அல்லாஹ்வுடைய அழகிய பெயர்கள் மற்றும் அவனது உயரிய பண்புகளை அறிவதன் முக்கியத்துவம்

- ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி ஹஃபிதஹுல்லாஹ்

ஷர்ஹ அல்-அகீதா அல்-வாஸிதிய்யா, பக்கம் 28-32. 

(இந்த புத்தகத்தின் ஆசிரியர் இமாம் இப்னு தைமிய்யா அவர்கள்) கூறுகிறார்கள்: அல்லாஹ்வை ஈமான் கொள்வதிலிருந்து உள்ளதாவது; (அல்லாஹ்) அவனுடைய புத்தகத்தில் (அல்-குர்ஆனில்) எவற்றையெல்லாம் கொண்டு தன்னை வர்ணித்துக் கொண்டானோ அவற்றையும், மேலும் அவனுடைய தூதர் ﷺ எவற்றையெல்லாம் கொண்டு அவனை வர்ணித்தார்களோ அவற்றையும் ஈமான் கொள்வதாகும். 

'ஈமான் கொள்வதிலிருந்து உள்ளதாவது' என ஆசிரியர் குறிப்பிடுவதற்கான காரணம், அல்லாஹ்வை ஈமான் கொள்வது என்பது மூன்று விடயங்களை நம்பிக்கை கொள்வதை (தன்னகத்தே) கொண்டுள்ளது.

1, அல்லாஹ்வுடைய ருபூபிய்யத்தை ஈமான் கொள்வது, 

2. அவனுடைய உலூஹிய்யத்தை ஈமான் கொள்வது, 

3. மேலும் அவனுடைய பெயர்கள் மற்றும் பண்புகளை ஈமான் கொள்வது என்பனவாகும். 

ஆசிரியர் அவர்கள் இங்கே இந்த (மூன்றாவது) பிரிவை விளக்கத் தொடங்குகிறார்கள். அது, அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளை ஈமான் கொள்வதாகும்.

(அல்லாஹ்வுடைய) பெயர்கள் மட்டும் பண்புகளுடைய பாடமானது, மிகப்பெரும் பாடமாகும். ஏனெனில், நிச்சயமாக அதுவே நேர்வழி மற்றும் மார்க்கத்தினுடைய அடிப்படையாகும். மேலும் அதுவே உள்ளங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய, அடைந்து கொள்ளக் கூடிய விடயங்களில் மிகப்பெரியதாகும். 

ஒரு ஈமான் கொண்ட உள்ளமானது, அல்லாஹ்வை அவனுடைய பெயர்கள் மற்றும் பண்புகளைக் கொண்டு அறிவதை விட வேறு எதன் பக்கமும் அதிக தேவையுடையதாக இருக்காது. 

இதுவே கல்வியின் அடிப்படையாகும். மேலும் இதுவே எல்லாவற்றுமான கல்வியுமாகும். 

எனவே, எவர் அல்லாஹ்வைப் பற்றி அறிந்து கொள்வாரோ, அவர் அவன் அல்லாத யாவற்றையும் பற்றி அறிந்து கொள்வார். மேலும் எவர் அல்லாஹ்வைப் பற்றி அறியாமையில் இருப்பாரோ, அவர் அவன் அல்லாத யாவற்றையும் பற்றி மிகவும் அறிவிலியாக இருப்பார்.

கல்விகளிலேயே, அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றிய கல்வியே மிகவும் சிறப்பானதாகும். இந்த கல்வியும், மேலும் இந்த கல்வியின் மீது கட்டி எழும்புகின்ற அடிமைத்தனத்தை பரிபூரணப்படுத்தும் செயலும்தான், அல்லாஹ் இந்த படைப்பினங்களை படைத்ததற்குரிய ஒரே நோக்கமாக இருக்கின்றது.

ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ سَبْعَ سَمَٰوَٰتٍ وَمِنَ ٱلْأَرْضِ مِثْلَهُنَّ يَتَنَزَّلُ ٱلْأَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ وَأَنَّ ٱللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَىْءٍ عِلْمًۢا 

அல்லாஹ்-அவன் எத்தகையவனென்றால் ஏழு வானங்களையும், அவைகளைப்போல் (எண்ணிக்கையில்) பூமியையும் படைத்தான், அவைகளுக்கிடையில் (அன்றாடம் நடந்தேரும் காரியங்கள் பற்றி) கட்டளைகள் இறங்கிக் கொண்டே இருக்கின்றன, நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக ஆற்றலுடையவன் என்பதையும்,  நிச்சயமாக அல்லாஹ் (தன்) அறிவால் ஒவ்வொரு பொருளையும் திட்டமாக சூழ்ந்தறிந்து கொண்டிருக்கின்றான் என்பதையும் (விசுவாசிகளே!) நீங்கள் அறிந்து கொள்வதற்காக (இவ்வாறு விளக்குகிறான்.) [65:12]

அல்லாஹ், அவன் அறிந்து கொள்ளப்படுவதற்காகவும், பின்னர் (அதனடிப்படையில்) வணங்கப்படுவதற்காகவுமே, இந்த முழு பிரபஞ்சத்தையும் படைத்துள்ளான்.

 جَعَلَ ٱللَّهُ ٱلْكَعْبَةَ ٱلْبَيْتَ ٱلْحَرَامَ قِيَٰمًا لِّلنَّاسِ وَٱلشَّهْرَ ٱلْحَرَامَ وَٱلْهَدْىَ وَٱلْقَلَٰٓئِدَۚ ذَٰلِكَ لِتَعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَأَنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ ٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ وَأَنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ 

'சிறப்புற்ற வீடாகிய கஅபாவை மனிதர்களுக்கு அபயம் அளிக்கக்கூடிய இடமாக அல்லாஹ் ஆக்கியிருக்கின்றான். (அவ்வாறே துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இந்நான்கு) சிறப்புற்ற மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிகளையும், (அல்லாஹ்வுடைய காணிக்கை என்பதற்காக) அடையாளம் இடப்பட்ட மிருகங்களையும் (அபயம் பெற்றவைகளாக ஆக்கியிருக்கின்றான்.) வானங்களிலும், பூமியிலுமுள்ள யாவையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான் என்பதை நீங்கள் அறிவதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்து கொள்கின்றான்.

நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவனாக இருப்பதுடன் நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழை பொறுத்துக் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்'. [5:97,98]

எனவே, அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளைப் பற்றிய கல்வியானது மகத்தான, முக்கியமான விடயங்களிலிருந்து உள்ளதாகும். இவ்வுலக வாழ்க்கையில் ஒரு அடியானுடைய இலக்குகளிலேயே மிக முக்கியமானதாக (இக்கல்வி) இருப்பது அவசியமாகும்.

அல்லாஹ்வை, அவனது பெயர்கள் மற்றும் பண்புகள் கொண்டு அறியாது (அவனுக்காக) என்ன வணக்க வழிபாடு மற்றும் (அவனை நோக்கிய) என்ன முன்நோக்குதல் இருந்துவிடமுடியும்?! 

ஒரு அடியான் தனது எஜமானனின் பக்கம் (எப்பொழுதும்) தேவையுடையவனாக இருக்கின்றான். மாறாக, அவனே (அல்லாஹ்வே) அடியானது இரட்சகனாகவும், (வணங்கப்படும்) இறைவனாகவும் இருக்கின்ற ரீதியில் அவனின் பக்கம் இன்றியமையாத தேவையுடையவனாக இருக்கின்றான்.

அவனே (அல்லாஹ்வே) அடியானைப் படைத்த இறைவன், அவனுக்கு வாழ்வாதாரம் அளிப்பவன், அவனது காரியங்களை (சரிவர) நிர்வகிக்கப் பொறுப்பு ஏற்றுக் கொள்பவன், அடியான் அவன் மீதே பொறுப்பு சாட்டுகிறான் மேலும் (தனது) எல்லா காரியங்களையும் (முற்றிலுமாக) அவனிடத்திலேயே ஒப்படைக்கின்றான் என்ற ரீதியில் தனது எஜமானின் பக்கம் (ஒரு அடியான் எப்பொழுதும்) தேவையுடையவனாக இருக்கின்றான்.

