வஸீலா தேடுவதன் தெளிவான சட்டங்கள்

ஆசிரியர் : ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்)

மொழி பெயர்ப்பு: அஷ்ஷெய்க். எம்.எஸ். ஸெய்யிது முஹம்மத் மதனி


உள்ளடக்கம்:


ஆசிரியர் வாழ்க்கைக் குறிப்பு

முன்னுரை

நபிகள்‌ பெருமானார்‌ (ஸல்‌) அவர்களின்‌ மதிப்பு

உலகில்‌ நபிகள்‌ பெருமானாரின்‌ ஷபாஅத்தால்‌ உண்டாகும்‌ பலாபலன்கள்‌

நபியின்‌ ஷபாஅத்தை மறுக்கின்றவர்கள்‌ யார்‌?

இணை வைப்பவர்களும்‌ ஷபாஅத்தும்

'நான்‌ என்னுடைய பிரார்த்தனையை ஷபாஅத்துக்காகப்‌ பிற்படுத்தி வைத்திருக்கிறேன்‌'

படைத்தவனை ஒப்புக்‌ கொள்ளுதல்‌.

சிலைகளை சிருஷ்டிகள்‌ என்று ஒப்புக்கொள்ளல்‌.

இருவகைப்பட்ட முஷ்ரிக்குகள்‌

ஜின்‌ ஷைத்தான்களின்‌ ஆள்மாறாட்டம்‌

விக்ரஹங்களால்‌ சிபாரிசு செய்ய முடியாது

நபிகள்‌ இறந்ததற்கப்பால்‌ அவர்களிடம்‌ பிரார்திக்கக்‌ கோரலாமா?

மசூதிகள்‌ ஏக இறை வழிபாட்டுக்குரியனவே

முஸ்லிம்களின்‌  கப்றுகளை ஸியாரத்‌ செய்வது எப்படி?

காஃபிர்களின்‌ கப்ரை ஸியாரத்‌ செய்யலாமா?

நாத்திகர்களிடத்தில்‌ ஸியாரத்தின் தாத்பரியம்‌.

ஷைத்தான்‌ தன்‌ கூட்டாளிகளைத்தான்‌ வழி கெடுக்கிறான்

கஃபா மனிதனைக்‌ தாவஃப்‌ செய்கிறதா?

இறை நேசர்கள்‌.

அனுஷ்டானங்களில்‌ சிறந்தது தொழுகை

சிருஷ்டீகளிடம்‌ எதைக்‌ கேட்கலாம்‌?

இறைவனால்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட்ட மதம்‌ இஸ்லாம்‌ ஒன்றே!

இஸ்லாத்தின்‌ இரு அடிப்படைகள்‌

சிருஷ்டிகளிடம்‌ கேட்பதால்‌ விளையும்‌ தீமைகள்‌

பாங்கின்‌ பிரார்த்தனை

சன்மார்க்கம்

தவஸ்ஸுல்‌ வஸீலாவில்‌ ஏற்பட்ட பிசகுதல்கள்‌

'நபியைக்‌ கொண்டு வஸீலா தேடுவது' ஸஹாபாக்களின்‌ கருத்து'

படைப்பினங்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்யலாமா?

இறைவனுக்கும்‌ படைப்பினங்களுக்குமிடையேயுள்ள வேறுபாடு

மஸ்ஜிதுன்‌ நபவிக்குப்‌ பயணமாகுதல்‌

சுவனப்பூங்காவில்‌ ஒரு பகுதி

கப்றும்‌ விழாக்களும்

வஸீலா ஷபாஅத்‌ என்னும்‌ வார்த்தைகளில்‌ ஏற்பட்ட சந்தேகங்கள்

ஹதீஸ்களின்‌ தராதரங்கள்‌

பார்வையிழந்த ஸஹாபியைப்‌ பற்றிய ஹதீஸ்‌

ஒரு ஸஹாபி அறிவிக்கும்‌ ஹதீஸைக்‌ கொண்டு சட்டம்‌ விதிப்பதற்கு மற்ற ஸஹாபிகளின்‌ ஒப்புதலும்‌ வேண்டும்‌.

ஒரே ஸஹாபியின்‌ கூற்று சான்றாகுமா?

வஸீலாவின்‌ மூன்றாவது வகை

மேன்மைக்குரிய சிருஷ்டிகள்‌ அல்லாஹ்வுடைய பங்காளிகளல்ல.

மறுமை நாளையின்‌ பரிந்துரைகள்‌ (ஷபாஅத்துகள்‌)

இது விஷயத்தில்‌ அப்துல்‌ மலிக்‌ பின்‌ ஹாரூன்‌ ரிவாயத்

கப்றும்‌ வைபவங்களும்

அபுபக்கர்‌ ஸித்கீக்‌ (ரலி) அவர்கள்‌ உதவி தேடினார்களா?

சிருஷ்டிகளைக்‌ கொண்டு ஆணையிடுதல்‌

இறைவன்‌ அனுமதித்தவை

ரஸுல்மார்களின்‌ பணிகள்‌ யாவை?

நபிமார்களின்‌ தன்மைகளுக்கும்‌, அல்லாஹ்வின்‌ தன்மைகளுக்குமிடையில்‌ உள்ள வித்தியாசம்‌

நபியின்‌  துஆவைக்‌ கொண்டு வஸீலா தேடுவது எப்படி?

இஸ்லாத்தின்‌ அடிப்படைகள்‌

தூய இஸ்லாத்தின்‌ இரண்டாவது அடிப்படை

வினாவும்‌ விடையும்‌

ஷபாஅத்‌ விஷயத்தில்‌ ஸூன்னத் ஜமாஅத்திற்கு மாறுபட்டவர்களின்‌ அபிப்பிராயம்‌

முஅவியா (ரலி) அவர்கள்‌ யஸீத்‌ பின்‌ அஸ்வத்‌ (ரலி) அவர்களைக்‌ கொண்டு மழை தேடிப்‌ பிரார்த்தித்த சம்பவம்‌

நபியைக்‌ கொண்டு ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள்‌ வஸீலா தேடினார்களா?

கப்றுகளில்‌ பள்ளி கட்டலாமா?

மறைமுகமான பிரார்த்தனை

ஷபாஅத்தின்‌ வகைகள்

சிருஷ்டிகளைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்யலாமா?

சிருஷ்டீகளைக்‌ கொண்டு பாதுகாவல்‌ தேடலாமா?

ஓதிப்பார்த்தல்

இறைவன்‌ தன்‌ சிருஷ்டீகளைக்‌ கொண்டு ஏன்‌ சத்தியம்‌ செய்ய வேண்டும்

அனுமதிக்கப்பட்ட பிரார்த்தனைகள்‌

பிரார்த்தனையின்‌ படித்தரங்கள்‌



இந்நூலின்‌ மூல ஆசிரியரான ஷைகுல்‌ இஸ்லாம்‌ இப்னு தைமிய்யா அவர்களின்‌ வாழ்க்கை வரலாறு

மாபெரும்‌ மார்க்க மேதையும்‌ சீர்திருத்தவாதியுமான அஹ்மது தகிய்யுத்தீன்‌ இப்னு தைமிய்யா என்பவர்‌ ஹிஜ்ரி 661-ஆண்டு ரபீவுல்‌ அவ்வல்‌ 10 (கி.பி 1263 ஜனவரி 22 ஆம்‌ நாள்‌) சிரியாவில்‌ ஹர்ரான்‌ என்ற ஊரில்‌ பிறந்தார்‌. தந்தை ஷிஹாபுத்தீன்‌ அப்துல்‌ ஹலீம்‌ இப்னு தைமிய்யா திமிஷ்கிலுள்ள (டமாஸ்கஸ்‌) ஜாமி வுல்‌ உமவீ மஸ்ஜித்‌ இமாமாகவும்‌, தாருல்‌ ஹதீதுஸ்‌-ஸகரிய்யா பேராசிரியராகவும்‌ பணியாற்றி வந்தார்‌. இவரின்‌ பாட்டனார்‌ அபுல்‌ பரகாத்‌ மஜ்துத்தீன அப்துஸ்ஸலாம்‌ இப்னு தைமிய்யா (ஹி-652) ஹன்பலி மத்ஹபின்‌ சிறந்த மார்க்க மேதையாகவும்‌ விளங்கினார்‌. ஆறு ஆண்டுகள்‌ பக்தாதில்‌ கல்விச்சேவை புரிந்த இவர்‌ எழுதிய ஹதீதுத்தொகுப்பாகிய அல்மந்திகிய்யு மின்‌ அஹாதீதுல்‌ அஹ்காம்‌ என்ற நூலும்‌, அல்‌-வஸிய்யத்துல்‌ ஜாமிஆவும்‌ இவரின்‌ புகழ்‌ வாய்ந்த நூல்களாகும்‌

இளமை

இப்னு தைமிய்யா சிறு வயதிலேயே குர்‌ஆனை மனனமிட்டுவிட்டார்.‌ இமாம்‌ ஸீபவைஹின்‌ இலக்கண நூலில்‌ தேர்ச்சி பெற்று இலக்கியம்‌, அரபி வடிவெழுத்து, கணிதம்‌ முதலானவற்றில்‌ சிறந்து விளங்கினார்‌. குர்‌ஆன்‌, ஹதீஸ்‌, பிக்ஹ்‌ ஆகிய கலைகளை தமது தந்தையாரிடமிருந்து கற்றுத்தேறினார்‌. சிறு வயதிலேயே அபார நினைவாற்றலைப்‌ பெற்றிருப்பதை அறிந்த ஓர்‌ அறிஞர்‌ இவரது பலகையில்‌ 13 நபிமொழிகளை எழுதி அதனை ஒரு தடவை படித்ததும்‌ மனனமாகச்சொல்லுமாறு கேட்டார்‌. அடுத்த கணமே ஒப்புவித்த இவரிடம்‌ மீண்டும்‌ ஒருமுறை அதே போல்‌ வேறு சில நபிமொழிகளை எழுதிச்‌ சோதித்தார்‌. முன்புபொலவே இதிலும்‌ சிறுவர்‌ வெற்றியடைந்ததும்‌ இச்சிறுவருக்கு இறைவன்‌ நீண்ட ஆயுளைக்‌ கொடுப்பின்‌ இவர்‌ உலகில்‌ ஒப்பாரும்‌ மிக்காருமின்றி சிறந்த அறிஞராக விளங்குவார்‌ என்று முன்னறிவுப்புச்‌ செய்தார்‌.

நினைவாற்றல்

இவர்‌ அறிந்த ஒன்றை ஒருபோதும்‌ மறந்ததில்லை. இவர்‌ 200 க்கு மேற்பட்ட ஹதீஸ்‌ கலை இமாம்களிடம்‌ பாடம்‌ பயின்றிருக்கிறார்‌. இவருக்கு ஹதீதுக்கலையில்‌ இருந்த அறிவாற்றலைக்‌ கண்டு அறிஞர்‌ இப்னுல்‌ வர்தீகுல்லு ஹதீதின்‌ லா யஃரிபு ஹு இப்னு தைமிய்யா ஃபலைஸ பிஹதீஸின்‌” “இப்னு தைமிய்யா அறியாத ஹதீஸ்‌ ஹதீஸே அல்ல” என்று போற்றுகின்றார்‌.

திருக்குர்‌ஆன்‌ பற்றி தாம்‌ ஒரு நூறு விளக்கவுரைகள்‌ படித்துள்ளதாகவும்‌ ஏதேனும்‌ ஒரு திருவசனத்திற்கு விளக்கம்‌ தெரியவில்லையாயின்‌ தாம்‌ காடுகளுக்குச்‌ சென்று தம்‌ தலையை தரையில்‌ வைத்து ஸுஜூது நிலையில்‌ , இறைதூதர்‌ இப்றாஹீம் ‌(அலை) அவர்களுக்கு வழி காட்டிய இறவா!எனக்கும்‌ இந்த திருவசனத்திற்கு தெளிவைத்‌ தருவாயாக என்று இறைஞ்சி வந்ததாகவும்‌ இவர்‌ கூறுகின்றார்‌.

பிரச்சாரம்

கி.பி.1282 ல்‌ தமது 22-வது வயதில்‌ இவரின்‌ தந்தையார்‌ இறந்ததும்‌ அவர்‌ வகித்த பேராசிரியர்‌ பதவியில்‌ நியமிக்கப்பட்டார்‌. பதவி ஏற்றதும்‌ இவர்‌ ஆற்றிய முதற்‌ சொற்பொழிவே மக்களின்‌ உள்ளத்தைப்‌ பெரிதும்‌ கவர்ந்தது. “அவ்வாண்டில்‌ நிகழ்ந்த வியத்தகு நிகழ்ச்சி என்று அதனை வரலாற்றாசிரியர்‌ இப்னு கதீர்‌ வர்ணிக்கிறார்‌.

அப்பதவியில்‌ பதினேழு ஆண்டுகள்‌ இருந்து பணி புரிந்தார்‌. தமது வகுப்புகளிலும்‌ மக்கள்‌ மன்றங்களிலும்‌ இஸ்லாத்தின்‌ தூய கொள்கைகளையும்‌ கோட்பாடுகளையும்‌ துணிவுடன்‌ எடுத்துரைத்தார்‌. “பித்‌அத்‌ என்னும்‌ அனாச்சாரங்களையும்‌ இஸ்லாத்திற்‌ -கெதிரான பொய்பிரச்சாரங்களையும்‌ முறியடிப்பதில்‌ முனைப்புடன்‌ செயல்பட்டார்‌. இவரிடம்‌ இறைவனின்‌ சில இயல்புகளையும்‌ பண்புகளையும்‌ பற்றிச்‌ சிலர்‌ கேள்வி கேட்க அவற்றிற்கு இவர்‌ அளித்த ஆணித்தரமான பதில்‌ ஷாபியாக்களையும்‌, அஷ்‌அரியாக்களையும்‌ கொந்தளித்துக்‌ குமுறுமாறு செய்தது.

தீரச்செயல்

ஹி 699-ல்‌ தார்த்தாரியர்கள்‌ (சிரியா) திமிஷ்கின்‌ மீது படையெடுத்து வந்தனர்‌. அப்போது இவர்‌ அவர்களை வாக்காலும்‌ வாளாலும்‌ எதிர்த்து நின்றார்‌. மக்களை புறமுதுகிட்டு ஓடாது வீராவேசத்துடன்‌ போர்‌ புரியுமாறு தூண்டினார்‌. உலமாக்கள்‌, ஃபுகஹாக்கள்‌ தலைமையில்‌ மக்களை ஒன்று திரட்டி போர்‌ பயிற்சி, அம்பெய்தும்‌ பயிற்சி அளித்து போரிலே ஈடுபடுமாறு செய்து தாமும்‌ கலந்து கொண்டார்‌. இவரின்‌ தீரச்செயல்களை வரவேற்று மக்கள்‌ ஒத்துழைப்பு நல்கி பெரிதும்‌ கெளரவித்தனர்‌.

துணிச்சல்

எகிப்து மன்னர்‌ முஹம்மது காலாவூன்‌ தார்த்தாரியர்களை எதிர்த்து நின்ற போதிலும்‌ போரில்‌ தோற்று வெருண்டோடினார்‌. இக்காலை புதிதாக இஸ்லாத்தை ஏற்று மஹ்மூது என்னும்‌ பெயர்‌ சூடிய செங்கிஸ்கானின்‌ பேரன்‌ காஸானை சந்தித்து குர்‌ஆன்‌ ஹதீஸ்‌ போதனைகளை எடுத்தோதி முஸ்லிம்களின்‌ உயிரை வீணேகொல்ல வேண்டாமென்று ஆணித்தரமாக வாதிட்டார்‌. அப்போது இத்துணை பெரிய தைரியசாலியை இதுவரை நான்‌ பார்த்ததில்லை என்று வியந்தார்‌ காஸான்‌. இவரை தம்முடன்‌ உணவுண்ண காஸான்‌ அழைத்தபோது அநியாயமாக கொள்ளையடிக்கப்பட்ட பொருளைத்‌ தாம்‌ உண்ணமுடியாது என இவர்‌ மறுத்து விட்டார்‌. அதன்பின்‌ காஸான்‌ தமக்காக பிரார்த்திக்குமாறு வேண்ட, இறைவா! காஸான்‌ உன்னுடைய மார்க்கத்தை காப்பதற்காக வாளெடுத்திருப்பின்‌ அவருக்கு உதவி செய்வாயாக. இல்லையேல்‌ நீ விரும்பியவாறு செய்து கொள்‌! என்று பிரார்த்தித்தார்‌. இதைக்கேட்டு அவருடன்‌ சென்றவர்கள்‌ நடுங்கிய பொழுது காஸான்‌ அதற்கு ஆமீன்‌ கூறிக்கொண்டிருந்தார்‌. அதன்பின்‌ தமது 300 பிரதானிகளை அழைத்து திமிஷ்கில்‌ விட்டு வருமாறு மரியாதையுடன்‌ அனுப்பி வைத்தார்‌.

சமயோசித ஆலோசனை

ஹி702 ரமளானில்‌ மீண்டும்‌ தார்த்தாரியர்கள்‌ திமிஷ்கின்மீது படையெடுத்தபோது இவர்‌ எகிப்து சுல்தான்‌ இப்னு கலாவூனை படைதிரட்டி வருமாறும்‌ அவருக்கு இம்முறை இன்ஷா அல்லாஹ்‌ வெற்றி கிடைக்குமென்றும்‌ இறைவன்‌ மீது ஆணையிட்டுக்‌ கூறி, துன்புறுத்தப்பட்டவனுக்கு இறைவன்‌ உதவுவான்‌ என்னும்‌ பொருளில்‌ வரும்‌ திருமறையின்‌ 22:60 வசனத்தை ஓதிக்காட்டினார்‌. ரமளான்‌ பிறை 2ல்‌ நடைபெற்ற இப்போரில்‌ முஸ்லிம்களை நோன்பை விட்டுவிடுமாறு கூறி நோன்பு திறக்க இவர்‌ உணவும்‌ வழங்கினார்‌. இந்த ஃபத்வாவுக்கு ஆதாரமாக நாளை நீங்கள்‌ எதிரியை எதிர்த்து நிற்க வேண்டியதிருக்கும்‌. அப்போது நீங்கள்‌ நோன்பில்லாதிருந்தால்தான்‌ எதிரியுடன்‌ வன்மையாகப்‌ போராட முடியும்‌. என்று நபி (ஸல்‌) அவர்கள்‌ தம்‌ தோழர்களை நோக்கிக்‌ கூறியிருப்பதாக இவர்‌ சொன்னார்‌. இப்போரில்‌ இவர்‌ கூறிய வண்ணமே எகிப்து சுல்தான்‌ வெற்றி பெற்றார்‌. தார்த்தாரியர்‌ புறமுதுகிட்டு ஓடினர்‌.

சீர்‌ திருத்தங்கள்

யூத கிறித்தவ சகவாசத்தால்‌ முஸ்லிம்களிடையே ஊடுருவியிருந்த பழக்கவழக்கங்கள்‌, அனாச்சாரங்கள்‌, பித்‌அத்துகளை களைவதில்‌ முழு மூச்சாக ஈடுபட்டார்‌. திமிஷ்கின்‌ அருகில்‌ குலூத்‌ நதி தீரத்தில்‌ உள்ள ஒரு கற்பாறைக்கு மக்கள்‌ தெய்வீகத்‌ தன்மை கற்பித்து அங்கு இறையருள்‌ வேண்டி சென்று வருவதைக்கண்ட இவர்‌ கல்வெட்டும்‌ தொழிலாளர்‌ சிலரை அங்கு அழைத்துச்‌ சென்று அதனை வெட்டி துவம்சமாக்கி அப்பழக்கத்திற்கு சாவுமணிகட்டினார்‌.

ஒருவர்‌ நகங்களையும்‌ தலை மயிரையும்‌ நீளமாக வளர்த்து பறவைகளின்‌ இறக்கைகளால்‌ உடை அணிந்து கொண்டும்‌, குடித்துக்‌ கும்மாளமடித்துக்‌ கொண்டும்‌ ஆபாசச்‌ சொற்களை வீசிக்கொண்டும்‌ ஹிப்பியைப்‌ போல்‌ திரிவதைக்‌ கண்ட இவர்‌, அவனை அழைத்து பக்குவமாக உபதேசம்‌ செய்து அவனை முழுமையாக மாற்றி புதுமனிதராக்கினார்‌.

மற்றொருவர்‌ கனவுக்கு விளக்கம்‌ கூறுவதில்‌ வல்லவர்‌ எனக்கூறி ஏய்த்துப்‌ பிழைத்து வருவதைக்‌ கண்டு அவ்வழக்கத்தை விட்டொழிக்குமாறு ஆணையிட்டார்‌ இவர்‌.

மார்க்கத்திற்கு எதிரான பாத்தினீ, நுளைரீ, இஸ்மாயிலீ முதலான சில வகுப்பார்‌ குன்றுகளிலும்‌ காடுகளிலும்‌ வாழ்ந்து இஸ்லாத்தின்‌ விரோதிகளுக்கு உதவிவருவதைக்‌ கண்டு மனம்‌ கொதித்து சுல்தானின்‌ படையுடன்‌ அவர்கள்‌ மீது போர்மேற்கொண்டார்‌.

காடுகளில்‌ போய்‌ அவர்கள்‌ பதுங்கிக்‌ கொள்வதை அறிந்த இவர்‌ காடுகளிலிருந்த மரங்களை வெட்டி வீழ்த்துமாறு கூறி பனூ நதீர்கள்‌ மீது நபி (ஸல்‌)அவர்கள்‌ படையெடுத்துச்‌ சென்றபோது இவ்வாறு செய்துள்ளார்கள்‌ என்றும்‌ எடுத்துரைத்தார்‌.

சத்திய முழக்கம்‌

இவ்வாறு எங்கெல்லாம்‌ ஆகாப்‌ பழக்கங்களைக்‌ கண்டாரோ அங்கெல்லாம்‌ துணிச்சலோடு சென்று அவற்றை அகற்றினார்‌ இவர்‌. இதனால்‌ இவருக்குப்‌ பல எதிரிகள்‌ ஏற்படலாயினர்‌. குர்‌ஆன்‌ ஹதீஸின்‌ படி முஸ்லிம்கள்‌ செயலாற்ற வேண்டுமென்று இவர்‌ முழங்கி வந்தது இவருக்குப்‌ பல ஆதரவாளர்களைத்‌ தேடித்தந்த போதினும்‌ அதைவிட அதிகமாக எதிரிகளையும்‌ உண்டு பண்ணியது. எனினும்‌ தமது சத்தியப்போதனைகளிலிருந்து ஒருபொதும்‌ இவர்‌ பின்வாங்கவே இல்லை. 

இப்னு அரபியின்‌ வஹ்தத்துல்‌ உஜூது கொள்கையை இவர்‌ வன்மையாக தாக்கிய பொழுது இவரை எகிப்துக்கு வருமாறு சுல்தானிடமிருந்து கண்டிப்பான கட்டளை வந்தது. மர்க்க விற்பன்னர்கள்‌, அரசாங்க அதிகாரிகள்‌ நிரம்பிய அம்மன்றத்தில்‌ இவரது நியாயமான வாதத்தை யாரும்‌ கேட்கத்தயாராக இல்லை. இவரையும்‌ இவரது சகோதரர்களான ஷர்புத்தீன்‌ அப்துல்லாஹ்வும்‌, ஸைனுத்தீன்‌ அப்துர்ரஹ்மானும்‌ சிறையில்‌ தள்ளப்பட்டனர்‌.

சிறையிலும்‌ கொள்கைப்பிரச்சாரம்‌

சிறையிலும்‌ இவர்‌ தம்‌ கொள்கைப்‌ பிரச்சாரத்தை விடவில்லை. இவர்‌ சென்ற சில நாட்களில்‌ சிறைக்‌ கூடம்‌ முழுவதும்‌ பிரச்சார மடமாக காட்சி வழங்கியது. இவரின்‌ மாணவர்களாக மாறிய கைதிகள்‌ விடுதலை செய்யப்பட்ட பொழுதுகூட விடுதலை வேண்டாமென்று கூறிச்சிறையிலேயே இவருடன்‌ இருந்து கொண்டார்கள்‌. இவர்‌ தம்முடைய பிரச்சாரத்தை விட்டுவிடுவதாகக்கூறின்‌ விடுதலை செய்யப்படுவார்‌ என்று கூறப்பட்டது.

“முடியாது அதற்குப்பதிலாக இச்சிறையே எனக்குப்‌ போதுமானது” என்று கூறிவிட்டார்‌ இவர்‌.

சூபித்துவ- தரீக்காக்‌ கொள்கைகளை உடைத் தெறிந்தார்‌

ஹிஜ்ரி 707 ரபீவுல்‌ அவ்வல்‌ 23 ஆம்‌ நாள்‌ விடுதலை செய்யப்பட்ட இவர்‌ கெய்ரோவிலுள்ள மத்ரஸா ஸாலிஹிய்யாவிலும்‌ ஏனைய கல்விக்கூடங்களிலும்‌ சொற்பொழிவாற்றினார்‌.

பிற்காலத்தில்‌ தோன்றிய சூபித்தத்துவம்‌ இந்தோ-கிரேக்க தத்துவமேயாகும்‌ என்றும்‌ அது ஷரீஅத்துக்கு அப்பாற்பட்டது என்றும்‌ இவர்‌ கூறினார்‌. சூபிகளெல்லாம்‌ இதற்கு பெரும்‌ எதிர்‌ப்பு தெரிவிக்க, ஷெய்கு இப்னு அதாவுல்லாஹ்‌ இஸ்கந்தரி என்னும்‌ சூபி வழக்குத்தொடர இவர்‌ ஷவ்வால்‌ மாதம்‌ 8ஆம்‌ நாள்‌ மீண்டும்‌ சிறையிலடைக்கப்பட்டார்‌.

இதன்‌ பின்‌ விடுதலை செய்யப்பட்ட இவர்‌, அங்கு நிலவி வந்த ஸப்யீனிய்யா தரீக்காவை உடைத்தெறிந்து அதில்‌ சேர்ந்திருந்த பலரைத்தம்‌ கொள்கையை ஏற்குமாறு செய்தார்‌.

எதிரிகளுக்கும்‌ மன்னிப்பு

ஹிஜ்ரி 709 ல்‌ நாஸிர்‌ இப்னு கலாவூன்‌ அரியணை ஏறியதும்‌ இவரை கெய்ரோ வரவழைத்து மிகவும்‌ மரியாதையுடன்‌ வரவேற்றார்‌. இவரது எதிரிகளுக்கெல்லாம்‌ தலைவெட்டும்‌ தண்டனை விதிப்பதாக சுல்தான்‌ கூறிய போது அவர்களையெல்லாம்‌ எப்போதே மன்னித்துவிட்டேன்‌ என்று கூறினார்‌. இதன்‌ பிறகு இவருடைய விரோதிகள்‌ இவரது பிச்சார வேகத்தைத்‌ தடைசெய்ய முடியாது போகவே இவரை அடித்து உதைத்து உடலில்‌ பலத்த காயத்தை ஏற்படுத்தினார்கள்‌. அப்போது பழிவாங்க எண்ணிய தமது ஆதரவாளர்களிடம்‌ அவர்களை ஒன்றும்‌ செய்யவேண்டாம்‌ எனத் தடுத்துவிட்டார்‌. இவ்விதம்‌ தனக்குத்‌ துன்பங்கள்‌ விளைவித்த எதிரிகள்‌ அத்தனைபேரையும்‌ மன்னித்த நிகழ்ச்சிகள்‌ எத்தனையோ உண்டு.

போர்படையில்‌ பங்கேற்பு

ஹிஜ்ரி 712ல்‌ தார்த்தாரியர்கள்‌ திமஷ்கின்மீது படையெடுத்து வந்தபோது சுல்தானுடன்‌ படையில்‌ சேர்ந்து இஸ்லாத்திற்காக வீரப்போர்‌ செய்து உயிர்‌ நீக்க வீரும்புவதாகக்‌ கூறி போரிடச்சென்றார்‌.

பிரச்சாரத்தில்‌ கவனம்‌

மார்க்க விசயங்களில்‌ கவனம்‌ செலுத்திய இவர்‌ மூன்று தலாக்‌ விசயத்தில்‌ - ஒரே நேரத்தில்‌ கூறும்‌ மூன்று தலாக்‌ செல்லுபடியாகாது என்று - கூறிய கருத்து மார்க்க அறிஞர்களின்‌ எதிர்ப்பை மீண்டும்‌ ஈட்டித்தந்தது. இதனால்‌ சிறையில்‌ தள்ளப்பட்டு ஐந்து மாதங்களும்‌ பதினெட்டு நாட்களும்‌ சிறைவாசம்‌ அனுபவித்தார்‌. பின்னர்‌ ஹிஜ்ரி 721 முஹர்ரம்‌ 10 ஆம்‌ நாள்‌ விடுதலை செய்யப்பட்டார்‌.

கப்ர்‌ வணக்கத்திற்கு எதிராகக்‌ குரல்‌

ஹிஜ்ரி 726 வரை மத்ரஸா ஹன்பலிய்யாவிலும்‌, கஸ்ஸாஸீனிலுருந்த தமது சொந்த பாடசாலையிலும்‌ குர்‌ஆன்‌, ஹதீஸ்‌ வகுப்புகள்‌ நடத்தி வந்தார்கள்‌. இந்தவேளையில்‌ பதினேழு ஆண்டுகளுக்கு முன்‌ பெரியார்களின்‌ கப்ருகளுக்கும்‌, நபி(ஸல்‌) அவர்களுடைய கப்ருக்கும்‌ தரிசிப்பதையே நோக்கமாகக்‌ கொண்டு செல்லக்கூடாது என இவர்கள்‌ வழங்கிய ஒரு ஃபத்வாவை வைத்து எதிர்பாளர்கள்‌ பெரும்‌ கிளர்ச்சி செய்யவே மீண்டும்‌ ஹி.726 ஷஃபான்‌ 7ஆம்‌ நாள்‌ இவர்‌ சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்‌. இதை அறிந்ததும்‌ நான்‌ எதிபார்த்தது நடந்து விட்டது. மிக்க மகிழ்ச்சியடைகிறேன்‌. இதனால்‌ எனக்கு மிகுந்த நன்மையே ஏற்படும்‌ என்று புன்முறுவலோடு கூறினார்‌.

சிறையிலிருந்தே நாடு முழுவதும்‌ எழுத்துப்பிரச்சாரம்‌

திமிஷ்கில்‌ இவர்‌ சிறையில்‌ தள்ளப்பட்டபோது இவரது சகோதரர்‌ அப்துர்ரஹமான்‌ இப்னு தைமிய்யாவும்‌ மாணவர்‌ ஹாபிள்‌ இப்னு கைய்யூமும்‌ உடனிருந்தனர்‌. சிறையில்‌ வைத்து இவர்‌ எழுதியவை யாவும்‌ பிரதி செய்யப்பட்டு நாடு முழவதும்‌ பரத்தப்பட்டன. இதையறிந்த அரசாங்கம்‌ அவை யாவையும்‌ பறிமுதல்‌ செய்தது. இவரிடம்‌ இருந்த கையெழுத்துப்‌ பிரதிகளும்‌ இவர்‌ எழுதப்பயன்படுத்திய காகிதம்‌, எழுதுகோல்‌ மைக்கூடு ஆகியவையும்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு நீதிமன்ற நூலகத்தில்‌ வைக்கப்பட்டன. ஆனால்‌ இவரோ அதுபற்றிச்‌ சிறிதும்‌ கவலைப்படாது தமக்குக்‌ கிடைத்த காகிதங்களில்‌ தமது கருத்துகளை கரிதுண்டால்‌ எழுதி வந்தார்‌. இப்போராட்டத்தை இவர்‌ ஒரு ஜிஹாத்‌ என்றே கருதினார்‌.

சீர்‌திருத்தச்‌ செம்மலின்‌ மறைவு

சிறையிலிருக்கும்‌ போது திருக்குர்‌ஆனுக்கு விளக்கவுரை எழுதியதோடு எண்பது தடவை ஓதி முடித்தார்‌. எண்பத்தொன்றாவது தடவை ஸூரத்துல்‌ கமர்‌ ஓதத்துவங்கி 54:54,55 வசனமாகிய

இன்னல்‌ முத்தகீன ஃபீஜன்னத்தின்‌ வநஹர்‌ ஃபீ மக்‌அதி ஸித்கின்‌ இந்த மலீகின்‌ முக்ததிர்‌

நிச்சயமாக பயபக்தியுடையோர்‌ சுவனபதிகளிலும்‌ (அவற்றிலுள்ள) ஆறுகளிலும்‌ இருப்பார்கள்‌. மெய்யாகவே மிகவும்‌ கண்ணியமிக்க இருப்பிடத்தில்‌ ஆற்றல்மிக்க அரசனிடத்தில்‌ (இருப்பார்கள்‌). என்ற வசனத்தை ஓதிவரும்பொழுது இவருடைய ஆவி உடலைவிட்டும்‌ பிரிந்தது. இது நிகழ்ந்தது ஹிஜ்ரி 728 துல்‌ கஃதா பிறை 2 இரவாகும்‌.

அப்போது இவருக்கு வயது 67. இவருடைய ஜனாஸா தொழுகையில்‌ இரண்டு லட்சம்‌ பேர்‌ கலந்து கொண்டனர்‌. இவருடைய ஜனாஸா தொழுகை பல்வேறு நாடுகளிலும்‌, நெடுந்தொலைவிலுள்ள எமனிலும்‌, சீனாவிலும்கூட நிகழ்த்தப்பட்டது.

புரட்சிகாமான நூல்கள்‌

இவர்கள்‌ 500 நூல்கள்‌ வரை எழுதியுள்ளார்கள்‌. அவற்றுள்‌ மஜ்மூ௨ல்‌ பதாவா, (மஜ்மூஅத்துல்‌ ஃபதாவா இப்னு தைமிய்யா 20 பாகங்களில்‌ இன்றும்‌ கிடைக்கின்றன) அல்‌ வாஸிதிய்யா, தர்‌உ தஆருளில்‌ அக்லி வந்நக்லி, நக்ளுல்‌ மந்திக்‌, மின்ஹாஜுஸ்‌ சுன்னத்திந்‌ நபவிய்யா. தப்ஸீர்‌ இப்னு தைமிய்யா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இவர்களின்‌ மாணவர்கள்‌

இவர்களின்‌ புகழ்‌ வாய்ந்த மாணவர்களில்‌ குறிப்பிடத்தக்கவர்கள்‌ :

1. இமாம்‌ ஹாபிள்‌ இப்னு கைய்யிம்‌ ஜவ்ஸிய்யா (ரஹ்‌)

2. இமாம்‌ ஹாபிள்‌ அல்‌-முஃபஸ்ஸிர்‌ இப்னு கதீர்‌ (ரஹ்‌)

3. இமாம்‌ ஹாபிள்‌ அல்‌ முஹத்திஸ்‌ ஷம்ஸுத்தீன்‌ அத்தஹபீ (ரஹ்‌)

18 ஆம்‌ நூற்றாண்டில்‌ வாழ்ந்த இமாம்‌ முஹம்மது இப்னு அப்துல்‌ வஹ்ஹாபும்‌ எகிப்தில்‌ தோன்றிய அல்மனார்‌ சீர்திருத்த வாதிகளும்‌ இவரைப்‌ பின்பற்றியவர்களேயாவார்கள்‌.

(குறிப்பு: இவர்களின்‌ சத்திய முழக்க வரலாறு பிரச்சாரகர்களுக்கு சிறந்த பாடமாகும்‌ இத்துணை மாண்புக்குரிய பெருமேதையைத்‌ தூற்றுவோரும்‌ வரலாற்றில்‌ உண்டு. இவர்களைப்பற்றிய பாடநூலோ அறிமுகமோ இந்திய மத்ராஸாக்கள்‌ எதிலும்‌ இல்லாதது வியப்புக்கும்‌ வேதனைக்குமுரியதாகும்‌.)



இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் முன்னுரை:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்‌.

புகழெல்லாம்‌ அல்லாஹ்வுக்கே உரியது! அவனிடம்‌ நாம்‌ உதவி தேடுகிறோம்‌. பிழைபொறுக்கத்‌ தேடுகிறோம்‌. நமது ஆத்மாவின்‌ தீமைகளிலிருந்து விடுதலை பெறவும்‌, கெட்ட செயல்களைக்‌ தவிர்ந்து நடக்கவும்‌ அல்லாஹ்வைக்‌ கொண்டு பாதுகாப்புத்‌ தேடுகிறோம்‌. இறைவன்‌ எவருக்கு நேர்வழியைக்‌ காட்டினானோ அவர்களை வழிகெடுக்க யாராலும்‌ முடியாது. இறைவன்‌ எவர்மீது வழிகேட்டை விதித்திருக்கிறானோ அவர்களுக்கு நேர்வழி காட்டவும்‌ யாருக்கும்‌ தகுதியில்லை. அவன்‌ இணையற்ற ஏகன்‌. இது உண்மை என்பதற்கு நாம்‌ சான்று பகர்கிறோம்‌.

நபிகள்‌ பெருமானார்‌ முஹம்மது ரசூல்‌ (ஸல்‌) அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ அடியாரும்‌, உத்தமத்‌ தூதருமாவார்கள்‌. உண்மையான சன்மார்க்கத்தையும்‌, நேர்வழியையும்‌ அல்லாஹ்‌ அவர்களுக்குக்‌ கொடுத்து எல்லா மதங்களை விட இந்த சன்மார்க்க தீனுல்‌ இஸ்லாத்தை மேலோங்கச்‌ செய்வதற்கு அவர்களை நபியாகக்‌ தேர்ந்தெடுத்து அனுப்பினான்‌. அவர்கள்‌ உண்மை என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியளிக்கிறான்‌.

நலவுகள்‌ செய்கிறவர்களுக்கு சுவனமிருக்கிறது என்று நபிகள்‌ பெருமானார்‌ (ஸல்‌) நன்மாராயம்‌ கூறினார்கள்‌. தீமைகள்‌ செய்கிறவர்களுக்கு நரகத்தைக்‌ கூறி அச்சுறுத்தினார்கள்‌. அல்லாஹ்வின்‌ பாதையில்‌ மக்களை அழைத்தார்கள்‌. இருள்‌ சூழ்ந்த சமூகத்துக்கு ஒளி விளக்காக அனுப்பப்பட்டார்கள்‌. அவர்களைக்‌ கொண்டு மக்கள்‌ நேர்வழி பெற்றனர்‌. அகப்பார்வையில்லா உள்ளங்கள்‌ தெளிவு பெற்றன. மூடிக்‌ கிடந்த கண்கள்‌ திறந்தன. செவிகள்‌ மிளிர்ந்தன. பூட்டப்பட்டிருந்த இதயங்கள்‌ திறக்கப்பட்டதினால்‌ அவை சிந்திக்கத்‌ துவங்கின.

பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ தமது தூதர்‌ பொறுப்பை, தம்மிடம்‌ ஒப்படைக்கப்பட்டிருந்த அமானிதத்தை சரிவர நிறைவேற்றினார்கள்‌. மக்களுக்கு நல்ல போதனைகளை போதித்தார்கள்‌. அல்லாஹ்வின்‌ பாதையில்‌ போராடினார்கள்‌. உலகைப்‌ பிரியும்‌ வரையில்‌ தன்‌ இறைவனை வணங்கினார்கள்‌. அல்லாஹ்‌ அவர்களுக்கு தன்‌ சாந்தி சமாதானத்தை அருள்‌ புரியட்டும்‌. நீண்ட போரட்டத்துக்குப்‌ பிறகு வெற்றிவாகை சூடினார்கள்‌. மெய்யைப்‌ பொய்யிலிருந்து வேறுபடுத்தினார்கள்‌. வழிபாடு எது என்றும்‌, வழிகேடு எப்படி என்பதையும்‌ பிரித்துக்‌ காட்டினார்கள்‌. இறைநேசச்‌ செல்வர்கள்‌ யார்‌?இறைவனின்‌ விரோதிகள்‌ யார்‌? என்பதை விபரமாகக்‌ கூறினார்கள்‌.

அல்லாஹ்வும்‌ அவனது ரசூலும்‌ எவற்றை ஆகுமாக்கினார்களோ அவையே ஆகுமானவை. எவற்றை விலக்கினார்களோ அவை ஆகாதவை என்று கூறினார்கள்‌. அல்லாஹ்வும்‌ ரசூலும்‌ காட்டித்‌ தந்தவை தான்‌ உண்மையான மார்க்கமாகும்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ மனு-ஜின்‌ இருசாராருக்கும்‌ தூதராக அனுப்பப்‌ பட்டார்கள்‌. இவ்விருசாராரும்‌ அவர்களை நம்பி வழிபட வேண்டும்‌. அவர்கள்‌ இறைவனிடமிருந்து பெற்று வந்த உண்மைகளை மெய்பித்தல்‌ வேண்டும்‌. வாழ்வின்‌ எல்லா நிலைகளிலும்‌ அந்த நபிகளை முன்மாதிரியாக கொள்ளுதல்‌ வேண்டும்‌. இவை போன்றவைதான்‌ உண்மையான இறைவழிபாடாகும்‌. நேரான மார்க்கமும்‌ இதுவேதான்‌. இறைநேசர்களின்‌ பாதையும்‌ இதுவேயாகும்‌. அல்லாஹ்‌ தன்னடியார்களுக்கு அனுமதியளித்த வஸீலாவும்‌ இதுவேயாகும்‌.

இறைவன்‌ கூறினான்‌: "சத்திய விசுவாசிகளே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்‌. அவனிடம்‌ (நெருங்கிச்‌) செல்வதற்குரிய வணக்க வழிபாடுகளை (வஸீலாவை) த்தேடிக்‌ கொள்ளுங்கள்‌ (5:35) 

இந்த ஆயத்து அல்லாஹ்வின்‌ பக்கம்‌ சேர்வதற்குரிய வஸீலா என்பதின்‌ கருத்து அவனை நம்பி வழிபட்டு நடந்து கொள்ளுதல்‌. நபி (ஸல்‌) அவர்களையும்‌ நம்பி அவர்களின்‌ அடிசுவட்டைப்‌ பின்பற்றுதல்‌, மேலும்‌ அந்த நபிக்கு வழிபடுதல்‌ என்ற கருத்தையே குறிக்கின்றது. இப்படி நபியை ஈமான்‌ கொண்டு அல்லாஹ்வை அஞ்சி வழிபட்டு நடப்பது என்ற கருத்துக்குட்பட்ட வஸீலாவைத்‌ தேடுவது ஒவ்வொரு மனிதனுக்கும்‌ கடமையாகிறது. எக்காரணத்தினாலும்‌ இத்தகைய நற்கருமங்களை (வஸீலாவை) த்‌ தேடுவதைப்‌ புறக்கணித்து நடக்க யாருக்கும்‌ இயலாது. அல்லாஹ்வின்‌ கருணையையும்‌ வெகுமதியையும்‌ பெற, அவனுடைய தண்டனையிலிருந்து நீங்கி நடக்க இந்த வஸீலாவைத்‌ தேடித்தான்‌ ஆகவேண்டும்‌.

நபிகள்‌ பெருமானாரை நம்புதல்‌, அவர்களுக்கு வழிபட்டு நடத்தல்‌, நற்கருமங்கள்‌ புரிதல்‌ என்ற கருத்தைக்‌ கொண்ட வஸீலாவைத்‌ தேடுதல்‌ எல்லா மனிதர்களுக்கும்‌ கட்டாயமாகும்‌.


வஸீலா தேடுவதன் தெளிவான சட்டங்கள்


நபிகள்‌ பெருமானார்‌ (ஸல்‌) அவர்களின்‌ மதிப்பு.

நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ எல்லா மக்களுக்கும்‌ பரிந்து பேசி அல்லாஹ்விடம்‌ சிபாரிசு செய்வார்கள்‌. புகழுக்கு உரிய உன்னதமான ஸ்தானமும்‌ அவர்களுக்கு உண்டு. பரிந்து பேசுகின்ற அனைத்து சிபாரிசுகாரர்களை விட மதிப்பிலும்‌, அந்தஸ்திலும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ அல்லாஹ்விடத்தில்‌ சிறந்தவர்களாவார்கள்‌. அவர்களின்‌ அந்தஸ்தின்‌ அருகில்‌ எந்த நபிகளும்‌, எந்த ரசூலும்‌ நெருங்க முடியாது. இவர்கள்‌ அல்லாஹ்விடம்‌ எல்லோரையும்‌ விட மதிப்புக்குரியவர்‌. யார்‌ யாருக்கு அவர்கள்‌ இறைவனிடம்‌ துஆச்‌ செய்து மன்றாடி சிபாரிசு செய்கிறார்களோ அவர்கள்‌ தாம்‌ நபிகளாரின்‌ சிபாரிசைக்‌ கொண்டும்‌, துஆவைக்கொண்டும்‌ அல்லாஹ்விடம்‌ நெருங்கி அவனின்‌ திருப்பொருத்தத்தைப்‌ பெறுகிறவர்கள்‌.

ஸஹாபாக்க‌(நபித்தோழர்கள்)ளைப்‌ பொறுத்தவரையில்‌ அவர்களும்‌ நபிகளைச்‌ சந்தித்து அவர்களைக்‌ கொண்டு அல்லாஹ்விடம்‌ துஆக்கேட்கச்‌ செய்து அவர்களின்‌ ஷபாஅத்தை அல்லாஹ்விடம்‌ வேண்டி அவன்‌ பால்‌ நெருங்கினார்கள்‌. நாளை மறுமையிலும்‌ நபிகள்‌ (ஸல்‌) அவர்களின்‌ துஆவினாலும்‌, நபிகள்‌ அல்லாஹ்விடம்‌ சிபாரிசு செய்வதனாலும்‌ தம்‌ சமூகத்தவர்கள்‌ அல்லாஹ்வை நெருங்க முடியும்‌. ஸஹாபாக்கள்‌ நபிகளோடு வைத்திருந்த தொடர்புகளிலிருந்தும்‌, நடைமுறைகளிலிருந்தும்‌, பழக்க வழக்கங்களிலிருந்தும்‌ “தவஸ்ஸுல்‌ வஸீலா” என்ற வார்த்தைகளுக்கு இந்தக்‌ கருத்தை விளங்க முடிகிறது.

மேலும்‌ நபிகளின்‌ சிபாரிசும்‌, துஆவும்‌ மனிதனுக்குப்‌ பலனளிக்க வேண்டுமானால்‌ அவர்கள்‌ மீது ஈமான்‌ கொண்டாக வேண்டும்‌. நயவஞ்சகர்களுக்கும்‌, விசுவாசமில்லாத குஃப்பார்களுக்கும்‌ எந்த பெரியோர்களின்‌ சிபாரிசும்‌, துஆவும்‌ மறுமையில்‌ பலனற்றதாக இருக்கிறது. நபி (ஸல்‌) அவர்கள்‌ தன்‌ தகப்பனார்‌ அப்துல்லாஹ்‌, பெரிய தந்‌தை அபுதாலிப்‌ மற்றும்‌ சில விசுவாசமற்றோருக்காக பிழைபொறுக்கத்‌ தேட வேண்டாமென விலக்கப்பட்டிருக்கிறார்கள்‌. நயவஞ்சகர்கள்‌ (முனாபிக்‌)களுக்குப்‌ பிழைபொறுக்கத்‌ தேட வேண்டாமென அல்லாஹ்‌ அவர்களை தடுத்தான்‌. "நபியே! நீர்‌ இந்த நயவஞ்சகர்களுக்குப்‌ பாவமன்னிப்பு தேடுவதும்‌ தேடாமலிருப்பதும்‌ சமமே. திட்டமாக அல்லாஹ்‌ அவர்களை ஒருபோதும்‌ மன்னிக்க மாட்டான்‌” என்று அல்லாஹ்‌ கூறினான்‌ (63:6)

இறை நம்பிக்கைக்‌ கொண்ட மக்கள்‌ தமது விசுவாசத்தில்‌ பலதரப்பட்டிருப்பார்கள்‌. இதைப்போன்று இறைவிசுவாசமில்லா காஃபிர்கள்‌ தமது அவநம்பிக்கையில்‌ (குஃப்ரியத்தில்‌) பலதப்பட்டவர்களாக இருப்பார்கள்‌. இந்த உண்மையை திருமறையும்‌ குறிப்பிடுகிறது "போர்‌ செய்யக்கூடாதென்று விலக்கப்பட்ட மாதங்களை தாம்‌ விரும்பியவாறு அவர்கள்‌ முன்பின்னாக மாற்றி மறிப்பதெல்லாம்‌ குஃப்ரை (நிராகரிப்பை) பலப்படுத்தும்‌ செயல்களாகும்‌...” (9:37) என்பது இறைவாக்கு. 

குஃப்ரிலும்‌ பலமான குஃப்ர்‌, இலேசான குஃப்ர்‌ என பலதரம்‌ இருக்கிறது. அன்று சில நிராகரித்தவர்கள்‌ (குஃப்பார்கள்‌) நபிகள்‌ (ஸல்‌) அவர்களுக்கு உதவி ஒத்தாசைகள்‌ புரிந்தார்கள்‌. இவர்களுடைய அவநம்பிக்கை சற்று பலம்‌ குன்றியிருக்கும்‌. இத்தகைய காஃபிர்களுக்கும்‌ மறுமை நாளில்‌ நபிகளின்‌ ஷபாஅத்‌ அருளப்பட்டு இவர்களின்‌ நரகவேதனை குறைக்கப்படுகிறது. ஆனால்‌ நபிகளின்‌ ஷபாஅத்தினால்‌ ஒருபோதும்‌ காஃபிர்களின்‌ நரகவேதனை இல்லாமலாக்கப்பட மாட்டாது.

அப்பாஸ்‌ பின்‌ அப்துல்‌ முத்தலிப்‌ நபி (ஸல்‌) அவர்களிடம்‌ ‘யா ரசூலுல்லாஹ்! அபுதாலிப்‌ தாங்களுக்கு பல ஒத்தாசைகளை‌ செய்திருக்கிறார்‌. பல சந்தர்ப்பங்களில்‌ தாங்களை எதிரிகளின்‌ தாக்குதலிலிருந்து காப்பாற்றினார்‌. எனவே தாங்கள்‌ அவர்களுக்கு ஏதாவது உபகாரம்‌ புரிந்தீர்களா?’ என்று வினவியதற்கு நபி (ஸல்‌) ‘ஆம்‌ அவர்‌ இப்பொழுது நரகத்தின்‌ மேல்‌ தரத்திலிருக்கிறார்‌. நான்‌ அல்லாஹ்விடத்தில்‌ மன்றாடி இதைச்‌ செய்யவில்லையென்றால்‌ அவர்‌ நரகத்தின்‌ அடித்தட்டில்‌ இருந்திருப்பார்‌' என்று கூறினார்கள்‌. (முஸ்லிம்)

அபூஸயீத்‌ (ரலி) கூறுகிறார்கள்‌: நபி (ஸல்‌) அவர்களிடம்‌ ஒருமுறை தம்‌ பெரிய தந்‌தை அபுதாலிப்பைப் பற்றி கூறப்பட்டது. அப்பொழுது நபியவர்கள்‌ மறுமையில்‌ எனது சிபாரிசு அபூதாலிப்புக்கு நல்ல பலனை அளிக்குமென்று நினைக்கிறேன்‌. நெருப்பின்‌ மேல்பகுதியில்‌ அவரை நியமிக்கப்படும்‌. அவரின்‌ இரண்டு கரண்டைக்கால்களை நெருப்பு மூடியிருக்கும்‌. இதனால்‌ அவருடைய மூளை உருகி வடிந்து கொண்டிருக்கும்‌ என கூறினார்கள்‌. நரகவாதிகளில்‌ அபூதாலிப்‌ மட்டும்‌ நெருப்பினாலான இரு மிதியடிகள்‌ அணிந்திருப்பார்‌. அதிலிருந்து வெப்பம்‌ மூளை வரையிலும்‌ மேலே ஏறி மூளையை உருகச்‌ செய்து கொண்டேயிருக்கும்‌ எனக்‌ கூறினார்கள்‌.

நபியவர்கள்‌ ஷபாஅத்து சில காஃபிர்களுக்குப்‌ பலனளிப்பது போல்‌ காஃபிர்களுக்காக வேதனையை உலகில்‌ அளிக்க வேண்டாமென்று இறைஞ்சுகின்ற நபிமார்களின்‌ துஆவும்‌ அங்கீகரிக்கப்படுகிறது. ‘முன்னர்‌ ஒரு நபி தம்‌ சமூகத்து காஃபிர்களால்‌ அடிக்கப்பட்ட போது அவர்கள்‌ 'இறைவா! என்‌ சமூகத்தைச்‌ சார்ந்த மக்கள்‌ அறிவிலிகளாக இருக்கிறார்கள்‌. அவர்களுக்கு நீ நேர்வழி கொடுத்தருள்வாயாக' என்று பிரார்த்தித்தார்கள்‌' என நபிகள்‌ (ஸல்‌) கூறினார்கள்‌. நபி (ஸல்‌) அவர்களும்‌ 'இறைவா காஃபிர்களை நீ மன்னிப்பாயாக! அவர்களின்‌ வேதனையை முன்கூட்டி உலகில்‌ வைத்து வழங்கிவிடாதே!' எனக்‌ கூறி பிரார்த்தித்திருக்கிறாார்கள்‌.

இறைவன்‌ திருமறையில்‌ "மனிதர்களை அவர்கள்‌ தேடிக்கொண்ட தீவினைக்காக உடனுக்குடன்‌ அல்லாஹ்‌ தண்டிப்பதாக இருப்பின்‌ பூமியில்‌ எந்த ஜீவனையும்‌ விட்டு வைத்திருக்க மாட்டான்‌. எனினும்‌ அவர்களைக்‌ குறிப்பிட்ட தவணை வரையிலும்‌ பிற்படுத்துகிறான்‌...” (35:45) என்று கூறியிருக்கிறான்‌. நபியவர்கள்‌ சில காஃபிர்களுக்காக 'இறைவா! இவர்களை நேர்‌வழியின்‌ பால்‌ திருப்புவாயாக! இவர்களுக்கு உணவும்‌ அளித்தருள்வாயாக!' என்றும்‌ பிரார்த்தித்திருக்கிறார்கள்‌.

அபூஹுரைரா என்ற நாயகத்‌ தோழரின்‌ தாயாருக்காக இப்படிப்‌ பிரார்த்தித்து, அம்மூதாட்டிக்கு அல்லாஹ்‌ ஹிதாயத்தைக்‌ கொடுக்தான்.‌ 'தவ்ஸ்‌' என்ற வம்சத்தாருக்கு நேர்வழி கிடைப்பதற்காகவும்‌, இஸ்லாத்தில்‌ அவர்கள்‌ சேர்வதற்காகவும்‌ நபிகள்‌ நாயகம்‌ பிரார்த்தித்து இறைவனிடமிருந்து ஹிதாயத்துப்‌ பெறச்‌ செய்தார்கள்‌.

இணைவைப்பவர்‌(முஷ்ரிக்‌)கள்‌ சிலர்‌ பெருமானாரிடம்‌ வந்து மழை பெய்வதற்காகப்‌ பிரார்த்திக்க வேண்டும்‌ எனக்‌ கேட்ட போது அல்லாஹ்விடத்தில்‌ நபி (ஸல்‌) பிரார்த்தித்தார்கள்‌. இச்சம்பவத்தை இமாம்‌ அபூதாவுத்‌ அறிவிக்கிறார்கள்‌. இப்படி நபியவர்கள்‌ செய்து காட்டியது அனைத்துக்‌ கல்நெஞ்சர்களான காஃபிர்களின்‌ உள்ளங்களைக்‌ கவரச்‌ செய்வதற்குத்தான்‌. எல்லா உயிரினங்களை விட மதிப்பிற்‌ சிறந்த நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களைக்‌ காட்டிலும்‌ அந்தஸ்தில்‌ எவரும்‌ உயரப்‌ போவதில்லை. அவர்களுடைய சிபாரிசைக்‌ காட்டிலும்‌ உயர்ந்த ஒரு சிபாரிசை இறைவன்‌ மறுமையில்‌ யாருக்கும்‌ அளிக்க மாட்டான்‌. இப்படியிருந்தும்‌ கூட நபிகளின்‌ ஷபாஅத்துடையவும்‌, துஆவுடையவும்‌ பலாபலன்களையெல்லாம்‌, அவர்களைக்‌ கொண்டு நம்பி வழிபடுவதினால்‌ கிடைக்கின்ற ஈடேற்றதோடு ஒப்பிட்டுப்பார்த்தால்‌ இவர்களை நம்பி வழிபடுவதினால்‌ மட்டும்‌ நிச்சயமாக வெற்றி கிடைக்கிறது எனக்‌ கூறலாம்‌. பெருமானார்‌ மீது ஈமான்‌ கொண்டு அவர்களின்‌ அடிச்சுவட்டைப்‌ பின்பற்றியொழுகுவது அனைத்து வெற்றிகளுக்கும்‌, நரக விடுதலைக்கும்‌ ஏதுவாகிறது. அல்லாஹ்வையும்‌, ரசூலையும்‌ நம்பி வழிபட்ட நிலையில்‌ எந்த மனிதர்கள்‌ இறந்தாலும்‌ அவர்கள்‌ 'அஹ்லுஸ்‌ ஸுஆதத்‌' என்ற பாக்கியமுடையோர்‌ கூட்டத்தில்‌ இருப்பார்கள்‌ என்று கூறலாம்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ கொண்டு வந்த உண்மைகளை மறுத்து அவற்றை நிராகரித்து நடக்கின்ற ஒவ்வொருவனும்‌ 'அஹ்லுன்‌ நார்‌' என்னும்‌ நரகவாதி என உறுதியாகக்‌ கூறலாம்‌.

ஆனால்‌ நபிகளின்‌ ஷபாஅத்தையும்‌, துஆவையும்‌ அருளப்பெற்ற ஒருவன்‌ அதனால்‌ மட்டும்‌ நிச்சயம்‌ பலன்‌ பெறுவானா, இல்லையா என்பதை நிச்சயமாகச்‌ சொல்வதற்கில்லை. ஏனென்றால்‌ அவர்களின்‌ ஷபாஅத்தும்‌, துஆவும்‌ மனிதர்களுக்குப்‌ பயன்பட வேண்டுமென்றால்‌ அதற்குரிய நிபந்தனைகள்‌ அனைத்தும்‌ ஒருங்கே அமையப்‌ பெற்றிருக்க வேண்டும்‌. இல்லையென்றால்‌ ஷபாஅத்தும்‌, துஆவும்‌ எந்த பலனையும்‌ அளிக்காது. காஃபிர்கள்‌ நரகத்தை விட்டு வெளியேற வேண்டும்‌ என்றோ, அவர்களின்‌ குற்றங்களை மன்னிக்க வேண்டும்‌ என்றோ எத்தனை பெரிய மனிதர்‌ வேண்டினாலும்‌, சிபாரிசு செய்தாலும்‌ இவற்றை இறைவன்‌ ஏற்க மாட்டான்‌. நபிகள்‌ (ஸல்‌) அவர்களுக்குப்‌ பிறகு அந்தஸ்தில்‌ உயர்ந்த மனிதர்கள்‌ இவ்வையகத்தில்‌ இருப்பார்களானால்‌ நபி இப்ராஹீம்‌ (அலை) அவர்களைக்‌ குறிப்பிடலாம்‌. 

இப்ராஹீம்‌ நபியவர்கள்‌ தம்‌ தகப்பனாருக்காகப்‌ பிரார்த்தனை செய்து பாவமன்னிப்பும்‌ அல்லாஹ்விடம்‌ வேண்டினார்கள்‌. இதைப்‌ பற்றி இறைவன்‌ "எங்கள்‌ இறைவனே! எனக்கும்‌, என்‌ தாய்‌-தந்தைக்கும்‌, மற்ற மூஃமின்களுக்கும்‌ கேள்விக்‌-கணக்குக்‌ கேட்கும்‌ (மறுமை) நாளில்‌ மன்னிப்பளிப்பாயாக!...” (என பிரார்த்தித்தார்கள்‌) என்று இறைவன்‌ கூறுகிறான்‌ (14:41)

இப்ராஹீம்‌ நபியவர்களைப்‌ போன்று நபி (ஸல்‌) அவர்களும்‌ தம்‌ பெரிய தந்‌தை அபூதாலிப்க்காக பாவமன்னிப்புக்‌ கோரினார்கள்‌. இதைக்கண்ட வேறு சில முஸ்லிம்களும்‌ (காஃபிர்களான) தம்‌ உற்றார்களுக்காகப்‌ பிழைபொறுக்கத்தேட முனைந்தபோது இறைவன்‌ தன்‌ திருத்தூதரையும்‌, மூமின்களையும்‌ கண்டித்து இப்படி காஃபிர்களுக்காக பாவமன்னிப்புத்‌ தேட வேண்டாமென்று கண்டித்தான்‌. 

"இணைவைத்து வணங்குவோருக்காக பாவமன்னிப்புக்‌ கோருவது நபிக்கோ, விசுவாசிகளுக்கோ தகுமானதல்ல. அவர்கள்‌ (இவர்களுக்கு) நெருங்கிய பந்துக்களாக இருந்தாலும்‌ சரியே. அவர்கள்‌ நிச்சயமாக நரகவாசிகள்தாம்‌ என்று இவர்களுக்குத்‌ தெளிவான பின்னரும்‌ (இது தகுமானதல்ல)". (9:13)

இப்ராஹீம்‌ (அலை) அவர்கள்‌ தம்‌ தந்தைக்காக ஏன்‌ பாவமன்னிப்பு கேட்டார்கள்‌. அதற்குரிய காரணத்தை இறைவனே விளக்குகின்றான்‌: “இப்ராஹீம்‌ (நபி) தம்‌ தந்தைக்காக மன்னிப்புக்‌ கோரியதெல்லாம்‌ அவர்‌ தம்‌ தந்தைக்குச்‌ செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவே அல்லாது வேறில்லை. (அவருடைய தந்தை) அல்லாஹ்வுக்கு விரோதி என்று தெளிவாகத்‌ தெரிந்ததும்‌ அதிலிருந்து அவர்‌ விலகிக்‌ கொண்டார்‌.

நிச்சயமாக இப்ராஹீம்‌ மிக்க இரக்கமும்‌, அடக்கமும்‌ உடையோராக இருந்தார்‌". (9:14)

"ஒரு கூட்டத்தினரை அல்லாஹ்‌ நேர்வழியில்‌ செலுத்திய பின்‌ அவர்கள்‌ விலகிக்‌ கொள்ள வேண்டிய விஷயங்கள்‌ எவையென்பதை அவன்‌ அவர்களுக்கு விபரமாக அறிவித்து வரும்‌ வரையில்‌ அவர்கள்‌ தவறிழைக்கும்படி அவன்‌ (விட்டு) விடமாட்டான்‌.

நிச்சயமாக அல்லாஹ்‌ யாவற்றையும்‌ மிக்க அறிந்தோனுமாயிருக்கிறான்‌" என்றும்‌ அல்லாஹ்‌ திருமறையில்‌ கூறினான்‌" (9:115)

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும்‌ ஹதீஸில்‌ நபிகள்‌ (ஸல்‌) கூறுகிறார்கள்‌: இப்ராஹிம்‌ நபியவர்கள்‌ தம்‌ தகப்பனார்‌ ஆஸரை மறுமை நாளில்‌ சந்திக்கும்‌ போது அவர்‌ வாடிய முகத்துடன்‌ காணப்படுவார்‌. இந்நிலையைக்‌ காணும்‌ நபி இப்ராஹீம்‌ தம்‌ தகப்பனாரைப்‌ பார்த்து எனக்கு பாவம்‌ செய்யாதீர்‌ என நான்‌ அன்று உலகில்‌ வைத்து உம்மைத்‌ தடுக்கவில்லையா?” எனக்‌ கேட்பார்கள்‌. அப்பொழுது அவர்களின்‌ தந்‌தை ஆஸர்‌ இப்ராஹீமை நோக்கி; இன்று நான்‌ உமக்குப்‌ பாவம்‌ ஏதும்‌ செய்ய மாட்டேன்‌!' என பதிலுரைப்பார்‌. இதைக்கேட்ட இப்ராஹீம்‌ நபியவர்கள்‌ "இறைவா! நீ மறுமையில்‌ என்னைக்‌ கேவலப்படுத்துவதில்லை என வாக்களித்தாயே. இதோ என்‌ தந்‌தை படும்பாட்டை விட எனக்குக்‌ கேவலமான ஒரு காட்சி இனியும்‌ உண்டோ? எனக்கூறி அல்லாஹ்விடம்‌ முறையிட 'இந்நேரம்‌ காஃபிர்களுக்கு சுவனத்தை ஹாராமாக்கி- விலக்கி விட்டேன்‌' என்று அல்லாஹ்‌ கூறுவான்‌. பிறகு: 'இப்ராஹீமே! கீழே நோட்டமிடுவீராக!' என சொல்லப்படும்‌. அவர்கள்‌ கீழே பார்க்கும்பொழுது தம்‌ தந்தை ஆஸர்‌ இரத்த நிறமுள்ள ஒரு கழுதைப்‌ புலியின்‌ வாய்க்குள்‌ இருப்பதைப்‌ பார்ப்பார்கள்‌. பின்னர்‌ அதன்‌ கால்களைப பிடித்து நரகில்‌ தூக்கி எறியப்படும்‌. (புகாரி)

நபிகள்‌ இப்ராஹீம்‌ (அலை) அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில்‌ மிகப்‌ பெரிய அந்தஸ்தும்‌, மதிப்பும்‌ இருந்தும்‌ கூட, முஷ்ரிக்காக இருந்த தம்‌ தகப்பனாருக்காக செய்த பிரார்த்தனையும்‌, கோரிய பாவமன்னிப்பும்‌ எந்த வகையிலும்‌ பலன்‌ தருவதாக அமையவில்லை. மூஃமீன்களைப்‌ பார்த்து அல்லாஹ்‌ கூறுகின்றான்‌:

'இப்ராஹீமிடத்திலும்‌, அவருடன்‌ இருந்தவர்களிடத்திலும்‌ உங்களுக்கு ஓர்‌ அழகிய முன்மாதிரி நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள்‌ தம்‌ ஜனங்களை நோக்கி, 'நிச்சயமாக நாங்கள்‌ உங்களிலிருந்தும்‌, அல்லாஹ்வையன்றி நீங்கள்‌ வணங்கிக்‌ கொண்டிருப்பவற்றிலிருந்தும்‌ விலகி விட்டோம்‌. நிச்சயமாக நாங்கள்‌ உங்களையும்‌ நிராகரித்து விட்டோம்‌. அல்லாஹ்‌ ஒருவனையே நீங்கள்‌ விசுவாசம்‌ கொள்ளும்‌ வரையில்‌ எங்களுக்கும்‌, உங்களுக்குமிடையில்‌ விரோதமும்‌, குரோதமும்‌ ஏற்பட்டுவிட்டது' என்று கூறினார்கள்‌. அன்றி இப்ராஹீம்‌ தம்‌ தந்தையை நோக்கி 'அல்லாஹ்விடத்தில்‌ உமக்காக யாதொன்றையும்‌ தடுக்க எனக்கு சக்தி கிடையாது. ஆயினும்‌ உமக்காக அவனிடத்தில்‌ பின்னர்‌ நான்‌ மன்னிப்புக்‌ கேட்பேன்‌' என்று கூறி 'எங்கள்‌ இறைவனே! உன்னையே நாங்கள்‌ நம்பினோம்‌. உன்மீதே நாங்கள்‌ பாரம்‌ சாட்டினோம்‌. உன்னிடமே (நாங்கள்‌ (யாவரும்‌)) வரவேண்டியிருக்கிறது. எங்கள்‌ இறைவனே! நீ எங்களை நிராகரிப்போரின்‌ துன்பத்திற்குள்ளாக்கி விடாதே! எங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள்‌ இறைவனே! நிச்சயமாக நீயே மிகைத்தவன்‌ ஞானமுடையவன்‌' என்று பிரார்த்தித்தார்‌' (60:4-5)

இப்ராஹீம்‌ நபியவர்களையும்‌, அன்னாரைப்‌ பின்பற்றிய நல்லவர்களையும்‌ முன்மாதிரியாகக்‌ கொள்ள அல்லாஹ்‌ மூமின்களைப்‌ பார்த்துக்‌ கூறுகின்றான்‌: "தம்‌ தந்தைக்கு பிழைபொறுக்கக்‌ தேடுவேன்‌ எனக்‌ கூறிய விஷயத்தில்‌ மட்டும்‌ எவரும்‌ இப்ராஹீமைப்‌ பின்பற்ற வேண்டாம்‌" என்று எச்சரிக்கை செய்கிறான்‌. 

இணை வைப்பதை அல்லாஹ்‌ ஒருபோதும்‌ மன்னிப்பதில்லையே! எனவே முஷ்ரிக்கான பிதாவுக்காக துஆச்‌ செய்த விஷயத்தில்‌ அவர்களைப்‌ பின்பற்றாதிருக்க வலியுறுத்தப்படுகிறது. இதைப்‌
போன்ற சில சம்பவங்கள்‌ நபி (ஸல்‌) அவர்களுக்கும்‌ நிகழ்ந்திருக்கிறது. என்‌ தாயாருக்குப்‌ பாவமன்னிப்புக்‌ கோர அலலாஹ்விடம்‌ அனுமதி வேண்டியபொழுது அவன்‌ எனக்கு அனுமதி தரவில்லை. என்‌ தாய்‌ இறந்த பிறகு அவர்களின்‌ சமாதியைச்‌ சந்தித்து (ஸியாரத்து செய்ய) அவனிடம்‌ கேட்டேன்‌. அதற்கு அனுமதித்தான்‌' என்று நபியவர்கள்‌ கூறுவதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்‌. (முஸ்லிம்)

நபி (ஸல்‌) அவர்கள்‌ தம்‌ தாயார்‌ ஆமினாவின்‌ கப்றை தரிசிக்கச்‌ சென்ற போது அழுதார்கள்‌. அவர்கள்‌ அமுவதைக்‌ கண்ட உடனிருந்த ஸஹாபிகளும்‌ (தோழர்களும்‌) கண்ணீர்‌ வடித்தார்கள்‌. பிறகு நபி (ஸல்‌) கூறினார்கள்‌: அல்லாஹ்விடம்‌ என்‌ தாயாருக்காகப்‌ பாவமன்னிப்புக்‌ கோர அவனிடமே அனுமதியும்‌ வேண்டினேன்‌. அவன்‌ அதற்கு அனுமதி தரவில்லை. ஆனால் அவர்களின்‌ சமாதியை ஜியாரத்‌ செய்ய மட்டும்‌ அனுமதித்தான்‌. தோழர்களே! சமாதிகளை ஸியாரத்‌ செய்யுங்கள்‌. ஏனெனில்‌ நிச்சயமாக இந்த ஸியாரத்‌ உங்களுக்கு இறப்பு பற்றி நினைவூட்டுகிறது' என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியதாக மற்றோர்‌ அறிவிப்பில்‌ காணப்படுகிறது.

அனஸ்‌ (ரலி) அவர்களால்‌ அறிவிக்கப்படும்‌ ஹதீஸில்‌ ஒரு மனிதர்‌ நாயகமே! என்‌ தந்தை எங்கே இருக்கிறார்‌ என்று கேட்டார்‌. அதற்கு நபி (ஸல்‌) அவர்கள்‌ ‘நரகத்திலிருக்கிறார்‌' என்று பதிலுரைத்தார்கள்‌. இதைச்‌ செவியுற்றுத்‌ திரும்பிய அம்மனிதரைக்‌ கூப்பிட்டு, 'உம்‌ தந்தையும்‌, என்‌ தந்தையும்‌ நரகில்தானிருக்கிறார்கள்‌' என்றும்‌ நபி (ஸல்‌) அறிவித்தார்கள்‌. 

"நீர்‌ உம்முடைய நெருங்கிய பந்துக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்‌” (26:214) என்ற திருவசனம்‌ இறக்கப்பட்டபோது குறைஷிகளை அழைத்து ஒன்று திரட்டி நபி (ஸல்‌) அவர்கள்‌ சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்‌. அப்பொழுது அவர்களிடம்‌ சில பொதுவான விஷயங்களை தெரிவித்தார்கள்‌. தனியாகவும்‌ சிலரை கூப்பிட்டு நல்ல போதனைகளையும்‌, உபதேசங்களையும்‌ வழங்கினார்கள்‌. பனூமுர்ரா, பனூ அப்துஷம்ஸ்‌, அப்து முனாப்‌, அப்துல்‌ முத்தலிப்‌ போன்ற பெரும்‌ வம்சத்தாரை அழைத்து ஒவ்வொருவரும்‌ தம்மை நரக வேதனையிலிருந்து காப்பாற்றிக்‌ கொள்ளும்படி கூறினார்கள்‌. பின்‌ தனியாக தன்‌ அருமை புதல்வி பாத்திமாவுக்கும்‌ நரகத்தைப்‌ பற்றி எச்சரித்தார்கள்‌. பாத்திமாவே அல்லாஹ்விடத்தில்‌ எனக்கு எந்த உரிமையும்‌ இல்லை. அவனின்‌ ஆதிக்கத்திலோ, பொக்கிஷஙகளிலோ உரிமை செலுத்தி எதையும்‌ நான்‌ உனக்காகத்‌ தேக்கி வைத்திருக்கவில்லை. அதற்குரிய சக்தியும்‌ எனக்கில்லை. (உறவு என்ற ஒரே தொடர்புதான்‌ நம்மையெல்லாம்‌ ஒன்று சேர்க்கிறது) என்றார்கள்‌.

வேறு சில அறிவிப்பின்படி குறைஷிகளைப்‌ பார்த்து கீழ்வருமாறு போதித்தார்கள்‌ எனவும்‌ சொல்லப்படுகிறது. அவர்களுக்கு நபியவர்கள்‌: 'குறைஹஷிக்‌ கூட்டமே! அல்லாஹ்விடம்‌ உங்களின்‌ ஆத்மாக்களின்‌ விடுதலைக்காக நீங்கள்‌ வேண்டுங்கள்‌. நான்‌ எதையும்‌ அவனிடம்‌ சென்று உங்களுக்காகச்‌ சாதித்துத்‌ தருவேன்‌ எனக்‌ கருதாதீர்கள்‌. எதற்கும்‌ நான்‌ இயலாதவன்‌' என கூறினார்‌. பின்‌ பல(கூட்டத்தா)ரைக்‌ கூப்பிட்டு இப்படி நபியவர்கள்‌ சொன்னார்கள்‌. அப்துல்‌ முத்தலிப்‌ அப்பாஸிப்னு அப்துல்‌ முத்தலிப்‌ நபியவர்களின்‌ மாமியார்‌ ஸபிய்யா, இவர்களுக்கெல்லாம்‌ முதலில்‌ கூறிவிட்டு பின்‌ தம்‌ அருமை புதல்வி பாத்திமாவிடம்‌ மகளே! எனக்குச்‌ செல்வமிருந்தால்‌ அதிலிருந்து நீ விரும்பியதை என்னிடம்‌ கேள்‌! அல்லாஹ்வின்‌ வேதனையிலிருந்து உனக்கு விடுதலை வாங்கித்தர என்னை வேண்டாதே! நான்‌ அல்லாஹ்வின்‌ விஷயத்தில்‌ எதையும்‌ உனக்காகச்‌ சாதித்துத்தர சக்தியற்றவன்‌' என்று கூறினார்கள்‌.

ஆயிஷா (ரலி) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌: நபியே தங்களின்‌ நெருங்கிய உறவினர்களை நரகத்தைப்‌ பயந்துக்‌ கொள்ளும்படி எச்சரிக்கை விடுங்கள்‌' என்ற கருத்துள்ள வசனம்‌ இறங்கியபோது நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ எழுந்து நின்று தம்‌ புதல்வி பாத்திமாவையும்‌, அப்துல்‌ முத்தலிபின்‌ மகள்‌ ஸபிய்பாவையும்‌ நோக்கி: எனது செல்வத்திலிருந்து நீங்கள்‌ விரும்பியதைக்‌ கேளுங்கள்‌! ஆனால்‌ அல்லாஹ்வின்‌ விஷயத்தில்‌ எதையும்‌ என்னிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள்‌. நான்‌ எதையும்‌ அல்லாஹ்விடமிருந்து உடமையாக்கி வைத்திருக்கவில்லை' என்று தெரிவித்தார்கள்‌.

அபூஹுரைரா அறிவிக்கும்‌ மற்றோர்‌ ஹதீஸில்‌ கீழ்வருமாறு காணப்படுகிறது: 'ஒருநாள்‌ நபியவர்கள்‌ எங்களுக்குப்‌ பிரசங்கம்‌ செய்ய எழுந்து நின்று கீழ்வருமாறு சொற்பெருக்காற்றினார்கள்‌. 

வஞ்சனையைப பற்றிக்‌ குறிப்பிடுகையில்‌ அது அபாயகரமானது என்று கூறி விளக்கம்‌ தந்தார்கள்‌. மறுமை நாளில்‌ அமளியிட்டு கோலமிடுகின்ற கழுதை, குதிரை மற்றும்‌ ஆடு-மாடுகளின்‌ வடிவத்திலுள்ள மிருகங்களைத்‌ தம்‌ முதுகின்‌ மீது சுமந்து என்னிடம்‌ வந்து உதவி தேடுகிறவர்களாக (அபயம்‌ கோருகிறவர்களாக) நீங்கள்‌ யாரும்‌ என்னிடம்‌ வரக்கூடாது. இப்படித்தாம்‌ செய்த பிழைகள்‌ அனைத்தும்‌ நாளை மறுமையில்‌ உயித்தெழுந்து மிருகக்‌ கோலங்களில்‌ பல உயிர்ப்பிராணிகளாக மாற்றப்பட்டு, அம்மிருகஙகளை‌ முணுமுணுத்தவாறு முதுகில்‌ தாங்கிச்‌ சுமந்து அவஸ்தைப்படும்‌ அவலநிலையில்‌ நீங்கள்‌ வருவதை நான்‌ ஒருபோதும்‌ விரும்ப மாட்டேன்‌. என்‌ மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்துப்‌ பொறுப்புகளையும்‌ உங்களிடம்‌ விளக்கியும்‌ சொல்லியும்‌, செய்தும்‌ காட்டி விட்டேன்‌. இறைவனிடமிருந்து பெற்ற அனைத்தையும்‌ உங்களிடம்‌ சேர்த்தும்‌ விட்டேன்‌. மீறி மறுமையில்‌ நீங்கள்‌ இப்படி வந்து கேவல நிலைமையில்‌ என்னிடம்‌ முறையிட்டால்‌ எதையும்‌ என்னால்‌ செய்துதர முடியாது என்று உண்மையைத்‌ கூறி உங்களைத்‌ திருப்பி விடுவேன்‌. இப்படியெல்லாம்‌ வருமென்று உலகத்திவிருக்கும்‌ போதே சொல்லி விளக்கமும்‌ தந்து விட்டேன்‌. எந்த உதவி ஒத்தாசைகளையும்‌ என்னிடமிருந்து அன்று பெற மாட்டீர்கள்‌:


உலகில்‌ நபிகள்‌ பெருமானாரின்‌ ஷபாஅத்தால்‌ உண்டாகும்‌ பலாபலன்கள்‌

லெளகீக, ஆத்மீக விவகாரங்களில்‌ நபியவர்களின்‌ துஆவும்‌, சிபாரிசும்‌ எல்லா மூமின்‌ சகோதரர்களுக்கும்‌ பலனளிக்குமென்பதில்‌ சந்தேகமில்லை. அவர்களின்‌ பதவிகளை உயர்த்தவும்‌, நற்கூலிகளை அதிகமாக பெறவும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மறுமையில்‌ செய்கின்ற சிபாரிசும்‌ பயன்‌ தரும்‌. இந்த உண்மையைப்‌ புறக்கணிப்பவர்கள்‌ 'அஹ்லுல்‌ பித்‌அத்‌' என்னும்‌ அனாச்சாரவாதிகளே! மறுமையில்‌ தம்‌ சமூகத்தாரிலுள்ள பாவிகளுக்கு நபியவர்கள்‌ சிபாரிசு செய்வார்கள்‌. இதுவும்‌ எல்லா இஸ்லாமியர்களாலும்‌, அனைத்து ஸஹாபிகளாலும்‌, தாபியீன்கள்‌, நான்கு இமாம்கள்‌, மற்றும்‌ எல்லா அறிஞர்களாலும்‌ ஒத்துக்‌ கொள்ளப்பட்ட உண்மையாகும்‌.


நபியின்‌ ஷபாஅத்தை மறுக்கின்றவர்கள்‌ யார்‌?

முஃதஸிலாக்கள்‌, ஜய்திய்யாக்கள்‌, கவாரிஜிகள்‌ போன்ற பித்‌அத்துக்காரர்கள்தான்‌ இவ்வுண்மையை ஏற்கமாட்டார்கள்‌. நரகத்தில்‌ அகப்பட்டவர்களுக்கு யாருடைய சிபாரிசும்‌ பலனளிக்காது என்று அவர்கள்‌ வாதாடுகிறார்கள்‌. 

மனிதன்‌ இரண்டே அமைப்புக்குரியவன்‌. சுவனவாதி அல்லது நரகவாதி. நரகவாதியாக நரகில்‌ பிரவேசித்தவனுக்கு என்றும்‌ இருப்பிடம்‌ நரகமே. சுவனத்தைத்‌ தன்‌ இருப்பிடமாக்கிக்‌ கொண்டவனுக்கு என்றும்‌ சுவனமே இருப்பிடமாகும்‌. இவ்விரு இருப்பிடங்களிலிருந்தும்‌ எக்காரணத்தாலும்‌ இவர்கள்‌ வெளியேற்றப்படமாட்டார்கள்‌. தண்டனையும்‌, நற்செய்கைக்கான நல்ல கூலியும்‌ ஒருபோதிலும்‌ ஒன்று சேராது. இவ்வாறு இவர்கள்‌ வாதாடுகிறார்கள்‌. 

ஆனால்‌ நபித்தோழர்களோ, தாபியீன்களோ, நான்கு இமாம்களோ, மற்ற அறிஞர்களில்‌ எவருமோ இப்படிச்‌ சொல்லவில்லை. நரகிலிட்டு தன்‌ குற்றத்திற்கொப்ப வேதனை கொடுக்கப்பட்டவர்கள்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ சிபாரிசினால்‌ வெளியேற்றப்படுகிறார்கள்‌ என்ற உண்மையை உண்மையான ஹதீஸ்களின்‌ வெளிச்சத்தில்‌ மனமார ஏற்றுக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. அல்லாஹ்‌ தான்‌ நாடியவர்களுக்கு தான்‌ விரும்பியபடி தண்டனை வழங்குகிறான்‌. பிறகு நபி (ஸல்‌) அவர்களின்‌ சிபாரிசினால்‌ சிலரை நரகிலிருந்து வெளியேற்றுகின்றான்‌. வேறு சிலருக்கு நபியல்லாத மற்றவர்களைக்‌ கொண்டு சிபாரிசு செய்யப்பட்டு நரக விடுதலை அளிக்கப்படுகிறது. எவருடைய சிபாரிசும்‌ இல்லாமல்‌ நரகிலிருந்து மற்றும்‌ பலருக்கு விடுதலை அளிக்கப்படுகிறது.

நபிகளின்‌ சிபாரிசு எந்தப்‌ பலனையும்‌ யாருக்கும்‌ அளிக்காது என்று கூறி ஷபாஅத்தைப்‌ புறக்கணிக்கின்ற முஃதஸிலாக்கள்‌, ஜய்திய்யாக்கள்‌, கவாரிஜிகள்‌ கீழ்குறிப்பிடப்படும்‌ இறைவசனங்களைத்‌ தம்‌ வாதத்திற்கு சான்றாக எடுத்திருக்கின்றனர்‌.

இறைவன்‌ கூறுகிறான்‌: "நீங்கள்‌ மறுமை நாளை அஞ்சி நடந்துக்‌ கொள்ளுங்கள்‌! அந்நாளில்‌ எந்த ஓர்‌ ஆத்மாவும்‌ மற்றவொரு ஆத்மாவுக்குப்‌ பலனளிக்காது. எந்தவொரு ஆத்மாவும்‌ மற்றவொரு ஆத்மாவுக்காகப்‌ பரிந்து பேசுவதும்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படமாட்டாது. அதற்காக யாதொரு பரிகாரத்தையும்‌ (ஈடாக) பெற்றுக்‌ கொள்ளப்படமாட்டாது. மேலும்‌ அவர்கள்‌ (எவராலும்‌ எவ்வித) உதவியும்‌ பெற மாட்டார்கள்‌". (2:48)

மேலும்‌ இறைவன்‌ மற்றொரு ஆயத்தில்‌: “எந்த நாளில்‌ ஒரு ஆத்மா மற்றவொரு ஆத்மாவுக்கு எந்தப்‌ பலனையும்‌ அளிக்காதோ அந்நாளைப்‌ பயந்துக்‌ கொள்ளுங்கள்‌. அந்த ஆத்மாவிடமிருந்து எந்தவொரு பரிகாரமும்‌ அங்கீகரிக்கப்பட மாட்டாது. அதற்காக எவர்‌ பரிந்துரைத்தாலும்‌ பலனில்லை. அவர்கள்‌ (எவராலும்‌ எவ்வித) உதவியும்‌ பெற மாட்டார்கள்‌”. (2:123)

"அநீதி செய்பவர்களுக்கு உதவியாளர்கள்‌ அந்நாளில்‌ ஒருவரும்‌ இருக்கமாட்டார்கள்‌. அனுமதி பெற்ற சிபாரிசுகாரர்களும்‌ இருக்கமாட்டார்கள்‌". (40:18)

"அவர்களுக்காகப்‌ பரிந்து பேசுவோரின்‌ சிபாரிசும்‌ அன்று யாதொரு பயனும்‌ அளிக்காது” (74:48). 

இதகைய வசனங்களைத்‌ தமக்குச்‌ சான்றாக வைத்து நபியவர்களின்‌ ஷபாஅத்தைப்‌ புறக்கணிக்கிறார்கள்‌.

சுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தைச்‌ சேர்ந்த அறிஞர்களின்‌ கருத்துக்கள்‌ (முஃதஸிலா, ஜய்திய்யா, கவாரிஜ்‌ போன்ற) வழிகெட்ட கூட்டத்தாருக்கு பதிலடியாக அமைந்திருக்கிறது. அவர்கள்‌ இந்த வசனங்களுக்கு இருவகையான கருத்துகளை வழங்குகிறார்கள்‌.

ஒன்று: இறைவனின்‌ இவ்வசனங்களிலிருக்கும்‌ 'நபிகளின்‌ பரிந்துரை பலனளிக்காது' என்பது முஷ்ரிக்குகளுக்குப்‌ பலனளிக்காது என்பதைத்தான்‌ குறிப்பிடுகிறது என்கிறார்கள்‌.

இக்கருத்துக்குச்‌ சான்றாக இறைவனே அம்முஷ்ரிக்குகளுக்கு ஷபாஅத்துப்‌ பலன்தராது என கூறியிருக்கிறான்‌. அம்முஷ்ரிக்குகளைப்‌ பற்றி விளக்கும்‌ போது:

சுவனத்திலிருப்பவர்கள்‌ நரகவாகிகளைப்‌ பார்த்து உங்களை நரகில்‌ புகுத்தியது எது? என முஷ்ரிக்குகளான குற்றவாளிகளைக்‌ கேட்பார்கள்‌. அதற்கு அவர்கள்‌ 'நாங்கள்‌ தொழக்கூடியவர்களில்லை. ஏழைகளுக்கு நாங்கள்‌ ஆகாரமளிக்கவில்லை. வீணான காரியங்களில்‌ மூழ்கிக்‌ கிடந்தவர்களுடன்‌ சேர்ந்து நாமும்‌ வீணில்‌ மூழ்கிக்‌ கிடந்தோம்‌. கூலிகள்‌ வழங்கும்‌ இந்நாளையும்‌ நாங்கள்‌ பொய்யாக்கினோம்‌. நாங்கள்‌ மரணித்து இதை உறுகியாகக்‌ காணும்‌ வரையில்‌ இவ்வாறே இருந்தோம்‌' என்று கூறுவார்கள்‌.

எனவே அவர்களுக்காகப்‌ பரிந்துரை பேசுவோரின்‌ சிபாரிசும்‌ அன்று யாதொரு பயனும்‌ அளிக்காது” (74:40-48) இவர்கள்‌ உலகில்‌ காஃபிர்களாக வாழ்ந்ததினால்‌ எவருடைய பரிந்துரையும்‌ இவர்களுக்குப்‌ பலனளிக்காது என்று கூறி 'ஷபாஅத்துச்‌ செய்வோரின்‌ சிபாரிசு இவர்களுக்குப்‌ பயன்‌ தராது' என்றே இவர்களைப்‌ பற்றி இறைவன்‌ குறிப்பிட்டான்‌.

இரண்டு: மேற்படி வசனங்களில்‌ 'பரிந்துரை பயனளிக்காது' என்பதைக்‌ கொண்டு நபிகளுக்குரிய ஷபாஅத்தை (பரிந்துரையை) நாடப்படமாட்டாது. இஸ்லாம்‌ மார்க்கத்திலில்லாத நூதன செயல்களைச்‌ செய்கின்ற முப்ததியீன்களான முஸ்லிம்களிடமும்‌, முஷ்ரிக்குகளிடமும்‌, யூதர்களிடமும்‌, கிறிஸ்தவர்களிடமும்‌ அறியப்பட்டிருந்த ஒருவகையான பரிந்துரையைத்தான்‌ இங்கே நாடப்படுகிறது. அத்தகைய ஷபாஅத்‌ யாருக்கும்‌ பயன்‌ தரக்கூடியதல்ல என்றும்‌ விளங்கிக்‌ கொள்ள வேண்டும்‌. மக்களில்‌ சிலர்‌ மற்றும்‌ சிலரிடம்‌ சென்று அனுமதி கோராமலேயே சிபாரிசு செய்யும்போது அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதுபோல்‌ சில மனிதர்களுக்கு அல்லாஹ்விடமிருக்கும்‌ மதிப்பினால்‌ அனுமதியின்றியே அல்லாஹ்விடம்‌ அவர்கள்‌ சிபாரிசை வேண்டினால்‌ அதை அவன்‌ ஏற்கிறான்‌ என இம்முஷரிக்குகளும்‌ நம்பியிருந்தார்கள்‌.

மலக்குகள்‌, நபிமார்கள்‌, வலிமார்கள்‌, நன்மக்கள்‌ இவர்களை விக்ரகங்களாக அமைத்து இவ்விக்ரகங்களைக்‌ கொண்டு சிபாரிசைத்‌ தேடினார்கள்‌. இவ்விக்ரகங்கள்‌ இறைவனின்‌ சில தனிபட்ட படைப்புகள்‌ என்றும்‌, இவற்றை வேண்டுவதினாலும்‌, வணங்கி வழிபடுவதினாலும்‌ தாங்கள்‌ அல்லாஹ்வை நெருங்க முடியுமென்றும்‌ எண்ணி வணங்கினார்கள்‌. மன்னர்களை நெருங்குவதற்காக அவரின்‌ அந்தரங்கச்‌ செயலாளரை சிபாரிசுக்காகப்‌ பிடித்து அவர்‌ அரசரிடம்‌ அனுமதி வேண்டாமல்‌ தமக்குப்‌ பரிந்துரைத்து அரச பீடத்தை நெருங்கும்‌ வாய்ப்பைப்‌ பெற்று, தமது காரியங்களைச்‌ சாதிப்பது போல இந்த விகரகங்களையும்‌ வேண்டினால்‌ கடவுளிடம்‌ இவை சிபாரிசு செய்து எல்லாவற்றையும்‌ சாதித்துத்‌ தருவார்கள்‌ என்றும்‌ நம்பியிருந்தனர்‌. எனவேதான்‌ இந்த சிபாரிசு பலனளிக்காதென்று அல்லாஹ்‌ கூறினான்‌: 

"அல்லாஹ்வுடைய அனுமதியின்றி அவனிடத்தில்‌ எவருக்காக யாரால்தான்‌ பரிந்துபேச முடியும்‌...?" (2:255)

இன்னும்‌ இறைவன்‌ கூறுகிறான்‌: "வானத்தில்‌ எத்தனையோ மலக்குகள்‌ இருக்கின்றனர்‌. அவர்கள்‌ (எவருக்காகவும்‌) ஷபாஅத்துச்‌ செய்தாலும்‌ அது எந்தப்‌ பயனும்‌ அளிக்காது. ஆனால்‌ அல்லாஹ்‌ தான்‌ விரும்பி திருப்திப்பட்டு எவருக்கு ஷபாஅத்துக்கு அனுமதி கொடுக்கின்றானோ (அத்தகையவர்‌ பரிந்துப்‌ பேசுவது பயனளிக்கும்‌). (53:26)

மலக்குகளைப்பற்றிக்‌ குறிப்பிடுகையில்‌ கூறுகிறான்‌: "அவர்களுக்கு முன்பின்‌ இருப்பவற்றை அவன்‌ நன்றாக அறிகின்றான்‌. அவன்‌ விரும்பியவர்களுக்கன்றி மற்றெவருக்கும்‌ இந்த மலக்குகள்‌ சிபாரிசு செய்ய மாட்டார்கள்‌. அவனுக்கஞ்சி நடுங்கிக்‌ கொண்டிருப்பார்கள்‌" (21:28) 

"அல்லாஹ்வுடைய அனுமதி பெற்றவர்களைத்‌ தவிர வேறெவருடைய சிபாரிசு செய்வதும்‌ பலனளிக்காது." (34:23)

"முஷ்ரிக்குகள்‌ தமக்கு நன்மையோ தீமையோ எதுவும்‌ செய்யமுடியாதவற்றை வணங்குவதுடன்‌ இவை அல்லாஹ்விடத்தில்‌ எங்களுக்கு சிபாரிசு செய்பவை என்றும்‌ கூறுகின்றனர்‌". (10:18)

"நபியே! எவர்கள்‌ மறுமையில்‌ தங்கள்‌ இரட்சகனிடம்‌ ஒன்று சேர்க்கப்பட்டு விசாரணை செய்யப்படுவோம்‌ என்று பயப்படுகிறார்களோ அவர்கள்‌ பாவத்திலிருந்து விலகி பரிசுத்தவான்௧ளாகுவதற்காக நீர்‌ எச்சரிக்கை செய்யும்‌. அவர்களுக்கு (அந்நாளில்‌) உதவியாளனும்‌, பரிந்து பேசுபவனும்‌ அந்த அல்லாஹ்வையன்றி வேறு ஒருவருமில்லை" (6:51) 

"அல்லாஹ்‌ தான்‌ வானங்கள்‌ பூமி இவற்றுக்கிடையிலுள்ளவை அனைத்தையும்‌ ஆறு நாட்களில்‌ படைத்து பிறகு அர்ஷின்‌ மீது ஸ்திரப்பட்டான்‌. உங்களை இரட்சிப்பதற்கும்‌, உங்களுக்காகப்‌ பரிந்து பேசுவதற்கும்‌ அவனை தவிர வேறு ஒருவருமில்லை. இதனை நீங்கள்‌ சிந்திக்கவேண்டாமா?". (32:4)

"அல்லாஹ்வையன்றி எவற்றை இவர்கள்‌ இறைவன்‌ என அழைக்கிறார்களோ அவை இவர்களுக்காக அல்லாஹ்விடத்தில்‌ ஷபாஅத்துச்‌ செய்யும்‌ சக்தி பெறாது. ஆனாலும்‌ எவர்கள்‌ உண்மையை அறிந்து அதனை பகிரங்கமாகவும்‌ கூறுகிறார்களோ அவர்கள்‌ அவனுடைய அனுமதி கிடைத்தால்‌ அல்லாஹ்விடம்‌ ஷபாஅத்துச்‌ செய்வார்கள்‌". (43:86)

"(உங்களை சிருஷ்டிப்பதிலும்‌, போஷிப்பதிலும்‌ இறைவனுக்குத்‌) துணையானவர்கள்‌ என எவர்களை எண்ணிக்‌ கொண்டிருந்தீர்களோ அவர்கள்‌ உங்களுக்கு சிபாரிசு செய்ய உங்களுடன்‌ காணவில்லையே! (அவர்களுக்கும்‌) உங்களுக்குமிடையில்‌ இருந்த சம்பந்தங்களெல்லாம்‌ நீங்கி உங்களுடைய நம்பிக்கைகளெல்லாம்‌ தவறி விட்டன". (6:94)

"இவர்கள்‌ அல்லாஹ்‌ அல்லாதவற்றை தங்களுக்குச்‌ சிபாரிசு செய்பவை என்று எண்ணி எடுத்துக்‌ கொண்டிருக்கின்றனரா? அவை எத்தகைய சக்தியுமில்லாமலும்‌ எதையும்‌ அறியாமலும்‌ இருந்தாலுமா அவற்றை உங்களுக்கு சிபாரிசு செய்பவையாக எடுக்கின்றீர்கள்‌ என நபியே! நீர்‌ கேளும்‌. மேலும்‌ நபியே! நீர்‌ சொல்லும்‌ 'சிபாரிசுகள்‌ யாவும்‌ அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில்‌ யாரும்‌ சிபாரிசு செய்ய முடியாது). வானங்கள்‌, பூமியின்‌ ஆட்சி முழுவதும்‌ அவனுக்குரியதே! (மறுமையில்‌) அவனிடமே நீங்கள்‌ கொண்டு வரப்படுவீர்கள்‌". (39:43- 44)

"அந்நாளில்‌ ரஹ்மான்‌ எவருக்கு அனுமதியளித்து அவர்களின்‌ பேச்சைக்‌ கேட்க விரும்பினானோ அவர்களைத்‌ தவிர மற்றெவருடைய சிபாரிசும்‌ பயனளிக்காது." (20:109)

"என்னைப்‌ படைத்தவனை நான்‌ வணங்காகிருக்க எனக்கென்ன (நேர்ந்தது? விசாரணைக்காக) அவனிடமே நீங்கள்‌ திரும்பக்‌ கொண்டு வரப்படுவீர்கள்‌. அவனையன்றி (மற்றெதனையும்‌, எவரையும்‌) இறைவானாக நான்‌ எடுத்துக்‌ கொள்வேனா? ரஹ்மான்‌ எனக்கு ஏதேனும்‌ தீங்கிழைக்கக்‌ கருதினால்‌ இவற்றின்‌ சிபாரிசு அதில்‌ ஒன்றையுமே என்னை விட்டுக்‌ தடுத்துவிடாது. அதிலிருந்து என்னை இவற்றால்‌ விடுவிக்கவும்‌ முடியாது". (36:22-23)


இணை வைப்பவர்களும்‌ ஷபாஅத்தும்

இறைவனுக்கு இணைவைப்போர்‌ மலக்குகளையும்‌, நபிமார்களையும்‌, மற்றும்‌ நன்மக்களின்‌ பிம்பங்களையும்‌ அமைத்து அவற்றிடம்‌ சிபாரிசை வேண்டினார்கள்‌.

இப்பிம்பங்களைக்‌ கொண்டு வெளிப்படையில்‌ நாங்கள்‌ சிபாரிசைத்‌ தேடினாலும்‌ உண்மையில்‌ நேரடியாகவே இவர்களிடம்‌ கேட்கிறோம்‌ என்று வாதாடினார்கள்‌. இந்தப்‌ படைப்பினங்களுக்கு கல்லறைகளை அமைத்து வேண்டி நின்றார்கள்‌. அவற்றுக்கு முன்‌ மண்டியிட்டு விழுந்து சிபாரிசை வேண்டி வணக்கங்களும்‌ புரிந்தார்கள்‌. இம்மாதிரியான சிபாரிசை இறைவன்‌ அழித்து இல்லாமலாக்கி விட்டான்‌. இந்த ஷபாஅத்தை நம்பிய முஷ்ரிக்குகளை இழிவானவர்கள்‌ என கண்டித்தான்‌. இவர்கள்‌ அல்லாஹ்வை முழுக்க முழுக்க நிராகரித்த காஃபிர்கள்‌ என்றும்‌ இறைவன்‌ இவர்களை வர்ணித்தான்‌.

திருமறையில்‌ ஸுஃரத்து நூஹ்‌ அத்தியாயம்‌ 23-24ம்‌ திருவசனங்களில்‌ வருகிற வத்தூ, ஸூவாஉ, யகூது, யஊகு, நஸ்ர்‌ போன்ற விக்ரகங்களுக்கு விளக்கங்கள்‌ தரும்போது இந்த விக்ரகங்கள்‌ நூஹ்‌ நபியின்‌ சமூகத்தில்‌ வாழ்ந்திருந்த நல்ல மக்களாவர்‌. இந்நன்மக்கள்‌ இறந்த பிறகு இவர்களுக்குச்‌ சமாதிகள்‌ கட்டி அந்தச்‌ சமாதிகளின்‌ மீது குப்புற வீழ்ந்து வழிபாடுகள்‌ செய்தார்கள்‌. அதன்‌ பிறகு இந்தச்‌ சமாதியில்‌ புதைக்கப்‌ பட்டவர்களுக்கு சிலைகள்‌ அமைத்து அவற்றை வணங்கலானார்கள்‌ என்று அறிஞர்‌ இப்னு அப்பாஸும்‌ மற்றும்‌ பல வியாக்கியானிகளும்‌ விளக்கமளிக்கின்றனர்‌. 

இந்த விளக்கங்களை திருமறை வியாக்கியான நூற்களிலும்‌, ஸஹீஹுல்‌ புகாரி போன்ற ஹதீஸ்‌ தொகுப்புகளிலும்‌ காணலாம்‌. இத்தகைய சிபாரிசுகளை நபி (ஸல்‌) ஒழித்துக்‌ கட்டினார்கள்‌. இத்தகைய சிபாரிசுகளை நாடும்‌ எல்லா வழிகளையும்‌ முழுக்க ஒழித்துக்‌ கட்டினார்கள்‌. நபிமார்கள்‌ மற்றும்‌ நன்மக்கள்‌ ஆகியோரின்‌ சமாதிகளை மசூதியாக்கியவர்களை நபியவர்கள்‌ சபித்தார்கள்‌. அத்தகைய மசூதிகளில்‌ (சிபாரிசை வேண்டாமலே) ஏக இறைவனை மட்டும்‌ வணங்கினால்‌ கூட அதுவும்‌ விரும்பத்தக்கதல்ல எனக்‌ கூறி கப்ருகளை நோக்கித்‌ தொழ வேண்டாமென்றும்‌ விலக்கினார்கள்‌.

அலி (ரலி) அவர்களை அனுப்பி பூமியின்‌ மட்டத்தை விட உயர்த்தப்பட்ட எல்லா சமாதிகளையும்‌ தரைமட்டத்திலாக்கும்படி ஏவினார்கள்‌. பிம்பங்களைக்‌ கண்டால்‌ உடைத்தெறியும்படிக்‌ கட்டளையிட்டார்கள்‌. உருவங்கள்‌ வரைபவனை (படைப்பவனை) சபித்தார்கள்‌. அபுல்‌ ஹயாஜுல்‌ அஸத்‌ என்பவர்கள்‌ அலி (ரலி) அவர்கள்‌ கூறியதாக விளக்கும்‌ ஹதீஸில்‌ கீழ்வருமாறு காணப்படுகிறது: 'நபிகள்‌ எந்தப்‌ பொறுப்பைத்‌ தந்து என்னை அனுப்பினார்களோ, அந்தப்‌ பொறுப்பை நான்‌ உம்மிடம்‌ ஒப்படைத்து அனுப்புகிறேன்‌. எந்த சிலைகளைக்‌ கண்டாலும்‌ விட்டு வைக்காதீர்‌ உயர்ந்திருக்கும்‌ சமாதிகளைக்‌ கண்டால்‌ அவற்றை பூமி மட்டத்தில்‌ உடைத்து விடும்‌.


இஸ்லாத்தில்‌ வஸீலா - தவஸ்ஸுலின்‌ தாத்பரியம்‌ என்ன?

வஸீலா என்பதிலிருந்து பிறக்கின்ற தவஸ்ஸுல்‌ என்னும்‌ சொல்லுக்கு மூன்று கருத்துக்களை அறிஞர்கள்‌ வழங்குகின்றனர்‌. அம்மூன்றில்‌ இரு பொருள்களை எவராலும்‌ மறுக்க இயலாது. அனைத்து முஸ்லிம்களும்‌ ஓர்முகமாக ஏற்றிருக்கிறார்கள்‌.

அதில்‌ ஒன்று: அசலில்‌ தவஸ்ஸூல்‌ என்பதற்குப்‌ பொதுவாக ஈமான்‌, இஸ்லாம்‌, நற்கருமம்‌ என்ற அர்த்தத்தை‌ கொடுப்பது. அதாவது நபிகளைக்கொண்டு ஈமான்‌ கொண்டு, அவர்களுக்கு வழிப்பட்டு, அல்லாஹ்வுக்கு கீழ்படிந்து நடப்பது. இப்படி நடந்து அவனை நெருங்குவது.

இரண்டு: தவஸ்ஸூல் என்பதற்கு நபியின்‌ சிபாரிசு, அவர்களின்‌ பிரார்த்தனை என்ற கருத்தைக்‌ கொடுப்பது. அதாவது நபியவர்கள்‌ யார்யாருக்குப்‌ பிரார்த்தனை செய்தார்களோ, மறுமையில்‌ யார்யாருக்கு சிபாரிசு செய்வார்களோ அவர்கள்‌ நிச்சயமாக அல்லாஹ்வை நெருங்க முடியும்‌. அவர்களும்‌ தவஸ்ஸுலைக்‌ கொண்டு பயனடைந்தவர்கள்‌ கூட்டத்தில்‌ சேருவார்கள்‌. 

இவ்விரு கருத்துக்குட்பட்ட தவஸ்ஸுலை எவராலும்‌ புறக்கணிக்க இயலாது. மீறி இக்கருத்தை புறக்கணித்தால்‌ அவனை (காஃபிராக) நிராகரித்தவனாகக்‌ கணிக்கப்படுவதுடன்‌ இஸ்லாத்திலிருந்து வெளியேறிய முர்தத்தாகவும்‌ ஆக்கப்பட்டு இறைவனிடம்‌ பாவமன்னிப்பு வேண்டி தெளபாச்‌ செய்து மீண்டும்‌ இஸ்லாத்தைத்‌ தழுவுமாறு அவனிடம்‌ கூறப்படும்‌. இஸ்லாத்தில்‌ நுழைந்தால்‌ அதோடு சரி. இல்லாவிட்டால்‌ முர்தத்தாகக்‌ கருதி வெட்டப்படும்‌. 'தவஸ்ஸுல்‌' வஸீலா, என்பதை இப்படி விளங்குவது அவற்றுக்குரிய பொருத்தமான விளக்கமாகும்‌. ஏகத்துவத்தைப்‌ போகிக்கின்ற வஸீலாவென்பதும்‌ இதுவேதான்‌. 

அல்லாஹ்விடமின்றி வேறு எவரிடத்திலும்‌ உதவி தேடி பிரார்த்திப்பதற்கு இஸ்லாத்தில்‌ இடமேயில்லை. இஸ்லாத்தின்‌ அடிப்படையும்‌ இதுவேயாகும்‌. இதுவே உண்மையான தீனுல்‌ இஸ்லாம்‌. அன்றி வேறு ஒரு மதத்தை இறைவன்‌ மார்க்கமாக யாரிடமிருந்தும்‌ அங்கீகரிக்க மாட்டான்‌.

இப்படிப்பட்ட தீனை போதிப்பதற்காக இறைவன்‌ தூதர்களை அனுப்பி அவர்கள்‌ வழியாக வேதங்களையும்‌ அருளினான்‌. நபிகள்‌ பெருமானார்‌ (ஸல்‌) அவர்களை நம்பி, அவர்களுக்குக்‌ கீழ்படிந்து நடப்பதுவே மதத்தின்‌ அடிப்படைக்‌ கொள்கையாகும்‌. இதை இஸ்லாமிய சமுதாயத்தின்‌ ஒவ்வோர்‌ உறுப்பினரும்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. மீறி யாராவது இதை நிராகரித்தாலும்‌, அவர்‌ காஃபிராகி விடுகிறார்‌. நபியவர்களின்‌ பிரார்த்தனை, சிபாரிசுகளினால்‌ முஸ்லிம்கள்‌ நிச்சயமாகப்‌ பயனடைவார்கள்‌ என்ற விஷயத்தை எவன்‌ புறக்கணித்தாலும்‌ காஃபிராகி விடுகிறான்‌. ஆனால்‌ முந்திய குஃப்ரோடு நிராகரிப்போடு இவனை ஒப்பிட்டுப்‌ பார்க்கையில்‌ இவன்‌ கொஞ்சம்‌ எளிய மாதிரியிலான நிராகரிப்பாளனாகத்‌ தெரியலாம்‌. 

எனவே நபிகளின்‌ பிரார்த்தனையினாலும்‌, சிபாரிசினாலும்‌ மக்கள்‌ பயன்‌ பெறுவர்‌ என்ற உண்மையை அறிவீனமாக எவர்‌ மறுத்தாலும்‌ அவருக்கு அது விளக்கிக்‌ காட்டப்பட வேண்டும்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ இப்பிரபஞ்சத்தில்‌ வாழ்ந்திருக்கையில்‌ முஸ்லிம்‌ தோழர்களுக்காக வேண்டிய பிரார்த்தனைகளும்‌, அவர்களுக்காகப்‌ பரிந்து பேசிய சிபாரிசுகளும்‌ பயன்‌ தரக்கூடியவை என்பதை எவராலும்‌ மறுக்க இயலாது.

மேலும்‌, நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ மறுமையில்‌ செய்கின்ற சிபாரிசு பற்றி எல்லோரும்‌ திட்டவட்டமாகக்‌ கூறியிருக்கிறார்கள்‌. ஸஹாபாக்கள்‌, தாபியீன்கள்‌. மாபெரும்‌ நான்கு மத்ஹபுடைய இமாம்கள்‌, மற்றும்‌ சுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தைச்‌ சேர்ந்த அனைத்து அறிஞர்களும்‌ நபி அவர்களுக்கு 'ஷபாஅத்‌' நிச்சயமாக உண்டென்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்‌. 

அந்த ஷபாஅத்தில்‌ பொதுவான ஷபாஅத்துமிருக்கிறது. தனிப்பட்ட முறையிலான ஷபாஅத்தும்‌ இருக்கிறது. நபிகளின்‌ உம்மத்தைச்‌ சார்ந்தவர்களில்‌ யார்‌ யார்‌ பெரும்‌ பாவத்தினால்‌ நரகில்‌ கிடந்து தத்தளிக்கிறார்களோ, அவர்களுக்காக இறைவனின்‌ ஆணையைப்‌ பெற்று அவனிடம்‌ அந்தப்‌ பாவிகளுக்காகப்‌ பரிந்து பேசுவார்கள்‌. பாவிகளில்‌ யார்‌ உலகில்‌ வாழ்ந்திருக்கும்‌ போது ஏக இறை வழிபாட்டில்‌ இருந்தார்களோஅவர்கள்‌ இந்த பரிந்துரையினால்‌ பிரயோசனமடைந்து, நரக வேதனையை விட்டும்‌ ஈடேற்றம்‌ பெறுவார்கள்‌. இறைவனுக்கு இணை வைத்து முஷ்ரிக்குகளாக வாழ்ந்திருந்த எவரும்‌ சிபாரிசினால்‌ எள்ளளவும்‌ பயன்பெற மாட்டார்கள்‌. இவர்கள்‌ நபிகளை எத்தனை அதிகமாக விரும்பி அன்பு வைத்திருந்தாலும்‌ நபிகளின்‌ இந்த ஷபாஅத்து முஷ்ரிக்குகளுக்குச்‌ சிறிதும்‌ பயனளிக்காது. ஏக இறைவழிப்பட்டைப்‌ புறக்கணித்து நபி (ஸல்‌) அவர்களை அளவு கடந்து நேசித்து வாழ்ந்த அபுதாலிபும்‌ அவரைப்‌ போன்ற முஷீரிக்குகளும்‌ நபியின்‌ ஷபாஅத்தினால்‌ நரக விடுதலை பெற முடியவில்லையே.

அபூஹுரைரா (ரலி) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌: 'நாயகமே! மறுமை நாளில்‌ தாங்களின்‌ சிபாரிசைப்‌ பெற்றுக்‌ கொள்ளும்‌ அடியார்களில்‌ மிகப்பெரிய செளபாக்கியவான்கள்‌ யார்‌?' என நபிகள்‌ பெருமானாரிடம்‌ வினவியதற்கு 'கலப்பற்ற முறையில்‌ உணமையான உள்ளத்தால்‌ எவர்‌ ஷஹாதத்‌ கலிமாவை மொழிந்து உலகில்‌ வாழ்ந்தாரோ அவரே என்னுடைய ஷபாத்தைப்‌ பெற்று மறுமையில்‌ செளபாக்கியவானாக இருப்பார்‌' என்று விடை தந்தார்கள்‌. (புகாரி)


'நான்‌ என்னுடைய பிரார்த்தனையை ஷபாஅத்துக்காகப்‌ பிற்படுத்தி வைத்திருக்கிறேன்‌

எல்லா நபிமார்களும்‌ அல்லாஹ்விடம்‌ பிரார்த்தித்தார்கள்‌. அவர்களின்‌ பிரார்த்தனைகள்‌ அங்கீகரிக்கப்பட்டன. தீவிரமாக இவர்கள்‌ முன்கூட்டியே தம்‌ பிரார்த்தனைகளைச்‌ செய்து முடித்தார்கள்‌. நான்‌ மறுமை நாளில்‌ என்‌ உம்மத்துகளுக்கு சிபாரிசு செய்ய வேண்டுமென்பதால்‌ என்‌ பிரார்த்தனைகளில்‌ தீவிரமாக நடந்து கொள்ளவில்லை. எனக்குரிய பிரார்த்தனைகளை நான்‌ மறைத்து வைத்திருக்கிறேன்‌. இன்சா அல்லாஹ்‌ என்‌ உம்மத்துகளில்‌ யார்‌ அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல்‌ மரணமடைகிறார்களோ அவர்களுக்கெல்லாம்‌ அந்த ஷபாஅத்‌ நிச்சயம்‌ கிடைக்கும்‌ என்று நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. (முஸ்லிம்)

வானவர்களில்‌ ஒருவர்‌ வந்து: என்‌ உம்மத்துகளில்‌ நேர்பகுதி மக்களை சுவனத்தில்‌ நுழைக்கச்‌ செய்யும்‌ உரிமையையோ - அல்லது அந்த உம்மத்துகளில்‌ பாவிகளுக்கு சிபாரிசை அல்லாஹ்விடம்‌ கேட்கும்‌ உரிமையையோ - இவ்விரண்டிலும்‌ ஏதேனுமொன்றைத்‌ தேர்வு செய்யும்படி கூறி எனக்கு அனுமதி வழங்கினார்கள்‌. அப்போது ஷபாஅத்தை நான்‌ தேர்ந்தெடுத்தேன்‌. அது அல்லாஹ்வுக்கு இணைதுணை வைக்காதவர்களுக்குக்‌ கிடைக்கும்‌. (ஸூனன்)

இறைவனுக்கு இணை, துணை கற்பிக்காது இறந்தவர்கள்‌ என்னுடைய சிபாரிசுக்குரியவராவார்‌ என்று நபியவர்கள்‌ அறிவித்ததாக இன்னுமோரிடத்தில்‌ வந்திருக்கிறது. இதிலேதான்‌ ஏகத்துவத்தைக்‌ காண முடியும்‌. தீனின்‌ அடிப்படையும்‌ இதுவே. முன்னோர்கள்‌ பின்னோர்கள்‌ எவரிடமிருந்து இதைத்‌ தவிர எதையும்‌ அல்லாஹ்‌ தீனாக ஏற்றுக்‌ கொள்ள மாட்டான்‌. இந்த உண்மைகளைப்‌ போதிப்பதற்காகவே ரஸூல்மார்களை அனுப்பி வேதங்களையும்‌ அருளினான்‌. இந்த உண்மைகளைப்‌ பின்வரும்‌ இறைவசனங்கள்‌ விளக்கிக்‌ காட்டுகின்றன:

(நபியே!) உமக்கு முன்னர்‌ நாம்‌ அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களைப்‌ பற்றி நீர்‌ கேளும்‌. வணங்கப்படுவதற்கு ரஹ்மானையன்றி வேறு ஏதாவது இறைவனை நாம்‌ நியமித்திருந்தோமா?: (43:45). 

"உமக்கு முன்னர்‌ நாம்‌ அனுப்பிய தூதர்களுக்கெல்லாம்‌ நிச்சயமாக என்னைத்‌ தவிர வேறு நாயனில்லை. எனவே என்னையே நீங்கள்‌ வணங்குங்கள்‌ என்று நான்‌ வஹீ அறிவிக்காமலில்லை" (21:25). 

“ஒவ்வொரு வகுப்பினருக்கும்‌ நிச்சயமாக நாம்‌ தூதரை அனுப்பியிருந்தோம்‌. அத்தூதர்கள்‌ அவர்களை நோக்கி: 'அல்லாஹ்‌ ஒருவனையே வணங்குங்கள்‌. வழிகெடுக்கும்‌ ஷைத்தான்களிலிருந்து நீங்கள்‌ விலகி நடந்து கொள்ளுங்கள்‌' என்று கூறிச்‌ சென்றார்கள்‌. அல்லாஹ்‌ நேர்வழியில்‌ செலுத்தியோரும்‌ அவர்களில்‌ உண்டு. வழிகேடே விதிக்கப்பட்டோரும்‌ அவர்களில்‌ உண்டு". (16:36).

இவ்வாறு ஒவ்வொரு நபியைப்‌ பற்றியும்‌ இறைவன்‌ குறிப்பிடுகையில்‌: அவர்கள்‌ அனைவரும்‌ (தம்‌ சமூகத்தினரை) அல்லாஹ்‌ ஒருவனுக்குக்‌ கீழ்படிந்து வணங்குவதிலேயே திருப்பி விட வேண்டும்‌ என்ற தலைப்பை அடிப்படையாகக்‌ கொண்டே தம்‌ பிரச்சார வேலையை ஆரம்பித்கிருக்கிறார்கள்‌ என்று கூறினான்‌.

"ஆது என்ற கூட்டத்தாருக்கு அவர்களுடைய சகோதரர்‌ ஹூதை நம்‌ தூதராக அனுப்பி வைத்தோம்‌. அவர்களைப்‌ பார்த்து அவர்‌ கூறினார்‌: 'மக்களே! அல்லாஹ்‌ ஒருவனையே நீங்கள்‌ வணங்குங்கள்‌. அவனைத்‌ தவிர வேறு நாயன்‌ உங்களுக்கு இல்லை. (வேறு நாயன்‌ உண்டெனக்கூறும்‌) நீங்கள்‌ கற்பனையாகப்‌ பொய்‌ கூறுபவர்களே" (11:50).

"ஸமூத்‌ என்னும்‌ கூட்டத்தாரிடம்‌ அவர்களுடைய சகோதரர்‌ ஸாலிஹை நம்‌ தூதராக அனுப்பி வைத்தோம்‌. அவர்‌ அம்மக்களை நோக்கி, என்‌ சமூகத்தாரே! அல்லாஹ்‌ ஒருவனையே நீங்கள்‌ வணங்குங்கள்‌. உங்களுக்கு அவனையன்றி வேறு நாயன்‌ இல்லை. அவனே உங்களை பூமியிலிருந்து உண்டாக்கினான்‌. அதிலேயே அவன்‌ உங்களை வாழ வைத்தான்‌. எனவே நீங்கள்‌ அவனிடமே மன்னிப்பை வேண்டி அவன்‌ பக்கமே திரும்புங்கள்‌. நிச்சயமாக என்‌ இறைவன்‌ உங்களுக்கு மிக நெருங்கியவனாகவும்‌, பிரார்த்தனைகளை அங்கீகரிப்பவனாகவும்‌ இருக்கிறான்‌" (11:61).

இப்னு உமர்‌, நபி (ஸல்‌) அவர்களைப்‌ பற்றிக்‌ குறிப்பிடுகையில்‌ 'இணைவைக்காமல்‌ ஏக அல்லாஹ்வை மறுமைநாள்‌ வரையில்‌ வணங்கிக்‌ கீழ்படிவதற்காக நான்‌ நபியாக வாளுடன்‌ அனுப்பப்பட்டுள்ளேன்‌. ஈட்டி முனையின்‌ நிழலில்தான்‌ எனக்கு உணவையும்‌ ஏற்பாடு செய்பப்பட்டுள்ளது. எவர்‌ எனது கட்டளைகளைப்‌ புறக்கணிக்கிறாரோ அவருக்கு இழிவும்‌, கேவலமும்‌ கண்டிப்பாக உண்டு. ஒரு சமூகத்துக்கு ஒப்பாக வாழ்கின்ற மனிதனை அவன்‌ சமூகத்துடனே சேர்க்கப்படும்‌ என்று நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறுவதாகத்‌ தெரிவிக்கிறார்கள்‌. (முஸ்னத்)


படைத்தவனை ஒப்புக்‌ கொள்ளுதல்‌.

குறைஷிகளிலிருந்தும்‌, மற்ற சமூகங்களிலிருந்தும்‌ முஷ்ரிக்குகள்‌ என்று யாரைப்பற்றி திருமறை பிரகடனப்படுத்தியதோ அவர்களும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ எவர்களை வெட்டிக்‌ கொன்று அவர்களின்‌ செல்வத்தைப்‌ பறித்து அவர்களின்‌ மகளிரை சிறை பிடிக்க வேண்டுமென்றும்‌, அவர்கள்‌ அனைவரும்‌ நரகவாதிகளென்றும்‌ பகிரங்கமாக விளக்கினார்களோ அவர்களும்‌ அல்லாஹ்‌ ஒருவன்‌ மட்டுமே வானங்கள்‌ பூமிகளைப்‌ படைத்தவன்‌ என்ற உண்மையை மனமாற ஏற்று ஒப்புக்‌ கொண்டிருந்தார்கள்‌.

இதைப்பற்றி திருமறை "நபியே! வானங்களையும்‌, பூமியையும்‌ சிருஷ்டித்தவன்‌ யார்‌? என்று நீர்‌ அவர்களிடம்‌ கேட்பீராயின்‌, அதற்கு அவர்கள்‌ அல்லாஹ்தான்‌ என்று திடமாகக்‌ கூறுவார்கள்‌. புகழனைத்தும்‌ அல்லாஹ்வுக்கே என்று கூறுவீராக! எனினும்‌ அவர்களில்‌ பெரும்பாலோர்‌ அல்லாஹ்வை (புகழ்ந்து துதி செய்ய) அறிய மாட்டார்கள்‌" (31:25). "

(நபியே! நீர்‌ அவர்களைப்‌ பார்த்து) வானங்கள்‌ பூமியை படைத்து, சூரியன்‌, சந்திரனையும்‌ தன்திட்ட பிரகாரமே நடக்கும்படி அடக்கி வைத்தவன்‌ யார்‌? என கேட்பீராயின்‌ அல்லாஹ்தான்‌ என நிச்சயமாகக்‌ கூறுவார்கள்‌. அவ்வாறாயின்‌ அவர்கள்‌ ஏக தெய்வக்‌ கொள்கையை விட்டு எங்கு வெருண்டோடுகின்றனர்‌" (29:61)

"நபியே! பூமியும்‌ அதிலுள்ளவையும்‌ யாருக்குச்‌ சொந்தமானது? நீங்கள்‌ அறிந்திருந்தால்‌ கூறுங்கள்‌ எனக்‌ கேளும்‌! அதற்கவர்கள்‌ அல்லாஹ்வுக்கே சொந்தமானது எனக்‌ கூறுவார்கள்‌. அவ்வாறாயின்‌ இதனைக்‌ கொண்டு நீங்கள்‌ நல்லுணர்ச்சி பெற மாட்டீர்களா? என கேட்பீராக! மேலும்‌ ஏழு வானங்களுக்கும்‌, மகத்தான அர்ஷுக்கும்‌ இறைவன்‌ யார்‌? என கேட்பீராக! அதற்கவர்கள்‌ யாவும்‌ அல்லாஹ்வுக்குரியனவே எனக்‌ கூறுவார்கள்‌. அவ்வாறாயின்‌ நீங்கள்‌ அவனுக்குப்‌ பயப்பட வேண்டாமா? எனக்‌ கூறும்‌. அன்றி சகல பொருட்களின்‌ அதிகாரமும்‌ யார்‌ கையிலிருக்கிறது? யாராலும்‌ இரட்சிக்கப்படாதவனும்‌, எல்லோரையும்‌ இரட்சிக்கக்‌ கூடியவனும்‌ யார்‌? நீங்கள்‌ அறிந்திருந்தால்‌ சொல்லுங்கள்‌ என கேளும்‌! அதற்கவர்கள்‌ (சகல அதிகாரமும்‌) அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறுவார்கள்‌. அப்படியென்றால்‌ நீங்கள்‌ உங்கள்‌ சுயஅறிவை எங்கு இழந்து விட்டீர்களெனக்‌ கூறும்‌. நாம்‌ அவர்களுக்கு சத்தியத்தையே கொடுக்கிருந்தோம்‌. இதனை மறுத்துக்‌ கூறும்‌ அவர்கள்‌ நிச்சயமாக பொய்யர்களே! அல்லாஹ்‌ எந்த சந்ததியையும்‌ எடுத்துக்‌ கொள்ளவுமில்லை. அவனுடன்‌ வேறு நாயனுமில்லை. அப்படியிருப்பின்‌ ஒவ்வொரு இறைவனும்‌ தான்‌ சிருஷ்டித்தவற்றை தன்னுடன்‌ சேர்த்துக்‌ கொண்டு ஒருவர்‌ மற்றவர்‌ மீது போரிட்டு மிகைக்க ஆரம்பித்து விடுவர்‌. (நிராகரிக்கும்‌) இவர்கள்‌ வர்ணிக்கும்‌ தன்மைகளை விட்டு அல்லாஹ்‌ மிகத்‌ தூய்மையானவனாவான்‌. (23:84-91).


சிலைகளை சிருஷ்டிகள்‌ என்று ஒப்புக்கொள்ளல்‌.

அல்லாஹ்வுடன்‌ வேறு கடவுள்களும்‌ இருக்கின்றனர்‌ எனக்கூறி இறைவனுக்கு இணை கற்பித்த முஷ்ரிக்குகள்‌ தாம்‌ கற்பித்த துணை கடவுள்களைப்‌ பற்றி அவையும்‌ சிருஷ்டிக்கப்பட்ட படைப்பு வர்க்கத்தைச்‌ சார்ந்தவர்கள்தான்‌ என்பதை ஏற்றிருந்தனர்‌.

இருந்தும்‌ அவற்றிற்குக்‌ கீழ்படிந்து வணக்க வழிபாடுகள்‌ செலுத்துவதினால்‌ அவை தமக்காக அல்லாஹ்விடம்‌ சிபாரிசு செய்து அவனுடன்‌ நெருங்கிய தொடர்பை பெற்றுத்தர முடியும்‌ என்ற நம்பிக்கையில்‌ அத்தகைய கடவுள்களைத்‌ தமக்குப்‌ பரிந்து பேசும்‌ தலைவர்களாக மதித்திருந்தார்கள்‌. இதை அல்லாஹ்‌ கீழ்வரும்‌ இறை வசனங்களில்‌ விளக்குகின்றான்‌:

"முஷ்ரிக்குகள்‌ தங்களுக்கு யாதொரு நன்மையும்‌ தீமையும்‌ செய்யமுடியாதவற்றை வணங்குவதுடன்‌ இவை அல்லாஹ்விடத்தில்‌ எங்களுக்கு சிபாரிசு செய்பவை என்றும்‌ கூறுகின்றனர்‌. ஆகவே நபியே வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்வுக்குத்‌ தெரியாதவற்றை நீங்கள்‌ அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அவனோ யாவையும்‌ நன்கறிந்தவன்‌) அவன்‌ மிகத்‌ தூய்மையானவன்‌. அவர்கள்‌ இணை வைப்பவற்றை விட எல்லாம்‌ மிக்க உயர்ந்தவன்‌ என்று கூறும்‌”. (10:18).

"அல்லாஹ்வினால்‌ இவ்வேதம்‌ அருளப்பட்டது. அவன்‌ (யாவரையும்)‌ மிகைத்தோனும்‌, எல்லாவற்றையும்‌ அறியும்‌ ஞானமுடையோனுமாய்‌ இருக்கிறான்‌. நபியே திட்டமாக முழுக்க முழுக்க உண்மையான இவ்வேதத்தை நாமே உமக்கு இறக்கியிருக்கிறோம்‌. ஆகவே நீர்‌ முற்றிலும்‌ பரிசுத்த மனதுடன்‌ அல்லாஹ்வை வணங்கி வாரும்‌. வழிபாடு அவனுக்கே உரியது. தூய வழிபாட்டுக்குரியவன்‌ அல்லாஹ்‌ ஒருவனே! என்பதை விளக்குவீராக. யார்‌ அல்லாஹ்‌ அல்லாதவற்றை தம்மைக்‌ காக்கும்‌ தெய்வங்களாகவும்‌, தம்மைப்‌ பராமரிப்பவர்களாகவும்‌ ஏற்படுத்தியிருக்கிறார்களோ அவர்கள்‌ அத்தெய்வங்கள்‌ எங்களை அல்லாஹ்வுடன்‌ மிக்க சமீபத்திலாக்கி வைக்கும்‌ என்பதற்காகவேயன்றி இவற்றை நாங்கள்‌ வணங்கவில்லை என கூறுகின்றனர்‌. இவர்கள்‌ தர்க்கித்துக்‌ கொண்டிருக்கும்‌ இவ்விஷயத்தைப்‌ பற்றி திட்டமாக அல்லாஹ்‌ மறுமையில்‌ அவர்களுக்கு மத்தியில்‌ தீர்ப்பு வழங்குவான்‌. உண்மையை மறுத்துப்‌ பொய்‌ கூறுபவர்களை நிச்சயமாக அல்லாஹ்‌ நேர்வழியில்‌ செலுத்துவதில்லை". (39:1-3)

ஹஜ்ஜுக்காக இஹ்ராம்‌ கட்டிய பிறகு முழங்கப்படும்‌ தூய்மை முழக்க சொற்களான தல்பியாவிலும்‌ கீழ்வருமாறு கூறினார்கள்‌: 'இறைவா! உன்‌ அழைப்புக்கு நாம்‌ விடை தருகிறோம்‌. உனக்குப்‌ பங்காளியில்லை. ஆனால்‌ நீ உடைமையாக்கிக்‌ கொண்ட பங்காளிகள்‌ மட்டும்‌ இருக்கிறார்கள்‌. இப்பங்காளிகளின்‌ உடைமைகளையும்‌ நீயே உடைமையாக்கியிருக்கிறாய்‌, 

மேலும்‌ இதைப்பற்றிக்‌‌ அல்லாஹ்‌ கீழ்வரும்‌ வசனங்களில்‌ கூறுகையில்

"மனிதர்களே! உங்களில்‌ நின்றுமே அல்லாஹ்‌ ஓர்‌ உதாரணத்தை உங்களுக்காகக்‌ கூறுகிறான்‌: நாம்‌ உங்களுக்களித்த செல்வங்களில்‌ நீங்கள்‌ உடைமையாக்கிக்‌ கொண்ட அடிமைகளுமிருக்கிறார்களே, அவர்களில்‌ எவரையாவது உங்களுடன்‌ பங்காளிகளாக்கிக்‌ கொண்டு நீங்களும்‌, அவர்களும்‌ சமம்‌ என கூறிப்‌ பாராட்டுவீர்களா? உங்களை நீங்கள்‌ பொருட்படுத்துவதைப்போல்‌ அவர்களை நீங்கள்‌ பொருட்படுத்துவீர்களா? (நிச்சயமாகப்‌ பொருட்படுத்த மாட்டீர்கள்‌) அவ்வாறிருக்க என்னுடைய சிருஷ்டிகளை நீங்கள்‌ எனக்கு இணையாகவோ, பங்காளியாகவோ ஆக்கலாமா? அறிவாளிகளுக்கு நம்‌ வசனங்களை இவ்வாறு விவரித்துக்‌ கூறினோம்‌. எனினும்‌ அக்கிரமக்காரர்கள்‌ அறிவின்றியே தங்களுடைய மனோ இச்சைகளைப்‌ பின்பற்றி நடக்கின்றனர்‌. எவர்களை அல்லாஹ்‌ தவறான வழியில்‌ விட்டு விட்டானோ, அவர்களை நேரான வழியில்‌ திருப்பக்‌ கூடியவர்‌ யார்‌? இன்னும்‌ அவர்களுக்கு உதவி செய்வோர்‌ எவருமில்லை.

நபியே! நீர்‌ உம்‌ முகத்தை இஸ்லாத்தின்பாலே முற்றிலும்‌ திருப்பி, அந்த இஸ்லாத்தை நிலைபெற செய்வீராக! அல்லாஹ்‌ மனிதர்களை சிருஷ்டித்த வழியே அவனுடைய இயற்கை வழியாகும்‌. இதுவே சரியான நிலையான வழியுமாகும்‌. இருப்பினும்‌ மனிதர்களில்‌ பெரும்பாலோர்‌ இதை அறிந்து கொள்ள மாட்டார்கள்‌.

(மூமின்௧களே!) நீங்கள்‌ யாவரும்‌ அவன்பால்‌ திரும்பச்‌ செல்கிறவர்களாகவே இருக்கிறீர்கள்‌. ஆகவே அந்த அல்லாஹ்வைப்‌ பயந்து தொழுகையையும்‌ கடைப்பிடித்தொழுகுங்கள்‌. இணைவைத்து வணங்குகிறவர்களில்‌ நீங்கள்‌ ஆகிவிடாதீர்கள்‌.

அவர்கள்‌ தங்கள்‌ மார்க்கத்தில்‌ பிரிவினையை உண்டு பண்ணி பல வகுப்பார்களாகச்‌ சிதறி விட்டனர்‌. அவர்கள்‌ ஒவ்வொரு வகுப்பாரும்‌ தங்களிடமுள்ளதைக்‌ கொண்டு சந்தோசப்படுகின்றனர்‌"'. (30:28-32).

இந்த இறைவசனங்கள்‌ மூலமாக இறைவன்‌ கீழ்க்காணும்‌ உண்மைகளை விவரிக்கின்றான்‌:

ஒன்று: எவரும்‌ தன்‌ ஆதிக்கத்திலிருக்கிற அடிமைகளை தம்முடைய பங்காளியாகவோ, கூட்டாளியாகவோ எடுத்துக்‌ கொள்ள மாட்டார்கள்‌. 

இரண்டு: தோழர்களுக்கு மத்தியில்‌ நடக்கின்ற விவரங்களைப்‌ போன்று ஏதும்‌ அடிமை எஜமான்களுக்கு மத்தியில்‌ நடக்காது. 

மூன்று: மனிதர்கள்‌ எவருமே தன்‌ ஆதிக்கத்திலிருக்கின்ற ஓர்‌ அடிமை தமது ஆட்சிப்‌ பொறுப்பில்‌ தலையிடுவதை எக்காரணத்தாலும்‌ ஏற்க மாட்டார்‌. இப்படியிருக்க அல்லாஹ்‌ தன்‌ அடிமைகளை தன்‌ ஆட்சியின்‌ பங்காளியாக எடுத்துக்‌ கொள்வான்‌ என்று யாரால்தான்‌ கூற முடியும்‌ இவையெல்லாம்‌ மூடத்தனமாகும்‌.

மேலும்‌ சில இடங்களில்‌ இவர்கள்‌ அல்லாஹ்வைப்‌ பற்றி பொருத்தமில்லாதவற்றைக்‌ கூறினார்கள்‌. அல்லாஹ்வுக்குப்‌ பெண்மக்கள்‌ இருக்கின்றனர்‌ என சொன்னார்கள்‌. இப்படிச்‌ சொல்வோர்களே ஒருபோதும்‌ தமக்குப்‌ பெண்குழந்தை பெறுவதை விரும்புவதேயில்லை. இவ்வாறு முட்டாள்தனமாக அவர்கள்‌ கூறியது பற்றி அல்லாஹ்‌ கீழ்வரும்‌ ஆயத்துகளில்‌ விளக்கிக்‌ காட்டுகிறான்‌:

"தாங்கள்‌ விரும்பாத பெண்மக்களை அல்லாஹ்வுக்குக்‌ கற்பிக்கும்‌ இவர்கள்‌ மறுமையில்‌ நிச்சயமாகத்‌ தங்களுக்கு நன்மைதான்‌ கிடைக்குமென்று நாவால்‌ பொய்யாகப்‌ புகழ்ந்து கூறுகிறார்கள்‌. நிச்சயமாக இவர்களுக்கு நரகம்‌ தான்‌ உண்டு என்பதிலும்‌, நரகத்திற்கு முதலாவதாக இவர்கள்தாம்‌ விரட்டப்படுவார்கள்‌ என்பதிலும்‌ சந்தேகமேயில்லை". (16:62)

"அவர்களில்‌ ஒருவனுக்குப்‌ பெண்குழந்தை பிறந்ததாக நற்செய்தி கூறப்பட்டால்‌ அவனுடைய முகம்‌ துக்கத்தால்‌ கருத்து விடுகிறது. கோபத்தை விழுங்குகிறவனாகக்‌ காட்சி தருகிறான்‌. பெண்குழந்தை பிறந்தது என்று அவனுக்குக்‌ கூறப்பட்ட இந்த (கெட்ட) செய்தியைப்‌ பற்றி வெறுப்படைந்து இழிவுடன்‌ அதை வைத்திருப்பதா அல்லது உயிருடன்‌ அதை மண்ணில்‌ புதைத்து விடுவதா? என்று கவலைப்பட்டு மக்கள்‌ முன்வராது மறைந்து கொண்டே திரிவான்‌. இவ்வாறு (தங்களுக்கு ஆண்‌ குழந்தையும்‌, இறைவனுக்குப்‌ பெண்‌ குழந்தையுமாக) அவர்கள்‌ கூறும்‌ தீர்மானம்‌ மிகக்‌ கெட்டதல்லவா? இத்தகைய கெட்ட உதாரணங்களெல்லாம்‌ மறுமையைப்‌ பற்றி விசுவாசமில்லாதவர்களுக்கே தகும்‌. அல்லாஹ்வுக்கே மிக்க மேலான வர்ணணைகள்‌ உண்டு. அவன்‌ யாவரையும்‌ மிகைத்தோனும்‌ மிக்க ஞானமுடையோனுமாக இருக்கிறான்‌". (16:58-60).


இருவகைப்பட்ட முஷ்ரிக்குகள்‌

அல்லாஹ்வும்‌, அவனுடைய திருத்தூதரும்‌ எவரைப்‌ பற்றி இறைவனுக்கு இணைவைக்கும்‌ முஷ்ரிக்குகள்‌ என்று விளக்கினார்களோ அவர்களை இருவகைகளாகப்‌ பிரிக்கலாம்‌. 

ஒன்று: நூஹ்‌ நபியின்‌ சமூகத்திலுள்ளவர்களைப்‌ போன்றோர்‌. 

மற்றொன்று: நபி இப்ராஹீம்‌ (அலை) அவர்களின்‌ சமூகத்தைச்‌ சார்ந்தோரைப்‌ போன்றவர்கள்‌.

இவ்விரு கூட்டத்தினரும்‌ இறைவனுக்கு ஒவ்வொரு மாதிரியாக இணை வைத்தார்கள்‌.

நபி நூஹ்‌ (அலை) அவர்களின்‌ சமூகத்தார்‌ (ஸாலிஹீன்களான) இறைவனின்‌ நல்லடியார்கள்‌ இறந்தால்‌ அவர்களுக்குச்‌ சமாதிகளைக்‌ கட்டி உயர்த்தி அந்த சமாதிகளின்‌ மீது தரித்திருந்து நாட்களைக்‌ கழித்து பிறகு சமாதிகளில்‌ புதைக்கப்பட்டவர்களின்‌ உருவச்‌ சிலையைக்‌ கட்டி உயர்த்தி அந்தப்‌ பிம்பங்களுக்கு கீழ்ப்படிந்து வழிபாடுகளைச்‌ செலுத்தினார்கள்‌. நபி இப்ராஹீம்‌ (அலை) அவர்களின்‌ சமூகமோ இணைவைப்பதில்‌ மற்றொரு வழியைக்‌ கையாண்டார்கள்‌. 

நட்சத்திரங்களை வணங்கினார்கள்‌. சூரியன்‌ சந்திரன்‌ மற்றும்‌ கிரகங்களுக்கெல்லாம்‌ வணக்கங்களைச்‌ செலுத்தினார்கள்‌. அவற்றைக்‌ கடவுளாகவும்‌ மதித்தார்கள்‌.

இவ்விரு கூட்டத்தினரும்‌ ஜின்களுக்கு வழிப்படுவதில்‌ ஒன்றித்திருந்தார்கள்‌. ஷைத்தான்கள்‌ இவர்களுடன்‌ நேரடி சம்பாஜணைகளை நடத்துவதுண்டு. பலதரப்பட்ட குற்றங்களைப்‌ புரிவதற்கு ஷைத்தான்‌ இவர்களுக்கு உறுதுணையாக நின்றான்‌.

உண்மையில்‌ ஜின்களுக்கு கீழ்ப்படிந்து வணக்கங்களைச்‌ செய்து வந்த இச்சமூகத்தார்கள்‌ தங்களை மலக்குகளுக்கு வழிபடுகிறவர்கள்‌ என நினைத்துக்‌ கொண்டனர்‌. ஜின்களும்‌ இவர்களின்‌ இப்பாவச்‌ செயலுகளுக்கு உடந்தையாக இருந்தார்கள்‌. இதைப்‌ பற்றி இறைவன்‌ கூறுகிறான்‌: "

(மலக்குகளை வணங்கிக்‌ கொண்டிருந்த) இம்மக்களை ஒன்று சேர்க்கப்படும்‌ இந்நாளில்‌ மலக்குகளை நோக்கி இவர்கள்‌ தானே உங்களை வணங்கிக்‌ கொண்டிருந்தவர்கள்‌ என்று கேட்கப்படும்‌. அதற்கவர்கள்‌ நாயனே! நீ மிகப்‌ பரிசுத்தமானவன்‌. நீதான்‌ எங்கள்‌ இரட்சகன்‌ (அவர்களல்ல). இவர்கள்‌ ஜின்களையே வணங்கி வந்தார்கள்‌. (எங்களையல்ல). இவர்களில்‌ பெரும்பாலோர்‌ அந்த ஜின்களையே விசுவாசம்‌ கொண்டுமிருந்தார்கள்‌". (34:40-41).

மலக்குகள்‌ ஒரு போதும்‌ நிராகரித்தவர்களுடன்‌ சேர மாட்டார்கள்‌. இறைவனுக்கு இணைதுணை வைக்கும்‌ விஷயத்தில்‌ ஒத்தாசை புரிய மாட்டார்கள்‌. 

இறந்தவர்களைக்‌ கொண்டும்‌ சரி, உயிருள்ளவர்களைக்‌ கொண்டும்‌ சரி எவரைக்‌ கொண்டானாலும்‌ இறைவனுக்கு துணை (பங்காளி) வைக்கும்‌ விஷயத்தில்‌ ஒருக்காலும்‌ மலக்குகள்‌ பொருந்தக்‌ கூடியவர்களல்ல. ஆனால்‌ ஷைத்தானோ மக்களுக்குப்‌ பலமாதிரியான பேருதவிகளைச்‌ செய்து கொடுக்கிறான்‌. மனித உருவத்தில்‌ வேடம்‌ மாறி வந்து இணைவைப்பதற்குரிய எல்லா ஒத்தாசைகளையும்‌ புரிந்து கொடுக்கிறான்‌. சிலவேளைகளில்‌ நான்தான்‌ நூஹ்‌ நபி, நானே இப்ராஹீம்‌ நபி என்றெல்லாம்‌ கூறுவான்‌. தன்னை நபி ஹிள்ர்‌ என்றும்‌ அபூபக்கர்‌, உமர்‌ என்றெல்லாம்‌ கூறி மக்களின்‌ நம்பிக்கையைப்‌ பறித்துக்‌ கொண்டு ஓடி விடுகிறான்‌. தன்னை நபியென்றும்‌, ஸஹாபியென்றும்‌, பெரிய ஷைகு என்றும்‌ மக்கள்‌ கருதுமளவுக்கு நடிக்கிறான்‌. இந்த ஏமாற்று வித்தையை விளங்காத மக்கள்‌ அவனுடைய ஜாலவித்தைகளைக்‌ கண்கூடாகப்‌ பார்த்து நம்பி நம்‌ நம்பி வந்துள்ளார்‌, பெருமைக்குரிய ஷைகு விஜயம்‌ செய்திருக்கிறார்‌ என்றெல்லாம்‌ கூறி ஏமாந்து தமது திடகாத்திரமில்லாத நம்பிக்கையை இந்த ஷைத்தான்களுக்கும்‌, ஜின்களுக்கும்‌ பறிகொடுத்து விட்டுத்‌ தத்தளிக்கிறார்கள்‌.


ஜின்‌ ஷைத்தான்களின்‌ ஆள்மாறாட்டம்‌

முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும்‌. ஜின்‌ வர்க்கம்‌ மனித வர்க்கத்தைப்‌ போன்றதாகும்‌. ஜின்களில்‌ காஃபிர்கள்‌ உண்டு. இறைவனை மறுத்துப்‌ பேசுகின்றோரும்‌ உண்டு. முஸ்லிம்களும்‌ உண்டு. ஜின்களில்‌ பாவிகள்‌, குற்றவாளிகள்‌, அறிவீலிகள்‌ மூடத்தனமாக இறைவனுக்கு வழிப்படுகிறவர்கள்‌ மனிதர்களில்‌ சிலர்களைப்‌ போன்று குரு (ஷைகு) மார்களை விரும்புகிறவர்கள்‌ இப்படி பலதரப்பட்ட அமைப்பிலும்‌ ஜின்கள்‌ இருக்கிறார்கள்‌. (இது ஸூரத்துல்‌ ஜின்‌ பதினொன்றாம்‌ ஆயத்திலும்‌ சுட்டிக்காட்டப்படுகிறது) சந்தர்ப்பங்களில்‌ ஜின்கள்‌ குரு (ஷைகு) மார்களின்‌ வேடங்களை அணிந்து மனிதனிடம்‌ காட்சியளிக்கிறார்கள்‌. இத்தகைய சம்பவங்கள்‌ பெரும்பாலும்‌ காடு வனாந்திரங்களிலும்‌, மக்கள்‌ நடமாட்டமில்லாப்‌ பகுதிகளிலும்‌ நடக்கின்றன. மனிதனுக்கு முன்னால்‌ ஜின்கள்‌ ஆஜராகி ஏதோ ஆகாரத்தையும்‌, நீரையும்‌ கொடுத்து சாதாரணமாக நடக்கும்‌ சில தூரமான சம்பவங்களைக்‌ குறித்து மனிதனிடம்‌ கூறிவிட்டுப்‌ போய்‌ விடுகிறார்கள்‌. இதைக்கண்ட மனிதன்‌ அறிவின்மையால்‌ தனக்குரிய  குரு (ஷைகு) ஆஜரானார்‌. இறந்து போன அல்லது உயிரோடிக்கின்ற தன்‌ குரு விஜயம்‌ செய்தார்‌ என்று நம்புகிறான்‌. கிடைத்த உணவும்‌, தண்ணீரும்‌ தன்னுடைய குருவிடமிருந்து கிடைத்தவை என்றெண்ணி ஜின்னிடமிருந்து கேட்ட செய்திகளை குரு (ஷைகு)வின்‌ பொன்மொழியாக ஏற்கிறான்‌. அதற்கொப்ப வாழ்க்கையை அமைத்துக்‌ கொள்கிறான்‌.

குருவின்‌ பொக்கிஷங்கள்‌ அந்தரங்க விவகாரங்கள்‌ அனைத்தும்‌ தமக்குக்‌ கிடைத்ததாக ஒரு மகிழ்ச்சியும்‌, குதூகலமும்‌ எங்கிருந்தோ இவனுக்கு உண்டாகிறது. இதனால்‌ சில நேரங்களில்‌ இந்தக்‌ குருவை(ஷைகை;) பற்றி அவர்‌ மலக்கு வர்க்கத்தைச்‌ சார்ந்தவரென எண்ணி மதிப்பதுண்டு. 'மலக்கு வடிவில்‌ குருநாதரைப்‌ பார்த்தேன்‌' என்று இந்த ஏமாளி புலம்புகிறான்‌. இவனுக்கு இணைகற்பித்தல்‌, பொய்‌-பித்தலாட்டங்கள்‌, பாவச்செயல்கள்‌, அத்துமீறல்கள்‌ போன்ற எந்தப்‌ பாவச்செயல்களுக்கும்‌ மலக்குகள்‌ துணை நிற்க மாட்டார்கள்‌ என்பதை இந்த மனிதன்‌ விளங்கவில்லை.

மேலே குறிப்பிட்ட செய்கைகள்‌ அத்தனையும்‌ ஜின்களின்‌ ஜாலவித்தைகள்‌ என்ற உண்மையைக்‌ கூட இந்த அப்பாவியால்‌ புரிய முடியவில்லை. இறைவன்‌ கூறுகிறான்‌: "நபியே! இணைவைத்து வணங்குவோரை நோக்கி நீர்‌ கூறும்‌! அல்லாஹ்வைத்‌ தவிர வேறு தெய்வங்கள்‌ இருப்பதாக நீங்கள்‌ நினைத்துக்‌ கொண்டிருக்கிறீர்களே அவைகளை நீங்கள்‌ அழைத்துப்‌ பாருங்கள்‌. அவ்வாறு அழைத்தீர்களென்றால்‌ அவை உங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும்‌ நீக்கி வைக்கவோ, அதனைத்‌ தட்டி விடவோ சக்தியற்றவை என்பதை அறிந்து கொள்வீர்கள்‌. இவர்கள்‌ ஆண்டவர்களென எவற்றை அழைக்கிறார்களோ அவையும்‌ தங்களுக்காக இறை நெருக்கத்தை வேண்டுகின்றன. தங்களையும்‌ இறைவனோடு நெருங்க வைக்கும்‌ வழிகள்‌ எவை என்பதைத்‌ தேடி கொண்டிருக்கின்றன. அவனுடைய அருளை எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்கும்‌ பயப்படுகின்றன. ஏனென்றால்‌ உம்‌ இறைவனின்‌ வேதனை நிச்சயமாக மிக (மிக) பயப்படக்‌ கூடியதே". (17:56-57).

முன்னோர்களில்‌ ஒரு சாரார்‌ கீழ்வருமாறு விளக்கியுள்ளனர்‌: உஸைர்‌, ஈஸா போன்ற நபிமார்களையும்‌, மலக்குகளையும்‌ சில மக்கள்‌ வணங்கி வந்தனர்‌. இவர்களுக்கு இறைவன்‌ விளக்கம்‌ கொடுக்கும்‌ போது: நபிமார்கள்‌, மலக்குகள்‌ அனைவரும்‌ இறைவனின்‌ அடிமைகள்தாம்‌. இவர்கள்‌ யாவரும்‌ அல்லாஹ்வின்‌ அருளை வேண்டி நிற்கின்றனர்‌. அவனின்‌ வேதனையை பயப்படுகின்றனர்‌. பல்வேறு வழிபாடுகளைச்‌ செய்து தம்‌ இறைவனின்‌ திருப்தியைக்‌ கைப்பற்றுவதற்காக ஒவ்வொருவரும்‌ பிரயாசைப்படுகின்றனர்‌ என்று கூறினான்‌.


விக்ரஹங்களால்‌ சிபாரிசு செய்ய முடியாது

இறைவனுக்கு இணையுண்டு என நினைக்கின்ற முஷ்ரிக்குகள்‌ கூறுகின்றனர்‌:

மலக்குகளும்‌, நபிமார்களும்‌ எங்களுக்காக சிபாரிசு செய்ய வேண்டுமென்றே நாம்‌ அவர்களை வேண்டுகிறோம்‌. வேறு எதையும்‌ நாங்கள்‌ கேட்கவில்லை. நபிமார்கள்‌, மலக்குகள்‌, நன்மக்கள்‌ இவர்கள்‌ சமாதியில்‌ வந்து நாம்‌ கேட்பதெல்லாம்‌ சிபாரிசு ஒன்றைத்தான்‌. உதாரணமாகக்‌ கூறுவதாயின்‌: இரக்கமுள்ள நாச்சியார்‌ மர்யம்‌ அவர்களே! மேன்மைக்குரிய பீட்டர்‌ அவர்களே! ஜுர்தீஸ்‌ அவர்களே! நபி மூஸாவே! அல்லது இப்ராஹீமே! எங்களுக்காக உங்கள்‌ இறைவனிடம்‌ சிபாரிசை வேண்டுங்கள்‌ எனக்‌ கூறி நாங்கள்‌ சம்பாஷணை நடத்தும்‌ போது அல்லது இவர்களின்‌ சமாதிகளில்‌ சென்று நாங்கள்‌ அவர்களோடு உரையாடும்‌ போது அல்லது கண்‌ மறைவாக வாழும்‌ எங்கள்‌ குருவுடன்‌ நாங்கள்‌ பேசும்போது இப்பெரியார்கள்‌ தம்‌ வாழ்வில்‌ சாதித்த அறச்‌ செயல்களைப்‌ பற்றி நினைப்போம்‌. அவர்களின்‌ நன்னடத்தைகளைப்‌ பற்றி சிறிதளவு எங்களுடைய சிந்தைகளில்‌ புகுத்துவோம்‌.

இச்சிலைகள்‌ முழு உருவத்துடன்‌ செதுக்கப்பட்ட பிம்பங்களாகட்டும்‌ அல்லது வெறும்‌ உருவப்‌ படங்களாகட்டும்‌ எதுவானாலும்‌ எங்களின்‌ நினைவுகளனைத்தும்‌ இச்சிலைகுரியவர்‌ யாரோ அவருடன்தானிருக்கும்‌. இச்சிலைகள்‌ அருகில்‌ சென்றால்‌ அவற்றிற்குரிய மெய்யான (உண்மை) மனிதர்‌ யாரோ அவரையே நாம்‌ வேண்டுகிறோமே அன்றி வெறும்‌ கற்களால்‌ அமைக்கப்பட்ட பிம்பங்களையல்ல என இவ்வாறு முஷ்ரிக்குகள்‌ கூறுகிறார்கள்‌.

சில பாடல்களையும்‌, சங்கீதங்களையும்‌ சாமிகளுக்கு முன்னால்‌ இவர்கள்‌ பாடுவதுண்டு. எனக்காகப்‌ பரிந்து பேசுங்கள்‌. பெரியாரே நான்‌ உங்கள்‌ அருகில்‌ இருக்கிறேன்‌. எனக்குக்‌ கிருபை செய்யுங்கள்‌. எனக்கு சிபாரிசு செய்யுங்கள்‌. விரோதிகளுக்குப்‌ பாதகமாக நமக்கு உதவுங்கள்‌. நாங்கள்‌ கடும்‌ சிக்கல்களிலே மாட்டிக்‌ கொண்டிருக்கிறோம்‌. இந்தச்‌ சிக்கல்களை அகற்றுவதற்காக அல்லாஹ்விடம்‌ கேளுங்கள்‌. எங்கள்‌ கஷ்டத்தை நீக்கி நல்ல நிலையை அல்லாஹ்விடம்‌ கேட்டு வாங்கித்‌ தாருங்கள்‌. என்‌ பாவங்களை மன்னிக்க அல்லாஹ்விடம்‌ பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா? என்றெல்லாம்‌ சிலைகளுக்கும்‌, சமாதிகளுக்கும்‌ முன்னால்‌ சென்று இரங்குவது மட்டுமின்றி திருமறையின்‌ கருத்தையும்‌ இவர்கள்‌ தம்‌ மனோ இச்சைகளுக்கொப்ப மாற்றி விடுகிறார்கள்‌. 

இறைவன்‌ கூறுகிறான்‌: “அல்லாஹ்வின்‌ கட்டளைகளுக்கு வழிப்படுவதற்காகவே அல்லாமல்‌ மனிதர்களிடம்‌ நாம்‌ எந்தத்‌ தூதரையும்‌ அனுப்பவில்லை. ஆகவே இதற்கு மாறு செய்த அவர்கள்‌ தமக்குத்‌ தாமே தீங்கிழைத்துக்‌ கொண்ட சமயத்தில்‌ அல்லாஹ்விடம்‌ பாவமன்னிப்புக்கோரி உம்மிடம்‌ வந்து அவர்களுக்காக அல்லாஹ்வின்‌ தூதராகிய நீரும்‌ பாவமன்னிப்பைக்‌ கோரியிருந்தால்‌ அன்பாளனாகவும்‌, மன்னிப்புடையோனாகவும்‌ அல்லாஹ்வை அவர்கள்‌ கண்டிருப்பார்கள்‌” (4:64) 

இந்த ஆயத்துக்கு முரண்பட்ட கருத்தைக்‌ கொடுத்தார்கள்‌.


நபிகள்‌ இறந்ததற்கப்பால்‌ அவர்களிடம்‌ பிரார்த்திக்கக்‌ கோரலாமா?

பெருமானார்‌ (ஸல்‌) உலகை விட்டு மறைந்த பின்னர்‌ அவர்களிடம்‌ சென்று அவர்கள்‌ அல்லாஹ்விடம்‌ பிரார்த்தித்து நமக்காகப்‌ பாவமன்னிப்பு வாங்கித்தர வேண்டுவதும்‌: நபி வாழ்ந்திருக்கையில்‌ ஸஹாபிகள்‌ நபியிடம்‌ பாவமன்னிப்பைத்‌ தமக்காகப்‌ பிரார்த்திக்கும்படி வேண்டியதற்குச்‌ சமமானதாகும்‌ என்று கூறி மேற்படி இறைவசனத்துக்கு தம்‌ மனோ-இச்சைக்கொப்ப விளக்கம்‌ அளித்தனர்‌. 

இது அனைத்தும்‌ முஸ்லிம்‌ அறிஞர்களின்‌ விளக்கத்துக்கும்‌, ஸஹாபாக்களுடையவும்‌ , தாபியீன்களுடையவும்‌, ஏகமனதான தீர்மானங்களுக்கும்‌ (இஜ்மாஉக்கும்‌) நேர்‌ முரண்‌பட்டதாகும்‌.

ஏனெனில்‌ பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ உலகை விட்டுப்‌ பிரிந்த பிறகு அவர்களின்‌ தோழர்களான ஸஹாபாக்கள்‌, தாபியீன்கள்‌ இவர்களில்‌ ஒருவர்‌ கூட நபி (ஸல்‌) அவர்கள்‌ இறந்ததற்கப்பால்‌ தமக்குப்‌ பிழை பொறுக்க அல்லாஹ்விடம்‌ பிரார்த்தியுங்கள்‌ என்றோ, எங்களுக்கு இன்னின்ன தேவைகளுண்டு அவையெல்லாம்‌ நிறைவு பெறவும்‌ அல்லாஹ்‌ அவற்றை பூர்த்தி செய்து தரவும்‌ அல்லாஹ்விடம்‌ பிரார்த்தியுங்கள்‌ என்றோ கேட்டதில்லை. 

அன்று வாழ்ந்திருந்த பற்பல நூலாசிரியர்கள்‌ மற்றும்‌ அறிஞர்கள்‌, இமாம்கள்‌ யாருமே இப்படியொரு சம்பவத்தை தமது நூலில்‌ இன்று வரையிலும்‌ எழுதியதில்லை. ரொம்ப பிற்காலத்தில்‌ வந்த சிலர்கள்‌ சில கட்டுக்கதைகளையும்‌, பொய்ச்‌ சம்பவங்களையும்‌ இது விஷயத்தில்‌ அங்குமிங்குமாக எழுதி வைத்திருக்கிறார்கள்‌. பெரிய அறிஞர்களிடம்‌ இச்சம்பவங்களுக்கு எந்தச்‌ சான்றுகளுமில்லை. ஏனெனில்‌ காலஞ்சென்ற பிறகு நபிமார்களிடமோ, வலிமார்களிடமோ, நன்மக்கள்‌ என்று அறியப்பட்டிருந்த ஸாலிஹீன்களிடமோ அல்லது மலக்குகளிடமோ கேட்பதும்‌, சமாதிகளில்‌ சென்று கேட்பதும்‌, பெரியோர்களின்‌ சிலைகளை கட்டி வைத்து அவற்றிடம்‌ பிரார்த்திப்பதும்‌, கண்‌ மறைவிலிருக்கும்‌ பெரியோர்களை அழைத்துக்‌ கேட்பதுமெல்லாம்‌ இறைவனுக்கு இணை கற்பிக்கும்‌ வகைகளிலெல்லாம்‌ மிகப்‌ பெரியதாகும்‌. 

இவை கிறிஸ்தவ - யூத வகுப்பாரில்‌ தோன்றிய (பித்‌அத்துக்‌ காரர்களாலும்‌) அனாச்சாரங்களைப்‌ புரிகின்றவர்களாலும்‌, அல்லாஹ்வும்‌, அவனுடைய தூதரும்‌ அனுமதியளிக்காத செய்கைகளை வணக்க வழிபாடுகளென்று நினைத்துச்‌ செய்கிற இஸ்லாமியர்களாலும்‌ தோற்றுவிக்கப்பட்ட தீய செய்கைகளாகும்‌.

அல்லாஹ்வும்‌, ரஸூலும்‌ எவற்றைச்‌ செய்ய அனுமதி வழங்கவில்லையோ அவற்றைச்‌ செய்கிறவனை அல்லாஹ்‌ தன்‌ அனுக்கிரஹத்தை விட்டும்‌ துரத்தி விடுகிறான்‌. திருமறையில்‌ அல்லாஹ்‌ கூறினான்‌: 

'அல்லாஹ்‌ அனுமதிக்காத எதனையும்‌ மார்க்கத்தில்‌ உள்ளது என்று அவர்களுக்குத்‌ தீர்ப்பு வழங்கக்கூடிய இணை தெய்வங்களும்‌ அவர்களுக்கு இருக்கின்றனவா?" (42:21). 

மலக்குகள்‌, காலமான நபிமார்கள்‌, கண்‌ முன்னிலையில்லா தூரத்தொலைவில்‌ மறைந்திருப்பவர்கள்‌ இவர்களிடமெல்லாம்‌ தேவைகளைக்‌ கேட்டல்‌, இவர்களைக்‌ கொண்டு உதவி தேடல்‌, சிபாரிசு வேண்டுதல்‌, இவர்களை நினைப்பதற்காகவோ அல்லது இவர்களின்‌ எண்ணங்களை மனதில்‌ நிலை பெறச்‌ செய்வதற்காகவோ, பரிந்துரை தேடுவதற்காகவோ அல்லது மற்ற ஏதேனும்‌ தேவைகளுக்காக அவர்களின்‌ பிம்பங்களை எழுப்புதல்‌ இதுபோன்ற செய்கைகள்‌ அனைத்தும்‌ அல்லாஹ்வும்‌, அவன்‌ தூதரும்‌ அனுமதி வழங்காத அனாச்சாரங்களாகும்‌. இத்தகைய செய்கைகளை நபிமார்கள்‌ எவருமே மத அனுஷ்டானங்கள்‌ என்று கூறியதில்லை. இறைவனால்‌ இறக்கப்பட்ட எவ்வேதத்கிலும்‌ இவற்றைக்‌ குறித்து இவை அனுமதிக்கப்பட்ட செய்கைகளெனச்‌ சொல்லப்படவும்‌ இல்லை. நம்‌ இஸ்லாமிய மார்க்கத்தில்‌ இத்தகைய செய்கைகளை கடமை (வாஜிபு) என்றோ, சுன்னத்‌ என்றோ எந்த இமாமும்‌ கூறியதுமில்லை. ஸஹாபாக்கள்‌, தாபியீன்கள்‌, மேலும்‌ இமாம்களில்‌ மிகப்‌ பெரிய நால்வரும்‌ இதை அனுமதித்ததுமில்லை. மற்றும்‌ குறிப்பிடத்தக்க எவ்வறிஞரும்‌ அனுமதி வழங்கவில்லை.

நமது சன்மார்க்கத்தை எவர்கள்‌ வழியாக நாம்‌ விளங்கினோமோ அவர்களில்‌ எவருமே இவற்றை ஆகுமான செய்கை என கூறியதுமில்லை.

அப்படியென்றால்‌ நாம்‌ மேற்கூறிய அனாச்சாரங்களை இஸ்லாமிய செய்கைகள்‌ என்று எப்படிக்‌ கூற முடியும்‌. தாம்‌ கண்ட பொய்க்‌ கனவுகளையும்‌, கட்டுக்கதைகளையும்‌ மட்டுமே இந்தத்‌ தீய செய்கைகளுக்குச்‌ சான்றாக ஆக்கியிருக்கிறார்கள்‌.

இவையனைத்தும்‌ ஷைத்தானின்‌ வேலைகள்‌. அவனே இவர்களை வழி கெடுக்கும்‌ நோக்கத்துடன்‌ இவற்றை செய்கிறானென்பதை இவர்கள்‌ உணரவில்லை.

சில காலமானவர்களை அழைப்பதற்காவும்‌, அவர்களிடம்‌ சிபாரிசு வேண்டுவதற்காவும்‌ யாரோ இயற்றிய பாடல்களையும்‌, கவிதைகளையும்‌ வைத்து கவர்ச்சியான இராகங்களில்‌ இறந்தவர்களுடன்‌ உரையாடுகின்றனர்‌. தமது இத்தீய செயலுக்கு உறுதுணையாகப்‌ பாட்டுகளையும்‌ எடுத்துக்‌ கொள்கின்றனர்‌. காலஞ்‌ சென்ற நபிமார்கள்‌, வலிமார்கள்‌ இவர்கள்மீது புகழ்ப்‌ பாக்களை இயற்றி அவற்றின்‌ கடைசியில்‌ ஷபாஅத்தை வேண்டுகிற ஒரு பகுதி (மைய்யித்துடன்‌ உரையாடி சம்பாஷனை நடத்தும்‌ மற்றொரு பகுதி, கெஞ்சி கேட்கும்‌ இன்னொரு பகுதி) இப்படியாகப்‌ பல காட்சிகளைப்‌ பாடல்களில்‌ அமைத்துக்‌ கொள்கிறார்கள்‌.

இவர்கள்‌ உரையாடும்‌ இப்பாக்கள்‌ ஒருபோதும்‌ எந்தப்‌ பயனையும்‌ தராது. மத்ஹபுடைய எந்த இமாமும்‌ இதை நல்லது, ஸுன்னத்‌, வாஜிப்‌ என்று சொன்னதில்லை. 

அறிஞர்களின்‌ எந்த நூல்களிலும்‌ இதைக்‌ குறிப்பிடப்படவுமில்லை. இவற்றைப்‌ பாமரமக்கள்‌ இன்னும்‌ விளங்காமலிருக்கின்றனர்‌.

ஸுன்னத்தோ, வாஜிபோ இல்லாத ஒரு செயலை ஸுன்னத் அல்லது வாஜிப்‌ என்ற நம்பிக்கையில்‌ எவர்‌ புரிந்தாலும்‌ அவரை வழிகெட்டவன்‌ (முட்டாள்‌) என்று கூற வேண்டும்‌. இது அறிஞர்களின்‌ தீர்ப்பாகும்‌. ஏனெனில்‌ அல்லாஹ்வுக்குக்‌ கீழ்படிகிற வணக்க வழிபாடுகள்‌ அனைத்தும்‌ வாஜிப்‌ அல்லது முஸ்தஹப்பு என்ற சட்டங்களுக்கு உட்பட்டதாகத்தான்‌ இருக்க வேண்டும்‌. இவ்விரு சட்டங்களுக்கும்‌ உட்படாத செய்கைகளை எவர்‌ காட்டினாலும்‌ அவர்‌ வணக்க முறைகளில்‌ தவறியவர்‌ என்றே கூற வேண்டும்‌.

இம்மாதிரியான வேண்டாச்‌ செயல்களைப்‌ பற்றி அவற்றில்‌ பற்பல பலாபலன்களைக்‌ கண்கூடாகக்‌ கண்டதாகவும்‌ சிலர்‌ சொல்கிறார்கள்‌. நிறைய நன்மைகளைப்‌ பெற்றதாகக்‌ கூறி தம்‌ விருப்பத்திற்கும்‌, ஆசைக்கும்‌ இசைந்தவாறு பொய்ச்‌ சான்றுகளைக்‌ காட்டுகின்றனர்‌. இவற்றையெல்லாம்‌ இவர்களுக்கு காட்டிக்‌ கொடுத்தவர்கள்‌ யார்‌?

இவர்களின்‌ மனோ-இச்சைகளா அல்லது குர்‌ஆனும்‌, ஹதீஸுமா? இவற்றை இஸ்லாம்‌ மார்க்கத்திலுள்ள செயல்களாக எப்படிக்‌ கூற முடியும்‌? நபி (ஸல்‌) அவர்களும்‌, முன்னர்‌ வந்த நபிமார்களும்‌, இவர்களுள்‌ எவருமே மனிதன்‌, மலக்கு, காலஞ்சென்ற நபி இவர்களைக்‌ கொண்டெல்லாம்‌ ஷபாஅத்தையும்‌, வஸீலாவையும்‌ வேண்டலாமென்றோ அவ்லியாக்கள்‌, ஸாலிஹீன்கள்‌ மேலும்‌ கண்களை விட்டும்‌ மறைந்திருக்கும்‌ நாதாக்கள்‌ இவர்களை அழைத்து தம்‌ தேவைகளைக்‌ கேட்கலாமென்றோ அனுமதி வழங்கவில்லை.

இப்படியிருக்க அல்லாஹ்வின்‌ மலக்கே நீங்கள்‌ அல்லாஹ்விடம்‌ எனக்காக ஷபாஅத்தை வேண்டுங்கள்‌. எங்கள்‌ குற்றங்களை பொறுத்துத்தர அவனிடம்‌ பிரார்த்தியுங்கள்‌. என்னை நேரான வழியில்‌ நடத்தவும்‌, எனக்கருள்‌ புரியவும்‌, ஆரோக்கியத்தைத்‌ தரவும்‌ இறைவனை இறைஞ்சுங்கள்‌ என்று கேட்பது முற்றிலும்‌ கூடாத செய்கையாகும்‌.

அன்றி 'அல்லாஹ்வின்‌ நபியே! தூதரே! எனக்கு துஆச்‌ செய்யுங்கள்‌. எனக்காக பிழை பொறுக்கத்‌ தேடுங்கள்‌. எனக்கு உதவி செய்யவும்‌, ஆரோக்கியத்தை அருளவும்‌ அல்லாஹ்வைக்‌ கேளுங்கள்‌ என முன்னோர்கள்‌ பிரார்த்தித்தது கிடையாது. என்‌ பாவங்களையும்‌, உணவு பற்றாக்குரை, எதிரிகளின்‌ அட்டகாசங்கள்‌, எனக்குத்‌ தீமை செய்த இன்னாரைப்‌ பற்றியெல்லாம்‌ உங்களிடம்‌ முறையிட்டு வேண்டுகிறேன்‌. எனக்குதவுங்கள்‌ என்றெல்லாம்‌ முன்னோர்கள்‌ எவரும்‌ நபிமார்களிடமோ, வலிமார்களிடமோ, மலக்குகளிடமோ கேட்கவில்லை. 

