கோட்பாடுகளும் இஸ்லாம் மார்க்கத்தில் அதன் அவசியமும்

بسم الله الرحمن الرحيم


அஷ் ஷெய்க் ஸாலிஹ் இப்னு பெளஸான் அல் பெளஸான் அவர்களின்
عقيدة التوحيد நூலிலிருந்து

“அகீதா” என்ற சொல்லின் கருத்து:

அகீதா எனும் சொல் “அக்து” என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். இணைத்தல், கட்டுதல் என்பதே இதன் பொருள்.. 

عَقَدْتُ عَلَيْهِ الْقَلْبَ என்றால் என் மனதை அதனுடன் இணைத்துக் கொண்டேன். என்பதாகும். மேலும் அகீதா என்பது மனிதன் கடைப்பிடித்தொழுகும் பண்பையும் கொள்கையையும் குறிக்கும். இதன்படி நல்லொழுக்கமும் நற் கொள்கையும் உள்ள ஒருவனைப் பற்றிக் குறிப்பிடும் போது لَهُ عَقِيْدَةٌ حَسَنَةٌ அவன் ஒரு நல்ல கொள்கைவாதி என்பர். 

மேலும் அகீதா என்பது உள்ளத்தின் செயலாகும். எனவே​ ஒரு பொருளின் மீது மனதுக்கிருக்கும் நம்பிக்கையையும், பற்றையும் அது குறிக்கும்.

ஷரீஆவின் பார்வையில் அகீதா:

அல்லாஹ்வின் மீதும், அவனின் மலக்குகள், வேதங்கள், தூதர்கள், இறுதி நாள், நன்மை தீமை யாவும் அல்லாஹ்வின் நியதிப்படியே நிகழ்கின்றன என்று நம்பிகை கொள்வதாகும். இவை ஈமானின்- நம்பிக்கையின் அடிப்படைகள் எனப்படும். 

ஷரீஆவை, கோட்பாடு சார்ந்தவை என்றும், கிரியை சார்ந்தவை என்றும் இரண்டு பகுதி​களாக வகைப் படுத்தலாம் 

ஷரீஆ கோட்பாடுகள்,

இதற்கு செயல் வடிவமில்லை. இதற்கு உதாரணமாக அனைத்தையும் பரிபாலிப்பவன் அல்லாஹ்தான் என்று விசுவாசம் கொள்வதையும், அவனுக்கு அடிபணிதல் கடமை என்று ஏற்றுக் கொள்வதையும், மற்றும் முன் குறிப்பிட்ட ஈமானின் ஏனைய அடிப்படைகளின் மீது விசுவாசம் கொள்வதையும் குறிப்பிடலாம். இவை ஷரீஆவின் அடிப்படைகள் எனப்படும்

ஷரீஆவின் கிரியைகள்

இவற்றுக்கு செயல் வடிவம் உண்டு, எனவே இவை செயல் வடிவங்களுடன் தொடர்புடையவை. இதற்கு தொழுகை, ஸகாத்து, நோன்பு போன்று ஏனைய கிரியைகளையும் அதன் சட்டங்களையும் உதாரணமாகக் குறிப்பிடலாம். இவை ஷரீஆவின் கிளைகள் எனப்படும். ஏனெனில் இஸ்லாமிய கோட்பாடுகள் சீராக இருக்குமிடத்தே, அமல்கள், கிரியைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக அமையும். 
எனவே சரியான கோட்பாடுதான் மார்க்கதின் அத்திவாரமாகும். அதன் மீதே மார்க்கம் நிறுவப்பட்டுள்ளது. அது சரியாக இருக்குமிடத்தே கிரியைகளும் சரியானவையாக அமையப் பெறும். அவை தவறாக இருக்கும் பட்சத்தில் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதனையே அல்லாஹ்வின் வாக்கு இப்படி இயம்புகின்றது.

فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا ﴿١١٠الكهف﴾ 
“எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக. (18/110) 

وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ ﴿٦٥﴾
“மேலும் நீங்கள் இணை வைத்தால் உங்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர்கள் என்று உங்களுக்கும், உங்களுக்கு முன்னிருந்த ஒவ்வொரு வருக்​கும் மெய்யாகவே வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டது. (39/65)

فَاعْبُدِ اللَّـهَ مُخْلِصًا لَّهُ الدِّينَ ﴿٢الزمر﴾ 
“முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு பரிசுத்த மனதுடன் அவனை வணங்கி வாருங்கள்.” (39/2)

أَلَا لِلَّـهِ الدِّينُ الْخَالِصُ ۚ(الزمر3) 
“பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். (39/3)

இத் திரு வசனங்கள் கிரியைகள் யாவும், இணைவைக்கும் காரியங்களை விட்டும் நீங்கி, அல்லாஹ் ஒருவனுக்கே என்ற தூய எண்ணத்தில் மேற் கொள்ளப்பட்டாலன்றி அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதையே தெளிவு படுத்துகின்றன. இது போன்று இன்னும் ஏராளமான வசனங்கள் இதனை வலியுறுத்துகின்றன. எனவே தான் அல்லாஹ்வின் தூதர்கள் அனைவரும் முதலில் அகீதாவை சீர்படுத்தும் விடயத்தில் கவனம் செலுத்தினர். ஆகையால் அல்லாஹ் ஒருவனை மாத்திரம் வணங்கி அவனைத் தவிர்ந்த அனைத்து வழிபாடுகளையும் ஒதுக்கி விடும்படி தங்களின் சமூகத்தினருக்கு அவர்கள் முதலில் அழைப்பு விடுத்தனர். இதனையே அல்லாஹ்வின் திருவசனம் இவ்வாறு எடுத்துரைக்கின்றது.

وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّـهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ ۖ (النحل/36)
“ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பி வைத்தோம். அவர்கள் அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், ஷைத்தான்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்,” என்றனர்.” (16/36)

மேலும் ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்தாரை நோக்கி முதலில் கூறியது,

اعْبُدُوا اللَّـهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُ (الأعراف/59)
“நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை.” (7/59) என்றுதான். இதனையே தங்களின் சமூகத்தினரிடம் நூஹ், ஹூது, ஸாலிஹ், ஷுஐப் மற்றும் ஏனைய நபிமார்கள் யாவரும் கூறினர். 

மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமக்கு நுபுவ்வத் கிடைத்த பின்னர், அவர்கள் மக்காவில் இருந்த பதின்மூன்று ஆண்டுகளிலும் மக்களை ஏகத்துவத்தின் பால் அழைத்து அவர்களின் அகீதா கோட்பாட்டை சீர்திருத்தும் காரியத்திலேயே ஈடுபட்டிருந்தார்கள். 

ஏனெனில் இதுவே மார்க்கத்தின் அடிப்படை. இதன் மீதே இஸ்லாம் மாரக்கத்தின் சகல கருமங்களும் நிருவப்பட்டுள்ளன என்பதால்தான். எனவே தான் எல்லா காலங்களிலும் தோன்றிய சீர்திருத்தவாதிகள் நபிமார்களினதும், ரஸுல்மார்களினதும் இந்த வழி முறையைப் பின் தொடர்ந்தனர். எனவே இதன்படி அவர்கள் தங்களின் பிரச்சாரத்தை ஏக இறை கொள்கையிலிருந்து, அதாவது அகீதா கோட்பாடுகளை சீர்திருத்தும் காரியத்திலிருந்து ஆரம்பம் செய்தனர். அதன் பின்னரே மார்க்கத்தின் ஏனைய விடயங்களின் பால் அவர்கள் கவணம் செலுத்தினர். 

அகீதாவின் சரியான அடிப்படைகளும்
இவ்விடயத்தில் முன்னோரின் அணுகு முறையும்

ஒரு விடயம் இன்னொரு விடயத்தில் தஙகியிருப்பதைتَوْفِيْقِيَّةْ , என்பர். இதன்படி இஸ்லாமிய அகீதா கோட்பாடுகள் யாவும் இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரத்துடன் இணைகப்பட்டிருப்பதன் காரணமாக. இதனை تَوْفِيْقِيَّةْ என்பர். எனவே மார்க்கத்தை ஏற்படுத்திய அல்லாஹ்வின் புறத்திலிருந்து உறுதி செய்யப்படாத எந்தவொரு கோட்பாடும் இஸ்லாமிய அகீதாவாக ஆகாது.