அவ்வாறே, அவனே அடியான் வணங்குகின்ற, நேசிக்கின்ற, கண்ணியப்படுத்துகின்ற, பெருமைப்படுத்துகின்ற, பயப்படுகின்ற மற்றும் ஆதரவுவைக்கின்ற அவனது வணக்கத்திற்குரியவன் என்ற ரீதியில், அவன் பக்கம் முழுமையான தேவை உடையவனாக இருக்கின்றான். 

அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் அவனுடைய பண்புகளை அறியாமல், அல்லாஹ்வுடைய ருபூபிய்யத்தை ஈமான் கொள்ளுதல் அல்லது அவனுக்கு வணக்க வழிபாடு செய்தல் என்ற இந்த இரண்டு விடயங்களை எவ்வாறு நிலைநாட்ட முடியும்!? 

உன்னிடம் "அல்லாஹ் உன்னுடைய இறைவன் என்பதை நம்பிக்கை கொள், மேலும் அவனுடைய எந்த ஒரு பண்பையும் அறிந்து கொள்ளாமல் அவனை வணங்கு" எனக் கூறப்படுவதாக உன்னுடைய உள்ளத்தில் கற்பனை செய்.

'நீ வணங்குபவன், அவனைப் பற்றி எந்த ஒன்றும் உனக்கு தெரியாமல், உன்னிடத்தில் அறியப்படாதவனாக இருக்கிறான்' என்கின்ற அந்த மிகப்பெரும் இருள் மற்றும் இறுக்கம் உன்னுடைய உள்ளத்தை எவ்வாறு ஆட்கொள்கின்றது என்பதை கவனி.

இதன் காரணமாகவே நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து அவனது அடியானின் மீதுள்ள மிகப்பெரிய நிஃமத்தானது, அவன் தன்னைப் பற்றி அவனுடைய அடியானை அறியச் செய்வதாகும்.

உனக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் ஆரோக்கியம், வாழ்வாதாரம், செல்வம், (சீரான) செவிப்புலன், கேள்விப்புலன், பார்வை முதலிய அருட்கொடைகளிலிருந்து ஏதேனும் ஒன்றை நீ எண்ண நாடினால், அவை எல்லாவற்றையும் விட மிக மகத்தான அருட்கொடையை நீ மறந்துவிடாதே! அதுதான், அவன் தன்னைப் பற்றி உன்னை அறிந்து கொள்ளுமாறு செய்ததாகும்.

இதுதான் (ஒரு அடியானுக்கு அல்லாஹ் செய்யும்) மாபெரும் அருட்கொடையாகும். மேலும், இதுவே பேருபகாரம் ஆகும். இதனை நெருங்கக்கூடிய வேறு எந்த ஒரு அருட்கொடையும் இல்லை. 

நிச்சயமாக எல்லா நலவுகளும் இந்தக் கல்வியுடனே பின்னிப் பிணைந்துள்ளன. அதாவது, நீ அல்லாஹ்வைப் பற்றி தெரிந்து கொள்வதும், மேலும் அவனை அறிய வேண்டிய முறையில் அறிந்து கொள்வதுமாகும்.

எனவே, வணங்கப்படுபவன் (அல்லாஹ்வைப்) பற்றி அறிவதாவது, வணக்க வழிபாடுகளைப் பற்றி அறிவதை விட முந்தியதாக இருக்கும் நிலையில், ஒரு மனிதனிடத்தில் வணங்கப்படுபவனைப் பற்றி அறிய ஆர்வமில்லாது, வணக்க வழிபாடுகளைப் பற்றி (மட்டும்) அறிய ஆர்வம் இருப்பதென்பது ஆச்சரியமான (விடயங்களிலிருந்து) உள்ளதாகும்!

(வணங்கப்படுபவனைப்பற்றி அறிந்து கொள்ள ஆர்வமில்லாது, மற்ற) அனைத்து கல்விகளின் மீதும், கலைகளின் மீதும் - மேலும் அவர்கள் கூறுவது போல - ஒவ்வொரு (துறையின்) வல்லுமையின் மீதும் அநேகமாக ஆர்வம்காட்டி, அவற்றை அறிந்து கொள்வதற்கு கடுமையாக பாடுபடுவர்கள், என்றாலும் தங்களுடைய இரட்சகனைப் பற்றி மக்களிளேயே மிகவும் அறியாதவர்களாக, அவனது பல மகத்தான மற்றும் அழகான பண்புகளைப் பற்றி அறியாதவர்களாக இருப்பவர்களைக் குறித்து என்னவென்று சொல்வது?!

