மூஸா நபியும், மலக்குல் மௌத்தும்

 

-SHM. இஸ்மாயில் ஸலபி

இது வரை நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்பட்டதல்ல என்பது குறித்து விபரித்தோம். இதே போன்று மற்றும் பல ஹதீஸ்களும் பல்வேறுபட்ட தவறான காரணங்களைக் காட்டி மறுக்கப்படுகின்றன. அவ்வாறு மறுக்கப்படும் அறிவிப்புக்களில் மூஸா நபியும், மலக்குல் மௌத்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸும் ஒன்றாகும்.

ஹதீஸும் கவாரிஜ்களும்: 
இந்த ஹதீஸ் குறித்த சர்ச்சைக்குள் நாம் நுழையும் முன்னர் மற்றுமொறு விடயத்தை நினைவூட்டுவது நல்லது எனக் கருதுகின்றேன். வழிகெட்ட பல பிரிவினரும் ஹதீஸ்களை மறுத்துள்ளனர். அவர்கள் ஹதீஸை மறுப்பதற்குக் கூட குர்ஆனின் சில வசனங்களையும், பகுத்தறிவு வாதங்களையும் முன்வைத்தே மறுத்தனர். வெறுமனே காரண-காரியம் எதையும் காட்டாமல் அவர்கள் மறுக்கவில்லை.

கவாரிஜ்கள், “நரகம் சென்ற முஸ்லிம்கள் மீண்டும் சுவனம் நுழைவிக்கப்படுவர்” என்ற கருத்தில் வரும் ஹதீஸ்களை மறுத்தனர். இவற்றைச் சும்மா அவர்கள் மறுக்கவில்லை, குர்ஆன் வசனங்கள் சிலவற்றைத் தவறாக விளங்கித்தான் மறுத்தார்கள். இதனை ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெறும் பின்வரும் அறிவிப்பு உறுதி செய்கின்றது.

‘நான் கவாரிஜிகளின் கருத்தால் தாக்கப்பட்டிருந்தேன். நாங்கள் சிலர் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டோம். நாம் மதீனாவைக் கடந்து செல்லும் போது ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் மக்களுக்கு ஹதீஸ்களைக் கூறிக்கொண்டிருந்தார். அவர் (நரகத்திலிருந்து வெளியேற்றப்படும்) நரகவாதிகள் குறித்து நினைவூட்டிய போது நான் அவரைப் பார்த்து, ‘அல்லாஹ்வின் தூதரின் தோழரே! யாரை நீ நரகில் நுழைவித்தாயோ, அவரை நிச்சயமாக நீ கேவலப்படுத்தி விட்டாய் என அல்லாஹ் கூறுகின்றான். அதே போன்று ‘நரகவாதிகள் அதிலிருந்து வெளியேற முயற்சிக்கும் போதெல்லாம் மீண்டும் அதில் போடப்படுவார்கள்’ என்றும் குர்ஆனில் கூறுகின்றான். அதற்கு மாற்றமாக நீங்கள் என்ன கூறிக்கொண்டிருக்கின்றீர்கள்?’ எனக் கேட்டேன். அதற்கவர், ‘நீ குர்ஆனை ஓதுகின்றாயா?’ எனக் கேட்டார். நான், ‘ஆம்!’ என்று கூறினேன். அதற்கவர், ‘நீ மகாமும் மஹ்மூத்’ பற்றி அதில் ஓதியுள்ளாயா?’ எனக் கேட்டார். நான் ‘ஓதியுள்ளேன்’ என்றேன். புகழத் தக்க அந்த இடத்தால் நரகிலிருந்து அல்லாஹ் வெளியாக்க நாடுபவர்களை வெளியேற்றுவான்…’ என்று விளக்கமளித்தார்கள். (யஸீதுல் பகீர், ஸஹீஹ் முஸ்லிம்)

‘நீ யாரை நரகில் நுழைவித்தாயோ அவர்களை நீ இழிவுபடுத்தி விட்டாய்’ என்ற குர்ஆன் வசனத்திற்கு “நரகம் சென்றவர்கள் மீண்டும் சுவனம் நுழைவிக்கப்படுவார்கள்’ என்ற ஹதீஸ் முரண்படுகின்றது. எனினும் அவர்களது அந்த அணுகுமுறை வழிகெட்ட அணுகுமுறையாக இருந்ததே தவிர ‘ அஹ்லுஸ் ஸுன்னா’வின் நிலைப்பாடாக இருக்கவில்லை.

இவ்வாறே, ‘நாம் நபிமார்கள்; நாம் யாருக்கும் வாரிசுகளாகவும் மாட்டோம்; நமது சொத்து வாரிசு சொத்தாகப் பங்கிடப்படவும் மாட்டாது’ என்ற கருத்தில் நபி(ஸல்) அவர்களின் பல அறிவிப்புக்கள் அமைந்திருக்கின்றன.

ஃபாத்திமா(ரலி)அவர்கள், நபி(ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற சொத்தில் பங்கு கேட்ட போது, இந்த ஹதீஸைக் கூறித்தான் ஃபாத்திமா(ரலி)அவர்களுக்குப் பங்கு கொடுக்க அபூபக்கர்(ரலி) அவர்கள் மறுத்து விட்டார்கள்.

எனினும் ஷீஆக்கள், இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி மறுத்தனர். (அவர்கள் இதை மட்டுமல்ல, மற்றும் பல்லாயிரம் ஹதீஸ்களைக் காரணம் கூறாமலேயே மறுக்கின்றனர்.)

”அவர் எனக்கு வாரிசாகவும், யஃகூபின் சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார். எனது இரட்சகனே! அவரைப் பொருந்திக் கொள்ளப்பட்டவராக நீ ஆக்குவாயாக!” (என்றும் பிரார்த்தித்தார்.)’ (19:6)

என்ற வசனங்களை ஆதாரங் காட்டி நபிமார்களின் குடும்பத்திற்கும் வாரிசுரிமை உள்ளது. அபூபக்கர்(ரலி) அவர்கள் ஃபாத்திமா(ரலி)அவர்கள் மீது கொண்ட வெறுப்புக் காரணமாகத்தான் இந்தக் குர்ஆன் வசனங்களுக்கு முரணான ஹதீஸை இட்டுக் கட்டினார் என்றும் அவதூறு கூறினர்.

இவ்வாறே, கவாரிஜ்கள் எனும் வழிகேடர்கள் பகுத்தறிவு வாதத்தை முன்வைத்துப் பல ஹதீஸ்களை மறுத்துள்ளனர். மாதத் தீட்டுடன் உள்ள பெண்கள் அக்காலத்தில் விடுபடும் நோன்பைக் கழா செய்ய வேண்டும், தொழுகையைக் கழாச் செய்ய வேண்டியதில்லை. இதுதான் சட்டம். இது குறித்துப் பல ஹதீஸ்கள் பேசுகின்றன. ஆனால் கவாரிஜ்கள், ‘நோன்பை விடத் தொழுகை முக்கியமான வணக்கம். நோன்பைக் கழாச் செய்ய வேண்டும் என்றால் அதை விட முக்கியமான தொழுகையைக் கழாச் செய்யாமல் விட முடியுமா?’ என்ற பகுத்தறிவுக் கேள்வி மூலம் ஹதீஸை மறுத்தனர்.

இதனைப் பின்வரும் அறிவிப்பு உணர்த்துகின்றது:
ஒரு பெண்மணி ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘மாதத் தீட்டுடைய பெண் நோன்பைக் கழாச் செய்கிறாள். தொழுகையைக் கழாச் செய்யக் கூடாது. இது ஏன்?’ என்று கேட்டாள். அதற்கு ஆயிஷா(ரலி)அவர்கள், ‘நீ ஒரு கவாரிஜீயப் பெண்ணா?’ எனக் கேட்டார்கள். அதற்கவள் ‘அப்படி இல்லை. இருப்பினும் (அறிந்துகொள்வதற்காகக்) கேட்கிறேன்’ என்றாள். அதற்கு ஆயிஷா(ரலி)அவர்கள், நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அது எமக்கும் ஏற்பட்டது. நாம் நோன்பைக் கழாச் செய்ய ஏவப்பட்டோம். தொழுகையைக் கழாச் செய்ய ஏவப்படவில்லை’ என்று கூறினார்கள்.

மேற்படி அறிவிப்பு புகாரி, முஸ்லிம் உட்படப் பல்வேறு கிரந்தங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, ‘ஹதீஸை மறுத்தல்’ என்ற இந்த வழிகேடு சமூகத்தில் ஊடுருவி வளர்ந்து விடக் கூடாது. இந்தக் கோணத்தில் ஆய்வு செய்தால் ஹதீஸ்களை மட்டுமல்ல, எதிர்காலத்தில் குர்ஆன் வசனங்களைக் கூட விஞ்ஞானத்திற்கு முரண்படுகிறது, பகுத்தறிவுக்கு முரண்படுகிறது என்று மறுக்கும் நிலைக்குக் கொண்டு சென்று விடும் என்பதால், இது குறித்து விவரிக்க வேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழுலகில் தவ்ஹீத் வட்டாரத்தில்தான் இந்த நோய் பரவி வருகிறது. இந்த வகையில் தவ்ஹீத் வட்டாரத்தைச் சென்றடையும் ஊடகத்தின் மூலமே இந்தத் தெளிவை வழங்கும் தேவை உள்ளது. இந்தத் தவறான கருத்து தமிழுலகில் அறிஞர் பிஜே அவர்கள் மூலமாகத்தான் முன்வைக்கப்பட்டது. அவர் முன்வைக்கும் வாதத்தை அவரது நூலிலிருந்தே எடுத்துக் காட்டி விளக்கம் அளிக்கும் தேவை இருப்பதால் அவரது பெயரையும், வாதங்களையும் அதிலுள்ள முரண்பாடுகளையும், அவர் ஹதீஸ்களில் சில இடைச் செறுகல்-நீக்கம் செய்திருப்பதையும் சுட்டிக் காட்டி விளக்குவது அவசியமாகின்றது என்பதை வாசகர்கள் கவனத்திற்கொள்ளவும்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் குறித்து அவர் தனது தர்ஜமாவில் 1304 (நான்காம் பதிப்பு) இல் குறிப்பிடும் போது, ‘ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை. திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது. இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்றுக் குர்ஆனை மறுத்து விடாமல், குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை மட்டும் நிறுத்தி வைப்பதுதான் நேர்மையான பார்வையாகும். இந்த நேரத்தில் மட்டும் இது போன்ற ஹதீஸ்களை மட்டும் நாம் விட்டுவிட வேண்டும் ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் பல விடயங்களை ஒப்புக்கொள்கிறார் :

** குர்ஆனுக்கு ஹதீஸ் நேரடியாக முரண்பட வேண்டும். நாமாகச் சுற்றி வளைத்து முரண் கற்பிக்கும் நிலை இருக்கக் கூடாது.

** எந்த வகையிலும் குர்ஆனையும், குறித்த ஹதீஸையும் இணைத்து விளக்கம் கூற முடியாமல் இருக்க வேண்டும். (இந்த வகையில் இவர் மறுக்கும் ஹதீஸ்களுக்கு எந்த வகையிலும் விளக்கம் கூற முடியாத நிலையில்தான் உள்ளதா என்பது நோக்கத்தக்கது)

** இந்த நிலை இருந்தால், அந்த ஹதீஸை மட்டும் நிறுத்தி வைக்க வேண்டும். (மறுக்க வேண்டும் என்பது அல்ல. அது குறித்து மௌனம் காக்க வேண்டும்.)

இவர், தான் எழுதியதற்கு மாற்றமாக குறித்த ஹதீஸை மறுக்கிறார்; ஏற்பவர்கள் வழிகேட்டில் இருப்பதாகக் கூறுகிறார்; விவாதத்திற்கு அழைக்கிறார் என்றால், இதுதான் நிறுத்தி வைக்கும் நேர்மையான பார்வையா? என நடுநிலையாகச் சிந்தித்துப் பாருங்கள்!

மூஸா நபியும், மலக்குல் மௌத்தும்:

صحيح البخاري ت – 3 / 310
1339
حَدَّثَنَا مَحْمُودٌ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِمَا السَّلَام فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لَا يُرِيدُ الْمَوْتَ فَرَدَّ اللَّهُ عَلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ بِهِ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ قَالَ أَيْ رَبِّ ثُمَّ مَاذَا قَالَ ثُمَّ الْمَوْتُ قَالَ فَالْآنَ فَسَأَلَ اللَّهَ أَنْ يُدْنِيَهُ مِنْ الْأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَوْ كُنْتُ ثَمَّ لَأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ عِنْدَ الْكَثِيبِ الْأَحْمَرِ

pj-tharjama

( பக் 1307-1308 , பீ.ஜே வின் திருக்குர்ஆன் தர்ஜுமா, நான்காம் பதிப்பு )

மேற்படி அறிவிப்பில் முக்கியமான ஒரு பகுதியை மறைத்து விட்டே அவர் மொழியாக்கம் செய்துள்ளார். வேண்டுமென்றே மறைத்து விட்டுத்தான் செய்தார் என்று இனித் துணிந்து கூறலாம். ஏனெனில், ஜம்இய்யா வெளியிட்ட ‘இதுதான் தவ்ஹீத்’ என்ற நூலின் 129 பக்கத்தில் ஒரு ஹதீஸை முபாறக் (ஸலபி) மொழி பெயர்க்கும் போது, சில பகுதிகளை விட்டு விட்டு மொழி பெயர்த்துள்ளார். அதில் தெளிவாகவே ‘ …’ என்று கூறினார் என்று போடப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் ஹதீஸில் இன்னும் சில பகுதிகள் இருக்கின்றன என்பதுதான். அப்படியிருந்தும் திட்டமிட்டு ஹதீஸின் ஒரு பகுதியை மறைத்து விட்டதாக பீஜே எம் மீது குற்றம் சாட்டினார். இப்போது இவர் மொழி பெயர்த்த ஹதீஸில் இன்னும் இருக்கின்றது என்ற குறியீடு இல்லாமலேயே அவர் இருட்டடிப்புச் செய்த பகுதியைப் பாருங்கள்!

‘…அப்படியானால் இப்பொழுதே தயார் எனக் கூறி விட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் எனும்) புனிதத் தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டிக் கொண்டார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது, ‘நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்தச் செம்மண் குன்றுக்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஸா(அலை) அவர்களது கப்ரைக் காட்டியிருப்பேன்’ என்று குறிப்பிட்டார்கள்.’

மேற்படி ஹதீஸின் முக்கிய பகுதியை மூடி மறைத்து விட்டு, இந்த ஹதீஸை மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டு வர முயற்சிக்கின்றார். இந்த ஹதீஸில் ஏற்படுத்தப்படும் முக்கிய சந்தேகத்திற்குத் தீர்வாக அமையும் ஹதீஸின் முக்கிய செய்தியை இருட்டடிப்புச் செய்து இந்த ஹதீஸை மறுக்க முனைந்துள்ளார் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.

