“லாமியா” - விளக்கவுரை

‎بسم الله الرحمن الرحيم


முன்னுரை:

அல்லாஹுத்தஆலா இவ்வுலக வாழ்க்கையையும் மரணத்தையும் படைத்த நோக்கம் யார் மனிதர்களில் நல்லமல்களில் ஈடுபடுகின்றார்கள் என்பதைச் சோதித்துப் பார்க்கவேயாகும் என்பது அல்குர்ஆன் வழங்குகின்ற போதனையாகும். எனவே, அல்லாஹ் எதிர்பார்க்கின்ற முறையில் நல்லமல்களில் ஈடுபட்டு அவனுடைய சுவனத்தை அடைந்து கொள்வது எமது பொறுப்பாகும்.

நல்லமல்களைச் செய்வதாயின் அதற்கான அடிப்படை அறிவுகள் எம்மிடத்தில் காணப்பட வேண்டும். எப்பொழுது ஒரு முஸ்லிம் அல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் ஸலபுகளின் வழிமுறையில் விளங்கி அதனை அமுல்படுத்துகின்றானோ நிச்சயமாக அவனுடைய அமல்கள் சீராகும் என்பதில் சந்தேகமில்லை.

அல்லாஹ் எமக்குப் புரிந்த அருள்களில் ஒன்றாகப் பலகத்துறை எனும் கிராமத்தில் அல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் ஸலபுகளின் விளக்கத்தில் பிரச்சாரம் செய்வதற்கான அத்தார் அஸ்ஸலபிய்யா என்ற ஒரு பள்ளிவாசலை அமைத்துத் தந்திருக்கின்றான். தொடர்ந்தேர்ச்சியாக இப்பள்ளிவாசலில் இப்பிரச்சாரம் இடைநிறுத்தப்படாமல் அல்லாஹ்வின் உதவியுடன் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. குறிப்பாக அகீதா துறையில் பல வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

இத்தொகுப்பைப் பொறுத்தவரையில் இது வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மக்ரிப் தொழுகைக்குப் பின் அத்தார் அஸ்ஸலபிய்யாப் பள்ளிவாசலில் நடைபெற்றுவந்த அகீதா வகுப்பின் எழுத்து வடிவமாகும். இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கவிதை அமைப்பில் தொகுத்த 'லாமியா' என அழைக்கப்படக்கூடிய சிறு நூலுக்கான விளக்க வகுப்பே இதுவாகும். இந்நூலிலே இமாமவர்கள் இஸ்லாமிய அகீதாவுடன் தொடர்புபட்ட பல அம்சங்களை இடம்பெறச் செய்திருக்கின்றார்கள்.

அகீதா என்பது இஸ்லாமியத் துறைகளிலே மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஏனைய துறைகளைவிட பல விஷேடத் தன்மைகளை அகீதாக் கல்வி பொதிந்திருக்கின்றது. ஒரு முஸ்லிம் வழிகேட்டில் இருக்கின்றானா? நேர்வழியில் இருக்கின்றானா? என்பதைத் தீர்மானிக்கும் ஒரேயொரு கல்வி அகீதாவாகும். மேலும், அது ஒரு முஸ்லிம் இஸ்லாத்தில் இருக்கின்றானா? அல்லது குப்ரில் இருக்கின்றானா? என்பதைப் பிரித்துக் காட்டும் ஒரு கல்வியாகும். இதுபோன்ற அம்சங்களை வரலாறு, பிக்ஹ், ஹதீஸ் போன்ற ஏனைய துறைகள் பொதிந்திருக்கமாட்டாது. எனவே, இதன் மூலம் அகீதாவின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒரு முஸ்லிம் தனது மார்க்கக் கல்வியை ஆரம்பமாக அகீதாவைக் கற்பதைக் கொண்டே ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால், எமது முன்னோர்களாகிய நபிமார்கள், ஸஹாபாக்கள் அவர்களது பிரச்சாரத்தை அகீதாவிலிருந்தே ஆரம்பித்திருக்கின்றார்கள். ஆனால், இன்று சில முஸ்லிம் சகோதரர்கள் அகீதாவை ஓர் இடத்தில் வைத்துவிட்டு ஸஹாபாக்கள் முதல் நவீன அறிஞர்களின் காலம்வரை கருத்து முரண்பாடுகள் காணப்பட்ட பிக்ஹ் விடயங்களை தலையாய அம்சமாக எடுத்து அதிலிருந்தே தனது கல்வியையும் அழைப்புப் பணியையும் ஆரம்பிக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். எதிர்த்தரப்புவாதிகளுக்கு எவ்வாறு மறுப்பு வழங்குவது? அவர்களுடைய ஆதாரங்களுக்கு எவ்வாறு பதில் கொடுப்பது? போன்ற சிந்தனைகளிலும், எதிர்த்தரப்புவாதிகளுடன் விரோதத்தை வெளிப்படுத்திக் கொண்டும் இவர்கள் காலத்தை கடத்துகின்றார்கள். ஆனால், அல்லாஹ்வுடைய விடயத்திலும் தூதருடைய விடயத்திலும் எனது கொள்கை எவ்வாறு இருக்க வேண்டும்? ஸஹாபாக்கள், அல்குர்ஆன், சுவர்க்கம், நரகம், மறுமை நாள், கப்ரு வாழ்க்கை ஆகிய விடயங்களில் நாம் எவ்வாறு ஈமான் கொண்டிருக்க வேண்டும் என்பதை அறியாதவர்களாக பல முஸ்லிம் சகோதரர்கள் காணப்படுகின்றார்கள்.

இந்த நாட்டில் காபிர்களுக்கு முஸ்லிம்கள் அடிமைப்படுத்தப்படுவது போன்ற நிலைமைகளை நாம் அவதானிக்கின்றோம். இதற்குக் காரணம், அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனை நம்பி வாழக்கூடிய முஸ்லிம்களுக்கும் எதிரிகளாக இருக்கக்கூடிய காபிர்களிடம் உதவிக்கரம் நீட்டி, அவர்களை அஞ்சி, மார்க்கம் மற்றும் அல்லாஹ்வின் திருப்தி ஆகியவற்றை சற்றும் பாராது அவர்களைத் திருப்திப்படுத்த முயல்வதாகும். இவர்களை சீர்திருத்த வேண்டிய இஸ்லாமிய அழைப்பாளர்கள் என்ற பெயரில் செயற்படக்கூடிய சகோதரர்கள் அல்லாஹ்வின் எதிரிகளாகிய காபிருடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறியாது அவர்கள் எமது சகோதரர்கள், அவர்களுடன் நாம் இணைந்து செயற்பட வேண்டும், அவர்களது வைபவங்களில் நாம் கலந்து கொண்டு இனநல்லுறவை வலுப்படுத்த வேண்டும் எனக்கூறி அந்நிய மதத்தவர்களின் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் அளவிற்கு இவ்வழைப்பாளர்களின் நடவடிக்கைகள் காணப்படுகின்றன. முஸ்லிம் தலைவர்களே முஸ்லிம்களை மேலும் வழிகேட்டில் நுழைவிக்கக்கூடிய ஒரு காட்சி எமது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சரியான அகீதாவை இலங்கை முஸ்லிம்கள் கற்றுக் கொள்ளாதது தான் இதற்கு மிக முக்கிய காரணமாக அமைகின்றது. லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையை விரும்பும் முஸ்லிம்களோடு எவ்வாறு அன்பாக நடந்து கொள்ள வேண்டும்? அவ்வார்த்தையை மறுக்கும் அதனுடைய எதிரிகளாகிய காபீர்களுடன் எவ்வாறு விரோதமாகச் செயற்பட வேண்டும் என்பதை அகீதா கல்வி போதிக்கின்றது. இதனைச் சரியான முறையில் கற்று அதனை எமது வாழ்வில் நாம் அமுல்படுத்தினால் காபிர்களிடம் மண்டியிட வேண்டிய அவசியம் இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்காது என்பதில் இரண்டாவது கருத்துக் கூற எவருக்கும் முன்வர முடியாது.

மேலும், ஒரு சாரார் அல்லாஹ்வைப் பற்றி சரியான முறையில் அறிந்து கொள்ளாததின் காரணமாகப் பாவச் செயல்களிலும், மோசமான நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடிய ஒரு நிலையை நாம் கண்டு வருகின்றோம். ஆண் பெண் கலப்பு, விபச்சாரம், ஆடல் பாடல்கள், அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுதல் போன்ற பயங்கரமான பாவகாரியங்களில் எமது சமூகம் மூழ்கியிருக்கின்றது. அல்லாஹ் கேட்கிறான், பார்க்கிறான், அறிகிறான் என்பதை சிறிதுமே எண்ணிப் பார்க்காதவர்களாக இவர்களுடைய வாழ்க்கை கழிகின்றது.

இலங்கை முஸ்லிம்களிடம் காணப்படும் இப்படியான குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் அகீதாக் கல்வியை முற்படுத்த வேண்டும். அதனைக் கற்றுக் கொள்ள நாம் முயற்சியெடுக்க வேண்டும்.

அதனடிப்படையில், மக்களை சீர்திருத்தும் நோக்கில் பல அகீதா வகுப்புக்கள் அத்தார் அஸ்ஸலபிய்யாப் பள்ளிவாசலில் பொதுமக்களுக்காக நடாத்தப்படுகின்றன. அதில் ஒன்றே 'லாமியா' என்ற நூலுக்கான விளக்கவுரை வகுப்பாகும். இதனை எழுத்துவடிமாக இங்கு நாம் தொகுத்து தந்திருக்கின்றோம். இதனைக் கொண்டு அல்லாஹ் எம்மனைவருக்கும் பயனளிப்பானாக! அல்லாஹ்வின் கூலி நாடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக இதனை அவன் ஆக்கிவைப்பானாக!

-  அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்


'லாமியா' நூல் பற்றிய அறிமுகம்

நூலின் பெயர்: லாமியா

தொகுத்தவர்: ஷெய்ஹுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ்

உள்ளடக்கம்: இந்நூல் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினருடைய கொள்கையைத் தெளிவுபடுத்தும் வகையில் கவிதை அடிகளாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. இஸ்லாமிய அகீதாவின் அனைத்து விடயங்களையும் இத்தொகுப்பு பொதிந்திருக்காவிட்டாலும் மிக முக்கியமான 15 விடயங்களை இத்தொகுப்பு உள்ளடக்கியிருக்கின்றது.
அவையாவன:

1. ஸஹாபாக்களுடைய விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் நிலைப்பாடு.