'நபியே! வலியே! மலக்கே! என்று அழைத்து, நான்‌ உங்கள்‌ பக்கத்தில்‌ விருந்தாளியாக வந்து நிற்கிறேன்‌. உங்கள்‌ அண்டை வீட்டாரும்‌ நானே. தாங்களை யார்‌ வேண்டி உதவி கோரினாலும்‌, உதவி செய்யும்‌ தன்மை நிறைந்த தாங்கள்‌ ஏழையான எனக்குப்‌ பாதுகாப்பைத்‌ தேடுங்கள்‌. பாதுகாப்பைத்‌ தேடப்படுகிறவர்களில்‌ தங்களை விடச்‌ சிறந்தவர்கள்‌ எவரும்‌ இல்லை. எனக்குப்‌ பாதுகாவலைத்‌ தாருங்கள்‌ என்று முன்னோர்கள்‌ எவரும்‌ கேட்டதில்லை. 

எழுதப்பட்ட காகிதங்களைச்‌ சமாதிகளில்‌ தொங்க விட்டும்‌, குறிப்புத்‌ தாள்களில்‌ இன்னார்‌ பாதுகாவல்‌ கேட்கிறார்‌ என்று வரைந்து விட்டுச்‌ செல்லுதலும்‌ முன்னோர்களிடம்‌ இருக்கவில்லை. இவற்றுள்‌ சில கிறிஸ்தவக்‌ கோவில்களிலும்‌ நடக்கிறது. யூதர்களிலும்‌ இப்பழக்கமுண்டு.

ஆனால்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ இவற்றைப்‌ போதிக்கவில்லையென்பது முஸ்லிம்களின்‌ ஏகமனதான தீர்ப்பாகும்‌. முன்னர்‌ தோன்றிய நபிமார்களும்‌ இவற்றை தம்‌ சமுதாயத்திற்கு விதித்திருக்க மாட்டார்கள்‌ என்பது நிச்சயமாகும்‌. இது விஷயத்தில் வேதத்தையுடைவர்களிடத்து தங்கள்‌ நபிமார்களிடமிருந்து கிடைத்த எந்த சான்றுகளையும்‌ காண முடியாது. முஸ்லிம்களிடத்திலும்‌ இது விஷயத்தில்‌ நபியைப்‌ பின்பற்றி அறிவிக்கப்பட்ட சான்றுகளில்லை. மேற்கூறப்பட்ட தீவினைகளை நபித்தோழர்களும்‌, தாபியீன்களும்‌ செய்ததில்லை. தீனிலும்‌, துன்யாவிலும்‌ எம்‌ பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ காலஞ்‌ சென்றதன்‌ பின்‌ பல வகையான சோதனைகள்‌ ஸஹாபாக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. வறட்சியால்‌ சோதிக்கப்பட்டார்கள்‌. உணவு பற்றாக்குறையாலும்‌, எதிரிகள்‌ பயத்தாலும்‌ சோதிக்கப்பட்டனர்‌. இந்நிலைகளிலெல்லாம்‌ பெருமானாரின்‌ கப்றிலே வந்து தம்‌ சோதனைகளைப்‌ பற்றி முறையிடவில்லை.

'நாயகமவர்களே! தாங்கள்‌ சமூகத்துக்கு ஏற்பட்ட சோதனைகள்‌ விலக அல்லாஹ்விடம்‌ பிரார்த்தியுங்கள்‌. அவர்கள்‌ உதவியைப்‌ பெறவும்‌, அவர்களின்‌ பாவங்களை அல்லாஹ்‌ மன்னிக்கவும்‌ நீங்கள்‌ அல்லாஹ்விடம்‌ கேளுங்கள்‌ என்று அவர்கள்‌ கூறவில்லை.

முஸ்லிம்களின்‌ இமாம்களும்‌, குறிப்பாக நான்கு இமாம்கள்‌ இவற்றை நல்லவையென மதிக்கவில்லை.

இமாம்கள்‌ ஹஜ்ஜின்‌ விலக்கல்களைப்‌ பற்றி பல நூல்கள்‌ எழுதி இருக்கின்றனர்‌. ஹஜ்ஜின்போது நபியின்‌ கப்றில்‌ சென்று தம்‌ சமூகத்தாரின்‌ தேவைகளை முறையிடுதல்‌ ஸுன்னத்‌ என்றோ, நபியிடம்‌ வஸீலா தேடலாம்‌, சிபாரிசு தேடலாம்‌ அவர்கள்‌ உம்மத்‌(சமூகத்‌)துக்கு ஏர்பட்ட ஆத்மீக-இலெளகீக வியாதிகள்‌ அடங்கலையும்‌, மேலும்‌ வறுமை, உணவுபஞ்சம்‌ வறட்சி, எதிரிகள்‌ பயம்‌, அக்கிரமக்காரர்களின்‌ தீங்குகள்‌, மக்கள்‌ அதிகமாகப்‌ புரிகின்ற குற்றங்கள்‌ இவற்றைப்‌ பற்றியோ அல்லது ஒரு தேவையைப்‌ பற்றியோ நபியிடம்‌ முறையிட்டுப்‌ பிரார்த்திக்கலாமென்று எந்த இமாமும்‌ தம்‌ கிரந்தங்களில்‌ எழுதி வைக்கவில்லை. ஏனெனில்‌ இவை பித்‌அத்‌ (இஸ்லாமிய மார்க்கத்திலில்லாத நூதன வழிபாடு)களாகும்‌. ஸுன்னத்‌, வாஜிப்‌ அல்லாத வழிபாடுகளை யார்‌ புரிந்தாலும்‌ அவற்றிற்கு சட்ட அறிஞர்கள்‌ 'அல்பித்‌அத்துஸ்‌ ஸய்யிஆ' என சொல்கிறார்கள்‌. பித்‌அத்துக்கு நபியவர்கள்‌ வழிகேடு என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்‌.

சில புதிய நூதன வழிபாடுகளைக்‌ குறித்து அவை விரும்பத்தகுந்த அனுஷ்டானங்கள்‌ (அல்பித்‌அத்துல்‌ ஹஸனா, மார்க்கத்தில்‌ விரும்பப்படும்‌ புதிய வழிபாடுகள்‌) என்று சிலர்‌ விளக்கம்‌ கொடுக்கிறார்கள்‌. அல்பித்‌அத்துல்‌ ஹஸனா என்று ஒரு செயலை கூறவேண்டுமானால்‌ அச்‌ செய்கைகளைப்‌ பற்றி அது முஸ்தஹுப்‌ என்று காட்டும்‌ ஆதாரங்கள்‌ ஷரீஅத்தில்‌ காணப்பட வேண்டும்‌. எந்த செய்கைக்கு ஸுன்னத்‌, வாஜிப்‌ என்ற விதிகள்‌ நிரூபிக்கப்படவில்லையோ, அவை ஒருபோதும்‌ அல்லாஹ்வைச்‌ சமீபிக்கிற நல்ல வழிபாடாகக்‌ கூறப்பட மாட்டாது. நபியவர்களின்‌ ஏவல்களுக்குட்பட்ட நற்கருமங்களல்லாத வேறு ஒரு செய்கையைப்‌ புரிந்து விட்டு அது நல்ல அனுஷ்டானம்‌ என எவன்‌ கருதுகிறானோ அவனை வழிகெட்ட மூடன்‌, ஷைத்தானின்‌ தோழன்‌, ஷைத்தானின்‌ பாதையை விரும்புகிறவன்‌ என்று சொல்ல வேண்டும்‌.
 
இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌: எங்களுக்கு நபி (ஸல்‌) அவர்கள்‌ ஒரு கோடிட்டுக்‌ காட்டினார்கள்‌. பிறகு தம்‌ வல, இடப்புறங்களிலும்‌ பற்பல கோடுகளைக்‌ கிழித்து விட்டுக்‌ கூறினார்கள்‌: இதோ இந்தக்‌ கோடுதான்‌ அல்லாஹ்வின்‌ பக்கம்‌ சேர்த்து வைக்கின்ற நேரான வழியாகும்‌. இட, வல பக்கங்களில்‌ வரையப்பட்ட கோடுகளைப்‌ பார்த்து இவையனைத்துமே ஷைத்தானின்‌ பாதைகள்‌ என்றும்‌, இப்பாதைகள்‌ ஒவ்வொன்றிலும்‌ ஷைத்தான்‌ நின்று மக்களை வழிதிருப்பிக்‌ கொண்டிருக்கிறான்‌. அவன்‌ மக்களை ஆட்கொண்டு விட்டான்‌ என்று கூறிவிட்டு திருமறையில்‌ வரும்‌ இந்த ஆயத்தை ஓதினார்கள்‌. 

"நிச்சயமாக இதுதான்‌ என்னுடைய நேரான வழியாகும்‌. இதனையே நீங்கள்‌ பின்பற்றுங்கள்‌. மற்ற வழிகளைப்‌ பின்பற்றாதீர்கள்‌. அவை அல்லாஹ்வுடைய வழியிலிருந்து உங்களைப்‌ பிரித்து விடும்‌...” (6:153)

மலக்குகளாகட்டும்‌, நபிமார்கள்‌, வலிமார்கள்‌, நன்மக்கள்‌ எவராயினும்‌ சரியே அவர்கள்‌ காலமான பிறகு அவர்களின்‌ சமாதியில்‌ சென்று சிபாரிசைத்‌ தேடுவதும்‌ வஸீலா பாவமன்னிப்பு மற்றும்‌ இதர தேட்டங்களையெல்லாம்‌ வேண்டுவதும்‌, கப்றுகளில்‌ சென்று மய்யித்திடம்‌ பிரார்த்திப்பதும்‌ மற்றும்‌ இதைப்‌ போன்ற அனைத்துமே மார்க்கத்தில்‌ அனுமதிக்கப்படாத மாபெரும்‌ கொடிய பாவமான ஷிர்க்கும்‌ தப்பான வழிபாடுகளுமாகும்‌. 

இவ்விஷயத்தில்‌ மேலே தரப்பட்டுள்ள விளக்கத்தை ஒவ்வொரு முஸ்லிமும்‌ அறிய வேண்டும்‌. ஏனெனில்‌ இவை இஸ்லாத்தின்‌ அடிப்படை விளக்கமாகும்‌. அல்லாஹ்‌, ரஸுலை நம்பிய ஒவ்வொரு முஸ்லிமும்‌ மேற்கூறப்பட்ட இச்சட்டங்களை விளங்கியிருத்தல்‌ வேண்டும்‌. 

இறந்தவர்களைக்‌ கொண்டு ஷபாஅத்‌ தேடும்‌ விஷயத்திலும்‌ வஸீலாவை வேண்டும்‌ விஷயத்திலும்‌ 'கூடாது' என்பதுதான்‌ சட்டம்‌ என்று உண்மையான முஸ்லிம்‌ ஏற்க வேண்டும்‌ முஸ்லிம்கள்‌ அனைவருக்கும்‌ அப்பட்டமாகத்‌ தெரிகிற நபியவர்களின்‌ வழிமுறைகளுக்கும்‌ (ஸுன்னத்துக்கும்‌) இஸ்லாத்தில்‌ முந்திக்‌ கொண்டு விசுவாசம்‌ கொண்ட அன்ஸாரிகள்‌, முஹாஜிரீன்௧கள்‌ அவர்களை மெய்யாகப்‌ பின்பற்றியவர்கள்‌ அனைவருடைய அபிப்பிராயங்களுக்கும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌, ஸஹாபாப்‌ பெருமக்கள்‌ இவர்களின்‌ ஏகமனதான முடிவுக்கும்‌ (இஜ்மாவுக்கும்‌) மாறாக நடக்கிறவர்களை ஒருபோதும்‌ பின்பற்ற முடியாது.

இதுவரையிலும்‌ கூறிய விளக்கங்களிலிருந்து இறந்தவர்களிடம்‌ சென்று பாவமன்னிப்புக்காகப்‌ பிரார்த்திப்பதையும்‌, அவர்களிடம்‌ வஸீலா தேடுவதையும்‌, சிபாரிசு வேண்டுவதையும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ தடுத்திருக்கிறார்கள்‌ என்று புரிந்து கொள்ளலாம்‌.

நபியவர்கள்‌ எதைச்‌ செய்யக்கூடாதென தடுத்துள்ளார்களோ அது வணக்க வழிபாடாகவும்‌ ஆகமுடியாது. அது ஸுன்னத்‌, வாஜிப்‌ பொன்ற சட்டங்களுக்குள்‌ அடங்கிய சட்டமும்‌ அல்ல. முஹாஜிரீன்கள்‌, அன்சாரிகளின்‌ போக்குமல்ல. இவர்களைப்‌ பின்பற்றியவர்களின்‌ போக்குமல்ல. மாறாக இது இஜ்மாஉக்கு மாற்றமான செய்கையாகும்‌.

இமாம்‌ முஸ்லிமின்‌ ஸஹீஹான ஹுதீஸில்‌ வருகிறது: 'மரணத்திற்கு ஐந்து தினங்களுக்கு முன்னர்‌ நபியவர்கள்‌ கூறினார்கள்‌. உங்களுக்கு முன்னுள்ள சமூகத்தினர்‌ கப்றுகளை மசூதிகளாக்கியிருந்தார்கள்‌. நீங்கள்‌ கப்றுகளை மசூதிகளாக்காதீர்கள்‌. அதை விட்டும்‌ உங்களை தடுக்கிறேன்‌' 

ஆயிஷா (ரலி) அவர்கள்‌ மூலம்‌ அறிவிக்கப்படும்‌ ஒரு ஹதீஸில்‌ மரணத்திற்கு முன்னர்‌ நபியவர்கள்‌ கூறினார்கள்‌: யூதர்களுக்கும்‌, கிறிஸ்தவர்களுக்கும்‌ அல்லாஹ்வின்‌ சாபம்‌ உண்டாகட்டும்‌! இவர்கள்‌ தங்களின்‌ நபிமார்களின்‌ கப்றுகளை பள்ளிகளாக்கினர்‌. மேலும்‌ றாவி கூறுகிறார்‌: நபியவர்கள்‌ இவர்களின்‌ இச்செய்கையைப்‌ பற்றி அச்சுறுத்தினார்கள்‌. இதை நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ சொல்லவில்லையென்று சொன்னால்‌ நபிகளின்‌ கப்றும்‌ உயர்த்தப்பட்டிருக்கும்‌. ஆனால்‌ நபிகள்‌ தம்‌ கப்றை பள்ளியாக்குவதை வெறுத்திருந்தார்கள்‌.

திருமறை, ஹதீஸ், மத்ஹபுடைய இமாம்களின்‌ சான்றுகள்‌ ஆகியவற்றை மூலாதாரமாக வைத்துத்தான்‌ இவர்கள்‌ புரிகிறார்களா?.. இல்லவே இல்லை. மக்களின்‌ ஏகமனதான தீர்மானங்களை அடிப்படையாக்கி இவற்றை அவர்கள்‌ புரியவில்லை. மாறாகத்‌ தம்‌ மனதின்‌ விருப்பத்திற்கொப்பச்‌ செயல்படுகிறார்கள்‌. இச்செய்கைகளை இஸ்லாமிய சமயம்‌ போதிக்கின்ற வாஜிபான அல்லது ஸுன்னத்தான அமல்கள்‌ என்று யாரும்‌ கூறவில்லை. முஸ்லிம்களால்‌ அறியப்பட்ட சட்டங்கள்‌ எத்தனையோ இருக்கின்றன. முஸ்லிம்‌ சமுதாயத்தின்‌ அனைத்து இமாம்களால்‌ வகுத்துக்‌ காட்டப்பட்ட இலட்சோப இலட்சம்‌ சட்டங்களில்‌ இறந்தோரைக்‌ கொண்டு உதவி தேடுவதைப்‌ பற்றியும்‌, இறந்தோரைக்‌ கொண்டு ஷபாஅத்‌ வேண்டுவது பற்றியும்‌ அது வாஜிப்‌ அல்லது ஸுன்னத்  என்று யாரும்‌ சொல்ல மாட்டார்கள்‌.

ஒரு காகிதத்தில்‌ அல்லது தகட்டில்‌ அரபியில்‌ ஏதோதோ எழுதி சுருட்டி தாயத்து கட்டுதல்‌, இவையெல்லாம்‌ இன்று வரையிலும்‌ மதத்தின்‌ பெயரால்‌ செய்யப்பட்டு வருகின்ற மெளட்டீகச்‌ செயல்களாகும்‌. இத்தீவினைகளை நபி (ஸல்‌) அவர்களோ அல்லது இதர நபிமார்களோ தம்‌ சமுதாய மக்களுக்கு எடுத்துக்‌ காட்டியுள்ளார்களா?

இவற்றைச்‌ செய்கிறார்களென்றால்‌ அவர்களில்‌ அனுப்பப்பட்ட நபிமார்கள்‌ அல்லது அந்த நபிமார்களின்‌ தோழர்கள்‌ இவற்றை எடுத்துக்‌ காட்டியதனால்‌ தான்‌ செய்கிறார்கள்‌ என்று நிரூபிக்க முடியுமா? இல்லவே இல்லை. மாறாக அந்நிய ஜாதிகளைப்‌ பின்பற்றி நம்‌ முஸ்லிம்களும்‌ இத்தகைய தீவினைகளில்‌ ஈடுபடுகிறார்கள்‌.

மார்க்க விஷயத்தில்‌ அபிப்பிராயங்களை கூறுகின்ற இஸ்லாமியர்களின்‌ இமாம்களான (முஜ்தஹித்கள்‌) எவருமே ஆதரவு கொடுக்காத எந்த சட்டத்தையும்‌ உண்மையான முஸ்லிம்கள்‌ ஏற்க மாட்டார்கள்‌. 

குறிப்பிட்ட ஒரு அறிஞர்‌ இது விஷயமாக வேறு அபிப்பிராயங்களைக்‌ கூறுகிறாரென்றால்‌ அந்த அறிஞரை நாம்‌ பின்பற்றுவது அவசியமில்லை. இவருடைய இந்த அபிப்பிராயத்தை நாம்‌ எடுக்க வேண்டுமென்பது தேவையில்லை. நபியவர்களுடைய ஹதீஸுக்கும்‌ மாபெரிய நான்கு மத்ஹபுடைய இமாம்களின்‌ ஏகோபித்த அபிப்பிராயங்களுக்கும்‌, அந்த அறிஞர்‌ விபரீதமாக நடந்துக்‌ கொண்டார்‌ என்பது கருத்தாகும்‌. எனவே நபி (ஸல்‌) அவர்களுக்கு விபரீதமான இந்தக்‌ கருத்தில்‌ ஒருபோதும்‌ மனிதனைப்‌ பின்பற்றத்‌ தேவையில்லை.

அறிஞர்‌ என்று கூறக்கூடிய எவரும்‌ இது விஷயத்தில்‌ நபிகள்‌ கூறியதற்கு மாறு செய்யவில்லை.

ஆனால்‌ பிற்காலத்தில்‌ வந்த சில மக்கள்‌ தம்மை அறிஞர்கள்‌ என்று கூறி இது விஷயத்தில்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ போக்குக்கு விபரீதமாக நடந்து கொண்டார்கள்‌.

அப்படியென்றால்‌ இவர்களின்‌ அபிப்பிராயத்தை முஸ்லிம்கள்‌ பின்பற்ற முடியுமா? பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ காலம்‌ சென்ற பின்‌ அவர்களை அழைத்து மேலும்‌ வலிமார்களையும்‌, ஸாலிஹீன்களையும்‌ பிரார்த்தித்து வஸீலா தேடலாமென்றும்‌, அவர்களிடம்‌ ஷபாஅத்தை வேண்டலாமென்றும்‌ வாதிடுபவர்களுக்கு ஷரீஅத்தில்‌ சான்றுகள்‌ இருக்கின்றனவா? இல்லவேயில்லை. இப்படிப்பட்டவர்களையும்‌, நபியவர்களின்‌ போக்குக்கு மாறு செய்பவர்களையும்‌ இமாமாக (முஜ்தஹிதாக) எண்ண முடியுமா? 

ஒருபோதும்‌ இவரை அறிஞர்‌ என்று கூறுவதற்கில்லை. தான்தோன்றித்தனமாக யாரோ கூறிச்‌ சென்ற மூடத்தனத்தை கண்மூடித்தனமாக ஆதரவு அளிப்பவனுக்கு அல்லாஹ்விடம்‌ நிறைய தண்டனைகளுண்டு. ஏனென்றால்‌ அறிவும்‌, தக்க ஞானமும்‌ இல்லாமல்‌ அல்லாஹ்வின்‌ விஷயத்தில்‌ போராடுகிறவனுக்கு இவன்‌ ஒப்பாவான்‌.

இதற்கு பித்‌அத்‌ என்றே கூறவேண்டும்‌. முஸ்லிம்களின்‌ இமாம்கள்‌ யாரும்‌ பித்‌அத்திற்கு துணைநிற்க மாட்டார்கள்‌. நபிமார்கள்‌, ஸாலிஹீன்கள்‌ இவர்களின்‌ சமாதிகளைக்‌ கட்டிஉயர்த்தி அதில்‌ விளக்கேற்றி அலங்கரித்து இறைவனைத்‌ தொழும்‌ பள்ளிவாசல்களைப்‌ போன்று வணக்கஸ்தலமாக்குவதை வன்மையாக நபிகள்‌ கண்டித்து (அது ஹறாம்‌) கூடாத தீயசெயல்‌ எனத்‌ தடுத்துள்ளார்கள்‌. கப்றுகளை அழகு படுத்துவதெல்லாம்‌ மார்க்கத்தில்‌ தடை செய்யப்பட்டுள்ளது. பிற மதத்தவர்களைப்‌ போல பெருமானாரின்‌ சமூகமும்‌ கப்று விஷயத்தில்‌ வழிகேட்டிலாகி விடக்கூடாது என்பதனால்‌ மரணத்தின்‌ தறுவாயில்‌ கூட நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ இதைப்‌ பயங்கரமாக எச்சரித்து உள்ளார்கள்‌.


மசூதிகள்‌ ஏக இறை வழிபாட்டுக்குரியனவே

பள்ளிவாசல்களை நிறுவுவதினால்‌ அல்லாஹ்வைக்‌ தொழுவது மட்டும்‌ இலட்சியமாக இருக்க வேண்டும்‌. முஸ்லிம்கள்‌ தொன்று தொட்டு ஏக இறைவனை மட்டும்‌ வணங்குவதற்கு மசூதிகளைக்‌ கட்டி வந்தார்கள்‌. இப்பள்ளிவாயில்களில்‌ இறைவழிபாடுகளைத்‌ தவிர்த்து வேறு எச்செயலையும்‌ அனுஷ்டானம்‌ என்ற பெயரில்‌ செய்ய முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை. ஏகனைத்‌ தொழலாம்‌. அவனிடம்‌ தன்‌ நாட்டங்களைக்‌ கேட்டுக்‌ கெஞ்சலாம்‌. இதைக்‌ தவிர படைப்பினங்களில்‌ எவரையும்‌ அழைத்துப்‌ பிரார்த்திக்கக்‌ கூடாது.

தொழுவதற்காக முஸ்லிம்களுக்கு மசூதிகள்‌ தேவை என்பதற்காக கப்றுகளில்‌ மசூதிகளைக்‌ கட்டி வைத்து இறைவனுக்காகத்‌ தொழுதாலும்‌ அதுவும்‌ ஒருபோதும்‌ அனுமதிக்கப்பட மாட்டாது. மெய்யாகவே அல்லாஹ்வை மட்டும்‌ வணங்குவதாக இத்தொழுகையால்‌ நாடியபோதிலும்‌ சரியே. (இப்பள்ளிவாசலில்‌ தொழுவது அனுமதிக்கப்பட மாட்டாது). கப்றோடு இணைந்த பள்ளிவாசல்களில்‌ அல்லாஹ்வைத்‌ தொழுவதினால்‌ பிற்காலங்களில்‌ இறைவனைத்‌ தொழும்போது கப்றாளியை எண்ணி அவரிடம்‌ தன்‌ தேவைகளை முறையிடலாம்‌. கப்றும்‌, மசூதியும்‌ ஒன்றோடொன்று சேர்ந்திருப்பதனால்‌ பிரார்த்தனைகள்‌ விரைவில்‌ அங்கீகரிக்கப்‌படலாம்‌ என்பன போன்ற தப்பான எண்ணங்களினால்‌ மனிதன்‌ உந்தப்பட்டுக்‌ தொழுவதற்கு இப்பள்ளியை நாடுவான்‌. இது அவனை ஷிர்க்கின்‌ பக்கம்‌ (இறைவனுக்கு இணை வைப்பதின்‌) பால்‌ கொண்டு சேர்த்து விடும்‌. எனவே தான்‌ பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ சமாதிகளில்‌ பள்ளி கட்டுவதை கண்டிப்பாகத்‌ தடுத்திருக்கிறார்கள்‌.

ஒரு செய்கை (அது எத்தகைய செய்கையானாலும்‌ சரியே) அதைப்‌ புரிவதினால்‌ மனிதன்‌ தன்னை அறியாமலே தவறின்பால்‌ திரும்பி விடுவான்‌ என்றும்‌, அதில்‌ எந்த பலாபலன்களுமில்லை என்றும்‌ தெரியவந்தால்‌ அதைச்‌ செய்யக்கூடாதென்று அவசியம்‌ மனிதனை தடுக்க வேண்டும்‌. இது சட்டக்கலை அறிஞர்களின்‌ பொதுவான தீர்ப்பாகும்‌.

நபி (ஸல்‌) அவர்கள்‌ சூரியன்‌ உதயமாகிக்‌ கொண்டிருக்கும்‌ நேரம்‌, சூரியன்‌ பூமத்திய ரேகையில்‌ நடமாடிக்‌ கொண்டிருக்கும்‌ நேரம்‌, அது அஸ்தமிக்கிற நேரம்‌-ஆக இம்மூன்று நேரங்களிலும்‌ தொழக்கூடாதென விலக்கியிருக்கிறார்கள்‌. 

தொழுகை என்பது இறைவனின்‌ திருப்தியைப்‌ பெறுவதற்குரிய ஒரு தூய்மையான வழிப்பாடாகும்‌. அதை மிக விரும்பத்தகுந்த வழிப்பாடுகளில்‌ சேர்க்க வேண்டும்‌.

ஆனால்‌ மேற்கூறப்பட்ட இம்மூன்று நேரங்களிலும்‌ இந்த வழிப்பாட்டை (தொழுகையை) நிறைவேற்றும்போது தீமையான செயலாக அத்தொழுகை நிரூபிக்கப்‌படுகிறது. ஏனெனில்‌ இந்நேரம்‌ முஸ்லிம்களால்‌ நிறைவேற்றப்படும்‌ தொழுகை இணைவைக்கும்‌ ஷிர்க்குக்காரர்களின்‌ தொழுகையோடு ஒப்பாகிவிடும்‌. சூரியன்‌, சந்திரன்‌ மற்றும்‌ நட்சத்திரங்கள்‌, கோளங்கள்‌ இவற்றை வணங்கி வழிபடுகின்ற முஷ்ரிக்குகள்‌ இவற்றிற்கு தலைசாய்த்து ஸுஜுது செய்து இந்நேரங்களில்‌ தம்‌ வணக்கங்களை செலுத்துகின்றனர்‌. 

நட்சத்திரங்களிடமும்‌, சூரிய சந்திரன்களிடமும்‌ தம்‌ தேவையை வேண்டுகின்றனர்‌. இப்படியுள்ள நேரத்தில்‌ இம்முஷ்ரிக்குகளுடன்‌ சேர்ந்து தொழுதால்‌ (நாமும்‌ முஷ்ரிக்குகளுடன்‌ வணங்கும்‌ நேரத்தில்‌ ஒத்திருந்தால்‌) நம்மையும்‌ அந்த வணக்கங்கள்‌ சில நேரங்களில்‌ ஷிர்க்கின்‌ பக்கமாக இழுத்து விடுகிறது.

அன்றியும்‌ இவ்வேளைகளில்‌ தொழுவதில்‌ பிரத்தியேகமான சிறப்போ, மேன்மையோ, விசேஷமோ ஒன்றுமில்லை. பொதுவாக தொழுது இறைவனுக்கு நன்றி செலுத்தி அவன்‌ திருப்தியைப்‌ பெறலாம்‌ என மனிதன்‌ எண்ணினால்‌ கூட அவ்வெண்ணம்‌ வீணாகி விடாது. ஏனெனில்‌ (இது அல்லாத) எந்த நேரமும்‌ தொழமுடியும்‌. அதற்கு அனுமதியும்‌ உண்டல்லவா? எனவே இக்குறிப்பிட்ட சில நேரங்களில்‌ மட்டும்‌ தொழாவிட்டாலும்‌ வேறு எல்லா நேரங்களிலும்‌ தொழலாம்‌. தொழுகையினால்‌ கிடைக்கும்‌ பிரதிபலன்களும்‌ இந்த விலக்களினால்‌ துண்டிக்கப்பட்டு விடாது. மனிதன்‌ தீமையிலிருந்தும்‌ காப்பாற்றப்படுகிறான்‌.

ஆக இந்நேரங்களில்‌ தொழவேண்டாமென தடுக்கப்‌ பட்டிருப்பதெல்லாம்‌ அத்தொழுகையைத்‌ தொழுகிறவன்‌ முஷ்ரிக்குகளைப்‌ போன்று சூரியனை வணங்கி, சூரியனிடம்‌ தன்‌ தேவைகளுக்காகப்‌ பிரார்த்தித்து, அதற்கு வழிபட்டு அதனால்‌ ஷிர்க்கின்பால்‌ சென்று விடலாகாது என்பதை பயப்படுவதனால்தான்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ தொழுகைக்கு இந்நேரங்களைத்‌ தடுத்திருக்கிறார்கள்‌.

இப்பொழுது நாம்‌ தலைப்பிற்கு வருவோம்‌. நபிமார்கள்‌, அவ்லியாக்கள்‌, நாதாக்கள்‌ இவர்களின்‌ சமாதிகளை மசூதிகளாகக்‌ கட்டுவதையும்‌ நபியவர்கள்‌ தடுத்துள்ளார்கள்‌.

ஏனெனில்‌ குறிப்பாக இத்தகைய மசூதிகளில்‌ தொழவருகிறவன்‌ அவன்தொழுகை அவனை  ஷிர்க்கின்‌ பக்கமாக இழுத்துக்‌ கொண்டு போய்‌ சேர்த்து விடுகிறது. காரணம்‌ என்னவென்றால்‌ இப்பள்ளிவாசலை மட்டும்‌ கருதித்‌ தொழ வருகிற மனிதன்‌ பிற்காலத்தில்‌ ஒருமுறை கப்றாளியை மட்டும்‌ நாடி வரக்கூடும்‌. கப்றிலிருப்பவருக்கு மதிப்பையளித்து தாம்‌ செய்கிற ஸுஜுதில்‌ அவருக்கொரு சிறு பங்கைச்‌ சமர்ப்பிக்க இடம்பாடு உண்டல்லவா? இதனால்‌ அவன்‌ விரைவில்‌ முஷ்ரிக்காகி விடுகிறான்‌.

இத்தகைய நிலைமைகள்‌ மனிதனை இணைவைப்பதின்‌ பக்கம்‌ சாட்டி விடக்கூடாது என்பதனால்‌ தான்‌ நபியவர்கள்‌ கப்றுகளில்‌ மசூதிகள்‌ கட்ட வேண்டாம்‌ என்று விலக்கியிருக்கிறார்கள்‌.

கப்றில்‌ இறைவனுக்கு இல்லம்‌ நிறுவுதலும்‌ ஹறாம்‌. அவ்விறையில்லத்தில்‌ சென்று கப்றாளியைப்‌ பிரார்த்திப்பதும்‌ ஹறாம்‌. இவ்விரு ஹறாம்களையும்‌ ஒன்றோடொன்று இணைத்து சீர்தூக்கிப்‌ பார்த்தால்‌ கப்றில்‌ பள்ளிவாசல்‌ கட்டுதலிலுள்ள ஹறாம்‌ சற்று இலேசான விலக்கலா (ஹறாமா)கத்‌ தெரிய வருகிறது. ஆனால்‌ அதைக்‌ கட்டி முடித்த பிறகு அதில்‌ வணக்கம்‌ என்ற பெயரில்‌ எதிர்காலத்தில்‌ நடக்கப்‌ போகிற வன்மைச்‌ செய்கைகளோடு (ஷிர்க்குகளோடு) ஒத்துப்‌ பார்க்கும்‌ வேளையில்தான்‌ இந்தச்‌ செயல்கள்‌ மிகப்‌ பெரிய ஹறாமாகவும்‌, இறைவன்‌ மன்னிக்காத துரோகமாகவும்‌ புலனாகும்‌.

எனவே இப்படியொரு நிலை உருவெடுப்பதை வேரோடு பிடுங்கி வீச வேண்டும்‌ என்பதை நாடிய நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ கப்றில்‌ மசூதிகள்‌ அமைப்பதை ஹறாமாக்கினார்கள்‌.


முஸ்லிம்களின்‌  கப்றுகளை ஸியாரத்‌ செய்வது எப்படி?

கப்று (சமாதி) தரிசனம்‌ என்பது மார்க்கத்தில்‌ அனுமதிக்கப்பட்ட அமைப்பாகும்‌. அனுமதிக்கப்படாத நூதன முறையில்‌ அனுஷ்டிக்கப்படும்‌ அமைப்பு மற்றொன்று. இப்படி ஸியாரத்‌ இரு வகைப்படும்‌. ஷரீஅத்தில்‌ ஆகுமாக்கப்பட்ட ஸியாரத்திற்கு நமது இஸ்லாம்‌ விளக்கம்‌ தரும்போது 'எந்த ஸியாரத்தினால்‌ ஸியாரத்‌ செய்கிறவனின்‌ எண்ணம்‌ கப்றாளிக்காக அல்லாஹ்விடம்‌ பிரார்தித்தல்‌' என்று அமைகிறதோ அதுவே ஷரீஅத்தில்‌ அனுமதிக்கப்படுகிற ஸியாரத்தாகும்‌. மனிதன்‌ இறந்ததன்‌ பின்‌ (ஜனாஸா) தொழுகை நடத்துகிறோமென்றால்‌ அத்தொழுகையின்‌ உட்கருத்து ஜனாஸாவுக்காக பிரார்த்தனை புரிவதாகும்‌.

இதுபோல ஸியாரத்திலும்‌ இறந்தவருக்காக அல்லாஹ்விடம்‌ பிரார்த்தித்தல்‌ என்பதாக மட்டுமே கருத வேண்டும்‌. அன்றி முஸ்லிமல்லாத முனாஃபிக்‌ இறந்த பின்பு அவனுக்காக ஒருபோதும்‌ தொழுகை நடத்தப்பட மாட்டாது. அவனின்‌ சவக்குழியில்‌ கொஞ்ச நேரம்கூட நின்று விட்டுப்‌ போவதையும்‌ தடுக்கப்பட்டிருக்கிறது.

முனாஃபிக்குகளுடைய பிரேதக்குழியில்‌ சற்றுநேரம்‌ பாவமன்னிப்புத்தேடி நிற்பது அவனுக்கு ஜனாஸாத்‌ தொழுகை நடத்துவதற்குச்‌ சமமானது என்று கூறப்படுகிறது. முனாஃபிக்‌ (நயவஞ்சகர்‌) களைப்‌ பற்றி அல்லாஹ்‌ கூறுகிறான்‌: "அந்த முனாஃபிக்குகளில்‌ எவர்‌ இறந்து விட்டாலும்‌ அவர்மீது ஒருபோதும்‌ (ஜனாஸாத்‌) தொழுகை தொழாதீர்கள்‌. அவருடைய கப்றில்‌ (மன்னிப்புக்‌ கோரி) நிற்காதீர்கள்‌.

ஏனென்றால்‌ திட்டமாக அவர்கள்‌ அல்லாஹ்வையும்‌, அவனுடைய தூதரையும்‌ நிராகரித்து விட்டதுடன்‌ பாவிகளாகவே இறந்துமிருக்கின்றனர்‌". (9:24)

அந்நயவஞ்சகர்களுக்காகத்‌ தொழ வேண்டாமென்று நபியை அல்லாஹ்‌ விலக்கியதுடன்‌ அவர்களுக்குப்‌ பாவமன்னிப்பு வேண்டி சவக்குழியில்‌ கூட நிற்கலாகாது என எச்சரிக்கை விடுத்துள்ளான்‌. இவர்கள்‌ அல்லாஹ்வை நிராகரித்தவர்கள்‌, அவனது தூதரை புறக்கணித்தவர்கள்‌. அப்படியானால்‌ இவர்களின்‌ கப்றருகில்‌ நின்று இவர்களுக்காக எப்படிப்‌ பிரார்த்திக்க முடியும்‌.

முஸ்லிமுக்கு மட்டும்‌ ஜனாஸா தொழப்பட வேண்டும்‌. அத்தொழுகையால்‌ இந்த ஜனாஸாவுக்குப்‌ பிரார்த்தனைகள்‌ வேண்டப்படுகின்றன. ஜனாஸாவின்‌ கப்றருகில்‌ நின்று இறைவனிடம்‌ பிரார்த்கிக்கலாம்‌. இப்படி மூமினான மய்யித்துக்கு இவற்றைப்‌ புரிவது நபிகள்‌ காட்டித்‌ தந்த ஸுன்னத்தான வழிமுறையாகும்‌. இவற்றை எல்லா ஸஹாபாக்களும்‌, இமாம்களும்‌, அறிஞர்‌ பெருமக்களும்‌ அறிந்திருந்தார்கள்‌. 

நபியவர்கள்‌ முஸ்லிமின்‌ ஜனாஸாவைத்‌ தொழுது தம்சமூகத்தாருக்கு இவ்வழி முறையைக்‌ காட்டித்‌ தந்தார்கள்‌. ஒருவர்‌ இறந்து அவர்‌ அடக்கம்‌ செய்யப்பட்டபின்‌ கப்றருகில்‌ நின்று கொண்டு தோழர்களை நோக்கி நபியவர்கள்‌ கீழ்வருமாறு கூறினார்கள்‌: மக்களே! இதோ இம்மனிதரிடம்‌ இப்பொழுது கேள்விகள்‌ கேட்கப்படுகின்றன. உறுதிப்பாட்டையும்‌, தளராத நிலையையும்‌, திடமான வார்த்தைகளையும்‌ அல்லாஹ்‌ அவருக்கு அருள்புரிய நீங்கள்‌ பிரார்த்தியுங்கள் (அபூதாவூத்)‌

நபியவர்கள்‌ மதினாவிலுள்ள (அடக்கஸ்தலமான) பகீயில்‌ அடக்கப்‌ பட்டிருப்பவர்களையும்‌, உஹது யுத்தத்தின்‌ போது போராடி இறைவன்‌ பாதையில்‌ தியாகம்‌ செய்த ஷுஹதாக்களின்‌ கப்றுகளையும்‌ சென்று ஸியாரத்‌ செய்ததுடன்‌ கப்று ஸியாரத்தின்‌ போது கீழ்வரும்‌ வார்த்தைகளைச்‌ சொல்ல வேண்டுமென்றும்‌ கற்றுக்‌ கொடுத்தார்கள்‌: 'கப்றிலிருக்கிற மூமின்‌-முஸ்லிம்களே, அல்லாஹ்வின்‌ சாந்தியும்‌ ஈடேற்றமும்‌ என்றும்‌ உங்களுக்கு உண்டாகட்டும்‌. இன்ஷா அல்லாஹ்‌ நாங்கள்‌ உங்களுடன்‌ வந்து சேருவோம்‌. முற்காலத்தில்‌ மரணமடைந்த, எதிர்காலத்தில்‌ மரணமடையப்‌ போகின்ற சகலருக்கும்‌ அல்லாஹ்‌ அருள்பாலிக்கட்டும்‌. எங்களுக்கும்‌, உங்களுக்கும்‌ அல்லாஹ்‌ சுகத்தையளிக்க பிரார்த்திக்கிறோம்‌' என்று கூறிவிட்டு ‘இறைவா! இவர்கள்‌ கூலிகளை நீ பாழாக்கி விடாதே! இவர்களுக்குப்‌ பிறகு எங்களை நீ குழப்பத்தில்‌ தள்ளி விடாதே!' என்றும்‌ பிரார்த்தித்தார்கள்‌.

இப்படிச்‌ சம்பவங்களை விளக்குகிற ஸஹீஹான ஹதீஸ்கள்‌ நிறைய வந்திருக்கின்றன. அபூஹுரைரா (ரலி) மூலம்‌ ஹதீஸ்‌ தொகுப்பாளரான இமாம்‌ முஸ்லிம்‌ (ரஹ்‌) தமது ஹதீஸ்‌ தொகுப்பில்‌ இந்தக்‌ கருத்திற்குரிய ஒரு ஹதீஸைப்‌ பதிவு செய்திருக்கிறார்கள்‌. இப்படி மூமின்களான சத்திய விசுவாசிகளின்‌ சமாதிகளை ஸியாரத்‌ செய்வதின்‌ ஏக இலட்சியம்‌ அவர்களுக்காக அல்லாஹ்விடம்‌ பிரார்த்தனை செய்தல்‌ என்பதாகும்‌.


காஃபிர்களின்‌ கப்ரை ஸியாரத்‌ செய்யலாமா?

இஸ்லாத்தில்‌ அனுமதிக்கப்பட்ட இன்னுமொரு ஸியாரத்தும்‌ நபிகளார்‌ மூலம்‌ அறியப்பட்டுள்ளது. அதுவே காஃபிர்களின்‌ கப்றை ஸியாரத்‌ செய்வது என்பது. காஃபிர்களின்‌ சமாதிகளை ஸியாரத்‌ செய்வது குறித்து ஏராளமான ஹதீஸ்களை அபூஹுரைரா (ரலி) அவர்கள்‌ வாயிலாக இமாம்களான முஸ்லிம்‌, அபூதாவூத்‌, நஸாயி, இப்னுமாஜா போன்ற ஹதீஸ்‌ அறிஞர்களின்‌ தொகுப்புகளில்‌ காணப்படுகின்றன.

அபூஹுரைரா (ரலி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌: நபி (ஸல்‌) அவர்கள்‌ தம்‌ தாயார்‌ ஆமினாவின்‌ கப்றில்‌ வந்து நின்று அழுதார்கள்‌. இந்த வேதனையான காட்சியைக்‌
கண்ட தோழர்களும்‌ கண்ணீர்‌ வடித்தார்கள்‌. பின்‌ நபியவர்கள்‌ தம்‌ தோழர்களைக்‌ கூப்பிட்டு, மக்களே! என்‌ இரட்சகனிடம்‌ என்‌ தாயாருக்காகப்‌ பாவமன்னிப்புத்‌ தேட அனுமதி கோரினேன்‌. அதற்கு அல்லாஹ்‌ அனுமதிக்கவில்லை. கடைசியாக தாயாரின்‌ கப்றையாவது ஸியாரத்‌ செய்ய அனுமதி கேட்டேன்‌. அதற்கு மட்டும்‌ அனுமதித்தான்‌.
எனவே தப்றுகளை எமியாரத்‌ செய்யுங்கள்‌. ஏனெனில்‌ இந்த ஸியாரத்‌ மறுமையைப்பற்றி ஞாபகப்‌ படுத்துகிறது.

எனவே கப்றாளி காஃபிராகட்டும்‌ முஸ்லிமாகட்டும்‌ மெளத்தை ஞாபகப்‌ படுத்தும்‌ விஷயத்தில்‌ கண்டிப்பாக ஸியாரத்‌ பலனளிக்கிறது. ஆனால்‌ ஒன்றை கவனத்தில்‌
கொள்ள வேண்டும்‌. கப்றாளி காஃபிராக (நிராகரிப்பவனாக) இருப்பானென்றால்‌ இவன்‌
கப்றை ஸியாரத்‌ செய்யும்‌ போது இந்த காஃபிருக்காக அல்லாஹ்விடம்‌ பிரார்த்திப்பதோ, இவனுக்குரிய ஏதேனும்‌ தேவைகளை இறைவனிடம்‌ கேட்பதையோ ஒருபோதும்‌ நினைக்கக்‌ கூடாது. இறைவனிடம்‌ பிரார்த்திப்பதைக்‌ கருதி ஸியாத்திற்கு
வரவேண்டுமானால்‌ கப்றாளி மூமினாக இருக்க வேண்டும்‌. (காஃபிரின்‌ சமாதியையும்‌ ஸியாரத்‌ செய்வதற்கு இஸ்லாம்‌ அனுமதி வழங்குகிறதென்றால்‌ அதன்‌ காரணம்‌ ஸியாரத்தினால்‌ முஸ்லிம்‌ படிப்பினை பெற வேண்டுமென்பதுதான்‌).

இஸ்லாம்‌ அனுமதி வழங்காத நூதன அமைப்பில்‌ செய்யப்படும்‌ ஸியாரத்திற்கு வருவோம்‌. கப்றில்‌ அடக்கப்பட்டுள்ளவரிடம்‌ தனக்குரிய தேவைகளை முறையிடல்‌, கப்றாளியிடம்‌ சென்று உதவித்‌ தேடிப்‌ பிரார்த்தித்தல்‌, சிபாரிசுகளைக்‌ கேட்டல்‌
இவற்றை நாடிச்‌ செய்யப்படும்‌ ஸியாரத்துகள்‌ அனைத்தும்‌ பித்‌அத்தான நூதனரீதியில்‌
செய்யப்படும்‌ ஸியாரத்துகளாகும்‌. சமாதியின்‌ அருகில்‌ நின்று வேண்டினால்‌ சீக்கிரம்‌ விடை கிடைத்து விடும்‌ என நினைத்துக்‌ கொண்டு அந்த சமாதியில்‌ சென்று
பிரார்த்திப்பதும்‌, நூதனமான (பித்‌அத்தான) ஸியாரத்‌ என்றே இஸ்லாம்‌ தீர்ப்பு வழங்குகிறது. இந்த அமைப்பிலான அனைத்து ஸியாரத்துகளும்‌ நூதன
அனுஷ்டானங்களாகும்‌. இவற்றை நபியவர்கள்‌ கடுமையாக எதிர்த்துப்‌ போராடியிருக்கிறார்கள்‌. நபித்தோழர்கள்‌ எவரும்‌ இதைச்‌ செய்ததில்லை. நபியவர்களின்‌ கப்றில்‌ கூட இதைச்‌ செய்ய அவர்கள்‌ அன்று முன்வரவில்லை. மற்றெந்தப்‌ பெரியாரின்‌
சமாதியிலும்‌ இம்மாதிரியான ஸியாரத்துகள்‌ நடைபெற்றதில்லை. ஏனெனில்‌ இது
அல்லாஹ்வுக்கு இணை வைப்பதாகும்‌. இன்னும்‌ அதிகமாக இணைவைப்பதின்‌ காரணங்களோடு மனிதனை இது திருப்பி விடுகிறது.

கப்றில்‌ அடக்கப்‌பட்டிருப்பவரிடம்‌ பிரார்த்திப்பதையோ அல்லது அவரின்‌ சமாதி
அருகிலிருந்து இறைவனை அழைத்தால்‌ விரைவில்‌ விடை கிடைக்கும்‌ என்பன போன்ற நாட்டங்கள்‌ ஒன்றுமில்லாது அல்லாஹ்வை மட்டும்‌ தனியாக வணங்குவதற்கென்று நபிமார்கள்‌, வலிமார்கள்‌, நாதாக்கள்‌ இவர்களின்‌ சமாதிகளை மசூதிகளாக்குவது கூட தடுக்கப்பட்டுள்ளது. நபி (ஸல்‌) இதைக்‌ கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள்‌. எந்த ஒரு சமூகத்தார்‌ இதை மீறி செயல்படுகிறார்களோ அவர்கள்‌ எல்லோரும்‌ அல்லாஹ்‌, ரஸுலுடைய கோபத்திற்கும்‌, சாபத்திற்கும்‌ ஆளாவார்கள்‌. நபிகள்‌ பெருமானார்‌ (ஸல்‌)
அவர்கள்‌ கூறுகிறார்கள்‌: 'தம்‌ நபிமார்களின்‌ சமாதிகளில்‌ மசூதிகளைக்‌ கட்டி உயர்த்திய
யூதர்களுக்கும்‌, கிறிஸ்தவர்களுக்கும்‌ அல்லாஹ்வின்‌ சாபம்‌ உண்டாகட்டும்‌. மற்றொரு ஹதீஸில்‌ வருகிறது: 'யூதர்களையும்‌, கிறிஸ்தவர்களையும்‌ அல்லாஹ்‌ அழித்தொழித்து விடுவானாக’ ஏனெனில்‌ இவர்கள்‌ தம்‌ நபிமார்களின்‌ கப்றுகளை இறையில்லங்களாக ஆக்கிக்‌ கொண்டனர்‌' மேலும்‌ றாவி கூறுகிறார்‌: இவர்களின்‌ இத்தீவினைப்‌ பற்றி நபி (ஸல்‌) அவர்கள்‌ அச்சுறுத்தினார்கள்‌. இன்னுமொரு ஹதீஸில்‌ 'உங்களுக்கு முன்னர்‌ வாழ்ந்திருந்தவர்கள்‌ சமாதிகளை மசூதிகளாக்கிக்‌ கொண்டனர்‌. நீங்கள்‌ அதைச்‌ செய்யாதீர்கள்‌. இது விஷயத்தில்‌ நான்‌ உங்களை எச்சரிக்கிறேன்‌. கடுமையாக
உங்களை இதைவிட்டும்‌ தடுக்கிறேன்‌' என்று நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌.

அல்லாஹ்‌ ஒருவனை மட்டும்‌ வணங்கி வழிபடும்‌ எண்ணத்துடன்‌ சமாதிகளில்‌ பள்ளிவாசல்கள்‌ நிறுவுவதைப்‌ பற்றி நபிகள்‌ இந்த மாதிரி கடும்‌ எதிர்ப்புகளைக்‌ காட்டி விளக்கியிருக்கிறார்களென்றால்‌ அதனால்‌ அல்லாஹ்வின்‌ சாபத்திற்கும்‌, கடும்‌ வேதனைக்கும்‌ மனிதன்‌ இலக்காகி விடுவானென்றால்‌, கப்றில்‌ அடங்கியிருப்பவர்களிடம்‌ தம்‌ தேவைகளைக்‌ கேட்க வேண்டும்‌, பிரார்த்தனைகளை கப்றருகில்‌ நின்று பிரார்த்திக்க வேண்டும்‌, நேர்ச்சைகளை கப்றாளிக்காக நேர வேண்டும்‌, அங்கு சென்று உதவி தேடிப்பிரார்த்திக்க வேண்டும்‌, அடக்கப்பட்டிருக்கும்‌ பெரியாரைப்‌ பொருட்டாக வைத்துப்‌ பிரார்த்திக்க வேண்டும்‌, அங்கே தம்‌ தேவைகளை வேண்டினால்‌ சிரமப்படாமல்‌ விரைவில்‌ அவை கிடைத்து விடும்‌, எல்லா நாட்டங்களையும்‌ கப்றாளியின்‌ பொருட்டால்‌ எளிதில்‌ சம்பாதித்து விடலாம்‌ என்ற எண்ணங்களை மனதில்‌ பதிய வைத்து ஒருவன்‌ கப்றைக்‌ கட்டினால்‌ அல்லது கப்றில்‌ மசூதியை நிறுவினால்‌ அல்லது கப்றையே பள்ளியாக மாற்றினால்‌ அவன்‌ நிலை என்னவாக இருக்க முடியும்‌? சிந்திக்க வேண்டும்‌.

நபி நூஹ்‌ (அலை) அவர்களின்‌ காலத்தில்‌ 'ஷிர்க்‌' தலை தூக்க ஆரம்பித்தது. மேற்கூறப்பட்ட செய்கைகள்‌ தாம்‌ ஷிர்க்‌ உண்டாகவும்‌ ஏதுவாக இருந்தன. இதனால்‌
சிலை வணக்கமும்‌ உலகில்‌ தலைகாட்ட துவங்கியது. இப்னு அப்பாஸ்‌ (ரலி) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌: நபி ஆதம்‌, நூஹ்‌ (அலை) இவ்விருவர்களுக்கு மத்தியில்‌ பத்து நூற்றாண்டுகள்‌ இடைவெளியுண்டு. இவ்விடைவெளியில்‌ தோன்றிய அனைத்து மக்களும்‌ முஸ்லிம்களாக வாழ்ந்திருந்தனர்‌. என்றிலிருந்து சமூகத்திலுள்ள நன்மக்கள்‌, ஸாலிஹீன்கள்‌, பெரியோர்கள்‌ இவர்களின்‌ சமாதிகளை மக்கள்‌ அளவு கடந்து மரியாதை செலுத்த ஆரம்பித்தனரோ அன்று முதல்‌ இணை வைப்பும்‌ (ஷிர்க்கும்‌) தலைதூக்கியது. அதனால்‌ முஸ்ரிக்குகள்‌ என்று ஒரு சாராரும்‌ வெளிப்பட்டனர்‌.

இமாம்‌ புகாரி (ரஹ்‌) அவர்கள்‌ தமது ஹதீஸ்‌ தொகுப்பில்‌ இப்னு அப்பாஸ்‌ (ரலி) அவர்கள்‌ வழியாகவும்‌, மற்றும்‌ வேறு அறிஞர்களின்‌ வழியாகவும்‌ மேலும்‌ திருமறை வியாக்கியானிகள்‌ தம்‌ தப்ஸீர்‌ நூற்களிலும்‌ கீழ்வரும்‌ திருவசனத்தில்‌ காணப்படுகின்ற "அன்றி அவர்கள்‌ கூறினர்‌. நீங்கள்‌ உங்கள்‌ தெய்வங்களை விட்டு விடாதீர்கள்‌. வத்து,
ஸுவாஉ, யகூஸ்‌, யஊக்‌, நஸ்ர்‌ ஆகிய விக்ரஹங்களில்‌ எதையும்‌ விட்டு விடாதீர்கள்‌" (71:23). 

இந்த சாமிகள்‌ அனைவரும்‌ நூஹ் நபியவர்களின்‌ சமூகத்தில்‌ தோன்றிய பெரியார்களேயாவர்‌. இவர்கள்‌ காலஞ்‌ சென்ற பின்னர்‌ இவர்களுடைய சமாதிகளில்‌
மக்கள்‌ மண்டியிட்டுக்‌ கிடந்து தம்‌ காலத்தைக்‌ கழித்ததோடு இவர்களுக்கு பிம்பங்களையும்‌ அமைத்து அவற்றிற்கு வழிபாடுகள்‌ செய்தும்‌ வரலாயினர்‌ என்று கூறுகிறார்கள்‌. அதன்‌ பிறகு அறபிக்‌ குலங்களில்‌ இச்சிலைகள்‌ அனந்தரச்‌ சொத்தாக வந்து சேர்ந்தது என்று இப்னு அப்பாஸ்‌ (ரலி) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌.


நாத்திகர்களிடத்தில்‌ ஸியாரத்தின் தாத்பரியம்‌.

தத்துவ ஞானிகளிலுள்ள சில தஹ்ரிய்யாக்கள்‌ (நாத்திகர்கள்‌) ஸியாரத்தின்‌ போது புதுமாதிரியான ஒரு ஷிர்க்கையும்‌ மக்களுக்கு விளக்கி காட்டியிருக்கிறார்கள்‌. அவர்களுடைய சித்தாந்தம்‌ வானங்களையும்‌, பூமியையும்‌ அல்லாஹ்‌ ஆறு நாட்களில்‌ படைத்தான்‌ என்பதெல்லாம்‌ உவமிப்புகள்தாம்‌ உன்மையல்ல என்பதாகும்‌.

சின்னஞ்சிறு தூசியிலிருந்து வானவெளியில்‌ கோளப்‌ பாதையில்‌ சுழலும்‌ பிரமாண்டமான கிரகங்கள்‌ வரை அவற்றின்‌ ஒவ்வொரு அம்சத்தையும்‌ தனித்தனியாக
அல்லாஹ்‌ ஆழ்ந்து அறிகிறான்‌. தன்னுடைய அனைத்துப்‌ படைப்பினங்களின்‌ குரல்களையும்‌ நுணுக்கமாக கேட்கும்‌ பேராற்றலும்‌ அவனுக்கு உண்டு. அவற்றின்‌ தேட்டங்கள்‌ அனைத்தையும்‌ கேட்டு விளங்கி விரும்பியவர்களுக்கு விடை கொடுப்பான்‌
என்பன போன்ற தெளிவான உண்மைகளை நாத்திகர்கள்‌ புறக்கணித்துக்‌ கூறுகின்றனர்‌.
நபிமார்கள்‌, வலிமார்கள்‌, உத்தமர்கள்‌ இவர்கள்‌ வாழ்ந்திருக்கையில்‌ அல்லாஹ்விடம்‌
கேட்கின்ற சிபாரிசின்‌ கருத்தையும்‌ மூமின்கள்‌ விளங்கியிருப்பதற்கு முரணாக நாத்திகர்கள்‌ குறிப்பிடுகிறார்கள்‌.

மூமின்களிடம்‌ ஷபாஅத்‌ என்றால்‌ அல்லாஹ்விடத்தில்‌ தேவைகளை வேண்டிப்‌ பிரார்த்திப்பதல்லவா? முஸ்லிம்‌ தன்‌ சகோதரனின்‌ வேண்டுகோளை முன்வைத்து அல்லாஹ்விடம்‌ மன்றாடினால்‌ அவன்‌ விரும்பியவர்களின்‌ பிரார்த்தனைகளை ஏற்கிறான்‌. சிபாரிசைக்‌ கேட்டவன்‌ பயன்‌ பெறுகிறான்‌. குழந்தைச்‌ செல்வம்‌ வேண்டுமென அல்லாஹ்விடம்‌ பிரார்த்திப்பவனுக்குக்‌ குழந்தைகள்‌ பிறக்கின்றன. மழை பெய்யச்‌ செய்ய வேண்டுமென்று தேவைப்பட்டால்‌ மழை பெய்கிறது. இதர தேவைகள்‌
அல்லாஹ்விடம்‌ சமர்ப்பிக்கப்பட்டால்‌ கிடைத்து விடுகின்றன. ஆக வாழ்ந்திருக்கும்‌ ஸாலிஹான பெரிய மக்களின்‌ துஆக்களை ஏற்று அல்லாஹ்‌ தன்‌ அடியார்களின்‌ தேட்டங்களை நிறைவேற்றிக்‌ கொடுக்கிறான்‌. இது மூமின்கள்‌ அறிந்துள்ள ஷபாஅத்‌
ஆகும்‌.

ஆனால்‌ நாத்திகர்கள்‌ ஷபாஅத்துக்குரிய இக்கருத்தைத்‌ திருப்பி விட்டார்கள்‌. மழை
பெய்வதானாலும்‌ சரி, இடி-மின்னல்‌ போன்றவை ஏற்பட்டாலும்‌ சரி, மனிதகுலத்தின்‌ பிறப்பு, இறப்பு, வாழ்வு, தாழ்வு, நோய்‌, நொடி, இன்பம்‌, துன்பம்‌ போன்ற எதுவானாலும்‌ சரியே. ஆகாயங்கள்‌, பூமி ஆகியவற்றில்‌ நடக்கும்‌ அத்தனை சம்பவங்களும்‌
அல்லாஹ்வின்‌ வல்லமையால்‌ நடக்கக்‌ கூடியவை அல்ல. நன்மக்களின்‌ பிரார்த்தனைகளையும்‌ இறைவன்‌ கேட்க மாட்டான்‌. அதற்கு அவன்‌ சக்தியுள்ளவனும்‌ அல்ல. மாறாக இவ்வனைத்து சம்பவங்களும்‌ கிரகங்களின்‌ இயற்கை விதிகளினால்‌
நடப்பது போல காலஞ்சென்ற மனிதனின்‌ ஆத்மாவுக்குள்‌ மறைந்திருக்கும்‌ வலுவானதொரு சக்தியினாலும்‌ இவையெல்லாம்‌ நடக்கின்றன. நல்ல ஒரு மனிதன்‌ காலஞ்சென்ற பின்பு அவருடைய உற்ற சினேகிதர்‌ தம்‌ சமாதியைச்‌ சந்திக்க வரும்போது கப்றிலிருப்பவருக்கும்‌, அவரை சந்திக்கவரும்‌ நண்பருக்குமிடையில்‌ அல்லாஹ்வினால்‌ அறிய முடியாத ஒரு வகையான ஆத்மீகத்‌ தொடர்பு உண்டாகிறதாம்‌. 

இத்தொடர்பினால்‌ ஸியாரத்‌ செய்தவருக்குத்‌ தம்‌ தேவைகளெல்லாம்‌ கிடைத்து விடுகிறதாம்‌. இப்படிப்‌ பச்சையாக இறைவனைப்‌ புறக்கணிக்கும்‌
சித்தாந்தங்களை மேலான தம்‌ கருத்துக்களென்று கூறியிருக்கிறார்கள்‌. இஸ்லாமியர்களான சில மெளட்டீகர்களும்‌ இந்தக்‌ கருத்தை ஆதரிக்காமலில்லை.

வெயிலில்‌ கண்ணாடியைக்‌ காட்டினால்‌ சூரியனின்‌ சுடர்கள்‌ கண்ணாடியை நோக்கிப்‌ பாய்கின்றன. கண்ணாடியோ தான்‌ பெற்றதை திருப்பியடிக்கிறது.
இக்கண்ணாடியிலிருந்து பிரதி பலிக்கின்ற சுடர்களை மற்றொரு கண்ணாடியில்‌ செலுத்துகிறது என்று வைத்துக்‌ கொள்வோம்‌. அப்படியென்றால்‌ அந்தக்‌ கண்ணாடியும்‌ சுடர்‌ விடத்‌ தயாராகும்‌. இவ்விரண்டாவது கண்ணாடியின்‌ சுடரினால்‌ தூரத்திலிருக்கும்‌ சுவர்‌ வெளிச்சத்தைப்‌ பெறுவது போல ஸியாரத்‌ செய்கிறவன்‌ கப்றிலிருக்கின்ற
மய்யித்திடமிருந்து தமது வாழ்க்கையின்‌ தேவைகளை பெறுகிறாராம்‌. (மய்யித்துகள்‌ அக்லுல்‌ பஃஆலிடமிருந்து இதைப்‌ பெறுகிறதாம்‌). நாத்திகர்களின்‌ மேற்கூறிய விதண்டாவாகங்களுக்கும்‌, ஒழுக்கக்‌ கேடான தத்துவங்களுக்கும்‌ இதுவே சான்றாகும்‌.

பிம்பங்கள்‌, சாமிகள்‌ எங்கெல்லாம்‌ காணப்படுகின்றனவோ அங்கெல்லாம்‌ ஷைத்தான்‌, ஜின்களின்‌ நடமாட்டம்‌ அதிகமாக உண்டு. அங்கே ஷைத்தான்களின்‌ சம்பாஜணைகளைக்‌ கேட்க முடியும்‌. சமாதிகளிலிருந்து சப்தங்களைச்‌ சிலர்‌ கேட்டிருக்கின்றனர்‌. யார்‌ யாரோ தம்‌ முன்‌ வந்து உரையாடுவது போன்ற குரல்களை
உணர்கின்றனர்‌. ஏதோ சில பெரிய மனிதர்கள்‌ உதயமாகி மறைவது போன்ற காட்சிகள்‌,
கப்றைப்‌ பிளந்து மய்யித்து வெளியே உதயமாகி ஸியாரத்துச்‌ செய்தவனைக்‌ கட்டியணைக்கும்‌ சில காட்சிகள்‌, அற்புதமான பற்பல நடத்தைகள்‌ இம்மாதிரி மனிதனை வழிகெடுக்கும்‌ எல்லாத்‌ தீயசெய்கைகளையும்‌ கப்றுகளில்‌ காண முடிகின்றன.
கப்றுகளை சிலைகளாகத்‌ திருப்பி, வணக்கஸ்தலங்களாக மாற்றி ஷிர்க்கின்‌
வாசல்களைத்‌ திறந்து வைக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு ஷைத்தான்களும்‌,
ஜின்களும்‌ இவற்றைக்‌ துணிவாக செய்து வருகிறார்கள்‌. வையகத்தில்‌ கப்றுகளை
பிம்பங்களாகத்‌ திருப்பியதும்‌, அதிலிருந்து இறைவனுக்கு இணைவைத்தல்‌ உண்டானதும்‌ ஷைத்தானின்‌ காரணம்‌ தானென்பதை வரலாறும்‌ கூறுகிறது. இதை விளங்காத மனித சமூகம்‌ சமாதியில்‌ புதைக்கப்‌ பட்டிருக்கும்‌ கப்றாளியே இவற்றைப்‌ புரிகிறார்‌ என நம்பி ஏமாற்றமடைந்து தன்‌ வலுவான இறை நம்பிக்கையைப்‌ பறிகொடுத்து விடுகின்றது. ஷைத்தான்கள்‌ மனித உருவில்‌ ஆள்மாறாட்டம்‌ பண்ணுவதை மக்கள்‌ தெரியாமலிருக்கிறார்கள்‌. இதனால்‌ கப்றருகில்‌ கண்ட கூத்தாட்டங்களைப்‌ பற்றி அவை நபியின்‌ அல்லது மலக்கின்‌ செயல்களென்று மதித்து
தமது தீர்க்கமான ஈமானுக்கு இழுக்கு ஏற்படுத்திக்‌ கொள்வதுடன்‌ ஷிர்க்கிலும்‌ நுழைந்து விடுகின்றனர்‌. இதைப்பற்றிய சம்பவங்கள்‌ ஏராளம்‌ இருக்கின்றன. அவற்றையெல்லாம்‌ கூறினால்‌ புத்தகம்‌ நீண்டு விடும்‌ என்பதால்‌ இங்கே முடித்துக்‌ கொள்கிறேன்‌.

உண்மையான இறைவிசுவாசியின்‌ நம்பிக்கை இப்படியொன்றுமிருக்காது. இதைப்பற்றி
ஷைத்தானின்‌ விளையாட்டுகள்‌ என்று நம்பி தீர்க்கமான முடிவுக்கு வந்து விடுகிறான்‌.
இப்படிப்பட்ட ஷைத்தானின்‌ நடிப்புக்களை சமாதியில்‌ காணும்போது உண்மை விசுவாசி மெய்யாகவே தூய உள்ளத்துடன்‌ ஆயத்துல்‌ குர்ஸியை ஓதி விட்டு ஷைத்தானின்‌ மாயாஜாலக்தில்‌ சிக்காமல்‌ தன்னைக்‌ காத்துக்‌ கொள்வான்‌. எல்லா ஷைத்தான்களும்‌
பூமியில்‌ அப்படியே அடங்கி ஒடுங்கி விடுகின்றன. இறைவனின்‌ திருமறை வசனங்களை குறிப்பாக ஆயத்துல்‌ குர்ஸியை ஓதுவதினால்‌ ஷைத்தான்களையும்‌, காஃபிரான ஜின்களையும்‌ விரட்டியடிக்க முடியுமல்லவா? உண்மையில்‌ ஆள்மாறாட்டம்‌ செய்கிறவர்‌ மலக்காகவோ, மூமினான ஜின்னாகவோ இருப்பார்களென்றால்‌, திருமறை
வசனங்கள்‌ அவர்களுக்கு எந்தத்‌ துன்பத்தையும்‌ அளிக்காது. இது விஷயமாக ஹதீஸில்‌
பல சம்பவங்கள்‌ காணப்படுகின்றன.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும்‌ ஒரு ஹதீஸில்‌ ஒருமுறை ஜின்னொன்று அபூஹுரைராவை நோக்கி நீர்‌ படுக்கைக்குச்‌ சென்றால்‌ ஆயத்துக்‌ குர்ஸியை ஓதும்‌. அப்படி நீர்‌ செய்தால்‌ அல்லாஹ்வின்‌ பாதுகாவலிலே இரவு முழுவதும்‌ சுகமாக இருக்க
படியும்‌. எந்த ஷைத்தானும்‌ விடியற்காலை வரையில்‌ உம்மை நெருங்க முடியாது" என்று கூறியதாம்‌. இதை நபியிடம்‌ வந்து அபூஹுரைரா அறிவித்த போது அந்த
ஜின்னின்‌ கூற்று உண்மை. அவனோ பொய்யன்‌' என்று நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. கப்றில்‌ ஏதேனும்‌ பிசாசுகளின்‌ தொல்லைகள்‌ காணப்பட்டால்‌
அதைவிட்டும்‌ உண்மையான முஸ்லிம்‌ அல்லாஹ்விடம்‌ பாதுகாவல்‌ தேடிக்‌ கொள்வான்‌. ஷரீஅத்தில்‌ அனுமதிக்கப்பட்ட பாதுகாவலைத்‌ தேட வேண்டும்‌.

பற்பல நபிமார்களின்‌ வரலாற்றைப்‌ படித்தால்‌ அவர்களின்‌ வாழ்க்கையில்‌ பல தடவை
ஷைத்தான்கள்‌ குறுக்கிட்டு அவர்களுக்குத்‌ துன்பமும்‌, தீவினையும்‌ கொடுக்க முனைந்திருக்கின்றன. நெறிகெட்ட செய்கைகளின்பால்‌ அவர்களைக்‌ திருப்ப
முற்பட்டிருக்கின்றன. வணக்கவழிபாட்டில்‌ அவர்கள்‌ ஈடுபட்டிருக்கின்ற வேளையிலும்‌ அவர்களுக்குத்‌ தீங்கு செய்து தொல்லையும்‌, தொந்தரவும்‌ கொடுக்க ஷைத்தான்‌ எத்தனித்தான்‌. இதைச்‌ சரித்திரத்திலும்‌ காணலாம்‌. ஒருநாள்‌ நபியவர்களின்‌ பக்கம்‌ ஒரு
ஜின்‌ நெருப்புக்‌ கொள்ளியைத்‌ தூக்கி வந்து அவர்கள்‌ மீது வீசி நபியை வேதனைப்‌படுத்த எத்தனித்த வேளையில்‌ ஜிப்ரீல்‌ (அலை) அவர்கள்‌ வந்து கீழ்வரும்‌
(அபுத்தய்யாஹ்‌ அவர்கள்‌ அறிவிக்கும்‌ ஹதீஸில்‌ வருகின்ற) பிரபலமான பாதுகாப்புச்‌ சொற்களை சொல்லும்படி நபியவர்களுக்குக்‌ கூறிவிட்டுச்‌ சென்றார்கள்‌. 

அபுத்தய்யாஹ்‌ அவர்கள்‌ குறிப்பிடுகிறார்கள்‌: அப்துர்‌ ரஹ்மான்‌ இப்னு கன்பஜ்‌ என்பவர்கள்‌ நபியவர்களின்‌ தோழமையைப்‌ பெற்ற ஸஹாபிகளில்‌ வயது முதிர்ந்தவர்களாக இருந்தார்கள்‌. ஒருமுறை அவ்வயோதிகரிடம்‌ ஒரு மனிதர்‌ வினவினார்‌: 'பெருமானார்‌ (ஸல்‌) அவர்களை ஷைத்தான்‌ சூழ்ந்து கொண்டபோது அவர்கள்‌ எதைக்‌ கையாண்டார்கள்‌... 

இக்கேள்விக்கு விடை கொடுத்த அப்துர்‌ ரஹ்மான்‌ அவர்கள்‌ கீழ்வருமாறு விளக்கிக்‌ காட்டினார்கள்‌. 

பார்வதங்களிலிருந்தும்‌, மலையிடுக்குகளில் இருந்தும்‌ ஒரு கும்பல்‌ ஷைத்தான்கள்‌ இறங்கி வந்து பெருமானார்‌ (ஸல்‌) அவர்களை முற்றுகையிட்டனர்‌. அவற்றுள்‌ ஒரு ஷைத்தானிடம்‌ தீப்பந்தமொன்று இருந்தது. அதை ஏந்தி வந்து நபியின்‌ பக்கம்‌ சென்று அவர்களைச்‌ சுட்டுக்‌ கரிக்க முனைந்தான்‌. இதைக்கண்ட பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ திடுக்கிட்டார்கள்‌. அவ்வேளையிலே ஜிப்ரீல்‌ (அலை) அவர்கள்‌ வந்து 'நபியே! சொல்லுங்கள்‌' என்று குரல்‌ கொடுத்தார்கள்‌. நான்‌ எதைச்‌ சொல்ல வேண்டும்‌' என்று நபிகளார்‌ கேட்க இந்த துஆக்களைச்‌ சொல்லும்படி ஜிப்ரீல்‌ (அலை) அவர்கள்‌ சொல்லிக்‌ கொடுத்தார்கள்‌: ‘பூரணமான இறை வசனங்களின்‌ பொருட்டால்‌ நான்‌ அல்லாஹ்விடம்‌ பாதுகாவல்‌ தேடுகிறேன்‌' இவ்வசனங்களை நல்லார்‌, பொல்லார்‌ எவர்‌ உரைத்தாலும்‌ அல்லாஹ்‌ படைத்த அனைத்து தீங்குகளிலிருந்தும்‌ தப்பிக்க முடியும்‌. வானங்களிலிருந்து இறங்குகின்ற தீமைகள்‌, வானங்களை நோக்கிச்‌ செல்லுகின்ற தீமைகள்‌, பூமியை நோக்கி வரும்‌ தீமைகள்‌, இரவிலும்‌-பகலிலும்‌ உண்டாகும்‌ குழப்பங்கள்‌, தொல்லைகள்‌, தொந்தரவுகள்‌, இன்னும்‌ வீடு குடிகளில்‌ பாய்ந்து வருகிற தீய செய்கைகள்‌, கொடுமைகள்‌, அக்கிரமஙகள்‌ அனைத்தையும்‌ விட்டுத்‌ தப்பிக்க முடியும்‌. காருண்யனாகிய அல்லாஹ்வே! என்னை நீ காத்தருள்வாயாக.

இந்த வசனங்களை நபிகள்‌ கூறியதும்‌ ஷைத்தானின்‌ கரத்திலிருந்த தீ அணைந்து விட்டதுடன்‌ அல்லாஹ்‌ அந்த ஷைத்தான்களைத்‌ தோற்கடிக்கவும்‌ செய்தான்‌. 

இமாம்‌ புகாரி, முஸ்லிம்‌ இவர்களின்‌ ஹதீஸ்‌ தொகுப்பிலும்‌ அபூஹுரைரா (ரலி) அவர்கள்‌ அறிவித்ததாக இன்னுமொரு சம்பவம்‌ பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில்‌ நபி (ஸல்‌)
அவர்கள்‌ கூறுகிறார்கள்‌: 'பராக்கிரமசாலியான ஒரு ஜின்‌ திடீரென வந்து எனக்குக்‌ கொடுமைத்‌ தரவும்‌, என்‌ தொழுகையை முறித்து விடவும்‌ எத்தனித்தது. உடனே அல்லாஹ்‌ எனக்கு நல்ல தீர்க்கமான சக்தியைத்‌ தந்தான்‌. அதனால்‌ அந்த ஜின்களை
நான்‌ பயங்கரமாக முறியடித்தேன்‌. அதைப்பிடித்து பொழுது விடியும்‌ வரையிலும்‌ இந்தப்‌ பள்ளித்‌ தூணில்‌ கட்டி வைத்து உங்களுக்கு காட்டித்‌ தரலாமென்று நினைத்தேன்‌. ஆனால்‌ சகோதரர்‌ நபி சுலைமான்‌ (அலை) அவர்கள்‌ (திருமறை குறிப்பிடுகிறது)
கூறினார்கள்‌: "என்‌ இறைவனே என்னுடைய குற்றங்களை மன்னித்துவிடு. எனக்குப்‌ பின்‌
எவருமே அடைய முடியாத ஒரு ஆட்சியை எனக்கு நீ தந்தருள்‌. நிச்சயமாக நீயே பெரும்‌ கொடையாளி...” (38:35). அந்த ஜின்‌ தன்‌ சூழ்ச்சியில்‌ வெற்றி பெறாமல்‌
நஷ்டவாளியாகக்‌ திரும்பி சென்றது.

ஆயிஷா (ரலி) அவர்கள்‌ அறிவிக்கும்‌ மற்றோர்‌ ஹதீஸில்‌ 'நபி (ஸல்‌) அவர்கள்‌ தொழுது கொண்டிருக்கும்‌ போது ஒரு ஷைத்தான்‌ அவர்களிடம்‌ வந்தது. அதை நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ பிடித்து கழுத்தை நெறித்துக்‌ கொல்ல முற்பட்டார்கள்‌. பிறகு
கூறினார்கள்‌. 'இந்த ஷைத்தானின்‌ நாவிலுள்ள ஈரம்‌ இதோ என்‌ கையில படிந்திருக்கிறுது. ஆனால்‌ சுலைமான்‌ நபி அவர்களின்‌ பிரார்த்தனை மட்டும்‌
இல்லாதிருப்பின்‌ அந்த ஷைத்தானைப்‌ பிடித்துக்‌ கட்டி மக்களின்‌ பார்வைக்கு விட்டிருப்பேன்‌. (நஸாஈ)

அபூஸயீத்‌ அல்‌-குத்ரீ அவர்கள்‌ வாயிலாக அறிவிக்கப்படும்‌ ஹதீஸில்‌ நபியவர்கள்‌
ஸுப்ஹு தொழுது கொண்டிருந்தார்கள்‌. அபூ ஸயீத்‌ அல்‌-குத்ரீயும்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ பின்னால்‌ நின்று தொழுகிறார்கள்‌. இந்நேரம்‌ நபியவர்களுக்குத்‌ திருமறை வசனங்கள்‌ ஓதத்‌ தடுமாற்றம்‌ ஏற்படுகிறது. இதைப்பின்னால்‌ நின்று தொழுது கொண்டிருந்த ஸஹாபிகள்‌ கவனித்தார்கள்‌. தொழுகை முடிந்தபின்‌ நபியவர்கள்‌ பின்வருமாறு கூறினார்கள்‌: 'இப்லீஸுடன்‌ நீங்கள்‌ என்னைப்‌ பார்த்திருக்க வேண்டியிருந்தது. தொழுகையில்‌ அவன்‌ என்னை அணுகினான்‌. என்‌ கரத்தை நீட்டி அவனைக்‌ கையடக்கினேன்‌. கழுத்தை நெறித்தேன்‌. அவன்‌ நாவிலிருந்து வெளிப்பட்ட
உமிழ்நீரின்‌ ஈரம்‌ இதோ என்‌ பெருவிரலிலும்‌, சுண்டுவிரலிலும்‌ படிந்திருப்பதைப்‌ பாருங்கள்‌. சகோதரர்‌ சுலைமான்‌ நபியின்‌ பிரார்த்தனை மட்டும்‌ இல்லாதிருந்தால் பள்ளிவாசல்‌ தூணில்‌ அவன்‌ கட்டப்பட்டு மதினா நகர சிறுவர்களால்‌ எள்ளி
நகையாடப்படும்‌ ஒரு விளையாட்டுப்‌ பொருளாக அவனை ஆக்கி விடலாமாக இருந்தது. உங்களில்‌ யாராவது தொழும்‌ வேளையில்‌ தனக்கும்‌, கிப்லாவுக்கும்‌ இடையில யாரும்‌ குறுக்கிடக்‌ கூடாது என்று எண்ணினால்‌ அதற்கொப்ப ஒரு திரையைச்‌ செய்யட்டும்‌. (அபூதாவூத், அஹமத்)

இமாம்‌ முஸ்லிம்‌ அவர்கள்‌ அபுத்தர்தா அவர்கள்‌ மூலமாக குறிக்கும்‌ ஒரு ஹதீஸில்‌ கீழ்வருமாறு உள்ளது: 'நபி (ஸல்‌) அவர்கள்‌ தொழுவதற்கு எழுந்து நின்றார்கள்‌. பிறகு அவூது பிலலாஹரி மின்க' (உன்னை விட்டும்‌ அல்லாஹ்விடம்‌ காவல்‌ தேடுகிறேன்‌) என்று சொல்வதை நாங்கள்‌ கேட்டோம்‌. அதன்‌ பின்‌ அல்‌ அனுக பி லனதில்லாஹ்‌' (அல்லாஹுவின்‌ சாபம்‌ உனக்கு உண்டாகட்டும்‌) என்று மும்முறை மொழிந்து விட்டு, ஏதோ ஒரு பொருளை எடுக்கக்‌ கையை நீட்டுவது போல தம்‌ திருக்கரத்தை
நீட்டினார்கள்‌. தொழுகை முடிந்ததும்‌ நாங்கள்‌ எழுந்து சென்று நாயகமே. ஏதேதோ இதற்கு முன்‌ நீங்கள்‌ தொழுகையில்‌ சொல்லாத வார்த்தைகளை இன்று தொழுகையில்‌ நாங்கள்‌ கேட்டோம்‌. கையையும்‌ நீட்டினீர்களே ஏன்‌? என்று கேட்டோம்‌.

அதற்கு நபியவர்கள்‌ பதிலளிக்கையில்‌ அல்லாஹ்வின்‌ கொடிய விரோதி இப்லீஸ்‌ ஒரு தீப்பிழம்பைத்‌ தாங்கி வந்து, என்‌ முகத்திலிட எத்தனித்தான்‌. உடனே 'அவூது பில்லாஹி மின்க' என்று நான்‌ மும்முறை மொழிந்தேன்‌. அல்லாஹ்வின்‌ முழு சாபமும்‌, கோபமும்‌
உண்டாகட்டும்‌ என்றும்‌ கூறினேன்‌. இதைக்கேட்ட இப்லீஸ்‌ சற்று பின்வாங்கினான்‌. இருந்தாலும்‌ அவனைப்‌ பிடித்து வைத்துக்‌ கட்டிவிட நினைத்தேன்‌. நம்‌ சகோதரர்‌ நபி சுலைமான்‌ துஆச்‌ செய்யாமல்‌ மட்டும்‌ விட்டிருந்தால்‌, அவனைப்‌ பிடித்து விலங்கிட்டு
மதினா நகரின்‌ சிறுவர்களைக்‌ கொண்டு விளையாடச்‌ செய்திருப்பேன்‌' என்று கூறி முடித்தார்கள்‌.


ஷைத்தான்‌ தன்‌ கூட்டாளிகளைத்தான்‌ வழி கெடுக்கிறான்‌

இங்கே முக்கியமான ஒன்றைக்‌ கவனிக்க வேண்டும்‌. நபிமார்களையே ஷைத்தான்‌ துன்புறுத்தவும்‌, அவர்களுக்குத்‌ தீங்குகளையும்‌, அக்கிரமங்களையும்‌ விளைவிக்கவும்‌, அவர்களுடைய வணக்கவழிபாடுகளைக்‌ கெடுத்து நாசம்‌ பண்ணிடவும்‌
தயாராவானானால்‌ நபியல்லாத மற்றவர்களின்‌ கதியைப்‌ பற்றி நாம்‌ சிந்திக்க வேண்டும்‌. (சாதாரணமான முஸ்லிம்‌ மனிதனை ஷைத்தான்‌ எப்படி ஆட்கொண்டு அடிமைப்படுத்தி விடுகிறான்‌ என்பதைப்‌ பகுத்துணர்ந்து பார்க்க வேண்டும்‌). 

நபியவர்கள்‌ மனு-ஜின்‌ இரு இனத்திலுள்ள அனைத்து ஷைத்தான்களையும்‌ அடித்து அமர்த்துவதற்குரிய ஆற்றலை பெற்றிருக்கிறார்கள்‌. அல்லாஹ்‌ அதற்குரிய
ஆற்றலையும்‌ அறிவையும்‌ அவர்களுக்கு வழங்கியிருக்கிறான்‌. 

பற்பல வணக்கவழிபாடுகள்‌, திக்ருகள்‌, (இறை தியானங்கள்‌) பிரார்த்தனைகள்‌, இறைவனின்‌
பாதையில்‌ போராடுதல்‌ (ஜிஹாதுகள்‌) போன்ற எத்தனை எத்தனையோ வணக்கங்கள்‌, வழிபாடுகளின்‌ பேருதவியால்‌ ஷைத்தனைப்‌ பிடித்தடக்கி, ஒடுக்கும்‌ திறமை நபிமார்களுக்குண்டு.

ஆனால்‌ சதாரணமான ஒரு முஸ்லிம்‌ இதைப்‌ போன்ற இக்கட்டான வேளையில்‌ என்ன செய்ய முடியும்‌? ஆம்‌! யார்‌ நபிமார்களின்‌ சன்மார்க்கத்தைப்‌ பின்பற்றினார்களோ, அவர்கள்‌ ஷைத்தானின்‌ வலையில்‌ சிக்குண்டு தத்தளிக்காமல்‌ நபிமார்களைக்‌ காத்தது போல அல்லாஹ்‌ இவர்களையும்‌ பாதுகாக்கிறான்‌. எவன்‌ நெறிகெட்டு இஸ்லாம்‌
அனுமதிக்காத நூதன அனுஷ்டானங்களை மார்க்கத்தின்‌ பெயரால்‌ ஏற்படுத்தி, அல்லாஹ்வுக்குரிய கடமைகளை மறந்து, ஏகத்துவத்திற்குரிய மாறுபட்ட
செய்கைகளைச்‌ செய்து, நபிமார்கள்‌, வலிமார்கள்‌, சாந்த சீலர்கள்‌, உத்தமர்கள்‌ இவர்களின்‌ சமாதிகளில்‌ சென்று முட்குத்தி, சிரம்‌ சாய்த்து இன்னும்‌ இவைப்‌ போன்ற செயல்களைச்‌ செய்கிறானோ, அவனை வைத்து திட்டமாக ஷைத்தான்‌ விளையாடுகிறான்‌. இவனை ஷைத்தான்‌ எள்ளி நகையாடுகிறான்‌. ஏகத்துவத்திலிருந்து நிச்சயமாக இவன்‌ மாறி விடுவான்‌. இதனால்‌ இஸ்லாத்திலிருந்து வெளியேறியும்‌ விடுகிறான்‌.

திருமறை கூறுகிறது: "யார்‌ விசுவாசங்கொண்டு தங்கள்‌ இறைவனை முற்றிலும்‌ நம்பி இருக்கிறார்களோ. அவர்களிடத்தில்‌ நிச்சயமாக இந்த ஷைத்தானுக்கு யாதொரு அதிகாரமுமில்லை. அவனுடைய அதிகாரமெல்லாம்‌ அவனுடன்‌ சம்பந்தம்‌ வைப்பவர்களிடமும்‌, அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களிடமுமே செல்லும்‌" (16:99-100). 

மெய்யான என்‌ அடியார்களிடத்தில்‌ திட்டமாக உனக்கு யாதொரு செல்வாக்குமில்லை. வழிகேட்டில்‌ உன்னை பின்பற்றியவர்களைத்‌ தவிர". (15:42).

ஷைத்தானின்‌ சூழ்ச்சியிலிருந்து விடுதலைப்‌ பெற பற்பல வழிகளை முஸ்லிம்கள்‌ தொன்று தொட்டே மேற்கொண்டு வந்தனர்‌. இக்கட்டான சில சந்தர்ப்பங்களில்‌ ஷைத்தான்‌ ஆக்கிரமிக்க முற்பட்டால்‌ அல்லாஹ்விடம்‌ மட்டும்‌ பிரார்த்தித்து அவன்‌ சூம்ச்சியிலிருந்து விடுபட்டவர்களும்‌ முஸ்லிம்களில்‌ உண்டு. நெஞ்சில்‌ ஊடுருவிப்‌
பாய்கின்ற திருமறை வசனங்களில்‌ சிலவற்றைத்‌ தூய தெளிவான உள்ளத்துடன்‌ ஓதினால்‌ எல்லா ஷைத்தான்களிடமிருந்தும்‌ வெற்றி பெறலாம்‌.


கஃபா மனிதனைக்‌ தாவஃப்‌ செய்கிறதா?

புனித மக்கமாநகரில்‌ இருக்கின்ற ஆதி இறையில்லமான கஃபத்துல்லாஹ்‌ அப்படியே
எழுந்து வந்து தன்னை (தவாஃப்‌) சுற்றுவது போல சில காட்சிகள்‌, மாபெரும்‌ அர்ஷும்‌, அதன்‌ மீது பெரியதொரு உருவமும்‌ இருப்பது போலக்‌ காணும்‌ இன்னொரு காட்சி, யார்‌ யாரோ வானத்தில்‌ பறந்து செல்கிறார்கள்‌, சிலர்‌ அணிவகுத்து வானத்திலிருந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்‌, இத்தகைய இன்னுமொரு காட்சி இத்தகைய
காட்சிகளைச்‌ சிலர்‌ காணுகின்றனர்‌.

இவற்றைக்‌ கண்டதிலிருந்து தாம்‌ அல்லாஹ்வைக்‌ கண்டதாகப்‌ பிரகடனப்படுத்தி விடுகின்றனர்‌. இப்படி நடந்திருக்கிறது. அதிலும்‌ குறிப்பாக ஏராளமான வணக்க வழிபாடுகளில்‌ தன்னை ஈடுபடுத்தி சமூகத்தில்‌ வணக்கசாலி என தன்னை விளம்பரம்‌ செய்து கொள்கின்ற வணக்க அபிமானிகளுக்கு இது அடிக்கடி சம்பவிப்பதுண்டு. இவர்கள்‌ இதில்‌ நல்ல நம்பிக்கையும்‌, ஆதரவும்‌ கொண்டிருக்கிறார்கள்‌. ஆனால்‌ இவ்வாறான செய்கைகள்‌ அத்தனையும்‌ ஷைத்தானின்‌ சூழ்ச்சியும்‌, பரிகசிப்பும்‌ என்பதை
இவர்கள்‌ மறந்து விடுகின்றனர்‌. பகுத்துணரும்‌ ஆற்றலையும்‌, போதிய மார்க்க ஞானத்தையும்‌, தன்‌ தீர்க்கமான பாதுகாப்பையும்‌ எவருக்கு அல்லாஹ்‌
வழங்கவில்லையோ, அவர்கள்‌ இத்தகைய சூழ்ச்சியில்‌ அகப்பட்டுத்‌ தத்தளிக்கிறார்கள்‌.

சரியான மார்க்கஞானம்‌ கொடுக்கப்பட்ட உத்தமர்கள்‌ ஒருபோதிலும்‌ இத்தகைய இருட்படலத்தில்‌ சிக்கிவிட மாட்டார்கள்‌.

மாமேதை அப்துல்‌ காதிர்‌ ஜீலானி (ரஹ்‌) அவர்களின்‌ வாழ்க்கை வரலாற்றில்‌ பிரபலமான ஒரு சம்பவம்‌ சொல்லப்படுகிறது. அவர்கள்‌ கூறுகிறார்கள்‌: 'நான்‌
வணக்கத்தில்‌ மூழ்கியிருந்தேன்‌. அந்நேரம்‌ அதிபயங்கரமான ஒரு சிம்மாசனத்தைக்‌ கண்டேன்‌. ஓர்‌ ஒளி அதன்மீது மின்னிக்‌ கொண்டிருந்தது. அந்த சிம்மாசனம்‌ என்னை நோக்கி 'அப்துல்‌ காதிரே!' என்று கூப்பிட்டு 'நான்‌ உம்‌ இரட்சகன்‌' எனக்‌ கூறியது. அதன்‌
பின்னர்‌ 'பிறருக்கு (ஹறாமென்று) விலக்கிய அனைத்தையும்‌ உமக்கு மட்டும்‌ (ஹலால்‌) ஆகுமானதாக்கியிருக்கிறேன்‌' என்று கூறியது. இதைக்கண்ட நான்‌ 'என்ன நீ அல்லாஹ்வா? உன்னைத்‌ தவிர வேறு அல்லாஹ்‌ இல்லையா? எனக்‌ கேட்டு விட்டு ‘அல்லாஹ்வின்‌ கொடிய பகைவனே! சீக்கிரமாக இதைவிட்டு ஓடிவிடு' என்று அதட்டினேன்‌. அந்தச்‌ சிம்மாசனத்தின்‌ மீதிருந்த வெளிச்சம்‌ தூள்தூளாகிச்‌ சிதறி அது இருள்கணமாகத்‌ திரும்பி விட்டது.

பிறகு சிம்மாசனமாக ஆள்மாறாட்டம்‌ செய்த ஷைத்தான்‌ கூறினான்‌: 'அப்துல்‌ காதிரே! உமக்கிருக்கிற மார்க்கக்கலை ஞானத்தாலும்‌, மதிப்பாலும்‌, அபிமானத்தாலும்‌ எனது
சூழ்ச்சியை விட்டு தப்பித்து வெற்றியடைந்தீர்‌. எழுபதுக்கும்‌ அதிகமான மக்களை இத்தகைய உபாயத்தால்‌ வஞ்சித்து, ஏமாற்றி அவர்களின்‌ அமல்களை வீணாக்கியிருக்கிறேன்‌.

ஞான மேதை அப்துல்‌ காதிரிடம்‌ வினவப்‌பட்டது 'இது ஷைத்தானின்‌ வித்தையென்று எப்படித்‌ தாங்கள்‌ அறிந்து கொண்டீர்கள்‌?' அதற்கு அவர்கள்‌ 'பிறருக்கு
அனுமதியளிக்காத அனைத்தையும்‌ உனக்கு மட்டும்‌ ஆகுமாக்கினேன்‌' என்ற அந்த ஷைத்தானின்‌ கூற்றிலிருந்து கிரகித்துக்‌ கொண்டேன்‌. நபிகள்‌ பெருமானாரின்‌ ஷரீஅத்‌ சட்டத்தின்‌ கீழ்‌ எல்லோரும்‌ சமமானவர்கள்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ கொண்டு வந்த
இஸ்லாமிய நியதிகளை ஒருபோது மாற்றவோ, மறுக்கவோ முடியாது என்ற உண்மைகளை நான்‌ துல்லியமாக அறிந்திருந்தேன்‌. இதனால்‌ என்னில்‌ ஆகிக்கம்‌ செலுத்த ஷைத்தானால்‌ இயலாது போயிற்று. அன்றி, 'நான்‌ உன்னுடைய இரட்சகன்‌'
என்று கூறினானே தவிர 'நான்தான்‌ உன்னுடைய அல்லாஹ்‌' என்று கூற அவனால்‌ முடியவில்லை. அல்லாஹ்‌ என்ற ஜலாலத்துடைய நாமத்தை கூறி அது நான்தான்‌ என்று பொய்வாதாட்டம்‌ செய்ய யாராலும்‌ முடியாதல்லவா? ஆகவே இந்த மேற்கோள்களை வைத்து ஷைத்தானென்று புரிந்துகொண்டேன்‌' என்பதாக மாமேதை அப்துல்‌ காதிர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ விளக்கம்‌ தந்தார்கள்‌.

மக்கள்‌ பொதுவாக தாம்‌ ஷைத்தான்களிடமிருந்து கண்கூடாகக்‌ கண்டதைச்‌ சான்றாக வைத்து அல்லாஹ்வை விழிப்பிலே நேராகக்‌ கண்டார்களென்று எண்ணி பிரகடனப்படுத்துகின்றனர்‌. 'கண்ணால்‌ கண்டதை விட சக்தியான மேற்கோளுக்கு இனி
அவசியமில்லையே' என்று நினைக்கின்றனர்‌. அவர்கள்‌ கண்டதும்‌ உண்மைதான்‌, சொல்வதும்‌ உண்மைதான்‌. ஆனால்‌ அது ஷைத்தானின்‌ நடிப்பு என்பதை மட்டும்‌
புரியாமலிருந்து விட்டனர்‌. தாம் கண்ட ஷைத்தானைப்‌ பற்றி அல்லாஹ்வென்றும்‌, நபியென்றும்‌, வலியென்றும்‌, ஹிள்ர்‌ நபி என்றும்‌, உத்தம மனிதரென்றும்‌ கருதித்‌ தமது இறை விசுவாசத்துக்கு இழுக்கு ஏற்படுத்திக்‌ கொள்கின்றனர்‌. மார்க்கத்தை சரிவரப்‌ புரியாத மெளட்டீக ஆபித்‌(வணங்கி)கள்‌ இது விஷயத்தில்‌ அதிகமாக நெறி தவறி ஏமாந்து விடுகின்றனர்‌.

நபிகள்‌ (ஸல்‌) அவர்களைப்‌ பற்றி ஸஹீஹான ஹதீஸில்‌: 'என்னைக்‌ கனவுலகில்‌ எவர்கள்‌ பார்க்கிறார்களோ அவர்கள்‌ என்னை மெய்யாகவே பார்த்தவருக்கு ஒப்பாகிறார்‌. ஏனெனில்‌ ஷைத்தான்‌ எனது தோற்றத்தில்‌ வந்து நடிக்க மாட்டான்‌' என்று
கூறியிருக்கிறார்கள்‌. இந்த ஹதீஸை வைத்துக்‌ கூட நபிகள்‌ (ஸல்‌) அவர்களை நேரடியாக விழிப்பில்‌ பார்க்க எவருக்கும்‌ சக்தியில்லை என்று விளங்க முடிகிறது.

நபியின்‌ உருவத்தில்‌ ஆள்மாறாட்டம்‌ பண்ணுவதை விட்டும்‌ ஷைத்தான்‌ தடுக்கப்‌ பட்டுள்ளானென்றால்‌ விழிப்பில்‌ நபிகளைப்‌ பார்த்தேன்‌ என்று கூறுகிறவனின்‌ பொய்‌ எவ்வளவு சக்தியானது என்பதை குறிப்பிடத்‌ தேவையில்லை. தூக்கத்தின்‌ போது மட்டும்‌ அவர்களைக்‌ காண முடியுமென்று விளங்க முடிகிறது.

மனிதன்‌ கனவுலகில்‌ பற்பல காட்சிகளைக்‌ காண்கிறான்‌. அவற்றில்‌ சில மெய்யான
காட்சிகள்‌, மற்றும்‌ சில ஷைக்தானின்‌ ஊசலாட்டத்தால்‌ விளையும்‌ தவறான
தோற்றங்கள்‌. பிந்தியவை முழுக்கமுழுக்க பொய்யாகவே அனுபவமாகின்றன. ஆனால்‌
நபியவர்களை எவரேனும்‌ கனவில்‌ கண்டார்களெனின்‌ அக்காட்சி ஒருபோதும்‌ பொய்யாக ஷைத்தானின்‌ ஊசலாட்டங்களினால்‌ நடந்ததாகச்‌ சொல்வதற்கில்லை.

ஏனெனில்‌ ஷைத்தான்‌ நபியின்‌ தோற்றத்தை எடுத்து எக்காரணத்தாலும்‌ அபிநயிக்க முடியாது. அதைவிட்டும்‌ அல்லாஹ்‌ அவனைத்‌ தடுக்கிறான்‌. இதிலிருந்து நபிகளை (இப்போது) இவ்வுலகில்‌ வைத்து எவராலும்‌ விழிப்பில்‌ பார்க்க முடியாது என்பதே முடிவு. இதுவே சத்திய விசுவாசிகளின்‌ வழியாகும்‌. ஆகவே அல்லாஹ்வை நான்‌ கண்கூடாகப்‌ பார்த்தேன்‌ என்று யாராவது வாதாடினால்‌ அவனைப்‌ பொய்யன்‌ என்று விளங்கிக்‌ கொள்ளுதல்‌ வேண்டும்‌. ஸஹாபாக்கள்‌, தாபியீன்கள்‌ எவருமே இம்மாதிரி
வாதாட்டங்களைக்‌ கூறியதில்லை. அவர்களைப்‌ பற்றி இத்தகைய ஒரு சம்பவம்‌ கூட நூற்களிலும்‌ இடம்‌ பெறவில்லை.

அக்கிரமங்கள்‌, கொடுமைகள்‌ மற்றும்‌ இணைவைத்தல்‌ போன்ற தீயசெயல்களை எவர்‌ அதிகமாகச்‌ செய்ய துணிச்சல்‌ உள்ளவராயிருப்பாரோ அவரை ஷைத்தான்‌ எப்போதும்‌ உற்ற தோழராக எடுத்துக்‌ கொள்கிறான்‌. கண்‌ மறைவில்‌ நடக்கும்‌ சில
சங்கதிகளை இவருக்கு விளக்கிக்‌ காட்டுகிறான்‌. இரகசியங்கள்‌ சிலவற்றை தெரிவித்துக்‌ கொடுப்பான்‌.

மாறாக எவர்‌ அவனுக்கு முரண்பட்டிருக்கிறாரோ அவருக்கு இடையூறுகள்‌, தீங்குகள்‌ இவற்றையெல்லாம்‌ செய்ய துணிகிறான்‌. சில நேரங்களில்‌ நோய்‌-நொடிகள்‌, பிரச்சனைகள்‌, மனநிம்மதியின்மை போன்ற சில சிக்கல்களில்‌ கொண்டு போய்‌ மாட்டி விடுகிறான்‌. 

இதனால்‌ சிலர்‌ தம்‌ உயிரையும்‌, செல்வத்தையும்‌, குடும்பம்‌, சொத்து, சுகம்‌ அனைத்தையும்‌ இழக்க வேண்டி நேரிடுகிறது. நோயால்‌ அவதிபடுவோரும்‌ உண்டு. ஒருவரது சொத்தை அபகரித்துப்‌ பிறருக்கு கொண்டு சேர்த்து விடுதல்‌, ஒரு வீட்டின்‌ சாமான்களைத்‌ திருடிப்‌ பிறர்‌ வீடுகளில்‌ கொண்டு வைத்து சமூகப்‌ குழப்படிகளும்‌, பிரச்சனைகளும்‌ தலைதூக்க ஊக்கமளித்து அதனால்‌ ஒரு சமூகத்துக்கு வாழ்வும்‌, மற்றொரு சமூகத்துக்குத்‌ தாழ்வும்‌ உண்டாக்கி விடுவதுடன்‌ மக்களிடையே
தூய்மையான நல்லொழுக்கமும்‌, நல்லெண்ணமும்‌ குன்றச்‌ செய்து வாழ்க்கையில்‌ தோல்வியை ஏற்படுத்துவதுமுண்டு.

விண்வெளி மார்க்கமாக ஷைத்தான்‌ சிலர்களை வழி மறித்து தூரத்தொலைவில்‌ செலுத்தி விடுகிறான்‌. சிலரை வழி மறித்து மக்காவில்‌ அரபா நாளில்‌ கொண்டு வந்து, திருப்பி அவர்களை மீண்டும்‌ ஊரிலேயே மீட்டிக்‌ கொண்டுபோய்‌ விட்ட வரலாறும்‌
உண்டு. ஹஜ்‌ செய்வதற்கென்று நினைக்கிறீர்களா? அப்படியொன்றுமில்லை. அதற்கெல்லாம்‌ ஷைத்தான்‌ எங்கே துணியப்‌ போகிறான்‌. ஹஜ்ஜைச்‌ செய்ய வைக்கும்‌ நோக்கமிருந்தால்‌ அவனை இஹ்ராம்‌ கட்டச்‌ செய்யாது ஏமாற்ற வேண்டுமா? தவாஃப்‌, ஸயீ போன்றவற்றைச்‌ செய்ய விடாது தொடர்ந்து தல்பியா ஓதிக்கொண்டிருக்கும்‌ வாய்ப்புகள்‌ ஏதும்‌ அளிக்காமல்‌ ஒரேடியாகத்‌ தூக்கி அரபாவில்‌ தான்‌ கொண்டு சேர்க்க
வேண்டுமா? இல்லவேயில்லை. ஷைத்தானுடைய கருத்து ஹஜ்‌ செய்ய வைப்பதல்ல என்பதனை விளங்குதல்‌ வேண்டும்‌. 

ஷைத்தான்‌ இத்தகைய சம்பவங்கள்‌ ஏராளம்‌
செய்து கொண்டிருக்கிறான்‌. (திடீரென்று) நினையாப்‌ புறமாக புனித மக்கா நகரின்‌ ஹரம்‌ ஷரீஃபில்‌ எந்த ஒரு அமலைச்‌ செய்ய வேண்டுமென்று நாடினாலும்‌ இஹ்ராம்‌ எல்லையைத்‌ தாண்டுவதற்கு முன்‌ இஹ்ராம்‌ கட்டியாக வேண்டும்‌. இது இஸ்லாமிய சட்டம்‌. எல்லா அறிஞர்களின்‌ தீர்ப்பும்‌ இதுவே. இது இப்படியிருக்க சிலரை வழி மறித்துக்‌ கொண்டு வந்து கஃபாவின்‌ பக்கத்தில்‌ தவாஃப்‌ மட்டும்‌ செய்யும்‌ வாய்ப்பை
அமைத்துக்‌ கொடுக்கிறான்‌. 

மக்களில்‌ கல்வித்‌ தேடி வருகிறவர்கள்‌, வியாபார
நோக்கோடும்‌ உறவினர்களை சந்தித்துச்‌ செல்லும்‌ நோக்கோடு வருகிறவர்களும்‌ கூட கண்டிப்பாக மக்கா எல்லையினுள்‌ நுழையும்‌ முன்னர்‌ இஹ்ராம்‌ கட்டியாக வேண்டும்‌. இது (வாஜிப்‌) கடமை என்று கூடச்‌ சொல்லும்‌ இமாம்கள்‌ இருக்கிறார்கள்‌. இப்படியிருக்க
இஹ்ராம்‌ இல்லாது வேறு எதுவும்‌ செய்ய விடாது ஒருவனை வழி மறித்து கொண்டு வந்து தவாஃபை மட்டும்‌ செய்ய வைக்கும்‌ ஷைத்தானின்‌ நோக்கம்‌ என்னவென்பதை ஒவ்வொருவரும்‌ கிரகித்துக்‌ கொள்ள வேண்டும்‌.

சிலை வணங்கிகள்‌, அவர்களுக்கு ஒத்த கிறிஸ்தவர்கள்‌, யூதர்கள்‌, முஸ்லிம்களில்‌ ஷிர்க்‌, பித்‌அத்காரர்கள்‌ இவர்களிடமே இது விஷயமாகப்‌ பற்பல கதைகளைக்‌ கேட்க முடிகிறது.

இவற்றையெல்லாம்‌ இங்கு குறிப்பிட்டு இப்புத்தகத்தை நீட்டிக்‌ கொள்ள நான்‌
விரும்பவில்லை. சுருங்கக்‌ கூறுமிடத்து, அல்லாஹ்வின்‌ அடிமைகளான நபிமார்களையும்‌, அவ்லியாக்களையும்‌ மற்றும்‌ நன்மக்களைப்‌ பொருட்டாக வைத்துப்‌ பிரார்த்தனை செய்து சிந்தனையில்லாத மார்க்க அனுஷ்டானங்களில்‌ எவர்‌ திரிகிறாரோ அவருக்கு இக்கதியே உலகில்‌ கிடைத்து விடுகிறது. (ஷைத்தானுக்கு தம்‌ வாழ்க்கையைப்‌ பறிகொடுத்து அனாச்சாரத்திலும்‌, ஐயுறவாதத்திலும்‌, வழிகேட்டிலும்‌ அலைவார்கள்‌. சன்மார்க்கமின்றி குருத்துவத்தை ஆதரிப்பார்கள்‌. இவர்கள்‌ பின்பற்றும்‌
இஸ்லாம்‌ ஒருபோதும்‌ இஸ்லாமல்ல. இவர்கள்‌ இஸ்லாத்திலிருந்து வெகுதூரம்‌ அப்பாற்பட்டவர்கள்‌) 

தாம்‌ கண்கூடாகக்‌ கண்டதும்‌, நேர்முக சம்பாஷனை நடத்தியதும்‌, இவர்களின்‌ சிலபல தேவைகள்‌ நிறைவேறியதும்‌ எல்லாமே மய்யித்தைப்‌ பொருட்டாக
வைத்துப்‌ பிரார்த்தனை புரிந்ததினால்தான்‌ என்று நினைத்துக்‌ கொள்கிறார்கள்‌. மய்யித்‌ நேராக உதயமாகி வந்து விட்டார்‌ என மனதில்‌ கருதிக்‌ கொண்டு திரிவார்கள்‌.

எல்லாமே ஜின்‌-ஷைத்தான்௧கள்‌ துணையினால்‌ இவரையும்‌, மற்றவர்களையும்‌ வஞ்சிப்பதற்கு அவை புரிந்த வித்தைகள்‌ என்பதை புரிய மாட்டார்கள்‌.

அறியாமைக்கால அரபிகளில்‌ ஒருசாரார்‌ ஜின்‌-ஷைத்தான்௧களின்‌ இத்தகைய குறும்புத்தனங்களைப்‌ பற்றி அது வெறும்‌ பொய்யானதென்றும்‌, மனிதனின்‌
கற்பனையால்‌ விளைந்த ஏமாற்றங்களைதக்‌ தவிர இதற்கு உண்மையே இல்லை என்றும்‌ கூறியிருக்கிறார்கள்‌. இதனால்‌ இதைப்‌ போன்ற சம்பவங்களை அவர்கள்‌ மெய்ப்பிக்கவில்லை. ஷைத்தான்‌, ஜின்களின்‌ விளையாட்டுகள்‌ என்று தகுந்த சான்றுகள்‌ கூறி இவற்றைப்‌ பொய்ப்பித்தனர்‌. இது விஷயத்தில்‌ நிலை பிறழாது நின்றனர்‌. பின்னர்‌
எந்த வகுப்பார்‌ இவற்றை வலிமார்களின்‌ அற்புதச்‌ செய்கைகளென்று மதித்துப்‌ பாராட்டி பிரகடனப்படுத்தி வந்தனரோ இவர்களின்‌ வீண்‌ பிரச்சாரத்தால்‌ முந்திய சாராரும்‌ வழிகேட்டிலாயினர்‌. 

ஷைத்தானின்‌ விளையாட்டுகளை வலியின்‌ கராமத்‌ என்று கருதித்‌ தமது முந்திய கொள்கைக்குத்‌ துரோகம்‌ விளைவித்தனர்‌. இதனால்‌ பொதுவாக
அறியாமைக்கால அரபிகளிடையே கப்றுகளிலும்‌, இதர இடங்களிலும்‌ நடக்கின்ற ஜின்‌, ஷைத்தான்களின்‌ பரிகசிப்புகள்‌ யாவும்‌ காலஞ்சென்றவர்களின்‌ அற்புதச்‌ செயல்களாக
மதிக்கப்‌ படலாயின. அல்லாஹ்வின்‌ கடமைகளை நிறைவேற்றி அவன்‌ விலக்கல்களை தவிர்த்து, அநீதி, அட்டூழியம்‌, அக்கிரமங்களில்‌ வாழ்நாளைக்‌ கழிக்காது இறை விசுவாசம்‌, பக்தி என்பன போன்ற பற்பல ஒழுக்கங்கள்‌ இதயத்தில்‌ ஒருங்கிணைந்து
அல்லாஹ்வை மட்டும்‌ பயப்படுகிறவர்களைப்‌ பற்றி மட்டுமே அல்லாஹ்‌ இறைநேசச்‌ செல்வர்‌ (வலியுள்ளாஹ்‌) என்று கூறியுள்ளான்‌. "விசுவாசிகளே! அல்லாஹ்வின்‌ நேசர்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமும்‌ இல்லை. அவர்கள்‌ கவலைப்படவும்‌
மாட்டார்கள்‌. அவர்கள்‌ இறைவனை மெய்யாகவே நம்பி அவனுக்குப்‌ பயந்து நடந்துக்‌ கொள்கின்றனர்‌ என்பதை (நீங்கள்‌ அறிந்து கொள்ளுங்கள்‌)”. (10:62,63)

இந்த ஆயத்துக்கு நேர்மாறாக நடந்தவர்களைப்‌ பற்றி அவ்லியாக்கள்‌ என்று ஜாஹிலிய்யர்கள்‌ கூறினார்கள்‌. 

இறைவிசுவாசம்‌, பக்தி இவற்றுக்கெல்லாம்‌ அப்பாற்பட்டு வாழ்ந்தவர்களுக்கு (கராமத்துகள்‌) அற்புத செய்கைகள்‌ செய்யும்‌ சக்தியிருக்கிறது எனக்கூறி தூய இஸ்லாம்‌ மார்க்கத்தை விட்டும்‌ வெளியேறி 'முர்தத்‌' ஆகியும்‌ விடுகின்றனர்‌. இறைவன்‌ திருமறையில்‌ கூறும்‌ உண்மையைப்‌ பாருங்கள்‌:

"(விசுவாசிகளே!) எவர்கள்‌ மீது ஷைத்தான்கள்‌ இறங்குகின்றன என்று நாம்‌ உங்களுக்கு
அறிவிக்கட்டுமா? பொய்‌ சொல்லும்‌ ஒவ்வொரு பாவியின்‌ மீதும்‌ ஷைத்தான்கள்‌
இறங்குகின்றன". (26:221-222).

பொய்யர்கள்‌, பாவிகள்‌, மாறு செய்கிறவர்கள்‌ இவர்களைப்‌ போன்றவர்களுக்கு ஷைத்தான்கள்‌ துணையாக நிற்கின்றனரென்றால்‌ காஃபிர்களுக்கும்‌, முஷ்ரிக்குகளுக்கும்‌ ஷைத்தான்கள்‌ எவ்வளவு ஒத்தாசை புரிவார்கள்‌ என்பதை எண்ணிப்‌ பார்க்க வேண்டும்‌. என்று முதல்‌ அல்லாஹ்வையும்‌, ரஸூலையும்‌ பொய்யாக்கி அவர்களின்‌ ஏவல்‌ - விலக்கல்களுக்கு மாறுசெய்து எல்லாக்காலமும்‌ நிராகரிப்பிலும்‌, புறக்கணிப்பிலும்‌ வாழத்‌ தொடங்கினார்களோ அன்று முதலே காஃபிர்களுக்கு ஷைத்தான்கள்‌ பெரிதும்‌ துணையாக நின்று வழிகெடுக்க உதவினார்கள்‌. 

ஆகவே ஷைத்தானுக்கு வழிபட்ட பாவிகள்‌ புரிகின்ற வித்தைகளைப்‌ பார்த்து வலிமார்களின்‌ கராமத்துகள்‌ என்ற முடிவுக்கு வந்து விடக்‌ கூடாது. இவ்வாறான பரிகசிப்புகள்‌, சிறுமைத்தனங்கள்‌ எதுவுமே சமாதியில்‌ புதையுண்டு கிடக்கும்‌ வலியுனுடைய அல்லது நபியுனுடைய திறமை என்றோ, அவருடைய ஈமானின்‌ சக்தி என்றோ கூறி முடிவுக்கு வந்து விடுதல்‌ அறிவுடைமை அல்ல. 

அல்லாஹ்வுக்கு உள்ளது போல ஷைத்தான்களுக்கும்‌
அவ்லியாக்கள்‌ (நேசர்கள்‌) இருக்கின்றனர்‌. இவ்விருவர்களின்‌ அவ்லியாக்களையும்‌ அவர்களின்‌ குண ஒழுக்கங்களையும்‌ பிரித்தறிவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும்‌ கடமையாகும்‌. 

இதைப்‌ பற்றி அதிகமாக விளங்க விழைபவர்கள்‌ எமது
'ரஹ்மானுடையவும்‌ ஷைத்தானுடையவும்‌ தோழர்களின்‌ வித்தியாசங்கள்‌' என்ற நூலைப்‌ படித்துக்‌ கொள்வார்களாக!

இறை விசுவாசமில்லாத காஃபிரை இவர்கள்‌ அவ்லியாவாக்கினார்கள்‌. தொழாதவனையும்‌ அவ்லியாவாக்கினர்‌. இறைத்தூதர்களைத்‌ திட்டி, அவர்களைச்‌ சபித்து மதத்தைப்‌ புறக்கணித்து நடந்தவனும்‌ வலிப்பட்டத்தைப்‌ பெற்றான்‌. ஷிர்க்‌, பித்‌அத்‌, மூடநம்பிக்கை அத்தனையிலும்‌ வாழ்ந்தவனை அவ்லியாவாக்கப்பட்டது. 

மதத்தின்‌ ஐயுறவாதி, விதண்டாவாதி, நெறியில்லாமல்‌ வாழ்ந்தவன்‌ எல்லோருக்கும்‌ அவ்லியாப்‌ பட்டம்‌ கிடைத்தது. 

இறந்த பின்னர்‌ இவர்களுக்கெல்லாம்‌ சக்தி உண்டென்று நம்பினர்‌. காரணம்‌ இவர்களின்‌ தர்ஹாக்களில்‌ அற்புதங்களைக்‌ கண்டார்கள்‌ போலும்‌.
ஷைத்தானின்‌ வழிமறிப்பு என்று யூகித்துக்‌ கொள்ளும்‌ ஆற்றல்தான்‌ இவர்களுக்கில்லையே! சூனியமும்‌, மந்திரமும்‌ செய்து உலகை ஏமாற்றுகிறவர்கள்‌,
சோதிடர்கள்‌, காஃபிர்கள்‌, முஷ்ரிக்குகள்‌ இவர்களிடம்‌ எத்தனையோ ஷைத்தான்கள்‌ நின்று விதவிதமான வியப்புக்குரிய செயல்களை செய்து கொண்டிருக்கின்றன.

இச்சூனியங்களையும்‌, கண்கட்டு வித்தைகளையும்‌ பார்க்கிற நாம்‌ கராமத்‌ என்று சொல்லி அதைச்‌ செய்கிறவர்களை அவ்லியாவாக்கி விடுவோமானால்‌ நம்மை பகுத்தறிவுள்ள முஸ்லிம்‌ என்று யாரும்‌ சொல்ல மாட்டார்கள்‌.


இறை நேசர்கள்‌.

மெய்யான இறை நேசச்செல்வர்கள்‌ இறை நம்பிக்கையிலும்‌, பக்தியிலும்‌ தீர்க்கமானவர்களாக இருப்பார்கள்‌. அல்லாஹ்வின்‌ பயம்‌ என்றும்‌ அவர்களின்‌ இதயங்களில்‌ பசுமரத்தாணி போல்‌ பதிந்திருக்கும்‌. அல்லாஹ்‌ அல்லாத எவரையும்‌
(அவர்‌ நபியாகட்டும்‌, வலியாகட்டும்‌, ஜின்னாகட்டும்‌) அவர்கள்‌ அஞ்ச மாட்டார்கள்‌. அல்லாஹ்வின்‌ பக்கம்‌ மாத்திரமே இவர்கள்‌ பக்தி செலுத்துவார்கள்‌. உண்மைக்கு மாறாக ஷிர்க்வாத கருத்துகளுக்கு ஒருபோதும்‌ இவர்கள்‌ இசைய மாட்டார்கள்‌.
திருக்குர்‌ ஆனையும்‌, ஹதீஸையும்‌ வைத்து துருவி ஆராய்ந்து இஸ்லாத்தில்‌ உள்ளவற்றை மட்டும்‌ எடுத்துச்‌ செயல்படுவார்கள்‌. இவர்களிடமிருந்து வெளிப்படுகின்ற (கராமத்‌) அற்புதச்‌ செய்கை என்பது இறை நம்பிக்கை, இறைபக்தி போன்ற நல்ல
குணங்களின்‌ விளைவாகும்‌. அன்றி பித்‌அத்‌, ஷிர்க்‌ போன்ற தீய குணங்களில்‌ தம்மை ஈடுபடுத்துகிறவர்கள்‌ எவரும்‌ ஒருபோதும்‌ கராமத்தை (அற்புதச்‌ சாதனைகளை) வெளிப்படுத்த மாட்டார்கள்‌. 

மக்கள்‌ தமது இஷ்டப்படி மார்க்க விஷயத்தில்‌ நடந்து
கொள்ள முடியாதல்லவா? மாபெரும்‌ அவ்லியாக்களின்‌ வரலாறுகளைப்‌ படித்தால்‌ கண்ட மாதிரி, கண்ட இடங்களிலெல்லாம்‌ தம்‌ அற்புதச்‌ செய்கைகளை
வெளிப்படுத்தியுள்ளார்கள்‌ என்று வரலாற்று ஆசிரியர்கள்‌ இன்று வரை குறிப்பிட்டதில்லை.

மதச்‌ சட்டங்களுக்குத்‌ தகுந்த மேற்கோள்‌ காட்டி எண்பிக்கப்‌ படுவதற்கும்‌, மதப்‌ போதனைகளை நிரூபிக்க வேண்டிய நிலைகளும்‌ உருவானால்‌ மட்டுமே தம்‌ கராமத்தினால்‌ அவற்றை உறுதியான முறையில்‌ விளக்கி மதத்தைக்‌ கண்ணியப்படுத்திக்‌ காட்டுவார்கள்‌. முஸ்லிம்களுக்கு ஏதாவது தேவைகள்‌ ஏற்பட்டாலும்‌ கராமத்தைக்‌ கொண்டு அவற்றைப்‌ பூர்த்தி செய்து கொடுப்பவர்களும்‌ உண்டு. சில
வலிமார்கள்‌ கராமத்தை ஹலால்‌ (ஆகுமாக்கப்பட்ட வினை)களில்‌ பயன்படுத்தி இருக்கிறார்கள்‌. 

ஆக எப்படியிருப்பினும்‌ அனுமதியில்லா ஹறாமான பாவச்‌ செயல்கள்‌ புரிவதற்கு சாதகமாக ஒரு வலியுல்லாஹ்‌ கூட தம்‌ கராமத்தைப்‌ பயன்படுத்திக்‌ கொள்ளவில்லை. விலக்கப்பட்ட செயல்களில்‌ கராமத்துகள்‌ உபயோகிக்கப்பட்டால்‌ அவை கராமத்‌ என்றும்‌ சொல்லப்பட மாட்டாது. மாறாக அவன்‌ துரோகியாவான்‌. அவனே அல்லாஹ்வின்‌ பாவியுமாவான்‌. தனக்கும்‌, தன்னைச்‌ சூழ்ந்திருப்பவர்களுக்கும்‌ அநீதி இழைத்துக்‌ கொண்டான்‌. இஸ்லாத்தில்‌ அத்துமீறியவன்‌ என்றும்‌, பாவியென இவனைப்‌ பற்றிச்‌ சொல்லப்பட வேண்டும்‌. 

இஸ்லாமியரின்‌ சமூகத்தில்‌ வாழ்ந்து தன்னை மூமின்‌ என்றும்‌, ஈமானுக்குப்‌ பாடுபடுகிறவன்‌ என்றும்‌ காட்டிக்‌ கொண்டிருந்தாலும்‌ இவனை விடக்‌ கொடியவன்‌ இருக்க முடியாது. அவ்லியாக்கள்‌ தூய ஈமானிலும்‌, தீர்க்க பக்தியாலும்‌ அல்லாஹ்விடமிருந்து வெகுமதியாக கராமத்தைப்‌ பெறுகின்றனர்‌. எனவே இக்‌ கராமத்தை ஒருபோதும்‌ தீமைகளுக்கு பயன்படுத்த மாட்டார்கள்‌. தீய செயல்களில்‌ கராமத்தை உபயோகித்ததினால்‌ அவை நன்மையாகத்‌
திரும்பிவிடப்‌ போவதுமில்லை.

ஒரு முஸ்லிம்‌ மத எதிரியோடு போராடினான்‌ என்று வைத்துக்‌ கொள்வோம்‌. போராடியவன்‌ வென்றான்‌. எதிரியிடமிருந்து ஏராளம்‌ வெற்றிப்‌ பொருட்கள்‌
கிடைத்தது. அவற்றால்‌ தன்‌ பையை நிறைத்துக்‌ கொண்டான்‌. இப்போது மத எதிரியோடு போரடியவன்‌ என்ற வகையில்‌ இவன்‌ சிறந்தவனென்பதில்‌ ஐயமில்லை.

இவன்‌ பாராட்டி ஊக்குவிக்கப்பட வேண்டியவன்‌. இவனுடைய செய்கையும்‌ கெளரவிக்ககத்‌ தக்கததல்லவா? ஆனால்‌ பின்னொரு முறை இந்த குறைப்‌ பொருட்களை வீணடித்து விட்டான்‌. ஷைத்தானுக்குத்‌ துணை செய்யும்‌ காரியங்களில்‌ இச்செல்வங்கள்‌ அத்தனையையும்‌ போக்கடித்தான்‌. தன்னிஷ்டப்படி தீய நடவடிக்கைகளில்‌ வினியோகித்தான்‌. போராடிக்‌ கிடைத்தப்‌ பொருள்‌ அத்தனையும்‌ இவனுக்குக்‌ கெடுதியாக அமைந்து விடுகிறது. பயனெதையுமே நல்கவில்லை. இப்படித்தான்‌ கராமத்தும்‌. 

அது கிடைக்க வேண்டுமானால்‌ திடமான ஈமான்‌ வேண்டும்‌. இறையச்சம்‌ மிகுதியாக உள்ளத்தில்‌ குடிகொள்ள வேண்டும்‌. மற்றும்‌ எத்தனையெத்தனையோ நற்பண்புகள்‌ வேண்டும்‌. இவை நிரம்பிய ஜெயசீலர்கள்‌ மட்டும்‌ இந்தக்‌ கராமத்துக்கு உரியவர்களாக ஆகிறார்கள்‌. 

இப்படிக்கிடைத்த கராமத்தை ஒழுக்கக்‌ கேடான செய்கைகளினால்‌ இறைவனை நிராகரிக்கிற, மேலும்‌ அவனுக்குக்‌ குற்றம்‌ புரிகிற, இன்னும்‌ அவனுக்கு
விருப்பமில்லாப்‌ பாதைகளில்‌ செலுத்தி பாவச்‌ செயல்கள்‌ புரிகிற செயல்களில்‌ ஈடுபடுத்தினால்‌ இவற்றைக்‌ கராமத்‌ என்று கூற முடியுமா? இதனால்‌ வலிப்பட்டம்‌ உள்ளதாகச்‌ சொல்லப்படுபவன்‌ பெரும்‌ பாவியாக மாறிவிட வேண்டியத்தானே வருகிறது.

ஆகவே இம்மாதிரி முறைகேடான கராமத்தைப்‌ பயன்படுத்தியவர்களில்‌ பலர்‌ இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாகவும்‌, காஃபிர்களாக இறந்திருப்பதாகவும்‌ அவர்களைச்‌ சார்ந்தவர்களே ஏற்றிருக்கிறார்கள்‌. இதைப்பற்றி விளக்கமாக
வேறோரிடத்தில்‌ பேசலாம்‌. 

இணைவைத்த முஷரிக்குகள்‌ வழிகெட்டுப்‌ போனதற்கான காரணங்களில்‌ மிக முக்கியமானவை எவை என்றால்‌ அவர்களின்‌ பிம்பங்களின்‌ அருகில்‌ அவர்கள்‌ கண்ட காட்சிகளும்‌, கேட்ட குரல்களும்‌ தான்‌. இவையே இவர்களை ஷிர்க்கில்‌-இணைவைப்பில்‌ உறைந்திருக்கத்‌ தூண்டின. 

தர்ஹாக்களில்‌ ஏதோதோ தொலைவிலுள்ள சம்பவங்கள்‌ விளக்கப்படுகின்றன. சிறு சிறு தேவைகள்‌ நிறைவேற்றப்படுவதும்‌ உண்டு. கப்று வெடித்து பயங்கரமான அழகிய வடிவத்திலுள்ள
ஒரு ஷைகு உதயமாகி, ஸியாரத்துக்குச்‌ சென்றவனைக்‌ கட்டியணைத்து ஸலாம்‌
கொடுத்து ஏதோ அவனுக்கு விருப்பமான பேச்சுகளைப்‌ பேசிவிட்டு மறைந்து விடுகிறார்‌.

இதனால்‌ ஸியாரத்துக்குச்‌ சென்றவனுக்கு நல்ல உறுதியாகி விட்டது. அதாவது: 'கப்றில்‌ அடக்கப்பட்டிருந்த நபி அல்லது அவ்லியாதான்‌ வந்து வரம்‌ கொடுத்து (முரீது வியாபாரம்‌ நடத்தி) விட்டுப்‌ போகிறார்‌' என்று இதை நினைத்து நிம்மதியடைகிறான்‌.

பின்பு இச்சம்பவத்தின்‌ வெளிச்சத்தில்‌, திடமான ஷிர்க்‌ வாழ்க்கையைக்‌ தொடர்கிறான்‌. கப்று மெய்யாக வெடிக்கவுமில்லை, பிளக்கவுமில்லை. தன்‌ கண்களில்‌ அப்படியொரு கண்கட்டு வித்தைக்‌ காட்சியை ஷைத்தான்‌ ஏற்படுத்தி விட்டு, இவனை நிலை
குலையச்‌ செய்தான்‌. கப்று வெடித்து மனிதன்‌ உதயமாகுவது போல சுவர்கள்‌, பூமிகள்‌ போன்றவையும்‌ வெடிப்பதுண்டு. குறிப்பிட்ட சில இடங்களில்‌ இந்தமாதிரி சம்பவங்கள்‌
ஏராளம்‌ நடந்திருக்கின்றன.

இதைவிட ஆச்சரியமான செய்தி என்னவென்றால்‌ சமாதியிலிருந்து ஊடுருவிப்‌ பாய்கிற அவ்லியாக்கள்‌, ஷைகுமார்கள்‌ ஸியாரத்துக்கு வந்தவனிடம்‌ 'நாங்கள்‌ இந்த சமாதிகளில்‌ ஸ்திரப்‌ பட்டிருப்பதில்லை' என்று கூறுகிறார்கள்‌. எந்த வேளையில்‌ நாங்கள்‌ புதைக்கப்பட்டோமோ அந்த வேளையிலிருந்தே நாங்கள்‌ கப்றை விட்டு வெளியேறி விடுகிறோம்‌. 

உயிருள்ள மக்கள்‌ சமூகங்களுக்கிடையில்‌ தான்‌ நாங்கள்‌ சுற்றித்‌ திரிகிறோம்‌. உங்களின்‌ அன்றாடக்‌ காரியங்கள்‌ எல்லாவற்றிலும்‌ நாங்கள்‌ பங்கு
பெறுவதுண்டு” என்று கூறுவார்களாம்‌. சிலர்‌ மய்யித்தைப்‌ புதைப்பதற்காகக்‌ தூக்கிச்‌ செல்லும்‌ வழியில்‌ இறந்த மய்யித்தும்‌ சேர்ந்து தன்‌ ஜனாஸாவை தூக்கிச்‌ செல்வது போல்‌ ஒரு கண்கட்டுக்‌ காட்சியை கண்டிருக்கின்றனர்‌.

இதுபோல்‌ எத்தனையோ சம்பவங்களைக்‌ கூறிக்கொண்டே இருக்கலாம்‌. வழிதவறிய
சமூகம்‌ இவற்றைக்‌ கண்டதும்‌ சிந்தனையின்றி அவ்லியாக்களின்‌ கராமத்துகள்‌ என்று பொய்யை எடுத்துக்‌ கூறி மெய்பித்து விடுகிறது. என்றும்‌ உயிருடனுள்ள அல்லாஹ்வை பயப்படுவதை விட்டும்‌ நீங்கி, எப்போதோ இறந்து மடிந்த வலியைப்‌ பயந்து நடக்கின்றனர்‌. கப்றில்‌ உதயமான மனிதனைப்‌ பற்றி நபியென்றும்‌, அவ்லியாவென்றும்‌, ஷைகு என்றும்‌ தீர்மானித்து விடுகின்றனர்‌. மனித உருவத்தில்‌ தோற்றமளித்தது மலக்கு என்றும்‌ கூட சிலர்‌ கூறக்‌ கேட்டிருக்கிறோம்‌. இதனால்‌ இவர்களுக்குப்‌ பயந்தும்‌ நடக்கின்றனர்‌. பயப்படாவிட்டால்‌ தண்டனை கிடைக்குமென்ற நடுக்கம்‌! தாம்‌ கண்டதைப்‌ பற்றி கப்றாளியின்‌ ரூஹானிய்யத்‌ என்றும்‌, அவருடைய சோற்றுச்‌ சட்டி பிச்சைக்‌ குடுக்கை என்றும்‌, அவருடைய 'ஸிர்ரூ' அந்தரங்க இரகசியங்கள்‌ விஜயம்‌ செய்திருக்கின்றன என்றெல்லாம்‌ கூறி நம்பி விடுகின்றனர்‌. ஒரே நேரத்தில்‌ ஒரே தோற்றத்தில்‌ இரண்டு இடங்களில்‌ ஷைத்தான்‌ காண்பித்துக்‌ கொடுக்கிறான்‌. பார்ப்பவர்கள்‌ ஒரு வலியுல்லாஹ்வுக்கு ஒரே நேரத்தில்‌ பற்பல இடங்களில்‌ பிரதிபலிக்கும்‌ சக்தியுண்டு என்று முடிவுக்கு வந்து விடுகின்றனர்‌.

மலக்குகளையும்‌, காலஞ்சென்ற நபிமார்களையும்‌ அழைப்பதற்காவும்‌, இவர்களின்‌ தர்ஹாக்களில்‌ சென்று தம்‌ தேவைகளை வேண்டுவதற்காகவும்‌ புறப்படுபவர்கள்‌ நிச்சயமாக முஷ்ரிக்குகளாவர்‌. இத்தீவினையால்‌ தம்‌ ஈமானை வீணாக்கி விடுகிறார்கள்‌. 

இவர்களும்‌, கிரகங்களை வணங்கி வழிபடுகிறவர்களும்‌, நட்சத்திரங்களையும்‌ இதர
கோளங்களையும்‌ நோக்கிப்‌ பிரார்த்திக்கின்ற மூட நம்பிக்கைக்காரர்களும்‌ ஒரே சமத்துவத்தில்‌ உள்ளவர்கள்‌ என்று கூறலாம்‌. அல்லாஹ்‌ கூறுகின்றான்‌: "ஒரு மனிதனுக்கு வேதத்தையும்‌, ஞானத்தையும்‌, நபித்துவத்தையும்‌ அல்லாஹ்‌ அருளிய
பின்னர்‌ அவர்‌ மனிதர்களை நோக்கி அல்லாஹ்வையன்றி என்னையே வணங்குங்கள்‌
என்று கூறுவதற்கில்லை. ஆனால்‌ மனிதர்களை நோக்கி நீங்கள்‌ வேதத்தைக்‌ கற்றுக்‌ கொடுத்துக்‌ கொண்டும்‌, ஓதிக்கொண்டும்‌ இருப்பதன்‌ காரணமாக (அதிலுள்ளவாறு) இறை (வன்‌ ஒருவனையே வணங்கும்‌) அடியார்களாகி விடுங்கள்‌ (என்றுதான்‌
கூறுவார்‌). தவிர மலக்குகளையும்‌, நபிமார்களையும்‌ தெய்வங்களாக எடுத்துக்‌ கொள்ளுங்களென்றும்‌ அவர்‌ கட்டளையிட மாட்டார்‌. நீங்கள்‌ முஸ்லிமானதின்‌ பின்னர்‌ நிராகரிக்கும்படி உங்களை ஏவுவாரா?" (3:79-80)

இன்னும்‌ அல்லாஹ்‌ கூறுகிறான்‌: (நபியே!) நீர்‌ கூறும்‌. அல்லாஹ்வையன்றி (வேறு தெய்வங்களிருப்பதாக) நீங்கள்‌ எண்ணிக்‌ கொண்டிருக்கிறீர்களே அவற்றை (உங்கள்‌ கஷ்டங்களை நீக்க) அழையுங்கள்‌. அவ்வாறு அழைத்தால்‌ அவை உங்களுடைய யாதொரு கஷ்டத்தையும்‌ நீக்கி வைக்கவோ அல்லது அதனை தட்டி விடவோ சக்தியற்றவை (என்பதை அறிவீர்கள்‌). 

இவர்கள்‌ (ஆண்டவன்‌ என) அழைப்பவையும்‌,
தங்களை இறைவனிடம்‌ சேர்த்து வைக்கும்‌ அமல்களைக்‌ தேடுவதுடன்‌ அவ்வமல்களைக்‌ கொண்டு அல்லாஹ்வோடு மிக நெருங்கியவர்‌ யார்‌? என்பதையும்‌
தேடிக்‌ கொண்டு அவனுடைய அருளை எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்கும்‌ பயப்படுகின்றனர்‌. ஏனென்றால்‌ உம்‌ இறைவனின்‌ வேதனை நிச்சயமாகப்‌ பயப்படக்‌ கூடியதே”. (17:56-57)

இன்னும்‌ அல்லாஹ்‌ கூறுகிறான்‌: "(நபியே!) நீர்‌ கூறும்‌. அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள்‌ தெய்வங்களென எண்ணிக்‌ கொண்டீர்களோ அவற்றை நீங்கள்‌ அழைத்துப்‌ பாருங்கள்‌. வானங்களிலோ பூமியிலோ அவற்றுக்கு அணுவளவும்‌ அதிகாரம்‌ இல்லை. அன்றி அ(வ்விரண்டில்‌ எதிலும்‌ அவற்றைப்‌ படைப்ப)தில்‌ இவற்றுக்கு எத்தகைய பங்குமில்லை. அவனுக்கு உதவியாளர்களும்‌ அவர்களில்‌ ஒருவரும்‌ இல்லை. அவனுடைய அனுமதி பெற்றவர்களைத்‌ தவிர மற்றெந்த மலக்கும்‌ அவனிடம்‌
பரிந்து பேசுவதும்‌ பலனளிக்காது". (34:22-23)

இதைப்போன்ற கருத்துள்ள பல ஆயத்துகளை திருமறையில்‌ காணமுடியும்‌. அத்தனையுமே அல்லாஹ்‌ அல்லாத இதர படைப்புகளிடம்‌ பிரார்த்திப்பதை வன்மையாகக்‌ கண்டிக்கிறது. நாதாக்களானாலும்‌ சரி, அவ்லியாக்களானாலும்‌ சரி, யாரானாலும்‌ அவர்கள்‌ காலஞ்சென்று விட்டால்‌ அவர்களிடம்‌ சென்று துஆக்கள்‌ வேண்டப்பட மாட்டாது. படைப்புகள்‌ எவராயினும்‌ அவர்களிடம்‌ ஷபாஅத்துகள்‌ தேடுவதும்‌ தடுக்கப்பட்டுள்ளது. இவை ஷிர்க்கான அமல்களாகும்‌. ஷிர்க்கின்பால்‌ மனிதனை வேகமாகத்‌ திருப்புகின்ற அபாயகரமான செயல்கள்‌. 

ஆனால்‌ பெரியோர்கள்‌ வாழ்ந்திருக்கும்‌ போது அவர்களிடம்‌ சென்று ஷபாஅத்துக்‌ கேட்கலாம்‌. பிரார்த்தனை கேட்கலாம்‌. இதற்கு அனுமதியுண்டு. இவர்கள்‌ உயிரோடிருக்கையில்‌ தேவைகள்‌
எதுவானாலும்‌ சரி அவற்றை நிறைவேற்றித்‌ தரச்‌ சொல்வது அனுமதிக்கப்பட்டதின்‌ காரணம்‌ என்னவென்றால்‌, வாழ்ந்திருக்கும்‌ நபியிடமும்‌, வலியிடமும்‌, ஒரு தேவையைக்‌ கேட்டால்‌ அது ஷிர்க்கில்‌ மனிதனைச்‌ சேர்த்து விடாது. இத்தகைய
வேண்டுதலில்‌ ஷிர்க்‌ நுழைவதற்குரிய வாய்ப்புகளும்‌ இல்லை. ஏனெனில்‌ நபிமார்களின்‌ வாழ்நாளில்‌ அவர்களில்‌ ஒருவர்‌ கூட அல்லாஹ்வை வணங்குவது போலத்‌ தம்‌ கண்முன்னிலையில்‌ வைத்துத்‌ தன்னை வணங்கி வழிபடுவதை அனுமதிக்கவில்லையென்பது வரலாறு கூறும்‌ உண்மை. அப்படி வேறு எவராகிலும்‌ தம்மைக்‌ கடவுளாக்க முனைந்தால்‌ கூட நபிமார்கள்‌ உடனே அதைத்‌ தடுத்து விடுவார்கள்‌. இது
நபிமார்களின்‌ குணங்களில்‌ ஒன்று. ஸாலிஹான நன்மக்களில்‌ எவரும்‌ தான்‌ வணங்கப்படுவதற்கு வாய்ப்புகள்‌ அளிக்கவில்லை என்பதுவே உண்மை.

இந்த ஆதாரங்களினால்‌ உயிரோடு நடமாடும்‌ ஒரு நபியையோ, வலியையோ, குருவையோ அணுகி அவரிடம்‌ சிபாரிசைக்‌ கேட்கலாம்‌. உதவித்‌ தேடி நிற்கலாம்‌. அல்லாஹ்விடம்‌ பிரார்த்திக்கச்‌ சொல்லலாம்‌. இதற்கெல்லாம்‌ ஷரீஅத்தில்‌ அனுமதி
உண்டு. ஆனால்‌ இவர்கள்‌ காலஞ்சென்றதற்கப்பால்‌ இவற்றுள்‌ எதுவுமே அனுமதிக்கப்பட மாட்டாது. எந்த முஸ்லிமுக்கும்‌ காலஞ்‌ சென்ற நபியிடம்‌ அவருடைய கப்றில்‌ சென்று முறையிடுவதற்கும்‌, பிரார்த்தனைகள்‌ வேண்டுவதற்கும்‌, உரிமை வழங்கப்படவில்லை.

ஏனெனில்‌ தவறான செயலில்‌ மனிதன்‌ மூழ்கினால்‌ அல்லது நபியின்‌ சமாதியில்‌ அவர்களை கண்ணியப்படுத்தி வணங்கி பித்‌அத்தான வேலைகள்‌ அச்சமாதியில்‌ நடத்தப்பட்டால்‌ இவற்றைத்‌ தடுத்து நிறுத்துகின்ற ஆற்றலும்‌, வல்லமையும்‌ இறந்துப்‌
போன நபிமார்களுக்குக்‌ கிடையாது. இதனால்‌ மனிதன்‌ ஷிர்க்கின்‌ பக்கம்‌ போய்ச்சேர்ந்து தன்‌ ஈமானை வீணாக்கிக்‌ கொள்கிறான்‌. இறந்துபோன நபியிடம்‌ சென்று பிரார்த்திப்பதால்‌ இம்மாதிரியான நிலைமைகள்‌ இவனுக்கு உருவாயின. இங்கேதான்‌ இறந்தவர்களைப்‌ பிரார்த்திக்கக்‌ கூடாது என்ற அனுமதியின்மையின்‌ மர்மம்‌ வெளிப்படுகிறது.

காலஞ்சென்ற ஒருவரைப்‌ பிரார்த்தித்து தம்‌ தேவைகளை முறையிடுவதும்‌, எங்கோ தூரத்‌ தொலைவில்‌ இருப்பவரைக்‌ கூப்பிட்டுக்‌ தேவைகளை வேண்டுவதும்‌ கூடாது என்பது என்ற விஷயத்தில்‌ சமம்தான்‌. 

மனிதன்‌ ஒரு நபியை நேராகப்‌ பார்த்தான்‌ என்று வைத்துக்‌ கொள்வோம்‌. அல்லது ஒரு மலக்கை சந்தித்தான்‌. எனக்காக துஆ செய்யுங்கள்‌ என்று அவர்களிடம்‌ வேண்டுகோள்‌ விடுத்தான்‌. இந்நேரம்‌ இச்சொல்‌ அவனை  ஷிர்க்கில்‌ சேர்த்து விடாது. 

ஆனால்‌ எங்கோ ஒரு நல்ல மனிதர்‌ அல்லது ஒரு
நபி இருப்பதாக கேள்விப்பட்டதும்‌ அவரை மனதில்‌ நினைத்து தூரத்திலிருக்கின்ற அவரிடம்‌ உரையாடுவது போல்‌ நினைத்து எனக்காக துஆச்‌ செய்யுங்கள்‌ என்று தன்‌ வேண்டுகோளை தெரிவித்தானென்றால்‌ இச்செயல்‌ கண்டிப்பாக அவனை ஷிர்க்கில்‌ சேர்த்து வைக்கிறது. 

ஏனெனில்‌ மய்யித்தாக இருப்பவரும்‌, மறைமுகமாக இருப்பவரும்‌ ஷிர்க்கான செயல்களை காணவும்‌, கேட்கவும்‌ முடியாதவர்களாக இருப்பதனால்‌ இவற்றைச்‌ செய்கிறவனைத்‌ தடுக்க மாட்டார்கள்‌. இத்தீய செயல்‌ விலக்கப்‌படாமலேயே செய்யப்படுகிறது. இதனால்‌ ஷிர்க்குகள்‌ நாளொரு மேனியாக வளர்ந்து கொண்டே செல்கிறது.

உயிருடனிருக்கையில்‌ எந்த நபியும்‌ தாம்‌ வணங்கப்பட்டு தமக்காக சிரம்‌ சாய்ப்பதை
ஒருபோதும்‌ விரும்பமாட்டார்‌. ஷிர்க்கைக்‌ கண்டால்‌ உடனே அதைக்‌ தடுத்து நிறுத்த வேண்டுமென்று பணிக்கப்பட்டுள்ளார்கள்‌. ஆகவே வாழும்‌ காலங்களில்‌ மனிதன்‌ நபியிடம்‌ தம்‌ தேவைகளைச்‌ சொல்லிப்‌ பிரார்த்திக்கும்படி வேண்டலாம்‌. அதனால்‌
தப்புகள்‌ தலைதூக்கி விடுமோ என்ற ஐயப்பாடுகள்‌ உண்டாக வழியில்லை.

மய்யித்துகளிடம்‌ தம்‌ தேவைகளை வேண்டி நின்று இருகரமேந்திக்‌ கெஞ்சிக்‌ கேட்டு துஆக்களை அங்கீகரிக்கும்‌ சக்தி அவற்றிற்கு உண்டு என இதயத்தால்‌ விசுவாசித்து அவ்வாறு செயல்பட்டால்‌ அதேவினாடியில்‌ மனிதன்‌ ஷிர்க்கின்பால்‌ சேர்ந்து
விடுகிறான்‌. முஷரிக்குகளும்‌, வேதம்‌ அருளப்‌ பெற்ற வழிகெட்ட கூட்டத்தார்களும்‌, அவர்களைப்‌ பின்பற்றி பித்‌அத்துக்காரர்களான முஸ்லிம்களில்‌ சிலரும்‌ மார்க்கம்‌ அனுமதிக்காத புதுமைச்‌ செயல்களைச்‌ செய்து தங்களை நேர்மையான நம்பிக்கையிலிருந்து திருப்பிக்‌ கொண்டார்கள்‌.

நமக்கு துஆக்‌ கேட்கும்படி நாமாகச்‌ சென்று மலக்குகளிடம்‌ முறையிடத்‌ தேவைதான்‌ என்ன? நன்மையை நாடி அவர்களாகவே சத்திய விசுவாசிகளுக்காக வேண்டி அல்லாஹ்விடம்‌ பிரார்த்தித்துப்‌ பிழைபொறுக்கத்‌ தேடுகிறார்கள்‌. இவ்வுண்மையைத்‌ திருமறை விளக்குகிறது: 'அர்ஷைச்‌ சுமந்திருப்பவர்களும்‌, அதனைச்‌ சூழ இருப்பவர்களும்‌ தங்கள்‌ இறைவனின்‌ புகழைக்‌ கொண்டு அவனைத்‌ துதி‌ செய்கிறார்கள்‌, அவனை விசுவாசிக்கிறார்கள்‌ விசுவாசம்‌ கொண்டோரின்‌ குற்றங்களை மன்னிக்கும்‌ படியும்‌ கோருகிறார்கள்‌. 

"எங்கள்‌ இறைவனே! நீ உன்‌ ஞானத்தாலும்‌,
கருணையாலும்‌ யாவற்றையும்‌ சூழ்ந்தறிகிறாய்‌. ஆகவே பாவங்களை விட்டு விலகி உனது வழியைப்‌ பின்பற்றுவோருக்கு நீ மன்னிப்பளித்து, அவர்களை நரக வேதனையிலிருந்து காத்தருள்வாயாக! இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும்‌
நிலையான சுவனபதிகளில்‌ அவர்களையும்‌, அவர்களுடைய மூதாதையர்களிலும்‌, மனைவியரிலும்‌, சந்ததிகளிலுமுள்ள நல்லோர்களையும்‌ புகுத்துவாயாக. நிச்சயமாக நீயே யாவரையும்‌ மிகைத்தோனும்‌, யாவரையும்‌ அறிந்த ஞானமுடையோனுமாய்‌ இருக்கிறாய்‌. சகல தீங்குகளிலிருந்தும்‌ அவர்களைக்‌ காத்துக்‌ கொள்வாயாக. அன்றையதினம்‌ எவரை நீ சகல தீங்குகளிலிருந்தும்‌ காத்துக்‌ கொண்டாயோ அவர்மீது
நிச்சயமாக நீ பேரருள்‌ புரிந்து விட்டாய்‌. இதுவே மகத்தான பெரும்‌ பாக்கியமாகும்‌! (என்று பிரார்த்திக்கின்றனர்‌). (40:7-9)

"மேலுள்ள வானங்கள்‌ வெடித்து (விழுந்து) விடவும்‌ கூடும்‌. (ஆனால்‌) மலக்குகள்‌ (பயந்து) தங்களிறைவனைப்‌ புகழ்ந்து துதிச்‌ செய்து பூமியிலுள்ளவர்களின்‌ குற்றங்களை மன்னிக்குமாறு கோரிக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மன்னிப்போனும்‌, கிருபையுடையோனுமாயிருக்கிறான்‌ என்பதை அறிந்துக்‌ கொள்ளுங்கள்‌. யார்‌ அவனையன்றிப்‌ (பிறரைக்‌ தம்‌) பாதுகாவலராக எடுத்துக்‌
கொண்டார்களோ அவர்களை அல்லாஹ்‌ கவனித்தவனாக இருக்கிறான்‌. (நபியே!)
அவர்கள்‌ மீது நீர்‌ பொறுப்பாளரல்லர்‌. (42:5-6)

இத்திருமறை வசனங்களின்‌ அடிப்படையில்‌ பார்க்கும்‌ போது மலக்குகள்‌ மூமின்களுக்காகப்‌ பிழைபொறுக்கத்‌ தேடுகிறார்கள்‌ என்பதை விளங்க முடிகிறது. விசுவாசிகள்‌ மலக்குகளிடம்‌ சென்று தம்‌ தேவைகளை முறையிடாமல்‌, மலக்குகள்‌ தாமாக விசுவாசிகளுக்குப்‌ பிரார்த்தனை செய்து வேண்டுகிறார்கள்‌. ஆகவே நபியவர்களும்‌, இதர நபிமார்கள்‌, வலிமார்கள்‌, நாதாக்கள்‌ இவர்களைப்‌ போன்ற பொதுநலம்‌ கருதுகின்றவர்கள்‌ அனைவரும்‌ தம்‌ சமூகத்தில்‌ வாழும்‌ நல்ல மக்களின்‌ நலனை நாடிப்‌ பிரார்த்திப்பார்கள்‌. அல்லாஹ்விடம்‌ சிபாரிசும்‌ செய்வார்கள்‌ என்பதைப்‌ புரிந்து கொள்ள முடிகிறதல்லவா? நபிமார்களெல்லாம்‌ தங்களுக்கு கட்டளையிடப்‌ பட்டதையே செய்கிறவர்கள்‌. செய்யக்‌ கூடாதென்று விலக்கப்பட்ட எதையும்‌ செய்யமாட்டார்கள்‌. இது நபித்துவத்தின்‌ அடிப்படையாகும்‌.

இரண்டாவதாக: இன்னதைச்‌ செய்ய வேண்டும்‌. இன்னதைச்‌ செய்யக்‌ கூடாது என்று அவர்களைக்‌ திருத்த மனித சமூகத்தால்‌ முடியுமா? நபிமார்கள்‌ தவறான செய்கையில்‌ விழாமல்‌ பாதுகாப்பளிக்கப்‌ பட்டுள்ளார்கள்‌. தமது சமூகத்துக்கு எப்போதும்‌ நலவை நாடி அவர்களுக்கு எப்போதும்‌ ஒத்தாசை புரிவார்கள்‌. சமூகத்தை ஆதரிக்கும்‌ எந்த மனிதனும்‌
இது விஷயத்தில்‌ நபிமார்களைப்‌ போலிருக்க முடியாது. நபிமார்களிடம்‌ தம்‌ தேவைகளை முறையிட்டுப்‌ பிரார்த்திக்கக்‌ கோருவது ஷரீ அத்தில்‌ அனுமதிக்கப்பட்ட ஸுன்னத்தான செயல்‌ என்றோ, வாஜிபான செயல்‌ என்றோ யாரும்‌ சொல்ல
மாட்டார்கள்‌. அது விலக்கப்பட்ட வினை.

நபிமார்களும்‌, வலிமார்களும்‌ வாழ்ந்திருக்கையில்‌ சமூக நலனை நாடி அவர்கள்‌ துஆச்‌ செய்தாலும்‌, செய்யாமலிருந்தாலும்‌ மனிதர்கள்‌ அதைப்பற்றி சிந்திக்கத்‌ தேவையில்லை. அல்லாஹ்‌ அவர்களை நோக்கி எதைப்‌ பணித்தானோ அதைத்‌ தவிர
இம்மியளவு கூட கூட்டியோ குறைத்தோ அவர்கள்‌ செய்ய மாட்டார்கள்‌. இதுவே அவர்களைப்‌ பற்றிய நமது விசுவாசம்‌.

நபிமார்களிடம்‌ (திடீரென்று) நமக்கு துஆச்‌ செய்யக்‌ கூறினால்‌ நமது வேண்டுதலுக்கிணங்க உடனே துஆக்‌ கேட்பார்கள்‌ என்று என்ன நம்பிக்கை இருக்கிறது? நாம்‌ துஆச்‌ செய்ய வேண்டினாலும்‌, வேண்டாவிட்டாலும்‌ இது விஷயத்தில்‌
அல்லாஹ்வின்‌ கட்டளை எதுவோ அதைத்தான்‌ செய்வார்கள்‌. துஆச்‌ செய்யுங்கள்‌ என்று நாம்‌ வேண்டிய நேரத்தில்‌ அவர்கள்‌ மீதுள்ள அல்லாஹ்வின்‌ விதி யாருக்கும்‌ துஆ கேட்கக்‌ கூடாது என்றிருக்குமானால்‌ நமது வேண்டுதல்‌ பலனளிக்காது. மாறாக நமக்குப்‌ பிரார்த்திக்க அல்லாஹ்‌ அவர்களைப்‌ பணித்துள்ளான்‌ என்று வைத்துக்‌ கொள்வோம்‌. நாம்‌ நபியிடம்‌ எதையும்‌ முறையிட்டுக்‌ கேட்கவுமில்லை என்றாலும்‌ நமக்குத்‌ தெரியாமல்‌ நம்‌ நாட்டங்கள்‌ நிறைவேற்றப்படும்‌. ஏனெனில்‌ நபியவர்கள்‌
அதற்காகப்‌ பாடுபட்டிருக்கிறார்கள்‌ என்பதை நாம்‌ அறியவில்லை.

சுருங்கக்‌ கூறினால்‌ காலஞ்சென்ற நபிமார்களிடமும்‌, வலிமார்களிடமும்‌ நமது எத்தேவையை வேண்டினாலும்‌ அணுவளவும்‌ பயனளிக்காது. மாறாக அது தீங்கான செய்கையின்‌ பால்‌ மனிதனை இழுத்துச்‌ செல்லும்‌. நபிமார்கள்‌ உலகில்‌ வாழும்‌ போது அவர்களிடம்‌ நம்‌ தேவைகளை முறையிட்டு நமக்காகப்‌ பிரார்த்திப்பதற்கும்‌, சிபாரிசு செய்வதற்கும்‌ வேண்டுவது கூட வாஜிபான அல்லது ஸுன்னத்தான
அமல்களொன்றுமில்லை. ஆனால்‌ அது ஷிர்க்கின்‌ பக்கம்‌ மனிதனைச்‌ சேர்த்து விடாது.

நபியிடம்‌ நேராக ஆஜராகித்‌ தேவைகளைக்‌ கேட்கும்‌ போது ஷிர்க்‌ வருமென்று பயமேயில்லை. நன்மைகள்‌ சில வேளைகளில்‌ இரு தரப்பாருக்கும்‌ கிடைக்கின்றன. நபிமார்கள்‌ கூலி கொடுக்கப்‌ படுவார்கள்‌. நபியின்‌ துஆவினால்‌ தம்‌ சமூகத்தின்‌
தேவைகள்‌ நிறைவேற்றப்‌ படும்போது சமூகமும்‌ துஆவினால்‌ பயன்‌ பெறுகிறது. ஆக இருதரப்பாரும்‌ (மனிதனும்‌, நபியும்‌) பலனடைகிறார்கள்‌.

ஆனால்‌ முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும்‌. அசலில்‌ படைப்புகளிடம்‌ கேட்டல்‌ என்பது தடுக்கப்பட்டுள்ளது. நபிமார்களின்‌ பிரார்த்தனைகள்‌ பலன்‌ நல்கினாலும்‌, நல்காவிட்டாலும்‌ பொதுவாக சிருஷ்டிகளிடம்‌ பிரார்த்தனை வேண்டுவது,
உலகத்‌ தேவைகளைக்கூறி துஆச்‌ செய்யும்படி அவர்களைக்‌ கேட்பது ஆகியவையெல்லாம்‌ வாஜிப்‌, ஸுன்னத்‌ என்ற ஷரீஅத்‌ சட்டங்களுக்கு உட்பட்டதல்ல.

இது போற்றுவதற்குரியதும்‌ அல்ல. நல்ல தரமான வேலையென்றும்‌ சொல்லப்பட மாட்டாது. மனிதன்‌ எந்நேரமும்‌ எத்தேவைகளையும்‌ அல்லாஹ்விடம்‌ கேட்க வேண்டுமென்று தானே பணிக்கப்பட்டிருக்கிறான்‌. ஹாஜத்துக்களையும்‌ அல்லாஹ்‌ ஒருவனிடமே முறையிட்டுக்‌ கெஞ்ச வேண்டும்‌. நம்‌ முழு ஆதரவுகளையும்‌ அல்லாஹ்வின்‌ மீதே முற்றிலும்‌ ஆதரவு வைக்க வேண்டும்‌. எல்லாக்‌ காரியங்களையும்‌ அல்லாஹ்விடம்‌ பாரம்சாட்டி ஒப்படைத்து அவன்‌ மீது 'தவக்குல்‌' வைக்க வேண்டும்‌.
சிருஷ்டிகளை நோக்கிக்‌ கெஞ்சுவது அசலில்‌ தடுக்கப்பட்டதும்‌, விரும்பத்தகாததும்‌, ஒழுக்கக்‌ கேடானதுமான செயலாகும்‌.

இருப்பினும்‌ கடும்‌ சிக்கலான தேவைகள்‌ நேர்ந்தால்‌ மட்டும்‌ உயிருடனிருக்கும்‌ படைப்புகளிடம்‌ அப்பிரச்சனைகளை முறையிடுவதற்கு ஒரு அனுமதியிருக்கிறது. ஆயினும்‌ அதுபோற்றத்‌ தகுந்த அனுமதியென்று கூறுவதற்கில்லை. மனிதனுக்கு எந்தச்‌ சிக்கலான நிலைகள்‌ உருவானாலும்‌ அச்சிக்கல்களை சமாளித்து ஏதேனும்‌ தக்க
வழிகளில்‌ அதை நிவர்த்தி செய்து அல்லாஹ்விடம்‌ முறையிட்டு அவனிடமிருந்தே சர்வ பிரச்சனைகளுக்கும்‌ தீர்வு காண வேண்டும்‌. இதுவே சிலாகிக்கத்‌ தக்க மதிப்பான நடத்தையாகும்‌. 

அல்லாஹ்‌ கூறுகிறான்‌: "(உலக வேலைகளிலிருந்து) நீர்‌ ஓய்வு பெற்றதும்‌ வணக்கத்திற்குரிய தயாரிப்பை எடுத்துக்‌ கொள்ளும்‌. அன்றி (துன்பத்திலும்‌,
இன்பத்திலும்‌) உம்‌ இறைவனை (ஆதரவு வைத்து அவனை) யே நோக்கி நிற்பீராக!" (94:7-8)

வாழ்க்கையில்‌ எப்படித்தான்‌ சிக்கல்கள்‌, துன்பங்கள்‌, துயரங்கள்‌ நேர்ந்தாலும்‌ அவற்றிலிருந்து விடுதலை பெற அல்லாஹ்‌ ஒருவனை மட்டும்‌ நாட வேண்டும்‌.
எவரிடத்திலும்‌ முஸ்லிம்‌ தன்‌ துயரங்களை முறையிடுதல்‌ ஆகாது என்று குர்‌ஆன்‌ விளக்கிக்‌ காட்டுகிறது: 

“அல்லாஹ்வும்‌, அவனுடைய தூதரும்‌ அவர்களுக்குக்‌
கொடுத்ததைப்‌ பற்றித்‌ திருப்தியடைந்து 'அல்லாஹ்‌ நமக்குப்‌ போதுமானவன்‌, அல்லாஹ்‌ தன்‌ கிருபையைக்‌ கொண்டு மேலும்‌ அருள்‌ புரிவான்‌, அவனுடைய தூதரும்‌ (அருள்‌ புரியலாம்‌) நிச்சயமாக நாம்‌ அல்லாஹ்வையே நம்பியிருக்கிறோம்‌' என
அவர்கள்‌ கூறியிருக்க வேண்டாமா?”. (9:59)

கொடுத்ததைப்‌ பற்றிக்‌ குறிப்பிடும்போது அல்லாஹ்வும்‌ ரஸூலும்‌ கொடுத்ததாகச்‌ சொல்கிறான்‌. அதே வேளையில்‌ எவரைக்‌ கொண்டு மக்கள்‌ போதுமாக்கிக்‌ கொள்ள வேண்டுமென்பது பற்றிக்‌ குறிப்பிடுகையில்‌ அல்லாஹ்வை மட்டும்‌ குறிப்பிடுகிறான்‌.

தன்னுடன்‌ ரஸூலையும்‌ இணைத்து 'அல்லாஹ்வும்‌ ரஸூலும்‌ நமக்குப்‌ போதுமானவர்கள்‌' என்று அவர்கள்‌ கூற வேண்டாமா? என்று அல்லாஹ்‌ சொல்லவில்லை. மக்களுக்கு மார்க்க நெறிகளை வழங்குவதில்‌ அல்லாஹ்‌ தன்னுடன்‌ ரஸுலையும்‌ சேர்த்துக்‌ கூறுகிறான்‌: (ஆகவே) நம்முடைய தூதர்‌ உங்களுக்கு வகுத்துத்‌ தந்த வழிமுறைகளை நீங்கள்‌ மனமொத்து எடுத்துக்‌ கொள்ளுங்கள்‌. அவர்‌ எதனைக்‌ கூடாதென்று தடுத்து விட்டாரோ அவற்றிலிருந்து விலகிக்‌ கொள்ளுங்கள்‌" என்று குறிப்பிடுகிறான்‌. (59:7)

நற்செயல்களை ஏற்றுச்‌ செயல்பட்டும்‌ தீய செயல்களைத்‌ தவிர்த்துக்‌ கொண்டும்‌ மக்கள்‌ அல்லாஹ்வைத்‌ திருப்திப்‌படுத்துவதைப்‌ போல ரஸூலையும்‌ திருப்திப்‌படுத்த வேண்டும்‌. அல்லாஹ்‌, ரஸூலின்‌ முழு திருப்தியையும்‌ மக்கள்‌ நாடி நின்றனர்‌. ஆனால்‌ துன்பங்கள்‌, துயரங்கள்‌ நேர்ந்தால்‌ யாரைக்கொண்டு மக்கள்‌ போதுமாக்கிக்‌ கொள்ள
வேண்டும்‌ என்ற விஷயத்தை விளக்கியபோது அல்லாஹ்‌ தன்னை மட்டும்‌ தான்‌ கூறியிருக்கிறான்‌. தன்னுடன்‌ ரஸூலையும்‌ சேர்த்துக்‌ கூறவில்லை. 

மேலும்‌ 9:59 வசனத்தின்‌ இறுதியில்‌ 'நிச்சயமாக நாம்‌ அல்லாஹ்வையே நம்பியிருக்கிறோம்‌ என்று
அவர்கள்‌ கூற வேண்டாமா? எனும்‌ இடத்தில்‌ அல்லாஹ்வுடன்‌ ரஸூலும்‌ சேர்த்துக்‌ கூறப்படவில்லை. இதிலிருந்து மனிதன்‌ அல்லாஹ்‌ ஒருவனுக்கு மட்டுமே அஞ்சி ஒடுங்கிப்‌ பயந்திட வேண்டுமென்பது புலனாகிறது.

ஆனால்‌ ரஸூலைப்‌ பொறுத்தவரையில்‌ மக்கள்‌ அவர்களைப்‌ பின்பற்ற வேண்டும்‌. அவர்களின்‌ முன்மாதிரிகளை ஏற்க வேண்டும்‌ என்பன போன்ற செயல்களில்‌ மட்டுமே அல்லாஹ்வுடன்‌ ரஸூலையும்‌ சேர்த்துக்‌ கூற முடியும்‌. பயபக்திக்குரியவனும்‌, அஞ்சி
பயந்து நடக்க அருகதையுள்ளவனும்‌, ஆதரவு வைக்கப்‌பட வேண்டியவனும்‌ அல்லாஹ்‌ ஒருவன்‌ மட்டும்தான்‌ இதில்‌ நபிமார்களைச்‌ சேர்க்க முடியாது.

இதுபற்றிப்‌ பிறிதொரு வசனத்தில்‌ அல்லாஹ்‌ கூறுகிறான்‌: "எவர்கள்‌ அல்லாஹ்வுக்கும்‌, அவனுடைய தூதருக்கும்‌ வழிப்பட்டு, அல்லாஹ்வுக்குப்‌ பயந்து
அவனுக்கு மாறு செய்வதை அஞ்சிக்‌ கொண்டிருக்கின்றாரோ அத்தகையவர்தாம்‌
நிச்சயமாக மறுமையிலும்‌ பாக்கியசாலிகள்‌” (24:52) 

இந்த ஆயத்தில்‌ வழிப்படுவதை அல்லாஹ்வுக்கும்‌, ரஸுலுக்கும்‌ சேர்க்கப்‌பட்டுள்ளது. பயப்படுவதையும்‌,
அஞ்சுவதையும்‌ அல்லாஹ்வுடன்‌ மட்டும்‌ சேர்த்துக்‌ கூறப்பட்டுள்ளது. ஒருநாள்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ இப்னு அப்பாஸ்‌ (ரலி) அவர்களை அழைத்துக்‌ கூறினார்கள்‌:

'சிறுவரே! சில வார்த்தைகளை நான்‌ உமக்குச்‌ சொல்லித்‌ தருகிறேன்‌. அவற்றை நீர்‌ செவி தாழ்த்திக்‌ கேளும்‌. அல்லாஹ்வை நீர்‌ பேணிக்‌ கொள்ளும்‌. அவ்வாறெனின்‌ அல்லாஹ்‌ உமக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறான்‌. அல்லாஹ்வை நீர்‌ பயந்து நடந்தால்‌ அவனை நீர்‌ உமது சமீபத்தில்‌ பெற முடியும்‌. நீர்‌ செழிப்பாக வாழும்‌ காலங்களில்‌ அல்லாஹ்வுக்கு உம்மை (உமது தாராள மனதை)க்‌ காட்டி விடும்‌.
அப்படியென்றால்‌ உமக்கு ஏற்படும்‌ இக்கட்டான நிலைகளில்‌ அவன்‌ உமக்கு தனது தாராள குணத்தைக்‌ காட்டித்‌ தருவான்‌. நீர்‌ ஒன்றைத்‌ தேவைப்பட்டு அதைப்‌ பெற்றுக்‌ கொள்ள நாடினால்‌ அல்லாஹ்விடமே அதைக்‌ கேட்டுப்‌ பெற்றுக்‌ கொள்ளும்‌. உதவி தேடினால்‌ அல்லாஹ்விடம்‌ மட்டும்‌ உதவி தேடும்‌. நீர்‌ வாழ்நாளில்‌ அனுபவிக்கப்‌ போகும்‌ அனைத்துக்‌ காரியங்களைப்‌ பற்றியும்‌ திட்டவட்டமாக முன்னரே அல்லாஹ்‌ எழுதி முடித்து விட்டான்‌. ஆகவே உலகமே அணி திரண்டெழுந்து உமக்கு தீங்கிழைக்க
முனைந்தாலும்‌ இன்பம்‌, துன்பம்‌, நன்மை, தீமை இவ்விரு விதிகளில்‌ அல்லாஹ்‌ உமக்கு எழுதி நிர்ணபித்துள்ளானே அதைத்‌ தவிர வேறு எதுவும்‌ உமக்கு அணுகாது. ஆகவே உம்மால் அல்லாஹ்வைத்‌ திருப்திப்‌ படுத்தும்‌ வண்ணம்‌ ஏதேனும்‌ வழிபாடுகளை தீர்க்கமான இறை விசுவாசத்துடன்‌ செய்ய முடியுமானால்‌ செய்யும்‌. உம்மால்‌ அவற்றைச்‌ செய்ய முடியாவிட்டால்‌ பரவாயில்லை. நிலை குலைந்து
விடாதீர்‌. மனம்‌ வெறுக்கின்ற செயல்கள்‌ மீது நீர்‌ பொறுமையை மேற்கொள்ளும்‌. அப்பொறுமையில்‌ பற்பல நன்மைகள்‌ இருக்கின்றன. இது இப்னு அப்பாஸ்‌ அவர்களைப்‌ பற்றி நன்கறியப்பட்ட பிரபலமான ஹதீஸாகும்‌. சமயங்களில்‌ சுருக்கமான முறையில்‌ அறிவிக்கப்‌ படுவதுண்டு.

நபியவர்கள்‌ இந்த ஹதீஸில்‌ இப்னு அப்பாஸை நோக்கி 'தேவைகளை நீர்‌ அல்லாஹ்விடமே கேட்டுப்‌ பெற வேண்டும்‌. உதவி தேடினால்‌ அல்லாஹ்விடம்‌
மட்டும்‌ உதவி தேடும்‌' என்று ஏவியிருப்பது இப்னு அப்பாஸைப்‌ பற்றி அறிவிக்கப்படுகின்ற ஹதீஸ்களிலே மிகத்‌ தெளிவாக பலம்‌ குன்றாத (ஸஹீஹான) ஹதீஸாக அறிவிக்கப்படுகிறது. 

இமாம்‌ அஹ்மத்‌ (ரஹ்‌) அவர்களின்‌ முஸ்னத்‌ என்ற
ஹதீஸ்‌ தொகுப்பில்‌ ஒரு சம்பவம்‌ வருகிறது: கலீபா அபூபக்கர்‌ ஸித்தீக்‌ (ரலி) அவர்களின்‌ கரத்திலிருந்த சாட்டை ஒருமுறை கீழே விழுந்து விடுகிறது.
இத்தருணத்தில்‌ அந்தச்‌ சாட்டையை எடுத்து தாருங்கள்‌ என்று கூட யாரிடத்திலும்‌ அவர்‌ கெஞ்சி நிற்கவில்லை. அவர்களாகவே அதை எடுத்தார்கள்‌. அது மட்டுமல்ல, என்‌ ஆருயிர்த்‌ தோழர்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ 'எதையும்‌ மனிதர்களிடம்‌ கேட்காதே' என்று
என்னைப்‌ பணித்துள்ளார்கள்‌ என்றும்‌ இதற்கு விளக்கம்‌ கொடுத்தார்கள்‌.

