பித்அத் என்றால் என்ன? நல்ல பித்அத் வழிகேடான பித்அத் என்று இருக்கிறதா? உதாரணம் தரவும்?


-தொகுப்பு
உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

பித்அத் (நூதனம், அனாச்சாரம்) என்றால் என்ன ? நல்ல பித்அத் வழிகேடான பித்அத் என்று இருக்கிறதா?
உதாரணம் தரவும்?

தெளிவு :
இபாததுக்களில், (வணக்க வழிபாடுகளில்)
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த ஸுன்னதுகளை (வழிமுறைகளை) விட்டுவிட்டு ஊர்வழக்கு, குடும்ப வழக்கு, மஹல்லா வழக்கு என்று மன இச்சைகளை மார்க்கமாக ஆக்க முற்படுவது.

பித்அத்துக்களை "முபாஹ்", என்று முறைகேடாக இவர்கள் விளக்கம் தருகிறார்கள், வணக்க வழிபாடுகளில் கூடுதல் குறைவு செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஆதாரங்கள் வேண்டும்.

உலக விடயங்களில் இஸ்லாம் ஒரு விஷயத்தை தடை செய்யாத வரை அது "முபாஹ்", கூடும்.

இந்த உண்மையை மறைக்க பார்க்கிறார்கள் இந்த அசத்தியவாதிகள்.

தாங்கள் புரியும் அனாச்சாரங்களை மார்க்கம் சொல்லாத விதத்தில் விளக்கம் தருகிறார்கள்.

அது தொழுகை, நோன்பு, ஸதகா என்ற எந்த வகை  வணக்கமாக இருந்தாலும் இறைத்தூதர் அவர்களின் வழிகாட்டுதலில் வணங்கவில்லை என்றால் 
அது பித்அத் (நூதனம், அனாச்சாரம்)
அதை ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து மார்க்க அறிஞர்களை வைத்து அரங்கேற்றம் செய்தாலும் 
ஒரு பித்அத் ஸுன்னதாக ஆகாது, அது வழிகேடே அன்றி வேறில்லை.

من أحدث في أمرنا هذا ما ليس منه، فهو ردٌّ))؛ رواه البخاري ومسلمٌ

யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது அல்லாஹ்விடத்தில் எற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

من عمل عملًا ليس عليه أمرنا، فهو ردٌّ

யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக செய்கின்றாரோ அது அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

இவ்விரு நபிமொழிகளிலிருந்தும் பித்அத்தான செயல்கள் அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பது நமக்கு தெளிவாக விளங்குகின்றது.

எல்லா பித்அத்தும் வழிகேடாகும்

இஸ்லாத்தில் புதிதாக (ஒன்றை) உருவாக்குவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன். ஏனென்றால் புதிதாக ஏற்படுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும், அனைத்து பித்அத்தும் வழிகேடாகும், என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

இன்னும் ஒரு அறிவிப்பில் அனைத்து வழிகேடும் நரகத்திற்கு கொண்டு செல்லக்கூடியவை எனவும் வந்திருக்கின்றது.

எல்லா பித்அத்துகளும் வழிகேடு என்று நபி(ஸல்) அவர்கள் தெளிவாகச் சொல்லியிருந்தும், இன்று முஸ்லிம்களில் சிலர், எல்லா பித்அத்தும் வழிகேடல்ல, கெட்ட பித்அத்துக்கள்தான் வழிகேடாகும், நல்ல பித்அத்துக்கள் வழிகேடல்ல என்று பித்அத்துக்களை இரண்டாக பிரிப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கின்றது. இது முற்றிலும் தவறாகும்.

