அத்தியாயம் 15 ஹஜ்

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 15
ஹஜ்

பாடம் : 1 ஹஜ் அல்லது உம்ராவிற்காக ‘இஹ்ராம்’ கட்டியவருக்கு அனுமதிக்கப்பட்டவையும் அனுமதிக்கப்படாதவையும்; அவர் நறுமணம் பூசுவது தடை செய்யப்பட்டுள்ளதும்.
2188. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "இஹ்ராம்" கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(முழு நீளச்) சட்டைகள், தலைப் பாகைகள், முழுக் கால்சட்டைகள்,முக்காடுள்ள மேலங்கிகள் (புர்னுஸ்), காலுறைகள் (மோஸா) ஆகியவற்றை அணியாதீர்கள். காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறைகள் அணிந்துகொள்ளட்டும். ஆனால், காலுறை இரண்டும் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து)கொள்ளட்டும். குங்குமப்பூ மற்றும் "வர்ஸ்" ஆகிய வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட எந்த ஆடைகளையும் அணியாதீர்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2189. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், "இஹ்ராம்" கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "முழுநீளச் சட்டை, தலைப்பாகை, முக்காடுள்ள மேலங்கி, முழுக் கால்சட்டை, வர்ஸ் மற்றும் குங்குமப்பூ ஆகிய வாசனைச் செடிகளின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடை, காலுறைகள் ஆகியவற்றை "இஹ்ராம்" கட்டியவர் அணிய வேண்டாம். காலணிகள் கிடைக்காவிட்டால், காலுறைகள் அணியலாம். ஆனால், கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி காலுறைகளைக் கத்தரித்துக்கொள்ள வேண்டும்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2190. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இஹ்ராம்" கட்டியவர் குங்குமப்பூ மற்றும் "வர்ஸ்" ஆகிய வாசனைச் செடிகளின் சாயம் இடப்பட்ட ஆடையை அணியக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும், "("இஹ்ராம்" கட்டியிருக்கும்போது) காலணிகள் கிடைக்காதவர், காலுறைகள் அணியட்டும்; காலுறைகளைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்துக் கொள்ளட்டும்" என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அத்தியாயம் : 15
2191. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உரையில், "கீழங்கி கிடைக்காத ("இஹ்ராம்" கட்டிய)ஒருவர் முழுக்கால் சட்டை அணிவார்; காலணிகள் கிடைக்காத ஒருவர் காலுறைகள் அணிவார்" என்று குறிப்பிட்டதை நான் செவியுற்றேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நபி (ஸல்) அவர்கள் அரஃபா வில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டதை நான் செவியுற்றேன்" என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஷுஅபா (ரஹ்) அவர்களைத் தவிர மற்றவர்களது அறிவிப்பில் "அரஃபா உரையில் அவ்வாறு குறிப்பிட்டார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
2192. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இஹ்ராமின்போது) காலணிகள் கிடைக்காதவர் காலுறைகளை அணியட்டும்; கீழங்கி கிடைக்காதவர் முழுக் கால்சட்டை அணியட்டும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2193. ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) "ஜிஅரானா" எனுமிடத்தில் இருந்தபோது, அவர்களிடம் நறுமணம் (அல்லது மஞ்சள் நிற அடையாளம்) பூசப்பட்ட மேலங்கி அணிந்த ஒரு மனிதர் வந்தார். அவர், "நான் எனது உம்ராவில் என்ன செய்யவேண்டுமென உத்தரவிடுகிறீர்கள்?" என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) வந்தது. உடனே அவர்கள் ஒரு துணியால் மறைக்கப்பட்டார்கள். -(என் தந்தை) யஅலா (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது நான் அவர்களைப் பார்க்க ஆசைப்படுகிறேன்" என்று கூறுவார்கள். - "நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது அவர்களைப் பார்க்க நீர் விரும்புகிறீரா?" என உமர் (ரலி) அவர்கள் கேட்டுவிட்டு, (நபியவர்களை மறைத்திருந்த) அந்தத் துணியின் ஓரத்தை விலக்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் இளம் ஒட்டகம் குறட்டை விடுவதைப் போன்று குறட்டை விட்டுக்கொண்டிருந்ததை அப்போது நான் கண்டேன்.
பிறகு (அந்தச் சிரமநிலை) அவர்களைவிட்டு விலகியபோது, "என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?" என்றார்கள். (அந்த மனிதர் வந்ததும்), " "உம்மீதுள்ள மஞ்சள் நிற அடையாளத்தை" அல்லது "நறுமணத்தின் அடையாளத்தை" கழுவிக்கொள்க. உமது அங்கியை களைந்துகொள்க. மேலும், நீர் உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்க" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2194. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "ஜிஅரானா" எனுமிடத்தில் இருந்தபோது, அதிகமாக நறுமணம் பூசப்பட்ட, தைக்கப்பட்ட அங்கி அணிந்த ஒரு மனிதர் அவர்களிடம் வந்தார். அவர், "(தைக்கப்பட்ட) இந்த அங்கி என்மீதிருக்கும் நிலையிலும், அதிகமாக நறுமணம் பூசியிருக்கும் நிலையிலும் நான் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டிவிட்டேன்" என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உமது ஹஜ்ஜில் நீர் என்ன செய்வீர்?" என்று கேட்டார்கள். அவர், "இந்த ஆடையைக் களைந்துவிடுவேன்; என்மீதுள்ள இந்த நறுமணத்தைக் கழுவிக்கொள்வேன்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "உமது ஹஜ்ஜில் நீர் செய்வதை உம்ராவிலும் செய்துகொள்க" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2195. ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் "நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது நான் அவர்களைப் பார்க்க வேண்டும் (என ஆசையாக உள்ளது)" என்று கூறுவார்கள்.
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு அருகிலுள்ள) "ஜிஅரானா" எனுமிடத்தில் தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு மேலே துணியொன்று நிழலுக்காகக் கட்டப்பட்டிருந்தது. அவர்களுடன் உமர் (ரலி) அவர்கள் உள்ளிட்ட அவர்களுடைய தோழர்களில் சிலரும் இருந்தனர்.
அப்போது அதிகமாக நறுமணம் பூசிய, கம்பளியாலான அங்கியணிந்த ஒரு மனிதர் வந்தார். அவர், "அல்லாஹ்வின் தூதரே! அதிகமாக நறுமணம் பூசப்பட்ட அங்கியால் "இஹ்ராம்" கட்டியவர் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்.
அவரை நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, அமைதியாக இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெற்றது. உடனே உமர் (ரலி) அவர்கள், "இங்கு வாருங்கள்" என சைகையால் (என் தந்தை) யஅலா (ரலி) அவர்களை அழைத்தார்கள்.
(என் தந்தை யஅலா (ரலி) அவர்கள் கூறினார்கள்:)
நான் சென்று (நபி (ஸல்) அவர்களுக்கு மேலே கட்டப்பட்டிருந்த துணிக்குள்) எனது தலையை நுழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் குறட்டை விட்ட நிலையில் சிறிது நேரம் காணப்பெற்றார்கள். பிறகு அவர்களைவிட்டு அந்த (சிரம)நிலை விலகியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "சற்று முன்னர் என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?" என்றார்கள். அந்த மனிதர் தேடப்பட்டு, அழைத்துவரப்பட்டார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "உம்மீதுள்ள நறுமணத்தை மூன்றுமுறை கழுவிக்கொள்க. (தைக்கப்பட்டுள்ள உமது) அங்கியைக் களைந்து விடுக. (தைக்கப்படாத ஆடை அணிந்து கொள்க.) பிறகு உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்துகொள்க" என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2196. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "ஜிஅரானா" எனுமிடத்தில் இருந்தபோது, உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டிய ஒரு மனிதர் அவர்களிடம் வந்தார். அவர் தமது தாடியிலும் தலையிலும் மஞ்சள் நிற நறுமணம் பூசியிருந்தார்; (தைக்கப்பட்ட) அங்கி அணிந்திருந்தார். அவர், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் காணும் இந்த நிலையில் நான் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளேன்" என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீர் உமது அங்கியைக் களைந்துகொள்க; மஞ்சள் நிற நறுமணத்தைக் கழுவிக் கொள்க; உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்துகொள்க" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2197. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்களிடம் மேலங்கி அணிந்த ஒரு மனிதர் வந்தார். அவரது அங்கியில் நறுமணத்தின் அடையாளம் இருந்தது. அவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டிவிட்டேன். எனவே, நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் பதிலேதும் கூறாமல் அமைதியாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது, (துணி போன்றவற்றால்) அவர்களது தலைக்கு மேல் நிழலிட்டு அவர்களை உமர் (ரலி) அவர்கள் மறைப்பார்கள். நான் உமர் (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும் போது அவர்கள்மீது இடப்படும் துணிக்குள் நான் எனது தலையை நுழை(த்துப் பார்)க்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்" என்று சொல்லியிருந்தேன்.
இந்நிலையில் நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு அருளப்பெற்றபோது, உமர் (ரலி) அவர்கள் துணியால் அவர்களை மறைத்தார்கள். உடனே நான் அவர்களிடம் சென்று அந்தத் துணிக்குள் எனது தலையை நுழைத்து, அவர்களைக் கூர்ந்து நோக்கினேன். நபி (ஸல்) அவர்களுக்கு (வஹியின்போது ஏற்படும் சிரமநிலை அவர்களைவிட்டு) விலகியபோது, "சற்று முன்னர் என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?" என்றார்கள். உடனே அவர்களிடம் அந்த மனிதர் (வந்து) நின்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உமது அங்கியைக் களைந்துகொள்க; உம்மீதுள்ள நறுமணத்தின் அடையாளத்தைக் கழுவிக்கொள்க. நீர் உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்க" என்று கூறினார்கள்.7
அத்தியாயம் : 15
பாடம் : 2 ஹஜ் மற்றும் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டும் எல்லைகள்.
2198. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும், ஷாம்(சிரியா)வாசிகளுக்கு அல்ஜுஹ்ஃபாவையும், நஜ்த்வாசிகளுக்குக் கர்னுல் மனாஸிலையும், யமன்வாசிகளுக்கு யலம்லமையும் "இஹ்ராம்" கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த எல்லைகள், இ(ங்கு குறிப்பிடப்பெற்றுள்ள)வர்களுக்கும் ஹஜ் மற்றும் உம்ராவிற்காக இவ்வழிகளில் வருகின்ற மற்றவர்களுக்கும் பொருந்தும். அவர்கள் இவ்வூர்வாசிகளாக இல்லாவிட்டாலும் சரியே! இந்த எல்லைகளுக்குள் இருப்பவர்கள்,தாம் வசிக்கும் இடத்திலிருந்தே ("இஹ்ராம்" கட்டிக்கொள்வர்); மக்காவாசிகள் மக்காவிலிருந்தே "இஹ்ராம்" கட்டிக்கொள்வர்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2199. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும், ஷாம்(சிரியா)வாசிகளுக்கு அல்ஜுஹ்ஃபா வையும், நஜ்த்வாசிகளுக்குக் கர்னுல் மனாஸிலையும், யமன்வாசிகளுக்கு யலம்லமையும் "இஹ்ராம்" கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த எல்லைகள், இவர்களுக்கும் ஹஜ் மற்றும் உம்ராவிற்காக இவ்வழியே வரக்கூடிய ஒவ்வொருவருக்கும் பொருந்தும்;அவர்கள் இவ்வூர்வாசிகளாக இல்லாவிட்டாலும் சரியே! இந்த எல்லைகளுக்குள் இருப்பவர், தாம் பயணம் புறப்படும் இடத்திலிருந்தே "இஹ்ராம்" கட்டிக்கொள்வார். எனவே, மக்காவாசிகள் மக்காவிலிருந்தே "இஹ்ராம்" கட்டிக்கொள்வர்.
அத்தியாயம் : 15
2200. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும், ஷாம்(சிரியா)வாசிகள் அல்ஜுஹ்ஃபாவிலும், நஜ்த் வாசிகள் கர்னிலும் "இஹ்ராம்" கட்டுவார்கள்.
இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(தொடர்ந்து) யமன்வாசிகள் யலம்லமில் "இஹ்ராம்" கட்டுவார்கள் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என எனக்குச் செய்தி எட்டியது.
அத்தியாயம் : 15
2201. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும், ஷாம்(சிரியா)வாசிகள் அல்ஜுஹ்ஃபாவிலும், நஜ்த் வாசிகள் கர்னிலும் "இஹ்ராம்" கட்டுவார்கள்.
இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
யமன்வாசிகள் யலம்லமில் "இஹ்ராம்" கட்டுவார்கள் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என (நபித் தோழர்களால்) எனக்குச் சொல்லப்பட்டது; (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக) நான் அதைச் செவியுறவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2202. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவாசிகள் "இஹ்ராம்" கட்டும் இடம் துல்ஹுலைஃபா ஆகும். ஷாம்(சிரியா)வாசிகள் "இஹ்ராம்" கட்டும் இடம் "மஹ்யஆ" ஆகும். அதுவே அல்ஜுஹ்ஃபா எனும் இடமாகும். நஜ்த்வாசிகள் "இஹ்ராம்" கட்டும் இடம் "கர்ன்" ஆகும்.
இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
"யமன்வாசிகள் "இஹ்ராம்" கட்டும் இடம் யலம்லம் ஆகும்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என நபித்தோழர்கள் (என்னிடம்) கூறினர்; (நேரடியாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் இதைச் செவியுறவில்லை.
அத்தியாயம் : 15
2203. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும், ஷாம்(சிரியா)வாசிகள் அல்ஜுஹ்ஃபாவிலும், நஜ்த்வாசிகள் கர்னிலும் "இஹ்ராம்"கட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
யமன்வாசிகள் யலம்லமில் "இஹ்ராம்" கட்டுவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2204. அபுஸ்ஸுபைர் (முஹம்மத் பின் முஸ்லிம் - ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் "இஹ்ராம்" கட்டும் இடம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு கூறியதை நான் செவியுற்றேன். நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவே ஜாபிர் (ரலி) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள் என நான் எண்ணுகிறேன்.
அத்தியாயம் : 15
2205. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும், மற்றொரு வழியான அல்ஜுஹ்ஃபாவிலும் "இஹ்ராம்" கட்டுவார்கள். இராக்வாசிகள் தாத்து இர்க்கிலும், நஜ்த்வாசிகள் கர்னிலும், யமன் வாசிகள் யலம்லமிலும் "இஹ்ராம்" கட்டுவார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவே ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என நான் எண்ணுகிறேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 3 தல்பியாவும், அதன் வழிமுறையும் நேரமும்.
2206. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்க, வல்முல்க்க, லா ஷரீக்க லக்" என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன "தல்பியா" ஆகும்.
(பொருள்: இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். இறைவா! உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகின்றேன். உனக்கு இணை துணை கிடையாது. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையானவர் எவருமிலர்.)
இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "லப்பைக் லப்பைக் வ சஅதைக், வல்கைரு பி யதைக், லப்பைக் வர்ரஃக்பாஉ இலைக்க வல்அமல்" என்று கூடுதலாகக் கூறுவார்கள்.
(பொருள்: இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகின்றேன். நன்மைகள் உன் கைகளிலேயே உள்ளன. இதோ வந்துவிட்டேன். வேண்டுதல்கள் உன்னிடமே. நற்செயல்கள் உனக்காகவே.)
அத்தியாயம் : 15
2207. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபா பள்ளிவாசல் அருகில் தமது வாகன ஒட்டகம் சரியாக நிலைக்கு வந்த பிறகு "லப்பைக் அல்லாஹும்ம! லப்பைக் லப்பைக், லா ஷரீக்க லக்க லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்க வல்முல்க்க, லா ஷரீக்க லக்" என்று தல்பியா கூறுவார்கள்.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன "தல்பியா" ஆகும் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள் என மக்கள் கூறினர்.
மேலும், இதனுடன் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "லப்பைக் லப்பைக் வ சஅதைக். வல்கைரு பியதைக் லப்பைக். வர்ரஃக்பாஉ இலைக்க வல்அமல்" என்றும் கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாயிலிருந்து (நேரடியாகவே) தல்பியாவைக் கற்றேன்" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 15
2208. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையைக் களிம்பு தடவிப் படியவைத்திருந்த நிலையில் "லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்க, வல் முல்க்க லா ஷரீக்க லக்" என்று கூறியதை நான் கேட்டேன். அவர்கள் (தமது தல்பியாவில்) இதைவிடக் கூடுதலாக வேறெதையும் கூற மாட்டார்கள்.
இதன் அறிவிப்பாளரான சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் துல்ஹுலைஃபா பள்ளிவாசல் அருகில் தமது ஒட்டகம் சரியாக நிலைக்கு வந்ததும் இவ்வாறு தல்பியா கூறி "இஹ்ராம்" கட்டுவார்கள்" என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.
மேலும் (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியவாறே தல்பியா கூறி "இஹ்ராம்" கட்டுவார்கள். லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்! லப்பைக் வ சஅதைக். வல்கைரு ஃபீ யதைக். லப்பைக். வர்ரஃக்பாஉ இலைக்க வல்அமல்" எனக் கூறுவார்கள் என்றும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுவார்கள்.
அத்தியாயம் : 15
2209. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்பாளர்கள் (ஹஜ்ஜின்போது) "லப்பைக், லா ஷரீக்க லக்" (உன் அழைப்பை ஏற்றோம். உனக்கு இணை ஏதுமில்லை) என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்குக் கேடுதான். போதும்! போதும்! (இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்)" என்பார்கள். (ஏனெனில்,) அதன் பிறகு இணைவைப்பாளர்கள் "இல்லா ஷரீக்கன் ஹுவ லக்க. தம்லிகுஹு வ மா மலக் (ஆனால், உனக்கு ஓர் இணையாளன் இருக்கின்றான்; அவனுக்கு நீ எசமானன். அவன் எவருக்கும் எசமான் அல்லன்; அல்லது அவனுக்கும் அவனுடைய உடமைகளுக்கும் நீயே அதிபதி) என்றும் கூறுவார்கள். இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரும்போது, இவ்வாறு இணைவைப்பாளர்கள் கூறுவார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 4 மதீனாவாசிகள் துல்ஹுலைஃபா பள்ளிவாசலில் "இஹ்ராம்" கட்டவேண்டுமென வந்துள்ள கட்டளை.
2210. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இந்த "பைதாஉ" எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டினார்கள் என நீங்கள் பொய்யுரைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பள்ளிவாசல் -அதாவது துல்ஹுலைஃபா பள்ளிவாசலில்தான்- "இஹ்ராம்" கட்டினார்கள்.
அத்தியாயம் : 15
2211. சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "பைதாஉ" எனும் இடத்திலிருந்தே "இஹ்ராம்" கட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டால் அவர்கள், "பைதாஉ எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டினார்கள் என நீங்கள் பொய்யுரைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹுலைஃபா பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த) அந்த மரத்திற்குப் பக்கத்தில் தமது ஒட்டகம் சரியாக நிலைக்கு வந்தபோதே "இஹ்ராம்" கட்டினார்கள்" என்று கூறுவார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 5 வாகனம் புறப்படுவதற்குத் தயாராகி நிற்கும்போது ("இஹ்ராம்" கட்டி) "தல்பியா" கூறல்.
2212. உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "அபூஅப்திர் ரஹ்மான்! நீங்கள் நான்கு விஷயங்களைச் செய்வதை நான் பார்த்தேன். உங்கள் தோழர்களில் வேறெவரும் அவற்றைச் செய்வதை நான் பார்க்கவில்லை" என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "அவை யாவை, இப்னு ஜுரைஜே?" என்று கேட்டார்கள். "(கஅபாவைச் சுற்றி வரும்போது அதன் மூலைகளில் "ஹஜருல் அஸ்வத்" மற்றும் "ருக்னுல் யமானீ" ஆகிய) இரு மூலைகளை மட்டுமே நீங்கள் தொடக்கண்டேன். மேலும், பதனிடப்பட்ட (முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகளை நீங்கள் அணிவதை நான் கண்டேன். நீங்கள் (உங்கள் ஆடைக்கு) மஞ்சள் சாயமிடுவதைக் கண்டேன். மேலும், நீங்கள் மக்காவில் இருக்கும்போது, மக்கள் (துல்ஹஜ் மாத) தலைப் பிறையைக் கண்டவுடன் "இஹ்ராம்" கட்டினாலும், நீங்கள் மட்டும் துல்ஹஜ் எட்டாம் நாள் (யவ்முத் தர்வியா) வரும்வரை "இஹ்ராம்" கட்டாமலிருப்பதை நான் கண்டேன் (இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்?)" என்று கேட்டேன்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: கஅபாவின் மூலைகளைப் பொறுத்தவரை,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய) இரு மூலைகளை மட்டுமே தொட்டதை நான் பார்த்தேன் (அதனால்தான் நானும் அவ்வாறு செய்கிறேன்). (முடி அகற்றப்பட்ட) செருப்புகளைப் பொறுத்தவரை,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முடியில்லாத காலணிகளை அணிவதையும் அதனுடன் அங்கத் தூய்மை (உளூ) செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அவற்றை அணிவதை விரும்புகிறேன். மஞ்சள் நிறமோ, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதனால் (தமது ஆடைக்குச்) சாயமிடுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அதனால் (எனது ஆடைக்குச்) சாயமிடுவதை விரும்புகிறேன். (துல்ஹஜ் எட்டாவது நாள்) "இஹ்ராம்" கட்டுவதோ, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனம் பயணத்திற்குத் தயாராகி நிற்கும்வரை ("இஹ்ராம்" கட்டி) "தல்பியா" கூறுவதை நான் பார்த்ததில்லை.
அத்தியாயம் : 15
2213. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டையும் பன்னிரண்டு தடவைகள் நிறைவேற்றியுள்ளேன். நான் அவர்களிடம், "அபூஅப்திர் ரஹ்மான்! நீங்கள் நான்கு விஷயங்களைச் செய்வதை நான் பார்த்தேன்"என உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. ஆனால், "இஹ்ராம்" கட்டுவது தொடர்பான தகவல் வேறுவிதமாகக் காணப்படுகிறது.
அத்தியாயம் : 15
2214. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகன ஒட்டகத்தின் வளையத்தில் காலை வைத்து, ஒட்டகம் பயணத்திற்குத் தயாராகி நிற்கும்போது, துல்ஹுலைஃபாவில் ("இஹ்ராம்" கட்டி) தல்பியா கூறுவார்கள்.
அத்தியாயம் : 15
2215. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகம் நிலைக்கு வந்து பயணத்திற்குத் தயாரான போது "தல்பியா" கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2216. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் தமது வாகன ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து, அது நிலைக்கு வந்தபோது "தல்பியா" கூறியதை நான் பார்த்தேன்.
அத்தியாயம் : 15
பாடம் : 6 துல்ஹுலைஃபா பள்ளிவாசலில் தொழுதல்.
2217. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("இஹ்ராம்" கட்டி ஹஜ் கிரியைகளை) ஆரம்பித்த போது, இரவில் துல்ஹுலைஃபாவில் தங்கினார்கள்; அங்குள்ள பள்ளிவாசலில் தொழுதார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 7 "இஹ்ராம்" கட்டும்போது நறுமணம் பூசுதல்.
2218. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டும்போது, அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்காக அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன்; அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது, கஅபாவைச் சுற்றுவதற்கு ("தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு) முன்பும் அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2219. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டும்போது அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்காக அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன். அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது அவர்கள், கஅபாவைச் சுற்றுவதற்கு ("தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு) முன்பு அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுவதற்காகவும் அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன்.
இதை, காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2220. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்கு முன் அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்காக நான் அவர்களுக்கு நறுமணம் பூசுவேன்; அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும் போதும், அவர்கள் கஅபாவைச் சுற்றுவதற்கு ("தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு) முன்பு அவர்களுக்கு நான் நறுமணம் பூசுவேன்.
இதை, காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2221. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும், அவர்கள் "இஹ்ராம்" கட்டும்போதும் அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன்.
இதை, காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2222. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜிற்காக "இஹ்ராம்" கட்டிய போதும் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும் நான் எனது கையால் அவர்களுக்கு ("தரீரா" எனும்) வாசனைத் தூளைப் பூசிவிட்டேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2223. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியபோது எதனால் அவர்களுக்கு நறுமணம் பூசினீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மிக நல்ல வாசனைப் பொருளால் (நறுமணம் பூசிவிட்டேன்)" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2224. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்கு முன் என்னால் இயன்ற மிக நல்ல வாசனைப் பொருளை அவர்களுக்குப் பூசிவந்தேன். பின்னர் அவர்கள் "இஹ்ராம்" கட்டுவார்கள்.
அத்தியாயம் : 15
2225. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியபோது அவர்கள் "இஹ்ராம்" கட்டியதற்காகவும், அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோது அவர்கள் "தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு முன்பும் எனக்குக் கிடைத்தவற்றில் மிக நல்ல நறுமணத்தை அவர்களுக்கு நான் பூசிவிட்டேன்.
அத்தியாயம் : 15
2226. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது, அவர்களது தலை வகிட்டில் நறுமணப் பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், கலஃப் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது" எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை. அதற்குப் பகரமாக "அது அவர்கள் "இஹ்ராம்" கட்டியபோது பூசிய நறுமணமாகும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2227. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("இஹ்ராம்" கட்டி) "தல்பியா" கூறியபோது, அவர்களது தலை வகிட்டில் நறுமணப்பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2228. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தல்பியா" கூறியபோது, அவர்களது தலை வகிட்டில் நறுமணப்பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2229. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது அவர்களது தலை வகிட்டில் நறுமணப்பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2230. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது, அவர்களது தலை வகிட்டில் பூசியிருந்த நறுமணப்பொருள் ஒளிர்ந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
அத்தியாயம் : 15
2231. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்ட விரும்பினால் தம்மிடம் இருப்பவற்றிலேயே மிக நல்ல மணமுடைய வாசனை (எண்ணெ)யைப் பூசிக்கொள்வார்கள். பின்னர் அவர்களின் தலையிலும் தாடியிலும் அந்த எண்ணெய் ஒளிர்வதை நான் காண்பேன்.
அத்தியாயம் : 15
2232. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது, அவர்களது தலை வகிட்டில் பூசியிருந்த கஸ்தூரியின் ஒளியை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2233. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்கு முன்பும், துல்ஹஜ் பத்தாம் நாளில் அவர்கள் கஅபாவைச் சுற்றுவதற்கு ("தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு) முன்பும் கஸ்தூரி கலந்த நறுமணப்பொருளை அவர்களுக்கு நான் பூசிவந்தேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2234. முஹம்மத் பின் அல்முன்தஷிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், ஒருவர் நறுமணப்பொருளைப் பயன்படுத்திவிட்டுக் காலையில் "இஹ்ராம்" கட்டியவராக இருப்பதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் நறுமணம் கமழக் கமழக் காலையில் "இஹ்ராம்" கட்டியவனாக இருப்பதை விரும்பவில்லை. இவ்வாறு செய்வதைவிட தாரைப் பூசிக்கொள்வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்" என்று கூறினார்கள். பின்னர் நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று இப்னு உமர் (ரலி) அவர்கள் "நான் நறுமணம் கமழக் கமழக் காலையில் "இஹ்ராம்" கட்டியவனாக இருப்பதை விரும்பவில்லை. இவ்வாறு செய்வதைவிட தாரைப் பூசிக்கொள்வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்" எனக்கூறினார்கள் என்று தெரிவித்தேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியபோது அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன். பின்னர் அவர்கள் தம் துணைவியரிடம் சென்றுவிட்டுப் பின்னர் காலையில் "இஹ்ராம்" கட்டியவராக இருந்தார்கள்" என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2235. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நறுமணம் பூசிவிடுவேன். அவர்கள் தம் துணைவியரிடம் சென்றுவிட்டுப் பின்னர் நறுமணம் கமழக் கமழ காலையில் "இஹ்ராம்" கட்டியிருப்பார்கள்.
அத்தியாயம் : 15
2236. முஹம்மத் பின் அல்முன்தஷிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள், "நான் "இஹ்ராம்" கட்டியவனாக நறுமணம் கமழக் கமழக் காலை நேரத்தில் இருப்பதைவிட தாரைப் பூசிக்கொள்வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்" என்று கூறியதை செவியுற்றேன். ஆகவே, நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதை அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நறுமணம் பூசிவிட்டேன். அவர்கள் தம் துணைவியரிடம் சென்றுவிட்டு வந்து பின்னர் இஹ்ராம் கட்டியவர்களாகக் காலையில் இருந்தார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 8 "இஹ்ராம்" கட்டியவர் வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
2237. ஸஅப் பின் ஜஸ்ஸாமா அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையிலுள்ள) "அல்அப்வா" அல்லது "வத்தான்"எனுமிடத்தில் இருந்தபோது, நான் அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினேன். அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். எனது முகத்தில் ஏற்பட்ட (மாற்றத்)தை அவர்கள் கண்டபோது, "நாம் "இஹ்ராம்" கட்டியிருப்பதால் தான் இதை ஏற்க மறுத்தோம்" என்று கூறினார்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2238. மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2239. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் காட்டுக் கழுதையின் இறைச்சியை அன்பளிப்பாக வழங்கினேன்"என ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2240. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது, அவர்களுக்கு ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினார்கள். நபியவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். மேலும், "நாம் "இஹ்ராம்" கட்டியிருக்காவிட்டால், அதை உம்மிடமிருந்து ஏற்றிருப்போம்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2241. மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மன்ஸூர் பின் அல்முஅதமிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டுக் கழுதையின் ஒரு காலை அன்பளிப்பாக வழங்கினார்கள்" என்று காணப்படுகிறது. ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ரத்தம் சொட்டிக்கொண்டிருந்த காட்டுக் கழுதையின் பின் சப்பையை (அன்பளிப்பாக வழங்கினார்கள்)" என்று இடம் பெற்றுள்ளது. ஷுஅபா (ரஹ்) அவர்களது மற்றோர் அறிவிப்பில் "நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டுக் கழுதையின் விலாப் பகுதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள்" என்று வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2242. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என்னிடம்) ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் வந்தபோது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்த வேளையில், அவர்களுக்கு வேட்டைப்பிராணியின் இறைச்சி அன்பளிப்பாக வழங்கப்பட்டது குறித்து எனக்கு நீங்கள் எவ்வாறு அறிவித்தீர்கள்?" என நினைவுபடுத்துமாறு கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேட்டைப்பிராணியின் இறைச்சியில் ஒரு பகுதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நாம் இதை உண்ணமாட்டோம். (ஏனெனில்) நாம் "இஹ்ராம்" கட்டியுள்ளோம்" என்று கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2243. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஹஜ்ஜுக்காகப்) புறப்பட்டுச் சென்றோம். எங்களில் "இஹ்ராம்" கட்டியவர்களும் இருந்தனர்; "இஹ்ராம்" கட்டாதவர்களும் இருந்தனர். (நான் "இஹ்ராம்" கட்டியிருக்கவில்லை.) நாங்கள் (மதீனாவிற்கு அருகிலுள்ள) "அல்காஹா" எனுமிடத்தில் இருந்தபோது, என் தோழர்கள் எதையோ உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். நான் கூர்ந்து பார்த்தபோது ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. உடனே நான் என் குதிரையின் சேணத்தைப் பூட்டி, எனது ஈட்டியை எடுத்துக்கொண்டு (குதிரையில்) ஏறினேன். அப்போது என் (கையிலிருந்து) சாட்டை கீழே விழுந்துவிட்டது. அதை எடுத்துத் தருமாறு என் தோழர்களிடம் நான் கேட்டேன். அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருப்பதால் "அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த விஷயத்தில் உமக்கு எந்த உதவியும் செய்யமாட்டோம்" என்று கூறிவிட்டார்கள். எனவே, நானே இறங்கி அதை எடுத்துக்கொண்டு (குதிரையில்) ஏறி, மணல் மேட்டுக்கு அப்பாலிருந்த அந்தக் கழுதைக்குப் பின்னால் (மறைந்து) சென்று, அதை நோக்கி என் ஈட்டியை எறிந்தேன். பிறகு அதை அறுத்து என் தோழர்களிடம் கொண்டுவந்தேன். அப்போது அவர்களில் சிலர் "உண்ணுங்கள்" என்றனர். வேறு சிலர் "உண்ணாதீர்கள்" என்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு முன்னால் (சென்று ஓரிடத்தில் தங்கி) இருந்தார்கள். ஆகவே, நான் எனது குதிரையை முடுக்கி,அவர்களிடம் போ(ய் அதை "இஹ்ராம்" கட்டியவர்கள் உண்பதைப் பற்றி வினவி)னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அது அனுமதிக்கப்பெற்றதுதான். எனவே, அதை உண்ணுங்கள்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2244. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தில்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். மக்கா செல்லும் சாலை ஒன்றில் நான் இருந்தபோது, "இஹ்ராம்" கட்டியிருந்த என் தோழர்கள் சிலருடன் பின்தங்கி விட்டேன். அப்போது நான் "இஹ்ராம்" கட்டியிருக்கவில்லை. இந்நிலையில் நான் (வழியில்) காட்டுக் கழுதையொன்றைக் கண்டு, எனது குதிரைமேல் அமர்ந்தேன். அப்போது என் தோழர்களிடம் என் சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் ("இஹ்ராம்" கட்டியிருந்ததால் அதை எடுத்துத்தர) மறுத்துவிட்டார்கள். அவர்களிடம் எனது ஈட்டியை எடுத்துத் தரும்படி கேட்டேன். அதற்கும் அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆகவே, நானே (இறங்கி) அதையெடுத்து அந்தக் கழுதையைத் தாக்கிக் கொன்றேன். நபித்தோழர்களில் சிலர் அதிலிருந்து உண்டார்கள். வேறுசிலர் (உண்ண) மறுத்துவிட்டனர். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தபோது, அதைப் பற்றி அவர்களிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதுவெல்லாம் அல்லாஹ் உங்களுக்கு உண்ணக் கொடுத்த உணவாகும்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2245. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உங்களுடன் அதன் இறைச்சியிலிருந்து ஏதேனும் (எனக்கு எஞ்சி) உள்ளதா?" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2246. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா ஒப்பந்தம் நடந்த ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். என் தோழர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தனர். நான் "இஹ்ராம்" கட்டியிருக்கவில்லை. "ஃகைகா" எனுமிடத்தில் எதிரிகள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, (எதிரிகளை எதிர்கொள்ள) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முன்னே) சென்றார்கள். நான் மற்ற நபித்தோழர்களுடன் (சென்றுகொண்டு) இருந்தபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கலாயினர். நான் கூர்ந்து கவனித்தபோது, ஒரு காட்டுக் கழுதை எனக்குத் தென்பட்டது. உடனே நான் அதை ஈட்டியால் தாக்கி (ஓடவிடாமல்) நிறுத்திவிட்டேன். என் தோழர்களிடம் உதவி கோரினேன். ("இஹ்ராம்" கட்டியிருந்ததால்) அவர்கள் எனக்கு உதவ மறுத்துவிட்டனர். பிறகு அதன் இறைச்சியை நாங்கள் உண்டோம். இந்நிலையில் (எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடுவோமோ என்று நாங்கள் அஞ்சினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தேடி எனது குதிரையைச் சிறிது நேரம் விரைவாகவும் சிறிது நேரம் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் (வழியில்) நான் "பனூ ஃகிஃபார்" குலத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்தபோது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நீர் எங்கே சந்தித்தீர்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "அவர்களை "தஅஹின்" எனும் நீர்நிலையருகே (சந்தித்து) விட்டுவந்தேன். அப்போது அவர்கள் "சுக்யா" எனும் சிற்றூரில் மதிய ஓய்வெடுக்கப் போய்க்கொண்டிருந்தார்கள்" என்று கூறினார்.
