அகீதா ஓர் அறிமுகம்

- அஷ்ஷெய்க் S.H.M.இஸ்மாயில் ஸலபி

முஸ்லிம்களுக்கு அல்லாஹு தஆலா கொள்கையாக தந்திருக்கும் அடிப்படை விடயம் என்னவென்றால் ஷஹாத்து கலிமா எனும் “வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை, இன்னும் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதராவார்.”

இதுவே முஸ்லிம்களின் அடிப்படை கொள்கையாகும் இந்த கொள்கையை பரப்புவதும் இதனை விளக்குவதும் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வின் அனைத்து விடயங்களிலும் கருவாக இருந்தது. அன்னாரின் எந்த ஒரு அடிப்படையான  நடவடிக்கையையும் கவனிக்கையில் அவை அனைத்தும் நமக்கு காட்டுவது வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை என்பதும் பின்பற்றுவதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் தவிர வேறு யாருக்கும் தகுதியில்லை எனும் அடிப்படையாகும். இதனையே நாம் கொள்கையென்று கூறுகிறோம். இன்னும் அரபியில் இஃதிகாத் அல்லது அகீதா என்று சொல்கிறோம்.

வரலாற்றை நாம் கவனிக்கையில் உலமாவுல் முஸ்லிமீன் (முஸ்லிம்களின் அறிஞர்கள்) ஸஹாபாக்களின் காலம் தொடங்கி இன்று வரை இந்த கொள்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் ஆழமாக விளக்கம் காட்டியே சென்று இருக்கிறார்கள். கொள்கை விஷயத்தில் எந்த ஒரு அம்சமாயினும் சிறிதேனும் தவறுகள் வந்திடாமல் இருக்க வேண்டும் என்பதும், அல்லாஹ்வை வணங்கும் விஷயத்தில் மனிதன் தூய்மையாக விளங்க வேண்டும், என்பதும் அதனுடைய விளக்கங்களில் புதிய விஷயங்கள் கலந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதுமே அய்மதுல் முஸ்லிமீன்களான (இஸ்லாமிய அறிஞர்கள்) இன்னும் ஸஹாபாக்களை பின் தொடர்ந்து வந்த தாபிஈன்கள் மற்றும் தபஉ தாபிஈன்கள், அவர்களின் வழிமுறையில் இன்று இஸ்லாத்தை வளர்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கும் உலமாக்கள் போன்ற அனைவருடைய போராட்டமாக இருக்கிறது. அந்த போராட்டத்தின் அடிப்படையான கொள்கை ” வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை”.

இஸ்லாத்தின் அத்திபாரமாகத் திகழ்வது அகீதாவாகும். இஸ்லாமியப் பிரசாரத்தின் முக்கிய இலக்கும் அகீதாவாகும். அகீதாவைப் போதிக்காமல் அதற்கு முதன்மை வழங்காமல் இஸ்லாமியப் பிரசாரத்தை முன்னெடுக்க முடியாது.

இஸ்லாமிய அமைப்புகளும், இஸ்லாமிய அழைப்பாளர்களும் அடிப்படையான அகீதாவுக்கு வழங்க வேண்டிய முக்கியத்துவத்தை உரிய முறையில் வழங்கத் தவறி விட்டன என்றே கூற வேண்டும். அகீதாவை விட ஃபிக்ஹ் மஸ்அலாக்களும், பழாயில்களும்தான் அதிகமாக மக்களிடம் தாக்கம் செலுத்தியுள்ளன.

இஸ்லாமிய அகீதாவில் அல்லாஹ்வின் அழகுத் திரு நாமங்கள், பண்புகள் பற்றிய நம்பிக்கையும் முக்கியமானதாகும். தவ்ஹீதை மூன்று வகைகளாகப் பிரித்து நோக்கும் அறிஞர்கள், “தவ்ஹீதுல் அஸ்மாஉ வஸ்ஸிஃபாத்” என மூன்றாவது வகையாக இதைக் குறிப்பிடுவர். இந்த வகையில் இது குறித்த நம்பிக்கை தவ்ஹீதில் மூன்றில் ஒன்றாகத் திகழ்கின்றது. எனினும் பெரும்பாலும் பேசப்படாத தவ்ஹீதாகவே இது இருக்கின்றது. பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகளுக்கு இப்படியொரு பகுதி இருப்பதே தெரியாது. மற்றும் சில அமைப்புகளுக்கு இப்படியொரு பகுதி இருப்பது தெரிந்தாலும் இது பேசத் தேவை இல்லாத சாதாரண சமாச்சாரமாகவே உள்ளது. மற்றும் சிலர் இது முதஷாபிஹாத் போன்றது எனக் கூறி இஸ்லாத்தின் அடிப்படை அம்சமாகிய இதை அடிப்படையல்ல என ஒதுக்கி விடுகின்றனர்.