குறிப்பு: தற்பொழுது அவரது வெப்தளத்தில், அவர் இந்த ஹதீஸை முழுமையாக மொழிப்பெயர்த்து வெளியிட்டிருந்தாலும், முன்பு அவர் தனது தர்ஜுமாவில் முக்கிய பகுதியை மறைத்து அதைப் படித்தவர்களின் மனதில், இந்த ஹதீஸை மறுக்கும் மனோ நிலையை உருவாக்கியுள்ளார்.

மரணமும், நபிமார்களுக்குரிய சட்டமும்:
பொதுவாக ஹதீஸ்களை மறுப்போர் அடிப்படையான ஒரு விடயத்தில் முதல் தவறு விடுவர். அந்தத் தவறில் இருந்து நியாயமான சில வாதங்கள் முன்வைப்பர். அந்த வாதங்களால் மக்கள் மயக்கப்படுவர். பொதுவான ஒரு சட்டத்தைக் குறிப்பிட்ட ஒரு சாராருக்குரிய அல்லது நபருக்குரிய சட்டத்துடன் மோத விட்டுத் தமது நியாயத்தை நிறுவ முற்படுவர். உதாரணமாகச் செத்தவைகள் உண்ணத் தடை விதிக்கப்பட்டுள்ளன என்பது பொதுவான சட்டம். மீன் இறந்தாலும் சாப்பிடலாம் என்பது தனியான சட்டம். செத்தவற்றை உண்ணக் கூடாது என்ற பொதுச் சட்டத்திலிருந்து நீர் வாழ் உயிரினங்கள் விதிவிலக்களிக்கப்பட்டுள்ளன என இதைப் புரிந்துகொள்ளாவிட்டால் குர்ஆனும், ஹதீஸும் முரண்படுவதாகத்தான் தென்படும். இந்த அடிப்படையை மனதில் கொண்டு பின்வரும் செய்தியை வாசிக்கவும்.

மரணம் வந்தால் ஒரு நிமிடம் முற்படுத்தப்படவும் மாட்டாது, பிற்படுத்தப்படவும் மாட்டாது என்பது பொதுச் சட்டம். ஆயினும், நபிமார்கள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர்.

மரணமும், நபிமார்களுக்குரிய சட்டமும்

‘இம்மை-மறுமை (இரண்டுக்கும்) இடையில் (மறுமையைத்) தேர்ந்தெடுக்காத வரையில் எந்த நபியும் மரணிப்பதில்லை என்பதை நான் செவியுற்றிருந்தேன். நபி(ஸல்) அவர்கள், தான் மரணித்த அவர்களது அந்த நோயின் போது, ‘அல்லாஹ் அருள் புரிந்தவர்களுடன்…’ என்ற ஆயத்தை ஓதினார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்கள் மரணத்தைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள் என நான் நினைத்தேன்’ என ஆயிஷா(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹ் புகாரி)

முஅதா

‘(மரணத்தைத்) தானாகத் தேர்ந்தெடுக்காத வரையில் எந்த நபியும் மரணிப்பதில்லை’ என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்.’ (முஅதா)

நபி(ஸல்) அவர்கள், தான் மரணத்தைத் தேர்ந்தெடுத்தது குறித்துக் கூறும் போது ‘ஒரு அடியாரிடம் இம்மையும், அதன் அலங்காரமும் காட்டப்பட்டது. அவரோ மறுமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்’ எனக் கூறினார்கள். (ஹாகிம்)

ஹாகிம்

இந்தச் செய்தியை நபி(ஸல்) அவர்கள் கூறிய போது நபி(ஸல்) அவர்கள் தனது நிலை குறித்துத்தான் கூறுகின்றார்கள் என்பதை அபூபக்கர்(ரலி)அவர்கள் மட்டுமே உடனே புரிந்து கொண்டார்கள்.

எனவே நபிமார்களின் மரணத்திற்கும், பொதுவானவர்களின் மரணத்திற்குமிடையில் வேறுபாடு உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்! அவர்கள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர்.

மனித உருவில் மலக்குகள்:

அடுத்ததாக, மலக்குகள் சில போது மனித உருவில் வருவார்கள். வந்தவர் தன்னை மலக்கு என்று கூறும் வரை அவர் வானவர் என்ற உண்மை பார்ப்பவருக்குத் தெரியாமல் இருக்கலாம் என்பதைக் குர்ஆன் உறுதி செய்கின்றது.

(1) மர்யம்(அலை) அவர்களிடம், ஜிப்ரீல்(அலை) அவர்கள் மனித உருவில் வருகின்றார்கள். கன்னிப் பெண்ணான அவர்கள், வந்தவர் வானவர் என்று அறியாமல் கெட்ட நோக்கத்தில் ஒரு ஆண் தன்னை அணுகுவதாக எண்ணிப் பாதுகாவல் தேடுகின்றார்கள். அதன் பின்னர்தான் வந்தவர், தான் ஒரு வானவர் என்ற உண்மையைக் கூறுகின்றார்.
பார்க்க: (அல்குர்ஆன் 19:17-22)

(2) இப்றாஹீம்(அலை) நபியிடம் மலக்குகள் மனித வடிவில் வருகின்றனர். அவர் அவர்களுக்காக கொழுத்த காளைக் கன்றை அறுத்து விருந்து வைக்கிறார். அவர்கள் உண்ணாமல் இருப்பதைக் கண்டு அச்சமுறுகின்றார். அதன் பின்னர்தான் வந்தவர்கள், தாம் வானவர்கள் என்ற உண்மையைக் கூறுகின்றனர்.
பார்க்க: அல்குர்ஆன் 51:24-30, 15:51-56, 11:69-76, 39:31-32.

(3) இதே வானவர்கள், லூத்(அலை)நபியின் வீட்டிற்குச் செல்கின்றனர். அவரது சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், மலக்குகளை மனிதர்கள் என எண்ணி தன்னினச் சேர்க்கைக்கு அவர்களைப் பயன்படுத்தப் பலவந்தப்படுத்துகின்றனர். லூத்(அலை)நபி அந்தக் கெட்டவர்களிடம் கெஞ்சிக் கேட்டும், அவர்கள் தமது தவறை விடுவதாக இல்லை.

எனவே, விருந்தாளிகளை விட்டு விட்டுத் தமது மகள்களைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்கின்றனர். அவர்கள் அதற்கும் இணங்காத போது அவரது மனவேதனையை அல்லாஹ்விடம் முறையிடுகின்றார்கள். அதன் பின்னர்தான் வந்தவர்கள் தாம் வானவர்கள் என்றும், இந்த சமுதாயத்தை அல்லாஹ்வின் உத்தரவுப் படி அழிக்க வந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

பார்க்க – அல்குர்ஆன் 15:67-74, 11:77-82, 29:33-34.

இறுதிக் கட்டத்தில் அவர்களாகக் கூறும் வரை மேற்குறிப்பிட்ட நபிமார்களுக்கே வந்தவர்கள் வானவர்கள் என்பது தெரியாமல் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

இந்த வகையில் மூஸா(அலை)நபியிடம் மனித உருவில் வந்த வானவரை அவர் வானவர் என்று தெரிந்தோ அல்லது தெரியாமலோ மூஸா(அலை) தாக்கினார் என்பது மறுக்கக் கூடிய அம்சம் இல்லை என்பதை அறியலாம்.

அடுத்து ‘அனுமதியின்றி ஒருவர் வீட்டிற்குள் உற்றுப் பார்த்தால், அவரது கண்ணைக் குத்துங்கள்!’ எனக் கூறி, உற்றுப் பார்ப்பதன் தீமையை நபி(ஸல்) அவர்கள் உணர்த்துகின்றார்கள். இந்த வகையில் தனது வீட்டிற்குள் அனுமதியின்றி வந்தவர் மீது மூஸா (அலை) கடுமையாக நடந்துகொண்டுள்ளார்கள். அத்துடன் தனது உயிரைப் பாதுகாப்பதற்காகப் போராடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. வந்தவர் வானவர் என்று அறியாமல் தன் உயிரைக் காத்துக்கொள்வதற்காக மூஸா(அலை)நபி வந்தவருக்கு அடித்தால், அது மார்க்க ரீதியில் மறுக்கப்படக் கூடிய அம்சம் அல்ல என்பதை அறியலாம்.

இந்த அடிப்படையைக் கருத்திற்கொள்ளாமல் இந்த ஹதீஸைப் பல்வேறுபட்ட கேள்விகள் மூலம் மறுக்க முனைகின்றார் பீஜே அவர்கள். இவரது வாதங்களை ஏற்றால் குர்ஆன் கூறும் பல சம்பவங்களையும் இதே வாதத்தின் அடிப்படையில் நிராகரிக்க நேரிடும். 

மரணத்தைப் பொறுத்த வரையில் சாதாரண மனிதர்களின் மரணத்திற்கும், நபிமார்களின் மரணத்திற்குமிடையில் வித்தியாசம் இருப்பதையும், நபிமார்கள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர் என்பதையும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தினோம். இந்த உண்மையை உணராமல்தான் சிலர் இந்த ஹதீஸை மறுக்கின்றனர்.

அத்துடன் மலக்குகள் மனித ரூபத்தில் வருவர் என்பதையும் தன்னிடம் திடீரென மனித ரூபத்தில் வந்த மலக்கை மூஸா நபி அறைந்தது ஒரு சாதாரண நிகழ்வு. மறுக்கப்படவேண்டிய அம்சம் அல்ல என்பதையும் தெளிவுபடுத்தினோம். இந்த உண்மையை உணராத பல வழிகெட்ட பிரிவினர் வரலாற்று ஓட்டத்தில் இந்த ஹதீஸை மறுத்துள்ளனர். இதனை அஹ்லுஸ் ஸுன்னாவுடைய பல அறிஞர்களும், ஹதீஸ் கலை மேதைகளும் வன்மையாகக் கண்டித்துமுள்ளனர்.

அல்லாஹுத்தஆலா இரவின் இறுதிப் பகுதியில் உலகத்தின் வானத்திற்கு இறங்குகின்றான் என்ற ஹதீஸை நீங்கள் கூறுகின்றீர்கள் அல்லவா? அவ்வாறே சுவனத்தில் முஃமின்கள் அவனைப் பார்ப்பார்கள் என்றும், முகத்தைக் கேவலப்படுத்தாதீர்கள்! ஏனெனில், அல்லாஹ் ஆதம்(அலை) அவர்களைத் தனது சூறத்தில் படைத்தான் என்ற ஹதீஸையும், நரகம் முறையிடும் போது அல்லாஹ் அதில் தனது காலை வைப்பான் என்றும், மூஸா(அலை) அவர்கள் மலக்குல் மவ்த்தின் கண்ணைப் பழுதாக்கினார் என்றும் ஹதீஸ்களைக் கூறுகின்றீர்களே என்று இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது;

كل هدا صحيح

“இவை அனைத்தும் ஆதாரபூர்வமானவைதான்” என்று கூறினார்கள்.

இமாம் இஸ்ஹாக்(ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் பற்றிக் கூறும் போது;

لا يدعه الا مبتدع او ضعيف الرأي

“இதனை வழிகேடன் அல்லது பலவீனமான பார்வையுடையவனைத் தவிர வேறு எவரும் விட்டு விட மாட்டார்கள்” என்று குறிப்பிடுகின்றார்கள்.

இந்த ஹதீஸைக் கடந்த காலங்களில் பல பிரிவினரும் மறுத்து வந்துள்ளனர். இது குறித்து இமாம் இப்னு குஸைமா(ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது;

قَالَ اِبْنُ خُزَيْمَةَ : أَنْكَرَ بَعْضُ الْمُبْتَدَعَةِ هَذَا الْحَدِيثَ

சில பித்அத்வாதிகள் இந்த ஹதீஸை மறுத்துள்ளனர்” என்று குறிப்பிடுகின்றார்கள்.
(ஸஹீஹுல் புகாரியின் விரிவுரை பத்ஹுல் பாரீ 10/24)

இமாம் அல்மாஸிரிய்(ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது;

قَالَ الْمَازِرِيّ : وَقَدْ أَنْكَرَ بَعْض الْمَلَاحِدَة هَذَا الْحَدِيث

“சில நாஸ்திகர்கள் இந்த ஹதீஸை மறுக்கின்றனர்” என்று குறிப்பிடுகின்றார்கள்.
(பார்க்க: ஸஹீஹ் முஸ்லிமின் விளக்கவுரை 8/103)

சில அறிஞர்கள் இந்த ஹதீஸை நம்புவதை அகீதாவில் ஒரு பகுதியாகக் குறிப்பிடுகின்றனர்.

இது குறித்து அறிஞர் ஸாலிஹ் அல் உதைமீன்(ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது;

وهذا الحديث ثابت في الصحيحين وإنما أثبته المؤلف في العقيدة لأن بعض المبتدعة أنكره

“இந்த ஹதீஸ் புகாரி-முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சில பித்அத்வாதிகள் இதை மறுப்பதால் இந்த நூலாசிரியர் அகீதாவில் ஒரு அம்சமாக இந்த ஹதீஸை இடம்பெறச் செய்துள்ளார்கள்” என்று குறிப்பிடுகின்றார்கள்.
(பார்க்க: மஜ்மூஉ பதாவா வரஸாயில் இப்னு உதைமீன் 5/31)

நவீன கொள்கைவாதிகள் எனும் பித்அத்வாதிகள் மறுத்துள்ளது போன்றே “ராபிழாக்கள்” எனும் வழிகெட்ட ஷீஆக்களும் இந்த ஹதீஸை மறுத்துள்ளனர்.

அபூ ஸுலைமான் அல்ஹத்தாபி(ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது;

قَالَ أَبُو سُلَيْمَانَ الْخَطَّابِيُّ هَذَا حَدِيثٌ يَطْعَنُ فِيهِ الْمُلْحِدُونَ وَأَهْلُ الْبِدَعِ

“நிராகரிப்பாளர்களும், பித்அத்வாதிகளும் இந்த ஹதீஸில் குறை கூறுகின்றனர்” எனக் குறிப்பிடுகின்றனர்.
(அல்அஸ்மாஉ வஸ்ஸிபாத் லில்பைஹகீ 2/449)

அல்ஹாபிழ் அப்துல் கனீ அல்முகத்தஸி இது குறித்துக் குறிப்பிடும் போது;

لا ينكره إلا ضال مبتدع راد على الله ورسوله

“வழிகேடனும், பித்அத்வாதியும் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் செய்தியை மறுப்பவனும் மட்டுமே இந்த ஹதீஸை மறுப்பான்” என்று குறிப்பிடுகின்றார்.
(தத்கிரதுல் முஃதஸி ஷரஹு அகீததுல் ஹாபிழ் அப்துல் கனீ அல்முகத்தஸி)

இவ்வாறு பல்வேறுபட்ட வழிகெட்ட பிரிவினரால் மறுக்கப்பட்ட இந்த ஹதீஸை அவர்கள் கூறிய அதே காரணங்களை முன்வைத்து சகோதரர் பீஜே அவர்களும் மறுக்கின்றார்கள். இவர் இந்த ஹதீஸை மறுப்பதற்காக முன்வைக்கும் வாதங்களைப் பின்வருமாறு சுருக்கி நோக்கலாம்.

