அத்தியாயம் 84 பரிகாரங்கள்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 84

சத்திய (முறிவுக்கான) பரிகாரங்கள்

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பகுதி 1

''அதன் பரிகாரமாவாது; உங்கள் குடும்பத்தாருக்கு நீங்கள் அளிக்கும் உணவில் நடுத்தரமான உணவைப் பத்து ஏழைகளுக்கு அளித்திடவேண்டும்; அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்திட வேண்டும். (இதில் எதற்குமே சக்தி) பெறாவிட்டால் மூன்று நாள்கள் நோன்பு நோற்றிடவேண்டும்'' எனும் (திருக்குர்ஆன் 05:89 வது) இறைவசனமும், 'நோன்பு நோற்றல், அல்லது தர்மம் செய்தல், அல்லது பலியிடல் (ஹஜ்ஜில் பலியிடுவதற்கு முன்பே தலைமுடி களைவதற்குப்) பரிகாரமாகும்'' எனும் (திருக்குர்ஆன் 02:196 வது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி(ஸல்) அவர்கள் இட்ட கட்டளையும்.2

இப்னு அப்பாஸ்(ரலி), அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்), இக்ரிமா(ரஹ்) ஆகியோர் '(மேற்கண்ட வசனங்களைப் போன்று) குர்ஆனில் 'அல்லது', 'அல்லது' என எங்கெல்லாம் வந்துள்ளதோ அங்கெல்லாம் சம்பந்தப்பட்டவருக்கு (அங்கு குறிப்பிடப்பட்டவற்றில் ஒன்றைக் தேர்ந்தெடுக்க) விருப்ப உரிமை உண்டு என்று கூறியுள்ளனர். நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில் தலைமுடி களைந்ததற்கான) பரிகாரம் தொடர்பாக கஅப் இப்னு உஜ்ரா(ரலி) அவர்களுக்கு விருப்ப உரிமை அளித்தார்கள்.3

6708 கஅப் இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார்.

நான் (ஹஜ்ஜின்போது) நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் 'அருகில் வா!'' என்று அழைத்தார்கள். எனவே, நான் அவர்கள் அருகில் சென்றேன். அப்போது அவர்கள் 'உம்முடைய (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். அவர்கள் 'நோன்பு நோற்றல், அல்லது தர்மம் செய்தல், அல்லது பலியிடல் பரிகாரமாகும்'' (திருக்குர்ஆன் 02:196) என்றார்கள்.

அய்யூப்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு என்பது மூன்று நாள்கள் நோன்பு நோற்பதையும், பலியிடல் என்பது ஓர் ஆட்டைக் குர்பானி கொடுப்பதையும், தர்மம் என்பது ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பதையும் குறிக்கும்.

பகுதி 2

செல்வரின் மீதும் ஏழையின் மீதும் எப்போது பரிகாரம் கடமையாகும்?

அல்லாஹ் கூறினான்:

அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (தக்க பரிகாரங்களுடன்) முறித்துக்கொள்வதை உங்களுக்கு அனுமதித்திருக்கிறான். அல்லாஹ்வோ உங்கள் எஜமானன். அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன். (திருக்குர்ஆன் 66:02)

6709 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து 'இறைத்தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்'' என்றார். நபி(ஸல்) அவர்கள் 'உமக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'நான் ரமளானில் (நோன்பு வைத்துக்கொண்டே) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்'' என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் 'ஓர் அடிமையை விடுதலை செய்ய உம்மால் முடியுமா?' என்று கேட்டார்கள். அவர் 'இல்லை' என்றார். 'தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க உம்மால் முடியுமா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் 'இல்லை'' என்றார். 'அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உம்மால் முடியுமா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அவர் 'இல்லை'' என்றார். நபி(ஸல்) அவர்கள் 'அமர்வீராக!'' என்றார்கள். அவரும் அமர்ந்தார்.

பின்னர் நபி(ஸல்) அதவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த 'அரக்' ஒன்று கொண்டுவரப்பட்டது.