ஆரம்ப கால அறிஞர்கள் தவ்ஹீதின் இந்தப் பகுதிக்கு அதிக அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்தப் பகுதியைத் தவறாகப் புரிந்து கொண்டதால்தான் வரலாற்றில் பல வழிகெட்ட அமைப்புகள் தோற்றம் பெற்றன. அந்நிய தத்துவ வித்துகள், தர்க்கவியல் சாஸ்திரம் எனும் சகதிக்குள் சிக்கித் தவித்த சிலர் சிதைத்து சின்னாபின்னமாக்கிய பகுதியும் இதுதான். எனவே “அல் அஸ்மாஉ வஸ்ஸிஃபாத்” எனும் இப்பகுதியைப் புரிந்துகொள்வதற்கான சில அடிப்படைகளை இந்த ஆக்கத்தின் மூலம் வாசகப் பெருமக்களாகிய உங்களுடன் பகிர்ந்துகொள்ள முற்படுகின்றோம்.


(1) இது நம்பிக்கைக்குரிய பகுதி

“அல் அஸ்மாஉ” என்றால் அல்லாஹ்வின் அழகுத் திருப்பெயர்களைக் குறிக்கும். “அஸ்ஸிஃபாத்” என்றால் அல்லாஹ்வின் பண்புகளைக் குறிக்கும். அல்லாஹ்வின் பண்புகளையும், பெயர்களையும் அவன் சொன்னால் மாத்திரமே எம்மால் அறிந்துகொள்ள முடியும். அல்லது அவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் சொன்னால்தான் எம்மால் அறிய முடியும். எனவே “அஸ்மா வஸ்ஸிஃபாத்” எனும் இந்தப் பகுதி அல்லாஹ்வாலும், அவனது தூதராலும் சொல்லப்பட்டதை அப்படியே நம்புவதை அடிப்படையாகக் கொண்டது. அல்லாஹ்வைப் பற்றியோ, அவனது பண்புகள் பற்றியோ நாம் ஆராய்ந்தறிய முடியாது; சிந்தித்துப் புரிய முடியாது. இது ஆய்வுக்கோ, சிந்தனைக்கோ உட்பட்ட விஷயமல்ல; ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்த விடயமாகும்.

“அவன் அவர்களுக்கு முன்னுள்ளவற்றையும் அவர்களுக்குப் பின்னுள்ளவற்றையும் நன்கறிகிறான். அவனை அவர்களால் (முழுமையாக) அறிந்து கொள்ள முடியாது.” (20:110)

அவன் அனைத்தையும் அறிந்தவன். ஆனால் அவனைப் பற்றி அவன் சொல்லாமல் எவராலும் அறிய முடியாது. சிலர் “இல்முல் கலாம்” என்ற பெயரில் அல்லாஹ் பற்றியும், அவனது பண்புகள் பற்றியும், மறைவான விடயங்கள் பற்றியும் தேவையற்ற தத்துவ விமர்சனங்களில் ஈடுபட்டனர். அறிவுக்கு அப்பாற்பட்ட விடயங்களில் அவரவர் அறிவுக்கும், தர்க்க சிந்தனைக்கும் ஏற்ப பேச முற்பட்டனர். இது அவர்களை வழிகேட்டிலிட்டுச் சென்றது. இமாம்கள் பலரும் “இல்முல் கலாம்” எனும் இத்துறையை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

எனவே “அஸ்மா வஸ்ஸிஃபாத்” விடயத்தில் ஆய்வுக்கோ, சிந்தனைக்கோ, தர்க்க ஞானத்திற்கோ இடம் கொடுக்காமல் சொல்லப்பட்டிருப்பதை நம்புதல் என்ற அளவோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.


(2) மறுக்கக் கூடாது

அல்லாஹ்வின் எந்த ஒரு பெயரையோ, பண்பையோ மறுத்து விடக் கூடாது. அல்லாஹ்வின் பெயர்களையும், பண்புகளையும் மறுப்பது குஃப்ருக்கு இட்டுச் செல்லும். சில கடந்த கால அறிஞர்களில் சிலர் அல்லாஹ்வின் பெயர்கள்-பண்புகளில் சிலவற்றைத் தவறாக விளங்கி அவற்றை நிராகரித்தனர். அல்லாஹ் தன்னைப் பற்றிச் சொன்ன ஒரு செய்தியை இது அல்லாஹ்வுக்குத் தகுதி அற்றது என மறுக்கும் அதிகாரம் யாருக்குமில்லை.

மக்கத்துக் காஃபிர்கள் அல்லாஹ்வுக்கு “அர்ரஹ்மான்” என்றொரு பெயர் இருப்பதை அறிந்திருக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் “யா அல்லாஹ்! யா ரஹ்மான்!” என அழைத்ததை அவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

இது குறித்துக் குர்ஆன் பேசும் போது;
“அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே அவனைப் பிரார்த்தியுங்கள். அவனது பெயர்களில் திரிபுபடுத்துவோரை விட்டு விடுங்கள். அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்காக அவர்கள் கூலி வழங்கப்படுவார்கள்.” (7:180)

அல்லாஹ்வின் பெயர்களையும், பண்புகளையும் மறுப்பது மாபெரும் குற்றமென்பதை இந்த வசனம் மறுக்கின்றது;
“வானவர்கள் அணி அணியாக நிற்க, உமது இரட்சகன் வருவான்.” (89:22)

மலக்குகள் அணியணியாக நிற்கையில் உமது இரட்சகன் வருவான் என இந்த வசனம் கூறுகின்றது. அல்லாஹ் தனக்கு வருதல் என்றொரு பண்பு இருப்பதாகக் கூறும் போது வருதல் என்ற பண்பு அல்லாஹ்வின் தகுதிக்கு உகந்ததல்ல. எனவே அல்லாஹ்வுக்கு வருகை என்ற பண்பு இல்லை என மறுக்க முடியாது. வழிகெட்ட பல அமைப்புகளும் அல்லாஹ்வின் பண்புகள் குறித்து இப்படிச் சிந்தித்துப் பண்புகளை நிராகரித்து வருகின்றனர். அல்லாஹ்வின் பண்புகளை நிராகரிப்பது, அல்லாஹ்வை நிராகரிப்பதில் ஒரு பகுதியாகும் என்பது கவனிக்கத்தக்கதாகும்.


