அத்தியாயம் 12 ஜகாத்

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 12
ஜகாத்

1780. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தானியங்களில்) ஐந்து "வஸ்க்"குகளை விடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை; (கால்நடைகளில்) ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. (வெள்ளியில்) ஐந்து "ஊக்கியா"க்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1781. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மேற்கண்டவாறு) கூறியதை நான் கேட்டேன். அப்போது அவர்கள் தம்முடைய ஐந்து விரல்களால் சைகை செய்தார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. பிறகு மேற்கண்ட ஹதீஸில் உள்ள விவரங்களைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 12
1782. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தானியங்களில்) ஐந்து "வஸ்க்"குகளை விடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை; (கால்நடைகளில்) ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. (வெள்ளி யில்) ஐந்து "ஊக்கியா"க்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1783. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரீச்சம் பழத்திலும் தானியத்திலும் ஐந்து "வஸ்க்"குகளைவிடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1784. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தானியத்திலும் பேரீச்சம் பழத்திலும் ஐந்து "வஸ்க்"குகளை எட்டாதவரை ஸகாத் இல்லை; ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. (வெள்ளியில்) ஐந்து "ஊக்கியா"க்களைவிடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும், அவற்றில் "பேரீச்சம் பழம்" (தம்ர்) என்பதற்கு பதிலாக "பழம்" (ஸமர்) என்று (பொதுவாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1785. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளியில் ஐந்து "ஊக்கியா"க்களைவிடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை. பேரீச்சம் பழத்தில் ஐந்து "வஸ்க்" குகளை விடக் குறைவானவற்றில் ஸகாத் இல்லை.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
அத்தியாயம் : 12
பாடம் : 1 பத்திலொரு பாகம், அல்லது அதில் பாதி கடமையாகும் ஸகாத்.
1786. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நதிகளாலும் மழையாலும் முளைத்தவற்றில் பத்து சதவீதம் (ஸகாத் கடமை) ஆகும். ஒட்டகத்தின் மூலம் நீர் பாய்ச்சி முளைத்தவற்றில் ஐந்து சதவீதம் (ஸகாத் கடமை) ஆகும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 2 ஒரு முஸ்லிம் தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை.
1787. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமின் அடிமைக்காகவோ குதிரைக்காகவோ அவர்மீது (ஸகாத் கடமை) இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1788. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமின் அடிமைக்காகவோ குதிரைக்காகவோ அவர்மீது (ஸகாத் கடமை) இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1789. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடிமைக்காக (உரிமையாளன்மீது) ஸகாத் (கடமை) இல்லை; நோன்புப் பெருநாள் தர்மத்தைத் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 3 (ஓராண்டு முழுமை அடைவதற்கு முன்பே) ஸகாத் வழங்குவதும் ஸகாத் வழங்க மறுப்பதும்.
1790. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் வசூலிப்பதற்காக உமர் (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அப்போது "இப்னு ஜமீல்,காலித் பின் அல்வலீத் மற்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) ஆகியோர் (ஸகாத் வழங்க) மறுத்துவிட்டனர்" என்று கூறப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இப்னு ஜமீல் ஏழையாக இருந்து, அல்லாஹ் அவரைச் செல்வ(ந்த)ராக ஆக்கிய பிறகே அவர் (ஸகாத் வழங்க) மறுத்துள்ளார். காலிதைப் பொறுத்தவரை, நீங்கள் காலிதுக்கு அநீதி இழைக்கின்றீர்கள். அவரோ தம் கவசஉடைகளையும் போர்த்தளவாடங்களையும் அல்லாஹ்வின் பாதையில் (அறக்கொடையாக) வழங்க முடிவு செய்திருந்தார். அப்பாஸ் அவர்களைப் பொறுத்தவரையில் அவரது ஸகாத்தையும் அதைப்போன்ற இன்னொரு மடங்கையும் வழங்குவது என்மீது பொறுப்பாகும். உமரே! ஒருவருடைய தந்தையின் சகோதரர் அவருடைய தந்தையைப் போன்றவர் ஆவார் என்பது உமக்குத் தெரியாதா?" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 4 நோன்புப் பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், தோல் நீக்கப்படாத கோதுமை ஆகியவற்றை வழங்குவது முஸ்லிம்கள் மீது கடமையாகும்.
1791. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்களில் சுதந்திரமானவர்கள், அடிமைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய அனைவர் மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு "ஸாஉ" அல்லது தோல் நீக்கப்படாத (வாற்) கோதுமையில் ஒரு "ஸாஉ" (ஏழைகளுக்கு வழங்குவது கடமையாகும்) என ரமளான் நோன்புப் பெருநாள் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு நிர்ணயித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1792. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அடிமைகள், சுதந்திரமானவர்கள் ஆகியோரில் சிறியவர், பெரியவர் அனைவர்மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு "ஸாஉ" அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு "ஸாஉ" (ஏழைகளுக்கு வழங்குவது கடமையாகும்) என நோன்புப் பெருநாள் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1793. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சுதந்திரமானவர்கள், அடிமைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவர்மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு "ஸாஉ" அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு "ஸாஉ" (ஏழைகளுக்கு வழங்குவது கடமையாகும்) என ரமளான் தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். பிறகு மக்கள் (தோல் நீக்கப்பட்ட) மணிக்கோதுமையில் அரை "ஸாஉ"வை அதற்குச் சமமாக ஆக்கினர்.
அத்தியாயம் : 12
1794. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு "ஸாஉ" பேரீச்சம்பழத்தையோ அல்லது ஒரு "ஸாஉ" தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கும்படி கட்டளையிட்டார்கள்.
மக்கள் ஒரு "ஸாஉ" தோல் நீக்கப்படாத கோதுமைக்குச் சமமாக இரண்டு "முத்"து (அரை "ஸாஉ") தோல் நீக்கப்பட்ட (மணிக்) கோதுமையை ஆக்கிக்கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1795. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்களில் சுதந்திரமானவர்கள், அடிமைகள், ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் ஆகிய அனைவர் மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு "ஸாஉ" அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு "ஸாஉ" (ஏழைகளுக்கு வழங்குவது கடமையாகும்) என ரமளான் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.
அத்தியாயம் : 12
1796. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஏதேனும் உணவிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது உலர்ந்த திராட்சையிலிருந்து ஒரு "ஸாஉ" வழங்கிவந்தோம்.
அத்தியாயம் : 12
1797. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை என அனைவருக்காகவும் நாங்கள் ஏதேனும் உணவிலிருந்து ஒரு ஸாஉ, அல்லது பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது உலர்ந்த திராட்சையிலிருந்து ஒரு "ஸாஉ" நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கிவந்தோம். முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராவிற்காக எங்களிடம் வரும்வரையில் இவ்வாறே நாங்கள் வழங்கிவந்தோம். முஆவியா (ரலி) அவர்கள் (எங்களிடம் வந்ததும்) சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் மக்களுக்கு ஆற்றிய உரையில் "ஷாம் (சிரியா) பகுதியின் தோல் நீக்கப்பட்ட (மணிக்) கோதுமையில் இரு "முத்"துகள், பேரீச்சம் பழத்தின் ஒரு "ஸாஉ"க்கு நிகரானதாகும் என நான் கருதுகிறேன்" என்று குறிப்பிட்டார்கள். மக்கள் அதைப் பிடித்துக்கொண்டனர்.
நானோ (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) வழங்கியதைப் போன்றே நான் உயிர் வாழும்வரை வழங்கிக்கொண்டிருப்பேன்.
அத்தியாயம் : 12
1798. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை என அனைவருக்காகவும் பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு "ஸாஉ", பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு "ஸாஉ", தோல் நீக்கப்படாத (வாற்) கோதுமையிலிருந்து ஒரு "ஸாஉ" ஆகிய மூன்று இனங்களிலிருந்து நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கிவந்தோம். முஆவியா (ரலி) அவர்கள் வரும்வரையில் இவ்வாறே வழங்கிவந்தோம். பிறகு முஆவியா (ரலி) அவர்கள் தோல் நீக்கப்பட்ட (மணிக்) கோதுமையிலிருந்து இரு "முத்"து, ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழத்திற்கு ஈடானதாகும் என்று கருதினார்கள்.
நானோ (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) வழங்கியதைப் போன்றே வழங்கிக் கொண்டிருப்பேன்.
அத்தியாயம் : 12
1799. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் பாலாடைக்கட்டி, பேரீச்சம் பழம், தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமை ஆகிய மூன்று இனங்களிலிருந்தே நோன்புப் பெருநாள் தர்மத்தை வழங்கிவந்தோம்.
அத்தியாயம் : 12
1800. இயாள் பின் அப்தில்லாஹ் பின் அபீசர்ஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் தோல் நீக்கப்பட்ட அரை "ஸாஉ" (மணிக்)கோதுமையை ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்திற்கு ஈடாக்கியபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அதை ஆட்சேபித்தார்கள். "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வழங்கி வந்ததைப் போன்று பேரீச்சம்பழத்தில் ஒரு "ஸாஉ", அல்லது உலர்ந்த திராட்சையில் ஒரு "ஸாஉ", அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு "ஸாஉ", அல்லது பாலாடைக்கட்டியில் ஒரு "ஸாஉ"வைத் தவிர வேறெதையும் நோன்புப்பெருநாள் தர்மமாக வழங்கமாட்டேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 5 பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்கிடுமாறு வந்துள்ள கட்டளை.
1801. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் பெருநாள் தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன்பே நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 12
1802. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் பெருநாள் தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன்பே நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 6 ஸகாத் வழங்க மறுப்பது குற்றம்.
1803. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித்தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகங்களின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறை வேற்றாவிட்டால் - தண்ணீர் புகட்டும் நாளில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும் அவற்றுக்குரிய கடமைகளில் ஒன்றாகும்- மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஒட்டகங்களில் பால்குடி மறந்த குட்டி உள்பட ஒன்றுகூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால் குளம்புகளால் மிதிக்கும்; வாயால் கடிக்கும். அவற்றில் கடைசி ஒட்டகம் மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர்மீது ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஆடு, மாடுகளின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஆடு, மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்ற வில்லையாயின் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். கொம்பு வளைந்த,கொம்பு இல்லாத, காதுகள் கிழிக்கப்பட்ட அவருடைய ஆடு, மாடுகள் ஒன்றுவிடாமல் வந்து அவரை முட்டித்தள்ளும்; காலால் அவரை மிதிக்கும். அவற்றில் கடைசிப் பிராணி அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலில் சென்ற பிராணி அவர் மீது ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் (நிலை என்ன)?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "குதிரை மூன்று வகையாகும். அது ஒரு மனிதருக்குப் பாவச்சுமையாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும்;இன்னொரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தருவதாகும்:
குதிரை பாவச்சுமையாக மாறும் மனிதன் யாரெனில், பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் இஸ்லாமியருடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதை வைத்துப் பராமரித்துவந்த மனிதன் ஆவான். அது அவனுக்குப் பாவச்சுமையாகும்.
குதிரை (பொருளாதாரப்) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், அவர் அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காகக் கட்டிவைத்திருந்தார். பிறகு அதனுடைய பிடரியின் (பராமரிப்பின்) விஷயத்திலும், (அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கிவைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்ற) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு அந்தக் குதிரை பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும்.
குதிரை நற்பலனைப் பெற்றுத்தரக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், இஸ்லாமியருக்காக இறைவழியில் அதைப் பசும்புல் வெளியில் கட்டிவைத்துப் பராமரித்துவந்தவர் ஆவார். எந்த அளவிற்கு "அந்தப் பசும்புல் வெளியில்" அல்லது "அந்தத் தோட்டத்தில்" அது மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அதன் கெட்டிச் சாணம், சிறுநீர் ஆகியவற்றின் அளவிற்கு அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அது தன் நீண்ட கயிற்றினைத் துண்டித்துக் கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச்சுவடுகள், கெட்டிச் சாணங்கள் அளவிற்கு நன்மைகளை அவருக்கு இறைவன் எழுதாமலிருப்பதில்லை. அதன் உரிமையாளரான அந்த மனிதர் அதை ஓட்டிக்கொண்டு ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அவருக்கு இல்லாமலிருந்தாலும் அது குடித்த தண்ணீரின் அளவிற்கு அவருக்கு அல்லாஹ் நன்மைகளை எழுதாமல் இருப்பதில்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே, கழுதைகளின் நிலை என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், கழுதைகள் குறித்து எந்தக் கட்டளையும் எனக்கு அருளப்பெறவில்லை; "எவர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்" எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7,8) வசனங்களைத் தவிர" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 12
1804. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அதில், "ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாவிட்டால்" என்று இடம்பெற்றுள்ளது. "அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை" என்று இடம்பெறவிவ்லை.
மேலும், இந்த அறிவிப்பில் "அந்த ஒட்டகங்களின் பால்குடி மறந்த குட்டிகள்கூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால் குளம்புகளால் மிதிக்கும்" எனும் குறிப்பு இடம் பெற்றுள்ளது. "அவருடைய இரு விலாப்புறங்களிலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும்" எனவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1805. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பொன், வெள்ளி போன்ற) கருவூலச் செல்வங்களைச் சேகரித்துவைத்திருக்கும் ஒருவர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையாயின், மறுமை நாளில் அவற்றை நரக நெருப்பில் இட்டு, உருக்கி, உலோகப்பாளங்களாக மாற்றி,அவருடைய விலாப்புறங்களிலும், நெற்றியிலும் சூடு போடப்படும். இறுதியில் அல்லாஹ் தன் அடியார்களிடையே ஒரு நாளில் -அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்- தீர்ப்பளிப்பான். பிறகு அவர் தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையைக் காண்பார்.
ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையாயின், (மறுமை நாளில்) அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அவ்வொட்டகங்கள் முன்பிருந்ததைவிட மிகவும் கொழுத்தவையாக மாறி, அவர்மீது ஏறிக் குதித்தோடும். அவ்வொட்டகங்களில் கடைசி ஒட்டகம் அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர்மீது ஏவிவிடப்படும். இறுதியில் அல்லாஹ் தன் அடியார்களிடையே ஒரு நாளில் -அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்- தீர்ப்பளிப்பான். பிறகு அவர் தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையைக் காண்பார்.
ஆடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையாயின் (மறுமை நாளில்) அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஆடுகள் முன்பிருந்ததைவிட மிகவும் கொழுத்தவையாக மாறி, அவர்மீது ஏறி,குளம்புகளால் அவரை மிதிக்கும்; கொம்புகளால் அவரை முட்டும். அவற்றில் கொம்புகள் வளைந்தவையும் இருக்காது;கொம்புகளற்றவையும் இருக்காது. அவற்றில் இறுதி ஆடு அவரைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலாவது ஆடு அவர்மீது ஏவிவிடப்படும். இறுதியில் அல்லாஹ் தன் அடியார்களிடையே ஒரு நாளில் -அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு நீங்கள் எண்ணிக் கணக்கிடும் நாட்களில் ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்- தீர்ப்பளிப்பான். பிறகு அவர் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை,அல்லது நரகத்தின் பாதையைக் காண்பார்
-இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஹைல் பின் அபீஸாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த என் தந்தை அபூஸாலிஹ்-ரஹ்) அவர்கள் மாட்டைப் பற்றிக் குறிப்பிட்டார்களா, இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.-
அப்போது மக்கள் "குதிரைகள் (நிலை என்ன) அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குதிரைகளின் பிடரிகளில் மறுமை நாள்வரை நன்மைகள் பிணைக்கப்பட்டுள்ளன. குதிரை மூன்று வகையாகும்:
அது ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தருவதாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதாரப்) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச்சுமையாகும்.
குதிரை நற்பலனைப் பெற்றுத் தரக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், இறைவழியில் பயன்படுத்துவதற்காக முன்னேற்பாடாக அதை வைத்திருப்பவர் ஆவார். அதன் வயிற்றுக்குள் எந்தத் தீவணம் சென்றாலும் அதற்காக அவருக்கு அல்லாஹ் நன்மையை எழுதாமல் இருப்பதில்லை. அதை அவர் ஒரு பசும்புல் வெளியில் மேயவிட்டால், அது எந்த ஒன்றைத் தின்றாலும் அதற்காக அல்லாஹ் அவருக்கு ஒரு நன்மையை எழுதாமலிருப்ப தில்லை. ஓர் ஆற்றிலிருந்து அதற்கு அவர் நீர் புகட்டினால், அதன் வயிற்றினுள் செல்லும் ஒவ்வொரு துளி நீருக்காகவும் அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். (அதன் சிறுநீர், சாணம் ஆகியவற்றுக்காகக்கூட அவருக்கு நன்மைகள் எழுதப்படும் என்றும் குறிப்பிட்டார்கள்.) அது ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அது எடுத்து வைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் அவருக்கு ஒரு நன்மை உண்டு.
குதிரை (பொருளாதாரப்) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், அதை அந்தஸ்திற்காகவும் அலங்காரத்திற்காகவும் வைத்திருப்பவர் ஆவார். ஆயினும், இன்பத்திலும் துன்பத்திலும் (அதனால் தாங்க இயலும் சுமையை மட்டுமே சுமத்துவதிலும், அதன் பசியைத் தணிப்பதிலும்) அதன் முதுகு மற்றும் வயிற்றின் உரிமையை அவர் மறக்காதவர் ஆவார்.
குதிரை பாவச்சுமையாக மாறும் மனிதன் யாரெனில், கர்வம், செருக்கு, அகம்பாவம், மக்களிடம் காட்டிக்கொள்ளல் ஆகிய (குறுகிய) நோக்கங்களுக்காக அதை வைத்திருக்கும் மனிதன் ஆவான். அவனுக்கே அது பாவச்சுமையாகும்" என்று கூறினார்கள்.
மக்கள், "அல்லாஹ்வின் தூதரே, கழுதையின் நிலை என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "கழுதைகள் குறித்து எந்தக் கட்டளையையும் அல்லாஹ் எனக்கு அருளவில்லை; "எவர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்" எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7,8) வசனங்களைத் தவிர" என்று சொன்னார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "கொம்புகள் வளைந்தவை" (அக்ஸா) என்பதற்கு பதிலாக "காது கிழிக்கப்பட்டவை" (அள்பா) என்று இடம்பெற்றுள்ளது.
மேலும் "அவருடைய விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும்" என்று இடம் பெற்றுள்ளது. "அவருடைய நெற்றியிலும்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் தம் ஒட்டகங்களில் "இறைவனுக்குரிய உரிமையை" அல்லது "தர்மத்தை" நிறவேற்றாவிடில்" என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 12
1806. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமைகளைச் செய்யாமல் இருந்தால், மறுமை நாளில் அவை, முன்பு ஒருபோதும் இருந்திராத அளவிற்குக் கொழுத்த நிலையில் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்காருவார். அந்த ஒட்டகங்கள் குதித்தோடி வந்து தம் கால்களால் அவரை மிதிக்கும்.
மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமைகளைச் செய்யாமல் இருந்தால், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெருத்த நிலையில் அவரிடம் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்காருவார். அந்த மாடுகள் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும்; கால்களால் மிதிக்கும். அவ்வாறே ஆடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையைச் செய்யாமலிருந்தால், அவை முன்பு இருந்ததைவிடப் பெரியவையாக மறுமை நாளில் வரும். அவற்றுக்காக அவர் விசாலமானதொரு மைதானத்தில் அமர்வார். அவை தம் கொம்புகளால் அவரை முட்டும்; கால்குளம்புகளால் மிதிக்கும். அந்த ஆடுகளில் கொம்பற்றவையோ கொம்பு முறிந்தவையோ இருக்காது.
(பொன், வெள்ளி போன்ற) கருவூலச் செல்வங்களை உடையவர் அவற்றுக்கான கடமைகளைச் செய்யாமலிருந்தால், அவருடைய செல்வங்கள் மறுமைநாளில் கொடிய நஞ்சுடைய பெரிய பாம்பாக மாறி, தனது வாயைத் திறந்தநிலையில் அவரைப் பின்தொடரும். அவரிடம் அது வந்ததும் அவர் அங்கிருந்து வெருண்டோடுவார். அப்போது "நீ சேமித்துவைத்த உனது கருவூலத்தை நீயே எடுத்துக்கொள். அது எனக்கு வேண்டாம்" என்று அது அவரை அழைத்துக் கூறும். அதனிடமிருந்து தம்மால் தப்பமுடியாது என்று அவர் அறியும் போது, தமது கையை அதன் வாய்க்குள் நுழைப்பார். அது அவரது கையை ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிக்கும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த ஹதீஸை உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றேன். பிறகு ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, அவர்களும் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதைப் போன்றே அறிவித்தார்கள்.
உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகங்களுக்குரிய கடமை என்ன?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தண்ணீர் புகட்டும் நாளில் அவற்றில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும், அவற்றின் வாளியை இரவலாக வழங்குவதும், பொலி ஒட்டகங்களை இரவல் தருவதும், அ(தன் பால், உரோமம் ஆகிய)வற்றைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவற்றை அன்பளிப்பாக வழங்குவதும், அல்லாஹ்வின் பாதையில் அவற்றின் மீது சுமைகளை ஏற்றுவதும் ஆகும்" என்று கூறினார்கள்" என இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1807. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "ஒட்டகம், மாடு, ஆடு ஆகிய கால்நடைகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் உட்காரவைக்கப்படுவார். அப்போது கால்குளம்புகள் உடையவை தம் கால்குளம்புகளால் அவரை மிதிக்கும்; கொம்புடையவை தமது கொம்பால் அவரை முட்டித் தள்ளும். அன்றைய தினம் அவற்றுக்கிடையே கொம்புகளற்றவையும் இருக்காது; கொம்புகள் முறிந்தவையும் இராது" என்று கூறினார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவற்றுக்குரிய கடமைகள் என்ன?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "பொலி ஒட்டகங்களை இரவலாக வழங்குவதும், அவற்றின் வாளியை இரவலாகக் கொடுப்பதும், அவற்றிலிருந்து பால் கறந்துகொள்வதற்கு(ம் உரோமத்தை எடுத்துக்கொள்வதற்கும்) அனபளிப்பாக வழங்குவதும், தண்ணீர் புகட்டும் நாளில் அவற்றிலிருந்து பால் கறந்து ஏழைகளுக்கு அளிப்பதும், அல்லாஹ்வின் பாதையில் அவற்றின் மீது சுமைகளை ஏற்றுவதும் ஆகும்" என்று கூறினார்கள்.
