இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்


நூலாக்கம் : மௌலவி. இஸ்மாயில் மதனீ

முன்னுரை:

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வைப்போற்றி அவன் திருப்பெயரால்

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வாழ்க்கையைப் பின்பற்றி வாழ்ந்த, வாழ்கின்ற அனைவர் மீதும் உண்டாவதாக.

இஸ்லாத்தை உண்மைப்படுத்துவதும் பொய்ப்பிப்பதும் ஸஹாபாக்கள் விடயத்தில் நாம் கொண்டிருக்கின்ற நிலைப்பாட்டை மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளது. ஏனெனில் அவர்களே அடிப்படை. அடிப்படையை தகர்த்தபின் கட்டிடம் நிலைபெறாது. இதனால்தான் ஷீஆக்களும் இஸ்லாத்திற்கு எதிரான சக்திகளும் இஸ்லாத்தை குழிதோண்டிப் புதைக்கும் நோக்கத்துடன் ஸஹாபாக்களைக் குறைகூறி இஸ்லாத்தின் ஆணிவேரை அறுத்துவிட முயற்சிக்கின்றனர். இது எம்மில் அதிகமானவர்களுக்குத் தெரிவதில்லை. படித்தவர்கள், பாமரர்கள் என்ற வித்தியாசமின்றி மிகப்பெரும் விடயங்களைக்கூட சாதாரணமாக ஏற்றுக்கொள்கின்றோம். தங்கள் பிள்ளைகளுக்கு அந்த கொள்கைகளை கற்றுக்கொடுப்பதற்கு முயற்சிக்கின்றோம்.

ஸஹாபாக்களை எவராவது குறைகண்டால் அவன் இஸ்லாத்தையே அழித்துவிடுவதற்கு முயற்சிக்கின்றான் என்று புரிந்துகொள்ளுங்கள். ஏனெனில் நாம் குர்ஆனை உண்மையென்பதும் ஹதீஸை உண்மையென்பதும் ஸஹாபாக்கள் நம்பகமானவர்கள் என்பதனால்தான். இவர்கள் எமது சாட்சிகளை இல்லாமலாக்குவதன் மூலம் எமது அடிப்படைகளை இல்லாமலாக்க முயல்கின்றனர் என்று இமாம்கள் குறிப்பிடுகின்றனர்.

ஸஹாபாக்களைப்பற்றிய பல மோசமான கருத்துக்கள், அதன் விளைவுகளையும் அவைகளை உருவாக்கியவர்களின் உள்நோக்கத்தையும் தெரிந்துகொள்ளாமல், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் என்று பரப்பப்படுகின்றன, கற்பிக்கப்படுகின்றன. ஆனாலும் இவைகளின் உண்மை நிலைகளை தெளிவுபடுத்தும் ஒரு நூல் தமிழ் உலகத்தில் இல்லாமல் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். நான் என்று ஷீஆக்கள் தொடர்பாக வாசிக்க ஆரம்பித்தேனோ அன்றிலிருந்தே ஸஹாபாக்கள் பற்றிய அவர்களது பிழையான கருத்துக்களுக்கு விளக்கமளிக்கும், ஒரு முழுமையான ஒரு ஆய்வை இந்த சமுதாயத்திற்கு முன்வைக்க வேண்டும் என்ற ஆவல் என் உள்மனதில் பதிந்து விட்டது. இந்த நூலின் மூலம் அந்த நீண்ட நாள் கனவு ஓரளவு நிறைவேறியிருக்கிறது என்று நினைக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த நூலை வாசிக்கும் சிலர், இவ்வளவு பாதகமான கருத்துக்களைக்கொண்டிருக்கின்ற ஷீஆக்களைப் பற்றியும் ஸஹாபாக்கள் விடயத்தில் அவர்களின் தவறான கொள்கைகளைப் பற்றியும் விளக்குகின்ற நூல்கள் ஏன் தமிழ் உலகத்தில் அதிகமாக வெளிவரவில்லை என்று கேட்க முடியும் அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

01) எப்போதும் ஷீஆக்கள் கிறிஸ்தவர்களைப்போன்று இரத்தத்தை மையமாகக் கொண்டு பிரசராம் செய்கின்ற ஒரு கூட்டம். மக்களின் உணர்வுகளைக் கிளறி அதை தங்கள் கொள்கைக்கு உரமாகப் பயன்படுத்துகின்றனர். கிறிஸ்தவர்கள் தங்கள் பிரச்சாரங்களில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதைச் சொல்லி மக்களின் கண்ணீரைப் பெற்றுக் கொள்வதைப்போல, ஷீஆக்களும் தங்கள் பிரச்சார மேடைகளை, ஹூஸைன் (ரழி). அவர்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டதையும் அவர் கொலை செய்யப்பட்ட விதத்தையும் சொல்லி மக்களை கதறி அழவைப்பதற்கே பயன்படுத்துகின்றனர் இனால், அவர்கள் தங்கள் கொள்கையைப்பற்றி சொல்லாமலிருக்கும் போது அவர்களைப்பற்றி நாம் எழுதுவது அவர்களைப்பற்றி அறிமுகப்படுத்துவதாக மாறி, எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்று எமது அறிஞர்கள் கருதியிருக்கலாம்.

02) குற்றம் செய்தவன் மனது குறுகுறுக்கும் என்பதைப்போல தங்களின் மோசமான கொள்கைகள் மக்களுக்கு மத்தியில் பிரபல்யமானாலோ அல்லது அந்தப்புத்தகங்கள் எல்லோரின் கைகளுக்கும் சென்றுவிட்டாலோ நாம் நாறிப்போவோம் என்பதனால் ஷீஆக்கள் தங்கள் நூல்களை பகிரங்கப் படுத்துவதில்லை. தங்களின் நூல்களை மற்றவர்களை விட்டும் மறைப்பதனால் தங்கள் சுயரூபத்தை ஒரு பரம ரகசியமாக வைத்திருக்கலாம் என்று நினைக்கின்றனர் போலும். என்றாலும் அல்லாஹ் மிகப்பெரியவன் என்பதனால் அவர்களின் நூல்கள் பிற்பட்ட காலங்களிலே வெளியில் கொண்டுவரப்பட்டன. இதனால் அவர்களின் அடிப்படை நூல்களைப் பெற்றுக்கொள்வதில் எமது அறிஞர்கள் சவால்களை எதிர்நோக்கியிருக்கலாம்.

03) ஷீஆக்களின் நூல்கள் பெரும்பாலும் பாரசீக மொழியிலேயே இருக்கின்றன. பிந்திய நாட்களில் அதுவும் அவர்களின் கொள்கைகள் மக்களுக்கு மத்தியில் பரவி குழப்பங்களை ஏற்படுத்த ஆரம்பித்தபோது, அவர்களின் உண்மை நிலையை தெளிவுபடுத்தும் நோக்கில் அவர்களின் நூல்கள் அரபுமொழிக்கு மாற்றப்பட்டு வருகின்றன. பாரசீக மொழியினை நன்றாகத்தெரிந்தவர்கள் குறைவாக இருந்ததும் இத் தலைப்புக்களில் அதிகமாக நூல்கள் வெளிவராதிருந்ததற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

04) அறிஞர்கள் தங்கள் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு மத்தியில் எந்தப்பிரச்சினை அதிகமானதாகவும் முதன்மைப்படுத்தப்பட வேண்டியதாகவும் இருக்கிறதோ, அல்லது முக்கியமானது என்று அவர்கள் கருதுகிறார்களோ அதிலேயே பெரும்பாலும் தங்கள் முழுக்கவனத்தையும் குவித்தனர். எனவே, அவர்களின் கவனக்குறைவும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். எது எவ்வாறிருப்பினும் நச்சுக்கருத்துக்களிலிருந்து எமது சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற தலைப்புக்களில் இனிவரும் காலங்களில் அதிகமாக எழுதுவதும் ஷீஆக்கள் பற்றி பல கோணங்களில் ஆய்வுகளை மேற்கொள்வதும் காலத்தின் தேவை என நினைக்கிறேன்.

இந்த நூலில் ஷீஆக்கள் பற்றிய அறிமுகக்குறிப்புக்களை தவிர்த்துள்ளேன். ஸஹாபாக்கள் பற்றிய அவர்களின் கருத்துக்களுக்கும், குற்றச்சாட்டுக்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். அத்தோடு புத்தகத்தின் தலைப்பு முழுமை பெறுவதற்காக அதனோடு தொடர்புடைய வேறு சில தலைப்புக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஷீஆக்கள் பற்றிய சுருக்கமான குறிப்புக்களைப்பெற விரும்பும் சகோதரர்கள் எனது முதல் நூலான இமாம்களின் பார்வையில் ஷீஆக்கள் என்ற நூலை வாசிக்குமாறு வேண்டுகிறேன்.

இந்த நூல் சிறப்பாக அமைவதற்குத் துணைபுரிந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறேன். இந்தப் புத்தகத்திற்கான தகவல்களை திரட்டுவதற்கு உதவி செய்த எனது வெளிநாட்டு நண்பர்கள், ஆசிரியர்கள், இந்தப்புத்தகத்தை திருத்தி அழகுற அமைவதற்கு துணைபுரிந்தவர்கள், ஆலோசனை வழங்கியவர்கள், மதிப்புரை வழங்கியவர், இந்த நூலை மேலாய்வு செய்து, வெளியிடுகின்ற ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அபூபக்கர் சித்தீக் (மதனி), அதன் செயலாளர் ஏ.எல். கலீலுர் ரஹ்மான் (எம்.ஏ) மற்றும் அதன் ஊழியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் பணிகளை இறைவன் ஏற்றுக்கொண்டு அருள் புரியவேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அன்புக்குரிய வாசகர்களே! இது இந்தத் தலைப்பில் எனது முதல் முயற்சி உங்களின் ஆதரவும் வரவேற்பும் இருந்தால் மேலும் பல தலைப்புக்களில் எழுதுவதற்கு திட்டமிட்டுள்ளேன்.

எனவே உங்களின் பிரார்த்தனைகளை வேண்டுவதோடு இந்த நூலில் நான் தவறுகள் விட்டிருப்பின் அவைகளைத் திருத்தவும் சுட்டிக்காட்டவும் பின்நிற்காதீர்கள் என்று வேண்டிக்கொள்கிறேன். அல்லாஹ் எம்மனைவருக்கும் நேரான பாதையைக் காட்டுவானாக.
-அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்-

M.B.M இஸ்மாயில் (மதனி)
பாடசாலை வீதி, செம்மண்னோடை,
வாழைச்சேனை. இலங்கை.


உள்ளடக்கம்
  
வரலாற்றை வாசிக்க முன்…

வரலாற்றை எவ்வாறு வாசிப்பது?

நாம் யாரிடமிருந்து வரலாறுகளைப் படிப்பது?

வரலாற்றை வாசிக்கும் போது கவனிக்க வேண்டியவை…

ஸஹாபி என்றால் யார்?

ஸஹாபியை தீர்மானிப்பதற்கான வழிகள்.

ஸஹாபாக்கள் பற்றி அல்-குர்ஆன்.

ஹதீஸ்களில் ஸஹாபாக்கள்.

ஸஹாபாக்களும், தியாகமும்.

ஸஹாபாக்கள் விடயத்தில் அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத்தினர்.

ஸஹாபாக்களைக் குறை கண்டால் அல்லது காபிர்கள் என்று சொன்னால்!

ஸஹாபாக்கள் விடயத்தில் வழிகெட்டுப் போனவர்கள்.

அஹ்லுல் பைத் என்போர் யார்?

நபியின் அஹ்லுல் பைத்தினர் யார்?

விதண்டாவாதமும் விளக்கமும்.

அஹ்லுல்பைத்களுக்கும் ஏனைய ஸஹாபாக்களுக்கும் மத்தியில் உள்ள உறவுகள்.



வரலாற்றை வாசிக்கும் முன்:

இஸ்லாமிய வரலாற்றில் அதன் பொற்காலமாக வர்ணிக்கப்படுவது அப்பாஸியாக்களின் ஆட்சிக்காலமான இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளாகும் இதில் தான் இஸ்லாமியர்கள் இன்றளவும் போற்றுகின்ற பல கலைகள் நூலுருப்படுத்தப்பட்டன, வளர்ச்சியும் கண்டன. இஸ்லாமிய வரலாறும் இந்தக்காலத்திலேயே நூலுருப்படுத்தப்படுகிறது. இக்காலத்தில் வரலாற்றை எழுதியவர்கள் மூன்று குழுக்களாகக் காணப்பட்டனர்.

01) தன்னுடைய எழுத்தின் மூலம் சாப்பிடுவதையும் கௌரவம் தேடுவதையும் இலட்சியமாகக் கொண்டவர்கள்:
இவர்கள் எல்லாக் காலத்திலும் இருப்பதைப்போல அந்தக்காலத்திலும் இருந்தார்கள். அப்பாஸியாக்களின் ஆட்சிக் காலத்தில் இவர்கள் இருந்ததால் அப்பாஸிய்யாக்களிடம் புகழையும் பணத்தையும் எதிர்பார்த்து அப்பாஸிய்யாக்களுக்கு முன்னால் ஆட்சிசெய்த உமைய்யாக்களை ஏசியும் அவர்களை மக்கள் தவறாக புரிந்து கொள்ளும் அடிப்படையில் அவர்களின் வரலாறுகளை சித்தரித்தும், அப்பாஸியாக்களை புகழ்ந்தும், அவர்களின் சேவைகளை பாராட்டியும் வரலாற்றை திரிபுபடுத்தி எழுதினர்.

02) ஹவாரிஜ், ஷீஆ (ரவாபிழா) போன்ற குழுக்கள்:
ஹவாரிஜ்களைப் பொறுத்தவரைக்கும் அலி (ரழி) . போன்ற பெரும் ஸஹாபாக்களை காபிர்கள் என்றனர். அவரின் வரலாற்றில் அவரை காபிர் என்று சொல்வதற்கு எவையெல்லாம் தங்களுக்கு துணை செய்யும் என்று அவர்கள் நினைத்தார்களோ அதை மாத்திரம் எடுத்து தங்கள் நூல்களில் பதிவு செய்தனர், அல்லது பிரச்சாரம் செய்தனர். அலி (ரழி) . அவர்கள் இறை சட்டங்களுக்கு பதிலாக மனித சட்டங்களை ஏற்று இறைவனை நிராகரித்தார் என்று எழுதியும் பிரச்சாரம் செய்தும் வந்தனர். அலி (ரழி) . அவர்களைப் பற்றி வாசிப்பவரும் கேட்பவரும் அவரை காபிர் (இறைவன் எம்மை பாதுகாப்பானாக) என்று புரிந்து கொள்ளுமளவுக்கு அவரின் வரலாற்றை திரிபுபடுத்தி எழுதினர்.

ஷீஆக்களைப் பொறுத்தவரைக்கும் ஹவாரிஜ்களுக்கு முற்றிலும் எதிரானவர்கள். அலி (ரழி) . அவர்களை நபியின் அந்தஸ்திலும் சில போது இறைவனின் அந்தஸ்திலும் அதைவிடவும் உயர்ந்த இடத்திலும் வைத்து நோக்குபவர்கள். ஏனைய ஸஹாபாக்களை கொச்சைப்படுத்துவதையும் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேற்றுவதையும் தங்கள் இலட்சியமாகக்கொண்டவர்கள். இவர்கள் தங்கள் கொள்கையை உண்மைப்படுத்துகின்ற அடிப்படையில், ஸஹாபாக்களுக்கு மத்தியில் நடந்த சில நிகழ்வுகளுக்கு தவறான விளக்கம் கொடுப்பது, அல்லது தங்கள் கொள்கையை உறுதிப்படுத்துவதற்காக வரலாறுகளை புனைதல், வரலாற்றில் எந்த முகாந்திரமும் இல்லாத கற்பனைக் கதைகளை உருவாக்குதல் போன்ற வழிகள் மூலம் வரலாற்றைப் பதிவு செய்தனர்.

அதாவது, இங்கு எது உண்மையான வரலாறு, எது தவறானது என்பதற்கு பதிலாக பார்ப்பவர் ஸஹாபாக்களை தவறானவர்கள் என்றும், அலி (ரழி) . அவர்கள் போன்ற சில ஸஹாபாக்களே உண்மையான முஸ்லிம்கள் என்றும் முடிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பது, இல்லாதது எல்லாம் சேர்த்து எழுதப்பட்டது.

03) இமாம் தபரி, இப்னு கதீர், இப்னுல் அதீர், இப்னு அஸாகிர். தஹபி இப்னு ஹிஸாம் (ரஹிமஹூமுல்லாஹ்) போன்ற நடுநிலைவாத எழுத்தாளர்கள்.
இவர்கள், வரலாற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள தவறான செயற்பாடுகளையும், அதனால் மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் தப்பான முடிவுகளையும் பார்க்கிறார்கள். இதனால் மக்களுக்கு சரியான வரலாறுகளை தெளிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் வரலாற்றை அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவு செய்தனர். நாம் அறிவிப்பாளர் வரிசையுடன் வரலாறுகளை பதிவு செய்வதொன்றே எது சரியானது என்பதை தெளிவுபடுத்துவதற்கு போதுமானது என்று அவர்கள் கருதினர். இதற்கும் மேலாக சிலபோது அறிவிப்பாளர்களில் உள்ள சில விமர்சனங்களையும் முரண்பாடுகளையும் அவ்வப்போது சுட்டிக்காட்டவும் செய்தனர். எனவே, இவர்களின் நூல்களில் பலமான அறிவிப்பாளர் தொடரைக்கொண்ட செய்திகளும், பலவீனமான அறிவிப்பாளர் தொடரைக்கொண்ட செய்திகளும் காணப்பட்டன. பிற்பட்ட காலங்களில் வரலாற்றை படித்தவர்கள் அறிவிப்பாளர் வரிசைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக செய்திகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து இந்த இமாம்களின் நூல்களில் இந்த செய்தி பதிவாகியுள்ளது என்று நம்பி ஏமாந்து போனதோடு மற்றவர்களை வேண்டுமென்றோ, தெரியாமலோ ஏமாற்றியும் விட்டனர். (அல்லாஹ் எம்மைப்பாதுகாப்பானாக)


வரலாற்றை எவ்வாறு வாசிப்பது:

வரலாறு என்பது மனிதர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு துறை. நாம் இப்படிச்செய்ய வேண்டும் இவ்வாறுதான் இருக்கவேண்டும் எனும் ஏவல்களை விட, இவ்வாறு இருந்தார்கள் இப்படி நடந்தது என்று சொல்வதை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். விடயம் என்ன என்பதை சுருக்கமாகக் கேட்டு இரசிப்பதே மக்களின் இயல்பாக மாறிவிட்டது. இதனால் பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் மக்களின் இரசனையைக் கருத்தில் கொண்டு திடுக்கிடச்செய்யும் வரலாறுகளையும், ஆச்சரியமான அபூர்வமான சம்பவங்களையும் சேர்த்துக்கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இது உண்மையானதா? அல்லது தவறானதா? என்பதை அவர்கள் சிந்திப்பதே இல்லை. மக்கள் இரசிப்பதையே இலக்காகக்கொண்டு செயற்படுகின்றனர்.

சிலபோது, இவர்கள் இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் இதை அறிவிப்புச் செய்துள்ளார்கள் என்று சொல்வார்கள். இப்னு கதீரைப்பார்த்தால் அவரே அந்த அறிவிப்பு பலவீனமானது என்று சொல்லி இருப்பார். சில போது இவர்கள் தங்கள் இடத்திற்கு ஏற்றாற்போல் புதிய வரலாறுகளை பழைய பெயர்களில் புனைகின்றனர். இது, குறித்த பேச்சாளர் அல்லது நூலாசிரியரின் இலட்சியத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றது. நல்ல உணர்வுகளையும் சிறந்த முடிவுகளையும் அவர் விரும்பினால் அதற்கு ஏற்றாற்போலும், தவறான முடிவுகளையும் தீய உணர்வுகளையும் உருவாக்கவோ அல்லது கட்டிக்காக்கவோ விரும்பினால் அதற்கு உகந்ததாகவும் தான் கொண்டுவரும் துணுக்கை வடிவமைக்கிறார்.

எமது தமிழ் உலக வாசகர்களைப் பொறுத்தவரைக்கும் அல்லது பொதுவாக பெரும்பான்மையான வாசகர்களைப் பொறுத்தவரைக்கும் எது முதலில் அவர்களின் கரங்களில் கிடைக்கிறதோ அதை வேதவாக்கு என்று நினைத்துவிடுகின்றனர். அதை சரியானதா? தவறானதா? என்று ஆய்வு செய்வதற்கு பதிலாக அதையே அடிப்படையாகக்கொண்டு மற்றவைகளை உரசிப்பார்க்கின்றனர். இதனால் சரியான வரலாறுகளை நிராகரித்து, இட்டுக்கட்டப்பட்ட வரலாறுகளை சரியானதாக மற்றவர்களுக்கு பிரச்சாரம் செய்கின்றனர். சிலர் சரியானது எது என்பதை தெரிந்துகொள்வதற்கான அடிப்படைக் கலைகள் பற்றிய அறிவு இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் ஏனைய துறைகளில் முன்னேறி பல்கலைக்கழக ஆசிரியர்களாகவும், உயர்தர மாணவர்களுக்கு பாடம் போதிக்கின்றவர்களாகவும் உள்ளனர். இவர்களுக்கு இந்த வரலாறுகள் அவசியம் தேவைப்படுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த கலையைத் தெரிந்துகொண்டு சரியான வரலாறுகளை தெரிந்துகொள்வதற்கு முயற்சித்தல் அல்லது அது பற்றிய அறிவுள்ளவர்களிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளல் என்பதற்குப் பதிலாக தங்கள் சிந்தனையை உபயோகிக்கின்றனர். அல்லது தான் வாசித்தவற்றில் எது அதிகமாக கூறப்படுகிறதோ அதை உண்மையானது என்று முடிவு செய்துவிடுகின்றனர். உண்மையில் நடந்து முடிந்த ஒரு நிகழ்வில் உண்மையானது எது என்பதை தெரிந்து கொள்வதற்கு இது உகந்த வழியல்ல என்பதை புத்தியுள்ளவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.

எனவே நபியவர்களின் ஹதீஸ்களில் சரியானவற்றை தெரிந்துகொள்வதற்கு நாம் எத்தகைய வழிகளைப் பின்பற்றுகிறோமோ அத்தகைய வழிகளை சரியான வரலாறுகளைத் தெரிந்துகொள்வதற்கும் நாம் பின்பற்றவேண்டும். இதுவே இன்றைய காலத்தின் தேவையாகவுள்ளது. நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் ஏதாவது ஒன்றை நாம் கேள்விப்பட்டால் அது பலமானதா? அல்லது பலவீனமானதா? என்று முதலிலே ஆய்வு செய்கின்றோம் அதன் பின்பே அதற்கேற்றாற் போல் முடிவுகளை மேற்கொள்கின்றோம். இஸ்லாமிய அறிஞர்கள் ஒரு ஹதீஸைப் பலமானது என்று தீர்மானிப்பதற்கு குறித்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையையும் அதன் உள்ளீட்டை (அவர்கள் சொல்கின்ற செய்தியை)யும் அவதானிக்கின்றனர்.

அறிவிப்பாளர் வரிசையை அவதானமாகவும் நிதானமாகவும் ஆய்வு செய்கின்றனர். அந்த அறிவிப்பாளர் வரிசையில் விமர்சிக்கப்பட்டவர்கள் அல்லது பலவீனமானவர்கள் இடம்பெற்றுள்ளனரா? என்பதை தெரிந்து கொள்ள கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அறிவிப்பாளர் வரிசை சரியானது என்பதை தெரிந்துகொண்டதன் பின்பு அவர்கள் சொல்லும் செய்தியை அவதானிக்கின்றனர். அதில் அறிவிப்பாளர்களால் உட்புகுத்தப்பட்ட விடயங்கள் உள்ளனவா? அல்லது அந்த செய்தியை பலவீனப்படுத்தும் வேறு ஏதாவது அந்த செய்தியில் உள்ளதா? என்பதை அவதானிக்கின்றனர். இதன் போது பல நிபந்தனைகளையும் கடும் முயற்சிகளையும் செய்கின்றனர்.

இதன் போது குறித்த செய்தியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு விதமான ஆய்வுகளிலும் குறைகள் எதுவும் காணப்படவில்லையானால் அந்த செய்தி பலமானது என்று தீர்ப்பு வழங்குகின்றனர். அதில் வடுக்கள் இருக்குமாயின் அதன் தராதரத்திற்கு ஏற்ப அதை பலவீனமானது என்றும் மிகவும் பலவீனமானது என்றும் இட்டுக்கட்டப்பட்டது என்றும் தீர்ப்பு வழங்குகின்றனர். வரலாற்றைப்பொறுத்தவரைக்கும் இந்த விதிகளைப் பயன்படுத்துவது மிகவும் கடினமானது என்றாலும் நாம் அதை பயன்படுத்தாமல் இருக்கமுடியாது. இந்த விதிகளை நாம் பயன்படுத்தினால், அதிகமான வரலாறுகளை இழந்துவிடுவோம் என்று சிலர் விமர்சிக்கின்றனர். இது தவறான முடிவாகும் இவர்கள் கற்பனை செய்வதைப்போன்று அதிகமான வரலாறுகளை நாம் இழந்துவிடமாட்டோம். உண்மையில் இட்டுக்கட்டப்பட்ட வரலாறுகள்தான் அதிகமானதாக இருந்தால் அதை நிராகரிப்பதற்கு நாம் பின்னிற்கவும் கூடாது. இந்த சகோதரர்களுக்கு நாம் ஒன்று சொல்வோம் நீங்கள் எல்லா விடயங்களையும் இத்தகைய பகுப்பாய்விற்கு உட்படுத்தாவிட்டாலும் குறைந்தது கருத்துமுரண்பாடுள்ள விடயங்கள் அல்லது ஒருவரை குறைகாண்பதைப்போன்று அமைந்துள்ள விடயங்கள், இவைகளையாவது அத்தகைய ஆய்விற்கு உட்படுத்துங்கள். இதற்கும் அப்பால் தத்துவம் பேசும் சகோதரர்களுக்கு நாம் சொல்வோம், நம்மிடம் ஆயிரம் செல்லாக்காசுகள் இருப்பதைவிட ஒரு ரூபாயாவது நல்ல நாணயம் இருப்பதுதானே நல்லது. நமக்கு வரலாறு குறைந்துபோகும் என்ற கவலை வேண்டாம். நம் முன்னோர்கள் மீது சேறு பூசாமல் வாழ்வோம், நன்மையை நாடி நாம் செய்யும் பிரச்சாரத்தால் இட்டுக்கட்டிய குற்றத்திற்கு ஆளாகி குளிக்கப்போய் சேறு பூச மாட்டோம். மறுமையை இலக்காகக்கொண்டு செயற்படும் மனிதர்களுக்கு  இதுவே உகந்த வழி என்று நாம் கருதுகிறோம்.

உண்மையில் நமக்குத்தேவையான வரலாறுகள் எல்லாம் அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இமாம் தபரி (ரஹ்) தன்னுடைய தாரீஹ் என்ற நூலிலே பதிவுசெய்துள்ளார்கள் அல்லது ஸஹீஹூல் புஹாரி, முஸ்னத் அஹ்மத், ஜாமிஉத்திர்மிதி போன்ற ஏராளமான ஹதீஸ் நூல்களில் பதிவாகியுள்ளன. அல்லது இப்னு ஜரீர், இப்னு கதீர் போன்ற தப்ஸீர் கலை அறிஞர்கள் சில வரலாற்றுத் தகவல்களை அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவு செய்துள்ளனர். சிலபோது இந்த நிகழ்வுகளைக்குறித்து தனியான நூல்கள் அறிவிப்பாளர் வரிசையுடன் எழுதப்பட்டுள்ளன.

எனவே ஒருபோதும் நமக்கு இந்த வரலாறுகள் அறிவிப்பாளர் வரிசை இல்லாமல் இருக்காது. அவ்வாறு அறிவிப்பாளர் வரிசைதான் இல்லாமல் இருந்தாலும் நம்மிடம் ஒரு அடிப்படை உள்ளது. அதுதான் அல்-குர்ஆனில் அல்லாஹ், ஸஹாபாக்களை சிறந்தவர்கள் என்கிறான். அவர்கள் நீதமானவர்கள், ரஸூல்மார்கள், நபிமார்களுக்கு அடுத்த அந்தஸ்தில் இருப்பவர்கள் அவர்கள்தான். மேலும் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்டான் என்று சொல்கிறது. எனவே அதன் அடிப்படையில் நின்று எங்களிடம் உள்ள செய்திகளை நாம் தரம்பிரித்துக்கொள்ள முடியும்.

எனவே நாம் வரலாறுகளைப் படிக்கின்றபோது நம்பகமானது எது? நம்பகமற்றது எது? என்பதை பகுப்பாய்வு செய்து படிக்கவேண்டும்.


நாம் யாரிடமிருந்து வரலாறுகளைப் படிப்பது?

நாம் யாரிடமிருந்து வரலாறுகளைப் படிப்பது அல்லது எத்தகைய நூல்களிலிருந்து வரலாறுகளை வாசிப்பது என்பது மிகவும் முக்கியமான கேள்வியாகும்.

இன்று சமுதாயத்தில் யார் சிறந்த எழுத்தாற்றல் மிக்கவராகவும், சிறந்த கற்பனை வளம் மிக்கவராகவும், எடுக்கும் தொனிப்பொருளை தொய்வில்லாமல் இறுதிவரை கொண்டு செல்லக்கூடியவராகவும், வாசிக்கும் போது மனதுக்கும் நாவுக்கும் இதமான வார்த்தைகளையும் கற்பனைகளையும் தனது நூல்களில் கலந்து வைத்துள்ளாரோ, அவரின் புத்தகங்களே அதிகம் விற்பனையாகின்றன அல்லது வாசிக்கப்படுகின்றன. சிலர் சொல்வதைப்போல இன்றைய கற்பனை உலகில் இதுவே தேவை என்றும் நூலாசிரியர்கள் கருதுகிறார்கள். உண்மை எது என்று தெரிந்துகொள்வதற்கு பதிலாக மனதிற்கு இதமானது எதுவோ அவற்றை தேர்ந்தெடுக்கிறார்கள். இது மிகவும் கவலையான விடயமாகும்.

இஸ்லாமிய வரலாற்றைப் பொறுத்த வரைக்கும் அரபு மொழியே அதில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றது. அதாவது அது அரபு மொழியிலேயே தொகுக்கப்பட்டுள்ளது. மூலமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு எழுதப்பட்டிருக்கும் அதிகமான நூல்கள் கீழைத்தேய ஆய்வாளர்களின் திருவிளையாடல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. அல்லது மோசமான சிந்தனைகளுக்கு அடிமையானவர்களின் கை அதிலே மேலோங்கியிருக்கிறது. அரபு அல்லாத மொழியை பேசக்கூடியவர்களுக்கு இது ஒரு சவாலாகவே உள்ளது.

அது மாத்திரமல்லாமல் அரபு மொழியை படிக்கின்றவர்கள் இந்த துறைகளில் தங்கள் கவனங்களை செலுத்தி சமுதாயத்திற்கு உண்மையான வரலாறுகளை பெற்றுக்கொடுப்பதில் தவறிழைத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். தாங்கள் எதற்காக அரபு மொழி படிக்கிறோம் அல்லது படிக்கவேண்டும் என்ற இலட்சியத்தை மறந்து அவர்கள் செயற்படுகின்றனர்.

இஸ்லாமிய வரலாற்றை வாசிப்பதைப் பொறுத்தவரை வாசிப்பவரின் தரத்திற்கு ஏற்ப அவர் வாசிக்கவேண்டிய நூல்கள் வேறுபடுகின்றது.

(01) வாசிப்பவர், அறிவிப்பாளர் வரிசையை ஆய்வு செய்து சரியானது எது? தவறானது எது? என்பதைதெரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவராக இருந்தால்! இத்தகையவர்கள் இமாம் தபரீ (ரஹ்) அவர்கள் எழுதிய தாரீஹ் என்ற நூலை வாசிக்கலாம். இஸ்லாமிய வரலாற்றுக்கு இதுவே அடிப்படை நூலாக கருதப்படுகின்றது. சரியான வரலாற்றைச் சொல்பவர்களும், தப்பான கொள்கையை வளர்க்க வரலாற்றை ஆதாரமாகக் காட்டுபவர்களும் இந்த நூலையே ஆதாரமாகக் கொள்கின்றனர். எனவே இரு சாராரிடமும் இந்த நூல் இஸ்லாமிய வரலாற்றில் அடிப்படை நூலாக கருதப்படுகின்றது.