நபி(ஸல்) அவர்கள் பித்அத்துக்களை விவரிக்கும் போது குல்லு பித்அத்தின் ளலாலத்துன் என்றே கூறினார்கள். குல்லு என்றால் "எல்லாம்" என்பது பொருள். குல்லு பித்அத்தின் ளலாலத்துன் என்றால் எல்லா பித்அத்தும் வழிகேடு என்றுதான் பொருள். அரபு இலக்கணம் தெரிந்த யாரும் இதை மறுக்கமாட்டார்கள். இதற்குப் பிறகும் சில பித்அத் வழிகேடு, சில பித்அத் நல்லது என்று கூறுவது நபியவர்களின் ஹதீஸுக்கு தவறான விளக்கம் கொடுத்ததாக ஆகாதா? இனிமேலாவது சிந்தித்துப் பார்க்கட்டும்!

பித்அத் வாதிகள் எடுத்து வைக்கும் ஆதாரங்கள்?

1. யார் இஸ்லாத்தில் நல்ல ஒரு காரியத்தை  ஆரம்பிக்கின்றாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும், (அவருக்குப் பின்) செய்பவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் ஒரு பங்கும் இவருக்கு உண்டு. ஆனால் அவர்களின் நன்மையில் ஏதும் குறைக்கப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

அவர்கள் தரும் விளக்கம்: இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள், புதிதாக நல்ல காரியத்தை இஸ்லாத்தில் ஆரம்பிக்கலாம் என அனுமதி அளித்திருக்கின்றார்கள். ஆகவே நல்ல பித்அத்தைச் செய்வது ஆகுமானதாகும்.

நாம் கொடுக்கும் விடை: இது  நீளமான ஹதீஸின் ஒரு பகுதியாகும். அந்த ஹதீஸை முழுமையாகப் படித்தால் தெளிவு கிடைத்து விடும். அதாவது நபி(ஸல்) அவர்களிடத்தில் மிக வறுமை நிலையில் சில நபித் தோழர்கள் வந்தார்கள். அதைப்பார்த்த நபி(ஸல்) அவர்கள் தன் தோழர்களைப் பார்த்து, அவர்களுக்கு தர்மம் செய்யும்படி வற்புறுத்தினார்கள். இதைக் கேட்ட ஒரு நபித் தோழர் தன் வீடு சென்று தன் கை நிரம்பிய அளவு வெள்ளிக்காசுகளைக் கொண்டு வந்து அவர்களுக்குக் கொடுத்தார். இதைப்பார்த்த மற்ற நபித் தோழர்களும் தங்கள் வீடுகளுக்குச் சென்று உணவு மற்றும் ஆடைகளைக் கொண்டு இரு குவியல்களாகக் குவித்தார்கள். இப்போதுதான் நபி(ஸல்) அவர்கள் மேற் கூறிய வார்த்தையைக் கூறினார்கள். அதாவது ஒரு நல்ல செயலை முதலில் யார் செய்கின்றாரோ அவரைப் பார்த்து செய்பவர்களின் நன்மையில் ஒரு பங்கு இவருக்கும் கிடைக்கும். இதுதான் அந்த வார்த்தையின் விளக்கமாகும். நல்ல பித்அத் கெட்ட பித்அத் என்பதற்கு இங்கே எந்த ஆதாரமும் இல்லை.  நபி(ஸல்) அவர்கள் ஏவியதைச் செய்வது எப்படி பித்அத்தாகும்?  

2. உமர்(ரலி) அவர்கள் "இது நல்ல பித்அத்" எனக் கூறினார்கள். (முஅத்தா)

அவர்கள் தரும் விளக்கம்: நல்ல பித்அத் இருப்பதினால்தான் இப்படி உமர்(ரலி) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

