வானவர்கள் (மலக்குகள்)

எம். எம். அப்துல் காதிர் உமரி

நாம் இவ்வுலகில் காணும் படைப்பினங்கள் ஏராளம் ஏராளம். மலைகள் செடிகள், கொடிகள், கனி தரும் மரங்கள், பெரும் பாறைகள், அவற்றுள் நாம் அறியாத இன்னும் பல அதிசயங்கள், வானங்கள், நட்சத்திரங்கள், சந்திரன், சூரியன், பல கோள்கள், பூமி பல ஊர்வன, விலங்குகள், பறவைகள், இன்னும் எண்ணிலடங்கா படைப்பினங்கள், கடல் அதில் நீந்தி வரும் மீன்கள், முத்து தரும் சிப்பிகள், இன்னும் எத்தனையோ அற்புதங்கள்! இவற்றில் சிலவற்றைப் பார்த்து தொட்டு, சிலவற்றை அனுபவித்தும் வரும் நிலையில் மனிதன் படைக்கப்பட்டுள்ளான். இவ்வாறு பல படைப்பினங்கள் படைக்கப்பட்டது போன்று நெருப்பால் படைக்கப்பட்ட இனமொன்று உண்டு; அது ஜின் எனப்படும். அதே போன்று ஒளியால் படைக்கப்பட்ட இனம் ஒன்று உண்டு; அந்த இனம்தான் மலக்குகள் - வானவர்கள் என்று சொல்லப்படும். இறைநம்பிக்கையாளன் ஒருவன் தன் வாழ்க்கையில் வானவர்களைப் பற்றித் தெளிவாக அறிந்து வைத்திருப்பது இறைவன் விதித்துள்ள கடமைகளில் ஒன்று.

இறைவனின் படைப்பா?

அவனே அனைத்துப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப்படி அமைத்தான். (அல்குர்ஆன் 25:02) அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், அவன் வானங்களையும் பூமிகளையும் படைத்தவன். இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்நான்கும், இறக்கை உள்ளவர்களாக வானவர்களைத் தன் தூதை எடுத்துச் செல்பவர்களாக ஆக்கினான். தான்  நாடியதைப்  படைப்பிலே மிகுதிப்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் 35:01)

உலகிலுள்ள அனைத்துப் படைப்பினங்களையும், படைத்த அந்த இறைவனே, வானவர்களையும் படைத்துள்ளான் என்பதை நாம் மேற்கண்ட வசனத்தின் முலம் அறியலாம். முஸ்லிம்களாக உள்ள நாம் வானவர்களைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில், இஸ்லாம் வானவர்களை நம்புவது இறைநம்பிக்கையின் ஒரு பகுதி என்று அறிவிக்கிறது.

அவர்கள் மீது நம்பிக்கை கொள்வது:

இறைத்தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்புகிறார். (அவ்வாறே) இறைநம்பிக்கையாளர்களும் (நம்புகின்றனர். இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனது தூதர்களையும் நம்புகிறார்கள். (அல்குர்ஆன் 2:285)

இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் ஒருநாள் மக்களுடன் அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து இறைத்தூதர்அவர்களே! இறைநம்பிக்கை (ஈமான்) என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையும் அவனது வானவர்களையும் அவனது வேதத்தையும் அவனது சந்திப்பையும், அவனது தூதர்களையும் நம்புவது என்று கூறினார்கள்..  (ஹதீஸின் ஒரு பகுதி) அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)    நூல் முஸ்லிம்

தன்னை முஸ்லிம் என்று சொல்லக்கூடிய ஒருவன் எவ்வளவு தான் தொழுது, ஜகாத் கொடுத்து, நோன்பு நோற்று, ஹஜ் செய்து வந்தாலும், வானவர்களை நம்பவில்லையென்றால் ஒருபோதும் அவன் முஸ்லிமாக  இருக்க முடியாது. ஏனெனில் இறைவன் மற்றொரு வசனத்தில் குறிப்பிடுகையில்,

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக்  கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் (மட்டும்) இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும் வேதத்தின் மீதும் நபிமார்களின் மீதும் இறைநம்பிக்கை (ஈமான்) கொள்ளுதல் ஆகும். அல்குர்ஆன் 2:177

வானவர்களும் ஒரு படைப்பு, அவர்களை அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக  மட்டுமே  படைத்துள்ளான்.  அவர்கள்  அவனுடைய  ஏவல்களை மட்டுமே செய்வார்கள்; மாறு செய்யமாட்டார்கள்.  அவர்களை நாம் பார்க்க முடியாது என்று கருதுவதே வானவர்களை நம்புதல் எனப்படும்

''அல்லாஹ் அவர்களுக்கு ஏவிய எதிலும் மாறு செய்ய மாட்டார்கள், அவன் ஏவிய படியே செய்து வருவார்கள்.'' (அல்குர்ஆன் 66:06)

''இறைநம்பிக்கையாளர்களே நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் அவன் இறக்கிய (இவ்)வேதத்தின் மீதும், இதற்குமுன் இறங்கிய வேதங்களின் மீதும் நம்பிக்கைகொள்ளுங்கள்: எவர் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதிநாளையும் (நம்பாமல்) மறுக்கிறாரோஅவர் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டார்.''

அவர்கள் எதிலிருந்து படைக்கப்பட்டார்கள்?

வானவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டார்கள் என முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் மூலம்  தெளிவாகிறது.

அவர்களின் எண்ணிக்கை:

வானவர்கள் மொத்தம் எத்தனை பேர் படைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை இறைவனைத் தவிர வேறு எவரும் அறிய முடியாது.  அவர்களைப் பற்றி இறைவனும் குறிப்பிடவில்லை. இறைத்தூதரும் குறிப்பிடவில்லை. எனவே, அவர்கள் இத்தனை பேர்கள் என்று எவராலும் குறிப்பிட்டுக் கூறவும் முடியாது.

அவர்களின் உருவ அமைப்பு:

''இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்நான்கும், இறக்கைகள் உள்ளவர்களாக வானவர்களைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக இறைவன் ஆக்கினான்.'' (அல்குர்ஆன் 35:01)

ஜிப்ரில் (அலை) அவர்களை (முழுமையான தோற்றத்தில்) நான் பார்த்தேன்.  அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருந்தன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர்கள். (நூல்: புகாரி)

வானவர்கள் மனிதர்களைப் போன்றல்லாமல் இறக்கைகள் உள்ளவர்களாகப் படைக்கப்பட்டிருப்பதை நாம் மேற்கண்ட வசனம் மற்றும் நபிமொழியின் மூலம் அறியலாம்.

அவர்களின் வல்லமை:

''மிக்க வல்லமையுடையவர்(ஜிப்ரில்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்'' (அல்குர்ஆன் 53;05)

மேற்கண்ட வசனத்தின் மூலம் முந்தையச் சமுதாயங்களை அவர்களின் நன்றி கெட்டத்  தனத்திற்காக  இறைவன் அழிக்க  நாடிய போது வானவர்களின் மூலம் அழித்தொழித்தான். இதன் மூலம், அவர்களின் பெரும் வல்லமையைக் காண முடிகிறது.

அவர்களின் தன்மைகள்:

வானவர்களின் தன்மைகள், மனிதத் தன்மைகளுக்கு அப்பாற்பட்டது. அவர்கள் உண்பதுமில்லை; பருகுவதுமில்லை, உறங்குவதுமில்லை. நபிமார்களிடம் அவர்(வானவர்)கள் மனிதத்தோற்றத்தில் வந்தபோதும் கூட மனிதத் தன்மைக்கு உட்படவில்லை.

இப்ராஹீம்(அலை) அவர்களிடம் மனிதத் தோற்றத்தில் வானவர்கள் வந்தபோது மனிதர்கள்தாம் என்றெண்ணிக் கொண்டு அவர்களுக்கு உணவு கொண்டு வந்தார்கள். ஆனால் வானவர்கள் அதை உண்ணவில்லை என்பதை இறைவன் தனது திருமறையின் மூலம் நமக்குத் தெளிவாக்குகிறான்.

''(நபியே) இப்ராஹீமின் கண்ணியமிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?  அவர்களிடம் வந்தபோது உம்மீது சாந்தி நிலவட்டும்!''  என்று அவர்கள் கூறினார்கள். அவர் கூறினார்; ''உங்கள் மீதும் சாந்தி நிலவுக!'' இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா ஆட்களாக இருக்கிறார்களே என்று எண்ணிக்கொண்டனர்) பின்னர் அவர் தம் குடும்பத்தாரிடம் சென்று பொரிக்கப்பட்ட ஒரு காளைக்கன்றைக் கொண்டு வந்து அதனை விருந்தினர் முன் வைத்தார். பிறகு கூறினார். ''சாப்பிடாமல் இருக்கின்றீர்களே'' என்று, பின்னர் அவர்களைக் குறித்து அவர் மனதிற்குள் அஞ்சினார். அவர்களோ அஞ்சாதீர்! என்று கூறினார்கள். மேலும் அறிவுமிக்க ஒரு மகன் பிறக்கப் போவதாக அவருக்கு நற்செய்தி அறிவித்தார்கள்.  பின்னர் இதைக் கேட்ட அவருடைய மனைவியார் கூச்சலிட்டவாறு எதிரில் வந்து தம் முகத்தில் அடித்துக்கொண்டு, ''நான் மலட்டுக் கிழவியாயிற்றே'' என்று கூறினார். (அறிவுமிக்கப் புதல்வர் பிறப்பார் என்று) ''இவ்வாறே உம் இறைவன் கூறினான். நிச்சயமாக அவன் ஞானமிக்கவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்'' என்று கூறினார்கள். (பின்னர் இப்ராஹீம்)  இறைத்தூதர்களே! நீங்கள் எந்தப் பணியை ஆற்ற அனுப்பப்பட்டுள்ளீர்கள்?'' என்றுவினவினர்.

அதற்கு அவர்கள் கூறினார்கள், ''குற்றவாளிகளான ஒரு சமூகத்தாரின் பால் நிச்சயமாக அனுப்பப்பட்டிருக்கிறோம். சுட்ட கற்களை அவர்கள் மீது பொழிவதற்காக, அவை வரம்புமீறிச் செல்வோருக்காக உம் இறைவனிடம் (அக்கற்கள்) அடையாளமிடப்பட்டன. ஆகவே, அவ்வூரில் இருந்த இறைநம்பிக்கையாளர்களை (முதலில்) நாம் வெளியேற்றி விட்டோம். எனவே முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிர வேறெவரையும் நாம் காணவில்லை.'' (அல்குர்ஆன் 51:24-36)

அவர்கள் இறைவனின் பிள்ளைகளா?

வானவர்கள் உண்பதோ, பருகுவதோ இல்லை. அவர்களுக்கு மனைவிமார்களும் இல்லை. மனிதத் தன்மைகள் இல்லாத அவர்கள் இறைவனின் பிள்ளைகளோ என்ற தவறான முடிவுக்கு வந்துவிடக் கூடாது. ஏனெனில் வானவர்களை இறைவனின் பிள்ளைகள் என்று இறைமறுப்பாளர்களும், முஷ்ரிக்குகளும் கூறியதற்கு மறுப்பாக அல்லாஹ் கீழ்வரும் வசனத்தை அருளினான்.

''உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் மக்களை அளித்து விட்டு (தனக்கு மட்டும்) வானவர்களிலிருந்து பெண் மக்களை எடுத்துக் கொண்டானா?  நிச்சயமாக நீங்கள் மிகப்பெரும் (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.'' (அல்குர்ஆன் 17:40)

''(நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே!  அல்லாஹ் எவரிடமும் தேவையற்றவன்; அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை அன்றியும் அவனுக்கு நிகராக எவருமில்லை.'' (அல்குர் ஆன் 112:1-4)

மேற்கண்ட வசனத்தின் இறைவன் மூலம் தனக்குத்  தாய் தந்தையில்லை; மனைவி மக்களும் இல்லை என்பதைத் தெளிவாக்குகிறான்.

அவர்கள் பெண்களா?

''நிச்சயமாக மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள், பெண்களுக்குப் பெயரிடுவதுபோல் வானவர்களுக்குப் பெயரிடு கிறார்கள்.'' (அல்குர்ஆன்53:27)

முஷ்ரிக்குகள் வானவர்களைப் பெண்கள் என்று எண்ணிக் கொண்டு பேசியதற்கும், அவர்களுக்குப்  பெண்களின் பெயரிட்டுத் தெய்வங்கள் போன்று அழைத்ததற்கும் மறுப்பாகவே அல்லாஹ் மேற்கண்ட வசனத்தை அருளினான்;

''அல்லது, நாம் வானவர்களைப் பெண்களாகவா படைத்தோம் அதற்கு அவர்கள் சாட்சிகளா?'' (அல்குர்ஆன் 43:19)

''அன்றியும், அல்லாஹ்வின் அடியார்களாகிய வானவர்களை இவர்கள் பெண்மக்களாக ஆக்குகிறார்கள். அவர்கள் படைக்கப் பட்ட போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? இவர்களின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டு, கேள்வி கேட்கப்படுவார்கள்.'' (அல்குர்ஆன் 37:150)

வானவர்கள் பெண்களுமல்ல, ஆண்களுமல்ல, அலியுமல்ல. அவர்கள் ஒரு தனிப்பட்ட படைப்பு என்பதை மேற்கண்ட வசனங்கள் மூலம் அறியலாம்.

மனிதன் வானவராக முடியுமா?

மனிதன் என்றும் மனிதனாகத்தான் இருக்க முடியும். அவன் ஒருபோதும் வானவராக மாறிட இயலாது என்பதை திருக்குர் ஆன் வாயிலாகவே நாம் அறியலாம்.

யூசுஃப்(அலை) அவர்களின் அழகில் மயங்கிய பெண்கள் அவர்களை வானவர்கள் என்று வர்ணித்தார்கள்.  அந்த அளவிற்கு அப் பெண்கள் உயர்த்திக் கூறியும் அவர்கள் மனிதராகத்தான் இருந்தார்கள். வானவர்களாக மாறிவிடவில்லை.