நான் அவர்களைச் சென்றடைந்து, "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தோழர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) கூறினர். பயணத்தில் உங்களைப் பிரிந்துவிடுவோமோ என்று அவர்கள் அஞ்சினர். (எனவே, அவர்கள் வந்துசேரும்வரை) அவர்களுக்காக நீங்கள் காத்திருங்கள்" என்றேன். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காத்திருந்தார்கள். தொடர்ந்து நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் (ஒரு காட்டுக் கழுதையை) வேட்டையாடினேன். என்னிடம் அதில் சிறிதளவு எஞ்சியுள்ளது" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்முடனிருந்த) மக்களிடம், "உண்ணுங்கள்" என்றார்கள். அப்போது அம்மக்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தனர்.
அத்தியாயம் : 15
2247. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் நாங்களும் புறப்பட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் சிலரை வேறு வழியில் திருப்பிவிட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். அப்போது, "கடற்கரை வழியாகச் செல்லுங்கள்; நாம் சந்திப்போம்" என்று கூறினார்கள். அவ்வாறே நபித்தோழர்கள் கடற்கரை வழியாகச் செல்லத் தொடங்கினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி அவர்கள் திரும்பி வந்தபோது,என்னைத் தவிர அவர்கள் அனைவரும் "இஹ்ராம்" கட்டியிருந்தனர். நான் "இஹ்ராம்" கட்டியிருக்கவில்லை. இவ்வாறு அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, காட்டுக்கழுதைகளைக் கண்டனர். அவற்றை நான் தாக்கி, ஒரு பெட்டைக் கழுதையின் காலை வெட்டி (அதை வேட்டையாடி)னேன். பிறகு அவர்கள் (ஓரிடத்தில்) இறங்கி அதன் இறைச்சியைச் சாப்பிட்டனர்; "நாம் "இஹ்ராம்"கட்டிக்கொண்டே (வேட்டைப் பிராணியின்) இறைச்சியைச் சாப்பிட்டுவிட்டோமே" என்று கூறினர்.
பிறகு அந்தக் கழுதையின் இறைச்சியில் எஞ்சியுள்ளதை எடுத்துக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தோம்; அபூகத்தாதா "இஹ்ராம்" கட்டியிருக்கவில்லை. இந்நிலையில் நாங்கள் (வழியில்) காட்டுக் கழுதையைக் கண்டோம். அபூகத்தாதா அவற்றைத் தாக்கி, ஒரு பெட்டைக் கழுதையின் காலை வெட்டி (வேட்டையாடி)னார். பின்னர் நாங்கள் (ஓரிடத்தில்) இறங்கி அதன் இறைச்சியிலிருந்து சிறிதளவை உண்டோம். பிறகு "வேட்டையாடப்பெற்ற பிராணியின் இறைச்சியை இஹ்ராம் கட்டிய நிலையில் சாப்பிடுகிறோமே" என்று (எங்களிடையே) பேசிக் கொண்டோம். பிறகு அதன் இறைச்சியில் எஞ்சியதை எடுத்து வந்திருக்கிறோம்" என்று கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் எவரேனும் அதைத் தாக்குமாறு அவரைப் பணித்தாரா, அல்லது அதை நோக்கி எப்படியாவது சைகை செய்தாரா?" என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் "இல்லை" என்றனர். "அப்படியானால் அதன் எஞ்சிய இறைச்சியை நீங்கள் உண்ணுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2248. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஷைபான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உங்களில் யாரேனும் அதைத் தாக்குமாறு அவரைத் தூண்டினாரா, அல்லது தாக்குமாறு சைகை செய்தாரா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என இடம்பெற்றுள்ளது.
ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நீங்கள் சைகை செய்தீர்களா, அல்லது (அவருக்கு) உதவி செய்தீர்களா, அல்லது நீங்களே வேட்டையாடினீர்களா?" என்று கேட்டார்கள் எனக் காணப்படுகிறது.
ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் (அவருக்கு) உதவி செய்தீர்களா என்று கேட்டார்களா? அல்லது நீங்கள் வேட்டையாடினீர்களா என்று கேட்டார்களா" என்று எனக்குத் தெரியவில்லை.
அத்தியாயம் : 15
2249. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஹுதைபியா (ஒப்பந்தப்) போருக்குச் சென்றேன். அப்போது மக்களில் என்னைத் தவிர, மற்ற அனைவரும் உம்ரா விற்காக "இஹ்ராம்" கட்டியிருந்தனர். நான் (வழியில்) ஒரு காட்டுக் கழுதையை வேட்டையாடி என் தோழர்களுக்கு உண்ணக் கொடுத்தேன். அப்போது அவர்கள் அனைவரும் "இஹ்ராம்" கட்டியிருந்தனர். பிறகு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று "எங்களிடம் அதன் இறைச்சியில் சிறிதளவு எஞ்சியுள்ளது" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உண்ணுங்கள்" என்றார்கள். அப்போது அவர்கள் அனைவரும் "இஹ்ராம்" கட்டியிருந்தனர்.
அத்தியாயம் : 15
2250. மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "இஹ்ராம்" கட்டியவர்களாகப் புறப்பட்டோம். நான் "இஹ்ராம்" கட்டாதிருந்தேன்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேலும் அதில், "அ(ந்த மாமிசத்)தில் ஏதேனும் உங்களிடம் உள்ளதா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாங்கள், "அதன் கால் எங்களிடம் உள்ளது" என்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை வாங்கி உண்டார்கள்" என்றும் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2251. மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் "இஹ்ராம்" கட்டியிருந்த ஒரு குழுவினருடன் இருந்தேன். அப்போது நான் "இஹ்ராம்" கட்டாதிருந்தேன்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேலும், "உங்களில் யாரேனும் ஒருவர் (அதைக் கொல்லுமாறு) அவருக்கு சைகை செய்தாரா? அல்லது ஏதேனும் உத்தரவிட்டாரா?" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் தூதரே!" என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின் உண்ணுங்கள்" என்றார்கள் எனவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2252. அப்துர் ரஹ்மான் பின் உஸ்மான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு உம்ராப் பயணத்தில்) தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது நாங்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தோம். அப்போது அவர்களுக்கு (வேட்டையாடப்பட்ட) ஒரு பறவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தல்ஹா (ரலி) அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். எனவே, எங்களில் சிலர் அதைச் சாப்பிட்டனர். வேறுசிலர் (சந்தேகம் ஏற்பட்டதால் சாப்பிடாமல்) பேணுதலாக இருந்துவிட்டனர். தல்ஹா (ரலி) அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்தபோது, அதைச் சாப்பிட்டவர்களின் செயலைச் சரி கண்டார்கள் (குறை கூறவில்லை). மேலும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இ(வ்வாறு வேட்டையாடப்பட்ட)தைச் சாப்பிட்டிருக்கிறோம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 9 இஹ்ராம் கட்டியவர்களும் மற்றவர்களும் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியேயும் கொல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள (தொல்லை தரும்) உயிரினங்கள்.
2253. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு (வகை) உயிரினங்கள் தீங்கிழைப்பவை ஆகும். அவை புனித (ஹரம்) எல்லையிலும் வெளியிலும் கொல்லப்படும். (அவையாவன:) பருந்து, (நீர்க்)காகம், எலி, வெறிநாய்.
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் மிக்சம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்களிடம், "பாம்பைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அது அற்பமாக (அடித்து)க் கொல்லப்படும்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2254. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தீங்கிழைக்கக்கூடிய ஐந்து (வகை) உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியிலும் கொல்லப்படும். பாம்பு, நீர்க்காகம், எலி, வெறிநாய், பருந்து ஆகியவைதாம் அவை. - இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2255. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளேயும் கொல்லப்படும்.தேள், எலி, பருந்து, (நீர்க்)காகம்,வெறிநாய் ஆகியவைதாம் அவை.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2256. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளேயும் கொல்லப்படும். எலி, தேள், (நீர்க்)காகம், பருந்து,வெறிநாய் ஆகியவைதாம் அவை.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2257. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங்களைப் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியிலும் கொல்ல உத்தரவிட்டார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 15
2258. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒவ்வொன்றும் தீங்கிழைக்கக் கூடியவையாகும். அவை புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளேயும் கொல்லப்படும். (நீர்க்)காகம், பருந்து, வெறிநாய், தேள், எலி ஆகியவைதாம் அவை.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2259. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து உயிரினங்களைப் புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளே "இஹ்ராம்" கட்டிய நிலையில் ஒருவர் கொன்றுவிட்டாலும் அவர்மீது குற்றமேதும் இல்லை. எலி, தேள், (நீர்க்)காகம், பருந்து, வெறிநாய் ஆகியவைதாம் அவை.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு அபீ உமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "புனித இடங்களில்" என (பன்மையாக) வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2260. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து உயிரினங்கள் உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றும் தீங்கிழைக்கக்கூடியவை ஆகும். அவற்றைக் கொல்பவர்மீது எந்தக் குற்றமும் இல்லை. தேள், (நீர்க்)காகம், பருந்து, எலி, வெறிநாய் ஆகியவைதாம் அவை.
இதை நபி (ஸல்) அவர்களின் துணை வியார் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2261. ஸைத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், "இஹ்ராம் கட்டியிருப்பவர் எந்த உயிரினங்களைக் கொல்லலாம்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர் "எலி, தேள், பருந்து, வெறிநாய், (நீர்க்)காகம் ஆகியவற்றைக் கொல்ல "உத்தரவிடப்பட்டது" அல்லது "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்" என்று என்னிடம் தெரிவித்தார்" என விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2262. ஸைத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், "இஹ்ராம் கட்டிய ஒருவர் எந்த உயிரினங்களைக் கொல்லலாம்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர் "வெறிநாய், எலி, தேள், பருந்து, (நீர்க்)காகம், பாம்பு ஆகியவற்றைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுவந்தார்கள்" என்று என்னிடம் கூறினார்" என்றார்கள்.
இவற்றை ஒருவர் தொழுகையில் இருக்கும்போதும் கொல்லலாம் என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2263. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இஹ்ராம்" கட்டியிருக்கும் ஒருவர் ஐந்து உயிரினங்களைக் கொல்வது குற்றமாகாது. (நீர்க்)காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியவைதாம் அவை.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2264. அப்துல் மலிக் பின் அப்தில் அஸீஸ் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம், "இஹ்ராம் கட்டியவர் எந்த உயிரினங்களைக் கொல்ல அனுமதி உண்டு என்பது குறித்து இப்னு உமர் (ரலி) அவர்கள் என்ன கூறினார்கள்?" என்று கேட்டேன். அதற்கு நாஃபிஉ (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: "நபி (ஸல்) அவர்கள் ஐந்து உயிரினங்களை ஒருவர் கொன்றுவிட்டாலும் அதைக் கொன்றதற்காக அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை; (நீர்க்)காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியவைதாம் அவை என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் ஒருவரது அறிவிப்பில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. (பின்வரும் ஹதீஸில்) இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்களும் இப்னு ஜுரைஜ் போன்றே அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2265. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஐந்து உயிரினங்களில் ஒன்றைப் புனித (ஹரம்) எல்லைக்குள் கொன்றாலும் எந்தக் குற்றமுமில்லை" என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன் என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
2266. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து உயிரினங்களை ஒருவர் இஹ்ராம் கட்டிய நிலையில் கொன்றுவிட்டாலும் அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. தேள், எலி,வெறி நாய், (நீர்க்)காகம், பருந்து ஆகியவைதாம் அவை.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படும் வாசகமே இங்கு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 10 இஹ்ராம் கட்டியவர்,தமது தலையில் பாதிப்பு ஏதும் இருந்தால் தலை (முடி)யை மழித்துக்கொள்ளலாம்;அதற்காகப் பரிகாரம் அவசியமாகும் என்பதும், பரிகாரத்தின் அளவும்.
2267. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா உடன்பாடு நடந்த காலகட்டத்தில் (உம்ராவிற்காக நான் "இஹ்ராம்" கட்டியிருந்த போது), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் எனது (கற்)பாத்திரத்தின் கீழே நெருப்பை மூட்டி (சமைத்து)க் கொண்டிருந்தேன். (அப்போது எனது தலையிலிருந்து) பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்துகொண்டிருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?" என்று கேட்டார்கள். நான், "ஆம்" என்று கூறினேன். அதற்கு, "உனது தலையை மழித்துக்கொள். பின்பு மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளி. அல்லது ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடு! (இதுவே "இஹ்ராம்" கட்டிய நிலையில் தலையை மழித்ததற்கான பரிகாரமாகும்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மூன்று நோன்பு நோற்றல், ஆறு ஏழைகளுக்கு உணவளித்தல், குர்பானி கொடுத்தல் ஆகிய இம்மூன்றில்) எதை முதலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2268. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உங்களில் ஒருவர் நோயாளியாக இருந்தாலோ, அல்லது அவரது தலையில் பாதிப்பு ஏதேனும் இருந்தாலோ (அவர் தலையை மழிக்கலாம். ஆனால்,) அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்கவேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும்; அல்லது பலியிட வேண்டும்" எனும் இந்த (2:196 ஆவது) வசனம் என் தொடர்பாகவே அருளப்பெற்றது.
நான் (ஹுதைபியா நேரத்தில் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது) நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் "அருகில் வா!" என்றார்கள். நான் அருகில் சென்றேன். "இன்னும் நெருங்கி வா!" என்றார்கள். நான் இன்னும் நெருங்கினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள், "உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். நபி (ஸல்) அவர்கள், (தலைமுடியை மழித்துவிட்டு) அதற்குப் பரிகாரமாக (மூன்று) நோன்பு நோற்க வேண்டும். அல்லது தர்மம் செய்ய வேண்டும். அல்லது (என்னால்) இயன்ற ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிட வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2269. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுதைபியா பயணத்தில்) என் அருகில் (வந்து) நின்றார்கள். அப்போது எனது தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்துகொண்டிருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "அவ்வாறாயின் நீ உனது தலையை மழித்துக்கொள்"என்றார்கள். இதையடுத்து "உங்களில் ஒருவர் நோயாளியாக இருந்தால், அல்லது அவரது தலையில் பாதிப்பு ஏதேனும் இருந்தால் (அவர் தலையை மழிக்கலாம். ஆனால்,) அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும். அல்லது பலியிட வேண்டும்" எனும் இந்த (2:196ஆவது) வசனம் என் தொடர்பாக அருளப்பெற்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது ஆறு ஏழைகளுக்கு ஒரு "ஃபரக்" அளவு தர்மம் செய். அல்லது உன்னால் இயன்ற ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடு!" என்று சொன்னார்கள்.40
அத்தியாயம் : 15
2270. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (உம்ராவிற்குச் சென்றபோது) மக்காவிற்குள் நுழைவதற்கு முன் "இஹ்ராம்" கட்டியவனாக ஹுதைபியாவில் ஒரு பாத்திரத்தின் கீழ் தீ மூட்டி (சமைத்து)க் கொண்டிருந்தேன். (எனது தலையிலிருந்த) பேன்கள் என் முகத்தில் உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது என்னைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், "உன் தலையிலுள்ள இப்பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால், நீ உனது தலையை மழித்துக்கொள். (அதற்குப் பரிகாரமாக) ஒரு "ஃபரக்" உணவை ஆறு ஏழைகளுக்குப் பகிர்ந்தளி. (ஒரு "ஃபரக்" என்பது மூன்று "ஸாஉ"கள் அளவாகும்.) அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடு" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2271. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னிடம், "உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். நபி (ஸல்) அவர்கள், "நீ உனது தலையை மழித்துக்கொள். பிறகு ஓர் ஆட்டை அறுத்துப் பலியிடு. அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். அல்லது மூன்று "ஸாஉ" பேரீச்சம் பழத்தை ஆறு ஏழைகளுக்குப் பகிர்ந்தளி!" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2272. அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் அருகில் (கூஃபா) பள்ளிவாசலில் அமர்ந்தேன். அவர்களிடம், "..அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்கவேண்டும். அல்லது பலியிட வேண்டும" எனும் இந்த (2:196ஆவது) வசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள், "இந்த வசனம் என் தொடர்பாகவே அருளப்பெற்றது. எனது தலையில் பிணி ஏற்பட்டிருந்தது. எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். எனது தலையிலிருந்த பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொண்டிருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்கு இந்த அளவிற்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை" என்று கூறிவிட்டு, "உனக்கு ஓர் ஆடு கிடைக்குமா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை" என்றேன். அப்போதுதான் இந்த (2:196ஆவது) வசனம் அருளப் பெற்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை "ஸாஉ" உணவு வீதம், ஆறு ஏழைகளுக்கு உணவளி" என்று சொன்னார்கள். ஆகவே, இந்த வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பெற்றது. ஆனால், அதன் சட்டம் உங்கள் அனைவருக்கும் பொதுவானதாகும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2273. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹுதைபியாவின்போது) "இஹ்ராம்" கட்டியவனாக நபி (ஸல்) அவர்களுடன் (உம்ராவிற்காகச்) சென்றேன். அப்போது எனது தலையிலும் தாடியிலும் பேன்கள் நிறைந்து விட்டன. இத்தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அவர்கள் (என்னை அழைத்து வருமாறு) என்னிடம் நபியவர்கள் ஆளனுப்பினார்கள்; நாவிதரையும் அழைத்தார்கள். அவர் (வந்து) எனது தலையை மழித்தார். பிறகு "உன்னிடம் ஏதேனும் குர்பானிப் பிராணி உண்டா?" என்று என்னிடம் கேட்டார்கள். நான், "எனக்கு அதற்கான வசதி இல்லை" என்றேன். அவ்வாறாயின், மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். அல்லது தலா ஓர் ஏழைக்கு ஒரு "ஸாஉ"வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளி" என்று கூறினார்கள். வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் "உங்களில் ஒருவர் நோயாளியாக இருந்தாலோ, அல்லது அவரது தலையில் பாதிப்பு ஏதேனும் இருந்தாலோ (அவர் தலையை மழிக்கலாம். ஆனால்,)அதற்குப் பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும். அல்லது தர்மம் செய்ய வேண்டும். அல்லது பலியிட வேண்டும்" எனும் (2:196ஆவது) வசனத்தைக் குறிப்பாக என் தொடர்பாக அருளினான். பின்னர் முஸ்லிம்கள் அனைவருக்கும் (அதன் சட்டம்) பொதுவானதாக அமைந்தது.
அத்தியாயம் : 15
பாடம் : 11 "இஹ்ராம்" கட்டியவர் குருதி உறிஞ்சி எடுப்பது செல்லும்.
2274. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்த நிலையில் (தமக்கேற்பட்டிருந்த ஒற்றைத் தலைவலியின் காரணத்தால்) குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2275. அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையில் தமது தலையின் நடுவே குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். அப்போது அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 12 "இஹ்ராம்" கட்டியவர் தம் கண்களுக்கு மருந்திடலாம்.
2276. நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு பயணத்தில்) அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் "அல்மலல்" எனுமிடத்தை அடைந்த போது, (எங்களுடன் வந்த) உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டது. பின்னர் நாங்கள் "அர்ரவ்ஹா" எனுமிடத்தில் இருந்தபோது, அவருக்குக் கண் வலி கடுமையாகிவிட்டது. உடனே உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களிடம் ஆளனுப்பி (தாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி)க் கேட்டார். அதற்கு அபான் (ரஹ்) அவர்கள், அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு கூறியனுப்பினார்கள். மேலும், "(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) "இஹ்ராம்" கட்டியிருந்த ஒருவருக்குக் கண்வலி ஏற்பட்டபோது,இவ்வாறுதான் அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2277. நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்) அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டது. அப்போது அவர்கள் கண்ணில் அஞ்சனம் (சுருமா) இட்டுக்கொள்ள விரும்பினார்கள். இதை அறிந்த அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் எனத் தடை விதித்துவிட்டு, கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அவருக்கு உத்தர விட்டார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் (கண்வலி எற்பட்டோருக்கு) அவ்வாறு செய் தார்கள் என உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றும் அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 13 "இஹ்ராம்" கட்டியவர் தம் உடலையும் தலையையும் கழுவலாம்.
2278. அப்துல்லாஹ் பின் ஹுனைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அல்அப்வா" எனுமிடத்தில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகிய இருவரும் (ஒரு விஷயத்தில்) கருத்து வேறுபாடு கொண்டனர். அதாவது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் "இஹ்ராம் கட்டியவர் தமது தலையைக் கழுவலாம்" என்று கூறினார்கள். மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் "இஹ்ராம் கட்டியவர் தலையைக் கழுவக் கூடாது"என்றார்கள்.
இதையடுத்து அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அதைப் பற்றிக் கேட்பதற்காக அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் என்னை அனுப்பிவைத்தார்கள். நான் சென்றபோது அவர்கள் கிணற்றின் மேல் ஊன்றப்பட்டிருக்கும் இரு மரக்குச்சிகளுக்கிடையே ஒரு துணியால் திரையிட்டுக் குளித்துக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு முகமன் (சலாம்) கூறினேன். அவர்கள், "யார் அது?" என்று கேட்டார்கள். "நான் அப்துல்லாஹ் பின் ஹுனைன் (வந்திருக்கிறேன்). "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது எவ்வாறு தமது தலையைக் கழுவுவார்கள்?" என்று உங்களிடம் கேட்பதற்காக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னை உங்களிடம் அனுப்பி வைத்தார்கள்" என்று சொன்னேன். அபூ அய்யூப் (ரலி) அவர்கள் தமது கையைத் திரையின் மீது வைத்து, தமது தலை தென்படும் அளவிற்குத் திரையைக் கீழே இறக்கினார்கள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த மனிதரிடம், "தண்ணீர் ஊற்று" என்றார்கள். அவர் தண்ணீர் ஊற்ற, அபூ அய்யூப் (ரலி) அவர்கள், பின்னிருந்து முன்னாகவும் முன்னிருந்து பின்னாகவும் தம் கைகளைக் கொண்டுசென்று தமது தலையைத் தேய்த்துக் கழுவினார்கள். பிறகு, "இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்வதை நான் பார்த்திருக்கிறேன்" என்று கூறினார்கள். - இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2279. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அப்போது அபூஅய்யூப் (ரலி) அவர்கள் தம் கைகளைப் பின்னிருந்து முன்னாகவும் முன்னிருந்து பின்னாகவும் தலை முழுவதற்கும் கொண்டுசென்றார்கள். (அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறிய செய்தி மிஸ்வர் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது) மிஸ்வர் (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் "(இனி) ஒருபோதும் நான் உங்களிடம் வழக்காடமாட்டேன்" என்று கூறினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 14 "இஹ்ராம்" கட்டியவர் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை.
2280. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இஹ்ராம் கட்டியிருந்த) ஒருவர் தமது ஒட்டகத்திலிருந்து விழுந்து, கழுத்து முறிக்கப்பட்டு இறந்து போனார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டுங்கள். அவருடைய இரு ஆடைகளால் அவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். அவரது தலையை மூடாதீர்கள். ஏனெனில், "தல்பியா" கூறியவராக அவரை மறுமை நாளில் அல்லாஹ் எழுப்புவான்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2281. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "அரஃபா" பெருவெளியில் தங்கியிருந்த ஒருவர், தமது வாகனத்திலிருந்து விழுந்துவிட்டார். அது அவரது கழுத்தை முறித்துவிட்டது. இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்டபோது, "அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டுங்கள். இரு ஆடைகளில் அவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். அவருக்கு வாசனைத் தூள் போடாதீர்கள். அவரது தலையை மூடாதீர்கள். ஏனெனில், "தல்பியா" சொல்லிக்கொண்டிருப்பவராக மறுமை நாளில் அவரை அல்லாஹ் எழுப்புவான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2282. மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் "இஹ்ராம்" கட்டியவராக நபி (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தார்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
அத்தியாயம் : 15
2283. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் "இஹ்ராம்" கட்டியவராக நபி (ஸல்) அவர்களுடன் வந்தார். அப்போது தமது ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்து,கடுமையாகக் கழுத்து முறிக்கப்பட்டு இறந்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டி, அவருடைய இரு ஆடைகளை (பிரேத ஆடையாக) அவருக்கு அணிவியுங்கள். அவரது தலையை மூடாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் "தல்பியா" கூறியவராக வருவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2284. மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "இஹ்ராம்" கட்டிய ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வந்தார்" என்று ஹதீஸ் துவங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், அதில் "ஏனெனில், அவர் மறுமை நாளில் "தல்பியா" சொல்லிக்கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்" என்று (சிறிது வித்தியாசத்துடன்) இடம் பெற்றுள்ளது. "அவர் எந்த இடத்தில் விழுந்தார் என்பதைப் பற்றி சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடவில்லை" என்று அதிகப்படியாக ஒரு குறிப்பும் அதில் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2285. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இஹ்ராம் கட்டியிருந்த ஒருவரின் கழுத்தை, அவரது வாகன (ஒட்டக)ம் முறித்து விட்டது. அதனால் அவர் இறந்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டி, அவருடைய இரு ஆடைகளில் அவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். அவரது தலையை மூடாதீர்கள். அவரது முகத்தையும் மறைக்காதீர்கள். ஏனெனில், "தல்பியா"ச் சொல்லிக்கொண்டிருப்பவராக அவர் மறுமை நாளில் எழுப்பப்படுவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2286. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் "இஹ்ராம்" கட்டியவராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார். அப்போது அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட்டது. அதனால் அவர் இறந்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டி, அவருடைய இரு ஆடைகளில் அவருக்கு (பிரேத) ஆடை அணிவியுங்கள். அவருக்கு நறுமணம் பூசாதீர்கள். அவரது தலையை மூடாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தமது தலையைக் களிம்பு தடவிப் படியவைத்த நிலையில் ("இஹ்ராம்" கட்டியவராக) எழுப்பப்படுவார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2287. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இஹ்ராம் கட்டியிருந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த போது, அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட்டது. (அதனால் அவர் இறந்து விட்டார்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரது உடலைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டும்படி உத்தரவிட்டார்கள். அவருக்கு எந்த நறுமணமும் பூசக்கூடாது; அவரது தலையை மூடக்கூடாது. ஏனெனில், அவர் மறுமை நாளில் தமது தலையைக் களிம்பு தடவிப் படியவைத்த நிலையில் ("இஹ்ராம்" கட்டியவராக) எழுப்பப்படுவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2288. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் "இஹ்ராம்" கட்டியவராக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவர் தமது ஒட்டகத்திலிருந்து விழுந்துவிட்டார். அவரது ஒட்டகம் (அந்த இடத்திலேயே) அவரைக் கொன்றுவிட்டது. (அதனால் அவர் இறந்துவிட்டார்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், தண்ணீராலும் இலந்தை இலையாலும் அவருக்கு நீராட்டி, இரு ஆடையால் பிரேத ஆடை (கஃபன்) அணிவிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்கள். எந்த நறுமணமும் பூசக் கூடாது; அவரது தலை வெளியில் தெரிய வேண்டும் (என்றும் உத்தரவிட்டார்கள்).
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் இந்த ஹதீஸை அபூபிஷ்ர் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அப்போது "அவரது தலையும் முகமும் வெளியில் தெரிய வேண்டும். ஏனெனில், அவர் மறுமை நாளில் தமது தலையைக் களிம்பு தடவிப் படியவைத்த நிலையில் ("இஹ்ராம்" கட்டியவராக) எழுப்பப்படுவார்" என்று அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2289. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இஹ்ராம் கட்டியிருந்த) ஒரு மனிதரது கழுத்தை அவரது ஒட்டகம் முறித்துவிட்டது. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டும்படியும் அவரது முகத்தையும் தலையையும் திறந்து வைக்குமாறும் உத்தரவிட்டார்கள். "ஏனெனில் அவர், மறுமை நாளில் "தல்பியா" சொன்னவராக எழுப்பப்படுவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2290. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இஹ்ராம் கட்டி) இருந்தார். அப்போது அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட்டது. அதனால் அவர் இறந்துவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவரை நீராட்டுங்கள். ஆனால், எந்த நறுமணத்தையும் அவருக்குப் பூசாதீர்கள். அவரது முகத்தை மூடாதீர்கள். ஏனெனில் அவர், மறுமை நாளில் "தல்பியா" சொல்லிக்கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 15 "இஹ்ராம்" கட்டுகின்றவர் "நான் நோய் போன்ற காரணங்களால் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு தடுக்கப்படும்போது) இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடுவேன்" என முன் நிபந்தனையிடுவது செல்லும்.
2291. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களிடம் சென்று, "நீ ஹஜ் செய்ய விரும்புகிறாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாளியாகவே இருக்கிறேன்" என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், "நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி, "இறைவா, நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்" என்று கூறிவிடு!" என்றார்கள்.
ளுபாஆ (ரலி) அவர்கள் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களுடைய துணைவியார் ஆவார்.
அத்தியாயம் : 15
2292. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ளுபாஆ பின்த் அஸ்ஸுபைர் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் ஹஜ் செய்ய விரும்புகிறேன். ஆனால், நான் நோயாளி ஆவேன்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி, "(இறைவா!) நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அது தான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்" என்று கூறிவிடு!" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2293. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ளுபாஆ பின்த் அஸ்ஸுபைர் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "எனக்கு (நோய் ஏற்பட்டு) உடல் கனத்துவிட்டது. நான் ஹஜ் செய்ய விரும்புகிறேன். தாங்கள் எனக்கு என்ன உத்தரவிடுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக "தல்பியா"க் கூறி, "(இறைவா!) நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்" என்று கூறிவிடு!" என்றார்கள்.
