முஹம்மது (ஸல்) - உலகளாவிய இறைத்தூதர்

தவறான புரிதல்களுக்கும் விழிப்புணர்வு இல்லாத நிலைக்கும் மிகச் சிறந்த தீர்வு கல்விதான். இதுவரை இல்லாதபடி தற்போது மிகவும் பரபரப்பாக உள்ள கேள்வி: யார் அந்த முஹம்மது? ஏன் பலராலும் இந்தளவு அவர் நேசிக்கப்படுவதுடன், பலராலும் இந்தளவு வெறுக்கப்படுகிறார்? அவர் உண்மையில் இறைவனின் தூதர்தானா? அவருடைய போதனைதான் என்ன? அந்தப் போதனைகள்படி அவர் வாழ்ந்தாரா? தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஆதரித்தாரா? அவரைப் பற்றிய உண்மைதான் என்ன?
 
அல்லாஹ்வின் தூதரைப் பற்றி அறிமுகம் செய்ய வேண்டுமென்றால் அவரது பெயர் முஹம்மது. அவரின் தந்தை பெயர் அப்துல்லாஹ். 1400 வருடங்களுக்கு முன்பு முழு மனிதகுலத்திற்கும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் அவர். அவரது போதனை நேரான பாதையைக் காட்டுகிறது. வெள்ளையர், கருப்பர், ஏழை பணக்காரன், ஆண் பெண் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் அவர் போதனைகள் செய்தார். அவர் வழியாகத்தான் மனிதகுலத்திற்கு இறைவனின் இறுதி வழிகாட்டல் கிடைத்துள்ளது. அவர் ஓர் இறுதி இறைத்தூதர். அவர் காட்டிய வழியில் சென்றால் மட்டுமே மறுவுலகில் வெற்றி பெற முடியும். அவரைக் குறித்து மனம் திறந்த நிலையில் அறிந்துகொள்ளுங்கள். மேற்கத்திய ஊடகங்களை நம்பாதீர்கள். அவரைக் குறித்து அறியும் முன் முதலில் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
 
இஸ்லாமிய மார்க்கம் குர்ஆன் மற்றும் சுன்னா-நபிவழியின் அடிப்படையில் அமைந்துள்ளது. குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள். சுன்னா என்பது நபி முஹம்மது அவர்களின் போதனைகள். இஸ்லாம் எனும் வார்த்தை ஸலாம், சில்ம் என்கின்ற இரண்டு மூல வார்த்தைகளில் இருந்து வருகிறது. ஸலாம் என்றால் அமைதி, சமாதானம். சில்ம் என்றால் கட்டுப்படுதல். இஸ்லாமிய வழக்கில் ஒருவர் இறைவனின் விருப்பங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்தால் அவர் அமைதியையும் சமாதானத்தையும் அடைவார் என்பது இதற்கு விளக்கமாக அமையும். எனவே, அல்லாஹ்வின் கட்டளைகள் என்ன என்பதை அறிந்து அவற்றின்படி நாம் நடப்பதும், நபி முஹம்மது (ஸல்) அவர்கள் எப்படி ஒன்றைச் செயல்படுத்தினார்களோ, அவ்வாறே பின்பற்றிச் செல்வதும் நமது கடமையாகும்.நபியவர்களது சொல், செயல், அங்கீகாரத்தை நாம் பின்பற்ற வேண்டும்.
 
இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது கட்டப்பட்டுள்ளது. அவை:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும், முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி அளிப்பது.
 
தினசரி ஐந்து நேரத் தொழுகைகளைத் தவறாமல் தொழுவது.
 
ஆண்டுக்கு ஒரு முறை ஸகாத் எனும் கட்டாயத் தர்மம் செய்வது.
 
ரமளான் மாதத்தில் நோன்பு வைப்பது.
 
ஆயுளில் ஒரு முறை மக்கா சென்று கஅபா பள்ளிவாசலை ஹஜ்ஜு செய்வது. (நபிமொழியின் கருத்து- ஸஹீஹுல் புகாரீ)
 
பின்வரும் விஷயங்கள் உண்மையாக இருந்தால்தான் ஒருவரின் வணக்கம் இறைவனிடம் ஏற்கப்படும் என்று இஸ்லாம் வரையறுத்துள்ளது.
மறுவுலக நன்மையை நாடி அல்லாஹ் ஒருவனுக்காக மட்டுமே வணக்கத்தைச் செய்ய வேண்டும். முகத்துதிக்காகவோ உலக இலாபத்திற்காகவோ செய்யக் கூடாது.
 
நபியவர்களின் சொல், செயல்கள் அடிப்படையில் வணக்கம் அமைய வேண்டும். இதற்கு நபியின் வழிமுறை பற்றிய அறிவு அவசியம்.
 
குர்ஆன்

மனிதர்களில் யாராக இருந்தாலும் நபியவர்களைப் பின்பற்றினால் மட்டுமே சொர்க்கம் செல்ல முடியும். அவர்களது மார்க்கத்தையும் அதன் சட்டங்களையும் பின்பற்ற வேண்டும்.
 
இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். எவர்கள்அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் சுவர்க்கச் சோலைகளில் நுழையவைப்பான். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். அவற்றிலேயே அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுதான் மாபெரும் வெற்றியாகும்.(அல்குர்ஆன் 4:13)
 
யூதர்கள், கிறித்துவர்களில் யார் முஹம்மது நபியை ஏற்று விசுவாசம் கொண்டார்களோ அவர்களுக்கு இரட்டைக் கூலி உண்டு என்றும் அல்லாஹ் நற்செய்தி கூறுகிறான்.
 
ஆகவே, இதற்கு முன்னர் எவர்களுக்கு நாம் நம்முடைய வேதத்தைக் கொடுத்து, அவர்களும் அதனை உண்மையாகவே நம்பிக்கை கொள்கின்றார்களோ, அவர்கள் மீது (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதற்கவர்கள், ‘இதனையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். நிச்சயமாக இதுவும் எங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மை(யான வேதம்)தான். இதற்கு முன்னதாகவே நிச்சயமாக நாங்கள் இதனை (எங்கள் வேதத்தின் மூலம் அறிந்து) ஏற்றுக் கொண்டிருக்கிறோம்” என்று கூறுவார்கள்.இத்தகையவர்கள் உறுதியாக இருந்ததின் காரணத்தால், இரண்டு தடவைகள் அவர்களுக்கு (நற்)கூலி கொடுக்கப்படும். (அல்குர்ஆன் 28:52,53,54)
 
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக நியமித்து நீர் செய்கின்ற தீர்ப்பை தங்கள் உள்ளங்களில் எவ்வித அதிருப்தியுமின்றி முற்றிலும் ஏற்காத வரையில் அவர்கள், அல்லாஹ்வை உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள். (அல்குர்ஆன்4:65)
 
நபிவழி

நபியவர்கள் கூறினார்கள்: யார் எனக்குக் கீழ்ப்படிந்தாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். யார் எனக்கு மாறுசெய்கிறாரோ, அவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவராவார். யார் நான் நியமித்த ஆட்சியாளருக்குக் கட்டுப்படுவாரோ, அவர் எனக்குக் கட்டுப்பட்டவராவார். யார் அவருக்கு மாறுசெய்கிறாரோ, அவர் எனக்கு மாறுசெய்தவராவார். (ஸஹீஹுல் புகாரீ, சுனன் நசாயீ)
 
“என் சமுதாயத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வர், என்னை மறுத்தவர் தவிர” என்று நபியவர்கள் கூறியபோது, “அல்லாஹ்வின் தூதரே, யார் மறுத்தவர்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “யார் எனக்குக் கீழ்ப்படிந்தவரோ அவர் சொர்க்கம் செல்வார். யார் எனக்கு மாறுசெய்தாரோ, அவர் மறுத்தவர் ஆவார்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரீ)
 
மனிதகுல வரலாறு

அல்லாஹ் குர்ஆனின் பல இடங்களில் கடந்தகால சமுதாயங்களின் வரலாறு குறித்து சிந்தித்துப் பார்க்கும்படி கட்டளையிடுகிறான். அப்படிச் சிந்தித்தால் அதிலிருந்து படிப்பினைகள் பெற முடியும் என்கிறான். எனவேதான் குர்ஆனில் நிறைய சரித்திரச் சம்பவங்கள் உள்ளன. முற்கால மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களின் முடிவு எப்படி அமைந்தது என்று பல விஷயங்களை அல்லாஹ் கூறிச்செல்கிறான். வெற்றிகரமான ஆசிரியர்களும் போதகர்களும் வரலாற்றை நன்கு உள்வாங்கி இருப்பார்கள்.
 
அல்லாஹ் இந்தப் பிரபஞ்சத்தை ஒரு நோக்கத்திற்காகப் படைத்துள்ளான். இதன் ஒவ்வொரு பகுதியும் அவனது கட்டுப்பாட்டில் உள்ளன. கொஞ்சம் கூட கோளாறு இல்லாமல் அவை இயங்கி வருகின்றன. இவ்வாறே மனிதனும் ஒரு நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டுள்ளான். ஆயினும் அவனுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவன் தான் விரும்பியதைச் செய்ய முடியும். தன் மனவிருப்பப்படி இயங்க முடியும். இதனிடையே அவன் அல்லாஹ்வினால் கண்காணிக்கப்பட்ட நிலையிலும் இருக்கிறான். அல்லாஹ் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தவிர இம்மனிதனை விட்டு வைக்கமாட்டான். அவனது திட்டப்படி அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும்.
 
மனிதன் வாழ்வதற்குப் பொருத்தமான இந்தப் பூமியைப் படைத்த பின்பு அல்லாஹ் முதன் மனிதர் ஆதமையும் அவருடைய மனைவி ஹவ்வாவையும் படைத்தான். ஆதம் முதல் நபியாகவும் இருந்தார். மனிதர்களுக்கு நேர்வழி காட்ட மனிதர்களை நியமிப்பதுதான் அல்லாஹ்வின் வழிமுறை. அவர்களைத்தாம் இறைத்தூதர்கள் என்கிறோம். இந்தப் பூமியில் மனிதன் படைக்கப்பட்டுள்ள நோக்கம் குறித்து ஆதமுக்கு அல்லாஹ் செய்தி அறிவித்தான். வானவர் வந்து அச்செய்தியை வழங்கிச் சென்றார்.
 
முஸ்லிம்கள் எல்லா இறைத்தூதர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நபி முஹம்மதுக்கு முன்பு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதராவது அனுப்பப்பட்டிருந்தார்.ஒவ்வொரு தூதரும் அவரது சமுதாயத்தில் அறிவாலும் குணத்தாலும் தனித்தன்மை உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து என்ன அறிவிக்கப்பட்டதோ அதை அப்படியே தம் மக்களிடம் எடுத்துரைத்தார்கள்.
 
ஒவ்வொரு தூதருக்கும் அல்லாஹ் அற்புதங்களை வழங்கி உதவினான். அவர்கள் உண்மையாகவே இறைத்தூதர்கள்தாம் என்பதற்கு அவை ஆதாரங்களாக இருந்தன. அவர்கள் மனிதர்களே என்றாலும் நேர்வழியை அல்லாஹ்விடமிருந்து பெற்று அவனது கட்டளைப்படி பிரசாரம் செய்தார்கள்.
 
இறுதியாக உலகம் முழுமைக்கும் இறுதித்தூதராக நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர் நபி இப்றாஹீமின் மகன் நபி இஸ்மாயீலுடைய சந்ததியில் பிறந்தார்கள். அரபுலகில் பிரபலமான குறைஷ் கோத்திரத்தில் பிறந்தார்கள். அவர்களுக்குப் படிப்பறிவு இருக்கவில்லை. ஆனாலும் மிக உன்னதமான குணங்களுடனும் சிறப்புகளுடனும் திகழ்ந்தார்கள்.
 
எல்லாத் தூதர்களைப் போலவே இவருக்கும் இறைச்செய்தி வழங்கப்பட்டது. மனிதகுலம் முழுமைக்கும் அதை எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பாகும் அது. நபிமார்களின் வரிசையில் அவர்கள்தாம் இறுதி நபி என்பதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்:
அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கின்றார். (ஆகவே, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அனுப்பமாட்டான்.) அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்33:40)
 
வரலாற்றில் ஓரிறை நம்பிக்கையைப் பலதூதர்களும் பிரசாரம் செய்தனர். அல்லாஹ்வின் அச்செய்தி ஆயிரமாயிரம் வருடங்களாக எடுத்துச் சொல்லப்பட்டது. ஆனால் மனிதகுலம் அதைவிட்டுத் தடம்புரண்டது. முதல்மனிதர் ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து சொல்லப்பட்ட இச்செய்தி காலப்போக்கில் மறைந்து போனது. அப்போது நபிநூஹ்(அலை) வந்து அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்தார். அவரைச் சிலர் ஏற்றுக்கொண்டனர். தலைமுறை தலைமுறையாக இப்படித் தூதர்கள் வருவதும் ஏகத்துவத்தின் பக்கம் அழைப்பதுமாக இருக்கும் நிலையில் ஆதமிலிருந்து ஈசா எனும் இயேசு வரை பல தூதர்கள் வந்துவிட்டிருந்தனர். அத்தூதர்களை மக்கள் சிலரே ஏற்றுக்கொண்டனர். அவர்களின் காலம் முடிந்த நிலையில்தான் முஹம்மது அனுப்பப்பட்டார். 
 
மனிதகுலம் வழிதவறியதின் காரணங்கள்

மனிதர்கள் தொடர்ந்து இறைத்தூதர்களின் பாதையை விட்டுத் தடம்புரண்டு வழிதவறிப் போனதற்கு என்னென்ன காரணங்கள்? குறிப்பாக இரண்டு காரணங்களைச் சொல்ல வேண்டும். ஒன்று, ஆட்சியதிகாரங்களால் உண்டான அரசியல். மற்றொன்று, மக்களின் அறியாமை. பழங்காலத்தில் மனிதன் உலகைப் பற்றியும் இதன் இயக்கங்கள் பற்றியும் மிகக் குறைவாகவே தெரிந்து வைத்திருந்தான். அச்சமயம் அரசியல் ஆதிக்கம் அறிவார்ந்த எல்லா ஆய்வுகளையும் தடுத்து வைத்திருந்தது. இதனால் இயற்கையான பிரபஞ்ச இயக்கங்கள் குறித்து ஏராளமான மூடநம்பிக்கைகள் உருவாகின. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவை மகா சக்தி கொண்டவையாக நம்பப்பட்டு வந்தன.
 