ஆகையால் இவ்விடயத்தில் மனித ஆய்வுகளுக்கும், சிந்தனைகளுக்கும் இடமில்லை. எனவே அதன் அடிப்படைகள் அல்குர்ஆனுடனும், ஸுன்னாவுடனும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அல்லாஹ்வைப் பற்றியும், அவனிடம் கட்டாயம் இருக்க வேண்டியது எது? இருக்கக் கூடாதவை எது? என்பதையும் நன்கு அறிந்தவன் அவனே. இதனை அவனை விடவும் மிகவும் அறிந்த எவரும் இல்லை. மேலும் அவனையடுத்து இதனை நன்கு அறிந்தவர் ரஸுல் (ஸல்) அவர்களே. 

எனவே அவர்களை விடவும் இதனை நன்கு அறிந்தவர் எவரும் இல்லை. எனவேதான் சான்றோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களும், அவர்களைப் பின் தொடர்ந்தவர்களும் அகீதாவைத் தெரிந்து கொள்வதற்கான வழியை அல்குர்ஆனுடனும், ஸுன்னாவுடனும் மட்டுப்படுத்திக் கொண்டனர்.
எனவே அல்லாஹ்வின் விவகாரத்தில் அல்குர்ஆனும் ஸுன்னாவும் எதனை உறுதி செய்கின்றதோ அதன் மீது அவர்கள் விசுவாசம் கொண்டனர். அதனைத் தங்களின் கொள்கையாக ஏற்று அதன் படி செயலாற்றினர். மேலும் அல்குர்ஆனும், ஸுன்னாவும் உறுதி படுத்தாத அனைத்தையும் அவர்கள் நிராகரித்தனர். அவை எதனையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவேதான் அகீதா விடயத்தில் இவர்கள் மத்தியில் முரண்பாடுகள் தோன்றவில்லை. 

எனவே அகீதா பற்றிய அவர்களின் கொள்கை ஒன்றாகவும், அவர்களின் ஜமாஅத்து ஒன்றாகவும் விளங்கியது. ஏனெனில் யாரெல்லாம் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனின் தூதரின் வழி முறையையும் கடைப்பிடித்து வருகின்றார்களோ அவர்களின் வாக்கு ஒருமித்த வாக்காகவும், அவர்களின் கொள்கை சரியானதாகவும், அவர்களின் வழி ஒரே வழியாகவும் இருக்கும் என்பதற்கு அல்லாஹ் உத்தரவாதம் அளித்துள்ளான். இதனை அல்லாஹ்வின் வாக்குகள் உறுதி செய்கின்றன.

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّـهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ (آل عمران/103)
“மேலும் நீங்கள் அவைரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் எனும்) கயிற்பை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்திட வேண்டாம்.”(3/103) 

فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَىٰ ﴿/طه/١٢٣﴾ 
“நிச்சயமாக என்னுடைய நேர்வழி உங்களிடம் வரும். எவன் என்னுடைய நேர்வழியைப் பினபற்றுகிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார். நஷ்டமடையவும் மாட்டார்.” (20/123) 

என்று சரியான அகீதாவை ஏற்று நடப்போரின் ஒருமித்த நிலையை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். 

எனவேதான் இவர்கள் ஈடேற்றம் பெற்ற கூட்டத்தினர் என்று அழைக்கப்படுகின்றனர். ஏனெனில் ரஸூல் (ஸல்) அவர்கள், தங்களின் உம்மத்தினர் எழுபத்து மூன்று கூட்டதினராகப் பிரிந்து விடுவார்கள், இவர்களில் ஒரு கூட்டத்தினரைத் தவிர மற்றவர்கள் யாவரும் நரகத்தில் இருப்பார்கள். என்று கூறிய போது, அந்தவொரு கூட்டத்தினர் யார்? என்று வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள். “எந்தக் கூட்டத்தினர் நானும் எனது தோழர்களும் இருக்கும் கொள்கையில் இருப்பார்களோ அந்தக் கூட்டமே அது.” என்று அவர்களைப் பற்றி ரஸூல் (ஸல்) அவர்கள் சாட்சி பகர்ந்தார்கள்.

