அத்தியாயம் 51 மறுமை சுவர்க்கம் நரகம்

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 51
மறுமை சுவர்க்கம் நரகம்

பாடம் : 1 சொர்க்கமும் அதிலுள்ள இன்பங்களின் தன்மையும் சொர்க்கவாசிகளின் நிலையும்.
5436. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5437. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை (சொர்க்கத்தில்) நான் தயார்படுத்தி வைத்துள்ளேன்" என்று கூறினான்.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
இதைக் குர்ஆனிலுள்ள "அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாக அவர்களுக்காக மறைத்துவைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்" (32:17) எனும் வசனம் உறுதிப்படுத்துகிறது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5438. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்" என்று கூறினான். எனினும், (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துள்ளது சொற்பமே! - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5439. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "நான் என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்"என்று கூறினான். (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) உங்களுக்கு அல்லாஹ் அறிவித்திருப்பது சொற்பமே!
இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிறகு, "அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாக அவர்களுக்காக மறைத்துவைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்" (32:17) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5440. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தேன். அப்போது அவர்கள் சொர்க்கத்தின் நிலை குறித்து பேசினார்கள்" என்று முழுமையாக ஹதீஸை அறிவித்தார்கள்.
பிறகு இறுதியில் "அதில் எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்கள் உள்ளன" என்றும் கூறிவிட்டு, "அச்சத்துடனும் எதிர்பார்ப்புடனும் தம் இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப் புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும்; நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாக அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்" (32:16,17) எனும் வசனங்களை ஓதினார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
அத்தியாயம் : 51
பாடம் : 2 சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது.
5441. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் ஒரு பயணி நூறு வருடங்கள் பயணிப்பார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5442. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்லமாட்டார்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
5443. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இந்த ஹதீஸை நுஅமான் பின் அபீ அய்யாஷ் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
"சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்துசெல்லும் கட்டான உடலுள்ள பயிற்சியளிக்கப்பட்ட உயர்ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக்கடக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 51
பாடம் : 3 சொர்க்கவாசிகள்மீது இறைவன் தனது உவப்பை அருள்வதும் அதன் பின்னர் ஒருபோதும் அவர்கள்மீது கோபப்படாமல் இருப்பதும்.
5444. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி, "சொர்க்கவாசிகளே!" என்று அழைப்பான். அதற்கு அவர்கள், "எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மைகள் அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளன" என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ், "திருப்தி அடைந்தீர்களா?" என்று கேட்பான். அதற்கு சொர்க்கவாசிகள், "உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (கொடைகள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியிருக்க, நாங்கள் திருப்தியடையாமல் இருப்போமா?" என்று கூறுவார்கள்.
அப்போது அல்லாஹ், "இதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கட்டுமா?" என்பான். அவர்கள், "அதிபதியே! இதை விடச் சிறந்தது எது?" என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், "உங்கள்மீது என் உவப்பை அருள்கிறேன்; இனி ஒருபோதும் உங்கள்மீது நான் கோபப்படமாட்டேன்" என்று கூறுவான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
பாடம் : 4 சொர்க்கவாசி(களில் கீழ்த் தட்டில் இருப்பவர்)கள் (மேல்)அறைகளில் உள்ளவர்களை வானிலுள்ள நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று பார்ப்பது.
5445. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசி(களில் கீழ்த் தட்டில் இருப்பவர்)கள் மேல்அறை(களில் உள்ளவர்)களை, வானில் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று பார்ப்பார்கள்.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளரான) அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இந்த ஹதீஸை நுஅமான் பின் அபீ அய்யாஷ் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு) "கிழக்கு அடிவானில், அல்லது மேற்கு அடிவானில் நீங்கள் ஒளிரும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று" என்று (கூடுதலாக) அறிவித்ததை நான் கேட்டேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5446. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சொர்க்கவாசிகள் தமக்கு மேலேயுள்ள (சிறப்பு) அறைகளில் வசிப்பவர்களை,அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கிற ஒளிரும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (தகுதியில்) தமக்கும் அவர்களுக்குமிடையே ஏற்றத்தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டுதான்) அப்படிப் பார்ப்பார்கள்" என்று கூறினார்கள்.
(இதைக் கேட்ட) நபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவை நபிமார்களின் தங்குமிடங்கள் தானே? மற்றவர்கள் அவற்றை அடைய முடியாதுதானே?" என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை. என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக! அ(ங்கே தங்குப)வர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என (முறையாக) ஏற்றுக்கொண்ட மக்களே ஆவர்" என்று பதிலளித்தார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பதற்காகத் தம் குடும்பத்தாரையும் செல்வத்தையும் தியாகம் செய்ய விரும்புவோர் பற்றிய குறிப்பு.
5447. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் என்னை ஆழமாக நேசிப்போரில் சிலர் எனக்குப்பின் தோன்றுவார்கள். அவர்களில் ஒருவர் என்னைப் பார்க்க வேண்டுமே என்பதற்காகத் தம் குடும்பத்தாரையும் செல்வத்தையும்கூடத் தியாகம் செய்ய விரும்புவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
பாடம் : 6 சொர்க்கத்திலுள்ள சந்தையும் அதில் சொர்க்கவாசிகள் அடைந்துகொள்ளும் அருட்கொடையும் அலங்காரமும்.
5448. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப்போடும். உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள்.
அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், "எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!" என்று கூறுவர். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்" என்று கூறுவர்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
பாடம் : 7 சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினரின் முகம் பௌர்ணமி இரவின் முழு நிலவைப் போன்றிருக்கும் என்பதும்,அவர்களின் இதர தன்மைகளும், அவர்களின் துணைவியர் பற்றிய குறிப்பும்.
5449. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) மக்கள், "சொர்க்கத்தில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் ஆண்களா, அல்லது பெண்களா?" என்று பெருமையுடன் பேசிக்கொண்டிருந்தனர்; அல்லது விவாதித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், "அபுல்காசிம் (ஸல்) அவர்கள், "சொர்க்கத்தில் நுழைகின்ற முதல் அணியினர்,பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்களுக்குப் பின்னே நுழைபவர்கள்,வானில் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்றிருப்பார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் இரு துணைவியர் இருப்பர். அப்பெண்களின் காலின் எலும்பு மஜ்ஜை அவர்களது (கால்) சதைக்கு அப்பாலிருந்து (அவர்களது பேரழகின் காரணத்தால்) வெளியே தெரியும். சொர்க்கத்தில் துணைவி இல்லாத எவரும் இருக்கமாட்டார்" என்று கூறவில்லையா?" எனக் கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "(ஒரு முறை) ஆண்களும் பெண்களும் "சொர்க்கத்தில் அதிக எண்ணிக்கையில் யார் இருப்பார்கள்" என்று வழக்காடிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் (அதைப் பற்றிக்) கேட்டார்கள். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், "அபுல்காசிம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று அறிவித்தார்கள்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 51
5450. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று (அழகாகத்) தோற்றமளிப்பார்கள். பிறகு அவர்களுக்கு அடுத்து நுழைபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று காட்சியளிப்பார்கள். சொர்க்கத்தில் அவர்கள் மலஜலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். எச்சில் துப்பவுமாட்டார்கள்.
அவர்களின் சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களது வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகையிடும்) தூபக் கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அவர்களுடைய துணைவியர் கண்ணழகுக் கன்னியர் (அல்ஹூருல் ஈன்) ஆவர். அவர்கள் அனைவரது குணமும் ஒரே மனிதரின் குணமாகவே அமைந்திருக்கும். அவர்கள் தம் தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரம் கொண்டவர்களாயிருப்பார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5451. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். பிறகு அவர்களுக்கு அடுத்து நுழைபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று காட்சியளிப்பார்கள். அவர்களுக்குப் பிறகு இன்னும் பல படித்தரங்களும் உண்டு.