இமாம் தபரீ (ரஹ்) அவர்களின் இந்த நூலிலே வரலாறுகள் அனைத்தும் அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் சரியான தகவல்களும் இருக்கின்றன. தவறான தகவல்களும் இருக்கின்றன. இவைகளை வாசிப்பவர் ஆய்வு செய்து அறிந்து கொள்ள வேண்டும். ஆரம்பகால இமாம்கள் ஒரு செய்தியின் நம்பகத்தன்மையை சுட்டிக்காட்ட அதன் அறிவிப்பாளர் வரிசையை நாம் குறிப்பிட்டாலே போதுமானது என்று கருதினார்கள். இதனால் இமாம் தபரீ (ரஹ்) அவர்களும் அவ்வாறு செய்தார்கள். எனவே, வாசிப்பவர் அவதானமாக இருக்க வேண்டும். எதுவும் வீணாகிவிடக்கூடாது என்பதற்காகவும், இந்த விடயத்தில் தவறான ஓர் அறிவிப்பும் இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காகவும் அத்தனை செய்திகளையும் அறிவிப்பாளர் வரிசையுடன் இமாமவர்கள் பதிவுசெய்துள்ளார்கள்.

இமாம் தபரீ (ரஹ்) தன்னுடைய முகவுரையின் 05ம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
எமது இந்த நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்! நான் என்ன நிபந்தனையிட்டேனோ அதற்கேற்ப வந்த அறிவிப்புக்களையெல்லாம் நான் இதிலே பதிவுசெய்துள்ளேன். இதிலே நான் குறிப்பிட்டிருப்பவையெல்லாம் என்னிடம் வந்த செய்திகளிலும் சம்பவங்களிலும் நான் எதை குறித்த செய்தியின் அறிவிப்பாளர்கள் வழியாக அறிந்தேனோ அவைகளைத்தான். என்னுடைய இந்த நூலில் பலவீனமான உண்மையல்லாத, வாசிப்பவர் வெறுக்கின்ற, கேட்பவர் மோசமாக கருதுகின்ற முந்தியவர்களைப்பற்றிய சில செய்திகள் நாம் குறிப்பிட்டவற்றில் இருக்கும். இவைகளெல்லாம் நாமாக குறிப்பிடவில்லை என்பதை அவர் (வாசிப்பவரும், கேட்பவரும்) தெரிந்துகொள்ளவேண்டும். மாறாக, எங்களுக்கு யார் அதை அறிவித்தார்களோ அவர்கள் சொன்னது, எங்களுக்கு எவ்வாறு வந்ததோ அவ்வாறே நாங்கள் பதிவு செய்ததைத்தவிர வேறு எதுவும் எமது பணியன்று.

அதாவது இமாம் தபரீ (ரஹ்) அவர்கள் தன்னுடைய முன்னுரையில், நீ தான் எது சரி, எது பிழை என்பதை தீர்மானிக்க வேண்டும். நான் எனக்குக்கிடைத்தவற்றை அறிவிப்பாளர் வரிசையுடன் எழுதி வைத்திருக்கிறேன் என்று சரியானதையும் பிழையானதையும் தீர்மானிக்கும் பொறுப்பை எமக்குத் தந்திருக்கிறார்கள். எனவே நாம் தவறான வரலாறுகளைச் சொல்லி, இமாம் தபரீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்று சொல்வது தப்பான அணுகுமுறையாகும் என்பதை புரிந்து செயற்பட வேண்டும்.

இமாம் தபரீ (ரஹ்) அவர்களின் நூல் இஸ்லாமிய வரலாற்றை அறிந்துகொள்வதற்கு தவறான வரலாறுகளை குறிப்பிடுவோர், சரியான வரலாறுகளை குறிப்பிடுவோர் போன்ற இரு சாராராலும் முதன்மைப்படுத்தப்படுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

1. இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற இத்தகைய நிகழ்வுகளை நூலுருப்படுத்தியவர்களில் இந்த நிகழ்வுகளுக்கு காலத்தால் மிகவும் நெருக்கமானவர் இவர்தான்.

2. இமாம் தபரீ (ரஹ்) அவர்கள் தான் குறிப்பிடும் எந்த அறிவிப்பையும் அறிவிப்பாளர் வரிசையுடன் சொல்வார். இதை வைத்தே சரியானதையும் தவறானதையும் இனங்காண முடியும் என்பதால் அறிஞர்களுக்கு மத்தியில் இது முக்கியத்துவம் பெற்றது.

3. பிற்பட்ட காலத்தில் வந்த வரலாற்று ஆய்வாளர்கள் எல்லோரும் இந்த நூலையே தங்கள் ஆய்வின் அடிப்படை நூலாக கருதி செயற்பட்டுள்ளனர். எனவே சரியான அடிப்படையில் இஸ்லாமிய வரலாற்றை நாங்கள் ஆய்வு செய்ய விரும்பினால், அதற்கான அடிப்படைத் தகைமைகளைப் பெற்றிருந்தால் இமாம் தபரீ (ரஹ்) அவர்களின் நூலை அணுக வேண்டும். அணுகும்போது அவதானமாகவும் விமர்சனக்கண்ணோட்டத்தோடும் அணுகுதல் அவசியமானது.

(02) சரியானதையும் பிழையானதையும் அறிந்து கொள்வதற்கான பகுப்பாய்வுக் கலை பற்றிய அறிவு இல்லாதவர்கள்.

இவர்கள் பின்வரும் நூல்களை அணுகினால் ஸஹாபாக்கள், அவர்களுக்கு மத்தியில் நடந்த பிரச்சினைகள் போன்றவற்றில் சரியான வரலாறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்களின் அல்பிதாயா வந்நிஹாயாஹ
البداية والنھاية لابن كثير رحمھ الله

இமாம் தஹபி (ரஹ்) அவர்களின் தாரீஹூல் இஸ்லாம்
تاريخ الإسلام للإمام الذھبي رحمھ الله

இமாம் அபூபக்ர் (ரழி) இப்னுல் அரபியின் அல் அவாஸிம் மினல் கவாஸிம்
العواصم من القواصم للإمام أبو بكر بن العربي رحمھ الله

 

வரலாற்றை வாசிக்கும் போது கவனிக்க வேண்டியவை: 

எந்த ஒரு வரலாற்று நூலையும் வாசிக்கும் போதும் அவர் சொல்லும் கருத்துக்கள் முற்றிலும் உண்மையானது என்பதை உள்வாங்கிக்கொண்டு அவரின் கருத்தை முழுமையாக நம்பி வாசிக்கக்கூடாது. அவர் சொல்லுகின்ற கருத்துக்களில் நம் கவனத்தைச் செலுத்துவதை விடுத்து, அவர் அறிவிப்புச்செய்கின்ற விடயங்களிலேயே நம் கவனத்தைச் செலுத்தவேண்டும். அதன் உண்மை நிலையை அறிந்துகொள்வதற்கே முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். வாசிக்கும் போது எப்போதும் நடுநிலைவாதியாகவும் சரியானதை ஏற்றுக்கொள்ளும் மனோ நிலையோடும் இருக்க வேண்டும். குறிப்பாக நாம் ஸஹாபாக்களைப்பற்றி வாசிக்கும்போது இரண்டு விடயங்களை கவனத்திலிருத்திக்கொள்ள வேண்டும்.

01) நபிமார்களுக்குப்பிறகு ஸஹாபாக்களே இந்த சமுதாயத்தில் சிறந்தவர்கள் என்று நம்புதல்.
ஏனெனில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவர்களை புகழ்ந்துள்ளனர். இந்த சமுதாயத்தில் சிறந்தவர்கள் அவர்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்களை இறைவன் பொருந்திக்கொண்டதாக சொல்கிறான். அவர்களில் அதிகமானவர்கள் சுவர்க்கத்தைக்கொண்டு நன்மாராயம் கூறப்பட்டிருக்கின்றனர். (இது தொடர்பான ஆதாரங்களை ஸஹாபாக்கள் பற்றி அல்குர்ஆன், ஹதீஸில் ஸஹாபாக்கள் போன்ற தலைப்புக்களில் அறிந்துகொள்ளலாம்)

02) ஸஹாபாக்கள் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் அல்லர்.
ஸஹாபாக்கள் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் அல்லர். அவர்களுடைய வாழ்விலும் தவறுகள் நடந்திருக்கின்றன. எனவே, ஸஹாபாக்கள் பற்றிய ஒரு மோசமான சம்பவத்தை நாம் வாசித்தால் உடனடியாக அதை மறுத்துவிடக்கூடாது அதேநேரத்தில் அதை ஏற்றுக்கொள்ளவும் கூடாது. அதன் நம்பகத்தன்மை தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். செய்தி நம்பகமானதாக இருந்தால் அது அவர்களிடம் ஏற்பட்ட தவறுகளாகும். ஏனைய மனிதர்களுக்கு ஏற்படுவதைப்போன்று அவர்களுக்கும் தவறுகள் ஏற்படும். இத்தகைய தவறுகளில் ஒன்றுதான் இது என்று நாம் முடிவு செய்ய வேண்டும். செய்தி பலமானதாக இல்லையென்றால் நாம் நிராகரித்துவிடல் வேண்டும்.


ஸஹாபி என்றால் யார்? 

மொழி வழக்கில் தோழன் என்ற கருத்தைக் கொண்டுள்ள இப்பதம், ஒருவரை ஒரு விநாடியேனும் சந்தித்தவருக்கும் சொல்லப்படும் என்பதில் மொழித்துறை சார்ந்த அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு கிடையாது. மொழி வழக்கில் இப்படி இருந்தாலும், பரிபாசையில் யாருடைய சந்திப்புக்கள் அதிகரித்து குறிப்பிட்ட ஒரு காலம் தொடர்ச்சியாக நிலைத்திருக்கிறதோ அவர்களையே ஸஹாபி என்றழைக்கப்படும்.

இஸ்லாமிய வழக்கில் யாரெல்லாம் இஸ்லாத்தை ஈமான் கொண்ட நிலையில் நபி (ஸல்) அவர்களை சந்தித்து முஸ்லிமாக மரணித்தாரோ அவருக்கே ஸஹாபி என்று சொல்லப்படும். இந்த வரைவிலக்கணத்தையே இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாகவும் பொருத்தமான வரைவிலக்கணமாகவும் சொல்லிக்காட்டுகிறார்கள். (பார்க்க: நுஹ்பதுல் பிக்ர் ப:55)

இந்த வரைவிலக்கணத்திலே அதிகமான நிபந்தனைகள் உள்ளன என்பதனால் இதன், ஒவ்வொரு வார்த்தையையும் விரிவாக அவதானிப்போம்.

01) யாரெல்லாம்:
யாரெல்லாம் என்ற சொல் பகுத்தறிவுள்ள மனிதர்கள், ஆண், பெண் இருபாலாரையும் குறிக்கும். இதிலே பகுத்தறிவில்லாத எதுவும் அடங்கமாட்டாது. உதாரணமாக நபியவர்கள் பிரயாணம் செய்த கழுதை, நபியவர்கள் பிரசங்கம் நிகழ்த்திய மரக்குற்றி, நபியவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

02) சந்தித்தல்:
ஒரு விநாடியேனும் சந்திப்பு நடந்திருத்தல் போதுமானது. பல தடவைகள் சந்தித்திருக்க வேண்டும் பல தடவைகள் பேசியிருக்க வேண்டும் இருவரும் ஒன்றாக பல தடவைகள் நடந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையெல்லாம் கிடையாது. இதற்கும் மேலாக ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும் என்ற நிபந்தனையும் கிடையாது. இதனாலேயே நாம் கண் தெரியாத இப்னு உம்மி மக்தூம் போன்றவர்களையெல்லாம் ஸஹாபாக்கள் என்கிறோம்.

இந்த நிபந்தனையின் படி யாரெல்லாம் நபியவர்களை சந்திக்க வில்லையோ அவர்களெல்லாம் ஸஹாபி என்ற அடைமொழிகொண்டு அழைக்கப்படமாட்டார்கள். அவர்கள் நபியவர்களின் காலத்தில் வாழ்ந்து நபியவர்களை ஈமான்கொண்டிருந்தாலும் சரியே. இதனால் தான் மன்னர் நஜ்ஜாஸி நபியவர்களின் காலத்தில் வாழ்ந்தும், அவர் நபியவர்களை ஈமான் கொண்டிருந்தும் நாம் அவரை ஸஹாபி என்றழைப்பதில்லை.

03) நபியவர்களை:
நபி (ஸல்) அவர்களை சந்தித்திருக்க வேண்டும் அதாவது முஹம்மத் பின் அப்துல்லாஹ் என்ற மனிதருக்கு அவரது 40வது வயதில் நபித்துவம் கிடைக்கிறது இதற்குப்பிறகு அவரை சந்தித்தவர்களே ஸஹாபி என்றழைக்கப்படுவார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு முன் அவரது இளமைக்காலத்தில் அவரை சந்தித்தவர்கள் எல்லாம் ஸஹாபி என்றழைக்கப்படுவதில்லை. உதாரணமாக நபியவர்கள் தனது 12வது வயதில் தன் சாச்சாவுடன் வியாபாரத்திற்கு செல்லும் போது நபியவர்களைச் சந்தித்து எதிர்காலத்தில் இவர் நபியாக அனுப்பப்படுவார் என்று கூறிய மதகுருவைக் குறிப்பிடலாம்.

இமாம் இராகி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: நபித்துவம் கிடைத்த பின்பு நபியவர்களை சந்திப்பவர்களுக்குத்தான் ஸஹாபி என்றழைக்கப்படும் என்பதற்கு சிறந்த ஆதாரம் அறிஞர்கள் நபியவர்களின் குழந்தை இப்றாஹீமை ஸஹாபி என்றழைக்கின்றனர். காரணம்: அவர் நபித்துவம் கிடைத்தபின் பிறந்தவர். நபியவர்கள் அவரை முத்தமிட்டார்கள். பின்புதான் அவர் மரணிக்கிறார். ஆனால் நபியவர்களின் இன்னுமொரு புதல்வர் காஸிமை அறிஞர்கள் ஸஹாபி என்று சொல்வதில்லை, காரணம்: அவர் நபியவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு முன்னால் பிறந்து மரணித்தார். (தத்ரீபுர்ராவி 2:209)

04) நபியவர்களை ஈமான்கொண்ட நிலையில்:
முதல் சொன்ன மூன்று நிபந்தனைகளுடன் நபியவர்களை ஈமான் கொண்ட நிலையில் அந்த சந்திப்பு நடைபெற்றிருக்க வேண்டும் என்பதும் மிகவும் முக்கியமான நிபந்தனையாகும். முன்சென்ற மூன்று நிபந்தனைகளும் முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதோர் இருபகுதியாருக்கும் நிகழலாம். ஆனால் இந்த நிபந்தனையின் மூலம் ஸஹாபி என்ற பதம் முஸ்லிம்களுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படுகிறது.

ஸஹாபாக்களின் காலத்தில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து நபியவர்கள் சந்தித்த குழந்தைகளை அத்பாலுஸ்ஸஹாபா அதாவது பிறப்பால் நபியின் காலத்தை அடைந்தவர்கள் என்றழைக்கின்றனர். இவர்கள் ஏதாவதொரு செய்தியை அறிவித்தால் அதை இன்னுமொரு ஸஹாபியிடமிருந்து கேட்டிருக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஏற்றுக்கொள்கின்றனர்.

05) முஸ்லிமாக மரணித்திருத்தல் வேண்டும்:
முன்சென்ற நிபந்தனைகள் பூர்த்தியாக்கப்பட்டிருக்கும் அதேவேளை முஸ்லிமாக மரணித்திருக்க வேண்டும் என்பதும், ஒருவரை ஸஹாபி என்றழைப்பதற்கு இன்றியமையாத நிபந்தனைகளிலொன்றாகும். முன்சென்ற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருந்தும், பின்பு அவர் மதம்மாறி அந்த மதத்திலேயே மரணித்திருந்தால் அவர் ஸஹாபி என்று அழைக்கப்படமாட்டார். 

இவ்வாறு மரணித்தவர்கள் மூவர்தான் உள்ளனர்.
1. உபைதுல்லாஹ் பின் ஜஹ்ஸ்
2. அப்துல்லாஹ் பின் ஹதல்
3. ரபீஆ பின் உமையா பின் ஹலப்
 இவர்கள் மூவரையும் ஸஹாபி என்றழைப்பதில்லை. ஆனால் சிலபோது சிலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு ஏதோவொரு காரணத்திற்காக மதம்மாறி பின்பு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தில் மரணித்திருக்கலாம். இவர்களைப் பெரும்பான்மையான அறிஞர்கள் ஸஹாபி என்றே அழைக்கின்றனர்.

உதாரணமாக, அஸ்அத் பின் கைஸ் என்பவரைக் குறிப்பிடலாம். இவர் நபியவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு பின்பு மதம்மாறி பின்பு அபூபக்ர் (ரழி) அவர்களின் காலத்தில் மீண்டும் இஸ்லாத்தில் நுழைகிறார். இஸ்லாமியனாகவே மரணித்தார் ஸஹாபாக்கள் எல்லோரும் தங்களின் தோழனாக அவரை ஏற்றுக் கொண்டனர். அபூபக்ர் (ரழி) அவர்கள் தன் சகோதரியை அவருக்குத் திருமணம் செய்துவைத்தார்கள் அறிஞர்கள் எல்லோருமே அவரை ஸஹாபி என்றே அழைக்கின்றனர்.


ஸஹாபியை தீர்மானிப்பதற்கான வழிகள்:

ஒருவர் ஸஹாபியா? இல்லையா? என்பதை அறிந்துகொள்வதற்கு அறிஞர்கள் பல வழிகளைக் குறிப்பிடுகின்றனர். அவற்றில் பின்வரும் வழிகள் மிகவும் முக்கியமானவை.

01) அத்தவாதுர்.
அதாவது இவ்வளவு பேரும் சேர்ந்து ஒரு பொய்யில் ஒற்றுமைப்பட்டிருக்கமாட்டார்கள் என்று எண்ணுமளவிற்கு ஒரு பெரும் கூட்டத்தினால் ஒருவர் ஸஹாபி என்று உறுதிப்படுத்தப்படுதல்.
(شرح التذكرة والتبصرة)

02) ஸஹாபி என்று சமுதாயத்தில் பிரபல்யம் அடைந்திருத்தல்.
(شرح التذكرة والتبصرة)

03) வேறொரு ஸஹாபியினால் உறுதிப்படுத்தப்படல்.
(الإستيعاب في أسماء الأصحاب)

04) தாபிஈன்களில் நம்பகமானவர் ஒருவர் மூலம் இவர் ஸஹாபி என்று உறுதிப்படுத்தப்படல்.

05) தன்னைத்தானே ஸஹாபி என்று வாதிடுதல்:
இவ்வாறு ஒருவர் சொன்னால் இரண்டு நிபந்தனைகளுக்கு அவர் உட்பட்டிருப்பின் அவர் ஸஹாபி என்று இனங்காணப்படுவார்.
1. வாதிடுபவர் நம்பிக்கையாளராகவும், நீதமுடையவராகவும் இருத்தல்.
2. நபியவர்களின் காலத்தில் வாழ்ந்தவராக இருத்தல்.
அதாவது நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்து 100 ஆண்டுகளுக்குள் மரணித்தவராக இருத்தல் வேண்டும். ஏனெனில் புஹாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு செய்தி வருமாறு: ஒரு தடவை நபியவர்கள் கூறினார்கள் இன்றைய தினம் உயிரோடு உள்ள எவரும் 100 வருடங்களின் பின் உயிருடன் இருக்கமாட்டார்கள்.


ஸஹாபாக்கள் பற்றி அல்-குர்ஆன்: 

ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு ஹூதைபிய்யா என்னும் இடத்தில் நடந்த உடன்படிக்கையில் கலந்துகொண்டு நபியின் கரங்களில் உயிர் உள்ளவரை போராடுவது என்று செய்து கொண்ட உடன்படிக்கையின் போது பின்வரும் வசனத்தை இறைவன் இறக்கிவைத்தான்.

(நபியே!) திட்டமாக அல்லாஹ் விசுவாசிகளை அவர்கள் மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்தபோது பொருந்திக்கொண்டான், பின்னர் அவர்களின் இதயங்களிலிருந்ததை நன்கறிந்து, அவர்கள் மீது அமைதியை இறக்கிவைத்தான், அன்றியும், சமீபமான வெற்றியையும் அவர்களுக்கு (அருட்கொடையாகக்) கொடுத்தான் (48:18) 

முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும் (இஸ்லாத்தை ஏற்க) முதலாவதாக முந்திக்கொண்டவர்களும், (அவர்களின் சொல், செயல்களாகிய) நற்கருமத்தில் அவர்களைப் பின்பற்றினார்களே அவர்களும் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்டான், அவர்களும் (அல்லாஹ்வாகிய) அவனைப் பொருந்திக்கொண்டனர். அன்றியும் சுவனபதிகளை அவர்களுக்கென அவன் தயாராக்கி வைத்திருக்கின்றான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றிலேயே அவர்கள் நிரந்தரமாக (த் தங்கி) இருப்பவர்கள், இது மகத்தான வெற்றியாகும்’ (9:100)

நபியே! உமக்கு அல்லாஹ்வும் உம்மைப் பின்பற்றிய இறை விசுவாசிகளும் போதுமாகும் (8:64)

முஹம்மது, அல்லாஹ்வின் தூதராவார், அவருடன் இருப்பவர்களோ நிராகரிப்போர் மீது மிகக் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே மிக்க அன்புடையவர்கள், (குனிந்து) ருகூஉ செய்பவர்களாகவும், (சிரம் பணிந்து) ஸூஜூது செய்கிறவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர், அல்லாஹ்விடமிருந்து பேரருளையும் (அவனுடைய) பொருத்தத்தையும் தேடுவார்கள், அவர்களுடைய அடையாளம், சிரம்பணிவதன் அடையாளத்தினால் அவர்களுடைய முகங்களில் இருக்கும், இதுவே தவ்றாத் (என்னும் வேதத்)தில் உள்ள அவர்களின் உதாரணமாகும், இன்னும் இன்ஜீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது, ஒரு பயிரைப்போன்றதாகும், அது தன் முளையை வெளிப்படுத்தி பின்னர் அதை பலப்படுத்துகின்றது. பின்னர் அது (தடித்து) கனமாகின்றது. பின்னர் அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது, விவசாயிகளை ஆச்சரியமடையச்செய்கிறது, இவர்களைக்கொண்டு நிராகரிப்போருக்கு அவன் கோபமூட்டுவதற்காக (இவ்வாறு உதாரணங்கள் கூறுகிறான்) அவர்களில் விசுவாசங்கொண்டு நற்கருமங்களும் செய்கின்றவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களித்திருக்கின்றான். (48:29)

தங்கள் வீடுகளையும், தங்கள் பொருட்களையும் விட்டு (அக்கிரமமாக மக்காவிலிருந்து) வெளியேற்றப்பட்டார்களே அத்தகைய ஹிஜ்ரத்துச் செய்தவர்களான ஏழைகளுக்கும் (அப்பொருளில் பங்குண்டு) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து பேரருளையும் (அவனுடைய) பொருத்தத்தையும் தேடுகின்றனர். இன்னும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்கின்றனர், இவர்கள் தாம் (ஸாதிகூன் என்னும்) உண்மையாளர்கள், இன்னும் (முஹாஜிர்களாகிய) அவர்களுக்கு முன்பே (மதீனாவில்) வீட்டையும், (அல்லாஹ்வின் மீது) விசுவாசம் கொள்வதையும் (கலப்பற்றதாக்கிக்) கொண்டிருந்தார்களே அத்தகைய (அன்ஸாரிகளான)வர்கள், தம்பால் ஹிஜ்ரத் செய்து வந்தோரை நேசிப்பார்கள். மேலும் (ஹிஜ்ரத்துச்செய்து வந்த) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதைப் பற்றி தங்கள் நெஞ்சங்களில் காழ்ப்புணர்ச்சியைப் பெறமாட்டார்கள், மேலும் தங்களுக்கு (கடும்) தேவையிருந்த போதிலும், தங்களைவிட (முஹாஜிரீன்களான அவர்களை)த் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். இன்னும் எவர் தன் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டாரோ அத்தகையோர் தாம் வெற்றி பெற்றவர்கள். மேலும் அவர்களுக்குப் பின் வந்தார்களே அத்தகையவர்கள், ‘எங்கள் இரட்சகனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்டார்களே அத்தகைய எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னித்தருள்வாயாக! விசுவாசங் கொண்டவர்களைப்பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன். மிகக் கருணையுடையவன் என்று (பிரார்த்தனை செய்தும்) கூறுவார்கள். (59:8,9,10)

(விசுவாசங்கொண்டோரே!) மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள். தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள் (3:110)

இந்த வசனத்தில் கூறப்படும் சிறப்பில் முதலில் நுழைபவர்கள் ஸஹாபாக்கள்தான் என்பது தெளிவாகின்றது.

மேலும், (நபியே!) காலையிலும், மாலையிலும் தங்களுடைய இரட்சகனை அவனது (சங்கையான) முகத்தை நாடியவர்களாக அழைத்து (ப்பிரார்த்தித்து)க் கொண்டிருப்போரை நீர் விரட்டிவிட வேண்டாம், அவர்களுடைய கணக்கிலிருந்து யாதொன்றும் உம்மீது (பொறுப்பாக) இல்லை. உம்முடைய கணக்கிலிருந்து யாதொன்றும் அவர்கள் மீது (பொறுப்பாக) இல்லை. ஆகவே நீர் அவர்களை விரட்டினால், அநியாயக்காரர்களில் (ஒருவராக) ஆகிவிடுவீர். (6:52)


ஹதீஸ்களில் ஸஹாபாக்கள்:

இறைத்தூதர் . அவர்கள் கூறினார்கள் என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும், என் தோழர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) புஹாரி 3673.

மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போருக்குச் செல்வார்கள். அப்போது, (அவர்கள் யார் மீது படையெடுத்துச் செல்கிறார்களோ) அவர்கள், உங்களிடையே இறைத்தூதர் . அவர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றனரா? என்று கேட்பார்கள். ஆம், இருக்கிறார்கள் என்று (போரிடச் சென்ற) அவர்கள் பதில் சொல்வார்கள். உடனே, போருக்குச் சென்ற அவர்களுக்கு வெற்றி அளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போர் புரியச் செல்வார்கள். (அவர்களிடம்), உங்களிடையே இறைத்தூதர் அவர்களின் தோழர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கிறார்களா? என்று கேட்கப்படும். போருக்குச் சென்றவர்கள், ஆம், இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். உடனே அவர்களுக்கும் வெற்றியளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் போருக்குச் செல்வார்கள். அப்போது அவர்களிடம், அல்லாஹ்வின் தூதருடைய தோழர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்களுடன், தோழமை கொண்டவர்கள் உங்களிடையே இருக்கின்றனரா? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், ஆம், இருக்கிறார்கள் என்று பதிலளிப்பார்கள். உடனே, அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரீ(ரழி) புஹாரி 3649

மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். பின்னர், ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தை முந்திக் கொள்ளும். அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தை முந்திக் கொள்ளும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) புஹாரி 3651

அன்ஸார்களை (மக்காவாசிகளை வரவேற்ற, மதீனாவில் வாழ்ந்த ஸஹாபாக்கள்) இறைவிசுவாசியைத் தவிர வேறு எவரும் நேசிக்கமாட்டார். நயவஞ்சகனைத் தவிர வேறு எவரும் கோபிக்கமாட்டார். யார் அவர்களை நேசிக்கிறாரோ அவரை அல்லாஹ் நேசிக்கிறான். யார் அவர்களைக் கோபிக்கிறாரோ அவரை அல்லாஹ்வும் கோபிக்கிறான் என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: பறாஉ (ரழி), புஹாரி 3783, முஸ்லிம் 246

அபூபக்ருடைய வாசலைத் தவிர (மஸ்ஜிதுந் நபவிக்கு வரும்) அனைத்து வாசல்களையும் அடைத்து விடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி 3678, பைஹகி 4496)

இறைத்தூதர். அவர்கள் கூறினார்கள் தன் நட்பிலும் தன் செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூபக்ரேயாவார். என் இறைவனல்லாத வேறெவரையாவது நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் (ரழி) அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கனவே) இருக்கத் தான் செய்கின்றன. (என்னுடைய இந்தப்) பள்ளி வாசலில் அபூபக்ரின் வாசலைத் தவிர வேறு எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ, புஹாரி 3654

நாங்கள் நபி (ஸல்). அவர்களின் காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம். (முதலில்) அபூபக்ர் (ரழி) அவர்களைச் சிறந்தவராக மதிப்பிட்டோம். பிறகு உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்களையும் பிறகு உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்களையும் சிறந்தவர்களாக மதிப்பிட்டு வந்தோம்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), புஹாரி 3655.

(இறைவனைத் தவிர வேறு) ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் (ரழி) அவர்களையே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், அவர் (மார்க்கத்தில்) என் சகோதரரும், (இன்பம், துன்பம் யாவற்றிலும்) என் தோழரும் ஆவார். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), புஹாரி 3656.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படி கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, நான் வந்து தங்களைக் காண (முடிய)வில்லையென்றால்…? என்று, (நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் என்ன செய்வது? என்பது போல்) கேட்டாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ என்னைக் காணவில்லையென்றால் அபூபக்ர் (ரழி)-ரிடம் செல் என்று பதில் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம் (ரழி), புஹாரி 3659.

நான் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் (ரழி). அவர்கள் தம் முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், உங்கள் தோழர் வழக்காட வந்துவிட்டார் என்று கூறினார்கள். அபூபக்ர் (ரழி) . (நபி (ஸல்) அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, இறைத்தூதர் அவர்களே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் (ரழி) இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்துவிட்டார். எனவே, உங்களிடம் வந்தேன் என்று கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், அபூபக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! என்று மூன்று முறை கூறினார்கள். பிறகு உமர் (ரழி), (அபூபக்ர் (ரழி) அவர்களை மன்னிக்க மறுத்துவிட்டதற்காக) மனம் வருந்தி அபூபக்ர் (ரழி). அவர்களின் வீட்டிற்குச் சென்று, அங்கே அபூபக்ர் (ரழி) . இருக்கிறார்களா? என்று கேட்க வீட்டார், இல்லை என்று பதிலளித்தார்கள்.

எனவே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. இதனால், பயந்துபோன அபூபக்ர் (ரழி) அவர்கள், பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நானே (வாக்கு வாதத்தைத் தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன். என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். பொய் சொல்கிறீர் என்று நீங்கள் கூறினீர்கள். அபூபக்ர் (ரழி) அவர்களோ, நீங்கள் உண்மையே சொன்னீர்கள் என்று கூறினார். மேலும் (இறை மார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து)விட்டு விடுவீர்களா? என்று இரண்டு முறை கூறினார்கள். அதன் பிறகு அபூபக்ர் (ரழி). அவர்கள் மன வேதனைக்குள்ளாக்கப் படவில்லை. என்று அபுத்தர்தா (ரழி) அறிவிக்கிறார்கள், நூல்: புஹாரி 3661.

