அத்தியாயம் 43 நபிமார்களின் சிறப்புகள்

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 43
நபிமார்களின் சிறப்புகள்

பாடம் : 1 நபி (ஸல்) அவர்களின் வமிசாவளியின் சிறப்பும் அவர்கள் நபியாக நியமிக்கப்படுவதற்கு முன் அவர்களுக்கு "கல்" சலாம் சொன்னதும்.
4573. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் "கினானா"வைத் தேர்ந்தெடுத்தான்; "கினானா"வின் வழித்தோன்றல்களில் குறைஷியரைத் தேர்ந்தெடுத்தான்; குறைஷியரிலிருந்து பனூ ஹாஷிம் குலத்தாரைத் தேர்ந்தெடுத்தான். பனூ ஹாஷிம் குலத்தாரிலிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தான்.
இதை வாஸிலா பின் அல்அஸ்கஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4574. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மக்காவிலுள்ள கல் ஒன்றை அறிவேன். நான் நபியாக நியமிக்கப்படுவதற்கு முன் அது எனக்கு முகமன் (சலாம்) சொல்லி வந்தது. நிச்சயமாக இப்போதும் அதை நான் அறிவேன்.
இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களுக்குள்ள சிறப்பு.
4575. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் ஆதமின் மக்கள் (மனிதர்கள்) அனைவருக்கும் தலைவன் நானே. முதன் முதலில் மண்ணறை பிளந்து (உயிர்த்து) எழுபவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை செய்பவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை ஏற்கப்படுபவனும் நானே.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள்.
4576. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் (பாத்திரத்தைக்) கொண்டுவரச் சொன்னபோது, (உட்பகுதி குறுகலான) வாயகன்ற (சிறிய) பாத்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டது. (நபி (ஸல்) அவர்கள் பாத்திரத்திற்குள் தம் விரல்களை நுழைத்தார்கள்.) மக்கள் அதிலிருந்து அங்கத் தூய்மை (உளூ) செய்யலாயினர். நான் எண்ணிக் கணக்கிட்டுப் பார்த்தேன். அவர்கள் அறுபதிலிருந்து எண்பது பேர் இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய விரல் களுக்கிடையிலிருந்து தண்ணீர் சுரப்பதை நான் பார்க்கலானேன்.
அத்தியாயம் : 43
4577. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அஸ்ர் தொழுகையின் நேரம் நெருங்கிவிட்டபோது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். அங்கத் தூய்மை (உளூ) செய்ய மக்கள் தண்ணீரைத் தேடினர். அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அங்கத் தூய்மை (உளூ) செய்ய சிறிது தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பாத்திரத்தினுள் தமது கையை வைத்தார்கள். பிறகு அதிலிருந்து அங்கத் தூய்மை செய்யும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய விரல்களுக்கிடையிலிருந்து தண்ணீர் சுரந்து வருவதை நான் கண்டேன். மக்கள் அதிலிருந்து அங்கத் தூய்மை செய்தனர். எந்த அளவுக்கென்றால், அவர்களில் கடைசி ஆள்வரை அனைவரும் (அதிலேயே) அங்கத் தூய்மை செய்து முடித்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4578. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் "அஸ்ஸவ்ரா" எனுமிடத்தில் இருந்தார்கள். (அஸ்ஸவ்ரா என்பது மதீனாவின் கடைத்தெருவுக்கும் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்கும் அருகில் இருந்த ஓர் இடமாகும்.) அப்போது நபி (ஸல்) அவர்கள் (அங்கத் தூய்மை செய்வதற்காகப்) பாத்திரத்தைக் கொண்டுவரச் சொன்னார்கள். அதில் சிறிது தண்ணீர் இருந்தது. பிறகு அப்பாத்திரத்தினுள் தமது கையை வைத்தார்கள். அப்போது அவர்களுடைய விரல்களுக்கிடையிலிருந்து தண்ணீர் சுரக்கலாயிற்று. (அங்கிருந்த) நபித்தோழர்கள் அனைவரும் அதிலிருந்து அங்கத் தூய்மை (உளூ) செய்தனர்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம் "அபூஹம்ஸா அவர்களே! அவர்கள் (மொத்தம்) எத்தனை பேர் இருந்தனர்?" என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் "சுமார் முந்நூறு பேர் இருந்தனர்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 43
4579. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலுள்ள) "அஸ்ஸவ்ரா" எனுமிடத்தில் இருந்தார்கள். அப்போது அவர்களிடம் அவர்களின் விரல்களை (முக்கினால் அவற்றை)க்கூட மறைக்காத அளவுக்கு, அல்லது விரல்களை மட்டுமே மறைக்கும் அளவுக்கு (சிறிது) தண்ணீர் இருந்த (சிறிய) பாத்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டது" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 43
4580. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு மாலிக் அல்அன்சாரிய்யா (ரலி) அவர்கள், தமது நெய் பை ஒன்றில் நபி (ஸல்) அவர்களுக்கு நெய்யை அன்பளிப்பா(கக் கொடுத்தனுப்புவா)ர். பிறகு அவரிடம் அவருடைய மக்கள் வந்து (ரொட்டிக்காகக்) குழம்பு கேட்பார்கள். அப்போது அவர்களிடம் எதுவும் இருக்காது. உடனே உம்மு மாலிக் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு நெய் கொடுத்தனுப்பும் (அந்தப் பையில் ஏதேனும் மீதி இருக்கும் என்று எண்ணி) அந்தப் பையை நோக்கிச் செல்வார்கள். அதில் நெய் இருக்கும். இவ்வாறே அவர் அந்தப் பையைப் பிழியும்வரை வீட்டுக்குத் தேவையான குழம்பு அதில் இருந்து கொண்டே இருந்தது.
(இறுதியில் அந்தப் பையைப் பிழிந்தபோது நெய் இல்லாமற் போய்விட்டதால்) அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்(து நடந்ததைத் தெரிவித்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அந்தப் பையை நீ பிழிந்தாயா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்" என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அதை அப்படியே நீ விட்டிருந்தால் அதில் எப்போதும் நெய் இருந்துகொண்டே இருந்திருக்கும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43
4581. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து உணவுப் பொருட்கள் வழங்குமாறு கோரினார். அவரது உணவுக்காக நபி (ஸல்) அவர்கள் அரை "வஸ்க்" தொலி நீக்கப்படாத கோதுமை வழங்கினார்கள். அதிலிருந்து அவரும் அவருடைய துணைவியும் அவர்களுடைய விருந்தினரும் உண்டுகொண்டே வந்தனர். இறுதியில் ஒரு நாள் அவர் அந்தக் கோதுமையை நிறுத்துப்பார்த்தார்.
(பிறகு அதிலிருந்த கோதுமை தீர்ந்துவிட்டது.) ஆகவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்(து நடந்ததைத் தெரிவித்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அதை நீ நிறுத்துப் பார்த்திருக்காவிட்டால் அதிலிருந்து நீங்கள் சாப்பிட்டுக்கொண்டே இருந்திருப்பீர்கள். உங்களுக்காக அதில் எப்போதும் கோதுமை இருந்திருக்கும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43
4582. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "தபூக்" போரின்போது புறப்பட்டுச் சென்றோம். அப்போது அவர்கள் (இரு நேரத்) தொழுகைகளை (ஒரே நேரத்தில்) சேர்த்துத் தொழுதுவந்தார்கள்; லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்.
பின்பொரு நாள் தொழுகையைத் தாமதப்படுத்திவிட்டு, பிறகு வந்து லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். பிறகு உள்ளே சென்றுவிட்டுப் பிறகு வந்து மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்.
பிறகு, "அல்லாஹ் நாடினால், நாளை நீங்கள் தபூக் ஊற்றுக்குச் செல்வீர்கள். முற்பகலுக்கு முன் நீங்கள் அங்கு சென்றுவிடாதீர்கள். நான் வருவதற்குமுன் உங்களில் எவரும் அங்கு சென்றுவிட்டால், அங்குள்ள தண்ணீரில் கை வைத்துவிட வேண்டாம்" என்று கூறினார்கள்.
அவ்வாறே நாங்கள் அங்கு சென்றோம். அப்போது இரு மனிதர்கள் எங்களை முந்திக்கொண்டு அந்த ஊற்றை நோக்கிச் சென்றனர். செருப்பு வார் அளவுக்கு அந்த ஊற்றில் தண்ணீர் சிறிதளவே சுரந்துகொண்டிருந்தது. பிறகு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துசேர்ந்தார்கள்.) அவர்கள் இருவரிடமும் "அதன் தண்ணீரில் கை வைத்தீர்களா?" என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும் "ஆம்" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் கண்டித்தார்கள். அவர்கள் சொல்ல வேண்டுமென அல்லாஹ் நாடியதையெல்லாம் அவ்விருவரிடமும் சொன்னார்கள்.
பிறகு மக்கள் தம் கைகளால் அந்த ஊற்றிலிருந்து சிறிது சிறிதாகத் தண்ணீர் அள்ளி ஓரிடத்தில் சேர்த்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் தண்ணீரில் தமது கையையும் முகத்தையும் கழுவி அந்த ஊற்றிலேயே அந்தத் தண்ணீரை விட்டார்கள். அப்போது ஊற்றிலிருந்து ஏராளமான தண்ணீர் "பீறிட்டு" அல்லது "நிறைந்து" ஓடியது. (அறிவிப்பாளர் அபூஅலீ (ரஹ்) அவர்களே இவ்வாறு ஐயத்துடன் அறிவிக்கிறார்கள்.) மக்கள் அனைவரும் தண்ணீர் அருந்தினர்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முஆதே! (எனக்குப் பிறகு) நீங்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தால்,இவ்விடத்தில் தோட்டங்கள், குடியிருப்புகள் ஆகியவை நிறைந்திருப்பதைக் காண்பீர்கள்" என்று (முன்னறிவிப்பாகக்) கூறினார்கள்.
அத்தியாயம் : 43
4583. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தபூக் போருக்குப் புறப்பட்டுச் சென்றோம். அப்பயணத்தில் நாங்கள் "வாதில் குரா" எனுமிடத்திலிருந்த ஒரு பெண்மணிக்குச் சொந்தமான ஒரு (பேரீச்சந்)தோட்டத்தை அடைந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மரத்திலுள்ள கனிகளை மதிப்பிடுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் மதிப்பிட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் பத்து "வஸ்க்" கனிகள் இருப்பதாக மதிப்பிட்டார்கள். மேலும் அப்பெண்ணிடம், "இன்ஷாஅல்லாஹ், நாங்கள் திரும்பி வருவதற்குள் இக்கனிகளை நீ எண்ணிவை" என்று சொன்னார்கள்.
பிறகு நாங்கள் நடந்து தபூக்கிற்குச் சென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்றிரவு உங்கள்மீது கடுமையான காற்று வீசும். அப்போது உங்களில் எவரும் எழுந்திருக்க வேண்டாம். உங்களில் ஒட்டகம் வைத்திருப்பவர் அதைக் கயிற்றால் கட்டிவைக்கட்டும்" என்று கூறினார்கள்.
அவ்வாறே அன்றிரவு கடுங்காற்று வீசியது. அப்போது எங்களில் ஒருவர் எழுந்தார். அக்காற்று அவரைத் தூக்கிச் சென்று, "தய்யி" குலத்தாரின் ("அஜா" மற்றும் "சல்மா" ஆகிய) இரு மலைகளுக்கிடையே போட்டுவிட்டது.
பின்னர் "அய்லா" நாட்டின் அரசர் இப்னுல் அல்மாவின் தூதுவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு கடிதத்துடன் வந்தார். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அய்லா அரசர் சார்பாக) வெள்ளைக் கோவேறு கழுதையொன்றையும் அன்பளிப்பாக வழங்கினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அய்லா அரசருக்கு) பதில் கடிதம் எழுதினார்கள்; மேலும், போர்வையொன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்த(னுப் பின)ôர்கள்.
பிறகு நாங்கள் திரும்பி "வாதில் குரா" சென்றடைந்தோம். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணிடம் அவளது தோட்டத்திலிருந்த பேரீச்சங்கனிகளைப் பற்றிக் கேட்டார்கள். "அதில் எவ்வளவு கனிகள் உள்ளன?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண் "பத்து வஸ்க்குகள்" என்று பதிலளித்தாள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் விரைவாக (மதீனாவுக்குச்) செல்லப் போகிறேன். உங்களில் விரும்பியவர் என்னுடன் விரைவாக வரலாம்; விரும்பியவர் இங்கு தங்கியிருக்கலாம்" என்று சொன்னார்கள். பிறகு நாங்கள் புறப்பட்டு மதீனா அருகில் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது தாபா (தூய நகரம்);இதோ உஹுத் மலை; அது நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம்" என்று கூறினார்கள்.
பிறகு "அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது "பனுந் நஜ்ஜார்" குடும்பமாகும். பிறகு "பனூ அப்தில் அஷ்ஹல்" குடும்பமாகும். பிறகு "பனூ அப்தில் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ்" குடும்பமாகும். பிறகு "பனூ சாஇதா"குடும்பமாகும். அன்சாரி கிளைக்குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு" என்று சொன்னார்கள்.
பிறகு (பனூ சாஇதா குடும்பத்தைச் சேர்ந்த) சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது அபூஉசைத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை இருப்பதாகச் சொல்லிவிட்டு, (பனூ சாஇதா குடும்பத்தாரான) நம்மை இறுதியாகவே குறிப்பிட்டுள்ளதை நீங்கள் பார்க்க வில்லையா?" என்று கேட்டார்கள்.
உடனே சஅத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அன்சாரி கிளைக்குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை இருப்பதாகத் தாங்கள் குறிப்பிட்டுவிட்டு, இறுதியில் எங்களைக் குறிப்பிட்டுள்ளீர்களே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் மிகச் சிறந்(த குடும் பத்)தவர்களில் இடம்பெற்றிருப்பதே உங்களுக்குப் போதுமானதல்லவா?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 43
4584. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுமைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அன்சாரிகளின் கிளைக்குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் தொடர்பான சம்பவம் இடம்பெறவில்லை.
உஹைப் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அய்லா அரசருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் கடிதம் எழுதினார்கள்" என்று இடம்பெறவில்லை. மாறாக, "அவர்களின் ஊருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 4 நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருந்ததும் எதிரிகளிடமிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றியதும்.
4585. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ("தாத்துர் ரிகாஉ" எனும்) போருக்காக "நஜ்த்" நோக்கிப் புறப்பட்டுச் சென்றோம். (போரை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில்) கருவேல முள்மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கில் இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்துசேர்ந்தார்கள். (மதிய ஓய்வு கொள்ளும் நண்பகல் நேரத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே இறங்கி ஓய்வெடுத்தார்கள். அப்போது அவர்கள் தமது வாளை அந்த மரத்தின் கிளையொன்றில் தொங்கவிட்டார்கள். (ஆங்காங்கே இருந்த) மரங்களின் கீழே மக்கள் பிரிந்து சென்று, நிழல் பெற்று (ஓய்வெடுத்து)க்கொண்டிருந்தனர்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களை அழைத்துக்) கூறினார்கள்: நான் உறங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் என்னிடம் வந்து (எனது) வாளை (தமது கையில்) எடுத்துக்கொண்டார். உடனே நான் விழித்துக்கொண்டேன். அப்போது அவர் என் தலைமாட்டில் நின்றிருந்தார். (உறையிலிருந்து) உருவப்பட்ட வாள் அவரது கையில் இருப்பதை உடனே உணர்ந்தேன். அப்போது அவர், "என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?" என்று என்னிடம் கேட்டார்.
நான், "அல்லாஹ்" என்று பதிலளித்தேன். பிறகு மீண்டும் அவர், "என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?" என்று கேட்டார். நான் "அல்லாஹ்" என்றேன். உடனே அவர் வாளை உறையிலிட்டுவிட்டார். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்.
பிறகு அவர் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையிடவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4586. மேற்கண்ட ஹதீஸ் நபித்தோழர் ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் நபி (ஸல்) அவர்களுடன் போருக்காக "நஜ்த்" நோக்கிப் புறப்பட்டுச் சென்றேன். (போரை முடித்து) நபி (ஸல்) அவர்கள் திரும்பியபோது அவர்களுடன் நானும் திரும்பினேன். ஒரு நாள் மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்தது" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (நஜ்தை நோக்கிப்) புறப்பட்டுச் சென்றோம். "தாத்துர் ரிகாஉ" எனுமிடத்தில் நாங்கள் இருந்தபோது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அதில், "பிறகு அவர் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையிடவில்லை" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 43
பாடம் : 5 நபி (ஸல்) அவர்கள் எந்த நல்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப்பெற்றார்களோ அதற்கான உவமை பற்றிய விளக்கம்.
4587. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் என்னை நல்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பியுள்ளதற்கு உதாரணம், நிலத்தில் விழுந்த பெருமழையின் நிலையைப் போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள், நீரை ஏற்றுக்கொண்டு ஏராளமான புற்பூண்டுகளையும் செடிகொடிகளையும் முளைக்கச் செய்யும் நல்ல நிலங்களாகும்.
வேறுசில தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதை இறைவன் மக்களுக்குப் பயன்படச்செய்தான். அதிலிருந்து மக்களும் அருந்தினர்; (தம் கால்நடைகளுக்கும்) புகட்டினர்; (பயிரிட்டுக் கால்நடைகளை) மேய்க்கவும் செய்தனர்.
அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கிவைத்துக்கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்கச் செய்யவுமில்லை.
இதுதான், இறைமார்க்கத்தில் விளக்கம் பெற்று, நான் கொண்டுவந்த தூதால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டுவந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டுவந்த அல்லாஹ்வின் நல்வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கின்றவனுக்கும் உதாரணமாகும்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 6 நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தார்மீது கொண்டிருந்த பரிவும் பாசமும் சமுதாயத்தாருக்குத் தீங்கிழைப்பவை குறித்து அவர்கள் அதிகமாக எச்சரித்ததும்.
4588. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கும் என்னை அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு அனுப்பியுள்ளானோ அதற்கும் எடுத்துக்காட்டாகிறது,ஒரு மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் தம் சமூகத்தாரிடம் சென்று, "என் சமுதாயமே! நான் (இன்ன பெரும்) படையை என் கண்களால் பார்த்தேன். (அப்படை எந்நேரமும் உங்களைத் தாக்கலாம். அதை எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இல்லை.) நான் நிர்வாணமாக (ஓடி)வந்து எச்சரிக்கை செய்ப(வனைப் போன்ற)வன். ஆகவே,தப்பித்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.
அப்போது அவருடைய சமூகத்தாரில் ஒரு பிரிவினர் அவருக்குக் கீழ்ப்படிந்து இரவோடு இரவாக மெல்ல நடந்து தப்பிவிட்டனர். ஆனால், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவரை நம்ப மறுத்து காலையிலும் அங்கேயே தங்கியிருந்தனர். ஆகவே, அதிகாலையில் அப்படையினர் வந்து அவர்களைத் தாக்கிப் பூண்டோடு அழித்தனர்.
இதுதான் எனக்குக் கீழ்ப்படிந்து, நான் கொண்டுவந்த (மார்க்கத்)தைப் பின்பற்றி நடந்தவருக்கும், எனக்கு மாறுசெய்து,நான் கொண்டுவந்த சத்தியத்தை ஏற்க மறுத்தவருக்கும் உதாரணமாகும்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4589. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலையும் என் சமுதாயத்தாரின் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். விட்டில் பூச்சிகளும் இதர பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. (நரக நெருப்பில் விழுவதிலிருந்து உங்களைத் தடுக்க) உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். (ஆனால்), நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில் நுழைந்து கொண்டிருக்கிறீர்கள். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4590. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலை ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். அவரைச் சுற்றிலும் அது ஒளி வீசியபோது நெருப்பைச் சுற்றும் விட்டில் பூச்சிகளும் இதர பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றை(த் தீயில் விழவிடாமல்) தடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரையும் மீறி அவை தீயில் விழுகின்றன.
இதுதான் எனது நிலையும் உங்களது நிலையும் ஆகும். (நரக) நெருப்பி(ல் விழுவதி)லிருந்து உங்களைத் தடுக்க உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக்கொண்டிருக்கிறேன். "நெருப்பிலிருந்து விலகி வாருங்கள். நெருப்பிலிருந்து விலகி வாருங்கள்" என்று சொல்கிறேன். ஆனால், நீங்களோ என்னையும் மீறி நரகத்தில் நுழைந்துகொண்டிருக்கிறீர்கள்.
அத்தியாயம் : 43
4591. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலையும் உங்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். அதில் வெட்டுக்கிளிகளும் விட்டில் பூச்சிகளும் விழலாயின. அவர் அதி(ல் விழுவதி)லிருந்து அவற்றைத் தடுத்துக்கொண்டிருந்தார். (இவ்வாறுதான்) நரக நெருப்பி(ல் விழுவதி)லிருந்து (உங்களைத் தடுக்க) உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனது கையிலிருந்து நீங்கள் நழுவிக்(கொண்டு நெருப்பை நோக்கி ஓடிக்)கொண்டிருக்கிறீர்கள்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 7 நபி (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதர் என்பது பற்றிய குறிப்பு.