2. நல்லமல்களைக் கொண்டு அல்லாஹ்விடம் வஸீலாத் தேடுவது பற்றிய குறிப்பு.

3. குர்ஆன் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் கொள்கை.

4. குர்ஆனிலிருந்தும் சுன்னாவிலிருந்துமே அகீதா எடுக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றிய விளக்கம்.

5. அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் கோட்பாடு.

6. மறுமையில் அல்லாஹ்வைப் பார்க்க முடியும் என்பது தொடர்பான தகவல்கள்.

7. அல்லாஹ் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான் என்பது குறித்த செய்திகள்.

8. மீஸானுடைய விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் நம்பிக்கை.

9. ஹவ்ள் பற்றிய தெளிவு.

10. ஸிராத் என்ற பாலம் குறித்த கருத்துக்கள்.

11. சுவர்க்கம் பற்றிய வர்ணணை.

12. நரகத்தின் கொடூரம்.

13. கப்ரின் இன்பங்கள், வேதனைகள் பற்றிய உண்மையான நிலைப்பாடு.

14. மத்ஹபுடைய நான்கு இமாம்களின் அகீதாவின் நிலவரம்.

15. ஸலபுகளைப் பின்பற்றுதலின் அவசியமும் பித்அத் குறித்த எச்சரிக்கையும்.


இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்

பெயர்: அஹ்மத் இப்னு அப்தில் ஹலீம் இப்னு அப்திஸ்ஸலாம்

இடுகுறிப் பெயர்: அபுல் அப்பாஸ்

சிறப்புப் பெயர்: ஷெய்ஹுல் இஸ்லாம்

குடும்ப அந்தஸ்து: அல்ஹர்ரானி, அந்நுமைரி

பிறப்பு: ஹிஜ்ரி 661ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் பத்தாவது தினம் திங்கட்கிழமை ஹர்ரான் என்ற பிரதேசத்தில் பிறக்கின்றார்கள். மொங்கோலியர்கள் ஹர்ரான் பிரதேசத்தை ஆக்கிரமித்து மக்களுடன் அநீதியான முறையில் நடந்து கொள்ளும் ஒரு காலத்திலே இவர் பிறக்கிறார்.

பின்பு இவர்கள் ஹிஜ்ரி 667ம் ஆண்டு தனது தந்தையுடன் திமிஷ்க் - டமஸ்கஸ் - நகரத்திற்குப் புறப்பட்டுச் செல்கின்றார்கள். அங்கே அவர் வளர்ந்து கல்வியை ஆரம்பிக்கின்றார்.

கல்வி: இவர் சிறிய வயதில் அல்குர்ஆனை மனனம் செய்தார். பின்பு ஹதீஸ், தப்ஸீர், அறபு ஆகிய துறைகளில் எழுதப்பட்ட நூட்களை வாசிக்க ஆரம்பித்தார். இப்பருவத்திலிருந்தே இவர் நூட்களை எழுதவும் ஆரம்பித்தார்.

இவர் 17 வயதை அடைந்த போது மக்களுக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்கும் பணியைத் திறம்படச் செய்தார். இவருடைய தந்தை அப்துல் ஹலீம் அவர்கள் அல்ஜாமிஉல் உமவி என்ற பள்ளிவாசலில் மனிதர்களுக்கு கற்பிப்பவராக இருந்தார்கள். அவர் ஹிஜ்ரி 682ம் ஆண்டு மரணித்த போது அப்பணியில் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஈடுபடுகின்றார்கள். அப்போது அவருக்கு 21 வயதாக இருந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜும்ஆத் தொழுகையின் பின் மக்களுக்கு அல்குர்ஆன் விரிவுரை பற்றிய பாடத்தை நடாத்தினார்.

இவர் யுத்தங்களிலும் சத்தியத்தை எடுத்துரைப்பதிலும் தைரியசாலியாகக் காணப்பட்டார். அதன் காரணமாக அவருடைய எதரிகள் அதிகரித்தனர். பித்அத்வாதிகள் அவரை நோவினைக்கு ஆளாக்கினர். பல தடவைகள் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஆசிரியர்கள்:
1. அப்துல் ஹலீம் இப்னு தைமியா
2. ஸைனுத்தீன்
3. மஜ்துத்தீன் இப்னு அஸாகிர்

மாணவர்கள்:
1. ஷம்சுத்தீன் இப்னுல் கைய்யிம் அல்ஜவ்சிய்யா
2. அபூ அப்தில்லாஹ் முஹம்மத் அத்தஹபீ
3. இஸ்மாஈல் இப்னு உமர் இப்னு கஸீர்
4. முஹம்மத் இப்னு அப்தில் ஹாதி அல்மக்திஸி
5. ஸைனுத்தீன்
6. இல்முத்தீன்

எழுதிய நூற்கள்:
1. அல்இஸ்திகாமத்
2. இக்திளாஉஸ் ஸிராதில் முஸ்தகீம்
3. பயானுல் பிர்கதின் நாஜியா
4. பயானு தல்பீஸில் ஜஹ்மிய்யா
5. தர்உ தஆருளில் அக்லி வந்நக்லி
6. அத்தத்முரிய்யா
7. ரப்உல் மலாம் அனில் அஇம்மதில் அஃலாம்
8. அஸ்ஸியாஸதுஷ் ஷரஇய்யா
9. ஷர்ஹு ஹதீஸின் நுஸூல்
10. அஸ்ஸாரிமுல் மஸ்லூல் அலா ஷாதிமிர் ரஸூல்
11. அல்அகீததுல் வாஸிதிய்யா
12. அல்புர்கான் பய்ன அவ்லியாஇர் ரஹ்மான் வஅவ்லியாஇஷ் ஷைத்தான்
13. முஃதகதாது அஹ்லில் ளழால்
14. மின்ஹாஜுஸ் ஸுன்னதின் நபவிய்யா

மரணம்:
இவர்கள் ஷஃபான் மாதம் ஹிஜ்ரி 726ம் ஆண்டு சிறைச்சாலையில் நுழைகின்றார்கள். இவர்கள் நபிமார்கள், ஸாலிஹான அடியார்களின் கப்ருகளைத் தரிசிக்கப் பிரயாணம் மேற்கொள்ளக்கூடாது என்று பிரச்சாரம் செய்தார்கள். அதன் காரணமாகவே இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிறையில் இவர்கள் நோய்வாய்ப்படுகின்றார்கள். ஹிஜ்ரி 728ம் ஆண்டு துல்கஃதா மாதம் இருபதாவது தினம் திங்கட்கிழமையன்று இவர்கள் மரணிக்கின்றார்கள். அப்போது அவருடைய வயது 67ஆகக் காணப்பட்டது.

மனிதர்கள் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கு நோய் ஏற்பட்டதை அறிந்திருக்கவில்லை. அவருடைய மரணச் செய்தியை அம்மக்கள் செவிமடுத்த போது அவர்கள் ஆண்களாகவும் பெண்களாகவும் அந்த சிறைச்சாலையில் ஒன்று சேர்ந்தனர். ளுஹருக்குப் பின் அவருக்கு ஜனாஸா தொழுவிக்கப்பட்டது. இவருடைய ஜனாஸாவில் 50,000 முஸ்லிம்கள் கலந்துகொண்டதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அஸருக்குச் சற்று நேரத்திற்கு முன் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பற்றி ஏனைய அறிஞர்கள் கூறிய கருத்துக்கள்

1. இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு விடயத்தை ஒன்று சேர்த்தால் அதனை உடனடியாக மனனமிடுவார்கள். அவர் விவேகமுடையவராகவும் அதிகம் மனனம் செய்தவராகவும் இருந்தார். தப்ஸீர் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கலைகளில் இமாமாகவும் இருந்தார். பிக்ஹுடைய விடயத்தில் அறிவுடையவராக இருந்தார்.... அறிஞர்களின் கருத்து முரண்பாடுகளை நன்கறிந்தவர்களாக இருந்தார். மார்க்கத்தின் அடிப்படை அம்சங்கள், கிளை அம்சங்கள், அறபு இலக்கணம், அறபு மொழி போன்ற துறைகளிலும் மிக்க அறிவுள்ளவராக இருந்தார்.'

2. இப்னு தகீக் அல்ஈத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'நான் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களுடன் இணைந்த போது அனைத்துவகையான அறிவுகளும் அவருடைய இரு கண்களுக்கு மத்தியில் காணப்பட்ட ஒரு மனிதராக நான் அவரைக் கண்டேன். அவர் விரும்புவதை எடுப்பார். அவர் விரும்பாத விடயத்தை விட்டுவிடுவார்.'

3. அல்மிஸ்ஸீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'அல்லாஹ்வுடைய வேதம், அவனுடைய தூதுருடைய சுன்னா பற்றி மிக அறிந்தவராகவும் அவ்விரண்டையும் நன்றாகப் பின்பற்றுபவராகவும் நான் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களைத் தவிர வேறுயாரையும் காணவில்லை.'

4. இமாம் தஹபீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் விவேகத்திலும், விரைவாக ஒரு விடயத்தை விளங்கிக் கொள்வதிலும் அத்தாட்சியாக இருந்தார்கள். குர்ஆன், சுன்னா, கருத்து முரண்பாடு பற்றிய அறிவில் தலையாகக் காணப்பட்டார்கள்.'

5. அஸ்ஸுப்கி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'அல்லாஹ்வின் மீது ஆணையாக. இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களை ஒரு மடையனைத் தவிர அல்லது மனோ இச்சையைப் பின்பற்றுபவனைத் தவிர வேறுயாரும் வெறுக்கமாட்டார்கள்.'

6. இப்னு ரஜப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஓர் இமாமாவார். பிக்ஹ் விடயத்தில் தேர்ச்சி பெற்றவரும் ஆராய்ச்சியாளரும் ஹதீஸ் கலைவல்லுநரும் மனனம் செய்தவரும் விரிவுரையாளரும் அடிப்படை அறிவுள்ளவரும் பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தவருமாவார்.'

7. அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'இந்த மனிதர் குர்ஆனிலிருந்தும் சுன்னாவிலிருந்தும் ஸலபுகளின் அடிச்சுவடுகளிலிருந்தும் ஒளிமயமான புத்தியுடன் அறிவை ஒன்று சேர்க்கின்ற விடயத்தில் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஓர் அத்தாட்சியாகவும் இருந்தார்.'

