அத்தியாயம் 37 ஆடையும் அலங்காரமும்

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 37
ஆடையும் அலங்காரமும்

பாடம் : 1 பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களை, பருகுவதற்காகவோ மற்ற நோக்கங்களுக்காகவோ பயன்படுத்துவது ஆண்களுக்கும், பெண்களுக்கும் தடை செய்யப்பட்டதாகும்.
4192. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிப் பாத்திரங்களில் (பானங்களை) அருந்துகின்றவர், தமது வயிற்றில் மிடறு மிடறாக நரக நெருப்பையே விழுங்குகிறார்.
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து அலீ பின் முஸ்ஹிர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், "வெள்ளி மற்றும் பொன் பாத்திரங்களில் உண்ணவோ பருகவோ செய்கின்றவர்..." என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
ஆனால், மற்றவர்களின் அறிவிப்புகளில் "உண்பது" தொடர்பாகவோ "பொன் பாத்திரம்" பற்றியோ குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 37
4193. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொன் அல்லது வெள்ளிப் பாத்திரத்தில் (பானங்களைப்) பருகியவர், தமது வயிற்றில் மிடறு மிடறாக நரக நெருப்பையே விழுங்குகிறார்.
இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 2 பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரத்தைப் பயன்படுத்துவது ஆண், பெண் இரு பாலருக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது; பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பட்டுக் கரை போன்றவற்றை, நான்கு விரல்கள் அளவுக்கு மிகாமல் பயன்படுத்துவது ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
4194. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏழு செயல்களைச் செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்.
எங்களுக்கு அவர்கள் கட்டளையிட்ட ஏழு விஷயங்களாவன:
1. நோயாளிகளை நலம் விசாரிப்பது. 2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது. 3. தும்மிய(வர் "அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறினால் அ)வருக்கு ("அல்லாஹ், உங்களுக்குக் கருணை புரிவானாக!" என்று) மறுமொழி கூறுவது. 4. சத்தியத்தை நிறைவேற்றுவது அல்லது (உன்னோடு தொடர்புடைய ஒரு விஷயத்தில்) சத்தியம் செய்தவருக்கு அதை நிறைவேற்ற உதவுவது. 5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுவது. 6. விருந்தழைப்பை ஏற்றுக்கொள்வது. 7. (மக்களிடையே) சலாமைப் பரப்புவது.
எங்களுக்கு அவர்கள் தடை விதித்த ஏழு விஷயங்களாவன:
1. (ஆண்கள்) "பொன் மோதிரம் அணிவது" அல்லது "மோதிரங்கள் அணிவது" 2. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது. 3.மென்பட்டுத் திண்டு பயன்படுத்துவது. 4. (ஆண்கள் எகிப்தியப்) பட்டு கலந்த பஞ்சாடை அணிவது. 5. (ஆண்கள்) சாதாரணப் பட்டு அணிவது. 6. (ஆண்கள்) கெட்டிப் பட்டு அணிவது. 7. (ஆண்கள்) அலங்காரப் பட்டு அணிவது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "சத்தியத்தை நிறைவேற்றுவது, அல்லது சத்தியம் செய்தவருக்கு அதை நிறைவேற்ற உதவுவது" என்பது இடம்பெறவில்லை. அதற்குப் பகரமாக "கண்டெடுக்கப்பட்ட பொருள் பற்றி அறிவிப்புச் செய்வது" என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "சத்தியத்தை நிறைவேற்றுவது" என ஐயப்பாடின்றி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றில் "வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது; ஏனெனில், இம்மையில் அதில் பருகியவர் மறுமையில் அதில் பருகமாட்டார்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஏழு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
இவற்றிலும் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ள தகவல்களே இடம்பெற்றுள்ளன. ஆனால், "(மக்களிடையே) சலாமைப் பரப்புவது" என்பதற்குப் பகரமாக "சலாமுக்குப் பதிலுரைப்பது" என இடம்பெற்றுள்ளது. மேலும் "(ஆண்கள்) தங்க மோதிரம் அணிவது அல்லது "தங்க வளையம் அணிவது" என்று (ஐயத்துடன்) காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "சலாமைப் பரப்புவது" என்றும் "தங்க மோதிரம் அணிவது" என்றும் சந்தேகமின்றி இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
4195. அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களுடன் "மதாயின்" (இராக்) நகரில் இருந்தபோது, அவர்கள் பருகுவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். அப்போது அவர்களிடம் (மஜூசி மதத்தவரான) ஊர்த் தலைவர் வெள்ளிப் பாத்திரத்தில் பானம் கொண்டுவந்தார். ஹுதைஃபா (ரலி) அவர்கள் அதை அவர்மீது வீசியெறிந்து விட்டு (அங்கிருந்தவர்களிடம்) பின்வருமாறு கூறினார்கள்:
நான் (ஏன் அவர்மீது வீசியெறிந்தேன் என்பதற்கான காரணத்தை) உங்களிடம் தெரிவிக்கிறேன். நான் அவரிடம் இ(ந்த வெள்ளிப் பாத்திரத்)தில் பருகத் தரவேண்டாம் எனக் கட்டளையிட்டிருந்தேன். (அவர் அதைக் கேட்காமல் அதிலேயே மீண்டும் பருகத்தந்தார்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரத்தில் பருக வேண்டாம்; அலங்காரப் பட்டையோ சாதாரணப் பட்டையோ பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும் மறுமை நாளில் (இறைநம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியவை ஆகும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் "மதாயின்" நகரில் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் அருகில் இருந்தோம்..." என்று ஹதீஸ் துவங்குகிறது. அதில் "மறுமை நாளில்" எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களது ஓர் அறிவிப்பில் ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்து இப்னு அபீலைலா (ரஹ்) அவர்கள் அறிவித்தார் என்றும், மற்றோர் அறிவிப்பில் அபூஃபர்வா (ரஹ்) அவர்கள் "நான் அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி) அவர்களிடமிருந்து கேட்டேன்" என்றும் இடம்பெற்றுள்ளது.
சுஃப்யான் (ரஹ்) அவர்கள், "இப்னு அபீ லைலா (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி) அவர்களிடமிருந்தே செவியுற்றார்கள் என்றே நான் எண்ணுகிறேன்" என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "மதாயின் நகரில் ஹுதைஃபா (ரலி) அவர்கள் பருகுவதற்குத் தண்ணீர் கேட்டபோது நான் அங்கிருந்தேன். அப்போது ஒருவர் வெள்ளிப் பாத்திரமொன்றைக் கொண்டுவந்தார்..." என்று இப்னு அபீ லைலா (ரஹ்) அவர்கள் கூறியதாகச் செய்தி ஆரம்பிக்கிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் எந்த அறிவிப்பிலும் "நான் அங்கிருந்தேன்" எனும் வாசகம் இடம்பெறவில்லை. முஆத் பின் முஆத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டுமே அவ்வாறு இடம்பெற்றுள்ளது. மற்றவர்களின் அறிவிப்பில் "ஹுதைஃபா (ரலி) அவர்கள் பருகுவதற்குத் தண்ணீர் கேட்டார்கள்" என்பதாகவே இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4196. அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹுதைஃபா (ரலி) அவர்கள் பருகுவதற்குத் தண்ணீர் கேட்டபோது, அக்னி ஆராதனையாளர் (மஜூசி) ஒருவர் ஒரு வெள்ளிப்பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்தார். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சாதாரணப் பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியவேண்டாம். பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாம். பொன் மற்றும் வெள்ளித் தட்டுகளில் உண்ணவேண்டாம். ஏனெனில், அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கு உரியவை ஆகும்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அத்தியாயம் : 37
4197. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் பள்ளிவாசலின் நுழைவாயில் அருகே கோடுபோட்ட பட்டாடை ஒன்று விற்கப்படுவதைக் கண்டார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கிக்கொண்டால், வெள்ளிக்கிழமையன்று மக்களுக்காக (உரையாற்ற) நிற்கும்போதும், தங்களிடம் தூதுக் குழுக்கள் வரும்போதும் அணிந்துகொள்ளலாமே?" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமை நாளில் எந்த நற்பேறும் இல்லாதவர்தாம் இதை (இம்மையில்) அணிவார்" என்று கூறினார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அத்தகைய சில பட்டாடைகள் வந்தன. அவற்றில் ஓர் ஆடையை உமர் (ரலி) அவர்களுக்கு வழங்கினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்கு அணியத் தருகிறீர்கள். ஆனால், (பள்ளிவாசலின் நுழைவாயில் அருகே விற்றுக்கொண்டிருந்த) "உத்தாரித் (பின் ஹாஜிப்)" என்பாரின் பட்டாடை விஷயத்தில் தாங்கள் வேறுவிதமாகக் கூறினீர்களே?" என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை நீங்கள் அணிந்துகொள்வதற்காக நான் உங்களுக்குத் தரவில்லை" என்று சொன்னார்கள்.
ஆகவே, உமர் (ரலி) அவர்கள் அதை மக்காவிலிருந்த இணைவைப்பாளரான தம் சகோதரர் ஒருவருக்கு அணியக் கொடுத்துவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4198. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"தமீம்" குலத்தைச் சேர்ந்த உத்தாரித் (பின் ஹாஜிப்) என்பவர் கடைத்தெருவில் நின்று, கோடுபோட்ட பட்டு அங்கி விற்பதை உமர் (ரலி) அவர்கள் கண்டார்கள்.
-உத்தாரித் (பன்னாட்டு) மன்னர்களுடன் தொடர்புள்ளவராகவும், அவர்களிடமிருந்து (பல்வேறு பொருட்களைப்) பெற்றுவருபவராகவும் இருந்தார்.-
பிறகு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! கடைத்தெருவில் நின்று, கோடு போட்ட பட்டு அங்கியை உத்தாரித் விற்பதைக்கண்டேன். அதைத் தாங்கள் வாங்கி, அரபுத் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும்போது தாங்கள் அணிந்துகொண்டால் நன்றாயிருக்குமே!" என்று சொன்னார்கள். "வெள்ளிக்கிழமையின்போதும் அணிந்து கொண்டால் நன்றாயிருக்குமே" என்றும் அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமையில் எந்த நற்பேறும் இல்லாதவரே இம்மையில் இந்தப் பட்டாடைகளை அணிவார்" என்று சொன்னார்கள்.
பின்னர் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கோடு போட்ட பட்டாடைகள் சில கொண்டுவரப்பட்டன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றில் ஓர் பட்டாடையை உமர் (ரலி) அவர்களுக்கும் மற்றொன்றை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களுக்கும் அனுப்பி வைத்தார்கள். இன்னொன்றை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுக்குக் கொடுத்து, "இதை முக்காடுகளாக வெட்டி உங்கள் பெண்களிடையே பங்கிட்டுவிடுங்கள்" என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் தமது பட்டாடையை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்குக் கொடுத்தனுப்பியுள்ளீர்கள். ஆனால், உத்தாரித் விற்ற பட்டாடை குறித்து நேற்று தாங்கள் வேறுவிதமாகக் கூறினீர்களே?" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை நீங்கள் அணிந்துகொள்வதற்காக உங்களுக்கு நான் கொடுத்தனுப்பவில்லை. மாறாக, இதை நீங்கள் (விற்றுப் பணம்) பெறுவதற்காகவே கொடுத்தனுப்பினேன்" என்று சொன்னார்கள்.