''அப்பெண்களின் பேச்சுகளை (அஜீஸின் மனைவி) கேட்டபோது (விருந்திற்காக) சாய்மானங்கள் சித்தம்செய்து அப்பெண்களுக்கு அழைப்பு அனுப்பினாள்; (விருந்திற்கு வந்த) அப்பெண்களில் ஒவ்வொருத்திக்கும் (பழங்களை நறுக்கி உண்பதற்காக) ஒரு கத்தியும் கொடுத்தாள். இப்பெண்கள் எதிரே செல்லும் என்று (யூசுஃபிடம்) கூறினாள்; அப் பெண்கள் அவரைப் பார்த்ததும்(அவரழகில் மயங்கி) அவரை மிக மேன்மையாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய்மறந்து) தம் கைகளை வெட்டிக் கொண்டனர். ''அல்லாஹ்வே பெரியவன்; இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்குரிய வானவர்க்கேயன்றி வேறில்லை'' என்று கூறினார்கள்.'' (அல்குர்ஆன் 12:31)

இப்லீஸ் ஆதம்(அலை) அவர்களின் உள்ளத்திலும், அவருடைய துணைவியார் உள்ளத்திலும் தவறான எண்ணங்களை ஊசலாடச் செய்து நீங்கள் இறைவன் தடை செய்த மரத்தின் கனியைப் புசியுங்கள்! நீங்கள் வானவர்களாம் விடுவீர்கள் என கூறினான். ஆனால் அவன் கூறியதற்கு மாற்றமாகவே நடந்தது என்பதை அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடும்றான்;

அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் வானவர்களாம் விடுவீர்கள்,  அல்லது (இச்சுவனபதியில்) என்றென்றும் தங்ம்விடுவீர்கள் என்பதற்காகவே அன்றி, (வேறெதற்கும்) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை என்று கூறினான்.

நிச்சயமாக உங்களிவருக்கும் நான் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன் என்று சத்தியம் செய்து கூறினான்.

இவ்வாறு அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான்  - அவர்களிருவரும் அம்மரத்தினைச் சுவைத்த போது அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; ''உங்கள் இருவரையும் அம்மரத்தை விட்டு நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகிரங்கமான பகைவன் என்று உங்களுக்கு நான் சொல்லவில்லையா?'' என்று கேட்டான்.

அதற்கு அவர்கள்; ''எங்கள் இறைவனே எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால் நாங்கள் நஷ்டமடைந்து விடுவோம்.'' என்று கூறினார்கள். அல்குர்ஆன் 7:20-23

ஷைத்தானின் தூண்டுதலால் வானவர்களாக மாறிடவேண்டும் என்ற திட்டம் நிறைவேறாமல் மனிதன் மனிதனாகவேதான் இருக்கிறான் என்பதை மேற்கண்ட வசனங்களின் மூலம் நாம் அறியலாம்.

அவர்களைக் காண முடியுமா?

வானவர்கள் மனித உருவத்தில் வந்தார்கள் என்றால் அவர்களை எல்லோரும் பார்க்க முடியுமா? அவர்கள் எல்லாருடனும் பேசுவார்களா என்ற சந்தேகம் எழலாம்: அவர்களை தூதர்கள் பார்த்திருக்கிறார்கள். சில ஸஹாபாக் களும் பார்த்திருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பு இருந்த சில சமுதாய மக்களும் பார்த்திருக்கிறார்கள்.  ஆனால் நபி(ஸல்) அவர்கள் காலத்திற்குப் பின்பு எவரும் வானவர்களைக் கண்டதில்லை. இனிமேல் காணவும் முடியாது.  ஆனால் மறுமை நாளில் அனைவரும் காணலாம்.

முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு முன் சென்ற நபிமார்களில் சிலர் வானவர்களை மனித வடிவில் பார்த்திருக்கிறார்கள் என்பதை நாம் திருக்குர்ஆன் வாயிலாக அறியலாம்.

இப்ராஹீம்(அலை) அவர்களிடம் வானவர்கள் மனித உருவில் வந்தனர். வந்தவர்கள் மனிதர்கள் என எண்ணிக் கொண்டு அவர்களுக்காகப் பொறித்த காளைக் கன்றின் கறியைக் கொண்டு வந்தார்கள்.  அவர்கள் புசிக்கவில்லை, ''பயப்படாதீர்கள். நாங்கள் லூத்(அலை) நபியின் சமூகத்தாரின் பக்கம் அனுப்பப்பட்டுள்ளோம்.'' என்று கூறினர் என்பதை அல்லாஹ் திருக்குர்ஆனின் 11 வது அத்தியாயம் 69, 70 ஆகிய வசனங்களில் குறிப்பிட்டுக் காண்பிக்கிறான்.

பின்னர் அவர்கள் லூத்(அலை) அவர்களுடைய சமூகத்தாரின் பால் வந்தனர். அவர்களை அங்கிருந்த மக்களும் பார்த்தனர். ஆனால் அவர்கள் வானவர்கள் என்பதை அறியவில்லை. மனிதர்கள் என்றே எண்ணினர் என்ற விஷயத்தையும் அல்லாஹ் அதே 11 வது அத்தியாயம் 77,78 வசனங்களில் குறிப்பிட்டுக் காண்பிக்கிறான்.

மர்யம்(அலை) அவர்கள் இறையச்சம் மிகுந்த ஒரு பெண்மணி. அவர்கள் நபியல்ல. இவரை நபியென எண்ணுவது கூடாது. ஆனால் அவர்களிடம் வானவர் இறைச்செய்தி கொண்டு வந்தார்; அதை அவருக்குத் தெரிவித்தார் என்பதை திருக்குர்ஆன் கூறுகிறது. இவ்வாறு நபியல்லாத சிலருக்கும் வஹீ அருளப்பட்டுள்ளது.

''(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அனுப்பிவைத்த தூதர்கள் எல்வோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி)  நீங்கள் இதனை அறிந்திராமல் இருந்தால் (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.'' என்று கூறுவீராக!'' (அல்குர்ஆன்16:43)

வானவர்கள் கூறினார்கள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந் துள்ள சொல்லைக் கொண்டு உமக்கு (ஓரு மகவு வரவிருப்பது பற்றி) நற்செய்தி கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ், மர்யமின் மகன் ஈசா என்பதாகும்.

''அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணிய மிக்கவராகவும் (இறைவனுக்கு) நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்.'' (அல்குர்ஆன் 3:45)

நபி(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் வானவர்களைப் பலமுறை கண்டுள்ளார்கள். ஜிப்ரில்(அலை) அவர்களை அவர்களின் முழுத் தோற்றத் திலும் நபி(ஸல்) அவர்கள் கண்டுள்ளார்கள் என்பதைக் கீழ்வரும் இறைவசனம் நமக்கு உணர்த்துகிறது.

''மிக்க வல்லமையுடையவர் (ஜீப்ரில்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார். (அவர்) மிக்க உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில் நம் தூதர் முன் தோன்றினார்.  அவர் உன்னதமான அடிவானத்தில் இருக்கும் நிலையில் பின்னர், அவர் நெருங்ம் இன்னும் அருகில் வந்தார். (வளைந்த) வில்லின் இருமுனைகளைப் போல் அல்லது அதனினும் நெருக்கமாக வந்தார்.  அப்பால் (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம், அவர் அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.'' (அல்குர்ஆன் 53:5-10)

ஜிப்ரில் (அலை) அவர்களை இயற்கைத் தோற்றத்தில் நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கண்டுள்ளார்கள்.

முதன் முதலாக ஹிராக்குகையில் நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரில்(அலை) அவர்களின் உண்மையான தோற்றத்தைக் கண்டு பயந்து போனார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு ஆரம்பத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும். நல்ல கனவுகளிலே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவைக் கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போலிருக்கும்.

பின்னர் தனிமையில் இருப்பது அவர்களுடைய விருப்பமாயிற்று. ஹிராக் குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள்.  தன்னுடைய குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தனர். (அங்கு தங்கும்) அந்நாட்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அந்த உணவு முடிந்த பின்னர்) மீண்டும் (தன்னுடைய மனைவி) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பி விடுவார்கள்.

அதுபோன்று பல நாட்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு வஹீ கொண்டு வரும் வரை நீடித்தது. ஒருநாள், ஒரு வானவர் அவர்களிடம் வந்து 'ஓதுவீராக' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின்வருமாறு விளக்கிக் கூறினார்கள்.

அவர் என்னைப் பிடித்துக்கொண்டு நான் சிரமப்படும் அளவிற்குக் கட்டி அணைத்தார். பிறகு விட்டு  விட்டார்;மீண்டும் ஓதுவீராக என்றார். (அதற்கும்) ஓதத் தெரிந்தவனில்லையே என்றேன். இரண்டாவது முறையும், நான் சிரமப்படும் அளவிற்கு என்னைக் கட்டியணைத்து விட்டுவிட்டு மீண்டும் ஓதுவீராக என்றார். (அதற்கும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றேன். அவர் என்னை மூன்றாவது முறை கட்டியணைத்து விட்டு, படைத்த உம் இரட்சகன் பெயரால் ஓதுவீராக் அவனே அலக்கு(ஆரம்பக் கரு நிலையி) லிருந்து படைத்தான். ஓதுவீராக உம் இரட்சகன் கண்ணிய மிக்கவன் என்றார்.

பின்னர் நபி(ஸல்) அவர்கள் இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் மனைவி) கதீஜா(ரலி) அவர்களிடம் வந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்) நூல் : புகாரி

ஜிப்ரில் (அலை) அவர்களின் இயற்கைத் தோற்றத்தை இரண்டாவது முறை கண்டதை நபி(ஸல்) அவர்கள் கீழ்வருமாறு விவரிக்கிறார்கள்.

நான் நடந்து போய்க்கொண்டிருந்தபோது வானத்திலிருந்து ஒரு குரலைக்கேட்டு என்னை உயர்த்திப்பார்த்தேன்.  அப்போது ஹிரா குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்திற்கும், பூமிக்குமிடையே ஒரு ஆசனத்தில் அமர்ந்திருப்பது கண்டு அச்சமுற்றேன். வீட்டிற்குத் திரும்ப வந்து (கதீஜாவிடம்) என்னைப் போர்த்துங்கள் என்றேன்.  அப்போது, போர்வையைப் போர்த்தியவரே எழுவீராக (மக்களுக்கு) எச்சரிக்கை செய்வீராக என்று 74 வது அத்தியாயத்தில் (5) வசனங்களை இறைவன் அருளினான் என நபி(ஸல்) கூறியதாக ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி

''அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரில்) இறங்கக் கண்டார். ஸித்ரதுல் முன்தஹா எனும் (வான எல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே அதன் சமீபத்தில்தான் ஜன்னத்துல் மஃவா எனும் சுவர்க்கம் இருக்கிறது.  ஸித்ரதுல் முன்தஹா எனும் அம்மரத்தைச் சூழ்ந்து கொண்ட வேளையில் அவருடைய பார்வை விலகவில்லை, அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை. திடமாக அவர் தம்முடைய இரட்சகனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்''. ( அல்குர்ஆன் 53:13-18)

நபி(ஸல்) மிஃராஜ் பயணம் சென்றிருந்தபோது, ஜிப்ரில் (அலை) அவர்களை அவர்களுடைய இயற்கை உருவில் கண்டதை அல்லாஹ் இவ்வாறு விவரித்துக் கூறும்றான். இதுவல்லாமல் மற்ற நேரங்களில் பல முறை நபி(ஸல்) அவர்கள் மனித ரூபத்தில் வானவர்களைக் கண்டுள்ளார்கள்.

ஒருநாள் இறைத்தூதர் அவர்கள் மக்கள் மத்தியில் அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, ''இறைத்தூதர் அவர்களே! இறைநம்பிக்கை (ஈமான்) என்றால் என்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதத்தையும் அவனது சந்திப்பையும், அவனது தூதர்களையும் நம்புவது.''  என்று கூறினார்கள்.

''இறைத்தூதர் அவர்களே! இஸ்லாம் என்றால் என்ன?'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வை நீ வணங்குவதும், அவனுக்கு நீர் எதையும் இணையாக்காமல் இருப்பதும் விதிக்கப்பட்ட தொழுகைகளை நீர் நிறைவேற்றுவதும், விதிக்கப்பட்ட ஜகாத்தை நீர் கொடுத்து வருவதும், ரமலானில் நீர் நோன்பு நோற்பதுமாகும்'' என்றார்கள்.

''இறைத்தூதர் அவர்களே! இஹ்ஸான் என்றால் என்ன?'' என்று கேட்டார். ''நிச்சயமாக நீர் அல்லாஹ்வைக் காண்பது போன்று வணங்குவதாகும். நீர் அல்லாஹ்வைப் பார்க்கவில்லையாயினும், நிச்சயமாக அல்லாஹ் உம்மைப் பார்த்து கொண்டிருக்கின்றான்'' என்றார்கள்.

''இறைத்தூதர் அவர்களே! இறுதி(கியாமத்) நாள் எப்போது?'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கேட்பவரை விட கேட்கப் படுபவர் இது பற்றி மிக அறிந்தவரல்லர். ஆயினும் அதன் அடையாளங்களைப் பற்றி உமக்கு அறிவிக்கிறேன் (எனக்கூறி) அடிமைப் பெண் தன் எஜமானனைப் பெற்று விடுவாளாயின், அது அந்நாளின் அடையாளங்களில் உள்ளதாகும். ஆடையில்லாதவர்களும், காலில் செருப்பணியாதவர்களும், மக்களுக்குத் தலைவர்களாக ஆகிவிடுவார்களாயின் அது அந்நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். (இன்னும்) ஐந்து விஷயங்கள். அவற்றை அல்லாஹ்வையன்றி வேறு யாரும் அறிய மாட்டார்கள் (எனக்கூறிவிட்டு) பிறகு,

''நிச்சயமாக, அல்லாஹ்விடமே இறுதிநாள் பற்றிய அறிவு உண்டு. அவனே மழையை இறக்கி வைக்கிறான். மேலும் கர்ப்ப காலங்களில் உள்ளவற்றையும் அவனே அறிகிறான், எந்த ஆத்மாவும் எங்கே நாளை இருக்கும், எதை செய்யும் பூமியில் எங்கே இறப்பெய்தும் என்பதையும் அறியாது''

''நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் (செய்திகளை) அறிவிப்பவனாகவும் இருக்கிறான்'' என்று கூறி அல்குர்ஆனின் 31:34 என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அதன் பிறகு (வந்திருந்த அந்த) மனிதர் திரும்பச் சென்று விட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ''அந்த மனிதரை மீண்டும் என்னிடம் அழைத்து வாருங்கள்''என்றனர். அவரைத் திரும்ப அழைத்து வரச் சென்றவர்கள் யாரையும் (அம்மனிதரைக்) காணவில்லை என்றனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ''இவர் ஜிப்ரில் , மனிதர்களுக்கு அவர்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக வந்தார்'' என்றார்கள். அறிவிப்பவர்; அபூஹுரைரா(ரலி)    நூல்; முஸ்லிம்

மேற்கண்ட நபிமொழியின் மூலம் மனித ரூபத்தில் வந்த வானவரை நபி(ஸல்) அவர்களும், அவர்களுடன் அமர்ந்திருந்த ஸஹாபாக்கள் அனைவரும் கண்டார்கள் என்பதை அறியலாம்.