மேலும், "(பொன், வெள்ளி, பணம் உள்ளிட்ட) செல்வங்களை உடையவர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றாவிட்டால், மறுமை நாளில் அவை கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறி தம்மவரை எங்கு சென்றாலும் விடாமல் பின்தொடரும். அப்போது "இதுதான் நீ கருமித்தனம் செய்து (சேர்த்து)வந்த உனது செல்வம்" என்று கூறப்படும். அவர் அதனிடமிருந்து வெருண்டோடுவார். அதனிடமிருந்து தம்மால் தப்பமுடியாது என்று அவர் காணும் போது, தமது கரத்தை அவர் அதன் வாய்க்குள் வைப்பார். ஒட்டகம் கடிப்பதைப் போன்று அது அவரது கரத்தைக் கடிக்க ஆரம்பிக்கும்.
அத்தியாயம் : 12
பாடம் : 7 ஸகாத் வசூலிப்பவர்களிடம் பொருத்தமாக நடந்துகொள்ளல்.
1808. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சில கிராமவாசிகள் வந்து, "எங்களிடம் ஸகாத் வசூலிக்க வருபவர்களில் சிலர் எங்களிடம் வரம்புமீறி நடந்துகொள்கிறார்கள்" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களிடம் ஸகாத் வசூலிக்க வருபவர்களை (அவர்களது கடமையைச் செய்ய ஒத்துழைத்து) திருப்தியடையச் செய்யுங்கள்" என்று (மக்களிடம்) கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் கேட்டதுமுதல், என்னிடம் ஸகாத் வசூலிக்க வந்த எவரும் என்னைக் குறித்து திருப்தி கொள்ளாமல் திரும்பிச் சென்றதில்லை.
- ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 8 ஸகாத் வழங்காதவருக்குக் கிடைக்கும் கடுமையான தண்டனை.
1809. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் நான் போய்ச்சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்டதும் "கஅபாவின் அதிபதிமீது ஆணையாக! அவர்கள் நஷ்டவாளிகள்" என்று கூறினார்கள். நான் சென்று (அவர்கள் அருகில்) அமர்ந்தேன். என்னால் இருப்புக்கொள்ள முடியாததால் உடனே எழுந்து, "என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "அவர்கள் அதிகமான செல்வம் படைத்தவர்கள். ஆனால், (நல்வழியில் செல்வத்தை ஈந்த) சிலரைத் தவிர" என்று கூறியபடி இவ்வாறு இவ்வாறு இவ்வாறு என்று (தம் முன் பக்கம், பின் பக்கம், வலப் பக்கம், இடப் பக்கம்) சைகை செய்து (நல்வழிகள் பல உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி)விட்டு, "ஆனால், அவர்கள் மிகக் குறைவானவர்களே. ஒருவருக்கு ஒட்டகமோ மாடோ ஆடோ இருந்து அவற்றுக்கான ஸகாத்தை அவர் நிறைவேற்றவில்லையாயின், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெரியனவாகவும் கொழுத்தவையாகவும் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும்; கால் குளம்புகளால் மிதிக்கும். அவரை இறுதிப் பிராணி மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவரை மிதிக்கவரும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நபி (ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் நான் போய்ச்சேர்ந்தேன்" என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
ஆயினும் அதில், "எனது உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒரு மனிதர் ஒட்டகத்தையோ மாட்டையோ ஆட்டையோ அவற்றுக்குரிய ஸகாத்தை வழங்காத நிலையில் விட்டுவிட்டு இறந்துவிடுவாராயின்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1810. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்து, அதிலிருந்து ஒரேயொரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் (அதை மக்கள் நலனுக்காகச் செலவிடாமல்) மூன்று இரவுகள்கூட கழிந்துசெல்வது எனக்கு மகிழ்ச்சியளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கும் பொற்காசைத் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 9 தர்மம் செய்யுமாறு வந்துள்ள ஆர்வமூட்டல்.
1811. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் (பாறைகள் நிறைந்த) "ஹர்ரா"ப் பகுதியில் (எதிரிலிருந்த) உஹுத் மலையைப் பார்த்தவாறே நடந்துசென்று கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூதர்ரே!" என்று என்னை அழைத்தார்கள். நான் "இதோ! காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். நபி (ஸல்) அவர்கள் "இந்த உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்து, அதிலிருந்து ஒரேயோரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் அதை அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி இப்படி இப்படியெல்லாம் செலவிடாமல் மூன்று இரவுகள்கூட கழிந்து செல்வதை நான் விரும்பவில்லை. கடனை அடைப்பதற்காக நான் எடுத்துவைக்கும் பொற்காசைத் தவிர" என்று கூறி, வாரி இறைப்பதைப் போன்று தமது முன் பக்கமும் வலப் பக்கமும் இடப் பக்கமும் சைகை செய்தார்கள்.
பிறகு (சிறிது தூரம்) நாங்கள் நடந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் "அபூதர்ரே!" என்று (மீண்டும்) அழைத்தார்கள். நான் "இதோ! காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். நபி ஸல்) அவர்கள் "(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்" என்று கூறிவிட்டு, முன்பு செய்ததைப் போன்றே செய்து, "இப்படி இப்படி இப்படி (நல்வழியில்) செலவு செய்தவர்கள் தவிர" என்று கூறினார்கள்.
பிறகு (இன்னும் சிறிது தூரம்) நாங்கள் சென்றதும் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் "அபூதர்! நான் வரும்வரை இங்கேயே இருங்கள்!" என்று கூறிவிட்டு (இருளுக்குள் நடந்து) என்னை விட்டும் மறைந்துவிட்டார்கள். அப்போது ஏதோ மர்மமான உரத்த சப்தம் ஒன்றை நான் கேட்டு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதோ ஏற்பட்டுவிட்டது போலும்" என்று கூறிக்கொண்டு, அவர்களைப் பின்தொடர எண்ணினேன். பிறகு என்னிடம் நபி (ஸல்) அவர்கள் "நான் வரும்வரை இங்கேயே இருங்கள்" என்று சொன்னது என் நினைவுக்கு வந்தது. ஆதலால், அவர்கள் என்னிடம் வரும்வரை அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அவர்கள் வந்ததும் நான் கேட்ட சப்தத்தைப் பற்றி அவர்களிடம் எடுத்துச் சொன்னேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் "அது (வானவர்) ஜிப்ரீல்தாம். அவர் என்னிடம் வந்து "உங்கள் சமுதாயத்தாரில் யார் (ஏக இறைவனாம்) அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் (வாழ்ந்து) இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் செல்வார்" என்றார். நான் (ஜிப்ரீலிடம்) "அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)?" என்று கேட்டேன். அவர் "(ஆம்) விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (இறுதியில் அவர் சொர்க்கம் செல்வார்)" என்று பதிலளித்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1812. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஓர் இரவு நேரத்தில் வெளியில் புறப்பட்டுச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்கள்; அவர்களுடன் எந்த மனிதரும் இருக்க வில்லை. அவர்கள் தம்முடன் யாரும் வருவதை விரும்பவில்லை என்று நான் எண்ணிக் கொண்டேன். நிலா வெளிச்சம்படாத இடத்தில் நான் (அவர்களுக்குப் பின்னால்) நடக்கலானேன். அவர்கள் திரும்பி என்னைப் பார்த்துவிட்டு, "யார் இது?" என்று கேட்டார்கள். "(நான்) அபூதர், அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்" என்று பதிலளித்தேன். அவர்கள் "அபூதர்ரே, இங்கே வாருங்கள்" என்று அழைத்தார்கள். நான் அவர்களுடன் சிறிது நேரம் நடந்தேன். அப்போது அவர்கள், "(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர் ஆவர். அல்லாஹ் தந்த நல்லதை (செல்வத்தை) அள்ளித் தமது வலப்பக்கமும் இடப்பக்கமும் முன்பக்கமும் பின்பக்கமும் வாரி இறைத்து, நன்மை புரிந்தவரைத் தவிர" என்று கூறினார்கள். பிறகு இன்னும் சிறிது நேரம் நான் அவர்களுடன் நடந்தேன். அப்போது அவர்கள் "இந்த இடத்திலேயே அமர்ந்திருங்கள்" என்று கூறினார்கள். பாறைகள் சூழ்ந்த ஒரு வெட்டவெளியில் "நான் திரும்பி வரும்வரையில் இந்த இடத்திலேயே அமர்ந்திருங்கள்" என்று கூறி என்னை உட்கார வைத்தார்கள். பின்னர் (பாறைகள் நிறைந்த அந்த) "ஹர்ரா"ப் பகுதியில் நடந்து சென்றார்கள்.
அவர்களை நான் பார்க்க முடியாத இடத்திற்குச் சென்று நீண்ட நேரம் இருந்துவிட்டு, என்னை நோக்கி வந்தார்கள். அப்போது "அவன் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலும் சரியே!" என்று கூறிக்கொண்டிருந்ததை நான் செவியுற்றேன். அவர்கள் (என் அருகில்) வந்ததும் என்னால் பொறுமையுடன் இருக்க முடியாமல், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! "ஹர்ரா"ப் பகுதியில் தாங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்? யாரும் தங்களுக்கு எந்த பதிலும் அளிப்பதை நான் செவியுறவில்லையே?" என்று கேட்டேன். அதற்கு "அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். அவர் ஹர்ராப் பகுதியில் என்னிடம் வந்து "யார் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் எனும் நற்செய்தியை உங்கள் சமுதாயத்தாரிடம் கூறி விடுங்கள்" என்றார். உடனே நான் "ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "ஆம்" என்று பதிலளித்தார். நான் "அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா?" என்று (மீண்டும்) கேட்டேன். அவர் "ஆம்" என்றார். நான் "அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா?" என்று (மீண்டும்) கேட்டேன். அவர் "ஆம்;அவர் மது அருந்தினாலும் சரியே!" என்று கூறினார் என்றார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 10 செல்வத்தைக் குவித்து வைத்(துக்கொண்டு அதற்கான கடமையை நிறைவேற்றா) தோர் குறித்து வந்துள்ள கண்டனம்.
1813. அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மதீனாவிற்குச் சென்றேன். அங்கு ஓர் அவையில் பங்கேற்றேன். அந்த அவையில் குறைஷிப் பிரமுகர்களும் இருந்தனர். அப்போது மிகவும் சொரசொரப்பான ஆடையும் முரட்டுத்தனமான தோற்றமும் முகமும் கொண்ட ஒரு மனிதர் (அங்கு) வந்து அவர்கள் முன் நின்று, "(ஸகாத் வழங்காமல்) செல்வத்தைக் குவித்து வைத்திருப்போருக்கு "நற்செய்தி" கூறுக: நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் அவருக்கு உண்டு. அந்தக் கல் அவர்களில் ஒருவரது மார்புக் காம்பின் மேல் வைக்கப்படும். உடனே அது அவரது தோளின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியேறும். பிறகு அந்தக் கல் அவரது தோளின் மேற்பகுதியில் வைக்கப்படும். உடனே அது மார்புக்காம்பின் வழியாக ஊடுருவி வெளியேறும்" என்று கூறினார்.
(இதைக் கேட்டவுடன்) மக்கள் தங்கள் தலைகளைத் தாழ்த்திக்கொண்டனர். அவர்களில் ஒருவர்கூட அவருக்கு எந்தப் பதிலும் அளித்ததை நான் பார்க்கவில்லை.
பிறகு அந்த மனிதர் திரும்பிச்சென்றார். அவரைப் பின்தொடர்ந்து நான் சென்றேன். அவர் ஒரு தூணுக்கு அருகில் போய் உட்கார்ந்தார். அப்போது அவரிடம் நான், "தாங்கள் கூறியதைக் கேட்டு இம்மக்கள் வெறுப்படைந்ததையே நான் கண்டேன்" என்றேன். அதற்கு அவர், "இவர்கள் விவரமற்ற மக்கள். என் உற்ற தோழர் அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னை அழைத்தார்கள். நான் அவர்களது அழைப்பிற்குப் பதிலளித்தேன். அப்போது அவர்கள் "உஹுத் மலையை நீர் பார்க்கிறீரா?" என்று கேட்டார்கள். தமது தேவை ஒன்றுக்காக அவர்கள் என்னை அங்கு அனுப்பப்போகிறார்கள் என எண்ணியவாறு (நேரத்தை அறிந்துகொள்ள) எனக்கு மேலே உள்ள சூரியனைப் பார்த்து விட்டு, "(ஆம்; உஹுத் மலையைப்) பார்க்கிறேன்" என்றேன். அப்போது "இந்த (உஹுத் மலை) அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும், அதில் அனைத்தையும் ஈந்து மகிழவே நான் விரும்புவேன். (அதில் எதையும் சேகரித்து வைக்கமாட்டேன். என் கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கும்) மூன்று பொற்காசுகளைத் தவிர" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், இந்த மக்களோ எதையுமே அறியாதவர்களாய் உலக ஆதாயங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார்.
நான், "உங்களுக்கும் உங்களுடைய குறைஷி சகோதர்களுக்கும் என்ன ஆயிற்று? நீங்கள் அவர்களை அணுகி அவர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்வதில்லையே?" என்று கேட்டேன். அதற்கு அவர், "உம்முடைய இறைவன் மீதாணையாக! நான் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் சந்திக்கும்வரை இவர்களிடம் இவ்வுலகப் பொருட்கள் எதையும் கேட்கமாட்டேன்; மார்க்க விஷயங்களைப் பற்றிய எந்தத் தீர்ப்பையும் கோரவுமாட்டேன்" என்று கூறினார்.
அத்தியாயம் : 12
1814. அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் குறைஷிக் குலத்தார் சிலருடன் (ஓர் அவையில்) இருந்தேன். அப்போது அவ்வழியாகச் சென்ற அபூதர் (ரலி) அவர்கள் "(ஸகாத் கொடுக்காமல்) செல்வத்தைக் குவித்து வைப்பவர்களுக்கு (பழுக்கக் காய்ச்சப்பட்ட கம்பியால்) அவர்களது முதுகில் சூடு போடப்படும். அது அவர்களது விலாவிலிருந்து வெளியேறும். அவர்களது பிடரிப் பகுதியில் ஒரு சூடு போடப்படும். அது அவர்களின் நெற்றியிலிருந்து வெளியேறும் என நற்செய்தி கூறுங்கள்" என்று கூறிவிட்டு, அங்கிருந்து விலகிப்போய் (ஓரிடத்தில்) அமர்ந்தார்கள். நான் "இவர் யார்?" என்று கேட்டேன். மக்கள் "இவர்தாம் அபூதர் (ரலி)" என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து அவர்களிடம் சென்று, "சற்று முன்பாகத் தாங்கள் ஏதோ கூறிக் கொண்டிருந்தீர்களே அது என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "அவர்களுடைய நபி (முஹம்மத்-ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியையே நான் கூறினேன்" என்றார்கள். நான், "(தலைவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கும்) இந்த நன்கொடை தொடர்பாகத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள், "அதை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், இன்று அது உங்களுக்கு உதவியாக இருக்கும். அது உங்களது மார்க்கத்திற்கான கூலியாக இருக்குமாயின், அதை விட்டுவிடுங்கள் (பெற்றுக்கொள்ளாதீர்கள்)" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 11 தர்மம் செய்யுமாறு வந்துள்ள தூண்டலும், தர்மம் செய்பவருக்கு (சிறந்த) பிரதிபலன் உண்டு என்ற நற்செய்தியும்.
1815. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ், "ஆதமின் மகனே (மனிதா)! நீ (பிறருக்கு) ஈந்திடு. உனக்கு நான் ஈவேன்" என்று சொன்னான்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் வலக்கரம் நிரம்பியுள்ளது; இரவிலும் பகலிலும் அது வாரி வழங்குகிறது. அதை எதுவும் குறைத்துவிடாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1816. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின் வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடம் அல்லாஹ், "நீர் (பிறருக்கு ஈந்திடுக. நான் உமக்கு ஈவேன்" என்று சொன்னான்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் வலக்கரம் நிரம்பியுள்ளது. அது இரவிலும் பகலிலும் வாரி வழங்கிக் கொண்டேயிருக்கிறது. எதுவும் அதைக் குறைத்துவிடவில்லை. வானத்தையும் பூமியையும் அவன் படைத்தது முதல் வழங்கியது எதுவும் அவனது வலக்கரத்திலுள்ள (செல்வத்)தை குறைத்துவிடவில்லை பார்த்தீர்களா? (வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு முன்னர்) அவனது அரியாசனம் நீரின் மீ(து அமைந்)திருந்தது. அவனது மற்றொரு கரத்தில் மரணம் (உள்ளிட்ட தலைவிதியின் தராசு) உள்ளது. அவனே உயர்த்துகிறான்; தாழ்த்துகிறான்.
அத்தியாயம் : 12
பாடம் : 12 குடும்பத்தார், அடிமைகள் (பணியாட்கள்) ஆகியோருக்குச் செலவழிப்பதன் சிறப்பும் அவர்களை (ஆதரிக்காமல்) வீணாக்கிவிடுபவன், அல்லது அவர்களுக்கு வழங்க வேண்டிய வாழ்க்கைப்படியை வழங்க மறுப்பவன் அடையும் பாவமும்.
1817. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் தம் குடும்பத்தாருக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும் (தீனார்), அல்லாஹ்வின் பாதையில் தமது வாகனத்திற்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும், அல்லாஹ்வின் பாதையில் தம் நண்பர்களுக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசுமே அவர் செலவிடுகின்ற பொற்காசுகளிலேயே சிறந்ததாகும்.
இதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ கிலாபா (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடும்பத்தாருக்குச் செலவிடுவதையே ஆரம்பமாகக் கூறினார்கள்" என்று கூறிவிட்டு, "தம் சின்னஞ்சிறிய பிள்ளைகளுக்குச் செலவிடுகின்றவரைவிட அதிக நற்பலன் அடைந்துகொள்ளும் மனிதர் யார்? (ஏனெனில்) அவர்தம் பிள்ளைகளைச் சுய மரியாதையோடு வாழச்செய்கிறார். அல்லது அவர் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு உதவி, அவர்களைத் தன்னிறைவுடன் வாழச்செய்கிறான்" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 12
1818. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்ட ஒரு பொற்காசு, நீங்கள் ஓர் அடிமை(யின் விடுதலை)க்காகச் செலவிட்ட ஒரு பொற்காசு, நீங்கள் ஓர் ஏழைக்குத் தர்மம் செய்த ஒரு பொற்காசு, நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசு - இவற்றில் நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசே அதிக நற்பலனை உடையதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1819. கைஸமா பின் அப்திர் ரஹ்மான் பின் அபீசப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுடைய கருவூலக்காப்பாளர் வீட்டுக்குள் வந்தார். அவரிடம் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் "அடிமைகளுக்கு உணவு கொடுத்துவிட்டாயா?" என்று கேட்டார்கள். அவர், "இல்லை" என்றார். "உடனே சென்று அவர்களுக்கு உணவு கொடு" என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவரது உணவு எவரது அதிகாரத்தில் உள்ளதோ அவர், அவருக்கு உணவளிக்க மறுப்பதே அவர் பாவி என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
அத்தியாயம் : 12
பாடம் : 13 ஒருவர் முதலில் தமக்கும், பிறகு தம் குடும்பத்தாருக்கும், பிறகு தம் உறவினர்களுக்கும் செலவு செய்ய வேண்டும்.
1820. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"பனூ உத்ரா" குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், தாம் இறந்த பிறகு தம்முடைய அடிமை ஒருவர் விடுதலையாகிக் கொள்ளட்டும் என்று (பின்விடுதலை) அறிவித்திருந்தார். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (அவரிடம்), "அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் உம்மிடம் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த அடிமையைக் காட்டி), "இவரை என்னிடமிருந்து வாங்கிக்கொள்பவர் யார்?" என்று கேட்டார்கள். நுஐம் பின் அப்தில்லாஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் அவ்வடிமையை எண்ணூறு வெள்ளிக்காசுகளுக்கு வாங்கிக்கொண்டார்கள். நுஐம் (ரலி) அவர்கள் அந்தக் காசுகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவர, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த அடிமையின் உரிமையாளரிடம் அவற்றைக் கொடுத்து, "உமது தர்மத்தை முதலில் உம்மிடமிருந்து தொடங்குவீராக! பிறகு உமது தேவைபோக ஏதேனும் எஞ்சினால், அது உம்முடைய குடும்பத்தாருக்கு உரியதாகும்! உன் வீட்டாருக்கு வழங்கியது போக ஏதேனும் எஞ்சினால், அது உம் உறவினர்களுக்கு உரியதாகும். உம் உறவினர்களுக்கு வழங்கியது போக ஏதேனும் எஞ்சினால், அது இவ்வாறு இவ்வாறு உமக்கு முன் பக்கமும் வலப்பக்கமும் இடப்பக்கமும் (அறவழிகளின் அனைத்து முனைகளிலும் செலவு செய்வீராக!)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அன்சாரிகளில் "அபூமத்கூர்" என்று சொல்லப்படும் ஒரு மனிதர் "யஅகூப்" எனப்படும் தம் அடிமை, தமது இறப்புக்குப் பிறகு விடுதலை பெற்றவராவார் என (பின்விடுதலை) அறிவித்திருந்தார்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 12
பாடம் : 14 உறவினர்கள், மனைவி, மக்கள் மற்றும் தாய் தந்தையர் ஆகியோர் இணை வைப்பாளர்களாய் இருப்பினும் அவர்களுக்காகச் செலவழிப்பது மற்றும் தர்மம் செய்வதன் சிறப்பு.