இமாம்‌ முஸ்லிம்‌ (ரஹ்‌) அவர்களுடைய ஸஹீஹான ஹதீஸுத்‌ தொகுப்பில்‌ அவ்‌ஃப்‌ பின்‌ மாலிக்‌ என்பார்‌ மூலம்‌ அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸில்‌ அவ்‌ஃப்‌ பின்‌ மாலிக்‌ அவர்கள்‌ கூறுகிறார்கள்‌: 'நபி (ஸல்‌) அவர்கள்‌ தம்‌ தோழர்களில்‌ ஒரு சாராரிடம்‌ ஒப்பந்தம்‌ செய்து கொண்ட பொழுது கீழ்வருகிற சில வாக்கியங்களையும்‌ ஸஹாபாக்களிடம்‌ மறைமுகமாகச்‌ சொல்லிக்‌ கொடுத்தார்கள்‌. அது மக்களிடம்‌
எதையும்‌ கேட்க வேண்டாம்‌' என்பதுதான்‌. மேலும்‌ அவ்‌ஃப்‌ (ரலி) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌. ஸஹாபாக்களில்‌ சிலர்‌ சாட்டை போன்றவை தம்‌ கையை விட்டும்‌ கீழே விழுந்தால்‌ கூட பிறரிடம்‌ அதை எடுத்துத்‌ தாரும்‌' என்று கேட்டதில்லை.

இமாம்‌ புகாரியுடையவும்‌, முஸ்லிமுடையவும்‌ ஸஹீஹான ஹதீஸ்‌ கிரந்தங்களில்‌ வருகின்ற ஒரு ஹதீஸில்‌ பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: 'என்‌ சமுதாயத்திலுள்ளவர்களில்‌ எழுபதினாயிரம்‌ மக்கள்‌ கேள்வி கணக்கின்றி சுவனத்தில்‌
புகுவார்கள்‌. இது பற்றி மேலும்‌ நபிகள்‌ விளக்கம்‌ தருகையில்‌ கூறினார்கள்‌: அவர்கள்‌ ஓதிப்‌ பார்க்க பிறரிடம்‌ வேண்டிக்‌ கொள்ளாதவர்கள்‌. சூடுபோட்டு சிகிச்சை செய்யாதவர்கள்‌. அவர்கள்‌ துர்ச்சகுனம்‌ பார்ப்பவர்களாகவம்‌ இருந்ததில்லை. தம்‌
இரட்சகன்‌ அல்லாஹ்வின்‌ மீது தன்‌ காரியங்களை பாரம்‌ சாட்டி ஒப்படைத்திருந்தனர்‌'
என்று! கூறினார்கள்‌. கேள்வி-கணக்கின்றி சுவர்க்கத்தில்‌ நுழைபவர்களின்‌ தன்மைகளைப்‌
பற்றிப்‌ பாராட்டி நபி (ஸல்‌) அவர்கள்‌ குறிப்பிடும்‌ பொழுது அவர்கள்‌ ஓதிப்‌ பார்க்க யாரிடமும்‌ வேண்டிக்‌ கொள்ள மாட்டார்கள்‌' என்று விளக்கம்‌ தருகிறார்கள்‌.

திருமறையைக்‌ கொண்டும்‌, அல்லாஹ்வின்‌ அழகிய திருநாமங்களைக்‌ கொண்டும்‌ ஓதிப்‌ பார்த்தல்‌ என்பது அனுமதிக்கப்பட்ட பிரார்த்தனைகளின்‌ இனத்தைச்‌ சார்ந்ததாக இருந்தும்‌ அவர்கள்‌ அதைக்‌ கூட பிறரிடம்‌ கெஞ்சிச்‌ செய்ய மாட்டார்கள்‌ என்று பாராட்டப்‌ படுகிறார்கள்‌. மனிதன்‌ பிறரிடம்‌ ஓதிப்‌ பார்க்க போவதைக்‌ காட்டிலும்‌ தனக்குத்‌ தானாவே ஒதிப்‌ பார்ப்பதும்‌, மற்றவர்கள்‌ சொல்லாமல்‌ தாமாக உணர்ந்து பிறருக்கு ஓதிப்‌ பார்ப்பதும்‌ மார்க்கத்தில்‌ விரும்பத்தக்க செயலாகும்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ தமக்குத்‌ தாமாக ஓதிப்‌ பார்த்திருக்கிறார்கள்‌. ஆனால்‌ யாரிடத்திலும்‌ தமக்கு ஓதிப்‌ பார்க்க வேண்டிக்‌ கொள்ளவில்லை.

மனிதர்கள்‌ தமக்காகவும்‌ பிறருக்காகவும்‌ ஓதிப்‌ பார்ப்பதெல்லாம்‌ பிரார்த்தனைப்‌ புரிவதற்குச்‌ சமமாகும்‌. தமக்கும்‌, பிறருக்கும்‌ பிரார்த்திப்பது போன்றொரு அமல்தான்‌ ஓதிப்‌ பார்ப்பதும்‌. அத்துடன்‌ ஒன்றைக்‌ கவனிக்க வேண்டும்‌. ஒதிப்பார்த்தல்‌
திருமறையைக்‌ கொண்டும்‌, இறைவனின்‌ அழகிய திருநாமங்களைக்‌ கொண்டும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. வேறு ஏதேனும்‌ (மந்திரித்தல்‌) செய்தால்‌ அது முழு ஹறாமான செயலாக மதிக்கப்படுகிறது. 

நபியவர்கள்‌ தமக்காக ஓதிப்பார்த்தல்‌ அல்லாஹ்விடம்‌ பிரார்த்தனை புரிவதற்குச்‌ சமம்‌. இதைப்‌ பிறருக்காகச்‌ செய்தால்‌ பிறருக்காகப்‌ பிரார்த்தித்திருக்கிறார்கள்‌ என்றே கூற வேண்டும்‌. நபிகள்‌ மட்டுமல்ல, அனைத்து
நபிமார்களுமே அல்லாஹ்விடத்தில்‌ தமக்காகவும்‌, பிறருக்காகவும்‌ பிரார்த்தனைகள்‌ நடத்திப்‌ பற்பல தேவைகளை அவனிடம்‌ கேட்டிருக்கிறார்கள்‌. பல தேவைகளை அவனிடமிருந்து பிறருக்காகச்‌ சாதித்துக்‌ கொடுத்துமிருக்கிறார்கள்‌. நபிமார்களான ஆதம்‌, இப்ராஹீம்‌, மூஸா (அலை) போன்ற மற்றும்‌ இறை தூதர்களின்‌ வரலாற்றில்‌ அல்லாஹ்‌ இதைக்‌ குறிப்பிட்டுக்‌ காட்டுகிறான்‌.

இப்னு அப்பாஸ்‌ அறிவிக்கும்‌ ஸஹீஹான ஹதீஸில்‌ கூறப்படுகிறது: 'நம்ரூத்‌ இப்ராஹிம்‌ நபியைத்‌ தூக்கி நெருப்புக்‌ கிடங்கில்‌ எறிந்தபோது உடனே ஜிப்ரீல்‌
வருகைத்‌ தந்து கூறினார்கள்‌. 'இப்ராஹீமே! உம்‌ தேவையைக்‌ கேளும்‌' உடனே இப்ராஹீம்‌ நபியவர்கள்‌ அல்லாஹ்வே எனக்குப்‌ போதுமானவன்‌. அவனிடம்‌ நான்‌ எல்லாக்‌ காரியங்களையும்‌ ஒப்படைத்து விட்டேன்‌. பாரம்சாட்டி ஒப்படைக்கக்‌ கூடியவார்களில்‌ அவனே சிறந்தவன்‌ -ஹஸ்பியல்லாஹு வ நிஃமல்‌ வகீல்‌- என கூறினார்கள்‌. சிலர்‌ பெருமானாரிடம்‌ வந்து நபியே! தாங்களுக்கெதிராக யுத்தம்‌ புரிய சகல மனிதர்களும்‌ நிச்சயமாகத்‌ திரண்டு நிற்கின்றனர்‌. ஆகவே அவர்களை பயப்படுங்கள்‌' என்று கூறியபோது, நபியவர்களும்‌ 'ஹஸ்பியல்லாஹு வ நிஃமல்‌ வகீல்‌' எனக்‌ கூறித்தான்‌ தமக்குத்‌ தாமே பாதுகாப்புத்‌ தேடிக்‌ கொண்டார்கள்‌.

இப்படியாகவே அனைத்து நபிமார்களும்‌ தமக்காக அல்லாஹ்விடம்‌ மட்டும்‌ பாதுகாப்புக்‌ கேட்டு நின்றார்கள்‌. வேறு யாரிடமும்‌ எதையும்‌ கேட்கவில்லை. கஷ்டங்களை விட்டு நீங்கவும்‌, துன்பங்களிலிருந்து விடுபடவும்தாமாகவே துஆக்களை இறைஞ்சி துன்பங்களிலிருந்து விலகிக்‌ கொண்டனர்‌. யாரிடமும்‌ அவர்கள்‌ எதைப்‌ பற்றியும்‌ முறையிடவில்லை. ஜிப்ரீலிடம்‌ கூட எதையும்‌ வேண்டிக்‌ கொள்ளவில்லையென்றால்‌ வேறு எந்தப்‌ படைப்புகளிடம்தான்‌ கேட்கப்‌ போகிறார்கள்‌.

ஒரு நாள்‌ ஜிப்ரீல் (அலை)‌ நபி (ஸல்‌) அவர்களிடம்‌ வந்து நபியே! தாங்களுக்கு ஏதாவது தேவைகள்‌ இருக்கின்றனவா? என்று கேட்டார்கள்‌. அதற்கு நபி (ஸல்‌) அவர்கள்‌ ஜிப்ரீலை நோக்கி 'உங்களிடம்‌ எனக்கு எத்தேவையுமில்லை' என்று பதில்‌
கொடுத்தார்கள்‌. இச்சம்பவத்தை இமாம்‌ அஹ்மதும்‌ மற்றவர்களும்‌ அறிவிக்கிறார்கள்‌.

நபி இப்ராஹீம்‌ (அலை) அவர்கள்‌ தீக்குண்டத்தில்‌ எறியப்பட்ட வேளையில்‌ அல்லாஹ்விடம்‌ பிரார்த்தித்து அதிலிருந்து விடுதலைப்‌ பெற்ற சம்பவத்தை வேறு
இடங்களில்‌ திருமறை குறிப்பிடுகிறது. அவர்கள்‌ நெருப்பில்‌ எறியப்பட்டபோது ஜிப்ரீல்‌ விஜயம்‌ செய்தார்கள்‌. 'இப்ராஹீமே! உமக்கு இப்பொழுது என்ன தேவையோ அதை அல்லாஹ்விடம்‌ கேளும்‌ என்று பணித்தார்கள்‌. அதற்கு இப்ராஹீம்‌ நபியவர்கள்‌ 'நான்‌ ஏன்‌ அல்லாஹ்விடம்‌ கேட்க வேண்டும்‌. என்னைப்‌ பற்றி அல்லாஹ்‌ தெரிந்திருப்பதே
எனக்குப்‌ போதுமானது. நான்‌ ஒன்றும்‌ அவனிடம்‌ கேட்கத்‌ தேவையில்லை' (ஹஸ்பீ மின்‌ ஸுஆலி இல்முஹு பி ஹாலி) என்று நபி இப்ராஹீம்‌ (அலை) ஜிப்ரீலிடம்‌ கூறியதாகச்‌ சொல்லப்படும்‌ சம்பவம்‌ ஆதாரமற்றதாகும்‌. இதை மெய்யான சம்பவம்‌
என்று குறிப்பிட முடியாது. மாறாக இப்ராஹீம்‌ (அலை) அவர்கள்‌ இவ்வேளையில்‌ ஹஸ்பியல்லாஹு வ நிஃமல்‌ வகீல்‌ என்று கூறிக்‌ கொண்டிருந்தார்கள்‌. இது இப்னு
அப்பாஸ்‌ மூலம்‌ அறிவிக்கப்படும்‌ ஸஹீஹான ஹதீஸில்‌ காணப்படுகிறது. 

நபி இப்ராஹீம்‌ (அலை) அவர்கள்‌ ஜிப்ரீலிடம்‌ 'நான்‌ ஏன்‌ இறைவனிடம்‌ கேட்க வேண்டும்‌?' என்று எப்படிப்‌ புறக்கணித்துக்‌ கூறுவார்கள்‌. அல்லாஹ்‌ எல்லாவற்றையும்‌ அறிந்திருக்கிறான்‌. சிருஷ்டிகளின்‌ ஒவ்வொரு நிலைமையையும்‌ அறிந்திருக்கிறான்‌.
அத்துடன்‌ தன்னை வணங்க வேண்டுமென்றும்‌ அவற்றைப்‌ பணித்திருக்கிறான்‌. தன்மீது
எல்லா அடிமைகளும்‌ தத்தம்‌ காரியங்களைப்‌ பாரம்‌ சாட்டி ஒப்படைத்து விட்டுத்‌ தேவைகள்‌ அனைத்தையும்‌ அவனிடமே கேட்க வேண்டுமென்றும்‌ பணத்திருக்கிறான்‌.

ஆம்‌! இவை ஒவ்வொன்றும்‌ ஒவ்வொரு காரணம்‌. இக்காரணங்களினால்‌ சகல காரியங்களும்‌ உண்டாகின்றன. காரணங்களைக்‌ கொண்டு காரியங்கள்‌ நிறைவேறும்‌ அமைப்பில்‌ விஷயங்களை அல்லாஹ்‌ அமைத்திருக்கிறான்‌. எனவே வணங்கி வழிபடும்‌ நன்மைகளுக்குரிய கூலி கொடுத்தல்‌ என்று ஒரு காரியம்‌ உண்டாவதற்கு வணங்க வேண்டுமென்ற காரணத்தை அமைத்துள்ளான்‌. ஆக வணக்கம்‌, வழிபாடு என்ற காரணங்களிருந்தால்‌ கூலி கொடுக்கப்படும்‌ என்ற காரியம்‌ நிறைவேறுகிறது. இதைப்‌ போன்றுதான்‌ துஆக்களின்‌ நிலைமையும்‌. அங்கீகரிக்கப்படல்‌ என்ற காரியம்‌ உண்டாவதற்கு இறைவனிடம்‌ கெஞ்சிக்‌ கேட்டல்‌ என்ற காரணம்‌ இருக்க வேண்டும்‌. அல்லாஹ்‌ அனைத்தையும்‌ முறைபோல்‌ அறிந்திருக்கிறான்‌ என்பதில்‌ எவருக்கும்‌
சந்தேகமில்லை. யார்‌ என்ன தேவைக்குரியவன்‌? எது யாருக்கு வேண்டும்‌? பாவி யார்‌? கொடிய பாவி யார்‌? என்பன போன்றவற்றை விளக்கமாகவும்‌, துல்லியமாகவும்‌ அறிந்திருக்கிறான்‌. இத்தகைய அல்லாஹ்வுக்கு மனிதன்‌ தன்னிடம்‌ துஆக்‌ கேட்க
வேண்டுமென்று பணிப்பதில்‌ என்ன குறைபாடு வரப்போகிறது? பாவம்‌ செய்கிறவனை நன்றாக அறிந்திருந்தும்‌ அவனை நோக்கி 'நீ பிரார்த்தித்து என்னிடம்‌ பாவமன்னிப்பை வேண்டு' என்று பணிப்பதில்‌ எந்தக்‌ குறையும்‌ அல்லாஹ்வுக்கு இல்லை.

இதைப்‌ போன்றுதான்‌ நபி இப்ராஹீமின்‌ நிலைமையும்‌. நெருப்புக்‌ குண்டத்தில்‌ தூக்கி வீசப்பட்ட போது அவர்களின்‌ நிலைமைகளை அல்லாஹ்‌ நன்றாக தெரிந்திருந்தான்‌. இதனால்‌ அவர்களை அல்லாஹ்விடம்‌ பிரார்த்திக்காமலிருக்க என்ன வந்து விட்டது? எனவே நபி இப்ராஹீம்‌ (அலை) அவர்கள்‌ கூறியதாகச்‌ சொல்லப்படும்‌ வார்த்தைகள்‌ ஆதாரமற்றவையாகும்‌. 

ஆனால்‌ ஒன்றை கவனத்தில்‌ கொள்ள வேண்டும்‌. துஆக்களை விட சிலவேளை சில திக்ருகளுக்கு (தியானங்களுக்கு) அதிகமான மதிப்புகள்‌
கொடுக்கப்படுகின்றன. மனிதன்‌ இதுபோன்ற திக்ருகளை ஓதினால்‌ துஆக்‌ கேட்பவனுக்குக்‌ கிடைக்கும்‌ ஆதாயத்தை விட அதிகமான ஆதாயத்தையும்‌, வெகுமதிகளையும்‌ இந்த திக்ருகளை மொழிந்ததினால்‌ பெறுகிறான்‌. ஆனால்‌ திக்ருகள்‌
ஓதி துஆவின்‌ பலனைப்‌ பெறுவதற்கெல்லாம்‌ மிகக்‌ குறைந்த சந்தர்ப்பங்களில்‌ மட்டும்தான்‌. 

ஹதீஸ்‌ குத்ஸியில்‌ அல்லாஹ்‌ கூறுவதை நபியவர்கள்‌
குறிப்பிடுகிறார்கள்‌: 'அல்லாஹ்‌ கூறினான்‌: 'என்னிடம்‌ எதையும்‌ கேட்காது என்னைத்‌ தியானிப்பதிலேயே ஒருவன்‌ நேரத்தைக்‌ கழித்தால்‌ துஆக்‌ கேட்பவர்களுக்கு அளிக்கப்படும்‌ ஆதாயத்தை விட சிறந்த ஆதாயத்தையும்‌, வெகுமதியையம்‌ அளித்து
அவனைக்‌ கெளரவிப்பேன்‌' இன்னுமோர்‌ ஹதீஸ்‌ குத்ஸியில்‌ நபியவர்கள்‌ கூறினார்கள்‌:

'அல்லாஹ்‌ சொல்கிறான்‌: 'என்னிடம்‌ பிரார்த்திக்காமலும்‌, என்னை திக்ரு செய்யாமலும்‌ எவர்‌ திருமறை ஓதுவதில்‌ மட்டும்‌ பராக்காயிருக்கிறாரோ அவருக்கு துஆக்‌ கேட்பவர்களுக்குக்‌ கொடுக்கப்படும்‌ வெகுமதியைக்‌ காட்டிலும்‌ சிறந்த வெகுமதியையும்‌, ஆதாயத்தையும்‌ நான்‌ கொடுப்பேன்‌. இதை அவர்கள்‌ தமது ஹதீஸ்‌ தொகுப்பில்‌ பதிவு செய்திருக்கிறார்கள்‌.


அனுஷ்டானங்களில்‌ சிறந்தது தொழுகை

வழிபாடுகளில்‌ ஏற்றமானது தொழுகை. அத் தொழுகையில்‌ குர்‌ஆன்‌ ஒதுதல்‌, துஆக்கள்‌ கேட்டல்‌, திக்ரு செய்தல்‌ யாவும்‌ அடங்கியிருக்கின்றன. இதில்‌ ஒவ்வொன்றும்‌ அதற்குரிய குறிப்பிட்ட இடத்தில்‌ சொல்ல வேண்டுமென்பது சட்டம்‌. தக்பீர்‌ கட்டித்‌
தொழுகையில்‌ நுழைந்து 'வஜ்ஜஹ்த்து, ஃதனா போன்றவை ஒதி முடித்ததும்‌ குர்‌ஆனிலிருந்து சிறிதளவு ஓதவேண்டும்‌. ருகூவிலும்‌, ஸஜுதிலும்‌ குர்‌ஆன்‌ ஓதுதல்‌ விலக்கப்பட்டுள்ளது. இவ்விரு இடங்களிலும்‌ திக்ருகள்‌, துஆக்கள்‌ தான்‌ ஓதவேண்டும்‌. பெருமானார்‌ அவர்கள்‌ தொழுகையின்‌ இறுதியில்‌ பிரார்த்தித்திருக்கிறார்கள்‌.
தோழர்களிடமும்‌ அதைப்‌ போன்று பிரார்த்திக்க ஏவியிருக்கிறார்கள்‌. 

குறிப்பாக ஸுஜுதில்‌ துஆ செய்வது மிக ஏற்றமானது. ஸுஜுதில்‌ அதிகமாகப்‌ பிரார்த்திப்பதைப்‌ பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ விரும்பியிருக்கிறார்கள்‌. நிலையிலும்‌, ருகூவிலும்‌ கூடப்‌ பிரார்த்தனைகள்‌ அனுமதிக்கப்படும்‌. குர்‌ஆன்‌ ஓதுவதும்‌, திக்ரு செய்வதும்‌ தொழுகையில்‌ மிகச்சிறந்த கர்மங்களாக இருந்தும்‌ கூட மனிதன்‌ தன்‌ இரட்சகனிடம்‌
சிரம்‌ பணிந்து பாவமன்னிப்புத்‌ தேடுதல்‌ சிலாகிக்கத்‌ தக்கதாக கருதப்படுகிறது.

கலீலுல்லாஹ்‌ இப்ராஹீம்‌ (அலை) அவர்கள்‌ தம்‌ இரட்சகனிடம்‌ அனைத்து நாட்டங்களையும்‌ கேட்டு மன்றாடினார்கள்‌. மற்ற நபிமார்களும்‌ இதுபோன்றே
செய்திருக்கிறார்கள்‌. அவ்வாறாயின்‌ சாதாரண மனிதன்‌ அல்லாஹ்விடம்‌ எப்படி மன்னிப்புக்‌ கேட்டுத்‌ தேவைகளுக்காகப்‌ பிரார்த்திக்காமலிருக்க முடியும்‌? இதைப்பற்றி தெளிவாக இறைவன்‌ விளக்கிக்‌ காட்டுகிறான்‌: 

"எங்கள்‌ ரப்பே! திட்டமாக நான்‌ என்‌ சந்ததிகளை மிக்க கண்ணியம்‌ வாய்ந்த உன்‌ வீட்டின்‌ சமீபமாக நான்‌ வசித்திருக்கச்‌ செய்தேன்‌. அது விவசாயம்‌ ஏதுமில்லாத ஒரு பள்ளதாக்கு. எங்கள்‌ ரப்பே! அவர்கள்‌ உன்னைத்‌ தொழுது கொண்டிருப்பதற்காக (அங்கு வசிக்கச்‌ செய்தேன்‌) மனிதர்களில்‌ ஒரு சாராரின்‌ இதயங்கள்‌ அவர்களை நாடும்படிச்‌ செய்வாயாக! பற்பல கனிவர்க்கங்களையும்‌ ஆகாரமாக அவர்களுக்கு அளித்தருள்வாயாக! அதற்கு அவர்கள்‌ உனக்கு நன்றி செலுத்துவார்கள்‌.

எங்கள்‌ ரப்பே! இதயங்களில்‌ நாங்கள்‌ மறைத்து வைப்பதையும்‌, வெளிப்படுத்துவதையும்‌ நீயே நன்கறிவாய்‌. வானத்திலோ, பூமியிலோ உள்ளவற்றில்‌
யாதொன்றும்‌ அல்லாஹ்வுக்கு மறைந்ததல்ல. சர்வ புகழும்‌ அல்லாஹ்வுக்குரியது. அவந்தான்‌ என்னுடைய வயோதிகத்தில்‌ இஸ்மாயிலையும்‌, இஸ்ஹாக்கையும்‌ எனக்குச்‌ சந்ததிகளாக அளித்தான்‌. நிச்சயமாக என்‌ ரப்பு பிரார்த்தனையைச்‌ செவியுறுபவனாக இருக்கிறான்‌.

ரப்பே! என்னையும்‌, என்‌ சந்ததிகளையும்‌ உன்னைத்‌ தொழுது வருபவர்களாக ஆக்கி வைப்பாயாக. எங்கள்‌ ரப்பே! என்னுடைய பிரார்த்தனைகளை அங்கீகரித்துக்‌
கொள்வாயாக.

எங்கள்‌ ரப்பே! எனக்கும்‌, என்‌ பெற்றோருக்கும்‌ மற்ற மூமின்களுக்கும்‌ கேள்விக்‌ கணக்கு கேட்கும்‌ மறுமை நாளில்‌ மன்னிப்பளிப்பாயாக என்று பிரார்த்தித்தார்‌”. (14:37- 41)

"இப்ராஹீமும்‌, இஸ்மாயீலும்‌ கஃபத்துல்லாவின்‌ அஸ்திவாரத்தைக்‌ கட்டி உயர்த்திய போது: 'எங்கள்‌ ரப்பே! உன்னை வணங்குவதற்காக நாங்கள்‌ அமைத்த இவ்வில்லத்தை எங்களிடமிருந்து ஏற்றருள்வாயாக. நிச்சயமாக நீயே நம்முடைய இப்பிரார்த்தனையைச்‌
செவியுறுவோனாகவும்‌, நன்கறிந்தவனாகவும்‌ இருக்கிறாய்‌.

எங்கள்‌ ரப்பே! எங்களிருவரையும்‌ உனக்கு முற்றிலும்‌ வழிப்படும்‌ முஸ்லிம்களாகவும்‌, எங்களுடைய சந்ததியிலிருந்து ஒரு கூட்டத்தினரை ஆக்கி வைப்பாயாக. (ஹஜ்‌ காலத்தி நாம்‌ புரிய வேண்டிய) எங்களுடைய வணக்கங்களையும்‌ அறிவிப்பாயாக.
(நாங்கள்‌ தவறிழைத்து விட்டாலும்‌) எங்களை நீ மன்னிப்பாயாக. நிச்சயமாக நீயே மிக மன்னிப்போனும்‌, நிகரற்ற அன்புடையோனுமாக இருக்கிறாய்‌.

எங்கள்‌ ரப்பே! என்‌ சந்ததிகளுக்கு உன்னுடைய அத்தாட்சிகளை எடுத்தோதிக்‌ காண்பித்து, வேதத்தையும்‌, ஞானத்தையும்‌ கற்றுக்‌ கொடுத்து அவர்களைப்‌ பரிசுத்தமாக்கி வைக்கக்கூடிய ஒரு தூதரை அவர்களிடமிருந்தே அவர்களுக்கு அனுப்பி
வைப்பாயாக. நிச்சயமாக நீயே மிக்க வல்லோனும்‌, நுண்ணறிவுடையோனுமாக இருக்கிறாய்‌' என்றும்‌ பிரார்த்தித்தார்கள்‌"'. (2:127-129)

மேலும்‌ மனிதன்‌ தன்‌ முஸ்லிம்‌ சகோதரருக்காக வேண்டி அல்லாஹ்விடம்‌ பிரார்த்திப்பது விரும்பத்தக்க செயல்‌. இது விஷயமாக அபுத்தர்தா (ரலி) என்ற ஸஹாபி மூலமாக அறிவிக்கப்படும்‌ ஸஹீஹான ஹதீஸாவது: நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: மனிதன்‌ கண்‌ பார்வைக்கு அப்பாற்பட்டிருக்கும்‌ தன்‌ இஸ்லாமிய சகோதரனுக்காகப்‌ பிரார்த்தித்தால்‌ இம்மனிதனிடம்‌ ஒரு மலக்கு ஏவி விடப்‌படுகிறார்கள்‌. இஸ்லாமிய உடன்‌ பிறந்தவனுக்காக எப்பொழுதெல்லாம்‌ இறைனிடம்‌ பிரார்த்திக்கிறானோ அப்பொழுதெல்லாம்‌ மலக்கு இப்பிரார்த்தனையைக்‌ கேட்டு ஆமின்‌ சொல்கிறார்‌. அத்துடன்‌ நீ பிரார்த்தித்தற்கொப்ப அல்லாஹ்‌ உனக்கும்‌ தந்தருள்‌
புரியட்டுமென்றும்‌ வேண்டுகிறார்‌. இதனால்‌ இருவரின்‌ தேவைகளும்‌ நிறைவேற்றப்படுகின்றன.

அல்லாஹ்விடம்‌ தனக்காகப்‌ பிரார்த்திப்பதனால்‌ தன்‌ நாட்டங்கள்‌ நிறைவேறுகின்றன. பிறருக்காகப்‌ பிரார்த்திப்பதனால்‌ தன்னுடையவும்‌, பிறருடையவும்‌ தேவைகள்‌ கிடைக்கின்றன. இவ்வாறிருக்க மனிதன்‌ மனிதனை நோக்கியே பிரார்த்தித்தால்‌, மனிதன்‌ மனிதனிடமே தேவைகளைக்‌ கேட்டு முறையிட்டால்‌ எவருடைய நாட்டமும்‌ நிறைவேறாமல்‌ போவதுடன்‌ பிரார்த்திப்பவன்‌ குற்றவாளியாகவும்‌ ஆகிவிடுகிறான்‌.

ஏனென்றால்‌ படைப்பினம்‌ தன்னைப்‌ போன்ற இன்னொரு படைப்பிடம்‌ சென்று கேட்பதில்‌ என்ன பயனிருக்கிறது. மனிதன்‌ பிறரிடம்‌ கேட்க அனுமதிக்கப்பட்ட விஷயங்களைத்‌ தவிர வேறு எதையும்‌ எத்தனைப்‌ பெரிய மனிதரிடமும்‌ கேட்டு நிற்கக்‌ கூடாது.


சிருஷ்டிகளிடம்‌ எதைக்‌ கேட்கலாம்‌?

கேட்காலாமென்று அனுமதிக்கப்பட்டவற்றில்‌ ஒன்று கல்வி. கல்வியைத்‌ தெரியாதவன்‌ தெரிந்தவனிடம்‌ கேட்கலாம்‌. கேட்டு விளங்கலாம்‌. இதை இறைவனும்‌
மனிதனுக்கு ஏவியிருக்கிறான்‌: "நீங்கள்‌ அறிந்து கொள்ளாமலிருந்தால்‌ கற்றோரிடம்‌ கேட்டறிந்து கொள்ளுங்கள்‌”. (16:43)

"..இதனை) நீங்கள்‌ அறியாவிட்டால்‌ முன்னருள்ள வேதத்தையுடையோரிடமேனும்‌ கேட்டறிந்து கொள்ளுங்கள்‌”. (21:7)

"உமக்கு முன்னர்‌ நாம்‌ அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களைப்‌ பற்றி நீர்‌ கேளும்‌. வணங்கப்படுவதற்கு ரஹ்மானையன்றி வேறொரு ஆண்டவனை நாம்‌ ஆக்கினோமா? (என்று). (43:45)

கல்வியைச்‌ செலவழிப்பது கற்றவன்‌ மீது கடமையாகும்‌. கல்லாதவன்‌ கற்றவனிடம்‌
சென்று ஒரு விஷயத்தைக்‌ கேட்கும்போது கற்றவன்‌ அதைச்‌ சொல்லிக்‌ கொடுக்காமல்‌ மறைத்தால்‌ அல்லாஹ்‌ மறுமையில்‌ கடும்‌ தண்டனையை அப்படி மறைப்பவனுக்கு வழங்குவதாகவும்‌ ஹதீஸில்‌ வந்திருக்கிறது. கல்வியை மறைத்து வைத்திருப்பவனுக்கு நெருப்பிலான கடிவாளமிட்டு வேதனை வழங்கப்படுவதாகவும்‌ ஹதீஸில்‌ காணப்படுகிறது.

அதுமட்டுமல்ல கல்வி என்பது கற்றுக்‌ கொடுப்பதினால்‌ வளர்ச்சி பெறுகிறது. செல்வத்தைச்‌ செலவு செய்தால்‌ குறைந்து விடுவது போல கல்வி குறைந்து விடாது. மாறாக நாளொரு மேனியாக கல்வி வளர்ந்து கொண்டே செல்கிறது. ஆகவேதான்‌
கல்வி ஒளி விளக்குக்கு ஒப்பிடப்படுகிறது. எத்தனையோ பேர்‌ விளக்கின்‌ ஒளியில்‌ பயன்‌
பெறுகின்றனர்‌. இந்த ஒரே விளக்கிலிருந்து எண்ணற்ற விளக்குகளைக்‌ கொளுத்தவும்‌
முடியும்‌. அப்படியிருந்தும்‌ விளக்குக்கு எந்தக்‌ குறையும்‌ ஏற்படுவதில்லை. பிறரிடம்‌ கல்வியைக்‌ கேட்பது போல தனக்குரிய உடைமைகளையும்‌, உரிமைகளையும்‌ கேட்டு வாங்கலாம்‌. கொடுத்திருந்த கடன்கள்‌, அடகுகள்‌, அமானிதங்கள்‌ அனைத்தையும்‌
ஒப்படைக்கப்‌ பட்டவர்களிடமிருந்து கேட்டு வாங்க வேண்டும்‌. இந்த மாதிரியான விஷயங்களைக்‌ கேட்டல்‌ அனுமதிக்கப்படுகிறது. யுத்தத்தில்‌ கிடைத்த ஆதாயப்‌
பொருட்களைப்‌ போன்ற கூட்டுச்‌ சொத்துகளையும்‌ மேலதிகாரிகளிடமிருந்து கேட்டு வாங்குவதற்கு அனுமதியிருக்கிறது.

வாரிசுகளுக்குரிய அனந்தர, அவகாசச்‌ சொத்துகள்‌, தனக்காக வஸிய்யத்‌ செய்யப்பட்ட சொத்துகள்‌, வாக்களிக்கப்பட்டதும்‌ நன்கொடையாக எழுதி வைக்கப்பட்டதுமான பொருட்கள்‌ இவை போன்றவற்றை கேட்டு வாங்கலாம்‌. கேட்பது இங்கும்‌
அனுமதிக்கப்படுகிறது. இச்சொத்துகளை வைத்திருப்பவரிடம்‌ அணுகி அவற்றைக்‌ கேட்டு
வாங்க வேண்டும்‌.

மனைவி தன்‌ கணவனிடம்‌ தன்‌ அன்றாடச்‌ செலவினங்களைக்‌ கேட்டு வாங்க வேண்டும்‌. பிரயாணிகள்‌ கடமைப்பட்டவர்களை அணுகித்‌ தமக்காக விருந்தளிப்பதற்கு வேண்டுவதும்‌ அனுமதிக்கப்‌ படுகிறது. மூஸா நபியவர்களும்‌, ஹிள்று அவர்களும்‌ கிராமவாசிகளை அணுகி விருந்து கேட்டதும்‌ அவர்கள்‌ அதை மறுத்ததும்‌ திருமறையில்‌
தெளிவாகக்‌ காணப்படும்‌ சம்பவம்‌ அல்லவா?

அதுபோலவே உடன்படிக்கை செய்து
கொண்டவர்கள்‌, மேலும்‌ கூட்டு வியாபாரம்‌ செய்கிறவர்கள்‌ தமக்குரிய பங்குகளை
கூட்டாளிகளிடம்‌ கேட்டு வாங்க வேண்டும்‌. விற்றவன்‌ வாங்கியவனிடம்‌ விலையைக்‌ கேட்க வேண்டும்‌. வாங்கியவன்‌ விற்றவனிடம்‌ சரக்கைக்‌ கேட்க வேண்டும்‌. இப்படியாக வாழ்வில்‌ சில, பல இடங்களில்‌ பிறரிடம்‌ கேட்க நேரிடும்‌ சந்தர்ப்பங்களையும்‌,
நிலைமைகளையும்‌ இஸ்லாம்‌ வரையறுத்துத்‌ தந்திருக்கிறது. இந்நிலைமைகளைகத்‌ தவிர வேறு எந்த நிலைமையிலும்‌ மனிதன்‌ தன்னைப்‌ போன்ற மற்ற மனிதனை கெஞ்சி நிற்பது முற்றிலும்‌ தடுக்கப்பட்டுள்ளது.

இதைத்தான்‌ திருமறையும்‌ கூறுகிறது: “அல்லாஹ்வுக்கு நீங்கள்‌ பயந்து நடந்து
கொள்ளுங்கள்‌. அவனைக்‌ கொண்டே நீங்கள்‌ உங்களுக்குள்‌ ஒருவருக்கொருவர்‌ கேட்டுக்‌
கொள்கிறீர்கள்‌. இன்னும்‌ (அல்லாஹ்வுக்கஞ்சி) இரத்தக்‌ கலப்பு உறவினர்க்கும்‌
மதிப்பளியுங்கள்‌. (4:1)

சில விஷயங்களைக்‌ (கேட்பதை விட) கேட்காமலிருத்தல்‌ மேன்மையாகும்‌. அவற்றைக்‌ கேட்க வேண்டுமென்று மனிதன்‌ பணிக்கப்படவுமில்லை. எனவே கேட்காலிருப்பதே நன்மை தரும்‌. நபியவர்கள்‌ அதுபற்றிப்‌ பேசும்போது உங்களில்‌ சிலர்‌ ஏதோ சில விஷயங்களைப்‌ பற்றிக்‌ கேட்டுத்‌ தெரிந்து கொள்கிறார்கள்‌. ஆனால்‌
உண்மையில்‌ அவர்கள்‌ கேட்டுத்‌ தெரிந்து செல்லும்போது நெருப்பையே அக்குளில்‌ இடுக்கிக்‌ கொண்டு செல்வது போல இருக்கிறது.' என்று கூறினார்கள்‌. இந்த ஹதீஸின்‌ வெளிச்சத்தில்‌ பார்க்கும்போது மனிதன்‌ ஒரு சிலவற்றைக்‌ கேட்டறியாமல்‌ இருப்பது மேன்மையாகும்‌. இவைக்‌ கேட்பவை பொறுத்த சட்டம்‌. 

ஆனால்‌ கேட்கப்பட்டவனைப்‌ பொறுத்த வரையில்‌ கேட்பவனின்‌ தேவைகளைச்‌ செவிதாழ்த்திக்‌ கேட்டு, அவற்றை அங்கீகரித்து கேட்பவனுக்காகத்‌ தக்க பதில்‌ கொடுக்க வேண்டுமென்று பணிக்கப்‌பட்டுள்ளான்‌. 

"கேட்பவனை யாசிப்பவனை வெருட்டாதீர்‌" (93:10). 

"அவர்களுடைய பொருட்களில்‌ கேட்பவர்களுக்கும்‌, வெட்கத்தால்‌ கேட்காதோருக்கும்‌ குறிப்பிட்ட
பாத்தியதை உண்டு”. (70:24-25) 

"...ஆகவே (அவ்வொட்டகைகளை) நிறுத்தி வைத்து
அல்லாஹ்வுடைய பெயரைக்‌ கூறி அறுங்கள்‌. அது கீழே விழுந்து உயிர்‌ விட்டால்‌ அதிலிருந்து நீங்கள்‌ புசியுங்கள்‌. அதிலிருந்து கேட்டவர்களையும்‌, கேட்காதவர்களையும்‌ உண்ணச்‌ செய்யுங்கள்‌” (22:36) என்று திருமறை கூறுகிறது. 'என்னிடம்‌ ஒன்றும்‌
கேட்காமல்‌ இருப்பதற்காக இவருடைய நாவை அறுத்துத்‌ துண்டாக்கி விடுங்கள்‌' என்று
ஓரிடத்தில்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியிருக்கிறார்கள்‌.

சிலவேளைகளில்‌ கேட்பது (ஹறாமான) விலக்கப்பட்ட செய்கையாககத்‌ திரும்பி விடுவதுண்டு. இந்நிலையில்‌ கேட்கப்பட்டவனைப்‌ பொறுத்தவரையில்‌ கேட்பதற்கொப்ப பதில்‌ கொடுத்து தீர வேண்டுமென்றும்‌ பணிக்கப்பட்டுள்ளான்‌. 

நபியவர்களின்‌ பூரணத்‌ தன்மைகளில்‌ ஒன்று: கேட்பவனுக்குப்‌ பதில்‌ கொடுத்து விடுவது, அது விலக்கப்பட்ட கேள்வியாயினும்‌ சரியே. அவன்‌ யாரென்றும்‌ பார்க்க மாட்டார்கள்‌. இது நபியைப்‌
பொறுத்தமட்டில்‌ பெருந்தன்மையாகக்‌ கணிக்கப்படும்‌. அவர்களுக்கு இது வாஜிப்‌ என்றும்‌
கூறப்படுகிறது. ஸஹாபாக்களில்‌ பிரபலமான அபூபக்கர்‌ ஸித்தீக்‌ (ரலி) அவர்கள்‌ உமர்‌ ஃபாரூக்‌ (ரலி) அவர்கள்‌ போன்ற பெரும்‌ ஸஹாபாக்களில்‌ யாருமே தடுக்கப்பட்ட ஏது கேள்விகளையும்‌ நபியவர்களிடம்‌ வந்து கேட்க மாட்டார்கள்‌. தமக்கு வேண்டி
பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று கூட இப்பெரும்‌ ஸஹாபிகள்‌ நபிகளிடம்‌ சொல்லிக்‌ கொள்ளவில்லை. ஆனால்‌ பொதுவாக அனைத்து முஸ்லிம்களுக்காக
பிரார்த்திக்க வேண்டுமென்று இப்பெரிய ஸஹாபிகள்‌ நபிகளாரிடம்‌ வேண்டியிருக்கிறார்கள்‌. 

சில புனிதப்‌ போர்களில்‌ அவற்றில்‌ பங்கு பெற்ற சிலர்‌
நபியிடம்‌ தம்‌ ஒட்டகைகளை அனுமதி வேண்டிய நேரத்தில்‌ உமர்‌ (ரலி) அவர்கள் நபியிடம்‌ கூறினார்கள்‌: நாயகமே! நாளைய தினம்‌ பசியோடு நடந்து சென்றே எதிரிகளோடு போராடும்‌ போது நமது நிலைமை என்ன? ஆகவே மக்களை அழைத்து அவர்களிடம்‌ மிஞ்சியிருக்கும்‌ உணவுகளைச்‌ சேர்த்து பின்பு பரக்கத்துக்காகத்‌ தாங்கள்‌ பிரார்த்தித்தால்‌ தாங்களின்‌ பிரார்த்தனையால்‌ அல்லாஹ்‌ எங்களுக்குப்‌ பரக்கத்துச்‌ செய்வான்‌' இன்னும்‌ ஓர்‌ அறிவிப்பில்‌ 'தாங்கள்‌ துஆவின்‌ காரணத்தினால்‌ அல்லாஹ்‌ எங்களுக்கு உதவி புரிவான்‌' என்று காணப்படுகிறது.

மேலும்‌ ஸஹாபிகளில்‌ நடுத்தரமான பதவிக்குரிய சிலர்‌ மட்டும்‌ நபியை அணுகித்‌ தம்‌ தேவைகளைக்‌ கூறி முறையிட்டிருக்கிறார்கள்‌. கண்‌ பார்வையிழந்த ஒரு ஸஹாபி வந்து தமக்குப்‌ பார்வை மீட்டிக்‌ கிடைக்க அல்லாஹ்விடம்‌ பிரார்த்திக்கும்படி நபியிடம்‌
வேண்டிக்‌ கொண்டார்கள்‌. அனஸ்‌ (ரலி) அவர்களின்‌ தாயார்‌ உம்மு ஸுலைம்‌ என்ற பெண்மணி நபியிடம்‌ வருகை வந்து நபியின்‌ சிப்பந்தியான தன்‌ மகன்‌ அனஸ்‌ (ரலி) க்காகப்‌ பிரார்த்திக்கும்படி கேட்டுக்‌ கொண்டார்‌. அபூஹுரைரா (ரலி) தம்மையும்‌, தம்‌
தாயாரையும்‌ மூமின்கள்‌ நேசிப்பதற்காக நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ பிரார்த்திக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள்‌. நட்பிலும்‌, அள்ளி வழங்குவதிலும்‌ நம்மீது ரொம்பப்‌ பேருபகாரியாக இருந்தவர்‌ அபூபக்கர்‌ ஸித்தீக்‌ அவர்களே. ஆனால்‌ அபூபக்கர்‌ (ரலி) அவர்களைப்‌ பொறுத்த வரையில்‌ இத்தகைய கேள்விகளை அவர்கள்‌ நபியிடம்‌
கேட்கவேயில்லை. அவர்களைப்‌ பற்றியும்‌, மேன்மை தாங்கிய ஸஹாபிகளைப்‌ பற்றியும்‌ திருமறை கீழ்வருமாறு கூறிக்‌ கொண்டிருக்கிறது:

"பயபக்கியுடையவர்‌ அந்த நரக நெருப்பிலிருந்து தப்பித்துக்‌ கொள்வார்‌. பாவத்திலிருந்து பரிசுத்தமாக்கிக்‌ கொள்வதற்காகத்‌ தம்பொருளைத்‌ தானமாக அளிப்பார்‌. அவர்‌ பதில்‌ செய்யக்‌ கூடியவாறு எவருடைய நன்றியும்‌ அவர்‌ மீது இல்லாதிருந்தும்‌
மிக்க மேலான தம்‌ இறைவனின்‌ திருப்பொருத்தத்தை விரும்பியே (தான தர்மம்‌ கொடுப்பார்‌) இறைவன்‌ அவருக்களிக்கும்‌ கொடையைக்‌ கொண்டு பின்னர்‌ அவரும்‌ திருப்தியடைவார்‌". (92:17-21)

ஸஹீஹான ஹதீஸில்‌ கீழ்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது: 'நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. 'நட்பிலும்‌, அள்ளி வழ்ங்குவதிலும்‌ நம்மீது பேருபகாரியாக இருந்தவர்‌ அபூபக்கர்‌ அவர்களே! பூமியில்‌ ஒருவரை நான்‌ கூட்டாளியாக அமைத்துக்‌ கொள்ள விரும்பினால்‌ அபூபக்கரைத்‌ தவிர வேறெவரையும்‌ தோ்வு செய்யமாட்டேன்‌”

உடலாலும்‌, செல்வத்தாலும்‌ ஸித்தீக்கைக்‌ காட்டிலும்‌ பெரிய பரோபகாரி ஒருவருமில்லை. ஸஹாபாக்களில்‌ அபூபக்கரைப்‌ போன்று நல்மனம்‌ படைத்தவர்கள்‌
எவருமில்லை என்று சொன்னாலும்‌ மிகையாகாது. எத்தனையோ தான ‌- தர்மங்களையெல்லாம்‌ அல்லாஹ்வின்‌ திருப்பொருத்தத்தை நாடியே
செய்திருக்கிறார்கள்‌. உலக மக்களின்‌ எவருடைய கூலியையும்‌, நன்றியையும்‌ அவர்கள்‌ எதிர்‌ பார்க்கவில்லை.

திருமறையில்‌ இறைவனும்‌ அப்படித்தான்‌ அவர்களைப்‌ பற்றிக்‌ கூறுகிறான்‌. தமக்கு இறைவன்‌ வழங்கிய செல்வத்தையும்‌ தம்‌ சொந்த உழைப்பையும்‌ கொண்டு திருப்திப்‌பட்டுப்‌ பிறரிடம்‌ எதையும்‌ கேட்காமல்‌ தம்மைக்‌ காப்பாற்றி பிறரிடம்‌ தேவையற்றிருந்தார்கள்‌. மற்றவர்களின்‌ உதவி ஒத்தாசைகளைப்‌ பெற்று அதற்குப்‌ பதிலாக நன்றி செலுத்த வேண்டிய நிலையிலாகாது, மனிதர்களின்‌ எவருடைய
நன்றிக்கும்‌ கடமைப்‌ படாதவாறு தம்‌ வாழ்க்கையை அமைத்துக்‌ கொண்டனர்‌. நபிகளை நம்பி, அவர்களை மெய்ப்பித்து, அவர்களிடமிருந்து கல்வியையும்‌ கற்றுக்‌
கொண்டார்கள்‌. அபூபக்கர்‌ (ரலி) அவர்கள்‌ நபி (ஸல்‌) அவர்களுக்கு அளித்த பேருதவிகளுக்கும்‌, அவர்களுக்கு நபிகள்‌ கற்றுக்‌ கொடுத்ததற்கும்‌, நேர்வழி காட்டியதற்கும்‌ எல்லாம்‌ உயரிய பொருத்தமான கூலிகளை அவருக்கு அல்லாஹ்‌
மறுமை நாளில்‌ வழங்கவிருக்கிறான்‌.

பொதுவாக நபிமார்கள்‌ மக்களுக்கு வழங்கும்‌ ஈடிணையற்ற ஒழுக்க சீலங்களுக்கும்‌, நற்பண்புகளுக்கும்‌, ஹிதாயத்துக்கும்‌ உரிய பலாபலன்களை மறுமையில்தான்‌ பெறுவார்களே தவிர அவற்றில்‌ எதையும்‌ இவ்வுலகத்தில்‌ இருக்கையில்‌ மக்களிடமிருந்து எதிர்பார்க்க மாட்டார்கள்‌. 

திருமறையில்‌ இறைவனும்‌ இதைக்‌ குறிப்பிடுகிறான்‌: "இதற்காக நான்‌ உங்களிடம்‌ யாதொரு கூலியையும்‌ கேட்கவில்லை. என்னுடைய கூலியெல்லாம்‌ உலகத்தார்‌ யாவரையும்‌ படைத்துப்‌ போஷிப்பவனிடமே இருக்கிறது”. (26:127)

நபிகளாரின்‌ வளர்ப்பு மகனாக இருந்த ஸைத்‌ பின்‌ ஹாரிதா அல்‌-கஃபீ மேலும்‌ அலீ பின்‌ அபீதாலிப்‌ போன்ற சில ஸஹாபிகள்‌ ஒருசில குறிப்பிட்ட உதவி ஒத்தாசைகளை அதிகமாக நபிகளாரிடம்‌ இருந்து பெற்றிருக்கிறார்கள்‌. இவர்களைப்‌ பொறுத்தவரையில்‌
நன்றி செலுத்துவதற்குரிய சில பல உதவிகளை நபிகளாரிடமிருந்து பெற்றார்கள்‌ என்று கூறலாம்‌. 

ஆனால்‌ இந்நிலை ஒருபோதும்‌ அபூபக்கர்‌ (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டதில்லை. இது விஷயத்திலும்‌ இவர்கள்‌ பாராட்டுக்குரியவர்களாவர்‌. கீழ்வரும்‌ சம்பவம்‌ நாம்‌ கூறியதை மேலும்‌ தெளிவு படுத்துகிறது. 

ஸைது (ரலி) அவர்கள்‌ நபியவர்களின்‌ அடிமையாக இருந்தவர்கள்‌. நபியவர்கள்‌ ஸைது (ரலி) அவர்களுக்கு
உரிமையளித்து அவர்களை சுதந்திரமாக்கினார்கள்‌. இது ஸைது (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்‌) அவர்களிடமிருந்து கிடைத்த பெரும்‌ பேருதவி என்பதை எவராலும்‌ மறுப்பதற்கில்லை. திருமறையும்‌ இதைச்‌ சுட்டிக்‌ காட்டுகிறது: "எவருக்கு அல்லாஹ்‌
அருள்‌ செய்து நீரும்‌ அவர்‌ மீது அருள்‌ புரிந்து கருணை காட்டியிருந்தீரோ அவரிடத்தில்‌ ‘நீர்‌ அல்லாஹ்வுக்கு பயந்து உம்முடைய மனைவியை (விவாக பந்தத்திலிருந்து முறிக்காமல்‌) உம்மிடமே வைத்துக்‌ கொள்ளும்‌' எனக்கூறிய போது.....' (33:37)

அலி (ரலி) அவர்களின்‌ சம்பவத்திற்கு வருவோம்‌. மக்காவாசிகளை ஒருமுறை பயங்கரமான பஞ்சம்‌ வாட்டியது. இந்தப்‌ பஞ்ச காலத்தில்‌ பற்றாக்குறையால்‌ மக்கள்‌ அவதிப்பட்டுக்‌ கொண்டிருக்கையில்‌ அபூதாலிபின்‌ குடும்பத்திற்கு நபி (ஸல்‌) அவர்களும்‌, அப்பாஸ்‌ (ரலி) அவர்களும்‌ உதவினார்கள்‌. அலி (ரலி) அவர்களை நபியவர்களும்‌, அலீயின்‌ சகோதரர்‌ ஜஃபரை அப்பாஸூம்‌ சேர்த்துத்‌ தத்தம்‌ குடும்பங்களில்‌ வைத்துக்‌ காப்பாற்றினார்கள்‌. இந்த வகையில்‌ அலி (ரலி) அவர்களும்‌ நபி (ஸல்‌) அவர்களுக்குத்‌ தனியாக நன்றி செலுத்தக்‌ கடமைப்‌ பட்டிருந்தார்கள்‌.

ஆனால்‌ அபூபக்கர்‌ ஸித்தீக்‌ (ரலி) அவர்களோ நாயகத்திடம்‌ யாதொரு உதவியும்‌ வேண்டி நின்றதில்லை. எல்லாவற்றையும்‌ அவர்கள்‌ தம்‌ சொந்த செலவிலேயே முடித்துக்‌ கொள்வார்கள்‌. எனவே அவர்களைப்‌ பற்றி நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறும்‌
போது: நபியுடன்‌ நட்பு வைத்ததிலும்‌, அள்ளி வழங்குவதிலும்‌, எதையும்‌ சொந்தமாக
தம் செலவிலேயே ஆற்றல்‌ படைத்தவர்‌ அபூபக்கர்‌ (ரலி) அவர்கள்‌ மட்டுமே' என பாராட்டிக்‌ கூறியுள்ளார்கள்‌.

அது மட்டுமல்ல தன்‌ செல்வங்கள்‌ அனைத்தையும்‌ அல்லாஹ்வின்‌ பாதையில்‌ செலவழித்தார்கள்‌. கொடுமைக்காளான அடிமை ஸஹாபிகளை தம்‌ சொந்தப்‌ பணம்‌ கொடுத்து வாங்கி உரிமை விட்டார்கள்‌.

நபிகள்‌ (ஸல்‌) அவர்களைப்‌ பொறுத்தவரையில்‌ தம்‌ சொந்தக்‌ தேவைகளுக்காக அபூபக்கருடையவோ, மற்ற தோழர்களுடையவோ உதவியும்‌, ஒத்தாசைகளும்‌ தேவை இல்லை. அவர்களுடைய சுயதேவைகளை அவர்களாகவே பூர்த்தி செய்து
கொள்வார்கள்‌. எனினும்‌ மக்காவிலிருந்து எதிரிகளால்‌ துரத்தப்பட்டு மதினாவுக்கு ஹிஜ்ரத்‌ செய்யப்‌ புறப்படும்‌ தருணத்தில்‌ நபிகளை நோக்கி அபூபக்கர்‌ (ரலி) அவர்கள்‌ கூறினார்கள்‌: 'நாயகமே! என்னிடம்‌ இப்பொழுது இரு வாகனங்கள்‌ (ஒட்டகங்கள்‌)
இருக்கின்றன. அதில்‌ ஒன்றைத்‌ தாங்கள்‌ எடுத்துக்‌ கொள்ளுங்கள்‌. அதற்கு நபியவர்கள்‌
'விலைக்குத்‌ தருவதென்றால்‌ சரி' எனக்கூறி ஒத்துக்‌ கொண்டனர்‌. சுருங்கக்‌ கூறின்‌ அபூபக்கர்‌ (ரலி) அவர்கள்‌ சிறந்த நபிக்குறிய சிறந்த ஸித்தீக்காவார்கள்‌. அபூபக்கர்‌ அவர்கள்‌ எவருக்கு எந்த பேருதவிகள்‌ புரிந்தாலும்‌ அவற்றின்‌ கூலியையும்‌,
நன்றியையும்‌ மக்களிடம்‌ எதிர்பார்க்கவே மாட்டார்கள்‌. அல்லாஹ்வின்‌ திருப்பொருத்தமும்‌, அவனிடமிருந்து நல்ல பல கூலிகளையும்‌, மறுமையில்‌ பெற்று
அல்லாஹ்வின்‌ திருப்தியை அடைவது மாத்திரமே அவர்களுடைய நடவடிக்கையின்‌ இலட்சியமாக இருந்தது. நபியிடமோ மலக்குகளிடமோ யாரிடம்‌ எந்த நன்றியையும்‌ எதிர்பார்க்க மாட்டார்கள்‌. 

"நாம்‌ உங்களுக்கு உணவளிப்பதெல்லாம்‌ அல்லாஹ்வுக்காக- அவனுடைய முகத்தை நாடியே-தவிர உங்களிடம்‌ நான்‌ யாதொரு கூலியையோ
அல்லது உங்கள்‌ நன்றியறிதலையோ கருதியல்ல என்று அவர்கள்‌ கூறுவார்கள்‌” என இறைவன்‌ அவர்களை பாராட்டுகின்றான்‌. (76:9)

ஒரு மனிதன்‌ மற்றொருவருக்கு ஏதேனுமொரு உதவி செய்து கொடுத்து விட்டுத்‌ தனக்காகப்‌ பிரார்த்திக்கும்படி சொல்வானென்றால்‌ தான்‌ செய்த உதவிக்குக்‌ கூலி கேட்கிறானென்றுதான்‌ அது பொருள்படும்‌. இங்கே அல்லாஹ்வின்‌ திருப்பொருத்தத்தை நாடி அம்மனிதன்‌ உதவி செய்துள்ளான்‌ என்று கருத முடியாது. இறைவன்‌ கூறினான்‌:

"நாம்‌ உங்களுக்கு உணவளிப்பதெல்லாம்‌ அல்லாஹ்வுக்காக - அவனுடைய முகத்தை
நாடியே-தவிர உங்களிடம்‌ நான்‌ யாதொரு கூலியையோ அல்லது உங்கள்‌ நன்றியறிதலையோ கருதியல்ல என்று அவர்கள்‌ கூறுவார்கள்‌" (76:9) 

என விளக்குகிறான்‌. இது நல்ல மூமின்களின்‌ பண்பாடு. பிறருக்கு உதவினால்‌ அவ்வுதவியின்‌ பலாபலனை அல்லாஹ்விடம்‌ எதிர்பார்க்க வேண்டுமேயல்லாது உதவியைப்‌ பெற்றவர்களிடம்‌ எந்தக்‌ கூலியையும்‌ கேட்க கூடாது. அவர்களிடம்‌
பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று பணிப்பதும்‌ கூலி கேட்பதற்குச்‌ சமமாகும்‌.

துஆக்கள்‌ கூலியைப்‌ போன்றவை என ஹதீஸில்‌ காணப்படுகிறது. 'உங்களுக்கு எவரேனும்‌ உதவினால்‌ அதற்கு நீஙகள்‌ பதில்‌ செய்யுங்கள்‌. அதற்குப்‌ பொருத்தமான பிரதிபலன்‌ நல்க உங்களால்‌ முடியாவிட்டால்‌ அல்லது அதற்குரிய பொருத்தமான
கூலியை நீங்கள்‌ பெற்றுக்‌ கொள்ளாவிட்டால்‌ அவருக்காகப்‌ பிரார்த்தியுங்கள்‌. அப்படிப்‌
பிரார்த்தித்தால்‌ நிச்சயமாக அவருக்குப்‌ பதிலுதவி செய்து விட்டீர்கள்‌ எனத்‌ தெரிந்து கொள்ள வேணடும்‌. என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌.

ஆயிஷா (ரலி) அவர்கள்‌ யாருக்காவது தான-தர்மங்களை கொடுத்தனுப்பினால்‌ நபியே! இந்த ஸதகாவை ஒப்புக்‌ கொள்கிறவர்கள்‌ நமக்காக இறைவனிடம்‌ பிரார்த்திக்கிறார்களென்றால்‌ அது எவ்வாறான பிரார்த்தனை என்பதைக்‌ கவனித்துக்‌
கொள்ளுங்கள்‌. அது போல நாமும்‌ அவர்களுக்காக பிரார்த்திக்கலாம்‌. இதனால்‌ நாம்‌ செய்த தர்மத்தின்‌ பலாபலனை முழுக்க முழுக்க அல்லாஹ்விடம்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌' என்று நாயகத்திடம்‌ கூறி அனுப்புவார்களாம்‌.

உம்மிடமிருந்து உதவியைப்‌ பெற்ற யாசகர்‌ 'அல்லாஹ்‌ உமக்கு நல்ல அபிவிருத்தியைத்‌ தருவானாக (பாரகல்லாஹு ஃபீக்க)!' என்று கூறி உமக்குப்‌
பிரார்த்தித்தால்‌ 'உமக்கும்‌ அல்லாஹ்‌ நல்ல அபிவிருத்தியைத்‌ தரட்டும்‌' என நீரும்‌ அவருக்காகப்‌ பிரார்த்திக்க வேண்டுமென்று சில ஸலஃபுஸ்‌ ஸாலிஹீன்கள்‌ கூறியுள்ளார்கள்‌.

ஆகவே நன்மைகள்‌ செய்கிறவன்‌ இறைவனின்‌ முகத்தை நாடியே செய்ய வேண்டுமென்று பணிக்கப்‌ பட்டுள்ளான்‌. சிருஷ்டிகளுடம்‌ இரக்கம்‌ காட்டி அறச்‌
செய்கைகள்‌ புரிகிறவன்‌ அவற்றை இறைவன்‌ ஒருவனுக்காகச்‌ செய்ய வேண்டும்‌. மறுமையில்‌ கிடைக்கின்ற இறை திருப்தியே இவனது இலட்சியமாக அமைய வேண்டும்‌. நன்மை செய்து விட்டு மனிதர்களிட நன்மைக்கு பகரமாக எந்தக்‌
கூலியையும்‌ கேட்க கூடாது. அம்மனிதர்‌ எத்தனை பெரிய அந்தஸ்துக்கு உரியவராக இருந்தாலும்‌ சரியே. நபியானாலும்‌ சரியே. நாம்‌ புரிந்த இந்த நன்மைக்கு வேண்டி தமக்காகப்‌ பிரார்திக்க வேண்டுமென்று சொல்லவே கூடாது. ஏனென்றால்‌ அல்லாஹ்‌
தன்‌ அடியார்கள்‌ அனைவருக்கும்‌ தன்னை ஒருவனை மட்டும்‌ வணங்குங்கள்‌ என்றும்‌, அறச்‌ செயல்களைக்‌ தன்‌ ஒருவனை மட்டும்‌ கருதியே செய்யுங்கள்‌ என்றும்‌
பணித்திருக்கிறான்‌.


இறைவனால்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட்ட மதம்‌ இஸ்லாம்‌ ஒன்றே!

தொன்று தொட்டு இன்று வரை அனைத்து நபிமார்களும்‌ போதித்து வந்த ஒரேவழி நாம்‌ விளக்கிக்‌ காட்டிய இதே இஸ்லாம்‌ ஒன்றே. இதுவே நேர்மையான வழி. இதுவே உண்மையான இஸ்லாமிய வழி. நேர்மையில்லாச்‌ செய்கைகளை இஸ்லாமியச்‌
செய்கைகள்‌ எனக்கருதி எவர்‌ செயல்பட்டாலும்‌ அவை இஸ்லாத்கிற்குப்‌ புறம்பான செய்கைகள்‌ என்றே கருதப்படும்‌. இந்த உண்மையை விளக்குவதற்காக இறைவன்‌:

"இஸ்லாத்தைக்‌ தவிர வேறொரு மார்க்கத்தை யாரும்‌ விரும்பினால்‌ நிச்சயமாக அவனிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மறுமையில்‌ அவன்‌
நஷ்டமடைந்தோரில்‌ சேர்ந்து விடுவான்‌” என்று கூறுகிறான்‌. (3:85)

நபிமார்களான நூஹ்‌, இப்ராஹீம்‌, மூஸா, ஈஸா (அலை) இவர்களையும்‌ இதர நபிமார்களையும்‌ தொடர்ந்த சமூகங்கள்‌ அத்தனையும்‌ இஸ்லாமியர்களாகவே வாழ்ந்தனர்‌. 

நபி நூஹ்‌ (அலை) தம்‌ சமுதாயத்தை நோக்கி: "நீங்கள்‌ என்னைப்‌ புறக்கணித்தால்‌ (அதைப்‌ பற்றி எனக்குக்‌ கவலையில்லை ஏனென்றால்‌) நான்‌ உங்களிடத்தில்‌ யாதொரு கூலியும்‌ கேட்கவில்லை. என்னுடைய கூலியெல்லாம்‌ அல்லாஹ்விடமேயன்றி மற்றெவரிடமுமில்லை. நான்‌ முஸ்லிம்களில்‌ இருக்குமாறே ஏவப்பட்டுள்ளேன்‌" என்று கூறினார்கள்‌. (10:72)

இறைவன்‌ நபி இப்ராஹீமைப்‌ பற்றிக்‌ கூறும்போது: தன்னைக்‌ தானே மூடனாக்கிக்‌ கொண்டவனைத்‌ தவிர இப்ராஹீமுடைய இஸ்லாம்‌ மார்க்கத்தைப்‌ புறக்கணிப்பவன்‌ யார்‌? நிச்சயமாக நாம்‌ அவரை இவ்வுலகில்‌ தேர்ந்தெடுத்தோம்‌. மறுமையிலும்‌
நிச்சயமாக அவர்‌ நல்லடியார்களில்‌ இருப்பார்‌. அவருக்கு அவருடைய இறைவன்‌ 'அஸ்லிம்‌' நீர்‌ (எனக்கு முற்றிலும்‌) வழிப்படும்‌ எனக்கூறிய சமயத்தில்‌, அவர்‌ (எவ்விதத்‌ தயக்கமுமின்றி) 'அகிலமனைத்தின்‌ இரட்சகனாகிய உனக்கு இதோ நான்‌ இஸ்லாமாகி
விட்டேன்‌ (வழிப்பட்டேன்‌) என்று கூறினார்‌”. (2:131-132)

நபி மூஸா (அலை) (தம்‌ சமூகத்தவரை நோக்கி) என்னுடைய சமூகத்தவரே! நீங்கள்‌ மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசித்து உண்மையாகவே நீங்கள்‌ அவனுக்கு முற்றிலும்‌ வழிப்படுகிறவர்களாக (முஸ்லிமாக) இருந்தால்‌ அவனை முற்றிலும்‌ நம்பி
விடுங்கள்‌. அவனிடமே உங்கள்‌ காரியங்களை ஒப்படைத்து விடுங்கள்‌ என்று கூறினார்கள்‌". (10:84)

(அன்றி) எங்களிடம்‌ இறைவனின்‌ அத்தாட்சிகள்‌ வந்தபோது நாங்கள்‌ அவனைக்‌ கொண்டு விசுவாசம்‌ கொண்ட (இந்தக்‌ குற்றத்தைக்‌) தவிர வேறு எதற்கு
எங்களிடமிருந்து பழிவாங்கப்‌ போகிறாய்‌ என்று ஃபிர்‌அவ்னை வினவி, 'இறைவா! எங்கள்‌ மீது பொறுமையைப்‌ பொழிவாயாக! உனக்கு முற்றிலும்‌ வழிப்பட்டவர்களாக (முஸ்லிம்களாக) எங்களை ஆக்கி எங்களைக்‌ கைப்பற்றுவாயாக' என்று (கூறி
மனந்திருந்திய சூனியக்காரர்கள்‌) பிரார்த்தித்தார்கள்‌"'. (7:126)

யூஸுஃப்‌ நபி (அலை) 'இறைவா! நிச்சயமாக நீ எனக்கு ஒரு ஆட்சியை அருள்‌ புரிந்தாய்‌. கனவுகளின்‌ விளக்கங்களையும்‌ எனக்கு நீ கற்று தந்தாய்‌. வானங்களையும்‌ பூமியையும்‌ படைத்தோனே! இம்மை, மறுமையில்‌ என்னை இரட்சிப்பவன்‌ நீயே!
முற்றிலும்‌ உனக்கு வழிப்பட்டவனாக (முஸ்லிமாக) என்னை நீ கைப்பற்றிக்‌ கொள்வாயாக! நல்லடியார்‌ கூட்டத்தில்‌ என்னை சேர்த்து விடுவாயாக! என்று
பிரார்த்தித்தார்கள்‌". (12:101)

தெளராத்தையும்‌ நிச்சயமாக நாம்‌ தான்‌ இறக்கி வைத்தோம்‌. அதில்‌ நேர்வழியும்‌ இருக்கிறது பிரகாசமும்‌ இருக்கிறது. அல்லாஹ்வுக்கு முற்றிலும்‌ வழிப்பட்டு (முஸ்லிமாக) நடந்த நபிமார்கள்‌ அதனைக்‌ கொண்டே யூதர்களுக்கு மார்க்கக்‌ கட்டளையிட்டு வந்தார்கள்‌". (5:44)

"அன்றி என்னையும்‌ (அல்லாஹ்வையும்‌) என்னுடைய தூதரையும்‌ (அதாவது உம்மையும்‌) ஈஸா (அலை) விசுவாசிக்கும்படி அப்போஸ்தலர்கள்‌ என்னும்‌ உம்‌
சிஷ்யர்களுக்கு நான்‌ அறிவித்த சமயத்தில்‌ அவர்கள்‌ (அவ்வாறே) நாங்கள்‌ விசுவாசித்தோம்‌. நிச்சயமாக நாங்கள்‌ முற்றிலும்‌ வழிப்பட்ட முஸ்லிம்களென்பதற்கு
நீரே சாட்சியாக இருப்பீராக எனக்கூறியதையும்‌ நினைத்துப்‌ பாரும்‌ (என அந்நாளில்‌ கூறுவான்‌)”. (5:111)


இஸ்லாத்தின்‌ இரு அடிப்படைகள்‌

இஸ்லாத்தில்‌ அடிப்படைச்‌ சித்தாந்தங்கள்‌ இரண்டு. ஒன்று: இணைவைக்காமல்‌ அல்லாஹ்வை மட்டும்‌ வணங்கி வழிப்படுவது. இரண்டு: வழிபாடுகளின்‌ முறைகளை அல்லாஹ்வின்‌ சட்டங்களிலிருந்தும்‌, அவன்‌ தூதர்‌ காட்டித்தந்த வாஜிப்‌, முஸ்தஹப்‌
என்ற விதிகளிலிருந்தும்‌ எடுத்து வழிபடுவது. 

தூதுவர்கள்‌ ஒவ்வொருவரும்‌ ஒவ்வொரு காலத்தில்‌ தோன்றியிருக்கிறார்கள்‌. அவ்வப்போதுள்ள நபிமார்களின்‌ ஏவல்களுக்கொப்ப அல்லாஹ்வுக்கு வணக்கங்கள்‌ செலுத்தப்பட்டன. யூதர்களின்‌ தெளராத்‌ வேதம்‌ உறுதி குலையாமல்‌ நேர்மையாக இருந்த காலத்தில்‌ அதன்‌ விதிப்படி வணக்கங்கள்‌
புரிந்தவர்கள்‌ முஸ்லிம்களாக மதிக்கப்பட்டனர்‌. 

இன்ஜீலும்‌ அப்படித்தான்‌. அதாவது இவ்வேதங்களில்‌ மனிதக்கரம்‌ நுழைந்து அவற்றை மாற்றி மறிப்பதற்கு முன்னர்‌ வேதங்களுக்கொப்ப வணங்கி வழிபட்டு வந்தவர்களையே முஸ்லிம்களென்று கூறமுடியும்‌. 

இஸ்லாத்தின்‌ தொடக்கத்தில்‌ பைத்துல்‌ முகத்தஸை நோக்கி நபியவர்கள்‌ தொழுது வந்திருக்கிறார்கள்‌. இந்த நாட்களில்‌ பைத்துல்‌ முகத்தஸின்‌ பக்கம்‌ திரும்பி நின்று முஸ்லிம்கள்‌ நிறைவேற்றிய தொழுகை இஸ்லாமிய வணக்கமாக கருதப்பட்டது.
எப்பொழுதிலிருந்து கஃபாவை நோக்கித்‌ திரும்ப வேண்டுமென்று நபி (ஸல்‌) அவர்கள்‌ பணிக்கப்பட்டார்களோ அன்றிலிருந்து கஃபாவை நோக்கித்‌ தொழுதார்கள்‌. இதுவும்‌ இஸ்லாமியத்‌ தொழுகைதான்‌. இனிமேல்‌ கஃபாவை புறக்கணித்து விட்டு பைத்துல்‌ முகத்தஸை நோக்கி எவன்‌ தொழுகிறானோ அவனது தொழுகை இஸ்லாத்திற்கு
மாறான தொழுகையாகும்‌.

முஹம்மது (ஸல்‌) அவர்கள்‌ நபியாக அனுப்பப்பட்ட பிறகு எவரெல்லாம்‌ அவர்கள்‌ காட்டித்தந்த வாஜிப்‌, முஸ்தஹப்‌ போன்ற சட்டங்களை ஒதுக்கி விட்டு அல்லாஹ்வும்‌, ரஸூலும்‌ சொல்லாத அமல்களை வணக்கமாக எண்ணி அவற்ரைச்‌ செய்து மனம்‌
போன போக்கில்‌ வழிபாடுகள்‌ செய்கிறார்களோ அவர்களை முஸ்லிம்கள்‌ என்று சொல்ல முடியாது. அத்துடன்‌ மனிதன்‌ செய்கின்ற வாஜிப்‌, முஸ்தஹப்‌ போன்ற சட்டத்துக்குட்பட்ட அமல்களையெல்லாம்‌ அகில உலகைப்‌ பரிபாலிக்கும்‌ அல்லாஹ்‌
ஒருவனைக்‌ கருதிச்‌ செய்ய வேண்டும்‌. இதை அல்லாஹ்வே கூறுகிறான்‌:

"வேதத்தையுடையவர்கள்‌ தங்களிடம்‌ தெளிவான சான்று வந்த பின்னர்தான்‌ மாறு செய்து வேறுபட்டனர்‌. ஆனால்‌ இறைவனுக்கு கலப்பற்ற மார்க்கத்தையே செய்ய வேண்டும்‌. அல்லாஹ்‌ ஒருவனையே வணங்க வேண்டும்‌ என்றல்லாமல்‌ வேறு எதையும்‌ அவர்கள்‌ ஏவப்படவில்லை". (98:4-5)

(நபியே!) நிச்சயமாக முற்றிலும்‌ உண்மையான இவ்வேதத்தை நாம்தாம்‌ உமக்கு இறக்கி வைத்திருக்கிறோம்‌. எனவே நீர்‌ முற்றிலும்‌ பரிசுத்த மனதுடன்‌ அல்லாஹ்வை வணங்கி வாரும்‌. தூய வழிபாடு அல்லாஹ்வுக்கே சொந்தமானது". (39:2-3)

அல்லாஹ்வைக்‌ கொண்டும்‌ ரஸுலைக்‌ கொண்டும்‌ ஈமான்‌ கொள்ளுதல்‌, ஏழை எளியோருக்குப்‌ பொருளுதவி செய்தல்‌, மற்றும்‌ இதர தான-தர்மங்கள்‌ வழிபாடுகள்‌ புரிதல்‌, அல்லாஹ்வையும்‌ ரஸூலையும்‌ நேசித்தல்‌, மேலும்‌ சகல முஸ்லிம்கள்‌ அனைத்து வாஜிப்‌-முஸ்தஹப்பான ஆகியவையெல்லாம்‌ அல்லாஹ்‌ ஒருவனின்‌ திருப்தியை மட்டுமே நாடிச்‌ செய்யவேண்டுமென மனிதன்‌ பணிக்கப்பட்டுள்ளான்‌.
இத்தகைய அமல்களுக்கு சிருஷ்டிகளிடம்‌ கூலி கேட்கலாகாது. அவர்களிடம்‌ துஆ வேண்டும்‌ படியும்‌, மற்ற எந்த விஷயங்களையும்‌ முறையிடவோ வேண்டவோ கூடாது.

படைப்பினங்களிடம்‌ எதைக்‌ கேட்க வேண்டும்‌, எதைக்‌ கேட்க கூடாது என்று இஸ்லாம்‌ வகுத்துத்‌ தந்திருக்கிறது. சிருஷ்டிகளிடம்‌ கேட்க இஸ்லாம்‌ அனுமதித்தவைக்‌ கூட அவர்களிடம்‌ கேட்பது வாஜிப்‌, முஸ்தஹப்பான சட்டங்களுக்குட்பட்ட செய்கையொன்றும்‌ அல்ல. அவை ஜாயிஸ்‌ (அனுமதிக்கப்‌ பட்டவை) தான்‌. ஜாயிஸாக இருந்தும்‌ கூட சில இடங்களில்தான்‌ படைப்பினங்களிடம்‌ கேட்பது ஜாயிஸாகும்‌ (அனுமதிக்கப்படும்‌). மேலும்‌ ஒன்றைக்‌ கவனிக்க வேண்டும்‌. ஒருமனிதரிடம்‌ பிறர்‌
வந்து கெஞ்சிக்‌ கேட்பதற்கு முன்னரே அவன்‌ கொடுக்க வேண்டுமென்று பணிக்கப்பட்டிருக்கிறான்‌. 

அவ்வாறெனின்‌ கேட்டல்‌ என்பது அடியோடு உலகிலிருந்து மாய்ந்து விட வேண்டுமல்லவா?


சிருஷ்டிகளிடம்‌ கேட்பதால்‌ விளையும்‌ தீமைகள்‌

எதையும்‌ சிருஷ்டிகளிடம்‌ கேட்பதற்கு மூமின்‌ முஸ்லிம்கள்‌ அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌. குறிப்பாக நபிமார்கள்‌ யாரிடமும்‌ கேட்க கூடாது. அவர்களிலும்‌ குறிப்பாக பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ யாரிடமும்‌ எதையும்‌ கேட்கக்‌ கூடாது. நபிமார்கள்‌ மதிப்பாலும்‌, கண்ணியத்தாலும்‌ பொதுவாக மேலானவர்கள்‌. எதையும்‌ அல்லாஹ்விடம்‌ கேட்பார்கள்‌. அவர்களின்‌ எல்லாத்‌ தேவைகளுக்கும்‌ அல்லாஹ்‌ போதுமானவன்‌.

படைப்பினங்களிடம்‌ ஒரு விஷயத்தைக்‌ கேட்பதில்‌ மூன்று தீமைகள்‌ விளைகின்றன.

அல்லாஹ்‌ அல்லாதவற்றிடம்‌ தேவைப்படுதல்‌. இதனால்‌ ஷிர்க்கின்‌ ஓர்‌ அம்சம்‌ தலைதூக்குகிறது. கேட்டல்‌ என்ற காரணத்தினால்‌ கேட்கப்‌ பட்டவனுக்குத்‌ தொந்தரவு கொடுத்தல்‌ ஏற்படுகிறது. இது பிறருக்குத்‌ தீங்கு விளைவித்தல்‌ என்ற
இனத்தைச்‌ சார்ந்தது. கேட்பவன்‌ தன்னை இழிவு படுத்திக்‌ கொள்ளல் இது தனக்குத்‌ தானே தீங்கிழைத்தலின்‌ வகையில்‌ சேரும்‌. இப்படி மூன்று விதமான கெடுதல்களைக்‌ கேட்பவன்‌ சம்பாதித்துக்‌ கொள்கிறான்‌. 

நபிமார்களைப்‌ பொறுத்த வரையில்‌ அவர்கள்‌ எல்லா இழிவிலிருந்தும்‌, குற்றங்களிலிருந்தும்‌ காப்பாற்றப்‌
பட்டிருக்கிறார்கள்‌. ஆகவே பிறரிடம்‌ கெஞ்சும்‌ இழிவில்‌ இவர்கள்‌ சேர மாட்டார்கள்‌.

நபியவர்கள்‌ தம்‌ உம்மத்துகளிடம்‌ தமக்காக துஆச்‌ செய்ய ஏவியிருக்கிறார்களென்றால்‌ தம்‌ உம்மத்திடம்‌ தேவைப்பட்டார்களென்பது கருத்தல்ல. மாறாக தம்‌ சமூகத்தார்கள்‌ ஏராளமான பலாபலன்களைப்‌ பெற வேண்டுமென்பதே நபிகளாரின்‌ இலட்சியமாகும்‌. 

மக்கள்‌ மிகுந்த பிரதி பலன்களை பெறும்‌ வழிகளை
நபிகள்‌ காட்டித்‌ தந்திருக்கிறார்கள்‌ என்பதையும்‌ அதன்‌ தாத்பரியமாகக்‌ கருதலாம்‌. கடமைகள்‌ யாவை? ஸுன்னத்துகள்‌ யாவை? என்பவற்றை தம்‌ உம்மத்துகளுக்கு விளக்கி பொதுவாக மக்கள்‌ பயனடைய வேண்டிய அனைத்து வழிகளையும்‌ சொல்லிக்‌ கொடுத்திருக்கிறார்கள்‌. பிரதிபலன்‌ அதிகமாக உம்மத்துகளுக்குக்‌ கிடைக்க
வேண்டுமென்ற ஒரே எண்ணத்தால்‌ தமக்காக பிரார்த்தனைச்‌ செய்ய மக்களை ஏவினார்கள்‌. மக்களின்‌ பிரார்த்தனைகளினால்‌ ஒருவேளை நபிகளும்‌ பயன்பெறக்‌ கூடும்‌. ஆனால்‌ மக்களிடம்‌ தேவைகளைக்‌ கேட்டுக்‌ கெஞ்சியிருக்கிறார்கள்‌ என
நினைத்து விடலாகாது. ஏனெனில்‌ நாயகத்தின்‌ ஏவலின்படி மக்கள்‌ செயல்பட்டுக்‌ கொண்டிருந்த காலமெல்லாம்‌ நபிகளுக்கும்‌ அதனுடைய கூலியும்‌, பயனும்‌ சேர்ந்து கொண்டே இருக்கும்‌. நபிகளின்‌ உம்மத்துகள்‌ செய்யும்‌ ஒவ்வொரு வணக்க வழிபாட்டுக்கும்‌, நற்செயலுக்கும்‌ உரிய கூலிகள்‌ நபி (ஸல்‌) அவர்களுக்கும்‌ உண்டு என ஹதீஸும்‌ கூறுகிறது. இந்த உலகம்‌ நீடித்திருக்கும்‌ காலம்‌ வரையிலும்‌ அவற்றின்‌ கூலிகள்‌ நபிக்குச்‌ சேர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஒருவன்‌ நேர்வழியின்‌ பால்‌ மக்களை அழைத்தால்‌ அழைப்பைக்‌ கேட்டு செயல்பட்டவர்களுக்குக்‌ கொடுக்கப்படுகின்ற அதே கூலிகள்‌ அழைத்தவனுக்கும்‌ மறுமையில்‌ கிடைக்கின்றன. இவ்விருவரின்‌ கூலிகளில்‌ எவ்வித வித்தியாசமும்‌,
குறைபாடும்‌ இருக்காது என்று நபி (எல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. நபி (ஸல்‌) அவர்களைப்‌ பொறுத்த வரையில்‌ முஸ்லிம்‌ சமூகத்தையே முழுமையாக நேர்வழியில்‌ திருப்பி இருக்கிறார்கள்‌. இச்சமூகம்‌ அன்றிலிருந்து இன்றுவரை, இன்னும்‌ மறுமை நாள்‌
வரையிலும்‌ செய்து கொண்டிருந்த, இனிமேலும்‌ செய்யப்‌ போகின்ற அத்தனை நல்ல செயல்களுக்கும்‌ நபிகள்‌ நாயகம்‌ தான்‌ காரணமாக இருந்திருக்கிறார்கள்‌. ஆகவே மக்கள்‌ கோடிகளிலுள்ள முஸ்லிம்கள்‌, மூமின்களுக்கு வழங்கப்படும்‌ அதே கூலிகள்‌ நபி (ஸல்‌) அவர்களுக்கும்‌ குறையாமல்‌ கிடைத்து விடும்‌ என்பதில்‌ சந்தேகமில்லை.

ஆகவே மூதாதையர்களான ஸலஃபுஸ்‌ ஸாலிஹீன்கள்‌ தமது வழிபாட்டின்‌ நன்மைகளை நபிக்கு நன்கொடையாக அளிப்பதில்லை. திருமறையை ஒதியும்‌, மற்ற அமல்களைப்‌ புரிந்தும்‌ நபிகளுக்கு 'ஈஸால்‌ ஸவாப்‌' செய்வதில்லை. ஏனெனில்‌
இவர்களுடைய வழிபாடுகளின்‌ கூலிகள்‌ முழுமையாக நாயகக்கிற்குத்‌ தானாகச்‌ சேரும்போது நாம்‌ ஏன்‌ சேர்க்க வேண்டும்‌? ஆனால்‌ தாய்‌-தந்தையர்களைப்‌ பொறுத்த வரையில்‌ இப்படி அல்ல. அவர்களுக்காக நன்மைகளைப்‌ புரிந்து அவற்றிற்குரிய கூலிகளை பிறருக்குச்‌ சேர்த்து விடல்‌ (ஈஸாலுஸ்‌ ஸவாப்‌ செய்தல்‌) வேண்டும்‌.

நன்மைகள்‌ புரிந்து அவற்றின்‌ பிரதிபலன்களைப்‌ பெற்றோர்களுக்காகச்‌ செலுத்த வேண்டும்‌. பிள்ளைகள்‌ செய்கின்ற அனைத்து நற்கிரியைகளின்‌ பிரதிபலன்களை அப்பிள்ளைகள்‌ பெறுவதுபோல்‌ பிள்ளைகளின்‌ பெற்றோர்களும்‌ பெறுவார்களென்று
யாராலும்‌ சொல்ல முடியாது. தகப்பன்‌ தன்‌ மகனின்‌ பிரார்த்தனைகளால்‌ அதிக நன்மைகளைப்‌ பெறுகிறான்‌. மகனின்‌ இத்தகைய பிரார்த்தனையும்‌, வேறு ஒருசில அமல்களும்‌ மட்டுமே தகப்பனுக்குச்‌ சேருகிறது. அதல்லாது மகன்‌ புரிகின்ற
அமல்களின்‌ கூலிகள்‌ யாவும்‌ தகப்பனுக்கு அப்படியே குறையாமல்‌ கிடைத்து விடாது.

ஹதீஸில்‌ நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: 'மனிதன்‌ மரணமடைந்து விட்டால்‌ அவனுடைய எல்லா அமல்களும்‌ நின்று விடுகின்றன. மூன்று அமல்களின்‌
பலாபலன்கள்‌ மாத்திரம்‌ இறந்த பின்னரும்‌ நிரந்தரமாக மனிதனுக்குக்‌ கிடைத்துக்‌
கொண்டேயிருக்கும்‌. எப்போதும்‌ ஓயாமல்‌ பலன்‌ தரும்‌ தர்மம்‌ (ஸதகதுல்‌ ஜாரியா), மாண்ட பின்பும்‌ பிரயோசனமளிக்கும்‌ கல்வி, பிரார்த்தனை செய்யும்‌ பிள்ளைகள்‌. இம்மூன்றின்‌ பிரதிபலன்கள்‌ காலஞ்சென்ற பின்னரும்‌ பயனளிக்கும்‌ என்பதில்‌ எவ்விதச்‌ சந்தேகமுமில்லை. இந்த ஹதீஸில்‌ மகன்‌ தகப்பனுக்குக்‌ கேட்கும்‌ துஆ மரணமடைந்த
பின்‌ தகப்பனுக்குப்‌ பயன்படுமென்று நபியவர்கள்‌ கூறினார்களே ஒழிய மகன்‌ புரியும்‌ நற்கிரியைகளின்‌ அனைத்து பலாபலன்களும்‌ தகப்பனுக்குக்‌ கிடைக்குமென நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறவில்லை. எனவே ஒருசில நல்ல அமலின்‌ கூலிகளையும்‌
பெற்றோருக்காகச்‌ செலுத்துவது அனுமதிக்கப்‌ பட்டுள்ளது. நபியவர்களுக்கு வேண்டிய
நல்லமல்களின்‌ கூலிகளை ஹதியாவாக செலுத்தப்பட மாட்டாது. இதை மட்டும்‌ ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள்‌ தடுத்திருக்கிறார்கள்‌.

ஆகவே நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ முஸ்லிம்களிடம்‌ தமக்காக துஆச்‌ செய்யுங்கள்‌ என்பது போன்ற ஒரு விஷயத்தைக்‌ கூறினால்‌ அவர்கள்‌ தம்‌ உம்மத்திடம்‌ கோரிக்கை விடுத்தார்கள்‌ என்று கருதுவது தவறாகும்‌. நபிகள்‌ தம்‌ உம்மத்துகளை நன்மைகளின்‌ பால்‌ பிரேரணை நல்குவதற்காக அவற்றின்பால்‌ தம்‌ உம்மத்துகளை தூண்டி விடுவார்கள்‌. தம்‌ மீது ஸலவாத்துகள்‌ சொல்லும்படி பணிப்பார்கள்‌. இதுவும்‌
நன்மைகளை ஏராளம்‌ செய்வதற்காக காட்டித்‌ தந்த ஒரு வழியே. தவிர நம்மிடம்‌ ஸலவாத்துக்களைக்‌ கொண்டு கோரிக்கை விட்டதல்ல. ஸலவாத்தைப்‌ பொறுத்த வரையில்‌ நபிகளை விட அல்லாஹ்வே ஏவியிருக்கிறானல்லவா? "நிச்சயமாக அல்லாஹ்வும்‌ அவனுடைய மலக்குகளும்‌ நபியின்‌ மீது ஸலவாத்துச்‌ சொல்கிறார்கள்‌.

ஆகவே விசுவாசிகளே நீங்களும்‌ அவர்கள்‌ மீது ஸலாத்தும்‌, ஸலாமும்‌ கூறுங்கள்‌".
(33:56)


பாங்கின்‌ பிரார்த்தனை

நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ தமது உம்மத்துகளிடம்‌ ஸலவாத்துச்‌ சொல்லக்‌ கூறியிருப்பதுபோல தமக்காக வஸீலாவையும்‌, பளீலாவையும்‌, புகழுக்குரிய
இடத்தையும்‌ கேட்டு அல்லாஹ்விடம்‌ பிரார்த்திக்கும்‌ படியும்‌ ஏவியிருக்கிறார்கள்‌. அப்துல்லாஹ்‌ பின்‌ உமர்‌ (ரலி) அவர்கள்‌ வாயிலாக அறிவிக்கப்படும்‌ ஹதீஸில்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: 'முஅத்தின்‌ பாங்கு சொல்வதைக்‌ கேட்டால்‌ முஅத்தின்‌ சொல்வதைப்‌ போன்று நீங்களும்‌ சொல்லுங்கள்‌. பிறகு என்மீது ஸலவாத்துச்‌ சொல்லுங்கள்‌. ஒருமுறை என்மீது ஒருவர்‌ ஸலவாத்துச்‌ சொன்னால்‌ அல்லாஹ்‌
அவர்மீது பத்துமுறை ஸலவாத்துச்‌ சொல்வான்‌. பிறகு பாங்குடைய துஆவில்‌ எனக்காக வஸீலாவை அல்லாஹ்விடம்‌ கேட்டுப்‌ பிரார்த்தியுங்கள்‌. இந்த வஸீலா சுவனத்தில்‌ வழங்கப்படும்‌ மாபெரும்‌ ஒரு பதவியாகும்‌. அல்லாஹ்வின்‌ அடியார்களில்‌
ஒரே ஒரு மனிதருக்கு அப்பதவி வழங்கப்படுகிறது. அது எனக்கு வழங்கப்படுவதை ஆசைப்படுகிறேன்‌. ஆகவே எனக்காக எவர்‌ அல்லாஹ்விடம்‌ வஸீலாவைக்‌
கேட்கிறாரோ அவர்‌ மறுமையில்‌ என்னுடைய ஸபாஅத்துக்கு உரியவராகிறார்‌'. (முஸ்லிம்)

ஜாபிர்‌ (ரலி) அவர்கள்‌ வாயிலாக அறிவிக்கப்படும்‌ ஹதீஸில்‌ நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: 'தொழுகைக்கு பாங்கு சொல்லப்படுவதைக்‌ கேட்கும்‌ போது நிலையான தொழுகையின்‌ ரப்பே! பரிபூரணமான இப்பிரார்த்தனைகளின்‌ நாயனே! முஹம்மத்‌ (ஸல்‌) அவர்களுக்கு மதிப்பையும்‌, கண்ணியத்தையும்‌, உயர்ந்த பதவிகளையும்‌
அளித்தருவதுடன்‌ அவர்களுக்கு 'வஸீலா' என்ற பதவியையும்‌ அருள்வாயாக! புகழுக்குரிய ஸ்தானத்தில்‌ அவர்களை மறுமையில்‌ அனுப்பியருள்‌! இவ்வாறு
செய்வதாக இறைவா நீ வாக்களித்துள்ளாய்‌! நீ வாக்குறுதி மாறாதவன்‌' என்று எவர்‌ கூறினாலும்‌ அவருக்கு மறுமையில்‌ என்‌ ஸபாஅத்‌ கிடைத்து விடும்‌. இப்படி முஸ்லிம்கள்‌ வஸீலா கேட்கும்படி நாயகம்‌ பெரிதும்‌ விரும்பினார்கள்‌. நபிகளுக்கு வஸீலாவைக்‌ கேட்பதினால்‌ முஸ்லிமானவன்‌ நபிகள்‌ (ஸல்‌) அவர்களின்‌ சிபாரிசுக்குரியவனாக ஆகி விடுகிறான்‌. ஒருமுறை ஸலவாத்துச்‌ சொல்வதினால்‌
அல்லாஹ்‌ அவன்‌ மீது பத்து விடுத்தம்‌ ஸலவாத்துச்‌ சொல்வான்‌. (புகாரி)

ஆக நபிகளுக்கு வேண்டி நாம்‌ செய்கிற சின்னஞ்சிறு வேலைகளுக்குப்‌ பதிலாக மாபெரிய கூலிகளை இறைவன்‌ தருகிறான்‌ என்ற கருத்தை நபிகள்‌ (ஸல்‌) விளக்கி ஸலவாத்துகள்‌, துஆக்கள்‌ போன்றவற்றை ஏராளம்‌ சொல்ல வேண்டுமென்று தூண்டுதல்‌ அளித்திருக்கிறார்கள்‌. முஸ்லிம்களை நல்லமல்களில்‌ நீடித்திருக்கின்ற பிரேரணைகளைச்‌ செய்திருக்கிறார்களேயொழிய நபிகள்‌ தமக்குரிய தேவைகளை முறையிட்டுக்‌ கூறி விண்ணப்பித்தார்களென்று விளங்கி கொள்ளப்பட மாட்டாது.

ஒருநாள்‌ உமர்‌ (ரலி) அவர்கள்‌ நபி (ஸல்‌) அவர்களிடம்‌ வந்து தாம்‌ உம்றாவுக்குச்‌ செல்ல அனுமதி வழங்க வேண்டினார்கள்‌. அதற்கு நபிகள்‌ அனுமதிக்‌ கொடுத்து விட்டு உமரிடம்‌: என்னுடைய சகோதரரே! உமது பிரார்த்தனையில்‌ எங்களை மறந்து விடாதீர்‌'
என்றார்கள்‌. (அஹமத், திர்மிதி, இப்னுமாஜா)

இங்கே நாம்‌ ஒரு படிப்பினையைப்‌ பெற வேண்டும்‌. நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ தமக்காகப்‌ பிரார்த்திக்க வேண்டுமென்று உமரிடம்‌ கூறியது ஸலவாத்தையும்‌,
வஸீலாவையும்‌, உயர்ந்த பதவியையும்‌ கேட்க வேண்டுமென்று மக்களிடம்‌ பணித்தது போன்றதாகும்‌. முஸ்லிமை நற்கிரியைகளின்பால்‌ தூண்டி உற்சாகமளித்து முஸ்லிம்களுக்குப்‌ பேருதவி செய்வதைத்‌ தவிர நபிகளுக்கு வேறொன்றும்‌ இலட்சியமாக இல்லை. எத்தனை எத்தனையோ
நன்மைகளைச்‌ செய்ய வேண்டுமென்று நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ முஸ்லிம்களைப்‌ பணித்திருக்கிறார்கள்‌. அதிலொன்றுதான்‌ தமக்காக உமரிடம்‌ துஆ கேட்க
வேண்டுமென்று பணித்ததும்‌. உம்றாவுக்கு அனுமதிக்‌ கேட்ட உமருக்குப்‌ பயனளிக்கவல்ல செயலைப்‌ புரியத்தூண்டி, அவருக்கு உபகாரம்‌ செய்ய
வேண்டுமென்பதே நபிகளின்‌ இலட்சியமாகும்‌. நபிகளின்‌ சொல்லுக்கிணங்கி முஸ்லிம்கள்‌ இத்தகைய நற்கருமங்களை நிறைவேற்றினால்‌, நபிக்காக துஆச்‌ செய்தால்‌ நபிகளும்‌ அதனால்‌ பலனடையாமலிருக்கப்‌ போவதில்லை. அவர்களும்‌
மக்கள்‌ கேட்கிற துஆவினாலும்‌, இதர அமல்களினாலும்‌ பயன்‌ பெறுவார்கள்‌.

ஒருவர்‌ நபி (ஸல்‌) அவர்களிடம்‌ வந்து: நாயகமே! பிரார்த்தனையின்‌ போது நான்‌ தங்கள்‌ மீது அதிகமாக ஸலவாத்துச்‌ சொல்லி வருகிறேன்‌. இருப்பினும்‌ சுமார்‌
எத்தனை முறை ஸலவாத்துகளை நான்‌ துஆவில்‌ சேர்த்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்று! தாங்கள்‌ கருதுகிறீர்கள்‌? என்று கேட்டார்‌. அதற்கு 'நீர்‌ விரும்பிய மாதிரி சொல்லும்‌' என்று நபிகள்‌ பதிலுரைத்தார்கள்‌. உடனே அம்மனிதர்‌ அப்படியானால்‌ எனது பிரார்த்தனையின்‌ கால்பகுதியைத்‌ தாங்கள்‌ மீது ஸலவாத்துச்‌ சொல்வதில்‌ கழிக்கவா? என்றார்‌. உடனே நபியவர்கள்‌ முன்னர்‌ கூறியது போல நீர்‌ விரும்பியது போல
ஸலவாத்துகள்‌ சொல்லும்‌, கால் பங்கை விட அதிகம்‌ சொன்னாலும்‌ அது மிக நல்லது தான்‌' என்றார்கள்‌. அதைக்‌ கேட்டதும்‌ அம்மனிதர்‌ அப்படியானால்‌ என்‌ துஆவின்‌ பாதியைத்‌ தாங்கள்‌ மீது ஸலவாத்துச்‌ சொல்வதில்‌ கழிக்கவா?' என்று வினவ, அதற்கும்‌ நபிகள்‌ முன்னர்‌ கூறியது போல பதில்‌ கூறிவிட்டு: அதிகம்‌ சொன்னாலும்‌ உமக்கு நன்மைதான்‌ கிடைக்கும்‌ என்றார்கள்‌. இதைக்‌ கேட்ட அம்மனிதர்‌:
அப்படியென்றால்‌ என்‌ துஆவின்‌ மூன்றில்‌ இரு பகுதிகளில்‌ நான்‌ ஸலவாத்துகள்‌ சொல்கிறேனே' என்றார்‌. அதற்கும்‌ நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ முன்னர்‌ கூறியது போல்‌ கூறி 'இன்னும்‌ அதிகமாகச்‌ சொன்னால்‌ உமக்குத்தான்‌ நல்லது' என்றார்கள்‌. உடனே அம்மனிதர்‌ நாயகமே! என்‌ பிரார்த்தனைகள்‌ முழுவதையும்‌ ஸலவாத்துக்காகவே ஆக்கி
விழுகிறேன்‌ என்றார்‌. அதற்கு நபி (ஸல்‌) அவர்கள்‌ 'அப்படியானால்‌ உம்‌ எண்ணங்கள்‌ நிறைவேற்றப்படும்‌. உமது பாவங்கள்‌ மன்னிக்கப்படும்‌' என்று கூறினார்கள்‌.

அதைப்பற்றி நல்ல பல விளக்கங்கள்‌ 'பக்தாது வினாக்களின்‌ விடைகள்‌' என்ற நூலில்‌
விளக்கப்பட்டுள்ளது. ஒன்றைக்‌ கவனிக்க வேண்டும்‌. அம்மனிதர்‌ தம்‌ தேவைகளை அல்லாஹ்விடம்‌ கேட்டுப்‌ பிரார்த்திப்பதற்கு பதிலாக நபியின்‌ மீது ஸலவாத்துகளை மட்டும்‌ கூறி துஆவை முடித்துக்‌ கொள்கிறார்‌. இந்த ஸலவாத்துகள்‌ அவர்‌ துஆக்களின்‌
இடத்தை நிரப்புகின்றன. இதிலிருந்து மனிதன்‌ தேவைகளைக்‌ கேட்டுப்‌ பிரார்த்திப்பதற்குப்‌ பதிலாக ஸலவாத்துக்களை மாத்திரம்‌ ஓதிக்‌ கொண்டிருந்தாலும்‌ அந்த மனிதரின்‌ இலெளகீக, வைதீகத்‌ தேவைகள்‌ நிறைவேற்றப்‌படுகின்றன என்பதனை விளங்க முடிகின்றது. அல்லாஹ்‌ அவருக்கு இது விஷயத்தில்‌ பொறுப்பேற்றிருக்கிறான்‌.
நபிகளுக்கு ஒரு விடுத்தம்‌ கூறும்‌ ஸலவாத்துக்கு பத்து முறை அல்லாஹ்‌ கூலி கொடுக்கிறான்‌ அல்லவா?

மனிதன்‌ ஒவ்வொரு மூமினுக்கும்‌ தனித்தனியாக துஆச்‌ செய்ய நினைக்கிறான்‌ என வைத்துக்‌ கொள்வோம்‌. இந்த துஆக்களுக்கு மலக்குகள்‌ ஆமின்‌ கூறி 'உனக்கும்‌ அதுபோல்‌ கிடைக்கட்டும்‌' என்று பதிலுரைத்து துஆ அங்கீகரிக்கப்பட்டது என்றால்கூட
இத்தகைய துஆக்களை மாற்றி ஸலவாத்தாக ஆக்கி விட்டால்‌ இந்த ஸலவாத்து அவனுடைய மேற்கூறிய அங்கீகரிக்கப்படத்‌ தகுதியுள்ள துஆவுக்கு ஈடு செய்கிறது. 

ஆகவே மனிதன்‌ ஸலவாத்தினால்‌ தன்‌ தேவைகளை அடைகிறான்‌. ஏனெனில்‌ மூமின்களுக்கு துஆச்‌ செய்வதைக்‌ காட்டிலும்‌ நபிக்காக துஆ (ஸலவாத்து) செய்வது எத்தனையோ மேன்மைக்கு உரியதல்லவா? ஆகவே மூமினுக்கு துஆச்‌ செய்வதைக்‌ காட்டிலும்‌ நபிகளுக்கு ஸலவாத்து உரைப்பதில்‌ ஏராளமான கூலிகளை மனிதன்‌ அடைகிறான்‌.

'எனக்காக துஆச்‌ செய்யுங்கள்‌' என்று ஒருவரை மற்றவர்‌ வேண்டினார்‌ என்று வைத்து கொள்வோம்‌. இந்த வேண்டுதலினால்‌ வேண்டியவனும்‌ வேண்டப்பட்டவனும்‌ பயன்பெற வேண்டுமென ஒரே இலட்சியம்‌ கருதப்‌ பட்டால்‌ இத்தகைய வேண்டுதல்கள்‌ நன்மை தரும்‌. இதில்‌ பெருமானாரின்‌ முன்மாதிரியைக்‌ காண முடிகிறது. ஏனெனில்‌ ஒரு
ஸலவாத்தை நாம்‌ நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ மீது சொல்வதனால்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ பத்து ஸலவாத்தை நம்மீது நல்குகிறார்களல்லவா? இது போன்ற விண்ணப்பங்களையும்‌, வேண்டுதல்களையும்‌ இஸ்லாம்‌ ஆதரிக்கிறது. ஏனெனில்‌ இதில்‌
தமக்கும்‌, மற்றவருக்கும்‌ நலன்கள்‌ நாடப்படுகிறது. ஆனால்‌ பிறரிடம்‌ கேட்கும்‌ போது நம்‌ நலன்கள்‌ மட்டும்‌ கருதப்பட்டால்‌ இம்மாதிரியான வேண்டுதல்களை இஸ்லாம்‌ வெறுக்கிறது. ஏனெனில்‌ இதில்‌ பெருமானாரின்‌ முன்மாதிரி இல்லை. அவர்கள்‌ பத்து
ஸலவாத்துகளை பிறருக்கு நாடியதற்கப்பால்‌ தானே தமக்காக ஸலவாத்துச்‌ சொல்ல வேண்டுமென பணித்தார்கள்‌. சுயநலம்‌ கருதி இப்படித்‌ தேவைப்படுவதை விட அல்லாஹ்விடம்‌ ஆதரவு வைத்துக்‌ கொண்டு சும்மா இருந்து விடுவது நல்லது.

இத்தனை நேரமும்‌ நாம்‌ விளக்கியது உயிருடனிருப்பவனிடம்‌ கேட்பதைப்‌ பற்றியது.
அதில்‌ அனுமதிக்கப்பட்ட முறைகளை நாம்‌ விளக்கினோம்‌. ஆனால்‌ இறந்து மடிந்த மைய்யித்திடம்‌ கேட்பதும்‌, கெஞ்சுவதும்‌ முழுக்க முழுக்க விலக்கப்பட்ட தீய வினையாகும்‌. சுன்னத்துமில்லை. கடமையுமில்லை. அனுமதிக்கப்பட்ட ஜாயிஸான செய்கையும்‌ கூட ஆகாது. முற்றிலும்‌ இஸ்லாம்‌ மார்க்கம்‌ ஹராமாக்கி வெறுத்‌தொதுக்கிய கொடிய தீய செய்கை. இதை ஸஹாபாக்கள்‌ எவரும்‌ செய்யவில்லை. தாபியீன்கள்‌, தபவுத்தாபியீன்கள்‌, ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள்‌ எல்லோரும்‌ இதை வெறுத்து ஒதுக்கி விட்டார்கள்‌. 

ஈமானுக்கு இழுக்கு ஏற்படும்‌ ஒரு செய்கையை எவரால்‌ தான்‌ மதித்துக்‌ கூற முடியும்‌. மனிதனுடைய வாழ்க்கையின்‌ இலட்சியத்துக்கே கேடு
விளைவிக்கும்‌ ஒரு நச்சு வினையை யாராவது அனுமதிப்பார்களா? ஃபாயிதா இல்லாத வீண்‌ செயல்கள்‌ விசுவாசத்தைப்‌ போக்கடித்து விடுகிறதல்லவா? இஸ்லாம்‌ கூறும்‌ போதனைகள்‌ இம்மை, மறுமையில்‌ பற்பல பலாபலன்களை அளிக்கிறது. நன்மை பயக்காத போதனைகளை போதிப்பது இஸ்லாம்‌ மார்க்கமாகாது. காலம்‌
சென்றவர்களிடம்‌ தேவைகளை முறையிட்டுக்‌ கெஞ்சுவதில்‌ என்ன நன்மையை மனிதன்‌ காணப்‌ போகிறான்‌?

முன்னர்‌ நாம்‌ விளக்கிய சம்பவத்துக்கு வருவோம்‌. நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ தமக்காக துஆச்‌ செய்ய வேண்டுமென்பதின்‌ தாத்பரியம்‌ பொதுவாக மக்களுக்கு நன்மை செய்தல்‌ என்பதாகும்‌. நபி (ஸல்‌) அவர்களின்‌ ஏவல்களனைத்தும்‌ இதை விளக்கிக்‌ காட்டுகின்றன. அவர்களின்‌ ஏவல்களைப்‌ பார்க்கும்போது உயிருடனிருந்தாலும்‌, காலம்‌ சென்ற
பின்னரும்‌ பிறருக்கு உதவுதல்‌ என்ற தாத்பரியத்தையே காண முடிகிறது.

உதாரணமாக மைய்யித்துத்‌ தொழுவதை எடுத்துக்‌ கொள்வோம்‌. மேலும்‌ மூமின்களின்‌ கப்றுகளில்‌ ஸியாரத்‌ செய்தல்‌, அவர்கள்‌ மீது கப்றில்‌ ஸலாம்‌ சொல்லுதல்‌, அவர்களுக்கு பிரார்த்தித்தல்‌ இவை அத்தனையுமே இறந்தவர்களுக்கு உதவுதல்‌ என்ற
தலைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கின்றன. இதன்‌ விதி வாஜிபாக இருக்கட்டும்‌ அல்லது ஸுன்னத்தாக இருக்கட்டும்‌. எதுவாயினும்‌ பிறருக்கு உதவுதல்‌ எனும்‌
தாத்பரியத்தையே இதில்‌ காண முடிகிறது. நபி (ஸல்‌) அவர்கள்‌ அதை ஏவியுள்ளார்கள்‌.

மற்றொரு விஷயத்தையும்‌ இங்கு கவனிக்க வேண்டும்‌. மக்கள்‌ அல்லாஹ்வுக்கு வேண்டித்‌ தொழ வேண்டும்‌, ஜகாத்‌ கொடுக்க வேண்டும்‌ என்று பணிக்கப்பட்டுள்ளார்கள்‌. இந்தத்‌ தொழுகை, ஜகாத்‌ இவற்றைப்‌ பற்றி சிந்தித்தாலும்‌ தொழுகை அல்லாஹ்வுக்கு சொந்தமானது. அது அவனுடைய ஹக்கு. படைப்பினங்கள்‌ தொழுகையை அவசியம்‌
நிறைவேற்ற வேண்டும்‌. மேலும்‌ ஜகாத்‌ ஏழை எளியோருக்குச்‌ சொந்தமானது. அது அவர்களின்‌ ஹக்கு. அதையும்‌ செல்வந்தர்களே கொடுத்து தீர வேண்டும்‌. இதன்‌ அடிப்படையில்‌ தான்‌ நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ இதையும்‌ ஏவியிருக்கிறார்கள்‌.
அடியார்களின்‌ பாத்தியதைகளையும்‌ கொடுத்து நிறைவேற்றும்படி நபி (ஸல்‌) அவர்கள்‌
மக்களிடம்‌ ஏவினார்கள்‌.

ஆகவே நபி (ஸல்‌) அவர்கள்‌ மக்களுக்குக்‌ காட்டுகின்ற வழிகளெல்லாம்‌ மனிதர்களுக்கு நன்மைகள்‌ நாடப்படுகின்றன. மக்கள்‌ அல்லாஹ்வுக்கு மட்டும்‌ வழிப்பட வேண்டும்‌. அவ்வழிபாட்டில்‌ யாரையும்‌ அவனுடன்‌ பங்கு சேர்க்கக்‌ கூடாது. மனிதனுக்கு
உதவுதலும்‌, இறைவனுக்கு வழிபடும்‌ ஒரு அம்சமாகவே மதிக்கப்படுகிறது. ஜனாஸா தொழுகை என்பது மைய்யித்துக்காக கேட்கப்படும்‌ ஒரு பிரார்த்தனையாகும்‌. மனிதன்‌ இறந்தாலும்‌ உதவ வேண்டுமென்ற நோக்குடன்‌ இது கடமையாக்கப்பட்டுள்ளது.

மூமின்களுடைய கப்றை ஸியாரத்‌ செய்வதும்‌ ஒரு வழிபாடாகும்‌. அங்கு மூமினுக்காகப்‌ பிரார்த்திக்க வேண்டுமென்ற நன்னோக்குடன்‌ இது ஸுன்னத்தாக்கப்‌ பட்டிருக்கிறது.

இப்படி இஸ்லாம்‌ அனுமதி வழங்கும்‌ அனைத்து வழிபாடுகளிலும்‌ மனிதனின்‌ நன்மைகளையே நாடப்படுகின்றன. மார்க்கத்தின்‌ பெயரால்‌ புரியப்படும்‌ ஒவ்வொரு அமலும்‌ மனிதனுக்குப்‌ பயனளிக்கத்தக்க செய்கையாய்‌ அமைதல்‌ வேண்டும்‌. ஆனால்‌ ஷைத்தான்‌ தன்‌ ஆதரவாளர்களைத்‌ தன்‌ வசமாக்கிக்‌ கொண்டு அவர்களை தனக்குக்‌ கீழ்படிய வைத்து விட்டான்‌. காலம்‌ சென்றவர்களை ஸியாரத்‌ செய்வதிலும்‌ அல்லாஹ்வுக்கு இணை வைப்பதின்பால்‌ மக்களின்‌ இலட்சியத்தைக்‌ திருப்பி விட்டான்‌.

கப்றில்‌ புதையுண்டு இருக்கும்‌ மைய்யித்துக்கு துஆச்‌ செய்ய வேண்டுமென்று நினைப்பதைத்‌ திருப்பி அவருக்குத்‌ தீங்கு செய்யும்‌ எண்ணத்தைப்‌ புகுத்தி விட்டான்‌. இதனால்‌ நபிமார்கள்‌, ஸாலிஹீன்கள்‌, அவ்லியாக்கள்‌ இவர்களின்‌ சமாதிகளை ஸியாரத்‌
செய்வதின்‌ நோக்கம்‌ இவர்களிடம்‌ தத்தம்‌ தேவைகளைச்‌ சமர்ப்பித்தல்‌ என்றும்‌, சமாதிகளில்‌ பரக்கத்திருக்கிறது, அங்கு துஆச்‌ செய்வதில்‌ ஏதோ தனி விசேஷயிருக்கிறது, துஆவும்‌ அங்கீகரிக்கப்படும்‌ என்றெல்லாம்‌ மக்கள்‌ தப்பெண்ணம்‌ கொள்ளுமளவுக்கு அவர்களின்‌ மனதை ஷைத்தான்‌ திருப்பி விட்டான்‌. மைய்யித்துக்கு ஸலாம்‌
கூறாமலும்‌, துஆ கேட்காமலும்‌ தம்‌ தேவைகளை மட்டும்‌ விண்ணப்பித்து வருதல்‌ போன்ற வெறும்‌ அனாச்சாரத்தின்‌ பால்‌ தம்‌ ஆதரவாளர்களை ஷைத்தான்‌ திருப்பி விட்டான்‌.

இதனால்‌ மக்களின்‌ எண்ணமே மாறி விடுகிறது. ஸியாரத்துக்குச்‌ சென்று முஸ்லிம்கள்‌ தம்‌ ஈமானைப்‌ பறிகொடுத்து விட்டுக்‌ திரும்புகிறார்கள்‌. ஜனாஸா
தொழும்போது மனிதனின்‌ எண்ணம்‌ ஜனாஸாவுக்கே தொழுவதாக இருக்க வேண்டும்‌ என்று சொல்லி மக்களை ஷைத்தான்‌ ஏமாற்றுகிறான்‌. இதனால்‌ மக்கள்‌ விரைவில்‌ முஷ்ரிக்குகளாகி விடுகிறார்கள்‌. இவர்கள்‌ தமக்குத்தாமே குற்றம்‌ செய்து,
மைய்யித்துக்கும்‌ தீங்கிழைத்துக்‌ கொள்கிறார்கள்‌. பற்பல தீவினைகளைப்‌ புரிந்து, அக்கிரமக்காரர்களாக மாறி விடுகிறார்கள்‌. அல்லாஹ்வும்‌, ரஸுலும்‌ எவற்றைச்‌ செய்ய வேண்டுமென்று நிர்ணயம்‌ பண்ணித்‌ தந்திருக்கிறார்களோ, அவற்றில்‌ ஏகத்துவத்தின்‌
உயிரோட்டத்தைக்‌ காண முடிகிறது. அவற்றில்‌ நேர்மையையும்‌, நெறியையும்‌ காண முடியும்‌. அவற்றில்‌ சிருஷ்டிகளுக்குச்‌ சாதகமான பற்பல நன்மைகளையும்‌ பார்க்கலாம்‌. கலப்பறுதலையும்‌ (இக்லாஸையும்‌) பார்க்கலாம்‌. அல்லாஹ்வின்‌ விதிகளில்‌ அடியார்கள்‌ யாவருக்கும்‌ இம்மையிலும்‌, மறுமையிலும்‌ பல ஆதாயங்கள்‌ இருக்கின்றன. அல்லாஹ்‌ சொல்லாத ஒன்றை வழிபாடாக நினைத்துச்‌ செய்யும்போது,
ஏகத்துவத்திற்குப்‌ பதிலாக ஷிர்க்கையும்‌, அநீதியையும்‌, நெறிகேட்டையும்‌, ஒழுக்கமின்மையையும்‌ அதில்‌ காண முடிகிறது. உபகாரத்துக்குப்‌ பதிலாக அபகாரத்தையும்‌, கெடுதல்களையும்‌ அதில்‌ பெற்றுக்‌ கொள்ள முடியும்‌. மேலும்‌ அல்லாஹ்‌: "வணங்குங்கள்‌, அவனுக்கு எதையும்‌ இணையாக்காதீர்கள்‌, பெற்றோர்களுக்கும்‌, உற்றார்களுக்கும்‌ உதவுங்கள்‌” என கூறுகிறான்‌. (4:36)

இஸ்லாத்தின்‌ ஏவல்‌, விலக்கல்கள்‌ எப்போதும்‌ உயர்ந்த நற்பண்புகளைப்‌ போதிக்கின்றன. இறைவன்‌ இவ்வொழுக்கங்களை மிக நேசிக்கிறான்‌. ஒழுக்கக்‌
கேட்டையும்‌, தீய குணத்தையும்‌ வெறுக்கிறான்‌. பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: 'நற்பண்புகளைப்‌ பரிபூரணமாக்குவதற்காக நான்‌ நபியாக அனுப்பப்‌ பட்டிருக்கிறேன்‌'.

பிறிதொரு ஹதீஸில்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌: உயர்ந்த கரம்‌, தாழ்ந்த கரத்தை விட மேன்மையானது" நபி (ஸல்‌) அவர்கள்‌ இன்னுமொரு ஹதீஸில்‌ கூறுகிறார்கள்‌: உயர்ந்த கரத்துக்கு அள்ளி அள்ளிக்‌ கொடுக்கும்‌ தன்மையண்டு. தாழ்ந்த
கரம்‌ யாசித்துக்‌ கெஞ்சி பிறரிடம்‌ தேவைப்படுகின்ற கரமாகும்‌' அப்படியென்றால்‌ கேட்பவனுக்கு என்ன மதிப்பு இருக்கிறது? யாசிப்பவன்‌ பிறருக்கு எப்படி நன்மை செய்ய முடியும்‌? கெஞ்சுகிறவன்‌ எப்போதும்‌ மற்றவருக்குத்‌ தீயதே செய்கிறானே தவிர,
நல்லதைச்‌ செய்ய மட்டான்‌.

துன்பங்கள்‌ வந்தால்‌ அல்லாஹ்விடம்‌ கெஞ்ச வேண்டும்‌. இதில்‌ தான்‌ தவ்ஹீதை (ஏகத்துவத்தை) காண முடிகிறது. இங்கேதான்‌ ஏகத்துவத்தின்‌ ஒளியும்‌ பிரதிபலிக்கும்‌. அடியானைப்‌ பற்றி அவன்‌ உண்மையானவன்‌, நேர்மையானவன்‌, தன்‌ பொறுப்புகள்‌ அனைத்தையும்‌ தன்‌ இரட்சகனான அல்லாஹ்‌ ஒருவனிடமே பாரம்‌ சாட்டி ஒப்படைத்து
அவனை மெய்யாக நேசிக்கும்‌ சத்திய விசுவாசி என்றெல்லாம்‌ அவனைப்‌ போற்ற முடியும்‌. இப்படியிருக்க துன்பங்கள்‌, துயரங்கள்‌ நேர்ந்தால்‌ சிருஷ்டிகளிடம்‌ சென்று கெஞ்சி, அவற்றை ஆதரவு வைத்து, தன்‌ பொறுப்புகளைப்‌ பாரம்‌ சாட்டி இறைவனை நேசிப்பது போன்று அவற்றை நேசித்து நடப்பவனிடம்‌ தவ்ஹீதைக்‌ காண முடியுமா?
எப்படி அவனை சத்திய விசுவாசி என்று சொல்வது? மனிதன்‌ அல்லாஹ்வுக்குக்‌ கீழ்படிந்து நடந்து அவனிடம்‌ மட்டும்‌ இரங்கி மன்றாடினால்‌ இவனைப்‌ பற்றி உண்மை விசுவாசி என சொல்லப்படும்‌. சிருஷ்டிகளை அழைத்துப்‌ பிரார்த்திப்பவனுக்கும்‌,
ஈமானுக்குமிடையில்‌ பெரும்‌ தொலைவு இடைவெளி இருக்கிறதல்லவா?

நபிகளின்‌ ஏவல்கள்‌ அனைத்திலும்‌ இம்மை, மறுமையின்‌ நன்மைகளைக்‌ காண முடியும்‌ என்று கூறினோம்‌. இறைவழிபாடு, இறைவனுக்கு இணை-துணை கற்பிக்காமலிருத்தல்‌, பெற்றோருக்கும்‌, மற்றோருக்கும்‌ உதவி செய்தல்‌ இம்மூன்று
நற்பண்புகளையும்‌, பற்பல சீரிய ஒழுக்கங்களையும்‌ நபியவர்கள்‌ போதித்துச்‌ சென்றார்கள்‌. நபிகளின்‌ அனைத்துப்‌ போதனைகளையும்‌ குறிப்பாக இம்மூன்று சீரிய பண்பாடுகளையும்‌ பேணுகிறவர்களுக்கு இம்மையிலும்‌, மறுமையிலும்‌ நன்மைகளுண்டு.
இதற்கு மாறு செய்கிறவர்களை நபியவர்கள்‌ வன்மையாகக்‌ கண்டித்திருக்கிறார்கள்‌. 

தவறுகள்‌ புரிந்தால்‌ துன்பங்கள்‌ பலவற்றை மக்கள்‌ சந்திக்கக்‌ கூடும்‌. ஷைத்தான்‌ என்றுமே நபியவர்களின்‌ கொள்கைகளுக்கு மாறுசெய்கிறவன்‌ அல்லவா? அவர்களுக்கு மாறுசெய்வதையே என்றும்‌ அவன்‌ எதுர்பார்க்கிறான்‌. இதைத்‌ திருமறையும்‌ நன்றாக
விளக்குகிறது: "ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள்‌ ஷைத்தானை வணங்கக்‌ கூடாது. நிச்சயமாக அவன்‌ உங்களுக்கு பகிரங்க விரோதி என நான்‌ உங்களிடம்‌ உறுதிமொழி வாங்கவில்லையா?" "நீங்கள்‌ என்னையே வணங்க வேண்டும்‌. இதுதான்‌ நேரான
வழியென்றும்‌ நான்‌ உங்களிடம்‌ உறுதிமொழி வாங்கவில்லையா?"

"(அவ்வாறிருந்தும்‌) உங்களில்‌ பெருந்தொகையினரை அவன்‌ நிச்சயமாக வழிகெடுத்து விட்டான்‌. இதனை நீங்கள்‌ அறிந்து கொள்ள வில்லையா?". (36:60-62)

"என்‌ அடியார்களிடத்தில்‌ நிச்சயமாக உனக்கு யாதொரு செல்வாக்கும்‌ இராது. வழிகேட்டில்‌ உன்னைப்‌ பின்பற்றியவர்களைத்‌ தவிர”. (15:42)

(நபியே!) நீர்‌ திருக்குர்ஆனை ஓத ஆரம்பித்தால்‌ (அதற்கு முன்‌) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டுக்‌ காக்கும்படி அல்லாஹ்விடம்‌ கோரிக்‌ கொள்ளும்‌. எவர்கள்‌ விசுவாசம்‌ கொண்டு தங்கள்‌ இறைவன்‌ மீது தவக்குல்‌ வைத்திருக்கிறார்களோ அவர்களிடத்தில்‌ நிச்சயமாக (இந்த) ஷைத்தானுக்கு யாதொரு அதிகாரமுமில்லை. அவனுடைய அதிகாரமெல்லாம்‌ அவனுடன்‌ சம்பந்தம்‌ வைத்திருப்பவர்களிடமும்‌,
அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களிடமுமே செல்லும்‌". (16:98-100)

"எவன்‌ ரஹ்மானுடைய நல்லுபதேசத்திலிருந்து கண்ணை மூடிக்‌ கொள்கிறானோ அவனுக்கு நாம்‌ ஒரு ஷைத்தானை (சினேகிதனாக) காட்டி விடுவோம்‌. அவன்‌ இவனுக்கு இணைபிரியாத தோழனாகி விடுவான்‌. நிச்சயமாக அவைதாம்‌ அவர்களை
நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. எனினும்‌ அவர்களோ தாங்கள்‌ நேரான பாதையில்‌ இருப்பதாகவே எண்ணிக்‌ கொள்வார்கள்‌". (43:36-37)

"நிச்சயமாக நாம்தாம்‌ இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்‌. ஆகவே (அதில்‌ எத்தகைய மாறுதலும்‌, அழிவும்‌ ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதனை இரட்சித்துக்‌ கொள்வோம்‌”. (15:9)

"நிச்சயமாக என்னுடைய நேர்வழி உங்களிடம்‌ வரும்‌. எவன்‌ என்னுடைய நேர்வழியைப்‌ பின்பற்றுகின்றானோ அவன்‌ வழிதப்பவும்‌, நஷ்டமடையவும்‌ மாட்டான்‌.
எவன்‌ என்னுடைய நல்லுபதேசத்தைப்‌ புறக்கணிக்கின்றானோ, அவனுடைய வாழ்க்கை
நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும்‌. மறுமை நாளிலோ நாம்‌ அவனைக்‌ குருடனாக எழுப்புவோம்‌. அவன்‌ என்‌ இறைவனே! நீ ஏன்‌ என்னைக்‌ குருடனாக
எழுப்பினாய்‌. நான்‌ (உலகில்‌) பார்வையுடையவனாக இருந்தேனே என்று கேட்பான்‌. அதற்கு இவ்வாறே நம்‌ வசனங்களும்‌ உன்னிடம்‌ வந்தன. நீ அவற்றை மறந்து
விட்டாய்‌. அவ்வாறே இன்றைய தினம்‌ நீயும்‌ மறக்கப்பட்டு விட்டாய்‌ என்று இறைவன்‌
கூறுவான்‌". (20:123-126)

"அலிஃப்‌, லாம்‌, மீம்‌, ஸாத்‌. (நபியே! இவ்‌) வேதம்‌ உம்மீது அருளப்‌ பெற்றுள்ளது. இதைப்‌ பற்றி உம்முடைய நெஞ்சத்தில்‌ யாதொரு நெருக்கமும்‌ வேண்டாம்‌. இதனைக்‌ கொண்டு நீர்‌ (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும்‌, விசுவாசம்‌
கொண்டோருக்கு ஒரு நல்லுபதேசமாகவும்‌ அருளப்‌ பெற்றுள்ளது. (மனிதர்களே!) உங்களுக்கு உங்கள்‌ இறைவனால்‌ அருளப்பட்டதைப்‌ பின்பற்றுங்கள்‌. அவனையன்றி (மற்றெவரையும்‌ உங்களுக்கு) பாதுகாப்பாளர்‌ (களாக ஆக்கி அவர்‌) களை நீங்கள்‌
பின்பற்றாதீர்கள்‌. (எனினும்‌ இதனைக்‌ கொண்டு) நீங்கள்‌ நல்லுணர்ச்சி பெறுவது வெகு சொற்பமே". (7:1-3)

"(நபியே! இது) வேதநூல்‌ இதனை நாமே உம்மீது அருட்செய்கிருக்கிறோம்‌. (இதன்‌ மூலம்‌) மனிதர்களை அவர்களின்‌ இறைவனின்‌ கட்டளைப்‌ பிரகாரம்‌ இருள்களிலிருந்து வெளியேற்றி பிரகாசத்தின்பால்‌ நீர்‌ கொண்டு வருவீராக. (அப்பிரகாசமே) மிக்க
புகழுக்குரிய (அல்லாஹ்வாகிய, யாவரையும்‌) மிகைத்தோனின்‌ நேரான வழியாகும்‌. அந்த அல்லாஹ்‌ (எத்தகையோனென்றால்‌) வானங்களிலும்‌, பூமியிலும்‌ இருப்பவை யாவும்‌ அவனுக்கே சொந்தமானவையே. ஆகவே நிராகரிப்போருக்கு வந்தடையும்‌
கடினமான வேதனையின்‌ காரணமாக (அவர்களுக்கு) பெருங்கேடுதான்‌”. (14:1-2)

(நபியே!) உமக்கு நம்முடைய கட்டளைகளில்‌ உயிரானதை (குர்‌ஆன்‌) வஹி மூலம்‌ அறிவிக்கிறோம்‌. (இதற்கு முன்னர்‌) நீர்‌ வேதம்‌ இன்னதென்றும்‌, விசுவாசம்‌ இன்னதென்றும்‌ அறிந்தவராக இருக்கவில்லை. ஆயினும்‌ (இவ்வேதத்தை உமக்கு வஹி மூலம்‌ அறிவித்து) இதனைப்‌ பிரகாசமாகவும்‌ ஆக்கி நம்‌ அடியார்களில்‌ நாம்‌ விரும்பியவர்களுக்கு இதனைக்‌ கொண்டு நேரான வழியைக்‌ காண்பிக்கின்றோம்‌. (நபியே!) நிச்சயமாக நீர்‌ (இதன்‌ மூலம்‌ ஜனங்களுக்கு) நேரான வழியைக்‌ காண்பிக்கின்றீர்‌. இதுதான்‌ அல்லாஹ்வுடைய வழி. வானங்களிலும்‌, பூமியிலும்‌ இருப்பவை (யாவையும்‌) அவனுக்குச்‌ சொந்தமானவையே. சகல காரியங்களும்‌
அவனிடம்‌ வந்தே தீரும்‌ என்பதை (நபியே!) நீர்‌ அறிந்து கொள்வீராக”. (42:52-53)


 சன்மார்க்கம்‌!

மனிதர்கள்‌ எவற்றைச்‌ செய்ய வேண்டுமென்று நபியவர்கள்‌ பணித்திருக்கிறார்களோ அவற்றைப்‌ புரிவதால்‌ சன்மார்க்கத்தை அடைய முடிகிறது நபியவர்கள்‌ செய்ய வேண்டாமென்று எவற்றைக்‌ தடுத்தார்களோ அவற்றைக்‌ தவிர்ந்து நடக்க வேண்டும்‌. அவர்கள்‌ கூறிய சொற்களுக்கொப்ப செயல்பட்டு அச்சொற்களை நம்வாழ்வில்‌
மெய்பித்துக்‌ காட்ட வேண்டும்‌. அப்படியானால்‌ நிச்சயமாக நாம்‌ சன்மார்க்கத்தை அடையலாம்‌. அல்லாஹ்வின்பால்‌ சென்றடைய இதைக்‌ காட்டிலும்‌ நேர்மையான ஒருவழியே இல்லை. இறைவனை நெருங்கிய நல்மக்கள்‌ இப்பாதையைப்‌ பின்பற்றினர்‌.
இதனால்‌ அவர்கள்‌ வெற்றியடைந்து ஜெயசீலர்களாகவும்‌ திகழ்ந்தனர்‌. இப்பாதையை
கடைபிடித்தொழுகிய அல்லாஹ்வின்‌ படைகள்‌ அவன்‌ பாதையில்‌ போராடி பெரும்‌ வெற்றிகளை ஈட்டினார்கள்‌. இதற்கு நேர்முரணாக எவர்கள்‌ நடப்பார்களோ அவர்களெல்லாம்‌ வழி தவறி நெறி கெட்ட பாதையில்‌ சென்று விடுகிறார்கள்‌. இதனால்‌
இம்மை, மறுமை ஆகிய ஈருலகில்‌ வேதனைக்கும்‌ சோதனைக்கும்‌ ஆளாகி விடுகின்றனர்‌.

இறைவன்‌ நபியவர்களைப்‌ பரிசுத்தமாக்கி வைத்திருக்கிறான்‌. அனைத்துப்‌ பாவங்களை
விட்டும்‌ தூய்மைப்‌ படுத்தினான்‌. அதனால்‌ அவர்கள்‌ குற்றங்கள்‌ புரிவதை விட்டும்‌ பாதுகாக்கப்‌ படுகிறார்கள்‌. அவர்களின்‌ அடிச்சுவட்டைத்‌ தொடர்ந்தவனும்‌ சன்மார்க்கத்தை எய்துகிறான்‌. கீழ்வரும்‌ வசனத்தில்‌ இறைவன்‌ தன்‌ நபியைப்‌
பரிசுத்தமானவர்‌ என்று பாராட்டுகிறான்‌: “தோன்றி மறையும்‌ நட்சத்திரங்களின்‌ மீது ஆணையாக, உங்கள்‌ தோழர்‌ (நபியவர்கள்‌) வழி கெடவுமில்லை. தவறான வழியில்‌ செல்லவுமில்லை. தன்னிஷ்டப்படி அவர்‌ எதனையும்‌ கூற மாட்டார்‌. வஹி மூலம்‌
அறிவிக்கப்‌ பட்டதைக்‌ தான்‌ கூறுவார்‌". (53:14)

இறைவனை நாம்‌ தொழும்போது கீழ்வரும்‌ வசனத்தைச்‌ சொல்ல வேண்டுமென்று நம்மை இறைவன்‌ பணித்துள்ளான்‌: "நீ எங்களை நேரான வழியில்‌ நடத்தி வைப்பாயாக. எவர்களுக்கு நீ அருள்பாலித்தாயோ அவர்களுடைய வழியில்‌. அவ்வழி உன்‌ கோபத்திற்குள்ளானவர்களுடைய வழியுமல்ல. நெறி பிறழ்ந்தவர்களின்‌ வழியுமல்ல”. (ஸுரா பாத்திஹா) கோபத்திற்குள்ளானவர்களைக்‌ கொண்டு யூதர்களையும்‌, நெறி பிறழ்ந்தவர்களைக்‌ கொண்டு கிறிஸ்தவர்களையம்‌ கருதப்பட வேண்டுமென்று நபி
(ஸல்‌) அவர்கள்‌ கூறியதாக அத்‌ பின்‌ ஹாதிம்‌ கூறுகிறார்‌. (திர்மிதி)

எனவேதான்‌ ஸுஃப்யான்‌ பின்‌ உயைனா என்பவர்கள்‌ விளக்குகிறார்கள்‌: 'பெரியார்கள்‌ சொல்வார்களாம்‌. நம்‌ முஸ்லிம்‌ அறிவிலிகளில்‌ மோசமானவர்களிடம்‌ யூதர்களின்‌ ஒரு வகைப்‌ பாவனையைக்‌ காண முடிகிறது. நம்‌ முஸ்லிம்களிலேயே தவறான வணக்க
வழிபாடுகளில்‌ ஈடுபடுகிறவர்களிடம்‌ கிறிஸ்தவர்களின்‌ ஒரு ஒற்றுமை இருக்கிறது' என நெறி தவறிய அறிஞனுடையவும்‌, விபரம்‌ தெரியாமல்‌ ஏராள வணக்க வழிபாடுகளைப்‌ புரிகிறவர்களுடையவும்‌ (ஃபித்னாவை) குழப்படிகளைப்‌ பயந்து கொள்ளுங்கள்‌ என்று
ஸலஃபுஸ்ஸாலிஹீன்களில்‌ பலர்‌ கூறியிருக்கின்றனர்‌. ஏனெனில்‌ இவ்விரு சாராரின்‌ குறும்புத்தனமும்‌, குழப்படியும்‌ எல்லோரையும்‌ பாதிக்கின்றன அல்லவா? எவன்‌ மெய்யைப்‌ பகுத்துணர்ந்த பின்னரும்‌ அவ்வழியில்‌ நடக்கவில்லையோ அவன்‌
யூதனுக்கு ஒப்பானவன்‌. அத்தகைய யூதர்களைப்‌ பற்றித்‌ திருமறை கீழ்வருமாறு கூறுகிறது: "நீங்கள்‌ தவ்ராத்தை ஓதிக்‌ கொண்டே உங்களை மறந்து விட்டு மற்ற மனிதர்களை நன்மை செய்யும்படி ஏவுகிறீர்கள்‌? நீங்கள்‌ சிந்திக்க வேண்டாமா?" (2:44)

எவர்‌ மார்க்க விபரமின்றி அல்லாஹ்வை அளவு கடந்து தன்மனம்‌ போன போக்கிலும்‌, இணை வைத்தும்‌, மார்க்க வரம்புகளை மீறியும்‌ வணக்கங்கள்‌ புரிகிறாரோ அவர்‌ கிறிஸ்தவருக்கு ஒப்பாவார்‌. அவர்களைப்‌ பற்றி அல்லாஹ்‌ கீழ்வருமாறு
குறிப்பிடுகிறான்‌: "வேதத்தையுடையோர்களே! நீங்கள்‌ உங்கள்‌ மார்க்கத்தில்‌ உண்மையல்லாததை மிகைப்படுத்திக்‌ கூறி வரம்பு மீறாதீர்கள்‌. மேலும்‌ முன்னர்‌ வழி தவறிய மக்களின்‌ விருப்பங்களையும்‌ பின்பற்றாதீர்கள்‌. அவர்கள்‌ பலரை வழிகெடுத்து
விட்டதுடன்‌ தாங்களும்‌ நேர்‌ மார்க்கத்திலிருந்து விலகி விட்டனர்‌". (5:77)

சுருங்கக்கூறின்‌, உண்மையைப்‌ புரிந்தும்‌ அதற்கொப்ப செயல்படாதவன்‌ மனோ
இச்சையின்‌ அடிமையாகிறான்‌. விபரமின்றி ஏராளமான வழிபாடுகளில்‌ மூழ்கிறவனை வழி கெட்டவனாகவும்‌ சித்தரிக்கப்‌ படுகிறது. மனோ இச்சைக்கு அடிமையாவதினால்‌ தான்தோன்றித்தனம்‌ பிறக்கிறது. நேர்வழியை ஒதுக்கி விட்டதிலிருந்து வழிகேடுகள்‌
தலை தூக்குகின்றன. இறைவன்‌ கூறுகிறான்‌: "(நபியே!) நீர்‌ அவர்களுக்கு ஒருவனுடைய (பல்‌ஆமிப்னு பாரா) சரித்திரத்தை ஓகிக்‌ காண்பியும்‌. அவனுக்கு நாம்‌, நம்‌ அத்தாட்சிகளைக்‌ கொடுத்தோம்‌. எனினும்‌ அவன்‌ அதிலிருந்து முற்றிலும்‌ நழுவி
விட்டான்‌. ஆகவே ஷைத்தான்‌ அவனைப்பின்‌ தொடர்ந்து சென்றான்‌. அவனுடைய சூம்ச்சிக்குள்‌ சிக்கி வழி தவறியவர்களிலாகி விட்டான்‌. நாம்‌ நினைத்திருந்தால்‌ அவனை அவ்வத்தாட்சிகளின்‌ காரணமாக உயர்த்தியிருப்போம்‌. எனினும்‌ அவன்‌ இவ்வுலக இன்பத்தில்‌ மூழ்கி தன்‌ இச்சையைப்‌ பின்பற்றி விட்டான்‌. அவனுடைய உதாரணம்‌ ஒரு
நாயின்‌ உதாரணத்திற்கு ஒத்திருக்கிறது. நீர்‌ அதைத்‌ துரத்தினாலும்‌ நாக்கை தொங்க விட்டுக்‌ கொள்கிறது. விட்டு விட்டாலும்‌ நாக்கை தொங்க விட்டுக்‌ கொள்கிறது. இதுவே நம்முடைய வசனங்களைப்‌ பொய்யாக்கும்‌ மக்களுக்கு உதாரணமாகும்‌. ஆகவே
அவர்கள்‌ சிந்தித்து ஆராய்ந்து நடக்கும்‌ பொருட்டு இச்சரித்திரத்தை அடிக்கடிக்‌ கூறுவீராக". (7:175-176)

நியாயமின்றி பூமியில்‌ கர்வங்‌ கொண்டு அலைபவர்கள்‌ என்னுடைய கட்டளைகளைப்‌ புறக்கணிக்கும்படி செய்து விடுவேன்‌. அவர்கள்‌ அத்தாட்சிகள்‌ யாவையும்‌ கண்ட போதிலும்‌ அவற்றை நம்பவே மாட்டார்கள்‌. அவ்வாறு நேரான வழியை அவர்கள்‌ கண்ட போதிலும்‌ அதனைத்‌ (தம்‌ வாழ்க்கையின்‌) வழியாக எடுத்துக்‌ கொள்ள மாட்டார்கள்‌. ஆனால்‌ தவறான வழியைக்‌ கண்டால்‌ அதனையே (தம்‌ வாழ்வின்‌) பாதையாக
அமைத்துக்‌ கொள்வார்கள்‌. திட்டமாக அவர்கள்‌ நம்முடைய வசனங்களை பொய்யாக்கி, அவற்றைப்‌ புறக்கணித்துப்‌ பாராமுகமாக இருந்ததே இதற்குக்‌ காரணமாகும்‌". (7:146)

எனவே எவர்கள்‌ வழிகேட்டையும்‌, மனோ இச்சைக்கொப்ப நடப்பதையும்‌ தம்‌ வாழ்க்கையில்‌ இணைத்துக்‌ கொள்கிறாரோ அவர்கள்‌ யூத, கிறிஸ்தவர்களின்‌ வழியைப்‌ பின்பற்றி விடுகிறார்கள்‌. இறைவன்‌ நம்‌ அனைவருக்கும்‌, அனைத்து
முஸ்லிம்களுக்கும்‌, நபிமார்கள்‌, உயிர்த்தியாகிகள்‌, இறை நேசர்கள்‌, மற்றும்‌ நன்மக்கள்‌
எல்லோருக்கும்‌ காட்டிய நேரான பாதையைக்‌ காட்டியருள்வானாக!


தவஸ்ஸுல்‌ வஸீலாவில்‌ ஏற்பட்ட பிசகுதல்கள்‌

மேற்கூறிய விளக்கங்களெல்லாம்‌ சரிவர நாம்‌ புரிந்து கொண்டோம்‌. அவ்விளக்கங்களிலிருந்து 'தவஸ்ஸுல்‌ வஸீலா' என்ற வார்த்தைகளைப்‌ பற்றி ஓரளவுக்கு விளங்க முடிந்தது. இவ்விரு வார்த்தைகளும்‌ அடக்கியிருக்கும்‌ சரியான கருத்துகள்‌ யாவை என்பதுப்‌ பற்றி மேலும்‌ நாம்‌ தெரிய வேண்டியிருக்கிறது. ஏனெனில்‌ பற்பல மாறுபட்ட பிசகுதலான கருத்துகளை மக்கள்‌ அவற்றிலிருந்து எடுத்துக்‌ கொள்கின்றனர்‌. 'வஸீலா, தவஸ்ஸுல்‌' என்பதின்‌ உண்மையான கருத்துகள்‌ யாவை?
வஸீலா என்ற வார்த்தைக்குப்‌ பொருந்தாத பொய்யான கருத்துகள்‌ யாவை? என்பவற்றை நன்கு பகுத்துணர்ந்து கொள்ள வேண்டும்‌. மேலும்‌ நபிமொழியும்‌, ஸஹாபிகளின்‌ விளக்கமும்‌ வஸீலாவுக்கு என்ன தாத்பரியத்தை அளிக்கிறதோ அந்த தாத்பரியத்தை நாமும்‌ பின்பற்ற வேண்டும்‌.

நபித்தோழர்களான ஸஹாபாக்கள்‌ வஸீலாவுக்கு என்ன விளக்கத்தை அளித்தனர்‌. வஸீலாவை எப்படி அவர்கள்‌ விளங்கியிருந்தனர்‌. 

ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள்‌ வஸீலாவுக்கு அன்றிலிருந்தே எப்படி விளக்கம்‌ அளித்தனர்‌ என்பதை நாமும்‌
தெரிந்திருக்க வேண்டும்‌. வஸீலாவை வைத்து எப்படி அவர்கள்‌ செயல்பட்டு வந்தனரோ அதை நாமும்‌ முன்மாதிரியாக அமைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. அன்றி பித்‌அத்காரர்களைப்‌ போன்றோர்‌ வஸீலாவின்  கருத்தில்‌ எதை வாதாடுகின்றனரோ அதை நாம்‌ கடைப்பிடிக்கத்‌ தேவையில்லை. பலர்‌ வஸீலாவின்‌ உண்மையான தாத்பரியத்தைகத்‌ தெரியாமல்‌ இருந்து விடுகின்றனர்‌. 'வஸீலா, தவஸ்ஸுல்‌' என்பது
பிசகுதலுக்குரியதும்‌, பற்பல கூட்டுக்‌ கருத்துகள்‌ நிரம்பிய மூடலான தெளிவற்ற விளக்கங்களுள்ள வார்த்தை என்பதை மக்கள்‌ இன்னும்‌ புரியவில்லை.

இவ்வார்த்தை 'மாயிதா' என்ற அத்தியாயத்தில்‌ 35ம்‌ வசனத்தில்‌ கூறப்பட்டுள்ளது:
'சத்திய விசுவாசிகளே! நீங்கள்‌ அல்லாஹ்வுக்குப்‌ பயந்து நடந்து கொள்ளுங்கள்‌. அவனிடம்‌ நெருங்கிச்‌ செல்வதற்குரிய வழிமுறையைத்‌ தேடிக்‌ கொள்ளுங்கள்‌". (5:35)

(நபியே!) இணைவைத்து வணங்குவோரை நோக்கி நீர்‌ கூறும்‌. அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களிருப்பதாக நீங்கள்‌ எண்ணிக்‌ கொண்டிருக்கிறீர்களே, அவற்றை நீங்கள்‌ (உங்கள்‌ கஷ்டங்களை நீக்க) அழையுங்கள்‌. (அவ்வாறு அழைத்தால்‌) அவை உங்கள்‌ யாதொரு கஷ்டத்தையும்‌ நீக்கி விடவோ அல்லது அதனைத்‌ தட்டி விடவோ
சக்தியற்றவை (என்பதை அறிந்து கொள்வீர்கள்‌). இவர்கள்‌ கடவுளென அழைப்பவையும்‌, தங்களுக்காக தங்கள்‌ இறைவனிடம்‌ சமீபிப்பதைத்‌ தேடிக்‌ கொண்டிருக்கின்றன. அவர்களில்‌ இறைவனோடு மிக்க நெருங்கியவர்‌ யார்‌? என்பதையும்‌ வேண்டி
அவனுடைய அருளையும்‌ எதிர்பார்த்து, அவனுடைய வேதனைக்கும்‌ பயப்படுகின்றனர்‌. ஏனெனில்‌ நிச்சயமாக உம்‌ இறைவனின்‌ வேதனையோ மிகப்‌ பயப்படக்கூடியதே!". (17:56-57)

அல்லாஹ்‌ மனிதனை நோக்கித்‌ தன்‌ பக்கம்‌ சேர்த்து வைக்கின்ற வஸீலாவைத்‌ தேடிக்‌ கொள்ள வேண்டுமென்று கூறிய வஸீலாவும்‌, மலக்குகள்‌, நபிமார்கள்‌ எல்லோருமே இறைவனிடம்‌ வஸீலா தேடுகிறார்கள்‌ என்று இறைவன்‌ கூறிய
வஸீலாவும்‌ (எல்லாமே) நற்கருமங்கள்‌ என்பதுவேயாகும்‌. இதுவே அதன்‌ உண்மை தாத்பரியமாகும்‌. வாஜிபான, முஸ்தஹப்பான எல்லா நல்ல அனுஷ்டானங்களும்‌ அதனுள்‌ அடங்கி இருக்கின்றன. மனிதர்கள்‌ செய்ய வேண்டுமென்று பணிக்கப்பட்டுள்ள அனைத்து நல்ல அமல்களும்‌ இஸ்லாமிய ஷரீஅத்திற்குட்பட்ட வஸீலாக்களாகும்‌.

எனவே எந்தெந்த அனுஷ்டானங்கள்‌ வாஜிப்‌, ஸுன்னத்‌ என்ற சட்டத்துக்குட்பட வில்லையோ அவை வஸீலா என்ற வார்த்தையில்‌ சேராது. அப்படியானால்‌
ஹறாமானவற்றை (விலக்கப்‌ பட்டவற்றைச்‌) செய்தல்‌ வஸீலாவாகாது.

மக்ரூஹ்களைச்‌ செய்தாலும்‌ வஸீலாவாகாது. 

ஹலால்களை (ஆகுமானவற்றை)ச்‌ செய்தாலும்‌ அதை வஸீலாவாகக்‌ கருதப்பட மாட்டாது. 

வாஜிப்கள்‌, முஸ்தஹப்புகள்‌ போன்ற அல்லாஹ்வும்‌, ரஸூலும்‌ நிர்ணயித்து ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள்‌, அவ்விரு சட்டங்களுக்குட்பட்டதாக இறைவனின்‌ விதிகள்‌ அனைத்தையும்‌ காண முடியும்‌. 

இத்தகைய அமல்கள்‌ நம்பிக்கையின்‌ (ஈமானின்‌) அடிப்படையில்‌ செய்யப்பட வேண்டும்‌. நபியவர்கள்‌ கொண்டு வந்த அனைத்தையும்‌ உண்மையென்று நம்ப வேண்டும்‌. ஏனெனில்‌ அவை அல்லாஹ்விடமிருந்து கிடைக்கப்‌ பெற்றவை. நபியவர்களின்‌ சொந்த
அபிப்பிராயமல்ல. நபியவர்கள்‌ எவற்றையெல்லாம்‌ ஏவினார்களோ அவற்றை கடைப்பிடிக்தொழுகி அதனால்‌ அல்லாஹ்வை நெருங்குதல்‌ என்ற கருத்தைத்தான்‌ வஸீலாவுக்கு அறிஞர்‌ பெருமக்கள்‌ அளிக்கின்றனர்‌. சிருஷ்டிகள்‌ இத்தகைய
வஸீலாவைத்‌ தான்‌ தேடிப்‌ பெற வேண்டும்‌. இந்தக்‌ கருத்துக்குரிய வஸீலாவைத்‌ தான்‌ இறைவன்‌ நம்மீது பணித்திருக்கிறான்‌. வேறு எந்தக்‌ கருத்தையும்‌ வஸீலாவுக்கு‌ கொடுக்கக்‌ கூடாது. ஏனெனில்‌ அவை பொருந்தாக்‌ கருத்துக்களாகும்‌.

நபியின்‌ ஹதீஸில்‌ வஸீலாவுக்கு என்ன அர்த்தம்‌ கொடுக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்வோம்‌. நபியவர்களின்‌ பொன்மொழிகளில்‌ பற்பல இடங்களில்‌ வஸீலா என்ற வார்த்தையைக்‌ காண முடிகிறது. ஒருமுறை நபியவர்கள்‌ கூறினார்கள்‌: 'எனக்காக
நீங்கள்‌ அல்லாஹ்விடம்‌ வஸீலாவைக்‌ கேளுங்கள்‌. இந்த வஸீலா என்பது சுவனத்தில்‌ ஒரு பகுதியாகும்‌. ஏதோ ஒரு மனிதருக்குத்தான்‌ அது கிடைக்கும்‌. அம்மனிதர்‌ நானாக இருக்க ஆசைப்படுகிறேன்‌. எனவே எவர்‌ இவ்வஸீலாவை எனக்குக்‌ கிடைக்கும்படி
இறைவனிடம்‌ பிரார்த்திக்கிறாரோ அவர்‌ மறுமையில்‌ எனது ஷபாஅத்துக்கு உரியவராகிறார்‌'.

இன்னொரு ஹதீஸில்‌ நபியவர்கள்‌ கூறினார்கள்‌: 'எவர்‌ பாங்கு சொல்லி முடிந்ததும்‌ (என்றென்றும்‌) நிலைநாட்டப்படும்‌ தொழுகைகளுக்கும்‌, நிரப்பமான
பிரார்த்தனைகளுக்கும்‌ உரிய இரட்சகனே! முஹம்மத்‌ நபியவர்களுக்கு வஸீலாவையும்‌, ஃபளீலாவையும்‌ கொடுத்து அருல்‌ புரிவாயாக! நீ அவர்களுக்கு வாக்களித்த புகழுக்குரிய இடத்தில்‌ மறுமையில்‌ அவர்களை எழுந்தருளச்‌ செய்வாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதி மாறமாதவன்‌' என ஓதினால்‌ அவருக்கு என்‌ சிபாரிசு கிடைத்து விடும்‌.

இங்கே ஹதீஸில்‌ குறிப்பிடப்பட்டுள்ள வஸீலா என்பது தனியாக நபியவர்களுக்கு உரியவொரு பதவியாகும்‌. அல்லாஹ்விடம்‌ நாம்‌ பிரார்த்தித்து இப்பதவியை
நபிகளாருக்குக்‌ கிடைக்கச்‌ செய்ய வேண்டுமென்று ஏவினார்கள்‌. ஏதோ ஒருவருக்கு மட்டுமே இப்பதவியுண்டு. நபி (ஸல்‌) அவர்கள்‌ தமக்கே இப்பதவி கிடைக்க ஆசைப்பட்டார்கள்‌. அதனால்‌ நாம்‌ அல்லாஹ்விடம்‌ வேண்டி இப்பதவியை
அவர்களுக்காக வாங்கிக்‌ கொடுக்கும்படி ஏவினார்கள்‌. இதன்‌ கூலியாக நபிகளின்‌ ஷபாஅத்தையும்‌ நம்மால்‌ பெற முடிகிறது. நாம்‌ நபிகளுக்கு துஆச்‌ செய்வதினால்‌ நபிகளின்‌ துஆவை நாம்‌ பெறுகிறோம்‌. 

ஷபாஅத்‌ என்பது துஆவின்‌ வகையைச்‌ சார்ந்தது அல்லவா! நபியவர்களுக்காக நாம்‌ எதைப்‌ புரிந்தாலும்‌ அதற்கு நிகராக கூலி நமக்குக்‌ கிடைத்து விடுகிறது.

இதற்கு இன்னுமொரு உதாரணத்தைக்‌ கூற முடிகிறது. நாயகத்தின்‌ மீது ஒருமுறை ஸலவாத்துக்‌ கூறினால்‌ அப்படிக்‌ கூறியவனுக்கு இறைவன்‌ பத்து முறை ஸலவாத்துக்‌ கூறுகிறான்‌. இதிலிருந்து நாம்‌ எதைத்‌ தெரிந்து கொள்கிறோம்‌. நபி (ஸல்‌)
அவர்களுக்காக நாம்‌ செய்யும்‌ அனைத்து நற்செயல்களும்‌ சமமான பலாபலன்களையும்‌
சில வேளைகளில்‌ அதிகமான பலாபலன்களையும்‌ கூலியாக நபிகளிடமிருந்து நம்மால்‌ பெற முடியும்‌ என்பதை விளங்குகிறோம்‌.


'நபியைக்‌ கொண்டு வஸீலா தேடுவது' ஸஹாபாக்களின்‌ கருத்து'

நபித்தோழர்களான ஸஹாபிகளின்‌ சொற்களில்‌ காணப்படுகின்ற, மேலும்‌ அவர்களின்‌ பேச்சுகளில்‌ பரிமாறப்பட்ட வஸீலா என்ற வார்த்தையின்‌ தாத்பரியத்திற்கு வருவோம்‌.

ஸஹாபிகள்‌ பற்பல சம்பவங்களைக்‌ கூறும்போது நாயகத்தைக்‌ கொண்டு அல்லாஹ்வை நெருங்கியதாகவும்‌, அவர்களைக்‌ கொண்டு அவனிடம்‌ வஸீலா தேடியதாகவும்‌ (உதவி கோரியதாகவும்‌) அல்லாஹ்வின்பால்‌ முன்னோக்கியதாகவும்‌
கூறுவார்கள்‌. பற்பல இடங்களில்‌ இப்படிக்‌ காணப்படுகின்றன.

இவர்களின்‌ பிரயோகங்களில்‌ வஸீலா என்ற வார்த்தையின்‌ கருத்தை நாம்‌ அவசியம்‌ விளங்கிக்‌ கொள்ள வேண்டும்‌. நபியைக்‌ கொண்டு அல்லாஹ்வை
நெருங்கினார்களென்று ஒரு ஸஹாபி கூறினால்‌ அதன்‌ கருத்தில்‌ நபியின்‌ பிரார்த்தனையாலும்‌ அவர்களின்‌ ஷபாஅத்தாலும்‌ அல்லாஹ்வை அவர்கள்‌
நெருங்கினார்கள்‌ என்று விளங்கிக்‌ கொள்ள வேண்டும்‌. நபியவர்களைக்‌ கொண்டு அல்லாஹ்விடம்‌ உதவித்‌ தேடுதல்‌, அவர்களைக்‌ கொண்டு அவன்பால்‌ முன்னோக்குதல்‌ என்பவற்றின்‌ அனைத்துத்‌ தாத்பரியமும்‌ இப்படித்தான்‌. ஸஹாபாக்களைப்‌
பொறுத்தவரையில்‌ நபியின்‌ பிரார்த்தனையும்‌, அவர்களின்‌ ஷபாஅத்தையுமே கருதுவர்‌.

இனி பிற்கால மக்களிடையே வஸீலா என்ற வார்த்தைக்கு அளிக்கப்படும்‌ கருத்துக்கு
வருவோம்‌. இவர்களிடம்‌ நபியைக்‌ கொண்டு வஸீலா தேடுவதென்றால்‌ நபியைப்‌ பொருட்டாக வைத்துப்‌ பிரார்த்தனை செய்தல்‌, நபியின்‌ உரிமை மீது ஆணையிட்டுக்‌ கேட்டல்‌ என்ற கருத்தைக்‌ காண முடிகிறது. நபியல்லாத மற்ற வலிமார்கள்‌, ஸாலிஹீன்கள்‌, நல்ல மக்கள்‌ என்று யார்‌ யாரைப்‌ பற்றி நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்கள்‌ அனைவரையும்‌ முன்னிறுத்தி, அவர்களைக்‌ கொண்டு
ஆணையிட்டு, அவர்களின்‌ பொருட்டால்‌ பிரார்த்தித்தல்‌ இதுவே பிற்கால முஸ்லிம்கள்‌
பலர்‌ மத்தியில்‌ வஸீலாவுக்குக்‌ கொடுக்கப்படும்‌ கருத்தாகும்‌. (இது நச்சுக்‌ கருத்து என்பதை இவர்கள்‌ விளங்கவில்லை) இப்படி தவஸ்ஸூல்‌, வஸீலா என்ற சொற்களைத்‌ திருமறை, நபிமொழி, ஸஹாபிகளின்‌ சொற்கள்‌, பின்னர்‌ தோன்றிய தற்கால முஸ்லிம்களின்‌ பிரயோகங்கள்‌ இவற்றிலெல்லாம்‌ காண முடிகிறது.

ஆனால்‌ இப்பின்னோர்களான முஸ்லிம்களின்‌ இக்கருத்துகளைத்‌ தவிர ஏனைய பிற கருத்துக்கள்‌ சரியானது என்பதில்‌ சந்தேகமில்லை. அனைத்து அறிஞர்களும்‌ இதனை ஏகோபித்துக்‌ கூறியிருக்கிறார்கள்‌. ஏனெனில்‌ திருமறையிலும்‌, நபிமொழியிலும்‌, ஸஹாபாக்களின்‌ பிரயோகங்களிலும்‌ வந்துள்ள கருத்துக்கள்‌ அனைத்தும்‌ வஸீலா, தவஸ்ஸூல்‌ என்பவற்றிற்கு இஸ்லாமிய ஷரீஅத்து அளிக்கும்‌ கருத்துக்களாகும்‌.
எனவே அதில்‌ எந்த தவறுதல்களும்‌ ஏற்படுவதற்கு வழியில்லைதானே. 

வாஜிபான, முஸ்தஹப்பான அனைத்து நற்கிரியைகளும்‌ இஸ்லாமிய ஷரீஅத்தின்‌ வஸீலாக்கள்‌ எனலாம்‌. நபி (ஸல்‌) அவர்களை விசுவாசித்து வழிபட்டு நடப்பதினால்‌ இறைவனிடம்‌ (வஸீலாவை) சமீபிப்பதைத்‌ தேடுதல்‌ என்பதும்‌ இங்கே பொருந்துகின்றதல்லவா? இதுதான்‌ உண்மையான வஸீலா.

பெருமானார்‌ (ஸல்‌) அவர்களைக்‌ கொண்டு ஸஹாபாக்கள்‌ வஸீலா தேடினார்களென்றால்‌ அவர்களின்‌ துஆக்களையும்‌, ஷபாஅத்தையும்‌ பெற்று
இறைவனிடம்‌ சமீபிப்பதை (வஸீலாவை) தேடினார்கள்‌ என்று விளங்குதல்‌ வேண்டும்‌. இத்தகைய கருத்துள்ள வஸீலாவைத்  தேடிக்கொள்வதற்கு எல்லோரும்‌ ஆயத்தமாக வேண்டும்‌. ஏனெனில்‌ அறிஞர்‌ பெருமக்கள்‌ அனைவரும்‌ இம்மாதிரியான வஸீலாவைத்‌ தேட அனுமதி வழங்கியுள்ளனர்‌. 

உமர்‌ (ரலி) அவர்களின்‌ பிரார்த்தனையும்‌ இதைத்தான்‌
காட்டுகிறது. தம்‌ பிரார்த்தனையில்‌ அவர்கள்‌ கூறினார்கள்‌: 'இறைவா! நாங்கள்‌ மழையின்றி வரட்சியால்‌ பாதிக்கப்பட்ட வேளையில்‌ எங்கள்‌ நபி (ஸல்‌) அவர்களைக்‌ கொண்டு நாங்கள்‌ உன்னை சமீபிப்பதற்கு முனைந்தோம்‌. அதனால்‌ நீ எங்களுக்கு மழை பெய்யச்‌ செய்து அருள்‌ பாலித்தாய்‌. அதே நிலைமை இன்று எங்களைப்‌ பாதித்துள்ளது.
ஆகவே நபிகளின்‌ பெரிய தந்தையார்‌ அவர்களை வைத்து நாங்கள்‌ உன்னை சமீபிக்கிறோம்‌. (வஸீலா தேடுகிறோம்‌) ஆகவே எங்களுக்கு மழையைப்‌ பெய்யச்‌ செய்தருள்வாயாக!

இங்கே நாம்‌ ஒன்றைக்‌ கவனிக்க வேண்டும்‌. நபி (ஸல்‌) அவர்களைக்‌ கொண்டு அல்லது நபி (ஸல்‌) அவர்களின்‌ சிறிய தந்தையைக்‌ கொண்டு தான்‌ அவர்களின்‌ துஆ மபாஅத்‌ இவற்றைக்‌ கொண்டு அல்லது அவற்றின்‌ உதவியால்‌ நற்கருமங்கள்‌ செய்து
நாங்கள்‌ உன்னை அணுகினோம்‌ என்பதாகும்‌. ஆகவே நபி (ஸல்‌) அவர்களின்‌ காலத்தில்‌ ஏற்பட்ட அதே நிலைமை இன்று எங்களைப்‌ பாதித்துள்ளது. எனவே நபியின்‌ சிறிய தந்தையின்‌ துஆ ஷபாஅத்தின்‌ பொருட்டால்‌ உன்னை நாங்கள்‌ சமீபிக்கிறோம்‌,
வஸீலா தேடுகிறோம்‌ என்பதாக எடுத்துக்‌ கொள்ள வேண்டும்‌.

அல்லாஹ்‌ இதைத்தான்‌ கூறினான்‌: "அவனிடம்‌ நெருங்கிச்‌ செல்லக்கூடிய வணக்க
வழிமுறைகளைத்‌ தேடிக்‌ கொள்ளுங்கள்‌". (5:35)

நபிக்கு வழிப்படுதல்‌ அல்லாஹ்வுக்கு வழிப்படுதல்‌ போலாகும்‌. ஆகவே நபிக்கு வழிப்பட்டு நடப்பதினாலும்‌, அல்லாஹ்வின்‌ சமீபத்தைப்‌ பெற முடிகிறது. இதை அல்லாஹ்‌ விளக்கிக்‌ காட்டுகிறான்‌: "எவன்‌ அல்லாஹ்வின்‌ தூதருக்கு வழிப்பட்டு
நடக்கிறானோ, அவன்‌ நிச்சயமாக அல்லாஹ்வுக்கே வழிப்பட்டான்‌”. (4:80)

நற்கிரியைகள்‌ புரிந்து இறைவனுக்கு வழிப்பட்டு அவன்‌ தூதர்களைப்‌ பின்பற்றி அதன்‌ மூலம்‌ அல்லாஹ்வை நெருங்கிச்‌ செல்லுதல்‌ என்ற கருத்துக்குரிய வஸீலாவைத்‌ தேடுவது ஒவ்வொரு மனிதனுக்கும்‌ கடமையாகும்‌. இத்தகைய கருத்துக்குரிய வஸீலா இஸ்லாத்தின்‌ அடித்தளம்‌ போன்றதல்லவா? முஸ்லிம்களில்‌ யாரால்தான்‌ இத்தகைய வஸீலாவை மறுக்க முடியும்‌? இதைப்‌ போலவே நபி (ஸல்‌) அவர்களின்‌ பிரார்த்தனையையும்‌, ஷபாஅத்தையும்‌ பெற்று இறைவனை சமீபிப்பதும்‌
இவையெல்லாம்‌ அனுமதிக்கப்பட்ட வஸீலாவாகும்‌. எனவே தான்‌ உமர்‌ (ரலி) அவர்கள்‌ இதைச்‌ செய்துக்‌ காட்டினார்கள்‌. அவர்கள்‌ நபிகளின்‌ துஆவின்‌ பொருட்டால்‌ அல்லாஹ்விடம்‌ வஸீலா தேடினார்கள்‌. அன்றி நபிகளைப்‌ பொருட்டாக வைத்து வஸீலா தேடவில்லை. இது முக்கியமாக முஸ்லிம்கள்‌ சிந்திக்க வேண்டிய விஷயமல்லவா? நபிகளைப்‌ பொருட்டாகக்‌ கொண்டு வஸீலா தேடியிருந்தால்‌ அவர்கள்‌
மரணமடைந்த பிறகும்‌ அவர்களை வைத்தே வஸீலா தேடியிருக்க வேண்டும்‌.

நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ அப்பாஸ்‌ (ரலி) அவர்களை விட மேலானவர்கள்‌ அல்லவா? நபியவர்கள்‌ உயிருடன்‌ வாழ்ந்திருக்கையிலும்‌ நபிகள்‌ மரணமடைந்தாலும்‌ அவர்களைப்‌ பொறுத்த வரையில்‌ இருவாழ்க்கையும்‌ சமம்தானே. கப்றிலும்‌ நபிகள்‌ உயிருடன்தான்‌
இருப்பார்கள்‌. ஆனால்‌ உமர்‌ (ரலி) அவர்கள்‌ அப்படிச்‌ செய்யாமல்‌ நபியவர்கள்‌ மரணமடைந்த பிறகு அவர்களின்‌ பெரிய தகப்பனார்‌ அப்பாஸ்‌ (ரலி) அவர்களைக்‌ கொண்டு இறைவனிடம்‌ வஸீலா தேடியதனால்‌ நபிகளின்‌ உடலைக்‌ கொண்டும்‌,
அதைப்‌ பொருட்டாக வைத்தும்‌ அவர்கள்‌ வஸீலா தேடவில்லை என்பது தெளிவாகிறது.

அப்படி உடலைப்‌ பொருட்டாக வைத்து வஸீலா தேடக்கூடாது என்பதையும்‌ தெரிந்துக்‌ கொள்ளலாம்‌. எனவே நபியவர்கள்‌ வாழ்ந்திருக்கையில்‌ செய்யப்பட்ட சில அமல்கள்‌ நபியவர்கள்‌ மரணமடைந்த பிறகு முடியாமலாகிவிடும்‌. அப்படியானால்‌ நபியவர்கள்‌
மரணமடைந்த பிறகும்‌ அவர்களின்‌ துஆவைக்‌ கொண்டு வஸீலா தேட முடியாது.

ஏனெனில்‌ அது அவர்கள்‌ உயிருடன்‌ வாழ்ந்திருந்த காலத்தோடு முடிந்து விட்டதல்லவா? இதிலிருந்து நாம்‌ எதை விளங்குகிறோமென்றால்‌ உயிருடன்‌
வாழ்ந்திருக்கும்‌ மனிதனிடம்‌ வஸீலா தேட முடியும்‌. இறந்துபோன மனிதன்‌ எத்தகு பெரியவனாக இருப்பினும்‌ அவரின்‌ துஆவையோ சிபாரிசையோ எதிர்பார்த்து வஸீலா தேடக்‌ கூடாது. அப்படித்‌ தேடுதல்‌ பெருங்‌ குற்றமாகத்‌ திரும்பி விடும்‌ என்பதைத்தான்‌.

இறைவனுக்கு வழிப்படுவதின்‌ மூலமாக அவனை நெருங்குதல்‌ என்ற கருத்துக்குரிய வஸீலா மனிதன்‌ தேட வேண்டும்‌. அதற்கு காலமோ இடமோ குறிப்பில்லை. ஆனால்‌ நபிகளின்‌ துஆவைக்‌ கொண்டும்‌, சிபாரிசைக்‌ கொண்டும்‌ இறைவனை
நெருங்குதல்‌ என்ற கருத்துக்குரிய வஸீலாக்கு நபியவர்கள்‌ ஹயாத்துடனிருப்பதை
நிபந்தனையாக்கப்படுகிறது. 

தற்பொழுது நபி (ஸல்‌) அவர்கள்‌ மரணமடைந்து
விட்டதினால்‌ அத்தகைய வஸீலாவும்‌ வேண்டப்பட மாட்டாது. நபிகளின்‌ ஷபாஅத்தைக்‌ கொண்டு வஸீலா தேடுவதற்கும்‌ இனி மறுமையில்தான்‌ முடியும்‌. 

நபிகளைப்‌ பொருட்டாக வைத்துப்‌ பிரார்த்திப்பதும்‌, அவர்களைக்‌ கொண்டு ஆணையிட்டு வேண்டுவதும்‌ இவைகள்‌ அனைத்துமே பெரிய தவறான கருமங்களாகவே கருதப்பட வேண்டும்‌. ஏனெனில்‌ நபித்தோழர்களில்‌ ஒருவர்கூட இவற்றைச்‌
செய்யவில்லையல்லவா? எத்தனையோ துன்பங்கள்‌, துயரங்கள்‌ நபித்தோழர்களுக்கு ஏற்பட்டன. இருப்பினும்‌ படைப்பினங்களை அழைத்தோ, அவற்றின்‌ பொருட்டாலோ ஒருபோதிலும்‌ அவர்கள்‌ பிரார்த்திக்கவில்லை. நபிகளின்‌ வாழ்நாளிலும்‌ இப்படிச்‌ செய்யவில்லை. அவர்கள்‌ வபாத்தான பிறகும்‌ செய்யவில்லை. நபிகளின்‌ கப்றிலும்‌, மற்றெந்த ஸாலிஹீன்கள்‌ சென்று அவர்கள்‌ இப்படிச்‌ செய்யவில்லை. ஸஹாபாக்களைப்‌ பற்றி அறிவிக்கப்படும்‌ பலமாதிரியான பிரார்த்தனைகளில்‌ ஒன்றில்‌ கூட இத்தகைய பிரார்த்தனைகளைக்‌ காண முடியாது. நபிகளும்‌, ஸஹாபாக்களும்‌ கூறியதாக இது விஷயத்தில்‌ அறிவிக்கப்பட்ட சில ஹதீஸ்களை நன்றாக ஆராய்ந்து பார்த்தால்‌ அவை பலவீனமான ஹதீஸ்களாக இருப்பதைக்‌ காணலாம்‌. இன்ஷா
அல்லாஹ்‌ அதைப்‌ பற்றி பின்னர்‌ நாம்‌ விளக்கமாகக்‌ குறிப்பிடுகிறோம்‌.