எனவே சிலர் அல்குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் புறம்பாக கிரேக்க தத்துவ ஞானிகளின் இறைக் கோட்பாட்டுத் தத்துவம் மற்றும் அவர்களின் தர்க்க சாஸ்திர விதிகளின் பிரகாரம் தங்களின் அகீதா கொள்கையை நிறுவிக் கொண்ட போதுதான், இஸ்லாமிய அகீதா- கோட்பாடு விடயத்தில் தவறுகளும் பிளவுகளும் ஏற்பட்டன. அதனை அடுத்து கருத்து முரண்பாடுகளும், சமூகப் பிரிவுகளும் தோன்றி இஸ்லாமிய சமூகம் சின்னா பின்னமடைந்தது. இதிலிருந்து நபியவர்களிகளின் அந்த வாக்கின் உண்மை நிலை தெளிவாகின்றது.

மனித வாழ்வில் வழிகேட்டின் ஆரம்பமும்,
அதிலிருந்து பாதுகாப்புப் பெறும் வழி முறைகளும்

பய​ன் தரும் செயல்களுக்கு வழிகோலுவது சரியான அகீதாவே. எனவே அதனை விட்டும் விலகியிருப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும். ஆகையால் சரியான அகீதாவைப் பெறாதவன் சந்தேகங்களுக்கும், கற்பனைகளுக்கும் இரையாவது திண்ணம். சில வேளை அவை யாவும் அவனிடம் வந்து குவிந்துவிடும். அப்போது அவன் தன் வாழ்க்கையை மகிழ்ச்சிகர மானதாக ஆக்கிக் கொள்ளத் தேவையான சரியான பார்வையையும் சிந்தனையையும் இழந்து விடுவான். 

ஈற்றில் அவனுக்குத் தன் வாழ்க்கையே நெருக்கடிகள் நிறைந்ததாக ஆகிவிடும். அதன் பின் அவன் சரியான அகீதா கிடைக்கப் பெறாத அதிகமான மக்களைப் போன்று தற்கொலை மூலமேனும் தன் பிரச்சினை களிலிருந்து விடுதலை பெற முயலுவான்.

சரியான அகீதா கோட்பாட்டினைப் பெறாத ஒரு சமூகம் காட்டு மிராண்டி சமூகமாகும். எனவே, இறை நிராகரிப்பிலிருக்கும் “காபிரான” சமூகங்களிடம் இருப்பது போன்று, அந்த சமூகத்திடம் அழிவின் பால் இட்டுச் செல்லும் பொருளாதார வளங்கள் அதிகமாக இருந்த போதிலும், அதனிடம் சரியான அகீதா கோட்பாடு இல்லாததன் காரணமாக அது மகிழ்ச்சியான வாழ்கைக்குத் தேவையான வளங்களை இழந்து விடும். ஏனெனில் இந்தப் பொருளாதார வளங்களில் இருந்து சரியான பயனைப் பெறுவதற்கு சரியான வழிகாட்டலும் அறிவுறுத்தலும் அவசியம். அப்படியான வழிகாட்டல் இஸ்லாத்தின் சரியான அகீதா கோட்பாட்டையன்றி வேறு எதுவும் இல்லை.​ இது பற்றிய அல்லாஹ்வின் சில வாக்குகளைக் கவனிப்போம்.

يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا (51 /المؤمنون)
“என்னுடைய தூதர்களே! நீங்கள் பரிசுத்தமான வைகளையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள்.” (23/51) என்று அல்லாஹ் கூறுகின்றான். மேலும்

وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا ۖ يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ ۖ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ ﴿١٠﴾ أَنِ اعْمَلْ سَابِغَاتٍ وَقَدِّرْ فِي السَّرْدِ ۖ وَاعْمَلُوا صَالِحًا ۖ إِنِّي بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ ﴿١١﴾ وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ ۖ وَأَسَلْنَا لَهُ عَيْنَ الْقِطْرِ ۖ وَمِنَ الْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ ۖ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيرِ ﴿١٢﴾ يَعْمَلُونَ لَهُ مَا يَشَاءُ مِن مَّحَارِيبَ وَتَمَاثِيلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُورٍ رَّاسِيَاتٍ ۚ اعْمَلُوا آلَ دَاوُودَ شُكْرًا ۚ وَقَلِيلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُورُ ﴿١٣السبأ ﴾
“மெய்யாகவே நாம் தாவூதுக்கு பெரும் அருள் புரிந்தோம். மலைகளே! பறவைகளே! “நீங்கள் அவருடன் துதி செய்யுங்கள்” மேலும் நீங்கள் வளையங்களை ஒழுங்காக இணைத்து போர்ச்சட்டை செய்யுங்கள் என்று, அவருக்கு இரும்பையும் மெதுவாக்கித் தந்தோம். மேலும் நீங்கள் நற்செயல்களையே செய்து கொண்டிருங்கள். ​நிச்சயமாக நான் நீங்கள் செய்பவைகளை உற்று நோக்கியவனாக இருக்கின்றேன்.”
“அன்றி ஸுலைமானுக்கு காற்றை வசப்படுத்தித் தந்தோம்.அதன் காலைப் பயணம் ஒரு மாத தூரமும், அதன் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது. அன்றி செம்பை ஊற்றுப் போல் நாம் அவருக்கு ஓடச் செய்தோம். தன் இறைவனுடைய கட்டளைப்படி அவருக்கு வேலை செய்யக்கூடிய ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவர்களில் எவன் நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றானோ அவனை நரக வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம்.”
“அவை அவர் விரும்பிய மாளிகைகளையும், சிலைகளையும், .தண்ணீர் தொட்டிகளைப் போன்ற பெரும் கொப்பரைகளையும், (கரும்புப் பாலை காய்ச்சும் பாத்திரங்களையும்) அசைக்க முடியாத பெரிய சமயல் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. தாவூதின் சந்ததிகளே! நீங்கள் நன்றி செலுத்திக் கொண்டிருங்கள். எனினும் என்னுடைய அடியார்களில் நன்றி செலுத்துபவர்கள் சொற்பமாகவே இருக்கின்றார்கள்.” என்று அல்லாஹ் கூறுகின்றான். (34/10,11,12.13) 

எனவே அகீதா கோட்பாட்டின் பலம், பொருளாதார பலத்தின் மூலம் சிதறிப் போகாமல் இருப்பது அவசியம். அவ்வாறன்றி தவறான கொள்கைகளின் பக்கம் சாய்ந்து அது சிதறி விடுமாயின், சரியான அகீதாவைக் கொண்டிராத, பொருளாதார பலம் பொருந்திய காபிரான நாடுகளில் காண்பது போன்று பொருளாதார பலமானது அழிவுக்கும், வீழ்ச்சிக்கும் உரிய காரணியாக மாறி விடும்.​ 

சரியான அகீதாவை விட்டும் விலகிச் செல்வதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்திருப்பது அவசியம். அவையாவன:

சரியான அகீதாவைக் கற்காமலும், கற்பிக்காமலும் அதனைப் புறக்கணித்தல், அல்லது அதன் மீது போதிய கவனம் செலுத்தாமை. இதன் காரணமாக அடுத்து வரும் பரம்பரையினர் அகீதா என்றால் என்னவென்று அறியும் வாய்ப்பை இழந்து விடுவர்.. எனவே இவ்வாறான சூழலில் மக்கள் உண்மையை தவறாகவும், தவறை உண்மையாகவும் கருதுவார்கள். 

இது பற்றி உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்கள் கூறும் போது மெளடீகத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளாத மக்கள் இஸ்லாம் மார்க்கத்தில் தோன்றும் போது, அதன் சங்கிலி வளையல்கள் துண்டு துண்டாக உடைந்து போகும்” என்றார்கள். 

பெற்றோரும் மூதாதையினரும் செய்து வந்த காரியம் பிழையாக இருந்த போதிலும் அதனைப் பிடிவாதமாகக் கடைப் பிடித்தல். மேலும் தங்களுக்கு எதிரானவர்களிடம் சரியான கருத்தொன்று இருந்த போதிலும் அதனைப் புறக்கனித்தல். இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்,

وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّـهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا ۗ أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ ﴿١٧٠البقرة﴾
“மேலும் அல்லாஹ் இறக்கி வைத்ததைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் “அவ்வாறன்று, எவற்றின் மீது எங்களின் மூதாதைகள் இருக்க நாங்கள் கண்டோமோ அவற்றையே நாங்கள் பின்பற்றுவோம்” எனக் கூறுகின்றனர். அவர்களுடைய மூதாதைகள் ஒன்றையுமே அறியாதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருரந்தாலுமா?” (2/170)

