அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா?

- அஷ்ஷெய்க் இஸ்மாயில் ஸலபி

அல் குர்ஆன், ஸுன்னா இரண்டுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். இவை இரண்டும் அல்லாஹ்விடமிருந்து வந்த வேத வெளிப்பாடு (வஹி)யாகும். இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கும் போது அவற்றுக்கிடையே முரண்பாடிருக்க வாய்ப்பேயில்லை. முரண்பாடு இருப்பதாகத் தோன்றினால் நாம் புரிந்து கொண்டதில்தான் எங்கோ தவறு விட்டிருப்போமே தவிர குர்ஆனிலோ, ஸஹீஹான ஹதீஸிலோ எந்தக் குறைபாடும் இருக்காது. இருக்க வாய்ப்பும் இல்லை. இதுதான் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.

சில வழிகெட்ட பிரிவினர் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி பல ஹதீஸ்களை மறுத்தனர். இதனை அந்தந்தக் காலத்தில் வாழ்ந்த நல்லறிஞர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அதே நேரம் மறுக்கவும் செய்தனர்.

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஆதாரபூர்வமான ஹதீஸை முஃதஸிலாக்கள் எனும் வழிகேடர்கள் மறுத்தனர். நவீன காலத்தில் அபூரய்யா எனும் வழிகேடனும் அவனது சிந்தனையால் தாக்கப்பட்ட சில சிந்தனையாளர்களும் இந்த தவறான வழிமுறையைக் கையாண்டு பல ஹதீஸ்களை மறுத்து வருகின்றனர்.

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸை முஃதஸிலாக்கள் மறுக்கும் போது “நீங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரைப் பின்பற்றுகின்றீர்கள் என்று அநியாயக்காரர்கள் கூறுகின்றனர்” (25:8)

என்ற வசனத்தை ஆதாரமாகக் காட்டினர். அநியாயக்காரர்கள்தான் நபி(ஸல்) அவர்களைச் சூனியம் செய்யப்பட்டவர் என்று கூறினர். எனவே, நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸை ஏற்க முடியாது என்றனர்.

வழிகேடர்களான முஃதஸிலாக்கள் இப்படிக் கூறினாலும் நல்ல வழி நடந்த நல்லறிஞர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு இந்த ஆயத்தும், ஹதீஸும் முரண்படுவதாகத் தென்படவும் இல்லை.

“அவர்களின் உள்ளங்கள் பொடுபோக்காக இருக்கின்றன. “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லையல்லவா? நீங்கள் பார்த்துக் கொண்டே சூனியத்திடம் செல்கிறீர்களா?” என்று அநியாயம் செய்தோர், தமக்குள் இரகசியமாகப் பேசிக்கொண்டனர்.” (21:3)

இங்கே அநியாயங்கள் நபி(ஸல்) அவர்களை உங்களைப் போன்ற மனிதர் என்று கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான். நபி(ஸல்) அவர்கள் எம்மைப் போன்ற மனிதர்தான் என்பதைக் குர்ஆன் பல இடங்களில் உறுதி செய்கின்றது.

“நான் உங்களைப் போன்ற மனிதன்தான். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியான உங்கள் இரட்சகன் ஒருவனே என்று எனக்கு (வஹி) அறிவிக்கப்படுகிறது என (நபியே) நீர் கூறுவீராக (18:110)

“நான் உங்களைப் போன்ற மனிதர்தான். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியான உங்கள் இரட்சகன் ஒரே ஒருவன்தான் என்று எனக்கு வஹி அறிவிக்கப்படுகிறது என (நபியே!) நீர் கூறுவீராக!” (41:6)

அநியாயக்காரர்கள் நபி(ஸல்) அவர்களை மனிதர் என்று கூறினார்கள் என்பதற்காக நபி(ஸல்) அவர்களை மனிதன் என்று கூறும் அனைவரும் அநியாயக்காரர்களாகிவிடுவார்களா? இந்தக் காபிர்கள் நபி(ஸல்) அவர்களைப் பார்த்து மனிதர் என்று கூறிய கூற்று சரியானது. ஆனால் அவரது தூதுத்துவத்தை மறுப்பதற்காகவே இப்படிக் கூறினர். எனவே தண்டிக்கப்படுகின்றனர். இது போன்ற வசன அமைப்புக்களைக் குர்ஆனில் பல இடங்களில் காணலாம்.

மக்கத்து இணைவைப்பாளர்களில் சிலர் கழா கத்ரை தமது இணை வைப்புக்குச் சாதகமான ஆயுதமாகப் பயன்படுத்தினர். அல்லாஹ் நடியிருந்தால் நாம் இணைவைத்திருக்க மாட்டோம். ஹலாலானவற்றை ஹராமாக்கியிருக்கமாட்டோம் என்று கூறினர். அவர்கள் கூறிய கூற்று சரியானதே! அல்லாஹ் நாடியிருந்தால் இணைவைத்திருக்க மாட்டார்கள். எனினும் இந்த வார்த்தையைத் தவறான நோக்கத்தில் அவர்கள் பயன்படுத்தியதால் அவர்களைக் குர்ஆன் பொய்யர்கள் என்கின்றது.

“அல்லாஹ் நாடியிருந்தால் நாமோ, நமது மூதாதையர்களோ இணைவைத்திருக்கமாட்டோம். (ஆகுமான) எதையும் விலக்கியிருக்கவும் மாட்டோம்” என்று இணைவைத்தோர் கூறுவர். இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தோரும் நமது தண்டனையை சுவைக்கின்ற வரை பொய்ப்பித்துக் கொண்டேயிருந்தனர். “உங்களிடம் ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா? (இருந்தால்) அதை எமக்கு வெளிப்படுத்துங்கள். நீங்கள் வெறும் யூகத்தையே பின்பற்றுகின்றீர்கள். நீங்கள் கற்பனை செய்வோரேயன்றி வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (6:148)

நபி(ஸல்) அவர்கள் குறித்து அந்த அநியாயக்காரர்கள் சூனியம் செய்யப்பட்டவர் என்று சொன்னார்கள். இதன் மூலம் நபி(ஸல்) அவர்களது தூதுத்துவத்தை முழுமையாக நிராகரித்து சூனியம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டதனால் உளறிய உளறலாக அவர்களது போதனையைச் சித்தரிக்க முற்படுகின்றனர். அவர்களது அந்தக் கூற்றுக்கும் ஹதீஸ் சொல்லும் செய்திக்கும் சம்பந்தமே இல்லை. எனவேதான் புஹாரி, முஸ்லிம் போன்ற பெரும் பெரும் மேதைகளுக்கெல்லாம் இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவதாகத் தென்படவில்லை.

ஒரு ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவது போல் தென்பட்டால் அவற்றுக்கிடையே இணக்கம் காண வேண்டும். இணக்கம் காண முடியாவிட்டால் இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளன. இரண்டையும் நான் நம்புகின்றேன் என்று ஈமான் கொள்ள வேண்டும். இவற்றுக்கிடையே முரண்பாடு இல்லை. இருந்தாலும் நான் புரிந்து கொண்டதில்தான் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது என்று எண்ணி மௌனம் காக்க வேண்டும்.

இந்த உண்மையைத் தெளிவாக விளக்குவதற்காக நாம் குர்ஆனிலிருந்து சுமார் 10 உதாரணங்களை உங்கள் முன் வைக்கின்றோம். ஏனெனில் குர்ஆனில் எந்த முரண்பாடும் இல்லை என்பதில் எல்லளவும் சந்தேகமில்லை.

“இந்தக் குர்ஆனை அவர்கள் சிந்தித்துணர வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் அவர்கள் இதில் அதிகமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்” (4:82)

குர்ஆனில் சில வசனங்கள் மற்றும் சில வசனங்களுடன் முரண்படுவது போல் தென்படலாம். ஆனால் அதில் எந்த முரண்பாடும் இருக்காது. இருக்கவும் முடியாது. முரண்படுவதாகத் தோன்றினாலும் புரிந்து கொண்டதில்தான் தவறு ஏற்பட்டிருக்கும். எமக்கு முரண்பாட்டைக் களைய முடியாவிட்டாலும் இரண்டும் உண்மை என்று ஈமான் கொள்ள வேண்டும்.

குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை மறுக்கும் இந்தப் போக்கு ஆபத்தானதாகும். இந்த சிந்தனை முற்றிப் போனால் ஈற்றில் இதே அணுகுமுறையில் குர்ஆனையும் அணுகி குர்ஆனையும் நிராகரிக்கும் அல்லது முழுமையாக நம்பாத நிலை ஏற்படும். பெரிய சிந்தனைச் சிக்கலில் மூழ்க நேரிடும். (நஊதுபில்லாஹ்)

இன்று தவ்ஹீத் வட்டாரத்தில் பாமர மக்கள் கூட இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது. அந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்று வாய் கூசாமல் கூறிவருகின்றனர். முரண்பாடுகளைக் களைந்து இணக்கம் காண்பதென்பது துறைசார்ந்த அறிஞர்களுக்கே உரிய பணியாகும். இந்த சிந்தனையைப் பரப்புகின்றவர்கள் அளவுகோளைக் கூறிவிட்டோம் அதற்குப் பின்னர் நீங்கள் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் எனப் பாமர மக்களது கரங்களில் இந்தத் தவறான அளவு கோளைக் கொடுத்தவர்கள் நீச்சல் தெரியாதவனை ஆழ் கடலில் தள்ளிய துரோகத்தைச் செய்துள்ளனர். இது கரையேற முடியாத கடல் போன்ற ஆழமான அம்சம் என்பதைப் பாமரர்களும் புரிந்து கொள்ள இந்தப் பத்து உதாரணங்களும் உதவும் என்று நம்புகின்றேன்.