இனி மத்ஹபுடைய இமாம்களின்‌ அபிப்பிராயத்துக்கு வருவோம்‌. இவர்களின்‌ சொற்களைக்‌ கவனித்தால்‌ கூட ஸஹாபாக்களின்‌ போக்கை இவர்கள்‌ மீறவில்லை
என்பதையும்‌ காணலாம்‌. அபூஹனிபா (ரஹ்‌) அவர்களும்‌ அவர்களின்‌ தோழர்களான இதர இமாம்கள்‌ அனைவரும்‌ இறந்து போன மனிதரைக்‌ கொண்டும்‌, அவரைப்‌ பொருட்டாக வைத்தும்‌, அவரைக்‌ கொண்டு ஆணையிட்டும்‌ வஸீலா தேடக்‌ கூடாது என்று கூறியிருக்கின்றனர்‌. 'அபுல்‌ ஹுஸைனுல்‌ குத்ரி' என்ற அறிஞர்‌ 'ஷரஹுல்‌ கர்கி'
என்ற பெரும்‌ ஃபிக்ஹு நூலில்‌ கராஹத்‌ என்ற தலைப்பில்‌ பர்பீ என்ற தம்‌ மேற்கூறிய
சட்டத்தை இமாம்‌ அபூஹனீபாவின்‌ தோழர்களான இமாம்களில்‌ பலர்‌ குறிப்பிட்டுள்ளதாக அறிவிக்கிறார்‌.

இமாம்‌ அபூ யூஸுப்‌ (ரஹ்‌) அவர்கள்‌ அறிவிப்பதாக பிஷருப்னுல்‌ வலீத்‌ குறிப்பிடுகிறார்‌; அல்லாஹ்விடம்‌ அவனைக்‌ கொண்டல்லாமல்‌ மற்ற யாரைப்‌
பொருட்டாக வைத்தும்‌ பிரார்த்திக்க கூடாது. 'இறைவா! உனது சிம்மாசனத்தின்‌
மகத்துவத்தால்‌ உன்‌ சிருஷ்டிகளின்‌ பொருட்டால்‌ கேட்கிறேன்‌ என்று பிரார்த்திப்பதை நான்‌ பெரிதும்‌ வெறுக்கிறேன்‌' என்று இமாம்‌ அபூ ஹனீபா (ரஹ்‌) அவர்கள்‌ கூறினார்களாம்‌. இமாம்‌ அபூ ஹனீபா அவர்கள்‌ கூறியதற்கொப்ப அபிப்பிராயப்‌
பட்டிருக்கிறார்கள்‌. 'இன்னாரின்‌ பொருட்டால்‌ அல்லது அன்பியாக்கள்‌, ரஸுல்மார்களின்‌
பொருட்டால்‌ அல்லது கஃபாவின்‌ பொருட்டால்‌ அல்லது மஷ்‌அருல்‌ ஹராமின்‌ பொருட்டால்‌ உன்னிடம்‌ பிரார்த்திக்கிறேன்‌' என்று கூறி துஆச்‌ செய்தலை முழுக்க முழுக்க இமாம்‌ அபூ யூஸுப்பும்‌ வெறுத்திருக்கிறார்கள்‌.

அறிஞர்‌ குத்ரி அவர்கள்‌ குறிப்பிடுகிறார்கள்‌: அல்லாஹ்விடத்தில்‌ படைப்பினங்களுக்கு
என்ன மதிப்பிருக்கிறுது? என்வே சிருஷ்டிகளின்‌ பொருட்டைத்‌ தொண்டு பிரார்த்திப்பது தவறாகும்‌. இதுவே அறிஞர்களின்‌ ஏகோபித்த முடிவுமாகும்‌.


படைப்பினங்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்யலாமா?

இதுபோன்று தான்‌ சிருஷ்டிகளைக்‌ கொண்டு ஆணையிட்டுத்‌ தம்‌ தேவையை வேண்டுவது. இதுவும்‌ விலக்கப்பட்ட செய்கையாகும்‌. படைப்பினங்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்வதை எல்லா மத்ஹபுடைய இமாம்களும்‌ வெறுத்திருக்கிறார்கள்‌.

சிருஷ்டிகளைக்‌ கொண்டு சக்தியம்‌ செய்து இன்னொரு சிருஷ்டியிடம்‌ கேட்பது கூடாதெனின்‌, அதே சிருஷ்டியைக்‌ கொண்டு படைத்தவனிடம்‌ ஆணையிட்டுக்‌ கேட்க முடியுமா? அது எப்படி அனுமதிக்கப்படும்‌? அல்லாஹ்வுக்கு வேண்டுமானால்‌ தம்‌ சிருஷ்டிகளைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்யலாம்‌. தன்‌ சிருஷ்டிகளைக்‌ கொண்டு ஆணையிட்டுச்‌ சொல்வதில்‌ தன்‌ வல்லமையை அல்லாஹ்‌ வெளிப்படுத்துகிறான்‌. தன்‌ ஒருமைப்பாட்டை நிரூபித்துக்‌ காட்டுகின்ற பல திருஷ்டாந்தங்களை ஏகத்துவத்தின்‌ தீர்க்கமான பல சைக்கினைகளை இறைவன்‌ இந்த சத்தியத்தால்‌ வெளிப்படுத்துகிறான்‌.
இறைவன்‌ இரவு பகலைக்‌ கொண்டு ஆணையிடுகிறான்‌. 

'யாவையும்‌ மறைத்துக்‌ கொள்ளும்‌ இருண்ட இரவின்‌ மீது ஆணையாக! பிரகாசமுள்ள பகலின்‌ மீது சத்தியமாக' என்று கூறினான்‌. 'சூரியன்‌ மீதும்‌, அதன்‌ பிரகாசத்தின்‌ மீதும்‌, அது அஸ்தமித்ததற்குப்பின்‌ அதைத்‌ தொடர்ந்து உதயமாகும்‌ சந்திரன்‌ மீது சத்தியமாக, பாவிகளின்‌ ஆத்மாவைப்‌ பலமாக பறிப்பவர்கள்‌ மீது (சத்தியமாக). இப்படியே திருமறையில்‌ பற்பல இடங்களில்‌ இறைவன்‌ தன்‌ சிருஷ்டிகளைக்‌ கொண்டு ஆணையிட்டுக்‌ தன்‌ படைப்பினங்களின்‌ மதிப்பை விளக்குகின்றான்‌. இது இறைவனைப்‌ பொருத்த வரையில்‌ பொருந்துகின்ற ஒரு சத்தியமாகும்‌.

ஆனால்‌ மனிதர்கள்‌ தம்மைப்‌ போன்ற இன்னொரு சிருஷ்டியைக்‌ கொண்டு ஆணையிட்டுப்‌ பிரார்த்தித்தால்‌ அங்கே தான்‌ ஷிர்க்‌ தலை தூக்குகிறது. ஆகவே நபியவர்கள்‌ கூறினார்கள்‌: இறைவனல்லாத இதர சிருஹ்டிகளைக்‌ கொண்டு எவர்‌
சத்தியம்‌ செய்கிறாரோ அவர்‌ தம்‌ இறைவனுக்கு இணை கற்பித்து விட்டார்‌' (திர்மிதி).

ஹாகிமில்‌ மற்றொரு அறிவிப்பில்‌ அப்படிச்‌ செய்பவர்‌ காபிராகி விட்டார்‌' என்று காணப்படுகிறது. எவராகிலும்‌ சத்தியம்‌ செய்ய விரும்பினால்‌ அவர்‌ அல்லாஹ்வைக்‌ கொண்டு மட்டும்‌ சத்தியம்‌ செய்ய வேண்டும்‌. இல்லையென்றால்‌ வாயை மூடிக்‌
கொண்டு மெளனமாக இருக்க வேண்டும்‌ என்று இன்னுமொரு ஹதீஸில்‌ நபியவர்கள்‌
கூறினார்கள்‌. (புகாரி, முஸ்லிம்)

உங்களின்‌ பெற்றோர்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்யாதீர்கள்‌. ஏனெனில்‌ மாதா பிதாக்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்வதை அல்லாஹ்‌ தடுத்திருக்கிறான்‌' என்று மற்றோர்‌ இடத்தில்‌ வருகிறது. லாத்‌, உஸ்ஸா போன்ற விக்கிரகங்களைக்‌ கொண்டு எவர்‌ சத்தியம்‌ செய்தாலும்‌ அவன்‌ உடனே கலிமாச்‌ சொல்லி இஸ்லாத்தில்‌ நுழைய வேண்டுமென்று நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌.
(புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்வின்‌ அர்ஷ்‌, புனித கஃபா, பைத்துல்‌ முகத்தஸ்‌ பள்ளி, மஸ்ஜிதுன்‌ நபவி (மதீனாப்‌ பள்ளிவாசல்‌), மலக்குகள்‌, ஸாலிஹீன்கள்‌, அரசர்கள்‌, முஜாஹிதுகளின்‌ ஆயுதங்கள்‌, அன்பியாக்கள்‌, இவர்களின்‌ கப்றுகள்‌, மற்றும்‌ மதிப்பிற்குரிய பொருட்கள்‌ இவற்றையெல்லாம்‌ கொண்டு சத்தியம்‌ செய்தால்‌ அந்த சத்தியம்‌ நிறைவேறாது என்று
அறிஞர்கள்‌ அனைவரும்‌ அபிப்பிராயப்‌ பட்டிருக்கிறார்கள்‌. இத்தகைய சத்தியத்துக்கு
மாறு செய்கிறவன்‌ குற்றப்பரிகாரமும்‌ (கப்பாரா) கொடுக்க வேண்டியதில்லை.

சிருஷ்டிகளைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்வதையும்‌, சப்தமிடுவதையும்‌ பெரும்பாலான அறிஞர்கள்‌ விலக்கிக்‌ (ஹராமாக) கருகியிருக்கிறார்கள்‌. இமாம்‌ அபூ ஹனிபா அவர்கள்‌ இப்படி அபிப்பிராயப்‌படுகிறார்கள்‌. இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌, இமாம்‌ ஷாபிஈ போன்றவர்களின்‌ ஓர்‌ அபிப்பிராயமும்‌ இதை ஹராம்‌ என விலக்குகிறது.

ஸஹாபாக்களின்‌ ஏகோபித்த முடிவும்‌ அப்படியே. ஹராமோடு நெருங்கிய மக்ரூஹ்‌ என்றும்‌ சிலர்‌ கூறுகின்றனர்‌. ஆனால்‌ இவர்களின்‌ இக்கூற்று பலவீனமானது. ஹராம்‌ என்பதுவே பலமான அபிப்பிராயமாகும்‌. இப்னு மஸ்வூத்‌, இப்னு உமர்‌, இப்னு அப்பாஸ்‌ (ரலி) போன்ற ஸஹாபிகள்‌ ஒவ்வொருவருமே அல்லாஹ்‌ அல்லாத இதர
சிருஸ்டிகளைக்‌ கொண்டு மெய்யாக சத்தியம்‌ செய்வதைக்‌ காட்டிலும்‌, அல்லாஹ்வைக்‌ கொண்டு பொய்‌ சத்தியம்‌ செய்வதை நான்‌ விரும்புகிறேன்‌' என கூறியிருக்கிறார்கள்‌. ஏன்‌ தெரியுமா? சிருஷ்டிகளைக்‌ கொண்டு ஆணையிடுதல்‌ இறைவனுக்கு இணை
வைப்பதற்கு சமமான குற்றம்‌. ஆனால்‌ அல்லாஹ்வைக்‌ கொண்டு பொய்‌ சத்தியம்‌ செய்தல்‌ இணை வைப்பது போன்ற குற்றமல்ல. பொய்‌ சொன்னதின்‌ குற்றத்திற்கு
ஆளாகிறான்‌. இணை வைத்தலை (ஷிர்க்கை) விட பொய்‌ சிறிய குற்றம்‌ தானே. எனவேதான்‌ இப்னு அப்பாஸும்‌, இதர ஸஹாபிகளும்‌ இப்படிக்‌ கூறினார்கள்‌.

நபிமார்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்வதால்‌, குறிப்பாக நபி (ஸல்‌) அவர்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்து விட்டு அதற்கு மாறு காட்டினால்‌ தண்டனையுண்டா? இல்லையா? இத்தகைய சத்தியம்‌ நிறைவேறுமா? நிறைவேறாதா? என்பதில்‌ இமாம்கள்‌
அபிப்பிராயப்‌ பேதம்‌ தெரிவித்துள்ளனர்‌. 

மத்ஹபுடைய இமாம்களான அபூ ஹனீபா, ஷாபிஈ, மாலிக்‌ (ரஹ்‌) ஆகியோருடையவும்‌, இமாம்‌ அஹ்மதின்‌ ஒரு அபிப்பிராயமும்‌ இத்தகைய சத்தியம்‌ நிறைவேறாது என்று தீர்ப்பு வழங்குகிறது. பெரும்பாலான அறிஞர்களின்‌ தீர்ப்பும்‌ இதுவே. ஆனால்‌ இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பலின்‌ இன்னுமோர்‌
அபிப்பிராயத்தில்‌ குறிப்பாக நபி (ஸல்‌) அவர்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்தால்‌ அதற்கொப்ப செயல்பட வேண்டுமென்று கூறியிருக்கிறார்களாம்‌.

இமாம்‌ அஹ்மதின்‌ தோழர்களான காழி இயாழ்‌ போன்ற வேறு சில அறிஞர்கள்‌ இவ்வபிப்பிராயத்தை ஆமோதிக்கின்றனர்‌. ஆனால்‌ இப்னு முன்திர்‌
இவ்வபிப்பிராயங்களை நபியவர்களின்‌ விஷயத்தில்‌ மட்டும்‌ சொல்கிறார்கள்‌. இப்னு அகீல்‌ எல்லா நபிமார்கள்‌ விஷயத்திலும்‌ இதைக்‌ குறிப்பிடுகிறார்‌. 

இந்த ஆணைக்கு மாறு செய்தால்‌ கப்பாரா (குற்றப்பரிகாரம்‌) கொடுப்பதை கடமையாக்குவது பலமற்றதும்‌ இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமான சொல்லாகும்‌. இவர்களின்‌ இக்கருத்து இஸ்லாமிய அடைப்படைக்‌ கொள்கைகளுக்கு மாறுபட்டிருப்பதனால்‌ இதைக்‌ தவறான
அபிப்பிராயமென்றே தீர்ப்புக்‌ கூற வேண்டியிருக்கிறது. அல்லாஹ்விடமே எதையும்‌
கேட்க வேண்டும்‌. அவனுடைய திருநாமங்களின்‌ பொருட்டாலும்‌, அவனுடைய தன்மைகள்‌, குணங்கள்‌ இவற்றையெல்லாம்‌ பொருட்டாகவும்‌ கொண்டு கேட்கப்படும்‌ பிரார்த்தனைகள்‌ அனைத்துமே விரும்பத்‌ தக்கவை.

இதற்கு உதாரணமாக கீழ்வரும்‌ துஆவை எடுத்துக்‌ கொள்ளலாம்‌. 'இறைவா! புகழனைத்து உனக்கே உரித்தாகுக, இப்புகழின்‌ பொருட்டால்‌ கேட்கிறேன்‌. நீதான்‌ பெரிய பேருபகாரம்‌ செய்பவன்‌. தானசீலனான அல்லாஹ்வும்‌ நீதான்‌. வானம்‌ பூமிகளை முன்மாதிரியின்றி நாதனமான முறையில்‌ படைத்திருக்கிறாய்‌. கம்பீரத்துக்கும்‌, கண்ணியத்திற்கும்‌ உரிய நாயனே! நீ ஏகன்‌. பிறரிடம்‌ தேவையற்றவன்‌. எவரையும்‌ பெறாதவன்‌. எவராலும்‌ பெறப்படாதவன்‌. யாரோடும்‌ ஒப்புவமையற்ற அல்லாஹ்வும்‌ நீயே. உன்‌ திருநாமத்தைக்‌ கொண்டு கேட்கிறேன்‌. நீயே அவற்றைக்‌ கொண்டு உனக்குப்‌
பெயர்‌ வைத்தாய்‌. அவற்றை உன்‌ வேதத்தில்‌ இறக்கி அருள்‌ பாலித்தாப்‌. அடியார்களில்‌ சிலருக்கு அதைக்‌ கற்றுக்‌ கொடுத்திருக்கிறாய்‌. இறைவா! இத்தகைய உன்‌ தன்மைகளை முன்வைத்து அவற்றின்‌ பொருட்டால்‌ உன்னிடம்‌ கேட்கிறேன்‌' என்பன
போன்ற பிரார்த்தனைகளால்‌ யாராவது பிரார்த்தித்தால்‌ அது மிக்க நன்மை தரவல்ல பிரார்த்தனையாகக்‌ கருதப்படும்‌.

ஏனெனில்‌ இங்கு மனிதன்‌ இறைவனின்‌ திருநாமங்களையும்‌, அவன்‌ தன்மைகள்‌
குணங்கள்‌ அனைத்தையும்‌ முன்னிறுத்தி அவற்றின்‌ பொருட்டால்‌ பிரார்த்திக்கிறான்‌. இதனால்‌ எவ்வித குற்றமும்‌ இல்லை. இறைவன்‌ செய்கைகளெல்லாம்‌ அவனின்‌ தன்மைகளுடையவும்‌, திருநாமங்களுடையவும்‌ பிரதி பலனல்லவா? மன்னிப்பாளன்‌ என்ற அவனின்‌ திருநாமத்திலிருந்து மன்னித்தல்‌ என்ற செய்கை பிரதிபலிக்கிறது.

புகழுக்குரியவனாக, பேருபகாரியாக இறைவன்‌ இருப்பதால்‌ தன்‌ அடியார்கள்‌ கேட்கின்ற
வேளையில்‌ உதவி புரிய வேண்டுமென்பதை காட்டுகின்றது. தன்‌ அடிமைகளுக்காக
புகழுக்குரிய பற்பல பேருதவிகளைச்‌ செய்து காட்டினான்‌. இதனால்‌ அவன்‌ புகழுக்குரியவனாகவும்‌ இருக்கின்றான்‌. மனிதன்‌ தன்‌ இரட்சகனை புகழ்ந்து
பாராட்டுவதனால்‌ தன்‌ பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட ஏதுவாகிறது. நாம்‌ தொழுகையில்‌ கூறுகின்ற 'ஸமியல்லாஹு லிமன்‌ ஹமிதா' என்ற சொற்றொடரும்‌ இதைக்‌ காட்டுகிறதே. ஏனெனில்‌ இவ்வார்த்தையின்‌ தாத்பரியம்‌ 'தன்னைப்‌ புகழ்ந்துரைப்பவனின்‌
பிரார்த்தனையை இறைவன்‌ ஏற்றுக்‌ கொண்டான்‌' என்பதாகும்‌. 

தொழுகிறவன்‌ இதைச்‌ செய்ய வேண்டுமென்று பணிக்கப்பட்டிருக்கிறான்‌. 'ஸமிஅ' என்ற வார்த்தை ஏற்றுக்‌ கொண்டான்‌, அங்கீகரித்தான்‌ என்று பொருள்படும்‌. இந்த அர்த்தத்திற்கு ஹதீஸிலும்‌,
திருமறையிலும்‌ பல இடங்களில்‌ 'ஸுமிய' என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: 'இறைவா! பயனற்ற கல்வியை விட்டும்‌ அடங்காத ஆத்மாவை விட்டும்‌ ஏற்றுக்‌ கொள்ளாத பிரார்த்தனையை விட்டும்‌ (மின்‌ துஆஇன்‌ லா யஸ்மு) நான்‌ உன்னிடம்‌ காவல்‌ தேடுகிறேன்‌.

நபி இப்ராஹீம்‌ (அலை) அவர்கள்‌ தமது பிரார்த்தனையின்‌ கடைசியில்‌ “(இன்ன ரப்ரீ ஸமீஉத்‌ துஅஉ) நிச்சயமாக என்னுடைய இறைவன்‌ பிரார்த்தனைகளை அதிகம்‌ அங்கீகரிப்பவன்‌' என்றார்கள்‌" (14:39) இன்னோர்‌ இடத்தில்‌ இறைவன்‌ கூறினான்‌: "அவர்களை அங்கீகரிப்போரும்‌ உங்களில்‌ பலர்‌ உள்ளனர்‌" (9:47). "அவர்கள்‌ பொய்யான
விஷயங்களையே அதிகமாகக்‌ கேட்கின்றனர்‌. அன்றி, உம்மிடம்‌ வராத மற்றொரு கூட்டத்தினருக்கு வேண்டி அதிகமாகப்‌ பதிலளிக்கின்றனர்‌". (5:41)

இறைவனைப்‌ புகழுதல்‌, பாராட்டுதல்‌ என்றால்‌ அவனின்‌ தன்மைகளையும்‌, குணங்களையும்‌, திருநாமங்களையெல்லாம்‌ எடுத்துரைப்பதல்லவா? அவன்‌ தன்மைகளை எடுத்துக்‌ கூறி பிரார்த்திப்பதனால்‌ பிரார்த்தனைகள்‌ அங்கீகரிக்கப்படலாம்‌. அருள்‌ பாலித்தல்‌ இறைவனின்‌ செய்கை. இது அருளாளன்‌ என்ற அவனது
திருநாமத்தின்‌ பிரதிபலிப்பாகும்‌. இதுபோலவே இறைவனுடைய எல்லாச்‌ செய்கைகளும்‌, அவை அவனது திருநாமங்களுடையவும்‌, அவன்‌ குணங்களுடையவும்‌ விளைவாகும்‌. நபியவர்களிடம்‌ ஒரு நாள்‌ ஆயிஷா (ரலி) அவர்கள்‌ நாயகமே, ரமழானில்‌ லைலத்துல்‌ கதர்‌ இரவில்‌ நான்‌ எதைக்‌ கூற வேண்டும்? என்று வினவினார்கள்‌. அதற்கு 'இறைவா, நீ மன்னிப்பாளன்‌, மன்னிப்பை பிரியப்படுகிறவன்‌, ஆகவே என்னை மன்னித்தருள்வாயாக!' எனக்‌ கூற வேண்டுமென நாயகம்‌ (ஸல) அவர்கள்‌ சொல்லித்‌
கொடுத்தார்கள்‌. 'அஃபுவ்வுன்‌' என்ற அல்லாஹ்வின்‌ திருநாமத்தையும்‌, அவன்‌ தன்மைகளையும்‌ முன்னர்‌ மொழிந்து விட்டு அதன்பிறகு அத்தன்மைக்குத்‌ தோதுவான ஒரு செய்கையை (அஃப்வை) கேட்கப்படுகிறது. இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌
அவர்களைப்‌ பற்றி அறிவிக்கப்படும்‌ ஒரு சம்பவத்தில்‌ 'அவர்கள்‌ ஒரு மனிதரிடம்‌ கீழ்வருவதை எடுத்துக்‌ கூறிப்‌ பிரார்த்திக்கச்‌ சொன்னார்கள்‌: 'தட்டழிந்து
திரிபவர்களுக்கும்‌, வழி தெரியாமல்‌ திணறி அலைபவர்களுக்கும்‌ வழிகாட்டுகின்றவனே!
மெய்யானவர்களின்‌ பாதையை எனக்குக்‌ காட்டித்‌ தந்தருள்வாயாக! உன்‌ நேர்மையான அடியார்களில்‌ என்னையும்‌ சேர்த்தருள்வாயாக!"

அல்லாஹ்வின்‌ திருநாமங்களில்‌ ஒன்று (அல்ஹாதீ) நேர்வழி நடத்துபவன்‌. இறைவன்‌ மக்களுக்கு நேரான வழியைக்‌ காட்டுவதெல்லாம்‌ மேற்கூறிய அத்திருநாமத்தின்‌ விளைவாகும்‌. எனவேதான்‌ அன்றிலிருந்தே அறிஞர்கள்‌ அல்லாஹ்வின்‌
திருநாமங்களையும்‌, அவன்‌ குணங்களையும்‌, தன்மைகளையும்‌ பொருட்டாக வைத்துப்‌
பிரார்த்திக்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்கள்‌. இன்னும்‌ விளக்கமாக கூறினால்‌ இறைவன்‌ தன்‌ அடியார்களுக்குப்‌ புரிகின்ற நன்மைகள்‌ அனைத்துமே அகில உலகைப்‌ படைத்துக்‌ காத்துப்‌ பரிபாலிப்பவன்‌ (ரப்புன்‌) எனும்‌ அவனுடைய திருநாமத்தின்‌
தேட்டமாகுமென்று கூறலாம்‌.

ஆகவே நபிமார்கள்‌, ரஸுல்மார்கள்‌, அவர்களைப்‌ போன்ற பெரியார்கள்‌, நாதாக்கள்‌ எல்லோருமே தத்தம்‌ பிரார்த்தனைகளில்‌ அல்லாஹ்வை அழைக்கும்‌ போது அதிகமாக 'யா ரப்பீ' என்று அழைத்துப்‌ பிரார்த்திக்கின்றனர்‌. பிரார்த்தனையின்‌ போது 'யா ரப்பீ' அகிலமனைத்தையும்‌ படைத்துப்‌ பரிபாலிப்பவனே! எனும்‌ சொற்றொடர்‌ மிகப்‌
பொருத்தமாக இருப்பதைக்‌ காண்கிறோம்‌. நபி ஆதம்‌ (அலை) அவர்கள்‌ 'ரப்பனா' என்று சொல்லித்தான்‌ இறைவனை அழைத்தார்கள்‌. தமது பிரார்த்தனையில்‌ 'எங்களைப்‌ படைத்து பரிபாலிக்கும்‌ நாயனே, எங்களுக்கு நாங்கள்‌ தீங்கிழைத்துக்‌ கொண்டோம்‌. நீ
எங்களை மன்னித்து அருள்‌ புரியாவிட்டால்‌ நிச்சயமாக நாங்கள்‌ நஷ்டமடைந்து விடுவோம்‌' என்று கூறினார்கள்‌. (7:23)

இவ்வாறுதான்‌ நபி நூஹ்‌ (அலை) அவர்களும்‌ தமது பிரார்த்தனையின்‌ போது கூறினார்கள்‌. "என்னைப்படைத்து பரிபாலிக்கின்ற நாயனே! நான்‌ அறியாத விஷயங்களைப்‌ பற்றி இனி நான்‌ உன்னிடம்‌ கேட்காது என்னை இரட்சித்தருளுமாறு நான்‌ உன்னிடம்‌ பிரார்த்திக்கிறேன்‌. நீ என்னை மன்னித்து எனக்கு கிருபை செய்யாவிடில்‌ நிச்சயமாக நானும்‌ நஷ்டமடைந்தோரில்‌ ஆகி விடுவேன்‌ என்று
கூறினார்‌” (11:47)

நபி இப்ராஹீம்‌ (அலை) அவர்களின்‌ பிரார்த்தனையை நாம்‌ கவனிப்போமென்றால்‌ அவர்களும்‌ '(ரப்பனா) எங்களைப்‌ படைத்து காத்து பரிபாலிக்கின்ற இரட்சகனே, என்று கூறித்தான்‌ தமது பிரார்த்தனையை ஆரம்பித்தார்கள்‌. எங்களை படைத்துப்‌ பரிபாலிப்பவனே, திட்டமாக நான்‌ என்‌ சந்ததிகளை கண்ணியம்‌ வாய்ந்த உன்‌ வீட்டில்‌
சமீபத்தில்‌ வசித்திருக்கச்‌ செய்திருக்கிறேன்‌. அது விவசாயமில்லாத பள்ளதாக்கு... என்று கூறினார்கள்‌' (14:37)

இப்படியே நபிமார்களின்‌ பிரார்த்தனையைப்‌ பற்றி நாம்‌ ஆராய்ந்தால்‌ அவர்கள்‌ ரப்பீ, யாரப்பீ, யா ரப்பனா என்ற வார்த்தைகளைத்தான்‌ உபயோகித்துத்‌ தம்‌ தேட்டங்களை இறைவனிடம்‌ வேண்டியிருக்கிறார்கள்‌. எனவேதான்‌ சட்ட மேதைகளில்‌ பலரும்‌, மத்ஹபுடைய இமாம்களில்‌ இமாம்‌ மாலிக்‌, இமாம்‌ அபூ ஹனிபா, இவர்களின்‌ தோழரான இப்னு அபீ இம்ரான்‌ போன்ற இன்னும்‌ சிலரும்‌ பிரார்த்தனையின்‌ போது
மனிதன்‌ தன்‌ இறைவனை யா எய்யிதீ (என்‌ தலைவனே) எனக்கூறி அழைக்கக்கூடாது
அப்படி அழைப்பது அருவறுக்கத்தக்கதென்றும்‌ கூறியுள்ளனர்‌. 

அன்பியாக்கள்‌, ரஸுல்மார்கள்‌ தம்‌ பிரார்த்தனையில்‌ அல்லாஹ்வை யா ரப்பீ, யா ரப்பீ என்று கூப்பிட்டது போல நாமும்‌ அப்படியே கூப்பிட வேண்டுமென்று இவர்கள்‌ அபிப்பிராயப்படுகிறார்கள்‌.

'அல்‌ ஹய்யுல்‌ கய்யூம்‌' நித்தியமாக என்றும்‌ உயிரோடு இருப்போன்‌ என்ற அல்லாஹ்வின்‌ திருநாமம்‌ அவனுடைய எல்லா குணங்களையும்‌, தன்மைகளையும்‌, அனைத்துத்‌ திருநாமங்களின்‌ தாத்பரியத்தையும்‌ அடக்கிய ஒரு சொற்றொடராக
இருப்பதைக்‌ காணலாம்‌. எனவே அறிஞர்கள்‌ இதையும்‌ எடுத்துக்‌ கூறி துஆ கேட்பதை
விரும்பியிருக்கின்றனர்‌. நபிகளின்‌ துஆவின்‌ போது இதை அதிகமாக எடுத்துரைப்பார்கள்‌
என்று கூறப்படுகிறது. வேறு சில நூற்களில்‌ இது பற்றி சான்றாக விளக்கப்பட்டுள்ளது.

இனி நாம்‌ முந்திய தலைப்புக்கு வருவோம்‌. ஆம்‌ அல்லாஹ்‌ புகழுக்குரியவன்‌. அவனைப்‌ புகழ்ந்து பாராட்டியதற்கப்பால்‌ கேட்கப்படும்‌ துஆக்கள்‌ பெரிதும்‌ ஏற்றமானது.

அது அங்கீகரிப்பதற்கும்‌ வாய்ப்பிருக்கிறது. அல்லாஹ்வையும்‌ பாராட்டையும்‌, புகழையும்‌ கொண்டு கேட்கப்படும்‌ பிரார்த்தனையை அவன்‌ ஏற்றருள்வான்‌. ஆகவேதான்‌ மனிதன்‌ தம்‌ தொழுகையின்‌ போது அத்தஹிய்யாத்தில்‌ இறைவனைப்‌ புகழ்ந்து விட்டு
தனக்காக பிரார்த்திக்க வேண்டுமென பணிக்கப்பட்டிருக்கிறான்‌. அல்லாஹ்வை
புகழாமலும்‌, அவனை வாழ்த்தாமலும்‌, நபி (ஸல்‌) அவர்கள்‌ மீது ஸலவாத்துச்‌ சொல்லாமலும்‌, தொழுது முடித்தவுடன்‌ தனக்காகத்‌ துஆ மட்டும்‌ கேட்டு விட்டுச்‌
சென்று ஒரு மனிதரைப பார்த்து நபியவர்கள்‌ இவர்‌ அவசரப்பட்டு விட்டார்‌' என்று கூறினார்கள்‌. பின்னர்‌ அம்மனிதரை அழைத்து உங்களில்‌ யாராவது ஒருவர்‌
பிரார்த்திக்க நினைத்தால்‌ அல்லாஹ்வைப்‌ புகழ்ந்து அவன்‌ மீது துதிகள்‌ சொல்லி பிறகு நபி (ஸல்‌) அவர்கள்‌ மீது ஸலவாத்துகளையும்‌ கூற வேண்டும்‌. பின்னர்‌ தமக்குத்‌ தேவையானவற்றை இறைவனிடம்‌ கேட்க வேண்டுமென்று சொன்னார்கள்‌. (அபூதாவூத், திர்மிதி)

இப்னு மஸ்வூத்‌ (ரலி) அவர்கள்‌ கூறினார்கள்‌: நாயகத்துடன்‌ தோழர்களான அபூபக்கர்‌
உமர்‌ ரலியவா்கள்‌ இருவரும்‌ அமர்ந்து கொண்டிருக்கையில்‌ நான்‌ தொழுது
கொண்டிருந்தேன்‌. தொழுகையில்‌ நான்‌ அமர்ந்தபோது முதலில்‌ அல்லாஹ்வை வாழ்த்தினேன்‌. பிறகு நபியவர்கள்‌ மீது ஸலவாத்துக்‌ கூறினேன்‌. அதன்பின்‌ எனக்காக துஆக்‌ கோரினேன்‌. இதைக்‌ கேட்டுக்‌ கொண்டிருந்த நபியவர்கள்‌ என்னை நோக்கி நீர்‌ அல்லாஹ்விடம்‌ கேளும்‌. அள்ளி வழங்குவான்‌' என்றார்கள்‌. (திர்மிதி)

அல்லாஹ்வை முன்னிறுத்திக்‌ கேட்கிறேன்‌ என்று ஒருவன்‌ மற்றவனிடம்‌ ஒரு தேவையை வேண்டினால்‌ அதனால்‌ குற்றமொன்றும்‌ வரப்போவதில்லை. இது
அனுமதிக்கப்பட்ட அமைப்பிலான வேண்டுதலல்லவா? ஏனெனில்‌ இந்த வேண்டுதலின்‌ தாத்பரியம்‌ அல்லாஹ்வை நம்பியிருக்கிறேன்‌. இந்த நம்பிக்கையின்‌ பெயரால்‌ அதன்‌ பொருட்டால்‌ கேட்கிறேன்‌ என்று விளக்கம்‌ கொடுக்கப்படும்‌. இப்படி அல்லாஹ்வைக்‌ கொண்டும்‌, அவன்‌ ரஸூலைக்‌ கொண்டும்‌ விசுவாசம்‌ கொண்ட காரணத்தினால்‌ அந்த
ஈமானை முன்னிறுத்தி அதன்‌ பொருட்டால்‌ கேட்கப்பட்ட இத்தகைய வேண்டுதல்கள்‌
அங்கீகரிக்கப்படுவதற்கு அருகதையுண்டு. நம்மிடமிருக்கும்‌ விசுவாசம்‌, நாம்‌ புரிகின்ற
நற்கிரியைகள்‌ இவற்றின்‌ பொருட்டால்‌ பிரார்த்தனைகள்‌ வேண்டலாம்‌. இஸ்லாத்தில்‌
அதற்கு அனுமதியும்‌ உண்டு.

சிருஷ்டிகளைக்‌ கொண்டு ஆணையிட்டுக்‌ கேட்கப்பட மாட்டாது. அவைகளை பொருட்டாக வைத்துப்‌ பிரார்த்தித்தலும்‌ கூடாது. இறைவா! உன்‌ அன்பியாக்களின்‌ பொருட்டால்‌ நான்‌ உன்னிடம்‌ கேட்கிறேன்‌ என்று கேட்கப்பட மாட்டாது.

அதிய்யத்துல்‌ ஊபி அவர்கள்‌ கூறினார்கள்‌: அபூ ஸயீதுல்‌ குத்ரி (ரலி) அவர்கள்‌ அறிவிக்கும்‌ ஒரு ஹதீஸில்‌ வருகிறது: தொழுகைக்கு புறப்படும்‌ ஒரு மனிதனுக்கு நபியவர்கள்‌ கீழ்வரும்‌ பிரார்த்தனையை சொல்ல வேண்டுமென்று கற்றுக்‌ கொடுத்தார்கள்‌.

'இறைவா! உன்னிடம்‌ பிரார்த்திப்பவர்களுக்காக உன்‌ மீதுள்ள பாத்யதையை (ஹுக்கைப்‌) பொருட்டாக வைத்துக்‌ கேட்கிறேன்‌. இதோ நான்‌ நடந்து செல்லும்‌
பாதையின்‌ பொருட்டால்‌ கேட்கிறேன்‌. நான்‌ வீட்டிலிருந்து அகங்காரத்தை நாடி புறப்பட்டதில்லை. அமானிதத்திற்காகவோ, பெருமையையோ, முகஸ்துதியையோ எதிர்பார்த்து நான்‌ புறப்படவில்லை. உன்‌ கோபத்தை பயந்தவனாகவும்‌, உன்‌ திருப்பொருத்தத்தை நாடியுமே நான்‌ கிளம்பியிருக்கிறேன்‌'

இந்த ஹதீஸை இமாம்‌ அஹ்மதும்‌, மற்றும்‌ இப்னு மாஜா போன்றவர்கள்‌ அறிவித்தாலும்‌ இதன்‌ (இஸ்னாதில்‌) அறிவிப்பாளர்‌ பட்டியலில்‌ பலவீனமான
அறிவிப்பாளரான அதிய்யதுல்‌ ஊபி இடம்‌ பெறுவதினால்‌, இந்த ஹதீஸைப்‌ பற்றி
முஹத்திஸீன்கள்‌ பலவீனமானதென்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்‌. ஸஹீஹான ஹதீஸ்‌ என்று நாம்‌ கருதினால்‌ கூட இந்த ஹதீஸ்‌ பொருத்தமான விளக்கத்தைத்தான்‌ அளிக்கிறது. அதாவது கேட்பவர்கள்‌ விஷயத்தில்‌ அல்லாஹ்வின்‌ மீதுள்ள கடமை (ஹக்கு) அவர்களின்‌ கேள்விக்கு பதில்‌ கொடுப்பது, அவர்கள்‌ பிரார்த்தனைகளை
அங்கீகரிப்பது மேலும்‌ அவர்களின்‌ வணக்கங்களுக்கு பிரதிபலன்‌ நல்குவது. இப்படியாக பதில்‌ கொடுத்தல்‌, துஆக்கள்‌ அங்கீகரித்தல்‌, பிரதிபலன்‌ நல்குதல்‌ இவை அனைத்துமே அல்லாஹ்வின்‌ ஹக்குகளாகும்‌. இவற்றை அல்லாஹ்‌ தன்‌ மீது வாஜிபாக்கிக்‌ கொண்ட
(ஸிபாத்துகள்‌) தன்மை எனலாம்‌.

அப்படியென்றால்‌ மனிதன்‌ அல்லாஹ்வின்‌ ஸிபத்துகளின்‌ பொருட்டால்‌ பிரார்த்தனை செய்தால்‌ அது மேலான விரும்பத்தகுந்த பிரார்த்தனையாகிறது. இதைத்தான்‌ நாம்‌ முன்னர்‌ கூறியிருக்கிறோமே. மனிதன்‌ விசுவாசத்தின்‌ பொருட்டாலும்‌, அல்லாஹ்வின்‌ திருநாமங்கள்‌, அவனுடைய தன்மை (ஸிபாத்து) கள்‌ பொருட்டாலும்‌ வேண்டப்படும்‌
பிரார்த்தனைகள்‌ அனைத்துமே அங்கீகரிக்கப்‌ படுவதற்குக்‌ காரணமாகின்றன. 

இறைவன்‌ தன்‌ திருமறையில்‌ இதை சுட்டிக்காட்டும்‌ போது: "விசுவாசங்‌ கொண்டு நற்கருமங்கள்‌
செய்தோர்களின்‌ பிரார்த்தனைகளை அவன்‌ அங்கீகரித்து அவர்களுக்கு தன்னுடைய
அருளை மேலும்‌ அதிகப்‌படுத்துகின்றான்‌" எனக்‌ கூறினான்‌. (42:26)

இதைப்போல இறைவன்‌ வாக்களித்திருக்கும்‌ வாக்குறுதிகளைக்‌ கொண்டும்‌, அவற்றின்‌ பொருட்டாலும்‌ பிரார்த்தனைகள்‌ வேண்டப்பட அனுமதிக்கப்படுகிறது. ஏனென்றால்‌ இறைவனின்‌ வாக்குறுதி தவறாகாது அல்லவா? நிச்சயம்‌
வாக்குறுதிகொப்ப நடைபெறத்தான்‌ செய்யும்‌. எனவே அந்த வாக்குறுதிகளை முன்வைத்தும்‌ துஆக்கள்‌ வேண்டலாம்‌.

இந்த உண்மையைக்‌ கீழ்வரும்‌ இறைவசனம்‌ மேலும்‌ விளக்கிக்‌ காட்டுகிறது:
"(மூமின்கள்‌ கூறுவார்கள்‌) இரட்சகனே! 'உங்கள்‌ இறைவனை விசுவாசியுங்கள்‌' என எங்களை விசுவாசத்தின்‌ பக்கம்‌ அழைத்தோரின்‌ அழைப்பை நிச்சயமாக நாங்கள்‌ செவியேற்று நாங்களும்‌ அவ்வாறே விசுவாசம்‌ கொண்டோம்‌. ஆதலால்‌ இறைவா! எங்கள்‌ குற்றங்களை மன்னித்து எங்கள பாவங்களிலிருந்து விடுவித்து முடிவில்‌
நல்லோர்களுடன்‌ எங்களை இறக்கச்‌ செய்வாயாக!". (3:193)

இன்னொரு இடத்தில்‌ இறைவன்‌ குறிப்பிடுகிறான்‌: "நிச்சயமாக என்னுடைய அடியார்களில்‌ ஒரு வகுப்பார்‌ இருந்தனர்‌. அவர்கள்‌ (என்னை நோக்கி) 'இறைவனே!
நாங்கள்‌ உன்னை விசுவாசிக்கிறோம்‌. நீ எங்களுடைய குற்றங்களை மன்னித்து எங்கள்‌
மீது அருள்‌ புரிவாயாக! அருள்‌ புரிவோரிலெல்லாம்‌ நீ மிக்க மேலானவன்‌ என்று பிரார்த்தித்துக்‌ கொண்டிருந்தனர்‌. ஆனால்‌ நீங்களோ என்னை தியானிப்பதை முற்றிலும்‌ மறந்து விட்டு, அவர்களைப்‌ பரிகசித்து அவர்களைப்‌ பற்றி சிரித்துக்‌ கொண்டிருந்தீர்கள்‌". (23:109-110)

பத்று யுத்தம்‌ நடந்த அன்று நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: ' இறைவா! நீ எனக்கு வாக்களித்ததை நிறைவேற்றித்‌ தந்தருள்‌!' என்று. இதைக்கூறி அல்லாஹ்வின்‌ வாக்களிப்பை ஆசை வைத்துப்‌ பிரார்த்தித்தார்கள்‌. 

தெளராத்‌ வேதத்திலும்‌ கீழ்வரும்‌ சம்பவம்‌ காணப்படுகிறது: பனூ இஸ்ரவேலர்கள்‌ மீது இறைவனின்‌ கோபம்‌ இறங்கிய வேளையில்‌, நபிகள்‌ மூஸா (அலை) அவர்கள்‌ தம்‌ இறைவனிடத்தில்‌ நபி இப்ராஹீம்‌ (அலை) அவர்களுக்கு இறைவன்‌ முன்னர்‌ ஒருமுறை வாக்களித்ததை முன்வைத்து, அதை எடுத்துக்‌ காட்டி அந்த வாக்குறுதியின்‌ பொருட்டால்‌ மூஸா (அலை) தமக்காகப்‌ பிரார்த்தித்தார்கள்‌. நல்ல அமல்களின்‌ பொருட்டாக பிரார்த்தனை செய்வது ஷரீஅத்‌ அனுமதிக்கின்ற ஒரு பிரார்த்தனையாகும்‌. 

குகையில்‌ அகப்பட்ட மூவரின்‌ வரலாற்றை இதற்கு உதாரணமாக எடுத்துக்‌ கொள்ளலாம்‌. அவர்களில்‌ ஒவ்வொருவரும்‌ அல்லாஹ்வை மட்டும்‌ நாடி கலப்பற்ற ரீதியில்‌ புரிந்த அமல்களைப்‌ பொருட்டாக வைத்துப்‌ பிரார்த்தித்தனர்‌. இதனால்‌ பாறை தானாக விலகியது. ஆம்‌, உண்மையான ரீதியில்‌ நல்ல அமல்களைத்‌ தூய எண்ணத்துடன்‌ மனிதன்‌ செய்யும்போது அவனை
இறைவன்‌ நேசிக்கிறான்‌. அவனுடைய அமலைப்‌ பொருந்திக்‌ கொள்கிறான்‌. இதனால்‌ அந்த அமல்களைச்‌ செய்தவனின்‌ பிரார்த்தனைகள்‌ அங்கீகரிக்கப்படுகின்றன. ஏனெனில்‌
தம்‌ துஆக்கள்‌ அங்கீகரிக்கப்படும்‌ நிலைமையில்‌ இம்மனிதனை அவனது நல்லமல்கள்‌ திருப்பி விட்டன. எப்போது இவன்‌ பிரார்த்தித்தாலும்‌ அது அங்கீகரிக்கப்பட ஏதுவாகிறது. குகையில்‌ அகப்பட்ட மூவரில்‌ ஒருவர்‌ தம்‌ பெற்றோர்களுக்காக பேருதவி செய்து கொடுத்ததைப்‌ பொருட்டாக வைத்து பிரார்த்தனை செய்தார்‌. மற்றொருவர்‌ தமது
சம்பூர்ண பத்தினித்‌ தன்மையை எடுத்துக்கூறிப்‌ பிரார்த்தனை செய்தார்‌. மூன்றாமவர்‌ தனது நாணயத்தையும்‌, உபகார மனதையும்‌ எடுத்துரைத்து துஆ இறைஞ்சினார்‌.

இப்னு மஸ்வூத்‌ (ரலி) அவர்கள்‌ நள்ளிரவு வேளைகளில்‌ கூறுவார்கள்‌: இறைவா! உனக்கு வழிப்பட வேண்டுமென்று நீ என்னைப்‌ பணித்தாய்‌, வழிப்பட்டேன்‌. என்னை அழைத்தாய்‌, இதோ வந்திருக்கிறேன்‌ இந்த நள்ளிரவு வேளையில்‌. எனவே எனக்கு மன்னிப்பு அருள்வாயாக!. இப்னு உமர்‌ (ரலி) அவர்கள்‌ ஸஃபா மலைமீது ஏறி நின்று
கூறினார்கள்‌: 'இறைவா! என்னிடம்‌ கேட்டுப்‌ பிரார்த்தியுங்கள்‌. நான்‌ தருகிறேன்‌ என நீ
கூறியுள்ளாய்‌. இதோ உன்னை அழைக்கிறேன்‌. நீ வாக்குறுதி பிறழாதவன்‌' என்று கூறிவிட்டு தம்‌ தேவைகளைக்‌ கேட்டு பிரார்த்தித்தார்கள்‌.

நபிமார்களின்‌ அல்லது மலக்குகளின்‌ அல்லது நல்ல மனிதர்களின்‌ (ஹக்கால்‌) பொருட்டால்‌, (ஹுர்மத்தால்‌) மேன்மையால்‌ (ஜாலால்‌) அந்தஸ்தால்‌ என்றெல்லாம்‌
இவர்களின்‌ அந்தஸ்தையும்‌, மதிப்பையும்‌ எடுத்துரைத்து அவற்றைப்‌ பொருட்டாக வைத்து மனிதன்‌ அல்லாஹ்விடத்தில்‌ பிரார்த்தித்தால்‌, இது தவறான பிரார்த்தனையாக கருதப்படும்‌. ஏனென்றால்‌ இப்பிரார்த்தனையின்‌ தாத்பரியத்தில்‌ தவறான கருத்துக்களைக்‌ காண முடிகிறது. நல்ல மனிதர்களுக்கு அவர்களுடைய உரிமை என்று
கருதப்படக்கூடிய சில (ஹக்குகள்‌) பாத்யதைகள்‌ அல்லாஹ்விடத்தில்‌ இருப்பதாக இதிலிருந்து விளங்க முடிகிறதல்லவா? மனிதன்‌ தன்‌ உரிமை என்று கருதும்‌ அளவுக்கு என்ன பாத்யதைகள்‌ தான்‌ அல்லாஹ்வின்‌ மீது கடமையாகி விடப்‌ போகின்றன? அப்படியொன்றும்‌ அல்லாஹ்வின்‌ மீது கடமையில்லை என்பது தானே மூமின்களின்‌ விசுவாசம்‌.

நபிமார்களுக்கும்‌ நல்ல மனிதர்களுக்கும்‌ அல்லாஹ்‌ உயர்ந்த அந்தஸ்துகளையும்‌, நல்ல பெரிய பதவிகளையும்‌ வைத்திருக்கிறான்‌ என்பது உண்மைதான்‌. குறிப்பாக நபிமார்களுக்கு நல்ல பல பதவிகள்‌ அல்லாஹ்விடத்தில்‌ உண்டு. இந்த நபிமார்களைப்‌ பின்பற்றி அவர்கள்‌ காட்டிச்‌ சென்ற வழியை அனுசரித்து நடந்தவர்களுக்கும்‌ நல்ல பல
கூலிகளை அல்லாஹ்விடமிருந்து பெற முடியும்‌. (நன்மக்கள்‌) ஸாலிஹீன்களுக்குப்‌ பற்பல அந்தஸ்துகள்‌ அல்லாஹ்விடத்தில்‌ உண்டு என்பதின்‌ தாத்பரியம்‌ என்னவென்றால்‌ சுவனத்தில்‌ இவர்களின்‌ படித்தரத்தையும்‌, (அதுவும்‌ இறைவன்‌ நாடினால்‌) மதிப்பையும்‌ மேன்மைப்‌ படுத்தி விடுவான்‌ என்பதாகும்‌. தவிர இவர்களைப்‌ பொருட்டாகக்‌ கொண்டு கேட்கின்ற பிரார்த்தனைகளை கண்டிப்பாக அல்லாஹ்‌
அங்கீகரிப்பான்‌ என்பதல்ல அதன்‌ தாத்பரியம்‌. இவர்களின்‌ மதிப்பை எடுத்துக்‌ கூறி பிரார்த்தித்தால்‌ ஒரு போதும்‌ அல்லாஹ்‌ ஏற்றுக்‌ கொள்ள மாட்டான்‌. நபிமார்களுக்குக்‌ கூட அல்லாஹ்வின்‌ அனுமதியின்றி சிபாரிசு செய்ய அதிகாரமில்லாமலிருக்கும்‌ போது
அவர்களை விட மதிப்பில்‌ குறைந்தவர்களுக்கு அல்லாஹ்விடத்தில்‌ என்ன உரிமை
கொண்டாட முடியும்‌? இறைவன்‌ கூறுகிறான்‌:
அல்லாஹ்வின் அனுமதியின்றி அவனிடத்தில் யார்தான் சிபாரிசு செய்ய முடியும் (2:255) 

அன்பியாக்களின்‌ மதிப்பால்‌ மனிதன்‌ எப்பொழுது
பயன்‌ பெறுகிறான்‌ தெரியுமா? அவர்களின்‌ வழிமுறைகளைக்‌ கடைபிடித்தொழுகும்‌ போதுதான்‌. அல்லாஹ்வைப்‌ பற்றி அவர்கள்‌ போதித்தவற்றை செவிதாழ்த்திக்‌ கேட்க வேண்டும்‌. அதற்கொப்ப வழிப்பட்டு நடக்க வேண்டும்‌. அந்த நபிமார்களின்‌ வாழ்க்கை முறைகளை மனிதன்‌ அணுஅணுவாகப்‌ பின்பற்ற வேண்டும்‌. அப்படியானால்‌ நபிமார்களின்‌ அந்தஸ்தாலும்‌, மதிப்பாலும்‌ மனிதன்‌ பயனடைந்தான்‌ என்று கூற முடியும்‌. 

இங்குதான்‌ நபிமார்களின்‌ அந்தஸ்தும்‌, மேன்மையும்‌ மனிதனுக்குப்‌ பயனளிக்கின்றன. மூமின்களுக்கு நபிமார்கள்‌ எவற்றையெல்லாம்‌ காட்டிச்‌ சென்றார்களோ அவற்றுக்கொப்ப மூமின்கள்‌ தம்‌ வாழ்க்கையில்‌ செய்து காட்டினால்‌ அன்பியாக்களின்‌ பொருட்டாலும்‌ மூமின்கள்‌ வெற்றி பெற்றார்கள்‌ என்று கூற முடியும்‌. இதைப்‌ போலதான்‌ நபிமார்களின்‌ துஆக்களும்‌, ஷபாஅத்தும்‌. இந்த நபிமார்கள்‌ மற்றும்‌ நன்மக்கள்‌ இவர்களெல்லாம்‌ மூமின்களுக்காக அல்லாஹ்விடத்தில்‌ பிரார்த்தித்தால்‌, அவனிடத்தில்‌ ஷபாஅத்துச்‌ செய்தால்‌ இங்கேயும்‌ மூமின்கள்‌ அன்பியாக்களுடைய மதிப்பாலும்‌, அந்தஸ்தாலும்‌ பயனடைந்தார்கள்‌ என்று கூற முடியும்‌. 

இதற்கு மாறாக நபிமார்களிடமிருந்து துஆக்கள்‌ பெருமளவுக்கு மனிதன்‌ நடந்து கொள்ளாமலும்‌, அவர்களிடமிருந்து சிபாரிசு பெறும்‌ அருகதையும்‌ அவன்‌ அடையாமல்‌ இருக்கின்ற வேளையில்‌ அந்நபிமார்களைப்‌ பொருட்டாக வைத்துப்‌ பிரார்த்திப்பதில்‌ அவர்களின்‌ அந்தஸ்தையும்‌, மேன்மையையும்‌ எடுத்துக்‌ கூறி துஆச்‌ செய்வதில்‌ என்ன பயனிருக்கிறது? எனவே தான்‌ கூறினோம்‌: நபிமார்களின்‌ மதிப்பைக்‌ கொண்டும்‌,
பெரியோர்களுக்குரிய அந்தஸ்தைக்‌ கொண்டும்‌ மனிதன்‌ பயன்பெற வேண்டுமானால்‌ அது அவர்களை முன்னிறுத்தியோ, அவர்களின்‌ சிறப்பை எடுத்துக்‌ கூறியோ துஆ கேட்பதின்‌ மூலமாகப்‌ பெறக்‌ கூடியதல்ல. அவர்களின்‌ நெறிமுறைகளை மனிதன்‌
பின்பற்றியொழுகும்‌ பொழுதுதான்‌ அவர்களால்‌ இவன்‌ பயனடைந்தான்‌ என்று கருதப்படும்‌. 

வாழ்நாள்‌ முழுவதும்‌ நபியவர்களின்‌ வழியை மீறி நடந்து விட்டு பின்பு ஒருநாள்‌ அவர்களின்‌ பொருட்டையும்‌, மதிப்பையும்‌ எடுத்துரைத்துப்‌ பிரார்த்திப்பவன்‌ கீழ்வரும்‌ இம்மனிதனுக்கு ஒப்பாகிறான்‌: இவன்‌ ஏதோ ஒரு மனிதரிடம்‌ சென்று
'இன்னவர்‌ தங்களுக்கு முழுக்கவும்‌ கீழ்படிந்து நடப்பதின்‌ காரணத்தினால்‌ அவரை தாங்கள்‌ நேசிக்கிறீர்கள்‌. தாங்களிடம்‌ அவருக்கு பெரும்‌ மதிப்பு உண்டு. இம்மதிப்பின்‌ பொருட்டால்‌ என்‌ தேவையை நிறைவேற்றித்‌ தாரும்‌' என்று கூறி வேண்டினான்‌.

ஒரு மனிதனுக்கு மற்றவன்‌ கீழ்படிந்து நடந்ததினால்‌ இம்மனிதர்‌ அவரை நேசிக்கிறார்‌. இதற்கும்‌ இவன்‌ சென்று அம்மனிதரிடம்‌ இன்னொருவனின்‌ வழிபாட்டையும்‌, அதனால்‌ கிடைத்த அம்மனிதரின்‌ அன்பையும்‌ காரணம்‌ காட்டி அதைப்‌ பொருட்டாக வைத்து வேண்டுவதற்கும்‌ எந்த சம்பந்தமுமில்லை.

இதைப்‌ போலவே அன்பியாக்கள்‌, ஸாலிஹீன்கள்‌ இவர்கள்‌ முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்கு கீழ்படிந்ததினால்‌, அல்லாஹ்‌ அவர்களை நேசித்தான்‌. அவர்களுக்கு மதிப்பையும்‌, கண்ணியத்தையும்‌ அளித்தான்‌. அவர்களின்‌ படித்தரத்தை
மேன்மையாக்கினான்‌. இப்படியிருக்க, இப்படித்‌ தரங்களையும்‌, மேன்மையையும்‌ முன்வைத்து அவற்றைப்‌ பொருட்டாகக்‌ கொண்டு ஒரு மனிதன்‌ அல்லாஹ்விடம்‌ பிரார்த்தித்தால்‌ ஏதோ தொடர்பற்ற சம்பந்தமில்லாத ஒன்றை எடுத்துக்‌ கூறி
பிரார்த்திக்கிறான்‌ என்று விளங்கிக்‌ கொள்ள வேண்டும்‌. இதனால்‌ இப்பிரார்த்தனையும்‌
அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்களின்‌ கண்ணியத்தாலும்‌, மதிப்பாலும்‌, பொருட்டாலும்‌
அவன்‌ பயனடைய வேண்டுமானால்‌ - அவனுடைய பிரார்த்தனை அல்லாஹ்விடம்‌ அங்கீகரிக்கப்பட வேண்டுமானால்‌ அதற்குரிய காரணங்கள்‌ முதலில்‌ பிரார்த்திப்பவனிடம்‌ ஒருங்கிணைந்திருத்தல்‌ வேண்டும்‌. இல்லையெனில்‌ எத்தனை நாட்கள்‌ மண்டியிட்டுக்‌ குப்புறவிழ்ந்து இவர்களின்‌ பொருட்டை மட்டும்‌ வைத்து மன்றாடினாலும்‌ அது ஒரு
பயனையும்‌ அளிக்காது.

நபி (ஸல்‌) அவர்களை விசுவாசம்‌ கொண்டு அவர்களை நேசித்து அவர்களுக்குக்‌ கீழ்படிந்து, அவர்களின்‌ அடிச்சுவட்டைப்‌ பின்பற்றியொழுகுவதை முன்வைத்து
இவற்றைப்‌ பொருட்டாகக்‌ கொண்டு மனிதன்‌ பிரார்த்தித்தால்‌ இப்பிரார்த்தனை மிக நல்ல அமைப்பிலான பிரார்த்தனையாகும்‌. ஏனெனில்‌ முக்கியமான ஒரு காரணத்தை முன்‌ வைத்தல்லவா பிரார்த்திக்கப்படுகிறது. இதனால்‌ இப்பிரார்த்தனை அங்கீகரிக்கப்‌ படுவதற்கே ஏதுவாகி விடுகிறது. மேற்கூறிய அமல்களைப்‌ பொருட்டாக வைத்துக்‌
கேட்டால்‌ அதை நல்ல பொருத்தமான பிரார்த்தனை என்று கூறலாம்‌. இதுவே உதவி தேடுவதில்‌ விரும்பத்‌ தகுந்த அமைப்பாகும்‌.

நபி(ஸல்‌) அவர்கள்‌ 'மறுமையில்‌ என்‌ சிபாரிசுக்கு அருகதைப்‌ படைத்தவர்கள்‌ ஏகத்துவ வாதிகளான முஸ்லிம்களே. இது அல்லாத ஷிர்க்கில்‌ மூழ்கி கிடப்பவர்களான முஷ்ரிக்குகள்‌ அல்ல' என்று கூறினார்கள்‌. நபிகளுக்கு வஸீலா என்ற பதவியை
அல்லாஹ்‌ அருள்‌ புரிய அவனிடம்‌ பிரார்த்தனை செய்பவர்களுக்கும்‌ நபியின்‌ சிபாரிசு கிடைக்கிறது.

நபியவர்கள்‌ கூறினார்கள்‌: 'முஅத்தின்‌ பாங்கு சொல்வதை நீங்கள்‌ கேட்கும்‌ போது அவர்‌ கூறுவது போல நீங்களும்‌ (மெதுவாகச்‌) சொல்லுங்கள்‌. பின்னர்‌ என்மீது ஸலாவாத்துச்‌ சொல்லுஙகள்‌. ஏனெனில எனக்கு ஒரு விடுத்தம்‌ யாராகிலும்‌ ஸலவாத்துக்‌ கூறினால்‌ பத்து விடுத்தம்‌ அவருக்கு அல்லாஹ்‌ அருள்‌ பாலிக்கிறான்‌. அதன்‌ பிறகு எனக்காக வஸீலாவை அல்லாஹ்விடம்‌ கேளுங்கள்‌. இந்த வஸீலா என்பது சுவனத்தில்‌ உள்ள ஒரு பதவியின்‌ பெயராகும்‌. மக்களில்‌ ஏதோ ஒருவருக்குத்தான்‌ அது கிடைக்கும்‌. அவர்‌ நானாக இருப்பதற்கு ஆசைப்படுகிறேன்‌.
யாராவது எனக்காக அல்லாஹ்விடம்‌ வஸீலாவைக்  கேட்டுப்‌ பிரார்த்தித்தால்‌ அவர்‌ என்‌ ஷபாஅத்திற்கு உரியவராக ஆகி விடுகிறார்‌

அபூஹுரைரா (ரலி) அவர்கள்‌ நபியவர்களிடம்‌: யா ரஸுலுலலாஹ்‌! மறுமையில்‌ தாங்கள்‌ சிபாரிசைப்‌ பெற்று அதனால்‌ மிக அபிமானம்‌ பெறுபவர்கள்‌ யார்‌? என்று வினவினார்கள்‌. அதற்கு நபியவர்கள்‌ கலப்பற்ற தூய்மையான உள்ளத்தால்‌ மெய்யாக யார்‌ கலிமா ஷஹாதாவை மொழிந்தாரோ அவர்தான்‌ என்‌ சிபாரிசினால்‌ மிக அபிமானம்‌ அடைவார்‌' எனப்‌ பதில்‌ உரைத்தார்கள்‌.

நபிகளின்‌ சிபாரிசைப்‌ பெற்று அதனால்‌ பயன்பெற ஏக இறைநம்பிக்கை உள்ளத்தில்‌ குடிகொள்ள வேண்டும்‌. இதுவே இந்த ஹதீஸின்‌ தாத்பரியமாகும்‌. ஏனெனில்‌ ஏகத்துவம்‌ இஸ்லாத்தின்‌ அடித்தளம்‌. எத்தனை பெரிய பாவங்களை மனிதன்‌ செய்தாலும்‌ அல்லாஹ்‌ அவனை மன்னித்தருள முடியும்‌. ஆனால்‌ இணைவைத்தலை எவ்வாறு மன்னிக்கப்படும்‌? இறைவனின்‌ சன்னிதானத்தில்‌ அவனுடைய அனுமதியின்றி
யாருக்கும்‌ சிபாரிசு செய்ய அனுமதியில்லை. 

அல்லாஹ்வின்‌ அனுமதியைப்‌ பெற்ற பின்னர்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ சிபாரிசு செய்ய ஆயத்தமானால்‌ கூட ஏகத்துவவாதிகளை மட்டுமே இந்த சிபாரிசினால்‌ காப்பாற்றி சுவனத்தில்‌ நுழைவிக்கச்‌ செய்வார்களேயொழிய மற்றவர்களுக்கு இந்த சிபாரிசினால்‌ ஒரு பயனுமில்லை.

இதிலிருந்து இன்னொன்றையும்‌ புரிந்து கொள்ளலாம்‌. நபிகள்‌ நாயகத்திற்கு வஸீலா என்ற பதவியை அல்லாஹ்விடம்‌ கேட்டு பிரார்த்தித்து அவர்களின்‌ ஷபாஅத்துக்‌ கிடைக்க வேண்டுமானால்‌ அவர்களைக்‌ கொண்டு முழுக்க விசுவாசமும்‌ கொண்டிருக்க
வேண்டும்‌. வெறும்‌ துஆவை மட்டும்‌ நபிகளுக்காக வேண்டினால்‌ அது ஷபாஅத்துக்‌ கிடைத்து விட காரணமாகாது. அவர்களைக்‌ கொண்டு விசுவாசமும்‌ கொள்ள வேண்டும்‌. அவர்கள்‌ இறைவனிடமிருந்து கொண்டு வந்த உண்மைகளை மெய்ப்பித்து அவர்களைத்‌ தம்‌ வாழ்விலும்‌ முன்மாதிரியாக எடுத்துக்‌ கொள்ள வேண்டும்‌. இதையெல்லாம்‌ செய்து
விட்டு அவர்களுக்காக வஸீலா என்ற பதவியை அல்லாஹ்‌ அருள்புரிய அவனிடம்‌ பிரார்த்திக்க வேண்டும்‌. இவை அனைத்தும்‌ மனிதனிடம்‌ ஒன்றிணைந்தால்‌ மட்டுமே அவன்‌ நபிகளின்‌ சிபாரிசைப்‌ பெறத்‌ தகுதி பெறுகிறான்‌.

மனிதன்‌ தன்‌ பிரார்த்தனையில்‌ இன்னாரின்‌ பொருட்டால்‌, அவரின்‌ உரிமையால்‌ என்று கூறிக்‌ கேட்கும்‌ போது மனிதனுக்கு ஏதோ சில உரிமைகள்‌ அல்லாஹ்விடம்‌ இருப்பதாக நினைக்கக்‌ தோன்றுகிறதல்லவா? இப்படி நினைத்தல்‌ சுன்னத்‌ வல்‌
ஜமாஅத்தினரின்‌ போக்கல்ல என விளங்கிக்‌ கொள்ள வேண்டும்‌. மாறாக இது முஃதஸிலாக்களின்‌ கொள்கையாகும்‌. இவர்கள்‌ இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பிரிவினராவர்‌. 'மனிதனுக்குச்‌ செய்ய வேண்டிய எந்த செயலுமே அல்லாஹ்வின்‌ மீது
கடமையாகவில்லை' என்று வேறு சிலர்‌ கூறுகின்றனர்‌.

அவன்‌ தன்‌ அடியார்களுக்குச்‌ செய்கின்ற அனுக்கிரகங்கள்‌, நன்மைகள்‌ அனைத்துமே
அவன்‌ அருள்‌ கிருபை என்ற அமைப்பிலாகும்‌. அல்லாஹ்‌ தன்மீது அடியார்களுக்கு அருள்‌ பாலிப்பதை ஏற்படுத்தி வைக்கிருக்கிறான்‌. மூமினான படைப்பினங்களுக்கு இத்தகைய இரக்கமான கூலிகளை அளிப்பதாக தன்மீது இறைவன்‌ தானாகவே ஏற்படுத்தியுள்ளான்‌. அவர்களுக்கு அநீதி இழைப்பதை தன்மீது விலக்கியிருக்கிறான்‌
அல்லவா? சிருஷ்டிகளுக்கு எந்தச்‌ செயலை அல்லாஹ்‌ செய்தாலும்‌ அது கடமை என்ற அடிப்படையிலல்ல. மாறாக அவன்‌ தன்‌ மீது ஏற்படுத்திக்‌ கொண்ட இரக்கம்‌, நேர்மை, நீதி என்பன போன்ற குணங்களுக்கு, தன்மைகளுக்கும்‌ உட்பட்டதாகும்‌. ஹதீஸுல்‌ குத்ஸியிலும்‌ இந்த உண்மையை நம்மால்‌ பார்க்க முடிகிறது. அதில்‌ இறைவன்‌
குறிப்பிடுகிறான்‌: “அடியார்களே! என்மீது நான் அநீதியை விலக்கிக் கொண்டேன்; இந்த அநீதியை விட்டும் உங்களையும் விலக்குகின்றேன்”

திருமறையும்‌ இதை எடுத்துக்‌ கூறுகிறது:
உங்கள் இறைவன் அருள் புரிவதை தன்மீது கடமையாக்கிக் கொண்டான்(6:54). விசுவாசிகளுக்கு உதவி செய்வது நம்மீது கடமையாகி விட்டது.(30:47)

முஆத்‌ (ரலி) அவர்கள்‌ ஒரு ஹதீஸில்‌ கூறுகிறார்கள்‌: நபியவர்கள்‌ முஆதிடம்‌ முஆதே! அல்லாஹ்வுக்காக அடியார்கள்‌ செய்ய வேண்டிய (ஹக்குகள்‌) கடமைகள்‌
யாவை என்பது பற்றி உமக்குத்‌ தெரியுமா? எனக்‌ கேட்டார்கள்‌. அதற்கு அல்லாஹ்வும்‌, ரஸுலும்‌ தான்‌ நன்கறிவார்கள்‌ என நான்‌ கூறினேன்‌. பின்‌ நபியவர்கள்‌
தூய்மையான உள்ளத்துடன்‌ அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு அவனுக்கு இணைதுணை கறபிக்காமல்‌ இருப்பதுதான்‌ அல்லாஹ்வுக்காக அடியார்கள்‌ செய்ய
வேண்டி (ஹக்குகள்‌) கடமைகள்‌ என்று கூறினார்கள்‌. பின்‌ நபியவர்கள்‌ முஆதே! அடியார்கள்‌ இவற்றைப்‌ புரிந்தால்‌ அவர்களுக்காக அல்லாஹ்வின்‌ மீது என்ன
கடமையுண்டு? என்று கேட்டார்கள்‌. பின்னர்‌ இதற்கு நபியவர்களே அதாவது அடியார்களை வேதனைப்‌ படுத்தாமலிருப்பதே அவன்‌ மீதுள்ள (ஹக்காகும்‌)
கடமையாகும்‌ என்று விளக்கம்‌ கூறினார்கள்‌.

இந்த ஹதீஸின்‌ வெளிச்சத்தில்‌ நபிமார்கள்‌, ஸாலிஹீன்கள்‌ போன்ற நல்லடியார்களுக்கும்‌ தூய்மையான உள்ளத்துடன்‌ அல்லாஹ்வுக்குக்‌ கீழ்படிந்து நடப்பவர்களுக்கும்‌ (அவர்கள்‌ சுவாதீனம்‌ செலுத்தும்‌) ஏதோதோ சில உரிமைகள்‌ (ஹக்குகள்‌) அல்லாஹ்வின்‌ மீது இருப்பதாக விளங்க முடிந்தாலுமிந்த (ஹக்கை) பாத்தியதைகளைக்‌ கொண்டு அவனுடைய ரஹ்மத்‌ எனும்‌ அருளை நாட வேண்டும்‌. மனிதர்கள்‌ தமக்கிடையில்‌ சில விஷயங்களை அமைத்துக்‌ கொண்டு சுவாதீனம்‌
செலுத்துகின்ற பாத்தியதைகளைப்‌ போன்று எண்ணி விடக்‌ கூடாது.

மனிதர்கள்‌ புரிகின்ற வணக்க வழிபாடுகளினால்‌ அவர்கள்‌ சுவாதீனம்‌ செலுத்துகின்ற ஒரு பாத்தியதையையும்‌ அல்லாஹ்வின்‌ மீது சுமத்தி விட முடியாது. மனிதர்கள்‌ தம்‌ வழிபாட்டினால்‌ அல்லாஹ்‌ அவர்களுக்குக்‌ கூலி கொடுத்தல்‌ அவன்‌ மீது கடமையாகி விட்டது என நினைக்கும்‌ போது அங்கே ஈமானுக்குப்‌ பழுது ஏற்பட்டு விடுகிறது.
முஸ்லிம்கள்‌ தம்‌ பிரார்த்தனைகளில்‌ எடுத்துக்‌ கூறி சுவாதீனம்‌ செலுத்திக்‌ கேட்கும்‌ அளவுக்கு எந்த ஒரு பாத்தியதையும்‌ மனிதர்களுக்கு அல்லாஹ்வின்‌ மீது இல்லவே இல்லை. இந்த உண்மையை நபி தாவூத்‌ (அலை) அவர்களின்‌ சம்பவம்‌ சுட்டிக்‌ காட்டுகிறது. அதில்‌ அல்லாஹ்‌ நபி தாவூத்‌ (அலை) அவர்களைப்‌ பார்த்து உம்முடைய மூதாதையர்களுக்கு என்மீது என்ன (ஹக்கு) பாத்தியதை இருக்கிறது என்று
கேட்கிறான்‌.

இதிலிருந்து மனிதர்கள்‌ தமக்கு மத்தியில்‌ ஒருவர்‌ மற்றவர்‌ மீது செலுத்துகின்ற சுவாதீனங்களைப்‌ போன்று அல்லாஹ்வின்‌ மீது எந்தப்‌ பாத்தியதையும்‌,
சுவாதீனத்தையும்‌ சுமத்தி விடக்‌ கூடாது என்பது தெளிவாகிறதல்லவா? விபரமுல்லாமல்‌ அல்லாஹ்வை ரொம்ப வணங்குவதாக நினைத்துக்‌ கொண்டிருக்கும்‌
சில போலி வணக்கசாலிகள்‌ தம்‌ வணக்கங்களுக்குக்‌ கூலி வழங்கும்‌ பாத்தியதையை அல்லாஹ்வின்‌ மீது சுமத்தி அவனுக்குக்‌ கடமையாக்கி விடுகிறார்கள்‌. இதனால்‌ இவர்கள்‌ தம்‌ வணக்கத்தை பாழாக்கி விடுகிறார்களேயொழிய எந்தப்‌ பயனையும்‌
அடைய மாட்டார்கள்‌. 

மன்னருக்கு வேலைக்காரன்‌ பணிவிடை புரிவதினால்‌
மன்னரிடமிருந்து பற்பல பலாபலன்களைப்‌ பெறுகிறான்‌. வேலையாட்களுக்குப்‌ பற்பல ஒத்தாசை உதவிகளை மன்னன்‌ செய்துக்‌ கொடுக்கிறான்‌. அவர்களுக்கு ஏற்படும்‌ சிரமங்களையும்‌, தொல்லைகளையும்‌ விட்டும்‌ அவர்களைக்‌ காப்பாற்ற மன்னன்‌ ஏற்பாடு செய்கிறான்‌. இது மன்னன்‌ மீது கடமையாகிறது.

மன்னனின்‌ பணியாளர்கள்‌ தாம்‌ செய்த பணியின்‌ கூலியை மன்னனிடமிருந்து எதிர்பார்த்து செயல்பட்டது போல இறைவனையும்‌ சில போலி வணங்கிகள்‌ மன்னனுக்கு ஒப்பிடுகிறார்கள்‌. தமது வணக்க வழிபாட்டின்‌ கூலிகளை அல்லாஹ்வின்‌
மீது கடமையாக்கி விடுகிறார்கள்‌. இதனால்‌ அல்லாஹ்வை மனித இனத்சைச்‌ சார்ந்த
ஒரு மன்னனுக்கு ஒப்பிட்டுக்‌ கூறி அவனுக்கு ஒப்புவமை கொடுத்து விடுகிறார்கள்‌. மனிதர்களிலுள்ள இந்த அரசனையும்‌, மற்றவர்களையும்‌ படைத்த இறைவனுக்கும்‌, அரசனுக்கும்‌ இடையிலுள்ள வித்தியாசத்தை இவர்கள்‌ விளங்கவில்லை. அரசன்‌ தன்‌ பணியாளர்களின்‌ சேவையை எதிர்‌ நோக்கி நிற்கின்றான்‌. இச்சேவை அரசனுக்குப்‌
பெரிதும்‌ தேவை. ஆனால்‌ இறைவனுக்கு மனிதனின்‌ வணக்கங்கள்‌ தேவையா? இல்லவே இல்லை. வணக்க வழிபாடுகளுக்கு வருவோமேயானால்‌ மனிதர்களின்‌
வணக்கம்‌ அல்லாஹ்வுக்குத்‌ தேவையே இல்லை. வணக்கங்களை மனிதன்‌ தன்‌ சுய நன்மைகளை நாடியே புரிகிறானேயொழிய அல்லாஹ்வுக்குக்‌ தன்‌ சிருஷ்டிகளின்‌ எந்த வழிபாடும்‌ தேவையில்லை. அவன்‌ தேவைகளில்லாதவன்‌. எனவே தான்‌ கூறினோம்‌.
இந்த உண்மையைத்‌ திருமறையும்‌ கூறுகிறது:

பாருங்கள், நீங்கள் நன்மை செய்த போது, அது உங்களுக்கு நன்மையாய் இருந்தது. நீங்கள் தீமை செய்தபோது அது உங்களுக்குத் தீமையாய் இருந்தது. பிறகு, இரண்டாவது சந்தர்ப்பம் வந்தபோது வேறு பகைவர்களை உங்கள் மீது நாம் சாட்டினோம். அவர்கள் உங்கள் முகங்களை உருக்குலைத்திட வேண்டும்; மேலும், முந்தைய பகைவர்கள் முதல் தடவை எவ்வாறு (பைத்துல் முகத்தஸ்) பள்ளியில் நுழைந்தார்களோ அவ்வாறு இவர்களும் அங்கே நுழைந்து, தங்கள் கைக்கு எட்டியவற்றையெல்லாம் அழித்துவிட வேண்டும் என்பதற்காக!”
(அல்குர்ஆன்: 17:7)

மற்றொரு வசனத்தில்‌ இறைவன்‌ கூறுகிறான்‌:

யாரேனும் நற்செயல் புரிந்தால் அவர் தனக்கே நன்மை செய்து கொள்கின்றார். மேலும், யாரேனும் தீமை செய்தால் அதன் தீய விளைவு அவரையே சாரும். உம் இறைவன் தன் அடிமைகளுக்கு கொடுமை இழைப்பவன் அல்லன்.
(அல்குர்ஆன்: 41:46)

இன்னொரு வசனத்தில்‌ இறைவன்‌ கூறுகிறான்‌:

நீங்கள் நிராகரிப்பீர்களாயின் திண்ணமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன். ஆனால், அவன் தன் அடியார்களிடம் நிராகரிப்பை விரும்புவதில்லை. மேலும், நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், அதனை அவன் உங்களுக்காக விரும்புகின்றான். சுமை சுமப்பவர் எவரும் பிறரின் சுமையைச் சுமக்கமாட்டார். இறுதியில், உங்கள் இறைவனின் பக்கமே நீங்கள் எல்லோரும் திரும்ப வேண்டியுள்ளது. அப்பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை அவன் உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். திண்ணமாக, அவன் உள்ளங்களின் நிலைமைகளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 39:7)

இன்னொரு வசனத்தில்‌ இறைவன்‌ கூறுகிறான்‌:

அவர்களுள் ஓரளவு வேத அறிவைப் பெற்றிருந்த ஒருவர் “நீங்கள் கண்மூடித் திறப்பதற்குள் அதை உங்களிடம் நான் கொண்டு வந்து விடுகின்றேன்” என்று கூறினார். அவ்வாறே அவ்வரியணை தம்மிடத்தில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதுமே ஸுலைமான் (உரக்கக்) கூறினார்: “இது என் இறைவனின் அருட்கொடையாகும்; நான் நன்றி செலுத்துகின்றேனா, நன்றி கொல்கின்றேனா என என்னை அவன் சோதிப்பதற்காக! மேலும், யாரேனும் நன்றி செலுத்தினால் அவருடைய நன்றி அவருக்கே நன்மை தரும். தவிர, யாரேனும் நன்றி கொன்றால் திண்ணமாக, என்னுடைய இறைவன் தேவைகள் அற்றவனாகவும், பெரும் கண்ணியமிக்கவனாகவும் இருக்கின்றான்!”
(அல்குர்ஆன்: 27:40)

மேலும், உங்கள் இறைவன் இவ்வாறு அறிவித்திருந்ததையும் நினைவு கூருங்கள்: “நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் நிச்சயம் நான் உங்களுக்கு மேன்மேலும் வழங்குவேன்; நீங்கள் நன்றி கொல்வீர்களாயின் திண்ணமாக எனது தண்டனை மிகக்கடுமையானதாகும்.”
(அல்குர்ஆன்: 14:7)

மேலும், மூஸா கூறினார்: “நீங்கள் நிராகரிக்கிறீர்கள் என்றால், ஏன் பூமியில் உள்ள அனைவருமே நிராகரிப்பாளர்களாய் ஆகிவிட்டாலும் கூட திண்ணமாக அல்லாஹ் தேவைகளற்றவனாகவும் தனக்குத்தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்.”
(அல்குர்ஆன்: 14:8)

(நபியே! இன்று) இறைநிராகரிப்பின் வழியில் மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்(களின் நடவடிக்கை)கள் உம்மைத் துயரத்தில் ஆழ்த்திட வேண்டாம். நிச்சயமாக அவர்களால் அல்லாஹ்வுக்குச் சிறிதும் தீங்கு விளைவித்திட முடியாது. அவர்களுக்கு மறுமையில் எத்தகைய நற்பேறும் கிடைக்கக்கூடாது என்பது அல்லாஹ்வின் நாட்டமாகும். இறுதியில் அவர்களுக்கு மிகப்பெரும் தண்டனையும் கிடைக்கும்.
(அல்குர்ஆன்: 3:176)

இன்னொரு இடத்தில்‌ இறைவன்‌ கூறுகிறான்‌:

அங்குத் தெளிவான சான்றுகளும் இப்ராஹீம் நின்று தொழுத இடமும் உள்ளன. மேலும் (அது எத்தகைய ஆலயமெனில்) அங்கு எவர் நுழைந்தாலும் அவர் அச்சமற்றவராகி விடுகின்றார். மேலும், அந்த ஆலயத்திற்குச் சென்றுவர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்காக ஆற்றவேண்டிய கடமையாகும். ஆனால் யாரேனும் இக்கட்டளையைச் செயல்படுத்த மறுத்தால் (அவர் தெரிந்து கொள்ளட்டும்) உலகத்தார் அனைவரை விட்டும், நிச்சயம் அல்லாஹ் தேவையற்றவனாய் இருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 3:97)

நாம் அல்லாஹ்வுக்காக செய்கிற அமல்களை அவன்மீது எடுத்துரைத்து தமக்குரிய பாத்தியதைகளை கூறுவதற்கு முன்னர் அல்லாஹ்வே நம்மீது அவன் புரிந்த பேருதவிகளை எடுத்துக் கூறி விளக்கம் தருகிறான்.

இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை உமக்குச் செய்த பேருதவியாகச் சொல்லிக்காட்டுகிறார்கள். இவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதை எனக்குச் செய்த பேருதவியாகச் சொல்லிக்காட்டாதீர்கள்! மாறாக, நம்பிக்கை கொள்வதற்கான வழிகாட்டுதலை அருளியதன் மூலம் அல்லாஹ்தான் உங்களுக்குப் பேருதவி செய்திருக்கின்றான். (நம்பிக்கை கொண்டதாக வாதிடுவதில்) நீங்கள் வாய்மையாளர்களாய் இருந்தால்!
(அல்குர்ஆன்: 49:17)

பிறிதொரு வசனத்தில்‌ இறைவன்‌ கூறுகிறான்‌:

நன்றாக அறிந்து கொள்ளுங்கள்; உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கின்றார்; பல விவகாரங்களில் உங்கள் சொல்லை அவர் ஏற்றுக் கொள்வாராயின், நீங்கள்தாம் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்கள். ஆனால், அல்லாஹ் உங்களுக்கு (ஈமானில்) நம்பிக்கையில் பற்றுதலை ஏற்படுத்தினான். அதனை உங்கள் உள்ளத்திற்கு உகந்ததாய் ஆக்கினான். மேலும், நிராகரிப்பையும் பாவம்புரிவதையும் மாறுசெய்வதையும் உங்களுக்கு வெறுப்புக்குரியனவாய் ஆக்கினான். இத்தகையவர்களே நேரியவழியில் இருப்பவர்கள்;
(அல்குர்ஆன்: 49:7)

அல்லாஹ்வின் அருளாலும் தயவாலும். இன்னும் அல்லாஹ் மிகவும் அறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 49:8)

ஹதீஸ் குத்ஸியில் இறைவன் கூறுகிறான்: 

என்னுடைய அடியார்களே ஒருபோதும் உங்களால் எனக்கு நன்மை செய்யவோ தீங்கிளைக்கவோ இயலாது நீங்கள்‌ எத்தனையோ குற்றங்கள்‌ புரிந்து கொண்டிருக்கின்றீர்கள்‌. நான்‌ அவையனைத்தையும்‌ மன்னித்து விட்டேன்‌. ஆகவே என்னிடம்‌ மன்னிப்பைக்‌ கேளுங்கள்‌. உங்களை மன்னித்து விடுகிறேன்‌. என்‌ அடியார்களே! உங்களில்‌ தோன்றிய முன்னோர்கள்‌, பின்வருவோர்கள்‌, மனு-ஜின்‌ வர்க்கத்தினர்‌ எல்லோரின்‌ இதயங்களும்‌ பாவம்‌ செய்யும்‌ இயல்புடையதாக மாறி விட்டால்‌ கூட அவை என்னுடைய ஆட்சி பலத்தை எள்ளவும்‌ குறைத்து விடாது. என்‌ அடியார்களே! இதற்கு மாறாக உங்களிலுள்ள மானிடர்கள்‌ மற்றும்‌ ஜின்‌ இனங்கள்‌ மேலும்‌ தொன்றுதொட்டே தோன்றிய, மறுமை நாள்‌ வரையில்‌ தோன்றவிருக்கும்‌ படைப்புகள்‌ அனைத்தின்‌, அனைவரின்‌ இதயங்களிலெல்லாம்‌ இறைபக்தி நிரம்பிய ஓர்‌ இதயமாக மாறிவிட்டால்‌ கூட இதனால்‌ இவை என்னுடைய ஆட்சி அதிகாரத்தில்‌ ஒரு அணுவளவைக்‌ கூட அதிகமாக்கி விடப்‌ போவதில்லை. என்‌ அடியார்களே! நீங்கள்‌ அனைவரும்‌ ஒன்று திரண்டு ஒரே திடலில்‌ ஒரே குரலில்‌ நின்று தத்தம்‌ தேவைகளை வேண்டி அதற்கொப்ப
நான்‌ உங்கள்‌ அனைவருக்கும்‌ அவரவர்‌ வேண்டுகோளுக்கிணங்க தந்துவிட்டேனென்றால்‌ கூட அதுவும்‌ என்னுடைய பொக்கிஷத்தைக்‌ குறைத்து விடப்‌ போவதில்லை. சமுத்திரத்தில்‌ முக்கப்பட்ட ஊசியின்‌ முனையிலிருக்கும்‌ ஈரநைப்பால்‌
சமுத்திரம்‌ எந்த அளவு குறையுமோ அந்த அளவுக்குத்தான்‌ என்னுடைய பொக்கிஷத்தைக்‌ குறைக்குமேயொழிய வேறு எவற்றையும்‌ அதிகமாகக்‌ குறைத்து விடாது.


இறைவனுக்கும்‌ படைப்பினங்களுக்குமிடையேயுள்ள வேறுபாடு

பகுத்தறிவு படைத்தவன்‌ தன்னைப்‌ படைத்த இறைவனுக்கும்‌, படைக்கப்பட்ட படைப்புகளுக்கும்‌ இடையிலுள்ள பல வித்தியாசங்களை விளங்கிக்‌ கொள்வான்‌. ஒன்று: அல்லாஹ்‌ பிறரின்‌ வணக்க வழிபாடுகளில்‌ இருந்தெல்லாம்‌ தேவையற்றவன்‌. அவன்‌ ஒருபோதும்‌ தன்‌ அடியார்களை வேண்டி நிற்க மாட்டான்‌. பிறரை வேண்டி நிற்பது மனிதப்‌ பண்பல்லவா! எத்தனைப்‌ பெரிய மாமன்னரானாலும்‌ பிறரின்‌ உதவி ஒத்தாசைகளை விட்டு விலகி நின்று வாழ முடியாது.

இரண்டு: நற்கருமங்களை அல்லாஹ்‌ விரும்புகிறான்‌. அவற்றால்‌ திருப்தியடைகிறான்‌ என்பவையெல்லாம்‌ உண்மைதான்‌. பாவமன்னிப்புக்‌ கோரி மீள்கிறவர்களைப்‌ பெரிதும்‌ நேசிக்கிறான்‌. இதுவும்‌ உண்மையான விஷயம்தான்‌. ஆனால்‌ இவற்றை அவன்‌
தேவைப்படுகிறவன்‌ என்று நினைக்கக்‌ கூடாது. அவன்‌ ஒரு செயலை விரும்புதல்‌ அவன்‌ தேவைப்படுவதினால்‌ அல்ல. அடியார்களது நற்செயல்களில்‌ அவனுக்கென்ன தேவை வந்து விடப்‌ போகிறது? அப்படி ஒன்றுமே இல்லை. இவை எதுவுமே
அல்லாஹ்வுக்கு தேவையுமில்லை. ஏன்‌? அவன்தான்‌ இந்நல்லமல்களைச்‌ செய்ய வேண்டும்‌, தவ்பாச்‌ செய்து மீள வேண்டும்‌ என்றெல்லாம்‌ எண்ணத்தையே மனிதர்களின்‌ இதயங்களில்‌ பிறக்கச்‌ செய்கிறான்‌. 

அப்படியானால்‌ அவை அவனுக்குத்‌
தேவைப்படுகின்றன என எந்த பகுத்தறிவுடையோனும்‌ நினைக்க முடியாதல்லவா! விசுவாசம்‌ என்ற ஈமான்‌ அல்லாஹ்‌ அளித்த மிகப்‌ பெரிய அனுக்கிரகமாகும்‌.
இதைவிடப்‌ பெரிய அனுக்கிரகத்தை அல்லாஹ்‌ அடியார்களுக்கு அருள்‌ புரியவில்லை.

சுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினர்களின்‌ அபிப்பிராயமும்‌ இப்படித்தான்‌. விசுவாசம்‌ (ஈமான்‌) என்ற பெரும்‌ அனுக்கிரகத்தையே படைப்பினங்கள்‌ மீது அவன்‌ அருள்‌ புரிந்திருக்கும்‌ போது இனி அவனால்‌ அருள்‌ புரியப்படாதவை ஒன்றுமில்லை. அல்லாஹ்‌ தான்‌
விரும்பும்‌ அனைத்தையும்‌ தானே படைத்துக்‌ காத்து பரிபாலிக்கும்‌ அருகதை அவனுக்கிருக்கும்‌ போது அவற்றில்‌ அவனுக்குத்‌ தேவையுண்டு என்று எவரும்‌ கூற முடியாது. மனிதனைப்‌ பொறுத்த வரையில்‌ மனிதன்‌ ஒன்றை விரும்பினால்‌ அவன்‌
அதை சிருஷ்டித்து விட முடியாது.

மூன்று: மனிதர்களுக்குப்‌ பயன்தரும்‌ செய்கைகளைக்‌ கொண்டு மட்டுமே அவர்களை அல்லாஹ்‌ பணித்துள்ளான்‌ என்று கூறினோம்‌. அவர்களுக்குத்‌ தீங்கு விளைவிக்கின்றவற்றை விட்டும்‌ அவர்களைத்‌ தடுத்துள்ளான்‌. கதாதா (ரலி) அவர்கள்‌ இதை அழகாக எடுத்துரைக்கிறார்கள்‌: 'செப்ப வேண்டுமென மனிதனை இறைவன்‌ பணித்திருக்கும்‌ ஏவல்கள்‌ அடங்களிலும்‌ அவர்களின்‌ நலம்தான்‌
கருதப்படுகிறதேயல்லாது அலலாஹவுக்கு அவற்றில்‌ தேவை இருப்பதினால்‌ அல்ல.

அல்லாஹ்‌ தடுத்திருக்கும்‌ விலக்கல்களும்‌ இப்படித்தான்‌. அவற்றில்‌ மனிதர்களுக்குக்‌
கெடுதி இருக்கிறதினால்‌ மட்டுமே அவற்றை விட்டும்‌ மனிதர்களை விலக்கி இருக்கிறானேயொழிய வேறொன்றினாலுமல்ல. ஆனால்‌ இவற்றை மனிதனால செய்ய முடியுமா? மனிதனால்‌ இத்தகைய அந்தரங்க மர்மங்களை நினைத்துக்‌ கூட பார்க்க
படியாது. மனிதன்‌ மற்றவனை நோக்கி பணிக்கின்ற ஏவல்களிலும்‌, தடுக்கின்ற விலக்கலகளிலும்‌ தனது சுய நலத்தையே உள்ளே மறைத்து வைத்திருப்பான்‌.

இப்பொழுது நாம்‌ விளக்கிய உண்மையைத்தான்‌ சுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தைச்‌ சார்ந்த அறிஞர்கள்‌ அனைவருமே ஏற்றிருக்கிறார்கள்‌. அல்லாஹ்வின்‌ ஏவல்கள்‌, விலக்கல்கள்‌ அனைத்தும்‌ மனிதர்களின்‌ நலனையும்‌, தீமையையும்‌ அடிப்படையாகக்‌ கணிக்கப்பட்டுத்‌ தீர்மானம்‌ செய்யப்பட்டுள்ளன. இவற்றில்‌ அல்லாஹ்வின்‌ கிருபையும்‌, நுட்பமான
தத்துவத்தையும்‌ வெளிப்படுத்த முடிகிறது. 'ஜபரிய்யா' போன்ற சுன்னத்‌ வல்‌ ஜமாஅத்திற்கு அப்பாற்பட்ட சில பிரிவினர்‌ இதற்கு நேர்மாறான அபிப்பிராயத்தைக்‌ கூறி வழி கெட்டார்கள்‌. மனிதன்‌ பலாத்காரமாக நடத்தப்படுகிறானென அவர்கள்‌ கூறியிருக்கிறார்கள்‌. 

மனிதனுக்குத்‌ தீங்கு விளைவிக்கும்‌ செயல்களை அல்லாஹ்‌ அவன்‌ மீது பணித்திருக்கிறான்‌ போலும்‌. அவனுக்கு நன்மை தரும்‌ செய்கையை விட்டும்‌ அவனை அல்லாஹ்‌ விலக்கியிருப்பதாக இப்பிரிவினர்‌ நம்புகிறார்கள்‌. எனவே இவர்களுக்கு ஜபரிய்யா என்று சொல்லப்படுகிறது. மனிதர்களுடன்‌ பெரிதும்‌ இரக்கம்‌
உள்ள இறைவன்‌ இப்படி ஒன்றும்‌ செய்ய மாட்டான்‌ என்பதை இப்பிரிவினர்கள்‌ மறுத்து விட்டார்கள்‌. 

எத்தனையோ திருத்தூதர்களை அனுப்பி வைத்து, வேதங்களை இறக்கித்‌ தன்‌ படைப்பினங்கள்‌ மீது அல்லாஹ்‌ இரங்கியிருக்கிறான்‌. பற்பல புலன்களையும்‌
எண்ணற்ற ஆற்றல்களையும்‌ அடியார்களுக்கு அனுக்கிரகமாக அளித்தான்‌. மனித சமூகத்தை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றினான்‌. தன்‌ அடியார்களுக்குச்‌ சாதகமான (நேர்‌) வழியைக்‌ காட்டி அவர்களை நன்மக்களாக வாழ வைப்பதில்‌ அல்லாஹ்வை விட இரக்கமானவன்‌ யார்‌ இருக்க முடியும்‌? சக்திகளெல்லாம்‌ அவனுக்கே சொந்தமானவை. இதைத்‌ தெரிந்து கொண்டு சுவனத்தில்‌ இருப்பவர்கள்‌ மறுமையில்‌ சொல்வார்களாம்‌"

 “எங்களுக்கு இவ்வழியினைக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அல்லாஹ் எங்களை நேர்வழியில் செலுத்தியிராவிடில், நாங்கள் நேர்வழியை அடைந்திருக்கவே மாட்டோம். உண்மையில், எங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தார்கள்.” (அந்நேரம்) கூறப்படும்: “நீங்கள் வாரிசுகளாக்கப்பட்ட சுவனம் இதுதான். நீங்கள் செய்து வந்த செயல்களுக்குப் பகரமாக இது உங்களுக்குக் கிடைத்திருக்கிறது!”
(அல்குர்ஆன்: 7:43)

இத்தகைய புகழுக்குரிய சாதனைகளை மனிதனால்‌ செய்ய முடியுமா?

நான்கு: அல்லாஹ்‌ மனிதனுக்கு அளித்த அனுக்கிரகங்களைக்‌ கணக்கிட்டு எண்ணிவிட முடியாது. மனிதர்கள்‌ அல்லாஹ்வுக்கு வழிபடுவதையும்‌,
வணங்குவதையும்‌ அனுக்கிரகங்களுக்கு நன்றி செலுத்தும் பாங்கில்‌ (இந்த எண்ணத்துடன்‌)
புரிவார்களானால்‌ அல்லாஹ்‌ அருளிய அனுக்கிரகங்களில்‌ ஒருசில அம்சங்களுக்குக்‌
கூட இவ்வணக்க வழிபாடுகள்‌ ஈடாகாது. மனிதன்‌ ஆயுள்‌ முழுவதும்‌ புரிந்த இபாதத்தின்‌ நிலை இப்படியானால்‌ இறைவனுக்குக்‌ கீழ்படியாதவனின்‌ நிலை என்ன? சுருங்கக்‌ கூறின்‌ மனிதன்‌ புரிகின்ற இபாதத்துகள்‌ கூட அல்லாஹ்வின்‌ அனுக்கிரகமாகவே கருதப்படல்‌ வேண்டும்‌. அப்படியானால்‌ இந்த இபாதத்‌ (வணக்கம்‌) எனும்‌ அனுக்கிரகத்துக்கு எதை நன்றியாக இறைவனுக்கு சமர்பிக்க முடியும?

ஐந்து: மனிதர்கள்‌ என்றுமே அல்லாஹ்வின்‌ பால்‌ தேவையுள்ளவர்கள்‌. அவர்களிடமிருந்து நிகழும்‌ குறைபாடுகளை சரிப்படுத்தும்‌ பொருட்டு என்றுமே
மனிதர்கள்‌ அல்லாஹ்வின்‌ மன்னிப்பை வேண்டி நிற்கிறார்கள்‌. மனிதர்கள்‌ அனைவரும்‌ தன்‌ வழிபாட்டினால்‌ மட்டும்‌ சுவனத்தில்‌ பிரவேசித்திட முடியாதல்லவா? அப்படி எவரும்‌ நினைக்கவும்‌ வேண்டாம்‌. மனிதர்களுள்‌ பாவத்தை விட்டு விலகியவர்கள்‌ நபிமார்களைத்‌ தவிர எவருமில்லை. அப்படியானால்‌ அல்லாஹ்வின்‌ மன்னிப்பை விட்டு
நீங்கி அதில்‌ தேவையற்றிருப்பவர்களும்‌ இருக்க முடியாது. இறைவன்‌ திருமறையில்‌
கூறுகிறான்‌:

அல்லாஹ் மக்களை அவர்கள் செய்யும் தீய செயல்களுக்காகத் தண்டிப்பானாகில், பூமியின் மீது எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்க மாட்டான். ஆயினும், அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவன் அவகாசம் அளித்துக் கொண்டிருக்கின்றான். பிறகு, அவர்களுக்குரிய காலம் பூர்த்தியானால் திண்ணமாக, அல்லாஹ் தன் அடிமைகளைப் பார்த்துக் கொள்வான்!
(அல்குர்ஆன்: 35:45)

எனவே மனிதன்‌ அல்லாஹ்விடமிருந்து பெறப்போகிற நற்கூலிகள்‌ அவன்‌ புரிந்த நற்கிரியைகள்‌ காரணமாக மாத்திரமல்ல. இருப்பினும்‌ இந்த நற்கிரியைகள்‌
அல்லாஹ்விடமிருந்து நற்கூலிகளைப்‌ பெறுவதற்குரிய ஒரு சின்ன ஏதுவாகவும்‌, ஒரு
சின்னக்‌ காரணமாகவும்‌ எடுத்துக்‌ கொள்ளலாம்‌. அல்லாஹ்வினால்‌ தன்‌ மீது சுமத்தப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றி விட்டதனால்‌ இறைவனின்‌ மன்னிப்புத்‌ தேவையில்லை என்று மனிதன்‌ கருதிக்‌ கொண்டால்‌ அவனைப்‌ போன்ற முட்டாள்‌ வேறு யாரும்‌ இருக்க முடியாது.

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌: உங்களுள்‌ எவரும்‌ தாம்‌ செய்த நல்லமல்களால்‌ மட்டும்‌ ஒருபோதும்‌ சுவனத்தில்‌ பிரவேசிக்க முடியாது' இதைக்‌ கேட்ட ஸஹாபாக்கள்‌ நாயகமே! தாங்களும்‌ அப்படித்தானா? என்று கேட்டார்கள்‌. அதற்கு 'நானும்‌ அப்படித்தான்‌. அல்லாஹ்வின்‌ அருளும்‌, கிருபையும்‌, மன்னிப்பும்‌ என்னைச்‌ சூழ்ந்து கொள்ளவில்லையானால நானும்‌ சுவனத்தில நுழைய முடியாது' என்று நபியவர்கள்‌
பதிலளித்தார்கள்‌. 

வேறொரு ஹதீஸில்‌: 'வானஙகளிலும்‌, தன்‌ பூமியிலுமுள்ள உயிரினங்கள்‌ அனைத்தையும்‌ சேர்த்து இறைவன்‌ வேதனைப்‌ படுத்தினால்‌ கூட அவன்‌ அவற்றுக்குத்‌ தீங்கிழைத்தவனாக ஆகி விட மாட்டான்‌. மாறாக அவற்றை இறைவன்‌ தன்‌ அருளால்‌ அணைத்துக்‌ கொண்டால்‌ அவற்றின்‌ வணக்க வழிபாடுகளைவிட இந்த அருள்‌ தான்‌ மேன்மைக்குரியதாக மிகைத்திருக்கும்‌' என்று நபியவர்கள்‌ கூறினார்கள்‌.

மனிதர்களுக்காக அல்லாஹ்வின்‌ மீது சில ஹக்குகள்‌ பாத்தியதைகள்‌ உண்டு என்று கூறுகிறவர்கள்‌ பாத்தியதை என்ற வார்த்தையின்‌ தாத்பரியத்தில்‌ 'இறைவன்‌ வாக்களித்துள்ள வாக்குறுதிகள்‌' என்ற கருத்தை நாடினால்‌ அது குற்றமில்லை.

ஏனெனில்‌ இறைவனின்‌ வாக்குறுதி நிச்சயமாக நிறைவேறியேயாகும்‌ என அவனே உறுதியளித்துள்ளான்‌. அவன்‌ என்றும்‌ மெய்யுரைப்பவன்‌ அல்லவா? ஒருபோதும்‌ வாக்குறுதி பிறழ மாட்டான்‌. அவன்‌ தன்‌ கிருபையாலும்‌, நுண்ணிய ஞானத்தாலும்‌ வாக்களித்ததற்கொப்பச்‌ செயல்படுவதைத்‌ தன்மீது கடமையாக்கி வைத்துள்ளான்‌.

'வாக்குறுதி' என்ற கருத்துக்குட்பட்ட பாத்தியதையை (ஹக்கை) எடுத்துக்‌ கூறி, அதன்‌ பொருட்டால்‌ பிரார்த்தனை செய்தால்‌ அந்த பிரார்த்தனையின்‌ சாரம்‌ அல்லாஹ்‌ நமக்களித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றும்படி அவனை வேண்டுதலாகும்‌. இதனால்‌
குற்றமேற்படாது. நல்ல அமல்களை முன்வைத்துப்‌ பிரார்த்தித்தாலும்‌ குற்றமில்லை.

ஏனெனில்‌ நல்ல அமல்கள்‌ என்பது அல்லாஹ்வின்‌ நற்கூலிகளையும்‌, மன்னிப்பையும்‌ பெறுவதற்குரிய ஒரு காரணமாகும்‌. அக்காரணத்தைக்‌ குறிப்பிட்டுப்‌ பிரார்த்தனை செய்தலும்‌ அனுமதிக்கப்‌ பட்டுள்ளது.

மேலும்‌ ஒன்றைக்‌ கவனிக்க வேண்டும்‌. மேற்கூறப்பட்ட ஹக்கு (பாத்தியதை) என்பதற்கு இறைவனின்‌ வாக்குறுதி என்ற கருத்தைக்‌ கண்டோம்‌. இக்கருத்தை
உள்ளடக்கிய பாத்தியதையைப்‌ பொருட்டாக வைத்து துஆ கேட்கலாம்‌ என்றும்‌ கூறினோம்‌. ஆனால்‌ அத்துடன்‌ அல்லாஹ்வின்‌ வாக்குறுதி எவருக்குக்‌ கிடைக்கும்‌ என்பதையும்‌ புரிந்து கொள்ள வேண்டும்‌. 

துஆவின்‌ போது இவற்றை மனதால்‌ சிந்தித்துக்‌ கொள்ள வேண்டும்‌. அல்லாஹ்வுக்கும்‌, ரஸூலுக்கும்‌ வழிபட்டு வாழ்க்கையை அமைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. அப்படியென்றால்‌ தானே அவனுடைய
வாக்குறுதிகள்‌ கிடைக்க முடியும்‌? அக்கிரமிகளுக்கும்‌, பாவிகளுக்கும்‌ அல்லாஹ்வின்‌ வாக்குறுதிகள்‌ ஒருபோதும்‌ கிடைக்காது. இவர்கள்‌ இந்த வாக்குறுதியைப்‌ பொருட்டாக வைத்துப்‌ பிரார்த்திப்பதற்குரிய அருகதையை இழந்து விடுகிறார்கள்‌. இதனால்‌ இவர்களின்‌ பிரார்த்தனையும்‌ அங்கீகரிக்கப்படுவது இல்லை. ஏனெனில்‌ இவர்கள்‌
தமக்குப்‌ பொருந்தாத ஒன்றை எடுத்துக்‌ கூறி அதன்‌ பொருட்டாலல்லவா கேட்கிறார்கள்‌. அப்படியானால்‌ கேட்பது எங்கே கிடைக்கப்‌ போகிறது?

ஒரு விஷயத்தை முன்னிறுத்தி அதைப்‌ பொருட்டாகக்‌ கொண்டு கேட்கப்படும்‌ துஆக்களில்‌ அல்லாஹ்வின்‌ அழகிய திருநாமங்களையும்‌, அவனுடைய
மேன்மைக்குரிய தன்மைகளையும்‌, குணங்களையும்‌ பொருட்டாகக்‌ கொண்டு அதன்‌ நிமித்தம்‌ இறைவனிடம்‌ கேட்டால்‌ அந்த துஆவுக்கு பெரும்‌ மதிப்பு இருக்கிறது. அங்கீகரிக்கப்படுவதற்கான அருகதையையும்‌ இந்த துஆ அடைகிறது. 

ஏனெனில்‌ "இறைவா! நீ நேர்வழியில்‌ செலுத்துகிறவன்‌, கொடைவள்ளல்‌, உதவி ஒத்தாசைகள்‌ புரிகிறவன்‌, இப்படியெல்லாம்‌ நீ இருப்பதின்‌ பொருட்டால்‌ என்னை நேர்வழியில்‌
செலுத்துவாயாக! எனக்கு நீ அள்ளி வழங்குவாயாக! எனக்கு உதவி ஒத்தாசைகள்‌ புரிந்தருள்வாயாக! எனக்கூறி நாம்‌ பிரார்த்திக்கும்போது நமக்கு என்னென்ன விஷயங்கள்‌ தேவையோ அவையனைத்துமே அல்லாஹ்வின்‌ தன்மைகளுள்‌
உட்பட்டவையாக இருக்கின்றன என நாம்‌ ஏற்றுக்‌ கொள்கிறோம்‌. அத்தன்மைகளால்‌ அல்லாஹ்‌ வா்ணிக்கப்பட்டவனாகவும்‌ நாம்‌ விசுவாசிக்கிறோம்‌. இதனால்‌ நம்‌ பிரார்த்தனைகளை விரைவில்‌ அங்கீகரிப்பதற்குரிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்‌
கொண்டோமல்லவா!

அல்லாஹ்வின்‌ மீதுள்ள பாத்தியதைகள்‌ என்பதற்கு 'மனிதனுக்கு அவன்‌ வாக்களித்திருக்கும்‌ வாக்குறுதிகள்‌' எனும்‌ விளக்கத்தைக்‌ கண்டோம்‌. இத்தகைய வாக்குறுதியின்‌ நிமித்தம்‌ பிரார்த்தனை செய்தல்‌ அனுமதிக்கப்படுகிறது.

வழிப்பட்டவர்களுக்கு நல்ல கூலி கொடுப்பதாகவும்‌, கலப்பற்ற தூய்மையான நெஞ்சத்துடன்‌ பிரார்த்தனை செய்பவர்களுடைய பிரார்த்தனைகளை அங்கீகரிப்பதாகவும்‌ அவன்‌ வாக்களித்துள்ளான்‌. அவனுடைய இத்தகைய சொல்லுறுதியையும்‌,
சொல்நாணயத்தையும்‌ தவிர வேறெந்த வகையான பாத்தியதைகளும்‌ மனிதர்களுக்காக இறைவன்‌ மீது இல்லை. அல்லாஹ்‌ எக்காலமும்‌ சொல்லுறுதிக்கு மாறு செய்யாதவன்‌. இது பற்றி அவனே திருமறையில்‌ கூறுகிறான்‌:

உம் இரட்சகன் கருணையை தன்மீது கடமையாக்கி கொண்டான்(6:54). இன்னும் அல்லாஹ்வுடைய வாக்குறுதி முற்றிலும் உண்மையானது(4:122) என்று
கூறியிருக்கிறான்‌.

மற்றொரு இடத்தில்‌:
இது அல்லாஹ் அளித்த வாக்குறுதி ஆகும். அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதில்லை. ஆயினும், மக்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.
(அல்குர்ஆன்: 30:6)

இன்னுமொரு இடத்தில்‌ “ (நபியே!) அல்லாஹ் தன் தூதர்களிடம் அளித்துள்ள வாக்குறுதிக்கு மாறு செய்வான் என்று நீர் ஒருபோதும் கருதவேண்டாம். திண்ணமாக, அல்லாஹ் வல்லமையுடையவனும், பழிவாங்குபவனும் ஆவான்.”
(அல்குர்ஆன்: 14:47)

அனைத்து அறிஞர்களாலும்‌ இந்த உண்மை ஏற்றுக்‌ கொள்ளப்பட்டிருக்கிறது. அல்லாஹ்வுடைய வாக்குறுதி நிச்சயமாக நடக்கத்தான்‌ போகிறது என்பதில்‌ எவரும்‌ சந்தேகிக்கமாட்டார்கள்‌. இவ்வாக்குறுதியைச்‌ செயல்படுத்துவதைத்‌ தவிர்த்து வேறு ஒரு பாத்தியதையும்‌ யாருக்கும்‌ அல்லாஹ்வின்‌ மீது இல்லை. வாக்குறுதியை நிறைவேற்றுதல்‌ என்பதைத்‌ தவிர வேறேதேனும்‌ கடமை (ஹக்கு) அல்லாஹ்வின்‌ மீது உண்டா என்பதில்‌ மூன்று மாதிரியான அபிப்பிராய பேதங்கள்‌ வந்திருக்கின்றன. 

ஒன்று: வாக்குறுதியை என்பதைத்‌ தவிர வேறு எந்த ஹக்கும்‌ அல்லாஹ்வின்‌ மீது இல்லை.

இரண்டு: அடியார்களோடு சேர்த்துப்‌ பார்க்கும்‌ போது செய்ய வேண்டிய சில விஷயங்களும்‌ செய்யக்‌ கூடாத சில விஷயங்களும்‌ அல்லாஹ்வின்‌ மீது இருக்கிறது.

மூன்றாவது: அவன்‌ தனக்கே சில விஷயங்களை ஹராமாகவும்‌, சில விஷயங்களை வாஜிபாகவும்‌ ஏற்படுத்தி இருக்கிறான்‌. எனவே அவன்‌ எதைத்‌ தன்‌ மீது வாஜிபாக்கினானோ அது வாஜிபாகும்‌. எதைத்‌ தன்‌ மீது ஹராமாக்கினானோ அது ஹராமாகும்‌. 

முன்னர்‌ கூறிய அபூதருடைய ஹதீஸும்‌ இதைக்‌ காட்டுகிறது. அக்கிரமம்‌ அவனிடமிருந்து கூடாது என்பதில்‌ யாருக்கும்‌ சந்தேகமில்லை. ஆனால்‌ அவனுக்குச்‌ செய்ய முடியுமான எக்காரியத்துக்கும்‌ ஒருபோதும்‌ அக்கிரமம்‌ என சொல்லப்பட மாட்டாது. அக்கிரமம்‌ என்பது பிறருடைய உடைமையில்‌ கையாடுவது அல்லவா!

கண்டிப்பாக வழிப்பட்டே ஆகவேண்டிய காரியங்களுக்கு மாறு காட்டினாலும்‌ அக்கிரமம்‌
எனக்‌ கூறலாம்‌. ஆனால்‌ இவ்விரண்டும்‌ அல்லாஹ்விடம்‌ சிந்திக்கவே முடியாது. அல்லாஹ்‌ எவருக்கும்‌ எதிலும்‌ அக்கிரமம்‌ செய்யவே மாட்டான்‌.

இதைத்‌ தெளிவாக இறைவன்‌ குறிப்பிடுகிறான்‌: 

ஆனால், எவர் நம்பிக்கையாளராயிருந்து நற்செயல்கள் புரிகின்றாரோ (அவருக்கு அநீதி மற்றும் உரிமைப் பறிப்பு பற்றிய எந்த அச்சமும் இருக்காது.)
(அல்குர்ஆன்: 20:112)

மேலும்‌ இறைவன்‌ கூறுகிறான்‌:
திண்ணமாக, அல்லாஹ் எவருக்கும் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அல்லாஹ் அதனை இரட்டிப்பாக்குகின்றான். தன்னிடமிருந்து மாபெரும் கூலியையும் வழங்குகின்றான்.
(அல்குர்ஆன்: 4:40)

நாம் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை; மாறாக அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள். மேலும் உம் இறைவனின் கட்டளை வந்துவிட்டபோது, அல்லாஹ்வை விடுத்து அவர்கள் அழைத்தவண்ணம் இருந்த அவர்களுடைய கடவுள்கள் அவர்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. நாசத்தைத் தவிர வேறு எந்தப் பயனையும் அவை அவர்களுக்குத் தரவில்லை.
(அல்குர்ஆன்: 11:101)

(வாக்குறுதி என்ற) இக்கருத்துக்குட்பட்ட அல்லாஹ்வின்‌ மீதுள்ள பாத்தியதையை எடுத்துக்கூறி அதைப்‌ பொருட்டாகக்‌ கொண்டு பிரார்த்தித்தாலும்‌ பிரார்த்தனைகள்‌ அங்கீகரிக்கப்‌ படுவதற்குரிய ஒருசிறு (ஏது) காரணமேயொழிய வேறொன்றையும்‌ கருதி
விடக்கூடாது. வணக்க வழிபாடுகள்‌ புரிகிறவர்கள்‌ தத்தம்‌ பிரார்த்தனையில்‌ இப்படித்தான்‌ நினைத்தார்கள்‌. அல்லாஹ்‌ கூலி கொடுப்பதாகக்‌ கூறியுள்ளதை எடுத்துக்‌ கூறிக்‌ கேட்கையில்‌ அது தனது துஆ அங்கீகரிக்கப்‌ படுவதற்குரிய ஓர்‌ ஏதுவாக
நினைத்துக்‌ கொண்டே அதனைப்‌ பொருட்டாகக்‌ கொண்டு பிரார்த்தனைகளில்‌ சேர்த்துக்‌
கொண்டார்கள்‌.

ஆனால்‌ ஒருவன்‌ தன்‌ பிரார்த்தனையில்‌ இன்னொருவனின்‌ பொருட்டை எடுத்துக்‌ கூறினான்‌ என்று வைத்துக்‌ கொள்வோம்‌. இவ்விரண்டாவது உள்ளவன்‌ அல்லாஹ்விடத்தில்‌ நல்லவனாக இருந்தான்‌. அவனுடைய சில வாக்குறுதிகளைப்‌ பெறுவதற்கும்‌ அருகதை படைத்திருந்தான்‌ என்றும்‌ கற்பனை செய்வோம்‌. ஏனெனில்‌ அவன்‌ கலப்பற்ற இறைவிசுவாசியாக இருந்தான்‌. நல்ல செயல்களைப்‌ புரிந்தான்‌. ஏராளம்‌ கூலிகள்‌ பெறுகின்ற அளவுக்கு அல்லாஹ்வின்‌ சொல்லுறுதிக்கு ஒத்தவனாக
வாழ்ந்தான்‌. இந்நிலையில்‌ இந்த நல்ல மனிதனின்‌ பொருட்டையும்‌, அவனின்‌ மதிப்பையும்‌ எடுத்துரைத்து மற்றவன்‌ பிரார்த்தனை செய்தால்‌ இப்பிரார்த்தனையால்‌ இவனுக்கு என்ன மதிப்புக்‌ கிடைக்கப்போகிறது? இதில்‌ பிரார்த்தித்தவனுக்கு ஒரு பயனுமில்லை. அல்லாஹ்வுக்கு முழுக்க வணங்கி வழிபட்டு கீழ்படிந்து நடந்தவனுக்கு மதிப்பையும்‌, கண்ணியக்கையும்‌ கொடுப்பதாக அல்லாஹ்‌ வாக்களித்கிருக்கிறான்‌.

அவனுக்கு வேதனைகள்‌ கொடுக்கப்பட மாட்டது என்றும்‌, அவன்‌ படித்தரத்தை உயர்த்துவதாகவும்‌ கூறினான்‌. இதன்‌ நிமித்தம்‌ இந்த ஹக்குகளைப்‌ பொருட்டாகக்‌ கொண்டு இன்னொருவன்‌ பிரார்த்திப்பதில்‌ பயனில்லை. இவ்வுண்மையை ஒவ்வொரு முஸ்லிமும்‌ விளங்கிக்‌ கொள்ள வேண்டும்‌. இது தனக்குச்‌ சம்பந்தமில்லாத ஏதோ ஒன்றை எடுத்துக்கூறி பிரார்த்திப்பதற்குச்‌ சமமாகும்‌.

குறிப்பு 1:

ஒருவன்‌ அடுத்தவனை நோக்கி நபியவர்களின்‌ பொருட்டால்‌ கேட்கிறேன்‌ (அவர்களைக்‌ கொண்டு) அல்லது அவர்களை முன்னிறுத்திக்‌ கேட்கிறேன்‌ என்று
கூறினால்‌ இக்கூற்றிலுள்ள 'நபியைக்‌ கொண்டு கேட்கிறேன்‌' என்பதின்‌ கருத்தில்‌ நபியை ஈமான்‌ கொண்டு விசுவாசித்து அவ்விசுவாசத்தைப்‌ பொருட்டாக வைத்துக்‌ கேட்பதை கருதப்பட்டால்‌ இக்கூற்று தவறாகாது என்று சில அறிஞர்கள்‌ விளக்கம்‌ தந்திருக்கிறார்கள்‌. எனவே இத்தகைய பிரார்த்தனைகள்‌ அனுமதிக்கப்படும்‌.

ஸஹாபாக்கள்‌, தாபியீன்கள்‌, ஸலபுஸ்ஸாலிஹீன்கள்‌ ஆகியோருள்‌ சிலர்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ வபாத்தான பிறகும்‌ இத்தகைய பாணியில்‌ துஆக்‌ கேட்டிருக்கிறார்கள்‌ என்று கூறும்‌ சம்பவங்களும்‌, இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹ்‌) அவர்கள்‌ கூறியதாகச்‌ சொல்லப்படுகின்ற - நபிகள்‌ மரணமடைந்த பிறகும்‌ அவர்களைப்‌ பொருட்டாகக்‌
கொண்டு பிரார்த்திக்கலாம்‌ - என்ற கூற்றையும்‌, இவையனைக்தையும்‌ நாம்‌ மேற்கூறிய கருத்தின்படி எடுத்துக்‌ கொள்ள வேண்டும்‌.

நபியைக்‌ கொண்டு பிரார்த்தனை செய்தார்களென்றால்‌ அவர்களை விசுவாசம்‌
கொண்டு அவர்களை நேசித்துப்‌ பின்பற்றி நடப்பதின்‌ பொருட்டால்‌ துஆச்‌ செய்திருக்கிறார்கள்‌ எனக்‌ கொள்ள வேண்டும்‌. ஆனால்‌ பலர்‌ இதை விளங்குவதில்லை.

நபியைக்‌ கொண்டு உதவி தேடுதல்‌ என்ற சொல்லிற்கு நாம்‌ கூறிய கருத்தை அளிக்கவில்லை. வேறு பல மாதிரியான வியாக்கியானங்களைக்‌ கொடுத்து
விடுகிறார்கள்‌. இதனால்‌ பற்பல தவறுகள்‌ நுழைந்து விடுகின்றன. நபித்தோழர்கள்‌ நபியைக்‌ கொண்டு வஸீலாத்‌ தேடினார்கள்‌ என வரும்‌ ஹதீஸின்‌ விளக்கத்தில்‌ நபியின்‌ பிரார்த்தனையையும்‌, அவர்களின்‌ சிபாரிசையும்‌ பெற்று அல்லாஹ்வுடன்‌
சமீபிப்பதைத்‌ தேடினார்கள்‌ என்று அறிஞர்கள்‌ விளக்கம்‌ கொடுத்திருக்கிறார்கள்‌,

உற்றார்‌ உறவினர்கள்‌ மரணமடைந்த பின்னர்‌ அவர்களுக்காகப்‌ பிரார்த்திப்பது, மன்னிப்புத்‌ தேடுவதும்‌ வாரிசுகளின்‌ மீதுள்ள பாத்தியதையாகும்‌. உறவு (இரத்த பாசம்‌) உறவினர்களுக்கு மத்தியில்‌ சில பாத்தியதைகளை சுமத்துகின்றன. அப்படிச்‌
சுமத்தப்பட்ட பாத்தியதைகளில்‌ உற்றாருக்குப்‌ பிழைபொறுக்கத்தேடி அவர்களுக்காக
அல்லாஹ்விடம்‌ பிரார்த்தனை புரிதல்‌ என்பது மிகக்‌ குறிப்பிடத்‌ தக்கதாகும்‌. இறைவன்‌
திருமறையில்‌ உறவை மதிப்பாகக்‌ கூறியுள்ளான்‌:

மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 4:1)

நபியவர்கள்‌ கூறினார்கள்‌: உறவு (இரத்த பந்தம்‌) என்பது அருளாளன்‌ எனும்‌ அல்லாஹ்வின்‌ திருநாமத்துடன்‌ நெருங்கிய தொடர்புள்ள ஒன்றாகும்‌.
இப்பந்தத்துவத்தை எவர்‌ தண்டிக்காமல்‌ ஒட்டி வாழ்கிறாரோ, அவர்‌ அல்லாஹ்வின்‌ அருளிலிருந்தும்‌ தண்டிக்கப்பட மாட்டார்‌. இதை முறித்து வாழ்கிறவரை அல்லாஹ்‌ தன்னருளிலிருந்து அப்புறப்படுத்தி விடுகிறான்‌' மேலும்‌ நபியவர்கள்‌ கூறினார்கள்‌:
அல்லாஹ்‌ 'ரஹ்ம்‌' எனும்‌ இரத்தபந்தத்தை சிருஷ்டித்த போது அது ரஹ்மானின்‌ அரையோடு பின்னிப்‌ பிணைந்து நின்று 'இறைவா! இவ்விடம்‌ உறவினர்களைப்‌ பிரிந்து வாழ்வதை விட்டும்‌ உன்னிடம்‌ பாதுகாவல்‌ தேடுமிடம்‌ என்று கூறியது.

அப்போது இறைவன்‌ கூறினான்‌: உன்னுடன்‌ ஒட்டி வாழ்கிறவனறுடன்‌ நான்‌ சேர்ந்திருப்பதையும்‌, உன்னைப்‌ பிரிந்து வாழ்கிறவனுடன்‌ நான்‌ தூரமாக இருப்பதையும்‌ நீ திருப்திப்படுகிறாயா இல்லையா? இந்த வினாவுக்குப்‌ பதிலளிக்கும்‌ போது 'ரஹ்ம்‌'
எனும்‌ இரத்தபந்தம்‌ ஆம்‌ (என்னை எவர்கள்‌ பிரிந்து வாழ்கிறார்களோ அவர்களை விட்டு விலகி விடு. என்னை நெருங்கியவர்களோடு நீயும்‌ நெருங்கிச்‌ செல்‌. இதையே நான்‌ பொருந்திக்‌ கொண்டேன்‌ (இறைவா) என்று கூறியது.

ஹதீஸ்‌ குத்ஸியில்‌ இறைவன்‌ கூறினான்‌:
நான் அருளாளன் (ரஹ்மான்) ரஹம் எனும் இரத்த பந்தத்தைப் படைத்தேன் ரஹ்மான் என்ற எனது திருநாமத்திலிருந்து ரஹீம் என்னும் பெயரையும் அதற்கு நான் தேர்வு செய்தேன் எனவே எவர் இரத்த பந்தத்தை சேர்ந்து வாழ்கிறாரோ அவருடன் நானும் சேர்ந்திருப்பேன் எவர் அதைப் பிரிந்து வாழ்கிறாரோ அவரை விட்டு நான் பிரிந்து விடுவேன்.

அலி (ரலி) அவர்களைப்‌ பற்றிக்‌ கூறப்படுகின்ற ஒரு சம்பவத்தில்‌ அவர்களின்‌ சகோதரர்‌ ஐஃபரின்‌ மகன்‌ அலி (ரலி) அவர்களிடம்‌ வந்து தம்‌ தந்தையாரைச்‌ சொல்லி எதையாவது கேட்டால்‌ அலி (ரலி) அவர்கள்‌ அதனை உடனே கொடுத்து விடுவார்களாம்‌. சகோதரர்‌ ஐஃபருக்கு அலி (ரலி) அவர்களின்‌ மீது இரத்த பாசத்தினால்‌ ஏற்பட்ட சில கடமைகள்‌ இருப்பதனால்‌ தான்‌ அலி (ரலி) அவர்கள்‌ இப்படிச்‌ செய்தார்கள்‌.

இரத்த பாசத்தினால்‌ ஏற்படும்‌ கடமைகள்‌ அனைத்தும்‌ மனிதர்கள்‌ இறந்த பின்னரும்‌ நீடித்திருக்கும்‌ என்பதை கீழ்வரும்‌ ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது: ஒருவர்‌ நபி (ஸல்‌) அவர்களிடம்‌ வந்து யா ரஸுலல்லாஹ்! என்‌ பெற்றோர்கள்‌ மரணமடைந்து விட்டார்கள்‌. இரத்த பாசத்தினால்‌ அவர்களுக்கு நான்‌ செய்ய வேண்டிய கடமைகள்‌, பேருதவிகள்‌ இவற்றுள்‌ ஏதாவது என்மீது மீது இருக்கிறதா என்று வினவியதற்கு ஆம்‌. அவர்களுக்காக நீ பிரார்த்தனை புரிதல்‌ வேண்டும்‌. இறைவனிடம்‌ அவர்களுக்காக மன்னிப்புத்‌ தேட வேண்டும்‌. அவர்கள்‌ வாக்களித்த வாக்குறுதிகளை நீ
நிறைவேற்றுவதும்‌ உன்மீது கடமையாகும்‌. பெற்றோர்கள்‌ வழியாகக்‌ கிடைத்த இரத்த
பாசத்தை விட்டும்‌ நீ பிரியாமல்‌ உறவினர்களை ஒட்டி வாழ வேண்டும்‌. ஏனெனில்‌ பெற்றோர்கள்‌ இல்லையென்றால்‌ நட்டபுறுவோ, சொந்த பந்தமோ ஒருபோதும்‌ உனக்கு ஏற்பட்டிருக்காது' என்றும்‌ கூறி முடித்தார்கள்‌.

இப்னு உமர்‌ (ரலி) அவர்கள்‌ அறிவிக்கும்‌ ஒரு ஹதீஸில்‌ குறிப்பிடப்படுகிறது:
மனிதன்‌ தன்‌ பெற்றோர்கள்‌ இறந்த பின்னர்‌ அவர்களின்‌ உற்ற தோழர்களை ஒட்டி வாழுதல்‌ என்பது மிக ஏற்றமான நன்மை பயக்கும்‌ செயலாகும்‌. 

சிருஷ்டிகளுள்‌ எவற்றைக்‌ கொண்டும்‌ சத்தியம்‌ செய்து அல்லாஹ்விடம்‌ பிரார்த்தனை செய்யக்‌ கூடாது. நபிமார்களாக இருப்பினும்‌ சரியே. இவற்றைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்து பிரார்த்திப்பதை எல்லா அறிஞர்களும்‌ விலக்கியிருக்கிறார்கள்‌. குறிப்பாக இமாம்‌ அபூஹனிபா (ரஹ்‌) அவர்களும்‌, தோழர்களும்‌ இதை வன்மையாகக்‌ கண்டித்திருக்கிறார்கள்‌. உயிரற்ற பொருட்களைக்‌ கொண்டும்‌ ஆணையிடக்‌ கூடாது.

மேலும்‌ 'இறைவா! கஃபாவின்‌ மீது சத்தியமாக உன்னிடம்‌ பிரார்த்திக்கிறேன்‌' என்று கூறி துஆக்‌ கேட்பவனும்‌ குற்றவாளியாக மாறி விடுகிறான்‌ என்று எல்லா அறிஞர்களும்‌ ஏகோபித்துக்‌ கூறியுள்ளனர்‌.

இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹ்‌) அவர்களுடைய முஸ்னத்‌ எனும்‌ பிரபலமான ஹதீஸ்‌ கிரந்தத்தின்‌ இரண்டாவது தொகுப்பில்‌ 330-ம்‌ பக்கத்தில்‌ இந்த ஹதீஸ்‌ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹதீஸின்‌ நேருரையில்‌ காணப்படுகின்ற 'ஹக்வுர்‌-ரஹ்மான்‌'
என்பதற்கு 'ரஹ்மானின்‌ ஹக்வு' (அரை-நடுப்பகுதி) என்றே அர்த்தம்‌ கொடுக்கப்படுகிறது. மேலும்‌ இதைப்போன்று குர்‌ஆனிலும்‌, ஹதீஸிலும்‌ காணப்படுகின்ற இறைவனின்‌ ஸிபாத்துகள்‌ யாவும்‌ அவற்றின்‌ கருத்துகளை மாற்றாமலும்‌, திருப்பாமலும்‌, புரட்டாமலும்‌, வடிவம்‌-உவமை போன்றவற்றைக்‌ கூறாமலும்‌, குர்‌ஆனிலும்‌, ஹதீஸிலும்‌ வந்தது போன்று அப்படியே ஏற்பது ஸலபுஸ்ஸாலிஹீன்களின்‌ கொள்கையாகும்‌. எனவே அவர்களைப்‌ பின்பற்றி நாமும்‌ ‘ஹக்வு' என்ற இவ்வார்த்தைக்கு ஹதீஸில்‌ வந்தது போன்று அர்த்தம்‌ சொல்லக்‌ கடமை பட்டிருக்கிறோம்‌. இவ்வார்த்தையின்‌ கருத்தை‌ புரட்டியோ, திருப்பியோ கூறுவதும்‌, பொருந்தாதவற்றைக்‌ கூறி அதன்‌ தாத்பரியத்தை மாற்றி விடுவதும்‌, அல்லாஹ்வின்‌ தன்மைகளுக்கு உவமை, ஒப்பு, வடிவம்‌ முதலியவற்றைக்‌ காண்பதும்‌
மாபெரும்‌ குற்றமாகும்‌. இங்கு வந்திருக்கும்‌ 'அரை' (ஹக்வு) படைக்கப்பட்ட ஜீவராசிகளின்‌ அரையைப்‌ போன்றதல்ல என்றும்‌, அல்லாஹ்வுக்கே உரித்தான
அவனுக்குப்‌ பொருந்துகின்ற 'அரை' என்றும்‌ எடுத்துக்‌ கொள்ள வேண்டும்‌.

குறிப்பு 2:

அல்லாஹ்விடம்‌ அவன்‌ படைப்பினங்களைக்‌ கொண்டு ஆணையிட்டுப்‌ பிரார்த்தித்தல்‌ தடுக்கப்பட்டுள்ளது போல படைப்பினங்களிடம்‌ சென்று அவற்றைக்‌ காரணம்‌ காட்டியும்‌, அவற்றைப்‌ பொருட்டாகக்‌ கொண்டும்‌ கேட்பது விலக்கப்‌ பட்டிருக்கிறது. ஆனால்‌ சிலர்‌ இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள்‌. சில ஸலபுஸ்ஸாலிஹீன்களுடைய குறிப்புகளையும்‌ தம்‌ தஃவாவுக்குச்‌ சான்றாகக்‌ கூறினார்கள்‌. எனவே மக்களில்‌ பலர்‌ இம்மாதிரி துஆச்‌ செய்வதைக்‌ காணலாம்‌. ஆனால்‌ இது விஷயத்தில்‌ நபிகளைப்பற்றி
அறிவிக்கப்பட்ட ஹதீஸ்கள்‌ அனைத்தும்‌ பலம்‌ குன்றியவையும்‌, புனையப்‌ பட்டவையுமாகும்‌. 

மேலும்‌ ஏதெனும்‌ ஒன்றைக்‌ காரணம்‌ காட்டி ஒருவரிடமிருந்து ஒரு பொருளைக்‌ கேட்பதற்கும்‌ அப்பொருளைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்து கேட்பதற்குமிடையில்‌ பெரிய வித்தியாசம்‌ உண்டு. சத்தியம்‌ செய்து கேட்பது சக்தியான வேண்டுதலாகும்‌. மனிதன்‌ தன்‌ வேண்டுதலை உறுதிப்படுத்துவதற்காக ஆணையிடுகிறான்‌. இப்படி சத்தியம்‌ செய்து கேட்கும்‌ நிலைக்கு அவன்‌ வர வேண்டுமெனின்‌ எவன்‌ மீது சத்தியப்‌ பிரமாணம்‌ செய்து கேட்கப்பட்டதோ அவன்‌ தான்‌ கேட்டதைக்‌ கொடுத்து விடுவான்‌ என்ற உறுதி நிலை வந்தாக வேண்டும்‌. ஆனால்‌ சத்தியத்தைக்‌ காப்பவர்களாக மனிதர்களுள்‌ எத்தனைப்‌ பேர்தான்‌ இருக்க முடியும்‌? மனிதர்களுள்‌ ஆணையை மீறாதவர்கள்‌ மிகக்‌ குறைவே. எனவேதான்‌ அது கூடாதென்று தடுக்கப்‌ பட்டுள்ளது. ஆனால்‌ ஒரு பொருளைப்‌ பொருட்டாக வைத்தும்‌, ஏதுவாகக்‌
காட்டியும்‌, காரணமாக எடுத்துக்‌ கூறியும்‌ கேட்கப்‌ படுவது அவ்வளவு சக்கி வாய்ந்த மதிப்பிற்குரிய வேண்டுதல்‌ அல்ல. ஒன்றைப்‌ பொருட்டாக அல்லது காரணமாகக்‌ காட்டிக்‌ கேட்பவன்‌ இழிவுடன்‌ கெஞ்சி நிற்பவனுக்குச்‌ சமமாகிறான்‌. மனிதன்‌ தனது
நினைப்பில்‌ எது நல்லது என்று பட்டதோ அதைப்‌ பொருட்டாக வைத்துக்‌ கேட்டால்‌ தான்‌ விரும்புவது கிடைத்து விடும்‌ என்று எண்ணிக்‌ கொள்கிறான்‌. 

எனவே இப்படிக்‌ கேட்பவனுக்கு ஒருக்கால்‌ கிடைத்து விடலாம்‌. கிடைக்காமலும்‌ இருக்கலாம்‌. ஆனால்‌
கிடைத்து விட்டால்‌ 'பொருட்டால்‌' என்று கூறியதனால்‌ அல்லது பெரியோர்களைக்‌ கொண்டு உதவி தேடியதினால்‌ தான்‌ கிடைத்தது என எண்ணிவிடக்‌ கூடாது. கேட்பதற்கொப்ப கிடைத்தது. யாருடைய பொருட்டாலும்‌ அல்ல. தேவைப்படுகிறவர்களுக்கு எல்லாம்‌ அல்லாஹ்‌ கொடுக்கிறானல்லவா? எனவே
கிடைத்தது அல்லாஹ்வின்‌ பெரும்‌ கருணையால்‌ மட்டும்தான்‌.

கொடுமை செய்யப்பட்டோருக்கு அவர்கள்‌ பிரார்த்தித்தால்‌ அல்லாஹ்‌ அள்ளி வழங்குகிறான்‌. அவர்கள்‌ காஃபிர்களாக இருந்தாலும்‌ சரியே. நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: ஏதேனும்‌ ஒன்றைக்‌ கேட்டு அல்லாஹ்விடம்‌ பிரார்த்திப்பவர்களுக்கெல்லாம்‌ அவன்‌ மூவகை நன்மைகளில்‌ ஏதெனும்‌ ஒன்றைச்‌ செய்து விடுகிறான்‌. அவன்‌ கேட்டதைக்‌ கொடுத்து விடுகிறான்‌. அல்லது இவன்‌ கேட்பதற்கொப்ப நன்மைகளை மறுமையில்‌ இவனுக்காகச்‌ சேகரித்து வைத்துக்‌ கொள்வான்‌. அல்லது இவன்‌ கேட்ட அளவிற்குத்‌ தீங்குகளை இவனை விட்டு அகற்றி விடுகிறான்‌. 

இப்படி மூன்றில்‌ ஒரு நன்மையான காரியத்தை அல்லாஹ்‌ செய்து விடுகிறான்‌. ஆனால்‌ அப்பிரார்த்தனையில்‌ பிறருக்குக்‌ கெடுதல்கள்‌, குற்றங்கள்‌ இடம்‌ பெறக்‌ கூடாது. பிரார்த்திப்பவன்‌ இரத்த பாசத்தைப்‌ பிரிந்து வாழ்கிறவனாகவும்‌ இருத்தல்‌ கூடாது. இவ்விரண்டும்‌ மேற்கூறப்பட்ட மூன்று நன்மைகளில்‌ ஏதேனுமொன்று
கிடைப்பதற்குரிய நிபந்தனையாகும்‌. 

இந்த ஹதீஸைச்‌ செவியுற்ற ஸஹாபிகள்‌
நபியவர்களிடம்‌ யா ரஸுலுல்லாஹ்‌! அப்படியானால்‌ நாங்கள்‌ இறைவனிடம்‌ நிறையப்‌ பிரார்த்திப்போம்‌' என்று கூறியதற்கு 'நீஙகள்‌ பிரார்த்திப்பதை விட ஏராளமாக அல்லாஹ்விடம்‌ இருக்கிறது" என்று நபி (ஸல்‌) அவர்கள்‌ பதில்‌ கூறினார்கள்‌.

படைப்பினங்களைக்‌ கொண்டு ஆணையிட்டுப்‌ பிரார்த்தித்தல்‌ தடுக்கப்பட்டுள்ளது போல படைப்பினங்களிடம்‌ அவற்றைக்‌ காரணம்‌ காட்டி மேலும்‌ பொருட்டாகக்‌ கொண்டு கேட்பதும்‌ விலக்கப்‌ பட்டிருக்கிறது. ஆனால்‌ சில மக்கள்‌ இதற்கு அனுமதி
வழங்கியிருக்கிறார்கள்‌. சில ஸலபுஸ்ஸாலிஹீன்களுடைய குறிப்புகளையும்‌ தம்‌
தஃவாவுக்குச்‌ சான்றாகக்‌ கூறினார்கள்‌. எனவே பலர்‌ இம்மாதிரி துஆச்‌ செய்வதைக்‌ காணலாம்‌. ஆனால்‌ இது விஷயத்தில்‌ நபிகளைப்‌ பற்றி அறிவிக்கப்பட்ட ஹதீஸ்கள்‌ அனைத்தும்‌ பலம்‌ குன்றியவையும்‌, புனையப்பட்டவையுமாகும்‌.

கண்‌ பார்வை இழந்த ஸஹாபியின்‌ கீழ்வரும்‌ ஒரு ஹதீஸைத்‌ தவிர வேறொரு பொருத்தமான ஆதாரங்கள்‌ எதையும்‌ இவர்கள்‌ தம்‌ தஃவாவுக்குச்‌ சாதகமாகப்‌ பெற்றுக்‌ கொள்ள மாட்டார்கள்‌. இந்த ஹதீஸைப்‌ பொறுத்தவரையில்‌ கூட உண்மையில்‌
அவர்களுக்கு ஆதாரங்களில்லை என்றே கூறலாம்‌. ஏனெனில்‌ இந்த ஹதீஸின் நேருரையிலிருந்தே இம்மனிதர்‌ நபியின்‌ துஆவைக்‌ கொண்டும்‌, ஷபாஅத்தைக்‌ கொண்டும்‌ தான்‌ வஸீலாத்‌ தேடினார்கள்‌ என்பது தெளிவான உண்மையாகும்‌. அதனால்‌ தான்‌ அவரது கண்பார்வையும்‌ மீட்கப்பட்டது.

அம்மனிதர்‌ நபி (ஸல்‌) அவர்களிடம்‌ வருகை தந்து நாயகமே! என்‌ கண்கள்‌ குணமாகப பிரார்த்தனை செய்யுங்கள்‌' என்று வேண்டிய போது அவருக்கு நபி (ஸல்‌) அவர்களும்‌ கீழ்வரும்‌ துஆவை ஓத வேண்டும்‌ என்று கற்றுக்‌ கொடுத்தார்கள்‌.

'இறைவா! நான்‌ உன்னிடம்‌ பிரார்த்திக்கிறேன்‌. உன்னுடைய நபி முஹம்‌மது (ஸல்) அவர்களைக்‌ கொண்டு நான்‌ உன்‌ பக்கம்‌ திரும்புகிறேன்‌. அவர்கள்‌ கருணை நபி'. 

சிருஷ்டிகளைப்‌ பொருட்டாக (காரணமாக)க்‌ கொண்டு பிரார்த்திக்கலாம்‌ என அனுமதி வழங்குகிறவர்களுக்கு இந்த ஹதீஸில்‌ கூட யாதொரு ஆதாரத்தையும்‌ காண முடியாது. ஏனெனில்‌ இந்த ஹதீஸில்  கண்பார்வை இழந்த மனிதர்‌ நபிகளின்‌ துஆவையும்‌, ஷபாஅத்தையும்‌ கொண்டுதான்‌ அல்லாஹ்விடம்‌ வஸீலாத்‌ தேடியிருக்கிறார்‌ என்று
தெளிவாக விளங்க முடிகிறது.

ஆரம்பத்திலேயே அவர்‌ நபியிடம்‌ வந்து தமக்காக துஆக்‌ கேட்க வேண்டுமென்றல்லவா விரும்பினார்கள்‌. எனவேதான்‌ இவருடைய துஆவில்‌ கூறப்பட்டுள்ள 'இறைவா! நபி முஹம்‌மது (ஸல்‌) அவர்களைக்‌ கொண்டு நான்‌ உன்‌ பக்கம்‌ முகம்‌ திருப்புகிறேன்‌' என்பதற்கு 'நபியின்‌ துஆவின்‌ பொருட்டாலும்‌ முகம்‌
திருப்புகிறேன்‌' என்பது தாத்பரியமாகும்‌ என்று கூறினோம்‌. அதுமட்டுமல்ல மேற்கூறப்பட்ட துஆவின்‌ கடைசியில்‌ 'இறைவா! என்‌ விஷயத்தில்‌ நபியின்‌ சிபாரிசை ஏற்றருள்வாயாக!' என்றும்‌ கூறப்பட்டுள்ளது. இதையும்‌ சொல்லும்படி நபியவர்கள்‌ அம்மனிதருக்கு கற்றுக்‌ கொடுத்தார்கள்‌. எனவே இதிலிருந்தும்‌ நபிகளின்‌ துஆ, ஷபாஅத்துக்களைக்‌ கொண்டுதான்‌ அல்லாஹ்விடம்‌ அம்மனிதர்‌ வஸீலாத்‌ தேடினார்‌
என்பதாகத்‌ தெரிந்து கொள்ள முடிகிறது. நபியவர்கள்‌ இம்மனிதருக்காக அல்லாஹ்விடம்‌ பிரார்த்தித்தார்கள்‌. சிபாரிசும்‌ செய்தார்கள்‌. இதன்‌ காரணத்தினால்‌
அவருடைய கண்பார்வை திரும்பி விட்டது. அவர்‌ குணமடைந்து விட்டார்‌. இதை நபிகளின்‌ அற்புதச்‌ சக்திகளில்‌ ஒன்றாகக்‌ கருத வேண்டும்‌. நபிகளின்‌ பிரார்த்தனையைப்‌ பெறாத வேறு குருடர்கள்‌ நபிகளைப்‌ பொருட்டாக வைத்து பிரார்த்தித்தால்‌, அவர்களின்‌ நிலைமை கண்பார்வை இழந்த இம்மனிதரின்‌ நிலைமையைப்‌ போன்று நிச்சயமாக ஆகி இருக்காது.

மழைதேடும்‌ விஷயத்தில்‌ உமருடைய துஆவும்‌ இதைத்தான்‌ காட்டுகிறது. அதில்‌ அவர்கள்‌ 'இறைவா! மழை இல்லாமல்‌ எங்களுக்கு வறட்சி நிலை வரும்போதெல்லாம்‌, எங்கள்‌ நபிகளைக்‌ கொண்டு நாங்கள்‌ உன்னிடம்‌ வஸீலாத்‌ தேடினோம்‌. அதனால்‌ நீ
எங்களுக்கு மழை பெய்யச்‌ செய்தாய்‌, இதோ எங்களுக்கு அந்த நிலைமை நபியவர்கள்‌
இறந்த பின்னும்‌ ஏற்பட்டு விட்டது. ஆகவே நபியின்‌ பெரிய தந்தையைக்‌ கொண்டு நாங்கள்‌ உன்னிடம்‌ வஸீலாத்‌ தேடுகிறோம்‌' என்று பிரார்த்தித்தனர்‌. 

இச்சம்பவத்தில்‌ காணப்படுகின்ற வஸீலாவும்  அனுமதிக்கப்பட்ட வஸீலாக்களில்‌ ஒன்றாகும்‌.
இவையனைத்தும் நபிகளுடையவும்‌, மற்ற பெரியவர்களுடையவும்‌ துஆக்களைக்‌
கொண்டும்‌, சிபாரிசுகளைக்‌ கொண்டும்‌ இறைவனிடம்‌ வஸீலாத் தேடுவதைக்‌ தவிர அவர்களைக்‌ கொண்டு வஸீலாத் தேடுவதல்ல என விளங்குதல்‌ வேண்டும்‌.

அவர்களையே வைத்து வஸீலாத்‌ தேடுதல்‌ அனுமதிக்கப்படுமானால்‌ கலீபா உமர்‌ (ரலி) அவர்களும்‌, இதர முஹாஜிரீன்களும்‌, அன்சாரிகளும்‌ நபிகளை வைத்து வஸீலாத்‌ தேடுவதை விட்டு விட்டு அப்பாஸைக்‌ கொண்டு வஸீலாத்‌ தேட முனைந்திருக்க மாட்டார்கள்‌. இமாம்‌ அபூஹனிபாவும்‌, தோழர்களும்‌, மற்றவர்களும்‌ நபியைப்‌ பொருட்டாக வைத்துக்‌ கேட்பதை தடுத்திருக்கிறார்கள்‌. இமாம்‌ மாலிக்குடைய மத்ஹபும்‌ அப்படித்தான்‌ கூறுகிறது. 

ஆனால்‌ இந்த இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) அவர்களைப்‌
பற்றி வேறு சிலர்‌ கூறும்போது அவர்கள்‌ சிருஷ்டிகளைக்‌ கொண்டு ஆணையிட்டுப்‌
பிரார்த்திப்பதையும்‌, நபிமார்களையும்‌, வலிமார்களையும்‌ பொருட்டாக வைத்துப்‌
பிரார்த்திப்பதையும்‌ அனுமதித்திருப்பதாகச்‌ சொல்கிறார்கள்‌. இச்சொல்‌ இமாம்‌ மாலிக்கின்‌ மீது பொய்யாகச்‌ சுமத்தப்பட்ட சொல்லாகும்‌. இமாம்‌ அவர்களோ, அவர்களின்‌ தோழர்களோ ஒருபோதும்‌ இதை அனுமதித்திருக்க முடியாது. எப்படி அதை
அவர்கள்‌ அனுமதிக்க முடியும்‌? பிரார்த்திபபவன்‌ தன்‌ இறைவனை அழைக்கும்‌ போது ‘எஜமானே! எஜமானே! (யா ஸய்யிதி! யா ஸய்யித்‌) என அழைத்துப்‌ பிரார்த்திப்பதைக்‌ கூட அவர்கள்‌ வெறுத்திருக்கும்‌ போது நபியைக்‌ கொண்டு ஆணையிட்டும்‌, அவர்களை
பொருட்டாக வைத்தும்‌ பிரார்த்திப்பதை எப்படி இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) அவர்கள்‌ அனுமதிப்பார்கள்‌? ஷரீஅத்தில்‌ இல்லாத ஒன்றை, மேலும்‌ ஸலபுஸ்ஸாலிஹீன்கள்‌
சொல்லாத ஒரு சட்டத்தை இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) அவர்கள்‌ கூறியதாக எவராலும்‌ நிரூபிக்க முடியாது.

நபியவர்கள்‌ இறந்த பின்னர்‌ அவர்களின்‌ துஆவையும்‌, ஷபாஅத்தையும்‌ வேண்டிப்‌ பிரார்த்திக்கலாம்‌ என்றும்‌, கப்றருகில்‌ சென்று இவையெல்லாம்‌ கேட்கலாமென்றும்‌ ஒருபோதும்‌ அனுமதித்திருக்க மாட்டார்கள்‌.

அதுமட்டுமல்லாது பிரார்த்தனையின்‌ போது இறைவனை கொடை வள்ளலே! அகிலத்தைப்‌ படைத்து ஆள்பவனே! (யா ரப்பி யா கரீம்‌!) என்று கூறித்தான்‌ பிரார்த்திக்க வேண்டுமென்று பணித்திருக்கிறார்கள்‌. மாறாக தயாபரனே! கிருபையுள்ளவனே! என அழைத்துப்‌ பிரார்த்திப்பதைக்‌ கூட அவர்கள்‌ விரும்பவில்லை. ஏனெனில்‌ நபித்தோழர்கள்‌ மற்றும்‌ முன்னோர்களான ஸலபுஸ்ஸாலிஹீன்கள்‌ இப்படி அழைத்துப்‌ பிரார்த்தனை செய்திருப்பதாக அறியப்பட வில்லையாம்‌. இப்படி மிக நுட்பமாக ஒவ்வொன்றையும்‌
ஆராய்ந்து ஷரீஅத்தின்‌ அடிப்படையில்‌ பிரார்த்தனை செய்ய வேண்டிய அமைப்புகளை இமாம்‌ மாலிக்‌ அவர்கள்‌ விளக்கிக்‌ காட்டியிருக்கும்‌ போது இந்த இமாமைப்‌ பற்றி நபியைப்‌ பொருட்டாக வைத்தும்‌, அவர்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்தும்‌
பிரார்த்திப்பதை அனுமதித்துள்ளார்கள்‌ என்று யாராவது கூறினால்‌ நம்ப முடியுமா?

மழையின்றி வறட்சியால்‌ மக்கள்‌ வாடிய வேளையில்‌ கலீபா உமரும்‌, முஹாஜிரீன்கள்‌, அன்ஸாரிகள்‌ எவருமே எந்தச்‌ சிருஷ்டிகளையும்‌ பொருட்டாக
வைத்து அவற்றைக்‌ காரணமாகக்காட்டி மழை தேடிப்‌ பிரார்த்திக்கவில்லை. நபியவர்களின்‌ மரணத்தின்‌ பின்னர்‌ அப்பாஸ்‌ (ரலி) அவர்களின்‌ துஆவினாலும்‌,
ஷபாஅத்தினாலும்‌ தான்‌ வஸீலாத் தேடப்பட்டுள்ளது என்று இந்தப்‌ பிரபலமான சம்பவத்தை இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) அவர்கள்‌ தெரியாமலிருக்க முடியாது. நபியவர்களின்‌ வாழ்நாளில்‌ ஒருமுறைக்‌ கூட சிருஷ்டிகளை முன்னிறுத்திக்‌ தன்‌ தேவைகளை
அல்லாஹ்விடம்‌ அவர்கள்‌ வேண்டவில்லை. தம்மையோ, தம்மைப்போன்ற இதர நபிமார்களையோ பொருட்டாகக்‌ கொண்டும்‌ பிரார்த்திக்கவில்லை. வறட்சியின்‌ போது மழை பொழிவதற்காகவும்‌ பிரார்த்திக்கவில்லை.  மற்றும்‌ எந்தத்‌ தேவைக்காகவும்‌
அப்படிப்‌ பிரார்த்திக்கவில்லை. நபித்தோழர்களில்‌ அனஸ்‌ (ரலி) அவர்களும்‌, உமர்‌ (ரலி) அவர்களின்‌ மகன்‌ அப்துல்லாஹ்‌ போன்ற பெரும்‌ நபித்தோழர்களெல்லாம்‌ வறட்சி வேளையில்‌ நபிகள்‌ நாயகத்தின்‌ பிரார்த்தனையைக்‌ கொண்டு வஸீலாத்‌ தேடி மழையைப்‌ பெற ஆசைப்பட்டார்கள்‌.

நபியவர்களைக்‌ காரணம்‌ காட்டியும்‌, பொருட்டாக வைத்தும்‌ பிரார்த்தனை செய்வது ஸஹாபிகளுக்கு மத்தியில்‌ தெரிந்திருந்தால்‌ உமர்‌, அப்பாஸ்‌ (ரலி) அவர்களைக்‌ கொண்டு மழை பொழிவதற்காக வஸீலாத் தேடிய வேளையில்‌ ஸஹாபிகள்‌ உமர்‌
(ரலி) அவர்களைத்‌ தடுத்திருப்பார்கள்‌. நபியைப்‌ பொருட்டாக வைத்து வஸீலாத்‌ தேடுவதுதான்‌ அப்பாஸ்‌ (ரலி) அவர்களை கொண்டு வஸீலாத்  தேடுவதை விட மிக மேலானது என்றும்‌ கூறியிருப்பார்கள்‌. எல்லாச்‌ சிருஷ்டிகளை விட மேலான நபியவர்கள்‌ வாழ்ந்திருக்கும்‌ போது அவர்களை வைத்து வஸீலாத்‌ தேடப்பட்டது. இன்று
கடும்‌ வறட்சி நம்மைப்‌ பீடித்துள்ளது. இப்பொழுதுதான்‌ நபியவர்களின்‌ வஸீலா மிகத்‌
தேவைப்படுகிறது. இந்நிலையில்‌ நபியைவிட மதிப்பிற்‌ குறைந்த அவர்களின்‌ உறவினர்களைச்‌ சார்ந்த ஒரு மனிதரை வைத்து ஏன்‌ வஸீலாவாகத்  தேட வேண்டுமென்று ஸஹாபிகள்‌ உமர்‌ (ரலி) அவர்களிடம்‌ கேள்விகளைத்‌ தொடுத்திருப்பார்கள்‌. 

நபிகளால்‌ செய்துக்‌ காட்டப்பட்ட ஒரு ஸுன்னத்துக்கு மாறு செய்தும்‌, இருவர்களில்‌ அல்லாஹ்விடம்‌ மிக மதிப்பிற்குரிய ஒருவரைக்‌ தேர்வு செய்து வஸீலாத்‌ தேடாமல்‌ நபியைவிட மதிப்பிலும்‌, அந்தஸ்திலும்‌ குறைந்த ஒருவரைத்‌ தேர்ந்து ஏன்‌ வஸீலாத்‌ தேட வேண்டுமென்று ஸஹாபிகள்‌ உமர்‌ (ரலி) அவர்களிடம்‌ வினவியிருப்பார்கள்‌. ஆனால்‌ ஸஹாபிகள்‌ உமரின்‌ செய்கையைக்‌ கண்டு எதையும்‌ கேட்கவில்லை.

எனவே நபிகளாரின்‌ துஆக்களைக்‌ கொண்டு தான்‌ வஸீலாத்‌ தேடப்பட்டதே தவிர அவர்களையே வைத்து வஸீலாவாகத் தேடப்படவில்லை என்பதற்கு இதுவே சான்றாகும்‌. ஏனெனில்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மரணமடைந்து விட்டார்கள்‌. இந்நிலையில்‌ அவர்களின்‌ பிரார்த்தனையை எதிர்பார்க்க முடியாது. உயிருடன்‌ வாழ்ந்திருப்பவர்களின்‌ பிரார்த்தனையில்‌ தான்‌ ஆதரவு வைக்க முடியும்‌. இதனால்‌ அப்பாஸ்‌ (ரலி) அவர்களின்‌ பிரார்த்தனையைக்‌ கொண்டு வஸீலாத்  தேடப்பட்டு மழை பொழிய வேண்டுமென்று
எதிர்‌ பார்த்தார்கள்‌.

அப்பாஸ்‌ (ரலி) அவர்களை வைத்து கலீபா உமர்‌ செய்துக்‌ காட்டியதைப்‌ போன்ற ஒரு சம்பவம்‌ கலீபா முஆவியா (ரலி) அவர்கள்‌ காலத்திலும்‌ நடைப்பெற்றது. இவர்களும்‌, இவர்தம்‌ சுற்றம்‌ சூழ இருந்த ஸஹாபிகள்‌, தாபியீன்கள்‌ அனைவரும்‌ சேர்ந்து யஸீத்‌ பின்‌ அல்‌ அஸ்வதில்‌ ஜர்ஷீட் என்பவர்களைக்‌ கொண்டு வஸீலாத்‌ தேடினார்கள்‌.

எனவே இமாம்‌ ஷாபிஈ, இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ போன்ற மத்ஹபுடைய இமாம்களின்‌ தோழர்களான மார்க்க பேரறிஞர்கள்‌ மழை தேடிப்‌ பிரார்த்திக்கும்‌ போது நல்ல ஒழுக்கமுள்ள உத்தமர்களின்‌ பிரார்த்தனையைக்‌ கொண்டு வஸீலாத்‌ தேட
வேண்டுமென்று கூறியிருக்கிறார்கள்‌. அத்துடன்‌ மேற்கூறப்பட்ட உத்தமர்கள்‌ அப்பாஸ்‌ (ரலி) அவர்களைப்‌ போல நபி (ஸல்‌) அவர்களின்‌ குடும்பத்தைச்‌ சார்ந்தவர்களாக இருந்தால்‌ அவர்கள்‌ இத்தகைய பிரார்த்தனைகளுக்கு மிகவும்‌ ஏற்றவர்கள்‌ என்றும்‌ கூறியிருக்கின்றனர்‌. ஏனெனில்‌ அதில்‌ உமர்‌ (ரலி) அவர்களின்‌ முன்மாதிரி உண்டு.

அறிஞர்களான இமாம்‌ ஷாபிஈ, மாலிக்‌, அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹ்‌-அலைஹிம்‌) போன்றவர்களைப்‌ பற்றிக்‌ கூறப்படும்போது இவர்கள்‌ அனைவரும்‌ நபிமார்கள்‌
மரணமடைந்த பின்னர்‌ அவர்களிடத்தில்‌ தேவைகளை முறையிடுவதையும்‌, ஷபாஅத்‌ கேட்பதையும்‌ அனுமதித்து இருக்கிறார்கள்‌ என்று யார்‌ கூறினாலும்‌ அது பொய்யான கூற்றாகும்‌. இது முஸ்லிம்களுடைய இமாம்கள்‌ மீது பொய்‌ புளுகுகளைச்‌ சுமத்துவதாகும்‌. 

சில அறிவீலிகள்‌ இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) அவர்கள்‌ மீது இத்தகைய பொய்களைச்‌ சுமத்தியிருக்கிறார்கள்‌. அவர்கள்‌ கூறியதாக சில கட்டுகதைகளையும்‌
எடுத்துக்‌ காட்டுகிறார்கள்‌. இக்கதைகள்‌ உண்மையாக இருந்தால்‌ கூட இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) அவர்கள்‌ மறுமையில்‌ ஷபாஅத்‌ கேட்டு பிரார்த்திப்பதை
சொல்லியிருப்பார்களேயொழிய நபி (ஸல்‌) அவர்கள்‌ இறந்த பின்னர்‌ ஷபாஅத்தைக்‌ கேட்கலாம்‌ என்று சொல்லியிருக்க மாட்டார்கள்‌. இமாம்களின்‌ சொற்களை எடுத்துரைப்பதில்‌ சிலர்‌ அவற்றை அப்படியே புரட்டி மறித்து விடுகின்றனர்‌. இதுபற்றி
இன்ஷா அல்லாஹ்‌ நாம்‌ பிறகு விளக்குவோம்‌.

அறிஞர்‌ காழி இயாள்‌ என்பவர்கள்‌ இமாம்‌ மாலிக்கிடமும்‌ அவர்தம்‌ தோழர்களிடம்‌
அறியப்பட்டிருந்த அனைத்து அபிப்பிராயங்களையும்‌ உண்மையாகவே தம்‌ நூலில்‌ எடுத்துக்‌ கூறியிருக்கிறார்கள்‌. ‘நபிகளின்‌ கப்றை ஸியாரத்‌ செய்தல்‌' என்ற தலைப்பில்‌ இமாம்‌ மாலிக்கைப்‌ பற்றி பொய்யர்கள்‌ கூறிய கூற்றுகளில்‌ ஒன்றையுமே இவர்தம்‌ நூலில்‌ குறிப்பிடவில்லை. இவர்கள்‌ இமாம்‌ மாலிக்கைப்பற்றியும்‌, தோழர்களைப்பற்றியும்‌ கூறுகையில்‌ 'நபி (ஸல்‌) அவர்கள்‌ இறந்ததன்‌ பின்‌ அவர்களின்‌ மதிப்பும்‌, கண்ணியமும்‌ குறைந்து விடாது. உயிரோடிருக்கையில்‌ இருந்த மதிப்பைப்‌
போன்று இறந்த பின்னரும்‌ அவர்களுக்கு நிறைய மதிப்புண்டு. ஆகவே இறந்த பின்னர்‌ நபி அவர்களுக்குரிய மதிப்பையும்‌ கொடுத்துதான்‌ ஆக வேண்டும்‌. அவர்களைப்‌ பற்றிக்‌ கூறப்படும்போதும்‌, அவர்களின்‌ பொன்மொழிகள்‌ எடுத்துரைக்கப்பட்டாலும்‌, அவர்களின்‌ திருநாமத்தைச்‌ செவியுற்றாலும்‌ அதற்கெல்லாம்‌ அவசியம்‌ மதிப்புக்‌ கொடுத்துதான்‌ ஆக வேண்டும்‌' என்று கூறியிருக்கிறார்கள்‌.

மேலும்‌ இமாம்‌ மாலிக்கைப்‌ பற்றி அறிஞர்‌ காழி இயாள்‌ பின்வருமாறு அறிவிக்கிறார்கள்‌. 'ஒருநாள்‌ அய்யூபுஸ்‌ ஸக்தியானி என்பவர்களைப்‌ பற்றி இமாம்‌
மாலிக்கிடம்‌ கேட்கபட்டபோது கூறினார்களாம்‌. நான்‌ பேசிய அனைவரைக்‌ காட்டிலும்‌ அய்யூபுஸ்‌ ஸக்தியானி ஒரு சிறந்த மனிதர்‌. அவர்‌ இருமுறை ஹஜ்‌ செய்திருக்கிறார்‌. அவரை நான்‌ பலமுறை கவனித்திருக்கிறேன்‌. தேவையை மீறி அவர்‌ எதையும்‌
பேசமாட்டார்‌. நபி அவர்களின்‌ திருநாமம்‌ எடுத்துரைக்கப்பட்டால்‌ அழுது விடுவார்‌.
அப்போது அவருக்கு கனிவுடன்‌ நான்‌ ஆறுதல்‌ சொல்வேன்‌. அவரிடமிருந்து நான்‌ இதை அறிந்ததினாலும்‌ அவர்‌ நபிக்கு அளவே இல்லாத கண்ணியம்‌ கொடுத்ததினாலும்‌ தான்‌ அவரைப்பற்றி இப்படி நான்‌ எழுதுகிறேன்‌'.

முஸ்‌அப்‌ பின்‌ அப்துல்லாஹ்‌ என்பவர்‌ சொல்கிறார்‌. நபிகள்‌ நாயகத்தைப்‌ பற்றி பேசும்போது இமாம்‌ மாலிக்கின்‌ முகம்‌ வித்தியாசமாகி விடும்‌. அப்படியே அவர்கள்‌ தலை குனிந்து விடுவார்கள்‌. பக்கத்தில்‌ இருப்பவர்களுக்கெல்லாம்‌ இது கஷ்டமாகத்‌
தெரியும்‌. ஒருநாள்‌ இதைப்‌ பற்றி இமாம்‌ அவர்களிடம்‌ ஏன்‌ இப்படிச்‌ செய்கிறீர்கள்‌? என்று கேட்டபோது அதற்கு அவர்கள்‌ விடையளிக்கையில்‌ 'நான்‌
பார்ப்பவற்றையெல்லாம்‌ நீங்களும்‌ பார்த்திருந்தால்‌ இப்படிக்‌ கேட்டிருக்க மாட்டீர்கள்‌' என்று கூறிவிட்டு கீழ்வரும்‌ சம்பவங்களையும்‌ எடுத்துக்காட்டி விளக்கம்‌ தந்தார்கள்‌.

திருமறையை அழகாக ஓதக்கூடிய காரிகளில்‌ தலை சிறந்து விளங்கிய முஹம்மத்‌ பின்‌ அல்முன்கதிர்‌ அவர்களிடம்‌ நபியவர்களின்‌ ஹதீஸ்களில்‌ ஏதாவது ஒன்றைப்‌ பற்றிக்‌ கேட்கப்பட்டால்‌ உடனே அழுது விடுவார்கள்‌. பிறகு நாங்கள்‌ அவர்மீது இரக்கம்‌
கொண்டு ஆறுதல்‌ சொல்லித்‌ தேற்றும்‌ வரையிலும்‌ அழுகையை நிறுத்த மாட்டார்கள்‌. இவர்களைப்‌ போன்றே ஜஃபர்‌ பின்‌ முஹம்மத்‌ என்ற பெரியாரும்‌ இருந்தார்கள்‌. இவர்கள்‌ நகைச்சுவையோடு பேசுவார்கள்‌. புன்முறுவல்‌ பூத்தவாறே காணப்படுவார்கள்‌. ஆனால்‌ நபியவர்கள்‌ பற்றிக்‌ கூறப்பட்டால்‌ மட்டும்‌ அவர்களின்‌ நிறம்‌ மஞ்சனித்து
விடும்‌. நபிகளைப்பற்றி ஹதீஸ்களை அறிவிக்கும்போது ஒளுவில்லாமல்‌ எதையும்‌
சொல்ல மாட்டார்கள்‌. பலமுறை அவருடன்‌ நான்‌ சென்றிருக்கிறேன்‌. கீழ்வரும்‌ மூன்று அம்சங்களில்‌ ஒன்றை விட்டுக்‌ கூட அவர்‌ நீங்கியதாக நான்‌ பார்த்ததில்லை. தொழுது கொண்டிருப்பார்கள்‌. அல்லது பேசாமல்‌ வாய்மூடி கொண்டிருப்பார்கள்‌. அல்லது திருமறையை ஓதிக்‌ கொண்டிருப்பார்கள்‌. தேவையில்லாமல்‌ எதையும்‌ பேசமாட்டார்கள்‌. அல்லாஹ்வை பயந்து நடக்கின்ற அறிஞர்களைச்‌ சார்ந்தவராகவும்‌, மிகுந்த வணக்க வழிபாடுகளை செய்கின்றவராகவும்‌ இருந்தார்கள்‌.

இன்னும்‌ அப்துர்ரஹ்மான்‌ பின்‌ அல்காஸிம்‌ என்ற அறிஞர்‌ எப்போதெல்லாம்‌ நபிகளைப்பற்றி எடுத்துரைக்கின்றாரோ அப்போதெல்லாம்‌ அவருடைய மேனியில்‌ நிறத்தைக்‌ கவனித்தால்‌ அது இரத்தம்‌ பீறிட்டோடுகின்ற உடம்பைப்‌ போல்‌ காட்சி தரும்‌.
நாயகத்தைப்‌ பற்றி எடுத்துச்‌ சொல்லும்போது அவருடைய நாவு பயத்தால்‌ வரண்டு விடும்‌. மேலும்‌ ஆயிர்‌ பின்‌ அப்துல்லாஹ்‌ பின்‌ ஸுபைர்‌ என்பவரிடம்‌ நான்‌ அடிக்கடி வருவதுண்டு. அவர்களும்‌ நபிகளைப்பற்றி கூறப்பட்டால்‌ அழுது விடுவார்கள்‌. கண்களில்‌ கண்ணீர்‌ தாரைதாரையாக வழியும்‌. 

ஸுஹ்ரியை நான்‌ பார்த்திருக்கிறேன்‌. அவர்‌ எனக்கு
மிக நெருங்கியவரும்‌, மிக வேண்டியவருமாக இருந்தார்‌. எனினும்‌ நபி (ஸல்‌) அவர்களைப்‌ பற்றி அவர்களிடம்‌ கூறப்பட்டால்‌ என்னை யாரென்று தெரியாதவர்‌ போலவும்‌, நாம்‌ அவரை யாரென்று அடையாளம்‌ கண்டு கொள்ளாத ரீதியிலும்‌ மாறி
விடுவார்‌. 

மேலும்‌ ஸப்வான்‌ பின்‌ ஸுலைம்‌ என்பவரிடத்தில்‌ நான்‌ அடிக்கடி செல்வதுண்டு. இறைவனுக்குக்‌ கீழ்படிவதிலும்‌, வணக்க வழிபாடுகள்‌ அதிகம்‌
செய்வதிலும்‌ அவர்கள்‌ சிறந்து விளங்கினார்கள்‌. திருமறையையும்‌, நபிமொழியையும்‌ ஆராய்கின்ற ஆற்றல்‌ பெற்ற முஜ்தஹிதாகவும்‌ அவர்‌ இருந்தார்‌. ஆனால்‌ அவரிடத்தில்‌ நபியவர்களைப்‌ பற்றிக்‌ குறிப்பிட்டால்‌ போதும்‌, கண்ணீர்‌ வடித்து அழுது கொண்டே இருப்பார்கள்‌. மக்களெல்லாம்‌ இவரைக்‌ தனியாக விட்டுவிட்டு ஒதுங்கி விடுவார்கள்‌

இந்த யஸீத்‌ பின்‌ அல்‌ அஸ்வத்‌ என்பவர்கள்‌ வணக்க வழிபாட்டில்‌ மிகவும்‌ ஊறிப்போனவர்களாக இருந்தார்கள்‌.