எவ்வாறு ஸுன்னாவுக்கு எதிரான “ஜஹ்மிய்யா, முஃதஸிலா, அஷாஇறா, ஸூபிய்யா” போன்ற பிரிவினர் தங்களின் முன்னைய வழி தவறிய இமாம்களைப் பின்பற்றி, சரியான அகீதா கொள்கையை விட்டுப் பிரிந்து வழிதவறிப் போனார்களோ அது போல அகீதா விடயத்தில் மக்கள் முன் வைக்கும் கருத்துக்களை​, சரியான ஆதாரம் எதுவுமில்லாது, அவை சரியானவையா என்று சீர்தூக்கிப் பார்க்காமல் குருட்டுத் தனமாக அவற்றைப் பின்பற்றுதல்..

நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தினரையும், மற்றும் அதிகமான நகர வாழ் கப்று வணங்கிகளையும் போன்று, அவ்லியாக்கள் மற்றும் ஸாலிஹீன்கள் விடயத்தில் எல்லை மீறல், மேலும் அல்லாஹ்வையன்றி வே​று எவராலும் செய்ய இயலாத பயன் தரும் காரியம் எதனையும் செய்யவும், தீமையைத் தடுத்து நிறுத்தவும் கூடிய ஆற்றல் அவர்களிடமும் உண்டென்று நம்பி அவர்களை அவர்களின் தரத்திற்கும் மேலாக உயர்த்துதல், இன்னும் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படவும் என அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் அந்த சான்றோர்களை இடைத் தரகர்களாக ஆக்கிக் கொண்டு, அல்லாஹ்வுக்குப் பதிலாக அவர்களை வழிப்படுதல், அவர்களின் கல்லறைகளுக்குச் சென்று காணிக்கைகளைச் சமர்ப்பித்தல், பிராணிகளை அறுத்துப் பழியிடுதல், அங்கு துஆ பிரார்த்தனையில் ஈடுபடுதல், அவர்களிடம் பாதுகாப்பும் உதவியும் தேடி மன்றாடுதல், போன்ற காரியங்கள். 

இத்தகைய கருமங்களை நூஹ் (அலை) அவர்களின் சமூகம், கைவிட விரும்பவில்லை. எனவே இக்காரியங்களை விட்டு விட வேண்டாம் என்று அவர்கள் தங்களின் சகாக்களை வேண்டிக் கொண்டனர். அவர்களின் இந்நிலைப்பாட்டை அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது

وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا ﴿٢٣نوح﴾ 
“அவர்கள் நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள். ‘வத்’ ‘ஸுவாஉ’ ‘யகூஸ்’ ‘யஊக்’ ‘நஸ்ர்’ ஆகியவைகளையும் விட்டு விடாதீர்கள்” என்று கூறினர். (71/23) 

எனவே இது போன்றுதான் கப்று வணங்கிகளின் நிலையும் இருக்கின்து.

உலகிலிருக்கும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளையும், அவனின் அல்குர்ஆன் வாக்குகளையும் பற்றி மக்கள் சிந்திக்க மறந்து போனமை, மேலும் பொருளாதார நாகரிக வளங்களை மேன்மைப் படுத்தி, இவையாவும் வெறும் மனித பலத்தின் சாதனை என்றும் அவர்கள் நினைத்தனர். இதன் காரணமாக அவர்கள் அல்லாஹ்வை மறந்து இவை யாவும் மனித முயற்சியால் மாத்திரம் ஏற்பட்ட சாதனைகள் என்று அந்த மனிதர்களைப் பாராட்டவும் அவர்களை கெளரவிக்கவும் முற்பட்டனர். இவ்வாறுதான் முன்னர் காரூனும் நினைத்தான். எனவே அவனுடையவும், அவனைப் போன்றோருடை யவும்​ இந்த நிலைப்பட்டைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்,

قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَىٰ عِلْمٍ عِندِي (القصص/78) 
“இதை எல்லாம் என்னுடைய சொந்த அறிவினால்தான் நான் அடைந்தேன்” என்று (காரூன்) கூறினான்” (28/78) 

மேலும் மனிதனின் துயரங்களை அல்லாஹ் நீக்கி அவனுக்கு அருட் கொடைகளை வழங்குகின்றபோது அவன்,

هَـٰذَا لِي (فصلت/50)
“இது எனக்கு வரவேண்டி இருந்ததே” (41/50) என்றும்
 
إِنَّمَا أُوتِيتُهُ عَلَىٰ عِلْمٍ (الزمر/49)
​“நான் இதனை அடைந்ததெல்லாம் என்னுடைய அறிவினால்தான்”(39/49) 

என்றும் கூறுகின்றான், என அவர்களின் நிலையை பற்றி இத்திருவசனங்கள் எடுத்துரைக்கின்றன.

