அத்தியாயம் 21 தொழுகையில் செய்யும் பிற செயல்கள்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 21
தொழுகையில் செய்யும் பிற செயல்கள்

அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

பாகம் 2

(தொழுகைக்குள் கட்டுப்படாத, தொழுகைக்கு உதவக்கூடிய செயல்கள்)

பகுதி 1

தொழுகையுடன் சம்பந்தப்பட்ட காரியங்களில் கைகளைப் பயன்படுத்தலாம்.

''ஒருவர் தொழும்போது தம் உடலில் எந்தப் பகுதியையும் பயன்படுத்தலாம்'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

அபூ இஸ்ஹாக் தொழும்போது தம் தொப்பியைக் கழற்றியும் மாட்டியும் இருக்கிறார்.

அலீ(ரலி) தொழும்போது தம் மேனியில் சொரிந்து கொள்ளும் நேரம் அல்லது தம் ஆடையைச் சரி செய்து கொள்ளும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தம் கையை இடதுகை மணிக்கட்டில் வைத்திருப்பார்கள்.

1198. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நான் என் சிறிய தாயார் மைமூனா(ரலி)யின் வீட்டில் ஓர் இரவு தங்கினேன். ஒரு தலையணையின் அகலப்பகுதியில் படுத்துக் கொண்டேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவி (மைமூனா)வும் அந்தத் தலையணையின் நீளப்பகுதியில் படுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை அல்லது அதற்குச் சற்று முன்புவரை அல்லது அதற்குச் சற்றுப் பின்பு வரை தூங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்து அமர்ந்தார்கள். தம் கையால் தம் முகத்திலிருந்து தூக்க(க் கலக்க)த்தை விலக்கிவிட்டு 'ஆல இம்ரான்' அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை ஓதினார்கள். பிறகு தொங்க விடப்பட்ட தோல் பாத்திரத்தை நோக்கிச் சென்று அதிலிருந்து அழகிய முறையில் உளுச் செய்து தொழலானார்கள். நானும் எழுந்து அவர்கள் செய்தது போன்றே செய்து, அவர்களின் (இடது) விலாப் புறத்தில் நின்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் வலது கரத்தை என் தலைமீது வைத்து என்னுடைய வலது காதைப் பிடித்து (வலது புறத்திற்கு) திருப்பினார்கள். இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள் மேலும் இரண்டு ரக்அத்கள் இன்னும் இரண்டு ரக்அத்கள், பிறகு இரண்டு ரக்அத்கள், மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் வித்ரு தொழுதுவிட்டுப் படுத்தார்கள். முஅத்தின் வந்ததும் எழுந்து சிறிய அளவில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு (பள்ளிக்குப்) புறப்பட்டு ஸுபுஹ் தொழுகை நடத்தினார்கள்.

பகுதி 2

தொழுகையில் பேசக் கூடாது

1199. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

(ஆரம்ப காலத்தில்) நபி(ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு நாங்கள் ஸலாம் கூறுவோம். அவர்கள் எங்களுக்கு பதில் ஸலாம் கூறுவார்கள். நாங்கள் (அபீ ஸீனியாவின் மன்னர்) நஜ்ஜாஷியிடமிருந்து திரும்பியபோது அவர்களுக்கு ஸலாம் கூறினோம். எங்களுக்கு ஸலாம் கூறவில்லை. (தொழுது முடித்ததும்) 'நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன'' என்று கூறினார்கள்.

1200. ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) காலத்தில் நாங்கள் தொழுகையில் பேசிக் கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். இந்நிலையில் 'தொழுகைகளில் பேணுதலாக இருங்கள்'' என்ற (திருக்குர்ஆன் 02:238) வசனம் அருளப்பட்டது. அதன்பின்னர் பேசக் கூடாது என்று கட்டளையிட்டோம்.

பகுதி 3

தொழுகையில் (இமாமுக்கு) ஏற்படும் தவறுகளை உணர்த்த) 'ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்' என்று ஆண்கள் கூறலாம்.

1201. ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.