உசாமா (ரலி) அவர்களோ அதை அணிந்துகொண்டு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உசாமாவை உற்றுப் பார்த்தார்கள். (அவர்கள் பார்த்த பார்வையிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தாம் (இவ்வாறு) செய்தது பிடிக்கவில்லை யென்பதை உசாமா உணர்ந்து கொண்டார்.
உடனே "அல்லாஹ்வின் தூதரே! ஏன் (இப்படி) என்னை உற்றுப் பார்க்கிறீர்கள்? தாங்கள் தாமே இதை எனக்குக் கொடுத்தனுப்பினீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை நீ அணிந்துகொள்வதற்காக உனக்கு நான் கொடுத்தனுப்பவில்லை. மாறாக, இதை முக்காடுகளாக வெட்டி, உன் (வீட்டுப்) பெண்களுக்குப் பங்கிடுவதற்காகவே உனக்குக் கொடுத்தனுப்பினேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 37
4199. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கெட்டிப் பட்டாடை ஒன்று கடைத் தெருவில் விற்கப்படுவதைக் கண்டு, அதை வாங்கிக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கி பெருநாள், தூதுக்குழுக்கள் சந்திப்பு ஆகியவற்றின்போது தங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர் (இம்மையில் அணியும்) ஆடையாகும்" என்று சொன்னார்கள். பின்னர் உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ் நாடிய சில நாட்கள் (எதுவும் நடக்காமல்) கழித்தார்கள்.
பின்னர் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலங்காரப் பட்டு அங்கி ஒன்றை அனுப்பிவைத்தார்கள். உடனே அதை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! "இது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர் (இம்மையில் அணியும்) ஆடையாகும்". அல்லது "(மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவரே (இம்மையில்) இதை அணிவார்" என்று தாங்கள் கூறினீர்களே? பிறகு தாங்களே இதை எனக்குக் கொடுத்தனுப்பியுள்ளீர்களே?" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை விற்று நீங்கள் உங்களது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளுங்கள் (அதற்காகவே இதைக் கொடுத்தனுப்பினேன்)" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4200. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் "உத்தாரித்" குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் "கெட்டியான" அல்லது "சாதாரண" பட்டு மேலங்கி ஒன்றைக் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), "இதைத் தாங்கள் வாங்கிக்கொண்டால் நன்றாயிருக்குமே?" என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர் தாம் இதை (இம்மையில்) அணிவார்" என்று சொன்னார்கள்.
பிறகு (ஒரு சந்தர்ப்பத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கோடுபோட்ட பட்டாடை ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டபோது, அதை உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். அதைப் பெற்ற உமர் (ரலி) அவர்கள், "இதை எனக்குக் கொடுத்தனுப்பியுள்ளீர்கள். ஆனால், இதைப் பற்றித் தாங்கள் வேறுவிதமாகத் கூறியதைக் கேட்டேனே?" என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இதை விற்று) இதன் மூலம் நீங்கள் பயனடைந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இதை உங்களுக்குக் கொடுத்தனுப்பினேன்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் "உத்தாரித்" குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் (கெட்டியான அல்லது சாதாரண பட்டு மேலங்கி) ஒன்றைக் கண்டார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
எனினும் அதில், "(இதை விற்று) இதன் மூலம் நீங்கள் பயனடைந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே உங்களுக்கு இதைக் கொடுத்தனுப்பினேன். இதை நீங்கள் அணிந்து கொள்வதற்காக உங்களுக்கு நான் கொடுத்தனுப்பவில்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
- யஹ்யா பின் அபீஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் "அல்இஸ்தப்ரக்" பட்டு குறித்துக் கேட்டார்கள். நான் "கெட்டியான முரட்டுப் பட்டு" என்று பதிலளித்தேன். அப்போது அவர்கள் கூறினார்கள்:
(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறக்கேட்டுள்ளேன்:
என் தந்தை உமர் (ரலி) அவர்கள் ஒரு மனிதர் கெட்டிப் பட்டாடை ஒன்றை அணிந்திருப்பதைக் கண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்... என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளவாறு குறிப்பிட்டார்கள்.
எனினும், இந்த அறிவிப்பில், "(இதை விற்று) இதன் மூலம் ஏதேனும் செல்வத்தை நீங்கள் அடைந்துகொள்வதற்காகவே இதை உங்களுக்கு நான் கொடுத்தனுப்பினேன்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 37
4201. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையும் அதாஉ (ரஹ்) அவர்களின் பிள்ளைக்குத் தாய்மாமாவுமான அப்துல்லாஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அஸ்மா (ரலி) அவர்கள் என்னை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் அனுப்பி, "ஆடைகளில் (சிறிது) பட்டு வேலைப்பாடுகள் உள்ளதையும், சிவப்பு நிற மென்பட்டுத் திண்டுகளை(ப் பயன்படுத்துவதை)யும், ரஜப் மாதம் முழுவதும் நோன்பு நோற்பதையும், தாங்கள் தடை செய்துவருவதாக எனக்குச் செய்தி எட்டியுள்ளதே (அது உண்மையா?)" என்று கேட்கச் சொன்னார்கள்.
அதற்கு என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "ரஜப் மாதத்தில் நோன்பு நோற்பதைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டதைப் பொறுத்தவரையில், (நீங்கள் கேள்விப்பட்டது பொய்யாகும்.) எல்லாக் காலங்களிலும் நோன்பு நோற்கும் ஒருவ(னான என்)னைப் பற்றி எப்படி (இதைச் சொல்ல முடியும்)?
ஆடைகளில் பட்டு வேலைப்பாடுகள் உள்ளதைப் பொறுத்தவரையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் "(மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர்தாம் (இம்மையில்) பட்டாடை அணிவார்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். பட்டு வேலைப்பாடுகள் உள்ளதும் இத்தடைக்குள் அடங்கும் என்று நான் அஞ்சினேன்.
சிவப்பு நிறத்தில் அமைந்த மென்பட்டுத் திண்டைப் பொறுத்தவரையில், இதுதான் அப்துல்லாஹ் பின் உமரின் திண்டாகும். இதுவும் சிவப்பு நிறத்தில் அமைந்த திண்டுதான்" என்று கூறினார்கள்.
நான் அஸ்மா (ரலி) அவர்களிடம் திரும்பி வந்து, இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதைத் தெரிவித்தேன். அப்போது அஸ்மா (ரலி) அவர்கள், "இதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நீளங்கியாகும்" எனக் கூறி, கோடுபோட்ட பாரசீக (மன்னர்கள் அணியும்) பட்டு நீளங்கி ஒன்றை வெளியே எடுத்தார்கள். அதன் கழுத்துப் பகுதியில் அலங்காரப் பட்டு வேலைப்பாடு இருந்தது. அதன் முன், பின் திறப்புகள் அலங்காரப் பட்டினால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அஸ்மா (ரலி) அவர்கள், "இது, ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவர்கள் இறக்கும்வரை இருந்துவந்தது. அவர்கள் இறந்த பின்னர் அதை நான் எடுத்துவைத்துக்கொண்டேன். இதை நபி (ஸல்) அவர்கள் அணிந்துவந்தார்கள். பின்னர் நாங்கள் (அருள்வளம் கருதி) இதைத் தண்ணீரில் கழுவி, அதைக்கொண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துவருகிறோம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 37
4202. கலீஃபா பின் கஅப் அபீதிப்யான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்துகையில் "நீங்கள் உங்கள் (வீட்டுப்) பெண்களுக்குப் பட்டாடைகள் அணிவிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பட்டாடை அணியாதீர்கள். யார் இம்மையில் அதை அணிகிறாரோ, அவர் மறுமையில் அதை அணியமாட்டார்" என்று கூறியதாக உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 37
4203. அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஈரானிலுள்ள) ஆதர்பைஜானில் (ஓர் படையில்) இருந்தபோது எங்களுக்கு (வாசித்துக் காட்டுமாறு எங்கள் தளபதி உத்பா (ரலி) அவர்களுக்கு) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கடிதம் ஒன்று எழுதினார்கள். (அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:)
(தளபதி) உத்பா பின் ஃபர்கதே! இது (உமது பொறுப்பிலுள்ள செல்வம்.) நீர் பாடுபட்டுச் சம்பாதித்ததுமல்ல; உம்முடைய தந்தையோ தாயோ பாடுபட்டுச் சம்பாதித்ததுமல்ல. எனவே, நீர் உமது இருப்பிடத்தில் இருந்துகொண்டு அனுபவிப்பதைப் போன்றே, முஸ்லிம்கள் தம் இருப்பிடங்களில் இருந்தவாறே அனுபவிக்கச் செய்வீராக. உல்லாச வாழ்க்கை, இணைவைப்பாளர்களின் நாகரிகம், பட்டாடை ஆகியவற்றிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.
ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பட்டாடைக்குத் தடை விதித்தார்கள்; இந்த அளவைத் தவிர: (அந்த அளவை விவரிக்கையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நடு விரலையும் ஆட்காட்டி விரலையும் உயர்த்தி, அவ்விரண்டையும் இணைத்துக் காட்டினார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"(கைகளால் சைகை செய்து காட்டியது தொடர்பான) இந்தச் செய்தியும் அந்தக் கடிதத்தில் காணப்பட்டது" என அறிவிப்பாளர் ஆஸிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இதைக் கூறுகையில் அறிவிப்பாளர் ஸுஹைர் (ரஹ்) அவர்களும் தம்மிரு விரல்களை உயர்த்திக் காட்டினார்கள்.
அத்தியாயம் : 37
4204. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (எங்கள் படைத் தளபதி உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்களுடன் ஆதர்பைஜானில் இருந்தபோது) எங்களுக்கு (கலீஃபா) உமர் (ரலி) அவர்களின் கடிதம் வந்தது. (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமையில் இந்தப் பட்டாடையில் ஒரு சிறிது(ம் அணிகின்ற பாக்கிய)மற்றவரே இம்மையில் அதை அணிவார்; இந்த அளவைத் தவிர: -(அந்த அளவை விவரிக்கும் வகையில் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள்) பெருவிரலுக்கு அடுத்துள்ள இரு விரல்களால் சைகை செய்து காட்டினார்கள்.- அது கோடுபோட்ட கெட்டி ஆடைகளின் பித்தான்களின் அளவு என அந்த ஆடைகளைக் கண்டபோது கருதினேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்களுடன் இருந்தோம்..." என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 37
4205. மேற்கண்ட ஹதீஸ் அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: நாங்கள் உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்களுடன் ஆதர்பைஜானில் அல்லது சிரியாவில் இருந்தபோது, எங்களுக்கு உமர் (ரலி) அவர்களின் கடிதம் வந்தது. (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:)
இறைவாழ்த்துக்குப் பின்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பட்டு அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்தார்கள்;இந்த இரு விரல்களின் அளவைத் தவிர.
அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "(உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்ட "இந்த அளவு" என்பது,ஆடைகளின் கரைகளில் செய்யப்படும்) வேலைப்பாட்டையே குறிக்கிறது என அறிந்து கொள்ள எங்களுக்கு அவகாசம் தேவைப்படவில்லை.