அம்ர் இப்னு ஆஸ் (ரழி) கூறினார்கள் நபி (ஸல்) அவர்கள் தாத்துஸ் ஸலாஸில் எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி அவர்களிடம் சென்று, மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்? என்று கேட்டேன். அவர்கள், ஆயிஷா (ரழி) என்று பதிலளித்தார்கள். நான், ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷா-வின் தந்தை (அபூபக்ர்) என்று பதிலளித்தார்கள். பிறகு யார் (பிரியமானவர்)? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், பிறகு உமர் இப்னு கத்தாப் தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்) என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள். (புஹாரி 3662)

இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள் நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக் கொண்டிருந்த ஒரு கிணற்றின் அருகே கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவிற்கு(த் தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூ குஹாபாவின் மகன் (அபூபக்ர் (ரழி) அவர்கள்) அதை எடுத்துக் கொண்டு அதிலிருந்து ஒரு வாளி நீரை அல்லது இரண்டு வாளி நீரை இறைத்தார். அவர் (சிறிது நேரம்) இறைத்தபோது சோர்வு தெரிந்தது. அல்லாஹ் அவரின் சோர்வை மன்னிப்பானாக! பிறகு, அது மிகப் பெரிய வாளியாக மாறிவிட்டது. அப்போது அதை கத்தாபின் மகன் உமர் (ரழி) எடுத்தார். உமர் (ரழி) இறைத்ததைப் போன்று இறைக்கிற (வலிமை மிக்க) ஒரு புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்ததில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டி வைக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.)
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), புஹாரி 3664

இறைத்தூதர் அவர்கள், இறைவழியில் ஏதேனும் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவிட்டவர் சொர்க்கத்தின் வாசல்களில் (ஒவ்வொன்றில்) இருந்து அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்ததாகும். (இதன் வழியாக நுழையுங்கள்) என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாக இருந்தவர் தொழுகைக்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். ஜிஹாத் (அறப்போர்) புரிபவராக இருந்தவர் ஜிஹாதுக்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். தர்மம் (ஸதகா) செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாசலிலிருந்து அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் நோன்பின் வாசலிலிருந்தும் அர்ரய்யான் என்னும் (நோன்பாளிகளுக்கே உரிய சிறப்பு) வாசலிலிருந்து அழைக்கப்படுவார் என்று கூறினார்கள். உடனே அபூபக்ர் (ரழி), அவர்கள் இந்த வாசல்களிலிருந்து அழைக்கப்படுபவருக்குத் துயரம் எதுவும் இருக்காது. (அவர் எந்த வழியிலாவது சொர்க்கம் சென்றுவிடுவார்.) என்று கூறிவிட்டு, இறைத்தூதர் அவர்களே! அவை அனைத்திலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அபூபக்ரே நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்கவேண்டுமென்று விரும்புகிறேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா., புஹாரி 3666.

அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரழி) அறிவிக்கிறார்கள் நான் என் வீட்டில் உழூச் செய்துவிட்டுப் புறப்பட்டேன். (அப்போது எனக்குள்), நான் இறைத்தூதர் அவர்களைவிட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே என்னுடைய இந்த நாள் (முழுவதும்) இருப்பேன் என்று சொல்லிக் கொண்டேன். நான் பள்ளி வாசலுக்கு வந்து நபி (ஸல்) அவர்களைக் குறித்துக் கேட்டேன். அப்போது மக்கள், நபி அவர்கள் புறப்பட்டு இந்தப் பக்கம் போனார்கள் என்று கூறினர். நான் (நபி (ஸல்) அவர்கள் சென்ற திசையில்) அவர்களின் அடிச்சுவட்டில் அவர்களைப் பற்றி (இந்த வழியாகச் சென்றார்களா? என்று) விசாரித்தபடி சென்றேன். இறுதியில் (குபாவுக்கு அருகிலுள்ள ஒரு தோட்டமான) பிஃரு அரீஸுக்குள் சென்று அதன் வாசலில் அமர்ந்தேன். அதன் வாசல் பேரீச்ச மட்டையால் தயாரிக்கப்பட்டிருந்தது. இறைத்தூதர் அவர்கள் தம் (இயற்கைக்) கடனை நிறைவேற்றிக் கொண்டு உழூச் செய்தார்கள். உடனே, நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் (பிஃரு) அரீஸ் (என்னும் அத்தோட்டத்தில் உள்ள) கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவருக்கு நடுவே தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்க விட்டபடி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று வாசலருகே அமர்ந்து கொண்டேன். நான் (எனக்குள்), இன்று நான் அல்லாஹ்வின் தூதருடைய வாயில் காவலனாக இருப்பேன் என்று சொல்லிக் கொண்டேன். அப்போது அபூபக்ர் (ரழி) . வந்து கதவைத் தள்ளினார்கள். நான், யார் அது? என்று கேட்டேன். அவர்கள், (நானே) அபூபக்ர் (வந்துள்ளேன்) என்று பதிலளித்தார்கள். உடனே நான், சற்றுப் பொறுங்கள் என்று சொல்லிவிட்டு (நபி (ஸல்) அவர்களிடம்) சென்று, இறைத்தூதர் அவர்களே! இதோ அபூபக்ர் (ரழி) அவர்கள் (வந்து) தங்களிடம் உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள் என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும், அவர் சுவர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லுங்கள் என்று கூறினார்கள். நான் அபூபக்ர் (ரழி) அவர்களை நோக்கிச் சென்று அவர்களிடம், உள்ளே வாருங்கள். இறைத்தூதர் அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று நற்செய்தி அறிவித்தார்கள் என்று சொன்னேன். உடனே, அபூபக்ர் (ரழி) அவர்கள் உள்ளே வந்து, இறைத்தூதர் . அவர்களுக்கு வலப் பக்கத்தில் அவர்களுடன் (கிணற்றின்) சுற்றுச் சுவரில் அமர்ந்து கொண்டு, நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்றே தம் கால்கள் இரண்டையும் கிணற்றில் தொங்கவிட்டுக் கொண்டு கால்களைத் திறந்து வைத்தார்கள். பிறகு, நான் திரும்பிச் சென்று (வாசலில்) அமர்ந்து கொண்டேன். நான் (முன்பே) என் சகோதர(ர் ஒருவ)ரை உழூச் செய்து என்னுடன் சேர்ந்து கொள்ளும்படி சொல்லி, விட்டு விட்டு வந்திருந்தேன். எனவே (எனக்குள்), அல்லாஹ் அவருக்கு நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு), வரச் செய்வான் என்று சொல்லிக் கொண்டேன். அவருக்கு என்று அபூமூஸா அல்-அஷ்அரீ (ரழி) கூறியது. தம் சகோதரரைக் கருத்தில் கொண்டே என்று அறிவிப்பாளர் ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) கூறினார்கள்: அப்போது ஒருவர் கதவை அசைத்தார். நான், யார் அது? என்று கேட்டேன். வந்தவர், (நானே) உமர் இப்னு கத்தாப் (வந்துள்ளேன்) என்று சொன்னார். நான், கொஞ்சம் பொறுங்கள் என்று கூறிவிட்டு, இறைத்தூதர் . அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் கூறி, இதோ, உமர் (ரழி) இப்னு கத்தாப் அவர்கள் வந்து தங்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள் என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அவருக்கு அனுமதி கொடுங்கள் அவர் சுவர்க்கவாசி என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள் என்று கூறினார்கள். நான் சென்று, உள்ளே வாருங்கள். இறைத்தூதர் அவர்கள் நீங்கள் சுவர்க்கவாசி என்று உங்களுக்கு நற்செய்தி கூறுகிறார்கள் என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து கிணற்றின் சுற்றுச் சுவரில் இறைத்தூதர் அவர்களுக்கு இடப்பக்கம் அமர்ந்து தம் இரண்டு கால்களையும் கிணற்றுக்குள் தொங்கவிட்டார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலருகே) அமர்ந்து கொண்டேன் அல்லாஹ் அவருக்கு (என் சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச் செய்வான் என்று (முன்போன்றே எனக்குள்) கூறிக் கொண்டேன். அப்போது ஒருவர் வந்து கதவை ஆட்டினார். நான், யார் அது? என்று கேட்டேன். அவர், (நானே) உஸ்மான் இப்னு அஃப்பான் (வந்திருக்கிறேன்) என்று பதிலளித்தார். உடனே, கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்லிவிட்டு, இறைத்தூதர் அவர்களிடம் சென்று, அவர்களுக்கு உஸ்மான் (ரழி) அவர்கள் வந்திருக்கும் செய்தியை அறிவித்தேன். நபி அவர்கள், அவருக்கு அனுமதி கொடுங்கள். அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து அவருக்கு சுவர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே நான் உஸ்மான் (ரழி) அவர்களிடம் சென்று அவரிடம், உள்ளே வாருங்கள். உங்களுக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து உங்களுக்கு சுவர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று இறைத்தூதர் . அவர்கள் நற்செய்தி கூறினார்கள் என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து (பார்த்த போது) சுற்றுச் சுவர் (ஒரு பக்கம்) நிரம்பி விட்டிருப்பதைக் கண்டார்கள். எனவே, மற்றொரு பக்கம் நபி (ஸல்) அவர்களுக்கு எதிரே அமர்ந்தார்கள். (புஹாரி 3674.)

அனஸ் (ரழி) அறிவித்தார்கள்ள (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரழி), உமர் (ரழி)., உஸ்மான் (ரழி). ஆகியோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும், ஒரு உண்மையாளரும், இரண்டு உயிர்த் தியாகிகளும் உள்ளனர் என்று கூறினார்கள். (புஹாரி 3675.)

இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள் நான் சிலரிடையே நின்று கொண்டிருக்க, அவர்கள் உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்களுக்காக பிரார்த்திதார்கள். அப்போது உமர் (ரழி) அவர்கள் (இறந்து) கட்டிலின் மீது கிடத்தப்பட்டிருந்தார்கள் – அப்போது என் பின்னாலிருந்து ஒருவர் தன் முழங்கையை என் தோளின் மீது வைத்து (உமர் (ரழி). அவர்களை நோக்கி,) அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். அல்லாஹ் (உங்கள் உடல், அடக்கம் செய்யப்படும் போது) உங்களை உங்களுடைய இரண்டு தோழர்க(ளான நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரழி). அவர்க)ளுடன் (அவர்களின் மண்ணறைகளுக்கு அருகே) அடங்கச் செய்ய வேண்டும் என்று நான் விரும்பிக் கொண்டிருந்தேன். ஏனெனில், பெரும்பாலான நேரங்களில் இறைத்தூதர் அவர்கள், நானும் அபூபக்ரும் உமரும் (இப்படி) இருந்தோம் நானும் அபூபக்ரும் உமரும் (இப்படிச்) செய்தோம் நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். எனவே, உங்களை அல்லாஹ் அவ்விருவருடன் (அவர்களின் மண்ணறைகளுக்கு அருகே) அடங்கச் செய்திட வேண்டுமென்று விரும்புகிறேன் என்று கூறினார். நான் திரும்பிப் பார்த்தேன். இப்படிச் சொன்ன அந்த மனிதர் அலி இப்னு அபீ தாலிப் (ரழி) அவர்களாக இருந்தார்கள். (புஹாரி 3677.)

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவிக்கிறார்கள் இணைவைப்பவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது? என்று நான் அப்துல்லாஹ் இப்னு உம்ர் (ரழி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், (ஒரு முறை மக்காவில்) உக்பா இப்னு அபீ முஐத் என்பவன், நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் வந்து தன் போர்வையை அவர்களின் கழுத்தில் போட்டு அதை (அவர்களின் மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்ததைப் பார்த்தேன். அப்போது அபூபக்ர் (ரழி) வந்து, நபி (ஸல்) அவர்களைவிட்டு உக்பாவை (தம் கையால்) தள்ளினார்கள். அப்போது, என் இறைவன் அல்லாஹ் தான் என்று சொல்லும் காரணத்திற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்(ல முனை)கிறீர்கள்? அவரோ தம் இறைவனிடமிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார் என்று கூறினார்கள். (புஹாரி 3678.)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், நான் (கனவில்) என்னை சுவர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா (ரழி) அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடி ஓசையைச் செவியுற்றேன். உடனே, யார் அது? என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), இவர் பிலால் என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், இது யாருக்குரியது? என்று கேட்டேன். அவர், (வானவர்), இது உமருடையது என்று கூறினார். எனவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (எனவே, அதில் நுழையாமல் திரும்பிவிட்டேன்) என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரழி) இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும்  அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்|என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழி), (புஹாரி 3679)

இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள் நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில் என்னிடம் ஒரு பால் பாத்திரம் கொண்டு வரப்பட்டது. (அந்தப்) பாலை நான் (தாகம் தீரும் அளவு) அருந்தினேன். இறுதியில், என் நகக்கண் அல்லது, நகக் கண்கள் ஊடே (பால்) பொங்கி வருவதைக் கண்டேன். பிறகு (நான் அருந்தியது போக இருந்த மிச்சத்தை) உமர் (ரழி) அவர்களுக்குக் கொடுத்தேன் என்று இறைத்தூதர். அவர்கள் கூறினார்கள். மக்கள், இதற்கு (இந்தப் பாலுக்கு) நீங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், இறைத்தூதர் அவர்களே! என்று கேட்க, அதற்கு அவர்கள், அறிவு என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி)., புஹாரி 3681.

நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை உமர் பின் கத்தாப் (ரழி) அவர்களைப் பார்த்து, கத்தாபின் புதல்வரே! என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! ஒரு தெருவில் நீங்கள் (நடந்து) செல்வதை ஷைத்தான் கண்டால், அவன் உங்கள் தெருவைவிட்டு வேறொரு தெருவில் தான் செல்வான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) புஹாரி 3683

இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள் உமர் (ரழி) (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது மக்கள் அவரைச் சுற்றிலும் (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து பிரார்த்திக்கலாயினர். அவரின் ஜனாஸா (சடலம்) எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழலாயினர். அப்போது நான் அவர்களிடையே இருந்தேன். என் தோளைப் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் தான் என்னை திடுக்கிடச் செய்தார். (யாரென்று திரும்பிப் பார்த்த போது) அது அலி (ரழி) இப்னு அபீ தாலிப். தாம். அவர்கள், உமர் (ரழி) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! என்று பிரார்த்தித்துவிட்டு, (உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத் தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள் தாம் அத்தகைய மனிதர்.) அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்க(ளான நபி அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரழி) அவர்)கள் இருவருடனும் தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில் தான்) அடங்கச் செய்வான் என்று எண்ணியிருந்தேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம் என்றும் நானும் அபூபக்ரும் உமரும் (இந்த இடத்திற்கு) உள்ளே புகுந்தோம் என்றும் நானும் அபூபக்ரும் உமரும் புறப்பட்டோம் என்று சொல்வதை நான் அதிகமாகச் செவியேற்றிருக்கிறேன். (புஹாரி 3685)

இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள் உங்களுக்கு முன்பிருந்த சமுதாயங்களில், (பல்வேறு) பிரச்சினைகளில் சரியான தீர்ப்பு எது? என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். என் சமுதாயத்தினரில் அப்படிப்பட்டவர் எவரேனும் இருந்தால் அது உமராகத்தான் இருக்கும்.
அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரழி) – புஹாரி 3689

(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில், ஓர் ஆட்டிடையன் தன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது ஓர் ஓநாய், ஆடு ஒன்றைக் கவ்விக் கொண்டு ஓடலாயிற்று. ஆட்டை மேய்த்துக் கொண்டிருந்தவர் அந்த ஓநாயைத் துரத்திச் சென்றார். அப்போது ஓநாய் அவரைப் பார்த்து, மன் லஹா யவ்மஸ் ஸபுஇ – கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதைப் பாதுகாக்கக் கூடியவர் யார்? அப்போது என்னைத் தவிர இதற்கு மேய்ப்பாளன் (பொறுப்பாளன்) எவனும் இருக்க மாட்டானே என்று கூறியது’ என நபி அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டு வியந்தவர்களாக) சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் தூயவன் என மக்கள் கூறினர். அப்போது நானும், அபூபக்ரும் உமரும் இந்த நிகழ்ச்சியை நம்புகிறோம் என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள். (நபியவர்கள் இதைக் கூறிய சமயம்) அபூபக்ரும் (ரழி) உமரும் (ரழி) அங்கு இருக்கவில்லை. அறிவிப்பவர்: அபூ ஹுரைரா., புஹாரி 3690

அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) கூறினார்கள் (ஒரு முறை), நான் தூங்கிக் கொண்டிருந்தபோது, (கனவில்) மக்கள் (பலவிதமான) சட்டைகளை அணிந்தவர்களாக எனக்கு எடுத்துக்காட்டப்பட்டார்கள். அவற்றில் (அவர்களின்) மார்பை எட்டக்கூடியவையும் இருந்தன. அவற்றில் (அவர்களின்) மார்பை எட்டாதவையும் இருந்தன. உமர் (ரழி) அவர்கள், (தரையில்) இழுத்துக் கொண்டே செல்லும் அளவிற்கு (நீளமான) சட்டையொன்றை அணிந்தவராக எனக்குக் காட்டப்பட்டார்|| என்று இறைத்தூதர். அவர்கள் கூறினார்கள். மக்கள், இதற்கு நீங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், இறைத்தூதர் அவர்களே! என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அந்தச் சட்டைகள்) அவர்களின் மார்க்கத்தை (மார்க்க உணர்வையும் செயல்பாடுகளையும்) குறிக்கும் என்று (விளக்கம் காண்பதாக) பதில் கூறினார்கள். (புஹாரி 3691.)

ஸலமா இப்னு அக்வஃ (ரழி) அறிவிக்கிறார்கள்: அலி (ரழி) . அவர்கள் கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின் தங்கிவிட்டிருந்தார்கள். அவர்களுக்கு கண் வலி ஏற்பட்டிருந்தது. நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின் தங்கி விட்டேனே என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். பிறகு அலி (ரழி). புறப்பட்டு (வந்து) நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்தார்கள். எந்த நாளின் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நாளின் (இரவுக்கு முந்தைய) மாலை நேரம் வந்தபோது, இறைதததூதர். அவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிற அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற… ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப்போகிறேன்… அல்லது அத்தகைய ஒருவர் இக்கொடியைப் பிடித்திருப்பார்… என்று சொல்லிவிட்டு, அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான் என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலி (ரழி) . வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், இதோ அலி (ரழி) அவர்களே! என்று கூறினர். இறைத்தூதர் . அவர்கள் அலி (ரழி) . அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான். (புஹாரி 3702)

ஆயிஷா (ரழி). அவர்கள் குறிப்பிடுகிறார்கள் நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, தம் மகள் பாத்திமாவை அழைத்து அவரிடம் ஏதோ இரகசியமாகக் கூறினார்கள். (நபி அவர்கள் சொன்னதைக் கேட்டு) பாத்திமா அழுதார். மீண்டும் பாத்திமாவை நபி (ஸல்) அவர்கள் அழைத்து எதையோ இரகசியமாகக் கூறினார்கள். (அதைக் கேட்டவுடன்) பாத்திமா சிரித்தார். நான் அதைப் பற்றி (நபி (ஸல்) அவர்கள் இரகசியமாகச் சொன்னது என்ன என்று) அவரிடம் கேட்டேன். அதற்கு பாத்திமா, நபி (ஸல்) அவர்கள் (முதல் முறை) என்னிடம் இரகசியமாகப் பேசியபோது, தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள். அதனால் நான் அழுதேன். பிறகு (இரண்டாம் முறை) இரகசியமாகப் பேசியபோது அவர்களின் குடும்பத்தாரில் நானே அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லப் போகும் முதல் ஆள் என்று கூறினார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியோடு) சிரித்தேன் என்று பதிலளித்தார்கள். (புஹாரி 3715, 3716)

இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள் ஒவ்வோர் இறைத்தூதருக்கும் ஒரு பிரத்தியேக உதவியாளர் (ஹவாரிய்யு) உண்டு. எனது பிரத்தியேக உதவியாளர் ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) ஆவார். அறிவிப்பவர்: ஜாபிர் ., புஹாரி 3719.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி). அறிவிக்கிறார்கள்ளூ நபி (ஸல்) அவர்கள், உஸாமா இப்னு ஸைத் (ரழி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (இப்போது) இவரின் தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால்… (இது ஒன்றும் புதிதல்ல). இதற்கு முன் (மூத்தா போரின் போது) இவரின் தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். (அவரின் மகனான) இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவராவார் என்று கூறினார்கள். (புஹாரி 3730)

உஸாமா இப்னு ஸைத். அவர்கள் குறிப்பிடுகிறார்கள் நபி (ஸல்) அவர்கள் (சிறார்களாயிருந்த) என்னையும் ஹஸன் (ரழி) அவர்களையும் கையிலெடுத்து இறைவா! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கிறேன் நீயும் நேசிப்பாயாக! என்று பிரார்த்திப்பார்கள். (புஹாரி 3735)

ஹுதைஃபா (ரழி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான் வாசிகளிடம், நம்பகத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுக்கு நிச்சயம் நான் அனுப்புவேன் என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் (பலர் அந்த அமீன் என்னும் சிறப்பு தமக்கு கிட்டாதா என) பேராவல் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூ உபைதா (ரழி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். (புஹாரி 3745)

அபூபக்ர் (ரழி). அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் (மேடை) மீது (உரையாற்றியபடி) இருக்க ஹஸன் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பக்க வாட்டில் அமர்ந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களையும் மறு முறை ஹஸன். அவர்களையும் நோக்கியபடி, இந்த என்னுடைய (மகளின்) மகன் மக்களின் தலைவராவார். முஸ்லிம்களின் இரண்டு குழுவினரிடையே இவர் வாயிலாக அல்லாஹ் சமாதானத்தை ஏற்படுத்தவிருக்கிறான் என்று சொல்லக் கேட்டேன். (புஹாரி 3746)

அனஸ் (ரழி) அறிவிக்கிறார்கள் ஸைத் இப்னு ஹாரிஸா (ரழி) அவர்களும் ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் (ரழி) அவர்களும் (அப்துல்லாஹ்) இப்னு ரவாஹா (ரழி) அவர்களும் (மூத்தா போர்க் களத்தில்) உயிர்நீத்துவிட்ட செய்தியை, அது (மதீனாவிற்கு) வந்து சேர்வதற்கு முன்பே (இறைவனால் அறிவிக்கப் பெற்று மக்களுக்கு) நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். (முதலில்) இஸ்லாமியச் சேனையின் கொடியை ஸைத் (தம் கையில்) எடுத்தார் அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, ஜஃபர் (தம் கையில்) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு இப்னு ரவாஹா (தம் கையில் கொடியை) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார்|| என்று இறைத்தூதர். அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன. இறுதியில் அக்கொடியை அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள் (காலித் இப்னு வலீத்) எடுத்தது. அல்லாஹ் (அவரின் கரத்தில்) முஸ்லிம்களுக்கு வெற்றியை அளித்துவிட்டான் என்று (போர்க்கள நிகழ்ச்சிகளை விவரித்துச்) கூறினார்கள். (புஹாரி 3757)

இறைத்தூதர். அவர்கள் ஒரு நாள், ஆயிஷா (ரழி)வே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார் என்று கூறினார்கள். நான், சலாமுக்கு பதில் கூறும் முகமாக வ அலைஹிஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு அவரின் மீதும் சலாம் (இறை சாந்தி) பொழியட்டும். மேலும், அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும் என்று பதில் முகமன் சொல்லிவிட்டு, நான் பார்க்க முடியாதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று இறைத்தூதர். அவர்களிடம் கூறினேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) ., புஹாரி 3768.

ஆண்களில் நிறையப் பேர் முழுமை பெற்றிருக்கிறார்கள். ஆனால், பெண்களில் இம்ரானின் மகள் மர்யமையும், ஃபிர் அவ்னின் மனைவி ஆஸியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை. (உலகின் மற்ற) பெண்களை விட ஆயிஷா (ரழி)வுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) எல்லா உணவுகளைக் காட்டிலும் ஸரீத் என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும். என்று இறைத்தூதர். அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா அஷ்அரீ (ரழி) புஹாரி 3769.

உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அறிவிக்கிறார்கள் மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபியவர்கள் ஆயிஷா (ரழி). அவர்களிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுத்து வந்தனர். (அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து) ஆயிஷா (ரழி). கூறினார்: (நபியவர்களின் துணைவியரான) என் தோழிகள் உம்மு ஸலமா. அவர்களிடம் ஒன்று கூடி, உம்மு ஸலமாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபிகளார் ஆயிஷா (ரழி)விடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆயிஷா (ரழி) நபி (ஸல்) அவர்களுக்கு நலம் நாடுவதைப் போன்றே நாமும் அவர்களுக்கு நலம் நாடுகிறோம். எனவே, தமக்கு (தரவிரும்பும்) அன்பளிப்புகளை தாம் இருக்குமிடத்தில்… அல்லது செல்லுமிடத்தில்… (அது எவருடைய வீடாக இருந்தாலும் அங்கு) அனுப்பி வைத்து விடவேண்டும் என்று மக்களுக்குக் கட்டளையிடும்படி இறைத்தூதர். அவர்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.
உம்மு ஸலமா (ரழி) கூறினார்: நான் நபி (ஸல்) அவர்களிடம் இதைச் சொல்ல, நபி (ஸல்) அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. மீண்டும் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் திரும்பி வந்தபோது நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அப்போதும் அவர்கள் என்னைக்கண்டு கொள்ளவில்லை. மூன்றாம் முறை வந்த போதும் நான் அவர்களிடம் இதே கோரிக்கையைச் சொன்னேன். அப்போது அவர்கள், உம்மு ஸலமாவே! ஆயிஷா (ரழி)வின் விஷயத்தில் எனக்கு மனவேதனை தராதே. ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் அவரல்லாத வேறெந்தப் பெண்ணின் போர்வைக்குள் நான் இருக்கும் போதும் எனக்கு வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டதில்லை என்று பதிலளித்தார்கள். (புஹாரி 3775)

ஸஃத் பின் முஆத் (ரழி) அவர்களின் மரணத்திற்கு அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கியது என்று நபி (ஸல்). அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி) நூல்: புஹாரி (3703), முஸ்லிம் (2466)

இங்கே நாம் தொகுத்துள்ள ஹதீஸ்கள் நபியவர்களால் சொல்லப்பட்ட சில செய்திகளேயாகும். இது தவிரவும் அதிகமான செய்திகள் உள்ளன. விரும்பியவர்கள் ஹதீஸ் அடிப்படை நூல்களில் அவற்றை பெற்றுக்கொள்ளலாம்.


ஸஹாபாக்களும் தியாகமும்: 

ஸஹாபாக்களின் தியாகங்கள் பற்றி பல பாகங்களில் தனியான நூல்கள் இருக்கின்றன. ஸஹாபாக்கள் இந்த மார்க்கத்திற்காக செய்த தியாகங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவிற்கு ஏராளமாகவும் தாராளமாகவுமுள்ளன. இந்தத் தலைப்பின் கீழ் ஸஹாபாக்களின் தியாகங்களை விரிவாக குறிப்பிடுவது எமது நோக்கமல்ல. மாறாக ஸஹாபாக்கள் என்ற இந்த நூலின் முழுமைத்தன்மைக்கு தவிர்க்க முடியாத ஒரு பகுதி இது என்பதனால் அது தொடர்பான சில குறிப்புகளை இங்கு தருகின்றோம்.

ஸஹாபாக்கள் இந்த மார்க்கத்திற்காக செய்த தியாகங்களை சுருக்கமாக நான்கு வகையாக நோக்கலாம்.
01) இந்த மார்க்கத்தை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் செய்த தியாகம்:
02) இஸ்லாத்தை கற்றுக்கொள்ளவும் நடைமுறைப்படுத்தவும்…:
03) இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எத்திவைப்பதற்காக:
04) இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பாதுகாத்தல்:

01) இந்த மார்க்கத்தை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் செய்த தியாகம்:
ஸஹாபாக்கள் தாங்கள் வாழ்ந்த சமுதாயத்தில் எந்தக் குற்றமும் செய்யாத உத்தமர்களாக, அந்த சமுதாயத்தை வழி நடாத்தக்கூடியவர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காகப் பல தியாகங்களை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். உதாரணமாக சுமையா (ரழி) அவர்கள் இந்த மார்க்கத்தை ஏற்றுக்கொண்டதற்காகவே பல சோதனைகளைத் தாண்ட வேண்டியேற்பட்டது. அவர் இந்த மார்க்கத்தை ஏற்றுக்கொண்டதற்காகவே அபூஜஹ்ல் அவரின் மர்ம உறுப்பில் அம்பெய்து கொன்றான். அவரின் கணவர் யாஸிர் (ரழி) அவர்கள் அவரின் இரு கால்களும் இரண்டு ஒட்டகங்களில் கட்டப்பட்டு இரண்டு திசைகளை நோக்கி விரட்டப்படுகிறது. அவர் இரண்டாகக் கிழிக்கப்படுகிறார். பிலால் . அவர்கள் இந்த இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக பாலைவன மணலில் சுடுவெயிலில் வெற்று மேனியோடு கிடத்தப்பட்டு அவர் எழும்பாத வகையில் பாராங்கற்கள் அவருக்கு மேலே தூக்கிவைக்கப்பட்டு வேதனை செய்யப்பட்டார்கள்.

கொல்லனாக இருந்த ஹப்பாப் இப்னு அரத் (ரழி) அவர்கள் இந்த மார்க்கத்தில் நுழைந்ததற்காக அவரின் கடையில் இருந்த இரும்புகளே அவரின் எதிரிகளாக மாறிவிடுகின்றன. அவரின் இரும்புகளே சூடுபோடப்பட்டு பின்பு அவருக்கு அவற்றினால் வேதனை வழங்கப்பட்டது. இவ்வாறு இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டதற்காக ஸஹாபாக்கள் செய்த தியாகங்கள் ஏராளமாக இருக்கின்றன. பின்பொரு காலத்தில் உமர் (ரழி) அவர்கள் ஹப்பாப் (ரழி) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபோது செய்யப்பட்ட வேதனை தொடர்பாகக் கேட்டார்கள். அதற்கு ஹப்பாப் (ரழி) அவர்கள் பதில் ஏதும் சொல்லாமல் தமது ஆடையை உயர்த்தி முதுகைக் காட்டினார்கள். சதையேதும் இல்லாமல் இருந்தது, உடனே உமர் (ரழி) அவர்களுக்கு அது உடலியல் ரீதியான அத்தனை தண்டனைகளையும் உணர்த்திற்று.

நாம் மேலே குறிப்பிட்டவை உடலியல் ரீதியான தியாகங்கள் மாத்திரமே ஆனால், அவர்களின் வரலாற்றைப் படிப்பவர்கள் வேதனை, சோதனையின் அத்தனை வடிவங்களும் அவர்களைத் தொட்டுச் சென்றிருப்பதை உணர்வார்கள்.

02) இஸ்லாத்தை கற்றுக்கொள்ளவும் நடைமுறைப்படுத்தவும்…
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஸஹாபாக்கள் அதைக்கற்றுக் கொள்வதற்கும் நடைமுறைப்படுத்தவும் பல தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். அதிகமான ஸஹாபாக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட செய்தி, அவர்கள் நபியவர்களுடன் வைத்திருந்த இறுக்கமான தொடர்பு, அவர்கள் இஸ்லாத்தைக் கற்பதற்காக நபியவர்களை அடிக்கடி சந்தித்தமை கற்றதைப் பின்பற்றியமை என்பவைகளினாலேயே வெளியுலகிற்குத் தெரிய வந்தது.
இவ்வாறு தெரிய வந்தபோதெல்லாம் ஸஹாபாக்கள் தங்கள் இன்பங்கள் அத்தனையையும் இழக்க நேரிட்டது. இந்தக்காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அபூதாலிப் கணவாயில் மூன்று வருடங்கள் முற்றுகையிடப்பட்டார்கள். இந்த உலகுக்கும் அவர்களுக்குமிடையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது என்றே சொல்லவேண்டும். அந்தளவிற்கு, துன்பங்களை எதிர்கொண்டார்கள். அவர்களுக்கும் ஏனைய சமூகத்திற்கும் மத்தியிலான அத்தனை தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. உண்பதற்கு ஏதுமில்லாததால் அவர்கள் இலைகுழைகளை உண்டனர், இதனால் அவர்களின் மலம், மிருகங்களின் மலம் போன்று இருந்ததாக சில ஸஹாபாக்கள் குறிப்பிடுகின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில் இந்த இஸ்லாத்தை மக்காவில் எம்மால் பின்பற்ற முடியாது என்றபோது தங்கள் சொத்து, குடும்பம், பிறந்த மண் அத்தனையையும் விட்டுவிட்டு அண்டை நாடுகளுக்கு இடம்பெயர வேண்டியேற்பட்டது. இந்த வகையில் இரண்டு தடவைகள் அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்தனர். பின்பு மக்காவில் நாம் இனியும் தங்கியிருந்து இந்த இஸ்லாத்தை எடுத்து நடப்பது கஷ்டமான காரியம் என்ற முடிவுக்கு வந்தபோது எல்லோரும் மக்காவிலிருந்து சுமார் 480 கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் மதீனாவைநோக்கி இடம்பெயர்ந்தார்கள். தங்கள் உடைமைகள், உறவுகள் அத்தனையையும் இழந்து கொள்கை என்ற உரத்தோடு வெறுங்கையர்களாக மனிதர்களாக மதீனா நகரை அடைந்தார்கள். இது, அவர்கள் இஸ்லாத்தைப்பின்பற்றியதற்காக ஒரே நேரத்தில் எல்லா வகையான சோதனைகளையும் தாங்கிய மிகவும் பெரியதோர் சந்தர்ப்பம் என்று கூறலாம்.