அவர்களை வணங்கலாமா?

அவர்களின் உருவ அமைப்பு, வல்லமை, தன்மைகள் இவற்றைக் கண்டு அவர்களை வணங்கலாமா என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. ஏனெனில் அவர்களை வணங்குமாறு இஸ்லாம் பணிக்கவில்லை. இறைவனின் பல படைப்புக்களில் அவர்களும் ஒரு படைப்பு என்றே இஸ்லாம் கூறுகிறது.

''மேலும், (நம் தூதராகிய) அவர் வானவர்களையும், நபிமார்களையும் வணக்கத்திற்குரியவர்களாக, ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று உங்களுக்குக் கட்டளையிடமாட்டார். நீங்கள் முஸ்லிம்களாக (அல்லாஹ்விடம் மட்டுமே முற்றிலும் சரணடைந்தவர்களாக) ஆகிவிட்டபின் (நீங்கள் அவனை) நிராகரிப்போராம் விடுங்கள் என்று உங்களுக்கு அவர் கட்டளையிடுவாரா?'' (அல்குர்ஆன் 3:80)

வானவர்கள் இறைவனுக்கு அடிமையாக இருப்பதைப் பெருமையாகக் கருதுகின்றனர். அவர்களிடம் பெருமையோ, கர்வமோ துளியளவும் இருப்பதில்லை. அவர்கள் தன்னை வணங்குமாறு யாரையும் பணிப்பதுமில்லை என்பதை நமக்கு குர் ஆனின் கீழ்க்கண்ட மற்றொரு வசனமும் தெளிவுபடுத்துகிறது.

''ஈஸா மஸீஹும் (அல்லாஹ்விற்கு) நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்விற்கு அடிமையாக இருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாக) வழிபடுதலைக் குறைவாக எண்ணிக் கர்வமும் கொள்கிறார்களோ, அவர்கள் யாவரையும் மறுமையில் ஒன்று சேர்ப்பான்'' அல்குர்ஆன் 4:172

அவர்களுக்கு மரணமுண்டா?

வானவர்களின் தன்மைகளும், வல்லமையும், அவர்கள் செய்யும் பணிகளும் ஆச்சரியமாக உள்ளன. உயிர்களையும் அவர்களே எடுக்கின்றனர். எனவே அவர்களுக்கு மரணமேயில்லை என தவறாக எண்ணிவிடக்கூடாது. உண்மையில் அவர்களுக்கும் மரணமுண்டு.

''(உலகிலுள்ளவை) யாவும் அழிந்து போகக்கூடியதே, மிக்க வல்லமையும், கண்ணியமுமிக்க உம் இறைவனின் முகம் மட்டுமே நிலைத்திருக்கும்.'' (அல்குர்ஆன்55:26,27)

இறைவனைத் தவிர அனைத்தும் அழியக்கூடியது என்பதால் நிச்சயமாக வானவர்களும் மரணித்து, பின்பு எழுப்பப்படுவர்.  ஆனால் மனிதர்களிடம் விசாரணை நடப்பதுபோன்று அவர்களிடம் விசாரணை நிகழாது.

அவர்களின் பணிகள்:

வானவர்களுக்கென்று அல்லாஹ் சில பணிகளைக் கொடுத்துள்ளான்.  அதை அவர்கள் சரியாகச் செய்து வருகின்றனர்.  . மனித இனத்தைப் போன்று இறைவன் ஏவிய பணிகளை விரும்பினால் செய்யலாம், இல்லையென்றால் விட்டு விடலாம் என்ற அகிசம் அவர்களுக்கில்லை. எதை எவ்வாறு செய்யச் சொல்லிக் கட்டளையோ, அதில் சிறிதும் மாற்றம் செய்ய மாட்டார்கள்.

''அல்லாஹ் ஏவிய எதிலும் (வானவர்கள்) மாறு செய்ய மாட்டார்கள்.  அவன் ஏவியபடியே செய்து வருவார்கள்.'' (அல்குர்ஆன் 66:06)

மேலும் தங்களுக்கு மேலாக இருக்கும் (சர்வ வல்லமையுடைய) தங்கள் இறைவனைப் பயப்படுகிறார்கள். இன்னும் தாங்கள் ஏவப்பட்டுள்ளதை (அப்படியே) செய்கிறார்கள். அல்குர்ஆன் 16:50

அவர்களுக்கு இடப்பட்டிருக்கும் பணியினைப் பார்ப்போம்.

இறைவனைத் துதித்தல்:

''இடி அவனது புகழைக்கொண்டு துதிக்கின்றது. இன்னும் வானவர்கள் அவனை அஞ்சி துதிக்கின்றனர்.'' (அல்குர்ஆன் 13:13)

''வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், ஜீவராசிகளும் வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸுஜுது செய்து (சிரம் பணிந்து) வணங்குகின்றன. அவர்கள் (ஆணவங்கொண்டு) பெருமையடிப்பதில்லை.'' (அல்குர்ஆன் 16:49)

''வானவர்கள் (மறுமையில்) தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹ்செய்த வண்ணம் அர்ஷை சூழ்ந்து நிற்பதை நீர் காண்பீர்.'' (அல்குர்ஆன் 39:75)

தான் நினைத்தால் வணங்குவதும், இல்லையென்றால் வணங்காமல் விட்டுவிடுவதும் என்ற நிலையிலுள்ள மனிதர்களைப் போலல்லாமல், வானவர்கள் இறைவனைத் துதித்துக் கொண்டும் வணங்கிக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட வசனங்கள் மூலம் அறியலாம்.

வஹீ (இறைச் செய்தி) கொண்டு வருதல்:

இறைவனின் தூதை நபிமார்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு வஹீ என்று சொல்லப்படும். இப்பணியை வானவர்கள் தான் செய்து வந்தார்கள். வஹீ கொண்டு வரும் பணி முஹம்மது நபியுடன் முடிந்து விட்டது. இனியொரு நபியோ, வேதமோ அருளப்போவதில்லை.

''அவன்(இறைவன்) வானவர்களிடம் வஹீயைக் கொடுத்துத் தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது (அனுப்பி வைத்து) ''நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன், என்னைத் தவிர வேறு யாரும் இல்லை ஆகையால் நீங்கள் எனக்கே அஞ்சுங்கள், என (மக்களுக்கு எச்சரிக்கைச் செய்யுங்கள் என்ற கட்டளையுடன் வானவர்களை) இறக்கி வைக்கிறான்.'' (அல்குர்ஆன் 16:62)

''அவர் (முஹம்மத்) தன் இச்சைப்படி எதையும் பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. மிக்க வல்லமையுடையவர் (ஜிப்ரில்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.'' (அல்குர்ஆன் 53:3-5)

வானவர்களின் பணிகளில் ஒன்று வஹீ கொண்டு வருதல். இப்பணியை ஜிப்ரில்(அலை) அவர்கள் மேற்கொண்டார்கள்.  நபி(ஸல்) அவர்களுக்கு முதல் முதலில் ஹிரா குகையில் வஹீ கொண்டு வந்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் ஆயுள் முடியும் வரை வஹீ கொண்டு வந்தார்கள். அதே ஜிப்ரில்(அலை) நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பிருந்த நபிமார்கள் அனைவருக்கும் வஹீ கொண்டு வந்தார்கள். கண்ணிய மிக்கப் பெண்மணியான மர்யம்(அலை) அவர்களுக்கும், அவர்கள் தாம் இறைச்செய்தி கொண்டு வந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் ஜிப்ரில் (அலை) அவர்கள் எந்த மனிதருக்கும் வஹீ கொண்டுவர மாட்டார்கள். முடிக்கப்பட்டு விட்டது.

லைலத்துல் கத்ர் - இரவில் இறங்குதல்:

''நிச்சயமாக நாம் அதை (குர் ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.  மேலும் கண்ணியமிக்க இரவு என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானதாகும். அதில் வானவர்களும், ஆன்மாவும் (ஜிப்ரிலும்) தம் இறைவனின் கட்டளைப்படி (நடைபெறவேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும்வரை இருக்கும்.'' (அல்குர்ஆன்97:1-5)

லைலத்துல் கத்ர் இரவில் வானவர்கள் பூமியில் இறங்குகின்றனர். இறைவனிடமிருந்து சாந்தியையும் இறையருளையும் கொண்டு வருகின்றனர். அந்தச் சாந்தியையும், நல்லருளையும், இறைவனின் நல்லடியார்களுக்குச் சேர்க்கின்றனர்.  வானவர்களின் பணிகளில் இதுவும் ஒன்று என்பதை நாம் மேற்கண்ட அத்தியாயத்தின் மூலம் அறியலாம்.

அவர்கள் சாட்சி கூறுகின்றனர்:

இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. எதுவுமில்லை என்பதையும், இறைவனின் வேதத்தைக் குறித்தும், இறைவனின் வானவர்களும் சாட்சி கூறுகின்றனர். மேலும் அறிவுடையார்களும் சாட்சி கூறுகின்றனர் என்பதை அல்லாஹ் தன் திருமறையில் விவரிக்கிறான்.

''அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகின்றான். மேலும் வானவர்களும், அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் மிகைத்தவன். ஞானமிக்கவன்.'' (அல்குர்ஆன் 3:18)

''(நபியே) நாம் உமக்கு(தான்) அருளியதை (வேதத்தை)க் குறித்து அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான். அவன் அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு இறக்கி வைத்தான். வானவர்களும் (இதற்கு) சாட்சியங்கூறுவதற்கு அல்லாஹ் போதுமானவன்.'' (அல்குர்ஆன்4:166)

மனித குலத்தைக் கண்காணித்தல்:

''நிச்சயமாக உங்கள் மீது பாதுகாவலர்கள் (நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். நீங்கள் செய்கிறதை (எல்லாம்) அவர்கள் அறிகிறார்கள்.'' (அல்குர்ஆன் 82:10-12)

மனிதர்கள் தீமை செய்கிறார்களா நன்மை செய்கிறார்களா என்பதைக் கண்காணித்து அதைப் பதிவு செய்து வைப்பதற்காக ஒவ்வொரு மனிதனுடனும் அல்லாஹ் இரண்டு வானவர்களை நியமித்துள்ளான். ஒருவர் மனிதன் செய்யும் நன்மையான காரியங்களையும், மற்றொருவர் மனிதன் செய்யும் தீமையான காரியங்களையும் பதிவு செய்து வைக்கின்றனர். மனிதன் ஒரு வார்த்தை பேசினாலும் அதைப் பதிவு செய்து கொள்வார்கள். பதிவு செய்யப்பட்ட இப்பதிவேட்டை இறைவனிடம் சமர்ப்பிக்கின்றனர். இறைவன் இதைப் பற்றி மறுமை நாளில் விசாரித்து அவர்களின் செயலுக்குத் தக்கவாறு தீர்ப்பு வழங்குவான்.

ஒரு மனிதனின் முழு வரலாற்றைச் சுருக்கமாக எழுதினாலே பெரும் பெரும் நூலாக வெளியிடுகிறோம். அப்படியிருக்க, மனிதனின் ஒவ்வொரு வார்த்தையையும் எழுதினால் என்ன ஆகும் என்று சிலர் எண்ணலாம். ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட நூலை ஒரு மிகச்சிறிய டிஸ்க்கிற்குள் கொண்டு வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். மனிதனுக்கே இவ்வளவு அறிவு, திறமை உள்ளதென்றால் அவனைப் படைத்த இறைவனுக்கு இது ஒன்றும் பெரிய காரியமல்ல. அவன் எப்படியெல்லாம் செய்ய நாடுகிறானோ, அப்படி எல்லாம் செய்வான். அது அவனது வல்லமையின் இரகசியம்..

அவர்கள் வலம் வருதல்:

''நாய், இன்னும் உருவப்படங்கள் இருக்கும் வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள்'' என்று  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதல்ஹா(ரலி)        நூல்: புகாரி, முஸ்லிம்

''உருவப்படம், நாய் இன்னும் குளிப்புக் கடமையானவர் இருக்கும் இடங்களில் வானவர்கள் நுழைய மாட்டார்கள்''. அறிவிப்பவர்: அலி(ரலி)          நூல்: நஸயீ, அபுதாவூத்

இறைவனின் அருளைக் கொண்டு வானவர்கள் பல இடங்களில் இறங்குவார்கள். அப்படி அவர்கள் இறங்கிப் பல இடங்களுக்குச் செல்வதில் மனிதர்கள் வசிக்கும் இல்லங்களுக்குச் செல்வதும் ஒன்று. இப்பணியை அவர்கள் இறைவனின் கட்டளைப்படிச் செய்யும்போது எவருடைய வீடுகளில் உருவப்படம் தொங்கவிட்டோ, அல்லது மரியாதை நிமித்தம் பாதுகாக்கப்பட்டோ, தேவையின்றி நாய் வளர்த்துக் கொண்டோ இருக்கிறார்களோ, அவர்களுடைய இல்லங்களிலும், குளிப்புக் கடமையானவர் ஒரு தொழுகையின் நேரத்தைக் கடக்கும் வரையிலோ அல்லது இரவில் குளிப்புக் கடமையானவர் ஒரு தொழுகையின் நேரத்தைக் கடக்கும் வரையிலோ அல்லது இரவில் குளிப்புக் கடமையானவர்கள் இறைத் தூதரின் கட்டளைப்படி குளிப்புக் கடமையான பின்பு உளு செய்யாமலோ இருக்கும் இல்லங்களிலும்  வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

காலையிலும், மாலையிலும் மனிதர்களைக் கண்காணித்தல்:

''இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவர்களும், தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள். பஜ்ரு தொழுகையிலும், அஸர் தொழுகையிலும் இரு சாராரும் சந்திக்கின்றனர். பின்னர் இரவில் தங்கி அவர்கள் மேலேறிச் செல்கின்றனர்.''

