மனைவியரிடம் கடுமை காட்டும் கணவர்கள்

பண்பாட்டிலும் செயல்பாட்டிலும் நல்லவர்களாக இருப்பவர்களில் சிலர், குறிப்பிடத்தக்க தவறுகளை செய்கிறார்கள். அப்படிபட்ட தவறுகளை இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். 

இந்தத் தொடரில் இதுவரை பார்த்த தலைப்புகள்: வீட்டோடு மாப்பிள்ளை, பெண்கள் ஆடை - கவனம் தேவை, மார்க்க விஷயத்தில் சச்சரவு, பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காத பெற்றோர், பெண்ணுக்கு சொத்தில் பங்கில்லையா?.

இந்த மாத தொடரில் மனைவியரிடம் அவசியமின்றி கடுமை காட்டும் கணவர்மார்கள் குறித்து பார்ப்போம். 

அதிகம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடக்கூடிய, நபிவழியை அக்கறையுடன் பேணி நடக்கக் கூடிய சிலரும் கூட மனைவிமாரிடம் தேவையில்லாமல் இறுக்கத்துடனும் கடுமையுடனும் நடந்து கொள்கிறார்கள். இவர்கள் நல்லவர்களாக இருந்தும்கூட தவறான புரிதல் காரணமாகவே இவ்வாறு நடக்கிறார்கள். 

       அதாவது திரு குர்ஆனில் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிப்பவர்கள் என்று சொல்லப்படுவதை தவறான புரிதலால் தவறான முறையில் செயல் படுத்துவதாக தோன்றுகிறது. அந்த வசனம் : 

       ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாவர் ஏனெனில் அவர்களில் ஒருவரை விட ஒருவரை மேன்மைப் படுத்தியிருப்பதாலும் அவர்கள் தங்களின் செல்வங்களிலிருந்து (பெண்களுக்காக) செலவு செய்வதாலுமாகும். (அல்குர்ஆன் 4:34)        இந்த வசனத்தில் ஆண்களுக்கு இயற்கையாகவே  பெண்களை விட கூடுதல் சிறப்பு வழங்கப்பட்டிருப்பது, பெண்களின் தேவைகளுக்காக தங்கள் செல்வத்தை செலவழிப்பது ஆகிய இரண்டு காரணங்களால் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிப்பவர்கள் என்று அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். 

       மனைவிக்கு தானே நிர்வாகி, தானே அவளுக்காக செலவு செய்பவன் என்பதால், தான் கட்டளையிட வேண்டியவன் அவளை அடக்கி வைத்திருக்க வேண்டியவன் அவள் எந்நிலையிலும் தனக்கு மாற்றுக் கருத்துச் சொல்லாமல் அடங்கி நடக்க வேண்டியவள் என்ற மனோ நிலையிலேயே உறவாடுவதால் இப்படிப் பட்டவர்கள் தங்களின் மனைவியருடன் இறு க்கத்துடனும் கடுமையுடனும் நடந்து கொள்கிறார்கள். ஆனால் அல்லாஹு தஆலா ஆண்கள் நிர்வாகிகள் என்றால் இவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தில் சொல்லவில்லை. வேறு எப்படி? 

இன்னும் (மனைவியராகிய) அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம். (அல் குர்ஆன் 4:19)  

மனைவியரிடம் வெறுக்கத்தக்க விஷயம் எதுவும் இருந்தாலும் வேறு நன்மையான பல விஷயங்கள் இருக்கும் என்பதை நினைவூட்டி அவர்களிடம் நல்ல முறையில்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்த வசனம் வலியுறுத்துகிறது. 

மனைவி வெறுப்பேற்றும் விதமாக நடக்கும்போது கூட கனிவுடன் நடக்கும்படி இறை வசனம் வழிகாட்டுகிறது. இப்படி இருக்கும் போது சாதாரண நிலையிலேயே கடுமையாக நடந்து கொள்வது முறையாகுமா? 