- மேற்கண்ட தகவல் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்களின் (இறுதிக்) கூற்று இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 37
4206. சுவைத் பின் ஃகஃபலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (டமாஸ்கஸிலுள்ள) "ஜாபியா" எனுமிடத்தில் உரை நிகழ்த்துகையில், "நபி (ஸல்) அவர்கள் பட்டு அணிவதைத் தடைசெய்தார்கள்; இரு விரல்கள் அல்லது மூன்று விரல்கள் அல்லது நான்கு விரல்கள் வைக்குமிடத்தின் அளவைத் தவிர" என்று குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4207. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தமக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட அலங்காரப் பட்டு நீளங்கி ஒன்றை அணிந்தார்கள். பின்னர் விரைவாக அதைக் கழற்றி உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது அவர்களிடம், "ஏன் விரைவாக அதைக் கழற்றிவிட்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள், "அதை அணியவேண்டாம் என (வானவர்) ஜிப்ரீல் என்னைத் தடுத்துவிட்டார்" என்று பதிலளித்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் அழுதுகொண்டே வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் வெறுத்த ஒன்றை எனக்குக் கொடுத்துள்ளீர்களே? எனக்கு மட்டும் என்னவாம்?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை நீங்கள் அணிந்து கொள்வதற்காக உங்களுக்கு நான் இதை வழங்கவில்லை. இதை நீங்கள் விற்று(க் காசாக்கி)க் கொள்வதற்காகவே உங்களுக்கு வழங்கினேன்" என்று சொன்னார்கள். எனவே, அதை உமர் (ரலி) அவர்கள் இரண்டாயிரம் திர்ஹங்களுக்கு விற்று விட்டார்கள்.-இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4208. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கோடுபோட்ட பட்டுஅங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் அதை எனக்குக் கொடுத்தனுப்பினார்கள். அதை நான் அணிந்துகொண்டேன்.
(அதைக் கண்டபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் நான் கோபத்தைக் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை நீங்கள் அணிந்து கொள்வதற்காக உங்களுக்கு நான் கொடுத்தனுப்பவில்லை. (மாறாக,) இதை முக்காடுகளாக வெட்டி (உங்கள் வீட்டுப்) பெண்களிடையே பங்கிடுவதற்காகவே உங்களுக்கு நான் கொடுத்தனுப்பினேன்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஆத் பின் முஆத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கிணங்க அதை(த் துண்டாக்கி) என் (வீட்டுப்) பெண்களிடையே பங்கிட்டுக் கொடுத்துவிட்டேன்" என்று அலீ (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கிணங்க" எனும் குறிப்பு இல்லை. "அதை நான் என் (வீட்டுப்) பெண்களிடையே பங்கிட்டுவிட்டேன்" என்பது மட்டுமே காணப்படுகிறது.
அத்தியாயம் : 37
4209. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"தூமத்துல் ஜந்தல்" பகுதியின் மன்னர் உகைதிர் என்பவர், நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டுத் துணி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அதை நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கி, இதை முக்காடுகளாக வெட்டி, ஃபாத்திமாக்களிடையே பங்கிட்டுவிடுங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா மற்றும் அபூகுறைப் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "(உங்கள் வீட்டுப்) பெண்களிடையே பங்கிட்டுவிடுங்கள்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
4210. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோடுபோட்ட பட்டுஅங்கி ஒன்றை எனக்குக் கொடுத்தார்கள். நான் (அதை அணிந்துகொண்டு அவர்களிடம்) புறப்பட்டு வந்தபோது, அவர்களது முகத்தில் கோபத்தை நான் கண்டேன். எனவே,அதை வெட்டி என் (வீட்டுப்) பெண்களிடையே பங்கிட்டுவிட்டேன்.
அத்தியாயம் : 37
4211. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மென்பட்டு நீளங்கியொன்றை உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் "இதை எனக்குக் கொடுத்தனுப்பியுள்ளீர்களே! (முன்பு) இந்த ஆடை குறித்து வேறுவிதமாகக் கூறினீர்களே?" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை நீங்கள் அணிந்துகொள்வதற்காக உங்களுக்கு நான் கொடுத்தனுப்பவில்லை. (மாறாக, இதை விலைக்கு விற்று,) அந்தக் காசின் மூலம் நீங்கள் பயனடைந்து கொள்வதற்காகவே உங்களுக்கு இதை நான் கொடுத்தனுப்பினேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4212. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இம்மையில் பட்டு அணிகிறாரோ, அவர் மறுமையில் அதை அணியமாட்டார்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4213. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இம்மையில் பட்டு அணிந்தவர், மறுமையில் அதை அணியமாட்டார்.
இதை அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37
4214. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஆண்கள் பட்டு அணிவது தடைசெய்யப்படுவதற்கு முன்பு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ("ஃபர்ரூஜ்"எனும்) நீண்ட பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்து கொண்டார்கள். பிறகு அதை அணிந்தபடியே (மஃக்ரிப் தொழுகை) தொழுதார்கள்.
தொழுகை முடிந்து திரும்பியதும் அதை வெறுப்பவர்களைப் போன்று பலமாக (உருவிக்) கழற்றினார்கள். பிறகு, "இது இறையச்சமுடையவர்களுக்கு உகந்ததன்று" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 3 சொறிசிரங்கு உள்ளிட்டவை இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம்.
4215. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) , ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) ஆகியோருக்குப் பயணத்தில் சொறிசிரங்கு அல்லது (வேறு) நோய் ஏற்பட்டிருந்ததால் பட்டு முழு நீளங்கி அணிந்துகொள்ள அவ்விருவருக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "பயணத்தில்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 37
4216. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது
ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகியோருக்குச் சொறிசிரங்கு ஏற்பட்டிருந்த காரணத்தால் பட்டாடை அணிந்துகொள்ள அவர்கள் இருவருக்கும் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்." அல்லது "அனுமதியளிக்கப்பட்டது."
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4217. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களும் ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களும் புறப்பட்டுச் சென்ற ஒரு போர் பயணத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (தமது உடலில் சிரங்கு உண்டாக்கிய) ஒட்டுண்ணிகளைக் குறித்து முறையிட்டனர். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் பட்டு முழு நீளங்கி அணிய அனுமதியளித்தார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 4 செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடையை ஆண்கள் அணிவதற்கு வந்துள்ள தடை.
4218. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்டபோது, "இவை இறைமறுப்பாளர்களின் ஆடைகளில் உள்ளவையாகும். எனவே, இதை நீர் அணியாதீர்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4219. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "உன் தாயாரா இவ்வாறு (செம்மஞ்சள் நிறச் சாயமிடுமாறு) உமக்குக் கட்டளையிட்டார்?" என்று கேட்டார்கள். நான், "அவ்விரண்டையும் கழுவி (செம்மஞ்சள் நிறச் சாயத்தை அகற்றி)க் கொள்கிறேன்" என்றேன். நபி (ஸல்) அவர்கள் "இல்லை, அவ்விரண்டையும் எரித்துவிடு" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 37
4220. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை ஆகியவற்றை அணியவேண்டாம் என்றும், பொன் மோதிரம் அணிய வேண்டாமென்றும், (தொழுகையில்) ருகூஉவில் குர்ஆனை ஓத வேண்டாமென்றும் தடை செய்தார்கள்.- இதை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37
4221. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (தொழுகையில்) ருகூஉவிலிருக்கும்போது குர்ஆனை ஓத வேண்டாமென்றும், தங்கம் அணிய வேண்டாமென்றும், செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடையை அணிய வேண்டாமென்றும் என்னைத் தடுத்தார்கள்.
அத்தியாயம் : 37
4222. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தங்கமோதிரம் அணிய வேண்டாமென்றும், பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை அணிய வேண்டாமென்றும், ருகூஉ மற்றும் சஜ்தாவில் குர்ஆனை ஓத வேண்டாமென்றும், செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடையை அணிய வேண்டாமென்றும் தடைசெய்தார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு.
4223. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் "எந்த ஆடை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது?" என்று கேட்டோம். "(பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வை" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 37
4224. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமான துணியாக இருந்தது.
அத்தியாயம் : 37
பாடம் : 6 ஆடையில் (எளிமையும்) பணிவு(ம்) மேற்கொள்வதும்; ஆடை, விரிப்பு உள்ளிட்டவற்றில் கெட்டியானதையும் எளிமையானதையும் வைத்துப் போதுமாக்கிக் கொள்வதும்; முடியாலான ஆடை, கரை வேலைப்பாடுகள் செய்யப்பட்டவை ஆகியவற்றை அணியலாம் என்பதும்.
4225. அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் எங்களிடம் யமன் நாட்டில் தயாரிக்கப்பட்ட கெட்டியான கீழங்கி ஒன்றையும் "அல்முலப்பதா" (ஒட்டாடை) எனப் பெயர் பெற்ற மற்றோர் ஆடையையும் எடுத்துக்காட்டி, "அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இரண்டு ஆடைகளையும் அணிந்திருந்த நிலையில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உயிர் பிரிந்தது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 37
4226. அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறியதா வது:
ஆயிஷா (ரலி) அவர்கள் எங்களிடம் கீழங்கி ஒன்றையும் (இரண்டை ஒன்றாகச் சேர்த்து) ஒட்டப்பட்ட மற்றொரு கெட்டியான ஆடையையும் எடுத்துக்காட்டி, "இவற்றை அணிந்திருந்த நிலையில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உயிர் பிரிந்தது" என்று சொன்னார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "கெட்டியான கீழங்கியொன்றையும்" என்று இடம்பெற்றுள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் அபூபுர்தா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "கெட்டியான கீழங்கியொன்றையும்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
4227. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலை நபி (ஸல்) அவர்கள், கோடுபோட்ட கறுப்பு முடியாலான ஆடை அணிந்து வெளியே புறப்பட்டார்கள்.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4228. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாய்ந்துகொள்ளும் தலையணை, பதனிடப்பட்ட தோலால் அமைந்திருந்தது. அது ஈச்ச நாரினால் நிரப்பப்பெற்றிருந்தது.
அத்தியாயம் : 37
4229. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்கும் விரிப்பு, ஈச்ச நாரால் நிரப்பப்பெற்ற பதனிடப்பட்ட தோலால் அமைந்திருந்தது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ("விரிப்பு" என்பதைக் குறிக்க "ஃபிராஷ்" என்பதற்குப் பதிலாக) "ளிஜாஉ" எனும் சொல் இடம்பெற்றுள்ளது. அபூ முஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உறங்கும் (விரிப்பு)" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தலாம்.
4230. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்குத் திருமணமானபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "படுக்கை விரிப்புகள் அமைத்துவிட்டாயா?" என்று கேட்டார்கள். நான், "எங்களிடம் எவ்வாறு படுக்கை விரிப்புகள் இருக்கும்?" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தெரிந்துகொள். விரைவில் அவை (உங்களிடம்) இருக்கும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4231. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மணமானபோது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "படுக்கை விரிப்புகள் அமைத்துவிட்டாயா?" என்று கேட்டார்கள். நான் "எங்களிடம் எவ்வாறு படுக்கை விரிப்புகள் இருக்கும்?" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தெரிந்துகொள். விரைவில் அவை (உங்களிடம்) இருக்கும்" என்றார்கள்.
(பின்னாளில் ஒரு சமயம்) என் துணைவியிடம் படுக்கை விரிப்பொன்று இருந்தது. நான் அவரிடம் "அதை என்னிடமிருந்து அப்புறப்படுத்து (என்னிடம் அதைக் கொண்டுவராதே)" என்று சொல்ல, அதற்கு என் துணைவி, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விரைவில் அவை (உங்களிடம்) இருக்கும் என்று சொன்னார்களே?" என்று கேட்டார்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(என் துணைவி அவ்வாறு பதிலளித்ததும்) அவ்வாறாயின், அவற்றை நான் (அப்படியே) விட்டுவிடுகிறேன்"என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத்தக்கதன்று.