1821. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனா அன்சாரிகளிலேயே அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல்-ரலி) அவர்கள் பெரும் செல்வராக இருந்தார். அவருடைய செல்வங்களில் "பைரஹா" எனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரை அருந்துவது வழக்கம். "நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்" எனும் இந்த (3:92ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்துசென்று, "அல்லாஹ் தனது வேதத்தில் "நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்" எனக் கூறுகின்றான். என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது "பைரஹா" (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும் அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் விரும்பிய வழியில் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்" என்று சொன்னார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நல்லது. அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! நீங்கள் அது தொடர்பாகக் கூறியதை நான் செவியுற்றேன். அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவதையே நான் (உசிதமாகக்) கருதுகிறேன்" என்று சொன்னார்கள்.எனவே, அதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் தம் நெருங்கிய உறவினர்களுக்கும், தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்து விட்டார்கள்.
அத்தியாயம் : 12
1822. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான)பலனை அடையமாட்டீர்கள்"எனும் இந்த (3:92ஆவது) வசனம் அருளப்பெற்றதும் அபூதல்ஹா (ரலி) அவர்கள், "நம் இறைவன் நம் செல்வங்களிலிருந்து சிலவற்றை நம்மிடம் (தர்மம் செய்யுமாறு) கோருவதாகவே நான் கருதுகின்றேன். ஆகவே, நான் எனது "பரீஹா" (பைரஹா) எனும் நிலத்தை அல்லாஹ்வுக்காக வழங்கிவிட்டேன். இதற்குத் தங்களையே சாட்சியாக ஆக்குகிறேன், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவீராக!" என்று கூறினார்கள். அவ்வாறே அபூதல்ஹா (ரலி) அவர்கள் அதை (தம் உறவினர்களான) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி), உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்கு (தானமாக) வழங்கிவிட்டார்கள்.
அத்தியாயம் : 12
1823. குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அன்னை) மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (தம்முடைய) அடிமைப் பெண் ஒருத்தியை விடுதலை செயதார்கள். அதை அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ உன் தாயின் சகோதரர்களுக்கு அவளை (அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்குமே!" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
1824. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் துணைவியார் ஸைனப் பின்த் முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பெண்களே! உங்கள் நகைகளிலிருந்தாவது தர்மம் செய்யுங்கள்!" என்று கூறினார்கள். நான் (என் கணவர்) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்று "நீங்களே கையில் காசில்லாதவர்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெண்களாகிய) எங்களைத் தர்மம் செய்யுமாறு பணித்தார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (வறுமையில் வாழும் உங்களுக்கே அதை நான் வழங்கலாமா எனக்) கேளுங்கள். அதுவே எனக்குப் போதுமாகும் என்றால் (நான் உங்களுக்கே வழங்கிவிடுவேன்). இல்லை (கணவனுக்கு மனைவி வழங்குவது தர்மமாகக் கருதப்படாது) என்றால், அதை நான் பிறருக்குக் கொடுத்துவிடுவேன்" என்று கூறினேன். அப்போது (என் கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் என்னிடம் "இல்லை, நீயே அவர்களிடம் செல்" என்று கூறிவிட்டார்கள். எனவே, நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டுவாசலில் (ஏற்கெனவே) ஓர் அன்சாரிப்பெண்ணும் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது (எங்களுக்கு) மதிப்பு கலந்த அச்சம் இருந்தது. (எனவே, வெளியிலேயே நின்றுகொண்டிருந்தோம்.)
பின்னர் பிலால் (ரலி) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தபோது அவரிடம் நாங்கள், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, இரு பெண்கள் வீட்டுவாசலில் நின்றுகொண்டு, தம் கணவன்மார்களுக்கும் தமது மடியில் வளரும் (தந்தையற்ற) அநாதைக் குழந்தைகளுக்கும் தம்மீது கடமையான தர்மத்தை வழங்கலாமா என வினவுகிறார்கள் என்று கேளுங்கள். ஆனால், நாங்கள் யார் என்று அவர்களிடம் சொல்லவேண்டாம்" என்று கூறினோம். பிலால் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவ்விருவரும் யார்?" என்று பிலாலிடம் கேட்டார்கள். அதற்கு "ஓர் அன்சாரிப் பெண்ணும் ஸைனபும்" என்று பிலால் பதிலளித்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "எந்த ஸைனப்?" என்று கேட்டார்கள். "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய துணைவியார்"" என்று பிலால் பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்விருவருக்கும் இரு நன்மைகள் உண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
1825. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்கள் அறிவித்த மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் பள்ளிவாசலில் இருந்தபோது என்னைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் "உங்கள் நகைகளிலிருந்தாவது தர்மம் செய்யுங்கள்" என்று கூறினார்கள்" என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 12
1826. (அன்னை) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (என் முதல் கணவரான) அபூ சலமாவின் பிள்ளைகளுக்குச் செலவழிப்பதால் (தர்மம் செய்த) நன்மை எனக்கு உண்டா? அவர்களை நான் இன்னின்னவாறு (பிறரிடம் கையேந்தும் நிலையில்) விட்டுவிடமாட்டேன். அவர்களும் என் பிள்ளைகளே" எனக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம். அவர்களுக்காக நீ செலவிட்ட(டால் அ)தற்கான நன்மை உனக்கு உண்டு" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1827. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் (இறைவனிடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தாருக்குச் செலவு செய்தால் அதுவும் அவர் செய்த தர்மமாகும்.
இதை பத்ருப்போரில் கலந்துகொண்டவரான அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1828. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (இணைவைப்பவரான) என் தாயார் என்னிடம் "ஆசையுடன்" அல்லது "அச்சத்துடன்" வந்துள்ளார். நான் அவருடன் உறவு கொண்டாடலாமா?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் "ஆம்" என்றார்கள்.
அத்தியாயம் : 12
1829. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியருடன் சமாதான ஒப்பந்தம் செய்திருந்த காலத்தில் இணைவைப்பவராக இருந்த என் தாயார் என்னிடம் வந்தார். நான், "அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்; நான் என் தாயாருடன் உறவு கொண்டாடலாமா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி நடந்துகொள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 15 இறந்தவருக்காகத் தர்மம் செய்தால் அதன் பலன் இறந்தவரைச் சென்றடையும்.
1830. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்காமல் திடீரென இறந்துவிட்டார். அவர் (மட்டும் இறுதி நேரத்தில்) பேசியிருந்தால் தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பார் என்று நான் எண்ணுகிறேன். இந்நிலையில் அவருக்காக நான் தர்மம் செய்தால் அவருக்கு நன்மை கிட்டுமா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அபூஉசாமா (ஹம்மாத் பின் உசாமா பின் ஸைத்-ரஹ்) அவர்களது அறிவிப்பிலேயே "அவர் இறுதிவிருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்காமல்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது. மற்றவர்களது அறிவிப்பில் இக்குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 12
பாடம் : 16 நல்லறங்கள் ஒவ்வொன்றுக்கும் "ஸதக்கா" (தர்மம்) எனும் பெயர் பொருந்தும்.
1831. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எல்லா நல்லறமும் தர்மமே.
இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1832. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! வசதிபடைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்; (ஆனால், அவர்கள்) தங்களது அதிகப்படியான செல்வங்களைத் தானதர்மம் செய்கின்றனர். (அவ்வாறு தானதர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே!)" என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்களும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்)தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா? இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு "ஓரிறை உறுதிமொழி"யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே;உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நீங்களே) சொல்லுங்கள்: தடைசெய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக்கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 12
1833. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு விஷயம் (சொல்கிறேன்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவிற்கு அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி (தக்பீர்), அல்லாஹ்வைப் புகழ்ந்து (தஹ்மீத்), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று (ஏகத்துவ உறுதி) கூறி, அல்லாஹ்வைத் துதித்து (தஸ்பீஹ்), அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி (இஸ்திஃக்ஃபார்), மக்களின் நடைபாதையில் (இடையூறாகக்) கிடந்த ஒரு கல்லையோ அல்லது முள்ளையோ அல்லது எலும்பையோ அகற்றி, நல்லதை ஏவி, அல்லது தீமையைத் தடுத்(து நல்லறங்கள் புரிந்)தாரோ அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே நடமாடுகிறார்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூதவ்பா அர்ரபீஉ பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் சில நேரங்களில் ("அவர் நடமாடுகிறார்" என்பதற்கு பதிலாக) "அவர் மாலைப் பொழுதை அடைகிறார்" என்று அறிவித்துள்ளார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("நல்லதை ஏவி" என்பதுடன் "அல்லது" என்பதைச் சேர்த்து) "அல்லது நல்லதை ஏவி" என்றும், "அவர் மாலைப் பொழுதை அடைகிறார்" என்றும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஒவ்வொரு மனிதனும் (முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன்) படைக்கப் பட்டுள்ளான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. இந்த அறிவிப்பில் "அன்றைய தினத்தில் (தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே) அவர் நடமாடுகிறார்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1834. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்று கூறினார்கள். அப்போது "(தர்மம்செய்ய ஏதும்) அவருக்குக் கிடைக்கவில்லையானால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "அவர் தம் கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; பிறருக்கும் தர்மம் செய்வார்" என்று சொன்னார்கள். "அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால் (என்ன செய்வார்), சொல்லுங்கள்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் "பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்" என்றார்கள். "(இதற்கும் அவர்) சக்தி பெறாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் "அவர் "நல்லதை" அல்லது "நற்செயலை"(ச் செய்யும்படி பிறரை) ஏவட்டும்" என்றார்கள். "(இயலாமையால் இதையும்) அவர் செய்யாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?" என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், "அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே தர்மம்தான்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1835. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்த ஹதீஸ்களாகும். பின்வரும் ஹதீஸும் அவற்றில் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தமது வாகனத்தின் மீது ஏறி அமர உதவுவதும் அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றிவிடுவதும் தர்மமாகும். இன்சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.
அத்தியாயம் : 12
பாடம் : 17 (நல்வழியில்) செலவு செய்பவரும் செலவு செய்ய மறுப்பவரும்.
1836. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு நாளும் அடியார்கள் காலை நேரத்தை அடையும்போது இரு வானவர்கள் (வானத்திலிருந்து) இறங்குகின்றனர். அவர்களில் ஒருவர், "இறைவா! (நல்வழியில்) செலவு செய்பவருக்குப் பிரதிபலனை அளிப்பாயாக!" என்று கூறுவார். மற்றொருவர், "இறைவா! (கடமையானவற்றில்கூடச்) செலவு செய்ய மறுப்பவருக்கு இழப்பைக் கொடுப்பாயாக!" என்று கூறுவார்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 18 தானதர்மத்தை ஏற்க ஆள் கிடைக்காமல்போவதற்கு முன் தர்மம் செய்யுமாறு வந்துள்ள தூண்டல்.
1837. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இப்போதே) தானதர்மம் செய்துகொள்ளுங்கள். ஏனெனில், மக்களுக்கு ஒரு காலம் வரப் போகிறது; அப்போது ஒருவர் தமது தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு (அதைப் பெறுபவர் யாரேனும் கிடைப்பாரா என) அலைவார். ஆனால், அதை ஏற்பவர் எவரையும் காண மாட்டார். அந்தப் பொருள் வழங்கப்படுகின்ற ஒருவன் "நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் ஏற்றுக்கொண்டிருப்பேன்; இன்றோ இது எனக்குத் தேவையில்லை" என்று கூறிவிடுவான்.
இதை ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1838. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒருவர் தங்கத்தை எடுத்துக்கொண்டு தர்மம் செய்வதற்காக அலைவார். ஆனால், அதைப் பெற்றுக்கொள்ளக்கூடிய எவரையும் அவர் காணமாட்டார். மேலும், (அப்போது போர்கள் மிகுந்து) ஆண்கள் குறைந்து, பெண்கள் அதிகரித்துவிடுவதால் ஓர் ஆணை நாற்பது பெண்கள் பின்தொடர்ந்துவந்து, அவனைச் சார்ந்திருக்கும் நிலை காணப்படும்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அப்துல்லாஹ் பின் பர்ராத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஓர் ஆணை (இந்த நிலையில்) நீங்கள் காண்பீர்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1839. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செல்வம் பெருகிக் கொழிக்காதவரை யுகமுடிவு நாள் நிகழாது. எந்த அளவிற்கு (செல்வம் பெருகும்) எனில், ஒருவர் தமது செல்வத்திற்குரிய ஸகாத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் செல்வார். ஆனால், அவரிடமிருந்து அதைப்பெற்றுக்கொள்ள ஒருவரையும் அவர் காணமாட்டார். மேலும், அரபுமண் மேய்ச்சல் நிலங்களாகவும் (கரை புரண்டோடும்) வாய்க்கால்களாகவும் மாறாதவரை (யுகமுடிவு நாள் நிகழாது).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1840. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை யுகமுடிவு நாள் ஏற்படாது. எந்த அளவிற்கு (செல்வம் பெருகும்) எனில்,அந்நாளில் பொருளின் உரிமையாளருக்கு, அவரிடமிருந்து தர்மத்தைப் பெற்றுக்கொள்பவர் குறித்த கவலை ஏற்படும். தர்மத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு ஒருவர் அழைக்கப்படுவார். ஆனால், அவரோ "இது எனக்குத் தேவையில்லை" என்று கூறிவிடுவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1841. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பூமி தனது வயிற்றிலுள்ள புதையல்களான தங்கக் கட்டி, வெள்ளிக் கட்டி ஆகியவற்றைத் தூண்களைப் போன்று வாந்தியெடுக்கும். அப்போது கொலை செய்தவன் வந்து, "இதற்காகவே நான் கொலை செய்தேன்" என்று கூறுவான். உறவுகளை அரவணைக்காதவன் வந்து, "இதற்காகவே நான் என் இரத்த உறவுகளைத் துண்டித்தேன்" என்று கூறுவான். திருடன் வந்து, "இதற்காகவே எனது கரம் துண்டிக்கப்பட்டது" என்று கூறுவான். பிறகு அதை (அப்படியே) விட்டுவிடுவார்கள்; அதிலிருந்து எதையும் எடுக்கமாட்டார்கள் (அந்த அளவிற்கு அவர்கள் ஏற்கெனவே வசதியுடனிருப்பார்கள்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 19 முறையான சம்பாத்தியத்திலிருந்து செய்யும் தர்மம் (இறைவனிடம்) ஏற்கப் படுவதும் அது வளர்ச்சியடைவதும்.
1842. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் தூய்மையானதை மட்டுமே ஏற்பான். யார் தூய்மையான சம்பாத்தியத்திலிருந்து தர்மம் செய்கிறாரோ அதை அளவற்ற அருளாள(னான இறைவ)ன் தனது வலக்கரத்தால் வாங்கிக்கொள்கிறான். அது ஒரு பேரீச்சங்கனியாக இருந்தாலும் சரியே! அது அந்த அருளாளனின் கையில் வளர்ச்சி அடைந்து மலையைவிடப் பெரியதாகிவிடுகின்றது. உங்களில் ஒருவர் "தமது குதிரைக் குட்டியை" அல்லது "தமது ஒட்டகக் குட்டியை" வளர்ப்பதைப் போன்று.-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1843. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முறையான சம்பாத்தியத்திலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தைத் தர்மம் செய்தாரோ அதை அல்லாஹ் தனது கரத்தால் வாங்கி, உங்களில் ஒருவர் "தமது குதிரைக் குட்டியை" அல்லது "தமது ஒட்டகக் குட்டியை" வளர்ப்பதைப் போன்று வளர்ச்சியடையச் செய்கிறான். இறுதியில் அது மலையைப் போன்று, அல்லது அதைவிட மிகப்பெரியதாக மாறிவிடுகின்றது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ரவ்ஹ் பின் அல்காசிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "முறையான சம்பாத்தியத்திலிருந்து அவர் உரிய முறையில் தர்மம் செய்தால்" என்று இடம்பெற்றுள்ளது.
சுலைமான் பின் பிலால் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர் உரிய இடங்களில் (தர்மம் செய்தால்)" என்று காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1844. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்" என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்: தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன் (23:51). "நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள் (2:172).
பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். "அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி "என் இறைவா, என் இறைவா" என்று பிரார்த்திக்கிறார். ஆனால்,அவர் உண்ணும் உணவு தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; தடைசெய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 20 பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும், அல்லது (இன்)சொல்லையேனும் தர்மம் செய்யுமாறு வந்துள்ள தூண்டலும் அது நரக நெருப்பிலிருந்து காக்கும் திரையாக அமையும் என்பதும்.
1845. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யார் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரக நெருப்பிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள இயன்றவராக இருக்கிறாரோ அவர் அவ்வாறே செய்து கொள்ளட்டும்!
இதை அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1846. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசாமலிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்விற்கும் உங்களில் ஒருவருக்கும் இடையே மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். பிறகு அவர் தமது வலப்பக்கம் பார்ப்பார். தாம் ஏற்கெனவே செய்த(பாவத்)தைத் தவிர வேறெதையும் அங்கு அவர் காணமாட்டார். பின்னர் அவர் தமது இடப்பக்கம் பார்ப்பார். தாம் ஏற்கெனவே செய்த(பாவத்)தைத் தவிர வேறெதையும் அங்கும் அவர் காணமாட்டார். மேலும், அவர் தமக்கு முன்னால் பார்ப்பார். தமது முகத்துக்கெதிரே நரக நெருப்பையே அவர் காண்பார். ஆகவே, முடிந்தால் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
இதை அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அலீ பின் ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இன்சொல்லைக் கொண்டேனும் (நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்)" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1847. அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது நரகத்தைப் பார்த்து அஞ்சுவதைப் போன்று) தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். பின்னர் "நரகத்திலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். பிறகு (நரகத்தைக் கண்டு அஞ்சுவதைப் போன்று) தமது முகத்தை (மீண்டும்) திருப்பிக் கொண்டார்கள். அவர்கள் நரகத்தையே பார்க்கிறார்கள் போலும் என்று நாங்கள் எண்ணினோம். பின்னர் "பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். அதுவும் இல்லாதவர் இன்சொல்லைக் கொண்டேனும் (நரகத்திலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ளட்டும்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "(பார்க்கிறார்கள்) போலும்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. ("அவர்கள் நரகத்தையே பார்க்கிறார்களோ என்று நாங்கள் எண்ணினோம்" என்றே இடம்பெற்றுள்ளது.)
- மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு அதிலிருந்து பாதுகாப்புக் கோரினார்கள். மேலும், (நரகத்தைக் கண்டு அஞ்சுவதைப் போன்று) தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இவ்வாறு மூன்றுமுறை செய்தார்கள். பின்னர் "பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். அதுவும் இல்லாதவர் இன்சொல்லைக் கொண்டேனும் (நரகத்திலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
1848. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த "கம்பளி ஆடை" அல்லது "நீளங்கி" அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் "முளர்"குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே "முளர்" குலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது "மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்துகொள்ளுங்கள்" எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், "அல்ஹஷ்ர்" அத்தியாயத்திலுள்ள "நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்திற்கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்" எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது "(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு "ஸாஉ" கோதுமை, ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்" என்று கூறி, "பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்" என்று வலியுறுத்தினார்கள்.
உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு "ஸாஉ" கோதுமையிலிருந்தும் ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது;ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே,யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றிலும் "(ஒரு நாள்) முற்பகல் நேரத்தில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம்"என்றே ஹதீஸ் தொடங்குகிறது.
உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகை தொழுவித்துவிட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார்கள்" என்று சற்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1849. மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் வட்டமாய் கிழிந்த கம்பளிஆடை அணிந்த ஒரு கூட்டத்தார் வந்தார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
மேலும் இவ்வறிவிப்புகளில் பின்வரும் தகவல்களும் இடம்பெற்றுள்ளன:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுவித்தார்கள். பிறகு சிறிய சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது ஏறி அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பின்னர் "அம்மா பஅத்" ("இறை வாழ்த்துக்குப் பின்...) என்று கூறிவிட்டு, "அல்லாஹ் தனது வேதத்தில் "மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள்..." (4:1)என்று கூறியுள்ளான்" என்றார்கள்.
அத்தியாயம் : 12
1850. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "கிராமவாசிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்கள்மீது கம்பளியாடைகள் காணப்பட்டன. அவர்களது வறிய நிலையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அவர்களுக்குத் தேவை ஏற்பட்டிருந்தது..." என்று ஜரீர் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 12
பாடம் : 21 தர்மம் செய்வதற்காகக் கூலிக்குச் சுமை தூக்குவதும், சிறிதளவு தர்மம் செய்தவ(ராயினும் அவ)ரைக் குறைகூறுவது குறித்து வந்துள்ள கடுமையான தடையுத்தரவும்.
1851. அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, நாங்கள் (சுமைதூக்கி) கூலி வேலை செய்யலானோம். அபூ அகீல் (ஹப்ஹாப்-ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) அரை "ஸாஉ" பேரீச்சம் பழம் (கொண்டு வந்து) தர்மம் செய்தார். மற்றொரு மனிதர் அதைவிடச் சிறிது அதிகமாகக் கொண்டுவந்(து தர்மம் செய்)தார். இதைக் கண்ட நயவஞ்சகர்கள், (அரை "ஸாஉ" கொண்டுவந்த) இவரது தர்மமெல்லாம் அல்லாஹ்விற்குத் தேவையில்லை; (அதைவிட அதிகமாகக் கொண்டுவந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே (தர்மம்) செய்தார்" என்று (குறை) சொன்னார்கள். அப்போதுதான் "(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையவர்கள் என்றால், இறை நம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசுகின்றார்கள். (இறைவழியில் ஈவதற்காகச்) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கின்றார்கள். அல்லாஹ் அவர்களை நகைக்கின்றான். மேலும்,அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு" எனும் (9:79ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் பிஷ்ர் பின் காலித் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில் "மனமுவந்து வாரி வழங்குவோர்" எனும் சொல்லைக் குறிப்பிடவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், சயீத் பின் அர்ரபீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நாங்கள் எங்களுடைய முதுகுகளில் (சுமை)தூக்கி கூலிவேலை செய்யலானோம்" என்று (அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 22 பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு.
