விமர்சனம் செய்ய முன் அதன் ஒழுங்குகளைக் கடைபிடி

ஒரு முஸ்லிமின் கண்ணியம் கஃபாவின் கண்ணியத்தை விட அல்லாஹ்விடம் மேலானது. அந்த வகையில் விமர்சனம் என்ற பெயரில் விமர்சிக்கத் தெரியாது அவருடைய மானத்தில்  கைவைப்பது சாதாரண விடயமல்ல.

இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்; "ஹதீஸ் அறிவிப்பாளர்கள் பற்றி விமர்சனம் செய்யும் போது பூரண பக்குவத்தோடும் மனோஇச்சையை விட்டு விலகி பக்க சார்பு இல்லாமலும் 'ஹதீஸ் கலை' பற்றிய ஆழ்ந்த அறிவோடும் விமர்சனம் செய்ய வேண்டும். (மூகிழஹ் : 108)

அல்லாஹு அக்பர்! தற்போதைய எடுத்து நோக்கும் போது சர்வ சாதாரணமாக பொதுமக்கள் உலமாக்களையும் மார்க்கம் கற்கும் மாணவர்களையும் அவர் இவர் கூறுவதை வைத்து கண்மூடித்தனமாக பொது இடங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் விமர்சனம் செய்து வருகின்றனர். இவ்வாறு  விமர்சனம் செய்பவர்கள் தங்களிடம் இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ்  அவர்கள் கூறியது போன்று பக்குவம், குறித்த விடயம் சார்ந்த மார்க்க அறிவு, பக்கச்சார்பின்மை போன்றன இருக்கின்றனவா!? என்பதைப் பார்த்துக் கொள்ளட்டும். 
 
அத்தோடு உண்மையில் விமர்சிக்கப்படும் ஓர் நபர் வழி தவறிய முஸ்லிம் என்று வைத்துக் கொள்வோம், அவரை விமர்சிக்கும் போது நடுநிலையாக இடம், சந்தர்ப்பங்களைக் கருத்திற் கொண்டு தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். அவருடைய நல்ல பக்கங்களையும் எடுத்துரைக்க வேண்டும். குறைகளை மாத்திரம் கூறிக் கொண்டு போவது புத்திசாலித்தனம் கிடையாது. 

இமாம் அபூ ஹாதம் (ரஹ்) அவர்கள் இது குறித்து கூறுகையில் : " புத்திசாலி தனது குறைகளை அடையாளம் கண்டு கொள்வான். யாருக்கு தனது குறைகள் மங்கி விட்டனவோ அவனுக்கு பிறர் நலவுகள் மங்கி விடும்......" என்றார்கள் (ரவ்ழதுல் உகலா : 40) .
 
நாம் சத்தியத்தில் இருந்தும் அந்த குறித்த நபரை விமர்சனம் செய்யும் போதோ அல்லது அவருடன் விவாதங்கள் மேற்கொள்ளும் போதோ எமது நோக்கம் பழிவாங்குவது அல்லது இழிவு படுத்துவது அல்லது எம்மிடம் உள்ள அறிவை வைத்து பெருமை அடிப்பது போன்றனவாக இருந்தால் அது மிகப் பெரிய குற்றம் என்பதுடன் சமுதாயத்தில் பல சீர்கேடுகள் உருவாகுவதற்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக மாறிவிடும். 

இதோ பாருங்கள்! முன்னைய அறிஞர்கள் இது விடயத்தில் கையாண்ட முறைகளை;

இமாம் இப்னு ரஜப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுவதாவது ;
"ஹாதம் அல் அஸம் (ரஹ்) அவர்களிடம் : ....உங்களுடன் விவாதிக்க வரும் நபர்களைச் சுலபமாக மடக்கி விடுகின்றீர்கள் அது எப்படி சாத்தியமாகின்றது? என்று கேட்கப்பட்ட போது, இமாம் அவர்கள் " மூன்று விடயங்களை அச்சந்தர்ப்பத்தில் கடைபிடிப்பேன் அவை;

01- பிரதி வாதி சரியாக விடயத்தை முன்வைக்கும் போது நான் சந்தோஷம் கொள்வேன். 

02- அவர் தவறு விடும் போது நான் கவலைப் படுவேன். 

03- அவரைக் கஷ்டப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வதோ அல்லது தகாத வார்தைப் பிரயோகங்களையோ உபயோகிக்க மாட்டேன். என்று பதிலளித்தார்கள்."  

(அல் பர்க்கு பைனன் நஸீஹதி வத்தஃயீர் : 10)
 
அந்த வகையில் மார்க்கத்திற்காக வீரத்தால், உடலால், வார்த்தைகளால், எழுத்துக்களால், பொருளால் போராடும் போதும் இஹ்லாஸ் எனும் உளத்தூய்மையைக் கடைபிடிக்க வேண்டும். அது எம்மை விட்டு விலகும் போது சுவனத்தை விட்டு நாமும் விலகிக்கொண்டே செல்வோம். 

யுத்தத்தில் கூட போராடி துண்டு துண்டாக வெட்டப்பட்டு இறந்தாலும் அவரிடம் இஹ்லாஸ் இல்லை எனில் அவரின் இறுதி முடிவு நல்ல முறையில் இல்லை என்பதே உண்மை. 

எனவே ஓர் உண்மையான முஃமின் தனது நடையிலும், பேச்சிலும் தீனை வெளிப்படுத்தினால் மாத்திரம் போதாது. மாறாக அவையனைத்தும் அல்லாஹ்வுக்காக, மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காக நல்ல நோக்கத்துடன் அமைய வேண்டும்.

 - Ahsan Asman Muhajiri
Previous Post Next Post