நிகழ்வுகளின் சுருக்கம்

நபியின் வருகைக்கு முன்பு உலகத்தின் நிலை
நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வருகைக்கு முன்பு உலகம் வரலாற்றில் அதுவரை இல்லாத அளவு மிக மோசமான காலத்தில் இருந்தது. உண்மையில் அது ஓர் இருண்ட காலம். மனிதகுலம் மிகவும் இழிந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. மக்களின் வாழ்க்கை எல்லா விஷயங்களிலும் இழிவாக இருந்தது. சமயம், குணநலன், சமூக வாழ்வு, அரசியல், பொருளாதாரம் என்று ஒவ்வொன்றிலும் இருள் சூழ்ந்து கிடந்தது. மனித சமூகம் முடிவில்லாத துயரத்தில் உழன்று கொண்டிருந்தது. மனஇச்சைகளும், வழிகேடுகளும், வரட்டுப் பிடிவாதங்களும் வளர்ந்துகொண்டே இருந்தன.
 
இறைவனின் வேதங்கள் மாற்றப்பட்டும் திரிக்கப்பட்டும் போனதால் இறைவழிகாட்டல் அனைத்தும் மறைந்துவிட்ட நிலை நிலவியது. மனிதகுலம் அல்லாஹ்வின் தூதுச்செய்தியை இழந்து நின்றது. மனிதர்கள் தாங்களாக உருவாக்கிய மதங்களும், இறைவேதங்களை மாற்றியதைக் கொண்டு உருவான பொய் நம்பிக்கைகளுமே ஆட்சி செய்து வந்தன. மக்கள் அதில் போதை உள்ளவர்களாக மாறியிருந்தார்கள். அவற்றைப் பிடிவாதமாகப் பின்பற்றி வந்தனர். இதனால் அடிக்கடி அவர்களிடையே போர்கள் மூண்டன.அன்று ஏகத்துவக் கொள்கையில் இருந்தவர்கள் மிக மிகச் சொற்பம். அவர்கள் சமூகப் பிணைப்பும் உறவும் இல்லாமல் ஒதுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். எனவே, அவர்கள் தனிமையில் வாழ்ந்து வந்தார்கள்.
 
அன்று எவர்களிடம் வேதம் இருந்ததோ அவர்கள் தங்கள் மதத்தின் உண்மையான போதனைகளைத் தூக்கியெறிந்துவிட்டு வாழ்ந்துகொண்டிருந்தார்கள். தாங்களே சுயமாக சட்டங்களை எழுதிக்கொண்டு அவற்றை இறைவனின் சட்டங்கள் என்று ஏமாற்றி வந்தார்கள். அவர்களுக்கு அப்படிப்பட்ட எந்த அதிகாரத்தை அல்லாஹ் வழங்கவில்லை என்றிருந்தும் துணிந்து காரியத்தில் இறங்கியிருந்தனர். கிழக்கில் பாரசீக பேரரசு இருந்தது. மேற்கில் ரோமப் பேரரசு ஆட்சி செய்தது. அச்சமயம் இவர்கள்தாம் பூமியில் இரண்டு பெரிய வல்லரசுகளாக இருந்தார்கள். பேராட்சி புரிந்து வந்தார்கள்.
 
அரபுகளின் நிலைமை

அரபுகளும் நல்ல நிலைமையில் இருக்கவில்லை. அவர்கள் குலங்களாக, கோத்திரங்களாக இருந்தார்கள். அவை பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவையாக இருந்தன. ஆனால் ஒரு விஷயத்தில் அவர்கள் அனைவருமே ஒரே மாதிரியாக இருந்தார்கள். பழக்க வழக்கங்களும் உணர்ச்சிகளுக்கும் அடிமையானவர்கள் அவர்கள். கொள்ளை அடிப்பது, போர் புரிவது ஆகியவற்றின் பெயரால் பெருமையடிப்பதும் அவர்களின் வழக்கமாக இருந்தது. மோசமான குணங்கள் உள்ளவர்களாக இருந்ததினால் தங்கள் சொந்த பெண் குழந்தைகளைக் கூட உயிருடன் புதைத்துவிடுவார்கள்.
 
தங்கள் மூதாதையர்களின் பெயரால் பெருமையடிப்பதும் அவர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதும் அரபுகளின் முக்கியக் குணமாக இருந்தன. எவ்வளவுதான் அவர்களது மூதாதையர் வழிதவறியவர்களாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் இருந்தனர். இதன் விளைவுதான் அவர்கள் சிலைகளை வணங்கியதும். ஒவ்வொரு கோத்திரமும் தங்களுக்கென பிரத்தியேகச் சிலைகளை வைத்திருந்தனர். நபி இப்றாஹீம் (அலை) அவர்களது ஏகத்துவ மார்க்கத்தை விட்டுவிட்டு, அதைத் திரித்து மாற்றி சிலை வணங்கிகளாகவும், நட்சத்திரங்களையும் ஜின்களையும் வணங்குபவர்களாகவும் ஆகியிருந்தனர். படைத்தவன் ஒருவனையே வணங்க வேண்டும் என்று அந்தப் படைப்பாளனுக்காக கட்டப்பட்ட பள்ளிவாசல் கஅபா அவர்களின் இடத்தில்தான் இருந்தது. அவர்களோ அதையும் சிலை வணங்கும் இடமாக மாற்றிவிட்டிருந்தனர்.பெரும் சிலைகள் மட்டுமின்றி நிறைய குட்டிச் சிலைகளை அதனைச் சுற்றி வைத்திருந்தனர். உண்மையில் அவர்களின் சிலைகளை எண்ணவே முடியாது.
 
அபூரஜாஉ அல்உதாரித் (ரஹ்)அவர்கள் கூறியதாவது:நாங்கள் (அறியாமைக் காலத்தில்) கல்லை வணங்கிக்கொண்டிருந்தோம். (நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த) ஒரு கல்லைவிடச் சிறந்த மற்றொரு கல்லை நாங்கள் கண்டால் அதை எடுத்துக்கொண்டு பழையதை எறிந்து விடுவோம். கல் ஏதும் எங்களுக்குக் கிடைக்க வில்லையென்றால் நாங்கள் மண் கட்டியைச் சேகரி(த்துக் குவி)ப்போம். பிறகு, ஆட்டைக் கொண்டு வருவோம்; அதன் பாலை (குவிந்து கிடக்கும்) அந்த மண்கட்டியின் மீது கறப்போம்; பிறகு அதைச் சுற்றி வருவோம்.(ஸஹீஹுல் புகாரீ4376)
 
தங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே உள்ள தரகர்கள்தாம் இந்தச் சிலைகள் என்று அவர்கள் சொன்னாலும், அந்தப் பொய்த் தெய்வங்களிடம் அவர்கள் உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைந்துவிட்டார்கள். அவர்களின் உள்ளங்களும், செயல்களும், குணநலன்களும், ஏன் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் அவற்றுடன் கலந்துவிட்டிருந்தன. தங்களை அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான் எனும் அறிவே மழுங்கிவிட்ட நிலையில் இருந்தார்கள்.
 
அல்லாஹ் கூறுகிறான்:விவசாயம் மற்றும் (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளில் அல்லாஹ் உற்பத்தி செய்பவற்றிலிருந்து ஒரு பங்கைத் தங்கள் விருப்பப்படி குறிப்பிட்டு, ‘இது அல்லாஹ்வுக்கு” என்றும் (மற்றொரு பங்கை) ‘இது எங்களுடைய தெய்வங்களுக்கு” என்றும் கூறுகின்றார்கள். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென குறிப்பிட்ட பங்கில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேருவதில்லை. எனினும், அல்லாஹ்வுக்கென குறிப்பிட்டவை(யில் ஏதேனும் ஒன்று தற்செயலாக) அவர்களின் தெய்வங்களு(க்குரிய பங்கில் விழுந்து கலந்துவிட்டாலோ, அது அவற்று)க்கே சேர்ந்துவிடுகின்றன! (வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களையும் கூட்டாக்கி) அவர்கள் செய்கின்ற இந்தத் தீர்மானம் மிகக் கெட்டது.(அல்குர்ஆன்6:136)
 
இறைத்தூதர் இப்றாஹீம் விட்டுச்சென்ற அனைத்து விஷயங்களிலும் அவர்கள் மாற்றம் செய்திருந்தனர். கூட்டல் குறைத்தல், திருத்தங்கள் செய்துவிட்டனர். ஹஜ்ஜு யாத்திரை என்பது பெருமையடிக்கவும், பகைமையை வளர்க்கவும், போட்டிபோடவுமே நடந்துகொண்டிருந்தது. தூய்மையான மார்க்கத்தை விட்டுத் தூரமாகிப் பல மூடநம்பிக்கைகளையும் கட்டுக்கதைகளையும் பின்பற்றிவந்தனர்.
 
என்னதான் அவர்கள் வழிகெட்டுப் போயிருந்தாலும், நேர்வழியை விட்டு மிகவும் தொலைவாக இருந்தாலும், பூமியைச் சீர்திருத்திப் பாவங்களைத் தடுத்து சத்தியத்தை எடுத்துச்சொல்வோரும் உலகில் இல்லாமல் இல்லை. அந்தக் கூட்டத்தினர் மக்களின் பழிகளுக்கு அஞ்சுவதில்லை, பயப்படுவதும் இல்லை. சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே, இறைநம்பிக்கைக்கும் இறைமறுப்புக்கும் இடையே தொடர்ந்து போர் இருந்துகொண்டேதான் இருக்கும். வெற்றி என்பது சத்தியவாதிகளுக்கே. அல்லாஹ் கூறுகிறான்: இத்தகைய (சோதனையான) காலங்களை மனிதர்களுக்கு மத்தியில் மாறி மாறி வரும்படி நாம்தாம் செய்கின்றோம்.(அல்குர்ஆன்3:140)
 
மக்காவில் வாழ்ந்தவர்கள் வட்டிக்கு விடுபவர்களாகவும் இருந்தார்கள். மிக உச்சபட்ச வட்டியை நிர்ணயித்து, சில சமயங்களில் நூறு சதவீதம் அளவு வட்டியை வாங்குவார்கள். கடன்பட்டவர்கள் சில சமயங்களில் அந்தளவு வட்டியைக் கட்ட முடியாதவர்களாக இருக்கும்போது- பெரும்பாலான நேரங்களில் அப்படித்தான் ஆகிவிடும்- அந்தக் கடனாளிகளிடம் அவர்களின் மனைவிகளையும் மகள்களையும் தகாத காரியங்களுக்குத் தரும்படி நிர்பந்திப்பார்கள். இவ்வாறு அடக்குமுறை செய்து அப்பெண்களைக் கொண்டு பாவகரமான தொழில்கள் நடத்தி வேண்டுமளவு சம்பாதித்துக்கொள்வார்கள்.  
 
உலகின் நிலைமை

அரபுகள் மட்டுமல்ல, அரேபிய பாலைவனத்தின் எல்லையோரங்களில் அமைந்த பாரசீக, ரோம பேரரசுகளின் கீழ் வாழ்ந்த மக்களின் நிலைமையும் மிக மோசமாகவே இருந்தது.
 
பாரசீகர்கள் நெருப்பை வணங்கி வந்தார்கள். அது மட்டுமின்றி, பாம்தத்தின் மகன் மஸ்தக் பெயரால் ஒரு மதம் செயல்பட்டு வந்தது. இருமை எனும் நன்மை தீமை இரண்டையும் கடவுளாகக் கருதும் விநோதமான கொள்கையை அது போதித்தது. பாரசீகர்கள் பெண்களைப் பொதுச் சொத்தாகக் கருதினார்கள்.மானி என்பவர் மஸ்தக்கிற்கு முன்பு ஒரு மதத்தைத் தோற்றுவித்தார். அது இயேசு மற்றும் ஜொராஸ்டரின் மதங்களிலிருந்து உருவான கலவை மதம். அதுபோலவே மஸ்தக்கும் ஒரு மதத்தை உருவாக்கினார். இந்த இரண்டு மதங்களும் இவர்களின் இறப்புக்குப் பின்பு அழிந்தன. இன்னொரு பக்கம் சாசானியன் ஆட்சியமைப்பு ஜொராஸ்டர் மதகுருக்களின் துணையுடன் நிறைய அழிச்சாட்டியங்களைச் செய்து வந்தது. அடக்குமுறை, அநியாய வரி வசூலிப்பு என்று பல காரியங்களில் ஈடுபட்டு வந்தது.
 
பைசாந்தியப் பேரரசும் அக்காலத்தில் ரோமைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தது. இவர்கள் இறைத்தூதர் இயேசுவின் மார்க்கத்தை அன்றைய ரோம பல தெய்வ நம்பிக்கைகளுடன் கலந்து ஒரு புதிய மார்க்கமாக உருவாக்கியிருந்தார்கள். அது கிறித்துவ மதம். கிபி 381இல் கிரேக்க ரோம திருச்சபைகளின் கூட்டமைப்பு அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த ஏரியஸ் உடைய கொள்கையை நிராகரித்தது. இச்சபையினர் இயேசுவும் கடவுளும் ஒன்றே எனும் கொள்கைக்கு வந்துவிட்டிருந்தனர். ஏரியசோ கடவுளுக்கு என்று தனித்துவம் உள்ளதென்றும், இயேசு அவரில் ஒருவராகமாட்டார் என்று நம்பினார். இயேசு படைக்கப்பட்டவர்தான் என்றும் கூறினார்.
 
இச்சமயத்தில் யூதக்கூட்டங்களின் நிலையையும் கவனிக்க வேண்டும். அவர்கள் மேற்கு ஆசியா மற்றும் வட ஆபிரிக்கா பகுதிகளில் சிதறிப் போயிருந்தனர். இந்தப் பகுதிகளில்தான் அல்லாஹ் அதிகமான இறைத்தூதர்களை அனுப்பியுள்ளான் என்பதால் அத்தகைய இறைத்தூதரின் வருகையை நாடிக் காத்திருந்தனர். அவர்களிடம் இருந்த தவ்றாத், அதாவது நபி மூசாவுக்கு இறக்கப்பட்ட வேதமானது முழுவதுமாக மாற்றப்பட்டு மறைக்கப்பட்ட நிலையில் இருந்தது.
 
கிழக்கில் சீனாவும் இந்தியாவும் பல வகைப்பட்ட கலாசாரங்களின் தாக்கத்தால் இருளில் மூழ்கிக் கிடந்தது. கன்ஃபூசியஸ் மதம் சீனாவில் பரவியிருந்தது. அது அவர்களின் சிந்திக்கும் ஆற்றலைத் துடைத்து எறிந்திருந்தது. இந்தப் பக்கம் இந்தியாவில் இந்து மதம் கோலோச்சியது. ஆரியர்களின் ஆதிக்கத்தால் வட இந்தியாவிலிருந்து உருவான இம்மதம் சாதிப் பிரிவினையைத் தோற்றுவித்து மக்களை அடிமைப்படுத்தியது.
 