இப்படிப்பட்டவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கணவன் தான் மனைவிக்கு நிர்வாகி என்றாலும் தான் ஒரு எஜமானைப் போல நடந்து கொள்ளக் கூடாது. தன் வாழ்க்கை இணையர் என்ற உணர்வுடன் தோழியைப் போல் நடத்த வேண்டும். 

இதற்கு நபி ஸல் அவர்களின் வாழ்க்கையில் முன்மாதிரி உள்ளது. பிரயானத்தின் போது நபி (ஸல்) அவர்களின் மனைவி சஃபிய்யா (ரலி) அவர்களுக்கு ஒட்டகத்தில் ஏறி அமருவது சிரமமாக இருந்தது. அப்போது நபியவர்கள் ஒட்டகத்தின் அருகே அமர்ந்து தம் முழங்காலை வைத்தார்கள். நபி (ஸல்) அவர்களின் முழங்காலின் மீது தம் காலை வைத்து சஃபிய்யா (ரலி) (ஒட்டகத்தில்) ஏறினார்கள். (நூல்: புகாரி 2893)

மதிப்புக்குரிய ஒருவரின் முலங்கால் மீது கால் வைத்து யாரும் இப்படி ஏற முடியாது. அவர் நபியாக இருந்தால் அறவே முடியாது. ஆனால் அதுவே மனைவி என்றால் அது ஒரு குறை அல்ல.     

இதிலிருந்து என்ன தெரிகிறது? ஓர் ஆண்மகன் தன் மனைவியிடம் கௌரவம் பார்க்கவே கூடாது என்று தெரிகிறது.

கௌரவம் பார்க்கும் போதுதான் மனைவி கூறும் மாற்றுக் கருத்தை கூட சகித்துக்கொள்ள முடியாத மனோ நிலை ஏற்படும். 

மாற்றுக் கருத்து சொல்லக் கூடாதா?

மனைவி, தான் சொல்வதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். மாற்றுக்கருத்தோ ஆலோசனையோ சொல்லக்கூடாது என்ற மனோபாவத்துடன் பல கணவன்மார்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். தனக்கு ஆலோசனையோ மாற்றுக் கருத்தோ சொல்லிவிடக் கூடாது என்பதற்க்காகவே எப்போதும் கடுமையாகவும் இறுக்கத்துடனும் நடந்து கொள்கிறார்கள். 

இவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் மனைவியரும் கூட நபியவர்களுடன் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

  உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: குறைஷிக் குலத்தாராகிய நாங்கள் (மக்காவில் இருந்தபோது) பெண்கள் மீது கடுமை மிகைத்தவர்களாகேவ இருந்துவந்தோம். (எங்கைள எதிர்த்துப் பேசாத அளவிற்கு அவர்கைள அடக்கிவைத்திருந்தோம்.) நாங்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவிற்கு வந்தபோது, அங்கு ஒரு சமுதாயதைக் கண்டோம். அங்கு ஆண்கைளப் பெண்கள் மிகைக்கக்கூடியவர்களாக இருந்தனர். இதை எங்களுடைய பெண்களும் அப்பெண்களிடமிருந்து கற்றுக்கொள்ளத் தொடங்கினர். எனது வீடு (மதீனாவின்) மேட்டுப் பகுதி கிராமங்களில் பனூ உமய்யா பின் ஜைஸத் குலத்தாரிடையே இருந்தது. (ஒரு நாள்) நான் என் மனைவி மீது கோபப்பட்டேன். அவள் என்னை எதிர்த்துப் பேசினார். அவர் என்னை எதிர்த்துப் பேசிய(து எனக்குப் பிடிக்கவில்லை; அ)தை நான் வெறுத்தேன். அப்போது அவள், "நான் உங்கைள எதிர்த்துப் பேசியதற்காக நீங்கள் ஏன் (என்னை) வெறுக்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களுடைய துணைவியர்கூட (நபிகளாரின் பேச்சுக்கு) மறுபேச்சு பேசத்தான் செய்கிறார்கள். அவர்களில் சிலர் நபியவர்களிடம் பகலில் இருந்து இரவு வரை பேசுவதில்லை'' என்று கூறினார். உடேன நான் அங்கிருந்து புறப்பட்டு (என் புதல்வி) ஹஃப்ஸாவிடம் சென்று, "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பேச்சுக்கு மறுபேச்சு பேசுகிறீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா "ஆம்' என்று பதிலளித்தார். நான் "உங்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம் பகலில் இருந்து இரவு வரை கோபமாக இருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். அதற்கும் ஹஃப்ஸா "ஆம்' என்றார். நான், "அவர்களில் இப்படிச் செய்தவர் நஷ்டமைடந்துவிட்டார்; இழப்புக்குள்ளாகிவிட்டார். உங்களில் ஒருவர்மீது இறைத்தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அவர்மீது அல்லாஹ்வும் கோபமைடந்துவிடுவான் எனும் அச்சம் அவருக்கில்லையா? அவ்வாறாயின் அவர் அழிந்துபோய்விடுவார். (எனவே)அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கைள நீ எதிர்த்துப் பேசாதே! அவர்களிடம் (அதிகமாக உன் தேவைகள்) எதையும் கேட்டுக்கொண்டிராதே! உனக்கு (அவசியத் தேவைவெயனத்) தோன்றியதை என்னிடம் கேள். உன் அண்டை வீட்டுக்காரர் (ஆயிஷா) உன்னை விட அழகு மிக்கவராகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரியமானவராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் நடந்துகொள்வைதப் பார்த்து) நீ ஏமாந்து போய் (அவரைப் போல நடந்துகொள்ளத் துணிந்து) விடாதே!'' என்று நான் (என் மகளுக்கு அறிவுரை) கூறினேன். பிறகு நபியிடம் சென்று  "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிக் குலத்தாராகிய நாங்கள் பெண்கைள அடக்கிவைத்திருந்தோம். நாங்கள் மதீனாவுக்கு வந்த போது, ஆண்கள் மீது பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டத்தாரை (அன்சாரிகைள)க் கண்டோம். எங்கள் பெண்களும் அப்பெண்கைளப் பார்த்து (ஆண்கைள எதிர்த்துப் பேசும் பழக்கத்தைக்) கற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். நான் ஒரு நாள் என் மனைவி மீது கோபம் கொண்டேன். அவர் அப்போது என்னை எதிர்த்துப் பேசிக் கொண்டிருந்தார். அவர் என்னிடம் எதிர்த்துப் பேசிய(தை நான் விரும்பவில்லை; அ)தை நான் வெறுத்தேன். அப்போது அவர், "நான் உங்கைள எதிர்த்துப் பேசுவதை வெறுக்கிறர்கேள! அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களின் துணைவியரும்கூட நபியவர்களின் பேச்சுக்கு மறுபேச்சு பேசத்தானே செய்கின்றனர். அவர்களில் ஒருவர் நபியவர்களுடன் கோபித்துக்கொண்டு அன்றைய தினத்தில் இரவு வரை பேசுவதில்லை'' என்று கூறினார். நான் "அவர்களில் இப்படிச் செய்தவர் நஷ்டமைடந்துவிட்டார்; இழப்புக்குள்ளாகிவிட்டார். அவர்களில் ஒருவர்மீது இறைத்தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அவர்மீது அல்லாஹ்வும் கோபமைடந்து விடுவான் எனும் அச்சம் அவருக்கில்லையா? அவ்வாறாயின் அவர் அழிந்துபோய்விடுவார் என்று சொன்னேன்'' என்று கூறினேன். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். பிறகு நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று, "உன் அண்டை வீட்டுக்காரர் (ஆயிஷா) உன்னைவிட அழகானவராகவும் அல்லாஹ்வின் தூதருக்குப் பிரியமான வராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வைதக் கண்டு) நீ ஏமாந்துவிடாதே!'' என்று கூறியைதச் சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னொரு முறை புன்னைகத்தார்கள்.  (முஸ்லிம்:2948,)

      இந்த ஹதீஸின் படி நபித்தோழர்களின் மனைவியர் தங்களின் கணவர்மார்களிடம் மாற்றுக் கருத்து கூறியுள்ளார்கள் என்பது மட்டுமின்றி நபியின் மனைவியரும் கூட நபியிடம் மாற்றுக்கருத்து கூறியிருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. 