குறிப்பு 3:

இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) அவர்களுடைய தோழர்களின்‌ பிரபலமான நூற்களிலிருந்து இத்தகைய சம்பவங்களை காழி இயாள்‌ தமது நூலில்‌ தொகுத்துத்‌ தந்துள்ளார்கள்‌. அத்துடன்‌ அவர்கள்‌ பலவீனமான பற்பல அறிவிப்பாளர்களால்‌ சொல்லப்பட்ட ஒரு
சம்பவத்தையும்‌ தம்‌ நூலில்‌ எடுத்துக்‌ கூறுகிறார்கள்‌. அது வருமாறு: 'மஸ்ஜிதுன்‌ நபவியில்‌ கலீபா அபூஜஃபருல்‌ மன்ஸூர்‌ அவர்கள்‌ இமாம்‌ மாலிக்‌ அவர்களுடன்‌ வாதிட்டுக்‌ கொண்டிருந்தார்களாம்‌. அந்நேரம்‌ கலீபாவிடம்‌ இமாம்‌ அவர்கள்‌ கூறினார்களாம்‌. 'அமீருல்‌ மூமினினே! இப்புனித பள்ளிவாசலில்‌ உமது குரலை உயர்த்தாதீர்‌! குரல்‌ உயர்த்திப்‌ பேசும்‌ விஷயத்தில்‌ இறைவன்‌ சிலருக்கு மரியாதையைக்‌ கற்றுக்‌ கொடுத்திருக்கிறான்‌ என்று இறைவன்‌ கூறியிருக்கிறானல்லவா? (49:2). மேலும்‌
இது விஷயத்தில்‌ மற்றும்‌ சிலரை அவன்‌ பாராட்டியும்‌ இருக்கிறான்‌. “திண்ணமாக, எவர்கள் இறைத்தூதரின் திருமுன் (உரையாடும்போது) தங்கள் குரலைத் தாழ்த்துகின்றார்களோ உண்மையில் அத்தகையவர்களின் உள்ளங்களை இறையச்சத்திற்காக அல்லாஹ் பரிசோதித்துத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் இருக்கின்றன.”
(அல்குர்ஆன்: 49:3) என்று கூறியுள்ளான்‌.
மற்றும்‌ சில மக்களை இறைவன்‌ இழிவு படுத்திக்‌ கூறும்போது “(நபியே, உமது) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மைக் கூப்பிடுவோரில் பெரும்பாலோர் அறியாதவர்களே!”
(அல்குர்ஆன்: 49:4) என்று இறைவன்‌ கூறினான்‌.

அதன்‌ பின்னர்‌ இமாம்‌ அவர்கள்‌ 'நபியவர்கள்‌ மரணமடைந்த பின்னரும்‌ கூட உயிருடன்‌ வாழ்ந்திருப்பதைப்‌ போன்று மதிப்புக்குரியவர்களாகவே இருக்கிறார்கள்‌'
என்று விளக்கினார்களாம்‌. இதைச்‌ செவியுற்ற கலீபா அபூஜஃபர்‌ அல்‌ மன்ஸூர்‌ கொஞ்சம்‌ அடங்கி விட்டார்‌. 

பிறகு கலீபா 'இமாமவர்களே! நான்‌ பிரார்த்தனையின்‌
போது கிப்லாவை முன்னோக்கி நிற்கவா? அல்லது நபிகளைப்‌ பார்த்து முகம்‌ திருப்பவா? என்று கேட்டார்‌. இதற்கு நபிகளை விட்டு உமது முகத்தைத்‌ திருப்ப என்ன நேர்ந்து விட்டது என்று இமாம்‌ அவர்கள்‌ அவரிடம்‌ வினவினார்களாம்‌. அதன்‌ பிறகு
இமாம்‌ அவர்கள்‌ இந்த நபிதான்‌ மறுமைநாள்‌ வரையிலும்‌ உம்முடையவும்‌, உம்‌ பிதா ஆதமுடையவும்‌ வஸீலாவாக இருக்கிறார்கள்‌. எனவே இத்தகைய நபியை நோக்கி உமது முகத்தைத்‌ திருப்புவீராக! அவர்களைக்‌ கொண்டு சிபாரிசும்‌ வேண்டுவீராக!
அல்லாஹ்‌ உமது சிபாரிசை ஏற்றுக்‌ கொள்வான்‌ என்று கூறிவிட்டு இந்த இறைவசனத்தை ஓதினார்களாம்‌.

தமக்குத் தாமே அவர்கள் அநீதி இழைத்துக்கொண்ட வேளையில், உம்மிடம் அவர்கள் வந்திருந்தால், இன்னும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரியிருந்தால், அவர்களுக்காக தூதரும் மன்னிப்புக் கோரியிருந்தால், திண்ணமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பு வழங்குபவனாகவும் பெருங் கருணையுடையவனாகவும் இருப்பதைக் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்: 4:64)

இது பலவீனமான அறிவிப்பாளர்களால்‌ எடுத்துக்‌ கூறப்பட்ட சம்பவமாகும்‌. இச்சம்பவம்‌ துண்டிக்கப்பட்ட சம்பவம்‌ (முன்கதிஃ) என்று விளங்குதல்‌ வேண்டும்‌. இதை அறிவிப்பவர்களின்‌ பட்டியலில்‌ முஹம்மத்‌ பின்‌ ஹுமைதுர்‌ ராஸி என்பவரும்‌ இடம்‌ பெற்றிருக்கிறார்‌. இவர்‌ இமாம்‌ மாலிக்கை கலீபா அபூஜஃபர்‌ அல்‌ மன்ஸூரின்‌
காலத்தில்‌ சந்தித்திருக்க முடியாது. ஏனெனில்‌ கலீபா அபூஜஃபர்‌ ஹிஜ்ரி 158ல்‌ மக்காவில்‌ காலமானார்‌. இமாம்‌ மாலிக்‌ அவர்களோ ஹிஜ்ரி 179 ல்‌ காலமானார்‌.
ஆனால்‌ மேற்கூறப்பட்ட முஹம்மத்‌ பின்‌ ஹுமைதுர்‌ ராஸி என்பவர்‌ ஹிஜ்ரி 248ல்‌ தான்‌ மரணமடைந்திருக்கிறார்‌.

அத்துடன்‌ முஹம்மத்‌ பின்‌ ஹுமைதுர்‌ ராஸி என்பவர்‌ கல்வி தேடுவதற்காக ஊரைவிட்டுக்‌ கிளம்பியதேயில்லை. வயதேறிய காலத்தில்‌ தான்‌ கல்விக்காகத்‌ தன்‌ தந்தையாருடன்‌ புறப்பட்டிருக்கிறார்‌. ஹதீஸ்‌ தொகுப்பாளர்கள்‌ பலர்‌ இவரை மிகப்‌ பலவீனமான அறிவிப்பாளராக மதிக்கிறார்கள்‌. அபூஸர்‌ஆ, இப்னு வாரா என்ற
இருவரும்‌ இந்த முஹம்மத்‌ பின்‌ ஹுமைதைப்‌ பொய்யர்‌ என கூறியுள்ளார்கள்‌. மற்றும்‌ ஹதீஸ்‌ அறிஞர்கள்‌ பலரும்‌ இவரின்‌ பற்பல தவறுகளைச்‌ சுட்டிக்‌ காட்டியிருக்கிறார்கள்‌. ஸாலிஹ்‌ பின்‌ முஹம்மத்‌ அல்‌ அஸத்‌ என்பவர்‌ இவரைப்‌ பற்றிக்‌ குறிப்பிடும்‌ போது ‘இவரைவிட துணிச்சலாக அல்லாஹ்வின்‌ மீது பொய்‌ சொல்லக்கூடியவரை நான்‌
கண்டதில்லை' என்றார்கள்‌. இவரைப்பற்றி யஃகூப்‌ பின்‌ ஷபீபா என்பவர்‌ 'ஏராளமான வெறுக்கத்தக்க ஹதீஸ்களைச்‌ சொல்கிறவர்‌' என்றார்கள்‌. நஸாயீ இவரைப்பற்றி நம்பிக்கைக்குரியவர்‌ அல்லர்‌ என்றார்கள்‌. இப்னு ஹிப்பான்‌ இவரைப்பற்றி புரட்டியும்‌, திருப்பியும்‌ ஹதீஸ்களைக்‌ கூறுவதில்‌ தலைசிறந்தவர்‌ என்றார்கள்‌.

மேலும்‌ இந்த ஹதீஸ்‌ அறிவிப்பாளர்கள்‌ பட்டியலில்‌ பற்பல பலவீனமானவர்கள்‌ இடம்‌ பெற்றிருக்கிறார்கள்‌. இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) அவர்களைப்‌ பற்றிக்‌ கூறுகின்ற இமாம்‌ அவர்களின்‌ பற்பல இதர தோழர்களில்‌ எவரும்‌ இந்தச்‌ சம்பவத்தைச்‌ சொன்னதில்லை. 

முஹம்மத்‌ பின்‌ ஹுமைத்‌ வழியாகக்‌ கிடைக்கப்பெற்ற இந்த சம்பவத்தைக்‌ கொண்டு இமாம்‌ அவர்களின்‌ அபிப்பிராயத்தை நிரூபித்துக்‌ காட்ட முடியாது என்று
அவர்களுடைய சக நண்பர்களே கூறியிருக்கிறார்கள்‌. அத்துடன்‌ இச்சம்பவத்தில்‌ இமாம்‌ அவர்களின்‌ மத்ஹபுக்கு முரண்பட்ட பல விதிகளும்‌ இடம்‌ பெற்றிருக்கின்றன. அது மட்டுமின்றி இந்த ஹதீஸின்‌ நேருரையில்‌ வந்திருக்கின்ற 'நபி (ஸல்‌) அவர்கள்‌
மறுமைநாள்‌ வரையிலும்‌ உம்முடையவும்‌, பிதா ஆதம்‌ (அலை) அவர்களுடையவும்‌ வஸீலாவாக இருக்கிறார்கள்‌' என்ற கருத்து நபிகளைக்‌ கொண்டு ஆதமும்‌, அவரின்‌ சந்ததிகளும்‌ மறுமைநாளில்‌ வஸீலாத் தேடுவார்கள்‌ என்பதைத்தான்‌ காட்டுகிறது.
மறுமையில்‌ நபியின்‌ சிபாரிசைக்‌ கொண்டும்‌ வஸீலாத்  தேடுவார்கள்‌ என்பதையே இந்த ஹதீஸ்‌ விளக்குகிறது.

எனவே இந்த ஹதீஸின்‌ நேருரையிலிருந்து நபிகள்‌ இறந்த பின்னர்‌ அவர்களிடம்‌ சென்று ஷபாஅத்‌ கேட்கலாம்‌ என்பதை விளங்க முடியாது. நபியவர்களின்‌ ஷபாஅத்தை ஆதமும்‌, சந்ததிகளும்‌ மறுமை நாளில்‌ வேண்டி நிற்பார்கள்‌ என்பது உண்மை என ஸஹீஹான ஹதீஸில்‌ வருகிறது.

மக்கள்‌ எல்லோரும்‌ ஆதமிடம்‌ சென்று தமக்காக அல்லாஹ்விடம்‌ ஷபாத்துச்‌ செய்ய கோரும்போது ஆதம்‌ (அலை) அவர்கள்‌ நபி நூஹ்‌ (அலை) அவர்களிடம்‌ சென்று வேண்டும்படி கூறுவார்கள்‌. நூஹ்‌ (அலை) அவர்கள்‌ நபி இப்ராஹீமைச்‌ சுட்டிக்‌
காட்டுவார்கள்‌. இப்ராஹீம்‌ நபியவர்கள்‌ நபி மூஸாவையும்‌, நபி மூஸா அவர்கள்‌ நபி ஈஸாவையும்‌ நோக்கிச்‌ செலலுங்கள்‌ என்று மக்களை பணிப்பார்கள்‌. இறுதியாக நபி ஈஸா அவர்கள்‌ நபி முஹம்மத்‌ (ஸல்‌) அவர்களை நோக்கிப்‌ புறப்படுங்கள்‌ என்று மக்களை அனுப்புவார்கள்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: ஆதமுடைய சந்ததிகளுக்கெல்லாம்‌ தான்‌ தலைவராக இருக்கிறேன்‌. இதனால்‌ எனக்குப்‌
பெருமையில்லை. ஆதமுமம்‌, அவருக்குப்‌ பின்னர்‌ தோன்றிய அனைவரும்‌ மறுமையில்‌ எனது கொடியின்‌ கீழ்‌ ஒதுங்கி நிற்பார்கள்‌. இதனால்‌ எனக்கு ஒரு பெருமையுமில்லை.

மேற்கூறப்பட்ட சம்பவத்தின்‌ நேருரையில்‌ முரணான பல கருத்துகள்‌ இல்லையென்றாலும்‌ இமாம்‌ மாலிக்குடைய மத்ஹபுக்கு முரணான சில சட்டங்கள்‌
அதிலே காண முடிகிறது. எனவே இச்சம்பவத்தை இமாம்‌ அவர்கள்‌ கூறியிருக்க முடியாது. கலீபா அபூஜஃபருல்‌ மன்ளர்‌ இமாமை நோக்கி துஆவின்போது கிப்லாவை முன்னோக்கவா அல்லது ரஸூலை முன்னோக்கி நின்று பிரார்த்திக்கவா என
கேட்டதற்கு நபியை விட்டும்‌ உன்‌ முகத்தைத்‌ திருப்பி விடுவதற்கு என்ன வந்து விட்டது என்று இமாம்‌ அவர்கள்‌ கேட்டதாகக்‌ கூறப்படுவதிலிருந்தே அது இமாம்‌ மாலிக்குடையவும்‌ மற்றும்‌ அனைத்து மத்ஹபின்‌ இமாம்களுடையவும்‌, ஸலபுஸ்ஸாலிஹீன்கள்‌, தாபியீன்கள்‌ அனைவரின்‌ கொள்கைகளுக்கும்‌, அபிப்பிராயங்களுக்கும்‌ முரண்‌ பட்டிருக்கிறது.

மஸ்ஜிதுன்‌ நபவியைச்‌ சந்திக்க முதன்‌ முதலில்‌ ஒருவர்‌ சென்றால்‌ தொழுது விட்டுப்பிறகு நபிகள்‌ நாயகத்தின்‌ மீது ஸலாம்‌ கூறித்‌ தமக்காகப்‌ பிரார்த்திக்க
விரும்புகிறவன்‌ கிப்லாவை நோக்கி நின்று பிரார்த்திக்க வேண்டும்‌. தமக்காகப்‌ பிரார்த்திக்கும்‌ வேளையில்‌ நபிகளின்‌ கப்றை நோக்கி நிற்க கூடாது. நபிகளுக்காகப்‌ பிரார்த்தித்து அவர்களுக்காக ஸலவாத்துக்‌ கூறும்‌ வேளையில்‌ மட்டுமே நபியின்‌
கப்றை நோக்கி நிற்க வேண்டும்‌. இது அனைத்து அறிஞர்களின்‌ அபிப்பிராயமாகும்‌.

இதுதான்‌ இமாம்‌ மாலிக்கின்‌ ஒரு அபிப்பிராயமும்‌ கூட. இமாம்‌ ஷாபி, இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹ்‌) போன்றவர்களும்‌ இவ்வாறே அபிப்பிராயப்படுகிறார்கள்‌. ஆனால்‌ இமாம்‌ அபூ ஹனீபாவின்‌ தோழர்கள்‌ நபிகளின்‌ மீது ஸலாம்‌ கூறுகின்ற நேரத்தில்‌ கூட அவர்களின்‌ கப்றை முன்னோக்கி நிற்பதைக்‌ காட்டிலும்‌ கிப்லாவைத்தான்‌ முன்னோக்கி நிற்க வேண்டும்‌ என்று அபிப்பிராயப்படுகிறார்கள்‌. 

நபிகளின்‌ அறையை இடது பக்கமாக ஆக்கியவண்ணம்‌ ஸலாம்‌ கூற வேண்டும்‌ என்றும்‌ இமாம்‌ அபூ ஹனிபாவின்‌ தோழர்களில்‌ சிலர்‌ அபிப்பிராயப்‌ படுகின்றனர்‌. அவர்களின்‌ அறையை பின்புறமாக ஆக்கியவண்ணம்‌ ஸலாம்‌ கூற வேண்டும்‌ என்று அபிப்பிராயப்படும்‌ அறிஞர்களும்‌ இவர்களில்‌ உண்டு.

இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) அவர்கள்‌ நீண்ட நேரம்‌ மனிதன்‌ கப்றருகில்‌ நின்று கொண்டிருப்பதை வெறுக்கிருக்கிறார்கள்‌. அறிஞர்‌ காழி இயாள்‌ 'மப்ஸூத்‌' என்ற தமது நூலில்‌ இமாம்‌ மாலிக்கைப்‌ பற்றி 'மனிதன்‌ நபிகளின்‌ கப்றருகில்‌ நின்று
கொண்டிருப்பதை அவர்கள்‌ விரும்பவில்லை' என்றும்‌, நபிகளின்‌ மீது ஸலாம்‌ கூறிவிட்டுச்‌ சென்று விட வேண்டும்‌ என்றும்‌ கூறியிருப்பதாக அறிவித்துள்ளார்கள்‌. 

மேலும்‌ அறிஞர்‌ நாபிஃ அவர்கள்‌ கூறியதாக காழி இயாள்‌ கீழ்வருமாறு கூறுகிறார்கள்‌.
கலீபா உமரின்‌ மகன்‌ நபியின்‌ கப்றருகில்‌ வந்து ஸலாம்‌ சொல்வதை நூற்றுக்கும்‌ அதிகமான விடுத்தம்‌ நான்‌ கண்டிருக்கிறேன்‌. அதன்‌ பின்னர்‌ கலீபா அபூபக்கர்‌ (ரலி) அவர்கள்‌ மீதும்‌ தம்‌ தந்தை உமர்‌ மீதும்‌ ஸலாம்‌ கூறிவிட்டுத்‌ திரும்புவார்கள்‌. இந்நேரம்‌
அவர்கள்‌ 'அஸ்ஸலாமு அலன்‌ நபீ, அஸ்ஸலாமு அலா அபீபக்ரின்‌, அஸ்ஸலாமு அலாஅபீ' (நபிக்கும்‌, அபூபக்கர்‌ (ரலி) அவர்களுக்கும்‌, என்‌ தந்தைக்கும்‌ ஸலாம்‌ உண்டாவதாக!) என்று கூறுவார்கள்‌. 

இப்படியாக ஒருநாள்‌ நபியவர்கள்‌ உட்காருகின்ற
மிம்பரில்‌ தம்‌ கரத்தை வைத்துப்‌ பிறகு அக்கரத்தை முகத்தில்‌ ஒத்திக்‌ கொண்டார்கள்‌. இப்னு அபி கஸூத்‌, கஃனப்‌ போன்றவர்களைப்‌ பற்றி காழி இயாள்‌ அறிவிக்கின்ற மற்றொரு குறிப்பில்‌ நபித்தோழர்கள்‌ பள்ளிவாசலை விட்டு வெளியேறுகின்ற நேரத்தில்‌
கப்றுக்கு எதிரிலுள்ள மிம்பரின்‌ மீது பதிக்கப்‌ பட்டிருக்கின்ற மாதுளம்பழ வடிவத்திலான
உருளையைத்‌ தம்‌ வலக்கரத்தால்‌ தொட்டுப்பார்த்து விட்டு பிறகு அல்லாஹ்விடம்‌ கிப்லாவை முன்னோக்கி நின்று பிரார்த்திப்பார்கள்‌ என்று கூறினார்கள்‌.

அப்துல்லாஹ்‌ பின்‌ உமர்‌ நபியவர்களின்‌ கப்றருகில்‌ நின்று நபியவர்களுக்கும்‌, அபூபக்கர்‌ ஸித்தீக்‌, உமர்‌ (ரலி) ஆகியோருக்கும்‌ ஸலாம்‌ சொல்வதை இமாம்‌ மாலிக்‌ அவர்கள்‌ முவத்தா என்னும்‌ நூலில்‌ குறித்துள்ளதை அறிஞர்‌ காழி இயாள்‌ கூறுகிறார்‌.
அதே சம்பவத்தை இப்னுல்‌ காஸிம்‌ அல்‌ கஃனபீ போன்ற வேறு சில அறிவிப்பாளர்கள்‌ ‘உமருடைய மகன்‌ அப்துல்லாஹ்‌, அபூபக்கர்‌, உமர்‌ (ரலி) இவ்விருவருக்காகவும்‌ பிரார்த்தனை செய்து விட்டுத்‌ திரும்புவார்கள்‌ என்று சொல்லியுள்ளார்கள்‌.

இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) அவர்கள்‌ மற்றுமொரு இடத்தில்‌ கூறுகிறார்கள்‌: 'நபிகளின்‌ மீது அஸ்ஸலாமு அலைக்க ஆப்யுஹன்‌ நபிய்யு வரஹுமத்துல்லாவரி வபரகாத்து உ” என்று ஸலாம்‌ கூறிய பின்னர்‌ அபூபக்கர்‌, உமர்‌ (ரலி) இவர்கள்‌ மீதும்‌ ஸலாம்‌ கூற வேண்டும்‌. அதன்‌ பின்னர்‌ இமாம்‌ மாலிக்‌ அவர்கள்‌ விளக்கம்‌ தருகிறார்கள்‌. நபிகளின்‌ மீது ஸலாம்‌ கூறி அவர்கள்‌ மீது பிரார்த்தித்தால்‌ தமது முகத்தை கப்றை நோக்கி
திருப்பிச்‌ சற்று நேரம்‌ கப்றோடு நெருங்கி நின்று கப்றைத்‌ தொடாமல்‌ பிரார்த்திக்க வேண்டும்‌. 

மதீனாவாசிகளாக இருப்பின்‌ அவர்கள்‌ மஸ்ஜிதுன்‌ நபவியை விட்டு வெளியேறும்‌ போதெல்லாம்‌ நபியவர்களின்‌ கப்றருகில்‌ நின்று விட்டு போக வேண்டும்‌ என்பதில்லை. வெளியூர்களிலிருந்து வருகிறவர்கள்‌ மட்டுமே இச்சட்டத்கிற்கு
உட்படுவார்கள்‌. பிரயாணமாகிச்‌ செல்கிறவனும்‌, பிரயாணத்திலிருந்து திரும்புகிறவனும்‌
நபியவர்களின்‌ கப்றருகில்‌ கொஞ்சநேரம்‌ நின்று அவர்கள்‌ மீது ஸலவாத்துகள்‌ கூறி அபூபக்கர்‌, உமர்‌ (ரலி) அனைவருக்கும்‌ சேர்த்து பிரார்த்தனை செய்வதும்‌ பரவாயில்லை.

ஒருமுறை இமாம்‌ மாலிக்கிடம்‌ சொல்லப்பட்டது. பிரயாணம்‌ செய்ய முடியாது மதீனாவிலேயே தங்கியிருப்பவர்கள்‌ நபியவர்களின்‌ கப்றருகில்‌ நின்று ஒவ்வொரு நாளும்‌ ஸலாம்‌ சொல்கிறார்கள்‌. சில வெள்ளிக்கிழமை ஜும்‌ஆ தினத்திலும்‌ அவர்கள்‌
மீது ஸலாம்‌ கூறி நீண்ட நேரம்‌ துஆச்‌ செய்துக்‌ கொண்டே இருப்பார்கள்‌. இதைக்‌ கேட்ட இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) மதீனாவிலுள்ள நமது அறிஞர்கள்‌ (புகஹாக்கள்‌) வழியாக இதை நான்‌ கேட்கவேயில்லை என்று கூறி விட்டு நம்‌ சமூகத்தின்‌ முன்னோர்கள்‌
என்னென்ன காரணங்களினால்‌ அபிமானிகளாக வாழ்ந்தார்களோ அக்காரணங்களை வைத்துத்தான்‌ பின்னோர்கள்‌ அபிமானிகளாக முடியும்‌. எனவே நம்‌ சமூகத்தின்‌ முன்னோர்கள்‌ (ஸஹாபாக்கள்‌) அதற்குப்‌ பிறகு தோன்றியவர்கள்‌ (தாபியீன்கள்‌)
இப்படிச்‌ செய்தார்கள்‌ என்று எனக்குத்‌ தகவல்‌ கிடைக்கவில்லை. பிரயாணத்திலிருந்து வருகிறவர்கள்‌, அதை நாடுகிறவர்கள்‌ இவர்களைத்‌ தவிர மற்றவர்களுக்குப்‌ பல விடுத்தம்‌ நீண்ட நேரம்‌ நபிகளின்‌ கப்றருகில்‌ நின்று பிரார்த்திக்க அனுமதியில்லை என்றார்கள்‌. அபுல்வலீதுல்பாஜீ 'இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) அவர்கள்‌ உள்ளூரைச்‌ சார்ந்த
மதீனாவாசிகளுக்கும்‌, வெளியூர்க்காரர்களுக்கும்‌ நபிகளை ஸியாரத்‌ செய்யும்‌ விஷயத்தில்‌ மாறுபட்ட சட்டங்களால்‌ பணித்துள்ளார்கள்‌. இதற்குக்‌ காரணம்‌
வெளியூர்க்காரர்கள்‌ தொலைதூரக்திலிருந்து நபியின்‌ பள்ளியில்‌ தொழுவதற்கும்‌, நபிகளுக்கு ஸலாம்‌ சொல்ல வேண்டுமென்றும்‌ நாடி மதீனாவுக்கு வருகிறார்கள்‌.

மதீனாவாசிகளோ ஊரிலேயே தங்கியிருப்பவர்கள்‌. நபிகளுக்கு ஸலாம்‌ சொல்ல வேண்டுமென்பதை நாடி தூரத்தில்‌ எங்கும்‌ பயணம்‌ செய்ய வேண்டியதில்லை.
ஆகவேதான்‌ ஸலாம்‌ கூறும்‌ மாதிரியில்‌ இவ்விரு சாராருக்கும்‌ மத்தியில்‌ சில மாறுதல்கள்‌ அனுமதிக்கப்பட்டுள்ளன' என்று கூறிவிட்டு நபிகளின்‌ ஒரு ஹதீஸையும்‌ எடுத்துரைத்தார்கள்‌. 

இந்த ஹதீஸில்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ 'இறைவா! என்னுடைய கப்றை வணங்கப்படும்‌ சிலையாக மாற்றிவிடாதே!' என கூறியுள்ளார்கள்‌. மேலும்‌ நபியவர்கள்‌ 'நபிமார்களின்‌ கப்றுகளை யார்‌ பள்ளிவாசல்களாக ஆக்கினாரோ அவர்கள்‌ மீது அல்லாஹ்வின்‌ கோபம்‌ அதிகமாகட்டும்‌' என்றும்‌ கூறியுள்ளார்கள்‌. மேலும்‌ அபுல்‌ வலீத்‌ கூறுகிறார்‌: நபி (ஸல்‌) அவர்கள்‌ 'மக்களே! யாரும்‌ எனது கப்றில்‌ விழாக்கள்‌ கொண்டாடாதிர்கள்‌' என்று உரைத்தார்கள்‌. இன்னும்‌ இமாம்‌ மாலிக்கைப்‌ பற்றிக்‌ கூறும்‌ ஒரு மஸ்‌அலாவில்‌ (சட்டத்தில்‌) நபிகளின்‌ பள்ளிவாசலில்‌ வருகிறவர்கள்‌ முதலில்‌
காணிக்கையாக தஹிய்த்துல்‌ மஸ்ஜித்‌ தொழுகை தொழுது கொள்ள வேண்டும்‌. அதன்‌ பின்‌ ஸியாரத்‌ செய்ய வேண்டும்‌. இப்பள்ளியில்‌ ஸுன்னத்துத்‌ தொழுவதற்கு மிக ஏற்றமான இடமாக நபிகள்‌ தொழுத சில இடங்கள்‌ குறிப்பி ப்பட்டுள்ளன. அவை மணம்‌ பூசப்பட்ட தூண்களுள்ள இடமாகும்‌. (அதாவது அவ்விடத்திலுள்ள தூண்களின்‌ கீழ்பகுதியில்‌ வெள்ளை நிறம்‌ காணப்படும்‌). ஆனால்‌ பர்ளுத்‌ தொழுகைகளை நிறைவேற்றுவதற்கு இமாமுடன்‌ நெருங்கி இருக்கிற முந்திய ஸப்புகளே (அணிகளே)
சிறந்தவையாகும்‌ என்று கூறியிருக்கிறார்கள்‌.

நபிகளின்‌ பள்ளியை நாடி வருகின்ற வெளியூர்வாசிகளுக்கு மேற்கூறப்பட்ட இடத்தில்‌
நின்று ஸுன்னத்தான தொழுகையை நிறைவேற்றுதல்‌ அவர்கள்‌ தங்கியிருக்கின்ற இடங்களில்‌ தொழுவதைவிட மேன்மைக்குரியது. இவையனைத்தும்‌ இமாம்‌ மாலிக்கைப்‌ பற்றியும்‌, அவர்களின்‌ தோழர்கள்‌, மற்றும்‌ இதர ஸஹாபாக்கள்‌ பற்றியும்‌ அறியப்பட்ட பிரபலமான சட்டங்களாகும்‌. நபிகளின்‌ மீது ஸலாம்‌ சொல்லி அவர்களுக்காகப்‌
பிரார்த்திக்க வேண்டும்‌ என்ற இலட்சியத்தைத்‌ தவிர வேறு எந்த எண்ணத்திலும்‌ நபியவர்களின்‌ கப்றை நாடக்கூடாது. 

ஸலாம்‌ சொல்லி துஆ செய்கிறவர்கள்‌ கூட அதிக
நேரம்‌ கப்றருகில்‌ நின்று கொண்டிருப்பதையும்‌ இமாம்‌ மாலிக்‌ அவர்கள்‌ வெறுத்திருக்கிறார்கள்‌. மதீனாவைச்‌ சார்ந்தவர்கள்‌ கூட கப்றில்‌ வரும்போதெல்லாம்‌
அதனருகில்‌ நீண்ட நேரம்‌ நிற்க கூடாது.

மனிதன்‌ தனக்காகப்‌ பிரார்த்திக்க நினைத்தால்‌ கிப்லாவின்‌ பக்கம்‌ முகம்‌ திருப்பி நின்று பிரார்த்திக்க வேண்டும்‌. இதுவே ஸஹாபாக்களின்‌ வழியாகும்‌. அவர்களின்‌ வரலாற்றில்‌ ஒருவர்‌ கூட நீண்ட நேரம்‌ கப்றருகில்‌ நின்று நபிகளுக்காகப்‌ பிரார்த்திக்கவில்லை. அப்படியானால்‌ நாம்‌ எப்படி நீண்ட நேரம்‌ பிரார்த்திக்க முடியும்‌? நபிகளை வேண்டிப்‌ பிரார்த்தித்தல்‌, அவர்களிடம்‌ தேவையை முறையிடுதல்‌, அவர்களின்‌ கப்றருகில்‌ சென்று சிபாரிசை வேண்டி நிற்குதல்‌, அல்லது அவர்கள்‌ இறந்த பின்னர்‌ சிபாரிசு வேண்டுதல்‌ போன்ற எதையுமே ஆன்றோர்‌ (ஸலபு)களில்‌ எவரும்‌
செய்ததில்லை. கப்றின்‌ பக்கத்தில்‌ சென்று பிரார்த்திப்பதாலோ அல்லது நபியைப்‌
பொருட்டாக வைத்துப்‌ பிரார்த்திப்பதாலோ விசேஷமான ஏதேனும்‌ விதிகளும்‌, குறிப்பிடத்தக்க நன்மைகளும்‌ உண்டென்றிருந்தால்‌ ஸஹாபிகளும்‌, தாபியீன்களும்‌ அவற்றைச்‌ செய்யாமல்‌ விட்டு வைப்பார்களா?

முன்னர்‌ நாம்‌ கூறிய அபூ ஜஃபருல்‌ மன்னரை நோக்கி இமாம்‌ மாலிக்‌ சொல்லியதாகக்‌ கூறப்படும்‌ 'நீர்‌ நபிகளை முன்னோக்கி நிற்பீராக! அவர்களைக்‌
கொண்டு சிபாரிசும்‌ தேடுவீராக!' என்ற சம்பவம்‌ இமாம்‌ அவர்கள்‌ மீது இட்டுகட்டி சுமத்தப்பட்டதாகும்‌. இச்சம்பவம்‌ இமாம்‌ அவர்களின்‌ அபிப்பிராயங்களுக்கும்‌ மற்றும்‌ ஸஹாபிகள்‌, தாபியீன்களுடைய சொல்‌, செயல்களுக்கும்‌ மாறுபட்ட ஒன்றாகும்‌. அவர்கள்‌ எல்லோரும்‌ தமக்காக அல்லாஹ்விடம்‌ பிரார்த்திப்பதில்‌ கூட கப்றை நோக்கி நிற்பதைக்‌ குற்றமாக கருதினார்களென்றால்‌ நபியிடம்‌ சிபாரிசு செய்யும்‌ துஆவையும்‌ கேட்க அவர்கள்‌ எப்படி அனுமதித்து இருக்க முடியும்‌? கப்றை நோக்கி நின்று
தமக்காகப்‌ பிரார்த்திப்பதைக்‌ குற்றமாக மதித்த ஒருசமூகம்‌ தீனிலும்‌, துன்யாவிலும்‌ உண்டாகும்‌ துன்பங்களைக்‌ களைந்திட காலஞ்சென்ற நபிமார்களிடமும்‌, வலிமார்களிடமும்‌, மலக்குகளிடமும்‌ எப்படி முறையிடுவார்கள்‌? ஒருபோது அப்படிச்‌
செய்திருக்க மாட்டார்கள்‌. 

இத்தகைய வழிபாடுகள்‌ அனைத்துமே இறைவனுக்கு இணை வைப்பவர்களான முஷ்ரிகீன்களும்‌, குஃப்பார்களும்‌ மற்றும்‌ கிறிஸ்தவர்களும்‌
இவர்களைப்‌ பின்பற்றிய சில முஸ்லிம்களும்‌ செய்கின்றவையாகும்‌. இது முஹாஜிரீன்கள்‌, அன்ஸாரிகள்‌ போன்ற நன்மக்களைப்‌ பின்பற்றிய பழக்கமே அல்ல. முஸ்லிம்களுடைய இமாம்களாக அறியப்பட்ட அறிஞர்களில்‌ ஒருவர்கூட இத்தகைய
கொள்கைகளை ஆதரிக்கவில்லை. இவர்கள்‌ அனைவரும்‌ நபியவர்கள்‌ மீது ஸலவாத்தும்‌, ஸலாமும்‌ கூறுவதில்‌ அதிக அக்கறை கொண்டவர்களாக இருந்தார்கள்‌. நபிகளின்‌ அருகில்‌ நின்று ஸலாம்‌ கூறினால்‌ அதை அவர்கள்‌ கேட்கிறார்கள்‌.
தூரத்திலிருந்து கூறப்படும்‌ ஸலாம்‌ நபியவர்களுக்கு எத்தி வைக்கப்படுகிறது என்றும்‌ இவர்கள்‌ முழுக்க முழுக்க விளக்கம்‌ பெற்றிருந்தார்கள்‌.

இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பலும்‌, மற்றும்‌ இமாம்கள்‌ பலரும்‌ கீழ்வரும்‌ ஹதீஸை நபியவர்களுக்கு ஸலாம்‌ எத்தி வைக்கப்படுகிறது என்பதற்குச்‌ சான்றாக
காட்டியுள்ளார்கள்‌. நபியவர்கள்‌ சொன்னதாக அபூஹுரைரா (ரலி) கூறுகிறார்கள்‌: 'என்‌ மீது யார்‌ ஸலாம்‌ கூறினாலும்‌ நான்‌ அவருக்கு பதில்‌ ஸலாம்‌ சொல்வதற்காக எனது உயிர்‌ மீட்டித்தரப்படுகிறது. (அபூதாவூத், அஹமத்)

நபியின்‌ கப்றருகில்‌ வந்து சொல்வதை மேன்மையாகக்‌ கருதிய இமாம்கள்‌ இந்த ஹதீஸைச்‌ சான்றாக எடுத்துள்ளனர்‌. நபியவர்களின்‌ கப்றை ஸியாரத்‌
செய்வதைப்பற்றிக்‌ கூறப்படும்‌ ஏனைய ஹதீஸ்களும்‌ பலவீனமானவையாகவும்‌, மார்க்கத்தீர்ப்புகள்‌ வழங்க சான்றாக எடுத்துக்‌ கொள்ள முடியாதவையாகவும்‌
காணப்படுகின்றன. எனவேதான்‌ 'ஸிஹாஹுஸ்‌ ஸித்தா' எனும்‌ ஆறு பெரும்‌ ஹதீஸ்‌ தொகுப்பாசிரியர்களும்‌, 'ஸூனன்‌' எனும்‌ ஹதீஸ்‌ நூலாசிரியர்களும்‌ இத்தகைய ஹதீஸ்களை தம்‌ நூல்களில்‌ பதிவு செய்யவில்லை. 

பலவீனமான ஹதீஸ்களை அறிவிக்கின்ற தாருல்‌ குத்னி, பஸ்ஸாஸ்‌ போன்ற தொகுப்பாசிரியர்கள்‌ சிலர்‌ மட்டுமே இது விஷயத்தில்‌ ஒரு சில ஹதீஸ்களைக்‌ கூறியிருக்கிறார்கள்‌. அதிலும்‌ குறிப்பாக
அப்துல்லாஹ்‌ பின்‌ உமர்‌ அல்‌இமரி என்பவர்‌ அறிவிக்கின்ற ஹதீஸை நினைவில்‌ கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்‌. இவர்‌ பலவீனமான அறிவிப்பாளர்‌ என்பதில்‌ சந்தேகமில்லை. இவர்‌ அறிவிக்கின்ற ஹதீஸ்களில்‌ பொய்யை வெளிப்படையாகக்‌ காண முடிகிறது. நான்‌ மரணமடைந்த பின்னர்‌ என்னை யார்‌ ஸியாரத்‌ செய்கிறாரோ அவர்‌ நான்‌ வாழ்ந்திருக்கையில்‌ என்னை வந்து சந்தித்தற்குச்‌ சமமாகிறார்‌' என்று
நபியவர்கள்‌ கூறியதாக இந்த அப்துல்லாஹ்‌ குறிப்பிடுகிறார்‌. இந்த ஹதீஸின்‌ கருத்தில்‌
உண்மைக்கு மாறுபட்ட விளக்கம்‌ வெளிப்படையாகத்‌ தெரிவது போல முஸ்லிம்களின்‌ கொள்கைகளுக்கே இந்த ஹதீஸ்‌ முரண்பட்டிருப்பதை விளங்கலாம்‌. ஏனெனில்‌ ஈமான்‌ கொண்டு, நபியவர்கள்‌ வாழ்ந்திருக்கையில்‌ அவர்களைச்‌ சந்தித்தவர்களுக்கு
ஸஹாபிகள்‌ என பெயர்‌ சூட்டப்படுகிறது. 

முஹாஜிரீன்கள்‌ மற்றும்‌ இறைவன்‌ பாதையில்‌ போராடிய முஜாஹிதீன்கள்போன்றவர்கள்‌ இப்பெயருக்கு மிகவும்‌ அருகதைப்‌ படைத்திருந்தார்கள்‌. நபியவர்கள்‌ இன்னுமொரு ஹதீஸில்‌ என்னுடைய தோழர்களைத்‌ திட்டாதீர்கள்‌' என விலக்கி விட்டு கீழ்வருவதையும்‌ கூறினார்கள்‌: 'சத்தியமாக நீங்கள்‌ உஹது மலையைப்‌ போன்ற அளவுக்குத்‌ தங்கத்தைச்‌ செலவு செய்தாலும்‌ என்‌
ஸஹாபாக்களின்‌ சிறப்பில்‌ இரு சிறங்கை அளவோ அல்லது அதில்‌ பாதியோ கூட உங்களால அடைய முடியாது. (புகாரி, முஸ்லிம்)

அப்படியானால்‌ நபியவர்கள்‌ மரணமடைந்தற்குப்‌ பின்‌ அவர்களை ஸியாரத்‌ செய்வதால்‌ ஸஹாபியாக ஆகிவிட முடியுமா? ஸஹாபாக்களுக்குப்‌ பிறகு தோன்றிய மக்கள்‌ மாபெரும்‌ கடமைகளான தொழுகை, ஹஜ்‌, நோன்பு, போன்ற அமல்களைச்‌
செய்து, இறைவன்‌ பாதையில்‌ போராடி மற்றும்‌ பல வாஜிபான அமல்களைச்‌ நிறைவேற்றுவதனால்‌ கூட ஸஹாபிகளின்‌ நிலையை அடைய முடியாமலிருக்க,
கடமையில்லாததும்‌, அந்த அமலுக்காகப்‌ பிரயாணம்‌ செய்தல்‌ அனுமதிக்கப்படாததுமான ஒருசில அமலைச்‌ செய்து விடுவதனால்‌ ஸஹாபியாக ஆகிவிட முடியும்‌ என்று கூறுவதை எப்படி ஹகீஸ்‌ என்று நிரூபிக்க முடியும்‌?

நபியவர்களின்‌ கப்றை ஸியாரத்‌ செய்ய வேண்டுமென்பதை மட்டும்‌ இலட்சியமாகக்‌
கொண்டு பிரயாணம்‌ செய்வதை அறிஞர்கள்‌ தடுத்திருக்கிறார்கள்‌. ஏனெனில்‌ நபிகளின்‌
பள்ளிவாசலை நாடிப்‌ பிரயாணம்‌ செய்வதெல்லாம்‌ அதில்‌ தொழுவதற்காகத்தான்‌. தொழுகையை நிறைவேற்றிய பின்னர்தான்‌ ஸியாரத்தை நினைக்க வேண்டும்‌. இதைப்போலவே தொழுகையை இலட்சியமாகக்‌ கொண்டே பைத்துல்‌ முஹத்தஸ்‌
பள்ளிவாசலுக்கும்‌ செல்ல வேண்டும்‌. ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக கஃபத்துல்லாவை நோக்கி பிரயாணமாக வேண்டும்‌. இப்படிப்‌ பிரபலமான பள்ளிகளில்‌ கடமையானதும்‌, முஸ்தஹப்பானதுமான அமல்களை நிறைவேற்றச்‌ சென்றால்‌ கூட
நபிகளின்‌ வாழ்நாளில்‌ அவர்களை நோக்கி பிரயாணம்‌ செய்த ஒரு ஸஹாபியின்‌ பதவியை அடைய முடியாமலிருக்கும்‌ போது நபியவர்களின்‌ கப்றை ஸியாரத் செய்வதை மட்டும்‌ நாடி விலக்கப்பட்ட பிரயாணமாக யாத்திரை செய்கின்ற ஒரு
சாதாரண மனிதர்‌ ஸஹாபியாக முடியுமா?


மஸ்ஜிதுன்‌ நபவிக்குப்‌ பயணமாகுதல்‌

நேர்ச்சைகள்‌ செய்வது கடனைப்‌ போன்றதாகும்‌. கடனை திருப்பி ஒப்படைப்பது கட்டாயமாவதைப்‌ போல நேர்ந்த கடன்களையும்‌ திருப்ப வேண்டுமென அனைத்து இமாம்களும்‌ கூறியிருக்கிறார்கள்‌. எனவே நபியவர்களின்‌ கப்றை நோக்கிப்‌ பிரயாணம்‌
செய்ய வேண்டுமென்று ஒருவர்‌ நேர்ந்தால்‌ அல்லது மற்ற நபிமார்கள்‌, நன்மக்கள்‌ ஆகியோருடைய கப்றுகளில்‌ ஏதேனுமொன்றுக்குப்‌ போக வேண்டுமென்று நேர்ந்தால்‌ அதை நிறைவேற்றுதல்‌ அவசியமில்லை. மாறாக அதை நிறைவேற்றினால்‌
விலக்கப்பட்ட ஒரு அனுஷ்டானத்தைச்‌ செய்தவனாகி விடுகிறான்‌ என்று அனைத்து அறிஞர்களும்‌ ஏகோபித்து அபிப்பிராயப்‌ படுகிறார்கள்‌.

இனி நபிகளின்‌ பள்ளிவாசலிலோ, அல்லது பைத்துல்‌ முகத்தஸிலோ தொழுவதற்குப்‌ போக வேண்டுமென்று நேர்ந்தால்‌ அதை நிறைவேற்றுவது கடமையா? இல்லையா? என்பதில்‌ இமாம்‌ ஷாஃபிஈ (ரஹ்‌) அவர்கள்‌ இருவிதமான கருத்துக்களைச்‌ சொல்லி இருக்கிறார்கள்‌. இது ஒரு கடன்‌ என்றும்‌, இக்கடனை நிறைவு செய்வது கடமையாகும்‌ என்பதும்தான்‌ அவர்களின்‌ பலமான அபிப்பிராயமாகும்‌. இமாம்களான மாலிக்கும்‌, அஹ்மத்‌ பின்‌ ஹன்பலும்‌ இந்த அபிப்பிராயத்தை ஆதரிக்கிறார்கள்‌. இமாம்‌ அபூஹனீபா (ரஹ்‌) அவர்கள்‌ இந்த நேர்ச்சையை நிறைவேற்றுவது கடமையில்லை என்று
அபிப்பிராயப்‌ படுகிறார்கள்‌. ஏனெனில்‌ இமாம்‌ அபூஹனிபாவின்‌ மத்ஹபில்‌ நேர்ச்சை நிறைவேற வேண்டுமானால்‌ கடமையான ஒன்றை நேர வேண்டும்‌. வாஜிபல்லாத அமல்களைச்‌ செய்வதாக நேர்ந்தால்‌ அதை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை.

இதனடிப்படையில்‌ மேற்கூறிய இரு பள்ளிவாசல்களுக்கும்‌ பிரயாணம்‌ செய்வது
ஷாரீஅத்தில்‌ கடமையாக விதிக்கப்பட்ட ஒரு அனுஷ்டானம்‌ அல்ல. அப்படியானால்‌
இத்தகைய நேர்ச்சைகளை நேர்ந்து நிறைவேற்றுவதும்‌ கடமையாகாது. இது இமாம்‌
அபூஹனிபாவின்‌ கொள்கையாகும்‌. நேர்ச்சைகளை அவசியம்‌ நிறைவு செய்ய வேண்டுமென்று கடமையாக்கிய மற்ற இமாம்கள்‌ பள்ளியில்‌ தொழப்‌ போவதாக நேர்ந்து கொள்வது ஒரு வழிபாடாகும்‌. வழிபாடுகளையும்‌, அனுஷ்டானங்களையும்‌ புரிவதாக
நேர்ந்து கொண்டால்‌ அவசியம்‌ அந்நேர்ச்சையை நிறைவேற்றியாக வேண்டும்‌ எனக்‌ கூறியிருக்கிறார்கள்‌.

இமாம்‌ புகாரி (ரஹ்‌) அவர்கள்‌ அறிவிக்கின்ற ஹதீஸில்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மனிதன்‌ அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக நேர்ந்து கொண்டால்‌ அதற்கொப்ப வழிபட்டுக்‌ கொள்ள வேண்டும்‌. அவனுக்கு மாறு செய்வதாக எவர்‌ நேர்ந்து கொண்டாலும்‌ அதை
நிறைவேற்ற வேண்டாம்‌' என்று கூறினார்கள்‌.

நபிமார்கள்‌ அல்லது ஸாலிஹீன்களின்‌ சமாதிகளை நோக்கி ஸியாரத்துக்காக பிரயாணம்‌ செய்வதாக ஒருவர்‌ நேர்ந்தால்‌ எக்காரணத்தாலும்‌ அதை நிறைவேற்ற வேண்டியதில்லை என்று எல்லா இமாம்களும்‌ கூறியிருக்கிறார்கள்‌. ஏனெனில்‌ இது
இறைவழிபாடுகளில்‌ சேராத ஒன்றாகும்‌. 

இவ்வாறிருக்க வழிபாடுகளின்‌ இனத்தைச்‌ சேராத செயலை ஒரு மனிதன்‌ செய்தால்‌, அதனால்‌ நபித்தோழரைப்‌ போன்று ஆகிவிடுவான்‌ என்று கூறும்‌ கூற்று ஹதீஸாக இருக்க முடியுமா? இன்னும்‌
கூறப்போனால்‌ இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) அவர்கள்‌ நபியின்‌ கப்றை ஸியாரத்‌ செய்தேன்‌' என ஒரு மனிதன்‌ கூறுவதையே வெறுத்திருக்கிறார்கள்‌. அப்படிச்‌ சொல்வதே பெரும்‌ தவறு எனக்‌ கருதியிருக்கிறார்கள்‌. 

ஏனெனில்‌ ஸியாரத்‌ என்ற வார்த்தை நபியின்‌
கப்றோடு சேர்த்துக்‌ கூறப்படமாட்டாது என்றும்‌, அது மரியாதைக்‌ குறைவாக இருப்பதாகவும்‌ கூறுகிறார்கள்‌. இவ்வார்த்தை மூடலான தெளிவற்ற கருத்தை
வழங்குகிறதாம்‌. ஸியாரத்‌ செய்தேன்‌ என்று ஒருவர்‌ கூறினால்‌ அது ஷரீஅத்‌ அனுமதிக்கின்ற ஸியாரத்தாகவும்‌ இருக்கலாம்‌. ஷரீஅத்‌ அனுமதிக்காத ஷிர்க்கின்‌ இனத்தைச்‌ சார்ந்த பித்‌அத்தான முறையில்‌ அனுஷ்டிக்கப்படும்‌ ஸியாரத்தாகவும்‌ இருக்கலாம்‌. 

ஷரீஅத்‌ அனுமதிக்கின்ற ஸியாரத்தைக்‌ கொண்டு கப்றாளிக்கு ஸலாம்‌ சொல்வதும்‌, அவருக்கு துஆ செய்வதும்‌ கருதப்படும்‌. பித்‌அத்தான ஸியாரத்தைக்‌
கொண்டு முஷ்ரிக்கீன்களுடையவும்‌, நூதன அனுஷ்டானவாதிகளுடையவும்‌, மய்யித்துகளிடம்‌ தம்‌ தேவையைக்‌ கேட்பவர்களுடையவும்‌ ஸியாரத்தைக்‌ கருதுதல்‌ வேண்டும்‌. இது முற்றிலும்‌ விலக்கப்பட்ட ஸியாரத்தாகும்‌. எனவேதான்‌ ஸியாரத்‌ என்ற
சொல்‌ தெளிவற்ற மூடலான கருத்தைக்‌ கொண்டிருக்கிறது என்று கூறினோம்‌.

அத்தகைய ஒரு சொல்லை நபியவர்களின்‌ கப்றுடன்‌ இணைத்துச்‌ சொல்வதைக்‌ காட்டிலும்‌ தெள்ளத்‌ தெளிவான பிசகுதலில்லாத ஒரு வார்த்தையைத்‌ தேர்வுச்‌ செய்து அவ்வார்த்தையுடன்‌ நபியின்‌ கப்றை சேர்த்துச்‌ சொல்வதில்‌ பெருமை இருக்கிறது.
அப்படியென்றால்‌ 'நபிகளின்‌ மீது ஸலாம்‌ சொன்னேன்‌' என்று கூற முடியும்‌. அதனால்‌ தவறான பல மாறுபட்ட கருத்துக்களை விட்டும்‌ தப்பித்துக்‌ கொள்ளலாம்‌. ஷரீஅத்தில்‌ அனுமதிக்கப்படாத ஸியாரத்‌ என்பதும்‌ கூட மய்யித்துக்காக ஸலாம்‌ கூறி பிரார்த்திப்பதுதானே ஆகவே 'நபியின்‌ மீது ஸலாம்‌ கூறினேன்‌' என்று சொல்லும்‌ போது அது அனுமதிக்கப்பட்ட ஸியாரத்திற்கு ஈடாகிறது.


சுவனப்பூங்காவில்‌ ஒரு பகுதி

நபி (ஸல்‌) அவர்கள்‌ என்னுடைய வீடுக்கும்‌, மிம்பருக்குமிடையில்‌ இருக்குமிடம்‌
சுவனப்பூஙகாக்களில்‌ ஒரு பூங்காவாகும்‌' என்று கூறியிருக்கிறார்கள்‌. நபிகளைப்‌ பற்றி இப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்‌ இந்த ஹதீஸை‌ சிலர்‌ திரித்து நபியவர்களின்‌ 'வீடு' என்று கூறியதை 'கப்று' என்று அறிவித்திருக்கிறார்கள்‌. நபியவர்கள்‌ இந்த
ஹதீஸை அறிவிக்கும்‌ போது உயிரோடு தானே இருந்தார்கள்‌. கப்றில்‌ அவர்கள்‌ அடக்கப்பட்டிருக்க வில்லையே அப்படியிருக்க எனது கப்று என்று எப்படி நபியவர்கள்‌ கூறியிருக்க முடியும்‌? எனவேதான்‌ ஸஹாபாக்களில்‌ எவரும்‌ கப்று என்று வந்த
ஹதீஸை ஆதாரமாக கொள்ளவில்லை. இதனால்‌ நபியவர்கள்‌ மரணமடைந்த பிறகு எங்கே அவர்களின்‌ புனித மேனியை அடக்கம்‌ செய்ய வேண்டுமென்பதில்‌ அபிப்பிராய வித்தியாசங்களையும்‌ கூறியிருக்கிறார்கள்‌.

நபிகள்‌ தம்‌ கப்றைப்‌ பற்றி என்னுடைய கப்று என்று அன்று கூறியிருந்தால்‌ ஸஹாபிகளுக்கிடையில்‌ நபிகளின்‌ புனித மேனியை அடக்கப்படும்‌ இடத்தைக்‌ குறித்து தர்க்கமும்‌, அபிப்பிராய பேதமும்‌ எழுந்திருக்காது. ஆகவே இதுவும்‌ மேற்கூறப்பட்ட
ஹதீஸில்‌ என்னுடைய கப்று என்று நபியவர்கள்‌ கூறவில்லை என்பதற்குச்‌ சான்றாகும்‌.

நபியவர்கள்‌, ஆயிஷா (ரலி) அவர்களின்‌ வீட்டில்‌ மரணமடைந்தார்கள்‌. ஸஹாபிகள்‌ சுமூகமாக ஒரு முடிவிற்கு வந்ததும்‌ ஆயிஷா (ரலி) அவர்களின்‌ அறையில்‌ நபியவர்களின்‌ உடல்‌ அடக்கம்‌ செய்யப்பட்டது. 

அதன்‌ பின்னர்‌ கலீபா வலீத்‌ பின்‌ அப்துல்‌ மலிக்‌ அவர்களின்‌ ஆட்சியின்‌ போது நபியவர்களின்‌ பள்ளி விசாலமாக்கப்‌பட்டது. கலீபா வலீத்‌ நபியவர்களின்‌ பள்ளியோடு 'உம்மஹாத்துல்‌ மூமினீன்‌' (நபியின்‌ பிராட்டியார்களின்‌) அறைகள்‌ அனைத்தும்‌ விலை கொடுத்து வாங்கி பள்ளிவாசலோடு சேர்த்து விடும்படி தம்‌ ஆளுனருக்குக்‌ கட்டளையிட்டார்கள்‌. அவ்வாறே செய்யப்பட்டது.

அன்றிலிருந்து இவ்வறைகள்‌ கிழக்குப்‌ பக்கமாகவும்‌, கிப்லாவின்‌ பக்கமாகவும்‌ ஆகிவிட்டது. பிறகு நபியவர்களின்‌ பள்ளிவாசல்‌ விசாலமாக்கப்பட்டதிலிருந்து ஆயிஷா (ரலி) அவர்களின்‌ அறை பள்ளிக்குள்‌ நுழைந்து விட்டது. பின்னர்‌ அந்த அறைக்கு மதில்கட்டி மறைத்து அம்மதில்‌ கூர்மையாக்கப்பட்டது. ஏனெனில்‌ நபியவர்கள்‌ 'கப்றின்‌ மீது உட்காராதீர்கள்‌.அதை நோக்கி தொழாதீர்கள்‌' (ஸஹீஹ் முஸ்லிம்) கப்றை நோக்கி அல்லாஹ்வை வணங்கினால்‌ கூட கப்றுக்கே ஸுஜுது செய்வது போல ஆகிவிடுவதனால்‌ இது விலக்கப்பட்டது. மேலும்‌ சமாதிகளில்‌ அல்லாஹ்வைத்‌ தொழுகின்ற பள்ளிவாசல்கள்‌ கட்ட வேண்டாமென்றும்‌ விலக்கியிருக்கிறார்கள்‌. கப்றில்‌ ஸலாம்‌ சொல்வதற்கும்‌, கப்றாளிக்காகப்‌ பிரார்த்தனை நடத்துவதற்கும்‌ அனுமதி இருக்கிறது. எனவே அன்பியாக்களுடையவும்‌, ஸாலிஹீன்களுடையவும்‌ கப்றருகில்‌ தொழுவதற்காவும்‌, துஆ இறைஞ்சுவதற்காவும்‌ போகிறவன்‌ அல்லாஹ்‌, ரஸூல்‌
விலக்கிய ஒரு ஹராமைச்‌ செய்யப்‌ போகிறான்‌ என விளங்குதல்‌ வேண்டும்‌.


கப்றும்‌ விழாக்களும்‌

அப்துல்லாஹ்‌ பின்‌ மஸ்வூத்‌ (ரலி) அவர்கள்‌ நபியவர்கள்‌ கூறியதாக அறிவிக்கும்‌ ஒரு ஹதீஸில்‌ அல்லாஹ்வுக்குப்‌ பூமியில்‌ வந்து போகின்ற மலக்குகள்‌
இருக்கிறார்கள்‌. அவர்கள்‌ வழியாக என்னுடைய உம்மத்திலுள்ளவர்கள்‌ என்மீது கூறுகின்ற ஸலாம்‌ எனக்கு சேர்த்து வைக்கப்படுகிறது" என்று அறிவிக்கிறார்கள்‌. (நஸாயி, அபூஹாத்திம்)

தூரத்திலிருக்கும்‌ ஒரு முஸ்லிம்‌ நபியின்‌ மீது சொல்லும்‌ ஸலாம்‌ மலக்குகள்‌ வழியாக நபியின்‌ பால்‌ சேர்த்து வைக்கப்‌ படுகின்றது என்று இந்த ஹதீஸுக்கு விளக்கம்‌ தரப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஜும்‌ஆ நாளன்றும்‌ அதிகமாக என்‌ மீது ஸலாம்‌ சொல்லுங்கள்‌. இந்நாளில்‌ என்‌ உம்மத்தாரின்‌ ஸலவாத்துக்கள்‌ எனக்கு எடுத்துக்‌ காட்டப்படுகின்றன. எவர்‌ எனக்கு அதிகமாக ஸலாம்‌ சொல்கிறாரோ அவர்தாம்‌ பதவியில என்னுடன்‌
நெருங்கியவராக இருப்பார்‌ என்பது பிரபல்யமான மற்றொரு ஹதீஸாகும்‌. நபி (ஸல்‌) அவர்களைப்பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள்‌ அறிவிக்கும்‌ மற்றொரு ஹதீஸில்‌ கீழ்வருமாறு காணப்படுகிறது: என்னுடைய கப்றில்‌ விழாக்கள்‌ கொண்டாடாதீர்கள்‌.

உங்கள்‌ இல்லங்களை கப்றுகளைப்‌ போன்று ஆக்கி விடாதீர்கள்‌. எங்கிருந்தாலும்‌ என்மீது ஸலவாத்துச்‌ சொல்லுங்கள்‌. காரணம்‌ உங்கள்‌ ஸலவாத்‌ என்னை வந்து சேருகிறது. (முஸ்னத்)

பிறிதொரு ஹதீஸில் நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ 'எனது கப்றின்‌ அருகிலிருந்து எனக்கு யார்‌ ஸலவாத்துச்‌ சொன்னாலும்‌ நான்‌ அதைக்‌ கேட்பேன்‌. தூரத்திலிருந்து என்மீது (யார்‌ ஸலவாத்துச்‌ சொன்னாலும்‌ அது என்னிடம்‌ சேர்த்து வைக்கப்படும்‌' என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌. இன்னுமொரு ஹதீஸில்‌ நபி (ஸல்‌)
அவர்கள்‌ 'நீஙகள்‌ உங்கள்‌ இல்லங்களிலும்‌ தொழுகையை நிறைவேற்றி வாருங்கள்‌.
கப்றுகளாக உஙகள்‌ இல்லங்களை ஆக்கி விடாதீர்கள்‌. என்னுடைய கப்றை திருவிழா
கொண்டாடும்‌ அளவுக்கு அமைத்து விடாதீர்கள்‌. என்மீது ஸலவாத்தும்‌, ஸலாமும்‌ சொல்லுங்கள்‌. ஏனென்றால்‌ அவை என்னைச்‌ சேருகின்றன' என்று கூறினார்கள்‌.

ஹஸன்‌ (ரலி) அவர்களின்‌ பேரனான அப்துல்லாஹ்‌ பின்‌ ஹுஸைன்‌ அவர்கள்‌, நபிகளின்‌ கப்றில்‌ அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்த ஒரு மனிதரைப்‌ பார்த்து ‘மனிதரே! நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ தமது கப்றைப்‌ பற்றி அதில்‌ திருவிழாக்கள்‌ கொண்டாடாதீர்கள்‌ என்றும்‌, நீங்கள்‌ எங்கிருந்து ஸலவாத்துச்‌ சொன்னாலும்‌ அது எனக்கு சேர்ந்து விடும்‌ என்றும்‌ கூறியிருக்க ஏன்‌ அடிக்கடி இங்கே வந்து செல்கிறீர்‌?
என்று கேட்டு விட்டு நபியவர்களின்‌ மீது நீர்‌ சொல்லுகின்ற ஸலாமும்‌, அந்தலூஸ்‌ (ஸ்பெயின்‌) பகுதியில்‌ வாழும்‌ ஒரு மனிதர்‌ சொல்லும்‌ ஸலாமும்‌ நபிகளைப்‌ பொறுத்தவரையில்‌ சமம்தான்‌ என்று கூறினார்கள்‌.

பலவீனமானதும்‌, துண்டிக்கப்பட்டதுமான ஹதீஸில்‌ 'நபிகளை விட்டு உமது முகத்தைக்‌ திருப்பிவிட என்ன நேர்ந்து விட்டது? அந்த நபியவர்கள்‌ மறுமைநாள்‌
வரையிலும்‌ உம்முடையவும்‌, உம்‌ ஆதிபிதா ஆதமுடையவும்‌ வஸீலாவாக இருக்கிறார்களே' என்று இமாம்‌ மாலிக்‌ கூறியதாக முன்னர்‌ வந்துள்ளது. ஆனால்‌ கீழ்வரும்‌ சில சம்பவங்களைக்‌ கவனித்தால்‌ இதை நிச்சயமாக மாலிக்‌ (ரஹ்‌) அவர்கள்‌
கூறியிருக்க மாட்டார்கள்‌ என்பதை விளங்க முடியும்‌.

அறிவிப்பாளர்‌ பட்டியலில்‌ முஹன்னதக்‌ பின்‌ ஹுமைத்‌ அர்ராஸி இடம்‌ பெற்றிருக்கிறார்‌. இவரும்‌, இமாம்‌ மாலிக்கும்‌ சந்தித்துக்‌ கொள்ளவேயில்லை. அத்துடன்‌
நபிகளின்‌ சிபாரிசினால்‌ மக்கள்‌ மறுமையில்‌ வஸீலா பெறுவார்கள்‌ என்பதை பற்பல ஹதீஸ்கள்‌ சுட்டிக்காட்டிக்‌ கொண்டிருக்கின்றன. நபிகளின்‌ தோழர்கள்‌ வாழ்ந்திருந்த காலத்திலும்‌ அவர்கள்‌ நபியிடம்‌ சென்று நபியின்‌ துஆவினால்‌ வஸீலாவை‌
பெற்றிருக்கிறார்கள்‌.

எனவே இதை மட்டும்‌ காரணமாக வைத்து நபி (ஸல்‌) அவர்கள்‌ மரணமடைந்த பின்னர்‌ அவர்களின்‌ துஆவையும்‌, ஷபாஅத்கையும்‌ அவர்களின்‌ கப்றில்‌ சென்று கேட்கலாம்‌ என்று யாரும்‌ நினைத்து விட வேண்டாம்‌. இவ்வாறான ஒரு சம்பவத்தை
இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) அவர்கள்‌ சொல்லியிருக்க முடியாது. இவையாவும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ தம்‌ சமூகத்தை விட்டும்‌ முழுக்க முழுக்க தடுத்திருக்கின்ற ஒரு தீய செயலாகும்‌ என்பதை யாரும்‌ மறந்து விட வேண்டாம்‌. நபியவர்கள்‌ இறந்துபோன
பின்னர்‌ ஸஹாபிகளோ, தாபியீன்களோ மற்றும்‌ இமாம்களோ இப்படிச்‌ செய்யவில்லை.

மார்க்கத்தின்‌ அடிப்படைகளையும்‌, அதன்‌ நுண்ணியமான கருத்துக்களையும்‌, சட்டங்களையும்‌ அறியாத அறிவீலிதான்‌ இத்தகைய சம்பவங்களைக்‌ கூறியிருக்க முடியுமே தவிர இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) அவர்கள்‌ ஒருபோது இதைச்‌ சொல்லியிருக்க
மாட்டார்கள்‌. கல்வியும்‌, ஆராய்ச்சித்‌ திறமையும்‌, தலைமைப்பதவியும்‌, அறிவு, மேன்மை போன்ற எத்தனை எத்தனையோ சிறப்பம்சங்கள்‌ ஒருங்கே அமைந்த ஒரு இமாம்‌ இந்தத்‌ தவறான சம்பவத்தில்‌ வருகின்ற ஒரு அபிப்பிராயத்துக்கு உறுதுணையாக இருந்திருக்க மாட்டார்கள்‌. நபிகளின்‌ ஸுன்னத்தை முழுக்க முழுக்க கடைப்பிடிக்‌ தொழுகுவதில்‌ மிக்க அக்கறையுள்ளவர்களாக வாழ்ந்திருந்தார்கள்‌.

மார்க்கத்தில்‌ இல்லாத நூதனமான செய்கைகள்‌ மதக்தின்‌ பெயரால்‌ செய்யப்படுவதைத்‌ தடுத்திருக்கிறார்கள்‌. அந்தச்‌ சம்பவத்தில்‌ கூறப்பட்ட மற்றொரு உரையைப்‌ பார்ப்போமானால்‌ கூட இமாம்‌ அவர்கள்‌ அதைக்‌ கூறியிருக்க மாட்டார்கள்‌ எனத்‌
தெளிவாகும்‌. 'அந்த நபியைக்‌ கொண்டு நீர்‌ சிபாரிசு வேண்டும்‌! அல்லாஹ்‌ உமது சிபாரிசை ஏற்றுக்‌ கொள்வான்‌' என்று அபூஜஃபரிடம்‌ இமாம்‌ அவர்கள்‌ கூறினார்களாம்‌.

ஸஹாபாக்களின்‌ வரலாற்றை நாம்‌ படிக்கின்ற போது அவர்களில்‌ ஒருவர்‌ கூட நபிகள்‌ இறந்த பின்னர்‌ அவர்களிடமிருந்து ஷபாஅத்தைக்‌ தேடியதாகக்‌ காணமுடியாது. நபியின்‌ கப்றிலும்‌ கேட்கவில்லை. வேறு எந்த மாதிரியான ஷபாஅத்தையும்‌ நபிகள்‌
மரணமடைந்த பின்னர்‌ கேட்கவில்லை. நபியவர்கள்‌ அதை அன்று அனுமதித்திருந்தால்‌ எல்லா ஸஹாபிகளும்‌ அதன்படி செயல்‌பட்டிருப்பார்கள்‌. நபியவர்களின்‌ கட்டளைகளையும்‌, ஸுன்னத்துகளையும்‌ அதிகமதிகம்‌ செய்ய வேண்டுமென்று பேராவல்‌ கொண்டிருந்த ஸஹாபிகள்‌ அதை அணுவளவும்‌ விட்டு வைத்திருக்கமாட்டார்கள்‌. மாறாக இதை அதிகமாகச்‌ செய்திருப்பார்கள்‌. இவை அனுமதிக்கப்பட்ட செய்கைகள்‌ என்றும்‌ விளங்கியிருந்தால்‌ பிறரிடமும்‌ இதைச்‌ சொல்லிக்‌
கொடுத்திருப்பார்கள்‌.

அதைப்‌ போன்றுதான்‌ இமாம்களும்‌ இச்சட்டத்தை விட்டு வைக்திருக்க மாட்டார்கள்‌. தமது நூல்களில்‌ இதை விளக்கமாக கூறியிருப்பார்கள்‌. இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) அவர்கள்‌ கூறிய 'இஸ்லாமிய சமூகத்தில்‌ தோன்றிய முன்னோர்கள்‌ என்னென்ன
காரணங்களினால்‌ மதிப்பைப்‌ பெற்றார்களோ அக்காரணங்களைக்‌ கொண்டுதான்‌ பின்னோர்களும்‌ மதிப்பைப்‌ பெற முடியும்‌' என்ற தீர்க்கமான உரையை கவனித்தாலும்‌, இந்தச்‌ சமூகத்தின்‌ முன்னோர்கள்‌ அப்படிச்‌ செய்திருப்பதாக எனக்குத்‌ தகவல்‌
கிடைக்கவில்லை என்று இமாமவர்கள்‌ மற்றோர்‌ இடத்தில்‌ கூறியிருப்பதைக்‌ கவனித்தாலும்‌ இமாமவர்கள்‌ அனைத்து ஸஹாபிகளுடையவும்‌, தாபியீன்களுடையவும்‌ மற்றும்‌ ஸலபுஸ்ஸாலிஹீன்களுடையவும்‌ எல்லாச்‌ செய்திகளையும்‌, வழிபாடுகளையும்‌ துருவி ஆராய்ந்து தம்‌ நூல்களில்‌ பதிவு செய்ய வேண்டுமென்று
பெரிதும்‌ அக்கறையுள்ளவர்களாக இருந்தார்கள்‌ என்று தெரிந்து கொள்ளலாம்‌.

நபி (ஸல்‌) அவர்கள்‌ வாழ்ந்திருக்கையில்‌ அவர்களிடம்‌ சென்று பிரார்த்திக்கக்‌ கேட்பதிலும்‌, ஷபாஅத்துச்‌ செய்ய வேண்டுவதிலும்‌ குற்றமில்லை என்று எல்லா
அறிஞர்களும்‌ கூறியிருக்கிறார்கள்‌. ஸஹாபாக்களின்‌ செயல்களும்‌ இதற்குச்‌ சான்றாக உள்ளன. இதைக்‌ கீழ்வரும்‌ சம்பவமும்‌ விளக்கிக்‌ காட்டுகிறது.

ஒருநாள்‌ காட்டரபி ஒருவர்‌ வந்து யா ரஸூலுல்லாஹ்‌! மனிதர்கள்‌ எல்லோரும்‌ துன்பப்படுகிறார்கள்‌. குழந்தைகள்‌ எல்லாம்‌ பட்டினியால்‌ வாடுகின்றன. செல்வங்கள்‌ அழிந்து விட்டன. எனவே எங்கள்‌ நலனுக்காகப்‌ பிரார்த்தியுங்கள்‌. நாம்‌ உங்களிடம்‌
அல்லாஹ்வைக்‌ கொண்டு சிபாரிசு தேடுகிறோம்‌. உங்களைக்‌ கொண்டு அல்லாஹ்விடமும்‌ ஷபாஅத்துத்‌ தேடுகிறோம்‌ என்று கூறினார்‌. இதைச்‌ செவியுற்ற நபியவர்கள்‌ ஆச்சர்யத்தால்‌ 'ஸுப்ஹானல்லாஹ்‌! என்று கூறி அல்லாஹ்வைத்‌ துதித்தார்கள்‌. அக்கம்‌ பக்கத்திலிருந்த ஸஹாபிகளின்‌ முகங்களில்‌
எல்லாம்‌ ஏதோ சில மாறுதல்கள்‌ காணப்பட்டன. இதைக்‌ கண்ட நபி (ஸல்‌) வீறிட்டெழுந்து, என்ன சொல்கிறீர்‌' என அவரிடம்‌ வினவி விட்டு நீர்‌ நினைப்பதைவிட அலலாஹ்வடைய 'ஹான்‌' மகத்துவம்‌ வலுப்பமானதல்லவா? அவனைக்‌ கொண்டு
அவனுடைய சிருஸ்டிகளிடம்‌ சிபாரிசு செய்ய முடியுமா? என வினவினார்கள்‌. பின்‌ உம்மிடம்‌ அல்லாஹ்வைக்‌ கொண்டு சிபாரிசு செய்கிறோம்‌' என்று கூறியதை வெறுத்துப்‌ பேசினார்கள்‌. ஆனால்‌ மனிதரிடம்‌ அல்லாஹ்வைக்‌ காரணமாக வைத்துக்‌
கேட்பதையும்‌, படைப்பினங்களிடம்‌ அல்லாஹ்வைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்துக்‌ கேட்பதையும்‌, நபிகளைக்‌ கொண்டு அல்லாஹ்விடம்‌ சிபாரிசு தேடுவதையும்‌ அவர்கள்‌ வெறுக்கவோ, மறுக்கவோ இல்லை. அல்லாஹ்வைக்‌ கொண்டு மனிதரிடம்‌ சிபாரிசு தேடுவதை மட்டும்‌ வெறுத்திருக்கிறார்கள்‌.

எனவே நபியின்‌ ஷபாஅத்தை அவர்கள்‌ வாழ்ந்திருக்கும்‌ போதும்‌, கியாமத்து நாள்‌ அன்றும்‌ கேட்பது அனுமதிக்கப்‌ பட்டுள்ளது. நபியவர்களிடம்‌ ஸஹாபாக்கள்‌ பலர்‌ வந்து ஷபாஅத்தை வேண்டி நின்றார்கள்‌. இதை அல்லாஹ்வும்‌ சுட்டிக்‌ காட்டுகின்றான்‌:

 மேலும் (அவர்களுக்கு அறிவித்துவிடுவீராக:) அல்லாஹ்வின் கட்டளைப்படி மக்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே தவிர எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை. தமக்குத் தாமே அவர்கள் அநீதி இழைத்துக்கொண்ட வேளையில், உம்மிடம் அவர்கள் வந்திருந்தால், இன்னும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரியிருந்தால், அவர்களுக்காக தூதரும் மன்னிப்புக் கோரியிருந்தால், திண்ணமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பு வழங்குபவனாகவும் பெருங் கருணையுடையவனாகவும் இருப்பதைக் கண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன்: 4:64)

நபியவர்கள்‌ 'ஷபீஃ ஆகவும்‌, முஷஃப்பஃ ஆகவும்‌ உள்ளார்கள்‌ என்பது அனைத்து அறிஞர்களின்‌ ஏகோபித்த முடிவாகும்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ தமது பிரார்த்தனையின்‌ போது அல்லாஹ்விடத்தில்‌ தன்னை ஷபீஃ ஆக ஆக்க வேண்டுமென்று பிரார்த்தித்து
இருக்கிறார்கள்‌.

அன்றி பாமர மக்கள்‌ சிற்சில நேரங்களில்‌ ஷபாஅத்‌ என்ற வார்த்தைக்கு வஸீலா தேடுதல்‌ என்ற கருத்தை வழங்கி விடுகிறார்கள்‌. இன்ன மனிதரைக்‌ கொண்டு உதவி தேடுகிறேன்‌ என்ற கருத்திற்காக ஷபாஅத்‌ தேடுகிறேன்‌ எனக்கூறிப்‌ பிரார்த்தித்தார்கள்‌.
கண்‌ முன்னிலையை விட்டும்‌ தூரமாக மறைந்திருக்கின்ற நபிமார்களைக்‌ கொண்டு
வஸீலா தேடுவதாகக்‌ கருதி தமது பிரார்த்தனையின்‌ போது 'இறைவா! நான்‌ இன்னாரின்‌ சிபாரிஸைக்‌ கேட்கிறேன்‌' என்று கூறி தவஸ்ஸுல்‌ (வஸீலா தேடுதல்‌) என்ற கருத்திற்கு ஷபாஅத்‌ என்ற வார்த்தையை உபயோகித்தார்கள்‌. வார்த்தைகளின்‌
கருத்தையும்‌, பொருளையும்‌ திருப்பியும்‌, புரட்டியும்‌ விடுகிறவன்‌ பெரிய குற்றவாளியாகி விடுகிறான்‌ என்பதை இவர்கள்‌ புரிவதில்லை. 

ஷபாத்துக்கும்‌, வஸீலாவுக்குமிடையில்‌ நிறைய வித்தியாசங்கள்‌ உண்டு. மொழி அடிப்படையில்‌
பார்த்தாலும்‌, நபியவர்கள்‌, ஸஹாபாக்கள்‌ இவர்களின்‌ உரையாடல்களைக்‌ கவனித்தாலும்‌, அவ்விரு வார்த்தைகளுக்கும்‌ அறிஞர்கள்‌ அளிக்கின்ற கருத்துக்களைக்‌ கவனித்தாலும்‌ வஸீலா, ஷபாஅத்‌ போன்ற வார்த்தைகளுக்கு நிறைய வித்தியாசங்களைக்‌ காண முடிகிறது. எனவே ஒரு வார்த்தையின்‌ தாத்பரியம்‌ பிரிதொரு வார்த்தைக்கு வழங்கப்படும்போது உண்மையில்‌ அவ்வார்த்தையால்‌
கிடைக்கும்‌ நேரடி அர்த்தம்‌ மாறி விடுகிறது. இதனால்‌ தவறான பல கருத்துக்களிலும்‌, பிழைகளிலும்‌ மனிதன்‌ சென்று சேர்ந்து விடுகிறான்‌.

இக்காரணத்தினால்‌ தான்‌ இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) அவர்கள்‌ மீது இட்டுக்கட்டப்பட்ட கதை அரபி மொழியிலும்‌, ஷரீஅத்திலும்‌ ஞானம்‌ இல்லாதவர்களால்‌ புனையப்பட்ட ஒரு சம்பவம்‌ என்று அறிஞர்கள்‌ விளக்கம்‌ தந்திருக்கிறார்கள்‌. அதிலும்‌ குறிப்பாக
ஷபாஅத்‌ என்ற வார்த்தை வஸீலா என்ற வார்த்தையின்‌ தாத்பரியத்தை அளிப்பதாக தெரியவருகிறது. அதுமட்டுமின்றி அதன்‌ உரைநடையைக்‌ கவனிக்கும்‌ போதும்‌, இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) அவர்களுடைய உரைக்கும்‌, இக்கதையின்‌ உரைநடைக்குமிடையில்‌
பெரும்‌ வித்தியாசத்தைக்‌ காணலாம்‌.

அதுமட்டுபின்றி மேற்குறிப்பிட்ட சம்பவத்தில்‌ மஸ்ஜிதுர்‌ ரஸூலில்‌ குரலை உயர்த்திப்‌ பேசக்‌ கூடாது எனக்கூறி கலீபாவைத்‌ தடுத்து வசனங்களை எடுத்தோதி அவருக்கு விளக்கமளித்ததெல்லாம்‌ இமாம்‌ மாலிக்‌ அவர்கள்‌ செய்திருக்கிறார்கள்‌
என்பது உண்மையாக இருக்கலாம்‌. ஏனெனில்‌ கலீபா உமர்‌ (ரலி) அவர்கள்‌ கூட நபியின்‌ பள்ளிவாசலில்‌ அமர்ந்திருந்து குரலை உயர்த்திப்‌ பேசுவதை விலக்கியிருக்கிறார்கள்‌.

இது விஷயத்தில்‌ இமாம்‌ மாலிக்‌ அவர்கள்‌ கலீபா உமரைப்‌ பின்பற்றி ஸுன்னத்தின்‌ அடிப்படையில்‌ செயல்‌ பட்டிருக்கலாம்‌. எனவே இதுபோன்ற செய்திகள்‌ மட்டும்‌ இமாம்‌ அவர்களைப்‌ பற்றிக்‌ கூறப்பட்டால்‌ அது உண்மையாக இருக்கும்‌. எதையாவது மாபெரும்‌ இமாம்கள்‌ கூறியதாகச்‌ சொல்லி இமாம்களோடு சேர்த்துக்‌ கூறக்‌ தகுதியற்ற
சில சம்பவங்களைக்‌ கூறினால்‌ எவரும்‌ அதை ஏற்கமாட்டார்கள்‌.

நபியவர்கள்‌ ஸஹாபாக்களிடம்‌ பேசும்போது பயன்படுத்திய சொற்பிரயோகங்கள்‌, அன்னாரின்‌ வார்த்தை நடைகள்‌, பாணிகள்‌, நபிகளிடம்‌ ஸஹாபாக்கள்‌ உரையாடிய உரையாடலின்‌ பாணி, அன்னாரின்‌ பேச்சுக்கள்‌ இவற்றையெல்லாம்‌ அறியாத ஒருவர்‌ அவர்களைப்‌ பற்றி ஹதீஸ்‌ அறிவித்தால்‌ அந்த ஹதீஸ்களில்‌ பற்பல மாற்றங்களையும்‌, திருப்பங்களையும்‌ ஏற்படுத்தி விடுகிறார்கள்‌. மக்கள்‌ பலதரப்பட்டவர்கள்‌. ஒவ்வொருவரிடமும்‌ தனித்தனி வார்த்தை பிரயோகத்தை-சொல்லாட்சியைக்‌
காண்கிறோம்‌. ஒரு சொல்லை குறிப்பிட்ட ஒரு கருத்துக்கு அல்லது குறிப்பிட்ட ஒரு பொருளுக்குப்‌ பிரயோகித்துப்‌ பழகியிருப்பார்கள்‌. அதேசொல்‌ திருமறையிலும்‌, நபிமொழியிலும்‌, ஸஹாபாக்களின்‌ பேச்சு வழக்கிலும்‌ காணப்படும்போது தமக்குத்‌
தெரிந்ததும்‌, தாம்‌ பழகியதுமான தாத்பரியத்தைக்‌ கொடுக்கலானார்கள்‌. இதனால்‌ சில நேரங்களில்‌ திருமறைக்கும்‌, நபிமொழமிக்கும்‌, ஸஹாபாக்களின்‌ சொற்களுக்கும்‌ அல்லாஹ்வும்‌, ரஸூலும்‌ நாடியதற்கு நேர்மாற்றமான தாத்பரியத்தைக்‌ கொடுக்க நேரிடும்‌. இது பலருக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சினையாகும்‌. 

இலக்கணம்‌, இலக்கியம்‌, தர்க்கம்‌, சட்டம்‌, மதஇயல்‌ போன்ற துறைகளில்‌ அறிஞர்களாக இருப்போர்‌ கூட
இத்தகைய தவறுகளில்‌ அதிகமாக அகப்பட்டிருக்கிறார்கள்‌. பொதுமக்களும்‌ இதற்கு விதி
விலக்கல்ல.

நாத்திகர்கள்‌, பொய்‌ ஸுஃபிகள்‌ (விதண்டாவாதிகள்‌) இஸ்மாயிலிய்யா போன்றவர்களெல்லாம்‌ நபிமார்களுடையவும்‌, ஸஹாபாக்களுடையவும்‌ உரைகளை எடுத்து தத்தம்‌ மனப்போக்குபடி விருப்பமான விளக்கங்களை கொடுத்து விட்டு
'நாங்களும்‌, நபிமார்களும்‌ அவர்களைப்‌ பின்பற்றியோர்‌ ஆகியோரின்‌ மூல உரைகளுக்கொப்பவே விளக்கம்‌ கொடுத்திருக்கிறோம்‌' என பொய்யுரைக்கின்றனர்‌.

மலாயிகத்‌ என்ற சொல்லுக்கு விவேகம்‌, ஆற்றல்‌, ஆத்மசக்தி என்றெல்லாம்‌ பொருள்‌ கூறுகிறார்கள்‌. ஜின்‌-ஷைத்தான்‌ என்பவற்றிற்கு மனஆற்றல்‌ என்ற கருத்தையும்‌ அளிக்கிறார்கள்‌. அக்ல்‌ என்ற சொல்லிற்கு பூமியிலுள்ள அனைத்தையும்‌
வெளிப்படுத்தும்‌ ஒருபொருள்‌ என்பன போன்ற தாத்பரியங்களையும்‌ வழங்கியுள்ளார்கள்‌.

இவர்களின்‌ கொள்கையில்‌ அல்லாஹ்வின்‌ முதல்‌ சிருஷ்டி அக்ல்‌ என்பதாகும்‌. இதற்குச்‌ சான்றாகப்‌ பொய்யான ஒரு ஹதீஸையும்‌ எடுத்துக்‌ காட்டுகிறார்கள்‌. அந்த ஹதீஸுடைய கருத்தைக்‌ கூறும்‌ வேளையில்‌ அல்லாஹ்‌ முதன்முதலாக அக்லை
படைத்ததாக கூறுகின்றனர்‌. 'அவ்வல மா கலக' என்ற வாக்கியத்தை 'அவ்வலு மா கலக' என்று சொல்லப்பட்டதினால்‌ தவறான கருத்துக்கள்‌ அதிலே நுழைந்து விட்டன. ‘அவ்வல' என்று சொல்லும்போது நேர்மையான கருத்தை இதற்குக்‌ காண முடிகிறது.

இதை மெய்யான ஹதீஸ்‌ என ஏற்றால்‌ கூட இவர்கள்‌ கூறும்‌ தாத்பரியத்தை அது அளிக்கவில்லை. ஏனெனில்‌ அதன்‌ உண்மையான கருத்தாவது: அல்லாஹ்‌ அக்லை படைத்ததும்‌ அதனுடன்‌ உரையாடினான்‌. அதை நோக்கி வா என்றான்‌. அது வந்தது. போ என்றான்‌, அது போயிற்று. பிறகு அல்லாஹ்‌ கூறினான்‌. 'எனது மகத்துவத்தின்‌ மீது
சத்தியமாக உன்னைவிட கண்ணியமான ஒரு சிருஸ்டியை நான்‌ படைக்கவேயில்லை.
ஆகவே உன்னைக்‌ காரணாமாக வைத்துதான்‌ மக்களை நான்‌ தண்டிப்பேன்‌. அவர்களுக்கு
தான்‌ கூலியும்‌ வழங்குவேன்‌. அவர்களைத்‌ தண்டிப்பதற்கும்‌, அவர்களுக்கு நன்மைகள்‌
வழங்குவதற்கும்‌ நீதான்‌ காரணம்‌ என்று அக்லை பார்த்துக்‌ கூறினான்‌. அதைப்‌ படைத்ததும்‌ இப்படியெல்லாம்‌ அதனுடன்‌ உரையாடினான்‌ என்றால்‌ அதை படைப்பதற்கு முன்னர்‌ வேறு எவற்றையெல்லாமோ படைத்திருக்கிறான்‌ என்றும்‌, அக்லை படைத்தபோது அதனுடன்‌ உரையாடவும்‌ செய்தான்‌ என்றும்‌ தெளிவாகிறது. மேலும்‌ மக்களின்‌ நிமித்தம்‌ மேற்கூறிய நான்கு குணங்களை மட்டும்‌ பெற முடியுமேயொழிய எல்லாக்‌ காரியங்களையும்‌ பெற முடியாது. முஸ்லிம்களிடம்‌ அக்ல்‌ என்றால்‌ சிந்தித்து விளங்கும்‌ ஒரு ஆற்றலுக்குச்‌ சொல்லப்படும்‌. இந்த அக்லினால்‌ கல்விகளையும்‌,
செயல்திறன்கள்‌ எல்லாவற்றையுமே பெற முடிகிறது.

இப்படியான வார்த்தைகளைப்‌ புரட்டி மறித்து திருப்பிப்‌ பொருள்‌ கூறும்‌ நாஸ்திகர்களும்‌, அவர்களைப்‌ பின்பற்றியவர்களுமெல்லாம்‌ அல்லாஹ்‌, ரஸுலுடைய பரிசுத்தமான திருமறையிலும்‌, நபிமொழியிலும்‌, அதன்‌ உரைகளை மாற்றி மறித்து
தத்தம்‌ விருப்பங்களுக்கு ஏற்ப விளக்கம்‌ கொடுத்து விடுகிறார்கள்‌. அல்லாஹ்வும்‌, அவனுடைய ரஸூலும்‌, நாடியதற்கு மாறாகவும்‌ பொருள்‌ காண்கிறார்கள்‌. இதனால்‌ அல்‌ லவ்ஹுல்‌ மஹ்‌ஃபூல்‌ என்பதற்கு அண்ட கோளங்களின்‌ ஆத்மா என்றும்‌, அல்‌ கலம்‌ என்பதற்கு அல்‌ அக்லுல்‌ அவ்வல்‌ என்றும்‌, மல்கூத்‌, ஜபரூத்‌, முல்க்‌ போன்ற சொற்களுக்கு நஃப்ஸப்‌ என்றும்‌, அக்ல்‌ என்றும்‌ விளக்கம்‌ கொடுத்தார்கள்‌.

இப்படியாக ஷபாஅத்‌ என்ற வார்த்தைக்கும்‌ தவறான வியாக்கியானத்தைக்‌ கொடுத்தார்கள்‌. ஷபாஅத்‌ என்றால்‌ அதைக்‌ கேட்பவனுக்காக கேட்கப்பட்டவனிடமிருந்து பரந்து வியாபிக்கிற ஒரு சக்தி என்று பொருள்‌ கூறினார்கள்‌. 

சொற்பிரயோகங்கள்‌ பற்றி வியாக்கியானிகள்‌ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்‌. உதாரணமாக 'கதீம்‌' என்ற சொல்லைப்‌ பார்க்கலாம்‌. அது அரபி அகராதியில்‌ புதியது எனும்‌ சொல்லுக்கு எதிர்ப்பதமாக உபயோகிக்கப்படுகிறது. அப்படியானால்‌ அது பழையது எனப்‌ பொருள்படும்‌. பழமையானது என்றால்‌ அதற்கு முன்னர்‌ மற்றொன்று அதைவிட முந்தியிருந்தாலும்‌, இல்லாவிடினும்‌ அது கவனிக்கப்‌ படுவதில்லை. இப்பொருளில்‌ திருமறை கதீம்‌ என்ற சொல்லை பிரயோகித்திருக்கிறது. இறைவன்‌ கூறினான்‌:

பழைய பேரீச்சங்காம்பு போல்.. (அல்குர்ஆன்: 36:39)

மேலும்‌ நபி யூஸுபின்‌ சகோதரர்கள்‌ (யஃகூப்‌ நபியைப்‌ பார்த்து) வீட்டிலுள்ளவர்கள் கூறினர்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (இன்னும்) உங்களுடைய பழைய மனக்குழப்பத்திலேயே உழன்று கொண்டிருக்கிறீர்கள்.” (அல்குர்ஆன்: 12:95)
என அல்லாஹ்‌ கூறுகிறான்‌. 

அதற்கு இப்ராஹீம் கூறினார்: “எவற்றை நீங்களும், உங்களுடைய முற்காலத்து மூதாதையர்களும் வணங்கிவந்தீர்களோ, அவற்றை நீங்கள் என்றாவது (கண்திறந்து) பார்த்திருக்கின்றீர்களா?
(அல்குர்ஆன் 26:75-76)

இதற்கெல்லாம்‌ கதீம்‌ (அக்தம்‌) என்பது அகராதியின்‌ அடிப்படையில்‌ பொருள்‌ கொள்ளப்படுகிறது. ஆனால்‌ கதீம்‌ என்ற சொல்லுக்கு மதக்‌ கோட்பாடு, மத
நம்பிக்கைகள்‌ பற்றி விதிகள்‌ கூறும்‌ அறிஞர்களிடத்தில்‌ வேறுமாதிரியான கருத்துக்கள்‌
இருக்கின்றன. இவர்கள்‌ கதீம்‌ என்றால்‌ தொன்று தொட்டே உள்ளது. அதற்கு முன்னர்‌ எதுவுமே ஏற்படவில்லை என்று விளக்கம்‌ தருகிறார்கள்‌.

இதைப்போல வார்த்தை என்ற பதம்‌ வாக்கியம்‌ என்ற கருத்தில்‌ அரபி மொழியிலும்‌, குர்‌ஆனிலும்‌, ஹதீஸிலும்‌ உபயோகிக்கப்‌ பட்டுள்ளதைக்‌ காணலாம்‌.

உதாரணமாக நபிகளின்‌ ஒரு ஹதீஸை எடுத்துக்‌ கொள்ளலாம்‌. நபியவர்கள்‌ ‘அருளாளனான அல்லாஹ்வின்பால்‌ மிகவும்‌ உவப்பானவையும்‌, நாவுக்கு இலேசான அதாவது எளிதில்‌ சொல்லக்‌ கூடியவையும்‌, மறுமையில்‌ நன்மை, தீமைகளை நிறுத்துப்‌ பார்க்கும்‌ மீஸானில்‌- தராசில்‌ மிகக்‌ கனமுடையவையுமான இரு வார்த்தைகள்‌ தான்‌
"ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி ஸுப்ஹானல்லாஹில்‌ அளிம்‌” என்று
கூறினார்கள்‌. இந்த ஹதீஸில்‌ கலிமதானி (இரு சொற்கள்‌) என்பது வாக்கியங்கள்‌ என்ற கருத்தில்‌ கூறப்பட்டுள்ளது.

மேலும்‌ நபிகள்‌ 'கவிஞர்‌ கூறிய வார்த்தையில்‌ மிக உண்மையானது கவிஞர்‌ நுபைது உரைக்க அல்லாஹ்‌ அல்லாதவை அனைத்தும்‌ அழிந்து விடுபவை' என்று கூறினார்கள்‌. இங்கேயும்‌ நபிகள்‌ வார்த்தையை வாக்கியம்‌ என்ற பொருளில்‌ பிரயோகித்கிருக்கிறார்கள்‌.

திருமறையிலும்‌ “அவர்களின் வாயிலிருந்து வெளிப்படுகின்ற பேச்சு எத்துணை மோசமானது! அவர்கள் வெறும் பொய்யைத்தான் கூறுகின்றார்கள்.
(அல்குர்ஆன்: 18:5) வருகிறது. இவ்வசனத்தில்‌ வார்த்தை என்பது வாக்கியத்திற்குப்‌ பதிலாக பயன்படுத்தப்‌ பட்டிருக்கிறது. 

 (நபியே!) நீர் கூறும்: “வேதம் அருளப்பட்டவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு வார்த்தையின் பக்கம் வாருங்கள்
(அல்குர்ஆன்: 3:64)

'தவில்‌ அர்ஹாம்‌' என்ற சொற்றொடரும்‌ இப்படித்தான்‌ மாதா-பிதாக்களின்‌ வழியாக உள்ள எல்லா உறவினர்களுக்கும்‌ சொல்லப்படும்‌. இவர்கள்‌ அனந்தரச்‌ சொத்துக்களுக்கு உரியவர்களானாலும்‌ சரி, இல்லாவிட்டாலும்‌ சரியே. ஆனால்‌ புகஹாக்கள்‌
இச்சொற்றொடரை அவகாசிகள்‌ இல்லாதவனுடைய அனந்தரச்‌ சொத்தைப்‌ பெறுகிறவர்களுக்கு உபயோகித்தார்கள்‌. “இறைநிராகரிப்பாளர்களின் வாக்கைத் தாழ்த்தினான். மேலும், அல்லாஹ்வின் வாக்குதான் மேலானதாக இருக்கிறது. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான்.
(அல்குர்ஆன்: 9:40)”

இம்மாதிரியாக அரபி மொழியிலும்‌, திருமறையிலும்‌, ஹதீஸிலும்‌ பற்பல இடங்களில்‌ வார்த்தை என்பது வாக்கியத்துக்கு உபயோகிக்கப்‌ படுவதைக்‌ காண முடிகிறது. இலக்கண அறிஞர்கள்‌ பெயர்ச்சொல்‌, வினைச்சொல்‌, துணைச்‌ சொல்‌ இவற்றிற்கெல்லாம்‌ வார்த்தை என்ற பதத்தைப்‌ பிரயோகித்தனர்‌. பேச்சுகளுக்கு வார்த்தை என்று கூறுவதை அனுமதித்தனர்‌.


வஸீலா ஷபாஅத்‌ என்னும்‌ வார்த்தைகளில்‌ ஏற்பட்ட சந்தேகங்கள்‌

வார்த்தைகளைப்‌ பற்பல கருத்துக்களுக்குப்‌ பிரயோகிப்பதை அறியாதவர்களும்‌, புரட்டியும்‌, திருப்பியும்‌ சொற்களைக்‌ கூறக்‌ கூடியவர்களுமான சிலரிடத்தில்‌ வஸீலா, தவஸ்ஸூல்‌, ஷபாஅத்‌ போன்ற சில வார்த்தைகள்‌ கிடைத்தபோது அவற்றிற்கு
அல்லாஹ்வும்‌, ரஸுலும்‌, ஸஹாபாக்களும்‌, தாபியீன்களும்‌, இமாம்கள்‌ ஆகியோரெல்லாம்‌ விலக்கியிருந்ததற்கு மாற்றமான கருத்துக்களைக்‌ கொடுத்து மக்களை தவறின்பால்‌ திருப்பி விட்டார்கள்‌. இதனால்‌ பலர்‌ தவறினார்கள்‌.

இவ்வார்த்தையின்‌ உட்கருத்தைப்‌ புரிந்து கொண்டவர்கள்‌ மிகச்‌ சிலரே. பொதுவாக கல்வி என்பது நன்றாக ஆராய்ந்து கற்று அறிந்து கொள்வதாகும்‌. அறிஞர்களிடமிருந்து ஏதாவது உரைகளை நகர்த்தி, அவ்வாறு நகர்த்திய உரைகளை அந்த அறிஞர்களே கூறியதாகச்‌ சொல்லப்படும்போது இச்சொல்லில்‌ எத்தனை உண்மை இருக்கிறது
என்பதையும்‌ சிந்திக்க வேண்டும்‌. நபிகளுடைய பதப்பிரயோகங்களையும்‌, ஸஹாபாக்களுடையவும்‌, தாபியீன்களுடையவும்‌ சொற்களின்‌ கருத்துக்களையும்‌ நன்றாக அறிந்த பின்னர்‌ அவற்றுக்கு விளக்கம்‌ தர முனைவது போல திருமறைக்கு விளக்கம்‌ சொல்லும்போதும்‌, வார்த்தைகளின்‌ தாத்பரியங்களைக்‌ கூறும்போதும்‌ தகுந்த சான்றுகளைக்‌ கொண்டு சொல்ல வேண்டும்‌.

எல்லா இடங்களில்‌ வைத்தும்‌ நபிகளின்‌ மீது ஸலாத்தும்‌, ஸலாமும்‌ கூற வேண்டுமென்று அல்லாஹ்‌ நம்மைப்‌ பணித்திருக்கிறான்‌. இதைக்‌ குர்‌ஆன்‌,
ஹதீஸ்களுடைய நேருரையிலிருந்து வெளிப்படையாக விளங்கிக்‌ கொள்ள முடிகிறது. இதில்‌ மாறுபட்ட அபிப்பிராயம்‌ கூறுவதற்கு யாருக்கும்‌ உரிமையில்லை. நபிகளுக்கு வேண்டி அல்லாஹ்விடம்‌ வஸீலா, பளீலா என்னும்‌ சில பதவிகளைக்‌ கேட்டுப்‌ பிரார்த்திக்க வேண்டுமென்று நபியவர்களே நம்மைப்‌ பணித்துள்ளார்கள்‌. ஸஹீஹான ஹதீஸ்‌ வழியாக இது விஷயத்தில்‌ நமக்கு ஆசையூட்டியிருக்கிறார்கள்‌.

நபியவர்களுக்கு அல்லாஹ்‌ வாக்களித்தற்கொப்ப புகழுக்குரிய உன்னதமான இடத்கில்‌ அவர்களை மறுமையில்‌ சேர்த்துவிட வேண்டுமென்று பிரார்த்திக்கவும்‌ நம்மைப்‌ போதித்தார்கள்‌. இத்தகைய வஸீலாவும், ஸலாவாத்துகளுமெல்லாம்‌ நபிகளுடைய
சொந்தப்‌ பாத்தியதைகளாகும்‌.

மேலும்‌ நாம்‌ தேட வேண்டுமென்று பணிக்கப்பட்டுள்ள வஸீலா என்பது வணக்க வழிபாடுகள்‌ நற்கருமங்கள்‌ செய்து அல்லாஹ்வோடு நெருங்க வேண்டும்‌ என்பதாகும்‌. இந்தக்‌ கருத்துக்குட்பட்ட வஸீலாவில்  நபியின்‌ ஏவல்கள்‌ அனைத்தும்‌ இடம்‌ பெறுகின்றன. நபியவர்களை முழுக்க விசுவாசித்து அவர்களின்‌ பாதையை முன்மாதிரியாகப்‌ பின்பற்றி அவர்களுக்கு முழுக்க வழிபட்டு நடப்பதினால்‌ இந்த
வஸீலாவைப்‌ பெற முடிகிறது. அவ்வாறென்றால்‌ இத்தகைய வஸீலாவைக்‌ தேடுதல்‌ ஒவ்வொரு முஸ்லிமின்‌ மீதும்‌ கட்டாயக்‌ கடமையாகும்‌.

இன்னும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ வாழ்ந்திருக்கையில்‌ அவர்களின்‌ பிரார்த்தனைகள்‌, ஷபாஅத்துகள்‌ இவற்றைப்‌ பெற்றும்‌, மறுமையில்‌ அவர்களின்‌ ஷபாஅத்தை வேண்டியும்‌ அல்லாஹ்வை சமீபிக்கத்‌ தேடுவது இன்னொரு வகை வஸீலாவாகும்‌. நபியவர்களுக்கு அல்லாஹ்விடம்‌ இருக்கின்ற மதிப்பினாலும்‌, கண்ணியத்தினாலும்‌ அவர்களின்‌
பிரார்த்தனையை ஏற்று ஷபாஅத்தை அங்கீகரித்து அல்லாஹ்‌ அவர்களை கெளரவிப்பான்‌. இதனால்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ துஆ, ஷபாஅத்‌ ஆகியவற்றைப்‌
பெற்றவர்கள்‌ பயனடைந்தார்கள்‌. அன்று ஸஹாபிகளுக்கு நபியின்‌ இந்த ஷபாஅத்‌
கிடைத்ததினால்‌ அவர்களுக்கு அல்லாஹ்‌ மழையைப்‌ பெய்யச்‌ செய்து வறட்சிக்கு நிவாரணமளித்தான்‌. கண்பார்வை இழந்த ஸஹாபி ஒருவரின்‌ கண்பார்வை திரும்பியது. நபியவர்களின்‌ துஆவும்‌, ஷபாஅத்தும்‌ அருளப்பட்டவருக்கும்‌, அவற்றை அருளப்படாதவருக்கும்‌ இடையில்‌ நீண்ட வேறுபாடுகள்‌ உள்ளன.

நபி (ஸல்‌) அவர்களைப்‌ பொருட்டாக வைத்து ஸஹாபாக்கள்‌ தாமாகவே பிரார்த்தனை நடத்தியதினால்‌ மழை பெய்தது என்றோ, நபியைக்‌ கொண்டு ஆணையிட்டு இறைவனிடம்‌ ஸஹாபாக்கள்‌ தாமாகவே வேண்டியதினால்‌ இறைவன்‌ அவர்களுக்கு மழையைப்‌ பெய்யச்செய்தான்‌ என்றோ, பார்வையிழந்த ஸஹாபிக்கு அவர்‌ தாமாக பிரார்த்தனை நடத்தியதினால்‌ தான்‌ தன்‌ பார்வை திரும்பியது என்றோ எண்ணுவது பெரிய குற்றமாகும்‌. சில மக்கள்‌ இப்படிச்‌ செய்து வருகிறார்கள்‌.

நபியவர்கள்‌ இறந்த பின்னரும்‌ அவர்களைப்‌ பொருட்டாக வைத்தும்‌, அவர்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்தும்‌ அல்லாஹ்விடம்‌ பிரார்த்திக்கின்றனர்‌. இதை ஷரீஅத்‌ அனுமதிக்கின்ற செய்கை என்றும்‌ கருதிக்‌ கொள்கின்றனர்‌. நபியவர்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்வதோடு நின்று விடுவதில்லை. மலக்குகள்‌, ஸாலிஹீன்கள்‌ மற்றும்‌ தமது எண்ணத்தில்‌ நல்லவர்கள்‌ என்று நினைப்பவர்களை எல்லாம்‌ பொருட்டாக
வைத்து அவர்களைக்‌ கொண்டெல்லாம்‌ சத்தியம்‌ செய்து கேட்கின்றனர்‌. உண்மையில்‌
இம்மக்கள்‌ (அதாவது நல்லவர்கள்‌ என்று கருதப்பட்டவர்கள்‌) பெரிய குற்றவாளிகளாக
இருந்தாலும்‌ பிரார்த்திப்பவர்களின்‌ நினைப்பில்‌ இவர்கள்‌ நல்லவர்களாக இருந்தால்‌ மட்டும்‌ போதுமானது. அதனால்‌ இவர்களை வஸீலாத்‌ தேடுவதற்குரிய கருவிகளாக்கி விடுகின்றனர்‌. உண்மையில்‌ ஸஹீஹான ஹதீஸ்‌ இவர்களின்‌ இப்பொய்‌ வாதத்திற்குச்‌ சாட்சி கூறாது. நபிகளின்‌ மீது இட்டுக்கட்டிச்‌ சொல்லப்பட்ட பொய்யான ஹதீஸ்களும்‌, பலவீனமான ஏதோ சில ஆதாரங்களுமே இவர்களின்‌ இவ்வாதத்திற்குச்‌ சான்றுகளாகி விடுகின்றன.

படைப்பினங்களை பொருட்டாக வைத்து வஸீலா தேடலாம்‌ என்று கூறும்‌ வாதத்திற்குச்‌ சான்றாக நபிகள்‌ கூறிய ஸஹீஹான ஹதீஸ்களைப்‌ பார்க்க முடியாது. இமாம்‌ புகாரி (ரஹ்‌) அவர்களுடைய மாபெரும்‌ ஹதீஸ்‌ தொகுப்பான ஸஹீஹ்‌
புகாரியிலும்‌, இமாம்‌ முஸ்லிமின்‌ ஹதீஸ்‌ திரட்டிலும்‌, பொதுவான ஆறு பெரும்‌ ஹதீஸ்‌ தொகுப்புகளிலும்‌, மற்றும்‌ இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹ்‌) போன்ற
ஹதீஸ்‌ அறிஞர்களின்‌ 'முஸ்னத்‌' களிலும்‌ மேலும்‌ இவைப்போன்ற நம்பத்தகுந்த நூற்களிலும்‌ இவ்வாதத்திற்கு சான்றுகளைப்‌ பெற முடியாது. இட்டுக்கட்டப்பட்ட (மவ்ளூஃ) ஹதீஸ்கள்‌ அதிகமாக இடம்பெற்றுள்ள சில நூற்கள்‌ மட்டும்தான்‌ மேற்படி
வாதத்தை அனுமதிக்கின்றன. 

இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பலுடைய முஸ்னதிலும்‌,
அதைப்போன்ற வேறு சில நூற்களிலும்‌ பொய்யுரைக்கும்‌ பலவீனமான அறிவிப்பாளர்கள்‌ வழியாக வந்த சில பலவீனமான ஹதீஸ்கள்‌ பதிவு
செய்யப்பட்டுள்ளன. இருப்பினும்‌ இமாம்‌ அஹ்மதைப்‌ பொறுத்தவரையில்‌ வேண்டுமென்றே அவற்றைக்‌ குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்‌. மாறாக அந்த
அறிவிப்பாளர்கள்‌ பலவீனமான ஹதீஸ்களைக்‌ கூறுகிறவர்கள்‌ எனத்‌ தெரியாமல்‌ அவர்களின்‌ ஹதீஸ்கள்‌ தவறான முறையில்‌ இமாம்‌ அஹ்மதின்‌ நூலான முஸ்னதில்‌ இடம்‌ பெற்றுவிட்டது. அவை அறிவிப்பாளர்‌ பொய்யர்‌, பலவீனர்‌ எனத்‌ தெரிந்ததற்கு
அப்பால்‌ சேர்க்கப்பட்ட ஹதீஸ்கள்‌ அல்ல.

இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பலுடைய முஸ்னத்‌ எனும்‌ ஹதீஸ்‌ தொகுப்பில்‌ புனையப்பட்ட ஹதீஸ்கள்‌ ஏதேனும்‌ இருக்கிறதா இல்லையா என்ற விஷயத்தில்‌
ஹாபிஸ்‌ அபுல்‌ அலா அல்‌-ஹமதானி; ஷைகு அபுல்‌ஃபர்ஜ்‌, இப்னுல்‌ ஜவ்ஸ்‌ ஆகியோருக்கிடையே அபிப்பிராயப்‌ பேதங்கள்‌ ஏற்பட்டிருக்கின்றன. ஹாபிஸ்‌ அபுல்‌ அலா இல்லையென மறுக்கிறார்கள்‌. இப்னுல்‌ ஜவ்ஸ்‌ இமாம்‌ அஹ்மதின்‌ முஸ்னதில்‌
மப்ளுஃ (நபியின்‌ மீது இட்டுக்கட்டப்பட்ட) ஹதீஸ்கள்‌ இருப்பதாக நிரூபித்துக்‌ காட்டுகிறார்‌. இவ்விரு அறிஞர்களும்‌ ஒவ்வொரு அபிப்பிராயத்தைக்‌ கூறிவிட்டாலும்‌ இருவரின்‌ சொல்லும்‌ ஒன்றைத்தான்‌ காட்டுகிறது. 

ஏனெனில்‌ புனையப்பட்ட ஹதீஸ்கள்‌ யாவை என விளக்கம்‌ கூறுவதில்‌ இவ்விருவரும்‌ இரு மாதிரியான அபிப்பிராயங்களைக்‌ கூறுகின்றனர்‌. அபுல்‌ஃபர்ஜ்‌ 'ஒரு ஹதீஸ்‌ அது சரியானதல்ல என காட்டுகின்ற ஏதேனும்‌ ஒரு சான்று கிடைத்து விட்டால்‌ அதுவே புனையப்பட்ட ஹதீஸாகும்‌' என்று கூறுகிறார்‌. அபுல்‌ஃபர்ஜ்‌ இந்த இனத்தைச்‌ சார்ந்த பற்பல ஹதீஸ்களை தமது நூலில்‌ புனையப்பட்ட ஹதீஸ்களுக்கு உதாரணமாகவும்‌ எடுத்துக்‌ காட்டுகிறார்‌. ஆனால்‌ அபுல்‌ அலா 'புனையப்பட்ட ஹதீஸ்‌ என்றால்‌ நபிகள்‌ கூறியதாக வேண்டுமென்றே அவர்கள்மீது இட்டுக்கட்டி பொய்யாகக்‌ கூறப்படும்‌ ஹதீஸாகும்‌' என்று கூறுகிறார்‌.

இந்த விளக்கத்தை ஹாபிஸ்‌ அபுல்‌ அலா ஆமோதிக்கிறார்‌. அறிஞர்‌ அபுல்‌ஃபர்ஜ்‌ புனையப்பட்டது எனக்கூறிய சில ஹதீஸ்களைப்‌ பற்றி வேறு சில அறிஞர்கள்‌ அவை மெய்யான ஹதீஸ்கள்‌ என்று கூறி அபுல்‌ஃபர்ஜின்‌ அபிப்பிராயத்தைப்‌
புறக்கணித்கிருக்கிறார்கள்‌.

ஸலபுஸ்ஸாலிஹீன்களுக்கிடையில்‌ பொய்யும்‌, புரட்டும்‌ கொண்டு புனையப்பட்டவை குறைவுதான்‌. ஸஹாபாக்களைப்‌ பொறுத்தவரையில்‌ நபிகளைப்பற்றி ஹதீஸ்கள்‌ அறிவிக்கும்போது அவர்கள்‌ அனைவரும்‌ உண்மையையும்‌, நேர்மையையும்‌ தமது கடமையாகக்‌ கொண்டிருந்தார்கள்‌. வேண்டாத அனுஷ்டானங்கள்‌, பித்‌அத்துகள்‌ எதுவும்‌ அவர்களிடம்‌ காணப்படவில்லை. ஆனால்‌ காரிஜிய்யாக்கள்‌, முர்ஜிய்யாக்கள்‌, ராபிளிய்யாக்கள்‌, கத்ரிய்யாக்கள்‌ போன்ற வழிகெட்ட வகுப்பார்களிடம்‌ அன்று
நூதனமான புதுப்புது அனுஷ்டானங்கள்‌ காணப்பட்டன. 

இவர்களில்‌ ஒருவர்கூட நபித்தோழராக இருக்கவில்லை. ஸஹாபிகளில்‌ யாரும்‌ என்னிடம்‌ ஹிள்ர்‌ வந்தார்‌ என்று கூறவில்லை. மூஸா நபியுடைய வரலாற்றில்‌ காணப்படுகின்ற ஹிள்ர்‌ என்பவர்கள்‌ இறந்து விட்டார்கள்‌ என்பது நிச்சயம்‌. இதைப்பற்றி விளக்கமான செய்திகளை நான்‌ இன்னொரு இடத்தி்ல்‌ விளக்கியிருக்கிறேன்‌. எனவே இதைப்பற்றி அதிகமாக நான்‌ இங்கே விளக்கவில்லை.

மக்களிடத்தில்‌ அதிகமாக வந்து போய்க்‌ கொண்டிருப்பதாக அறியப்படும்‌ ஹிள்ர்‌ என்பவர்‌ ஜின்‌ என்பதாக விளங்கிக்‌ கொள்ள வேண்டும்‌. மனித உருவத்தில்‌ ஆள்மாறாட்டம்‌ செய்து தன்னை ஹிள்ர்‌ எனக்கூறுவது ஜின்‌ இனத்தில்‌ ஒன்றாகும்‌.

பொய்யர்களான மனிதர்களில்‌ சிலரும்‌, தம்மைப்பற்றி தாம்‌ ஹிள்ர்‌ என்றும்‌ பொய்‌ வாதாட்டம்‌ செய்து வருகிறார்கள்‌. இவர்களைப்‌ பற்றி யாரும்‌ மலக்கு என்று எண்ணிக்‌ கொள்ள வேண்டாம்‌. மலக்குகள்‌ எக்காலமும்‌ பொய்யுரைக்க மாட்டார்கள்‌. மனு-ஜின்‌
இனங்களில்தான்‌ பொய்‌ மலிவாகக்‌ காணப்படும்‌. ஹிள்ர்‌ என்று கூறி பலரிடம்‌ ஜின்கள்‌ ஆள்மாறாட்டம்‌ செய்து வந்திருக்கின்றன. அவர்களில்‌ பலரை நானும்‌ அறிவேன்‌. இவர்களைப்பற்றி விளக்கமாகக்‌ கூறினால்‌ நமது தலைப்பு நீண்டு விடும்‌ என்பதால்‌ சுருக்கிக்‌ கொள்கிறேன்‌.

ஜின்களுடைய இத்தகைய ஏமாற்று வித்தை ஸஹாபாக்களிடம்‌ விலை போகவில்லை. இது விஷயத்தில்‌ அவர்கள்‌ மிகவும்‌ திறமைசாலிகளாக இருந்தார்கள்‌. விபரமற்ற ஆபிதுகள்‌ (வணக்கவாளிகள்‌) பலரை ஜின்கள்‌ மக்காவுக்குத்‌ தூக்கிக்‌ கொண்டு வந்து அரஃபாவில்‌ நிறுத்தி மீண்டும்‌ அவர்களை ஊரில்‌ திருப்பிக்‌ கொண்டு
விட்டிருக்கின்றன. இம்மாதிரி ஏமாற்றங்களில்‌ ஸஹாபிகள்‌ சிக்கியதில்லை. சிலரின்‌
பணத்தைத்‌ திருடி, உணவுப்‌ பண்டங்களைக்‌ கையாடி பிறரிடம்‌ கொண்டு கொடுத்தும்‌ ஜின்கள்‌ ஏமாற்றுகின்றன. இவற்றையெல்லாம்‌ காணுகின்ற மனிதன்‌ கராமத்துகள்‌ என தவறாக விளங்கிக்‌ கொள்கிறான்‌. இவையனைத்தும்‌ ஜின்‌-ஷைத்தான்‌௧ளுடைய ஊசலாட்டங்கள்‌ என்று நினைப்பதில்லை.

ஸஹாபாக்களின்‌ வரலாற்றில்‌ அவர்களில்‌ ஒருவர்‌ கூட ஜின்‌-ஷைத்தான்களின்‌ சூழ்ச்சி வலையில்‌ சிக்கிக்‌ கொள்ளவில்லை. தாபியீன்களைப்‌ பொறுத்தவரையில்‌ மக்கா, மதீனா, பஸரா, ஷாம்‌ போன்ற பகுதிகளில்‌ வசித்து வந்த தாபியீன்களில்‌ எவருமே வேண்டுமென்றே பொய்யுரைக்கவில்லை. ஷியாக்கள்‌ மட்டுமே பொய்யுரைப்பவர்களாக அறியப்பட்டு வந்திருக்கிறார்கள்‌. வேறு சில கூட்டத்தாரிடமும்‌ பொய்‌ அறியப்பட்டு வந்திருக்கிறது. ஆனால்‌ தவறுதல்‌ என்பது எவரையும்‌ விட்டு வைக்கவில்லை. அதை
விட்டு தப்பியவர்கள்‌ மிக அரிது. நபித்தோழர்களில்‌ சிலரும்‌ தவறுதலில்‌ சிக்கியிருக்கிறார்கள்‌. அவர்களும்‌ தவறுதல்‌ என்ற நோயால்‌ சில நேரங்களில்‌ பாதிக்கப்‌
பட்டிருக்கிறார்கள்‌. 

தாபியீன்களும்‌ அப்படித்தான்‌. தவறு இவர்களையும்‌ விட்டு வைக்கவில்லை. எனவே ஸஹீஹுல்‌ புகாரி, ஸஹீஹுல்‌ முஸ்லிமைத்‌ தவிர மற்ற நூற்களில்‌ பதிவு செய்யப்பட்டிருக்கும்‌ சில ஹதீஸ்களிலும்‌ தவறுகள்‌
பாய்ந்திருக்கின்றன. ஆனால்‌ இமாம்‌ புகாரி, இமாம்‌ முஸ்லிமுடைய நூற்கள்‌ மட்டும்‌ மிக்க தூய்மையானது என்பதில்‌ சந்தேகமில்லை. மற்ற ஹதீஸ்‌ நூற்கள்‌ சிலவற்றில்‌ தவறுகள்‌ இடம்‌ பெற்றிருப்பதை ஹாபிஸ்‌ அபுல்‌ அலா அறிந்திருந்தார்கள்‌. இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹ்‌) அவர்களே சில தவறான ஹதீஸ்களை தமது முஸ்னத்‌ என்ற நூலில்‌ அறிவித்து விட்டு பிறர்‌ அவற்றைத்‌ தவறானவை என்று விளங்குவதற்காகவே தாம்‌ அறிவித்ததாக விளக்கம்‌ தந்துள்ளார்கள்‌.

இது விஷயத்தில்‌ இமாம்‌ அஹ்மத்‌ அவர்கள்‌ மற்ற சில தொகுப்பாளர்களைப்‌ போன்றவர்கள்‌ அல்லர்‌. ஏனெனில்‌ மற்றவர்கள்‌ வேண்டுமென்றே பொய்யுரைக்கின்ற அறிவிப்பாளர்களிடமிருந்து, அவர்கள்‌ பொய்யர்கள்‌ என்று தெரிந்த பிறகும்‌ கூட,
அவர்களால்‌ கிடைக்கின்ற ஹதீஸ்களை தம்‌ நூற்களில்‌ பதிவு செய்திருக்கிறார்கள்‌. இதனால்‌ அபூதாவூத்‌, திர்மிதி போன்ற 'ஸுனன்‌' தொகுப்பாசிரியர்களில்‌ அறிவிப்பாளர்‌ பட்டியலிலிருந்து சிலர்‌ அறிவிக்கின்ற ஹதீஸ்களை இமாம்‌ அஹ்மத்‌ அவர்கள்‌ வேண்டுமென்றே நீக்கிவிட்டு அத்தகைய ஹதீஸ்களை விட்டும்‌ தமது முஸ்னத்‌ என்ற
நூலை சுத்தப்படுத்தியிருக்கிறார்கள்‌. 

உதாரணமாக, கதீர்‌-பின்‌ அப்துல்லாஹ்வுடைய
ஷைகுமார்களைப்‌ பற்றி அறிவிக்கப்படும்‌ ஹதீஸ்களை இமாம்‌ அஹ்மத்‌ அவர்கள்‌ தமது ஸுனனில்‌ பதிவு செய்யவில்லை. மாறாக இமாம்‌ அபூதாவூத்‌ தமது ஸுனனில்‌ இத்தகைய ஹதீஸ்களைச்‌ சேர்த்திருக்கிறார்கள்‌. ஹதீஸ்களைத்‌ திரட்டிப்‌ பதிவு
செய்வதில்‌ இமாம்‌ அஹ்மத்‌ அவர்கள்‌ விதித்துக்‌ கொண்ட நிபந்தனைகள்‌ அபூதாவூத்‌ அவர்கள்‌ விதித்துக்‌ கொண்ட நிபந்தனையைக்‌ காட்டிலும்‌ தூய்மையானதாகக்‌ காணப்படுகிறது.

சுருங்கக்‌ கூறின்‌ வஸீலா, தவஸ்ஸூல்‌, ஷபாஅத்‌ இவற்றையெல்லாம்‌ மனிதனைப்‌ பொருட்டாக வைத்துக்‌ கேட்பதற்கு அனுமதியுண்டு என்று கூறக்கூடியவர்கள்‌ வெறுக்கப்பட்டவையும்‌, பலவீனமானவையும்‌, புனையப்பட்டவையுமான
ஹதீஸ்களைத்தான்‌ ஆதாரமாகக்‌ காட்ட முடியும்‌. விசேஷ குணங்களைப்‌ பற்றியும்‌ (பளாயில்கள்‌) சிறப்பம்சங்கள்‌, விசேஷ அமல்கள்‌ போன்றவற்றைப்‌ பற்றியெல்லாம்‌ நல்லதையும்‌, கெட்டதையும்‌ கலந்து அறிவிக்கின்ற சில அறிவிப்பாளர்கள்தாம்‌
இத்தகைய ஹதீஸ்களைப்‌ பதிவு செய்திருக்கிறார்கள்‌. 

காலங்களின்‌ சிறப்பு, வழிபாடுகளின்‌ சிறப்பு, நபிமார்களின்‌ சிறப்பு, ஸஹாபாக்களின்‌ சிறப்பு, குறிப்பிட்ட சில இடங்களின்‌ சிறப்பு போன்ற சிறப்புகளைப்பற்றி நூற்களை தொகுத்தவர்களும்‌ கூட இந்த புனையப்பட்ட பலவீனமான ஹதீஸ்களை ஏராளம்‌ சேர்த்திருக்கிறார்கள்‌. இவ்வாறான
சிறப்புகள்‌ பற்றி அறிவிக்கப்படும்‌ ஹதீஸ்களில்‌ ஸஹீஹான ஹதீஸ்களும்‌ இருக்கின்றன. ஹஸன்‌ என்ற நடுத்தரத்திலுள்ள நல்ல ஹதீஸ்களும்‌ இடம்‌
பெறுகின்றன. பலவீனமான பொய்யான இட்டுக்கட்டப்பட்ட பல ஹதீஸ்களும்‌ பளாயில்கள்‌ பற்றி அறிவிக்கின்றன. ஷரீஅத்‌ சட்டங்களை விதிப்பதற்கு எக்காரணத்தாலும்‌ பலவீனமான ஹதீஸ்கள்‌ ஆதாரமாக எடுக்கப்பட மாட்டாது.
ஷரீ அத்துடைய அனைத்துச்‌ சட்டங்களையும்‌, விதிகளையும்‌, ஏவல்‌-விலக்கல்கள்‌ அனைத்தையுமே ஸஹீஹ்‌, ஹஸன்‌ என்ற இரு தரத்திலுள்ள ஹதீஸ்களைக்‌ கொண்டுதான்‌ ஏவப்பட்டுள்ளது.

அத்துடன்‌ இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பலும்‌, மற்றும்‌ அறிஞர்கள்‌ சிலரும்‌ நற்கருமங்களுக்குரிய சிறப்புக்கள்‌ பற்றி அறிவிக்கப்படுவதில்‌ மட்டும்‌ பலவீனமான சில ஹதீஸ்களை எடுத்துக்‌ கொள்ளலாமென்று அனுமதி வழங்கியிருக்கிறார்கள்‌. ஆனால்‌ உறுதியாக அது பொய்யென்று நிரூபணமானால்‌ அல்லது அது உண்மையான ஹதீஸ்‌
அல்ல என்று வெளிப்பட்டால்‌ இந்நிலையில்‌ பலவீனமான ஹதீஸும்‌ எடுக்கப்பட மாட்டாது என்று கூறியிருக்கிறார்கள்‌.

அதற்குக்‌ காரணமாக கீழ்வருமாறு கூறினார்கள்‌: ஷரீஅத்திலுள்ள ஒரு அமல்‌ அது தக்க சான்றுகளைக்‌ கொண்டு விதிக்கப்படிருக்கிறது என்று வைத்துக்‌ கொள்வோம்‌. மேலும்‌ அந்த அமலின்‌ சிறப்பம்சங்களைப்‌ பற்றியும்‌, அதன்‌ நன்மைகளைப்‌ பற்றியும்‌ ஒரு பலவீனமான ஹதீஸ்‌ விளக்கிக்‌ காட்டுகின்றது. இந்த பலவீனமான ஹதீஸில்‌
கூறப்பட்டதற்கு ஏற்பதான்‌ மேற்படி அமலின்‌ சிறப்பும்‌, நன்மையும்‌ இருக்க முடியும்‌. அத்துடன்‌ இந்த பலவீனமான ஹதீஸ் பொய்யானதென்று நிரூபிக்கப்படவுமில்லை. இந்நிலையில்‌ பலவீனமான ஹதீஸ்‌ விளக்கிக்‌ காட்டுகின்ற நன்மைகள்‌ மெய்யாகவே இருக்க முடியும்‌. 

அத்துடன்‌ மற்றொன்றையும்‌ இங்கே கவனித்தல்‌ வேண்டும்‌. அது என்னவென்றால்‌ ஒரு அமலைப்‌ பற்றி அது வாஜிபானது அல்லது ஸூன்னத்தானது
என்று விதிகள்‌ கூறப்பட வேண்டுமானால்‌ பலவீனமான ஹதீஸ்களைச்‌ சான்றாகக்‌ கொண்டு விதிகளைக்‌ கூற முடியாது. இது அறிஞர்கள்‌ அனைவரின்‌ அபிப்பிராயமாகும்‌. பலவீனமான ஹதீஸைக்‌ கொண்டு ஒருவர்‌ ஸுன்னத்‌ அல்லது வாஜிப்‌ என்று ஷரீ அத்தில்‌ விதித்தால்‌ அவர்‌ அறிஞர்களின்‌ ஏகமனதான விதிகளுக்கு மாறு செய்தவராக மதிக்கப்படுவார்‌. 

ஷரீ அத்தில்‌ அறியப்படுகின்ற ஆதாரங்களை
வைத்துத்தான்‌ ஹராம்‌ என்பதுவும்‌ விதிக்கப்பட வேண்டும்‌. ஒரு அனுஷ்டானத்தை ஷரீ அத்தில்‌ ஹராமாக்கப்பட்ட பிறகு ஒரு பலவீனமான ஹதீஸில்‌ இந்த ஹராமைப்‌ புரிகிறவனுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த ஹதீஸைப்‌ பொய்யென்று
காட்டுகின்ற சான்றுகளுமில்லை. அப்படியானால்‌ அத்தகைய பலவீனமான ஹதீஸை
அறிவிப்பதில்‌ குற்றமில்லை.

இதைப்‌ போலவே மனிதனை நற்கருமங்களின்பால்‌ ஆசையூட்டுகின்ற, மேலும்‌ தீவினைகளை விட்டுத்‌ தடுக்கின்ற பலவீனமான ஹதீஸ்களை அறிவித்தல்‌
அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால்‌ அத்துடன்‌ அவ்விஷயத்தில்‌ அல்லாஹ்வும்‌, நற்கிரியைகளைப்‌ பற்றி அவை மேலானவை, தரமானவை என்று சிலாகித்து ஆர்வமூட்டியும்‌ தீவினைகளைப்பற்றி அவை கேவலமானவை, அஞ்ச வேண்டியவை என்று எச்சரித்தும்‌ கண்டித்தும்‌ கூறியிருக்க வேண்டும்‌ என்றால்‌ மட்டுமே பலவீனமான ஹதீஸ்களை அது விஷயத்தில்‌ எடுத்துக்‌ கூற முடியும்‌. பொய்யென்றும்‌,
புனையப்பட்டதென்றும்‌ நபிகளின்‌ மீது இட்டுக்கட்டாகக்‌ கூறப்பட்டது என்று தெரியவரும்‌ எந்த ஹதீஸும்  எத்தகைய அமலுக்கும்‌, விதிகளுக்கும்‌ பயன்‌ படுத்தப்படமாட்டாது. பலவீனமான ஹதீஸ்களைப்‌ போன்றுதான்‌ இஸ்ராயீலிய்யாத்துகளும்‌ கருதப்பட வேண்டும்‌. பாவம்‌ செய்வதை விட்டு மனிதனை எச்சரிப்பதிலும்‌, நன்மையின்‌ பால்‌ மனிதனைத்‌ தூண்டி ஆர்வமூட்டுவதிலும்‌ இஸ்ராயீலிய்யாத்துகளை உபயோகித்துக்‌ கொள்வதற்கு அனுமதியிருக்கிறது.

அத்துடன்‌ மேற்கூறப்பட்ட இரு நிபந்தனைகளையும்‌ கவனிக்க வேண்டும்‌. ஒன்று: இஸ்லாமிய ஷரீஅத்திலும்‌ அதைச்‌ செய்ய வேண்டுமென்று அல்லாஹ்‌ நம்மைப்‌
பணித்து அவன்‌ நமக்கு ஆர்வமூட்டிபிருக்க வேண்டும்‌. அல்லது நம்மை தடுத்து அது விஷயத்தில்‌ அச்சுறுத்தி இருக்க வேண்டும்‌. 

இரண்டு: அது பொய்யான கதையென்று
அறியப்படாமலும்‌, நிரூபிக்கப்படாமலும்‌ இருக்க வேண்டும்‌. வெறும்‌ இஸ்ராயீலியாத்துகளை மட்டும்‌ வைத்து நமது இஸ்லாமிய ஷரீஅத்தில்‌ விதிகள்‌
விதிக்கப்பட மாட்டாது. இது எல்லா அறிஞர்களாலும்‌ ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர்‌ உண்மையாகும்‌. 

இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹ்‌) அவர்கள்‌ பலவீனமான ஹதீஸ்களைச்‌ சான்றாக எடுத்து இஸ்லாமிய விதிகளுக்குப்‌ பயன்படுத்தி இருக்கிறார்கள்‌ என்று அவர்களைப்பற்றிச்‌ சொல்லப்படுவது சரியல்ல. இமாம்‌ அஹ்மதும்‌, அவர்களுக்கு முன்னுள்ள அறிஞர்‌ சிலரும்‌ ஹதீஸை 'ஸஹீஹ்‌' என்றும்‌, 'ளயீஃப்‌' என்றும்‌ இரு வகையாக அமைத்து, அதில்‌ ஒன்று முற்றிலும்‌ பலவீனமானது என்றும்‌, அதை வைத்து ஷரீஅத்தின்‌ எந்தச்‌ சட்டமும்‌ விதிக்கப்பட மாட்டாது என்றும்‌, இன்னொன்று பலவீனமான ஹதீஸ்களில்‌ அழகானவை என்றும்‌
வகுத்துக்‌ கூறினார்கள்‌.

அறிவிப்பாளர்களின்‌ பெயர்ப்பட்டியலுடன்‌ அறிவிக்கப்படும்‌ ஹதீஸ்‌ தொகுப்புகளுக்கு
முஸ்னத்‌ என்று சொல்லப்படும்‌.


ஹதீஸ்களின்‌ தராதரங்கள்‌

இமாம்‌ திர்மிதி (ரஹ்‌) அவர்கள்‌ தமது ஜாமிஉ என்ற ஹதீஸ்‌ தொகுப்பில்‌ ஹதீஸ்களை மூன்றாகத்‌ தரம்‌ பிரித்தார்கள்‌. அவை: ஸஹீஹ்‌, ஹஸன்‌, எளயீஃப்‌
என்பன. இமாம்‌ திர்மிதி அவர்கள்தாம்‌ முதன்‌ முதலாக ஹதீஸ்களை இப்படி பிரித்துக்‌ காட்டியவர்கள்‌. ஒரே ஹதீஸ்‌ பல வழிகளில்‌ அறிவிக்கப்படும்‌ போதும்‌,
அறிவிப்பாளர்கள்‌ பட்டியலில்‌ குற்றம்‌ சுமத்தப்பட்டவர்களும்‌, ஒற்றையாக நிற்பவர்களும்‌
இல்லாமல்‌ இருக்கும்போதும்‌ தான்‌ அந்த ஹதீஸுக்கு 'ஹஸன்‌' என்று பெயரிட்டார்கள்‌. இமாம்‌ திர்மிதி ஹஸன்‌ என்று கருதிய ஹதீஸ்களை இமாம்‌
அஹ்மத்‌, ளயீஃப்‌ (பலவீனமானவை) என்ற தரத்திலுள்ள ஹதீஸ்களோடு இணைத்து, இத்தகைய பலவீனமான ஹதீஸ்களை இஸ்லாமிய சட்ட விதிகளுக்குப்‌ பயன்படுத்தியும்‌ இருக்கிறார்கள்‌.

படைப்பினங்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்தும்‌, அவர்களைப்‌ பொருட்டாக வைத்தும்‌ தேவைகளைக்‌ கேட்டால்‌ அனுமதிக்கப்படும்‌ என்று கூறக்கூடியவர்கள்‌ தமது வாதத்திற்கு ஸஹீஹ்‌, ஹஸன்‌ என்ற தரத்திலுள்ள ஹதீஸ்கள்‌ கிடைக்காமையினால்‌,
மூன்றாம்‌ வகையைச்‌ சார்ந்த ளயீஃபானதும்‌, நபிகள்‌ மீது இட்டுக்கட்டிப்‌ புனைந்து சொல்லப்பட்ட (மவ்ளு ஆனவையுமான) சில ஹதீஸ்களை ஆதாரமாக எடுத்தார்கள்‌. 

இஸ்லாமிய அறிஞர்களோ, மத்ஹபுடைய இமாம்களோ யாருமே இத்தகைய ஹதீஸ்களை சரியெனக்‌ காணவில்லை. அவற்றிலிருந்து மார்க்கச்‌ சட்டங்களையும்‌ வெளிப்படுத்தவில்லை. மேற்படி ஹதீஸ்களின்‌ உதாரணத்திற்காக அப்துல்‌ மலிக்‌ பின்‌
ஹாருன்‌ பின்‌ அன்தரா மூலமாக அறிவிக்கப்படும்‌ ஹதீஸை எடுத்துக்‌ கொள்ளலாம்‌.

இந்த ஹத்ஸின்படி: அபூபக்கர்‌ ஸித்தக்‌ (ரலி) அவர்கள்‌ பெருமானாரிடம்‌ வந்து “நாயகமே! நான்‌ குர்ஆனைக்‌ கற்கிறேன்‌. ஆனால்‌ அது என்னை விட்டு நழுவுகிறது'
என்று முறையிட்டபோது நபி (ஸல்‌) அவர்கள்‌ கீழ்வரும்‌ துஆவை ஓத வேண்டுமென்று கற்றுக்‌ கொடுத்தார்களாம்‌. 'இறைவா! உன்னுடைய நபி முஹம்மது (ஸல) அவர்களின்‌ பொருட்டால்‌ கேட்கிறேன்‌. மேலும்‌ உன்னுடைய தோழர்‌ நபி இப்ராஹீம்‌ பொருட்டாலும்‌, நபிகள்‌ மூஸா, ஈஸா (அலை) அவர்களின்‌ பொருட்டாலும்‌, தவ்ராத்‌, இன்ஜீல்‌, ஸபூர்‌ புர்கான்‌ ஆகியவற்றின்‌ பொருட்டாலும்‌, நீ அறிவிக்கின்ற அனைத்து வஹியின்‌ பொருட்டாலும்‌, நீ விதித்துள்ள எல்லா விதிகளின்‌ பொருட்டாலும்‌
கேட்கின்றேன்‌. இந்த ஹதீஸை அப்துல்‌ மலிக்‌ பின்‌ ஹாரூன்‌ அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌.

இப்பொழுது இந்த ஹதீஸின்‌ அறிவிப்பாளர்‌ பட்டியலுக்கு வருவோம்‌. அப்துல்‌ மலிக்‌ பின்‌ ஹாரூன்‌ நேர்மையான அறிவிப்பாளர்‌ அல்ல. பொய்யர்களில்‌ இவர்‌ பிரபலமானவர்‌ என்பதைக்‌ கீழ்வரும்‌ அபிப்பிராயங்கள்‌ தெளிவு படுத்துகின்றன. மிஹ்ரஸ்‌ பின்‌ ஹிஸாம்‌ என்ற அறிஞர்‌ குறிப்பிடுகிறார்‌: 'இந்த அப்துல்‌ மலிக்கை பற்றி யஹ்யா பின்‌ மயீன்‌ என்ற ஹதீஸ்‌ கலை அறிஞர்‌ பொய்யர்‌ என்று கூறியுள்ளார்‌. அறிஞர்‌ அஸ்‌அதீ இவரைப்பற்றி தஜ்ஜால்‌ (வஞ்சகர்‌, ஏமாற்றுக்காரர்‌) என்றும்‌, பொய்யர்‌ என்றும்‌
கூறியுள்ளார்‌. அறிஞர்‌ அபூஹாகிம்‌ பின்‌ ஹிப்பான்‌ இவரைப்பற்றி ஹதீஸ்களைப்‌ புனைந்து சொல்கிறவர்‌ என்று கூறினார்‌. இமாம்‌ நஸயீ ஹதீஸ்‌ தொகுப்பாளர்‌
பட்டியலிலிருந்து இவர்‌ 'மத்ரூக்‌' (தூக்கி எறியப்பட்டவர்‌) என்று கூறினார்‌. இமாம்‌ புகாரி
இவர்‌ வெறுக்கப்பட்ட ஹதீஸ்களை கூறியவர்‌ என உரைத்தார்‌. பலவீனமானவர்‌ என்று இவரைப்பற்றி இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ கூறியுள்ளார்‌. இப்னு அதி என்பவர்‌ யாரும்‌ பின்பற்ற முடியாத பல ஹதீஸ்கள்‌ இவரிடம்‌ இருப்பதாக கூறுகிறார்‌. இவரும்‌, அவரது தந்தையும்‌ பலவீனமானவர்கள்‌ என்று தாரகுத்னீ குறிப்பிடுகிறார்‌. இன்னும்‌ பற்பல ஹதீஸ்‌ கலை அறிஞர்கள்‌ இந்த அப்துல்‌ மலிக்கைப்‌ பற்றி எத்தனையோ குறைபாடுகளை கூறியிருக்கிறார்கள்‌. அறிஞர்‌ அபுல்‌ பரஜ்‌ பின்‌ ஜவ்‌ஸி இந்த ஹதீஸை
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைப்‌ பற்றி எழுதிய நூலில்‌ சேர்த்திருக்கிறார்‌. இதே ஹதீஸை இப்னு ரஸீன்‌ தமது ஜாமீஉ என்ற நூலில்‌ குறிப்பிடும்‌ போதும்‌, இப்னு அதீர்‌ தமது ஜாபீஉ உஸூல்‌ என்ற நூலில்‌ இதை நகல்‌ செய்தபோதும்‌ இதை அறிவித்தவர்‌ யார்‌ என்பதையோ, முஸ்லிம்களுடைய எந்த நூலிலிருந்து இந்த ஹதீஸ்‌ நகல்‌ செய்யப்பட்டது என்பதையோ குறிப்பிடவில்லை.

இரவு பகலின்‌ அமல்கள்‌ பற்றி நூல்கள்‌ தொகுத்தவர்களான இப்னுல்‌ ஸன்னி, அபூநயீம்‌ போன்றவர்கள்‌ தாம்‌ இதை அறிவிக்கிறார்கள்‌. இதைப்போன்ற நூல்களில்‌ பல மவ்ளுஃ ஆன ஹதீஸ்களை காண முடியும்‌. இஸ்லாமிய ஷரீஅத்‌ சட்ட விதிகளுக்கு இத்தகையவைகளை பயன்படுத்தக்‌ கூடாது என்று அறிஞர்கள்‌ ஏகமனதாக தீர்ப்புகள்‌
வழங்கியிருக்கிறார்கள்‌. இதே ஹதீஸை அபுஷ்‌ ஷைகுல்‌ இஸ்பஹானி தமது "பளாயிலுல்‌ அஃமால்‌' என்ற நூலில்‌ பதிவு செய்து இருக்கிறார்கள்‌. ஆனால்‌ இந்நூலைப்‌ பொறுத்தவரையில்‌ இதில்‌ எத்தனையோ பொய்‌ ஹதீஸ்களும்‌, நபிகள்‌ மீது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும்‌ இடம்‌ பெற்றிருக்கின்றன.

இந்த அப்துல்‌ மலிக்‌ என்பவர்‌ இதைப்‌ போன்ற இன்னொரு ஹதீஸையும்‌ கூறியிருக்கிறார்‌. இதில்‌ வேதம்‌ அருளப்பெற்ற யூதர்கள்‌, கிறிஸ்தவர்கள்‌ அனைவருமே அவ்வேதங்களைப்‌ பொருட்டாக வைத்து தம்‌ தேவைகளை வேண்ட ஆரம்பிப்பார்கள்‌
என்று விளக்கம்‌ கொடுக்கிறுக்கிறார்‌. இந்த விளக்கத்தை திருமறை வியாக்கியானிகளுக்கும்‌, திருக்குர்‌ஆன்‌ உரைகளுக்கும்‌, வரலாற்று ஆசிரியர்களின்‌ அபிப்பிராயங்களுக்கும்‌ மாறாகச்‌ சொல்லியிருக்கிறார்‌.

எனவே இத்தகைய ஆதாரங்களை வைத்து அப்துல்‌ மலிக்‌ பின்‌ ஹாரூன்‌ நேர்மையான அறிவிப்பாளர்‌ அல்ல என விளங்கிக்‌ கொண்டோம்‌. ஏனெனில்‌ இவர்‌
வேண்டுமென்றே பொய்யுரைப்பவர்‌, நினைவாற்றலும்‌ குன்றியவர்‌. எனவே இவர்‌ அறிவிக்கும்‌ ஹதீஸிலும்‌ நேர்மையிருக்க முடியாதல்லவா? எனவே அதை ஆதாரமாக எடுத்துக்‌ கொள்ளக்‌ கூடாது.

ஆதம்‌ நபியவர்கள்‌ பெருமானாரின்‌ பொருட்டால்‌ வஸீலாத்‌ தேடினார்கள்‌ என்று கூறப்படும்‌ ஹதீஸைப்‌ பற்றி...

ஆதம்‌ (அலை) அவர்கள்‌ பெருமானார்‌ (ஸல்‌) அவர்களைக்‌ கொண்டு வஸீலாத்‌ தேடினார்கள்‌ என்று சொல்லப்படும்‌ இந்த ஹதீஸ்‌ நபிகளைப்‌ பற்றி உமர்‌ (ரலி) அவர்கள்‌ வாயிலாக அறிவிக்கப்படுகிறது. சுவர்க்கத்தில்‌ பிசகிய ஆதம்‌ (அலை) அவர்கள்‌ 'இறைவா! முஹம்மதின்‌ பொருட்டால்‌ அவரின்‌ உரிமையைக்‌ கொண்டு ஆணையிட்டுக்‌ கேட்கிறேன்‌. நீ என்‌ குற்றங்களை மன்னித்தருள்‌' என்றார்களாம்‌.
இதற்கு இறைவன்‌ 'ஆதமே! நான்‌ முஹம்‌மதைப்‌ படைப்பதற்கு முன்னரே நீர்‌ அவரை எப்படி அறிந்து கொண்டாய்‌' என்று கேட்டான்‌. அதற்கு 'இறைவா! நீ என்னை உன்‌ கரத்தால்‌ படைத்து உன்னிடமிருந்து எனக்கு உயிரை ஊதியபோது நான்‌ தலையை உயர்த்திப்‌ பார்த்தேன்‌. அர்ஷின்‌ தூண்களில்‌
லாஇலாஹ இலலலலாஹ்‌ முஹம்மதுர்‌ ரஸுூலுல்லாஹ்‌' என்று எழுதப்பட்டிருந்ததைக்‌ கண்டேன்‌. ஆதலால்‌ சிருஸ்டிகள்‌ உனக்கு மிகவும்‌
விருப்பமான ஒருவரின்‌ நாமத்தையன்றி வேறொன்றையும்‌ உன்‌ பெயருடன்‌ இணைத்துக்‌ கொள்ள மாட்டாய்‌ என்று அறிந்தேன்‌' என ஆதம்‌ பதிலளித்தாராம்‌. அதற்கு இறைவன்‌ ஆதமே! நீர்‌ மெய்யுரைத்தீர்‌. திட்டமாக சிருஸ்டிகளில்‌ அவர்‌ மிகவும்‌
விரும்பத்தக்கவரே. எனவே நீர்‌ அவரின்‌ பொருட்டால்‌ கேளும்‌. நான்‌ மன்னித்து விடுகிறேன்‌. அன்றி முஹம்மத்‌ (ஸல்‌) அவர்கள்‌ இல்லையென்றால்‌ நான்‌ உம்மைப்‌ படைத்திருக்க மாட்டேன்‌' எனக்‌ கூறினான்‌.

இந்த ஹதீஸை ஹாக்கிம்‌ தமது 'முஸ்தத்ரக்‌' எனும்‌ நூலில்‌ பதிவு செய்திருக்கிறார்‌. தாம்‌ இதனை ஸஹீஹான ஹதீஸ்‌ என நினைப்பதாகவும்‌ குறிப்பிடுகிறார்‌.

இந்த ஹதீஸ்‌ அறிவிப்பாளர்களைப்‌ பற்றி ஆராய்ந்து பார்க்கும்போது அவர்களின்‌ பெயர்‌ பட்டியலில்‌ அப்துல்‌ ரஹ்மான்‌ பின்‌ ஜய்த்‌ பின்‌ அஸ்லம்‌ என்பவர்‌ இடம்‌
பெறுகிறார்‌. இவர்‌ பலவீனமான ஒரு அறிவிப்பாளர்‌ என்பது ஹதீஸ்‌ கலை அறிஞர்களின்‌ (முஹத்திஸின்களின்‌) கருத்தாகும்‌. ஹாக்கிம்‌ என்பவரால்‌ அறிவிக்கப்படும்‌ இந்த ஹதீஸ்‌ நிராகரிக்கப்பட வேண்டியதுதான்‌ என்பதை பின்னர்‌
தருகின்ற விளக்கங்கள்‌ தெளிவுபடுத்துகின்றன.

இமாம்களான அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌, அபூ ஸர்‌ஆ, அபூ ஹாக்கிம்‌, நஸயி, தார்‌குத்னி போன்ற ஹதீஸ்  அறிஞர்களில்‌ பெரும்பாலோர்‌ அப்துர்ரஹ்மானை ஒரு
பலவீனமான அறிவிப்பாளராகவே கணித்துள்ளனர்‌. அபூ ஹாத்திம்‌ பின்‌ ஹிப்பான்‌ என்பவர்‌ அப்துர்ரஹ்மானைப்‌ பற்றிக்‌ குறிப்பிடும்போது 'இவர்‌ தம்மை அறியாமலே ஹதீஸ்களை மாற்றியும்‌, திருப்பியும்‌ கூறிக்‌ கொண்டிருந்தார்‌. ஆதலால்‌ அவரால்‌ அறிவிக்கப்படும்‌ ஹதீஸ்களை ஒதுக்கி விடுவதே சிறந்தது' என்றார்‌.

ஹாக்கிம்‌ இதை ஸஹீஹ்‌ என்று கூறியிருப்பது கவனிக்கப்பட மாட்டாது. ஏனென்றால்‌ ஹாக்கிம்‌ ஸஹீஹ்‌ எனக்கூறிய இதைப்போன்ற பல ஹதீஸ்ளுக்கு ஹதீஸ்‌ தொகுப்பாளர்கள்‌ மறுப்புத்‌ தெரிவித்திருக்கிறார்கள்‌. அறிஞர்களிடத்தில்‌
பொய்யானது, புனையப்பட்டது என்றெல்லாம்‌ நிரூபிக்கப்பட்ட பல ஹதீஸ்களை ஹாக்கிம்‌ ஸஹீஹ்‌ என்று கூறியிருக்கிறார்‌. அறிஞர்‌ பைஹக்‌, இப்னுல்‌ ஜவ்ஸ்‌ மற்றும்‌ ஹதீஸ்‌ அறிவிப்பாளர்கள்‌ பலர்‌ குறிப்பிடுகின்றனர்‌. 

ஈஸா நபியின்‌ போதனைகளை கூறப்பட்டுள்ள ஸர்பிப்னு ஸர்மலாவின்‌ ஹதீஸை ஹாக்கிம்‌
ஸஹீஹ்‌ என்று கூறியுள்ளார்‌. ஆனால்‌ அது பொய்யானது என்று அறிஞர்கள்‌ ஏகமனதாக தீர்ப்பு வழங்கியுள்ளனர்‌. புனையப்பட்ட ஹதீஸ்‌ என்று அறிஞர்களால்‌ தீர்ப்பு வழங்கப்பட்ட எத்தனையோ ஹதீஸ்களை ஸஹீஹானவை என ஹாக்கிம்‌ தமது
முஸ்தத்ரக்‌ என்ற நூலில்‌ கூறியிருக்கிறார்‌. இதன்‌ காரணத்தினால்‌ மேற்கோள்‌ காட்டுவதற்காக அறிஞர்கள்‌ ஹாக்கிமின்‌ ஸஹீஹான ஹதீஸ்களை எடுத்து கொள்ள மாட்டார்கள்‌. அவற்றின்‌ மீது ஆதரவு வைக்கவும்‌ மாட்டார்கள்‌.

ஆனால்‌ ஹாக்கிம்‌ ஸஹீஹாக்கிய எல்லா ஹதீஸ்களைப்‌ பற்றியும்‌ இப்படிச்‌ சொல்வதற்கில்லை. அவர்‌ ஸஹீஹாக்கிய ஹதீஸ்களில்‌ மிகுதியானவையும்‌
அவருடைய அபிப்பிராயத்திற்கொப்ப ஸஹீஹானவைதாம்‌. இருப்பினும்‌ இவர்‌ ஸஹீஹ்‌ என்று கூறும்‌ ஹதீஸ்களில்‌ ஏராளம்‌ தவறுகள்‌ இருக்கின்றன. ஹதீஸ்களை (தஸ்ஹீஹ்‌) ஸஹீஹாக்கும்‌ அறிஞர்களுக்கு மத்தியில்‌ ஹாக்கிமுடைய தஸ்ஹீஹைப்‌ போல பலம்‌ குன்றிய ஒரு தஸ்ஹீஹைக்‌ காண முடியாது.

ஹதீஸ்களை ஸஹீஹாக்கும்‌ துறையில்‌ அபூஹாதம்‌ பின்‌ ஹிப்பான்‌ தலைசிறந்து விளங்கினார்கள்‌. இமாம்களான திர்மிதி, தாரகுத்னி, இப்னுகுஸைமா, இப்னு மன்தா போன்றவர்களெல்லாம்‌ ஹதீஸ்களைத்‌ துருவி ஆராய்ந்து அவை ஸஹீஹ்‌ என்று தீர்ப்பு வழங்கும்‌ கலையில்‌ சிறந்து விளங்கினார்கள்‌. ஆனால்‌ ஹாக்கிம்‌ இப்படிப்பட்டவர்‌ அல்லர்‌. இது விஷயத்தில்‌ இமாம்‌ முஸ்லிம்‌ மிகவும்‌ நுணுக்கமுள்ளவர்கள்‌.
ஹதீஸ்களை ஸஹீஹாக்கும்‌ துறையில்‌ இமாம்‌ முஸ்லிமை எவராலும்‌ வெல்ல முடியாது.

அடுத்தாற்போல்‌ இமாம்‌ புகாரியை நெருங்க இமாம்‌ முஸ்லிமுக்கு இயலாது. ஸஹீஹான ஹதீஸ்களை அறிவிப்பதில்‌ இமாம்‌ புகாரியின்‌ ஸஹீஹ்‌ புகாரிக்கு
நிகரான ஒரு தூய்மையான, நுணுக்கமான தொகுப்பே இல்லை. 'ஹதீஸ்‌ துறையில்‌ இமாம்‌ புகாரியைப்போல அறிவாற்றல்‌ படைத்த ஒருவரை அல்லாஹ்‌
படைக்கவில்லை. ஹதீஸ்‌ கலையில்‌ இமாம்‌ புகாரி அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்கு ஈடு செய்ய எவருமில்லை. இமாம்‌ புகாரி அவர்கள்‌ பழுதான ஹதீஸ்கள்‌ யாவை, நேர்மையான ஹதீஸ்கள் யாவை என்பன பற்றி மிகவும்‌ விளக்கமுள்ளவர்களாக திகழ்ந்தார்கள்‌' என இமாம்‌ திர்மிதி அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌.

எனவே ஹதீஸ்களை ஸஹீஹாக்குவதில்‌ இமாம்‌ புகாரியுடன்‌ அபிப்பிராய பேதம்‌ கொள்ள எவரும்‌ முற்படவில்லை. முற்பட்டால்‌ கூட இமாம்‌ புகாரியின்‌ அபிப்பிராயமே மிகைத்து நிற்கும்‌. எதிராளி வாய்மூட வேண்டியது நேரிடும்‌. இது விஷயத்தில்‌ இமாம்‌
முஸ்லிமும்‌ இமாம்‌ புகாரியை போன்றவர்களல்லர்‌. 
இமாம்‌ முஸ்லிம்‌ ஸஹீஹாக்கி வெளிப்படுத்திய ஹதீஸ்களில்‌ அபிப்பிராய பேதங்கள்‌ சொல்லப்பட்டுள்ளன. சிற்சில நேரங்களில்‌ அபிப்பிராய பேதங்கள்‌ சொன்னவர்களின்‌ கூற்றில்‌ நேர்மையைக்‌ காணலாம்‌.

உதாரணத்திற்கு சூரிய கிரகணக்‌ தொழுகை விளக்கத்தை எடுத்துக்‌ கொள்ளலாம்‌. அத்தொழுகையை நபியவர்கள்‌ மூன்று ருகூவுகளைக்‌ கொண்டு தொழுதார்கள்‌ என்றும்‌, நான்கு ருகூவுகளாகக்‌ தொழுதார்கள்‌ என்றும்‌ இமாம்‌ முஸ்லிமின்‌ ரிவாயத்தில்‌ அறிவிக்கப்படுகிறது. மற்றொரு அறிவிப்பில்‌ இரண்டு ரக்‌அத்தாகத்‌ தொழுதார்கள்‌ என்று வருகிறது. உண்மையில்‌ நபியவர்கள்‌ இஅரண்டு ரக்‌அத்தைத்‌ தவிர தொழவில்லை. நபியவர்கள்‌ மகன்‌ இப்ராஹீம்‌ இறந்த அன்று ஒரே தடவைதான்‌ சூரிய கிரகணத்‌
தொழுகை தொழுதிருக்கிறார்கள்‌ என்று இமாம்‌ ஷாபிஈ அவர்கள்‌ கூறியிருக்கிறார்கள்‌. அப்படியானால்‌ நான்கு ருகூவு செய்தார்கள்‌ என்ற ரிவாயத்‌ (அறிவித்தல்‌) எப்படி சரியாக இருக்க முடியும்‌. இருமுறை கிரகணமேற்பட்டதா? இல்லையே! இரு
இப்ராஹீம்கள்‌ பெருமானாருக்குப்‌ புதல்வர்களாக இருந்தார்களா? அதுவுமில்லையே. அப்படியானால்‌ இரு ருகூவுகள்‌ செய்தார்கள்‌ என்பதுதான்‌ சரியான அறிவிப்பாகும்‌. இதுவே இமாம்‌ புகாரியின்‌ அறிவித்தலுமாகும்‌. நபி (ஸல்‌) அவர்களின்‌ மகன்‌
இப்ராஹீம்‌ மாதத்தின்‌ பத்தாம்‌ நாள்‌ இறந்தார்கள்‌ என்று கூறுபவரும்‌ பொய்யுரைப்பவரேயாவார்‌.

எனவே ஹதீஸ்களை ஸஹீஹாக்கும்‌ விஷயத்தில்‌ இமாம்‌ புகாரியுடன்‌ கருத்து வேற்றுமைகளைச்‌ சொல்ல எவரேனும்‌ துணிந்தால்‌ இமாம்‌ புகாரியினுடைய அபிப்பிராயமே ஆதாரங்களுடன்‌ மிகைத்து நிற்கும்‌.

இன்னுமோர்‌ உதாரணத்தைப்‌ பார்ப்போம்‌. இறைவன்‌ சனிக்கிழமையன்று மண்ணைப்‌ படைத்தான்‌ என ஹதீஸில்‌ இமாம்‌ முஸ்லிம்‌ ரிவாயத்‌ செய்திருக்கிறார்கள்‌. இது விஷயத்தில்‌ இமாம்‌ புகாரியும்‌, அறிஞர்‌ யஹ்யா பின்‌ மயீனும்‌, மற்றும்‌ பலரும்‌ வேறுமாதிரியாகக்‌ கூறி இமாம்‌ முஸ்லிம்‌ கூறியதற்கொப்ப நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) கூறியிருக்க முடியாது என்றும்‌ சொல்லித்‌ தர்க்கம்‌ செய்திருக்கிறார்கள்‌. இவர்களின்‌ இவ்வாதத்தில்தான்‌ உண்மையைக்‌ காண முடிகிறது. ஏனெனில்‌ இவர்களுடன்‌ சான்றுகள்‌ இருப்பதைக்‌ காண்கின்றோம்‌. திருமறை, நபிமொழி, ஸஹாபாக்களின்‌ ஏகமனதான சொற்கள்‌ அனைத்துமே அல்லாஹ்‌ பூமிகளையும்‌, வானங்களையும்‌ ஆறு நாட்களில்‌ படைத்தான்‌ என்றும்‌, இறுதியாக நபி ஆதமை வெள்ளிக்கிழமை அன்று படைத்தான்‌
என்றும்‌ உறுதி படுத்துகின்றனர்‌. மேலும்‌ சிருஷ்டித்தல்‌ எனும்‌ செயலை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்தான்‌. இதை போன்ற சான்றுகளால்‌ சிருஷ்டித்தலின்‌
முறைகளை விளக்கமாக நிரூபிக்கப்பட்ட பின்னர்‌ சனிக்கிழனையன்று இறைவன்‌ மண்ணைப்‌ படைத்தான்‌ என்றுள்ள இமாம்‌ முஸ்லிமின்‌ ரிவாயத்‌ சரியாக இருக்க முடியுமா? முடியாது. எனவே இமாம்‌ முஸ்லிம்‌, இமாம்‌ புகாரியைப்‌ போன்றவர்களல்லர்‌ என்று கூறினோம்‌. முஸ்லிம்‌ ஸஹீஹாக்கி வெளியிட்ட பல ஹதீஸ்களில்‌ அபிப்பிராயங்கள்‌ சொல்லப்பட்டிருக்கின்றன. சில நேரங்களில்‌
அபிப்பிராயங்கள்‌ கூறியவர்களின்‌ ஆதாரங்களில்‌ உண்மையைக்‌ காண முடியும்‌.

ஆனால்‌ இமாம்‌ முஸ்லிம்‌, இமாம்‌ புகாரி ஆகிய இருவரது தொகுப்புகளில்‌ உள்ள மிகுதியான உரைகளும்‌ ஹதீஸ்‌ அறிஞர்களின்‌ ஒப்புதலைப்‌ பெற்றவை. எல்லோரும்‌ அதை ஏற்றிருக்கிறார்கள்‌. அவற்றை நபிகள்‌ கூறியதாக நிச்சயம்‌ அவர்கள்‌ அறிந்தும்‌ இருக்கிறார்கள்‌. இவற்றுள்‌ யாருக்கும்‌ அபிப்பிராயம்‌ சொல்வதற்கு இடமில்லை. இது
விஷயத்தில்‌ அதிகமான விளக்கம்‌ வேறு இடங்களில்‌ கூறப்பட்டுள்ளன. ஆதம்‌ (அலை) அவர்கள்‌ பற்றிய மேற்கூறிய ஹதீஸை வேறு சில அறிஞர்களும்‌ அறிவிப்பாளர்களின்‌ பெயர்கள்‌ (இஸ்னாத்‌) இல்லாமல்‌ கூறியுள்ளனர்‌. மற்றும்‌ சிலர்‌ சில பல இடங்களில்‌
கூட்டியும்‌ அறிவித்திருக்கிறார்கள்‌. என்‌ குற்றங்களை மன்னித்து விடு!” என்பதற்கு பதிலாக 'என்‌ தவ்பாவை ஏற்றுக்கொள்‌! என்று கூறினார்களாம்‌. நீர்‌ எப்படி
முஹம்மதை அறிந்து கொண்டீர்‌?" என்று அல்லாஹ்‌ கேட்டதற்கு 'சுவனலோகத்தில்‌ எல்லா இடங்களிலும்‌ லாஇலாஹ இலலலலாஹண்‌ முஹம்மதுர்‌ ரஸூலுல்லாஹ்‌ என்று எழுதப்பட்டிருந்ததைக்‌ கண்டேன்‌' என்றும்‌ வேறு சில மாற்றங்களுடன்‌ இதே ஹதீஸ்‌ அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இத்தகைய தன்மைக்குரிய ஹதீஸ்கள்‌ அவசியம்‌ ஒதுக்கப்பட வேண்டும்‌. ஷரீஅத்தின்‌ விதிகள்‌ இம்மாதிரி உரைகளால்‌ அமைக்கப்பட மாட்டாது.

இது அறிஞர்கள்‌ வழங்கும்‌ தீர்ப்பு. ஏனெனில்‌ மேற்குறிப்பிட்ட ஹதீஸ்‌ யூத- கிறிஸ்தவ நூல்களிலிருந்து அறிவிக்கப்படும்‌ பழைய சில கட்டுக்கதை (இஸ்ராயிலியாத்‌) களுக்கு ஒத்த சம்பவம்‌ போல்‌ இருக்கிறது. இதனால்‌ நம்‌ இஸ்லாமிய மார்க்க சட்டங்கள்‌ ஏதும்‌ விதியாகவில்லை. இத்தகைய சம்பவங்களை நபியவர்கள்‌ கூறியதாக ஸஹீஹான ஹதீஸ்கள்‌ வாயிலாக கிடைத்தால்‌ மட்டுமே
அவை ஏற்கப்படும்‌. பழங்கால செய்திகளையும்‌, வேதம்‌ அருளப்பட்ட சமூகங்களான யூத-கிறிஸ்தவ சமூகத்தாரின்‌ கதைகள்‌ பற்றியெல்லாம்‌ கஃபுல்‌ அஹ்பார்‌, வஹ்ப்‌ பின்‌ முனப்பிஹ்‌ போன்றோர்‌ வாயிலாக கிடைத்தால்‌ கூட அவற்றை தீனுல்‌ இஸ்லாமில்‌ எடுத்து செயல்‌ படுவதற்கும்‌, ஆதாரமாக ஏற்றுக்‌ கொள்வதற்கும்‌ அனுமதியில்லை.

இப்படி இருக்கும்போது நம்பத்தகாதவர்கள்‌ வழியாக கிடைத்த ஏதாவது நம்மிடம்‌ கூறப்பட்டால்‌ அதை ஏற்றுக்‌ கொள்ள முடியுமா?

எனவேதான்‌ இஸ்ஹாக்‌ பின்‌ பிஷர்‌ போன்றவர்கள்‌ கூறுகின்ற பழங்காலப்‌ பொய்க்‌ கட்டுகதை (இஸ்ராயீலிய்யாத்‌) களுக்கு மேற்படி ஹதீஸை ஒப்பிட்டோம்‌. முன்னர்‌ தோன்றிய நபிமார்களைப்பற்றிக்‌ கூறப்பட்ட சம்பவங்கள்‌ மெய்யாக இருக்குமாயின்‌ அவை அவர்களது ஷரீஅத்திற்குப்‌ பொருத்தமாக இருக்கலாம்‌. முன்‌ நபிமார்களின்‌ ஷரீஅத்திலுள்ள சட்டங்களை எடுத்து இஸ்லாமிய ஷரீஅத்தில்‌ செயல்படுத்தப்பட்டால்‌
அவை ஆகுமா, இல்லையா என்பது அறிஞர்களுக்கு இடையில்‌ எழுந்த பிரபலமான ஒரு பிரச்சனையாகும்‌. 

இது விஷயத்தில்‌ அறிஞர்கள்‌ 'நம்‌ இஸ்லாமிய ஷரீஅத்‌
சட்டங்களுக்கு ஒருவகையான பாதிப்பும்‌, மாற்றங்களும்‌ ஏற்படாவிட்டால்‌ முந்தைய
நபிமார்களின்‌ ஷரீஅத்‌ சட்டங்களை எடுத்து செயல்படுவது ஆகுமானது என்று குறிப்பிடுகிறார்கள்‌. இதுவே மிகுதியான அறிஞர்கள்‌ குறிப்பிடும்‌ அபிப்பிராயமாகும்‌. இந்த அனுமதிக்கு அடிப்படையாக நம்‌ நபிகளுடைய ஹதீஸிலிருந்தோ அல்லது வேறு
ஏதேனும்‌ வழிகளில்‌ ஆதாரப்பூர்வமாக முன்னோர்களின்‌ ஷரீஅத்தில்‌ இடம்‌ பெற்றிருந்த
சட்டம்‌ என்றோ நிரூபிக்கப்‌ பட்டிருத்தல்‌ வேண்டும்‌.

நபியவர்கள்‌ கூறியதாக இப்னு அப்பாஸ்‌ அவர்கள்‌ மூலம்‌ அறிவிக்கப்படும்‌ இன்னுமொரு ஹதீஸையும்‌ எடுத்துக்‌ கொள்ளலாம்‌. இந்த ஹதீஸ்‌ மூஸா பின்‌
அப்துர்ரஹ்மான்‌ அல்‌-ஸன்‌ஆனி அறிவிக்கிறார்கள்‌. குர்‌ஆனை மனனம்‌ செய்து, மற்றும்‌ கல்வியையும்‌ பலதரப்பட்ட அறிவுகளையும்‌ மறக்க விடாமல்‌
பேணிப்பாதுகாத்து வைக்க வேண்டும்‌ என்று எவராகிலும்‌ விரும்பினால்‌ சுத்தமான ஒரு பாத்திரத்தில்‌ அல்லது பளிங்குத்தட்டில்‌ குங்குமமும்‌, தேனும்‌, மழை நீரும்‌ கலந்து மையாக்கி, எழுதி, அதைக்‌ கலக்கி, மூன்று நாள்‌ நோன்பு நோற்று, நோன்பு திறக்கும்போது அதைப்‌ பருகி, கீழ்வரும்‌ துஆவைக்‌ கொண்டு ஒவ்வொரு தொழுகைக்குப்‌ பிறகும்‌ பிரார்த்திக்கவும்‌: 'இறைவா! நீயே பிரார்த்திக்கப்படுகிறவன்‌. உன்னைப்போல்‌ பிரார்த்திக்கப்படுகிறவன்‌ எவருமில்லை. அப்படி யாரும்‌ பிரார்த்திக்கப்‌ படவும்‌ மாட்டார்கள்‌. இதைப்‌ பொருட்டாக வைத்தும்‌, உன்‌ நபிமார்களான பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ மேலும்‌, நபிமார்களான இப்ராஹிம்‌, மூஸா, ஈஸா (அலை) இவர்களின்‌ உரிமைகளையும்‌, பாத்தியதைகளையும்‌ பொருட்டாக வைத்து அவற்றைக்‌ கொண்டு கேட்கிறேன்‌' என்று கூறி கடைசி ஹதீஸ்‌ வரையிலும்‌ மூஸா பின்‌
அப்துர்ரஹ்மான்‌ அல்‌-ஸன்‌ஆனி சொல்லி முடித்தார்‌.

இனி இந்த மூஸா பின்‌ அப்துர்ரஹ்மான்‌ அல்‌-ஸன்‌ஆனி ஹதீஸ்‌ தொகுப்பாளர்கள்‌ பட்டியலில்‌ எப்படி மதிக்கப்படுகிறார்‌ என்பதை ஆராய்வோமானால்‌ அவர்‌ முழுப்‌ பொய்யராக இருக்கிறார்‌ என்பதைத்‌ தெரிய முடியும்‌. இவர்‌ விஷயத்தில்‌ அறிஞர்‌ அபூ அஹ்மத்‌ பின்‌ அத்‌ 'வெறுக்கத்தக்கவர்‌' என்று கூறியுள்ளார்‌. அபூ ஹாதம்‌ பின்‌ ஹிப்பான்‌ இவரைப்பற்றி 'பித்தலாட்டக்காரர்‌, ஹதீஸ்களைப்‌ பொய்யாக இட்டுக்கட்டிச்‌
சொல்கிறவர்‌' என்று சொல்லி மேலும்‌ கூறுகிறார்‌: 'இவர்‌ முகாதில்‌, கல்பீ போன்றவர்களின்‌ சொற்களிலிருந்து விஷயங்களைத்‌ திரட்டி தப்ஸீரில்‌ ஒரு நூலைப்‌ புனைந்துவிட்டு பின்னர்‌ அதை இப்னு அப்பாஸைப்பற்றி இப்னு ஜுரைஜ்‌ கூறியதாகச்‌
சுமத்தியிருக்கிறார்‌. அன்றி இதே ஹதீஸ்‌ மூஸா பின்‌ இப்ராஹீம்‌ அல்‌-மர்வஸ்‌ வழியாகவும்‌ அறிவிக்கப்படுகிறது. இவரைப்பற்றி யஹ்யா பின்‌ மயீன்‌ 'பொய்யர்‌' என்று கூறியிருக்கிறார்‌. தாரகுத்னி இவரைப்பற்றி 'ஒதுக்கப்பட வேண்டியவர்‌' என்று
கூறியிருக்கிறார்‌. சொல்லையும்‌, பொருளையும்‌, மாற்றியும்‌, திருப்பியும்‌ அறிவிக்கின்ற ராவிகளும்‌ இந்த ஹதீஸ்‌ அறிவிப்பாளர்‌ தொடரில்‌ இடம்‌ பெறுகிறார்கள்‌.

இவையனைத்தும்‌ இருள்‌ சூழ்ந்த பெயர்ப்‌ பட்டியல்களாக இருப்பதனால்‌ இவர்கள்‌ அறிவிக்கின்ற ஹதீஸ்களைக்‌ கொண்டு மார்க்க சம்பந்தமான தீர்ப்புகள்‌ ஏதும்‌ விதிக்கப்பட மாட்டாது. பிற்காலத்தில்‌ தோன்றிய ஹதீஸ்‌ தொகுப்பாளர்கள்‌ சிலர்‌
ஸஹீஹ்‌ என்றும்‌, ளயீஃப்‌ என்றும்‌ ஹதீஸ்களின்‌ தரத்தை எடைப்போட்டுப்‌ பார்க்காமல்‌ சில ஹதீஸ்களை பளாயில்களுடைய (சிறப்புகளுடைய) தலைப்பில்‌ ரிவாயத்‌ செய்வதை பழக்கமாக்கிக்‌ கொண்டார்கள்‌. தாம்‌ அதிகமான ஹதீஸ்களை ரிவாயத்‌ செய்திருப்பதாக விளங்கப்பட வேண்டுமென்பதுதான்‌ இவர்களின்‌ இலட்சியமே தவிர
அவை இஸ்லாமியச்‌ சட்டங்களைப்‌ புலப்படுத்துகின்ற நபியவர்களின்‌ பொன்மொழிகளாக அமைய வேண்டும்‌ என்பது இவர்களின்‌ இலட்சியமாக இருக்கவில்லை. 