நாம் கொடுக்கும் விடை: இது உமர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் நடந்த ஒரு சம்பவமாகும். அதாவது நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு தராவீஹ் தொழுகையை மூன்று நாட்கள் ஜமாஅத்தாகத் தொழவைத்தார்கள். அது பர்ளாக்கப்பட்டு விடும் என்பதால் அவர்களின் மரணம் வரைக்கும் பின்பு ஜமாஅத்தாக மக்களுக்குத் தொழவைக்கவில்லை. நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்ர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்திலும் அப்படியே விடுபட்டிருந்தது. உமர்(ரலி) அவர்களின் ஆட்சி வந்த போது மக்கள் தராவீஹ் தொழுகையை தனிமையில் தொழுவதைப் பார்த்து, இவர்களை ஒரு ஜமாஅத்தாகத் தொழ வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து, உபை இப்னு கஃபு, தமீமுத் தாரி(ரலி) என்னும் இரு நபித் தோழர்களை இமாமாக ஆக்கி, அவர்களுக்குப் பின் மக்கள் ஒரு ஜமாஅத்தாக ஒருங்கிணைந்து நின்று தொழுததைப்  பார்த்து விட்டே இது நல்ல பித்அத்து என்றார்கள்.

இதை வைத்து நல்ல "பித்அத்", கெட்ட "பித்அத்" இருக்கின்றது என்று கூற முடியாது. காரணம் நபி(ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் மக்களுக்கு ஜமாஅத்தாக தொழவைத்திருக்கிறார்கள். நபியவர்கள் செய்ததைச் நாம் பின்பற்றுவது எப்படி பித்அத்தாகும்.? அப்படியானால் ஏன் உமர்(ரலி) அவர்கள் இது நல்ல பித்அத் என்று கூறினார்களென்றால், பித்அத் என்ற அரபு வார்த்தைக்குரிய நேரடி கருத்தை வைத்தே. பித்அத் என்ற அரபு வார்த்தைக்கு புதியது என்ற அர்த்தமாகும். நீண்ட காலமாக விடுபட்டிருந்த சுன்னத்தை புதுப்பித்திருப்பது நல்லது என்ற அர்த்தத்தில்தான் அப்படி கூறினார்களே தவிர, நபியவர்கள் தடுத்த பித்அத்தைப்பற்றி அல்ல. அதாவது நீண்ட காலமாக மக்கள் தனித்தனியாக தொழுததை விட ஒரு ஜமாஅத்தாக இன்று மக்கள் தொழுவது நன்றாக இருக்கின்றதே என்ற அர்த்தத்தில்தான்.

3. மாடிக் கட்டிடங்கள் கட்டுவது, விமானத்தில் மற்றும் வாகனங்களில் பிரயாணம் செய்வது இன்னும் இவைகள் போன்றவைகள்.

அவர்கள் தரும் விளக்கம்: இவைகள் அனைத்தும் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. மாறாக புதிதாக உருவானவைகள்தான். இவைகளை உபயோகிப்பதை யாரும் தடுக்கவில்லை. ஆகவே நல்ல பித்அத்தை செய்வது ஆகுமாகும்.

நாம் கொடுக்கும் விடை: இஸ்லாத்தில் ஒன்றை புதிதாக உருவாக்குவதற்குத்தான் பித்அத் என்று சொல்லப்படும். மாடிக்கட்டிடத்தை, விமானத்தை, வாகனங்களை ஆதாரமாகக் காட்டுவது, பொருத்தமற்ற ஒன்றாகும். இவைகள் மார்க்கத்தோடு சம்மந்தப்பட்டவைகளும் அல்ல.

பித்அத்தினால் ஏற்படும் விளைவுகள்

1. முஸ்லிம் சமுதாயத்திற்குள் பல தவறுகள் ஊடுருவதற்கு மிகப் பெரும் காரணம்.

2. பித்அத் செய்பவர் பித்அத்தை விடாதவரை அவருடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (தர்கீப், வதர்கீப்)

3. மறுமையில் கவ்தர் தடாகத்தின் தண்ணீரை அருந்த விடாமல் அவர் தடுக்கப்படுவார். (புகாரி)

நபியவர்களை நேசிப்பது எப்படி?

நபி(ஸல்) அவர்களை நேசிப்பது அனைத்து முஃமின்களின் மீது கடமையாகும். தன் உயிரை விடவும் நபி(ஸல்) அவர்களை நேசிக்காதவர் உண்மை முஃமினாக முடியாது. நபி(ஸல்) அவர்களை நேசிப்பதென்பது அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை முழுமையாக பின்பற்றுவதாகும்.