பின்னர் ளுபாஆ (ரலி) அவர்கள் (முழுமையாக) ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள்.
இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2294. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ளுபாஆ (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய விரும்பியபோது, அவருக்கு முன் நிபந்தனையிட்டுக் கொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கிணங்க அவ்வாறே அவர் (முன் நிபந்தனையிட்டு ஹஜ்) செய்தார். -இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2295. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ளுபாஆ (ரலி) அவர்களிடம், "நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி, "(இறைவா!) நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்" என்று கூறிவிடு!" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நபி (ஸல்) அவர்கள் ளுபாஆ (ரலி) அவர்களிடம் (மேற்கண்டவாறு) உத்தரவிட்டார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 16 பிரசவ இரத்தப்போக்கு அல்லது மாதவிடாய் ஏற்பட்ட பெண் "இஹ்ராம்" கட்டலாம்; இஹ்ராமின்போது அவர் குளிப்பது விரும்பத்தக்கதாகும்.
2296. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களுக்கு "அஷ்ஷஜரா" எனுமிடத்தில் முஹம்மத் பின் அபீபக்ர் எனும் குழந்தை பிறந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களைக் குளித்துவிட்டு, தல்பியா கூறச் சொல்லுமாறு (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2297. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் துல்ஹுலைஃபா எனுமிடத்தில் பிரசவித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,அவரைக் குளித்துவிட்டு "தல்பியா" கூறச் சொல்லுமாறு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 17 "இஹ்ராம்" கட்டும் முறைகள்; இஃப்ராத், தமத்துஉ, கிரான் ஆகிய மூன்று முறைகளில் ஹஜ் செய்யலாம்; உம்ராவுடன் ஹஜ்ஜை இணைக்கலாம்; ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்தவர் ("காரின்")தம் கிரியைகளிலிருந்து எப்போது விடுபடுவார்?
2298. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "விடைபெறும்" ஹஜ் ஆண்டில் புறப்பட்டோம். (முதலில்) உம்ராச் செய்வதற்காக "இஹ்ராம்" கட்டினோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவரிடம் பலிப்பிராணி உள்ளதோ அவர் உம்ராவுடன் ஹஜ்ஜுக்காகவும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். அவ்விரண்டையும் நிறைவேற்றிய பிறகே அவர் இஹ்ராமிலிருந்து விடுபடவேண்டும்" என்று சொன்னார்கள். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்) மக்காவிற்குச் சென்றேன். (மாதவிடாயின் காரணத்தால்) நான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவில்லை. ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (சயீ) ஓடவு மில்லை.
ஆகவே, இதைப் பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அப்போது அவர்கள், "உன் தலை (முடி)யை அவிழ்த்து வாரிக்கொள். ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டிக்கொள். உம்ராவை விட்டுவிடு" என்று சொன்னார்கள். அவ்வாறே நான் செய்தேன்.
நாங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி முடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களுடன் (இஹ்ராம் கட்டுவதற்காக) "தன்ஈம்" எனும் இடத்திற்கு அனுப்பினார்கள். (அங்கிருந்து புறப்பட்டு) நான் உம்ராச் செய்தேன். "இது (இந்த உம்ரா) உனது (விடுபட்ட) உம்ராவிற்குப் பதிலாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டியவர்கள் இறையில்லத்தைச் சுற்றிவந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடவும் (சயீ) செய்தனர்; பிறகு இஹ்ராமிலிருந்து விடுபட்டனர். பின்னர் மினாவிலிருந்து திரும்பிய பின் மற்றொரு முறை ஹஜ்ஜுக்காகச் சுற்றி (தவாஃப்) வந்தனர். ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து (ஹஜ்ஜுல் கிரான்) செய்தவர்கள் ஒரேயொரு முறைதான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்தனர்.
அத்தியாயம் : 15
2299. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள், "விடைபெறும்" ஹஜ் ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் உம்ராச் செய்வதற்காக "இஹ்ராம்" கட்டியவர்களும் இருந்தனர். ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவர்களும் இருந்தனர். நாங்கள் மக்காவை அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பலிப்பிராணியைத் தம்முடன் கொண்டுவராமல் உம்ராவிற்காக ("தமத்துஉ") "இஹ்ராம்" கட்டியவர், (உம்ராவை முடித்துவிட்டு) இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளட்டும். உம்ராவிற்காக ("கிரான்") "இஹ்ராம்" கட்டி, தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டுவந்திருப்பவர் (துல்ஹஜ் பத்தாம் நாளில்) தமது பலிப் பிராணியை அறுத்துப் பலியிடாத வரை இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டாம். ஹஜ்ஜுக்காக மட்டும் ("இஃப்ராத்") "இஹ்ராம்" கட்டியிருப்பவர் தமது ஹஜ்ஜை முழுமையாக்கட்டும்" என்று கூறினார்கள்.
அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாள் வரும்வரை மாதவிடாயுடனேயே நான் இருந்தேன். நானோ உம்ராவிற்காக மட்டுமே "இஹ்ராம்" கட்டியிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தலைமுடியை அவிழ்த்து அதை வாரிவிடுமாறும், உம்ராவிற்காக நான் "இஹ்ராம்" கட்டியதை விட்டுவிட்டு ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டிக்கொள்ளுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் செய்தேன். நான் ஹஜ்ஜை நிறைவேற்றிய பின் என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களை அனுப்பி, எந்த உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபடாமலேயே நான் ஹஜ்ஜை அடைந்து கொண்டேனோ அந்த உம்ராவிற்காக இஹ்ராம் கட்டி வருமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2300. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள், "விடைபெறும்" ஹஜ் ஆண்டில் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். (முதலில்) உம்ராச் செய்வதற்காக நான் "இஹ்ராம்" கட்டினேன். நான் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், "தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருப்பவர் உம்ராவுடன் ஹஜ்ஜுக்காகவும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். அவ்விரண்டையும் நிறைவேற்றிய பிறகே அவர் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்" என்று சொன்னார்கள்.
அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாள் இரவை நான் அடைந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! நான் உம்ராவிற்காக (மட்டும்) "இஹ்ராம்" கட்டியிருந்தேன். (இந்நிலையில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது) நான் எவ்வாறு ஹஜ் செய்வது?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உனது தலைமுடியை அவிழ்த்து அதை வாரிவிட்டுக்கொள். உம்ராவை நிறுத்திவிட்டு, ஹஜ் செய்துகொள்" என்று சொன்னார்கள். அவ்வாறே நான் ஹஜ்ஜை நிறைவேற்றியதும் நபி (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களுக்கு (என்னை "தன்ஈமு"க்கு அழைத்துச் செல்லுமாறு) உத்தரவிட, அவர் என்னைத் தமக்குப் பின்னால் தமது வாகனத்தில் அமர்த்திக்கொண்டு,நான் நிறுத்திவைத்திருந்த உம்ராவிற்காக "தன்ஈம்" எனும் இடத்தில் "இஹ்ராம்" கட்டச் செய்தார்.
அத்தியாயம் : 15
2301. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (விடைபெறும் ஹஜ்ஜுக்காகப்) புறப்பட்டோம். அப்போது அவர்கள், "உங்களில் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டிற்கும் (கிரான்) "இஹ்ராம்" கட்ட விரும்புகின்றவர், அவ்வாறே செய்யட்டும்! ஹஜ்ஜுக்கு மட்டும் (தமத்துஉ) "இஹ்ராம்" கட்ட விரும்புகின்றவர், அதற்காக "இஹ்ராம்" கட்டட்டும்! உம்ராவிற்கு மட்டும் (இஃப்ராத்) "இஹ்ராம்" கட்ட விரும்புகின்றவர், அதற்காக "இஹ்ராம்" கட்டட்டும்!" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கு மட்டும் "இஹ்ராம்" கட்டி, "தல்பியா" கூறினார்கள். அவ்வாறே அவர்களுடன் மக்களில் சிலரும் "இஹ்ராம்" கட்டினர். வேறுசிலர் உம்ரா மற்றும் ஹஜ் ஆகிய இரண்டிற்கும் "இஹ்ராம்" கட்டினர். இன்னும் சிலர் உம்ராவிற்கு மட்டும் "இஹ்ராம்" கட்டினர்.
நான் உம்ராவிற்காக மட்டும் "இஹ்ராம்" கட்டியவர்களில் ஒருவராக இருந்தேன்.
அத்தியாயம் : 15
2302. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் துல்ஹஜ் மாத தலைப்பிறையை எதிர்பார்த்தவர்களாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "விடைபெறும்"ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்ட விரும்புகின்றவர், உம்ராவிற்கு "இஹ்ராம்" கட்டிக்கொள்ளட்டும்; நான் என்னுடன் பலிப் பிராணியைக் கொண்டு வந்திருக்காவிட்டால் உம்ராவிற்காகவே நானும் "இஹ்ராம்" கட்டியிருப்பேன்" என்று சொன்னார்கள். எனவே, மக்களில் சிலர் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டியிருந்தனர். வேறுசிலர் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியிருந்தனர். நான் உம்ராவிற்காக "இஹ்ராம்"கட்டியவர்களில் ஒருவராக இருந்தேன்.
நாங்கள் புறப்பட்டு மக்காவை அடைந்ததும் அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நானோ எனது உம்ராவின் கிரியைகளைச் செய்து இஹ்ராமிலிருந்து விடுபட்டிருக்கவில்லை. எனவே, இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீ உனது உம்ராவை விட்டுவிட்டு, உனது தலைமுடியை அவிழ்த்து, அதை வாரிக்கொண்டு ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டிக்கொள்" என்று கூறினார்கள். அவ்வாறே நான் செய்தேன். அல்லாஹ் எங்கள் ஹஜ்ஜை நிறைவேறச் செய்து (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்) "முஹஸ்ஸபி"ல்57 தங்கும் இரவு வந்தபோது, என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அவர் என்னைத் தமக்குப் பின்னால் தமது வாகனத்தில் அமர்த்திக்கொண்டு "தன்ஈம்" நோக்கிச் சென்றார். அங்கிருந்து நான் உம்ராவிற்காக "தல்பியா" கூறினேன். அல்லாஹ் எங்களுக்கு ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்ற வாய்ப்பளித்தான்.
(அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) இதற்கு (பரிகாரமாக) ஏதேனும் பலியிடலோ தர்மமோ நோன்போ (ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து) நிகழவில்லை.
அத்தியாயம் : 15
2303. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் துல்ஹஜ் மாதத்தின் தலைப்பிறையை எதிர்பார்த்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது நாங்கள் (ஹஜ் மாதத்தில் உம்ராச் செய்யக் கூடாது என்று எண்ணியிருந்ததால்) ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்துடன் சென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களில் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்ட விரும்புகின்றவர், உம்ராவிற்கு "இஹ்ராம்" கட்டிக்கொள்ளட்டும்" என்று கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
2304. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் துல்ஹஜ் மாதத்தின் தலைப்பிறையை எதிர்பார்த்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் சிலர் உம்ராவிற்காக (தமத்துஉ) "இஹ்ராம்" கட்டியிருந்தனர்; வேறுசிலர் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து (கிரான்) "இஹ்ராம்" கட்டியிருந்தனர்; வேறுசிலர் ஹஜ்ஜுக்கு மட்டும் (இஃப்ராத்) "இஹ்ராம்" கட்டியிருந்தனர். நான் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டியவர்களில் ஒருவராக இருந்தேன்" என்று ஹதீஸ் துவங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட இரு ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்த அறிவிப்பில், "ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் நிறைவேற்றித்தந்தான்"என அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது. மேலும், அதில் "இதற்கு(ப் பரிகாரமாக)ப் பலியிடலோ, தர்மமோ, நோன்போ (ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து) நிகழவில்லை" என ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2305. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள், "விடைபெறும்" ஹஜ் ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் சிலர் உம்ராவிற்காக (தமத்துஉ) "இஹ்ராம்" கட்டியிருந்தனர்; வேறுசிலர் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து (கிரான்) "இஹ்ராம்" கட்டியிருந்தனர்; இன்னும் சிலர் ஹஜ்ஜுக்கு மட்டும் (இஃப்ராத்) "இஹ்ராம்" கட்டியிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியிருந்தார்கள். உம்ராவிற்கு மட்டும் "இஹ்ராம்" கட்டியவர்கள் (உம்ராவை முடித்ததும்) இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொண்டார்கள். ஹஜ்ஜுக்கு மட்டுமே "இஹ்ராம்" கட்டியவர்களும் அல்லது ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து "இஹ்ராம்" கட்டியவர்களும் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாள் வரும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.
அத்தியாயம் : 15
2306. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஹஜ்ஜுக்காக) நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்துடன் சென்றோம். நாங்கள் "சரிஃப்" எனுமிடத்தில், அல்லது அதற்கு அருகில் இருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. நபி (ஸல்) அவர்கள் நானிருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுதுகொண்டிருந்த என்னிடம், "உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அதற்கு அவர்கள், "இந்த மாதவிடாய் பெண்கள்மீது அல்லாஹ் விதியாக்கிய (இயற்கையான) ஒன்றாகும். எனவே, நீ குளிக்கும்வரை, இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர,ஹாஜிகள் செய்கின்ற மற்றெல்லாக் கிரியைகளையும் செய்துகொள்" என்றார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியர் சார்பாக மாட்டைக் குர்பானி கொடுத்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2307. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றும் எண்ணத்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். (மக்காவிற்கு அருகிலுள்ள) "சரிஃப்" எனும் இடத்திற்கு நாங்கள் வந்தபோது, எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நானிருந்த இடத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அழுதுகொண்டிருந்த என்னிடம் "உன் அழுகைக்குக் காரணம் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த ஆண்டு நான் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டு வந்திருக்கக் கூடாது என்று கருதுகிறேன்" என்று கூறினேன். அவர்கள், "உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது போலும்!" என்றார்கள். நான், "ஆம்" என்றேன். அப்போது, "இ(ந்த மாதவிடாயான)து பெண்கள்மீது அல்லாஹ் விதியாக்கிய ஒன்றாகும். எனவே, நீ தூய்மையாகும்வரை, இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர, ஹாஜிகள் செய்யும் மற்றெல்லாக் கிரியைகளையும் செய்துகொள்" என்று சொன்னார்கள்.
நான் மக்காவை அடைந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், "உங்கள் இஹ்ராமை உம்ராவிற்காக மாற்றறிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். உடனே தம்முடன் பலிப் பிராணியைக் கொண்டுவந்திருந்தவர்களைத் தவிர மற்றவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொண்டனர். அப்போது நபி (ஸல்), அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) மற்றும் வசதி படைத்த இன்னும் சிலரிடம் பலிப் பிராணிகள் இருந்தன. (உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிய) அவர்கள் (துல்ஹஜ் எட்டாவது நாளில் மினாவிற்குச்) சென்றபோது ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி, "தல்பியா" கூறினர். "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் நான் (மாதவிடாயிலிருந்து) தூய்மையானபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது உத்தரவின் பேரில், நான் "தவாஃபுல் இஃபாளா"செய்தேன். பின்னர் எங்களிடம் மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. நான் "இது என்ன?" என்று கேட்டேன். அதற்கு மக்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்காகக் குர்பானி கொடுத்தார்கள் (அதுதான் இந்த இறைச்சி)" என்று கூறினர்.
முஹஸ்ஸபில் தங்கும் (துல்ஹஜ் பதினான்காவது) இரவில் நான், "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் நிறைவேற்றிவிட்டுத் திரும்பிச் செல்ல, நானோ ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றிச் செல்கிறேன்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களிடம் (என்னைத் தன்ஈமுக்கு அழைத்துச் சென்று, அங்கு உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டுமாறு) உத்தரவிட, அவர் என்னைத் தமக்குப் பின்னால் தமது ஒட்டகத்தில் அமர்த்திக்கொண்டு சென்றார். நான் நினைத்துப் பார்க்கிறேன். அப்போது நான் இளவயதுப் பெண்ணாக இருந்தேன். (ஒட்டகத்தில் அமர்ந்து சென்றபோது) நான் குட்டித்தூக்கம் போடுவேன். அப்போது எனது முகம் (ஒட்டகத்தின் சேணத்திலுள்ள) சாய்வுக் கட்டையில் இடித்துக்கொள்ளும். நாங்கள் இருவரும் தன்ஈமுக்கு வந்து சேர்ந்த போது, அங்கு நான் உம்ராவிற்காக "தல்பியா"கூறினேன். அது, மக்கள் முன்பே நிறைவேற்றிய உம்ராவிற்குப் பகரமாக அமைந்தது.
அத்தியாயம் : 15
2308. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் ஹஜ்ஜுக்காக "தல்பியா" கூறி(ப் புறப்பட்டுச் செல்லலா)னோம். நாங்கள் "சரிஃப்" எனுமிடத்தில் இருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நானிருந்த இடத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் அழுது கொண்டிருந்தேன்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், ஹம்மாத் பின் சலமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நபி (ஸல்), அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) மற்றும் வசதி படைத்த இன்னும் சிலரிடம் பலிப் பிராணிகள் இருந்தன. (உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிய) அவர்கள் (துல்ஹஜ் எட்டாவது நாளில் மினாவிற்குச்) சென்றபோது ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி, "தல்பியா" கூறினர்" எனும் குறிப்பும், "நான் இளவயதுப் பெண்ணாக இருந்தேன். (ஒட்டகத்தில் அமர்ந்து சென்றபோது) நான் குட்டித்தூக்கம் போடுவேன். அப்போது எனது முகம் (ஒட்டகத்தின் சேணத்திலுள்ள) சாய்வுக் கட்டையில் இடித்துக்கொள்ளும்" எனும் குறிப்பும் இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 15
2309. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கு மட்டும் (இஃப்ராத்) "இஹ்ராம்" கட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2310. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹஜ்ஜுக்கு "இஹ்ராம்" கட்டியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ் மாதங்களில், ஹஜ்ஜின் புனிதக் கிரியைகளில், ஹஜ்ஜின் இரவு (பகல்)களில் (பங்கேற்கப்) புறப்பட்டோம். நாங்கள் "சரிஃப்" எனுமிடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கூடாரத்திலிருந்து புறப்பட்டு) தம் தோழர்களிடம் வந்து, "உங்களில் எவரிடம் பலிப் பிராணி இல்லையோ அவர் தமது இஹ்ராமை உம்ராவிற்காக மாற்றிக்கொள்ள விரும்பினால், அவர் அவ்வாறே செய்துகொள்ளட்டும்; எவரிடம் பலிப்பிராணி உள்ளதோ (அவர் இவ்வாறு செய்ய) வேண்டாம்" என்றார்கள். தம்மிடம் பலிப்பிராணி இல்லாத நபித்தோழர்களில் சிலர் இவ்வாறு செய்தனர். வேறுசிலர் இவ்வாறு செய்யவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமும் அவர்களுடனிருந்த வசதி படைத்த தோழர்களில் சிலரிடமும் பலிப் பிராணிகள் இருந்தன. (எனவே அவர்களால் உம்ரா மட்டும் செய்து இஹ்ராமிலிருந்து விடுபட முடியவில்லை). இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நானிருந்த இடத்திற்கு வந்தார்கள்.
அப்போது நான் அழுதுகொண்டிருந்தேன். என்னிடம், "உன் அழுகைக்குக் காரணம் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "நீங்கள் உங்கள் தோழர்களிடம் பேசியதைச் செவியுற்றேன். உம்ராவைப் பற்றித் தாங்கள் கூறியதையும் நான் கேட்டேன். என்னால் உம்ராச் செய்ய முடியாமல் போய்விட்டதே" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்கு என்னவாயிற்று?" என்று கேட்டார்கள். "நான் தொழுகை இல்லாமல் இருக்கிறேன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதனால் உனக்கு ஒரு பாதிப்புமில்லை. பெண்களில் நீயும் ஒருத்தி. எனவே, அவர்களுக்கு அல்லாஹ் விதியாக்கியதை உனக்கும் விதியாக்கியுள்ளான். நீ ஹஜ் செய்துகொண்டிரு. அல்லாஹ் உனக்கு உம்ராச் செய்யும் வாய்ப்பையும் தரலாம்" என்று கூறினார்கள்.
ஆகவே, நான் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டு மினாவில் தங்கியிருந்தபோது, நான் (மாதவிடாயிலிருந்து) தூய்மையானேன். பிறகு நாங்கள் (மினாவிலிருந்து சென்று) இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப் செய்யலா)னோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முஹஸ்ஸப்" எனுமிடத்தில் தங்கியிருந்தார்கள். (அவர்களிடம் நான் சென்றபோது) அவர்கள் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களை அழைத்து, "உன் சகோதரியை ஹரமுக்கு வெளியே (தன்ஈமுக்கு) அழைத்துச் செல். அவர் உம்ராவிற்கு "இஹ்ராம்" கட்டி, இறையில்லம் கஅபாவைச் சுற்றட்டும்! (உம்ராச் செய்து முடிக்கட்டும்!) நான் இங்கேயே உங்கள் இருவரையும் எதிர்பார்த்துக் காத்திருப்பேன்" என்றார்கள்.
உடனே நாங்கள் புறப்பட்டு (தன்ஈமுக்கு)ச் சென்றோம். நான் (அங்கு) "இஹ்ராம்" கட்டிக் கொண்டு (வந்து) இறையில்லத்தைச் சுற்றி வந்தேன். ஸஃபா மற்றும் மர்வாவில் சுற்றிவந்தேன். பிறகு (உம்ராவை முடித்து) நாங்கள் நடுநிசி நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்துசேர்ந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கூடாரத்தில் தங்கியிருந்தார்கள். "(உம்ராவை) முடித்துவிட்டாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் புறப்பட அனுமதியளித்தார்கள்; பின்னர் இறையில்லத்திற்குச் சென்று சுப்ஹுத் தொழுகைக்கு முன் அதைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள். பிறகு மதீனாவை நோக்கிப் புறப்பட்டார்கள்.
அத்தியாயம் : 15
2311. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் சிலர் ஹஜ் (இஃப்ராது)க்கு மட்டும் "இஹ்ராம்" கட்டினர். வேறுசிலர் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து (கிரான்) "இஹ்ராம்" கட்டினர். இன்னும் சிலர் உம்ராச் செய்து முடித்துவிட்டு, ஆசுவாசமாக "ஹஜ்(ஜுத் தமத்து)" செய்வதற்காக "இஹ்ராம்"கட்டினர்.
- காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக வந்தார்கள்... (மற்ற விவரங்கள் மேற் கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.)
அத்தியாயம் : 15
2312. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்துடன் துல்கஅதா மாதம் இருபத்தைந்தாவது நாள் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். நாங்கள் மக்காவை நெருங்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பலிப் பிராணியைத் தம்முடன் கொண்டுவந்தவர் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடி முடித்தவுடன் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடவேண்டும்" என்று கட்டளையிட்டார்கள். பிறகு துல்ஹஜ் பத்தாவது நாள் எங்களிடம் மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. நான், "இது என்ன (இறைச்சி)?" என்று கேட்டேன். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்காக அறுத்துப் பலியிட்டார்கள். (அந்த இறைச்சிதான் இது)" என்று பதிலளிக்கப்பட்டது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இந்த ஹதீஸை காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்களிடம் எடுத்துக் கூறினேன். அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த ஹதீஸை, உள்ளது உள்ளபடி அம்ரா உமக்கு அறிவித்துள்ளார்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2313. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் எல்லாரும் (ஹஜ், உம்ரா ஆகிய) இரு கிரியைகளையும் நிறைவேற்றிவிட்டுத் திரும்புகின்றனர். நான் மட்டும் (ஹஜ் என்கிற) ஒரேயொரு கிரியையை நிறைவேற்றிவிட்டுத் திரும்புகிறேனே?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ (சற்றுக்) காத்திருந்து, (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்ததும் "தன்ஈமு"க்குச் சென்று, அங்கு உம்ராவிற்காக "தல்பியா" கூறிக்கொள். பிறகு நாளை நாம் இன்னின்ன இடத்தில் சந்திப்போம். ஆனால், உம்ராவிற்கான நற்பலன் (நீ ஏற்றுக்கொண்ட) "உனது சிரமத்திற்கு" அல்லது "உனது பொருட்செலவிற்கு" தக்கவாறுதான் கிட்டும்!" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2314. அப்துல்லாஹ் பின் அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை அறிவித்த மேற்கண்ட ஹதீஸ் காசிம் பின் முஹம்மத் (ரஹ்), இப்ராஹீம் பின் யஸீத் பின் கைஸ் (ரஹ்) ஆகியோர் வழியாக இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் எது யாருடைய அறிவிப்பு என்று எனக்குத் தெரியவில்லை.
அத்தியாயம் : 15
2315. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்துடன் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். நாங்கள் மக்கா சென்றடைந்ததும் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்தோம். அதன் பிறகு, பலிப்பிராணியை (தம்முடன்) கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவ்வாறே பலிப்பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர். நபி (ஸல்) அவர்களின் துணைவியரும் பலிப்பிராணியைக் கொண்டுவராததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொண்டனர்.
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் நான் இறையில்லத்தைச் சுற்றிவரவில்லை. (ஹஜ் முடிந்து) "அல்முஹஸ்ஸப்" எனுமிடத்தில் தங்கும் (துல்ஹஜ் பதினான்காவது) இரவு வந்தபோது, நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் அனைவரும் ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்துத் திரும்புகின்றனர். நான் ஹஜ்ஜை மட்டுமே முடித்து விட்டுத் திரும்புகிறேனே?" என்றேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், "நாம் மக்கா வந்தடைந்த இரவுகளில் நீ இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவில்லையா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். "அவ்வாறாயின், நீ உன் சகோதரர் (அப்துர் ரஹ்மான்) உடன் "தன்ஈமு"க்குச் சென்று அங்கிருந்து உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டி (உம்ராவை நிறைவேற்றி)க்கொள். பிறகு இன்னின்ன இடத்தில் நாம் சந்திப்போம்" என்று கூறினார்கள்.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியார்) ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "நான் உங்களைப் புறப்படவிடாமல் தடுத்துவிடுவேன் என எண்ணுகிறேன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (செல்லமாக), "உன் கழுத்தறுந்து போக! உனக்குத் தொண்டை வலி வர! (காரியத்தைக் கொடுத்துவிட்டாயே!) நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் நீ (கஅபாவைச்) சுற்றி வரவில்லையா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். (அப்படியானால்) பரவாயில்லை நீ புறப்படு!" என்றார்கள்.
(தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு ஒரு குன்றில் ஏறிக்கொண்டிருந்தபோது (உம்ராவை முடித்துத் திரும்பிய) என்னைச் சந்தித்தார்கள். அப்போது நான் குன்றிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தேன். அல்லது அவர்கள் இறங்கிக்கொண்டிருந்தார்கள்; நான் ஏறிக்கொண்டிருந்தேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2316. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜை நிறைவேற்றும் எண்ணமோ உம்ராவை நிறைவேற்றும் எண்ணமோ கொள்ளாமல் (பொதுவாக) "தல்பியா" சொன்னவர்களாக (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம்" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
2317. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதம் நான்காவது நாள், அல்லது ஐந்தாவது நாள் அன்று (மக்காவிற்கு) வந்தார்கள். அப்போது நானிருந்த இடத்திற்குக் கோபத்துடன் வந்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! உங்களைக் கோபப்படுத்தியவர் யார்? அவரை, அல்லாஹ் நரகத்தில் நுழைவிப்பானாக!" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "உனக்குத் தெரியுமா? நான் மக்களிடம் (பலிப் பிராணியைக் கொண்டுவராதவர்கள் தமது ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கிக்கொள்ளட்டும் என) ஓர் உத்தரவு பிறப்பித்தேன். ஆனால், அவர்களோ தயக்கம் காட்டுகிறார்கள். நான் பின்னால் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால், (என்னுடன்) பலிப்பிராணியைக் கொண்டு வந்திருக்கமாட்டேன்; இங்கு வந்த பிறகு வாங்கியிருப்பேன்; பின்னர் மக்கள் (தம் ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கி) இஹ்ராமிலிருந்து விடுபட்டதைப் போன்று நானும் விடுபட்டிருப்பேன்" என்றார்கள்.
(ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் தயக்கம் காட்டுவதைப் போன்றுள்ளது" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று எண்ணுகிறேன் என இடம் பெற்றுள்ளது.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2318. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதம் நான்காவது நாள், அல்லது ஐந்தாவது நாள் (மக்காவிற்கு) வந்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பிக்கிறது. மேலும், அதில் "மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள்" எனும் வாசகத்தில் ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்கள் வெளியிட்ட ஐயம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
2319. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டி (மக்காவிற்கு) வந்தேன். இறையில்லாம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதற்கு முன்பே எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. ஆகவே, (தவாஃபைத் தவிர உம்ராவின்) அனைத்துக் கிரியைகளையும் நிறைவேற்றிவிட்டு, ஹஜ்ஜுக்காக ("இஹ்ராம்" கட்டி) "தல்பியா" கூறினேன். (மினாவிலிருந்து) புறப்படும் (நஃப்ருடைய) நாளில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "நீ (கஅபாவைச்) சுற்றி வந்ததே உனது ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் போதுமானதாகும். (எனவே, நீ உம்ராச் செய்ய வேண்டிய தில்லை)" என்று சொன்னார்கள். ஆனால், அதை நான் ஏற்க மறுத்துவிட்டேன். ஆகவே, என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களுடன் "தன்ஈமு"க்கு அனுப்பி வைத்தார்கள். நான் ஹஜ் முடிந்த பின் உம்ராச் செய்தேன்.
அத்தியாயம் : 15
2320. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்காவிற்கு அருகிலுள்ள) "சரிஃப்" எனும் இடத்தில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. "அரஃபா"வில் தூய்மை அடைந்தேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ ஸஃபா மற்றும் மர்வாவில் சுற்றி (சயீ) வந்ததே உனது ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் போதுமானதாகிவிட்டது" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2321. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் அனைவரும் (ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் நிறைவேற்றிவிட்டு) இரு நற்பலன்களுடன் திரும்பிச் செல்ல, நான் மட்டும் (ஹஜ்ஜை மாத்திரம் நிறைவேற்றி அதற்குரிய) ஒரு நற்பலனுடன் திரும்பிச் செல்வதா?" என்று கேட்டேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களிடம் என்னைத் "தன்ஈமு"க்கு அழைத்துச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். அப்துர் ரஹ்மான் (ரலி) என்னைத் தமது ஒட்டகத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்(டு, தன்ஈமை நோக்கிப் பயணம் மேற்கொண்)டார். அப்போது நான் எனது முகத்திரையை உயர்த்தி, கழுத்து வழியாக அதைக் கழற்றலானேன். உடனே அவர் தமது ஒட்டகத்தை அடிப்பதைப் போன்று எனது காலில் அடித்தார். நான் அவரிடம், "(அந்நிய ஆண்கள்) எவரேனும் (என்னைப் பார்ப்பதைக்) காண்கிறீரா? (பிறகு ஏன் என்னை அடிக்கிறீர்?)" என்று கேட்டேன். பிறகு நான் (தன்ஈமில்) உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டி, "தல்பியா" சொன்னேன். (உம்ரா முடிந்த பிறகு) நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தோம். அப்போது அவர்கள் "முஹஸ்ஸபி"ல் தங்கியிருந்தார்கள்.
அத்தியாயம் : 15
2322. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களை எனது வாகனத்தில் எனக்குப் பின்னால் உட்காரவைத்து (அழைத்துச் சென்று) "தன்ஈமி"ல் உம்ரா மேற்கொள்ளச் செய்யுமாறு உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2323. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹஜ்ஜுக்கு மட்டும் "இஹ்ராம்" கட்டியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவை நோக்கி) வந்தோம். ஆயிஷா (ரலி) அவர்கள் உம்ராவிற்காக ("இஹ்ராம்" கட்டியவர்களாக) வந்தார்கள். நாங்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) "சரிஃப்" எனுமிடத்திற்கு வந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் இறையில்லம் கஅபா,ஸஃபா மற்றும் மர்வா ஆகியவற்றைச் சுற்றினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், எங்களில் தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள்.