01. மறுமையில் காபிருக்கு பார்வை உண்டா?
“மறுமை நாளில் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் தமது முகங்களால் (நடந்து வருபவர்களாகவும் அவர்களை)  நாம் ஒன்று சேர்ப்போம்” (17:97)

இந்த வசனம் வழிகேடர்கள் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் எழுப்பப்படுவார்கள் என்பதை உறுதி செய்கின்றது. மார்க்கப் போதனைகளை புறக்கணித்தவர்கள் குருடர்களாக எழுப்பப்படுவார்கள் என்பதைப் பின்வரும் வசனம் உறுதி செய்கின்றது.

இந்த வசனங்களைப் பார்க்கும் போது காபிர்கள், வழிகேடர்கள், வேத போதனையைப் புறக்கணித்தவர்கள், குருடர்களாக எழுப்பப்படுவார்கள் என்பது உறுதியாகின்றது. ஆனால், மற்றும் பல வசனங்கள் மறுமையில் காபிர்கள் பார்ப்பார்கள் என்று கூறுகின்றது.

“குற்றவாளிகள் நரகத்தைப் பார்த்து, “நிச்சயமாக தாம் இதில் விழக்கூடியவர்களே என்பதை அறிந்து கொள்வர். அதை விட்டும் தப்பித்துக்கொள்ளும் எந்த இடத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.” (18:53)

குற்றவாளிகள் நரகத்தைப் பார்ப்பார்கள் என இந்த வசனம் கூறுகின்றது.

“மேலும், பதிவேடு (அவர்கள் முன்) வைக்கப்படும். அதில் உள்ளவற்றினால் அஞ்சியவர்களாக குற்றவாளிகளை நீர் காண்பீர். இன்னும் அவர்கள், “எமக்கு ஏற்பட்ட கேடே! இப்பதிவேட்டிற்கு என்ன ஆனது! (எங்கள் செயல்களில்) சிறியதையோ, பெரியதையோ அது பதிவு செய்யாமல் விட்டு வைக்கவில்லையே! என்று கூறுவர். மேலும், தாம் செய்தவற்றை தம் முன்னால் கண்டு கொள்வர். இன்னும் உமது இரட்சகன் எவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.” (18:49)

குற்றவாளிகள் தமது பதிவேட்டைப் பார்ப்பர் என்பதை இந்த வசனம் உறுதி செய்கின்றது.

குற்றவாளிகள் நரகத்தைக் கண்டது மட்டுமன்றி மறுமையில் அவர்கள் பார்ப்பார்கள், கேட்பார்கள், பேசுவார்கள் என்பதைப் பின்வரும் வசனம் எடுத்துக்காட்டுகின்றது.

“குற்றவாளிகள் தமது இரட்சகன் முன்னிலையில் தலை குனிந்தவர்களாய் நிற்பதை நீர் பார்ப்பீரானால், “எங்கள் இரட்சகனே! நாங்கள் பார்த்துவிட்டோம். நாங்கள் செவிசாய்த்துவிட்டோம். நீ எங்களை (உலகிற்கு) மீட்டிவிடு (அவ்வாறு செய்தால்) நாங்கள் நல்லறம் புரிவோம். நிச்சயமாக நாம் உறுதியாக நம்பிக்கை கொள்வோம்” (என்று அவர்கள் கூறுவதை நீர் காண்பீர்.)” (32:12)

இங்கே குற்றவாளிகளே பார்த்தோம்ளூ கேட்டோம் என்று கூறுகின்றனர். எனவே அவர்கள் பார்த்தார்கள்ளூ கேட்டார்கள்; பேசினார்கள். ஆனால், ஆரம்பத்தில் கூறிய (17:97) ஆம் வசனம் அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் எழுப்பப்படுவர் என்று கூறுகின்றது. இரண்டும் நேருக்கு நேர் முரண்படுவதாகத் தென்படுகின்றது.

“அவர்கள் நம்மிடம் வரும் நாளில் எவ்வளவோ தெளிவாகக் கேட்பார்கள்! எவ்வளவோ தெளிவாகப் பார்ப்பார்கள்! ஆனால், இன்றைய தினம் அநியாயக்;காரர்கள் மிகத் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கின்றனர்.” (19:38)

இந்த வசனம் மறுமை நாளில் அவர்கள் தெளிவாகப் பார்ப்பார்கள், தெளிவாகக் கேட்பார்கள் என்று கூறுகின்றது. அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும் எழுப்பப்படுவார்கள் என்ற வசனத்தை மறுப்பது போன்று இவ்வசனம் அமைந்துள்ளது. (நஊதுபில்லாஹ்) இப்போது நாம் என்ன செய்வது? இரண்டில் ஒன்றை மறுத்து மற்றதை ஏற்பதா? அல்லது முரண்படுகின்றது என்று கூறி இரண்டையும் மறுப்பதா? அல்லது இரண்டுக்கும் இணக்கம் கண்டு இரண்டையும் ஏற்பதா? என்று கேட்டால் மூன்றாவதாகக் கூறியதுதான் சரியான முடிவாக இருக்கும். ஒரு வேளை இரண்டையும் இணைத்து எம்மால் இணக்கம் காண முடியாவிட்டால் இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்தது. இரண்டும் அல்லாஹ்வின் வார்த்தை என்று நான் ஈமான் கொள்கின்றேன் என்று கூறி நம்ப வேண்டும்.

இந்த அடிப்பiயில் இந்த இரண்டு கருத்துக்களையும் தரும் வசனங்களையும் சில அறிஞர்கள் பின்வருமாறு இணக்கம் காண முயல்கின்றனர்.

1. அவர்கள் எழுப்பப்படும் போது குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் எழுப்பப்படுவர். பின்னர் அவர்களுக்கு அல்லாஹ் பார்வையையும், பேச்சையும் செவிப்புலனையும் கொடுப்பான். அப்போதுதான் நரகத்தைப் பார்த்து அஞ்சி கத்திக் கதறி அவர்கள் முழுமையாக வேதனையை அனுபவிக்க முடியும். இது அருள் அல்ல தண்டனையை முழுமையாக அடைவதற்கான வழியாகும். அவர்கள் குருடர்களாக இருப்பார்கள் என்பது ஒரு சந்தர்ப்பம். பார்ப்பார்கள், பேசுவார்கள் என்பது வேறொரு சந்தர்ப்பம். எனவே, முரண் இல்லை என்ற அடிப்படையில் அறிஞர் அபூஹய்யான்(ரஹ்) போன்றவர்கள் விளக்க மளிக்கின்றார்கள்.

2. அவர்கள் தமக்கு மகிழ்வளிக்கும் எதையும் காணவும் மாட்டார்கள். கேட்கவும் மாட்டார்கள்! தமக்குப் பயனளிக்கும் எதையும் பேசவும் மாட்டார்கள்! உலகத்தில் இருக்கும் போது சத்தியத்தைப் பார்க்காமலும், கேட்காமலும், பேசாமலும் இருந்தது போல் மறுமையில் இப்படி இருப்பர். சத்தியத்தைக் காணாதவர்கள் குருடர்களாகவும், சத்தியத்தைக் கேட்காதவர்கள் செவிடர்களாகவும், கூறப்படுவதுண்டு ஒன்று இருந்தும் அதன் மூலம் பயன்பெறாமல் இருப்பது இல்லாமல் அவை இருப்பதற்கு சமமானதாகும். இந்த அடிப்படையில் அவர்கள் குருடர்கள், ஊமையகள், செவிடர்கள் என்று கூறப்படுவதாக இப்னு அப்பாஸ்(ரழி), ஹஸன் அல் ஆலூஸி(ரஹ்) போன்றோர் கூறுகின்றனர்.

3. மற்றும் சிலர் இதனை வேறொரு கோணத்தில் பார்க்கின்றனர். நரகவாதிகள் நரகத்திற்குப் போன பின்னரும் பேசுவர். அப்போது அல்லாஹ் அவர்களைப் பேசாமல் தடுத்துவிடுவான்.

“அதிலேயே நீங்கள் சிறுமையடைந்து விடுங்கள், என்னுடன் பேசாதீர்கள் (என்று கூறுவான்.)” (23:108

“அவர்கள் அநியாயம் செய்து கொண்டிருந்ததின் காரணமாக (எமது) விதி அவர்கள் மீது நிகழ்ந்துவிடும். எனவே, அவர்கள் பேசமாட்டார்கள்.” (27:85)

அல்லாஹ்வின் ஏற்பாடு இருக்கும் வரை பார்ப்பர் பேசுவர் கேட்பர். அல்லாஹ்வின் தடை வந்த பின்னர் அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் மாறிவிடுவர். இந்த வசனங்களை ஒருவர் சாதாரணமாகப் பார்க்கும் போது நேருக்கு நேர் முரண்படுவது போன்று தோன்றலாம். ஆனால் முரண்பாடு இல்லை என்பதை அறிய ஆழமான ஆய்வுப் பார்வை தேவைப் படுகின்றது. இதனால் பாமரர்கள் புரிந்து கொண்டு ஆழமறியாமல் காலை விடும் ஆபத்தான வேலையை விட்டும் ஒதுங்கிக் கொள்வது அவரவர் அவரவரது ஈமானையும் மார்க்கத்தையும் பாதுகாக்கப் பெரிதும் உதவும்.

02. மறுமையில் விசாரிக்கப்படுவார்களா?