4232. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "ஒரு விரிப்பு ஆணுக்குரியது. மற்றொரு விரிப்பு அவன் துணைவிக்குரியது. மூன்றாவது விரிப்பு விருந்தாளிக்குரியது. நான்காவது விரிப்பு ஷைத்தானுக்குரியது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வது தடை செய்யப்பட்டதாகும் என்பதும், அணியும் ஆடை எந்த அளவுக்குக் கீழே இறங்கலாம், அதில் விரும்பத்தக்க அளவு என்ன என்பது பற்றிய விளக்கமும்.
4233. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆடையை (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பதினோரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "மறுமை நாளில் ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 37
4234. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தற்பெருமையால் தனது ஆடையை(த் தரையில் படும்படி) இழுத்துக்கொண்டு செல்பவனை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4235. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தற்பெருமையால் தனது ஆடையை(த் தரையில் படும்படி) இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "தன் ஆடைகளை" என்று (பன்மையாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
4236. முஸ்லிம் பின் யந்நாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ஒரு மனிதர் தமது ஆடையைத் தரையில் இழுபடும்படி இழுத்துச் செல்வதைக் கண்டார்கள். அப்போது, "நீர் யார்?" என்று கேட்டார்கள். அவர் தமது குடும்பத்தைப் பற்றித் தெரிவித்தார். அவர் பனூ லைஸ் குலத்தைச் சேர்ந்தவராயிருந்தார். அவரை யாரென அறிந்து கொண்ட பின், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தற்பெருமையடிக்கும் நோக்கத்துடனே தனது கீழாடையை (தரையில்படும் படி) இழுத்துச் சென்றவனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்" என்று கூறியதை நான் இந்த என் இரு காதுகளால் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "தனது கீழாடையை" என்றே இடம்பெற்றுள்ளது. "தனது ஆடையை" என (பொதுவாக) இல்லை. அபூயூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("முஸ்லிம் பின் யந்நாக்" என்ற அறிவிப்பாளரின் பெயர்) "முஸ்லிம் அபில்ஹசன்" என (குறிப்புப் பெயருடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
4237. முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நான் நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் (ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமை யான முஸ்லிம் பின் யசார் (ரஹ்) அவர்களுக்கும் இப்னு உமர் (ரலி) அவர்களுக்கும் நடுவே அமர்ந்திருந்தேன்.
அப்போது முஸ்லிம் பின் யசார் (ரஹ்) அவர்களிடம் "தற்பெருமையுடன் தனது ஆடையைத் தரையில் படும்படி இழுத்துக்கொண்டு செல்பவன் குறித்துத் தாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஏதேனும் செவியுற்றீர்களா?" என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்கச் சொன்னேன். (அவ்வாறே அவர் கேட்டார்.)
அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ் மறுமை நாளில் அவனை ஏறெடுத்துப் பார்க்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4238. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது எனது கீழாடை (கணுக்காலுக்குக்) கீழே இருந்தது. அப்போது அவர்கள், "அப்துல்லாஹ்! உமது கீழாடையை உயர்த்திக் கட்டு" என்றார்கள். நான் உயர்த்திக் கட்டினேன். பிறகு "இன்னும் சிறிது (உயர்த்து)" என்றார்கள். அவ்வாறே நான் இன்னும் சிறிது உயர்த்தினேன். பின்னர் அதையே நான் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.
(இவ்வாறு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதைக் கேட்ட) மக்கள் சிலர், "எதுவரை உயர்த்த வேண்டும்?" என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "கணைக்கால்களின் பாதியளவுக்கு" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 37
4239. முஹம்மத் பின் ஸியாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் பஹ்ரைன் நாட்டின் (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக இருந்தபோது, ஒரு மனிதர் தமது கீழாடையைத் தரையில் படும்படி இழுத்துக்கொண்டு செல்வதைக் கண்டார்கள். அப்போது தமது காலால் பூமியில் தட்டியவாறு "(இதோ! பெரிய) தலைவர் வருகிறார். (பெரிய) தலைவர் வருகிறார்" என்று (இடித்துக்) கூறலானார்கள்.
பிறகு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அகம்பாவத்துடன் தனது ஆடையை (தரையில் படும்படி) இழுத்துச் செல்பனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்” என்று கூறினார்கள்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "மர்வான் பின் அல்ஹகம், அபூஹுரைரா (ரலி) அவர்களை (இடைக்கால) ஆட்சியராக நியமித்திருந்தார்" என்று காணப்படுகிறது. முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அபூஹுரைரா (ரலி) அவர்கள் மதீனாவின் (இடைக்கால) ஆட்சியராக நியமிக்கப் பட்டிருந்தார்கள்" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 10 தம் ஆடைகளைக் கண்டு ஒருவர் பெருமிதம் கொண்டு, கர்வத்தோடு நடப்பது தடை செய்யப்பட்டதாகும்.
4240. நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:
(முற்காலத்தில்) ஒரு மனிதன் தோள்கள் வரை தொங்கும் தனது தலை முடியையும் தான் அணிந்திருந்த இரு ஆடைகளையும் எண்ணிப் பெருமிதத்தோடு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது பூமிக்குள் அவன் புதையுண்டு போனான். அவன் மறுமை நாள் நிகழும்வரை பூமிக்குள் குலுங்கியபடி அழுந்திச் சென்றுகொண்டே இருப்பான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4241. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில்) ஒரு மனிதன் தற்பெருமை கொண்டவனாகத் தன் ஆடைகளை அணிந்து கொண்டு கர்வத்தோடு நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமை நாள் நிகழும்வரை (அவ்வாறே) பூமிக்குள் குலுங்கியபடியே அழுந்திச் சென்றுகொண்டே இருப்பான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஒரு மனிதன் தன்னிரு ஆடைகளை அணிந்து கர்வப்பட்டுக்கொண்டிருந்த போது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்களில் ஒருவன் தனது ஆடையை அணிந்து கர்வம் கொண்டான்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே முடிகிறது.
அத்தியாயம் : 37
பாடம் : 11 ஆண்கள் தங்கமோதிரம் அணிவது தடை செய்யப்பட்டதாகும்; இஸ்லாத்தின் ஆரம்பத்தில் அதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி மாற்றப்பட்டுவிட்டது.
4242. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், தங்கமோதிரம் அணிய வேண்டாமென (ஆண்களுக்கு)த் தடை விதித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4243. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மனிதர் தமது கையில் தங்கமோதிரம் அணிந்திருப்பதைக் கண்டபோது, அதைக் கழற்றச்செய்து தூக்கியெறிந்தார்கள். பிறகு "உங்களில் ஒருவர் (நரக) நெருப்பின் கங்கை எடுத்து, அதைத் தமது கையில் வைத்துக் கொள்கிறார்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற பிறகு அந்த மனிதரிடம், "உமது மோதிரத்தை(க் கழற்றி) எடுத்து நீ (வேறு வகையில்) பயனடைந்துகொள்" என்று கூறப்பட்டது. அவர், "இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீசியெறிந்துவிட்டதை அல்லாஹ்வின் மீதாணையாக ஒருபோதும் நான் எடுக்க மாட்டேன்" என்று சொல்லிவிட்டார்.
அத்தியாயம் : 37
4244. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கமோதிரம் ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தார்கள். அதை அணியும்போது அதன் குமிழ் பகுதி தமது உள்ளங்கை பக்கமாக அமையும்படி அணிவார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்ற) மோதிரங்களைச் செய்துகொண்டனர்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) அமர்ந்து அந்த மோதிரத்தைக் கழற்றிவிட்டு, "நான் இந்த மோதிரத்தை அதன் குமிழ் பகுதி உள்ளங்கை பக்கமாக அமையும்படி வைத்தே அணிந்துகொண்டிருந்தேன்" என்று கூறி, அதை எறிந்துவிட்டார்கள்.
பிறகு "அல்லாஹ்வின் மீதாணையாக! இதை ஒருபோதும் நான் அணியமாட்டேன்" என்று சொன்னார்கள். உடனே மக்களும் தங்களின் மோதிரங்களை (கழற்றி) எறிந்தனர்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உக்பா பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அ(ந்த மோதிரத்)தைத் தமது வலக்கையில் அணிந்திருந்தார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 12 நபி (ஸல்) அவர்கள் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரத்தை அணிந்திருந்ததும் அதை நபியவர்களுக்குப் பின் (மூன்று) கலீஃபாக்களும் அணிந்திருந்ததும்.
4245. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்து கொண்டார்கள். அது (அவர்களின் வாழ்நாளில்) அவர்களது கையில் இருந்தது. பிறகு (முதலாவது கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. பிறகு (இரண்டாவது கலீஃபா) உமர் (ரலி) அவர்களின் கையில் இருந்தது.
பிறகு (மூன்றாவது கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்களின் கையில் இருந்தது. இறுதியில் அது உஸ்மான் (ரலி) அவர்களிடமிருந்து "அரீஸ்” எனும் கிணற்றில் (தவறி)விழுந்துவிட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த இலச்சினை "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்றிருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உஸ்மான் (ரலி) அவர்களிடமிருந்து" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 37
4246. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (முதலில்) தங்கமோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். பிறகு அதை(க் கழற்றி) எறிந்தார்கள். பிறகு வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து)கொண்டார்கள். அதில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" எனும் இலச்சினை பொறித்தார்கள். மேலும், "எனது மோதிரத்தில் பொறிக்கப்பட்டிருப்பதைப் போன்று வேறு யாரும் (அரசு) இலச்சினை பொறிக்க வேண்டாம்" என்று சொன்னார்கள்.
அவர்கள் அதை அணியும்போது அதன் குமிழ் பகுதி உள்ளங்கை பக்கமாக அமையும்படி அணிவார்கள். அந்த மோதிரம் தான் "அரீஸ்” எனும் கிணற்றில், முஐகீப் (பின் அபீஃபாத்திமா - ரலி) அவர்களின் கையிலிருந்து விழுந்துவிட்டது.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" எனும் இலச்சினை பொறித்தார்கள். மேலும், மக்களிடம் "நான் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" எனும் இலச்சினை பொறித்துள்ளேன். ஆகவே, வேறு யாரும் அதைப் போன்று (அரசு) இலச்சினை பொறிக்க வேண்டாம்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" (எனும் இலச்சினை அமைந்திருந்தது) எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 37
பாடம் : 13 நபி (ஸல்) அவர்கள் அரபியரல்லாத (வெளிநாட்ட)வருக்குக் கடிதம் எழுத விரும்பியபோது (முத்திரையிடுவதற்காக) மோதிரம் ஒன்றைத் தயாரித்துக் கொண்டது.
4247. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பைஸாந்திய) ரோமர்களுக்குக் கடிதம் எழுத விரும்பியபோது மக்கள், "ரோமர்கள் முத்திரையிடப்படாத எந்தக் கடிதத்தையும் வாசிக்கமாட்டார்கள்" என்று கூறினர்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" எனும் இலச்சினை பொறித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையில் (ஒளிர்ந்த) அந்த மோதிரத்தின் வெண்மையை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4248. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரபியர் அல்லாதோருக்குக் கடிதம் எழுத விரும்பியபோது, "அரபியர் அல்லாதோர் முத்திரை இல்லாத கடிதம் எதையும் ஏற்கமாட்டார்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டது, எனவே,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயார் செய்துகொண்டார்கள்.