4592. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலையும் (எனக்கு முன்பிருந்த) இதர இறைத்தூதர்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் ஒரு கட்டடத்தை நேர்த்தியாகவும் அழகாகவும் கட்டினார். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு "இதைவிட அழகான கட்டடத்தை நாங்கள் கண்டதேயில்லை. இதோ இந்த (மூலையில் வைக்கப்படாமலிருக்கும்) செங்கலைத் தவிர" என்று கூறினர். நான்தான் அந்தச் செங்கலாக இருக்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4593. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அபுல்காசிம் (முஹம்மத் - ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் நேர்த்தியாகவும் அழகாகவும் முழுமையாகவும் (பல அறைகள் கொண்ட) இல்லம் ஒன்றைக் கட்டினார். இல்லத்தின் ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவைத்தார். மக்கள் (வந்து) அதைச் சுற்றிப் பார்க்கலாயினர். அந்த இல்லம் அவர்களைக் கவர்ந்தது. அப்போது அவர்கள், "நீர் இந்த இடத்தில் ஒரு செங்கல் வைத்திருக்கக்கூடாதா? (வைத்திருந்தால்) உமது கட்டடம் முழுமையடைந்திருக்குமே!" என்று கூறினர்.
நான்தான் அந்தச் செங்கல் என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 43
4594. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்கள் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் ஒரு கட்டடத்தை அழகாகவும் எழிலாகவும் கட்டினார். அதன் ஒரு மூலையில் ஒரு செங்கல் வைக்குமளவுக்கான இடத்தை மட்டும் விட்டு வைத்தார். மக்கள் வந்து அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு அவரிடம் (அதன் அழகு குறித்து) வியப்புத் தெரிவித்தனர்; "(இந்த இடத்தில்) இந்தச் செங்கல் வைக்கப்பட்டிருந்தால் நன்றாயிருக்குமே!" என்று கூறினர். நானே அந்தச் செங்கல். நானே இறுதி இறைத்தூதர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வாயிலாகவும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் "எனது நிலையும் இதர இறைத்தூதர்களின் நிலையும்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 43
4595. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலையும் இதர இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டிய மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்டு முழுமையாகவும் நிறைவாகவும் அந்த வீட்டைக் கட்டி முடித்தார். மக்கள் அதனுள் நுழைந்து (பார்வையிட்டுவிட்டு) வியப்படைந்து, "இந்தச் செங்கல்லின் இடம் மட்டும் (காலியாக) இல்லாதிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!" என்று கூறலாயினர். நானே அந்தச் செங்கல்லின் இடத்தில் இருக்கிறேன். நானே நபிமார்களில் இறுதியாக வந்தேன். - இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "முழுமையாகவும்" என்பதற்குப் பகரமாக "அழகாகவும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள்புரிய விரும்பினால், அதற்கு முன்பே அதன் தூதரைக் கைப்பற்றிக்கொள்வான்.
4596. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் தன் அடியார்களில் ஒரு சமுதாயத்தாருக்கு அருள்புரிய நாடினால்,அதற்கு முன்னரே அதன் தூதரைக் கைப்பற்றி, அவரை அந்தச் சமுதாயத்தாருக்கு முன்பே சென்று (தக்க ஏற்பாடுகளுடன்) காத்திருக்கச் செய்கிறான். அல்லாஹ் ஒரு சமுதாயத்தாரை அழிக்க நாடினால், அந்தச் சமுதாயத்தாரின் தூதர் உயிருடனிருந்து பார்த்துக்கொண்டிருக்கும்போதே அச்சமுதாயத்தாரை வேதனைக்குள்ளாக்கி அழிக்கிறான். அவரை நம்ப மறுத்து அவரது கட்டளைக்கு மாறுசெய்யும்போது, அவர்களை அழிப்பதன் மூலம் அவரைக் கண் குளிர்ச்சி அடையச் செய்கிறான்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் "அல்கவ்ஸர்" எனும்) நீர்த் தடாகம் உண்டு என்பதும் அதன் சிறப்புத் தன்மைகளும்.
4597. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களுக்கு முன்பே ("அல்கவ்ஸர்") தடாகத்திற்குச் சென்று (உங்களுக்கு நீர் புகட்டக்) காத்திருப்பேன்.
இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4598. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களுக்கு முன்பே ("அல்கவ்ஸர்") தடாகத்திற்குச் சென்று (உங்களுக்கு நீர் புகட்டக்) காத்திருப்பேன். யார் (என்னிடம்) வருகிறாரோ அவர் (அத்தடாகத்தின் நீரை) அருந்துவார். யார் (அதை) அருந்துகிறாரோ அவருக்கு ஒருபோதும் தாகமே ஏற்படாது. (அத்தடாகத்தினருகில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள்வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடை ஏற்படுத்தப்படும்.
இதை சஹல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸை சஹ்ல் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இந்த ஹதீஸை அறிவித்துக்கொண்டிருந்தபோது, அதைச் செவியுற்றுக்கொண்டிருந்த நுஅமான் பின் அபீஅய்யாஷ் (ரஹ்) அவர்கள் "இவ்வாறு சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?"என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அப்போது நுஅமான் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அபூசயீத் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூடுதலாக அறிவித்ததையும் நான் செவியுற்றேன்:
அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் (என் தோழர்கள்)" என்று சொல்வார்கள். அப்போது "உங்களுக்குப் பின்னால் அவர்கள் செய்ததை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று கூறப்படும். "அப்போது நான், எனக்குப் பின்னர் (தமது மார்க்கத்தை) மாற்றிக்கொண்டவர்கள் தொலைந்து போகட்டும்; தொலைந்து போகட்டும்" என்று கூறுவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் (ரலி) அவர்கள் வழியாக மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வழியாக இன்னோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4599. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
("அல்கவ்ஸர்") எனும் எனது தடாகம் (பரப்பளவில்) ஒரு மாத காலப் பயணத் தொலைவு கொண்டதாகும். அதன் அனைத்து மூலைகளும் சமஅளவு கொண்டவையாகும். அதன் நீர் வெள்ளியைவிட வெண்மையானதாகும். அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்ததாகும். அதன் (விளிம்பிலிருக்கும்) கூஜாக்கள், (எண்ணிக்கையில்) விண்மீன்கள் போன்றவையாகும். யார் அதன் நீரை அருந்துகிறாரோ அவர் அதன்பின் ஒருபோதும் தாகமடையமாட்டார்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாகப் பின்வருமாறு சொன்னார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (எனது "அல்கவ்ஸர்" எனும்) தடாகத்தினருகில் இருந்தவாறு உங்களில் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பேன். அப்போது என்னை நெருங்கவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள்.
உடனே நான் "இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்" என்பேன். அதற்கு "உமக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீர் அறிவீரா? அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்கள் தம் குதிகால்கள்மீது (தமது பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்றுகொண்டேயிருந்தார்கள்" என்று கூறப்படும்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ பின் உமர் அல்ஜுமஹீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இதனால்தான் இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வே! நாங்கள் எங்கள் குதிகால்கள்மீது திரும்பிச் செல்வதிலிருந்தும், நாங்கள் எங்கள் மார்க்கம் தொடர்பாகக் குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம்" என்று பிரார்த்திப்பார்கள்.
அத்தியாயம் : 43
4600. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் முன்னிலையில் இருந்தபடி கூறினார்கள்: நான் எனது ("அல்கவ்ஸர்" எனும்) தடாகத்தினருகில் உங்களில் என்னிடம் வருபவர் யார் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் சிலர் என்னிடம் நெருங்கவிடாமல் தடுக்கப்படுவர். அப்போது நான் "இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்" என்று கூறுவேன். அதற்கு இறைவன், "இவர்கள் உமக்குப் பின்னால் செய்ததை நீர் அறியமாட்டீர். இவர்கள் தம் குதிகால்கள்மீது (தம் பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்றுகொண்டேயிருந்தனர்" என்று கூறுவான்.
அத்தியாயம் : 43
4601. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் ("அல்கவ்ஸர்" எனும் சிறப்புத்) தடாகம் குறித்துக் கூறுவதை நான் கேள்விப் பட்டுவந்தேன். ஆனால், அதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எதையும் நான் செவியுறவில்லை. இந்நிலையில் ஒரு நாள் என் அடிமைப் பெண் எனக்குத் தலைவாரிக்கொண்டிருந்தாள்.
அப்போது (பள்ளிவாசலின் சொற்பொழிவு மேடையிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களே!" என்று அழைத்தார்கள். உடனே நான் அந்த அடிமைப் பெண்ணிடம், " என்னைவிட்டு (சிறிது) விலகிக்கொள்" என்று சொன்னேன். அதற்கு அவள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களைத்தான் அழைத்தார்கள். பெண்களை அழைக்கவில்லை" என்று சொன்னாள். அதற்கு நான் "நானும் மக்களில் ஒருவரே" என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (எனது "அல்கவ்ஸர்" எனும்) தடாகத்தினருகில் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அங்கு என்னிடம் வருவோருக்கு ஓர் எச்சரிக்கை! உங்களில் எவரும் வழி தவறிவந்த ஒட்டகம் விரட்டப்படுவதைப் போன்று (என்னை நெருங்கவிடாமல்) என்னிடமிருந்து விரட்டப்பட வேண்டாம்.
அப்போது நான், "ஏன் இவ்வாறு (விரட்டுகிறீர்கள்)?" என்று கேட்பேன். அதற்கு, "உங்களுக்குப் பின்னால் இவர்கள் புதிது புதிதாக (மார்க்கத்தில்) எதையெல்லாம் உருவாக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது" என்று சொல்லப்படும். அப்போது நான், "தொலையட்டும்! (அவர்கள்)" என்பேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உம்மு சலமா (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி "மக்களே!"என்று கூறியதை நான் கேட்டேன். அப்போது நான் தலைவாரிக்கொண்டிருந்தேன். உடனே நான் எனக்குத் தலைவாரிவிட்டுக்கொண்டிருந்த அடிமைப் பெண்ணிடம், தலை முடியைச் சேர்த்து (கொண்டை போட்டு)விடு என்று சொன்னேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 43
4602. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுவிப்பதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழுதார்கள்.
பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பரு)க்குத் திரும்பிவந்து "உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது ("அல்கவ்ஸர்" எனும்) என் தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு "பூமியின் கருவூலத் திறவுகோல்கள்" அல்லது "பூமியின் திறவுகோல்கள்" கொடுக்கப் பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (ஏக இறைவனுக்கு) இணை கற்பிப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகச் செல்வங்களுக்காக நீங்கள் ஒருவரோடொருவர் போட்டியிட்டு (மோதி)க்கொள்வீர்களோ என்றுதான் அஞ்சுகிறேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43
4603. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹுதுப் போர் உயிர்த்தியாகிகளுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி (உரை நிகழ்த்தி)னார்கள். அ(வ்வுரையான)து உயிரோடுள்ளவர்களிடமும் இறந்தவர்களிடமும் (மறுமைப் பயணத்திற்கு) விடைபெறுவது போலிருந்தது.
அவ்வுரையில் அவர்கள், "நான் ("அல்கவ்ஸர்" எனும் எனது) தடாகத்தினருகில் உங்களுக்(கு நீர் புகட்டுவதற்)காகக் காத்திருப்பேன். அத்தடாகத்தின் பரப்பளவு "அய்லா"விலிருந்து "ஜுஹ்ஃபா" வரையுள்ள தொலைதூரத்தைப் போன்றதாகும். எனக்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவரோடொருவர் போட்டியிட்டு, சண்டையிட்டுக்கொண்டு, உங்களுக்கு முன்னிருந்தோர் அழிந்ததைப் போன்று நீங்களும் அழிந்துவிடுவீர்களோ என்றே நான் அஞ்சுகிறேன்" என்று சொன்னார்கள்.
இதுவே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை இறுதியாகச் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது பார்த்த நிகழ்வாக அமைந்தது.
அத்தியாயம் : 43
4604. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களுக்கு முன்பே ("அல்கவ்ஸர்" எனும்) தடாகத்திற்குச் சென்று (உங்களுக்கு நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது மக்களில் சிலருக்காக நான் வாதாடுவேன். ஆனால், அதில் நான் தோற்றுவிடுவேன். அப்போது நான் "இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்; என் தோழர்கள்" என்பேன். அதற்கு "உமக்குப் பின்னர் இவர்கள் (மார்க்கத்தில்) புதிது புதிதாக என்னென்ன செய்தார்கள் என்பதை நீர் அறியமாட்டீர்" என்று சொல்லப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "(இவர்கள்) என் தோழர்கள்; என் தோழர்கள் (என்பேன்)" எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் வழியாகவும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4605. ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"("அல்கவ்ஸர்" எனும்) எனது தடாக(த்தின் விசால)மானது, (யமனிலுள்ள) "ஸன்ஆ"விற்கும் மதீனாவிற்கும் இடையேயான தொலைதூரம் கொண்டதாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன் என்று சொன்னேன்.
அப்போது முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி) அவர்கள் என்னிடம் "அதன் கோப்பைகள் குறித்து நீங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுறவில்லையா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். அதற்கு முஸ்தவ்ரித் (ரலி) அவர்கள், "(அல்கவ்ஸர்) தடாகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்பைகள் (எண்ணிக்கையில்) நட்சத்திரங்களைப் போன்று காணப்படும்" என நபி (ஸல்) அவர்கள் தெரிவித்ததாகச் சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஹாரிஸா பின் வஹ்ப் அல்குஸாஈ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்கவ்ஸர்" தடாகத்தைப் பற்றி மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி அறிவித்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது. முஸ்த்தவ்ரித் (ரலி) அவர்களின் கூற்றும் அவர்களுக்கு ஹாரிஸா (ரலி) அவர்கள் அளித்த பதிலும் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 43
4606. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு எதிரில் (மறுமையில்) ஒரு தடாகம் உள்ளது. (அதை நீங்கள் காண்பீர்கள்.) அதன் இரு மூலைகளுக்கு இடையேயுள்ள தொலைதூரம் (அன்றைய "ஷாம்" நாட்டின்) "ஜர்பா" மற்றும் "அத்ருஹ்" ஆகிய நகரங்களுக்கிடையே உள்ள தூரத்தைப் போன்றதாகும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு எதிரில் (மறுமை நாளில்) ஒரு தடாகம் உள்ளது. (அதை நீங்கள் காண்பீர்கள்). அது (அன்றைய "ஷாம்"நாட்டின்) "ஜர்பா" மற்றும் "அத்ருஹ்" ஆகியவற்றுக்கு இடையே உள்ளதைப் போன்ற (தொலைதூரத்தைக் கொண்ட)தாகும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "எனது தடாகம்" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள், பின்வருமாறு கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது:
நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் (அவ்விரு ஊர்களின் தூரத்தைப் பற்றிக்) கேட்டேன். அதற்கு நாஃபிஉ (ரஹ்) அவர்கள், "(அவ்விரண்டும்) "ஷாம்" நாட்டிலுள்ள இரு ஊர்களாகும். அவ்விரண்டுக்குமிடையே மூன்று இரவு பயணத்தொலைவு உள்ளது" என்று பதிலளித்தார்கள்.
இப்னு பிஷ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூன்று நாட்கள் பயணத்தொலைவு உள்ளது" என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4607. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு எதிரில் (மறுமை நாளில்) தடாகம் ஒன்று உள்ளது. (அதை நீங்கள் காண்பீர்கள். அதன் நீளம், அன்றைய ஷாம் நாட்டிலுள்ள) "ஜர்பா" மற்றும் "அத்ருஹ்" ஆகியவற்றுக்கிடையே உள்ள (தொலைதூரத்)தைப் போன்றதாகும். அதில் விண்மீன்களைப் போன்று கோப்பைகள் உள்ளன. யார் அங்கு வந்து அதிலிருந்து அருந்துகிறாரோ அவருக்கு அதற்குப் பின்னர் ஒருபோதும் தாகமே ஏற்படாது.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4608. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (அல்கவ்ஸர் எனும்) அத்தடாகத்தின் கோப்பைகள் என்ன?"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அதன் கோப்பைகள் (எண்ணிக் கையானது), மேகமோ நிலவோ இல்லாத இரவில் காட்சியளிக்கும் விண்மீன்களின் எண்ணிக்கையைவிட அதிகமானதாகும். அவையே சொர்க்கத்தின் கோப்பைகளாகும்.
யார் அ(த்தடாகத்)தில் அருந்துகிறாரோ அவருக்கு இறுதிவரை தாகமே ஏற்படாது. அதில் சொர்க்கத்திலிருந்து இரு வடிகுழாய்கள் வழியாக நீர் வந்துசேருகிறது. அதில் அருந்துபவருக்குத் தாகமே ஏற்படாது. அத்தடாகத்தின் அகலம் அதன் நீளத்தைப் போன்று (சமஅளவில்) இருக்கும். அதன் தொலைதூரம் (அன்றைய ஷாம் நாட்டிலிருந்த) "அம்மானு"க்கும் "அய்லா"வுக்கும் இடையேயுள்ள தொலைதூரத்தைக் கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது; தேனைவிட மதுரமானது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4609. ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "நான் எனது ("அல் கவ்ஸர்") தடாகத்தில் நீர் அருந்தும் பகுதியில் நின்றுகொண்டு யமன்வாசிகளுக்(கு முன்னுரிமை அளிப்பதற்)காக மற்றவர்களை விரட்டுவேன். யமன்வாசிகளுக்குத் தண்ணீர் கிடைப்பதற்காக எனது (கையிலுள்ள) தடியின் மூலம் மற்றவர்களை அடிப்பேன்" என்று சொன்னார்கள்.
அப்போது நபியவர்களிடம் அத்தடாகத்தின் அகலம் குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "அது, எனது வசிப்பிட(மான மதீனா நகர)த்திலிருந்து "அம்மான்"வரை உள்ள தொலைவிற்கு அகலமானதாகும்" என்றார்கள்.
அத்தடாகத்தின் பானம் குறித்து வினவப்பட்டபோது, "அது, பாலைவிட வெண்மையானது; தேனைவிட இனிமையானது. சொர்க்கத்திலிருந்து நீளுகின்ற இரு வடிகுழாய்கள் அத்தடாகத்திற்குள் தொடர்ச்சியாகத் தண்ணீரைப் பாய்ச்சிக்கொண்டிருக்கும். அக்குழாய்களில் ஒன்று தங்கத்தாலானது; மற்றொன்று வெள்ளியாலானது" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் மறுமை நாளில் (அல்கவ்ஸர்) தடாகத்தில் நீர் அருந்தும் பகுதியில் இருப்பேன்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
-(அல்கவ்ஸர்) தடாகம் தொடர்பான மேற்கண்ட ஹதீஸ், ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் முஹம்மத் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக இடம்பெற்றுள்ளது:
நான் எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த யஹ்யா பின் ஹம்மாத் (ரஹ்) அவர்களிடம், "நீங்கள் இந்த ஹதீஸை அபூஅவானா (ரஹ்) அவர்களிடமிருந்தே செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு யஹ்யா (ரஹ்) அவர்கள், "இதை நான் ஷுஅபா (ரஹ்) அவர்களிடமிருந்தும் செவியுற்றுள்ளேன்" என்று பதிலளித்தார்கள். உடனே நான், "அது குறித்து நன்கு சிந்தித்துச் சொல்லுங்கள்" என்று கேட்டேன். அப்போது அவர்கள் நன்கு சிந்தித்துவிட்டு, அவ்வாறே (ஷுஅபா (ரஹ்) அவர்களிடமிருந்தே) எனக்கு அறிவித்தார்கள்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
4610. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ("அல்கவ்ஸர்" எனும்) எனது தடாகத்தைவிட்டு, ஒட்டகங்களிடமிருந்து அந்நிய ஒட்டகங்களை விரட்டுவதைப் போன்று சில மனிதர்களை விரட்டுவேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4611. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் தடாகத்தின் (பரப்பு) அளவு, யமனிலுள்ள "ஸன்ஆ" நகரத்திற்கும் (ஷாம் நாட்டை ஒட்டியிருந்த) "அய்லா"நகரத்திற்கும் இடையேயான (தொலைதூரத்)தைப் போன்றதாகும். மேலும், அதில் விண்மீன்களின் எண்ணிக்கையைப் போன்று (எண்ணற்ற) கோப்பைகள் இருக்கும். - இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4612. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னுடனிருந்த என் தோழர்களில் சிலர் (மறுமையில் "அல்கவ்ஸர்") தடாகத்துக்கு என்னிடம் வருவார்கள். நான் அவர்களைப் பார்க்கும்போது அவர்கள் (நானிருக்கும் பகுதிக்கு) ஏறிவருவர். அப்போது என்னைவிட்டு அவர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். அப்போது நான், "இறைவா! (இவர்கள்) என் அருமைத் தோழர்கள்; என் அருமைத் தோழர்கள்" என்பேன். அதற்கு, "உமக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பதை நீர் அறியமாட்டீர்" என்று என்னிடம் கூறப்படும்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அதன் கோப்பைகள் விண்மீன்களின் (கணக்கிலடங்கா) எண்ணிக்கையில் அமைந்ததாகும்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
4613. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது (அல்கவ்ஸர்) தடாகத்தின் இரு கரைகளுக்கிடையிலான தொலைதூரம், (யமனிலுள்ள) "ஸன்ஆ"வுக்கும் மதீனாவுக்கும் இடையேயுள்ள தொலைதூரம் போன்றதாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4614. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், (ஸன்ஆவுக்கும் மதீனாவுக்கும் இடையேயுள்ள தொலைதூரம் போன்றதாகும்.) அல்லது மதீனாவுக்கும் அம்மானுக்கும் இடையேயுள்ள தொலைதூரம் போன்றதாகும் என ஐயப்பாடுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அபூ அவானா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எனது (அல்கவ்ஸர்) தடாகத்தின் இருகரைகளுக்கும் இடையேயுள்ள தொலைதூரம்..."என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 43
4615. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அத்தடாகத்தில் விண்மீன்களின் எண்ணிக்கை அளவுக்குப் பொன்னாலும் வெள்ளியாலுமான கோப்பைகள் காணப்படும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அதன் கோப்பைகள் விண்மீன்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவையாகும்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
4616. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களுக்கு முன்பே ("அல்கவ்ஸர்" எனும்) அத்தடாகத்தினருகில் உங்களுக்காகக் காத்திருப்பேன். அதன் இரு ஓரங்களுக்கு இடையேயுள்ள தூரம், (யமனிலுள்ள) "ஸன்ஆ"வுக்கும் "அய்லா"வுக்கும் இடையே உள்ள தூரத்தைப் போன்றதாகும். அதிலுள்ள கோப்பைகள் (எண்ணிக்கையில்) விண்மீன்களைப் போன்றவையாகும்.
இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4617. ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் என் அடிமை நாஃபிஉ மூலம் ஜாபிர் பின சமுரா (ரலி) அவர்களுக்கு "தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் ஒன்றை எனக்குத் தெரிவியுங்கள்" என்று கடிதம் எழுதினேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் உங்களுக்கு முன்பே சென்று (உங்களுக்கு நீர் புகட்டக்) காத்திருப்பேன்" என்று கூறியதைக் கேட்டுள்ளேன்" என்று பதில் கடிதம் எழுதினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) அவர்களுக்காக (வானவர்கள்) ஜிப்ரீல் (அலை), மீக்காயீல் (அலை) ஆகியோர் (எதிரிகளுடன்) போரிட்டது.
4618. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுதுப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வலப் பக்கமும் இடப் பக்கமும் வெண்ணிற ஆடைகள் அணிந்த இரு மனிதர்களை -அதாவது ஜிப்ரீல் (அலை), மீக்காயீல் (அலை) ஆகியோரை- நான் பார்த்தேன். அதற்கு முன்போ அதற்குப் பின்போ அவ்விருவரையும் நான் பார்த்ததில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4619. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுதுப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வலப் பக்கமும் இடப் பக்கமும் வெண்ணிற ஆடைகள் அணிந்த இரு மனிதர்களை நான் பார்த்தேன். அவ்விரு மனிதர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு முன்போ அதற்குப் பின்போ அவ்விருவரையும் நான் பார்த்ததில்லை.
அத்தியாயம் : 43
பாடம் : 11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும்.
4620. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (குணத்திலும் தோற்றத்திலும்) மக்களிலேயே மிகவும் அழகானவர்களாகவும் மக்களிலேயே அதிகக் கொடைகுணம் கொண்டவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந்தார்கள்.
ஒரு (நாள்) இரவு மதீனவாசிகள், (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டு) பீதியுற்றார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்களில் சிலர் நடந்தனர். (உண்மை நிலை அறிய) அத்திசையை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்பே சென்று விட்டிருந்தார்கள். பிறகு அவர்கள் தமது கழுத்தில் வாளைத் தொங்கவிட்டபடி அபூதல்ஹா (ரலி) அவர்களது (சேணம் பூட்டப்படாத) வெற்றுடலான குதிரையின்மீது அமர்ந்தவண்ணம் திரும்பி வந்து மக்களைச் சந்தித்து, "பீதியடையாதீர்கள்; பீதியடையாதீர்கள்" என்று (மக்களைப் பார்த்துச்) சொன்னார்கள்.
பிறகு "(அலை வீசும்) கடலாகவே (தங்கு தடையின்றி ஓடக்கூடியதாகவே) இக்குதிரையை நாம் கண்டோம்" அல்லது "இக்குதிரை ஒரு கடலாகும்" என்று சொன்னார்கள். (அதற்கு முன்னர்) அக்குதிரை மெதுவாக ஓடக்கூடியதாகவே இருந்தது.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4621. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவில் (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி மக்களிடையே) பீதி ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குரிய "மன்தூப்" எனப்படும் குதிரை ஒன்றை இரவல் வாங்கி, (உண்மை நிலையைக் கண்டறிய எதிரிகள் வருவதாகச் சொல்லப்பட்ட திசையில்) அக்குதிரையிலேறிச் சென்றார்கள்.
பிறகு திரும்பி வந்து "பீதியூட்டும் எதையும் நாம் காணவில்லை. இக்குதிரையை (தொடர்ந்து அலை வீசும்) கடலாகவே (தங்குதடையின்றி ஓடக்கூடியதாகவே) நாம் கண்டோம்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குரிய" என்பதற்குப் பதிலாக "எங்களுக்குரிய குதிரை" ஒன்றை இரவல் வாங்கினார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 12 மக்களிலேயே நபி (ஸல்) அவர்கள், தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றை விட அதிகமாகச் செல்வங்களை வாரி வழங்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
4622. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே செல்வங்களை அதிகமாக வாரி வழங்கக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் ரமளான் மாதத்தில் மேன்மேலும் அதிகமாக வாரி வழங்குவார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் ரமளான் மாதத்தில் (ஒவ்வோர் இரவிலும்) அந்த மாதம் முடியும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்திப்பது வழக்கம். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். அவ்வாறு ஜிப்ரீல் தம்மைச் சந்திக்கும்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட அதிகமாகச் செல்வங்களை வாரி வழங்குவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களிலேயே மிகவும் அழகான பண்புகள் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள்.
4623. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை (மனம் வேதனைப்படும்படி) "ச்சீ" என்றோ "இதை ஏன் செய்தாய்?" என்றோ, "நீ இப்படிச் செய்திருக்கக் கூடாதா?" என்றோ எதற்காகவும் அவர்கள் (கடிந்து) சொன்னதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபுர்ரபீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பணிவிடை செய்பவர் செய்ய வேண்டிய ஒரு செயலில் ("ச்சீ"என்றோ, "இதை ஏன் செய்தாய்?" என்றோ அவர்கள் கேட்டதில்லை)" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. மேலும், "அல்லாஹ்வின் மீதாணையாக!" எனும் குறிப்பு அதில் இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4624. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது (என் தாயாரின் இரண்டாம் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள், எனது கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலிப் பையன்; அவன் தங்களுக்குப் பணிவிடை செய்யட்டும்" என்று சொன்னார்கள்.
அதன்படி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும்போதும் பயணத்தில் இருக்கும்போதும் அவர்களுக்குப் பணிவிடை செய்துவந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் செய்த எதைப் பற்றியும் "இதை நீ ஏன் இப்படிச் செய்தாய்?" என்றோ, நான் செய்யாமல் விட்ட எதைப் பற்றியும் "இதை நீ ஏன் இப்படிச் செய்யவில்லை?" என்றோ அவர்கள் என்னிடம் கேட்டதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4625. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அவர்கள் ஒருபோதும் என்னிடம் "இன்னின்னதை நீ ஏன் செய்தாய்?" என்று கேட்டதாக எனக்குத் தெரியவில்லை; அவர்கள் எதற்காகவும் என்னை ஒருபோதும் குறை கூறியதுமில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4626. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகிய நற்குணம் கொண்டவராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒரு நாள் அலுவல் ஒன்றுக்காக என்னை அனுப்பினார்கள். அப்போது நான் "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் போகமாட்டேன்" என்று சொன்னேன். ஆனால், என் மனத்தில் நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட அந்த அலுவலுக்குச் செல்ல வேண்டும் என்றே இருந்தது.
நான் புறப்பட்டுச் சென்றபோது, கடைத்தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றேன். (அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடலானேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பின்பக்கம் (வந்து) எனது பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் பார்த்தபோது அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். "அருமை அனஸே! நான் உத்தரவிட்ட இடத்திற்கு நீ சென்றாயா?" என்று கேட்டார்கள். நான், "ஆம்; செல்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னேன்.
மேலும் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். நான் செய்த எதைப் பற்றியும் "இன்னின்னதை நீ ஏன் செய்தாய்?" என்றோ, நான் செய்யாமல் விட்டுவிட்ட எதைப் பற்றியும் "நீ இன்னின்னதைச் செய்திருக்கக் கூடாதா?" என்றோ அவர்கள் என்னிடம் கேட்டதாக எனக்குத் தெரியவில்லை.
அத்தியாயம் : 43
4627. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகிய பண்புகள் கொண்டவர்களாய்த் திகழ்ந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் "இல்லை" என்று சொன்னதில்லை என்பதும், அவர்கள் தாராளமாக நன்கொடைகள் வழங்கியதும்.
4628. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் "இல்லை" என்று சொன்னதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்படியே ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4629. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை முன்வைத்து எது கேட்கப் பட்டாலும் அவர்கள் அதைக் கொடுக்காமல் இருந்ததில்லை.
இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து (கேட்டபோது), இரு மலைகளுக்கு இடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை அவருக்கு வழங்கினார்கள். அந்த மனிதர் தம் சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று, "என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், முஹம்மத் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்" என்று சொன்னார்.
அத்தியாயம் : 43
4630. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) இரு மலைகளுக்கிடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை (நன்கொடையாகக்) கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கொடுத்தார்கள். அவர் தம் சமுதாயத்தாரிடம் சென்று, "என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் அவர்கள் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்" என்று கூறினார்.
ஒரு மனிதர் உலக ஆதாயத்திற்காக இஸ்லாத்தை ஏற்றிருந்தாலும், இஸ்லாத்தைத் தழுவிய சிறிது காலத்திற்குள் அவருக்கு இஸ்லாம் இந்த உலகத்தையும் அதிலிருப்பவற்றையும்விட மிகவும் உவப்பானதாக ஆகிவிடும்.
அத்தியாயம் : 43
4631. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிப் போருக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடனிருந்த முஸ்லிம்களும் புறப்பட்டுச் சென்று ஹுனைன் எனுமிடத்தில் ("ஹவாஸின்" குலத்தாருடன்) போரிட்டனர். அப்போது அல்லாஹ் தனது மார்க்கத்திற்கும் முஸ்லிம்களுக்கும் வெற்றியளித்தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றைய தினத்தில் ஸஃப்வான் பின் உமய்யாவுக்கு (முதலில்) நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். பிறகு இன்னும் நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். பிறகு மேலும் நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள்.
(முந்நூறு ஒட்டகங்களைப் பெற்றுக்கொண்ட) ஸஃப்வான் பின் உமய்யா, "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அன்று தாராளமாக) எனக்கு வழங்கினார்கள். அப்போது அவர்கள் எனக்கு மக்களிலேயே மிகவும் வெறுப்பானவர்களாய் இருந்தார்கள். அவர்கள் எனக்கு நன்கொடைகள் வழங்கிக்கொண்டே வந்து மக்களிலேயே எனக்கு மிகவும் உவப்பானவர்களாய் ஆகிவிட்டார்கள்" என்று கூறியதாக சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
அத்தியாயம் : 43
4632. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "பஹ்ரைனின் நிதி நம்மிடம் வந்தால், நான் உனக்கு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு தருவேன்" என்று கூறி, இரு கைகளையும் அள்ளித் தருவதைப் போன்று (மூன்று முறை) சேர்த்துக்காட்டினார்கள். ஆனால், அந்த நிதி வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
பின்னர் (ஆட்சித் தலைவராக வந்த) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அந்த நிதி வந்தது. அப்போது பொது அறிவிப்பாளர் ஒருவரிடம் "எவருக்காவது நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் வாக்களித்திருந்தால், அல்லது எவருக்காவது அவர்கள் கடன் தர வேண்டியிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்" என்று பொது அறிவிப்புச் செய்யும்படி கட்டளையிட்டார்கள். (அவ்வாறே அவர் பொது அறிவிப்புச் செய்தபோது) நான் (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) சென்று, "பஹ்ரைனின் நிதி நம்மிடம் வந்தால், நான் இவ்வளவு இவ்வளவு இவ்வளவு தருவேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள்" என்றேன்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் இரு கை நிறைய ஒரு தடவை அள்ளிக்கொடுத்து "எண்ணிப்பார்" என்று சொன்னார்கள். நான் எண்ணிப்பார்த்தபோது ஐநூறு (நாணயங்கள்) இருந்தன. பிறகு மீண்டும் "இதைப் போன்றே,இன்னும் இரு மடங்குகளும் பெற்றுக்கொள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4633. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது (பஹ்ரைனின் ஆளுநர்) அலாஉ பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்களிடமிருந்து (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (சிறிது) நிதி வந்தது. அபூபக்ர் (ரலி) அவர்கள், "யாருக்காவது நபி (ஸல்) அவர்கள் கடன் தர வேண்டியிருந்தால், அல்லது நபியவர்களின் தரப்பிலிருந்து யாருக்காவது வாக்குறுதி தரப்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும். (அவரது உரிமையை நாம் நிறைவேற்றுவோம்)" என்று கூறினார்கள் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 43
பாடம் : 15 நபி (ஸல்) அவர்கள் குழந்தைகள் மீதும் குடும்பத்தார்மீதும் காட்டிய அன்பும், அவர்களது பணிவும், பணிவின் சிறப்பும்.
4634. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனக்கு இன்றிரவு ஓர் ஆண் குழந்தை பிறந்தது; அவனுக்கு நான் என் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களின் பெயரைச் சூட்டினேன்" என்று கூறிவிட்டு, அக்குழந்தையை அபூ சைஃப் எனப்படும் கொல்லரின் மனைவியான உம்மு சைஃப் எனும் பெண்மணியிடம் (பாலூட்டுவதற்காக) ஒப்படைத்தார்கள்.
பின்னர் (குழந்தைக்கு உடல்நலக்குறைவு என அறிந்து அதைப் பார்ப்பதற்காகக்) குழந்தையிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற போது அவர்களைப் பின்தொடர்ந்து நானும் சென்றேன். அபூசைஃபிடம் நாங்கள் சென்றடைந்த போது, அவர் தமது உலையை ஊதிக்கொண்டிருந்தார். வீடு முழுவதும் புகை நிரம்பியிருந்தது. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்பாக விரைவாகச் சென்று "அபூசைஃபே! (உலையை ஊதுவதை) நிறுத்துங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துள்ளார்கள்" என்றேன்.
உடனே அபூசைஃப் (உலையை ஊதுவதை) நிறுத்திவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கித் தம்மோடு அணைத்துக்கொண்டுவிட்டு, (பிரார்த்தனைகளில்) அல்லாஹ் நாடிய சிலவற்றைச் சொன்னார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் குழந்தை (இப்ராஹீம்) மூச்சு வாங்கிக்கொண்டிருந்ததை நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. அப்போது அவர்கள், "கண் அழுகின்றது; உள்ளம் கவலைப்படுகின்றது. நம் இறைவன் விரும்புவதைத் தவிர வேறெதையும் நாம் கூறமாட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! இப்ராஹீமே! உம(து பிரிவு)க்காக நாம் கவலைப்படுகிறோம்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4635. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட அதிகமாகத் தம் குடும்பத்தாரை நேசிக்கும் ஒருவரை நான் பார்த்ததில்லை. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குழந்தை) இப்ராஹீம் மதீனாவின் மேட்டுப் பாங்கான கிராமப்பகுதியில் பாலூட்டி வளர்க்கப்பட்டு வந்தார்.
(அங்கிருந்த குழந்தையைப் பார்ப்பதற்காக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செல்லும் போது அவர்களுடன் நாங்களும் செல்வோம். அவர்கள் வீட்டுக்குள் நுழைவார்கள். அப்போது வீட்டுக்குள் புகை மூட்டப்பட்டிருக்கும். குழந்தையின் பால்குடித் தந்தை (அபூசைஃப்) கொல்லராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கி முத்தமிட்டுவிட்டுத் திரும்புவார்கள்.
இதன் அறிவிப்பாளரான அம்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: குழந்தை இப்ராஹீம் இறந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இப்ராஹீம் என் புதல்வர். பால்குடிப் பருவத்திலேயே இறந்துவிட்டார். அவருக்கு அவரது பால்குடித் தவணையை முழுமையாக்கும் செவிலித் தாய்மார்கள் இருவர் சொர்க்கத்தில் இருக்கிறார்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4636. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்திருந்தனர். அப்போது அவர்கள் (மக்களிடம்), "நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா?" என்று கேட்டனர். மக்கள் "ஆம்" என்று பதிலளித்தனர். அதற்கு அந்தக் கிராமவாசிகள் "ஆனால், நாங்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! (குழந்தைகளை) முத்தமிடுவதில்லை" என்று கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உங்களிடமிருந்து கருணையைப் பறித்துவிட்டால்,என்னால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உமது உள்ளத்திலிருந்து கருணையைப் பறித்துவிட்டால், (என்னால் என்ன செய்ய முடியும்)" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
4637. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தம் பேரர்) ஹசன் (ரலி) அவர்களை முத்தமிடுவதைக் கண்ட அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், "எனக்குப் பத்து குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் எவரையும் நான் முத்தமிட்டதில்லை" என்று சொன்னார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "விஷயம் தெரியுமா? கருணை காட்டாதவன் கருணை காட்டப்படமாட்டான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4638. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள்மீது கருணை காட்டாதவருக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 16 நபி (ஸல்) அவர்கள் அதிகமாக வெட்கப்பட்டது.
4639. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தார்கள். அவர்கள் ஏதேனுமொன்றை வெறுத்தால், அந்த வெறுப்பை அவர்களது முகத்திலிருந்தே நாங்கள் அறிந்துவிடுவோம்.
மேற்கண்ட ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4640. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் (இராக்கில் உள்ள) கூஃபாவுக்கு வந்தபோது நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை" என்று கூறிவிட்டு, "நற்குணங்கள் வாய்ந்தவரே உங்களில் மிகவும் சிறந்தவர்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்றும் தெரிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் உஸ்மான் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுடன் (இராக்கிலுள்ள) கூஃபா நகருக்கு வந்திருந்தபோது (அவர்களிடம் நாங்கள் சென்றோம்)"என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும்.
4641. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; அதிகமாகவே (அமர்ந்திருக்கிறேன்). அவர்கள் சுப்ஹுத் தொழுகையை முடித்தபின் சூரியன் உதயமாவதற்குமுன் தாம் தொழுத இடத்திலிருந்து எழுந்திருக்கமாட்டார்கள். சூரியன் உதயமான பின்பே (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலத்தில் நடந்த விஷயங்கள் பற்றிப் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். (அதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக்கொண்டிருப்பார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 18 பெண்கள் மீது நபி (ஸல்) அவர்கள் காட்டிய அன்பும், பெண்களின் வாகனங்களை மெதுவாகச் செலுத்துமாறு ஒட்டகவோட்டிக்கு நபியவர்கள் கட்டளையிட்டதும்.
4642. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அவர்களுடன் அவர்களுடைய கறுப்பு நிற அடிமையான "அன்ஜஷா" எனப்படுபவரும் இருந்தார். அவர் பாட்டுப் பாடி (ஒட்டகத்தை விரைந்தோடச் செய்து)கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்ஜஷா! நிதானமாக ஓட்டிச் செல். (ஒட்டகத்தின் மேலுள்ள) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4643. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தில்) நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் வந்தார்கள். அப்போது "அன்ஜஷா" எனப்படும் ஒட்டகவோட்டி ஒருவர், துணைவியர் அமர்ந்திருந்த ஒட்டகங்களை (பாட்டுப்பாடி விரைவாக) ஓடச்செய்து கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான் அன்ஜஷா! நிதானமாக ஓட்டிச் செல். (ஒட்டகச் சிவிகைக்குள் இருக்கும்) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூகிலாபா (ரஹ்) அவர்கள் (இராக்வாசிகளிடம்), "(இங்கு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தையைக் கூறியுள்ளார்கள். அதையே உங்களில் ஒருவர் சொல்லியிருந்தால்,அதற்காக அவரை நீங்கள் நையாண்டி செய்திருப்பீர்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4644. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியருடன் (ஒரு பயணத்தில்) இருந்தார்கள். அப்போது அவர்கள் அமர்ந்திருந்த ஒட்டகங்களை ஒட்டகவோட்டி ஒருவர் (பாட்டுப்பாடி விரைவாக) ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அந்த ஒட்டகவோட்டியிடம்), "அன்ஜஷா! மெதுவாக ஓட்டிச் செல். கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4645. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அன்ஜஷா எனப்படும்) "அழகிய குரல் வளத்துடன் பாட்டுப்பாடி ஒட்டகமோட்டுபவர்" ஒருவர் இருந்தார். (அவர் ஒரு முறை ஒட்டகத்தில் பெண்கள் இருக்க, பாடிக்கொண்டிருந்த போது) அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நிதானம், அன்ஜஷா! கண்ணாடிக் குடுவைகளை -அதாவது மென்மையான பெண்களை- உடைத்துவிடாதே" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அழகிய குரல் வளத்துடன் பாட்டுப்பாடி ஒட்டகமோட்டுபவர்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 43
பாடம் : 19 நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் நெருங்கிப்பழகியதும் மக்கள் அவர்களிடமிருந்து வளம் ("பரக்கத்") பெற்றதும்.