1852. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காலையில் ஒரு பெரிய பாத்திரம் (நிறையப்) பாலும் மாலையில் ஒரு பெரிய பாத்திரம் (நிறையப்) பாலும் தருகின்ற ஓர் ஒட்டகத்தை ஒரு வீட்டாருக்கு இரவலாகத் தரக்கூடிய மனிதர் எவரேனும் (உங்களில்) உண்டா? இதற்குரிய நற்பலன் நிச்சயமாக மிகப் பெரியதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1853. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பல விஷயங்களுக்குத் தடைவிதித்தார்கள். மேலும், அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:
ஒருவர் ஒரு கால்நடையை (பால் கறந்து கொள்வதற்காக) இரவலாக வழங்கினால், அது காலையில் ஒரு தர்மத்தின் நன்மையையும், மாலையில் ஒரு தர்மத்தின் நன்மையையும் பெற்றுத்தருவதாக அமையும்; காலையில் கறக்கப்பட்ட பாலுக்காகவும் மாலையில் கறக்கப்பட்ட பாலுக்காகவும் (இந்த நன்மைகள் கிடைக்கும்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 23 (தாராள மனத்துடன்) செலவு செய்கின்றவருக்கும் கஞ்சனுக்கும் உள்ள உதாரணம்.
1854. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கஞ்சனின் நிலையோடு ஒப்பிடுகையில் தாராள மனத்துடன்)செலவு செய்கின்ற தர்மசீலரின் நிலையானது, மார்பிலிருந்து கழுத்தெலும்பு வரை (இரும்பாலான) "இரு நீளங்கிகள்" அல்லது "இரு கவசஆடைகள்" அணிந்துள்ள (இரு) மனிதரின் நிலையைப் போன்றதாகும். "(தாராள மனத்துடன்) செலவு செய்கின்றவர்" அல்லது "தர்மம் செய்கின்றவர்" தர்மம் செய்ய எண்ணும் போது அவரது கவசம் "விரிவடைந்து" அல்லது "(நீண்டு) சென்று" அவரது விரல் நுனிகளை மறைத்து (அதற்கப்பால்) அவரது பாதச் சுவடுகளைக்கூட(த் தொட்டு) அழித்து விடுகிறது. (ஆனால்,) கஞ்சன் செலவு செய்ய எண்ணும்போது அவனது கவசம் அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை (இறுகப்) பிடித்துவிடுகிறது. அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஞ்சனுக்கும் தர்மம் செய்கின்றவனுக்கும் பின்வருமாறு உதாரணம் கூறினார்கள்: அவ்விருவரின் நிலையானது, இரும்பாலான இரு கவசங்கள் அணிந்துள்ள இரு மனிதர்களின் நிலையை ஒத்திருக்கிறது. அவர்களின் கைகள் அவர்களுடைய மார்போடும் கழுத்தெலும்புகளோடும் பிணைக்கப்பட்டுள்ளன. தர்மம் செய்கின்றவர் ஒன்றைத் தர்மம் செய்யும் போதெல்லாம் அவரது கவசம் விரிந்து, அவரது விரல்நுனிகளை மறைத்து, பாதச்சுவடுகளைக் கூட(த் தொட்டு) அழிக்கத் தொடங்குகிறது. (ஆனால்,) கஞ்சனோ ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும் போதெல்லாம் அவனது கவசம் அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை (இறுக்கிப்) பிடிக்கத் துவங்குகிறது. அவன் தனது கவசத்தை விரிவுபடுத்த முயலும்போது நீ பார்த்தால் (வியப்புத்தான் ஏற்படும்; ஏனெனில்,) அது விரியாது.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இதைக் கூறியபோது) அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் தமது விரலால் தமது சட்டைக் கழுத்தை (நெருக்கி), (இவ்வாறு) சுட்டிக் காட்டினார்கள்.
அத்தியாயம் : 12
1855. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கஞ்சன் மற்றும் தர்மம் செய்கின்றவரின் நிலையானது, இரும்பாலான இரு கவசங்கள் அணிந்த இரு மனிதர்களின் நிலைக்கு ஒத்திருக்கிறது. தர்மம் செய்பவர் ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும்போது, அவரது கவசம் விரிவடைந்து, அவரது பாதச்சுவடுகளைக்கூட(த் தொட்டு) அழித்துவிடுகிறது. (ஆனால்,) கஞ்சனோ ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும்போது, அவனது கவசம் அவனை அழுத்தி, அவனுடைய கைகள் கழுத்தெலும்புவரை சென்று ஒட்டிக்கொள்கின்றன. கவசத்தின் ஒவ்வொரு வளையமும் மற்றதன் இடத்தை இறுக்கிப் பிடிக்கிறது. அதை விரிவுபடுத்த அவன் முனைவான். ஆனால், அவனால் இயலாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 24 தர்மம் செய்தவருக்கு நிச்சயம் நற்பலன் உண்டு; உரியவரின் கைக்கு தர்மம் போய்ச் சேராவிட்டாலும் சரியே!
1856. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில்) ஒருவர் "நான் இன்றிரவு தர்மம் செய்யப்போகிறேன்" எனக் கூறிக்கொண்டு, (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து, (தெரியாமல்) அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்து விட்டார். காலையில் மக்கள், "இன்றிரவு ஒரு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது" எனப் பேசிக்கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், "இறைவா! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்" என்று கூறினார்.
மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளியே வந்து, அதை ஒரு பணக்காரரின் கையில் கொடுத்துவிட்டார். மறுநாள் காலையில் மக்கள், "ஒரு பணக்காரருக்குத் தர்மம் செய்யப்பட்டுள்ளது" எனப் பேசிக்கொண்டனர். (இதைக்கேட்ட) அவர், "இறைவா! பணக்காரருக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்" என்று கூறினார்.
(மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் புறப்பட்டுச் சென்று, ஒரு திருடனின் கையில் அதைக் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், "இன்றிரவு ஒரு திருடனுக்குத் தர்மம் செய்யப் பட்டுள்ளது" என்று பேசிக்கொண்டனர். உடனே அவர், "இறைவா! விபச்சாரிக்கும் பணக்காரனுக்கும் திருடனுக்கும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் உரியது" எனக் கூறினார். பின்னர் (கனவில்) அவரிடம் (வானவர்) அனுப்பிவைக்கப்பட்டு (பின்வருமாறு) கூறப்பட்டது: உமது தர்மம் ஏற்கப்பட்டுவிட்டது. விபச்சாரிக்கு நீர் கொடுத்த தர்மம், அவள் விபச்சாரத்திலிருந்து விலகி கற்பைப் பேணக் காரணமாக அமையலாம். பணக்காரனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தால் அவன் படிப்பினை பெற்று, அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்யக்கூடும். திருடனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மம் அவன் களவைக் கைவிடக் காரணமாக அமையலாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 25 நேர்மையான ஒரு காசாளர் தம் முதலாளியின், அல்லது ஒரு மனைவி தன் கணவனின் நேரடியான அனுமதியின் பேரில்,அல்லது அவரது அனுமதியை குறிப்பால் அறிந்து வீட்டிலுள்ள (பொருளிலிருந்து) எதையும் வீணாக்காமல் தர்மம் செய்தால் அந்தக் காசாளருக்கும் அந்த மனைவிக்கும்கூட நன்மை கிடைக்கும்.
1857. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தைச் செயல்படுத்தக்கூடிய -அல்லது அந்தக் காரியத்திற்காக வழங்கக்கூடிய- நேர்மையான முஸ்லிம் காசாளர், தர்மத்தில் பங்கு வகிக்கும் இருவரில் ஒருவராவார். அவர் முழுமையாகவும் குறைவின்றியும் மனப்பூர்வமாகவும் அக்காரியத்திற்கு வழங்குகிறார்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1858. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை முறையோடு தர்மம் செய்தால், (அறவழியில்) செலவழித்தற்காக அவளுக்கும் நற்பலன் உண்டு. அதைச் சம்பாதித்தவன் என்ற அடிப்படையில் கணவனுக்கும் நற்பலன் உண்டு. அதைப் போன்றே காசாளருக்கும் (செலவிட உதவியதற்காக நற்பலன்) உண்டு. இவர்களில் யாரும் யாருடைய நற்பலனிலும் சிறிதும் குறைத்துவிடமாட்டார்கள்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("தனது வீட்டிலுள்ள உணவை" என்பதற்குப் பதிலாக) "அவளுடைய கணவனின் உணவிலிருந்து" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1859. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தன் கணவனின் வீட்டிலுள்ளவற்றை முறையோடு (அறவழியில்) செலவழித்தால் அவளுக்கும் நற்பலன் உண்டு. அதைப் போன்றே, அதைச் சம்பாதித்தவன் என்ற அடிப்படையில் கணவனுக்கும் நற்பலன் உண்டு. அதைப் போன்றே, காசாளருக்கும் (செலவிட உதவியதற்காக நற்பலன்) உண்டு. அவர்களுடைய நற்பலன்களில் சிறிதும் குறைந்துவிடாது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 26 ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல்.
1860. "ஆபில் லஹ்ம்" என்பாரின் அடிமையாயிருந்த உமைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அடிமையாக இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "நான் என் உரிமையாளரின் செல்வத்திலிருந்து எதையேனும் தர்மம் செய்யலாமா?" என்று கேட்டேன். அதற்கு "ஆம். (தர்மம் செய்யலாம்.) உங்கள் இருவருக்கும் சரிபாதி நற்பலன் உண்டு" என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1861. "ஆபில் லஹ்ம்" என்பாரின் அடிமையாயிருந்த உமைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) என் உரிமையாளர் என்னிடம் இறைச்சியை (நீளமாக வெட்டி உப்புக் கண்டத்திற்காக)க் காயப்போடுமாறு கட்டளையிட்டார். அப்போது என்னிடம் ஓர் ஏழை வந்தார். அதிலிருந்து சிறிதளவு இறைச்சியை அவருக்கு நான் வழங்கிவிட்டேன். இதை என் உரிமையாளர் அறிந்தபோது என்னை அடித்துவிட்டார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் உரிமையாளரை அழைத்து, "அவரை ஏன் அடித்தீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு "நான் சொல்லாமலேயே எனது உணவை மற்றவர்களுக்கு இவர் கொடுக்கிறார்" என்று என் உரிமையாளர் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(ஏழைக்கு வழங்கியதால்) உங்கள் இருவருக்குமே நறபலன் உண்டு"என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
1862. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தன் கணவன் உள்ளூரில் இருக்கும்போது அவனது அனுமதி இல்லாமல் (கூடுதலான- நஃபில்) நோன்பு நோற்கவேண்டாம். கணவன் ஊரில் இருக்கும்போது அவனது அனுமதி இல்லாமல் யாரையும் அவனது வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். அவள் தன் கணவனின் உத்தரவு இல்லாமல் அவனது சம்பாத்தியத்திலிருந்து (அறவழியில்) செலவு செய்தால் அதன் நற்பலனில் பாதி அவனுக்கும் கிடைக்கும்.
அத்தியாயம் : 12
பாடம் : 27 தர்மத்தையும் இதர நற்செயல்களையும் சேர்த்துச் செய்தவர்.
1863. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவிட்டாரோ அவர் சொர்க்கத்தி(ன் வாசல்களில் ஒவ்வொன்றி)ல் இருந்து "அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்ததாகும். (இதன் வழியாக நுழையுங்கள்)" என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாக இருந்தவர், தொழுகைக்குரிய வாசலில் இருந்து அழைக்கப்படுவார். அறப்போராளியாக இருந்தவர், அறப்போருக்குரிய வாசலில் இருந்து அழைக்கப்படுவார். தர்மம் செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாசலில் இருந்து அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் (நோன்பாளிகளுக்கே உரிய) "அர்ரய்யான்" எனும் வாசலில் இருந்து அழைக்கப்படுவார்" என்று சொன்னார்கள். உடனே அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த வாசல்களில் இருந்து அழைக்கப்படும் ஒருவருக்கு (வேறுவாசல் வழியாகச் செல்ல வேண்டிய) அவசியம் இராது. (ஏனெனில், எந்த வழியிலாவது அவர் சொர்க்கம் சென்றுவிடுவார். இருந்தாலும்,) அந்தத் தலைவாயில்கள் ஒவ்வொன்றிலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம். அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1864. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவிட்டாரோ அவரைச் சொர்க்கத்தின் காவலர்கள் அழைப்பார்கள். ஒவ்வொரு வாசலின் காவலர்களும் "இன்ன மனிதரே! இங்கே வாரும்!" என்று அழைப்பார்கள்" என்று கூறினார்கள். இதைக்கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாது (எந்த வாசல் வழியாகவும் அவர் சொர்க்கத்தினுள் நுழையலாம்)" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கவேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1865. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். "இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்?" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். "இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?" என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். "இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை" என்றார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 28 அறவழியில் தாராளமாகச் செலவிடும்படி வந்துள்ள தூண்டலும், எண்ணி எண்ணிச் செலவழிப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும்.
1866. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "(தாராளமாக நல்வழியில்) செலவழிப்பாயாக. (அல்லது "(ஈகை மழை) பொழிவாயாக" அல்லது "அள்ளி வழங்குவாயாக"). எண்ணி எண்ணி(ச் செலவழித்து)க்கொண்டிராதே. அப்படிச் செய்தால்,அல்லாஹ்வும் உனக்கு எண்ணி எண்ணியே தருவான்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அள்ளி வழங்குவாயாக.(அல்லது "(ஈகை மழை) பொழிவாயாக" அல்லது "செலவழிப்பாயாக"). எண்ணி எண்ணி(ச் செலவழித்து)க் கொண்டிராதே. (அப்படிச் செய்தால்) அல்லாஹ்வும் உனக்கு எண்ணியே தருவான். கஞ்சத்தனமாகப் பையில் (முடிந்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் அல்லாஹ்வும் உன் விஷயத்தில் (தனது அருள் வளங்களைப் பொழியாமல் தனது) பையை முடிந்து வைத்துக்கொள்வான்.
- மேற்கண்ட ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1867. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (என் கணவர்) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் அளித்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் கிடையாது. அவர் அளிப்பவற்றில் சிலவற்றை நான் தர்மம் செய்தால் அது குற்றமாகுமா?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன்னால் இயன்ற அளவு சிறிதளவேனும் தர்மம் செய். கஞ்சத்தனமாக பையில் (முடிந்து) வைத்துக்கொள்ளாதே. அவ்வாறு செய்தால் அல்லாஹ்வும் உன் விஷயத்தில் (தன் அருள் வளங்களைப் பொழியாமல் தனது) பையை முடிந்து வைத்துக்கொள்வான்" என்று பதிலளித்தார்கள்.
இதை அப்பாத் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 29 சிறிதளவாயினும் தர்மம் செய்யுமாறு வந்துள்ள தூண்டலும், அற்பமாகக் கருதி சிறிதளவைத் தர்மம் செய்ய மறுக்கலாகாது என்பதும்.
1868. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அவள் அற்பமாகக் கருத வேண்டாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 30 இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு.
1869. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:
1. நீதி மிக்க ஆட்சியாளர்.
2. இறைவழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞன்.
3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.
4. இறைவனுக்காகவே நேசித்து, அவனுக்காகவே இணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர்.
5. தகுதியும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை(த் தவறுசெய்ய) அழைத்தபோதும் "நான் அல்லாஹ்விற்கு அஞ்சுகிறேன்" என்று கூறியவர்.
6. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம்கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்.
7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்திய மனிதர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து, அல்லது அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றாலும் திரும்பி வரும்வரை அதனுடனேயே தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 31 உடல் நலத்தோடும் பணத்தேவையோடும் இருப்பவர் செய்யும் தர்மமே மிகச் சிறந்த தர்மம் ஆகும்.
1870. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! மகத்தான தர்மம் எது?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் உடல் நலமுள்ளவராகவும், பணத்தேவை உள்ளவராகவும், வறுமையை அஞ்சி, செல்வத்தை எதிர்பார்த்தவராகவும் இருக்கும்போது நீங்கள் செய்யும் தர்மமமே (மகத்தான தர்மம் ஆகும்). உயிர் தொண்டைக்குழியை அடைந்துவிட்டிருக்க, இன்ன மனிதருக்கு இவ்வளவு (கொடுங்கள்); இன்ன மனிதருக்கு இவ்வளவு (கொடுங்கள்)" என்று சொல்லும் (நேரம் வரும்)வரை தர்மம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள்! ஏனெனில், அப்போது உங்கள் செல்வம் (வாரிசாகிய) இன்ன மனிதருக்கு உரியதாகிவிட்டிருக்கும்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 12
1871. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! மகத்தான நன்மையுடைய தர்மம் எது?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்முடைய தந்தைமீது அறுதியாக! அது குறித்து நிச்சயம் உமக்கு விளக்கமளிக்கப்படும். நீங்கள் உடல் நலமுள்ளவராகவும், பணத்தேவை உடையவராகவும், வறுமையை அஞ்சியவராகவும் நீண்டநாள் வாழவேண்டுமென எதிர்பார்த்தவராகவும் இருக்கும்போது, நீங்கள் செய்யும் தர்மமே (மகத்தான நன்மை தரக்கூடியதாகும்). உயிர் தொண்டைக்குழியை அடைந்துவிட்டிருக்க, இன்ன மனிதருக்கு இவ்வளவு (கொடுங்கள்); இன்ன மனிதருக்கு இவ்வளவு (கொடுங்கள்)" என்று சொல்லும் (நேரம் வரும்)வரை தர்மம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள்! (ஏனெனில்,) அப்போது உங்கள் செல்வம் (வாரிசாகிய) இன்ன மனிருக்கு உரியதாகிவிட்டிருக்கும்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஒரு மனிதர் "தர்மத்தில் சிறந்தது எது?" என்று கேட்டார்" என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 12
பாடம் : 32 மேல் கைதான் கீழ் கையைவிடச் சிறந்ததாகும். மேல்கை என்பது கொடுக்கக் கூடியதும், கீழ் கை என்பது வாங்கக்கூடியதும் ஆகும்.
1872. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதிருந்தபடி தர்மம் செய்வது, பிறரிடம் கையேந்தாமல் தன்மானத்துடன் இருப்பது ஆகியவற்றைப் பற்றி உபதேசித்தார்கள். அப்போது "மேலிருக்கும் கை கீழிருக்கும் கையைவிடச் சிறந்ததாகும். மேல் கை என்பது கொடுக்கக்கூடியதும், கீழ் கை என்பது யாசிக்கக்கூடியதும் ஆகும்" என்று குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 12
1873. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே "தர்மத்தில் சிறந்தது" அல்லது "நல்ல தர்மம்" ஆகும். மேல் கை, கீழ் கையைவிடச் சிறந்ததாகும். உங்கள் குடும்பத்தாரிலிருந்தே (உங்களது தர்மத்தைத்) தொடங்குங்கள்.
இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1874. ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் (தர்மம்) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகும் நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் நான் கேட்டேன். எனக்குக் கொடுத்தார்கள். பிறகு "இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். யார் இதை(ப் பேராசையின்றி) நல்ல எண்ணத்துடன் பெறுகிறாரோ அவருக்கு அதில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். யார் மனத்தை அலையவிட்டு(ப் பேராசையுடன்) இதை எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு அதில் வளம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1875. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனே! (மனிதனே!) உன் தேவைபோக எஞ்சியதை நீ தர்மம் செய்வதே உனக்கு நல்லதாகும். அதை (யாருக்கும் கொடுக்காமல்) இறுக்கிவைப்பது உனக்குத் தீமையாகும். தேவையுள்ள அளவு சேமித்துவைத்தால் நீ பழிக்கப்படமாட்டாய். உன் வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு. மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும்.
இதை அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 33 யாசிப்பதற்கு வந்துள்ள தடை
1876. அப்துல்லாஹ் பின் ஆமிர் அல்யஹ்ஸபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள், "மக்களே! (வரைமுறையின்றி) நபிமொழிகளை அறிவிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஆனால், உமர் (ரலி) அவர்கள் காலத்தில் இருந்துவந்த நபிமொழிகளைத் தவிர. ஏனெனில், உமர் (ரலி) அவர்கள் வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ்வின் (மார்க்கம்) விஷயத்தில் (பொய்யுரைப்பதிலிருந்து) மக்களைப் பயமுறுத்திவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் எவருக்கு நன்மை நாடுகின்றானோ அவரை மார்க்கத்தில் விளக்கமுள்ளவராக ஆக்குகின்றான். நான் கருவூலக் காவலன் மட்டுமே. ஒருவருக்கு நான் மனப்பூர்வமாகக் கொடுத்தால், அவருக்கு அதில் வளம் வழங்கப்படும். ஒருவர் யாசித்ததை முன்னிட்டு, அல்லது அவரது பேராசையைக் கண்டு அவருக்கு நான் கொடுத்தால், அவர் உண்டாலும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 12
1877. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம் கேட்டு (என்னை) நச்சரிக்காதீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் ஒருவர் என்னிடம் ஏதேனும் (தர்மம்) கேட்டு,அதை நான் வெறுத்த நிலையில் அவர் என்னிடம் கேட்டது அவருக்குக் கிடைத்தால், அதில் அவருக்கு வளம் வழங்கப்படுவதில்லை.
இதை முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களை ஸன்ஆவில் (யமன்) உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். அப்போது அவர்கள் தமது இல்லத்தில் இருந்த வாதுமைக் கொட்டையை எனக்கு வழங்கினார்கள். அவர்களின் சகோதரரிடமிருந்து இந்த ஹதீஸை எனக்கு அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 12
1878. முஆவியா (ரலி) அவர்கள் தமது உரையில் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ் எவருக்கு நன்மை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கமுள்ளவராக ஆக்குகிறான். நான் பங்கிடுபவன் மட்டுமே. அல்லாஹ்தான் கொடுக்கிறான்" என்று சொல்ல நான் கேட்டேன்.