அவர்களது கையில் (ஒளிர்ந்த) அந்த மோதிரத்தின் வெண்மையை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
அத்தியாயம் : 37
4249. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சீசர், குஸ்ரூ, நீகஸ் (கிஸ்ரா, கைசர், நஜாஷீ) ஆகிய மன்னர்களுக்குக் கடிதம் எழுத விரும்பியபோது, "இ(ம்மன்ன)வர்கள் முத்திரை இல்லாத எந்தக் கடிதத்தையும் ஏற்கமாட்டார்கள்" என்று கூறப்பட்டது. ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி வளைய மோதிரம் ஒன்றை வார்த்து அதில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" எனும் இலச்சினை பொறித்துக்கொண்டார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 14 மோதிரங்களை(க் கழற்றி) எறிதல்.
4250. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் வெள்ளி மோதிரம் ஒன்றைக் கண்டேன். (அதைக் கண்ட) மக்களும் வெள்ளி மோதிரங்களைச் செய்து அணிந்துகொண்டனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (முன்பு அணிந்திருந்த) தமது (பொன்) மோதிரத்தை (கழற்றி) எறிந்துவிடவே, மக்களும் தம் (பொன்) மோதிரங்களை (கழற்றி) எறிந்துவிட்டனர்.
அத்தியாயம் : 37
4251. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையில் வெள்ளி மோதிரத்தைக் கண்டேன். பிறகு மக்களும் வெள்ளி மோதிரங்களை வார்த்து, அவற்றை அணிந்து கொண்டனர். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முன்பு அணிந்திருந்த) தமது (தங்க) மோதிரத்தை எறிந்துவிட்டார்கள். எனவே, மக்களும் தம் (தங்க) மோதிரங்களை எறிந்துவிட்டனர்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 15 அபிசீனியக் குமிழ் உள்ள வெள்ளி மோதிரம்.
4252. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வெள்ளி மோதிரம் அபிசீனியக் குமிழ் (அல்லது கறுப்புக் கல்) உள்ளதாக இருந்தது.
அத்தியாயம் : 37
4253. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வலக்கரத்தில் வெள்ளி மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார்கள். அதன் குமிழ் அபிசீனியாவைச் சேர்ந்ததாயிருந்தது. அதன் குமிழ் பகுதியைத் தமது உள்ளங்கை பக்கம் அமையும்படி அணிந்திருப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 16 கையின் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது.
4254. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது
அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இந்த விரலில் மோதிரம் அணிந்திருந்தார்கள்" என்று கூறி, தமது இடக்கையின் சுண்டுவிரலை நோக்கி சைகை செய்தார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 17 நடு விரலிலும் அதற்கடுத்துள்ள ஆட்காட்டி விரலிலும் மோதிரம் அணிவதற்கு வந்துள்ள தடை.
4255. அபூபுர்தா ஆமிர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இந்த விரலில் அல்லது அதற்கடுத்த விரலில் மோதிரம் அணிய வேண்டாம் என என்னைத் தடை செய்தார்கள்" என்று கூறினார்கள்.
-அது எந்த இரு விரல்கள் என அறிவிப்பாளர் ஆஸிம் பின் குலைப் (ரஹ்) அவர்களுக்குத் தெரியவில்லை.-
மேலும், "கஸ்" வகைத் துணியை அணியவேண்டாம் என்றும் (சிவப்பு) மென்பட்டு விரிப்புகளில் (மீஸரா) அமர வேண்டாமென்றும் எனக்குத் தடை செய்தார்கள்.
மேலும், அலீ (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
"கஸ்" வகைத் துணி என்பது, எகிப்து அல்லது சிரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வகைத் துணியாகும். அதில் விலா எலும்புகளைப் போல வரிவரியாகக் கோடுகள் இருக்கும். இன்னவற்றுக்கு அது ஒப்பாயிருக்கும். "மீஸரா" என்பது, பெண்கள் தம் கணவர்களுக்காக ஒட்டகச் சேணத்தில் அமைக்கும் சிவப்பு நிற மென்பட்டுத் திண்டுகளைப் போன்ற விரிப்புகளாகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அபூமூசாவின் புதல்வர் (அபூபுர்தா) கூறினார்" என அறிவிப்பாளர்தொடரில் இடம் பெற்றுள்ளது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். அல்லது நபி (ஸல்) அவர்கள் என்னைத் தடை செய்தார்கள்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
4256. அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த விரலில் அல்லது இந்த விரலில் மோதிரம் அணியவேண்டாம் என்று என்னைத் தடை செய்தார்கள்" என்று கூறி, நடுவிரலையும் அதற்கடுத்த (ஆட்காட்டி) விரலையும் சுட்டிக் காட்டினார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 18 காலணி அல்லது அது போன்றதை அணிவது விரும்பத்தக்கதாகும்.
4257. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மேற்கொண்ட ஒரு போர் பயணத்தில் நபி (ஸல்) அவர்கள், "காலணியை அணிந்துகொள்ளுங்கள். ஏனெனில்,ஒரு மனிதர் காலணி அணிந்திருக்கும்வரை அவர் வாகனத்திலேயே இருக்கிறார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 19 காலணி அணியும்போது முதலில் வலக் காலில் அணிவதும் கழற்றும்போது முதலில் இடக்காலில் இருந்து கழற்றுவதும் விரும்பத்தக்கதாகும்; ஒரேயொரு காலணியில் நடப்பது வெறுக்கத்தக்கதாகும்.
4258. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் காலணி அணியும் போது முதலில் வலக் காலில் அணியட்டும். அதைக் கழற்றும்போது முதலில் இடக் காலில் இருந்து கழற்றட்டும். ஒன்று, இரு காலணிகளையும் ஒருசேர அவர் அணிந்து கொள்ளட்டும். அல்லது இரண்டையும் ஒருசேரக் கழற்றிவிடட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37
4259. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஒரேயொரு காலணியில் நடக்கவேண்டாம். ஒன்று, இரு காலணிகளையும் ஒருசேர அவர் அணிந்துகொள்ளட்டும். அல்லது இரண்டையும் ஒருசேர கழற்றிவிடட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37
4260. அபூரஸீன் மஸ்ஊத் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்து, தமது கையால் தமது நெற்றியில் அடித்துவிட்டு, "அறிந்துகொள்ளுங்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது (அவர்கள் சொல்லாததைச் சொன்னதாகப்) பொய்யுரைக்கிறேன் என நீங்கள் பேசிக் கொள்கிறீர்கள். நீங்கள் நேர்வழியில் செல்ல, நான் (மட்டும்) வழிகெட்டுவிட வேண்டுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவரின் செருப்பு வார் அறுந்துவிட்டால், அதைச் சீராக்காத வரை மற்றொரு செருப்பில் நடந்து செல்லவேண்டாம்" என்று கூறினார்கள் என நான் உறுதியளிக்கிறேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 20 ஒரேயொரு துணியை உடலில் சுற்றிக் கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்த நிலையில் விட்டுவிடுவதும் (இஷ்தி மாலுஸ் ஸம்மாஉ), ஒரே துணியைப் போர்த்திக்கொண்டு குத்துக்காலிட்டு அமர்வதும் (இஹ்திபா) தடை செய்யப்பட்டவை ஆகும்.
4261. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒருவர் தமது இடக் கையால் உணவு உண்பது, அல்லது ஒரேயொரு காலணியில் நடப்பது, ஒரேயொரு துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடுவது (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக் கொண்டு மர்ம உறுப்பு வெளியே தெரியுமாறு (குத்துக்காலிட்டு) அமர்வது (இஹ்திபா) ஆகியவற்றுக்குத் தடை விதித்தார்கள்.
அத்தியாயம் : 37
4262. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவரது செருப்பு வார் அறுந்துவிட்டால்" அல்லது "தமது செருப்பு வார் அறுந்து விட்ட ஒருவர்" அதைச் சீராக்காத வரை ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒரேயொரு காலுறை அணிந்தும் நடக்க வேண்டாம். இடக் கையால் சாப்பிட வேண்டாம்.
ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு (மர்ம உறுப்பு வெளியே தெரியுமாறு குத்துக்காலிட்டு) அமர வேண்டாம். ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிட வேண்டாம்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 21 மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு கால்மீது மற்றொரு காலைப் போட்டுக் கொள்வதற்கு வந்துள்ள தடை.
4263. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிட வேண்டாம் என்றும், ஒரே துணியைப் போர்த்திக்கொண்டு (மர்ம உறுப்பு வெளியே தெரியுமாறு குத்துக்காலிட்டு) அமர வேண்டாம் என்றும், ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருக்கும்போது கால்மீது கால் போட்டுக்கொள்ள வேண்டாம் என்றும் தடை செய்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4264. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), "ஒரேயொரு காலணியில் நடக்காதே. ஒரே கீழாடையால் (உன் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு குத்துக்காலிட்டு அமராதே. இடக் கையால் சாப்பிடாதே. ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்தவாறு விட்டுவிடாதே. நீ மல்லாந்து படுத்திருக்கும்போது ஒரு காலை மற்றொரு கால்மீது போடாதே" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4265. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு காலை மற்றொரு கால்மீது போட்டுக்கொள்ள வேண்டாம்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 22 மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு காலை மற்றொரு கால்மீது போட்டுக் கொள்வதற்கு வந்துள்ள அனுமதி.
4266. அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு காலின் மீது மற்றொரு காலைப் போட்டுக்கொண்டு பள்ளிவாசலில் மல்லாந்து படுத்திருப்பதை நான் கண்டேன்.
அத்தியாயம் : 37
4267. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வது தடை செய்யப் பட்டதாகும்.
4268. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதைத் தடை செய்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அதாவது ஆண்களுக்குத் தடை செய்தார்கள்" என (விளக்கத்துடன்) இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்கள் குங்குமப்பூச் சாயமிட்டுக் கொள்ளக்கூடாது எனத் தடை விதித்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 24 நரைமுடியில் மஞ்சள் நிறத்திலோ, சிவப்பு நிறத்திலோ சாயமிடுவது விரும்பத் தக்கதாகும். கறுப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும்.
4269. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹாஃபா அவர்கள் மக்கா "வெற்றி ஆண்டில்" அல்லது "வெற்றி நாளில்" (நபி (ஸல்) அவர்களிடம்) "வந்தார்கள்". அல்லது "கொண்டுவரப் பட்டார்கள்". அவர்களது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று (தூய வெள்ளை நிறத்தில்) இருந்தன. அவருடைய துணைவியரிடம் நபி (ஸல்) அவர்கள், "இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள்" என்று உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 37
4270. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றி நாளில் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹாஃபா, (நபி (ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டார். அவரது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வதில் யூதர்களுக்கு மாறுசெய்தல்.
4271. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களும் கிறித்தவர்களும் (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வதில்லை. ஆகவே, நீங்கள் (உங்கள் நரைமுடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறுசெய்யுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 26 உயிரினங்களின் உருவப்படங்களை வரைவதும், விரிப்புகள் போன்ற மதிப்பில்லாப் பொருட்கள் தவிர, உருவப்படமுள்ள இதரப் பொருட்களை வைத்துக் கொள்வதும் தடை செய்யப்பட்டவை ஆகும். உருவப்படமோ நாயோ உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள்.