(3) மாற்று விளக்கம் கூறக் கூடாது:-

அல்லாஹ்வைப் பற்றி அல்லாஹ்வும், அவனது தூதர்களும் என்ன சொன்னார்களோ, என்ன அர்த்தத்தில் சொன்னார்களோ அதை அதே அர்த்தத்தில் நம்ப வேண்டும். மாற்று அர்த்தம் கூறலாகாது.

குர்ஆன் மனிதர்கள் பேசும் மொழியில் அருளப்பட்டது. மனிதர்கள் நம்பி நடப்பதற்காக அருளப்பட்டது. தூய்மையான அறபு மொழியில் அருளப்பட்டதாகும். இந்தக் குர்ஆனையும், அதன் விளக்கத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் எடுத்துக் கூறினார்கள். அவர்கள் அதைப் புரிந்துகொண்டார்கள்.

அல்லாஹ்வைப் பற்றியும், அவனது பண்புகள் பற்றியும் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது நபித் தோழர்கள் எதைப் புரிந்து கொண்டார்களோ அதுதான் அதன் அர்த்தமாகும். அல்லாஹ்வைப் பற்றி நபித் தோழர்கள் எப்படி நம்பினார்களோ அப்படியே நாமும் நம்ப வேண்டும். அல்லாஹ்வைப் பற்றிப் பின்னால் வந்தவர்கள் ஆய்வு செய்தோ, விஞ்ஞான ஆய்வுக்குட்படுத்தியோ அறிந்துகொள்ள முடியாது. நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ் வருவான்!” என்று கூறிய போது, நபித் தோழர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்களோ அதுதான் அதன் அர்த்தமாகும். இந்த அடிப்படையில் அல்லாஹ்வும், ரஸூலும் சொன்னதைத் ஸஹாபிகள் எளிமையாகப் புரிந்து கொண்டது போல் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு சொல்லிற்கு அதன் அடிப்படை அர்த்தத்தைத்தான் முதலில் கொடுக்க வேண்டும்.  முகம், கை, கால் போன்ற பதங்கள் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டால் முகம் என்றால் முகத்தைத்தான் குறிக்கும்.

எல்லா மொழியிலும் இலக்கியமாக சில வார்த்தைகள் பயன்படுத்தப்படும். இலக்கியமாகப்  பயன்படுத்தப்படும் என்பதற்காகப் பயன்படுத்தப்படுவது எல்லாம் இலக்கியம்தான் என்று ஆகி விடாது. வீரனைக் குறிக்கச் சிங்கம் என்றும், தந்திரசாலியைக் குறிக்க நரி என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. “நான் சிங்கத்தைக் கண்டேன்!” என்று ஒருவர் கூறினால், அவர் கண்டது சிங்கத்தைத்தான் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். “நான் ஒரு சிங்கத்தோடு உறங்கினேன்!” என்றால், நேரடிப் பொருள் கொள்ள முடியாத தடையொன்று ஏற்படுவதால், சிங்கமென்பதற்கு “வீரம் நிறைந்த மனிதர்” என்று அர்த்தம் செய்யலாம்.

அல்லாஹ் வருகின்றான் என்றால் அவன் அவனது தகுதிக்கும், மகத்துவத்துக்கும் ஏற்ப வருகின்றான். அவனுக்கு வருகை என்ற பண்பு உண்டு என்றால் அவனது தகுதிக்கும், மகத்துவத்துக்கும் ஏற்ப அவனுக்கு வருகை என்ற பண்பு உண்டு என்று கூறுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

“அவர்கள் தமது உடன்படிக்கையை முறித்த தினால் அவர்களை நாம் சபித்து, அவர்களது உள்ளங் களை இறுக்கமானதாக ஆக்கி விட்டோம். (அதனால்) அவர்கள் (வேத) வார்த்தைகளை அதன் இடங் களை விட்டும் திரிபுபடுத்தி விடுகின்றனர். இன்னும் தமக்கு உபதேசிக்கப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டும் விட்டனர்..” (5:13)

இமாம் ஷாபிஈ(றஹ்) அவர்கள் இது குறித்துக் கூறும் போது, “நான் அல்லாஹ்வை நம்புகின்றேன்! அவனிடமிருந்து வந்தவற்றையும் நம்புகின்றேன்! அல்லாஹ் எந்த அர்த்தத்தில் சொன்னானோ, அதே அர்த்தத்திலும் நம்புகின்றேன்! நான் அல்லாஹ்வின் தூதரையும், அவரிடமிருந்து வந்தவற்றையும் நம்புகின்றேன்! அவர் எந்த அர்த்தத்தில் கூறினாரோ அதே அர்த்தத்திலும் நம்புகின்றேன்!” எனக் கூறினார்கள்.