பனூ அம்ர் இப்னு அவ்ஃப் கூட்டத்தினரிடையே சமரசம் செய்து வைப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். தொழுகை நேரம் வந்ததும் பிலால்(ரலி) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து 'நபி(ஸல்) அவர்கள் (தங்கள் பணியின் நிமித்தமாக நேரத்தோடு வந்து சேர்வதிலிருந்து) தடுக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துகிறீர்களா?' என்று கேட்டார். 'நீர் விரும்பினால் செய்கிறேன்'' என அபூ பக்ர்(ரலி) கூறினார். பிலால்(ரலி) தொழுகைக்கு இகாமத் கூறியதும் அபூ பக்ர்(ரலி) முன்னே சென்று தொழுகை நடத்த ஆரம்பித்தார். சற்று நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் வரிசைகளைப் பிளந்து கொண்டு நடந்து வந்து முதல் வரிசையில் நின்றார்கள். உடனே மக்கள் கைதட்டலானார்கள். அபூ பக்ர்(ரலி) தொழுகையில் திரும்பிப் பார்க்காதவராக இருந்தார். மக்கள் கைதட்டலை அதிகரித்தபோது அபூ பக்ர்(ரலி) திரும்பிப் பார்த்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வரிசையில் நிற்பதைக் கண்டார். 'அங்கேயே நிற்பீராக'' என்று நபி(ஸல்) அவர்கள் சைகை மூலம் தெரிவித்தார்கள். அபூ பக்ர்(ரலி) தம் கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து (திரும்பாமல்) பின்புறமாகவே நடந்து பின்னால் நின்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் முன்னே சென்று தொழுகை நடத்தினார்கள்.

பகுதி 4

தொழும்போது அறியாத நிலையில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அல்லது அவரை நோக்கி ஸலாம் கூறுதல்

1202. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும்போது ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒருவரின் மீது மற்றவர் ஸலாம் கூறி வந்தோம். இதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் 'சொல், செயல், பொருள் வடிவிலான எல்லாக் காணிக்கைகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தி ஏற்படட்டுமாக! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். முஹம்மத்(ஸல்), அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்'' என்று கூறுங்கள்! இவ்வாறு நீங்கள் கூறினால் வானம், பூமியிலுள்ள எல்லா நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறியவர்களாவீர்கள்' எனக் குறிப்பிட்டார்கள்.

பகுதி 5

பெண்கள் (தொழுகையில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட) கை தட்டுதல்

1203. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தஸ்பீஹ் கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும்.''

என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்.

1204. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்..

தஸ்பீஹ் கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும்.

என ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார்.

பகுதி 6

தொழுபவர் ஏதேனும் பிரச்சினைகளுக்காகப் பின்புறமாகவோ முன்புறமாகவோ நகருதல்

இதுபற்றிய நபிவழியை ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.

1205. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

முஸ்லிம்கள் திங்கட்கிழமை பஜ்ரு தொழுகை தொழுது கொண்டிருந்தனர். அபூ பக்ர்(ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். (மரணத் தருவாயிலிருந்த) நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி)யின் அறையிலுள்ள திரையை விலக்கி அணிவகுத்து நிற்கும் மக்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே புன்கைத்தவாறு திடீரென அவர்களிடம் வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்த வரப்போகிறார்கள் என்று எண்ணி அபூ பக்ர்(ரலி) திரும்பாமல் பின்புறமாக விலகலானார். நபி(ஸல்) அவர்களைக் கண்ட மகிழ்ச்சியின் காரணமாக மக்களுக்குத் தொழுகையின் கவனம் மாறியது. நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் தொழுது முடியுங்கள்' என்று தம் கையால் சைகை செய்துவிட்டு அறைக்குள் நுழைந்து திரையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினம் மரணித்துவிட்டார்கள்.

பகுதி 7

தொழுது கொண்டிருக்கும் மகனைத் தாய் அழைத்தால்..?

1206. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்..

