குர்ஆனை மனனம் செய்திருந்த பல தோழர்களை தொலை தூர ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்குள்ள மக்களுக்கு குர்ஆனைப் பயிற்றுவிக்க ஏற்பாடுகளைச் செய்தார்கள் உமர் (ரலி) அவர்கள். முஆத் பின் ஜபல் (ரலி), இபாதா பித் ஸாமித் (ரலி), மற்றும் அபூதர்தா (ரலி) போன்றோர்கள் அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட தோழர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவார்கள். இபாதா பின் ஸாமித் (ரலி) அவர்களை 'ஹிம்ஸ்” பகுதிக்கும், அபூதர்தா (ரலி) அவர்களை டமாஸ்கஸ் பகுதிக்கும், முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை ஜெருஸலம் பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். அபூதர்தா (ரலி) அவர்கள் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஜாமிஆ மஸ்ஜிதில் குர்ஆன் வகுப்பு எடுத்த பொழுது, அங்கு வந்து கலந்து கொண்டு இஸ்லாமிய அறிவைப் பெற்றுக் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 1600 ஆக இருந்தது என்று அறிவிப்புகள் கூறுகின்றன.

குர்ஆனை பரப்புவதில் உமர் (ரலி) அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டார்கள். முஸ்லிம்கள் குறைந்தது ஐந்து சூராக்களையாவது மனனம் செய்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். குர்ஆனை கற்றுக் கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. குர்ஆனை ஓதி, அதன் கட்டளைகளை நினைவில் வைத்திருக்குமாறு தனது இராணுவத்தினருக்கு உமர் (ரலி) அவர்கள் ஆணையே பிறப்பித்திருந்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் மிகவும் உச்சரிப்புடன் ஓதக் கூடிய பழக்கத்தைக் கற்றறிந்திருந்தார்கள். 'நீங்கள் எந்தளவு உச்சரிப்புடன் ஓதக் கற்றுக் கொண்டீர்களோ, அதன்படியே மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுங்கள்” என்று குர்ஆன் ஆசிரியர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதுடன், அரபி மொழியையும், இன்னும் அதன் இலக்கியத் தன்மையையும் சேர்த்துக் கற்பிக்குமாறு உமர் (ரலி) அவர்கள் அறிவுறுத்தினார்கள். அதன் மூலம் கற்றுக் கொள்பவர்கள் குர்ஆனின் உச்சரிப்பு முறையை மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும், தவறான உச்சரிப்புகளிலிருந்து விடுபட முடியும் என்றும் கூறினார்கள்.

அரபி மொழி நடையை அறியாத யாரும் குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும் பணியை கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று உமர் (ரலி) அவர்கள் உத்தரவே இட்டிருந்தார்கள் என்பதிலிருந்து, குர்ஆனை மக்களிடம் எந்தளவு உச்சரிப்புத் தூய்மையுடன் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் ஆவல் கொண்டிருந்தார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

உமர் (ரலி) அவர்களும், பள்ளிவாசல்களும்

உமர் (ரலி) அவர்களது காலத்தில் தொடர்ச்சியாக இஸ்லாமியப் பிரதேசங்கள் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தன, அவ்வாறு வளர்ச்சி காணும் பிரதேசங்களில் எல்லாம் பள்ளிவாசல்கள் கட்டப்பட வேண்டும் என்று உமர் (ரலி) அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள்.

புதிதாகவே நிர்மாணிக்கப்பட்ட நகரங்களான கூஃபா, பஸரா ஆகியவற்றின் மத்தியில் ஜும்ஆப் பள்ளிவாசலையும், இன்னும் ஒவ்வொரு கோத்திரத்தாரினுடைய பகுதிகளில் சிறுசிறு பள்ளிகளும் கட்டப்பட்டன. இவ்வாறாக உமர் (ரலி) அவர்களது காலத்தில் மட்டும் 4000 பள்ளிவாசல்கள் சிறிதும் பெரிதுமாகக் கட்டப்பட்டன.

739 ம் ஆண்டில் உமர் (ரலி) அவர்கள் மக்காவில் உள்ள கஃபா பள்ளிவாசலையும் விஸ்தரித்துக் கட்ட ஆரம்பித்தார்கள். அதற்காக அதனை அடுத்துள்ள வீடுகள் விலைக்கு வாங்கப்பட்டு, இடிக்கப்பட்டதன் பின்னர் அந்த இடங்களில் பள்ளி விஸ்தரிக்கப்பட்டது. முன்பு பள்ளியின் சுவர்களில் விளக்குகள் ஏற்றப்படவில்லை. முதன்முறையாக உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் பள்ளியினுள் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது.

முன்பு கஃபாவைச் சுற்றி கட்டப்பட்டுள்ள துணி சாதாரண துணியினால் ஆனது. பின்னர் அதற்காக பிரத்யேகமான துணியால் நெய்யப்பட்டு, எகிப்திலிருந்து வரவழைக்கப்பட்டது.

மக்காவில் புனித ஹரம் பகுதியைப் பிரித்து அவைகளைப் புனிதப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. அதாவது ஒரு திசையை நோக்கி மூன்று மைல்கள் அளவும், இன்னும் ஏனைய பகுதிகளில் ஏழு மைல்கள் அளவும் அளவிடப்பட்ட, அதற்கு இடைப்பட்ட பகுதிகளை புனிதப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டது.அதனை அடையாளப்படுத்த அடையாளக் கற்களும் ஊண்றப்பட்டன, அவற்றுக்கு 'அன்ஸப்” என்றும் பெயாரிடப்பட்டது.

கஃபாவினைப் போலவே மதினாவில் உள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாசலும் விஸ்தரிக்கப்பட்டது. அதனைச் சுற்றியுள்ள வீடுகளை விலைக்கு வாங்கி அவற்றை இடித்து விட்டு, அந்தப் பகுதிகளில் விஸ்தரிப்பு செய்யப்பட்டது.

அவ்வாறு கைப்பற்ற நிலங்களில் அப்பாஸ் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான நிலமும் இருந்தது. அரசானது மக்களின் சொத்துக்களை விருப்பமின்றி கைப்பற்றக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து உமர் (ரலி) அவர்களின் அரசின் மீதே அப்பாஸ் (ரலி) அவர்கள், உபைய்யிப்னு கஃபு (ரலி) அவர்களின் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். வழக்கின் தீர்ப்பு அரசுக்கு எதிராக இருந்தது. தீர்ப்பை ஏற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களின் நிலத்தைத் திரும்ப ஒப்படைத்தார்கள். அதன் பின்னர் அப்பாஸ் (ரலி) அவர்கள் விருப்பத்துடன் அதனை பள்ளிவாசலுக்கே அன்பளிப்புச் செய்து விட்டார்கள், அதனை மிகவும் பெருந்தன்மையாக உமர் (ரலி) அவர்கள் ஏற்றும் கொண்டார்கள். அதற்குப் பிரதியீடு செய்யும் விதமாக, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கென ஒரு வீட்டையும் உமர் (ரலி) அவர்கள் அன்பளிப்புச் செய்தார்கள்.

விஸ்தரிப்பின் காரணமாக, பள்ளியானது நீள வாக்கில் 100 மீட்டரிலிருந்து 140 மீட்டராகவும், இன்னும் அகலவாக்கில் 60 லிருந்து 80 அடியாகவும் வளர்ந்தது.

பள்ளிவாசலுக்குள் முதன் முதலாக விளக்கு ஏற்றி வைத்தவரும் அவரே. இன்னும் பள்ளிவாசலுக்கு நறுமணப்புகை போடுவதையும் அவரே ஆரம்பித்து வைத்தார். பள்ளியின் தரைகள் சீர் செய்யப்பட்டு, அவற்றில் பாய்கள் விரிக்கப்பட்டன.

ஹிஜ்ரி காலண்டர்

அமீருல் முஃமினீன் அவர்களே.., உங்களிடமிருந்து தொடர்ந்து எங்களுக்குக் கட்டளைகள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால் அந்த உத்தரவுக் கடிதங்களில் தேதிகள் குறிப்பிடப்படவில்லை, சிலவேளைகளில் கடிதத்தில் உள்ள வாசகங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றன, எனவே அவற்றில் எது முந்தையது, எது பிந்தையது என்ற குழப்பம் நீடிக்கின்றது, உங்களது உத்தரவுகளை சரிவரப் புரிந்து கொள்ள இயலவில்லை என்று பஸராவின் கவர்னராக இருந்த அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் ஒரு கடிதத்தை உமர் (ரலி) அவர்களுக்கு எழுதினார்கள்.

பஸராவின் கவர்னரது சந்தேகம் உமர் (ரலி) அவர்களைச் சிந்திக்க வைத்தது. அதேநேரத்தில் யமன் தேசத்திலிருந்து ஷஃபான் மாதம் குறிப்பிடப்பட்டதொரு பணம் வந்திருந்தது. சரி.., அப்படி என்றால் இனி கடிதங்களில் மாதத்தைக் குறிப்பிடலாம் என்றால்.., அது இந்த வருடத்தில் உள்ளதா.., அல்லது அடுத்த வருடத்தியதா என்ற சந்தேகத்தையும் உருவாக்கி விடுமே என்று சிந்தித்தார்கள். உடனே, தோழர்களின் உதவியை நாடி இது குறித்து அவர்களிடம் ஆலோசனை நடத்தினார்கள்.

சிலர் ரோமர்களின் முறையையும், இன்னும் சிலர் பாரசீக முறைப்படியும் காலண்டர் உருவாக்கிக் கொள்ளலாம் என்றார்கள். ஆனால் உமர் (ரலி) அவர்களோ., நாம் முஸ்லிம்கள்.., முஸ்லிம்களுக்கென்று ஒரு நாட்காட்டி வேண்டும் என்றார்கள். சரி.., நம்முடைய தசாப்தம் எப்பொழுதிலிருந்து துவங்குகின்றது? என்று கூறுங்கள் என்றார்கள் உமர் (ரலி) அவர்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்திலிருந்து என்று ஒருசிலர் கூறினார்கள். இன்னும் சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரண நாளிலிருந்து என்றார்கள். அப்பொழுது அலி (ரலி) அவர்கள் கூறினார்கள், முஸ்லிம்களினுடைய மறுமலர்ச்சி என்பது மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் புறப்பட்ட நாளிலிருந்து ஆரம்பமாகின்றது என்றார்கள், அலி (ரலி) அவர்களினுடைய இந்த ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ரபிய்யுல் அவ்வல் மாதம் தனது ஹிஜ்ரத்தை ஆரம்பித்தார்கள். அவ்வாறென்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் புறப்பட்ட பொழுது அந்த ஆண்டின் இரண்டு மாதங்களும் எட்டு நாட்களும் கடந்து விட்டிருந்தன. சரி.., ஹிஜ்ரியைக் கணக்கு வைத்து ஆண்டு என்றால், மாதங்களில் எந்த மாதத்தினை முதல் மாதமாகக் குறிப்பது என்ற குழப்பம் ஆரம்பமானது.