எனவே அல்லாஹ்வின் பண்புகள்-பெயர்களுக்கு மாற்று விளக்கம் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.


(4) ஒப்புவமை கூறக் கூடாது:

அல்லாஹ்வின் பண்புகளைப் படைப்பினங் களின் பண்புகளுக்கு ஒப்பாக்கவும் கூடாது; ஒப்பாக எண்ணவும் கூடாது. அவ்வாறு ஒப்பாகப் பேசினால் அல்லது நம்பினால் அல்லாஹ்வைப் படைப்புக்கு ஒப்பாக்கி இணை வைத்த குற்றம் நேரும். அவ்வாறே படைப்புகளின் பண்புகளை அல்லாஹ்வின் பண்புகளுக்கு இணையாகஃநிகராக ஆக்கினாலும் இணை வைத்தல் ஏற்படும். இந்த வித்தியாசத்தைப் புரிந்து அவனது பண்புகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுக்குப் பார்வை உண்டு; கேள்வி உண்டு. மனிதனுக்கும், ஏனைய படைப்புகளுக்கும் கேட்டல்-பார்த்தல் என்ற பண்புகள் உண்டு. அல்லாஹ்வுக்கு அவனது அந்தஸ்துக்கும், தகுதிக்கும் ஏற்ற கேட்டலும், பார்த்தலும் உள்ளன. மனிதனுக்கு அவனது தகுதிக்கும், ஆற்றலுக்கும் ஏற்ற கேட்டலும், பார்த்தலும் உண்டு. மிருகங்களுக்கு அவற்றின் தகுதிக்கும், தேவைக்கும் ஏற்ற கேட்டலும், பார்த்தலும் உள்ளன.

கேட்டல், பார்த்தல், உயிர் வாழ்தல் என்ற பண்புகள் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் தன்மையில் வித்தியாசமுள்ளது. “நான் கண்டியில் இருந்து கொழும்பு சென்றேன்!” என்று கூறும் போது, “செல்தல்” என்ற எனது செயலை மக்கள் ஒரு விதத்தில் புரிந்துகொள்கிறார்கள். பஸ் தரிப்புக்குச் சென்றிருப்பார். வரிசையாய் நின்றிருப்பார். பஸ்ஸில் ஸீட் பிடித்திருப்பார். மூன்று-மூன்றரை மணித்தியாலங்கள் பயணத்தில் கொழும்பை அடைந்திருப்பார் என மக்கள் புரிந்துகொள்வார்கள்.
“இலங்கை ஜனாதிபதி கண்டியில் இருந்து கொழும்பு சென்றார்!” என்று கூறப்பட்டால் இதை நான் போனது போல் மக்கள் கற்பனை பண்ண மாட்டார்கள். ஜனாதிபதியின் தகுதிக்கு ஏற்ற விதத்தில் அந்தப் பயணம் அமைந்திருக்கும் என்றே மககள் நம்புவார்கள். சாதாரண மனித நடத்தையிலேயே இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்கின்றோம்.

“யானைக்கும் கால் உண்டு! எறும்புக்கும் கால் உண்டு!” இவ்வாறு ஒருவர் கூறினால், எறும்பின் காலை யானையின் காலுக்கு ஒப்பிட்டதாக ஆகாது. யானைக்கு அதன் உடல் வாகுக்கு ஏற்ற கால் உள்ளது. எறும்புக்கு அதன் உடலுக்கு ஏற்ற கால் உள்ளது என்றே புரிந்துகொள்வோம்.

“..அவனைப் போன்று எதுவுமில்லை. அவன் செவியேற்பவன்; பார்ப்பவன்.” (42:11)

இந்த வசனத்தில் அல்லாஹ்வுக்கு ஒப்புவமை இல்லை என்று கூறப்படுகின்றது. அதே வேளை அவன் கேட்பவன்-பார்ப்பவன் என்றும் கூறப்படுகின்றது.

எனவே அல்லாஹ்வுக்குப் பார்வை உள்ளது என்று நம்ப வேண்டும். எந்தப் படைப்பின் பார்வையும் அல்லாஹ்வின் பார்வை போன்றதல்ல. அல்லாஹ்வின் பார்வைக்கு நிகரானதோ, சமமானதோ அல்ல என்றும் நம்ப வேண்டும்.

அல்லாஹ்வுக்குக் கேள்வி உள்ளது என்று நம்ப வேண்டும். அல்லாஹ்வின் கேள்விப் புலனுக்கு நிகராகஃசமமாக யாராலும் கேட்க முடியாது என்றும் நம்ப வேண்டும்.

இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாத சிலர் “அல்லாஹ்வுக்குப் பார்வை உண்டு!” என்று சொன்னால் மனிதனுக்கும் பார்வை உண்டு! எனவே இணை வைத்தல் ஏற்பட்டு விடும்.! எனவே அல்லாஹ்வுக்குப் பார்வை இல்லை! அல்லது அவன் கண் இல்லாமல் பார்க்கின்றான்! காதில்லாமல் கேட்கின்றான்!” என்றெல்லாம் கூற ஆரம்பித்தனர்.