     ஆனால் நம்மில் பலரும் தங்களின் மனைவியர் தங்களிடம் மாற்றுக் கருத்து சொல்லக்கூடாது, தங்களுக்கு ஆலோசனை சொல்லக்கூடாது என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நினைப்பினாலேயே மனைவியரோடு தேவையில்லாமல் பிரச்னையை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

       நபி (ஸல்) அவர்களுக்கே அவர்களின் துணைவியர் ஆலோசனை கூறிய சம்பவம் ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

      நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் ஹுதைபியா உடன்படிக்கைக்குப் பின் மக்காவுக்கு சென்று உம்ரா செய்யாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்ப்பட்டது. அதனால் நபியவர்கள் தம் தோழர்களை நோக்கி, குர்பானி கொடுத்து விட்டு தலைமுடி களைந்து  கொள்ளுங்கள் என்றார்கள். இவ்வாறு மூன்று முறை நபியவர்கள் உத்தரவிட்டும் யாரும் எழுந்து செல்லாத காரணத்தால் தம் துணைவி உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்று விஷயத்தை சொன்னார்கள். அப்போது உம்மு சலமா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து முடியை களைந்து கொள்ளுங்கள். யாருடனும் ஒரு  வார்த்தையும் பேசாதீர்கள் என்று ஆலோசனை கூறினார்கள். 

நபியவர்கள் அவ்வாறு செய்ததை பார்த்த நபித்தோழர்களும் அதனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். (புகாரி 2731) 

      அல்லாஹ்வின் தூதரே தம் மனைவியின் ஆலோசனையை கேட்டு செயல்பட்டுள்ளார்கள் எனும்போது மற்றவர்கள் முடியாது என்று சொல்ல முடியுமா?

இதேபோல் இன்னும் சில தவறுகளும் உள்ளன. அவற்றில் ஒன்று மனைவியின் சிரமமான வேலைகளில் கணவன் ஒத்தாசை செய்யாமலிருப்பது. மனைவி சமையலறையில் வேலையில் இருக்கும்போது தொட்டிலில் தூங்கும் குழந்தை விழித்து அழுதால் கணவன் தொட்டிலை ஆட்டிவிட வேண்டும். அல்லது பிள்ளையை தூக்கி அமைதிப்படுத்த வேண்டும்.

இதில் ஏதேனும் ஒன்றைச் செய்ய வாய்ப்பிருந்தும் எதுவும் செய்யாமல் எனக்கென்னவென்று சும்மா இருந்தால் இதுவும் ஒரு குற்றம்தான்!
தான் இப்படி வேலையில் இருக்கும்போதுகூட கணவர் உதவி செய்யாமல் இருக்கிறாரே என்று மனைவி வேதனைப்படமாட்டாளா?

நபியின் நடைமுறை

நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இருக்கும்போது வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி, ஒத்தாசை செய்வார்கள்.

அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்துவந்தார்கள்?” என்று நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை -அதாவது தம் குடும்பத்தாருக்கான பணிகளை- செய்துவந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் (வேலைகளை விட்டுவிட்டு) தொழுகைக்குப் புறப்பட்டுவிடுவார்கள்”என்று பதிலளித்தார்கள். (புகாரி - 676)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகப்பெரிய அளவிலான நிலப்பரப்பை ஆட்சி செய்துகொண்டிருந்த நிலையில்தான் மேற்கண்டவாறு நடந்திருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எரிந்து விழுதல்

சிறிய அளவிலான குற்றங்குறைகள் நிகழ்வது மனித இயல்பு. அதையெல்லாம் அனுசரித்துச் சென்றால்தான் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