சிலர் ரஜப் மாத்திலிருந்து ஆரம்பமாக வேண்டும் என்றார்கள், சிலர் ரமளான் மாதம் புனிதமிக்கது, எனவே அதிலிருந்து ஆரம்பமாக வேண்டும் என்றார்கள், சிலர் ஹஜ் புனிதமிக்கது அதிலிருந்து தான் துவங்க வேண்டும் என்றார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.., அரேபியாவில் புத்தாண்டு என்பது முஹர்ரம் மாதத்திலிருந்து தான் துவங்குகின்றது என்றார்கள். உஸ்மான் (ரலி) அவர்களது ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அன்றிலிருந்து புத்தாண்டின் முதல் மாதமாக முஹர்ரம் அறிவிக்கப்பட்டது. ஹிஜ்ரி காலண்டர் முறையும் உருவானது. பின்னர் இந்த முடிவு அனைத்துப் பிரதேசங்களுக்கும் அறிவிக்கப்பட்டது.



உமர் (ரலி) அவர்களும், மதுவும்

அன்றைய அரபுக்களிடம் குடிப்பழக்கம் என்பது சர்வ சாதாரணமாக இருந்து வந்தது. அதிலும் குறிப்பாக குறைஷியர்களிடம் இந்தப் பழக்கம் அதிகம் காணப்பட்டது. அன்றைய அறியாமைக் காலத்தில் உமர் (ரலி) அவர்கள் கூட குடிப்பழக்கம் உடையவராகவே இருந்தார்கள். எப்பொழுது உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்களோ அப்பொழுதிலிருந்து குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டார்கள், மதுவை முற்றிலும் அவர்கள் அருந்துவதில்லை. உமர் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த சிந்தனையாளர். குடிப் பழக்கம் என்பது ஒருவருடைய வாழ்க்கைப் போக்கையே மாற்றி விடுவதோடு, அவரது கடமைகள் மற்றும் பொறுப்புக்களிலிருந்தும் கூட அவரைத் தடுமாற வைத்து விடுகின்றது, எனவே அதனைத் தடை செய்வதற்கான இறைவனுடைய அறிவிப்பு ஒன்று வராதா என்று உமர் (ரலி) அவர்கள் சிந்திக்கலானார்கள். இது குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கூட வலியுறுத்தியும் வந்தார்கள். அப்பொழுது மதினாவில் கீழ்க்கண்ட இறைவசனத்தை இறைவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளினான் :

(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; ''அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.”” (2:219)

மேற்கண்ட வசனம் இறங்கியது பற்றி உமர் (ரலி) அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

'இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! இது போதாது, மதுவை முற்றிலும் தடை செய்வதற்கான விசேஷ சட்டம் இறங்கியருள பிரார்த்தியுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்கள்.

பின்னர், சிறிது காலம் கழித்து மீண்டும் இன்னுமொரு இறைவசனம் இறங்கியருளப்பட்டது, அதாவது :

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அப்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (5:90)

மேற்கண்ட இறைவசனம் அருளப்பட்டதன் பின்னர், அதனை உமர் (ரலி) அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தெரியப்படுத்தினார்கள், ஆனால் இந்த வசனம் குறித்து உமர் (ரலி) அவர்களுக்கு இன்னும் திருப்தியேற்படவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! இந்தச் சட்டத்தில் நேரடியான தடையைக் காண முடியவில்லை. எனவே, மதுவை நேரடியாகத் தடை செய்யும் அளவுக்கு சட்டம் இறக்கியருளப்பட பிரார்த்தனை செய்யுங்களேன் என்று கேட்டுக் கொண்டார்கள். அதன் பின்னர் கீழ்கண்ட வசனம் இறங்கியது :

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், கொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (5:91)

மேற்கண்ட வசனமே பூரண மதுவிலக்கை அமுல்படுத்துவதற்குண்டான முழுமையான சட்டத்தை வழங்கியது என்று கூறலாம். இருப்பினும் கூட, சில முஸ்லிம்கள் குடிப் பழக்கத்தை விட முடியாமல் தொடர்ந்து வந்தனர்.

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட நேரத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யம் கிழக்கிலும், மேற்கிலும் பரவிக் கொண்டிருந்த சமயத்தில், இஸ்லாத்தின் இறைநம்பிக்கையைப் பூரணமாகப் பாதுகாக்க வேண்டுமென்றால், மது விஷயத்தில் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தாக வேண்டும் என்று உமர் (ரலி) அவர்கள் முடிவு செய்தார்கள். சில குற்ற நடவடிக்கைகளுக்கு திருமறைக் குர்ஆனில் நேரடியாகவே தண்டனைச் சட்டங்கள் அருளப்பட்டுள்ளன, ஆனால் குடிப் பழக்கத்திற்கான தண்டனைச் சட்டம் எதுவும் அதில் வழங்கப்படவில்லை. இறைவன் அதனை முற்றிலும் தடை செய்ய நாடியிருந்தால், அதற்கான தண்டனைச் சட்டத்தையும் வழங்கியருப்பானல்லவா என்று குடிகாரர்கள் விவாதம் செய்து, குடிப்பழக்கத்தை தங்களுக்கு சாதகமானதொரு அம்சமாக ஆக்கிக் கொள்ளப் பார்த்தார்கள்.

இந்தக் கேள்விக்கான விடையை கண்டுபிடிப்பதற்காக தனது ஆலோசனை சபையை உமர் (ரலி) அவர்கள் கூட்டினார்கள். முதலில் மதுவைத் தடை செய்யும் நடவடிக்கைக்குள் இறங்கு முன்பாக, மது அருந்துவது சட்டத்திற்கு உட்பட்டதா அல்லது சட்டத்திற்குப் புறம்பானதா என்பதற்கான பதிலைக் கண்டுபிடிக்கும்படி உமர் (ரலி) அவர்கள் ஆலோசனை சபையைக் கேட்டுக் கொண்டார்கள். ஆலோசனையின் முடிவில் தடை செய்யப்பட்டதே என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அடுத்த கேள்வி : சட்டத்திற்குப் புறம்பானது என்றால், அதனை மீறும் பட்சத்தில் அதற்கான தண்டனை என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. திருமறைக் குர்ஆனில் இதற்கான தண்டனைச் சட்டங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று உமர் (ரலி) அவர்கள் கருத்துக் கூறினார்கள். சட்டத்தை மீறிச் செயல்படுகின்றவர்கள் மீது விதிக்கப்படுகின்ற தண்டனையைப் போன்றதொரு தண்டனையை உருவாக்கியாக வேண்டும் என்று உமர் (ரலி) அவர்கள் அவையைக் கேட்டுக் கொண்டார்கள்.

போதையில் மூழ்கியிருக்கக் கூடிய மனிதன் வாய் தவறி உளறக் கூடியவனாக இருக்கின்றான், அவன் அவ்வாறு உளறக் கூடியதானது அவதூறு போன்றது, எனவே அவதூறுக்கான தண்டனை என்னவோ அதனை அவனுக்கு வழங்க முடியும், ஏனென்றால் குடி போதையின் காரணமாக எதைப் பேசுவதென்று தெரியாமல் அவன் பிறரைப் பேசக் கூடியவனாக இருக்கின்றான் என்றார்கள் அலி (ரலி) அவர்கள். பிறரை அவதூறு பேசக் கூடியவனுக்கு கீழ்க்கண்ட தண்டனையைக் குர்ஆன் வழங்குகின்றது :

கண்ணியமிக்க பெண்கள் மீது அவதூறு கூறி, நான்கு சாட்சியங்களைக் கொண்டு நிரூபிக்கவில்லையென்றால், ஒவ்வொருவருக்கும் எண்பது கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும், சட்டத்தை மீறிச் செயல்படுகின்ற அவர்களது சத்தியப் பிரமாணங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

இந்தச் சட்டம் கூறுவதைப் போல அவர்களுக்கு எண்பது கசையடிகள் வழங்கப்பட வேண்டும் என்று அலி (ரலி) அவர்கள் கருத்துக் கூறினார்கள். இந்த ஆலோசனையை உமர் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து அனைத்துப் பிரதேசங்களுக்கும் கீழ்க்கண்ட ஆணையை உமர் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள் :

திருமறைக் குர்ஆனின் வழிகாட்டுதல்களின்படி மது அருந்துவது தடை செய்யப்பட்டது. எந்தவொரு முஸ்லிமாவது, மது அருந்துவது ஆகுமானது என்று விவாதம் செய்தால், திருமறைக் குர்ஆனின் புறக்கணித்த குற்றத்திற்காக அவரது தலையைத் துண்டித்து விடுங்கள். ஆனால் அவர் மது அருந்துவது சட்டத்திற்குப் புறம்பானது என்று கூறிக் கொண்டே, அந்தத் தவறில் வீழந்திருந்தாரென்றால் அவருக்கு எண்பது கசையடிகளை பொது மக்களின் முன்னிலையில் நிறைவேற்றுங்கள் என்று உத்தரவு பிறப்பித்தார்கள்.

இந்தச் சட்டத்தை முஸ்லிம் பிரதேசங்களில் மிக வேகமாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. முஸ்லிம்கள் இந்த தீய செயல்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்டார்கள்.