“எவர்களுக்குத் தூதர்கள் அனுப்பப் பட்டார்களோ, அவர்களை நிச்சயமாக நாம் விசாரிப்போம். மேலும், அத்தூதர்களையும் நாம் விசாரிப்போம்.” (7:6)

இந்த வசனம் தூதர்களும், தூதர்கள் அனுப்பப்பட்ட சமூகங்களும் அதாவது அனைத்து மனிதர்களும் விசாரிக்கப்படுவார்கள் என்று கூறுகின்றது.

“உமது இரட்சகன் மீது சத்தியமாக,  அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி  நிச்சயமாக அவர்கள் அனைவரையும் நாம் விசாரணை செய்வோம்”(15:92-93)

இந்த வசனத்தில் அனைவரும் விசாரிக்கப்படுவர் என்று சத்தியம் செய்து கூறப்படுகின்றது.

“மேலும், அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள். நிச்சயமாக அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் (என்று கூறப்படும்.)” (37:24)

“அவன் அவர்களை அழைக்கும் நாளில், “தூதர்களுக்கு நீங்கள் என்ன பதில் அளித்தீர்கள்?” எனக் கேட்பான்.” (28:65)

இந்த வசனங்கள் அனைத்தும் மறுமையில் கேள்வி கணக்கு, விசாரனை இருக்கின்றது என்று கூறுகின்றது. ஆனால் பின்வரும் வசனங்கள் இதற்கு மாற்றமாக அமைந்திருப்பது போன்று தோன்றுகின்றது (நஊதுபில்லாஹ்).

“வலிமைமிக்க அரசனிடம் உண்மையான இருப்பிடத்தில் இருப்பார்கள்.” (55:39) முரண்படுவது போல் தோன்றுவதை இங்கே குறித்த முரண்பாட்டை நீக்குவதற்காக தெளிவு பெறுவதற்காக) என அடைப்புக் குறி போடப்பட்டுள்ளது. அடைப்புக்குறி போட விரும்பாதவர்கள் மனிதனிடமும், ஜின்னிடமும் அவனது குற்றம் குறித்து விசாரிக்கத் தேவை இருக்காது என மொழியாக்கம் செய்துள்ளனர்.

“குற்றவாளிகள் தங்களது பாவங்கள் குறித்து (தெளிவு பெறுவதற்காக) விசாரிக்கப்பட மாட்டார்கள்.” (28:78)

இந்த வசனம் குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள் என்று கூறுகின்றது. அனைவரும் விசாரிக்கப்படுவார்கள் என்றும் மனிதனோ, ஜின்னோ விசாரிக்கப்படமாட்டார்கள் என்றும் குர்ஆனே கூறுகின்றது. மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டுமே நேருக்கு நேர் முரண்படுவதாகவே தோன்றும். ஆனால் இரண்டுக்குமிடையில் முரண்பாடு இல்லை என்பதுதான் உண்மையாகும். நாம் உடன்பாடு கண்டாலும், காணாவிட்டாலும் கூட இரண்டுக்குமிடையில் முரண்பாடு இல்லை என்பதும் இரண்டும் இறை வார்த்தைதான் என்பதும் நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

இந்த இருவித கருத்தைத் தரும் வசனங்களுக்குமிடையில் பின்வருமாறு இஸ்லாமிய அறிஞர்கள் இணக்கம் காண முனைந்துள்ளனர்.

1. கேள்விகள் இரண்டு வகைப்படும். ஒன்று, தகவலை அறியச் செய்வதற்காகவும், செய்திகளைச் சொல்வதற்காகவும் கேட்கப்படும் கேள்வி. இந்தக் கேள்வி குற்றவாளிகளிடம் கேட்கப்படமாட்டாது.

அடுத்து கேட்பதன் மூலம் கேட்கப்படுபவர்களைக் கேவலப்படுத்தும் கேள்வி. இது குற்றவாளிகளிடம் கேட்கப்படும் என்று கூறப்படும் வகையைச் சார்ந்த கேள்வியாகும். குற்றவாளிகளிடம் கேட்கப்படுவதாகக் கூறப்படும் கேள்விகளை அவதானித்தால் இந்த உண்மையை அறியலாம்.

“மேலும், அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள். நிச்சயமாக அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் (என்று கூறப்படும்.)” (37:24-55)

“இது சூனியமா? அல்லது நீங்கள் பார்க்க முடியாதவர்களா?” (52:15)

“நிராகரித்தோர் கூட்டம் கூட்டமாக நரகத்தின் பால் இழுத்துக்கொண்டு வரப்படுவர். அவர்கள் அங்கு வந்தவுடன் அதன் வாயில்கள் திறக்கப்படும். “உங்களது இரட்சகனின் வசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்டி, உங்களது இந்நாளின் சந்திப்பை உங்களுக்கு எச்சரிக்கை செய்யக்கூடிய தூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா?” என அதன் காவலர்கள் அவர்களிடம் கேட்பர். அ(தற்க)வர்கள், “ஆம். (வந்தனர்) எனக் கூறுவர். எனினும் வேதனையின் வாக்கு நிராகரிப்பாளர்கள் மீது உறுதியாகிவிட்டது.” (39:71)

“அது கோபத்தால் வெடித்துவிடப் பார்க்கின்றது. அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், “உங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா?” என அதன் காவலர்கள் அவர்களிடம் கேட்பார்கள்.” (67:8)

இந்தக் கேள்விகள் தகவல் பெறுவதற்காகக் கேட்கப்படும் கேள்விகள் அல்ல. இவை கேட்கப்படுபவர்களை இழிவுபடுத்துவதற்காகக் கேட்கப்படும் கேள்விகளாகும்.

நபிமார்களும் விசாரிக்கப்படுவதாக குர்ஆன் கூறுகின்றது. இது தகவல் பெறுவதற்கோ, கேட்கப்படுபவரை இழிவு படுத்துவதற்காகவோ கேட்கப்படமாட்டாது. இது அவருடன் சம்பந்தப்பட்ட சமூகத்தில் உள்ள கெட்டவர்களை இழிவு படுத்துவதற்காகவே கேட்கப்படும் கேள்வியாகும். உதாரணமாக, உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தைகள் என்ன குற்றத்திற்காக நீங்கள் கொல்லப்பட்டீர்கள் என்று விசாரிக்கப்படுவர். (81:9) இது அவர்களுக்கு எதிரான விசாரணை அல்ல. இது அவர்களைக் கொன்ற அவர்களது பெற்றோர்களை இழிவுபடுத்தக் கேட்கப்படும் கேள்வியாகும். இந்த அடிப்படையில் நபிமார்களும் பின்வருமாறு விசாரிக்கப்படுகின்றனர்.

“தூதர்களை அல்லாஹ் ஒன்று சேர்க்கும் நாளில் “நீங்கள் என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்?” என்று கேட்பான். அ(தற்க)வர்கள், “எங்களுக்கு எவ்வித அறிவும் இல்லை. நிச்சயமாக நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன்” எனக்  கூறுவார்கள்.” (5:109)

எனவே, கேள்வி உண்டு என்பது அவர்களை இழிவுபடுத்தும் கேள்வி உண்டு என்கின்றது. கேள்வி இல்லையென்பது தகவல் பெறுவதற்காக எந்தக் கேள்வியும் கேட்க வேண்டிய தேவை இருக்காது என்பது குறித்துப் பேசுகின்றது. இரண்டும் வெவ்வேறு விடயம் பற்றி உண்டு, இல்லை என்று பேசுவதால் இரண்டுக்குமிடையில் முரண்பாடு இல்லை. நபிமார்களிடம் கேட்கப்படும் கேள்வி அவர்களுடன் சம்பந்தப்பட்ட சமூகத்திலிருந்த கெட்டவர்களை இழிவுபடுத்துவதற்கான கேள்வியாகும்.

2. மற்றும் சிலர் இதனை இப்படி விளக்குகின்றனர். மறுமையில் பல கட்ட நிகழ்வுகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றில் விசாரிக்கப்படுவர், சிலவற்றில் விசாரிக்கப்படமாட்டார். எனவே, இதில் முரண்பாடு இல்லை என்று கூறுகின்றனர்.

03. கேள்வி உண்டு என்று கூறப்படுவது அடிப்படையான அம்சங்கள் தொடர்பானவை. கேள்வி இல்லையென்று கூறப்படுவது மேலோட்டமான சாதாரணமான அம்சங்களுடன் தொடர்புபட்டவை என்று மற்றும் சில அறிஞர்கள் பிரித்து நோக்குகின்றனர். இவ்வாறு நோக்கும் போது முரண்பாடு நீங்கிவிடுவதைக் காணலாம்.

இந்த இணக்கம் காணும் வழியை ஒருவர் அடைந்தாலும், அடையாவிட்டாலும் குர்ஆனின் வசனத்தை மறுக்க முடியாது! இவ்வாறே குர்ஆனுக்கு ஸஹீஹான ஹதீஸ் முரண்படுவது போல் தென்பட்டாலும் இணக்கம் காண முயல வேண்டும் முடியாவிட்டால் இரண்டுமே வஹி என்பதால் இரண்டையும் ஏற்கின்றேன் என ஈமான் கொள்ள வேண்டும். இந்த ஆக்கத்தில் முரண்பாடு போல் தோன்றும் ஆனால் முரண்பாடு இல்லாத சுமார் பத்து அம்சங்களை குர்ஆனிலிருந்து முன்வைப்பதாக நான் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன். இஸ்லாமிய அறிஞர்கள் இது போன்று நூற்றுக்கும் மேற்பட்ட தகவல்களை முன்வைத்துள்ளனர். இது ஆழம் காண முடியாத கடல் போன்ற ஓர் அம்சம். சாதாரண பொது மக்கள் தமக்கு அறிவோ, ஆற்றலோ, விபரமோ இல்லாத இது போன்ற அம்சங்கள் விடயத்தில் நிதானமான போக்கைக் கைக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இவற்றைக் கூறுகின்றேன்.