-'அரக்' என்பது பெரிய கூடை ஆகும்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இதைப் பெற்று தர்மம் செய்வீராக!'' என்று கூறினார்கள். அம்மனிதர் '(இறைத்தூதர் அவர்களே!) என்னைவிட ஏழையாக இருப்போருக்காக (நான் தர்மம் செய்ய வேண்டும்)?' என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு 'இதை உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!'' என்றார்கள்.5

பகுதி 3

பரிகாரத்தை நிறைவேற்றுவதற்காக ஏழைக்கு உதவுதல்

6710 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து '(இறைத்தூதர் அவர்களே!) நான் அழிந்து விட்டேன்'' என்றார். நபி(ஸல்) அவர்கள் 'என்ன அது?' என்று கேட்டார்கள். 'நான் ரமளானில் (நோன்பு வைத்துக் கொண்டே) என் மனைவியைப் புணர்ந்துவிட்டேன்'' என்றார். நபி(ஸல்) அவர்கள் '(விடுதலை செய்வதற்கு) ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?' என்று கேட்டார்கள். அவர் 'இல்லை'' என்றார். 'தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் 'இல்லை'' என்றார். 'அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் 'இல்லை'' என்றார். பின்னர் அன்சாரிகளில் ஒருவர் 'அரக்' ஒன்றைக் கொண்டு வந்தார். -'அரக்' என்பது பேரீச்சம் பழம் உள்ள கூடை ஆகும். -அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இதைக் கொண்டு சென்று தர்மம் செய்வீராக!'' என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர் 'இறைத்தூதர் அவர்களே! எங்களை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (பாறைகள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் எங்களைவிடப் பரம ஏழை வீட்டார் யாருமில்லை!'' என்று கூறினார். பிறகு 'நீ போய் இதை உம் குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுப்பீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.6

பகுதி 4

(சத்திய முறிவுக்கான) பரிகாரத்திற்காகப் பத்து ஏழைகளுக்கு (உணவு) அளிக்கும்போது அவர்கள் நெருங்கிய உறவினர்களாகவோ தூரத்து உறவினர்களாகவோ இருக்கலாம்.

6711 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து '(இறைத்தூதர் அவர்களே!) நான் அழிந்துவிட்டேன்!'' என்றார். நபி(ஸல்) அவர்கள் 'உமக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'நான் ரமளானில் (நோன்பு வைத்துக் கொண்டே) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்'' என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் 'ஓர் அடிமையை விடுதலை செய்யும் வசதியைப் பெற்றுள்ளீரா?' என்று கேட்டார்கள். அவர் 'இல்லை'' என்றார். 'தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் 'இல்லை'' என்றார். 'அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் 'என்னால் இயலாது'' என்றார். பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் பேழீச்சம் பழம் உள்ள கூடை ஒன்று கொண்டு வரப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இதை எடுத்துச் சென்று தர்மம் செய்வீராக!'' என்று கூறினார்கள். அப்போது அம்மனிதர். 'என்னை விட ஏழையாக இருக்போருக்கா (நான் தர்மம் செய்யவேண்டும்)? மதீனாவின் (பாறைகள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் எங்களை விடப் பரம ஏழைகள் யாருமில்லை'' என்று கூறினார். பிறகு நபி(ஸல்) அவர்கள் 'இதை எடுத்துச் சென்று உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்துவிடுவீராக!'' என்றார்கள்.

பகுதி 5

மதீனாவின் 'ஸாஉ'ம் நபி(ஸல்) அவர்கள் (காலத்து) 'முத்'தும் அதன் வளமும் வாழையடி வாழையாக மதீனாவாசிகள் கடைப்பிடித்து வந்ததும்.7

6712 சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் 'ஸாஉ' என்பது, இன்றைக்கு (நடைமுறையிலிருக்கும்) உங்களின் 'முத்'தில் ஒரு 'முத்'தும் மூன்றில் ஒரு பாகமும் (1 1/3) கொண்டதாக இருந்தது. பின்னர் உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்களின் காலத்தில் இதன் அளவு அதிகமாக்கப்பட்டது.8

6713 நாஃபிஉ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் ரமளான் மாத (ஸதகத்துல் ஃபித்ர்) தர்மத்தை ஆரம்ப(க் கால) 'முத்'தான நபி(ஸல்) அவர்களின் 'முத்'தைக் கொண்டே வழங்கி வந்தார்கள். மேலும், சத்திய (முறிவுக்கான) பரிகாரத்தையும் நபி(ஸல்) அவர்களின் 'முத்'தைக் கொண்டே வழங்கிவந்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ குதைபா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

