ஸூரத்துல் இன்ஷிகாக்

அத்தியாயம் - 84

ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்)
(வசனங்கள் - 25, மக்கி)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

84:1. வானம் பிளந்துவிடும் போது

84:2. தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபணியும் போது-

84:3. இன்னும், பூமி விரிக்கப்பட்டு,

84:4. அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-

84:5. தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.

84:6. மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.

84:7. ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,

84:8. அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.

84:9. இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.

84:10. ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-

84:11. அவன் (தனக்கு) 'கேடு” தான் எனக் கூவியவனாக-

84:12. அவன் நரகத்தில் புகுவான்.

84:13. நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.

84:14. நிச்சயமாக, தான் (இறைவன் பால்) ''மீளவே மாட்டேன்”” என்று எண்ணியிருந்தான்.

84:15. அப்படியல்ல, நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.

84:16. இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

84:17. மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,

84:18. பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).

84:19. நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.

84:20. எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை.

84:21. மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.

84:22. அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.

84:23. ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.

84:24. (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.

84:25. எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.

Previous Post Next Post