அல் குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை. அப்படி முரண்பாடுகள் இருந்தால் அது இறை வேதமாகவும் இருக்க முடியாது என அல் குர்ஆனே கூறியுள்ளது. அல் குர்ஆனில் சில வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்போல் தோன்றுகின்றன. அவற்றை ஆழமாக அவதானித்துப் பார்த்தால் அவற்றுக்கிடையே முரண்பாடு இல்லையென்பதை உணர்ந்து கொள்ளலாம். அப்படி உணர்ந்து கொள்ள முடியாவிட்டாலும் இரண்டும் என் இரட்சகனிடமிருந்து வந்தவை என்று ஈமான் கொள்ள வேண்டும்.

இவ்வாறே அல் குர்ஆனுக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸுக்கும் இடையில் முரண்பாடு இல்லை. சில ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவது போல் தென்பட்டாலும் ஆழமாக அவதானித்தால் முரண்பாடு இல்லையென்பதை உணர்ந்து கொள்ளலாம். அப்படி உணர முடியாவிட்டாலும் நான் புரிந்து கொண்டதில்தான் ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்று இரண்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த உண்மையை உணர்த்துவதற்காக முரண்போல் தென்படும் பத்துக் குர்ஆன் வசனங்களை உதாரணமாகத் தருவதாக நாம் கூறியிருக்கின்றோம். ஏற்கனவே இரண்டு உதாரணங்களைக் கூறியிருந்தோம். அதன் மற்றப் பகுதிகளை இங்கே தருகின்றோம்.

03. நரகவாதிகள் பேசுவார்களா?

“இது அவர்கள் பேசமுடியாத நாளாகும்”
“சாக்குப் போக்குக் கூற அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.” (77:35-36)
இந்த வசனங்கள் கெட்டவர்கள் பேசமாட்டார்கள் என்றும் சாக்குப் போக்குக் கூறமாட்டார்கள் என்றும் கூறுகின்றது.

“பின்னர், “எங்கள் இரட்சகனாகிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இணைவைப்பாளர்களாக இருந்ததில்லை” என்று கூறுவதைத் தவிர வேறு எதுவும் அவர்களின் பதிலாக இருக்காது.” (6:23)

இந்த வசனம் அவர்கள் பேசுவதாக மட்டுமல்ல தாம் இணைவைக்கவே இல்லையென்று பொய் கூறுவார்கள் என்றும் கூறுகின்றது.

“எவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டிருந்தார்களோ அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, நாம் எவ்வித தீங்கும் செய்து கொண்டிருக்க வில்லையென சமாதானம் கோருவார்கள். “இல்லை! நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருப்பவை பற்றி அல்லாஹ் நன்கறிந்தவன்” (என்று கூறுவார்கள்)” (16:28)

“”அகிலத்தாரின் இரட்சகனுக்கு உங்களை நாம் சமமாக்கிய போது, அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாம் தெளிவான வழி கேட்டிலேயே இருந்தோம்” என அவர்கள் அதில் தர்க்கித்தவர்களாகக் கூறுவார்கள்.”
“எம்மை இந்தக் குற்றவாளிகளே வழி கெடுத்தனர். (26:97-99)

“உங்களுக்கு முன் சென்ற ஜின் மற்றும் மனித சமூகங்களுடன் நீங்களும் நரகத்தில் நுழைந்து விடுங்கள். அதில் ஒவ்வொரு சமூகமும் நுழையும் போதெல்லாம் தனது சகோதர சமூகத்தை சபிக்கும். அவர்கள் அனைவரும் அதைச் சென்றடைந்ததும், அவர்களில் பின் வந்தோர் அவர்களில் முன் சென்றோரைப் பார்த்து, “எங்கள் இரட்சகனே! இவர்கள்தாம் எம்மை வழிகெடுத்தவர்கள். எனவே, நரகத்தின் இருமடங்கு வேதனையை அவர்களுக்கு வழங்குவாயாக!” என்று கூறுவார்கள். அ(தற்க)வன், “உங்களில் ஒவ்வொருவருக்கும் இருமடங்கு உண்டு. எனினும், நீங்கள் அறியமாட்டீர்கள்” எனக் கூறுவான்.”
“அவர்களில் முன் சென்றோர் அவர்களில் பின் வந்தோரிடம் எம்மை விட உங்களுக்கு எந்தச் சிறப்பும் இல்லை. எனவே, நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த வற்றிற் கான வேதனையை நீங்களே சுவையுங்கள் எனக் கூறுவர்.” (7:38-39)

இன்னும் இது போன்ற ஏராளமான வசனங்கள் நரகவாதிகள் பேசுவார்கள் என்றும் சாக்குப் போக்குச் சொல்வார்கள் என்றும் கூறுகின்றன. நரகவாதிகளின் உரையாடல்கள் பற்றியும் நரகவாதிகளுடன் சுவர்க்கத்துவாதிகள் பேசுவது பற்றியெல்லாம் குர்ஆன் கூறுகின்றன. இரண்டும் ஒன்றுக்கொன்று நேரடியாக முரண்படுவது போல் தோன்றினாலும் முரண்பாடு இல்லை. இது குறித்து அறிஞர்கள் விளக்கும் போது பின்வரும் விளக்கங்களை அளிக்கின்றனர்.

1. மறுமையில் பலகட்ட நிகழ்ச்சிகள் இருக்கின்றன. சில கட்டங்களில் பேசுவர், சில கட்டங்களில் பேசமாட்டார்கள். இரண்டு வகையான வசனங்களும் இரு விதமான நிலைப்பாட்டைப் பற்றி பேசுகின்றன என்பது ஒரு விளக்கமாகும்.

2. தமக்குப் பயன் தரும் எந்தப் பேச்சையும் அவர்கள் பேசமாட்டார்கள். பயனற்ற பேச்சு பேச்சாக எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. இந்த அடிப்படையில் பேசமாட்டார்கள் என்பது அவர்களது பேச்சுக்களால் அவர்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை என்பதைத்தான் குறிக்கும் என்பது சிலருடைய விளக்கமாகும்.

3. “எங்கள் இரட்சகனே! இதிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! அதன் பின்னரும் நாம் (நிராகரிப்பின்பால்) மீண்டால் நிச்சயமாக நாம் அநியாயக்காரர்கள் தாம் (என்றும் கூறுவர்.)”
“அதிலேயே நீங்கள் சிறுமையடைந்து விடுங்கள், என்னுடன் பேசாதீர்கள் (என்று கூறுவான்.)” (23: 107-108)

இவ்வாறு கூறப்பட்ட பின்னர்தான் அவர்கள் பேச அனுமதிக்கப்படமாட்டார்கள். அதற்கு முன்னர் பேசமாட்டார்கள் என்று அந்த வசனம் கூறவில்லை என்று விளக்குவர். இதனைப் பின்வரும் வசனம் உணர்த்துகின்றது.

“அவர்கள் அநியாயம் செய்து கொண்டிருந்ததின் காரணமாக (எமது) விதி அவர்கள் மீது நிகழ்ந்து விடும். எனவே, அவர்கள் பேச மாட்டார்கள்.” (27:85)

எனவே பேசக் கூடாது என்ற விதி விதிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் பேசுவார்கள். அதற்கு முன்னர் அவர்கள் பேசுவார்கள் என்பது அதற்குப் பின்னர் அவர்கள் பேசமாட்டார்கள் என்பதற்கு முரணானது அல்ல.

04. எது சிறந்த சமூகம்

“இஸ்ராஈலின் சந்ததியினரே! நான் உங்கள்மீது புரிந்துள்ள எனது அருட்கொடையையும், அகிலத்தாரை விட உங்களை மேன்மைப்படுத்தியதையும் நினைவுகூருங்கள்”. (2:122)

இந்த வசனங்களில் பனூ இஸ்ரவேலர்களை அல்லாஹ் சிறப்பான சமூகமான ஆக்கியதாகக் கூறுகின்றான். அதுவும் “அலல் ஆலமீன்” அகிலத்தார்களில் சிறப்பான சமூகமாக ஆக்கியதாகக் கூறுகின்றான். இந்த வசனங்களில் அடிப்படையில் இஸ்ரவேல் சமூகம்தான் சிறந்த சமூகம் என்றாகிவிடுகின்றது.

“மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள். (ஏனெனில்) நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்கள். தீமையை விட்டும் தடுக்கின்றீர்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றீர்கள். வேதத்தையுடையோரும் நம்பிக்கை கொண்டால் அது அவர்களுக்கு நல்லதாகும். அவர்களில் நம் பிக்கை கொள்வோரும் உள்ளனர். இன்னும், அவர்களில் அதிகமானோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.” (3:110)

இந்த வசனம் நபி(ச) அவர்களை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் சமூகத்தை “கைர உம்மத்” சிறந்த சமூகம் என்று கூறுகின்றது. இரண்டும் முரண்படுவது போன்று தோன்றுகின்றது. இரண்டுமே சிறந்த சமூகம் என்ற கருத்திலும் முடிவெடுக்க முடியாது. ஏனெனில் இஸ்ரவேல் பற்றிக் கூறும் போதும் அகிலத்தார் அனைவரையும் விட அவர்களைச் சிறப்பித்ததாகக் கூறப்படுகின்றது. முஸ்லிம் உம்மத் பற்றிக் கூறப்படும் போதும் மனித இனத்துக்கு வெளியேற்றப்பட்ட சமூகங்களிலேயே நீங்கள்தான் சிறந்த சமூகம் என்று கூறப்படுகின்றது. எனவே இரண்டுமே சிறந்த சமூகம் என்று முடிவு செய்யவும் அந்த வசனம் இடம் தரவில்லை. இரண்டுக்குமிடையில் முரண்பாடு இருக்கின்றது என்று கூறி இரண்டையும் நிராகரித்தாலோ காபிராகிவிடுவோம். வஹியில் முரண்பாடு இருக்கவும்மாட்டாது. இது குறித்து ஆழ்ந்து அவதானித்தால் இஸ்ரவேலர்கள் பற்றி அகிலத்தார் அனைவரையும் விட உங்களை நான் சிறப்பித்தேன் என்று அல்லாஹ் கூறும் இடத்தில் அந்தக் காலத்தில் வாழ்ந்த அனைவரையும் விட அவர்கள் சிறப்பிக்கப்பட்டது பற்றி பேசப்படுவதைக் உணரலாம். அவர்கள் சிறப்பிக்கப்பட்டது ஒரு குறிப்பிட்ட காலத்தில் சிறப்பிக்கப்பட்டது என்று முடிவு செய்யும் போது முரண்பாடு நீங்கிவிடுகின்றது. இஸ்ரவேலர்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்த அனைவரையும் விட சிறப்பிக்கப்பட்hர்கள். அந்த சிறப்பை இழந்தும் விட்டனர். முஸ்லிம் உம்மத் சிறந்த சமூகம் என்ற சிறப்பை இழக்காது. இவ்வாரே ஆதார பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவது போல் தோண்றும் போதும் ஏதாவது ஒரு முறையில் இணக்கம் கண்டு இரண்டையும் ஏற்பதுதான் சரியான வழிமுறையாகும்.

5. நிர்ப்பந்தத்திற்கு மன்னிப்பு உண்டா?

“எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின் அவரின் உள்ளம் நம்பிக்கையால் அமைதி பெற்ற நிலையில், அவர் நிர்ப்பந்திக்கப்பட்டதின் காரணமாக அவனை (வாயளவில்) நிராகரிக்கிறாரோ (அவர் மீது குற்றமில்லை.) எனினும், எவர்கள் மன நிறைவுடன் நிராகரிப்பை ஏற்றுக் கொள்கின்றார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும். அவர்களுக்கு கடுமையான வேதனையும் உண்டு.” (16:106)

இந்த வசனத்தை நோக்கும் போது நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒருவர் குப்ரான வார்த்தையை மொழிந்தாலோ அல்லது குப்ரான செயலைச் செய்தாலோ காபிராகிவிடமாட்டார் என்பது உறுதியாகிவிடுகின்றது.

“நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லெறிந்து கொன்று விடுவார்கள். அல்லது தங்களது மார்க்கத்திற்கு உங்களை மீட்டிக் கொள்வார்கள். அப்போது, நீங்கள் ஒருபோதும் வெற்றிபெற மாட்டீர்கள்.” (18:20)

இந்த வசனத்தைப் பார்க்கும் போது நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒருவர் குப்ரான செயலைச் செய்தால் அவர் காபிராகிவிடுவார் என்று புரிய முடிகின்றது. நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள் என்ற வார்த்தை நிர்ப்பந்தம் காரணமாக குப்ரைச் செய்தவனும் சுவனம் செல்லமாட்டான் என்று கூறுகின்றது. உங்களைக் கல்லெறிந்து கொண்றுவிடுவார்கள் என்ற வார்த்தை அவர்கள் குப்ரை ஏற்றுக் கொள்ளாவிட்டால் கொள்ளப்படுவார்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. கொலை அச்சுறுத்தலை விட பெரிய நிர்ப்பந்தம் வேறு எதுவும் இருக்க முடியாது. எனவே, இந்த வசனம் நிர்ப்பந்தம் காரணமாக வெறுப்புடன் நிராகரித்தாலும் அது நிரந்தர நரகம் செல்லக் காரணமாகிவிடும் என்பதை உறுதி செய்கின்றது. ஆனால் முன்னைய வசனம் நிர்ப்பந்தம் காரணமாக உள்ளத்தில் ஈமான் உறுதியாக இருக்கும் நிலையில் வெளிப்படையாக நிராகரிப்போர் தண்டிக்கப்படமாட்டார்கள் என்று கூறுகின்றது. இரண்டு வசனங்களும் ஒன்றுக் கொன்று முரணான கருத்தைத் தருகின்றது. இதனை எப்படிப்; புரிந்து கொள்வது என்பது முக்கியமானதாகும்.

நிர்ப்பந்தத்திற்குக் கூட நிராகரிக்கக் கூடாது என்பது எமக்கு முன்னர் வாழ்ந்த சமூகங்களுக்குரிய கட்டமாகும். நிர்ப்பந்தம் காரணமாக உள்ளத்தில் ஈமானை ஏற்றுக் கொண்டு வெறுப்புடன் நிராகரிப்பை வெளிப்படுத்துவதற்கான அனுமதியென்பது இந்த உம்மத்துக்குரியதாகும். நிர்ப்பந்தம் காரணமாக நிராகரித்தவர்களுக்கு மன்னிப்பு இல்லை என்பது மாற்றப்பட்ட மன்சூஹ் ஆன சட்டமாகும். இவ்வாறு முடிவு செய்யும் போது முரண்பாடு நீங்கிவிடுகின்றது. அல் குர்ஆனுக்கு ஆதாரபூர்வமான ஹதீஸ் முரண்பட்டால் அதில் நாஸிஹ், மன்சூஹ் அல்லது தனிச் சட்டம், பொதுச் சட்டம் என்பன போன்ற ஏதாவது வேறுபாடுகள் இருப்பதை உணரலாம். இவ்வாறு சட்டத்தை வேறுபடுத்திக் காண்பதன் மூலம் முரண்பாட்டைக் களைந்து இரண்டையும் ஏற்றுக் கொள்வதே சரியான நிலைப்பாடாகும்.

06. யார் பெரிய அநியாயக்காரன்

“அல்லாஹ்வின் மஸ்ஜித்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழ்படுத்த முயல்பவனைவிட பெரும் அநியாயக்காரன் யார்? அச்சமுடையவர்களாகவே அன்றி அவற்றில் நுழைவதற்கு அவர்களுக்குத் தகுமானதல்ல. அவர்களுக்கு இம்மையில் இழிவும் மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.” (2:114)

இந்த ஆயத்து அல்லாஹ்வின் மஸ்ஜிதை விட்டும் தடுப்பவனை விட பெரிய அநியாயக்காரன் யாரும் இல்லை என்று கூறுகின்றது.

“இப்றாஹீம், இஸ்மாஈல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் (அவரது) சந்ததிகள், யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தார்கள் என்று நீங்கள் கூறுகின் றீர்களா? (இதை) நீங்கள் நன்கு அறிந்த வர்களா? அல்லது அல்லாஹ்வா? என்று (நபியே!) நீர் கேளும். அல்லாஹ்விடமிருந்து வந்த சான்றை தன்னிடம் வைத்துக் கொண்டு மறைப்பவனை விட மிகப்பெரும் அநியாயக்காரன் யார்? நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.” (2:140)

இந்த ஆயத்து அல்லாஹ்விடமிருந்துள்ள அத்தாட்சியை மறைப்பவன்தான் பெரிய அநியாயக்காரன் என்று கூறுகின்றது.

“அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை அல்லது அவனது வசனங்களைப் பொய்ப்பித்தவனை விட மிகப்பெரும் அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்.” (6:21)

இந்த வசனம் அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுபவனும், அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிப்பவனுமே பெரிய அநியாயக்காரன் என்று கூறுகின்றது.

“அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனையும், அல்லது தனக்கு வஹியாக எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் தனக்கு வஹி அறிவிக்கப்படுவதாகக் கூறுபவனையும், மேலும் அல்லாஹ் இறக்கியதைப் போன்று நானும் இறக்குவேன் என்று கூறுபவனையும் விட மிகப்பெரும் அநியாயக்காரன் யார்? இவ்வநியாயக்காரர்கள் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்த்தால் வானவர்கள் தமது கைகளை விரித்தவர்களாக, “உங்களது உயிர்களை நீங்களே வெளியேற்றி விடுங்கள்! அல்லாஹ்வின் மீது, உண்மைக்கு மாற்றமாக நீங்கள் கூறிக்கொண்டிருந்ததினாலும், அவனது வசனங்களை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருந்ததினாலும் இன்றைய தினம் இழிவுதரும் வேதனையை நீங்கள் கூலியாக வழங்கப்படுகின்றீர்கள்” (எனக் கூறுவதை நீர் காண்பீர்)” (6:93)

இந்த வசனம் அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுபவனும், தனக்கு வஹி வராமலேயே வருவதாகக் கூறுபவனும் அல்லாஹ் அருளியது போன்று தானும் அருளுவேன் என்று கூறுபவனுமே பெரிய அநியாயக்காரன் என்று கூறுகின்றது.

“அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியவனை அல்லது தன்னிடம் வந்த சத்தியத்தைப் பொய்ப்பித்தவனை விட, மிகப்பெரும் அநியாயக்காரன் யார்? நிராகரிப்பாளர்களுக்கான தங்குமிடம் நரகத்தில் இல்லையா?” (29:68)

அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பவனும் தன்னிடம் வந்த உண்மையைப் பொய்ப்பிப்பவனுமே பெரிய அநியாயக்காரன் என்று கூறுகின்றன.

இந்த வசனங்களும் இது போன்ற மற்றும் பல வசனங்களும் “அழ்ழுலுமு” மிகப் பெரிய அநியாயக்காரன் என சிலரைக் குறிப்பிடுகின்றன. இப்போது யார் மிகப் பெரிய அநியாயக்காரன் என்ற சந்தேகம் எழுகின்றது. யார் மிகப் பெரிய அநியாயக்காரன்?