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், அன்றைய கால உலகம் என்பது போர்கள், இரத்தம் சிந்தல்கள், அடிமைத்தனம், பெண்ணடிமைத்தனம், உரிமைகளை நசுக்குதல், அடக்குமுறை என்றாகவே ஆகிவிட்டிருந்தது. உலகம் துயரில் விழுந்து கிடந்தது. ஆனால் அதன் இருளிலிருந்து அதைக் காப்பாற்ற யாரும் இருக்கவில்லை.மனிதகுலத்தின் பிரச்சினைகளைச் சீர் செய்ய எந்த மதமோ, சித்தாந்தமோ, கொள்கையோ, கலாசாராமோ முன்வரவில்லை.
 
உலகின் ஒரு மதம் கூட உலகளாவிய பார்வை கொண்டிருக்கவில்லை. ஏன், தங்களின் தேச, மொழி அடிப்படையில் அவர்களுக்குள் ஒன்றுபட்ட பார்வை இருக்கவில்லை. இனவெறியும் சாதிவெறியும் குறுகிய சிந்தனையை ஏற்படுத்திப் பல பாகுபாடுகளை உருவாக்கியிருந்தது.
 
இறைத்தூதர் தேவைப்பட்டார்

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அல்லாஹ் தனது இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை மனிதகுலத்திற்கு அனுப்பினான். இறைநிராகரிப்பு, அடக்குமுறை, வழிகேடு, அறியாமை, ஒழுக்கச் சீர்குலைவு ஆகிய அனைத்தைவிட்டும் காப்பாற்றக்கூடிய உலகளாவிய தூதுச்செய்தியுடன் நபியவர்கள் வந்தார்கள்.
 
முஹம்மது நபியவர்களின் வமிசம்
நபியவர்களின் வமிச வரலாறு என்பதுமூன்றுபகுதிகள் கொண்டது. முதலாவது வரலாற்று அறிஞர்களாலும் வமிசாவளி ஆய்வாளர்களாலும் ஆதாரப்பூர்வமானதாக ஏற்கப்பட்டது. அது அத்னான் என்பவரில் போய் முடிகிறது. இரண்டாவது வமிசாவளிப் பட்டியல் கருத்துவேறுபாடுகள் கொண்டது. அது அத்னானுக்கும் பின்னோக்கிச் சென்று நபி இப்றாஹீமில் போய் முடிகிறது. மூன்றாவது நபி இப்றாஹீமுக்கும் பின்னே சென்று முதல் மனிதர் ஆதமில் போய் முடிகிறது. இதன் சில விவரங்களும் சரியானவை அல்ல.
 
இவற்றில் முதல் பகுதியான அத்னான் வரையுள்ள வமிசாவளிப் பட்டியல் இதோ: முஹம்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப் (இவரை ஷைபா என்றும் கூறுவர்) இப்னு ஹாஷிம் இப்னு கிலாப் இப்னு முர்ரா இப்னு கஅப் இப்னு லுஅய் இப்னு காலிப் இப்னு ஃபஹ்ர் (இவரைக் குறைஷ் என்றும் கூறுவர். இவரின் பெயரே இக்கோத்திரத்தின் பெயராக ஆனது) இப்னு மாலிக் இப்னு நள்ர் (இவரைக் கைஸ் என்றும் கூறுவர்) இப்னு கினானா இப்னு குசைமா இப்னு முத்ரிகா (ஆமிர்) இப்னு எலியாஸ் இப்னு முளர் இப்னு நிசார் இப்னு மஅத் இப்னு அத்னான். (ஆதாரம்: இப்னு ஹிஷாம் 1/1,2)
 
நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவ நம்பிக்கையின் தலைவராகவும், யூதர்கள், கிறித்துவர்கள், முஸ்லிம்கள் மூன்று சாராருக்கும் பொதுவான தந்தையாகவும் அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளார். அவருடைய இரண்டாவது மகன் இஸ்ஹாக் (அலை) அவர்களின் சந்ததியில் இஸ்ரவேலர்கள் தோன்றினார்கள். இவர்களில்தாம் நபி யாகூப், யூசுஃப், மூசா, தாவூது, சுலைமான் மற்றும் ஈசா (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகியோர் வந்தனர். இது நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சந்ததிக்கு அல்லாஹ் புரிந்த அருளாகும். அவனது வாக்கை அல்லாஹ் முழுமைப்படுத்தினான். (காண்க அல்குர்ஆன் 62.2) இப்பூமியின் பல சமுதாயங்களுக்கு அவர்களின் சந்ததியில் இருந்தே தூதர்களை அனுப்பினான். இதை முஸ்லிம்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இவ்வாறு நம்பிக்கை கொள்வது அவர்களின் மார்க்க அடிப்படையாகவும் உள்ளது.
 
இயேசு இஸ்ரவேலர்களின் இறுதித்தூதராக ஆனார். அவருக்குப் பிறகு அல்லாஹ் தனது நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியில் தூதரை அனுப்பி அவருக்களித்த வாக்கை முழுமைப்படுத்தினான். (காண்க. அல்குர்ஆன் 2.129) இயேசுவின் காலத்திற்குப் பிறகு சுமார் 600 வருடங்களுக்குப் பின் அல்லாஹ்வின் இறுதித்தூதராக நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். நபி இப்றாஹீமின் மகன் இஸ்மாயீல் (அலை) உடைய இரண்டாவது மகன் கேதார் உடைய சந்ததியில் வந்தார்கள். அல்லாஹ் இப்றாஹீமுடைய இரண்டு மகன்களின் சந்ததிகளுக்கும் இதன் மூலம் அருள்புரிந்தான்.
 
இறைச்செய்தியின் ஆரம்பம்

நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முதல் தடவையாக இறைச்செய்தி இறங்கியது ஹிரா எனும் குகையில். அப்போது அவர்கள் அங்கு தியானத்தில் ஈடுபட்டு வந்தார்கள். வானவர் ஜிப்ரீல் வந்தார். நபியவர்களை நோக்கி, ‘வாசிப்பீராக’ என்றார். ‘எனக்கு வாசிக்கத் தெரியாது’ என்று நபி கூற, மறுபடியும் மறுபடியும் வாசிக்கச் சொல்லிவிட்டு, “வாசியுங்கள், உங்களைப் படைத்த உங்கள் இறைவன் பெயரைக் கொண்டு வாசியுங்கள். அவன்தான் மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான். வாசியுங்கள், உங்கள் இறைவன் மிகவும் கண்ணியமானவன்” ஆகிய (அல்குர்ஆன் 96.1-3) வசனங்களை ஓதிக்காட்டிவிட்டுச் சென்றார்கள்.
 
நபியவர்கள் பயந்தவர்களாகத் தம் வீட்டிற்குச் சென்று தமது மனைவி கதீஜாவிடம் தமக்கு நடந்தவற்றைச் சொன்னார்கள். அதைக் கேட்ட அவர், “அல்லாஹ் மீது சத்தியமாக, அல்லாஹ் உங்களை இழிவுபடுத்தமாட்டான். நீங்கள் உறவினர்களை அரவணைக்கிறீர்கள், பலவீனர்களுக்கு உதவுகிறீர்கள், விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள், வறியவர்கள், சோதனைக்குள்ளானவர்களின் சுமைகளை நீங்கள் சுமக்கிறீர்கள்” என்று கூறி ஆறுதல்படுத்தினார்.
 
அடுத்த நாள் தமது உறவினரில் உள்ள வேத அறிவுமிக்க முதியவர் வரகா இப்னு நவ்ஃபல் என்பவரிடம் அழைத்துச் சென்று இவ்விசயத்தைக் குறித்து கூறினார். நபியவர்கள் கூறிய அனைத்தையும் கேட்ட வரகா, நபியவர்களிடம் வந்தவர் ஜிப்ரீல் எனும் வானவர்தாம் என்றும், இவர்தாம் இதற்கு முன்பு நபி மூசாவிடம் வந்தவர் என்றும் கூறிவிட்டு, உங்கள் மக்கள் உங்களை இந்த ஊரை விட்டு வெளியேற்றுவார்கள் என்றும் கூறினார். (ஸஹீஹுல் புகாரீ)
 
இதற்குப் பின்பு சிறிது காலம்இறைச்செய்தி வருவது நின்றிருந்தது. நபியவர்கள் மிகவும் கவலைக்குள்ளானார்கள். ஒரு நாள் மலைப்பாதையில் நடந்துகொண்டிருந்தபோது மறுபடியும் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானத்திற்கும் பூமிக்கும் மத்தியில் தோன்றினார். அதைக் கண்ட நபியவர்கள் திரும்பவும் பயந்தவர்களாகத் தம் வீட்டிற்குச் சென்று கதீஜாவிடம், ‘என்னைப் போர்த்துங்கள், போர்த்துங்கள்’ என்று கூறியபடி நுழைந்தார்கள். அப்போதுதான், “போர்வை போர்த்தியவரே, எழுவீராக, அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக” எனும் (74.1,2) வசனங்கள் இறங்கின.
 
இதன் பிறகு தொடர்ந்து அடிக்கடி இறைச்செய்திகள் இறங்கியவண்ணம் இருந்தன. நபியவர்கள் மக்காவில் பதிமூன்று வருடங்கள் தங்கியிருந்து இஸ்லாமின் பக்கம் மக்களை அழைத்தார்கள். சத்தியத்தை எடுத்துச் சொன்னார்கள். மென்மையாகவும் அழகிய முறையிலும் அழைத்தார்கள். முதலில் தமது நெருங்கிய உறவினர்களையும் கோத்திரத்தாரையும் அழைத்தார்கள். பிறகு மக்கா நகரத்திற்கு அருகில் உள்ளவர்களையும் வெளியூர் மக்களையும் அழைத்தார்கள். “நபியே, உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைத் தெளிவாக எடுத்துச்சொல்லிவிடுங்கள். இணைவைப்பவர்களைப் புறக்கணித்துவிடுங்கள்” எனும் (15.94) வசனம் இறங்கிய பின்னர் அவர்களின் அழைப்பு மனிதகுலம் அனைவருக்குமாக ஆனது.
 
மக்கா காலகட்டம்

மக்கா காலகட்டத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.
இரகசிய அழைப்புக் காலம். இது மூன்று வருடங்கள் நீடித்தது. 
 
பகிரங்க அழைப்புக் காலம். இது நான்காம் வருடத்தின் தொடக்கத்திலிருந்து பத்தாம் வருடத்தின் இறுதி வரை நீடித்தது.
 
மக்காவுக்கு வெளியே அழைப்பு. இது பத்தாம் வருடத்திலிருந்து நபியவர்கள் ஹிஜ்ரத் எனும் இடம்பெயர்வு செய்து மதீனாவுக்குச் செல்லும் வரை நீடித்தது.
 
மக்களில் மிகவும் சொற்பமானவர்கள், செல்வந்தர்களில் ஒரு சிலர், பலவீனர், ஏழை, ஆண்கள், பெண்கள் நபியவர்களை விசுவாசம் கொண்டனர். இவர்களில் பலர் கடும் தொல்லைக்கு ஆளாயினர். சிலர் கொல்லப்பட்டனர். சிலர் எத்தியோப்பியாவுக்கு இடம்பெயர்ந்து சென்றனர். குறைஷிகள் இந்தளவு முஸ்லிம்களைத் துன்புறுத்தினர்.
 
நபியவர்கள் ஐம்பது வயதை அடைந்தபோது, நபியாகி பத்தாம் வருடத்தில் அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் இறந்தார். இவர் நபியவர்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தவர். இதே வருடம் நபியின் மனைவி கதீஜாவும் இறந்தார். இதற்குப் பின்பு குறைஷிகளின் அநியாயங்கள் இன்னும் அதிகரித்தன. எவ்வளவுக்கு எவ்வளவு நபியவர்களுக்குத் தொந்தரவு தர முடியுமோ அந்தளவு முயற்சி செய்தனர். எல்லா வழிகளிலும் கொடுமை செய்தனர். ஆனால் நபியவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி பொறுமையாக அனைத்தையும் சகித்துக்கொண்டு இருந்தார்கள்.
 
குறைஷிகளின் கொடுமைகள் எல்லை தாண்டிச் சென்றபோது நபியவர்கள் மக்காவுக்கு வெளியே தாயிஃப் எனும் நகருக்குச் சென்றார்கள். அம்மக்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். ஆனால் அவர்களோ நபியை இழிவுபடுத்திப் பேசியது மட்டுமின்றி அவர்களை நோக்கி கற்களை வீசியும் காயப்படுத்தினார்கள். அதனால் வெளியான இரத்தம் அவர்களின் பாதங்களையும் நனைத்துவிட்டது. திரும்பவும் அவர்கள் மக்காவுக்கு வந்து தமது அழைப்புப்பணியைத் தொடர்ந்தார்கள். குறிப்பாக ஹஜ்ஜு காலங்களில் பலரையும் சந்தித்தார்கள்.
 
அல்லாஹ் தமது நபிக்கு மக்களின் உதவியைக் கொண்டு வந்தான். அதற்குரிய காலம் வந்தது. ஹஜ்ஜுக் காலத்தில் மதீனாவைச் சேர்ந்த கஸ்ரஜ் எனும் கோத்திரத்தாரைச் சந்தித்தார்கள். அவர்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள். பின் மதீனாவுக்குச் சென்று அங்கு இஸ்லாமைப் பரப்பினார்கள். அடுத்த வருடம் அவர்கள் ஹஜ்ஜுக் காலத்தில் வந்தபோது அதிகமானவர்களாக இருந்தார்கள். இம்முறை அவர்களுடன் நபியவர்கள் முஸ்அப் இப்னு உமைர் எனும் தோழரை அனுப்பி வைத்தார்கள். குர்ஆனையும் இஸ்லாமியச் சட்டங்களையும் கற்றுக்கொடுப்பது இவரின் பணி. இவரால் மதீனாவில் பலர் முஸ்லிமானார்கள். மதீனாவில் அவ்ஸ் எனும் கோத்திரத்தின் தலைவர்களாக இருந்த சஅது இப்னு முஆது மற்றும் உசைது இப்னு ஹுளைர் ஆகியோரும் முஸ்லிமானார்கள்.
 
