அத்தியாயம் 14 வித்ருத் தொழுகை

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 14
வித்ருத் தொழுகை

பகுதி1

வித்ருத் தொழுகை எப்படி?

990. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் :

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகை பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்'' என்று கூறினார்கள்.

991. நாஃபிவு அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) (மூன்று ரக்அத்களில்) இரண்டு ரக்அத்களுக்கும் ஒரு ரக்அத்துக்குமிடையே ஸலாம் கொடுப்பார்கள். (அவ்விடைவெளியில்) தம் சில தேவைகள் பற்றியும் (குடும்பத்தினருக்குக்) கட்டளையிடுவார்கள்.

992. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன். நான் தலையணையின் பக்கவாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் தூங்கினார்கள். இரவின் பாதி வரை கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம். நபி(ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப் பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர்) எடுத்து உளுச் செய்தார்கள். அவர்களின் உளுவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளுச்) செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் போய் நின்றேன். அவர்கள் தங்கள் வலக்கரத்தை என் தலை மீது வைத்தார்கள். என்னுடைய காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள், மீண்டும் இரண்டு ரக்அத்கள் மறுபடியும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ருத் தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து மற்றும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு ஸுபுஹுத் தொழுகைக்காக (வீட்டைவிட்டு) வெளியே சென்றார்கள்.

993. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

''இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களே! நீ முடித்துக் கொள்ள நாடினால் ஒரு ரக்அத்தைத் தொழு! அது முன்னர் தொழுததை ஒற்றையாக ஆக்கி விடும்.''

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(இரண்டாவது அறிவிப்பாளராகிய) காஸிம், 'மக்கள் மூன்று ரக்அத்களை வித்ராகத் தொழுவதை நாம் காண்கிறோம். எல்லாமே அனுமதிக்கப்பட்டது தாம். இதில் எப்படிச் செய்தாலும் குற்றமில்லை என கருதுகிறேன்' என்று குறிப்பிட்டார்கள்.

994. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர். அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் ஒரு ஸஜ்தாவை உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் நீட்டுவார்கள். ஃபஜ்ருத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். முஅத்தின் (ஃபஜர்) தொழுகைக்கு (அழைக்க) அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்திருப்பார்கள்.

பகுதி 2

வித்ருத் தொழுகையின் நேரம்.

தூங்குவதற்கு முன் வித்ருத் தொழுமாறு எனக்கு நபி(ஸல்) கட்டளையிட்டார்கள் என அபூ ஹுரைரா(ரலி) குறிப்பிட்டார்கள்.

995. அனஸ் இப்னு ஸீரின் அறிவித்தார்.

ஃபஜ்ருத் தொழுகைக்கு முன்னுள்ள (ஸுன்னத்) இரண்டு ரக்அத்களில் நீண்ட அத்தியாயங்களை நாங்கள் ஓதலாமா? என்று இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு 'நபி(ஸல்) அவர்கள் இரவில் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவார்கள். ஒரு ரக்அத்தைக் கொண்டு அவற்றை ஒற்றையாக்குவார்கள். பாங்கு சொல்லி முடித்தவுடன் விரைந்து இரண்டு ரக்அத்களைத் தொழுவார்கள்' என இப்னு உமர்(ரலி) கூறினார்.

996. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இரவின் எல்லா நேரங்களிலும் நபி(ஸல்) அவர்கள் வித்ருத் தொழுகிறார்கள். (சில சமயம்) அவர்களின் வித்ரு ஸஹர் வரை நீண்டுவிடும்.

பகுதி 3

ந(ஸல்) அவர்கள் தம் குடும்பத்தினரை வித்ருத் தொழுகைக்காக உறக்கத்திலிருந்து எழுப்பியது

997. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களின் விரிப்பில் குறுக்கே உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது நபி(ஸல்) அவர்கள் வித்ருத் தொழ எண்ணும்போது என்னை எழுப்புவார்கள். நானும் தொழுவேன்.

பகுதி :4

ஒருவர் தம் நாளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்வது.

998. இறைத்தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்:

''இரவிகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்'.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 5

வாகனத்தில் அமர்ந்தவாறு வித்ருத் தொழுவது

999 ஸயீத் இப்னு யஸார் அறிவித்தார் நான் மக்கா செல்லும் வழியில் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) உடன் இரவு பயணம் மேற்கொண்டுடிருந்தேன் ஸீப்ஹை (நெருங்குவதை) அஞ்சிய நாங்கள் வாகனத்திலிருந்து இறங்கி வித்ருத் தொழுதுவிட்டுப் பின்னர் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன் அப்போது அவர்கள் எங்கே சென்றிருந்தீர் என்று கேட்டனர் நான் ஸூப்ஹை அஞ்சி வாகனத்திலிருந்து இறங்கி வித்ருத் தொழுதேன் என்றேன் அதற்கவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உமக்கு அழகிய முன்மாதிரி இல்லையா? என்று கேட்டார்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக இருக்கிறேன் என்றேன் அப்போது இப்னு உமர்(ரலி) நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து வித்ருத் தொழுதிருக்கிறார்கள் எனக் கூறினார்கள்

பகுதி : 6

பயணத்தில் வித்ருத்

தொழுவது

1000 இப்னு உமர்(ரலி) கூறியதாவது

நபி(ஸல்) அவர்கள் பயணத்தின்போது வாகனத்தின் மீதமர்ந்து தொழுவார்கள் கடமையான தொழுகை தவிர (உபரியான) இரவுத் தொழுகைகளை வாகனம் எத்திசையில் சென்றாலும் தொழுது கொண்டிருப்பார்கள் தம் வாகனத்தின் மீதமர்ந்தே வித்ரும் தொழுவார்கள்

பகுதி : 7

ருகூவுக்கு முன்பும் பின்பும்

குனூத் ஓதுதல்

1001 முஹம்மது கூறினார் நபி(ஸல்) அவர்கள் ஸூப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் 'ஆம்' என்றனர். 'ருகூவுக்கு முன்பு குனூத் ஓதி இருக்கிறார்களா? என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு 'ருகூவுக்குப் பின்பு சிறிது காலம் (நபி(ஸல்) அவர்கள் குனூத்) ஓதினார்கள் என விடையளித்தார்கள்.

1002. ஆஸிம் அறிவித்தார்.

குனூத் பற்றி அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'குனூத் (நபி(ஸல்) அவர்கள் காலத்தில்) நடைமுறையில் இருந்தது தான்' என்று விடையளித்தார்கள். ருகூவுக்கு முன்பா? பின்பா? என்று கேட்டேன். அதற்கு 'ருகூவுக்கு முன்பு தான்' என்று கூறினார்கள். ருகூவுக்குப் பிறகு என்று நீங்கள் கூறினீர்கள் என ஒருவர் எனக்குக் கூறினாரே என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். 'அவர் பொய் சொல்லி இருக்கிறார். நபி(ஸல்) அவர்கள் ருகூவுக்குப் பிறகு ஒரு மாதம்தான் குனூத் ஓதினார்கள். நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரீகீன்களைவிடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையே ஓர் உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்றுவிட்டனர்.) அப்போது நபி(ஸல்) அவர்கள் முஷ்ரீகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள் என்று அனஸ்(ரலி) விடையளித்தார்கள்.

1003. அனஸ்(ரலி) அறிவித்தார்.

ரிஃல், தக்வான் ஆகிய கூட்டத்தினருக்கு எதிராக நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்.

1004. அனஸ்(ரலி) அறிவித்தார்.

மஃரிபிலும் ஃபஜ்ரிலும் குனூத் ஓதுதல் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தது.
Previous Post Next Post