4272. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு (குறிப்பிட்ட) நேரத்தில் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால், அந்த நேரம் வந்தும் ஜிப்ரீல் வரவில்லை.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் குச்சியொன்று இருந்தது. அதை அவர்கள் தூக்கியெறிந்துவிட்டு, "அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறுசெய்யமாட்டான். அவனுடைய தூதர்களும் வாக்குறுதிக்கு மாறுசெய்யமாட்டார்கள்" என்று கூறினார்கள். பின்னர் திரும்பிப் பார்த்தபோது, தமது கட்டிலுக்குக் கீழே நாய்க்குட்டியொன்று இருப்பதைக் கண்டார்கள்.
உடனே "ஆயிஷா! இந்த நாய் இங்கு எப்போது நுழைந்தது?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தெரியவில்லை" என்றேன். உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்ட பின் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் வருவதாகச் சொன்னீர்கள். உங்களுக்காக நான் (எதிர்பார்த்து) அமர்ந்திருந்தேன். ஆனால், நீங்கள் வரவில்லையே (ஏன்)?" என்று கேட்டார்கள்.
அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "உங்கள் வீட்டினுள்ளிருந்த நாயே என(து வருகை)க்குத் தடையாக அமைந்துவிட்டது. (வானவர்களாகிய) நாங்கள், நாயும் உருவப்படமும் உள்ள வீட்டிற்குள் நுழையமாட்டோம்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வருவதாக வாக்களித்திருந்தார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி (சுருக்கமாக முடிகி)றது. மேற்கண்ட அறிவிப்பில் உள்ளதைப் போன்று விரிவாக இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 37
4273. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வழக்கத்திற்கு மாறாகக்) கவலையோடு அமைதியாக இருந்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் தங்களது தோற்றத்தில் ஏதோ மாற்றத்தை நான் காண்கிறேனே (ஏன்)?" என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(வானவர்) ஜிப்ரீல் இன்றிரவில் என்னை வந்து சந்திப்பதாக வாக்களித்திருந்தார். ஆனால், அவர் வரவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் என்னிடம் வாக்கு மாறி நடந்ததில்லை" என்று சொன்னார்கள். அந்நாள் முழுவதும் அதே நிலையிலேயே அவர்கள் காணப்பட்டார்கள்.
பிறகு அவர்களது மனதில், எங்கள் வீட்டிலிருந்த கூடாரமொன்றுக்குக் கீழே நாய்க்குட்டி இருக்கும் நினைவு வந்தது. உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்டவுடன் தமது கையில் தண்ணீர் அள்ளி அந்த இடத்தில் தெளித்து விட்டார்கள்.
அன்று மாலை நேரமானதும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது "நீங்கள் நேற்றிரவு என்னிடம் வருவதாக வாக்களித்திருந்தீர்களே?" என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் "ஆம். ஆயினும், (வானவர்களாகிய) நாங்கள் நாயும் உருவப்படமும் உள்ள வீட்டில் நுழையமாட்டோம்" என்று கூறினார்கள்.அன்றைய பொழுது புலர்ந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாய்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள். சிறிய தோட்டங்களில் உள்ள நாய்களைக் கொல்லுமாறும் கட்டளையிட்டார்கள். பெரிய தோட்டங்களில் உள்ள நாய்களை விட்டுவிட்டார்கள். (அவற்றைக் கொல்லுமாறு உத்தரவிடவில்லை.)
அத்தியாயம் : 37
4274. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாயும் (உயிரினங்களின்) உருவப்படமும் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள்.-இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4275. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாயும் (உயிரினங்களின்) உருவப்படமும் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.
இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதல்ஹா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4276. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உருவப்படம் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் பின்னர் நோய்வாய்ப்பட்டபோது, அவர்களை உடல்நலம் விசாரிக்க நாங்கள் சென்றோம். அப்போது அவர்களது வீட்டுக் கதவில் உருவப்படம் உள்ள திரைச் சீலையொன்று தொங்கிக்கொண்டிருந்தது.
நான் (இந்த ஹதீஸை ஸைத் (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தபோது என்னுடனிருந்த) நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்களின் மடியில் வளர்ந்த உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்களிடம், "உருவப்படங்களைப் பற்றி முன்பொரு நாள் ஸைத் (ரலி) அவர்கள் நமக்கு (ஒரு ஹதீஸ்) அறிவிக்கவில்லையா?"என்று கேட்டேன்.
அதற்கு உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள், "துணியில் வரையப்பட்ட (உயிரற்றவையின் உருவத்)தைத் தவிர என்று அவர்கள் சொன்னதை நீர் கேட்கவில்லையா?" என்று கேட்டார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4277. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உயிரினங்களின்) உருவப்படம் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள்.
இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் நோய் வாய்ப்பட்டபோது, நாங்கள் அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றோம். அங்கு அவர்களது வீட்டி(ன் வாசலி)ல் உருவப்படங்கள் உள்ள திரையை நாங்கள் கண்டோம். நான் (என்னுடனிருந்த) உபைதுல்லாஹ் அல் கவ்லானீ (ரஹ்) அவர்களிடம் "உருவப் படங்களைப் பற்றி (முன்பு ஒரு நாள்) ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் நமக்கு (ஒரு) ஹதீஸ் அறிவிக்கவில்லையா?" என்று கேட்டேன்.
அதற்கு உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள், "துணியில் வரையப்பட்ட (உயிரற்றவையின் படத்)தைத் தவிர என்று அவர்கள் சொன்னதை நீர் செவியேற்கவில்லையா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். அதற்கு உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள், "ஆம், அவ்வாறு சொல்லத்தான் செய்தார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 37
4278. ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நாயும் உருவச் சிலைகளும் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழையமாட்டார்கள்" என்று கூறியதை நான் கேட்டேன் என அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
ஆகவே, நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "இவர் (ஸைத் பின் காலித்), "நாயும் உருவச்சிலைகளும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என என்னிடம் தெரிவிக்கிறாரே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், கூறினார்கள்: இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த ஒரு செயல் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கிறேன்.
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு போருக்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். பிறகு நான் திரைச் சீலையொன்றை எடுத்து அதை (எனது வீட்டு) வாசலில் தொங்கவிட்டேன். அவர்கள் (போரை முடித்துத் திரும்பி) வந்தபோது அந்தத் திரைச் சீலையைப் பார்த்தார்கள். அவர்களது முகத்தில் அதிருப்தியை நான் அறிந்துகொண்டேன். அவர்கள் வேகமாக அதைப் பிடித்து இழுத்துக் கிழித்துவிட்டார்கள்.
மேலும், "அல்லாஹ், கல்லுக்கும் களி மண்ணுக்கும் ஆடையணிவிக்குமாறு நமக்குக் கட்டளையிடவில்லை" என்று கூறினார்கள். ஆகவே, அந்தத் திரையை நாங்கள் துண்டாக்கி, அவற்றில் பேரீச்ச நார்களை நிரப்பி, இரு தலையணைகள் செய்துகொண்டோம். அதை அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.
அத்தியாயம் : 37
4279. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களிடம் திரைச் சீலையொன்று இருந்தது. அதில் பறவையின் உருவம் இருந்தது. ஒருவர் வீட்டுக்குள் நுழையும்போது அந்தத் திரையே அவரை வரவேற்கும். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை அப்புறப்படுத்து. நான் வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம் இவ்வுலக(த்தின் ஆடம்பர)ம்தான் என் நினைவுக்கு வருகிறது" என்று கூறினார்கள்.
மேலும், எங்களிடம் குஞ்சம் வைத்த துணியொன்றும் இருந்தது. அதன் கரைவேலைப்பாடுகள் பட்டினால் ஆனவை என்றே நாங்கள் கூறிவந்தோம். அதை நாங்கள் அணிந்துவந்தோம்.
அத்தியாயம் : 37
4280. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துல் அஃலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆயினும், அத்துணியைக் கிழித்துவிடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிடவில்லை" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
4281. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது, எனது வீட்டுவாசலில் நான் குஞ்சம் உள்ள திரைச் சீலையொன்றைத் தொங்கவிட்டிருந்தேன். அதில் இறக்கைகள் கொண்ட குதிரைகளின் உருவங்கள் இருந்தன. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (அகற்றுமாறு) உத்தரவிட, அவ்வாறே அதை நான் அகற்றிவிட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்தா பின் சுலைமான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 37
4282. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தை முடித்துக்கொண்டு) என்னிடம் வந்தார்கள். அப்போது நான் (வீட்டுவாசலை) உருவப்படம் உள்ள திரைச் சீலையால் மறைத்திருந்தேன். அதைக் கண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறம் மாறிவிட்டது. அந்தத் திரைச் சீலையை எடுத்துக் கிழித்துவிட்டார்கள்.
பிறகு "மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோரில், அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகப் படைக்(க நினைக்)கின்றவர்களும் அடங்குவர்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு முடிகிறது. ஆயினும், அதில் "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் திரைச் சீலையை நோக்கிச் சென்று, தமது கையாலேயே அதைக் கிழித்துவிட்டார்கள்" என்று (கூடுதலாக) இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் மற்றும் அப்து பின் ஹுமைத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர்" என்றே இடம்பெற்றுள்ளது. "வேதனைக்குள்ளாவோரில்..." என்று இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 37
4283. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்திலிருந்து திரும்பி) என்னிடம் வந்தார்கள். அப்போது நான் எனது அலமாரியை, உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச் சீலையொன்றால் மறைத்திருந்தேன். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது, அதைக் கிழித்து விட்டார்கள். அவர்களது முகம் நிறம் மாறியிருந்தது.
மேலும், "ஆயிஷா! மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள் தாம்" என்று கூறினார்கள்.
பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையைக் கிழித்து ஓரிரு தலையணை (இருக்கை)களாக ஆக்கிக்கொண்டோம்.-இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4284. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் உருவப்படங்கள் உள்ள (திரைத்) துணியொன்று இருந்தது. அது வாசலிலிருந்து (எனது) அலமாரிவரை நீண்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதை நோக்கியே தொழும் நிலை ஏற்பட்டிருந்தது. எனவே, "அதை என்னைவிட்டு அப்புறப்படுத்து" என்று கூறினார்கள். ஆகவே, அதை நான் அப்புறப்படுத்தி அதைத் தலையணை (இருக்கை)களாக ஆக்கிவிட்டேன்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4285. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் (எனது வீட்டில்) உருவப்படங்கள் உள்ள திரைச் சீலையைத் தொங்கவிட்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் அதை அப்புறப்படுத்தினார்கள். ஆகவே, அதை நான் இரு தலையணை (இருக்கை)களாக ஆக்கிக் கொண்டேன்.
அத்தியாயம் : 37
4286. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (எனது வீட்டில்) உருவப்படங்கள் உள்ள திரைச் சீலையொன்றைத் தொங்க விட்டிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டுக்கு) வந்தபோது, அதை அப்புறப்படுத்திவிட்டார்கள். அதை நான் துண்டித்து இரு தலையணை (இருக்கை)களாக ஆக்கிக்கொண்டேன்.