குறிப்பு: இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய 'லாமியா' என்ற இக்கவிதைத் தொகுப்புக்கு பல அறிஞர்கள் விரிவுரை செய்திருக்கின்றார்கள். அவற்றில் பிரதான மூன்று விரிவுரை நூட்களை அடிப்படையாக வைத்தே இக்கவிதைத் தொகுப்பை உங்களுக்கு நான் விளக்கியிருக்கின்றேன். அவையாவன:

1. அத்தஃலீகாதுல் ஹிஸான்: அஷ்ஷெய்ஹ் அப்துல் ஹமீத் அவர்களுக்குரியது.
2. தன்பீஹுல் அனாம்: அஷ்ஷெய்ஹ் அபூமுஆத் அவர்களுக்குரியது.
3. அல்பவாஇதுல் பஹிய்யா: அஷ்ஷெய்ஹ் முஹம்மத் இப்னு ஹிஸாம் அவர்களுக்குரியது.
இவர்கள் மூவரும் யமனில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆலிம்களில் ஒருவராகிய அஷ்ஷெய்ஹ் யஹ்யா இப்னு அலீ அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் அவர்களின் மாணவர்களாவர்.


முதல் கவிதைவரிக்கான விளக்கம்

‎يا سائلي عن مذهبي وعقيدتي   رزق الهدى من للهداية يسئل
'என்னுடைய போக்கைப் பற்றியும் அகீதாவைப் பற்றியும் கேட்பவனே!
நேர்வழியைக் கேட்பவனுக்கு நேர்வழி ரிஸ்க்காக வழங்கப்படும்'

விளக்கம்:
இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனக்கு முன்வைக்கப்பட்ட கேள்விக்கே இக்கவிதை அடிகளின் மூலம் பதிலளித்திருக்கிறார்கள். அந்த அமைப்பில் எத்தனையோ புத்தகங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அவையாவன: தத்முரிய்யா, அல்வாஸிதிய்யா, அல்ஹமவிய்யா, அத்தபூதகிய்யா, ஸஹீஹ் முஸ்லிம், அஸ்ஸியாஸதுஷ் ஷரஇய்யா, ஜாமிஉ பயானில் இல்ம் வபள்லிஹீ, இப்னு அபீஸமனைன் என்பவருடைய உஸூலுஸ்ஸுன்னா போன்ற நூற்களாகும்.

கேள்வி கேட்பது அறிவைத்தேடுகின்ற மற்றும் மார்க்கத்தில் விளக்கத்தைப் பெறுகின்ற சாதனங்களில் ஒரு சாதனமாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிவுடையவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.' (அந்நஹ்ல்: 43)

மத்ஹப் என்ற சொல்லின் விளக்கம்

இங்கு குறிப்பிடப்பட்ட மத்ஹப் என்ற சொல்லின் நாட்டம் ஒரு மனிதன் மார்க்கத்தை விளங்குவதின்பால் செல்லக்கூடிய பாதை ஆகும். மாறாக, அறியப்பட்ட நான்கு மத்ஹபுகளுமல்ல. ஏனென்றால், நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுவதற்கு குர்ஆனிலோ, சுன்னாவிலோ ஆதாரம் இல்லை. மாற்றமாக, குர்ஆனையும் சுன்னாவையும் பின்பற்ற வேண்டும் என்பதையே ஆதாரம் தெரிவிக்கின்றது. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்.' (அல்அஃராப்: 03)

சிலர் கூறுவதுபோல் நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுவது அவசியம் என்று நாம் கூறினால் அபூபக்கர், உமர், உஸ்மான், அலீ - ரழியல்லாஹு அன்ஹும் - , தாபிஈன்கள் ஆகியோர் நேர்வழியில் இருக்கவில்லை என்று கூறுகின்ற நிலை ஏற்பட்டுவிடும். ஆதாரத்திற்கு மாற்றமானதாக இருந்தாலும் ஒரு மத்ஹபைப் பின்பற்ற வேண்டும், அதிலிருந்து வெளியேற முடியாது என்று யாராவது நம்பிக்கை கொண்டால் அது மகத்தான ஒரு வழிகேடாகும்.

அதேபோன்று, ஒருவர் நான் ஹனபீ, நான் ஹன்பலீ, நான் ஷாபிஈ, நான் மாலிகீ என்று கூறுவதைவிடுத்து நான் எங்கு சத்தியத்தையும் ஆதாரத்தையும் கண்டு கொள்வேனோ அதை எடுத்துக் கொள்வேன் என்று கூறுவதே மிகச் சரியான நிலைப்பாடாகும்.

இமாம்களான அபூஹனீபா, மாலிக், ஷாபிஈ, அஹ்மத் ஆகிய அனைத்து இமாம்களும் 'ஹதீஸ் சரியாக இருந்தால் அதுவே எனது மத்ஹபாகும்' என்று கூறியதாக அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'ஒருவர் அறிவிப்பாளர் வரிசையையும் அது சரியானது என்பதையும் அறிந்து கொண்ட பின்பும் ஸுப்யானுடைய கூற்றை எடுத்துக்கொள்வது குறித்து நான் ஆச்சரியப்படுகின்றேன்.'

அஷ்ஷெய்ஹ் இப்னு ஹிஸாம் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் மத்ஹப் என்ற வார்த்தை குறித்து பின்வருமாறு கூறுகின்றார்கள்: 'இப்னு மன்ழூர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மத்ஹப் என்றால் ஒரு மனிதன் பயணிக்கக்கூடிய ஒரு கொள்கையாகும்' என்று கூறியுள்ளார்கள்.

அஷ்ஷெய்ஹ் அபூமுஆத் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் மத்ஹப் என்ற வார்த்தை குறித்துப் பின்வருமாறு விளக்கியுள்ளார்கள். 'மத்ஹப் ஒரு மனிதன் செல்லக்கூடிய கொள்கையும் வழியுமாகும்.'

அத்தோடு, இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இக்கவிதை அடியில் 'அகீதாவைப் பற்றியும்' என்ற வார்த்தையைக் கூறியிருக்கின்றார்கள்.

அகீதா என்ற வார்த்தை குறித்து அஷ்ஷெய்ஹ் அபூமுஆத் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்: 'அரபுமொழி அடிப்படையில் அகீதா, அல்இஃதிகாத் என்ற வார்த்தை இணைத்தல், கட்டுதல் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றது.'

பரிபாசையில் அகீதா என்றால் புத்தி ஏற்றுக்கொள்ளக்கூடிய உறுதியான ஒரு சட்டமாகும். அது நடைமுறைக்கு உடன்பட்டால் சரியான கொள்கையாகவும் நடைமுறைக்கு முரண்படுமாயின் மோசமான கொள்கையாகவும் காணப்படும். (ஷர்ஹுல் வாஸிதிய்யா: இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ்)

இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'நேர்வழியைக் கேட்பவனுக்கு நேர்வழி ரிஸ்க்காக வழங்கப்படும்.'

ரிஸ்க் என்ற வார்த்தை குறித்த சில விளக்கங்களை அஷ்ஷெய்ஹ் இப்னு ஹிஸாம் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியிருக்கின்றார்கள்: 'ரிஸ்க் இரண்டு வகைப்படும்.

1.         பொதுவான ரிஸ்க்: இது எந்தவித விதிவிலக்கும் இல்லாத பொதுவான ரிஸ்க்காகும். உதாரணம்: அல்லாஹ் மனிதர்களுக்கு காற்று, உணவு, குடிபானம் போன்றவற்றை ரிஸ்க்காக வழங்கியிருக்கின்றான். இந்த வகையான ரிஸ்க் காபிர், முஸ்லிம், மிருகங்கள், பறவைகள் ஆகிய அனைத்தையும் பொதிந்து கொள்ளும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'இன்னும் உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுள்ள நிலைமையிலே அன்றி எந்தவோர் உயிரினமும் பூமியில் இல்லை.' (ஹூத்: 06)

மேலும் அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு இரட்சகன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக! 'நீங்கள் உண்மையாளராக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.' (அந்நம்ல்: 64)

2.         குறிப்பான ரிஸ்க்: இதுவே உலகிலும் மறுமையிலும் தொடர்ந்தேர்ச்சியாகப் பயனளிக்கக்கூடிய பிரயோசனம் அளிக்கும் ரிஸ்க்காகும்.

இவ்வகையைச் சார்ந்த ரிஸ்க் இரண்டு விடயங்களைப் பொதிந்து கொள்கின்றது.

முதலாவது: உள்ளங்களுக்கு அல்லாஹ் அறிவையும் ஈமானையும் ரிஸ்க்காக வழங்குதல்.

இரண்டாவது: உடலுக்கு அல்லாஹ் ஹலாலான ரிஸ்க்கை வழங்குதல்.

இவ்வகையான ரிஸ்க்கிற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக அமைகின்றது. தாரிக் இப்னு அஷ்யம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மனிதர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவருக்குப் பின்வருமாறு கற்றுக் கொடுப்பார்கள்: 'என் இரட்சகனே! என்னை மன்னிப்பாயாக! எனக்கு இரக்கமளிப்பாயாக! எனக்கு நேர்வழிகாட்டுவாயாக! எனக்கு நிவாரணமளிப்பாயாக! எனக்கு ரிஸ்க் அளிப்பாயாக!' பின்பு அவர்கள் 'இந்த வார்த்தைகள் உமக்கு உமது உலக வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் ஒன்று சேர்த்துவிடும்' என்று கூறுவார்கள்.' (முஸ்லிம்)

நேர்வழி ரிஸ்க்காக வழங்கப்படும் என்று இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியதன் மூலம் நாடப்படுவது இரண்டாவது வகையைச் சார்ந்த ரிஸ்க்கேயாகும்.

தனக்கு ரிஸ்க் வழங்குமாறு ஓர் அடியான் அல்லாஹ்விடம் துஆச் செய்தால் இந்த இரண்டாவது வகையான ரிஸ்க்கையே உள்ளத்தில் கொண்டுவரச் செய்து துஆச் செய்வது அவசியமாகும்.

இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: 'நேர்வழியைக் கேட்பவனுக்கு நேர்வழி ரிஸ்க்காக வழங்கப்படும்.'

இக்கவிதை அடியில் இமாமவர்கள் எவர் அல்லாஹ்விடத்தில் நேர்வழியைக் கேட்கிறாரோ அவர் அதைப் பெற்றுக்கொள்வார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இது குறித்து அஷ்ஷெய்ஹ் அபூமுஆத் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்: 'நேர்வழியைப் பெற்றுத்தரும் காரணங்களில் ஒன்றே அதை அல்லாஹ்விடம் வேண்டுவதும், கேட்பதுமாகும் என்பதை இந்தக் கவிதை வரி சுட்டிக்காட்டியுள்ளது.'