அடிமை

உலக அரங்கில் இஸ்லாம் மிளரத் துவங்கிய பொழுது, உலக பொருளாதாரம் என்பது அடிமைத் தொழிலை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த அடிமைத்தனத்துக்கு எதிராக முதன் முதலில் உலக அரங்கில் குரல் கொடுத்தது இஸ்லாம் மட்டுமே. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களில் ஏராளம் பேர் அடிமைகளாக இருந்தவர்கள் தாம். உண்மையில், மக்காவின் குறைஷிகள் இஸ்லாத்தின் மீது ஏன் கடுமையான பகைமையைப் பாராட்டினார்கள் என்றால்.., அடிமைத் தனத்தை மூலதனமாகக் கொண்டிருந்த மக்காவின் சந்தைப் பொருளாதாரத்தில் அது கைவைத்த காரணமேயாகும்.

உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இந்த அடிமைத் தனத்தை முடிந்தளவு ஒழித்து விட வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டார்கள். அதற்காக மிகவும் துணிகரமான முறையில், ''அரபுலகத்தில் எந்த அரபும் அடிமையாக இருக்க முடியாது”” என்றதொரு அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் இந்த உலகத்திலேயே முதன்முதலாக அடிமைகள் இல்லாத பிரதேசமான அரேபியா திகழ ஆரம்பித்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின் தூதுத்துவத்துக்கு எதிராக இஸ்லாத்தைப் புறக்கணித்து விட்டு போர் செய்தவர்களைக் கைதிகளாகப் பிடித்து, அடிமைகளாக்கி வைத்திருந்த நிலையை மாற்றி, உமர் (ரலி) அவர்கள் அத்தைகயவர்களது அடிதை; தளையைத் தடை செய்தார்கள். அவர்களை சுதந்திரமானவர்கள் என அறிவித்தார்கள்.

இன்னுமொரு அறிவிப்பையும் உமர் (ரலி) அவர்கள் வெளியிட்டார்கள். அந்த அறிவிப்பின்படி, எஜமானன் மூலமாக குழந்தையைப் பெற்றெடுத்த அடிமைப் பெண்ணும் அடிமைத் தளையிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்கள்.

அவர்களிடம் நல்லவற்றைக் கண்டால் (அடிமைகளிடம்), ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்”” என்று திருமறைக் குர்ஆன் கட்டளையிடுகின்றது.

இந்தக் கட்டளையை அமுல்படுத்துமுகமாக, அடிமைகள் தங்களது எஜமானர்களிடம் ஒரு குறிப்பிட்ட தவணைக்குள் பிணைத் தொகையைச் செலுத்தி விடுவதாக வாக்களித்தால், அந்த ஒப்பந்தத்திற்கு எஜமானர்கள் சம்மதிக்க வேண்டும் என்று உமர் (ரலி) அவர்கள் ஆணை பிறப்பித்தார்கள்.

நபித்தோழர்களில் மிக முக்கியமானவர்களுள் ஒருவரான அனஸ் (ரலி) அவர்களுக்கு சிரின் என்றதொரு அடிமை இருந்தார். இவர் தன்னுடைய எஜமானராக அனஸ் (ரலி) அவர்களிடம் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ள விரும்பினார், ஆனால் அனஸ் (ரலி) அவர்களோ மறுத்தார்கள். இந்த விவகாரம் உமர் (ரலி) அவர்கள் முன்னிலையில் வந்த பொழுது, அனஸ் (ரலி) அவர்களை அந்த ஒப்பந்தத்திற்குச் சம்மதிக்க வைத்தார்கள் உமர் (ரலி) அவர்கள்.

இந்த விவகாரத்தை தீர்த்துக் கொள்வதற்காக அரசின் கருவூலகத்திலிருந்து அடிமைகளுக்கும் அவர்களது எஜமானர்களுக்கும் சமமான அளவில் உதவித் தொகையைப் பெற்றுக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது. அடிமையானவருக்கு எவ்வாறு உதவித் தொகை வழங்கப்பட்டதோ, அதைப் போலவே எஜமானர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டது.

அடிமைகளை அவர்களது உறவுகளிலிருந்து பிரித்து விடக் கூடாது என்றும் உத்தரவிட்டார்கள். இந்த உத்தரவின் மூலமாக அடிமைப் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள், தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு விடாமல் பாதுகாக்கப்பட்டார்கள். தாயும், குழந்தையுமாக அவர்கள் இருந்தார்களென்றால், அவர்களை ஒரே ஒரு எஜமானர் தான் வாங்கிக் கொள்ள முடியும் என்ற நிலையையும் கொண்டு வந்தார்கள்.

இன்னும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கொண்ட ஒருவரை போர்க்கைதியாகப் பிடிக்கப்பட்டு, அடிமைகளாக ஆக்கிக் கொள்வதற்குத் தடை விதித்தார்கள், அவர்களுக்கான பிணைத் தொகையைப் பெற்றுக் கொண்டு விடுதலை செய்வதற்கு உத்தரவிட்டார்கள். சிரியாவின் ஹிராகுலிஸ் மன்னனது மகள் கைதியாகப் பிடிக்கப்பட்ட பொழுது, அவளை அவளது தந்தையிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டார்கள். பாபிலோன் போரின் பொழுது முகவ்கஸ் மன்னனது மகள் அர்மனூஸா கைதியாகப் பிடிக்கப்பட்ட பொழுதும், அவளைத் திரும்ப அவளது தந்தையிடமே ஒப்படைக்கப்பட்டாள்.

அடிமைகளின் அந்தஸ்தை உயர்த்துவதற்காக வேண்டி, எஜமானர்கள் தங்களது அடிமைகளுடன் சேர்ந்தமர்ந்து உணவருந்தட்டும் என்று அறிவுரை கூறினார்கள். இன்னும் சில சந்தர்ப்பங்களில் அடிமைகளைத் தன்னுடன் உணவருந்த வருமாறு அழைத்து அமர வைக்கக் கூடியவராகவும் உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறக் கூடியவர்களாக இருந்தார்கள் :

''அடிமைகளுடன் சேர்ந்தமர்ந்து உணவருந்துவதை அவமதிப்பாகக் கருதுகின்றவர்கள் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டுமாக”” என்பார்கள்.

மேலும் முஸ்லிமானதொரு அடிமை முஸ்லிமல்லாத ஒருவருக்கு பாதுகாப்பு அளித்திருந்தாரென்றால், அவரது பாதுகாப்பு உரிமைக்கு கண்ணியமளிக்கப்பட்டது. அதாவது சுதந்திரமானதொரு முஸ்லிம் பாதுகாப்பளித்தால், எந்தளவு அதற்கு கண்ணியமளிக்கப்படுமோ அந்தளவு வழங்கப்பட்டது.

உமர் (ரலி) அவர்களது காலத்தில் அடிமைகள் கண்ணியமான பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் இக்ரமா என்பவர் அடிமையாக இருந்தார், இவர் ஹதீஸுக் கலையில் இமாமாக இருந்தார். நாஃபி என்பவர், இவரும் ஒரு அடிமை, இவர் இமாம் மாலிக் அவர்களுக்கு ஆசிரியராக இருந்தார். இது மட்டுமல்ல.., உமர் (ரலி) அவர்களது காலத்தில் பல அடிமைகள் உயர்பதவிகளில் அமர்த்தப்பட்டு கண்ணியமளிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் மோகத்திற்குக் கட்டுப்பாடு

அன்றைய அறியாமைக்காலச் சமூகத்தில் பாலியல் மோகம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. இஸ்லாம் ஒழுக்க விழுமியங்களில் கட்டுப்பாட்டைக் கொண்டு வரவிழைந்த பொழுது, இந்த பாலியல் மோகத்திற்கும் கட்டுப்பாடு விதித்தது. இஸ்லாம் நான்கு மனைவிகளுக்கு மேல் திருமணம் செய்வதற்குத் தடை விதித்தது. இன்னும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிமார்களைத் திருமணம் செய்திருப்பவர்கள், அவர்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்று பணித்தது. இன்னும் திருமண உறவின்றி யாராவது விபச்சாரத்தில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன.

இன்னும் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், சமூகத்தில் நிலவி வரும் பாலியல் மோசடிகளை முற்றிலும் களைந்து விட தீர்மானித்தார்கள்.

கவிதைகள் புனைவதும் அவற்றைக் கேட்பதும் அறியாமைக் காலத்தில் மக்களிடையே ஒழுக்க வீழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது. தங்களது மனதுக்குப் பிடித்த பெண்ணை வர்ணிப்பதும், அவர்களது அழகை கவிதைகளில் வடிப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. இன்னும் சிலவேளைகளில் பெண்களின் பெயர்களும் கூட அந்தக் கவிதைகளின் ஊடாக வலம் வருவதுண்டு. இதன் காரணமாக வீடுகளில், கணவன் மனைவிக்கு இடையே பிணக்குகளும் ஏற்பட்டு விடுவதுண்டு. இது ஒரு சமூகத்தீமையாக வலம் வருவதைக் கணித்த உமர் (ரலி) அவர்கள், கவிதைகளில் பெண்களின் பெயர்களைப் பயன்படுத்த தடை விதித்தார். இன்னும் சமூகத்தில் ஒழுக்க வீழ்ச்சியை ஏற்படுத்துகின்ற பாடல்களை, கவிதைகளை இயற்றக் கூடாது என்றும் அவர் தடை விதித்தார். கவிஞர்களும், புலவர்களும் உமர்(ரலி) அவர்கள் விதித்த இந்த சட்டத்தை மீறிய பொழுது, அவர்களுக்கு கசையடிகளாக தண்டனை நிறைவேற்றப்பட்டன.

