செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவம், கணக்கியல், சட்டம், ஷரீஆ போன்ற துறைகளில் நிபுணர்களின் "ஏகபோகத்தை" (Monopoly) இது நீக்கும் என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால், மார்க்க விடயங்களில், குறிப்பாக ஃபத்வா போன்ற புனிதமான மற்றும் நுட்பமான விவகாரங்களில் AI-ஐ முழுமையாக நம்புவது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், ஃபத்வா வழங்குவதற்குத் தேவையான அடிப்படைத் தகுதிகள் AI-க்கு இல்லை.
*ஃபத்வா வழங்குபவரின் (முஃப்தி) அத்தியாவசியத் தகுதிகள்*
ஒரு ஃபத்வாவை வழங்குவதற்கு இஸ்லாத்தில் பல கடுமையான நிபந்தனைகள் உள்ளன. இந்த நிபந்தனைகள் AI-ஆல் ஒருபோதும் பூர்த்தி செய்ய முடியாதவை.
1. ஆழமான மார்க்க அறிவும் புரிதலும்:
ஃபத்வா வழங்குபவருக்கு இஸ்லாமிய ஷரீஆ, குர்ஆன், ஹதீஸ், அரபு மொழி, இஸ்லாமிய வரலாறு, ஃபிக்ஹ் (இஸ்லாமியச் சட்டம்) மற்றும் சமூகச் சூழ்நிலைகள் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவு இருக்க வேண்டும். இந்த அறிவு வெறும் தரவுத் தொகுப்பு அல்ல, அது பல வருடங்கள் கடினமான கற்றல் மற்றும் பயிற்சியின் விளைவாகும். AI-க்கு இந்த ஆழமான புரிதல் கிடையாது. அது வெறும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு புள்ளியியல் மற்றும் கணித வழியில் பதில்களை உருவாக்குகிறது.
2. மனித நேயமும் நுண்ணறிவும்:
ஒரு முஃப்தி தனிப்பட்ட நபரின் சூழ்நிலைகள், பழக்கவழக்கங்கள், தேவைகள் மற்றும் வரம்புகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப ஃபத்வாவை வழங்குவார். இந்த மனித நேயமும், ஒரு சூழ்நிலையின் நுட்பமான காரணிகளைக் கருத்தில் கொள்ளும் திறனும் AI-க்கு இல்லை. இது ஃபத்வாவின் உள்ளடக்கத்தை முழுமையாகப் பாதிக்கக்கூடிய ஒரு முக்கியமான அம்சமாகும்.
3. நம்பகத்தன்மை மற்றும் "AI Hallucinations":
AI-யால் உருவாக்கப்படும் பதில்கள், அதன் மூலங்கள் தெரியாத அல்லது தவறான தகவல்களில் இருந்து பெறப்பட்டிருக்கலாம். மேலும், இது ஒரு குறிப்பிட்ட கருத்துக்கு சார்பாக இருக்கலாம் அல்லது உண்மைக்குப் புறம்பான தகவல்களை "கற்பனை" செய்து உருவாக்கும் (AI Hallucinations). AI ஷரீஆ நூல்களில் இருப்பதாகக் கூறும் பல தகவல்கள் அந்த நூல்களிலோ, குறிப்பிட்ட பக்கங்களிலோ துல்லியமாக இருப்பதில்லை. பல தகவல்கள் இடம் மாறி, அல்லது ஒரு இமாம் கூறியதாக வழங்கியிருக்கும் உண்மையான நூலில் தேடிப் பார்த்தால், அங்கு அவ்வாறு எதுவும் பெரும்பாலும் இருக்காது.
*AI மற்றும் கூகுள் மூலம் மார்க்கம் கற்போரின் நிலை*
மார்க்கத்தைப் பற்றி சிறிதும் அறிவில்லாத சிலர், AI-ஐ முழுமையாக நம்பி மார்க்கத்தைக் கற்கலாம் என்று கிளம்பியிருப்பது حاطب الليل (இரவில் விறகு புறக்குபவர்) போன்ற ஒரு நிலைதான். இரவில் விறகு புறக்குபவர் விறகு என நினைத்து விஷப் பாம்பையும் எடுத்துச் செல்ல வாய்ப்பு உள்ளது. அதேபோல, ஒன்றுமே தெரியாமல் AI மற்றும் கூகுள் மூலம் மார்க்கம் கற்பவர்களின் நிலை ஆபத்தானதே. குறைந்தது ஒரு விடயம் பற்றி ஓரளவேனும் தெரிந்திருந்தால் தான், AI-இல் கிடைக்கும் தகவல்கள் சரியா, பிழையா என்பதையாவது கண்டுகொள்ள முடியும்.
*AI-ஐ எவ்வாறு சரியாகப் பயன்படுத்தலாம்?*
ஃபத்வாக்களுக்கு AI-ஐ நம்பிச் செயல்படுவது அனுமதிக்கப்படாது என்றாலும், சில குறிப்பிட்ட வழிகளில் அதை ஒரு பயனுள்ள கருவியாகப் பயன்படுத்தலாம்.
1. அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள்:
பொதுவாக அறிஞர்களும், ஆய்வாளர்களும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் குறித்த தகவல்களைத் திரட்டவும், புத்தகங்களின் சுருக்கங்களைப் பெறவும் அல்லது ஆய்வுக்கான மூலங்களைக் கண்டறியவும் AI-ஐப் பயன்படுத்தலாம். இது நேரத்தையும் உழைப்பையும் மீதப்படுத்தும். இருப்பினும், அவர்கள் AI வழங்கும் தகவல்களின் உண்மைத்தன்மையை மூல ஆதாரங்களுக்கே சென்று சரிபார்க்க வேண்டும்.
2. பொதுவான முஸ்லிம்கள்:
சாதாரண மக்கள் AI-ஐ ஒரு தலைப்பு பற்றி பொதுவான அறிவைப் பெறுவதற்கோ அல்லது சில அம்சங்களைப் புரிந்துகொள்வதற்கோ பயன்படுத்தலாம். ஆனால், அதை ஒரு நம்பகமான ஃபத்வாவாகக் கருதி செயல்படுவது அனுமதிப்பது கூடாது. அதற்குப் பதிலாக, ஃபத்வாக்களைப் பெறுவதற்கு நம்பகமான அறிஞர்களையே அணுக வேண்டும். நீங்கள் ஒரு மார்க்க காரியத்தைப் பற்றி அறியும் போது, யாரிடம் இருந்து உங்கள் மார்க்கத்தை கற்றுக்கொள்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுருக்கமாக கூறுவதாயின் AI ஒரு கருவி மட்டுமே, இது மார்க்கத்தை விளக்கும் அல்லது கற்பிக்கும் இடமோ, தலமோ அல்ல. இஸ்லாத்தில் ஃபத்வா வழங்குவது ஒரு மிகவும் முக்கியமான பாரதூரமான விடயம், இது அல்லாஹ்வுக்காக மக்களை வழிநடத்துவதற்கு ஒத்தது என்று கருதப்படுகிறது. எனவே, பத்வாவின் போது இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களை நாடுவதே சரியான வழி.
அல்லாஹ் அனைவரையும் என்றும் நெறி பிறழாது நேரான வழியில் இட்டுச் செல்வானாக!
_ Azhan Haneefa