''என் அடியார்களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்?'' என்று அவர்களிடம் இதுபற்றித் தெரிந்து கொண்டே விசாரிப்பான். ''அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போதே அவர்களிடம் சென்றோம். அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போதே அவர்களை விட்டுவிட்டு வரும்றோம்'' என்று அவர்கள் விடையளிப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்;அபூஹுரைரா(ரலி)         நூல்;புகாரி

மனிதனைப் பற்றி இறைவன் தானாக எதுவும் அறிந்து கொள்ள முடியாது போலும், எனவேதான் வானவர்களை அனுப்பி பார்வையிடச் செய்கிறான் என்பது இதன் கருத்தல்ல. மாறாக, இறைவன் மனிதனைப் படைக்க நாடியபோது, வானவர்கள் மாற்றுக் கருத்துக் கொண்டார்களல்லவா? எனவே, அவர்களிடம் இறைவன் அடியார்களின் நடத்தையைப் பற்றிப்  பெருமைப்பட்டுக் கொள்ளும் பொருட்டு இவ்வாறு கேள்விகளைக் கேட்கிறான். ''இறைவன் இதைப் பற்றித் தெரிந்து கொண்டே விசாரிப்பான்'' எனும் வாசகம் இதைத் தெளிவுபடுத்துகிறது.

இறைமறுப்பாளர்களை அவர்கள் சபிக்கின்றார்கள்:

''யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் இறைமறுப்பாளர்களாகவே மரித்து விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ்வுடையவும்,  வானவர்களுடையவும், மனி தர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.'' (அல்குர்ஆன் 2:161)

அவர்களிடம் தெளிவான ஆதாரம் வந்து, நிச்சயமாக (இந்தத்)தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சி கூறியும், இறைநம்பிக்கை (ஈமான்) கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களேயானால் அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி வழங்குவான்? அல்லாஹ் அநியாயக்காரக் கூட்டத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்.

''நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ், வானவர்கள், மனிதர்கள் அனைவரின் சாபமும் இருக்கின்றது என்பதுதான் அவர்களுக்குரிய கூலியாகும்.'' (அல்குர்ஆன் 3:86,87)

இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்து, உண்மையை மறைத்து, அதே நிலையில் மரணிக்கும் மனிதர்களை வானவர்கள் சபிக்கின்றனர் என்பது மேற்கண்ட வசனங்களின் மூலம் நமக்குத் தெளிவாகிறது.

''இந்த வசனம் மட்டும் திருக்குர்ஆனில் இல்லையென்றால் நான் எந்தச் செய்தியையும் அறிவிக்க மாட்டேன்'' என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நல்லடியர்களுக்காகப் பாவமன்னிப்புக்கோருதல்:

''அவர்களுக்கு மேலிருந்து வானங்கள் பிளந்து விடலாம். ஆனால் வானவர்கள் தங்களின் இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹ் செய்து, உலகிலுள்ளவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுகின்றனர். அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னிப்பவன். மிக்கக் கிருபையுடையவன்.'' (அல்குர்ஆன் 42:05)

''உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின்பால் கொண்டு வருவ தற்காக உங்கள் மீது அருள் புரிகிறவன் அவனே; இன்னும் அவனுடைய வானவர்களும் அவ்வாறே (பிரார்த்திக்கின்றனர்) மேலும், அவன் இறைநம்பிக்கை யாளர்களிடம் மிக்க இரக்கமுடையவனாயிருக்கின்றான்.'' (அல்குர்ஆன் 33:43)

வானவர்களின் பணிகளில் நல்லடியார்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதும் ஒன்றென மேற்கண்ட வசனம் தெளிவுபடுத்துகின்றது.

உயிர்களைக் கைப்பற்றுதல்:

''நிச்சயமாக நாமே உயிரும் கொடுக்கின்றோம்; மரிக்கவும் வைக்கிறோம். மேலும் எல்லாவற்றிற்கும் உரிமையாளராக நாமே இருக்கின்றோம். மேலும், எல்லாவற்றிற்கும் வாரிசாக (உரிமையாளனாக) நாமே இருக்கின்றோம்.'' (அல்குர்ஆன் 15:23)

நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம். நாமே மரிக்கும்படி செய்கிறோம். அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டும் வர வேண்டியிருக்கிறது.

உயிர்களைக் கைப்பற்றும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே இருக்கிறது. என்பதை நாம் மேற்கண்ட வசனங்களின் மூலம் அறியலாம். ஆனால் இறைவன் நேரடியாக உயிர்களைக் கைப்பற்றாமல் அதற்கென்று சில வானவர்களை நியமனம் செய்துள்ளான். அவர்கள்தான் அப்பணியைச் செய்கின்றனர். இறைவனின் இயலாமையின் காரணமாக வானவர்கள் அப்பணியைச் செய்கின்றனர் என்று தவறாக எண்ணிவிடக் கூடாது. அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்து ஆகுக என்றால் அது உடனே ஆகிவிடும் எனும் தனது வல்லமைiயும் அல்குர்ஆனின் 40:68 வசனத்தில் தெளிவாகக் கூறுகிறான்.  அவனால் படைக்கப்பட்டப் படைப்பினங்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு படைப்பினத்திற்கும் ஒரு பணியைப் பிரித்துக் கொடுத்து இருக்கிறான். அந்த அடிப்படையில் வானவர்களில் சிலருக்குக்  கொடுக்கப்பட்ட பணிதான் உயிர்களைக் கைப்பற்றுதல்.

''இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள்; பூமியில் பிரயாணம் செய்யுகிபோதோ..., அவர்கள் நம்முடன் இருந்திருந்தால் மரணமடைந்தோ கொல்லப்பட்டோ போயிருக்க மாட்டார்கள் என்று ஆனால் அல்லாஹ் ஏக்கமும் கவலையையும் உண்டாக்குவதற்காகவே இவ்வாறு செய்கிறான். மேலும் அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான். இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவ னாகவே இருக்கிறான்.''  (அல்குர்ஆன் 3:156)

''இன்னும் அவன் தான் உங்களை வாழச் செய்கிறான். பிறகு அவனே மரணிக்கச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன். (எனினும்) மனிதன் நிச்சயமாக நன்றிகெட்டவனாகவே இருக்கின்றான்.'' (அல்குர்ஆன் 22:66)

உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும் மலக்குல் 'மவ்த்' எனும் வானவர் தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார்; பின்னர் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்: அல்குர்ஆன் 32:11

''அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன்மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை(த்தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கின்றான். மீதியுள்ள வற்றை ஒரு குறிப்பிட்டத் தவணைவரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுவான். சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.'' (அல்குர்ஆன் 39:42)

நல்லோர்களின் உயிரையும் வானவர்கள் தாம் கைப்பற்றுகிறார்கள்.

''(இறைமறுப்பை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் வானவர்கள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களின் 'ஸலாமுன் அலைக்கும்' (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) நீங்கள் செய்துகொண்டிருந்த நற்கருமங்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்'' என்று அவ்வானவர்கள் சொல்வார்கள்.'' (அல்குர்ஆன் 16:32)

தீயோர்களின் உயிர்களை வானவர்கள்தான் கைப்பற்றுகின்றனர்.

''அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றும் அறிவிக்கப்படாமலிருக்க   எனக்கு வஹீ வந்தது என்று கூறுபவன்; அல்லாஹ் இறக்கி வைத்த இவ்வேதத்தைப்போல் நானும் இறக்கி வைப்பேன் என்று கூறுபவன் ஆகிய இவர்களை விட பெரிய அநியாயக் காரர்கன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேளையில் இருக்குகிபோது நீங்கள் அவர்களைப் பார்த்தால் வானவர்கள் தம் கைகளை நீட்டி(இவர்களிடம்) உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாக கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில் நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள். இன்னும் அவனுடைய வசனங்களை (நம்பாது மறுத்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்(என்று கூறுவதை நீர் காண்பீர்). (அல்குர்ஆன்6:93)

''வானவர்கள் இறைமறுப்பாளர்களின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால் வானவர்கள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள். அரிக்கும் மரண வேதனையைச் சுவையுங்கள் என்று.'' (அல்குர்ஆன்8:50)

''அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்பவர்களாக இருக்கும் நிலையில் வானவர்கள் அவர்களுடைய உயிர்களைக் கைப்பற் றுவார்கள்; அப்போது அவர்கள் 'நாங்கள் எந்தவிதமான தீமையும் செய்யவில்லையே'' என்று வானவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக, சமாதானமாகக் கோருவார்கள். அவ்வாறில்லை, அல்லாஹ் நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன் (என வானவர்கள் கூறுவார்கள்).'' (அல்குர்ஆன் 16:28)

வானவர்கள் உயிர்களைக் கைப்பற்றுவது பற்றிச் சில தவறான கருத்துகள் மக்களிடம் நிலவுகின்றன. அனைவரின் உயிர்களையும் பறிப்பது ஒரே ஒரு வானவர்தான். அவர்பெயர் இஸ்ராயீல் எனும் ஒரு கருத்து நிலவுகிறது. இது முற்றிலும் தவறான கருத்தாகும். அல்லாஹ் 16:28, 16:32, 8:50 ஆகிய வசனங்களில் உயிர்களைப் பறிக்கும் வானவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது ''அல் மலாயிகா'' என்று பன்மையாகத்தான் குறிப்பிடுகிறானே அன்றி மலக் என்று ஒருமையாகக் குறிப்பிடவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கப்ருகளில் இறங்குதல்:

மனிதர்களைப் புதைக்கும் புதைகுழிக்கு அரபிமொழில் கப்ரு என்று சொல்லப்படும். மனிதன் கப்ரில் வைக்கப்பட்டவுடன் இரு வானவர்கள் இறங்குவார்கள். அவர்கள் இறங்கிய உடன் அந்த மனிதன் உயிர் கொடுத்து எழுப்பப்படுவான். அப்போது அவனிடம் கேள்விகள் கேட்கப்படும். அங்கு அவன் கூறும் பதிலுக்குத் தக்கவாறு அவனுடைய இருப்பிடம் அங்கு நிர்ணயிக்கப்படும்.

''நிச்சயமாக அடியான் அவனது கப்ரில் வைக்கப்பட்டு(விட்டால்) அவனது தோழர்களெல்லாம் திரும்பி விடின் (திரும்பிச் செல்லும்போது) அவர்களது செருப்பின் காலடி ஓசைகளை நிச்சயமாக உறுதியாகவே அவர் (அடக்கம் செய்யப்பட்ட மனிதர் கேட்கிறார்). (மற்றொரு அறிவிப்பில் அவர்கள் திரும்பிவிடுவார்களாயின் என்றுள்ளது) அவரிடம் இரு வானவர்கள் வந்து, அவரை உட்காரவைக்கின்றனர். இம்மனிதரைப் பற்றி நபி(ஸல்) அவர்களைப் பற்றி) நீ என்ன சொல்லிக் கொண்டிருந்தாய்? என அவரிடம், அவ்விருவரும் கேட்பார்கள். (அப்போது) மூஃமினானவர்; நிச்சயமாக அவர் (முஹம்மது) அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன் என்று கூறுவார். (அப்போது) அவருக்கு நரகத்தில் (இருந்த) உனது இருப்பிடத்தைப் பார்.  அதைச் சுவனத்தில் உன் இருப்பிடமாக அல்லாஹ் மாற்றி விட்டான்.. அவ்விரண்டு (இருப்பிடங்களையும்) அவர் காண்பார் என நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அவரது கப்ரு எழுபது முழம் அளவிற்கு விஸ்தரிக்கப்படும். (மறுமை நாளைக்காக) அவர்கள் எழுப்பப்படும் வரை அதன் மீது பச்சைப் பசுமையாக ஆக்கப்படும் என நமக்குக் கூறப்பட்டது என கதாதா ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகிறார்.. அறிவிப்பவர்; அனஸ் பின் மாலிக்(ரலி)    நூல்; முஸ்லிம்

விசுவாசங்கொண்டவர்களை நிலையான சொல்லைக் கொண்டு அல்லாஹ் நிலைப்படுத்தி வைக்கிறான் என்ற அவனின் கூற்று, கப்ரில் வேதனை பற்றி (அது உண்டென நிரூபணம் செய்ய) இறங்கியதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக பராஉபின் ஆஜிப்(ரலி) அறிவிக்கிறார்கள்.

கப்ரில் வைக்கப்பட்ட அவரிடம் உமது இரட்சகன் யார்? என்று கேட்கப்படும். அதற்கவர் என்னுடைய இரட்சகன் அல்லாஹ் என்றும், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நபி எனவும் கூறுவார்.

அதுதான் விசுவாசங் கொண்டவர்களை, ''நிலையான கூற்றைக்கொண்டு இம்மை வாழ்க்கையிலும், மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்தி வைக்கிறான்'' என்ற அல்லாஹ்வின் கூற்றாகும். அறிவிப்பவர் ;அல்பராஉபின் ஆஜிப்(ரலி) நூல்; முஸ்லிம்

இங்கு சிலருக்குச் சந்தேகம் எழலாம். அதை நாம் முதலில் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

எல்லா மனிதர்களும் கப்ரில் வைக்கப்படுவதில்லை, சிலரை எரித்து விடுவார்கள்.  சிலரைப் பறவைகளுக்கு இரையாகப் போட்டு விடுகிறார்கள்.  சிலர் கடலில் விழுந்து மீனுக்கு இரையாம் விடுகிறார்கள். சிலருடைய உடல்கள் கப்ருகளில் (புதைகுழி) போய்ப்போடாமல் பூமியில் போடப்பட்டு அழுகி விடுகின்றன. சிலர் விமானத்தில் பயணிக்கும்போது விமானம் வெடித்து உடல்கள் சிதறடிக்கப்படுகின்றன.  இவ்வாறு நிகழும்போது கப்ருகளில் கேள்வி - கணக்கு,தண்டனை என்றால் இவர்களின் நிலை என்ன?