பள்ளியை விட்டும் தடுப்பவனா? அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுபவனா? அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பவனா? அல்லது அல்லாஹ்வின் ஆயத்துக்களை நிராகரிப்பவனா?. இதில் யார் பெரிய அநியாயக்காரன்? யாராவது ஒருவன் மிகப் பெரிய அநியாயக்காரன் என்று கூறினால் அடுத்தவர்கள் அவனை விட குற்றத்தில் குறைந்த அநியாயக்காரர்கள் என்று கூற நேரிடும். அப்போது மிகப் பெரிய அநியாயக்காரன் எனக் குர்ஆன் குறிப்பிட்டதில் சந்தேகம் ஏற்பட்டு விடும். இதை எப்படிப் புரிந்து கொள்வது.

குர்ஆன் பொதுவாக மிகப் பெரிய அநியாயக்காரன் எனக் குறிப்பிட்டுள்ளது. அதைக் குறிப்பிட்ட குற்றத்துடன் மட்டும் தொடர்புபடுத்திப் புரிந்து கொள்ள வேண்டும்.

தடுப்பவர்களில் மிகப் பெரிய அநியாயக்காரன் பள்ளிகளை விட்டும் தடுப்பவன்.

பொய்யுரைப்பதில் மிகப் பெரிய அநியாயக்காரன் அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பவன்.

இட்டுக் கட்டுவதில் மிகப் பெரிய அநியாயக்காரன் அல்லாஹ் மீது இட்டுக்கட்டுபவன்.

பொய்ப்பிப்பதில் மிகப் பெரிய அநியாயக்காரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிப்பவன். மறைப்பதில் மிகப் பெரிய அநியாயக்காரன் அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைப்பவன் என பகுதி பகுதியாகப் பிரித்து நோக்க வேண்டும். இவ்வாறு நோக்கும் போது முரண்பாடு அகன்றுவிடும்.

அபூறையான் போன்ற அறிஞர்கள் மற்றுமொறு கோணத்தில் இப் பிரச்சினையை அணுகுகின்றனர். இங்கே குறிப்பிடப்பட்ட குற்றங்கள் அனைத்தும் சம அளவிளான அநியாயங்கள். இவனை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்கின்றான்? என்ற கேள்வி இவனை விடப் பெரிய அநியாயக்காரன் யாரும் இல்லை என்றுதான் கூறுகின்றது. இவன் அளவுக்கு சமமான அநியாயக்காரன் யாரும் இல்லை என்ற கருத்தைத் தராது. எனவே இவர்கள் அனைவரும் பெரிய அநியாயக் காரர்கள்தான். ஒருவரையொருவர் மிகைத்துவிட்டனர் என்று கூற முடியாத அளவுக்கு இல்லாமல் சம அளவிலான அநியாயக்காரர்கள் என எடுத்துக் கொண்டாலும் குறித்த சந்தேகம் அகன்றுவிடும்.

இவ்வாறு அல் குர்ஆன் ஒன்றைக் கூறும் போது அதற்கு முரண் போல் ஹதீஸ் ஒரு செய்தியைக் கூறினால் குர்ஆன் குறிப்பிட்டது ஒரு துறை சார்ந்தது. ஹதீஸ் குறிப்பிட்டது மற்றொரு துறை சார்ந்தது என்று புரிந்து கொண்டால் முரண்பாடு அகன்றுவிடும். அதை விட்டு விட்டு ஹதீஸை நிராகரிப்பதென்பது வஹியின் ஒரு பகுதியை ஏற்று மறு பகுதியை மறுக்கும் தவறான போக்காகும். இந்தத் தவறான வழியில் மக்களைத் தள்ளிவிடும் அழைப்பாளர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும்.

குர்ஆன், சுன்னா இரண்டுமே வஹி எனும் வேத வெளிப்பாடு. இரண்டும் அல்லாஹ்விடமிருந்து பெறப்பட்டவையே. எனவே இரண்டுக்குமிடையில் முரண்பாடு இருக்க முரண்பாடு இருப்பது போல் தோன்றினால் நமது அறிவில்தான் ஏதோ கோளாறு இருக்க வேண்டும். ஹதீஸில் ஒரு நாளும் கோளாறு இருக்காது. நாம் புரிந்து கொண்டதில் எங்கோ ஒரு இடத்தில் தவறு விட்டிருப்போம். 

எனவே, குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸும் முரண்படுவது போல் தோன்றினால் இரண்டுக்குமிடையில் இணக்கம் காண முயற்சிக்க வேண்டும். முடியாமல் போனால் இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்தது. எனவே, இரண்டையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன் என நம்ப வேண்டும்.

சிலர் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான பல ஹதீஸ்களை மறுக்கின்றனர். அவற்றை நம்புபவர்களை வழிகேடர்களாகவும் சிலபோது முஷ;ரிக்குகளாகவும் பார்க்கின்றனர். அவர்கள் ஏற்றுக் கொள்ளும் போது நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸ் ஸஹீஹானது. அது அவர்களது நபித்துவத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என ஏசினர், பேசினர். அப்போது நபி(ச) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஹதீஸை ஏற்பவன்தான் தவ்ஹீத்வாதி. இநத நிலையிலிருந்து மாறி நபி(ச) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்று கூறினர். அவர்கள் இன்று ஒன்றை மறுத்தார்கள் என்றால் நாளைக்கு அவர்கள் மறுத்த ஹதீஸை நம்புபவன் முஷ;ரிக்காகிவிடுகின்றான். ஆக மார்க்கத்தை நம்புவதற்கு அவர்கள் எதை விளங்குகின்றார்களோ அதையே அடுத்தவர்களும் விளங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

குர்ஆன், ஹதீஸை அல்லாஹ்வினால் பொருந்திக் கொள்ளப்பட்ட நபித்தோழர்கள் புரிந்து கொண்டது போல் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினால் அவர்கள் வழிகேடர்களாம். ஆனால் குர்ஆன், ஹதீஸை இவர்கள் எப்படிப் புரிந்து கொள்கின்றார்களோ அதே போன்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம். இல்லாவிட்டால் நாம் வழிகேடர்களாம். ஏன் இந்த முரண்பாடான நிலை என்று புரியவில்லை.

இந்த வழிகெட்ட போக்கை இனம்காட்டவும், குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை நிராகரிப்பது தவறான போக்கு. அது குர்ஆனையே நிராகரிக்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகவும் முரண்படுவது போல் தோன்றக்கூடிய பத்துக் குர்ஆன் வசனங்களை உதாரணத்திற்குத் தருவதாக நாம் கூறியிருந்தோம். ஏற்கனவே ஆறு உதாரணங்களை நாம் பார்த்துள்ளோம். மீதி நான்கு உதாரணங்களையும் இந்த இதழில் நோக்குவோம்.

07. அல்குர்ஆனின் ஆயத்துக்கள் முஹ்கமானவையா? முதஷாபிஹானவையா?

“அவன் தான் உம்மீது இவ்வேதத்தை இறக்கி வைத்தான். அதில் (கருத்துத் தெளிவுள்ள) “முஹ்கமாத்” வசனங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றும் சில (பல கருத்துக்களுக்கு இடம்பாடான) “முதஷாபிஹாத்களாகும்.” (3:7)

இந்த வசனம் அல் குர்ஆனில் தெளிவான வசனங்களும் இருக்கின்றன. பல கருத்துக்கு இடம்பாடான “முதஷாபிஹ்” ஆன வசனங்களும் உள்ளன என்று கூறுகின்றது.

“அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும். இதன் வசனங்கள் தெளிவுபடுத்தப்பட்டு பின்னர் யாவற்றையும் அறிந்த, ஞானமிக்கவனிடமிருந்து அவை விபரிக்கப்பட்டுள்ளன.” (11:1)

இந்த வசனத்தைப் பார்க்கும் போது அல்குர்ஆனில் எல்ல வசனங்களும் தெளிவுபடுத்தப்பட்டவை என்ற கருத்தைப் பெறக்கூடியதாக இருக்கின்றது.

பின்வரும் வசனங்கள் அல் குர்ஆனின் வசனங்கள் தெளிவானவை என்ற கருத்தைத் தருகின்றன. (2:99, 10:15, 19:73, 22:16,72, 24:1, 29:49, 34:43, 45:25, 46:7, 57:9, 58:05)

இன்னும் இதே கருத்தைத் தரும் பல வசனங்களைக் காணலாம். இந்த வசனங்களைப் பார்க்கும் போது குர்ஆனில் “முதஷாபிஹா” வசனங்களே இல்லையென்று எண்ணத் தோன்றும்.

ஆனால், 39:23ஆம் வசனத்தைப் பார்க்கும் போது முதஷாபிஹான வேதம் என்று கூறப்படுகின்றது. இந்த வசனத்தின் அடிப்படையைப் பார்த்தால் குர்ஆன் முழுதுமே முதஷாபிஹத்தான வசனங்களைக் கொண்டது என்ற கருத்துத் தென்படும்.

குர்ஆனில் முஹ்கமும் இருக்கிறது. முதஷாபிஹும் இருக்கிறது.

குர்ஆன் முழுவதுமே முஹ்கம்தான். முதஷாபிஹ் இல்லை.

குர்ஆனே முதஷாபிஹானதுதான் என்ற மூன்று கருத்தும் ஒன்றுக்கொன்று முரண்போலத் தோன்றலாம். ஆனால் அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் கூறப்படுவதால் அதில் எந்த முரண்பாடும் இல்லை என்பதை ஆழமாக அவதானிக்கும் போது அறிந்து கொள்ள முடியும்.