ஆனால் இச்சந்தர்ப்பதில் மனிதன் அல்லாஹ் இவ்வுலகில் ஏற்படுத்தி வைத்துள்ள அவனின் நிஃமத்துக்களையும் அதன் உயரிய சிறப்புக்களையும் பயன்பாடுகளையும் பார்க்கவோ அது பற்றிச் சிந்திக்கவோ இல்லை. மேலும் அல்லாஹ்தான் மனிதனைப்​ படைத்து இவற்றை வெளிக் கொண்டு வரும் ஆற்றலை அவனுக்கு வழங்கினான் என்பதையும் அவன் நினைத்துப் பார்க்கவில்லை. இது பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது,

وَاللَّـهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ ﴿٩٦/الصافات﴾
“உங்களையும் நீங்கள் சித்தரித்தவைகளையும் அல்லாஹ்தான் படைத்தான்.” (37/96)

أَوَلَمْ يَنظُرُوا فِي مَلَكُوتِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا خَلَقَ اللَّـهُ مِن شَيْءٍ (الأعراف/185)
“வானங்களையும், பூமியினுடைய ஆட்சியையும், அல்லாஹ் படைத்திருக்கும் மற்ற பொருள்ளையும் அவர்கள் பார்க்கவில்லையா? (7/185)

اللَّـهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِيَ فِي الْبَحْرِ بِأَمْرِهِ ۖ وَسَخَّرَ لَكُمُ الْأَنْهَارَ ﴿٣٢﴾
“அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான். அவனே வானத்திலிருந்து மழை பொழியச் செய்து அதைக் கொண்டு உங்களுக்கு உணவாக கனி வர்க்கங்களையும் வெளிப்படுத்துகின்றான். தன் கட்டளையைக் கொண்டு கப்பலை உங்கள் இஷ்டப்படி கடலில் செல்ல வைக்கிறான். ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான்.(14/,32)

وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ ۖ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ ﴿٣٣﴾
“மேலும் நகர்ந்து கொண்டிருக்கும் சூரியனையும் சந்திரனையும் உங்களுக்கு வசதியாக அமைத்தான். இன்னும் இரவையும் பகலையும் உங்களுக்கு வசதியாக அமைத்தான்” (14/33)

وَآتَاكُم مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُ ۚ وَإِن تَعُدُّوا نِعْمَتَ اللَّـهِ لَا تُحْصُوهَا ۗ إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ (ابراهيم/32,33,34)
“இன்னும் நீங்கள் கேட்டவைகளை எல்லாம் அவன் உங்களுக்கு அளித்தான். ஆகவே அல்லாஹ் வுடைய அருட் கொ​டைகளை நீங்கள் கணக்கிடும் சமயத்தில் அதனை உங்களால் எண்ண முடியாது. நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகின்றவனாகவும், மிக நன்றிகெட்டவனாகவும் இருக்கிறான்.(14/34)