(சொர்க்கத்தில்) அவர்கள் மலஜலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். சளி துப்பவுமாட்டார்கள். அவர்களின் (தலைவாரும்) சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களுடைய (நறுமணப் புகையிடும்) தூபக் கலசங்கள் அகில் குச்சியால் எரிக்கப்படும். அவர்களுடைய வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும். அவர்கள் அனைவரது குணமும் ஒரே மனிதரின் குணத்தைப் போன்றிருக்கும். அவர்கள் தம் தந்தை ஆதம் (அலை) அவர்களைப் போன்று அறுபது முழம் உயரம் கொண்டவர்களாயிருப்பார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் அனைவரது குணமும் ஒரே மனிதரின் குணத்தில் அமைந்திருக்கும்" என்று காணப்படுகிறது. அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் அனைவரது (உடல்) அமைப்பும் ஒரே மனிதரின் (உடல்) அமைப்பில் இருக்கும்" என்று இடம்பெற்றுள்ளது. அதாவது "அவர்கள் தம் தந்தை (ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் இருப்பார்கள்" என்று இப்னு அபீஷைபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அத்தியாயம் : 51
பாடம் : 8 சொர்க்கம் மற்றும் சொர்க்கவாசிகள் பற்றிய வர்ணனையும் அவர்கள் காலையிலும் மாலையிலும் இறைவனைத் துதிப்பதும்.
5452. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினரின் முகங்கள் பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று தோற்றமளிக்கும். சொர்க்கத்தில் அவர்கள் சளி உமிழமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். மலஜலம் கழிக்கவுமாட்டார்கள். அவர்களுடைய பாத்திரங்களும் (தலைவாரும்) சீப்புகளும் தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆனவை. அவர்களுடைய (நறுமணப் புகையிடும்) தூபக் கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அவர்களின் வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும்.
அவர்களில் ஒவ்வொருவருக்கும் இரு துணைவியர் இருப்பர். அவர்களது காலின் எலும்பு மஜ்ஜைகூட (கால்) சதைக்கு அப்பாலிருந்து அவர்களது பேரழகின் காரணத்தால் வெளியே தெரியும். அவர்களுக்கிடையே எந்த மன வேறுபாடும் இருக்காது. எந்தவிதக் குரோதமும் இருக்காது. அவர்களுடைய உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். (நன்றிக்காக) அவர்கள் காலையும் மாலையும் இறைவனை (தூயவன் என)த் துதிப்பார்கள்.
அத்தியாயம் : 51
5453. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பார்கள்; பருகுவார்கள். எச்சில் துப்பமாட்டார்கள். மலஜலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
மக்கள், "(அவர்கள் உண்ணும்) உணவின் நிலை என்ன? (அது எப்படி கழிவாக வெளியேறும்?)" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நறுமணமுள்ள) ஏப்பமாகவும் கஸ்தூரி மணம் கமழும் வியர்வையாகவும் வெளியேறும். மூச்சு விடுமாறு அகத்தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக்கொண்டும் போற்றிக்கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத்தூண்டல் ஏற்படும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "கஸ்தூரி மணம் கமழும் வியர்வையாகவும் வெளியேறும்" என்பதுவரையே இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
5454. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பார்கள்; பருகுவார்கள். மலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். சிறுநீர் கழிக்கவுமாட்டார்கள். அவர்கள் உண்ணும் உணவு கஸ்தூரி மணம் கமழும் வியர்வை போன்று, ஏப்பமாக வெளியேறும். மூச்சு விடுமாறு அகத்தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக்கொண்டும் போற்றிக்கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத்தூண்டல் ஏற்படும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அவற்றில் ஹஜ்ஜாஜ் பின் அஷ்ஷாஇர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் உண்ணும் அந்த உணவு" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
5455. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "மூச்சு விடுமாறு அகத்தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக்கொண்டும் இறைவனைப் பெருமைப்படுத்திக்கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத்தூண்டல் ஏற்படும்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 51
பாடம் : 9 சொர்க்கவாசிகள் அனுபவிக்கும் இன்பங்கள் நிலையானவை என்பதும், "இது தான் சொர்க்கம்; நீங்கள் நற்செயல் புரிந்துகொண்டிருந்ததற்காக இது உங்களுக்கு உடைமையாக்கப் பட்டுள்ளது என்று அவர்களிடம் எடுத்துச்சொல்லப்படும்" (7:43) எனும் இறைவசனமும்.
5456. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் நுழைபவர் இன்பத்திலேயே இருப்பார்; துன்பம் காணமாட்டார். அவரது ஆடை இற்றுப்போகாது. அவரது இளமை அழிந்துபோகாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5457. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர்) பொது அறிவிப்பாளர் ஒருவர், "(இனி) நீங்கள் ஆரோக்கியத்துடனேயே இருப்பீர்கள்; ஒருபோதும் நோய் காணமாட்டீர்கள். நீங்கள் உயிருடன் தான் இருப்பீர்கள்;ஒருபோதும் இறக்கமாட்டீர்கள். இளமையோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் முதுமையடையமாட்டீர்கள். நீங்கள் இன்பத்தோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் துன்பம் காணமாட்டீர்கள்" என்று அறிவிப்புச் செய்வார்.
இதையே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "இதுதான் சொர்க்கம்; நீங்கள் (உலகில்) நற்செயல் புரிந்துகொண்டிருந்ததற்காக இது உங்களுக்கு உடைமையாக்கப்பட்டுள்ளது என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லப்படும்" (7:43) என்று கூறுகின்றான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி), அபூ ஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
பாடம் : 10 சொர்க்கக் கூடாரங்களின் நிலையும் அவற்றில் இறைநம்பிக்கையாளர்களுக்குத் துணைவியர் பலர் இருப்பதும்.
5458. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளருக்குச் சொர்க்கத்தில் ஒரு கூடாரம் உண்டு. அது நடுவில் துளையுள்ள (பிரமாண்டமான) முத்தால் ஆனதாகும். அதன் உயரம் அறுபது மைல்களாகும். அதில் இறை நம்பிக்கையாளருக்குத் துணைவியர் பலர் இருப்பர். அவர்களிடம் இறைநம்பிக்கையாளர் சுற்றி வருவார். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பார்க்க முடியாது.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5459. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நடுவில் துளையுள்ள முத்தாலான (பிரமாண்டமான) கூடாரம் ஒன்று சொர்க்கத்தில் உண்டு. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் இறை நம்பிக்கையாளருக்குத் துணைவியர் இருப்பர். அவர்கள் மற்றவர்களைப் பார்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர் அவர்களைச் சுற்றிவருவார்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5460. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(சொர்க்கத்திலுள்ள) கூடாரம் என்பது, ஒரு (பிரமாண்டமான) முத்தாகும். அதன் உயரம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் இறைநம்பிக்கையாளருக்குத் துணைவியர் இருப்பர். அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
பாடம் : 11 இவ்வுலகிலுள்ள சொர்க்க நதிகள்.
5461. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சைஹான், ஜைஹான், ஃபுராத், நீல் ஆகியவை சொர்க்க நதிகளில் உள்ளவையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
பாடம் : 12 சொர்க்கத்தில் நுழையும் மக்கள் சிலருடைய உள்ளங்கள் பறவைகளின் உள்ளத்தைப் போன்றிருக்கும்.
5462. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உள்ளங்கள் பறவைகளின் உள்ளத்தைப் போன்றிருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5463. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (ஆதிமனிதர்) ஆதமை அவரது (அழகான) உருவத்தில் படைத்தான்.அவரது உயரம் அறுபது முழங்களாகும். அவரைப் படைத்தபோது, "நீர் சென்று, அங்கு அமர்ந்திருக்கும் வானவர்கள் குழுவுக்கு முகமன் (சலாம்) கூறுவீராக; அவர்கள் உமக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்வீராக. ஏனெனில், அதுதான் உங்களது முகமனும் உங்களுடைய சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று இறைவன் சொன்னான்.
அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம்) சென்று, "அஸ்ஸலாமு அலைக்கும்" (உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்) என்று (முகமன்) சொன்னார்கள்.
அதற்கு வானவர்கள், "அஸ்ஸலாமு அலைக்க வ ரஹ்மத்துல்லாஹ்" (சாந்தியும் இறைவனின் பேரருளும் உங்கள்மீதும் பொழியட்டும்) என்று பதில் (முகமன்) கூறினர். அவர்கள் (தமது பதிலில்) "இறைவனின் பேரருளும்" (வ ரஹ்மத்துல்லாஹ்) என்பதைக் கூடுதலாகச் சொன்னார்கள்.