(இதை அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் அறிவித்த) அந்த வேளையில், அங்கு அவையில் இருந்த பனூ ஸுஹ்ரா குலத்தாரின் முன்னாள் அடிமையான ரபீஆ பின் அதாஉ (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விரு தலையணைகளில் தலை சாய்த்துக்கொள்வார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னதாக (உங்கள் தந்தை) அபூமுஹம்மத் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டார்.
அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் (ரஹ்) அவர்கள் "இல்லை" என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், "ஆயினும், காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் அவ்வாறு கூறியதை நான் செவியுற்றேன்" என்று கூறினார்.
அத்தியாயம் : 37
4287. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (உயிரினங்களின்) உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். (வீட்டுக்கு வந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கண்டதும் வாசற்படியிலேயே நின்றுவிட்டார்கள்; உள்ளே வரவில்லை. அவர்களது முகத்தில் அதிருப்தியை "நான் அறிந்துகொண்டேன்". அல்லது "அறியப்பட்டது". உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்?" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தத் திண்டின் நிலை என்ன?" என்று கேட்டார்கள். நான், "இதில் தாங்கள் அமர்ந்துகொள்வதற்காகவும் தலை சாய்த்துக் கொள்வதற்காகவும் தங்களுக்காகவே இதை நான் விலைக்கு வாங்கினேன்" என்றேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த உருவப்படங்களை வரைந்தவர்கள் (மறுமை நாளில்) வேதனை செய்யப்படுவார்கள். மேலும், அவர்களிடம் "நீங்கள் படைத்தவற்றுக்கு நீங்களே உயிர் கொடுங்கள்" எனக் கூறப்படும்" என்று சொல்லிவிட்டு, "(உயிரினங்களின்) உருவப்படங்கள் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைவதில்லை" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சிலரது அறிவிப்பைவிட வேறுசிலரது அறிவிப்பு முழுமையானதாக உள்ளது. அவற்றில் அப்துல் அஸீஸ் பின் அப்தில்லாஹ் அல்மாஜிஷூன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அதை எடுத்து இரு தலையணைகளாக நான் ஆக்கிக்கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டில் இருக்கும்போது அவற்றில் தலை சாய்த்துக்கொள்வார்கள்" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
4288. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயிரினங்களின் உருவங்களைத் தயாரித்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப் படுவார்கள். அவர்களிடம் "நீங்கள் படைத்தவற்றுக்கு நீங்களே உயிர் கொடுங்கள்" என்று கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4289. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திண்ணமாக மறுமை நாளில் (இறைவனிடம்) மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப்போர் தாம்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூசயீத் அல்அஷஜ்ஜு (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "திண்ணமாக" எனும் சொல் இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) மற்றும் அபூகுறைப் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் நரகவாசிகளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோரில் அடங்குவர்" என இடம்பெற்றுள்ளது. சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகிறது.- முஸ்லிம் பின் ஸுபைஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒருமுறை) மஸ்ரூக் (ரஹ்) அவர்களுடன் ஓர் இல்லத்தில் இருந்தேன். அங்கு மர்யம் (அலை) அவர்களின் உருவச்சிலைகள் இருந்தன. அப்போது மஸ்ரூக் (ரஹ்) அவர்கள், "இவை (ரோமப் பேரரசர்) சீசரின் உருவச்சிலைகள்" என்றார்கள். "நான் இல்லை, இவை மர்யம் (அலை) அவர்களின் உருவச்சிலைகள்" என்றேன்.
அப்போது மஸ்ரூக் (ரஹ்) அவர்கள், "கவனி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப்போரே" என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 37
4290. சயீத் பின் அபில்ஹசன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "நான் இந்த உருவங்களை வரை(யும் தொழில் செய்துவரு)கிறேன். இதைப் பற்றி எனக்கு மார்க்கத் தீர்ப்பு அளியுங்கள்" என்று கேட்டார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "எனக்கு அருகில் வா" என்றார்கள். அவர் அருகில் வந்தார்.
பிறகு (மீண்டும்) "இன்னும் அருகில் வா" என்றார்கள். அவர் இன்னும் அருகில் வந்தபோது, அவரது தலைமீது கையை வைத்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியை உமக்குச் சொல்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உருவங்களைப் படைக்கும் ஒவ்வொருவரும் நரகத்திற்கே செல்வர். அவர் படைத்த ஒவ்வோர் உருவத்திற்கும் அல்லாஹ் உயிர் கொடுப்பான். அதுவே அவரை நரகத்தில் வேதனை செய்யும்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
மேலும் "நீர் வரைந்துதான் ஆக வேண்டும் என்றால் மரங்கள், உயிரற்ற (இயற்கைக் காட்சிகள் உள்ளிட்ட)வற்றின் படங்களை வரைந்துகொள்" என்று கூறினார்கள்.
முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகிறேன்:
நான் (இந்த அறிவிப்பாளர்தொடரில் கிடைத்த இந்த ஹதீஸை) நஸ்ர் பின் அலீ (ரஹ்) அவர்கள் (முன்னிலையில் வாசித்துக் காட்டியபோது அவர்கள்) அதை (உண்மையான ஹதீஸ் என) ஏற்றுக்கொண்டார்கள்.
அத்தியாயம் : 37
4291. நள்ர் பின் அனஸ் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (மக்களுக்கு) மார்க்கத் தீர்ப்புகள் வழங்கலானார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என (எதைப் பற்றியும்) குறிப்பிட வில்லை. இந்நிலையில் இறுதியாக ஒரு மனிதர் வந்து, அவர்களிடம், "நான் இந்த உருவங்களைப் படைக்கும் (தொழில் புரிகின்ற) ஒரு மனிதன் ஆவேன்" என்று கூறி (அது குறித்துத் தீர்ப்புக் கோரி)னார்.
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அருகில் வா" என்று கூற, அந்த மனிதர் அருகில் வந்ததும் "உலகில் ஓர் உருவப்படத்தை வரைந்தவர், மறுமை நாளில் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி பணிக்கப்படுவார். ஆனால்,அவரால் ஊதமுடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்" எனக் கூறினார்கள்.
- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள மேற்கண்ட ஹதீஸ் நள்ர் பின் அனஸ் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் வாயிலாகவே வேறு இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4292. அபூஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் (மதீனாவின் ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகமின் வீட்டுக்குச் சென்றேன். அங்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் உருவப்படங்கள் சிலவற்றைக் கண்டார்கள்.
அப்போது "எனது படைப்பைப் போன்று படைக்கத் தயாராகிவிட்டவனை விட அக்கிர மக்காரன் வேறு யார் இருக்க முடியும்? அவ்வாறாயின் அவர்கள் ஓர் உயிரணுவைப் படைத்துக் காட்டட்டும்! அல்லது ஒரு தானிய வித்தைப் படைத்துக் காட்டட்டும்! அல்லது கோதுமை வித்தைப் படைத்துக் காட்டட்டும் என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறினான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- அபூஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மதீனாவில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த மர்வான் அல்லது சயீத் பின் அல்ஆஸுக்கு உரிய புது மனையொன்றுக்கு நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் சென்றோம். அந்த மனையில் ஓவியர் ஒருவர் உருவப்படங்களை வரைந்துகொண்டிருந்தார்.
அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் மேற்கண்ட நபிமொழியை அறிவித்தார்கள். அதில் "அல்லது கோதுமை வித்தைப் படைத்துக் காட்டட்டும்!" எனும் வாசகம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 37
4293. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உருவச் சிலைகளோ உருவப்படங்களோ உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 27 பயணத்தில் நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத்தக்கவை ஆகும்.
4294. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாயும் மணியோசையும் உள்ள பயணிகளுடன் (அருள்) வானவர்கள் வரமாட்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4295. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒலியெழுப்பும் மணி, ஷைத்தானின் இசைக் கருவியாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்காக) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும்.
4296. அபூபஷீர் கைஸ் பின் உபைத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட பயணமொன்றில் அவர்களுடன் இருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவிப்பாளர் ஒருவரை அனுப்பி, "எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (கண்ணேறு கழிவதற்காகக் கட்டப்படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது வேறெந்த மாலையோ இருக்கக்கூடாது. இருந்தால் அவை துண்டிக்கப்பட வேண்டும்" என்று அறிவிக்கச் செய்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள், "அப்போது நபித்தோழர்கள் இரவில் ஓய்வெடுக்கும் இடங்களில் இருந்தார்கள்" என்று அபூபஷீர் (ரலி) அவர்கள் (கூறியதாக அப்பாத் பின் தமீம் (ரஹ்) அவர்கள் என்னிடம்) சொன்னதாகவே நான் கருதுகிறேன்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
கண் திருஷ்டிக்காக இவ்வாறு கட்டப்படுவதையே (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என) நான் கருதுகிறேன்.
அத்தியாயம் : 37
பாடம் : 29 உயிரினங்களின் முகத்தில் அடிப்பதும் முகத்தில் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும்.
4297. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முகத்தில் அடிக்கவேண்டாம் என்றும், முகத்தில் அடையாளச் சூடிட வேண்டாம் என்றும் தடை செய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4298. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களை, முகத்தில் அடையாளச் சூடிடப்பட்ட கழுதையொன்று கடந்து சென்றது. அப்போது அவர்கள், "இதற்கு அடையாளச் சூடிட்டவனை அல்லாஹ் சபிப்பானாக!" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 37
4299. உம்மு சலமா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான அபூஅப்தில்லாஹ் நாஇம் பின் உஜைல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முகத்தில் சூடு போட்டு அடையாளமிடப்பட்டிருந்த கழுதையொன்றைக் கண்டு அதைக் கண்டித்தார்கள்" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.
மேலும், (அவர்களின் தந்தை அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் - ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் முகத்திலிருந்து தள்ளியுள்ள (உடம்பின்) ஒரு பகுதியிலேயே நான் அடையாளமிடுவேன்" என்று கூறிவிட்டு, தமது கழுதைக்கு அதன் பின்கால் சப்பையின் ஓர் ஓரத்தில் அடையாளமிடுமாறு கட்டளையிட்டார்கள். அவர்கள்தாம் பின்கால் சப்பையின் ஓரத்தில் சூடு போட்டு அடையாளமிட்ட முதல் ஆள் ஆவார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 30 மனிதனல்லா பிற உயிரினங்களில் முகமல்லா மற்ற உறுப்புகளில் சூடிட்டு அடையாளமிடலாம் என்பதும், ஸகாத் மற்றும் ஜிஸ்யா கால்நடைகளில் அவ்வாறு செய்யுமாறு வந்துள்ள தூண்டலும்.
4300. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது என்னிடம் அவர்கள், "அனஸே! இந்தக் குழந்தையை நன்கு கவனித்துக்கொள். நபி (ஸல்) அவர்கள் (பேரீச்சம் பழத்தை) மென்று இவன் வாயிலிடுவதற்காக இவனை அவர்களிடம் நீ எடுத்துச் செல்லாத வரை இவன் எதையும் உட்கொண்டுவிட வேண்டாம்" என்று சொன்னார்கள்.
அவ்வாறே, நான் அவனை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் "ஹுவைத்" (அல்லது ஜவ்ன்) குலத் தயாரிப்பான கோடு போட்ட கம்பளியாடை அணிந்து, மக்கா வெற்றியின்போது தம்மிடம் வந்த வாகன ஒட்டகத்துக்குச் சூடிட்டு அடையாளமிட்டுக்கொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 37
4301. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது, நபி (ஸல்) அவர்கள் (பேரீச்சம் பழத்தை) மென்று அச்சிறுவனின் வாயிலிடுவதற்காக நபியவர்களிடம் அவனை (எங்கள் குடும்பத்தார்) கொண்டுசென்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தொழுவமொன்றில் ஓர் ஆட்டிற்குச் சூடிட்டு அடையாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இதை எனக்கு அறிவித்த) ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் "அதன் காதுகளில் (அடையாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்)" என்று கூறியதாகவே நான் பெரும்பாலும் கருதுகிறேன்.