(முன் காலத்தில்) ஒரு பெண் வழிபாட்டு அறையிலிருந்த தம் மகனை 'ஜுரைஜ்' என்று அழைத்தார்! 'இறைவா! நான் தொழுது கொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரே!'' என்று ஜுரைஜ் (மனத்திற்குள்) கூறினார். மீண்டும் 'ஜுரைஜ்' என்று அப்பெண் அழைத்தபோது. 'இறைவா! நான் தொழுது கொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரே!'' என்று ஜுரைஜ் (மனத்திற்குள்) கூறினார். மீண்டும் அப்பெண் 'ஜுரைஜ்' என்று அழைத்தபோது 'இறைவா! நான் தொழுது கொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரே'' என்று (மனத்திற்குள்) கூறினார். அப்போது அப்பெண் 'இறைவா! விபச்சாரிகளின் முகத்தில் விழிக்காமல் ஜுரைஜ் மரணிக்கக் கூடாது'' என்று பிரார்த்தித்தார். ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தி ஜுரைஜுடைய ஆசிரமத்திற்கு வந்து செல்பவளாக இருந்தாள். அவள் ஒரு குழந்தையைப் பெற்றாள். இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது என்று அவளிடம் கேட்கப்பட்டபோது 'ஜுரைஜுக்குதான் அவர் தம் ஆசிரமத்திலிருந்து இறங்கி வந்து இவ்வாறு செய்துவிட்டார்' என்று அவள் கூறினாள். 'தன்னுடைய குழந்தையை எனக்குப் பிறந்தது எனக் கூறும் அப்பெண் எங்கே?' என்று ஜுரைஜ் கேட்டுவிட்டு அவள் பெற்ற குழந்தையை நோக்கி 'சிறுவனே! உன் தந்தை யார்?' எனக் கேட்டதற்கு அக்குழந்தை 'ஆடுமேய்க்கும் இன்னார்' என விடையளித்தது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 8

தொழும்போது சிறு கற்களை அப்புறப்படுத்துதல்

1207. முஐகீப்(ரலி) அறிவித்தார்.

ஸஜ்தாச் செய்யும்போது மண்ணைச் சமப்படுத்திய மனிதரை நோக்கி 'நீர் இவ்வாறு செய்வதென்றால் ஒரு முறை மட்டும் செய்வீராக.' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பகுதி 9

ஸஜ்தாவின்போது ஆடையைத் தரையில் விரித்தல்

1208. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

கடுமையான வெப்பத்தில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதிருக்கிறோம். எங்களில் ஒருவருக்குத் தம் முகத்தைத் தரையில் வைக்க இயலாவிட்டால் தம் ஆடையை விரித்து அதில் ஸஜ்தாச் செய்வார்.

பகுதி 10

தொழும்போது செய்ய அனுமதிக்கப்பட்ட புறச் செயல்கள்.

1209. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தொழும்போது நபி(ஸல்) அவர்களை நோக்கி என் கால்களை நான் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது என்னை விரலால் குத்துவார்கள். உடனே கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் எழுந்ததும் கால்களை நீட்டிக் கொள்வேன்.

1210. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதார்கள். (தொழுது முடித்ததும்) ஷைத்தான் எனக்குக் காட்சி தந்து என் தொழுகையை முறித்துவிட முயன்றான். அவனை அல்லாஹ் எனக்கு அடிபணியச் செய்தான். அவனை நான் பிடித்துக் கொண்டேன். அவனை ஒரு தூணில் கட்டி வைத்து காலையில் நீங்களெல்லாம் பார்க்க வேண்டுமென விரும்பினேன். எனக்குப் பின் யாருக்கும் வழங்காத ஆட்சியை எனக்கு வழங்கு (திருக்குர்ஆன் 38:35) என்று சுலைமான் நபி(ஸல்) அவர்கள் கூறியதை நினைவுக்குக் கொண்டு வந்தேன். (அதனால் அவனைவிட்டு விட்டேன்) இழிந்தநிலையில் அவனை அல்லாஹ் ஓடச் செய்துவிட்டான் என்று கூறினார்கள்.

பகுதி 11

ஒருவர் தொழும்போது அவரின் வாகனம் ஓடிவிட்டால்

ஒருவரின் ஆடையைத் திருடன் எடுத்துச் சென்றால் தொழுகையைவிட்டுவிட்டு திருடனை விரட்டிச் செல்லலாம் என்று கதாதா கூறுகிறார்.