அப்போது நாங்கள், "(இஹ்ராமிலிருந்து விடுபட்டால் எங்களுக்கு) எதுவெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ளது?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "அனைத்துமே அனுமதிக்கப் பெற்றுள்ளன" என்றார்கள். ஆகவே, நாங்கள் (எங்கள்) மனைவி யருடன் தாம்பத்திய உறவு கொண்டோம். நறுமணம் பூசிக்கொண்டோம். (தைக்கப்பெற்ற) எங்கள் ஆடைகளை அணிந்து கொண்டோம். அன்றைய தினத்திற்கும் அரஃபாவுக்குமிடையே நான்கு இரவுகளே இருந்தன. பின்னர் நாங்கள் "தர்வியா" (துல்ஹஜ் எட்டாம்)நாளில் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி, "தல்பியா" சொன்னோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிருந்த இடத்திற்குச் சென்றபோது, அவர்கள் அழுதுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது, "உனது பிரச்சினை என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் "எனது பிரச்சினை என்னவென்றால், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. மக்கள் அனைவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருக்க, நான் மட்டும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை; இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவுமில்லை. இப்போது மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகப் போய்க்கொண்டிருக்கின்றனர்" என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இ(ந்த மாதவிடாயான)து, பெண்கள்மீது அல்லாஹ் விதியாக்கியதாகும். ஆகவே, நீ குளித்துவிட்டுப் பின்னர் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி "தல்பியா" சொல்லிக்கொள்" என்றார்கள். அவ்வாறே அவர்கள் செய்துவிட்டு, தங்க வேண்டிய (புனித) இடங்களில் தங்கினார்கள். மாதவிடாயிலிருந்து தூய்மை யடைந்ததும் கஅபாவையும், ஸஃபா மற்றும் மர்வாவையும் சுற்றினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ உனது ஹஜ்ஜிலிருந்தும் உம்ராவிலிருந்தும் விடுபட்டு விட்டாய்" என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வராமலேயே ஹஜ் செய்து முடித்து விட்டேனே எனக் கவலைப்படுகிறேன்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (என் சகோதரரிடம்) "அப்துர் ரஹ்மானே! நீ இவரை அழைத்துச் சென்று, "தன்ஈமி"லிருந்து உம்ராச் செய்யவைப்பாயாக!" என்றார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்) "முஹஸ்ஸபி"ல் தங்கியிருந்த இரவில் இது நடந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில் லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிருந்த இடத்திற்குச் சென்றார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் அழுதுகொண்டிருந்தார்கள்..." என்பதிலிருந்தே ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 15
2324. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜின்போது உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டினார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும் அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதமாக நடந்துகொள்ளும் மனிதராக இருந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ஒன்றை ஆசைப்பட்டபோது, அவரது வழியிலேயே அவரை விட்டுவிட்டார்கள். அதனால்தான், அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்களை "தன்ஈமி"ல் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டச் செய்தார்கள்" என அதிகப்படியாகவும் இடம்பெற்றுள்ளது.
அறிவிப்பாளர் அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள், "எனவே, ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ் செய்யும்போது, நபி (ஸல்) அவர்களுடன் அவர்கள் செய்ததைப் போன்றே செய்வார்கள்" என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2325. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி "தல்பியா" சொன்னவர்களாக நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். எங்களுடன் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். நாங்கள் மக்காவிற்கு வந்ததும் இறையில்லத்தைச் சுற்றி வந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (சயீ) ஓடினோம். அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு (ஹலால் ஆகி)க்கொள்ளட்டும்" என்றார்கள். நாங்கள், "எந்த வகையில் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "எல்லா வகையிலும் இஹ்ராமிலிருந்து விடுபடுங்கள்" என்றார்கள். ஆகவே, நாங்கள் மனைவியரிடம் சென்றோம் (தாம்பத்திய உறவு கொண்டோம்); (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்தோம்; நறுமணம் பூசிக்கொண்டோம். துல்ஹஜ் எட்டாவது நாள் (யவ்முத் தர்வியா) வந்தபோது, ஹஜ்ஜுக்காகத் தல்பியா கூறினோம். (ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்கும் சேர்த்து "இஹ்ராம்" கட்டியிருந்த) நாங்கள் ஏற்கெனவே ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடியதே எங்களுக்குப் போதுமானதாக அமைந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களில் ஏழு பேர் ஓர் ஒட்டகத்திலும், ஏழு பேர் ஒரு மாட்டிலும் கூட்டுச் சேர்ந்து (பலியிட்டுக்)கொள்ள உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2326. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, (துல்ஹஜ் எட்டாவது நாளில்) மினாவை நோக்கிச் செல்லும் போது (ஹஜ்ஜுக்காக) "இஹ்ராம்" கட்டி, தல்பியா சொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். எனவே, நாங்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) "அல்அப்தஹ்" எனுமிடத்தில் (ஹஜ்ஜுக்காக) "இஹ்ராம்" கட்டி, "தல்பியா" சொன்னோம்.
அத்தியாயம் : 15
2327. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து (கிரான்) "இஹ்ராம்" கட்டியிருந்ததால் இரண்டுக்கும் சேர்த்து) ஒரேயொரு தடவையே தவிர, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றி (சயீ) வரவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் பக்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்கள் ஆரம்பத்தில் சுற்றிவந்த (ஒரேயொரு தடவையே தவிர)" என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2328. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மக்கள் சிலருடன் இருந்தபோது, ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதைக் கேட்டேன்:
முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களான நாங்கள் தனியாக ஹஜ்ஜுக்காக மட்டும் "இஹ்ராம்" கட்டி "தல்பியா" சொன்னோம். நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதம் நான்காவது நாள் காலையில் (ஹஜ்ஜுக்கு "இஹ்ராம்" கட்டியவர்களாக) வந்தார்கள். அப்போது இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுமாறு எங்களுக்கு உத்தரவிட்டார்கள்: "இஹ்ராமிலிருந்து விடுபட்டு, (உங்கள்) மனைவியருடன் உடலுறவு கொள்ளுங்கள்" என்றார்கள்.
- அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஆனால், இஹ்ராமிலிருந்து விடுபடுவதை நபி (ஸல்) அவர்கள் கட்டாயமாக்கவில்லை. மாறாக, அதை அனுமதிக்கவே செய்தார்கள். -
தொடர்ந்து ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அப்போது நாங்கள், "நமக்கும் அரஃபாவுக்குமிடையே ஐந்து நாட்களே எஞ்சியுள்ள நிலையில், நாம் நம் மனைவியருடன் உறவுகொள்ள வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் உத்தரவிடுகிறார்களே! நம் இனஉறுப்புகளில் இந்திரியத் துளிகள் சொட்டிக்கொண்டிருக்க, (மனைவியருடன் கூடிய பின் உடனடியாக) நாம் அரஃபாவுக்குச் செல்வதா?" என்று (வியப்புடன்) பேசிக்கொண்டோம்.
- அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதைக் கூறியபோது ஜாபிர் (ரலி) அவர்கள் தமது கையை அசைத்து சைகை செய்து காட்டியதை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
(ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் பேசிக்கொண்டதைக் கேள்விப்பட்ட) நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து, "நான் உங்களையெல்லாம் விட அல்லாஹ்விற்கு மிகவும் அஞ்சுபவனும், மிகவும் உண்மை பேசுபவனும், அதிகமாக நன்மை புரிபவனும் ஆவேன் என்பதை நீங்கள் அறிந்தே உள்ளீர்கள். நான் என்னுடன் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருக்காவிட்டால்,நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுவதைப் போன்று நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன். (ஹஜ்ஜுடைய மாதத்தில் உம்ராச் செய்யலாம் என) நான் பின்னர் அறிந்ததை முன்னரே அறிந்திருந்தால், எனது பலிப்பிராணியை நான் கொண்டுவந்திருக்கமாட்டேன். எனவே, நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளுங்கள்!" என்றார்கள். நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம்; செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம்.
அப்போது (யமன் நாட்டில்) ஸகாத் வசூலிக்கும் நிர்வாகப் பொறுப்பில் இருந்த அலீ (ரலி) அவர்கள் (ஹஜ்ஜுக்கு) வந்தார்கள். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், "நீர் எதற்காக "இஹ்ராம்" கட்டி, "தல்பியா" சொன்னீர்?" என்று கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் எதற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளார்களோ அதற்காகவே "இஹ்ராம்" கட்டியுள்ளேன்" என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் "நீர் இஹ்ராமிலேயே நீடித்து, (ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்த பின்) குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடுவீராக!" என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக ஒரு குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருந்தார்கள். அப்போது சுராக்கா பின் மாலிக் பின் ஜுஅஷும் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக்கொள்ளும் இச்சலுகை) இவ்வாண்டிற்கு மட்டுமா? அல்லது என்றைக்குமா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் "என்றைக்கும்தான்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2329. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி, "தல்பியா" சொன்னோம். நாங்கள் மக்காவிற்கு வந்ததும் எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, எங்களது இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள். அது எங்களுக்குச் சிரமமாகத் தோன்றியது; மனவேதனையும் அளித்தது. இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அவர்களுக்கு வானிலிருந்து ஏதேனும் செய்தி எட்டியதா, அல்லது மக்களின் தரப்பிலிருந்து போய்ச் சேர்ந்ததா என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்நிலையில் அவர்கள், "மக்களே! நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளுங்கள். என்னுடன் பலிப்பிராணி இருந்திராவிட்டால் நீங்கள் செய்ததைப் போன்றே நானும் செய்திருப்பேன்" என்றார்கள். ஆகவே, நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம்; மனைவியருடன் தாம்பத்திய உறவு கொண்டோம். (சாதாரணமாக) இஹ்ராமிலிருந்து விடுபட்டவர் செய்வதையெல்லாம் செய்தோம். துல் ஹஜ் எட்டாவது நாளானபோது,மக்காவிலிருந்து (மினாவை நோக்கிப்) புறப்படும் வேளையில் நாங்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி, "தல்பியா" சொன்னோம்.
அத்தியாயம் : 15
2330. அபூஷிஹாப் மூசா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் துல்ஹஜ் பிறை எட்டுக்கு நான்கு நாட்களுக்கு முன்னால் உம்ராவிற்குப் பின் ஹஜ் (தமத்துஉ) செய்ய நாடி மக்காவிற்குச் சென்றேன். அப்போது மக்கள், "(இப்படி உம்ராவிற்குப் பின் ஹஜ்ஜுத் தமத்துஉ செய்தால்) உமது ஹஜ் தற்போது மக்காவாசிகளின் ஹஜ்ஜாக மாறிவிடுகிறது (குறைந்த நன்மையே உமக்குக் கிடைக்கும்)" என்று கூறினர். நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் சென்று இது தொடர்பாக விளக்கம் கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரி (ரலி) அவர்கள் என்னிடம் (பின்வருமாறு) அறிவித்தார்கள் என்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டுவந்த ஆண்டில் நானும் அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்றேன். அப்போது (அவர்களுடன் வந்த) மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்கு மட்டும் "இஹ்ராம்" கட்டியிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), "நீங்கள் இறையில்லத்தைச் சுற்றிவந்து, ஸஃபா மற்றும் மர்வா இடையே ஓடிவிட்டு,தலைமுடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக்கொள்ளுங்கள். துல்ஹஜ் பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டிக்கொள்ளுங்கள். நீங்கள் இதற்கு முன்னால் (ஹஜ்ஜுக்கு எனச்) செய்துவந்த இஹ்ராமை (உம்ராவை நிறைவு செய்து ஹஜ்ஜுக்குச் செய்யும்) "தமத்துஉ" ஆக மாற்றிக் கொள்ளுங்கள்" என்றார்கள்.
அதற்குத் தோழர்கள், "நாங்கள் ஹஜ் எனக் குறிப்பிட்ட இஹ்ராமை எவ்வாறு உம்ராவாக ஆக்கிக்கொள்வது?" என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் கட்டளையிடுவதைச் செய்யுங்கள். ஏனெனில், நான் என்னுடன் பலிப்பிராணியைக் கொண்டு வரவில்லையாயின், உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்றே நானும் செய்திருப்பேன். பலிப்பிராணி(யைக் கொண்டுவந்ததால் அது) உரிய இடத்தை அடைவதற்கு முன் (பலியிடும்வரை) நான் இஹ்ராமிலிருந்து விடுபடலாகாது" என்றார்கள். உடனே தோழர்கள் அவ்வாறே செய்தனர்.
அத்தியாயம் : 15
2331. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவுக்கு) வந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களது இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொண்டு, இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு உத்தரவிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பலிப் பிராணியிருந்ததால் தமது இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக்கொள்ள அவர்களால் இயலவில்லை.
அத்தியாயம் : 15
பாடம் : 18 ஹஜ்ஜுடன் உம்ராவும் செய்து பயனடைதல்.
2332. அபூநள்ரா முன்திர் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (ஹஜ் மாதத்தில் முதலில் உம்ராவிற்கு "இஹ்ராம்" கட்டி அதை நிறைவேற்றியவுடன் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, துல்ஹஜ் பிறை எட்டு அன்று மீண்டும் "இஹ்ராம்" கட்டி) ஹஜ்ஜுத் தமத்துஉ செய்யுமாறு உத்தரவிட்டுவந்தார்கள். அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் அதற்குத் தடை விதித்துவந்தார்கள். எனவே, நான் இதைப்பற்றி ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கூறி (தீர்ப்புக் கோரி)னேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், சரியான ஆளிடம்தான் இந்த விஷயம் வந்துள்ளது. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுத் தமத்துஉ செய்துள்ளோம். பின்னர் உமர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்தபோது அவர்கள், "அல்லாஹ் தன் தூதருக்கு, தான் நாடியதை தான் நாடிய ஒரு காரணத்திற்காக அனுமதித்து வந்தான். ஆனால், குர்ஆன் அதற்குரிய இடத்தில் உள்ளது. ஆகவே, அல்லாஹ்விற்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் அவன் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளபடி முழுமையாக்குங்கள். இப்பெண்களின் திருமணத்தை உத்தரவாதப்படுத்துங்கள். இனி, தவணை முறையில் (குறிப்பிட்ட காலம்வரைக்கும் என்று) ஒரு பெண்ணை மணமுடித்தவர் (என்னிடம்) கொண்டு வரப்பட்டால், அவரைக் கல்லால் அடித்துக் கொல்லாமல் விடமாட்டேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. அதில், "...எனவே, உங்களது உம்ராவிலிருந்து ஹஜ்ஜைத் தனியாகப் பிரித்திடுங்கள். அதுவே உங்கள் ஹஜ்ஜையும் முழுமையாக்கும்; உங்கள் உம்ராவையும் முழுமையாக்கும்" என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2333. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "லப்பைக்க பில்ஹஜ்" எனத் தல்பியாச் சொன்னவர்களாக (ஹஜ்ஜுக்குச்) சென்றோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிற்கு வந்ததும்) அந்த இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 19 நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்.
2334. முஹம்மத் பின் அலீ பின் அல் ஹுசைன் பின் அலீ பின் அபீதாலிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு முறை) ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்றோம். ஜாபிர் (ரலி) அவர்கள் (என்னுடன் வந்த) மக்களைப் பற்றி விசாரித்துவிட்டு இறுதியில் என்னைப் பற்றி விசாரித்தார்கள். "நான் ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்களின் பேரன் முஹம்மத் பின் அலீ" என்று (என்னை) அறிமுகப்படுத்தினேன். உடனே ஜாபிர் (ரலி) அவர்கள், (அன்பொழுகத்) தமது கையை எனது தலையை நோக்கி நீட்டி, (பிறகு கையைக் கீழே கொண்டு சென்று) எனது அங்கியின் மேல் பொத்தானையும்,அடுத்து கீழ்ப் பொத்தானையும் கழற்றி, எனது நெஞ்சில் கையை வைத்தார்கள். -அப்போது நான் இளவயதுச் சிறுவனாக இருந்தேன்- மேலும், "என் சகோதரர் மகனே, வருக. நீர் விரும்பியதைப் பற்றி என்னிடம் கேள்" என்றார்கள். அவர்களிடம் சில விளக்கங்களைக் கேட்டேன். -அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் கண்பார்வையற்றவராய் இருந்தார்கள்.- தொழுகை நேரம் வந்ததும் அவர்கள் தமது மேல் துண்டை போர்த்திக்கொண்டு எழுந்தார்கள். அவர்கள் அதைத் தமது தோள்மீது போடப் போட, அது சிறியதாக இருந்ததால் தோளில் உட்காராமல் அதன் இரு ஓரங்களும் கீழே விழுந்துகொண்டிருந்தன. அப்போது அவர்களது மேல்சட்டை அருகிலிருந்த ஒரு கொக்கியில் மாட்டப்பெற்றிருந்தது. பிறகு அவர்கள் (மேல்சட்டை அணியாமலேயே மேல்துண்டுடன்) எங்களுக்குத் தொழுவித்தார்கள்.
பிறகு அவர்களிடம் நான், "அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஒன்பது" எனத் தமது விரலால் சைகை செய்து காட்டிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிற்குச் சென்ற பின்) "ஒன்பது" ஆண்டுகள் ஹஜ் (கடமையாகததால் அதை) நிறைவேற்றாமலேயே தங்கியிருந்தார்கள். பத்தாவது ஆண்டில் மக்களிடையே "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த ஆண்டில்) ஹஜ் செய்யப்போகிறார்கள்" என அறிவிப்புச் செய்யவைத்தார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றி அவர்களைப் போன்றே தாமும் (ஹஜ்) கிரியைகளைச் செய்யும் நோக்கத்துடன் ஏராளமான மக்கள் மதீனாவிற்கு(த் திரண்டு) வந்தனர்.
பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். "துல்ஹுலைஃபா" எனும் இடத்திற்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது, (அபூபக்ர் (ரலி) அவர்களின் துணைவியார்) அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களுக்கு முஹம்மத் பின் அபீபக்ர் (ரலி) பிறந்தார். உடனே அஸ்மா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அபூபக்ர் (ரலி) அவர்களை) அனுப்பி "நான் எப்படி ("இஹ்ராம்") கட்ட வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ குளித்துவிட்டு, (பிரசவப்போக்கு இருப்பதால்) ஒரு துணியால் கச்சை கட்டிக்கொண்டு, "இஹ்ராம்" கட்டிக்கொள்" என்று கூறியனுப்பினார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கிருந்த (துல்ஹுலைஃபா) பள்ளிவாசலில் தொழுதுவிட்டு, "கஸ்வா" எனும் ஒட்டகத்தில் ஏறினார்கள். (துல்ஹுலைஃபாவிற்கு அருகிலுள்ள) "அல்பைதாஉ" எனுமிடத்தில் அவர்களது ஒட்டகம் நிலைக்கு வந்து பயணத்திற்குத் தயாரானபோது நான் பார்த்தேன்; எனது பார்வையெட்டும் தூரத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னாலும், வலப் பக்கத்திலும், இடப் பக்கத்திலும், பின்னாலும் (ஏராளமான) மக்கள் வாகனத்திலும் கால்நடையாகவும் வந்து குழுமியிருப்பதைக் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு நடுவில் இருந்தார்கள். அப்போது அவர்களுக்குக் குர்ஆன் வசனங்கள் அருளப்பெற்றன. அவற்றின் விளக்கத்தை அவர்கள் அறிவார்கள். அவர்கள் எதைச் செய்தாலும் அதை நாங்களும் அப்படியே செய்தோம்.
அவர்கள் "லப்பைக். அல்லாஹும்ம லப்பைக். லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக். வல்முல்க லா ஷரீக்க லக் (இதோ, உன் அழைப்பேற்று வந்துவிட்டேன் இறைவா! உன் அழைப்பேற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகி றேன். உனக்கு இணை யாருமில்லை. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாளர் எவருமில்லை)" என்று ஏகத்துவ உறுதிமொழியுடன் தல்பியாச் சொன்னார்கள். மக்கள், தாம் கூறிவருகின்ற முறையில் (சற்று கூடுதல் குறைவு வாசகங்களுடன்) தல்பியா கூறினர். ஆனால், அதில் எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து தமது தல்பியாவையே சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது நாங்கள் ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் எண்ணியிருக்கவில்லை. (ஹஜ் காலத்தில் செய்யும்) அந்த உம்ராவை நாங்கள் அறிந்திருக்கவுமில்லை. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இறையில்லம் கஅபாவுக்கு வந்(து தவாஃப் செய்)தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவில் "ஹஜருல் அஸ்வத்" உள்ள மூலையில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள். (தம் தோள்களைக் குலுக்கியவாறு) வேகமாக மூன்று முறையும், (சாதாரணமாக) நடந்தவாறு நான்கு முறையும் சுற்றிவந்தார்கள்.
பிறகு மகாமு இப்ராஹீமை முன்னோக்கிச் சென்று, "இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளுங்கள்" (2:125) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அப்போது மகாமு இப்ராஹீம் தமக்கும் கஅபாவிற்கும் இடையே இருக்குமாறு நின்று, இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். குல் ஹுவல்லாஹு அஹத், குல் யாஅய்யுஹல் காஃபிரூன் ஆகிய இரு அத்தியாயங்களை அவ்விரு ரக்அத்களிலும் ஓதினார்கள்.
- இவ்விரு அத்தியாயங்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் ஓதினார்கள் என்றே ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து என் தந்தை முஹம்மத் பின் அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என நான் அறிவேன் என்று அறிவிப்பாளர் ஜஅஃபர் பின் முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹஜருல் அஸ்வத்" அமைந்துள்ள மூலைக்குத் திரும்பிச் சென்று, அதில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள். பின்னர் (அருகிலிருந்த) அந்த (ஸஃபா) வாசல் வழியாக "ஸஃபா" மலைக் குன்றை நோக்கிப் புறப்பட்டார்கள். ஸஃபாவை நெருங்கியதும் "ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்" எனும் (2:158ஆவது) வசனத்தை ஓதிக் காட்டிவிட்டு, "அல்லாஹ் ஆரம்பமாகக் குறிப்பிட்டுள்ள இடத்திலிருந்தே நானும் ஆரம்பிக்கிறேன்" என்று சொன்னார்கள். அவ்வாறே, முதலில் "ஸஃபா" மலைக் குன்றை நோக்கிச் சென்று, அதன் மீது ஏறினார்கள். அப்போது அவர்களுக்கு இறையில்லம் கஅபா தென்பட்டது. உடனே "லாயிலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை), அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என ஓரிறை உறுதிமொழியும் தக்பீரும் சொன்னார்கள்.
மேலும், லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து. வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, அன்ஜஸ வஅதஹு, வ நஸர அப்தஹு. வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக எவரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் படைத் தவன். (அந்த) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான். தன் அடியாருக்கு உதவி செய்துவிட்டான். தன்னந்தனியாக கூட்டணிக்குலங்கள் அனைத்தையும் தோற்கடித்துவிட்டான்)"என்றும் கூறினார்கள்.
பிறகு ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (ஓடு பாதையில்) பிரார்த்தித்துவிட்டு, மேற்கண்டவாறு மூன்று முறை கூறினார்கள்.
பிறகு மர்வாவில் இறங்கி, பள்ளத்தாக்கின் நடுப்பகுதியில் கால் பதித்தபோது, அங்கிருந்து (தோள்களைக் குலுக்கியபடி) ஓடலானார்கள். பள்ளத்தாக்கின் நடுப்பகுதியைத் தாண்டியதும் (சாதாரணமாக) நடக்கலானார்கள். ஸஃபாவில் செய்ததைப் போன்றே மர்வாவிலும் செய்தார்கள்.
மர்வாவில் அவர்கள் தமது இறுதிச் சுற்றை முடித்ததும், "நான் (ஹஜ்ஜுடைய) மாதத்தில் உம்ராச் செய்யலாம் எனப்) பின்னர் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால், நான் பலிப்பிராணிகளை என்னுடன் கொண்டுவந்திருக்கமாட்டேன்; இதை உம்ராவாக மாற்றியிருப்பேன். எனவே, பலிப்பிராணியைத் தம்முடன் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, தமது இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளட்டும்!" என்று சொன்னார்கள்.
அப்போது சுராக்கா பின் மாலிக் பின் ஜுஅஷும் (ரலி) அவர்கள் எழுந்து(வந்து), "அல்லாஹ்வின் தூதரே! இ(ச்சலுகையான)து, இந்த ஆண்டிற்கு மட்டுமா, அல்லது என்றைக்குமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் விரல்களில் ஒன்றை மற்றொன்றுடன் கோத்துக்கொண்டு, "ஹஜ்ஜுக்குள் உம்ரா நுழைந்து கொண்டது" என்று இரண்டு முறை கூறினார்கள். பிறகு (சுராக்கா (ரலி) அவர்களுக்கு), "இல்லை; என்றைக்கும் தான் (இச்சலுகை); என்றைக்கும் தான் (இச்சலுகை)" என்று விடையளித்தார்கள்.
(அந்த ஹஜ்ஜின்போது) அலீ (ரலி) அவர்கள் யமன் நாட்டிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்காகக் குர்பானி ஒட்டகங்களுடன் வந்தார்கள். அப்போது (அலீயின் துணைவி யார்) ஃபாத்திமா (ரலி) அவர்கள், சாயமிடப்பட்ட ஆடையணிந்து, கண்களுக்கு அஞ்சனம் தீட்டி இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பவர்களில் ஒருவராகக் காட்சியளித்தார்கள். அதை அலீ (ரலி) அவர்கள் ஆட்சேபித்தார்கள். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள், "என் தந்தை (நபி) அவர்கள்தாம் இப்படிச் செய்யுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்" என்றார்கள்.
- அலீ (ரலி) அவர்கள் இராக்கிலிருந்தபோது (இதைப் பின்வருமாறு) குறிப்பிடுவார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா செய்தது குறித்துப் புகார் செய்வதற்காகவும், ஃபாத்திமா கூறியபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் அவ்வாறு செய்யச் சொன்னார்களா என்று கேட்டறிவதற்காகவும் சென்றேன். ஃபாத்திமாமீது ஆட்சேபம் செய்ததை,அவர்களிடம் தெரிவித்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எனது குற்றச்சாட்டைக் கேட்டுவிட்டு), "அவர் (ஃபாத்திமா) சொன்னது உண்மையே; அவர் சொன்னது உண்மையே" என்றார்கள்.
பிறகு, "நீர் இஹ்ராம் கட்டி, ஹஜ் செய்ய முடிவு செய்தபோது என்ன (தல்பியா) சொன்னீர்?" என்று கேட்டார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், "இறைவா! உன் தூதர் எதற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளார்களோ அதற்காகவே நானும் "இஹ்ராம்" கட்டினேன்"என்று (தல்பியா) சொன்னேன் என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "என்னுடன் பலிப்பிராணிகள் உள்ளன. எனவே, ("என்னைப் போன்றே" எனக்கூறி நீரும் இஹ்ராம் கட்டியுள்ளதால்) நீர் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டாம்"என்றார்கள்.-
தொடர்ந்து முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அலீ (ரலி) அவர்கள் யமனிலிருந்து கொண்டுவந்த பலிப்பிராணிகளையும் நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) கொண்டுவந்த பலிப் பிராணிகளையும் சேர்த்து மொத்தம் நூறு பலிப் பிராணிகள் சேர்ந்தன.
பிறகு மக்கள் அனைவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, தலைமுடியைக் குறைத்துக் கொண்டனர்; நபி (ஸல்) அவர்களையும்,தம்முடன் பலிப்பிராணிகளைக் கொண்டுவந்திருந்த மக்களையும் தவிர! துல்ஹஜ் எட்டாவது நாள் வந்தபோது, மக்கள் மினாவை நோக்கிச் சென்றனர். அப்போது ஹஜ்ஜுக்காக (இஹ்ராம் கட்டி) "தல்பியா" கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறிச்சென்று (மினாவில்) லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா, ஃபஜ்ர் ஆகிய (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதார்கள். ஃபஜ்ர் தொழுதுவிட்டுச் சூரியன் உதயமாகும் வரை சிறிது நேரம் அங்கேயே தங்கினார்கள். பிறகு (அரஃபா அருகிலுள்ள) "நமிரா" எனுமிடத்தில் தமக்காக முடியினாலான கூடாரம் ஒன்று அமைக்குமாறு உத்தரவிட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அவர்கள் (முஸ்தலிஃபாவிலுள்ள) "மஷ்அருல் ஹராம்" எனும் மேட்டுக்கு அருகில் தங்குவார்கள் எனக் குறைஷியர் பெரிதும் நம்பிக்கொண்டிருந்தனர். அறியாமைக் காலத்தில் குறைஷியர் அங்கு தங்குவது வழக்கம். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கடந்து அரஃபாவிற்குச் சென்றுவிட்டார்கள். அங்கு "நமிரா"வில் தமக்காக அமைக்கப்பெற்றிருந்த கூடாரத்தைக் கண்டு அங்கு இறங்கித் தங்கினார்கள்.
சூரியன் உச்சி சாய்ந்ததும் "கஸ்வா" எனும் தமது ஒட்டகத்தில் (சேணம் பூட்டுமாறு) உத்தரவிட்டார்கள். சேணம் பூட்டப்பெற்றதும் ("உரனா") பள்ளத்தாக்கின் மத்திய பகுதிக்கு வந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்:
"உங்களது புனிதமிக்க இந்நகரத்தில் உங்களது புனிதமிக்க இம்மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும். அறிக! அறியாமைக் காலத்தின் அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டவை ஆகும். அறியாமைக் காலத்தில் நிகழ்ந்துவிட்ட உயிர்க்கொலைகளுக்கான பழிவாங்குதல்கள் அனைத்தும் (என் பாதங்களுக்குக் கீழே) புதைக்கப்பட்டவை ஆகும். (அவற்றை நான் தள்ளுபடி செய்கிறேன்.) முதற்கட்டமாக, நம்மிடையே நடைபெற்ற கொலைகளில் ரபீஆ பின் அல்ஹாரிஸின் மகனது கொலைக்கான பழிவாங்கலை நான் தள்ளுபடி செய்கிறேன். அவன் பனூ சஅத் குலத்தாரிடையே பால்குடிப் பாலகனாக இருந்துவந்தான். அவனை ஹுதைல் குலத்தார் கொன்றுவிட்டனர். அறியாமைக் காலத்தில் இருந்த வட்டியும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்படுகிறது. (அவற்றையும் நான் தள்ளுபடி செய்கிறேன்.) நம்மவர் கொடுத்திருந்த வட்டிகளில் முதற்கட்டமாக (என் பெரிய தந்தை) அப்பாஸ் பின் அப்தில் முத்தலிபிற்கு வரவேண்டிய வட்டியை நான் தள்ளுபடி செய்கிறேன். அதில் (அசலைத் தவிர) கூடுதலான தொகை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது. பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடைக்கலத்தால் அவர்களை நீங்கள் (கைப்) பிடித்துள்ளீர்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்களது கற்பை நீங்கள் அனுமதிக்கப் பெற்றதாக ஆக்கியுள்ளீர்கள். அவர்களிடம் உங்களுக்குள்ள உரிமை என்னவென்றால், நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் விரிப்பில் (அதாவது உங்களது வீட்டில்) அவர்கள் அனுமதிக்காமல் இருப்பதாகும். அவ்வாறு அவர்கள் அனுமதித்தால் காயம் ஏற்படாதவகையில் அவர்களை நீங்கள் அடிக்கலாம். உங்களிடம் அவர்களுக்குள்ள உரிமை யாதெனில்,முறையான உணவும் உடையும் அவர்களுக்கு நீங்கள் அளிப்பதாகும்.
உங்களிடையே நான் (மிக முக்கியமான) ஒன்றை விட்டுச் செல்கிறேன். அதை நீங்கள் பலமாகப் பற்றிக்கொண்டால் நீங்கள் ஒருபோதும் வழிதவறவேமாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமாகும்" என்று கூறிவிட்டு, "(மறுமை நாளில்) உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (இறைச்செய்திகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்துவிட்டீர்கள்; (உங்களது நபித்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்தார்மீது) அக்கறையுடன் நடந்துகொண்டீர்கள் என நாங்கள் சாட்சியமளிப்போம்" என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது சுட்டுவிரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு அதை மக்களை நோக்கித் தாழ்த்தி, "இறைவா! இதற்கு நீயே சாட்சி" என்று மூன்று முறை கூறினார்கள்.
பிறகு தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லச்செய்து, லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச்செய்து, அஸ்ர் தொழுகையும் தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் அவர்கள் தொழவில்லை.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் ஏறி, அரஃபாவிற்கு வந்து, அங்கிருந்த ("ஜபலுர் ரஹ்மத்" மலை அடிவாரத்தில்) பாறைகள்மீது தமது "கஸ்வா" எனும் ஒட்டகத்தை நிறுத்தினார்கள். கால்நடையாக நடந்துவந்த மக்கள் திரளை தம் முன்னிறுத்தி, கிப்லாவை முன்னோக்கி, சூரியன் மறையத் தொடங்கும்வரை அப்படியே வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்.