யார் என்னை நேசிக்கின்றாரோ அவர் என் வழிமுறைகளை பின்பற்றட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பைஹகி)

எதையாவது ஒன்றை நான் உங்களுக்கு ஏவினால், அதில் முடியுமானதைச் செய்யுங்கள். ஏதாவது ஒன்றை நான் உங்களை விட்டும் தடுத்தால் அதை முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாயி)

நபி(ஸல்) அவர்களின் வழிமுறையை முழுமையாக பின்பற்றி, அவர்கள் தடுத்த அனைத்தையும் தடுத்து நடக்க நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக !!

பித்அதின் சில உதாரணங்கள்
கதம் ஃபாத்திஹா
மௌலூது ஓதுதல்
ஸலாத்துன் நாரியா ஓதுதல்
மிஃராஜ் & பராத் இரவுகளில் விஷேடமாக விழித்து வணங்குதல்,அன்று பகல் நோன்பு நோற்பது.
நபியவர்கள் காட்டித் தராத விதத்தில் சில எண்ணிக்கைகளில் சப்தமாக இசையுடனும், ஆடலுடனும் திக்ருச் செய்தல் ,
ரஜப் மாதத்தில் உம்ரா செய்வது நபிவழி என்று புரிதல்
ஐவேளை தொழுகைக்குப்பின் 
நபியவர்கள் கற்றுக் கொடுத்த துஆக்கள், தஸ்பீஹாதுக்கள், திருக்குர்ஆன் வசனங்கள் இந்த அனைத்து ஸூன்னதுகளையும் தனி தனியாக செய்வதை விட்டு விட்டு இமாமுடன் ஆமீன் ஆமீன் என்று சப்தமாக கூறி கூட்டு துஆ செய்தல்.
அல்லது ஜமாத் தொழுகை முடிந்தவுடன் மேற்கூறப்பட்ட விதத்தில் நபிவழியை பின்பற்றாமல் 
எழுந்து சென்று விடுவது தான் ஸுன்னத் என்று தவறாக விளங்குவது.

இன்னும் பல ....

இவைகள் அனைத்தையும் விட்டுவிட்டு மன இச்சையை மார்க்கமாக ஆக்க முயலும் சிலர்
அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும் !! 

இதைத்தான் காலம் காலமாக சத்திய பாதையில் பயணித்த சஹாபாக்களும், சங்கையான நான்கு மத்ஹபுகளின் இமாம்களும் 
புரிந்து வந்தனர்.

الله اعلم من الصواب 

اَفَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰٮهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰى عِلْمٍ وَّخَتَمَ عَلٰى سَمْعِهٖ وَقَلْبِهٖ وَجَعَلَ عَلٰى بَصَرِهٖ غِشٰوَةً   فَمَنْ يَّهْدِيْهِ مِنْ بَعْدِ اللّٰهِ‌  اَفَلَا تَذَكَّرُوْنَ‏

(நபியே!) தன்னுடைய உடல் ஆசையை இச்சையை(த் தான்  வணங்கும்) தெய்வமாக எடுத்துக்கொண்ட ஒருவனை நீங்கள் கவனித்தீர்களா? அவனுக்கு(ப் போதுமான) கல்வி இருந்தும் (அவனது பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டு, அவனுடைய செவியின் மீதும், உள்ளத்தின் மீதும் முத்திரையிட்டு விட்டான். அவனுடைய பார்வையின் மீதும் ஒரு திரையை அமைத்து விட்டான். அல்லாஹ் இவ்வாறு செய்த பின்னர், அவனை யாரால்தான் நேரான வழியில் செலுத்த முடியும்? (இதனை) நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?
(அல்குர்ஆன் : 45:23)
أحدث أقدم