– மூஸா நபி மரணத்தை வெறுத்துள்ளார் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.

– ஒரு நபி வானவரைத் தாக்குவாரா? இது நபிமார்களின் பண்புக்குச் சரி தானா?

– மலக்கு தோல்வியுடன் திரும்பிச் செல்வாரா?

இவைதான் இந்த ஹதீஸை மறுப்போர் எடுத்து வைக்கும் பிரதானமான வாதங்களாகும். இந்த ஒவ்வொரு வாதங்களுக்குள்ளும் மற்றும் சில சின்னச் சின்னக் கேள்விகள் அடங்கியுள்ளன. அவை அத்தனைக்கும் இன்ஷா அல்லாஹ் விரிவான விளக்கங்களை இத்தொடரில் நாம் பார்க்கலாம்.

அந்த விளக்கத்திற்குச் செல்ல முன்னர் பொதுவான நடுநிலையான ஒரு சிந்தனையை உங்கள் முன்வைப்பது பொருத்தம் என்று நினைக்கின்றேன்.

ஒரு ஹதீஸில் ஏதேனும் ஒரு சின்ன குறை இருந்தால் பல அறிஞர்களின் பார்வைக்கு அது படாமல் போக வாய்ப்பு உள்ளது என்றாவது கூறலாம். எனினும் கடந்த காலத்தில் வாழ்ந்த எந்த ஹதீஸ் கலை மேதைக்கும் அந்தக் குறை தென்படாமல் போய் விட்டது என்று கூற முடியாது. ஆயினும் பீஜே கூறுவது போல் ஒரு நபியுடையதும், ஒரு மலக்குடையதும் ஏன்! அல்லாஹ்வுடையதும் அந்தஸ்த்தைக் குறைத்துக் காட்டும் ஹதீஸாக இது இருந்திருந்தால் நிச்சயமாக ஹதீஸ் கலை மேதைகள் அனைவரின் பார்வையிலிருந்து அது தப்பியிருக்காது! பீஜேயை விட இமாம் புகாரி, முஸ்லிம் போன்ற இமாம்கள் மார்க்க அறிவோ, உணர்வோ, ஆய்வோ, அற்றிருந்தார்கள் என்று கற்பனையும் பண்ண முடியாது. இப்படி இருக்கக் குர்ஆனின் பல வசனங்களுக்கு முரணாக அமைந்த(?) ஒரு ஹதீஸை அவர்கள் அனைவரும் “சரியானது!” என்று கூறியிருப்பார்களா? என்று சிந்தித்தால், குறை ஹதீஸில் இல்லை; இந்த ஹதீஸை மறுப்போரின் அறிவிலும், மார்க்கத்தை ஆய்வு செய்யும் முறையிலும்தான் உள்ளது என்பது புலப்படுகின்றது. எனவேதான் வழிகெட்ட பிரிவினரைத் தவிர வேறு எந்த அறிஞர்களும் கடந்த காலங்களில் இந்த ஹதீஸை மறுத்ததில்லை. பீஜேயை விடக் கடந்த கால அறிஞர்கள் அனைவரும் ஆய்வறிவற்றவர்களாக இருந்தனர் என்று எண்ணுவது இஸ்லாமிய வரலாற்றையும், ஹதீஸ் கலை வரலாற்றையும் அறியாதவர்களின் பார்வையாகவே இருக்கும். இந்தச் சிந்தனையுடன் இந்த ஹதீஸை மறுப்பதற்காக முன்வைக்கப்படும் வாதங்களைப் பார்ப்போம்.

மூஸா நபி மரணத்தை வெறுத்தார்களா?

இந்த வாதத்தைப் பீஜே பின்வருமாறு முன்வைக்கின்றார்;

“இவ்வுலக வாழ்க்கை அற்பமானது; மறுமை வாழ்வுதான் நிலையானது” என்பது எல்லா இறைத் தூதர்களினதும் போதனையாக இருந்தது. தமக்கு மரணம் வந்து விட்டது என்பதை மூஸா நபியவர்கள் அறிந்து கொண்டால் அதற்குத் தம்மைத் தயார்படுத்திக்கொள்வார்களே தவிர, அதை எதிர்த்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டார்கள்.”
(பீஜேயின் தர்ஜமா – நான்காம் பதிப்பு, பக்கம் 1309)

நாம் ஏற்கனவே நபிமார்களின் மரணத்திற்கும், சாதாரண மக்களின் மரணத்திற்குமிடையிலிருக்கும் வேறுபாட்டை விபரித்துள்ளோம். அந்த ஹதீஸே இந்த வாதத்தை வலிமையிழக்கச் செய்து விடும். நபிமார்களுக்கு மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அல்லாஹ் வழங்கியுள்ளான். அதை மூஸா நபி பயன்படுத்தினார் என்றால் அது அவரது உரிமை. அதனால் அவரது கண்ணியத்தில் எந்தக் குறையும் ஏற்படாது.

அடுத்து வானவர் மனித ரூபத்தில் வந்துள்ளார். மனிதன் ஒருவர் மூலம் தனக்கு ஆபத்து வருமென்றால், அதை எதிர்த்து நடவடிக்கை மேற்கொள்வது மார்க்கம் வலியுறுத்தும் அம்சமேயல்லாது தடுத்த அம்சம் அல்ல. அடுத்து மூஸா(அலை) அவர்கள் – அவர்களின் உண்மையான நாட்டம் என்ன? என்பது ஹதீஸின் இறுதிப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. (அதைத்தான் பீஜே தர்ஜமாவில் மொழி பெயர்க்காமல் இருட்டடிப்புச் செய்திருந்தார்.) இது குறித்துப் பின்னர் விளக்கமாக நோக்கலாம்.

இந்த ஹதீஸை மறுப்போர் கூறுவது போல மூஸா நபி மரணத்தை வெறுத்திருந்தால் கூட அது அவரது அந்தஸ்தைக் குறைக்காது.

மரணமற்ற வாழ்வை விரும்பிய ஆதம் நபி:

அல்லாஹுதஆலா ஆதம்(அலை) அவர்களைப் படைத்து சுவனத்தில் சுகமாக வாழ விட்டான். ஒரேயொரு மரத்தின் கனியை மட்டும் உண்ணக் கூடாது எனத் தடுத்திருந்தான். ஆதம்(அலை) அவர்கள் அந்தக் கனியை ஷைத்தானின் தூண்டுதலால் சாப்பிட்டார்கள்.

ஷைத்தான் எப்படி அவர்களை வழிகெடுத்தான்? என்பது பற்றிக் குர்ஆன் கூறும் போது;

அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். “ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும் உமக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்றான். (20:120)
(இது பீஜே அவர்களின் மொழியாக்கம்தான்)

மரணமில்லாத வாழ்வு கிடைக்கும் என்று ஷைத்தான் தூண்டியதால் அல்லாஹ்வின் கட்டளையையும் மீறி ஆதம்(அலை) அவர்கள் அந்த மரத்தின் கனியைப் புசித்தார்கள். ஆதம்(அலை) அவர்களும் ஒரு நபிதான். மரணமேயில்லாத வாழ்க்கையின் மீது அவர்கள் கொண்ட மோகம் அல்லாஹ் போட்ட ஒரேயொரு தடையைக் கூட மீறும் அளவுக்கு அவர்களை இட்டுச் சென்றுள்ளது என்று குர்ஆன் கூறுகின்றது.

மூஸா நபி மரணத்தை வெறுத்ததாகக் காரணம் காட்டி மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸை மறுப்பது போல், ஆதம்(அலை) அவர்கள் மரணமே இல்லாத வாழ்வுக்கு ஆசைப்பட்டு, ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு, அல்லாஹ்வின் கட்டளையை மீறுவதாகக் கூறும் குர்ஆனின் வசனங்களையும் நிராகரிக்கப் போகின்றார்களா? முரட்டுத்தனமான பிடிவாதமும், விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற மனோநிலையும் ஹதீஸை மட்டுமல்ல; குர்ஆனையும் நிராகரிக்கும் நிலைக்கு இவர்களை அழைத்துச் செல்லுமா?

இது ஆதம்(அலை) அவர்களுடன் சம்பந்தப்பட்டது. மூஸா நபி சம்பந்தப்பட்ட சில நிகழ்ச்சிகளையே இங்கே தர விரும்புகின்றோம்.

உயிருக்குப் பயந்து ஊரை விட்டு ஓடியவர்(?)

மூஸா(அலை) அவர்கள் தவறுதலாக ஒரு கொலை செய்தார்கள். அந்த செய்தி தெரிய வந்த போது, மூஸா(அலை) அவர்களைக் கொலை செய்ய அதிகாரிகள் முடிவு செய்ததாகத் தகவல் மூஸா நபிக்குக் கிடைக்கின்றது. எனவே தனது உயிரைக் காத்துக்கொள்வதற்காக பயத்துடன் கவனமாக எவரும் அறியாத வண்ணம் ஊரை விட்டும் மூஸா நபி ஓடுகின்றார். (பார்க்க: 28:15-21)

மூஸா நபி உயிருக்குப் பயந்து ஊரை விட்டும் ஓடியதாக இந்தக் குர்ஆனிய வசனங்கள் கூறுகின்றனவே! இதையும் மறுக்கப் போகின்றார்களா? அல்லது தவறுதலாக ஒரு கொலை நடந்து விட்டால் சட்டப்படி அதை அணுகி, பிரச்சினையைத் தீர்க்காமல் கொலையை மூஸா நபி மறைத்துள்ளார்கள். இந்தச் சம்பவம் கொலை செய்வதையும், அதை மறைப்பதையும் தேவைப்பட்டால் சட்டத்தின் பிடியில் சிக்காமல் ஓடி ஒழிப்பதையும் ஆதரிக்கின்றது என்று கூறி, (நூறு கொலைகள் செய்த மனிதனை அல்லாஹ் மன்னித்த ஹதீஸை மறுத்தது போன்று) இந்தக் குர்ஆன் வசனங்களையும் மறுக்கப் போகின்றார்களா? அல்லது இந்தச் சம்பவம் கொலை செய்யத் தூண்டுகின்றது என்று கூறி மறுக்க முன்வருவார்களா?

இந்தச் சம்பவத்திற்கு வேண்டுமானால் சில சமாளிப்புப் பதில்களை அவர்கள் கூறலாம்.

பாம்புக்குப் பயந்து ஓடியவர்:

மூஸா நபியுடன் தூர் மலையடிவாரத்தில் அல்லாஹ் நேரடியாகப் பேசுகின்றான்; “மூஸாவே! நான்தான் அகிலத்தின் இரட்சகனாகிய அல்லாஹ்!” என்று நேரிடையாகக் கூறியே அல்லாஹ் பேசுகின்றான். அப்போது மூஸா நபியின் கையில் இருந்த தடியைக் கீழே போடுமாறு அல்லாஹ் கூறுகின்றான். அவர் கீழே போட்டார். அந்தத் தடி பாம்பு போல் நெளிவதைக் கண்டதும்;

திரும்பிப் பார்க்காமல் புறமுதுகிட்டு ஓடினார். அதன் பின் அல்லாஹ்வே, “மூஸாவே! முன்னோக்கி வாரும்! பயப்படாதீர்! நிச்சயமாக நீர் அச்சமற்றவர்களில் உள்ளவர்” என்று கூறிய பின்னர்தான் வருகிறார்.
(பார்க்க: 28:29-31, 20:11-21)

இந்தச் சம்பவத்தை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்! மூஸா நபி உயிருக்கு எவ்வளவு பயந்துள்ளார் என்று சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ்வே நேரடியாகப் பேசிக்கொண்டிருக்கும் போது அந்தப் பாக்கியம் மிக்க உரையாடலையும் உடைத்துக் கொண்டு ஒரு பாம்புக்குப் பயந்து ஓடுவதாக இந்த ஆயத்துக்கள் கூறுகின்றனவே! இது சரியாக இருக்குமா? அப்படியே பயப்பட்டால் கூட தன்னுடன் நேரடியாக அல்லாஹ் உரையாடிக்கொண்டிருக்கின்றான்; அந்த அல்லாஹ்விடமே முறையிடலாமல்லவா? இவ்வாறுதான் மூஸா நபியும் மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸ் குறித்துப் பீஜே வாதிப்பது போல் வாதிட்டால் இந்த ஆயத்துக்களையும் நிராகரிக்க நேரிடுமல்லவா?

மேற்படி ஹதீஸை மறுக்கும் விதத்தில் பீஜே அவர்கள் எழுதும் போது;

“மலக்குல் மவ்த் அல்லாஹ்வின் கட்டளையைக் கூறிய போது ஒரு நபி என்ன செய்திருப்பார்? உடனே அதற்குத் தலை சாய்த்திருப்பதைத் தவிர வேறு வழி அவருக்கு இல்லை. (நபிமாருக்குத்தான் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் வேறு வழி இருக்கிறது என்ற அடிப்படைக்கு முரணான கூற்று இது.) இதோ நான் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தத் தயார்! என்று கூறி இருந்தால் ஒரு நபியின் தகுதி அதில் வெளிப்பட்டிருக்கும். அல்லது “இறைவா! இன்னும் கொஞ்சம் ஆயுளை அதிகமாக்கித் தா!” என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருந்தால் சராசரி முஃமினின் பண்பு அதில் வெளிப்பட்டிருக்கும். ஆனால், அல்லாஹ் அனுப்பிய தூதரை கண்ணைக் குருடாக்கும் அளவுக்கு அறைவது ஈமானில் சேருமா? இறை மறுப்பில் சேருமா?” என்று வாதிட்டு அந்த ஹதீஸை மறுக்கின்றார்.

இதே போன்று அல்லாஹ் நேரடியாக உரையாடிக்கொண்டிருக்கின்றான். அவன்தான் தடியைப் போடச் சொல்கின்றான். அது பாம்பு போல் நெளிகின்றது. இதைப் பார்த்த ஒரு இறைத் தூதர் என்ன செய்ய வேண்டும்? அச்சம் இல்லாமல் இருக்க வேண்டுமல்லவா?