1211. அஸ்ரக் இப்னு கைஸ் அறிவித்தார்.

நாங்கள் அஹ்வாஸ் எனுமிடத்தில் ஹருரிய்யாக் கூட்டத்தினருடன் போரிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ஆற்றோரத்தில் ஒருவர் தம் வாகனத்தின் கடிவாளத்தை ஒரு கையில் பிடித்து தொழுது கொண்டிருந்தார். வாகனம் அவரை இழுக்க அவரும் அதைத் தொடர்ந்தார். அவர் அபூ பர்ஸா(ரலி) என்ற நபித்தோழராவார். அப்போது காரிஜிய்யாக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் 'இறைவா! இந்தக் கிழவரைத் தண்டிப்பாயாக!' எனக் கூறினார். அந்தப் பெரியவர் தொழுது முடித்ததும் 'நீங்கள் கூறியதை கேட்டுக் கொண்டுதானிருந்தேன். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஆறு அல்லது ஏழெட்டுப் போர்களில் பங்கெடுத்திருக்கிறேன். நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தை இலகுவாக்கியிருப்பதையும் பார்த்திருக்கிறேன். என் வாகனத்தை அதன் மேயும் இடத்துக்கு ஓடவிட்டுவிட்டு கவலையுடன் நான் செல்வதைவிட என் வாகனத்துடன் திரும்பிச் செல்வதே எனக்கு விருப்பமானது எனக் கூறினார்.

1212. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஒரு முறை சூரியக் கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்று நீண்ட அத்தியாயம் ஒன்றை ஓதித் தொழுதார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி மற்றோர் அத்தியாயத்தை ஓதினார்கள். பிறகு மற்றொரு ருகூவு செய்து முடித்தார்கள். ஸஜ்தாவும் செய்தார்கள். இவ்வாறே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். பின்னர் 'சூரிய, சந்திர கிரகணங்கள் இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை. எனவே இவற்றை நீங்கள் கண்டால் அவை உங்களைவிட்டு விலக்கப்படும் வரை தொழுங்கள்! எனக்கு வாக்களிக்கப்பட்ட அனைத்தையும் இந்த இடத்தில் கண்டேன். நான் முன்னே செல்வது போல் நீங்கள் என்னைக் கண்டபோது சொர்க்கத்தின் ஒரு திராட்சைப் பழக்கொத்தைப் பிடிக்க முயன்றேன். நான் பின்னே செல்வது போல் என்னை நீங்கள் கண்டபோது நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியை அழித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். நரகத்தில் அம்ர் இப்னு லுஹை என்பவனையும் கண்டேன். அவன்தான் ஸாயிபத் எனும் (கால்நடைகளை சிலைகளுக்கு நேர்ச்சை செய்யும்) வழிபாட்டை உருவாக்கியவன்'' என்று கூறினார்கள்.

பகுதி 12

தொழும்போது எச்சில் உமிழ்வதும் வாயால் ஊதுவதும் கூடும்.

''நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையில் ஸஜ்தாவில் ஊதியுள்ளனர்'' என்று அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1213. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் கிப்லாத் திசையில் (சுவரில்) எச்சிலைக் கண்டார்கள். பள்ளியில் இருந்தவர்களைக் கடிந்ததுடன் 'அல்லாஹ் உங்களுக்கு முன்னே இருக்கிறான். எனவே, யாரேனும் தொழுது கொண்டிருந்தால் கண்டிப்பாக எச்சில் உமிழ வேண்டாம்' எனக் கூறிவிட்டு இறங்கி வந்து தம் கையால் அதைச் சுரண்டினார்கள்.

''உங்களில் யாரேனும் உமிழ்ந்தால் தம் இடப்புறத்தில் உமிழட்டும்'' என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.

1214. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒருவர் தொழும்போது தம் இறைவனுடன் உரையாடுகிறார். எனவே, தமக்கு முன்னாலோ, வலப்புறமாகவோ எச்சில் துப்பவேண்டாம். எனினும் இடதுபுறமாக தம் இடது பாதத்தின் அடியில் துப்பட்டும்.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 13

தொழுகையில் ஏற்படும் தவறுகளை ஆண்கள் (சட்டம்) தெரியாத நிலையில் கைதட்டி உணர்த்தினால் அவர்களின் தொழுகை பாழாகாது.