நேரங்களின்‌ சிறப்பு, ஆட்களின்‌ சிறப்பு, வழிபாட்டின்‌ சிறப்பு, ஸஹாபாக்களின்‌ சிறப்பு, குலஃபாக்களின்‌ சிறப்பு என்றெல்லாம்‌ பளாயில்கள்‌ விஷயத்தில்‌ ஹதீஸ்கள்‌ தொகுத்த பல்வேறு ஆசிரியர்கள்‌ இந்த மாதிரியைக்‌ கையாண்டிருக்கிறார்கள்‌. இவர்கள்‌ தொகுத்த ஹதீஸ்கள்‌ பல்வேறு தராதரமுடையவை. இவற்றில்‌ ஸஹீஹான ஹதீஸ்களுமிருக்கும்‌. ஹஸன்‌, ளயீஃப்‌, மவ்ளுஃ என்ற பற்பல தரத்திலுள்ள
ஹதீஸ்களும்‌ இருக்கும்‌.

அபுஷைகுல்‌ இஸ்பஹானி 'அமல்களின்‌ சிறப்பு' (பளாயிலுள்‌ அஃமால்‌) என்ற தலைப்பில்‌ ஹதீஸ்களைத்‌ தொகுத்திருக்கிறார்‌. கைஸமத்‌ பின்‌ ஸுலைமான்‌ ‘ஸஹாபக்களின்‌ சிறப்பிலும்‌, அபூ நயீமுல்‌ இஸ்பஹானி குலஃபாக்களின்‌ சிறப்பிலும்‌,
அபுல்லைஸ்‌ அல்‌-ஸமர்கந்தி, அப்துல்‌ அஸ்ஸுல்‌ கன்னானி, அபூ அலிய்யுல்‌ பன்னா போன்ற ஷைகுமார்கள்‌ ஏராளாம்‌ ஹதீஸ்களைத்‌ திரட்டியிருக்கிறார்கள்‌. ஹதீஸ்‌ துறையில்‌ இவர்களுக்குப்‌ போதிய ஞானமிருந்தும்‌ தாம்‌ கேட்ட ஹதீஸ்களை பொதுவாக அறிவித்து விடுகிறார்கள்‌. அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களை பிறர்‌ தெரிய
வேண்டுமென்பதே இவர்களின்‌ இலட்சியம்‌ அன்றி அவை மார்க்கத்‌ தீர்ப்புகளுக்கு ஆதாரமாக்கப்பட வேண்டுமென்பது இவர்களின்‌ இலட்சியமாக இருந்ததில்லை. ஆதலால்‌ ஹதீஸ்களை அலசி, ஆராய்ந்து பாராமல்‌ முன்கரான ஹதீஸ்‌ என்றும்‌,
(வெறுக்கப்பட்ட ஹதீஸ்‌) பலவீனமான ஹதீஸ்‌ (ளயீஃப்‌) புதுமையான ஹதீஸ்‌ (கரீப்‌) என்று பாகுபடுத்தாமல்‌ விபரபின்றிக்‌ கூறிவிடுகின்றனர்‌.

ஆனால்‌ ஹதீஸ்‌ தொகுப்பாளர்களில்‌ நேர்மையானவர்கள்‌ என்று அறியப்பட்ட இமாம்களான மாலிக்‌ பின்‌ அனஸ்‌, ஷாஃபிஈ, அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌, இஸ்ஹாக்‌ பின்‌ ராஹவைஹி மேலும்‌ இமாம்‌ புகாரி, அலீ பின்‌ முதைனி, அபூதாவூத்‌, தபரீ, இப்னு
குஸைமா, அபூ ஸர்‌ஆ, ஷுஃபத்திப்னுல்‌ ஹஜ்ஜாஜ்‌, யஹ்யா பின்‌ ஸயீத்‌ அல்‌-கத்தான்‌, அப்துர்ரஹ்மான்‌ பின்‌ அல்‌-மஹ்த்‌, ஸுஃப்யான்‌ பின்‌ உயைனா, வகீஃ, இப்னுல்‌ ஜா்ராஹ்‌, அப்துல்லாஹ்‌ இப்னுல்‌ முபாரக்‌, அபூஹாகிம்‌, தாவூத்‌ பின்‌ அலீ இப்னுல்‌ முன்திர்‌ போன்ற அறிஞர்கள்‌, ஹதீஸ்‌ ஆராய்ச்சியாளர்கள்‌ தாம்‌ திரட்டிய ஹதீஸ்களைக்‌ கொண்டு இஸ்லாமிய மார்க்க விதிகளை வெளியாக்குவதை இலட்சியமாக வைத்து திரட்டியிருப்பதனால்‌, அவற்றில்‌ ஸஹீஹானவை யாவை, ளயிஃபானவை யாவை, அறிவிப்பாளர்களில்‌ நம்பத்தகுந்தவர்கள்‌ யாவர்‌, புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்‌ யாவர்‌ என நுணுக்கமாக ஆரய்ந்து ஹதீஸ்களைத்‌ திரட்ட முற்பட்டனர்‌. அது விஷயத்தில்‌ பெரும்‌ சிரமங்களையும்‌, பலவாறான கஷ்டங்களையும்‌ சுமந்து கொண்டார்கள்‌. இவர்கள்‌ அறிவிக்கின்ற ஹதீஸ்களில்‌ சந்தேகமே இல்லை.

இவற்றை நாம்‌ இங்கு ஏன்‌ குறிப்பிடுகிறோம்‌ என்றால்‌ பெருமானாரையும்‌, பொதுவான சிருஷ்டிகளையும்‌ பொருட்டாக வைத்து, அவர்களைக்‌ கொண்டு ஆணையிட்டு வஸீலா தேடலாம்‌ என அனுமதி வழங்கியவர்களில்‌ ஒருவர்‌ கூட தமது இந்த வாதத்திற்கு நபிகளோடு சேர்க்கப்பட்ட ஸஹீஹான ஹதீஸ்களில்‌ ஒன்றைக்கூட ஆதாரம்‌ காட்ட முடியவில்லை. இதுபற்றி அறிஞர்கள்‌ அனைவரும்‌ அறிந்த ஒன்றாகும்‌. இது விஷயத்தில்‌ சான்றாக எடுத்துக்‌ கூறப்பட்ட ஹதீஸ்கள்‌ அனைத்துமே பெருமானார்‌ மீது வேண்டுமென்றே பொய்யாகப்‌ புனைந்து சொல்லப்பட்ட ஹதீஸ்களாகவோ அல்லது
நபியவர்கள்‌ கூறியது என்று தவறுதலாக அறிவிக்கப்பட்டிருக்கும்‌ ஹதீஸ்களாகவோ
அல்லது முன்னோர்களின்‌ பலவீனமான வரலாறுகளாகவோ தான்‌ இருக்குமே தவிர
அவை நேர்மையான ஹதீஸ்களாக இருக்க முடியாது. சில வேளை ஸலஃபுஸ்ஸாலிஹீன்களிடமிருந்து கேட்கப்பட்ட பலவீனமான சொற்களாகவும்‌
இருப்பதைக்‌ காணலாம்‌.

உதாரணமாக கீழ்வரும்‌ சம்பவத்தைக்‌ குறிப்பிடலாம்‌. 'அப்துல்லாஹ்‌ பின்‌ ஸுபைரும்‌, முஸ்‌அப் பின்‌ ஸுபைரும்‌, அப்துல்லாஹ்‌ பின்‌ உமரும்‌, அப்துல்‌ மலிக்‌
பின்‌ மார்வானும்‌ ஒன்று சேர்ந்து கஃபாவின்‌ அருகில நின்று கொண்டு 'ருக்னுல்‌ யமானி’ யை இறுகப்‌ பிடித்தவண்னம்‌ ஒவ்வொருவரும்‌ தத்தம்‌ தேவைகளை
அல்லாஹ்விடம்‌ பிரார்த்தித்தார்களாம்‌. இதனால்‌ அல்லாஹ்‌ தன்‌ விசாலமான அருள்‌மாரியிலிருந்து அருள்பாலிப்பான்‌ என்றும்‌ தமக்குள்‌ பேசிக்‌ கொண்டார்களாம்‌. ஒருவர்‌ அப்துல்லாஹ்‌ பின்‌ ஸுபைரை நோக்கி 'எழுந்து பிரார்த்தியும்‌. நீர்தான்‌ ஹிஜ்ராவுக்குப்‌ பிறகு இஸ்லாத்தில்‌ தோன்றிய முதல் குழந்தையாயிற்றே' என்றார்‌. அதைக்‌ கேட்டதும்‌ அவர்‌ எழுந்து நின்று 'ருக்னுல்‌ யமானி'யை இறுகப்‌ பிடித்தவாறு ‘இறைவா! நீ மகத்துவமிக்கவன்‌. பயங்கரமான எல்லா நிலைகளிலும்‌ உன்‌ மீது ஆதரவு
வைக்கப்படுகிறது. உன்‌ திருமுகத்தின்‌ பெருமையால்‌, அதன்‌ மதிப்பால்‌, உன்‌ அர்ஷின்‌ குணசியத்தால்‌, அதன்‌ மகத்துவத்தால்‌, உன்‌ நபியின்‌ பொருட்டால்‌, அவர்களின்‌ மரியாதையைக்‌ கொண்டும்‌, மதிப்பைக்‌ கொண்டும்‌ நான்‌ உன்னிடம்‌ கெஞ்சி வேண்டுகிறேன்‌. இந்த ஹிஜாஸ்‌ மாகாணத்தின்‌ அதிகாரமும்‌, அதன்‌ ஆட்சிப்‌ பொறுப்பும்‌ என்மீது ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர்‌ என்னை மெளத்தாக்கி விடாதே!' என்று
பிரார்த்தித்து விட்டு அமர்ந்தார்களாம்‌.

இரண்டாவதாக முஸ்‌அப்‌ பின்‌ ஸுபைர்‌ எழுந்து 'ருக்னும்‌ யமானி'யைப்‌ பற்றிப்‌ பிடித்துக்‌ கொண்டு அல்லாஹ்வே! நீ அனைத்து படைப்பினங்களின்‌ இரட்சகன்‌. அவையனைத்தும்‌ உன்‌ பக்கம்‌ மீளக்கூடியவை. அனைத்துக்‌ காரியங்களின்‌ மீதும்‌
ஆதிக்கம்‌ செலுத்துகின்ற உள்‌ ஆற்றலின்‌ பொருட்டால்‌ பிரார்த்திக்கிறேன்‌. இராக்கின்‌
ஆட்சி பீடத்தை எனக்கு நீ அருள்‌ புரிந்து ஹுஸைனின்‌ மகள்‌ ஸுஹைனாவை எனக்கு
நீ திருமணம்‌ செய்து தரும்வரையில்‌ என்னை நீ மெளத்தாக்கி விடாதே!' என்று கூறிப்‌ பிரார்த்தித்தார்களாம்‌.

பிறகு அப்துல்‌ மலிக்‌ பின்‌ மர்வான்‌ எழுந்து நின்று 'ருக்னுல்‌ யமானி'யைப்‌ பற்றிப்‌ பிடித்துக்‌ கொண்டு ஏழு வானங்களுடையவும்‌, வறட்சியால்‌ வாடிய பிறகு
புற்பூண்டுகளை முளைப்பிக்கும்‌ பூமியையுடையவும்‌ இரட்சகனே! உன்னுடைய ஏவல்களுக்கு இணங்கிய நல்லடியார்கள்‌ எந்த ஒன்றைக்‌ கொண்டு உன்னிடம்‌
பிரார்த்தித்தார்களோ அதைக்‌ கொண்டு நானும்‌ பிரார்த்திக்கிறேன்‌. உன்னுடைய சிருஷ்டிகள்‌ மீதுள்ள உன்‌ உரிமைகளையும்‌, பாத்தியதைகளையும்‌ முன்னிறுத்திக்‌ கேட்கிறேன்‌. உன்‌ அர்ஷை சுற்றி வரும்‌ மலக்குகளின்‌ பொருட்டாலும்‌ உன்னிடம்‌
கேட்கிறேன்‌' என்று கூறி துஆவின்‌ கடைசி வரையிலும்‌ பிரார்த்தித்தார்கள்‌.

ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள்‌ பற்றிய இந்த சம்பவத்தை இப்னு அபித்துன்யா என்பவர்‌ தமது முஜாபுத்‌ துஆ என்ற நூலில்‌ இஸ்மாயில்‌ பின்‌ அப்பானுல்‌ கனவி வழியாகக்‌ கிடைத்தது என்று கூறியிருக்கிறார்‌. இந்த இஸ்மாயில்‌ என்பவரின்‌ நிலைமையை நாம்‌
ஆராய்ந்தால்‌ இவர்‌ பொய்யுரைப்பவர்‌ எனத்‌ தெரிந்து கொள்ளலாம்‌. இவரைப்பற்றி இமாம்களான புகாரி, முஸ்லிம்‌, தாரகுத்னி, அபூ ஸர்‌ஆ போன்றவர்களெல்லாம்‌ ‘ஒதுக்கப்பட்டவர்‌' என்று கூறியிருக்கிறார்கள்‌. அபூ ஹாதிம்‌ இந்த இஸ்மாயிலைப்‌ ‘பொய்யன்‌' என்று கூறியுள்ளார்‌. 'நம்பத்தகுந்த நாணயமானவர்கள்‌ மீது இட்டுக்கட்டுகிறவர்‌' இப்னு ஹிப்பான்‌ கூறியிருக்கிறார்‌. 'இவரின்‌ அறிவித்தலுக்கொப்ப ஹதீஸ்களை நான்‌ எழுதிக்‌ கொண்டே இருந்தேன்‌. ஆனால்‌ புனையப்பட்ட மவ்ளூஃ ஆன ஹதீஸ்களை இவரின்‌ ரிவாயத்துகளில்‌ பெற்றுக்‌ கொள்ளப்பட்டதினால்‌ இவரின்‌ ஹதீஸ்களை ரிவாயத்‌ செய்வதைக்‌ தவிர்த்து விட்டேன்‌' என்று அஹ்மத்‌ பின்‌
ஹன்பல்‌ அவர்கள்‌ கூறுகிறார்கள்‌. மற்றும்‌ பற்பல குற்றங்களை இவர்‌ விஷயத்தில்‌ கூறியிருக்கின்றனர்‌.

மேலும்‌ இந்த ஹதீஸின்‌ கருத்திலும்‌, அமைப்பிலும்‌, அதில்‌ இடம்‌ பெற்றவர்களின்‌ பெயர்களிலும்‌, அவர்கள்‌ பிரார்த்தித்த துஆக்களிலும்‌ வேறு சில அபிப்பிராயங்கள்‌ காணப்படுகின்றன. அந்த ஹதீஸ்களில்‌ இவர்கள்‌ ஹிஜ்ர்‌ பக்கம்‌ ஒன்று
சேர்ந்தார்களென்றும்‌, அப்துல்லாஹ்‌ பின்‌ ஜுபைர்‌ ஆட்சி பீடத்திற்கு ஆசைப்பட்டார்கள்‌ என்றும்‌, உர்வா பின்‌ ஜுபைர்‌ தம்மை விட்டு கல்வி பறிக்கப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டார்களென்றும்‌, முஸ்‌அப்‌ பின்‌ உமர்‌ இராக்கின்‌ தலைமைப்‌ பதவியையும்‌,
தல்ஹாவின்‌ மகள்‌ ஆயிஷாவையும்‌, ஹுஸைனின்‌ மகள்‌ ஸுஹைனாவையும்‌ சேர்த்து மனைவியாக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள்‌ என்றும்‌ காணப்படுகிறது. அப்துல்லாஹ்‌ பின்‌ உமர்‌ அல்லாஹ்‌வின்‌ மன்னிப்பை விரும்பினாரென்றும்‌ அதை அறிவிக்கின்ற ராவி குறிப்பிடுகின்றார்‌. மேலும்‌ அதை அறிவிக்கின்ற ராவி, மேலும்‌ இப்னு உமர்‌ மன்னிப்பைப்‌ பெற்றார்களென்றும்‌, ஒவ்வொருவரும்‌ தாம்‌ விரும்பியதைப்‌ பெற்றுக்‌ கொண்டார்களென்றும்‌ குறிப்பிடுகிறார்‌. ஆம்‌! சிருஷ்டிகளில்‌ யாரையும்‌
எடுத்துரைத்து அவர்களின்‌ பொருட்டால்‌ இங்கே கேட்கப்படவில்லை. எனவே இந்த
இஸ்னாத்‌ முன்னர்‌ கூறப்பட்ட இஸ்னாதை விட நன்றாக இருப்பதாக அஹ்லுல்‌ இல்ம்‌ (அறிஞர்‌ உலகம்‌) ஏக மனதாக ஏற்றுக்‌ கொள்கிறது.

சிலர்‌ தாம்‌ கனவில்‌ கண்ட கதைகளை மனிதரைக்‌ கொண்டு வஸீலா தேடுவதற்குரிய ஆதாரமாக கொள்கிறார்கள்‌. கனவில்‌ இன்னாரைப்‌ பொருட்டாகக்‌ கொண்டு வைத்துப்‌ பிரார்த்திக்கும்படி சொல்லப்பட்டுள்ளதாம்‌. இத்தகைய கனவுகளும்‌, கதைகளும்‌ மார்க்க அனுஷ்டானங்களுக்குச்‌ சான்றாக அமைய முடியுமா? அனைத்து அறிஞர்களின்‌
ஏகமனதான அபிப்பிராயப்படி மார்க்கச்‌ சட்டங்களை விதிக்க கனவுகளும்‌, கதைகளும்‌ ஆதாரமாக ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது. துஆக்களைச்‌ சேர்த்து புத்தகங்களை எழுதியவர்கள்‌ இத்தகைய சம்பவங்களை ஏராளம்‌ சேர்த்துள்ளார்கள்‌. கீழே காணும்‌ ஒரு சம்பவத்தைப்‌ பற்றி அது ஸலஃபுஸ்ஸாலிஹீன்களிடையே நடைபெற்றதாக இப்னு அபித்துன்‌யா தமது முஜாபுத்‌ துஆ என்ற நூலில்‌ அறிவிக்கிறார்‌.

ஒரு மனிதர்‌ அப்துல்‌ மலிக்‌ பின்‌ ஸயீதிடம்‌ வந்தபோது அவரின்‌ வயிற்றை அப்துல்‌ மலிக்‌ சோதித்துப்‌ பார்த்து தீராத நோய்‌ ஒன்று அம்மனிதரைப்‌ பீடித்திருப்பதாகக்‌
கூறினார்‌. அது என்ன நோய்‌ என்று அம்மனிதர்‌ அப்துல்‌ மலிக்கிடம்‌ வினவ அதற்கு அவர்‌, துபைலா (வயிற்றினுல்‌ உண்டாகும்‌ கொப்புளங்கள்‌) என பதிலுரைத்தார்‌. இதைச்‌ செவியுற்ற அம்மனிதர்‌ திரும்பி விட்டார்‌. பிறகு வருத்தத்துடன்‌ அல்லாஹ்‌! அல்லாஹ்‌! என்று கீழ்வருமாறு பிரார்த்தித்தார்‌. என்‌ இறைவன்‌ ஏகன்‌. எதையும்‌ நான்‌ அவனுக்கு இணை வைக்க மாட்டேன்‌. இறைவா! உன்‌ நபியின்‌ பொருட்டால்‌ நான்‌ உன்‌ பக்கம்‌ முன்னோக்குகிறேன்‌. அவர்‌ நபிய்யுர்‌ ரஹ்மத்‌ என்னும்‌ அருள்‌ நபி. அல்லாஹ்வின்‌ ஸலவாத்தும்‌, ஸலாமும்‌ அவர்‌ மீது உண்டாகட்டும்‌! முஹம்‌மதே! உங்களைப்‌ பொருட்டாக வைத்து உங்களின்‌ இரட்சகன்பால்‌ நான்‌ முகம்‌ திருப்புகிறேன்‌. எனவே எனது இரட்சகன்‌ எனது நோயிலிருந்து எனக்கு அருள்‌ பாலிக்கட்டும்‌' அதன்‌ பின்னர்‌ அப்துல்‌ மலிக்‌ அவரது வயிற்றைத்‌ தடவிப்‌ பார்த்து விட்டு, 'நீர்‌ குணமடைந்து விட்டீர்‌. இப்பொழுது உமக்கு எந்த நோயுமில்லை' என்றாராம்‌.

இதுபோன்ற துஆக்களை வைத்து ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள்‌ பிரார்த்தித்து
இருக்கிறார்களாம்‌. மேலும்‌ நபியைக்‌ கொண்டு பிரார்த்திபபதை இமாம்‌ அஹ்மத்‌ பின்‌
ஹன்பல்‌ அனுமதித்திருப்பதாக 'மன்ஸக்குல்‌ மிர்வதி' என்ற நூலில்‌ நகல்‌ செய்யப்பட்டுள்ளது. ஆனால்‌ இமாம்‌ அஹ்மதைத்‌ தவிர உள்ள மற்ற அறிஞர்கள்‌
இப்படிப்பட்ட துஆக்கள்‌ கேட்பதை விலக்கியிருக்கிறார்கள்‌.

உதவித்‌ தேடிப்‌ பிரார்த்திப்பவர்களின்‌ இலட்சியம்‌ நபியை ஈமான்‌ கொண்டு, அவர்களை நேசித்து, அவர்களுக்கு வழிபட்டு நடப்பதை பொருட்டாக வைத்துக்‌ கேட்பதாக இருப்பின்‌ இமாம்‌ அஹ்மதைப்‌ பற்றி நகல்‌ செய்தது சரியாக இருக்கலாம்‌.
ஆனால்‌ நபியை பொருட்டாக வைத்துக்‌ கேட்பதுதான்‌ அவர்களுடைய இலட்சியமாக இருப்பின்‌ அங்குதான்‌ அபிப்பிராயப்‌ பேதங்கள்‌ கூறப்படும்‌. அப்பொழுது திருகுர்‌ஆன்‌, ஹதீஸ்‌ இவற்றின்‌ வெளிச்சத்தில்‌ ஆராய்ந்து அதற்குரிய தீர்ப்புக்கு வர வேண்டும்‌.

துஆ இறைஞ்சிய பின்னர்‌ பிரார்த்தித்தவனுக்கு அவனுடைய தேவைகள்‌ நிறைவேறின என்பதனால்‌ அதை ஷரீஅத்‌ அனுமதித்த துஆ என்றோ, சிருஷ்டிகளைக்‌ கொண்டு வஸீலா தேடியதினால்தான்‌ கிடைத்தது என்றோ சொல்ல முடியாது. எத்தனை
எத்தனையோ மக்கள்‌ நட்சத்திரங்களையும்‌, மற்ற பிறவற்றையும்‌ அழைத்து பிரார்த்திக்கின்றனர்‌. கிறிஸ்தவ கோயில்களைக்‌ கொண்டும்‌, மேலும்‌ சாமிகளைக்‌ கூப்பிட்டும்‌ பிரார்த்திக்கின்றனர்‌. கப்றுகள்‌, பிம்பங்கள்‌, சமாதிகள்‌ இவற்றின்‌ அருகில்‌
நின்று பிரார்த்தித்தால்‌ பிரார்த்தனைகள்‌ அங்கீகரிக்கப்பட்டு விடும்‌ என்று நம்பிக்கை
வைத்து சொல்கின்றனர்‌. அங்கே சென்று ஏதேதோ கேட்டுப்‌ பிரார்த்திக்கின்றனர்‌.

சில நேரங்களில்‌ இவர்களின்‌ தேட்டங்கள்‌ கிடைத்து விடுகின்றன. எனவே தம்‌ தேவைகள்‌ நிறைவேற்றப்பட்டதினாலோ, தாம்‌ கேட்டது கிடைத்து விட்டதனாலோ மேற்கூறப்பட்ட துஆக்கள்‌ போன்றவை ஷரீ அத்தில்‌ அனுமதிக்கப்படும்‌ என்பது
அவசியமில்லை. ஏனெனில்‌ அதனால்‌ பல்வேறு கெடுதிகள்‌ விளைகின்றன. இஸ்லாமிய ஷரீஅத்தின்‌ விதிவிலக்குகளில்‌ மனித சமூகத்தின்‌ நன்மைகள்‌ கவனிக்கப்படுகின்றன. வெளிப்படையில்‌ அவை நன்மை தருவதென்று விளங்கப்படாவிட்டாலும்‌ சரியே.

உதாரணமாக ஷரீஅத்தில்‌ விலக்கப்பட்டவற்றைக்‌ கவனிப்போமானால்‌ ஷிர்க்‌ (இணைவைத்தல்‌), மது அருந்துதல்‌, சூதாடல்‌, அசிங்கமான வெறுக்கத்தக்க செய்கைகளைப்‌ புரிதல்‌, அக்கிரமங்கள்‌ செய்தல்‌ போன்ற விலக்கப்பட்ட செய்கைகளை புரிகின்றவனுக்கு நிச்சயமாக அவற்றினால்‌ ஒருசில பலன்கள்‌ கிடைக்கலாம்‌. தீமைகளோ அதிகம்‌.
எனவே இச்செய்கைகளால்‌ விளையும்‌ தீமைகளையும்‌, கெடுதல்களையும்‌ கவனிக்கும்போது அவற்றிலுள்ள பயன்களை விட தீமைகளே அதிகமாக இருப்பதைக்‌
காணலாம்‌. இதை வைத்துத்தான்‌ அல்லாஹ்வும்‌, ரஸூலும்‌ அவற்றை விலக்கி ஹராம்‌ என்று விதித்திருக்கிறார்கள்‌. இவை அனைத்தும்‌ விலக்கல்களின்‌ விதிகள்‌.

ஏவல்‌ விதிகளைப்‌ பொறுத்தவரையிலும்‌ அப்படித்தான்‌. இபாதத்துகள்‌, ஜிஹாத்‌, தம்‌
சொந்த பொருளிலிருந்து ஜகாக்‌ கொடுத்தல்‌, பிற, தான-தர்மங்கள்‌ செய்தல்‌ போன்ற வணக்க வழிபாடுகளைப்‌ பார்த்தால்‌ அவற்றிலும்‌ சில கஷ்டங்களும்‌ சிரமங்களும்‌ இருக்க முடியும்‌. ஆனால்‌ அவற்றால்‌ விளையும்‌ நற்பயன்களின்‌ பொருத்தத்தை
முன்வைத்து அல்லாஹ்‌ அவற்றை கடமையாக்கி தன்‌ அடியார்கள்‌ மீது விதித்திருக்கின்றான்‌.

இதுவே மார்க்க விதிவிலக்கின்‌ தத்துவங்களாகும்‌. மக்கள்‌ அவசியம்‌ இவற்றைப்‌ புரிந்து கொள்ள வேண்டும்‌. ஷரீஅத்தில்‌ வாஜிப்‌ என்றோ, சுன்னத்‌ என்றோ, முஸ்தஹப்‌ என்றோ ஒரு செயல்‌ சட்டமாக்கப்பட வேண்டுமானால்‌ அதை விதிக்கப்படுவதற்கு உரிய ஆதாரம்‌ என்னவென்பதை ஷரீஅத்‌ நிரூபித்துக்‌ காட்டட்டும்‌. வழிபாடுகள்‌, வணக்கங்கள்‌ அனைத்துமே வாஜிப்‌, முஸ்தஹப்‌ என்ற இரு விதிகளுக்குட்பட்டு இருக்கின்றன.
இவ்விரு விதிகளுக்கும்‌ அப்பாற்ப்பட்ட எதுவும்‌ வணக்கமாகாது. பிரார்த்தனைகள்‌ வணக்க வழிபாடுகளில்‌ உட்பட்டு இருக்கின்றன. எனவே எதை வைத்துப்‌ பிரார்த்திக்கப்படுகிறதோ அது மார்க்கத்தில்‌ (ஷரீ அத்தில்‌) அனுமதிக்கப்பட்ட பிரார்த்தனையாக இருத்தல்‌ வேண்டும்‌.

சுருங்கக்கூறின்‌ சில ஸலஃபுஸ்ஸாலிஹீன்களும்‌, சில அறிஞர்களும்‌ சிருஷ்டிகளும்‌ பெருமானார்‌ (ஸல்‌) அவர்களை மட்டும்‌ முன்னிறுத்தி பிரார்த்திப்பதை
அனுமதித்திருக்கின்றனர்‌. இவர்கள்‌ கூட வேறு சிருஷ்டிகளைக்‌ கொண்டு கேட்பதை அவர்கள்‌ (நபிமார்களாகட்டும்‌, மலக்குகள்‌, ஸாலிஹீன்கள்‌, கண்‌ பார்வைக்கு அப்பாற்ப்பட்டவர்கள்‌, இறந்து போன படைப்பினங்களின்‌ எத்தனை பெரியவனாக
இருப்பினும்‌ சரியே. இவற்றையெல்லம்‌ முன்னிறுத்தித்‌ தம்‌ தேவைகளை முறையிடுவதற்கு) இவ்வகுப்பினர்‌ அனுமதிக்கவில்லை. ஆனால்‌ மற்ற இமாம்களும்‌,
ஸஹாபாக்களும்‌, தாபியீன்களும்‌, இதர ஸலஃபுஸ்ஸாலிஹீன்களும்‌ செய்யாத ஒன்றை
இவர்கள்‌ அனுமதித்திருக்கிறார்கள்‌ என்றே கருத வேண்டும்‌.

((மேலும்‌ இந்த மூஸா பின்‌ இப்ராஹீம்‌ ளயீஃபான அறிவிப்பாளர்‌ என்று காட்டுகின்ற அறிஞர்கள்‌ பலரின்‌ அபிப்பிராயங்களை இமாம்‌ இப்னு தைமிய்யா இங்கே
குறிப்பிடுகிறார்‌.))


பார்வையிழந்த ஸஹாபியைப்‌ பற்றிய ஹதீஸ்‌

இந்த ஹதீஸை இமாம்‌ திர்மிதியும்‌, நஸாயீயும்‌ அறிவிக்கிறார்கள்‌. 'நபிகளின்‌ துஆவை வைத்து பிரார்த்தித்தல்‌' என்ற இனத்தைச்‌ சார்ந்த ஹதீஸாக  இந்த ஹதீஸ்‌ அமைந்திருக்கிறது. கண்பார்வை இழந்த ஒரு மனிதர்‌ நபியவர்களிடம்‌ வந்து தமக்காகப்‌
பிரார்த்தித்து தமது பார்வையை மீட்டுத்தர அல்லாஹ்வை வேண்டும்படி கேட்டுக்கொண்டார்‌. இதனைச்‌ செவியுற்ற நபி (ஸல்‌) அவர்கள்‌ அம்மனிதரை நோக்கி நீர்‌ விரும்பினால்‌ கொஞ்சம்‌ பொறுமையுடன்‌ இருந்திருக்கலாம்‌. இல்லாவிட்டால்‌ நீர்‌ நினைப்பதுபோல நான்‌ பிரார்த்திக்கிறேன்‌' என்றார்கள்‌. இதைக்‌ கேட்ட அம்மனிதர்‌
பிரார்த்தியுஙகள்‌' என்றார்‌.

உடனே பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ 'ஒளு செய்து இரண்டு ரக்‌அத்‌ தொழுது கீழ்வருவதைப்போல சொல்ல வேண்டும்‌' என்று பணித்தார்கள்‌. 'இறைவா! அருள்‌ மிக்க உன்‌ நபியைக்‌ கொண்டு பிரார்த்திக்கிறேன்‌. முஹம்மதே! ரஸுலுல்லாஹ்வே!
உம்மைக்‌ கொண்டு நான்‌ என்‌ இரட்சகனின்‌ பக்கம்‌ எனது இத்தேவையை (கண்பார்வை திரும்புதலை) நிறைவேற்றுவதற்காக முன்னோக்குகிறேன்‌. இறைவா! என்‌ விஷயத்தில்‌ நபியின்‌ சிபாரிசை ஏற்றுக்‌ கொள்வாயாக! என்று சொல்லிக்‌ கொடுத்தார்கள்‌. இந்த ஹதீஸ்‌ நபியவர்களின்‌ துஆவினாலும்‌, சிபாரிசினாலும்‌ வஸீலா தேடலாம்‌ என்று
காட்டுகிறது. பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ இம்மனிதருக்காக பிரார்த்தித்தார்கள்‌.
எனவேதான்‌ 'நபியின்‌ சிபாரிசை என்‌ விஷயத்தில்‌ ஏற்றுக்‌ கொள்வாயாக! என்றுக்‌ கூறி
சொல்லிக்‌ கொடுத்தார்கள்‌.

தமக்காக தம்‌ ரஸூல்‌ கேட்கின்ற பிரார்த்தனையை ஏற்றுக்‌ கொள்ளுமாறு அல்லாஹ்விடம்‌ கேட்க வேண்டுமென்று அம்மனிதரிடம்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌
சொல்லிக்‌ கொடுத்தார்கள்‌.

நபியவர்களின்‌ அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனைகளிலும்‌, அவர்களுக்கென்று
அருளப்பட்ட அற்புத சக்திகளிலும்‌ (முஃஜிஸாக்களிலும்‌) இந்த ஹதீஸை அறிஞர்கள்‌
குறிப்பிடுகிறார்கள்‌. பெருமானார்‌ (ஸல்‌) அவர்களின்‌ பிரார்த்தனையின்‌ பரக்கத்தால்‌ எண்ணற்ற அற்புதங்கள்‌ நிகழ்ந்திருக்கின்றன. தீராத வியாதிகள்‌ குணப்பட்டிருக்கின்றன. கண்பார்வை இல்லாத இம்மனிதரின்‌ பார்வை மீட்டிக்‌ கிடைப்பதற்காக நபியவர்கள்‌ பிரார்த்தித்தார்கள்‌. உடனே அவரின்‌ பார்வை திரும்பி விட்டது.

நுபுவ்வத்தின்‌ அத்தாட்சிகள்‌ (தலாயிலுன்‌ நுபுவ்வத்‌) குறித்து நூற்கள்‌ இயற்றிய பைஹகீ போன்றவர்கள்‌ இதை ரிவாயத்‌ செய்திருக்கிறார்கள்‌. பைஹகீயின்‌
இன்னுமொரு ரிவாயத்தில்‌ இடம்பெற்ற ஸஹாபி இறைவன்‌ மீது சத்தியமாக நாம்‌ அந்த மஜ்லிஸிலே தான்‌ இருந்தோம்‌. நெடுநேரம்‌ நாங்கள்‌ பேசவும்‌ இல்லை. அதற்கிடையில்‌ இம்மனிதர்‌ அங்கே வந்தார்‌. இயற்கையில பார்வையள்ள மனிதரைப்‌ போலவே இருந்தார்‌' என்று கூறுகிறார்‌.

இந்த ஹதீஸை இமாம்‌ திர்மிதியும்‌ ரிவாயத்‌ செய்திருக்கிறார்கள்‌. இதன்‌ தரத்தைப்‌
பற்றி ஹஸன்‌, ஸஹீஹ்‌, கரீப்‌ என்றெல்லாம்‌ கூறியிருக்கிறார்கள்‌. மேலும்‌ இமாம்‌ நஸயீயும்‌, இப்னு மாஜாவும்‌ இதை ரிவாயத்‌ செய்திருக்கிறார்கள்‌. ஆனால்‌ இமாம்‌ திர்மிதியும்‌, மற்றவர்களும்‌ இந்த ஹதீஸின்‌ வார்த்தையை இதர அறிஞர்களைப்‌
போன்று நிரப்பமாகச்‌ சொல்லவில்லை. ('அல்லாஹும்ம ஹஃப்பிஃஹு பிய்ய'
இதுவரைதான்‌ கூறியிருக்கிறார்கள்‌). பைஹகீ கூறியதைப்போல்‌ இமாம்‌ அஹ்மதும்‌ தனது முஸ்னதில்‌ ரூஹ்‌ இப்னு உபைதாவைப்‌ பற்றி இந்த ஹதீஸை ரிவாயத்‌ செய்திருக்கிறார்கள்‌. மேலும்‌ இமாம்‌ பைஹகீ, அபூ உமாமத்திப்னு ஸஹ்லிப்னு ஹனீபைப்‌ பற்றி கீழ்வரும்‌ ஒரு கதையையும்‌ அறிவிக்கிறார்கள்‌. நபியவர்கள்‌ இறந்ததற்கப்பால்‌ அவர்களைக்‌ கொண்டு வஸீலாத்‌ தேடுகிறவரைப்‌ பற்றி இதையும்‌
ஒரு சான்றாக எடுக்க முடியும்‌.

ஒரு மனிதர்‌ கலீஃபா உஸ்மான்‌ (ரலி) அவர்களிடம்‌ தம்முடைய தேவையின்‌ நிமித்தம்‌ வந்து போய்‌ கொண்டிருந்தாராம்‌. கலீஃபா அவர்கள்‌ அம்மனிதரைக்‌
கவனிக்காமலும்‌, அவருடைய தேவையைப்‌ பொருட்படுத்தாமலும்‌ இருந்தார்களாம்‌.
இதற்கிடையில்‌ அம்மனிதர்‌ உஸ்மான்‌ பின்‌ ஹனீப்‌ ஸஹாபியை சந்திக்க நேர்ந்தது. அவரிடம்‌ தன்‌ பிரச்சினையைப்‌ பற்றி முறையிட்டார்‌. இதை கேட்டதும்‌ உஸ்மான்‌ பின்‌ ஹனிப்‌ அம்மனிதரை ஒளுச்‌ செய்துவர பணித்தார்கள்‌. பிறகு பள்ளிவாசலில்‌ சென்று இரண்டு ரக்‌அத்துக்கள்‌ தொழுது விட்டு,
'இறைவா! அருள்‌ நிறைந்த உன்‌ நபி முஹம்‌மத்‌ (ஸல்‌) அவர்களைக்‌ கொண்டு நான்‌ பிரார்த்திக்கிறேன்‌. முஹம்மதே! உம்மைக்‌ கொண்டு எனது இந்தத்‌ தேவையை நிறைவேற்றுவதற்காக என்னுடைய இரட்சகனின்‌ பக்கம்‌ முகம்‌ திருப்புகிறேன்‌' என்று
பிரார்த்தித்துப்‌ பின்னர்‌ தம்‌ தேவைகளை எடுத்துக்‌ கூற வேண்டும்‌. அதன்‌ பின்னர்‌ கலீஃபாவிடம்‌ நீர்‌ செல்லும்‌ என்றும்‌, உம்முடன்‌ நானும்‌ வருவேன்‌ என்றும்‌ கூறினார்‌. இதைச்‌ செவியுற்ற அம்மனிதர்‌ தாம்‌ கேட்டு விளங்கியதன்படி செய்தார்‌. பின்னர்‌ கலீஃபா உஸ்மான்‌ (ரலி) அவர்களிடம்‌ சென்றார்‌. கலீஃபா உஸ்மானின்‌ காவலர்கள்‌ அம்மனிதரின்‌ கையைப்‌ பிடித்து அழைத்துக்‌ கொண்டு வந்துநேராகக்‌ கலீஃபாவிடம்‌ சேர்ப்பித்தனர்‌. கலீஃபா அவர்கள்‌ அவரை விரிப்பில்‌ தம்முடன்‌ உட்காரவைத்து
அவருக்கு என்ன வேண்டும்‌? என்று கேட்டார்கள்‌. அவர்‌ தம்‌ தேவைகளை எடுத்துக்‌ கூற அவற்றையெல்லாம்‌ கலீஃபா நிறைவேற்றிக்‌ கொடுக்கவும்‌ செய்தார்கள்‌.
கலீஃபாவிடமிருந்து வெளியான அம்மனிதர்‌ வழியில்‌ உஸ்மானிப்னு ஹனீபை சந்திக்கிறார்‌. அல்லாஹ்‌ உங்களுக்கு நல்ல பல கூலிகளை அருளட்டும்‌ என
பிரார்த்தித்துப்‌ பின்னர்‌ கூறினார்‌. 'நீஙகள்‌ என்னிடம்‌ மேற்படி விஷயங்களைச்‌ சொல்லித்‌ தருவதற்கு முன்னர்‌ நான்‌ கலீஃபாவிடம்‌ சென்றிருந்தபோது, என்னை யாரும்‌ ஏறிட்டுக்‌ கூட பார்க்கவில்லை' என மீண்டும்‌ உஸ்மான்‌ பின்‌ ஹனீபிற்காகப்‌ பிரார்த்தித்தார்கள்‌. இவற்றை நானாகக்‌ கூறவில்லை. பெருமானார்‌ (ஸல்‌) அவர்களிடம்‌ ஒரு பார்வையிழந்த மனிதர்‌ வந்து பார்வையின்மைப்‌ பற்றி முறையிட்டபோது பெருமானார்தான்‌ இதைக்‌ கற்றுக்‌ கொடுத்தார்கள்‌ என்று கூறி முன்னர்‌ நான்‌
குறிப்பிட்டதுபோல இமாம்களான திர்மிதியும்‌, நஸாயீயும்‌ பதிவு செய்த ஹதீஸை கடைசி வரையிலும்‌ உஸ்மான்‌ பின்‌ ஹனீப்‌ கூறி முடித்தார்‌.

இதே ஹதீஸை வைத்து நபியவர்கள்‌ மரணமடைந்த பின்னரும்‌ அவர்களைக்‌ கொண்டு வஸீலா தேடலாம்‌ என்று கூறுகிறவர்கள்‌ ஆதாரம்‌ காட்டுகின்றனர்‌. ஆனால்‌ இந்த சம்பவம்‌ சரிதானா, இல்லையா என்பதை நாம்‌ ஆராய்ந்துப்‌ பார்க்க
கடமைப்பட்டிருக்கிறோம்‌. உஸ்மான்‌ பின்‌ ஹனிப்‌ மேற்படி மனிதருக்கு நபியவர்களின்‌ துஆவைச்‌ சொல்லிக்‌ கொடுக்கையில்‌ நபியவர்களின்‌ கூற்றிலுள்ள (பஷஃப்பிஃ ஹுஃபிய்ய) என்‌ விஷயத்தில்‌ நபியின்‌ ஷபாஅத்தை ஏற்றருள்‌' என்ற நபியுரையைக்‌
கூறாமல்‌ விட்டு விட்டார்‌. இப்படி உஸ்மானுடைய ஹதீஸில்‌ குறைபாடுகள்‌ காணப்படுகின்றன.

சுருங்கக்‌ கூறின்‌ இந்த உஸ்மான்‌ பின்‌ ஹனீப்‌ என்பவர்கள்‌ நபியவர்கள்‌ கற்றுக்‌ கொடுத்த துஆவில்‌ சிலவற்றைப்‌ போக்கியும்‌, குறைத்தும்‌ பிரார்த்திப்பதற்கு அனுமதியுண்டு என்று நினைத்துக்‌ கொண்டார்கள்‌ போலும்‌. ஆகவேதான்‌ பெருமானார்‌
(ஸல்‌) அவர்கள்‌ பார்வையிழந்த ஸஹாபிக்குக்‌ கற்றுக்‌ கொடுத்ததைப்‌ போல சொல்லிக்‌ கொடுக்கவில்லை. அத்துடன்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ இறந்ததன்‌ பின்னரும்‌ அவர்களைக்‌ கொண்டு பிரார்த்திக்கலாம்‌ என்றும்‌ எண்ணிக்‌ கொண்டார்கள்‌ போலும்‌.

உண்மையில்‌ பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ கண்‌ பார்வையிழந்த மனிதருக்குக்‌ கற்றுக்‌ கொடுத்த துஆவின்‌ வசனத்தில்‌ உஸ்மான்‌ பின்‌ ஹனிப்‌ நினைப்பது போல்‌ ஏதும்‌ காணப்படவில்லை. இந்த ஹதீஸில்‌ வரும்‌ சம்பவம்‌ என்னவென்றால்‌ பார்வையிழந்த மனிதர்‌ தமக்காகப்‌ பிரார்த்திக்க வேண்டுமென்று நபியிடம்‌ வந்து கேட்டார்‌. நபி (ஸல்‌)
அவர்கள்‌ அம்மனிதரை நோக்கி 'இறைவா! என்‌ விஷயத்தில நபியவர்களின்‌ பரிந்துரையை ஏற்றுக்‌ கொள்வாயாக!' என கூற வேண்டும்‌ என்று சொல்லிக்‌
கொடுத்தார்கள்‌ என்‌ விஷயத்தில்‌ நபியின்‌ சிபாரிசை ஏற்றுக்‌ கொள்வாயாக!' என்று கூறிப்‌ பிரார்த்திக்க வேண்டுமானால்‌ நபிகள்‌ அம்மனிதருக்குப்‌ பரிந்துபேசி
அல்லாஹ்விடம்‌ பிரார்த்தித்திருந்தால்தான்‌ இதைச்‌ சொல்லிக்‌ கொடுக்க முடியும்‌.

நபியவர்கள்‌ அம்மனிதருக்கு ஷபாஅத் செய்யாமலிருந்தால்‌ இப்படிச்‌ சொல்லியிருக்க
மாட்டார்கள்‌. எனவே இத்தகைய துஆக்கள்‌ பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ உலகில்‌ வாழ்ந்திருந்த காலத்திலும்‌, மறுமையில்‌ அவர்கள்‌ ஷபாஅத்‌ செய்கிற நாளிலும்‌ தான்‌ பொருந்துமே தவிர எல்லாக்காலங்களிலும்‌ இதைக்‌ கொண்டு பிரார்த்திக்க முடியாது என்றுதான்‌ விளங்க வேண்டும்‌.

இதே ஹதீஸின்‌ மற்றொரு அறிவிப்பில்‌ (ரிவாயத்தில்‌) 'இறைவா! என்‌ விஷயத்தில்‌ நபியின்‌ பரிந்துரையை ஏற்றருள்வாயாக!' என்ற வாக்கியங்களுக்கு அடுத்தாற்போல ‘நபிக்காக என்னுடைய சிபாரிசை ஏற்றருள்வாயாக' என்று காணப்படுகிறது. இங்கே நாம்‌
சிந்திக்க வேண்டும்‌. நபியின்‌ விஷயத்தில்‌ மனிதன்‌ எப்படி சிபாரிசு செய்ய முடியும்‌. பெருமானார்‌ (ஸல்‌) அவர்களின்‌ தேவைகள்‌ நிறைவேறுவதற்கு மனிதனால்‌ பிரார்த்திக்க முடியுமா? இந்த கேள்விக்கு பதிலளிக்கையில்‌ 'ஆம்‌! மனிதனின்‌ பரிந்துரையாக
(சிபாரிசாக) நபிக்காக அவன்‌ செய்கின்ற பிரார்த்தனைகள்‌ கருதப்படுகின்றன' என்று
கூறலாம்‌. பெருமானார்‌ (ஸல்‌) அவர்களுக்கு ஸலவாத்தும்‌, ஸலாமும்‌ சொல்ல வேண்டுமென்றும்‌, வஸீலா என்னும்‌ சுவனத்தில்‌ உள்ள ஒரு பதவியை அவர்கள்‌ பெற இறைவனிடம்‌ பிரார்த்திக்க வேண்டுமென்றும்‌ மனிதன்‌ பணிக்கப்பட்டிருக்கிறான்‌. அதன்‌ காரணத்தினால்‌ பெருமானாரின்‌ சிபாரிசு (ஷபாஅத்‌) மறுமையில்‌ அவசியம்‌ கிடைப்பதாகவும்‌ வாக்களிக்கப்‌ பட்டிருக்கின்றன.

எனவே பெருமானாரின்‌ உம்மத்தினர்‌ தன்‌ நபிக்காக வஸீலா என்ற சுவனலோகத்திலுள்ள பதவியை அல்லாஹ்விடம்‌ கேட்டல்‌ அவர்களுக்காகப்‌
பிரார்த்திப்பது போன்றதாகும்‌. இப்பிரார்த்தனையைத்‌ தான்‌ நபியின்‌ விஷயத்தில்‌ பரிந்துரைத்தல்‌' என்னும்‌ சொற்றொடர்‌ இங்கு குறிப்பிடுகிறது. நபிக்காக நாம்‌
பிரார்த்திக்கும்போது நபியவர்கள்‌ நமக்காகப்‌ பிரார்த்தனை செய்கிறார்கள்‌. ஷபாஅத்தும்‌
(சிபாரிசும்‌) பிரார்த்தனையின்‌ இனத்தைச்‌ சேர்ந்ததல்லவா! எனவேதான்‌ அன்று முன்னோர்கள்‌ அமலைப்‌ போன்றதுதான்‌ கூலியும்‌ எனக்‌ கூறினார்கள்‌. நாம்‌ நபிக்காக புரிந்த செயல்‌ துஆவாகும்‌. இந்த துஆவுக்கு நபியவர்கள்‌ நமக்கு அளிக்கும்‌ உதவி
துஆவேதான்‌. ஆனால்‌ துஆவுக்கு ஷபாஅத்‌ என்ற பதம்‌ பிரயோகிக்கப்‌ பட்டுள்ளது என்பதுதான்‌ வித்தியாசம்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ மீது ஸலவாத்து சொல்கிறவனுக்கு
அல்லாஹ்வும்‌ அவன்மீது ஸலவாத்து சொல்கிறான்‌. இங்கும்‌ அமலும்‌, கூலியும்‌ ஒன்றுபோல இருக்கிறதல்லவா!

கண்பார்வை இல்லாத மனிதர்‌ நபியிடம்‌ ஷபாஅத்‌ வேண்டினார்‌. அதற்கு நபியவர்கள்‌ அவரிடமும்‌ ஷபாஅத்‌ (துஆ) செய்யச்‌ சொன்னார்கள்‌. இதனடிப்படையில்‌ நபியவர்கள்‌ அம்மனிதருக்காகச்‌ செய்த வேலையும்‌, அம்மனிதர்‌ நபிக்காகச்‌ செய்த வேலையும்‌- ஒவ்வொன்றையும்‌ குறிப்பதற்காக ஷபாஅத்‌ என்ற சொல்தான்‌ பிரயோகிக்கப்பட்டுள்ளது.
நபியவர்களின்‌ துஆவை இறைவன்‌ ஏற்றுக்‌ கொண்டான்‌. அம்மனிதரின்‌ பார்வையைத்‌
திருப்பிக்‌ கொடுத்தான்‌. இதனால்‌ இப்படிப்பட்ட அபூர்வமான சம்பவங்களை அல்லாஹ்‌
நபியவர்களுக்கு அளித்த அற்புதம்‌ (முஃஜிஸாத்‌) என்று கருதல்‌ வேண்டும்‌. இது நுவுவ்வத்தின்‌ (நபித்துவத்தின்‌) அத்தாட்சிகளில்‌ ஒன்றாகக்‌ கணிக்கப்‌படுகிறது.

இன்னொரு ரிவாயத்தில்‌ 'நான்‌ எனக்காகச்‌ செய்யும்‌ சிபாரிசை ஏற்றுக்‌ கொள்வாயாக!" என்றும்‌ காணப்படுகிறது. அவருக்கு நபியவர்கள்‌ செய்யும்‌ துஆவுடன்‌ தமக்காகத்‌ தம்மையே சிபாரிசுக்காரராக ஆக்கிக்‌ கொண்டார்‌ போலும்‌. ஏனெனில்‌ நபியவர்களின்‌ துஆ கிடைக்காவிட்டால்‌ தமது துஆவாகிலும்‌ பயன்படட்டும்‌ என்று நினைத்தார்‌.
ஆனால்‌ தமக்காக ஒருவர்‌ கேட்கும்‌ துஆ (ஷபாஅத்‌) என்று கூறுவது அரிது. ஏனெனில்‌ சிபாரிசுக்கு இருவர்‌ வேண்டும்‌. ஒருவர்‌ மட்டும்‌ தமக்காகப்‌ பிரார்த்தித்துக்‌ கொண்டால்‌ அதற்கு சிபாரிசு செய்தார்‌ என்று கூறுவதில்லையல்லவா?

அத்துடன்‌ (ப ஹஷஃப்பிஃஹு...பி நப்ஸ்‌ என்ற) ரிவாயத்தைப்‌ பற்றி அபிப்பிராய பேதங்கள்‌ பல சொல்லப்படுகின்றன. மேற்சொன்ன வார்த்தைகளைச்‌ சேர்த்து ரிவாயத்‌ செய்தவர்கள்‌ எவரும்‌ பிரபலமான அறிஞர்கள்‌ இல்லை. ஸுனன்‌ தொகுப்பாளர்கள்‌
இதனைப்‌ புறக்கணித்திருக்கின்றனர்‌. இதன்‌ உரைநடையிலும்‌ பற்பல குழப்பங்கள்‌
சுட்டிக்காட்டப்‌ பட்டுள்ளன. மேலும்‌ இதன்‌ ராவி வெறுக்கத்தக்க ஹதீஸ்களை அறிவித்தவராகவும்‌ தெரிய வருகிறது.

எனவே இந்த ரிவாயத்தில்‌ சந்தேகங்களும்‌, ஐயப்பாடுகளும்‌ இடம்‌ பெற்றிருப்பதனால்‌
இதுவும்‌ சான்றாக எடுத்துச்‌ சொல்ல முடியாத ஹதீஸ்கள்‌ கூட்டத்தில்‌ ஒதுக்கப்பட வேண்டும்‌. எந்த ஹதீஸ்களிலிருந்து சந்தேகங்களும்‌, ஐயப்பாடுகளும்‌ பிறக்கின்றனவோ அவை ஷரீஅத்‌ விதிகளுக்கு ஆதாரமாக்கப்பட மாட்டாது. இதைப்போன்ற இடங்களில்‌ ஸஹாபியின்‌ ரிவாயத்தைக்‌ கவனிக்க வேண்டும்‌. அவர்களுடைய விளக்கம்‌ கவனிக்கப்பட மாட்டாது. ஏதாவதொரு மனிதர்‌ நபிகள்‌ இறந்த பின்னர்‌ தமது துஆவில்‌

'இறைவா! என்‌ விஷயத்தில்‌ நபியின்‌ சிபாரிசை ஏற்றருள்வாயாக! நபிக்காக என்னுடைய சிபாரிசையும்‌
ஏற்றருள்வாயாக!' என்று கூறிப்‌ பிரார்த்தித்தால்‌, பெருமானார்‌ அவர்கள்‌ இம்மனிதருக்கு
வேண்டித்‌ தாம்‌ வாழ்ந்திருக்கும்போது துஆச்‌ செய்யவும்‌ இல்லையென்றால்‌, இந்நிலையில்‌ இவரது பிரார்த்தனை வீண்‌ பேச்சாக மாறி விடுகிறது. எனவேதான்‌ முன்னர்‌ நாம்‌ கூறிய உஸ்மான்‌ பின்‌ ஹனீப்‌ என்பவர்‌ பெருமானாரிடம்‌ எதையும்‌
கேட்க வேண்டுமென்று அம்மனிதரை நோக்கிப்‌ பணிக்காமல்‌, 'என்‌ விஷயத்தில்‌ நபியின்‌ சிபாரிசை ஏற்றருள்வாயாக!' என்றுள்ள வசனத்தையும்‌ சொல்லிக்‌ கொடுக்காமல்‌, நபிகளைப்‌ பற்றி அறியப்பட்ட துஆக்களை நிரப்பமாக அவருக்குச்‌ சொல்லிக்‌
காட்டாமல்‌, அவற்றில்‌ சிலவற்றை மட்டும்‌ கூறிவிட்டு நிறுத்தி விட்டார்கள்‌. இதனால்‌ நபியின்‌ இபாதத்தோ, மற்றும்‌ துஆக்களோ ஒன்றும்‌ ஏற்படவில்லை.

ஆனால்‌ கலீஃபா உஸ்மான்‌ (ரலி) அவர்கள்‌ மேற்படி மனிதரின்‌ தேவைகளை நிறைவேற்றியதற்கு வேறு காரணங்கள்‌ இருக்கின்றன. மேலும்‌ உஸ்மான்‌ பின்‌ ஹனீப்‌ சொல்லிக்‌ காட்டியப்‌ பிரார்த்தனையும்‌ நபியவர்கள்‌ வழியாக வந்த பிரார்த்தனை அல்ல.
ஏனெனில்‌ 'என்‌ விஷயத்தில்‌ நபியின்‌ சிபாரிசை ஏற்றருள்வாயாக!' என்ற நபியின்‌ உரையை இவர்‌ சொல்லிக்‌ காட்டியிருந்தால்‌ தானே நபியிடமிருந்து அது அறியப்பட்ட பிரார்த்தனை எனலாம்‌. ஆனால்‌ துஆவின்‌ முக்கியமான அப்பகுதி இடம்பெற
வில்லையானால்‌ அதை பெருமானாரின்‌ பிரார்த்தனை என எவ்வாறு சொல்ல முடியும்‌? ஒருபோதும்‌ சொல்ல முடியாது. நபியவர்கள்‌ மரணமடைந்த பின்னர்‌ அந்த துஆவைக்‌ கொண்டு ஒருவர்‌ பிரார்த்தித்த்தாலும்‌ அப்பிரார்த்தனை கருத்தற்ற பிரார்த்தனையாக
இருக்குமே தவிர அர்த்தமுள்ள பிரார்த்தனையாக இருக்க முடியாது.

அதுமட்டுமல்லாது உஸ்மான்‌ பின்‌ ஹனிபுடைய இந்த ஹதீஸின்‌ இறுதியில்‌ ஒருசில வித்தியாசங்களும்‌ காணப்படுகின்றன. பெருமானார்‌ அவர்கள்‌ இறந்து விட்டால்‌ அதன்‌ பின்னரும்‌ அவர்களைப்‌ பொருட்டாகவைத்து பிரார்த்திக்கலாம்‌. அதற்கு ஷரீஅத்தில்‌ அனுமதியுண்டு என்று விளங்கி இருந்திருப்பார்கள்‌. தாம்‌ விளங்கி இருந்ததற்கொப்ப
ரிவாயத்‌ செய்திருப்பார்கள்‌.

ஒரு ஸஹாபி அறிவிக்கும்‌ ஹதீஸைக்‌ கொண்டு சட்டம்‌ விதிப்பதற்கு மற்ற ஸஹாபிகளின்‌ ஒப்புதலும்‌ வேண்டும்‌.

ஒரேயொரு ஸஹாபியின்‌ விளக்கத்தை மட்டும்‌ வைத்து காரியங்களை நாம்‌ தீர்மானித்து விடக்‌ கூடாது. ஒரு அறிவிப்பாளர்‌ அறிவிக்கும்‌ ஹதீஸில்‌ உள்ள
நேருரையின்‌ கருத்தும்‌, அறிவிப்பாளர்‌ அது விஷயத்தில்‌ விளங்கியிருக்கும்‌ விளக்கமும்‌
வித்தியாசமாகக்‌ காணப்பட்டால்‌ ஹதீஸின்‌ உரையைத்தான்‌ நாம்‌ எடுக்க வேண்டும்‌.
அவ்விஷயத்தில்‌ ஸஹாபியின்‌ விளக்கம்‌ சான்றாக எடுக்கப்பட மாட்டாது.

வணக்க வழிபாடுகளை அனுமதித்தல்‌, தடுத்தல்‌, கடமையாக்குதல்‌ போன்ற விதிகள்‌ வழங்குவதில்‌ நபிகளைப்பற்றி ஒரு ஸஹாபி ஒரு அபிப்பிராயத்தை கூறுகிறார்‌ என்று வைத்துக்‌ கொள்வோம்‌. இந்த அபிப்பிராயத்துக்கு ஏனைய ஸஹாபிகள்‌ ஒப்புதல்‌
வழங்கவும்‌ இல்லை. நபிகளைப்பற்றி வந்திருக்கும்‌ மற்ற சான்றுகள்‌ மிகுதியான ஸஹாபிகளின்‌ அபிப்பிராயங்களுக்கும்‌ ஒத்திருக்கின்றன என்றால்‌ மிகுதியானவர்களின்‌ அபிப்பிராயங்களை வைத்தே விதிகள்‌ நிர்ணயிக்க வேண்டும்‌. இங்கு தனித்து நின்று
அபிப்பிராயம்‌ கூறிய ஒரு ஸஹாபியை பின்பற்றுதல்‌ முஸ்லிம்களுக்கு கூடாது.

ஆனால்‌ அந்த ஸஹாபியைப்‌ பொறுத்தவரையில்‌ அப்படி தனித்து நின்று அபிப்பிராயம்‌ சொல்வதில்‌ குற்றமொன்றும்‌ இல்லை. ஏனெனில்‌ இஜ்திஹாத்‌ (குர்‌ஆன்‌, ஹதீஸின்‌ வெளிச்சத்தில்‌ மார்க்கச்‌ சட்டங்களை ஆராய்தல்‌) என்றும்‌ விரும்பத்தக்க ஒரு
அமலாகும்‌. ஆனால்‌ சட்டங்கள்‌ ஆராய்ச்சிக்குக்‌ தகுந்த மஸ்‌அலாவாக இருத்தல்‌ வேண்டும்‌ என்பது கவனத்திற்குரியது.

ஒரே ஒரு ஸஹாபியின்‌ அபிப்பிராயத்தை மட்டும்‌ வைத்து சட்டம்‌ தீட்டப்பட மாட்டாது என்பதற்கு பற்பல ஆதாரங்கள்‌ காண முடிகிறது. ஒளு செய்யும்போது உமர்‌ (ரலி) அவர்கள்‌ இரு கண்‌ குழிகளிலும்‌ தண்ணீரைச்‌ செலுத்துவார்கள்‌. செவிகளை
தடவுவதற்கு புதுத்‌ தண்ணீரை எடுப்பார்கள்‌. அபூஹுரைரா (ரலி) அவர்கள்‌ ஒளுவின்‌
போது கைகளின்‌ மேல்பகுதி வரையிலும்‌ நீட்டிக்‌ கழுவிவிட்டு, நாளை மறுமையில்‌ ஒளுவின்‌ காரணத்தினால்‌ முகத்தின்‌ வெண்மை அதிகப்படுத்திக்‌ கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறவர்கள்‌ கைகளை நீட்டிக்‌ கழுவ வேண்டுமென்று
கூறுவார்கள்‌. அபூஹுரைரா (ரலி) அவர்கள்‌ ஒளுவின்போது பிடரியையும்‌ தடவிவிட்டு
இதுவே மறுமையில்‌ விலங்குகள்‌ மாட்டப்படுமிடம்‌ என்று கூறுவார்களாம்‌.

உமர்‌ (ரலி) அவர்கள்‌, மற்றும்‌ அபூஹுரைராவை பின்பற்றிய சில அறிஞர்கள்‌ இத்தகைய செயல்களை ஒளுவின்‌ சுன்னத்துகள்‌ எனக்‌ கூறினாலும்‌ மிகுதியான
அறிஞர்கள்‌ இதற்கு மாற்றம்‌ செய்திருக்கிறார்கள்‌. இவ்விரு ஸஹாபிகளைக்‌ தவிர மற்ற ஸஹாபிகள்‌ இப்படி ஒளுச்‌ செய்ததில்லை என்று கூறுகின்றனர்‌. மாபெரும்‌ ஹதீஸ்‌ தொகுப்புகளான ஸஹீஹுல்‌ புகாரியிலும்‌, முஸ்லிமிலும்‌, மற்றும்‌ ஹதீஸ்களிலும்‌ பெருமானாரைப்‌ பற்றி அறிவிக்கப்பட்ட ஒளுவின்‌ அமைப்பிலும்‌ அவர்கள்‌ செவிகளுக்காகக்‌ புதுத்‌ தண்ணீரை எடுத்ததாக காணப்படவில்லை. இரு
முட்டுக்கைகளுக்கும்‌, கரண்டைக்‌ கால்களுக்கும்‌ மேலாக கழுவினார்கள்‌ என்றும்‌ காணப்படவில்லை. பிடரியைத்‌ தடவியதாகவும்‌ இல்லை.

அபூஹுரைரா (ரலி) அவர்கள்‌ கூறியதுபோல்‌ முகத்தில்‌ வெண்மையை அதிகமாகப்‌ பெறுவதற்கு கைகளை ஏற்றிக்‌ கழுவ வேண்டுமென்று நபி (ஸல்‌) அவர்கள்‌
கூறியதாகவும்‌ காணப்படவில்லை. கையை மேலே ஏற்றி கழுவுவதனால்‌ மறுமையில்‌ முகத்தின்‌ வெண்மை அதிகமாகுமென்பது சில ஹதீஸ்களில்‌ புகுத்தப்பட்ட
அபூஹுரைராவின்‌ சொல்லாகும்‌.

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியது நீங்கள்‌ மறுமை நாளன்று ஒளுவின்‌ அடையாளங்களினால்‌ முகமும்‌, கைகால்களும்‌ வெண்மையுள்ளவர்களாக வருவீர்கள்‌'
என்றாகும்‌. மேலும்‌ நபிகள்‌ ஒளுச்‌ செய்யும்போது முழங்கையிலும்‌, முழங்காலிலும்‌ தண்ணீர்‌ சேரும்வரையில்‌ கழுவினார்கள்‌. இன்னும்‌ நபியவர்கள்‌ கூறிய 'குர்ரத்‌' என்ற சொல்‌ முகத்துக்கே உரியது. முக வெண்மை மறுமையில்‌ அதிகமாக உண்டாவதற்கு
முகத்தைத்தான்‌ ஏற்றிக்‌ கழுவ வேண்டுமே தவிர கைகளையோ, கால்களையோ ஏற்றிக்‌
கழுவுவதால்‌ முகத்தின்‌ வெண்மை அதிகப்பட மாட்டாது. கைகால்களுக்குரிய வெண்மைக்கு அரபியில்‌ 'ஹுஜ்லக்‌' என்று கூறப்படும்‌. 'குர்ரத்‌' என்று சொல்லப்பட மாட்டாது. அபூஹுரைரா (ரலி) அவர்கள்‌ முகத்தை நீட்டமாகக்‌ கழுவ முடிகிறவன்‌
அப்படி செய்ய வேண்டுமென்று கூறியதை தவறாக விளங்கிய சிலர்‌ முழங்கையை கழுவுவது முகத்தின்‌ வெண்மை நீட்டமாகக்‌ கிடைப்பதற்குக்‌ காரணம்‌ என்று விளங்கிக்‌ கொண்டார்கள்‌.

மறுமையில்‌ முகத்திற்கு அளிக்கப்படும்‌ வெண்மை முகத்தில்‌ தான்‌ வழங்கப்படும்‌. முகத்தை விட அதிகமாக ஏற்றி வழங்கப்பட மாட்டாது. ஏனெனில்‌ முகம்‌ மனிதனுடைய வரையறுக்கப்பட்ட ஒரு உறுப்பாகும்‌. அதை நிரப்பமாக அவசியம்‌ கழுவ
வேண்டும்‌. அப்படியானால்‌ தான்‌ ஒளுவும்‌ நிறைவேறும்‌. அதனால்‌ அப்பகுதி வெண்மைக்குரியதாகவும்‌ ஆகிவிடும்‌. வெண்மை அதிகமாகக்‌ கிடைப்பதற்காக
தலையைக்‌ கழுவுதல்‌ தவறான வேலையாகும்‌. தலையில்‌ வெண்மை நிறம்‌ அதிகமாக்கப்படும்‌ என்று நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறவில்லை. கைகால்களும்‌,
வரையறுக்கப்பட்டுள்ள இடங்களை விட நீட்டமாகக்‌ கழுவுதல்‌ சுன்னத்தாகக்‌ கருதப்பட மாட்டாது. கைகால்களை நீட்டிக்‌ கழுவுவதற்கு அரபியில்‌ 'முஸ்லா' என்று சொல்லப்படும்‌.

இன்னுமொரு சம்பவத்திற்கு வருவோம்‌. இப்னு உமர்‌ (ரலி) அவர்கள்‌ தம்‌ வாழ்க்கையின்‌ ஒவ்வொரு அம்சத்திலும்‌ பெருமானாரை அப்படியே முழுக்கப்‌ பின்பற்றி ஒழுக வேண்டுமென்று நினைத்தார்கள்‌. எந்த அளவுக்கென்றால்‌ நடைப்பாதையில்‌ கூட நபிகளின்‌ சுவட்டடியில்‌ தாமும்‌ கால்வைத்து நடந்துச்‌ செல்ல வேண்டுமென்பது அவர்களின்‌ அவா. பிரயாணத்தின்‌ போது பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ எங்கெல்லாம்‌
இறங்கித்‌ தங்கினார்களோ அங்கெல்லாம்‌ இப்னு உமர்‌ அவர்களும்‌ இறங்கித்‌ தங்குவார்கள்‌. நபியவர்கள்‌ ஒளுவெடுத்த அதே இடத்தில்‌ நின்று ஒளுச்‌ செய்வார்கள்‌. ஒளுவின்‌ மீதித்‌ தண்ணீர்‌ இருந்தால்‌ நபிகள்‌ ஊற்றிய சில செடி, கொடிகள்‌, மரங்களின்‌
மீது ஊற்றுவார்கள்‌. இப்படியே பற்பல செயல்களை இப்னு உமர்‌ செய்து வந்தார்கள்‌.

இத்தகைய பின்பற்றுதலை அறிஞர்களின்‌ ஒரு சாரார்‌ மட்டும்‌ ஆதரிக்கின்றனர்‌. முஸ்தஹப்‌ என்றும்‌ கருதுகின்றனர்‌. ஆனால்‌ அதிகமான அறிஞர்கள்‌ இதை முஸ்தஹப்பாக (ஸுன்னத்தாகக்‌) கருதவில்லை. ஸஹாபாக்களின்‌ மிகப்பெரிய பதவிக்குரிய அபூபக்கர்‌, உமர்‌, உஸ்மான்‌, அலீ, இப்னு மஸ்வூத்‌, முஆத்‌ பின்‌ ஜபல்‌, மற்றும்‌ பெரும்‌ ஸஹாபிகள்‌ இப்னு உமரைப்‌ போன்று செய்யவில்லை. இப்படிச்‌
செய்யப்படுவதை ஸுன்னத்‌ என்று கணிக்கவுமில்லை. உண்மையில்‌ இவற்றை நல்லவையென கருதியிருந்தால்‌ தாமும்‌ செய்திருப்பார்கள்‌. ஏனெனில்‌ நபி (ஸல்‌) அவர்களை முழுக்க முழுக்கப்‌ பின்பற்றி அவர்களை அப்படியே முன்மாதிரியாக வாழ்க்கையில்‌ அமைத்துக்‌ கொண்டவர்கள்தானே இவர்களும்‌.

பெருமானாரைப்‌ பின்பற்றுதல்‌ என்பது அவர்கள்‌ என்னென்னவற்றை என்னென்ன முறையில்‌ வேண்டுமென்று கருதிச்‌ செய்தார்களோ அவற்றை அப்படியே நாமும்‌ செய்ய வேண்டும்‌. வணக்க வழிபாடுகள்‌ என்ற அமைப்பில்‌ ஒரு செய்கையை அவர்கள்‌ புரிந்திருந்தால்‌ நாமும்‌ அந்த வழிபாட்டை அப்படியே செய்ய வேண்டுமென்று விதிக்கப்‌படுவோம்‌. குறிப்பிட்ட சில இடங்களையோ, நேரங்களையோ வணக்கிற்கென்று அவர்கள்‌ ஒதுக்கியிருந்தால்‌ நாமும்‌ அவற்றை வணக்கத்திற்கென்று ஒதுக்க வேண்டும்‌.
கஃபாவைச்‌ சுற்றிலும்‌ தவாஃப்‌ செய்வதை நாடி செயல்‌ பட்டார்கள்‌. ஹஜருல்‌ அஸ்வதை முத்தமிட்டார்கள்‌. மகாமு இப்ராஹீமுக்குப்‌ பின்னால்‌ நின்று தொழுதார்கள்‌. மதினா பள்ளிவாசலில்‌ ஒரு தூணுக்குப்‌ பின்னால்‌ நின்று தொழுவதை
விரும்பியிருந்தார்கள்‌. ஸஃபா, மர்வா மலைமீது ஏறி நின்று இறைவனை தியானித்து, அவனிடம்‌ பிரார்த்திப்பதை விரும்பியிருந்தார்கள்‌. முஸ்தலிபா, அரஃபாவில்‌ ஹஜ்ஜின்‌ போது துஆ வேண்டினார்கள்‌. இவை அனைத்துமே நபி அவர்கள்‌ வேண்டுமென்று
கருதிச்‌ செயல்பட்ட வணக்கங்களாகும்‌. இவற்றை நாமும்‌ செய்ய வேண்டும்‌. நபியவர்களை இவற்றில்‌ முழுக்க பின்பற்ற வேண்டும்‌.

ஆனால்‌ எதிர்பாராக விதம்‌ ஒரு செயலை கருதாமல்‌ நபியவர்கள்‌ செய்தால்‌, உதாரணமாக பிரயாணம்‌ போய்க்கொண்டே இருந்த வழியில்‌ இறங்கித்‌ தங்கினார்கள்‌. அங்கே ஓய்வெடுத்துக்‌ கொண்டிருக்கையில்‌ தொழுகை நேரம்‌ வந்து விட்டதனால்‌ தொழுதார்கள்‌. இப்பொழுது நபியவர்கள்‌ இறங்கியதும்‌, ஒய்வெடுத்ததும்‌ தொழுகை
நேரம்‌ வந்தவுடனே தொழுததும்‌ எல்லாம்‌ வேண்டுமென்றே கருதிச்‌ செய்யவில்லை.
பிரயாணத்தின்‌ போது அசதிகள்‌ ஏற்படும்‌. கொஞ்சம்‌ இறங்கி ஓய்வெடுத்துப்‌ போகலாம்‌ என்று நினைத்தார்கள்‌. நேரம்‌ வந்ததும்‌ தொழுது விட்டுப்‌ போகலாம்‌ என்று கருதினார்கள்‌. இத்தகைய செயல்களை அவர்கள்‌ வேண்டுமென்றே செய்யவில்லை.

இப்படி இருக்க நாம்‌ வேண்டுமென்றே கருதி அந்த இடங்கள்‌ வந்ததும்‌ ஏன்‌ இறங்க வேண்டும்‌. அந்த இடத்தில்‌ தொழ வேண்டுமென்றெல்லாம்‌ கருதி குறிப்பிட்ட சில இடங்களையும்‌, காலத்தையும்‌ வணக்கத்திற்கென்று ஒதுக்கி வைத்து நாம்‌
செயல்பட்டால்‌ நபி (ஸல்‌) அவர்களை பின்பற்றியவர்கள்‌ ஆக முடியாது. உமர்‌ பின்‌
கத்தாப்‌ (ரலி) அவர்கள்‌ இவற்றை வன்மையாக கண்டித்து நாதனமான அனுஷ்டானம்‌ என்றும்‌ விலக்கினார்கள்‌. இதை நன்றாக புரிந்துக்‌ கொள்ள வேண்டும்‌. ஸஹீஹான ஹதீஸில்‌ கீழ்வரும்‌ சம்பவம்‌ ஒன்று இதை உறுதிப்படுத்துகிறது.

மஃரூர்‌ பின்‌ ஸுவைத்‌ ஒரு பிரயாணத்தின்‌ போது உமர்‌ (ரலி) அவர்கள்‌ ளுஹர்‌ தொழுகையைத்‌ தொழுது விட்டு பக்கத்திலிருந்த ஓர்‌ இடத்திற்குச்‌ சென்றார்கள்‌. இதைக்‌ கண்ட உடனிருந்த ஸஹாபிகளும்‌ அந்த இடத்திற்குச்‌ சென்றார்கள்‌. பெருமானார்‌
(ஸல்‌) அவர்கள்‌ அவ்விடத்தில்‌ தொழுதிருப்பதாகவும்‌ தமக்குள்‌ பேசிக்‌ கொண்டார்கள்‌. இதைக்‌ கேட்டுக்‌ கொண்டிருந்த உமர்‌ (ரலி) அவர்கள்‌ 'வேதம்‌ வழங்கப்பட்ட சமூகங்கள்‌ தம்‌ நபிமார்களின்‌ கால்‌ சுவட்டைக்‌ கூடப்‌ பின்பற்றினார்கள்‌. அச்சுவட்டின்‌ அடிகளில்‌ ஆலயங்களையும்‌, கோயில்களையும்‌ கட்டியதனால்‌ அழிந்தொழிந்தார்கள்‌' என்று
கூறிவிட்டு, 'எவருக்குத்‌ தொழுகையின்‌ நேரம்‌ வந்ததோ அவர்‌ உடனே தொழுது கொள்ள வேண்டும்‌. அப்படியில்லையானால்‌ தம்‌ பிரயாணத்தை தொடர வேண்டும்‌" என்று கூறினார்கள்‌.

ஏனெனில்‌ பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ பிரயாணத்தின்‌ போது வேண்டுமென்றே இதை இலக்காக வைத்து இந்த இடத்தில்‌ இறங்கவில்லை. தொழுகைகென்று இவ்விடத்தைக்‌ குறிப்பாக ஏற்படுத்திக்‌ கொள்ளவுமில்லை. ஆனால்‌ அந்த இடத்கில்‌ இறங்கித்‌ தொழுதிருக்கிறார்கள்‌ என்பது உண்மைதான்‌. இது உமர்‌ (ரலி) அவர்களுக்கும்‌
நன்கு தெரிந்தது. இருப்பினும்‌ அத்தகைய இடங்களை வரையறுத்துக்‌ குறிப்பிட்டு
தொழுகைக்கென்று ஒதுக்கி விடுவதை வேதம்‌ அருளப்பட்டவர்கள்‌ செய்ததனால்‌ அழிந்தொழிந்தார்கள்‌. இதைப்போன்ற நூதன அனுஷ்டானங்களை விட்டும்‌ முஸ்லிம்களைத்‌ தடுத்தார்கள்‌. முஸ்லிம்‌ யூதர்களுடனும்‌, கிறிஸ்தவர்களுடனும்‌ வழிபாடுகளில்‌ ஒத்திருப்பதை விட்டு விலக்கினார்கள்‌. இப்படிப்பட்ட அமல்கள்‌
புரிகிறவன்‌ வெளிப்படையில்‌ மட்டும்‌ நபிக்கு ஒத்திருக்கிறான்‌. இலட்சியத்தில்‌ யூதர்களுடையவும்‌, கிறிஸ்தவர்களுடையவும்‌ போக்குக்கு ஒப்பாகிறான்‌. இலட்சியமே உள்ளத்தின்‌ செயலாகும்‌. மற்றவை உடலின்‌ செயல்தானே. இதைக்‌ கவனத்தில்‌
ஆழப்பதித்து முஸ்லிம்கள்‌ செயல்பட வேண்டும்‌. வெளிப்படையான அமல்களில்‌ மட்டும்‌ பெருமானாரைப்‌ பின்பற்றுவதை விட இலட்சிய அமலில்‌ அவர்களைக்‌ தொடருவதில்‌ தான்‌ மேன்மை இருக்கிறது.

இதனால்தான்‌ தொழுகையில்‌ உள்ள 'ஜல்ஸதுல்‌ இஸ்திராஹா' பற்றியும்‌ அறிஞர்கள்‌ அபிப்பிராய வித்தியாசங்களைக்‌ கூறியுள்ளனர்‌. ஜல்ஸதுல்‌ இஸ்திராஹா என்றால்‌ இரண்டாவது ஸுஜூது முடிந்து எழுந்து நிலைக்கு (கியாமுக்கு)ப்‌ போவதற்கு முன்னர்‌
கொஞ்சம்‌ அமர்ந்து விட்டு செல்லுதல்‌. நபியவர்கள்‌ இப்படிக்‌ கொஞ்சம்‌ அமர்ந்து விட்டுத்தான்‌ எழுந்தார்கள்‌. ஆனால்‌ அமர்ந்தது எதனால்‌? வேண்டுமென்றே குறிப்பாக அதைச்‌ செய்தார்களா, அல்லது வேறு ஏதேனும்‌ தேவையினால்‌ செய்தார்களா என்பதில்‌ அறிஞர்கள்‌ அபிப்பிராயம்‌ சொல்லி இருக்கின்றனர்‌. நபியவர்கள்‌ வேண்டுமென்றேதான்‌
சற்று அமர்ந்து விட்டு பின்‌ எழுந்தார்கள்‌ என்று சொல்கிறவர்கள்‌ இந்த ஜல்ஸதுல்‌ இஸ்திராஹாவை ஸுன்னத்தாக்கினார்கள்‌. மாறாக நபியவர்கள்‌ ஒன்றும்‌
இலட்சியமாகக்‌ கருதாமல்‌ ஏதேதோ தேவையினால்‌ அமர்ந்து எழுந்தார்கள்‌ என்று சொல்கிறவர்கள்‌ ஜல்ஸதுல்‌ இஸ்திராஹாவை சுன்னத்‌ இல்லை என்றார்கள்‌.

இதே அபிப்பிராய வித்தியாசங்களை பற்பல விஷயங்களில்‌ காண முடிகிறது. உதாரணமாக நபியவர்கள்‌ ஹஜ்ஜின்போது மினாவில்‌ இருந்து திரும்பும்போது 'வாதி முஹஸ்ஸப்‌' என்ற இடத்தில்‌ ஏன்‌ இறங்கினார்கள்‌. தம்‌ உம்மத்துகளுக்கு அதை
ஸுன்னத்‌ என்று போதிப்பதற்காக இறங்கினார்களா அல்லது பிரயாணத்தினால்‌ ஏற்படும்‌ தேவையை முன்னிட்டு கொஞ்ச நேரம்‌ இருந்து விட்டு வந்தார்களா? இதிலும்‌ அறிஞர்கள்‌ முன்னர்‌ நாம்‌ குறிப்பிட்டது போன்ற கருத்து வேற்றுமைகளைத்‌
தெரிவித்துள்ளனர்‌. இன்னும்‌ சில உதாரணங்கள்‌ அபூதல்ஹா என்ற ஸஹாபி மட்டும்‌ நோன்பாளிக்கு ஆலங்கட்டியைச்‌ சாப்பிட அனுமதி வழங்கியிருக்கிறார்கள்‌. இப்னு உமர்‌ தமது கையை நபி (ஸல்‌) அவர்கள்‌ மிம்பரில்‌ இருந்த இடத்தில்‌ வைத்ததைப்‌ பற்றியும்‌ இப்படித்தான்‌ கருதல்‌ வேண்டும்‌. பஸராவில்‌ இப்னு அப்பாஸும்‌, கூஃபாவில்‌ அம்ர்‌ பின்‌ ஹாரிஸும்‌ ஈதுல்‌ அல்ஹா இரவில்‌ தக்பீர்‌ கூறியதும்‌ இப்படித்தான்‌. இது விஷயத்தில்‌
எல்லா ஸஹாபிகளும்‌ செயல்படாமல்‌ இருந்ததினாலும்‌, மேலும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌
தம்‌ உம்மத்துக்கு ஷரீஆவாக விதிக்காததினாலும்‌ இவற்றை முஸ்தஹப்பான ஸுன்னத்‌ என்று கூற முடியாமலாகி விட்டது.

ஹுதைஃபா என்ற ஸஹாபி சூரியன்‌ உதிப்பதற்கு முன்னர்‌ உள்ள பகல்‌ வெளிச்சம்‌ வந்த பிறகு நோன்பு நோற்கிறவனுக்கு பகல்‌ உணவு அருந்தலாமென்று
அனுமதித்திருக்கிறார்கள்‌. கஃபாவில்‌ தவாஃப்‌ செய்வதற்கு முன்னர்‌ சுகந்த பொருட்களை பயன்படுத்துவது கராஹத்‌ (வெறுக்கத்தக்கது) என்று உமர்‌ (ரலி) அவர்களும்‌ இப்னு உமரும்‌ கூறியிருக்கின்றனர்‌. சில ஸஹாபிகள்‌ பிரயாணத்தின்போது நோன்பு நோற்கவே கூடாது என்று தடுத்துள்ளனர்‌. ஸல்மான்‌ என்பவர்கள்‌ உமிழ்‌ நீரை அசுத்தம்‌ (நஜீஸ்‌) என்று கூறியிருக்கிறார்கள்‌. வேதம்‌ அருளப்பட்ட சமூகத்தில்‌ உள்ள பெண்ணை
மணம்‌ புரிதல்‌ கூடாது என்று இப்னு உமர்‌ (ரலி) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌. இப்னு மஸ்வூதும்‌, இப்னு உமரும்‌ பெருந்துடக்குடையவன்‌ (ஜனாபத்காரன்‌) தயம்மும்‌ செய்யக்‌ கூடாது என்று கூறியுள்ளனர்‌. இஹ்ராம்‌ கட்டியவன்‌ மரணமடைந்து விட்டால்‌
அவனுடைய இஹ்ராம்‌ வீணாகி (பாத்திலாகி) விடும்‌. எனவே இஹ்ராம்‌ இல்லாத சாதாரண மனிதனுடைய சட்டமேதான்‌ இவனுக்குப்‌ பொருந்தும்‌ என இப்னு உமரும்‌, மற்ற சில ஸஹாபிகளும்‌ கூறியிருக்கின்றனர்‌. முஆதும்‌, முஆவியாவும்‌ காஃபிருடைய சொத்துக்கு முஸ்லிம்‌ வாரிசாக முடியும்‌ என்றார்கள்‌. அலியும்‌, இப்னு அப்பாஸும்‌ கணவன்‌ இறந்தப்‌ பெண்ணைப்‌ பற்றி இவள்‌ கர்ப்பமாக இருக்கையில்‌ கணவன்‌
இறந்தால்‌ இரு தவணைகளில்‌ நீட்டமான தவணை முடியும்‌ வரையிலும்‌ இத்தா இருக்க வேண்டும்‌ என்று கூறினார்கள்‌. கணவன்‌ இறந்தப்‌ பெண்ணைப்‌ பற்றி இப்னு அப்பாஸும்‌ மற்றவர்களும்‌, அவர்கள்‌ வீட்டிலேயே தான்‌ இருக்க வேண்டுமென்பதில்லை என்று கூறியிருக்கிறார்கள்‌.

இவ்வாறு பற்பல மஸ்‌அலாக்களில்‌ ஸஹாபிகள்‌ பற்பல அபிப்பிராய பேதங்களை கூறியிருக்கின்றனர்‌. ஒரு மஸ்‌அலாவில்‌ ஒருவர்‌ மட்டும்‌ தனி அபிப்பிராயம்‌ சொல்வார்‌. ஏனைய ஸஹாபிகள்‌ அவருடைய அபிப்பிராயத்துக்கு நேர்மாறாகவும்‌ இருப்பார்கள்‌.
ஏனெனில்‌ பெருமானாரிடம்‌ இருந்து வந்த ஆதாரங்களில்‌ எதுவுமே தனித்து நின்று
அபிப்பிராயம்‌ கூறிய அந்த ஸஹாபிகளுக்கு கிடைக்கவில்லை. எனவே அவர்‌ மட்டும்‌ அபிப்பிராயத்தில்‌ தனிமையானார்‌. அவர்‌ ஒருவர்‌ மட்டும்‌ தனித்து நின்று கூறிய சட்டத்தை நபியவர்கள்‌ உம்மத்தினர்‌ மீது விதித்தும்‌ இருக்க மாட்டார்கள்‌. இந்த நிலையில்‌ இந்த ஒரே ஸஹாபியின்‌ சொல்லை வைத்து அந்த மஸ்‌அலா மக்ரூஹ்‌ என்றோ, ஹராம்‌ என்றோ தீர்ப்பு வழங்கப்பட மாட்டாது. அத்தகைய மஸ்‌அலாக்களை திருமறை, நபிமொழியின்‌ வெளிச்சத்தில்‌ வைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்‌.
ஸுன்னத்‌, வாஜிப்‌, மக்ரூஹ்‌, ஹராம்‌ என்று தனிப்பட்ட முறையில்‌ அபிப்பிராயம்‌ கூறிய ஸஹாபியைப்‌ பற்றி அவர்‌ இஜ்திஹாத்‌ செய்ததின்‌ விளைவாக அப்படி
விளங்கிக்‌ கொண்டார்கள்‌ என்று கூற வேண்டும்‌. இஜ்திஹாதில்‌ தவறினால்‌ கூட நன்மைகள்‌ வழங்கப்படும்‌ என்று நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌ அல்லவா?

மத்ஹபுடைய இமாம்களும்‌, மற்ற அறிஞர்கள்‌ எல்லோரும்‌ இப்படித்தான்‌ கூறியிருக்கின்றனர்‌. இவர்களும்‌ எவருக்கும்‌ ஸுன்னத்‌, வாஜிப்‌, ஹராம்‌ என்று ஷரீஅத்தின்‌ தீர்ப்புகளைத்‌ தாமாக விதிப்பதற்கு உரிமையில்லை. குலஃபாவுர்‌ ராஸிதீன்கள்‌ ஸுன்னத்‌ என விதித்த சில விஷயங்களைப்‌ பற்றியும்‌, உண்மையில்‌ அவற்றை நபியவர்களின்‌ ஏவலின்‌ படியே விதித்திருக்கிறார்கள்‌ என்று விளங்குதல்‌
வேண்டும்‌. நபியவர்கள்‌ வாஜிபாக்கிய விஷயங்கள்‌ மட்டுமே தீனில்‌ வாஜிப்‌ எனக்‌ கூறப்படும்‌. வாஜிப்‌, முஸ்தஹப்‌, ஹராம்‌, மக்ரூஹ்‌, ஹலால்‌ போன்ற விதிகளை விதிப்பதற்கு உரிமையாளர்கள்‌ நபியவர்கள்‌ மட்டுமே ஆவார்கள்‌.


ஒரே ஸஹாபியின்‌ கூற்று சான்றாகுமா?

ஒரு ஸஹாபியின்‌ குறிப்பிட்ட தனிமையான ஒரு அபிப்பிராயத்தை மார்க்க விதிகளுக்குச்‌ சான்றாக எடுக்கப்படுமா இல்லையா என்பதில்‌ அறிஞர்‌ சிலர்‌ அபிப்பிராய பேதங்களைக்‌ கூறியுள்ளனர்‌. ஸஹாபாக்களில்‌ ஒருவரின்‌ கருத்து குர்‌ஆன்‌, ஹதீஸ்‌
நேருரைகளுக்கு (நஸ்ஸுக்கு) மாறாக இல்லையென்றால்‌ அது ஆதாரமாகக்‌ கொள்ளப்படும்‌. ஒருவரின்‌ அபிப்பிராயத்தை அனைத்து ஸஹாபாக்களும்‌ புறக்கணிக்காமல்‌ இருக்கின்ற போதும்‌ அது சான்றுடையதாக மதிக்கப்படும்‌. இதற்கு
'இஜ்மாவுன்‌ இக்ராரிய்யுன்‌' என்று சொல்லப்படுகிறது. ஏனெனில்‌ தவறுதலான அபிப்பிராயம்‌ கூறப்படுமானால்‌ மற்ற ஸஹாபிகள்‌ அதனை ஏற்கமாட்டார்கள்‌. அதனை புறக்கணித்து விடுவார்களல்லவா?

அன்று ஒரு நபித்தோழர்‌ ஒரு அபிப்பிராயத்தைக்‌ கூறி அந்த அபிப்பிராயம்‌ பிரபலமாகாமல்‌ மங்கி விட்டது என்று வைத்துக்‌ கொள்வோம்‌. நபித்தோழரின்‌ அந்த
அபிப்பிராயத்துக்கு எதிராக மற்றவர்கள்‌ எதுவும்‌ சொல்லவுமில்லை என்றால்‌ பிரபலமாகாத அந்த அபிப்பிராயமும்‌ ஆதாரமாக எடுக்கப்படும்‌. ஆனால்‌ மற்ற ஸஹாபிகள்‌ அந்த ஒருவரின்‌ அபிப்பிராயத்துக்கு மாறாக கூறியிருந்தால்‌ இங்கு மிகுதியானவர்களின்‌ அபிப்பிராயமே செல்லுபடியாகுமே தவிர ஒரு ஸஹாபி மட்டும்‌ கூறியது ஒதுக்கப்படும்‌ என அனைத்து அறிஞர்களும்‌ கூறியிருக்கின்றனர்‌. ஒருவருடைய அபிப்பிராயத்துக்கு முரணான கருத்தை அல்லது அதற்கு ஒத்த மற்றவர்கள்‌ கூறி இருக்கிறார்களா, இல்லையா என்று சந்தேகிக்க வேண்டியது
நேர்ந்தால்‌ எந்த கருத்தையும்‌ கவனிக்க கூடாது. பெருமானார்‌ (ஸல்‌) அவர்களின்‌ ஹதீஸின்‌ மேற்படி கருத்தை சீர்தூக்கிப்‌ பார்த்து அந்த ஹதீஸுக்கு ஒப்ப தீர்ப்புகள்‌ வழங்கப்பட வேண்டும்‌. ஹதீஸுக்கு முரண்பட்ட யாருடைய தீர்ப்பும்‌ எடுக்கப்பட
மாட்டாது.

இவை அறிஞர்களின்‌ விதிமுறைகள்‌. இந்த விதிகளின்‌ அடிப்படையில்‌ முன்னர்‌ நாம்‌ கூறிய உஸ்மான்‌ பின்‌ ஹனிப்‌ அவர்களோ, மற்றவர்களோ நபியவர்கள்‌ இறந்ததன்‌ பின்‌ அவர்களை பொருட்டாக வைத்து வஸீலா கேட்கலாம்‌ என அபிப்பிராயப்‌ படுகிறார்கள்‌
என்று வைத்துக்‌ கொள்வோம்‌. அபூபக்கர்‌, உமர்‌ போன்ற பெரிய ஸஹாபிகள்‌ இது விஷயத்தில்‌ உஸ்மான்‌ பின்‌ ஹனீபுடைய அபிப்பிராயத்துக்கு மாற்றமாகவும்‌ இருக்கிறார்கள்‌. இந்நிலையில்‌ பெரிய ஸஹாபிகளின்‌ கருத்திற்கொப்ப செயல்படுவதுடன்‌ உஸ்மான்‌ பின்‌ ஹனிபின்‌ அபிப்பிராயத்தை ஒதுக்கி விட வேண்டும்‌.

ஆகவே தான்‌ உமர்‌ (ரலி) அவர்கள்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ இறந்த பின்னர்‌ அன்னாரின்‌ பெரிய தந்தையாரை வைத்து வஸீலா தேடினார்கள்‌. இந்நேரம்‌ உமர்‌ (ரலி) அவர்கள்‌ அருகில்‌ முஹாஜிரீன்கள்‌, அன்சாரிகள்‌, இன்னும்‌ பற்பல ஸஹாபிகளும்‌ அதை நோக்கி
நின்று ஆதவரவளித்தனர்‌. அவர்களில்‌ எவரும்‌ அதை எதிர்த்துப்‌ பேசவில்லை. மக்கள்‌ இந்நேரத்தில்‌ மழையின்றி வறட்சியால்‌ தவித்துக்‌ கொண்டிருந்தனர்‌. இதைக்‌ கண்ட உமர்‌ (ரலி) அவர்கள்‌ மக்களுக்குச்‌ செழிப்பும்‌, ஐஸ்வர்யமும்‌ மீண்டும்‌ கிடைக்கும்‌
வரையில்‌ நான்‌ நெய்யாலான உணவருந்த மாட்டேன்‌ என்று சபதம்‌ செய்து கொண்டு அப்பாஸ்‌ (ரலி) அவர்களைக்‌ கொண்டு பிரார்த்தித்து வஸீலா தேடினார்கள்‌. தம்‌ பிரார்த்தனையில்‌ 'இறைவா! நாங்கள்‌ வறட்சியால்‌ பாதிக்கப்பட்ட நேரத்தில்‌ மழை
பெய்வதற்காக எங்கள்‌ நபியை வைத்து வஸீலா தேடினோம்‌. மழையையும்‌ பெய்யச்‌ செய்தாய்‌. ஆகவே இன்றி அதே நபியின்‌ பெரிய தந்தையாரைக்‌ கொண்டு வஸீலா தேடுகிறோம்‌. எங்களுக்கு மழை பெய்யச்‌ செய்தருள்வாயாக!' என்று உமர்‌ (ரலி) அவர்கள்‌ கூறியதும்‌ மழை பெய்தது.

இந்த துஆவை அனைத்து ஸஹாபிகளும்‌ அறிந்து ஏற்றுக்‌ கொண்டனர்‌. பிரபலமான இந்த துஆவை ஸஹாபிகள்‌ யாரும்‌ விமர்சிக்கவில்லை. இதுவும்‌ 'அல்‌-இஜ்மாவுல்‌ இக்ராரிய்யீன்‌' வகையில்‌ மிகத்‌ தெளிவான விதியாகும்‌. இதைப்போன்று முஆவியா (ரலி) அவர்களும்‌ தம்‌ ஆட்சியில்‌ யஸீத்‌ பின்‌ அல்‌-அஸ்வகைக்‌ கொண்டு வஸீலா தேடுவதும்‌, இவ்விரு வஸீலாக்களும்‌ ஒரே நியதியில்‌ ஒரே மாதிரியில்‌
இருந்திருக்குமானால்‌ உமர்‌ (ரலி), அப்பாஸ்‌ (ரலி) அவர்களைக்‌ கொண்டும்‌, முஆவியா (ரலி) யஸீதைக்‌ கொண்டும்‌ வஸீலா தேடிய நேரத்தில்‌ எல்லா ஸஹாபிகளும்‌ உமரிடமும்‌, முஆவியாவிடமும்‌ ஆட்சேபித்து இருப்பார்கள்‌.

'அனைத்து சிருஷ்டிகளும்‌ அல்லாஹ்விடத்தில்‌ மேன்மைக்குரிய வஸீலாவாக நபிகளை விட்டுவிட்டு ஏன்‌ அப்பாஸைக்‌ கொண்டு வஸீலா தேட வேண்டும்‌' என பற்பல வினாக்கள்‌ வீசி இருப்பார்கள்‌. ஆனால்‌ அப்படி எவரும்‌ எதையும்‌ உமர்‌ அவர்களிடம்‌ கேட்கவில்லை. இதுவே நமக்குப்‌ பெரிய ஆதாரமாக இருக்கிறது.

நபிகள்‌ (ஸல்‌) அவர்கள்‌ வாழ்ந்திருக்கையில்‌ அவர்களின்‌ துஆ, ஷபாஅத்தைக்‌ கொண்டு வஸீலா தேடினார்கள்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ இறந்த பின்னர்‌ அது முடியாததினால்‌ மற்ற மனிதர்களின்‌ துஆவைக்‌ கொண்டு வஸீலா தேடினார்கள்‌. ஆகவே எந்த சிருஷ்டிகளைக்‌ கொண்டும்‌ வஸீலா தேடப்பட மாட்டாது, துஆவைக்‌ கொண்டு வஸீலா தேடப்படும்‌ என்பதுவே இதன்‌ முடிவு. உமர்‌ (ரலி) அவர்களின்‌
செயல்களுக்குக்‌ கண்பார்வை இழந்த ஸஹாபியின்‌ சம்பவமும்‌, எல்லா ஸஹாபாக்களின்‌ சம்பவங்களும்‌ சான்று பகர்கின்றன. ஏனெனில்‌ கண்பார்வை இழந்த
ஸஹாபியை நபிகளின்‌ சிபாரிசைக்‌ கொண்டும்‌, துஆவைக்‌ கொண்டும்‌ வஸீலா தேட வேண்டுமென்றும்‌ பணித்தார்களே தவிர நபி (ஸல்‌) அவர்கள்‌ தங்களைக்‌ கொண்டே வஸீலா தேட பணிக்கவில்லை. எனவேதான்‌ துஆவில்‌ 'இறைவா! என்‌ விஷயத்தில்‌
நபியவர்களின்‌ துஆவை ஏற்றருள்வாயாக!' என்று நீர்‌ கூறும்‌ என அவருக்கு கற்றுக்‌ கொடுத்தார்கள்‌.

ஸஹாபிகள்‌ சிலர்‌ மற்றவர்களிடம்‌ நபியின்‌ துஆவையும்‌, ஷபாஅத்தையுமன்றி நபியைக்‌ கொண்டே வஸீலா தேட பணித்தார்கள்‌ என்றும்‌, அனுமதிக்கப்பட்ட துஆக்கள்‌ அத்தனையையும்‌ சொல்லிக்‌ கொடுக்காமல்‌ சிலதை சொல்லியும்‌, சிலதை விட்டும்‌ கூறினார்கள்‌ என்றும்‌ கற்பனை செய்தால்‌ கூட உமர்‌ (ரலி) அவர்களின்‌ செய்கை
ஒன்றே போதுமானது. ஏனெனில்‌ நபிகளின்‌ ஸுன்னத்துக்கு உமர்‌ (ரலி) அவர்களின்‌ இச்செய்கை பொருத்தமாக இருக்கிறது. எனவே எவர்‌ உமரின்‌ செயலுக்கு மாற்றம்‌ செய்கிறாரோ அவர்‌ நபியின்‌ ஸுன்னத்தை எடுத்துச்‌ செயல்படாதவராகக்‌ கருதப்படுவார்‌. இது விஷயத்தில்‌ நபிகளைப்பற்றி அறிவிக்கப்பட்ட ஹதீஸ்கள்‌ அனைத்தும்‌
இம்மனிதனுக்கு பாதகமாக அமையும்‌, சாதகமாக அமையாது.


வஸீலாவின்‌ மூன்றாவது வகை

வஸீலாவின்‌ மூன்றாவது வகை அனுமதிக்கப்படாத வஸீலாவாகும் . அதுவே நபிமார்கள்‌, ஸாலிஹீன்கள்‌ இவர்களைப்‌ பொருட்டாக வைத்தும்‌, மேலும்‌ இவர்களைக்‌ காரணம்‌ காட்டியும்‌, இவர்களை கொண்டு ஆணையிட்டும்‌ அல்லாஹ்விடம்‌ வஸீலா
தேடுதல்‌. இத்தகைய வஸீலா முழுக்க முழுக்க விலக்கப்பட்டிருக்கிறது. இந்த வஸீலாவிற்கு திருமறையும்‌, ஸஹீஹான ஹதீஸும்‌ ஸஹாபாக்களின்‌ தீர்ப்புகளும்‌ இமாம்களின்‌ கொள்கைகளும்‌ எதுவுமே சான்றாகாது. இதை அனுமதித்தவர்கள்‌ விரல்‌
விட்டு எண்ணக்‌ கூடிய ஒரு சில உலமாக்கள்‌ மட்டுமே. பெரும்பாலான அறிஞர்கள்‌ சிருஷ்டிகளைக்‌ கொண்டு பிரமாணம்‌ செய்து, ஆணையிட்டுப்‌ பிரார்த்தித்தலை
அனுமதிக்கவில்லை.

நபிமார்களாகவும்‌, அவர்களைப்‌ போன்ற சிருஷ்டிகளுக்காகவும்‌ நேர்ச்சை நேர்தல்‌, அந்த சிருஷ்டிகளைக்‌ கொண்டு ஆணையிடுதல்‌, சத்தியம்‌ செய்தல்‌ போன்ற செய்கைகள்‌ விலக்கப்பட்ட வினைகள்‌ என அனைத்து அறிஞர்களும்‌ ஏகோபித்துக்‌ கூறியுள்ளனர்‌. இந்த சத்தியம்‌ நிறைவேறாதது போல நேர்ச்சை கடனையும்‌ நிறைவேற்ற தேவையில்லை. இது விஷயத்தில்‌ நேர்மையான தீர்ப்பும்‌ இதுவே. ஏனெனில்‌ இது ஷிர்க்கான நேர்ச்சையல்லவா. 

மேற்படி சத்தியத்திற்கு ஒப்ப நடக்காதவனுக்கு குற்றபரிகாரமும்‌ வேண்டியதில்லை. அது நபியவர்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்தாலும்‌ சரியே. இமாம்களான அபூஹனீபா, மாலிக்‌, ஷாஃபிஈ, மேலும்‌ அஹ்மத்‌ பின்‌ ஹன்பலின்‌ ஒரு அபிப்பிராயம்‌ இவை அனைத்தும்‌ இந்த அபிப்பிராயத்தைக்‌ கூறுகின்றன. ஒருசில ஆலிம்கள்‌ இதற்கு வித்தியாசமாக சொல்கிறார்கள்‌. சிருஷ்டிகளைக்‌ கொண்டு அதுபோன்று மற்றொரு சிருஷ்டியின்‌ மீதே
சத்தியம்‌ செய்ய கூடாது என்றால்‌ சிருஷ்டிகளைக்‌ கொண்டு அவற்றை படைத்த அல்லாஹ்வின்‌ மீது எப்படி ஆணையிட முடியும்‌? என்பதை சிந்திக்க வேண்டும்‌.

சிருஷ்டிகளைப்‌ பொருட்டாக வைத்து பிரார்த்திப்பவனுடைய விஷயத்திலும்‌ இப்படி
கூற முடியும்‌. இவற்றை பொருட்டாக வைத்து பிரார்த்திப்பவர்கள்‌ அவற்றை வழிபாடு, வணக்கம்‌ என்று கூறியே செய்கின்றனர்‌. அதனால்‌ தம்‌ பிரார்த்தனைகள்‌ அங்கீகரிக்கப்படும்‌ என்றும்‌ உறுதி கொள்கின்றனர்‌. வணக்கம்‌, வழிபாடு என்றெல்லாம்‌
நினைக்க வேண்டுமானால்‌ அவை வாஜிப்‌, அல்லது ஸுன்னத்‌ என்ற விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்‌. இத்தகைய விதிகளை விதித்தவர்கள்‌ நபி (ஸல்‌) அவர்களாகவும்‌ இருக்க வேண்டும்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ தம்‌ சமூகத்திற்கு இத்தகைய விதிகளை விதிக்கவில்லை என்றால்‌ அவை வாஜிப்‌, ஸுன்னத்‌ என்ற தீர்ப்புகளுக்கு உட்பட்ட வணக்கமாக கருதப்பட மாட்டாது. இவை வணக்க, வழிபாட்டு இனத்தைச்‌
சார்ந்தவையுமல்ல. பிரார்த்தனைகள்‌ அங்கீகரிக்கப்‌ படுவதற்குரிய காரணங்களாகவும்‌ இல்லை. இதற்கு மாறாக எவர்கள்‌ செயல்பட்டாலும்‌ வழிகெட்டவர்களாக ஆகி விடுகின்றனர்‌. இவர்களின்‌ செய்கை நூதன அனுஷ்டானமாகவும்‌ (பித்‌அத்தாகவும்‌)
திரும்பி விடுகிறது. நூதன அனுஷ்டானங்கள்‌ அனைத்தும்‌ எக்காலமும்‌ ஷரீஅத்தில்‌ இடம்பெற்ற வணக்கமாகக்‌ கருதப்பட மாட்டாதல்லவா.

ஒன்றைப்‌ பொருட்டாக வைத்துக்‌ கேட்கும்‌ விஷயத்தில்‌ (உயிருள்ள, உயிரற்ற சிருஷ்டிகள்‌ அனைத்தும்‌ சமமாக இருக்கின்றன.) கஃபாவை முன்னிறுத்தியும்‌, பொதுவாக இறையில்லங்களையும்‌, தூார்ஸீனா மலையையும்‌, அல்லாஹ்வின்‌ அர்ஷையும்‌ (சிம்மாசனத்தையும்‌) இவற்றையெல்லாம்‌ ஏதுவாக வைத்து பிரார்த்திப்பதும்‌, மேலும்‌ எத்தனை பெரிய படைப்பானாலும்‌ சரியே. அவற்றை ஏதுவாகக்‌
காட்டிப்‌ பிரார்த்தித்தல்‌ விலக்கப்பட்டுள்ளது. முன்னர்‌ நாம்‌ விளக்கியதுபோல மனிதர்களின்‌ பிரார்த்தனைகள்‌ அங்கீகரிக்கப்‌ படுவதற்குப்‌ பொருத்தமானவற்றை
எடுத்துக்‌ கூறி பிரார்த்திக்க வேண்டும்‌.

சிருஷ்டிகளைப்‌ பொருட்டாகக்‌ காட்டி அவற்றின்‌ உரிமைகள்‌ மீது ஆணையிட்டுப்‌ பிரார்த்திக்கலாம்‌ என அனுமதிப்போர்‌ அறிஞர்‌ சிலரின்‌ சொற்களை ஆதாரமாகக்‌ கொண்டிருக்கிறார்களே தவிர நபிகளுடைய ஸஹீஹான ஹதீஸை இவர்கள்‌
காட்டவில்லை. கீழ்வரும்‌ ஒரு ஹதீஸைப் போல பலவீமான ஹதீஸ்களையே இவர்கள்‌ எடுத்துக்‌ காட்டுகின்றனர்‌. அந்த ஹதீஸை இமாம்‌ அஹ்மதும்‌, இப்னு மாஜாவும்‌, அதாவது, 'பிரார்த்திப்பவர்களுக்காக உன்மீதுள்ள கடமையைக்‌ கொண்டும்‌, (ஹக்கைக்‌ கொண்டும்‌) நான்‌ நடந்துச்‌ செல்லும்‌ இந்த நடைப்பாதையின்‌ பொருட்டாலும்‌' என்று பதிவு செய்திருக்கிறார்கள்‌.

இதை ஆதாரம்‌ காட்டி சிருஷ்டிகளின்‌ பொருட்டால்‌ கேட்கலாம்‌ என அனுமதிப்பவர்களுக்கு கூறிக்‌ கொள்கிறேன்‌. இதை அறிவித்தவர்களின்‌ பெயர்‌ பட்டியலில்‌ அனைத்து அறிஞர்களாலும்‌ பலவீனமானவர்‌ என்று தீர்ப்பு வழங்கப்பட்ட அதிய்யாத்துல்‌ ஊஃபி என்பவர்‌ இடம்‌ பெறுகிறார்‌. இவருடைய உரைகள்‌ சான்றாக எடுக்கப்பட
மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்‌ இந்த ஹதீஸின்‌ உரை எடுத்து விளக்கப்பட்டால்‌ கூட அவர்களுக்குச்‌ சான்றாக இந்த ஹதீஸில்‌ எதையும்‌ காண முடியாது. ஏனெனில்‌ பிரார்த்திப்பவர்களுக்காக அல்லாஹ்வின்‌ மீதுள்ள கடமை என்னவென்றால்‌ அவர்களுடைய பிரார்த்தனையை அங்கீகரிப்பதாகும்‌. (அதாவது இஜாபத்‌ துஆ). வணக்க வழிபாடுகள்‌ செய்கிறவர்களுக்காக வேண்டி அல்லாஹ்வின்‌
மீதுள்ள கடமை அவர்களுக்காக நற்பலன்‌ (ஸுவாப்‌) அருள்வதாகும்‌.

இப்படி துஆவை அங்கீகரித்தல்‌ (இஜாபத்‌ துஆ), வணங்குவோருக்கு நற்பலன்‌ நல்குதல்‌ (இஜாபத்துல்‌ ஆபிதீன்‌) போன்ற கடமைகள்‌ அனைத்தும்‌ அல்லாஹ்வின்‌ ஸிஃபாத்து (தன்மை)களாகும்‌. இவற்றை அல்லாஹ்‌ தன்‌ மீதுள்ள ஹக்குகளாக
அமைத்து மெய்யாகவே தன்‌ அடியார்களின்‌ மேற்கூறிய அமல்களுக்குப்‌ பிரதிபலனாக கொடுப்பதாகவும்‌ வாக்களித்துள்ளான்‌. எனவே இந்த மாதிரியான துஆக்களைக்‌ கொண்டு மனிதன்‌ பிரார்த்தித்தால்‌ கூட இறைவனின்‌ ஸிஃபாத்துகளை (தன்மைகளை)
பொருட்டாகக்‌ கொண்டு பிரார்த்தித்தல்‌ என்ற துஆக்களில்‌ தான்‌ சேர்க்கப்படும்‌. அன்றி
மனிதர்களின்‌ ஹக்குகளை முன்னிறுத்திக்‌ கேட்டால்‌ தான்‌ என்பதற்கு இதை ஆதாரமாகக்‌ கொள்ள முடியாது. இது அறிஞர்கள்‌ இந்த ஹதீஸுக்கு தரும்‌
விளக்கமாகும்‌.

குகைக்குள்‌ அகப்பட்ட மூவரில்‌ ஒவ்வொருவரும்‌ தான்‌ செய்த நற்கிரியைகளை எடுத்துக்‌ கூறி பிரார்த்தித்தனர்‌. அவர்களது அப்பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு குகையில்‌ இருந்து விடுதலை பெற்றனர்‌. இத்தகைய நற்கிரியைகள்‌ செய்யுமாறு
அல்லாஹ்‌ மனிதர்களைப்‌ பணித்திருக்கிறான்‌. அவற்றை செய்தவருக்கு நல்ல பல கூலிகள்‌ இருப்பதாக வாக்களித்தும்‌ இருக்கிறான்‌. எனவே அவர்கள்‌ தாம்‌ செய்த நற்கிரியைகளை எடுத்துரைத்துப்‌ பிரார்த்தித்தனர்‌. அதனால்‌ வெற்றி பெற்றனர்‌. அல்லாஹ்‌ தனது வாக்குறுதியை அவர்கள்‌ விஷயத்தில்‌ நிறைவேற்றும்‌ போது அவர்கள்‌ வெற்றி பெறுகின்றனர்‌.

"எங்கள்‌ இறைவா! உங்கள்‌ இறைவனை நம்புங்கள்‌ என்று எங்களை நம்பிக்கையின்‌ பால்‌ அழைத்தோரின்‌ அழைப்பை திட்டமாக நாங்கள்‌ செவியுற்று விசுவாசம்‌
கொண்டோம்‌. ஆதலால்‌ எங்கள்‌ நாயனே! நீ எங்கள்‌ குற்றங்களை மன்னித்து, பாவங்களிலிருந்து எங்களை விடுவித்து நல்லோர்களுடன்‌ எங்களை மரிக்கச்‌ செய்வாயாக!" (3:193) எனும்‌ திருவசனம்‌ இவ்வுண்மையை புலப்படுத்துகிறது.

மற்றொரு ஆயத்தில்‌ அல்லாஹ்‌ கூறுகிறான்‌; “என்னுடைய அடியார்களில்‌ ஒரு வகுப்பார்‌ இறைவனே! உன்னை நாங்கள்‌ விசுவாசிக்கின்றோம்‌. நீ எங்களுடைய குற்றங்களை மன்னித்து எங்கள்‌ மீது அருள்‌ செய்வாயாக! அருள்‌ செய்வோர்களில்‌
எல்லாம்‌ நீயே மிக்க மேலானவன்‌' என்று பிரார்த்தித்துக்‌ கொண்டிருந்தனர்‌" (23:109).

"நபியே! நீர்‌ கூறும்‌. 'இவற்றை விட மேலான ஒன்றை நான்‌ உங்களுக்கு அறிவிக்கவா? யார்‌ (இறைவனுக்கு) பயந்து நடக்கிறார்களோ அவர்களுக்கு தம்‌ இறைவனிடம்‌ சுவனபதிகள்‌ உண்டு. அவற்றில்‌ நீரருவிகள்‌ சதா ஓடிக்கொண்டே இருக்கும்‌. அவற்றில்‌ என்றென்றும்‌ தங்கி விடுவார்கள்‌. பரிசுத்தமான துணைகளும்‌ உண்டு. அல்லாஹ்வின்‌ திருப்பொருத்தமும்‌ கிடைக்கும்‌. அல்லாஹ்‌ தன்‌ அடியார்களை உற்று நோக்கியவனாக இருக்கிறான்‌” (3;15-16).

ஸஹர்‌ வேளையில்‌ இப்னு மஸ்வூத்‌ (ரலி) அவர்கள்‌ 'இறைவா! நீ என்னை அழைத்து இதோ வந்திருக்கிறேன்‌. நீ என்னைப்‌ பணித்தாய்‌. எனவே உன்‌ வணக்கத்திற்கென ௧ண் விழித்து விட்டேன்‌. இது ஸஹர்‌ வேளை. என்னை நீ தன்னித்து அருள்‌ செய்‌" என்று கூறுவார்களாம்‌.

சிருஷ்டிகளைக்‌ கொண்டு ஆணையிடுவதும்‌, அவற்றைப்‌ பொருட்டாக வைத்துக்‌ கேட்பதும்‌ வாஜிப்‌, முஸ்தஹப்‌ என்ற ஏவல்களுக்கோ அல்லது முபாஹ்‌ என்ற அனுமதிக்கோ உட்பட்டிருத்தல்‌ வேண்டும்‌. சிருஷ்டிகளைப்‌ பொருட்டாகக்‌ கொண்டு
கேட்பதற்கு அனுமதி உண்டு என்றால்‌ படைப்பினங்களுக்கு இடையில்‌ வேற்றுமை
காட்டாமல்‌ எல்லாச்‌ சிருஷ்டிகளைக்‌ கொண்டும்‌ கேட்க அனுமதியுண்டு என்று சொல்லப்பட வேண்டும்‌. அப்படி சொல்லப்பட்டால்‌ எல்லா படைப்பினங்களைக்‌
கொண்டும்‌ கேட்க வேண்டும்‌. அவற்றுள்‌ சிறிது பெரிது என்று பிரிக்கவோ, வேறுபடுத்தவோ கூடாது. ஜின்கள்‌, ஷைத்தான்‌௧ள்‌ இவை அனைத்தைக்‌ கொண்டும்‌
வஸீலா தேட வேண்டுமென்று இவர்கள்‌ அனுமதிக்க வேண்டியது அவசியமாகி விடும்‌.

ஆனால்‌ சிருஷ்டிகளைக்‌ கொண்டு வஸீலா தேடலாம்‌ என்று அனுமதித்தவர்கள்‌ மதிப்பிற்குரிய மாபெரும்‌ படைப்புகளைக்‌ கொண்டு மட்டுமே வஸீலா தேடுவதை
அனுமதித்தோம்‌ என்று கூறினால்‌ அல்லாஹ்‌ தன்‌ திருமறையில்‌ எவற்றைக்‌ கொண்டெல்லாம்‌ சத்தியம்‌ செய்தானோ அவற்றைக்‌ கொண்டெல்லாம்‌ துஆ கேட்கலாம்‌ என்பதையும்‌, சத்தியம்‌ செய்யலாம்‌ என்பதையும்‌ இவர்களின்‌ வாதத்திற்கொப்ப ஏற்க
வேண்டியது வரும்‌. திருமறையில்‌ இறைவன்‌ இரவு, பகல்‌, வானம்‌, பூமி, சந்திரன்‌, சூரியன்‌, ஆத்மா இன்னும்‌ எத்தனை எத்தனையோ சிருஷ்டிகளை மதித்து கண்ணியமான படைப்புகளாகக்‌ கருதி அவற்றைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்து பற்பல
விஷயங்களைக்‌ கூறுகிறான்‌. சிருஷ்டிகளைக்‌ கொண்டு கேட்கலாம்‌ என்று அனுமதித்தவர்கள்‌ மேற்கூறப்பட்ட வற்றையெல்லாம்‌ எடுத்து அவற்றைக்‌ கொண்டு அல்லாஹ்விடத்கில்‌ பிரார்த்திக்கலாம்‌ என்றோ, சத்தியம்‌ செய்யலாம்‌ என்றோ கூற
முடியவில்லை. ஒரு முஸ்லிமால்‌ இதைக்‌ கூறவும்‌ முடியாது.

வானம்‌, பூமி, சூரியன்‌, சந்திரன்‌, இரவு, பகல்‌, கடல்‌, மலை இவை அனைத்தும்‌ அல்லாஹ்வின்‌ மாபெரும்‌ படைப்புகளாகும்‌. இவை அவனுடைய ஏகத்துவத்தையும்‌, பரிபாலனத்தையும்‌ எடுத்தியம்பும்‌ பெரும்‌ அத்தாட்சிகள்‌. அகில உலகமனைத்தையும்‌
படைத்து பரிபாலிக்கின்ற தன்மையை (ருபூபிய்யத்‌) எடுத்துக்‌ காட்டும்‌ மாபெரும்‌ ஆதாரங்கள்‌. அவனுடைய ஞானத்தையும்‌, ஆற்றலையும்‌, நாட்டத்தையும்‌, அருளையும்‌, நுணுக்கத்தையும்‌, கம்பீரத்தையும்‌, மரியாதையையும்‌, மகத்துவத்தையும்‌ வெளிப்படுத்திக்‌ காட்டுகின்ற மேன்மைக்குரிய சிருஷ்டிகளாக இவை இருப்பதனால்‌ அல்லாஹ்‌ இவற்றைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்து ஆணையிட்டுக்‌ கூறுகிறான்‌.
இவற்றிற்கு இறைவன்‌ மதிப்பையும்‌ அளித்ததனால்தான்‌ இப்படி இவற்றைக்‌ கொண்டு
சத்தியம்‌ செய்கிறான்‌.

ஆனால்‌ சிருஷ்டிகளாக உள்ள நமக்கு இதுபோன்ற எத்தனை பெரிய படைப்பானாலும்‌ சரியே. அதைக்கொண்டு சத்தியம்‌ செய்வதற்கு அனுமதியில்லை. இது தெளிவான சான்றாகும்‌. அனைத்து அறிஞர்களாலும்‌ நிரூபிக்கப்பட்ட ஒரு சட்டமுமாகும்‌. இதில்‌ எந்த முஸ்லிமுக்கும்‌ மாறு செய்ய இயலாது. மாறு செய்தால்‌ விலக்கப்பட்ட ஷிர்க்கில்‌ நுழைந்து விடுவான்‌. அதுமட்டுமல்ல. படைப்புகளில்‌ மேற்கூறப்பட்டவற்றைக்‌ கொண்டு
அல்லாஹ்விடம்‌ பிரார்த்திப்பவன்‌ எதை எடுத்தாலும்‌ அதைக்‌ கொண்டு ஆணையிடத்‌ தயங்க மாட்டான்‌. ஆண்‌, பெண்‌, மலக்கு, நபி, ஜின்‌, காற்று, மழை, மேகம்‌, நட்சத்திரங்கள்‌, சூரியன்‌, சந்திரன்‌, வானம்‌, பூமி, இரவு, பகல்‌, மரம்‌, அத்தி, ஸைத்தூன்‌
(ஒலிவம்‌), மலை, கடல்‌, தூர்ஸ்னா மலை, அரஃபா, முஸ்தலிஃபா, ஸஃபா, மர்வா, மக்கா, மற்றும்‌ வணக்கம்‌ செலுத்தப்படும்‌ சாயிகள்‌, ஈஸா நபி, மேலும்‌ உஸைர்‌
அனைவருமே இம்மனிதனுக்கு சத்தியம்‌ செய்யப்படும்‌ கருவிகளாக இருக்கும்‌. இதனால்‌ அவன்‌ சன்மார்க்கத்தை விட்டும்‌ வெளியேற வேண்டிய நிலைமையும்‌ வந்து சேருகிறது. இவை அனைத்தும்‌ தீனுல்‌ இஸ்லாமில்‌ வெறுக்கப்பட்ட பயங்கரமான பாவச்‌ செய்கைகளும்‌, பித்‌அத்துகளுமாகும்‌. எல்லோருக்கும்‌ இதன்‌ தீமைகள்‌ வெளிப்படையாகத்‌ தெரிந்து விடும்‌. ஏனெனில்‌ சிருஷ்டிகளில்‌ மேற்கூறப்பட்டவற்றைக்‌ கொண்டு அல்லாஹ்வின்‌ மீது சத்தியம்‌ செய்ய அனுமதிப்பவன்‌ எதைக்‌ கொண்டும்‌
சத்தியம்‌ செய்வான்‌. தரீக்காக்களின்‌ ஷைகுமார்களும்‌, பீர்மார்களும்‌ கொடுக்கின்ற தஃவீஸுகளையும்‌, காப்பு நூல்களையும்‌ வைத்து சத்தியம்‌ செய்வான்‌. இதனால்‌
குஃப்ரிய்யத்தும்‌, ஷிர்க்கும்‌ வந்து அனைத்து நபிமார்களும்‌ பின்பற்றிய சத்திய இஸ்லாத்திலிருந்து மனிதனை அப்புறப்படுத்தி விடுகிறது.

தவஸ்ஸுல்‌, வஸீலாவை மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்‌. ஒன்று: பெருமானாரைக்‌ கொண்டு அவருக்கு வழிபட்டு (அல்லாஹ்வின்பால்‌ நெருங்குவதை) வஸீலா தேடுதல்‌. இந்த தாத்பரியத்திற்குட்பட்ட வஸீலாவைத்‌ தேடுதல்‌ அனைவர்‌ மீதும்‌ கடமையாக்கப்பட்டுள்ளது. இரண்டு: நபியின்‌ பிரார்த்தனையையும்‌, ஷபாஅத்தையும்‌ கொண்டு வஸீலா (அல்லாஹ்வை சமீபிக்கத்‌) தேடுதல்‌. இதுவும்‌ பயனளிக்கின்ற வஸீலாவாகும்‌. மூன்றாவது வகை மேலே விவரிக்கப்படுகிறது.


மேன்மைக்குரிய சிருஷ்டிகள்‌ அல்லாஹ்வுடைய பங்காளிகளல்ல.

மேன்மைக்குரிய மாபெரும்‌ சிருஷ்டிகளில்‌ நபிமார்களையும்‌, ஸாலிஹீன்களையும்‌
கொண்டு மட்டும்‌ சத்தியம்‌ செய்யலாம்‌ என்றும்‌, பிரார்த்திக்கலாம்‌ என்றும்‌ அனுமதிக்கின்றோமே தவிர எல்லா மக்களையும்‌, அல்லது எல்லா படைப்புகளையும்‌ கொண்டு அவர்களின்‌ பொருட்டால்‌ பிரார்த்திப்பதை நாங்கள்‌ அனுமதிக்கவில்லையே -
இது சிருஷ்டிகளில்‌ ஸாலிஹீன்களையும்‌, நபிமார்களையும்‌ கொண்டு பிரார்த்திப்பதை
அனுமதித்தவர்களின்‌ வாதமாகும்‌.

இவர்கள்‌ நாம்‌ கேட்கிறோம்‌. 'சிருஷ்டிகளில்‌ சில மற்றதைவிட மேன்மைக்குரியதாக இருந்தாலும்‌ சிருஷ்டி என்ற கோட்டை விட்டும்‌ அப்பாற்ப்பட்டு விட முடியுமா? மேன்மைக்குரியது என்பதனால்‌ அதை அல்லாஹ்வுடைய பங்காளி என்று கூற
முடியுமா? மேன்மைக்குரிய படைப்பு என்பதானால்‌ அதை வழிபட முடியுமா? இல்லவே இல்லை. பயந்து அவற்றின்‌ மீது தவக்குல்‌ வைத்து அவற்றுக்காக நோன்பு நோற்று, தொழுது, அவற்றிடம்‌ தேவைகள்‌ கேட்கவும்‌, ஆதரவுகள்‌ வைக்கவும்‌ அருகதையற்றவர்களாக சிருஷ்டிகள்‌ இருக்கின்றனர்‌. இவற்றையெல்லாம்‌ அல்லாஹ்வுக்கு மட்டும்‌ செலுத்த வேண்டிய வழிபாடுகளாகும்‌.

எனவே அவற்றைக்‌ கொண்டு ஆணையிடுவதும்‌, பிரார்த்திப்பதும்‌ தடுக்கப்பட்டுள்ளது. ஒருவன்‌ சத்தியம்‌ செய்ய நினைத்தால்‌ அல்லாஹ்வைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்யட்டும்‌! இல்லையென்றால்‌ வாயை மூடிக்‌ கொண்டு பேசாமல்‌ இருக்கட்டும்‌."
என்று ஒரு ஸஹீஹான ஹதீஸில்‌ காணப்படுகிறது. அல்லாஹ்வைக்‌ கொண்டல்லாது ஆணையிடாதீர்கள்‌' என்று இன்னுமொரு ஹதீஸில்‌ பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறியிருக்கிறார்கள்‌.

அல்லாஹ்‌ அல்லாதவற்றை (சிருஷ்டிகளை)க்‌ கொண்டு ஆணையிடுகிறவன்‌ இறைவனுக்கு இணை வைத்து விட்டான்‌' என்று மற்றொரு ஹதீஸில்‌ காணப்படுகிறது.
படைப்புகள்‌ என்ற விஷயத்தில்‌ நபியும்‌, மலக்கும்‌, ஸலிஹீன்களும்‌ எல்லோரும்‌ சமமே. இவர்களுள்‌ யாரைக்கொண்டும்‌ சத்தியம்‌ செய்யக்‌ கூடாது. சிருஷ்டிகள்‌ எத்தனைப்‌ பெரிய மேன்மைக்குரியவை ஆனாலும்‌ அவற்றைத்‌ தனக்கு இணை வைக்கக்‌ கூடாது என்று கண்டித்து இறைவன்‌ குறிப்பிடுகிறான்‌: "ஒரு மனிதருக்கு வேதத்தையும்‌, ஞானத்தையும்‌, நபித்துவத்தையும்‌ அல்லாஹ்‌ அருள்‌ புரிந்த பிறகு அவர்‌ பிற மனிதர்களை நோக்கி 'என்னை வணங்குங்கள்‌. அல்லாஹ்வையல்ல' என்று கூற
அவருக்கு (உரிமை) இல்லை. மாறாக 'நீங்கள்‌ வேதத்தைக்‌ கற்றுக்‌ கொடுத்துக்‌ கொண்டும்‌, ஓதிக்கொண்டு இருப்பதன்‌ காரணமாக இறையடியார்களாக ஆகி விடுங்கள்‌' என்று கூற வேண்டும்‌. தவிர மலக்குகளையும்‌, நபிமார்களையும்‌ தெய்வங்களாக எடுத்துக்‌ கொள்ளுங்கள்‌ என்று அவர்‌ உங்களை ஏவ மாட்டார்‌. ஆகவே நீங்கள்‌ அல்லாஹ்வுக்கு முற்றிலும்‌ வழிபட்டதன்‌ பின்னர்‌ குஃப்ரைக்‌ கொண்டு அவர்‌ உங்களை
ஏவுவாரா?" (3:79-80)

"நபியே! நீர்‌ கூறும்‌. அல்லாஹ்வையன்றி (கடவுளாக) நீங்கள்‌ எண்ணிக்‌ கொண்டிருப்பவற்றை நீங்கள்‌ அழையுங்கள்‌. அவை உங்களுக்கு எந்த கஷ்டத்தையும்‌, நீக்கவோ, தட்டி விடவோ சக்தியற்றவை. இவர்கள்‌ இறைவன்‌ என்று அழைப்பவையும்‌ தங்களுக்காக தங்கள்‌ இறைவனிடம்‌ (வணக்கங்களால்‌) சமீபிப்பதைத்‌ தேடிக்கொண்டு
அவர்களின்‌ இறைவனோடு மிக்க நெருங்கியவர்‌ யார்‌? என்பதையும்‌ தேடிக்கொண்டு இறைவனுடைய அருளையே எதிர்ப்பார்த்து அவனுடைய வேதனைக்கு பயப்படுகின்றன. ஏனென்றால்‌ உம்‌ இறைவனின்‌ வேதனையோ மிகப்‌ பயப்படக்கூடியதே" (17:56-57)

கடந்த காலத்து சமூகங்களில்‌ சிலர்‌ நபிமார்களான ஈஸா, உஸைர்‌ (அலை) மற்றும்‌ மலக்குகள்‌ போன்றவர்களை அழைத்துப்‌ பிரார்த்தித்து கொண்டிருந்தது பற்றி அல்லாஹ்‌ அவர்களை எச்சரித்து 'நீங்கள்‌ யாரை அழைத்து பிரார்த்திக்கின்றீர்களோ அவர்கள்‌ அனைவரும்‌ எனது அடிமைகள்‌. என்னையே நாடி நிற்கின்றனர்‌. என்‌ அருளை எப்போதும்‌ வேண்டிப்‌ பிரார்த்திக்கின்றனர்‌. என்னுடைய வேதனையைப்‌ பயந்துக்‌ கொண்டே வாழ்கின்றனர்‌. நீங்களும்‌ என்னுடைய அதாபை (வேதனையை) பயந்துதான்‌ வாழ்கின்றீர்கள்‌. நீங்கள்‌ என்னென்ன அமல்களைச்‌ செய்து என்னை சமீபிக்கிறீர்களோ அவற்றை அவர்களும்‌ புரிந்து என்னை சமீபிக்க நாடுகின்றனர்‌. இப்படியிருக்க ஏன்‌ இந்த சிருஷ்டிகளை அழைக்கிறீர்கள்‌?' என்று ஆன்றோர்‌ (ஸலஃபுகள்)‌ சிலர்‌ அறிவிக்கின்றனர்‌.

"அல்லாஹ்வுக்கும்‌, அவனுடைய தூதருக்கும்‌ எவர்‌ வழிபட்டு, அல்லாஹ்வுக்கு பயந்து, அவனுக்கு மாறு செய்வதை விட்டு விலகிக்‌ கொண்டிருக்கிறார்களோ அவர்கள்‌ நிச்சயமாக பாக்கியம்‌ பெற்றவர்கள்‌". (24:52)

வழிபாடு, கீழ்படிதல்‌ என்பது அல்லாஹ்வுக்கும்‌, ரஸூலுக்கும்‌ செய்ய வேண்டியது. ரஸூலுக்கு வழிபட்டவன்‌ அல்லாஹ்வுக்கு வழிபட்டவனாகிறான்‌ என்று இந்த ஆயத்தில்‌ இறைவன்‌ விளக்கி பயமும்‌, பக்தியும்‌ அல்லாஹ்வுக்கு மட்டும்‌ உரியது. அவற்றில்‌
ரஸூலுக்கு பங்கில்லை என்றும்‌ கூறினான்‌. எனவே ஒரு சிருஷ்டி அது எந்த படைப்பானாலும்‌ சரி. அதற்கு அஞ்சி, பயந்து நடத்தல்‌ கூடாது. அல்லாஹ்‌
ஒருவனுக்கே அஞ்ச வேண்டும்‌. மேலும்‌ இறைவன்‌ கூறுகிறான்‌: “அல்லாஹ்‌ நமக்குப்‌ போதுமானவன்‌. அல்லாஹ்‌ தன்‌ அருளைப்‌ பின்னும்‌ நமக்கு அருள்‌ புரிவான்‌. அவனுடைய ரஸூலும்‌ அருள்‌ புரிவார்கள்‌. நிச்சயமாக நாம்‌ அல்லாஹ்வையே (ஆசித்து) ஆதரவு வைத்து வாழ்கிறோம்‌ என்று அவர்கள்‌ கூறியிருந்தால்‌ நல்லது" (9:59).

மேலும்‌ கூறுகிறான்‌: "நீர்‌ ஒய்வு பெற்றால்‌ வணக்கத்தில்‌ சிரத்தை எடுத்துக்‌ கொள்ளும்‌. அன்றி உம்‌ இறைவனையே நீர்‌ ஆசிப்பீராக!" (94:7-8)

அல்லாஹ்வும்‌, ரஸூலும்‌ கொடுத்ததைக்‌ கொண்டு பொருந்தி வாழ வேண்டுமென்று இவர்களுக்கு வலியுறுத்தியுள்ளான்‌. அல்லாஹ்வே எங்களுக்குப்‌ போதுமானவன்‌ என்று கூறவும்‌ சொல்லியிருக்கிறான்‌. திருப்தி என்பது அல்லாஹ்‌, ரஸூல்‌ இவர்களுடனும்‌
சேர்க்கப்பட்டுள்ளது. போதுமாக்கிக்‌ கொள்ளுதல்‌ என்பது மேற்குறிப்பிட்ட திருமறை வசனத்தில்‌ அல்லாஹ்வோடு மட்டும்‌ சேர்க்கப்பட்டுள்ளது.‌ ரஸூலுடன் சேர்க்கப்படவில்லை. ஏனெனில்‌ அல்லாஹ்‌ ஒருவன்‌ தான்‌ தன்‌ மூமினான அடியார்களுக்குப்‌ போதுமானவன்‌. 'அல்லாஹ்வும்‌, ரஸூலும்‌ கொடுத்ததைக்‌ கொண்டு” என்று கூறினான்‌. ரஸூல்‌ எதைக்‌ கொடுக்க முடியும்‌ என்று சந்தேகித்தல்‌ கூடாது. ஏனெனில்‌ அல்லாஹ்வுடைய விதிவிலக்கல்களையும்‌ (ஹராம்களையும்‌), அவன்‌
அனுமதித்தவற்றையும்‌ (ஹலால்களையும்‌), மேலும்‌ அவனது நன்மார்க்கத்தையும்‌, எச்சரிக்கைகளையும்‌, வாக்குறுதிகளையும்‌ மக்களுக்கு எடுத்துக்‌ கூறுவதில்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ நடுநாயகமாக இருந்திருக்கிறார்கள்‌.

அல்லாஹ்வும்‌, ரஸூலும்‌ விலக்கியவை ஹராமாகின்றன. அனுமதித்தவை ஹலால்‌ ஆகின்றன. இஸ்லாம்‌ மார்க்கம்‌ என்றாலே அல்லாஹ்‌, ரஸூலின்‌ விதிகளல்லவா?

"நம்‌ தூதர்‌ உங்களுக்கு கொடுத்ததை எடுத்துக்‌ கொள்ளுங்கள்‌. தடுத்ததைவிட்டு விலகி
நடந்துக்‌ கொள்ளுங்கள்‌” என்று அல்லாஹ்‌ இன்னுமொரு இடத்தில்‌ குறிப்பிடுகிறான்‌.
(59.7)

செல்வமாயினும்‌, வேறு எதுவாயினும்‌ அல்லாஹ்‌, ரஸூல்‌ எதை ஹலாலாக்கிக்‌ கொடுத்தார்களோ, அதைப்பெற்றுக்‌ பொருந்திக்‌ கொள்ள வேண்டும்‌. யுத்தத்தில்‌ கிடைத்தப்‌ பொருட்கள்‌, தர்மச்‌ சொத்துக்கள்‌ போன்ற பொதுச்‌ சொத்துக்களிலும்‌
அல்லாஹ்வும்‌, ரஸூலும்‌ பங்கிட்டுப்‌ பகிர்ந்தளித்தைக்‌ கொண்டு திருப்திப்பட வேண்டும்‌. இதுவே ஒருவருக்குரிய அளவாகும்‌. அளவுக்கு மிஞ்சியதைக்‌ கேட்கக்‌ கூடாதல்லவா? பின்னர்‌ “அல்லாஹ்‌ நமக்குப்‌ போதுமானவன்‌” என்று கூறுவார்கள்‌ என்றும்‌ அல்லாஹ்‌ சொல்கிறான்‌ (9:59). இங்கே ரஸுலைக்‌ குறிப்பிடவில்லை. ஏனெனில்‌ அல்லாஹ்‌ ஒருவனே தன்‌ மூமினான அடியார்களுக்குப்‌ போதுமானவனாக இருக்கிறான்‌.

மூமின்கள்‌ அல்லாஹ்வைக்‌ கொண்டு போதுமாக்கிக்‌ கொள்வதுபோல நபியும்‌ அவனைக்‌ கொண்டு போதுமாக்கிக்‌ கொள்ள வேண்டும்‌. இதைப்பற்றி அல்லாஹ்‌ திருக்குர்‌ஆனில்‌ கூறுகிறான்‌: “நபியே! அல்லாஹ்‌ ஒருவன்‌ மட்டும்‌ உமக்கும்‌, உம்மைப்‌
பின்பற்றிய விசுவாசிகளுக்கும்‌ போதுமானவன்‌" (68:64). இவர்களுக்கு அல்லாஹ்‌ போதுமானவன்‌ என்றால்‌ இவர்களுக்கு நேர்வழியை அருள்‌ புரியவும்‌, வாழ்க்கையில்‌ எல்லாச்‌ செல்வங்களையும்‌ வழங்கவும்‌, மற்றும்‌ அனைக்கிற்கும்‌ அல்லாஹ்‌ ஒருவனைக்‌ கொண்டு போதுமாக்கப்படும்‌ என்பது ஆன்றோர்‌ பலரின்‌ கருத்தாகும்‌. மேற்குறிப்பிட்ட ஆயத்தில்‌ (9:59) அருளுக்குச்‌ சொந்தமானவன்‌ அவன்‌ ஒருவனே
என்பதைக்‌ காட்டுவதற்காக அல்லாஹ்‌ தன்‌ 'அருளை' என்று குறிப்பிட்டு இருக்கிறான்.

அதற்கப்பால்‌ ஆசித்தல்‌, ஆதரவு வைத்தல்‌ அல்லாஹ்வுக்கு மட்டுமே ஆக வேண்டும்‌.
இதைக்‌ காட்டுவதற்காக 'நிச்சயமாக நாம்‌ அல்லாஹ்வையே ஆதரவு வைத்து வாழ்கிறோம்‌' என்றான்‌. மனிதன்‌ அல்லாஹ்வைத்‌ தவிர வேறு எதையும்‌ எத்தனை மாபெரும்‌ சிருஷ்டியானாலும்‌ அதை ஆதரவு வைத்து நம்பி வாழக்கூடாது. இந்த
விதியில்‌ அனைத்து சிருஷ்டிகளும்‌ சமமே. நபிமார்கள்‌, வலிமார்கள்‌, மலக்குகள்‌ இவர்களுள்‌ எவரையும்‌ பயந்து அல்லது நம்பி, ஆசை வைத்து இவ்வையகக்கில்‌ வாழக்கூடாது.

இது விஷயத்தில்‌ இறைவன்‌ கூறினான்‌: (நபியே!) நீர்‌ கூறும்‌. அல்லாஹ்வையன்றி எவற்றை (தெய்வங்களென) நீங்கள்‌ எண்ணிக்‌ கொண்டீர்களோ அவற்றை அழைத்துப்‌ பாருங்கள்‌. வானங்களிலோ, பூமியிலோ அவற்றுக்கு அணுவளவும்‌ ஆதிக்கமில்லை.
அன்றியும்‌ அவ்விரண்டில்‌ எதிலும்‌ (அவற்றைப்‌ படைப்பதில்‌) இவற்றுக்குப்‌ பங்குமில்லை. (இதில்‌) அவனுக்கு உதவியாளர்களும்‌ அவர்களில்‌ எவருமில்லை. அவனது அனுமதி பெற்றவர்களைத்‌ தவிர அவனிடத்தில்‌ (எவரும்‌) பரிந்து பேசுவதும்‌
பயனளிக்காது” (34:22-23). இந்த வசனத்தில்‌ அல்லாஹ்வைத்‌ தவிர சிருஷ்டிகளை
அழைத்துப்‌ பிரார்த்திப்பவனுக்குப்‌ பயங்கரமான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

சிருஷ்டிகளுக்கு எள்ளளவும்‌ அல்லாஹ்வுடன்‌ அதிகாரத்தில்‌ பங்கில்லை. அல்லாஹ்வுக்கு சிருஷ்டிகளில்‌ நின்றும்‌ உதவியாளர்களோ, ஒத்தாசைக்காரர்களோ அவசியமில்லை. அத்தகைய பலவீனமான சிருஷ்டிகளுடன்‌ மனித இனம்‌ தொடர்பு
வைப்பதை விட்டு துண்டித்து வாழ வேண்டும்‌, மனிதன்‌ உதவி கேட்பதும்‌, பயப்படுவதும்‌, வணங்குவதும்‌, ஆதரவு வைப்பதும்‌ எல்லாம்‌ அல்லாஹ்வுடனே
இருத்தல்‌ வேண்டும்‌. மேலும்‌ படைப்புகளில்‌ குறிப்பிட்ட ஒரு சாராருக்கு அல்லாஹ்‌ அனுமதி கொடுத்தால்‌ மட்டும்‌ மறுமையில்‌ சிபாரிசு செய்ய அனுமதி உண்டு என்றும்‌ கூறியிருக்கிறான்‌.


மறுமை நாளையின்‌ பரிந்துரைகள்‌ (ஷபாஅத்துகள்‌)

இறுதி நாளில்‌ பரிந்துரை செய்வது பற்றி ஸஹீஹான சில ஹதீஸ்கள்‌ காணப்படுகின்றன. அன்று மக்கள்‌ அனைவரும்‌ ஆதம்‌ நபி அவர்களிடமும்‌, (உலுல்
அஸ்ம்‌) திடகாத்திர, உறுதிபாடுள்ள நபிமார்களான நூஹ்‌, இப்றாஹீம்‌, மூஸா, ஈஸா (அலை) ஆகியோரிடமும்‌ வந்து தமக்காக ஷபாஅத்‌ செய்ய வேண்டுமென்று கெஞ்சுவார்கள்‌. அந்த நபிமார்களில்‌ ஒவ்வொருவரும்‌ மற்றவரிடம்‌ மக்களைத்‌ திருப்பி
அனுப்பி வைப்பார்கள்‌. இறுதியில நபி ஈஸா (அலை) அவர்களிடம்‌ மக்கள்‌ திரண்டெழுவார்கள்‌. அப்போது ஈஸா (அலை) அவர்கள்‌ நபி முஹம்மதை நோக்கிச்‌
செல்லுங்கள்‌. அவர்கள்‌ முன்பின்‌ பாவங்கள்‌ அனைத்தும்‌ மன்னிக்கப்பட்டவர்கள்‌' என்று
கூறுவார்கள்‌.

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: எல்லா மக்களும்‌ என்னை நோக்கி வருவார்கள்‌. நான்‌ அல்லாஹ்வை நோக்கிச்‌ செல்வேன்‌. அவனைக்‌ கண்டதும்‌ ஸுஜுதில்‌ விழுந்து விடுவேன்‌. ஒரு சில துதிகளைக்‌ கூறி அல்லாஹ்வை நான்‌ புகழ்ந்து கொண்டே இருப்பேன்‌. அந்த துதிகள்‌ எவை என்பதை இப்போது நான்‌ சரியாக அறியாவிட்டாலும்‌ அந்நாளில்‌ எனக்கு அல்லாஹ்‌ தன்‌ அருளைத்‌ திறந்து தருகையில்‌ அறிந்து
கொள்வேன்‌. நான்‌ ஸுஜுதில்‌ இருப்பதைக்‌ காணும்போது 'முஹம்‌மதே! தலை உயர்த்திச்‌ சொல்லும்‌. நீர்‌ சொல்வதைக்‌ கேட்கப்படும்‌. உமக்கு வேண்டிய தேவைகளை கேளும்‌ கொடுக்கப்படும்‌. சிபாரிசு செய்யும்‌. ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌' என்று
சொல்லப்படும்‌. பின்னர்‌ சிபாரிசுக்கான சில குறிப்பிட்ட வரம்புகளை விதித்து அது விஷயத்தில்‌ வரையறுத்துக்‌ கூறப்படும்‌. நான்‌ அவர்களுக்காக சிபாரிசு செய்து சுவனலோகத்தில்‌ பிரவேசிக்கச்‌ செய்வேன்‌' என்று கூறி முழு ஹதீஸையும்‌ நபிகள்‌
(ஸல்‌) அவர்கள்‌ கூறி முடித்தார்கள்‌.

நபி (ஸல்‌) அவர்கள்‌ (அஷ்ஹாஃபிஉல்‌ முஷஃப்பிஉ) சிபாரிசு செய்பவர்களும்‌, அவர்களின்‌ சிபாரிசு ஏற்றுக்‌ கொள்ளப்படக்‌ கூடியவர்களும்‌ ஆவார்கள்‌ என்பதை நபி ஈஸா (அலை) அவர்கள்‌ விளக்கினார்கள்‌.

ஏனெனில்‌ அவர்கள்‌ அல்லாஹ்விடத்தில்‌ மேன்மைக்குரிய சிருஷ்டியாவார்கள்‌. முன்பின்‌ பாவங்கள்‌ மன்னிக்கப்பட்டவர்கள்‌ ஆவார்கள்‌. சிபாரிசு செய்பவர்களில்‌ மிக உத்தமமானவர்கள்‌. தமது இறைவனின்‌ சமூகத்தில்‌ வந்து அவனை துதித்து ஸுஜூது செய்து கொண்டிருப்பார்கள்‌. தமக்கு அனுமதி அளிக்கப்படும்‌ வரை சிபாரிசை ஆரம்பிக்க
மாட்டார்கள்‌ என்பது போன்றவற்றை எல்லாம்‌ நபி ஈஸா (அலை) அவர்கள்‌ மறுமையில்‌ சொல்வதாக நபி (ஸல்‌) விளக்கம்‌ தருகிறார்கள்‌.

இந்த விளக்கத்தில்‌ இருந்து அல்லாஹ்விற்கு தான்‌ அனைத்து உரிமைகளும்‌ இருக்கும்‌ என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அவன்‌ அனுமதி வழங்காவிட்டால்‌
எவரும்‌ அங்கு வாய்‌ திறக்க முடியாது. அத்துடன்‌ ஷபாஅத்துக்கு அனுமதியை அல்லாஹ்‌ வழங்கினாலும்‌ அதற்குகூட ஒரு எல்லையும்‌ வரம்பும்‌ இருக்கிறது. அங்கு இஷ்டம்போல நபி (ஸல்‌) அவர்களுக்கு எதையும்‌ சாதிக்க முடியாது. அல்லாஹ்வின்‌
நாட்டமும்‌, ஆற்றலும்‌, விருப்பமும்‌ தான்‌ அங்கு மிகைத்து நிற்கும்‌.

அல்லாஹ்விடத்தில்‌ ஷபாஅத்துச்‌ செய்பவர்களில்‌ மேன்மைக்கு உரியவராக நபி (ஸல்‌) அவர்களை மட்டும்‌ அல்லாஹ்‌ தேர்ந்தெடுத்தான்‌. ஏனெனில்‌ உபூதிய்யத்தின்‌ (அடிமைத்தனத்தின்‌) நிறைவையும்‌, இன்னும்‌ பூரண வழிபடுதலையும்‌, வழிபாட்டையும்‌,
இறைவனின்‌ இசைவுக்கும்‌, திருப்பொருத்தத்துக்கும்‌, பிரியத்துக்கும்‌ ஒப்ப நடப்பதும்‌ அவர்களிடம்‌ காணப்படுவது போல வேறு எவரிடமும்‌ காண முடியாது.

சரி இங்கே நாம்‌ விஷயத்துக்கு வருவோம்‌. சிருஷ்டிகளைக்‌ கொண்டு பிரார்த்திக்கலாம்‌ என்று அனுமதித்தவர்கள்‌ கீழ்வருமாறு கூறுகிறார்கள்‌: 'எல்லாப்‌ படைப்புகளைக்‌ கொண்டும்‌ பிரார்த்திக்கலாம்‌ என நாங்கள்‌ கூறவில்லை. சில
சிருஷ்டிகளைக்‌ கொண்டு ஈமான்‌ கொள்ளுதல்‌ கடமையாகிறது. அவர்கள்‌ தாம்‌ நபிமார்களும்‌, மலக்குகளும்‌. மேலும்‌ நபிமார்களையும்‌, மலக்குகளையும்‌ விசுவாசிக்காதவன்‌ மூமின்‌ என்று சொல்லப்பட மாட்டான்‌. எனவே ஈமான்‌ கொண்டு
விசுவாசிக்கப்பட வேண்டிய சில படைப்புகளை மட்டும்‌ பொருட்டாக வைத்து பிரார்த்திப்பதையும்‌, சத்தியம்‌ செய்வதையும்‌ நாங்கள்‌ அனுமதிக்கிறோமே தவிர எல்லாச்‌ சிருஷ்டிகளைக்‌ கொண்டும்‌, அவற்றின்‌ பொருட்டாலும்‌ பிரார்த்திப்பதை நாங்கள்‌ அனுமதிக்கவில்லை. இவை மேற்குறிப்பிட்டவர்கள்‌ கூறுகின்ற நியாயங்களாகும்‌.

இவர்களின்‌ இக்கூற்று கவனிக்கப்பட்டால்‌ இக்கூற்றிற்கொப்ப முன்கர்‌, நகீர்‌, ஹூருல்‌ஈன்கள்‌, சுவனம்‌, நரகம்‌, இவற்றின்‌ அதிபதிகள்‌ போன்ற அனைவரையும்‌ பொருட்டாகக்‌ கொண்டும்‌ பிரார்த்தித்தல்‌ கூடும்‌ என்பது விளங்கப்படும்‌. ஏனெனில்‌ நபியவர்கள்‌ தாம்‌ இவற்றை அறிவித்துள்ளார்கள்‌. நபியை விசுவாசித்தல்‌ கடமையாவது போல நபியால்‌ அறிவிக்கப்பட்ட அனைத்து விஷயங்களையும்‌ விசுவாசித்தல்‌ கடமையாகும்‌. இதன்‌ அடிப்படையில்‌ மேற்கூறிய சிருஷ்டிகளைப்‌ பொருட்டாகக்‌ கொண்டும்‌ பிரார்த்திக்கலாம்‌, சத்தியம்‌ செய்யலாம்‌ என்றெல்லாம்‌ அனுமதிக்க வேண்டியது ஏற்படுகிறது.

இவை அனைத்தும்‌ படைப்பினங்களை வைத்து வஸீலா தேடலாம்‌ என்ற தீய அனுமதியிலிருந்து பிறந்த தீய விளைவுகளாகும்‌. பிரார்த்தனைகள்‌
அங்கீகரிக்கப்படுவதற்கு ஷரீஅத்தில்‌ அனுமதிக்கப்படாத எந்தக்‌ காரணத்தையும்‌
பொருட்டாக வைத்துப்‌ பிரார்த்திப்பது ஹராமாகும்‌. சிருஷ்டிகளுக்கு இடையில்‌ தரம்‌ பிரித்தும்‌, ஏற்றத்தாழ்வு கூறியும்‌ குறிப்பிட்ட சிலவற்றை மட்டும்‌ சிருஷ்டிகளிலிருந்து தேர்வு செய்து வஸீலாவின்‌ கருவிகளாக அமைத்துக்‌ கொள்வதெல்லாம்‌
விலக்கப்பட்டிருக்கிறது.

கீழ்வரும்‌ இந்த ஆயத்தைக்‌ கொண்டும்‌ சிருஷ்டிகளைப்‌ பொருட்டாக வைத்து வஸீலா
தேடலாம்‌ என்று அதை அனுமதித்தவர்கள்‌ ஆதாரம்‌ கூறுகிறார்கள்‌. அல்லாஹ்‌ கூறுகிறான்‌: "இதற்கு முன்னரெல்லாம்‌ அவர்கள்‌ நிராகரிப்பவர்கள்‌ மீது தங்களுக்கு வெற்றியை அளிக்கும்படி (இந்த நபியின்‌ இறைவனிடம்‌) பிரார்த்தனை செய்து
கொண்டிருந்தார்கள்‌” (2:89). இத்திருமறை வசனத்தைப்‌ பார்த்த யூதர்கள்‌ அரபிகளில்‌
உள்ள முஷ்ரிகீன்களுக்கு 'இந்த நபியை இறைவன்‌ அனுப்புவான்‌. இந்நபியோடு சேர்ந்து உங்களோடு நாங்கள்‌ சண்டை போடுவோம்‌' என்று கூறினார்களாம்‌. இக்கூற்றில்‌ அவர்கள்‌ நபியைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்யவுமில்லை. பிரார்த்திக்கவும்‌ இல்லை.
மேலும்‌ யூதர்கள்‌ 'இறைவா! எழுத படிக்கத்‌ தெரியாத இந்நபியை அனுப்பி வைப்பாயாக. நாங்கள்‌ அவர்களைப்‌ பின்பற்றுவோம்‌. அவர்களுடன்‌ சேர்ந்து முஷ்ரிக்குகளோடு போராடுவோம்‌' என்று கூறினார்களாம்‌. இதுவே திருமறை வியாக்கியானிகளிடத்கில்‌ ஸ்திரமான விளக்கமாகும்‌. குர்‌ஆனும்‌ இப்படித்தான்‌ கூறுகிறது.

ஆனால்‌ சில வியாக்கியானிகள்‌ யூதர்களைப்‌ பற்றி 'அவர்கள்‌ எதிர்காலக்கில்‌ அனுப்பப்பட இருக்கும்‌ நபி முஹம்மத்‌ (ஸல்‌) அவர்களைப்‌ பொருட்டாக வைத்தும்‌,
அவர்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்தும்‌ அல்லாஹ்விடம்‌ பிரார்த்தனை செய்திருந்தனர்‌ என்று விளக்கம்‌ தருகின்றார்கள்‌. ஆனால்‌ இந்த விளக்கம்‌ நேர்மையான விளக்கமல்ல. தவறான விளக்கமாகும்‌. அனைத்து ஆதாரங்களுக்கும்‌ மேற்படி விளக்கம்‌
முரண்பட்டிருக்கிறது.

நபியவர்களின்‌ சரித்திர நூற்களும்‌, நபித்துவத்தின்‌ சான்றுகளைப்‌ போதிக்கின்ற இலக்கியங்களும்‌, மற்றும்‌ திருமறை வியாக்கியானங்களும்‌ இந்த சம்பவத்தை நன்றாக விளக்கியுள்ளன. அறிஞர்‌ அபுல்‌ ஆலியாவும்‌, மற்றும்‌ அறிஞர்‌ சிலரும்‌ 'அரபிகளுள்‌
முஷ்ரிக்குகளாக இருந்தோர்‌ மீது வெற்றிபெற வேண்டுமென்று யூதர்கள்‌ நினைத்தபோது
நபி முஹம்மத்‌ (ஸல்‌) அவர்களைக்‌ கொண்டு உதவிதேடி வெற்றி பெறுவதற்காக பின்வரும்‌ துஆவை ஓதுவார்கள்‌. 'இறைவா! எங்கள்‌ வேதத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ள இந்த முஹம்மத்‌ (ஸல்‌) அவர்களை நீ விரைவில்‌ அனுப்பி வை. அவர்களுடன்‌
நாங்களும்‌ சேர்ந்து முஷ்ரிக்குகளுடன்‌ போராடி வெற்றி பெறுவோம்‌' என்று கூறுகின்றனர்‌.

ஆனால்‌ முஹம்மத்‌ (ஸல்‌) அவர்களை அல்லாஹ்‌ நபியாக அனுப்பியபோது அவர்கள்‌ தம்‌ சமூகத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ அல்ல என்று தெரிந்ததும்‌ அரபிகள்‌ மீதுள்ள பொறாமையினால்‌ யூதர்கள்‌ நபிகளைப்‌ புறக்கணித்தனர்‌. எனினும்‌ நிச்சயமாக
நபியவர்கள்‌ அல்லாஹ்வின்‌ திருத்தூதர்தான்‌ என்று இவர்கள்‌ அறிந்திருந்தார்கள்‌. இதுபற்றி அல்லாஹ்‌ கூறுகின்றான்‌: “அவர்கள்‌ நன்றாக அறிந்திருந்தும்‌ அவர்களிடம்‌ வருவதை எதிபார்த்திருந்த அதே நபி வந்த சமயத்தில்‌ நிராகரித்தார்கள்‌. எனவே
நிராகரிப்பவர்கள்‌ மீது அல்லாஹ்வின்‌ சாபம்‌ உண்டாகட்டும்‌". (2:89)

இதுவே அனைத்து அறிஞர்களின்‌ விளக்கமாகும்‌. அன்றி அந்நபியைக்‌ கொண்டு பிரார்த்திப்பார்கள்‌ என்றோ, சத்தியம்‌ செய்வார்கள்‌ என்றோ அறிவிக்கின்ற எது சான்றும்‌ அறிஞர்கள்‌ வழியாக அறிவிக்கப்படவில்லை. 'யஸ்தஃப்திஹூன்‌' என்று திருமறையில்‌ காணப்படும்‌ வார்த்தைக்கு 'வெற்றியைத்‌ தேடுவார்கள்‌' என்பது பொருளாகும்‌. முஹம்மத்‌ (ஸல்‌) அவர்கள்‌ நபியாக அனுப்பப்பட்ட பிறகு அவர்களையும்‌ சேர்த்து முஷ்ரிக்குகளோடு போராடி வெற்றி பெறுதல்‌ என்று விளங்கிக்‌ கொள்ள வேண்டும்‌.

அதுமட்டுமின்றி நபியவர்கள்‌ அனுப்பப்பட்ட பிறகு இவர்கள்‌ வெற்றி பெறவும்‌ இல்லை. அந்த நபி தம்‌ சமூகத்தைச்‌ சார்ந்தவர்‌ அல்லர்‌ என்று தெரிந்து கொண்ட போது அரபிகள்‌ மீதுள்ள பொறாமையினால்‌ பெருமானாரை நிராகரித்து விட்டார்கள்‌. இதனால்‌
தோல்விதான்‌ அவர்களைச்‌ சந்தித்தது. நபியை ஈமான்‌ கொண்டு அவர்களுடன்‌ சேர்ந்து போராடிய ஒரு சிலர்‌ மட்டுமே வெற்றி பெற்றனர்‌. மற்றவர்கள்‌ காஃபிராகி தோல்வி அடைந்தனர்‌. இந்த சம்பவத்தைப்‌ பற்றி இன்னும்‌ அதிகமாக எமது ‘தலாயிலுந் நுபுவ்வத் ' என்ற நூலிலும்‌, ‘அல் இஸ்திஹாஸதுல் கபீர்’ என்ற நூலிலும்‌ விளக்கியுள்ளோம்‌.

இப்னு இஸ்ஹாக்‌ அறிவிக்கிறார்கள்‌. உமர்‌ பின்‌ கதாத்துல்‌ அன்சாரி என்பவர்கள்‌ தமது சமூகத்தில்‌ சில மக்கள்‌ இஸ்லாத்தை தழுவியது குறித்து விளக்கும்போது சொன்னார்களாம்‌ 'எங்களுக்கு அல்லாஹ்வின்‌ அருளும்‌, ஹிதாயத்தும்‌ (நேர்வழியும்‌)
இருந்தும்‌ கூட இஸ்லாத்தின்‌ பக்கம்‌ எங்களை ஈர்த்தது என்னவென்றால்‌ வேறு சில யூதர்களிடமிருந்து கேட்டுத்‌ தெரிந்த சில செய்திகள்‌ தான்‌. அன்று நாங்கள்‌ முஷ்ரிக்குகளாக இருந்தோம்‌. யூதர்கள்‌ வேதமுடையவார்களாக இருந்தார்கள்‌.
அவர்களிடம்‌ அறிவும்‌ இருந்தது. எங்களிடம்‌ அதுவும்‌ இல்லை. எங்களுக்கு மத்தியில்‌ பற்பல சண்டைகளும்‌, சச்சரவும்‌ ஏற்படுவதுமுண்டு. அவர்கள்‌ விரும்பாத எதையும்‌ நாங்கள்‌ செய்தால்‌ சீக்கிரம்‌ நபி ஒருவர்‌ வரப்போகிறார்‌. முற்கால சமூகத்தார்களான
ஆது, இரம்‌ கூட்டத்தார்கள்‌ வெட்டிக்‌ கொல்லப்பட்டதுபோல அந்த நபியுடன்‌ சேர்ந்து
உங்களையும்‌ நாங்கள்‌ வெட்டிக்‌ கொன்று விடுவோம்‌ என்று கூறி எங்களை எச்சரிப்பாார்கள்‌. நாங்கள்‌ அவர்களிடமிருந்து இவ்வாறு பலதடவை கேட்டிருக்கிறோம்‌.

ஆனால் நபி முஹம்மத்‌ (ஸல்‌), அவர்களைத்‌ திருத்தூதராக அல்லாஹ்‌ அனுப்பி வைத்தபோது அந்த நபி எங்களை அல்லாஹ்வின்பால்‌ அழைத்தார்கள்‌. நாங்கள்‌ அவ்வழைப்பை ஏற்று இஸ்லாத்தை தழுவினோம்‌. இந்த யூதர்கள்‌ எதனால்‌ எங்களை
எச்சரித்துக் கொண்டிருந்தனர்‌ என்பதையும்‌ புரிந்து கொண்டோம்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ அனுப்பப்பட்ட உடனே விரைந்து சென்று நாங்கள்‌ அவர்களை ஈமான்‌ கொண்டோம்‌. ஆனால்‌ யூதர்கள்‌ அந்த நபியை நிராகரித்தார்கள்‌. ஸுரத்துல்‌ பகராவின்‌ கீழ்வரும்‌
வசனங்கள்‌ எங்கள்‌ இருசாராரிலும்‌ இறங்கின.

"தம்மிடம்‌ உள்ள வேதத்தை மெய்ப்பித்துக்‌ காட்டுகின்ற வேதம்‌ அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்தது. அதற்கு முன்னெரெல்லாம்‌ அவர்கள்‌ நிராகரிப்பவர்கள்‌ மீது தங்களுக்கு (நபியைக்‌ கொண்டு) வெற்றி அளிக்கும்படி இறைவனிடம்‌ பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்‌. ஆனால்‌ அவர்கள்‌ நன்றாக அறிந்தும்,‌ நிச்சயமாக வருமென்றும் எதிர்ப்பார்த்துக்‌ கொண்டிருந்த நபி வந்த சமயத்தில்‌
நிராகரித்தார்கள்‌. எனவே நிராகரிப்பவர்கள்‌ மீது அல்லாஹ்வின்‌ சாபம்‌ உண்டாகட்டும்‌". (2:89)

ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள்‌ இந்த ஆயத்தின்‌ காரணத்தில்‌ இதைக்‌ கூறுகிறார்கள்‌. இத்தகைய ரிவாயத்துகளில்‌ நபிகளைப்‌ பொருட்டாக வைத்துப்‌ பிரார்த்தித்ததாக ஒன்றும்‌ காணப்படவில்லை. மாறாக இதில்‌ நபியை அனுப்ப வேண்டுமென்று அல்லாஹ்விடம்‌ பிரார்த்தித்திருக்கிறார்கள்‌.

இந்த ஆயத்து இறங்குவதற்குக்‌ காரணங்கள்‌ வேறு மாதிரியாகவும்‌ சொல்லப்படுகிறது. இப்னு அப்பாஸ்‌ (ரலி) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌. 'நபிகள்‌ (ஸல்) அவர்கள்‌ அனுப்பப்படுவதற்கு முன்னர்‌ அவ்ஸ்‌, கஸ்ரஜ்‌ என்ற இரு கோத்திரத்தாருக்கும்‌ எதிராக நபியவார்களைக்‌ கொண்டு வெற்றி பெறலாம்‌ என்று யூதர்கள்‌ ஆசித்துக்‌ கொண்டிருந்தனர்‌. அதே நபியவர்கள்‌ அரபிகளின்‌ வம்சத்திலிருந்து அனுப்பப்பட்டதனால்‌ அவர்களை நிராகரித்தனர்‌. அந்த நபியின்‌ விஷயத்தில்‌ அவர்கள்‌ முன்னர்‌ கூறியவை அனைத்தையும்‌ புறக்கணித்தனர்‌. முஆத்‌ பின்‌ ஜபலும்‌, பிஷர்‌ பின்‌ பாராவும்‌, தாவூத்‌ பின்‌ ஸலமாவும்‌ (யூதர்களே!) இஸ்லாத்தைத்‌ தழுவுங்கள்‌, அல்லாஹ்வை அஞ்சி பயற்து நடந்து கொள்ளுங்கள்‌. மேலும்‌ நாங்கள்‌ முஸ்ரிக்குகளாக (இணை வைப்பவர்களாக) இருந்த கட்டத்தில்‌ எங்களுக்கு எதிராக உதவி தேடிக்‌ கொண்டிருந்தீர்கள்‌. நபியவர்கள்‌ அனுப்பப்பட இருப்பதாகக்‌ கூறி அவர்களின்‌ தன்மைகளை எங்களுக்கு விளக்கிக்‌
காட்டித்‌ தந்த நீங்கள்‌ இன்று அந்த நபி வந்தபோது மறுக்கிறீர்களா? என்று கூறினார்கள்‌.

அதற்கு பனூ நுளைருடைய சகோதரரான ஸலாம்‌ பின்‌ மிஷ்கம்‌ என்பவர்‌ 'நாங்கள் உங்களிடம்‌ கூறிக்‌ கொண்டிருந்த நபி இவரல்லர்‌. இவர்‌ எங்களுக்கு புதிதாக எதையும்‌ கொண்டு வரவில்லை என்று கூறியதும்‌ மேற்கூறிய ஆயத்தை அல்லாஹ்‌
இறக்கினான்‌. மேலும்‌ இதே கருத்திற்குரிய ஹதீஸை அபுல்‌ ஆலியா கூறியதாக ரபீவு பின்‌ அனஸைப்‌ பற்றி மற்றொரு வழியாகவும்‌ ரிவாயத்‌ செய்யப்படுகிறது.


இது விஷயத்தில்‌ அப்துல்‌ மலிக்‌ பின்‌ ஹாரூன்‌ ரிவாயத்

ஆனால்‌ அப்துல்‌ மலிக்‌ பின்‌ ஹாரூன்‌ என்பவர்‌ இப்னு அப்பாஸைப்‌ பற்றி ஒரு ஹதீஸை ரிவாயத்‌ செய்கிறார்‌.

அதில்‌ இப்னு அப்பாஸ்‌ 'கைபரில்‌ உள்ள யூதர்கள்‌ கத்பான்‌ கோத்திரத்தாருடன்‌ போராடி யுத்தம்‌ செய்து கொண்டிருந்தனர்‌. ஆனால்‌ இந்த யூதர்கள்‌ கத்பான் கோத்திரத்தடன்‌ மோதும்‌ போதெல்லாம்‌ தோல்வி அடைந்து விடுவது வழக்கம்‌. எனவே கீழ்வரும்‌
துஆவைக்‌ கொண்டு யூதர்கள்‌ அல்லாஹ்விடம்‌ பாதுகாவல்‌ தேடினார்களாம்‌. 'இறைவா எழுதப்படிக்கத்‌ தெரியாத நபியான முஹம்மத்‌ (ஸல்‌) அவர்களின்‌ பொருட்டால்‌ உன்னிடம்‌ கேட்கிறோம்‌. இந்த நபியைக்‌ கடைசி காலத்தில்‌ அனுப்புவதாக நீ
எங்களுக்கு வாக்களிதுள்ளாய்‌. எனவே அந்நபியின்‌ பொருட்டால்‌ எங்களுக்குச்‌ சாதகமாக நீ உதவி செய்தருள்‌' என்று கூறி அவர்கள்‌ பிரார்த்தனை செய்யும்‌ போதெல்லாம்‌ கத்பான்‌ கோத்திரத்தாரை முறியடித்து விடுவார்கள்‌.

ஆனால்‌ அந்த நபி திருத்தூதராக அனுப்பப்பட்டபோது அவர்கள்‌ நிராகரித்து விட்டனர்‌. எனவே அல்லாஹ்‌ இந்த 2:89 ஆயத்தை இறக்கினான்‌.

ஹாக்கிம்‌ 'முஸ்தத்ரக்‌' என்னும்‌ தமது நூலில்‌ இதை ரிவாயத்‌ செய்து விட்டு தேவைகள்‌ ஏற்பட்டதனால்‌ இந்த ஹதீஸை ரிவாயத்‌ செய்ததாகக்‌ குறிப்பிடுகிறார்‌.
ஆனால்‌ இதை அறிஞர்கள்‌ மறுத்து இன்கார்‌ செய்துள்ளனர்‌. ஏனெனில்‌ இது அப்துல்‌
மலிக்‌ பின்‌ ஹாரூன்‌ அறிவிக்கும்‌ ஹதீஸ்‌ ஆகும்‌. ஹதீஸ்‌ அறிவிப்பாளர்களில்‌ இந்த அப்துல்‌ மலிக்‌ பின்‌ ஹாரூன்‌ மிகவும்‌ வலுவில்லாதவர்‌, பொய்யர்‌, ஒதுக்கப்பட்டவர்‌ என்பது எல்லா அறிஞர்களும்‌ அறிந்த உண்மை. யஹ்யா பின்‌ மயீனும்‌, மற்ற
இமாம்களும்‌ அப்துல்‌ மலிக்‌ பின்‌ ஹாரூனைப்‌ பற்றிக்‌ கூறியதை நாம்‌ முன்னர்‌ குறிப்பிட்டுள்ளோம்‌. அவருடைய பொய்களில்‌ இந்த ஹதிஸும்‌ ஒன்றாகும்‌.