இன்னும் முஅத்தா என்ற தற்காலித் திருமணத்திற்கும் தடை விதித்தார்கள். அதாவது, குறிப்பிட்ட காலக் கெடு ஒன்றை நிர்ணயித்து, அந்தக் காலக் கெடுவரைக்கும் கணவன் மனைவியாக ஆணும், பெண்ணும் வாழ்ந்து கொள்வது. அதற்கு மேல் அவர்கள் பிரிந்து விடுவார்கள். திருமணம் என்பது ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டு வாழ்நாள் முழுவதும் கணவன் மனைவியாக வாழக் கூடியதொரு சமூக அமைப்பு. இந்த அமைப்பில் குழந்தைகள் பெறுவதும், அவற்றைப் பராமரிப்பதும் இந்தத் தம்பதிகள் மீது கடமையானதொன்றாக மாறி விடுகின்றது. ஆனால் இந்த தற்காலிக திருமணத்தின் காரணமாக, பெண்களை நினைத்த மாத்திரத்தில் விவாகரத்துச் செய்வதும், இடைப்பட்ட காலத்தில் பிறந்த குழந்தைகள் அனாதைகளாவதும் சமூகத்தில் குழப்பத்தையும், சீர்கேடுகளையும் உருவாக்கி விடும், இன்னும் உண்மையில் திருமணம் என்பதற்கான அர்த்தமே இல்லாது போய்விடும் என்பதை உணர்ந்த உமர் (ரலி) அவர்கள், இந்த தற்காலிக திருமணத்திற்குத் தடை விதித்தார்கள். விவாகரத்து என்பதே ஒரு காரணத்தை முன்னிட்டு செய்யப்படுவது, ஆனால் இந்த முஅத்தா என்ற தற்காலிக திருமணத்தில் 'குறிப்பிட்ட காலக்கெடு” நிர்ணயிக்கப்படுவது என்பது இஸ்லாத்திற்கும், அதன் கொள்கைகளுக்கும் முரணாக அமைகின்றது என்று உமர் (ரலி) அவர்கள் தீர்மானித்து அதனைத் தடை செய்தார்கள்.

ஈராக் மற்றும் சிரியா முஸ்லிம்களின் கைவசம் ஆனதன் பின்னர், ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த பெண்களை மணமுடிக்கும் சந்தர்ப்பம் உருவாகியது. இவர்களின் அழகில் மயங்கிய அரபுக்கள், தங்களது அரபு மனைவிமார்களை விவாகரத்துச் செய்ய ஆரம்பித்தார்கள். இது சமூகத்தில் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது மட்டுமல்ல, மக்களிடையே பாலியல் ரிதியான ஒழுக்க வீழ்ச்சி அதிகமாகியது. இதனைத் தடுத்து நிறுத்துமுகமாக, ஈராக் மற்றும் சிரியா போன்ற அந்நிய நாடுகளின் பெண்களை மணமுடிப்பதற்கான சில நிபந்தனைகளை விதித்தார், அந்த நிபந்தனைகள் யாருக்குப் பொருந்துகின்றதோ அவர்கள் மட்டுமே அந்நிய நாட்டுப் பெண்களை மணமுடிக்கத் தகுதி வாய்ந்தவர்களாகக் கருதப்பட்டார்கள். ஹுதைபா (ரலி) அவர்கள் மதீனாவின் ஒரு அதிகாரியாக இருந்தார்கள், இவர் ஒரு ஈராக் கிறிஸ்தவப் பெண்ணை மணமுடித்துக் கொண்டார். உமர் (ரலி) அவர்களோ அந்தப் பெண்ணை விவாகரத்துச் செய்யும்படி ஹுதைஃபா அவர்களை வலியுறுத்தினார்கள். ஹுதைபா அவர்களோ.., எந்த சட்டத்தின் அடிப்படையில் விவாகரத்துச் செய்யச் சொல்கின்றீர்கள், எனது விவாகம் சட்டத்திற்கும் புறம்பானது என்றால் எவ்வாறு, உண்மையான விளக்கத்தை அளிக்கும்பட்சத்தில் அன்றி நான் விவாகரத்துச் செய்ய முடியாது என்று கூறி விடுகின்றார்கள். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.., நீங்கள் விவாகம் செய்திருப்பது சட்டத்திற்கு முரணானது அன்று, ஆனால் நீங்கள் மணமுடித்திருக்கும் அந்த கிறிஸ்தவப் பெண்ணை நான் ஏன் விவாகரத்துச் செய்யுங்கள் என்று கூறுகின்றேன் என்றால், அரபுலகத்துப் பெண்களின் நலனை முன்னிட்டே உங்களுக்கு இந்த அறிவுரையை வழங்குகின்றேன். அழகுக்காகவென்றே முஸ்லிம் அல்லாத பெண்களை மணந்து கொள்வது என்பது, மக்களிடையே பாலியல் விவகாரத்தில் ஒழுக்க வீழ்ச்சியை ஏற்படுத்தி விடும் என்று நான் கருதுகின்றேன். இந்த விளக்கத்தைக் கேட்ட ஹுதைஃபா (ரலி) அவர்கள் அந்த கிறிஸ்தவப் பெண்ணை விவாகரத்துச் செய்து விடுகின்றார்கள்.

இஸ்லாம் நான்கு பெண்களுக்கு அதிகமாக மணமுடித்துக் கொள்ள அனுமதி வழங்கவில்லை, அதேநேரத்தில் அவர்கள் எத்தனை அடிமைப் பெண்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்து வந்தது. இந்த அடிமைப் பெண்கள் எஜமானர்களின் சொத்துக்களைப் போல பராமரிக்கப்பட்டு வந்தார்கள், எஜமானர்கள் விரும்புகின்ற நேரத்தில் அவர்கள் விலைபேசி விற்கவும்பட்டார்கள். இஸ்லாமிய சாம்ராஜ்யம் பரந்து விரிந்து சென்று கொண்டிருந்த பொழுது, முஸ்லிம்களிடையே அதிகமான அடிமைப் பெண்கள் இருந்து வரலானார்கள், இதுவும் மக்களிடையே பாலியல் ரிதியான ஒழுக்க வீழ்ச்சியை ஏற்படுத்துவதைக் கணித்த உமர் (ரலி) அவர்கள், எந்த அடிமைப் பெண்கள் தங்களது எஜமானர்களது குழந்தையை கருத்தரித்துக் கொண்டார்களோ அவர்கள் சுதந்திரமான பெண்களாக கணிக்கப்படுவார்கள். அத்தகைய பெண்களை எஜமானர்கள் தங்களது அடிமைகளாக நிர்வகித்து வர முடியாது, அவர்களது சட்ட ரிதியான மனைவிமார்களைப் போலவே இவர்களுக்கும் உரிமைகள் உண்டு, அவர்கள் விரும்பினால் தங்களது கணவன்மார்களை விவாகரத்துச் செய்து விட்டு, இன்னொரு ஆணைக் கூட மணந்து கொள்ளலாம் என்று அறிவிப்புச் செய்தார்கள்.



திம்மிக்கள்

முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பிரதேசங்களில், பலர் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார்கள். சிலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களின் உயிர், உடமை, சொத்து, வழிபாட்டு உரிமை போன்றவற்றிற்கு முழுச் சுதந்திரமும், உரிமை வழங்கப்பட்டிருந்தன. இவர்களை 'திம்மிக்கள்” என்றழைக்கப்படுவார்கள், அதாவது ஒப்பந்தம் செய்து கொண்ட மக்கள் என்று பொருள்.

இத்தகைய திம்மிக்களிடம் அவர்களது பாதுகாப்பு, வாழ்வுரிமை, சுதந்திரம் மற்றும் சொத்துரிமை போன்றவற்றிற்கு ஈடாக, அவர்களிடமிருந்து பாதுகாப்பு வரி என்ற ஜிஸ்யா வரி வசூலிக்கப்பட்டது.

இதே போன்றதொரு பாதுகாப்பு உடன்படிக்கையை ஜெருஸலம் கிறிஸ்தவர்களிடத்திலும் ஒரு ஒப்பந்தத்தை உமர் (ரலி) அவர்களது காலத்தில் போடப்பட்டது. அதன் மூலம், அவர்களது வாழ்வு, சொத்து, தேவாலயங்கள் மற்றும் சிலுவை போன்றவற்றிற்கு உத்தரவாதம் தரப்பட்டது. இதில் எதுவொன்றன் மீதும் ஆக்கிரமிப்பு செய்யவோ, மடலாயங்கள் நிர்மூலமாக்கப்படவோ அல்லது சிலுவையை உடைத்தெறிவதோ என்பன போன்ற நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் இறங்க மாட்டார்கள் என்ற பாதுகாப்பு உத்தரவாதத்தை கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்கள் வழங்கினார்கள்.

மார்க்கத்தில் எந்தவித வற்புறுத்தல்களும் கிடையாது என்பதில் உமர் (ரலி) அவர்கள் முழு உறுதியோடு இருந்தார்கள். எவரொருவர் இஸ்லாத்தை மனதார ஏற்றுக் கொண்டு முஸ்லிமாக ஆகிக் கொண்டாரோ அவர் வரவேற்கப்பட்டார், ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி யாரையும் வற்புறுத்தப்படவில்லை. அதேபோல திம்மிக்களின் மதச் சுதந்திரத்தில், அவர்களது மத விவகாரத்தில் முஸ்லிம்கள் யாரும் மூக்கை நுழைப்பதற்கு அனுமதிக்கவும்படவில்லை.

தேசத்தின் முழு உரிமை பெற்ற குடிமக்களைப் போலவே திம்மிக்கள் நடத்தப்பட்டார்கள். முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று பாகுபாடு காட்டப்படவில்லை. ஒரு திம்மியான ஒருவரை ஒரு முஸ்லிம் கொலை செய்து விட்டால், அந்த கொலைக்கு ஈடான தண்டனையை முஸ்லிமுக்கு வழங்கப்பட்டது. இன்னும் முஸ்லிம் அல்லாதவர்களின் சொத்துக்கள், அவர்களது சொந்த சொத்துக்களாகவே கருதப்பட்டன. இன்னும் சொல்லப் போனால், திம்மிக்களின் விவாகாரத்தில் நீதமான முறையில் நடந்து கொள்ளும்படி தன்னுடைய ஆளுநர்களுக்கு கடுமையான உத்தரவு ஒன்றையே உமர் (ரலி) அவர்கள் போட்டு வைத்திருந்தார்கள்.

திம்மிக்களிடம் ஜிஸ்யா என்ற வரி வசூலிக்கப்பட்டது, அதன் மூலம் அவர்கள் இராணுவ சேவை ஆற்றுவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டார்கள். அதேவேளையில் அவர்களாக முன்வந்து இராணுவ சேவை ஆற்றும்பட்சத்தில், அவர்களிடமிருந்து ஜிஸ்யா என்ற வரி வசூலிக்கப்பட்டுவது கிடையாது. இன்னும் எவரொருவர் ஜிஸ்யா வரியைச் செலுத்துவதற்கு வசதியற்ற நிலையில் இருந்தாரென்றால், அவரிடமிருந்து அந்த வரியை வசூலிக்கப்படுவதனின்றும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தார்.