உணவில் உப்பு கூடி விடுவது, அல்லது,குறைந்து விடுவது போன்ற குறைகளுக்காகக் கூட மனைவியைக்கடுமையாய்த் திட்டும் கணவன்மார்கள் நிறைய இருக்கிறார்கள்.
மனைவி தனக்கு எப்போதும் பயப்பட வேண்டும் என்ற தவறான சிந்தனையினால் எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் கணவர்களும் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் மனைவியிடம் தவறுதலாக ஏற்படும் குறைகள், பிள்ளைகள் செய்யும் தவறுகள் போன்றவற்றுக்காக மனைவிமீது அனலை கக்குவார்கள்.
சில கணவன்மார்கள் தாம் தொழில் செய்யும் இடத்தில் ஏற்படும் கோபதாபங்களை வீட்டில் மனைவி, பிள்ளைகளிடம் காட்டுவார்கள்.இப்படிப்பட்டவர்கள் தங்களின் நிம்மதியைக் கெடுத்துக்கொள்வதுடன் மனைவி மக்களின் நிம்மதியையும் கெடுத்து விடுவார்கள்.

"அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இல்லங்களை அமைதித் தளமாக ஏற்படுத்தியுள்ளான்" (அல்குர்ஆன் 16:80) என்று கூறி அல்லாஹ் ஏற்படுத்தித் தந்துள்ள அமைதியை தங்களின் தவறான போக்கினால் கெடுத்துக்கொள்கிறார்கள்.

அதிகமாக எரிந்துவிழுபவர்கள் என்றால்,அதிகமாக குறை கூறுபவர்கள் என்பதுதான் அதன் அர்த்தம். இவ்வாறு குறைகூறிக்கொண்டே இருப்பவர்கள் பற்றி அல்லாஹ் கூறுவது: "குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்"(அல்குர்ஆன் 104:1) இவ்வாறு அல்லாஹ்வின் கடும் எச்சரிக்கைக்கு தகுதியானவர்களாக இந்த எரிந்து விழும் கணவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து தம்மைத் திருத்திக் கொள்ளவேண்டும்.

அதிகமான கட்டுப்பாடுகள்

சில நல்ல கணவன்மார்களும் செய்யும் தவறுகளில், மனைவியரிடம் காட்டும் அதிகப்படியான கட்டுப்பாடுகளும் குறிப்பிடத் தக்கவையாக உள்ளன.
மனைவி, தனது தாய்-தந்தைக்கு உதவி ஒத்தாசை செய்வதையும் அவள் தன் சொந்த பந்தங்களோடு உறவாடுவதையும் சில கணவன்மார்கள் தடுக்கிறார்கள்.

மனைவியானவள் தன் வீட்டின் பொறுப்புகளை நிறைவேற்றிவிட்டு தாராளமாக தனது பெற்றோருக்கும் சொந்த பந்தங்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்யலாம்.
தகுந்த காரணமின்றி இவ்வாறு தடை செய்தால் ரத்த உறவை அரவணைப்பதை தடுத்த குற்றம் ஏற்படும். அத்துடன் மனைவியை மன வேதனைக்கு உள்ளாக்கிய குறையும் சேரும்!

இந்த விஷயத்தை ஒரு உதாரணத்துக்காகத்தான் குறிப்பிடுகிறேன்.
எந்த விஷயமானாலும் மனைவி தனக்கு அனுமதிக்கப்பட்டதை செய்ய வேண்டும் என்று விரும்பும்போது கணவன் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டும் மனோபாவத்துடன் -நியாயமான காரணமின்றி- தடுக்க முனைவது பெரிய குறையாகும்.

பெண்ணைப் பொறுத்தவரை அவள் வீட்டில் தொழுவதே சிறப்பு என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்றால் தடுக்க வேண்டாம் என்றும் ஆண்களுக்கு கூறியது போன்ற வழிகாட்டலை நினைவில் கொள்ள வேண்டும்.