அவன்தான் அல்-ஜமீல் (மிகவும் அழகானவன்), அல்-வதூத் (அடியார்களை நேசிப்பவன், அடியார்களால் நேசிக்கப் படுபவன்), அர்-ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அர்-ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்), அல்-கஃபூர் (மிக்க மன்னிப்பவன்), அல்-அஸீஸ் (யாவரையும் மிகைத்தவன்), ஷதீதுல்-இகாப் (தண்டிப்பதில் மிகவும் கடுமையானவன்), மேலும் அவனது தண்டனை, குற்றவாளிகளான மக்களை விட்டும் திருப்பப்படாது என்பனவற்றையெல்லாம் அறியாது, அவனை நீ எவ்வாறு நேசம், பயம் மற்றும் ஆதரவுடன் வணங்க முடியும்?!

நீ அவனைப் பற்றி அறியாதவனாக இருக்கின்ற நிலையில், எப்படி பலதரப்பட்ட வணக்க வழிபாடுகளைக் கொண்டு அவனுக்கு வழிபடுவாய்?!

எனவேதான், "நீ எந்த அளவிற்கு அல்லாஹ்வைப் பற்றி அதிகமாக அறிந்திருக்கின்றாயோ, அந்த அளவிற்கு அவனை அதிகமாக வழிபடக்கூடியவனாக ஆகிவிடுவாய்". 

இது ஒரு அடிப்படை விதியாகும். உன் புத்தியை விட்டும் இது மறைந்து விடாதிருப்பது (உனக்கு) உகந்ததாகும். (அதாவது) "நீ எந்த அளவிற்கு அல்லாஹ்வைப் பற்றி அதிகமாக அறிந்திருக்கின்றாயோ, அந்த அளவிற்கு அவனை அதிகமாக வழிபடக்கூடியவனாக ஆகிவிடுவாய்". 

இதன் காரணமாகவே, சங்கைமிக்க நமது நபி ﷺ அவர்கள் மக்களிலேயே அல்லாஹ்வைப் பற்றி மிகவும் அறிந்தவராக இருந்தபொழுது, அவர்களிலேயே அவனை மிகவும் அஞ்சக் கூடியவராகவும், அதிகம் வழிபடக்கூடியவராகவும் இருந்தார்கள்.

قال ﷺ : «أنا أعلمكم بالله، وأشدكم له خشية»

"நான் உங்களிலேயே அல்லாஹ்வைப் பற்றி மிகவும் அறிந்தவன், மேலும் உங்களிலேயே அவனை கடுமையாக 
அஞ்சுபவன்" என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.

 قال عليه الصلاة والسلام: «رأيت جبريل ليلة أسري بي كالحلس البالي من خشية الله»،. 

"நான் (மிஃராஜ்) பயண இரவின் பொழுது,  ஜிப்ரீல் அவர்களைக் அல்லாஹ்வின் அச்சத்தின் காரணமாக தோய்ந்த ஆடையை போல (இருந்ததைக்) கண்டேன்" என நபி ﷺ அவர்கள் கூறினார்கள். 

ஏனெனில் (ஜிப்ரீல்) அவர்கள் அல்லாஹ்வுடைய படைப்பினங்களிலேயே, அவனது பெயர்கள் மற்றும் பண்புகளைப் பற்றி மிகவும் அறிந்தவர்களிலிருந்து உள்ளவராக இருந்தார்கள்.

அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் அவனது மகிமைக்குரிய அழகிய பண்புகளைப் பற்றிய இந்த கல்வியானது, அல்லாஹ்வின் பக்கம் (ஒருவரை) கொண்டுசேர்க்கும் பாதைகளில் மிகவும் மகத்தானதாகும்.

நீ உனது இறைவனை, அவனுடைய ரஹ்மத்தை, மேலும் அவனுடைய பொருத்தத்தை மற்றும் சொர்க்கத்தை அடைய விரும்பினால், இந்தப் பாதையை பற்றிப் பிடித்துக்கொள். (இறைவனின் பக்கம் சேர்க்கின்ற) இதைவிட சிறந்த மற்றும் மகத்தான வேறு ஒரு பாதை இல்லை.