இஸ்லாத்தைப் படிப்பதற்காக பலரும் பலநாடுகளிலிருந்தும் நபியவர்களிடம் வருவார்கள். இதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் காணப்படுகின்றன. பாதைகள் சரியாக செப்பனிடப்படாத போக்குவரத்து வசதிகளெல்லாம் முன்னேற்றமடையாத அந்தக்காலத்தில் இஸ்லாத்தைக் கற்பதற்காக பல 100 கிலோ கிலோமீற்றர்களைத் தாண்டிச்செல்வதென்பது இலகுவான காரியமல்ல. பல துன்பங்களையும் துயரங்களையும் தாங்கியே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருந்தது என்பது யாவரும் அறிந்த உண்மை.

சிலர் இந்த இஸ்லாத்தைக் கற்பதற்காக தங்கள் தொழில், குடும்பம் அத்தனையையும் இழந்து தங்களை அப்படியே அர்ப்பணித்து பசியோடும் பட்டினியோடும் வாழ்ந்தார்கள் என்பதை நாமறிவோம்.

03) இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எத்திவைப்பதற்காக:
தாம் உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு படித்துப் பின்பற்றிய இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எத்திவைப்பதிலும் ஸஹாபாக்கள் பல தியாகங்களைச் செய்ததோடு, பலசோதனைகளையும் தாங்கிக் கொண்டார்கள். இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். நாம் இறைவனுடைய வேதத்திலிருந்து 10 வசனங்களைக் கற்றுக்கொள்வோம் அதை நடைமுறைப்படுத்தி மற்றவர்களுக்கு எத்திவைத்து அமல் செய்யாமல், அதற்குப்பின்னால் இறங்கிய 10 வசனங்களை நாம் கற்றுக்கொள்ளமாட்டோம். (ஸூனன் அல-; குப்ரா, தபகாதுல் குப்ரா)

இந்த மார்க்கத்தை மக்களுக்கு மத்தியில் பரப்புவதில் அதிக கூலிகள் இருப்பதாக நபியவர்கள் அதிகமான சந்தர்ப்பங்களில் தூண்டியதன் விளைவாக அதிகமான ஸஹாபாக்கள் தங்களின் அத்தனை வேலைப்பலுக்களையும் மறந்து சிலபோது தங்களையே மறந்து செயற்பட்டனர். உமர் (ரழி). அவர்கள் குறிப்பிடுகிறார்கள். நானும் எனது அன்ஸாரித்தோழரும் வயலில் வேலை செய்வதற்கும், நபிவர்களுடன் இருப்பதற்குமாக நாட்களைப் பிரித்துக்கொண்டோம். நான் ஒரு நாளைக்கு வயலில் வேலை செய்வேன் அவர் நபியவர்களுடன் இருப்பார். அன்று வீடு திரும்புவதற்கு முன்னால், நபியவர்கள் சொன்ன செய்திகளை என்னிடம் வந்து சொல்லிவிட்டுத்தான் வீடு செல்வார். மறுநாள் அவர் தோட்டத்தில் வேலைசெய்வார் நான் நபியவர்களிடம் செல்வேன். வீடு திரும்புவதற்கு முதல் எனது தோழரிடம் வந்து நபி (ஸல்) அவர்கள் அன்றைய தினம் சொன்னதை சொல்லிவிட்டே வீடு செல்வேன்… (புஹாரி 89)

நபியவர்கள் இஸ்லாத்தை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கென்று தூதுவர்களை பிற நாடுகளுக்கும், தூரப்பிரதேசங்களுக்கும் அனுப்பிவைப்பார்கள். மதீனாவாசிகள் நபியவர்களுடன் இரண்டாம் அகபா உடன்படிக்கையில் கலந்து கொண்டு ஒப்பந்தம் செய்துவிட்டு அவர்கள் திரும்பும்போது நபியவர்கள் முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களை மதீனாவாசிகளுக்கு இஸ்லாத்தை கற்றுக் கொடுப்பதற்காக அனுப்பிவைத்தார்கள்.

முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்கள் குர்ஆனை நன்கு ஓதத்தெரிந்தவர்களில் ஒருவராக இருந்தார் மதீனாவிற்கு வந்ததிலிருந்து இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்தார். அவரின் பிரச்சாரத்தின் மூலம் மதீனாவின் முக்கிய தலைவர்களெல்லாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். மக்காவில் வாழும் போது மிகப்பெரிய செல்வந்தராக இருந்த முஸ்அப் (ரழி) அவர்கள் ஒவ்வொரு நாளைக்கும் புதிய புதிய ஆடைகளையும் விலைமதிப்புமிக்க பாதணிகளையும் பயன்படுத்துபவர். ஆனால் இஸ்லாத்தை ஏற்று மதீனாவிற்கு இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக சென்று ஹி. 03ம் ஆண்டு உஹதுக்களத்திலே மரணிக்கிறார்கள். அவரை முழுமையாக கபனிடுவதற்கு ஓராடைகூட இருக்கவில்லை. தலையை மூடினால் கால் தெரிகிறது, காலை மூடினால் தலைதெரிகிறது எனற் நிலையில் ஒரு சிறிய ஆடைதான் அவருக்கிருந்தது. பின்பு நபியவர்களின் உத்தரவின் படி அவரின் தலையை மூடிவிட்டு காலை மரக்கிளைகளை வைத்து மறைத்தனர். மிகப்பெரியதொரு செல்வந்தரின் வாழ்க்கைப் பயணம் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதினால் எவ்வளவு சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டிவந்திருக்கிறது என்பதற்கு இதை விட வேறு எடுத்துக்காட்டு இருக்கமுடியாது.

நபியவர்களிடம் சிலர் இஸ்லாத்தை ஏற்றதாகச் சொல்லி தமது கோத்திரத்தினருக்கு இஸ்லாத்தை பிரச்சாரம் செய்ய சிலரை கேட்டனர். நபியவர்களும் தன்னுடைய தோழர்களில் சிறப்பாக குர்ஆனை ஓதத்தெரிந்த, அது பற்றிய அறிவுள்ளவர்களை தேர்வு செய்து 70 பேர் கொண்ட ஒரு குழுவை அனுப்பிவைத்தார்கள். அத்தனை பேரையும் கூட்டிச்சென்ற அவர்கள், பிஃரு மஊனா என்ற இடத்தில் வைத்து கொலை செய்தார்கள். பிரச்சாரக்குழுவிற்கு நடந்த பரிதாபத்தை தெரிந்து கொண்ட நபியவர்கள் கூட்டிச்சென்ற ரஃலு, தக்வான் போன்ற கோத்திரங்களை சபித்தும் விசுவாசிகளுக்கு சார்பாக பிரார்த்தித்தும் ஒரு மாதகாலம் ஐங்காலத் தொழுகையிலும் குனூத் ஓதினார்கள். (புஹாரி)

இவ்வாறு பிரச்சாரத்திற்காக நபியவர்களால் அனுப்பபட்டவர்கள் முதல் தாங்களாக பிரச்சாரம் செய்தவர்கள் வரை பிரச்சார வரலாற்றில் அவர்களுக்கு ஏற்பட்ட சோகக்கதைகள் அதிகமாக உள்ளன.

04) இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பாதுகாத்தல்:
ஸஹாபாக்கள் செய்த தியாகங்களில் மற்றொரு வகை அவர்கள் இஸ்லாத்தையும் அதை ஏற்றிருந்த முஸ்லிம்களையும் பாதுகாப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகளாகும். இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்குமான முயற்சியில் பல தற்காப்பு யுத்தங்கள் நடந்திருக்கின்றன அதிலெல்லாம் ஸஹாபாக்கள் நெஞ்சுரத்தோடும் கொள்கைப்பற்றோடும் தன் சகோதரனைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடும் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்துப் போராடியிருக்கின்றனர். ஸஹாபாக்கள் இழுக்கப்பட்ட அத்தனை போராட்டங்களும் வெளியிலிருந்து பார்த்தால் தற்கொலை முயற்சி என்று சொல்லுமளவிற்கு அபாயங்கள் நிறைந்ததாகவே காணப்பட்டன. ஆனால் அந்த சூழலிலும் ஸஹாபாக்கள் காட்டிய உறுதி தாங்கள் இந்தக்கொள்கையையும் அதை ஏற்றுக்கொண்டவர்களையும் பாதுகாக்க எதையும் இழக்கத்தயார் என்பதைக்காட்டிற்று. நபியவர்கள் வலுக்கட்டாயமாக இழுக்கப்பட்ட முதல் போர் பத்ருப்போர் எதிரிகள் ஏறத்தாள 1000 பேர். ஒட்டகங்கள், குதிரைப்படை, போர்த்தளபாடங்கள் தேவைக்கு அதிகமாகவே இருந்தன. பயிற்றப்பட்ட போர்வீரர்கள் தாராளமாக இருந்தார்கள். இதில் ஏதாவது குறைவுள்ளது என்று கண்டால் மேலதிகமாக வந்து கலந்து கொள்வதற்கென்று படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், ஸஹாபாக்களின் நிலையோ மிகவுமே பரிதாபகரமானது. கடும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்த 313 பேர்தான் அவர்களின் ஆளணியாக இருந்தது. போர்த்தளபாடங்கள், வாகனங்கள் எல்லாமே மிகக்குறைவாகவே இருந்தன. ஆனாலும் ஸஹாபாக்கள் உறுதியோடு போராடி பகீரதப்பிரயத்தனங்களுக்கு மத்தியில் இறைவன் உதவியினால் வெற்றி கண்டார்கள்.

ஹி 03-ல் நடைபெற்ற உஹதுப்போரில் முஸ்லிம்கள் 700-பேர் எதிரிகள் 3000-பேர், அஹ்ஸாப் யுத்தம் எதிரிகள் 10000-பேர் அப்போது மதீனாவில் வாழ்ந்த மொத்த முஸ்லிம்களே 3000-பேரைத் தாண்டவில்லை. இந்த அஹ்ஸாப் யுத்த முற்றுகை 27நாட்கள் நீடித்தது. ஒவ்வொரு நாளும் கூலித்தொழில் செய்து சேமிக்க மனமில்லாமல் தேவைபோக மற்றயதை பிறருக்கு கொடுத்து மகிழ்ந்த ஸஹாபாக்கள் இந்த தொடர் முற்றுகையில் எவ்வளவு சோகத்தை அனுபவித்திருப்பார்கள் என்று நாம் சொல்லவேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு நபியவர்கள், ஸஹாபாகள் சந்தித்த எந்தப்போர்முனையை எடுத்துக்கொண்டாலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பதற்கும், அவர்கள் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கும் ஸஹாபாக்கள் செய்த தியாகங்களுக்கு கட்டியம் கூறுவதாகவே உள்ளது.


ஸஹாபாக்கள் விடயத்தில் அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத்தினர் : 

ஸஹாபாக்கள் பற்றிய அஹ்லுஸ்ஸூன்னாக்களின் கொள்கை அல்குர்ஆன், அஸ்ஸூன்னா ஸஹாபாக்கள் பற்றிச் சொல்வதற்கு முழுக்க முழுக்க உடன்பட்டிருப்பதையும் அல்-குர்ஆன், அஸ்ஸூன்னா ஸஹாபாக்கள் பற்றிச்சொல்வதையே அவர்கள் பற்றிய தங்களின் கொள்கையாக அமைத்திருப்பதையும் அவதானிக்கலாம். ஸஹாபாக்கள் விடயத்தில் அஹ்லுஸ்ஸூன்னாக்களின் கொள்கையை பின்வருமாறு நிரல்படுத்த முடியும்.

01) ஸஹாபாக்கள் நீதமானவர்கள் என்று நம்புதல். 
அவர்களின் சிறப்புக்கள், சிறப்பில் அவர்கள் முந்தியவர்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளுதல். அஹ்லுஸ்ஸூன்னாக்கள் அல்லாஹ்வும் அவனது தூதரும் ஸஹாபாக்கள் பற்றிச்சொல்லும் சிறப்புக்களை உறுதிப்படுத்துகின்றனர். மேலும் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் இந்த உலகத்தில் சிறந்த ஒரு சமுதாயம் என்றால் அது ஸஹாபிய சமுதாயம்தான். அவர்களைப் போன்று ஒரு சமுதாயம் ஒரு போதும் வராது. எனது சமுதாயத்திலே மிகவும் சிறந்தவர்கள் நான் வாழும் இந்த நூற்றாண்டில் வாழ்பவர்கள்… என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)

ஸஹாபாக்களை அல்லாஹ் தனது தூதரோடு தோழமை கொள்வதற்காய் தேர்ந்தெடுத்தான். அவர்கள் எவருமே செய்யாத தியாகங்களை இஸ்லாத்திற்காக செய்திருக்கின்றனர். அவர்கள் செய்த தர்மங்களோடு அல்லது தியாகங்களோடு எங்கள் அமல்களை ஒப்பிட முடியாது. அந்தளவுக்கு அவர்கள் உயர்வான இடத்திலிருக்கிறார்கள்.

02) ஸஹாபாக்களை நேசித்தல்:
ஸஹாபாக்கள் எவரையும் கோபிக்காமல் அவர்கள் அனைவர் மீதும் அன்பு பாராட்டுவதும் நேசம் கொள்வதும் அஹ்லுஸ்ஸூன்னாக்களின் பிரதானமான அடிப்படைகளில் ஒன்றாகும். முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளர்களாக இருக்கிறார்கள். நன்மையை ஏவுகிறார்கள் தீமையைத் தடுக்கிறார்கள். (9:71)

முஃமீன்கள் பற்றி குர்ஆன் இப்படிச்சொன்னால் எல்லா முஃமீன்களிலும் பார்க்க சிறந்தவர்களாக திகழும் ஸஹாபாக்கள் விடயத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.! ஸஹாபாக்களை நேசிப்பதை அஹ்லுஸ்ஸூன்னாக்கள் ஒரு வணக்கமாகக் கருதுகின்றனர். ஸஹாபாக்களை வெறுப்பவர்களை வெறுப்பதையும் வணக்கமாகக் கருதுகின்றனர். இவைகளை இறைவனுக்காகச்செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர். இதை ஈமானின் அங்கம் என்றும் ஈமான் இருப்பதற்கான அடையாளம் என்றும் பறைசாற்றுகின்றனர். ஈமானின் அடையாளம் அன்ஸார்களை நேசிப்பதாகும் நயவஞ்சகர்களின் அடையாளம் அன்ஸார்களை வெறுப்பதாகும் (புஹாரி 3784)

அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிய எந்த மனிதனும் அன்ஸார்களை வெறுக்கமாட்டான் (முஸ்லிம் 76)

ஸஹாபாக்களை நேசிப்பதன் சிறப்பு அதன் அவசியம் பற்றி அஹ்லுஸ்ஸூன்னா இமாம்கள் சொல்லும் கருத்துக்களை இமாம் அல்லாலகாயி அவர்கள் அஹ்லுஸ்ஸூன்னாக்களின் கொள்கைகளை விளக்கும் வகையில் எழுதிய ஷரஹூ உஸூலி இஃதிகாதி அஹ்லிஸ்ஸூன்னதி வல் ஜமாஆ என்ற நூலில் தனியான ஒரு பாடமிட்டுத் தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுவது பிரயோசனம் தரும் என்று கருதுகின்றேன். குபைசதுப்னு உக்லா சொல்கிறார்:
ஸஹாபாக்கள் ஒவ்வொருவரையும் நேசிப்பது இறைதூதரின் வழிமுறையாகும்.
( ( شرح أصول إعتقاد أھل السنة والجماعة 7:1240
ஹஸன் (ரழி) அவர்களிடம் அபூபக்ர் (ரழி) உமர் (ரழி) ஆகியோரை நேசிப்பது ஸூன்னத்தா? என்று கேட்கப்பட்டது. அதற்கு இமாமவர்கள் இல்லை. அவர்களை நேசிப்பது பர்ழு (அதாவது ஸூன்னத் அல்ல கடமை) என்றார்கள்.
( (شرح أصول إعتقاد أھل السنة والجماعة 7:1239
அலி (ரழி) ஆயிஷா (ரழி) மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள் அபூபக்ர் (ரழி) உமர் (ரழி) போன்றோரை நேசிப்பதும் அவர்களின் சிறப்புக்களை தெரிந்து கொள்வதும் நபிவழியாகும்.
( ( شرح أصول إعتقاد أھل السنة والجماعة 7:1239
இமாம் தஹாவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்ளூ நாம் நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அனைவரையும் நேசிப்போம். அவர்களில் எவர் மீது காட்டும் நேசத்திலும் நாம் கவனக்குறைவாக இருக்கமாட்டோம். அவர்களில் எவரை விட்டும் நாம் நீங்க மாட்டோம், அவர்களை கோபிப்பவர்களை நாம் கோபிப்போம். மேலும் அவர்களை மோசமாக விமர்சிப்பவர்களையும் நாம் கோபிப்போம் அவர்கள் விடயத்தில் நல்லதையே சொல்வோம். அவர்களை நேசிப்பது மார்க்கம், ஈமான், நல்லகாரியம், அவர்களை கோபிப்பது நிராகரிப்பு, நயவஞ்சகம், எல்லை மீறுதல் ஆகும்.
( (العقيدة الطحاوية مع شرحھا لابن أبي العز ص 289
இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் உஸ்மான் (ரழி) அலி (ரழி) போன்ற அனைவரையும் நேசிப்பதும் இவர்கள் இருவரையும் விட அபூபக்ர் (ரழி) உமர் (ரழி) ஆகியவர்களை முதன்மைப்படுத்துவதும் ஸூன்னத்தாகும் ( (مجموع الفتاوى 3:408 மக்களுக்கு மத்தியில் ஸஹாபாக்களின் சிறப்புக்களை பரப்புவதையும் அவர்களைக் குறைகாண்பதைத் தவிர்ப்பதையும் அஹ்லுஸ்ஸூன்னாக்கள், ஸஹாபாக்களை நேசிப்பதின் ஓர் அங்கமாக கருதுகின்றனர். தங்கள் சிறார்களை ஸஹாபாக்களை நேசிக்கப் பழக்குகின்றனர்.

ஸஹாபாக்களை கௌரவிக்கக்கூடியவர்களாக உருவாக்கினர், உருவாக்குகின்றனர். இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் முன்சென்ற நல்லடியார்கள் அபூபக்ரையும் (ரழி) உமரையும் (ரழி) நேசிப்பதை குர்ஆனில் ஒரு ஸூராவை கற்றுக்கொடுப்பதைப்போல தங்கள் சிறார்களுக்குக் கற்பித்தனர்.
(7ஃ ( شرح أصول إعتقاد أھل السنة والجماعة 1240
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தான் அடைந்து கொள்ளும் ஒரு சமூகத்தை நேசிப்பவன் நிலை பற்றிக்கேட்டார் அதற்கு நபியவர்கள் ஒவ்வொரு மனிதனும் அவன் நேசிப்பவர்களோடு இருப்பான்|| என்றார்கள். (புஹாரி 6169)

இந்த நபிமொழியை உணர்ந்த அஹ்லுஸ்ஸூன்னாக்கள் வரலாறு நெடுகிலும் ஸஹாபாக்களை நேசிப்பதிலும் அவர்களுக்கு எதிராக பேசுபவர்களை எதிர்ப்பதிலும் அதிக பிரயத்தனம் எடுத்துக்கொண்டனர்.

03) ஸஹாபாக்களுக்காக பிரார்த்தித்தல்:
அல்-குர்ஆனில் அல்லாஹ் முன்சென்ற நல்லடியார்களுக்காக நம்மைப் பிரார்த்திக்குமாறு சொல்கிறான் இதனால் அஹ்லுஸ்ஸூன்னாக்கள் ஸஹாபாக்களுக்காக பிரார்த்திப்பதை தங்களின் கொள்கைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளனர்.
மேலும் அவர்களுக்குப்பின் வந்தார்களே அத்தகையவர்கள் எங்கள் இரட்சகனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்தி விட்டார்களே அத்தகைய எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னித்தருள்வாயாக விசுவாசங்கொண்டவர்களைப்பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்ளூ மிக்க கருணையுடையவன் என்று (பிரார்த்தனை செய்தும்) கூறுவார்கள். (59:10) 

04) ஸஹாபாக்கள் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் அல்லர்: என்று அஹ்லுஸ்ஸூன்னாக்கள் நம்புகின்றனர். அல்லாஹ்வின் தூதர் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர். அவர் தவறு செய்தபோது இறைவன் அதைச் சுட்டிக்காட்டினான் ஆனால் ஸஹாபாக்கள் அவ்வாறில்லை. அவர்களும் சாதாரண மனிதர்கள் போல் தவறுகள் செய்யலாம். என்றாலும், அவர்கள் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுமளவு சிறப்பும் அதற்கு போதுமான வணக்க வழிபாடுகளையும் கொண்டவர்கள் என்று நம்புகின்றனர்…
05) ஸஹாபாக்களின் வாழ்க்கையை படிப்பினை பெறும் நோக்கில் படித்தல், அதிலிருந்து படிப்பினைகளை பெறல், அவர்களை நல்ல விடயங்களில் பின்பற்றுதல்.
06) ஸஹாபாக்களுக்கு மத்தியில் நடந்த பிரச்சினைகளில் நாவடக்கத்தோடு நடந்து கொள்ளல்:
ஸஹாபாக்கள் விடயத்தில் குறை காண்பவர்கள் பெரும் பாலும் ஸஹாபாக்களுக்கு மத்தியில் நடந்த சில பிரச்சனைகளை சிறந்த ஊடகமாகக் கையாளுகின்றனர். ஆனால் அஹ்லுஸ்ஸூன்னாக்கள் ஸஹாபாக்களுக்கு மத்தியில் நடந்த பிரச்சனைகளில் மௌனிகளாக நாம் இருப்பதுதான் நமது ஈமானுக்கு பாதுகாப்பு என்று கருதுகின்றனர். உமர் (ரழி) இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அலி (ரழி) உஸ்மான் (ரழி) ஸிப்பீன் யுத்தம் தொடர்பாக வினவப்பட்டது அதற்கவர்கள்ளூ எனது கரங்களை அந்த ரத்தத்தைவிட்டும் அல்லாஹ் தடுத்துவிட்டான் எனது நாவை அந்த ரத்தத்தில் நனைத்துக்கொள்வதை நான் வெறுக்கிறேன் என்றார்கள்.
(5/ابن سعد في الطبقات ( 307
அலி (ரழி) முஆவியா (ரழி) அவர்களுக்கு மத்தியில் நடந்தது பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு இமாமவர்கள் ‘நிச்சயமாக அவர்கள் விடயத்தில் நல்லதைத்தவிர வேறு எதையும் சொல்லமாட்டேன். அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் அருள்புரிவானாக என்றார்கள்.

( 1/الخلال في السنة ( 460

அபூ உஸ்மான் (ரழி) அஸ்ஸாபூனி (ரஹ்) அவர்கள் அஹ்லுஸ்ஸூன்னாக்களின் கொள்கையை தெளிவுபடுத்தும் போது சொல்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு மத்தியில் நடந்தவற்றில் நாம் மௌனமாக இருக்கவேண்டும் என்று அவர்கள் கருதுவதோடு, ஸஹாபாக்களைக் குறைகாணும் விதத்திலோ அல்லது அவர்களைக் குறைத்து மதிப்பிடும் விதத்திலோ பேசுவதிலிருந்தும் எமது நாவுகளைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். மேலும் ஸஹாபாக்கள் அனைவரையும் நேசிக்க வேண்டும். அவர்கள் அனைவருக்காகவும் அருள் வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
عقيدة السلف أصحاب الحديث ص 294

இது போன்ற கருத்துக்களை அதிகமான அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தக்கருத்தை அறிஞர்கள் பின்வரும் காரணங்களுக்காகவே சரியானதாகக் காண்கின்றனர். இந்தப்பிரச்சினைகளில் தொடர்புடைய இரு சாராரும் மரணித்து விட்டார்கள். அவர்களில் ஒரு சாராரை நல்லவர்கள் என்றும் மற்றவர்கள் கெட்டவர்கள் என்றும் அல்லது ஒரு சாரார் சரியாகச் செய்தார்கள் மற்றவர்கள் தவறிழைத்துவிட்டார்கள் என்றும் சொல்வதனால் எந்த பிரயோசனமும் நமக்கு இல்லை. ஜமல் போர் தற்செயலாக நடந்தது அதாவது திட்டமிட்டு அது மேற்கொள்ளப்படவில்லை. சமாதானமாக இருப்பது என்றே இரு சாராரும் முடிவு செய்தனர் என்றாலும் கயவர்களான ஷீஆக்களின் மூதாதையர் ஸபஇய்யாக்களால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டதே ஜமல் யுத்தம். இதனால் தான் அலி (ரழி) அவர்கள் தல்ஹா (ரழி) கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டபோது அழுது விட்டு இதற்கு இருபது வருடங்களுக்கு முன் நான் மரணித்திருக்கக் கூடாதா என்றார்கள். யுத்தம் முடிந்ததும் அதில் மரணித்தவர்களுக்காக அனைவரும் கைசேதப்பட்டார்கள். ஹஸன் (ரழி) அவர்கள் இந்த யுத்தம் நடத்தியதற்காகக் கண்டனத்தைத் தெரிவித்தார்கள். எனவே இங்கே எவர் மீதும் குற்றம் சுமத்த முடியாத ஒரு நிலை காணப்படுகிறது.

ஸிப்பீன் யுத்தத்தை பொறுத்த வரைக்கும் இஜ்திஹாதின் அடிப்படையில் நடந்ததாகும். ஸஹாபாக்கள் அனைவருமே இஜ்திஹாத் செய்யும் அந்தஸ்தைப்பெற்றவர்கள், அதற்கு தகுதியானவர்கள் அலி (ரழி) அவர்கள் தனது முடிவை சரியானதாகக் கண்டார்கள். முஆவியா (ரழி) அவர்களும் தனது முடிவை சரியானதாகக் கண்டார்கள். இருவரின் முடிவும் வித்தியாசமானதாக இருந்ததால் பிரச்சினை வலுப்பெற்றது.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: ஒரு ஹாகிம் முயற்சி செய்து அதில் சரியான முடிவை அடைந்து கொண்டால் அதற்கு இரண்டு கூலிகளும் அதில் தவறான முடிவை அடைந்து கொண்டால் அதற்கு அவருக்கு ஒரு கூலியும் வழங்கப்படும். (அபூதாவுத், திர்மிதி, நஸஈ, இப்னுமாஜா)

இஜ்திஹாத் செய்யும் தகுதியைப் பெற்று அதை செய்யும் ஒவ்வொருவருக்கும் கூலியுண்டு என்று நபியவர்கள் சொன்னார்கள். கூலியில் வேண்டுமானால் வித்தியாசமிருக்கலாம், ஆனால் கூலி உண்டு. இப்படி நபியவர்களே சொன்னதற்குப் பிறகு நாம் ஒரு தரப்பாரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதும், காபிர்கள் என்று சொல்வதும் அறிவுடைமையாகாது.

இந்தப்போராட்டங்களில் கலந்து கொண்ட ஸஹாபாக்களில் அதிகமானவர்கள் சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்டவர்கள். அவர்களைப் பொருந்திக் கொண்டுவிட்டதாக அல்லாஹ் சொல்கிறான் இறைவன் முக்காலங்கள் பற்றிய அறிவு படைத்தவன், அவனுக்கு இப்படியான பிரச்சினைகள் நடக்கும் என்பது தெரியும். அப்படி தெரிந்திருந்தும் அவன் அவர்களைப் பொருந்திக் கொண்டதாகச் சொல்லும் போது அவர்களை இறைவனின் அருளிலிருந்து வெளியானவர்கள் என்று சொல்வது முறைகேடான செயலாகும்.

ஒரு சில ஸஹாபாக்கள் தவறிழைத்தாலும் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் அளவுக்கு நன்மைகள் அவர்களிடம் அதிகமாக இருக்கிறது. எனவே அவர்களை மறுமைப் பாக்கியத்திலிந்து தூரமாக்குவது வக்கிரபுத்தியின் வெளிப்பாடாகும்.

ஸஹாபாக்கள் யுத்தங்கள் செய்தாலும் தங்களின் தவறுகளை உணர்ந்து இறைவன் சொல்வதைப்போன்று தங்களுக்கு மத்தியில் சமாதானம் செய்து கொண்டனர். உங்களுடைய சகோதரர்களுக்கு மத்தியில் பிரச்சினை ஏறபட்டால் அதை சமாதானமான முறையில் தீர்த்து வையுங்கள். (49:9)

07) ஸஹாபாக்கள் விடயத்தில் நாம் எல்லை மீறமாட்டோம்:
ஸஹாபாக்கள் எல்லோரையும் மதிக்கவேண்டும். அதே நேரம் அவர்களில் ஒரு சிலரை மெச்சுவதில் எல்லை மீறுவதும் மற்றும் சிலரை கீழ்த்தரமாக விமர்சிப்பதும் அஹ்லுஸ்ஸூன்னாக்களின் வழிமுறையன்று. ஸஹாபாக்கள் எல்லோரையும் நேசிக்கவேண்டும். அவர்களில் எல்லை மீறிவிடக்கூடாது என்பதில் அஹ்லுஸ்ஸூன்னாக்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஸஹாபாக்களை, மனிதனை மிஞ்சிய செயற்பாடுகளின் சொந்தக்காரர்களாக காட்டுவதோ, இறைவனுக்குச் செய்யவேண்டிய கடமைகளை அவர்களுக்குச் செய்வதோ, அவர்களை எல்லை மீறிப்புகழ்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும். எது செய்வதானாலும் திருந்தச்செய்வதும் நடு நிலைபேணுவதுமே அஹ்லுஸ்ஸூன்னாக்களின் சிறப்பம்சமாகும்.

