நாவன்மை மிக்க நயவஞ்சகன்

அபூ உஸ்மான் அந்நஹதி رحمه الله அவர்கள் கூறினார்கள்  உமர்رضي الله عنه  அவர்கள் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது நான் அவரது மிம்பருக்கு கீழே அமர்ந்திருந்தேன் அவர் தனது உரையில் அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக கூறினார்கள்: “என் சமுதாயத்தின் மீது நான் மிக அதிகமாக அஞ்சுவது நாவன்மைமிக்க நயவஞ்சகர்களைத்தான்”

நூல்: முஸ்னத் அஹ்மத் 144,310, ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 80 முஸ்னதல் பஸ்ஸார் 305


விளக்கம்:

எல்லாவித நன்மை தீமைகளையும் தம் சமுதாயத்திற்கு எச்சரித்த நபிصلى الله عليه وسلمஅவர்கள் சமுதாயத்தை வழிகெடுக்கக்கூடிய நாவன்மைமிக்க நயவஞ்சகர்களைக் குறித்தும் எச்சரிக்கைச் செய்தார்கள்.

பேச்சாற்றலை மட்டும் வைத்துக்கொண்டு  முறையான கல்வியில்லாமல் இன்று சமுதாயத்தை வழிகெடுக்கக் கூடியவர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்கள் தங்களுடைய நாவன்மையால் பெரும்பாண்மை மக்களை வழிகெடுத்து தவறான கொள்கையை அவர்களிடம் தினிக்கிறார்கள்.  

கல்வியாளர்களைக்காட்டிலும் நன்றாக எங்களுக்கு பேசத் தெரியும் என்றும் இவர்கள் வாதிடுவார்கள்.

இத்தகைய வழிகேடர்களை விட்டும், மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 இந்த நபி மொழியை உமர் رضي الله عنه அவர்கள் அறிவித்த சந்தர்பத்தைக்குறித்து இமாம் முனாவி رحمه الله அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

பஸராவாசிகளின் தலைவராக இருந்த அஹ்னஃப் என்பவர் மிக்வும் நாவன்மைமிக்கவராகவும், சிறப்புமிக்கவராகவும் இருந்தார்.

 அவர் உமர்رضي الله عنه அவர்களிடம் வந்த போது உமர்رضي الله عنه அவர்கள் அவரை தன்னிடம் ஒரு வருட காலம் தடுத்துவைத்துக்கொண்டார்.

 ஒவ்வொரு நாளும் இரவில் அவரிடம் வருவார் அப்போதெல்லாம் அவரைக் குறித்து நல்லதை மட்டுமே செவிமடுத்தார்..

 பின்னர் உமர் رضي الله عنه அவர்கள் அவரை அழைத்து உம்மை நான் தடுத்துவைத்ததற்கான காரணம் தெரியுமா? என்று கேட்டார் .

அதற்கு அவர் இல்லை என்று கூறினார்: அப்போது தான்  இந்த செய்தியை உமர் رضي الله عنه அவர்கள் கூறி, பின்னர் நாவன்மைமிக்க நயவஞ்சகனாக நீ இருப்பதை நான் அஞ்சினேன் நீர் முஃமினாக இருப்பதை நான் ஆதரவுவைக்கிறேன் எனவே நீ உமது ஊருக்கு செல் என்றும் கூறினார்கள்: .நூல் ஃபளுல் கதீர் 1/221

நமது நாவை நல்லவற்றிற்காக பயன்படுத்துவோம் நயவஞ்சகத்தை விட்டு எச்சரிக்கையாக இருப்போம்..

-உஸ்தாத் .M.பஷீர் ஃபிர்தௌஸி
أحدث أقدم