அடுத்த வருடம் ஹஜ்ஜுக் காலம் வந்தபோது சுமார் எழுபதுக்கும் அதிகமான அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரத்து மக்கள் முஸ்லிமான நிலையில் மக்கா வந்தார்கள். மக்கா குறைஷிகளால் புறக்கணித்து ஒதுக்கப்பட்டவராக நபியவர்கள் இருப்பதைச் சகிக்காதவர்களாய், அவர்களை மதீனாவுக்கே அழைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் அவர்கள் இருந்தனர். அகபா எனும் பள்ளத்தாக்கில் ஓர் இரவு அவர்கள் அனைவரும் ஒன்றுகூடினர். நடு இரவில் நபியவர்கள் தமது பெரிய தந்தை அப்பாஸ் அவர்களுடன் மதீனாவாசிகளிடம் வந்தார்கள். அச்சமயம் அப்பாஸ் முஸ்லிமாக இருக்கவில்லை. எனினும் தமது சகோதரரின் மகனுக்கு நலம் விரும்பியாக இருந்தார்கள். நபியவர்கள் மதீனாவாசிகளிடம் பேசினார்கள். அந்த மக்கள் நபியவர்களுக்கு உறுதிப்பிரமாணம் கொடுத்தார்கள். இறுதி வரை நபியவர்களின் மார்க்கத்திற்கு உதவுவதாகவும், அவர்களைக் காப்பதாகவும், அதற்காகப் போராடுவதாகவும் உறுதிமொழி அளித்தார்கள். நபியவர்கள் மதீனாவாசிகளுக்குச் சொர்க்க நற்செய்தி சொல்லி வாக்களித்தார்கள். இந்த உடன்படிக்கை முடிந்த பின் ஒவ்வொருவராக மதீனாவாசிகள் அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்கள். இதற்குப் பின் சிறிது காலம்தான் நபியவர்கள் மக்காவில் இருந்தார்கள்.  
 
அல்லாஹ்வுக்கு யார் உதவி செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மிகப் பலவானும் அனைவரையும் மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் 22.40)
 
நபியவர்கள் தம் தோழர்களுக்கு மதீனா செல்லும்படி கட்டளையிட்டார்கள். இணைவைப்பாளர்களால் தடுத்து வைக்கப்பட்டவர்கள் தவிர மற்ற எல்லாத் தோழர்களும் குழு குழுவாக மதீனா சென்றனர். அபூபக்ர், அலீ மற்றும் நபியைத் தவிர வேறு எந்த முஸ்லிமும் மக்காவில் இல்லை எனும் நிலை ஆனது. நபித்தோழர்கள் மதீனாவுக்குச் சென்று ஒன்றிணைந்தால் அவர்கள் வலிமையான கூட்டமாகிவிடுவார்கள் என்ற பயம் வந்துவிட்டது குறைஷிகளுக்கு. எனவே, அவர்கள் அனைவரும் ஆலோசனை செய்து நபியைக் கொன்றுவிடுவதே தீர்வு என முடிவெடுத்தார்கள். இச்செய்தி உடனே வானவர் ஜிப்ரீல் மூலம் நபிக்குத் தெரிய வந்தது. அன்று இரவு தமது படுக்கையில் அலீ அவர்களைப் படுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு மதீனா நோக்கிப் பயணம் செய்ய தயாரானார்கள். நபியவர்களிடம் மக்கள் கொடுத்து வைத்திருந்த அமானிதப் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அலீ மதீனா வர வேண்டும் என்பது கட்டளை. நபியவர்களின் வீடு குறைஷி கொலைவெறியர்களால் முற்றுகை இடப்பட்டது. அல்லாஹ்வின் உதவியால் அவர்களின் கண்ணில் படாதபடி நபி வெளியேறினார்கள். தமது தோழர் அபூபக்ரின் வீட்டிற்குச் சென்று இருவரும் ஒன்றாகப் புறப்பட்டார்கள். இந்த நிகழ்வைப் பின்வருமாறு இறைவன் கூறுகிறான்:
(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை (உமது ஊரைவிட்டு) வெளியேற்றவோ அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்துகொண்டிருந்த (நேரத்)தை நினைத்துப் பாரும். அவர்களும் சூழ்ச்சி செய்துகொண்டிருந்தார்கள்; (அவர்களுக்கு எதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்துகொண்டிருந்தான். ஆனால், சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ் மிக மேலானவன்.(அல்குர்ஆன்8:30)
 
அபூபக்ரும் நபியவர்களும் முதலில் மதீனாவுக்கு வெளியே உள்ள ஸவ்ர் எனும் குகையில் மூன்று நாட்கள் தங்கினார்கள். மதீனாவுக்கு வழிகாட்ட அவர்கள் அப்துல்லாஹ் இப்னு அபூஉரைகித் என்பவரை நியமித்துக்கொண்டார்கள். அவர் இணைவைப்பாளராக இருந்தாலும் அதற்கு முன் வந்தார். அபூபக்ர் மற்றும் நபியவர்களின் ஒட்டகங்களை வழிநடத்தினார். குறைஷிகள் நபியவர்களைப் பிடிக்கும்படி அறிவிப்புச் செய்தார்கள். எல்லாத் திசைகளிலும் சுற்றியலைந்தார்கள். நபியை உயிரோடு அல்லது பிணமாக எப்படிப் பிடித்தாலும் நூறு ஒட்டகங்கள் பரிசு என்று அறிவித்தார்கள். இதை அடையும் ஆசையில் புறப்பட்டவர்களில் சுராகா இப்னு மாலிக் என்பவரும் ஒருவர். அப்போது அவர் முஸ்லிமாக இருக்கவில்லை. அவர் நபியவர்களை மதீனா செல்லும் பாதை ஒன்றில் கண்டுவிட்டார். அவர் நெருங்கக்கூடாது எனப் பிரார்த்தனை செய்தார்கள் நபி. உடனே அந்தக் குதிரையின் கால்கள் மண்ணில் புதைந்தன. நகர முடியவில்லை. இதைக் கண்ட சுராகா இது அல்லாஹ்வின் உதவியே என்று உணர்ந்தார். தம்மை மன்னித்துவிடும்படிக் கேட்டார். நபியவர்கள் அவரை மன்னித்ததுடன், குறைஷிகளைத் திசைதிருப்புமாறு அவரைக் கேட்டுக்கொண்டார்கள். சுராகா அந்தப் பாதையில் வந்து கொண்டிருந்த குறைஷிகளிடம் திரும்பிச் சென்றுவிடுமாறும், அந்தப் பக்கம் யாரும் இல்லை என்றும் சொல்லி அனுப்பி வைத்தார். இவ்வாறு அல்லாஹ் தனது தூதரைப் பாதுகாத்தான். பத்திரமாக மதீனா வந்து சேர்ந்தனர் நபியும் அபூபக்ரும். சுராகா பிறகு மக்கா வெற்றி கொண்ட ஆண்டில் முஸ்லிமாகவும் ஆனார்.
 
மதீனா காலகட்டம்

மதீனா காலகட்டத்தையும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.
முதல் கட்டம் பல தொல்லைகளையும் துன்பங்களையும் கொண்டது. இஸ்லாமியப் பிரசாரப்பணியை முடக்கி அதன் வளர்ச்சியைத் தடுக்க எதிரிகள் போர்புரிந்தார்கள். இது ஹிஜ்ரீ 6ஆம் ஆண்டு நடந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையுடன் முடிவுற்றது.
 
இரண்டாவது கட்டமானது போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம் இணைவைப்பாளர்களின் தலைமை பறிக்கப்பட்டு, ஹிஜ்ரீ 8ஆம் ஆண்டு ரமளான் மாதத்தில் மக்கா வெற்றி கொள்ளப்பட்டது வரை உள்ளதாகும். இக்காலத்தில்தான் நபியவர்கள் பல மன்னர்களுக்கும் கடிதம் எழுதி இஸ்லாமிய அழைப்பு விடுத்தார்கள்.
 
மூன்றாவது கட்டம் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமைத் தழுவியதாகும். பல கோத்திரங்கள் நபியவர்களைச் சந்தித்து முஸ்லிமாகுவதற்கு மதீனா வந்து சென்றார்கள். இக்காலகட்டம் ஹிஜ்ரீ 11 ரபியுல் அவ்வலில் நபியவர்கள் மரணித்ததுடன் முடிந்தது.
 
நபி முஹம்மது அவர்கள் மக்காவிலிருந்து மதீனா வந்த அன்று முஸ்லிம்கள் மிகப் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று முழக்கம் செய்தார்கள். இந்தப் பயணத்தையே ஹிஜ்ரத் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வை வைத்தே ஹிஜ்ரீ ஆண்டு கணக்கிடப்படுகிறது. மதீனாவில் நுழையும் முன்பு நபியவர்கள் குபா எனும் பகுதியில் தங்கினார்கள். இது மதீனாவுக்கு வெளியே உள்ள சிறிய கிராமம். இங்கு ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். பனீ சாலிம் இப்னு அவ்ஃப் கூட்டத்தாரிடம் பத்து நாட்கள் தங்கியிருந்துவிட்டு, வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துவிட்டு அன்று மாலை மதீனாவுக்குள் நுழைந்தார்கள். நபியவர்களின் ஒட்டகக் கயிறைப் பிடித்தபடி மதீனாவாசிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில்தான் அவர்கள் தங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அந்த ஒட்டகத்தை விட்டுவிடுமாறும், அது எந்த வீட்டிற்கு முன் சென்று அமர்கிறதோ அந்த வீட்டில்தான் தங்கப்போவதாகவும் அறிவித்தார்கள். உண்மையில் அந்த இடத்தில்தான் இன்று மஸ்ஜிது நபவீ உள்ளது.
 
ஒட்டகம் நபியவர்களின் தாய்வழி உறவினர் அபூஅய்யூப் அல்அன்சாரீ அவர்களின் வீட்டு வாசலில் சென்று அமர்ந்துகொண்டது. நபியவர்கள் தமது குடும்பத்தாரையும் அபூபக்ரின் குடும்பத்தாரையும் மக்காவிலிருந்து அழைத்து வர ஆள் அனுப்பினார்கள். அவ்வாறே அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள்.
 
இதற்குப் பின்பு நபியவர்களும் தோழர்களும் சேர்ந்து ஒட்டகம் உட்கார்ந்த இடத்தில் மஸ்ஜிது கட்டும் வேலையில் இறங்கினார்கள். தொழுகைக்கான திசையாக (கிப்லாவாக) ஜெரூசலத்தில் உள்ள பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலை ஆக்கினார்கள். தாம் கட்டிய பள்ளிவாசலின் தூண்களாக பருத்த மரத்தண்டுகளை நட்டார்கள். ஈச்ச மரக் கிளைகளால் கூரையை அமைத்தார்கள். பதினாறு மாதங்களுக்குப் பிறகு தொழுகை திசை பைத்துல் முகத்தஸை விட்டு மக்காவிலுள்ள கஅபா நோக்கித் திருப்பப்பட்டது.
 
மஸ்ஜிதைக் கட்டியவுடனே நபியவர்கள் மக்காவிலிருந்து வந்த முஹாஜிர் தோழர்களுக்கும் மதீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட அன்சாரித் தோழர்களுக்கும் இடையே சகோதரத்துவ உடன்படிக்கை செய்து வைத்தார்கள். நபியவர்கள் அங்கிருந்த யூதர்களுடன் எழுத்துப்பூர்வமான உடன்படிக்கை ஒன்றையும் செய்துகொண்டார்கள். அதன் நோக்கம் மதீனாவின் அமைதியைப் பாதுகாப்பதாகும். யூதர்களின் மதகுரு அப்துல்லாஹ் இப்னு சலாம் முஸ்லிமானார். ஆயினும் பல யூதர்கள் நிராகரிப்பவர்களாகவே இருந்தார்கள். அந்த வருடம் நபியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை மணந்தார்கள். இரண்டாவது வருடம் பாங்கு சொல்வது கடமையாக்கப்பட்டது. ரமளான் நோன்பும் கடமையானது.
 
நபியவர்கள் மதீனாவிலேயே தங்கிவிட்டார்கள். அல்லாஹ்வின் உதவி அவர்களுக்குப் பக்கபலமாக அமைந்தது. முஹாஜிர்களும் அன்சாரிகளும் நபியவர்களுக்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டார்கள். போர்க்களங்களில் அவர்களைச் சுற்றி நின்று பாதுகாத்தார்கள்.
 
ஹிஜ்ரீ 6ஆம் ஆண்டு நபியவர்கள் மக்கா சென்று கஅபா இறையில்லத்தை உம்றா செய்து வலம் வர நாடினார்கள். இதைத் தடுப்பதற்கு இணைவைப்பாளர்கள் எதிர்த்து நின்றார்கள். அது ஹுதைபிய்யா எனும் இடத்தில் சமாதான ஒப்பந்தத்தில் முடிந்தது. பத்து வருடங்கள் போர் புரியக் கூடாது என்பது அதன் முக்கிய அம்சம். மக்களின் பாதுகாப்புக்காக அதை நபியவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இதற்குப் பின்பு மக்கள் கூட்டம் கூட்டமாக முஸ்லிமானார்கள். மன்னர்களுக்கு நபியவர்கள் கடிதம் எழுதி இஸ்லாமிய அழைப்புவிடுத்தார்கள்.
 
ஹிஜ்ரீ 8ஆம் ஆண்டு மக்கா இறைநிராகரிப்பாளர்கள் உடன்படிக்கையை முறித்தனர். நபியவர்கள் அவர்களுக்கு எதிராக மிகப் பெரிய படை திரட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. கஅபாவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த எல்லாச் சிலைகளையும் உடைத்தெறித்து அதைச் சுத்தப்படுத்தினார்கள். அவர்களும் தோழர்களும் உம்றா செய்த பின்பு மதீனா திரும்பினார்கள்.
 
இறுதி ஹஜ்ஜு

ஹிஜ்ரீ 10ஆம் ஆண்டு நபியவர்கள் ஹஜ்ஜு செய்தார்கள். மக்களுக்கும் அழைப்பு விடுத்தார்கள். மதீனாவிலும் அதைச் சுற்றியிருந்த மக்களும் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டார்கள். துல்ஹுலைஃபா எனும் இடத்தில் அவர்கள் இஹ்ராம் அணிந்துகொண்டார்கள். துல்ஹஜ்ஜு மாதத்தில் மக்காவினுள் நுழைந்தார்கள். தவாஃப் மற்றும் சஃஈ செய்தார்கள். மக்களுக்கும் ஹஜ்ஜின் காரியங்களைக் கற்றுக்கொடுத்தார்கள். அச்சமயம் மகத்தான சொற்பொழிவு ஒன்றை அரஃபா மைதானத்தில் நிகழ்த்தினார்கள். அதில் இஸ்லாமியச் சட்டங்களைத் தெளிவுபடுத்தினார்கள். “மக்களே, எனது வார்த்தைகளைக் கவனமாகக் கேளுங்கள். அடுத்த வருடம் நான் உங்களைச் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது. மக்களே, உங்கள் இரத்தமும், செல்வமும், மானமும் இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் எப்படிப் புனிதமானவையோ அவ்வாறே புனிதமானவை. அறியாமைக்காலப் பழக்கவழக்கங்கள் அனைத்தையும் எனது காலடியில் போட்டு நசுக்கிவிட்டேன். அறியாமைக்கால பழிவாங்கல் அனைத்தும் காலாவதியாகிவிட்டன. முதலில் ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் உடைய இரத்தத்திற்குரிய பழிவாங்கலை ரத்து செய்கிறேன். அவன் பனீ சஅது குலத்தாரிடம் பால்குடி குழந்தையாக இருந்தான். அவனை ஹுதைல் கொலை செய்துவிட்டான். அறியாமைக்கால வட்டிகளையும் ரத்து செய்கிறேன். முதலில் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் உடைய வட்டிகளை ரத்து செய்கிறேன்.” இவ்வாறு பேசினார்கள்.    
 