நபி(ஸல்) அவர்களை எதிரிகள் சூழ்ந்த போது, அபூபக்கர்(ரலி) அவர்களிடம் “பயப்படாதே! அல்லாஹ் எம்முடன் இருக்கின்றான்” என்று (9:40) கூறியது போன்று பயமற்று இருக்க வேண்டும். நம்முடன் அல்லாஹ் உரையாடுகின்றான் என்ற உணர்வுடன் இருந்திருக்க வேண்டும். சரி, சராசரி மனிதனைப் போல் அச்சம் ஏற்பட்டால் கூட அல்லாஹ்விடம் முறையிட வேண்டும். அதை விட்டு விட்டு பாம்புக்குப் பயந்து அல்லாஹ்வையே உதாசீனம் செய்வது போல் திரும்பிப் பார்க்காமல் ஓடுகின்றாரே இது அல்லாஹ்வை நம்புவதில் சேருமா? அல்லாஹ் மீது நம்பிக்கையற்ற தன்மையைக் காட்டுமா? இது அல்லாஹ்வை மதிப்பதைக் காட்டுமா? உதாசீனப்படுத்துவதைக் காட்டுமா? என்ற தொனியில் கேள்விகளைத் தொடுத்து இந்த வசனங்களையும் இவர்கள் நிராகரிக்கப் போகின்றார்களா?

மூஸா(அலை) அவர்கள் பிர்அவ்னிடம் பிரச்சாரம் செய்யும் போது தனது கைத் தடியைப் போடுகின்றார்கள். அது பாம்பாக மாறுகின்றது. இதைப் போல் எம்மாலும் செய்ய முடியும் என்ற அடிப்படையில் அவன் சூனியக்காரர்களுடன் போட்டிக்கு ஏற்பாடு செய்கின்றான். சூனியக்காரர்கள் தமது கைத் தடிகளையும், கயிறுகளையும் போட்ட போது அவர்களது சூனியத்தின் காரணத்தினால் அவை பாம்புகள் போன்று போலித் தோற்றமளிக்கின்றன. இதைப் பார்த்து மூஸா நபி பயப்படுகிறார்கள். இதனைக் குர்ஆன் பல இடங்களில் விபரிக்கின்றது. (பார்க்க: 20:57-69)

தனது தடி குறைந்தது ஏற்கனவே இரண்டு தடவைகளாவது பாம்பாக மாறியுள்ள நிலையிலும் மூஸா நபி சூனியக்காரர்களின் போலிப் பாம்புக்குப் பயப்பட்டுள்ளாரே! உயிருக்கு இவ்வளவு பயந்த ஒருவர் இறைத் தூதராக இருக்க முடியுமா? சூனியக்காரனின் இது போன்ற சேட்டைக்கு நாங்களே அச்சப்பட மாட்டோம் எனும் போது ஒரு நபி அச்சம் கொள்வாரா? சராசரி மனிதன் கூட உண்மையான பாம்பைக் கண்டால் கூடத் தடியைத் தேடி அதை அடிக்க முற்படும் போது ஒரு நபி கையில் தடியை வைத்துக் கொண்டு, பாம்பு போல் போலித் தோற்றத்தை ஏற்படுத்தும் கயிற்றுக்கும், தடிக்கும் அச்சப்பட்டிருப்பீர்களா? சூனியக்காரனால் தடியையும், கயிற்றையும் பாம்பாக மாற்ற முடியாது என்ற உண்மையை நாம் கூட உறுதியாகக் கூறிக்கொண்டிருக்கின்றோம். அப்படி இருக்கும் போது சூனியக்காரனால் தடியைப் பாம்பாக மாற்ற முடியாது என்ற அடிப்படை அரிச்சுவடி அறிவு கூட மூஸா நபிக்கு இல்லாமல் இருந்திருக்குமா? என்று பீஜே தனது பாணியில் கேள்விகளை அடுக்கி இந்தக் குர்ஆன் வசனங்களையும் நிராகரிக்கப் போகின்றாரா? பீஜேயை முழுமையாக நம்பும் சகோதரர்கள் குர்ஆன் வசனங்களையும் மறுக்கத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனரா?

உயிருக்குப் பயந்து உதவியாளரைக் கேட்டவரா?

அல்லாஹுதஆலா மூஸா நபியுடன் நேரடியாக உரையாடிச் சில அற்புதங்களையும் கொடுத்து ஃபிர்அவ்னிடம் சென்று பிரச்சாரம் செய்யச் சொல்கின்றான்.

அப்போது மூஸா நபி;
அ(தற்க)வர், “எனது இரட்சகனே! நிச்சயமாக நான் அவர்களில் ஒருவனைக் கொலை செய்து விட்டேன். அதனால் அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என நான் அஞ்சுகின்றேன்” என்று கூறினார். (28:33) என்று கூறுகின்றார்.

அல்லாஹ்வே நேரடியாக உத்தரவிடும் போது என்னை அவர்கள் கொன்று விடுவார்கள் என்ற அச்சத்தை மூஸா நபி வெளிப்படுத்துகின்றார்களே! இது சரியா? சாதாரணமாக எமது இளம் உலமாக்களே ஆபத்து நிறைந்த களங்களுக்குச் சென்று தஃவாச் செய்கின்றனர். ஒரு தீவிரவாதக் குழுத் தலைவனின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டுச் சாதாரண ஒரு தீவிரவாதி வெடிகுண்டுடன் போய் எதிரிகளுடன் மோதி தன்னைத் தானே அஞ்சாமல் அழித்துக்கொள்ளும் போது, அல்லாஹ் கூறும் போது என்னைக் கொன்று விடுவார்கள் என்று தனது அச்சத்தை வெளிப்படுத்துகின்றாரே! அது சரியாக இருக்குமா? அப்படியே கொல்லப்பட்டால் கூடச் சுவனம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இவருக்கு இல்லையா? அல்லாஹ்வின் பாதையில் உயிரைத் தியாகம் செய்ய ஏன் ஒரு நபி தயங்க வேண்டும்? என்றெல்லாம் கேள்வி எழுப்பி, இந்தக் குர்ஆன் கூறும் சம்பவத்தையும் நிராகரிக்கப் போகின்றனரா?

இவர்கள் ஹதீஸ்களை மறுக்கும் இதே பாணியில் சிந்தித்தால், ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மட்டுமல்ல; குர்ஆன் கூறும் பல சம்பவங்களையும் மறுக்கும் மனநிலைதான் சாதாரண மக்களிடம் ஏற்படும். வழிகெட்ட முறையில் அணுகி, ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் நிராகரித்து, குர்ஆனையும் நிராகரிக்கும் நிலைக்குச் செல்வதா? குர்ஆனையும், ஹதீஸையும் நிராகரிக்காமல் இணக்கப்பாட்டைக் கண்டு இரண்டையும் ஏற்கும் வழியில் செல்வதா? முரட்டுப் பிடிவாதமும், போலி சுய கௌரவமும் பார்த்து தனி நபர் மோகத்தில் வழிகேட்டைத் தேர்ந்தெடுப்பதா?

கடந்த கால ஹதீஸ் கலை மேதைகள் இந்த ஹதீஸை நியாயமான காரணங்களால் ஏற்றது போல் நாமும் ஏற்று நல்வழி செல்வதா? எனப் பொது மக்கள் நிதானமாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

மூஸா நபி மரணத்தை வெறுத்தால் கூட இந்த ஹதீஸை மறுக்க முடியாது என்பதை இதிலிருந்து அறியலாம். எனினும் மூஸா நபி மரணத்தை வெறுக்கவில்லை என்றுதான் இந்த ஹதீஸ் கூறுகின்றது.

மூஸா நபி மரணத்தை வெறுத்தார்களா?
இந்த ஹதீஸ் மூஸா நபி மரணத்தை வெறுத்ததாகக் கூறுகின்றது. ஒரு நபி மரணத்தை வெறுக்க மாட்டார். மரணம் வந்தால் உடனே அதற்குத் தயாராகி விடுவார்கள் என்ற அடிப்படையில் கேள்வி எழுப்புகின்றார்.

இந்த ஹதீஸ் மூஸா நபி மரணத்தை வெறுக்கவில்லை என்பதைத்தான் தெளிவாகக் கூறுகின்றது. தான் இப்போது மரணிப்பதா? அல்லது தாமதித்து மரணிப்பதா? என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை அல்லாஹ் நபிமார்களுக்கு வழங்கியுள்ளான். ஏனையோர் அறியாமல் மரணிப்பது போன்று நபிமார்கள் மரணம் பற்றி அறியாமல் மரணிப்பதில்லை. இந்த அனுமதியைத்தான் மூஸா நபி பயன்படுத்தினார்கள்.

மூஸா நபி மலக்கைத் தாக்கிய போது அவர் அல்லாஹ்விடம் சென்று மரணத்தை விரும்பாத ஒரு அடியானிடம் என்னை நீ அனுப்பி விட்டாய் என்று கூறுகின்றார்கள். இந்த வாசகம் மூஸா நபி மரணத்தை விரும்பவில்லை என்றுதான் கூறுகின்றது. இதன் பின் மூஸா நபிக்கு நீண்ட காலம் வாழும் வாய்ப்பை அல்லாஹ் அளிக்கின்றான். ஒரு மாட்டில் கை வைத்தால், பல்லாயிரம் முடிகள் கைக்குள் அடங்கலாம். அத்தனை ஆண்டுகள் வாழ விரும்பினால் வாழலாம் என்ற நிலை வந்த போதும் மூஸா நபி மரணத்தைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்றால், அவர் மரணத்தை வெறுத்தார் என்று கூற முடியுமா?

நடந்த ஒரு நிகழ்ச்சி பற்றி முடிவு செய்யும் போது இறுதிச் செய்திதான் முக்கியத்துவம் பெறும்.

உதாரணமாக, ஒருவரிடம் ஒரு பெண் கடன் கேட்கிறாள். அவர் கடன் தருவதாகவும், அந்தப் பெண் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் நிபந்தனையிடுகின்றார். இவரைப் பற்றி இந்தச் செய்தியை மட்டும் படித்தால் இவர் மிக மோசமான கீழ்த் தரமான மனிதராகவே இருப்பார் என்றுதான் கூற வேண்டும். எனினும் இந்த மனிதர் தவறுக்கு நெருங்கும் போது, அந்தப் பெண் “அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்!” என்று கூறியதும் தவறிலிருந்து ஒதுங்கிக்கொள்கின்றார். இவரை இஸ்லாம் நல்ல மனிதர் என்றுதான் கூறுகின்றது. இந்த ஹதீஸைப் போன்று மூஸா நபி மலக்கை அடித்திருந்தாலும் அவர் மரணத்தை வெறுத்தார் என்று கூற முடியாது. பல்லாயிரம் ஆண்டுகள் வாழ அவகாசம் கிடைத்தும் கூட “இப்போதே மரணிக்கத் தயார்!” என்று கூறி மரணத்தை நேசித்துள்ளார்கள் என்றுதான் ஹதீஸ் கூறுகின்றது.

மூஸா நபியின் ஆசை என்ன?
நபிமார்கள் மரணிக்கும் இடத்தில்தான் அடக்கம் செய்யப்படுவார்கள். மூஸா நபி மரணத்தை வெறுக்கவில்லை. எனினும் பைத்துல் முகத்திஸுக்கு அருகில் புனித பூமியில் மரணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஃபிர்அவ்னின் ஆட்சியில் அடிமைகளாக இருந்த மக்களை மீட்டுப் பலஸ்தீனுக்கு அழைத்துச் செல்லும் போராட்டத்தை முன்னெடுத்த அவர்கள் தன் இலட்சியக் கனவான புனித பூமியை அடைந்து, அந்தப் புனித பூமியிலேயே மரணிக்க ஆசைப்பட்டது சராசரி போராளியின் நியாயமான ஆசை என்பதை எவரும் அறியலாம்.

இப்போதே என் உயிரை எடுத்துக்கொள்! எனினும் (பைத்துல் முகத்திஸ் எனும்) புனித பூமிக்கு நெருக்கமாக அதிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தன் அடக்கஸ்தலம் அமைந்திடச் செய்யுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.

(இந்தப் பகுதியைத்தான் பீஜே தனது தர்ஜமாவில் தமிழாக்கம் செய்யாது விட்டுள்ளார்).

எனவே மூஸா நபி நீண்ட காலம் வாழ ஆசைப்படவில்லை. பைத்துல் முகத்திஸ் அருகில் மரணிக்கவே விரும்பினார்கள். இந்த ஹதீஸின் முக்கிய பகுதியே இதுதான். இமாம் புகாரி(ரஹ்) அவர்கள்

“யார் இரவில் புனித பூமியில் அடக்கம் செய்யப்படுவதை அல்லது அது போன்றதை விரும்புகின்றாரோ…” என்ற தலைப்பில்தான் இந்த ஹதீஸை இடம்பெறச் செய்துள்ளார்கள்.

(இதே ஹதீஸ் மற்றும் சில தலைப்புக்களிலும் இடம்பெற்றுள்ளது).

இந்தப் பகுதி எப்படித் தர்ஜமாவில் தவிர்க்கப்பட்டது என்பது ஆச்சரியமாகவே உள்ளது.

மூஸா நபியின் இந்த ஆசையை அல்லாஹ் நிவர்த்தி செய்தான். அவர்கள் புனித பூமியில்தான் மரணித்தார்கள் என்பதை ஹதீஸின் இறுதிப் பகுதி உறுதி செய்கின்றது.

நான் அங்கு (பைத்துல் மக்திஸில்) இருந்திருந்தால் சாலையோரமாகச் செம்மணற் குன்றின் கீழே அவரது மண்ணறை இருப்பதை உங்களுக்குக் காட்டியிருப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறியது இதைத் தெளிவுபடுத்துகின்றது.

மூஸா நபி மரணத்தை அறியாதிருந்தாரா?
இந்த நிகழ்ச்சி நடக்கும் வரை மரணத்தைப் பற்றி மூஸா நபி அறிந்திருக்கவில்லை என இந்த ஹதீஸ் கூறுகின்றது. எனவே இந்த ஹதீஸை ஏற்க முடியாது என பீஜே வாதிடுகின்றார்.

இது பற்றிக் கூறும் போது;

“ஒவ்வொரு மனிதனும் மரணித்தே ஆக வேண்டும் என்பது ஒட்டு மொத்த மனிதரும் அறிந்து வைத்துள்ள உண்மை. இந்த உண்மை ஒரு நபிக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு முஸ்லிம் நம்ப வேண்டிய அடிப்படைகளில் ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்க வேண்டும் என்பதும் முக்கியமானது. ஆனால் மூஸா நபி அவர்கள் மரணத்தை நெருங்கும் வரை இந்தச் சாதாரண உண்மையை அறியாதவராக இருந்துள்ளார் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. மனிதன் மரணித்தே ஆக வேண்டும் என்ற அடிப்படையான விஷயம் கூட கடைசி நேரத்தில் அல்லாஹ் சொல்லிக் கொடுத்த பிறகு தான் அவருக்குத் தெரிய வந்துள்ளது என்றால் தனது சமுதாயத்துக்கு அவர்கள் மரணம் பற்றியோ மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்க்கை பற்றியோ எதுவும் சொல்லித் தரவில்லை என்பதும் இந்த ஹதீஸுக்குள் அடங்கியுள்ளது. – பீஜே”

பீஜே எந்த ஆதாரத்தை முன்வைத்து இப்படி எழுதியுள்ளார் என்பதை முதலில் நாம் விளங்கிக் கொண்டு அதன் பின் அந்த விளக்கம் எவ்வளவு கேலிக்குரியது என்று பார்ப்போம்.