08) ஸஹாபாக்கள் எல்லோருமே ஒரே அந்தஸ்தில் இல்லை:
அஹ்லுஸ்ஸூன்னா வல்ஜமாஅத்தினர் எல்லா ஸஹாபாக்களையும் நேசிக்க வேண்டும் என்பதிலும், அவர்கள் அனைவரும் சிறப்புக்குரியவர்கள் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் எல்லா ஸஹாபாக்களும் ஒரே அந்தஸ்தில் இல்லை. அவர்களில் சிலர் சிலரைவிட அதிக சிறப்பு பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

இதன்படி ஸஹாபாக்களுக்கு மத்தியில் அந்தஸ்தின் அடிப்படையில் உள்ள வேறுபாடு பின்வருமாறு நிரல்படுத்தப்படுகின்றது.
01- அபூபக்ர் (ரழி) .
02- உமர் (ரழி) .
அம்ரிப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்ளூ நான் நபி (ஸல்) அவர்களிடம் மனிதர்களில் உங்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவர் யார் என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள் ஆயிஷா (ரழி) என்றார்கள். பிறகு ஆண்களில் யார்? என்று கேட்டேன். அவருடைய தந்தை (அபூபக்ர் (ரழி)) என்றார்கள் பிறகு யார்? என்றேன் அதற்கவர்கள் உமருப்னு கத்தாப் (ரழி) என்றார்கள்.. (புஹாரி 3662, முஸ்லிம் 2384)

இந்த சமுதாயத்தில் நபியவர்களுக்குப் பிறகு மிகவும் சிறப்புக்குரியவர் அபூபக்ர் (ரழி). அதன் பிறகு உமர் (ரழி). என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

03- உஸ்மான் (ரழி) .
இப்னு உமர் (ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் நபி (ஸல்) அவர்கள் உயிரோடிருந்தார்கள் ஸஹாபாக்கள் அதிகமாக இருந்தார்கள். இந்தவேளை நாம் இந்த சமுதாயத்தில் மிகவும் சிறந்தவர் அபூபக்ர் (ரழி) பின்பு உமர் (ரழி) .பின்பு உஸ்மான் (ரழி) என்று கணிக்கக்கூடியவர்களாக இருந்தோம். நான்காவதாக யாரையும் சொல்லாமல் மௌனமாக இருப்போம். (அஹ்மத் 4626)

இதே கருத்தை சொல்லும் இப்னு உமர் (ரழி) . அறிவிக்கின்ற இன்னுமொரு செய்தி புஹாரியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

04- அலி (ரழி) .
இந்த சமுதாயத்தில் மிக சிறப்புக்குரியவர்கள் என்ற இடத்தை வகிப்பவர்கள் அபூபக்ர் (ரழி), உமர் (ரழி). என்பதில் ஐயமில்லை அறிஞர்கள் அதில் ஒரு மித்த கருத்திலிருக்கின்றனர். ஆனால் மூன்றாம் இடத்தை வகிப்பவர் உஸ்மான் (ரழி) . அவர்களா? அல்லது அலி (ரழி) . அவர்களா? என்பதில் சிறு கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஆனால் பெரும்பான்மையான அஹ்லுஸ்ஸூன்னாக்கள் மூன்றாமிடம் கலீபா உஸ்மான் (ரழி) அவர்களுக்குரியது நான்காமிடமே கலீபா அலி (ரழி) அவர்களுக்குரியது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். ஏனெனில் ஸஹாபாக்கள் அனைவரும் அலி (ரழி) அவர்களைவிட உஸ்மான் (ரழி) அவர்களையே முற்படுத்தினர். அதுபோன்று உஸ்மான் (ரழி) கலீபாவாக்கப்பட்டபோது இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள்
மீதமிருந்தவர்களில் மிகச்சிறந்தவர் தலைவராக்கப் பட்டிருக்கிறார்.
السنة للخلال ص 384

இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்: அஹ்லுஸ்ஸூன்னாக்களின் அறிஞர்கள், தலைவர்கள், படைவீரர்கள், வணக்கசாலிகள் அனைவருமே இந்த சமூகத்தில் சிறந்தவர் அபூபக்ர் (ரழி) பின்பு உமர் (ரழி) பின்பு உஸ்மான் (ரழி). பின்பு அலி (ரழி) என்று சொல்வதில் ஏகோபித்த முடிவில் இருக்கின்றனர்
(3/ مجموع الفتاوى 406)

05- உமர் (ரழி) அவர்களால் தனக்குப்பின் ஆட்சிக்கு வருபவரை தீர்மானிப்பதற்கு அமைக்கப்பட்ட 06 பேர் கொண்ட ஆலோசனை சபையில் உஸ்மான் (ரழி), அலி (ரழி) தவிர்ந்தவர்கள்.

உமர் (ரழி) . அவர்கள் மரணிக்கும் போது தனக்குப்பின் ஆட்சிசெய்பவரை தீர்மானிக்கும் பொறுப்பை 06 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இதற்கு எந்த ஸஹாபியும் முரண்படவில்லை என்பதால் இது ஸஹாபாக்களின் ஏகோபித்த முடிவாகக் கொள்ளப்படுகிறது. இதனால் நான்கு கலீபாக்களிற்கு அடுத்ததாக சிறப்புக்குரியவர்களாக இவர்கள் கருதப்படுகின்றனர்.

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரழி), தல்ஹா (ரழி), ஸூபைர் (ரழி), உஸ்மான் (ரழி), அலி (ரழி). போன்றோர் இந்தக் குழுவில் அங்கம் வகித்தனர்.

06- சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் செய்யப்பட்ட பிரபல்யமான பத்துப்பேர் அல்லாத சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் செய்யப்பட்ட ஏனைய ஸஹாபாக்கள்:
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இவர்களின் பெயரைக்கூறி சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் கூறினார்கள். இது இவர்கள் ஏனையவர்களைவிட சிறப்புக்குரியவர்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

07- பத்ர் போரில் கலந்துகொண்ட ஸஹாபாக்கள்:
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறுவதாக அல்லாலகாயி சொல்கிறார்ளூ….பின்பு (சிறப்புக்குரியவர்கள்) பத்ரில் கலந்து கொண்ட முஹாஜிர்கள், பின்பு பத்ரில் கலந்து கொண்ட அன்ஸார்கள் ( (شرح أصول اعتقاد أھل السنة

08- மக்காவெற்றிக்கு முன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள்:
அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? மேலும் வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவர்களின் வாரிசுரிமை அல்லாஹ்வுக்கே உரியது. உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன்னர் யார் தன் பொருளை செலவு செய்து யுத்தமும் புரிந்தாரோ அவருக்கு உங்களில் யாரும் நிகராகமாட்டார். (முந்திய) அவர்கள் (மக்கா வெற்றிக்குப்) பிறகு செலவும் செய்து போரிட்டார்களே அத்தகையோரைவிட பதவியால் மிக மகத்தானவர்கள் (எனினும்) ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் நன்மையையே வாக்களித்திருக்கிறான். மேலும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவன். (57:10)

09- ஏனைய ஸஹாபாக்கள்:
நாம் இதற்கு முன்னால் குறிப்பிட்ட எந்தக்குழுவிலும் சேராமல் மீதமாக இருக்கும் ஸஹாபாக்கள் அவர்களுக்கு பின் வந்த தாபியீன்களைவிட சிறப்புக்குரியவர்கள் என்பதில் அறிஞர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்கிறார்கள்: மனிதர்களில் மிகவும் சிறந்தவர்கள் என்னுடைய இந்த நூற்றாண்டில் வாழ்பவர்கள்… (புஹாரி)

அந்தஸ்து அடிப்படையில் ஸஹாபாக்களின் படித்தரங்கள் பற்றிய இந்த ஒழுங்கு படுத்தல் முடிந்தவரை முயற்சித்து வழங்கப்பட்டுள்ளது. சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவைகள் தாக்கம் செலுத்தாது என்றே கருதுகிறேன். அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

ஸஹாபாக்களைக் குறை கண்டால் அல்லது காபிர்கள் என்று சொன்னால்:
ஸஹாபாக்களைக் காபிர்கள் என்றோ, உள்ளொன்றுவைத்து புறமொன்றாக நடப்பவர் என்றோ விமர்சிப்பவர்கள். பல அபாயகரமான விளைவுகளுக்குத் தங்களை உள்ளாக்கிக்கொள்ள நேரிடும். அவற்றை பின்வருமாறு அவதானிக்கலாம்.

01) இறைவனை மிஞ்சிய செயற்பாடு:
அல்லாஹ் ஸஹாபாக்களில் பொரும்பாலோரை சுவர்க்கவாதிகள் என்று சொல்கிறான் அவர்களைப் பொருந்திக் கொண்டதாகக் குறிப்பிடுகிறான். அல்லாஹ் பொருந்திக்கொண்டதாக சொல்லுகின்ற மனிதர்களை நாம் மோசமானவர்கள் என்று சொன்னால் அல்லது அவர்கள் நயவஞ்சகத்தோடு நடந்து கொண்டார்கள் என்று விமர்சித்தால் நாம் இறைவனை மிஞ்சிசெயற்பட்டதாக அமையும். அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாப்பானாக.

02) அல்-குர்ஆன், அஸ்ஸூன்னாவை பொய்ப்பித்தல்:
அல்-குர்ஆன், அஸ்ஸூன்னா ஸஹாபாக்களை புகழ்ந்து சொல்கிறது. அவர்களை நேசிப்பது ஈமானின் அடையாளம் என்று சொல்கிறது. அவர்களுடன் எங்கள் தர்மங்களையும் தியாகங்களையும் ஒப்பிடமுடியாது. அவர்களின் தர்மம் சிறியதாக இருந்தாலும், நன்மை அதிகமாகும் எனும் கருத்தை முன்வைக்கிறது. இவ்வாறு புகழப்பட்ட ஸஹாபாக்கள் விடயத்தில் குறை காண்பதும் அவர்களை மோசமானவர்களாக சித்தரிப்பதும் அல்குர்ஆனையும் அஸ்ஸூன்னாவையும் நிராகரிப்பதாக அமையும். அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக.

03) அல்லாஹ் அவன் தூதரை கேவலப்படுத்தியதாக அமையும்:
இந்த உலகத்தில் மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவராக அல்லாஹ் நபியவர்களைத் தேர்வு செய்கிறான். அவருக்குப்பின் நபி வருவதில்லை, அவரே இறுதித்தூதர், அவருக்கே மறுமையில் எல்லா மக்களுக்காகவும் கேள்வி கணக்கை துரிதப்படுத்துமாறு செய்யும் சிபாரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் மீது அல்லாஹ்வும் அவனது அமரர்களும் ஸலவாத்துச்சொல்கிறார்கள் எனவே மக்களே நீங்களும் ஸலவாத்துச்சொல்லுங்கள் என்று அல்குர்ஆன் சொல்கிறது…
இவ்வளவு சிறப்புக்களும் பொருந்திய நபியவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட ஸஹாபாக்களை நாம் குறை கண்டால் அல்லாஹ் தன் தூதருக்கு அவரை தூய்மையான அடிப்படையில் பின்பற்றுவதற்கு ஒரு குழுவை ஏற்படுத்தாமலும் அல்லது அவரைச் சூழ இருந்தவர்கள் அவரை ஏமாற்றி உள்ளொன்றும் வெளியொன்றுமாய் நடந்ததை அவருக்கு தெரிவிக்காமலும் அன்னாரை கேவலப்படுத்தியதாகவே அமையும். அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக.

04) ஸஹாபாக்களை பயிற்றுவிப்பதில் நபியவர்கள் தோல்வி கண்டார்கள்:
நபியவர்கள் இந்த உலகத்தில் பயிற்றுவிப்பாளர்கள் எல்லோரையும் விட மிகச்சிறந்த பயிற்றுவிப்பாளராகத் திகழ்ந்தார்கள். மறுமையின் நிகழ்வுகளையும் இவ்வுலகத்தின் போலித் தன்மையையும் எடுத்துக்காட்டி மக்கள் மனங்களில் இஸ்லாத்தை உறுதிப்படுத்துவது இறைவன் துணையினால் நபியவர்களுக்குக் கைவந்த கலையாகவிருந்தது.
நபி (ஸல்) அவர்கள் மரணித்த பின் குறிப்பிட்ட 10பேர் அல்லது அதைவிட சற்று கூடுதலானவர்களைத் தவிர பெரும்பான்மையான ஸஹாபாக்கள் மதம்மாறிவிட்டார்கள் என்று சொன்னால், நபி (ஸல்) அவர்கள் 23வருட தன்னுடைய பயிற்றுவிப்பில் தோல்வி கண்டுவிட்டார்கள் என்பதுதானே அர்த்தம். நபியவர்களுக்கே பயிற்றுவிக்க முடியவில்லை என்றால் யாரால்தான் முடியும். அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக.

05) தங்களை பொய்யர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்வர்:
ஒருவர் ஸஹாபாக்களை பொய்யர்கள், நயவஞ்சகர்கள், நடித்து வாழ்ந்தார்கள், மார்க்கத்தை மறைத்தார்கள் என்று சொல்வதே அவர் பொய்யர் என்பதற்கு போதுமான ஆதாரமாகும். ஏனெனில் அல்குர்ஆனும், அஸ்ஸூன்னாவும் புகழ்ந்து சொன்ன மக்கள் பொய்யானவர்களாக நிச்சயமாக இருக்கமுடியாது. எனவே யார் இப்படி விமர்சிக்கிறார்களோ அவர்கள்தான் பொய்யர்களாக இருக்கமுடியும்.

தர்க்கரீதியாக நாம் யோசித்தால் நிச்சயமாக ஸஹாபாக்கள் நயவஞ்சகர்களாக இருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஏனெனில் ஒரு மனிதனிடம் மிகவும் பெறுமதியாக இருப்பது அவனுடைய உயிரும் பொருளாதாரமும்தான். அவனிடம் இந்த இரண்டையும் விட பெருமதிவாய்ந்த எதுவும் இருக்கமுடியாது.

ஸஹாபாக்கள் இந்த இரண்டையும் இறைவனுக்காக அவனின் மார்க்கம் வாழவேண்டும் என்பதற்காகத் தியாகம் செய்தார்கள். நபியவர்களை பாதுகாப்பதற்காக பல போராட்டக் களங்களை சந்தித்தார்கள் பல்லாயிரம் சொத்துக்களை இழந்தார்கள், பல்லாயிரம் உயிர்களைப் பலி கொடுத்தார்கள், தங்கள் தேவையை விட மார்க்கத்தின் தேவையை முதன்மைப்படுத்தினார்கள், தன்னை விட தன் சகோதரனை அதிகமாகக் கவனித்தார்கள், தன் சொத்தின் சரிபாதியை மக்காவில் இருந்து வந்தவருக்கு அவர் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காகக் கொடுத்தார்கள்.

இதையெல்லாம் அவர்கள் நடிப்பிற்காகத்தான் செய்தார்களா? ஒரு மனிதன் நடித்துக்கொண்டு தன் உயிரையே மாய்த்துக் கொள்வானா? தன் உயிர் போவதைவிட நபியின் காலில் முற்தைப்பதை கூட மிகவும் வேதனைக்குரியதாக கருதினார்களே, இதுவும் நடிப்பின் வெளிப்பாடா? நிச்சயமாக இருக்க முடியாது. எனவே யாரெல்லாம் ஸஹாபாக்களை நடிகர்கள் என்றும் நயவஞ்சகர்கள் என்றும் விமர்சிக்கின்றார்களோ அவர்கள்தான் பொய்யர்கள் நயவஞ்சகம் கொண்ட கல்நெஞ்சர்கள்.

06) இஸ்லாமிய வரையறைகளையும் போதனைகளையும் மீறியசெயல்:
ஸஹாபாக்கள் மரணித்துவிட்டார்கள். மரணித்தவர்கள் விடயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டியுள்ளதோ அதை மீறும் போது மரணித்தவர்கள் விடயத்தில் நாம் இஸ்லாமிய வரையறைகளை மீறியவர்களாகக் கருதப்படுவோம்.

மரணித்தவர்களின் நல்லதையே பேசுதல்:
நபி (ஸல்) அவர்கள் மரணிதத்வர்களின் நல்லதையே பேசுங்கள் என்றார்கள். மரணித்தவர்களை ஏசாதீர்கள். ஏனெனில், அவர்கள் அனைவரும் எதைச்செய்தார்களோ அதை இறைவனிடம் அடைந்துகொண்டார்கள். (புஹாரி 1329)

மரணித்தவர்களின் பாவங்களை மன்னிக்குமாறு பிரார்த்தித்தல்:
மையவாடிகள் பக்கம் செல்லும் போது மரணித்திருப்பவர்களுக்காக பாவமன்னிப்புக்கோருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். மையவாடிகளின் பக்கம் செல்லும் ஒருவர் பின்வரும் பொருள்பட அமைந்த துஆவை ஓத வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்கள்.

இந்த கப்ருகளில் வாழும் முஃமீன்கள், முஸ்லிம்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக. அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாமும் உங்களுடன் வந்து சேர்ந்துவிடுவோம் அல்லாஹ் எங்களையும் உங்களையும் மன்னிப்பானாக. (முஸ்லிம் 2302)

அல்குர்ஆனில் அல்லாஹ் முஃமீன்களின் பண்பு தங்களைவிட முந்திச்சென்ற முஃமீன்களுக்காக பிரார்த்திப்பதாகும் என்று கூறுகிறான்.
மேலும் அவர்களுக்குப்பின் வந்தார்களே அத்தகையவர்கள் எங்கள் இரட்சகனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்தி விட்டார்களே அத்தகைய எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னித்தருள்வாயாக. விசுவாசங்கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்: மிக்க கருணையுடையவன் என்று (பிரார்த்தனை செய்தும்) கூறுவார்கள் (59:10)

பொதுவாக மரணித்தவர்கள் விடயத்தில் இவ்வாறு நடந்து கொள்ளுமாறு இஸ்லாம் சொல்லியிருக்க இஸ்லாத்தை எமக்காக பாதுகாத்துத்தந்த எம் பெருமானாரின் தோழர்கள் விடயத்தில் நலல் முறையில் நடந்து கொள்வதே பொருத்தமானதாகும்.

ஸஹாபாக்கள் விடயத்தில் வழிகெட்டுப்போனவர்கள்:

வரலாற்றில் ஸஹாபாக்கள் விடயத்தில் பலர் மோசமான கருத்தைக்கொண்டவர்களாக இருந்த போதிலும் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய இரண்டு குழுக்கள் இந்த விடயத்தில் மிகவும் பிரபல்யம் அடைந்தன.
01) றாபிழாக்கள்
02) ஹவாரிஜ்கள்

றாபிழாக்கள்:
ஷீஆக்களில் எல்லை மீறிய ஒரு கூட்டத்தினரே றாபிழாக்களாகும் இன்று உலகத்தில் வாழும் ஷீஆக்களில் 95-சதவிகிதமானோர் றாபிழாக்களே. மீதமிருக்கின்ற 5-சதவிகிதமானவர்களில் தான் இஸ்மாயீலிய்யா, ஸைதிய்யா, நுஸைரிய்யா போன்றவர்கள் உள்ளனர். ஆனாலும் இவர்களும் றாபிழாக்களின் கருத்துக்களையும், திட்டங்களையும் உள்வாங்கிக் கொண்டு தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொண்டுள்ளனர். இதனால்தான் இமாம்களும் அறிஞர்களும் இன்றிருப்போரை ஷீஆக்கள் என்று சொல்வதற்கு பதிலாக றாபிழாக்கள் என்று அழைக்கின்றனர். எல்லோரும் கொள்கையில் ஒற்றுமைப்படுவதனால் இது அவர்களுக்கு ஏற்றமானதொன்றாகவும் மாறிவிட்டது எனலாம்.

றாபிழா என்றால் நிராகரித்தவர், மறுத்தவர் என்பது பொருள். இவர்கள் அபூபக்ர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) அவர்களின் சிறப்புக்களை மறுத்ததாலேயே இவர்களுக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஸஹாபாக்களில் குறிப்பிட்ட சிலரைத் தவிர மற்ற அனைவருமே காபிர்கள் என்பது அவர்களின் நிலைப்பாடு. மேலும் ஸஹாபாக்கள் எல்லோரும் நபியவர்களுடன் நடித்துக்கொண்டே வாழ்ந்தார்கள் அவர்களுக்கென்று ஒரு தனியான கொள்கை இருக்கவில்லை. நபியவர்கள் மரணித்தவுடன் அவர்களது நயவஞ்சகம் வெளியானது. அவர்கள் முஸ்லிம்களுக்கு சதி செய்யக் கூடியவர்களாகவும் நிராகரிப்பை வளர்க்கக்கூடியவர்களாகவும் மாறிவிட்டனர். இவ்வாறு ஸஹாபாக்கள் விடயத்தில் பல மோசமான இஸ்லாத்தை விட்டும் தூரப்படுத்தக்கூடிய, எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத பல கொள்கைகளைக் கொண்டிருக்கின்றனர்.

ஸஹாபாக்கள் விடயத்தில் ஷீஆ அறிஞர்கள் குறிப்பிடுகின்ற அபத்தமான கருத்துக்களை தொகுப்பதென்பது மிகவும் கஸ்டமான காரியமாகும். நமக்குக்கிடைத்த கருத்துக்களை மாத்திரம் தொகுப்பதானாலும் பல புத்தகங்கள் எழுதலாம். விரிவை அஞ்சி விட்டுவிடுகிறோம். என்றாலும் ஸஹாபாக்கள் விடயத்தில் அவர்களின் வன்நெஞ்சத்தையும் கொடூர சிந்தனையையும் தெளிவுபடுத்தும் வகையிலும், மற்றவர்கள் அதைப்புரிந்து கொள்வதற்காகவும் அவர்களின் சில கருத்துக்களை மாத்திரம் இங்கே இணைத்துக்கொள்கிறோம்.

இங்கு நாம் குறிப்பிடும் கருத்துக்களில் ஒரு முஸ்லிம் என்பதற்கு மேலே மனிதன் என்ற அடிப்படையில் சொல்லக்கூடாத வெட்கித்துத் தலைகுனிய வேண்டிய பல கருத்துக்கள் உள்ளன. ஷீஆக்களின் உண்மை நிலையை இந்த சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும், அவர்களின் பசுத்தோல் கழற்றப்படவேண்டும். அவர்களின் வஞ்சக முகத்தை எல்லோரும் இனங்காண வேண்டும்  என்ற நிர்ப்பந்தம் மாத்திரம் இல்லையென்றால் நிச்சயமாக நாம் இவைகளை எழுதமாட்டோம். எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.

சிலர் இந்தக் கருத்துக்கள் ஷீஆக்களின் பழைய புத்தகங்களில்தான் உள்ளன. தற்போதைய அவர்களின் நடைமுறையில் இல்லை என்று குறிப்பிடுகின்றனர். இவர்கள் அல்லாஹ்வைப் பயந்துகொள்ள வேண்டும். உண்மையில் இந்தக் கருத்தை ஆய்வு செய்துதான் சொல்கிறார்களா? இவர்கள் சொல்வது உண்மையானால், ஏன் இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருக்கின்ற புத்தகங்களை ஷீஆக்கள் தற்போதும் அச்சிடுகின்றார்கள்? அத்தகைய கருத்துக்களைச் சொன்னவர்களை ஏன் இன்றுவரை தங்கள் இமாம்களாக மதிக்கின்றனர்? அவர்களின் தற்கால அறிஞர்கள் ஏன் இந்தக் கருத்துக்களை ஆதாரமாகக் கொள்கின்றனர்? ஏன் இந்தக கருத்துக்கள் ஷீஆக்களின் மிம்பர் மேடைகளில் முழங்கப்படுகின்றன? என்பதை சற்று நிதானமாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

ஸஹாபாக்களை காபிர்கள் என்றும் அவர்களை சபித்தும் சொல்கின்ற ஷீஆக்களின் அறிவிப்புக்கள் மட்டிட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளன என்பதை ஷீஆ அறிஞர்களே குறிப்பிடுகின்றனர்.

அல்-கர்கி (ஷீஆக்களின் முக்கிய அறிஞர்) கலீபாக்கள் காபிர்கள் என்று சொல்லுகின்ற, அவர்களை சபிக்கின்ற சில அறிவிப்புக்களைக் குறிப்பிட்டு விட்டு சொல்கிறார் இது போன்ற எங்கள் ஷீஆக்களின் புத்தகங்களில் உள்ள செய்திகளை தொகுப்பதற்கு ஒருவர் முனைந்தால் பல வல்யூம்களை அவர் ஒன்று சேர்க்கலாம். ஆனால் அப்போதும் அது முடியாது. அவற்றில் அதிகமானவற்றை குலைனி அவர்கள் தன்னுடைய அல்காபி என்ற நூலிலே குறிப்பிட்டுள்ளார்கள். தெளிவாக சபிக்கின்ற பல செய்திகளும் சபிக்கத்தூண்டுகின்ற பல செய்திகளும் அதிலே உள்ளன.
(نفحات اللاھوت ص 198 )

அல்-மஜ்லிஸி (ஷீஆக்களின் முக்கிய அறிஞர்) சொல்கிறார்: நான் சொல்கிறேன் அபூபக்ர், உமர், இவர்கள் போன்றவர்கள் காபிர்கள் என்று சொல்லும் அறிவிப்புக்கள், அவர்களை சபிப்பதற்கான நன்மைகள், அவர்களிலிருந்து நீங்குதல், அவர்களின் நூதன செயல்களை உள்ளடக்கிய அறிவிப்புக்கள் இந்தப்பாகத்திலோ அல்லது பல பாகங்களிலோ குறிப்பிட்டுவிட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளன.
( 30- بحار الأنوار 399)

ஷீஆக்களின் தற்கால அறிஞர்களில் ஒருவரான அபூ அலி அல்-அஸ்பஹானி தனது فرحة الزھراء ‘ என்ற நூலிலே 33ம் பக்கத்தில் குறிப்பிடுகிறார்: அபூபக்ரையும் உமரையும் காபிர் என்று உறுதிப்படுத்துகின்ற விடயத்தைப்பொறுத்தவரைக்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் (ஷீஆ அறிஞர்களின்) அதிகமான அறிவிப்புக்களில் நிறைந்து காணப்படும் ஒரு விடயமுமாகும்.

ஷீஆக்களின் முக்கிய அறிஞரான அலி இப்னு யூனுஸ் அல்ஆமிலி அபூபக்ர் (ரழி)., உமர் (ரழி)., உஸ்மான் (ரழி). போன்றவர்களைப்பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: உஸ்மான் (ரழி) அவர்களிடம் ஒரு விபச்சாரி தண்டனை வழங்கப்படுவதற்காக கொண்டுவரப்பட்டாள் அவர் அவளோடு தனது இச்சையை தீர்த்துக் கொண்டார் பின்பு அவளை கல்லெறிந்து கொல்லுமாறு ஏவினார். ( 3- ( الصراط المستقيم 30 )

அலி அல் கர்கி சொல்கிறார்: அபூபக்ர், உமர் உள்ளிட்ட நான்கு மனிதர்களை சபித்தே ஜஃபர் அவர்கள் தொழுகையை முடித்து கொள்பவர்களாக இருந்தார்கள். (نفحات اللاھوت ص 12 )

பரம்பரையிலும், வசதி வாய்ப்பிலும் கீழ்த்தரமான அபூபக்ர், உமர், உஸ்மானை, புத்தியுள்ள எந்த மனிதனும் சிறப்பில் முந்தியவர்கள் என்று நம்பமாட்டான். அவர்கள் அறிவிலோ போராட்டத்திலோ முந்தியவர்கள் என்று அறியப்படவில்லை. நீண்டகாலமாக சிலைகளை வணங்கினார்கள். உஹது, ஹூனைன் போரட்டங்களிலிருந்து விரண்டோடினார்கள்…. இன்னும் அதிகமானவற்றை செய்தார்கள் அவைகளில் சிறிய விடயமே அவர்களை காபிர்களாக்கிவிடும். எனவே அவர்கள் மீதும் அவர்களை நேசிப்பவர்கள் (ஏனைய ஸஹாபாக்கள், முஸ்லிம்கள்) மீதும் இறைவனதும் வானவர்களதும் எல்லா மனிதர்களினதும் சாபம் உண்டாவதாக.  (رسائل الكركي)

முஹம்மது இப்னு தாஹிர் அல்-கும்மி அஸ்ஸீராஸி அலி (ரழி) . அவர்களுக்கு முன்சென்ற மூன்று ஆட்சியாளர்களையும் பற்றிச்சொல்கிறார்: அவர்கள் முனாபிக்குகளின் தலைவர்கள் ரஸூல்மார்களின் தலைவர் கொண்டு வந்த மார்க்கத்தின் எதிரிகள். ( نفحات اللاھوت)

மூன்றாம் கலீபாவான உஸ்மான் அநியாயக்காரனாகவும் கெட்டவனாகவும் இருந்தான். ( نفحات اللاھوت)

முஹம்மது பாகிர் அல்மஜ்லிஸி சொல்கிறார்: காட்டரபிகள் இருவரும் கோபமடைந்தனர். அதாவது அபூபக்ரும் உமரும் கோபப்பட்டனர் ஏனெனில் அவர்கள் இருவரும் இஸ்லாத்திற்காக ஹிஜ்ரத் செய்யவில்லை. இருவரும் நிராகரிப்பாளர்களாகவே இருந்தனர். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது நயவஞ்சகமே அவர்கள் இருவரும் ஹிஜ்ரத் செய்தது முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கேயாகும்.  (مرآة العقول)

அல்அகாயித் என்ற நூலில் அவர் சொல்லும் போது ஷீஆக்களின் மார்க்கத்தில் மிகவும் இன்றியமையாத விடயம்தான் அபூபக்ர், உமர், உஸ்மான், முஆவியா போன்றவர்களிலிருந்து நீங்குவது.
தனது بحار الأنوار என்ற நூலில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார் அதிலே உஸ்மான் அவர்களுக்கும் அலி (ரழி). அவர்களுக்கும் பிரச்சினை ஏற்படுகிறதாம். அப்போது உஸ்மான், அலி (ரழி). அவர்களைப் பார்த்து உனது வாய்க்குள் மண்போகட்டும் என்று ஏசினாராம் (அதாவது உனக்கு மரணம் ஏற்படட்டும்) இதை விளக்கும் மஜ்லிஸி சொல்கிறார்: விபச்சாரியின் மகன் உஸ்மான் எப்படி ஏசுகிறான் பாருங்கள்!. அவன் எப்படி அலி (ரழி)யை நோவினை செய்கிறான் பாருங்கள்! அவன் மீதும் அவனை நேசிப்பவர்கள் (ஏனைய ஸஹாபாக்கள், முஸ்லிம்கள்) மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.

ஷீஆக்களின் ஹதீஸ்கலை அறிஞர் நிஃமதுல்லாஹ் அல்ஜஸாயிரி குறிப்பிடுகிறார்:
செய்திகளில் வந்திருப்பதைப்போல முதலாம் கலீபா அபூபக்ர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தார் (ஆனால்) அவர் ஜாஹிலிய்யாக் காலத்தில் வணங்கும் சிலை அவருடைய கழுத்திலே தொங்கவிடப்பட்டிருந்தது. அவருடைய ஆடையால் அதை மறைத்துக் கொள்வார். அவர் ஸூஜூது செய்வார். தான் சிலையை வணங்குவதாகவே நினைத்துக்கொள்வார். நபியவர்கள் மரணிக்கும் வரை இவ்வாறு இருந்தார். பின்பு அவர்களின் உள்ளங்களில் இருந்தவற்றை வெளிப்படுத்தினர்.(2- الأنوار النعمانية 111)

நாம் மேலே குறிப்பிட்ட அதே நூலில் சொல்கிறார்: மொத்தத்தில் நாம் அவர்களுடன் (ஷீஆக்கள் அல்லாதவர்களுடன்) ஒரு கடவுளிலோ, நபியிலோ, தலைவரிலோ ஒன்று சேரவில்லை. ஏனெனில், அவர்களது இரட்சகனின் தூதர் முஹம்மத் என்றும், அவரின் பின் அவரின் பிரதிநிதி அபூபக்ர் (ரழி) என்றும் சொல்கின்றனர். நாம் இந்த இறைவனை எங்கள் இறைவனென்றோ அந்த நபியை எமது நபியென்றோ சொல்லவில்லை. மாறாக எந்த இறைவனின் தூதர் முஹம்மதாகவும் அவரின் பிரதிநிதி அபூபக்ராகவும் இருக்கின்றாரோ அந்த இறைவன் எமது இறைவனுமல்ல அந்த நபி எமது நபியுமல்ல என்கிறோம். (2:278)

ஷீஆக்களின் பிரபல்யமான ஒரு அறிஞர் யூஸூபுல் பஹ்ரானி சொல்கிறார்: அபூபக்ர் அவரை அல்லாஹ் சபிப்பானாக, உமர் அவரை அல்லாஹ் சபிப்பானாக.
(الشھاب الثاقب ص 232،251)

அப்துல் ஹூஸைன் ஷரபுத்தீன் எனும் ஷீஆ க்களின் முக்கிய அறிஞர் தனது المراجعات என்ற நூலிலே ஸஹாபாக்கள் அஹ்லுல் பைத்தினருக்கு அநியாயம் செய்ததாகவும், ரவ்டிகளாக இருந்ததாகவும், பாவிகளாகவும் பச்சோந்திகளாகவும் திரிந்ததாகவும் குறிப்பிடுகிறார். மேலும் அல்லாஹ்வின் சாபம் அவர்கள் மீது விதியாகி விட்டதாகவும் அதிகமான இடங்களில் குறிப்பிடுகின்றார்.