சூரியனின் பொன்னிறம் சற்று மறைந்து சூரியனின் தலைப்பகுதி மறைந்துவிட்ட பிறகு உசாமா (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் (தமது வாகனத்தில்) அமர்த்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். "கஸ்வா" எனும் தமது ஒட்டகத்தின் கடிவாளத்தை அவர்கள் இறுக்க, அதன் தலை, (பயணி களைப்படையும்போது) கால் வைக்கும் வளையத்தில் பட்டது. அப்போது தமது வலக் கையால் சைகை செய்து, "மக்களே! நிதானம்! நிதானம்! (மெதுவாகச் செல்லுங்கள்)" என்றார்கள். ஒவ்வொரு மணல் மேட்டையும் அடையும் போது, ஒட்டகம் மேட்டில் ஏறும்வரை கடிவாளத்தைச் சற்றுத் தளர்த்தினார்கள். இவ்வாறு முஸ்தலிஃபாவிற்கு வந்ததும் அங்கு ஒரேயொரு "தொழுகை அறிவிப்பு"ம் இரு இகாமத்களும் சொல்லி மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் தொழவில்லை.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருக்களித்துப் படுத்திருந்துவிட்டு, ஃபஜ்ர் உதயமானதும் தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லி ஃபஜ்ர் தொழுவித்தார்கள். அப்போது அதிகாலை வெளிச்சம் நன்கு புலப்பட்டது. பிறகு "கஸ்வா" ஒட்டகத்தில் ஏறி, மஷ்அருல் ஹராமிற்கு ("குஸஹ்" மலைக்கு) வந்து, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ் மிகப்பெரியவன் என்று (தக்பீரு)ம், லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று (தஹ்லீலு)ம், "அவன் தனித்தவன்" என்று (ஓரிறை உறுதிமொழியு)ம் கூறினார்கள். நன்கு விடியும்வரை அங்கேயே தங்கியிருந்தார்கள்.
பிறகு சூரியன் உதயமாவதற்கு முன் அங்கிருந்து புறப்பட்டார்கள். அப்போது ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் (வாகனத்தில்) அமர்த்திக்கொண்டு சென்றார்கள். -ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அழகிய முடியும் தோற்றமும் வெள்ளை நிறமும் உடைய வசீகரமான ஆண் மகனாக இருந்தார்கள்.- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டபோது,அவர்களைக் கடந்து பெண்கள் சிலர் சென்றனர். ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அப்பெண்களைக் கூர்ந்து பார்க்கலானார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபள்ல் (ரலி) அவர்களின் முகத்தின் மீது தமது கையை வைத்(து மறைத்)தார்கள். உடனே ஃபள்ல் (ரலி) அவர்கள் தமது முகத்தை வேறு பக்கம் திருப்பி (அப்பெண்களை)ப் பார்க்கலானார்கள். மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையை மறு பக்கமும் கொண்டுசென்று, ஃபள்ல் (ரலி) அவர்களின் முகத்தின் மீது வைத்து, அப்பெண்களைப் பார்க்கவிடாமல் திருப்பினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்தலிஃபாவிற்கும் மினாவிற்கும் இடை யிலுள்ள) "பத்னு முஹஸ்ஸிர்" எனும் இடத்துக்கு வந்தபோது, தமது ஒட்டகத்தைச் சிறிது விரைவாகச் செலுத்தினார்கள். பின்னர் "ஜம்ரத்துல் அகபா" செல்லும் சாலையின் நடுவில் பயணம் செய்து, அந்த மரத்திற்கு அருகிலுள்ள "ஜம்ரத்துல் அகபா"விற்குச் சென்று, சுண்டி எறியும் அளவிற்கு ஏழு சிறு கற்களை ஜம்ராவின் மீது எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும்போது தக்பீர் கூறினார்கள். அந்தப் பள்ளத்தாக்கின் நடுவே நின்று கற்களை எறிந்தார்கள்.
பின்னர் மினாவிலுள்ள பலியிடும் இடத்திற்குச் சென்று, அறுபத்து மூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு எஞ்சிய (முப்பத்தேழு) ஒட்டகங்களை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்(துப் பலியிடச்செய்)தார்கள். தமது பலி ஒட்டகங்களிலும் அலீ (ரலி) அவர்களை நபியவர்கள் கூட்டாக்கிக்கொண்டார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, அறுக்கப்பட்ட ஒவ்வோர் ஒட்டகத்திலிருந்தும் ஓர் இறைச்சித் துண்டு கொண்டுவரப்பட்டு, ஒரு பாத்திரத்திலிட்டுச் சமைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் அதன் இறைச்சியை உண்டார்கள்; குழம்பைப் பருகினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறி, ("தவாஃபுல் இஃபாளா" செய்வதற்காக) இறையில்லம் கஅபாவை நோக்கிச் சென்றார்கள். மக்காவிலேயே லுஹ்ர் தொழுதுவிட்டு, அப்துல் முத்தலிப் மக்களிடம் சென்றார்கள். அப்போது அம்மக்கள் "ஸம்ஸம்" கிணற்றிலிருந்து நீரிறைத்து விநியோகித்துக்கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அப்துல் முத்தலிபின் மக்களே! நீரிறைத்து விநியோகியுங்கள். "ஸம்ஸம்" கிணற்றில் நீரிறை(த்து விநியோகிக்கும் பொறு)ப்பில் உங்களை மக்கள் மிகைத்து விடுவார்கள் என்று (அச்சம்) இல்லாவிட்டால், உங்களுடன் நானும் நீரிறைப்பேன்" என்று சொன்னார்கள்.அப்போது அவர்கள் ஒரு வாளித் தண்ணீரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிலிருந்து சிறிது நீரைப் பருகினார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2335. மேற்கண்ட ஹதீஸ் முஹம்மத் பின் அலீ பின் அல்ஹுசைன் பின் அலீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹஜ்ஜைப் பற்றிக் கேட்டேன்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும் அதில், "(அறியாமைக் காலத்தில்) அபூ சய்யாரா என்பவர் தமது சேணம் பூட்டப்படாத கழுதையில் அரபியரை (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்கு) அழைத்துச் செல்பவராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மஷ் அருல் ஹராமை"த் தாண்டிச் சென்றபோது, அந்த இடத்தோடு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தைச் சுருக்கிக்கொள்வார்கள்; அதுதான் அவர்கள் தங்கும் இடமாக அமையும் என்பதில் அவர்கள் உறுதியோடு இருந்தனர். ஆனால்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அ(ங்கு தங்குவ) தற்கு முன்வரவில்லை. நேராக அரஃபா நோக்கிச் சென்று (அதன் அருகிலுள்ள "நமிரா"வில்தான்) தங்கினார்கள்" என்று அதிகப்படியாகவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 20 "அரஃபா" பெருவெளி முழுவதும் தங்குமிடம்தான் என்பது தொடர்பாக வந்துள்ளவை.
2336. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மினாவில் மஸ்ஜிதுல் கைஃப் அருகிலுள்ள) இவ்விடத்தில் அறுத்துப் பலியிட்டேன். ஆனால், மினா முழுவதும் பலியிடும் இடமாகும். எனவே, (மினாவில்) நீங்கள் தங்கியிருக்கும் இடங்களிலேயே பலியிட்டுக்கொள்ளுங்கள். நான் (அரஃபா நடுவிலுள்ள "ஜபலுர் ரஹ்மத்" மலைக்குக் கீழே) தங்கினேன். ஆனால், அரஃபா முழுவதும் தங்குமிடமாகும். நான் (முஸ்தலிஃபாவில் "மஷ்அருல் ஹராம்" குன்றின் அருகில்) தங்கினேன். ஆனால், முஸ்தலிஃபா முழுவதும் தங்குமிடமாகும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2337. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா(விலுள்ள கஅபா)விற்கு வந்ததும் "ஹஜருல் அஸ்வது"க்குச் சென்று அதைத் தொட்டு முத்தமிட்டார்கள். பின்னர் வலப் புறமாக நடந்துசென்று (கஅபாவைச்) சுற்றலானார்கள். மூன்று சுற்றுகள் (தோள்களைக் குலுக்கியவாறு) வேகமாகவும் நான்கு சுற்றுகள் சாதாரணமாக நடந்தும் சுற்றினார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 21 அரஃபா பெருவெளியில் தங்குவதும், "பின்பு மக்கள் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்" (2:199) எனும் இறைவசனத் தொடரும்.
2338. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின்போது) குறைஷியரும் அவர்களுடைய சமயச் சார்புடையோரும் (தங்களை உயர்வாகக் கருதிக்கொண்டு) முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள் ("ஹரம்" புனித எல்லையைவிட்டு வெளியேறமாட்டார்கள்). அவர்கள் "கடினமான (சமயப் பற்றுடைய)வர்கள்" (ஹும்ஸ்) எனப் பெயரிடப்பட்டுவந்தனர். மற்ற எல்லா அரபியரும் "அரஃபா"பெருவெளியில் தங்குவார்கள். இஸ்லாம் வந்தபோது வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், (குறைஷிக் குலத்தவரான) தன் தூதருக்கு (துல்ஹஜ் ஒன்பதாம் நாளில்) "அரஃபாத்" சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு, அங்கிருந்தே புறப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டான். அக்கட்டளையே "பின்பு மக்கள் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்" (2:199) எனும் இறைவசனமாகும்.
அத்தியாயம் : 15
2339. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின்போது) அரபுகள் இறையில்லம் கஅபாவை நிர்வாணமாகவே சுற்றிவருவார்கள். "ஹும்ஸ்" (கடினமான சமயப் பற்றுடையவர்)களைத் தவிர! "ஹும்ஸ்" என்போர் குறைஷியரும் அவர்கள் பெற்றெடுத்த மக்களும் ஆவர். அரபுகள் நிர்வாணமாகவே (கஅபாவைச்) சுற்றிவருவார்கள். ஹும்ஸ்கள் ஏதேனும் ஆடை வழங்கினால் தவிர! ஆண்கள் ஆண்களுக்கும், பெண்கள் பெண்களுக்கும் ஆடை வழங்குவதுண்டு. கடினமான சமயப்பற்றுடைய ஹும்ஸ்கள் (துல்ஹஜ் ஒன்பதாம் நாளில்) முஸ்தலிஃபாவிலிருந்து வெளியேறமாட்டார்கள். மற்ற அரபுகள் அனைவரும் அரஃபாத் சென்றடை(ந்து அங்கு தங்கு)வார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஹும்ஸ்களைப் பற்றியே வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் "பின்பு மக்கள் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்" என்று கூறுகின்றான். (அரபு) மக்கள் அனைவரும் அரஃபாவிலிருந்தே திரும்பிச்செல்வார்கள். ஹும்ஸ்கள் மட்டும் முஸ்தலிஃபாவிலிருந்து திரும்பிச்செல்வார்கள். அவர்கள், "நாங்கள் "ஹரம்" (புனித) எல்லையிலிருந்தே திரும்பிச்செல்வோம்" என்று கூறுவார்கள். பின்னர் இந்த வசனம் (2:199) அருளப் பெற்றதும் அரஃபாத்திலிருந்தே அவர்களும் திரும்பிச்சென்றனர்.
அத்தியாயம் : 15
2340. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் ஒரு முறை) எனது ஒட்டகம் ஒன்றைத் தொலைத்து விட்டேன். அரஃபா நாளன்று நான் எனது ஒட்டகத்தைத் தேடிக்கொண்டு சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அரஃபா" பெருவெளியில் மக்களுடன் தங்கியிருப்பதைக் கண்டேன். அப்போது நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் (முஸ்தலிஃபாவில் தங்கும்) "ஹும்ஸ்"களில் ஒருவராயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?" என்று சொல்லிக் கொண்டேன். குறைஷியர் கடினமான சமயப் பற்றுடையவர் (ஹும்ஸ்)களாகவே கருதப்பட்டனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 22 (மற்றொருவரின் இஹ்ராமுடன்) சம்பந்தப்படுத்தி இஹ்ராம் கட்டுவது செல்லும்.
2341. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (யமன் நாட்டிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் (துல்ஹுலைஃபாவில்) "அல்பத்ஹா" பள்ளத்தாக்கில் தங்கியிருந்தார்கள். அவர்கள் என்னிடம், "ஹஜ் செய்வதற்காகவா வந்துள்ளீர்?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "நீர் எதற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளீர்?" என்று கேட்டார்கள். நான், "நபி (ஸல்) அவர்கள் எதற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளார்களோ அதற்காகவே நானும் "இஹ்ராம்" கட்டியுள்ளேன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்றே செய்தீர். நீர் (சென்று) இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப் செய்து), ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றி (தொங்கோட்டம் ஓடி)விட்டு, இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்க" என்றார்கள்.
அவ்வாறே நான் (சென்று) இறையில்லத்தையும் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையேயும் சுற்றி விட்டுப் பின்னர் பனூ கைஸ் குலத்தைச் சேர்ந்த (என் நெருங்கிய உறவினரான) ஒரு பெண்ணிடம் சென்றேன். அவர் எனது தலையில் பேன் பார்த்து விட்டார். பின்னர் (துல்ஹஜ் எட்டாவது நாளில்) நான் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி தல்பியாச் சொன்னேன். இவ்வாறே (ஹஜ்ஜுக்காகச் செய்த இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளலாம் என்றே) நான் மக்களுக்குத் தீர்ப்பும் வழங்கிவந்தேன். உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது என்னிடம் ஒரு மனிதர், "அபூமூசா!" அல்லது "அப்துல்லாஹ் பின் கைஸ்!" உங்களது ஒரு தீர்ப்பை நிறுத்திவையுங்கள். ஏனெனில், உங்களுக்குப் பின்னர் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (கலீஃபா) ஹஜ்ஜின் கிரியைகளில் செய்துள்ள மாற்றத்தை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று கூறினார். அதன் பின்னர் நான், "மக்களே! நாம் யாருக்கேனும் மார்க்கத் தீர்ப்பு ஏதேனும் வழங்கியிருந்தால் (அதை உடனடியாக செயல்படுத்திவிடாமல்) அவர் எதிர்பார்த்திருக்கட்டும். ஏனெனில், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் உங்களிடம் வருவார். அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்" என்று கூறினேன். உமர் (ரலி) அவர்கள் வந்ததும் அவர்களிடம் நான் நடந்ததைச் சொன்னேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள் "நாம் அல்லாஹ்வின் வேதப்படி செயலாற்றுவதெனில், அல்லாஹ்வின் வேதம் ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக்கும்படி கட்டளையிடுகிறது. நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி செயலாற்றுவதெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பலிப்பிராணி தனது இடத்தை அடையாத வரை (அதாவது குர்பானி கொடுக்காத வரை) இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2342. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்பத்ஹா" பள்ளத்தாக்கில் தங்கியிருந்தபோது அவர்களிடம் நான் வந்தேன். அவர்கள் என்னிடம், "நீர் எதற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளீர்?" என்று கேட்டார்கள். நான், "நபி (ஸல்) அவர்கள் எதற்காக "இஹ்ராம்"கட்டியுள்ளார்களோ அதற்காகவே "இஹ்ராம்" கட்டியுள்ளேன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உம்முடன் பலிப்பிராணியைக் கொண்டுவந்துள்ளீரா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். "அவ்வாறாயின் நீர் இறையில்லத்தையும் ஸஃபா மற்றும் மர்வாவையும் சுற்றிவந்துவிட்டுப் பின்னர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்வீராக"என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே நான் இறையில்லத்தையும் ஸஃபா மற்றும் மர்வாவையும் சுற்றி விட்டுப் பின்னர் என் கூட்டத்தைச் சேர்ந்த (நெருங்கிய உறவுக்காரப்) பெண் ஒருவரிடம் சென்றேன். அவர் எனக்குத் தலை கழுவி, தலை வாரிவிட்டார்.
நான் இவ்வாறே (ஹஜ்ஜுக்காகச் செய்த இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளலாம் என்றே) அபூபக்ர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சி யி(ன் ஆரம்பக் காலத்தி)லும் மக்களுக்குத் தீர்ப்பளித்துவந்தேன். நான் ஹஜ் காலத்தில் ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்தபோது என்னிடம் ஒரு மனிதர் வந்து, "இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (உமர்) ஹஜ்ஜின் கிரியைகளில் ஏற்படுத்திய புதிய நடைமுறையை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று சொன்னார். உடனே நான் "மக்களே! நாம் யாருக்கேனும் ஏதேனும் மார்க்கத் தீர்ப்பு அளித்திருந்தால் அவர்கள் (அதைச் செயல்படுத்திவிடாமல்) நிறுத்தி வைக்கட்டும்! இதோ! இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் உங்களிடம் வரப்போகிறார். அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்" என்று கூறினேன். உமர் (ரலி) அவர்கள் வந்தபோது அவர்களிடம் நான், "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ஹஜ்ஜின் கிரியைகளில் நீங்கள் ஏற்படுத்திய இந்த நடைமுறை என்ன?" என்று கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "நாம் அல்லாஹ்வின் வேதப்படி செயல்படுவதெனில், வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் "அல்லாஹ்விற்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் முழுமையாக்குங்கள்" (2:196) என்று கூறுகின்றான். நாம் நம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி செயல்படுவதெனில், நபி (ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணிகளைப் பலியிடாத வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2343. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பணி நிமித்தம்) என்னை யமன் நாட்டுக்கு அனுப்பியிருந்தார்கள். நான் அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் அவர்களிடம் சரியாக வந்து சேர்ந்தேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூமூசா! நீர் "இஹ்ராம்" கட்டியபோது எவ்வாறு (தல்பியா) சொன்னீர்?" என்று கேட்டார்கள். நான், "நபி (ஸல்) அவர்கள் எதற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளார்களோ அதற்காகவே நான் "இஹ்ராம்" கட்டுகிறேன்" என்று கூறினேன் என்றேன். அதற்கு அவர்கள், "நீர் (உம்முடன்) ஏதேனும் பலிப் பிராணி கொண்டுவந்துள்ளீரா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். "அவ்வாறாயின், நீர் சென்று இறையில்லத்தையும் ஸஃபா மற்றும் மர்வாவையும் சுற்றி வந்துவிட்டுப் பின்னர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்க" என்றார்கள். மற்ற விவரங்கள் மேற்கண்ட இரு ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2344. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(ஹஜ் பருவத்தில் உம்ராவிற்கு இஹ்ராம் கட்டி, அதை நிறைவேற்றிவிட்டுப் பிறகு துல்ஹஜ் எட்டாவது நாள் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிப் பயனடையும் முறையான) "தமத்துஉ" செல்லும்" என நான் மார்க்கத் தீர்ப்பு வழங்கிவந்தேன். இந்நிலையில் என்னிடம் ஒரு மனிதர் (வந்து), "நீங்கள் உங்களது தீர்ப்பொன்றை நிறுத்திவையுங்கள். இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (உமர் -ரலி) அவர்கள் ஹஜ்ஜின் கிரியைகள் விஷயத்தில் புதிதாக ஏற்படுத்தியுள்ளதை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று கூறினார். நான் பின்னால் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, அதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் ஹஜ் பருவத்தில் உம்ராச் செய்துள்ளனர் என நான் அறிந்துள்ளேன். ஆயினும்,ஹாஜிகள் தம் துணைவியருடன் (அரஃபாவில் உள்ள) "அராக்" பகுதியில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு (குளித்து)விட்டு, தம் தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க (அரஃபா நோக்கிச்) செல்வதை நான் வெறுத்தேன் (ஆகவேதான், ஹஜ் பருவத்தில் உம்ராச் செய்ய வேண்டாம் என நான் ஆணையிட்டேன்)" என்றார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 23 "தமத்துஉ" முறை ஹஜ் செல்லும்.
2345. அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் "தமத்துஉ" செய்ய வேண்டாம் எனத் தடை விதித்துவந்தார்கள். (இதற்கு மாறாக) அலீ (ரலி) அவர்கள் "தமத்துஉ" செய்யுமாறு உத்தரவிட்டுவந்தார்கள். இதையொட்டி உஸ்மான் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் ஏதோ சொன்னார்கள். பின்னர் அலீ (ரலி) அவர்கள், "நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "தமத்துஉ" செய்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள் (தாமே!)" என்றார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், "ஆம்; ஆயினும் அப்போது நாம் அஞ்சியவர்களாகத்தாமே இருந்தோம்!" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2346. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மக்கா செல்லும் வழியில்) "உஸ்ஃபான்" எனுமிடத்தில் அலீ (ரலி) அவர்களும் உஸ்மான் (ரலி) அவர்களும் சந்தித்துக்கொண்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் "தமத்துஉ" செய்வதற்கு, அல்லது (ஹஜ் பருவத்தில்) உம்ராச் செய்வதற்குத் தடை விதித்துவந்தார்கள். எனவே, அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த ஒரு செயலில் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? அதற்கு நீங்கள் தடை விதிக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், "(இந்த முடிவில்) நீங்கள் எம்மை விட்டுவிடுங்கள்!" என்று கூற, அதற்கு அலீ (ரலி) அவர்கள் "என்னால் உங்களை விட்டுவிட முடியாது" என்று சொன்னார்கள். தமது நிலையில் உஸ்மான் (ரலி) அவர்கள் (உறுதியாக) இருப்பதைக் கண்ட அலீ (ரலி) அவர்கள் ஹஜ்,உம்ரா ஆகிய இரண்டிற்கும் (கிரான்) சேர்த்து (இஹ்ராம் கட்டி) தல்பியாச் சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2347. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"தமத்துஉ" முறையில் ஹஜ் செய்வதானது, முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2348. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அது -அதாவது ஹஜ் காலத்தில் "தமத்துஉ" செய்வது- (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது.
அத்தியாயம் : 15
2349. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தவணை முறைத் திருமணம் (முத்ஆ), ஹஜ் காலத்தில் "தமத்துஉ" செய்வது ஆகிய இரு "முத்ஆ"க்களும் (நபித்தோழர்களாகிய) எங்களைத் தவிர வேறெவருக்கும் பொருந்தாது.
அத்தியாயம் : 15
2350. அப்துர் ரஹ்மான் பின் அபிஷ்ஷஅஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) மற்றும் இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) ஆகியோரிடம் சென்று, "நான் இவ்வருடம் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்ய (தமத்துஉ) முடிவு செய்துள்ளேன்" என்றேன்.
அதற்கு இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், "ஆனால், உங்கள் தந்தை (அபுஷ் ஷஅஸா) அவர்கள் இவ்வாறு (தமத்துஉ செய்ய) முடிவு செய்பவராக இருக்கவில்லை" என்றார்கள்.
இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
என் தந்தை யஸீத் பின் ஷரீக் (ரஹ்) அவர்கள் (மதீனாவிற்கு அருகிலுள்ள) "அர்ரபதா" எனும் இடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்துசென்றார்கள். அப்போது அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம் இதை (தமத்துஉ) பற்றி வினவியபோது அபூதர் (ரலி) அவர்கள், "தமத்துஉ செய்வது, (நபித்தோழர்களாகிய) எங்களுக்கு மட்டுமே உரிய சலுகையாக இருந்தது. அது உங்களுக்கு உரியதன்று"என விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2351. ஃகுனைம் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் "தமத்துஉ" முறையைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (நபித்தோழர்களாகிய) நாங்கள் அவ்வாறு செய்துள்ளோம். இதோ இவர் (முஆவியா) அன்றைய நாளில் "உருஷில்" அதாவது மக்காவில் இறைமறுப்பாளராக இருந்தார்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "இதோ இவர் -அதாவது முஆவியா (ரலி) அவர்கள்" என்ற குறிப்பும் இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட தகவல் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் சுஃப்யான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஹஜ் காலத்தில் உம்ராச் செய்வது (தமத்துஉ)" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2352. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், "நான் இன்றைய தினம் உமக்கு ஒரு ஹதீஸை அறிவிக்கப்போகிறேன்;அதன் மூலம் உமக்கு அல்லாஹ் இதற்குப் பின்னாலும் பயனளிப்பான். அறிந்துகொள்க: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வீட்டாரில் சிலரை, (ஹஜ் மாதத்தின்) பத்தாவது நாளில் உம்ராவிற்கு இஹ்ராம் கட்ட அனுமதித்தார்கள். இந்த நடைமுறையை மாற்றக்கூடிய எந்த இறைவசனமும் அருளப் பெறவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அதைத் தடை செய்யாமலேயே இறந்தும்விட்டார்கள். பின்னர் ஒவ்வொரு மனிதரும் தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினர்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2353. மேற்கண்ட தகவல் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பின்னர் ஒரு மனிதர் (அதாவது உமர் (ரலி) அவர்கள்) தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2354. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், "நான் உமக்கு ஒரு ஹதீஸை அறிவிக்கப் போகிறேன். அதன் மூலம் அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக்கூடும்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து, (தமத்துஉ) செய்யச் சொன்னார்கள். பின்னர் அவர்கள் இறக்கும்வரை அதற்குத் தடை விதிக்கவில்லை. அதைத் தடை செய்யும் எந்த இறைவசனமும் அருளப்பெறவுமில்லை. நான் (எனக்கு ஏற்பட்ட மூலநோய்க்காகச்) சூடிட்டுக்கொள்ளும்வரை எனக்கு (வானவர்களால்) சலாம் சொல்லப்பட்டுவந்தது. நான் சூடிட்டுக்கொண்டபோது, எனக்கு சலாம் சொல்வது கைவிடப் பட்டது. பின்னர் சூடிட்டுக்கொள்வதை நான் கைவிட்டேன்; (சலாம்) தொடர்ந்தது" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட தகவல் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2355. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் எந்த நோயால் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது என்னிடம் ஆளனுப்பி (என்னை அழைத்தார்கள். நான் சென்றபோது பின்வருமாறு) கூறினார்கள்:
நான் உமக்குச் சில ஹதீஸ்களை அறிவிக்கப்போகிறேன். எனக்குப் பின்னர் அவற்றின் மூலம் அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடும். நான் உயிரோடு வாழ்ந்தால் அவற்றை யாருக்கும் அறிவிக்க வேண்டாம். நான் இறந்துவிட்டால் நீர் விரும்பினால் அவற்றை (மக்களிடம்) அறிவியுங்கள்.
எனக்கு (வானவர்களால்) சலாம் சொல்லப்பட்டுவந்தது. அறிக: நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் (ஹஜ் காலத்தில்) சேர்த்துள்ளார்கள். பின்னர் அந்நடைமுறையை மாற்றக்கூடிய எந்த இறைவசனமும் அருளப் பெறவில்லை. நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்யவுமில்லை. பின்னர் ஒரு மனிதர் அவ்(வாறு தமத்துஉ செய்யும்) விஷயத்தில் தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்.
அத்தியாயம் : 15
2356. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறிந்துகொள்க: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்தார்கள். அ(தைத் தடை செய்யும் விதத்)தில் குர்ஆன் வசனம் ஏதும் அருளப் பெறவில்லை. (பின்னர்) ஒரு மனிதர் தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்.
அத்தியாயம் : 15
2357. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "தமத்துஉ" செய்துள்ளோம். அ(தைத் தடை செய்யும் விதத்)தில் குர்ஆன் வசனம் ஏதும் அருளப்பெறவில்லை. (பின்னர்) ஒரு மனிதர் தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்.
அத்தியாயம் : 15
2358. மேற்கண்ட ஹதீஸ் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நபி (ஸல்) அவர்கள் "தமத்துஉ" செய்தார்கள்; அவர்களுடன் நாங்களும் "தமத்துஉ" செய்தோம்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2359. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"தமத்துஉ" முறை ஹஜ் பற்றிய வசனம் (2:196) இறைவேதத்தில் அருளப்பெற்றது. அவ்வாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். "தமத்துஉ" முறை ஹஜ் பற்றிய அந்த வசனத்தைக் காலாவதியாக்கக்கூடிய வேறெந்த வசனமும் பின்னர் அருளப்பெறவு மில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் இறக்கும்வரை அதற்குத் தடை விதிக்கவுமில்லை. பின்னர் ஒரு மனிதர் (மட்டும்) தாம் விரும்பியதைத் தமது சொந்தக் கருத்தாகக் கூறினார்.
அத்தியாயம் : 15
2360. மேற்கண்ட தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆனால், அதில் "அவ்வாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. "நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செயல்படுத்தினோம்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 24 ஹஜ்ஜுடன் உம்ராவையும் செய்து பயனடைந்தவர் (முத்தமத்திஉ), அதற்காகப் பலிப்பிராணியை அறுப்பது கடமையாகும்; பலிப்பிராணி இல்லாதவர் ஹஜ் நாட்களில் மூன்று நோன்புகளும் வீடு திரும்பியதும் ஏழு நோன்புகளும் நோற்பது அவசியமாகும்.
2361. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது உம்ராவுடன் ஹஜ்ஜையும் நிறைவேற்றினார்கள்.அவர்கள் பலிப்பிராணியை (ஹஜ்ஜில்) அறுத்துப் பலியிட்டார்கள். (மதீனாவாசிகள் "இஹ்ராம்" கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவில் இருந்தே தம்முடன் பலிப்பிராணியை நபியவர்கள் கொண்டுவந்தார்கள். முதலில் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூறி, பின்னர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி தல்பியா கூறினார்கள். மக்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்குமாக "இஹ்ராம்" கட்டியிருந்தனர். மக்களில் சிலர் பலிப்பிராணியை அறுத்துப் பலியிடுபவர்களாக இருந்தனர். (அதற்காக) அவர்கள் பலிப்பிராணியைத் தம்முடன் கொண்டுவந்திருந்தனர். வேறுசிலரோ அறுத்துப் பலியிடுபவர்களாக இருக்கவில்லை. (ஏனெனில், அவர்கள் தம்முடன் பலிப்பிராணியை கொண்டு வந்திருக்கவில்லை.)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்ததும், மக்களிடம் "உங்களில் பலிப் பிராணியைக் கொண்டுவந்தவர்கள்,தமது ஹஜ்ஜை நிறைவு செய்யாதவரை இஹ்ராமிலிருந்து விடுபடக்கூடாது. பலிப்பிராணியைக் கொண்டுவராதவர்கள் இறை யில்லம் கஅபாவையும், ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையேயும் சுற்றி வந்துவிட்டு, தமது தலைமுடியை குறைத்துக்கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளட்டும். பின்னர் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி அறுத்துப் பலியிடட்டும். பலிப்பிராணி கிடைக்காதவர்கள், ஹஜ்ஜின் நாட்களில் மூன்று நோன்புகளும் (ஹஜ்ஜை முடித்து) தமது வீடு திரும்பியதும் ஏழு நோன்புகளும் நோற்றுக்கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்ததும் (கஅபாவை ஏழு முறை) சுற்றிவந்து விட்டு, முதல் வேலையாக (கஅபாவின்) மூலையை (ஒட்டிப் பதிக்கப்பெற்றுள்ள ஹஜருல் அஸ்வதை)த் தொட்டு முத்தமிட்டார்கள். ஏழில் மூன்று சுற்றுகள் (தோள்களைக் குலுக்கி) வேகமாக நடந்தும், நான்கு சுற்றுகள் மெதுவாக நடந்தும் சுற்றி (தவாஃபுல் குதூம்) வந்தார்கள். இறையில்லத்தைச் சுற்றி முடித்ததும் மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் சலாம் கொடுத்துவிட்டு நேராக ஸஃபாவுக்குச் சென்று, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஏழு தடவைச் சுற்றி (சயீ) வந்தார்கள்.
பிறகு ஹஜ்ஜை முடிக்கும்வரை அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடாமலிருந்தார்கள். துல்ஹஜ் பத்தாவது நாள் (யவ்முந் நஹ்ர்) அன்று தமது பலிப்பிராணியை அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் இஃபாளா) வந்துவிட்டுப் பின்னர் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள்.
மக்களில் பலிப்பிராணியைக் கொண்டுவந்து அறுத்துப் பலியிட்டவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே செய்தனர்.
அத்தியாயம் : 15
2362. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தோழர்களும் உம்ராவுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியதைப் பற்றிய மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 25 ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டியவர் (முஃப்ரித்) இஹ்ராமிலிருந்து விடுபடுகின்ற நேரததில்தான் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து "இஹ்ராம்"கட்டியவரும் (காரின்) இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.