நபியவர்களின் இறுதிப் பேருரை

பெண்களின் விஷயத்தில் அல்லாஹ்வுக்குப் பயந்துநடந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவர்களை நீங்கள் சட்டப்பூர்வமாக அடைந்திருக்கிறீர்கள். அவர்களின் உடல்கள் அல்லாஹ்வின் பாதுகாப்பில் உங்களிடம் உள்ளன. உங்களுக்கு அவர்கள் மீது உரிமை என்பது நீங்கள் வெறுக்கக்கூடிய எவரையும் உங்கள் படுக்கையில் அமர்வதற்கு அவர்கள் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அவர்கள் செய்தால் அவர்களை அடியுங்கள். ஆனால் கடுமை கூடாது. அவர்களுக்கு உங்கள் மீதுள்ள உரிமைகள் என்பது நீங்கள் அவர்களிடம் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும். முறையாக அவர்களுக்கு ஆடை அளிக்க வேண்டும். 
 
உங்களிடம் ஒன்றை விட்டுச் செல்கிறேன். அதை நீங்கள் உறுதியாகப் பற்றிப்பிடிக்கும் வரை நீங்கள் வழிதவறிச் செல்லமாட்டீர்கள். அதுதான் அல்லாஹ்வின் வேதம். “என்னைப் பற்றி உங்களிடம் கேட்கப்பட்டால் என்ன சொல்வீர்கள்” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “நீங்கள் தூதுச்செய்தியை எடுத்துச் சொல்லிவிட்டீர்கள். உங்கள் பொறுப்பை நிறைவேற்றிவிட்டீர்கள். எங்களுக்கு நன்மையை நாடினீர்கள் என்று சாட்சி சொல்வோம்” என்றனர். அப்போது நபியவர்கள் தமது சுட்டுவிரலை வானத்தை நோக்கி உயர்த்தி பிறகு அதை மக்களை நோக்கிக் காட்டி, “அல்லாஹ்வே, நீ சாட்சி, அல்லாஹ்வே நீ சாட்சி” என்று மூன்று முறை கூறினார்கள். 
 
இவ்வாறு அவர்கள் செய்த பின்பு அதே அரஃபா மைதானத்தில் பின்வரும் வசனம் இறங்கியது: இன்று நான் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து, என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்துவிட்டேன். உங்களுடைய இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் நான் திருப்தியடைந்துவிட்டேன்.(அல்குர்ஆன் 5.3)
 
இதன் மூலம் அல்லாஹ் தனது மார்க்கத்தையும் அதன் சட்டதிட்டங்களையும் முழுமைப்படுத்தியதாக அறிவித்தான்.
 
இந்த ஹஜ்ஜை ஹஜ்ஜுத்துல் விதா என்று கூறப்படுகிறது. காரணம் நபியவர்கள் செய்த இறுதி ஹஜ்ஜு இதுவே. இதற்குப் பின்பு அவர்கள் இன்னொரு ஹஜ்ஜு செய்யவில்லை. இதற்குப் பின்பு அவர்கள் மதீனா திரும்பிவிட்டார்கள்.
 
ஹிஜ்ரீ 11, சஃபர் மாதம் நபியவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். நோய் கடுமையானவுடன் அபூபக்ர் (ரலி) அவர்களை தொழுகை நடத்துமாறு கட்டளையிட்டார்கள். ரபியுல் அவ்வல் மாதம் நோய் இன்னும் கடுமையானது. அதன் பிறை 12 காலை இறந்தார்கள். முஸ்லிம்கள் மிகப் பெரிய துயரைச் சந்தித்தார்கள். நபியவர்களின் உடலைக் குளிப்பாட்டி முஸ்லிம்கள் ஒவ்வொருவராக அவர்களுக்குத் தொழுகை நடத்தி அவர்களின் உயிர் பிரிந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்கள். அந்த இடம் ஆயிஷாவின் வீடாக இருந்தது. இன்று அவ்விடம் மஸ்ஜிது நபவியின் வளாகத்தினுள் உள்ளது.
 
பிறகு முஸ்லிம்கள் நபியவர்கள் தோழர் அபூபக்ரை கலீஃபாவாகத் தேர்வு செய்தார்கள். அவரே நபியுடன் ஸவ்ர் குகையில் இருந்தவர். ஹிஜ்ரத் செய்தவர். அவருடைய இறப்புக்குப் பின்பு உமர் அவர்கள் கலீஃபாவாக ஆனார். அவருக்குப் பிறகு உஸ்மான், அலீ என்று கலீஃபாக்கள் வந்தனர். இவர்கள் அனைவரும் குலஃபாஉர் ராஷிதூன் எனும் நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் ஆவர்.
 
நபியவர்கள் குறித்து குர்ஆன்

நபியவர்களின் குணநலன்கள் குறித்து குர்ஆனிலும் நாம் காண முடியும். உள்ளங்களைக் கவரக்கூடிய மிக உயர்ந்த பண்புகள் அவர்களிடம் இருந்தன.
 
அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையானவராக நடந்துகொண்டீர். நீர் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீரானால் உம்மைவிட்டு அவர்கள் விரண்டோடி இருப்பார்கள். ஆகவே, நீர் அவர்(களின் குற்றங்)களை மன்னித்து அல்லாஹ்வும் அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! மேலும், (போர் மற்றும் அமைதி உடன்படிக்கை ஆகிய) மற்ற விசயங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக! (ஏதேனும் ஒரு செயலைச் செய்ய) முடிவு செய்துவிட்டால் அல்லாஹ்வின் மீதே நீர் பொறுப்பைச் சாட்டுவீராக! ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான்.(அல்குர்ஆன் 3:159)
 
அல்லாஹ் அவர்களை மனிதகுலம் முழுமைக்கும் தூதராக அனுப்பினான். தனது வேதம் குர்ஆனை அவர்களுக்கு இறக்கி அதன் பக்கம் மக்களை அழைக்குமாறு கட்டளையிட்டான்.
 
நபியே! நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்கு)ச் சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம்.மேலும், அல்லாஹ்வுடைய கட்டளைப்படி (மக்களை நீர்) அவன் பக்கம் அழைப்பவராகவும் ஒளிர்கின்ற ஒரு விளக்காகவும் (இருக்கின்றீர்).(அல்குர்ஆன் 33:45,46) 
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்:
நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன்.
 
(எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது.
 
போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன.
 
எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
 
நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன்.
 
என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் 907)
 
நபிமொழிகள் பாதுகாக்கப்பட்ட ஆதாரங்கள்

உலகிலேயே ஓர் இறைத்தூதரின் வாழ்க்கைச் செய்திகள் முழுக்க முழுக்க பாதுகாக்கப்பட்ட நிலையில் பதிவாகியுள்ளது என்றால் அது நபி முஹம்மது அவர்களுடையதுதான். முக்கியமான நிகழ்வுகள் மட்டுமில்லாமல் தினசரி அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் பிறப்பு முதல் இறப்பு வரை வரலாற்றுப் பக்கங்களில் பதிவாகியுள்ளன. அவருடைய பேச்சுகள், செயல்பாடுகள், அவர் அங்கீகரித்த விஷயங்கள், அவருடைய குணநலன்கள், சுபாவங்கள், இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால், அவர் நடந்த விதம், பேசிய விதம், ஆடை அணிந்த விதம், நகம் வெட்டிய முறை, தாடி முடிகளையும் தலை முடிகளையும் வாரிக்கொண்ட முறை, அதோடு அவர் தமது மனைவிகளை எப்படி நடத்தினார், நண்பர்களுடன் எப்படி பழகினார், எதிரிகளை எப்படி அணுகினார், பணியாளர்கள், அடிமைகளை எப்படி நடத்தினார் என அனைத்துமே பதிவாகியுள்ளன. இதனால் அவருடைய வாழ்க்கை முழுவதுமே அவரது நண்பர்களுக்கு ஒரு திறந்த புத்தகமாக அமைந்தது. அது தலைமுறை தலைமுறையாக அறிவிக்கப்பட்டு உலகம் முழுதும் உள்ள எல்லா மக்களுக்குமான செய்தியாக, பின்பற்றத் தகுதியாக ஆனது. அவரது வாழ்க்கையிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது. அவர்களை அழகிய முன்னுதாரணமாகக் கொண்டு பின்பற்றினால் நமது சமூக வாழ்வும், தனிப்பட்ட வாழ்வும் மிகவும் சீர் பெறும். இறையச்சமும் வெற்றியும் மிக்கதாக ஆகிவிடும்.
 
அல்லாஹ் கூறுகிறான்: எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் உறுதியாக நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்க வேண்டிய அழகான உதாரணம் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்ந்துகொண்டிருப்பார்கள்.(அல்குர்ஆன் 33.21)
 
இதற்காகத்தான் முதலில் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது. அடுத்ததாக நபியவர்களின் வாழ்க்கை முறைகள் எனும் சுன்னா பாதுகாக்கப்பட்டது. குர்ஆனில் அல்லாஹ் நம்மை நோக்கி ‘தொழுங்கள்’ என்று கட்டளையிடுகிறான். எப்படித் தொழ வேண்டும் என்ற விவரங்கள் அதில் இல்லை. அதை சுன்னாவின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இப்படி ஆயிரக்கணக்கான உதாரணங்களைக் கூற முடியும். ஆகவே குர்ஆனும் சுன்னாவும் நமக்கு இன்றியமையாதவையாக உள்ளன. குர்ஆனுக்கு விளக்கம் தருபவராகவே அல்லாஹ் தனது தூதரை அனுப்பினான்.
 
நபியவர்கள் மிக மகத்தான குணங்களுடனும் ஆளுமையுடனும் இருந்தார்கள். அவை அனைத்தையும் ஒருவர் கொண்டிருப்பது மற்ற மனிதர்களுக்கு அவ்வளவு எளிய விஷயமல்ல. ஒரு சிறுவராக, பெரியவராக, கணவராக, தந்தையாக, வியாபாரியாக, சட்டமேதையாக, ஆட்சியாளராக, போர்த்தளபதியாக, கல்வியாளராக, ஆசிரியராக பல கோணங்களில் அவர்களின் வாழ்க்கை அமைந்திருந்தது. கொடை வள்ளலாகவும், நீதி பேணுகிறவராகவும் அவர்களின் வாழ்க்கை கண்ணியமாக இருந்தது. மொத்தத்தில் எல்லாவிதமான நற்குணங்களும் நிரம்பிய மனிதராக அவர்கள் வாழ்ந்தார்கள். அதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்: நபியே நீங்கள் மிக மகத்தான நற்குணத்தின் மீது இருக்கிறீர்கள். (அல்குர்ஆன் 68: 4)
 
சாதி, மதம், நிறம், இன வேறுபாடுகள் இன்றி எல்லா மனிதர்களுக்குமான தூதராக அவர்கள் வந்தார்கள். அல்லாஹ் கூறுகிறான்: நபியே உங்களை அகில உலக மக்கள் அனைவருக்கும் ஓர் அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம். (அல்குர்ஆன் 21.107)
 
நபியவர்கள் மக்காவில் தொடங்கிய அழைப்பானது அந்தக் குறிப்பிட்ட மக்களுக்கானது அல்ல. முழு மனித சமுதாயத்திற்கும் உரியது. ஒரு சிறிய தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக விடப்பட்ட அழைப்பு அல்ல. உலகம் முழுக்க ஒரு மகத்தான மறுமலர்ச்சியை ஒவ்வொரு தலைமுறையிலும் கொண்டு வந்து சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக ஏற்பட்ட அழைப்பாகும். உலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அது, மனிதகுலத்திற்குச் சிந்தனையாலும் உடலாலும் விடுதலையை வழங்கியது.
 
அல்லாஹ் நபி முஹம்மதை இதற்குத் தேர்வு செய்தான். அவர்கள் அவனது தூதுச்செய்தியை முழுமையாக எடுத்துரைத்து மக்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வந்தார்கள்.
 
குர்ஆனின் பல இடங்களில் இத்தூதரை முன்மாதிரியாக எடுத்துப் பின்பற்றுமாறும் அவர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறும் கூறப்படுகிறது.(பார்க்க அல்குர்ஆன் 3: 31, 32, 132; 4: 13, 59, 61, 64, 65, 69, 80; 5:92; 8:1, 20, 46; 24: 47, 48, 51,52, 54, 56, 63 ; 47:33; 59:7; 33:36, 71; 48:17; 49:14; 64:12) நபியின் வழிமுறைதான் இஸ்லாமைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கான வழி. அதுவே குர்ஆனுக்கும் தெளிவான விளக்கம். அது இல்லாமல் இஸ்லாமையும் குர்ஆனையும் புரிந்துகொள்ளவே முடியாது.
 
