அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகளை புரிந்து கொள்வது எவ்வாறு?


அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் விஷயத்தில் அல்லாஹ்வும், அவனது தூதரும் அவனுக்கு இருப்பதாக உறுதி செய்துள்ள பெயர்களையும், பண்புகளையும் எப்படி என்று கூறாமலும், வடிவம் கொள்ளாமலும் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறே அல்லாஹ்வும், அவனது தூதரும் அவனுக்கு இல்லை என்று மறுத்துள்ள பண்புகளை அவனுக்கு இருப்பதாக வாதிடாமலும், திரித்துக் கூறாமலும் நம்பிக்கை கொள்ள வேண்டும். 
                                                
  لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ‌ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ 
அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (அல்குர்ஆன் : 42:11) 
                                                
குர்ஆன் மற்றும் ஸுன்னா ஆதாரங்களில் இடம் பெறும் வார்த்தைகளின் பொருளை நம்பிக்கை கொள்வதுடன் அதன் அர்த்தத்தை மறுக்கவோ எப்படியென்று கூறவோ கூடாது. 
                                                
அல்லாஹ்வுக்கென்று அழகிய பெயர்கள், பண்புகள் உள்ளன. அவைகளுக்கு ஒப்புவமானம் கூறாது. அதன் கருத்துகளை திரித்துக் கூறாது அதன் கருத்துகளை சிதைக்காது அப்படியே நம்ப வேண்டும். அதாவது அல்லாஹ் தன்னைப் பற்றி குர்ஆனில் எப்படி வர்ணித்துள்ளானோ, அல்லாஹ்வுடைய தூதர் நபி முஹம்மத்(ஸல்) எப்படி அல்லாஹ்வைப் பற்றி வர்ணித்து கூறினார்களோ அப்படியே நம்ப வேண்டும்.  அல்லாஹ் தனக்கு இருப்பதாக கூறிய பண்புகள் இரண்டு விதமாக உள்ளன, ஒன்று அல்லாஹ்வின் உள்ளமையுடன் (தாத்) தொடர்புடைய பண்புகள், இரண்டாவது அவனது செயல்களைச் சார்ந்த பண்புகள். 
                                                
அல்லாஹ்வின் கை: 

 قَالَ يٰۤـاِبْلِيْسُ مَا مَنَعَكَ اَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَىَّ‌  اَسْتَكْبَرْتَ اَمْ كُنْتَ مِنَ الْعَالِيْنَ 
“இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” என்று (அல்லாஹ்) கேட்டான். (அல்குர்ஆன் : 38:75) 
                                                
 وَقَالَتِ الْيَهُوْدُ يَدُ اللّٰهِ مَغْلُوْلَةٌ‌  غُلَّتْ اَيْدِيْهِمْ وَلُعِنُوْا بِمَا قَالُوْا‌ ۘ بَلْ يَدٰهُ مَبْسُوْطَتٰنِ ۙ يُنْفِقُ كَيْفَ يَشَآءُ‌ 
“அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; (அல்குர்ஆன் : 5:64) 
                                                
தனக்கு இரு கைகள் இருப்பதாக மேற்கூறிய வசனங்களில் கூறிக்காட்டுகிறான். 
                                                
அல்லாஹ்வின் முகம்: 

 وَّيَبْقٰى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ‌ 
மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். (அல்குர்ஆன் : 55:27) 
                                                
அல்லாஹ்வின் பாதம்: 

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
(நரகவாசிகள் நரகத்தின் போடப்படுவார்கள். நரகம் வயிறு நிரம்பாத காரணத்தால்) 'இன்னம் அதிகம் இருக்கிறதா?' என்று கேட்டுக் கொண்டேயிருக்கும். இறுதியில் கண்ணியத்தின் அதிபதி(யான இறைவன்) தம் பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது 'போதும்! போதும்! உன் கண்ணியத்தின் மீதாணையாக!' என்று கூறும். நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும்.  
அறிவிப்பாளர்:  அனஸ் இப்னு மாலிக்(ரலி) 
ஸஹீஹ் புகாரி : 6661,4848. 
                                                
அல்லாஹ்வின் கண்: 

 وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَاِنَّكَ بِاَعْيُنِنَا‌ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِيْنَ تَقُوْمُۙ‏
 மேலும், (நபியே!) உமதிரட்சகனின் தீர்ப்பை (எதிர்பார்த்துப்) பொருத்திருப்பீராக! நிச்சயமாக நீர் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கின்றீர், (ஆகவே, அவர்கள் உமக்கு எவ்வித இடையூறும் செய்து விட முடியாது.) மேலும் (நீர் நித்திரையிலிருந்து) எழுந்த நேரத்தில் உமதிரட்சகனின் புகழைக்கொண்டு துதி செய்து கொண்டிருப்பீராக! (அல்குர்ஆன்: 52:48) 
                          
 وَاصْنَعِ الْفُلْكَ بِاَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَاطِبْنِىْ فِى الَّذِيْنَ ظَلَمُوْا‌ ۚ اِنَّهُمْ مُّغْرَقُوْنَ‏
 மேலும் “நம்முடைய கண்கள் முன்பாகவே, நம்முடைய அறிவிப்பின் படி ஒரு கப்பலை நீர் செய்யும், அக்கிரமம் செய்தவர்களைப் பற்றி (இனி நீர் என்னுடன் பரிந்து) பேசாதீர், நிச்சயமாக அவர்கள் (பெரு வெள்ளத்தில்) மூழ்கடிக்கப்படுகிறவர்கள்” (என்றும் அறிவிக்கப்பட்டது). (அல்குர்ஆன்: 11:37)

                                                
அல்லாஹ்வின் பேச்சு: 

  مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ‌ 
அவர்களில்  அல்லாஹ் பேசியவர்களும்  உள்ளார்கள். (அல்குர்ஆன் : 2:253) 
                                                
 وَرُسُلًا قَدْ قَصَصْنٰهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ‌  وَكَلَّمَ اللّٰهُ مُوْسٰى تَكْلِيْمًا 
(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:164) 
                                                
இது போன்ற பண்புகள் குர்ஆனிலும், ஸுன்னாவிலும் சொல்லப்பட்டுள்ளன. அவைகளுக்கு மனித படைப்புகளுக்கு ஒப்பாக்கி அல்லது உவமானம் கூறி கருத்துக்களை திரித்து கூறக்கூடாது. 

அது போல், அல்லாஹ் கேட்கிறான், அல்லாஹ் பார்க்கிறான், அல்லாஹ் சிரிக்கிறான், அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்கி வருகிறான், அல்லாஹ் பெருமை கொள்கிறான், அல்லாஹ் கோபம் கொள்கிறான், அல்லாஹ் இரக்கம் காட்டுகிறான் போன்ற பண்புகளையும் திரித்து கூறாது எந்த ஒன்றோடும் உதாரணம் கூறாது நம்ப வேண்டும். 

மேன்மையும், கண்ணியமுமிக்க அல்லாஹ் தனக்குரிய விதத்தில் தன்னுடைய பண்புகளுக்குரியவனாக இருக்கிறான் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். 
                                                
அல்லாஹ் கூறுகிறான்: 
 هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَـبَّارُ الْمُتَكَبِّرُ‌ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ 
 هُوَ اللّٰهُ الْخَـالِـقُ الْبَارِئُ الْمُصَوِّرُ‌ لَـهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى‌ يُسَبِّحُ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ 
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். அவன்தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் - அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன் : 59:23,24) 
                                                
இமாம் அபூ ஹனீஃபா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 
அல்லாஹ் தனது வேதத்தில் கூறியதைப்போன்று அவனுக்கு கைகளும், முகமும், உயிரும் உள்ளது அல்லாஹ் கூறிய கைகளும், முகமும், நஃப்ஸும் அவனுக்குரிய பண்புகளாகும். அதனை எப்படி என்று கேட்கக் கூடாது. அவனது கை என்பதற்கு ஆற்றல் என்றோ, அருள் என்றோ கூறக் கூடாது. அவ்வாறு கூறுவது அல்லாஹ்வின் பண்பை பாதிலாக்குவதாகும். இன்னும் முஃதஸிலாக்களும், கத்ரியாக்களும் தான் இவ்வாறு கூறுவார்கள். 
நூல்: அல்ஃபிகுஹுல் அக்பர் ஷாமிலா, மின்னனு நூலகம், பக்கம் -27, மாஹின் பிரிண்டர் வெளியீடு பக்கம் -44. 
                                                