ஆகவே, (மறுமை நாளில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் அறுபது முழம் உயரம் கொண்ட ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில்தான் நுழைவார்கள். அவருக்குப் பிறகு இன்று வரை அவருடைய சந்ததிகள் (உயரத்தில்) குறைந்துகொண்டே வருகின்றனர்.
அத்தியாயம் : 51
பாடம் : 13 நரக நெருப்பின் கடுமையான வெப்பமும் அதன் ஆழத்தின் அளவும் அது நரகவாசிகளைத் தீண்டும் அளவும்.
5464. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, இழுத்து வருவார்கள்.இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5465. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "ஆதமின் மகன் (மனிதன்) பற்றவைக்கும் (பூமியிலுள்ள) இந்த நெருப்பானது, நரக நெருப்பிலுள்ள வெப்பத்தின் எழுபது பாகங்களில் ஒரு பாகமாகும்" என்று சொன்னார்கள்.
அதற்கு மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! (நரகவாசிகளைத் தண்டிக்க பூமியிலுள்ள) இந்த நெருப்பே போதுமானதாய் இருக்கிறதே?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அந்த நெருப்பு (பூமியிலுள்ள) இந்த நெருப்பைவிட அறுபத்தொன்பது பாகம் கூடுதலாக வெப்பமேற்றப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு பாகமும் (பூமியிலுள்ள) இந்த நெருப்பின் வெப்பம் கொண்டதாயிருக்கும்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5466. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது, ஏதோ விழுந்த சப்தத்தை அவர்கள் கேட்டார்கள். (நாங்களும் கேட்டோம்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது என்ன (சப்தம்) என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள், "இது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நரகத்திற்குள் தூக்கியெறியப்பட்ட ஒரு கல்லாகும். அது இந்த நேரம்வரை நரகத்திற்குள் சென்று இப்போதுதான் அதன் ஆழத்தை எட்டியது" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அது கீழே விழுந்துவிட்டது. அது விழுந்த சப்தத்தைத்தான் (இப்போது) நீங்கள் செவியுற்றீர்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
5467. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகம், நரகவாசிகளில் சிலரை அவர்களின் கணுக்கால்கள்வரை தீண்டும். வேறு சிலரை அவர்களது இடுப்புவரை தீண்டும். இன்னும் சிலரை அவர்களது கழுத்துவரை தீண்டும்.
இதை சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5468. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகம், நரகவாசிகளில் சிலரை அவர்களின் கணுக்கால்கள் வரை தீண்டும். வேறு சிலரை முழங்கால்கள்வரை தீண்டும். மற்றச் சிலரை இடுப்புவரை தீண்டும். இன்னும் சிலரைக் கழுத்துவரை தீண்டும்.- இதை சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ("அவர்களது இடுப்புவரை" என்பதைக் குறிக்கும்) "ஹுஜ்ஸத்திஹி" என்பதற்குப் பதிலாக "ஹிக்வைஹி"என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
பாடம் : 14 நரகத்தில் அக்கிரமக்காரர்கள் நுழைவர். சொர்க்கத்தில் அப்பாவிகள் நுழைவர்.
5469. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம் செய்துகொண்டன. நரகம், "அக்கிரமக்காரர்களும் ஆணவம் கொண்டவர்களுமே எனக்குள் நுழைவார்கள்" என்று சொன்னது. சொர்க்கம், "பலவீனர்களும் ஏழைகளுமே எனக்குள் நுழைவார்கள்" என்று சொன்னது.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் நரகத்திடம், "நீ எனது வேதனை. உன் மூலம் நான் நாடியவர்களுக்கு வேதனை கொடுக்கிறேன்" என்றும், சொர்க்கத்திடம், "நீ எனது பேரருள். உன் மூலம் நான் நாடியவர்களுக்கு அருள் புரிகிறேன்" என்றும் கூறினான். பிறகு (இரண்டையும் நோக்கி), "உங்களில் ஒவ்வொன்றையும் நிரப்புபவர்கள் (மக்களிடையே) உள்ளனர்" என்று சொன்னான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5470. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம் செய்துகொண்டன. நரகம், "பெருமையடிப்பவர் களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்" என்று சொன்னது. சொர்க்கம், "எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினரும் இயலாதவர்களுமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்" என்று கூறியது.
அப்போது அல்லாஹ் சொர்க்கத்திடம், "நீ எனது பேரருள். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகிறேன்" என்று கூறினான். நரகத்திடம், "நீ எனது வேதனை. உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்" என்று கூறினான். பிறகு (அவ்விரண்டையும் நோக்கி), "உங்களில் ஒவ்வொருவருக்கும் நிரம்பத் தரப்படும்" என்று சொன்னான்.
ஆனால், நரகமோ இறைவன் தனது பாதத்தை அதன் மீது வைக்காத வரை (வயிறு) நிரம்பாது. இறைவன் தனது பாதத்தை வைக்கும்போது, நரகம் "போதும்; போதும்" என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், நரகத்தின் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், ("வாக்குவாதம் செய்துகொண்டன" என்பதைக் குறிக்க "தஹாஜ்ஜத்" என்பதற்குப் பகரமாக) "இஹ்தஜ்ஜத்" எனும் சொல் இடம்பெற்றுள்ளது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 51
5471. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன. நரகம், "பெருமையடிப்பவர் களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்" என்று சொன்னது. சொர்க்கம், "எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ் நிலையினரும் அப்பாவிகளுமே (அதிகமாக) எனக்குள் நுழைவார்கள்" என்று கூறியது.
அல்லாஹ் சொர்க்கத்திடம், "நீயே எனது பேரருள். உன் மூலம் என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள்புரிகிறேன்" என்றும் நரகத்திடம், "நீ எனது வேதனை(க்காகத்)தான். உன் மூலம் என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன். உங்களில் ஒவ்வொருவருக்கும் (வயிறு) நிரம்பத் தரப்படும்" என்றும் கூறினான்.
ஆனால், நரகமோ வளமும் உயர்வும் மிக்க இறைவன் தனது காலை அதன் மீது வைக்காத வரை (வயிறு) நிரம்பாது. (இறைவன் காலை வைக்கும்போது,) நரகம் "போதும்; போதும்" என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், (நரகத்துக்கென அல்லாஹ் புதிதாக யாரையும் படைப்பதில்லை. மாறாக,) நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன் படைப்புகளில் யாருக்கும் அநீதியிழைக்க மாட்டான். ஆனால், சொர்க்கத்தி(ல் மீதியிருக்கும் இடத்தி)ற்கென்றே புதிதாகச் சிலரைப் படை(த்து அதை நிறைப்)பான்.
- மேற்கண்ட ஹதீஸ், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன" என்று தொடங்கி, "உங்களில் ஒவ்வொருவருக்கும் (வயிறு) நிரம்பத் தருவது என் பொறுப்பாகும்" என்பதுவரை இடம் பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள கூடுதல் தகவல்கள் இல்லை.
அத்தியாயம் : 51
5472. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நரகவாசிகள் அனைவரும் நரகத்தில் போடப்பட்ட பின்னரும் நரகம் (வயிறு) நிரம்பாத காரணத்தால்) "இன்னும் அதிகம் இருக்கிறதா?" என்று கேட்டுக்கொண்டேயிருக்கும். இறுதியில் கண்ணியத்தின் அதிபதி(யான இறைவன்) தனது பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது "போதும்; போதும், உன் கண்ணியத்தின் மீதாணையாக!" என்று கூறும். நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர் களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5473. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நரகவாசிகள்) நரகத்தில் போடப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். நரகம் (வயிறு நிரம்பாமல்) "இன்னும் அதிகம் இருக்கிறதா?" என்று கேட்கும்; இறுதியில் கண்ணியத்தின் அதிபதி (யான இறைவன்), நரகத்தில் தனது பாதத்தை வைப்பான். உடனே நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் ஒட்டிக்கொள்ளும். பிறகு, "போதும்; போதும். உன் கண்ணியத்தின் மீதும், உன் கொடையின் மீதும் சத்தியமாக!" என்று நரகம் கூறும்.
சொர்க்கத்தில் இடம் மீதி இருந்து கொண்டேயிருக்கும். இறுதியில், சொர்க்கத்திற்கென அல்லாஹ் புதியவர்களைப் படைத்து, சொர்க்கத்தில் மீதியுள்ள இடத்தில் அவர்களைக் குடியமர்த்துவான்.