மாலிக் இப்னு அனஸ்(ரஹ்) அவர்கள், '(மதீனாவில் வழக்கிலுள்ள) எங்களின் 'முத்'தே (ஹிஷாம் உருவாக்கிய) உங்களின் 'முத்'தை விட (அளவில் சிறியதானாலும் வளத்தில்) பெரியதாகும். நபி(ஸல்) அவர்களின் (காலத்தில் இருந்த மதீனா) 'முத்'தில் தவிர வேறொன்றில் சிறப்பு இருப்பதாக நாங்கள் கருதவில்லை'' என்று கூறினார்கள். மேலும், அவர்கள் என்னிடம் 'ஓர் ஆட்சியாளர் உங்களிடம் வந்து நபி(ஸல) அவர்களின் 'முத்' தைவிட (அளவில்) சிறியதொரு 'முத்'தை நிர்ணயித்தால், நீங்கள் எந்த அளவையைக் கொண்டு (ரமளான் தர்மம், பரிகாரம் ஆகியவற்றை) வழங்குவீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நான் 'நபி(ஸல்) அவர்களின் 'முத்'தைக் கொண்டே வழங்குவோம்'' என்று கூறினேன். அவர்கள் 'பார்த்தீர்களா? (இறுதியில்) விஷயம் நபி(ஸல்) அவர்களின் 'முத்'துக்கே வந்துசேர்கிறது'' என்றார்கள்.9

6714 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இறைவா! (மதீனாவாசிகளான) இவர்களுக்கு இவர்களின் அளவைகளான 'ஸாஉ' மற்றும் 'முத்' ஆகியவற்றில் வளம் சேர்ப்பாயாக'' என்று பிரார்த்தித்தார்கள்.10

பகுதி 6

சிறந்த அடிமை யார்?

அல்லாஹ் கூறினான்:

அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்திட வேண்டும். (திருக்குர்ஆன் 05:89)11

6715. 'ஒரு முஸ்லிமான அடிமையை விடுதலை செய்கிறவருக்கு (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வொரு உறுப்புக்கும் பகரமாக ஓர் உறுப்பை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்வான். அவரின் மர்ம உறுப்புக்கு பதிலாக இவருடைய மர்ம உறுப்பையும் விடுதலை செய்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.12

பகுதி 7

'முதப்பர்' (பின் விடுதலை அளிக்கப்பட்ட அடிமை), 'உம்முல் வலத்' (எசமானின் குழந்தைக்குத் தாயான அடிமைப் பெண்), 'முகாதப்' (விடுதலைப் பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமை) ஆகியோரை பரிகாரத்திற்காக விடுதலை செய்வதும் விபசாரத்தில் பிறந்த (அடிமைக்) குழந்தையை விடுதலை செய்வதும்.

தாவூஸ் இப்னு கைசான்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: முதப்பர், உம்முல் வலத் ஆகியோரை (பரிகாரத்திற்காக) விடுதலை செய்வது செல்லும்.13

6716 ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

அன்சாரிகளில் ஒருவர் தம் அடிமை ஒருவனைத் தம் இறப்புக்குப் பின் விடுதலை பெற்றவனாவான் என்று அறிவித்திருந்தார். ஆனால், அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவுமிருக்கவில்லை. இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது 'என்னிடமிருந்து இவனை (விலைக்கு) வாங்குபவர் யார்?' என்று கேட்டார்கள். அப்போது அவனை நுஐம் இப்னு நஹ்ஹராம்(ரலி) அவர்கள் எண்ணூறு திர்ஹங்களுக்கு (வெள்ளிக் காசுகளுக்கு) வாங்கினார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் 'அவன் (எகிப்து நாட்டு) கிப்தீ அடிமையாவான். அவன் (விற்கப்பட்ட) முதல் ஆண்டிலேயே இறந்துவிட்டான்'' என்றும் கூறக் கேட்டேன்.14

பகுதி 8

தமக்கும் இன்னொருவருக்கும் சொந்தமான ஓர் அடிமையை (குற்றப் பரிகாரத்திற்காக) ஒருவர் விடுதலை செய்தால்...? 15

பகுதி 9

குற்றப் பரிகாரத்திற்காக ஓர் அடிமையை விடுதலை செய்தால், அந்த அடிமையின் வாரிசுரிமை யாருக்குக் கிடைக்கும்?