இதை ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 34 (உண்மையான) ஏழை (மிஸ்கீன்) யாரென்றால், எந்தச் செல்வத்தையும் அவன் பெற்றிராததோடு, அவனது நிலையை அறிந்து அவனுக்குத் தர்மமும் வழங்கப்படுவதில்லை.
1879. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஓரிரு கவளம் உணவை, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களைப் பெறுவதற்காக இவ்வாறு மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்" என்று கூறினார்கள். மக்கள், "அப்படியானால் ஏழை என்றால் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ""(தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள) எந்தச் செல்வத்தையும் அவன் பெற்றிருக்கமாட்டான்; அவனது நிலையை அறிந்து அவனுக்குத் தர்மமும் வழங்கப்படுவதில்லை. தானும் வலியச்சென்று மக்களிடம் கேட்கமாட்டான் (அவனே உண்மையான ஏழை)" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 12
1880. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக அலைபவன் ஏழையல்லன். ஏழை என்பவன் (தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்து கொள்பவனே ஆவான். நீங்கள் விரும்பினால், "அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்கமாட்டார்கள்" (2:273) எனும் இறை வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்தள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 35 மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும்.
1881. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்டவர், தமது முகத்தில் சதைத்துண்டு ஏதும் இல்லாதவராகவே (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பார்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("சதைத் துண்டு" என்பதில்) "துண்டு" எனும் சொல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 12
1882. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களிடம் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்ட மனிதன், தனது முகத்தில் சதைத் துண்டு ஏதும் இல்லாதவனாகவே மறுமை நாளில் வருவான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1883. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அதிகம் பொருள் சேர்ப்பதற்காக மக்களிடம் யாசிப்பவன், (நரகின்) நெருப்புக் கங்கையே யாசிக்கிறான்; அவன் குறைவாக யாசிக்கட்டும்; அல்லது அதிகமாக யாசிக்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1884. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் காலையில் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு (சென்று), விறகு வெட்டி அதைத் தமது முதுகில் சுமந்து (விற்றுப் பிழைத்து), மக்களிடம் கையேந்தாமல் தன்னிறைவுடன் (சுயமரியாதையுடன்) வாழ்வதும் அதைத் தர்மம் செய்வதும், ஒரு மனிதனிடம் யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவருக்கு அவன் கொடுத்தாலும் சரி; மறுத்தாலும் சரி. மேலிருக்கும் கை,கீழிருக்கும் கையைவிடச் சிறந்ததாகும். மேலும், உனது வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "உங்களில் ஒருவர் காலையில் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு (சென்று), விறகு வெட்டி அதைத் தமது முதுகில் சுமந்து விற்பது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 12
1885. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் விறகுக்கட்டு ஒன்றைத் தமது முதுகில் சுமந்து விற்(றுப் பிழைப்)பதானது, ஒரு மனிதனிடம் யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவருக்கு அவன் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1886. அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒன்பது பேர், அல்லது எட்டுப் பேர், அல்லது ஏழு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் "நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக்கூடாதா?" என்று கேட்டார்கள். அது நாங்கள் உறுதிமொழி அளித்திருந்த புதிதாகும். எனவே, "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் முன்பே உறுதிமொழி அளித்துவிட்டோம்" என்று கூறினோம். பின்னர் அவர்கள் "நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக்கூடாதா?" என்று (மீண்டும்) கேட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (ஏற்கெனவே) உறுதிமொழி அளித்துவிட்டோம்" என்று நாங்கள் (திரும்பவும்) கூறினோம். பின்னர் (மூன்றாவது முறையாக) "நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிமொழி அளிக்கக்கூடாதா?" என்று கேட்டபோது,நாங்கள் எங்கள் கைகளை நீட்டி "அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நாங்கள் உறுதிமொழி அளிக்கிறோம். எதற்காக நாங்கள் தங்களிடம் உறுதிமொழி அளிக்கவேண்டும்?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; ஐவேளைத் தொழுகைகளைத் தொழவேண்டும்; எனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் (என்று உறுதிமொழி அளியுங்கள்)" என்று கூறிவிட்டு, (அடுத்த) ஒரு வார்த்தையை மெதுவாகச் சொன்னார்கள்: "மக்களிடம் எதையும் (கைநீட்டி) யாசிக்கக்கூடாது" என்றும் உறுதிமொழி கேட்டார்கள். (அவ்வாறே நாங்களும் உறுதிமொழி அளித்தோம்.) பிறகு அ(வ்வாறு உறுதியளித்த)வர்களில் சிலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களில் ஒருவரது சாட்டை (வாகனத்தின் மேலிருந்து) விழுந்தால்கூட அதை யாரிடமும் எடுத்துத் தருமாறு அவர்கள் கேட்டதில்லை.
இதன் அறிவிப்பாளரான அபூமுஸ்லிம் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நம்பிக்கைக்குரிய நேசர் ஒருவர் எனக்கு அறிவித்தார். அவர் எனது நேசத்திற்கு உரியவர்; அவர் என்னிடம் நம்பிக்கைக்குரியவர். (அவர்தாம்) அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 36 யார் யாசிக்கலாம்?
1887. கபீஸா பின் முகாரிக் அல்ஹிலாலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (மற்றொருவர் செலுத்த வேண்டிய) ஓர் இழப்பீட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தர்மப் பொருட்கள் நம்மிடம் வரும்வரை இங்கேயே இருங்கள். அதில் ஏதேனும் உங்களுக்குத் தரச்சொல்கிறோம்" என்று கூறினார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:
கபீஸா! மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு. ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டவர். அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்றவரை யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக்கொள்ள வேண்டும். மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர். அவர் "வாழ்க்கையின் அடிப்படையை" அல்லது "வாழ்க்கையின் அவசியத் தேவையை" அடைந்துகொள்ளும்வரை யாசிக்கலாம். இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன் வந்து, "இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்" என்று (சாட்சியம்) கூறுகின்றனர் என்றால், அவர் "வாழ்க்கையின் அடிப்படையை" அல்லது "வாழ்க்கையின் அவசியத் தேவையை" அடைகின்றவரை யாசிப்பது அவருக்குச் செல்லும். கபீஸா! இவையன்றி மற்ற யாசகங்கள் யாவும் தடைசெய்யப்பட்டவையே (ஹராம்) ஆகும். (இம்மூன்று காரணங்களின்றி ஒருவர் யாசித்துச் சாப்பிட்டால்) அவர் தடைசெய்யப்பட்டதையே (ஹராம்) சாப்பிடுகிறார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 37 ஆசையோடு எதிர்பார்க்காமலும், யாசிக்காமலும் ஒருவருக்கு வழங்கப்பட்டால் அதை அவர் பெற்றுக்கொள்ளலாம்.
1888. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு நன்கொடை வழங்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். (அப்போதெல்லாம்) நான் "என்னைவிட அதிகத் தேவையுடையவருக்கு இதைக் கொடுங்களேன்" என்று சொல்வேன். (ஒருமுறை இவ்வாறு) அவர்கள் எனக்குப் பொருள் ஒன்றைக் கொடுத்தபோது "என்னைவிட அதிகத் தேவையுடையவருக்கு இதைக் கொடுங்கள்" என்று நான் சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள். இந்தச் செல்வத்திலிருந்து எது நீங்கள் ஆசையோடு எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் உங்களிடம் வருகிறதோ அதை (மறுக்காமல்) பெற்றுக்கொள்ளுங்கள். இ(வ்வாறு ஏதும் கிடைக்கவி)ல்லையாயின், நீங்களாக அதைத் தேடிச் செல்லாதீர்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1889. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்கு நன்கொடை வழங்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "என்னைவிட அதிகத் தேவை உள்ளவருக்கு இதைக் கொடுத்துவிடுங்கள்" என்று கூறுவார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை வாங்கி உடைமையாக்கிக் கொள்ளுங்கள்; அல்லது தர்மம் செய்துவிடுங்கள். நீங்கள் ஆசையோடு எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் இந்தச் செல்வத்திலிருந்து உங்களிடம் எது வருகிறதோ அதை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள். அப்படி வராவிட்டால் அதைத் தேடி நீங்களாகச் செல்லாதீர்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இதனால்தான் (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் யாரிடமும் எதையும் கேட்கமாட்டார்கள். தாமாக முன்வந்து வழங்கப்பட்டால் அதை மறுக்கவுமாட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1890. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாஇதீ அல்மாலிகீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். நான் அந்தப் பணியை முடித்துவிட்டு (வந்து), உமர் (ரலி) அவர்களிடம் ஸகாத் பொருட்களை ஒப்படைத்தபோது எனக்கு ஊதியம் கொடுக்க உத்தரவிட்டார்கள். அப்போது நான், "நான் இந்த வேலையை அல்லாஹ்விற்காகவே செய்தேன். எனக்குரிய ஊதியம் அல்லாஹ்விடமே உள்ளது" என்று சொன்னேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (நீங்களாகக் கேட்காமல்) உங்களுக்கு (ஏதேனும்) வழங்கப் பட்டால், அதை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஸகாத் வசூலிப்பவனாக இருந்தேன். அதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு ஊதியம் வழங்கினார்கள். நீங்கள் சொன்னதைப் போன்றே நானும் சொன்னேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்களாகக் கேட்காமல் ஏதேனும் உங்களுக்கு (நீங்கள் செய்த பணிக்காக) வழங்கப்பட்டால் அதை நீங்கள் (வாங்கி) உட்கொள்ளுங்கள்; தர்மமும் செய்யுங்கள்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அஸ்ஸாஇதீ அல்மாலிகீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 38 உலக(ஆதாய)த்தின் மீது பேராசை கொள்வது விரும்பத்தக்கதன்று.
1891. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முதியவரின் மனம்கூட இரண்டை நேசிப்பதில் இளமையாகவே உள்ளது:
1, இம்மை வாழ்வின் மீதுள்ள ஆசை.
2, பொருளாசை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1892. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முதியவரின் மனம்கூட இரண்டை நேசிப்பதில் இளமையாகவே உள்ளது:
1. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை. 2. பொருளாசை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1893. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகன் (மனிதன்) முதுமையை அடையும்போதும் அவனது இரு குணங்கள் மட்டும் இளமையாகவே இருக்கும்:
1. பொருளாசை. 2. (நீண்ட) ஆயுள்மீதுள்ள ஆசை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து இன்னும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 39 ஒரு மனிதனுக்கு இரு ஓடைகள் (நிறைய செல்வம்) இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் எதிர்பார்ப்பான்.
1894. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். மனிதனின் வாயை (சவக் குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "(மேற்கண்டவாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். (இந்த வாசகம் அல்லாஹ்விடமிருந்து) அருளப்பெற்ற இறைவசனமா, அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவந்த பொன்மொழியா என்று எனக்குத் தெரியாது" என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1895. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுக்குத் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தாலும், (அதைப் போன்று) மற்றொரு நீரோடையும் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான்.அவனது வாயை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அத்தியாயம் : 12
1896. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய செல்வம் இருந்தாலும் அதனுடன் அதைப்போன்ற மற்றொரு நீரோடை தனக்கு இருக்க வேண்டுமென்றே அவன் விரும்புவான். அவனது மனத்தை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த வாசகம் குர்ஆனில் உள்ளதா, அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இந்த வாசகம் குர்ஆனில் உள்ளதா என்று எனக்குத் தெரியாது" என்று (மட்டும்) இடம்பெற்றுள்ளது. (இவ்வாறு) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படவில்லை.
அத்தியாயம் : 12
1897. அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் பஸ்ரா (இராக்) நகரத்திலுள்ள குர்ஆன் அறிஞர்களிடம் (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். (அவர்களது அழைப்பை ஏற்று) குர்ஆனைக் கற்றறிந்த முன்னூறு பேர் அவர்களிடம் வந்தார்கள். அப்போது அவர்களிடம் அபூமூசா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
பஸ்ராவாசிகளிலேயே நீங்கள்தாம் சிறந்தவர்கள் ஆவீர்கள்; அவர்களிலேயே குர்ஆனை நன்கறிந்தவர்களும் ஆவீர்கள். எனவே, (தொடர்ந்து) குர்ஆனை ஓதிவாருங்கள். காலம் நீண்டுவிட்ட போது உங்களுக்கு முன் வாழ்ந்த (வேதம் அருளப்பெற்ற சமுதாயத்த)வர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டதைப் போன்று உங்களுடைய உள்ளங்களும் இறுகிவிட வேண்டாம். நாங்கள் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) ஓர் அத்தியாயத்தை ஓதிவந்தோம்; நீளத்திலும் கடுமை(யான எச்சரிக்கை விடுக்கும் தோரணை)யிலும் "பராஅத்" எனப்படும் (9ஆவது) அத்தியாயத்திற்கு நிகராக அதை நாங்கள் கருதினோம். ஆனால், அந்த அத்தியாயத்தை நான் மறக்கச் செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும், அதில் "ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். மேலும், மற்றோர் அத்தியாயத்தையும் நாங்கள் ஓதிவந்தோம். அதை (சப்பஹ, யுசப்பிஹு, சப்பிஹ் என) இறைத்துதியில் தொடங்கும் அத்தியாயங்களில் ஒன்றுக்கு நிகராகவே நாங்கள் கருதினோம். அந்த அத்தியாயத்தையும் நான் மறக்கச்செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும்,அதில் "நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அவ்வாறு நீங்கள் செய்யாததைப் பிறருக்குச் சொல்வீர்களாயின்) அது உங்களுக்கு எதிரான சாட்சியாக உங்களுடைய கழுத்துகளின் மீது எழுதப்படும். பின்னர் மறுமை நாளில் அது குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். (இந்த அத்தியாயங்கள் பின்னர் மாற்றப்பட்டுவிட்டன.)
அத்தியாயம் : 12
பாடம் : 40 வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று.
1898. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 41 இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல்.
1899. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து (சொற்பொழிவு மேடைமீது) நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களுக்காக வெளிப்படுத்தும் இவ்வுலகின் கவர்ச்சிப் பொருட்க(ளான கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர்வகை)களைத் தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள். அப்போது ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா?" என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பிறகு (அந்த மனிதரிடம்) "என்ன கேட்டீர்கள்?" என்றார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே, நன்மை தீமையை உருவாக்குமா என்று கேட்டேன்" என்றார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்மையால் நன்மையே விளையும். ஆனால், இ(ந்தக் கவர்ச்சியான)து ஒரு நன்மையா? வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்னவைத்துக் கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவிற்குச் சென்றுவிடுகின்றன; (அப்போதுதான் துளிர்விட்ட) பசும் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (பசும் புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, (அசைபோடுவதற்காகச்) சூரியனை நோக்கி(ப் படுத்து)க்கொள்கிறது. (இதனால் நன்கு சீரணமாகி குழைவு நிலையில்) சாணமிடுகின்றது. அல்லது சிறுநீரை வெளியேற்றுகிறது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் மேய்ந்துவிட்டு வந்து) அசைபோடுகின்றது. பிறகு (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கிறது. (அவ்வாறுதான்) யார் ஒரு செல்வத்தை உரிய முறையில் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு அதில் வளம் (பரகத்) வழங்கப்படும். யார் ஒரு செல்வத்தை முறையற்ற வழிகளில் எடுத்துக்கொள்கிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1900. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவன் உங்களுக்காக வெளிப்படுத்தும் இவ்வுலகின் கவர்ச்சிப் பொருட்களைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள். அப்போது மக்கள், "இவ்வுலகின் கவர்ச்சிப் பொருட்கள் எவை, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) பூமியின் வளங்கள்(தாம் அவை)" என்று பதிலளித்தார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நன்மை தீமையை உருவாக்குமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்மையால் நன்மையே விளையும். நன்மையால் நன்மையே விளையும். நன்மையால் நன்மையே விளையும். வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால் நடைகளை), வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் கொண்டுசென்றுவிடுகின்றன; பசுமையான புல்லைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, சூரியனை நோக்கி(ப் படுத்துக்கொண்டு) அசைபோடுகின்றது. (இதனால் நன்கு சீரணமாகி குழைவு நிலையில்) சிறுநீரையும் வெளியேற்றி சாணமுமிடுகிறது. பின்னர் (வயிறு காலியானவுடன்) மீண்டும் சென்று மேய்கிறது.
இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் அதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகிறாரோ அவருக்கு அது நல்லுதவியாக அமையும். யார் அதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்று இருக்கிறார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
1901. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சொற்பொழிவு மேடைமீது அமர்ந்தார்கள். அவர்களைச் சுற்றி நாங்களும் அமர்ந்தோம். அப்போது அவர்கள் "எனக்குப் பின், உங்களிடையே இவ்வுலகின் கவர்ச்சியும் அதன் அலங்காரங்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதானது, உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகின்றவற்றில் ஒன்றாகும்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா?" என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாக இருந்தார்கள். அப்போது அந்த மனிதரிடம் "உமக்கு என்ன ஆயிற்று? நீர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேச்சுக் கொடுக்கிறீர். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!" என்று கேட்கப்பட்டது. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மௌனம் தொடருவதைக் கண்ட)நாங்கள் அவர்களுக்கு இறைஅறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது என்று கருதினோம். பிறகு அவர்கள் இயல்பு நிலைக்கு வந்து தம்மீதிருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துவிட்டு, "இந்தக் கேள்வி கேட்டவர் (எங்கே?)" என்று (அவரைப் பாராட்டுவதைப் போல) கேட்டார்கள். பின்னர், ""நன்மையால் நன்மையே விளையும். வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை), வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவிற்குச் சென்றுவிடுகின்றன. பச்சைப் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (பச்சைப் புற்களைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, சூரியனை நேராக நோக்கி(ப் படுத்துக்கொண்டு அசை போடுகின்றது); சாணமிட்டு சிறுநீரும் கழிக்கின்றது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் சென்று) மேய்கிறது.
இந்த (உலகின்) செல்வம் இனிமையும் பசுமையும் உடையதாகும். ஒரு முஸ்லிம் தமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அ(வரது செல்வமான)து அவருக்குச் சிறந்த தோழனாகும்.-(இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்) அல்லது அவர்கள் கூறியதைப் போன்று.- யார் முறையற்ற வழிகளில் செல்வத்தை எடுத்துக்கொள்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார். மேலும், மறுமை நாளில் அந்தச் செல்வம் அவருக்கு எதிரான சாட்சியாக அமையும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 42 சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு.
1902. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும், செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். பிறகு (மீண்டும் மீண்டும்) அவர்கள் கேட்டபோதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். இறுதியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்த அனைத்தும் (கொடுத்துத்) தீர்ந்துவிட்டபோது, "என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப்போவதில்லை. (இருப்பினும்,) யார் சுயமரியாதையோடு நடந்துகொள்கிறாரோ அவரை அல்லாஹ் தன்மானத்துடன் வாழச்செய்வான். யார் பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். யார் (இன்னல்களைச்) சகித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை வேறெதுவும் எவருக்கும் வழங்கப்படுவதில்லை" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 43 போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும்.
1903. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1904. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இறைவா! முஹம்மதின் குடும்பத்தாருக்குப் பசியைத் தணிக்கத் தேவையான உணவை வழங்குவாயாக" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 44 அருவருப்பாகப் பேசியும் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தியும் கேட்டவருக்கும் வழங்குவது.
1905. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிலருக்குத் தானப்பொருட்களை) பங்கிட்டுக் கொடுத்தார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே, அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்களைவிட இவர்கள் அல்லாத மற்றவர்களே இ(ந்தப் பொருட்களைப் பெறுவ)தற்கு மிகவும் தகுதியுடையவர்கள்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவர்கள் அருவருப்பாகப் பேசி, அல்லது என்னைக் கஞ்சன் என்று சொல்லி என்னிடம் கேட்கும் அளவிற்கு என்னைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். ஆனால், நான் கஞ்சன் அல்லன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1906. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தடித்த கரையுள்ள நஜ்ரான் (யமன்) நாட்டு சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களை அடைந்து, அந்தச் சால்வையை வேகமாக இழுத்தார். அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப்பகுதி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கழுத்தின் ஒரு மூலையில் (காயப்படுத்தி) அடையாளம் பதித்துவிட்டிருந்ததை நான் கண்டேன். பிறகு அவர், "முஹம்மதே! உங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்" என்று சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டு, பிறகு அவருக்கு நன்கொடை வழங்குமாறு உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், இக்ரிமா பின் அம்மார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பிறகு அந்தக் கிராமவாசி அந்தச் சால்வையை வேகமாக இழுத்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர்மீது கோபப்படாமல்) தமது நெஞ்சை அந்தக் கிராமவாசிக்கு நேராகத் திருப்பினார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர் வேகமாக இழுத்தபோது சால்வை (இரண்டாகக்) கிழிந்துவிட்டது. அதன் ஓர் ஓரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கழுத்திலேயே இருந்தது" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1907. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("கபா" எனும்) மேலங்கிகளை(த் தம் தோழர்களுக்கு)ப் பங்கிட்டார்கள். (ஆனால், என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. ஆகவே, மக்ரமா (ரலி) அவர்கள் (என்னிடம்), "அன்பு மகனே! (என்னோடு வா!) நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்வோம்" என்று சொல்ல, அவர்களுடன் நான் சென்றேன். (அங்கு சென்று சேர்ந்ததும்) "நீ உள்ளே போய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை என்னிடம் அழைத்து வா" என்று சொன்னார்கள். நான் அவ்வாறே மக்ரமா (ரலி) அவர்களிடம் வரும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்ரமா (ரலி) அவர்களிடம் புறப்பட்டு வந்தார்கள். அப்போது அவர்களிடம் அந்த அங்கிகளில் ஒன்று இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களுக்காக இதை நான் பத்திரப்படுத்தி வைத்தேன்" என்று சொன்னார்கள். மக்ரமா (ரலி) அவர்கள் அந்த அங்கியைக் கூர்ந்து பார்த்துவிட்டு, "மக்ரமா திருப்தி அடைந்து விட்டான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 12
1908. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு சில மேலங்கிகள் வந்தன. என்னிடம் என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள், "(என்னோடு வா!) நாம் நபி (ஸல்) அவர்களிடம் செல்வோம். அவர்கள் நமக்கு அவற்றிலிருந்து எதையேனும் தருவார்கள்" என்று கூறினார்கள். என் தந்தை (நபியவர்களின் வீட்டு) வாசலருகே நின்று பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரது குரலைப் புரிந்து கொண்டு, தம்முடன் ஓர் அங்கியை எடுத்துக்கொண்டு, அதன் நிறைகளைக் காட்டியபடி வெளியே வந்தார்கள். அப்போது அவர்கள் "உங்களுக்காக இதை நான் பத்திரப்படுத்தி வைத்தேன்; உங்களுக்காக இதை நான் பத்திரப்படுத்தி வைத்தேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 45 ஒருவரது இறைநம்பிக்கை (ஈமான்) குறித்து அஞ்சப்படும்போது அவருக்கு (பொருளாதார உதவிகள்) வழங்குதல்.