அல்லாஹ்வை நோக்கி அவனது பெயர்கள் மற்றும் அவனது பண்புகளின் பாதையின் (வாயிலாக) பயணிப்பவருக்கு இன்பங்கள் யாவும் கிடைக்கப் பெற்று விட்டது, அவர் களைப்பின்றி, தனது வசிப்பிடத்தை விட்டும் வெளியேற்றப்படாது, தனது படுக்கையின் மீது சாய்ந்தவராக இருந்தாலும் சரியே! 

இதன் காரணமாகவே, அல்லாஹ் தனது பெயர்கள் மற்றும் பண்புகளிலிருந்து, அதிகமானவற்றை அவனது அடியார்களுக்கு  தெளிவுபடுத்தி இருப்பது என்பது அவர்கள் மீது அவன் செய்த அருட்கொடைகளிலிருந்து உள்ளதாகும்.

மேலும் (அல்லாஹ்) தனது தூதர்கள் மீது இறக்கியருளிய வேதங்களை, அவனது பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றிய அதிகமான விளக்கங்களை உடையதாக ஆக்கியுள்ளான்.

அதிலும் குறிப்பாக, அல்லாஹ் தனது நபி ﷺ அவர்களைக் கொண்டு அனுப்பிய (இறுதி) வேதமான அல்-குர்ஆனில் (அவனது பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி) வந்துள்ளவை.

நிச்சயமாக அதிலே அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி பெரிய அளவில் (குறிப்பிடப்பட்டு) உள்ளது.

மேலும், அல்லாஹ் உதாரணங்களைக் கூறியுள்ளான். அதுபோலவே அவனுடைய தூதர் ﷺ அவர்களும் கூறியுள்ளார்கள். அவை அடியார்களுக்கு அவர்களுடைய எஜமானன், இறைவன் மற்றும் வணக்கத்திற்குரியவனைப் பற்றி தெளிவுபடுத்துவதாக இருக்கின்றது. 

 قال ﷺ : «لله أرحم بعباده من هذه بولدها»، 

(தனது தொலைந்த) குழந்தையை பிணைக்கைதிகள் மத்தியில் கிடைக்கும் வரைத் தேடி, (பின்பு) கண்டவுடன் உடனே அதற்கு பாலூட்டிய பெண்ணின் செயலைக் குறித்து நபி ﷺ அவர்கள் கூறியதை சிந்தித்து பாருங்கள். "இவள் தனது குழந்தைக்கு காட்டும் கருணையை விட, அல்லாஹ் தன் அடியார்களின் மீது அதிகம் கருணையுள்ளவனாக இருக்கின்றான்" என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.

قال ﷺ في شأن توبة العبد لله تبارك وتعالى: «لله أفرح بتوبة عبده من رجل كان في فلاة مدوية، ومعه دابته التي عليه طعامه وشرابه، ففقدها حتى أيس منها، ثم جلس تحت ظل شجرة ينتظر الموت، وإذا بدابته فوق رأسه، 

அல்லாஹ்விடம் ஒரு அடியான் (தவ்பா என்ற) பாவமன்னிப்புத் தேடும் விடயத்தை பற்றி நபி ﷺ அவர்கள் (பின்வருமாறு) கூறியுள்ளார்கள்: "ஒரு மனிதர் பாலைவனத்தில் (பயணம் செய்து கொண்டு) இருந்தார். அவரது உணவையும் தண்ணீரையும் சுமந்த ஒட்டகம் ஒன்று அவருடன்  இருந்தது. பின்னர் அது அவரை விட்டு தொலைந்து விட்டது. (அதைத் திரும்பப் பெறும்) நம்பிக்கையை அவர் இழந்த பின்பு, (பயணத்தை தொடர் முடியாத நிலையில்) ஒரு மரத்தின் நிழலில் மரணத்தை எதிர்பார்த்தவராக அமர்ந்தார். அப்பொழுது, எதிர்பாராத விதமாக அவரது ஒட்டகம் அவரது முன்னே வந்துவிட்டது. 