4646. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலைத் தொழுகையை தொழுது முடித்ததும் மதீனாவின் பணியாளர்கள் தண்ணீருள்ள பாத்திரங்களைக் கொண்டுவருவார்கள். கொண்டுவரப்படும் ஒவ்வொரு பாத்திரத்தினுள்ளும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையை மூழ்கச் செய்வார்கள். சில வேளைகளில் குளிரான காலை நேரங்களிலும் அதைக் கொண்டு வருவார்கள். அப்போதும் அதனுள்ளே கையை மூழ்கச் செய்வார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4647. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலையை நாவிதர் ஒருவர் மழித்துக் கொண்டிருக்கும் போது நான் பார்த்துள்ளேன். அப்போது நபித்தோழர்கள், ஒரு முடியாயினும் (தங்களில்) ஒருவரது கையில்தான் விழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களைச் சுற்றி வந்துகொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 43
4648. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தங்களிடம் ஒரு தேவை உள்ளது. (ஒரு விஷயம் பற்றி கேட்க வேண்டும்)" என்று கூறினாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ன மனிதரின் தாயே! எந்தத் தெருவுக்கு நான் வரவேண்டும் என நீ விரும்புகிறாய்; சொல். உனது தேவையை நான் நிறைவேற்றிவைக்கிறேன்" என்று கூறிவிட்டு, அவள் தமது தேவையை முடித்துக் கொள்ளும் வரை (மக்கள் நடமாட்டமுள்ள ஒரு தெருவில்) அவளுடன் தனியாக(ப் பேசிக்கொண்டு) நின்றிருந்தார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 20 நபி (ஸல்) அவர்கள் குற்றங்களிலிருந்து வெகு தொலைவில் விலகியிருந்ததும், அனுமதிக்கப்பெற்ற செயல்களில் எளிதானதையே அவர்கள் தேர்வு செய்ததும், அல்லாஹ்வின் புனிதச் சட்டங்கள் சீர்குலைக்கப்படும்போது அல்லாஹ்வின் சார்பாக மக்களை அவர்கள் தண்டித்ததும்.
4649. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்வு செய்துகொள்ளும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விருப்ப உரிமை வழங்கப்பெற்றால், அவர்கள் அவ்விரண்டில் எளிதானதையே -அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும்பட்சத்தில் (எப்போதும்) தேர்வு செய்வார்கள்.
அது பாவமான விஷயமாக இருந்தால், மக்களிலேயே அவர்கள்தான் அதிலிருந்து (விலகி) வெகு தொலைவில் நிற்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்காக (எதிலும் யாரையும் ஒரு போதும்) பழி வாங்கியதில்லை;இறைவனின் புனித(ச் சட்ட)ம் ஏதும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அல்லாஹ்வின் சார்பாகத் தண்டிக்க வேண்டுமென்று இருந்தாலே தவிர (அப்போது மட்டுமே பழிவாங்குவார்கள்).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4650. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒன்றைவிட மற்றொன்று எளிதானதாக இருக்கும் இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்வு செய்துகொள்ளும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விருப்ப உரிமை வழங்கப் பெற்றால், அவர்கள் அவ்விரண்டில் எளிதானதையே -அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் (எப்போதும்) தேர்வு செய்வார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால், மக்களிலேயே அவர்கள்தான் அதிலிருந்து (விலகி) வெகு தொலைவில் நிற்பார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அவ்விரண்டில் எளிதானதையே தேர்வு செய்வார்கள்" என்பதுவரையே இடம் பெற்றுள்ளது. அதற்குப் பிறகுள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 43
4651. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் எதையும் எப்போதும் அடித்த தில்லை; எந்தப் பெண்ணையும் எந்த ஊழியரையும் அடித்ததில்லை; அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்யும்போதே) தவிர.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொல்லாலோ செயலாலோ) தம்மைப் புண்படுத்திய எவரையும் அவர்கள் எப்போதும் பழிவாங்கியதில்லை; இறைவனின் புனித(ச் சட்ட)ம் ஏதும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இறைவனின் சார்பாக அவர்கள் நடவடிக்கை எடுத்தாலே தவிர (அப்போது மட்டுமே பழிவாங்குவார்கள்).
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அந்த அறிவிப்பாளர்களில் சிலர் வேறுசிலரைவிடக் கூடுதலான தகவல்களை அறிவித்துள்ளனர்.
அத்தியாயம் : 43
பாடம் : 21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணமும், அவர்களது உள்ளங்கையின் மென்மையும், அவர்கள் தொட்டுத் தடவியதால் ஏற்பட்ட வளமும்.
4652. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் முதல்தொழுகை (லுஹ்ர்) தொழுதேன். பிறகு அவர்கள் தம் வீட்டாரிடம் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது அவர்களுக்கு எதிரே சிறுவர்கள் சிலர் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அச்சிறுவர்களின் கன்னங்களை ஒவ்வொருவராகத் தடவினார்கள். என் கன்னங்களிலும் தடவினார்கள். அவர்களது கரத்திலிருந்து "குளிர்ச்சியை" அல்லது "நறுமணத்தை" நான் உணர்ந்தேன். அவர்கள் தமது கையை நறுமணப் பையிலிருந்து அப்போதுதான் எடுத்ததைப் போன்றிருந்தது.
அத்தியாயம் : 43
4653. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (உடல்) வாசனையைவிட நறுமணமிக்க "அம்பரை"யோ கஸ்தூரியையோ வேறெந்த நறுமணப் பொருளையோ நுகர்ந்ததேயில்லை; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்ளங்கையைவிட மென்மையான அலங்காரப் பட்டையோ சாதாரணப் பட்டையோ நான் தொட்டதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4654. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒளிரும் வெண்ணிறம் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களின் வியர்வைத் துளிகள் முத்துகளைப் போன்றிருந்தன. அவர்கள் நடந்தால் (பள்ளத்தில் இறங்குவதைப் போன்று முன்பக்கம்) சாய்ந்து நடப்பார்கள். அவர்களது உள்ளங்கையைவிட மென்மையான அலங்காரப் பட்டையோ சாதாரணப் பட்டையோ நான் தொட்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (உடல்) வாசனையைவிட சுகந்தமான கஸ்தூரியையோ "அம்பரை"யோ நான் நுகர்ந்ததேயில்லை.
அத்தியாயம் : 43
பாடம் : 22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் (பரக்கத்) ஏற்பட்டதும்.
4655. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், எங்களது வீட்டுக்கு வந்து மதிய ஓய்வெடுத்தார்கள். அப்போது அவர்களது உடலில் வியர்வை ஏற்பட்டது. என் தாயார் (உம்மு சுலைம் (ரலி)) அவர்கள் ஒரு கண்ணாடிக் குடுவையுடன் வந்து வியர்வைத் துளிகளை அந்தக் குடுவையில் சேகரிக்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து, "உம்மு சுலைமே! என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார்கள். என் தாயார், "இது தங்களது வியர்வை. இதை எங்கள் நறுமணப் பொருளில் சேர்க்கிறோம். இது நல்ல வாசனைப் பொருட்களில் ஒன்றாகும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43
4656. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் இல்லத்துக்கு வந்து, அங்கு உம்மு சுலைம் (படுத்து) இராதபோது அவர்களது விரிப்பில் படுத்து உறங்குவார்கள். ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் வந்து உம்மு சுலைமின் விரிப்பில் படுத்துறங்கினார்கள். அப்போது அங்கு வந்த உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், "இதோ நபி (ஸல்) அவர்கள் உங்கள் வீட்டில் உங்கள் விரிப்பில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்று சொல்லப்பட்டது.
உடனே உம்மு சுலைம் (ரலி) அவர்கள் வந்(து பார்த்)தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வியர்த்திருந்தது. அவர்களது வியர்வை, படுக்கையில் ஒரு துண்டுத் தோலில் திரண்டிருந்தது. உடனே உம்மு சுலைம், தமது நறுமணப் பெட்டியைத் திறந்து, அந்த வியர்வைத் துளிகளைத் துடைத்து தமது கண்ணாடிக் குடுவையொன்றில் அதைப் பிழிந்து சேகரிக்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் திடுக்கிட்டு விழித்து, "உம்மு சுலைமே! என்ன செய்கிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! அதன் வளத்தை எங்கள் குழந்தைகளுக்காக எதிர்பார்க்கிறோம். (அதனால் தான் அதைச் சேகரிக்கிறோம்)" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் "நீ செய்தது சரிதான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43
4657. உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக்கு மதிய ஓய்வெடுப்பதற்காக வருவார்கள். அப்போது அவர்களுக்காக நான் தோல் விரிப்பு ஒன்றை விரிப்பேன். அந்த விரிப்பில் நபி (ஸல்) அவர்கள் மதிய ஓய்வெடுப்பார்கள். நபி (ஸல்) அவர்களது உடலில் அதிகமாக வியர்வை ஏற்படும். அப்போது நான் அவர்களது வியர்வைத் துளிகளை எடுத்து வாசனைப் பொருட்களிலும் கண்ணாடிக் குடுவைகளிலும் சேகரிப்பேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உம்மு சுலைமே! என்ன இது?" என்று கேட்டார்கள். அதற்கு நான் "தங்களது வியர்வைத் துளிகளை எனது நறுமணப் பொருளில் சேர்க்கிறேன்"என்று கூறுவேன்.
அத்தியாயம் : 43
பாடம் : 23 நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) வரும்போது குளிர் காலத்திலும் வியர்வை ஏற்பட்டது.
4658. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் குளிரான காலை நேரங்களிலும் வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படும். பிறகு (அவர்களை விட்டு அந்நிலை விலகும்போது) அவர்களது நெற்றியிலிருந்து வியர்வைத் துளிகள் வழியும்.
அத்தியாயம் : 43
4659. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "தங்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) எப்படி வருகின்றது?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "சில நேரங்களில் மணியோசையைப் போன்று எனக்கு வேத அறிவிப்பு வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகவும் கடினமாக இருக்கும். பிறகு அச்செய்தியை நான் மனனமிட்டுக்கொண்ட நிலையில் அந்நிலை என்னை விட்டு விலகிவிடும். இன்னும் சில நேரங்களில், வானவர் ஒருவர் மனித உருவில் என்னிடம் வ(ந்து செய்திகளைத் த)ருவார். அவர் கூறுவதை நான் நினைவிலிருத்திக்கொள்வேன்"என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4660. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது, அவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும்;அவர்களது முகம் சாம்பல் நிறத்திற்கு மாறிவிடும்.
அத்தியாயம் : 43
4661. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது, தமது தலையைத் தாழ்த்திக்கொள்வார்கள். நபித் தோழர்களும் தம் தலையைத் தாழ்த்திக்கொள்வார்கள். அந்நிலை விலக்கப்பட்டதும் தமது தலையை உயர்த்துவார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 24 நபி (ஸல்) அவர்கள் தமது தலைமுடியை வகிடெடுக்காமல் நெற்றியில் தொங்க விட்டதும், வகிடெடுத்து வாரிவிட்டதும்.
4662. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வேதக்காரர்கள் (யூத, கிறித்தவர்கள்) தமது தலைமுடியை (வகிடெடுத்து வாரிவிடாமல் நெற்றியில்) தொங்கவிட்டுவந்தனர். இணைவைப்பாளர்கள் தம் தலைமுடியை வகிடெடுத்துப் பிரித்துவந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கு இறைக்கட்டளை விதிக்கப்படாத விஷயங்களில் வேதக்காரர்களுக்கு ஒத்துப் போவதையே விரும்பி வந்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதலில்) முன்தலை முடியை நெற்றியில் தொங்கவிட்டுவந்தார்கள். பிற்காலத்தில் அதை வகிடெடுத்து (வாரி)விட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றமும் அவர்கள் அழகிய முகஅமைப்புக் கொண்டவர்களாய் இருந்தார்கள் என்பதும்.
4663. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடுத்தர உயரமுள்ள மனிதராகவும் (பரந்த முதுகும், விரிந்த மார்பும் அமைந்து) இரு தோள்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாகவும் இருந்தார்கள். இரு காதுகளின் சோனையை எட்டும் அளவுக்குத் தலைமுடி கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் சிவப்பு நிற அங்கி அணிந்திருந்தார்கள். (அந்த ஆடையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட அழகான எவரையும் எப்போதும் நான் கண்டதேயில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4664. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட நீண்ட முடிவைத்து, சிவப்பு நிற அங்கி அணிந்திருந்த அழகான ஒருவரை நான் கண்டதேயில்லை. அவர்களது தலைமுடி தோள்களைத் தொட்டுக்கொண்டிருந்தது. (விரிந்த முதுகும் பரந்த மார்பும் கொண்டு) அவர்கள் இருதோள்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் அதிக உயரமுடையவராகவும் இருக்கவில்லை; குட்டையானவராகவும் இருக்கவில்லை. (நடுத்தர உயரமுடையவராகவே இருந்தார்கள்).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூகுரைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அதிகமான) தலைமுடி இருந்தது" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 43
4665. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகான முகம் உடையவர்களாகவும் அழகான உருவ அமைப்புக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் ஒரேயடியாக உயரமானவராகவும் இருக்கவில்லை;குட்டையானவராகவும் இருக்கவில்லை.
அத்தியாயம் : 43
பாடம் : 26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் நிலை.
4666. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைமுடி எப்படி இருந்தது?"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவர்களது தலைமுடி, அலையலையானதாக இருந்தது. சுருள் முடியாகவும் இல்லை; படிந்த முடியாகவும் இல்லை. அது அவர்களது காது மடல்களுக்கும் தோளுக்கும் இடையே தொங்கிக்கொண்டிருந்தது" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 43
4667. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைமுடி (சில வேளைகளில்) அவர்களின் தோள்களைத் தொட்டுக்கொண்டிருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4668. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைமுடி (சில வேளைகளில்) இரு காது மடல்களின் பாதிவரை இருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவற்றின் நிலை.
4669. ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாலமான வாயும் விரிந்த கண்ணும் மெலிந்த குதிகால்களும் உடையவர்களாக இருந்தார்கள்" என்று ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்.
நான் சிமாக் (ரஹ்) அவர்களிடம், "விசாலமான வாய் ("ளலீஉல் ஃபம்") என்றால் என்ன?" என்று கேட்டேன். அவர்கள் "பெரிய வாய்" என்றார்கள். "விரிந்த கண் ("அஷ்கலுல் ஐன்") என்றால் என்ன?" என்று கேட்டதற்கு "நீளமான கண் பிளவு" என்றார்கள்.
"மெலிந்த குதிகால்கள் ("மன்ஹூசுல் அகிப்") என்றால் என்ன?" என்று கேட்டதற்கு, "குதிகாலில் சிறிதளவு சதைப்பற்று காணப்படுவது" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 28 நபி (ஸல்) அவர்கள் வெண்ணிறம் கொண்டவராகவும் கலையான முகமுடையவராகவும் இருந்தார்கள்.
4670. சயீத் பின் இயாஸ் அல்ஜுரைரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபுத்துஃபைல் (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; அவர்கள் வெண்ணிறம் கொண்டவர்களாகவும் களையான முகமுடையவராகவும் இருந்தார்கள்" என்று பதிலளித்தார்கள்.
முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் (ஆகிய நான்) கூறுகிறேன்:
அபுத்துஃபைல் (ரலி) அவர்கள் (ஹிஜ்ரீ) நூறாம் ஆண்டில் இறந்தார்கள்; அவர்களே நபித்தோழர்களில் இறுதியாக இறந்தவர் ஆவார்.
அத்தியாயம் : 43
4671. சயீத் பின் இயாஸ் அல்ஜுரைரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபித்தோழர்களில் இறுதியாக உயிர் வாழ்ந்த) அபுத்துஃபைல் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன்; இந்தப் பூமியின்மீது அவர்களைப் பார்த்தவர் என்னைத் தவிர வேறெந்த மனிதரும் (இப்போது உயிருடன்) இல்லை" என்று கூறினார்கள்.
அவர்களிடம் நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எவ்வாறு கண்டீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெண்ணிறம் கொண்டவர்களாகவும் கலையான தோற்றமுடையவராகவும் நடுத்தரமான உடல்வாகு கொண்டவராகவும் இருந்தார்கள்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 29 நபி (ஸல்) அவர்களின் தலையிலிருந்த நரைமுடி.
4672. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையில் நரை எதையும் பார்க்கவில்லை; இவ்வளவு தவிர" என்று கூறினார்கள். (அவை மிகவும் குறைவானவை என்பதைப் போன்று அறிவிப்பாளர் சைகை செய்தார் என இப்னு இத்ரீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.)
மேலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் தம் நரைமுடிக்கு மருதாணி இலையாலும் "கத்தம்" (யமன் நாட்டு மூலிகைச்) செடியின் இலையாலும் சாயமிட்டுவந்தனர்" என்றும் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4673. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தலைமுடிக்குச்) சாயம் பூசியிருந்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "சாயம் பூசுகின்ற அளவுக்கு (நரை முடிகள்) அவர்களுக்கு இல்லை. அவர்களது தாடியில் மட்டுமே சில வெள்ளை முடிகள் இருந்தன" என்று கூறினார்கள்.
அவர்களிடம், "அபூபக்ர் (ரலி) அவர்கள் சாயம் பூசியிருந்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு, "ஆம்; மருதாணி இலையாலும் "கத்தம்" (யமன் நாட்டு மூலிகைச்) செடியின் இலையாலும் (சாயம் பூசியிருந்தார்கள்)" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 43
4674. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாயம் பூசியிருந்தார்களா?"என்று கேட்டேன். அதற்கு, "ஒரு சில நரைமுடிகளையே கண்டார்கள். (எனவே, சாயம் பூசவில்லை)" என்று அனஸ் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 43
4675. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் (தமது நரைமுடிக்குச்) சாயம் பூசியதுண்டா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்களது தலையிலிருந்த வெள்ளை முடிகளை நான் நினைத்திருந்தால் எண்ணிக் கணக்கெடுத்திருக்க முடியும். நபி (ஸல்) அவர்கள் சாயம் பூசியதில்லை. (ஆனால்,) அபூபக்ர் (ரலி) அவர்கள் மருதாணி இலையாலும் "கத்தம்" (யமன் நாட்டு மூலிகைச்) செடியின் இலையாலும் சாயம் பூசியிருந்தார்கள். உமர் (ரலி) அவர்களும் மருதாணி இலையால் நன்கு சாயம் பூசியிருந்தார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 43
4676. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் தம் தலையிலும் தாடியிலும் உள்ள நரைமுடிகளைப் பிடுங்குவது வெறுக்கப்பட்டதாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நரைமுடிக்குச்) சாயம் பூசியதில்லை. அவர்களது (கீழுதட்டின் அடியிலுள்ள) குறுந்தாடியிலும் நெற்றிப் பொட்டுகளிலுள்ள முடியிலும்தான் வெண்மை இருந்தது. தலையில் ஆங்காங்கே ஒரு சில முடிகளே நரைத்திருந்தன.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4677. அபூஇயாஸ் முஆவியா பின் குர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்களது (தலையில்) நரைமுடி இருந்ததா?" என்பது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அவர்களை அல்லாஹ் நரைமுடியால் அலங்கோலப்படுத்தவில்லை" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4678. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (முகத்தில்) இந்த இடத்தில் வெள்ளை முடி இருந்ததை நான் கண்டேன்" என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) அவர்கள் தமது விரல் ஒன்றைத் தமது கீழுதட்டிலுள்ள குறுந்தாடியின் மீது வைத்து சைகை செய்து காட்டினார்கள்.