இதுபற்றி நபி(ஸல்) வழியாக ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.

பகுதி 14

தொழுது கொண்டிருப்பவரிடம் மற்றவர் முன்னே செல்! காத்திரு என்று கூறும்போது தொழுபவர் அவ்வாறு செய்தால் அதில் தவறில்லை.

1215. ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார்.

மக்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழும்போது சிறிதாக இருந்த தம் வேட்டிகளைக் கழுத்தில் கட்டிக்கொள்வார்கள். இதன் காரணமாகவே 'ஆண்கள் (ஸஜ்தாவிலிருந்து எழுந்து) உட்காரும்வரை நீங்கள் (ஸஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தாதீர்கள் என்று பெண்களிடம் கூறப்பட்டது.

பகுதி 15

தொழும்போது ஸலாமுக்குப் பதில் கூறக்கூடாது.

1216. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு நான் ஸலாம் கூறுவேன். அவர்கள் பதில் ஸலாம் கூறுவார்கள். நாங்கள் (அபீ ஸீனியாவிலிருந்து) திரும்பி வந்தபோது அவர்களுக்கு ஸலாம் கூறினேன். எனக்கு பதிலளிக்கவில்லை. தொழுது முடித்ததும் நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன என்று கூறினார்கள்.

1217. ஜாபிர்பின் அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் என்னை தம் அலுவல் விஷயமாக (வெளியூர்) அனுப்பினார்கள். நான் அந்த வேலையை முடித்துத் திரும்பி வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினேன். அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை. என் மனதில் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த சில எண்ணங்கள் தோன்றின. நான் தாமதமாக வந்ததால் என்மேல் நபி(ஸல்) கோபமாக இருக்கக் கூடும் என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன். பிறகு மறுபடியும் ஸலாம் கூறினேன். அவர்கள் பதில் கூறவில்லை. முன்பைவிடக் கடுமையாக சந்தேகங்கள் ஏற்பட்டன. பின்னர் மீண்டும் ஸலாம் கூறினேன். எனக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு நான் தொழுது கொண்டிருந்ததால்தான் உமக்குப் பதில் கூறவில்லை என்று கூறினார்கள். (நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது) கிப்லா அல்லாத திசையை நோக்கி தம் வாகனத்தின் மீதமர்ந்து தொழுது கொண்டிருந்தனர்.

பகுதி 16

தொழும்போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் கைகளை உயர்த்துதல்

1218. ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார்.

குபாவில் இருந்த பனூ அம்ர் இப்னு அவ்பு கூட்டத்தினரிடையே தகராறு இருப்பதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. அவர்களிடையே சமரசம் செய்வதற்காக நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் புறப்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் வரத் தாமதமானது. தொழுகை நேரம் நெருங்கியது. அப்போது பிலால்(ரலி), அபூ பக்ர்(ரலி)யிடம் வந்து 'அபூ பக்ரே!'' நபி(ஸல்) வருவதற்குத் தாமதமாகிறது தொழுகை நேரம் நெருங்கிவிட்டது. எனவே, மக்களுக்கு நீங்கள் தொழுகை நடத்துகிறீர்களா? என்று கேட்டார். நீர் விரும்பினால் நடத்துகிறேன் என்று அபூ பக்ர்(ரலி) கூறினார். பிலால்(ரலி) தொழுகைக்கு இகாமத் சொன்னதும் அபூ பக்ர்(ரலி) முன்னே சென்றார். மக்களுக்கு (தொழுகை நடத்த) தக்பீர் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வரிசைகளைப் பிளந்து கொண்டு வந்து (முதல்) வரிசையில் நின்றார்கள். உடனே, மக்கள் கைதட்டலானார்கள். அபூ பக்ர்(ரலி) தொழுகையில் திரும்பிப் பார்க்கமாட்டார். ஆயினும் மக்கள் அதிகமாக கை தட்டியதால் திரும்பிப் பார்த்தார். (வரிசையில்) நபி(ஸல்) நின்றிருந்தார்கள். தொழுகையைத் தொடருமாறு அவருக்கு நபி(ஸல்)அவர்கள் சைகை செய்தார்கள். அபூ பக்ர்(ரலி), தமக்கையை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து அப்படியே (திரும்பாமல்) பின்னால் நகர்ந்து வரிசையில் நின்றார். நபி(ஸல்) அவர்கள் முன்னே சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி 'மக்களே! தொழுகையில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் ஏன் கைகளைத் தட்டுகிறீர்கள்? கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும். எனவே, தொழும்போது யாருக்கேனும் பிரச்சினை ஏற்பட்டால் 'ஸுப்ஹானல்லாஹ்' எனக் கூறட்டும்'' என்றார்கள். பிறகு அபூ பக்ரை நோக்கி 'அபூ பக்ரே! நான் உமக்கு சைகை செய்த பிறகும் மக்களுக்குத் தொழுகை நடத்த மறுத்ததேன்?' எனக் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) முன்னிலையில் அபூ குஹாஃபாவின் மகனுக்குத் தொழுகை நடத்தும் தகுதியில்லை'' எனக் கூறினார்.