6717 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(அடிமையாயிருந்த) பாரீராவை நான் விலைக்கு வாங்க விரும்பினேன். ஆனால், அவருக்கு வாரிசாகும் உரிமை தங்களுக்கே இருக்க வேண்டுமென அவரின் எசமான்கள் முன் நிபந்தனை விதித்தார்கள். எனவே, இது தொடர்பாக நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் 'பாரீராவை விலைக்கு வாங்கி (விடுதலை செய்து) விடு! ஏனெனில், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை சொந்தம்'' என்றார்கள்.16

பகுதி 10

சத்தியத்தின்போது 'இன்ஷா அல்லாஹ்' கூறுதல்.17

6718 அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நான் (என்) அஷ்அரீ குலத்தாரில் ஒரு குழுவினருடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று (எங்களையும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை'' என்றார்கள். பிறகு அல்லாஹ் நாடிய நேரம் வரை நாங்கள் (அங்கேயே) இருந்தோம். பின்பு சில ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் மூன்று ஒட்டக மந்தைகளை எங்களுக்கு வழங்கும்படி ஆணையிட்டார்கள். (அவற்றில் ஏறி) நாங்கள் சென்றபோது, எங்களில் சிலர் சிலரிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (நபி(ஸல்) அவர்கள் தரமாட்டேனென்று சத்தியம் செய்த பிறகு இவற்றை நாம் வாங்கிச் சென்றால் இவற்றில்) நமக்கு வளம் (பரக்கத்) ஏற்படாதே! நபி(ஸல்) அவர்களிடம் நம்மைச் சுமந்து செல்ல ஒட்டகங்கள் ஏற்பாடு செய்யும்படி கேட்டோம். அவ்வாறு நம்மை ஏற்றியனுப்பத் தம்மால் இயலாது என நபியவர்கள் சத்தியம் செய்து கூறினார்கள். பிறகு, நாம் ஏறிச் செல்ல ஒட்டகங்கள் வழங்கினார்கள்'' என்று கூறினார்கள். எனவே, நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் (திரும்பவும்) சென்று, அவர்களுக்கு அதை நினைவுபடுத்தினோம். அப்போது அவர்கள், 'நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை; மாறாக, அல்லாஹ்தான் உங்களை (அதில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனிமேல் ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, பிறகு அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரம் செய்துவிடுவேன்'' என்றார்கள்.18

6719 (மேற்கண்ட ஹதீஸில்) ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

இனிமேல் நான் ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில், 'சத்திய முறிவுக்காகப் பரிகாரம் செய்துவிட்டு அந்தச் சிறந்ததையே செய்வேன்' அல்லது 'சிறந்ததையே செய்துவிட்டுப் பரிகாரம் செய்துவிடுவேன்''

இதை ஹம்மாத் இப்னு ஸைத்(ரஹ்) அறிவித்தார்.

6720 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:) (இறைத்தூதர்) சுலைமான் (அலை) அவர்கள் (ஒரு முறை), 'நான் இன்றிரவு (என்னுடைய) தொண்ணூறு துணைவியரிடமும் சென்று (தாம்பத்திய உறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது அவர்களின் தோழர் ஒருவர், அவர் ஒரு வானவர் என அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். 'இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்று சொல்லுங்கள்' எனக் கூறினார். சுலைமான்(அலை) அவர்கள் இன்ஷா அல்லாஹ்' என்று கூற மறந்துவிட்டார்கள்; தம் துணைவியரிடம் சென்று வந்தார்கள். ஆனால், அவர்களின் துணைவியரில் ஒரே ஒருவரைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அந்த ஒருவரும் ஒரு புஜமுடைய அரை மனிதரையே பெற்றெடுததார். (நபி) சுலைமான் (அலை) அவர்கள் 'இன்ஷா அல்லாஹ்' (அல்லாஹ் நாடினால்) என்று கூறியிருந்தால் சத்தியத்தை அடையாமல் இருந்திருக்கமாட்டார்கள். தம் தேவையைப் பூர்த்தி செய்திருப்பார்கள்.19

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பகுதி 11

சத்தியத்தை முறிப்பதற்கு முன்பும் முறித்த பின்பும் பரிகாரம் செய்வது20

6721 ஸஹ்தம் இப்னு முளர்ரிப் அல்ஜர்மீ(ரஹ்) அறிவித்தார்.