திம்மிக்கள் அவர்களது சொந்த நடைமுறைச் சட்டங்களைப் பின்பற்றிக் கொள்வதற்கு உரிமை வழங்கப்பட்டிருந்தார்கள். திம்மிக்களின் சமூக கலாச்சாரத்தில் ஒருங்கிணைப்பை காண்பதற்காக, முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்படுவதற்கு முன்பாக திம்மிக்கள் என்ன ஆடை வடிமைப்பை பின்பற்றி ஆடை அணிந்து வந்தார்களோ அதே ஆடை வடிமைப்பைப் பின்பற்றி ஆடை அணியுமாறும், இன்னும் முஸ்லிம்களைப் போல ஆடை அணியக் கூடாது என்று தடை விதித்தார்கள். அதாவது, இந்த உத்தரவின் மூலமாக முஸ்லிம் அல்லாதவர்களின் மீது பாகுபாடு காட்டப்பட்டது என்ற அர்த்தம் கொள்ளலாகாது, மாறாக, முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களை வேறுபடுத்தி அறிந்து கொள்வதற்கான நடைமுறையாகக் கொள்ளப்பட்டது. அவரவர் கலாச்சார அடையாளங்கள் இதன் மூலம் பாதுகாக்கப்பட்டது.

அவர்களது சொந்த மத ஆச்சாரங்களைப் பின்பற்றிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்த அதேவேளையில், முஸ்லிம்களுக்கு இடையூறாக அவர்களது நடைமுறைகள் இருக்காமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். கிறிஸ்தவ மடாலயங்களில் மணியோசை முழங்கிக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த அதேவேளையில், அந்த மணியோசையானது முஸ்லிம்களின் தொழுகை நேரத்தில் ஈடுசெய்யும் விதமாக இருக்கக் கூடாது என்ற விதி வகுக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் தங்களது சிலுவையை சுமந்து கொண்டு வீதி உலா வருவதற்கு அனுமதிக்கப்பட்ட அதேவேளையில், அந்த வீதி உலாவானது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தெருக்கள் வழியாகச் செல்லக் கூடாது என்ற விதி வகுக்கப்பட்டது. இதன் மூலம் பல்வேறு சமயங்களுக்கிடையே கொளுந்து விட்டெறியும் பிரச்னைகள் உருவாகி விடக் கூடாது என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகவும் கவனம் கொடுத்துச் செயல்பட்டார்கள்.

திம்மிக்கள் விஷயத்தில் மிகவும் கண்டிப்பான முறையில் நடந்து கொள்ளுமாறும், அவர்களது ஒப்பந்தங்களைப் பேணுமாறும் தன்னுடைய கவர்னர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.

திம்மிக்களுக்கு தொந்தரவோ அல்லது அநீதமாகவோ முஸ்லிம்கள் நடக்கக் கூடாது. இன்னும் எந்தவித தீங்குகளும் அவர்களுக்கு செய்தல் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

அவரது மரணத்தருவாயில், தனக்கு அடுத்து வரக் கூடிய ஆட்சியாளர் மிகவும் நீதிமான முறையில் நடக்க வேண்டும் என்றும், அது அரசின் கடமை என்றும் அறிவுறுத்திச் சென்றார்.

திம்மிக்கள் விஷயத்தில் எனக்குப் பின் வரக் கூடிய ஆட்சியாளர் இறைவனைப் பயந்து நடந்து கொள்ள வேண்டும். அனைத்து விதமான ஆக்கிரமிப்புகளிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களை அநீதமான முறையில் நடத்தக் கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில், மற்ற குடிமக்கள் போலவே அவர்களும் நீதிமான முறையில் நடத்தப்பட வேண்டும். அவர்கள் மீது நடுநிலையான வரிவிதிப்பைக் கைக் கொள்ள வேண்டும், அவர்கள் சுமக்க வியலாத வரிச்சுமையை அவர்கள் மீது சுமத்தக் கூடாது என்று தனது இறுதி அறிவுரையில், தனக்குப் பின் வந்த ஆட்சியாளருக்கு அறிவுறுத்திச் சென்றார்கள்.

முஸ்லிம்களுக்கான உதவித் தொகை

யர்முக் மற்றும் கதீஸிய்யா போருக்குப் பின்னால் முஸ்லிம்களுக்கு அதிகமான கனீமத் என்ற போர்ச் செல்வங்கள் கிடைத்தன. மதீனாவின் கருவூலகம் நிரம்பி வழிந்தது, இதுவே உமர் (ரலி) அவர்களுக்கு மிகப் பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. இந்த செல்வத்தை என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்.

இதனைக் கருவூலகத்தில் வைத்திருந்து, இந்தப் பணத்தை பொதுநலச் சேவைகளுக்காகப் பயன்படுத்தும்படி சிலர் ஆலோசனை கூறினார்கள். இதனை பொதுவாக முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வில்லை. இறுதியாக எடுத்த முடிவின்படி, அன்றைய வருடத்தில் வருகின்ற தொகை முஸ்லிம்களுக்குப் பங்கிட்டு வழங்கி விடுவது என்ற முடிவெடுக்கப்பட்டது.

சரி.., இதனை எந்த அடிப்படையில் பங்கிடுவது என்ற கேள்வி அடுத்ததாக எழுந்தது. கிடைக்கின்ற செல்வத்தை சரி சமமாகப் பங்கிடுவது என்று ஆலோசனை கூறப்பட்டது. அவ்வாறு கிடைக்கின்ற அனைத்தையும் பங்கிட்டால் மக்கள் பெரும் பணக்காரர்கள் ஆகி விடுவார்கள். அவ்வாறு பங்கிடப்படுவதை விட மாதாந்திர உதவித் தொகை போல ஒரு தொகையை நிர்ணயம் செய்து விடலாம் என்று முடிவாகியது. அனைவரும் ஒப்புக் கொண்டார்கள்.

சரி.., இன்னாருக்கு இவ்வளவு என்று எந்த அடிப்படையில் நிர்ணயம் செய்வது என்ற கேள்வி எழுந்தது. அனைவருக்கும் ஒரே மாதிரியான உதவித் தொகையை நிர்ணயம் செய்வோம் என்றும், இன்னுமொரு ஆலோசனையாக, இஸ்லாத்தில் அவரவருக்கு இருக்கின்ற உயர் தகுதிகளை வைத்து நிர்ணயம் செய்வோம் என்றும் இரு கருத்துக் கூறப்பட்டது.

சரி.., இவர் இவரை விட சிறந்தவர் என்று எந்த அடிப்படையில் நிர்ணயம் செய்வது என்ற கேள்வி எழுந்தது. முதலில் கலிஃபாவிலிருந்து ஆரம்பம் செய்வோம், அவருக்கு அனைவரையும் விட உயர்ந்தபட்ச தொகையை நிர்ணயிப்போம் என்றார்கள். உமர் (ரலி) அவர்கள் இந்த ஆலோசனை நிராகரித்து விட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கோத்திரத்தாரிலிருந்து ஆரம்பம் செய்வோம் என்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிக நெருக்கமானவர்கள் யார் யார் என்பதை நிர்ணயம் செய்வதற்காகவென்று ஒரு கமிட்டியை நியமிக்கப்பட்டது. அந்த கமிட்டியானது கோத்திர வாரியாக பட்டியலிட்டுக் கொடுத்தது. அவர்களில் முதல் கோத்திரத்தவர்களாக பனீ ஹாஷிம் கோத்திரத்தார்கள் இருந்தார்கள். அதற்கடுத்து அபூபக்கர் (ரலி) அவர்களது கோத்திரத்தார்கள் இருந்தார்கள். மூன்றாவதாக உமர் (ரலி) அவர்களது கோத்திரத்தார்கள் இருந்தார்கள். ஆனால் மூன்றவதாக தன்னுடைய கோத்திரத்தார் இருப்பதை உமர் (ரலி) அவர்கள் விரும்பவில்லை, மறுத்து விட்டார்கள், தன்னுடைய கோத்திரத்தார்களை மிகவும் கீழான தரத்தில் வைக்குமாறு கோரினார்கள்.

இதற்கு உமர் (ரலி) அவர்களின் கோத்திரத்தார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் உமர் (ரலி) அவர்களோ.., என்னுடைய தோளின் மீது ஏறிக் கொண்டு, என்னுடைய நல்லறங்களை நீங்கள் பாழடிக்கப் பார்க்கின்றீர்கள், உங்களை நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறி விட்டார்கள்.

இறுதியாக முழு பட்டியலும் தயாரிக்கப்பட்ட பின், அதற்கு உமர் (ரலி) அவர்கள் ஒப்புதல் வழங்கினார்கள். அதன்படி,

    இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு அதிகபட்ச தொகையாக 12 ஆயிரம் திர்ஹம்களும்,

    இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சிறிய தகப்பனார் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு 7 ஆயிரம் திர்ஹம்களும்,

    இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பேரர்களான ஹஸன் மற்றும் ஹுஸைன் (ரலி) அவர்களுக்கு தலா 5 ஆயிரம் திர்ஹம்களும்,

    பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களுக்கு தலா 6 ஆயிரம் திர்ஹம்களும்,

    ஹுதைபிய்யா உடன்படிக்கையின் சமயத்தில் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டவர்களுக்கு 4 ஆயிரம் திர்ஹம்களும்,

    மக்காவின் வெற்றியின் பொழுது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு தலா 3 ஆயிரம் திர்ஹம்களும்,

    இஸ்லாத்தைப் புறக்கணித்துச் சென்றவர்கள் மீதான யமாமா போன்ற போர்களில் கலந்து கொண்டவர்களுக்கு தலா 3 ஆயிரம் திர்ஹம்களும்,

    யர்முக் மற்றும் கதீஸிய்யா போரில் கலந்து கொண்டவர்களுக்கு தலா 2 ஆயிரம் திர்ஹம்களும் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

இஸ்லாத்தில் அவர்கள் நுழைந்த சமயத்தை வைத்து இந்தத் தொகையை நிர்ணயித்திருக்கின்றேன், அவர்கள் என்ன தகுதியில் இருக்கின்றார்கள் என்ற நிலையை வைத்து நிர்ணயிக்கப்படவில்லை என்று உமர் (ரலி) அவர்கள் அறிவிப்புச் செய்தார்கள்.