ஷீஆக்களின் முக்கிய அறிஞர்களில் ஒருவரான முஹம்மத் பாகிர் அஸ்ஸத்ர் சொல்கிறார்:
அபூபக்ர் போராட்டத்தின் கஸ்டங்கள் தொல்லைகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்ஸார்களின் பல வீரர்களைத் தன் பாதுகாப்பிற்கு வைத்துக்கொண்டு தலைமைத்துவத்திற்குச் சென்றார். (فدك في التاريخ ص 127 )

தன்னுடைய ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக அபூபக்ர் அஹ்லுல்பைத்களின் முக்கியமான சொத்துக்களைச் சூரையாடியது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல, அல்லது அலி (ரழி) பதக் அல்லது அவையல்லாத பகுதிகளில் தனக்குக் கிடைப்பதை வைத்து தன்பால் மக்களைத் திருப்பப் பயன்படுத்துவார் என்று அபூபக்ர் பயந்திருக்கலாம். அபூபக்ர் போன்ற ஒருவரிடமிருந்து இவ்வாறு நிகழ்வது அபூர்வமான ஒன்றல்ல. அவரே பணத்தை மக்களை ஏமாற்றுவதற்கான வழியாகவும், வாக்குகளை சம்பாதித்துக்கொள்வதற்கான ஊடகமாகவும் பயன்படுத்தியவர்.
(فدك في التاريخ ص 89 )

அதாவது ஸஹாபாக்கள் எல்லோரும் அற்ப தீனாருக்காகவும் திர்ஹத்திற்காகவும் தங்கள் மார்க்கத்தை இலகுவில் விற்றுவிடக்கூடியவர்கள் என்கிறார். அதே நூலின் 138வது பக்கத்தில் சொல்கிறார்: அபூபக்ரின் ஆட்சிக்கு அல்லாஹ் அருள் செய்யவுமில்லை முஸ்லிம்கள் அதைப் பொருந்திக் கொள்ளவுமில்லை. 186வது பக்கத்தில் சொல்லும் போது: அபூபக்ர் இஸ்லாமிய முறைப்படி ஆட்சி செய்யவுமில்லை, அவரது ஆட்சி இஸ்லாமிய சாயம் பூசப்பட்ட ஆட்சியாக இருக்கவுமில்லை. (அல்லாஹ் எம்மனைவரையும் இவர்களின் மோசமான சிந்தனைகளிலிருந்து பாதுகாப்பானாக)

ஈரானியப்புரட்சியின் தந்தை என்று கருதப்படும் கொமைனி குறிப்பிடுகிறார்: ஸஹாபாக்களுக்கு நேரான வழியை காண்பிப்பதற்காகவும் சரியானதை காட்டுவதற்காகவும் கஸ்டங்களை சுமந்துகொண்டு அதிகமான முயற்சிகளை செய்த அந்த நபி (ஸல்) அவர்களையே ஸஹாபாக்கள் சரியான அடிப்படையில் மதிக்கவில்லை. அவருக்கு கொடுக்கவேண்டிய உரிமைகளை கொடுக்கவில்லை அவரை கௌரவிக்க வேண்டிய விதத்தில் கௌரவிக்கவில்லை. (كشف الأسرار ص 113 )

ஷீஆக்களின் முக்கிய நகரமான கும் எனும் இடத்தில் ஷீஆ அறிஞர்களுக்கு மத்தியில் அவர்களின் முக்கிய அறிஞர்களில் ஒருவரான குராஸானி ஓர் உரையை நிகழ்தினார். அது مقتطفات ولائية) ) என்ற பெயரில் நூலுருப்படுத்தப்பட்டுள்ளது அந்த உரையில் அவர் சொல்கிறார்:

ஷீஆ கொள்கையை ஏற்றுக்கொண்ட ஒருவர் இன்றைக்கு தனது குடும்பத்திற்கும் தனது கொள்கையை பின்பற்றுவோருக்கும் செய்யவேண்டிய அடிப்படைப் பொறுப்புக்கள் இரண்டு:
01) அலி (ரழி) அவர்களின் நேசத்தை மிகமிக உயர்ந்த அடிப்படையில் அவர்களின் உள்ளங்களில் விதைத்தல்.
02) அலி (ரழி). அவர்களுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்காதவர்களை (ஒட்டுமொத்த ஸஹாபாக்களையும், முன்சென்ற கலீபாக்களையும்) மிகவும் கடுமையான அடிப்படையில் வெறுத்தலும் கோபித்தலும். இவ்வாறான கோபத்திலும் வெறுப்பிலும் ஒரு கடுகளவு குறையுமானாலும் இந்த சமுதாயத்தை சாபம் பிடித்துவிடும் என்று எச்சரிக்கிறார். (அல்லாஹ் போதுமானவன்) 

ஷீஆக்களின் சமகால அறிஞர்களில் ஒருவர் அபூஅலி அல்-அஸ்பஹானி சொல்கிறார்: எனவே அமீருல் முஃமினீன் அலி (ரழி) அவர்களின் எதிரி யார்? … இதைப்போன்ற மனிதன் சபிக்கப்பட்ட மோசமானவர்களான அபூபக்ரையும், உமரையும் தவிர வேறு எவராகவும் இருக்கமுடியாது இறைவா! அவர்கள் இருவரையும் கடுமையாகத் தண்டிப்பாயாக
(10-  فرحة الزھراء ص 9 )

பிர்அவ்ன் அல்லாஹ்வை ஈமான் கொள்ளவில்லை நிராகரித்தும் அல்லாஹ்வுக்கு இணைவைத்தும் வாழ்ந்தான். அல்லாஹ்வின் அத்தாட்சியான மூஸா (அலை) அவர்களையும் அவர்களைப் பின்பற்றியோரையும் நோவினை செய்தான். இதனால் இறைவன் பிர்அவ்னையும் அவனின் உதவியாட்களையும் தண்டித்தான். அது போலவே சபிக்கப்பட்ட அபூபக்ரும் அல்லாஹ்வை ஈமான் கொள்ளவில்லை. காபிராகவும் முஸ்ரிக்காகவும் வாழ்ந்தான். இறைவனின் அத்தாட்சியான அலி (ரழி)யை நோவினை செய்தான். அவரின் இரத்தைத்தை ஓட்டினான். இதனால் நிச்சயமாக அல்லாஹ் அவனை கடுமையாகத் தண்டிப்பான் அவனை பின்பற்றுவோரும் அவனுடன் மறுமையில் எழுப்பப்பட்டு கடுமையான தண்டனையை அடைவர்.(فرحة الزھراء )

அஹ்லுல் பைத்தின் விரோதிகளிடமிருந்து நீங்குவது குறிப்பாக அபூபக்ர் உமர் போன்றவர்களிடமிருந்து நீங்குவது இந்த உலகத்தில் வாழ்பவர்கள் மீது மட்டும் கடமையல்ல (ஏழு) பூமி, (ஏழு) வானம் என்பவற்றில் வாழும் எல்லா உலகத்தாரின் கடமையுமாகும். அவர்கள் அனைவரும் அவர்களை சபிக்கின்றனர். இந்த உலகங்கள் அல்லாத வேறு சில படைப்பினங்களும் இருக்கின்றன. அவைகளுக்கு அவர்களை சபிப்பதையும் அவர்களிலிருந்து நீங்குவதையும் தவிர வேறு அமல் இல்லை என்பதை அதிகமான அறிவிப்புக்கள் மூலம் அறிகிறோம். (فرحة الزھراء )

அபூபக்ரையும் உமரையும் சபிப்பதும் அவர்களிலிருந்து நீங்குவதும் இந்த உலகத்தில் பகுத்தறிவில்லாதவற்றுக்கு மத்தியிலும் பரவிக்காணப்படுகிறது. சில பிராணிகள் அவைகளுக்கே உரிய மொழியில் அவர்களை சபிக்கின்றன. வெளிப்படையாக தெரியும் வகையில் அவர்கள் இருவரிடமிருந்தும் விரண்டோடுகின்றன. (فرحة الزھراء )

ஆயிஷா-வும், ஹப்ஸாவும் அவர்களின் தந்தையர்களைப் போலவே மோசமானவர்களாக வாழ்ந்தார்கள் அதிகமான பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்தார்கள். அவைகளில் ஒன்றுதான் நபி (ஸல்) அவர்களுக்கு அவர்கள் நஞ்சூட்டியது. (فرحة الزھراء )

அபூபக்ர், உமர் அவர்களை பின்தொடர்ந்தவர்களை நேசிப்பது மிகவும் தண்டனைக்குரிய குற்றமாகும். எந்தமனிதனிடம் அவர்கள் இருவர் மீதும் நேசம் உள்ளதோ அவன் எத்தகையவனாக, எந்தப்படித்தரத்தில் இருந்தாலும் சரி, அவர்கள் இருவரையும் விரும்புபவர் இறைவனின் மலக்காக இருந்தாலும், அவர் இறைவனுக்கு நெருக்கமானவராக இருந்தாலும் இல்லாது போனாலும் அவர் கடவுளின் கோபத்திற்குரியவராக மாறுவார். மறுமையில் மிகவும் கடுமையாக அவர் தண்டிக்கப்படுவார்.
(فرحة الزھراء)

இந்த நூலில் அஸ்பஹானியின் உச்சகட்டம் இத்தோடு முடிந்து விட்டது என்று நினைக்காதீர்கள், இந்த நூல் முழுக்க முழுக்க ஸஹாபாக்களுக்கு ஏசுவதை இலட்சியமாகக் கொண்டது என்றாலும் உமர் (ரழி) . அவர்களைக் கொலை செய்தது பற்றி அவன் சொல்வதைக்கூறி முடிக்கிறேன்.

உமரின் கொலை என்று இந்த நூலில் தனியான ஒரு பாடத்தை எழுதியுள்ளான். அதிலே உமர் (ரழி) அவர்களைக் கொலை செய்த சாபத்திற்குரிய நெருப்புவணங்கி அபூ லுஃலுஆ-வை புகழ்கிறான் அவன் சொல்கிறான்: அபூ லுஃலுஆ என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? அபூ லுஃலுஆ ஈரானைச் சேர்ந்தவன். அவனது பெயர் பாரசீகப்பெயர் (பைரூஸ்) அவன் கண்ணியமிக்க இறைபாதையில் போரிடும் முஸ்லிம்களில் ஒருவனாக இருந்தான். அதுபோல் அலி (ரழி). அவர்களை விரும்பி மற்றவர்களை வெறுக்கும் சுத்த ஷீஆக்களில் ஒருவனாகவும் இருந்தான். இந்த கண்ணியமிக்க மனிதன் பெரும் சிறப்பை அடைந்தான். காரணம் பாதிமதுஸ்ஸஹ்ராவின் பிரார்த்தனை பரகத்பொருந்திய இவனது இரண்டு கரங்களினால் நிறைவேற்றப்பட்டது. பாதிமா. அவர்களைக் கொன்றவனைக் கொன்றான் அவனது (உமர் (ரழி).) துன்பங்கள் கெடுதிகளிலிருந்து மனித இனத்துக்கு விடுதலை வழங்கினான். நாம் இவ்வளவு அதிகமான ஆண்டுகளின் பின்பு உண்மையான ஒரு வார்த்தையைச் சொல்கிறோம்:

அபூலுஃலுஆ-வே அல்லாஹ் உனக்கு அருள் செய்வானாக. ஸஹ்ராவின் (பாதிமாவின்) பிள்ளைகளின் உள்ளங்களில் சந்தோசத்தை நுழைத்துவிட்டாய்…. இன்றைக்கு இருக்கின்ற ஷீஆக்களிடம் எதிர்பார்க்கப்படும் விடயம் என்னவென்றால் தூய்மையால் நிரம்பிய அல்லாஹ்வின் அருளைப்பெற்ற காஸானில் உள்ள (அபூலுஃலுஅவின்) கப்ரை தரிசிப்பதாகும்.  (فرحة الزھراء )

விளங்கிவிட்டீர்களா ஷீஆக்களின் கொள்கையை! அபூலுஃலுஆ ஒரு நெருப்பு வணங்கிதானாம். ஆனால், அவன் உமர் (ரழி)-யைக் கொன்றதற்காக இறை நேசனாகிவிட்டானாம். ஷீஆக்களின் மிக முக்கியமான அறிஞர்களில் ஒருவரான துஸ்துரி குறிப்பிடுகிறார். மூஸா (அலை) அவர்கள் வந்து பனூ இஸ்ரவேலர்களில் பலருக்கு நேர்வழி காட்டினார்கள். ஆனால் மூஸா (அலை) வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் அனைவரும் இஸ்லாத்தை விட்டு சென்று விட்டனர். ஹாறூன் (அலை) அவர்களைத்தவிர வேறு எவரும் இஸ்லாத்தில் இருக்கவில்லை. இது போலவே முஹம்மத் (ஸல்) அவர்களும் வந்து அதிகமானவர்களுக்கு நேர்வழி காட்டினார்கள். ஆனால் நபியவர்கள் மரணித்ததும் அவர்கள் அனைவரும் மதம் மாறிவிட்டனர். ( أوجز الخطاب )

ஷீஆக்களின் பிரதானமான அறிஞர்களில் ஒருவரான மஜ்லிஸி என்று சொல்லக்கூடியவர் குறிப்பிடுகிறார்:

ஸஹாபாக்களும் ஏனையவர்களைப் போன்றுதான். அவர்களிலும் நீதமானவர்கள் இருக்கிறார்கள், அவர்களில் நயவஞ்சகர்கள், கெட்டவர்கள் எல்லோரும் உள்ளனர். மாறாக அவர்களில் மிகவும் அதிகமானவர்கள் வழிகெட்டவர்களாவர். ( أوجز الخطاب )

குர்ஆனுக்கு விரிவுரை வழங்குவதில் ஷீஆக்களிடம் பிரபல்யமான காஷானி என்பவர் குறிப்பிடுகிறார்: ஸஹாபாக்களில் அதிகமானவர்கள் நயவஞ்சகத்தை மறைத்துக்கொண்டே நபியவர்களுடன் வாழ்ந்து வந்தார்கள். அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டக்கூடியவர்களாகவும் நபியவர்களை கண்ணியப்படுத்துகின்ற அடிப்படையில் அவரை இழிவுபடுத்துதல், கஷ்டப்படுத்துதல் போன்ற விடயங்களில் அவர்கள் இட்டுக்கட்டக்கூடியவர்களாக இருந்தார்கள். ( أوجز الخطاب )

மனித இனத்தில் நபியவர்களை ஒருவர்தான் ஈமான் கொண்டார் அவர்தான் சத்தியத்தை தேடி தனது நாட்டிலிருந்து புறப்பட்டவர் அவர்தான் ஸல்மானுல் பாரிஸி. (كتاب الشيعة والسنة في الميزان )

உமர் அவர்கள் ஒரு நோயினால் படிக்கப்பட்டிருந்தார். அது ஆண் தண்ணீரினால்தால் சற்றுத்தணியும். இதனால் பின் துவாரத்தில் ஆண் புணர்ச்சியில் ஈடுபடக்கூடியவராக இருந்தார். (1- الأنوار النعمانية 63 )

(அல்லாஹ் போதுமானவன். அவர்களது கொள்கை அவர்களை எவ்வாறெல்லாம் கற்பனை செய்யத்தூண்டியிருக்கிறதென்று பாருங்கள்) உமரின் நிராகரிப்பு இப்லீஸை விட அதிகமானதல்ல என்றாலும் அவனை ஒத்தது. ( 2-223-تفسير العياشي 224 )

எந்தவொரு புத்தியுள்ள மனிதனும் உமர் காபிர் என்பதில் சந்தேகப்பட முடியாது அல்லாஹ்வினதும் அவன் தூதரினதும் சாபம் அவன் மீதும் அவனை முஸ்லிம் என்று கருதுபவர்கள் மீதும் அவனை சபிப்பதைவிட்டும் தடுப்பவர்கள் மீதும் உண்டாவதாக. (جلاء العيون للمجلسي ص 45 )

முஹம்மத் ஸாலிஹ் அல் ஜவ்ஹரி சொல்கிறார்: யாராவது அபூபக்ரையும் உமரையும் மாலையில் சபித்தால் அவர் காலையாகும் வரை அவருக்கு எந்தப் பாவமும் எழுதப்படாது. (ضياء الصالحين ص 513)
யார் அபூபக்ருக்கும் உமருக்கும் இந்த மார்க்கத்தில் ஏதாவது இருக்கிறது என்று நினைத்தானோ அவனுடன் அல்லாஹ் மறுமையில் பேசமாட்டான் அவனை தூய்மைப்படுத்தவுமாட்டான் அவனுக்கு நோவினைதரும் வேதனை உள்ளது. ( 1- أصول الكافي 373 )

ஹூர்ருல் ஆமிலி சொல்கிறார்: ஷீஆக்கள் எதிர்பார்த்திருக்கும் மஹ்தி வந்து அபூபக்ரையும் உமரையும் உயிர்கொடுத்து எழுப்புவார். பின்பு அவர்கள் இருவரையும் ஈத்தங் குற்றியில் அறைவார். ஒவ்வொரு நாளைக்கும் இருவருக்கும் 1000 தடவைகள் அடிப்பார்.  (إيقاظ من الھجعة)

நிச்சயமாக யாருடைய உள்ளத்தில் உஸ்மானுக்கு எதிர்ப்பு இல்லையோ, யார் அவனின் மானத்தை போக்குவதை ஹலாலாக்கிக் கொள்ளவில்லையோ மேலும் யார் அவர் காபிர் என்பதை நம்பவில்லையோ, அவன் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் எதிரியாவான் அல்லாஹ் இறக்கிவைத்ததை நிராகரித்தவனாவான் (نفحات اللاھوت)

ஷீஆக்களின் அறிஞரான அல்-கும்மி ‘ஆயிஷா (ரழி)வும் ஹப்ஸாவும் தவறாக நடந்தார்கள் என்று சத்தியமிட்டுச் சொல்கிறார்.( 2/تفسير القمي 377)

ஆயிஷா (ரழி) தவறான நடத்தையின் மூலம் சேகரித்த 40தீனார்களையும் அலி (ரழி)யின் விரோதிகளுக்கு பங்கிட்டுக் கொடுத்தார்.  (مشارف أنوار اليقين)

நபியவர்களின் அபம் நரகம் நுழையும் ஏனெனில் அது சில முஸ்ரிக்கான பெண்களுடன் சேர்ந்துள்ளது.
(كشف الأسرار للموسوي ص 24 )

கொமைனி சொல்கிறார்: நீங்கள் ஸஹாபாக்கள் என்று சொல்லும் அவர்கள் நயவஞ்சகர்கள் முனாபிக்குகள். (الحكومة الإسلامية )


ஷீஆக்கள் ஸஹாபாக்களாகக் கருதுவோர் யார்?

ஷீஆக்கள் மிகவும் சொற்பமானவர்களையே ஸஹாபாக்களாக கருதுகின்றனர் அவர்களின் அறிவிப்புக்களின் படி பார்த்தால் 10 அல்லது 15 பேரையே ஸஹாபாக்களாக இனங்காட்டுகின்றனர். அபூ ஜஃபர் சொல்கிறார்: நபியின் மரணத்தின் பின்பு 03 பேரைத் தவிர மற்றைய எல்லோரும் காபிர்களாகி விட்டனர். அந்த மூவர் யார் என்று கேட்கப்பட்ட போது: மிக்தாத், அபூதர் அல்கிபாரி, ஸல்மானுல் பாரிஸி என்றார்கள். (رجال الكشي )

வேறொரு அறிவிப்பில் : நபியவர்கள் மரணித்ததன் பின்பு மக்களில் 04 பேரைத் தவிர மற்றைய அனைவரும் நிராகரிப்பாளர்களாகி விட்டனர் என்றார். அவர்கள்: அலி (ரழி), மிக்தாத், அபூதர் அல்கிபாரி, ஸல்மானுல் பாரிஸி. (تفسير العياشي )

அது போல் ஷீஆக்கள் ஈரானிலே ஹம்ஸா . அவர்களுக்கு பெரும் கப்ரை கட்டி வைத்துள்ளனர் எனவே ஹம்ஸா (ரழி) அவர்களையும் ஸஹாபியாக கருதுகின்றனர் என்று சொல்லலாம். அதுபோல் அப்பாஸ் (ரழி), அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) போன்றவர்களையும் ஷீஆக்கள் ஸஹாபாக்களாகக் கருதுகின்றனர் என்று சொல்ல முடியும்.


ஹவாரிஜ்கள்:
ஹவாரிஜ் என்றால் வெளியானவர்கள் அல்லது பிரிந்து நிற்பவர்கள் என்று பொருள்படும். உண்மையான, கட்டுப்படுவதற்கு கடமையான ஒரு தலைவருக்கு எதிராக செயற்படுபவர்களையும் பிரிந்து நிற்பவர்களையுமே இஸ்லாமிய வரலாற்றில் ஹவாரிஜ்கள் என்று அழைக்கப்படுகின்றது. இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் அவர்கள் மார்க்கத்தை விட்டு வெளியானதாலும், மனிதர்களிலேயே மிகவும் சிறந்தவர்களுக்கு எதிராக அவர்கள் செயற்பட்டதினாலுமே அவர்களை ஹவாரிஜ்கள் என்று அழைக்கின்றனர்.
( 12/ فتح الباري 283 )

ஹவாரிஜ்கள் அலி (ரழி) அவர்களின் காலத்திலேயே தோற்றம் பெற்றனர். அலி (ரழி) அவர்களின் காலத்தில் அவரின் ஆட்சிக்கு எதிராகப்போர் புரிந்ததோடு கிளர்ச்சிகளையும் செய்துவந்தனர். அலி  (ரழி) அவர்கள் நஹர்வான் எனும் இடத்தில் இவர்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தி அவர்களைத் தோற்கடித்தார்கள். இவர்கள் அலி (ரழி) . அவர்களின் காலத்தில் பெரும் குழுவாகத்தோற்றம் பெற்றாலும் இவர்களின் அடிப்படை நபியவர்களின் காலத்திலிருந்தே ஆரம்பமாகிறது. அபூ ஸஈத் அல்-குத்ரி . அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம் நபியவர்கள் யுத்தத்தில் கிடைத்த பொருட்களைப் பங்கு வைத்துக் கொண்டிருந்தார்கள், அப்போது பனூதமீம் கிளையைச்சேர்ந்த ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே நீதமாகப்பங்கு வையுங்கள் என்றார். (இதைக்கேட்டு கோபமடைந்த நபியவர்கள்) நாசமாகிவிடுவான் நான் நீதி செலுத்தவில்லையென்றால் யார் நீதி செலுத்துவார் என்று கூறினார்கள். மேலும் ‘நான் நீதி செலுத்த வில்லையென்றால் நாசமாகிவிடுவேன் நஸ்டவாளியாவேன்’ என்றும் கூறினார்கள். (இந்த நிகழ்ச்சியை அவதானித்துக்கொண்டிருந்த) உமர் (ரழி) அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதரே அவன் விடயத்தில் எனக்கு அனுமதி தாருங்கள் அவன் கழுத்தை கொய்துவிடுகிறேன்’ என்றார். நபியவர்கள் இல்லை அவனை விட்டுவிடுங்கள் அவனுக்கு தோழர்கள் இருக்கிறார்கள் அவர்களின் தொழுகையைப்பார்த்து உங்களின் தொழுகை மிகவும் குறைவானது என்று நீங்கள் கருதுவீர்கள். அவர்களின் நோன்பைப்பார்த்து உங்களின் நோன்பை குறை காண்பீர்கள். குர்ஆனை ஓதுவார்கள் அவர்களின் தொண்டையை அது கடக்காது. வில்லிலிருந்து அம்பு பாய்ந்து செல்வதைப்போல இஸ்லாத்தை விட்டும் அவர்கள் செல்வார்கள். (புஹாரி 3610, முஸ்லிம் 1064)

அலி (ரழி) அவர்கள் நஹர்வான் போராட்டம் முடிந்ததும் மரணித்த ஹவாரிஜ்களில் துல்குவைஸிரா இருக்கிறாரா? என்று தேடிப்பார்க்குமாறு தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள். அதிலே துல்குவைஸிராவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அலி (ரழி) அவர்கள் தான் இவர்களுக்கு எதிராய் போராடியதில் தவறிழைக்கவில்லை போராட்டம் நடத்தவேண்டிய ஒரு கூட்டத்திற்கு எதிராகத்தான் போராடியிருக்கின்றேன். என்பதை நினைத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள். ஹவாரிஜ்கள் முஹக்கிமா, அல்ஹரூரிய்யா, அந்நவாஸிப், அல்மாரிகா, அல்அஸாரிகா, அல்அபாழிய்யா போன்ற பெயர்களைக்கொண்டு அழைக்கப்படுகின்றனர்.

ஹவாரிஜ்களின் கொள்கைகள் இஸ்லாத்திற்கு முரணானவை. அவற்றைப்பற்றி விளக்குவது எமது நோக்கமல்ல. ஹவாரிஜ்கள் ஸஹாபாக்கள் விடயத்தில் என்ன மோசமான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவதானிப்பதே எமது நோக்கமாகும்.

அல்-காழி அபூபக்ர் இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: ஹவாரிஜ்கள் இரண்டு வகை ஒரு குழுவினர். உஸ்மான் (ரழி), அலி (ரழி), ஜமல் போரில் கலந்து கொண்டவர்கள், ஸிப்பீன் போரில் கலந்து கொண்டவர்கள், தீர்ப்புக்காக எற்படுத்தப்பட்ட அந்தக்குழுவை ஏற்றுக்கொண்டு பொருந்தியவர்கள் அனைவரும் காபிர்கள் என்று குறிப்பிடுகின்றனர். மற்றைய குழுவினர், யாரெல்லாம் பெரும் பாவம் செய்கிறாரோ அவர்களெல்லாம் காபிர்கள், நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று குறிப்பிடுகின்றனர். மற்றும் சில அறிஞர்கள் இமாம் இப்னுல் அரபி சொல்கின்ற  முதலாவது குழுவினர் இரண்டாம் குழுவிலிருந்தே தோற்றம் பெற்றனர் என்று குறிப்பிடுகின்றனர். ஏனெனில் முதல் குழுவினர் ஸஹாபாக்களில் அதிகமானவர்களைக் காபிர்கள் என்று சொல்வதற்கு காரணம் அவர்கள் (ஸஹாபாக்களை) பெரும் பாவம் செய்தனர் என்று நினைப்பதாகும். (12/فتح الباري 285 )

முஸ்தபா அஸ்ஸிபாஈ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: ஹவாரிஜ்களின் அத்தனை பிரிவுகளுமே பிரச்சினை (உஸ்மான் (ரழி) . அவர்களின் கொலை) நடப்பதற்கு முன் எல்லா ஸஹாபாக்களையும் நல்லவர்களாகவும் நம்பகமானவர்களாகவுமே கருதினர். பின்பு அலி (ரழி), உஸ்மான் (ரழி), ஜமல் யுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் அதிலே நியமிக்கப்பட்ட இரண்டு நடுவர்கள், அதைப் பொருந்திக்கொண்டவர்கள், இரு நடுவர்களையும் அல்லது அவர்களில் ஒருவரை சரிகண்டோர், அனைவரையும் காபிர்கள் என்றனர். இதனாலேயே அதிகமான ஸஹாபாக்களின் ஹதீஸ்களைளூ அவர்கள் பிரச்சினையின் போது தீர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட முயற்சியை பொருந்திக் கொண்டதனாலும், அந்த ஹலீபாக்களை பின்பற்றியதனாலும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஏனெனில் அவர்கள் ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளுமளவிற்கு நம்பகமானவர்கள் அல்ல என்று கருதினர். (السنة ومكانتھا في التشريع الإسلامي 150،151 )

அப்துல் காதிர் ஷபஹீ அல்-ஹம்தி (ரஹ்) அவர்கள் ஹவாரிஜ்களின் பிரிவுகளை குறிப்பிட்டுவிட்டு கூறுகிறார்கள்: ஷஷஅலி (ரழி), உஸ்மான் (ரழி), இரண்டு நடுவர்கள், நடுவர்கள் ஏற்படுத்துவதை பொருந்திக்கொண்டவர்கள், அந்த நடுவர்களில் இருவரின் தீர்ப்பையோ அல்லது ஒருவரின் தீர்ப்பையோ ஏற்றுக்கொண்டவர்கள். இவர்கள் அனைவரையும் காபிர்கள் என்று சொல்வதில் அவர்களின் எல்லாப்பிரிவுகளும் ஒற்றுமைப்படுகின்றன. அது போல் அநியாயம் செய்கின்ற அரசனுக்கு எதிராக போராடவேண்டும் என்பதிலும் ஒற்றுமைப்படுகின்றனர். ஹவாரிஜ் மாத்திரம் அந்த அரசனை அநியாயக்காரன் என்று கண்டாலும் சரியே. (الأديان والفرق والمذاھب المعاصرة )


விடைபெறு முன்:
நாம் மேலே குறிப்பிட்டவற்றில் ஸஹாபாக்கள் விடயத்தில் ஷீஆக்களும் ஹவாரிஜ்களும் சில குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர், அந்தக் குற்றச்சாட்டுக்களையும் அதற்கான சில காரணங்களையும் சுருக்கமாக அவதானிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைகின்றேன்.

01) ஸஹாபாக்கள் எல்லோரும் நயவஞ்சகர்கள், அவர்கள் நடித்துக்கொண்டே நபியவர்களுடன் வாழ்ந்து வந்தனர்.

ஸஹாபாக்களின் வரலாற்றைப் படிக்கின்ற எவருமே ஸஹாபாக்கள் நடித்துக்கொண்டுதான் நபியவர்களுடன் வாழ்ந்தார்களா? என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள். ஸஹாபாக்கள் செய்த தியாகத்தையும் இந்த இஸ்லாத்திற்காக அவர்கள் இழந்தவற்றையும் பார்க்கின்ற புத்தியுள்ள எந்த மனிதனும் அவர்களின் உளப்பூர்வமான ஈடுபாட்டை உணர்ந்து கொள்வார்.

ஒருவன் மற்றவர்களை ஏமாற்ற மரணித்தவனைப்போன்று நடிப்பான். ஆனால் மரணிக்கமாட்டான். தன் நோக்கத்தை நிறைவேற்றி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக நடிக்கின்றவன் தன் உயிரையே மாய்த்துக்கொள்வான் என்று சொல்வது தொடர்பில்லாத வாதமாகும். ஸஹாபாக்கள் இந்த இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக தங்கள் சொந்தங்கள், சொத்துக்கள், மனைவி மக்கள், நாடு அத்தனையையும் இழந்து நாதியற்று நின்றார்கள். தேவைப்படின் இந்த இஸ்லாத்திற்காக தங்கள் உயிரையும் இழந்தார்கள். சிலர் தாம் போராட்டக்களங்களில் மரணிக்கவில்லையே என்று கவலைப்பட்டார்கள். ஷஇத்தனையும் அவர்களின் நடிப்புத்தான், உளப்பூர்வமான செயற்பாடு அல்ல| என்று சொல்வது அறிவுள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். அவர்கள் இழந்தவைகளைப் பெற்றுக்கொள்ளவே ஒரு மனிதன் நடிக்கவேண்டும் ஆனால் அத்தனையையும் இழந்து அவர்கள் வேறு எதற்காக நடிக்க வேண்டும் என்று நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

உலகத்தின் இனப் த்தை அடைந்துகொள்வதற்காக நடித்தார்கள் என்று சொன்னால், உலக இன்பங்களை அதிகமாகப்பெற்றிருந்த பலர் இந்த இஸ்லாத்தை ஏற்றதினால் அவற்றை இழந்தார்கள். தமக்கு உண்ண அதிகமான உணவிருந்தும் இஸ்லாத்தை ஏற்றதிற்காக எதுவுமே இல்லாமல் இலைகுழைகளை உண்ணுமளவுக்கு 03வருடங்கள் அபூதாலிப் பள்ளத்தாக்கில் அடைக்கப்பட்டார்கள். முஸ்அப் இப்னு உமைர் மக்காவில் பெரும் செல்வந்தர். ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு புதிய ஆடைகளை அணிந்து திரிந்தவர். இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபின் அத்தனையையும் இழந்து உஹதில் மரணிக்கும் போது முழுமையாக கபனிடுவதற்குக்கூட ஆடை இல்லாமல் போனது.