நாங்கள் அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்களிடம் இருந்தோம். ஜர்ம் குலத்தாரான எங்களுக்கும் இந்த (அஷ்அரீ) குலத்தாருக்கும் இடையே நட்புறவும் ஒத்துழைப்பும் இருந்தது. அப்போது (அபூ மூஸா அவர்களுக்கு) உணவு கொண்டு வரப்பட்டது. அந்த உணவில் கோழி இறைச்சி இருந்தது. அங்கு பனூ தைமுல்லாஹ் குலத்தைச் சேர்ந்த சிவப்பு மனிதர் ஒருவர் இருந்தார். அவர் ஓர் அடிமையைப் போன்று காணப்பட்டார். அவர் (உணவின் பக்கம்) நெருங்கவில்லை. எனவே, அவரிடம் அபூ மூஸா 'அருகில் வாருங்கள். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கோழி இறைச்சி உண்பதை பார்த்திருக்கிறேன்'' என்றார்கள். அதற்கு அவர் 'இந்தக் கோழி (இனம்) நான் அருவருப்பாகக் கருதும் ஒன்றைத் தின்னப் பார்த்தேன். உடனே ஒருபோதும் இதை உண்ணமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டேன்'' என்றார். அப்போது அபூ மூஸா(ரலி) அவர்கள் 'அருகில் வாருங்கள். அது குறித்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு(ப் பின்வருமாறு) கூறலானார்கள்.

நாங்கள் அஷ்அரீ குலத்தார் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் தர்ம ஒட்டகங்களில் சிலவற்றை பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் (எங்களைச்) சுமந்து செல்ல ஒட்டகங்கள் தருமாறு அவர்களிடம் கேட்டேன். அப்போது நபியவர்கள் கோபமாக இருந்தார்கள் என்று அறிவிப்பாளர் கூறினார்கள் எனவே கருதுகிறேன் என அய்யூப்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை'' என்றார்கள். எனவே, நாங்கள் சென்று விட்டோம். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. உடனே 'இந்த அஷ்அரீகள் எங்கே? இந்த அஷ்அரீகள் எங்கே?' என்று வினவப்பட்டது. இதையடுத்து நாங்கள் (நபியவர்களிடம்) சென்றோம். அப்போது வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து ஒட்டக மந்தைகளை எங்களுக்கு வழங்கும்படி உத்தரவிட்டார்கள். (அவற்றைப் பெற்றுக்கொண்டு) விரைவாக நாங்கள் புறப்பட்டோம்.

அப்போது நான் என் தோழர்களிடம் 'நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று நாம் ஏறிச்செல்ல வாகனம் கேட்டோம். அவ்வாறு நம்மை ஏற்றியனுப்ப இயலாது என அவர்கள் சத்தியம் செய்தார்கள். பிறகு நம்மை அழைத்து ஏற்றியனுப்பினார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் செய்த சத்தியத்தை மறந்துவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் செய்த சத்தியத்தை மறக்கும்படி நாம் செய்திருந்தால் ஒருபோதும் நாம் வெற்றியடையமாட்டோம். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் திரும்பச் சென்று, அவர்கள் செய்த சத்தியத்தை அவர்களுக்கு நாம் நினைவுபடுத்துவோம்'' என்று கூறினேன். எனவே, நாங்கள் திரும்பச் சென்று, இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஒட்டகம் கேட்டுத் தங்களிடம் வந்தோம். எங்களுக்குத் தரமுடியாது எனத் தாங்கள் சத்தியம் செய்தீர்கள். பிறகு எங்களை (அழைத்து) ஒட்டகங்களில் ஏற்றியனுப்பினீர்கள். எனவே, தாங்கள் செய்த சத்தியத்தை மறந்துவிட்டீர்களென நாங்கள் 'எண்ணுகிறோம்' அல்லது 'அறிகிறோம்' என்று கூறினோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'செல்லுங்கள். நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றியனுப்பவில்லை. மாறாக, அல்லாஹ்தான் உங்களை அதில் ஏற்றியனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் நாடினால், இனிமேல் நான் எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் அந்தச் சிறந்ததையே செய்வேன். சத்திய முறிவுக்காகப் பரிகாரம் செய்துவிடுவேன்'' என்று கூறினார்கள்.21

இதே ஹதீஸ் வேறு பல அறிவிப்பாளர் தொடர்களிலும் வந்துள்ளது.

6722 அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) 'ஆட்சிப் பொறுப்பை நீயாக (விரும்பிக்) கேட்காதே! ஏனெனில், நீ கேட்காமல் அது உனக்கு வழங்கப்பட்டால், அது தொடர்பாக உனக்கு (இறைவனது) உதவி அளிக்கப்படும். (நீ) கேட்டதால் அது உனக்கு வழங்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனது உதவி கிட்டாது.) நீ ஒரு சத்தியம் செய்து, அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் செய்துவிட்டு, உன்னுடைய சத்தியத்(தை முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்து விடு'' என்று கூறினார்கள்.22

இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
Previous Post Next Post