இந்த வகையில், உமர் (ரலி) அவர்களது மகன் அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்கள் 3 ஆயிரம் திர்ஹம்களை உதவித் தொகையாகப் பெற்றுக் கொண்டார்கள். அதேநேரத்தில் உஸாமா (ரலி) அவர்களுக்கு 4 ஆயிரம் திர்ஹம்கள் வழங்கப்பட்டன. இதற்கு அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதற்கு பதிலளிக்குமுகமாக உமர் (ரலி) அவர்கள் தனது மகனைப் பார்த்து,

அப்துல்லாவே..! உங்களை விட உஸாமாவுக்கு அதிகம் கொடுத்துள்ளேன், ஏனென்றால்.., அவர் உன்னை விட இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிக நெருக்கமானவர், இன்னும் உன்னுடைய தந்தையை விடவும் அவரது தந்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இன்னும் நெருக்கமானவர் என்று பதில் கூறினார்கள்.

பஞ்சம்

கி.பி. 640 வாக்கில் அரேபிய முழுவதும் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியது. மழை இல்லை, அதனால் விவசாயமும் இல்லை. அதனால் புற்பூண்டுகள் கூட எங்கும் காணப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் கடுமையான தொந்தரவுகளுக்கும், சிரமங்களுக்கும் ஆளானார்கள். இன்னும் புழுதிக் காற்றும் சுழன்றடிக்கவும், இன்னும் மக்கள் சிரமங்களுக்கு ஆளானார்கள். சந்தைகளில் கூட தானியங்களைப் பார்க்க முடியவில்லை. நெய், வெண்ணைய் மற்றும்; மாமிசங்கள் கூட சந்தையில் காணவில்லை. மக்கள் தங்களது உணவுத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே மிகவும் சிரமப்பட்டார்கள்.

நிலைமையின் விபரிதத்தை உணர்ந்த கலிஃபா உமர் (ரலி) அவர்கள், ஏனைய பிரதேச கவர்னர்களுக்கு கடிதம் எழுதி, அரேபியாவுக்கு உணவுப் பொருட்களை அனுப்பி வைக்குமாறு கோரினார்கள். சிரியா, எகிப்து, மற்றும் ஈராக் பகுதிகளில் இருந்து ஒட்டகம் நிறைய உணவுப் பொருட்கள் மதீனாவை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டன, எகிப்திலிருந்து கடல் மார்க்கமாகவும் உணவுப் பொருட்கள் வந்து சேர்ந்தன.

குடும்ப வாரியாக உணவுப் பொருட்கள் பங்கீடு செய்யப்பட்டன, கிராமப் புறங்களிலிருந்து வந்து மதீனாவில் தஞ்சம் புகுந்திருந்த மக்களுக்கு அரசின் செலவில், உணவு சமைத்து வழங்கப்பட்டது. இவ்வாறாக ஒவ்வொரு நாளும் 40 ஆயிரம் நபர்களுக்கு உணவு சமைத்துப் பரிமாறப்பட்டது.

அரசின் அனைத்து வளங்களும் உமர் (ரலி) அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால், பஞ்சம் நிலவி வந்த காலத்தில், சாதாரண குடிமகன் எதனைச் சாப்பிடுவானோ அதனையே நானும் சாப்பிட வேண்டும் என்று உமர் (ரலி) அவர்கள் முடிவெடுத்துக் கொண்டார்கள். அதன்படி, மாமிசம், நெய், பாலடைக் கட்டி போன்றவற்றைக் கொண்டு சமைக்கப்பட்ட உணவை சாப்பிட மறுத்ததோடு, பஞ்சம் முடியும் வரைக்கும் இதேநிலையில் இருந்து கொள்வது என்றும் முடிவெடுத்துக் கொண்டார். இன்னும் தன்னுடைய குடும்பத்தார்களிடம் தனக்கு சமைக்கப்படக் கூடிய உணவானது சாதாரண எண்ணைய் கொண்டு மட்டுமே சமைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவையே போட்டிருந்தார். ஆடம்பரமான உணவு வகைகளை தவிர்த்துக் கொண்டார். சாதாரண உணவு வகைகளையே உட்கொண்டார். இதன் காரணமாக அவரது உடல் மெலிந்து, நிறமும் மாறியது. அவரது வயிறு பிடிக்காத உணவின் காரணமாக உறும ஆரம்பித்தது, ஆனால் உமர் (ரலி) அவர்களோ.., வயிறே..! உன்னால் முடிந்த வரைக்கும் உறுமிக் கொள், பஞ்சம் எந்தளவு நீடிக்கின்றதோ அதுவரைக்கும் உன்னை நான் அசுத்தமடைய விட அனுமதிக்க மாட்டேன் என்று கூறிக் கொண்டார்கள். ஒருநாள் சந்தையில் நெய் விற்பதைக் கண்ட அவரது பணியாள் ஒருவர், உமர் (ரலி) அவர்களுக்காக கொஞ்சம் நெய்யை வாங்கிக் கொண்டு வந்தார். இதனை அறிந்து கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதனால் செய்யப்பட்ட உணவை ஆடம்பரம் என்று கருதி சாப்பிட மறுத்து விட்டார்கள். ஒருநாள் அவரது மகன் தந்தைக்காக மாமிச உணவை சமைத்து வைத்துக் கொண்டு சாப்பிட அழைத்தார். ஆனால் உமர் (ரலி) அவர்கள் சாப்பிட வர மறுத்து விட்டார்கள். பஞ்சம் நிலவி வந்த அந்த காலத்தில் தன்னுடைய மனைவியாரிடத்தில் நெருங்குவதில் கூட உமர் (ரலி) அவர்கள் மிகவும் கண்டிப்பானவராக இருந்தார்.

பஞ்சம் நிலவி வந்த அந்த காலத்தில், ஒவ்வொரு தெருவாக இரவு நேரத்தில் சுற்றி சுற்றி வந்து, அனைவருக்கும் உணவளிக்கப்பட்டு விட்டதா என்று தானே நகர்ச் சோதனையில் இறங்கினார்கள். எப்பொழுது உதவி கோரி விண்ணப்பங்கள் வருகின்றனவோ, பிறரை எதிர்பார்க்காது தானே ஓடிச் சென்று உதவினார். இன்னும் உதவிப் பொருட்களை தானே தனது முதுகில் சுமந்து கொண்டு சென்றார். நகர்ச் சோதனையை முடித்துக் கொண்டு, இரவின் இறுதிப் பகுதியில் தொழுகைக்காகவும் நிற்கக் கூடியவராக உமர்(ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள். சிறிது தூங்கி விட்டு, அதிகாலைத் தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக விரைவில் பள்ளிவாசலை நோக்கிச் செல்வதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

மக்கள் ஒன்று கூடியிருக்கும் அந்தப் பள்ளியில் :

மக்களே.., உங்களது ஆட்சியாளரின் கவனக் குறைவு காரணமாக இந்த தண்டனை இறங்கியிருக்கின்றதா அல்லது மக்களின் பாவங்களின் காரமணாக இந்த வேதனையை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோமா என்பது தெரியவில்லை. பாவத்தைச் சுமக்கின்றவர்கள் அனைவரும் இறைவனிடம் பிராயச்சித்தம் தேடிக் கொள்ளுங்கள், இந்த கடுமையான சூழ்நிலையிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்படி இறைவனிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.

பிலால் பின் ஹாரிஸ் என்ற பனூ மஸ்னி கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு ஆட்டை அறுத்தார், அறுத்த அந்த ஆட்டில் எலும்பைத் தவிர வேறொன்றுமில்லை என்ற அளவுக்கு அங்கே பஞ்சம் தலைவிரித்தாடியது. அன்றைய இரவில் அவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டார். அந்தக் கனவில்..,

உமரிடம் சென்று எனது இந்தச் செய்தியைத் தெரிவித்து விடுங்கள். மார்க்கத்தில் அவரை உறுதியாக இருக்கின்றார். இந்த சோதனையை விட்டும் விலகிக் கொள்வதற்கு மேலும் மார்க்கத்தில் உறுதியாக இருக்கும்படி அவரிடம் கூறுங்கள் என்று அந்தக் கனவில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிலால் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்த இந்த செய்தியை உமர் (ரலி) அவர்களிடம் பிலால் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் தெரிவித்து விடுகின்றார்கள். இந்தச் செய்தியின் மூலமாக கிடைக்கின்ற படிப்பினை என்ன என்பதனை உமர் (ரலி) அவர்களால் சரியாக ஊகித்துக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை தன்னிடம் ஏதேனும் பொடுபோக்குத் தனங்கள் இருப்பதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இந்தச் செய்தி தெரிவிக்கின்றதோ என்றும் கருதலானார்கள். இறையச்சத்தின் காரணமாக அவரது உடல் நடுங்கிற்று. பள்ளிவாசலுக்குச் சென்ற உமர் (ரலி) அவர்கள், தன்னிடம் ஏதேனும் குறைகள் காணப்படுகின்றனவா என்று மக்களிடம் விசாரிக்க ஆரம்பித்தார்கள். உங்களிடம் எந்த பலவீனங்களும் காணப்படுவதாக எங்களால் அறிய முடியவில்லை என்று மக்கள் கூறலனார்கள்.

பின்னர், மக்கள் ஒன்று சேர்ந்து.., உமரே.., இந்தக் கேள்வியை எங்களை நோக்கி வீசக் காரணம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கான அவசியம் என்ன வந்து விட்டது உங்களுக்கு என்றார்கள். அதன் பின்னர் பிலால் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களை அழைத்த உமர் (ரலி) அவர்கள், அந்த கனவை மக்களுக்கு விளக்கப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்கள். பிலால் (ரலி) அவர்கள் அந்தக் கனவைக் கூறி முடித்தவுடன், அங்கிருந்த நபித் தோழர் ஒருவர் எழுந்திருந்து, அமீருல் முஃமினீன் அவர்களே.., இந்தச் செய்தியில் உங்களுக்கு எதிராக எதுவும் காணப்படவில்லை. நம்மைச் சுற்றி இருக்கின்ற இந்த பஞ்சம் நம்மை விட்டு அகல்வதற்காக இஸ்திஸ்கா என்ற மழைத் தொழுகையைத் தொழும்படித் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நம்மை அறிவுறுத்தி இருக்கின்றார்கள் என்று விளக்கமளித்தார்.