குர்ஆனின் வசனங்கள் எல்லாமே தெளிவானவை என்ற ஆயத்துக்கள். குர்ஆன் சொல்லக்கூடிய சட்டங்கள் அனைத்துமே உறுதியானது, நீதியானது, சரியானது. அதன் வார்த்தைகள், அதன் கருத்துக்கள் அனைத்துமே அற்புதமானவை. அது சொல்லக்கூடிய அனைத்துச் செய்திகளும் உண்மையானது, உறுதியானது. அவற்றின் வார்த்தைப் பிரயோகத்திலோ அல்லது கருத்திலோ எந்தக் குறைபாடும் இல்லாதது என்ற கருத்துக்களைத் தரும். இந்த அடிப்படையில் நோக்கும் போது குர்ஆனின் ஆயத்துக்கள் அனைத்துமே தெளிவானவை, தெளிவுபடுத்தப்பட்டவை என்ற நிலையை அடைகின்றது.

குர்ஆனே முதஷாபிஹானது என்ற வசனம் தரும் அர்த்தம் அதன் ஆயத்துக்கள் அனைத்தும் ஒன்றையொன்று கருத்திலும், வார்த்தை அமைப்பிலும், நோக்கத்திலும், உண்மைத் தன்மையிலும், உறுதித் தன்மையிலும் ஒன்றையொன்று ஒத்தது என்ற கருத்தைத் தரும்.

அதன் சில வசனங்கள் முஹ்கமானது. சில வசனங்கள் முதஷாபிஹானது என்பதன் அர்த்தம்.

முஹ்கமானது என்பது அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய வசனங்கள் என்ற கருத்தாகும்.

“(இவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மையாளர்களாகவும் (அல்லாஹ்வுக்குக்) கட்டப்பட்டு நடப்போராகவும், (நல்லறங்களில்) செலவிடுவோராகவும், இரவின் இறுதி வேளைகளில் பாவமன்னிப்புத் தேடுபவர்களாகவும் இருப்பர்.” (3:17)

“எவர்கள் “தாகூத்” (அல்லாஹ் அல்லாது வணங்கப்படுபவை)களை வணங்காது தவிர்ந்து, அல்லாஹ்வின்பால் மீளுகிறார்களோ அவர்களுக்கு நன்மாராயம் உண்டு! எனவே, என் அடியார்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!” (39:17)

போன்ற வசனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

முதஷாபிஹான வசனங்களும் இருக்கின்றன என்பது அல்லாஹ் மட்டும் அறிந்த வசனங்களும் அல்லது அறிஞர்கள் மட்டும் முறையாகப் புரிந்து கொள்ளக்கூடிய வசனங்களும் இருக்கின்றன என்ற கருத்தாகும்.

இதில் எந்தக் கருத்துடைய வசனங்களைத் தவறாகப் புரிந்து கொண்டாலும் அடுத்த கருத்துள்ள வசனங்களை மறுப்பதாக அமைந்துவிடும். குர்ஆன் விடயத்தில் எப்படி அனைத்தையும் இணைத்துப் புரிந்து கொள்கின்றோமோ அதே போன்று குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறப்படும் ஹதீஸ்களையும் இணைத்து பொருள்கொள்ள முயல வேண்டும். முடியாத போது குர்ஆனில் ஒரு ஆயத்தை ஏற்று மறு ஆயத்தை மறுக்காது இரண்டையும் ஏற்றுக்கொள்வது போல் தோன்றும் ஹதீஸ்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

08. அல்லாஹ்வை எப்படி அஞ்ச வேண்டும்:

“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சிக்கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் முஸ்லிம்களாகவே அன்றி மரணித்து விடவேண்டாம்.” (3:102)

இந்த வசனத்தைப் பார்க்கும் போது அல்லாஹ்வை முறையாக அஞ்ச வேண்டும். அணுவளவும் பிசகாமல் அல்லாஹ்வை முழுமையாக அஞ்சி நடக்க வேண்டும் என்ற கருத்தைத் தருகின்றது.

“உங்களால் முடியுமான அளவு அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்ளூ செவிசாயுங்கள்ளூ இன்னும், கட்டுப்படுங்கள்ளூ (நல்லறங்களில்) செலவு செய்யுங்கள். (அது) உங்களுக்கு சிறந்ததாகும். எவர்கள் தமது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.” (64:16)

இந்த வசனம் இயன்றவரை அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் என்ற கருத்தைத் தருகின்றது. இரண்டும் முரண்படுவது போல் தோன்றுகின்றது. இது குறித்து அறிஞர்கள் விளக்கும் போது இரண்டு விதமான விளக்கங்களைத் தருகின்றனர்.

1. முடிந்தவரை அஞ்சிக்கொள்ளுங்கள் என்ற வசனம் முழுமையாக அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் என்ற வசனத்தை மாற்றி விட்டது. என்ற விளக்கத்தை ஸயீத் இப்னு சுபைர், அபுல் ஆலியா, ரபீஃ இப்னு அனஸ், கதாதா, முகாதல் இப்னு ஹையான், ஸைத் இப்னு அஸ்லம் போன்ற அறிஞாகள் கூறுகின்றனர்.

2. மற்றும் சிலர் முதல் வசனத்தை இரண்டாம் வசனம் தெளிவுபடுத்துகின்றது. அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சிக் கொள்ளுங்கள் என்றால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அதிகமதிகம் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என விளக்கப்படுத்துகின்றது என விபரிக்கின்றனர்.

09. ஆயிரமா? மூவாயிரமா?

பத்ர் போரின் போது முஃமின்களுக்கு உதவுவதற்காக வானவர்கள் வந்தார்கள். வந்த வானவர்களின் எண்ணிக்கை எத்தனை என்பது பற்றி குர்ஆன் கூறுவதை மேலோட்டமாகப் பார்த்தால் முரண்பாடு இருப்பது போல் தோன்றும்.

“மூவாயிரம் வானவர்களை உங்கள் இரட்சகன் இறக்கி உங்களுக்கு உதவி புரிந்தது உங்களுக்குப் போதாதா?” என்று நம்பிக்கை கொண்டோரிடம் (நபியே!) நீர் கூறியதை (எண்ணிப்பார்ப்பீராக!)” (3:124)

இந்த வசனத்தைப் பார்க்கும் போது 3000 மலக்குகள் உதவிக்கு வந்துள்ளனர் என்பதைப் புரியலாம்.
“உங்கள் இரட்சகனிடம் நீங்கள் உதவி தேடிய போது, “நிச்சயமாக நான் தொடர்ச்சியாக ஆயிரம் மலக்குகளைக் கொண்டு உங்களுக்கு உதவுவேன்” என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்.” (8:9)

இந்த வசனத்தில் 1000 மலக்குகளைக் கொண்டு நான் உங்களுக்கு உதவுவேன் என அல்லாஹ் கூறுகின்றான். பத்ருப் போரின் போது முஃமின்களுக்கு உதவ வந்த வானவர்களின் எண்ணிக்கை ஆயிராமா? மூவாயிரமா? இதில் ஒன்று சரியென்றால் மற்றொன்று பிழையாகத்தான் இருக்க வேண்டும். இரண்டுமே சரியாக இருக்க முடியாது. எனவே, ஏதோவொன்று பிழையாக இருக்க வேண்டும். பிழையான கருத்தைத் தந்த வசனம் எதுவென்பது தெரியாது. எனவே, இரண்டையும் நிராகரிக்க வேண்டும் என வாதிட்டால் ஒருவன் முஸ்லிமாக இருக்க முடியுமா?

இதை முரண்பாடாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. முஃமின்கள் பாதுகாப்புத் தேடிய போது ஆயிரம் மலக்குகளை அவர்களுக்கு உதவியாக அனுப்புவேன் எனக் கூறிய அல்லாஹ் முஃமின்களின் மன ஆறுதலுக்காக மூவாயிரமாக உயர்த்துகின்றான். ஆயிரம் மலக்குகள் என்பது கூட ஒரு நற்செய்திக்காகவும், மன ஆறுதலுக்காவும் கூறப்படும் செய்திதான். இருப்பினும் தான் அளித்த வாக்கை விட அல்லாஹ் முஃமின்களுக்கு அதிகமான உதவியாளர்களை அனுப்பி அருள் புரிந்தான்.

மூவாயிரம் பற்றி கூறிய வசனத்திற்கு அடுத்த வசனத்தில் நீங்கள் பொறுமையுடனும், தக்வாவுடனும் இருந்ததால் பத்ரில் மூவாயிரம் மலக்குகளை அனுப்பி அருள் புரிந்த அல்லாஹ் இன்னும் அதிகப்படுத்தி ஐயாயிரம் மலக்குகளை உதவிக்கு அனுப்பியிருப்பான் என்று கூறப்படுகின்றது.

“ஆம்! நீங்கள் பொறுமையாக இருந்து, (அல்லாஹ்வை) அஞ்சி நடக்கும் போது அ(ப்பகை)வர்கள் உங்கள் மீது திடீரென(த் தாக்க) வந்தால் (போருக்கான) அடையாளங்களுடன் கூடிய ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இரட்சகன் உங்களுக்கு உதவுவான்.” (3:125)

எனவே, தக்வாவுக்கும், பொறுமைக்கும் ஏற்ப உதவி அதிகரிக்கப்படும் என்ற உண்மை உணர்த்தப்படுகின்றது. ஆயிரம் என வாக்களித்த அல்லாஹ் முஃமின்களின் தக்வா, பொறுமையைப் பொறுத்து அதை மூவாயிரமாக அதிகரிக்கின்றான். இதில் முரண்பாடு இல்லை.