“நீ மீண்டும் அவரிடம் செல். காளை மாட்டின் முதுகில் அவரது கையை வைக்கச் சொல். அவரது கையின் அடியில் உள்ள ஒவ்வொரு முடிக்கும் ஒரு வருடம் என்ற அடிப்படையில் அவருக்கு வாழ்நாள் கொடுக்கப்பட்டதாகக் கூறு” என அல்லாஹ் மலக்குல் மவ்த்திடம் கூறுகின்றான். அதை அவர் கூறியதும் மூஸா நபி அல்லாஹ்விடம், (தும்ம மாதா) “அதன் பின்னர் என்ன?” என்று கேட்கிறார்கள். அல்லாஹ் “மரணம்தான்!” என்றதும், “அப்படியென்றால் இப்போதே (மரணிக்கிறேன்!)” என்று கூறித்தான் தனது புனித பூமியில் மரணிக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைக்கின்றார்கள்.

“பிறகு என்ன?” என மூஸா நபி கேட்டதை வைத்துத்தான் அவர் அது வரை மரணத்தைப் பற்றி அறியாமலேயே இருந்ததாக இந்த ஹதீஸ் கூறுகின்றது எனப் பீஜே வாதிட்டு ஹதீஸை மறுக்கின்றார்.

ஒரு ஹதீஸை இப்படித்தான் புரிந்துகொள்வதா? இப்படி விளங்க முற்பட்டால் பல குர்ஆன் வசனங்களும் அல்லாஹ்வின் அறிவு ஆற்றல் அனைத்தும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடும். அல்லாஹ் சோதித்து அறிவதாகக் கூறும் வசனங்கள், அல்லாஹ் வானவர்களிடம் கேட்கும் கேள்விகள் அனைத்தையும் பீஜே விளங்குவது போல் விளங்க முற்பட்டால் குஃப்ரில்தான் விழ நேரிடும். எனவே, “பிறகு என்ன?” என மூஸா நபி கேட்ட கேள்வியை வைத்து அது வரை மரணத்தைப் பற்றி அவர் அறியாமல் இருந்ததாக இந்த ஹதீஸ் கூறுவதாக பீஜே வாதிப்பது தவறாகும்.

அல்லது ஒரு கிராமத்தின் முகடுகள் தலைகீழாகக் கவிழ்ந்திருக்கும் போது அதனைக் கடந்து சென்ற ஒருவரின் நிலையை நீர் கவனிக்கவில்லையா? “இது அழிந்த பின் இதனை எவ்வாறு அல்லாஹ் உயிர்ப்பிப்பான்” என (வியப்போடு) அவர் கேட்டதும் அல்லாஹ் அவரை நூறு ஆண்டுகள் உயிரற்றவராக ஆக்கி, பின்னர் அவரை உயிர்ப்பித்து “எவ்வளவு காலம் நீர் (இந் நிலையில்) இருந்தீர்?” என்று கேட்டான். அ(தற்க)வர், “நான் ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியைக் கழித்திருப்பேன்” என்றார். (அதற்கு அல்லாஹ்) “இல்லை! நீர் நூறு ஆண்டுகளைக் கழித்துள்ளீர். உமது உணவையும், உமது பானத்தையும் பார்ப்பீராக! அவை கெட்டு விடவில்லை. (இறந்து உக்கிப் போன) உமது கழுதையையும் பார்ப்பீராக! என்றான். மனிதர்களுக்கு உம்மை ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (இவ்வாறு நாம் செய்தோம்). மேலும் (அதன்) எலும்புகளை எவ்வாறு நாம் ஒன்று திரட்டிப் பின்னர் அதற்கு எவ்வாறு சதையைப் போர்த்துகின்றோம் என்பதையும் பார்ப்பீராக! அவருக்குத் தெளிவு ஏற்பட்ட போது, “நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நான் அறிவேன்” என்று கூறினார். (2:259)

இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர் “உஸைர்” என்று கூறப்படுகின்றது. அவர் யார் என்பதில் உடன்படாவிட்டாலும் அவர் ஒரு நல்ல மனிதர் என்ற விடயத்தில் பீஜே முரண்பட மாட்டார் என்று உறுதியாக நம்புகின்றேன். இந்த வசனத்தில் அழிந்து போன ஒரு ஊரைப் பற்றி ஒரு நபி அல்லது நல்ல மனிதர் கூறும் போது இது அழிந்த பின் இதை அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிப்பான்? என்று கேட்கின்றார்.

நீண்ட காலம் வாழ அவகாசம் அளிக்கப்பட்ட போது, “மூஸா நபி அதன் பின் என்ன?” எனக் கேட்டார். இதை வைத்து அது வரை அவர் மரணத்தைப் பற்றி அறிந்தே இருக்கவில்லை என இந்த ஹதீஸ் கூறுகின்றது என்று பீஜே வாதிப்பது போல் இந்த வசனத்தை வைத்து;

“அழிந்த ஊரை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று இவர் கேட்டுள்ளார். இவர் அல்லாஹ்வின் ஆற்றலில் சந்தேகம் கொண்டதாக இந்தச் சம்பவம் தெரிவிக்கின்றது. ஊர் என்ன! உலகமே அழிந்த பின் அல்லாஹ் அனைவரையும் உயிர் கொடுத்து எழுப்புவான் என்று நம்ப வேண்டியது முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று. மறுமையை நம்பும் ஒருவர் இறந்த ஊரை எப்படி அல்லாஹ் உயிர்ப்பிப்பான் என்று கேட்க மாட்டான். ஒரு நபி (அல்லது பீஜே தனது தர்ஜமாவின் 79 ஆம் குறிப்பில் குறிப்பிடுவது போன்று “மிகச் சிறந்த நல்லடியார்”) மறுமையைப் பற்றியும் அல்லாஹ்வின் உயிர் கொடுக்கும் ஆற்றலைப் பற்றியும் அறியாது இருந்தார் என்று இந்த ஆயத்துக் கூறுகின்றது. எனவே இந்த ஆயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறப் போகின்றார்களா? அல்லது ஹதீஸையும், குர்ஆனையும் மறுக்காமல் இரண்டையும் இணக்கப்பாடாகப் புரிந்து கொண்டு நேர்வழி செல்வதா? என்று சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ்வின் ஆற்றலை அறியாத, அப்படி இல்லை என்றால் அல்லாஹ்வின் ஆற்றலில் சந்தேகம் கொண்டு விட்டார். எனவே இவர் காஃபிர் எனக் கூற வேண்டும். ஆனால் அந்தக் கருத்து குர்ஆனின் கூற்றுக்கு முரணானதாகும். இதற்கு மாற்றமாக அவர் அல்லாஹ்வின் ஆற்றலை அறிந்திருந்தார் என ஏற்றுக் கொள்வதென்றால் மூஸா நபியின் இந்தக் கேள்வி அவர் மரணத்தை அறியாதிருந்ததாகக் கூறுகின்றது என எப்படி மறுக்க முடியும்? இந்த வசனத்தை ஏற்க முடியுமானால் ஹதீஸையும் ஏற்கலாம்; ஹதீஸை மறுப்பதாயின் இந்த வசனத்தையும் மறுக்க நேரிடும். இந்த வசனத்தை ஏற்று மூஸா நபி பற்றிய ஹதீஸை மறுப்பது முரண்பாடாகும். இரண்டையும் மறுத்துக் குப்ருக்குச் செல்வதா? ஒன்றை மறுத்து மற்றதை ஏற்று முரண்பாட்டில் வாழ்வதா? இரண்டையும் ஏற்று நேர்வழி செல்வதா?

இதற்கு மற்றுமொரு சம்பவத்தைக் கூற முடியும்,

ஸகரிய்யா நபி முதுமையை அடைந்த நிலையில், குழந்தைப் பாக்கியம் அற்ற நிலையில் அல்லாஹ்விடம் துஆச் செய்கின்றார்கள்.

அல்லாஹ் அவருக்கு நற்செய்தி கூறும் போது;
“உனக்கு ஒரு ஆண் குழந்தை கிடைக்கும். அதற்கு யஹ்யா என்பது பெயர். இதற்கு முன் இந்தப் பெயரில் எவரும் வாழ்ந்து இல்லை. அந்த மகன் நபியாகவும், தலைவராகவும், கற்பொழுக்கமுள்ளவராகவும் இருப்பார்” என்று முழுமையான ஒரு விளக்கம் அளிக்கின்றான்.

இந்த விளக்கத்தின் பின்னரும் அவர்;
அ(தற்க)வர், “எனது இரட்சகனே! எனது மனைவியோ மலடியாகவும் ஆகி, நானும் முதுமையின் எல்லையை அடைந்திருக்க எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” எனக் கேட்டார். (19:8)

அல்லாஹ் அதற்கு;
“அது அவ்வாறுதான். அது எனக்கு மிக இலகுவானதாகும். நீ எப்பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் இதற்கு முன் உன்னை நான் படைத்திருக்கிறேன்” என்று உமது இரட்சகன் கூறினான் என (வானவர்) கூறினார்.

அதன் பின்னர் கூட “என் இரட்சகனே! எனக்கொரு அடையாளத்தைக் காட்டு!” என்று கேட்கின்றார். (பார்க்க: அல்குர்ஆன் 19:1-11)

மூஸா நபி கேட்ட கேள்வியை பீஜே விளக்கியது போன்று இந்தச் சம்பவத்தை நோக்கினால் நிலை என்ன? ஒரு நபி அல்லாஹ்வின் ஆற்றலில் நம்பிக்கையிழந்துள்ளார். அல்லாஹ்வே “உனக்குக் குழந்தை பிறக்கும்!” என்று முழு விபரத்தையும் கூறிய பின்னர் கூட “அது எப்படி முடியும்!? நான் முதுமையின் முடிவில் இருக்கின்றேன்; என் மனைவி மலடியாக இருக்கின்றாள்” என்று கேட்கின்றார். அல்லாஹ் அனைத்துக்கும் ஆற்றல் உள்ளவன் என்று நம்புவது ஒரு முஸ்லிமின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று. அந்த நம்பிக்கை இல்லாதவராக ஸகரிய்யா நபி இருந்துள்ளார். எப்பொருளும் இல்லாமலேயே அல்லாஹ் உலகத்தைப் படைத்தான். முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்களைத் தாய்-தந்தை இல்லாமலேயே படைத்தான் என்று எல்லா இறைத் தூதர்களும் போதித்திருக்க ஒரு நபி முதியவருக்கும், மலடிக்கும் குழந்தை எப்படிக் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறிய பின் அவனிடமே எதிர்த்துக் கேள்வி கேட்பதா? அது எனக்கு எளிது. ஒன்றுமே இல்லாத நிலையிலிருந்து உன்னை நான் படைக்கவில்லையா? என அல்லாஹ் கேட்ட பின்னர் அல்லாஹ்வின் வாக்குறுதியில் ஒரு நபி நம்பிக்கை வைக்காமல் அத்தாட்சி காட்டு எனக் கேட்டதாக இந்தச் சம்பவம் கூறுகின்றது என்று கூறிக் குர்ஆனையும் மறுப்பதா? அல்லது ஸகரிய்யா நபியின் ஈமானை மறுத்து அவரைக் காஃபிராக்குவதா?

பீஜே கூறுவது போன்று ஹதீஸ்களைத் தவறான வாதங்களை இத்தகைய நம்பி மக்கள் மறுத்து வந்தால் காலப் போக்கில் இதே அடிப்படையில் குர்ஆன் வசனங்களையும் மறுப்பார்கள். அதைத்தான் பீஜே தனது திர்மிதி முன்னுரையில் ஹதீஸ்களை மறுப்போர் முன்வைக்கும் வாதங்களைக் குர்ஆன் விடயத்திலும் முன்வைக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே பீஜே அவர்களின் தவறான போக்கில் சென்று ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுத்துத் தொடர்ந்து குர்ஆனையும் மறுக்கும் மனோநிலைக்குச் சென்று அல்லது குர்ஆன் மீது நம்பிக்கையும், பற்றும் அற்ற சமூகமாக வாழும் நிலைக்குச் சென்றிடாமல் எம்மை நாம் தற்காத்துக்கொள்ள வேண்டும்.

பீஜேயின் வாதங்களை ஏற்றால் நாம் குறிப்பிட்டவை போன்ற குர்ஆனியச் சம்பவங்களையும், வசனங்களையும் மறுக்க நேரிடும். இந்தக் குர்ஆன் கூறும் சம்பவங்களை ஏற்க முடியும் என்றால், “மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும்” குறித்த இந்த ஹதீஸையும் ஏற்க முடியும். குர்ஆனியச் சம்பவத்தை ஏற்போம். ஆதாரபூர்வமான இந்த ஹதீஸைப் பொறுத்த வரை பொறுத்தமற்ற காரணங்களைக் கூறி மறுப்போம் என்பது முரண்பாடான நிலையாகும்.

மூஸா நபியின் கேள்வியின் அர்த்தம் என்ன?
“பிறகு என்ன?” என மூஸா நபி கேட்டது, மரணத்தைப் பற்றி அவர் அறிந்தே இருக்கவில்லை என்பதைக் காட்டவில்லை. தான் விரும்பியது என்ன என்பதை இந்தக் கேள்வி மூலம் உணர்த்துகின்றார்கள். 1000 வருடம் வாழ்ந்தாலும் அதன் பின்னர் நான் மரணிக்கத்தானே போகின்றேன். நான் மரணத்தை வெறுக்கவில்லை. மரணிக்க இப்போதே நான் தயாராகத்தான் இருக்கின்றேன். எனது ஆசையெல்லாம் புனித பூமியில் மரணிக்க வேண்டும் என்பதுதான் என்று தெளிவுபடுத்துகின்றார்கள். அல்லாஹ்விடம் “மரணத்தை விரும்பாத ஒருவரிடம் என்னை அனுப்பி விட்டாய்!” என்று மலக்கு கூறினார். அது தவறு என்று அவருக்கு உணர்த்த அல்லாஹ் விரும்புகின்றான். மூஸா நபிக்கு நீண்ட ஆயுளை அளிக்கின்றான். அவரும் “தான் தற்போதே மரணிக்கத் தயார்; ஆனால், தன் மரணம் பைத்துல் முகத்தஸுக்கு அருகில் இடம்பெற வேண்டும். இதுதான் என் வேண்டுதல்” என்று கூறுகின்றார். இதன் மூலம் மூஸா நபி மரணத்தை வெறுக்கிறார் என்ற மலக்குல் மவ்த்தின் கூற்று தவறானது என்பதை அல்லாஹ் அவருக்கு உணர்த்தி விடுகின்றான்.