2363. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! மக்களின் நிலை என்ன? நீங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபடாமலிருக்கும்போதே, அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்களே?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படியவைத்துவிட்டேன். மேலும், எனது பலிப் பிராணிக்கு அடையாள மாலை தொங்கவிட்டுவிட்டேன். ஆகவே, நான் (ஹஜ்ஜை முடித்து அந்தப் பிராணியை) பலியிடாதவரை இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டேன்" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் நிலை என்ன? நீங்கள் உங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபடாமிலிருக்கிறீர்களே?" என்று நான் கேட்டேன் என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 15
2364. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம், "மக்களின் நிலை என்ன? நீங்கள் உங்கள் உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபடாமலிருக்கும் போதே, அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்களே?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் எனது பலிப்பிராணிக்கு அடையாள மாலை தொங்கவிட்டுவிட்டேன். மேலும், நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படியவைத்துவிட்டேன். ஆகவே, நான் ஹஜ் செய்து முடிக்காத வரை இஹ்ராமிலிருந்து விடு படமாட்டேன்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2365. மேற்கண்ட ஹதீஸ் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், மேற்கண்ட ஹதீஸில் (2363) உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2366. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ் ஆண்டில், (தவாஃபும் சயீயும் செய்துவிட்டு) உம்ராவின் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளுமாறு தம் துணைவியருக்கு உத்தரவிட்டார்கள். அப்போது நான், "நீங்கள் ஏன் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படிய வைத்துவிட்டேன். மேலும், எனது பலிப்பிராணிக்கு அடையாள மாலை தொங்க விட்டுவிட்டேன். ஆகவே, நான் (ஹஜ்ஜை முடித்து) எனது பலிப்பிராணியை அறுத்துப் பலியிடாத வரை இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டேன்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 26 (ஹஜ், உம்ராவை நிறைவேற்ற முடியாமல் எதிரிகளால்) தடுக்கப்பட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளலாம்; ஒரே இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து (கிரான்) செய்யலாம் என்பதன் விளக்கம்.
2367. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (மக்காவில் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் முற்றுகை யிட்டிருந்த) குழப்பமான காலகட்டத்தில் உம்ராவிற்காக (மக்காவிற்கு)ப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது அவர்கள், "நான் கஅபாவிற்குச் செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டால், (ஹுதைபியா சம்பவத்தின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் செய்ததைப் போன்று செய்வோம்" என்று கூறி விட்டு, உம்ராவிற்காக ("இஹ்ராம்" கட்டி) தல்பியாச் சொல்லிப் புறப்பட்டார்கள். "பைதாஉ" எனும் இடம் வந்ததும் தம் தோழர்களை நோக்கி, "(தடுக்கப்படும்போது இஹ்ராமிலிருந்து விடுபடலாம் என்பதில் ஹஜ், உம்ரா ஆகிய) அவையிரண்டும் ஒன்றுதான். நான் உம்ராவுடன் ஹஜ் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்" என்று கூறினார்கள்.
பிறகு இறையில்லம் கஅபாவிற்கு வந்து, அதை ஏழுமுறை சுற்றி (தவாஃப்) வந்தார்கள்; ஸஃபா மற்றும் மர்வா இடையேயும் ஏழு முறை சுற்றி (சயீ) வந்தார்கள். அதைவிடக் கூடுதலாக்கவில்லை. அதுவே (ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும்) போதுமானதாகும் என்று கருதினார்கள்; பலிப்பிராணியை அறுத்துப் பலியிடவும் செய்தார்கள்.
அத்தியாயம் : 15
2368. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுடன் போரிடுவதற்காக ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் (மக்காவை) முற்றுகையிட்டிருந்த காலகட்டத்தில், (ஹஜ்ஜுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வர்களான) அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்), சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோர், "இந்த ஆண்டு நீங்கள் ஹஜ் செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டு விடப்போவதில்லை. மக்களிடையே (உள்நாட்டுப்)போர் மூண்டு இறையில்லம் கஅபாவிற்குச் செல்ல முடியாமல் நீங்கள் தடுக்கப்படுவீர்கள் என்று நாங்கள் அஞ்சுகிறோம்" என்று கூறினர்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "அங்கு செல்ல முடியாமல் நான் தடுக்கப்பட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது, குறைஷி இறைமறுப்பாளர்கள் அவர்களைக் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுத்தவேளையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே நானும் செய்வேன்" என்று கூறிவிட்டு, "நான் உம்ராச் செய்ய முடிவு செய்துள்ளேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்" என்று கூறினார்கள். பிறகு புறப்பட்டு "துல்ஹுலைஃபா"விற்குச் சென்றதும் உம்ராவிற்காக ("இஹ்ராம்" கட்டி) தல்பியாச் சொன்னார்கள். மேலும், "கஅபாவிற்குச் செல்ல எனக்கு வழி விடப்பட்டால் நான் உம்ராச் செய்து முடிப்பேன். அங்கு செல்ல முடியாமல் நான் தடுக்கப்பட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது அவர்கள் செய்ததைப் போன்று நானும் செய்வேன்" என்று கூறிவிட்டு, "உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது" எனும் (33:21ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
தொடர்ந்து பயணம் செய்து "பைதாஉ" எனும் இடத்தை அடைந்தபோது, "(ஹஜ், உம்ரா ஆகிய) அவ்விரண்டின் நிலையும் ஒன்றே;உம்ராவிற்குச் செல்ல முடியாமல் நான் தடுக்கப்படுவது, ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாமல் நான் தடுக்கப்படுவதைப் போன்றுதான். நான் உம்ராவுடன் ஹஜ்ஜும் செய்ய முடிவு செய்துள்ளேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்று "குதைத்" எனுமிடத்தில் ஒரு பலிப்பிராணியை விலைக்கு வாங்கினார்கள். பிறகு ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்கும் சேர்த்து ஒரேயொரு தடவை (ஏழுமுறை) கஅபாவையும், (ஏழுமுறை) ஸஃபா மற்றும் மர்வாவுக்குமிடையேயும் சுற்றி (தவாஃப் மற்றும் சயீ) வந்தார்கள். பின்னர் துல்ஹஜ் பத்தாவது நாளன்று ஹஜ்ஜை நிறைவு செய்து, ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிலிருந்தும் விடுபட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை முற்றுகையிட்டிருந்தபோது, இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய விரும்பினார்கள்" என்று இச்செய்தி துவங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. அதன் இறுதியில், "ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்பவருக்கு ஒரு தவாஃபே போதும்" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள் என்றும், "(உம்ரா, ஹஜ் ஆகிய) அவ்விரண்டிலிருந்தும் முழுமையாக விடுபடாத வரை அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2369. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை ஹஜ்ஜாஜ் முற்றுகையிட்டிருந்த போது, இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய விரும்பினார்கள். அப்போது அவர்களிடம், "மக்களிடையே போர்மூளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உங்களை ஹஜ் செய்யவிடாமல் அவர்கள் தடுப்பார்கள் என நாங்கள் அஞ்சுகிறோம்" என்று சொல்லப்பட்டது. அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், "உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அவ்வாறு நான் தடுக்கப்பட்டால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று நானும் செய்வேன். நான் உம்ராச் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்" என்று கூறியபடி புறப்பட்டார்கள். "பைதாஉ" எனும் இடத்திற்கு வெளியே வந்ததும், "(தடுக்கப்படும் விஷயத்தில்) ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டின் நிலையும் ஒன்றே. நான் உம்ராவுடன் ஹஜ்ஜும் செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்" என்று கூறினார்கள். (இப்னு ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உங்களைச் சாட்சியாக்குகிறேன்" என இடம் பெற்றுள்ளது). மேலும், "குதைத்" எனுமிடத்தில் பலிப்பிராணியை விலைக்கு வாங்கி, அதைத் தம்முடன் கொண்டுசென்றார்கள். பின்னர் புறப்பட்டுச் சென்று ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்கும் சேர்த்து இஹ்ராம் கட்டி தல்பியாச் சொன்னார்கள்.
மக்காவிற்கு வந்ததும் கஅபாவையும் ஸஃபா மற்றும் மர்வாவையும் சுற்றி வந்தார்கள். (ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்கும் சேர்த்து ஏழு சுற்று கொண்ட ஒரு தவாஃபே செய்தார்கள்.) அதைவிடக் கூடுதலாகச் செய்யவில்லை. (துல்ஹஜ் பத்தாவது நாள்வரை) பலியிடவுமில்லை; தலையை மழிக்கவு மில்லை; முடியைக் குறைக்கவுமில்லை; இஹ்ராமிலிருந்து விடுபடவுமில்லை. துல்ஹஜ் பத்தாவது நாள் வந்த பிறகே அறுத்துப் பலியிட்டார்கள்; தலையை மழித்துக்கொண்டார்கள். ஆரம்பத்தில் செய்த தவாஃபே ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்கும் போதும் என்று கருதினார்கள். மேலும், "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தார்கள்" என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2370. மேற்கண்ட ஹதீஸ் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "இப்னு உமர் (ரலி) அவர்களிடம் "அவர்கள் உங்களை இறையில்லத்துக்குச் செல்லவிடாமல் தடுப்பார்கள்" என்று சொல்லப்பட்டபோது, "அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று செய்வேன்" என்று கூறினார்கள்" என இடம் பெற்றுள்ளது; ஹதீஸின் இறுதியில் "இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தார்கள்"என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்ற குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
பாடம் : 27 ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்துச் செய்வதும் (கிரான்), ஹஜ்ஜை மட்டும் தனியாகச் செய்வதும் (இஃப்ராத்).
2371. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ("விடைபெறும்" ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு மட்டும் ("இஹ்ராம்" கட்டி) தல்பியாச் சொன்னோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அப்துல்லாஹ் பின் அவ்ன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கு மட்டும் ("இஹ்ராம்" கட்டி) தல்பியாச் சொன்னார்கள்" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2372. பக்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து தல்பியாச் சொன்னதை நான் செவியுற்றேன்"என்று கூறினார்கள். நான் அ(வ்வாறு அனஸ் (ரலி) அவர்கள் கூறிய)தை இப்னு உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கு மட்டுமே தல்பியாச் சொன்னார்கள்" என்றார்கள். பின்னர் நான் அனஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அனஸ் (ரலி) அவர்கள், "நம்மை நீங்கள் சிறுவர்களாகவே எண்ணுகிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "லப்பைக்க உம்ரத்தன் வ ஹஜ்ஜன்" (நான் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் தல்பியாச் சொல்கிறேன்) என்று கூறியதை நான் செவியுற்றேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2373. பக்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் சேர்த்துச் செய்ததை நான் கண்டேன்" என்று கூறினார்கள். நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டபோது அவர்கள், "நாங்கள் ஹஜ்ஜுக்கு (மட்டுமே) தல்பியாச் சொன்னோம்" என்றார்கள். நான் அனஸ் (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து, இப்னு உமர் (ரலி) அவர்கள் சொன்னதை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் "நாங்கள் சிறுவர்களாகவே இருந்தோம் போலும்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 28 ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவர், மக்காவிற்கு வந்ததும் தவாஃபும் சயீயும் செய்வது அவசியம்.
2374. வபரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) இப்னு உமர் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "நான் (ஹஜ்ஜின்போது) அரஃபாவுக்குச் செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றிவருவது சரியா?" என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், "ஆம் (சரிதான்)" என்றார்கள். அதற்கு அந்த மனிதர், "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நீ அரஃபா செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றிவராதே!" எனக் கூறுகின்றாரே?" என்று கேட்டார். இப்னு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்துள்ளார்கள். அப்போது அவர்கள் "அரஃபா" செல்வதற்கு முன் கஅபாவைச் சுற்றினார்கள். நீர் (ஒரு முஸ்லிம்;அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுபவர் என்பதில்) உண்மையாளராய் இருந்தால், நீர் கடைப்பிடிப்பதற்குத் தகுதியானது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல்லா? அல்லது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொல்லா?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 15
2375. வபரா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், "நான் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவுடன், இறையில்லம் கஅபாவைச் சுற்றி வரலாமா?" என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், "(அவ்வாறு கஅபாவைச் சுற்றிவர) உமக்கு என்ன தடை?"என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "இன்ன மனிதரின் புதல்வர் அவ்வாறு (தவாஃப்) செய்வதை வெறுப்பதை நான் கண்டேன். ஆனால், அவரைவிட நீங்களே எங்கள் அன்புக்குரியவர்.(பஸ்ராவின் ஆளுநரான) அவரை உலகம் சோதித்துவிட்டிருக்கிறது" என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், "நம்மில் யாரைத்தான்" அல்லது "உங்களில் யாரைத் தான்" இவ்வுலகம் சோதிக்காமல் விட்டது?" என்று கூறிவிட்டுப் பின்னர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவுடன் இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்ததையும் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடி (சயீ) வந்ததையும் நாங்கள் கண்டோம். நீர் (ஒரு முஸ்லிம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுபவர் என்பதில்) உண்மையாளராய் இருந்தால், அல்லாஹ்வின் நெறியையும் அவனுடைய தூதரின் வழிமுறையையும் பின்பற்றுவதே இன்ன மனிதரின் வழிமுறையை நீர் பின்பற்றுவதைவிட மிகவும் தகுதியானதாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2376. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், "ஒருவர் உம்ராவிற்காக (மக்கா நகருக்கு) வந்து இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டார். ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே "சயீ" செய்யவில்லை. இந்நிலையில், அவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடலாமா? (அதாவது இஹ்ராமிலிருந்து விடுபடலாமா?)" என்று கேட்டோம். அதற்கு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிற்கு) வந்தபோது இறையில்லம் கஅபாவை ஏழு முறைச் சுற்றிவந்தார்கள். பிறகு மகாமு இப்ராஹீமிற்குப் பின்னால் (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையேயும் ஏழு முறை (ஓடினார்கள்). உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 29 (ஹஜ்ஜின்போது) கஅபாவைச் சுற்றி வந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே "சயீ" செய்த பின் (ஹஜ் முடியும்வரை) அந்த இஹ்ராமிலேயே நீடிப்பது, (அதாவது) இஹ்ராமிலிருந்து விடுபடாமல் இருப்பது அவசியமாகும்.
2377. முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இராக்வாசிகளில் ஒருவர் என்னிடம், "நீங்கள் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் "ஒருவர் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்"கட்டி, (மக்காவிற்கு வந்ததும்) இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் குதூம்) வந்தார். இந்நிலையில் அவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளலாமா, அல்லது கூடாதா?" என்று கேளுங்கள். உர்வா (ரஹ்) அவர்கள் "இஹ்ராமிலிருந்து விடுபடலாகாது" என்று பதிலளித்தால் "விடுபடலாம் என ஒரு மனிதர் கூறுகிறாரே?" என்று கேளுங்கள்" என்றார்.
அவ்வாறே நான் உர்வா (ரஹ்) அவர்களிடம் (சென்று) கேட்டபோது அவர்கள், "ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவர் ஹஜ்ஜை முடிக்காமல் இஹ்ராமிலிருந்து விடுபடலாகாது" என்று விடையளித்தார்கள். நான் "அப்படியானால், விடுபடலாம் என ஒருவர் கூறுகிறாரே?" என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், "அவர் சொன்னது தவறு" என்றார்கள்.
பின்னர் அந்த மனிதர் என் எதிரே வந்து அ(வர் கூறியனுப்பிய)து பற்றி என்னிடம் கேட்டார். அ(ப்போது உர்வா (ரஹ்) அவர்கள் கூறிய)தை நான் அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அந்த மனிதர் என்னிடம், "உர்வா (ரஹ்) அவர்களிடம் "அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளதாக ஒரு மனிதர் தெரிவித்து வந்தாரே? அஸ்மா (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோரின் நிலை என்ன? அவர்களும் அவ்வாறு செய்துள்ளனரே?" என்று நீங்கள் கேளுங்கள்" என்றார்.
அவ்வாறே நான் (மீண்டும்) உர்வா (ரஹ்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தேன். அப்போது உர்வா (ரஹ்) அவர்கள் "யார் அவர்?" என்று கேட்டார்கள். நான் "எனக்குத் தெரியாது" என்றேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், "அவருக்கு என்ன நேர்ந்தது? என்னிடமே வந்து நேரடியாகக் கேட்க மறுக்கிறாரே? அவர் (மார்க்க விஷயங்களில் பிடிவாதம் காட்டக்கூடிய) ஓர் இராக்வாசி என்றே நான் கருதுகிறேன்" என்றார்கள். நான் "எனக்குத் தெரியாது" என்று (மீண்டும்) சொன்னேன்.
உர்வா (ரஹ்) அவர்கள், "அவர் பொய்யுரைத்துவிட்டார்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்ததும் முதல் வேலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் குதூம்) வந்தார்கள்.
பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்தபோது, முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றிவந்தார்கள். பின்னர் அதைத் தவிர (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றுதல், ஹஜ்ஜோடு உம்ராவைச் சேர்த்தல் போன்ற) வேறெதுவும் நிகழவில்லை. பின்னர் உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்தபோது, அ(பூபக்ர் (ரலி) அவர்கள் செய்த)தைப் போன்றே செய்தார்கள். பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். அவர்கள் (மக்காவிற்கு வந்ததும்) முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றி வருவதையே நான் கண்டேன்; பின்னர் அதைத் தவிர (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றுதல், ஹஜ்ஜோடு உம்ராவைச் சேர்த்தல் போன்ற) வேறெதுவும் நிகழவில்லை.
பின்னர் முஆவியா (ரலி), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆகியோரும் (அவ்வாறே செய்தனர்.) பின்னர் என் தந்தை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். அவர்களின் முதல் வேலையாக இருந்ததும் கஅபாவைச் சுற்றுவதாகத் தான் இருந்தது. அதைத் தவிர வேறொன்றும் நடக்க வில்லை. பின்னர் முஹாஜிர்களும் அன்சாரிகளும் அவ்வாறு செய்வதையே நான் கண்டேன்; பின்னர் அதைத் தவிர வேறெதுவும் நிகழவில்லை.
பின்னர் அவ்வாறு செய்தவர்களில் இறுதியானவராக இப்னு உமர் (ரலி) அவர்களையே நான் கண்டேன். அவர்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றவில்லை. இதோ அவர்களுடன் இப்னு உமர் (ரலி) அவர்களே இருக்கிறார்கள். அவர்களிடமே மக்கள் கேட்க வேண்டியதுதானே! முன்னோர்களில் எவரும் தம் பாதங்களை (மக்காவில்) பதித்ததும் முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றிவராமல் இருந்ததில்லை. பின்னர் (ஹஜ்ஜை முடிக்காமல்) இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டார்கள். என் தாயார் (அஸ்மா-ரலி), என் சிறிய தாயார் (ஆயிஷா-ரலி) ஆகியோர் (மக்காவிற்கு) வந்ததும் முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றிவராமல் வேறெதையும் தொடங்கமாட்டார்கள். பின்னர் (ஹஜ்ஜை முடிக்கும்வரை) இஹ்ராமிலிருந்து விடுபடாமல் இருப்பார்கள்.
என் தாயார் (அஸ்மா-ரலி) அவர்கள் என்னிடம், "நானும் என் சகோதரி (ஆயிஷா-ரலி) அவர்களும் (உன் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களும் மற்றும் இன்னின்ன மனிதரும் உம்ராவிற்குச் சென்றபோது ஹஜருல் அஸ்வதைத் தொட்டதும் (அதாவது தவாஃபும் "சயீ"யும் செய்து முடித்ததும்) இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டோம்" என்று தெரிவித்தார்கள். (எனவே இராக்கைச் சேர்ந்த) அந்த மனிதர் பொய்யான தகவலையே குறிப்பிட்டுள்ளார்" என்று உர்வா (ரஹ்) அவர்கள் விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2378. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் "இஹ்ராம்" கட்டியவர்களாக (ஹஜ்ஜுக்கு)ப் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உங்களில்) தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருப்பவர் தமது இஹ்ராமிலேயே நீடிக்கட்டும்; பலிப்பிராணியைக் கொண்டுவராதவர் இஹ்ராமிலிருந்து விடுபடட்டும்" என்று சொன்னார்கள். அப்போது என்னுடன் பலிப்பிராணி இல்லாததால் நான் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டேன். (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களுடன் பலிப்பிராணி இருந்ததால் அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. அப்போது நான் எனது ஆடையை அணிந்து புறப்பட்டேன்; ஸுபைர் (ரலி) அவர்கள் அருகில் அமர்ந்தேன். உடனே அவர்கள் "என்னிடமிருந்து எழுந்து (சென்று) விடு" என்றார்கள். அப்போது நான், "உங்கள் மீது (ஆசையோடு) பாய்ந்துவிடுவேன் என அஞ்சுகிறீர்களா?" என்று கேட்டேன்.
- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2379. மேற்கண்ட தகவல் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும் அதில், ("என்னிடமிருந்து எழுந்துவிடு" என்பதற்குப் பதிலாக) "என்னைவிட்டு விலகிச் சென்றுவிடு" என்று ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அதற்கு நான், "உங்கள்மீது (ஆசையோடு) பாய்ந்துவிடுவேன் என நீங்கள் அஞ்சுகிறீர்களா?" என்று கேட்டேன் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2380. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான அப்துல்லாஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அஸ்மா (ரலி) அவர்கள் (மக்காவில் "அல்முஅல்லா" பொது மையவாடி அருகிலுள்ள) "அல்ஹுஜூன்" எனும் மலையைக் கடந்து செல்லும்போதெல்லாம் பின்வருமாறு அவர்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன்:
அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கருணை புரியட்டும்! சாந்தி அளிக்கட்டும்! நாங்கள் (ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இங்கு வந்து தங்கினோம். அப்போது எங்களிடம் (பயணத்திற்கான) மூட்டை முடிச்சுகள் குறைவாகவே இருந்தன; பயண வாகனங்களும் உணவுகளும் குறைவாகவே இருந்தன. அப்போது நானும் என் சகோதரி ஆயிஷாவும் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களும் இன்ன மனிதரும் இன்ன மனிதரும் உம்ராவிற்காக "இஹ்ராம்"கட்டி தல்பியாச் சொன்னோம். நாங்கள் கஅபாவைச் சுற்றி ("சயீ"யும் செய்து) வந்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டோம். பிறகு மாலையில் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டினோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹாரூன் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அஸ்மா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை கூறியதாவது"என்றே இடம்பெற்றுள்ளது. "அப்துல்லாஹ்" எனும் அவர்களது பெயர் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
பாடம் : 30 "தமத்துஉ" வகை ஹஜ்.
2381. முஸ்லிம் அல்குர்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "தமத்துஉ" வகை ஹஜ் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் அனுமதியளித்தார்கள். -இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் அதற்குத் தடை விதித்துவந்தார்கள்- எனவே, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இதோ இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களின் தாயார் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தமத்துஉ" செய்யத் தம்மை அனுமதித்தார்கள் எனக் கூறுகிறார்கள். ஆகவே, அவரிடம் சென்று அதைப் பற்றிக் கேளுங்கள்" என்றார்கள்.
அவ்வாறே அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் கனத்த உடலுடைய கண் பார்வையற்ற பெண்மணியாக இருந்தார்கள். அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தமத்துஉ" செய்வதற்கு அனுமதியளித்தார்கள்" எனக் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2382. மேற்கண்ட தகவல் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ அல்அம்பரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "தமத்துஉ" எனும் சொல்லே காணப்படுகிறது. "தமத்துஉ முறை ஹஜ்" என இடம்பெற வில்லை. முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "முத்அத்துல் ஹஜ்" ("தமத்துஉ" ஹஜ்) பற்றிக் கூறினார்களா? அல்லது "முத்அத்துந் நிசா" (தவணை முறைத் திருமணம்) பற்றிக் கூறினார்களா? என எனக்குத் தெரியவில்லை" என்று முஸ்லிம் அல்குர்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2383. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டி "தல்பியா"ச் சொன்னார்கள். அவர்களுடைய தோழர்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி "தல்பியா"ச் சொன்னார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை; அவர்களுடைய தோழர்களில் தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டுவந்தவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. மற்றவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். பலிப்பிராணியைக் கொண்டுவந்தவர்களில் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களும் ஒருவராக இருந்ததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.
அத்தியாயம் : 15
2384. மேற்கண்ட தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "தம்மிடம் பலிப்பிராணி இல்லாதவர்களில் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களும் மற்றொரு மனிதரும் அடங்குவர்; எனவே, அவர்கள் இருவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 31 ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ராச் செய்யலாம்.
2385. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அ(றியாமைக் காலத்த)வர்கள், ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ராச் செய்வது பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடியபாவம் எனக் கருதிவந்தனர். (துல்கஅதா,துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள், போர் செய்யத் தடைவிதிக்கப்பட்ட புனித மாதங்களாகத் தொடர்ந்து வந்ததால்) முஹர்ரம் மாதத்திற்கான தடையை ஸஃபருக்கு மாற்றிக் கொள்வார்கள். (ஹஜ் பயணத்திற்கான சுமையைச் சுமந்த ஒட்டகங்களின் முதுகில்)
"வடு மறைந்து
காலடித் தடங்கள் அழிந்து
ஸஃபர் மாதம் கழிந்தால்
உம்ராச் செய்யலாம்; உம்ராச் செய்பவர்"
என்றும் அவர்கள் கூறிவந்தனர்.
நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காவது நாள் காலை, ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவர்களாக (மக்காவிற்கு) வந்தபோது, (தம் தோழர்களிடம்) அவர்களது இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக்கொள்ளுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள். இது நபித்தோழர்களுக்கு மிகக் கடினமாகத் தெரிந்தது. இதனால் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?" என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எல்லாமும்தான் அனுமதிக்கப்படும்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2386. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி துல்ஹஜ் மாதம் நான்காவது நாள் (காலை மக்காவிற்கு) வந்து, சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். சுப்ஹுத் தொழுகையை முடித்ததும், "தமது இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக்கொள்ள விரும்புபவர் அதை உம்ராவாக ஆக்கிக் கொள்ளட்டும்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2387. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்), யஹ்யா பின் கஸீர் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டினார்கள்" என்று நஸ்ர் பின் அலீ (ரஹ்) அவர்களது முந்தைய அறிவிப்பில் இடம் பெற்றதைப் போன்றே உள்ளது.
அபூஷிஹாப் அப்து ரப்பிஹி பின் நாஃபிஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டினோம்" என்று காணப்படுகிறது.
நஸ்ர் பின் அலீ (ரஹ்) அவர்களைத் தவிர மற்ற அனைவரின் அறிவிப்புகளிலும் "அல்பத்ஹா எனுமிடத்தில் சுப்ஹுத் தொழுதார்கள்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2388. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (துல்ஹஜ் மாதம் முதல்)பத்தின் நான்காவது நாளில் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி, தல்பியாச் சொன்னவர்களாக (மக்காவிற்கு) வந்தார்கள். (தோழர்கள்) தமது இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக்கொள்ளுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2389. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) "தூ தவா" எனும் பள்ளத்தாக்கில் சுப்ஹுத் தொழுகை தொழுதார்கள். துல்ஹஜ் நான்காவது நாள் மக்காவிற்கு வந்து, தம் தோழர்களில் பலிப்பிராணியைத் தம்முடன் கொண்டுவந்தவர்கள் தவிர மற்றவர்கள் தமது இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2390. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இது, நாம் (உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்குமிடையே இடைவெளிவிட்டுப்) பயனடைந்த உம்ராவாகும். ஆகவே, "(உங்களில்) எவரிடம் பலிப்பிராணி இல்லையோ அவர் முழுமையாக இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடட்டும். ஏனெனில், மறுமை நாள்வரை ஹஜ்ஜுடன் உம்ராவும் சேர்ந்திருக்கும்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2391. அபூஜம்ரா அள்ளுபஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் "தமத்துஉ" வகை ஹஜ் செய்தேன். அவ்வாறு செய்யலாகாதென என்னைச் சிலர் தடுத்தனர். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதைச் செய்யுமாறு எனக்கு அவர்கள் உத்தரவிட்டார்கள்.
பின்னர் (ஒரு நாள்) நான் இறையில்லம் கஅபாவுக்குச் சென்று (அதன் அருகில்) உறங்கினேன். அப்போது ஒருவர் எனது கனவில் தோன்றி "ஒப்புக்கொள்ளப்பட்ட உம்ராவும் பாவச் செயல் கலவாத ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜும் (உமக்குக் கிடைத்துவிட்டன)"என்று கூறினார்.
உடனே நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று நான் (கனவில்) கண்டதை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் "அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன். (இந்த ஹஜ் முறை) அபுல்காசிம் (ஸல்) அவர்களின் வழி முறையாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 32 இஹ்ராம் கட்டும்போது, பலி ஒட்டகத்தின் கழுத்தில் மாலை தொங்கவிடுவதும், அதற்கு அடையாளமிடுவதும்.
2392. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("விடைபெறும்" ஹஜ்ஜுக்காகச் சென்றபோது) "துல்ஹுலைஃபா"வில் லுஹ்ர் தொழுகை தொழுதுவிட்டுத் தமது பலி ஒட்டகத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதன் வலப்பக்கத்திமில் பகுதியில் கீறி அடையாளமிட்டார்கள்; இரத்தத்தை அதிலிருந்து துடைத்தார்கள்; இரு செருப்புகளை (அதன் கழுத்தில் அடையாளத்திற்காக) தொங்கவிட்டார்கள். பின்னர் தமது வாகன ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து, "பைதாஉ" எனும் குன்றில் அது நேராக நின்றதும் ஹஜ்ஜுக்காகத் தல்பியாச் சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "துல்ஹுலைஃபா"விற்கு வந்தபோது" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. "அங்கு லுஹ்ர் தொழுதார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
(இறையில்லம் கஅபாவைச் சுற்றியவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார்.)
அத்தியாயம் : 15
2393. அபூஹஸ்ஸான் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பனுல் ஹுஜைம் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "ஒருவர் (மக்காவிற்கு வந்து) இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார்" எனும் இந்தத் தீர்ப்பு என்ன (சரிதானா)? இது மக்களைக் "கவர்ந்துள்ளது" அல்லது "குழப்பியுள்ளது" என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "(இது) உங்கள் நபி (ஸல்) அவர்களின் வழி முறையாகும்; நீங்கள் வெறுத்தாலும் சரியே" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2394. அபூஹஸ்ஸான் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார்;இறையில்லத்தைச் சுற்றி வருதலே உம்ராவாகும் எனும் கருத்தாக்கம் மக்களிடையே பரவலாகிவிட்டிருக்கிறது" என்று சொல்லப்பட்டது. அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "(ஆம்; இது) உங்கள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்; நீங்கள் வெறுத்தாலும் சரியே" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2395. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அதாஉ (ரஹ்) அவர்கள், "ஹஜ் செய்பவரோ மற்றவரோ (அதாவது உம்ராச் செய்பவரோ) இறையில்லம் கஅபாவைச் சுற்றிவந்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள்" என்று அறிவித்தார்கள்.
நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், "எந்த ஆதாரத்தை வைத்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பின்னர் அவை (பலிப்பிராணிகள் அறுப்பதற்காகச்) சென்றடையும் இடம், பழைமையான அந்த ஆலயமாகும்" எனும் (22:33ஆவது) இறை வசனத்திலிருந்தும், நபி (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது அவர்(களுடன் வந்தவர்)களுக்கு இஹ்ராமிலிருந்து விடுபடும்படி இட்ட கட்டளையை ஆதாரமாகக் கொண்டும்தான் இப்படிக் கூறினார்கள்" என்றார்கள்.
நான், "இஹ்ராமிலிருந்து விடுபடுவது அரஃபாவில் (போய்த்) தங்கிய பின்புதானே?" என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், "அது, அரஃபாவில் தங்கியதற்குப் பின்பும் அதற்கு முன்பும் (அனுமதிக்கப்பட்டதே)" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள் என விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 33 உம்ராவில் தலைமுடியைக் குறைத்துக்கொள்வது.
2396. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் முஆவியா (ரலி) அவர்கள், "நீங்கள் அறிவீர்களா? நான் "மர்வா" அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடியைக் கத்தரிக்கோலால் (கத்தரித்துக்) குறைத்துள்ளேன்" என்றார்கள். "இதை நான் உங்களுக்கு எதிரான ஆதாரமாகவே அறிகிறேன்" என்று நான் சொன்னேன்.
அத்தியாயம் : 15
2397. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடியை நான் கத்தரிக்கோலால் (கத்தரித்துக்) குறைத்தேன்; அப்போது அவர்கள் மர்வாவின் மீதிருந்தார்கள்" அல்லது "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடி கத்தரிக்கோலால் குறைக்கப்படுவதை நான் கண்டேன்; அப்போது அவர்கள் மர்வாவின் மீதிருந்தார்கள்" என்று கூறினார்கள்.
(ஹஜ்ஜில் தமத்துஉம் கிரானும் செல்லும்.)