அப்போது அவர்களிடம், "அன்றைய தினம் நீங்கள் யாரைப் போன்று இருந்தீர்கள்? (அன்று உங்களுக்கு என்ன வயதிருக்கும்)?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள், "அப்போது நான் அம்புக்கு இறகு பொருத்துவேன். (இது போன்றவற்றைச் செய்யும் அளவுக்கு விவரமுடைய வயதுள்ளவனாக இருந்தேன்)" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4679. அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் வெண்ணிறமுடையவர்களாகவும் முதுமை அடைந்தவர்களாகவும் இருந்தார்கள். (நபியவர்களின் பேரர்) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு (தோற்றத் தில்) ஒத்திருப்பார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஜுஹைஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "வெண்ணிறமுடையவர்களாகவும் முதுமை அடைந்தவர்களாகவும் இருந்தார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 43
4680. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் நரைமுடி பற்றிக் கேட்கப் பட்டது. அதற்கு அவர்கள், "நபியவர்கள் தமது தலையில் எண்ணெய் தேய்த்திருந்தால் அவர்களது தலையிலிருந்து ஒருசில நரைமுடிகூடத் தென்படாது; அவர்கள் எண்ணெய் தேய்த்திருக்காவிட்டால் சில நரைமுடி தென்படும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43
4681. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலை மற்றும் தாடியின் முன்பகுதி பழுப்பேறி (வெண்மையாகி) இருந்தது. அவர்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்திருந்தால் அந்த வெண்மை தென்படாது. அவர்கள் (எண்ணெய் தேய்க்காமல்) பரட்டை தலையுடன் இருந்தால் அந்த வெண்மை தென்படும். அவர்களது தாடியில் அதிகமான முடிகள் இருந்தன" என்று கூறினார்கள்.
அப்போது (அங்கிருந்த) ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் வாளைப் போன்று (மின்னிக்கொண்டு நீண்டதாக) இருந்ததா?" என்று கேட்டார். ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் (அதை மறுத்து), "இல்லை; அவர்களது முகம் சூரியனைப் போன்றும் சந்திரனைப் போன்றும் இருந்தது; வட்டமானதாக இருந்தது. அவர்களது முதுகில் தோள்பட்டை அருகில் நபித்துவ முத்திரையை நான் கண்டேன். அது புறா முட்டை போன்று அவர்களது உடலின் நிறத்திலேயே இருந்தது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 30 நபி (ஸல்) அவர்களது உடலில் நபித்துவ முத்திரை இருந்தது என்பதற்கான சான்றும், அதன் தன்மையும், அவர்களது உடலில் அது அமைந்திருந்த இடமும்.
4682. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முதுகில் (நபித்துவ) முத்திரை இருந்ததை நான் பார்த்தேன். அது புறா முட்டை போன்று இருந்தது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4683. சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னை என் தாயின் சகோதரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் (பாதங்களில்) நோய் கண்டுள்ளான்" என்று சொன்னார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அன்புடன்) என் தலையை வருடிக் கொடுத்து, என் வளத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கத் தூய்மை செய்(து மிச்சம் வைத்)த தண்ணீரில் நான் சிறிது குடித்தேன்.
பிறகு நான் அவர்களுடைய முதுகுக்குப் பின்னே நின்றேன். அப்போது அவர்களுடைய தோள்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையை நான் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படுகின்ற பித்தானைப் போன்றிருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4684. ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்கள், "நான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன். அவர்களுடன் "ரொட்டி இறைச்சி" அல்லது "தக்கடி உணவு" சாப்பிட்டேன்" என்று கூறினார்கள்.
அவர்களிடம் நான், "உங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்கள், "ஆம்; உங்களுக்கும்தான் (பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள்)" என்று கூறிவிட்டு, "(நபியே!) உம்முடைய பாவத்திற்காகவும் இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும் பெண்களுக்காகவும் நீர் பாவமன்னிப்புக் கோருவீராக" (47:19) எனும் இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
மேலும் கூறினார்கள்: பிறகு நான் நபி (ஸல்) அவர்க(ளுடைய முதுகு)க்குப் பின்னே சுற்றிவந்தேன். அப்போது அவர்களுடைய இரு தோள்பட்டைகளுக்கிடையே இடப் பக்கத் தோளின் மேற்புறத்தில் கை முஷ்டியைப் போன்று (துருத்திக்கொண்டும்) கொப்புளங்களைப் போன்று தழும்பாகவும் உள்ள நபித்துவ முத்திரையைக் கண்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பும் அவர்கள் நபியாக அனுப்பப்பெற்றதும் அவர்களின் வயதும்.
4685. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு மிக உயரமானவர்களாகவும் இல்லை;குட்டையானவர்களாகவும் இல்லை. சுத்த வெள்ளை நிறமுடையவர்களாகவும் இல்லை; மாநிறம் கொண்டவர்களாகவும் இல்லை; கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை; (தொங்கலான) படிந்த முடிவுடையவர்களாகவும் இல்லை.
நாற்பதாவது வயதின் தொடக்கத்தில் அவர்களை அல்லாஹ் தன் தூதராக அனுப்பினான். அதன் பிறகு, அவர்கள் மக்கா நகரில் பத்து ஆண்டுகளும் மதீனா நகரில் பத்து ஆண்டுகளும் தங்கியிருந்தார்கள்.
அறுபதாம் வயதின் தொடக்கத்தில் அவர்களை இறைவன் இறக்கச் செய்தான். அப்போது அவர்களுடைய தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள்கூட இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் "அவர்கள் ஒளிரக்கூடியவர்களாக இருந்தார்கள்" என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 32 நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை?
4686. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். உமர் (ரலி) அவர்களும் அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள்.
அத்தியாயம் : 43
4687. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 33 நபி (ஸல்) அவர்கள் மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார்கள்?
4688. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் (நபியாக்கப்பட்ட பின்னர்) மக்காவில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "பத்து ஆண்டுகள்" என்று பதிலளித்தார்கள். நான், "ஆனால், பதிமூன்று ஆண்டுகள் தங்கியிருந்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்" என்று சொன்னேன்.
- அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உர்வா (ரஹ்) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் (நபியாக்கப்பட்ட பின்பு) மக்காவில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பத்து ஆண்டுகள்" என்று பதிலளித்தார்கள். "ஆனால்,பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தங்கியிருந்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்களே?" என்று நான் கேட்டேன்.
அப்போது உர்வா (ரஹ்) அவர்கள், "அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக!" என்று பாவ மன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்துவிட்டு, "இப்னு அப்பாஸ், அந்த (அபூகைஸ் என்ற) கவிஞரின் வரிகளிலிருந்தே அதை எடுத்துரைக்கிறார்"என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43
4689. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் பதிமூன்று ஆண்டுகள் வாழ்ந்தார்கள். தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4690. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் மக்காவில் பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள். (புலம் பெயர்ந்தபின்) மதீனாவில் பத்தாண்டுகள் இருந்தார்கள். தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள்.
அத்தியாயம் : 43
4691. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் அப்துல்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது அ(ங்கிருந்த)வர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வயது பற்றிப் பேசிக்கொண்டனர். சிலர், "அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட அதிக வயதுடையவராக இருந்தார்கள்" என்று கூறினர். அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் அறுபத்து மூன்று வயதில் இறந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அறுபத்து மூன்றாம் வயதில் கொல்லப் பட்டார்கள்" என்று கூறினார்கள்.
அப்போது அங்கிருந்த மக்களில் ஆமிர் பின் சஅத் (ரஹ்) எனப்படும் ஒருவர் கூறினார்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் பின்வருமாறு எங்களிடம் கூறினார்கள்:
(ஒரு முறை) நாங்கள் முஆவியா (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அ(ங்கிருந்த)வர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய வயது பற்றிப் பேசிக் கொண்டனர். அப்போது முஆவியா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் அறுபத்து மூன்று வயதில் இறந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அறுபத்து மூன்று வயதில் கொல்லப் பட்டார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 43
4692. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் (மக்களிடையே) உரையாற்றும்போது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் அறுபத்து மூன்றாம் வயதிலேயே இறந்தனர். நானும் அறுபத்து மூன்றாம் வயதிலேயே (இறக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4693. பனூ ஹாஷிம் குலத்தாரின் முன்னாள் அடிமையான அம்மார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும்போது அவர்களுக்கு எத்தனை வயது நடந்துகொண்டிருந்தது?" என்று கேட்டேன். "ஒரு கூட்டத்தில் உள்ள உம்மைப் போன்ற ஒருவருக்கு இந்த விவரம்கூட தெரியாமலிருக்கும் என்று நான் கருதவில்லை" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான், "இதைப் பற்றி மக்களிடம் நான் கேட்டு விட்டேன். ஆனால், அவர்கள் மாறுபட்ட கருத்தை என்னிடம் தெரிவித்தார்கள். ஆகவே, அதில் தங்களது கருத்தை அறிய விரும்பினேன்" என்று சொன்னேன்.
உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "நீர் எண்ணிக் கணக்கிடுவாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "நாற்பது வயதிலிருந்து தொடங்குவீராக. நாற்பதாவது வயதில் அவர்கள் நபியாக அனுப்பப்பெற்றார்கள். பதினைந்து ஆண்டுகள் மக்காவில் (சில வேளை எதிரிகளைப் பற்றிய) பயமின்றியும் (சில வேளை) பயத்துடனும் இருந்தார்கள். மதீனாவிற்குப் புலம்பெயர்ந்ததிலிருந்து பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4694. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறுபத்து ஐந்தாம் வயதில் இறந்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4695. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நபித்துவத்துக்குப்பின்) மக்காவில் பதினைந்து ஆண்டுகள் தங்கினார்கள். (அங்கு வானவர்) யாரையும் (நேரடியாகப்) பார்க்காமல் வெறும் (அசரீரி) சப்தத்தைக் கேட்டுக்கொண்டும் (வானவரின்) ஒளியைப் பார்த்துக்கொண்டும் ஏழு ஆண்டுகள் இருந்தார்கள். மேலும், எட்டு ஆண்டுகள் வேதஅறிவிப்பு (குர்ஆன்) அருளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இருந்தார்கள். (புலம்பெயர்ந்தபின்) மதீனாவில் பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள்.
4696. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் "முஹம்மத்" (புகழப்பட்டவர்) ஆவேன். நான் "அஹ்மத்" (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் "மாஹீ" (அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் (ஏக) இறைமறுப்பு அழிக்கப்படுகிறது. நான் "ஹாஷிர்" (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள் எனக்குப் பின்னால் ஒன்றுதிரட்டப்படுவார்கள். நான் "ஆகிப்" (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் இல்லை.
இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4697. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனக்கு (ஐந்து) பெயர்கள் உள்ளன. நான் "முஹம்மத்" (புகழப்பட்டவர்) ஆவேன். நான் "அஹ்மத்" (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் "மாஹீ" (அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் அல்லாஹ் (ஏக) இறைமறுப்பை அழிக்கின்றான். நான் "ஹாஷிர்" (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள் என் பாதங்களுக்குக் கீழே (என் தலைமையில்) ஒன்றுதிரட்டப்படுவார்கள். நான் "ஆகிப்" (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லை" என்று கூறினார்கள்.
அவர்களுக்கு அல்லாஹ் "ரஊஃப்" (பேரன்புடையவர்) என்றும் "ரஹீம்" (இரக்கமுடையவர்) என்றும் பெயர் சூட்டியுள்ளான்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உகைல் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் "ஆகிப்" என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "தமக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லாதவர்" என்று பதிலளித்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
மஅமர், உகைல் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "(என் மூலம் ஏக இறை)மறுப்பாளர்களை (அல்லாஹ் அழிக்கிறான்)"என்று இடம்பெற்றுள்ளது. ஷுஐப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இறைமறுப்பை (அழிக்கிறான்)" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
4698. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பல பெயர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். "நான் "முஹம்மத்" (புகழப்பட்டவர்), "அஹ்மத்" (இறைவனை அதிகமாகப் போற்றுபவர்), "முகஃப்பீ" (இறுதியானவர்), "ஹாஷிர்" (ஒன்றுதிரட்டுபவர்), "நபிய்யுத் தவ்பா" (பாவமன்னிப்புடன் வந்த தூதர்), "நபிய்யுர் ரஹ்மத்" (இரக்கத்துடன் நடந்துகொள்ளுமாறு போதிக்க வந்த தூதர்) ஆவேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 35 நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை மிகவும் அறிந்திருந்ததும் அவனை மிகவும் அஞ்சி நடந்ததும்.
4699. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு செயலைத் தாமும் செய்துவிட்டு (மற்றவர் களுக்கும்) அதைச் செய்ய அனுமதி அளித்தார்கள். இச்செய்தி நபித்தோழர்களில் சிலருக்கு எட்டியபோது, அதை விரும்பாததைப் போன்று அதைச் செய்வதிலிருந்து அவர்கள் தவிர்ந்து கொண்டனர்.
இச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (மக்களிடையே) நின்று உரையாற்றினார்கள்.
அப்போது "சிலருக்கு என்ன நேர்ந்தது? நான் ஒன்றைச் செய்வதற்கு அனுமதியளித்த செய்தி அவர்களுக்கு எட்டியும்கூட அதை அவர்கள் வெறுத்து, அதைச் செய்வதிலிருந்து தவிர்ந்துகொள்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களையெல்லாம் விட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன்; அவனை மிகவும் அஞ்சி நடப்பவன் ஆவேன்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4700. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்வதற்கு (மக்களுக்கு) அனுமதி யளித்தார்கள். மக்களில் சிலர் அதைச் செய்வதிலிருந்து தவிர்ந்துகொண்டனர். (அதைச் செய்வதை வெறுத்தனர்.) இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் கோபப்பட்டார்கள். எந்த அளவுக்கென்றால் கோபம் அவர்களது முகத்தில் வெளிப்பட்டது.
பிறகு, "சிலருக்கு என்ன நேர்ந்தது? எனக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள ஒரு விஷயத்தை வெறுக்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களையெல்லாம்விட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன்; அவனை மிகவும் அஞ்சி நடப்பவன் ஆவேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி நடப்பது கடமையாகும்.
4701. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவாசிகள், தம் பேரீச்சந்தோப்புகளுக்கு நீர் பாய்ச்ச பயன்படுத்திவந்த "ஷிராஜுல் ஹர்ரா" எனும் கால்வாய் தொடர்பாக அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களுடன் தகராறு செய்தார். அந்த அன்சாரித் தோழர், "மடையைத் திறந்துவிடுங்கள்; தண்ணீர் பாயட்டும்!" என்று சொன்னார். ஸுபைர் (ரலி) அவர்கள், (மடையைத் திறந்துவிட) மறுத்து விட்டார்கள். (இதையடுத்து) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுசென்றனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களிடம், "ஸுபைரே! (உங்கள் தோப்புக்கு) நீர் பாய்ச்சிவிட்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்குத் தண்ணீரைத் திறந்துவிடுங்கள்" என்று சொன்னார்கள்.
உடனே அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, "அவர் உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவர் முதலில் நீர் பாய்ச்சிக்கொண்டு, பிறகு எனக்குத் திறந்துவிடும்படி அவருக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?" என்று கேட்டார்.
இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறிவிட்டது. அவர்கள் (என் தந்தையிடம்), "ஸுபைரே! நீங்கள் உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சுங்கள். பிறகு வரப்புகள் எட்டும்வரை தண்ணீரை (மடை கட்டி)த் தேக்கி நிறுத்தி விடுங்கள்" என்று சொன்னார்கள்.
ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! "உம்முடைய இறைவன் மீதாணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட வழக்கில் உம்மை நீதிபதியாக்கி, பின்னர் நீர் வழங்குகின்ற தீர்ப்பால் தம் உள்ளங்களில் அவர்கள் எந்த அதிருப்தியும் கொள்ளாமல் (அதற்கு) முழுமையாகக் கட்டுப்படாத வரை நம்பிக்கை கொண்டவர்களாக ஆகமாட்டார்கள்" (4:65) எனும் இறைவசனம் இந்த விவகாரத்தில்தான் அருளப்பெற்றது என்று நான் எண்ணுகிறேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும், அவர்களிடம் தேவையற்ற விஷயங்கள் அல்லது மார்க்க விதிகளுக்குத் தொடர்பில்லாதவை மற்றும் நிகழாத விஷயங்கள் உள்ளிட்டவை குறித்து அதிகமாகக் கேள்விகள் கேட்காமலிருப்பதும்.
4702. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் எதை(ச் செய்ய வேண்டாமென) உங்களுக்குத் தடை செய்துள்ளேனோ அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். நான் எதை(ச்செய்யுமாறு) உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளேனோ அதை உங்களால் இயன்ற வரை செய்யுங்கள். ஏனெனில், உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தம் இறைத்தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4703. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் எதை(ச் செய்யுங்கள் என்றோ செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உங்களிடம் (உங்களது முடிவுக்கு) எது விடப்பட்டுள்ளதோ (அதைப் பற்றி எதுவும் கேட்காமல் நீங்களும் விட்டு விடுங்கள்). ஏனெனில், உங்களுக்குமுன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம்..." என்று (சிறிது வேறுபாட்டுடன்) காணப்படுகிறது.
அத்தியாயம் : 43
4704. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முஸ்லிம்களுக்குத் தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றி (என்னிடம்) கேள்வி கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது முஸ்லிம்களுக்குத் தடை செய்யப்பட்டு விடுமானால், அவர்தான் முஸ்லிம்களிலேயே முஸ்லிம்களுக்குப் பெரும் குற்றம் இழைத்தவர் ஆவார்.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4705. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்விகேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே மக்களுக்கு அது (இறைவனால்) தடை செய்யப்பட்டுவிடுமானால், அவர் தான் முஸ்லிம்களிலேயே முஸ்லிம்களுக்குப் பெருங்குற்றம் இழைத்தவர் ஆவார்.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவிக்கும்போது,) "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை நான் மனனமிட்டுள்ளதைப் போன்று இந்த ஹதீஸை நான் (நன்கு) மனனமிட்டுள்ளேன்" என்று கூறியதாகவும் காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அந்த மனிதர் (தடை செய்யப்படாத) ஒன்றைப் பற்றிக் கேட்டார்;அதைப் பற்றி துருவித் துருவி வினவினார்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
4706. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, தம் தோழர்கள் (ஒன்றைக் குறித்து அதிருப்தியாகப்) பேசியது தொடர்பாகத் தகவல் கிடைத்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். (அதில்) அவர்கள், "(சற்று முன்னர்) எனக்குச் சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. இந்த நாளைப் போன்று வேறெந்த நாளிலும் நல்லதையும் கெட்டதையும் நான் கண்டதேயில்லை. நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்;அதிகமாக அழுவீர்கள்" என்று குறிப்பிட்டார்கள்.
அதைவிட (மனவேதனை அளித்த) கடினமான ஒரு நாள் நபித்தோழர்களுக்கு வந்ததில்லை. அவர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதனர்.
உடனே உமர் (ரலி) அவர்கள் எழுந்து, "அல்லாஹ்வை (மட்டுமே) இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றோம்" என்று கூறினார்கள்.
அ(ங்கிரு)ந்த மனிதர் (ஒருவர்) எழுந்து, "என் தந்தை யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ன மனிதர்தான் உம்முடைய தந்தை" என்று சொன்னார்கள். அப்போதுதான் "இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சில விஷயங்கள் குறித்துக் கேள்வி எழுப்பாதீர்கள். அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்கு வருத்தம் தரும்" (5:101) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4707. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ன மனிதர்தான் உம்முடைய தந்தை" என்று கூறினார்கள். மேலும், (அதையொட்டியே) "இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சில விஷயங்கள் குறித்துக் கேள்வி எழுப்பாதீர்கள். அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்கு வருத்தம் தரும்" (5:101) எனும் இறைவசனம் முழுமையாக அருளப்பெற்றது.
அத்தியாயம் : 43
4708. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) சூரியன் (நடுவானிலிருந்து) சாய்ந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து மக்களுக்கு லுஹர் தொழுகை தொழுவித்தார்கள்.
(தொழுகை முடிந்து) சலாம் கொடுத்ததும் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி யுக முடிவு நாள் பற்றிக் குறிப்பிட்டார்கள். அந்த நாளுக்கு முன்பாக பயங்கரமான சம்பவங்கள் பல நிகழும் என்றும் குறிப்பிட்டார்கள். பிறகு "எதைப் பற்றியேனும் யாரேனும் என்னிடம் கேட்க விரும்பினால் அவர் என்னிடம் கேட்கலாம். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இடத்தில் நான் இருக்கும்வரை நீங்கள் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி உங்களுக்கு நான் தெரிவிக்காமலிருக்கமாட்டேன்" என்றும் சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டு மக்கள் அதிகமாக அழுதனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "கேளுங்கள் என்னிடம்" என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள் எழுந்து, "என் தந்தை, யார்?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உம்முடைய தந்தை ஹுதாஃபாதான்" என்று கூறிவிட்டு, "கேளுங்கள் என்னிடம்" எனத் திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்நிலையைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து, "அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதர் எனவும் நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றோம்" என்று கூறினார்கள்.
இவ்வாறு உமர் (ரலி) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மௌனமானார்கள். பின்னர், "(நீங்கள் விரும்பாதவை நிகழும் நாள்) நெருங்கிவிட்டது. முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சற்று முன்னர் (நான் தொழுதுகொண்டிருந்தபோது) இந்தச் சுவரி(ன் திசையி)ல் எனக்குச் சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. இந்த நாளைப் போன்று (வேறெந்த நாளிலும்) நல்லதையும் கெட்டதையும் நான் கண்டதேயில்லை" என்று சொன்னார்கள்.