அவ்வாறே அல்லாஹ் தன்னைப் பற்றி கூறும் போது: 
 اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى 
அர்ரஹ்மான் அர்ஷின் மேல் உயர்ந்தான். (அல்குர்ஆன் : 20:5) 
                                                
அல்லாஹ் அர்ஷின் மேல் எப்படி உயர்ந்தான் என்று தெரியாது. குர்ஆனில் கூறப்பட்டவாறு நம்ப வேண்டும். 

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் அல்லாஹ் அர்ஷின் மேல் எப்படி இருக்கிறான் என ஒருவர் கேட்டார். அதற்கு இமாமவர்கள் அல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்திருக்கிறான் என்பது அறியப்பட்ட விஷயம். எப்படி உயர்ந்திருக்கிறான் என்பது அறியப்படாத விஷயம். அது பற்றி கேள்வி கேட்பது பித்அத்தாகும், அதனை நம்பிக்கை கொள்வது கட்டாயமாகும் என்றார்கள். உன்னை ஒரு பித்அத்வாதியாகக் கருதுகிறேன் என்று கூறி பின்னர் அவனை அந்த அவையில் இருந்து வெளியேற்ற கட்டளையிட்டார் அதன் அடிப்படையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டான். நூல்: ஹில்யதுல் அவ்லியா பாகம் -6, பக்கம் -325. 
                                                
அல்லாஹ்வுடைய தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அழகிய பெயர்களையும், பண்புகளையும் எப்படி ஸஹாபாக்களுக்கு கற்றுக்கொடுத்தார்களோ அதே அடிப்படையில் தான் ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும். இதை விடுத்து உவமானங்கள் கூறக்கூடாது. 

இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய முஃதஸிலாக்கள் மற்றும் ஜஹ்மிய்யாக்கள் என்போர் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளுக்கு தங்களுடைய பகுத்தறிவிற்கேற்ப விளக்கம் கொடுத்து மனித சிந்தனைக்கேற்ப புரிந்து கொள்ள முற்பட்டதன் காரணமாக பெரும் சீர்கேட்டை விளைவித்தார்கள். எனவே இவர்களை வழிகேடர்களாக, இமாம்கள் அடையாளம் காட்டினார்கள். மேன்மையும் மகத்துவமுமிக்க அல்லாஹ் தன்னுடைய பெயர்களை சிதைப்பதை வன்மையாக கண்டிக்கிறான். 
                                                
 وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا‌ وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اَسْمَآٮِٕهٖ‌  سَيُجْزَوْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ 
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள் (அல்குர்ஆன் : 7:180) 
                                                
அழகிய பெயர்களுக்கும் பண்புகளுக்கும் உரிய இரட்சகனான அல்லாஹ் தனக்கு ஒப்பாக எதுவுமில்லை என்று தெளிவாக கூறிய பிறகும் பகுத்தறிவைக் கொண்டு புரிந்து கொள்ள முனைவது வழிகேட்டைத் தவிர வேறில்லை. 
                                                
  لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ 
அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (அல்குர்ஆன் : 42:11) 
                                                
 وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ 
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (அல்குர்ஆன் : 112:4) 
                                                
இக்குர்ஆன் வசனங்களை ‌நன்கு புரிந்து கொண்டு அல்லாஹ்வை தூய்மைப்படுத்த வேண்டும். 

வழிகெட்ட கொள்கையைச் சார்ந்த சில பிரிவினர்கள் இப்பண்புகளை திரித்து, வழிகேடான கொள்கையை மக்கள் மத்தியில் புகுத்தினார்கள். அத்தகைய கருத்துக்கள் இன்றும் மக்களிடம் உள்ளன. அவையாவும் தவறான கருத்துக்களாகும். அல்லாஹ்வை, அவனது தூதர் (ஸல்) அவர்களும் வர்ணித்ததைப் போன்று வர்ணித்து வழிகெட்ட கருத்துகளில் இருந்து விலகிக்கொள்வோமாக. 
                           
 - உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி 
                                                
Previous Post Next Post