எந்தப் பொருளானாலும் சரி, அது எரிந்து போனாலும், துண்டாக்கப் பட்டு சிதறடிக்கப்பட்டாலும், பிற உயிரினங்கள் சாப்பிட்டாலும், அது இறுதியில் சென்றடையுமிடம் பூமிதான். எனவே மனிதன் எரிக்கப் பட்டாலும்,அவ்வுடலின் சாம்பல் பூமிக்குத்தான் வந்தடையும். விலங்குகள், மீன்கள் உண்டாலும் அவற்றின் கழிவு பூமியைத்தான் வந்தடையும். அதற்குப் பின் அவனைப் பூமியில் வைத்து இறைவன் தண்டிப்பதில் எவ்வித சிரமமும் இல்லை என்பதை அறியவும்.

நபி(ஸல்) அவர்கள் கப்ரு என்று குறிப்பிட்டதால் கப்ரில் வைக்கப்பட்டால் மட்டுமே கேள்வி-கணக்கு,  தண்டனை என்று அர்த்தமில்லை.  அன்றுமுதல் இன்று வரை அதிகமான மக்கள் புதைப்பதையே வழக்கமாகக் கொண்டிருப்பதாலும், இஸ்லாம் அடக்கம் செய்வதையே சட்டமாகக் கொண்டிருப்பதாலும், நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளவேண்டும்.

உண்மையில் கப்ரு வாழ்க்கை என்பது கப்ரில் நடத்தப்படும் வாழ்க்கையன்று. அது உலகத்திற்கும்,மறுமைக்கும் இடைப்பட்ட 'பர்ஜன்' எனும் வாழ்க்கை என்பதே உண்மை. இறைமறையும் கூறுகிறது

''அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, என் இறைவனே என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பியனுப்புவாயாக'' என்று கூறுவான். (அல்குர்ஆன் 23:99)

''நான் விட்டு வந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக'' (என்றும் கூறுவான்); அவ்வாறில்லை. அவ்வாறு அவன் கூறுவது வெறும் வார்த்தையேயன்றி வேறில்லை அவர்கள் எழுப்பப்படும் வரை அவர்கள் முன்னே ஒரு திரை இருக்கிறது.'' (அல்குர்ஆன் 23:100)

மேற்கண்ட வசனங்களில் மூலம் கப்ருகளில் வைக்கப்பட்டால்தான் கேள்விகள் கேட்கப்பட்டு தண்டிக்கப்படும் அல்லது சிறப்பிக்கப்படும் என்பதில்லை என்பது நமக்குத் தெளிவாகிறது.

எக்காளம் ஊதுதல்:

''ஸுர்'' என்ற அரபிச் சொல்லிற்கு எக்காளம் என்று பொருள். குழல் என்று கூடச் சொல்லலாம். யுக அழிவு நாளன்று வானவர் ''இஸ்ராஃயீல்(அலை) அவர்கள் ஸுர் ஊதுவார்கள். அவர்கள் இப்பணியைச் செய்யுமாறு இறை வனால் கட்டளையிடப்பட்டுள்ளார்கள்.''

''ஸூரில்(எக்காளத்தில்) ஊதுதல். ஒருமுறை ஊதப்படும் போது இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி(எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும், ஒரே தூணாக ஆக்கப்பட்டால் அந்நாளில்தான் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.'' (அல்குர்ஆன் 69:13-15)

''ஸூர்(எக்காளம்) ஊதப்பட்டால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர மூர்ச்சித்து விடுவார்கள்.'' (அல்குர்ஆன் 39:58)

''மேலும் ஸுர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.'' அல்குர்ஆன் 36:51

''ஸுர்(எக்காளம்) ஊதப்படும் நாள் அது குற்றவாளிகளை (பயத்தினால்) நீலம் பூத்தக் கண்ணுடையோராக நாம் அந்நாளில் ஒன்று சேர்ப்போம்.'' (அல்குர்ஆன் 20:102)

உலகம் அழிக்கப்படும்போது, வானவர் ஸுர் ஊதுவார். உலகம் அழிந்து விடும். அதற்குப் பின்னர் அனைத்து மக்களையும் எழுப்புவதற்கும் ஸுர் ஊதப் படும் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

அர்ஷை (அரியணையை) சுமந்திருத்தல்:

''இன்னும் வானவர்கள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹ் செய்த வண்ணம் அர்ஷை (அரியணையை) சூழ்ந்திருப்பதை நீர் காண்பீர்.'' (அல்குர்ஆன் 39:75)

''அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும், தங்கள் இறைவனின் புகழைக்கொண்டு அவனைத் தஸ்பீஹ் செய்து கொண் டிருக்கிறார்கள்.'' (அல்குர்ஆன்40:17)

''இன்னும் வானவர்கள் அதன் (வானத்தின்) கோடியில் இருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை(வானவர்கள்) எட்டுப் பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.'' (அல்குர்ஆன் 69:17)

மேற்கண்ட வசனங்களின் மூலம் வானவர்களின் பணிகளில் இறைவனின் அர்ஷை சுமந்திருப்பதும் ஒரு பணி என்பதை நாம் அறியலாம்.

அல்லாஹ் ''ஆகுக'' என்றால் அது ஆகிவிடும் பின் ஏன் எட்டு வானவர்கள் அர்ஷை சுமந்துகொண்டு வரவேண்டும், அது  தானாகவே வரலாமே எனும் ஒரு சந்தேகம் சிலருக்கு எழலாம்.  உண்மைதான். அவன் ''ஆகுக'' என்றால் ஆகிவிடும்.  எனவே அவன் தானாகவும் வரலாம். ஆனால் அவனுடைய வல்ல மையையும், மகிமையையும் மனிதர்கள் காணவேண்டும் என்பதற்காகவே மறுமையில் இவ்வாறு அல்லாஹ் வருகை தருகிறான் என்பதை அறியுவும்.

அவர்களின் பரிந்துரை:

''ரூஹ் (என்ற ஜிப்ரிலும்) வானவர்களும், அணியணியாக நிற்கும் அந்நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ, அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள். அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.'' (அல்குர்ஆன் 78:38)

மேற்கண்ட வசனத்தின் மூலம் வானவர்களையும், பரிந்துரை செய்ய இறைவன் அனுமதிப்பான் என்பது தெரிய வருகிறது.  மேலும்,

''(மனிதர்களின்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமர்ந்து இரு(வான) வர் எழுத்தெழுதுகிபோது - கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்தச் சொல்லையும் அவன் மொழிவதில்லை.'' (அல்குர்ஆன் 50:17,18)

என்ற இந்த இறைவசனங்களைக் காணும்போது மனிதர்களின் செயல்களையும், எல்லாவற்றையும் பதிவு செய்துகொண்டு சமர்ப்பிப்பார்கள். அது நல்லவர்களுக்குச் சுவர்க்கத்திற்காகப் பரிந்துரை செய்வதாகவும், தீயவர்களுக்கு நரகத்திற்காகப் பரிந்துரைசெய்வதாகவும் அமையும் என்பதும், இதுதான் மாபெரும் பரிந்துரை என்பதும் தெளிவாகிறது.

இது மட்டுமல்லாது, வானவர்களை எவர்களெல்லாம் வணங்கினார்களோ அதைப் பற்றியும் வானவர்களிடம் கேட்கப்படும் என்பதையும் இறைவன் கீழ்வரும் வசனங்களின் மூலம் தெளிவுபடுத்துகிறான்.

''(வானவர்களை வணங்கி வந்த) அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டும்'' அந்நாளில் அவன், வானவர்களிடம் ''இவர்கள் தானா உங்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள்'' என்று அல்லாஹ் கேட்பான்.'' (அல்குர்ஆன்34:40)

''(இதற்கு வானவர்கள்) ''நீ மிகத் தூய்மையானவன்; நீயே எங்கள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர்; எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் அவர்(ஜின்)கள் மேல் நம்பிக்கைக் கொண்டிருந்தவர்கள் என்று கூறுவார்கள்.'' (அல்குர்ஆன் 34:41)

அவர்கள் நரகத்தின் காவலர்கள்:

''அன்றியும், நரக காவலாளிகளை வானவர்கள் இல்லாமல் நாம் ஆக்கவில்லை.'' (அல்குர்ஆன் 74:31)

''(அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி, உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள் உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஒதிக் காண்பிக்ம்றவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் உங்களிடம் வரவில்லையா என்று கேட்பார்கள். (அதற்கு அவர்கள்) 'ஆம்' (வந்தார்கள்) என்று கூறுவார்கள்; எனினும் காஃபிர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாம்விட்டது.'' (அல்குர்ஆன் 39:71)

''மேலும் அவர்கள் (நரகத்தில்) 'யாமாலிக்' உம் இறைவன் எங்களை முடித்து விடட்டுமே! என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் ''நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே என்று கூறுவார்கள்'' (அல்குர்ஆன் 43:77)

''அது கோபத்தால் வெடித்து விடவும் நெருங்குகிறது; அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும்போதெல்லாம், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?  என்று அதன் காவலாளிகள் கேட்பார்கள்.'' (அல்குர்ஆன் 67:8)

''அதற்கவர்கள் கூறுவார்கள்; ''ஆம்'' அச்சமூட்டி எச்சரிப்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார்; ஆனால் நாங்கள் (அவரை) பொய்ப்பித்து 'அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை' என்று சொன்னோம்.''

''இன்னும் அவர்கள் கூறுவார்கள்; நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ, சிந்தித்தோ இருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்.'' (அல்குர்ஆன் 67;9,10)

மேற்கண்ட வசனங்களின் மூலம் நரகத்தின் காவலர்களாகவும், வானவர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை அறியலாம்.

அவர்கள் சுவர்க்கவாசிகளுக்கு வாழ்த்துக் கூறுதல்:

''நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக 'ஸலாமுன் அலைக்கும்' (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!'' என்று கூறுவார்கள். அல்குர்ஆன் 13:2

''நிலையான (அந்த) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; வானவர்கள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் அவர்களிடம் வருவார்கள்.'' அல்குர்ஆன் 13;24

(கப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் வானவர்கள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ, அவர்களிடம் ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) நீங்கள் செய்து கொண்டிருந்த நற்(கருமங்களுக்காக) சுவனபதியில் நுழையுங்கள்' என்று அவ்வானவர்கள் சொல்வார்கள். அல்குர்ஆன் 16:32

அந்நாளில் நிச்சயமாக சுவர்க்கவாசிகள் (தங்கள்) அலுவலில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

அங்கே அவர்களுக்கு (பலவகைக்) கனிவகைகள் உண்டு. இன்னும் அவர்களுக்கு அவர்கள் வேண்டுவது கிடைக்கும்.

அவர்களும் அவர்களுடைய மனைவியரும் நிழல்களில் கட்டில்களின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

'ஸலாமுன்' என்ற நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனிடமிருந்து வாழ்த்து உண்டு. அல்குர்ஆன் 36:55-58

(அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலை வில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.

'ஸலாமுடன் - சாந்தியுடன்' இ(ச்சுவர்க்கத்)தில் பிரவேசியுங்கள்; இதுதான் நிரந்தரமாக நீங்கள் தங்கியிருக்கும் நாளாகும். (என்று கூறப்படும்)

மேற்கண்ட வசனங்களின் மூலம் சுவர்க்க வாசிகளுக்கு வானவர்கள் வாழ்த்துக் கூறுவதை அறியலாம். இதில் கவனிக்க வேண்டியதென்னவென்றால் எவர்கள் சுவர்க்கவாசிகளாக இருக்கிறார்களோ அவர்களின் உயிரைப் பறிக்கும்போதே வானவர்கள் வாழ்த்துக் கூறுகிறார்கள் என்பதை இறைவன் 16:32 வசனத்தில் தெளிவுபடக் கூறுகின்றான்.  அந்த அளவிற்கு சுவர்க்கவாசிகள் மீது வானவர்கள் அன்பு செலுத்துகின்றனர்.

அவர்கள் சிலரைப் பூமியில் தண்டித்தனர்:

மனிதர்கள் வழிதவறிச் செல்லும்போதெல்லாம், அவர்களை நேர் வழிப்படுத்தும் பொருட்டு அவர்களிலேயே நல்லோர்களை அல்லாஹ் தன் தூதர்களாகத் தேர்வு செய்தனுப்பினான். அந்தத் தூதர்கள் தம் சமுதாய மக்களுக்கு இறைவனின் அத்தாட்சிகளையும் அருட்கொடைகளையும் எடுத்துரைத்து நேர்வழியில் அழைத்த போதிலும் எவர்கள் ஏற்க மறுத்தனரோ அவர்களை அல்லாஹ் இப்பூமியில் தண்டித்தான்.  அப்படித் தண்டிக்கப்பட்ட சமுதாயங்களில் நூஹ்(அலை) அவர்களுடைய சமுதாயம், ஆத் கூட்டம், ஸமூத் கூட்டம், லூத்(அலை) அவர்களின் சமுதாயம் போன்றோர் அடங்குவர்.

அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டு அவர்கள் மூலம் அந்தச் சமுதாயங்களை அழித்தான் என்பதை நாம் குர்ஆனின் பல இடங்களில் காணலாம்.