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் தம்மிடம் கூறியதாக இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்:
அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள் (தம் தந்தை யார் என்று வினவியதால் அவருடைய) தாயார்,அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்களிடம், "உன்னைவிட பெற்ற தாயைப் புண்படுத்திய ஒரு மகனைப் பற்றி ஒருபோதும் நான் கேள்விப்பட்டதேயில்லை. அறியாமைக் காலப்பெண்கள் செய்யும் பாவச்செயல்களில் ஒன்றை உன் தாயும் செய்திருக்க, அவளை நீ மக்கள்முன் அம்பலப்படுத்தினால் (அவளுக்கு அவமானம் ஏற்படாது என) நீ அச்சமற்று இருப்பாயா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஒரு கறுப்பு அடிமையுடன் இணைத்து (அவர்தான் உன் தந்தை என்று) கூறியிருந்தாலும் நிச்சயமாக அவரோடு என்னை நான் இணைத்துக்கொண்டிருப்பேன். (அவருடைய பிள்ளை என்று என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளவே செய்வேன்)" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4709. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களுக்குப் பிடிக்காத) சில விஷயங்கள் குறித்து வற்புறுத்தி கேள்வி கேட்டுவந்தனர். ஆகவே, ஒரு நாள் அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி, "கேளுங்கள் என்னிடம்; (இன்று) நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி நான் உங்களுக்குத் தெளிவுபடுத்தாமல் இருக்கப்போவதில்லை" என்று (கோபத்துடன்) கூறினார்கள்.
இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டு மக்கள் வாய்மூடி அமைதியாகி விட்டனர். நபியவர்கள் ஏதோ அசாதாரண நிலையில் இருக்கலாம் என்று மக்கள் பயந்து விட்டனர்.
அப்போது நான் வலப் பக்கமும் இடப் பக்கமும் திரும்பிப் பார்க்கத் தலைப்பட்டபோது, (அங்கிருந்த) ஒவ்வொருவரும் தமது ஆடையால் தலையைச் சுற்றிப் போர்த்தியபடி அழுதுகொண்டிருந்தனர். அப்போது அந்தப் பள்ளிவாசலில் இருந்த ஒரு மனிதர் பேசத் தொடங்கினார். அம்மனிதர் பிறருடன் வழக்காடும்போது, அவருடைய தந்தையல்லாத மற்றொருவரின் மகன் என அழைக்கப்பட்டுவந்தார்.
அவர், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை யார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன் தந்தை ஹுதாஃபாதான்" என்று சொன்னார்கள். பிறகு (நபியவர்களின் நிலையைக் கண்ட) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், குழப்பங்களின் தீமையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரியபின் "நாங்கள் அல்லாஹ்வை (மட்டுமே) இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதர் எனவும் மனநிறைவுடன் ஏற்றோம்" என்று கூறலானார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "நன்மையிலும் தீமையிலும் இன்றைய தினத்தைப் போன்று எந்த நாளையும் ஒருபோதும் நான் கண்டதில்லை. எனக்கு (இன்று) சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. அவற்றை (மிஹ்ராபின்) இந்தச் சுவருக்கு அப்பால் நான் கண்டேன்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4710. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காத சில விஷயங்கள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டது. இவ்வாறு அதிகமாக வினவப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்து விட்டார்கள். பிறகு மக்களிடம், "நீங்கள் விரும்பிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்" என்று சொன்னார்கள்.
அப்போது ஒரு மனிதர் "என் தந்தை யார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உம்முடைய தந்தை ஹுதாஃபா தான்" என்று கூறினார்கள். மற்றொருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை யார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஷைபாவின் முன்னாள் அடிமையாயிருந்த சாலிம்தான் உம்முடைய தந்தை"என்று சொன்னார்கள். (இக்கேள்வியால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் தென்பட்ட கோபத்தைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 38 நபி (ஸல்) அவர்கள் (விவசாயம் போன்ற) உலக நடைமுறைகள் தொடர்பாக ஆலோசனை என்ற முறையில் குறிப்பிட்டவை தவிர, மார்க்க விஷயங்களில் அவர்கள் கூறிய அனைத்துக்கும் கட்டுப்படுவது கடமையாகும்.
4711. தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பேரீச்ச மரங்களின் உச்சியில் இருந்து கொண்டிருந்த (மதீனாவாசிகள்) சிலரைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது, "இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், "பெண் மரங்களுடன் ஆண் மரங்களை இணைத்து ஒட்டுச் சேர்க்கை செய்து (பெண் மரங்களை) சூல் கொள்ளச் செய்கின்றனர்" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதனால் பயனேதும் ஏற்படும் என்று நான் கருதவில்லை" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைப் பற்றி (மதீனா விவசாயிகளிடம்) தெரிவிக்கப்பட்டபோது,அவர்கள் ஒட்டுச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். (அந்த ஆண்டில் அவர்களுக்கு மகசூல் பாதிக்கப்பட்டது.)
இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, "அ(வ்வாறு செய்வ)தனால் அவர்களுக்குப் பயன் ஏற்படுமானால் அவ்வாறு செய்து கொள்ளட்டும். நான் எனது யூகத்தையே தெரிவித்தேன். யூகத்தை தெரிவித்ததை வைத்து என்மீது குற்றம் சாட்டாதீர்கள். ஆயினும், நான் உங்களிடம் அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். ஏனெனில், நான் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைக்கமாட்டேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4712. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்ச மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்துகொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை சூல் கொள்ளச் செய்வதாக அவர்கள் கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். மக்கள் "(வழக்கமாக) இவ்வாறே நாங்கள் செய்துவருகிறோம்" என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் நன்றாயிருந்திருக்கலாம்" என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டுவிட்டனர். அந்த வருடத்தில் கனிகள் "உதிர்ந்துவிட்டன" அல்லது "குறைந்து விட்டன".
அதைப் பற்றி மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அவர்கள், "நான் ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே" என்று சொன்னார்கள்.
(இவ்வாறே சொன்னார்கள்) அல்லது இதைப் போன்று சொன்னார்கள் என அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அஹ்மத் பின் ஜஅஃபர் அல்மஅகரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆகவே, (அந்த ஆண்டில்) கனிகள் உதிர்ந்துவிட்டன" என்று ஐயப்பாடின்றி உறுதியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
4713. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களுக்கு மகரந்தச் சேர்க்கை செய்துகொண்டிருந்த மக்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, "நீங்கள் (இவ்வாறு) செய்யாமலிருந்தால் நன்றாயிருக்குமே!" என்று சொன்னார்கள். ஆகவே, (அவர்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். அதனால் அந்த மகசூலில்) நன்றாகக் கனியாத தாழ்ந்த ரகக் காய்களே காய்த்தன.
அப்போது அவர்களைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றபோது, "உங்கள் (பேரீச்ச) மரங்களுக்கு என்ன நேர்ந்தது?"என்று கேட்டார்கள். மக்கள், "நீங்கள் இப்படி இப்படிச் சொன்னீர்கள். (அதனால் நாங்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டோம். அதனால் இந்த நிலை ஏற்பட்டுவிட்டது)" என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "உங்கள் உலக விவகாரங்கள் பற்றி (என்னைவிட) நீங்களே நன்கு அறிந்தவர்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதே ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாகவும் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 39 நபி (ஸல்) அவர்களைப் பார்த்தல், அவர்களைப் பார்க்க வேண்டுமென ஆசைப்படல் ஆகியவற்றின் சிறப்பு.
4714. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நிச்சயமாக உங்களிடம் ஒரு நாள் வரும். (அன்று) என்னை நீங்கள் காண இயலாது. (நான் இறந்துபோயிருப்பேன்.) ஆனால், உங்களில் ஒருவர் (அன்று சிறிது நேரம்) என்னைப் பார்ப்ப(தற்கு வாய்ப்புக் கிடைப்ப)தானது, அவருடைய குடும்பத்தாரையும் செல்வங்கள் அனைத்தையும்விட அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கும்.
அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
என்னைப் பொறுத்தவரை இந்த ஹதீஸின் பொருளாவது: அவர்களுடன் என்னையும் அவர் பார்ப்பதானது, அவருடைய குடும்பத்தாரையும் செல்வங்களையும்விட அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கும். இந்த ஹதீஸின் வாசகங்கள், முன் பின்னாக இடம்பெற்றுள்ளது என்பதே என் கருத்தாகும்.
அத்தியாயம் : 43
பாடம் : 40 (இறைத்தூதர்) ஈசா (அலை) அவர்களின் சிறப்புகள்.
4715. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மர்யமின் மைந்தருக்கு (ஈசாவுக்கு) மிகவும் நெருக்கமானவன் ஆவேன். நபிமார்கள் அனைவரும் தந்தைவழிச் சகோதரர்கள் ஆவர். எனக்கும் ஈசா அவர்களுக்குமிடையே வேறு எந்த இறைத்தூதரும் இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4716. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஈசா (அலை) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன். நபிமார்கள் அனைவரும் தந்தைவழிச் சகோதரர்கள் ஆவர். எனக்கும் ஈசா அவர்களுக்குமிடையே வேறெந்த இறைத்தூதரும் இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4717. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இம்மையிலும் மறுமையிலும் மர்யமின் மைந்தர் ஈசா அவர்களுக்கு மக்களிலேயே மிகவும் நெருக்கமானவன் ஆவேன்" என்று கூறினார்கள்.
அப்போது "அது எப்படி, அல்லாஹ்வின் தூதரே?" என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நபிமார்களின் அன்னையர்கள் (வேறுபட்ட) பலராய் இருந்தாலும் அவர்கள் அனைவரும் தந்தைவழிச் சகோதரர்கள் ஆவர். அவர்கள் அனைவரது மார்க்கமும் ஒன்றே. எங்கள் (இருவர்) இடையே எந்த இறைத்தூதரும் இல்லை" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43
4718. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"(புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அதை ஷைத்தான் தீண்டாமல் இருப்பதில்லை. ஷைத்தான் தீண்டுவதால் குழந்தை வீறிட்டழுகிறது; மர்யமின் புதல்வரையும் அவருடைய தாயார் மர்யமையும் தவிர" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், "நீங்கள் விரும்பினால், "இந்தக் குழந்தையையும் இதன் வழித்தோன்றல்களையும் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து பாதுகாக்குமாறு உன்னிடம் நான் கோருகிறேன் (என இம்ரானின் துணைவியார் இறைவனை வேண்டினார்)" (3:36) எனும் இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "குழந்தை பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் குழந்தை வீறிட்டழுகிறது" என்று (சிறு வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.
ஷுஐப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("ஷைத்தான் தீண்டுவதால்" என்பதைக் குறிக்க "மிம் மஸ்ஸத்திஷ் ஷைத்தான்"என்பதற்குப் பகரமாக) "மிம் மஸ்ஸிஷ் ஷைத்தான்" என்று (சிறிய மாற்றத்துடன்) காணப்படுகிறது.
அத்தியாயம் : 43
4719. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகன் (மனிதன்) ஒவ்வொருவரையும், தாய் வயிற்றிலிருந்து அவன் பிறக்கும் நாளில் ஷைத்தான் தீண்டவே செய்கிறான்; மர்யமையும் அவருடைய புதல்வரையும் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4720. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஷைத்தான் தீண்டுவதாலேயே குழந்தை பிறக்கும்போது வீறிட்டழுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4721. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மர்யமின் புதல்வர் (ஈசா (அலை) அவர்கள்), ஒரு மனிதர் திருடிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவனிடம், "நீ திருடினாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "யாரைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஏக இறை)வன் மீதாணையாக! இல்லை (நான் திருடவில்லை)" என்றான்.
உடனே ஈசா (அலை) அவர்கள், "அல்லாஹ்வை (முன்னிறுத்தி சத்தியமிட்டு அவன் கூறுவதால் அவன் கூறியதை) நான் நம்பினேன். (திருடுவதைப் போன்று நானாகவே எண்ணிக்கொண்டதால்) என்னை நான் நம்ப மறுக்கிறேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 41 இறையன்பர் இப்ராஹீம் (அலை) அவர்களின் சிறப்புகள்..
4722. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "படைப்பினங்களிலேயே மிகவும் சிறந்தவரே!" என்று அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அது இப்ராஹீம் (அலை) அவர்கள்தான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே..." என்று கூறினார்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
- மேற்கண்ட அதே ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4723. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது எண்பதாவது வயதில் வாய்ச்சியினால் விருத்த சேதனம் செய்துகொண்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4724. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறந்துவிட்டவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால்) நாமே இப்ராஹீம் (அலை) அவர்களைவிடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (ஆகவே,சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை.) இப்ராஹீம் (அலை) அவர்கள், "என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக" என்று கேட்ட போது, "(அதை) நீர் நம்பவில்லையா?"என (அல்லாஹ்) கேட்டான். அதற்கு அவர் "அவ்வாறன்று (நம்பியிருக்கிறேன்); எனினும், எனது உள்ளம் நிம்மதியடைவதற்காகவே (கேட்கிறேன்)" என்று கூறினார். (2:260)
லூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக! அவர்கள் வலுவான ஓர் ஆதரவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள்.
யூசுஃப் (அலை) அவர்கள் சிறையில் கழித்த அளவுக்கு நீண்ட காலத்தை நான் கழிக்க நேர்ந்திருந்தால், (விடுதலையளிக்க) அழைத்தவரிடம் (அவரது அழைப்பை ஏற்று விடுதலையாகிச் செல்ல) நான் ஒப்புக்கொண்டிருப்பேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4725. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"லூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு அருள்வானாக. வலுவான ஓர் ஆதரவாளனிடமே அவர்கள் தஞ்சம் புகுந்தார்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 43
4726. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் ஒருபோதும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை:
1. (இணைவைக்கும் திருவிழாவுக்கு இப்ராஹீம் (அலை) அவர்களை மக்கள் அழைத்தபோது) "நான் நோயுற்றிருக்கிறேன்" என்று (அதில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியது.
2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு, மக்கள் "இப்படிச் செய்தது யார்?"என்று கேட்டபோது) "ஆயினும், இவர்களில் பெரியதான சிலைதான் இதைச் செய்தது" என்று கூறியது.
3. இன்னொரு பொய் (தம் துணைவி) சாரா விஷயத்தில் அவர்கள் சொன்னதாகும்: (அதன் விவரம் வருமாறு:)
(ஒரு நாள்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியார்) சாரா (அலை) அவர்களுடன் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய நாட்டுக்குச் சென்றார்கள். சாரா (அலை) அவர்கள் மக்களிலேயே மிகவும் அழகிய பெண்மணியாக இருந்தார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் சாரா அவர்களிடம், "இந்தக் கொடுங்கோல் மன்னன், நீ என் துணைவி என அறிந்து கொண்டால் உன்னை என்னிடமிருந்து கைப்பற்றிக்கொள்வான். (நீ யார் என) அவன் உன்னிடம் கேட்டால் "நீ என் சகோதரி" என்று கூறிவிடு. ஏனெனில், இஸ்லாத்தில் நீ என் சகோதரிதான். மேலும், பூமியில் உன்னையும் என்னையும் தவிர முஸ்லிம்கள் வேறெவரும் இருப்பதாக நான் அறியவில்லை" என்று கூறினார்கள்.
பிறகு அவர்கள் அந்த நாட்டுக்குள் நுழைந்தபோது, அந்த மன்னனுக்கு வேண்டியவர்களில் ஒருவன் சாரா அவர்களைப் பார்த்து விட்டு மன்னனிடம் சென்று, "(மன்னா!) உங்கள் நாட்டுக்குப் பெண்ணொருத்தி வந்துள்ளாள். உங்களுக்குரியவளாக இருப்பதைத் தவிர வேறெதுவும் அவளுக்குத் தகாது" என்று சொன்னான். ஆகவே, மன்னன்,சாரா அவர்களிடம் ஆளனுப்பினான். சாரா அவனிடம் கொண்டுசெல்லப்பட்டார்கள்.
அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் தொழுவதற்காக நின்றுகொண்டார்கள். சாரா மன்னனிடம் சென்றபோது,அவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளாமல் சாராவை நோக்கித் தனது கையை நீட்டினான். உடனே அவனது கை (வலிப்பு நோயால்) கடுமையாக இழுத்துக்கொண்டது. உடனே அவன் சாரா அவர்களிடம், "அல்லாஹ்விடம் (என் கைகளை) விடுவிக்கும்படி எனக்காகப் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கிழைக்கமாட்டேன்" என்று சொன்னான்.
அவ்வாறே அவர்கள் பிரார்த்தித்தார்கள். (அவன் குணமடைந்ததும்) மீண்டும் அவன் (அவர்களை நோக்கி) கையை நீட்டினான். அப்போது முன்பைவிடக் கடுமையாக அவனுடைய கை இழுத்துக்கொண்டது. அவன் முன்பு போன்றே மீண்டும் (பிரார்த்திக்கும்படி) கூறினான். அவ்வாறே சாராவும் பிரார்த்தித்தார்கள்.
(குணமடைந்ததும்) மறுபடியும் அவன் கையை நீட்டியபோது முந்தைய இரு தடவைகள் இழுத்துக்கொண்டதைவிட மிகக் கடுமையாக அவனது கை இழுத்துக்கொண்டது. அப்போது அவன் எனது கையை விடும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். உனக்கு அல்லாஹ்வே சாட்சி. (இனி) உனக்கு நான் தீங்கிழைக்கமாட்டேன்" என்று கூறினான்.
அவ்வாறே சாரா அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவனது கை விடுவிக்கப்பட்டது. சாராவை அழைத்து வந்தவனை மன்னன் அழைத்து, "நீ ஒரு மனுஷியை என்னிடம் கொண்டுவரவில்லை. ஒரு ஷைத்தானையே என்னிடம் கொண்டுவந்துள்ளாய். இவளை எனது நாட்டிலிருந்து வெளியேற்றி விடு. இவளுக்கு ஹாஜர் எனும் (அடிமைப்) பெண்ணை அன்பளிப்பாகக் கொடுத்துவிடு" என்று கூறினான்.
சாரா தம்மை நோக்கி நடந்துவருவதை இப்ராஹீம் (அலை) அவர்கள் கண்டபோது (தொழுகையை முடித்துத்) திரும்பினார்கள். அவரிடம் "என்ன நடந்தது?" என்று கேட்டார்கள். சாரா அவர்கள், "நல்லதே நடந்தது. அத் தீயவனின் கையை இறைவன் தடுத்துவிட்டான். ஒரு பணியாளரையும் கொடுத்தான்" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"மாஉஸ் ஸமாஉ" (வான் மழை) குலத்தாரே! அவர் (ஹாஜர்)-தான் உங்கள் தாயார்.
அத்தியாயம் : 43
பாடம் : 42 மூசா (அலை) அவர்களின் சிறப்புகள்..
4727. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் ஒருவர் மற்றவரது வெட்கத்தலத்தைப் பார்த்துக்கொண்டு நிர்வாணமாகவே குளிப்பார்கள்; மூசா (அலை) அவர்கள் தனியாகவே குளிப்பார்கள். ஆகவே, இஸ்ர வேலர்கள், "இறைவன் மீதாணையாக! மூசாவுக்கு விரைவீக்கம் உள்ளது. எனவேதான், அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை" என்று (குறை) கூறினர்.
ஒரு முறை மூசா (அலை) அவர்கள் குளிப்பதற்குச் சென்றார்கள்; அப்போது ஆடையை(க் கழற்றி) ஒரு கல்மீது வைத்தார்கள். அவர்களது ஆடையோடு அந்தக் கல் ஓடியது. மூசா (அலை) அவர்கள் அந்தக் கல்லைப் பின்தொடர்ந்து "கல்லே! எனது ஆடை! கல்லே! எனது ஆடை! என்று சப்தமிட்டுக்கொண்டு வேகமாக ஓடினார்கள்.
இறுதியில் இஸ்ரவேலர்கள் (இருந்த பகுதிக்கு வந்தபோது அவர்கள்) மூசா (அலை) அவர்களின் வெட்கத்தலத்தைப் பார்த்துவிட்டு, "இறைவன் மீதாணையாக! மூசாவுக்கு எந்தக் குறையுமில்லை" என்று கூறினர்.
பின்னர் அந்தக் கல் அப்படியே நின்றது. அதற்குள் அனைவரும் மூசா (அலை) அவர்களை (நன்கு) பார்த்துவிட்டனர். பின்னர் மூசா (அலை) அவர்கள் தமது ஆடையை எடுத்துக் கொண்டு (தமது கையிலிருந்த தடியால்) கல்லை அடிக்கலானார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! மூசா (அலை) அவர்கள் அந்தக் கல்மீது அடித்ததால் அதன்மீது ஆறோ ஏழோ வடுக்கள் ஏற்பட்டன.