நேர்வழியைக் கேட்பவர்களுக்கு நேர்வழி வழங்கப்படும் என்பதற்கான ஆதாரங்கள் மார்க்கத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹுத்தஆலா கூறியதாகக் கூறுகின்றார்கள்: 'எனது அடியார்களே! எவருக்கு நான் நேர்வழி வழங்கியிருக்கின்றேனோ அவரைத் தவிர நீங்கள் அனைவரும் வழிதவறியவர்களே! எனவே, என்னிடம் நீங்கள் நேர்வழியைக் கேளுங்கள். நான் உங்களுக்கு நேர்வழி அளிப்பேன்.' (முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவுத் தொழுகைகளில் ஆரம்பத் தக்பீருக்குப் பின்பு ஓதக்கூடிய துஆவிலே பின்வருமாறு கூறுவார்கள்: "சத்தியத்திலிருந்தும் எந்த விடயங்களில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டதோ அந்த விடயங்களில் உனது அனுமதியின் பிரகாரம் எனக்கு நேர்வழி வழங்குவாயாக! நிச்சயமாக நீ நாடியவருக்கு நேரான பாதையின் பால் வழி காட்டுகின்றாய்.” (முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின்வருமாறு ஒரு துஆவைக் கூறுமாறு கற்றுக் கொடுத்தார்கள்: "எனது இரட்சகனே! எனக்கு நேர்வழி வழங்குவாயாக! இன்னும் என்னை நேர்வழிப்படுத்தி சீர்திருத்துவாயாக!” (முஸ்லிம்)

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்ஹஸன் இப்னு அலீ ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களுக்கு வித்ர் தொழுகையின் குனூத்தில் ஓதுமாறு கற்றுக்கொடுத்த துஆவில் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: "என் இரட்சகனே! நீ நேர்வழிப்படுத்தியவர்களில் எனக்கும் நேர்வழி வழங்குவாயாக!...” (அஹ்மத், அஸ்ஸஹீஹுல் முஸ்னத்)

இந்த ஆதாரங்கள் யாவும் ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் நேர்வழியைக் கேட்டு துஆச் செய்ய வேண்டும் என்பதை தூண்டியிருக்கின்றன. இன்னும், அவ்வாறு கேட்பவர்களுக்கு நேர்வழி வழங்கப்படும் என்பதற்கும் இவ்வாதாரங்கள் சான்றாக அமைந்திருக்கின்றன.

நேர்வழியின் வகைகள்

நேர்வழி நான்கு வகைப்படும்:

1. பொதுவான நேர்வழி: இது அனைத்துப் படைப்பினங்களையும் பொதிந்து கொள்ளக்கூடிய நேர்வழியாகும். இவ்வுலகில் உள்ள உயிரினங்கள், சடப்பொருட்கள் யாவற்றுக்கும் வழங்கப்பட்ட நேர்வழியை இது குறிக்கும். இவ்வுலகில் எவ்வேலையைச் செய்வதற்கு உயிரினங்கள் யாவும் படைக்கப்பட்டனவோ அவ்வேலையைச் செய்வதற்கு அல்லாஹ் அவைகளுக்கு வழங்கக்கூடிய நேர்வழியே இதுவாகும். நாவின் மூலம் பேசுவதற்கும், கையின் மூலம் பிடிப்பதற்கும், காலின் மூலம் நடப்பதற்கும் அல்லாஹ் நேர்வழி வழங்கியிருக்கின்றான் என்பது இதன் உதாரணங்களில் உள்வாங்கப்படக்கூடியனவாகும்.

2. எத்திவைக்கப்படுதல், தெளிவுபடுத்தப்படல் ஆகியவற்றின் மூலம் கிடைக்கப் பெறும் நேர்வழி: அதாவது, பிறருக்கு நல்லவற்றையும் தீயவற்றையும் அறிவித்துக் கொடுத்தல் இதன் மூலம் நாடப்படுகின்றது. இந்த நேர்வழி அனைத்துப் படைப்பினங்களுக்கும் சென்றடையக்கூடிய ஒரு பூரணமான நேர்வழியன்று.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "ஸமூத் கூட்டத்தாருக்கு நாம் நேர்வழி வழங்கினோம். ஆனால், அவர்கள் நேர்வழியைவிட குருட்டுத்தன்மையை விரும்பிக் கொண்டார்கள்.” (புஸ்ஸிலத்:17)

நாம் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினோம், நேர்வழி காட்டினோம், அவர்களுக்கு நல்லவற்றை அறிவித்துக் கொடுத்தோம் ஆனால் அவர்கள் அவைகளின் மூலம் நேர்வழி பெறவில்லை என்பது இதன் விளக்கமாகும்.

மேலும், இந்த நேர்வழிக்கு ஆதாரமாக பின்வரும் அல்குர்ஆன் வசனமும் முன்வைக்கப்படுகின்றது. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "(நபியே!) நிச்சயமாக நீங்கள் நேரான பாதையின் பால் நேர்வழி காட்டுகின்றீர்கள்.” (அஷ்ஷூரா: 52)

3. அனுகூலம், உள்ளுணர்வு ஆகியவைகளின் மூலம் கிடைக்கும் நேர்வழி. இது அல்லாஹ்வுக்கு மாத்திரம் குறிப்பானது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களை நேர்வழியின் பால் அழைத்தார்கள். ஆனால், அவர்களுக்கு நேர்வழி வழங்குவது அல்லாஹ்வுடைய பொறுப்பாக உள்ளது. இதனையே பின்வரும் அல்குர்ஆன் வசனம் சுட்டிக்காட்டுகின்றது. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "(நபியே!) நீங்கள் விரும்பியவர்களையெல்லாம் உங்களுக்கு நேர்வழிப்படுத்த முடியாது.” (அல்கஸஸ்: 56)

4. சுவர்க்கம் மற்றும் நரகம் நுழைவதற்கு வழங்கப்படும் நேர்வழி.

இதனையே பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் குறித்து நிற்கின்றன. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்களையும் செய்தார்களோ அவர்களது ஈமானின் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி வழங்குவான். இன்பமான சுவனச் சோலைகளிலே அவர்களுக்குக் கீழால் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்.” (யூனுஸ்: 9)

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அநியாயமிழைத்தவர்களையும் அவர்களது மனைவிமார்களையும் அவர்கள் அல்லாஹ்வையன்றி வணங்கிக்கொண்டிருந்தவைகளையும் ஒன்று திரட்டுங்கள். அவர்கள் அனைவரையும் நரகத்தின் பாதையின் பால் நேர்வழிப்பத்துங்கள்” (அஸ்ஸாப்பாத்: 22,23)

அல்லாஹ்விடத்தில் இஸ்லாத்தையும் ஈமானையும் அடைந்து கொள்தவற்கான நேர்வழியைப் பெற்றுத்தருமாறு துஆச் செய்வது எமது கடமையாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகிறோம்.
நேர்வழியைப் பெற்றுத்தரும் காரணங்கள்

அஷ்ஷெய்ஹ் அபூமுஆத் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் நேர்வழியைப் பெற்றுத் தரக்கூடிய ஐந்து காரணங்களை ஆதாரங்களுடன் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அவைகளை இங்கு சுருக்கமாக முன்வைக்கின்றோம்.

1.   அல்குர்ஆனை ஓதுதல், அதனை ஆராய்ச்சி செய்தல், அதைக் கொண்டு நற்காரியங்களைப் புரிதல், அதனுடைய கருத்துக்களை விளங்குதல், அதன் கட்டளைகளுக்குத் தாழ்ந்து செல்லல், விரிந்த உள்ளத்துடன் அதனைச் செவிமடுத்தல் ஆகியன உள்ளங்களுக்கு நேர்வழியைப் பெற்றுத்தரக்கூடிய, இன்னும் உள்ளங்களை சீராக்கக்கூடிய விடயங்களாகும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "இது வேதமாகும். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது பயபக்தியுடையவர்களுக்கு நேர்வழிகாட்டக்கூடியதாக உள்ளது.” (அல்பகறா: 2)

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "மனிதர்களே! நிச்சயமாக உங்களிடத்தில் உங்கள் இரட்சகனிடமிருந்து நல்லுபதேசமும், உள்ளங்களில் உள்ளவற்றுக்கு நிவாரணம் அளிக்கக்கூடியதும், விசுவாசிகளுக்கு நேர்வழி வழங்கக்கூடியதும், அருள் புரியக்கூடியதும் வந்துவிட்டது.” (யூனுஸ்: 57)

இந்த வசனம் அல்குர்ஆன் குறித்தே இவ்வாறு அமையப் பெற்றிருக்கின்றது.

இதுபோன்ற ஆதாரங்கள் குர்ஆனை ஓதி அதனை விளங்கி செயற்படுவதின் மூலம் நேர்வழியைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெளிவுபடுத்துகின்றன.

2.   அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அவனுடைய மார்க்கத்தைப் பின்பற்றுவது, அதன் பால் திரும்புவது ஆகியன ஒரு முஸ்லிமுக்கு நேர்வழியைப் பெற்றுத் தரும் காரியங்களில் உள்ளவைகளாகும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அவனுடைய தூதர் உங்களிடத்தில் இருந்து கொண்டு, அல்லாஹ்வின் வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கக்கூடிய (நிலையில்) இருந்து கொண்டு நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள்? மேலும், எவர் அல்லாஹ்வை (அவனது மார்க்கத்தை) வலுவாகப் பற்றிக் கொள்கிறாரோ அவர் நிச்சயமாக நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்.” (ஆலுஇம்ரான்: 101)

மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்துவிட்டது. தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம். ஆகவே, யார் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு அவ(ன் அருளிய நேர்வழியி)னைப் பலமாகப் பிடித்துக் கொள்கிறாரோ அவர் தன் இரக்கத்திலும், அருளிலும் அவன் புகச் செய்வான். இன்னும், தன்னிடம் (அவர்கள் வந்து) சேரக்கூடிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துவான்.” (அந்நிஸா: 174,175)

இது போன்ற வசனங்கள் அல்லாஹ்வினது மார்க்கத்தைப் பற்றிப் பிடிப்பவர் நேர்வழியின் பால் சென்றடைவார் என்பதை உணர்த்துகின்றன.