1909. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு குழுவினரிடையே அமர்ந்திருந்தபோது, அக்குழுவினருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தர்மப் பொருட்களை) வழங்கினார்கள். ஆனால், அக்குழுவினரில் எனக்குப் பிடித்த ஒருவருக்கு ஏதும் கொடுக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்து சென்று, "அல்லாஹ்வின் தூதரே! (அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்?) அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்) என நான் அறிவேன்" என்று இரகசியமாகக் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் (வெளித்தோற்றத்தில் இறைநம்பிக்கையாளர்) என்று சொல்" என்றார்கள். சிறிதுநேரம் நான் அமைதியாக இருந்தேன். பின்னர், நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் (என் நாவில்) வந்துவிடவே, "அல்லாஹ்வின் தூதரே! அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் என்று நான் அறிவேன்" என்று (மீண்டும்) கூறினேன். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் என்று சொல்" என்றார்கள். சிறிதுநேரம் நான் அமைதியாக இருந்தேன். தொடர்ந்து, நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் (என் நாவில்) வந்துவிடவே, "அல்லாஹ்வின் தூதரே! அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் என்று நான் அறிவேன்" என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் என்று சொல்” நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால்,மற்றொருவர் இவரைவிட என் அன்புக்குரியவராய் இருப்பார். (அப்படியிருந்தும் அவருக்கு நான் கொடுப்பதற்குக்) காரணம், (நான் ஏதும் கொடுக்காதிருந்தால் வறுமையால் அவர் குற்றமேதும் இழைத்து, அதனால்) அவர் நரகத்தில் முகம் குப்புற வீழ்த்தப்படுவாரோ எனும் அச்சம்தான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹசன் பின் அலீ அல் ஹுல்வானீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், சஅத் (ரலி) அவர்கள் இரண்டு முறை அவ்வாறு கேட்டதாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (மூன்று முறை கேட்டு பதிலுரைத்த பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கழுத்திற்கும் தோளிற்கும் இடையில் அடித்து, "சஅதே! (என்னிடம் வழக்காடி) மோத வருகின்றீர்களா? நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்..." என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 46 இஸ்லாத்துடன் உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டிய (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய)வர்களுக்கு வழங்குவதும்,இறைநம்பிக்கை வலுவாக உள்ளவர்கள் (விட்டுக்கொடுத்து) பொறுமை காப்பதும்.
1910. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு "ஹவாஸின்" குலத்தாரின் செல்வத்தை (போரின்றி வெற்றிப் பரிசாக) அளித்தபோது,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) சில குறைஷியருக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுக்கலானர்கள். அப்போது அன்சாரிகளில் சிலர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! (எதிரிகளான) குறைஷிகளின் இரத்தம் நம் வாட்களில் சொட்டிக் கொண்டிருக்க, (நமக்குக் கொடுக்காமல்) இவர்களுக்குக் கொடுக்கிறார்களே; ஆனால், (தியாகங்கள் பல புரிந்த) நம்மை விட்டுவிடுகின்றார்களே!" என்று (கவலையுடன்) சொன்னார்கள்.
அவர்களின் இந்தப் பேச்சு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப்பட்ட தோலாலான ஒரு கூடாரத்தில் ஒன்றுதிரட்டினார்கள். அவர்கள் ஒன்றுகூடியதும் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, "உங்களைக் குறித்து எனக்கு எட்டியுள்ள செய்தி என்ன? (உண்மைதானா?)" என்று கேட்க, அன்சாரிகளிலிருந்த விவரமானவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் கருத்துடைய (தலை)வர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இளவயதுடைய மக்கள் சிலர்தாம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் குறைஷிகளின் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்க, நம்மை விட்டுவிட்டு அவர்களுக்குக் கொடுக்கிறார்களே!" என்று பேசிக்கொண்டனர்" என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைமறுப்பை விட்டு இப்போதுதான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு நான் கொடுக்கிறேன். (அதன் வாயிலாக இஸ்லாத்தில் அசையாத நம்பிக்கையையும் ஒட்டுறவையும் ஏற்படுத்தி) அவர்களது உள்ளங்களுடன் நான் இணக்கம் ஏற்படுத்துகிறேன். மக்கள் உலகச்செல்வங்களை எடுத்துக்கொண்டு செல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத்தூதரையே கொண்டுசெல்வதை விரும்பமாட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் பெற்றுத் திரும்பும் செல்வங்களைவிட நீங்கள் பெற்றுத்திரும்புவதே சிறந்ததாகும்" என்று சொன்னார்கள். உடனே அன்சாரிகள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (எங்களுடன் உங்களைக் கொண்டுசெல்வதையே) விரும்புகிறோம்" என்று சொன்னார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "விரைவில் (உங்களைவிடப் பிறருக்கு ஆட்சியதிகாரத்தில்) அதிகமாக முன்னுரிமை வழங்கப்படுவதைக் காண்பீர்கள். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (மறுமையில்) நீங்கள் சந்திக்கும்வரை பொறுமையாயிருங்கள். ஏனெனில், அன்று நான் (எனக்கு வழங்கப்படவுள்ள சிறப்புப் பரிசான "அல்கவ்ஸர்" எனும்) தடாகத்தின் அருகே இருப்பேன்" என்று சொன்னார்கள். அதற்கு அன்சாரிகள், "நாங்கள் பொறுமையாக இருப்போம்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹவாஸின் குலத்தாரின் செல்வங்களை வெற்றிப் பரிசாக அளித்தபோது" என்று ஹதீஸ் தொடங்குகிறது. ஆயினும், இறுதியில் "ஆனால், நாங்கள் பொறுமையாக இருக்கவில்லை" என்றே இடம் பெற்றுள்ளது. மேலும், "இளவயதுடைய மக்கள்" என்றுதான் இடம்பெற்றுள்ளது. (எங்களில் இளவயதுடைய மக்கள்" என்று இடம்பெறவில்லை.)
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் மேற்கண்ட (1910ஆவது) ஹதீஸில் உள்ளதைப் போன்றே "நாங்கள் பொறுமையாக இருப்போம்" என்று அன்சாரிகள் கூறியதாகவே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1911. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளை ஒன்றுதிரட்டி, "உங்களிடையே உங்களுடைய கூட்டத்தார் (அன்சாரிகள்) அல்லாத மற்றவர்கள் எவரேனும் (இங்கு வந்து) இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், "எங்கள் சகோதரி ஒருத்தியின் புதல்வர் ஒருவரைத் தவிர (மற்றவர்) வேறெவருமில்லை" என்று பதிலளித்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு சமுதாயத்தாரின் சகோதரி புதல்வர் அவர்களைச் சேர்ந்தவரே!" என்று கூறிவிட்டு, "குறைஷியர் அறியாமைக் காலத்திலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு இப்போது தான் இஸ்லாத்தில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தவும் விரும்பினேன். (அதனால்தான் அவர்களுக்குக் கொடுத்தேன்.) மக்கள் உலகச் செல்வங்களைப் பெற்றுக்கொண்டு தம் வீடுகளுக்குத் திருமபிச்செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையே பெற்றுக்கொண்டு உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை விரும்பவில்லையா? மக்கள் ஒரு கணவாயில் நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் சென்றால் நான் அன்சாரிகளின் கணவாயிலேயே செல்வேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1912. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரிடையே போர்ச்செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது அன்சாரிகள் (சிலர்), "இந்த விஷயம் எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. எதிரிகளின் இரத்தம் எங்களின் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க, எங்களுக்குச் சேரவேண்டிய போர்ச்செல்வங்கள் (புதிய முஸ்லிம்களான) குறைஷியரிடையே திருப்பிவிடப்படுகின்றன" என்று பேசிக்கொண்டனர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அன்சாரிகளை (ஒரு கூடாரத்தினுள்) ஒன்று திரட்டி, "உங்களைக் குறித்து எனக்கு எட்டிய செய்தி என்ன? (உண்மைதானா?)" என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள் "உங்களுக்கு எட்டியது உண்மைதான்" என்று பதிலளித்தனர். -அன்சாரிகள் பொய் பேசாதவர்களாய் இருந்தனர்- அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்கள் உலகச்செல்வங்களைப் பெற்றுக்கொண்டு தம் வீடுகளுக்குத் திரும்பிச்செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரைப் பெற்றுக்கொண்டு உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச்செல்வதை விரும்பவில்லையா? மக்கள் ஒரு கணவாயிலோ பள்ளத்தாக்கிலோ நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயிலோ பள்ளத்தாக்கிலோ நடந்துசென்றால், நான் அன்சாரிகளின் கணவாயிலேயே அல்லது அன்சாரிகளின் பள்ளத்தாக்கிலேயே செல்வேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 12
1913. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுனைன் போரின்போது (எதிரிகளான) "ஹவாஸின்" குலத்தாரும் "கத்ஃபான்" குலத்தாரும் தம் குழந்தை குட்டிகளுடனும் கால்நடைகளுடனும் (இஸ்லாமியப் படையினரை) நோக்கி வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் (அறப்) போராளிகள் பத்தாயிரம் பேரும் (மக்கா வெற்றியின்போது) மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களும் இருந்தனர். அவர்கள் (அனைவரும் எதிரிகளின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல்) நபி (ஸல்) அவர்களைத் தனியாக விட்டுவிட்டுப் பின்வாங்கிச் சென்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் இருமுறை அழைப்பு விடுத்தார்கள்; அவ்விரண்டுக்குமிடையே வேறெதுவும் பேசாமல் (தொடர்ச்சியாக) அழைத்தார்கள். தமது வலப்பக்கம் திரும்பி "அன்சாரிகளே!" என்று அழைக்க, அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதோ வந்துவிட்டோம். நற்செய்தி பெறுங்கள்; நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்" என்று கூறினர். பிறகு தம் இடப்பக்கம் திரும்பி, "அன்சாரிகளே!" என்று அழைத்தார்கள். அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! இதோ வந்துவிட்டோம். நற்செய்தி பெறுங்கள்; நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்" என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் வெள்ளைக் கோவேறு கழுதையின் மீது இருந்தார்கள். பிறகு அதிலிருந்து இறங்கி, "நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவேன்" என்று சொன்னார்கள். பிறகு (அந்தப் போரில் ஹவாஸின் மற்றும் ஃகத்ஃபான் குலத்தைச் சேர்ந்த) இணைவைப்பாளர்கள் தோல்வி கண்டதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமான போர்ச்செல்வங்களைப் பெற்றார்கள்; அவற்றை முஹாஜிர்களிடையேயும் (மக்கா வெற்றியின்போது) மன்னிப்பு அளிக்கப் பட்டவர்களிடையேயும் பங்கிட்டார்கள். அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை.
ஆகவே, அன்சாரிகள் (சிலர்), "கடுமையான பிரச்சினை என்றால் நாங்கள் அழைக்கப்படுகிறோம். போர்ச் செல்வங்களோ மற்றவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன" என்று (மனக்குறையுடன்) பேசிக்கொண்டனர். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளை ஒரு கூடாரத்தில் ஒன்று கூட்டி, "அன்சாரிகளே! உங்களைக் குறித்து எனக்கு எட்டிய செய்தி என்ன? (உண்மைதானா?)" என்று கேட்டார்கள். அவர்கள் (அதை ஒப்புக்கொள்வதைப் போன்று) மௌனமாயிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அன்சாரிகளே! மக்கள் உலகச் செல்வத்தைத் தங்களுடன் கொண்டுசெல்ல, நீங்கள் (இறைத்தூதர்) முஹம்மதை உடைமையாக்கிக் கொண்டு உங்கள் இல்லங்களுக்குச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா?" என்று கேட்டார்கள். அன்சாரிகள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (அதையே) விரும்புகிறோம்" என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "மக்களெல்லாம் ஒரு பள்ளத்தாக்கில் செல்ல, அன்சாரிகள் மட்டும் ஒரு கணவாயில் செல்வார்களாயின், நான் அன்சாரிகள் செல்லும் கணவாயையே தேர்ந்தெடுப்பேன்" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் (இதைத் தமக்கு அறிவித்த தம் பாட்டனாரான அனஸ் (ரலி) அவர்களிடம்), "அபூஹம்ஸா! (இந்நிகழ்ச்சி நடைபெற்றபோது) தாங்கள் அங்கு இருந்தீர்களா?" என்று கேட்க, அனஸ் (ரலி) அவர்கள், "நான் நபி (ஸல்) அவர்களைவிட்டு எங்கே போவேன்?" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1914. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மக்காவை வெற்றிகொண்டோம். பின்னர் ஹுனைனை நோக்கிப் போருக்காகப் புறப்பட்டோம். அப்போது (எதிரிகளான) இணைவைப்பாளர்கள் நான் பார்த்தவற்றிலேயே மிக அழகான முறையில் அணிவகுத்து வந்தனர். முதலில் குதிரைப் படைகள் நிறுத்தப்பட்டன. பிறகு காலாட்படையினரும் அதற்குப் பின் பெண்கள் அணியும் நிறுத்தப்பட்டது. பிறகு ஆடுகளும் பின்னர் இதர கால்நடைகளும் நிறுத்தப்பட்டன. அப்போது (எங்கள் அணியில்) அதிகமான வீரர்கள் இருந்தனர்; நாங்கள் ஆறாயிரம் பேர் இருந்தோம். எங்கள் சாலையோரக் குதிரைப்படைக்கு காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் (தளபதியாக) இருந்தார்கள். எங்கள் குதிரைப்படை எங்கள் முதுகுக்குப் பின்னால் திரும்பலாயிற்று. சிறிது நேரமே கழிந்திருக்கும்; அதற்குள் அவை எங்கள் (களத்திலிருந்து) விலகிச் செல்லத்தொடங்கின. எங்கள் (அணியிலிருந்த) கிராமவாசிகளும் நாங்கள் அறிந்த வேறு சிலரும் வெருண்டோடலாயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முஹாஜிர்களே, முஹாஜிர்களே" என்று அழைத்தார்கள். பின்னர் "அன்சாரிகளே, அன்சாரிகளே" என்று அழைத்தார்கள்.
-இது என் தந்தையின் சகோதரர்கள் (அல்லது என் கூட்டத்தார்) அறிவித்த தகவலாகும்-
அப்போது நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! தங்கள் அழைப்புக்குக் கீழ்படிந்தோம்" என்று கூறி(முன்னே வந்து எதிரிகளுடன் போரிடலா)னோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முன்னேறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் எதிரிகளை நோக்கி முன்னேறிச் சென்றபோது, அல்லாஹ் எங்கள் எதிரிகளை தோல்வியுறச்செய்தான். (எதிரிகள் விட்டுச் சென்ற) அந்த(ப் போர்)ச் செல்வங்களை நாங்கள் கைப்பற்றினோம். பின்னர் தாயிஃப் (நகர மக்களை) நோக்கி நடந்து அவர்களை நாற்பது இரவுகள் முற்றுகையிட்டோம். பிறகு மக்காவிற்குத் திரும்பி வந்து (அங்கு) தங்கினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களில்) ஒருவருக்கு நூறு ஒட்டகங்கள் (போர்ப் பரிசாக) வழங்கலானார்கள்.
மற்ற விவரங்கள் முந்தைய ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1915. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுனைன் போர்ச்செல்வங்களிலிருந்து) அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி), ஸஃப்வான் பின் உமய்யா (ரலி), உயைனா பின் ஹிஸ்ன் (பின் பத்ர்-ரலி) மற்றும் அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) ஆகியோருக்குத் தலா நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். அப்பாஸ் பின் மிர்தாஸ் (ரலி) அவர்களுக்கு அதைவிடக் குறைவாகவே கொடுத்தார்கள். அப்போது அப்பாஸ் பின் மிர்தாஸ் ரலி) அவர்கள் பின்வருமாறு கவி பாடினார்கள்:
எனது பங்கையும்
(என் குதிரை) உபைதின் பங்கையும்
உயைனாவுக்கும் அக்ரஉக்குமிடையே
பங்கிடுகிறீரா?
சபைகளில் மிர்தாஸை மிஞ்சுபவர்களாக
பத்ருமில்லை; ஹாபிஸும் இல்லை.
அவ்விருவரையும்விட
நான் குறைந்தவனுமில்லை.
யாரை இன்று நீர் தாழ்த்திவிட்டீரோ
அவர் உயர்த்தப்படப்போவதில்லை.
அப்போது அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை முழுமையாக்கி (வழங்கி)னார்கள்.
அத்தியாயம் : 12
1916. மேற்கண்ட ஹதீஸ் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேலும் அதில், "அல்கமா பின் உலாஸா (ரலி) அவர்களுக்கும் நூறு ஒட்டகங்கள் வழங்கினார்கள்" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அல்கமா பின் உலாஸா (ரலி) அவர்களைப் பற்றியோ ஸஃப்வான் பின் உமய்யா (ரலி) அவர்களைப் பற்றியோ குறிப்பு இல்லை. மேலும், மேற்கண்ட கவிதையும் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 12
1917. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் வெற்றி கண்டபோது, போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டிய (மக்கா வெற்றியின்போது புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய)வர்களுக்கு (மட்டும்) அவற்றைக் கொடுத்தார்கள். (அன்சாரிகளுக்கு எதுவும் கொடுக்கவில்லை.) அந்த மக்களுக்குக் கிடைத்ததைப் போன்று தமக்கும் கிடைக்கவேண்டுமென அன்சாரிகள் விரும்புகின்றார்கள் என்ற செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, அன்சாரிகளிடையே (அவர்களுக்கு ஆறுதலளிக்கும் விதமாக) உரையாற்றினார்கள்.
அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிறகு, "அன்சாரிகளே! உங்களை வழிதவறியவர்களாக நான் கண்டேன்; அல்லாஹ் என் மூலமாக உங்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ், என் மூலமாக உங்களைத் தன்னிறைவுடையவர்களாய் ஆக்கவில்லையா? நீங்கள் (இனவாதம் பேசி) பிரிந்து (சிதறிக்) கிடந்தீர்கள். அல்லாஹ் என் மூலமாக உங்களை இணக்கமாக்கவில்லையா?" என்று கேட்டார்கள். (தமது வருகையால் அன்சாரிகள் அடைந்த நன்மைகளை ஒவ்வொன்றாக நபியவர்கள் சொல்லும்போதெல்லாம்) "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அதிக உபகாரிகள்" என்று அன்சாரிகள் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறிருக்க, எனக்கு நீங்கள் பதிலளிக்கமாட்டீர்களா?" என்று கேட்க, அன்சாரிகள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகப்பெரும் உபகாரிகள்" என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்களும் விரும்பினால் இன்னின்னவாறு இன்னின்ன நேரத்தில் நடந்தது என்று (நீங்கள் எனக்குச் செய்த உதவிகளையும் பட்டியலிட்டுக்) கூறலாம்" என்று சில விஷயங்களைச் சொல்லிக்காட்டினார்கள்.
-அந்த விஷயங்கள் எவையெவை என்பதைத் தாம் மனனமிடவில்லை என இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.-
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ள) இந்த மக்கள் (நான் கொடுக்கும்) ஆடுகளையும் ஒட்டகங்களையும் (ஓட்டிக்) கொண்டுசெல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைவனின் தூதரையே (என்னையே) கொண்டுசெல்வதை விரும்பமாட்டீர்களா? அன்சாரி(களாகிய நீங்)கள் (மேனியுடன் ஒட்டிய) உள்ளாடைகள் போன்றவர்கள். மற்றவர்கள் மேலாடை போன்றவர்கள். ஹிஜ்ரத் (மார்க்கத்திற்காகப் பிறந்தகத்தைத் துறந்து செல்வது) மட்டும் நடந்திராவிட்டால், நான் அன்சாரிகளில் ஒருவனாயிருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு கணவாயிலும் பள்ளத்தாக்கிலும் நடந்து சென்றால், நான் அன்சாரிகள் செல்லும் கணவாயிலும் பள்ளத்தாக்கிலும்தான் செல்வேன். (அன்சாரிகளாகிய) நீங்கள் விரைவில் (ஆட்சியதிகாரத்தில்) உங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதைக் காண்பீர்கள். ஆகவே, (எனக்குச் சிறப்புப் பரிசாக மறுமையில் கிடைக்கவிருக்கும் "ஹவ்ளுல் கவ்ஸர்" எனும்) தடாகம் அருகே என்னைச் சந்திக்கும்வரை பொறுமையுடன் இருங்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 12
1918. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுனைன் போரின் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை (அளித்துப் போர்ச்செல்வங்களிலிருந்து அதிகமாக) வழங்கினார்கள். (புதிய முஸ்லிம்களில் ஒருவரான) அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா (பின் ஹிஸ்ன்-ரலி) அவர்களுக்கும் அதைப் போன்றே (நூறு ஒட்டகங்கள்) கொடுத்தார்கள். அரபுகளில் முக்கியமானவர்கள் சிலருக்கும் கொடுத்தார்கள். அன்றையதினம் அவர்களுக்கெல்லாம் பங்கீட்டில் முன்னுரிமை அளித்தார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்தப் பங்கீட்டில் நீதி வழங்கப்படவில்லை; அல்லாஹ்வின் திருப்தி நாடப்படவில்லை" என்று சொன்னார். உடனே நான், "இதை நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பேன்" என்று சொல்லிவிட்டு, அவர்களிடம் சென்று அவர் சொன்னதைத் தெரிவித்தேன். இதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் சிவப்புச்சாயம் போல் மாறிவிட்டது. பிறகு "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் வேறுயார் தாம் நீதியுடன் நடந்துகொள்வார்கள்? அல்லாஹ் (இறைத்தூதர்) மூசா (அலை) அவர்களுக்கு கருணை புரிவானாக! அவர்கள் இதைவிட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும், (அதைச்) சகித்துக் கொண்டார்கள்" என்று கூறினார்கள்.