அல்லாஹ்வின் பார்வை மனிதப் பார்வைக்கு ஒப்பானது என்று எண்ணித்தான் இவர்கள் இந்தத்  தவறைச் செய்தனர். அல்லாஹ்வின் பண்பு படைப்புகளின் பண்புகளுக்கு ஒப்பாகி விடக் கூடாது என எண்ணிய இவர்கள் அல்லாஹ்வின் பண்புகளை மறுத்தல் என்ற தவறில் விழுந்தனர். இஸ்லாம் சொல்லிய பிரகாரம் நம்பினால் அல்லாஹ்வின் பண்புகளை மறுக்கவும் தேவை இல்லை. அல்லாஹ்வுக்கு ஒப்பீடு செய்வதாக அஞ்சவும் தேவை இல்லை.

“மேலும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.” (112:4)

மேற்படி வசனத்தின் படி மனிதனும் பார்க்கின்றான்; அல்லாஹ்வும் பார்க்கின்றான். பார்க்கும் விடயத்தில் அல்லாஹ்வுக்கு நிகரோ, சமமோ இல்லை.

அல்லாஹ்வும் கேட்கின்றான்; மனிதனும் கேட்கின்றான். கேட்கும் விடயத்தில் அல்லாஹ்வுக்கு நிகரோ, சமமோ கிடையாது.

என அனைத்திலும் அல்லாஹ் நிகரற்ற, சமனற்ற, உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதாக நம்பும் போது ஒப்பீடு ஏற்படாது. எனவே அல்லாஹ்வின் பெயர்கள்-பண்புகளை அதே அர்த்தத்தில் எத்தகைய ஒப்பீடும் இல்லாமல் படைப்புகளின் பண்புகளுக்கு நிகராகஃசமமாக எண்ணாமல் அப்படியே நம்ப வேண்டும்.

இப்படி நம்பும் போது வழிகெட்ட சிந்தனை களிலிருந்தும், வழிகெட்ட எண்ணங்களிலிருந்தும் நாம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.


5. இப்படித்தான் என கய்பிய்யத் கூறக்கூடாது:

அல்லாஹ்வின் செயல்கள், பண்புகள் என்பவற்றுக்கு இப்படித்தான் அது என நாமாகத் கய்பிய்யத் கூறக் கூடாது. அல்லாஹ்வின் முகம், அல்லாஹ்வின் கை, அல்லாஹ்வின் கால் என்றெல்லாம் அல்குர்ஆனிலும், அல்ஹதீஸிலும் பல பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அல்லாஹ் வருவான்; அல்லாஹ் முதல் வானத்துக்கு இறங்குவான் என்றெல்லாம் அல்லாஹ்வின் செயற்பாடுகள் பற்றியும் குர்ஆனும், ஹதீஸும் போதிக்கின்றன.

அல்லாஹ் அர்ஷில் இப்படித்தான் இருக்கின்றான் என்றோ, அல்லாஹ் முதல் வானத்துக்கு இப்படித்தான் இறங்குவான் என்றோ யாரும் கூற முடியாது. ஏனெனில் இவற்றை யாரும் கண்டதில்லை; காணவும் முடியாது. இது ஆய்வு செய்து கூறக் கூடிய அம்சமும் அல்ல. இதை யாரும் கற்பனை பண்ணவும் முடியாது; கற்பனை பண்ணவும் கூடாது.

இவ்வாறே, அல்லாஹ்வின் கை இப்படியிருக்கும், அல்லாஹ்வின் முகம் இப்படியிருக்கும் என்று பேசவும் கூடாது; கற்பனை பண்ணவும் கூடாது. அல்லாஹ்வுக்கு அவனது கண்ணியத்துக்கும், அந்தஸ்த்துக்கும் தகுந்த முகம் உண்டு. அதை நாம் நம்புவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அல்லாஹ் – அவனது கண்ணியத்துக்கும், அந்தஸ்த்துக்கும் தகுந்த அமைப்பில் அர்ஷின் மேலானான்; முதல் வானத்துக்கு இறங்குவான்; வருவான் என்று நம்புவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இவை குறித்து மேலதிகமாகச் சிந்திப்பதோ, பேசுவதோ, விவாதிப்பதோ தவிர்க்கப்பட வேண்டும்.

6. “எப்படி?” எனக் கேட்கக்கூடாது:
“இப்படித்தான் இது இருக்கின்றது!” என ஒரு மனிதன் கூற வேண்டிய நிர்ப்பந்தத்தை எப்படி இருக்கின்றது? என்ற கேள்விதான் உருவாக்குகின்றது.

“அல்லாஹ் அர்ஷின் மேலானான்!” என்று குர்ஆன் கூறும் போது, அவன் எப்படி அர்ஷின் மேலிருக்கின்றான்? என்று கேள்வி கேட்கக் கூடாது. “அல்லாஹ் வருவான்!” எனக் குர்ஆன் கூறும் போது, அல்லாஹ் எப்படி வருவான்? எனக் கேள்வி கேட்கக் கூடாது.