இதை, "நாம் நரகத்திடம் "உனக்கு (வயிறு) நிரம்பிவிட்டதா?" என்று கேட்கும் நாளில் "இன்னும் அதிகம் இருக்கிறதா?"என்று அது கேட்கும்" (50:30) எனும் இறைவசனத்தி(ன் விளக்கவுரையி)ல் அப்துல் வஹ்ஹாப் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5474. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்குள் நுழைந்த பின்னர்) சொர்க்கத்தில் அல்லாஹ் நாடிய அளவு இடம் மீதியிருக்கும். பிறகு அல்லாஹ், தான் நாடியவற்றில் ஒரு படைப்பை சொர்க்கத்திற்கென உருவாக்குவான்.- இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5475. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் கறுப்பு வெள்ளை ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். பிறகு அதைச் சொர்க்கத்திற்கும் நரகத்திற்குமிடையே நிறுத்தப்படும் (என அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் கூடுதலாக இடம்பெற்றுள்ளது). பிறகு "சொர்க்கவாசிகளே! இது (என்னவென்று) உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்கப்படும். அப்போது சொர்க்கவாசிகள் தலையைத் தூக்கிப் பார்ப்பார்கள். மேலும், "ஆம்; (தெரியும்) இதுதான் மரணம்" என்று பதிலளிப்பார்கள்.(அவர்கள் அனைவரும் அதை முன்பே பார்த்திருக்கிறார்கள்.)
பிறகு (நரகவாசிகளை நோக்கி), "நரகவாசிகளே! இது (என்னவென்று) உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்கப்படும். அவர்களும் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு, "ஆம் (தெரியும்). இதுதான் மரணம்" என்று பதில் சொல்வார்கள். (அவர்கள் அனைவரும் அதை முன்பே பார்த்துள்ளனர்.)
உடனே (இறைவனின்) கட்டளைக்கேற்ப அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப் பட்டுவிடும். பிறகு "சொர்க்கவாசிகளே! நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை"என்று கூறப்படும்.
இதை அறிவித்த அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
இதைக் கூறிவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நபியே!) அவர்கள் எண்ணிப் பார்க்காமலும் நம்பிக்கை கொள்ளாமலும் இருக்கும் நிலையில் காரியம் முடிக்கப்பட்டு, துக்கம் ஏற்படும் அந்த நாளைப் பற்றி எச்சரிப்பீராக!" (19:39) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டியவாறு தமது கரத்தால் இந்தப் பூமியை நோக்கி சைகை செய்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5476. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும் நரகவாசிகள் நரகத்திற்கும் அனுப்பப்பட்ட பின் "சொர்க்கவாசிகளே!" என அழைக்கப்படும் என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இந்த அறிவிப்பில், "இதையே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (19:39 ஆவது வசனத்தில்) குறிப்பிடுகின்றான்"என இடம்பெற்றுள்ளது. "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த வசனத்தை) ஓதிக்காட்டினார்கள்"என்பதும், "தமது கரத்தால் பூமியை நோக்கி சைகை செய்தார்கள்" என்பதும் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 51
5477. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், சொர்க்கவாசிகளை சொர்க்கத்திற்கும் நரகவாசிகளை நரகத்திற்கும் அனுப்பிய பிறகு ஓர் அறிவிப்பாளர் அவர்களிடையே நின்று, "சொர்க்கவாசிகளே! இனி மரணம் இல்லை. நரகவாசிகளே! இனி மரணம் இல்லை. (உங்களில்) ஒவ்வொருவரும் அவரவர் இருக்குமிடத்தில் நிரந்தரமாக இருப்பார்கள்" என்று அறிவிப்பார்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5478. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும் நரகவாசிகள் நரகத்திற்கும் சென்று சேர்ந்த பிறகு "மரணம்" (ஓர் ஆட்டின் உருவத்தில்) கொண்டுவரப்பட்டு, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே நிறுத்தப்படும். பின்னர் அது அறுக்கப்படும். பிறகு பொது அறிவிப்பாளர் ஒருவர், "சொர்க்கவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது; நரகவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது" என்று அறிவிப்பார். அப்போது சொர்க்கவாசிகளுக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி அதிகமாகும். நரகவாசிகளுக்குக் கவலைக்கு மேல் கவலை அதிகமாகும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5479. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நரகத்தில்) இறைமறுப்பாளனின் "கடைவாய்ப்பல்" அல்லது "கோரைப்பல்" உஹுத் மலையைப் போன்றிருக்கும். அவனது தோலின் பருமன் மூன்று நாள் பயணத் தொலைவுடையதாக இருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5480. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகத்தில் இறைமறுப்பாளனின் இரு தோள்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாக வாகனத்தில் பயணிப்பவர் மூன்று நாட்கள் கடக்கும் தூரமாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அஹ்மத் பின் உமர் அல்வகீஈ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நரகத்தில்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 51
5481. ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை பின்வருமாறு) கூறியதைக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா? மக்கள், "ஆம் (தெரிவியுங்கள்)" என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், "(மக்களின் பார்வையில்) அவர்கள் பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்" என்று சொன்னார்கள்.
பிறகு "நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "ஆம்" என்றார்கள்."அவர்கள் இரக்கமற்றவர்கள்; உண்டு கொழுத்தவர்கள்; பெருமையடிப்பவர்கள் ஆவர்" என்று நபியவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், ("உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா" (அலா உக்பிருக்கும்) என்பதற்குப் பகரமாக) "உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?" (அலா அதுல்லுக்கும்) என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
5482. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றி வைப்பான். நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; ஒரு வமிசத்தில் பிறந்ததாகப் பொய்யாக வாதிடுபவர்கள்; பெருமை அடிப்பவர்கள். - இதை ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5483. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பரட்டைத் தலையுடைய, வீட்டுவாசல்களுக்கு வெளியே தடுத்து நிறுத்தப்படக்கூடிய எத்தனையோ பேர், (அல்லாஹ்விடம் தகுதியால் உயர்ந்தவர்களாய் இருப்பர்.) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) உண்மையாக்குவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5484. அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது (இறைத்தூதர் ஸாலிஹ் (அலை) அவர்களின் தூதுவத்திற்குச் சான்றாகப் பாறையிலிருந்து வெளிப்பட்ட) ஒட்டகத்தையும் அத(ன் கால் நரம்பி)னைத் துண்டித்துக் கொன்றவனையும் நினைவு கூர்ந்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்களில் நற்பேறற்ற ஒருவன் முன் வந்தான்" (91:12) எனும் இறைவசனத்தைக் கூறிவிட்டு, "அபூஸம்ஆவைப் போன்று ஸாலிஹ் (அலை) அவர்களின் (ஸமூத்) சமுதாயத்தில் மதிப்புமிக்கவனும் ஆதிக்கவாதியும் பலசாலியுமான ஒருவன் அந்த ஒட்டகத்(தைக் கொல்வ)துக்காக முன்வந்தான்" என்று சொன்னார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்க(ளின் உரிமைக)ள் குறித்து அறிவுறுத்தினார்கள்; பிறகு "உங்களில் ஒருவர் தம் மனைவியை (அடிமையை அடிப்பதைப் போன்று) அடிக்க முற்படுகிறார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக் காக)படுக்க நேரலாம். (இது முறையா?)" என்று கூறினார்கள்.
பிறகு (உடலிலிருந்து பிரியும்) நாற்ற வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, "(அப்படிச் சிரிக்க வேண்டாமெனக் குறிப்பிடும் வகையில்) உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செயலுக்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) ஏன் சிரிக்கிறார்?" என்று கேட்டு உபதேசித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அடிமைப் பெண்ணை அடிப்பதைப் போன்று" எனக் காணப்படுகிறது. அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆண் அடிமையை அடிப்பதைப் போன்று" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
5485. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இதோ இந்த பனூ கஅப் குலத்தாரின் தந்தையான "அம்ர் பின் லுஹை பின் கம்ஆ பின் கிந்திஃப்" தனது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்றுகொண்டிருப்பதை நான் கண்டேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5486. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(5:103ஆவது இறைவசனத்திலுள்ள) "பஹீரா" என்பது, (அறியாமைக் கால) சிலைகளுக்காக (அவற்றின் பெயரால்) பால் கறக்கக்கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுவந்த ஒட்டகமாகும்; மக்களில் யாரும் அதன் பாலைக் கறக்கமாட்டார்கள்.