3. அல்லாஹ்வுக்கு வழிப்படுகின்ற விடயத்தில் முயற்சியெடுத்தல் ஒரு முஸ்லிமுக்கு நேர்வழியைப் பெற்றுத்தரும் காரணங்களில் ஒன்றாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "எவர்கள் எமது விடயங்களில் முயற்சி செய்கின்றார்களோ அவர்களுக்கு திட்டமாகவே நாம் எமது பாதைகளின் பால் நேர்வழி செலுத்துவோம். மேலும், நிச்சயமாக அல்லாஹ் நன்மை புரிவோருடன் இருக்கின்றான்.” (அல்அன்கபூத்: 69)

4. நபிமார்கள், நல்லோர்கள் ஆகியோரின் வரலாற்றைக் கற்றுக் கொள்வதும், அவைகளை முன்மாதிரியாகவும், படிப்பினையாகவும் நோக்கி செயற்படுவதும் நேர்வழியைப் பெற்றுத் தரும் நற்கருமங்களில் ஒன்றாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அவர்களுடைய சரித்திரங்களிலே புத்தியுடையோருக்கு நிச்சயமாக படிப்பினை இருக்கிறது. இது கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை. மாறாக, இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விடயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.” (யூஸுப்: 111)

5. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கட்டுப்படுவதும் நேர்வழியைப் பெற்றுத் தரும் அம்சங்களில் ஒன்றாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "நீங்கள் அவருக்கு வழிப்பட்டால் நேர்வழி அடைவீர்கள், அத்தூதருக்குத் தெளிவாக எத்திவைப்பதையன்றி வேறெதுவும் கடமையாக்கப்படவில்லை.” (அந்நூர்: 54)

இந்த ஐந்து விடயங்களுமே அஷ்ஷெய்ஹ் அபூமுஆத் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் முன்வைத்த நேர்வழியைப் பெற்றுத் தரும் காரணங்களில் உள்ளடங்கக்கூடியவையாகும்.
எனவே, இது போன்ற நற்கருமங்களில் நாம் எம்மை ஈடுபடுத்தி அல்லாஹ்வினது நேர்வழியைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு அல்லாஹ் எம்மனைவருக்கும் அருள் பாலிப்பானாக.

இரண்டாவது கவிதை அடி

‎'اسمع كلام محقق في قوله لا ينثني عنه ولا يتبدل'
“தனது பேச்சை உறுதிப்படுத்தியவாறு பேசக்கூடியவரின் பேச்சை செவிமடுங்கள்! அவர் தனது கருத்திலிருந்து திரும்பவோ அதை மாற்றிக்கொள்ளவோமாட்டார்.”

விளக்கம்:

இக்கவிதை அடியில் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தான் ஏற்றிருக்கக்கூடிய கொள்கை விடயத்தில் அவர் உறுதியாக இருப்பதாகவும் சரியான அகீதாவை விட்டும் அவர் ஒரு சாண் அளவு கூட தூரமாகிவிடமாட்டார் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

அவர்களுக்கு பித்அத்வாதிகளினால் ஏற்படுத்தப்பட்ட சோதனைகள் நேர்த்தியான இக்கொள்கையில் மென்மேலும் உறுதித் தன்மையுடன் இருக்கத் துணை நின்றன.

தான் ஏற்றிருக்கக்கூடிய கொள்கையில் உறுதித்தன்மையை அல்லாஹ்விடம் கேட்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு துஆச் செய்தார்கள்: “உள்ளங்களைப் பிரட்டக்கூடியவனே! எனது உள்ளத்தை உனது மார்க்கத்தின் மீது பிரட்டுவாயாக”. (இப்னுமாஜா)

மேலும், “உள்ளங்களைத் திருப்புபவனே! எனது உள்ளத்தை உனக்கு வழிபடுவதின் பால் திருப்புவாயாக” என்றும் கூறினார்கள். (முஸ்லிம்)

இந்தக் கவிதை அடியில் இமாமவர்கள் தான் பின்னால் கூறக்கூடிய அகீதா சார்ந்த விடயங்களைப் புகழ்ந்து கூறியிருக்கின்றார்கள். மேலும், தான் உறுதிப்படுத்திப் பேசக்கூடியவர் என்றும் சத்திய வார்த்தையிலிருந்து திரும்பவோ, தன்னை மாற்றிக்கொள்ளவோமாட்டார் என்றும் தன்னைப் புகழ்ந்து கூறியிருக்கின்றார்கள்.

இதுவே அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் கொள்கையாகும். அவர்கள்  தமது கொள்கைகளையும் வழிமுறைகளையும் குர்ஆன், சுன்னாவுடைய ஆதாரங்களிலிருந்து பெற்றுக்கொள்வார்கள்.

மாறாக, பித்அத்வாதிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குத் தங்களை மாற்றிக் கொள்பவர்களாக இருக்கின்றார்கள். ஒரு கருத்தில் அவர்கள் நிலைத்திருக்கமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் தங்களது கொள்கைகளை அவர்களது மனோ இச்சையின்படியே அமைத்துக் கொள்கின்றார்கள்.

அஹ்லுஸ்ஸுன்னாக்கள் தாம் ஏற்றிருக்கக்கூடிய கொள்கையில் உறுதியாக இருப்பார்கள் என்பதற்குச் சான்றாக இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஒரு சம்பவம் அமைந்திருக்கின்றது. பித்அத்வாதிகளில் ஒருவன் இமாமவர்களிடம் வந்து: “என்னுடன் தர்க்கம் புரியுங்கள்” என்று கூறினான். அதற்கு இமாமவர்கள்: “நீ என்னை மிகைத்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?” என வினவினார்கள். அதற்கு அவன்: “நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டும்” என்று பதிலளித்தான். “நான் உன்னை மிகைத்துவிட்டால் நீ என்ன செய்வாய்?” என்று இமாமவர்கள் வினவியபோது: “நான் உங்களைப் பின்பற்றுவேன்” என்று பதிலளித்தான். அதற்கு இமாமவர்கள்: “உன்னைப் போன்ற ஒரு சந்தேகக்காரனிடம் சென்று நீ தர்க்கம் புரிந்து கொள்! நான் எனது கொள்கையில் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறினார்கள்.

இக்கவிதை அடியில் இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னைப் புகழ்ந்து சில வரிகளைக் கூறியுள்ளார்கள். தன்னையே ஒருவர் புகழ்ந்து கொள்வதை மார்க்கம் தடை செய்திருக்கின்றது. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “நீங்கள் உங்களையே பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டாம், இறையச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்”. (அந்நஜ்ம்: 32)

இவ்வசனம் தன்னை ஒருவர் புகழக்கூடாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. என்றாலும் பிறருடைய நலனுக்காகவோ அல்லது, தம்மை வந்தடையும் தீங்கைத் தடுத்துக்கொள்வதற்காகவோ தன்னைத்தானே ஒருவர் புகழ்ந்து பேசுவதில் குற்றம் இல்லை. இமாமவர்கள் தன்னைப் புகழ்ந்தது இந்த நோக்கத்தையே சாரும்.

பிறருடைய நலனுக்காகவும் தமக்கு ஏற்படக்கூடிய தீங்கைத் தவிர்ப்பதற்காகவும் ஒருவர் தன்னைப் புகழ்ந்து கூறலாம் என்பதற்கு நபிமார்கள், ஸஹாபாக்களின் வரலாறுகளிலிருந்து பல சான்றுகள் உள்ளன.

யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்: “இந்த பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை நிர்வாகியாக நியமியுங்கள். நான் பாதுகாப்பவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கின்றேன்” என்றார்கள். (யூஸுப்: 55)

யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னைப் புகழ்ந்து கூறியிருப்பதை இந்த வசனம் சுட்டிக்காட்டியுள்ளது. பூமியின் களஞ்சியங்களைத் தான் பாதுகாப்பேன் என்றும் அதுபற்றித் தனக்கு அறிவு இருப்பதாகவும் அவர் கூறியிருப்பதை நாம் அவதானிக்கலாம்.

உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது வீட்டில் முற்றுகையிடப்பட்ட போது பின்வருமாறு கூறினார்கள்: “அல்லாஹ்வின் பெயரால் உங்களைக் கேட்கிறேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களைத் தவிர வேறு எவரையும் நான் அல்லாஹ்வின் பெயரால் கேட்கவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: யார் ரூமா என்ற கிணற்றைத் தோண்டுகிறாரோ அவருக்கு சுவர்க்கம் உண்டு என்று கூறியதை நீங்கள் அறியவில்லையா? நானே அதனைத் தோண்டினேன். மேலும், அவர்கள்: எவர் தபூக் போருக்கான படையைத் தயார்படுத்துகின்றாரோ அவருக்கு சுவர்க்கம் உண்டு என்று கூறியதை நீங்கள் அறியவில்லையா? நானே அதனைத் தயார்படுத்தினேன்”.

இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிப்பாளர் வரிசையின்றி இச்செய்தியை ஸஹீஹுல் புஹாரியில் 2778வது செய்தியாகப் பதிவு செய்துள்ளார்கள்.

பிறருடைய நலனுக்காகத் தன்னைச் சிறப்பித்துக் கூறிய யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் போன்று தனக்கு ஏற்பட இருக்கின்ற தீங்கைத் தடுப்பதற்காகத் தன்னைச் சிறப்பித்து உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு மனிதன் தீமையைத் தடுத்துக்கொள்ளல் அல்லது, பயனை ஏற்படுத்தல் போன்ற தேவைகளுக்காகத் தன்னைச் சிறப்பித்துப் பேசலாம் என்பதனை மேற்குறித்த செய்தியிலிருந்து புரிந்து கொள்ளலாம். பெருமைக்காகவும் அதிகமதிகமாகவும் புகழ்ந்து கூறுவதே வெறுக்கத்தக்கதாகும்”.

இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “எவனைத் தவிர வணக்கத்துக்குத் தகுதியானவன் வேறு யாரும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள எந்த சூராவாக இருந்தாலும் அது எங்கே இறங்கியது என்பதை நான் அறிவேன். எந்தவொரு வசனமாக இருந்தாலும் அது எது விடயமாக இறக்கப்பட்டது என்பதையும் நான் அறிவேன். அல்லாஹ்வின் வேதத்தைப்பற்றி என்னைவிட அறிந்தவர் வேறு எவரும் இருப்பதாக நான் அறிந்தால் நான் ஒட்டகத்தில் ஏறிச் சென்று அவரை அடைந்து கொள்வேன்”. (புஹாரி, முஸ்லிம்)
இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு மனிதன் தேவையின் போது தனது சிறப்பைக் குறித்தும் தனது அறிவு பற்றியும் பேசலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக உள்ளது. எவர் தேவையின்றி, குறிப்பாக தற்பெருமைக்காகத் தன்னைப் புகழ்ந்து பேசுகின்றாரோ அதுவே தடை செய்யப்பட்டதாகும்”.