காரணம் – இந்தக் கேள்வி அர்த்தமற்றது; கேட்கக் கூடாதது. இந்தக் கேள்வி குழப்பமான மன நிலையையும், சிந்தனைச் சிக்கலையும் ஏற்படுத்தும்.அல்குர்ஆனை எடுத்துப் பார்த்தால் நபி(ஸல்) அவர்களது தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டுள்ளனர். மாதத் தீட்டு, பிறை எனப் பல அம்சங்கள் குறித்து  வினவியுள்ளனர்.

இவ்வாறே இஸ்லாமியச் சட்டதிட்டங்கள் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்டு விளக்கம் பெற்றுள்ளனர். அதை நபி(ஸல்) அவர்கள் தடுக்காத அதே வேளை ஊக்குவித்துமுள்ளார்கள். எனினும், நபித் தோழர்களில் எவரும் அல்லாஹ் சம்பந்தப்பட்ட விடயங்களில் கேள்வி கேட்காமல் சொல்லப்பட்டதை அப்படியே நம்பியுள்ளனர். எனவே, அல்லாஹ் சம்பந்தப்பட்ட விடயத்தில் யாரும் கேள்வி கேட்கலாகாது.

இமாம் மாலிக்(றஹ்) அவர்கள், அல்லாஹ் அர்ஷின் மேலானான் என்பது பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவர், “எப்படி அர்ஷின் மேலானான்?” எனக் கேள்வி கேட்டார்.

அதற்கு இமாம் மாலிக்(றஹ்) அவர்கள்;
அல்லாஹ் அர்ஷின் மேலானான் என்பது அறியப்பட்ட விடயம். (ஏனெனில் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

அதை நம்புவது கட்டாயக் கடமையாகும்.

எப்படி ஆனான் என்பது அறியப்படாத விடயம். (காரணம் அது குறித்துக் குர்ஆன்-ஸுன்னா எதையும் கூறவில்லை.

எப்படியென அது குறித்துக் கேள்வி கேட்பது ஸுன்னாவுக்கு முரணான பித்அத்தாகும்!” எனக் கூறியதோடு, “இவர் பித்அத் காரர்! இவரை இந்நச் சபையிலிருந்து வெளியேற்றுங்கள்!” என்று குறிப்பிட்டார்கள். எனவே அல்லாஹ் விடயத்தில் கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.

அடுத்ததாக இந்தக் கேள்விக்கு ஆய்வு செய்தோ, சுயமாக முயற்சி செய்தோ பதில் கூற முடியாது; கற்பனையிலும் பதில் கூற முடியாது. அல்லாஹ் பற்றி அவனும், அவனது தூதர்களும் கூறினாலே தவிர மக்களுக்கு எதுவும் தெரியாது. கூறப்பட்ட விடயத்தில் கேள்வி கேட்டால் பதில் கூறத்தக்க முகாந்திரம் இல்லை. எனவே சொல்லப்பட்டதை அப்படியே நம்ப வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது.


7. ஆதாரத்துக்குட்பட்டது:

அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் குறித்து யாரும் ஆய்வு செய்து கூற முடியாது. அல்லாஹ்வோ அல்லது அவனது தூதர்களோ கூறிய அடிப்படையில்தான் அவனது பெயர்கள்-பண்புகளை நம்ப வேண்டும். இந்த வகையில் அல்லாஹ்வின் அஸ்மா உல் ஹுஸ்னா எனும் அழகுத் திருநாமங்கள் அனைத்தும் ஆதாரத்துக்கு உட்பட்டவையாக இருத்தல் வேண்டும்.


8. அல்லாஹ்வின் பெயர்கள் அனைத்தும் அழகானவை:

“அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே அவனைப் பிரார்த்தியுங்கள். அவனது பெயர்களில் திரிபுபடுத்துவோரை விட்டு விடுங்கள். அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்;காக அவர்கள் கூலி வழங்கப்படுவார்கள்.” (7:180)

மேற்படி வசனங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருப்பதாகக் கூறுகின்றன. அர்த்தம் குறைந்த, தகுதியற்ற பெயர்கள் அல்லாஹ்வுக்கு இல்லை. உதாரணமாக, அல்லாஹ்வுக்கு “அர்ரஹ்மான்” என்ற அழகிய திருநாமம் உள்ளது. இந்தப் பெயர் அல்லாஹ்வின் விசாலமான அருளைக் குறிக்கின்றது. இதன் மூலம் அல்லாஹ்விடம் அருள், அன்பு எனும் பண்பு இருப்பதை அறியலாம்.

சிலர் “முத்தலிப்” என்பது அல்லாஹ்வின் பெயரென்று நம்புகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மற்றும் சிலர் “மனிதன் என்னைத் திட்டுகின்றான்! அவன் காலத்தைத் திட்டுகின்றான்! நானோ காலமாவேன்! நானே இரவு-பகலை மாறி மாறி வரச் செய்கின்றேன்!” என்ற ஆதாரபூர்வமான ஹதீஸை வைத்து, அல்லாஹ்வுக்கு “அத்தஹ்ர்” (காலம்) என்றொரு பெயர் இருப்பதாக எண்ணுகின்றனர். இதுவும் தவறாகும். இந்த ஹதீஸ், காலத்தைப் படைத்தவன் அல்லாஹ் என்பதால் காலத்தைத் திட்டுபவன் அல்லாஹ்வைத் திட்டுவதாகக் கூறுகின்றது. அவ்வாறில்லாமல் அல்லாஹ்வுக்குக் “காலம்” என்று ஒரு பெயர் இருப்பதாகக் கூறவேயில்லை. காலம் என்பது அழகான பெயருமில்லை. அது எந்தப் பண்பையும் பிரதிபலிக்கவும் இல்லை என்பது கவனிக்கத் தக்கதாகும்.