அத்தியாயம் : 15
2398. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உரத்த குரலில் ஹஜ்ஜுக்காகத் தல்பியா முழங்கியவர்களாகப் புறப்பட்டோம். நாங்கள் மக்காவிற்கு வந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களில் தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டுவந்திருப்பவரைத் தவிர மற்றவர்கள் தமது இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக் கொள்ளுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். துல்ஹஜ் எட்டாவது நாளன்று நாங்கள் மினாவுக்குச் சென்றபோது (செல்ல நாடிய போது), ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டித் தல்பியாச் சொன்னோம்.
அத்தியாயம் : 15
2399. ஜாபிர் (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்காக உரத்த குரலில் தல்பியா முழங்கியவர்களாகப் புறப்பட்டோம்.
- அபூநள்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களும் (தவணை முறைத் திருமணம், "தமத்துஉ" ஹஜ் ஆகிய) இரு "முத்ஆ"க்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டனர்" என்றார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், "நாங்கள் அவ்விரண்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இருக்கும் காலத்தில்) செய்தோம். பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) அவ்விரண்டையும் செய்யக் கூடாதென எங்களுக்குத் தடை விதித்தார்கள். எனவே, நாங்கள் அவ்விரண்டையும் திரும்பச் செய்வதில்லை" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 34 நபி (ஸல்) அவர்கள் தல்பியாச் சொன்னதும் பலியிட்டதும்.
2400. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள் யமன் நாட்டிலிருந்து (ஹஜ்ஜுக்கு) வந்தபோது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், "எதற்காக ("இஹ்ராம்"கட்டி) தல்பியாச் சொன்னீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் எதற்காக ("இஹ்ராம்"கட்டி) தல்பியாச் சொன்னார்களோ அதற்காகவே நானும் தல்பியாச் சொன்னேன்" என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், "என்னுடன் பலிப்பிராணி இருந்திராவிட்டால் நிச்சயமாக நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2401. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்கும் சேர்த்து, லப்பைக்க உம்ரத்தன் வ ஹஜ்ஜன்; லப்பைக்க உம்ரத்தன் வ ஹஜ்ஜன் (நான் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் தல்பியாச் சொல்கிறேன்; நான் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் தல்பியாச் சொல்கிறேன்) என்று தல்பியாச் சொன்னதை நான் செவியுற்றுள்ளேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2402. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யஹ்யா பின் அபீஇஸ்ஹாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நபி (ஸல்) அவர்கள் "லப்பைக்க உம்ரத்தன் வ ஹஜ்ஜன்"என்று கூறியதை நான் கேட்டேன் என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "லப்பைக்க பி உம்ரத்தின் வ ஹஜ்ஜின்" (உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் தல்பியாச் சொல்கிறேன்) என்று கூறியதை நான் கேட்டேன் என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2403. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக! (இறுதி நாட்களில்) மர்யமின் புதல்வர் (ஈசா) அவர்கள் (மக்கா - மதீனா இடையே உள்ள) "ஃபஜ்ஜுர் ரவ்ஹா" எனுமிடத்தில் ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவிற்காக அல்லது அவ்விரண்டுக்குமாகத் தல்பியாச் சொல்வார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக!" என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக" என்று கூறினார்கள் என ஹதீஸ் துவங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
பாடம் : 35 நபி (ஸல்) அவர்கள் செய்த உம்ராக்களின் எண்ணிக்கையும் காலமும்.
2404. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்கள் செய்தார்கள். தமது ஹஜ்ஜுடன் செய்த உம்ராவைத் தவிர மற்ற அனைத்தையும் துல்கஅதா மாதத்திலேயே அவர்கள் செய்தார்கள்; 1. "ஹுதைபியாவிலிருந்து" அல்லது "ஹுதைபியா ஒப்பந்தம் நடந்தபோது" துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா. 2. அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா. 3. ஹுனைன் போரில் கிடைத்த போர்ச் செல்வங்களைப் பங்குவைத்த இடமான ஜிஃரானாவிலிருந்து துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா. 4. அவர்கள் தமது ஹஜ்ஜுடன் செய்த உம்ரா (ஆகிய நான்குமே அவை).
- கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்தனை ஹஜ் செய்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "அவர்கள் ஒரேயொரு ஹஜ் மட்டுமே செய்தார்கள்; நான்கு உம்ராக்கள் செய்தார்கள்" என்று விடையளித்தார்கள். மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
2405. அபூஇஸ்ஹாக் அம்ர் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எத்தனை அறப்போர்களில் நீங்கள் கலந்துகொண்டீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பதினேழு அறப்போர்களில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் கலந்து கொண்டேன்)" என்று விடையளித்தார்கள்.
தொடர்ந்து அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்தொன்பது போர்களில் கலந்துகொண்டார்கள். அவர்கள் (மதீனாவிற்கு) நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்ற பிறகு ஒரேயொரு ஹஜ் -விடைபெறும் ஹஜ்- மட்டுமே செய்தார்கள்" என்றும் கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள், "(நாடு துறந்து செல்வதற்கு முன்) அவர்கள் மக்காவில் இருந்தபோது மற்றொரு ஹஜ் செய்துள்ளார்கள்" என்று குறிப்பிடுகிறார்கள்.
அத்தியாயம் : 15
2406. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் இப்னு உமர் (ரலி) அவர்களும் என் (சிற்றன்னை) ஆயிஷா (ரலி) அவர்களின் அறையோடு சாய்ந்து அமர்ந்திருந்தோம். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் பல் துலக்கும் குச்சியால் பல் துலக்கிக்கொண்டிருந்த சப்தத்தை நாங்கள் கேட்டோம். நான் (இப்னு உமர் (ரலி) அவர்களிடம்), "அபூ அப்திர் ரஹ்மான்! நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ராச் செய்துள்ளார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்" என்றார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அன்னையே! அபூஅப்திர் ரஹ்மான் கூறியதைத் தாங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அவர் என்ன சொல்கிறார்?" என்று கேட்டார்கள். "நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ராச் செய்துள்ளார்கள் என்று சொல்கிறார்" என்றேன்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "அபூஅப்திர் ரஹ்மானுக்கு அல்லாஹ் மன்னிப்பு அளிக்கட்டும்! என் ஆயுள்மீது அறுதியாக! நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ராச் செய்யவில்லை. நபியவர்கள் உம்ராச் செய்தபோதெல்லாம் அவர்களுடன் அபூஅப்திர் ரஹ்மானும் இருந்திருக்கிறார் (ஆனால், இப்போது அவர் மறந்துவிட்டார்)" என்று கூறினார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த இப்னு உமர் (ரலி) அவர்கள் "இல்லை" என்றோ, அல்லது "ஆம்"என்றோ சொல்லவில்லை; அமைதியாக இருந்தார்கள்.
அத்தியாயம் : 15
2407. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களும் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தோம். அங்கே ஆயிஷா (ரலி) அவர்களின் அறையோடு சாய்ந்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் பள்ளிவாசலில் முற்பகல் நேரத்தொழுகை (ளுஹா) தொழுதுகொண்டிருந்தனர். நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் மக்களின் அந்தத் தொழுகையைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள், "இது (மார்க்க அடிப்படையற்ற) புதிய நடைமுறை (பித்அத்)"என்றார்கள்.122 பிறகு அவர்களிடம், "அபூஅப்திர் ரஹ்மான்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?" என்று உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நான்கு உம்ராக்கள் செய்தார்கள்; அவற்றில் ஒன்றை ரஜப் மாதத்தில் செய்தார்கள்" என்றார்கள். நாங்கள் அவர்களது சொல்லைப் பொய்யாக்கவோ அதை மறுக்கவோ விரும்பவில்லை. இதற்கிடையே அறையினுள் ஆயிஷா (ரலி) அவர்கள் பல் துலக்கும் சப்தத்தைக் கேட்டோம். அப்போது உர்வா (ரஹ்) அவர்கள், "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அபூஅப்திர் ரஹ்மான் அவர்கள் சொல்வதை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அவர் என்ன சொல்கிறார்?" என்று கேட்டார்கள். "நபி (ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்கள் செய்துள்ளார்கள்; அவற்றில் ஒன்று ரஜப் மாதத்தில் நடந்தது என்று சொல்கிறார்" என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், "அபூஅப்திர் ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்ராச் செய்யும்போதெல்லாம் அவர்களுடன் அவரும் இருந்திருக்கிறார் (இப்போது மறந்துவிட்டார் போலும்!). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் ரஜப் மாதத்தில் உம்ராச் செய்ததே இல்லை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு.
2408. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அன்சாரிப் பெண்ணிடம், "நீ எங்களுடன் ஹஜ் செய்வதற்கு என்ன தடை?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "எங்களிடம் நீர் இறைப்பதற்கான இரண்டு ஒட்டகங்கள் மட்டுமே உள்ளன; ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் ஏறி ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டனர். மற்றோர் ஒட்டகத்தை எங்களுக்காக அவர் விட்டுச் சென்றுள்ளார். அதன் மூலம் நாங்கள் நீர் இறைத்துக்கொண்டிருக்கிறோம்" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ரமளான் மாதம் வந்துவிட்டால் அப்போது நீ உம்ராச் செய்துகொள். ஏனெனில், ரமளானில் உம்ராச் செய்வது ஹஜ்ஜுக்கு நிகரான (பலனுடைய)தாகும்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள்; ஆனால், அதை நான் மறந்துவிட்டேன்.
அத்தியாயம் : 15
2409. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உம்மு சினான் எனப்படும் ஓர் அன்சாரிப் பெண்ணிடம், "நீ எங்களுடன் ஹஜ் செய்வதற்கு உனக்கு என்ன தடை?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "என் பிள்ளையின் தந்தையிடம் (அதாவது என் கணவரிடம்) தண்ணீர் இறைக்கும் இரு ஒட்டகங்கள் இருந்தன. ஒன்றில் அவரும் அவருடைய மகனும் ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டனர்; மற்றொன்றில் எங்களின் அடிமை தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்கிறார்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "ரமளானில் செய்யப்படும் ஓர் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகரானதாகும்; அல்லது என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 37 மக்காவினுள் மேற்புறக்கணவாய் (அஸ்ஸனிய்யத்துல் உல்யா) வழியாக நுழைவதும் கீழ்ப்புறக் கணவாய் (அஸ்ஸனிய்யத்துஸ் ஸுஃப்லா) வழியாக வெளியேறுவதும் விரும்பத் தக்கதாகும்; (பொதுவாக) ஓர் ஊருக்குள் நுழையும் வழி ஒன்றாகவும், வெளியேறும் வழி வேறொன்றாகவும் இருப்பது விரும்பத்தக்கதாகும்.
2410. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அஷ்ஷஜரா" எனும் இடத்தின் வழியாக (மதீனாவிலிருந்து) வெளியேறுவார்கள். (திரும்பும்போது) "அல் முஅர்ரஸ்" எனும் இடத்தின் வழியாக நுழைவார்கள். மக்காவிற்குள் செல்லும்போது மேற்புறக்கணவாய் (அஸ்ஸனிய்யத்துல் உல்யா) வழியாக நுழைந்து, கீழ்ப்புறக் கணவாய் (அஸ்ஸனிய்யத்துஸ் ஸுஃப்லா) வழியாக வெளியேறுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்பத்ஹாவிலுள்ள அஸ்ஸனிய்யத்துல் உல்யா வழியாக நுழைவார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2411. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா நகருக்கு வந்த போது, அதன் மேற்புறம் (அஸ்ஸனிய்யத்துல் உல்யா) வழியாக நுழைந்து அதன் கீழ்ப்புறம் (அஸ்ஸனிய்யத்துஸ் ஸுஃப்லா) வழியாக வெளியேறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2412. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் மேற்பகுதியிலுள்ள "கதாஉ" (எனும் கணவாய்) வழியாக நுழைந்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என் தந்தை உர்வா (ரஹ்) அவர்கள் (மேற்பகுதியிலுள்ள "கதாஉ", கீழ்ப் பகுதியிலுள்ள "குதாஉ" ஆகிய) அவ்விரண்டு வழிகளிலும் நுழைவார்கள்; பெரும்பாலும் "கதாஉ" (எனும் கணவாய்) வழியாகவே நுழைவார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 38 மக்காவினுள் நுழைய விரும்புகின்றவர் "தூத் தவா" எனும் இடத்தில் இரவில் தங்குவதும், மக்காவினுள் நுழைவதற்காகக் குளிப்பதும், பகல் நேரத்தில் அதனுள் நுழைவதும் விரும்பத்தக்கவையாகும்.
2413. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தூத் தவா" எனுமிடத்தில் இரவில் தங்கி விட்டுக் காலையில் மக்காவில் நுழைந்தார்கள்.
இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே செய்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் உபைதுல்லாஹ் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "சுப்ஹுத் தொழுகும் வரை தங்கியிருப்பார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2414. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் மக்காவிற்கு வந்தால், "தூத் தவா"வில் இரவில் தங்காமல் இருக்கமாட்டார்கள். காலையில் (சுப்ஹுத் தொழுது) குளித்துவிட்டுப் பின்னர் பகல் நேரத்தில் மக்காவினுள் நுழைவார்கள். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்வார்கள் என அவர்கள் குறிப்பிடுவார்கள்.
அத்தியாயம் : 15
2415. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) மக்கா செல்லும்போது "தூத் தவா" எனும் இடத்தில் இறங்குவார்கள்;சுப்ஹுத் தொழும்வரை அங்கேயே இரவில் தங்கியிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத இடம் அங்குள்ள கெட்டியான மேட்டின் மீது அமைந்துள்ளது. அங்கு தற்போது பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ள இடம் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத) அந்த இடமன்று. அந்தப் பள்ளி வாசலுக்குக் கீழ்ப்புறமாக அமைந்துள்ள கெட்டியான மேடே (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத) அந்த இடமாகும்.
அத்தியாயம் : 15
2416. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("தூத் தவா"வில்) கஅபாவின் திசையில் அமைந்த ஓர் உயரமான மலையின் இரு குன்றுகளை நோக்கி (அல்லாஹ்வை வணங்கி)னார்கள். (அதாவது தற்போது) அங்கு கட்டப்பட்டுள்ள பள்ளிவாசலை, மேட்டுப் புறத்தில் அமைந்த தொழும் இடத்திற்கு இடப்பக்கமாக ஆக்கிக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத இடம், கறுப்பு மேட்டிற்குக் கீழே சுமார் பத்து முழம் தள்ளி இருந்தது. உமக்கும் கஅபாவிற்கும் இடையே அமைந்த உயரமான மலையின் இரு குன்றுகளை நோக்கித் தொழுதார்கள். - இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 39 உம்ராவின் தவாஃபிலும், ஹஜ்ஜின் முதல் தவாஃபிலும் விரைந்து நடப்பது ("ரமல்" செய்வது) விரும்பத்தக்கதாகும்.
2417. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவில் முதல் தவாஃப் செய்யும் போது, (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடப்பார்கள். (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதரணமாக) நடப்பார்கள். ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவரும்போது "பத்னுல் மசீல்" பகுதியில் மட்டும் விரைந்து நடப்பார்கள்.
இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு உமர் (ரலி) அவர்களும் இவ்வாறே செய்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2418. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ அல்லது உம்ராவிற்காகவோ (மக்காவிற்கு) வந்ததும் முதலில் தவாஃப் செய்வார்கள்; அதில் (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடப்பார்கள்; (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதராணமாக) நடப்பார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றுவார்கள்.
அத்தியாயம் : 15
2419. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்தபோது அவர்களை நான் பார்த்தேன்; அவர்கள் முதலாவது தவாஃபில் "ஹஜருல் அஸ்வதை"த் தொட்டு முத்தமிட்டார்கள். ஏழு சுற்றுகளில் (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடந்தார்கள்.
அத்தியாயம் : 15
2420. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவைச் சுற்றிவரும்போது முதல்) மூன்று சுற்றுகளில் "ஹஜருல் அஸ்வத்" முதல் (மறுபடியும்) "ஹஜருல் அஸ்வத்"வரை விரைவாக நடந்தார்கள். (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதரணமாக) நடந்தார்கள்.
அத்தியாயம் : 15
2421. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் (கஅபாவைச் சுற்றி வரும்போது) "ஹஜருல் அஸ்வத்" முதல் "ஹஜருல் அஸ்வத்" வரை விரைவாக நடந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்தார்கள் என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2422. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹஜருல் அஸ்வதி"லிருந்து "ஹஜருல் அஸ் வத்"வரை தவாஃபின் (முதல்) மூன்று சுற்றுகளில் விரைவாக நடந்ததை நான் பார்த்தேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2423. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தவாஃபின்போது) "ஹஜருல் அஸ்வதி"லிருந்து "ஹஜருல் அஸ்வத்"வரை தவாஃபின் (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2424. அபுத்துஃபைல் ஆமிர் பின் வாஸிலா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தவாஃபின்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடப்பதும் பிந்திய நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடப்பதுமான இந்த "ரமல்" பற்றி என்ன கருதுகிறீர்கள்? அது நபிவழியா? ஏனெனில், உங்களுடைய சமூகத்தார் அதை நபிவழியெனக் கூறுகின்றனரே?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும்" என்றார்கள்.
நான் "அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும் எனும் உங்களுடைய சொல் (லின் பொருள்) என்ன?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்தபோது இணைவைப்பாளர்கள், "முஹம்மதும் அவருடைய தோழர்களும் (மதீனாவிற்குப் போய்) மெலிந்துவிட்டதால் அவர்களால் இறையில்லம் கஅபாவைச் சுற்றி வர முடியாது" என்று கூறினர். நபியவர்கள் மீது இணைவைப்பாளர்கள் பொறாமை கொண்டவர்களாய் இருந்தனர்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் தவாஃபின்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடக்குமாறும் (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடக்குமாறும் கட்டளையிட்டார்கள்" என்றார்கள்.
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் "வாகனத்தில் அமர்ந்தவாறு ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவருவது (சயீ) பற்றி எனக்குக் கூறுங்கள். அது நபிவழியா? ஏனெனில், உங்கள் சமூகத்தார் அதையும் நபிவழியெனக் கூறுகின்றனரே?" என்று கேட்டேன். அதற்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும்" என்றார்கள். நான், "அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும் எனும் உங்களுடைய சொல்(லின் பொருள்) என்ன?" என்று கேட்டேன்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக மக்கா வந்தபோது) அவர்களைச் சுற்றிலும் ஏராளமான மக்கள் "இதோ முஹம்மத்; இதோ முஹம்மத்" எனக் கூறியவாறு திரண்டுவிட்டனர். இல்லங்களிலிருந்து இளம்பெண்கள்கூட வெளியே வந்து விட்டனர். (பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்பாக மக்கள் அடிக்கப்ப(ட்டு விரட்டப்ப)டுவதில்லை. எனவே, ஏராளமான மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டதால் வாகனத்தில் (அமர்ந்தவாறு ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றி) வந்தார்கள். ஆயினும், (அதனிடையே காலால்) நடப்பதும் ஓடுவதுமே சிறந்ததாகும்"என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "மக்காவாசிகள் பொறாமை கொண்ட சமுதாயத்தாராய் இருந்தனர்" என்று இடம் பெற்றுள்ளது. "அவர்கள் பொறாமை கொண்டவர்களாய் இருந்தனர்" எனும் (வினைச் சொல்) வாசகம் இல்லை.
அத்தியாயம் : 15
2425. அபுத்துஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தவாஃபின் போதும், ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவரும்போதும் விரைந்து நடந்தார்கள். (எனவே) அது நபிவழியாகும் என உங்களுடைய சமூகத்தார் கூறுகின்றனரே?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2426. அபுத்துஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்ததாகவே எண்ணுகிறேன்"என்றேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அதைப் பற்றி எனக்கு விவரமாகச் சொல்லுங்கள்" என்றார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மர்வா" அருகில் (அதைச் சுற்றிவரும்போது) ஓர் ஒட்டகத்தின் மீதிருந்ததை நான் கண்டேன். அப்போது அவர்களைச் சுற்றி ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்" என்றேன். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அவர்கள்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். அவர்களைவிட்டு மக்கள் விரட்டப்படவோ வலுக்கட்டாயப் படுத்தப்படவோ மாட்டார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2427. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (உம்ரத்துல் களாவிற்காக மக்காவிற்கு) வந்தபோது,யஸ்ரிபின் (மதீனாவின்) காய்ச்சலால் உடல் நலிவுற்றிருந்தனர். அப்போது (மக்கா நகர) இணைவைப்பாளர்கள், "நாளைய தினம் (மதீனாவின்) காய்ச்சலால் நலிவடைந்து, அதனால் சிரமத்தைச் சந்தித்த ஒரு கூட்டத்தார் உங்களிடம் வரப்போகிறார்கள்" என்று (ஏளனமாகப்) பேசிக்கொண்டனர்.
அதன்படி இணைவைப்பாளர்கள் (கஅபாவிற்கு அருகிலுள்ள அரை வட்டப்பகுதியான) ஹிஜ்ரை ஒட்டிய இடத்தில் உட்கார்ந்துகொண்(டு நபித்தோழர்களைப் பார்வையிட்)டனர். அப்போது இணைவைப்பாளர்களுக்குத் தமது பலத்தைக் காட்டுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவைச் சுற்றிவரும்போது முதல்) மூன்று சுற்றுகள் விரைந்து நடக்குமாறும்,ஹஜருல் அஸ்வதுக்கும் ருக்னுல் யமானிக்கும் இடையே (மெதுவாக) நடந்து செல்லுமாறும் கட்டளையிட்டார்கள்.
அப்போது இணைவைப்பாளர்கள், "(மதீனாவின்) காய்ச்சலால் இவர்கள் பலவீனமடைந்துள்ளனர் என நீங்கள் கருதினீர்கள். இவர்களோ இன்னின்னதைவிட பலம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்" என்று (தம்மிடையே) பேசிக்கொண்டனர். தவாஃபின் அனைத்துச் சுற்றுகளிலும் விரைந்து நடக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடாததற்குக் காரணம்,மக்கள்மீது கொண்ட இரக்கமேயாகும்.
அத்தியாயம் : 15
2428. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே) தொங்கோட்டம் ஓடியதும், இறையில்லத்தைச் சுற்றிவரும் போது விரைந்து நடந்ததும் இணைவைப்பாளர்களுக்குத் தமது பலத்தைக் காட்டுவதற்காகத்தான்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 40 (கஅபாவின்) இரு யமனிய மூலைகளைத் தொட்டு முத்தமிடலே விரும்பத் தக்கதாகும்; மற்ற இரு (ஷாமிய) மூலைகளை அல்ல.
2429. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய) இரு யமனிய மூலைகளைத் தவிர,இறையில்லம் கஅபாவில் வேறெந்த இடத்தையும் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்ததில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2430. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவில் "ஹஜருல் அஸ்வத்" மூலையையும், அதையொட்டி ஜுமஹியரின் குடியிருப்புகளை நோக்கி அமைந்துள்ள (ருக்னுல் யமானீ) மூலையையும் தவிர வேறெந்த மூலைகளையும் தொட்டு முத்தமிட மாட்டார்கள்.
அத்தியாயம் : 15
2431. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவில்) ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரு மூலைகளைத் தவிர வேறெந்த இடத்தையும் தொட்டு முத்தமிடமாட்டார்கள்.
அத்தியாயம் : 15
2432. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கூட்ட நெரிசலுள்ள நேரத்திலும் கூட்ட நெரிசலற்ற நேரத்திலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருக்னுல் யமானீ, ஹஜருல் அஸ்வத் ஆகிய இவ்விரு மூலைகளையும் தொட்டு முத்தமிட்டதைப் பார்த்ததிலிருந்து நானும் அவ்விரண்டு மூலைகளையும் முத்தமிடுவதைக் கைவிட்டதில்லை.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2433. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதைத் தமது கையால் தொட்டு, பின்னர் தமது கையை முத்தமிட்டதை நான் கண்டேன். மேலும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்ததை நான் பார்த்ததிலிருந்து நானும் அவ்வாறு செய்வதைக் கைவிட்ட தில்லை" என இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2434. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய) இவ்விரு யமனிய மூலைகளைத் தவிர (கஅபாவின்) வேறெந்த இடத்தையும் தொட்டு முத்தமிட்டதை நான் கண்டதில்லை.
அத்தியாயம் : 15
பாடம் : 41 தவாஃபின்போது ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடுவது விரும்பத்தக்கதாகும்.
2435. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டு விட்டு, "அல்லாஹ்வின் மீதாணையாக! நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2436. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டுவிட்டு, "நான் உன்னை முத்தமிடுகிறேன். (ஆனால்,) நீ ஒரு கல் என்பதை நான் நன்கு அறிவேன். ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டேன். (எனவே நானும் உன்னை முத்தமிட்டேன்)" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2437. அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முன்தலை வழுக்கையானவர் (அதாவது உமர் (ரலி) அவர்கள்), ஹஜருல் அஸ்வதை முத்தமிடும் போது, "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உன்னை முத்தமிடுகிறேன். நீ தீங்கோ நன்மையோ செய்ய முடியாத ஒரு கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்"என்று கூறியதை நான் பார்த்தேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் அபீபக்ர் அல்முகத்தமீ, அபூகாமில் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "சின்ன வழுக்கத் தலையரை நான் பார்த்தேன்" என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 15
2438. ஆபிஸ் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டுவிட்டு, "நான் உன்னை முத்தமிடுகிறேன்; நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்" என்று கூறியதை நான் கண்டேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2439. சுவைத் பின் ஃகஃபலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முகம் பதித்து முத்தமிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னிடம் மிகுந்த ஈடுபாடுகொண்டிருந்ததை நான் கண்டேன். (எனவே உன்னை நான் முத்தமிடுகிறேன்)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஆயினும், அபுல்காசிம் (முஹம்மத் - ஸல்) அவர்கள் உன்னிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததை நான் கண்டேன்" என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று இடம் பெற்றுள்ளது; "முகம் பதித்தார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
பாடம் : 42 ஒட்டகம் முதலான வாகனப் பிராணிகள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம்; வாகனத்திலிருப்பவர் முனை வளைந்த கைத்தடி போன்றவற்றால் ஹஜருல் அஸ்வதைத் தொ(ட்டு முத்தமி)டலாம்.
2440. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாஃப் செய்தார்கள். அப்போது,முனை வளைந்த கைத்தடியால் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு, முத்தமிட்)டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2441. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது தமது வாகனத்தின் மீதமர்ந்து இறையில்லத்தைச் சுற்றிவந்தார்கள்; அப்போது அவர்கள் தமது முனை வளைந்த கைத்தடியால் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு, முத்தமிட்)டார்கள். மக்கள் தம்மைப் பார்(த்து ஹஜ்ஜின் கிரியைகளைப் படி)க்க வேண்டும்; தம்மிடம் (மார்க்க விளக்கங்கள்) கேட்க வேண்டும்;அதற்கேற்ப தாம் மக்களின் பார்வையில் படவேண்டும் என்பதற்காகவே (வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்). ஏனெனில், அப்போது மக்கள் (திரளாக) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருந்தனர்.
அத்தியாயம் : 15
2442. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது தமது வாகனத்தின் மீதமர்ந்து இறையில்லம் கஅபாவையும் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையேயும் சுற்றிவந்தார்கள். மக்கள் தம்மைப் பார்(த்து ஹஜ்ஜின் கிரியைகளைப் படி)க்க வேண்டும்; தம்மிடம் (மார்க்க விளக்கங்கள்) கேட்க வேண்டும்; (அதற்கேற்ப) தாம் மக்களின் பார்வையில் பட வேண்டும் என்பதற்காகவே (வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்). ஏனெனில், அப்போது மக்கள் (திரளாக) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருந்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அலீ பின் கஷ்ரம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "தம்மிடம் அவர்கள் (மார்க்க விளக்கங்கள்) கேட்க வேண்டும் என்பதற்காக" என்பது மட்டும் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
2443. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது தமது ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்; அப்போது (கைத்தடியால்) ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு, முத்தமிட்)டார்கள். (கூட்ட நெரிசலில்) தம்மைவிட்டு மக்கள் விரட்டியடிக்கப்படுவதை அவர்கள் வெறுத்ததே அ(வர்கள் வாகனத்தில் அமர்ந்திருந்த)தற்குக் காரணமாகும்.
அத்தியாயம் : 15
2444. அபுத்துஃபைல் அலீ பின் வாஸிலா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றிவந்தபோது ஹஜருல் அஸ்வதைத் தம்மிடமிருந்த முனை வளைந்த கைத்தடியால் தொட்டு, அந்தக் கைத்தடியை முத்தமிட்டதை நான் கண்டேன்.
அத்தியாயம் : 15
2445. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நான் உடல் நலிவுற்றுள்ளேன்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஹஜ்ஜின்போது) நான் முறையிட்டேன். அதற்கு அவர்கள், "நீ மக்களுக்கப்பாலிருந்து வாகனத்தில் அமர்ந்து (கஅபாவைச்) சுற்றிவருவாயாக!" என்று சொன்னார்கள். அவ்வாறே நான் சுற்றிவந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அத்தூர்" எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பக்கத்தில் (சுப்ஹுத் தொழுகை) தொழுதுகொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 43 ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடுவது ("சயீ" செய்வது) முக்கியக் கடமையாகும்; அதைச் செய்யாமல் ஹஜ் நிறைவேறாது.
2446. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், "ஒருவர் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவராவிட்டாலும் அவர்மீது குற்றமில்லை என்று நான் கருதுகிறேன்" என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள், "ஏன் (எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்)?" என்று கேட்டார்கள். நான், "ஏனெனில், அல்லாஹ் "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவை ஆகும். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமன்று" (2:158) என்று கூறுகின்றான்" என்றேன்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவராத மனிதரின் ஹஜ்ஜையோ உம்ராவையோ அல்லாஹ் முழுமையாக்கமாட்டான். அவ்விரண்டையும் சுற்றாமல் இருப்பது குற்றமில்லை என்றிருந்தால், நீ கூறும் கருத்து வரும். ("சுற்றுவது குற்றமன்று" என்றே குர்ஆனில் வந்துள்ளது.) இந்த வசனம் ஏன் அருளப்பெற்றதென உனக்குத் தெரியுமா?அறியாமைக் காலத்தில் அன்சாரிகள் கடலோரத்தில் அமைந்திருந்த "இசாஃப்", "நாயிலா" ஆகிய சிலைகளுக்காக "இஹ்ராம்" கட்டிவந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றுவர்; பின்னர் தலையை மழித்துக் கொள்வர். இஸ்லாம் வந்தபோது அவ்விரண்டுக்குமிடையே சுற்றிவருவதை அன்சாரிகள் வெறுத்தனர். அறியாமைக் காலத்தில் தாம் செய்துவந்த ஒரு காரியம் என்பதால் அவர்கள் அதை வெறுத்தனர். அப்போது வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்" என்று தொடங்கும் (2:158ஆவது) வசனத்தை இறுதிவரை அருளினான். பின்னர் அன்சாரிகள் (ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே) சுற்றிவந்தனர்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2447. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நான் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவராமலிருப்பதில் என்மீது குற்றமேதுமில்லை என்று கருதுகிறேன்" என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள், "ஏன் (எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்)?" என்று கேட்டார்கள். நான், "ஏனெனில் அல்லாஹ் "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமன்று" (2:158) என்று கூறுகின்றான்" என்றேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: "அவ்விரண்டையும் சுற்றாமலிருப்பது குற்றமில்லை" என்றிருந்தால் நீ கூறும் கருத்து வரும். அன்சாரிகள் சிலர் தொடர்பாகவே இந்த வசனம் அருளப்பெற்றது. அவர்கள் அறியாமைக் காலத்தில் "இஹ்ராம்" கட்டினால் (மதீனாவிற்கு அருகில் "முஷல்லல்"எனும் குன்றிலிருந்த) "மனாத்" எனும் சிலைக்காக "இஹ்ராம்" கட்டுபவர்களாய் இருந்தனர். எனவே, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவருவதை அவர்கள் அனுமதிக்கப்பட்டதாகக் கருதவில்லை.
நபி (ஸல்) அவர்களுடன் அவர்கள் ஹஜ்ஜுக்காக வந்தபோது அதைப் பற்றி நபியவர்களிடம் தெரிவித்தனர். அப்போதுதான் அல்லாஹ் இந்த (2:158ஆவது) வசனத்தை அருளினான். என் ஆயுள் மீது அறுதியாக! ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவராதவரின் ஹஜ்ஜை அல்லாஹ் முழுமையாக்குவதில்லை.