இவ்வளவு கஸ்டமும் அவரது நடிப்புத்தான் என்று சொல்லமுற்படுவது எந்த வகையில் நியாயம்! போதையில் உள்ளவனைப்போன்று உளறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த உலகத்தில் தலைமைத்துவத்தை அடைந்து கொள்வதற்காக இஸ்லாமியனாக நடித்தார்கள் என்று வைத்துக்கொண்டால் குறைஷிகளின் தலைவர்கள் பலர் இந்த இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் தங்கள் பதவிகளையும் கௌரவத்தையும் இழந்தார்கள். தலைவராக இருப்பவர் இந்த மார்க்கத்திற்கு வருவதால் தலைமைத்துவத்தை இழக்கிறார். அவரைப்பார்த்து தலைமைக்காக நடித்தார் என்பது வஞ்சக எண்ணம் கொண்ட பிரச்சாரம் என்றே எனக்குத்தெரிகிறது. அது மாத்திரமல்லாமல் இஸ்லாத்தை ஏற்பவரின் உயிருக்கே உத்தரவாதமில்லாமல் இருந்த அந்தக்காலத்தில், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் பெரும்பாலும் அதை மறைத்திருக்கவேண்டும். அந்தளவுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில் தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களைப் பார்த்து நடிகர்கள் என்பது, நமக்கு நாமே அநியாயம் செய்வதைப்போன்றாகும்.

மனிதர்களின் உள்ளும் புறமும் அறிந்தவனான அல்லாஹ், ஸஹாபாக்களைப்பார்த்து தான் பொருந்திக்கொண்டதாக சொல்கிறான். நிச்சயமாக அவர்களின் உள்ளும் புறமும் ஒன்றாக இல்லையென்றால் அல்லாஹ் அப்படிச்சொல்லியிருக்க மாட்டான்.

02) ஸஹாபாக்களில் அதிகமானவர்கள் நபியின் மரணத்தின் பின் காபிர்களாகி விட்டனர்:

நபியின் பாசறையில் வளர்க்கப்பட்ட ஸஹாபாக்கள் நபியின் மரணத்தோடு இஸ்லாத்தை விட்டு ஓடிவிட்டனர் என்பது நபியின் பயிற்றுவிப்பில் குறை காண்பதாகும். நபியவர்கள் அவர்களின் தோழர்களை இந்த சமுதாயத்தில் மிகவும் சிறந்தவர்கள் என்று கூறினார்கள். இது இறைவனின் அங்கீகாரத்தைப்பெற்றது. எனவே இஸ்லாமிய சமுதாயத்தில் மிகவும் சிறந்தவர்களை நாம் இப்படி விமர்சித்தால் நமக்கு என்ன மீதமிருக்கிறது என்பதை சற்று நாம் சிந்திக்க வேண்டும்.

நபியவர்களுக்குப் பின் இந்த இஸ்லாத்தை ஸஹாபாக்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் கொண்டு சென்றனர், அதனை பிரச்சாரம் செய்தனர். பலர் இதில் பலியானார்கள். இன்று இஸ்லாம் இவ்வளவு பரவியிருக்கிறது என்றால் அன்று அவர்கள் இட்ட உறுதியான அடித்தளம் இதற்குக்காரணம் என்பதை எவருமே மறுக்க முடியாது. இந்த இஸ்லாத்தின் தூய வடிவத்தை பாதுகாப்பதற்காக அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றி அறிந்துகொண்ட எவரும் இவ்வாறு விமர்சிக்க மாட்டார்கள்.

இன்று இஸ்லாமிய நாடுகள் என்று சொல்லப்படும் அதிகமான நாடுகள் ஸஹாபாக்களின் முயற்சியினால், போராட்டத்தினால் கிடைத்த வெற்றிகள்தான். இன்னும் சொல்லப்போனால் எவர்களெல்லாம் இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்களோ அவர்களது நாடுகள் கூட ஸஹாபாக்கள் அவர்களுக்குப்போட்ட பிச்சைதான். பிச்சைபோட்டவனின் கையை உடைத்து கழுத்தை நெறிக்க முனைவது ஆரோக்கியமான சமுதாயத்தின் அடையாளமல்ல.

ஒரு கொள்கையைப் பின்பற்றி அந்தக்கொள்கைக்காகவே தன் உயிரைப் பணயம் வைத்து போராடி தங்கள் உலக இன்பங்களை இழந்து, தங்களையும் மறந்து செயல்பட்ட ஒரு கூட்டத்தினரைப்பார்த்து, அவர்கள் அந்தக்கொள்கையில் பற்றில்லாமலிருந்தார்கள். அவர்களுக்கும் அந்தக்கொள்கைக்கும் தொடர்பில்லை என்பது குறித்த இந்த வர்க்கத்தினரால் மாத்திரம் தான் சொல்லமுடியும். உலகத்தில் எவருமே சொல்லாத விநோதமான விடயமிது.

ஹவாரிஜ்களைப்பொறுத்த வரைக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்களை வித்தியாசமான அடிப்படையில் முன்வைக்கின்றனர். அதாவது ஸஹாபாக்களின் வாழ்க்கையில் நடந்த சில தவறான முடிவுகள் மூலம் ஏற்பட்ட பரிதாபகரமான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் அவர்களின் தியாகங்களுக்கும் முடிச்சுப் போடுகின்ற கைங்கரியத்தைச் செய்கின்றனர். அவர்களுக்கு மத்தியில் நடந்தபிரச்சினைகள் தொடர்பாக நாம் தனியான தலைப்புக்களில் ஆய்வு செய்திருக்கிறோம்.

ஆனால் அவர்களின் குற்றச்சாட்டுக்களிலே பிரச்சினைகளின் போது ஏற்படுத்தப்பட்ட நடுவர் குழுவையும், அவர்கள் சொன்ன தீர்ப்பை ஏற்றுக்கொண்டவர்களையும் காபிர்கள் என்பது மிகவும் தவறானதும் மூடர்களின் மட்டரகமான அறிவும் சிந்தனையுமாகும்.

இறைவனின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவேண்டிய சமுதாயம் தங்கள் முடிவுகளை மனிதர்களின் கரங்களில் கொடுத்துவிட்டிருக்கின்றனர். எனவே இவர்கள் இறைவனின் தீர்ப்புக்களை புறக்கணித்துவிட்டனர் என்பதனால் அவர்கள் காபிர்கள் என்று குறிப்பிடுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுக்கு இப்னு அப்பாஸ் . அவர்கள் வரலாற்றுப்புகழ்மிக்க ஒரு தீர்ப்பை, பதிலைக் குறிப்பிட்டார்கள்.

பிரச்சினை என்று வந்துவிட்டால் அதை சமாதானமான முறையில் தீர்த்துக்கொள்வதற்கு நடுவர் குழுக்கள் ஏற்படுத்தப்படுவது வழக்கம். இது தவறானது இதை செய்பவன் காபிராகிவிடுவான் என்று விமர்சிக்கிறார்கள் ஹவாரிஜக் ள். உண்மையில் இது தப்பான சிந்தனையின் விளைவு. ஆனால் ஷீஆக்களைப்பொறுத்தவரைக்கும் தங்கள் கொள்கையை உறுதிப்படுத்துவதற்காகவே தப்பான முறையில் ஸஹாபாக்களை இட்டுக்கட்டவும் அதை வைத்து ஸஹாபாக்களை குறைகாணவும் செய்கின்றனர். (அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக) ஷீஆக்கள் ஸஹாபாக்களைக் குறை கூறும்போது நபியவர்களின ; குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சொல்வதாக சில அறிவிப்புக்களை தங்களது நூல்களிலே பதிவு செய்துள்ளனர். இவைகளெல்லாம் உண்மையில் அலி (ரழி). அவர்களோ, அல்லது ஏனைய அஹ்லுல் பைத்தைச்சேர்ந்த ஸஹாபாக்களோ சொன்னவைகள் அல்ல. அவர்கள் பேரில் இட்டுக்கட்டப்பட்டவைகள். ஷீஆக்கள் தாங்களாகவே சில விடயங்களை உருவாக்கிக்கொண்டு அதை நபியவர்களின் குடும்பத்தினர் சொல்வதாக குறிப்பிடுகின்றனர். இவ்வாறு ஷீஆக்கள் செய்கிறார்கள் என்பது நபியவர்களின் குடும்பத்தினருக்கே தெரிந்திருந்தது. இதனால் அவர்கள் ஷீஆக்கள் விடயத்தில் மக்களை எச்சரிக்கக் கூடியவர்களாகவும், தாங்கள் சொன்னதாக ஷீஆக்கள் சொல்லும் தகவல்கள் பொய்யானது என்று மக்களுக்கு தெளிவுபடுத்தவும் செய்தார்கள்.

ஷீஆக்கள் பற்றிய நபியவர்களின் குடும்பத்தினரின் கருத்துக்களை நாம் இமாம்களின் பார்வையில் ஷீஆக்கள் என்ற நூலிள் தொகுத்துள்ளோம். எனவே அலி (ரழி)., ஹஸன்., ஹூஸைன், பாதிமா. அல்லது அவர்களின் பரம்பரையில் வந்த சில அறிஞர்கள் சொல்வதாக சொல்லப்படுகின்ற விடயங்களில் நாம் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும்.

ஷீஆக்களின் நூல்களில் காணப்படுகின்ற இவ்வாறான அறிவிப்புக்களை மக்களுக்கு நாம் எடுத்துக்காட்டும் போது ஷீஆக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அலி (ரழி). அவர்களும் அஹ்லுல் பைத்தின் மற்ற அங்கத்தவர்களும் ஸஹாபாக்களைப்பற்றி சொல்லுவதாக அவர்களின் நூல்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்ற சில நல்ல கருத்துக்களை மக்களுக்கு எடுத்துக்காண்பித்துளூ நாம் ஷீஆக்கள் விடயத்தில் கோபத்தோடு நடப்பதைப்போலவும், அவர்களிடம் எந்தத் தப்பான கொள்கையும் இல்லை என்பதைப்போலவும் சித்தரிக்க முயல்கின்றனர். ஆனால், ஷீஆ அறிஞர்கள்: ஸஹாபாக்களை அஹ்லுல் பைத்தினர் புகழ்வதைப்போல அமைந்திருக்கும் அத்தனை அறிவிப்புக்களும் ஷஷதகிய்யா|| வுக்காக சொல்லப்பட்டவை அதில் உண்மையில்லை என்கின்றனர். ஸஹாபாக்கள் நல்லவர்கள் என்பதற்காகவோ, அவர்களைப்புகழ வேண்டும் என்பதறக் hகவோ அஹ்லுல் பைத்தினர் இவ்வாறு சொல்லவில்லை. அதாவது இந்த சந்தர்ப்பத்தில் நாம் இப்படிச் சொல்வதுதான் நமக்கு பாதுகாப்பு (இந்த உலகத்தில்), இப்படிச் சொல்வதனால்தான் மற்றவர்கள் நம்மை தப்பானவர்கள் என்று உணர்ந்துகொள்ளமாட்டார்கள் அதற்குப்பிறகு நாம் ஏனைய கொள்கைகளை அவர்களிடம் பிரச்சாரம் செய்யமுடியும் என்பதற்காகவே இவ்வாறு சொன்னார்கள். சந்தர்ப்பத்தைப் பார்த்து தங்களையும் தங்கள் கொள்கையையும் பாதுகாக்கும் நோக்கிலேயே இவ்வாறு நடந்துகொண்டார்கள் அவர்களின் கொள்கை இதுவல்ல என்று குறிப்பிடுகின்றனர். (பார்க்க : تصحيح الإعتقاد ص 71 )


அஹ்லுல் பைத் என்போர் யார்?

எந்த ஒரு வாசகத்தையும் மொழியியல் ரீதியில் ஆய்வு செய்வதற்கு அறிஞர்கள் மொழித்துறை சார்ந்த அறிஞர்களையும் அவர்களின் நூல்களையுமே அணுகுவர். “அஹ்லுல் பைத்” எனும் இந்த வார்த்தை அரபு வார்த்தையாக இருந்தாலும் இஸ்லாமிய வரலாற்றோடு மிகுந்த தொடர்புடையதாகவும் பெரும் விளைவுகளுக்கு காரணமானதாகவுமிருக்கிறது. அத்தோடு நபியவர்களுடன் இது தொடர்புபடுத்தப்பட்டு புதிய சிக்கல்களும் உருவாக்கப்படுகின்றன எனவே அதை இஸ்லாமிய வழக்கில் ஆய்வு செய்ய வேண்டிய அவசியமிருக்கிறது. அதாவது அல்-குர்ஆன், அஸ்ஸூன்னாவில் என்ன கருத்தினடிப்படையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்யவேண்டும். எனவே இந்த வாசகத்தின் சரியான அர்த்தத்தை சந்தேகமற அறிந்துகொள்வதற்கு  பின்வரும் 04 முறைகளில் ஆய்வு செய்வோம்.

01) மொழி
02) வழக்கு
03) அல்-குர்ஆன்
04) அஸ்ஸூன்னா

மொழி:
அரபு மொழியில் இந்த வாசகம் என்ன கருத்தைக் கொண்டுள்ளது என்பதை நாம் ஆய்வு செய்தால் பின்வரும் விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஷஷஅஹ்லுல் பைத்|| எனும் அரபுப்பதம் “அஹ்ல்”, “பைத்” எனும் இரண்டு சொற்களின் பிணைப்பால் உருவானதாகும்.

“அஹ்ல்” என்றால் சொந்தக்காரன் என்பது பொருள் இது ஒரு பொதுவான சொல் இது எதனோடு இணைக்கப்படுகிறதோ அதனோடு இணைந்து கருத்தைக் கொடுக்கும். உதாரணமாக “அஹ்லுல் அம்ர்” என்றால் அதிகாரத்தின் சொந்தக்காரன் அதாவது ஆட்சியாளன் எனும் கருத்தைக்கொடுக்கும். “அஹ்லுல் ஜன்னாஹ்” என்றால் சுவர்க்க வாசிகள் என்றும் “அஹ்லுந்நார்” என்றால் நரகவாதிகள் என்றும் பொருள் தரும். “அஹ்லுல் மத்ஹப்” என்றால் மத்ஹபின் சொந்தக்காரர்கள் அதாவது குறித்த மத்ஹபின் படி நடப்பவர்கள் “அஹ்லுர்ரஜூல்” ஒரு மனிதனின் சொந்தக்காரர்கள் அதாவது அவனின் குடும்பம்.

“அஹல” என்றால் திருமணம் செய்தான் என்ற அர்த்தமும் உள்ளது “அஹ்ஹலகல்லாஹ்” என்றால் அல்லாஹ் உனக்கு திருமணம் முடித்ததுத்தருவானாக உன்னை குடும்பஸ்தனாக மாற்றுவானாக! என்ற பொருள்படும் பிரார்த்தனையாகும். “பைத்” என்றால் வீடு எனவே “அஹ்லுல் பைத்” என்றால் வீட்டின் சொந்தக்காரர்கள் வீட்டார், வீட்டில் வசித்துவருவோர் என்பதாகும் “அஹ்லு பைதிர்ரஜூலி” என்றால் மனிதன் ஒருவனின் வீட்டார் என்பதாகும். ஒரு மனிதரின் வீட்டார் எனும் போது அதில் பிரதானமான பாத்திரத்தை ஏற்பது அவனது மனைவியாகும். ஒருவரின் குடும்பம் என்றாலே அதில் பிரதானமாக இருப்பது அவனின் மனைவியேயாகும். “அஹ்லுர்ரஜூல்” என்றும் “அஹ்லுல்பைத்” என்றும் ஒரு மனிதரைக் குறிப்பிட்டு சொல்லப்படுமாக இருந்தால் அது அவனின் மனைவியையே பிரதானமாக குறிக்கும் மக்கள் இருந்தால் மனைவியோடு சேர்ந்து கொள்வார்கள், இல்லையென்றால் பிரச்சினை கிடையாது என்பதை மொழித்துறை வல்லுனர்கள் பலர் சுட்டிக்காட்டுகின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் பின்வருமாறு
ஸூபைதி
அல்ஹலபி
இப்னு மன்ழூர்
ஜவ்ஹரி
ஷமஹ்ஷரி

வழக்காறு:
பொதுவாக “அஹ்லுல்பைத்” எனும் இந்த வார்த்தையை எவ்வாறு பரிபாசையில் பயன்படுத்துகிறார்கள். என்று பார்த்தால் மனைவி என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்துகின்றனர். “அவன் தன் வீட்டாரோடு வந்தான்” என்று சொன்னால் நாங்கள் அவனது மனைவியோடு அவன் வந்திருக்கிறான் என்று விளங்குவோம். “தன் குடும்பத்தோடு வந்தான்’ என்று சொன்னால் தன் மனைவியோடும் பிள்ளைகளோடும் வந்திருக்கிறான் என்றே விளங்குவோம். ஒருவன் தன் மனைவியை விட்டுவிட்டு பிள்ளைகளோடு மாத்திரம் வந்தால் தன் குடும்ப சகிதம் வந்தான் என்று பயன்படுத்துவது மிகவும் குறைவு, தன் பிள்ளைகளோடு வந்தான் என்றே பெரும்பாலும் சொல்வோம்.

திருமணம் முடித்து பிள்ளை இல்லை என்றாலும் தன் மனைவியோடு வந்தால் “குடும்பத்துடன் வந்திருக்கிறார்” என்று சொல்வோம். எனவே குடும்பம் என்ற வார்த்தை பரிபாசையில் மக்களுக்கு மத்தியில் மனைவியைக் குறிக்கவே பெரும்பாலும் அரபியிலும் தமிழிலும் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகின்றது. குடும்பம் என்ற வார்த்தை பிள்ளைகளைக் குறிக்க மாத்திரம் பயன்படுத்தப்படுகிறது என்று சொன்னால் அவருக்கு மொழி அறிவோ, மக்கள் அந்த வார்த்தையைப் பயன்படுத்தும் முறையோ தெரியவில்லை என்றே நாம் புரிந்து கொள்வோம். அல்-குர்ஆன்:

அல் குர்ஆனில் அல்லாஹ் “அஹ்ல்” என்ற வார்த்தையை ஏராளமான இடங்களில் பயன்படுத்துகின்றான். இந்த வார்த்தை அல்-குர்ஆனில் உயர்திணையோடு இணைக்கப்படும் இடங்களெல்லாம் பெரும்பாலும் மனைவி, வீட்டார் என்ற கருத்துக்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

“அல் கஸஸ்” எனும் அத்தியாயத்தில் மூஸா (அலை) அவர்களின் வரலாற்றைச்சொல்லும் போது 12 வது வசனத்தில் மூஸா (அலை) அவர்களை அவரது தாய் பெட்டியில் வைத்து நதியில் விடுகிறார் பிர்அவ்ன் அந்தக்குழந்தையை தத்தெடுக்கிறான். அதற்கு பால் கொடுக்கவென ஒரு பெண்ணை தேடுகிறார்கள். எல்லாப் பெண்களிடமும் பால் குடிக்க அந்தப்பிள்ளை மறுக்கிறது, அப்போது அந்தக்குழந்தையை பின் தொடர்ந்த அதன் சகோதரி “அந்தக்குழந்தையை நம்பிக்கையாக பராமரிக்கக்கூடிய ஒரு வீட்டாரை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? ” என்று கேட்டார் இங்கே “வீட்டார்” என்பதற்கு البيت أھل  என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மூஸா (அலை) அவர்களின் தாயையே நாடப்படுகின்றது. எனவே இங்கு ஒரு பெண்ணைக் குறிக்க “அஹ்லுல் பைத்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதே அத்தியாயத்தின் 29வது வசனத்தில் “மூஸா (அலை) அவர்கள் குறித்த தவணையை முடித்த பின்பு தன் குடும்பத்துடன் சென்றார்” என்று வந்துள்ளது இதில் குடும்பம் என்பதற்கு “அஹ்ல்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூஸாவுடன் அவரது குடும்பம் என்று அவரது மனைவியைத்தவிர வேறு எவரும் அவருடன் இருக்கவில்லை. எனவே இங்கே மனைவியைக் குறிக்க “அஹ்ல்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே 29ம் வசனத்தில் மூஸா (அலை) அவர்கள் தூர்ஸீனாவிற்கு பக்கத்தில் ஒளியைக் கண்டபோது ‘தன் குடும்பத்திற்கு (இங்கே) நில்லுங்கள்” என்று சொன்னார் என்றுள்ளது. இங்கும் அவரது மனைவியைக்குறிக்கும் குடும்பம் என்ற அடைமொழிக்கு ‘அஹ்ல்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹூத் எனும் அத்தியாயத்தில் அல்லாஹ் இப்றாஹீம் (அலை) அவர்களின் வரலாற்றைச் சொல்கிறான் அவரின் மனைவி நீண்ட காலமாக பிள்ளை இல்லாமல் இருக்கிறார். அல்லாஹ் வானவர்களை அனுப்பி அவர்களுக்குப் பிள்ளை கிடைக்க இருக்கும் சந்தோசமான செய்தியைச் சொல்கிறான் அப்போது, அவரின் மனைவி “எனக்குப் பிடித்த கேடே எனக்கு பிள்ளை பிறப்பதா? நானோ இயலாத மூதாட்டியாக இருக்கிறேன். என்னுடைய கணவரும் வயோதிபராக உள்ளார். நிச்சயமாக இது ஆச்சரியமான ஒரு விடயமே! என்கிறார். (அதற்கு வானவர்கள்) அல்லாஹ்வின் விவகாரத்தில் நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? அஹ்லுல் பைத்தினரே உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அபிவிருத்தியும் உண்டாவதாக. நிச்சயமாக அவன் புகழுக்குரியவனும் மிகுந்த கொடையாளியுமாவான்” என்று கூறினார்கள். (72,73)

இங்கே, வானவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் மனைவிக்கு பதில் சொல்லும்போதே இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். அவரின் மனைவிக்கு பதிலளித்துவிட்டு அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்கின்றனர். பிரார்த்தனையின் போது “அஹ்லுல் பைத்” என்ற வாசகத்தைப் பயன்படுத்துகின்றனர். எனவே இங்கு இப்றாஹீம் (அலை) அவர்களும் அவரின் மனைவியையும் தவிர வேறு எவரும் இல்லாத வேளையில் அவரின் மனைவிக்கு பதில் சொல்லும் போது அவருக்காக பிரார்த்தித்த வேளை அவரைக்குறிக்க “அஹ்லுல் பைத்” எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. யூஸூப் என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் யூஸூப் (அலை) அவர்களின் வரலாற்றைக்குறிப்பிடுகிறான். அதிலே யூஸூப் (அலை) அவர்களை ஒரு அரசன் வளர்த்துவருகிறான்.

அவர் கட்டிளம் பருவத்தை அடைகிறார். மிகப்பெரும் பேரழகனாக திகழ்கிறார். அவரை வளர்த்த அரசனின் மனைவி அவர் மீது மோகம் கொள்கிறாள். எப்படியாவது அவரை அடைந்துவிடவேண்டும் என்பதற்காக தன் கதவை தாழிட்டுவிட்டு அவரை தப்பான வழிக்கு அழைக்கிறாள். ஆனால் யூஸூபோ அதற்கு மறுக்கிறார். அவள் வலுக்கட்டாயமாக இழுக்கிறாள் யூஸூப் இதிலிருந்து தப்பிப்பதற்காக ஓடுகிறார். பின்னால் அரசனின் மனைவி துரத்துகிறாள். இருவரும் கதவை அடைகிறார்கள் அரசனும் அந்த வேளையில் கதவின் பக்கம் வருகிறான் மூவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது, அரசனின் மனைவி அரசரை பார்த்து “உன்னுடைய அஹ்லுடன்” தப்பாக நடந்து கொள்ள நினைப்பவர்களுக்கு சிறை செய்தல் அல்லது கொடூரமாக தண்டித்தல் என்பதைத்தவிர வேறு என்ன கூலி இருக்கிறது” என்கிறாள்.

இங்கே “அஹ்ல்” என்ற வார்த்தை மனைவி என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது அவர்களுக்குப் பிள்ளை இல்லை இதனால்தான் யூஸூபை வளர்த்து வந்தனர்.

பின்வரும் வசனங்கள் யாவும் லூத் (அலை) அவர்களின் வரலாற்றைப்பற்றிப்பேசுகின்றன. அதிலும் குறிப்பாக “அஹ்லுல்பைத்” என்ற வார்த்தைக்குள் மனைவியே பிரதான பாத்திரம் என்பதைச் சொல்கின்றது.

அஃராப்:23, அந்நம்ல்:57, அஷ்ஷூஅரா 170,171 “நாங்கள் அவரையும் அவரின் குடும்பத்தையும் (அஹ்லுல் பைத்தையும்) காப்பாற்றினோம் ஆனால் அவரின் மனைவியைத்தவிர” அன்-கபூத்:32,33
இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு நற்செய்தி கொண்டு வந்த வானவர்கள் தாங்கள் ஒரு பிரதேசத்தை அழிப்பதற்காக இறைவனால் அனுப்பப்பட்டுளோம் என்ற செய்தியை இப்றாஹீம் நபியிடம் சொல்கின்றனர். அப்போது இப்றாஹீம் நபியவர்கள். “அந்தக்கிராமத்திலே லூத் (அலை) அவர்கள் இருக்கின்றார்கள்’ என்றார்கள் (அதற்கு வானவர்கள்) அதில் உள்ளவர்கள் பற்றி நாம் அறிவோம். அவரையும் அவரின் குடும்பத்தையும் (அஹ்லையும்) நாம் காப்பாற்றுவோம் ஆனால் அவரின் மனைவியைத்தவிர என்று கூறினர்.”

லூத் நபியிடம் வானவர்கள் வருகிறார்கள் நீ கவலைப்படாதே அஞ்சாதே நாம் உன்னையும் உனது குடும்பத்தையும் (அஹ்லையும்) காப்பாற்றுவோம். ஆனால் உன் மனைவியைத்தவிர (அவளை நாம் காப்பாற்றமாட்டோம்) என்று கூறினார்கள். லூத் (அலை) அவர்களின் சமூகத்தாரை அழிக்க மலக்குகள் வருகிறார்கள் அந்த சமூகத்தார் மலக்குகளோடும் தப்பாக நடக்க முயற்சிக்கின்றனர். லூத் (அலை) அவர்கள் தன் பெண் மக்களை (மனம் செய்யக்) கொடுத்து என் விருந்தாளிகளை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுகிறார்கள் ஆனால் அவரின் கூட்டம் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. லூத் (அலை) அவர்கள் செய்வதறியாது திகைக்கிறார் அப்போது வந்த வானவர்கள் சொன்னார்கள்: “லூதே நாம் உமது இரட்சகனின் தூதுவர்கள் அவர்கள் ஒருபோதும் உம்மை வந்தடையவே மாட்டார்கள் நீர் உமது குடும்பத்தோடு ( أھل –அஹ்லோடு) இரவில் சென்றுவிடு. உமது அஹ்லில் உனது மனைவியரைத்தவிர வேறு எவரையும் திரும்பிப்பார்க்கவேண்டாம் ஏனெனில் அவர்களுக்கு என்ன நடக்குமோ அது அவளையும் பீடிக்கும் என்றனர்.” (ஹூத் 81)

அஸ்ஸாப்பாத்: 133-135 இந்த அத்தியாயத்தில் வரும் வசனங்களும் லூத் (அலை) அவர்களின் குடும்பத்தையும் அவரையும் பாதுகாத்ததாகவும் அவரின் மனைவியைப்பாதுகாக்கமாட்டோம் என்றும் மலக்குகள் குறிப்பிடுகின்றனர். அதில் குடும்பம் எபதற்கு “அஹ்ல்” என்ற வார்த்தையை அல்லாபயன்படுத்துகின்றான். மேலே குறிப்பிடப்பட்ட வசனங்களிளெல்லாம் குடும்பம் என்பதற்கு அல்லா ஹ் ”அஹ்ல்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான்; அதுபோலவே “அஹ்ல்” என்பதில் தவிர்க்கமுடியாத அங்கம் மனைவி என்பதையும் தெளிவாக உணர்த்துகிறான். குடும்பத்தில் பிரதானமான ஒருவராக மனைவி இல்லாவிட்டால் குடும்பத்தைக்காப்பாற்றுவோம் என்று சொல்லிவிட்டு உன் மனைவியைக்காப்பாற்ற மாட்டோம் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை.  குடும்பத்தின் தலையாய பாத்திரங்களில் ஒன்றாக மனைவி இருப்பதனால்தான் “ஆனால் உன் மனைவியைத்தவிர” என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

அஸ்ஸூன்னா: ஸூன்னாவிலும் “அஹ்லுல் பைத்” எனும் வார்த்தை மனைவியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒரு தடவை ஆயிஷா (ரழி) . அவர்களின் அறையில் நுழைகிறார்கள் அப்போது அஹ்லுல் பைத்தினரே அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லிக்கொண்டு நுழைந்தார்கள். (புஹாரி 4793)

ஆயிஷா (ரழி). அவர்கள் மட்டும் வசிக்கும் அறையில் நுழையும் போது அஹ்லுல் பைத்தினரே என்று அழைத்தது ஆயிஷா (ரழி) . அவர்களைக்குறிக்கவே என்பது தெளிவாகத் தெரிகிறது. நாம் மேலே குறிப்பிட்ட நான்கு விதமான ஆய்வுகளின் அடிப்படையிலும் பகுத்தறிவின் படியும் “அஹ்லுல்பைத்” என்ற வார்த்தை ஒரு மனிதனின் குடும்பத்தைக்குறிக்க பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அதன் தவிர்க்க முடியாத அங்கமே மனைவி என்பதையும் கண்டோம்.


நபியின் அஹ்லுல் பைத் யார்?

அஹ்லுல் பைத் என்பது பொதுவான ஒரு வார்த்தையாக இருந்தபோதும் வழிகெட்ட சில இயக்கங்களின் தாக்கத்தினால் அது நபியவர்களின் குடும்பத்தைக் குறிக்கும் சொல்லாகவே பெரும்பாலும் அறிமுகமாகியுள்ளது. அத்தோடு இதில் பல பிரச்சினைகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. நபியவர்களின் குடும்பம் எனும் போது முதலில் நுழைபவர்கள் அவரின் மனைவியர் என்பதை நாம் மேலே குறிப்பிட்ட ஆய்வு தெளிவுபடுத்துகிறது. அதுபோல் அஹ்ஸாப் எனும் அத்தியாயத்தில் வரும் பலவசனங்களும் ஆலுஇம்றான் எனும் அத்தியாயத்தின் 121ஆவது வசனமும் சுட்டிக்காட்டுகிறது.

(நபியே!) நீர் உம் குடும்பத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டுச்சென்று விசுவாசங் கொண்டவர்களை (உஹது யுத்த களத்தில்) போருக்காக (அவரவருக்குரிய) இடங்களில் அமர்த்தி (ஒழுங்குபடுத்தி)க் கொண்டிருந்ததை (நினைத்துப்பார்ப்பீராக! யாவற்றையும்) அல்லாஹ் செவியுறுகிறவன் நன்கறிபவன் (அல்-குர்ஆன் 3:121)

இங்கே குடும்பம் என்பதற்கு அஹ்ல் என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். நபியவர்கள் உஹதுக்களத்திற்கு மதீனாவில் தன்னுடைய வீட்டிலிருந்து வெளியாகிச்செல்லும் போது அவர்களது மனைவியர்கள் மட்டுமே நபியவர்களின் வீட்டில் இருந்தார்கள். அவரது பிள்ளைகளில் பாதிமா (ரழி) அவர்களைத்தவிர எல்லோருமே மரணித்திருந்தனர். பாதிமா (ரழி) அவர்கள் கூட அலி (ரழி). அவர்களை மணந்துகொண்டு தனியாக இருந்தார்கள். எனவே இங்கே ‘‘அஹ்ல்’‘ என்ற வார்த்தை நபியவர்களின் குடும்பத்தில் மனைவியரைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் ஸைத் பின் அர்க்கம் . அவர்கள் அறிவிக்கும் செய்தியில், அவரிடம் நபியவர்களின் மனைவியர் அவரின் குடும்பமா? என்று கேட்கப்பட்ட போது, ‘‘‘‘நபியவர்களின் மனைவியர் அவரின் குடும்பத்தினர்கள்தான் என்றாலும் ஸகாத் பொருட்களைப் பெற்றுக் கொள்வது ஹராமாக்கப்பட்ட நபியவர்களின் குடும்பம் எனும் போது, அவரின் குடும்பம், ஜஃபரின் குடும்பம், உகைலாவின் குடும்பம், அப்பாஸின் குடும்பம் என்று எல்லோரும் அடங்குவர்’‘ (முஸ்லிம் 2408)

நபியவர்கள் ஒரு தடவை அலி (ரழி) ., பாதிமா (ரழி), ஹஸன் (ரழி), ஹூஸைன் (ரழி) போன்றோரை ஒரு போர்வையினால் மூடிவிட்டு இறைவா! இது எனது குடும்பத்தினர் அவர்களை நீ தூய்மைப்படுத்து என்று பிரார்த்தித்தார்கள். இந்தச் செய்தியை ஆயிஷா (ரழி). அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 2424)

அப்துல் முத்தலிப் பின் றபீஆ (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு நீளமான செய்தி, ஹாஷிம் கிளையார் அனைவருமே நபியவர்களின் குடும்பத்தினர் என்பதையும், அவர்கள் அனைவருமே ஸகாத் பெறத் தடைசெய்யப்பட்டவர்கள் என்பதையும் உணர்த்துகின்றது. ‘‘‘‘ரபீஆ., அப்பாஸ் (ரழி) அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து, அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த இரு சிறுவர்களையும் (அப்துல் முத்தலிப் பின் ரபீஆ (ரழி) பழ்ழு பின் அப்பாஸ்) நாம் நபியவர்களிடம் அனுப்பினால் அவர்கள் இருவரும் நபியவர்களிடம் பேசி இருவருக்கும் நபியவர்கள் ஸகாத் நிதியை சேகரிக்கும் பொறுப்பை வழங்கினால், மனிதர்கள் கொடுப்பதை அவர்கள் கொடுத்து (மற்றவர்கள் இதை) சேகரிப்பதால் எதை அடைந்து கொள்வர்களோ? அதை பெற்றுக்கொள்வார்களே என்று இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அலி (ரழி) . அவர்கள் அவ்வழியாக வந்தார்கள.; அவர்கள் இருவரிடமும் நின்றார்கள் பின்பு இருவரும் விடயத்தை அலி (ரழி) . அவர்களுக்குச் சொன்னார்கள். அலி (ரழி). அவர்கள்ள நீங்கள் இவ்வாறு செய்யாதீர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக நபியவர்கள் உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற மாட்டார் என்றார்கள்.