பல விவாதங்கள் புரிந்த பீஜே அவர்களுக்கு மூஸா நபியின் இந்தக் கேள்வி தன்னிலை விளக்கத்திற்காகக் கேட்கப்பட்டது என்ற உண்மை எப்படித் தெரியாமல் போனது என்பது ஆச்சரியம்தான்.

இது வரை நாம் கூறியதிலிருந்து மூஸா நபி மரணத்தை வெறுத்தார் என்பதும், அவர் இந்த நிகழ்ச்சி வரை மரணம் பற்றி அறியாமல் இருந்தார் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது என்றும் பீஜே வாதிடுவது தவறானது. இந்த வாதத்தை முன்வைத்து இந்த ஹதீஸை மறுப்பதென்றால் ஏராளமான அல்குர்ஆன் வசனங்களையும் மறுக்க நேரிடும் அளவுக்கு ஆபத்தான வாதங்கள் இவை என்பதை நீங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள்.

இந்த ஹதீஸ் நபிமார்கள், மலக்குகள் பற்றிய இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்ற அடிப்படையிலும் மறுக்கப்படுகின்றது. இது தொடர்பாக வைக்கப்படும் வாதங்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் தொடர்ந்தும் நோக்குவோம்.

– மிகச் சிறந்த இறைத் தூதர்களில் ஒருவரான மூஸா நபியவர்கள் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளவாறு நடந்திருப்பார்களா?

– நபிமார்கள் இறைவன் அனுப்பி வைத்த தூதரை அடித்து விரட்டுவார்களா?

– இறைவனால் அனுப்பப்பட்ட தூதரை அறைவது இறைவனை நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதற்குச் சமமாகும் என்பதைக் கூட மூஸா நபியவர்கள் அறிந்திருக்கவில்லை என்ற கருத்திலமைந்த ஹதீஸை நாம் எவ்வாறு நம்ப இயலும்?

– அப்படியே மூஸா நபி அறைந்திருந்தாலும் இறைவன் பணிந்து கெஞ்சிக்கொண்டிருக்க மாட்டான். யூனுஸ் நபியைத் தண்டித்ததைப் போன்று தண்டித்திருப்பான்.

இந்த வாதங்களை வைத்துத்தான் இந்த ஹதீஸ் மறுக்கப்படுகின்றது. இந்த ஹதீஸின் ஒரு பகுதி நபியின் தன்மைக்கு முரண்படுகின்றது என்றும் மற்ற பகுதி மலக்கின் தன்மைக்கு முரண்படுகின்றது என்றும் கூறுகின்றார். இந்த வாதத்தை முன்வைத்து ஆதாரபூர்வமான ஹதீஸை மறுக்க முடியுமா? அப்படி மறுத்தால் குர்ஆனைக் கூட மறுக்க நேரிடும் என்பதை எமது விளக்கத்தின் மூலம் நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

மூஸா நபி இப்படி நடந்திருப்பார்களா?
மிகச் சிறந்த நபிமார்களில் ஒருவரான மூஸா நபியவர்கள் இப்படி நடந்திருப்பார்களா? என பீஜே கேள்வி கேட்கின்றார். இதே கோணத்தில் குர்ஆனை ஆய்வு செய்தால் ஏற்படும் விபரீதத்தைச் சிந்தித்துப் பாருங்கள்!

மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒரு நபி இப்படி கறடு-முறடாக நடப்பார்களா? என்பது நியாயமான கேள்வியாகத் தோன்றும். ஆனால் இந்தக் கேள்வி ஒன்றே ஹதீஸை மறுக்கப் போதுமான வாதமாகி விடாது. தீடீரெனத் திட்டமிடாமல் நடக்கும் நிகழ்வுகள் குறித்து இப்படிக் கேள்வி கேட்கவும் கூடாது! இந்த வாதம் தவறானது என்பதைப் பின்வரும் விளக்கம் மூலம் விளங்கலாம்.

மூஸா நபி இளமையை அடைந்த போது அவர் ஒரு நாள் இரவு வெளியில் செல்கின்றார். கிப்தி இனத்தவன் ஒருவனும், இஸ்ரேல் இனத்தவன் ஒருவனும் சண்டை செய்துகொண்டிருக்கின்றனர். இஸ்ரவேல் இனத்தவன் மூஸா நபியை உதவிக்கு அழைக்கின்றான். இவரும் சென்று கிப்தி இனத்தவனுக்கு ஒரு குத்து குத்தினார். அவன் அங்கேயே செத்து விழுந்தான்.
(பார்க்க: அல்குர்ஆன் 28:15)

இந்தச் சம்பவத்தை எடுத்து வைத்துக் கொண்டு மிகச் சிறந்த ஒரு நபி இப்படி நடந்து கொள்வார்களா? என்று கேள்வி எழுப்பி இந்த ஆயத்தை மறுக்க முடியுமா? இந்தச் சம்பவம் மூஸா நபி, நபியாக ஆகும் முன்னர் நடந்தது என்று வேண்டுமானால் சமாளிக்கலாம்.

இந்த நிகழ்ச்சி பற்றி அல்லாஹ் கூறுவதற்கு முன்னரே ”அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் வழங்கினோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி வழங்குவோம்.” (28:14)

என்று கூறுகின்றான். சரி, ஒரு வாதத்திற்காக நபியாக அவர் ஆக்கப்படவில்லை என்று ஏற்றுக்கொள்வோம். இந்த வசனத்தில் அவர் இல்ம் (அறிவு) ஹுக்ம் (ஞானம்) வழங்கப்பட்டவர் என்று கூறப்படுகின்றது (முஹ்ஸின்) அவர் நன்மை செய்பவர் என்றும் கூறப்படுகின்றது.

அறிவும், ஞானமும் வழங்கப்பட்ட நல்ல மனிதரான மூஸா இப்படி நடந்திருப்பாரா? இருவர் சண்டை பிடித்தால் இருவரையும் சமாதானம் செய்து வைப்பது நல்லவரின் வேலை. அறிவும், ஞானமும் உள்ளவர்களின் வேலை. அதை விட்டு விட்டு ஒரு பக்கச் சார்பாக நின்று நீதி-நியாயம் பார்க்காமல் அடுத்தவன் சாகும் அளவுக்கு அடிப்பது நல்ல மனிதனின் செயலாக இருக்குமா? கொலை வெறித் தாக்குதல் நடத்திய ஒருவரை அல்லாஹ் நபியாகத் தேர்ந்தெடுப்பானா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினால் ஒன்றில் மூஸா நபி நல்லவர் இல்லை என்று கூற வேண்டும் அல்லது இந்த வசனத்தை நிராகரிக்க வேண்டும்.

பீஜே மூஸா நபியையும் நல்லவர் என்று ஏற்றுக்கொண்டு இந்த வசனத்தையும் ஏற்பதாக இருந்தால் மனித ரூபத்தில் வந்த மலக்கை மூஸா நபி அறைந்ததை, ஒரு நபி இப்படி நடப்பாரா? எனக் கேள்வி எழுப்பி மறுப்பது எப்படி நியாயமாகும்?

குர்ஆன் கூறும் சம்பவத்தை ஏற்க முடியும் என்றால் இந்த ஹதீஸையும் ஏற்க முடியும். ஹதீஸை மறுப்பதென்றால் குர்ஆனின் வசனத்தையும் அதே காரணத்தைக் கூறி மறுக்க நேரிடும். குர்ஆனையும், ஹதீஸையும் மறுக்காத போக்கை ஏற்பதா? அல்லது போலி வாதத்திற்கு மயங்கி ஹதீஸை மறுத்துப் பின்னர் குர்ஆனையும் மறுக்கும் மனநிலைக்கு மாறுவதா? என்பதைப் பொது மக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.

ஒரு நபி இறைத்தூதருடன் இப்படி நடப்பாரா?
மேலே கூறிய சம்பவம் மூஸா நபி சராசரி மனிதனுடன் நடந்துகொண்ட விதமாகும். ஆனால் இங்கே ஒரு வானவருடன் இப்படி நடந்துகொண்டதாகக் கூறப்படுகின்றது.

ஒரு நபி இறைத்தூதருடன் இப்படி நடந்து கொள்வாரா? இறைவனால் அனுப்பப்பட்ட தூதரை அறைவது இறைவனை நேருக்கு நேர் எதிர்ப்பதற்குச் சமமாகும் என்பதைக் கூட மூஸா நபி அறிந்திருக்கவில்லை என்ற கருத்திலமைந்த இந்த ஹதீஸை எப்படி நம்ப இயலும் என்ற அடிப்படையில் கேள்வி எழுப்பப்படுகின்றது.

இது கூட அறிவீனமான வாதம்தான். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டால் கூட, குர்ஆனில் வரும் சம்பவங்களை அதுவும் மூஸா நபி சம்பந்தப்பட்ட சம்பவங்களையே நிராகரிக்கும் நிர்க்கதி நிலை உருவாகும்.

மூஸா(அலை) அவர்களை அல்லாஹ் வேதத்தை வழங்க அழைத்த போது அவர் தனது சமூகத்தை ஹாரூன்(அலை) அவர்களின் பொறுப்பில் விட்டு விட்டுச் செல்கின்றார்கள். மூஸா நபி சென்ற பின்னர் சாமிரி என்பவன் நகைகள் மூலம் ஒரு காளைக் கன்றைச் செய்கின்றான். அதில் மாட்டின் சப்தத்தைப் போன்ற சப்தம் வருகின்றது. அந்த மக்கள் வழிகெட்டு காளை மாட்டை வணங்குகின்றனர். ஹாரூன் நபி தன்னால் முடிந்த வரை மக்களுக்குச் சத்தியத்தைச் சொல்கின்றார்கள். மக்கள் ஏற்கவில்லை. மூஸா நபி வந்ததும் அல்லாஹ் வழங்கிய ஏட்டைத் தூக்கி வீசி விட்டு, ஹாரூன் நபியின் தலைமுடியையும், தாடியையும் பிடித்து இழுக்கின்றார்கள். அவர்கள் வழிகெட்ட போது ‘நீ என்ன செய்தாய்? எனது கட்டளைக்கு மாறு செய்து விட்டாயே!’ என்று கண்டிக்கின்றார்கள். அப்போதுதான் ஹாரூன் நபி ‘எனது தாயின் மகனே! எனது தாடியையும், தலைமுடியையும் பிடித்து இழுத்து என் எதிரிகளை மகிழ்வுறச் செய்து விடாதீர்!’ எனக் கூறித் தன்னிலை விளக்கம் அளிக்கின்றார்கள்.
(பார்க்க: அல்குர்ஆன் 20:83-97, 7:148-150)

இந்தச் சம்பவத்தையும், மூஸா நபியும் மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸை பீஜே அணுகுவது போல் அணுகினால் மறுக்க நேரிடும்.

ஒரு நபி மற்றுமொரு நபியின் தாடியையும், தலைமுடியையும் பகிரங்கமாகப் பிடித்து இழுத்து அவமரியாதை செய்வாரா? நாங்கள் கூட நமது பகைவர்களைக் கண்டால் கூடப் பாதை ஓரங்களில் பகிரங்கமாக வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டால் கூட தாடியையும், தலைமுடியையும் பிடித்து இழுக்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்து செல்ல மாட்டோம் எனும் போது மிகச் சிறந்த நபிமார்களில் ஒருவரான மூஸா நபி இப்படி நடந்திருப்பார்களா?

ஒரு நபியின் தாடியைப் பிடித்து இழுப்பது அல்லாஹ்வை நேருக்கு நேர் எதிர்ப்பதற்குச் சமமானதாகும் என்ற சாதாரண அறிவு கூட மூஸா நபிக்கு இருக்கவில்லை எனக் கூறும் இந்தக் குர்ஆனிய சம்பவத்தை எப்படி நம்ப இயலும்?

தவ்ஹீதை ஏற்ற மக்கள் ஷிர்க்கில் வீழ்ந்தால் நாமே கொதிப்போம்; குமுறுவோம். அதை எதிர்ப்போம். இப்படி இருக்க ஒரு நபி ஷிர்க் நடக்கும் போது பார்த்துக்கொண்டு சும்மா இருந்தார் என மூஸா நபி நம்பியதாக இந்தச் சம்பவம் கூறுகின்றது. இதை நம்ப முடியுமா?

மூஸா நபி இப்படி நம்பி இருந்தால் அது ஹாரூன் நபியை மட்டுமல்ல; அல்லாஹ்வையே குறைத்து மதிப்பிடுவதாக அமைந்து விடும். அல்லாஹ் தனது தூதுத்துவப் பணிக்கு ஒருவரைத் தேர்ந்தெடுப்பதென்றால் அதற்குத் தகுதியானவரைத்தான் தேர்ந்தெடுப்பான்.

அல்லாஹ் தேர்ந்தெடுத்த ஹாரூன் நபி சிலை வணக்கம் நடக்கும் போது பார்த்துக்கொண்டு சும்மா இருந்ததாக மூஸா நபி நம்பியதாக இந்தச் சம்பவம் கூறுகின்றது. அப்படியென்றால் அல்லாஹ் தனது தூதுத்துவப் பணிக்குத் தகுதி இல்லாதவரைத் தெரிவு செய்து விட்டான். அல்லது அல்லாஹ்வுக்குத் தகுதியானவரைத் தெரிவு செய்யத் தெரியாமல் போய் விட்டது என்பதே இதன் அர்த்தமாகும். எனவே இந்தக் குர்ஆன் கூறும் சம்பவத்தை ஏற்க முடியாது என்று கூற நேரிடும்.

அப்படி இல்லை. குர்ஆன் கூறும் சம்பவத்தை நாம் ஏற்போம் என்று கூறுவதென்றால் ஆதாரபூர்வமான ஹதீஸ் கூறும் இந்தச் சம்பவத்தையும் ஏற்க முடியும்! ஹதீஸை மறுப்பதென்றால் குர்ஆனையும் மறுக்க நேரிடும். பீஜேயின் தவறான வாதங்கள் அந்த நிலைக்குத்தான் மனிதர்களை அழைத்துச் செல்லும். எனவே தவறான வாதங்களின் அடிப்படையில் ஹதீஸை மறுத்து, அதைத் தொடர்ந்து குர்ஆனையும் மறுக்கும் அல்லது முழுமையாக, முறையாகக் குர்ஆனை நம்பாத மனநிலைக்குச் செல்வதை விட்டும் மக்கள் தம்மைத் தற்காத்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.

வேதத்தை வீசிய மூஸா நபி..?
இந்த ஹதீஸில் கூறப்படுவது போன்று மூஸா நபி ‘மலக்குல் மவ்த்’துக்கு அறைந்திருந்தால் அல்லாஹ் அவரைத் தண்டித்திருப்பான். பணிந்து போய்க் கெஞ்சிக்கொண்டிருக்க மாட்டான். யூனுஸ் நபியைத் தண்டித்தது போல் தண்டித்திருப்பான். எனவே, அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடும் இந்தச் செயலை அல்லாஹ் தண்டிக்காமல் விட்டிருக்க மாட்டான் என்ற தோரணையிலும் இந்த ஹதீஸ் மறுக்கப்படுகின்றது.