மூன்றாவது கவிதை அடி

‎حب الصحابة كلهم لي مذهب ومودة القربى بها أتوسل
“ஸஹாபாக்கள் அனைவரையும் விரும்புவது எனது போக்காகும். நபியுடைய உறவினர்களை நேசிப்பதைக் கொண்டு நான் வஸீலாத் தேடுகின்றேன்”.

விளக்கம்:
ஸஹாபாக்கள் அனைவரையும் விரும்புவது அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் வழிமுறை என்பதை இந்தக் கவிதை அடியில் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அஷ்ஷெய்ஹ் அப்துல்ஹமீத் அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ் அவர்கள் இக்கவிதை வரிக்கு விளக்கமளிக்கும் போது பின்வருமாறு கூறுகின்றார்கள்: “எனது போக்கு ஸஹாபாக்களை விரும்புவதாகும். அவர்களை விரும்புவது என்ற விடயம், வாஜிபையும் அவர்களது சிறப்புக்களை அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் வழியில் நம்பிக்கை கொள்வதையும் வேண்டி நிற்கிறது. விசுவாசியைத் தவிர வேறு யாரும் அவர்களை விரும்பமாட்டார்கள். நயவஞ்சகனைத் தவிர வேறு யாரும் அவர்களை வெறுக்கமாட்டார்கள்”.

அஷ்ஷெய்ஹ் அபூமுஆத் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “ஸஹாபாக்களை விரும்புவது ஈமான் மற்றும் மார்க்கத்தின் அம்சங்களில் ஒன்றாகும். மார்க்க அறிஞர்கள் அதிகூடிய கவனம் செலுத்திய விடயங்களில் ஸஹாபாக்களின் விடயமும் ஒன்றாகும். ஸஹாபாக்களுக்கு காணப்படும் அதிகமான, கண்ணியத்திற்குரிய சிறப்புக்களையும் அவர்களது மகத்தான பண்புகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அந்த அறிஞர்கள் ஸஹாபாக்கள் குறித்துப் பல பகுதிகளை அகீதா நூற்களில் தொகுத்துள்ளனர். ராபிழாக்கள், ஹவாரிஜ்கள் போன்ற அற்பமானவர்களைத் தவிர ஏனைய உம்மத்தினர் யாவரும் இவ்வழியிலேயே சென்றுள்ளனர்”.

அஷ்ஷெய்ஹ் இப்னு ஹிஸாம் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்: “ராபிழாக்களுக்கும் நவாஸிப்களுக்கும் ஒரு மறுப்பை இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இக்கவிதை அடியில் சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஏனெனில், இவ்விரு பிரிவையும் சார்ந்தவர்கள் ஸஹாபாக்களை குறைத்து மதிப்பிடுகின்றனர், அவர்களுக்கு ஏசுகின்றனர். ராபிழாக்கள் அதிகமான ஸஹாபாக்களை வெறுக்கின்றனர். அவர்களில் அபூபக்கர், உமர், உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். மேலும், அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உறவினர்களை நேசிப்பதாகவும் கருதுகின்றனர். நவாஸிப்களைப் பொறுத்தவரையில் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உறவினர்களை வெறுக்கின்றனர். அவர்களுடன் விரோதத்தை நிலைநாட்டுகின்றனர்.

ஸஹாபாக்கள் விடயத்தில் மனிதர்கள் நான்கு வகையான கொள்கையைக் கொண்டிருக்கின்றனர்.
1. ஒரு கூட்டம் ஸஹாபாக்களை காபிர்கள் என்று கூறி வருகின்றது. மேலும் அவர்களுக்கு ஏசி அவர்களைக் குறைத்து மதிப்பிடுகின்றது. இவர்கள் ராபிழாக்களும் ஹவாரிஜ்களுமாவர்.

2. ஒரு கூட்டம் “ஸஹாபாக்களும் மனிதர்கள் நாமும் மனிதர்கள்” என்று கூறி வருகின்றது. ஸஹாபாக்களுக்கும் எமக்கும் மத்தியில் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதையே இவர்கள் இதன் மூலம் நாடுகின்றனர். இக்கருத்தை நவீன முஃதஸிலாக்களாகிய இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தவ்ஹீத் ஜமாஅத்தினரும் கூறி வருகின்றனர். நவீன முஃதஸிலாக்கள் என்பதே இவர்களுக்குத் தகுதியான பெயராகும்.

குர்ஆனை விளங்குவதற்கு ஸஹாபாக்களின் விளக்கம் அவசியமற்றது என்று இவர்கள் கூறுகின்றனர். ஸஹாபாக்கள் எந்த அரபைக் கொண்டு அல்குர்ஆனை விளங்கினார்களோ அந்த அரபையே நாமும் அறிந்திருக்கின்றோம். எனவே, அவர்களது விளக்கம் அவசியமற்றது என்ற நிலைப்பாட்டில் இவர்கள் காணப்படுகின்றனர்.

3. ஒரு கூட்டம் ஸஹாபாக்களுக்கு மார்க்கம் வழங்கிய அந்தஸ்த்து விடயத்தில் எல்லைமீறிச் சென்றுள்ளது. அவர்களுக்காக அறுத்துப் பலியிடக்கூடியவர்களாகவும் அவர்களிடம் துஆச் செய்பவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களே ஸூபியாக்களைச் சேர்ந்த கப்ரு வணங்கிகளாவர்.

4. நான்காவது கூட்டம் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினராவர். ஸஹாபாக்களின் அந்தஸ்த்துக்களையும் சிறப்புக்களையும் அறிந்த இவர்கள், அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவார்கள். அவர்களுக்கு மத்தியில் நடைபெற்ற சண்டை சச்சரவுகளைப்பற்றிப் பேசி அது விடயத்தில் தலையிடாமல் தங்களைத் தடுத்துக் கொள்கின்றனர். இவர்கள் கொண்டிருக்கும் கொள்கையே உண்மையானது.

அதேபோன்று, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது குடும்பத்தார் விடயத்தில் மனிதர்களிடம் மூன்று வகையான கொள்கைகள் காணப்படுகின்றன.

1. ஒரு கூட்டம் அவர்கள் விடயத்தில் எல்லைமீறிச் சென்றுள்ளனது. அவர்கள் ராபிழாக்களும் பாதினிய்யாக்களுமாவர்.

2. ஒரு கூட்டம் அவர்களை குறைத்து மதிப்பிடுகின்றது. அவர்கள் நவாஸிப்களாவர்.

3. ஒரு கூட்டம் மார்க்க அடிப்படையில் அவர்களை நேசிக்கின்றது. அவர்களே அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினராவர்.

ஸஹாபாக்கள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் நிலைப்பாடு

1. ஸஹாபாக்களுக்குரிய சிறப்புக்களை அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினர் நம்பிக்கை கொண்டுள்ளனர். அச்சிறப்புக்களுக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்றும் கருதுகின்றனர். அவர்களுக்குரிய எச்சிறப்பையும் அவர்கள் மறுக்கமாட்டார்கள்.

குர்ஆன், சுன்னாவிலிருந்து ஸஹாபாக்களின் சிறப்புக்களை தெளிவுபடுத்தும் சில ஆதாரங்கள்

1. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்.  அவரோடு இருப்பவர்கள் காபிர்களுடன் கடுமையாகவும் தங்களுக்கு மத்தியில் இரக்கமுடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்களை நீங்கள் ருகூஉ செய்தவர்களாகவும் சுஜூது செய்தவர்களாகவும் காண்பீர்கள். அல்லாஹ்விடம் சிறப்பையும் திருப்பொருத்தையும் அவர்கள் தேடுகின்றனர். அவர்களது அடையாளம் அவர்களது முகங்களில் காணப்படும் சுஜூதின் அடையாளமாகும். அது தவ்றாத்தில் அவர்களுக்குரிய உதாரணமாகும். மேலும், இன்ஜீலிலும் அவர்களுக்குரிய உதாரணமாகும்”. (அல்பத்ஹ்: 29)

2. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “(மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார். (மக்கா) வெற்றிக்குப் பின்பு செலவு செய்து போரிட்டவர்களைவிட அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள். எனினும் அல்லாஹ் எல்லோருக்கும் அழகானதையே வாக்களித்துள்ளான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்”. (அல்ஹதீத்: 10)

3. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “முஹாஜிரீன்களிலும் அன்ஸாரிகளிலும் முதலாவதாக முந்திக் கொண்டவர்கள் இன்னும் அவர்களை நல்ல முறையில் பின்பற்றியவர்கள் ஆகியோரை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு அல்லாஹ் சுவனங்களை தயார்படுத்தி வைத்துள்ளான். அவற்றுக்கீழால் ஆறுகள் ஒடிக்கொண்டிருக்கும். அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருப்பர். அதுவே மகத்தான வெற்றியாகும்”. (அத்தவ்பா: 100)

4. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “விசுவாசிகள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்தபோது உண்மையாகவே அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொண்டான்”. (அல்பத்ஹ்: 18)

5. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “மனிதர்களில் மிகச்சிறந்தவர்கள் எனது நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். பின்பு அவர்களை அடுத்து வருபவர்கள், பின்பு அவர்களை அடுத்து வருபவர்கள்”. (புஹாரி, முஸ்லிம்)

6. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “எனது ஆத்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹத் மலையளவு தங்கத்தால் செலவு செய்த போதிலும் அது எனது தோழர்களில் ஒருவர் செலவு செய்த இரு கையளவுக்கோ, அதன் அரைவாசிக்கோ ஈடாகாது”. (புஹாரி, முஸ்லிம்)

2. அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் ஸஹாபாக்களை விரும்புவார்கள்.
அதற்கான ஆதாரங்களாவன:

1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “அன்ஸாரித் தோழர்களை விசுவாசியைத் தவிர வேறு எவரும் விரும்பமாட்டார். நயவஞ்சகனைத் தவிர வேறு எவரும் வெறுக்கமாட்டார். எவர் அவர்களை விரும்புகின்றாரோ அவரை அல்லாஹ்வும் விரும்புவான். எவர் அவர்களை வெறுக்கின்றாரோ அவரை அல்லாஹ்வும் வெறுக்கின்றான்”. (புஹாரி, முஸ்லிம்)