فأخذ بخطامها وقال: اللهم أنت عبدي وأنا ربك»، أخطأ من شدة الفرح.

உடனே அதன் கடிவாளத்தைப் பிடித்து , "அல்லாஹ்வே! நீ எனது அடிமை. நான் உனது இறைவன்" என்று சந்தோச மிகுதியால் தவறாக கூறிவிடுகிறார். இவரின் மகிழ்ச்சியை விட, அல்லாஹ் தனது அடியானின் தவ்பாவைக் கொண்டு அதிகமாக மகிழ்ச்சியடைகிறான்".

நபி ﷺ அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளதில், உங்களின் இறைவனைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்வதை நெருக்கி வைக்கின்ற (விதத்தில்) உதாரணங்களை அவர்கள் குறிப்பிடுவதை கவனியுங்கள்.

மாறாக, அல்லாஹ் அவனது பெயர்கள் மற்றும் பண்புகளை அறிவதை ஏவியிருக்கின்றான். அது அவனுக்கு விருப்பமான ஒரு விடயம் என்பதை (இவ்வாறு அவன் ஏவுவது) காட்டுகின்றது. அல்லாஹ் எந்த ஒன்றையும் மார்க்கமாக ஏவுவது இல்லை, அதனை அவன் விரும்பியே தவிர.

அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் அவனுடைய பண்புகளை அறிவது குறித்து அல்-குர்ஆனில் எத்துணை கட்டளைகள் இருக்கின்றன! 

 وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌ 

'நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்'. [2:244]

وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلْمُتَّقِينَ

'அல்லாஹ் இறை அச்சமுடையவர்களுடன் இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்'. [2:194].

فَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ مَوْلَىٰكُمْۚ نِعْمَ ٱلْمَوْلَىٰ وَنِعْمَ ٱلنَّصِيرُ 

'நிச்சயமாக அல்லாஹ் உங்கள் பாதுகாவலன் (பொறுப்பாளன்) என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். அவன் சிறந்த பாதுகாவலன்; அவன் சிறந்த உதவியாளன்'. [8:40]

ٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ وَأَنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ 

'நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவனாக இருப்பதுடன் நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழை பொறுத்துக் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்'. [5:98]

(இவ்வாறாக), அல்லாஹ்வுடைய புத்தகத்தில் நிறைய ஆயத்துகளில் வந்துள்ளன. 

எனவே, இது கடமையான கல்விகளிலிருந்து உள்ளதாகும். ஒரு முஸ்லிம் இதை (இந்த கல்வியைப்) பெறுவதில் ஆர்வம் கொள்வதிலும், முயற்சி செய்வதிலும் அலட்சியமாக இருப்பது கூடாது.

இந்த பாடத்தில் வழிகேடு என்பது ஒரு லேசான விடயம் அல்ல. ஏனெனில், இந்த பாடத்தில் உள்ள பேச்சானது, மிக மகத்தானவனான அல்லாஹ்வைப் பற்றியதாகும். அவனைப் பற்றிய பேச்சானது, மற்றவைகளைப் பற்றிய பேச்சை போன்றதல்ல.

எவர் அல்லாஹ்வைப் பற்றி அறிவில்லாமல் பேசுவாரோ, அவர் மிகப்பெரிய ஒரு விடயத்தில் விழுந்து விட்டார்.

தடைசெய்யப்பட்ட பயங்கரமான விடயங்களைப் பற்றி விளக்கும் பொழுது, அல்லாஹ் கூறுகின்றான்:

وَأَن تَقُولُوا۟ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ 

'நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவதை (நிச்சயமாக என்னுடைய இறைவன் தடுத்துள்ளான்)' . [7:33]

இந்த முன்னுரையானது அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளுடைய விடயத்தில், இந்த உம்மத்தின் ஸலஃபுகள் எதன் மீது இருந்தார்களோ, மேலும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினரின் எதன் மீது பயணித்தார்களோ, அத்தகைய உயர்வான சீரிய பாதையின் அடிப்படையில், ஒரு கல்வியைத் தேடும் மாணவரின் ஆர்வத்தை,  கடும் முயற்சி மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கு கூர்மைப்படுத்தும். இன் ஷா அல்லாஹ். 

- மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வ அஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.
Previous Post Next Post