இந்த வாதமும் தவறானதாகும். மூஸா நபி அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத் தூதரின் தாடியையும், தலைமுடியையும் பகிரங்கமாகப் பிடித்து இழுத்துள்ளார்கள். ஒரு இறைத் தூதருடன் இப்படி நடந்து கொள்வது அல்லாஹ்வையே எதிர்த்து நிற்பதற்குச் சமமானதாகும். இப்படி மூஸா நபி நடந்திருந்தால் நிச்சயமாக யூனுஸ் நபியைத் தண்டித்தது போல் தண்டித்தே இருப்பான். அப்படித் தண்டித்ததாக எந்தச் செய்தியும் வரவில்லை. எனவே, மூஸா நபி, ஹாரூன் நபியுடன் இப்படி நடந்து கொண்டார்கள் என்பதை நம்ப முடியாது என இந்தக் குர்ஆன் கூறும் சம்பவத்தையும் பீஜேயும், அவர் கூறும் இத்தகைய தவறான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் சகோதரர்களும் கூறப் போகின்றார்களா?

மூஸா நபிக்கு அல்லாஹ் வேதத்தை வழங்கினான். அந்த வேதம் எழுத்து வடிவில் ஒரேயடியாக வழங்கப்பட்டது. இதை வழங்குவதற்காக அல்லாஹ் மூஸா நபிக்குத் தனியாக அவகாசம் அளித்து அவரை அழைத்து நேரடியாக வழங்கினான்.

அனைத்து விடயங்களையும் அவருக்காக நாம் பலகைகளில் எழுதினோம். அது உபதேசமாகவும், ஒவ்வொரு விடயத்தையும் தெளிவுபடுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. எனவே, அவற்றைப் பலமாகப் பற்றிக்கொள்வீராக! மேலும், அவற்றில் உள்ள மிகச் சிறந்ததை எடுத்து நடக்கும் படி உமது சமூகத்திற்கு ஏவுவீராக! வெகு விரைவில் பாவிகளின் இருப்பிடத்தை நான் உங்களுக்குக் காண்பிப்பேன் என்று (அல்லாஹ்) கூறினான். (7:145)

இவ்வளவு சிறப்பு மிக்க வேதத்தைப் பெற்ற மூஸா நபி தனது சகோதரர் ஹாரூன் நபியைக் கண்டிக்கும் போது;
……(7:150)

அல்லாஹ் நேரடியாக வழங்கிய வேதத்தை வீசி விட்டு, தனது சகோதரனது தாடியையும், தலைமுடியையும் பிடித்துத் தன்பால் அவரை இழுத்தார்.

மூஸாவுக்குக் கோபம் தணிந்த போது, பலகைகளை எடுத்தார். அவற்றில் வரையப்பட்டிருந்ததில் தங்கள் இரட்சகனைப் பயப்படுவோருக்கு நேர்வழியும் அருளும் இருந்தன. (7:154)

கோபம் தணிந்த பின்னர் ஏட்டை எடுத்தார். ஒருவர் அனுப்பிய கடிதத்தைக் கசக்குவது கூடக் கடிதம் அனுப்பிய நபரை இழிவுபடுத்துவதாகவே இருக்கும். இப்படி இருக்க, அல்லாஹ் நேரடியாக அளித்த வேதத்தைக் கோபத்தில் மூஸா நபி வீசியுள்ளார். இது அல்லாஹ்வையே எதிர்த்து நிற்பதற்குச் சமமானது. நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களே எந்தச் சந்தர்ப்பத்திலும் குர்ஆனைத் தூக்கி வீச மாட்டோம். இப்படியிருக்க ஒரு நபி, அதுவும் அல்லாஹ்வே தன்னிடம் நேரடியாகத் தந்த வேதத்தை வீசியிருப்பாரா? அப்படியே வீசியிருந்தால், அல்லாஹ் தண்டிக்காமல் விட்டிருப்பானா? எனக் கேள்வி எழுப்பினால் குர்ஆன் கூறும் இச்சம்பவத்தை நிராகரிக்க நேரிடும். குர்ஆனைத் தொடர்ந்து பார்த்தால் இதற்காக மூஸா நபி தண்டிக்கப்பட்டதாகக் கூடக் கூறப்படவில்லை. எனவே, இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க முடியாது. மிகச் சிறந்த ஒரு நபி, தனக்கு அல்லாஹ் வழங்கிய ஒரு வேதத்தை எந்த நிலையிலும் எடுத்தெறிய மாட்டார். அப்படிச் செய்திருந்தால் கூட யூனுஸ் நபியை அல்லாஹ் தண்டித்தது போல் தண்டித்தே இருப்பான் எனக் கூறி, மூஸா நபி வேதத்தை எறிந்ததைப் பீஜே மறுக்கப் போகின்றாரா? அல்லது திட்டமிடாமல் வேகத்தில் நடந்த ஒரு அசாதாரண நிகழ்வை சாதாரண நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்று புரிந்து கொள்வதா?

மூஸா நபி தண்டிக்கப்படவில்லை எனக் காரணம் கூறி ‘மலக்குள் மவ்த்’ சம்பந்தப்பட்ட ஹதீஸை மறுப்பதாயின் மூஸா நபி வேதத்தை எறிந்தது, ஹாரூன் நபியின் தலையையும் தாடியையும் பிடித்து இழுத்தது பற்றிப் பேசும் குர்ஆன் வசனங்களையும் மறுக்க வேண்டும். இத்தகைய குர்ஆன் வசனங்களை ஏற்க முடியுமாக இருந்தால் குதர்க்கமான வாதங்களை விட்டு விட்டு ‘மூஸா நபி-மலக்குல் மவ்த்’ சம்பந்தப்பட்ட ஹதீஸையும் நம்ப முடியும். ‘குர்ஆனை ஏற்போம்; அதே போன்ற கருத்தைத் தரும் ஹதீஸை வம்பு-வாதங்களை முன்வைத்து முரட்டுத்தனமாகப் பிடிவாதத்துடன் மறுப்போம்’ என்பது முரண்பாடான நிலைப்பாடாகும். எனவே, குர்ஆனையும் ஏற்று ஹதீஸையும் ஏற்று வெற்றி பெற முனைவோமாக!

மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும்’ சம்பந்தப்பட்ட ஹதீஸைப் பல வழிகெட்ட பிரிவினரும் தப்பும், தவறுமான தர்க்க ரீதியான வாதங்களை முன்வைத்து மறுத்துள்ளனர். இந்த ஹதீஸைச் சகோதரர் பிஜே அவர்களும் பல தவறான வாதங்களின் அடிப்படையில் மறுக்கின்றார். அவரது வாதங்களை ஏற்றுக்கொண்டால் இந்த ஹதீஸை மட்டுமன்றி குர்ஆன் கூறும் பல சம்பவங்களையும் நிராகரிக்க நேரிடும் என்பதைப் பலமான ஆதாரங்களில் அடிப்படையில் நிரூபித்து வருகின்றோம். அவரது வாதமும், ஸுன்னாவை அவர் அணுகும் முறையும் தவறானது என்பதற்கு இது தக்க சான்றாக அமைகின்றது. இந்த ஹதீஸ் குறித்து அவர் முன்வைக்கும் இன்னும் சில வாதங்களுக்கான பதில்களை இங்கே நோக்குவோம்.

‘மலக்குல் மவ்த்’ தோல்வியுடன் திரும்பிச் சென்றாரா?

ஒரு வானவர் இறைக் கட்டளையை நிறைவேற்றாமல் தோல்வியுடன் திரும்பிச் சென்றார் என்று இதில் கூறப்படுகின்றது’ என்று பீஜே தனது வாதத்தை ஆரம்பிக்கின்றார்.

அடுத்ததாக வானவர்களின் பண்புகள் குறித்தும் பேசுகின்றார்.

வானவர்களைப் பொறுத்தவரையில்;

– அவர்கள் தமக்குக் கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.

அவர்கள் தமக்கு மேலேயுள்ள தமது இரட்சகனை அஞ்சி, தமக்கு ஏவப்படுவதைச் செய்வார்கள். (16:50)

– அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.

பேச்சால் அவனை அவர்கள் முந்த மாட்டார்கள். அவனது கட்டளைக்கேற்பவே அவர்கள் செயற்படுவார்கள். (21:27)

– தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனிதர்களும் கற்களுமே அதன் எரிபொருட் களாகும். அதன்மீது கடின சித்தம் கொண்ட பலசாலிகளான வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ் தமக்கு ஏவியதற்கு மாறு செய்ய மாட்டார்கள். மேலும், அவர்கள் தமக்கு ஏவப்பட்டதைச் செய்வார்கள். (66:6)

இது போன்ற குர்ஆன் வசனங்களைக் குறிப்பிட்ட பின்னர் சகோதரர் பீஜே தனது வாதத்தைப் பின்வருமாறு முடிக்கின்றார்.

இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பினானோ அதைச் செய்து முடிப்பதுதான் வானவர்களின் இலக்கணம். மூஸா நபியின் உயிரைக் கைப்பற்ற ஒரு வானவரை இறைவன் அனுப்பினால் அவர் அந்த வேலையைச் செய்யாமல் திரும்ப மாட்டார். இந்த இலக்கணத்திற்கு எதிரான கருத்தை அந்த ஹதீஸ் கூறுகின்றது. (பார்க்க: ‘பீஜே தர்ஜமா’ பதிப்பு:04, பக்கம்:1308)

அல்லாஹ் ஒரு வானவருக்குக் கட்டளை பிறப்பித்தால், ‘அந்தக் கட்டளை என்ன?’ என்பதை நானோ, நீங்களோ, பீஜே அவர்களோ அறிய முடியாது. அதை அறிய வேண்டுமானால் அல்லாஹ் இட்ட கட்டளையை அல்லாஹ் கூற வேண்டும் அல்லது அல்லாஹ்வின் தூதர் கூற வேண்டும் அல்லது அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறிய செய்தி ஒன்றை வைத்து ‘இதுதான் ஏவப்பட்டுள்ளது’ என நாம் முடிவு செய்யலாம். இதை விட்டு விட்டு நாமாக ஒரு முடிவு செய்து ஹதீஸை மறுக்க முடியாது.

அல்லாஹ் மூஸா நபியின் உயிரைக் கைப்பற்ற வேண்டும் என மலக்குக்குக் கட்டளையிட்டிருந்தால் நிச்சயமாக அவர் உயிரைக் கைப்பற்றியிருப்பார். ஏனெனில், மலக்குகள் இட்ட பணியை ஆற்றுவர். அதற்கு மாற்றம் செய்ய மாட்டார்கள். இந்த ஹதீஸில் மலக்கு அடிபட்டதும் மீண்டும் அல்லாஹ்விடம் திரும்பிச் செல்கிறார் என்றால் அந்த மலக்கு மூஸா நபியின் உயிரை உடனே கைப்பற்ற வேண்டும் என்று அல்லாஹ்வால் ஏவப்படவில்லை என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். இதை விட்டு விட்டு அல்லாஹ் ஏவியதை மலக்கு செய்யவில்லை என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது என்று நாமாக முடிவு செய்து ஹதீஸை மறுக்க முடியாது.

இதே வேளை நபிமார்கள் அவர்களது விருப்பத்துடன்தான் மரணத்தைத் தழுவுவர் என்பதற்கான ஆதாரங்களை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். நபிமார்கள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்திற்குரியவர்கள் என்பது நிச்சயமாக மலக்குல் மவ்த்துக்குத் தெரிந்தே இருக்கும். எனவே மலக்கு அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் மூஸா நபியிடம் தோற்றுப் போனதாக இந்த ஹதீஸ் கூறுகின்றது என்பது அப்பட்டமான, அபத்தமான குற்றச்சாட்டாகும்.

வானவர் சுயமாகச் செயல்பட மாட்டார்:

ஒரு வானவர் சுயமாகச் செயல்பட மாட்டார். அல்லாஹ் ஏவியதைத்தான் செய்வார். மூஸா நபியின் உயிரைக் கைப்பற்ற வானவர் வருகிறார் என்றால் அவர் அல்லாஹ்வின் கட்டளைப்படித்தான் வந்துள்ளார் என்பது மூஸா நபிக்குத் தெரிந்திருக்க வேண்டும். இந்த அற்ப உண்மையைக் கூட அறியாதவராக மூஸா நபி இருந்துள்ளார் என இந்தச் சம்பவம் கூறுகின்றது என்ற அடிப்படையில் வாதிட்டும் இந்த ஹதீஸ் மறுக்கப்படுகின்றது. இதுவும் தவறான வாதம்தான். இதே அடிப்படையில் கேள்வி கேட்பதாக இருந்தால் குர்ஆன் கூறும் பல சம்பவங்களிலும் சந்தேகம் எழ ஆரம்பித்து விடும்.

மர்யம்(அலை) அவர்கள் குர்ஆன் சிறப்பித்துக் கூறும் ஒரு பெண்ணாவார்கள். முஃமின்களுக்கு உதாரணமாகக் கூறப்பட்ட இரு பெண்களில் இவரும் ஒருவர். அல்லாஹ்விடம் உயர்ந்த அந்தஸ்த்தைப் பெற்றவர். இவரின் பெயரில் அல்குர்ஆனின் 19 ஆம் அத்தியாயம் அழைக்கப்படுகின்றது.

மர்யம்(அலை) அவர்கள் தனிமையில் இருக்கும் போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் மனித ரூபத்தில் வருகின்றார்கள். அந்நிய ஆணைக் கண்ட மர்யம்(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றார்கள். அப்போது அவர் தான் ஒரு மலக்கு என்றும், மர்யம்(அலை) அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை கிடைக்கப் போகிறது என்றும் குறிப்பிடுகின்றார்கள். அத்துடன் அவர் நபியாக இருப்பார். அவரது பெயர் ஈஸா இப்னு மர்யம். அவர் தொட்டில் பருவத்தில் பேசுவார் என்று பல செய்திகளையும் கூறுகின்றார்கள். வந்தவர் வானவர் என்றால் மர்யம்(அலை) அவர்கள் இவர் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் வந்துள்ளார். இவர் சொல்வது நிச்சயம் நடக்கும் என்று நம்பியிருக்க வேண்டும். ஆனால், மர்யம்(அலை) அவர்கள் ‘என்னை எந்த ஆணும் தீண்டியதில்லை. நான் கெட்ட நடத்தை உள்ளவளுமல்ல. இப்படி இருக்க எனக்கு எப்படி குழந்தை பிறக்க முடியும்?’ எனக் கேள்வி கேட்கின்றார்கள். அதற்கு ‘அது எனக்கு இலகுவானது என உமது இரட்சகன் கூறுகின்றான்’ என வானவர் பதிலளித்தார். (பார்க்க 19:17-21, 3:45-49)

மர்யம்(அலை) அவர்கள் ஒரு ஸாலிஹான பெண்; முஃமின்களுக்கு முன் உதாரணமாக அல்லாஹ் கூறிய பெண். அவர்கள் மலக்குகளின் பண்புகளை அறியாமல் இருந்தார்களா? அல்லது அல்லாஹ் அனைத்துக்கும் ஆற்றல் உடையவன் என்பதை நம்பாததால்தான் ‘ஒரு ஆணும் என்னைத் தீண்டாமல் எனக்கு எப்படிக் குழந்தை கிடைக்க முடியும்?’ என்று கேட்டார்களா? இப்படிச் சிந்திக்க முடியுமா?