பிள்ளை செல்ல வேண்டி திசையை சீரமைத்துத் தரும் விடயத்தில் பெற்றோரின் பங்களிப்பு மிகப் பாரியது, எனினும் இல்லங்களில் அதற்கான நல்ல வழிகாட்டல் எதுவும் காணப்பட வில்லை. எனவேதான் “எல்லா குழந்தையும் இஸ்லாத்தின் அடிப்படையிலேயே பிறக்கிறது. எனினும் அதன் பெற்றோர்களே அதனை யூதனாக அல்லது கிரிஸ்தவனாக, அல்லது நெருப்பு வணங்கியாக மாற்றுகின்றனர்” என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளிலுள்ள கல்வி, தகவல் ஊடகங்கள் அவற்றின் உண்மையான கடமைகளைச் செய்ய முடியாதவாறு தடுக்கப் பட்டுள்ளன. ஆகையால் அங்கு பாடத் திட்டங்களில் மார்க்க விடயங்களுக்குப் பெரிய அளவில் இடம் கொடுக்கப்படவில்லை. அல்லது அவ்விடயத்தில் முற்றாகக் கவனம் செலுத்தப்படவில்லை, இதற்கு மாறாக தெலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை போன்ற விளம்பர ஊடகங்கள் அநேகமாக அழிவின் பக்கமும், மற்றும் சரியான வழிகளுக்குப் பதிலாக பிழையான வழிகளின் பக்கமும் திசை திருப்பும் சாதனங்களாக மாறியுள்ளன. அல்லது நல்ல பண்பாடுகளையும், சரியான அகீதாவையும் விதைக்கும்படியான விடயங்களின் பக்கமும், தவறான கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் சக்திகளை எதிர்க்கக் கூடிய விடயங்களின் பக்கமும் கவனம் செலுத்தாது வெறும் பொருளாதார மற்றும் ஆடம்பர விடயங்களின் பக்கம் அவை நாட்டம் கொண்டுள்ளன., இதனால் நாஸ்திக சக்திகளை எதிர்க்க முடியாத பலமற்ற பரம்பரை தோன்றியுள்ளது. இது அந்த சக்திகளை எதிர்க்க முடியாமல் அவற்றின் முன்னால் நிர்க்கதியாக நிற்கிறது.

வழிகேடுகளை விட்டும் பாதுகாப்புப் பெறும் வழிகள்

சரியான அகீதா கொள்கைப் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு அல்லாஹ்வின் வேதத்தின் பாலும் அவனின் தூதரின் வழியின் பாலும் திரும்புதல். ஏனெனில் முன்னைய சான்றோர் இவையிரண்டின் மூலமே தங்களின் அகீதாவை அடைந்து கொண்டனர். எனவே இந்த உம்மத்தின் ஆரம்ப கால சந்ததியினரை எதன் மூலம் சீர்திருத்த முடிந்ததோ அதன் மூலம்தான் இந்த உம்மத்தின் இறுதி கால சந்ததியினரையும் சீர்திருத்த முடியும். அத்துடன் தீமையைப் பற்றி அறிந்து கொள்ளாதவன் அதில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்புக்கள் உண்டு என்ற படியால் வழி தவறிய கொள்கை வாதிகளின் கொள்கையை மறுத்துரைக்கவும் அதிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும் அவர்களின் தவறான கொள்கையையும், அவர்களின் ஆட்சேபனைகளையும் பற்றி அறிந்து கொள்வது​ம் அவசியம், 

முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் சரியான அகீதா கொள்கையைக் கற்றுக் கொடுக்கும் விடயத்தில் விசேட கவனம் செலுத்துதல் வேண்டும். அவ்வமயம் அதனை பல கட்டங்களில் கற்றுக் கொடுப்பதும், அதற்காக பாட திட்டத்தில் அதிகப் படியான அதிக நேரம் ஒதுக்குவதும் அவசியம். மேலும் இதன் பரீட்சை விடயத்தில் அதிக கவனம் செலுத்துவதும் அவசியம்.

முன்னோர்களின் சரியான புத்தகங்களை போதித்தல் வேண்டும். அத்துடன் ஸூபிஸ, அநாச்சார, ஜஹ்மிய்யா, முஃதஸிலா, அஷாஇரிய்யா, மற்றும் மாதுரீதிய்யா போன்ற வழிதவறிய கூட்டத்தினரின் புத்தகங்களை ஓரம் கட்டிவிட வேண்டும். எனினும் வேண்டுமானால் அவர்களின் நூல்களில் இருக்கும் தவறான கருத்துக்களுக்குப் பதிலளிக்கவும், அதிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும் என்ற நோக்கில் அதனைக் கற்றுக் கொடுக்கலாம். 

ஸலபுஸ் ஸாலிஹீன்களின் சரியான அகீதாவைக் மக்களுக்குப் போதிக்கவும், வழிதவறிய கூட்டத்தவரின் வழிகேடுகளை மறுக்கவும் சீர்திருத்தவாதிகளான பிரச்சாரகர்களை ஏற்பாடு செய்தல் வேண்டும்.
Previous Post Next Post