அத்தியாயம் : 43
4728. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மூசா (அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுகின்ற மனிதராக இருந்தார்கள். ஆகவே, நிர்வாணமாக அவர்கள் காணப்படவேமாட்டார்கள். எனவே, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் "மூசாவுக்கு விரைவீக்கம் உள்ளது" என்று கூறிக்கொண்டனர்.
இந்நிலையில் மூசா (அலை) அவர்கள் ஒரு குட்டையில் குளித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் தமது ஆடையை ஒரு கல்மீது வைத்தார்கள். அந்தக் கல் (ஆடையோடு) விரைந்தோடலாயிற்று. மூசா (அலை) அவர்கள் தமது தடியால் அதை அடித்துக்கொண்டு, "கல்லே! எனது ஆடை!" "கல்லே! எனது ஆடை!" என்று கூறிக்கொண்டே அதை விரட்டிக்கொண்டு ஓடினார்கள்.
இறுதியில் அந்தக் கல் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் பிரமுகர்கள் இருக்குமிடத்திற்குச் சென்று நின்றது. (இது குறித்தே) "நம்பிக்கை கொண்டோரே! மூசாவுக்குத் தொல்லை தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக்கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூசா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்" (33:69) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 43
4729. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மலக்குல் மவ்த்" (உயிரை எடுத்துச்செல்ல வரும் வானவர்) மூசா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் வானவர் வந்த போது, மூசா (அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்து, அவரது கண்ணைப் பறித்துவிட்டார்கள். உடனே அந்த வானவர் தம் இறைவனிடம் திரும்பிச் சென்று "மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பிவிட்டாய்!" என்று கூறினார்.
அந்த வானவருக்கு மீண்டும் கண்ணைக் கொடுத்த இறைவன், "நீர் அவரிடம் திரும்பிச் சென்று அவரது கையை ஒரு காளை மாட்டின் முதுகின்மேல் வைக்கச் சொல்வீராக. (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவுக்கு) அவரது கை மறைக்கின்றதோ அதில் ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு இந்த உலகில் வாழ அவருக்கு அனுமதி உண்டு"என்று சொல்வீராக" என்றான்.
(அவ்வாறே அந்த வானவர் மூசா (அலை) அவர்களிடம் கூறியபோது) மூசா (அலை) அவர்கள், "இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடித்த) பிறகு என்ன நடக்கும்?" என்று கேட்டார்கள். இறைவன் "மரணம்தான்" என்று பதிலளித்தான்.
மூசா (அலை) அவர்கள், "அப்படியென்றால், இப்போதே (என் உயிரை எடுத்துக்கொள்)" என்று கூறிவிட்டு, (பைத்துல் மக்திஸ் எனும்) புனித பூமிக்கு நெருக்கமாக, அங்கிருந்து கல்லெறி தூரத்தில் தமது அடக்கத்தலம் அமைய வேண்டுமென அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இதை எடுத்துரைத்தபோது), "நான் அந்த இடத்தில் இருந்தால் செம்மணற்குன்றின் கீழே சாலையோரத்தில் அவர் அடக்கப்பட்டிருக்கும் இடத்தை உங்களுக்குக் காட்டியிருப்பேன்"என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4730. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மலக்குல் மவ்த்" (உயிரை எடுத்துச்செல்லவரும் வானவர்) மூசா (அலை) அவர்களிடம் வந்து, உங்கள் இறைவன் (உங்கள் உயிரை எடுத்து வருமாறு உத்தரவிட்டுள்ளான். அவனது) உத்தரவுக்குப் பணியுங்கள்" என்று கூறினார்.
உடனே மூசா (அலை) அவர்கள் வானவரை (முகத்தில்) அறைந்து, அவரது கண்ணைப் பெயர்த்துவிட்டார்கள். அந்த வானவர் இறைவனிடம் திரும்பிச் சென்று, "மரணத்தை விரும்பாத உன் அடியார் ஒருவரிடம் என்னை நீ அனுப்பிவிட்டாய்! அவர் எனது கண்ணைப் பறித்துவிட்டார்" என்று கூறினார்.
அவருக்கு மீண்டும் கண்ணை வழங்கிய இறைவன், "நீர் என் அடியாரிடம் திரும்பிச் சென்று, நீங்கள் உயிர்வாழத்தானே விரும்புகிறீர்கள்? அவ்வாறு நீங்கள் (இன்னும் நீண்ட நாட்கள்) உயிர்வாழ விரும்பினால், ஒரு காளை மாட்டின் முதுகின்மேல் கையை வையுங்கள்; (அதன் முதுகிலுள்ள முடிகளில்) உங்களது கை மறைக்கும் அளவுக்கு ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில்) நீங்கள் வாழலாம்" என்று சொல்வீராக என்று கூறினான்.
(அவ்வாறே அந்த வானவர் திரும்பிச் சென்று மூசா (அலை) அவர்களிடம் கூறியபோது) மூசா (அலை) அவர்கள், "(அத்தனை காலம் வாழ்ந்து முடிந்த) பிறகு என்ன நடக்கும்?" என்று கேட்டார்கள். வானவர், "பிறகு நீங்கள் மரணிக்கத்தான் வேண்டும்" என்றார்.
மூசா (அலை) அவர்கள், "அப்படியானால் இப்போதே விரைவாக (என் உயிரை எடுத்துக் கொள். இறைவா! பைத்துல் மக்திஸ் எனும் புனித பூமியிலிருந்து கல்லெறி தூரத்தில் என்னை இறக்கச் செய்து (அங்கேயே அடக்கம் செய்து)விடு"என்று வேண்டினார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (இப்போது) அந்த இடத்தில் இருந்தால், செம்மணற்குன்றின் கீழே சாலையோரமாக அவர் அடக்கப்பட்டிருக்கும் இடத்தை உங்களுக்குக் காட்டியிருப்பேன்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4731. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர் ஒருவர் (சந்தையில்) தமது சரக்கை எடுத்துக் காட்டியபோது, அவருக்குப் "பிடிக்காத" அல்லது "அவர் விரும்பாத" (குறைந்த) விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. (அறிவிப்பாளர் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் ஐயம்.)
அப்போது அந்த யூதர், "மனிதர்கள் அனைவரையும்விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக! இல்லை (இந்த விலை கட்டுப்படியாகாது)" என்று கூறினார். இதை அன்சாரி (முஸ்லிம்)களில் ஒருவர் கேட்டுவிட்டார். உடனே அந்த யூதரை முகத்தில் அறைந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, "மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்தவன்மீது சத்தியமாக! என்றா நீ கூறுகிறாய்?" என்று கேட்டார்.
உடனே அந்த யூதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "அபுல்காசிமே! (சிறுபான்மை மக்களான எங்கள் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக எங்களிடம் நீங்கள் வாக்குறுதி அளித்திருக்கும் அடிப்படையில்) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். இன்ன மனிதர் எனது முகத்தில் அறைந்துவிட்டார்" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த முஸ்லிமிடம்), "நீ ஏன் இவரது முகத்தில் அறைந்தாய்?" என்று கேட்டார்கள். "(அல்லாஹ்வின் தூதரே!), தாங்கள் எங்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கவே இவர் மனிதர்கள் அனைவரையும்விட மூசாவைத் தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக!" என்று (மூசா (அலை) அவர்களைச் சிறப்பித்துக்) கூறினார்" என்றார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். எந்த அளவுக்கென்றால், கோபக்குறி அவர்களது முகத்தில் தென்பட்டது. பிறகு கூறினார்கள்: இறைத் தூதர்களுக்கிடையே ("ஒருவர் மற்றவரைவிடச் சிறந்தவர்" என்று) ஏற்றத்தாழ்வு பாராட்டாதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில்) எக்காளம் ("ஸூர்") ஊதப்படும். உடனே வானங்களில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் மூர்ச்சையடைந்துவிடுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர.
பிறகு மற்றொரு முறை எக்காளம் ஊதப்படும். அப்போது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுபவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அந்த வேளையில் மூசா (அலை) அவர்கள் இறை அரியணையைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் "தூர் சினாய்" (மலையில் இறைவனைச் சந்தித்த) நாளில் மூர்ச்சையாகி விழுந்தது கணக்கி லெடுக்கப்(பட்டு,அங்கு அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்)பட்டதா? அல்லது எனக்கு முன்பே அவர் (மயக்கம் தெளிவிக்கப்பட்டு) எழுப்பப்பட்டுவிட்டாரா?" என்பது எனக்குத் தெரியாது. மேலும், யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்களைவிட ஒருவர் சிறந்தவர் என்று நான் ஒருபோதும் கூற மாட்டேன்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4732. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு யூதரும் ஒரு முஸ்லிமும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர். அந்த முஸ்லிம், "உலகத்தார் அனைவரைவிடவும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மேன்மை அளித்தவன் மீதாணையாக!" என்று (ஏதோ ஒரு விஷயத்தில் சத்தியமிட்டுக்) கூறினார். அதற்கு (பதிலாக) அந்த யூதர், "உலகத்தார் அனைவரைவிடவும் மூசா (அலை) அவர்களுக்கு மேன்மை அளித்தவன் மீதாணையாக!" என்று கூறினார்.
அதைக் கேட்டு (கோபம் கொண்ட) அந்த முஸ்லிம் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார். உடனே அந்த யூதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, தமக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்ததைத் தெரிவித்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த முஸ்லிமை வரவழைத்து), "மூசாவைவிட என்னைச் சிறப்பாக்கி (உயர்த்திப் பேசி)விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் (மறுமை நாளில்) மூர்ச்சையாகிவிடுவார்கள். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது மூசா (அலை) அவர்கள் இறை அரியணையின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்துவிட்டிருப்பாரா? அல்லது அவருக்கு மட்டும் இறைவன் (மூர்ச்சையடை வதிலிருந்து) விதிவிலக்கு அளித்திருப்பானா என்பது எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4733. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 43
4734. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "யூதர் ஒருவர் (ஒரு முஸ்லிமிடம்) முகத்தில் அறை வாங்கிக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்"என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
ஆயினும், அதில் "மூர்ச்சையடைந்துவிட்டவர்களில் மூசா (அலை) அவர்கள் (முதலாவதாக) மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா? அல்லது தூர்சினாய் மலையில் (இறைவனைப் பார்க்க முற்பட்டபோது) அடைந்த மூர்ச்சைக்குக் பகரமாக அத்தோடு போதுமென விடப்பட்டார்களா என்பது எனக்குத் தெரியாது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (சிறு வேறுபாட்டுடன்) காணப்படுகிறது.
அத்தியாயம் : 43
4735. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களுக்கிடையே ("ஒருவர் மற்றவரைவிடச் சிறந்தவர்" என) ஏற்றத்தாழ்வு கற்பிக்காதீர்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4736. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹத்தாப் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
4737. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் தொழுதுகொண்டிருந்தார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச்செல்லப்பட்ட இரவில் கடந்து சென்றேன்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 43 யூனுஸ் (அலை) அவர்கள் பற்றிய குறிப்பும், "நான் யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடச் சிறந்தவன்" என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த அடியாருக்கும் தகாது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும்.
4738. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"என் அடியார் ஒருவர் (தம்மைப் பற்றி) நான் யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது" என்று அல்லாஹ் கூறினான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4739. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "யூனுஸ் பின் மத்தா அவர்களைவிட நான் சிறந்தவன் என்று (என்னைப் பற்றிக் கூறுவது) எந்த அடியாருக்கும் தகாது" என்று கூறினார்கள். இவ்வாறு யூனுஸ் (அலை) அவர்களை, அவர்களுடைய தந்தையுடன் இணைத்து (மத்தாவின் மகன் யூனுஸ் என்று) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 44 யூசுஃப் (அலை) அவர்களின் சிறப்புகள்.
4740. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "மனிதர்களிலேயே இறைவனை அதிகமாக அஞ்சுபவர்தான்" என்று பதிலளித்தார்கள். உடனே மக்கள், "நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை" என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், இறைவனின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய புதல்வரான இறைத்தூதர் (இஸ்ஹாக்) உடைய புதல்வரான இறைத்தூதர் (யஅகூப்) உடைய புதல்வரான இறைத்தூதர் யூசுஃப் (அலை) அவர்கள்தான்" என்று பதிலளித்தார்கள். மக்கள், "இதைப் பற்றியும் நாங்கள் தங்களிடம் கேட்கவில்லை" என்று கூறினர்.
உடனே நபி (ஸல்) அவர்கள், "அரபியரின் மூலகங்கள் (எனப்படும் அரபியர் பரம்பரைகள்) குறித்தா என்னிடம் கேட்கிறீர்கள்? அறியாமைக் காலத்தில் மக்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் தான் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக்கொண்டால்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 45 ஸகரிய்யா (அலை) அவர்களின் சிறப்புகள்..
4741. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஸகரிய்யா (அலை) அவர்கள் தச்சுத் தொழில் செய்பவராக இருந்தார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அத்தியாயம் : 43
பாடம் : 46 களிர் (அலை) அவர்களின் சிறப்புகள்..
4742. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "(களிர் (அலை) அவர்களைச் சந்தித்த) மூசா, இஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பெற்ற மூசா (அலை) அவர்கள் அல்லர்; அவர் வேறு ஒரு மூசா என்று நவ்ஃப் அல்பிகாலீ கூறுகிறாரே?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "இறைவனின் விரோதி (யான அவர்) பொய்யுரைக்கிறார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக உபை பின் கஅப் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்"என்றார்கள்:
(ஒரு முறை) மூசா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல் மக்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் "மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு மூசா (அலை) அவர்கள் "(என்னைப் பொறுத்தவரையில்) நானே அறிந்தவன்" என்று கூறிவிட்டார்கள். "இது பற்றி அல்லாஹ்வே நன்கறிந்தவன்" என்று அவர்கள் (கூறியிருக்க வேண்டும்; ஆனால், அவ்வாறு அவர்கள்) கூறவில்லை.
இதனால் அல்லாஹ், மூசா (அலை) அவர்களைக் கண்டித்து, "இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகமாக அறிந்தவர்" என்று அவர்களுக்கு (வஹீ) அறிவித்தான்.
அதற்கு மூசா (அலை) அவர்கள், "என் இறைவா! அவரைச் சந்திப்பதற்கு எனக்கு வழி எப்படி?" என்று கேட்டார்கள். "நீங்கள் ஒரு கூடையில் ஒரு மீனை எடுத்துக்கொள்ளுங்கள். (அப்படியே கடலோரமாக நடந்து பயணம் செய்யுங்கள்.) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவறவிடுகிறீர்களோ அங்குதான் அவர் இருப்பார்" என்று அல்லாஹ் சொன்னான்.
(அவ்வாறே) மூசா (அலை) அவர்களும் அவர்களுடைய உதவியாளர் யூஷஉ பின் நூன் அவர்களும் நடந்தனர். மூசா (அலை) அவர்கள் ஒரு கூடையில் மீனை எடுத்துக்கொண்டு தம் உதவியாளருடன் நடந்து (இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகிலிருந்த) அந்தப் பாறைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு இருவரும் உறங்கினர்.
கூடையிலிருந்த அந்த மீன், கூடையிலிருந்து குதித்து வெளியேறிக் கடலில் விழுந்தது. அப்போது மீனுக்காக நீரோட்டத்தை அல்லாஹ் தடுத்துவிடவே, மீனைச் சுற்றி ஒரு வளையம் போல் நீர் ஆகிவிட்டது. அது அந்த மீனுக்குச் சுரங்கம் போல் ஆனது. அது மூசா (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய உதவியாளருக்கும் பெரும் வியப்பாக அமைந்தது.
பிறகு எஞ்சிய பகலிலும் இரவிலும் அவர்கள் இருவரும் நடந்தனர். மூசா (அலை) அவர்களின் (பயணத்) தோழர் மீனைப் பற்றி மூசா (அலை) அவர்களுக்குத் தெரிவிக்க மறந்துவிட்டார்.
(இரண்டாம் இரவு முடிந்து) காலை வேளையானபோது மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளரிடம், "நமது காலை உணவைக் கொண்டுவருக. நாம் இந்தப் பயணத்தில் மிகவும் களைப்பு அடைந்துவிட்டோம்" (18:62) என்று சொன்னார்கள்.
தமக்குக் கட்டளையிடப்பட்ட இடத்தைக் கடக்கும்வரை மூசா (அலை) அவர்களுக்குக் களைப்பு ஏற்படவில்லை. யூஷஉ பின் நூன், "நாம் அப்பாறையில் ஒதுங்கியபோது கவனித்தீர்களா? (அங்கு தான்) நான் மீனை மறந்துவிட்டேன். அதை (உங்களிடம்) கூறவிடாமல் ஷைத்தான் என்னை மறக்கச் செய்துவிட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமான முறையில் அமைத்துக்கொண்டது" (18:63) என்று கூறினார்.
அதற்கு மூசா (அலை) அவர்கள் "அதுதான் நாம் தேடிவந்த இடம்" என்று கூறினார்கள். உடனே அவர்கள் இருவரும் தம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த வழியே திரும்பினார்கள். இறுதியில் அந்தப் பாறைக்கு இருவரும் வந்துசேர்ந்தார்கள்.
அங்கு தம்மை முழுவதுமாக ஆடையால் மூடிக்கொண்ட ஒரு மனிதரை (களிரை)க் கண்டார்கள். அவருக்கு மூசா (அலை) அவர்கள் முகமன் (சலாம்) கூற, அம்மனிதர், "உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்? நீங்கள் யார்)?" என்று கேட்டார்.
அதற்கு மூசா (அலை) அவர்கள், "நான்தான் மூசா" என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், "இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசாவா?" என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள். அவர், "அல்லாஹ் உங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறியமாட்டேன். அல்லாஹ் எனக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று கூறினார்.
அதற்கு மூசா (அலை) அவர்கள், "உமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள நல்லறிவை நீர் எனக்குக் கற்றுத் தருவதற்காக நான் உம்மைப் பின்தொடரலாமா?" என்று அவரிடம் கேட்டார்கள்.
அதற்கு அம்மனிதர், "என்னுடன் பொறுமையாக இருக்க உங்களால் முடியாது; உங்களுக்குத் தெரியாத விஷயத்தில் உங்களால் எவ்வாறு பொறுமையாக இருக்க இயலும்?" என்று கேட்டார்.
அதற்கு மூசா (அலை) அவர்கள், "அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர். உமது எந்தக் கட்டளைக்கும் நான் மாறுசெய்யமாட்டேன்" என்று கூறினார்கள்.
அதற்கு களிர் அவர்கள், "நீங்கள் என்னைப் பின்தொடர்வதானால், நானாக எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் உங்களுக்குச் சொல்லாதவரையில் நீங்கள் என்னிடம் (அதைப் பற்றி ஏன், எதற்கு என்று விளக்கம்) கேட்கக் கூடாது"என்று சொன்னார். மூசா (அலை) அவர்கள் "ஆம் (அப்படியே செய்கிறேன்)" என்று (சம்மதம்) தெரிவித்தார்கள்.
பிறகு களிர் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் கடலோரமாக நடந்தனர். அப்போது மரக்கலம் ஒன்று அவர்களைக் கடந்துசென்றது. அப்போது அவர்கள் இருவரும் தங்களை ஏற்றிச் செல்லுமாறு மரக்கலக்காரர்களிடம் கோரினர். (ஏழைகளான மரக்கல உரிமையாளர்கள்) களிர் (அலை) அவர்களை அடையாளம் கண்டுகொண்டு,கட்டணம் ஏதுமின்றி அவர்களிரு வரையும் மரக்கலத்தில் ஏற்றிக்கொண்டனர்.
(அவர்களிருவரும் ஏறியமர்ந்ததும்) களிர் அவர்களின் கவனம் மரக்கலத்தின் (அடித்தளப்) பலகைகளில் ஒன்றை நோக்கிச் சென்றது. உடனே அதைக் கழற்றி (அந்த இடத்தில் முளைக்குச்சி ஒன்றை அறைந்து)விட்டார்கள்.
உடனே மூசா (அலை) அவர்கள், "கட்டணம் இல்லாமலேயே நம்மை ஏற்றிக்கொண்ட மக்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே ஓட்டை போடுகிறீர்களே? இதில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் பெரியதோர் (அபாயமான) காரியத்தைச் செய்துவிட்டீர்கள்" என்று கூறினார்கள்.
அதற்கு களிர் "என்னுடன் உங்களால் பொறுமையாக இருக்க முடியாது என்று உங்களிடம் நான் கூறவில்லையா?"என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், "நான் மறந்ததற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள். என் விஷயத்தில் சிரமத்தை ஏற்படுத்திவிடாதீர்கள்" என்று சொன்னார்கள்.
பிறகு இருவரும் மரக்கலத்திலிருந்து இறங்கி, கடலோரமாக நடந்துகொண்டிருந்த போது, சிறுவன் ஒருவன் மற்றச் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். உடனே களிர் (அலை) அவர்கள் அச்சிறுவனின் தலையைப் பிடித்துத் தமது கரத்தால் திருகிக் கொன்றுவிட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள் களிர் அவர்களிடம், "எந்த உயிரையும் கொல்லாத, ஒரு பாவமும் அறியாத உயிரைக் கொன்றுவிட்டீரே! தகாத காரியத்தைச் செய்துவிட்டீரே!" என்று கூறினார்கள்.