"சாயிபா" என்பது, (அறியாமைக் காலத்தில் நோய் நிவாரணம் போன்ற தேவைகள் நிறைவேற வேண்டும் என்ற வேண்டுதலில்) சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிடப்பட்டு வந்த ஒட்டகமாகும். அதன் மீது எந்தச் சுமையும் ஏற்றப்படாது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகப் பின்வருமாறு சொன்னார்கள்: "அம்ர் பின் ஆமிர் அல்குஸாஈ" தமது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்று கொண்டிருப்பதை நான் கண்டேன். முதன் முதலாக "சாயிபா" (ஒட்டகத்தைச் சிலைகளுக்காக நேர்ச்சை செய்து) திரியவிட்டவர் அவர்தான்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5487. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அவ்விரு பிரிவினரை நான் பார்த்ததில்லை. (முதலாம் பிரிவினர் யாரெனில்,) பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு மக்களை அடி(த்து இம்சி)க்கும் கூட்டத்தார்.
(இரண்டாம் பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்தபடி (தளுக்கி குலுக்கி கர்வத்துடன்) நடந்து (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தம் பக்கம் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களின் தலை(முடி) சரிந்து நடக்கக்கூடிய கழுத்து நீண்ட ஒட்டகத்தைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) அதன் வாடையைக்கூட நுகரமாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு தொலைவிலிருந்து வீசிக்கொண்டிருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5488. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ நீண்டநாள் வாழ்ந்தால் ஒரு சமுதாயத்தைப் பார்க்கக்கூடும். அவர்களின் கைகளில் மாட்டின் வாலைப்போன்று (நீளமான சாட்டைகள்) இருக்கும். அவர்கள் அல்லாஹ்வின் கோபத்துடனேயே காலையில் புறப்படுவார்கள். அல்லாஹ்வின் கடுங்கோபத்துடனேயே மாலையில் திரும்புவார்கள்.
அத்தியாயம் : 51
5489. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
(என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் நீண்ட நாள் வாழ்ந்தால் ஒரு சமுதாயத்தைப் பார்க்கக்கூடும். அவர்கள் அல்லாஹ்வின் கடுங்கோபத்துடனேயே காலையில் புறப்படுவார்கள். அவனுடைய சாபத்துடனேயே மாலையில் திரும்புவார்கள். அவர்களின் கைகளில் மாட்டின் வாலைப் போன்றவை (நீளமான சாட்டைகள்) இருக்கும்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
பாடம் : 15 உலக அழிவும் மறுமை நாளில் (மக்கள் அனைவரும்) ஒன்றுதிரட்டப்படுவதும்.
5490. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது இந்த -அதாவது சுட்டு- விரலை (அறிவிப்பாளர் யஹ்யா சுட்டு விரலால் சைகை செய்கிறார்) கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (அந்த அளவு குறைவானதேயாகும்.)
இதை பனூ ஃபிஹ்ர் குலத்தாரில் ஒருவரான முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அறிவிப்பாளர் இஸ்மாயீல் பின் அபீ காலித் (ரஹ்) அவர்கள் தமது பெருவிரலால் (கடலில் நுழைப்பதைப் போன்று) சைகை செய்தார்கள்" என்று காணப்படுகிறது.
யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களைத் தவிர மற்ற அனைவரது அறிவிப்பிலும், "(இவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்" என முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
5491. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மக்கள் மறுமைநாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்றுதிரட்டப்படுவார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! (நிர்வாணமான) பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் ஒருவரையொருவர் பார்ப்பார்களே?" என்று கேட்டேன்.
"ஆயிஷா! அவர்களில் சிலர் வேறு சிலரைப் பார்க்கும் எண்ணம் ஏற்படாத அளவுக்கு (அப்போதைய) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.அவற்றில் ஹாத்திம் பின் அபீஸஃகீரா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 51
5492. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உரையாற்றியபோது, "நீங்கள் செருப்பணியாமல் வெறுங்காலால் நடந்தவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள்" என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உரையாற்றிய போது" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 51
5493. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று (எங்களுக்கு) அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்:
மக்களே! (மறுமை நாளில்) நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக அல்லாஹ்விடம் ஒன்றுதிரட்டிக்கொண்டு வரப்படுவீர்கள். அல்லாஹ் கூறுகின்றான்: முதன் முதலாக அவர்களை நாம் படைத்ததைப் போன்றே (அந்நாளில்) அவர்களை நாம் மீண்டும் படைப்போம். இது நம்மீது (பொறுப்பாகிவிட்ட) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயமாகச் செய்வோம் (21:104).
கவனத்தில் வையுங்கள்! மறுமை நாளில் படைப்பினங்களிலேயே முதன் முதலாக ஆடையணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள்.
கவனத்தில் வையுங்கள்! என் சமுதாயத்தாரில் சிலர் இடப் பக்கமாக (நரகம் நோக்கி)க் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான் "என் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்" என்பேன். அப்போது "(இவர்கள்) உம(து இறப்பு)க்குப்பின் (மார்க்கத்தில்) என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்பது உமக்குத் தெரியாது" என்று கூறப்படும்.
அப்போது நான், நல்லடியார் (நபி ஈசா (அலை) அவர்கள்) சொன்னதைப் போன்று, "(இறைவா!)" நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கண்காணிப்பவனாகவே இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டபோது, நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்தையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உன் அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்" (5:117,118) என்று சொல்வேன்.
அப்போது என்னிடம், "நீர் இவர்களைவிட்டுப் பிரிந்ததிலிருந்து இவர்கள் தம் குதிகால் (சுவடு)களின் வழியே மார்க்கத்திலிருந்து வெளியேறிக்கொண்டேயிருந்தார்கள்" என்று கூறப்படும்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் வகீஉ மற்றும் முஆத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பிலேயே "அப்போது, இவர்கள் உம(து இறப்பு)க்குப் பின் (மார்க்கத்தில்) என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்பது உமக்குத் தெரியாது" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
5494. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமை நாள் வருவதற்குச் சற்றுமுன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்றுதிரட்டப்படுவார்கள். (அவற்றில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர் வாகனப் பற்றாக்குறையினால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் பேராகச் செல்வார்கள்.
அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவர். அவர்)களைப் பூமியில் ஏற்படும் (ஒரு பெரும்) "தீ" ஒன்றுதிரட்டும். அவர்கள் இரவில் ஓய்வெடுக்கும்போதும், மதிய ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அடையும்போதும், மாலை நேரத்தை அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீ அவர்களுடனேயே இருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
பாடம் : 16 மறுமை நாளின் நிலை. அதன் அமளிகளிலிருந்து தப்பிக்க நமக்கு அல்லாஹ் உதவி புரிவானாக!
5495. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்" (83:6) எனும் இறைவசனத்தை ஓதிவிட்டு, "(அன்று) தம் காதுகளில் பாதிவரை தேங்கி நிற்கும் தமது வியர்வையில் அவர்களில் ஒருவர் நின்றுகொண்டிருப்பார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மக்கள் நிற்பார்கள்" என்றே வசனத்தொடர் ஆரம்பமாகிறது. "அந்நாளில்" என்று அவர்கள் அறிவிக்க வில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் எட்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மூசா பின் உக்பா மற்றும் ஸாலிஹ் பின் கைசான் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "எந்த அளவுக்கு (அவர்கள் நிற்பார்கள்) என்றால், தம் காதுகளில் பாதிவரை தேங்கி நிற்கும் தமது வியர்வையில் அவர்களில் ஒருவர் மறைந்துபோய்விடுவார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
5496. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் (மனிதர்களின் தலைக்கருகில் நெருங்கிவரும் சூரியனால்) ஏற்படும் வியர்வை, தரையினுள் இரு கை நீட்டளவில் எழுபது முழம்வரை சென்று, (தரைக்குமேல்) "அவர்களின் வாயை" அல்லது "அவர்களது காதை" எட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
("அவர்களின் வாயை" அல்லது "அவர்களின் காதை" ஆகிய) இவற்றில் அறிவிப்பாளர் அபுல் ஃகைஸ் (ரஹ்) அவர்கள் எதைக் கூறினார்கள் என்பதில் ஸவ்ர் (ரஹ்) அவர்களே ஐயப்பாட்டை வெளியிட்டுள்ளார்கள்.