9. அல்லாஹ்வுக்கு எத்தனை பெயர்களுள்ளன என்பது யாருக்கும் தெரியாது:

“அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் உள்ளன. யார் அவற்றை மனனமிட்டுக்கொள்கிறாரோ அவர் சுவனம் நுழைவார்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
;(புகாரி 6410, முஸ்லிம் 2677)

இங்கு 99 என்று எண்ணிக்கை குறிப்பிடப் பட்டுள்ளது. எனினும், நபி(ஸல்) அவர்களது பிரபலமான ஒரு பிரார்த்தனை பின்வருமாறு அமைந்துள்ளது.
(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரழி), அஹ்மத் 1ஃ452, 394, இப்னு ஹிப்பான், ஹாகிம்)

கவலை/அச்சம் நீங்குவதற்காக ஓதுவதற்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆவே இதுவாகும். ஒரு முஸ்லிமுக்குக் கவலை/துக்கம் ஏற்பட்டு, இந்த துஆவை ஓதினால் அவனது கவலை நீங்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேற்படி துஆவில் “நீ உனது மறைவான அறிவில் மறைத்து வைத்துள்ள பெயர்களைக் கொண்டும் கேட்கின்றேன்!” என நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதால் மக்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்படாத அழகுத் திருநாமங்களும் அல்லாஹ்வுக்கு உள்ளன. அறிவிக்கப்பட்டவை 99 உள்ளன என்றே நம்ப வேண்டும் 99 மட்டும்தான் அவனது பெயர்கள் என்பதற்கில்லை.


10. ஒவ்வொரு பெயரும் அல்லாஹ்வின் ஒவ்வொரு தாதை (பண்பை) குறிப்பிடுகின்றது:

“அழகப்பன்” என்ற பெயருள்ள எல்லோரும் அழகாக இருப்பார்கள் என்பதற்கு இல்லை. மனிதன் பெயர்களை ஒரு அறிமுகத்துக்காகவும், அடையாளத்துக்காகவும் வைக்கின்றான். எனினும் அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்கள் அனைத்தும் அவனது சிறப்பான தன்மையையும், உயர்ந்த பண்புகளையும் வெளிப்படுத்துகின்றன. அல்லாஹ்வுக்கு “அல்ஆதில்” (நீதமானவன்) என்றொரு பெயர் உள்ளது. இந்தப் பெயரையும் நம்ப வேண்டும். அவனுக்கு “அத்ல்” (நீதி) என்ற பண்பு இருப்பதாகவும் நம்ப வேண்டும்; நீதிக்கு எதிரான அநீதி என்ற பண்பு அவனிடமில்லை என்றும் நம்ப வேண்டும்.


11. அல்லாஹ்வின் பண்புகள் பரிபூரணமானவை; குறைபாடற்றவை:

அல்லாஹ்வின் அழகுத் திருப் பெயர்களைப் போன்றே அல்லாஹ்வின் பண்புகள் அனைத்தும் புகழத்தக்கவை. பரிபூரணமானவை, உயர்ந்தவை என்றும் நம்ப வேண்டும்.

அல்லாஹ்வுக்குக் குறைவை உண்டுபண்ணும் பண்பு இருப்பதாக நம்புவது (குப்ர்) நிராகரிப்பை ஏற்படுத்தும். மரணம், அறியாமை, இயலாமை, ஊமை, குருடு, செவிடு போன்ற தன்மைகள் இருப்பதாக ஒருவன் நம்பினால் அல்லது அப்படிக் கற்பனை செய்தால் அது குப்ரை ஏற்படுத்தும். அல்லாஹ், “அல் ஆலிம்” (அறிந்தவன்) என்றால், அவனுக்கு “இல்ம்” (அறிவு) என்ற பண்பு இருக்கின்றது. அதே வேளை, அறிவுக்கு எதிரான அறியாமை என்ற பண்பு அறவேயில்லை என்றும் நம்ப வேண்டும். ஒரு மனிதனைப் பொருத்தவரையில் அறியாமை இருக்கும் போதே அவன் அறிஞன் என்றும் கூறப்படலாம். இயலாமை இருக்கும் போதே வல்லவன் என்றும் கூறப்படலாம். அல்லாஹ்வின் பண்புகள் ஒவ்வொன்றும் அதற்கு எதிரான பண்புகளை நிராகரிக்கின்றன.