பத்ரு யுத்தக் களத்தில் வானவர்களின் பங்கு:

பத்ரு யுத்தம் உலக வரலாற்றில் அதிசயமான ஒன்று. முஸ்லிம்கள் தங்களை விடவும் மூன்று மடங்கு அதிகமாக இருந்த எதிரிகளை வென்றனர். படைப்பலத்தில் மட்டும் குறைவு என்றில்லாமல் ஆள் பலத்திலும் மிகக் குறைவாகவே முஸ்லிம்கள் இருந்தனர். இன்னும் சவாரி வசதியிலும் குன்றியிருந்தனர். அப்படி இருந்தும் வெற்றி என்றால் இது எப்படியென்று உலகம் வேண்டுமானால் அதிசயிக்கலாம்.  ஆனால் வல்ல இறைவனுக்கு இது மிகவும் இலகுவானதே. அவன்தான், தன் வல்லமையைக் காண்பிக்கும் பொருட்டும்,  சத்திய மார்க்கத்தை நிலை நிறுத்தும் பொருட்டும் வானவர் களைக் கொண்டு முஸ்லிம்களுக்கு உதவி செய்துள்ளான்.

பத்ருப் போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்தபோது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்.  ஆகவே நீங்கள் நன்றி செலுத்து வதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

''இறைநம்பிக்கையாளர்களிடம், உங்கள் ரப்பு (வானிலிருந்து) மூவாயிரம் வானவர்களை இறக்கி  உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?  என்று (நபியே!) நீர் கூறினீர்.'' (அல்குர்ஆன் 3:123,124)

மேற்கண்ட இறைவசனங்கள் மூலம் பத்ரு யுத்தத்தில் இறைவனின் கட்டளையின்படி வானவர்களின் பங்கை அறியலாம்.

அந்த வல்ல இறைவனின் உதவி முஸ்லிம்களுக்கு அன்று இல்லாமல் போயிருந்தால் அவர்களில் ஒருவரும் தப்பி இருக்க முடியாது.  (அல்லாஹ்வின் உதவி உண்மை முஸ்லிம்களுக்கு நீடிக்கட்டும்)

வானவர்களைப் பற்றிய கட்டுக் கதைகள்:

உலகில் படைக்கப்பட்டுள்ள படைப்பினங்களில் எவை இறைவனுக்கு மாறு செய்தாலும் வானவர்கள் மாறு செய்வதில்லை.  அவர்கள் இறைவன் ஏவியதை  மட்டுமே செய்வார்கள். தன்னிச்சையாக எதையும் செய்ய மாட்டார்கள் என்பது இறைவனின் தீர்ப்பு.

''அல்லாஹ் அவர்களுக்கு ஏவிய எதிலும் (வானவர்கள்) மாறு செய்ய மாட்டார்கள். அவன் ஏவியபடியே செய்து வருவார்கள்.'' (அல்குர்ஆன் 66:06)

ஆனால் அந்த வானவர்களை இழிவுபடுத்தி, இறை வசனங்களை நிராகரிக்கும் பொருட்டு யூதர்களால் இட்டுக்கட்டப்பட்ட சில கதைகளை முஸ்லிம்கள் உண்மையென நம்புகின்றனர். தங்களை அறிஞர் என சொல்லிக் கொள்ளக்கூடிய சிலரும் கூட இந்தக் கட்டுக் கதைகளை உண்மையென நம்பி,  பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  இதற்குக் காரணம்,  முன் சென்ற சில விரிவுரையாளர்கள் திருக்குர்ஆனிற்கு விரிவுரை செய்யும்போது செய்திகளை நன்றாக ஆராயாமல் எழுதித் தள்ளியதே எனலாம். 'ஹாரூத் -மாரூத்' என்ற இருவரைப் பற்றி யூதர்கள் சில கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டார்கள்.  அக்கதைகள் வானவர்களின் கண்ணியத்தை இழிவுபடுத்திவிட்டன.

இறைவசனங்களையும் பொய்த்து விட்டன. அந்தக் கதைகளையும், அதன் பித்தலாட்டங்களையும் நாம் அறிந்து, அதை முற்றிலுமாக அகற்ற வேண்டும். 'அல்பகரா' எனும் அத்தியாயத்தின் 102ம் வசனத்தின் விளக்கவுரையில்தான் 'ஹாரூத் - மாரூத்' பற்றிய கட்டுக்கதைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இப்னு உமர்(ரலி), இப்னு மஸ்ஊத்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), அலி(ரலி), முஜாஹித்(ரஹி), கஃபுல் அஹ்பார்(ரஹி), ரபீஉ(ரஹி), சுதீ(ரஹி) ஆகிய குர்ஆனுக்கு விளக்கம் கூறும் அறிஞர்கள் கூறியதாக குர்ஆனுக்கு விரிவுரை எழுதிய இமாம்களான இப்னு ஜாரிரித் தபாரி, இப்னு மர்தவைஹி, ஹாகிம், இப்னுல் முன்திர், இப்னு அபீத்துன்யா, பைஹகீ, கதீப் ஆகியோர் தங்கள் நூற்களில் எழுதியுள்ளதை மதிப்பிற்குரிய இமாம் சுயூத்தீ அவர்கள் துர்ருல் மன்தூர் என்னும் குர்ஆன் விரிவுரையில் எழுதுகிறார்கள்.

மனிதர்களே, அல்லாஹ்வை நிராகரித்துப் பாவங்களில் மூழ்கியபோது, இரட்சகனே, இந்த மனிதர்களை உன்னை வணங்குவதற்காகப் படைத்தாய்.  இதோ அவர்கள் உனக்கு மாறு செய்து, உன்னை நிராகரித்து, குஃப்ரிலே வீழ்ந்து, புனிதமான உயிர்களைக் கொலை செய்து, ஹராமான பொருட்களைச் சாப்பிட்டுக் கொண்டு, மது, களவு, விபச்சாரம் போன்ற கொடிய பாவங்களைச் செய்கிறார்களே என்று வானவர்கள் அல்லாஹ்விடம் கூறினர்.

கூறியது மட்டுமல்ல மனிதர்களுக்குக் கேடாகவும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். மனிதர்களுக்காக அவர்கள் பச்சாதாப்படவில்லை.

''எனது வேதனைகள்) மறைவாக இருப்பதால் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள்''. என்று அல்லாஹ் பதிலளித்தான்.  இன்னொரு செய்தியின் படி (வானவர்களாகிய, நீங்கள் அவர்களைப் போன்று மனிதர்களாக) இருந்தால் அவ்வாறுதான் நடந்து கொள்வீர்கள் என்றும் அல்லாஹ் கூறினான்.

உன்னைத் தூய்மைப்படுத்துகிறோம்; நாங்கள் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டோம் என்று வானவர்கள் கூறினர்.  அப்படியானால் உங்களிலிருந்து இருவரைத் தெரிவு செய்யுங்கள் அவ்விருவருக்கும் மனித உணர்வுகளைக் கொடுத்து நன்மை, தீமைகளை விளக்கி உலகுக்கு அனுப்புகிறேன் என்று அல்லாஹ் கூறினான். வானவர்கள் ஏகோபித்து, ஹாரூத், மாரூத் ஆகிய இரு வானவர்களையும் தெரிவு செய்து அனுப்பினர்.

அல்லாஹ் அவ்விருவரையும் பூமிக்கு அனுப்பினான் மனித உணர்வு களையெல்லாம் கொடுத்தான்.  தன்னை வணங்குமாறும் தனக்கு எதையும் இணையாக்காதிருக்குமாறும் கட்டளையிட்டான். கொலை, களவு, மது, விபச்சாரம் ஆகியவைகளைத்  தவிர்த்துக் கொள்ளுமாறும் கூறினான்.

இக்கட்டளைகளை ஒழுங்காக நிறைவேற்றிக் கொண்டு, அவ்விரு வானவர்களும் மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். விரும்பிய போதெல்லாம் பழைய இடத்திற்கும் சென்று வந்தனர். அதற்காகச் சில அவ்ராதுகளையும் (அல்லாஹ்வுக்கு) விருப்பமான வசனங்களையும் பாடமிட்டு நினைத்த நேரங்களில் வானத்திற்கும் சென்று திரும்பிக் கொண்டிருந்தனர்.

சில காலத்திற்குப் பின் அவர்களிருவரும் ஓர் அழகியைக் கண்டனர்.  மனித சுபாவங்கள் கொடுக்கப்பட்டிருந்ததால் அவளுக்குப் பின்னால் செல்லத் தொடங்கினார்கள். தன்னுடைய மார்க்கத்திற்கு வந்தார்களானால் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதாக அவ்வழகி கூறினாள். அந்த மார்க்கம் என்ன என அவ்விருவரும் கேட்டனர்.  அவள் தன் முந்தானையிலிருந்து ஒரு சிலையை எடுத்துக்காட்டி, இதை நீங்கள் வணங்கினால் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவேன் என்று கூறினாள்.'' ''அல்லாஹ்விடம் பாதுகாவல்'' தேடுகிறேன். இது ஒரு கொடிய பாவம்'' என்று கூறிவிட்டு அவர்களிருவரும் சென்று விட்டனர்.

சில நாட்கள் செல்லவே, அவளைப் பற்றிய நினைவின்றி இருந்தார்கள். மற்றொரு நாள் அவளைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. அவளிடம் அவ்விருவரும் சென்ற போது அவ்வழகி முன் கூறிய நிபந்தனையையே அப்போதும் சொன்னாள்.  நாங்கள் அல்லாஹ்விற்கு இணைவைக்க மாட்டோம் எனக் கூறிச் சென்று விட்டனர்.

பல நாட்கள் ஓடின. மீண்டும் அவளைக் கண்டு அவளுக்குப் பின்னால் சென்றனர். இம்முறை அவள் அதே சிலையைக் காண்பித்து இதை நீங்கள் வணங்க வேண்டும் அல்லது யாரையேனும் கொலை செய்ய வேண்டும்; அல்லது இம்மதுவை அருந்த வேண்டும். இம்மூன்றில் ஒன்றைச் செய்தால் உங்களிருவர் விருப்பத்தை நிறைவேற்றுவேன் என்றாள்.

அவ்விருவரும் மூன்று நிபந்தனையில் இலகுவானது மது அருந்துவதுதான் எனக் கூறி மது அருந்தினார்கள். உடனே போதை மயக்கத்தில் அவ்வழகியுடன் இணைந்தனர். அவ்வழியே ஒரு மனிதன் வருவதைக் கண்ணுற்ற இருவரும், இவன் இக்கொடிய வேலையை ஊரில் பறைசாற்றுவான் என்று எண்ணி இருவரும் சேர்ந்து அம்மனிதனைக் கொலை செய்தனர்.

மயக்கம் தெளிந்த பின் மது அருந்தி, விபச்சாரம் செய்து, கொலையும் செய்து மூன்று கொடிய பாவங்களிலும் மூழ்கி விட்டோமே என்பதை அவ்விருவரும் உணர்ந்தனர். பின் வழக்கம்போல் வானத்திற்குச் செல்ல முயன்ற போது முடியாமல் போய்விட்டது.

இவர்களின் இந்நிலையை அறிந்த வானவர்கள் மனித சுபாவம் பற்றி அறிந்து கொண்டனர். தவறிழைத்த அவ்விருவருக்காகவும் வருந்தி வல்ல இறைவனிடம் பிரார்த்தித்தனர். அவர்களின் பிரார்த்தனையை ஏற்ற அல்லாஹ் அவ்விருவரிடமும் உலகத் தண்டனை வேண்டுமா? மறுமைத் தண்டனை வேண்டுமா? இவ்விரண்டில் ஒன்றைத் தெரிவியுங்கள் என்று கூறினான்.

மறுமைத் தண்டனைக்கு முடிவில்லை. எனவே இவ்வுலகத் தண்டனை யைத் தருமாறு கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்றுக்கொண்ட அல்லாஹ் இவ்வுலகத்திலேயே அவ்விருவருக்கும் தண்டனையளித்தான். அவ்விருவரும் பாபில் என்னும் ஊரில் தலைகீழாகக்  கட்டி வைக்கப்பட்டு வேதனை செய்யப்படும்றார்கள்.

இன்னோர் அறிவிப்பின்படி ஹாரூத், மாரூத் ஆம்ய அவ்விரு வானவர்களும் குடிபோதையில் வானத்திற்குச் செல்லும் வசனத்தினை அந்த அழகிக்குக் கற்றுக் கொடுத்ததாகவும், அவள் அதைப் பாடமிட்டு வானத்துக்குச் சென்றதாகவும், அல்லாஹ் அவளை நட்சத்திரமா(சுக்ம்ரனா)க உருமாற்றி விட்டான் என்றும் அறிவிக்கப்படும்றது.

இதைத் தொடர்ந்து மேலும் இரு செய்திகளை இமாம் சுயூத்தி அவர்கள் குறிப்பிடும்றார்கள்.

இப்னு ஜாரிர், இப்னு அபீஹாதம், ஹாம்ம். பைஹகீ ஆம்யோர் தங்கள் ம்ரந்தங்களில் ஆயிஷா(ரலி) அவர்கள் மூலம் அறிவிக்ம்றார்கள்; தௌமத்துல் ஜன்தல் (இராக் நாட்டின் கூஃபா நகருக்கு அரும்லுள்ள ஊர்) என்னும் இடத்தில் ஒரு பெண் என்னிடம் வந்து நானும் இன்னொரு பெண்ணும் இரு கருப்பு நாய்களில் பயணித்தோம். சிறிது தூரம் சென்றதும் இரண்டுபேர் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டோம் என்று கூறினர்.

இதனை உண்மைப்படுத்த மற்றொரு செய்தியையும் இமாம் சுயூத்தி அவர்கள் குறிப்பிடும்றார்கள்.

ஹாரூன் இப்னு ரிபாய் அவர்கள் அவ்சாயி மூலம் அவ்சாயி அவர்கள் கூறியதாக இப்னு முன்திர் அவர்கள் தமது நூலில் கூறும்றார். நான், அப்துல் மாலிக் இப்னு மர்வான் (உமையாக்களின் ஐந்தாவது கலீபா(ம்.பி 646-715) அவர்களின் அரண்மணைக்குச் சென்றேன். அங்கே ஒரு மனிதர் பெரிதும் மதிப்பளிக்கப்பட்டுப் பஞ்சணையில் சாய்ந்து கொண்டிருந்தார்.

என்னைக் கண்ட ஏனையோர், இம்மனிதர் ஹாரூத், மாரூத் ஆம்ய இருவரையும் கண்டுள்ளார் எனக் கூறினர். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக் கண்டவற்றைக் கூறுங்கள் என்றேன், அம்மனிதர் அபூர்வமாக விநோதமான செய்திகளையெல்லாம் கூறினார் என்றெழுதியுள்ளார்.