அத்தியாயம் : 37
4302. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தொழுவமொன்றில் ஓர் ஆட்டிற்குச் சூடிட்டு அடையாளமிட்டுக்கொண்டிருந்தபோது நாங்கள் அவர்களிடம் சென்றோம்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"அதன் காதுகளில் (அடையாளமிட்டுக்கொண்டிருந்தார்கள்)" என்று ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாகவே நான் கருதுகிறேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4303. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கரத்தில் சூடிடும் கருவி இருந்தது. (அதன் மூலம்) அவர்கள் "ஸதக்கா" (ஸகாத்) ஒட்டகங்களுக்கு அடையாளமிட்டுக்கொண்டிருந்ததை நான் கண்டேன்.
அத்தியாயம் : 37
பாடம் : 31 குழந்தையின் தலை முடியில் சிறிதளவு மழித்துவிட்டு, சிறிதளவு மழிக்காமல் விட்டுவிடுவது (குடுமி வைப்பது) வெறுக்கத்தக்கதாகும்.
4304. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "கஸஉ" வைத்துக் கொள்ளக் கூடாதெனத் தடை விதித்தார்கள்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான உமர் பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (என் தந்தை) நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் "கஸஉ என்றால் என்ன?" என்று கேட்டேள். "சிறுவனின் தலைமுடியில் சில பகுதியை மழித்துவிட்டு, வேறுசில பகுதிகளை மழிக்காமல் விட்டுவிடுவதாகும்" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "கஸஉ" பற்றி அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள் விளக்கம் அளித்ததாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
இவ்விரு அறிவிப்புகளிலும் (கஸஉ தொடர்பான) விளக்கக் குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 32 சாலைகளில் அமர்வதற்கு வந்துள்ள தடையும் (அவ்வாறு அமர்ந்தால்) சாலைக்குரிய உரிமைகளைப் பேணுவதும்.
4305. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்து தான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக் கொள்கிறோம்" என்று கூறினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆக வேண்டும் என்றிருந்தால், சாலைக்கு அதன் உரிமையைக் கொடுத்துவிடுங்கள்" என்று கூறினார்கள்.
மக்கள், "சாலையின் உரிமை என்ன?" என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், "(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும்,முகமனுக்கு (சலாம்) பதிலுரைப்பதும், நன்மை புரியும் படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமை) ஆகும்" என்று பதிலளித்தார்கள்.-
மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 33 பெண்கள் ஒட்டுமுடி வைத்துவிடுவது, வைத்துக்கொள்வது; பச்சை குத்திவிடுவது, குத்திக்கொள்வது; (அழகிற்காக) முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்கிவிடுவது, நீக்கிக்கொள்வது; (அழகிற்காக) பல் வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக்கொள்வது, (மொத்தத்தில்) அல்லாஹ்வின் (இயற்கையான) படைப்பு முறையை மாற்றுவது தடை செய்யப்பட்டதாகும்.
4306. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் மகள் (தாம்பத்திய உறவுக்குச் செல்லவிருக்கும்) மணப்பெண்ணாக இருக்கிறாள். அவளுக்குத் தட்டம்மை நோய் ஏற்பட்டு அதன் காரணத்தால் அவளது தலைமுடி கொட்டிவிட்டது. அவளது தலையில் நான் ஒட்டுமுடி வைத்துவிடட்டுமா?" என்று கேட்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான் (தன் கருணையிலிருந்து அப்புறப் படுத்துகின்றான்)" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், வகீஉ மற்றும் ஷுஅபா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் ("அதனால் அவளது தலைமுடி கொட்டிவிட்டது" என்பதைக் குறிக்க "ஃப தமர்ரக ஷஅருஹா" என்பதற்குப் பகரமாக) "ஃப தமர்ரத்த ஷஅருஹா" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
4307. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் என் மகளுக்கு மணமுடித்து வைத்தேன். பிறகு (அவளுக்கு ஏற்பட்ட நோயால்) அவளது தலைமுடி கொட்டிவிட்டது. அவளுடைய கணவரோ அவளை அழகுபடுத்தி (அனுப்பி)விடுமாறு கூறுகிறார். ஆகவே, அவளுக்கு ஒட்டுமுடி வைத்துவிடட்டுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேண்டாமென அவளைத் தடுத்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 37
4308. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒரு பெண் மணமுடித்தார். பின்னர் அவர் உடல் நலிவுற்றுவிடவே அவரது தலைமுடி கொட்டிவிட்டது. ஆகவே, (அவருடைய குடும்பத்தார்) அவருக்கு ஒட்டுமுடி வைத்துவிட விரும்பினர். எனவே, இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் சபித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4309. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒரு பெண் தன்னுடைய மகளுக்கு மணமுடித்துவைத்தார். பிறகு அவள் நோய்வாய்ப்பட்டு அதன் காரணத்தால் அவளது தலைமுடி உதிர்ந்துவிட்டது. அப்போது அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன் மகளின் கணவர் விருப்பத்திற்கிணங்க அவளது தலையில் ஒட்டுமுடி வைத்துவிடட்டுமா? என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப் பட்டுள்ளனர்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒட்டுமுடி வைத்துவிடும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
4310. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும், ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும், பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும் சபித்தார்கள். - இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4311. அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், (அழகிற்காக) முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றிவிடும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக்கோரும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன்பற்களைப் பிரித்துக்கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ்வின் (இயற்கை) படைப்பு முறையை மாற்றிக்கொள்ளும் பெண்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!" என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த "உம்மு யஅகூப்" எனப்படும் ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் குர்ஆனை ஓதிய(றிந்த)வராக இருந்தார். அவர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, "நீங்கள் பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சைக் குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக்கோரும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து தம் முன்பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், அல்லாஹ்வின் (இயற்கையான) படைப்பு முறையை மாற்றிக் கொள்ளும் பெண்களைச் சபித்ததாக எனக்கு எட்டிய செய்தி என்ன (அது உண்மையா)?" என்று கேட்டார்.
அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? அவர்கள் அல்லாஹ்வின் வேதத்திலும் சபிக்கப்பட்டுள்ளனரே?" என்று கூறினார்கள். அதற்கு அந்தப் பெண், "குர்ஆன் பிரதியில் இரு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் வாசித்திருக்கிறேன். அதில் (தாங்கள் குறிப்பிட்டதை) நான் காணவில்லையே?" என்று கேட்டார்.
அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "நீ குர்ஆனை (சரியாக) வாசித்திருந்தால் அதில் (நான் கூறியதை) நீ கண்டிருப்பாய். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் எதிலிருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகி இருங்கள்" (59:7) என்று கூறுகின்றானா?" என்றார்கள்.
அதற்கு அந்தப் பெண், "இவற்றில் சிலவற்றை தற்போது உங்கள் மனைவியிடமே நான் காண்கிறேனே?" என்று கேட்டார். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "நீயே சென்று (என் மனைவியைப்) பார்" என்று கூறினார்கள். அப்பெண் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவியிடம் சென்றார். ஆனால், எதையும் அவர் காணவில்லை.
பிறகு அவர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் (திரும்பி)வந்து "எதையும் நான் காணவில்லை" என்று சொன்னார். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "கவனி. அவ்வாறு (நீ கூறியபடி ஏதேனும் என் மனைவியிடம்) இருந்திருக்குமானால், அவளுடன் நாம் சேர்ந்து வாழமாட்டோம்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ("பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள்" என்பதைக் குறிக்க) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்வாஷி மாத்தி, வல் முஸ்தவ்ஷிமாத்" எனும் சொற்றொடரும் முஃபள்ளல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்வாஷிமாத்தி வல்மவ்ஷூ மாத்தி" எனும் சொற்றொடரும் ஆளப்பட்டுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் நபி (ஸல்) அவர்களின் கூற்று மட்டுமே இடம்பெற்றுள்ளது. உம்மு யஅகூப் தொடர்பான எந்தச் செய்தியும் இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4312. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், பெண்கள் தமது தலையில் எதையும் ஒட்டுச்சேர்க்கை செய்வதைக் கண்டித்தார்கள். -இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4313. ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி (மெய்க்) காவலர் ஒருவரது கையிலிருந்த முடிக்கற்றை (சவுரி முடி) ஒன்றை வாங்கி, "மதீனாவாசிகளே! உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது போன்றதைத் தடைசெய்து, "பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்துபோனதெல்லாம் அவர்களுடைய பெண்கள் இதைப் பயன்படுத்தியபோதுதான்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" எனக் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்துபோனதெல்லாம்" என்பதற்குப் பகரமாக) "வேதனை செய்யப் பட்டதெல்லாம்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 37
4314. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது எங்களிடையே உரை நிகழ்த்தினார்கள். அப்போது முடிக்கற்றை ஒன்றை (கையில்) எடுத்து, "இதை (ஒட்டுமுடி வைத்துக் கொள்ளும் செயலை) யூதர்களைத் தவிர வேறெவரும் செய்வதை நான் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இது பற்றிய செய்தி எட்டியபோது, இதை "போலித்தனம்" என அவர்கள் வர்ணித்தார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4315. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் முஆவியா (ரலி) அவர்கள் (எங்களிடையே உரையாற்றுகையில்), "நீங்கள் ஒரு மோசமான கலாசாரத்தை உருவாக்கிவிட்டிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் போலித்தனத்திற்குத் தடைவிதித்தார்கள்" என்று கூறினார்கள். (அப்போது) ஒரு மனிதர் தடியொன்றைக் கொண்டுவந்தார். அதன் முனையில் துண்டுத் துணியொன்று இருந்தது. முஆவியா (ரலி) அவர்கள் "கவனியுங்கள்! இதுவும் போலியானதுதான்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பெண்கள் துண்டுத் துணிகளைச் சேர்த்து தங்களுடைய தலை முடிகளை அதிகமாக்கிக் காட்டுவதையே அவ்வாறு முஆவியா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தம்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து (கர்வத்தோடு) நடக்கும் பெண்கள்.
4316. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு,மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.
(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.
அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 35 ஆடை முதலியவற்றில் போலித்தனம் காட்டுவதும் தனக்குக் கிடைக்கப்பெறாத ஒன்று நிறைய கிடைத்துவிட்டதாகக் காட்டிக்கொள்வதும் தடை செய்யப்பட்டவை ஆகும்.
4317. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நான் என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாகக் காட்டிக்கொள்ளலாமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கிடைக்கப்பெறாத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக்கொள்கிறவர், போலியான இரு ஆடைகளை அணிந்து கொண்டவர் போலாவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 37
4318. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "எனக்குச் சகக்கிழத்தி ஒருவர் இருக்கிறார். நான் (அவரிடம்) என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாகக் காட்டிக் கொண்டால், அது குற்றமாகுமா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "கிடைக்கப்பெறாத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக்கொள்கிறவர், போலியான இரு ஆடைகளை அணிந்துகொண்டவர் போலாவார்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Previous Post Next Post