அத்தியாயம் : 51
5497. மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு அருகில் கொண்டுவரப்படும். எந்த அளவுக்கென்றால், அவர்களுக்கும் அதற்கும் இடையில் ஒரு மைல் தொலைதூரமே இருக்கும். அப்போது மக்கள் தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் மூழ்குவார்கள். சிலரது வியர்வை அவர்களின் கணுக்கால்கள்வரையிலும், சிலரது வியர்வை முழங்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை இடுப்பு வரையிலும், சிலரது வியர்வை வாய் வரையிலும் எட்டிவிடும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.
இதைக் கூறியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் வாயை நோக்கி சைகை செய்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான சுலைம் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! "மைல்" என்று பூமியின் தொலைதூர அளவைக் குறிப்பிட்டார்களா? அல்லது கண்ணில் தீட்டப் பயன்படும் அஞ்சனக்கோலின் அளவைக் குறிப்பிட்டார்களா என்பது எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 51
பாடம் : 17 சொர்க்கவாசிகளையும் நரகவாசிகளையும் இவ்வுலகிலேயே அடையாளம் கண்டு கொள்ளத்தக்க பண்புகள்.
5498. இயாள் பின் ஹிமார் அல்முஜாஷிஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரையாற்றியபோது பின்வருமாறு கூறினார்கள்:
அறிந்துகொள்ளுங்கள்: என் இறைவன் இன்றைய தினம் எனக்குக் கற்றுத் தந்தவற்றிலிருந்து நீங்கள் அறியாதவற்றை உங்களுக்குக் கற்றுத்தருமாறு எனக்குக் கட்டளையிட்டான்.
(இறைவன் கூறினான்:) நான் ஓர் அடியானுக்கு வெகுமதியாக வழங்கியுள்ள அனைத்துப் பொருட்களும் அவனுக்கு அனுமதிக்கப்பட்டவையே ஆகும். நான் என் அடியார்கள் அனைவரையும் (இயற்கையிலேயே) உண்மை வழி நின்றவர்களாகவே படைத்தேன். (ஆயினும்) அவர்களிடம் ஷைத்தான் வந்து அவர்களது இயற்கை நெறியிலிருந்து அவர்களைப் பிறழச்செய்துவிட்டான். நான் அவர்களுக்கு அனுமதித்துள்ளவற்றைத் தடைசெய்யப் பட்டவையாக ஆக்கிவிட்டான்; நான் எனக்கு இணை கற்பிப்பதற்கு எந்தச் சான்றையும் இறக்காத நிலையில் எனக்கு இணை கற்பிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டான்.
அல்லாஹ் பூமியில் வசித்துக்கொண்டிருப்போரைப் பார்த்து, அவர்களில் அரபியர், அரபியரல்லாதோர் அனைவர்மீதும் (அவர்கள் இணை கற்பித்துக்கொண்டிருந்ததால்) கடுங்கோபம் கொண்டான்; வேதக்காரர்களில் (இணைவைக்காமல்) எஞ்சியிருந்தோரைத் தவிர! மேலும் (என்னிடம்) இறைவன், நான் உம்மைச் சோதிப்பதற்கும் உம்மைக் கொண்டு (பிறரைச்) சோதிப்பதற்குமே உம்மை நான் அனுப்பினேன். (வெள்ள)நீரில் அழிந்துபோய்விடாத வேதத்தையும் உமக்கு நான் அருளினேன். அதை உறங்கும்போதும் விழித்திருக்கும் நிலையிலும் நீர் ஓதுகின்றீர்" என்று கூறினான்.
மேலும், என் இறைவன் குறைஷியரை எரித்துவிடுமாறு எனக்குக் கட்டளையிட்டான். அப்போது நான் "என் இறைவா! அவர்கள் என் தலையை நொறுக்கி ஒரு ரொட்டியைப் போன்று ஆக்கிவிடுவார்களே?" என்று கூறினேன். இறைவன், "உம்மை (உமது பிறந்தகத்திலிருந்து) அவர்கள் வெளியேற்றியதைப் போன்று அவர்களை நீர் வெளியேற்றிவிடும். அவர்களிடம் அறப்போர் புரியும். உமக்கு நாம் உதவுவோம். (நல்வழியில்) நீர் செலவிடும். உமக்கு நாம் செலவிடுவோம். (அவர்களை நோக்கி) ஒரு படையை அனுப்பும். அதைப் போன்று ஐந்து மடங்கு படையை நாம் அனுப்புவோம். உமக்குக் கீழ்ப்படிபவர்களுடன் சேர்ந்து உமக்கு மாறுசெய்வோருடன் நீர் போரிடும்" என்று கூறினான்.
மேலும், சொர்க்கவாசிகள் மூவர் ஆவர். ஒருவர், நீதிநெறி வழுவாமல் வாரி வழங்கி நல்லறம் புரிய வாய்ப்பளிக்கப்படும் அரசர். இரண்டாமவர், உறவினர்களிடமும் மற்ற முஸ்லிம்களிடமும் அன்புடனும் இரக்கத்துடனும் நடந்துகொள்பவர். மூன்றாமவர், குழந்தை குட்டிகள் இருந்தும் (தவறான வழியில் பொருளீட்டிவிடாமல்) தன் மானத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்கின்ற மனிதர்.
நரகவாசிகள் ஐவர் ஆவர். முதலாமவர், புத்தி சாதுர்யம் இல்லாத பலவீனர். அவர் (சுயகாலில் நிற்காமல்) உங்களையே பின்தொடர்வார். தமக்கென குடும்பத்தையோ செல்வத்தையோ தேடிக்கொள்ளமாட்டார். இரண்டாமவர்,எந்த ஆசையையும் விட்டுவைக்காத மோசடிக்காரர். அற்பமானதே ஆனாலும் மோசடி செய்(தாவது அதை அடை)யாமல் விடமாட்டார். மூன்றாமவர், காலையிலும் மாலையிலும் உம்முடைய வீட்டார் விஷயத்திலும் உமது செல்வம் விஷயத்திலும் உமக்குத் துரோகமிழைப்பவர்.
(நரகவாசிகளின் குணங்களில் நான்காவதாக) கருமித்தனத்தை அல்லது பொய்யைக் கூறினார்கள். ஐந்தாமவன், "அதிகமாக அருவருப்பாகப் பேசுகின்ற ஒழுங்கீனன்" என்று குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூஃகஸ்ஸான் அல்மிஸ்மஈ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நல்வழியில் செலவிடுவீராக! உமக்கு நாம் செலவிடுவோம்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ், இயாள் பின் ஹிமார் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் ஓர் அடியானுக்கு வெகுமதியாக வழங்கியுள்ள அனைத்துப் பொருட்களுமே (அவனுக்கு) அனுமதிக்கப்பட்டவையாகும்" எனும் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் இயாள் பின் ஹிமார் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரையாற்றினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 51
5499. மேற்கண்ட ஹதீஸ் முஜாஷிஉ குலத்தாரான இயாள் பின் ஹிமார் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று உரையாற்றினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பில், "பணிவாக நடந்துகொள்ளுங்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் பெருமையடிக்க வேண்டாம். ஒருவர் மற்றவரிடம் எல்லை மீற வேண்டாம்" என்று இறைவன் எனக்கு அறிவித்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
மேலும், (நரகவாசிகளில் முதலாமவர் குறித்து) "அவர்கள் உங்களையே பின் தொடர்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் தமக்கெனக் குடும்பத்தையோ செல்வத்தையோ தேடிக்கொள்ள மாட்டார்கள்" என்று (சிறு வேறுபாட்டுடன்) இடம்பெற்றுள்ளது. அதில் கத்தாதா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாகவும் காணப்படுகிறது:
நான் முதர்ரிஃப் (ரஹ்) அவர்களிடம், "அபூஅப்தில்லாஹ்! இப்படியும் நடக்குமா? (தமக்கென குடும்பத்தையோ செல்வத்தையோ தேடிக்கொள்ளாதவர்களும் உண்டா?)" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! இ(த்தகைய)வர்களை நான் அறியாமைக் காலத்தில் (இருந்ததாக அவர்களுடைய வரலாறுகளில்) கண்டிருக்கிறேன். ஒரு மனிதர் ஒரு குலத்தாருக்காகக் கால்நடைகளை மேய்ப்பார். (அதற்காகக் கூலி எதையும் பெறமாட்டார்.) அவரது தாம்பத்திய உறவுக்காக அக்குலத்தாரின் அடிமைப் பெண் மட்டும் அவருக்குக் கிடைப்பாள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 51
பாடம் : 18 இறந்தவருக்குச் சொர்க்கத்திலுள்ள அல்லது நரகத்திலுள்ள அவரது இருப்பிடம் எடுத்துக்காட்டப்படுவதும்,மண்ணறையில் (கப்று) வேதனை உண்டு என்பதற்கான சான்றும், அதன் வேதனையிலிருந்து (காக்குமாறு இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதும்.