பகுதி 17

தொழும்போது இடுப்பில் கையை வைத்தல்

1219. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

தொழும்போது இடுப்பில் கை வைப்பது தடுக்கப்பட்டுள்ளது.

மற்றோர் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1220. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் இடுப்பில் கை வைத்து தொழுவது தடுக்கப்பட்டுள்ளது.

பகுதி 18

தொழும்போது எதைப்பற்றியாவது சிந்தித்தல்

நான் தொழுது கொண்டிருக்கும் போதே படைகளை (போருக்கு) தயார்படுத்து(வதற்கான வழிமுறைகளைச் சிந்திக்)கிறேன் என்று உமர்(ரலி) கூறியுள்ளனர்.

1221. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் அஸர் தொழுதேன். அவர்கள் ஸலாம் கொடுத்ததும் வேகமாக எழுந்து தம் மனைவியின் இல்லத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பினார்கள். தம் விரைவைக் கண்டு மக்கள் ஆச்சரியப்படுவதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் 'நான் தொழுது கொண்டிருக்கும்போது எங்களிடம் அது ஒரு மாலைப்பொழுதோ, ஓர் இரவுப் பொழுதோ இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே, அதைப் பங்கிட்டு வழங்குமாறு கட்டளையிட்டேன்'' என விளக்கினார்கள்.

1222. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''.

தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டதும் பாங்கைக் கேட்கக் கூடாது என்பதற்காக ஷைத்தான் காற்றுவிட்டவனாக ஓடுகிறான். பாங்கு முடிந்ததும் முன்னே வருகிறான். இகாமத் சொல்லப்பட்டதும் திரும்பி ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் முன்னே வருகிறான். தொழுது கொண்டிருக்கும் மனிதரிடம் 'நீ இதுவரை நினைத்திராதவற்றையெல்லாம் நினைத்துப்பார்'' என்று கூறுவான். முடிவில் அம்மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராகி விடுவார்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

''இவ்வாறு மறதி ஏற்பட்டால் அமர்ந்த நிலையில் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யவேண்டும்'' என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார் என அபூ ஸலமா கூறுகிறார்.

1223. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைரா அதிகம் (ஹதீஸ்களை) அறிவிப்பதாக மக்கள் (குறை) கூறுகின்றனர். நான் ஒரு மனிதரைச் சந்தித்து நேற்றிரவு இஷாவில் நபி(ஸல்) அவர்கள் எந்த அத்தியாயத்தை ஓதினார்கள்? என்று கேட்டேன். அவர் தெரியாது என்றார். நீர் அத்தொழுகையில் கலந்து கொள்ள வில்லையா? என்று கேட்டேன். கலந்து கொண்டேன் என்றார். அவரிடம் நான் 'அதை அறிவேன். இன்னின்ன அத்தியாயங்களையே நபி(ஸல்) அவர்கள் ஓதினார்கள்'' என்றேன்.
Previous Post Next Post