நபியவர்களைக் குறித்து முஸ்லிமல்லாத அறிஞர்கள்

மைக்கேல் ஹெச். ஹார்ட்:
உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முஹம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும்எழுப்பலாம்.
சமயஞ்சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே!(மைக்கேல் ஹெச். ஹார்ட் எழுதிய உலகில் மிகவும் தாக்கம் செலுத்திய நூறு பேர்)
 
பிரிட்டானியா கலைக்களஞ்சியம்:
இது நபி முஹம்மதைக் குறித்து பின்வருமாறு கூறுகிறது: மிகவும் அதிகமான ஆரம்பக்கால மூலாதாரங்கள் அவரை ஒரு நேர்மையான சிறந்த மனிதராகக் காட்டுகின்றன. அவர் அவரைப் போன்ற கண்ணியமானவர்கள் மத்தியில் மிகவும் மதிக்கத்தக்கவராகவும் இருந்தார். (பாகம் 12)
 
லாமார்ட்டின்:
தத்துவ போதகர், சொற்பொழிவாளர், இறைத்துதர், சட்ட நிபுணர், மாபெரும் போர்வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப் பூர்வமானகொள்கைகள் நம்பிக்கைகளை நிலை நாட்டியவர், மாயைகள் கவர்ச்சிகள் இல்லாதபகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கை வழி நாகரீகத்தை உருவாக்கி அளித்த மாமேதை, ஒரே ஆன்மீகத் தலைமையில் இருபது பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர் தாம்முஹம்மத் அவர்கள்.மனிதனுடைய பெருமையையும்புகழையும் அளக்கக்கூடிய எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும், முஹம்மதைவிடசிறந்த ஒருவரை நாம் காட்ட முடியாது.(லா மார்ட்டின், ஹிஸ்டரி துலா துர்கி (ஃப்ரெஞ்ச்), பாரிஸ்,1854, பாகம் 11, பக்கங்கள் 276-277)
 
ஜார்ஜ் பெர்னாட்ஷா:
முஹம்மதை நான் அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டேன். அவர் மனிதகுலத்தைக் காக்கவந்தவர் (Saviour of Humanity). இந்த நவீன உலகின் சர்வாதிகாரியாக அவரைப்போன்ற ஒருவர் வருவாரேயானால், இன்றைக்கு மிகவும் அவசியமான தேவைகளாகஇருக்கின்ற அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டு வந்த பிரச்சனைகளைத் தீர்க்கஅவரால் மட்டுமே முடியும். (The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8, 1936)
 
கே.எஸ். இராமகிருஷ்ண ராவ்:
இந்திய தத்துவவியல் பேராசிரியர் கே.எஸ். இராமகிருஷ்ண ராவ் நபியவர்களை மனிதகுலத்தின் முன்மாதிரி என்று குறிப்பிடுகிறார். அவர் எழுதுகிறார்: முஹம்மது அவர்களின் ஆளுமையின் முழு உண்மையைப் பெற்றுக்கொள்வது மிகவும் கடினமாக உள்ளது. ஒரு சில பகுதிகளைத்தான் என்னால் கிரகித்துக்கொள்ள முடிகிறது. அவரது ஆளுமையின் பகுதிகள் ஒவ்வொன்றும் ஆச்சரியமானவை. முஹம்மது ஓர் இறைத்தூதர் மட்டுமல்ல, அவரொரு போர் வீரர், வியாபாரி, ஆட்சியாளர், பேச்சாளர், சீர்திருத்தவாசி, அநாதைகளின் காவலர், அடிமைகளைப் பாதுகாப்பவர், பெண்களின் விடுதலையாளர், நீதிபதி, புனிதர் என்று இந்த அனைத்து தனித்தன்மைகளும் கொண்டவராக இருந்திருக்கிறார். இந்த அனைத்து மனிதச் செயல்பாடுகளிலும் அவர் ஒரு ஹீரோவாக நாயகராக விளங்கியுள்ளார். (Muhammad the Prophet of Islam" by Professor K.S Ramakrishna Rao)
 
காந்திஜி:
நபி முஹம்மது (ஸல்) அவர்களின் பண்புநலனைக் குறித்து ‘யங் இந்தியா’வில் காந்திஜி எழுதுகிறார்: கோடிக்கணக்கானவர்களின் இதயத்தில் விவாதத்துக்கு இடமில்லாத வகையில் இடம்பிடித்த ஒருவரின் வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்பினேன்…இஸ்லாம் வாளால்பரப்பப்படவில்லை என்ற உண்மை எனக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது. இஸ்லாத்தின் பிடிவாதமான எளிமை, இறைத்தூதர் முஹம்மதுவின் பரிபூரணமானசுயநலமற்ற தன்மை, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் அவர்வைத்திருந்த மரியாதை,தன் தோழர்கள் மீதும் தன்னைப் பின்பற்றியவர்கள் மீதும்அவர் கொண்டிருந்த அளவற்ற பிரியம், தீவிரமான அர்ப்பணம், அவரது வீரம், எதற்கும் அஞ்சாத தன்மை, கடவுள்மீது அவர் வைத்திருந்த பரிபூரண நம்பிக்கை, அவருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பணி மீது இருந்த கடமையுணர்வு இவைதான்இஸ்லாம் பரவுவதற்குக் காரணம். ஒவ்வொரு தடையையும் மீறி இஸ்லாம் வந்ததுஇவைகளால்தான். வாளால் அல்ல. நபிகள் நாயகம் பற்றிய இரண்டாம் பாகத்தை நான்படித்து முடித்து மூடியபோது, அந்த மகாவாழ்க்கை பற்றிப் படிக்க மேலும்இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது.(மகாத்மா காந்தி,  ‘யங் இந்தியா’ பத்திரிக்கையில் 1924ல் எழுதியது)
 
தாமஸ் கார்லைல்:
எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், எப்படி ஒரு தனி மனிதரால் அத்தனை கோத்திரங்களையும் காட்டுமிராண்டித்தனமான அரபிகளையும் சுமார் இருபது வருடங்களுக்குள் மிகச் சிறந்த பண்பாடு கொண்டவர்களாக, மிகவும் சக்தி வாய்ந்த சமுதாயமாக மாற்றிக் காட்ட முடிந்தது என்பதே.(Thomas Carlyle in 'Heroes and Hero Worship’)
 
அன்னி பெசண்ட்:
அரேபியாவின் இந்தத் தூதருடைய வாழ்க்கையையும், ஒழுக்கப் பண்புகளையும், தூய நடத்தையையும் படிப்பவர்கள் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதைஅறிந்தவர்களுக்கு அந்த வல்லமை மிக்க மாபெரும் இறைத் தூதர்களில் ஒருவரானஇறுதித் தூதரைக் குறித்து உயர்வான எண்ணமே ஏற்படும். எனது இந்த நூலில் நான்பலருக்கும் தெரிந்த பல விஷயங்களையே சொல்லி இருக்கிறேன் என்றாலும் நானேஅவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரும்பத் திரும்பப் படிக்கும் ஒவ்வொருமுறையும் ஆற்றல் மிக்க அரபு போதகரின் மீது புதிய ஒரு மதிப்பும் புதிய ஒருமரியாதை உணர்வும் ஏற்படுவதை நான உணர்கிறேன்.(Annie Besant, The life and Teachings of Mohamed 1932, page 4)
 
சரோஜினி நாயுடு:
உலகத்தில் ஜனநாயகத்தை முதன் முதலில் போதித்த மார்க்கம் இஸ்லாம் தான், பள்ளி வாசல்களில் தினமும் ஐந்து வேளை தொழுகையில் முஸ்லிம்கள் ஜனநாயகத்தை கடைபிடிக்கின்றனர், ஏழை, பணக்காரன் தோளோடு தோள் சேர்த்து ஒன்றாக இறைவனை "இறைவன் மிக பெரியவன்" என்று வழிபடுகின்றனர்.(S. Naidu, Ideals of Islam, vide Speeches & Writings, Madras, 1918, p. 169)
 
பாஸ்வொர்த் ஸ்மித்:
போப்புக்கான பாசாங்குகளும், சீசருக்கான படையணியினரும், பாதுகாவலர்களும், அரண்மனையும், நிரந்தர வருமானவும் இல்லாமல், ஒரே சமயத்தில் சீசராகவும்போப்பாகவும் இருந்தவர் முஹம்மது. தெய்விக கட்டளை கொண்டு ஆண்ட ஒரு மனிதன்உண்டென்றால் அது முஹம்மதுதான்.(பாஸ்வொர்த் ஸ்மித், Mohammad and Mohammadanism, லண்டன்,1874, பக்கம் 92)
 
நபி முஹம்மது குறித்து இந்து வேதங்கள்:

ரிக் வேதத்தில் 1:13: 3, 1:18:9, 1:106:4, 1:142:3, 2:3:2, 3:29:11, 5:5:2, 7:2:2, 10:64:3, 10:182:2, 19:70:2.
அதர்வண வேதம் 20 ஆவது புத்தகத்தில் குன்துப் என்ற பெயரில் ஒரு அத்தியாயம்உண்டு. 'குன்துப்' என்பதன் பொருள் 'அமைதியையும் பாதுகாப்பையும் தரக் கூடியவழிகள்' என்ற பொருள் தரும். இதையேதான் நாம் அரபியில் இஸ்லாம் என்கிறோம்.இந்த குன்துப் அத்தியாயத்தை புளூம் ஃபீல்ட், புரபஸர் ரால்ப்க்ரிபித்,பண்டிட் ராஜாராம் போன்றோர் மொழி பெயர்த்துள்ளனர். இந்த அதர்வணவேதத்தில் குன்துப் அத்தியாயத்தில் சுலோகங்கள் ஒன்றிலிருந்து பதின்மூன்றுவரை வரக் கூடியவை.


மந்த்ரா ஒன்று

'அவர்தான் நரசன்ஸா அல்லது புகழப் பட்டவர்'

'அவர்தான் கருமா. அமைதியை விரும்பும் அவர் தன் நாட்டவர்களால் துரத்தப் படுவார் 60090 எதிரிகளிடமிருந்து காப்பாற்றப் படுவார்'

சமஸ்கிருதமொழியில் 'கருமா' என்பதற்கு 'அமைதியை பரப்பக் கூடியவர்' என்ற அர்த்தம்வரும். 'நாடு துறப்பவர்' என்ற பொருளிலும் வரும். இந்த இரண்டு செயல்களும்முகமது நபியின் வாழ்க்கையில் நடைபெற்றவை.

'நரசன்ஸா' என்பதற்குபுகழப் பட்டவர் என்று அர்த்தம் வரும். அரபியில் புகழப் பட்டவர் என்றபதத்தில் வரும் பெயர் முகம்மது. மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வு இல்லை என்றுபிரச்சாரம் செய்த அவர் மக்காவிலிருந்து மதினாவுக்கு அவரின் உறவினர்களாலும்எதிரிகளாலும் விரட்டப் பட்டார். அப்போது இருந்த மக்காவின் மக்கள் தொகைஏறக்குறைய இதே எண்ணிக்கையில் இருந்தது.

மந்த்ரா இரண்டு

'அவர் ஒட்டகத்தில் சவாரி செய்வார். அவருடைய வாகனம் சொர்க்கத்தையும் தொட்டுவிடக் கூடியது'

ஒட்டகத்தில் பிரயாணம் செய்வது பிராமணர்களுக்கு தடுக்கப் பட்டுள்ளது. எனவே இதுவும் முகமது நபியைக் குறிப்பதாக உள்ளது.
முகமதுநபி 'மிஃராஜ்' என்ற விண்வெளிப் பயணம் செய்து இறைவனோடு பேசியதையும், சொர்க்கம் நரகத்தை பார்வையிட்டதையும் பற்றி நமக்கு ஹதீதுகளில் காணக்கிடைக்கின்றது.

மந்த்ரா மூன்று :

'அவர் பெயர்தான் மாமாஹ் ரிஷி'

இந்தமந்த்ராவில் வரும் பெயர் மாமாஹ் ரிஷி. எந்த ஒரு இறைத் தூதரும் இந்தபெயரில் இந்தியாவில் அவதரித்ததாக வரலாறுகளில் காணப் படவில்லை. மாமாஹ்என்பதும் முஹம்மது என்பதும் ஒன்று தான் என்று இதன் மூலம் விளங்க முடிகிறது.இதற்கு முன்பே கூட இந்து வேதங்களில் முஹம்மது என்ற முழுப் பெயரும்குறிப்பிடப் பட்டுள்ளது.

மந்த்ரா பதினான்கு :

அந்த தலைவரை நாம் வாழ்த்தி வரவேற்போம். அவரை ஏற்றுக் கொண்டால் தவறுகளில் வீழ்ந்து விடாமல் பாதுகாக்கப் படுவோம்.

அதர்வண வேதம் :

'உண்மையானஅந்த இறைவன் புகழப் பட்டவன். போர்க் களத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கைஉடையவர்கள் ஆச்சரியப் படத்தக்க வகையில் பத்தாயிரம் பேரை வெற்றிக் கொள்வர்.இது இறைவன் கிருபையால் நடக்கும்.'

அதர்வண வேதம் - அத்தியாயம் 21 - சுலோகம் 9

முகமதுநபி சந்தித்த பத்ர் போரில் முஸ்லிம்களின் தரப்பில் இருந்தது வெறும் 3000 பேரே.ஆனால் எதிரிகள் தரப்பில் இருந்தது 10000 க்கும் அதிகமானோர்.ஆச்சரியப் படும் வகையில் முஸ்லிம்கள் வெற்றியடைந்தனர். இந்த சுலோகத்தில்வரும் கடைசி வார்த்தையான 'அப்ரதி நி பசாயா' என்ற சொல் 'இறைவனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் இறை மறுப்பாளர்களுக்கு கொடுக்கப் பட்ட தோல்வி' என்றபொருளில் வரும்.

அதர்வண வேதம் :

'20 அரசர்களும் 60000 எதிரிகளும் சேர்ந்து அந்த புகழப் பட்டவரை எதிர்ப்பர்'

அதர்வண வேதம் - புத்தகம் 20 - அத்தியாயம் 21 - சுலோகம் 9

முகமதுநபி பிரசாரம் பண்ணிய காலத்தில் மக்காவின் மக்கள் தொகை ஏறக்குறைய 60000. மக்காவிற்குள்ளேயே ஒவ்வொரு குலத்துக்கும் கோத்திரத்திற்கும் சாதி வாரியாககிட்டத்தட்ட இருபது தலைவர்கள் இருந்தனர்.இவர்கள் கையில் தான் அன்றையமக்காவின் ஆட்சி இருந்தது. இவர்கள் தான் முகமது நபியை கடுமையாகஎதிர்த்தனர். புகழப் பட்டவர் என்ற பதத்துக்கு அரபியில் முகம்மதுபொருள்என்று வரும்.'அபந்து' என்ற வார்த்தைக்கு அர்த்தம் 'உதவி செய்யப்படாதவர்' என்று வரும். மக்காவாசிகளால் ஆரம்பத்தில் நிர்க்கதியாக முஹம்மதுநபி விடப் பட்டதைத்தான் இங்கு சுட்டிக் காட்டப் படுகிறது.

சாம வேதம் :

'இந்தக்குழந்தையின் பழக்கம் வித்தியாசமாக இருக்கும். இந்தக் குழந்தை தன்தாயிடமிருந்து பால் அருந்தாது. அத்தகைய சூழ்நிலை அங்கு உருவாகாது.'

சாம வேதம் - அக்னி - மந்த்ரா 64
சாம வேதம் - புத்தகம் 1 - பிரிவு 2 - அத்தியாயம் 2 - சுலோகம் 2

முகமதுநபி சிறு வயதில் தாய்ப் பால் அருந்த ஹலீமா என்ற பெண்ணிடம் அனுப்பப் பட்டுஅங்கு தான் தனது சிறு வயதை கழித்தார்.அவரை பெற்றது ஆமினாவாகும். போதியதாய்ப் பால் சுரக்காததால் அன்றைய வழக்கப்படி வாடகைக்கு பெண்களைநியமித்தனர்.