இப்படிச் சிந்தித்தால் ஒன்றில் இந்தச் சம்பவத்தை மறுக்க வேண்டும் அல்லது மர்யம்(அலை) அவர்கள் அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாதவர்களாக இருந்தார்கள் என்று கூற வேண்டும். இரண்டுமே தவறானவை என்பதால் சம்பவத்தையும் நம்பி, மர்யம்(அலை) அவர்களது மார்க்க அறிவிலும் குறை காணாமல் இருப்பதென்றால் மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸையும் ஏற்று, அது மூஸா நபியின் மார்க்க அறிவைக் குறைத்துக் காட்டாது என்றும் நம்ப முடியும்.

அன்னை சாரா அவர்களும், மலக்குகளும்:

அன்னை சாரா(அலை) அவர்கள் இப்றாஹீம் நபியின் மனைவியாவார்கள். 60:4 என்ற வசனத்தின் மூலம் அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருப்பதாக அல்லாஹ் கூறியுள்ளான். இவர்களும், மலக்குகளும் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் குர்ஆனில் கூறப்படுகின்றது.
(பார்க்க: 51:24-30, 15:51-60, 11:69-76, 29:31-32)

இந்தச் சம்பவத்தில் மனித ரூபத்தில் இப்றாஹீம் நபியிடம் மலக்குகள் வருகின்றனர். வந்தவர்கள் வானவர்கள் என்பதை அறியாமல் அவர் மலக்குகளுக்கு விருந்தளிக்கின்றார். அவர்கள் உண்ணாத போது ஆச்சரியப்பட்டு வினவிய போதுதான் வந்தவர்கள் வானவர்கள் என்பது அவருக்குத் தெரிகின்றது. வந்தவர்கள் தாம் இரண்டு நோக்கங்களுக்காக வந்ததாகக் கூறுகின்றனர்.

(1) இப்றாஹீம்-சாரா தம்பதியினருக்கு இஸ்ஹாக் என்ற அறிவுஞானம் மிக்க ஒரு குழந்தையைக் கொண்டு நன்மாராயம் கூறுவது. அந்தக் குழந்தைக்கு யஃகூப் என்ற ஆண் குழந்தை கிடைக்கும். அவர்கள் நபியாக இருப்பார்கள் என்ற நற்செய்தி சொல்வது.

(2) தன்னினச் சேர்க்கையாளர்களான லூத் நபியின் கூட்டத்தினரை அழிப்பது. 

இந்தச் செய்திகளைக் கூறியதும் அன்னை சாரா(அலை) அவர்கள் சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக்கொண்டு ‘நான் மலட்டுக் கிழவியாயிற்றே!’ என்றார்கள். அதற்கவர்கள் ‘அப்படித்தான் உமது இறைவன் கூறினான். அவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்’ என்றனர்.
(பார்க்க: அல்குர்ஆன் 51:24-30)

மலக்குகள் வந்து ஒரு செய்தியைக் கூறினால் சும்ம தாமாக வந்து கூற மாட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின்றிச் செயல்பட மாட்டார்கள். இப்படி இருக்க வானவர்கள் வந்து கூறியதும் ஒரு நபியின் மனைவி, அதுவும் அழகிய முன் உதாரணம் உண்டு என அல்லாஹ் கூறிய புகழுக்குரிய பெண் உடனே அதை நம்பி ஏற்றிருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக ‘நான் மலடி! கிழவி! எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்!?’ என்ற தோரணையில் பேசுகின்றார்கள். அதற்கு வந்த வானவர்கள் ‘இப்படித்தான் உமது இரட்சகன் கூறினான்!’ எனக் கூற வேண்டி ஏற்படுகின்றது. வந்தவர்கள் இப்படிக் கூறாமலேயே அன்னை சாரா அவர்கள் அதை உணர்ந்து நடந்திருக்க வேண்டும். இந்தச் சம்பவம் அதற்கு மாற்றமாகக் கூறுகின்றது. எனவே ஒன்றில், இந்தச் சம்பவம் பொய்யாக இருக்க வேண்டும் அல்லது அன்னை சாரா அவர்கள் மலக்குகள் ஒரு செய்தியைச் சொன்னால் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் சொல்வார்கள். பொய் சொல்ல மாட்டார்கள் என்பதை அறியாமல் இருந்தார்கள் என்று கூற வேண்டும். பீஜே அவர்கள் ஹதீஸை அணுகும் முறையில் இந்தச் சம்பவத்தை அணுகினால் இந்த இரண்டில் ஒரு முடிவைத்தான் எடுக்க நேரிடும். ஆனால் இந்த இரண்டுமே தவறான முடிவுகளாகும். பீஜே அவர்களின் ஹதீஸ் தொடர்பான அணுகுமுறை ஆபத்தானது என்பதை இதன் மூலம் அறியலாம்.

இப்றாஹீம் நபி அறியாது இருந்தாரா?

மேற்சொன்ன செய்தி ஒரு சாதாரணப் பெண் சம்பந்தப்பட்டது. இந்தச் சம்பவத்தை மற்றோரிடத்தில் குர்ஆன் குறிப்பிடும் போது இப்றாஹீம் நபி பேசிய விதமும் இவ்வாறே அமைந்துள்ளது.

மலக்குகள் நற்செய்தி கூறியதும், எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் நீங்கள் நற்செய்தி கூறுகின்றீர்களா? எதனடிப்படையில் நீங்கள் நற்செய்தி கூறுகின்றீர்கள்? எனக் கேட்டுள்ளார்கள்.

அ(தற்க)வர் ”எனக்கு முதுமை ஏற்பட்டிருக்கும் போது நீங்கள் எனக்கு நன்மாராயம் கூறுகின்றீர்களா? எந்த அடிப்படையில் நன்மாராயம் கூறுகின்றீர்கள்?” என்று (ஆச்சரியத்துடன்) கேட்டார். (15:54)

வந்தவர்கள் மலக்குகள் என்று தெரிந்து விட்டது. அவர்கள் குழந்தை கிடைக்கும்; ஆண் குழந்தை; அறிவுள்ள குழந்தை என்றெல்லாம் கூறுகின்றார்கள். வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளை இல்லாமல் வர மாட்டார்கள். இரட்சகன் சொல்லாததைச் சொல்ல மாட்டார்கள் என்ற அடிப்படை அறிவு ஒரு நபிக்கு இருந்திருக்க வேண்டும். எனவே மலக்குகள் கூறியதும் உடனே மறு பேச்சின்றி ஒரு நபி ஏற்றிருக்க வேண்டும். ஆனால் இப்றாஹீம் நபி எனக்கு முதுமை ஏற்பட்டு விட்டது. இதன் பின்னர் குழந்தை கிடைக்கும் என்று கூறுகின்றீர்களா? எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள்? எனக் கேள்வி கேட்கின்றார்கள். மலக்குகள் அல்லாஹ் கூறியதின் அடிப்படையில்தான் நற்செய்தி கூறுவார்கள் என்ற சாதாரண அறிவு கூட இப்றாஹீம் நபிக்கு இருக்கவில்லை என இந்தச் சம்பவம் கூறுகின்றது எனக் கூறிக் குர்ஆனை நிராகரிக்க முடியுமா? பீஜே அவர்கள் ஹதீஸ்களை அணுகும் இந்தத் தவறான வழிமுறை பிற்காலத்தில் குர்ஆனை மறுக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கும் ஆபத்துள்ளது என்பதை இது உணர்த்துகின்றதல்லவா?

வானவரிடம் வாதாட்டமா?

மலக்குகள் வந்து சொன்ன ஒரு விடயத்தில் கணவன்-மனைவி இருவரும் இப்படி நடந்து கொண்டனர். அடுத்த செய்தி லூத் நபியின் கூட்டத்தினரை வந்த மலக்குகள் அழிக்கப்போகின்றனர் என்பதாகும். இதை மலக்குகள் கூறிய பின்னர் இப்றாஹீம் நபி மலக்குகளுடன் வாதாட்டம் செய்யலானார்கள் எனக் குர்ஆன் கூறுகின்றது. அப்போது வானவர்கள் ‘இப்றாஹீமே! இந்தப் பேச்சை விட்டு விடுங்கள்! அவர்களுக்கு அழிவு என்பது முடிவு செய்யப்பட்டது!’ என்று கூறுகின்றனர்.

இது குறித்துக் குர்ஆன் கூறும் போது பின்வருமாறு கூறுகின்றது;

இப்றாஹீமை விட்டும் திடுக்கம் நீங்கி, நன்மாராயம் அவரிடம் வந்த போது, லூத்துடைய சமூகத்தார் பற்றி எம்முடன் அவர் தர்க்கிக்கலானார். நிச்சயமாக இப்றாஹீம் சகிப்புத்தன்மையுடையவரும், இளகிய மனமுடையவரும், (இரட்சகன் பால்) மீள்பவருமாவார். இப்றாஹீமே! (இதை நீர்) விட்டு விடுவீராக! நிச்சயமாக உமது இரட்சகனின் கட்டளை வந்து விட்டது. தடுக்கப்பட முடியாத வேதனை நிச்சயமாக அவர்களுக்கு வந்தே தீரும். (11:74-76)

மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் இயங்குவார்கள். அவன் என்ன சொன்னாலும் அதைச் செய்வார்கள். லூத்(அலை) அவர்களின் கூட்டத்தை அழிக்க வந்ததாக அவர்கள் சொன்னால் அது பற்றி அவர்களிடம் தர்க்கிப்பது அர்த்தமற்ற வேலையாகும். யார் என்ன சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள். இப்படி இருக்க லூத் நபியின் சமுகம் குறித்து இப்றாஹீம் நபி மலக்குகளுடன் தர்க்கம் செய்தார்கள் என்று இந்தச் சம்பவம் கூறுகின்றது. எனவே இந்தச் சம்பவத்தை ஏற்க முடியாது என்று கூறப்போகின்றனரா? மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் இயங்குவார்கள் என்ற சாதாரண உண்மையைக் கூட இப்றாஹீம் நபி அறியாதிருந்தார்கள் என இந்தச் சம்பவம் கூறுவதாகக் கூறப்போகின்றனரா?

மற்றுமொரு இடத்தில் இது பற்றி குர்ஆன் கூறும் போது;

(வானவர்களான) எமது தூதர்கள் நற்செய்தியுடன் இப்றாஹீமிடம் வந்த போது, ”இக்கிராமத்தினரை நிச்சயமாக நாம் அழிக்கப் போகிறோம். ஏனெனில் அதிலுள்ளோர் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” என்று கூறினர். அ(தற்க)வர், ”நிச்சயமாக அதில் லூத் இருக்கிறாரே! என்று கூறினார். அ(தற்க)வர்கள், அதில் இருப்போர் பற்றி நாம் நன்கறிவோம். நிச்சயமாக அவரையும், அவரது மனைவியைத் தவிர அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்போம். அவள் தங்கி (அழிந்து) விடுவோரில் ஆகி விட்டாள்’ என்று கூறினர். (29:31-32)

எனக் குறிப்பிடுகின்றது.

அல்லாஹ்வின் கட்டளைப்படி அநியாயக்கார ஊரை அழிக்க வந்த மலக்குகளுக்கு அங்கே லூத் என்ற நபி இருப்பது தெரியாது என்று இப்றாஹீம் நபி நம்பியதாக இந்த வசனம் கூறுகின்றது. இவர் அங்கே லூத் நபி இருக்கின்றார் என்று சொல்லிக் கொடுத்ததாக இந்த வசனம் கூறுகின்றது. இதை பீஜேயின் பாணியில் அணுகினால் மலக்குகளை விபரமற்றவர்களாக இப்றாஹீம் நபி நம்பியதாக இந்த இந்தச் சம்பவம் கூறுகின்றது. அத்துடன் ஒரு பணிக்காக அல்லாஹ் மலக்குகளை அனுப்பும் போது அது குறித்த முழு விளக்கத்தையும் மலக்குகளிடம் சரியாகச் சொல்லாமல் அனுப்பியுள்ளானோ தெரியாது. இவர்கள் அழிக்கும் ஊரில் ஒரு நபி இருப்பது தெரியாமல் அவரையும் அழித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இப்றாஹீம் நபி பேசியதாக இந்த வசனம் கூறுகின்றது. எனவே ஆயிரம் நபித்தோழர்கள் ஏகோபித்து ஏற்றிருந்தாலும் ஒரு நபியின் அடிப்படை மார்க்க அறிவில் சந்தேகத்தை உண்டுபண்ணும் இந்த வசனங்களை ஏற்க முடியாது என்று கூற நேரிடும்.

எனவே மலக்குல் மவ்த் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் வந்திருப்பார் என்ற அடிப்படை அறிவு கூட மூஸா நபிக்கு இருக்கவில்லை என இந்த ஹதீஸ் கூறுவதால் இதை மறுக்க வேண்டும் என வாதிடுவது அபத்தமானது. அப்படி வாதிட்டால் எண்ணற்ற குர்ஆன் வசனங்களை மறுக்க நேரிடும்.

எனவே மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஆதாரபூர்வமானது. அதைப் பீஜே மறுக்கும் விதம் ஆபத்தானது. இந்த வாதங்களை ஏற்றால் குர்ஆனைக் கூட மறுக்க நேரிடும். ஹதீஸ்களை மறுப்பதற்கு முன்வைக்கப்படும் அதே வாதங்களைக் குர்ஆன் விடயத்திலும் முன்வைக்க முடியும் என அவரே திர்மிதி முன்னுரையில் இந்த ஆபத்துக் குறித்து எச்சரித்துள்ளார். எனவே தவறான வாதங்களின் அடிப்படையில் ஹதீஸை மறுத்து, தொடர்ந்து குர்ஆனையும் மறுக்கும் மனநிலைக்குச் சென்று விடாமல் குர்ஆனையும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் நிதானமாக, நடுநிலையாக அணுகி விளங்க வேண்டும். இரண்டையும் மோத விட்டு, இரண்டையும் மறுத்து விடாமல் இரண்டையும் இணைத்து விளங்கிச் செயல்பட அனைவரும் முன்வர வேண்டும்.


Previous Post Next Post