அதன் பின்னர் உமர் (ரலி) அவர்கள் ஒருநாளை நிர்ணயித்து, அந்த நாளில் மழைத் தொழுகை தொழப்படும் என்று அறிவிப்புக் கொடுத்தார்கள். அன்றைய நாளில் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்கள் எங்கும் சிறப்பான மழைத் தொழுகையை தொழ வேண்டும் என்ற உத்தரவையே உமர் (ரலி) அவர்கள் வழங்கினார்கள். மதீனாவில் முஸ்லிம்கள் மழைத் தொழுகைக்கான ஒன்று கூடினார்கள். அன்று நடந்த தொழுகையில் உரையாற்றிய உமர் (ரலி) அவர்கள் :

நாம் பாவங்கள் செய்தவர்களாகி விட்டோம். நம்முடைய பாவங்களுக்கு பிராயச்சித்தமாக இறைவனிடம் பாவ மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். யா அல்லாஹ்..! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம்.., உன்னிடமே உதவி கோருகின்றோம். யா அல்லாஹ் எங்களது பாவங்களை மன்னிப்பாயாக.., எங்கள் மீது கருணை காட்டுவாயாக, எங்கள் மீது இரக்கம் காட்டுவாயாக..!

இவ்வாறாக மழைத் தொழுகை நடத்தி முடிக்கப்பட்டதன் பின், ஒரு வார காலத்திற்குள் மதீனாவின் வான் பரப்பில் மேகங்கள் சூழத் துவங்கின. கன மழை பொழிந்தது. இதன் பின்னர், உமர் (ரலி) அவர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துமுகமாக சிறப்புத் தொழுகையையும் நடத்தினார்கள். மழைக்குப் பின்னர் நிலைமைகள் முற்றிலும் மாறியது, பஞ்சம் நீங்கியது. மிகவும் கடுமையானதொரு சூழ்நிலையில் உமர் (ரலி) அவர்கள் மிகவும் சமர்த்தியமான முறையில் தமது ஆட்சியை நிர்வகித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



அரசியல் மற்றும் அரச நிர்வாகத் திறமை

கவர்னர்கள் நியமனம்

அரசாங்க நிர்வாகம் சீராக நடைபெறுவதற்கு பிராந்தியக் கவர்கனர்களின் திறமையும், சீரிய நிர்வாகவும் தேவையானது என்பதை உணர்ந்த உமர் (ரலி) அவர்கள், கவர்னர்களைத் தேர்வு செய்யும் விஷயத்தில் மிகவும் கவனமாகவும், அவர்களைத் தேர்வு செய்வதில் மிகவும் கண்டிப்பான நடைமுறைகளைப் பேணுபவர்களாகவும் இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் தனது கவர்னர்களை எவ்வாறு தேர்வு செய்தார்கள் என்பது பற்றிய பல தகவல்களை நாம் இங்கே காணப் போகின்றோம்.

ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் ஒரு தோழரை கவர்னராக நியமிக்க நாடினார்கள். அவ்வாறு கவர்னராக நியமிக்கப்பட இருந்தவர், தனது நியமன உத்தரவைப் பெற்றுக் கொள்ள உமர் (ரலி) அவர்களிடம் வந்திருந்தார். கவர்னர் நியமனத்திற்கான உத்தரவை தனது செயலாளரிடம் எழுதும்படியும் கேட்டிருந்தார்கள். இந்த நிலையில், அந்த நியமன உத்தரவு எழுதப்பட்டுக் கொண்டிருந்த அந்த வேளையில் உமர் (ரலி) அவர்களின் இளைய மகன் உமர் (ரலி) அவர்களின் அருகில் வந்து, அவரது மடியில் அமர்ந்தார். உமர் (ரலி) அவர்கள் மடியில் அமர்ந்த தனது மகனை அணைத்துக் கொண்டார்கள். அதனைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த தோழர் கூறினார்.., 'அமீருல் முஃமினீன்.., அவர்களே..! உங்களது குழந்தைகள் உங்களிடம் அச்சமின்றி சுதந்திரமாக வருகின்றன, ஆனால் என்னுடைய குழந்தைகளே என்னை நெருங்கவே பயப்படுகின்றன என்று கூறினார்.

இதனைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.., ''உங்களது குழந்தைகளே உங்களைப் பார்த்தது அச்சப்படுகின்றது என்று சொன்னால்.., பொதுமக்கள் இன்னும் அதிகமாக அல்லவா உங்களைப் பார்த்து அச்சப்படுவார்கள். அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டவர்கள் இத்தகைய மனிதர்கள் முன்னால் தங்களது புகார்களைக் கொண்டு வரவே அச்சப்படுவார்கள். எனவே, கவர்னராகவும் தகுதி உமக்கு இல்லை எனக் கூறிய உமர் (ரலி) அவர்கள், தன்னுடைய உதவியாளரை அழைத்து அந்த நியமன உத்தரவை ரத்து செய்யும்படிக் கூறி விட்டார்கள்.””

ஒருமுறை ஒரு தோழரை கவர்னராக நியமிக்க நாடினார்கள். அதற்கான உத்தரவு வழங்கப்படுவதற்கு முன்னர் அந்தத் தோழரை அழைத்து விபரம் சொன்ன பொழுது, அந்தத் தோழர் தனக்கு அந்தக் கவர்னர் பதவியைத் தருமாறு வேண்டிக் கொண்டார். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் அவரைப் பார்த்து :

''எனது சொந்த விருப்பத்தின் போரில் உம்மை நான் கவர்னராக நியமிக்க இருந்தேன், ஆனால் அந்த நியமனத்தை நீரே விரும்பிக் கேட்பதில் இருந்து, அந்தப் பதவியை அலங்கரிப்பதற்கு உமக்குத் தகுதி இல்லை என்று கருதுகின்றேன். நீரே அந்தப் பதவியை விரும்புவதில் இருந்து, அந்தப் பதவியைக் கொண்டு நீர் ஏதேனும் ஆதாயம் அடைய இருக்கின்றீரோ என்று நான் கருத வேண்டி உள்ளது, அதற்கு உம்மை நான் அனுமதிக்க மாட்டேன். எவரொருவர் இந்தப் பதவியைச் சுமையாகக் கருதுகின்றாரோ, இன்னும் இதனை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை முன்னிட்டு நிர்வகிக்க எண்ணுகின்றாரோ அவரே இந்தப் பதவியை அடைந்து கொள்ளத் தகுதியானவர் என்று கூறி விட்டார்கள்.

அடுத்ததாக, கூஃபாவின் கவர்னராக யாரை நியமிப்பது என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். மிகவும் கடின சித்தம் கொண்ட ஒருவரை நியமித்தால் மக்களை அவரைப் பற்றிப் புகார் கூற ஆரம்பித்து விடுகின்றார்கள். இன்னும் இளகிய மனது கொண்ட ஒருவரை நியமித்தால், அதனைத் தங்களுக்குச் சாதகமாக மக்கள் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றார்கள். இது விஷயத்தில் தனக்கு ஆலோசனை கூறுமாறு உமர் (ரலி) அவர்கள் தனது தோழர்களைக் கேட்டுக் கொண்டார்கள். அப்பொழுது அங்கு கூடியிருந்த சபையில் இருந்த ஒருவர் எழுந்திருந்து, இது விஷயத்தில் நான் ஒருவரை முன்மொழியலாம் என்று கருதுகின்றேன் என்றார். உமர் (ரலி) அவர்களோ.., யார் அந்த நபர் சொல்லுங்கள் என்றார்கள்.., அந்த நபர் கூறினார்.., உங்களது மகன் அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்கள் இதற்கு மிகவும் தகுதியானவர் என்று கூறினார்.

இதனைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள்.., உம்மீது இறைவனின் சாபம் உண்டாகட்டுமாக..! மிக உயர்ந்த பதவியில் உமர் தன்னுடைய மகனை நியமித்து விட்டார் என்று மக்கள் என்னைப் பற்றிப் பேசுவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கின்றீர்ளே..! இதற்கு நான் எப்பொழுதும் உடன்பட மாட்டேன்”” என்று பதில் கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்களைச் சுற்றிலும் உஸ்மான் (ரலி), அலி (ரலி), சுபைர் (ரலி) மற்றும் தல்ஹா (ரலி) போன்றோர்கள் இருந்தும் இவர்களின் யாருக்கும் உமர் (ரலி) அவர்கள் மிக உயர்ந்த பதவி எதனையும் தரவில்லை. ஒரு சமயம் ஒருவர்.., இவ்வளவு பிரபலமான நபித்தோழர்கள் உங்களுக்கு மிக அருகில் இருந்தும் இவர்களில் யாருக்கும் நீங்கள் உயர்ந்த பதவியை வழங்காமல் இருப்பது ஏன்? என்று கேட்டார். அதற்கு.., இவர்கள் அனைவரும் தங்களது இறையச்சம், இறைநம்பிக்கை போன்ற உன்னதப் பண்புகளால் மக்களால் மிகவும் மதிக்கப்படக் கூடிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் கூறும் இந்தக் கவர்னர் பதவியை அடைந்து அதில் அவர்கள் ஏதேனும் தவறிழைக்கும்பட்சத்தில், இன்றைக்கு அவர்கள் மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்பானது சோபை இழந்து விடக் காரணமாக அமைந்து விடக் கூடாது என்பதற்காகவே நான் அவர்களுக்கு இந்தப் பதவிகளை வழங்காமல் இருந்து வருகின்றேன் என்று பதில் கூறினார்கள்.