முகமது நபிக்கு அஹமது என்ற பெயரும் உண்டு

'இஸ்ராயீலின்மக்களே! நான் உங்களுக்கு அனுப்பப் பட்ட இறைவனின் தூதர். எனக்கு முன் சென்றதவ்ராத்தை உண்மைப் படுத்துபவன்எனக்குப் பின்னர் வரவுள்ள அஹமத் என்றபெயருடையதூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்.' என்று மர்யமின் மகன் ஈஸாகூறியதை நினைவூட்டுவீராக!(குர்ஆன் - 61 : 6)

மேற் கண்டகுர்ஆன் வசனத்தில் ஏசு தன் மக்களுக்கு பிரச்சாரம் செய்யும் போது அஹமத் என்றஒரு தூதர் எனக்கு பின்னால் வரப் போகிறார் என்று கோடிட்டுக் காட்டுகிறார்.இதைத் தான் இங்கு இறைவன் குறிப்பிடுகிறான். முகமது நபிக்கு அஹமது என்றமற்றொரு பெயரும் உள்ளது இதன் மூலம் தெரிய வருகிறது.

முகமது அகமது என்ற இரண்டு பெயர்களில் இந்து மத வேதங்களில் வரக் கூடிய பல முன்னறிவிப்புகளை இனி வரிசையாகக் காண்போம்.

அ) சாமவேதம் - உத்தரசிகா - மந்த்ரா 1500
(சாம வேதம் இரண்டாவது பிரிவு - புத்தகம் 7 - அத்தியாயம் 5 - செய்யுள் 1

ஆ)சாம வேதம் - இந்திரா அதிகாரம் 2 - மந்த்ரா 152
(சாம வேதம் புத்தகம் 2 - அதிகாரம் 2 - சுலோகம் 8)

இ) யஜூர் வேதா - அதிகாரம் 31 - செய்யுள் 18

ஈ) ரிக் வேதம் புத்தகம் 8 - துதிப் பாட்டு 6 - செய்யுள் 10

உ) அதர்வண வேதம் - புத்தகம் 8 - அதிகாரம் 5 - செய்யுள் 16

ஊ) அதர்வண வேதம் புத்தகம் 20 - அதிகாரம் 126 - செய்யுள் 14

எ) சாம வேதம் -உத்தர்சிக் - மந்த்ரா 1500 - பிரிவு 2

ஏ) சாம வேதம் - புத்தகம் 7 - அதிகாரம் 1 - பகுதி 5 - செய்யுள் 1

'அஹமத்இறைவனிடமிருந்து மனிதர்கள் பின் பற்றக் கூடிய சட்டத்தைக் கொண்டு வருவார்.நான் அவரிடமிருந்து சூரியன் தரும் ஒளியைப் போன்ற ஞானத்தைப் பெறுவேன்.'

- சாம வேதம் - இந்திரா அதிகாரம் 2 - மந்த்ரா 152 - புத்தகம் 2 - செய்யுள் ஒன்றிலிருந்து எட்டு வரை

மேலேஉள்ள அத்தியாயங்களில் அதிக இடங்களில் அஹமத் என்று வருகிறது. முகம்மதும்அகமதும்இவ்விரண்டும் முகமது நபியின் பெயர்களே!முகமது நபிஇறைவனிடமிருந்து குர்ஆன் மூலம் மக்களுக்கு சட்டங்களை வழங்கினார். இதைத்தான் இங்கு சுட்டிக் காட்டப் படுகிறது.

'முஹம்மதே! நற்செய்திகூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மைஅனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.' (குர்ஆன் 34 : 28)
 
பவிஷ்ய புராணத்தில் முஹம்மது நபி

பவிஷ்ய புராணத்தில் பின்வரும் சுலோகம் காணப்படுகிறது:

"ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர் ஆச்சார்யண ஸமன் வித மஹாமத் இதிக்கியாத"
 
சிஷ்ய சாகா ஸமன்விதம்.."(பாகம் 3, சுலோகம் 3, சூத்திரம் 5-7)

இதன் பொருள்:"அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் சீடர்களுடன்வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்)."
பவிஷ்ய புராணம் ப்ரதி ஸாரக் பாகம் 3, காண்டம் 3, ஸ்லோகம் 10-27. மகாரிஷி வியாசர் கூறுகிறார்:

''அத்தூதர்அரேபியாவில் நிலவும் மூடப் பழக்க வழக்கங்களை ஒழிப்பார். ஆர்ய தர்மத்தைஅந்நாட்டிலிருந்து அகற்றுவார். நேர்வழி காட்டும் அத்தூதர் முஹம்மது ஆவார்.அவருக்கு பிரம்மன் (கடவுள்) துணைபுரிவார். துஷ்டர்களை அவர்நல்வழிப்படுத்துவார். ஓ ராஜாவே நீர் கெட்டவர்களை (ஷைத்தானைப்)பின்பற்றாதீர். ஆத்தூதரினைப் பின்பற்றுவோர் மாமிசம் உண்பர். விருத்தசேதனம்செய்வர். தாடியுடன் இருப்பர். பாங்கோசை ஒலித்து வழிபாட்டில் ஈடுபடுவர்.அனுமதிக்கப்பட்டவற்றை மட்டுமே உண்பர். பன்றி இறைச்சியைத் தவிர்ப்பர்.அவர்களுக்கு போர் வெற்றிப்பொருட்கள் ஆகுமானது. அவர்களுக்கு "முஸல்மான்"எனப்பெயர்."
பவிஷ்ய புராணம் பாகம் 3, காண்டம் 1, அத்தியாயம் 3 ஸ்லோகம் 21-23

அக்கிரமும்அநீதியும் ஏழு புனித நகரங்களில் தலைவிரித்தாடும் (காசி உள்ளிட்ட)இந்தியாவில் ரச்சாஸ், ஸாபர், பிஹ்ல் போன்ற மூடர்களின் பழக்க வழங்கங்களைமக்கள் பின்பற்றுவர். முஹம்மதுவைப் பின்பற்றும் முஸ்லீம்கள் மிகச் சிறந்ததைரியசாலிகள். முஸல்மான்களிடம் நல்ல குணநலன்கள் காணப்படும். கெட்ட தீயசெயல்கள் ஆரியர்களின் பூமியில் ஒன்று திரட்டப்படும். இஸ்லாம் இந்தியாவையும்அதன் தீவுகளையும் ஆட்சி செய்யும். இவ்வுண்மைகளை அறிந்து கொண்ட ஓ முனியே!உமது இரட்சகனைப் புகழ்ந்து துதிப்பாயாக!
 
யூத கிறித்துவ வேதங்களில் நபி முஹம்மது:

குர்ஆன் கூறுகிறது: எவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத (நம்) தூதராகிய இந்த நபியைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் தங்களிடமுள்ளதவ்றாத்திலும், இன்ஜீலிலும் இவருடைய பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்.(அல்குர்ஆன் 7.157) 
 
இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகை, மார்க்கம், சமுதாயம்ஆகியவை பற்றி முந்தைய வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்படடிருந்தது.
 
இறைத்தூதர் மோசே (மூஸா (அலை) அவர்களின் முன்னறிவிப்பு பழைய ஏற்பாட்டில்:
 
”உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன்நடுவே உன் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணுவார், அவருக்குசெவிகொடுப்பீர்களாக! (உபாகமம்,18:15)
 
”உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள்சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்” (உபாகமம், 18:18)
 
அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புஸ்தகத்தைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன் எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான். (ஏசாயா 29.12) 
 
புதிய ஏற்பாட்டில்:
நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூடஇருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத்தந்தருளுவார்.(யோவான் 14.16) 
 
பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன்வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.(யோவான் 15.26) 
 
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப்பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில்வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.(யோவான் 16.7)
12. இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.

13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களைநடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள்யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

14. அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். (யோவான் 16.12-14)
 
கிரேக்க மொழியில் பெரிக்லை டோஸ் (Periclylos) என்னும் சொல்லின் அர்த்தமும் ஒன்றே. எனினும், பெரிக்லைடேஸ் என்பதை ஆங்கில மொழி பெயர்ப்பில் (Comforter) ஆறுதல்படுத்துபவர் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. (Periclylos) என்ற கிரேக்க சொல்லின் சரியான அர்த்தம், அன்பான நண்பர் அல்லது Advocateஎன்பதே. ஆறு தல்படுத்துபவர் Comforterஅல்ல. Paraletos என்று உச்சரிப்பு தவறாக Periclylosஎன்பது எழுதப்பட்டள்ளது. ஈஸா (அலை) அவர்கள் உண்மையிலே யே அஹ்மத் வருவார் என எதிர்வு கூறியுள்ளார். கிரேக்க சொல்லான Paracleteஎன்ற சொல் உலகில் எல்லாப் படைப்புகளுக்கும் கருணை யாக அனுப்பப்பட்ட நபிமுஹம்மத் (ஸல்) அவர்களையே குறிக்கின்றது.
 
சில கிறிஸ்தவர்கள் comfortor(ஆறுதல் படுத்துபவர் எனக் குறிப்பிடப்படுவது புனித ஆவி|யைக் குறிக்கின்றது எனக் கூறுகின்றனர். ஆனால், அவர்கள் கூறும் ஆறுதல் படுத்துபவர்| ஈஸா (அலை) பிரிந்து சென்ற பின்னரே வருவார் என பைபிள்  தெளிவாகக் குறிப்பிடுகின்றது. பைபளில் ஈஸா (அலை) இவ்வுலகில் இருக்கும் காலத்திலும் அவருக்கு முன்னும், எலிஸ்பெத்தின் கருவரையிலும் புனித ஆவி இருந்ததாக பைபிள் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
 
இயசு ஞானஸ்தானம் செய்யப்படும் போது புனித ஆவி இருந்ததாக பைபிள் குறுப் பிடுகின்றது. எனவே மேற்போந்த எதிர்வுகூறல் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகையை யே குறிப்பிடுகின்றது. 
 
புத்த மத நூல்களில் முஹம்மது நபி:

பௌத்த நூல்களில் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தொடர்பாகக் காணப்படும் குறிப்புகள் பின்வருமாறு:
1. புத்தர் நபி முஹம்மத் (ஸல்) ஒருவர் வருவார் என  முன்னறிவிப்புச் செய்தார்.
 
யு) அநேகமாக எல்லா பௌத்த நூல்களிலும் இது காணப்படுகிறது. அது  சக்கவத்தி சின்ஹானத் சுத்தந்தா D. 111 . 76நூலிலும் பின்வருமாறு காணப்படுகிறது.
 
உலகில் மைத்திரி (கருணைமிக்கவர்) என்ற பெயரில் ஒரு புனிதர் வருவார். அவர் மிக உன்னதமானவர். அவர் ஐயங்கள் தெளிந்தவர். செயல்களைத் தவிர அறிவைக் கொண்டு நிரப்பப்பட்டவர். நன்மாராயம் சொல்பவர். முழு அகிலத்தையும் அறிந்தவர்.
 
அவர் என்ன விடயங்களை தனது ஆத்மார்ந்த அறிவின் மூலம் உணர்ந்து கொண்டாரோ, அவற்றை இந்த அகிலத் துக்கும் எடுத்து முன்வைப்பார். அவர் தனது மார்க்கத்தைப் போதிப்பார். அம்மார்க்கம் மிகச் சிறந்த மூலத்தைக் கொண்டது. அதன் முடிவிலும் உயர்வானது. அதன் நோக்கத்திலும் உயர்வானது. ஆன்மாவிலும் எழுத்திலும் அது உயர்வானதே. அவர் ஒரு மத வாழ்வைப் போதிப்பார். அவ்வாழ்வு முறை முழுமையாக பரிசுத்தமானதும் முழுமை பெற்றதுமாகும். நான் இப்பொழுது போதிக்கும் என் மதம் போன்றதும் வாழ்வு முறை போன்றதையும் அவர் போதிப்பார். அவரது மதகுருமார் கூட்டம்  பல ஆயிரக்கணக்கில் இருக்கும். எனது மதகுருக் கள் கூட்டமோ நூற்றுக் கணக்கிலேயே இருக்கிறது.
 
டீ) கிழக்கின் புனித நூல்கள்| பாகம் 35பக்கம் 225ல் குறிப்பிடப்படுவது தலை மைத்துவமும் மத ஒழுங்கும் தங்கி யுள்ளது. ஒரே புத்தர் நான் மட்டுமல்ல எனக்குப் பிறகு ஷமைத்திரியர்| எனும் இவ்விவ்வாறான குணங்களையுடைய ஒரு புத்தர் பின்னர் வருவார். நான் தற்பொழுது நூற்றுக் கணக்கானோரின் தலைவராக இருக்கிறேன். அவர் பல ஆயிரக்கணக்கானோரின் தலைவராக இருப்பார்.||
 
ஊ) கேரஸ் என்பவரால் எழுதப்பட்ட புத்த மதக் கோட்பாடுகள்| என்ற நூலில் பக்கம்: 217, 218 (இது இலங்கையில் காணப்படுகிறது.)
 
(புத்தரின் சீடரான) ஆனந்தாஇ அருள் பெற்றவரான புத்தரிடம் கேட்கிறார். நீங்கள் சென்று விட்ட பின் எங்க ளுக்கு போதனை செய்பவர் யார்?|
 
அருள் பெற்றவர் (புத்தர்) சொல்கிறார்: இந்த பூமியில் வந்த முதல் புத்தர் நான் அல்ல. கடைசியானவரும் நானல்ல. காலப் போக்கில் இப்பூமியில் இன்னொரு புத்தர் தோன்று வார். மிகவும் ஐயங்தெளிந்த ஞானம் பெற்றவர். செயல்களில் அறிவைக் கொண்டு நிரம்பியர்.
 
அவர் ஒப்பிட்டுச் சொல்ல இயலாத மனிதர்களின் தலை வராகவும், தூதர்களினதும் அழிந்து செல்லக் கூடிய மனிதர் களினதும் தலைவராகவும் இருப்பார். நான் என்ன அற ஞானங்களை அறிவியல் உண்மைகளை உங்களுக்குப் போதிக்கின்றேனோ, அவற்றையே அவரும் வெளிப்படுத்துவார். அவர் அவரது மார்க்கத்தையும் போதிப்பார்.
 
அம்மார்க்கம் மூலத்தில் சிறப்பானது. அதன் முடிவில் உச்சத் தன்மையில் உயர் வானது. அதன் குறிக்கோளில் உன்னதமானது. அவர் ஒரு மதரீதியான ஒழுக்க வாழ்வை போதிப்பார். அது முழுமையானதும் பரிசுத்தமானதும், தற்பொழுது நான் உங்களுக்குப் போதிப்பது போன்றுமிருக்கும். அவரது சீடர்கள் பல ஆயிரக்கணக்கில் இருப்பர். ஆனால் எனது சீடர்களோ நூற்றுக்கணக்கிலேயே உள்ளனர்.
 
ஆனந்த் கேட்டார் அவரை நாம் எவ்வாறு அடையாளங் காண்பது?
அருள் பெற்ற அவர் (புத்தர்) கூறும்போது அவர் மைத் திரியர்' என அறியப்படுவார் எனப் பதிலளித்தார்.
 