5500. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமையில்) அவர் (தங்கப்போகும்) இருப்பிடம் காலையிலும் மாலையிலும் அவருக்கு எடுத்துக்காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால், சொர்க்கத்தில் இருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக்காட்டப்படும்). அப்போது "இதுதான் உமது இருப்பிடம்; மறுமை நாளில் இதை நோக்கியே அல்லாஹ் உம்மை எழுப்புவான்" என்று கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5501. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் இறந்துவிட்டால் (மறுமையில்) அவர் (தங்கப்போகும்) இருப்பிடம் காலையிலும் மாலையிலும் அவருக்கு எடுத்துக்காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் (எடுத்துக் காட்டப்படும் இடமும்) சொர்க்கமாக இருக்கும். அவர் நரகவாசியாக இருந்தால் (எடுத்துக் காட்டப்படும் இடமும்) நரகமாக இருக்கும். பிறகு "இதுவே உமது இருப்பிடம். மறுமை நாளில் இதை நோக்கியே நீர் எழுப்பப்படுவீர்" என்று கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5502. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் பனுந் நஜ்ஜார் குலத்தாருக்குச் சொந்தமான தோட்டமொன்றில் தமது கோவேறு கழுதையின் மீதிருந்தார்கள். அப்போது அவர்களுடன் நாங்களும் இருந்தோம். அப்போது அவர்களது கோவேறு கழுதை அவர்களைத் தூக்கியெறியும் அளவுக்கு வெருண்டோடியது.
அங்கு ஆறு அல்லது ஐந்து அல்லது நான்கு மண்ணறைகள் இருந்தன. (இவ்வாறுதான் சயீத் அல்ஜுரைரீ (ரஹ்) அவர்கள் அறிவித்துவந்ததாக இப்னு உலய்யா (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், "இந்த மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களைப் பற்றி யார் அறிவார்?" என்று கேட்டார்கள். ஒரு மனிதர், "நான் (அறிவேன்)" என்றார்.
நபி (ஸல்) அவர்கள், "இவர்கள் எப்போது இறந்தார்கள்?" என்று கேட்டார்கள். அவர், "இணைவைப்பு (கோலோச்சியிருந்த அறியாமை)க் காலத்தில் இறந்தனர்" என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இந்தச் சமுதாயம் மண்ணறைகளில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் (இறந்தவர்களைப்) புதைக்காமல் விட்டுவிடுவீர்கள் என்ற அச்சம் மட்டும் எனக்கில்லையாயின், நான் செவியுறும் மண்ணறையின் வேதனையை உங்களுக்கும் கேட்கச் செய்யும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்து இருப்பேன்" என்று கூறினார்கள்.
பிறகு எங்களை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி, "நரக நெருப்பின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்" என்றார்கள். மக்கள், "நரக நெருப்பின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்" என்று கூறினர்.
பிறகு "மண்ணறையின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்" என்றார்கள். மக்கள், "மண்ணறையின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்" என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "குழப்பங்களில் வெளிப்படையானவை மறைமுகமானவை அனைத்திலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்" என்று கூறினார்கள். மக்கள், "குழப்பங்களில் வெளிப்படையானவை மறைமுகமானவை அனைத்திலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்" என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்" என்றார்கள். மக்கள், "தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்" என்று கூறினர்.
இதன் அறிவிப்பாளரான அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், "இதை நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்கவில்லை. மாறாக, ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களே எனக்கு இதை அறிவித்தார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5503. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின், மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருப்பேன்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5504. அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்தபின் வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு "யூதர்கள், அவர்களின் கல்லறைகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5505. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டு அவருடைய நண்பர்கள் திரும்பிச் செல்லும்போது, அவர்களது காலணியின் ஓசையை இறந்தவர் செவியேற்பார். அப்போது அவரிடம் இரு வானவர்கள் வந்து அவரை எழுப்பி உட்காரவைத்து, "இந்த மனிதரைப் பற்றி என்ன சொல்லிக்கொண்டிருந்தாய்?" என்று (என்னைப் பற்றிக்) கேட்பார்கள். இறை நம்பிக்கையாளரோ, "இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என்று நான் உறுதிமொழிகிறேன்" என்று கூறுவார்.
அப்போது அவரிடம் "(நீ இறைநம்பிக்கையற்றவராக இருந்திருந்தால்) நரகத்தில் நீ தங்கப்போகும் இடத்தைப் பார். (நீ நம்பிக்கையாளனும் நல்லவனுமாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பகரமாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்" என்று கூறப்படும். அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் பார்ப்பார்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"அப்போது இறைநம்பிக்கையாளருக்கு எழுபது முழம் அளவுக்கு மண்ணறை விசாலமாக்கப் படும். அவர்கள் எழுப்பப்படும் (மறுமை) நாள்வரை அது மகிழ்ச்சியூட்டும் இன்பங்களால் நிரப்பப்படும்" என்றும் எங்களிடம் கூறப்பட்டது.
அத்தியாயம் : 51
5506. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தவரை மண்ணறைக்குள் வைத்து (அடக்கம் செய்து)விட்டு மக்கள் திரும்பிச் செல்லும் போது, அவர்களின் காலணி ஓசையை இறந்தவர் செவியேற்பார்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5507. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "ஓர் அடியார் மண்ணறையில் வைத்து அடக்கம் செய்யப்பட்டு அவருடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற் றுள்ளன.
அத்தியாயம் : 51
5508. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இறைநம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்க்கையிலும் மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்துகின்றான்" (14:27) எனும் இறைவசனம் மண்ணறை(யில் நடைபெறும்) வேதனை தொடர்பாகவே அருளப்பெற்றது.
அ(டக்கம் செய்யப்பட்ட)வரிடம், "உன் இறைவன் யார்?" என்று கேட்கப்படும். அதற்கு அவர், "என் இறைவன் அல்லாஹ். என்னுடைய நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆவார்கள்" என்று பதிலளிப்பார். இதையே மேற்கண்ட (14:27ஆவது) வசனம் குறிப்பிடுகிறது.
இதை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5509. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இறைநம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்க்கையிலும் மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்துகின்றான்" (14:27) எனும் இறைவசனம் மண்ணறை வேதனை தொடர்பாகவே அருளப்பெற்றது.
இதை கைஸமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த அறிவிப்பு மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5510. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) இறைநம்பிக்கையாளரின் உயிர் பிரியும்போது அதை இரு வானவர்கள் எடுத்துக்கொண்டு (வானுலகிற்கு) ஏறிச் செல்கிறார்கள்.
-புதைல் பின் மைசரா (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது, அந்த உயிரிலிருந்து வரும் நறுமணம் குறித்தும் அதில் கஸ்தூரி மணம் கமழும் என்பது குறித்தும் குறிப்பிட்டார்கள் என அறிவிப்பாளர் ஹம்மாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.-
அப்போது வானுலகவாசிகள் (வானவர்கள்), "ஒரு நல்ல ஆன்மா பூமியிலிருந்து வந்திருக்கிறது. அல்லாஹ் உனக்குப் பேரருள் புரிவானாக. நீ குடியிருந்துவந்த உடலுக்கும் பேரருள் புரிவானாக!" என்று பிரார்த்திப்பார்கள். பிறகு அந்த உயிர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் கொண்டுசெல்லப்படுகிறது. பிறகு அல்லாஹ், "இதை இறுதித் தவணைவரை (மறுமை நாள்வரை தங்கவைக்கப்பதற்காகக்) கொண்டுசெல்லுங்கள்" என்று கூறுவான்.