ஒருமுறை ஹிம்ஸ் பகுதியின் கவர்னர் பதவி காலியாக இருந்தது, இதனை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு வழங்கலாமா என்று உமர் (ரலி) அவர்களுக்கு யோசனையாக இருந்தது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை அழைத்த உமர் (ரலி) அவர்கள்.., உங்களை நான் ஹிம்ஸ் ன் கவர்னர் பதவியில் அமர்த்த நினைக்கின்றேன், இருப்பினும் உங்களைப் பற்றியதொரு அச்சம் எனக்கிருக்கின்றது என்று கூறினார்கள். அது என்ன அச்சம் என்றார்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். அதாவது, சில சமயங்களில் நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிக நெருக்கமானவன் என்ற எண்ணம் உங்களிடம் வந்து விடுமோ, அதன் காரணமாக சட்டத்திற்கு அப்பாற்பட்டவன் என்று நீங்கள் கருதிடுவீர்களோ என்று தான் அச்சப்படுகின்றேன் என்று உமர் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள். அதற்கு, எப்பொழுது என்னைக் குறித்து அச்சம் ஏற்பட்டு விட்டதோ அப்பொழுதிலிருந்து நான் இந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறி விட்டார்கள். அப்படியானால், இது விஷயத்தில் எனக்கு நீங்கள் உதவ வேண்டும், யாரை இந்தப் பதவிக்கு நான் நியமிக்கலாம் என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள், ''யார் நல்ல மனிதரோ அவரை நியமனம் செய்யுங்கள், இன்னும் யார் மீது உங்களுக்கு அச்சம் இல்லையோ அவரையே நியமியுங்கள்”” என்று பதில் கூறினார்கள்.

நீங்கள் கவர்னரை நியமனம் செய்வதில் நீங்கள் கடைபிடிக்கக் கூடிய வழிமுறை யாது? என்று ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு, ''ஒருவர் தனது மக்களுக்கு மத்தியில் இருந்து கொண்டிருக்கும் பொழுது, அவர் அவர்களது தலைவராக இருக்க வேண்டும், இருப்பினும் அவர் தலைவரைப் போல இருக்க மாட்டார், இன்னும் அவர் தலைவராக இருக்கும் பொழுது.., அவர் அவர்களில் ஒருவரைப் போல இருக்க வேண்டும்.., இத்தகைய மனிதரைத் தான் நான் கவர்னராக நியமிக்க விரும்புகின்றேன் என்று கூறினார்கள்.

அரசியல் நிர்வாகம்

உமர் (ரலி) அவர்களது காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யமானது பல்வேறு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு பிரிக்கப்பட்ட தேசங்கள் எத்தனை என்பதில் வரலாற்று ஆசிரியர்களிடத்தில் கருத்துவேறுபாடு நிலவுகின்றது. சிலர் எட்டு பிரதேசங்கள் என்றும், சில இதனை விட அதிகம் என்றும் கருத்துக் கூறுகின்றார்கள்.

அதாவது நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்கள் அடிப்படையில்,

முழு அரேபியாவும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது, ஒன்று மக்கா மற்றது மதீனா

ஈராக் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது, ஒன்று பஸரா இன்னொன்று கூஃபா

யூப்ரடிஸ் மற்றும் டைக்ரிஸ் நதிப் படுகைகள் மற்றும் ஜஸீரா

சிரியா

பாலஸ்தீனத்தை உமர் (ரலி) அவர்கள் இரண்டாகப் பிரித்தார்கள், அய்லா மற்றும ரம்லா

எகிப்து இரண்டாகப் பிரிக்கப்பட்டது, ஒன்று எகிப்தின் மேல்பகுதி மற்றும் எகிப்தின் கீழ்பகுதி

பெர்ஸியா மூன்றாகப் பிரிக்கப்பட்டது, ஒன்று குரஸான், அஸர்பைஜான் மற்றும் ஃபர்ஸ்

ஒவ்வொரு பிரதேசமும் பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. அவ்வாறு பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் எத்னை என்பது தெரியவில்லை. பெர்ஸியாவில் மட்டும் 47 மாவட்டங்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றது. முழு நாட்டிலும் இவ்வாறாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 100 இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

ஒவ்வொரு பிரதேசமும் கவர்னர் அல்லது வலி என்று பொறுப்புதாரரால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. அந்தப் பிரதேசங்களில் நியமிக்கப்பட்ட ஏனைய அதிகார வரம்புகள் பின்வருமாறு :

    கதீப் அல்லது தலைமைச் செயலாளர்

    கதீப் உத் திவான், செயலாளர், இராணுவம்

    ஸாஹிப் உல் கர்ராஜ், வருவாய்த் துறை அதிகாரி

    ஸாஹிப் உல் அஹ்தாத், காவல் துறை அதிகாரி

    ஸாஹிப் உல் பைத்துல் மால், கருவூலக அதிகாரி

    காழி, தலைமை நீதிபதி

சில மாவட்டங்களில் தனிச்சிறப்பு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தார்கள், அப்படிப்பட்ட மாவட்டங்களின் தலைமைத் தளபதியாக வலி என்பவர் நியமனம் செய்யப்பட்டிருந்தார்கள்.

உமர் (ரலி) அவர்களது காலத்தில் கவர்னராகப் பணியாற்றியவர்களின் விபரம் வருமாறு :

    அபூ உபைதா (ரலி) அவர்கள் சிரியாவின் கவர்னராகவும்,

    அபூ உபைதா (ரலி) அவர்களின் மரணத்திற்குப்பின் யஸீத் பின் அபூ ஸுஃப்யான் (ரலி) அவர்கள் சிரியாவின் கவர்னராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

    யஸீத் பின் அபூ ஸுஃப்யான் (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின் முஆவியா (ரலி) அவர்கள் சிரியாவின் கவர்னராக வருகின்றார்கள்.

    அம்ருப்னுல் ஆஸ் (ரலி) - எகிப்து

    ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) - கூஃபா

    உத்பா பின் கஸ்வான் (ரலி) - பஸரா

    அபூ மூஸா அஷ்அரி (ரலி) அவர்கள் உத்பா (ரலி) அவர்களுக்குப் பின் பஸராவின் கவர்னராகப் பொறுப்பேற்கின்றார்கள்

    இதாப் பின் உஸைத் (ரலி) அவர்கள் - மக்கா

    அய்யாத் பின் கனம் (ரலி) அவர்கள் ஜஸீரா பகுதிக்கு கவர்னராக நியமிக்கப்படுகின்றார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு முக்கியமான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டார்கள், அதாவது :

ஆமில் - தனிச் சிறப்பு அதிகாரத்தையும் இன்னும் பொது நிர்வாகம் ஆகிய இரு பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டன.

காழி - நீதித்துறை பரிபாலணம் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு நியமனமும் எழுத்துப் பூர்வமாகவே செய்யப்பட்டது. நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கான அதிகார வரம்புகள் என்ன என்பது பற்றி குறிப்பேடுகள் வழங்கப்பட்டன. அதில் அவர்களுக்கான அதிகார வரம்புகள் மற்றும் கடமைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. நியமனம் செய்யப்படக் கூடிய அதிகாரி பொறுப்பேற்பதற்கு முன்னால் மக்களவையை ஒன்று கூட்டி, தனக்கு என்னென்ன அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது பற்றி பொது அறிவிப்புச் செய்தாக வேண்டும் என்று பணிக்கப்பட்டார். இதன் மூலம் பொதுமக்கள் புதிய அதிகாரியின் அதிகார வரம்புகள் என்ன என்பதையும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகள் என்ன என்பது பற்றியும் அறிந்து கொண்டார்கள், இதனால் வரம்பு மீறுகின்ற அதிகாரியை அடையாளம் காணவும், அவர் செய்கின்ற தவறுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றை எளிதில் சுட்டிக் காட்டவும் மக்களால் இயலுமாக இருந்தது.

நியமிக்கப்பட இருக்கின்ற அதிகாரிகளை நோக்கி பொதுவான சில விதிமுறைகளை அவர்களுக்கு ஞாபகமூட்டக் கூடியவர்களாக இருந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அவற்றில் : ''ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், உங்களை நான் உத்தரவிடும் படைத்தளபதியாகவோ மற்றும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் அதிகாரம் கொண்டவராகவோ நியமிக்கவில்லை. மாறாக.., மக்கள் உங்களது நன்னடத்தைகளைப் பார்த்துப் பின்பற்றுகின்ற வழிகாட்டும் தலைவர்களாகவே நியமித்திருக்கின்றேன் என்று கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். முஸ்லிம்களுக்கு என்னென்ன உரிமைகள் வழங்கப்பட்டுள்ளனவோ அவற்றினை வழங்கிடுங்கள், அதிகார துஷ்பிரயோகம் செய்து அவர்களை அடக்குமுறைக்குள்ளாக்கி விட வேண்டாம். வரம்பு மீறி அவர்களைப் புகழ வேண்டாம், அது தவறான பாதைக்கு அவர்களை அழைத்துச் சென்று விடும். மக்களது முகத்தில் அறைந்தாற் போல உங்களது கதவுகளை மூட வேண்டாம், வலிமையுள்ளவர்கள் வறியவர்களை ஆக்கிரமிக்க அனுமதிக்கவும் வேண்டாம். அவர்களில் நீங்கள் தான் உயர்ந்தவர் என்ற நினைப்புடன் இருக்க வேண்டாம், அதுவே நீங்கள் அவர்கள் மீது செலுத்தும் அடக்குமுறையின் முதல்படியுமாகும் என்று கூறக் கூடியவர்களாக உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.

நியமன நேரத்தில், கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுத்துக் கொள்ளும்படி ஒவ்வொரு அதிகாரியும் வேண்டப்பட்டார். அதாவது,

    துருக்கிய குதிரையில் பயணிப்பதில்லை

    அழகிய மிருதுவான ஆடைகளை அணிவதில்லை

    மிருதுவான மாவினைக் கொண்டு செய்யப்பட்ட உணவை உண்பதில்லை

    பணியாள் ஒருவரை வீட்டு வாயிலில் வாயில் காப்போனாக நிறுத்தி வைப்பதில்லை, மற்றும்

    பொதுமக்கள் எளிதில் அணுகும் வண்ணம் வீட்டு வாசலை எப்பொழுதும் திறந்தே வைத்திருப்பது

இன்னும் அதிகார நியமனத்திற்கு முன்பாக, மேற்கண்ட அதிகாரியின் சொத்து மற்றும் அவர் வைத்திருப்பவைகள் குறித்து முழு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவரது அதிகார நாட்களின் பொழுது இவற்றில் ஏதேனும் இயல்புக்கு மாறாக கூடியது என்றால், அந்த அதிகார அழைக்கப்பட்டார், அதற்கான பதில் அளிக்கும் கோரப்பட்டார், இன்னும் அவ்வாறு இயல்புக்கு மீறி சொத்து சேர்க்கப்பட்டிருந்தால் அந்த சொத்து பறிமுதல் செய்யப்பட்டு, அரசின் கஜனாவில் சேர்க்கப்பட்டது.
Previous Post Next Post