1. மைத்திரிய என்ற சமஸ்கிருத சொல்லுக்கும் பாலியில் அதன் சம அர்த்தமுள்ள மெத்தய்ய| என்ற சொல்லுக்கும் ஷஅன்புள்ளஇ கருணைமிக்க, இரக்கமுள்ள| என்ற கருத்து கொள்ளப்படுகிறது. இது அத்தனைக்கும் சமமான கருத் துள்ள அறபுச் சொல் அஹ்மத்| என்பதாகும்.
 
அல்குர்ஆனில் ஸூறா அன்பியாவில் நாம் உம்மை சகல படைப்புகளக்கும் கருணை யாகவேயன்றி அனுப்பவில்லை(21:107) இதில் கருணை மிக்கவர் என குறிப்பிடப்படும் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கருணை மிக்கவர் (மைத்திரி) என்று அழைக்கப்படுகிறார்.
 
குர்ஆனில் கருணை, கருணை மிக்கவர் என409இடங்களில் குறிப்பிடப்படுகின்றன.
 
குர்ஆனில் உள்ள எல்லா அத்தியாயங்களும் -9ம் அத்தியாயமான ஸூறா தௌபாவைத் தவிர, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என ஆரம்பிக்கின்றது. அதன் பொருளா வது -நிகரற்ற அன்புடையோன் அளவற்ற அருளாள னான அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன் என்பதாகும்.
 
முஹம்மத்;| (Muhammadh) என்ற சொல் மஹமத்| (Mahamadh) என்றோ மஹ்மூத் (Mahmoodh) எனறோ உச்சரிக் கப்படுகின்றது. இன்னும் வேறு மொழிகளில் பல்வேறு முறைகளில் உச்சரிக்கப்படுவதை அவதானிக்கக் கிடைக் கின்றது. பாலி, சமஸ்கிருத மொழிகளில் மஹோ  (Maho) அல்லது மஹா (Maha) என்பதன் அர்த்தம் அதி சிறந்த உன்னதமான என்றும் மெத்தா (Metta) என்றால் அன்பு கருணை என்றும் பொருள்படும். ஆக, மஹமத் என்பதன் பொருள் மஹா காருண்யம் என்று கொள்ளலாம்.
 
2. புத்தரின் போதனைகள் சிலரால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடிய மறை பொருளானவையாகவும் எல்லோ ருக்கும் விளங்கக் கூடிய பொதுக் கொள்கை முறை எனவும் இரு வகைகளை கொண்டிருக்கிறது.
 
(Books Of the East) கிழக்கன் புனித நூலகள்பாகம்-2, பக்.36ல்  மஹாபரி நிப்பான சுத்த (Maha-Parinibbana Sutta) அத்தியாயம்2வசனம்-32ல் கீழ்வருமாறு கூறப்படுகிறது.
 
நான் மறைபொருள் ஞானத்தையும் பொதுக் கொள்கை களையும் எந்தவித வேறுபாடும் காட்டாமல் போதித்துள் ளேன். சத்தியத்தைக் கூறும் விடயத்தில், ஆனந்தா ததகாத் தாவுக்கு எதையும் மறைத்து விடும் ஆசிரியர் ஒருவரின் மூடிய கைக்கொள்கை இருக்க முடியாது.
 
நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் இறை ஞானம், பொது உலக விடயங்கள் எதுவும் தொடர்பாக எந்த வித வேறு பாடுமின்றி அல்லாஹ்வால் ஏவப்பட்ட கட்டளைகளை மக்களு க்கு எடுத்துரைத்துள்ளார். அன்றும் இன்றும் புனித குர்ஆன் பொதுமக்களுக்கு பகிரங்கமாகவே ஓதிக்காண்பிக்கப்பட்டுள்ளது. ஓதிக் காண் பிக்கப்படுகிறது. நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தில் எதையும் மறைப்பதையிட்டு கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
 
3. புத்தரின் நெருங்கிய சீடர்கள்
கிழக்கின் புனித நூல் பாகம்-2, பக்.-97மஹாபரிநிப்பன சுத்த, அத்தியாயம்-5, வசனம்-36ன் படி:
அப்பொழுது அருள் பெற்றவர் (புத்தர்) ஒருமுறை சகோதர மக்களுக்கு போதனை செய்யும்போது அவர் சொன்னார்: எவராகிலும் சகோதர மக்களில் ஒருவர் நீண்ட கடந்த காலத்தில் அரஹத் புத்தாவாக இருந்திருக்கிறாரோ அவர்களும் எனக்கு இப்பொழுது மிக நெருக்கமாக இருக் கும் சீடரான ஆனந்த போன்று எனது சீடர்களே. இந்த சகோதரர்கள் எதிர்காலத்தில் அரஹத் புத்தாவாக இருப்பார். அவருக்கும் ஆனந்தா எனக்கு இருப்பது போன்று நெருக்கமான சீடர்களாக இருப்பர்.
 
புத்தருக்கு மிக நெருக்கமான சீடர் ஆனந்த-அதே போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மிக நெருக் கமான சீடராக அனஸ் (ரழி) அவர்கள் இருந்திருக் கிறார்கள். அவர் மாலிக் அவர்களின் மகனாவார். அனஸ் (ரழி) அவர்களை அவரது பெற்றோர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைத் தார்கள். அனஸ் (ரழி) சொல்கிறார்: எனது தாயார் நபிய வர்களுக்கு சொன்னார். அல்லாஹ்வின் தூதரே! இதோ இருக்கிறார் உங்களது சிறு ஊழியர்.
 
மேலும் அனஸ் (ரழி) கூறுகையில் எனக்கு 8வயதிலிருந்து நான் அவர்களுக்கு ஊழியம் செய்து வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள் என்னை தனது மகன் என்றும் தனது அன்புக் குரிய சீடர் என்றும் அழைப்பார். அனஸ் (ரழி) அவர்கள் நபிகளாரின் மரணம் வரை எல்லாக் காலங்களிலும் சமாதான காலம், யுத்த காலம் எல்லாவற்றிலும் ஆபத்திலும் பாதுகாப்பி லும் நபி (ஸல்) அவர்களுடன் ஒன்றாக இருந்துள்ளார்கள்.
 
i) அனஸ் (ரழி) 11வயதே நிரம்பியவராக இருந்தபோதும் உஹத் யுத்தத்தில் நபி (ஸல்) அவர்களுக்குப் பக்கத்தில் இருந்திருக்கிறார்கள். அந்த யுத்தத்தில் நபி (ஸல்) அவர்கள் காயப்பட்டு ஆபத்தில் இருந்திருக்கிறார்கள்.
 
ii) ஹுனைன் யுத்தத்தின்போதும், அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் எதிரிகள் சூழப்பட்டிருந்த வேளை 16வயது நிரம்பி யிருந்த அனஸ்(ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பக்கத்தில் துணையாக இருந்திருக்கிறார்கள்.
 
எனவே அனஸ்(ரழி) அவர்கள் புத்தரை மதம்பிடித்த யானை தாக்க வந்தபோது அவருடன் கூட இருந்த ஆனந்தாவுக்கு ஒப்பிட்டுக் கூற முடியும்.
 
ஒரு புத்தரை அடையாளம்காண ஆறு அளவு கோள்கள் கூறப்பட்டுள்ளன:
கரோஸினால் எழுதப்பட்ட புத்தமத நூல், பக்.214ன் படி
அருள் பெற்றவர் (புத்தர்) கூறுகிறார், இரண்டு சந்தர்ப்பங் களிலேயே ஒரு ததகாத்தா|வின் பிரசன்னம் மிகவும் தெளிவாகவும் அளவற்ற பிரகாசமுடைய தாகவும் காணப்படும். ஆனந்தா இரவில் ஒரு ததகாத்தா அதிஉன்னத ஸ்தா னத்தை (நிலையை) அடைவதோடு முழுமையான உள்ளறி வையும் (ஞானம்) பெறுகிறார். இரவில்தான் அவர் கடை சியாக மறைவாகிறார். அம்மறைவின்போது இவ் வுலகின் அவரது சகல விடயங்களும் இப்போது போகின்றன.
 
4. கௌத்தம புத்தரின் கூற்றுப்படி, ஒரு புத்தரை அடையாளங் காண கீழ்வரும் ஆறு அடிப்படைகள்  அளவுகோள் கள் உள்ளன.
ஒரு புத்தர் அதி உன்னத நிலையையும் முழுமையான உள்ளறிவையும் இரவு நேரத்திலேயே அடைந்து கொள்கிறார்.
 
அவர் முழுமையான ஞானம் அடையும் பொழுது அவர் அளவு கடந்த பிரகாசம் அடைகிறார்.
 
புத்தர் இயற்கை மரணமேயடைவார்.
 
அவர் இரவு நேரத்திலேயே மரணமடைவார்.
 
அவர் மரணிக்கும் தருவாயில் மிக மிகப் பிரகாசமாகத் திகழ்வார்.
 
அவரது இறப்பின் பின் அவரது இவ்வுலக இருப்பு முற்றுப் பெற்று விடும்.
 
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அதிஉன்னத ஞான நிலையை -நபித்துவத்தை இரவு நேரமொன்றிலேயே பெற்றார்.
அல்குரஆனின் ஸூரா துஹானில் கூறப்படுகிறதுளூ
 
விடயங்களைத் தெளிவாக்கும் (வேத) நூலின் மீது சத்தியமாக -நாம் அதை ஒரு அருள் பெற்ற இரவிலேயே இறக்கிவைத்தோம்.||             (அல்குர்ஆன் 44:2-3)
 
ஸூரா கத்ரில் கூறப்படுவதாவது:
நாம் நிச்சயமாக இதை (தூதை) கண்ணியமிக்க இரவிலேயே இறக்கிவைத்தோம்.||    (அல்குர்ஆன் 97:1)
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தமக்குக் கிடைத்த ஞானத்தை விண்ணிலிருந்து வந்த ஒரு ஒளியைக் கொண்டு உணர்ந்தார்.
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இயற்கை மரணமே எய்தினார்கள்.
அயிஷா (ரழி) கூற்றுப்படி முஹம்மத் (ஸல்) அவர்கள் இரவு நேரத்திலேயே மரணமடைந்தார்கள்.அவர் இறக் கும் போது வீட்டில் விளக்கெரிய எண்ணெய் இருக்க வில்லை. ஆதலால் ஆயிஷா (ரழி) அவர்கள் எண்ணெய்யை இரவல் வாங்கி வந்திருந்தார்கள்.
அனஸ் (ரழி) அவர்கள் கூற்றுப்படி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள், அவர் இறந்த இரவு மிகமிக பிரகாசமாகக் காணப்பட்டார்கள்.
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்து அடக்கம் செய்யப்பட்டார்கள்.
 
5. புத்தர்கள் என்போர் போதகர்களே!
தம்மபதவில் கூறப்படுகிறது. கிழக்கின் புனித நூல்கள்;, பாகம்-10, பக்.67படி
 
ஜாகாத்தாக்கள் (புத்தர்கள்) என்போர் போதகர்கள் மட்டுமே.
 
அல்குர்ஆனின் ஸூரா ஹாசியாவில் கூறப்படுகிறது
 
எனவே நீர் உபதேசம் செய்வீராக. நீர் உபதேசம் செயக்கூடியவரே.  நீர் அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர். (அல்குர்ஆன் 88: 21-22)
 
6. தம்மபதவில் மைத்திரியரை இனங்காண கீழ்வரும் அடையாளங்கள் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. தம் மபதவில் மெதத  சுத்த 151ன் படி
வாக்குறுதியளிக்கப்பட்டவர்:
முழுப்படைப்புகளுக்கும் கருணையாளராக இருப்பார்.
 
சமாதானத்துக்கான தூதுவராக -சமாதானத் தூது வராக இருப்பார்.
 
உலகில் அதி வெற்றியாளராக இருப்பார்.
 
ஒரு போதகராக மைத்திரியாக இருப்பார்.
உண்மையாளராக இருப்பார்
 
தன்னை மதிப்பவராக இருப்பார்.
 
மென்மையானவராகவும் கண்ணியமானவராகவும் இருப்பார்.
 
பெருமையுள்ளவராக இருக்க மாட்டார்.
 
படைப்புகளுக்கு தலைவராக இருப்பார்.
 
சொல்லிலும் செயலிலும் மற்றவர்களுக்கு முன்மாதிரி யாக இருப்பார்.
(இவையனைத்தும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்பு களாகவே உள்ளன.) 
 
முஹம்மது நபியே இறுதி நபி

முஹம்மது ஓர் உலகளாவிய தூதர்: அவர்களின் தூதுச்செய்தி ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ, தேசத்திற்கோ, மொழியினருக்கோ உரியதல்ல.(அல்குர்ஆன் 34:28, 21:107, 25:1, 7:158)
கால வரையறை: நபியவர்களின் போதனைகள் எல்லாக் காலத்திற்கும் உரியவை. முந்திய இறைத்தூதர்களின் போதனைகள் அப்படியல்ல. அவை அக்காலத்திற்கு மட்டுமே உரியவை. (அல்குர்ஆன் 5:3)
உலகளாவிய தூதுச்செய்தி: நபியவர்களின் தூதுச்செய்தி உலகம் அழியும் வரை நிலைக்கக்கூடியது.(அல்குர்ஆன் 16:89, 5:48)
வாழ்க்கை வழி: நபியவர்கள் போதித்த வாழ்க்கை முறை முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதல்ல. எல்லா மனிதர்களுக்கும் உரியது.(அல்குர்ஆன் 21:107)
வேதம்: அல்லாஹ் நபியவர்களுக்கு வழங்கிய குர்ஆன் முழு மனிதகுலத்திற்கும் உரியது.(அல்குர்ஆன் 2:185)
முன்மாதிரி: நபியவர்கள் அனைத்து மனிதர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கினார்கள்.(அல்குர்ஆன் 33:21)
இறுதித்தூதர்: அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கின்றார். (ஆகவே, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அனுப்பமாட்டான்.-அல்குர்ஆன் 33.40)
 
முடிவுரை

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வழியாக இஸ்லாமைப் பின்பற்றுவதே வாழ்க்கையின் அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வாக அமையும். அதற்கு முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி சொல்வது நம்பிக்கையின் முக்கிய அம்சமாக உள்ளது. இஸ்லாமைப் பற்றி நமக்கு எடுத்துச் சொன்னதில் அவர்களே நமக்கு நம்பிக்கைக்கு உரியவர்கள் ஆவார்கள். அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர்கள் தடைசெய்த விஷயங்களை விட்டு விலகிக்கொள்ள வேண்டும். நபியவர்களுக்குக் கீழ்ப்படிவது அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதாகும். அவர்கள் நம்மைச் சொர்க்கத்தின் வழிகளைச் சொல்லி வழிநடத்தினார்கள். நரகத்தின் வழிகளைக் குறித்து எச்சரிக்கை செய்தார்கள்.
Previous Post Next Post