2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நயவஞ்சகனுடைய அடையாளம் அன்ஸாரித் தோழர்களை வெறுப்பதாகும். விசுவாசியுடைய அடையாளம் அன்ஸாரித் தோழர்களை நேசிப்பதாகும்”. (புஹாரி)

3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்ட மனிதன் அன்ஸாரித் தோழர்களை வெறுக்கமாட்டான்”. (முஸ்லிம்)

3. அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் அவர்களுக்காக துஆச் செய்வார்கள் இன்னும் பாவமன்னிப்பும் தேடுவார்கள்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “(நபித்தோழர்களாகிய) அவர்களுக்குப் பின் வந்தவர்கள், 'எங்கள் இறைவனே! எங்களுக்கும் ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அன்றியும், ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை உள்ளவன்' என்று பிரார்த்திப்பார்கள்”. (அல்ஹஷ்ர்: 10)

4. அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் அவர்களைத் திட்டமாட்டார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “எனது தோழர்களை ஏச வேண்டாம்!” (புஹாரி, முஸ்லிம்)

ஸஹாபாக்களை ஏசுவதின் சட்டம்

இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “ஸஹாபாக்களை ஏசுவதுடன் எவர் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கடவுள் என்று வாதிடுகின்றாரோ அல்லது, அவர்தான் நபியாக வரவேண்டியவர், ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் தூதுத்துவத்தை வழங்குகின்ற விடயத்தில் தவறிழைத்துவிட்டார் என்று கூறிகின்றாரோ அவர் காபிர் என்பதில் சந்தேகமில்லை. மேலும், அவரைக் காபிராகக் கருதாமல் மௌனம் சாய்ப்பவர்களும் காபிர்கள் என்பதில் சந்தேகமில்லை”.
எவர் ஸஹாபாக்களின் நேர்மையையோ, மார்க்கத்தையோ பாதிக்காத விதத்தில் ஏசுகின்றாரோ, உதாரணமாக: அவர்களில் சிலரை கஞ்சத்தனம், கோழைத்தனம், குறைவான அறிவு, பற்றற்ற வாழ்க்கையற்றவர்கள் போன்றவற்றைக் கூறி ஏசினால், அவர் ஒழுக்கமூட்டப்படுவதற்கும், திருத்தப்படுவதற்கும் தகுதியுடையவர் ஆவார். அவர் கூறிய அவ்விடயத்தை வைத்து அவர் காபிர் என்று நாம் தீர்ப்புச் செல்லமாட்டோம்.

பொதுவாகவே, எவர் அவர்களை சபித்து, அவர்களை அசிங்கப்படுத்துகின்றார்களோ, இது அவர்கள் விடயத்தில் ஏற்படக்கூடிய கருத்து வேறுபாட்டிற்குரிய ஓர் இடமாகும். ஏனெனில், இவ்வாறு ஏசுபவர் கோபத்தின் காரணமாக ஏசுகிறாரா? அல்லது, அதனை மனதில் ஏற்று நம்பிக்கை கொண்டவராக ஏசுகிறாரா? என்பதில் தடுமாற்றம் கொள்ளப்படுகின்றது.

எவர் அதனையும் கடந்து, ஸஹாபாக்களில் பத்துக்கும் இருபதுக்கும் இடைப்பட்டவர்களைத் தவிர மற்ற அனைவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்பு மதம் மாறிவிட்டனர் என்று கருதுகின்றாரோ அல்லது, பெரும்பாலான ஸஹாபாக்களை மோசமானவர்கள் என்று வர்ணிக்கிறாரோ, அவர் காபிர் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஏனெனில், ஸஹாபாக்கள் குறித்து அல்குர்ஆனில் பாராட்டிப் பேசப்படக்கூடிய பல ஆதாரங்களை இவர் பொய்ப்பித்தவராவார்.

5. அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் முரண்படாதவிதத்தில் அவர்களைப் பின்பற்றுவார்கள்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “முஹாஜிரீன்களிலும் அன்ஸாரிகளிலும் முதலாவதாக முந்திக் கொண்டவர்கள் இன்னும், அவர்களை நல்ல முறையில் பின்பற்றியவர்கள் ஆகியோரை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு அல்லாஹ் சுவனங்களை தயார்படுத்தி வைத்துள்ளான். அவற்றுக்கீழால் ஆறுகள் ஒடிக்கொண்டிருக்கும். அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருப்பர். அதுவே மகத்தான வெற்றியாகும்”. (அத்தவ்பா: 100)

ஸஹாபாக்கள் குறித்து மார்க்க அறிஞர்களின் கருத்துக்கள்

1.       இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் அடிப்படை அம்சங்களில் ஒன்று, நபித்தோழர்கள் விடயத்தில் அவர்களது உள்ளங்களும் நாவுகளும் ஈடேற்றம் பெற்றிருப்பதாகும்”. (அல்அகீததுல் வாஸிதிய்யா)

2. அபூஜஃபர் அத்தஹாவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “நாம் நபித்தோழர்களை விரும்புகிறோம். அவர்களில் எவரையும் விரும்புவதில் குறை ஏற்படுத்தமாட்டோம். அவர்களில் எவரை விட்டும் நாம் விலகிச் செல்லவும் மாட்டோம். எவர்கள் அவர்களை வெறுக்கின்றார்களோ மேலும், அவர்களைப் பற்றி மோசமானவற்றைக் கூறுகின்றார்களோ அவர்களை நாமும் வெறுக்கிறோம். நல்ல வார்த்தையைக் கொண்டே அன்றி அவர்களைப் பற்றி நாம் பேசமாட்டோம். அவர்களை விரும்புவது மார்க்கமும் ஈமானும் நல்லுபகாரமுமாகும். அவர்களை வெறுப்பது குப்ரும் நயவஞ்சகமும் வரம்புமீறுதலுமாகும்”. (அல்அகீததுத் தஹாவிய்யா)

3. இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “நபித்தோழர்களை நேசிப்பதும் அவர்களை விரும்புவதும் அவர்களது நல்ல விடயங்கள் பற்றிப் பேசுவதும் அவர்கள் மீது இரக்கம் கொள்வதும் அவர்களுக்கு பாவமன்னிப்புத் தேடுவதும் அவர்களது சின்னஞ்சிறு தவறுகளையும், அவர்களுக்கு மத்தியில் இடம்பெற்ற சச்சரவுகளையும்  பேசமால் தடுத்துக்கொள்வதும் அவர்களுக்கு உள்ள சிறப்புக்களை நம்பிக்கை கொள்வதும் அவர்களில் முந்தியவர்களை அறிந்து கொள்வதுமாகிய அனைத்தும் சுன்னாவில் காணப்படும் அம்சங்களாகும்”. (லும்அதுல் இஃதிகாத்)

4. அஸ்ஸாபூனி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “எவர் அவர்களை விரும்புகின்றாரோ மேலும், அவர்களை நேசிக்கின்றாரோ இன்னும், அவர்களுக்காகப் பிரார்த்திக்கின்றாரோ மற்றும், அவர்களது உரிமைகளில் கவனம் செலுத்துகின்றாரோ அத்தோடு, அவர்களது சிறப்புக்களை அறிந்து வைக்கின்றாரோ அவர் வெற்றிபெறக்கூடியவர்களுடன் வெற்றி பெறுவார். எவர் அவர்களை வெறுக்கின்றாரோ மேலும், அவர்களை ஏசுகின்றாரோ இன்னும், ராபிழாக்கள் மற்றும் ஹவாரிஜ்கள் - அல்லாஹ் அவர்களை சபிப்பானாக - அவர்களைக் குற்றம் சுமத்துகின்ற விடயங்களைக் கொண்டு குற்றம் சுமத்துகின்றாரோ அவர் அழிந்துவிடுவோருடன் அழிந்துவிடுவார்”. (அகீததுஸ் ஸலப்)

மேற் குறிப்பிடப்பட்ட கவிதை அடியின் இரண்டாவது பகுதியில் இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "நபியுடைய உறவினர்களை நேசிப்பதைக் கொண்டு நான் வஸீலாத் தேடுகின்றேன்."

இப்னு ஹிஸாம் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உறவினர்களை நேசிப்பது நற்காரியங்களில் ஓர் அம்சமாகும். நற்காரியங்களைக் கொண்டு அல்லாஹ்விடம் வஸீலாத் தேடுவது மார்க்கம் அனுமதித்த வஸீலா முறையாகும்."

இக்கவிதை அடியின் மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது குடும்பத்தாரை நேசிப்பது அவசியம் என்பது மார்க்கம் கூறக்கூடிய ஒரு விடயம் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது குடும்பத்தார் விடயத்தில் மனிதர்கள் கொண்டிருக்கும் கொள்கைகளை முன்பு குறிப்பிட்டிருக்கின்றோம். அவர்களது குடும்பத்தாரை நேசிப்பது மார்க்கத்தில் உள்ள காரியம் என்பதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்தோழர்களைப் பார்த்து: "நான் உங்களுக்கு எனது குடும்பத்தார் விடயத்தில் அல்லாஹ்வை ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன்" என்று மூன்று முறைகள் கூறினார்கள். (முஸ்லிம்)

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: "எனது ஆத்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! எனது குடும்பத்தாருடன் சேர்ந்திருப்பதை விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது குடும்பத்தார் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் ஆவார்கள்." (புஹாரி)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மனைவிமார்களும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "நபியுடைய குடும்பத்தினர்களே! நிச்சயமாக அல்லாஹ் அசுத்தத்தை உங்களை விட்டும் போக்கிவிடவே விரும்புகின்றான். மேலும், உங்களை பரிசுத்தப்படுத்தவும் அவன் விரும்புகின்றான்." (அல்அஹ்ஸாப்: 33)

இவ்வசனம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மனைவிமார் குறித்துப் பேசுகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது குடும்பத்தாருக்கு நாம் செய்ய வேண்டிய உரிமைகளில் மிக மகத்தானது அவர்கள் மீது ஸலவாத் கூறுவதாகும். தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் அவர்கள் மீது ஸலவாத் ஓதுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "நான் வஸீலாத் தேடுகின்றேன்" என்று இக்கவிதை அடியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஏதாவது ஒரு காரியத்தைக் கொண்டு அல்லாஹ்விடம் நெருக்கத்தை தேடுவதையே வஸீலா என்ற வார்த்தையின் மூலம் நாடப்படுகின்றது. இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது குடும்பத்தாரை நேசிப்பதைக் கொண்டு அல்லாஹ்விடம் வஸீலாத் தேடியுள்ளார்கள். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது கும்பத்தாரை நேசிப்பது ஒரு வணக்கமாகும். வணக்க வழிபாடுகள் மற்றும் நற்காரியங்களைக் கொண்டு அல்லாஹ்விடம் வஸீலாத் தேடுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "அவர்கள் எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாம் ஈமான் கொண்டு விட்டோம். எனவே, எங்களுக்கு எமது பாவங்களை மன்னித்தருள்வாயாக! நரக வேதனையை விட்டும் எங்களைக் காப்பாயாக! என்று கூறுவார்கள்." (ஆலுஇம்ரான்: 53)