அதற்கு களிர், "நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று (முன்பே) உங்களிடம் நான் கூறவில்லையா?" என்று கேட்டார்.
(அறிவிப்பாளர்) கூறுகிறார்: இம்முறை களிர் (அலை) அவர்கள் சொன்னது, முதல் முறை சொன்னதைவிடக் கடுமையானதாகும்.
பிறகு மூசா (அலை) அவர்கள், "இதற்குப் பிறகு நான் உங்களிடம் ஏதாவது (விளக்கம்) கேட்டால் என்னை உம்முடன் சேர்த்துக்கொள்ள வேண்டாம். (இரு முறை) நான் கூறிய சமாதானத்தை ஏற்றுக் கொண்டுவிட்டீர்" என்று சொன்னார்கள்.
தொடர்ந்து இருவரும் நடந்து, முடிவில் ஒரு கிராமத்தாரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டார்கள். அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அங்கு கீழே விழலாமா என யோசித்துக்கொண்டிருந்த -சாய்ந்த நிலையில் இருந்த- ஒரு சுவரைக் கண்டார்கள். உடனே அம்மனிதர் இவ்வாறு தமது கரத்தால் அதை(த் தூக்கி) நிறுத்தினார்.
அப்போது மூசா (அலை) அவர்கள், "இவர்களிடம் நாம் வந்து (உணவு கேட்டு)ம் இவர்கள் நம்மை உபசரிக்கவில்லை;உணவளிக்கவுமில்லை. (அவ்வாறிருந்தும் விழவிருந்த அவர்களது சுவரைத் தூக்கி நிறுத்திவிட்டீர்கள்.) நீங்கள் நினைத்திருந்தால் இதற்குக் கூலி பெற்றிருக்கலாமே!" என்றார்கள்.
களிர் (அலை) அவர்கள், "இதுவே நானும் நீங்களும் பிரிய வேண்டிய நேரம். உங்களால் பொறுமையாக இருக்க முடியாத (இம்மூன்று) செயல்களுக்கான விளக்கத்தை உங்களுக்கு (இப்போது) கூறுகிறேன்" என்று கூறினார்கள்.
(இந்நிகழ்ச்சியை கூறிக்கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மூசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரியட்டும். அவர் பொறுமையாக இருந்திருப்பாரானால், அவ்விருவர் பற்றிய (இன்னும்) பல தகவல்கள் நமக்கு எடுத்துரைக்கப்பட்டிருக்குமே என்று நான் ஆசைப்பட்டதுண்டு" என்று கூறினார்கள்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முதல் தடவை மூசா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியினாலாகும்" என்றும் கூறினார்கள்.
(தொடர்ந்து அந்த நிகழ்ச்சியைக்) கூறினார்கள்:
(அப்போது) சிட்டுக் குருவியொன்று வந்து மரக்கலத்தின் விளிம்பின்மீது விழுந்தது. பிறகு (தனது அலகால்) கடலில் ஒரு முறை கொத்தி (நீர் அருந்தி)யது. அப்போது மூசா (அலை) அவர்களிடம் களிர், "உம்முடைய அறிவும் என்னுடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவோடு ஒப்பிடுகையில், இந்தச் சிட்டுக் குருவி (தனது அலகால்) இந்தக் கடலிலிருந்து எடுத்த (நீரின்) அளவுதான் (நம் அறிவு உள்ளது)" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (இந்நிகழ்ச்சி பற்றிக் கூறும் 18:79ஆவது வசனத்தின் மூலத்தை) "வ கான அமாமஹும் மலிக்குன் யஃகுது குல்ல சஃபீனத்தின் ஸாலிஹத்தின் ஃகஸ்பா" என்று ஓதுவார்கள். (பொருள்: அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் பழுதில்லாத நல்ல மரக்கலங்கள் ஒவ்வொன்றையும் அபகரித்துக் கொண்டிருந்தான்.) மேலும், (18:80ஆவது வசனத்தின் மூலத்தை) "வ அம்மல் ஃகுலாமு ஃப கான காஃபிரன்" என்று ஓதுவார்கள். (பொருள்: அச்சிறுவன் இறைமறுப்பாளனாக இருந்தான்.)
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4743. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "(பேச்சாளர்) நவ்ஃப் அல்பிகாலீ என்பார் கல்வியைத் தேடிச் சென்ற மூசா, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் (இறைத்தூதராக நியமிக்கப் பெற்ற) மூசா அல்லர் என்று கூறுகிறாரே?" எனக் கேட்கப்பட்டது.
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், "சயீதே! அவ்வாறு அவர் கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?"என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நவ்ஃப் பொய்யுரைக்கிறார்" என்று கூறிவிட்டு, உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாகப் பின் வருமாறு கூறினார்கள்:
அத்தியாயம் : 43
4744. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூசா (அலை) அவர்கள் தம் (பனூ இஸ்ரா யீல் சமுதாய) மக்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளையும் சோதனைகளையும் நினைவூட்டி (அறிவுரை கூறி)க் கொண்டிருந்தார்கள்.
அப்போது "இந்தப் பூமியில் என்னைவிடச் "சிறந்த" அல்லது "நன்கறிந்த" மனிதர் வேறெவரும் இல்லை" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், "உம்மைவிடச் சிறந்தவரை, அல்லது உம்மை விட அதிக ஞானம் உள்ளவரை நான் அறிவேன்" என அறிவித்தான்; "இந்தப் பூமியில் ஒரு மனிதர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகம் அறிந்தவர்" என்று கூறினான்.
மூசா (அலை) அவர்கள் "இறைவா! அவரை எனக்கு அறிவித்துக்கொடு" என்று கேட்டார்கள். அப்போது அவர்களிடம், "உப்பிட்ட மீனொன்றைப் பயண உணவாக எடுத்துக்கொண்டு (கடலோரமாகச்) செல்வீராக. அந்த மீனை எந்த இடத்தில் நீங்கள் தவறவிடுவீர்களோ அங்கு அவர் இருப்பார்" என்று கூறப்பட்டது.
அவ்வாறே மூசா (அலை) அவர்களும் அவர்களுடைய உதவியாளரும் (கடலோரமாக) நடந்து சென்று அந்தப் பாறையை அடைந்தனர். மூசா (அலை) அவர்கள் பாதை மாறி (தம் உதவியாளரை) விட்டுச் சென்றுவிட்டார்கள்.
அப்போது (உதவியாளரின் கூடையிலிருந்த) மீன் குதித்துத் தண்ணீரில் விழுந்துவிட்டது. அது சென்ற நீர்த்தடம் இணையாமல் வளையம் போன்று மாறிவிட்டது.
அப்போது அவர்களுடைய உதவியாளர், "நான் இறைத்தூதரிடம் சென்று, இதைப் பற்றி தெரிவிக்க வேண்டாமா?" என்று கூறிக்கொண்டு, (மூசா (அலை) அவர்களிடம்) சென்றார். ஆனால், (அதைக் கூறவிடாமல்) அவருக்கு மறதி ஏற்படுத்தப்பட்டது.
அந்த இடத்தைவிட்டு அவர்கள் இருவரும் கடந்து சென்றதும், மூசா (அலை) அவர்கள் "நமது காலை உணவைக் கொண்டுவாரும்! இந்தப் பயணத்தில் நாம் களைப்படைந்து விட்டோம்" என்று கூறினார்கள்.
அந்த இடத்தைக் கடக்கும்வரை அவர்கள் இருவருக்கும் களைப்பு ஏற்படவில்லை. அந்த இடத்தைக் கடந்ததும் உதவியாளர் (மீன் தப்பிச் சென்றுவிட்டதைப் பற்றி) நினைத்தார். "கவனித்தீர்களா? நாம் அந்தப் பாறை அருகில் ஒதுங்கியபோது அந்த மீனை நான் மறந்து விட்டேன். அதைப் பற்றிக் கூறவிடாமல் ஷைத்தான் என்னை மறக்கவைத்துவிட்டான். அது கடலில் ஆச்சரியமான முறையில் தனது வழித்தடத்தை அமைத்துச் சென்றது" என்று கூறினார்.
மூசா (அலை) அவர்கள், "அதுதான் நாம் தேடிவந்த இடம்" என்று கூறியபடி, தம் அடிச் சுவடுகளைப் பின்பற்றி வந்த வழியே அவ்விருவரும் திரும்பினர். அப்போது அந்த மீன் குதித்தோடிய இடத்தை உதவியாளர் காண்பித்தார். மூசா (அலை) அவர்கள், "இதுதான் எனக்குச் சொல்லப்பட்ட இடமாகும்" என்று கூறிவிட்டு, அவரைத் தேடிக்கொண்டு சென்றார்கள்.
அங்கு ஆடையால் போர்த்தியபடி "பிடரியின் மீது" அல்லது "நடுப் பிடரியின் மீது" மல்லாந்து களிர் (அலை) அவர்கள் படுத்திருந்தார்கள். மூசா (அலை) அவர்கள் "உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்" என்று சொன்னார்கள். உடனே களிர் அவர்கள் தமது முகத்திலிருந்து ஆடையை விலக்கி "வ அலைக்குமுஸ் ஸலாம்" என்று பதில் சலாம் சொல்லிவிட்டு, "நீங்கள் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) "நான்தான் மூசா" என்றார்கள்.
களிர் அவர்கள், "எந்த மூசா?" என்று கேட்டார்கள். மூசா (அலை) அவர்கள், "பனூ இஸ்ராயீல் (சமுதாய மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பெற்ற) மூசா" என்று பதிலளித்தார்கள். "எதற்காக வந்துள்ளீர்கள்?" என்று களிர் அவர்கள் கேட்க, "உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக நான் (உங்களிடம்) வந்துள்ளேன்" என்று மூசா (அலை) அவர்கள் கூறினார்கள்.
அதற்கு களிர் (அலை) அவர்கள், "என்னுடன் உங்களால் பொறுமையாக இருக்க இயலாது. உங்களுக்கு ஞானமில்லாத ஒரு விஷயத்தில் உங்களால் எவ்வாறு பொறுமையாக இருக்க முடியும்? எதைச் செய்ய வேண்டுமென எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளதோ அதை நான் செய்வதை நீங்கள் கண்டால், உங்களால் பொறுமையாக இருக்க முடியாது"என்று கூறினார்.
அதற்கு மூசா (அலை) அவர்கள், "அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாக நீங்கள் காண்பீர்கள். உங்களின் எந்தக் கட்டளைக்கும் நான் மாறுசெய்யமாட்டேன்" என்று கூறினார்கள். "நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வருவதாயிருந்தால், எதைப் பற்றியும் நானாக (விளக்கம்) சொல்லாத வரை அதைப் பற்றி என்னிடம் நீங்கள் (விளக்கம்) கேட்கக் கூடாது" என்று களிர் (அலை) அவர்கள் சொன்னார்கள்.
பிறகு இருவரும் (கடலோரமாக) நடந்து சென்று ஒரு மரக்கலத்தில் ஏறினர். அப்போது களிர் (அலை) அவர்கள் வேண்டுமென்றே அந்த மரக்கலத்தில் ஓட்டை போட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள், "இதில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா ஓட்டை போடுகிறீர்? நீங்கள் மாபெரும் (அபாயமான) செயலையன்றோ செய்து விட்டீர்கள்?" என்று களிரிடம் கேட்டார்கள்.
அதற்கு களிர் அவர்கள், "உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று நான் சொல்லவில்லையா?"என்று கேட்டார்கள்.
மூசா (அலை) அவர்கள், "நான் மறந்துவிட்டதை வைத்து என்னைத் தண்டித்துவிடாதீர்கள். என் விஷயத்தில் சிரமத்தைக் கொடுத்துவிடாதீர்கள்" என்று கூறினார்கள்.
தொடர்ந்து இருவரும் நடந்தார்கள்; விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைச் சந்தித்தார்கள். உடனே களிர் அவர்கள் யோசிக்காமல் சென்று, அவர்களில் ஒரு சிறுவனைக் கொன்று விட்டார்கள். அதைக் கண்டு மூசா (அலை) அவர்கள்,பெரிதும் திடுக்குற்றார்கள்; வெறுப்படைந்தார்கள். எந்தப் பாவமும் அறியாத, எந்த உயிரையும் கொல்லாத உயிரைக் கொன்றுவிட்டீர்களே? தகாத காரியத்தைச் செய்துவிட்டீர்களே?" என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நிகழ்ச்சியைச் சொல்லிக்கொண்டே) இந்த இடத்திற்கு வந்தபோது "நம்மீதும் மூசா அவர்கள் மீதும் அல்லாஹ்வின் கருணை பொழியட்டும். மூசா (அலை) அவர்கள் மட்டும் அவசரப்பட்(டுக் கேள்வி கேட்)டிருக்காவிட்டால் இன்னும் (அரிய) விந்தை(யான பல காட்சி)களைக் கண்டிருப்பார். ஆயினும், (இவ்வாறு கேட்ட) மூசா (அலை) அவர்களை, தம் தோழர் (களிர்) முன்பாக நாணம் கவ்விக்கொண்டது" என்றார்கள்.
மூசா (அலை) அவர்கள் "இதற்குப் பிறகு ஏதேனும் உங்களிடம் நான் கேட்டால் உங்களுடன் என்னைச் சேர்த்துக்கொள்ளாதீர். என்னிடமிருந்து (இரு முறை) சமாதானத்தை ஏற்றுக் கொண்டீர்" என்று கூறினார்கள்.
மூசா (அலை) அவர்கள் பொறுமையாக இருந்திருந்தால், ஆச்சரியமானவற்றைக் கண்டிருப்பார்கள். -(பொதுவாகவே) நபி (ஸல்) அவர்கள் நபிமார்கள் எவரைப் பற்றியாவது பேச்செடுத்தால் "நம்மீதும் என்னுடைய இன்ன சகோதரர்மீதும் அல்லாஹ்வின் கருணை பொழியட்டும்" என்று முதலில் தமக்காகவும் பிறகு அந்த நபிக்காகவும் பிரார்த்திப்பார்கள்- நம் மீதும் அல்லாஹ்வின் கருணை பொழியட்டும்.
தொடர்ந்து அவர்கள் இருவரும் நடந்து, அற்பக் குணமுடைய ஒரு கிராமவாசிகளிடம் வந்தனர். அந்த மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று உணவு கேட்டுச் சுற்றிவந்தனர். அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர்.
அப்போது அங்கு விழுந்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்த ஒரு சுவரைக் கண்டனர். உடனே களிர் அதைத் தூக்கி நிறுத்தினார்கள். அதைக் கண்ட மூசா (அலை) அவர்கள், "நீர் நினைத்திருந்தால் இதற்குக் கூலியைப் பெற்றிருக்கலாமே?" என்று கூறினார்கள்.
களிர், "இதுவே எனக்கும் உமக்குமிடையே பிரியும் நேரமாகும்" என்று கூறி, மூசாவின் ஆடையைப் பிடித்தார். மேலும்,உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கத்தை உமக்குக் கூறுகிறேன். அந்த மரக்கலம் கடலில் தொழில் செய்யும் ஏழைகள் சிலருக்குரியது..." என்று தொடங்கி, வசனத்தின் (18:79) இறுதிவரை சொல்லிக்காட்டினார்கள்.
அந்த மரக்கலத்தை அபகரித்துக்கொள்பவன் வந்து, ஓட்டையான நிலையில் மரக்கலத்தைக் கண்டால் அதை விட்டுவிடுவான். பிறகு அவர்கள் மூங்கில் கழியால் (ஓட்டையை அடைத்து) அதைப் பழுது பார்த்துவிடுவார்கள்.
அந்தச் சிறுவனோ, படைக்கும்போதே "இறைமறுப்பாளன்" என (இறைவனால்) தீர்மானிக்கப்பட்டு படைக்கப்பட்டான். அவனுடைய பெற்றோர் அவன்மீது மிகுந்த பாசம் வைத்திருந்தனர். அவன் பருவ வயதை அடைந்தால் அவ்விருவரையும் தவறான வழியிலும் இறைமறுப்பிலும் தள்ளிவிடுவான். (இறைவன் கூறுகிறான்:) "அவ்விருவரின் இறைவன் அவனுக்குப் பதிலாக அவனைவிடச் சிறந்த தூய்மையான நெருங்கி உறவாடக்கூடிய குழந்தையை மாற்றாக வழங்குவான்" என நினைத்தோம். (18:81)
அந்தச் சுவர், அந்நகரத்தில் உள்ள இரண்டு அநாதைச் சிறுவர்களுக்கு உரியதாகும். அதற்குக் கீழே அவ்விருவருக்கும் உரிய புதையல் இருந்தது என்று அந்த வசனத்தின் (18:82) இறுதிவரை சொல்லிக்காட்டினார்கள்.
இதை உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4745. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் 18:77ஆவது வசனத்தின் மூலத்தில் ("லத்தகத்த அலைஹி அஜ்ரா" என்பதற்குப் பகரமாக) "லதகித்த அலைஹி அஜ்ரா" என்று ஓதினார்கள். (ஓதல் மாறுபட்டாலும் பொருள் ஒன்றே: இதற்குக் கூலியைப் பெற்றிருக்கலாமே!)
அத்தியாயம் : 43
4746. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"மூசா (அலை) (அவர்கள் சில ஞானங்களைக் கற்றுக்கொள்வதற்காக ஓர் அடியாரைத் தேடிச் சென்றார்கள் என அல்லாஹ் குறிப்பிடுகின்ற) அவர்களுடைய அந்தத் தோழர் யார்? அவர் "களிர்" அவர்கள்தானா என்பது தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஹுர்ரு பின் கைஸ் பின் ஹிஸ்ன் அல்ஃபஸாரீ என்பாரும் கருத்து வேறுபாடு கொண்டு வழக்காடிக் கொண்டனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அவர் களிர் (அலை) அவர்கள்தான்" என்றார்கள்.
அப்போது உபை பின் கஅப் அல்அன் சாரீ (ரலி) அவர்கள் அவ்வழியாகச் சென்றார்கள். அவர்களை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அழைத்து, "அபுத்துஃபைல் அவர்களே! இங்கே வாருங்கள். நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூசா (அலை) அவர்கள் யாரைச் சந்திக்கச் செல்வதற்கு இறைவனிடம் வழி கேட்டார்களோ அந்தத் தோழர் யார் என்பது தொடர்பாக வழக்காடிக்கொண்டோம். அவரது நிலை குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?" என்று வினவினார்கள்.
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) பதிலளித்தார்கள்:
(ஆம்;) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்: பனூ இஸ்ராயீல் மக்களின் ஒரு கூட்டத்தாரிடையே மூசா (அலை) அவர்கள் இருந்தபோது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "உங்களைவிட அறிந்தவர் எவரும் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்க, மூசா (அலை) அவர்கள், "இல்லை (என்னைவிட அறிந்தவர் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை)" என்று சொன்னார்கள்.
உடனே மூசா (அலை) அவர்களுக்கு, "இருக்கிறார்; அவர்தான் நம் அடியார் களிர் ஆவார்" என்று அல்லாஹ் (வஹீ) அறிவித்தான்.
அப்போது மூசா (அலை) அவர்கள் களிர் அவர்களைச் சந்திக்க வழி கேட்டார்கள். அப்போது அல்லாஹ் மீன் ஒன்றை அவர்களுக்கு அடையாளமாக ஆக்கி, "நீர் எந்த இடத்தில் மீனைத் தவற விடுகிறீரோ அந்த இடத்திலிருந்து (வந்த வழியே) திரும்பிச் செல்லும். அங்கு களிரைச் சந்திப்பீர்" என்று அவரிடம் கூறப்பட்டது.
அவ்வாறே மூசா (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய தூரம்வரை (தம் உதவியாளருடன்) நடந்தார்கள். பிறகு தம் ஊழியரிடம் "நமது காலை உணவைக் கொண்டுவாரும்" என்று கூறினார்கள்.
அதற்கு மூசா (அலை) அவர்களின் உதவியாளர், "கவனித்தீர்களா! நாம் அந்தப் பாறையில் ஒதுங்கியபோது அந்த மீனை நான் மறந்துவிட்டேன். அதைக் கூறவிடாமல் ஷைத்தான்தான் என்னை மறக்கச் செய்துவிட்டான்" என்று கூறினார்.
மூசா (அலை) அவர்கள், "அதுதான் நாம் தேடிவந்த இடம்" என்று தம் உதவியாளரிடம் சொல்ல, இருவரும் தம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்தவழியே திரும்பிச் சென்றார்கள். அங்கே களிர் (அலை) அவர்களைக் கண்டார்கள் (18:63-65). பின்னர் அவ்விருவர் தொடர்பாக அல்லாஹ் தனது வேதத்தில் எடுத்துரைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூசா (அலை) அவர்கள் கடலில் அந்த மீன் ஏற்படுத்திச் சென்ற வழித்தடத்தைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
Previous Post Next Post