இவையெல்லாம் யூதர்கள் மூலம் வந்த கட்டுக்கதைகள் என்பதில் சந்தேகமேயில்லை. இவை அறிவுக்கு ஒவ்வாத செய்திகளாகும். நபி(ஸல்) அவர்கள் ஹாரூத், மாரூத் பற்றி எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை. குர்ஆனில் கூறப்பட்டிருப்பதையும்விட அதிக விளக்கம் தரவில்லை. நபித்தோழர்களும் தரவில்லை. எனினும் அவர்கள் மூலம் வந்த செய்தி என எழுதப்பட்டுள்ளது. இமாம் சுயூத்தி அவர்கள் தாம் இதனை வலியுறுத்திக் கூறும்றார்கள். எனினும் இமாமவர்களும் இச்செய்திகள் உண்மையானவை அல்லது கற்பனையானவை என்று எதுவும் கூறாது மௌனமாக இருந்து விட்டார்கள்.

மற்றொரு வகையாக இமாம் சுயூத்தி அவர்கள் தமது குர்ஆன் விரிவுரையில் கூறுவதையும் பார்ப்போம்.

இப்னு ஜாரிர் ஸயீம்,கதீப் (தமது வரலாற்று நூலில்) எழுதுகிறார்கள், நாபிஃ அவர்கள் இப்னு உமர்(ரலி) அவர்களோடு ஒரு பிரயாணம் செய்தபோது ஓரிரவு தங்ம்யிருக்கும்போது இப்னு உமர்(ரலி) அவர்கள் நாபிஃ அவர்களிடம் 'விடிவெள்ளி தோன்றிவிட்டதா? பாரும்' என்றார்கள். அதற்கு நாபிஃ அவர்கள் தோன்றவில்லை என்றார்கள். இவ்வாறு மூன்று முறை கேட்டார்கள். மூன்றாவது முறை வானத்தைப் பார்த்து விட்டு விடிவெள்ளி தோன்றிவிட்டது என்றார்கள். அப்போது இப்னு உமர்(ரலி) அவர்கள் ''அதனை அல்லாஹ் நாசப்படுத்துவானாக'' என்றார். அதற்கு நாபிஃ அவர்கள் ''சுப்ஹானல் லாஹ் அல்லாஹ்வின் படைப்பு அவன் ஏவலுக்கு சற்றும் மாறுபடாது செயல்படும் ஒரு நட்சத்திரம்; இதனை நீங்கள் சபிக்கலாமா?  என்று கேட்டார்.

''நான் நபி(ஸல்) அவர்கள் கூறக்கேட்டதைத் தவிர அதிகமாக ஒன்றும் சொல்லவில்லை. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்; வானவர்கள் அல்லாஹ் விடம் யா அல்லாஹ்! ஆதமுடைய மக்களின் அக்கிரமங்களைக் கண்டு எப்படி பொறுமையாக இருக்கிறாய்  என்று கேட்டனர். நான் அவர்களைப் பல ஆசாபாசங்களைக் கொண்டு படைத்துள்ளேன் என்றான்.  உங்களை அவை ஏதுமில்லாது படைத்துள்ளேன் ''ஆசை மயக்கங்கள் எங்களுக்கு இருந்தாலும் நாங்கள் உனக்கு மாறு செய்ய மாட்டோம்'' என்று வானவர்கள் கூறினார்கள்.

அப்படியானால் உங்களில் இரண்டு வானவர்ளைத் தெரிவு செய்து தாருங்கள் என அல்லாஹ் கூறினான். வானவர்கள் கஷ்டப்படாது ஹாரூத், மாரூத் ஆகிய இருவரையும் தேர்வு செய்தனர். அவ்விருவரும் பூமிக்கு வந்தவுடன் மனிதர்களுக்குள்ள அத்தனைக் குணங்களையும் அவ்விருவருக்கும் அல்லாஹ் கொடுத்தான். சில காலம் சென்றதும் ''ஸுஹ்ரா'' என்ற ஓர் அழகிய பெண் அவர்கள் முன் தோன்றினாள். உடனே அவ்விருவருக்கும் அவள்மீது ஆசை தோன்றிவிட்டது. எனினும் ஒருவருக்குப்  பயந்து மற்றவர் தம் ஆசையை வெளிக்காண்பிக்காமல் மனதிலேயே வைத்துக் கொண்டிருந்தனர். இச்சை தாங்க முடியாத நிலை ஏற்பட்டதும், மற்றவரிடம் தமது ஆசையை வெளியிட்டார். மற்றவரும் தமது ஆசையைக் கூறினார்.

இருவருமாகச் சென்று அப்பெண்ணிடம் தங்கள் ஆசைக்கு இணங்குமாறு வேண்டவே, அப்பெண் நீங்கள் வானத்திற்குச் சென்று திரும்பும் மந்திரத்தைப் படித்துத் தந்தால் ஆசை பூர்த்தி செய்யப்படும் என்று கூறவே, அவர்களிருவரும் மறுத்து விட்டனர்.  இவ்வாறு மூன்று முறை நடைபெற்றது. இறுதியில் அவர்களிருவரும் அவளுக்கு அதனைப் படித்துக் கொடுத்துவிட்டு தங்கள் ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டனர்.

இருவருக்கும் இன்பத்தைக் கொடுத்த பின் அவள் அம்மந்திரத்தைக் கூறி வானத்திற்குச் சென்றதும், அல்லாஹ் அவளை நட்சத்திரமாக உருமாற்றி விட்டான். ஹாரூத், மாரூத் ஆகிய இருவரும் மீண்டும் வானத்திற்குச் செல்ல முடியாதவாறு அவர்களின் இறக்கைகளை வெட்டிவிட்டான்.

பின்னர் அவர்களிருவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடினார்கள். இம்மையின் தண்டனை தரவா,  அல்லது மறுமையின் தண்டனை தரவா எது விருப்பம் என அல்லாஹ் கேட்டான். இம்மையிலேயே தண்டனையைத் தருமாறு கேட்டனர். அவர்களிருவரையும் பூமி விழுங்கும்படி செய்தான். இப்பொழுது அவர்களிருவரும், வானத்திற்கும் பூமிக்குமிடையில் தலைகீழாகத்  தொங்கவிடப்பட்டுள்ளனர். தண்டனையை மறுமை நாள் வரை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.  இவ்வாறு இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறி முடித்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

புத்தி சுவாதீனமுள்ள எந்த முஸ்லிமும் இது நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி என்று ஏற்றுக் கொள்ளவே மாட்டான்.  இப்னு உமர்(ரலி) அவர்களைப் போன்ற உத்தம நபித்தோழர் மூலம் வந்த செய்தியாயினும் இதனை நம்பவே மாட்டான்.  நிச்சயமாக இது யூதர்களின் சரக்கு என்றே நம்புவான். இது பிழையான செய்தி,  யூதர்களின் கட்டுக்கதைகள் என்று கூறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

அவையாவன் 1. ஹாரூத் - மாரூத் பற்றிய நபி(ஸல்) அவர்களின் சரியான நபிமொழி எதுவும் இல்லை.

2. அபுல் பரஜ் இப்னு ஜவ்ஸி (கி.பி 510-597) அவர்கள் இது ஒரு கட்டுக்கதை என்று கூறியுள்ளார்கள்.

3. இமாம் இப்னு ஷிஹாபு இராக்கி அவர்கள் 'ஹாரூத் - மாரூத் ஆகிய இரு வானவர்களும் அவர்கள் செய்த தவற்றின் காரணமாக வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று யாராவது நம்பினால் அவன் காபிராகி விட்டான் என்று கூறுகிறார்கள், (ரூஹுல் மஆனி பாகம் 1 பக்கம் 341)

4. ஹாரூத்  - மாரூத் பற்றி வந்துள்ள முன் கதைக்கும் இரண்டாவது கதைக்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது.

5. ''...வானவர்கள் கண்ணியமிக்க (அல்லாஹ்வின்) அடியார்கள். (அவன் சந்நிதியில்) அவர்கள் யாதொரு வார்த்தையும் மீறிப் பேசமாட்டார்கள். அவனிட்ட கட்டளையையே அவர்கள் செய்து கொண்டிருப்பார்கள்.'' (அல்குர்ஆன்)

என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கு இக்கதைகள் முரண்படுகின்றன. நாங்கள் மனிதர்களாக இருந்தால் அக்கிரமங்கள் செய்ய மாட்டோம் என்று அல்லாஹ்வை எதிர்த்துப் பேசியுள்ளனர்.

6. பின்னுள்ள செய்தியில் அவ்விருவரும் தண்டிக்கப்பட்ட செய்தி இரண்டு விதமாகக் கூறப்படுகிறது. பூமி விழுங்கியது என்றும் வானத்திற்கும் பூமிக்குமிடையில் தொங்கவிடப்பட்டுள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து செய்தி கூறிய கறுப்பு நாய்களில் பிரயாணித்த பெண்களிருவரும் எந்தத் தோற்றத்தில் அவர்களைக் கண்டார்கள் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. தொங்கவிடப்பட்டி ருந்ததைக் கண்டோம் என்று மட்டுமே கூறியுள்ளார்கள். இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டா? ஆடையுடனா? நிர்வாணமாகவா? என்பனவும் தெளிவு படுத்தப்படவில்லை.

பூமி மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் கண்டார்கள். 35000 அடிக்கு அப்பாலென்றால் இப்பொழுது அதற்கு மேலும் பறந்து திரியும் விமானங்களில் அவர்கள் மோதிக் கொள்ளவில்லையா? 90 ஆம் ஆண்டு இராக்கில் குண்டுமரி     பொழியப்பட்டதே. அப்போது போடப்பட்ட குண்டுகளில் ஒன்றாவது அவர்களைத் தாக்கவில்லை. 35000 அடிக்குக் கீழே அந்த நாய்ச்சவாரிப் பெண்கள் கண்டிருந்தால் இப்பொழுது யார் கண்ணுக்கும் அகப்படாதது ஏன்? குறைந்த பட்சம் பக்தாதில் அடங்கப்பட்டிருக்கும் அல்லாஹ்வின் நேசர் முஹ்யீத்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் உயிருடனிருக்கும் போதாவது அவர்கள் கண்ணுக்குத் தென்பட்டிருக்கக் கூடாதா?

ஆதம்(அலை) அவர்களின் முதல் உலகத்து வரலாற்றைக் கூறும் அல்லாஹ், எந்த இடத்திலும் ஒரு பெண்ணுக்கு இரு கணவன்மார்கள் இருந்தார்கள் என்று கூறவேயில்லை. இருவருக்கும் மனைவியாக இருப்பவள் விபச்சாரி என்பதுதான் இஸ்லாத்தினதும், உலகப் பெரியார்களினதும் தீர்ப்பாகும். இங்கு இரண்டு ஆடவருக்குச் சுகம் கொடுத்த ஒருத்தி  நட்சத்திரப் பதவி பெற்றுள்ளாள்.

இதுபோன்று அக்கதையிலுள்ள பிழைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். குர் ஆன் விரிவுரையில் முதலாவதாக இச்செய்திகளை எழுதியவர் இமாம் இப்னு ஜாரிர் அத் தபாரி (கி.பி. 224-310) அவர்களாவார். இதனைத் தொடர்ந்து இந்த விரிவுரையை மேற்கோள்காட்டி அநேக விரிவுரையாளர்கள் எழுதினர்.  கடைசியாக ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன் பிறந்த இமாம் ஜமாலுத்தீன் சுயூத்தி (கி.பி. 849-911) அவர்கள் தமது துர்ருல் மன்தூரி என்னும் குர்ஆன் விரிவுரையில் எழுதியுள்ளார்.

முன் கூறப்பட்ட ஹாரூத் - மாரூத் என்ற வானவர்கள் பற்றிய உண்மை என்ன என்பதைப் பார்ப்போம்.

குர்ஆனிலுள்ள (2:102) வசனத்தில் நபி சுலைமான் (அலை) அவர்களும் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதை அறிவோம்.  இந்த நபிக்கு அல்லாஹ் எல்லாச் செல்வங்களையும் அளித்துள்ளான். ஏனைய ஜீவராசிகளின் பேச்சுகளையும் அறியக்கூடிய ஆற்றல் அளிக்கப்பட்டிருந்தார்கள். காற்றும் அவர்களுக்குப் பணிவிடை செய்தது என்றெல்லாம் அறிந்துள்ளோம். அல்லாஹ் குர்ஆனில் இவற்றைக் கூறியுள்ளான். அதனை நாம் விசுவாசங் கொள்ள வேண்டும்.

'ஸிஹ்ர்' என்ற அரபிப் பதத்திற்குச் சூனியம் என்று பொருள். இந்த சூனியத்தினால்தான் சுலைமான்(அலை) அவர்கள் இத்தனை நன்மைகளைப் பெற்றார்கள் என ஷைத்தான்கள் கதைகட்டி விட்டனர். அவர்கள் ஒரு சூனியக்காரர் என்று மக்கள் நம்பத் தொடங்கினர். நபி(ஸல்) அவர்களையும் இவ்வாறே மக்காவாசிகள் கூறினர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நபிமார்கள் காட்டிய முஃஜிஸாவுக்கும், சூனியத்திற்கும் வித்தியாசமுண்டு. நபிமார்கள் முஃஜிஸாக்களைக் காட்டி மக்களை நேர்வழிப்படுத்தினர். சூனியம் மக்களுக்குத்  தீங்கு விளைவிக்கக்கூடியது. நண்பர்களைப் பிரித்துவிடவும் சண்டை சச்சரவில்லாத கணவன் மனைவியைப்பிரித்து விடவுமே.  சூனியம் உதவும். சூனியம் செய்வது பெரும் பாவம். இதனை நபிமார்கள் செய்ய மாட்டார்கள்.