மூன்று நபர்கள் இரவில் ஒரு குகையில் தஞ்சம் புகுந்தபோது ஒரு பெரிய கல் அவர்களது குகையை மூடிக்கொண்டது. அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர்கள் செய்த நற்காரியங்களை அல்லாஹ்விடம் முன்வைத்து துஆச் செய்தார்கள். அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வஸீலாத் தேடுகின்ற முறைகளில் ஒன்றே அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் கொண்டு வஸீலாத் தேடுவதாகும். மேலும், ஸாலிஹான மனிதர்களது துஆவைக் கொண்டும் வஸீலாத் தேடலாம். வஸீலா பற்றிய விரிவான தகவல்களை அறிந்து கொள்ள இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களது "அத்தவஸ்ஸுல் வல்வஸீலா" என்ற நூலையும் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களது "அத்தவஸ்ஸுல் அன்வாஉஹு வஅஹ்காமுஹு" என்ற நூலையும் பார்க்கவும்.

நான்காவது கவிதை அடி

‎ولكلهم قدر علا وفضائل لكنما الصديق منهم أفضل
அவர்கள் ஒவ்வொருவருக்கும் உயர் அந்தஸ்தும் சிறப்புக்களும் உள்ளன. என்றாலும், அவர்களில் மிகச் சிறந்தவர் ஸித்தீக் ஆவார்.

விளக்கம்

இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இக்கவிதை அடியில் ஸஹாபாக்களுக்கு தனிப்பட்ட விதத்திலும் கூட்டாகவும் அந்தஸ்துக்களும் சிறப்புக்களும் உள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஸஹாபாக்களின் சிறப்புக்கள் இரண்டு வகைப்படும்:

1. தனிப்பட்ட ஒரு ஸஹாபியின் சிறப்பு:

உதாரணம்: அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு, உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு, உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு, அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு, இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் சிறப்பு, அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு, இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு, இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் சிறப்பு.

2. அவர்களில் காணப்பட்ட ஒரு கூட்டத்திற்குரிய சிறப்பு:

உதாரணம்: பத்ர் போரில் கலந்து கொண்டவர்களின் சிறப்பு, உஹத் போரில் கலந்து கொண்டவர்களின் சிறப்பு, பைஅதுர் ரிழ்வானில் கலந்து கொண்டவர்களின் சிறப்பு, இஸ்லாத்திற்கு முந்தியவர்களின் சிறப்பு.

பத்ர் போரில் கலந்து கொண்டவர்களின் சிறப்பு:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் பத்ர் போரில் கலந்து கொண்டவர்களைப் பார்த்து, நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள்! உங்களை நான் மன்னித்து விட்டேன் என்று கூறினான்." (புஹாரி, முஸ்லிம்)

ஹுதைபியா உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களின் சிறப்பு:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் நாடினால், மரத்தடியில் (ஹுதைபியாவில்) உடன்படிக்கை செய்தவர்களில் எவரும் நரகம் நுழையமாட்டார்." (முஸ்லிம்)

மேற்கூறப்பட்ட கவிதை அடியின் இரண்டாவது பகுதியில் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள்: "என்றாலும், அவர்களில் மிகச் சிறந்தவர் ஸித்தீக் ஆவார்" என்று கூறியுள்ளார்கள்.

இவ்வடியின் மூலம் இமாமவர்கள் ஸஹாபாக்களில் மிகவும் சிறந்தவர் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்: "ஸஹாபாக்களில் மிகச் சிறந்தவர் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு, பின்பு உமர் ரழியல்லாஹு அன்ஹு என்பதில் அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினர் உடன்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பின்பு உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும், அதற்குப் பின்பு அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் சிறப்புக்குரியவர்கள் என்று கூறியுள்ளனர்." (ஷர்ஹு முஸ்லிம்)

கூபாவைச் சேர்ந்த அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினர் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை விட அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சிறப்பானவர் என்று கூறியுள்ளனர். ஆனாலும், உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை விட மிகவும் சிறந்தவர் என்பதே பிரசித்தி பெற்ற கருத்தாகும்.

அபூ மன்ஸூர் அல்பக்தாதி ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்: "எமது தோழர்கள் மேற்கூறப்பட்ட ஒழுங்குமுறைப்படி நான்கு கலீபாக்கள் தாம் ஸஹாபாக்களில் மிகவும் சிறப்புக்குரியவர்கள் என்பதில் உடன்பட்டுள்ளனர். பின்பு சுவனத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட ஏனைய ஸஹாபாக்கள், பின்பு பத்ர் போரில் கலந்து கொண்டவர்கள், பின்பு உஹத் போரில் கலந்து கொண்டவர்கள், பின்பு பைஅதுர் ரிழ்வானில் கலந்து கொண்டவர்கள் ஆவார்கள்." (ஷர்ஹு முஸ்லிம்)

ஸஹாபாக்களில் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகவும் சிறப்புக்குரியவர் என்பதற்கான சில ஆதாரங்கள்

1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "எனது உம்மத்திலிருந்து நான் உற்ற தோழன் ஒருவரை எடுத்துக்கொள்வதாக இருந்தால் அபூபக்ரை உற்ற தோழனாக எடுத்திருப்பேன்." (புஹாரி, முஸ்லிம்)

2. இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் நாம் மனிதர்களுக்கு மத்தியில் சிறந்தவர்களைத் தெரிவு செய்யக்கூடியவர்களாக இருந்தோம். எனவே, நாம் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை (முதலாவதாகத்) தெரிவு செய்வோம். பின்பு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தெரிவு செய்வோம். பின்பு உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தெரிவு செய்வோம்." (புஹாரி)

3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண் வந்தாள். அவள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு விடயம் குறித்துப் பேசினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறுபடியும் தம்;மிடம் வருமாறு அவளுக்குக் கட்டளையிட்டார்கள். அவள்: அல்லாஹ்வின் தூதரே! நான் வந்து உங்களைக் காணவில்லையென்றால், (என்ன செய்வது?)" எனக் கேட்டாள். அதற்கவர்கள் :நீங்கள் என்னைக் காணாவிட்டால் அபூபக்ரிடம் செல்லுங்கள் என்று கூறினார்கள்." (புஹாரி, முஸ்லிம்)

4. அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: "நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மனிதர்களில் உங்களுக்கு மிகவும் விருப்பமானவர் யார்? எனக் கேட்டேன். அதற்கவர்கள் ஆஇஷா என்று கூறினார்கள். பின்பு ஆண்களில் மிகவும் விருப்பமானவர் யார்? எனக் கேட்டேன். அதற்கவர்கள் அவளுடைய தந்தை என பதிலளித்தார்கள். பின்பு யார்? என நான் கேட்டேன். அதற்கவர்கள் சில மனிதர்களைக் கூறிக்கொண்டிருந்தார்கள்." (புஹாரி, முஸ்லிம்)

5. இப்னுல் ஹனபிய்யா என்பவர் கூறுகின்றார்: "நான் எனது தந்தை (அலி இப்னு அபீதாலிப்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதருக்குப் பின்பு மனிதர்களில் மிகவும் சிறந்தவர் யார்? எனக் கேட்டேன். அதற்கவர்கள்: அபூபக்ர் என பதிலளித்தார்கள். பின்பு யார்? எனக் கேட்டேன். அதற்கவர்கள்: உமர் என்று கூறினார்கள். அவர் உஸ்மான் என்று கூறுவாரோ என நான் பயந்தேன். பின்பு (சிறந்தவர்) நீங்களா? என நான் கேட்டேன். அதற்கவர்கள் :நான் முஸ்லிம்களில் ஒருவனாகவே தவிர வேறு இல்லை என்று பதிலளித்தார்கள்." (புஹாரி)

சந்தேகமும் தெளிவும்

ராபிதாக்கள் ஸஹாபாக்களை குறை கூறுவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நீர் தடாகம் குறித்து வரக்கூடிய ஹதீஸ்களை ஆதாரமாகக் கூறுகின்றனர்.
அந்த ஹதீஸ்களில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது.

சில மனிதர்கள் அந்த நீர் தடாகத்தை விட்டும் அப்புறப்படுத்தப்படுவார்கள். அதைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் :இவர்கள் என்னுடைய தோழர்கள் எனக்கூறுவார்கள். மற்றொரு அறிவிப்பில் :இவர்கள் என்னுடைய உம்மத்தினர் என்று கூறுவார்கள் என இடம்பெற்றுள்ளது. அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இவர்கள் உமக்குப் பின்னால் மார்க்கத்தில் புதிதாக உருவாக்கியவைகள் உமக்குத் தெரியாது என்று கூறப்படும்.

மார்க்க அறிஞர்கள் இந்த சந்தேகத்திற்கு மூன்று வகையான பதில்களைக் கூறியுள்ளனர்.

1. இந்த ஹதீஸில் கூறப்பட்டவர்கள் மதம் மாறிய நயவஞ்சகர்கள்.

2. இந்த ஹதீஸில் கூறப்பட்டவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் வாழ்ந்து பின்பு அவருக்குப் பின்பு மதம் மாறியவர்கள்.

3. இவர்களைப் பொறுத்தவரையில் பெரும்பாவங்களிலும் பித்அத்களிலும் ஈடுபட்டவர்கள். இவர்களது பித்அத்கள் இவர்களை குப்ருக்கு இட்டுச் செல்லவில்லை. அவர்களுக்கு தண்டனையாக அவர்கள் அந்த நீர் தடாகத்தை விட்டும் தூரப்படுத்தப்படுவார்கள். பின்பு அவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவான்.  அதன் காரணமாக அவர்களை அல்லாஹ் சுவனத்தில் நுழைவிப்பான். (ஷர்ஹு ஸஹீஹ் முஸ்லிம்)

- இன்ஷா அல்லாஹ் தொடரும்.
Previous Post Next Post