ஓர் இறைமறுப்பாளர் உயிர் பிரியும்போது -அந்த உயிரிலிருந்து துர்வாடை கிளம்புவது பற்றியும் வானிலுள்ளோர் அதைச் சபிப்பார்கள் என்பது பற்றியும் புதைல் (ரஹ்) அவர்கள் தெரிவித்ததாக ஹம்மாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் -வானுலகவாசிகள், "ஒரு தீய ஆன்மா பூமியிலிருந்து வந்திருக்கிறது" என்று கூறுகின்றனர். அப்போது "இதை இறுதித் தவணைவரை கொண்டு செல்லுங்கள்" என்று கூறப்படுகிறது.
இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகையில், தம்மிடமிருந்த மிருதுவான துணியைத் தமது மூக்குவரை "இப்படி" கொண்டுசென்றார்கள் என்றும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் (சைகை செய்து) கூறினார்கள்.
அத்தியாயம் : 51
5511. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தில்) நாங்கள் உமர் (ரலி) அவர்களுடன் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையே (ஓரிடத்தில்) இருந்தோம். அப்போது (வானில்) பிறை தென்படுகிறதா என நாங்கள் பார்த்தோம். நான் கூர்மையான பார்வையுடைய மனிதனாக இருந்தேன். எனவே, நான் பிறையைப் பார்த்துவிட்டேன். என்னைத் தவிர பிறையைப் பார்த்ததாகக் கூற வேறெவரும் இருக்கவில்லை. அப்போது நான் உமர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் அதைப் பார்க்கவில்லையா?" என்று கேட்டேன். அதைத் தாம் பார்க்கவில்லை என அவர்கள் கூறலானார்கள். "நான் எனது படுக்கையில் இருக்கும் போது அதைப் பார்ப்பேன்" என்றும் கூறலானார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்துகொண்டவர்களைப் பற்றி எங்களிடம் கூறலானார்கள்.
பத்ருப் போருக்கு முந்தைய நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் பத்ருப் போரில் எதிரிகள் மாண்டு கிடக்கவிருக்கும் இடங்களைக் காட்டலானார்கள். "அல்லாஹ் நாடினால் இதுதான் நாளை இன்ன மனிதன் மாண்டு கிடக்கும் இடம்" என்று குறிப்பிட்டார்கள். சத்திய (மார்க்க)த்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அனுப்பியவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் பிசகாமல் சரியாக அவர்கள் மாண்டு கிடந்தனர்.
பிறகு அவர்கள் அனைவரும் ஒரு கிணற்றில் ஒருவர்பின் ஒருவராகப் போடப்படலாயினர். பிறகு அவர்க(ளின் சடலங்க)ளை நோக்கிச் சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அவற்றைப் பார்த்து), "இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுக்கு வாக்களித்ததை நீங்கள் உண்மையானதாகக் கண்டீர்களா? ஏனெனில், அல்லாஹ் எனக்கு வாக்களித்ததை நான் உண்மையானதாகக் கண்டேன்" என்று கூறினார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்களிடம் எப்படிப் பேசுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் கூறுவதை இவர்களைவிட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை. எனினும், அவர்களால் எனக்குப் பதிலேதும் கூற முடியாது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5512. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டவர்க(ளின் உடல்)களை மூன்று நாட்கள் (அப்படியே) விட்டுவிட்டார்கள். பிறகு அவர்கள் அருகில் சென்று நின்றுகொண்டு, "அபூஜஹ்ல் பின் ஹிஷாமே! உமய்யா பின் கலஃபே! உத்பா பின் ரபீஆவே! ஷைபா பின் ரபீஆவே! உங்கள் இறைவன் வாக்களித்ததை நீங்கள் உண்மையானதாகக் காணவில்லையா? ஏனெனில், எனக்கு என் இறைவன் வாக்களித்ததை நான் உண்மையானதாகக் கண்டேன்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர்களால் எப்படிக் கேட்க முடியும்? எவ்வாறு அவர்களால் பதிலளிக்க இயலும்? அவர்கள் முடைநாற்றம் வீசும் பிணங்களாகிவிட்டார்களே?" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீதாணையாக! நான் கூறுவதை இவர்களைவிட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை. எனினும், அவர்களால் பதிலளிக்க இயலாது" என்று கூறினார்கள். பிறகு அவர்களை இழுத்துச் சென்று கற்சுவர் எழுப்பப்பட்டிருந்த கிணற்றில் போடுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்கள் பத்ரிலிருந்த ஒரு பாழுங்கிணற்றில் போடப்பட்டனர்.
அத்தியாயம் : 51
5513. மேற்கண்ட ஹதீஸ் அபூதல்ஹா (ரலி) அவர்களிடமிருந்து இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "பத்ருப்போர் நாளன்று எதிரிகளைத் தோற்கடித்த பின்னர் இருபதுக்கும் அதிகமான, அல்லது இருபத்து நான்கு குறைஷித் தலைவர்களின் சடலங்களைப் பத்ரிலிருந்த உள்சுவர் எழுப்பப்பட்ட கிணறு ஒன்றில் தூக்கிப்போடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 51
பாடம் : 19 (மறுமை நாளில்) விசாரணை நடைபெறும் என்பதற்கான சான்று.
5514. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(மறுமை நாளில்) விசாரணை செய்யப்படுபவர் வேதனை செய்யப்படுவார்"என்று சொன்னார்கள். நான், "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "எவரது வினைப் பதிவேடு அவரது வலக்கரத்தில் வழங்கப்படுமோ அவரிடம் எளிதான முறையில் விசாரிக்கப்படும்" (84:8) என்றல்லவா கூறுகின்றான்?" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இ(ந்த வசனமான)து, (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக மனிதர்கள் புரிந்த நன்மை தீமைகளின் பதிவேட்டை) அவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுவது பற்றியதாகும்;கேள்வி கணக்கின்போது யார் துருவித் துருவி விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார்" என்று கூறினார்கள். -இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5515. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "(மறுமை நாளில்) விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தே போய் விடுவார்" என்று சொன்னார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! "எவரது வினைப் பதிவேடு அவரது வலக்கரத்தில் வழங்கப்படுமோ அவரிடம் எளிதான முறையில் விசாரிக்கப்படும்" (84:8) என்றல்லவா அல்லாஹ் கூறுகின்றான்?" என்று கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள், "இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்கள் புரிந்த நன்மை தீமைகளின் பதிவேடு) அவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுவது பற்றியதாகும்; எனினும், கேள்வி கணக்கின் போது யார் துருவித்துருவி விசாரிக்கப்படுவாரோ அவர் அழிந்தார்" என்று சொன் னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் "கேள்விகணக்கின்போது யார் துருவித்துருவி விசாரிக்கப்படுவாரோ அவர் அழிந்தார்" என்று கூறினார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 51
பாடம் : 40 பலவீனமானோர் மற்றும் அடக்கத்தோடு வாழ்வோரின் சிறப்பு
5516. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால், "உங்களில் ஒருவர் அல்லாஹ் குறித்து நல்லெண்ணம் கொள்ளாமல் மரணிக்க வேண்டாம்" என்று கூறியதை நான் கேட்டேன்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிட மிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5517. ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால், "உங்களில் ஒருவர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் குறித்து நல்லெண்ணம் கொண்டிருக்கும் நிலையில் அல்லாமல் மரணிக்க வேண்டாம்"என்று கூறியதை நான் கேட்டேன்.
அத்தியாயம் : 51
5518. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "ஒவ்வோர் அடியாரும், தாம் இறக்கும்போதிருந்த (மன)நிலையிலேயே எழுப்பப்படுவார்" என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.அதில், "நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்" என்ற குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 51
5519. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு சமுதாயத்தின் மீது வேதனையை இறக்க அல்லாஹ் நாடிவிட்டால்,அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும். பிறகு அவர்கள் தம் செயல்களுக்கு ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள்" என்று கூறியதை நான் கேட்டேன்.
Previous Post Next Post