திருமறை வியாக்கியானிகள்‌, வரலாற்று ஆசிரியர்கள்‌ ஆகியோரின்‌ ஒருமுகமான தீர்மானத்தின்படி மேற்குறித்த 2:89 திருமறை வசனம்‌ மதீனாவை அடுத்து வாழ்ந்திருந்த பனூ கைனுகா, பனூ குரைளா, பனூ நளீர்‌ வம்சத்திலுள்ள யூதர்கள்‌ விஷயத்தில்‌
இறக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. மேற்படி யூதர்கள்‌ அவ்ஸ்‌, கஸ்ரஜ்‌ வம்சத்தினருடன்‌ ஒப்பந்தம்‌ செய்திருந்தனர்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ மதீனாவுக்கு
வந்தபோதும்‌ அவர்களுடன்‌ ஒப்பந்தம்‌ செய்திருந்தார்கள்‌. ஆனால்‌ பனூ கைனுகாவும்‌,
பனூ நளீரும்‌ நபியுடன்‌ செய்திருந்த ஒப்பந்தத்தை மீறி நடக்க முற்பட்டபோது அவர்களோடு நபி (ஸல்‌) அவர்கள்‌ போர்‌ தொடுத்தார்கள்‌.

முதலில்‌ பனூ கைனுகாவுடனும்‌, பிறகு பனூ நளீருடனும்‌ சண்டை செய்தார்கள்‌. திருமறையின்‌ ஸூரத்துல்‌ ஹஸ்ரும்‌ இவர்கள்‌ விஷயத்தில்‌ தான்‌ இறங்கியது. பின்னர்‌ கந்தக்‌ யுத்தம்‌ நடந்த ஆண்டு பனூ குரைளாவுடன்‌ போர்‌ தொடுத்தார்கள்‌. மேற்படி
ஆயத்துக்கு இது உண்மையான காரணமாக இருக்க, அப்துல்‌ மலிக்‌ பின்‌ ஹாரூன்‌ தமது ஹதீஸில் இந்த ஆயத்தைப்‌ பற்றி அது கைபரில்‌ உள்ள யூதர்கள்‌ விஷத்திலும்‌, கத்பான்‌ வம்சத்தார்கள்‌ விஷயத்திலும்‌ தான்‌ இறங்கியது என்று எப்படிக்‌ கூற முடியும்‌?

மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ்‌ பொய்யை எப்படி சொல்ல வேண்டுமென்று கூடத்‌ தெரியாத ஜாஹிலான ஒரு மனிதர்‌ அறிவித்த ஹதீஸாகும்‌. இது பொய்‌ என்பதற்கு இன்னொரு காரணமும்‌ உண்டு. இந்த துஆவைக்‌ கொண்டு பிரார்த்தித்த வேளையில்‌
கத்பான்‌ படையினர்‌ தோற்கடிக்கப்பட்டு யூதர்கள்‌ வெற்றிப்‌ பெற்றார்களாம்‌. இந்த சம்பவத்தை இவரைத் தவிர எவரும்‌ சொன்னதில்லை. இத்தகைய சம்பவங்கள்‌ மற்ற அறிவிப்பாளர்களுக்கு எல்லாம்‌ தெரியாத மறைவான ஒன்றல்ல. உண்மையாக
ஹதீஸைக்‌ கூறக்கூடியவர்கள்‌ இச்சம்பவம்‌ நிகழ்ந்திருப்பின்‌ அதை உள்ளபடி எடுத்துக்‌
கூறியிருப்பார்கள்‌.

இவ்வாறான ஆதாரங்களைக்‌ காட்டி நபியைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்வதற்கும்‌, அவர்களைப்‌ பொருட்டாகக்‌ கொண்டு கேட்பதற்கும்‌ அனுமதியுண்டு என்று எப்படி சட்டம்‌ விதிக்க முடியும்‌? ஒருபோதும்‌ இது ஆதாரமாக எடுக்கப்பட மாட்டாது. ஏனெனில்‌ முதல்‌ காரணம்‌ இது ஹதீஸ்‌ என நிரூபிக்கப்படவில்லை. இரண்டாவது இதில்‌ 2:89
ஆயத்திலும்‌ இவர்‌ கூறியதற்குச்‌ சான்றுகள்‌ இல்லை.

அன்றி இது ஹதீஸ்‌ என்று நிரூபிக்கப்பட்டால்‌ கூட யூதர்களுக்குரிய ஷரீஅத்தின்‌ சட்டமாக இருக்கலாம்‌. நமது இஸ்லாமிய ஷரீஅத்தில்‌ இதை ஆதாரமாக எடுக்க முடியாதல்லவா? சிருஷ்டியைப்‌ பொருட்டாக வைத்து பிரார்த்திப்பதற்கு யூதர்களுக்கு அனுமதி இருப்பதால்‌ முஸ்லிம்களுக்கு அனுமதி ஒன்றும்‌ இல்லை. நபி யூஸுப்‌ (அலை) அவர்களின்‌ பெற்றோரும்‌, சகோதரர்களும்‌ ஸுஜூது செய்தார்கள்‌ என்று இறைவன்‌ கூறியுள்ளான்‌. இது முஸ்லிம்களுக்கு அனுமதிக்கப்படிருக்கிறதா? இல்லையே. குகை வாசிகளைப்‌ பற்றி இறைவன்‌ குறிப்பிடும்‌ போது: “இவர்கள்‌ விஷயத்தில்‌ எவருடைய அபிப்பிராயம்‌ மிகைத்ததோ அவர்கள்‌, இவர்களது தங்குமிடத்தில்‌ ஒரு பள்ளியை நாங்கள்‌ அமைத்து விடுவோம்‌ என்று கூறினார்கள்‌” என இறைவன்‌ குறிப்பிடுகிறான்‌. (18:21)

இவை முன்னர்‌ தோன்றிய சமூகங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கலாம்‌. ஆனால்‌ முஸ்லிம்களாகிய நாம்‌ கப்றுகளில்‌ மசூதிகள்‌ கட்டுவதை விட்டும்‌ தடுக்கப்பட்டிருக்கிறோம்‌. எனவே மேற்படி ஹதீஸை நாம்‌ ஆதாரமாக எடுக்க முடியாது.

திருமறையில்‌ 2:89 ம்‌ வசனத்தில்‌ 'யஸ்தஃப்திஹுன' என்று வருகிறது. அதனால்‌ நபியைக்‌ கொண்டு வஸீலா தேடினார்கள்‌ என்று கருத்தல்ல. இந்த வார்த்தைக்கு
'தலபுல்‌ஃபதஹு' வெற்றியைத்‌ தேடல்‌ என்பது கருத்தாகும்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ கூட முஹாஜிரீன்களில்‌ மிக ஏழ்மையானவர்களைக்‌ கொண்டு வெற்றியைத்‌ தேடியுள்ளார்கள்‌. அதாவது அவர்களின்‌ பிரார்த்தனையைக்‌ கொண்டு வெற்றிக்‌
கிடைப்பதைக்‌ தேடினார்கள்‌.

மற்றொரு இடத்தில்‌ உங்களுக்கு வெற்றியும்‌, உணவும்‌, அருளும்‌ யாவுமே உங்களில்‌ ஏழ்மையானவர்களின்‌ தொழுகைகள்‌, கலப்பற்ற செய்கைகள்‌, பிரார்த்தனைகள்‌ ஆகியவற்றால்‌ கிடைக்கின்றன என்று கூறினார்கள்‌.

"நீங்கள்‌ வெற்றியைத்‌ தேடி இருந்தால்‌ வெற்றி உங்களுக்கு வந்து விடும்‌” என்றும்‌ திருமறை கூறுகிறது. (8:19) இங்கு 'யஸ்தஃப்திஹு' என்ற வார்த்தைக்கு திருமறையும்‌ ‘வெற்றியைத்‌ தேடுதல்‌' என்ற கருத்தையே வழங்குகிறது. ஆகவே இந்த ஆயத்தில்‌ நபியைக்‌ கொண்டு வஸீலா தேடுதல்‌ என்ற கருத்தை நாடும்‌ சான்றுகள்‌ இல்லவேயில்லை. இதனால்‌ அத்தகைய கருத்துகளை இந்த ஆயத்தில்‌ சுமத்துவது கூடாது. வெற்றியைத்‌ தேடுதல்‌ என்ற கருத்து தெளிவாக இதற்கு உறுதிப்படுத்தப்‌ பட்டிருக்கிறது மட்டுமல்ல. மேற்படி ஹதீஸில்‌ காணப்பட்ட யூதர்கள்‌ அரபிகளை முறியடித்தார்கள்‌, வென்றார்கள்‌ என்பவை அனைத்தும்‌ பொய்யானவை. ஏனெனில்‌ யூதர்களின்‌ பழைய வரலாற்றில்‌ இருந்து அரபிகளை வென்றார்கள்‌, முறியடித்தார்கள்‌ என்பதைக்‌ காணமுடியாது. என்றுமே யூதர்கள்‌ தாம்‌ அரபிகளுக்கு இரையாக இருந்திருக்கிறார்கள்‌. அரபிகளிடம்‌ வந்து அபயம்‌ தேடி ஒப்பந்தம்‌ செய்து கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள்‌. 

இதை திருமறையும்‌ விளக்குகிறது: “அவர்கள்‌ எங்கிருந்தாலும்‌ அவர்கள்‌ மீது இழிவு
விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின்‌ உடன்படிக்கையைக்‌ கொண்டும்‌, (விசுவாசம்‌
கொண்ட) மனிதர்கள்‌ (அளிக்கும்‌ அபயம்‌) என்னும்‌ உடன்படிக்கையைக்‌ கொண்டுமே அன்றி அவர்கள்‌ தப்பித்துக்‌ கொள்ள முடியாது. அல்லாஹ்வின்‌ கோபத்திலும்‌ அவர்கள்‌ சிக்கிக்‌ கொண்டார்கள்‌. இழிவும்‌ அவர்கள்‌ மீது விதிக்கப்பட்டு விட்டது. இதன்‌ காரணம்‌ அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ வசனங்களை எப்பொழுதுமே நிராகரித்துக்‌ கொண்டும்‌,
நியாயமின்றி நபிமார்களைக்‌ கொலை செய்து கொண்டுமிருந்ததுதான்‌. மேலும்‌ அவர்கள்‌
பாவம்‌ செய்து கொண்டிருந்ததும்‌, அதிலும்‌ வரம்பு மீறி வந்ததும்‌ இதற்குக்‌ காரணமாகும்‌". (3:12)

தொன்றுதொட்டு யூதர்கள்‌ வீழ்ச்சி, இழிவு இவற்றை அனுபவித்துக்‌ கொண்டிருந்தனர்‌. அல்லாஹ்வும்‌ விசுவாசம்‌ கொண்டவர்களும்‌ அபயம்‌ அளிக்கா விட்டால்‌ அன்றே அவர்கள்‌ தொலைந்திருப்பார்கள்‌. இத்தகைய இழிவுக்கு ஆளான சமூகம்‌ அரபிகளையோ, மற்றவர்களையோ வீழ்த்த முடியுமா? இஸ்லாம்‌ பரவுவதற்கு முன்னரே யுத்தம்‌ செய்யக்‌ கூடாதென ஒப்பந்தம்‌ செய்து கொண்டவர்களுடன்‌ போர்‌ தொடுத்தார்கள்‌. ஈஸா (அலை) அவர்கள்‌ நபியாக அனுப்பப்பட்டதிலிருந்தே யூதர்கள்‌ அபிமானத்தை இழந்தார்கள்‌. ஈஸா நபியைப்‌ பொய்பிக்க முனைந்தார்கள்‌. இதை இறைவன்‌ குறிப்பிடும்‌ போது: "ஈஸாவே! நிச்சயமாக நான்‌ உம்மை (உம்முடைய ஆயுளைப்‌) பூர்த்தி
செய்வேன்‌. உம்மை என்‌ பக்கம்‌ உயர்த்திக்‌ கொள்வேன்‌. நிராகரிப்போரின்‌ அவதூறுகளிலிருந்து உம்மைத்‌ தூய்மைப்‌ படுத்துவேன்‌. உம்மைப்‌ பின்பற்றுவோரை நிராகரிப்பவர்களை விட மறுமைநாள்‌ வரை மேலாக்கியும்‌ வைப்பேன்‌" என்று
கூறினான்‌. (3:55)

மேலும்‌ ஒரு திருவசனத்தில்‌ “விசுவாசிகளே! நீங்கள்‌ அல்லாஹ்வுக்கு உதவி புரிவோராகி விடுங்கள்‌. மர்யமுடைய மகன்‌ ஈஸா (தம்‌) சிஷ்யர்களை நோக்கி
அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுபவர்‌ யார்‌? என்று கேட்ட சமயத்தில்‌ நாங்கள்‌ அல்லாஹ்வுக்காக உதவி செய்வோம்‌ என்று அந்த சிஷ்யர்கள்‌ கூறினார்கள்‌. ஆயினும்‌ இஸ்ராயீலின்‌ சந்ததிகளின்‌ ஒரு கூட்டத்தினர்‌ தாம்‌ அவரை விசுவாசித்தனர்‌. மற்றொரு
கூட்டத்தார்‌ நிராகரித்தனர்‌. விரோதிகளை வெல்ல நாம்‌ தாம்‌ உதவி புரிந்தோம்‌. அதனால்‌ அவர்கள்‌ வெற்றி அடைந்தனர்‌” (61:14) என்று இறைவன்‌ கூறினான்‌.

மேலும்‌ யூதர்களான இவர்கள்‌ நபி ஜக்கரிய்யா (அலை) அவர்களின்‌ மகன்‌ நபி யஹ்யா (அலை), மற்றும்‌ இறைத்தூதர்களை கொலை செய்து விட்டனர்‌. அல்லாஹ்‌ இதை திருமறையில்‌ விளக்கும்போது "வீழ்ச்சியும்‌, இழிவும்‌ அவர்கள்‌ மீது விதிக்கப்பட்டு
விட்டன. அல்லாஹ்வின்‌ கோபத்திலும்‌ அவர்கள்‌ சார்ந்து விட்டார்கள்‌. மெய்யாகவே அவர்கள்‌ அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்தும்‌, நியாயமின்றி நபிமார்களைக்‌ கொலை செய்தும்‌ வந்தது இதற்குக்‌ காரணமாகும்‌. இவ்வளவு பெரிய குற்றங்களை அவர்கள்‌ செய்(யும்படி நேர்ந்‌)ததற்கு காரணம்‌ அவர்கள்‌ (அல்லாஹ்வின்‌ கட்டளைகளை
அடிக்கடி) மீறி பாவம்‌ செய்துக்‌ கொண்டிருந்ததுதான்‌" என்று கூறினான்‌. (2:61)

உமர்‌ (ரலி) அவர்கள்‌ போன்ற பெரும்‌ நபித்தோழர்கள்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ வாழ்ந்திருக்கையிலும்‌, அவர்கள்‌ இறந்த பின்னரும்‌ அவர்களைக்‌ கொண்டு வஸீலா
தேடாமல்‌ நபிக்கு வழிபட்டும்‌, அவர்களின்‌ பிரார்த்தனை, சிபாரிசு ஆகியவற்றைக்‌ கொண்டும்‌ இறைவனோடு சமீபிப்பதை (வஸீலாவை) தேடி இருக்கிறார்கள்‌. இப்படி இருக்க தரத்தில்‌ குறைந்த சிருஷ்டிகளையும்‌, இறந்து போனவர்களையும்‌,
கண்பார்வைக்கு அப்பால்‌ மறைந்து இருப்பவர்களையும்‌, மலக்குகளையும்‌, மற்றும்‌
சிருஷ்டிகளில்‌ யார்‌ யாரைக்‌ கொண்டெல்லாமோ வஸீலா தேடப்படுவது பற்றி என்ன சொல்லப்படும்‌? நிச்சயமாக இவை ஷிர்க்காகும்‌.

இறைவன்‌ இதை வன்மையாக கண்டித்திருக்கிறான்‌: "நபியே! (இணை வைத்து வணங்குவோரை நோக்கி) நீர்‌ கூறும்‌. அல்லாஹ்வையன்றி (வேறு தெய்வங்கள்‌
இருப்பதாக) நீங்கள்‌ எண்ணிக்‌ கொண்டிருக்கிறீர்களே அவற்றை நீங்கள்‌ (உங்கள்‌
கஷ்டங்களை போக்க) அழையுங்கள்‌. (அவ்வாறு அழைத்தால்‌) அவை உங்களுடைய யாதொரு கஷ்டத்தை நீக்கி விடவோ, தட்டி விடவோ சக்தியற்றவை என்பதை அறிந்து கொள்வீர்கள்‌. இவர்கள்‌ இறைவனென்று அழைப்பவையும்‌ தங்களுக்காக தம்‌ இறைவனிடம்‌ வணக்கங்களால்‌ சமீபிப்பதைத்‌ தேடிக்‌ கொண்டு 'அவர்களில்‌
இறைவனோடும்‌ மிக்க நெருங்கியவர்‌ யார்‌?' என்பதையும்‌ வேண்டிக்‌ கொண்டு அவனுடைய அருளை எதிபார்த்து அவனுடைய வேதனைக்கு பயப்படுகின்றனர்‌. திட்டமாக உம்‌ இறைவனின்‌ வேதனையோ மிக மிகப்‌ பயப்படக்‌ கூடியது”. (17:56-57)

ஸலபுஸ்ஸாலிஹீன்களில்‌ ஒரு சாரார்‌ 'முன்னர்‌ தோன்றிய சமூகங்களிலுள்ள சிலர்‌ மலக்குகளையும்‌, ஈஸா, உஸைர்‌ போன்ற நபிமார்களையும்‌ அழைத்துப்‌ பிரார்த்தித்துக்‌ கொண்டிருக்கையில்‌ அல்லாஹ்‌ அவர்களைத்‌ தடுத்து நிறுத்திக்‌ கூறினான்‌. நீங்கள்‌
அழைக்கின்ற இந்த மலக்குகளும்‌, நபிமார்களுமெல்லாம்‌ என்னையே பயந்து என்‌
வேதனைக்கு அஞ்சி ஒடுங்குகின்றனர்‌. என்‌ பக்கம்‌ சமீபிப்பதற்கு ஆசைப்படுகின்றனர்‌. அவர்களை நோக்கிப்‌ பிரார்த்திக்கின்ற உங்களுக்கு ஏற்படும்‌ தீமைகளில்‌ அணுவளவைக்‌ கூட அவர்களால்‌ தட்டி விட முடியாது' என்று குறிப்பிடுகிறார்கள்‌.

இதைத்‌ திருமறையும்‌ விளக்குகிறது: “ஒருமனிதருக்கு வேதத்தையும்‌, நுண்ணறிவையும்‌ (ஞானத்தையும்‌), நபித்துவத்தையும்‌ அல்லாஹ்‌ கொடுத்த பின்னர்‌
அவர்‌ மனிதர்களை நோக்கி 'என்னையே வணங்குங்கள்‌ என்று (அவர்‌) கூறுவதற்கில்லை. ஆயினும்‌ (மனிதர்களை நோக்கி) நீங்கள்‌ வேதத்தைக்‌ கற்றுக்‌ கொடுத்துக்‌ கொண்டும்‌, ஓதிக்‌ கொண்டும்‌ இருப்பதன்‌ காரணமாக இறையடியார்களாக
மாறி விடுங்கள்‌ என்று கூற வேண்டும்‌. தவிர மலக்குகளையும்‌, நபிமார்களையும்‌ தெய்வங்களாக எடுத்துக்‌ கொள்ளுங்கள்‌ என்று அவர்‌ உங்களுக்கு கட்டளையிட மாட்டார்‌. எனவே நீங்கள்‌ முற்றிலும்‌ இறைவனுக்கு வழிபட்டதன்‌ பின்னர்‌ நிராகரிக்கும்படி அவர்‌ உங்களை ஏவுவாரா?" (3:79-80).


கப்றும்‌ வைபவங்களும்‌

நபி (ஸல்‌) அவர்கள்‌ தம்‌ கப்றை பள்ளியாகத்‌ திருப்பி விடாமலிருக்க (அதில்‌ வைபவங்கள்‌, கூடு, கொடிகள்‌ எடுக்காமலிருக்கச்‌ சொல்லியிருப்பதுடன்‌) தம்‌ மரணத்‌
தருவாயில்‌ (யூதர்களுக்கும்‌, கிறிஸ்தவர்களுக்கும்‌ அல்லாஹ்வின் சாபம்‌ உண்டாகட்டும்‌. ஏனெனில்‌ அவர்கள்‌ தம்‌ நபிமார்களின்‌ கப்றுகளை பள்ளிவாசல்களாக ஆக்கி விட்டார்கள்‌' என்று கூறியதாக ராவி குறிப்பிடுகிறார்‌. இவர்கள்‌ செய்கின்ற இந்தச்‌ செய்கையைப்‌ பற்றி நபியவர்கள்‌ எச்சரிக்கை செய்தார்கள்‌. (புகாரி, முஸ்லிம்)

மற்றொரு ஹதீஸில்‌ 'இறைவா! என்னுடைய கப்றை அனுஷ்டானங்கள்‌ செலுத்தப்படும்‌ பிம்பமாக ஆக்கி விடாதே! தம்‌ நபிமார்களின்‌ கப்றுகளில பள்ளி
வாசல்களைக்‌ கட்டி வைத்திருக்கும்‌ சில சமூகத்தார்கள்‌ மீது அல்லாஹ்வின்‌ கோபம்‌
அதிகமாகிக்‌ கொண்டிருக்கிறது' என்று இமாம்‌ மாலிக்‌ தம்‌ முவத்தா என்ற நூலில்‌ அறிவிக்கிறார்கள்‌.

இன்னுமொரு ஹதீஸில்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ 'நபி ஈஸாவை கிறிஸ்தவர்கள்‌ வரம்பு மீறித்‌ துதித்தது போல என்னை நீஙகள்‌ துதிக்காதீர்கள்‌. நான்‌ ஒரு அடிமை. எனவே என்னைப்‌ புற்றி அல்லாஹ்வின்‌ அடிமை என்றும்‌, அவன்‌ தூதர்‌ என்றும்‌ கூறுங்கள்‌'
என்று! கூறினார்கள்‌. (புகாரி, முஸ்லிம்)

மேலும்‌ கூறினார்கள்‌: அல்லாஹ்வும்‌, முஹம்மதும்‌ நாடியவை நடக்கும்‌ என்று ௯றாமல்‌ அல்லாஹ்‌ நாடியவை தான்‌ நடக்கும்‌ என்று கூறுங்கள்‌. அல்லாஹ்‌
நாடியதற்குப்‌ பின்னர்தான்‌ முஹம்‌மத்‌ நாட முடியும்‌.

காட்டரபிகளில்‌ ஒருவர்‌ நபிகளிடம்‌ வந்து 'நீங்களும்‌, அல்லாஹ்வும்‌ நாடியவை (நடந்தது) என்றார்‌. இதைக்கேட்ட நபி (ஸல்‌) அவர்கள்‌ என்னை அல்லாஹ்வுக்கு (நிகராக்கி) இணையாக்கி விட்டீர்களா? அல்லாஹ்‌ நாடியது மட்டும்‌ (நடந்தது) என்று கூறும்‌ என்றார்கள்‌.

இதைப்பற்றி இறைவன்‌ திருமறையில்‌ கூறுகிறான்‌: "நீர்‌ கூறும்‌! அல்லாஹ்‌ நாடினாலன்றி எனக்கு யாதொரு நன்மையோ, தீமையோ செய்து கொள்ள எனக்குச்‌ சக்தியில்லை. நான்‌ மறைவானவற்றை அறியக்‌ கூடுமாயின்‌ நன்மைகளையே அதிகம்‌
தேடிக்‌ கொண்டிருப்பேன்‌. (யாதொரு தீங்கும்‌ என்னை அணுகியிராது". (7:188)

மற்றொரு இடத்தில்‌ இறைவன்‌ கூறுகிறான்‌: "நீர்‌ கூறும்‌. அல்லாஹ்‌ நாடியதையன்றி யாதொரு நன்மையோ, தீமையோ நான்‌ எனக்கே தேடிக்‌ கொள்ள சக்தியற்றவன்‌ (10:49). மேலும்‌ கூறினான்‌: "நபியே! நீர்‌ விரும்பியவர்களை நேரான வழியில்‌ செலுத்தி விட உம்மால்‌ முடியாது. மாறாக அல்லாஹ்‌ மட்டும்‌ தான்‌ விரும்பியவர்களை நேரான வழியில்‌ செலுத்துகிறான்‌" (28:56). "நபியே! இவ்விஷயத்தில்‌ உமக்கு (யாதொரு) அதிகாரமும் இல்லை" (3;128)

இதுவே ஏகத்துவத்தின்‌ உண்மை நிலை. அல்லாஹ்விடத்தில்‌ மிக்க மதிப்பிற்கும்‌, பெருமைக்கும்‌, கண்ணியத்திற்குமுரிய நபி (ஸல்‌) அவர்களின்‌ நிலைமை இப்படி என்றால்‌ வேறு சிருஷ்டிகளின்‌ நிலைமை எப்படி எப்படி என்பதை சிந்தித்துப்‌ பார்க்க வேண்டும்‌.


அபுபக்கர்‌ ஸித்கீக்‌ (ரலி) அவர்கள்‌ உதவி தேடினார்களா?

அறிஞர்‌ தபரானி தமது 'முஃஜமுல்‌ கபீர்‌' என்ற நூலில்‌ 'ஒரு நயவஞ்சகன்‌ மூமின்களுக்கு கெடுதிகள்‌ செய்து கொண்டிருந்தான்‌. இதைக்‌ கண்ட அபூபக்கர்‌ ஸித்தீக்‌
(ரலி) மூமின்களை நோக்கி, வாருங்கள்‌! அல்லாஹ்வின்‌ தூதர்‌ நபி (ஸல்‌) அவர்களை
நோக்கிச்‌ செல்வோம்‌. இந்த நயவஞ்சகனின்‌ தொல்லையிலிருந்து தப்பிக்க நபிகளைக்‌
கொண்டு உதவித்‌ தேடுவோம்‌' என்றார்களாம்‌. இதற்கு நபி (ஸல்‌) அவர்கள்‌ 'என்னைக்‌ கொண்டு எப்படி உதவித்‌ தேட முடியம்‌. அல்லாஹ்வைக்‌ கொண்டுதான்‌ உதவி தேடப்பட வேண்டும்‌' என்று அபூபக்கர்‌ (ரலி) அவர்களுக்குக்‌ கூறியதாக குறிப்பிடுகிறார்கள்‌.

நபி (ஸல்‌) அவர்கள்‌ மரணமடைவதற்கு ஐந்து தினங்களுக்கு முன்னர்‌ உங்களுக்கு முன்‌ வாழ்ந்திருந்தவர்கள்‌ புதைகுழிகளைப்‌ பள்ளிகளாக அமைத்தார்கள்‌. எனவே நீங்கள்‌ அப்படிச்‌ செய்வதை விட்டும்‌ தடுக்கிறேன்‌' என்று கூறினார்கள்‌. புதைகுழிகளைப்‌ பள்ளிவாசல்களாக ஆக்கி விடாதீர்கள்‌. (முஸ்லிம்)

மேலும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ கப்றுகள்‌ மீது உட்காராதீர்கள்‌. கப்றுகளைப்‌ பார்த்து
(முன்னோக்கி) தொழாதீர்கள்‌' என்று கூறினார்கள்‌.
(முஸ்லிம்)

மேலும்‌ 'மூன்று பள்ளிவாசல்களை நோக்கி அல்லாது வேறு எந்தப்‌ பள்ளிகளுக்கும்‌ பிரயாணம்‌ செய்யப்பட மாட்டாது. அவற்றுள்‌ ஒன்று எனது மதீனா பள்ளி. மற்றொன்று மக்கா பள்ளி. மூன்றாவது பைத்துல்‌ முஹத்தஸிலுள்ள அக்ஸா பள்ளி' என்று
நபியவர்கள்‌ கூறினார்கள்‌. (புகாரி, முஸ்லிம்)

இமாம்‌ மாலிக்கிடம்‌ 'நபி (ஸல்‌) அவர்களின்‌ கப்றுக்கு வருவதாக நேர்ச்சை நேர்ந்துக்‌ கொண்டால்‌ அதன்‌ சட்டமென்ன? என்று ஒரு மனிதர்‌ வினவினார்‌. கப்றுக்கு வருவதாகக்‌ கருதினால்‌ இத்தகைய நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டியதில்லை.
நபியின்‌ பள்ளிவாசலுக்கு வருவதாக கருதினால்‌ கண்டிப்பாக அந்த நேர்ச்சையை நிறைவேற்றியாக வேண்டும்‌' என்று இமாமவர்கள்‌ பதிலளித்தார்கள்‌. பின்னர்‌ மேலே குறிப்பிட்டுள்ள புகாரி, முஸ்லிமுடைய ஹதீஸையும்‌ எடுத்துரைத்தார்கள்‌.

காளீ இஸ்மாயில்‌ என்பவரும்‌ தமது மப்ஸூத்‌ என்ற நூலிலும்‌ இதைக்‌ கூறியுள்ளார்‌.


சிருஷ்டிகளைக்‌ கொண்டு ஆணையிடுதல்‌

ஒருவன்‌ மற்றவனிடம்‌ 'சிருஷ்டிகளின்‌ மீது சத்தியமாக என்று கூறி ஆணையிட்டால்‌ இந்த சத்தியம்‌ நிறைவேறாது. சிருஷ்டிகள்‌ என்ற விஷயத்தில்‌ நபிமார்கள்‌, மலக்குகள்‌ அனைத்து படைப்பினங்களும்‌ ஒரே நிலைதான்‌. அல்லாஹ்வுக்கு சில ஹக்குகள்‌ (உரிமைகள்‌) இருக்கின்றன. அவற்றில்‌ தம்‌ படைப்புகளில்‌ எவரும்‌ பங்காளிகள்‌ அல்ல.

நபிமார்களுக்கும்‌ சில ஹக்குகள்‌ உண்டு. மூமின்களுக்கும்‌ சில ஹக்குகள்‌ உண்டு.
மக்களில்‌ சிலருக்கு மற்றவர்கள்‌ மீது சில உரிமைகள்‌, கடமைகள்‌ இருக்கின்றன.

அல்லாஹ்வுக்குரிய ஹக்கு என்னவென்றால்‌ சிருஷ்டிகளால்‌ அவன்‌ வணங்கப்பட்டு,
அவர்களால்‌ அவன்‌ இணைவைக்கப்படாமல்‌ இருப்பதாகும்‌. இதை விளக்கிக்‌ காட்டுகின்ற முஆத்‌ (ரலி) அவர்களின்‌ ஹதீஸை முன்னர்‌ நாம்‌ கூறியுள்ளோம்‌.

மத அனுஷ்டானங்கள்‌ அல்லாஹ்வுக்கு மட்டும்‌ கருதி கலப்பற்ற தூய எண்ணத்துடன்‌ செயல்படுவதும்‌, மூமின்கள்‌ தமது வாழ்வை அவன்‌ மீது பாரம்சாட்டி ஒப்படைத்து, அவன்‌ மீதே ஆசை வைத்து வாழ்வதும்‌ வணக்கத்தின்‌ முக்கிய அம்சங்களாகும்‌.
அவனை நேசிப்பதிலும்‌, அஞ்சுவதிலும்‌, பிரார்த்திப்பதிலும்‌, உதவி தேடுவதிலும்‌
அவனுடன்‌ யாரையும்‌ பங்கு சேர்க்கப்பட மாட்டாது. ஒரு ஹதீஸில்‌ அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த வண்ணம்‌ ஒருவன்‌ இறந்து விட்டால்‌ அவன்‌ நரகத்திற்கே சென்று விடுவான்‌' என்று வருகிறது.
(புகாரி, முஸ்லிம்)

பாவங்களில்‌ எது மிக பயங்கரமானது என்று கேட்கப்பட்டபோது உன்னைப்‌ படைத்த
இறைவனுக்கு இணை - துணை வைப்பது என்று நபி (ஸல்) அவர்கள்‌ பதிலளித்தார்கள்‌.

இணை வைத்தலை திருமறை வன்மையாகக்‌ கண்டிக்கிறது: "நிச்சயமாக அல்லாஹ்‌ தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்‌. இதனைத்‌ தவிர (மற்ற) எதையும்‌ தான்‌ நாடியவர்களுக்கு மன்னிப்பான்‌". (4:48-116)

 "ஆகவே இவற்றையெல்லாம்‌ தெளிவாக நீங்கள்‌ அறிந்து கொண்டு அல்லாஹ்வுக்கு (எத்தகைய) இணைகளையும்‌ ஏற்படுத்தாதீர்கள்‌" (2:22)

மேலும்‌ அல்லாஹ்‌ கூறுகிறான்‌: (மனிதர்களே! ஒன்றுக்குப்‌ பதிலாக) இரு தெய்வங்களை நீங்கள்‌ எடுத்துக்‌ கொள்ளாதீர்கள்‌. நிச்சயமாக இறைவன்‌ ஒரே ஒருவன்‌ தான்‌. ஆகவே என்னையே நீங்கள்‌ பயப்படுங்கள்‌". (16:51)

"என்னையே நீங்கள்‌ வணங்குங்கள்‌". (29:56)

"உன்னையே வணங்குகிறோம்‌. உன்னிடமே உதவித்‌ தேடுகிறோம்‌” என்று திருமறையில்‌ தோற்றுவாயில்‌ ஸூரா பாத்திஹாவில்‌ இறைவன்‌ கூறியிருக்கிறான்‌.

"மனிதர்கள்‌ பலர்‌ அல்லாஹ்‌ அல்லாதவற்றை அவனுக்கு இணையாக எடுத்துக்‌ கொண்டு அல்லாஹ்வை நேசிப்பது போல்‌ அவற்றை நேசித்துக்‌ கொண்டு வாழ்கின்றனர்‌. ஆனால்‌ விசுவாசிகள்‌ அல்லாஹ்வையே அதிகமாக நேசிப்பார்கள்‌”. (2:165)

"மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்‌. எனக்கே அஞ்சுங்கள்‌". (5:44)

"அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ கட்டளைகளை எடுத்துரைத்தே தீருவார்கள்‌. அவனுக்கு
பயப்படுவார்கள்‌. அல்லாஹ்வைக்‌ தவிர மற்ற எவருக்கும்‌ பயப்பட மாட்டார்கள்‌". (33:39)

முஷ்ரிக்கீன்கள்‌ அன்று இப்ராஹீம்‌ நபியவர்களை அச்சுறுத்தி மிரட்டிக்‌ கொண்டிருந்தார்கள்‌. திருமறை கூறுகிறது: "(நபி இப்ராஹீமுடன்‌) அவருடைய
சமூகத்தார்‌ தர்க்கம்‌ செய்தனர்‌. அதற்கு அவர்‌ கூறினார்‌. நீங்கள்‌ அல்லாஹ்வைப்‌ பற்றியா? நிச்சயமாக அவன்‌ எனக்கு நேர்வழி காட்டியிருக்கிற நிலையில்‌ என்னுடன்‌ தர்க்கம்‌ செய்கிறீர்கள்‌.

என்‌ இறைவன்‌ எதையாவது விரும்பினாலன்றி நீங்கள்‌ இணை வைத்து வணங்குபவற்றுக்கு நான்‌ பயப்பட மாட்டேன்‌. என்‌ இறைவன்‌ (யாவற்றையும்‌ (தன்‌)
ஞானத்தால்‌ சூழ்ந்தறிகின்றான்‌. இதைக்கூட நீங்கள்‌ சிந்திக்க வேண்டாமா? உங்களுக்கு யாதொரு அத்தாட்சியும்‌ அவன்‌ அளிக்காமல்‌ இருந்தும்‌ நீங்கள்‌ அல்லாஹ்வுக்கு இணை வைத்திருப்பதைப்‌ பற்றி நீங்கள்‌ பயப்படாதிருக்க நான்‌ எப்படி நீங்கள்‌ இணை
வைத்தவற்றுக்கு பயப்படுவேன்‌. நம்‌ இரு பிரிவினரில்‌ அச்சமின்றி நிம்மதியாக வாழத்‌ தகுதியுடையோர்‌ யார்‌? என்பதை நீங்கள்‌ அறிவுடையோர்களாக இருந்தால்‌ கூறுங்கள்‌. எவர்‌ மெய்யாக ஈமான்‌ கொண்டு தங்கள்‌ விசுவாசத்துடன்‌ யாதொரு அக்கிரமத்தையும்‌
கலந்து விடாமல்‌ இருப்போருக்கு நிச்சயமாக நிம்மதியுண்டு. அவர்கள்‌ தாம்‌ நேரான
வழியிலும்‌ இருக்கின்றனர்‌" (6:80-82).

இப்னு மஸ்வூத்‌ (ரலி) அவர்கள்‌ 'விசுவாசத்துடன்‌ அக்கிரமத்தைக்‌ கலவாமல்‌ இருப்போருக்கு' என்ற குர்‌ஆன்‌ வசனம்‌ இறங்கியதும்‌ நபித்தோழர்களுக்கு பெரும்‌ சங்கடங்கள்‌ ஏற்பட்டன. இதனால்‌ அவர்கள்‌ நபி (ஸல்‌) அவர்களிடம்‌ வந்து எங்களில்‌ எவர்தாம்‌ தமக்குத்‌ தாமே அக்கிரமம்‌ செய்யாதவராக இருக்க முடியும்‌ நாயகமே! என்று முறையிட்டனர்‌. அப்போது இங்கே அக்கிரமம்‌ என்ற வார்த்தை ஷிர்க்‌ என்னும்‌
கருத்தை வழங்குகிறது என்று கூறி தம்‌ ஸஹாபிகளுக்கு நபியவர்கள்‌ விளக்கம்‌
கொடுத்தார்கள்‌' என்று அறிவிக்கிறார்கள்‌.

லுக்மான்‌ தன்‌ குமாரனுக்கு நல்லுபதேசம்‌ செய்தபோது: “என்‌ அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே. நிச்சயமாக இணை வைப்பது மகத்தான ஒரு அக்கிரமமாகும்‌” (31:13) என்ற லுக்மானின்‌ போதனையையும்‌ உதாரணத்துக்காக நபியவர்கள்‌ எடுத்துக்‌ காட்டினார்கள்‌.

மேலும்‌ இறைவன்‌ கூறுகிறான்‌: “எவர்‌ அல்லாஹ்வுக்கும்‌, அவன்‌ தூதருக்கும்‌
வழிபட்டு, அல்லாஹ்வுக்கு அஞ்சி பயந்து (மாறு செய்யாமல்‌ இருக்கிறார்களோ) அத்தகையோர்‌ வெற்றி பெற்றவர்களே!" (24:52)

"நீங்கள்‌ மனிதர்களுக்குப்‌ பயப்படாதீர்கள்‌. என்னையே பயந்துக்‌ கொள்ளுங்கள்‌. என்‌
வசனங்களை ஒரு சொற்ப கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்‌". (3:44)

"நீங்கள்‌ உண்மையான விசுவாசிகள்‌ என்றால்‌ எனக்கு பயப்படுங்கள்‌. அவர்களுக்கு பயப்படாதீர்கள்‌". (3:175)

"அல்லாஹ்வும்‌, அவனது தூதரும்‌ அவர்களுக்கு கொடுத்தது பற்றி திருப்தி அடைந்து
அல்லாஹ்‌ நமக்கு போதுமானவன்‌. அவன்‌ தன்‌ அருளைக்‌ கொண்டு பின்னும்‌ அருள்‌
புரிவான்‌. அவனுடைய தூதரும்‌ அருள்‌ புரிவார்கள்‌. நிச்சயமாக நாம்‌ அல்லாஹ்வையே
நம்பி இருக்கின்றோம்‌ என்று அவர்கள்‌ கூறியிருக்க வேண்டாமா?” (9:59).

"(நம்முடைய) தூதர்‌ உங்களுக்குக்‌ கொடுத்ததை நீங்கள்‌ எடுத்துக்‌ கொள்ளுங்கள்‌.
அவர்‌ தடுத்ததிலிருந்து விலகிக்‌ கொள்ளுங்கள்‌". (59:7)

இத்திருவசனங்களைப்‌ பற்றி நாம்‌ சிந்திக்க வேண்டும்‌. வழிபாடு, அனுஷ்டானம்‌ ஆகியவை அல்லாஹ்வுக்கும்‌, ரஸுலுக்கும்‌ செய்ய வேண்டும்‌. எவர்‌ ரஸுலுக்கு
வழிபட்டாரோ அவர்‌ அல்லாஹ்வுக்கு வழிபட்டவராகிறார்‌. ஆனால்‌ அச்சம்‌, பயம்‌, பக்தி
போன்றவற்றை அல்லாஹ்‌ ஒருவனுக்கு மட்டுமே செலுத்த வேண்டும்‌. மனிதன்‌ அல்லாஹ்வையன்றி வேறெவரையும்‌, எதையும்‌ அஞ்சக்‌ கூடாது என்பதை விளங்க முடியும்‌.

மேலும்‌ சில ஆயத்துக்களில்‌ 'கொடுத்தல்‌' என்பது அல்லாஹ்வுடனும்‌, ரஸூலுடனும்‌ இணைத்துச்‌ சொல்லப்பட்டுள்ளதைக்‌ காண்கிறோம்‌. ஆனால்‌ 'அருள்‌' என்பது அல்லாஹ்வுடன்‌ மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. இதைப்போன்று 'ஆசைவைத்தல்‌', ‘ஆதரவு தேடல்‌' போன்றவற்றையும்‌ அல்லாஹ்வுடன்‌ மட்டுமே சேர்க்கப்படுள்ளதைக்‌
காண முடிகிறது. 'போதுமாக்கிக்‌ கொள்ளல்‌' இதுவும்‌ அல்லாஹ்வைக்‌ கொண்டு மட்டும்‌ ஆக வேண்டும்‌. நபி இப்ராஹீமை நெருப்புக்‌ கிடங்கில்‌ தூக்கி எறியப்பட்ட போதும்‌ அல்லாஹ்வே எங்களுக்குப்‌ போதுமானவன்‌. பாரம்‌ சாட்டப்படத்‌ கூடியவர்களில்‌ அவன்‌
மேன்மைக்குரியவன்‌' என்று கூறினார்கள்‌. நபி (ஸல்‌) அவர்களும்‌ இதைக்‌ கூறியதாக இமாம்‌ புகாரி (ரஹ்‌) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌. “நபியே! உமக்கும்‌, உம்மை பின்பற்றிய விசுவாசிகளுக்கும்‌ அல்லாஹ்வே போதுமானவன்‌" (8:64).

அல்லாஹ்வைக்‌ கொண்டு சிருஷ்டிகள்‌ போதுமாக்கிக்‌ கொள்வதில்‌ நபியவர்களும்‌, மற்ற மூமின்களும்‌ அனைவரும்‌ சமமானவர்கள்‌. ஆனால்‌ நபிமார்கள்‌
இறைவனிடமிருந்து விதிவிலக்குகளை சிருஷ்டிகளுக்கிடையில்‌ சேர்த்து வைக்கின்ற
ஒரு நடுவர்‌ என்றல்லாது வேறொன்றுமில்லை. இதுவே ஸலஃபுஸ்ஸாலிஹீன்களில்‌ அதிகமானவர்களின்‌ அபிப்பிராயமாகும்‌. விளக்கமாக இது முன்னர்‌ கூறப்பட்டு விட்டது.


இறைவன்‌ அனுமதித்தவை

எதை அல்லாஹ்வும்‌, அவன்‌ ரஸுலும்‌ விலக்கினார்களோ அது ஹராம்‌ என்று ஏற்றுக்‌ கொள்ள வேண்டும்‌. இவர்கள்‌ அனுமதித்தவை அனைத்தும்‌ ஹலாலானவை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்‌. இதற்குத்தான்‌ இஸ்லாம்‌ மார்க்கம்‌ என்று
சொல்லப்படுகிறது. மனிதர்கள்‌ அல்லாஹ்‌, ரஸூலை நேசித்து, வழிபட்டு அவர்களுக்கு பணிந்து நடக்க வேண்டும்‌. அவர்கள்‌ கொடுத்தவற்றைக்‌ கொண்டு திருப்திப்பட வேண்டும்‌. இதை திருமறையும்‌ விளக்குகிறது: “அவர்கள்‌ (மெய்யாகவே)
விசுவாசிகளாக இருந்தால்‌ அவர்களைத்‌ திருப்திப்‌ படுவதற்கு அல்லாஹ்வும்‌, ரஸுலும்‌ மிகவும்‌ தகுதியுடையவர்கள்‌ (என்பதை அவர்கள்‌ அறிந்து கொள்வார்கள்‌)". (9:62)

மேலும்‌ கூறுகிறான்‌: "மூமின்களே! அல்லாஹ்வுக்கும்‌, அவன்‌ திருத்தூதருக்கும்‌ வழிபடுங்கள்‌”. (4:80)

(நபியே!) நீர்‌ கூறும்‌. உங்களுடைய தந்தையர்களும்‌, உங்களுடைய புதல்வர்களும்‌, உங்களுடைய சகோதரர்களும்‌, உங்களுடைய துணைவர்களும்‌, உங்களுடைய குடும்பத்தினரும்‌, நீங்கள்‌ சம்பாதித்து வைத்துள்ள பொருட்களும்‌ நஷ்டமாகி விடுமோ
என்று பயந்து (எச்சரிக்கையுடன்‌) நீங்கள்‌ செய்து வரும்‌ வர்த்தகமும்‌, உங்களுக்கு மிக உவந்த வீடுகளும்‌ அவை அனைத்தும்‌ அல்லாஹ்வையும்‌, ரஸுலையும்‌ விரும்புவதை விடவும்‌, மேலும்‌ அவனுடைய பாதையில்‌ யுத்தம்‌ புரிவதை விடவும்‌ உங்களுக்கு மிக்க
விருப்பமானவையாக இருந்தால்‌ (நீங்கள்‌) உண்மை விசுவாசிகளல்லர்‌. நீங்கள்‌ அடைய வேண்டிய தண்டனையைப்பற்றி அல்லாஹ்வுடைய கட்டளை வரும்‌ வரையில்‌ காத்து எதிர்ப்பார்த்திருங்கள்‌" (9:24).

ஒரு ஹதீஸில்‌ 'மூன்று விஷயங்கள்‌ எவரிடம்‌ ஒருங்கே அமைந்திருக்கின்றனவோ, அவர்‌ மெய்யாகவே விசுவாசத்தின்‌ (ஈமானின்‌) சுவையை ரசிப்பார்‌. இம்மூன்று விஷயங்களாவன: எல்லா சிருஷ்டிகளையம்‌ விட அல்லாஹ்வும்‌, ரஸுலும்‌ தனக்கு உவப்பாக இருத்தல்‌, அல்லாஹ்வுக்காகவே ஒரு மனிதன்‌ மற்றவனைப்‌ பிரியம்‌ வைத்தல்‌, தன்னை நெருப்பில்‌ தூக்கிப்‌ போடப்படுவதை மனிதன்‌ வெறுப்பதுபோல
அல்லாஹ்‌ மனிதனுக்கு ஈமானைக்‌ கொடுத்து காப்பாற்றியதற்கப்பால்‌ (குஃப்ரின்‌) நிராகரிப்பின்பால்‌ மீள்வதை வெறுத்தல்‌' என்று நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. (புகாரி, முஸ்லிம்)

இறைவன்‌ கூறினான்‌: "நிச்சயமாக (நபியே!) உம்மை (விசுவாசிகளின்‌ விசுவாசத்தைப்‌ பற்றி) சாட்சிக்‌ கூறி அவர்களுக்கு நன்மாராயம்‌ கூறுவதற்காகவும்‌ (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும்‌ அனுப்பி வைத்தோம்‌. ஆகவே
(விசுவாசிகளே!) நீங்கள்‌ அல்லாஹ்வையும்‌, அவனுடைய தூதரையும்‌ விசுவாசித்து அவருக்கு உதவி ஒத்தாசைகள்‌ புரிந்து, அவரை கண்ணியப்படுத்தி, காலையிலும்‌, மாலையிலும்‌ அல்லாஹ்வை துதி செய்து வாருங்கள்‌'. (48:8-9)

மேலுள்ள திருவசனம்‌ அல்லாஹ்வின்‌ மீதும்‌, ரஸுலின்‌ மீதும்‌ ஈமான்‌ கொள்ள வேண்டுமென்பகைக்‌ தெளிவாகக்‌ காட்டுகிறது. அத்துடன்‌ உதவி, ஒத்தாசைகள்‌ செய்தல்‌, கண்ணியமளித்தல்‌ போன்றவை ரஸூலுக்குச்‌ செய்ய வேண்டுமென்பதையும்‌ காட்டுகிறது. காலையிலும்‌, மாலையிலும்‌ துதி செய்தல்‌ அல்லாஹ்வுக்கு மட்டும்‌
செலுத்தப்பட வேண்டிய வணக்கமாகும்‌. ஆம்‌! வழிபாடுகள்‌, அனுஷ்டானங்கள்‌ அனைத்தும்‌ அல்லாஹ்வுக்குச்‌ சொந்தமானவை. அல்லாஹ்வை தான்‌ தொழ வேண்டும்‌. அவனுக்காகவே நோன்பு நோற்க வேண்டும்‌. ஹஜ்‌ செய்வதும்‌ அவனுக்கே.
நேர்ச்சைகளும்‌ அல்லாஹ்வுக்காகச்‌ செய்ய வேண்டும்‌. அவனைக்‌ கொண்டு மட்டும்‌ ஆணையிடுதல்‌ வேண்டும்‌. பிரார்த்தனைகளை அவனிடமே கேட்க வேண்டும்‌.
அவனைக்‌ கொண்டு மட்டுமே உதவித்‌ தேட வேண்டும்‌. குறிப்பிடத்தக்க மூன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே ரிஹ்லத்‌ - பிரயாணம்‌ போக அனுமதியுண்டு. ஏனெனில்‌
அல்லாஹ்வின்‌ அனுமதி பெற்ற பின்னர்‌ இப்பள்ளிகளை நபிமார்கள்‌ நிர்மாணித்தார்கள்‌.
ஆகவே அவற்றில்‌ வணக்க வழிபாடுகள்‌ செய்வதை நாடிப்‌ போக அனுமதி உண்டு.

உயிர்‌ பிராணிகள்‌, செடி, கொடிகள்‌, மழை, மேகம்‌ போன்ற எந்த சிருஷ்டியையும்‌ சிருஷ்டிப்பதில்‌ எதையும்‌ அல்லாஹ்‌ துணையாக்கவோ அல்லது அவற்றைத்‌ தன்‌
ஒத்தாசைக்கு ஏற்படுத்திக்‌ கொள்ளவோ இல்லை. ஆனால்‌ இஸ்லாமிய மார்க்கத்தை மக்களுக்குப்‌ போதிப்பதற்கு மாத்திரம்‌ திருத்தூதர்களை இடையாளர்களாக ஏற்படுத்திக்‌ கொண்டான்‌. எந்தக்‌ காரணத்தைக்‌ கொண்டு எந்தப்‌ பொருளையும்‌ படைக்க விரும்புகிறானோ அதைக்‌ கொண்டு அதனைப்‌ படைத்து விடுகிறான்‌. இதில்‌
சிருஷ்டிகளுக்கு எந்த அதிகாரமும்‌ இல்லை. காரணங்களையும்‌ அவன்‌ தான்‌ படைக்கிறான்‌. காரணங்களைப்‌ படைப்பதற்கும்‌ சில காரணங்கள்‌ உண்டு. அதன்‌ மர்மம்‌ அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்‌. வேறு யாருக்கும்‌ இந்த விஷயங்களில்‌ தலையிட உரிமையில்லை. நடக்க வேண்டுமென்று அவன்‌ நாடியவை அனைத்தும்‌ நடந்தே தீரும்‌.
நடக்க வேண்டாம்‌ என்றுள்ள அவனுடைய நாட்டங்கள்‌ எங்கே நடக்கப்‌ போகின்றன?


ரஸுல்மார்களின்‌ பணிகள்‌ யாவை?

நபி (ஸல்‌) அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ போதனைகளை மக்களுக்குச்‌ சேர்த்து வைக்கின்ற ஓர்‌ இடையாளராக இருந்திருக்கிறார்கள்‌. அதனால்‌ தான்‌ ஹிதாயத்‌ எனும்‌
நேர்வழியை அடியார்களின்‌ உள்ளத்தில்‌ சேர்த்து வைக்கும்‌ பொறுப்புரிமை அல்லாஹ்வுடையது. அது நபியவர்களுக்கு உரியது அல்ல. அதற்கு சக்தி உடையவன்‌ அல்லாஹ்‌ ஒருவனே. திருத்தூதர்களால்‌ இவ்வாறான வேலைகளைச்‌ செய்ய முடியாது.

இதைத்‌ திருமறையும்‌ விளக்கிக்‌ காட்டுகிறது: "நபியே! நீர்‌ விரும்புகிறவர்களை நேர்வழியில்‌ செலுத்திவிட நிச்சயமாக உம்மால்‌ முடியாது. ஆனால்‌ அல்லாஹ்‌
மட்டுமே தான்‌ விரும்பியவர்களை நேரான வழியில்‌ செலுத்துகிறான்‌". (28:56)

(நபியே!) அவர்கள்‌ நேரான வழியில்‌ செல்ல வேண்டுமென்று நீர்‌ எவ்வளவோ விரும்புகிறீர்‌. ஆனால்‌ எவர்கள்‌ தப்பான வழியில்‌ செல்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ்‌ நேரான வழியில்‌ செலுத்துவதில்லை". (16:37)

ஹிதாயத்தைப்‌ போன்றுதான்‌ நபிமார்களின்‌ துஆவும்‌, அவர்கள்‌ தேடுகின்ற மன்னிப்பும்‌, பரிந்து பேசுவதும்‌ ஆகிய அனைத்துமே அப்படித்தான்‌. 

மன்னிப்பையும்‌, சிபாரிசையும்‌ பெறுவதற்கு அருகதை‌ படைத்தவர்களான நபி (ஸல்‌) அவர்கள்‌ கேட்டால்‌, அத்துடன்‌ அல்லாஹ்வும்‌ அதை விரும்பி ஏற்றுக்‌ கொண்டால்‌ அது பயனளிக்கும்‌. அன்றி நயவஞ்சகர்களுக்கும்‌, நிராகரித்த குஃப்பார்களுக்கும்‌ பிரார்த்தித்தல்‌ பயனற்றது. இவர்களது குற்றங்களும்‌ மன்னிக்கப்பட மாட்டாது. இதைத்‌ திருமறையும்‌
கூறுகிறது: (நபியே!) நீர்‌ அவர்களுக்குப்‌ பிழை பொறுக்கத்‌ தேடுவதும்‌ அல்லது தேடாமல்‌ இருப்பதும்‌ அவர்களைப்‌ பொருத்தவரையில்‌ சமமே. அல்லாஹ்‌ அவர்களை மன்னிக்கவே மாட்டான்‌". (63:6)


நபிமார்களின்‌ தன்மைகளுக்கும்‌, அல்லாஹ்வின்‌ தன்மைகளுக்குமிடையில்‌ உள்ள வித்தியாசம்‌

நபிமார்கள்‌ இறைதூதர்களாவார்கள்‌. அல்லாஹ்வின்‌ ஏவல்கள்‌, விலக்கல்கள்‌, வாக்குறுதிகள்‌, எச்சரிக்கைகள்‌, மற்றும்‌ செய்திகள்‌ அனைத்தையும்‌ நம்மீது எத்தி வைக்கும்‌ இடையாளர்களாக இருந்திருக்கிறார்கள்‌. அவர்கள்‌ கூறுகின்ற அனைத்தையும்‌ உண்மையென ஏற்று, அவற்றிற்கொப்ப வழிபட்டு செயல்படுதல்‌ நம்மீது கடமையாகும்‌. எந்த விதமான வேற்றுமையும்‌ காட்டாமல்‌ இவ்விதமாக நபிமார்கள்‌ அனைவரைக்‌
கொண்டும்‌ விசுவாசம்‌ கொள்ள வேண்டும்‌. எந்த ஒரு நபியையும்‌ ஒருவன்‌ ஏசினாலும்‌ அப்படி ஏசுபவன்‌ காஃபிராகி விடுவதுடன்‌ முர்தத்தான (மதம்‌ மாறிய) வனுடைய சட்டம்‌ இவன்‌ மீது அமுல்‌ படுத்தப்பட்டு மரண தண்டனைக்கு ஆளாவான்‌.

நபிமார்களுக்கும்‌, மற்றும்‌ எந்த சிருஷ்டிகளுக்கும்‌ அருகதை இல்லாத, பொருந்தாத எத்தனையெத்தனையோ தனித்தன்மைகளுக்கும்‌, லட்சணங்களுக்கும்‌ அல்லாஹ்‌ அருகதை உள்ளவனாக இருக்கிறான்‌. ஆகவே சிருஷ்டிகளின்‌ குணங்கள்‌ அல்லாஹ்வுடன்‌ சேர்க்கப்பட மாட்டாது. இந்த சிருஷ்டிகளின்‌ மீது தவக்குல்‌ (மனிதன்‌
தன்னுடையக்‌ காரியங்களை பாரம்‌ சாட்டி ஒப்படைத்தல்‌) வைக்கப்பட மாட்டாது.
இவற்றைக்‌ கொண்டு உதவி தேடப்பட மாட்டாது. சத்தியம்‌ செய்யப்பட மாட்டது. வஸீலாவும்‌ தேடப்பட மாட்டாது. இவையெல்லாம்‌ அல்லாஹ்வுக்குச்‌ சொந்தமானவை. நபிமார்களைக்‌ கொண்டு வஸீலா தேடுவதிலும்‌ பயனில்லை. நபிமார்களை நம்பி,
நேசித்து, வழிபட்டு வாழ்க்கையில்‌ இவர்களின்‌ நடைமுறைகளைப்‌ பின்பற்றி மார்க்கத்தை நிலைநாட்ட வேண்டும்‌. இவர்களுடன்‌ சேர்ந்து உதவி ஒத்தாசைகள்‌ புரிய வேண்டும்‌. இவர்களை மதித்து, இவர்களுடைய்‌ எதிரிகளுடன்‌ போராட வேண்டும்‌.
இவர்களின்‌ சொற்களை முழுக்க ஏற்று நடக்க வேண்டும்‌. இவர்கள்‌ ஹாராமாக்கியவற்றைக்‌ தவிர்த்துக்‌ கொள்ள வேண்டும்‌. ஹலாலாக்கியவற்றை ஏற்றுக்‌ கொள்ள வேண்டும்‌. அல்லாஹ்விடம்‌ வஸீலா (சமீபிப்பதை) தேட வேண்டும்‌.

இத்தகைய அமல்களைப்‌ புரிந்து விட்டு அதன்‌ பொருட்டால்‌ 'இறைவா! எங்கள்‌ துஆவை ஏற்றுக்‌ கொள்வாயாக!' என்று கேட்க வேண்டும்‌. குகையில்‌ அகப்பட்ட மூவரும்‌ இப்படிச்‌ செய்துதானே தப்பித்துக்‌ கொண்டார்கள்‌. நல்ல அமல்கள்‌ புரிந்து
நாளைய ஆகிரத்தில்‌ அதிகமான பலாபலன்கள்‌, இறைதிருப்தி, சுவர்க்கம்‌ இவற்றை அல்லாஹ்‌ அருள்புரிய அவனிடமே கேட்க வேண்டும்‌.

நபி (ஸல்‌) அவர்கள்‌ பணித்துள்ள அனைத்து அனுஷ்டானங்களும்‌ அவை இம்மை, மறுமையின்‌ அனைத்து முழு ஈடேற்றத்திற்குரிய முக்கிய வஸீலாவாகும்‌. கீழ்வரும்‌ ஆயத்தின்‌ விளக்கத்தை இதற்கு உதாரணமாக எடுத்துக்‌ கொள்ளலாம்‌. "எங்கள்‌ இறைவா! உங்கள்‌ இறைவனைக்‌ கொண்டு நம்புங்கள்‌ என்று கூறி ஈமானின்‌ பால்‌ எங்களை அழைத்தோரின்‌ அழைப்பை நிச்சயமாக நாங்கள்‌ செவிமடுத்து அவ்வாறே விசுவாசம்‌ கொண்டோம்‌. ஆதலால்‌ எங்கள்‌ இறைவா! நீ எங்கள்‌ குற்றங்களை
மன்னித்து, எங்கள்‌ பாவங்களிலிருந்து எங்களை விடுவித்து (முடிவில்‌) நல்லோர்களுடன்‌ எங்களை மரிக்கும்படிச்‌ செய்வாயாக!” (3:193). இந்த ஆயத்தில்‌
அவர்கள்‌ தம்‌ பிரார்த்தனைக்கு முன்னர்‌ ஈமானை முதலில்‌ எடுத்துக்‌ கூறினார்கள்‌. அமல்களை முன்வைத்து பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்‌ என்பது தெளிவாகிறது.

மூமின்களைப்பற்றி இன்னுமோர்‌ ஆயத்தை அல்லாஹ்‌ இதுபற்றி அருள்‌ செய்திருக்கின்றான்‌. "நிச்சயமாக என்னுடைய அடியார்களில்‌ ஒரு வகுப்பார்‌, எங்கள்‌
இறைவா! நாங்கள்‌ உன்னை நம்பி விசுவாசம்‌ கொண்டுள்ளோம்‌. நீ எங்களுடைய
குற்றங்களை மன்னித்து எங்கள்‌ மீது அருள்‌ புரிவாயாக. அருள்‌ புரிவோர்களில்‌ எல்லாம்‌
நீ மிக்க மேலானவன்‌ என்று கூறிக்‌ கொண்டிருந்தனர்‌" (23:109)


நபியின்‌  துஆவைக்‌ கொண்டு வஸீலா தேடுவது எப்படி?

நபிகளின்‌ பிரார்த்தனையாலும்‌, சிபாரிசாலும்‌ வஸீலா தேடுவதற்கு இரு முறைகள்‌ இருக்கின்றன. ஒன்று: நபிகளிடம்‌ சென்று அவர்கள்‌ தமக்காக துஆச்‌ செய்ய
வேண்டுமென்றும்‌, ஷபாஅத்‌ செய்ய வேண்டுமென்றும்‌ வேண்டிக்‌ கொள்வது. அப்போது அவர்கள்‌ வேண்டியவனுக்காக துஆவும்‌, ஷபாஅத்தும்‌ செய்வார்கள்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ வாழ்ந்திருந்த போது நடைபெற்ற வஸீலா தேடுதல்‌ என்பது இதுவேயாகும்‌. மறுமை நாளன்றும்‌ இப்படித்தான்‌ அவர்களிடம்‌ வேண்டப்படும்‌. நபி ஆதம்‌ (அலை)
அவர்கள்‌ முதல்‌ அனைத்து நபிமார்களிடமும்‌ மக்கள்‌ கெஞ்சி நின்றதற்கப்பால்‌ நபி (ஸல்‌) அவர்களிடம்‌ வந்து ஷபாஅத்தைக்‌ கேட்பார்கள்‌. இது அனுமதிக்கப்பட்ட ஷபாஅத்தின்‌ மாதிரியாகும்‌.

மற்றொன்று: நபிகளின்‌ ஷபாஅத்தையும்‌, துஆவையும்‌ தமக்கு அருள்‌ புரியும்படி நேராக அல்லாஹ்விடமே கெஞ்சி பிரார்த்தனை செய்வது. கண்பார்வை இழந்த
ஸஹாபியும்‌ இம்மாதிரியைத்தான்‌ பின்பற்றியதாக நாம்‌ ஹதீஸில்‌ பார்த்தோம்‌. அந்த ஹதீஸில்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ அம்மனிதருக்காகப்‌ பிரார்த்தித்து அம்மனிதரிடமும்‌ நேராக அல்லாஹ்விடம்‌ ஷபாஅத்தை ஏற்றருள நீரும்‌ பிரார்த்தியும்‌ என்று
பணித்தார்கள்‌ என்று வருகிறது.

இப்படி இருக்க நபி (ஸல்‌) அவர்கள்‌ வாழ்ந்திருந்த போது அவர்களால்‌ பிரார்த்தனையைப்‌ பெறாத ஒருவர்‌ நபியின்‌ துஆவினாலும்‌, ஷபாஅத்தினாலும்‌
அல்லாஹ்விடம்‌ எப்படி வஸீலாவை (நெருங்குதலை) பெற முடியும்‌? நடைபெறாத ஒரு விஷயத்தை வைத்து அல்லாஹ்விடம்‌ அணுகுவதை (வஸீலாவை) கேட்கிறான்‌ என்று சொல்ல வேண்டும்‌. இதில்‌ அணுவளவும்‌ பயனில்லை. முன்னர்‌ நாம்‌ குறிப்பிட்டுள்ள உமர்‌ (ரலி) அவர்களின்‌ வரலாறும்‌ இப்படித்தான்‌. அப்பாஸ்‌ (ரலி) அவர்களைக்‌ கொண்டு மழை தேடிப்‌ பிரார்த்தித்தார்கள்‌. அப்படியென்றால்‌ அப்பாஸ்‌ (ரலி) அவர்கள்‌ மட்டும்‌ துஆச்‌ செய்தார்கள்‌ என்பது அதன்‌ தாத்பரியமல்ல. அப்பாஸ்‌
(ரலி) அவர்களுடன்‌ உமர்‌ (ரலி) அவர்களும்‌, இதர முஸ்லிம்கள்‌ அனைவரும்‌ சேர்ந்து நின்று அல்லாஹ்விடம்‌ மன்றாடினார்கள்‌. மழையும்‌ பெய்தது. இதை நன்கு விளங்கிக்‌ கொள்ள வேண்டும்‌.


இஸ்லாத்தின்‌ அடிப்படைகள்‌

தூய இஸ்லாத்திற்கு இரண்டு அடிப்படைகள்‌ உண்டு. ஒன்று: லாஇலாஹ இல்லல்லாஹ்‌ முஹம்மதுர்‌ ரஸூலுல்லாஹ்‌ (அல்லாஹ்வைத்‌ தவிர இறைவன்‌
இல்லை. நபி (ஸல்‌) அவர்கள்‌ தூதராவார்கள்‌) என்ற திருக்கலிமாவை வாழ்க்கையில்‌ மெய்ப்பித்துச்‌ செயல்படுத்திக்‌ காட்டுதல்‌. அதிலும்‌ குறிப்பிடத்தக்கது அல்லாஹ்வுடன்‌ யாரையும்‌ இணையாக்காமல்‌ இருத்தல்‌. அப்படியென்றால்‌ அல்லாஹ்வை நீ நேசிப்பது போல வேறு எந்த சிருஷ்டியையும்‌ நேசிக்கலாகாது. அல்லாஹ்வை நீ ஆதரவு வைத்து
வாழ்வது போல வேறு எந்த சிருஷ்டிகளின்‌ மீதும்‌ ஆதரவு வைக்கலாகாது.

அல்லாஹ்வுக்கும்‌ அஞ்சுவது போல பிறருக்கு அஞ்சலாகாது. இவற்றில்‌ ஏதேனும்‌ ஒன்றில்‌ இறைவனுடன்‌ படைப்பினங்களைச்‌ சமமாகக்‌ காட்டினால்‌ நிச்சயமாக நீ தவறி விட்டாய்‌. அல்லாஹ்வின்‌ அன்புடனும்‌, அவன்‌ பயத்துடனும்‌, மற்றொரு பயத்தையும்‌, அன்பையும்‌ சேர்த்து இணைத்து விட்டாய்‌. இங்கே இணை வைத்தல்‌ தலை தூக்குகிறது. இந்நேரம்‌ ஆகாயங்களின்‌, பூமியின்‌ இறைவன்‌ ஒருவன்‌ தான்‌ என்று நீ நினைத்தாலும்‌
உன்‌ நம்பிக்கை பழுதாகி விட்டது.

அன்று அரபிகளில்‌ இருந்த முஷ்ரிக்குகள்‌ வானங்களையும்‌, பூமியையும்‌ படைத்தவன்‌
அல்லாஹ்‌ ஒருவன்‌ என்றுதான்‌ ஏற்றிருந்தனர்‌. "(நபியே!) வானங்களையும்‌, பூமியையும்‌
சிருஷ்டித்தவன்‌ யார்‌? என்று நீர்‌ அவர்களை கேட்பீராயின்‌ அதற்கு அவர்கள்‌, அல்லாஹ்‌
என்றே நிச்சயமாக கூறுவார்கள்‌” (31:25, 39:38). அப்படியிருக்க அல்லாஹ்‌ அவர்களை முஷ்ரிக்குகள்‌ என்று கூறினான்‌. மேலும்‌ திருமறை கூறுகிறது: "(நபியே!) அல்லாஹ்வுடன்‌ வணக்கத்துக்கு உரிய மற்றொருவரும்‌ இருப்பதாக நீங்கள்‌ சாட்சி கூற
முடியுமா? என்று கேளும்‌. அப்படி நான்‌ சாட்சி கூற மாட்டேன்‌ என்று நீரும்‌ கூறும்‌"
(6:19).

"அல்லாஹ்‌ அல்லாதவற்றை அவனுக்கு இணையாக எடுத்துக்‌ கொண்டு அல்லாஹ்வை நேசிப்பது போல அவற்ரையும்‌ நேசிப்போர்‌ மனிதர்களில்‌ பலர்‌
இருக்கின்றனர்‌. எனினும்‌ விசுவாசிகளே! அல்லாஹ்வையே அதிகமாக நேசியுங்கள்‌"
(2:165). இவர்கள்‌ அல்லாஹ்வை நேசிப்பது போல பிற சிருஷ்டிகளை நேசித்து வாழ்வதினால்‌ முஷ்ரிக்குகளாக மாறி விட்டார்கள்‌.

மற்றொரு ஆயத்தில்‌ இறைவன்‌ கூறுகிறான்‌: "...அல்லது அவர்கள்‌ அல்லாஹ்வுக்கு இணையாகிக்‌ கொண்டிருக்கும்‌ தெய்வங்கள்‌ அவன்‌ படைத்திருப்பதைப்‌ போல எதையும்‌
படைத்திருக்கின்றனவா? (என்றும்‌ நபியே நீர்‌ கேளும்‌). அவ்வாறாயின்‌ இவ்வுலகை சிருஷ்டித்தவன்‌ யார்‌ என்பதில்‌ அவர்களுக்கு சந்தேகம்‌ ஏற்படலாம்‌" (13:16).

ஆக்கவோ, அழிக்கவோ முடியாத ஒன்றைத்தான்‌ இவர்கள்‌ அல்லாஹ்வுக்கு இணையாக அமைத்து விட்டார்களேத்‌ தவிர வேறொன்றுமில்லை. தம்‌ புதுக்‌ கடவுள்‌ எதையும்‌ செய்யதென்று வாயார ஏற்றதற்கு அப்பாலும்‌ அத்தகைய சக்தியற்ற சிருஷ்டிகளை இவர்கள்‌ ஏன்‌ சிபாரிசுக்கு வேண்டி நடுவராக எடுக்க வேண்டுமென்று இறைவன்‌ கேட்கிறான்‌.

மேலும்‌ அல்லாஹ்‌ கூறுகிறான்‌: (இணை வைப்போர்‌) தங்களுக்கு யாதொரு நன்மையும்‌, தீமையும்‌ செய்ய முடியாத அல்லாஹ்‌ அல்லாதவற்றை வணங்குவதுடன்‌
இவை அல்லாஹ்விடத்தில்‌ எங்களுக்கு சிபாரிசு செய்பவை என்றும்‌ கூறுகின்றனர்‌. (எனவே நபியே!) நீர்‌ கூறும்‌. வானங்கள்‌, பூமியில்‌ அல்லாஹ்வுக்குத்‌ தெரியாதவற்றை நீங்கள்‌ அவனுக்கு அறிவிக்கிறீர்களா? அவன்‌ மிகப்‌ பரிசுத்தமானவன்‌. அவர்கள்‌ இணைவைப்பவற்ரை விட மிக்க உயர்ந்தவன்‌" (10:18).

ஸூரத்துல்‌ யாஸனில்‌ வருகிறது: ஹபீபும்‌ நஜ்ஜார்‌ என்ற நல்ல மனிதர்‌ தம்‌ பட்டணத்து மக்களிடம்‌ கூறுகின்றார்‌: “என்னைப்‌ படைத்தவனை நான்‌ வணங்காகிருக்க எனக்கென்ன நேர்ந்தது? அவனிடமே நீங்கள்‌ மீட்டப்படுவீர்கள்‌. அவனையன்றி (மற்ற எதனையும்‌) நான்‌ இறைவனாக எடுத்துக்‌ கொள்வேனா? ரஹ்மான்‌ எனக்கு பாதொரு தீங்கிழைக்க கருதினால்‌ இவற்றின்‌ சிபாரிசு (அதில்‌) ஒன்றையுமே என்னை விட்டு தடுத்து விடாது. அதிலிருந்து என்னை இவற்றினால்‌ விடுவிக்கவும்‌ முடியாது. (அவன்‌ ஒருவனையே நான்‌ வணங்கா விட்டால்‌) நிச்சயமாக நான்‌ பகிரங்க வழிகேட்டில்‌
சென்று விடுவேன்‌. நிச்சயமாக நான்‌ உங்களைப்‌ படைத்துப்‌ போஷிப்பவன்‌ மீதே விசுவாசம்‌ கொண்டிருக்கிறேன்‌. ஆதலால்‌ நீங்கள்‌ எனக்கு செவி சாயுங்கள்‌" (36:22-25).


தூய இஸ்லாத்தின்‌ இரண்டாவது அடிப்படை

அல்லாஹ்‌ தன்‌ திருத்தூதர்‌ வாயிலாக நமக்கு விதித்தவற்றைக்‌ கொண்டு நாம்‌ அவனை வணங்க வேண்டும்‌. அப்படியானால்‌ வாஜிப்‌ (கடமை), முஸ்தஹப்‌ (ஸுன்னத்‌) போன்ற விதிகளுக்குட்பட்ட வழிபாடுகளை நாம்‌ புரிய வேண்டும்‌. இந்த அடிப்படையில்‌ நாம்‌ பார்ப்போமானால்‌ சிருஷ்டிகளையும்‌, மய்யித்துகளையும்‌, மறைந்தவர்களையும்‌ அழைத்து பிரார்த்தித்து அவற்றிடம்‌ உதவி தேடினால்‌ (அதை அல்லாஹ்‌, ரஸூல்‌ யாருமே கடமை என்றோ, ஸுன்னத்‌ என்றோ நமக்கு விதிக்காமலிருக்கும்‌ நிலையில்‌) இப்படிச்‌ செய்பவன்‌ நிச்சயமாக பித்‌அத்காரனாக மாறி விடுகிறான்‌. இந்த பித்‌அத்‌ என்பது ஷிர்க்‌ (இணை வைத்தல்‌) ஆகும்‌. ஆகவே அனைத்துலக இரட்சகனுக்கு இணை வைத்து விடுகின்றவனாகி விட்டான்‌. இத்தகைய பித்‌அத்களுக்கு மார்க்கத்திலும்‌ ஆதாரமில்லை. இதைப்‌ பிறருக்குப்‌ போதிக்கிறவன்‌ அல்லாஹ்‌ இறக்கி வைக்காத விதிகளைக்‌ கொண்டு
ஏவுபவனாக மாறி விடுகின்றான்‌. இவனது இவ்விதிகளை எடுத்து முஸ்லிம்கள்‌ செயல்படக்‌ கூடாது. இத்தகைய பித்‌அத்காரர்கள்‌ அவசியம்‌ தண்டிக்கப்படுவார்கள்‌. இவர்கள்‌ தம்‌ குற்றத்திலிருந்து விடுபடுவதற்காக தெளபா செய்யச் சொல்ல வேண்டும்‌
இவையனைத்தும்‌ இத்தகைய பித்‌அத்காரர்கள்‌ விஷயத்தில்‌ அறிஞர்கள்‌ தீர்ப்புகளாகும்‌. மத்ஹபுடைய நான்கு இமாம்களும்‌ இவ்வாறுதான்‌ குறித்துள்ளார்கள்‌.

இத்தகைய சட்டங்களைப்‌ பற்றி அதிகமான விளக்கங்களை வேறு பல தொகுப்புகளில்‌
கூறி இருக்கிறேன்‌. அவற்றை நான்‌ இங்கே எடுத்துக்‌ கூற விரும்பவில்லை. விரும்புகிறவர்கள்‌ அந்த நூல்களில்‌ இவற்றைப்‌ படித்துக்‌ கொள்ளட்டும்‌.

ஹிஜ்ரி 711-ம்‌ ஆண்டு நான்‌ எகிப்திலிருந்த போது என்னிடம்‌ நபியைக்‌ கொண்டு வஸீலா தேடுவது குறித்து ஒரு பத்வா கேட்கப்பட்டது. அதற்கு நான்‌ மிக விளக்கமான பதில்‌ எழுதி இருந்தேன்‌. அந்த பத்வாவை இங்கும்‌ குறிப்பிடுவதற்கு விரும்புகிறேன்‌.
அதில்‌ ஏராளம்‌ பயன்கள்‌ இருக்கின்றன. ஏனெனில்‌ இவை ஏகத்துவம்‌ சம்பந்தமான சட்டங்களாகும்‌. இணை வைப்பதை அடியோடு பிடுங்கி எறிகின்ற ஒரு மஸ்‌அலா பற்றியதல்லவா! எனவே இதன்‌ விளக்கம்‌ எவ்வளவு தூரம்‌ விரிந்து செல்கிறதோ
அவ்வளவு தூரம்‌ சட்டங்கள்‌ தெளிவு பெறுகின்றன.


வினாவும்‌ விடையும்‌

வினா: இஸ்லாமிய மார்க்கத்தின்‌ இமாம்களான அறிஞர்களிடம்‌ கீழ்வரும்‌ மஸ்‌அலா பற்றி கேட்கப்படுகிறது. அதாவது நபிமார்களையும்‌, ஸாலிஹீன்களையும்‌ கொண்டு வஸீலா தேடி அவர்களிடம்‌ ஷபாஅத்தை வேண்டுவதில்‌ அனுமதிக்கப்பட்டதும்‌, அனுமதிக்கப்படாததுமான முறைகளையும்‌, அதன்‌ விதிகளையும்‌ விளக்க வேண்டும்‌.

விடை: அகிலத்தைப்‌ படைத்துக்‌ காக்கும்‌ அல்லாஹ்வுக்கே புகழெல்லாம்‌. நபி (ஸல்‌)
அவர்கள்‌ மறுமையில்‌ அல்லாஹ்வின்‌ அனுமதியைப்‌ பெற்று சிருஷ்டிகள்‌ தேவைப்ட்டதற்கப்பால்‌ அவர்களுக்கு ஷபாஅத்‌ செய்வார்கள்‌ என்பது அனைத்து அறிஞர்களாலும்‌ ஏகோபித்து கூறப்பட்டிருக்கிறது. நபி (ஸல்‌) அவர்கள்‌ தம்‌ சமூகத்தை சேர்ந்த பெரும்‌ பாவிகளுக்கும்‌, பொதுவாக அனைத்து மக்களுக்கும்‌ சிபாரிசு
செய்வார்கள்‌. இதுவும்‌ ஸஹாபிகள்‌, தாபியீன்கள்‌ மற்றும்‌ அனைத்து ஸுன்னத்‌ ஜமாத்தைச்‌ சேர்ந்தவர்களாலும்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட்டதாகும்‌.

அன்றி நபி (ஸல்‌) அவர்களுக்கு தனிப்பட்ட ஷபாஅத்துகளும்‌ (சிபாரிசுகளும்‌) இருக்கின்றன. இந்த ஷபாஅத்‌ நபியவர்களுக்கே உரித்தானது. வேறி எந்த சிருஷ்டிக்கும்‌ கிடையாது. இன்னொரு வகை ஷபாஅத்தும்‌ நபி (ஸல்‌) அவர்களுக்கும்‌ உண்டு. இந்த
வகையில்‌ மற்ற நபிமார்களுக்கும்‌, ஸாலிஹீன்களுக்கும்‌ பங்குண்டு. ஆனால்‌
மேற்குறிப்பிட்ட பெருமானாருக்கே உரிய ஷபாஅத்‌ இதர நபிமார்களுக்குரிய ஷபாஅத்தை விடவும்‌ மேன்மையானது. ஏனெனில்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ சிருஷ்டிகளின்‌ மேன்மைக்கும்‌, மதிப்புக்கும்‌ உரியவர்களல்லவா! மறுமையில்‌ ஏனைய நபிமார்களின்‌ மேன்மை, சிறப்பு, பெருமை ஆகியவையெல்லாம்‌ நபி முஹம்மத்‌ (ஸல்‌)
அவர்களுக்குரிய சிறப்பைக்‌ காட்டிலும்‌ குறைவாகத்தான்‌ இருக்கும்‌. அல்லாஹ்‌ அவர்களுக்கு அளித்த சிறப்பம்சங்களைக்‌ கூற முடியாது. அத்தகைய தூரம்‌ அதிகமுண்டு. பெருமானார்க்கு மறுமையில்‌ இறைவன்‌ மகாமுல்‌ மஹ்மூத்‌ எனும்‌ பெருமைக்குரிய பதவியைக்‌ கொடுப்பான்‌. இந்தப்‌ பதவி தமக்குக்‌ கிடைக்காதா என்று தொன்று தொட்டே தோன்றியவர்களும்‌, மேலும்‌ வரப்போகிறவர்களும்‌ ஆசைப்‌படுகிறார்கள்‌. பெருமானாரின்‌ ஷபாஅத்துகளை நிரூபித்துக்‌ காட்டுகின்ற எத்தனை எத்தனையோ ஹதீஸ்களை புகாரி, முஸ்லிம்‌ மற்றும்‌ நம்பத்தகுந்த கிரந்தங்களிலும்‌ காண முடியும்‌.


ஷபாஅத்‌ விஷயத்தில்‌ ஸூன்னத் ஜமாஅத்திற்கு மாறுபட்டவர்களின்‌ அபிப்பிராயம்‌

ஸுன்னத்‌ வல்‌ ஜமாத்தை விட்டு அப்பாற்பட்ட முஃதஸிலாக்களும்‌, காரிஜிய்யா வகுப்பாரைச்‌ சேர்ந்த வயீதிய்யாப்‌ பிரிவினரும்‌ மறுமையில்‌ நபிமார்களுக்குரிய ஷபாஅத்தை மூமின்களின்‌ பதவியை உயர்த்துவதற்காக மட்டுமே என்று ஒதுக்கி
விட்டார்கள்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ பதவியை உயர்த்தும்‌ விஷயத்தில்‌ மட்டும்தான்‌ மறுமையில்‌ ஷபாஅத்‌ செய்வார்களாம்‌. இப்பிரிவினரில்‌ மற்றும்‌ சிலர்‌ நபிகளின்‌ ஷபாஅத்தை அடியோடு மறுக்கிறார்கள்‌. பெருமானாருக்கு ஷபாஅத்தே இல்லையாம்‌.

ஆனால்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ வாழ்ந்திருந்த போது ஸஹாபிகள்‌ நபியவர்களிடம்‌ சென்று ஷபாஅத்‌ வேண்டியதைப்‌ பற்றி ஏகோபித்துக்‌ கூறப்பட்டுள்ளது. உமர்‌ (ரலி) அவர்கள்‌ அப்பாஸ்‌ (ரலி) அவர்களைக்‌ கொண்டு மழை தேடியதையும்‌ ஏற்றுக்‌
கொள்கின்றனர்‌. இவை புகாரியிலும்‌ பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்களாகும்‌.

புகாரியில்‌ இடம்‌ பெற்றுள்ள இன்னொரு சம்பவம்‌ குறிப்பிடத்தக்கது. இப்னு உமர்‌ (ரலி) அவர்கள்‌ நான்‌ நபி (ஸல்‌) அவர்களின்‌ முகத்தை அவர்கள்‌ மழைத்தேடித்‌ தொழுது கொண்டிருக்கையில்‌ பார்த்தேன்‌. துஆச்‌ செய்தவுடனே மழை பெய்தது.
வாய்க்கால்களும்‌, பள்ளத்தாக்குகளும்‌ நிறைந்தோடும்‌ வரையில்‌ பெரும்‌ மழை கொட்டியது. இந்நேரம்‌ இக்கருத்திலுள்ள புலவர்‌ ஒருவரின்‌ சொல்லும்‌ எனக்கு
நினைவுக்கு வந்தது என்று கூறினார்கள்‌.

உமர்‌ (ரலி) அவர்கள்‌ மழைத்‌ தேடிய சம்பவம்‌ வேறு பல ஹதீஸ்களிலும்‌ விளக்கமாக வந்திருக்கிறது. நபி (ஸல்‌) அவர்கள்‌ இறைவனிடம்‌ பிரார்த்திப்பவர்களாகவும்‌, பரிந்துரைப்பவர்களாகவும்‌ இருக்கும்‌ வேளையில்‌ உமர்‌ (ரலி) அவர்களும்‌, முஸ்லிம்களும்‌ சேர்ந்து யா அல்லாஹு! இந்த நபியைப்‌ பிரார்த்திப்பதற்காகவும்‌, எங்களுக்கு சிபாரிசு செய்வதற்காகவும்‌ நாங்கள்‌ முற்படுத்துகிறோம்‌' என்றார்களாம்‌. (என்‌ பெற்றோர்களை தங்களுக்கு அர்ப்பணம்‌
செய்கிறோம்‌. அல்லாஹ்வின்‌ ஸலாத்தும்‌, ஸலாமும்‌ அவர்கள்‌ மீது உண்டாகட்டும்‌), பிரார்த்தனையையும்‌, ஷபாஅத்தையும்‌ ஏற்றருள்‌ என்றும்‌ மேலும்‌ அவர்களின்‌
தேவைகளை எடுத்துக்‌ கூறி எல்லோரும்‌ பிரார்த்தித்தனர்‌. இந்த விளக்கம்‌ வேறு
ஹதீஸ்களிலிருந்தும்‌ அறியப்பட்டுள்ளது.

முஅவியா (ரலி) அவர்கள்‌ யஸீத்‌ பின்‌ அஸ்வத்‌ (ரலி) அவர்களைக்‌ கொண்டு மழை தேடிப்‌ பிரார்த்தித்த சம்பவம்‌

ஷாம்‌ (ஸிரியா, லெபனான்‌) பகுதியில்‌ மழையின்றி வறட்சி ஏற்பட்டபோது முஆவியா (ரலி) அவர்கள்‌ பஸ்த்‌ பின்‌ அஸ்வத்‌ (ரலி) அவர்களைக்‌ கொண்டு பிராத்தித்து மழைத்‌ தேடினார்கள்‌. துஆவின்‌ போது: இறைவா! எங்களின்‌ மேன்மைக்குரியவரைக்‌ கொண்டு வஸீலா தேடுகிறோம்‌ என்று பிரார்த்தித்து விட்டு, எங்கே! உங்கள்‌ கையை உயர்த்தி எங்களுக்காகப்‌ பிரார்த்தியும்‌ என்றார்கள்‌. உடனே யஸீதும்‌, அவருடன்‌ இருந்தவர்களும்‌ தத்தம்‌ கரங்களை ஏந்தி மன்றாடினார்‌. பிறகு மழை பெய்தது. இதை அடிப்படையாக வைத்து அறிஞர்கள்‌ குறிப்பிடுகின்றனர்‌. பக்தியும்‌, நேர்மையும்‌ நிரம்பிய நல்லவர்களைக்‌ கொண்டு குறிப்பாக அஹ்லுல்‌ பைத்‌ (நபியின்‌ சந்ததியைச்‌ சார்ந்தவர்களைக்‌) கொண்டு மழை தேடிப்‌ பிரார்த்தித்தல்‌ மிக ஏற்றமாகும்‌.

நபிகளுடைய காலத்தில்‌ தண்ணியின்றி வறட்சி ஏற்பட்ட வேளையில்‌ நபியவர்களிடம்‌ ஒரு காட்டரபி வந்து இந்த வறட்சியை எடுத்துச்‌ சொல்லி முறையிட்டார்‌. யா ரஸுலுல்லாஹ்‌! மழையில்லாமல்‌ எங்களுடைய ஆடு, மாடு, ஒட்டகைகள்‌ எல்லாம்‌
அழிந்து நாசமாகி விட்டன. நடை பாதைகளெல்லாம்‌ துண்டிக்கப்பட்டு விட்டன. எங்களுக்கு தண்ணீர்‌ கிடைக்க அல்லாஹ்விடம்‌ பிரார்த்திக்க வேண்டும்‌' என்று கேட்டுக்‌ கொண்டார்‌.

இதைக்‌ கேட்ட நபி (ஸல்‌) அவர்கள்‌ இரு கரங்களையும்‌ உயர்த்தி 'இறைவா! எங்களுக்கு மழையைத்‌ தந்தருள்‌' என்று பிரார்த்தித்தார்கள்‌. பிரார்த்திக்கும்‌ போது வானில்‌ மேகங்களின்‌ அடையாரளஙகளே இல்லை. பிரார்த்தித்து முடிந்ததும்‌ கடல்‌ திசையிலிருந்து மேகங்கள்‌ உருவாயின. பிறகு ஒருவார காலம்‌ ஓயாத மழை கொட்டியதுடன்‌ கதிரவனும்‌ இந்நாட்களில்‌ தலை காட்டவில்லை.

இதைக்‌ கண்ட அம்மனிதர்‌ (அல்லது மற்றொருவர்‌) நாயகமே! அதிகமான பாழையினால்‌ வழிகள்‌ அனைத்தும்‌ துண்டித்துப்‌ போய்‌ விட்டன. கட்டிடங்கள்‌ இடிந்து கொண்டிருக்கின்றன. எனவே இந்த மழை நிற்க அல்லாஹ்விடம்‌ துஆச்‌ செய்யுங்கள்‌'
என்றார்‌. இதைக்‌ கேட்ட நபி (ஸல்‌) அவர்கள்‌ தம்‌ திருக்கரஙகை உயர்த்தி 'இறைவா! இந்த மழையை எங்கள்‌ சுற்றம்‌, சூழவுள்ள தேவைகளுக்கு மட்டும்‌ பயன்படுத்தச்‌ செய்வாயாக! எங்களுக்குப்‌ பாதகமாக இதை ஆக்கிவிடாதே. விளை நிலங்களிலும்‌,
மலைகளிலும்‌, குன்றுகளிலும்‌, மலை இடுக்குகளிலும்‌, பள்ளத்தாக்குகளிலும்‌ எலலாம்‌ பெய்யச்‌ செய்வாயாக! என்று பிரார்த்தித்ததும்‌ மேகங்கள்‌ மதினாவை விட்டும்‌ அகன்று விட்டன. இது புகாரியிலும் முஸ்லிமிலும் கூறப்பட்டுள்ள பிரபலமான ஹதீஸாகும்‌.

இத்தகைய ஹதீஸ்களிலிருந்து நபி (ஸல்‌) அவர்கள்‌, ஸஹாபிகள்‌ ஆகியோரின்‌ உரைகளில்‌ மனிதரைக்‌ கொண்டு ஷபாஅத்து தேடுவதென்றால்‌ அதன்‌ தாத்பரியமே அவருடைய துஆவைக்‌ கொண்டு ஷபாஅத்‌ தேடுவதாகும்‌ என்று விளங்குதல்‌
வேண்டும்‌. அவரையே பொருட்டாகக்‌ கொண்டு பிராத்தனையும்‌, சிபாரிசும்‌ தேடப்பட மாட்டாது என்றும்‌ தெரிந்து கொள்ள வேண்டும்‌. (தாத்தை) அவரையே பொருட்டாகக்‌ கொண்டு ஷபாஅத்‌ தேடுதல்‌ ஒருபோதும்‌ அனுமதிக்கப்பட மாட்டாது.

நபி (ஸல்‌) அவர்களிடம்‌ ஒரு மனிதர்‌ வந்து நபியே! நாங்கள்‌ உங்களைக்‌ கொண்டு அல்லாஹ்விடம்‌ ஷபாஅத்து தேடுகிறோம்‌. அல்லாஹ்வைக்‌ கொண்டு உங்களிடமும்‌ ஷபாஅத்தைக்‌ கேட்கிறோம்‌' என்றார்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ அல்லாஹ்வைத்‌ துதித்து
விட்டு ஆச்சரியத்தோடு அட நாசமே, அல்லாஹ்‌ என்றால்‌ யார்‌ என்று உமக்குத்‌ தெரியுமா?' என்று வினவியதன்‌ பின்‌ அல்லாஹ்வைக்‌ கொண்டு அவன்‌ படைப்புகளில்‌ யாரிடமும்‌ சிபாரிசு செய்யப்பட மாட்டாது' என்று விளக்கம்‌ கொடுத்தார்கள்‌.
அல்லாஹ்வின்‌ தன்மை இதைவிட எல்லாம்‌ மிக மேலானது' என்றும்‌ கூறினார்கள்‌.

நபிகளுடையவும்‌, ஸஹாபாக்களுடையவும்‌ உரைகளில்‌ சிருஷ்டியின்‌ துஆவையும்‌, ஷபாத்தையும்‌, பொருட்டாகக்‌ கொண்டு கேட்பதையே கருதப்படும்‌. மாறாக சிருஷ்டியை மட்டுமே பொருட்டாகக்‌ கொண்டு கேட்பதை நாடப்பட மாட்டாது. சிருஷ்டிகளை
பொருட்டாகக்‌ கொண்டு கேட்கிற ஷபாஅத்தின்‌ தாத்பரியம்‌ அவர்களையே வைத்து கேட்பதாகும்‌. (அவர்களின்‌ பிரார்த்தனையைக்‌ கொண்டல்ல) என்றிருந்தால்‌ அல்லாஹ்வைக்‌ கொண்டு படைப்புகளிடத்தில்‌ ஷபாஅத்‌ கேட்கலாம்‌ என்பது
அனுமதிக்கப்படுவதாக இருக்க வேண்டும்‌. ஆனால்‌ நபியவர்கள்‌ அதைத்‌ தடுத்திருக்கிறார்கள்‌. அல்லாஹ்வைக்‌ கொண்டு சிருஷ்டிகளிடம்‌ சிபாரிசு கேட்கக்‌ கூடாது என்றார்கள்‌.

ஏனெனில்‌ ஷபாஅத்‌ தேடுவதைக்‌ கொண்டு என்பதன் கருத்து: நபியின்‌ துஆவைக்‌ கொண்டு ஷபாஅத்‌ தேடுதலாகும்‌. அவர்களைக்‌ கொண்டல்ல. நபியின்‌ துஆவைக்‌ கொண்டு நபிகள்‌ சிபாரிசு செய்வதற்கு அவர்களிடம்‌ கேட்கலாம்‌. நபியவர்கள்‌ இறைவனிடம்‌
பிரார்த்தித்து நம்‌ தேவைகளை அல்லாஹ்விடமிருந்து பெற்றுக்‌ கொடுத்தார்கள்‌. இந்த ஷபாஅத்திற்கு நல்ல பொருந்தக்கூடிய அர்த்தம்‌ இருக்கிறது. ஆனால்‌ அல்லாஹ்‌ யாருக்காக எவனிடம்‌ துஆச்‌ செய்ய முடியும்‌. அல்லாஹ்வுக்கு மேலானவர்‌ யார்‌ இருக்கிறார்‌? எனவே அல்லாஹ்வை சிபாரிசு செய்பவனாக ஆக்கக்‌ கூடாது.

சிபாரிசுக்குக்‌ குறைந்தது மூன்று பேர்‌ வேண்டும்‌. சிபாரிசு கேட்கிறவர்‌ (ஷஃபீஉ-நபி), சிபாரிசு செய்யப்படுகிறவன்‌ (மஷ்‌ஃபூஉ இலைஹி-அல்லாஹ்‌), சிபாரிசை தேவைப்படுகிறவன்‌ (மனிதன்‌). தன்‌ சிருஷ்டிகளின்‌ பாவங்களை மன்னிக்கவோ அல்லது
அவற்றின்‌ தேவைகளை நிறைவேற்றவோ யாரிடம்‌ சென்று அல்லாஹ்‌ பிரார்த்திக்கப்‌போகிறான்‌? எனவே சிபாரிசுக்கு மூவர்‌ வேண்டுமென்ற விதி அல்லாஹ்வுடன்‌ அந்த ஷபாஅத்‌ சேர்க்கப்படும்‌ போது சிந்தனைக்கு எட்டாததாக மாறி விடுகிறதல்லவா?
சிபாரிசின்‌ மூன்று அம்சங்களில்‌ ஒன்றை (மஷ்‌ஃபூஉ இலைஹி) இழக்க நேரிடுகிறது. இது எதைக்‌ காட்டுகிறது என்றால்‌ ஷபாஅத்தும்‌ (சிபாரிசும்‌), வஸீலாவும்‌ (இறை நெருக்கத்தைத்‌ தேடுவதும்‌) நபியைக்‌ கொண்டு கேட்கப்பட மாட்டாது. மாறாக
அவர்களின்‌ துஆவைக்‌ கொண்டுதான்‌ கேட்கப்படும்‌ என்பதைக்‌ காட்டுகிறது.

எல்லாம்‌ வல்ல இறைவன்‌ என்ற அனைத்து இறைக்‌ கொள்கைக்காரர்களை சார்ந்த ‘இத்திஹாதிய்யா' பிரிவினர்களில்‌ சிலரும்‌, இன்னும்‌ கவிஞர்களில்‌ சிலரும்‌ தான்‌ அல்லாஹ்வைக்‌ கொண்டும்‌ நபியிடம்‌ சிபாரிசு வேண்டியதாகக்‌ குறிப்பிடுகின்றனர்‌.
இவர்களின்‌ கூற்று தவறு. வழி கெடுப்பதாகும்‌. சிபாரிசு கேட்கப்படக்‌ கூடியவனும்‌, பிரார்த்திக்கப்படுபவனும்‌ அல்லாஹ்‌ ஒருவன்‌ மட்டுமே. வானங்கள்‌, பூமியில்‌ உள்ள அனைத்து சிருஷ்டிகளும்‌ அவனையே கெஞ்சி நிற்கின்றன. அப்படியிருக்க இறைவன்‌ தன்‌ சிருஷ்டிகளிடம்‌ பிரார்த்தித்தல்‌ சாத்தியமாகுமா? அவன்‌ தன்‌ அடியார்களை ஏவுகிறான்‌. அவர்கள்‌ அவனுக்குக்‌ கீழ்படிந்து விடுகின்றனர்‌. அவனுக்கு கட்டுப்பட்டு வழிபட்டு நடப்பதை சிருஷ்டிகள்‌ தத்தம்‌ கட்டாய கடமையாக ஏற்றுக்‌ கொள்கின்றனர்‌.
ரஸுல்மார்கள்‌ அல்லாஹ்வின்‌ கட்டளைகளை மனிதர்களுக்கு சேர்த்து வைப்பார்கள்‌. அவர்களுக்கு வழிபடுவதன்‌ தாத்பரியமும்‌ அல்லாஹ்வுக்கு சிரம்‌ சாய்ப்பதாகும்‌. திருமறையில்‌ "நாம்‌ அனுப்பிய எந்த தூதரும்‌ அல்லாஹ்வின்‌ அனுமதியுடன்‌ மக்கள்‌
அவருக்கு வழிபட வேண்டுமென்றே அனுப்பியுள்ளோம்‌" (4:64) என்று அல்லாஹ்‌ கூறுகிறான்‌.

மேலும்‌ கூறுகிறான்‌: "ரஸுலுக்கு வழிபட்டவன்‌ அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவனாகிறான்‌” (4:80). சமூகத்‌ தலைவர்களின்‌ கட்டளைகளுக்கு வழிபடுவதும்‌
கூட அவர்கள்‌ அல்லாஹ்‌, ரஸூலுக்கு வழிபட வேண்டுமென்று பணித்தாலே கடமையாகிறது. நபி (ஸல்‌) அவர்கள்‌ 'முஸ்லிமான மனிதன்‌ வாழ்விலும்‌, தாழ்விலும்‌, தூக்கத்திலும்‌, விழிப்பிலும்‌ தலைவர்களால்‌ பணிக்கப்பட்டதற்கொப்ப கேட்டு வழிபட்டு நடக்க வேண்டும்‌. அனால்‌ அல்லாஹ்வுக்கு மாறு செய்ய வேண்டுமென்று பணிக்கப்பட்டால்‌ இங்கே கேட்பதோ, வழிபாடோ இல்லை' என்று கூறிவிட்டு, படைத்தவனுக்கு மாறு செய்யும்‌ விஷயத்தில சிருஸ்டிகளுக்கு வழிபடக்‌ கூடாது” என்று
கூறி முடித்தார்கள்‌.

பரிந்துரைப்பவனின்‌ பரிந்துரையை ஏற்று அதற்கொப்ப வழிபடுதலும்‌ கடமை (வாஜிப்‌)யொன்றுமில்லை. எத்தனை பெரிய மனிதர்‌ சிபாரிசுக்கு வந்தாலும்‌ சரியே. பரீரா என்ற அடிமைப்பெண்‌ உரிமை விடப்பட்டதற்குப்‌ பின்‌ அவளுடைய அடிமை கணவரைப்‌ பிரியும்‌ விஷயத்தில்‌ தன்‌ இஷ்டம்போல செய்ய வேண்டுமென்று கூறி நபி
(ஸல்‌) அவர்கள்‌ அவளுக்கு அனுமதி வழங்கினார்கள்‌. அவளுடைய அடிமைக்‌ கணவர்‌ அவளை மிகவும்‌ விரும்பியிருந்தார்‌. தன்‌ மனைவி தம்மை கைவிடப்‌ போவதாகத்‌ தெரிந்ததும்‌ கணவர்‌ அழுது விட்டார்‌. இது தெரிய வந்ததும்‌ அந்தக்‌ கணவரை பிரியாமலிருக்கவும்‌, தம்‌ அடிமைக்‌ கணவருடன்‌ கூடி வாழ வேண்டுமென்றும்‌ நபியவர்கள்‌ பரீராவிடம்‌ கூறியபோது, 'நபியே! இது விஷயத்தில்‌ எனக்குக்‌ கட்டளை இடுகிறீர்களா?' என வினவினாள்‌. அதற்கு நபியவர்கள்‌ 'இல்லை. கட்டளையிடவில்லை. சிபாரிசு செய்கிறேன்‌' என்று பரீராவுக்கு பதிலளித்தார்கள்‌.
கட்டளை இடுகிறீர்களா என ஏன்‌ வினவினார்‌ என்றால்‌ சிபாரிசுக்கொப்ப செயல்பட தேவையில்லை என்பது அனைவருக்கும்‌ தெரிந்த உண்மையாக இருக்கலாம்‌. ஆனால்‌ நபிகள்‌ கட்டளையிட்டு விட்டால்‌ அதற்கொப்ப செயல்பட்டுத்தான்‌ ஆக வேண்டும்‌. அது
வாஜிப்‌ (கடமை) என்பதும்‌ முஸ்லிம்களுக்கு இடையில்‌ நன்கு தெரிந்திருக்கும்‌. எனவேதான்‌ நபியவர்கள்‌ 'நான்‌ பணிக்கவில்லை. சிபாரிசு செய்கிறேன்‌' என்றார்கள்‌.

இதிலிருந்து ஷபாஅத்தை ஏற்று அதற்கொப்ப செயல்படுதல்‌ வாஜிபில்லை என்று புலனாகிறதல்லவா! மனிதரிடம்‌ நபிகள்‌ வேண்டுகிற ஷபாஅத்தாயினும்‌ சரியே. ஏனெனில்‌ நபியவர்கள்‌ தம்‌ ஷபாஅத்தை பரீரா ஏற்றுச்‌ செயல்படாததினால்‌ நபியவர்கள்‌ அவளைக்‌ குற்றம்‌ கூறவில்லை. இதிலிருந்து மனிதன்‌ இன்னொரு மனிதனுக்காக ஷபாஅத்துச்‌ செய்தால்‌ அதை ஏற்க வேண்டுமென்பது அவசியமில்லை என்று
தெரிகிறது. விரும்பினால்‌ ஏற்கலாம்‌. இல்லையென்றால்‌ புறக்கணித்து விடலாம்‌.
அல்லாஹ்வைப்‌ பொருத்தவரை அவனுடைய அனுமதியின்றி எவருக்கும்‌ ஷபாஅத்துச்‌
செய்வதற்கு அனுமதியில்லை.

இதைத்‌ திருமறையும்‌ விளக்குகிறது: "அர்-ரஹ்மான்‌ சந்ததியை ஏற்படுத்திக்‌ கொண்டான்‌ என்று கூறினர்‌. அவனோ மிகப்‌ பரிசுத்தமானவன்‌. மலக்குகள்‌ (அவனது சந்ததிகள்‌) அல்லர்‌. அவர்கள்‌ அவனுடைய கண்ணியமிக்க அடியார்களே இ(வான)வர்கள்‌
(அவன்‌ முன்னிலையில்‌) யாதொரு வார்த்தையும்‌ மீறிப்‌ பேச மாட்டார்கள்‌. அவனிட்ட கட்டளையையே செய்து கொண்டிருப்பார்கள்‌. இவர்களுக்கு முன்னிருப்பவற்றையும்‌, இவர்களுக்குப்‌ பின்னிருப்பவற்றையும்‌ அவன்‌ நன்கறிவான்‌. அவன்‌
விரும்பியவர்களுக்கன்றி மற்றவருக்கு இவர்கள்‌ சிபாரிசு செய்ய மாட்டர்கள்‌. அவனுக்கு பயந்து நடுங்கிக்‌ கொண்டே இருப்பார்கள்‌" (21:26-28).

நபி (ஸல்‌) அவர்களிடமிருந்து இம்மையிலும்‌, மறுமையிலும்‌ சிபாரிசு தேடப்படும்‌ என்பதை முன்னர்‌ எடுத்துக்‌ காட்டப்பட்ட ஹதீஸ்கள்‌ தெளிவு படுத்துகின்றன. மறுமையில்‌ ஷபாஅத்‌ தேடுவது என்றால்‌ சிருஷ்டிகள்‌ அன்று நபி (ஸல்‌) அவர்களிடம்‌
சென்று தத்தம்‌ தீர்ப்புகளை முடித்து சுவனத்தில்‌ பிரவேசிப்பதற்கு அல்லாஹ்விடம்‌ சிபாரிசு செய்யுமாறு நபிகளை வேண்டிக்‌ கொள்வார்கள்‌. தம்‌ உம்மத்துகளில்‌ பெரும்‌ பாவம்‌ புரிந்தவர்களுக்கும்‌ ஷபாஅத்துச்‌ செய்வார்கள்‌. நரகத்துக்குச்‌ செல்ல
இருக்கின்றவர்களில்‌ சிலருக்கும்‌ ஷபாஅத்துச்‌ செய்து அங்கு செல்ல விடாமல்‌ தடுப்பார்கள்‌. நரகில்‌ நுழைந்தவர்கள்‌ சிலரை அதை விட்டும்‌ வெளியேற ஷபாஅத்துச்‌ செய்வார்கள்‌. உலகில்‌ இறைவனுக்குக்‌ கீழ்படிந்து நடந்து நன்மைக்குரியவர்களாக
வந்தவர்களுக்கும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ ஷபாஅத்துச்‌ செய்வதாக அதிகமான இமாம்கள்‌ அபிப்பிராயப்‌ படுகின்றனர்‌.

ஆனால்‌ முஃதஸிலாக்கள்‌, கவாரிஜ்கள்‌, பித்‌அத்காரர்களில்‌ பெரும்பாலோர்‌ அஹ்லுல்கபாயிர்‌ எனும்‌ பெரும்‌ பாவிகளுக்கு நபியின்‌ ஷபாஅத்து இல்லையென மறுத்துக்‌ கூறுகின்றனர்‌. பெரும்‌ பாவிகளுக்காக நபி (ஸல்‌) அவர்கள்‌ ஷபாஅத்துச்‌
செய்ய மாட்டார்களாம்‌. பெரும்‌ பாவம்‌ செய்தவனின்‌ குற்றத்தை இறைவன்‌ மன்னிக்கமாட்டான்‌. பெரும்‌ பாவிகள்‌ நரகில்‌ புகுவார்கள்‌. நரகத்தில்‌ புகுந்தால்‌ சிபாரிசினாலும்‌ சரி, மற்ற எந்த காரணத்தினாலும்‌ அதை விட்டு வெளியேற மாட்டார்கள்‌ என்பது
இவர்களின்‌ கொள்கை.

ஆனால்‌ ஸஹாபாக்களும்‌, தாபியீன்களும்‌ மேலும்‌ மத்ஹபுடைய இமாம்கள்‌ அனைவரும்‌ பொதுவாக ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தாரும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ பெரும்‌ பாவிகளுக்கு சிபாரிசு செய்வார்கள்‌ என்று கூறியிருக்கிறார்கள்‌. ஈமான்‌ கொண்டிருந்த
ஒரு மனிதன்‌ நரகில்‌ காலமெல்லாம்‌ கிடக்க மாட்டான்‌. எவரது இதயத்தில்‌ அணுவளவு ஈமான்‌ இருக்கிறதோ அவர்‌ நரகத்தை விட்டும்‌ வெளியேறி விடுவார்‌ என்று
கூறுகின்றனர்‌. ஆனால்‌ நபியவர்களிடம்‌ இந்த சிபாரிசைத்‌ தேடுவதும்‌ மேலும்‌ நபிகளைக்‌ கொண்டு வஸீலா தேடுவதுமெல்லாம்‌ அவர்கள்‌ வாழ்ந்திருக்கும்‌ போது ஆக வேண்டும்‌.


நபியைக்‌ கொண்டு ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள்‌ வஸீலா தேடினார்களா?

நபி (ஸல்‌) அவர்களைக்‌ கொண்டு ஷபாஅத்‌ தேடுதல்‌ அன்னார்‌ வாழ்ந்திருந்த காலத்தில்‌ அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால்‌ அவர்களைக்‌ கொண்டு பிரார்த்தித்தலும்‌, சத்தியம்‌ செய்து கேட்டலும்‌ அவர்கள்‌ இறந்ததற்கப்பால்‌ அனுமதிக்கப்‌ படாதது போன்று நபியவர்கள்‌ மறைந்திருக்கும்‌ போதும்‌, அவர்கள்‌ முன்னிலையில்‌ வைத்தும்‌ இப்படிச்‌
செய்யப்பட மாட்டாது. அன்றி இது விஷயத்தில்‌ நபிமார்களைப்‌ போன்றுதான்‌ மற்றவர்களும்‌. இவர்களைக்‌ கொண்டெல்லாம்‌ வஸீலா தேடுவதை நபித்தோழர்களும்‌, தாபியீன்களும் வழக்கமாக்கிக்‌ கொள்ளவில்லை.

கலீஃபா உமர்‌ (ரலி) அவர்களும்‌, முஆவியா (ரலி), அவர்களும்‌, மற்றும்‌ எண்ணற்ற ஸஹாபாக்களும்‌ வாழ்ந்திருக்கையில்‌ வறட்சி ஏற்பட்டபோது உயிருடனிருந்த அப்பாஸ்‌ அவர்களையும்‌, யஸீத்‌ பின்‌ அஸ்வத்‌ அவர்களையும்‌ கொண்டு வஸீலா தேடினார்கள்‌. மறைந்துபோன நபியைக்‌ கொண்டோ, அவர்களின்‌ கப்றருகில்‌ சென்றோ இதைச்‌ செய்யவில்லை. தம்‌ துஆக்களில்‌ நபியவர்களின்‌ மீது ஸலவாத்தும்‌ கூறினர்‌. மறைந்துபோன நபியைக்‌ கொண்டு வஸீலா தேடல்‌ அனுமதிக்கப்பட்ட நல்ல
அனுஷ்டானம்‌ என்று அவர்கள்‌ கருதியிருந்தால்‌ நபியுடைய கப்றருகில்‌ நின்றாவது (குறைந்த பட்சம்‌) பிரார்த்திக்க முனைந்திருப்பார்கள்‌. நபியையோ, அவர்களுடைய அந்தஸ்தையோ குறிக்கின்ற ஏதேனும்‌ ஒன்றை எடுத்துக்‌ கூறி அதன்‌ பொருட்டாலோ
அல்லது நம்மில்‌ சிலர்‌ துஆச்‌ செய்வது போல்‌ நபியைக்‌ கொண்டு ஆணையிட்டுக்‌ கேட்கவோ, 'அவர்களின்‌ பொருட்டால்‌' என்று கூறி கேட்கவோ செய்திருப்பார்கள்‌. ஆனால்‌ அப்படி ஒன்றும்‌ அவர்கள்‌ செய்யவில்லை.

எனவே அது அனுமதிக்கப்படாத வஸீலாவின்  முறை என்பதையும்‌, அவர்கள்‌ செய்து காட்டிய முறைதான்‌ வஸீலாவின் அனுமதிக்கப்பட்ட அமைப்பு என்பதையும்‌ அறிந்து கொள்ள வேண்டும்‌. நபி (ஸல்‌) அவர்களது அந்தஸ்தை எடுத்துக்‌ கூறி பிரார்த்தித்தல்‌
கூடாது என்று கூறினோம்‌. ஆனால்‌ நபியவர்கள்‌ கூறியதாக அறிவிலிகள்‌ சிலர்‌, 'நீங்கள்‌
அல்லாஹ்விடம்‌ பிரார்த்தித்தால்‌ என்னுடைய அந்தஸ்தையும்‌, மதிப்பையும்‌ எடுத்துரைத்து அதன்‌ பொருட்டால்‌ கேளுங்கள்‌. ஏனெனில்‌ அல்லாஹ்விடத்தில்‌ எனக்கு மிகப்பெரிய மதிப்பிருக்கிறது' என்ற ஹதீஸை குறிப்பிடுகின்றனர்‌.

ஆனால்‌ இந்த ஹதீஸ்‌ முஸ்லிம்களின்‌ நம்பத்‌ தகுந்த நூல்களிலிருந்து எடுக்கப்படவில்லை. இது பொய்யான ஹதீஸாகும்‌. ஹதீஸ்‌ துறையில்‌ ஞானமுள்ள ஒருவர்கூட இதைத்‌ தம்‌ நூற்களில்‌ குறிப்பிடவில்லை. எல்லா நபிமார்களுடையவும்‌,
ரஸுல்மார்களுடையவும்‌ மதிப்பைவிட நபியவர்களின்‌ மதிப்பு மிக மேலானது. இதை எவரும்‌ மறுக்க முடியாது. மேன்மைக்குரிய நபிமார்களான மூஸா, ஈஸா நபிகளை விட நபி (ஸல்‌) அவர்கள்‌ சிறந்தவர்கள்‌. 

இதுபற்றி அல்லாஹ்‌ குறிப்பிடுகிறான்‌:
"மூமின்களே! மூஸாவைபப்‌ பற்றி பொய்யாக அவதூறு கூறி அவரை தொல்லைப்‌ படுத்தியவர்களைப்‌ போல்‌ நீங்கள்‌ ஆகிவிட வேண்டாம்‌. அவர்கள்‌ கூறிய
அவதூறிலிருந்து அல்லாஹ்‌ அவரை தூய்மைப்படுத்தி விட்டான்‌. அல்லாஹ்விடத்தில்‌ அவர்‌ மிக கண்ணியமானவராகவே இருந்தார்‌”. (33:69)

இன்னும்‌ திருமறையில்‌ ஈஸாவைப்பற்றிக்‌ கூறினான்‌: “(மர்யமெ நோக்கி) மலக்குகள்‌ கூறினர்‌. மர்யமே! நிச்சயமாக அல்லாஹ்‌ தன்னுடைய ஒரு வார்த்தையைக்‌ கொண்டு உமக்கு ஒரு (மகனை அளிக்க) நற்செய்தி கூறினான்‌. அதன்‌ பெயர்‌ மர்யமுடைய மகன்‌ ஈஸா மஸீஹ்‌ என்பதாகும்‌. அவர்‌ இம்மை, மறுமையில்‌ மிக்க கம்பீரமானவராகவும்‌,
இறைவனுக்கு மிக்க நெருங்கியவர்களில்‌ ஒருவராகவும்‌ இருப்பார்‌". (3:45)

அல்லாஹ்விடத்தில்‌ மூஸாவுடையவும்‌, ஈஸாவுடையவும்‌ மதிப்பு இப்படியென்றால்‌ மனிதர்களின்‌ தலைவரான 'மகாமுல்‌ மஹ்மூத்‌' (சுவனத்தில்‌ ஒரு பதவி) 'கவ்ஸர்‌'
(சுவனத்தின்‌ ஒரு நதி) 'ஹவ்ளு' (சுவனத்தில்‌ ஒரு தண்ணீ தடாகம்‌) ஆகியவற்றை எல்லாம்‌ இறைவன்‌ வழங்கி கண்ணியப்படுத்துகின்ற நபி (ஸல்‌) அவர்களின்‌ மகிமையை வார்த்தைகளால்‌ வர்ணிக்க முடியுமா?

மகாமுல்‌ மஹ்மூத்‌ புகழுக்குரிய பதவியை எல்லோரும்‌ தமக்காக ஆசைப்படுவர்‌. மேற்கூறிய அல்‌ கவ்ஸர்‌, அல்‌ ஹவ்ளு இதிலிருந்து நீர்‌ பருக விரும்பும்‌ மக்களின்‌
பாத்திரங்கள்‌ வானத்திலிருக்கும்‌ நட்சத்திரங்களுக்கு சமமாகும்‌. அதன்‌ நீர்‌ பாலை விடவும்‌ வெண்மையானது. தேனை விடவும்‌ சுவை நிரம்பியது. அந்நீரில்‌ ஒரு மடங்கு பருகியவனுக்குத்‌ தாகமே இராது. உலுல்‌ அஸ்ம்‌ என்ற சிறப்புப்‌ பெற்ற நபிமார்களான ஆதம்‌, நூஹ்‌, இப்ராஹீம்‌, மூஸா, ஈஸா (அலைஹிம்‌) உட்பட அனைத்து நபிமார்களும்‌
மறுமையில்‌ ஷபாஅத்துச்‌ செய்வதை விட்டும்‌ பின்வாங்கும்‌ நேரத்தில்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ தாம்‌ மக்களுக்கு ஷபாஅத்தைக்‌ கொண்டு உதவி புரிவார்கள்‌.

அர்ஷின்‌ கீழுள்ள 'லிவாவு' என்ற கொடிக்குரியவர்களும்‌ நபியவர்களேயாகும்‌. இந்தக்‌ கொடியின்‌ நிழலில்‌ நபி ஆதமும்‌, இதர நபிமார்களும்‌ இருப்பார்கள்‌. நபி ஆதமின்‌ சந்ததிகளில்‌ தலைமைப்‌ பதவிக்குரியவர்‌, அனைத்து நபிமார்களை விட சிறந்தவர்களும்‌,
அவர்கள்‌ அனைவருக்கும்‌ போதகரும்‌, மிகப்‌ பெரும்‌ மதிப்பிற்குரியவர்களுமான முஹம்மத்‌ (ஸல்‌) அவர்கள்‌ மாத்திரமே என்பதை எவராலும்‌ மறுக்க இயலாது.

ஆனால்‌ எவ்வளவு இருப்பினும்‌ அல்லாஹ்விடத்தில்‌ அவன்‌ சிருஷ்டிகளுக்குரிய மதிப்பு சிருஷ்டிகளுக்கிடையில்‌ ஒருவருக்கொருவர்‌ அறிந்திருக்கும்‌ மதிப்பைப்‌ போலல்ல. இத்தனை மதிப்புகள்‌ நபி (ஸல்‌) அவர்களுக்கு இருந்தும்‌ கூட
அல்லாஹ்வுடைய அனுமதி பெறாமல்‌ சிருஷ்டிகளில்‌ ஒருவருக்கும்‌ அவர்கள்‌ ஷபாஅத்‌ செய்ய முடியாது.

திருமறையில்‌ அல்லாஹ்‌ குறிப்பிடுகிறான்‌: “வானங்களிலும்‌, பூமியிலுமுள்ள ஒவ்வொன்றும்‌ அர்‌-ரஹ்மானிடம்‌ அடிமையாக வந்தே தீரும்‌. அவையனைத்தையும்‌ அவன்‌ பூரணமாக கணக்கிட்டு அறிந்தும்‌ வைத்திருக்கிறான்‌". (19:93-94)

மேலும்‌ கூறுகிறான்‌: "மஸீஹும்‌, அல்லாஹ்வோடு நெருங்கிய மலக்குகளும்‌ அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைப்‌ பற்றி குறைவாகக்‌ கருத மாட்டார்கள்‌. எவர்கள்‌ கர்வத்தால்‌ அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை குறைவாகக்‌ காணுகின்றனரோ அவர்கள்‌ யாவரையும்‌ மறுமையில்‌ அவன்‌ தன்னிடம்‌ கொண்டுவரச்‌ செய்வான்‌. ஆகவே
எவர்‌ உண்மையாகவே விசுவாசம்‌ கொண்டு நர்கருமங்களைச்‌ செய்கிறார்களோ அவர்களுக்குரிய கூலியைப்‌ பூரணமாக வழங்கி தன்‌ அருளால்‌ பின்னும்‌
அதிகப்படுத்துவான்‌. எவர்‌ கர்வம்‌ கொண்டு (அல்லாஹ்வுக்கு அடிமையாய்‌ இருப்பதைக்‌)
குறைவாக காணுகின்றனரோ அவர்களைத்‌ துன்புறுத்தும்‌ வேதனையைக்‌ கொண்டு வேதனைப்‌ படுத்துவான்‌. அல்லாஹ்வையன்றி தங்களுக்கு தோழரையும்‌, உதவிப்‌ புரிவோரையும்‌ (அங்கு) அவர்கள்‌ காண மாட்டார்கள்‌". (4:172-173)

மனிதன்‌ இன்னொரு மனிதனிடம்‌ அனுமதியின்றியோ சிபாரிசு கேட்க முடியும்‌. இது சிருஷ்டிகளின்‌ தன்மை. ஏனெனில்‌ ஒருவன்‌ சிருஷ்டிக்கப்பட்டவன்‌ என்ற நிலையில்‌ மற்றவனுக்கு கூட்டாக இருக்கிறானல்லவா. எனவே இருவருக்கும்‌ காரியங்கள்‌ நிறைவேறுவதில்‌ பங்குண்டு. அல்லாஹ்வைப்‌ பொறுத்த வரையில்‌ எந்த விஷயத்திலும்‌ எவருடனும்‌ அவன்‌ கூட்டாக இருக்கிறான்‌ என்று சொல்ல முடியுமா?

திருமறை கூறுகிறது: "(நபியே!) நீர்‌ கூறும்‌. அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள்‌ (தெய்வங்களாக) எண்ணிக்‌ கொண்டிருக்கிறீர்களோ அவற்றை நீங்கள்‌ அழைத்துப்‌ பாருங்கள்‌. வானங்களிலோ, பூமியிலோ அவற்ருக்கு ஓர்‌ அணுவளவும்‌ அதிகாரம்‌ இல்லை. அன்றி அவ்விரண்டிலும்‌ அவற்றுக்கு எத்தகைய பங்கும்‌ இல்லை. அவனுக்கு உதவியாளர்களும்‌ அவர்களில்‌ ஒருவரும்‌ இல்லை. அவனுடைய அனுமதிப்‌
பெற்றவர்களைத்‌ தவிர அவனிடத்தில்‌ பரிந்துப்‌ பேசுவதும்‌ பயனளிக்காது". (34:22-23)


கப்றுகளில்‌ பள்ளி கட்டலாமா?

கப்றுகளைப்‌ பள்ளிகளாக்குவதை தடுத்து பல ஹதீஸ்கள்‌ வந்திருக்கின்றன. அப்படிச்‌ செய்பவனை நபி (ஸல்‌) அவர்கள்‌ சபித்திருக்கிறார்கள்‌. தமது கப்றில்‌ வைபவங்கள்‌ கொண்டாடுவதையும்‌ விலக்கினார்கள்‌. முதலில்‌ மக்களிடையே இணை வைத்தல்‌ என்பது நூஹ்‌ நபி அவர்களின்‌ காலத்திலே தான்‌ துவங்கிற்று. இப்னு அப்பாஸ்‌ (ரலி) அவர்கள்‌ 'நபி நூஹ்‌ (அலை) அவர்களுக்கும்‌, நபி ஆதம்‌ (அலை) அவர்களுக்கும்‌ இடையிலான பத்துத்‌ தலைமுறையிலுள்ள மக்கள்‌ இஸ்லாமியர்களாகவே
வாழ்ந்திருந்தார்கள்‌' என்று கூறினார்கள்‌.

நூஹ்‌ நபியவர்கள்‌ மக்கள்‌ சமூகத்திற்கு அனுப்பப்பட்ட முதல்‌ தூதராவார்கள்‌. நூஹ்‌ (அலை) அவர்களின்‌ 'சமூகத்தார்‌ (ஒருவருக்கொருவர்‌) நீங்கள்‌ உங்கள்‌ தெய்வங்களை (வணங்காது) ஒதுக்கி விட்டீர்கள்‌. வத்து, ஸுவாஉ, எகூஸ்‌, யவூக்‌, நஸ்ர்‌ (ஆகிய
விக்கிரகங்‌களையும்‌ விட்டு விடாதீர்கள்‌ என்று கூறிக்‌ கொண்டனர்‌' (71:23) இந்த ஆயத்தின்‌ கருத்தைப்‌ பற்றி ஸலபுஸ்ஸாலிஹீன்களின்‌ கருத்தாவது: இந்த ஆயத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ள சாமிகள்‌ அனைவருமே நபி நூஹ்‌ (அலை) அவர்களின்‌ சமூகத்தில்‌
தோன்றிய நன்மக்கள்‌ ஆவார்‌. இவர்கள்‌ இறந்ததன்‌ பின்னர்‌ மக்கள்‌ இவர்களின்‌ கப்றுகளில்‌ மண்டியிட்டு விழுந்தனர்‌. அதற்குப்‌ பின்னர்‌ மக்கள்‌ அவற்றை
வணங்கினார்கள்‌. இவை அரபிகளின்‌ கரங்களில்‌ வந்து சேர்ந்தன. பிறகு அரபிகள்‌ தம்‌ குடும்பங்களுக்கு இந்த சிலைகளின்‌ பெயர்களைச்‌ சூட்டினர்‌ என்பதாகும்‌.

இமாம்‌ புகாரி (ரஹ்‌) அவர்கள்‌ இப்னு அப்பாஸ்‌ வாயிலாக வந்த கீழ்காணும்‌ ஹதீஸை தந்துள்ளார்கள்‌: 'கப்றுகளை பள்ளிகளாக அமைப்பதைத்‌ தடுத்து அதனால்‌ ஷிர்க்கை ஒழித்துக்‌ கட்ட பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ நாடினார்கள்‌. ஏக இறைவனுக்குத்‌ தொழுதாலும்‌ அத்தொழுகையை கப்றுகளில பள்ளிவாசல்களை அமைத்து தொழக்‌ கூடாது' என நபி (ஸல்‌) அவர்கள்‌ தடுத்திருக்கிறார்கள்‌. இதை
அறிந்த ஸஹாபாக்கள்‌ தம்‌ வாழ்க்கையில் இதை தவிர்த்துக்‌ கொண்டார்கள்‌.

இதனால்‌ தான்‌ சூரியன்‌ உதயமாகும்‌ நேரத்தில்‌ தொழக்‌ கூடாது என்று பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ தடுத்திருந்தனர்‌. ஏனெனில்‌ இந்நேரத்தில்‌ இறைவனுக்கென்றே கருதி தொழுதாலும்‌ சூரியனுக்காகப்‌ பிரார்த்திப்பவர்களின்‌ பிரார்த்தனைக்கு ஒப்பாகி விடுகிறது.
கப்றில்‌ நின்று அல்லாஹ்வுக்காக தொழுதாலும்‌ கப்றாளியைக்‌ கொண்டு உதவி தேடுகின்ற ஷிர்க்கான வணக்கத்தோடு ஒப்பாகி விடுகிறது. இதையெல்லாம்‌ அறிந்த ஸஹாபிகள்‌ தாமாக விலகிக்‌ கொண்டனர்‌.

வஸீலா விஷயத்திலும்‌ ஸஹாபிகள்‌ நல்ல விளக்கம்‌ பெற்றிருந்தார்கள்‌. நபிகளை ஈமான்‌ கொண்டு, அவர்களுக்கு வழிபட்டு, அவர்கள்‌ மீது நேசம்‌ வைத்து நடப்பதைக்‌ கொண்டு வஸீலா தேடலாம்‌ என்றும்‌, நபிகளின்‌ துஆ, ஷபாஅத்‌ இவற்றைப்‌ பெற்று
வஸீலா தேடலாம்‌ என்றும்‌ நன்கு அறிந்திருந்தார்கள்‌. எனவே அவர்கள்‌ நபி (ஸல்‌) அவர்களை மட்டும்‌ கொண்டு வஸீலா தேடவில்லை. மேன்மைதாங்கிய பெருமானாரின்‌ துஆவைக்‌ கொண்டும்‌, ஷபாஅத்தைக்‌ கொண்டும்‌ வஸீலா தேடும்‌ வாய்ப்பு அவர்கள்‌
மரணமடைந்து விட்டதின்‌ காரணமாக முடியாமல்‌ போய்‌ விட்டது. இதனால்‌ மேன்மையில்‌ நபியை விட குறைந்த ஒரு மனிதரை வஸீலாவுக்கு அமைத்துக்‌
கொண்டனர்‌. ஸஹாபிகள்‌ நம்மை விட எல்லா வகையிலும்‌ சிறந்தவர்கள்‌. மார்க்கச்‌ சட்டங்களை பின்பற்றுவதில்‌ அவர்களைவிட பேராவல்‌ கொண்டவர்கள்‌ எவருமில்லை. அல்லாஹ்‌, ரஸூலுடைய விருப்புகள்‌ யாவை, வெறுப்புகள்‌ யாவை என்பதை நன்றாக அறிந்திருந்தார்கள்‌. அல்லாஹ்‌, ரஸுலின்‌ ஏவல்களுக்கு தகுந்த துஆக்களையும்‌
அறிந்திருந்தார்கள்‌. அத்தகைய துஆக்கள்‌ அங்கீகரிக்கப்படுவதற்கு மிக அருகதையுடைவையாகும்‌.

கண்பார்வை இழந்த ஸஹாபியின்‌ ஹதீஸை நபி (ஸல்‌) அவர்களின்‌ துஆவால்‌ வஸீலா தேடுவதற்கு சான்றாக கொள்ளப்படும்‌. ஆனால்‌ சில மக்கள்‌ இந்த ஹதீஸ்‌ நபிகள்‌ வாழ்ந்திருக்கும்‌ போதும்‌, அவர்களின்‌ மரணத்திற்கு பிறகும்‌ பொதுவாக அவர்களைக்‌ கொண்டு வஸீலா தேடுதல்‌ ஜாயிஸ்‌ என்பதைக்‌ காட்டுகிறது என்று கூறினார்கள்‌. மேலும்‌ கண்பார்வை இழந்த ஸஹாபியும்‌, இதர ஸஹாபாக்களும்‌
நபியவர்கள்‌ உயிருடனிருக்கையில்‌ வஸீலா தேடுவதின்‌ காரணத்தைப்‌ பற்றி நபிகளைக்‌
கொண்டு அல்லாஹ்வின்‌ மீது ஆணையிட்டும்‌, நபியைப்‌ பொருட்டாகக்‌ கொண்டும்‌ அல்லாஹ்விடம்‌ தமது தேவைகளை வேண்டுவதற்குச்‌ சமம்‌ என்று இவர்கள்‌ எண்ணிக்‌ கொண்டார்கள்‌.

நபியைக்‌ கொண்டு வஸீலா தேடுவதற்கு இவர்கள்‌ நபிக்கு வழிபடுவதோ, அல்லது நபிகள்‌ இவர்களுக்கு பிரார்த்திபப்தோ தேவையில்லை என்று கருதிக்‌ கொள்கிறார்கள்‌. இது விஷயத்தில்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ இவர்களுக்காக பிரார்த்திப்பதும்‌, பிரார்த்திக்காமல்‌ இருப்பதும்‌ சமமே. ஏனெனில்‌ தங்கள்‌ எண்ணத்தில்‌ கண்பார்வை இழந்த ஸஹாபி நபியைக்‌ கொண்டு வஸீலா தேடியபோது அவரின்‌ தேவை நிறைவேறியதாம்‌. அவருக்காக நபிகள்‌ பிரார்த்திக்க வில்லையாம்‌. இது இவர்களின்‌ கருத்து. இவர்களின்‌ சொல்‌ ஷரீஅத்தில்‌ முழுக்க விரும்பப்படாத ஒன்றாகும்‌. அல்லாஹ்வின்‌ ஷரீஅத்திற்கு இவர்கள்‌ ஒத்தவர்களே அல்லர்‌.

அல்லாஹ்வுடைய படைப்பின்‌ அமைப்பிற்கும்‌ இவர்களின்‌ கூற்று பொருந்தாது. ஏனெனில்‌ நபிகளின்‌ பிரார்த்தனை பெற்றவரும்‌, பெறாதவரும்‌ சமமானவர்‌ அல்லவே. கண்பார்வை இழந்த அம்மனிதருக்கு நிச்சயமாக நபி (ஸல்‌) அவர்கள்‌ பிரார்த்தித்தார்கள்‌.
எனவேதான்‌ அம்மனிதர்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ சொல்லிக்‌ கொடுத்த ' என்‌ விஷயத்தில்‌ நபிகளின்‌ பிரார்த்தனையை ஏற்றருள்வாயாக இறைவா!' என்னும்‌ வாக்கியத்தைக்‌ கூறினார்கள்‌. இச்சொல்‌ அவர்‌ விஷயத்தில்‌ நபியவர்கள்‌ 'ஷஃபீஉ' ஷபாஅத்‌
செய்கிறவர்களாக இருந்தார்கள்‌ என்பதைக்‌ காட்டுகிறதல்லவா!

நீர்‌ விரும்பினால்‌ கொஞ்சம்‌ பொறும்‌. இல்லையேல்‌ நான்‌ உமக்காகப்‌ பிரார்த்திக்கிறேன்‌' என்ற நபியுரையைக்‌ கேட்ட அம்மனிதர்‌ தமக்காகப்‌ பிரார்த்திக்கும்படி நபியவர்களிடம்‌ வேண்டிக்‌ கொண்டார்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ அவரிடம்‌ 'தொழ
வேண்டும்‌. தமக்காகவும்‌ பிராத்திக்க வேண்டும்‌' என்றும்‌ சொன்னார்கள்‌.

இந்த ஆதாரங்களைக்‌ கொண்டு நபிகளின்‌ துஆவினாலும்‌, சிபாரிசினாலும்‌ தான்‌
வஸீலா தேடப்படும்‌ என்பதை விளங்கப்படும்‌.

மழை தேடும்‌ விஷயத்தில்‌ உமர்‌ (ரலி) அவர்களுடைய ஹதீஸும்‌ இப்படித்தான்‌ அமைந்துள்ளது. இந்த ஸஹாபிகளெல்லாம்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மரணமடைந்த பின்னர்‌ நாயகக்திற்குப்‌ பகரமாக இன்னொருவரைக்‌ கொண்டு வஸீலா தேடினார்கள்‌.
நபியவர்கள்‌ உயிருடனிருக்கும்‌ போதும்‌, மரணமடைந்த பின்னரும்‌ ஒன்றுபோல்‌
வித்தியாசமின்றி அவர்களைக்‌ கொண்டு வஸீலா தேடப்படுமானால்‌, அதற்கு அனுமதியும்‌ இருக்குமானால்‌ படைப்புகளில்‌ அல்லாஹ்விடம்‌ மிகச்‌ சிறந்த கண்ணியம்‌ வாய்ந்த ஒரு படைப்பை (நபியை) ஒதுக்கி விட்டு அவர்களைவிட தரத்தில்‌ குறைந்த
இன்னொரு படைப்பைக்‌ கொண்டு வஸீலா தேட அவர்கள்‌ முனைந்திருக்க மாட்டார்கள்‌. வேறெந்த அந்தகரேனும்‌ நபியைக்‌ கொண்டு வஸீலா தேடினால்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ அவருக்கு துஆச்‌ செய்யவும்‌ இல்லையென்றால்‌ முன்னர்‌ நாம்‌ குறிப்பிட்டுள்ள
கண்பார்வை இழந்த ஸஹாபி குணமடைந்தது போல்‌ ஒருபோதும்‌ அந்த அந்தகர்‌ குணமடைய மாட்டார்‌.

அது மட்டுமல்ல. மேற்சொன்ன கண்பார்வையிழந்த ஸஹாபியின்‌ சம்பவத்தற்குப்‌ பிறகு ஸஹாபாக்களில்‌ கண்பார்வையிழந்த வேறொருவரும்‌ அப்படிச்‌ செய்ததாக இல்லை. அவர்களோ இஸ்லாத்தில்‌ முந்தி ஈமான்‌ கொண்ட அன்ஸாரிகளாகவும்‌, முஹாஜிரீன்களாகவும்‌, அல்லாஹ்‌, ரஸுலைப்‌ பற்றி நம்மைக்‌ காட்டிலும்‌ நன்கறிந்தவர்களாகவும்‌ இருந்துருக்கிறார்கள்‌.

அல்லாஹ்வின்‌ ஹக்குகள்‌ யாவை, ரஸூலின்‌ ஹக்குகள்‌ யாவை, துஆவில்‌ அனுமதிக்கப்பட்டது யாது, பலனளிக்காதது யாது என்றெல்லாம்‌ நன்கறிந்திருந்தார்கள்‌.

அது மட்டுமல்ல. அவர்கள்‌ மழை பெய்வதற்கும்‌, வறட்சி நீங்கி செழிப்பு வருவதற்கும்‌ பெரிதும்‌ தேவைப்‌ பட்டிருந்தார்கள்‌. இப்படியிருந்தும்‌ ஸஹாபாக்கள்‌ காட்டித்‌ தந்த வழியைத்தான்‌ பின்பற்றினார்களேயொழிய அவர்கள்‌ புறக்கணித்தொதுக்கிய வழிகளைப்‌ பின்பற்றவில்லை.

மார்க்க மேதைகளான மாபெரும்‌ புகஹாக்கள்‌ தம்‌ நூல்களில்‌ மழை தேடுவதைப்‌ பற்றிக்‌ குறிப்பிடும்‌ போது ஸஹாபிகள்‌ காட்டிச்‌ சென்ற வழிமுறைகளைத்‌ தான்‌ கூறியிருக்கிறார்கள்‌. ஸஹாபிகள்‌ செய்யாது புறக்கணித்த அமல்களைக்‌ குறிப்பிடவில்லை. நபியவர்கள்‌ வாழ்ந்திருக்கையில்‌ அவர்களைக்‌ கொண்டு வஸீலா தேடுவதின்‌ தாத்பரியமே அவர்களின்‌ துஆவைப்‌ பெற வேண்டும்‌ என்பதுதான்‌. எனவே
நாம்‌ நபியிடம்‌ நமக்காக பிரார்த்திக்கும்படி கூறுவதும்‌, அவர்களைக்‌ கொண்டு வஸீலா தேடுவதும்‌ சமமே.

அன்று ஸஹாபாக்கள்‌ உயிருடனிருக்கையில்‌ நபியிடம்‌ தமக்காக துஆச்‌ செய்ய சொல்லி இருக்கிறார்கள்‌. ஆனால்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மரணமடைந்த பிறகு யாரும்‌ துஆக்‌ கேட்கும்படி நபியிடம்‌ வேண்டிக்‌ கொள்ளவில்லை. இன்று பலர்‌ செய்வதுபோல அன்று அவர்களின்‌ கப்றில்‌ வந்தும்‌ வேண்டவும்‌ இல்லை. எங்கு வைத்தும்‌ கேட்கவில்லை. அப்படியென்றால்‌ ஸாலிஹீன்களின்‌ (நன்மக்களின்‌) கப்றில்‌ மக்கள்‌ தமக்காக துஆ வேண்டும்படி எப்படி அவர்களிடம்‌ கேட்க முடியும்‌? இதற்கு சில
சான்றாக ஏதோ சில பிற்கால மக்களின்‌ கதைகளையும்‌ காட்டுகிறார்கள்‌.

வாழ்க்கையில்‌ மூமின்கள்‌ ஒருவருக்கொருவர்‌ தமக்கிடையில்‌ பிரார்த்திக்கும்படி மற்றவர்களை வேண்டிக்‌ கொள்ளலாம்‌. அதற்கு ஷரீஅத்தில்‌ அனுமதியுண்டு. பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூட கலீஃபா உமரிடம்‌ தமக்காக துஆச்‌ செய்ய வேண்டும்‌
என்று கேட்டுக்‌ கொண்டது நினைவிருக்கும்‌ தானே. ஒரு ஹதீஸில்‌ வருகிறது: 'உம்ராச்‌ செய்வதற்கு நாயகத்திடம்‌ அனுமதி கேட்ட உமர்‌ (ரலி) அவர்களிடம்‌ (லா தன்ஸானா பா அகீ மின்‌ துஆயிக) சகோதரரே! உமது பிரார்த்தனையில்‌ எங்களை மறந்து விடாதீர்‌'
என்றாகும்‌.

மேலும்‌ நபியவர்கள்‌ தேவைப்பட்டவருக்காக பாவமன்னிப்புத்‌ தேடவேண்டுமென்று உவைஸ்‌ அல்‌ - கர்னியிடம்‌ ஏவினார்கள்‌. ஆனால்‌ தேவைப்பட்டவர்‌ உவைஸை விட மிகச்‌ சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்‌.

சுருங்கக்‌ கூறின்‌ பெருமானார்‌ (ஸல்‌) அவர்கள்‌ தம்‌ சமூகத்தாரிடம்‌ தமக்காக துஆச்‌ செய்யவும்‌, ஸலவாத்துக்‌ கூறவும்‌, வஸீலா தேடவும்‌ வேண்டினார்களென்றால்‌ அதன்‌ கருத்து தம்‌ உம்மத்துகளிடம்‌ தேவைப்படுவதல்ல. மாறாக சிருஷ்டிகளுக்கு பயன்தரும்‌ வழிகளை கற்றுக்‌ கொடுத்தலாகும்‌. இதனால்‌ சிருஷ்டிகள்‌ மார்க்க விஷயங்களில்‌ பெரும்‌ பலாபலன்களை அடைகின்றனர்‌. நபியின்‌ போதனையைக்‌ கேட்டு அதற்கொப்ப செயல்படும்‌ போது அதன்‌ காரணத்தினால்‌ நபிக்குரிய கூலியும்‌ அல்லாஹ்விடம்‌
அதிகரிக்கிறது. நபிக்காக நாம்‌ ஒரு ஸலவாத்துக்‌ கூறினால்‌ அதற்காக அல்லாஹ்‌ நம்மீது பத்து ஸலவாத்துக்‌ கூறுகிறான்‌. நபிக்காக வஸீலாவை (சுவனத்திலுள்ள பெரியதொரு பதவியை) வேண்டி அல்லாஹ்விடம்‌ பிரார்த்தித்தால்‌ பெருமானாரின்‌
மாபெரும்‌ ஷபாஅத்தே மறுமையில்‌ நமக்காக கிடைக்கிறது. நாம்‌ செய்யும்‌ நற்கருமங்களுக்குரிய கூலியை எவ்வளவு அகிகமாக அல்லாஹ்விடமிருந்து
பெறுகிறோமோ, அதே கூலிகள்‌ கொஞ்சமும்‌ குறையாமல்‌ நபிகளுக்கும்‌ உண்டு.

நபி (ஸல்‌) அவர்கள்‌ 'நேரான பாதையில்‌ (ஹிதாயத்தில்‌) ஒருவன்‌ மற்றவனை அழைத்தால்‌ அழைப்புக்குப்‌ பதில்‌ கொடுத்தவனுக்கு வழங்கப்படும்‌ கூலிகளுக்கொப்ப சிறிதும்‌ குறையாமல்‌ அழைத்தவனுக்கும்‌ உண்டு' என்று கூறினார்கள்‌.

இதன்‌ அடிப்படையில்‌ நோக்கினால்‌ அனைத்து நலன்களின்‌ வழிகாட்டியாக நபி (ஸல்‌) அவர்கள்‌ திகழ்ந்தார்கள்‌. தம்‌ சமூக மக்கள்‌ நலவுகள்‌ புரியும்‌ போதெல்லாம்‌ அந்த நலன்களுக்குரிய அதே கூலிகளைக்‌ குறையாமல்‌ நபிகளும்‌ பெறுகிறார்கள்‌. எனவேதான்‌ அன்று ஸஹாபிகள்‌, ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள்‌ இவர்களெல்லாம்‌ ஏதேனும்‌
நற்கருமங்கள்‌ செய்து விட்டு அவற்றின்‌ பலாபலன்களை பெருமானாருக்குச்‌ செலுத்தவில்லை. நபிகளுக்காக திருக்குர்‌ஆனும்‌ ஓதவில்லை. அவர்களுக்காக தர்மங்கள்‌ செய்யவில்லை. இப்படியெல்லாம்‌ செய்து இவற்றின்‌ பலாபலன்களை
நபியவர்களுக்காக ஹதியாச்‌ செய்யவுமில்லை. ஏனெனில்‌ முஸ்லிம்கள்‌ புரிகின்ற தொழுகை, நோன்பு, ஹஜ்‌, தர்மம்‌, திருமறை ஓதுதல்‌ போன்ற எந்த அமலாயினும்‌ சரியே. அதன்‌ பலாபலன்கள்‌ அனைத்தும்‌ பெருமானாருக்கும்‌ குறையாமல்‌ சேர்ந்து
விடுகிறது.

ஆனால்‌ பிள்ளைகள்‌ புரிகின்ற நற்கருமங்களின்‌ பலாபலன்கள்‌ பெற்றோருக்குத்‌ தானாகச்‌ சேர்ந்து விடுவதில்லை. எனவே பிள்ளைகள்‌ பெற்றோர்களுக்காகவும்‌, ஒரு முஸ்லிம்‌ இன்னொரு முஸ்லிமுக்காகவும்‌ நற்கருமங்கள்‌ புரிந்து அவற்றின்‌
நற்பலன்களை ஹதியாச்‌ செய்து சேர்த்து விட (ஈஸாலுஸ்‌ ஸவாப்‌) அனுமதிக்கப்பட்டுள்ளது.

பெருமானார்‌ அவர்கள்‌ அல்லாஹ்வுக்கு எப்படி வழிபட்டிருந்தார்கள்‌ என்பதைச்‌ சிந்திக்க வேண்டும்‌. "நீர்‌ ஓய்வு பெற்றால்‌ வணக்கத்துக்காக சிரத்தை எடுத்துக்‌ கொள்ளும்‌. மேலும்‌ (இன்பத்திலும்‌, துன்பத்திலும்‌) உம்‌ இறைவனையே நேசத்துடன்‌
சார்ந்திருப்பீராக' (94:7-8) என்று அவர்களைப்‌ பற்றி திருமறை கூறுகிறது.

படைத்த அல்லாஹ்வைத்‌ தவிர வேறெந்தச்‌ சிருஷ்டியையும்‌ அவர்கள்‌ ஆசிக்கவில்லை. ஒரு ஹதீஸில்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ 'என்‌ உம்மத்தைச்‌ சார்ந்த எழுபதினாயிரம்‌ மக்கள்‌ கேள்வி கணக்கின்றி சுவனத்தில்‌ பிரவேசிப்பார்கள்‌. அவர்கள்‌
வாழ்ந்திருக்கையில்‌ பிறரிடம்‌ ஓதிப்பார்க்கச்‌ சொல்லாதவர்கள்‌. நற்குறி, துர்க்குறி
பார்க்காதவர்கள்‌. சூடு போடாதவர்கள்‌. தம்‌ இறைவன்‌ மீது காரியங்களை பாரம்‌ சாட்டி ஒப்படைப்பவர்கள்‌' இப்படியாக அவர்களின்‌ இலட்சணங்களை குறிப்பிட்டார்கள்‌. ஓதிப்பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தும்‌ அதைப்‌ புரியாதவர்களைப்‌ பற்றி நபி (ஸல்‌) அவர்கள்‌ பாராட்டியிருக்கிறார்கள்‌. ஓதிப்பார்த்தல்‌ என்பது 'இஸ்திர்கா' என்பதின்‌
வினைச்சொல்‌ இங்கே வந்திருக்கிறது. இது ஒருவகைப்‌ பிரார்த்தனையைக்‌ குறிக்கும்‌. நபியவர்கள்‌ தமக்குத்தாமே ஒதிப்‌ பார்த்திருக்கிறார்கள்‌. பிறருக்கும்‌ ஓதிப்‌ பார்த்திருக்கிறார்கள்‌. ஆனால்‌ யாரிடமும்‌ தமக்கு ஒதிப்‌ பார்க்கும்படி வேண்டிக்‌
கொள்ளவில்லை. இதிலிருந்து மனிதனிடம்‌ எதனையுமே கேட்காமல்‌ (அது அனுமதிக்கப்பட்டதாயினும்‌ சரியே) அல்லாஹ்விடம்‌ மட்டும்‌ கேட்பவன்‌ மனிதரிடம்‌ கேட்பவனை விட மேலானவனாகிறான்‌ என்பதை விளங்கிக்‌ கொள்ள வேண்டும்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ அனைத்து சிருஷ்டிகளிலும்‌ மேலானவர்கள்‌ ஆவார்கள்‌. எனவேதான்‌ நபியவர்கள்‌ கலீஃபா உமரிடம்‌ தமக்காக துஆ செய்ய வேண்டுமென்று கேட்டுக்‌
கொண்டார்கள்‌ என்ற ஹதீஸ்‌ குறித்துப்‌ பற்பல அபிப்பிராய பேதங்கள்‌ வந்திருப்பதாகக்‌
கூறப்படுகிறது.

நபிகளின்‌ கப்றை வணங்கப்படும்‌ விக்கிரகங்களாக மாற்றாதீர்கள்‌ எனக்‌ குறிப்பிடப்படும்‌ ஹதீஸும்‌, கண்பார்வையிழந்த ஸஹாபியைப்‌ பற்றி அறிவிக்கப்படும்‌ ஹதீஸும்‌ முன்னர்‌ பல இடங்களில்‌ கூறப்பட்டுள்ளது. இமாம்‌ இப்னு தைமிய்யா இங்கும்‌ இந்த ஹதீஸைக்‌ கூறுகிறார்கள்‌. சுருக்கிக்‌ கொள்வதற்காக இங்கே நாம்‌ அவற்றை மீண்டும்‌
கூறவில்லை.


மறைமுகமான பிரார்த்தனை

பார்வைக்கப்பால்‌ இருப்பவர்கள்‌ ஒருவர்‌ இன்னொருவருக்கு வேண்டிக்‌ கேட்கின்ற
பிரார்த்தனைகள்‌ முன்னிலையில்‌ அவ்வாறு கேட்பதைக்‌ காட்டிலும்‌ இறைவனிடம்‌ மிக்க
ஏற்புடையதாகும்‌. ஏனெனில்‌ அது தூய எண்ணம்‌ கொண்டு பிரார்த்திக்கும்‌ துஆ அல்லவா? கலப்பற்ற எண்ணத்தால்‌ பார்வைக்கப்பால்‌ இருந்து ஒருவனுக்கு துஆ செய்யும்போது, அதன்‌ தூய்மையையும்‌, மதிப்பையும்‌ அளவிட முடியாதல்லவா? சாதாரணமாக அல்லாஹ்விடம்‌ துஆச்‌ செய்பவரோடு சேர்ந்து மறைமுகமாகப்‌ பிரார்த்திப்பவரை ஒப்பிட்டால்‌ நிறைய வித்தியாசங்களைக்‌ காண முடியும்‌.

எனவே தான்‌ நபிகள்‌ 'இறை அங்கீகாரத்துக்கு வலிமையாக மிக நெருங்கிய பிரார்த்தனை பார்வைக்கு அப்பாலுள்ளோர்‌ ஒவ்வொருவரும்‌ மறறவருக்கு வேண்டி இறைஞ்சும்‌ பிரார்த்தனையாகும்‌' என்று கூறினார்கள்‌.

இன்னொரு ஹதீஸில்‌ 'கண்பார்வைக்கு அப்பாற்பட்ட சகோதரனுக்காக ஏதெனுமொரு துஆவைக்‌ கொண்டு பிரார்த்தித்தால்‌, பிரார்த்தித்தவனுடன்‌ ஒரு மலக்கை அல்லாஹ்‌ ஏவுவான்‌. அம்மனிதன்‌ பிரார்த்திக்கும்‌ போதெல்லாம்‌ இந்த மலக்கு 'ஆமீன்‌' கூறி நீர்‌
மறைவான‌ சகோதரருக்கு ஆசித்தவையெல்லாம்‌ உமக்கும்‌ உண்டு' எனக்‌ கூறுவாராம்‌ என்று வருகிறது. (முஸ்லிம்)

பொதுவாக மனிதன்‌ தன்னைப்‌ போன்ற ஒருவனிடம்‌ சென்று அவனால்‌ புரிந்து நிறைவேற்றித்‌ தரக்கூடியதைக்‌ கேட்க வேண்டும்‌. மனிதனால்‌ அல்லாஹ்விடம்‌ பிரார்த்திக்க முடியுமென்றால்‌ இப்பிரார்த்தனையை அவனிடம்‌ வேண்டலாம்‌. ஆகவே
ஒருவருக்கொருவர்‌ தமக்கு மத்தியில்‌ துஆக்களைக்‌ கொண்டு பணிப்பது, பிரார்த்தனையை வேண்டுவது அனைத்தும்‌ அனுமதிக்கப்படுகிறது. அன்றியும்‌,
மனிதனால்‌ செய்து முடிக்க இயலுமான வேலைகள்‌, உதவி ஒத்தாசைகள்‌ அனைத்தையும்‌ பிறரிடம்‌ வேண்டுவதற்கு அனுமதியுண்டு. படைப்பினங்களால்‌ செய்ய இயலாத (அல்லாஹ்வுக்கு மட்டும்‌ முடியுமான) செயல்களை அல்லாஹ்விடம்‌ கேட்க வேண்டும்‌. வேறு எந்த சிருஷ்டியிடமும்‌ (அது நபி, மலக்கு யாரானாலும்‌ சரி) கேட்க கூடாது. சிருஷ்டியிடம்‌ சென்று என்னை மன்னித்து விடுங்கள்‌. எங்களுக்கு மழை
பெய்யச்‌ செய்யுங்கள்‌. காபிர்களுக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்யுங்கள்‌. எங்கள்‌ இதயங்களை நேரான வழியில்‌ திருப்புங்கள்‌ என்றெல்லாம்‌ கேட்பது ஜாயிஸல்ல-ஹராமாகும்‌.

நபிகளின்‌ காலத்தில்‌ மூமின்௧ளுக்குத்‌ தொல்லைக்‌ கொடுத்த ஒரு நயவஞ்சகனை விட்டும்‌ தப்பித்துக்‌ கொள்ள அபூபக்கர்‌ (ரலி) இதர ஸஹாபிகளிடம்‌ எழுந்து வாருங்கள்‌. இந்த முனாஃபிக்கின்‌ (நயவஞ்சகனின்‌) தீங்கிலிருந்து தப்பித்துக்‌ கொள்ள நபியிடம்‌ உதவித்‌ தேடுவோம்‌' என்று கூறியதற்கு என்னைக்‌ கொண்டு உதவி தேடப்பட மாட்டாது. அல்லாஹ்வைக்‌ கொண்டு தான்‌ உதவி தேடப்படும்‌' என்று நபியவர்கள்‌ பதிலுரைத்தார்கள்‌ ஏனெனில்‌ உதவியளித்தல்‌ மனிதனால்‌ முடியக்கூடியதல்ல. இறைவன்‌ கூறுகிறான்‌: "நீங்கள்‌ அல்லாஹ்விடம்‌ உதவித்தேடிப்‌ பிரார்த்தித்தபோது... அவன்‌ உங்கள்‌ பிரார்த்தனையை ஏற்றுப்‌ பதிலளித்தான்‌" (8:9)

நபி மூஸா (அலை) தமது பிரார்த்தனையில்‌ 'இறைவா! புகழெல்லாம்‌ உனக்கே. உன்னிடம்‌ முறையிடப்படும்‌. நீதான்‌ உதவித்‌ தேடப்படுகிறவன்‌. உன்னைக்‌ கொண்டே ஆதரவு தேடப்படும்‌. உன்மீது தவக்கல்‌ வைக்கப்படும்‌. உன்னைத்தவிர வேறு எவருக்கும்‌ இந்த சக்தியோ வல்லமையயபோ இல்லை' என்று கூறினார்கள்‌.

மேலும்‌ அபூ யஸ்துல்‌ பிஸ்தாமி அவர்கள்‌ மனிதன்‌ தன்னைப்போன்ற இன்னொரு மனிதனைக்‌ கொண்டு உதவித்‌ தேடல்‌, தண்ணீரில்‌ மூழ்கிறவன்‌ தன்னைப்‌ போல மூழ்கிக்‌ கொண்டிருக்கும்‌ இன்னொருவனைக்‌ கொண்டு உதவித்‌ தேடுவதற்குச்‌ சமமாகும்‌' என்று கூறினார்கள்‌.

மேலும்‌ அறிஞர்‌ அப்துல்லாஹ்‌ அல்‌ குறஷீ அவர்கள்‌ 'ஒரு சிருஷ்டி இன்னொரு சிருஷ்டியிடம்‌ உதவி தேடுவது சிறைவாசம்‌ கொண்ட இருவரில்‌ ஒருவர்‌ மற்றவரிடம்‌ உதவி தேடுவதைப்‌ போன்றுது' எனக்‌ கூறினார்கள்‌.

இறைவன்‌ கூறுகிறான்‌: “இவர்கள்‌ கடவுள்கள்‌ என அழைப்பவையும்‌, தங்களுக்காக தங்கள்‌ இறைவனிடம்‌ (வணக்கத்தால்‌) சமீபிப்பதைத்‌ தேடிக்‌ கொண்டும்‌, அவர்களின்‌ இறைவனோடு மிக்க நெருங்கியவர்கள்‌ யார்‌? என்பதைக்‌ தேடிக்‌ கொண்டும்‌, அவனுடைய அருளையே எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்குப்‌ பயப்படுகின்றன.
ஏனெனில்‌ நிச்சயமாக உமது இறைவனின்‌ வேதனையோ மிக மிகப்‌ பயப்படக்‌ கூடியதே” (17:56-57)

அன்று மலக்குகளையும்‌, அன்பியாக்களையும்‌ அழைத்துப்‌ பிரார்த்தனை செய்தவர்களுக்கு அல்லாஹ்‌ என்ன பதிலளித்து விளக்கம்‌ கொடுத்தான்‌ என்பதைப்‌
பற்றி ஸலஃபுஸ்ஸாலிஹீன்களில்‌ சிலர்‌ கூறியதும்‌ நினைவு கூறத்தக்கது. (இதுபற்றி விளக்கம்‌ முன்னரே தரப்பட்டுள்ளது.)

மலக்குகளையும்‌, அன்பியாக்களையும்‌ கூப்பிட்டு பிரார்த்திப்பதை அல்லாஹ்‌ தடுக்கிறான்‌. அத்துடன்‌ நமக்காக அவர்கள்‌ பிரார்த்திக்கிறார்கள்‌. ஷபாஅத்‌ செய்கிறார்கள்‌ என்று சில இடங்களில்‌ அறிவித்துள்ளான்‌. ஆகவே அவர்கள்‌ அல்லாஹ்வின்‌
கட்டளைக்கொப்ப மூமின்களுக்கு துஆச்‌ செய்பவர்களாக இருக்கலாம்‌. நாம்‌ அதைக்‌
கவனிக்க வேண்டியதில்லை. நாம்‌ இவர்களிடம்‌ எதையும்‌ கேட்கக்‌ கூடாது.

அன்பியாக்களும்‌ ஸாலிஹீன்களும்‌ அவர்கள்‌ கப்றில்‌ உயிருடன்‌ இருந்த போதிலும்‌ சரியே. கப்றில்‌ உள்ளவர்கள்‌ உலகில்‌ உள்ளவர்களுக்குப்‌ பிரார்த்திக்கிறார்கள்‌ என்று கற்பனை செய்தாலும்‌ கூட நாம்‌ எதையும்‌ அவர்களிடம்‌ வேண்டக்‌ கூடாது. ஏனெனில்‌ இப்படி கேட்பது அவர்களைக்‌ கொண்டு இணை வைக்கக்‌ கோருகிறது. அவர்களுக்கு
வழிபட்டு வணங்க வேண்டுமென்று தூண்டுகிறது. ஆனால்‌ சிருஷ்டிகள்‌ வாழ்ந்திருக்கையில்‌ மட்டும்‌ அவர்களால்‌ செய்ய முடியுமான எதை வேண்டுமானாலும்‌ கேட்கலாம்‌. அது ஷிர்க்கின்‌ பால்‌ மனிதனை தூண்டாது. மட்டுமின்றி மலக்குகள்‌
செய்கின்ற அமல்களும்‌, காலஞ்சென்ற அன்பியாக்கள்‌, ஸாலிஹீன்கள்‌ செய்கின்ற
செயல்களும்‌ அல்லாஹ்வுடைய 'அல்‌ - அம்ருல்‌ கவ்னி என்ற விதிகளுக்கு உட்பட்டவையாகும்‌. எனவே இந்த விதியை மாற்ற பிரார்த்திப்பவர்களின்‌
பிரார்த்தனைகள்‌ எந்த பயனையும்‌ தராது.

மலக்குகள்‌, நபிமார்கள்‌ இவர்களை இரட்சகர்கள்‌ என்று நினைத்துக்‌ கொள்பவர்‌ காஃபிர்‌ என்று கீழ்வரும்‌ ஆயத்து விளக்குகிறது: "ஒரு மனிதனுக்கு வேதத்தையும்‌, ஞானத்தையும்‌, நபித்துவத்தையும்‌ அல்லாஹ்‌ கொடுத்த பின்‌ அவர்‌ மனிதர்களை
நோக்கி 'அல்லாஹ்வையன்றி என்னையே வணங்குங்கள்‌' என்று கூறுவதற்கு
உரிமையில்லை. ஆயினும்‌ நீங்கள்‌ வேதத்தைக்‌ கற்றுக்‌ கொடுத்து கொண்டும்‌, ஓதிக்‌
கொண்டும்‌ இருப்பதன்‌ காரணமாக இறையடியார்களாகி விடுங்கள்‌. தவிர மலக்குகளையும்‌, நபிமார்களையும்‌ தெய்வங்களாகக்‌ கொள்ளுங்கள்‌ என்று அவர்‌ உங்களுக்கு கட்டளையிட மாட்டார்‌. இறைவனுக்கு நீங்கள்‌ முற்றிலும்‌ வழிப்பட்டதன்‌ பின்னர்‌ அவனை நிராகரிக்கும்படி அவர்‌ உங்களை ஏவுவாரா?" (3:79-60)

(நபியே!) நீர்‌ கூறும்‌ அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள்‌ (தெய்வங்கள்‌ என்று) எண்ணிக்‌ கொண்டீர்களோ, அவற்றை நீங்கள்‌ அழைத்துப்‌ பாருங்கள்‌. வானங்களிலோ, பூமியிலோ அவற்றுக்கு ஓர்‌ அணுவளவும்‌ அதிகாரமில்லை. அன்றி அவ்விரண்டிலும்‌ (அவற்றை படைப்பதில்‌) இவற்றுக்கு எத்தகைய பங்குமில்லை. இதில்‌ அவனுக்கு
உதவியாளர்களும்‌ அவர்களில்‌ ஒருவருமில்லை. அவனுடைய அனுமதி பெற்றவர்களைத்‌ தவிர அவனிடம்‌ பரிந்து பேசுவதும்‌ பலனளிக்காது” (34:22-23)

"அவனுடைய அனுமதியின்றி அவனிடத்கில்‌ சிபாரிசு செய்ய யார்‌ இருக்கிறார்கள்‌"
(2:255)

"அவனுடைய அனுமதிக்கு பிறகல்லாமல்‌ பரிந்து பேசக்கூடியவர்களே இல்லை” (10:3)

"அவனையன்றி உங்களை இரட்சிப்பவனோ, உங்களுக்குப்‌ பரிந்து பேசுபவனோ
வேறில்லை" (32:4)

"(இணை வைப்போர்‌) தங்களுக்கு யாதொரு நன்மையும்‌, தீமையும்‌ செய்ய முடியாத அல்லாஹ்‌ அல்லாதவற்றை வணங்குவதுடன்‌ இவை அல்லாஹ்விடத்தில்‌ எங்களுக்குச்‌ சிபாரிசு செய்பவை என்றும்‌ கூறுகின்றனர்‌. ஆகவே நபியே நீர்‌ கூறும்‌ வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்வுக்கு தெரியாதவைகளை நீங்கள்‌ அவனுக்கு அறிவிக்கிறீர்களா? அவன்‌ மிகப்‌ பரிசுத்தமானவன்‌. அவர்கள்‌ இணை வைப்பவற்றை விட மிக்க
உயர்ந்தவன்‌" (10:18)

ஸூரா யாஸினில்‌ வருகிற ஹபீபுன்‌ நஜ்ஜாரைப்‌ பற்றி அல்லாஹ்‌ குறிப்பிடும்‌ போது சொல்கிறான்‌: "என்னை சிருஷ்டித்தவனை நான்‌ வணங்காதிருக்க எனக்கென்ன நேர்ந்தது? அவனிடமே நீங்கள்‌ திருப்பிக்‌ கொண்டு வரப்படுவீர்கள்‌. அவனையன்றி
(மற்றெதனையும்‌, எவரையும்‌) நான்‌ கடவுளாக எடுத்துக்‌ கொள்வேனா? அர்‌-ரஹ்மான்‌
எனக்கு யாதொரு தீங்கிழைக்கக்‌ கருதினால்‌ இவற்றின்‌ சிபாரிசு அதி ஒன்றையுமே என்னை விட்டுத்‌ தடுத்து விடாது. என்னை அவற்றால்‌ விடுவிக்கவும்‌ முடியாது. அவன்‌ ஒருவனையே நான்‌ வணங்கா விட்டால்‌ நிச்சயமாக நான்‌ பகிரங்கமான வழிகேட்டில்‌
சென்று விடுவேன்‌. நிச்சயமாக நான்‌ உங்களைப்‌ படைத்துப்‌ போஷிப்பவனையே விசுவாசிக்கின்றேன்‌. ஆதலால்‌ நான்‌ சொல்வதைக்‌ கேளுங்கள்‌ என்று கூறினார்‌” (36:22- 25)


ஷபாஅத்தின்‌ வகைகள்‌

ஷபாஅத்‌ என்னும்‌ பரிந்துரைத்தல்‌ இரு வகைப்படும்‌. 

ஒன்று: முஷ்ரிக்குகளிடையிலும்‌, இவர்களைப்‌ போன்ற அறிவீனமான மக்களிடையிலும்‌ அறியப்பட்டிருந்த ஷபாஅத்‌. இதை இறைவன்‌ அடியோடு ஒழித்துக்கட்டி இல்லாமலாக்கிவிட்டான்‌. 

இரண்டு: அல்லாஹ்வின்‌ அனுமதி பெற்றதன்‌ பின்னர்‌ கோரப்படும்‌ ஷபாஅத்‌. இதை அல்லாஹ்‌ உறுதிப்படுத்தி கூறியிருக்கிறான்‌. இந்த ஷபாஅத்‌ அல்லாஹ்வுடைய அன்பியாக்களுக்கும்‌, ஸாலிஹீன்களுக்கும்‌ வழங்கப்படும்‌. மறுமையில்‌ சிருஷ்டிகள்‌ நபி (ஸல்‌) அவர்களிடம்‌ வந்து ஷபாஅத்தைக்‌ கேட்கும்போது நபி (ஸல்‌) அவர்கள்‌
அல்லாஹ்வின்‌ சமூகத்தில்‌ வந்து அவன்‌ முன்னிலையில்‌ ஸுஜுதில்‌ விழுந்து விடுவார்கள்‌. அவர்களுக்கு அல்லாஹ்‌ திறந்து கொடுக்கின்ற பாராட்டுரைகளால்‌ அல்லாஹ்வைத்‌ துதிப்பார்கள்‌. பின்னர்‌ தலையை ஸூஜுதிலிருந்து உயர்த்த, அல்லாஹ்‌ அறிவிப்புக்‌ கொடுத்து ஷபாஅத்துக்கு அனுமதி வழங்குவான்‌. அதற்கொப்ப நபியவர்கள்‌
ஷபாஅத்‌ செய்வார்கள்‌. (இது பற்றிய முழு விளக்கமும்‌ முன்னர்‌ வந்துள்ளது. ஹயாத்தாக இருக்கும்‌ போது பெருமானாரிடம்‌ பிரார்த்தனையை வேண்டுவதில்‌ ஷிர்க்‌ வந்து விடும்‌ என்று பயப்படுவதற்கில்லை). 

மாறாக நபியவர்கள்‌ மரணமடைந்ததற்கப்பால்‌ அவர்களிடம்‌ வஸீலா வேண்டுவதில்‌, ஷிர்க்கையும்‌,
பித்னாவையும்‌ பயப்பட வேண்டிய நிலைமை வருகிறது. ஏனெனில்‌ நபிமார்களின்‌ வாழ்நாளில்‌ அவர்களின்‌ முன்னிலையில்‌ வைத்து (யாரும்‌ அவர்களுக்கு ஸுஜுது செய்வதை அனுமதிக்க மாட்டார்கள்‌. வாழ்ந்திருக்கையில்‌ நபிமார்கள்‌
வணங்கப்பட்டார்கள்‌ என்று வரலாறுகளிலும்‌ அறியப்படவில்லை. இத்தகைய அசம்பாவிதங்கள்‌ நேர்ந்தால்‌ கூட நபியாக இருப்பவர்கள்‌ அதைப்‌ பார்த்துக்‌ கொண்டிருக்க மாட்டார்களல்லவா? உடனே தடுத்து நிறுத்துவார்கள்‌. அது சிறிதளவு ஷிர்க்காயினும்‌ சரியே. 

நபிகள்‌ வாழ்ந்திருக்கும்‌ போது ஒரு போதிலும்‌ இது நடைபெறாது. ஒரு சமயம்‌, நபியவர்களுக்கு ஒருவர்‌ ஸுஜுது செய்ய முற்பட்ட போது உடனே பெருமானார்‌ அவரைத்‌ தடுத்து நிறுத்தி 'அல்லாஹ்வும்‌, முஹம்மதும்‌ நாடியது நடந்தது என்று சொல்லாதீர்கள்‌. அல்லாஹ்‌ நாடியது நடந்தது. பிறகு தான்‌ முஹம்மத்‌ நாட முடியும்‌' என்று கூறி அம்மனிதருக்கு விளக்கம்‌ கொடுத்தார்கள்‌.