ஹதீஸ்

பெண்கள் பள்ளிவாசல்களுக்கு செல்வதைத் தடுக்காதீர்கள்! அவர்களின் வீடுகளே அவர்களுக்கு சிறந்தது. (அபூதாவூத்)

பெண்கள் அந்நிய ஆணின் பார்வையில் இருந்தும் அவசியமற்ற தொடர்புகளில் இருந்தும் விலகி இருக்க வேண்டும். இது நம் சத்திய மார்க்கம் நமக்கு கற்றுத் தந்துள்ள சிறப்பான வழிமுறை.

இதைப் பின்பற்றும் எண்ணத்தில் மனைவிமீது அளவுக்கதிகமான கெடுபிடிகள் செய்வது சில கணவன்மார்களின் குறையாக உள்ளது.மனைவி நிற்பது, நடப்பது, பேசுவது ஆகிய எல்லா நிலையிலும் அவசியம் என்று குறைகூறி வெறுப்பேற்றுவது முறையல்ல.

நடைமுறையிலும், உடைமுறையிலும் மார்க்கத்தின் வழி காட்டுதலில் மனைவி பேணுகிறார் என்றால் அல்ஹம்துலில்லாஹ். குறைகள் காணப்பட்டால் தெளிவாகப் பேசி சரி செய்ய வேண்டும்.

இதற்கு மாற்றமாக மனைவியின் ஒவ்வொரு நிலையிலும் சந்தேகத்தை வெளிப்படுத்தும் விதத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்துவது குடும்பத்தின் நிம்மதியை குலைத்துவிடும்!

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:இறைநம்பிக்கை கொண்டோரே சந்தேகமான பல எண்ணங்களிலிருந்து விலகிக்கொள்ளுங்கள்; ஏனெனில்,நிச்சயமாக எண்ணங்களில் சில பாவமாகும். (பிறர் குறைகளை) துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள்! (49:12) 

இதுபோன்ற திருக்குர்ஆன் வழிகாட்டுதலை பேணி நடக்க வேண்டும்.


மனைவியின் கோபம்

தனக்கு அடங்கி நடப்பது மட்டுமே மனைவியின் கடமை என்ற ஒரே மனநிலையில் இருக்கும் சில கணவர்கள் அவள் தனது கோபத்தையோ ஆட்சேபணையையோ தன்னிடம் வெளிப்படுத்தக் கூடாது என்று நினைக்கிறார்கள். இந்த நினைப்பு தவறானது.

அகில மக்களின் தலைவரும் வழிகாட்டியுமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமே அவர்களின் துணைவி கோபத்தை வெளிப்படுத்திய நிகழ்வை எல்லாம் ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என்மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்”என்று கூறினார்கள். அதற்கு நான், ‘‘எப்படி நீங்கள் அறிந்துகொள்வீர்கள்?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், ‘‘என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), ‘இல்லை; முஹம்மதுடைய அதிபதிமீது சத்தியமாக’ என்று கூறுவாய்! என்மீது கோபமாய் இருந்தால், ‘இல்லை; இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அதிபதிமீது சத்தியமாக’ என்று கூறுவாய்” என்று சொன்னார்கள்.

நான், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்), அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களது பெயரைத்தான் கோபித்துக்கொள்வேன். (தங்கள்மீதன்று)” என்று கூறினேன்.(புகாரி - 5228)

இந்த ஹதீஸ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதான கோபத்தை அவர்களின் துணைவியர் பேச்சில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நபியவர்களும் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். இப்படி இருக்கும்போது மற்றவர்கள் மறுக்க முடியுமா?

ஆக மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யும் நல்ல கணவர்களும்கூட குடும்ப வாழ்வில் சில தவறுகளைச் செய்கிறார்கள். அதில் திருத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இதனை எழுதியுள்ளேன்.

என்னால் இயன்றவரை உங்களின் சீர்திருத்தத்தைத் தவிர வேறெதையும் நான் நாடவில்லை. மேலும் நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை. அவனிடமே பொறுப்பு கொடுத்து இருக்கிறேன்; மேலும் அவனிடமே மீளுகிறேன். (அல்குர்ஆன் 11:88)

-அப்துர் ரஹ்மான் மன்பஈ
Previous Post Next Post