நான் "உறுதியாக! இனிமேல் எந்தச் செய்தியையும் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லமாட்டேன்" என்று சொன்னேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1919. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்ச்செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது ஒரு மனிதர், "இது இறைவனின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்" என்று சொன்னார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர் கூறியதை இரகசியமாகச் சொன்னேன். இதைக்கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கோபப்பட்டார்கள்; (கோபத்தால்) அவர்களின் முகம் சிவந்துவிட்டது. அதை அவர்களிடம் சொல்லாமல் இருந்திருக்கலாமே என்று நான் எண்ணினேன். பிறகு அவர்கள் "(இறைத்தூதர்) மூசா (அலை) அவர்கள் இதைவிட அதிகமாக மனவேதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஆயினும்,அவர்கள் சகித்துக்கொண்டார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 47 காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும்.
1920. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரை முடித்துத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அவர்களிடம் "ஜிஃரானா" எனுமிடத்தில் ஒரு மனிதர் வந்தார். பிலால் (ரலி) அவர்களது ஆடையில் வெள்ளி இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை அள்ளி மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த மனிதர், "முஹம்மதே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான். நான் நீதியுடன் நடந்துகொள்ளாவிட்டால் வேறு யார்தாம் நீதியுடன் நடந்து கொள்வார்? நான் நீதியுடன் நடந்துகொள்ளாவிட்டால் நான் நஷ்டமடைந்துவிட்டேன்; இழப்பிற்குள்ளாகிவிட்டேன்" என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "என்னை விடுங்கள், அல்லாஹ்வின் தூதரே! இந்த நயவஞ்சகனின் தலையைக் கொய்துவிடுகிறேன்" என்று சொன்னார்கள். அதற்கு "அல்லாஹ் காப்பாற்றுவானாக! நான் என் தோழர்களையே கொலை செய்கிறேன் என்று மக்கள் பேசுவார்கள். இதோ இவரும் இவருடைய தோழர்களும் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக் குழியைத் தாண்டி (உள்ளத்திற்குள்) செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறு பக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து (சுவடே தெரியாமல்) வெளியேறிவிடுவார்கள்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது
அவற்றில், "நபி (ஸல்) அவர்கள் போர்ச்செல்வங்களைப் பங்கிட்டார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 12
1921. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள் யமன் நாட்டிலிருந்து மண் அகற்றப்பட்டிராத தங்கக்கட்டி ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள்: அக்ரஉ பின் ஹாபிஸ் அல்ஹன்ழலீ (ரலி), உயைனா பின் பத்ர் அல்ஃபஸாரீ (ரலி), பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா பின் உலாஸா அல்ஆமிரீ (ரலி) மற்றும் பனூ நப்ஹான் குலத்தாரில் ஒருவரான ஸைத் அல்கைர் அத்தாயீ (ரலி) ஆகியோரே அந்நால்வரும்.
இதைக் கண்ட குறைஷி (முஸ்லிம்)கள் கோபமடைந்தனர். "நஜ்த்வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கிறீர்கள்; எங்களை விட்டுவிடுகிறீர்களே!" என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(புதிதாக இஸ்லாத்தைத் தழுவியுள்ள) அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே நான் இவ்வாறு செய்தேன்" என்று கூறினார்கள்.
அப்போது அடர்த்தியான தாடி கொண்ட, கன்னங்கள் தடித்திருந்த, கண்கள் பஞ்சடைந்த, நெற்றி புடைத்திருந்த, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் வந்து, "முஹம்மதே! அல்லாஹ்விற்கு அஞ்சுவீராக!" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானே (அல்லாஹ்விற்கு) மாறுசெய்தால் வேறெவர்தாம் அவனுக்குக் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்கள் விஷயத்தில் அவ(ர்களைப் படைத்த இறைவ)ன் என்மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என்மீது நம்பிக்கை வைக்கமாட்டீர்களா?" என்று கேட்டார்கள். பின்னர் அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது, அங்கிருந்த மக்களில் ஒருவர் அவரைக் கொல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். (அனுமதி கேட்டவர் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் என்றே கருதப்படுகிறது.) பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இ(வ்வாறு என்னிடம் பேசிய அ)ந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக்குழிகளைத் தாண்டிச் செல்லாது; இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்: சிலை வணக்கம் செய்பவர்களை விட்டுவிடுவார்கள். (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறுபக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் "ஆத்" கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்துவிடுவேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 12
1922. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல்பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத தங்கக்கட்டி ஒன்றை யமனிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டார்கள்: உயைனா பின் ஹிஸ்ன் (ரலி), அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி), ஸைத் அல்கைல் (ரலி). நான்காமவர் அல்கமா பின் உலாஸா (ரலி); அல்லது ஆமிர் பின் அத்துஃபைல் (ரலி).
அப்போது நபித்தோழர்களில் ஒருவர், "இதைப் பெறுவதற்கு இவர்களைவிடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம்தாம்" என்று கூறினார். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், "நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என்மீது நீங்கள் நம்பிக்கை வைக்கமாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்தவண்ணமுள்ளன" என்று சொன்னார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் உப்பிய, நெற்றி புடைத்த,அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டியிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்" என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான். பூமியிலிருப்பவர்களில் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்?" என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார். அப்போது காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவருடைய தலையைக் கொய்துவிடட்டுமா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "(அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம்" என்று சொன்னார்கள். அதற்கு காலித் (ரலி) அவர்கள், "எத்தனையோ தொழுகையாளிகள் தமது இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகின்றார்கள்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை" என்று கூறினார்கள்.
பின்னர் திரும்பிச் சென்றுகொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை இனிமையாக ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறுபக்கமாக) வெளியேறி விடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து (சுவடே தெரியாமல்) வெளியேறிவிடுவார்கள்" என்று கூறினார்கள். "நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் "ஸமூத்" கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போல அவர்களை நிச்சயம் அழித்துவிடுவேன்" என்று கூறியதாகவும் நான் எண்ணுகிறேன்.
அத்தியாயம் : 12
1923. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "(அல்கமா பின் உலாஸாவா, அல்லது ஆமிர் பின் அத்துஃபைலா என்ற ஐயப்பாடின்றி) அல்கமா பின் உலாஸா என்றே இடம்பெற்றுள்ளது. ஆமிர் பின் அத்துஃபைல் (ரலி) அவர்களது பெயர் காணப்படவில்லை. மேலும் ("நெற்றி புடைத்த" என்பதைக் குறிக்க) "நாத்திஉல் ஜப்ஹா" எனும் சொற்றொடரே இடம்பெற்றுள்ளது. "நாஷிஸுல் ஜப்ஹா" எனும் சொற்றொடர் இல்லை.
மேலும், இந்த அறிவிப்பில், "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் எழுந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அவரது தலையைக் கொய்துவிடட்டுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். பின்னர் அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் வாள்" (என்று சொல்லப்பட்ட) காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் எழுந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அவரது தலையைக் கொய்துவிடட்டுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேண்டாம்" என்று கூறிவிட்டு, "இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை இனிமையாக, அநாயசமாக ஓதுவார்கள்" என்று கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
மேலும், "நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் "ஸமூத்" கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் அழித்துவிடுவேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக நான் கருதுகிறேன் என அறிவிப்பாளர் உமாரா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1924. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் தங்கக்கட்டியை நால்வரிடையே பங்கிட்டார்கள்: ஸைத் அல்கைர் (ரலி),அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி), உயைனா பின் ஹிஸ்ன் (ரலி) மற்றும் அல்கமா பின் உலாஸா, அல்லது ஆமிர் பின் அத்துஃபைல் (ரலி) (ஆகியோரே அந்நால்வரும்)" என்று இடம்பெற்றுள்ளது.
மேலும், ("நெற்றி புடைத்த" என்பதைக் குறிக்க) "நாஷிஜுல் ஜப்ஹா" எனும் சொற்றொடரே இந்த அறிவிப்பிலும் ஆளப்பட்டுள்ளது.
இதில், "இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர்" என்பதும் இடம்பெற்றுள்ளது. "நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் "ஸமூத்" கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் (பூண்டோடு) அழித்துவிடுவேன்" எனும் குறிப்பு இந்த அறிவிப்பில் இல்லை.
அத்தியாயம் : 12
1925. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் மற்றும் அதாஉ பின் யசார் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
நாங்கள் இருவரும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று "ஹரூரிய்யா"க்கள் (காரிஜிய்யாக்கள்) குறித்துக் கேட்டோம். "அவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா?" என்று வினவினோம். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "ஹரூரிய்யா"க்கள் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், (பின்வருமாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்:
இந்தச் சமுதாயத்தாரிடையே ஒரு கூட்டத்தார் புறப்படுவர். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இந்தச் சமுதாயத்தைவிட்டும்" என்று கூறாததைக் கவனத்தில் கொள்க.) அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையை ஒப்பிட்டுப் பார்த்து உங்களது தொழுகையை நீங்கள் அற்பமாகக் கருதுவீர்கள். அவர்கள் (அதிகமாகக்) குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக்குழிகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அம்பெய்தவர் (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனையையும், (அம்பில்) அதன் முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும் நாணையும் பார்ப்பார். (அவற்றில் அடையாளம் எதையும் காணமாட்டார்.) அம்பின் முனையில் நாணைப் பொருத்தும் இடத்தில் இரத்தம் படிந்துள்ளதா என்றுகூட அவர் சந்தேகப்படுவார்.
அத்தியாயம் : 12
1926. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("ஹவாஸின்") போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக்கொண்டிருந்தபோது அவர்களின் அருகே நாங்கள் இருந்தோம். அப்போது "பனூ தமீம்" குலத்தைச் சேர்ந்த "துல்குவைஸிரா" எனும் மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நீதியுடன் நடந்துகொள்ளுங்கள்" என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், "உனக்குக் கேடுதான். நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லையென்றால் வேறு யார்தாம் நீதியுடன் நடந்துகொள்வார்? நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லையென்றால் நான் இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்துவிடுவேன்" என்று பதிலளித்தார்கள். உடனே உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவரது விவகாரத்தில் எனக்கு அனுமதி கொடுங்கள். இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரை விட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையையும், அவர்களது நோன்புடன் உங்களது நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களது தொழுகையையும் உங்களது நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களது கழுத்தெலும்பை (தொண்டையை)த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான இரத்தக்குறி எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும்) நாண் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு, அம்பின் (அடிப்பாகக்) குச்சி பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப் படாது. பிறகு, அம்பின் இறகு பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணப்படாது. அம்பானது சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன்மீது படாதவாறு) முந்திக்கொண்டு விட்டிருக்கும். அவர்களின் அடையாளம் ஒரு கறுப்புநிற மனிதராவார். அவருடைய இரு கை புஜங்களில் ஒன்று "பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்" அல்லது "துடிக்கும் இறைச்சித்துண்டு போன்றிருக்கும்". அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்" என்று சொன்னார்கள்.
நான் இந்த நபிமொழியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடமிருந்து கேட்டேன் என்று உறுதி அளிக்கின்றேன். மேலும், அந்தக் கூட்டத்தாருடன் அலீ (ரலி) அவர்கள் போர் புரிந்தார்கள்.அப்போது நானும் அலீயுடன் இருந்தேன். அலீ (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்கள் அடையாளம் கூறிய) அந்த மனிதரைக் கொண்டுவரும்படி கட்டளையிட, அவ்வாறே அவர் தேடப்பட்டு கொண்டு வரப்பட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட வர்ணனையின்படியே அவர் இருப்பதை நான் பார்த்தேன் என்றும் உறுதி கூறுகின்றேன்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1927. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாரில் தோன்றவிருக்கின்ற ஒரு கூட்டத்தாரைப் பற்றிக் கூறுகையில், "அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள். மொட்டை போடுவ(தை பக்தி மார்க்கமாகவும் வழிபாடாகவும் கொண்டிருப்ப)துதான் அவர்களின் அடையாளமாகும். "அவர்கள் தாம் படைப்பினங்களிலேயே தீயவர்கள்" அல்லது "படைப்பினங்களில் தீயவர்களில் உள்ளவர்களாவர்". இரண்டு பிரிவினர்களில் உண்மைக்கு மிகவும் நெருக்கமான ஒரு பிரிவினர் அவர்களை அழிப்பார்கள்" என்று கூறினார்கள். பிறகு அவர்களுக்கு உதாரணமாக ஒரு மனிதரைக் குறிப்பிட்டார்கள். "ஒருவர் வேட்டைப் பிராணியை நோக்கி அம்பை எய்துவிட்டு, அம்பின் முனையைப் பார்ப்பார். அதில் (பிராணியின் உடலைத் துளைத்துவிட்டதற்கான) எந்த அடையாளத்தையும் அவர் காணமாட்டார். பிறகு அம்பின் அடிப்பாகக் குச்சியைப் பார்பபார். அதிலும் (பிராணியை வீழ்த்திவிட்டதற்கான) எந்தச் சான்றையும் அவர் காணமாட்டார். பிறகு அம்பின் முனையில் நாணைப் பொருத்தப் பயன்படும் இடத்தைப் பார்ப்பார். அதிலும் (பிராணியைத் தாக்கி விட்டதற்கான) எந்தச் சான்றையும் அவர் காணமாட்டார்" என்று கூறினார்கள்.
அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
இராக்வாசிகளே! நீங்கள்தாம் அவர்களைக் கொன்றொழித்தீர்கள்.
அத்தியாயம் : 12
1928. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்று தோன்றும். இரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக நெருக்கத்திலிருக்கும் பிரிவினர் அவர்களைக் கொன்றொழிப்பார்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1929. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தார் இரு பிரிவினராகி நிற்கும்போது, அவர்களிடையேயிருந்து (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்று தோன்றும். அவ்விரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக அருகிலிருக்கும் ஒரு சாரார் அவர்களைக் கொன்றொழிக்கப் பொறுப்பேற்றுக்கொள்வர்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1930. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்று தோன்றும். இரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக அருகிலிருக்கும் பிரிவினரே அவர்களைக் கொன்றொழிக்கப் பொறுப்பேற்றுக் கொள்வர்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1931. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரைப் பற்றி, பிரிவினை ஏற்படும் வேளையில் அவர்கள் தோன்றுவார்கள். இரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக அருகிலிருக்கும் பிரிவினரே அவர்களைக் கொன்றொழிப்பார்கள்" என்று குறிப்பிட்டதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 48 காரிஜிய்யாக்களைக் கொல்லுமாறு வந்துள்ள தூண்டல்.
1932. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நான் வானத்திலிருந்து கீழே விழுந்துவிடுவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது அவர்கள் சொல்லாததைப் புனைந்து சொல்வதைவிட எனக்கு விருப்பமானதாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஒரு விவகாரத்தில் நான் உங்களிடம் பேசினால் (ராஜதந்திரத்தைப் பயன்படுத்தாமல் இருக்கமுடியாது. ஏனெனில்,) போர் என்பது சூழ்ச்சிதான் (என்பதை நினைவில் கொள்ளவும்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் இளம் வயதினராயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச்சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச்சொல்வார்கள். குர்ஆனை ஓதுவார்கள். வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (இஸ்லாமிய ஆட்சியாளர்களே!) அவர்களை நீங்கள் எங்கு சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு, அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 12
1933. அபீதா பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அலீ (ரலி) அவர்கள் காரிஜிய்யாக்களைப் பற்றிக் கூறுகையில், "அவர்களிடையே ஊனமான கையுடைய ஒரு மனிதர் இருப்பார். நீங்கள் வரம்பு மீறிவிடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லையாயின், அவர்களைக் கொல்பவர்களுக்கு அல்லாஹ் தன் தூதரின் நாவினால் வாக்களித்துள்ள நற்பலனை உங்களுக்கு நான் அறிவித்துவிடுவேன்" என்று கூறினார்கள். நான், "இதைத் தாங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அலீ (ரலி) அவர்கள், "ஆம்; கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! ஆம்; கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! ஆம்; கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக!" என்று (மூன்று முறை) சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
("ஊனமான கையுடைய மனிதர்" என்பதைக் குறிக்க ஹதீஸின் மூலத்தில்) "முக்தஜுல் யதி" அல்லது "மூதனுல் யதி" அல்லது "மஸ்தூனுல் யதி" எனும் சொற்றொடர்கள் ஆளப்பட்டுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அறிவிப்பாளர் அபீதா (ரஹ்) அவர்கள் "நான் செவியுற்ற செய்தியைத்தான் உங்களுக்கு அறிவிப்பேன்" என்று கூறிவிட்டு,அலீ (ரலி) அவர்கள் தொடர்பான மேற்கண்ட ஹதீஸை அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 12
1934. ஸைத் பின் வஹ்ப் அல்ஜுஹனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நஹ்ரவான் நகரத்தைச் சேர்ந்த) காரிஜிய்யாக்களை நோக்கிச் சென்ற அலீ (ரலி) அவர்களின் படையில் நானும் இருந்தேன். (செல்லும் வழியில்) அலீ (ரலி) அவர்கள், "மக்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "என் சமுதாயத்திலிருந்து ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். அவர்களின் ஓதலுடன் உங்களின் ஓதலை ஒப்பிடும்போது,உங்களின் ஓதல் ஒன்றுமேயில்லை; அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையை ஒப்பிடும்போது, உங்களது தொழுகை ஒன்றுமேயில்லை; அவர்களது நோன்புடன் உங்களது நோன்பை ஒப்பிடும்போது, உங்களது நோன்பு ஒன்றுமேயில்லை. (அந்த அளவிற்கு அவர்களுடைய வணக்க வழிபாடுகள் அதிகமாயிருக்கும்.) தங்களுக்குச் சாதகமான ஆதாரம் என்று எண்ணிக்கொண்டு அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுக்கு எதிரான ஆதாரமாகவே இருக்கும். அவர்களது தொழுகை(யில் அவர்கள் குர்ஆனை ஓதுவது), அவர்களது கழுத்தெலும்பைத் தாண்டிச்செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று இஸ்லாத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.
அவர்களை வீழ்த்தும் படையினர், அதற்காகத் தமக்கு வழங்கப்படவுள்ள நற்பலன் குறித்துத் தங்களுடைய நபியின் நாவினால் அறிவிக்கப்பட்டுள்ளதை அறிவார்களாயின், அதையே நம்பிக்கொண்டு நற்செயல் புரியாமல் இருந்துவிடுவார்கள். அவர்களிடையே கைபுஜம் மட்டுமே உள்ள ஒரு மனிதன் அவர்களுக்கு அடையாளம் ஆவான். முழங்கைக்குக் கீழே அவனுக்குக் கையிருக்காது. அவனது கை புஜத்தின் மீது மார்புக்காம்பைப் போன்று ஒரு கட்டியிருக்கும். அதன் மீது வெள்ளை முடிகள் முளைத்திருக்கும். நீங்கள் சந்ததிகளையும் செல்வங்களையும் கவனிக்கும் பிரதிநிதிகளாக இவர்களை விட்டுவிட்டு, முஆவியா (ரலி) அவர்களிடமும் ஷாம்வாசிகளிடமும் (ஸிஃப்பீன் போருக்காகச்) சென்று விடுவீர்கள். (இந்த காரிஜிய்யாக்களோ உங்கள் குழந்தை குட்டிகளைத் துன்புறுத்துவார்கள். உங்கள் சொத்துக்களைச் சூறையாடுவார்கள்.) அல்லாஹ்வின் மீதாணையாக! (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வர்ணித்த) அந்த(காரிஜிய்யா)க் கூட்டத்தார் இவர்களாகத்தாம் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், இவர்கள் அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிர்களைக் கொலை செய்துள்ளார்கள்; மக்களுடைய கால்நடைகளைக் கொள்ளையடித்துள்ளார்கள். எனவே, அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி, அவர்களை நோக்கிச் செல்லுங்கள் (அவர்களை வெல்லுங்கள்)" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளரான சலமா பின் குஹைல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
(அந்தப் பயணத்தில்) ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் (காரிஜிய்யாக்கள்) முகாமிட்டிருந்த ஒவ்வொரு தளங்களையும் எனக்குக் காட்டினார்கள். இறுதியாக நாங்கள் ("அத்தப்ரஜான்" எனும்) ஒரு பாலத்தைக் கடந்துசென்றோம். (கலகக்காரர்களான காரிஜிய்யாக்களை) நாங்கள் சந்தித்தபோது, காரிஜிய்யாக்களின் அன்றைய தளபதியாக அப்துல்லாஹ் பின் வஹ்ப் அர்ராசிபீ என்பான் இருந்தான். அவன் காரிஜிய்யாக்களிடம் "ஹரூரா போரின்போது இவர்கள் அல்லாஹ்வின் பெயரால் ஆணையிட்டு உங்களிடம் (சமாதான ஒப்பந்தக்) கோரிக்கையை முன்வைத்ததைப் போன்று இப்போதும் கோரிக்கை வைத்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். (அதற்கு இடமளித்துவிடாமல்) ஈட்டியை எறியுங்கள்; வாட்களை உறைகளிலிருந்து உருவி(த் தயாராக வைத்து)க் கொள்ளுங்கள்" என்று கூறினான். உடனே அவர்கள் திரும்பிச்சென்று தூரத்தில் நின்று கொண்டு தங்களுடைய ஈட்டிகளை வீசினர்; தங்களுடைய வாட்களை உருவி(யவாறு மக்களிடையே புகுந்த)னர். (அலீ (ரலி) அவர்களுடைய படையிலிருந்த) மக்களும் அவர்கள்மீது தங்களுடைய ஈட்டிகளைப் பாய்ச்சினர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கொல்லப்பட்டனர். அன்றைய தினம் (அலீ (ரலி) அவர்களின் அணியிலிருந்த) மக்களில் இருவர் மட்டுமே கொல்லப்பட்டனர்.