சூனியத்தைக் கற்றவர்களுக்குத்தான் சூனியத்திற்கும் முஃஜிஸாவுக்கு மிடையிலுள்ள வித்தியாசம் தெரியும். இதனைத் தெளிவுபடுத்தவே ஹாரூத் -மாரூத் ஆகீய இவ்விருவானவர்களையும் அனுப்பினான். ஆண் புணர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த லூத்(அலை) அவர்களின் சமூகத்தவர்களுக்கு மத்தியில் இரண்டு வானவர்களை அழகிய தோற்றத்தில் அனுப்பி அக்கூட்டத்தினரை அல்லாஹ் அழித்துள்ளான் என்பதையும் நாம் குர்ஆன் முலம் அறிந்துள்ளோம்.

மூஸா(அலை) அவர்கள் தங்கள் கைத்தடியைப் பாம்பாக மாற்றி முஃஜிஸாக் காட்டி - பிர் அவ்னின் சூனியக்காரர்களைத் தோற்கடித்ததையும் நாம் குர்ஆன் மூலம் அறிகின்றோம்.  ஆகவே நபிமார்கள் யாரும் சூனியம் செய்ததில்லை.  முஃஜிஸாதான் செய்து காட்டியுள்ளார்கள். இதனை உறுதிப்படுத்தவே சுலைமான் (அலை) அவர்கள் காலத்தில் ஹாரூத், மாரூத் ஆகிய இரு வானவர்களையும் அல்லாஹ் சூனியத்தைக் காட்டி அனுப்பி வைத்தான். முஃஜிஸா சூனியம் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார்கள். இந்த சூனியத்தை விளக்க வேண்டி அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட போதே நாங்கள் சோதனையாக இருக்கிறோம் என்ற வார்த்தையை உபயோகித்துள்ளார்கள்.

இந்த வார்த்தைகளுக்காகத்தான் முன் கூறப்பட்ட கற்பனைக் கதைகள் தோன்றியுள்ளன, யூதர்களால் இட்டுக்கட்டப்பட்ட இந்தக் கதைகள் உத்தம நபித்தோழர்களையும் இணைத்துப் பொய்யுரைக்காத நபி(ஸல்) அவர்களையும் இணைத்து, குர்ஆன் விரிவுரையாளர்கள் ஒருவரைப் பின்பற்றி மற்றவர் கூறிக் கடைசியாக இமாம் சுயூத்தி அவர்களோடு முடிந்துள்ளது.   யூதர்கள் சூழ்ச்சி குர்ஆன் விரிவுரையில் நன்கு ஊடுருவி விட்டது.

அரபி மொழியில் எழுதப்பட்டிருப்பவையெல்லாம் அப்பழுக்கற்றவை என நினைத்துக் கொண்டு இன்றைய மௌலவிகளும் இக்கதைகளைக் கூறித் திரிகிறார்கள்.

இக்கதைகளை நிராகரித்து அவற்றிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி இமாம்களாகிய அபூஹையான் (கி.பி. 654-754) அவர்களும் இப்னுல் கதீர் (கி.பி. 700-774) அவர்களும், அபுஸ்ஸுவாத் (கி.பி. 893-983) அவர்களும் ஷிஹாபுத்தீன் ஆலூஸி(கி.பி.1217-1270) அவர்களும் தங்கள் விரிவுரைகளில் எழுதியுள்ளனர்.

மண் எடுக்க முடியாது தவித்த வானவர்கள்?

அல்லாஹ் மனிதனைப் படைக்க நாடியபோது அவனை படைப்பதற்காகப் பூமியிலிருந்து மண் எடுத்து வரும்படி வானவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான், அப்போது வானவர்கள், ஒவ்வொருவராகப் பூமியிடம் சென்று மண் கேட்டனர். அப்போது பூமி, ''என்னுடைய ஒரு பகுதி நரகத்திடம் போவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அழுது புலம்பி மண்கொடுக்க மறுத்துவிட்டது. ஜிப்ரில் (அலை) அவர்களும் கூட மண் எடுக்கமுடியாமல் திரும்பி வந்து, பூமியின் மீது பரிதாபப்பட்டுவிட்டு, இறைவனிடம் முறையிட்டனர். இறைவன் இறுதியாக இஸ்ராயீல் என்ற மலக்கை மண் எடுத்துவர அனுப்பினான். அவர் சென்று பூமியிடம் மண் கேட்டபோது முன்பு மற்ற வானவர்களுக்குக் கூறியது போலவே கூறி பூமி அழுதது. ஆனால் அவர்பூமியின் மீது இரக்கம் காட்டாமல் இது என் இறைவனின் கட்டளை. எனவே நான் செய்தே தீருவேன் என்று கூறி பூமி அழுது துடிக்க துடிக்க அதனுடைய மேடுகளிலிருந்தும், பள்ளங்களிலிருந்தும் மண்ணை எடுத்துச் சென்றார். அதனைக் கொண்டு, மனிதனைப் படைத்த இறைவன், இஸ்ராயீலை அழைத்து, எப்படி நீ பூமியிடமிருந்து அது அழும் நிலையில் மண் எடுத்து வந்தாயோ அதே போன்று நீயே மனிதர்களின் உயிரையும் பறிக்க வேண்டும்; அதற்குப் பொறுப்பானவர் நீ தான் என்று கூறினான். எனவே இஸ்ராயீல்(அலை) அவர்கள் உயிர்களைக் கைப்பற்றுகின்றனர் என்ற மற்றொரு தவறான கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது.

நபிமார்கள் வரலாறு எனும் நூலில் எம்.ஏ அப்துர்ரஹீம் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இது முற்றிலும் இட்டுக்கட்டப்பட்ட ஒரு கற்பனைக் கதையாகும் இதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட கட்டுக்கதைகளால் இஸ்லாத்தின் புகழ் உயரும் என்று நினைப்பது மடமையிலும் மடமை. இதனால் இஸ்லாத்திற்கு பெரும் இழுக்கு ஏற்படும் என்பதை உணரத் தவறிவிடக்கூடாது.

அதுமட்டுமல்லாமல் திருக்குர் ஆனின் பல வசனங்களையும் ஹதீஸ்களையும் நிராகரிக்கும் போக்கையே மேற்கண்ட கதை ஊக்குவிக்கிறது.

வானங்கள், பூமி அவற்றில் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வின் ஆணைக்கு அப்படியே  கட்டுப்பட்டு நடக்கின்றன என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படையாகும். பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ள மனித ஜின் இனங்கள் மட்டுமே அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்கக்கூடியவர்களாகவும், மறுக்கக் கூடியவர்களாகவும் உள்ளனர். மற்ற படைப்பினங்கள் அனைத்தும் அவனது கட்டளைக்கும் விருப்பத்திற்கும் எதிராகச்  செயல்படுவதே இல்லை என்பதை அனைத்து முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். திருமறை குர்ஆன் இதைத் தெளிவாகவே விளக்குகின்றது.

''வானமும் பூமியும் அவனது உத்தரவுப் பிரகாரம் நிலை பெற்றிருப்பது அவனது அத்தாட்சிகளில் ஒன்றாகும்.'' (அல்குர்ஆன் 30:25)

என்று அல்லாஹ் கூறுகிறான். அந்த அல்லாஹ்வின் ஒரு கட்டளைக்கு அடிபணிய பூமி மறுத்துவிட்டதாக இந்தக்கதை அமைந்துள்ளது. வானங்களையும் பூமியையும் படைத்த பின் அவற்றை நோக்கி அல்லாஹ் ஒரு உடன்படிக்கை எடுத்ததைப் பின்வரும் வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான்.

''பூமியையும் வானங்களையும் நோக்ம் நீங்கள் விரும்பிய நிலையிலும் விரும்பாத நிலையிலும் (எனது ஆணைக்குக் கட்டுப்பட்டு) வாருங்கள் என்று (அல்லாஹ்) கூறினான்.''நாங்கள் (விரும்பி) கட்டுப்பட்டவைகளாக வந்தோம்'' என்று அவ்விரண்டும் (வானமும் பூமியும்) கூறின.'' (அல்குர்ஆன் 41:11)

அல்லாஹ் பூமிக்கோ வானத்திற்கோ ஒரு கட்டளையிட்டு விட்டால், அதை அப்படியே பூமியும் வானமும் ஏற்று நடக்கும். அதில் எள்ளளவும் மாற்றம் செய்யாது என்று மேற்குறிப்பிட்ட குர்ஆன் வசனம் ஐயத்திற்கிடமின்றித்  தெளிவு படுத்துகின்றது.  அல்லாஹ் மண் எடுத்து வருமாறு ஆணையிட்டிருக்கும்போது,  அதற்குப்  பூமி எப்படி மறுப்புச் சொல்லியிருக்கும்?  இந்தக் கதையை நம்பினால் திருக்குர் ஆனின் வசனத்தை நம்பாத நிலை ஏற்படுமல்லவா?  இறைவனின் வல்லமையைக் குறைத்து மதிப்பிட்டதாக ஆகிவிடுமல்லவா?

எனவே பூமி அல்லாஹ்வின் ஒரு கட்டளைக்கு அடிபணிய மறுத்திருக்கும் என்று எந்த முஸ்லிமும் கற்பனை செய்து கூடப்பார்க்க முடியாது. இந்தக் கதையில், அல்லாஹ் வானவர்களுக்கு ஒரு கட்டளை பிறப்பிக்கிறான்.  அதற்கு மாற்றமாக, பூமி வேறொரு கட்டளையைப் பிறப்பிக்கிறது. ஜிப்ரில் மீகாயீல், இஸ்ராஃயீல் ஆகிய மூவரும், வானவர்களில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள அந்த மூவரும் அல்லாஹ்வின் உத்தரவை விட பூமியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு தோல்வியோடு திரும்பினார்கள் என்றால் இதை நம்ப முடிகின்றதா? வானவர்கள் அல்லாஹ்வின் உத்தரவுக்கு எதிராக ஒரு போதும் செயல்பட மாட்டார்கள். மாறுசெய்வது அவர்களின் இயல்புக்கே அப்பாற்பட்டது என்றெல்லாம் திருக்குர்ஆனின் 66:6, 21:27 ஆகிய வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இப்படி இருக்கும் நிலையில் வானவர்கள் அதிலும் சிறப்புக்குரிய வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தாமல் எப்படித் திரும்பிச் சென்றிருக்க இயலும்? இறை உத்தரவுக்கு முரணாக உள்ள பூமியின் உத்தரவுக்கு எப்படி அடிபணிந்திருக்க முடியும்?

அப்படி எல்லாம் இறை உத்தரவுக்கு வானவர்கள் மாறு செய்ய மாட்டார்கள் என்று திருக்குர்ஆன் தெளிவாக்குகின்றதே! அந்தக் குர்ஆன் வசனங்களுக்கும் இந்தக் கதை முரண்படுகிறது.

இந்தக் கதையின் கருத்துப்படி அல்லாஹ் மண் எடுத்து வரச் சொன்னது கீழ்த்தரமான பொருளைப் படைப்பதற்காக அல்லவே! படைப்பினங்களிலேயே மிகச்சிறந்து விளங்குகின்ற மனித இனத்தைப் படைப்பதற்குத்தான் அல்லாஹ் மண் எடுத்து வரச் சொல்கிறான்.

''பூமியில் நான் ஒரு கலீபாவைப் படைக்கப்போகிறேன். (அல்குர்ஆன்2;30) என்று வானவர்களிடம் அல்லாஹ் கூறுகிறான்.  மிக உயர்ந்த நோக்கத்திற்காக அல்லாஹ் மண் எடுத்துவரச் சொல்லிஇருக்கும்போது பூமி எப்படி மறுத்திருக்க முடியும்  என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மண் எடுத்துச் வரச் சொன்னவன் சர்வ உலகத்தினையும் படைத்து அதிகாரம் செய்யும் வல்ல அல்லாஹ்.  இந்தக் கதையில் அவனது உத்தரவு மதிப்பற்றதாக ஆக்கப்படுகின்றது என்பதை உணர வேண்டாமா?

அந்தப் பணியைச் செய்து முடிக்க அனுப்பப்பட்டவர்களும் சாதாரணமானவர்கள் அல்லர். இறைவனின் உத்தரவை அப்படியே செய்து முடிக்கும் சிறந்த வானவர்கள். இந்தக் கதையில் வானவர்கள் இறை உத்தரவை மீறி விட்டார்கள் என்று காட்டப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

அற்பமான காரியத்தைச் செய்து முடிக்க மண் எடுத்து வரச் சொல்லவில்லை.

மிக உயர்ந்த சிறந்த நோக்கத்திற்காக அல்லாஹ் பூமியில் மண் எடுத்து வரச் சொல்லி இருந்தும், அது பூமியால் மறுக்கப்படுவதாக இந்தக்கதை குறிப்பிடுகிறது. எந்த வகையில் பார்த்தாலும், இந்தக் கதை சரியானதல்ல. ஒரு முஸ்லிம் இதனை நம்பக்கூடாது என்பது தெளிவாகவே தெரிகின்றது. இதுபோன்ற கதைகளை நம்பினால் இறைவனைப் பற்றியும் அவனது வானவர்களைப் பற்றியும் தவறான நம்பிக்கைக் கொண்டவர்களாவோம். மேலே நாம் எடுத்துக்காட்டிய இறை வசனங்களை நிராகரித்தவர்களாகவும் நாம் ஆக நேரிடும்.

இந்தக் கதை முழுக்கப் பொய் என்பதைப் பின்வரும் நபிமொழி தெளிவாக்குகின்றது.

''பூமியின் எல்லாப்பாகங்களிலிருந்தும் அல்லாஹ்வே கைப்பிடி மண் எடுத்து ஆதமைப் படைத்தான் அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி(ரலி)        நூல்கள்; அபூதாவூத், திர்மிதீ, இப்னுஹிப்பான்.

மண்  எடுத்து வரும்படி அல்லாஹ் வானவர்களுக்கு உத்தரவிடவில்லை. மாறாக அவனே கைப்பிடி மண் எடுத்து ஆதம்(அலை) அவர்களை உருவாக்கினான் என்று  இறைத்தூதர் அவர்கள் சொல்லியிருக்கும்போது, இந்தக் கதை பச்சைப் பொய் என்பது தெளிவாகின்றது. இது போன்ற கதைகளை நம்பி வானவர்களை மறுத்து, இறைவனின் கோபத்திற்குள்ளாகாமல் நம்மைக்காத்துக் கொள்வோமாக.
Previous Post Next Post