அப்போது ரபீஆ (ரழி) அவர்கள் அவரை எதிர்த்தார்கள்: ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்கள் மீது கொண்ட பொறாமையினால்தான் இதை சொல்கிறாய். நீ நபியவர்களின் மருமகனானாய், இறைவன் மீது ஆணையாக நாம் அதற்காக உன் மீது பொறாமைப்படவில்லை’ என்று சொன்னார்கள். அலி (ரழி) . அவர்கள் (அப்படியென்றால்) அவர்கள் இருவரையும் அனுப்பிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு ஒருக்கனைத்து சாய்ந்து கொண்டார்கள்.

அப்துல்முத்தலிபும் பழ்ழும் சொல்கிறார்கள்: நபியவர்கள் லுஹர் தொழுகையை முடித்த போது இருவரும் நபியவர்களின் அறையின் கதவில் அருகில் சென்று நின்று கொண்டோம். நபியவர்கள் எம்மிடம் வந்து எம் காதுகளைப் பிடிக்கும் வரை நாம் நின்றோம் பின்பு எதை மறைத்து வைத்துள்ளீர்கள் (எதைச் சொல்ல நினைக்கிறீர்கள்) சொல்லுங்கள் என்றார்கள். பின்பு அன்றைய தினம் வழக்கம்போல் நபியவர்கள் செல்லும் அவரின் மனைவி ஸைனப் பின்த் ஜஹ்ஸிடம் நுழைந்தார்கள், நாமும் நுழைந்தோம். (அப்துல் முத்தலிப் பின் ரபீஆ (ரழி) அவர்கள் சொல்கிறார்கள்: நாம் இருவரும் மற்றவர் பேச வேண்டும் என்று நினைத்தோம் பின்பு எங்களில் ஒருவர் பேசினார். அல்லாஹ்வின் தூதர் அவர்களே மனிதர்களில் அதிகம் நன்மை செய்பவர் நீங்கள், மனிதர்களில் தங்கள் குடும்ப உறவுகளை அதிகம் சேர்த்து வாழ்பவர் நீங்கள். நாமோ பருவ வயதை அடைந்து விட்டோம். ஸகாத் நிதியை சேகரிக்கும் பொறுப்புக்களில் எங்களை நீங்கள் நியமிக்க வேண்டும் என்று பேச வந்துள்ளோம். மனிதர்கள் அவைகளை சேகரித்து உங்களிடம் ஒப்படைப்பதைப்போல நாமும் ஒப்படைப்போம். அப்போது இதற்காக மக்கள் அடைந்து கொள்ளும் பங்கைப்போல நாமும் அடைந்து கொள்வோம் என்றனர்.

அப்துல் முத்தலிப் சொல்கிறார்: நாம் அவரிடம் (திரும்பவும்) பேசுவோமா? என்று நினைக்குமளவு நபியவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது அவரின் மனைவி ஸைனப் . அவர்கள் பேசவேண்டாம் என்று திரைக்குப்பின்னால் இருந்து சுட்டிக்காட்டினார்கள். பின்பு நபியவர்கள் சொன்னார்கள்: ஸகாத் பொருட்கள் என்பது முஹம்மதின் குடும்பத்தினருக்கு ஆகுமானதல்ல. நிச்சயமாக அவை மனிதர்களின் அழுக்குகள்.’‘‘‘ (முஸ்லிம் 1072)

(ரபீஆ பின் ஹாரித் (ரழி) அவர்கள் நபியவர்களின் மாமா ஹாஷிமின் குடும்பத்தைச்சேர்ந்தவர். எனவே பனூஹாஷிம் கிளையார் அனைவரும் அஹ்லுல் பைத்தினர் என்பது தெளிவு) மேலே நாம் கூறியவற்றைச் சுருக்கமாக, பின்வருவோர் நபிவர்களின் குடும்பத்தினர் என்று சொல்லலாம்.

நபியவர்களின் மனைவியர்கள் அலி (ரழி)., பாதிமா (ரழி), ஹஸன் (ரழி), ஹூஸைன் (ரழி) அலி (ரழி) யின் குடும்பம், ஜஃபரின் குடும்பம், உகைலின் குடும்பம், அப்பாஸின் குடும்பம். பனூ ஹாஷிம் கிளையார்.


விதண்டாவாதமும் விளக்கமும்.

நாம் மேலே நபியவர்களின் அஹ்லுல் பைத்தினர் யார் என்பதை குர்ஆன் ஸூன்னா அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தெளிவாக அவதானித்தோம். ஆனால் ஷீஆக்கள் நபியவர்களின் அஹ்லுல் பைத்தினரை முற்றிலும் குர்ஆன், ஸூன்னாவிற்கு முரண்படுகின்ற அடிப்படையில் தீர்மானிக்கின்றனர். அவர்கள் யாவர்? என்பதையும், அவர்களின் ஆதாரங்களுக்கான தெளிவான பதில்களையும் இங்கு அவதானிப்போம்.

ஷீஆக்கள், நபியவர்களின் குடும்பமாக அடையாளம் காட்டுவோர் அலி (ரழி), பாதிமா(ரழி) ஹஸன் (ரழி), ஹூஸைன் (ரழி) அவர்களின் குடும்பத்தில் வந்த சிலர் ஆகியோரை ஷீஆக்கள் அஹ்லுல் பைத்தினராகவும் தங்களின் மார்க்கத்தின் ஆதாரமாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். நபியவர்களின் இரண்டு மகளை திருமணம் செய்த உஸ்மான் (ரழி) . அவர்களை அஹ்லுல் பைத்தாக ஷீஆக்கள் கணிப்பிடுவதில்லை. ஆனால் ஒரு மகளைத் திருமணம் செய்த அலி (ரழி) . அவர்களை நபியவர்களின் குடும்பத்தின் தலைவரைப்போலவும், நபியவர்களின் குடும்பத்தில் அவரின் இடத்தைப்போன்ற இடம் எவருக்கும் கிடையாது என்பதைப்போலவும் மதிக்கின்றனர்.

ஷீஆக்கள் தங்களின் இந்தக் கொள்கைக்கு சொல்கின்ற ஆதாரங்களை இனி அவதானிப்போம். 

ஆதாரம்: 01
ஆயிஷா (ரழி) . அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் ஒரு காலைப்பொழுதில் வெளியானார்கள் அவர்கள் மீது ஒரு போர்வை இருந்தது. அதிலே அலி (ரழி) ., பாதிமா ., ஹஸன் ., ஹூஸைன் . போன்றோரை நுழைத்தார்கள். பின்பு ‘‘அல் அஹ்ஸாப் 33’‘ம் வசனத்தை ஓதினார்கள் ‘அஹ்லுல் பைத்’ (எனும் நபியின் குடும்பத்) தினராகிய உங்களை விட்டும் அசுத்தத்தை அகற்றி உங்களை முற்றிலும் பரிசுத்தப்படுத்திடவே அல்லாஹ் விரும்புகின்றான்.’ (முஸ்லிம் 2424)

இந்த ஹதீஸின் சில அறிவிப்புக்களிலே உம்மு ஸலமா . அவர்கள், நானும் போர்வைக்குள் வரலாமா என்று அனுமதி கேட்டதாகவும் அதாவது நானும் உங்களின் அஹ்லுல் பைத் இல்லையா என்று சொன்னதாகவும் அதற்கு நபியவர்கள் நீங்கள் உங்கள் இடத்தில் இருங்கள் நீங்கள் எல்லோரும் நலத்திலேயே இருக்கிறீர்கள் என்று சொன்னார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸை ஷீஆக்கள் வைத்துக்கொண்டு இந்தப் போர்வைக்குள் நபியவர்கள் நுழைத்தவர்கள் மாத்திரம்தான் அஹ்லுல் பைத்தினர் என்றும் அவர்கள் தவிரவுள்ள எவரும் அஹ்லுல் பைத்தினர் அல்ல என்றும் வாதிடுகின்றனர். அதாவது பாதிமா . அவர்கள் அஹ்லுல் பைத்தில் இருக்கிறார்களாம் அவர்கள் பிறப்பதறகு; காரணமாக இருந்த நபியவர்களின் மனைவி ஹதீஜா (ரலி).
அவர்கள் அஹ்லுல் பைத்தில் இல்லையாம். இதற்கான பதிலை தெளிவாக நோக்குவோம்.

01) நபியவர்களின் 23 வருடகால வாழ்க்கையில் நபியவர்கள் அஹ்லுல் பைத் பற்றி இந்த ஹதீஸில்
மாத்திரமே சொல்லியிருப்பதைப்போன்று ஷீஆக்கள் பேசுகின்றனர். நபியவர்கள் அஹ்லுல் பைத் தொடர்பாக சொன்ன சில செய்திகளை அஹ்லுல் பைத் பற்றிய அறிமுகத்திலே நாம் குறிப்பிட்டோம். எனவே அவைகளையெல்லாம் கவனித்தே முடிவுகளை செய்யவேண்டும்.

02) இங்கே நபியவர்களின் வார்த்தை மற்றவர்கள் அஹ்லுல் பைத்தினர் அல்ல என்பதையோ இவர்கள் மாத்திரம்தான் அஹ்லுல் பைதத் pனர் என்பதையோ உணர்த்தவில்லை. ஒருவருக்கு 06 நண்பர்கள் இருக்கும் போது மூன்று பேரைக்காட்டி இவர்கள் எனது நண்பர்கள் என்று சொல்வதனால் மற்ற மூவரும் எனது நண்பர்கள் அல்ல என்றாகாது. ஒருவர் தன் சகோதரனைக்காட்டி இவர் எனது தம்பி என்றால் அவருக்கு அண்ணன் இல்லை என்றோ வேறு எந்த சகோதரர்களும் அவருக்கு இல்லை  என்றோ, அவர்கள் குடும்பத்தில் இருவர்தான் என்றோ நாம் சொல்ல மாட்டோம். இந்த வார்த்தையை மாத்திரம் வைத்து அவ்வாறு சொல்ல முயல்பவர்களை நாம் சிந்திக்கத் தெரிந்தவர்கள் அறிவாளிகள் என்றோ சொல்லமாட்டோம்.

இறைவனும் இவ்வாறான வார்த்தைகளை அல்குர்ஆனில் பிரயோகிக்கிறான். அத்தவ்பா 36ம் வசனத்தில் ‘‘நிச்சயமாக அல்லாஹ் விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை 12 ஆகும். வானம் பூமி படைக்கப்பட்ட நாளிலிருந்து இறைவனின் வேதத்தில் இவ்வாறே உள்ளது.அதில் நான்கு மாதங்கள்  சங்கைபொருந்தியதாகும் அதுதான் உறுதியான மார்க்கமாகும்.’‘

இந்த வசனத்தை ஒருவர் வைத்துக்கொண்டு இந்த வசனத்தில் குறிப்பிடப்படுவதுதான் மார்க்கம் வேறு எதுவும் மார்க்கம் அல்ல என்று சொன்னால் நாம் யாராவது அவரை ஏற்றுக்கொள்வோமா? நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டோம். இந்தக் கருத்திலமைந்த பல வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன இவற்றையெல்லாம் நாம், அவை மாத்திரம்தான் மார்க்கம். வேறு விடயங்கள் எதுவும் மார்க்கத்தில் இல்லை என்ற அடிப்படையில் விளங்குவதில்லை. மாறாக இதுவும் மார்க்கம்தான் அதுபோலவே ஏனைய விடயங்களும் மார்க்கத்தில் உள்ளவைதான் என்று சொல்வோம். இதுபோலவே நபியவர்கள், இவர்கள் எனது குடும்பத்தினர், என்று சொல்வதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது இவர்களும் குடும்பமே ஏனையவர்களும் நபியவர்களின் குடும்பத்தில் இருக்கின்றனர் என்றே விளங்க வேண்டும்.

03) இந்த ஹதீஸில் வரும் அடிப்படையில் போர்வையின் உள்ளிருந்தவர்கள் மாத்திரமே அஹ்லுல் பைத்தின் அங்கத்தவர்கள் என்றால் ஏனையவர்கள் எவரையும் அதிலே வெளியிலிருந்து நுழைக்க முடியாது என்றால், ஷீஆக்களினால் அஹ்லுல் பைத் என்றும் தங்களின் இமாம்கள் என்றும் இனங்காட்டப்படுபவர்களில் மீதமுள்ள ஒன்பது பேரையும் எந்த அடிப்படையில் நுழைவிக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

இவ்வாறு நாம் கேட்டால் பாத்திமாவும் அலி (ரழி)யும் இருந்தார்கள் ஹஸன் (ரழி), ஹூஸைன் (ரழி) இருவருமே இருந்தார்கள்தானே! எனவே அவர்களின் பிள்ளைகளும் இதில் அடங்குவார்கள் என்று சொல்வர். அப்படியென்றால் பாத்திமாவின் தாய் நபியவர்களின் மனைவி ஹதீஜாவும் அஹ்லுல் பைத்தில் அடங்குவார்தானே என்று நாம் சொல்வோம். இதை ஆம் என்று ஏற்றுக்கொண்டால் நபியவர்களின் மனைவி ஹதீஜாவை அவரின் குடும்பம் என்று ஏற்றுக்கொள்ளும் நீங்கள் மற்றைய மனைவியரை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் என்று கேட்போம்… இவ்வாறு ஷீஆக்களின் இந்த தவறான கொள்கையினால் அவர்களால் பதில் சொல்லமுடியாத பல கேள்விகளில் சிக்கித் தவிக்கிறார்கள்.

ஹஸன் (ரழி) ஹூஸைன் (ரழி) இருவரின் பரம்பரையும் அஹ்லுல் பைத்தில் அடங்கும் என்று ஷீஆக்கள் சொல்வார்கள். ஆனால் தங்களின் இமாம்கள் என்றும், அஹ்லுல் பைத் என்று தாங்கள் இனங்காட்டும் போது ஏன் ஹூஸைன் (ரழி) அவர்களின் பரம்பரையை மட்டும் எடுத்துக்கொள்கின்றனர். அவர்களின் வாதத்தில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இருவரின் பரம்பரையில் வருவோரையும் தங்களின் இமாம்களாக ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஹஸன் (ரழி) அவர்களின் பரம்பரையிலிருந்து ஷீஆக்கள் எந்த இமாமையும் எடுத்துக்கொள்ளவில்லை. அதுபோலவே தங்கள் பிரச்சாரங்கள் அனைத்தையும் ஹூஸைன் . அவர்களை மையப்படுத்தியே செய்கின்றனர்.

எனவே, நாம் மேலே குறிப்பிடட அடிப்படையில் இந்த போர்வை ஹதீஸ் பற்றிய இவர்களும் எனது அஹ்லுல் பைத்தினர்தான் என்பதைக்குறிக்குமே தவிர இவர்கள்தான் எனது குடும்பத்தினர் வேறு எவரும் இல்லை என்பதைக்குறிக்காது.
ஆதாரம்: 02
إنما يريد الله لذھب عنكم الرجس أھل البيت ويطھركم تطھيرا

‘‘நபியின் மனைவியர்களே! நீங்கள் வேறு எந்தப் பெண்ணைப் போன்றவர்களுமல்ல… நபியின் குடும்பத்தினரே உங்களை அசுத்தத்திலிருந்து தூய்மைப்படுத்துவதையும் பரிசுத்தப்படுத்துவதையுமே அல்லாஹ் விரும்புகிறான்.’‘‘‘ (அஹ்ஸாப் 32,33)
நாம் இந்த வசனத்தில் கோடிட்டுக்காட்டியுள்ள ‘‘ كم ‘‘‘‘ என்ற வார்த்தை அரபியில் ஆண்களைப்பார்த்து ‘‘நீங்கள்’‘‘‘ என்பதற்கு பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். பெண்களைப்பார்த்து ‘‘நீங்கள்’‘‘‘ என்பதற்கு ‘‘ كن ‘‘‘‘ என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படும் இதை வைத்து ஷீஆக்கள் பின்வருமாறு வாதிடுகின்றனர்.

இந்த வசனத்தில் அல்லாஹ் ‘‘ كم ‘‘‘‘ என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளான் இது ஆண்களைக்குறிக்க பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். பெண்களைப்பற்றிப் பேசிவிட்டு திடீரென்று ஆண்களைப்பற்றிப்பேசுவதன் மூலம் பெண்களை இதிலிருந்து நீக்கியுள்ளான் என்பது தெளிவாகின்றது. அத்தோடு ஆரம்பத்தில் நபியவர்களின் மனைவியர்கள் பற்றிப் பேசும்போதெல்லாம் பெண்பாலைக்குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டு அஹ்லுல்பைத்தினர் பற்றி பேசும் போது ஆண்பாலைக்குறிக்கும் வார்த்தைகளைப் பயன்பத்தியிருப்பதே நபியின் மனைவியர் அஹ்லுல் பைத்தில் இல்லை. என்பதை தெளிவுபடுத்தவும் அஹ்லுல் பைத்திலிருந்து அவர்களை நீக்குவதற்காகவுமே ஆண்பாலில் பேசியுள்ளான் என்கின்றனர். இந்த வாதம் தவறானது என்பதை பின்வருமாறு விளக்க முடியும்.

01) அரபு மொழியில் ஆண்களுக்கு பயன்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்திப் பேசும் போது பெண்களையும் உள்ளடக்குகின்றது ஆனால் பென்களைக்குறிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தும்போது அது ஆண்களை உள்ளடக்குவதில்லை. இது அரபு மொழி தெரிந்த யாவரும் அறிந்திருக்கின்ற ஒரு விடயம். இது எவ்வாறு ஷீஆக்களுக்கு தெரியாமல் போனதோ தெரியவில்லை. அல்-குர்ஆன், அல்ஹதீஸில் உள்ள ஏராளமான கட்டளைகள் ஆண்பாலிலேயே பேசப்படுகிறது ஆனாலும் அது பெண்களையும் உள்ளடக்குகிறது பெண்களைக்குறித்து பேசப்படுபவை அவர்களுக்கே உரிய விடயங்களாகவே உள்ளன.

உதாரணமாக அந்நிஸா என்ற அத்தியாயத்தில் வரும் 26,27,28ம் வசனங்களைக்குறிப்பிடலாம்.
يريد الله ليبين لكم ويھديكم سنن اللذين من قبلكم ويتوب عليكم

‘‘அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும் உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்கள் சென்ற நேரான வழிகளில் உங்களையும்….’‘‘‘ இந்த வசனத்திலே வரும் அனைத்து வார்த்தைகளும் ஆண்களைக்குறிக்கும் வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையும் இது போன்றதையும் எவரும் ஆண்களுக்கு மாத்திரம் உரியது, பெண்கள் இதில் நுழையமாட்டார்கள் என்று பிரச்சாரம் செய்வது கிடையாது.

அல்-கஸஸ் அத்தியாயத்தின் 29வது வசனத்தில் இறைவன் பின்வருமாறு குறிப்பிடுகிறான். ‘‘ஆகவே மூஸா தன் தவணையை முடித்துக்கொண்டு தன் குடும்பத்தினருடன் இரவில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது’‘‘‘ இந்த வசனத்திலும் இது போன்ற வசனங்களிலும் ஆண்களைக்குறிக்கும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டாலும் பெண்களும் அதில் உள்ளடக்கப்படுவார்கள். இதுபோலவே அஹ்லுல் பைத் தொடர்பாக அஹ்ஸாப் அத்தியாயத்தில் வரும் வசனத்தில் ஆண்களைக்குறிக்கும் ‘‘ كم ‘‘‘‘ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும் அது பெண்களையும் குறிக்கும் என்று விளங்கிக் கொள்ளலாம்.
02) மேலே அஹ்ஸாபில் வரும் வசனத்தின் ஆரம்பத்தில் முழுக்க முழுக்க பெண்பாலில் பேசப்படுகிறது. நேரடியாக பெண்களுக்கு நபியவர்களின் மனைவியர்களுக்கு அந்தக் கட்டளைகள் முன்வைக்கப்படுகின்றன. அந்த வசனத்திற்கு அடுத்துள்ள வசனத்திலும் முழுக்க முழுக்க பெண்பாலைக்குறிக்கும் வார்த்தைகளே பயன்படுத்தப் பட்டுள்ளன.
ஆனால் அஹ்லுல் பைத்தினர் பற்றிப்பேசும்போது மட்டும் ஆண்பாலைக் குறிக்கும் ‘‘ كم ‘‘‘‘ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஏன் இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று யோசித்தால். அஹ்லுல் பைத்தைப் பொறுத்தவரையில் அதிலே நபியவர்கள் அங்கம் வகிக்கிறார்கள். அவர்கள்தான் அதன் தலைவராகவும் இருக்கிறார்கள். எனவே இந்த சந்தர்ப்பத்தில். பெண்பாலைக்குறிக்கும் வார்த்தை பயன்படுத்தப்பட்டால் நபி (ஸல்) அவர்கள் அஹ்லுல்பைத்திலிருந்து நீக்கப்பட்டதாகிவிடும் எனவே ஆண்பாலைக்குறிக்கும் ‘‘ كم ‘‘‘‘ என்ற வார்த்தை பயன்படுத்தபட்டுள்ளது. அதில் நபியவர்களும் அவர்களின் மனைவியரும் நுழைந்துவிடுவர். ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கிய ஒரு விடயத்தை சொல்லும்போது ஆண்பால் வார்த்தைகளை பயன்படுத்தும் அரேபியர்களின் வழமைக்கு இது ஒப்பானதாகும். இது போன்று அல்குர்ஆனில் ஏராளமான வசனங்கள் உள்ளன. இப்றாஹீம் (அலை) அவர்களின் வீட்டுக்கு வானவர்கள் வருகிறார்கள். அவருக்கு ஒரு குழந்தை பிறக்க இருப்பதாக நன்மாராயம் கூறுகின்றனர் இதைக்கேட்ட இப்றாஹீம் (அலை) அவர்களின் மனைவி ஆச்சரியமடைகிறார். ‘நான் மூதாட்டி எனது கணவர் இப்றாஹீமோ வயோதிபராக இருக்கிறார். இந்த நிலையில் எவ்வாறு குழந்தை பிறக்கும்?’ என்று கூறுகிறார் அதற்கு மலக்குகள் பதில் கொடுக்கும் போது.

( ‘ قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت ‘( 11:73
‘அ(தற்க)வர்கள், ‘அல்லாஹ்வின் கட்டளை குறித்தா நீர் ஆச்சரியப்படுகின்றீர்? ‘இவ்வீட்டாரே! அல்லாஹ்வின் அருளும், அவனது பாக்கியங்களும் உங்கள் மீது உண்டாவதாக! என்று கூறினர்.’ இங்கே இப்றாஹீம் நபியின் மனைவியோடு பேசும் போது மலக்குகள் ஆரம்பத்தில் பெண்பாலைக்குறிக்கும் ‘‘ تعجبين ‘‘ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். ஆனால் அதற்கு பின் அவரின் அஹ்லுல் பைத்தினருக்கு பிரார்த்திக்கும் போது ‘‘ كم ‘‘ என்ற ஆண்பாலுக்கு பயன்படுத்தப்படும் வார்த்தையை உபயோகிக்கின்றனர். காரணம், ஆரம்பத்தில் இப்றாஹீம் (அலை) அவர்களின் மனைவியோடு மட்டும் பேசுகின்றனர். ஆனால், பின்பு இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பம் பற்றி பேசுகின்றனர். அவரது குடும்பத்தின் தலைவர் அவர்தான் எனவே தான் ஆண்பாலைக்குறிக்கும் ‘‘கும்’‘ என்ற அரபு வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர். அதில் அவரது மனைவியும் நுழைகின்றார். இதேவேளை, பெண்பாலைக்குறிக்கும் வார்த்தையை பயன்படுத்தினால், அதில் இப்றாஹீம் (அலை) அவர்கள் நுழையமாட்டார்கள். இங்கே, இப்றஹீம் நபியின் மனைவி இதில் நுழையமாட்டார் அதனால்தான் ஆண்பாலில் மலக்குகள் உபயோகித்துள்ளனர் என்று வாதிடமுடியாது காரணம் ‘‘கும்’‘ என்ற வார்த்தை பன்மைக்கு பயன்படுத்தப்படுவது. ஒருமைக்கு பயன்படுத்துவது அல்ல இப்றாஹீம் நபியுடன் அவரது மனைவியைத்தவிர வேறு எவரும் இருக்கவில்லை. எனவே அவரது மனைவியும் அதில் நுழைகிறார் என்பது தெளிவாகிறது.

இதுபோலவே நபியவர்களின் குடும்பத்தில் அவர்களே தலைவர் என்பதால் ‘‘அஹ்ஸாப்’‘‘‘ அத்தியாயத்தில் ஆண்பாலைக்குறிக்கும் ‘‘ كم ‘‘ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் போராட்டத்தில் கொலை செய்யப்பட்டபோது நபியவர்கள் ஸஹாபாக்களுக்கு சொல்கிறார்கள்:
إصنعوا لآل جعفر طعاما فقد أتاهم أمر يشغلهم أو أتاهم ما يشغلهم

‘‘நீங்கள் ஜஃபரின் குடும்பத்தினருக்கு உணவு செய்து கொடுங்கள் ஏனெனில் அவர்களை (உணவை விட்டும்) திருப்பும் ஒரு விடயம் (மரணம்) நடந்திருக்கிறது’‘‘‘ (அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, தாரகுத்னி. பைஹகி, அஹ்மத்)

இந்த ஹதீஸிலே நாம் கோடிட்டுக்காட்டியுள்ள ‘‘ ھم ‘‘ என்ற வார்த்தை ஆண்பாலைக் குறிகக் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். இதனால் ஜஃபரின் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்க நபியவர்கள் சொல்லவில்லை. ஆண்களுக்கு மாத்திரமே உணவு கொடுங்கள் என்று சொன்னார்கள் என்று யாரும் சொல்வதில்லை, அல்லது ஜஃபரின் குடும்பத்தில் பெண்கள் இல்லை ஆண்கள் மட்டுமே இருந்தார்கள். அதனாலேயே நபியவர்கள் ‘‘ ھم ‘‘ என்று ஆண்பாலைக்குறிக்கும் வார்த்தையைப் பயன்படுத்தினார்கள் என்றும் எவரும் யோசிப்பதில்லை.
எனவே ஆண்பாலைக்குறிக்கும் வார்த்தையை பயன்படுத்தும்போது பெண்களும் அதில் நுழைந்து கொள்வார்கள். இது ஸஹாபாக்களிடமும், மற்ற எல்லோரிடமும் பிரபல்யம் அடைந்திருந்த ஒரு விடயமாகும். இதனாலேயே நபியவர்களும் அவ்வாறு ஆண்பாலைக்குறிக்கும் வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.

 இதுபோலவே அத்தியாயம் அஹ்ஸாபின் வசனத்தையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

03) நாம் ஆரம்பத்தில் அஹ்லுல் பைத்தினர் என்றால் யார்? என்பது பற்றி தெளிவுபடுத்தும் போது, மனைவியரும் அஹ்லுல் பைத்தில் நுழைவார்கள். ஒரு வகையில் அவர்கள்தான் அஹ்லுல் பைத்தின் பிரதான அங்கங்கள் என்பதை தெளிவாக விளக்கினோம். அதுவும் இந்த வசனத்தை விளக்குவதாக உள்ளது.

அதுபோல் அல்லாஹ் இப்றாஹீம்(அலை) அவர்களின் அஹ்லுல்பைத்தில் அவரின் மனைவி ஓர் அங்கம் என்று குறிப்பிடுகிறான். மூஸா (அலை) அவர்களின் மனைவி அவரின் அஹ்லுல் பைத்தில் ஓர் அங்கம் என்று குறிப்பிடுகிறான். இது மாத்திரமல்லாமல் இந்த உலகத்தில் பிறக்கும் எல்லோருடைய மனைவியும் அவருடைய குடும்பத்தின் பிரதான பகுதி என்பது எல்லோரும் அறிந்த விடயம். இவ்வாறிருக்க சங்கைக்குரிய நபியவர்களின் மனைவியரை அவரின் குடும்பத்திலிருந்து எவ்வாறு வெளியேற்றமுடியும்.!!

04) அல்-அஹ்ஸாப் அத்தியாயத்தில் வரும் அஹ்லுல் பைத் பற்றிய வசனத்திற்கு முன்னாலும் பின்னாலும் வரும் ஏராளமான வசனங்கள் நபியவர்களின் மனைவியரைப் பற்றியே பேசுகிறது இதன் மூலமும் நாம் அஹ்லுல் பைத் என்பதன் அர்த்தத்தைப்புரிந்து கொள்ளமுடியும். அல்குர்ஆனை விளக்கும்போது குறித்த வசனத்திற்கு முன், பின் உள்ள வசனங்கள் கவனத்தில் கொள்ளப்படும். பொதுவாக ஒருவரின் பேச்சை விளங்க அவர் முன்னால் பேசியதும், பின்னால் சொன்னதும் தேவைப்படுகிறது. இல்லாதபோது பெரும்பாலும் பெறப்படும் விளக்கம் தவறானதாக அமைந்துவிடும்.

05) அஹ்ஸாப் அத்தியாயத்தில வரும் வசனத்தில் ‘‘அஹ்லுல் பைத்’‘ என்பதை குறித்து ‘‘ كم ‘‘ என்ற  ஆண்பாலைக்குறிக்கும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதால் நபியவர்களின் மனைவியர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று பிரச்சாரம் செய்யும் ஷீஆக்கள் பாத்திமா. அவர்களை அந்த அஹ்லுல் பைத்தின் அங்கமாகவும், அந்த வசனம் அவரை உள்ளடக்கும் என்றும் குறிப்பிடுகின்றனர். இது எவ்வாறு அவர்களுக்குச் சாத்தியமானது? பாத்திமா . ஆண் தான் ஆனால் பெண்ணின் தோற்றத்தில் இருக்கிறார் என்று இவர்கள் இதற்கு பதில் சொல்வார்கள் போலும். எனவே இத்தகைய விடயங்களிலிருந்து ஷீஆக்களின் விமர்சனங்களும் விவாதங்களும் உள்நோக்கம் கொண்டவை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

உண்மையில் பாத்திமா(ரழி) உள்ளிட்ட ஏனையவர்கள் நபியவர்களின் போர்வை ஹதீஸின் மூலம் அஹ்லுல் பைத்தில் நுழைகின்றனர். அவரின் மனைவியர்களோ அஹ்ஸாபின் வசனத்தின் படியும் ஏனைய நாம் குறிப்பிட்ட ஆதாரங்களின்படியும் அஹ்லுல் பைத்தில் நுழைகின்றனர் என்றே நாம் குறிப்பிடுகிறோம்.

Previous Post Next Post