இதே வேளை, அல்லாஹ்வின் பண்பு போன்று பேசப்படும் ஒரு செய்தி ஒரு கோணத்தில் பார்க்கும் போது உயர்வாகவும், மற்றொரு கோணத்தில் பார்க்கும் போது குறைவாகவும் தென்படலாம்.
உதாரணமாக; “(நபியே!) நிராகரிப்பாளர்கள் உம்மைத் தடுத்து வைத்துக்கொள்வதற்கு அல்லது உம்மைக் கொலை செய்வதற்கு அல்லது உம்மை (மக்காவை விட்டும்) வெளியேற்றி விடுவதற்கு உமக்கெதிராகச் சூழ்ச்சி செய் ததை (எண்ணிப் பார்ப்பீராக!) அவர்கள் சூழ்ச்சி செய் கின்றனர். (அதற்கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய் கின்றான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ்வே சிறந் தவன்.” (8:30)

“நிச்சயமாக அவர்கள் கடுமையாகச் சூழ்ச்சி செய்கின்றனர். (அதை முறியடிக்க) நானும் கடும் சூழ்ச்சி செய்வேன்.” (86:15-16)

“நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுவதாக நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றி விடுகின்றான். அவர்கள் தொழுகைக்காக நின் றால் சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராக வுமே நிற்கின்றனர். மேலும், அவர்கள் அல்லாஹ்வைக் குறைவாகவே நினைவு கூருகின்றனர்.” (4:142)

சதி செய்வது, சூழ்ச்சி செய்வது என்பன குறைவான பண்புகளாகத் தோன்றலாம். இதே வேளை, சூழ்ச்சி செய்யும் எதிரியின் சூழ்ச்சியை முறியடிப்பது போற்றத் தக்க பண்பாகவும் இருக்கும். இவை போன்ற செயல்களை அல்லாஹ்வின் பண்புகள் என்றோ, அல்லாஹ்வின் பண்புகளில்லை என்றோ ஒட்டுமொத்தமாகக் கூறி விட முடியாது.

எந்த இடத்தில் இந்தச் செயல்களை அல்லாஹ்வுடன் இணைப்பது அவனுக்குப் பொருந்துமோ, அந்த இடத்தில் மட்டுமே இவற்றை அவனுடன் இணைக்க வேண்டும். மேற்கூறிய மூன்று வசனங்களிலும் எதிரிகளின் தவறுக்குப் பதிலடியாகத்தான் இந்த வினைச் சொற்கள் அல்லாஹ்வுடன் இணைத்துப் பேசப்படுகின்றன என்பது கவனிக்கத் தக்கதாகும்.

எனவேதான் அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் உதைமீன்(றஹ்) அவர்கள் அல்லாஹ்வைச் சூழ்ச்சியாளன் என வர்ணிக்கலாமா? என உன்னிடம் கேட்டால் “ஆம்!” என்றோ, “இல்லை!” என்றோ கூறாமல் சூழ்ச்சி செய்யப்பட யார் தகுதியாளர்களோ, அவர்களுக்கு அவன் சூழ்ச்சியாளன் என்று கூறுங்கள் எனக் குறிப்பிடுகின்றார்.


12. மாறாததும், நாடினால் நடப்பதும்:

அல்லாஹ்விடம் இருப்பதாகக் குர்ஆன்-ஸுன்னா கூறக் கூடிய பண்புகளை இரண்டாகப் பிரிக்கலாம்.

(1) மாறாத் தன்மை கொண்ட அவனது தாதுடன் சம்பந்தப்பட்டது:
கேள்வி, பார்வை போன்ற அவனது பண்புகளை இதற்கு உதாரணம் கூறலாம்.

(2) அல்லாஹ்வின் நாட்டத்துடன் சம்பந்தப்பட்டது:
இவை அவனது நாட்டத்தின் படி நாடும் போது நடக்கும் அவனது செயற்பாடுகளைக் குறிக்கும். எப்போதும் நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கில்லை.

உதாரணமாக, அர்ஷின் மீதானான் என்ற அவனது செயல் மற்றும் வருதல், சிரித்தல், கோபப்படுதல், மகிழ்வடைதல் இத்தகைய பண்புகளும் அல்லாஹ்வுக்குள்ளன. அவன் நாடும் போது அதைச் செய்வான்.

“தான் நாடுவதைச் செய்பவன்.” (85:16)

இத்தகைய செயற்பாடுகள் அவனது நாட்டத்துக்குட்பட்டதாகும். சில பண்புகள் தாதோடு சம்பந்தப்பட்ட பண்புகளாகவும், செயலோடு சம்பந்தப்பட்டவையாகவும் இருக்கும்.

உதாரணமாக, அல்லாஹ் மன்னிக்கக் கூடியவன். அதே நேரம், மன்னித்தல் என்ற அவனது செயற்பாடு நாடும் போது நாடுபவர்களுக்கு நடக்கும் அல்லாஹ் பேசக் கூடியவன். பேச்சு எனும் அவனது செயல் நாடும் போது நடக்கும்.

இந்த அடிப்படை வித்தியாசங்கள் அஸ்மா ஸிஃபாத் பற்றிய நம்பிக்கையில் அவசியம் புரியப்பட வேண்டியவையாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் அவன் நம்பச் சொன்ன விதத்தில் நம்பி ஈமான் கொண்ட முஃமின்கள் கூட்டத்தில் நம்மனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!
Previous Post Next Post