பிறகு (எங்களிடம்) அலீ (ரலி) அவர்கள், "அவர்களிடையே ஊனமான கையுடைய அந்த மனிதனைத் தேடிப்பாருங்கள்" என்று கூறினார்கள். மக்கள் தேடிப்பார்த்தபோது அவன் தட்டுப்படவில்லை. எனவே, அலீ (ரலி) அவர்களே எழுந்து சென்று, ஒருவர்மீது ஒருவராக அவர்கள் கொல்லப்பட்டுக் கிடந்த பகுதிக்கு வந்து "உடல்களை நகர்த்துங்கள்" என்று கூறினார்கள். அவனது உடல் தரைப் பகுதியின் அடியில் கிடப்பதைக் கண்டார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் "தக்பீர்" (அல்லாஹ் மிகப்பெரியவன் என்று) கூறினார்கள். பிறகு "அல்லாஹ் உண்மையே சொன்னான்; அவனுடைய தூதர் (அவனது செய்தியை) எட்டச் செய்தார்கள்" என்று சொன்னார்கள்.
அப்போது அலீ (ரலி) அவர்களிடம் அபீதா அஸ்ஸல்மானீ (ரஹ்) அவர்கள் வந்து, "இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! (காரிஜிய்யாக்கள் குறித்த) இந்த ஹதீஸை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், "ஆம்;எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக!" என்று பதிலளித்தார்கள். இவ்வாறு மூன்று முறை சத்தியம் செய்யுமாறு அலீ (ரலி) அவர்களை அபீதா (ரஹ்) அவர்கள் கோரினார்கள். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே சத்தியம் செய்தார்கள்.
அத்தியாயம் : 12
1935. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த (பிற்காலத்தில் இஸ்லாத்தைத் தழுவிய) உபைதுல்லாஹ் பின் அபீராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹரூராவாசி(களான காரிஜிய்யாக்)கள் தோன்றியபோது நான் அலீ (ரலி) அவர்களுடன் (அவர்களது அணியில்) இருந்தேன். ஹரூரிய்யாக்கள் "ஆட்சி அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்குமில்லை" (லா ஹுக்ம இல்லா லில்லாஹ்) எனும் கோஷத்தை எழுப்பினர். அலீ (ரலி) அவர்கள், "(இது) சத்திய வார்த்தைதான். ஆனால், தவறான நோக்கம் கொள்ளப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில மனிதர்களைப் பற்றி(ய அடையாளங்களை) எங்களுக்குத் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அப்பண்புகள் (காரிஜிய்யாக்களான) இவர்களிடம் (இருப்பதை) நான் அறிகிறேன். இவர்கள் நாவால் உண்மை சொல்கிறார்கள். ஆனால், அது அவர்களது தொண்டையைத் தாண்டாது (என்று கூறி, தொண்டையைச் சுட்டிக்காட்டுகிறார்கள்);அல்லாஹ்வின் படைப்புகளிலேயே அவனிடம் மிகவும் வெறுப்புக்குரியவன், இவர்களில் கறுப்புநிறமுடைய ஒரு மனிதனாவான். அவனது கைகளில் ஒன்று "ஆட்டின் பால் மடியைப் போன்றிருக்கும்" அல்லது "(பெண்ணின்) மார்புக் காம்பைப் போன்றிருக்கும்" என்று கூறினார்கள்.
அலீ (ரலி) அவர்கள் (தம் படையினருடன் சேர்ந்து காரிஜிய்யாக்களுடன் போரிட்டு) அவர்களைக் கொன்றொழித்தபோது, "(அந்தக் கறுப்பு மனிதனைத் தேடிப்) பாருங்கள்" என்று கூறினார்கள். அவர்கள் (தேடிப்)பார்த்தபோது அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அலீ (ரலி) அவர்கள் "திரும்பவும் சென்றுபாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய்யுரைக்கவில்லை; என்னிடம் பொய்யுரைக்கப்படவுமில்லை" என்று இரண்டு அல்லது மூன்று முறை சொன்னார்கள். பிறகு அவர்கள் அவனது உடலை ஒரு குழியில் கண்டனர். அதைக் கொண்டுவந்து அலீ (ரலி) அவர்களுக்கு முன்னால் வைத்தனர். இந்த நிகழ்ச்சி நடந்தபோதும் காரிஜிய்யாக்கள் குறித்து அலீ (ரலி) அவர்கள் கூறியபோதும் அந்த இடத்தில் நான் இருந்தேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
யூனுஸ் பின் அப்தில் அஃலா (ரஹ்) அவர்களது மற்றோர் அறிவிப்பில், "அந்தக் கறுப்பு மனிதனை நான் பார்த்தேன்" என்று இப்னு ஹுனைன் (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 49 காரிஜிய்யாக்கள் மனிதர்கள் மற்றும் உயிரினங்களிலேயே மோசமானவர்கள் ஆவர்.
1936. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எனக்குப் பின் என் சமுதாயத்தில்" ("அல்லது எனக்குப் பின் விரைவில் என் சமுதாயத்தில்") ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய கழுத்துகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று, மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்று விடுவார்கள். பிறகு அதன் பக்கம் திரும்பமாட்டார்கள். அவர்கள்தாம் மனிதர்கள் மற்றும் உயிரினங்களிலேயே மோசமானவர்கள் ஆவர்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இந்த ஹதீஸை அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஹகம் அல்கிஃபாரீ (ரலி) அவர்களுடைய சகோதரர் ராஃபிஉ பின் அம்ர் அல்கிஃபாரீ (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, "அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற இன்னின்ன ஹதீஸ்கள் என்ன?" என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸையும் அவர்களிடம் சொன்னேன். அப்போது ராஃபிஉ பின் அம்ர் (ரலி) அவர்கள், "நானும் இந்த ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 12
1937. யுசைர் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்களிடம், "காரிஜிய்யாக்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூற ஏதேனும் கேட்டுள்ளீர்களா?"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கிழக்கு (இராக்) திசையில் தமது கையால் சைகை செய்தவாறு இப்படிக் கூறினார்கள் என்றார்கள்: (இங்கிருந்து) ஒரு கூட்டத்தார் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். ஆனால், அது அவர்களது கழுத்தெலும்பை (தொண்டைக் குழியை)த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைத்த) அம்பு (உடலின் மறு புறம்) வெளியேறிச் செல்வதைப் போன்று, இஸ்லாத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளீயேறிச் சென்றுவிடுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "இங்கிருந்து சில கூட்டத்தார் கிளம்புவார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1938. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கிழக்கு (இராக்) திசையிலிருந்து வழிதவறிய ஒரு கூட்டத்தார் கிளம்புவார்கள். அவர்களுடைய தலைகள் மழிக்கப்பட்டு (மொட்டையாக) இருக்கும்.
இதை சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 50 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் ஸகாத் (பெறுவது) தடை செய்யப்பட்டுள்ளது. பனூ ஹாஷிம் மற்றும் பனுல் முத்தலிப் குலத்தாரே அவர்களுடைய குடும்பத்தார் ஆவர்; மற்றவர்கள் அல்லர்.
1939. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள், தர்மப் பேரீச்சம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சீ...சீ... கீழே போடு; நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா?" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நமக்கு தர்மப்பொருட்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது உனக்குத் தெரியாதா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக்கூடாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1940. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் என் வீட்டாரிடம் திரும்பிச்செல்லும் போது எனது படுக்கையின் மீது பேரீச்சம்பழம் கிடப்பதைப் பார்த்து, அதை உண்பதற்காக எடுப்பதுண்டு. பின்னர் அது தர்மப்பொருளாக இருக்குமோ என்று நான் அஞ்சி, உடனே அதைப் போட்டுவிடுகின்றேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1941. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக.! நான் எனது வீட்டாரிடம் திரும்பிச் செல்லும் போது "எனது படுக்கையின் மீது" (அல்லது "எனது வீட்டில்") பேரீச்சம் பழம் கிடப்பதைப் பார்த்து, அதை உண்பதற்காக எடுப்பதுண்டு. பின்னர் அது "தர்மப்பொருளாக" (அல்லது "தர்மப்பொருட்களில் ஒன்றாக") இருக்குமோ என்று அஞ்சி உடனே அதைப் போட்டுவிடுகின்றேன்.
அத்தியாயம் : 12
1942. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கண்டபோது, "இது தர்மப்பொருளாக இருக்காது என்றிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 12
1943. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாலையில் (கிடந்த) ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றபோது, "இது தர்மப் பொருளாக இருக்காது என்றிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 12
1944. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கண்டபோது, "இது தர்மப்பொருளாக இருக்காது என்றிருந்தால், இதை நான் சாப்பிட்டிருப்பேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 51 நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாரை தர்மப்பொருட்களை வசூலிக்கும் பொறுப்பில் அமர்த்தலாகாது.
1945. அப்துல் முத்தலிப் பின் ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களும் (என் பாட்டனாரின் சகோதரர்) அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களும் (ஓரிடத்தில்) ஒன்றுகூடி, (என்னையும் ஃபள்ல் பின் அப்பாஸையும் சுட்டிக்காட்டி) "இவ்விரு இளைஞர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி, அவ்விருவரையும் இந்தத் தர்மப்பொருட்களை வசூலிக்கும் பொறுப்பில் அமர்த்துமாறு கேட்கச் சொல்வோம்.(அவ்வாறு இவர்கள் அமர்த்தப் பட்டால்), மக்கள் வழங்குகின்ற (ஸகாத்)தை அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்படைப்பார்கள். (இந்தப் பணிக்காக) மக்களுக்குக் கிடைக்கின்ற (சன்மானப்) பொருள் இவர்களுக்குக் கிடைக்கும்" என்று பேசிக்கொண்டனர்.
இவ்வாறு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அங்கு வந்து அவர்களுக்கு முன்னால் நின்றார்கள். அப்போது அவர்கள் இருவரும் அலீ (ரலி) அவர்களிடம் அ(வர்களிருவரும் பேசிக்கொண்ட)தைத் தெரிவித்தனர். அதைக் கேட்ட அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், "அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்" என்று சொன்னார்கள். ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களை நோக்கி "அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள்மீதுள்ள பொறாமையால்தான் இவ்வாறு நீங்கள் செய்கிறீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு(டைய மகளை மணமுடித்துக்கொண்டதன் மூலம் அவர்களு)டன் திருமண பந்தத்தை அடைந்துகொண்டுவிட்டீர்கள். அதைக் கண்டு நாங்கள் உங்கள் மீது பொறாமை கொள்ளவில்லையே!" என்று கூறினர். அலீ (ரலி) அவர்கள், "(சரி) அவர்கள் இருவரையும் அனுப்பிவையுங்கள்" என்று கூறினார்கள். நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். அலீ (ரலி) அவர்கள் (அங்கேயே) சாய்ந்து படுத்துக் கொண்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையை முடித்ததும் அவர்களது அறையை நோக்கி நாங்கள் (இருவரும்) முந்திக்கொண்டு சென்று, அவர்களது அறைக்கு அருகில் நின்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களுடைய காதுகளைப் பிடித்து, "நீங்கள் இருவரும் உங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துங்கள்" என்று சொன்னார்கள். பிறகு அறைக்குள் நுழைந்தார்கள். நாங்களும் உள்ளே நுழைந்தோம். அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தார்கள். நாங்கள் இருவரும் ("நீ பேசு, நீ பேசு" என) ஒருவரையொருவர் பேசச்சொல்லிக் கொண்டிருந்தோம். பிறகு எங்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மக்களிலேயே மிகவும் ஈகை குணம் கொண்டவரும் உறவினர்களை நன்கு அரவணைத்துக்கொள்பவரும் ஆவீர்கள். நாங்கள் மணமுடிக்கும் வயதை அடைந்துவிட்டோம். எனவே, இந்தத் தானதர்மங்களை வசூலிக்கும் பொறுப்புகளில் ஒன்றில் எங்களை நீங்கள் நியமிப்பதற்காக நாங்கள் வந்துள்ளோம். மக்கள் வழங்கும் ஸகாத் பொருட்களை அப்படியே உங்களிடம் கொண்டுவந்து ஒப்படைப்போம். (இப்பணிக்குச் சன்மானமாக) அவர்கள் பெற்றுக்கொள்வதை நாங்களும் பெற்றுக்கொள்வோம்" என்று கூறினார்.
இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீண்டநேரம் அமைதியாக இருந்தார்கள். இறுதியில் அவர்களிடம் நாங்களே பேசலாமா என்று எண்ணினோம். (இதற்குள்) ஸைனப் (ரலி) அவர்கள் திரைக்கு அப்பாலிருந்து பேசவேண்டாம் என எங்களுக்குச் சைகை செய்யலானார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தர்மப் பொருள் முஹம்மதின் குடும்பத்தாருக்குத் தகாது. (ஏனெனில்,) அவை மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம்" என்று கூறிவிட்டு, "(பனூ அசத் கூட்டத்தைச் சேர்ந்தவரான) மஹ்மியாவையும் நவ்ஃபல் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிபையும் என்னிடம் வரச் சொல்லுங்கள்" என்று கூறினார்கள். (அப்போது மஹ்மியா (ரலி) அவர்கள் போரில் கிடைத்த ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) நிதியைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தார்கள்.) அவர்கள் இருவரும் வந்தபோது மஹ்மியா (ரலி) அவர்களிடம், "இந்த இளைஞருக்கு (ஃபள்ல் பின் அப்பாஸுக்கு) உங்களுடைய மகளை மணமுடித்து வையுங்கள்" என்று சொன்னார்கள். அவ்வாறே மஹ்மியா (ரலி) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள். பிறகு நவ்ஃபல் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடம், (என்னைச் சுட்டிக்காட்டி), "இந்த இளைஞருக்கு உங்களுடைய மகளை மணமுடித்து வையுங்கள்" என்று சொன்னார்கள். அவ்வாறே நவ்ஃபல் (ரலி) அவர்கள் எனக்கு(த் தம்முடைய மகளை) மணமுடித்து வைத்தார்கள். மேலும், மஹ்மியா (ரலி) அவர்களிடம் "இவர்கள் இருவருக்காகவும் போரில் கிடைத்த ஐந்தில் ஒருபாகம் நிதியிலிருந்து இன்ன இன்னதை மணக்கொடையாக (மஹ்ர்) கொடுங்கள்" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், "அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் நவ்ஃபல் (ரஹ்) அவர்கள் (அந்த) மஹ்ர் தொகை (எவ்வளவு என்பது) குறித்து என்னிடம் குறிப்பிடவில்லை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
1946. மேற்கண்ட ஹதீஸ் அப்துல் முத்தலிப் பின் ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "என் தந்தை ரபிஆ பின் அல் ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) மற்றும் அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) ஆகியோர் என்னிடமும் ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் "நீங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும் அதில், அலீ (ரலி) அவர்கள் தமது மேல்துண்டைப் போட்டு அதன் மீது சாய்ந்து படுத்துக்கொண்டார்கள். மேலும், "நான் ஹசனின் தந்தை (அபுல் ஹசன்) ஆவேன்; கருத்துடையவனும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறியனுப்பிய விஷயத்திற்கு உங்களுடைய புதல்வர்கள் இருவரும் பதில் கொண்டுவரும் வரை இவ்விடத்தைவிட்டு நான் நகரமாட்டேன்" என்று அலீ (ரலி) அவர்கள் கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது.
மேலும் இந்த ஹதீஸில் பின்வருமாறும் காணப்படுகிறது:
பிறகு எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இந்தத் தர்மப்பொருட்கள், மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம். இவை முஹம்மதுக்கோ முஹம்மதின் குடும்பத்தாருக்கோ அனுமதிக்கப்படவில்லை" என்று கூறினார்கள். மேலும், "மஹ்மியா பின் ஜஸ்உவை என்னிடம் வரச் சொல்லுங்கள்" என்றார்கள். அவர் பனூ அசத் குலத்தைச் சேர்ந்தவராவார். அவரை போரில் கிடைத்த செல்வங்களில் ஐந்தில் ஒரு பாக (குமுஸ்) நிதியைப் பாதுகாக்கும் பொறுப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நியமித்திருந்தார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 52 நபி (ஸல்) அவர்களுக்கும் பனூ ஹாஷிம் மற்றும் பனுல் முத்தலிப் குடும்பத்தாருக்கும் அன்பளிப்புகள் வழங்கலாம்;அன்பளிப்பவர் ஸதக்கா என்ற முறையில் அதை உடைமையாக்கியிருந்தாலும் சரியே! தர்மம் வழங்கப்பெற்றவர் தர்மப் பொருளைக் கைப்பற்றியவுடனேயே "தர்மப்பொருள்" எனும் பெயர் அதை விட்டும் நீங்கிவிடும்; தர்மம் வாங்கக் கூடாதவர் அதைப் பெறலாம்.
1947. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, "உணவேதும் உள்ளதா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களிடம் ஆட்டின் ஓர் எலும்பைத் தவிர வேறெந்த உணவும் இல்லை, அல்லாஹ்வின் தூதரே! அந்த எலும்புகூட என் முன்னாள் அடிமைப் பெண்ணுக்குத் தர்மமாக வழங்கப்பட்டதாகும்" என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதை எனக்கு அருகில் வை! அது தனது இடத்தை (அன்பளிப்பின் தகுதியை) அடைந்துவிட்டது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1948. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பரீரா (ரலி) அவர்கள் தமக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சியை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக அளித்தார்கள். அப்போது (இது தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சியாயிற்றே என்று வினவப்பட்டது. அதற்கு) நபி (ஸல்) அவர்கள் "இது பரீராவுக்குத்தான் தர்மமாகும்; ஆனால், நமக்கு அன்பளிப்பாகும்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1949. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது "இது பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்டதாகும்" என்று சொல்லப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இது பரீராவுக்குத்தான் தர்மமாகும்; ஆனால், நமக்கு அன்பளிப்பாகும்"என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1950. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அடிமையாயிருந்து விடுதலை பெற்ற) பரீரா (ரலி) அவர்களால் (மக்களுக்கு) மூன்று தீர்ப்புகள் கிட்டின. மக்கள் பரீராவுக்குத் தர்மம் கொடுப்பார்கள். அதை பரீரா எங்களுக்கு அன்பளிப்பாக வழங்குவார்கள். இதை நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, அவர்கள் "இது பரீராவுக்குத்தான் தர்மமாகும்; உங்களுக்கு அன்பளிப்பாகும். எனவே, இதை நீங்கள் சாப்பிடலாம்"என்றார்கள். (இது அத்தீர்ப்புகளில் ஒன்றாகும்).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1951. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அதில், "இது நமக்கு பரீராவிடமிருந்து அன்பளிப்பாக வந்ததாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1952. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்ம ஆடு ஒன்றை எனக்கு அனுப்பிவைத்தார்கள். அதில் சிறிது இறைச்சியை நான் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றபோது, "உங்களிடம் (உண்பதற்கு) ஏதும் உள்ளதா?" எனக் கேட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், "இல்லை. நீங்கள் நுஸைபா (உம்மு அத்திய்யா)வுக்கு (தர்மமாக) அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் நமக்கு அனுப்பிவைத்தார். அதைத் தவிர வேறொன்றுமில்லை" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது தனது இடத்தை (அன்பளிப்பின் தகுதியை) அடைந்துவிட்டது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 53 நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும்.
1953. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஓர் உணவுப் பொருள் கொண்டுவரப்படும்போது, அது குறித்து (இது அன்பளிப்பா, தர்மமா என்று) கேட்பார்கள். அது அன்பளிப்பு என்று பதிலளிக்கப்பட்டால், அதைச் சாப்பிடுவார்கள்; தர்மம் என்று கூறப்பட்டால் அதைச் சாப்பிடமாட்டார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 54 தர்மம் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல்.
1954. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு கூட்டத்தார் தம் தர்மப்பொருட்களைக் கொண்டுவந்தால், "இறைவா! இவர்களுக்கு நீ அருள்புரிவாயாக!" என்று பிரார்த்திப்பார்கள். என் தந்தை அபூஅவ்ஃபா (ரலி) அவர்கள் தம் தர்மப் பொருட்களை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றபோது, "இறைவா! அபூ அவ்ஃபாவின் குடும்பத்தாருக்கு நீ அருள்புரிவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("அபூஅவ்ஃபாவின் குடும்பத்தாருக்கு" என்பதற்கு பதிலாக) "அவர்களு(டைய குடும்பத்தார்களு)க்கு அருள்புரிவாயாக" என்று (பிரதிப் பெயர்ச்சொல்லாக) இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 55 ஸகாத் வசூலிப்பவர், தடைசெய்யப்பட்டதைக் கோராதவரை அவரை திருப்திபடுத்துவது (அவசியமாகும்).
1955. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களிடம் ஸகாத் வசூலிப்பவர் வந்தால், உங்கள்மீது திருப்தி கொண்ட நிலையிலேயே அவர் உங்களிடமிருந்து திரும்பிச் செல்லட்டும்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Previous Post Next Post