ஆனால்‌ நபிமார்கள்‌ மரணமடைந்த பின்‌ அவர்களைக்‌ கொண்டு ஷிர்க்‌ வைப்பதை அஞ்ச வேண்டும்‌. நபிமார்களான ஈஸாவைக்‌ கொண்டும்‌, உஸைரைக்‌ கொண்டும்‌, மற்றவர்களைக்‌ கொண்டும்‌ மேலும்‌ அவர்களின்‌ கப்றுகளிலும்‌ ஷிர்க்‌ வைக்கப்பட்டது.
இவற்றை அவர்களால்‌ தடுத்து நிறுத்த முடியவில்லை. ஏனெனில்‌ அவர்கள்‌ மரணமடைததற்கப்பால்‌ தலைதூக்கிய ஷிர்க்கை ஒழித்துக்‌ கட்ட அவர்களால்‌
முடியாதல்லவா? இதைக்‌ கருத்தில்‌ கொண்ட நபி (ஸல்‌) அவர்கள்‌ கிறிஸ்தவர்கள்‌ ஈஸாவை அளவு மீறித்‌ துதித்தது போல என்னை அளவு மீறி துதித்து விடாதீர்கள்‌' என்று எச்சரித்துக்‌ கூறினார்கள்‌. நான்‌ ஒரு அடிமை. என்னைப்‌ பற்றி அல்லாஹ்வின்‌
அடிமை என்றும்‌, தூதர்‌ என்றும்‌ கூறுங்கள்‌' என்றார்கள்‌. (புகாரி, முஸ்லிம்)

இறைவா! என்னுடைய கப்றை வணங்கும்‌ பிம்பமாக ஆக்கி விடாதே என்றும்‌ கூறி நபி (ஸல்‌) தொடர்ந்தும்‌ சொன்னார்கள்‌: 'கிரிஸ்தவர்களுக்கும்‌, யூதர்களுக்கும்‌
அல்லாஹ்வின்‌ சாபம்‌ உண்டாகட்டும்‌. ஏனெனில்‌ இவர்கள்‌ தங்கள்‌ நபிமார்களின்‌ கப்றில்‌ பள்ளிவாசல்களை அமைத்து விட்டார்கள்‌. இதை அறிவித்தவர்‌ குறிப்பிடுகிறார்‌: நபியவர்கள்‌ இவர்களின்‌ இச்செய்கையை பற்றி எச்சரிப்பதர்காக இதைக்‌ கூறினார்கள்‌.

அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்‌. அவன்‌ திருத்தூதரை மட்டுமே பின்பற்றி நடக்க வேண்டும்‌. பித்‌அத்தான வணக்கங்களைக்‌ கொண்டு நாம்‌ அவனை வணங்கக்‌ கூடாது. அப்படியானால்‌ தான்‌ ஷஹாதத்‌ கலிமாவின்‌ இலக்கை அடைய முடியும்‌.

அறிஞர்‌ புளைள்‌ பின்‌ இயாழ்‌ அல்லாஹ்வின்‌ திருவசனமான "உங்களில்‌ நற்கருமங்களை நன்றாகச்‌ செய்வோர்‌ யாரென்று பரிசோதிப்பதற்காக" (11:7) என்பதின்‌ பொருள்‌ 'நன்றாகச்‌ செய்தல்‌' என்பதற்கு கலப்பில்லாமல்‌, முறையாகச்‌ செய்தல்‌ என்று
விளக்கம்‌ கருதுகிறார்கள்‌. இதை அவர்கள்‌ கூறியதும்‌ 'அபூ அலியே, கலப்பில்லாமலும்‌, முறையோடும்‌ செய்தல்‌' என்றால்‌ என்ன? என்று அவர்களிடம்‌ கேட்கப்பட்டது. அதற்கவர்கள்‌ 'அனுஷ்டானங்கள்‌ கலப்பற்றும்‌, சரியான முறையிலும்‌ இல்லையென்றால்‌, அல்லாஹ்‌ அதை ஏற்க மாட்டான்‌. கலப்பற்றிருத்தல்‌ என்பது அல்லாஹ்வை நாடிச்‌ செய்தலாகும்‌. முறையோடிருத்தல்‌ என்பது நபி(ஸல்‌) அவர்கள்‌
காட்டியதற்கொப்ப செய்தலாகும்‌. இதனால்‌ அல்லாஹ்வின்‌ இவ்வசனத்தை மெய்ப்பித்தவர்களாக வாழ முடியும்‌. "எவன்‌ தன்‌ இறைவனைச்‌ சந்திக்க
விரும்புகிறானோ அவன்‌ நற்கருமங்களைச்‌ செய்து தன்‌ இறைவனுக்கு ஒருவரையும்‌ இணையாக்காது வணங்கி வருவானாக!" (18:110)

அமீருல்‌ மூமினீன்‌ உமர்‌ (ரலி) அவர்கள்‌ தமது துஆவில்‌ 'இறைவா! என்னுடைய அனைத்து அமல்களையும்‌ நல்ல ஸாலிஹான அமல்களாகவும்‌, உன்னுடைய
முகத்தையே நாடி தூய்மையான முறையில்‌ செய்யப்பெற்ற அமல்களாகவும்‌ ஆக்கியருள்வாயாக! இந்த அமலில்‌ யாருக்கும்‌ பங்கை நீ ஆக்கி விடாதே!' என்று கூறிப்‌ பிரார்த்திப்பார்கள்‌.

இறைவன்‌ கூறினான்‌: "அல்லாஹ்‌ அனுமதிக்காத எதனையும்‌ அவர்களுக்கு மார்க்க விதியாக விதிக்கக்‌ கூடிய இணைகளும்‌ இருக்கின்றனவா?” (42:21)

நபி (ஸல்‌) அவர்கள்‌ காட்டியதற்கொப்பச்‌ செய்வதென்றால்‌, நூதன அனுஷ்டானங்களைத்‌ தவிர்ந்து நடக்க வேண்டும்‌. ஒருமுறை நபி (ஸல்‌) அவர்கள்‌ நமது இஸ்லாமிய மார்க்கத்தில்‌ இல்லாத ஒரு (நூதன) அனுஸ்டானத்தை எவர்‌ செய்தாலும்‌ அது புறக்கணிக்கப்பட வேண்டியதே (புகாரி, முஸ்லிம்). நம்‌ விதிகளுக்கு உட்படாத எந்த அமலை ஒருவர்‌ செய்தாலும்‌ அது புறக்கணிக்கப்படும்‌.

இறைவன்‌ ஹதீஸ்‌ குத்ஸியில்‌ 'நான்‌ இணைதுணைகளை விட்டும்‌ தேவையற்றவன்‌.
ஆகவே ஒருவன்‌ என்‌ அனுஸ்டானத்தைப்‌ புரிந்து அதில்‌ மற்றவரையும்‌ என்னுடன்‌ பங்கு சேர்த்தால்‌ நான்‌ அவனை விட்டும்‌ பிரிந்து விடுவேன்‌. அந்த அனுஸ்டானம்‌ முழுவதும்‌ இணை வைக்கப்பட்டவனுக்கே சேரும்‌' என்று கூறுகிறான்‌.

ஆகவே இந்த ஹதீஸின்‌ வெளிச்சத்தில்‌ பெருமக்கள்‌ 'இஸ்லாம்‌ போதிக்கின்ற அனைத்து அமல்களும்‌ அவற்றின்‌ அடிப்படை குர்‌ஆன்‌ ஹதீஸின்‌ அடிப்படைகளாகும்‌' என்று கூறுகின்றனர்‌. அதாவது இஸ்லாத்தின்‌ சட்டங்கள்‌ அனைத்தும்‌ (தவ்கீஃபீய்யுன்‌)
குர்‌ஆன்‌ ஹதீஸின் உரைகளால்‌ அமைக்கப்பட்டிருக்கின்றன. அன்றி தனியாரின்‌
அபிப்பிராயத்தைக்‌ கொண்டல்ல. உமர்‌ (ரலி) அவர்களின்‌ வரலாறும்‌ இதைக்‌ காட்டுகிறது. அவர்கள்‌ ஹஜருல்‌ அஸ்வத்‌ கல்லை முத்தமிட்ட வேளையில்‌
'சத்தியமாக நீ நன்மை, தீமைகள்‌ செய்ய சக்தியற்ற ஒரு கல்‌ என்பதை நான்‌ அறிவேன்‌. உன்னை நபி (ஸல்) அவர்கள்‌ முத்தமிட்டதை நான்‌ பார்த்திராவிட்டால்‌ நானும்‌ உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்‌' என்று கூறினார்கள்‌.

நபி (ஸல்‌) அவர்களை பின்பற்றி நடக்கும்படி அல்லாஹ்‌ நம்மை ஏவினான்‌. அவர்களுக்கு வழிபட்டு, அவர்களை விரும்பி, அல்லாஹ்வையும்‌ ரஸூலையும்‌
எல்லோரையும்‌ விட உகந்தோராக நாம்‌ எடுத்துக்‌ கொள்வதற்கும்‌ பணித்தான்‌. "(நபியே!)
நீர்‌ கூறும்‌. நீங்கள்‌ மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால்‌ என்னைப்‌
பின்பற்றுங்கள்‌. (அதனால்‌) உங்களை அல்லாஹ்‌ நேசிப்பான்‌. உங்கள்‌ பாவங்களையும்‌ உங்களுக்காக அவன்‌ மன்னித்து விடுவான்‌" (3:31) மேலும்‌, "நீங்கள்‌ அவருக்கு வழிபட்டால்‌ நீங்கள்‌ நேரான வழியில்‌ சென்றவர்களாகி விடுவீர்கள்‌" (24:54)

"எவர்கள்‌ அல்லாஹ்வுக்கும்‌, அவனுடைய தூதருக்கும்‌ வழிபட்டு நடக்கின்றார்களோ அவர்களை சுவனபதியில்‌ சேர்க்கின்றான்‌. அவற்றிலே நீரருவிகள்‌ சதா ஓடிக்‌ கொண்டிருக்கும்‌. அங்கு அவர்கள்‌ என்றென்றும்‌ தங்கி விடுவார்கள்‌. இது மகத்தான
பெரு பாக்கியமாகும்‌" (4:13)

திருமறையும்‌, நபிமொழியும்‌ எவற்றையெல்லாம்‌ போதிக்கின்றனவோ அவற்றை விட்டும்‌ பிறழாது வாழ வேண்டும்‌. ஸஹாபக்கள்‌, ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள்‌
அப்படித்தான்‌ வாழ்ந்தார்கள்‌. மார்க்க விஷயங்களில்‌ தெரிந்த சட்டங்களைக்‌ கொண்டு விதிகள்‌ கூற வேண்டும்‌. தெரியாத சட்டங்களைக்‌ கொண்டு பிறருக்குத்‌ தீர்ப்பு வழங்காமல்‌ தன்னைக்‌ காத்துக்‌ கொள்ள வேண்டும்‌. தெரியாமல்‌ தீர்ப்பு வழங்குவதை
அல்லாஹ்‌ விலக்கியிருக்கிறான்‌. மனம்‌ விரும்பியதற்கொப்ப சட்டங்கள்‌, விதிமுறைகள்‌
சொல்லுகின்றவனுக்கு மார்க்கத்தில்‌ இடமில்லை. 

நபி (ஸல்‌) அவர்கள்‌ எதைக்‌ கொண்டு பிரார்த்தித்தார்கள்‌ என்பதைக்‌ காட்டுகின்ற பல ஹதீஸ்கள்‌ வந்திருக்கின்றன. அவற்றுள்‌ ஒரு ஹதீஸில்‌ 'நபி (ஸுல்‌) அவர்கள்‌ துஆவின்‌ போது 'இறைவா! நீ புகழுக்குரியவன்‌. புகழனைத்தும்‌ உனக்கே உரியது. அதனைக்‌ கொண்டு உன்னிடம்‌ பிரார்த்திக்கிறேன்‌. நீ
அன்றி வேறு இறைவனே இல்லை. நீயே பேருபகாரி. ஆகாயங்களையும்‌, பூமியையும்‌ முன்மாதிரியின்றியே நூதனமாய்ப்‌ படைத்தாய்‌. கம்பீரத்துக்கும்‌, கண்ணியத்துக்கும்‌ உரியவனே, உயிருள்ளவனே நித்தியமாக என்றென்றும்‌ இருப்பவனே!' என்று
பிரார்த்திப்பார்கள்‌. (அபூதாவூத், நஸாயி, இப்னுமஜா) இவ்வாறுதான்‌ நபியவர்களின்‌ துஆக்கள்‌ ரிவாயத்துச்‌ செய்யப்பட்டுள்ளன.

எனவே அவர்களைப்‌ பின்பற்றியே நாமும்‌ துஆச்‌ செய்ய வேண்டும்‌.


சிருஷ்டிகளைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்யலாமா?

படைப்பினங்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்யக்‌ கூடாது. அப்படி சத்தியம்‌ செய்தாலும்‌, அது நிறைவேறாது. இது அறிஞர்களின்‌ ஏகமனதான தீர்ப்பாகும்‌. 

மலக்குகள்‌, ஷெய்குமார்கள்‌, மன்னர்கள்‌, கஃபா ஷரீஃப்‌ இவர்களைக்‌ கொண்டெல்லாம்‌ ஆணையிட்டால்‌ அந்த ஆணை நிறைவேறாமலாகி விடும்‌. ஷரீஅத்தும்‌ இத்தகைய சத்தியங்களை விலக்குகிறது. இவ்விலக்கல்‌ 'தஹ்ரீ முடையவும்‌, அல்லது தன்ஸ்ஹுடையவும்‌' அதாவது கடுமையான விலக்கலாக இருக்க இடம்பாடுண்டு.

ஹதீஸ்‌ ஒன்றில்‌ நபியவர்கள்‌ மனிதன்‌ ஆணையிட விரும்பினால்‌ அல்லாஹ்வைக்‌ கொண்டு ஆணையிட வேண்டும்‌. இல்லையென்றால்‌ வாய்மூடி பேசாமல்‌ இருந்து கொள்ள வேண்டும்‌' என்றும்‌ அல்லாஹு அல்லாதவைகளைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்கிறவன்‌ நிச்சயமாக இணை வைத்து விட்டான்‌' என்று மற்றொரு ஹதீஸிலும்‌ கூறினார்கள்‌.

சிருஷ்டிகளைக்‌ கொண்டு ஆணையிட்டால்‌ நிறைவேறும்‌ என்று முன்னுள்ள அறிஞர்கள்‌ எவரும்‌ சொல்லவில்லை. ஆனால்‌ இமாம்‌ அஹ்மதுடைய இரு
அபிப்பிராயங்களில்‌ ஒன்றில்‌ நபி (ஸல்‌) அவர்களைக்‌ கொண்டு மட்டும்‌ ஆணையிட்டால்‌ நிறைவேறும்‌ என்று காணப்படுகிறது. இமாம்‌ அஹ்மதின்‌ தோழர்களில்‌
இப்னு அகில்‌ என்பவர்‌ இந்த அபிப்பிராயத்தை எல்லா நபிகளுடனும்‌ சேர்த்துச்‌ சொல்லி இருக்கிறார்கள்‌. ஆனால்‌ அவ்வபிப்பிராயம்‌ பலவீனமானது.

பொதுவாக நபியைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்தல்‌ கூடும்‌ என்ற சொல்லின்‌ அடிப்படை பலமற்றதும்‌, ஆதாரமில்லாததும்‌ ஆகும்‌. மற்ற எந்த அறிஞர்களும்‌ இப்படி சொல்லவே இல்லை என்பதைத்தான்‌ நாம்‌ அறிந்திருக்கிறோம்‌. இமாம்‌ அபூஹனீபா, இமாம்‌
ஷாஃபீஈ, இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) ஆகியோரின்‌ அபிப்பிராயமும்‌ இதை விளக்குகிறது.
மேலும்‌ இமாம்‌ அஹ்மதின்‌ இன்னுமோர்‌ அபிப்பிராயமும்‌ நபியைக்‌ கொண்டு ஆணையிட்டால்‌ நிறைவேறாது என்பதுதான்‌. இந்த விஷயத்தில்‌ அதிகமான அறிஞர்கள்‌ கூறியதே சரியானதாகும்‌.


சிருஷ்டீகளைக்‌ கொண்டு பாதுகாவல்‌ தேடலாமா?

படைப்பினங்களைக்‌ கொண்டு ஆணையிடுவது விலக்கப்படுவது போல அவர்களைக்‌ கொண்டு பாதுகாவல்‌ தேடுவதும்‌ விலக்கப்பட்டுள்ளது. பாதுகாவல்‌ தேடுவதற்கு அல்லாஹ்வையும்‌, அவன்‌ திருநாமங்களையும்‌ இலட்சணங்களையும்‌ அமைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. சிருஷ்டிக்கப்பட்ட பொருட்களால்‌ பாதுகாவல்‌ தேட மாட்டாது.
சிருஷ்டிக்கப்படாத நிரப்பமான வாக்கியங்களைக்‌ (உரைகளை) கொண்டு நபியவர்கள்‌ பாதுகாவல்‌ தேடியுள்ளார்கள்‌. 'அவூது பி கலிமாதில்லாஹித்‌ தாம்மாகத்தி' என்று கூறியிருக்கிறார்கள்‌. இறைவனின்‌ திருவசனங்கள்‌ சிருஷ்டிக்கப்பட்டவையல்ல
என்பதற்கு நபிகளின்‌ இந்த ஹதீஸ்‌ சான்றாக எடுத்துக்‌ கொள்ளப்படும்‌. 

எனவே தான்‌ நபி (ஸல்‌) அவற்றை பாதுகாப்பு தேடுவதற்காக எடுத்துக்‌ கொண்டார்கள்‌. இதை ஆதாரமாக வைத்து இமாம்‌ அஹ்மதும்‌, ஸலஃபுஸ்ஸாலிஹீன்களில்‌ உள்ள அறிஞர்களும்‌ அல்லாஹ்வின்‌ உரைகளை (கலாமுல்லாஹ்‌) சிருஷ்டிக்கப்பட்டவையல்ல (ஃகைர்‌ மக்லூக்‌) என்று உறுதியாக உரைத்தார்கள்‌. அல்லாஹ்வின்‌ உரைகள்‌ சிருஷ்டிக்கப்பட்டவையாக இருப்பின்‌ அவற்றைக்‌ கொண்டு நபியவர்கள்‌ பாதுகாப்பு தேடியிருக்க மாட்டார்கள்‌ என்பது இவர்களின்‌ கொள்கையாகும்‌.


ஓதிப்பார்த்தல்

ஷிர்க்‌ இடம்பெற வில்லையானால்‌ ஓதி பார்ப்பதில்‌ குற்றமில்லை என்று நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறி இருக்கிறார்கள்‌. இணை வைத்தலின்‌ ஏதாவதொரு அம்சம்‌ கலந்து விட்டால்‌ கூட அத்தகைய ஓதிப்பார்த்தல்‌ தடுக்கப்பட்டுள்ளது. ஜின்களைக்‌ கொண்டு காவல்‌ தேடி ஓதிப்பார்த்தலும்‌ விலக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வும்‌ இதை விளக்கிக்‌ காட்டுகிறான்‌: "மக்கள்‌ இனத்தைச்‌ சார்ந்த ஆண்களில்‌ சிலர்‌, ஜின்‌ இனத்தைச்‌ சார்ந்த சில ஆண்களைக்‌ கொண்டு பாதுகாவல்‌ கோருகின்றனர்‌. இதனால்‌ அவர்களுடைய கர்வம்‌ அதிகரித்து விட்டது" (72:6) இந்த
ஆயத்தை அடிப்படையாக கொண்டு 'மயக்கமுற்று போதையில்‌ இருப்பவர்களுக்கும்‌, மற்றவர்களுக்கும்‌ ஷிர்க்கை உட்கொள்கிற மந்திரம்‌ ஜபித்தல்‌ கூடாது. பொருள்‌ தெரியாத எந்த வார்த்தைகளையும்‌ உபயோகித்தல்‌ கூடாது. ஏனெனில்‌ அவற்றில்‌
ஷிர்க்குடைய வாக்கியங்கள்‌ சேர்ந்து விடக்கூடும்‌. அனுமதிக்கப்பட்ட ஒரு சிலவற்றைச்‌ செய்யலாம்‌. அப்படியானால்‌ அல்லாஹ்வைத்‌ தவிர மற்றும்‌ யாரைக்‌ கொண்டும்‌ சத்தியம்‌ செய்யக்‌ கூடாது' என்று சில அறிஞர்கள்‌ கூறுகின்றனர்‌.

வாழ்ந்திருந்த ஸாலிஹீன்களிடமும்‌, நாதாக்களிடமும்‌ சென்று அவர்கள்‌ நமக்காக அல்லாஹ்விடம்‌ பிரார்த்திக்க வேண்டுமென்று கோரி அதற்கொப்ப அவர்கள்‌ பிரார்த்திப்பதும்‌ நம்‌ கருமங்களை எடுத்துக்கூறி நாமாகவே அல்லாஹ்விடம்‌
பிரார்த்திப்பதும்‌ அனுமதிக்கப்படும்‌. ஸாலிஹீன்களின்‌ துஆக்கள்‌ நமக்கு நன்மைகளை அல்லாஹ்‌ தருவதற்குரிய ஒரு காரணமாகும்‌. இவர்களின்‌ துஆக்களும்‌, நமது அமல்களாளும்‌ அல்லாஹ்விடம்‌ வஸீலா தேடினால்‌ அது அனுமதிக்கப்பட்ட
வஸீலாவாகும்‌. இத்தகைய வஸீலாவைத்தான்‌ தேட வேண்டுமென்று அல்லாஹ்வும்‌ பணித்திருக்கிறான்‌. "மூமின்களே! அல்லாஹ்விற்குப்‌ பயந்து அவனிடம்‌ செல்வதற்குரிய வஸீலாவைத்‌ தேடிக்‌ கொள்ளுங்கள்‌” (5:35). இங்கு வஸீலா என்பதற்கு நல்லமல்கள்‌
என்பது கருத்தாகும்‌.

மேலும்‌ ஒரு வசனத்தில்‌ இறைவன்‌ கூறுகிறான்‌: "இவர்கள்‌ கடவுள்‌ என்று மதித்து அழைப்பவை தங்களுக்கு தங்கள்‌ இறைவனிடம்‌ (வஸீலாவை) வணக்கங்களால்‌ சமீபிப்பதைத்‌ தேடுகின்றன" (17:57)

நாம்‌ நல்லமல்களைக்‌ கொண்டும்‌, நபிமார்களின்‌ துஆக்களைப்‌ பெற்றும்‌ வஸீலா தேடாமல்‌ நபிகளை மட்டும்‌ பொருட்டாக வைத்து வஸீலா தேடப்பட்டால்‌ நம்‌ துஆக்கள்‌ அங்கீகரிக்கப்‌ படுவதற்குரிய ஒரு காரணமாக அது இருக்க முடியாது. ஆகவே
வஸீலாவுக்கு‌ பொருந்தாத ஒன்றைக்‌ கொண்டு வஸீலா தேடியவர்களாக நாம்‌ ஆகிவிடுவோம்‌. இவையெல்லாம்‌ நபிகளைப்‌ பற்றியோ, ஸலஃபுஸ்ஸாலிஹீன்களைப்‌
பற்றியோ கூறப்படும்‌ பிரபலமான துஆக்கள்‌ ஒன்றுமல்ல. இமாம்‌ அஹ்மத்‌ அவர்களைப்‌
பற்றி சொல்லப்படும்‌ போது நபிகளைக்‌ கொண்டு கேட்பதை அவர்கள்‌ அனுமதித்தார்கள்‌
என்று ‘மன்ஸக்குல் மர்வதீ’ என்ற நூலில்‌ வருவதைப்‌ பற்றி அது நபிகளைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்வது ஜாயிஸாகும்‌ என்றுள்ள இமாம்‌ அவர்களின்‌ இரு ரிவாயத்துகளில்‌ ஒன்று என்றே கருதப்பட வேண்டும்‌. ஆனால்‌ அனைத்து அறிஞர்களும்‌ இவ்விரண்டையும்‌ மறுத்திருக்கிறார்கள்‌ என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்‌.

நபிமார்களுக்கு நிரம்பவும்‌ மதிப்புண்டு என்று அல்லாஹ்வே குறிப்பிடுகிறான்‌. நபிமார்களான மூஸா, ஈஸா (அலை) அவர்களைப்‌ பற்றி முன்னர்‌ கூறப்பட்டு விட்டது. இதை எவராலும்‌ மறுக்க இயலாது. இந்த மதிப்பினாலும்‌, பதவியினாலும்‌ மக்களுக்கு
என்ன பலன்‌ கிடைக்கப்‌ போகிறது? இப்பதவிகளின்‌ பலாபலன்கள்‌ நபிமார்களுக்கே பலனளிக்கும்‌. மனிதர்கள்‌ நபிமார்களைப்‌ பற்றி நேசித்து அவர்கள்‌ வாழ்ந்ததற்கொப்ப தம்‌ வாழ்க்கைகளை அமைத்தாலே தவிர வேறு எந்த வழியிலும்‌ மனிதர்கள்‌ பலன்பெற
மாட்டார்கள்‌. அவர்களை நம்பி வழிபட்டு நேசித்து அவர்களுக்கு உதவி புரிந்து அவர்களின்‌ ஸுன்னத்தைப்‌ பின்பற்றி வாழ்ந்து இவற்றையெல்லாம்‌ கொண்டு அல்லாஹ்விடம்‌ வஸீலா தேடினால்‌ அது மிகப்பெரிய வஸீலாவாக கருதப்படும்‌.

நபிமார்களை மட்டும்‌ எடுத்துரைத்து ஒருவர்‌ பிரார்த்தித்தால்‌ அவர்களைக்‌ காரணம்‌ காட்டி பிரார்த்திக்கிறார்‌ என்பது தாத்பரியமாகும்‌. எனவே நபியை மட்டும்‌ காரணம்‌ காட்டி கேட்பதினால்‌ தம்‌ தேவைகள்‌ ஒருபோதும்‌ நிறைவேறாது. ஒருமனிதன்‌
மற்றவனிடத்தில்‌ வஸீலா தேடினால்‌ இந்த வஸீலாவை  கொண்டு அவனுக்கு ஷபாஅத்‌ செய்வதும்‌ கருதப்பட்டால்‌ இது அனுமதிக்கப்பட்டதாகும்‌. ஆனால்‌ இந்த வஸீலாவைக்‌ கொண்டு ஆணையிடுவது நாடப்பட்டால்‌ அது அனுமதிக்கப்படாததாகி
விடும்‌. சிருஷ்டிகளைக்‌ கொண்டு மற்றொரு சிருஷ்டியின்‌ மீது ஆணையிடக்‌ கூடாதல்லவா. 

இனி இந்த வஸீலாவைக்‌ கொண்டு நம்‌ தேட்டம்‌ நிறைவேறக்கூடிய ஒரு காரணம்‌ என்று மட்டும்‌ நாடப்பட்டால்‌ அதன்‌ விளக்கம்‌ பின்னால்‌ வருகிறது.
அல்லாஹ்விடம்‌ பிறரைக்‌ கொண்டு ஆணையிடக்‌ கூடாது. அனுமதிக்கப்பட்டவர்களின்‌ ஷபாஅத்தைக்‌ கொண்டு மட்டுமே அவனிடத்தில்‌ வஸீலா தேடப்படும்‌. அதற்கு அனுமதியும்‌ உண்டு. கண்பார்வை இழந்த ஸஹாபியின்‌ ஹதீஸின்‌ இதைத்தான்‌ காட்டுகிறது.

மேலும்‌ இறைவன்‌ கூறினான்‌: “அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்‌. அவனைக்‌ கொண்டே நீங்கள்‌ ஒருவருக்கொருவர்‌ (வேண்டியவற்றைக்‌) கேட்கிறீர்கள்‌. மேலும்‌ இரத்த பந்தத்தில்‌ ஏற்பட்ட உறவையும்‌ (அல்லாஹ்வுக்குப்‌ பயந்து) பேணிக்‌
கொள்ளுங்கள்‌” (4:1). அதிகமான அறிஞர்கள்‌ 'அல்‌-அர்ஹாமி' என உச்சரித்து அல்லாஹ்வைக்‌ கொண்டு மட்டும்‌ கேட்க வேண்டும்‌. சத்தியம்‌ செய்ய வேண்டும்‌.
உறவினர்களைக்‌ கொண்டு கேட்கப்பட மாட்டாது. மேலும்‌ சத்தியம்‌ செய்யப்பட மாட்டாது என்று கூறி இருக்கின்றனர்‌. ஆனால்‌ சிலர்‌ 'அல்‌-அர்ஹாம்‌' என்று ஓதி உறவினர்களைப்‌ பொருட்டாகக்‌ கொண்டு கேட்கலாம்‌ என்பதை அனுமதித்தார்கள்‌. ஆனால்‌ இந்த ஆயத்தில்‌ இவர்கள்‌ அனுமதிப்பதற்கு ஆதாரமே இல்லை. ஏனெனில்‌ உறவினர்களைப்‌ பொருட்டாகக்‌ கொண்டும்‌, அவர்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்தும்‌
கேட்கப்பட மாட்டாதல்லவா? ஆனால்‌ இந்த உறவினர்களை ஒருசிறு காரணமாக மட்டும்‌ எடுத்துக்‌ கொள்ளலாம்‌. இக்காரணத்தை எடுத்துக்‌ கூறிக்‌ கேட்க அனுமதியுண்டு. ஏனெனில்‌ இரத்தபாசம்‌ அதை உடையவர்களுக்கிடையில்‌ சில கடமைகளைச்‌ சுமத்தி விடுகிறது. மேலும்‌ குகையில்‌ சிக்கிய மூவர்‌ தத்தம்‌ நல்லமல்களைக்‌ காரணம்‌ காட்டிப்‌
பிரார்த்தித்து ஈடேற்றம்‌ அடைந்தார்கள்‌. நபியவர்களின்‌ துஆவையும்‌, ஷபாஅத்தையும்‌
காரணமாகக்‌ கொண்டுதான்‌ அன்று ஸஹாபிகள்‌ வேண்டிக்‌ கொண்டார்கள்‌. கலீஃபா அலீ பின்‌ அபூதாலிப்‌ அவர்கள்‌ பற்றி அறிவிக்கப்பட்ட சம்பவமும்‌ இப்படித்தான்‌. 

அலீ (ரலி) அவர்களின்‌ சகோதரர்‌ ஜஃபரின்‌ மகன்‌ தம்‌ தந்தை ஜஃபரைக்‌ காரணம்‌ காட்டி ஏதேனும்‌
ஒன்றைக்‌ கேட்டால்‌ அலீ (ரலி) அவர்கள்‌ அதைக்‌ கொடுத்து விடுவார்களாம்‌. இவையெல்லாம்‌ இரத்த பாசத்தின்‌ (ஹக்குகள்‌) கடமைகள்‌ எனக்‌ கூறலாம்‌.

முன்னர்‌ கூறப்பட்ட ஹதீஸான தொழுகைக்குப்‌ புறப்படுகிறவரின்‌ துஆ விஷயத்தில்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியதாக அபூஸயீத்‌ மூலமாக இப்னு மாஜா ரிவாயத்‌ செய்த ஹதீஸையும்‌ இப்படித்தான்‌ கூற வேண்டும்‌. இந்த ஹதீஸின்‌ இஸ்னத்‌ (ஆதார
தொடரில்‌) அதியத்‌ பின்‌ ஊஃபி இடம்‌ பெற்றிருப்பதால்‌ அது ளயீஃபானது்(பலவீனமானது) எனக்‌ கூறினோம்‌. நபிகள்‌ தாம்‌ அதைக்‌ கூறியதாக நினைத்தால்‌ கூட
அந்த ஹதீஸை இப்படித்தான்‌ விளக்க முடியும்‌. இவ்விளக்கத்திற்கு இரண்டு காரணங்கள்‌ உண்டு.

ஒன்று: அந்த ஹதீஸில்‌ பிரார்த்திப்பவர்களின்‌ பொருட்டைக்‌ கொண்டும்‌ அல்லாஹ்வுக்கு வழிபடுவதற்காக நடந்து செல்பவர்களின்‌ பொருட்டாலும்‌ கேட்கப்படுகிறது. அல்லாஹ்விடத்தில்‌ கேட்பவர்களுக்குரிய ஹக்கு அவர்களின்‌
பிரார்த்தனையை அங்கீகரிப்பதாகும்‌. இறைவழிபாட்டிற்கு நடந்து செல்பவர்களுக்குரிய
ஹக்கு அவர்களுக்குக்‌ கூலி கொடுப்பதாகும்‌. இந்த ஹக்குகளை அல்லாஹ்‌ தன்‌ மீது ஏற்படுத்தி வைத்திருக்கிறான்‌. ஆனால்‌ படைப்புகள்‌ இறைவன்‌ மீது எதையும்‌ சுமத்தி விடக்‌ கூடாது. இதை இறைவன்‌ குறிப்பிடுகிறான்‌: "உன்னுடைய இறைவன்‌ அருள்‌
புரிவதை தன்‌ மீது கடமையாக்கிக்‌ கொண்டான்‌" (6:54)

இன்னும்‌ கூறினான்‌: “மூமின்களுக்கு உதவி செய்தல்‌ நம்மீது கடமையாகி விட்டது" (30:47). மேலும்‌ கூறினான்‌: "தெளராத்திலும்‌, இன்ஜீலிலும்‌, குர்‌ஆனிலும்‌ அல்லாஹ்‌ வாக்களித்துத்‌ தன்‌ மீது கடமையாக்கிக்‌ கொண்டான்‌. அல்லாஹ்வை விடத்‌ தன்‌ வாக்குறுதிகளை பூரணமாக நிறைவேற்றுபவன்‌ யார்‌? (9:111)

முஆத்‌ (ரலி) பற்றி ஸஹீஹான ஹதீஸில்‌ வருகிறது. அடியார்களுக்கு அல்லாஹ்வின்‌ மீதுள்ள கடமையாவது அவனை அவர்கள்‌ இணை வைக்காமல்‌
வணங்குவது. அடியார்களுக்கு வேண்டி அல்லாஹ்வின்‌ மீதுள்ள ஹக்கு என்பது மேற்கப்பட்டவாறு அவர்கள்‌ வணங்கினால்‌ அவர்களை வேதனைப்‌
படுத்தாமலிருப்பதா,

ஹதீஸ்‌ குத்ஸியில்‌ வருகிறது. அல்லாஹ்‌ கூறினான்‌: அடியரர்களே! அக்கிரமம்‌ செய்வதை நான்‌ என்மீது ஹராமாக்கி‌ கொண்டேன்‌. உங்களுக்கும்‌ நான்‌ அதை
ஹராமாக்கி விட்டேன்‌. ஆகவே நீங்கள்‌ ஒருவருக்கொருவர்‌ அக்கிரமம்‌ செய்யாதீர்கள்‌.

அல்லாஹ்வை வணங்கக்‌ கூடியவர்களுடையவும்‌, அவனை பிரார்த்திக்க கூடியவர்களுடையவும்‌ ஹக்குகள்‌ அவர்களின்‌ பிரார்த்தனையை அங்கீகரித்துக்‌ கூலி கொடுத்தல்‌ என்றிருக்குமானால்‌ இவையெல்லாம்‌ அல்லாஹ்வுடைய செயல்களைக்‌
கொண்டு கேட்டல்‌ என்று கருதப்படும்‌. எனவே இதிலும்‌ குற்றமில்லை. இது நபிகளின்‌
சொல்லில்‌ வந்திருக்கின்ற இஸ்திகாதா(காவல்‌ தேடுதல்‌) என்பதற்கு ஒப்பானது. அதிலே நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. 'இறைவா! உன்னுடைய கோபத்திலிருந்து தப்பிக்க உன்னுடைய திருப்தியைக்‌ கொண்டு காவல்‌ தேடுகிறேன்‌. உனது தண்டனையிலிருந்து தப்பிக்க உன்‌ மன்னிப்பைக்‌ கொண்டு காவல்‌ தேடுகிறேன்‌. உனக்குரிய புகழ்‌
இவ்வளவுதான்‌ என்று என்னால்‌ மட்டுப்படுத்திக்‌ கூற முடியாது இங்கே அல்லாஹ்வின்‌ மன்னிப்பைக்‌ கொண்டு காவல்‌ தேடல்‌ என்பது கூலிக்‌ கொடுப்பதைக்‌ கொண்டு பிரார்த்திப்பதைப்‌ போல்‌ இருக்கிறது. மன்னித்தலும்‌, கூலி கொடுத்தலுமெல்லாம்‌ அல்லாஹ்வுடைய செய்கைகளாகும்‌.

இரண்டு: இறைவனைப்‌ பிரார்த்திப்பதும்‌, அவனுக்கு நற்கிரியைகள்‌ புரிவதுமெல்லாம்‌ அடியானின்‌ இலட்சியம்‌ நிறைவேறுவதற்குரிய ஒரு காரணமாகும்‌. இக்காரணம்‌ நபிகளுடையவும்‌, ஸாலிஹீன்களுடையவும்‌ துஆவைக்‌ கொண்டு வஸீலா தேடுவதைப்‌ போன்றிருக்கிறது. நபியையும்‌, ஸாலிஹீன்களையும்‌ கொண்டு துஆச்‌ செய்தல்‌
என்பதின்‌ கருத்து அவர்களைக்‌ கொண்டு அல்லாஹ்வின்‌ மீது சத்தியம்‌ செய்வதாக
இருக்குமானால்‌ அது கூடாததாகும்‌. ஏனெனில்‌ அல்லாஹ்வின்‌ மீது அவனைக்‌ கொண்டல்லாமல்‌ வேறு யாரைக்‌ கொண்டும்‌ சத்தியம்‌ செய்யப்பட மாட்டாது.
நபியையும்‌, ஸாலிஹீன்களையும்‌ கொண்டு துஆச்‌ செய்தல்‌ என்பதின்‌ கருத்து அவர்களைக்‌ காரணமாகக்‌ காட்டி அல்லாஹ்விடத்கில்‌ பிரார்த்தித்தல்‌
என்றிருக்குமானால்‌ அல்லாஹ்‌ காரணமாக ஆக்கியதைக்‌ கொண்டு கேட்டான்‌ என்பது
தாத்பரியமாகும்‌.

வணக்கமும்‌, பிரார்த்தனையுமெல்லாம்‌ மனிதனின்‌ இலட்சியங்கள்‌ நிறைவேறுவதற்குரிய காரணங்கள்‌ தாம்‌. இதைப்‌ போன்று ஒரு காரணம்தான்‌
நபியுடையவும்‌, ஸாலிஹீன்களுடையவும்துஆக்கள்‌ (இவர்கள்‌ வாழ்ந்திருக்கையில்‌). ஆனால்‌ இவர்களின்‌ பிரார்த்தனைகள்‌ உண்டாகாமலும்‌, நாம்‌ நற்கருமங்கள்‌ புரியாமலும்‌ இந்த சிருஷ்டிகளைக்‌ கொண்டு மட்டும்‌ வஸீலா தேடினால்‌ அது கூடாத
வஸீலாவாகும்‌.

ஒருவன்‌ மற்றவனிடம்‌ அன்பியாக்கள்‌, மலக்குகள்‌, ஸாலிஹீன்கள்‌ ஆகியோரின்‌ பொருட்டைக்‌ கொண்டு கேட்கிறேன்‌ என்று கூறி, அதனால்‌ அவர்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்வதைக்‌ கருதினான்‌ என்றால்‌ இது கூடாததாகாகும்‌. இத்தகைய சத்தியங்கள்‌
சிருஷ்டிகளுக்கிடையில்‌ (செய்தல்‌) கூடாது. 
அப்படியானால்‌ இவற்றைக்‌ கொண்டு அல்லாஹ்வின்‌ மீது சத்தியம்‌ செய்தல்‌ எப்படிக்‌ கூடும்‌? ஒருபோதும்‌ கூடாது. 

மேலும்‌ இக்கூற்றினால்‌ சத்தியத்தைக்‌ கருதாமல்‌ நபிமார்களையும்‌, மலக்குகளையும்‌, ஸாலிஹீன்களையும்‌ தம்‌ துஆக்கள்‌ அங்கீகரிக்கப்பட ஒரு காரணமாக மட்டும்‌ எடுக்கப்பட்டால்‌ இந்நிலையிலும்‌ இவர்களைக்‌ காரணமாக காட்டி மட்டும்‌ பிரார்த்திப்பதில்‌ எந்த நாட்டத்தையும்‌ பெற்றுக்‌ கொள்ள மாட்டான்‌. மாறாக தம்‌ நாட்டத்தைப்‌ பெற்றுக்‌ கொள்வதற்கு அன்பியாக்களையும்‌, மலக்குகளையும்‌ ஈமான்‌ கொள்ளுதல்‌ போன்ற காரணங்கள்‌ தம்மிடமிருந்தும்‌ (பிரார்த்திப்பவனிடமிருந்தே) ஏற்பட வேண்டும்‌. அன்பியாக்களின்‌ துஆக்கள்‌ (என்ற காரணமாவது) இவனுக்குக்‌ கிடைத்திருக்க வேண்டும்‌.

இது ஒன்றுமில்லாது வெறும் அன்பியாக்களையும்‌, மலக்குகளையும்‌ வைத்து பிரார்த்திப்பதில்‌ பலனேதுமில்லை. ஆனால்‌ மக்களில்‌ பலர்‌ இவர்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்து அல்லாஹ்விடம்‌ பிரார்த்திக்கப்‌ பழகிக்‌ கொண்டார்கள்‌. இந்த பெரியார்‌ மீது சத்தியமாக என்று கூறுவதையும்‌ சர்வ சாதாரணமாக ஆக்கிக்‌ கொண்டார்கள்‌.

மனிதர்கள்‌ செய்த நலன்கள்‌ ஒவ்வொன்றையும்‌ எடுத்துக்‌ கூறினால்‌ துஆக்கள்‌ அங்கீகரிக்கப்பட வாய்ப்பு உண்டு. இப்படியாக அல்லாஹ்விடம்‌ கெஞ்சுதல்‌ மிக ஏற்றமான பிரார்த்தனையாகும்‌. இதற்கு குர்‌ஆனிலும்‌, ஹதீஸிலும்‌ பற்பல
சான்றுகளைக்‌ காண முடியும்‌. முன்னர்‌ கூறப்பட்ட இப்னு மஸ்வூதுடைய துஆவும்‌, குகையில்‌ சிக்கிய மூவர்களின்‌ வரலாறும்‌ இதற்கு எடுத்துக்‌ காட்டாகும்‌.

கீழ்வரும்‌ திருமறை வசனங்களையும்‌ இதற்குச்‌ சான்றாக எடுத்துக்‌ கொள்ள முடியும்‌. இறைவன்‌ கூறினான்‌: "எங்கள்‌ இறைவா! உங்கள்‌ இறைவனை விசுவாசியுங்கள்‌ என்று விசுவாசத்தளவில்‌ எங்களை அழைத்தோரின்‌ அழைப்பை நிச்சயமாக நாங்கள்‌
செவியுற்று நாங்கள்‌ விசுவாசம்‌ கொண்டோம்‌. ஆதலால்‌ எங்கள்‌ இறைவா! நீ எங்கள்‌ குற்றங்களை மன்னித்து எங்கள்‌ பாவங்களிலிருந்து (எங்களை) விடுவித்து முடிவில்‌ நல்லோர்களுடன்‌ எங்களை மரிக்கும்படிச்‌ செய்வாயாக!" (3:193)

மேலும்‌ கூறினான்‌: "இத்தகையோர்‌ (தங்களிறைவனை நோக்கி) இறைவா! நிச்சயமாக
நாங்கள்‌ உன்னை விசுவாசிக்கிறோம்‌. ஆதலால்‌ நீ எங்களுடைய பாவங்களை மன்னித்து நெருப்பின்‌ வேதனையிலிருந்தும்‌ நீ எங்களை இரட்சிப்பாயாக! என்றும்‌ (சதா) பிரார்த்தித்துக்‌ கொண்டிருப்பார்கள்‌" (3:16)

மேலும்‌ கூறினான்‌: "எங்கள்‌ இறைவனே! நீ அருள்‌ செய்ததை நாங்கள்‌ விசுவாசிக்கின்றோம்‌. (உன்னுடைய) இத்தூதரையும்‌ நாங்கள்‌ பின்பற்றி நடக்கின்றோம்‌. ஆதலால்‌ (அவரை) உண்மைப்‌ படுத்தியவர்களுடன்‌ எங்களையும்‌ நீ பதிவு செய்து
கொள்வாயாக! (என்றும்‌ இச்சிஷ்யர்கள்‌ பிரார்த்தித்தனர்‌)”. (3:53)

மேலும்‌ கூறினான்‌: "நிச்சயமாக என்னுடைய அடியார்களில்‌ ஒரு வகுப்பார்‌ இருந்தனர்‌. அவர்கள்‌ (என்னை நோக்கி) எங்கள்‌ இறைவனே! நாங்கள்‌ (உன்னை) விசுவாசிக்கிறோம்‌. நீ எங்கள்‌ குற்றங்களை மன்னித்து எங்கள்‌ மீது அருள்‌ புரிவாயாக! அருள்‌ புரிவோர்களிலெல்லாம்‌ நீ மிக்க மேலானவன்‌ என்று பிரார்த்தித்துக்‌
கொண்டிருந்தனர்‌". (23:109)

கீழ்வரும்‌ ஹதீஸும்‌ இதை உண்மைப்‌படுத்துகிறது. அனஸ்‌ (ரலி) அவர்கள்‌ கூறியதாக அறிவிக்கப்படுகிறது. அன்ஸாரிகளில்‌ ஒருவர்‌ கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த போது நோய்‌ விசாரிக்க நாங்கள்‌ சென்றிருந்தோம்‌. இறந்து
விடுவாரென்று எங்களுக்குத்‌ தெரிந்ததினால்‌ அவருடைய உயிர்‌ பிரியும்வரை நாங்கள்‌ விலகவில்லை. பின்னர்‌ மய்யித்தைத்‌ துணியால்‌ போர்த்தினோம்‌. வயது முதிர்ந்த தாயார்‌ அமர்ந்திருந்தார்‌. அம்மூதாட்டியிடம்‌ 'உனக்கு ஏற்பட்ட இந்தச்‌ சங்கடத்தின்‌ கூலியை அல்லாஹ்விடமிருந்து நீ தேடிக்‌ கொள்‌!' என்று கூறப்பட்டது. இதைச்‌ செவியுற்ற அக்கிழவி ஏன்‌ அப்படிச்‌ சொல்கிறீர்கள்‌? என்‌ மகன்‌ இறந்து விட்டாரா? என்று ஆச்சரியமாக வினவினார்‌. நாங்கள்‌ 'ஆம்‌' என்று பதிலளித்ததும்‌, உண்மையைத்தான்‌ சொல்கிறீர்களா? என்று
அம்மூதாட்டி வினவினார்‌. நாங்கள்‌ மீண்டும்‌ ஆம்‌ என்றோம்‌. உடனே தம்‌ இரு கரங்களையும்‌ அல்லாஹ்வின்‌ பால்‌ உயர்த்தி பிரார்த்திக்கலானார்‌.
இறைவா! நான்‌ இஸ்லாத்தைத்‌ தழுவி உன்‌ திருத்தூதரின்‌ பால்‌ ஹிஜ்ரத்துச்‌ செய்து
வந்திருக்கிறேன்‌. இவையெலலாம்‌ என்ன சங்கடங்கள்‌ நேர்ந்தாலும்‌ அடுத்தாற்போல மகிழ்ச்சியை நீ எனக்குத்‌ தர வேண்டும்‌ என்பதற்காகத்தான்‌. இந்த உண்மையை நீயும்‌ அறிந்திருக்கிறாய்‌. எனவே இந்த சங்கடத்தை என்மீது பெரிய பாரமாக்கி விடாதே. எனக்‌ கூறிவிட்டு மய்யித்தின்‌ முகத்தைக்‌ திறந்து பார்த்தார்‌. நாங்கள்‌ அங்கேயே இருந்தோம்‌.
கடைசியில்‌ இறந்தவருடன்‌ (அவரின்‌ உயிரை மீட்கப்பட்டதினால்‌) நாங்கள்‌ உணவருந்தினோம்‌. இந்த சம்பவத்தை நாம்‌ சிந்தித்தாலும்‌ இந்த பெண்மணி தான்‌ நன்மைகளை எடுத்துக்‌ கூறி (ஈமான்‌ கொண்டு, ஹிஜ்ரத்துச்‌ செய்து வந்தேன்‌ எனச்‌
சொல்லி அதற்கப்பால்‌) தன்‌ பிரார்த்தனையைத்‌ துவங்கி இருக்கிறாள்‌ என்பதைக்‌ காணலாம்‌.

அபூ நயீம்‌ எழுதிய என்ற நூலில்‌ கீழ்வரும்‌ சம்பவம்‌
கூறப்படுகிறது: தாவூத்‌ நபியவர்கள்‌ தம்‌ பிரார்த்தனையின்‌ போது 'இறைவா! என்‌ பிதாக்களான நபி இப்ராஹீம்‌, இஸ்ஹாக்‌, யஃகூப்‌ (அலை) இவர்களின்‌ உரிமையால்‌ (ஹக்கால்‌) கேட்கிறேன்‌' என்றார்களாம்‌. உடனே அல்லாஹ்‌ அவர்களுக்கு வஹீ
அறிவித்து தாவூதே! உம்‌ பிதாக்களுக்கு என்மீது என்ன உரிமை இருக்கிறது?” என்று வினவினானாம்‌. இது (இஸ்ராயீலிய்யாத்‌) யூதர்களுடன்‌ சேர்க்கப்படும்‌ நம்பமுடியாத சம்பவமாயினும்‌ முன்னர்‌ கூறியதை வலுப்படுத்துகிறது என்பதற்காகக்‌ குறிப்பிடுகிறேனே தவிர இதன்‌ மீது (ஆதாரத்துக்காக) ஊன்றிக்‌ கொள்வதற்காக அல்ல. வாழ்ந்திருக்கும்‌ மனிதனிடம்‌ துஆ வேண்டி நிற்க அனுமதியுண்டு. மனிதனால்‌
நிறைவேற்ற முடியுமானதைக்‌ கேட்கலாம்‌. காலம்‌ சென்றவரிடமும்‌, கண்‌ மறைவில்‌ இருப்பவரிடமும்‌ கேட்கப்பட மாட்டாது.

சுருங்கக்‌ கூறின்‌ 'நபியைக்‌ கொண்டு வஸீலா தேடல்‌' என்பதில்‌ பற்பல கூட்டுக்‌ கருத்துகளுக்கும்‌, பிசகுதல்களும்‌ இருப்பதைக்‌ கண்டோம்‌. ஸஹாபாக்களின்‌ பிரயோகத்தில்‌ நபியின்‌ துஆ, ஷபாஅத்‌ இவற்றைப்‌ பெற்று வஸீலா தேடுவதுதான்‌
கருதப்பட்டது. நபியின்‌ துஆவும்‌, ஷபாஅத்தும்‌ மாபெரும்‌ வஸீலா என்றுதான்‌ கருத வேண்டும்‌. அல்லாஹ்விடம்‌ கேட்கும்‌ போது அவன்‌ திருநாமங்களையும்‌, இலட்சணங்களையும்‌ எடுத்துக்‌ கூறி அவற்றின்‌ பொருட்டால்‌ பிரார்த்திக்க வேண்டும்‌.
இதல்லாது அவன்‌ சிருஷ்டிகளின்‌ எதைக்‌ கொண்டும்‌ சத்தியம்‌ செய்து கேட்கக்‌ கூடாது.

உதாரணமாக, 'இறைவா! நீ புகழுக்குரியவன்‌. இப்புகழின்‌ பொருட்டால்‌ கேட்கிறேன்‌. நீ மிகப்பெரிய பேருபகாரி. உன்னையன்றி இறைவன்‌ வேறில்லை. வானங்களையும்‌, பூமியையும்‌ நூதனமாக சிருஸ்டித்தாய்‌. கண்ணியத்துக்கும்‌, கம்பீரத்துக்கும்‌ உரியவன்‌ நீயே. நீ என்றும்‌ இருப்பவன்‌. நித்திய ஜீவனுடன்‌ இருப்பவனே! ஏகனே! தனித்தவனே! நீ
எவரிடமும்‌ தேவை இல்லாதவனாக இருக்கிறாய்‌. இத்தன்மை எல்லாவற்றையும்‌ வைத்து கேட்கிறேன்‌. இறைவா! நீ யாரையும்‌ பெறவில்லை. பெற்றெடுக்கப்பட்டவனும்‌ இல்லை. உனக்கு நிகர்‌ யாருமில்லை' இத்தகைய துஆக்களைக்‌ கொண்டு பிரார்த்திக்க வேண்டும்‌.

மேலும்‌ 'இறைவா! உன அர்ஷ்‌ இஸ்ஸத்துகளால் (மதிப்புகளால்)‌, சூழப்பட்டி ருக்கிறது.
அத்தகைய அர்ஷை சூழ்ந்திருக்கும்‌ இஸ்ஸத்துகளின்‌ பொருட்டால்‌ உன்னிடம்‌ இறைஞ்சுகிறேன்‌. அளவற்ற உன்‌ அருளால்‌ மகத்தான திருநாமத்தால்‌, மேலான
அனுக்கிரகஙகளால்‌ கேட்கிறேன்‌. உன்‌ நிரப்பமான கலிமாத்‌ என்னும்‌ உரைகளின்‌ பொருட்டாலும்‌ கேட்கிறேன்‌' என்று கூறிப்‌ பிரார்த்திப்பதிலும்‌ குற்றமில்லை.

இருப்பினும்‌ இந்த கடைசி துஆவைக்‌ கொண்டு பிரார்த்திப்பதில்‌ அறிஞர்கள்‌ இரு கருத்துகளைக்‌ கூறுகின்றனர்‌. இமாம்‌ அபூஹனிபா (ரஹ்‌) அவர்கள்‌ இந்த துஆவைத்‌ தடுத்திருப்பதாக இமாம்‌ அபூ யூஸூஃப்‌ கூறுகிறார்கள்‌. 'அர்ஷை சுமந்திருக்கும்‌
இஸ்ஸத்துகளின்‌ பொருட்டால்‌ இறைஞ்சுகிறேன்‌. உன்‌ சிருஷ்டிகளின்‌ பொருட்டால்‌ கேட்கிறேன்‌' என்றெல்லாம்‌ கூறுவதை வெறுக்கிறேன்‌ என்றார்கள்‌. 'இறைவா! உன்னைக்‌ கொண்டு பிரார்த்திக்கிறேன்‌' என இறைவனை வேண்டி துஆச்‌ செய்வதை
விட வேறு அமைப்புகள்‌ வேண்டியதில்லை என்கிறார்கள்‌.

'ஆனால்‌ மேற்கூறப்பட்ட அர்ஷை சூழ்ந்திருக்கும்‌ மதிப்புகள்‌ என்பதின்‌ தாத்பரியமே அல்லாஹ்வைக்‌ கொண்டு கேட்பதுதான்‌. எனவே இத்தகைய துஆக்களில்‌ குற்றம்‌ ஒன்றும்‌ ஏற்படாது' என்று அபூ யூஸுஃப்‌ (ரஹ்‌) அவர்கள்‌ குறிப்பிடுகிறார்கள்‌. 'ஆனால்‌
நபிமார்கள்‌, ரஸுல்மார்கள்‌, கஃபத்துல்லாஹ்‌, மஷ்ஹருல்‌ ஹராம்‌ என்பவற்றின்‌ பொருட்டால்‌ கேட்பதை நான்‌ வெறுக்கிறேன்‌' என்று கூறினார்கள்‌. இரட்சகன்‌ மீது சிருஷ்டிகளுக்கு எந்த உரிமையும்‌, பாத்தியதையும்‌ கிடையாது. எனவே சிருஷ்டிகளைப்‌
பொருட்டாகக்‌ கொண்டு பிரார்த்தித்தாலும்‌ ஜாயிஸாகாது. இது இமாம்‌ அபூஹனிபாவும்‌,
அபூயூஸுஃப்பும்‌ மற்றவர்களும்‌ ஏகோபித்துக்‌ கூறிய கருத்தாகும்‌.


இறைவன்‌ தன்‌ சிருஷ்டீகளைக்‌ கொண்டு ஏன்‌ சத்தியம்‌ செய்ய வேண்டும்

அல்லாஹ்‌ தன்‌ சிருஷ்டிகளில்‌ விரும்பியவற்றைக்‌ கொண்டு மனிதர்களிடம்‌ சத்தியம்‌ செய்கிறான்‌. மனிதர்களைப்‌ பொறுத்தவரை சிருஷ்டிகளைக்‌ கொண்டு மற்றொரு சிருஷ்டியிடம்‌ அனுமதிக்கப்படாதது போல அவற்றைக்‌ கொண்டு
இறைவனிடத்திலும்‌ சத்தியம்‌ செய்வதில்‌ ஷிர்க்‌ நுழைந்து விடுகிறது. அல்லாஹ்‌ தன்‌ சிருஷ்டிகளைப்‌ பாராட்டி அவற்றின்‌ கெளரவத்தையும்‌, அமைப்பையும்‌, அவற்றைப்‌ படைத்தல்‌ இலேசான காரியமல்ல என்பவற்றையெல்லாம்‌ எடுத்துக்‌ கூறி அதன்‌ காரணத்தினால்‌ தன்‌ ஏகத்துவத்தை உறுதிப்‌ படுத்துகிறான்‌. இவையனைத்தையும்‌ ஏகத்துவத்தின்‌ அத்தாட்சிகள்‌ என்று தெரிவிப்பதற்காகவும்‌ அவற்றைக்‌ கொண்டு இறைவன்‌ சத்தியம்‌ செய்கிறான்‌.

ஆனால்‌ மனிதன்‌ சிருஷ்டியைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்யும்போது தன்‌ தேவைகள்‌ நிறைவேறுவதை மட்டும்‌ இலட்சியமாகக்‌ கொள்கிறான்‌. பிறர்‌ தன்‌ சொற்களை மெய்ப்பிப்பதற்காக வேண்டி, அல்லது சாதாரண ஒரு பிரச்சினைக்குத்‌ தீர்வு காண
சிருஷ்டிகளைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்கிறான்‌. இவ்விரு சத்தியங்களுக்கு மத்தியிலும்‌ நீண்ட வேறுபாடுகள்‌ உண்டு. எனவே தேவைகள்‌ கிடைப்பதற்கு தன்னைப்‌ படைத்த அல்லாஹ்விடம்‌ அவனைக்‌ கொண்டே கேட்பதுபோல படைப்பினங்களிடமும்‌ அந்த அல்லாஹ்வைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்ய வேண்டும்‌. ஒருவன்‌ மற்றவனிடம்‌ ‘இன்னதைக்‌ கொண்டு சத்தியமாகக்‌ கேட்கிறேன்‌' என்று கூறினால்‌ இக்கூற்று தவறாகும்‌. இங்கே சத்தியம்‌ செய்தவன்‌ மீது (கஃப்பாரா) குற்றப்பரிகாரம்‌ கடமையாகிறது. ஆனால்‌ யார்மீது ஆணையிடப்பட்டதோ அவருக்கு குற்றமொன்றும்‌
இல்லை என்று 'அஇம்மத்துல்‌ புகஹா' என்னும்‌ மார்க்க அறிஞர்கள்‌ கூறியிருக்கின்றனர்‌. ஒருவன்‌ மற்றவனிடம்‌ 'இன்னாரைக்‌ கொண்டு கேட்கிறேன்‌' என்று
கூறினால்‌ இங்கு யார்மீதும்‌ குற்றப்பரிகாரம்‌ கடமையாகாது. இதிலிருந்து அல்லாஹ்விடத்தில்‌ அவன்‌ படைப்புகளைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்து கேட்டல்‌ ஜாயிஸாகாது என்றும்‌ தெளிவாகிறது. சத்தியம்‌ செய்யாமல்‌ படைப்புகளின்‌ பொருட்டால்‌ இறைவனிடம்‌ வேண்டுவதினுடைய சட்டங்கள்‌ பற்றி முன்னரே கூறப்பட்டு விட்டது. 

ஒருவன்‌ 'அல்லாஹ்வின்‌ மீது ஆணையாக இன்னதை நான்‌ செய்வேன்‌' என்றால்‌ இங்கேயும்‌ யாரும்‌ கஃப்பாரா (குற்றப்பரிகாரம்‌) கொடுக்க வேண்டாம்‌. மேலும்‌ ஒருவன்‌ 'இறைவன்‌ மீது சத்தியமாக நீ இதைச்‌ செய்ய வேண்டும்‌' என்று கூறிவிட்டு சத்தியத்திற்கொப்ப சத்தியம்‌ செய்யப்பட்டவன்‌
செயல்படவில்லையானால்‌ இங்கே சத்தியம்‌ செய்பவன்‌ மீது குற்றப்பரிகாரம்‌ கடமையாகும்‌. எவர்‌ பிரார்த்தனையின்‌ வாக்கியத்தைக்‌ கொண்டு கேட்கிறாரோ அவர்‌ பிரார்த்தித்தவனுக்கு ஒப்பாகிறார்‌.

ஆனால்‌ கீழ்வருவதற்கொப்ப அல்லாஹ்வின்‌ மீது ஒருவன்‌ சத்தியம்‌ செய்வானென்றால்‌, உதாரணமாக 'இரட்சகனே! நிச்சயமாக நீ இதை எனக்குச்‌ செய்துதர வேண்டுமென்று உன்மீது சத்தியம்‌ செய்கிறேன்‌' இம்மாதிரியான சத்தியங்கள்‌
அனுமதிக்கப்படும்‌. இவை அல்லாஹ்வைக்‌ கொண்டு அவன்‌ மீது ஆணையிடுதல்‌ என்னும்‌ தன்மையிலுள்ள சத்தியமே தவிர சிருஷ்டிகளைக்‌ கொண்டு அல்லாஹ்விடம்‌ சத்தியம்‌ செய்யும்‌ தன்மையில் உள்ளதல்ல. ஸலஃபுஸ்ஸாலிஹீன்களைச்‌ சார்ந்த பராஃ இப்னு மாலிக்கும்‌, மற்றவர்களும்‌ இப்படி அல்லாஹ்வைக்‌ கொண்டு அவன்‌ மீதே சத்தியம்‌ செய்து பிரார்த்தித்து இருக்கிறார்கள்‌.

மேலும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியதாக 'இரண்டு பழைய துணிகள்‌ அணிந்து தலைமுடிகள்‌ சிதறி தூசுகள்‌ படிந்து வாசல்களில்‌ சென்றால்‌ துரத்தப்படுகின்ற எத்தனை எத்தனையோ மனிதர்கள்‌ அல்லாஹ்வின்‌ மீது ஆணையிட்டால்‌ அவர்களுக்கு
அல்லாஹ்‌ நிறைவேற்றிக்‌ கொடுப்பான்‌' என்று ஒரு ஸஹீஹான ஹதீஸில்‌ வருகிறது. 

மேலும்‌ ஒரு ஹதீஸில்‌ நபியவர்களை நோக்கி அனஸ்‌ பின்‌ நள்ர்‌ (ரலி) அவர்கள்‌ நாயகமே! உண்மையாக தங்களை நபியாக அனுப்பி வைத்த அல்லாஹ்வின்‌ மீது ஆணையாக, அர்ருபைபுடைய முன்பல்‌ உடைக்காமலிருக்கட்டும்‌' என்று இப்படிச்‌
சத்தியம்‌ செய்து வேண்டிக்‌ கொண்டபோது நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: அனஸே, பழிக்குப்பழி வாங்குவது இறைவனின்‌ விதியாக இருக்கிறதே' என்று. இதைக்‌ கேட்டதும்‌ மனிதர்‌ அர்ருபைபை மன்னித்து விட்டார்கள்‌. இதைக்‌ கண்ட நபி (ஸல்‌)
அவர்கள்‌ 'அல்லாஹ்வின்‌ அடியார்களில்‌ சிலர்‌ அவன்‌ மீது ஆணையிட்டால்‌ அவன்‌ அதற்கொப்ப நிறைவேற்றிக்‌ கொடுப்பான்‌' என்று கூறினார்கள்‌. இவையனைத்தும்‌ அல்லாஹ்விடத்தில்‌ அவனைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்தலாகும்‌. மாறாக
படைப்புகளைக்‌ கொண்டு அவனிடத்தில்‌ சத்தியம்‌ செய்வதல்ல.


அனுமதிக்கப்பட்ட பிரார்த்தனைகள்‌

மனிதர்கள்‌ அல்லாஹ்விடம்‌ பிரார்த்திக்க நினைத்தால்‌ ஷரீஅத்தில்‌ அனுமதிக்கப்பட்ட துஆக்களால்‌ அல்லது திருமறையிலிருந்தும்‌ பெருமானாரிடமிருந்தும்‌ அறியப்பட்ட துஆக்களைக்‌ கொண்டு பிரார்த்திக்க வேண்டும்‌. இத்தகைய துஆக்களை எடுத்துரைத்து
பிரார்த்திப்பதில்‌ சந்தேகமின்றி நிறையப்‌ பலாபலன்களை காண முடிகிறது. இந்த
துஆக்களினால்‌ மனிதன்‌ நேரான வழியைப்‌ பெறுகிறான்‌. அன்பியாக்கள்‌, ஸித்தீகீன்கள்‌,
ஷுஹாதாக்கள்‌, ஸாலிஹீன்கள்‌ இவர்கள்‌ வழியும்‌ இதுதான்‌. 

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியதாக சில பொதுமக்கள்‌ கூறுகின்ற 'உங்களுக்கு ஏதேனும்‌ தேவைகள்‌ ஏற்பட்டால்‌ எனது மதிப்பை எடுத்துரைத்து அதன்‌ பொருட்டால்‌ பிரார்த்தியுங்கள்‌' என்று
சொல்லப்படும்‌ ஹதீஸ்‌ பொய்யானதாகும்‌. இந்த ஹதீஸ்‌ பிரபலமான அறிஞர்களால்‌ அறிவிக்கப்படவில்லை. ஹதீஸ்‌ நூற்களிலும்‌ இதைக்‌ காண முடியாது.

ஒவ்வொரு துஆவிலும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மீது ஸலவாத்‌ சொல்ல வேண்டுமென்று மக்கள்‌ பணிக்கப்படுகிறார்கள்‌. மழைக்காக பிரார்த்தித்தாலும்‌ சரி மற்ற எந்த தேவைகளுக்காகப்‌ பிரார்த்தித்தாலும்‌ சரியே. இப்பிரார்த்தனைகளிலெல்லாம்‌ நபியவர்கள்‌
மீது ஸலவாத்‌ கூற வேண்டுமென்று அறிஞர்கள்‌ கூறியிருக்கிறார்கள்‌. இந்நிலையிலும்‌
நபியவர்களைக்‌ கொண்டு வஸீலா தேட வேண்டுமென்பதை இந்த அறிஞர்கள்‌ கூறவில்லை.

பொதுவாக அல்லாஹ்‌ அல்லாதவற்றைக்‌ கூப்பிட்டு பிரார்த்திப்பதையும்‌, அவற்றைக்‌ கொண்டு உதவி தேடுவதைப்‌ பற்றியும்‌ இவர்கள்‌ குறிப்பிடவில்லை. ஏனெனில்‌ அல்லாஹ்‌ அல்லாதவற்றை அழைப்பது குஃப்ராகும்‌. 

மேலும்‌ ஸலஃபுஸ்ஸாலிஹீன்களைப்‌ பற்றி அவர்கள்‌ நபிமார்களையும்‌, காலஞ்‌ சென்றவர்களையும்‌, மறைந்திருப்பவர்களையும்‌ அழைத்துப்‌ பிரார்த்தித்தார்கள்‌ என்று அறிவிக்கப்படவில்லை. இவற்றையெல்லாம்‌ அறிஞர்கள்‌ அல்லாத பிற்காலத்தில்‌ தோன்றிய சிலர்தாம்‌ கூறியிருக்கிறார்கள்‌. ஆனால்‌ சில முன்னோர்களைப்‌ பற்றி அவர்கள்‌ நபியின்‌ ஹக்கைக்‌ கொண்டும்‌, மதிப்பைக்‌ கொண்டும்‌ பிரார்த்தித்தாகச்‌
சொல்லப்படும்‌ பிரபலமான சொல்லாகவோ, நபிகளிடமிருந்து அறிவிக்கப்பட்ட ஸுன்னத்தாகவோ இருக்கவில்லை. இமாம்‌ அபூஹனிபா (ரஹ்‌) அவர்களைப்‌ பற்றியும்‌, அபூயூஸுப்பைப்‌ பற்றியும்‌ மற்றவர்களைப்‌ பற்றியும்‌ அறிவிக்கப்பட்டது போல
இவற்றையெல்லாம்‌ விலக்கி நிறுத்துவதே நபி (ஸல்‌) அவர்களின்‌ ஸுன்னத்தாகும்‌.

பகீஹ்‌ அபூ முஹம்மத்பின்‌ அப்துஸ்ஸலாம்‌ என்பவர்களின்‌ பத்வாவில்‌ கீழ்வருமாறு
நான்‌ பார்த்திருக்கிறேன்‌. அதில்‌ அவர்கள்‌ அல்லாஹ்விடத்தில்‌ அவன்‌ சிருஷ்டிகளில்‌
(யாரைக்‌ கொண்டும்‌ வஸீலா தேடக்‌ கூடாது என்று குறிப்பிடுகிறார்கள்‌. கண்பார்வை இழந்தவரைப்‌ பற்றிய ஹதீஸ்‌ ஸஹீஹானது என்றால்‌ நபியவர்களைக்‌ கொண்டு மட்டும்‌ வஸீலா‌ தேடப்படுமாம்‌. ஆனால்‌ இந்த ஹதீ்ஸோ ஸஹீஹ்‌ என்று அறிவுக்கப்படவும்‌ இல்லை. இந்த ஹதீஸைப்‌ பொறுத்தவரையில்‌ நபிகளின்‌ துஆவைக்‌ கொண்டு வஸீலா தேடலாம்‌ என்பதைத்தான்‌ காட்டுகிறது என்பதை முன்னர்‌
கூறினோம்‌. அன்றி இது சிருஷ்டிகளைக்‌ கொண்டு அல்லாஹ்வின்‌ மீது ஆணையிடலாமென்றோ, நபியைக்‌ கொண்டு கேட்கலாமென்றோ தெரிவிக்கும்‌
ஹதீஸில் துஆக்கள்‌ அங்கீகரிக்கப்படுவதற்காக நபியைக்‌ கொண்டு வஸீலா தேடக்‌ கூடியவர்கள்‌ ஷரீஅத்தின்‌ விதிகளை மீறி விட்டார்கள்‌. ஷரீஅத்தோ அவர்களுக்குப்‌ பயன்தரவல்ல செயல்களைத்தான்‌ ஏவுகிறது.

துஆ அங்கீகரிக்கப்படுவதற்கு மிகப்‌ பெரிய காரணமாக நபி (ஸல்‌) அவர்கள்‌ மீதுள்ள ஸலவாத்தை எடுத்துக்‌ கொள்ளலாம்‌. நபிகள்‌ மீது ஸலவாத்‌ கூற அல்லாஹ்‌ ஏவுகிறான்‌. திருமறையும்‌, ஹதீஸும்‌, ஸஹாபாக்களுடையவும்‌, இமாம்களுடையவும்‌
தீர்ப்புகள்‌ ஆகிய எல்லாம்‌ (இஜ்மாஉ) துஆவின்‌ போது நபிகள்‌ மீது ஸலவாத்‌ சொல்ல வேண்டும்‌ என்பதை விளக்கமாகக்‌ குறிப்பிடுகின்றன.

இறைவன்‌ கூறுகிறான்‌: "நிச்சயமாக அல்லாஹ்வும்‌, அவனுடைய மலக்குகளும்‌ நபியின்‌ மீது ஸலவாத்துச்‌ சொல்கிறார்கள்‌. விசுவாசிகளே! நீங்களும்‌ அவர்கள்‌ மீது ஸலவாத்துச்‌ சொல்லி, ஸலாமும்‌ கூறிக்‌ கொண்டிருங்கள்‌" (33:56)

நபி (ஸல்‌) அவர்கள்‌ 'என்மீது ஒருதடவை ஒருவர்‌ ஸலவாத்துக்‌ கூறினால்‌ அல்லாஹ்‌ அவர்மீது பத்து தடவைக்‌ கூறுகிறான்‌' என்று கூறினார்கள்‌.

புலாலாத்‌ பின்‌ உபைத்‌ என்ற ஸஹாபி கூறுகிறார்கள்‌: 'ஒரு மனிதர்‌ தொழுகையின்‌ போது துஆவில்‌ அல்லாஹ்வைத்‌ துதிக்காமலும்‌, நபிகள்‌ மீது ஸலவாத்துக்‌ கூறாமலும்‌ பிரார்த்திப்பதைக்‌ கண்ட நபி (ஸல்‌) அவர்கள்‌ அம்மனிதரைப்பற்றி இவர்‌ அவசரப்பட்டு விட்டார்‌ என்றார்கள்‌. பின்னர்‌ அம்மனிதரை அழைத்து அவரிடமோ அல்லது
வேறொருவரிடமோ நீங்கள்‌ பிரார்த்தித்தால்‌ இரட்சகனைப்‌ புகழ்ந்து, நபியின்‌ மீது ஸலவாத்துக்‌ கூறிப்‌ பின்னர்‌ நீர்‌ விரும்பியவற்றைக்‌ கேட்டுப்‌ பிரார்த்திக்க வேண்டும்‌ என்று கூறினார்கள்‌'. (அஹமத், அபூதாவூத், திர்மிதி, நஸாயி)

ஹதீஸில்‌ வருகிறது: ஒரு மனிதர்‌ வந்து யாரஸுலுல்லாஹ்‌! பாங்கு சொல்கிறவர்கள்‌ நன்மைகளில்‌ எங்களைவிட மிகைத்து விடுகிறார்களே என்று! முறையிட்டதற்கு அவர்‌ பாங்கில்‌ கூறுவதைப்‌ போல நீரும்‌ கூறும்‌. பாங்கு முடிந்து விட்டால்‌ பிரார்த்தனைச்‌ செய்யும்‌. கொடுக்கப்படும்‌' என்று நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. (அபூதாவூத், நஸாயி)

ஜாபிர்‌ பின்‌ அப்துல்லாஹ்‌ (ரலி) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌: பாங்கொலி கேட்டால்‌ கீழ்வரும்‌ துஆவை எவர்‌ பிரார்த்திக்கின்றார்களோ அவர்களுடைய துஆவை அல்லாஹ்‌ அங்கீகரிப்பான்‌. நிரப்பமான இந்த அழைப்புக்குரிய நாயனே! பயன்தரவல்ல தொழுகையின்‌ இரட்சகனே! நபிகள்‌ முஹம்மத்‌ (ஸல்‌) அவர்கள்‌ மீது ஸலவாத்துக்‌
கூறுவாயாக! அவர்களை நீ என்றும்‌ கோபமே இல்லாத பொருத்தமாக நீ அவர்களுடன்‌ பொருத்திக்‌ கொள்வாயாக!”

இன்னொரு ஹதீஸில்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌: 'பாங்குக்கும்‌, இகாமத்துக்கும்‌ இடையில்‌
கேட்கப்படும்‌ பிரார்த்தனை புறக்கணிக்கப்படுவதில்லை' என்று கூறினார்கள்‌. (அஹமத், அபூதாவூத், திர்மிதி, நஸாயி)

இரு வேளைகளில்‌ வானத்தின்‌ கதவுகள்‌ திறந்து வைக்கப்படுகின்றன. இவ்வேளைகளில்‌ பிரார்த்திப்பவனின்‌ பிரார்த்தனைகள்‌ மிகுதியாக அங்கீகரிக்கப்படும்‌. ஒன்று: பாங்கு சொல்லியதற்கப்பால்‌ உள்ள நேரம்‌. இன்னொன்று: இறைவனின்‌ பாதையில்‌ போராடுவதற்காக அணி‌ திரண்டிருக்கும்‌ நேரம்‌. (அபூதாவூத்)

நபி (ஸல்‌) அவர்கள்‌ இரவின்‌ கால்வாசி நேரம்‌ சென்று விட்டதின்‌ பின்னர்‌ எழுந்து மக்களே! இந்நேரம்‌ அல்லாஹ்வை நினையுங்கள்‌! பலமாக பூமி அதிர்ச்சி அடையும்‌ நாள்‌ வந்து விட்டது. அதனைத்‌ தொடர்ந்து இன்னும்‌ பல அதிர்ச்சிகள்‌ வரும்‌. மரணமும்‌ அதனைத்‌
தொடர்ந்து வந்து விடும்‌' என்று கூறுவார்கள்‌

((மேலும்‌ இமாம்‌ இப்னு தைமிய்யா பாங்கு சொல்வதற்குப்‌ பதில்‌ சொல்ல வேண்டிய முறை குறித்து அம்ர்‌ பின்‌ ஆஸ்‌ கூறியதாக ஸஹீஹ்‌ முஸ்லிமில்‌ வரும்‌ ஹதீஸை இங்கு குறிப்பிடுகிறார்‌. இது முன்னரே இடம்‌ பெற்றுள்ளதாகும்‌. விரிவஞ்சியும்‌ அதை மீண்டும்‌ இங்கு மொழி பெயர்க்கவில்லை.))

((இமாம்‌ இப்னு தைமிய்யா முன்னர்‌ வந்துள்ள உபையினுடைய ஹதீஸையும்‌ இங்கு
குறிப்பிடுகிறார்கள்‌.))


பிரார்த்தனையின்‌ படித்தரங்கள்‌

இஸ்லாமிய அறிஞர்களும்‌, இமாம்களும்‌ ஷரீஅத்தில்‌ ஆகுமானதும்‌, ஆகாதவையுமான பிரார்த்தனைகளை வரையறுத்துக்‌ கூறியிருக்கிறார்கள்‌. கூடாத, பித்‌அத்தான பிரார்த்தனைகளை மூன்றாகப்‌ பிரித்திருக்கிறார்கள்‌. ஒன்று: அல்லாஹ்‌
அல்லாத இதர சிருஷ்டிகளை அழைத்துப்‌ பிரார்த்தித்தல்‌. மய்யித்திடம்‌ கேட்டுப்‌ பிரார்த்தித்தல்‌. கண்‌ பார்வைக்கு அப்பாற்பட்டோர்‌, இறந்து போன நபிமார்கள்‌, ஸாலிஹீன்கள்‌ ஆகியோரையெல்லாம்‌ கூப்பிட்டு 'யாஸய்யித்தீ! எனக்கு உதவி செய்தருள்வீர்‌! உங்களைக்‌ கொண்டு காவல்‌ தேடுகிறேன்‌. உதவி கோருகிறேன்‌. என்‌ பகைவனுக்கெதிராக உதவி புரிவீராக!' என்றெல்லாம்‌ பிரார்த்தித்தலாகும்‌. அன்றி கீழ்வரும்‌ பிரார்த்தனை இவை எல்லாவற்றையும்‌ விட பயங்கர குற்றத்திற்குரியதாக இருக்கிறது. 'நீர்‌ என்னை மன்னித்தருள்வீ்ர்‌! என்னுடைய தெளபாவையும்‌, பாவமன்னிப்பையும்‌ ஏற்றருள்வீர்‌!' என்று பிரார்த்தனை செய்வது.

இவர்களுடைய கப்றுகளில்‌ ஸுஜுது செய்வதும்‌, கப்றுகளை நோக்கி நின்று தொழுவதும்‌, பிரார்த்திப்பதும்‌, கிப்லாவை முன்னோக்குவதை விட மேன்மையாகக்‌ கருதுவதும்‌ மாபெரும்‌ கொடிய ஷிர்க்காகும்‌. சில முட்டாள்கள்‌ கப்றுகளை சில
குறிப்பிடத்தக்கவர்களின்‌ கிப்லா என்றும்‌, சாதாரண பொதுமக்கள்‌ தான்‌ கஃபாவைப்‌ பார்த்துத்‌ தொழுவார்கள்‌ என்றும்‌ கூறி மக்களை வழி கெடுத்திருக்கிறார்கள்‌. மேலும்‌ கப்றுகளை நோக்கி பிரயாணம்‌ செய்தல்‌ ஹஜ்‌ பிரயாணக்கின்‌ இனத்தைச்‌ சார்ந்தது என்றும்‌, பலதடவை ஒரு கப்றுக்குப்‌ பயணம்‌ போனால்‌ ஒரு ஹஜ்ஜுக்கு ஈடாகி விடும்‌ என்று கருதுகிறவர்கள்‌ மேற்கூறப்பட்டவர்களை விட கொடிய குற்றவாளிகளாவர்‌.

இன்னும்‌ சொல்லப்போனால்‌ கப்றை ஒருவிடுத்தம்‌ ஸியாரத் செய்வது பலமுறை ஹஜ்‌ செய்வதை விட மேன்மைக்குரியது என்று கூறி முஷ்ரிக்குகளாக வாழும்‌ முஸ்லிம்‌ பெயர்‌ தாங்கிகளையும்‌ காண முடியும்‌. இதெல்லாம்‌ கொடிய ஷிர்க்காகும்‌. இதில்‌ பலர்‌
அகப்பட்டிருக்கிறார்கள்‌. ஆகாது என்று விலக்கப்பட்ட பிரார்த்தனைகளில்‌ இது முதல்‌ படித்தரமாகும்‌.

இரண்டாவது: மய்யித்‌, கண்பார்வைக்கு அப்பாற்பட்டிருக்கும்‌ ஸாலிஹீன்கள்‌, அன்பியாக்கள்‌ இவர்களையெல்லாம்‌ அழைத்து எனக்காக அல்லாஹ்விடம்‌ பிரார்த்தியுங்கள்‌ என்று வேண்டுதல்‌. எங்களுடைய தேவைகள்‌ நிறைவேற
அல்லாஹ்வை வேண்டுங்கள்‌ என்று கூறி கிறிஸ்தவர்கள்‌ மர்யமை வேண்டுவது போல
இவர்களை வேண்டுவது. இது நம்‌ முன்னோர்களான ஸலஃபுகளில்‌ ஒருவர்‌ கூட செய்திராத பித்‌அத்தான செய்கையாகும்‌. இஸ்லாமிய அறிஞர்‌ ஒருவரும்‌ இதை
ஜாயிஸானது என்று அனுமதிக்க மாட்டார்‌.

கப்றுக்குள்‌ இருப்பவர்களை நோக்கி ஸலாம்‌ கூறுதலும்‌, ஸலாமுக்காக சம்பாசணை செய்தலும்‌ ஜாயிஸாகும்‌. இதை யாரும்‌ மறுக்க முடியாது. கப்றை ஸியாரத்‌ செய்கிறவருக்கு நபி (ஸல்‌) அவர்கள்‌ கீழ்கண்டவாறு கப்றாளிக்காக அல்லாஹ்விடம்‌ துஆச்‌ செய்ய வேண்டுமென்று போதித்தார்கள்‌. அன்றி கப்றிலுள்ளவர்கள்‌ நமக்காக (ஸியாரத்‌ செய்தவருக்காக) துஆச்‌ செய்வார்கள்‌ என்றோ, கப்றில்‌ இருப்போரிடம்‌ துஆவை வேண்டி நிற்க வேண்டுமென்றோ நபி (ஸல்‌) அவர்கள்‌ சொல்லித்‌ தரவில்லை.

'முஸ்லிம்‌, மூமின்களான கப்றுவாசிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்‌. இன்ஷா அல்லாஹ்‌ நாங்களும்‌ உங்களை வந்தடைகிறோம்‌. எங்களையும்‌, உங்களையும்‌ அல்லாஹ்‌ மன்னித்தருள்வானாக! எங்களுடையவும்‌, உங்களுடையவும்‌ நம்‌ எல்லோரின்‌ பிழைகளைப்‌ பொறுத்தருள அவனைப்‌ பிரார்த்திக்கிறோம்‌. இறைவா! இவர்களுடைய கூலிகளை நீ இல்லாமலாக்கி விடாதே! இவர்களுக்குப்‌ பிறகு நீ எங்களை பித்னாவில்‌ ஆழ்த்தி விடாதே! எங்களையும்‌, இவர்களையும்‌ நீ மன்னித்தருள்வாயாக!' என்று கூறி ஸியாரத்தின்‌ போது பிரார்த்திக்க ஸஹாபாக்களுக்குக்‌ கற்றுக்‌ கொடுத்தார்கள்‌.

உலகில்‌ தெரிந்த ஏதேனுமொரு மனிதன்‌ கப்றருகே போய்க்‌ கொண்டிருக்கும்‌ போது அந்தக்‌ கப்றை நோக்கி ஸலாம்‌ கூறினால்‌ ஸலாத்துக்குப்‌ பதில்‌ சொல்வதற்காக அல்லாஹ்‌ அந்த கப்றாளியின்‌ உயிரை மீட்டிக்‌ கொடுக்கிறான்‌ எனும்‌ ஹதீஸை அபூ
அம்ர்‌ அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌. எந்த முஸ்லிம்‌ என்மீது ஸலாம்‌ கூறினாலும்‌ அவருக்கு பதில்‌ ஸலாம்‌ கூறுவதற்காக என்னுடைய உயிர்‌ மீட்டப்படுகிறது' என்று இன்னுமொரு ஹதீஸில்‌ வருகிறது.

எனவே எவராயிருப்பினும்‌ உயிரோடிருப்போர்தான்‌ மய்யித்துக்கு ஸலாம்‌ கூற வேண்டும்‌. மய்யித்துக்காக துஆச்‌ செய்ய வேண்டும்‌. இதைத்தான்‌ ஷரீஅத்தும்‌
விதிக்கிறது. மாறாக மய்யித்துகள்‌ உயிருள்ளவர்களுக்கு துஆச்‌ செய்வார்கள்‌ என்றோ,
மய்யித்துகளிடமிருந்து பிரார்த்தனைகள்‌ வேண்டப்படும்‌ என்பதையோ ஷரீஅத்‌ ஒருபோதும்‌ அனுமதிக்காது.

அப்துல்லாஹ்‌ பின்‌ உமர்‌ அஸ்ஸலாமு அலைக்க யாரஸுலுல்லாஹ்‌! (அல்லாஹ்வின்‌ ரஸுலே.! உங்கள்‌ மீது ஸலாம்‌), அஸ்ஸலாமு அலைக்க யாபா பகர்‌
(அபூபக்கரே உங்களக்கு ஸலாம்‌ உண்டாகட்டும்‌) அஸ்ஸலாமு அலைக்க யாஅபீ (என்‌ பிதாவே உங்களுக்கு ஸலாம்‌ உண்டாகட்டும்‌) என்று கூறிவிட்டு உடனே திரும்பி விடுவார்களாம்‌. (முஅத்தா மாலிக்)

அப்துல்லாஹ்‌ இப்னு தீனார்‌ (ரலி) கூறுகிறார்கள்‌. அப்துல்லாஹ்‌ இப்னு உமர்‌ நபியின்‌ கப்றருகில்‌ நின்று அவர்கள்‌ மீது ஸலவாத்துக்‌ கூறுவதை நான்‌
கண்டிருக்கிறேன்‌. பிறகு அபூபக்கர்‌, உமர்‌ (ரலி) இவர்களுக்காக வேண்டிப்‌ பிரார்த்திப்பார்கள்‌.

அனஸ்‌ (ரலி) அவர்களும்‌, மற்றவர்களும்‌ இதைப்போன்று நபியவர்களின்‌ மீது ஸலாம்‌ கூறுவார்கள்‌ என்று சொல்லப்படுகிறது. ஆக இவர்கள்‌ அனைவருமே நபி (ஸல்‌) அவர்கள்‌ மீதும்‌, அபூபக்கர்‌, உமர்‌ (ரலி) ஆகியோரின்‌ மீதும்‌ ஸலாம்‌ கூறிவிட்டுத்‌
திரும்பி விடுவார்கள்‌. மேலும்‌ துஆச்‌ செய்வதை நாடினால்‌ கிப்லாவை முன்னோக்கி நின்று அல்லாஹ்விடம்‌ பிரார்த்திப்பார்கள்‌. பிரார்த்தனையின்‌ போது நபி (ஸல்‌) அவர்களின்‌ அறையைப்‌ பார்த்துக்‌ கூட முகம்‌ திருப்பி நிற்க மாட்டார்கள்‌. நபியின்‌
அறையைப்‌ பார்த்து துஆச்‌ செய்ய வேண்டுமென்று சில ஸூஃபிகளும்‌, பாமரர்களும்‌, ஒரு சில புகஹாக்களும்‌ மட்டுமே குறிப்பிடுகிறார்களே தவிர பின்பற்றத்தகுந்த ஒரு இமாமின்‌ கூற்றைக்‌ கூட இது விஷயத்தில்‌ பார்க்க முடியாது. 

நேரிய கருத்தினைக்‌ கூறும்‌ எந்த ஒரு முஸ்லிமும்‌ இதை ஒத்துக்‌ கொள்ள மாட்டான்‌. மத்ஹபுடைய நான்கு இமாம்கள்‌, மற்ற இமாம்கள்‌ யாருமே இவ்வாறு அபிப்பிராயப்படவில்லை. இமாம்களான அபூஹனிபா, மாலிம்‌, ஷாஃபிஈ, அஹ்மத்‌ பின்‌ ஹன்பல்‌ (ரஹ்‌) மற்றும்‌ பெரும்‌ பெரும்‌ அறிஞர்களெல்லாம்‌ கூறினார்கள்‌. 'மனிதன்‌ நபியின்‌ மீது ஸலாம்‌ கூறிவிட்டு தனக்காகப்‌ பிரார்த்திக்க வேண்டுமென்று நினைத்தால்‌ கிப்லாவின்‌ பக்கம்‌ முகம்‌ திருப்பி நிற்க வேண்டும்‌' இமாம்‌ மாலிக்கும்‌, ஷாஃபியும்‌, அஹ்மத்‌ பின்‌ ஹன்பலும்‌ 'மனிதன்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மீது ஸலாம்‌ கூறும்‌ போது நபியின்‌ அறையைப்‌ பார்த்து அவர்களின்‌ முகத்துக்கெதிரே நின்று ஸலாம்‌ சொல்ல வேண்டுமென்று கூறியிருக்கின்றனர்‌. இமாம்‌ அபூஹனிபா அவர்கள்‌ இதை ஒத்துக்‌ கொள்ளவில்லை. துஆவுக்காக கிப்லாவை முன்னோக்கியது போல ஸலாம்‌ சொல்லும்‌ போதும்‌
கிப்லாவைத்தான்‌ முன்னோக்கி நிற்க வேண்டுமென்று கூறியிருக்கிறார்கள்‌. அவ்வாறாயின்‌ இமாம்‌ அபூஹனீபாவின்‌ மத்ஹபில்‌ நபிகளின்‌ அறையை மனிதன்‌ பின்‌ வசமாக ஆக்கிக்‌ கொள்ள வேண்டுமா? என்ற கேள்விக்குப்‌ பதிலாக 'வேண்டுமானால்‌ அறையை இடது பக்கமாக ஆக்கிக்‌ கொண்டு கிப்லாவைப்‌ பார்த்து ஸலாம்‌ கூற வேண்டும்‌' அறையைப்‌ பின்புறமிருந்து பிரார்த்திப்பதிலும்‌ குற்றமில்லை என்று கூறப்படும்‌. இந்த இடத்தில்‌ நின்று ஸலாம்‌ கூற வேண்டும்‌ என்பதில்‌ மட்டும்தான்‌ இமாம்களுக்கு இடையில்‌ கருத்து வேற்றுமையே தவிர கிப்லாவை நோக்கித்தான்‌ துஆச்‌ செய்ய வேண்டுமென்பதில்‌ எவருக்கும்‌ அபிப்பிராய பேதமில்லை. நபியின்‌ அறையை நோக்கி நின்று துஆச்‌ செய்ய வேண்டுமென்று எவரும்‌ அபிப்பிராயப்பட்டதில்லை.

கலீஃபா அபூ ஜஃபருல்‌ மன்ஸூரிடம்‌ நபியைப்‌ பார்த்து நின்று துஆச்‌ செய்ய வேண்டுமென்று இமாம்‌ மாலிக்‌ கூறியதாக அறிவிக்கப்படும்‌ ரிவாயத்‌ பொய்யானது
என்று முன்னரே கூறியிருக்கிறோம்‌. ஏனெனில்‌ அது இமாம்‌ மாலிக்கிடமிருந்து அறியப்பட்ட நேரான அபிப்பிராயத்துக்கு முரண்பட்டிருக்கிறது. இதை இஸ்மாயீல்‌ இப்னு இஸ்ஹாக்குல்‌ காமி என்பாரும்‌ மற்றவர்களும்‌ கூறியிருக்கிறார்கள்‌. அது மட்டுமல்ல,
பிரார்த்திப்ப்வர்கள்‌ நபியின்‌ அறையைப்‌ பார்த்து நீண்ட நேரம்‌ நின்று துஆச்‌ செய்வதைப்‌ பற்றி என்ன தீர்ப்பு வழங்குகிறீர்கள்‌ என்று ஒருமுறை இமாம்‌ மாலிக்கிடம்‌ கேட்கப்பட்ட போது அதை அவர்கள்‌ இன்கார்‌ செய்து மறுத்துக்‌ கூறினார்கள்‌ என்று இமாமுடைய தோழர்கள்‌ அறிவிக்கின்றனர்‌.

அது மட்டுமல்ல இமாமவர்கள்‌ நபியின்‌ அறையைப்‌ பார்த்து துஆச்‌ செய்வது பித்‌அத்‌ என்று கூறிவிட்டு ஸஹாபாக்கள்‌, தாபியீன்கள்‌ எவரும்‌ இவ்வாறு செய்யவில்லை என்றும்‌ விளக்கினார்கள்‌. பின்னர்‌ முன்னோர்கள்‌ எதனால்‌ நேர்மையாக வாழ்ந்தார்களோ
அதே காரணங்களைக்‌ கொண்டல்லாமல்‌ பின்னோர்கள்‌ நேர்மையாக வாழ முடியாது என்றும்‌ விளக்கம்‌ கொடுத்தார்கள்‌. எனவே இமாம்‌ மாலிக்‌ (ரஹ்‌) அவர்கள்‌ கூறியதில்‌ எந்த சந்தேகமுமில்லை. 'கப்றைப்‌ பார்த்து துஆ கேட்டல்‌' என்பது ஸஹாபாக்கள்‌, தாபியீன்கள்‌ இவர்களைப்‌ பற்றி அறிவிக்கப்பட்ட முதவாதிரான-தொடர்‌ ஆதாரமுள்ள ஹதீஸ்களிலிருந்து அது அவர்களின்‌ பழக்கத்தில்‌ உள்ளதல்ல என்பது தெளிவாகிறது. துஆவின்‌ போது அது அனுமதிக்கப்‌பட்டிருந்தால்‌ ஸஹாபிகள்‌ அதை அறிந்திருப்பார்கள்‌. ஏனெனில்‌ நன்மைகள்‌ செய்வதில்‌ அதிகமான பேராவல்‌ கொண்டவர்களாகத்தானே ஸஹாபிகள்‌ அறியப்பட்டிருந்தனர்‌. கப்றை முன்னோக்கி பிரார்த்திப்பதில்‌ விசேஷமான நன்மைகள்‌ இருந்தால்‌ அதை அவர்கள்‌ விட்டு வைப்பார்களா?

எனவே துஆ செய்பவர்‌ அல்லாஹ்‌ ஒருவனிடம்‌ மட்டுமே பிரார்த்திக்க வேண்டும்‌. துஆவின்போது நபியின்‌ அறையின்பால்‌ முகம்‌ திருப்புதல்‌ விலக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ்வைத்‌ தொழும்போதும்‌ அறையின்பால்‌ முகம்‌ திருப்பி நிற்கக்‌ கூடாது. ‘கப்றின்‌ மீது உட்காராதீர்கள்‌. அதன்‌ பக்கம்‌ முகம்‌ திருப்பித்‌ தொழாதீர்கள்‌' என்று கூறி நபி (ஸல்‌) அவர்கள்‌ இதைத்‌ தடுத்தார்கள்‌. குறிப்பாக நபிமார்களுடையவும்‌, ஸாலிஹீன்களுடையவும்‌ கப்றை நோக்கி அறவே தொழக்‌ கூடாது. கப்றைப்‌ பார்த்து தொழக்கூடாதென்பது பற்றி முஸ்லிம்களிடையே அபிப்பிராய பேதமே இல்லை. துஆவின்‌ போது அன்பியாக்களுடையவும்‌, ஸாலிஹீன்களுடையவும்‌ கப்றை கருதுதல்‌ இஸ்லாத்கில்‌ புதிதாக ஏற்படுத்தப்பட்ட பித்‌அத்தாகும்‌. இது அல்லாஹ்வை நாடி தொழுதாலும்‌ சரியே. இந்நிலையில்‌ கப்றையே பார்த்துத்‌ தொழுது கப்றில்‌ இருப்பவரிடமே பிரார்த்திக்கிறவனின்‌ செயல்‌ அறவே கூடாத செயலாகும்‌. நபி (ஸல்‌) அவர்கள்‌ வாழ்ந்திருக்கையில்‌ ஒரு விஷயத்தை அவர்களிடம்‌ கேட்பதின்‌ தாத்பரியமே
வேறு. ஏனெனில்‌ அவ்வேளையில்‌ ஷிர்க்‌ ஏற்படுவதற்கு இடமில்லையல்லவா!

அதுமட்டுமல்ல நபியாக இருப்பவர்‌ தமது வாழ்நாளில்‌ தம்‌ சமூகத்தார்களின்‌ வேண்டுகோளை நிறைவேற்றிக்‌ கொடுக்கவும்‌, அவர்களின்‌ பிரச்சினைகளுக்குத்‌ தீர்வு
காணவும்‌ பணிக்கப்‌ பட்டிருக்கிறார்கள்‌. இதில்‌ பற்பல நன்மைகளும்‌, பலாபலன்களும்‌ நபிக்கு வழங்கப்படுகின்றன. ஆனால்‌ நபிமார்கள்‌ மரணமடைந்த பின்னர்‌ இத்தகைய எந்த பொறுப்புகளுக்கும்‌ அவர்கள்‌ உரியவர்கள்‌ அல்லர்‌. இறந்ததற்கப்பால்‌ சட்ட பூர்வமான பொறுப்புகள்‌ அனைத்தும்‌ அவர்களை விட்டும்‌ விலகி விடுகின்றன.
அன்றியும்‌ ஒருசில அன்பியாக்கள்‌ மரணமடைந்ததற்கப்பால்‌ இறைவனைத்‌
தொழுகிறார்கள்‌, அவனை திக்ரு செய்கிறார்கள்‌, அவனிடம்‌ துஆ செய்கிறார்கள்‌ என்று சொல்லப்படுவதும்‌ நபி மூஸா (அலை) அவர்கள்‌ தமது கப்றிலே தொழுகிறார்கள்‌. பைத்துல்‌ முகத்தஸில்‌ மிஃராஜ்‌ இரவில்‌ மரணமடைந்த அனைத்து நபிமார்களும்‌ நபிகள்‌ பெருமானாரின்‌ பின்னால்‌ நின்று தொழுதிருக்கிறார்கள்‌ என்று சொல்லப்படுவதும்‌ (அப்போது) மலக்குகளும்‌, சுவனவாசிகளும்‌ இறைவனுக்கு தஸ்பீஹ்‌ செய்ததாகக்‌
கூறப்படுவதும்‌ இவை அனைத்துமே நபிமார்கள்‌ அதிகாரபூர்வமாக பணிக்கப்பட்டு செய்கின்ற செய்கைகள்‌ ஆகாது. இறந்ததற்கப்பால்‌ நபிமார்கள்‌ செய்யும்‌ வழிபாடுகள்‌ அனைத்தும்‌ அவர்களின்‌ தாராள மனப்பான்மையோடு தம்‌ இஷ்டப்படி
அனுஷ்டானங்களினால்‌ மனத்‌ திருப்தியையும்‌, ஆனந்தத்தையும்‌ அனுபவிப்பதற்காகப்‌ புரியும்‌ அமல்களே தவிர சட்ட பூர்வமாகக்‌ கணிக்கப்பட்டு புரியும்‌ அமல்களே அல்ல. இந்த அமல்களை அவர்கள்‌ விரும்பினால்‌ செய்வார்கள்‌. செய்யாமலுமிருப்பார்கள்‌. இந்த வழிபாடுகளினால்‌ அவர்கள்‌ பேரானந்தம்‌ துய்ப்போராய்‌ மாறுகிறார்கள்‌. வாழ்ந்திருக்கையில்‌ அவர்கள்‌ செய்த அமல்கள்‌ இப்படிப்பட்டவை அல்ல. அதில்‌ நபிமார்களுக்கும்‌ சோதனைகள்‌ உண்டு. அவர்கள்‌ அவற்றைச்‌ செய்யாவிட்டால்‌ வேதனையும்‌ உண்டு.

இதிலிருந்து நாம்‌ எதைப்‌ புரிந்து கொள்கிறோமென்றால்‌ மனிதன்‌ மய்யித்திடம்‌ எதைக்‌
கேட்டாலும்‌ அணுவளவு கூட மய்யித்திடமிருந்து பிரதிபலனைப்‌ பெற மாட்டான்‌. மய்யித்துகள்‌ எவற்றையெல்லாம்‌ செய்ய வேண்டுமென்று அவர்கள்‌ மீது அல்லாஹ்‌ பணித்திருந்தானோ அவற்றை அவர்கள்‌ செய்து இன்பம்‌ காண்பார்கள்‌. அதனால்‌ சுகம்‌ அனுபவித்து வாழ்வார்கள்‌. மனிதர்கள்‌ மய்யித்துகளிடம்‌ சென்று கேட்பதும்‌, கேட்காமலிருப்பதும்‌ மய்யித்தைப்‌ பொறுத்தவரையில்‌ சமம்தான்‌. மலக்குகளைப்‌ பாருங்கள்‌. அல்லாஹ்‌ கூறியவற்றைச்‌ செய்கிறார்கள்‌. இதனால்‌ அல்லாஹ்வின்‌ கட்டளைக்கு வழிபடுகிறார்களே தவிர சிருஷ்டிகளின்‌ கட்டளைகளுக்கு வழிபடமாட்டார்கள்‌. அல்லாஹ்‌ கூறியவற்றையெல்லாம்‌ செய்து கொண்டிருப்பார்கள்‌. அதிலே அவர்களும்‌ இன்பம்‌ காண்பார்கள்‌. இறைவன்‌ கூறினான்‌: "அர்‌ -ரஹ்மான்‌
(மலக்குகளைக்‌) தன்‌ சந்ததியாக எடுத்துக்‌ கொண்டான்‌ என்று கூறினர்‌. அவனோ மிக்க
பரிசுத்தமானவன்‌. இன்னும்‌ மலக்குகள்‌ அவனுடைய கண்ணியமிக்க அடியார்கள்‌. (அவன்‌ சந்நிதியில்‌) இவர்கள்‌ யாதொரு வார்த்தையையும்‌ மீறிப்‌ பேசமாட்டார்கள்‌. அவன்‌ இட்ட கட்டளைகளையே செய்துக்‌ கொண்டிருப்பார்கள்‌". (21:25-26)

இன்னொரு கண்ணோட்டத்தில்‌ பார்த்தால்‌ நபிகளின்‌ ஹயாத்தில்‌ ஒரு விஷயம்‌ அனுமதிக்கப்பட்டதினால்‌ அவர்கள்‌ இறந்ததற்கப்பாலும்‌ அது அனுமதிக்கப்பட
வேண்டுமென்பது அவசியமில்லை. உதாரணத்துக்காக நபியவர்களின்‌ வீட்டை எடுத்துக்‌ கொள்ளலாம்‌. நபியவர்கள்‌ வாழ்ந்திருக்கும்போது அந்த வீட்டிலிருந்து தொழுவது அனுமதிக்கப்‌பட்டிருந்தது. பள்ளிவாசலாக்கப்‌படுவதற்கும்‌ அது அருக்தையுள்ள
இடமாக இருந்தது. ஆனால்‌ என்று நபிகளின்‌ புனிதமேனி அதில்‌ அடக்கப்பட்டதோ
அதைப்‌ பள்ளியாக மாற்றுவதும்‌, அதில்‌ நின்று தொழுவதும்‌ ஹராமாக்கப்பட்டு விட்டது.
தம்‌ நபிமார்களின்‌ கப்றுகளைப்‌ பள்ளிகளாக ஆக்கியதனால்‌ தான்‌ அல்லாஹ்‌ யூதர்களையும்‌, கிறிஸ்தவர்களையும்‌ சபித்திருக்கிறான்‌ என ஹதீஸில்‌ வருகிறது.

நபியவர்கள்‌ வாழ்ந்திருக்கையில்‌ அவர்களை இமாமாக நிறுத்தி மக்கள்‌ பின்னால்‌ நின்று தொழுதார்கள்‌. இது சிறந்த தொழுகையாக நபியின்‌ காலத்தில்‌ கருதப்பட்டு வந்தது. ஆனால்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மரணமடைந்ததன்‌ பின்‌ அவர்களின்‌ கப்றின்‌
பின்னால்‌ நின்று நபியை இமாமாக நினைத்துத்‌ தொழப்படமாட்டாது. அதுமட்டுமின்றி நபியின்‌ காலத்தில்‌ அவர்களிடமிருந்து விதிகள்‌, தீர்ப்புகள்‌, உபதேசங்கள்‌ தேடப்பட்டன. ஆனால்‌ இன்று அவர்களிடமிருந்து இதை எதிர்‌ பார்க்கப்படமாட்டாது. இதற்கு அனுமதியில்லை. இப்படி எத்தனையோ விஷயங்கள்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ வாழ்ந்திருந்த காலத்தில்‌ அனுமதிக்கப்பட்டிருந்ததை அவர்கள்‌ இறந்ததன்‌ பின்னால்‌ சாத்தியமாகாமல்‌ ஆகிவிட்டது.

ஸியாரத்‌ எனும்‌ சொல்‌ ஷரீஅத்தில்‌ அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத ஸியாரத்துக்கும்‌ உபயோகிக்கப்‌படுவதினாலும்‌ நபியவர்களின்‌ கப்றை ஸியாரத்‌ செய்வதில்‌ ரிவாயத்‌ செய்யப்பட்ட ஹதீஸ்கள்‌ அனைத்தும்‌ பொய்யானவையும்‌, பலவீனமான ஹதீஸ்களாகவும்‌ வந்திருப்பதனால்‌ குறிப்பாக இவ்வார்த்தையை பிற்காலத்தவர்கள்‌ பித்‌அத்தான முறையில்‌ செய்யப்படுகின்ற ஸியாரத்துக்கு
பிரயோகித்து வந்ததினாலும்‌ தான்‌ இமாம்‌ மாலிக்‌ போன்ற அறிஞர்கள்‌ நபிகளின்‌ கப்றை ஸியாரத்‌ செய்தேன்‌ என்று நபியின்‌ கப்றுடன்‌ ஸியாரத்‌ என்ற வார்த்தையை இணைத்து கூறுதலை வெறுத்திருப்பதுடன்‌, நபியின்‌ கப்றில்‌ ஸலாம்‌ கூறினேன்‌ என்று சொல்ல வேண்டுமென விரும்பிப்‌ பணித்துள்ளார்கள்‌. ஏனெனில்‌ முன்னோர்கள்‌ வாயிலாக நபியை ஸியாரத்‌ பண்னினேன்‌ என்று க்ஷறப்பட வில்லையாம்‌. ஷரீஅத்‌ அனுமதிக்கின்ற
ஸியாரத்‌ அல்லாஹ்வை நாடியும்‌, அவனிடம்‌ பிரார்த்திப்பதைக்‌ கருதியும்‌, கப்றில்‌
இருப்பவருக்கு ஸலாம்‌ சொல்ல வேண்டுமென்பதைக்‌ கருதியும்‌ செய்யப்படும்‌ ஸியாரத்தாகும்‌. ஜனாஸா தொழுகையும்‌ அப்படித்தான்‌. அதில்‌ மய்யித்துக்குப்‌
பிரார்த்திப்பதையே கருதப்படுகிறது.

பித்‌அத்தான துஆவின்‌ மூன்றாம்‌ தரம்‌. அதுவே மனிதர்களின்‌ பொருட்டையும்‌, மதிப்பையும்‌, அந்தஸ்தையுமெல்லாம்‌ காரணமாகக்‌ காட்டிப்‌ பிரார்த்திப்பது. இதுவும்‌ ஹராமான பிரார்த்தனையாகும்‌. இதற்கு இஸ்லாத்தில்‌ தக்க சான்றுகள்‌ இல்லை. ஸஹாபாக்கள்‌ யாரும்‌ இத்தகைய பிரார்த்தனையை ஆதரிக்கவில்லை. மாறாக அன்று
வாழ்ந்திருந்த அப்பாஸ்‌ (ரலி) அவர்களைக்‌ கொண்டு வஸீலா தேடினார்கள்‌. மேலும்‌ இவற்றை இமாம்களான அபூஹனீபாவும்‌, அபூ யூஸுபும்‌ விலக்கியிருக்கிறார்கள்‌
என்பதும்‌ முன்னர்‌ சுட்டிக்‌ காட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து தவஸ்ஸுல்‌ என்ற சொல்லுக்கிருக்கும்‌ கூட்டுக்‌ கருத்துக்களை விளங்கிக்‌ கொண்டோம்‌.

ஸாஹாபாக்கள்‌ நபியைக்‌ கொண்டு வஸீலா தேடினார்கள்‌ என்றால்‌ நபியின்‌ துஆவைக்‌ கொண்டு தேடினார்கள்‌ என்றுதான்‌ விளங்கிக்‌ கொள்ள வேண்டும்‌. ஏதாவது காரியங்களை நிறைவு செய்ய முடியாமல்‌ பிரயாசைப்படுகின்ற வேளையில்‌
கப்றிலிருப்பவரைக்‌ கொண்டு உதவிக்‌ தேடுங்கள்‌ என்று நபியவர்கள்‌ கூறியதாக பொய்யான ஒரு ஹதீஸை ஆதாரமாகக்‌ கொண்டு சில ஷெய்குமார்கள்‌ சிருஷ்டிகளைக்‌ கொண்டு உதவித்தேடிப்‌ பிரார்த்தனை செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார்கள்‌. இது
பொய்யானதும்‌, நபியின்‌ மீது இட்டுக்கட்டிப்‌ புனையப்பட்டதுமான ஹதீஸாகும்‌. பிரபலமான ஹதீஸ்‌ தொகுப்புகள்‌ எதிலும்‌ இதைக்‌ காண முடியாது. “மரணமில்லாத நித்திய ஜீவனாகவுமிருக்கும்‌ அல்லாஹ்வின்‌ மீது நீர்‌ உம்‌ காரியங்களை ஒப்படையும்‌. அவனுடைய புகழைக்‌ கூறி அவனைத்‌ துதி செய்து கொண்டிரும்‌. தன்‌ அடியார்களின்‌
பாவங்களை அவன்‌ நன்கறிந்திருப்பது போதுமானதாக இருக்கிறது” என்று அல்லாஹ்‌
கூறுகிறான்‌. (25:58)

இது தீனுல்‌ இஸ்லாத்தில்‌ எல்லோரும்‌ அறிந்த உண்மையாகும்‌. இதைவிட இலேசான
அமலையே (கப்றுகளைப்‌ பள்ளிகளாக்குவதை) நபிகள்‌ தடுத்திருக்கிறார்கள்‌ என்றால்‌ அதைச்‌ செய்தவர்களை சபித்தும்‌ இருக்கிறார்கள்‌ என்றால்‌ கொடிய அமலான இதன்‌ நிலைமை எப்படி என்பதைச்‌ சிந்திக்க வேண்டும்‌. அப்படியானால்‌ கப்றில்‌ சென்று தேவைகளை முறையிடுவதற்கும்‌, சிலை வணக்கம்‌ புரிவதற்குமிடையில்‌ வித்தியாசமே
இல்லாமலாகிவிடும்‌.

முந்தைய நபிமார்களின்‌ ஷரீ அத்துக்களிலும்‌ ஷிர்க்‌ அனுமதிக்கப்‌படவில்லை. இறைவனுக்கு இணைவைத்தல்‌ என்பது நபி (ஸல்‌) அவர்கள்‌ மட்டும்‌ விலக்கிய ஒரு பாவமல்ல. மாறாக அனைத்து நபிமார்களும்‌ தம்‌ ஷரீஅத்துகளில்‌ இத்தகைய
ஷிர்க்குகள்‌ பரவுவதைத்‌ தடுத்தார்கள்‌. இறந்துப்‌ போனவர்களைக்‌ கூப்பிட்டு பிரார்த்திக்காதீர்கள்‌ என்றும்‌, ஷிர்க்கான அனுஷ்டானங்களைச்‌ செய்யாதீர்கள்‌ என்றும்‌ நபி மூஸா (அலை) அவர்கள்‌ பனூ இஸ்ரவேலர்களைத்‌ தடுத்திருந்தார்கள்‌ என்று
தெளராத்தில்‌ வருகிறது. மனிதன்‌ இத்தகைய அமல்களைச்‌ செய்வதனால்‌ அல்லாஹ்வின்‌ தண்டனைக்கு ஆளாகிறான்‌ என்றும்‌ அவர்கள்‌ கூறினார்கள்‌. ஏனெனில்‌ அனைத்து நபிமார்களின்‌ மார்க்கமும்‌ ஒன்றே. ஆனால்‌ நடைமுறை விதிகள்‌ சில
மட்டுமே ஒவ்வொரு நபிக்கும்‌ வெவ்வேறாக இருக்கும்‌. இந்த உண்மையை நபி (ஸல்‌) அவர்கள்‌ விளக்கியபோது, 'தாங்கள்‌ நபிமார்கள்‌ சமூகம்‌, எங்கள்‌ அனைவரது மதமும்‌ ஒன்றே' என்று கூறியதாக அறிவிக்கிறார்கள்‌.

இறைவனும்‌ இதைக்‌ குறிப்பிடுகிறான்‌: "(மூமின்௧ளே!) நூஹுக்கு எதை அவன்‌ உபதேசித்தானோ அதையே உங்களுக்கும்‌ மார்க்க சட்டமாக இறைவன்‌ விதித்துள்ளான்‌. ஆகவே (நபியே!) நான்‌ உமக்கு வஹீ மூலம்‌ அறிவிப்பதும்‌, இப்றாஹீம்‌, மூஸா, ஈஸா
ஆகியோருக்கு நாம்‌ உபதேசித்ததும்‌ (ஏக தெய்வக்‌ கொள்கையுடைய உண்மையான) மார்க்கத்தை நிலைநாட்டுங்கள்‌. அதில்‌ பிரிவினை செய்யாதீர்கள்‌ என்பதேயாகும்‌. எனவே உமது இந்த அழைப்பு இணை வைத்து வணங்குவோர்களுக்குப்‌ பெரும்‌
பளுவாகத்‌ தோன்றும்‌” (42:13). மேலும்‌ இறைவன்‌ கூறினான்‌: "(நாம்‌ அனுப்பிய தூதர்களிடம்‌) தூதர்களே! நீங்கள்‌ நல்ல உணவுகளைப்‌ புசியுங்கள்‌. நற்காரியங்களைச்‌ செய்யுங்கள்‌. நிச்சயமாக நீங்கள்‌ செய்பவற்றை நான்‌ நன்கறிந்து கொண்டிருக்கிறேன்‌.
உங்களுடைய இந்த சமுதாயம்‌ ஒரே சமுதாயம்‌ என்பது நிச்சயம்‌. நான்‌ உங்களுடைய இறைவன்‌. ஆகவே நீங்கள்‌ எனக்கே அஞ்சுங்கள்‌. (ஆனால்‌ யூதர்கள்‌) தங்களுடைய மார்க்க விஷயங்களில்‌ பற்பல பிரிவுகளாகப்‌ பிரிந்து கொண்டு ஒவ்வொரு வகுப்பாரும்‌ தங்களிடமுள்ளதை வைத்து சந்தோசப்படுகின்றனர்‌”. (23:52-53)

இன்னும்‌ அல்லாஹ்‌ கூறுகிறான்‌: "(நபியே!) நீர்‌ உம்‌ முகத்தை இஸ்லாமிய மார்க்கத்தின்‌ பால்‌ முற்றிலும்‌ திருப்பி நிலைநிறுத்துவீராக! அல்லாஹ்‌ மனிதர்களை
சிருஷ்டித்த வழியே அவனுடைய இயற்கை வழியாகும்‌. அல்லாஹ்வின்‌ சிருஷ்டியை எவராலும்‌ மாற்றி மறிக்க இயலாது. இதுவே நிலையான வழி. எனினும்‌ மனிதர்களில்‌ பெரும்பாலோர்‌ இதனை அறிந்து கொள்ள மாட்டார்கள்‌. (விசுவாசிகளே!) நீங்கள்‌
அவன்பால்‌ திரும்ப வேண்டியவர்களாக இருக்கிறீர்கள்‌. ஆகவே அவனுக்கஞ்சி தொழுகையை கடைபிடியுங்கள்‌. இணை வைத்து வணங்குவோரில்‌ நீங்களும்‌ ஆகி விடாதீர்கள்‌. அவர்கள்‌ தங்கள்‌ மார்க்கத்தை வெவ்வேறாகப்‌ பிரித்து பல பிரிவுகளாகப்‌
பிரிந்து விட்டனர்‌. ஒவ்வொரு வகுப்பாரும்‌ தங்களிடமுள்ளதைக்‌ கொண்டு சந்தோசப்படுகின்றனர்‌"'. (30:30-32)

இவ்வாறாக, திருமறை வசனங்களை ஆய்ந்தால்‌ முற்கால மக்கள்‌ பிற்காலத்தோரைப்‌ போன்றே ஷிர்க்கை விட்டும்‌ விலக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்‌ என்பது தெளிவாகும்‌. எல்லா நபிமார்களும்‌ இதைக்‌ தம்‌ சமூகத்தாருக்குப்‌ போதிப்பதில்‌ ஏகமனதாகப்‌
பாடுபட்டிருக்கிறார்கள்‌.

இதுவரை நாம்‌ கூறிய சான்றுகளிலிருந்து பொய்யையும்‌ மெய்யையும்‌ விளங்கிக்‌ கொண்டோம்‌. அல்லாஹ்வும்‌ அவன்‌ தூதரும்‌ எதை ஏவியிருக்கிறார்கள்‌ எதை விலக்கியிருக்கிறார்கள்‌ என்பவை தெளிவாகத்‌ தெரிந்திருக்கும்‌. அகிலத்தின்‌ அனைத்து சிருஷ்டிகளிலும்‌ சிறந்தவர்களான, மேலும்‌ அல்லாஹ்விடத்தில்‌ மிகவும்‌ கண்ணியம்‌ வாய்ந்த இறுதிதூதர்‌, மனித சமூகத்திலே தலைசிறந்து விளங்கும்‌, மேலும்‌ அனைத்து நபிமார்களில்‌ புனிதரான, சிபாரிசு செய்யும்‌ எல்லோரையும்‌ விட அல்லாஹ்விடத்தில்‌ மிக அந்தஸ்துக்குரிய நபியைக்‌ கொண்டு அவர்களின்‌ பொருட்டால்‌ வஸீலா தேடுவதும்‌, அவர்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்வதும்‌ விலக்கப்படுமானால்‌, பதவியில்‌ குறைந்த மற்ற நபிமார்கள்‌, ஸாலிஹீன்கள்‌ இவர்களைக்‌ கொண்டெல்லாம்‌ சத்தியம்‌ செய்து சபதமிட்டு, இவர்களின்‌ ஹக்கைக்‌ கொண்டும்‌ வஸீலா தேடி, இவர்களின்‌ கப்றுகளில்‌ சென்று பக்தி பிரவாகத்துடன்‌ தலைகுனிந்து வழிபட்டுப்‌ பிரார்த்திப்பதைப்‌ பற்றி ஷரீஅத்தின்‌ தீர்ப்பு என்னவென்பதை ஒவ்வொரு முஸ்லிமும்‌ சிந்திக்க வேண்டும்‌. முஸ்லிம்களுக்கு மய்யித்துகளைக்‌ கொண்டு மழை தேடிப்‌ பிரார்த்திப்பதோ, தம்‌ தேவைகளை மய்யித்திடம்‌ கேட்பதோ அறவே கூடாது. கண்பார்வையை விட்டு மறைந்திருக்கும்‌ ஷெய்குமார்களைக்‌ கொண்டு வஸீலா தேடுவதும்‌ அறவே கூடாது. ‘யா ஸய்யித்‌! எனக்குதவும்‌ என்‌ தேவைகளைப்‌ பூர்த்தி செய்து தாரும்‌' என்றெல்லாம்‌ கேட்பது அறவே கூடாது. அல்லாஹ்வும்‌, ரஸுலும்‌ இதை ஹாராமாக்கியிருக்கிறார்கள்‌. இதை ஒவ்வொரு முஸ்லிமும்‌ விளங்கியிருத்தல்‌ வேண்டும்‌.

இப்படி சிருஷ்டிகளைக்‌ கொண்டு கப்றருகில்‌ நின்று உதவி தேடுகிறவர்கள்‌ சிலை வணங்கிகளின்‌ இனத்தைச்‌ சார்ந்தவர்களாவர்‌. ஷைத்தான்‌ அவர்களை வழிகெடுக்க ஆரம்பித்தான்‌. சிலை வணங்கிகளைப்‌ போல இவர்களும்‌ வழிகெட்டு விட்டார்கள்‌. எந்த
மய்யித்தைக்‌ கொண்டு வஸீலா தேடினார்களோ அதே மய்யித்தின்‌ உருவத்தில்‌ ஷைத்தான்‌ நடித்து ஆள்மாறாட்டம்‌ செய்கிறான்‌. சோதிடர்களிடத்தில்‌ ஷைத்தான்‌ உரையாடுவது போல இவர்களிடத்திலும்‌ ஷைத்தான்‌ உரையாடுகிறான்‌. முகாஷபாவின்‌
(உதயமாகுதல்‌) அடிப்படையில்‌ எது எதையோ காட்டுகிறான்‌. இவற்றுள்‌ சில உண்மையாகவும்‌ இருக்கலாம்‌. ஆனால்‌ பொய்யே மிகைத்து நிற்கும்‌. ஷைத்தான்‌ இவர்களின்‌ சில தேவைகளையும்‌ நிறைவேற்றிக்‌ கொடுக்கிறான்‌. இவர்களின்‌ சில
விருப்பு, வெறுப்புகள்‌ பூர்த்தி செய்யப்படுகின்றன. இதனால்‌ இவர்கள்‌ கப்றிலிருந்த 'ஷெய்கு' எழுந்து வந்து என்னவெல்லாமோ செய்வதாக நினைத்துக்‌
கொண்டிருக்கிறார்கள்‌. தம்‌ ஷெய்கின்‌ வடிவத்தில்‌ ஒரு மலக்கை உருவாக்கி இதை செய்யப்படுகிறது என்றும்‌ சிலர்‌ எண்ணுவது உண்டு. இது ஷெய்கின்‌ அந்தரங்க
மர்மங்கள்‌ என்று தமக்குள்ளே பேசிக்‌கொள்கிறார்கள்‌. ஷைத்தானைக்‌ கொண்டு உதவித்‌ தேடிய இம்மனிதனை வழி கெடுத்து முஷ்ரிக்காக்குவதற்காக அவன்‌ ஷெய்கின்‌ உருவத்தில்‌ ஆள்மாறாட்டம்‌ செய்வதை இவர்கள்‌ புரியவில்லை. இவையெல்லாம்‌
சிலைவணங்கிகளை ஷைத்தான்‌ வழிகெடுப்பது போல இருக்கிறது. இவர்களின்‌ சில தேவைகளையும்‌ அவன்‌ நிறைவேற்றிக்‌ கொடுக்கிறான்‌ அல்லவா? இவையெல்லாம்‌ அன்று அரபிகளிலுள்ள முஷ்ரிக்குகளிடத்தில்‌ காணப்பட்டிருந்தன. இன்று
இந்தியாவிலும்‌, துருக்கியிலுமுள்ள முஷ்ரிக்குகளிடத்திலும்‌. ஏனைய முஷ்ரிக்குகளிடத்திலும்‌ காணப்படுகின்றன.

மறைவாக இருக்கையில்‌ என்னையும்‌, மற்றவர்களையும்‌ உதவி தேடிப்‌ பிரார்த்தித்த
மக்கள்‌ சிலரின்‌ சம்பவங்கள்‌ இதைவிட விசித்திரமானவை. நான்‌ ஊரை விட்டு பயணமாகி வெளியூர்‌ சென்றபோது என்னைக்‌ கொண்டு சிலர்‌ உதவித்‌ தேடினார்களாம்‌. அந்நேரம்‌ நான்‌ விண்வெளி மார்க்கமாகப்‌ பறந்து வந்து அவர்களிடம்‌ விஜயம்‌ செய்து ஏதேதோ தேவைகளை நிறைவேற்றிக்‌ கொடுத்ததாகக்‌ கண்டார்களாம்‌. ஒரு சந்தர்ப்பத்தில்‌ இப்படி என்னிடம்‌ தெரிவிக்கப்பட்டது. இதை நான்‌ செவிமடுத்த போது அவர்களுக்கு உண்மையை விளக்கிக்‌ கூறினேன்‌. 'ஷைத்தான்‌ என்னுடைய
கோலத்திலும்‌, ஷெய்குமார்களுடைய கோலத்திலும்‌ ஆள்மாறாட்டம்‌ செய்து உங்களுக்கு முன்னால்‌ காட்சியளித்து எதையெதையோ காட்டி அதை நீங்கள்‌
ஷெய்குடைய கராமத்து என்று நம்புவதற்காக இதைச்‌ செய்தானே தவிர உண்மையில்‌ நான்‌ அப்படி வரவில்லை' என்று கூறினேன்‌.

ஷெய்குமார்களைக்‌ கொண்டு உதவி தேடுதல்‌ என்ற வழிகேட்டிலிருந்து கிறிஸ்தவர்களும்‌ தப்பித்துக்‌ கொள்ளவில்லை. 'அல்லாஸ்‌' என்ற ஷெய்கைக்‌ கொண்டு உதவி தேடினால்‌ அவர்‌ வந்து நமது சில தேவைகளை நிறைவேற்றி வைக்கிறார்‌ என்று
நம்பியிருந்தார்கள்‌. இப்படி காலஞ்சென்ற நபிமார்கள்‌, ஸாலிஹீன்கள்‌, ஷெய்குமார்கள்‌,
அஹ்லுல்‌ பைத்துகள்‌ (நபி (ஸல்‌) அவர்களின்‌ குடும்பத்தினர்‌) இவர்களைக்‌ கொண்டெல்லாம்‌ உதவித்தேடிப்‌ பிரார்த்திப்போரின்‌ இலட்சியம்‌ ஏதோதோ தம்‌ சில தேவைகள்‌ அவர்கள்‌ நிறைவேற்றிக்‌ கொடுக்க வேண்டும்‌ என்பதாகும்‌. இத்தகைய ஏதேனும்‌ சில விஷயங்கள்‌ நிறைவேற்றப்பட்டால்‌, மேற்கூறப்பட்ட ஷெய்குமார்களைக்‌ கொண்டு உதவி தேடியதால்‌ காரியங்கள்‌ நிறைவேறின என்றும்‌, அற்புதச்‌ செய்கைகள்‌ கருதிக்‌ கொள்கிறார்கள்‌. சில வேளைகளில்‌ தாம்‌ உதவி தேடிய ஷெய்கின்‌ கப்றருகில்‌ வந்துப்‌ பிரார்த்திக்கின்ற வேளையில்‌ விண்வெளியிலிருந்து உணவும்‌, ஆயுதமும்‌,
மற்றும்‌ தாம்‌ விரும்பியவைகள்‌ எல்லாம்‌ இறங்குவதாகப்‌ பார்க்கக்‌ கூடியவர்‌ இதையும்‌
தம்‌ ஷெய்கின்‌ கராமத்துகள்‌ என்று கருதிக்‌ கொள்வார்‌. இவையாவும்‌ ஷைத்தானின்‌ சதி
மோசங்கள்‌ என்பதில்‌ சந்தேகமேயில்லை. விக்கிரகங்கள்‌ வணங்கப்‌படுவதற்குரிய
காரணங்களில்‌ இவை முக்கியமானவையாகும்‌.

நபி இப்றாஹீம்‌ (அலை) அவர்கள்‌ இத்தகைய ஷைத்தானின்‌ வித்தைகளிலிருந்து இரட்சிப்புப்பெற அல்லாஹ்வைப்‌ பிரார்த்தித்தார்கள்‌: “என்னையும்‌, என்‌ மக்களையும்‌ விக்கிரகங்களை வணங்காது நீ இரட்சித்துக்‌ கொள்வாயாக! இறைவா! நிச்சயமாக
இவ்விக்கிரகங்கள்‌ மனிதர்களில்‌ பலரை வழிகெடுத்து விட்டன". (14:35-36)

கல்லாலான விக்கிரகங்களுக்கு மனிதர்களில்‌ பலரை வழிகெடுக்கும்‌ சக்தியில்லை என்று ஏற்றிருந்தார்கள்‌. மேலும்‌ ஆகாயங்களை, பூமியைப்‌ படைப்பதில்‌ அவற்றுக்குப்‌ பங்குண்டு என்றும்‌ சிலை வணங்கிகளில்‌ எவரும்‌ கூறவில்லை. இருப்பினும்‌ அக்கற்களை செதுக்கி அவற்றை வணங்குவதினால்‌ இச்சிலைக்கு உரியவர்களான நன்மக்கள்‌ தமக்காக அல்லாஹ்விடத்தில்‌ நடுவர்களாக வந்து சிபாரிசு செய்வார்கள்‌ என்று கருதினார்கள்‌. நபிமார்கள்‌, ஸாலிஹீன்கள்‌, சூரியன்‌, சந்திரன்‌, நட்சத்திரங்கள்‌
போன்ற அனைத்து படைப்பின்‌ உருவத்திலும்‌ கற்களைச்‌ செதுக்கி அவற்றை வணங்கினார்கள்‌. ஜின்களையும்‌, மலக்குகளையும்‌ வணங்கினார்கள்‌. அவர்களுடைய வணக்கத்தின்‌ இலட்சியம்‌ கற்களை வணங்க வேண்டுமென்பதல்ல. இக்கற்களின்‌
வடிவத்திற்குச்‌ சொந்தமான நபிமார்கள்‌, மலக்குகள்‌, ஜின்கள்‌ போன்றவர்களை வணங்குவது தான்‌ இவர்களின்‌ இலட்சியமாக இருந்தது. ஷைத்தானும்‌ இவர்களின்‌ இலட்சியத்திற்கொப்ப இசைந்து வழிகோரினான்‌. மெய்யாகவே இவர்கள்‌ ஷைத்தானுக்கு வழிபடவும்‌ செய்தார்கள்‌. திருமறையில்‌ இதை இறைவன்‌ விளக்கிக்‌ காட்டுகிறான்‌:
"(மலக்குகளை வணங்கிக்‌ கொண்டிருந்தோர்‌) அனைவரும்‌ ஒன்று சேர்க்கப்படும்‌ நாளில்‌
மலக்குகளை நோக்கி 'உங்களை வணங்கிக்‌ கொண்டிருந்தவர்கள்‌ இவர்கள்தானா?'
என்று கேட்கப்படும்‌ போது, 'எங்கள்‌ இறைவனே! நீ மிகப்‌ பரிசுத்தமானவன்‌. நீதான்‌ எங்கள்‌ இரட்சகன்‌. அவர்களல்ல. இவர்கள்‌ ஜின்களையே வணங்கிக்‌ கொண்டிருந்தார்கள்‌. அவர்களில்‌ பெரும்பாலோர்‌ அவர்களையே (அந்த ஜின்களையே)
விசுவாசித்துமிருந்தார்கள்‌' என்று பதில்‌ அளிப்பார்கள்‌". (34:40-41)

சிலைகளை வணங்கி வழிபடுகிறவர்கள்‌ தாம்‌ ஷைத்தான்‌௧ளை வணங்குவதாக ஏற்று அவற்றை வணங்குவதில்லை. தமது மன ஆறுதலுக்காக மலக்குகள்‌, நபிமார்கள்‌, ஸாலிஹீன்கள்‌ என்று இவர்கள்‌ நல்லெண்ணம்‌ வைப்பவர்களைத்‌ தான்‌
வணங்குவதாகக்‌ கருதி சாந்தி அடைகின்றனர்‌.

மற்றொரு சாரார்‌ ஜின்களுக்கு வழிபடுவதை ஹராம்‌ என்று கருதாமலிருந்தார்கள்‌. மனிதனின்‌ தோற்றத்தில்‌ ஆள்மாறாட்டம்‌ செய்த ஷைத்தானிடம்‌ கேட்கின்ற
வேளையில்‌ தமக்கு ஸுஜூது செய்ய வேண்டுமென்றும்‌, வெறுக்கத்தக்க பல செய்கைகள்‌ செய்ய வேண்டுமென்றும்‌, மது அருந்த வேண்டுமென்றும்‌ ஷைத்தான்‌ தேவைப்படுவதுண்டு. செத்த பிணங்களைக்‌ கொடுக்க வேண்டுமென்றும்‌
தேவைப்படுவான்‌. பலர்‌ இதைக்‌ தெரிவதில்லை. தம்முடம்‌ உரையாடியவர்‌ மலக்கு என்றும்‌ ஜின்‌ இனத்தைச்‌ சார்ந்தவர்‌ என்றும்‌ கூறி மறைவான மனிதர்கள்‌ என்று இவர்களுக்கு பெயரும்‌ தட்டி விடுகிறார்கள்‌. மறைவான மனிதர்களைப்‌ பற்றி இவர்கள்‌ அல்லாஹ்வின்‌ அவ்லியாக்கள்‌, கண்பார்வைக்கு அப்பாற்பட்டவர்கள்‌ என்று கூறி
விடுகிறார்கள்‌. உண்மையில்‌ இவர்கள்‌ மனித உருவில்‌ நடித்த ஜின்களாகும்‌.

மனிதன்‌ ஜின்னிடம்‌ இரட்சிப்புக்‌ கோருவதுபற்றி திருமறையில்‌ இறைவன்‌:
"மனிதர்களிலுள்ள ஆண்கள்‌ பலர்‌ ஜின்களிலுள்ள ஆண்களில்‌ பலரிடம்‌ சென்று இரட்சிக்கக்‌ கோருகின்றனர்‌. இதனால்‌ அவர்களின்‌ கர்வம்‌ அதிகரித்து விட்டது" (72:6) என்று கூறுகிறான்‌. அன்று ஏதேனுமொரு அச்சம்‌ தரும்‌ பள்ளத்தாக்கு எதிலும்‌ ஒரு
மனிதர்‌ சென்றால்‌, 'இந்தப்‌ பள்ளத்தாக்கின்‌ பெரியவனைக்‌ கொண்டு இதிலுள்ள மடையர்களின்‌ தீங்குகளை விட்டும்‌ காவல்‌ தேடுகிறேன்‌' என்று கூறுவாராம்‌. மேலும்‌ அன்று மனிதர்கள்‌ ஜின்களை விட்டும்‌ காவல்‌ தேடினார்கள்‌. இவையனைத்தும்‌ ஜின்கள்‌ வரம்பு மீறுவதற்குரிய காரணங்களாக அமைந்தன. எங்களைக்‌ கொண்டு மனிதர்கள்‌
பாதுகாவல்‌ தேடுகின்றனர்‌ என்று ஜின்கள்‌ கூறுமளவிற்கு மனிதர்கள்‌ நடந்து கொண்டனர்‌. 

ஜின்களிலுள்ள சிலரின்‌ பெயர்களைக்‌ கையாளுகின்ற அஜமிகளின்‌ மாந்திரீக வேலைகள்‌, ஓதிப்பார்த்தல்‌ எல்லாம்‌ இப்படியே மனிதனை வழிகெடுக்கக்‌
கோருகின்றன. மக்கள்‌ இவர்களை அழைத்துப்‌ பிரார்த்தித்து உதவி கோரி தாம்‌ பெரிதாகக்‌ கருதியவற்றைக்‌ கொண்டெல்லாம்‌ சத்தியம்‌ செய்கின்றனர்‌. இதனால்‌ சில விஷயங்களில்‌ இவர்களுக்கு ஷைத்தான்‌ வழிபட்டு விடுகிறான்‌. இவையனைத்தும்‌ சூனியம்‌ செய்வதைப்‌ போன்றதாகும்‌. இறைவனுக்கு இணை வைப்பதைப்‌
போன்றதாகும்‌. 

இறைவன்‌ கூறினான்‌: "மேலும்‌ அவர்கள்‌ ஸுலைமானுடைய ஆட்சியைப்பற்றி ஷைத்தான்கள்‌ ஒதிக்காட்டிக்‌ கொடுத்தவற்றைப்‌ பின்பற்றினார்கள்‌.
ஸுலைமான்‌ காஃபிராக இருக்கவில்லை. அந்த ஷைத்தான்கள்‌ தான்‌ காஃபிர்களாக இருந்தார்கள்‌. அவர்கள்‌ மனிதர்களுக்கு சூனியத்தையும்‌, பாபிலோனில்‌ ஹாரூத், மாரூத்‌ என்னும்‌ இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டவற்றையும்‌ கற்றுக்‌ கொடுத்து வந்தார்கள்‌. அவ்விருவரும்‌ 'நாங்கள்‌ சோதனையாக இருக்கிறோம்‌. நீங்கள்‌ காஃபிர்களாக ஆகிவிட வேண்டாம்‌.' என்று கூறும் வரையில்‌ அவர்கள்‌ யாருக்கும்‌ அதனைக்‌ கற்றுக்‌ கொடுக்கவில்லை. எனவே கணவனுக்கும்‌, மனைவிக்குமிடையில்‌ பிரிவினை உண்டு பண்ணக்‌ கூடிய உபாயத்தை அவ்விருவரிடமிருந்து கற்றுக்‌ கொள்வார்கள்‌.
அல்லாஹ்வின்‌ கட்டளையின்றி அதைக்‌ கொண்டு அவர்கள்‌ ஒருவருக்கும்‌ தீங்கிழைத்து விட முடியாது. அன்றி அவர்களுக்கு யாதொரு பலனுமளிக்காமல்‌ தீங்கிழைக்கக்‌ கூடியது எதுவோ அதைத்தான்‌ அவர்கள்‌ கற்றுக்‌ கொள்கிறார்கள்‌. தவிர அவன்‌ எதை
விலைக்கு வாங்கிக்‌ கொண்டானோ அவனுக்கு மறுமையில்‌ யாதொரு பாக்கியமுமில்லை என்பதைக்‌ தெளிவாக அறிந்திருக்கிறார்கள்‌. அன்றி தங்களையே
விற்று அவர்கள்‌ எதை வாங்கிக்‌ கொண்டார்களோ அது கெட்டதாகும்‌. அவர்கள்‌ அறிந்து கொள்ள வேண்டாமா?. (2:102)

கப்றில்‌ இருப்பவரைக்‌ கொண்டு உதவி தேடிப்‌ பிரார்த்திக்கும்போது கப்றருகில்‌ பற்பல
காட்சிகள்‌ காட்டப்படுகின்றன. ஷைத்தான்கள்‌ இவர்களைத்‌ தூக்கி மக்காவுக்கும்‌, மற்ற
இடங்களுக்கும்‌ கொண்டு செல்கின்றன. இந்த கப்றிலிருப்பவன்‌ சில நேரங்களில்‌ இறைவனை நிராகரிக்கின்ற நாஸ்திகனாகவும்‌, தொழுகை மற்றும்‌ அல்லாஹ்‌, ரஸுலின்‌ இதர கடமைகளையும்‌ மறுத்துக்‌ கூறியவனாகவும்‌ இருப்பான்‌. அல்லாஹ்வும்‌, ரஸூலும்‌ ஹராமாக்கியவற்றை இந்தக்‌ கப்றிலிருப்பவன்‌ ஹலால்‌
எனக்‌ கருதியிருப்பான்‌. இத்தகைய பெரும்‌ குற்றங்களும்‌, பாவங்களும்‌, குஃப்ரிய்யத்தான
செயல்களும்‌ இவனிடம்‌ இருந்ததினால்‌ தான்‌ ஷைத்தான்கள்‌ இவனிடம்‌ அணுகினார்கள்‌.
இவர்கள்‌ அல்லாஹ்வையும்‌, ரஸுலையும்‌ நம்பி இவர்களுக்கு வழிபட்டு அல்லாஹ்விடம்‌ பாவமன்னிப்புக்‌ கோரினால்‌ இந்த ஷைத்தான்கள்‌ நிச்சயமாக அவனிடமிருந்து பிரிந்து விடுவார்கள்‌. ஷைத்தான்களின்‌ ஊசலாட்டங்கள்‌ இவர்களிடத்தில்‌ எந்த தீயயலனையும்‌ அளிக்காது.

இம்மாதிரியான பலரை நான்‌ ஷாமிலும்‌, மிஸ்ரிலும்‌, ஹிஜாஸிலும்‌, யமனிலும்‌ கண்கூடாகக்‌ கண்டிருக்கிறேன்‌. இதைவிடப்‌ பயங்கரமான பித்‌அத்துகளும்‌, ஷிர்க்குகளும்‌ இராக்கிலும்‌, துருக்கியிலும்‌, குராஸானிலும்‌ நடைபெறுகின்றன. முஷ்ரிக்குகள்‌ வாழும்‌ பூமிகள்தான்‌ இம்மாதிரி வேலைகளுக்குரிய உறைவிடமாகும்‌. நிராகரிப்பு, இறைவனுக்கு மாறு செய்தல்‌, குற்றங்கள்‌ அதிகம்‌ புரிதல்‌ போன்ற காரணங்களினால்‌ ஷைத்தானின்‌
சக்தியும்‌, வழிகேடும்‌ அதிகப்படுகின்றன. 

எங்கெல்லாம்‌ ஏகத்துவம்‌ பலமாக இருக்கிறதோ அங்கும்‌, நபி (ஸல்‌) அவர்களின்‌ வழிமுறைகள்‌ எங்கெல்லாம்‌ அதிகமாகப்‌ பின்பற்றப்‌ படுகின்றனவோ அங்கும்‌ ஷைத்தானின்‌ மோசடிகளும்‌, வழிகேட்டு
வித்தைகளும்‌ பயனளிக்காது. முஷ்ரிக்குகளின்‌ சமூகத்தில்‌ இம்மாதிரி சம்பவங்கள்‌ மலிவாகக்‌ காணப்படுவதற்குரிய காரணங்களும்‌ இதுவே. 

இஸ்லாத்தைக்‌ தழுவாத புத்தர்கள்‌, தூனியா வகுப்பார்‌, பக்‌ ஷியாக்கள்‌ போன்ற முஷ்ரிக்குகள்‌ துருக்கியிலும்‌,
இந்தியாவிலும்‌ உள்ள காஃபிர்களின்‌ ஷெய்குமார்கள்‌ ஆகியோரிடம்‌ ஷைத்தானின்‌ மோசடிகள்‌ அதிகமாகக்‌ காணப்படும்‌. இவர்களில்‌ சிலர்‌ விண்ணிலே பறப்பது போலக்‌ காணப்படுவார்கள்‌. மறைவான விஷயங்களைப்‌ பற்றிப்‌ பேசுவார்கள்‌. இன்னிசைக்குப்‌
பயன்‌படுத்துகின்ற கொட்டும்‌, வாத்தியமும்‌ விண்ணில்‌ பறந்து செல்வதைப்போல்‌ காணப்படும்‌. இந்த ஷைகுமார்களின்‌ வழியை மீறுபவர்களின்‌ தலை அடிக்கப்படும்‌. அடித்தவரை யாரும்‌ காணமாட்டார்கள்‌. முஷ்ரிக்குகளின்‌ ஷைகுமார்களின்‌ தண்ணீர்ப்‌
பாத்திரம்‌ சுற்றுவது போன்று இன்னொரு காட்சி. அதை யார்‌ தூக்கிச்‌ செல்கின்றார்கள்‌ என்பது பற்றி அறியப்பட மாட்டாது. அவர்களில்‌ ஒருவரிடத்தில்‌ யாராவது விருந்தாளி வந்து விட்டால்‌ பல வகையான உணவுகளைக்‌ கொண்டு அவர்‌ கண்ணியப்படுத்தப்‌படுவார்‌. உணவு எங்கிருந்து வருகிறது என்பதை அவர்கள்‌ அறிய மாட்டார்கள்‌.

இவையனைத்தும்‌ ஷைத்தான்கள்‌ மற்றவரிடமிருந்து திருடி இவர்களுக்குக்‌ கொடுத்ததை அறியமாட்டார்கள்‌. இப்படிப்‌ பற்பல செய்திகள்‌ முஷ்ரிக்குகளிடமும்‌, ஈமான்‌ குன்றிய துருக்கியரிடமும்‌, மற்றவரிடமும்‌ நிறையக்‌ காணப்படும்‌. தாத்தாரியரிடத்தில்‌ இன்னும்‌ பல வகையான சம்பவங்களைப்‌ பார்க்கலாம்‌. இஸ்லாத்தைக்‌ தழுவியவர்கள்‌ ஏகத்துவத்தைத்‌ தம்‌ வாழ்க்கையில்‌ நிரூபித்துக்‌ காட்டாமலும்‌, நபி (ஸல்‌) அவர்களைப்‌ பின்பற்றாமலும்‌, ஷைகுமார்களையும்‌, கண்‌ மறைவில்‌ உள்ளவர்களையும்‌ அழைத்து அவர்களைக்‌ கொண்டு உதவிக்தேடி நடப்பார்களேயானால்‌ கணிசமான முறையில்‌ ஷைத்தான்‌ அவர்களைக்‌ கெடுத்து விடுவான்‌. அவன்‌ இவர்களைத்‌ தூக்கி சில வேளைகளில்‌ அரஃபாவில்‌ ஹாஜிகளுடன்‌ கொண்டு நிறுத்தி விடுகிறான்‌. இஹ்ராம்‌ கட்டாமலும்‌, முஸ்தலிபாவில்‌ இரவு தங்காமலும்‌, தவாஃப்‌ செய்யாமலும்‌ தாம்‌ ஹஜ்‌ செய்ததாக நினைத்துக்‌ கொள்கிறார்கள்‌. இதனால்‌ தமக்கு ஒரு பெரிய அவ்லியா கராமத்‌ கிடைத்து விட்டதாக நினைத்துக்‌ கொள்கிறார்கள்‌. இவை அனைத்தும்‌ ஷைத்தானின்‌ விளையாட்டுகள்‌ என்பதை இவர்கள்‌ அறிய மாட்டார்கள்‌. இது ஷரீஅத்தில்‌ அனுமதிக்கப்பட்ட ஹஜ்‌ என்று இஸ்லாமிய அறிஞர்களில்‌ ஒருவர்கூட சொல்ல மாட்டார்கள்‌. இதை வணக்கம்‌ என்றோ, அவ்லியா கராமத்‌ என்றோ கூறுகிறவன்‌ வழி கெட்டவனாகவே இருப்பான்‌. அன்பியாக்களோ, ஸஹாபாக்களோ இத்தகைய அமல்களைச்‌ செய்யவில்லை. 

அலெக்ஸாந்திரியாவிலிருந்து அரஃபாவிற்குக்‌ தூக்கிச்‌ செல்லப்பட்ட சிலர்‌, வானத்திலிருந்து மலக்குகள்‌ இறங்கி ஹாஜிகளின்‌ பெயர்களை
எழுதுவதைப்‌ பார்த்தபோது 'என்னுடைய பெயரை எழுதினீர்களா?' என்று கேட்டார்களாம்‌. அதற்கு மலக்குகள்‌ 'சாதாரண மக்கள்‌ செய்தது போல நீங்கள்‌
செய்யவில்லையே' என்றார்களாம்‌. மேலும்‌ மலக்குகள்‌ 'நீ இஹ்ராம்‌ கட்டவில்லை. கஷ்டங்களைச்‌ சுமந்து கொள்ளவில்லை. பிரதிபலன்‌ கொடுக்கக்கூடிய எந்த
அமல்களையும்‌ நீ செய்யவில்லை' என்று கூறினார்களாம்‌.

ஒரு ஷெய்கிடத்தில்‌ (மேற்கூறப்பட்டவர்கள்‌) விண்வெளி மார்க்கம்‌ சென்று ஹஜ்‌ செய்வதற்கு அனுமதி தாருங்கள்‌ என்று வேண்டிக்‌ கொண்டபோது ஷெய்க்‌ 'அல்லாஹ்‌, ரஸூல்‌ சொன்னதற்கொப்ப நீங்கள்‌ ஹஜ்‌ செய்யாததினால்‌ இத்தகைய ஹஜ்ஜைக்‌
கொண்டு இஸ்லாத்தின்‌ கடமை நிறைவேறிவிடாது' என்று கூறினார்களாம்‌.

புனிதமான மார்க்கம்‌ நமது இஸ்லாம்‌. இது இரு அடிப்படைகள்‌ மீது அமைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று: இறைவனுக்கு இணை துணை கற்பிக்காமல்‌ வணக்க
வழிபாடுகள்‌ செலுத்துவது. இரண்டு: எப்படி அல்லாஹ்வை வணங்க வேண்டுமென்று நபிகள்‌ காட்டித்‌ தந்தார்களோ அப்படி அவனை வணங்குவது. இவ்விரு அடிப்படைகளையும்‌ முழுமையாக நாம்‌ எடுத்து செயல்படுவதினால்‌ கலிமத்துஷ்‌ ஷஹாதாவின்‌ உண்மையான தாத்பரியத்தை மெய்ப்பித்தவர்களாக ஆக முடியும்‌. இறைவன்‌ அடியார்களின்‌ இதயத்தால்‌ பயந்து, வழிபட்டு, உதவிகோரி, நேசித்து, பெருமைப்படுத்தி, கண்ணியப்படுத்தி, ஆசைவைத்து நடக்கப்படக்‌ கூடியவனாவான்‌. இந்நிலையில்‌ தான்‌ உண்மையாக நாம்‌ அவனை இறைவனாக ஏற்றிருக்கிறோம்‌ என்பதை நிரூபிக்க முடியும்‌. அல்லாஹ்வுக்கு என்னென்ன தன்மைகள்‌, பாத்தியதைகள்‌, உரிமைகள்‌ இருக்கின்றனவோ அவற்றில்‌ எதிலும்‌ மனிதர்கள்‌ கூட்டாக மாட்டார்கள்‌. வணக்கமும்‌ அல்லாஹ்வுக்குரியது. வேறு எவரும்‌ வணங்கப்பட மாட்டார்கள்‌. பிரார்த்தனைக்குரியவனும்‌ அவனே. வேறு யாரும்‌ பிரார்த்திக்கப்பட மாட்டார்கள்‌.
அவனையே அஞ்ச வேண்டும்‌. வேறு சிருஷ்டிகளுக்கு அஞ்சக்‌ கூடாது.

நபிகளைப்‌ பொறுத்தவரையில்‌ அவர்கள்‌ இப்படிப்பட்டவர்கள்‌ அல்ல. அல்லாஹ்வின்‌
ஏவல்‌, விலக்கல்களை மக்களுக்குச்‌ சேர்த்து வைக்கின்ற ஒரு நடுவராவார்கள்‌. எதை
அல்லாஹ்‌ ஹலாலாக்கினானோ அது ஹலாலானது. எதை ஹராமாக்கினானோ அது ஹராமானது. எவற்றை இறைவன்‌ சட்டமாக நியமித்தானோ அவற்றுக்குப்‌ பெயர்தான்‌ மார்க்கமென்பது. அல்லாஹ்விற்கும்‌, சிருஷ்டிகளுக்கும்‌ இடையில்‌ நியமனங்களை நபி
(ஸல்‌) அவர்கள்‌ சேர்த்து வைத்தார்கள்‌. அவன்‌ வாக்குறுதிகளையும்‌, எச்சரிக்கைகளையும்‌ மனிதர்களுக்கிடையில்‌ எடுத்துக்‌ கூறுவார்கள்‌. அல்லாஹ்வின்‌ அனுமதிகளையும்‌, விலக்கல்களையும்‌, மற்றும்‌ ஏனைய உரைகளையும்‌ மனிதர்களுக்கிடையில்‌ சேர்த்து வைக்கின்ற ஒரு நடுவர்தான்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌.

பிரார்த்தனைகளை அங்கீகரித்தல்‌, நோய்நொடிகளைக்‌ குணப்படுத்துதல்‌, நேர்வழி
வழங்குதல்‌, செல்வத்தைக்‌ கொடுத்தல்‌, சோதனையிலிருந்து மனிதனைக்‌ காப்பாற்றுதல்‌
இவையனைத்தும்‌ அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான பொறுப்புகளாகும்‌. அவன்‌ ஒருவனே பிரார்த்தனைகளைக்‌ கேட்கிறான்‌. அவரவருக்குரிய இடங்களைத்‌ தெரிந்து வைத்திருக்கிறான்‌. மனிதர்களின்‌ அகத்தோற்றத்தையும்‌, வெளித்தோற்றத்தையும்‌ நன்றாக விளங்கியிருக்கிறான்‌. அனுக்கிரகங்களைப்‌ பொழிய சக்தி படைத்தவனும்‌ அவனே. நோய்‌ நொடிகளை நீக்க அவன்‌ ஒருவனிடமே கேட்க வேண்டும்‌. தன்‌
சிருஷ்டிகளின்‌ நிலைமையைப்‌ பற்றி அவனிடம்‌ சொல்லிக்‌ கொடுக்க எவரும்‌ தேவையில்லை. அவர்களின்‌ தேவையைப்‌ பூர்த்தி செய்வதில்‌ அல்லாஹ்வுக்கு எவரும்‌ துணைபுரிய வேண்டாம்‌. எல்லா காரணங்களையும்‌ அவனே சிருஷ்டித்தான்‌.
காரணங்களுக்கெல்லாம்‌ காரணகர்த்தாவாக அவனிருக்கும்‌ போது யாருடைய ஒத்தாசைதான்‌ அவனுக்குத்‌ தேவைப்படப்‌ போகிறது? ஏகனும்‌, எந்தத்‌
தேவையுமில்லாதவனும்‌, எவரையும்‌ பெறாதவனும்‌, எவராலும்‌ பெறப்படாதவனும்‌, நிகரற்ற நாயனும்‌ அவனே. வானங்களிலும்‌, பூமியிலும்‌ வாழும்‌ அனைத்து
படைப்பினங்களும்‌ அவனிடமே கெஞ்சி நிற்கின்றன. “வானங்களிலும்‌, பூமியிலுமுள்ள யாவரும்‌ தங்களுக்கு வேண்டியவற்றை அவனிடமே கேட்கின்றனர்‌. அவன்‌ ஒவ்வொரு நாளும்‌ (புதிது புதிதாக) ஒவ்வொரு நிலையிலுமிருக்கிறான்‌" (50:29) என்று திருமறை
கூறுகிறது. அவனால்‌ முடியாத ஒன்றும்‌ இல்லை. ஒருவரின்‌ பிரார்த்தனையைக்‌ கேட்கின்ற வேளையில்‌ மற்றொருவரின்‌ பிரார்த்தனையையும்‌ கேட்பதை விட்டு அவன்‌ சக்தியற்றவனல்ல. அனைத்து மொழிகளிலும்‌ எண்ணிறைந்த குரல்களிலும்‌ எழுப்பப்படுகின்ற எல்லா பிரார்த்தனைகளையும்‌, எல்லாத்தொனிகளையும்‌,
தேவைகளையும்‌ அவன்‌ செவியுறுகிறான்‌. அலட்டி அலட்டிக்‌ கேட்பவர்கள்‌ அவனை அலுப்பில்‌ வீழ்த்த மாட்டார்கள்‌. மாறாக அலட்டி பிரார்த்திப்பவரை அவன்‌ பெரிதும்‌ நேசிக்கிறான்‌.

நபித்தோழர்கள்‌ நபியிடம்‌ ஏதாவது சட்டங்கள்‌ பற்றி வினவினால்‌ அதற்கு பதிலை நபியே சொல்ல வேண்டுமென்று அல்லாஹ்வால்‌ பணிக்கப்பட்டுள்ளார்கள்‌. இதைப்பற்றி
இறைவன்‌ கூறுகிறான்‌: “நபியே! (தர்மத்திற்காக) எதைச்‌ செலவு செய்வது என்று அவர்கள்‌ உம்மிடம்‌ கேட்கிறார்கள்‌. அதற்கு (அவசியத்திற்கு வேண்டியது போக) மீதமுள்ளகைச்‌ செலவு செய்யுங்கள்‌ என்று நீர்‌ கூறுவீராக!" (2:219). இன்னும்‌ கூறுகிறான்‌: (நபியே!) புதுப்பிறைகளைப்‌ பற்றி அவர்கள்‌ உம்மிடம்‌ கேட்கிறார்கள்‌. அவை மனிதர்களுக்கு காலங்களை அறிவிக்கக்கூடியவை, ஹஜ்ஜையும்‌
அறிவிக்கக்கூடியவை என்று நீர்‌ கூறுவிராக!: (2:189).

'"(நபியே!) சிறப்பான மாதங்களில்‌ (துல்கஃதா, துல்ஹஜ்‌, முஹம்‌, ரஜப்‌) யுத்தம்‌ செய்வதைப்‌ பற்றி உம்மிடம்‌ கேட்கிறார்கள்‌. அந்த மாதங்களில்‌ யுத்தம்‌ செய்வது பெரும்‌ பாவம்‌... என்று நீர்‌ கூறும்‌" (2:217).

அதே நேரக்தில்‌ நபித்தோழர்கள்‌ அல்லாஹ்வைப்‌ பற்றி (சட்டங்களைப்‌ பற்றியல்ல) நபியிடம்‌ கேட்டால்‌ அல்லாஹ்‌ அவர்களின்‌ சமீபத்திலேயே இருப்பதாக அல்லாஹ்வே விளக்குகிறான்‌. திருமறை கூறுகிறது: “(நபியே!) உம்மிடம்‌ என்னுடைய அடியார்கள்‌
என்னைப்‌ பற்றிக்‌ கேட்டால்‌ நிச்சயமாக நான்‌ சமீபமாகவே இருக்கிறேன்‌. எவரும்‌ என்னை அழைத்தால்‌ அழைப்போருக்கு நான்‌ விடையளிக்கிறேன்‌" (2:186)

அல்லாஹ்‌ நபிகளிடம்‌ சமீபத்தில்தான்‌ இருப்பதாக விளக்க வேண்டுமென்று ஏவவில்லை. சிருஷ்டிகளின்‌ சமீபத்தில்‌ இருப்பதாக அவனே எடுத்துக்‌ கூறினான்‌.
அவனை அழைப்பவனின்‌ அருகில்‌ இருக்கிறான்‌ என்ற உண்மையை ஒருவர்‌ சொல்லித்‌ தராமலேயே புரிந்து கொள்ளலாம்‌ என்று இவ்வசனம்‌ விளக்குகிறது. எனவே அல்லாஹ்‌ தன்‌ படைப்பினங்களுடன்‌ மிக நெருங்கியிருப்பதனால்‌ அனைவரின்‌ பிரார்த்தனைகளையும்‌, இரகசியமாகக்‌ கேட்கப்படும்‌ தேவைகளையும்‌ செவியுறுகிறான்‌. இந்த உண்மையை நபி (ஸல்‌) அவர்களும்‌ கூறியிருக்கிறார்கள்‌.

பிரார்த்திக்கும்‌ போதும்‌, இறைவனை தியானித்து துதிகள்‌ சொல்லும்‌ போதும்‌ குரலுயர்த்திப்‌ பிரார்த்திப்பவர்களை நோக்கி நபி (ஸல்‌) அவர்கள்‌ ஜனங்களே! உங்கள்‌ ஆத்மாக்களுடன்‌ இரக்கம்‌ காட்டுங்கள்‌. செவிடனையோ உங்கள்‌ கண்பார்வைக்கு அப்பால்‌ இருப்பவனையயோ அழைக்கவில்லை. பக்கத்தில்‌ நின்று கேட்டுக்‌
கொண்டிருக்கும்‌ அல்லாஹ்வையே நீங்கள்‌ அழைக்கிறீர்கள்‌. நீங்கள்‌ அழைக்கின்ற
இறைவன்‌ மிகவும்‌ அருகில்‌ இருக்கின்றான்‌. ஒட்டகை வாகனத்தில்‌ பிரயாணம்‌ செய்கின்றவன்‌ ஒட்டகையின்‌ கழுத்துடன்‌ எத்தனை தூரம்‌ நெருங்கியிருக்கிறானோ
அதைவிட அதிகமாக பிரார்த்திப்பவனுடன்‌ அல்லாஹ்‌ நெருங்கியிருக்கிறான்‌.

இன்னொரு ஹதீஸில்‌ 'நீங்கள்‌ தொழுகைக்காக எழுந்து நின்றால்‌ முகத்துக்கு எதிரில்‌ துப்ப வேண்டாம்‌. ஏனெனில்‌ அல்லாஹ்‌ முகத்துக்கு எதிரில்‌ இருக்கிறான்‌. வலப்புறத்திலும்‌ துப்ப வேண்டாம்‌. அங்கேயும்‌ மலக்கொருவர்‌ இருக்கிறார்‌.
இடப்பக்கமாகவோ தன்‌ இரு பாதங்களுக்கு அடியிலோ துப்ப வேண்டும்‌' என்று வந்துள்ளது. இது ஸஹீஹான ஹதீஸாகும்‌. இறைவன்‌ வானங்களின்‌ மேலுள்ள தன்‌ அர்ஷில்‌ இருக்கிறான்‌. சிருஷ்டிகளை விட்டெல்லாம்‌ விலகியும்‌ இருக்கிறான்‌.

அவனுடைய தரத்தில்‌ எதுவுமே சிருஷ்டிகளிலுமில்லை. அவனுடைய சிருஷ்டிகளில்‌ ஒன்றும்‌ (எதுவும்‌) அவனுடைய தரத்திலுமில்லை. அல்லாஹ்‌ அனைத்து சிருஷ்டிகளை விட்டும்‌ அர்ஷை விட்டும்‌ தேவையற்றவன்‌. படைப்பினங்களின்‌ ஒரு விஷயமும்‌
அவனுக்குத்‌ தேவையில்லை. உண்மையில்‌ அல்லாஹ்வே தன்‌ ஆற்றலால்‌ அர்ஷைச்‌
சுமந்து நிற்கும்‌ மலக்குகளையும்‌ தாங்கி நிற்கிறான்‌. உலகத்தை இறைவன்‌ பல தட்டுகளாக படைத்திருக்கிறான்‌. மேல்தட்டுகள்‌ கீழ்தட்டுகளின்‌ பால்‌ தேவையாகாத வகையில்‌ உலகைப்‌ படைக்கிருக்கிறான்‌. வானமண்டலங்கள்‌ வாயுமண்டலங்களோடு தொடர்புடையதல்ல. வாயு மண்டலம்‌ பூமண்டலக்கோடு தேவையாகாது. இந்த
அனைத்துக்‌ கோளங்களுக்கும்‌ கிரகங்களுக்கும்‌ மேலே அகில கோளங்களின்‌ இரட்சகனான அல்லாஹ்‌ இருக்கிறான்‌. இத்தகைய ஆற்றல்‌ தனக்கு இருக்கின்றதாக வர்ணிக்கின்ற இறைவன்‌ கூறுகின்றான்‌: “அல்லாஹ்வின்‌ மேலான தகுகிக்குத்‌
தக்கவாறு அவனை அவர்கள்‌ கண்ணியப்படுத்தவில்லை. இன்னும்‌ மறுமை நாளில்‌ பூமி முழுவதும்‌ அவனுடைய ஒரு கைப்பிடியிலும்‌, வானங்கள்‌ சுருட்டப்பட்டு அவனுடைய
வலக்கரத்திலும்‌ இருக்கும்‌. அவர்கள்‌ இணை வைப்பதை விட்டும்‌ அவன்‌ மிக்க மேலானவன்‌. மிகப்‌ பரிசுத்தமானவன்‌". (39:67)

இத்தகைய பேராற்றல்‌ படைத்த இறைவன்‌ எத்தனை வல்லமையுடையவன்‌. பிறரிடம்‌ தேவையற்றவன்‌. மாபெரியோன்‌ என்பதை எண்ணிப்‌ பார்க்க வேண்டும்‌. அவன்‌ மிக உயர்ந்தவன்‌. ஏகன்‌. எவரையும்‌ பெறாதவன்‌. யாராலும்‌ பெறப்படாதவன்‌. அவனுக்கு
நிகர்‌ யாருமில்லை. அனைத்துமே அவன்‌ பக்கம்‌ தேவைப்படுகின்றனவே தவிர அவன்‌ எவரிடத்திலும்‌ தேவையற்றவன்‌. இத்தகைய ஏகத்துவ விளக்கங்களை வேறு பல இடங்களில்‌ தந்துள்ளேன்‌. இறைவன்‌ எந்த ஏகத்துவத்தை பரப்புவதற்காக திருத்தூதர்களை அனுப்பினானோ, அத்தகைய பரிசுத்தமான ஏகத்துவம்‌ திருமறையில்‌ பல இடங்களில்‌ விளக்கப்பட்டுள்ளது. 

திருமறையில்‌ 'ஸூரத்துல்‌ இக்லாஸ்‌' ஏகத்துவக்‌
கொள்கையை நனி சிறந்து விளக்கிக்‌ காட்டுகிறது. "(நபியே!) நீர்‌ அல்லாஹ்‌ ஒருவன்‌ என்று கூறும்‌” என்று ஏவுகிறது. மேலும்‌ செயல்‌ ரீதியான ஏகத்துவத்தை 'ஸூரத்துல்‌ காஃபிரூன்‌' என்ற அத்தியாயம்‌ விளக்கிக்‌ காட்டுகிறது. "நபியே! காஃபிர்களை நோக்கி
நீர்‌ கூறும்‌. காஃபிர்களே நீங்கள்‌ வணங்குபவற்றை நான்‌ வணங்க மாட்டேன்‌. நான்‌ வணங்குபவனை நீங்கள்‌ வணங்கவில்லை. அவ்வாறே இனியும்‌ நீங்கள்‌
வணங்குபவற்றை நான்‌ வணங்குபவன்‌ அல்லன்‌. நான்‌ வணங்குபவனை இனி நீங்களும்‌ வணங்குகிறவர்கள்‌ அல்லர்‌. உங்களுடைய வினைக்குரிய கூலி உங்களுக்கும்‌, என்னுடைய செயலுக்குரிய கூலி எனக்கும்‌ கிடைக்கும்‌” (109:1-6).

சொல்‌, செயல்‌ ரீதியான ஏகதெய்வ நம்பிக்கையை இவ்விரு அத்தியாயங்களும்‌ விளக்கிக்‌ கொண்டிருப்பதனால்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ ஸுப்ஹுத்‌ கொழுகையின்‌ ஸுன்னத்தான இரு ரக்‌அத்துகளிலும்‌, தவாஃபுடைய இரு ரக்‌அத்துகளிலும்‌ மற்றும்‌ சில
தொழுகைகளிலும்‌ இவ்விரு ஸூராக்களையும்‌ ஓதி வந்தார்கள்‌. தொழுகையின்‌ இந்த கருத்துகள்‌ அடங்கிய கீழ்வரும்‌ ஆயத்துகளையும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ ஓதி வந்தார்கள்‌.

முதல்‌ ரக்‌அத்தில்‌ "(மூமின்களே!) நீங்கள்‌ கூறுங்கள்‌. அல்லாஹ்வையும்‌, எங்களுக்கு அருளப்பெற்ற இ(வ்வேதத்‌)தையும்‌, இப்றாஹீம்‌, இஸ்மாயீல்‌, இஸ்ஹாக்‌, யஃகூப்‌ முதலியவர்களுக்கும்‌, இவர்களுடைய சந்ததிகளுக்கும்‌ அருளப்பெற்ற யாவற்றையும்‌, மூஸாவுக்கும்‌, ஈஸாவுக்கும்‌ கொடுக்கப்‌ பட்டிருந்ததையும்‌, மற்றைய நபிமார்களுக்கு
அவர்களின்‌ இறைவனிடமிருந்து கொடுக்கப்‌ பட்டிருந்தவற்றையும்‌ நாங்கள்‌ விசுவாசிக்கிறோம்‌. அவர்களில்‌ எவருடனும்‌ நாங்கள்‌ வேறுபாடு காட்ட மாட்டோம்‌. அந்த அல்லாஹ்வுக்கே முற்றிலும்‌ நாங்கள்‌ வழிப்பட்டோம்‌" (2:136) என்ற ஆயத்தை ஓதினார்கள்‌.

இரண்டாவது ரக்‌அக்கில்‌ “வேதம்‌ அருளப்பட்டவர்களே! நாம்‌ அல்லாஹ்வைத்‌ தவிர
வேறொன்றையும்‌ வணங்க மாட்டோம்‌. நாம்‌ அவனுக்கு யாதொன்றையும்‌ இணையாக்க மாட்டோம்‌. நம்மில்‌ எவரும்‌ அல்லாஹ்வையன்றி எவரையும்‌ இறைவனாக எடுத்துக்‌ கொள்ள மாட்டோம்‌ என்று நமக்கிடையிலுள்ள (சம நிலையான) ஒரு மத்திய
விஷயத்தின்‌ பால்‌ வாருங்கள்‌ என்று (நபியே!) நீர்‌ கூறுவீராக! இதையும்‌ அவர்கள்‌ புறக்கணித்தால்‌ நிச்சயமாக நாங்கள்‌ (அவன்‌ ஒருவனுக்கே முற்றிலும்‌ வழிபட்ட) முஸ்லிம்கள்‌ என்று நீங்கள்‌ (எங்களுக்காக) சாட்சியம்‌ கூறுவீர்களாக!" (3:46) என்ற ஆயத்தை ஒதுவார்கள்‌. 

இவ்விரு ஆயத்துகளும்‌ இஸ்லாமிய சமுதாயத்தின்‌
அடிப்படைக்‌ கொள்கைகளை அடக்கிக்‌ கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு இறை
வசனங்களும்‌ சொல்லாலும்‌, செயலாலுமுள்ள ஈமானின்‌ (நம்பிக்கையின்‌) அம்சங்களைப்‌ பொதிந்திருக்கின்றன. இறைவன்‌ அடியார்களுக்களித்த அனுக்கிரகங்களிலெல்லாம்‌ ஈமானும்‌, இஸ்லாமுமே மிகப்‌ பெரிய அனுக்கிரகங்களாகும்‌. இவ்விரு அனுக்கிரகங்களும்‌ இவ்விரண்டு ஆயத்துகளிலும்‌ அடங்கி இருக்கின்றன.

இது வினா-விடையின்‌ கடைசிப்‌ பகுதியாகும்‌. இதை அப்படியே சுருக்கி எழுத்து வடிவத்தில்‌ இங்கே கொண்டு வருவதற்கு விரும்பியதினால்‌ குறிப்பிடுகிறேன்‌. ஏனெனில்‌ இதில்‌ முக்கியமான இலட்சியங்களும்‌, பயனுள்ள சட்டங்களும்‌
அடங்கியிருக்கின்றன. ஏகத்துவமே அல்‌ குர்‌ஆனின்‌ (ஸுர்ரு) மர்மமாகும்‌. ஈமானின்‌ நூற்களும்‌ ஏகத்துவத்தைகத்‌ தான்‌ போதிக்கின்றன. இத்தகைய ஆதாரங்களின்‌ அமைப்புகளை நல்ல பல சொற்களால்‌ குறிப்பிடுவது மிக முக்கியமானதும்‌,
அடியார்களுக்குப்‌ பயன்‌ தரவல்லதுமாகும்‌. அதிலேதான்‌ இம்மை, மறுமையின்‌ பலாபலன்களும்‌ இருக்கின்றன.

அல்லாஹ்வே நன்கறிந்தவன்‌.

Previous Post Next Post