மூவாயிரம்பேர் வந்தனர் என்று கூறிவிட்டு இல்லையில்லை ஆயிரம் பேர் வந்தனர் என்றால்தான் முரண்பாடாகும். ஆயிரம் பேரை உதவிக்கு அனுப்பினேன் என்று கூறிய அல்லாஹ் மூவாயிரம் பேரை அனுப்பியது முரண்பாடு அல்ல. அருள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதே அர்த்தமாகும். ஆயிரம் பேர் வந்தனர் என்று கூறப்படாததும் கவனிக்கத்தக்கதாகும்.

10. நீதமாக நடக்க முடியுமா? முடியாதா?:

பலதார மணத்தின் போது மனைவியருடன் நீதமாக நடக்க முடியும் என்று ஒரு வசனமும் எவ்வளவுதான் முயன்றாலும் நீதமாக நடக்க முடியாது என மற்றுமொரு வசனமும் கூறுகின்றது. மேலாட்டமாகப் பார்க்கின்ற போது இது முரண்பாடாகவே தென்படும். ஆழமாகப் பார்க்கும் போது இரண்டும் இரு வேறுபட்ட அம்சங்கள் குறித்துப் பேசுவதைப் புரிந்து கொள்ளலாம்.

“அநாதை(களை மணம் முடித்தால் அவர்)கள் விடயத்தில் நீதியாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால், பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களில் இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நந்நான்காக மணம் முடியுங்கள். நீங்கள் (இவர்களுக் கிடையில்) நீதமாக நடக்க முடியாது என அஞ்சினால், ஒருத்தியை அல்லது உங்கள் அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்.) நீங்கள் அநீதியிழைக்காமலிருக்க இதுவே மிக நெருக்கமானதாகும்.” (4:3)

இந்த வசனம் நீதமாக நடக்க முடியுமென்றால் பலதார மணம் முடியுங்கள். உங்களால் நீதமாக நடக்க முடியாது என்று நீங்கள் பயந்தால் ஒன்றுடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கூறப்படுகின்றது. இதன் மூலம் நிதமாக நடக்கவும் சாத்தியம் இருக்கின்றது என்பதை அறியலாம்.
மனைவியரிடையே நீதமாக நடக்க நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் முடியாது.. ..

“நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும் மனைவியரிடையே நீதமாக நடந்துகொள்ள உங்களால் முடியாது. நீங்கள் ஒருத்தியின் பக்கம் முழுமையாகச் சாய்ந்து அடுத்தவளை (அந்தரத்தில்) தொங்கவிடப்பட்டவள் போல் விட்டு விடாதீர்கள். நீங்கள் உங்களைச் சீர்செய்து, (அல்லாஹ்வை) அஞ்சி நடந்தால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.” (4:129)

முன்னைய வசனம் நீதமாக நடக்க முடியும். அது சாத்தியமானதுதான் என்கின்றது. இந்த வசனம் நீங்கள் முயன்றாலும் முடியாது என்று கூறுகின்றது. வழிகெட்ட பிரிவினர் ஹதீஸை அணுகுவது போல் அணுகினால் குர்ஆனில் முரண்பாடு என்று கூறவேண்டியேற்படும். ஆனால் இரண்டு வசனங்களும் இரு வேறு அம்சங்கள் பற்றிப் பேசுகின்றன.

நீதமாக நடக்க முடியும் என்று கூறும் வசனம் மனைவிமார்களுக்குரிய உரிமைகளை வழங்குவது தொடர்பானதாகும். உணவு, உடை, இருப்பிடம், பாதுகாப்பு, உடல் சுகம் இதையெல்லாம் மனைவியரிடையே அநீதமில்லாமல் நீதமாக நடந்து கொள்ள முடியும். அப்படியும் நீதமாக நடக்க முடியாது என அஞ்சுபவர்களுக்கு பலதார மணம் தடையாகும்.

நீதமாக நடக்க முடியாது எனக் கூறும் வசனம் அன்பு செலுத்தும் விடயத்தில் ஒருவரை நேசிக்கும் அதே அளவுக்கு அடுத்தவரை நேசிக்க முடியாது. ஒருவர்பால் இயல்பாக ஏற்படும் ஈடுபாட்டின் அளவுக்கு அதிகமாக அடுத்த மனைவியுடனும் ஈடுபாட்டுடன் நடக்க முடியாது! முடியாது எனக் கூறும் வசனம் இதைத்தான் கூறுகின்றது.

முடியும் எனக் கூறப்படுவது ஒரு அம்சத்தை முடியாது என்று கூறப்படுவது மற்றுமொரு அம்சத்தையாகும். இதே போன்று குர்ஆன் ஒரு விடயத்தையும், ஹதீஸ் மற்றுமொரு விடயத்தையும் பேசும் போது சிலர் இரண்டையும் ஒன்றாகப் பார்த்து ஒன்றுக்கொன்று முரண்படுவதாகக் கூறி ஹதீஸை மறுப்பது வஹியின் ஒரு பகுதியை மறுப்பதாகவே அமையும்.

10. மறுமையில் மறப்பார்களா? மறக்கமாட்டார்களா?

“நிராகரித்து, இத்தூதருக்கு மாறு செய்தோர் பூமி தம்மைக் கொண்டு தரைமட்டமாக்கப்படக் கூடாதா? என்று அந்நாளில் விரும்புவார்கள். அவர்களால் அல்லாஹ்விடம் எந்தச் செய்தியையும் மறைத்;துவிட முடியாது.” (4:42)

இந்த ஆயத்தைப் பார்க்கும் போது மறுமையில் காபிர்கள் தமது செய்திகளில் எதையுமே மறக்கமாட்டார்கள் என்று புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் பின்வரும் வசனங்கள் அவர்கள் மறப்பர்கள் என்று கூறுகின்றது.

“அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணைவைத்தவர்களிடம், “நீங்கள் எண்ணிக் கொண்டிருந்த உங்கள் இணை தெய்வங்கள் எங்கே?” என்று நாம் கேட்போம்.”

“பின்னர், “எங்கள் இரட்சகனாகிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இணைவைப்பாளர்களாக இருந்ததில்லை” என்று கூறுவதைத் தவிர வேறு எதுவும் அவர்களின் பதிலாக இருக்காது.”

“எவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டிருந்தார்களோ அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, நாம் எவ்வித தீங்கும் செய்து கொண் டிருக்கவில்லையென சமாதானம் கோருவார்கள். “இல்லை! நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருப்பவை பற்றி அல்லாஹ் நன்கறிந்தவன்” (என்று கூறுவார்கள்)” (16:28)

“பின்னர் அவர்களிடம், அல்லாஹ்வை யன்றி நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவைகள் எங்கே எனக் கேட்கப்படும். அ(தற்க)வர்கள், “அவை எங்களை விட்டும் மறைந்துவிட்டன. மாறாக இதற்கு முன்னர் எந்தவொன்றையும் அழைப்பவர்களாக நாம் இருக்கவில்லை” என்று கூறுவர். இவ்வாறே அல்லாஹ், நிராகரிப்பாளர்களை வழிகேட்டில் விட்டு விடுகின்றான்.” (40:74)

இந்த வசனங்களின் கருத்து முன்னைய வசனத்தின் கருத்துடன் நேரடியாக முரண்படுகின்றது. இப்போது இரண்டையும் மறுப்பதா? அல்லது இரண்டையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்வதா? எது சரியான வழி? என்று சிலர் ஹதீஸிற்கும், குர்ஆனுக்கும் முரண்பாடு கற்பிக்க மடித்துக் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளார்கள். இவர்களின் போக்கு குர்ஆனிலும் சந்தேகத்தை உண்டுபண்ணிவிடும்.

இந்த வசனங்கள் பற்றி இப்னு அப்பாஸ்(வ) அவர்கள் கூறும் போது அவர்களது நாவுகள் தாம் இணை வைக்கவில்லை என்று சொல்லும். அல்லாஹ் அவர்களது நாவுகளுக்கு சீல் குத்திவிடுவான். அப்போது அவர்களது கைகள் பேசும், கால்கள் சாட்சி சொல்லும். இப்போது அவர்கள் எதையும் மறைக்கமாட்டார்கள் என்ற வசனம் செயல்படுத்தப்படுவதைக் காணலாம்.

“இன்றைய தினம் அவர்களது வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தவை குறித்து, அவர்களது கைகள் எம்முடன் பேசும். மேலும், அவர்களது கால்கள் சாட்சி கூறும்.” (36:65)

இந்த வசனமும் இந்தக் கருத்தைத்தான் தருகின்றது.

முரண்படுவது போல் தோன்றும் பல குர்ஆன் வசனங்களை உதாரணமாகக் குறிப்பிட்டோம். இது போன்று நூற்றுக்கும் மேற்பட்ட வசனங்களுக்கு அல் குர்ஆன் விளக்கவுரையில் தேர்ச்சி பெற்ற அறிஞர்கள் விளக்கம் கூறியுள்ளனர்.

குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை மறுப்பது தவறான அணுகுமுறையாகும். இந்த சிந்தனைப் போக்கு வளர்ந்துவிட்டால் குர்ஆன் குர்ஆனுக்கு முரண்படுகின்றது என நாம் ஏற்கனவே குறிப்பிட்டவை போன்ற வசனங்களைக் கூறி குர்ஆனையும் நிராகரிப்போர் உருவாகிவிடுவர். இந்த ஆபத்தை உணர்த்துவதற்காகவே இவற்றை உதாரணமாகத் தந்தோம். குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை மறுக்கும் இந்த ஆபத்தான போக்கு பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவது என்ன என்பதை அடுத்து நோக்குவோம்.
Previous Post Next Post