அத்தியாயம் : 15
2448. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவராத எவர்மீதும் (குற்றம்) ஏதுமிருப்பதாக நான் கருதவில்லை. (எனவே) அவ்விரண்டுக்குமிடையே நான் சுற்றி வராமலிருப்பதை நான் ஒரு பொருட்டாகவே எண்ண மாட்டேன்" என்றேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! நீ சொல்வது தவறு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் (ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே) சுற்றிவந்தனர். எனவே, அது ஒரு நபிவழியாக ஆகிவிட்டது. "முஷல்லல்" எனும் இடத்திலிருந்த சிலைகளுக்காக "இஹ்ராம்" கட்டியவர்களே ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றி வராமலிருந்தனர். இஸ்லாம் வந்தபோது, அதைப் பற்றி நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் வினவினோம். அப்போதுதான் வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமில்லை" எனும் (2:158ஆவது) வசனத்தை அருளினான். (இவ்வசனத்தில்) "அவ்விரண்டையும் சுற்றாமலிருப்பது குற்றமில்லை" என்றிருந்தால்தான் நீ சொல்லும் கருத்து வரும்" என்றார்கள்.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த ஹதீஸை நான் அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களிடம் சொன்னபோது,அதைக் கேட்டு அவர்கள் வியப்படைந்தார்கள். ("இந்த வசனத்திற்கு) இதுதான் (சரியான) விளக்கமாகும். அறிஞர்களில் பலர் "ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவராத அரபுகள் "இவ்விரு கற்(குன்று)களுக்கிடையே சுற்றிவருவது அறியாமைக் காலச்செயலாகும்" என்றார்கள் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். (ஆனால்) அன்சாரிகளில் வேறுசிலரோ "இறையில்லம் கஅபாவைச் சுற்றிவருமாறே நாம் பணிக்கப்பட்டுள்ளோம். ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே அவ்வாறு (சுற்றிவருமாறு) நாம் பணிக்கப்படவில்லை" என்று கூறினர். அப்போதுதான் வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்..." என்று (2:158ஆவது) தொடங்கும் வசனத்தை அருளினான். இந்த வசனம் இவ்விருசாரார் தொடர்பாகவும் அருளப் பெற்றிருக்கலாம் என நான் கருதுகிறேன்" என்று அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2449. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன்" என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. மேலும் அதில், பின்வருமாறும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று காணப்படுகிறது:
அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவருவதைப் பாவமாகக் கருதிவந்தோம்" என்று கூறினர். அப்போது வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமன்று" (2:158) எனும் வசனத்தை அருளினான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விரண்டுக்கும் இடையே சுற்றிவருவதை (தமது) வழிமுறையாக்கினார்கள். எனவே, அவ்விரண்டுக்குமிடையே சுற்றுவதைக் கைவிட எவருக்கும் (உரிமை) இல்லை.
அத்தியாயம் : 15
2450. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளும் "ஃகஸ்ஸான்" குலத்தாரும் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் "மனாத்" எனும் சிலைக்காக "இஹ்ராம்" கட்டி "தல்பியா" கூறுபவர்களாய் இருந்தனர். எனவே, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவருவதை அவர்கள் பாவமாகக் கருதினர். (ஆனால்,) அதுவே அவர்களின் மூதாதையரிடையே நிலவிவந்த மரபாக இருந்தது. அன்சாரிகள் இஸ்லாத்தைத் தழுவியபோது,அதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினர். இதுதொடர்பாகவே அல்லாஹ், "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமன்று. யார் கூடுதலாக நன்மை செய்கிறாரோ (அவருக்கு) அல்லாஹ் நன்றி பாராட்டக்கூடியவனும் நன்கறிந்தவனும் ஆவான்" (2:158) எனும் வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 15
2451. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகள் (ஆரம்பக் காலத்தில்) ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவருவதை வெறுப்பவர்களாய் இருந்தனர்; "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமன்று" (2:158) எனும் வசனம் அருளப்படும்வரை.
அத்தியாயம் : 15
பாடம் : 44 ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடுவது (சயீ) ஒரே தடவைதான் என்பது பற்றிய விளக்கம்.
2452. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ் மற்றும் உம்ராவின்போது) நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஒரேயொரு தடவை தவிர (கூடுதலாகச்) சுற்றிவரவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஆரம்பத்தில் சுற்றிவந்த ஒரேயொரு தடவை தவிர" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 45 ஹஜ் செய்பவர் துல்ஹஜ் பத்தாவது நாளன்று "ஜம்ரத்துல் அகபா"வில் கல்லெறியத் துவங்கும்வரை தொடர்ந்து தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது விரும்பத் தக்கதாகும்.
2453. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
("விடைபெறும்" ஹஜ்ஜின்போது) அரஃபாவிலிருந்து திரும்புகையில் நான் வாகனத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவுக்கு அருகிலுள்ள இடப்புறப் பள்ளத்தாக்கை அடைந்ததும் ஒட்டகத்தை மண்டியிடவைத்துவிட்டுச் சென்று, சிறுநீர் கழித்துவிட்டுத் திரும்பிவந்தார்கள். நான் அவர்களுக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்யத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் சுருக்கமாக அங்கத் தூய்மை செய்தார்கள். நான், "தொழப்போகிறீர்களா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தொழுகை உனக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்)தான்" எனக் கூறி விட்டு, வாகனத்தில் ஏறி முஸ்தலிஃபா வந்ததும் தொழுதார்கள். பின்னர் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்படும் அதிகாலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாகனத்தில் அவர்களுக்குப் பின்னால் ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான குறைப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஜம்ரா"வை அடையும்வரை "தல்பியா" சொல்லிக்கொண்டே இருந்தார்கள் என ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2454. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("விடைபெறும்" ஹஜ்ஜில்) முஸ்தலிஃபாவிலிருந்து புறப்படும்போது, தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களை ஏற்றிக்கொண்டார்கள். ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாவது நாளில்) "ஜம்ரத்துல் அகபா"வில் கல்லெறியும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்" என என்னிடம் தெரிவித்தார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2455. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் ("விடைபெறும்" ஹஜ் பயணத்தின் போது) அவர்களது வாகனத்தில் அமர்ந்திருந்தவரான ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அரஃபா நாள்" மாலையிலும் "முஸ்தலிஃபா நாள்" காலையிலும் திரும்பிக்கொண்டிருந்த மக்களிடம், "மெதுவாகச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, மினாவிலுள்ள "முஹஸ்ஸிர்" ஓடைக்குள் நுழைந்ததும், "ஜம்ராவில் எறிவதற்காக, சுண்டி எறியப்படும் சிறு கற்களை எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஜம்ரத்துல் அகபா"வில் கல்லெறியும் வரை தொடர்ந்து தல்பியாச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஜம்ரத்துல் அகபா"வில் கல்லெறியும்வரை தொடர்ந்து தல்பியாச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. மேலும் அதில், ("சுண்டி எறியப்படும் சிறுகற்கள்" என்று கூறும்போது) "ஒரு மனிதன் கல் சுண்டி விளையாடுவதைப் போன்று தமது கையால் சைகை செய்தார்கள்" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2456. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் முஸ்தலிஃபாவில் இருந்தபோது, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "அல் பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பெற்றதோ அவர் (முஹம்மத் - ஸல்) இந்த இடத்தில் "லப்பைக். அல்லாஹும்ம, லப்பைக்" என்று (தல்பியா) கூறியதை நான் செவியுற்றேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2457. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்படும்போது தல்பியாச் சொன்னார்கள். அப்போது "இவர் ஒரு கிராமவாசியா?" என்று கேட்கப்பட்டது. அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "மக்கள் மறந்துவிட்டனரா,அல்லது வழிதவறிவிட்டனரா? "அல்பகரா" அத்தியாயம் யாருக்கு அருளப்பெற்றதோ அவர் (முஹம்மத் - ஸல்) இந்த இடத்தில் "லப்பைக். அல்லாஹும்ம, லப்பைக்" என (தல்பியா)ச் சொன்னதை நான் செவியுற்றுள்ளேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2458. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) மற்றும் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், முஸ்தலிஃபாவில் "அல்பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பெற்றதோ அவர் (முஹம்மத் - ஸல்) இந்த இடத்தில் "லப்பைக். அல்லாஹும்ம, லப்பைக்" என (தல்பியா)ச் சொன்னதை நான் செவியுற்றுள்ளேன்" என்று கூறினார்கள். பிறகு அவர்கள் தல்பியாச் சொன்னார்கள்; அவர்களுடன் நாங்களும் தல்பியாச் சொன்னோம். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 46 அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறல்.
2459. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (அரஃபா நாள்) காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவிலிருந்து அரஃபாவிற்குச் சென்றோம். அப்போது எங்களில் சிலர் தல்பியா (லப்பைக்...) கூறிக்கொண்டிருந்தனர். வேறுசிலர் தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறிக்கொண்டிருந்தனர்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2460. அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நாங்கள் "அரஃபா" தினத்தன்று காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது எங்களில் சிலர் "தக்பீர்" சொல்லிக்கொண்டிருந்தனர். வேறுசிலர் "தல்பியா"சொல்லிக்கொண்டிருந்தனர். நாங்களோ தக்பீர் சொல்லிக்கொண்டிருந்தோம்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் அபீசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் எனக்கு இந்தச் செய்தியை அறிவித்த அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்களிடம், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களைக் கண்டு வியப்படைகிறேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று நீங்கள் உங்கள் தந்தையிடம் எப்படி வினவாமலிருந்தீர்கள்?" என்று கேட்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2461. முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது, நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது இன்றைய தினத்தில் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "அன்று எங்களில் சிலர் "தல்பியா" கூறிக்கொண்டிருந்தனர்; அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட வில்லை. வேறுசிலர் "தக்பீர்" கூறிக்கொண்டிருந்தனர்; அதற்கும் ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2462. முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் "அரஃபா" நாளன்று காலையில் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "இன்றைய தினத்தில் தல்பியா கூறுவதைப் பற்றித் தாங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் நபி (ஸல்) அவர்களுடனும் நபித்தோழர்களுடனும் இவ்வாறு சென்றிருக்கிறேன். அப்போது எங்களில் சிலர் "தக்பீர்" கூறிக்கொண்டிருப்பர். வேறுசிலர் "தல்பியா" கூறிக்கொண்டிருப்பர். எங்களில் யாரும் மற்றவரை குறை கூறமாட்டார்கள்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 47 அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபாவிற்குத் திரும்புவதும், அந்த இரவில் முஸ்தலிஃபாவில் மஃக்ரிப் மற்றும் இஷா ஆகிய இருதொழுகைகளையும் சேர்த்துத் தொழுவதும்.
2463. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் 9ஆவது நாள்) அரஃபாவிலிருந்து (முஸ் தலிஃபாவிற்குத்) திரும்பிச் செல்லும்போது, வழியில் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி சிறுநீர் கழித்தார்கள். பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது அவர்கள் (மும்முறை உறுப்புகளைக் கழுவி) முழுமையாக அங்கத் தூய்மை செய்யவில்லை (சுருக்கமாகவே செய்தார்கள்). நான் அவர்களிடம், "(மஃக்ரிப்) தொழப்போகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு, "தொழுகை உமக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது" என்று அவர்கள் கூறி, வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். முஸ்தலிஃபா வந்ததும் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது அவர்கள் முழுமையாக அங்கத் தூய்மை செய்தார்கள். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும் மஃக்ரிப் தொழுதார்கள். பிறகு ஒவ்வொருவரும் தமது ஒட்டகத்தைத் தத்தமது கூடாரத்தில் படுக்க வைத்தனர். பிறகு இஷாத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும் இஷாத் தொழுதார்கள். அவ்விரு தொழுகைகளுக்குமிடையே நபியவர்கள் (கூடுதலாக) வேறெதுவும் தொழவில்லை.
அத்தியாயம் : 15
2464. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பிய பின் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக (வழியில்) ஒரு பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றார்கள். (அவர்கள் திரும்பிவந்ததும் அவர்கள் அங்கத் தூய்மை செய்வதற்காக) அவர்களுக்கு நான் நீர் ஊற்றினேன். அப்போது "நீங்கள் (மஃக்ரிப்) தொழப்போகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தொழுமிடம் உமக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்)தான் உள்ளது" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2465. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பியபோது, (வழியில்) ஒரு பள்ளத்தாக்கை அடைந்ததும் (வாகனத்திலிருந்து) இறங்கி சிறுநீர் கழித்தார்கள். ("சிறுநீர் கழித்தார்கள்" என்று வெளிப்படையாகவே உசாமா கூறினார்கள்; "நீர் ஊற்றிக் கழுவினார்கள்" என்று சூசகமாகக் கூறவில்லை.) பிறகு தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அங்கத் தூய்மை செய்தார்கள். (தலா ஒவ்வோர் உறுப்பையும் ஒரு முறையே கழுவினார்கள்.) முழுமையாக அங்கத் தூய்மை செய்யவில்லை. அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! தொழப்போகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தொழுகை உமக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது" என்றார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்து முஸ்தலிஃபா வந்ததும் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2466. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த குறைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) இருந்தபோது "அரஃபா" நாள் மாலையில் என்ன செய்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "மக்கள் மஃக்ரிப் தொழுகைக்காக (தங்கள் ஒட்டகங்க ளை)ப் படுக்கவைக்கும் பள்ளத்தாக்கிற்குச் சென்றோம். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைப் படுக்க வைத்தார்கள். பிறகு சிறுநீர் கழித்தார்கள். ("நீர் ஊற்றிக் கழுவினார்கள்" என்று சூசகமாக உசாமா கூறவில்லை; சிறுநீர் கழித்தார்கள் என வெளிப்படையாகவே குறிப்பிட்டார்கள்.) பிறகு அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் கேட்டார்கள். பிறகு அங்கத் தூய்மை செய்தார்கள். அப்போது அவர்கள் முழுமையாக அங்கத் தூய்மை செய்யவில்லை (ஒவ்வோர் உறுப்பையும் தலா ஒரு முறையே கழுவினார்கள்.)
நான், "அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள்) தொழப்போகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தொழுகை உமக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது" என்றார்கள். பிறகு வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். நாங்கள் முஸ்தலிஃபாவிற்கு வந்து சேர்ந்ததும் மஃக்ரிப் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு மக்கள் தம் ஒட்டகங்களைத் தத்தமது கூடாரங்களில் படுக்கவைத்தார்கள்; இஷாத் தொழுகையை முடிக்கும்வரை அவற்றை அவிழ்த்துவிடவில்லை. இஷாத் தொழுத பிறகே ஒட்டகங்களை அவிழ்த்(துப் பயணத்தைத் தொடர்ந்)தனர்" என்று உசாமா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள். நான், "மறுநாள் காலையில் நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அமர்ந்தார்கள். நானோ (மினாவிற்கு) முந்திச் சென்ற குறைஷியருடன் நடந்தேசென்றேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2467. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தலைவர்கள் (தமது பயணத்தில்) இறங்கி இயற்கைக் கடன்களை நிறைவேற்றும் பள்ளத்தாக்கு வந்தபோது, (தமது வாகனத்திலிருந்து) இறங்கினார்கள். பிறகு சிறுநீர் கழித்தார்கள். ("நீர் ஊற்றிக் கழுவினார்கள்"என்று உசாமா சூசகமாகக் கூறவில்லை; சிறுநீர் கழித்தார்கள் என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டார்கள்.) பிறகு தண்ணீர் கொண்டுவரச் சொல்லிச் சுருக்கமாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! தொழப்போகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு தொழுகை உமக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2468. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபாவிற்குத்) திரும்பியபோது அவர்களுக்குப் பின்னால் நான் வாகனத்தில் அமர்ந்திருந்தேன். அவர்கள் அந்தப் பள்ளத்தாக்கிற்கு வந்துசேர்ந்ததும் தமது வாகன ஒட்டகத்தைப் படுக்கவைத்து விட்டுக் கழிப்பிடம் நோக்கிச் சென்றார்கள். (தமது தேவையை முடித்து) அவர்கள் திரும்பிய போது, அவர்களுக்கு நான் நீர் குவளையிலிருந்து தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். முஸ்தலிஃபா வந்ததும் அங்கு மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து (இஷா நேரத்தில்) தொழுதார்கள்.
அத்தியாயம் : 15
2469. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பியபோது, அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். உசாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதே நிலையில் (மிதமான வேகத்தில்) தொடர்ந்து பயணம் மேற்கொண்டு முஸ்தலிஃபா போய்ச்சேர்ந்தார்கள்.
அத்தியாயம் : 15
2470. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபாவிற்குத்) திரும்பும் போது தமக்குப் பின்னால் (தமது வாகனத்தில்) அமரவைத்திருந்த உசாமா (ரலி) அவர்களிடம் (பின்வருமாறு) கேட்கப்பட்டது. அப்போது அவர்களுடன் நான் இருந்தேன். அல்லது உசாமா (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பியபோது எவ்வாறு பயணித்தார்கள்?" என்று நான் கேட்டேன். அதற்கு உசாமா (ரலி) அவர்கள், "நபியவர்கள் மிதமான வேகத்தில் பயணித்தார்கள். (கூட்ட நெரிசல் காணப்படாத) விசாலமான இடத்தை அடைந்தால் அவர்கள் விரைவாகச் சென்றார்கள்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2471. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மேற்கண்ட ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள "அந்நஸ்" (விரைவு) என்பது "அல் அனக்" (மிதவேகம்) என்பதைவிடக் கூடுதல் வேகமாகும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2472. அபூஅய்யூப் காலித் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"விடைபெறும்" ஹஜ்ஜின்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் பின் யஸீத் அல் கத்மீ (ரஹ்) அவர்கள், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது ஆட்சியில் கூஃபாவின் ஆளுநராக இருந்தார்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2473. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜின்போது) முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள்.
அத்தியாயம் : 15
2474. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். அவற்றுக்கிடையே (கூடுதலான தொழுகைகள்) வேறெதுவும் தொழவில்லை.
(மஃக்ரிப்) மூன்று ரக்அத்கள் தொழுது விட்டு, (தொடர்ந்து) இஷாவை இரண்டு ரக்அத்தாக (சுருக்கி)த் தொழுதார்கள்.
இதன் அறிவிப்பாளரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்விடம் சென்றடையும் வரை இவ்வாறு முஸ்தலிஃபாவில் சேர்த்தே தொழுதுவந்தார்கள்.
அத்தியாயம் : 15
2475. சலமா பின் குஹைல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் (தமது ஹஜ்ஜின்போது) முஸ்தலிஃபாவில் ஒரே இகாமத்தில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதார்கள். பிறகு, "இவ்வாறே இப்னு உமர் (ரலி) அவர்களும் தொழுதார்கள்" என்றும், "அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் தொழுவார்கள் என இப்னு உமர் (ரலி) அவர் கள் கூறினார்கள்" என்றும் அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2476. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "மஃக்ரிபையும் இஷாவையும் ஒரேயோர் இகாமத்தில் (சேர்த்துத்) தொழுதார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2477. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதார்கள். ஒரேயோர் இகாமத்தில் மூன்று ரக்அத்கள் மஃக்ரிபையும் இரண்டு ரக்அத்கள் இஷாவையும் தொழுதார்கள்.
அத்தியாயம் : 15
2478. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் (அரஃபாவிலிருந்து) திரும்பி முஸ்தலிஃபாவிற்கு வந்து சேர்ந்தபோது, அவர்கள் ஒரேயோர் இகாமத்தில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுவித்துவிட்டுத் திரும்பினார்கள். பிறகு, "இவ்வாறே இந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள்" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 48 (ஹாஜிகள்) துல்ஹஜ் பத்தாம் நாளில் முஸ்தலிஃபாவில் சுப்ஹுத் தொழுகையை (அதன் ஆரம்ப நேரத்தில்) அதிக இருட்டிலேயே தொழுவது விரும்பத் தக்கதாகும்; சுப்ஹு நேரம் வந்துவிட்டது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே அவ்வாறு ஆரம்ப நேரத்தில் தொழ வேண்டும்.
2479. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணத்தில்) எந்தத் தொழுகையையும் அதற்குரிய நேரத்தில் தொழாமல் வேறு நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை; இரண்டு தொழுகைகளைத் தவிர. ஒன்று: முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதது. மற்றொன்று: அன்றைய (மறு)நாள் ஃபஜ்ர் தொழுகையை அதற்குரிய (வழக்கமான) நேரத்திற்கு முன்னரே (முஸ்தலிஃபாவில்) தொழுதது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "ஃபஜ்ர் தொழுகையை அதற்குரிய (வழக்கமான) நேரத்திற்கு முன் இருட்டிலேயே தொழுதது" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 49 பெண்கள் (முதியோர், நோயாளிகள்) உள்ளிட்ட பலவீனர்களை, கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன்பே இரவின் இறுதியில் முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது விரும்பத்தக்கதாகும்; மற்றவர்கள் சுப்ஹுத் தொழுகையை நிறைவேற்றும்வரை முஸ்தலிஃபாவிலேயே தங்கியிருப்பது விரும்பத்தக்கதாகும்.
2480. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கும் முன்பே (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குத்) தாம் புறப்பட்டுச் செல்ல சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முஸ்தலிஃபா இரவில் அனுமதி கேட்டார்கள்- (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்) சவ்தா கனத்த உடலுடையவராக (மெதுவாக நடப்பவராக) இருந்தார்கள்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். எனவே, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்படுவதற்கு முன்பே புறப்பட்டுச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை சுப்ஹுவரை அங்கேயே தங்கியிருக்கச் செய்தார்கள். பிறகு அவர்கள் (சுப்ஹுத் தொழுதுவிட்டுப்) புறப்படவே நாங்களும் புறப்பட்டுச் சென்றோம்.
சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்று முன்பே சென்றதைப் போன்று, நானும் அனுமதி பெற்றிருந்தால் வேறெந்த மகிழ்ச்சியையும்விட அது எனக்கு மிகவும் உவப்பானதாய் இருந்திருக்கும்.
இதன் அறிவிப்பாளரான காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள "ஸபிதா" எனும் சொல்லுக்கு "கனத்த உடலுடையவர்" என்று பொருள்.
அத்தியாயம் : 15
2481. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சவ்தா (ரலி) அவர்கள் கனத்த உடலுடைய மெதுவாக நடக்கும் பெண்ணாக இருந்தார். எனவே, அவர் முஸ்தலிஃபாவிலிருந்து இரவிலேயே புறப்பட்டுச் செல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதிகேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள்.
சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றதைப் போன்று நானும் அவர்களிடம் அனுமதி பெற்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும்!
இதன் அறிவிப்பாளரான காசிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள் இமாமுடனேயே (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப்) புறப்பட்டுச் செல்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2482. காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றதைப் போன்று, நானும் அவர்களிடம் அனுமதி பெற்றுச் சென்று, மினாவில் சுப்ஹுத் தொழுது விட்டு, மக்கள் வருவதற்கு முன்பே "ஜம்ரா"வில் கல்லெறிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பினேன்" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களிடம், "சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றிருந்தாரா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "ஆம். அவர் கனத்த உடலுடைய பெண்ணாக இருந்ததால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2483. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2484. அஸ்மா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான அப்துல்லாஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபா இல்லத்தின் அருகே இருந்தபோது, என்னிடம் "சந்திரன் மறைந்துவிட்டதா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். அவர்கள் சிறிது நேரம் தொழுதுவிட்டுப் பிறகு "மகனே! சந்திரன் மறைந்துவிட்டதா?"என்று (மீண்டும்) கேட்டார்கள். நான் "ஆம் (மறைந்துவிட்டது)" என்றேன். "என்னுடன் (மினாவுக்குப்) புறப்படு" என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். (மினா வந்ததும்) அவர்கள் "ஜம்ரா"வில் கல்லெறிந்துவிட்டுப் பின்னர் (திரும்பிவந்து) தமது கூடாரத்தில் தொழுதார்கள். அப்போது அவர்களிடம் நான், "அம்மா! நாம் விடிவதற்கு முன்பே (மினாவுக்கு) வந்து விட்டோம்" என்றேன். அவர்கள், "(இதில் தவறேதும்) இல்லை, மகனே! நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு (விடியலுக்கு முன்பே மினாவிற்கு வர) அனுமதியளித்துள்ளார்கள்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "இல்லை, மகனே! அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள், பயணத்திலிருந்த தம் பெண்களுக்கு (விடியலுக்கு முன்பே மினாவிற்கு வர) அனுமதியளித்துள்ளார்கள்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2485. சாலிம் பின் ஷவ்வால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் என்னை முஸ்தலிஃபாவிலிருந்து (மினாவிற்கு) இரவி(ன் இருளி)லேயே அனுப்பிவைத்தார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2486. உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தில் இவ்வாறே செய்துவந்தோம். (அதாவது) "ஜம்உ" விலிருந்து மினாவிற்கு இருளிலேயே (விடியலுக்கு முன்பே) புறப்பட்டுச் செல்வோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அம்ர் பின் முஹம்மத் அந்நாகித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("ஜம்உ" என்ப தன் மற்றொரு பெயரான) "முஸ்தலிஃபா விலிருந்து..." என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2487. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பலவீனர்(களான பெண்)களுடன்" அல்லது "பயணச் சுமைகளுடன்" என்னையும் "ஜம்உ" (முஸ்தலிஃபா)விலிருந்து (மினாவிற்கு) இரவிலேயே அனுப்பிவைத்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2488. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் குடும்பத்துப் பலவீனர்களை முன்கூட்டியே (மினாவிற்கு) அனுப்பிவைத்தார்கள். அவர்களில் நானும் ஒருவன் ஆவேன்.
இதை உபைதுல்லாஹ் பின் அபீயஸீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2489. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் குடும்பத்துப் பலவீனர்களை முன்கூட்டியே (மினாவிற்கு) அனுப்பிவைத்தார்கள். அவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன்.
இதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2490. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலைக்கு முந்தைய (சஹர்) நேரத்திலேயே தம் பயணச்சாமான்களுடன் என்னை (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்கு) அனுப்பி வைத்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள் என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவு நன்கு இருக்கவே) நீண்ட இரவில் என்னை (மினாவிற்கு) அனுப்பிவைத்தார்கள்" என்று கூறினார்கள் எனும் செய்தி தங்களுக்கு எட்டியதா?" என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள் "இல்லை; மேற்கண்டவாறு அதிகாலைக்கு முந்தைய (சஹர்) நேரத்திலேயே என்னை அனுப்பிவைத்தார்கள் என்று மட்டுமே கூறினார்கள்" என்றார்கள். நான் அவரிடம், "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நாங்கள் ஃபஜ்ருக்கு முன்பே ஜம்ராவில் கல்லெறிந்தோம் என்று கூறினார்களா?" என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், "இல்லை; மேற்கண்டவாறு மட்டுமே கூறினார்கள்" என்று விடையளித்தார்கள். "ஃபஜ்ரை எங்கு தொழுவித்தார்கள்?" என்று நான் கேட்க, "இல்லை; மேற்கண்டவாறு மட்டுமே கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2491. சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது குடும்பத்திலுள்ள பலவீனர்களை முன் கூட்டியே (ஃபஜ்ருக்கு முன்பே மினாவிற்கு) அனுப்பிவிடுவார்கள். அதன்படி, அவர்கள் முஸ்தலிஃபாவில் "மஷ்அருல் ஹராம்" எனுமிடத்தில் இரவில் தங்கியிருந்து, அங்கு தமக்குத் தெரிந்தவகையில் அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள். பிறகு, இமாம் முஸ்தலிஃபாவில் தங்கித் திரும்புவதற்கு முன்பே இவர்கள் (மினாவிற்குத்) திரும்பிவிடுவர். அவர்களில் சிலர் ஃபஜ்ர் தொழுகைக்காக முன்கூட்டியே மினாவிற்குச் சென்றுவிடுவர். இன்னும் சிலர் அதற்குப் பின் செல்வர். மினாவுக்குச் சென்றதும் "ஜம்ரா"வில் கல்லெறிவர். "(முதியோர், பெண்கள், நோயாளிகள் போன்ற) இத்தகைய (நலிந்த)வர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு செய்ய) அனுமதி யளித்துள்ளார்கள்"என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 50 "பத்னுல் வாதி" பள்ளத்தில் மக்கா தமக்கு இடப் பக்கமிருக்கும்படி நின்று, "ஜம்ரத்துல் அகபா"வின் மீது கல்லெறிவதும், ஒவ்வொரு கல்லை எறியும்போது தக்பீர் கூறுவதும்.
2492. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "பத்னுல் வாதி" பள்ளத்தில் நின்று "ஜம்ரத்துல் அகபா"வின் மீது ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீரும் கூறிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், "மக்கள் மேற்பரப்பில் நின்றல்லவா கல்லை எறிகின்றனர்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது ஆணையாக! "அல்பகரா" அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ (அந்த அல்லாஹ்வின் தூதர்-ஸல்) அவர்கள் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்" என்று பதிலளித்தார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2493. சுலைமான் பின் மஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதிருந்தபடி, "ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொகுத்தளித்த முறைப்படி குர்ஆனைத் தொகு(த்துப் பதிவு செய்யு)ங்கள். (அல்பகரா அத்தியாயம், அந்நிசா அத்தியாயம், ஆலு இம்ரான் அத்தியாயம் என்றெல்லாம் கூறுவதைத் தவிர்த்து) பசுமாட்டைப் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம், மகளிர் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம், இம்ரானின் சந்ததியர் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம் (எனப் பெயரிட்டு, குர்ஆன் வசனங்களை ஜிப்ரீல் கொண்டுவந்த வரிசை முறைப்படி பதிவு செய்யுங்கள்)" என்றார்.
நான் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களைச் சந்ததித்தபோது ஹஜ்ஜாஜ் கூறியதைத் தெரிவித்தேன். அப்போது இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜாஜைக் கடிந்துரைத்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நான் (ஹஜ்ஜின் போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (மினாவில்) "ஜம்ரத்துல் அகபா"விற்குச் சென்று அதனை ஒட்டியுள்ள "பத்னுல் வாதி" பள்ளத்தாக்கில் இறங்கி ஜம்ராவை நோக்கி நின்று அதன் மீது ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீரும் கூறினார்கள். அப்போது அவர்களிடம் நான், "அபூஅப்திர் ரஹ்மான்! மக்கள் இப்பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் நின்றவாறு கல்லை எறிகின்றனரே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! "அல் பகரா" அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர்கள் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட செய்தி மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "ஹஜ்ஜாஜ், "அல்பகரா அத்தியாயம் எனச் சொல்லாதீர்கள்" என்று கூறியதைக் கேட்டேன் என அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிப்பு ஆரம்பிக்கிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட அறிவிப்பில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
2494. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவர்கள் இறையில்லம் கஅபா தமக்கு இடப்பக்கமாகவும், மினா தமக்கு வலப்பக்கமாகவும் இருக்கும்படி (பத்னுல் வாதி பள்ளத்தாக்கில்) நின்று ஜம்ராவின் மீது ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். மேலும், "அல்பகரா அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர்கள் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்" என்றும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2495. மேற்கண்ட செய்தி மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "ஜம்ரத்துல் அகபா"விற்குச் சென்ற போது..." என்று அறிவிப்பு தொடங்குகிறது.
அத்தியாயம் : 15
2496. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜின்போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "பத்னுல் வாதி" பள்ளத்தாக்கில் நின்று (ஜம்ராவின் மீது) கல்லை எறிந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் "மக்கள் பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் நின்று ஜம்ராவின் மீது கல்லை எறிகின்றனரே? (ஆனால் தாங்கள் பள்ளத்தில் நின்று கல்லை எறிகின்றீர்களே?)" என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! "அல்பகரா" அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர்கள் இங்கிருந்ததுதான் (ஜம்ராவின் மீது) கல்லை எறிந்தார்கள்" என்று பதிலளித்தார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 51 நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் வாகனத்தில் அமர்ந்தவாறு "ஜம்ரத்துல் அகபா"வின் மீது கல் எறிவது விரும்பத் தக்கதாகும் என்பதும், "நீங்கள் உங்களது ஹஜ்ஜின் கிரியைகளை (என்னிடமிருந்து) கற்றுக்கொள்ளுங்கள்" என்ற நபி (ஸல்) அவர்களின் சொல்லின் விளக்கமும்.
2497. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்தவாறு (ஜம்ரத்துல் அகபாவின் மீது) கல் எறிவதை நான் கண்டேன். மேலும் அவர்கள், "நீங்கள் உங்களது ஹஜ்ஜின் கிரியைகளை (என்னிடமிருந்து இந்த ஆண்டிலேயே) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான், எனது இந்த ஹஜ்ஜிற்குப் பிறகு ஹஜ் (செய்வேனா,) செய்யமாட்டேனா என்பதை அறியமாட்டேன்" என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2498. உம்முல் ஹுஸைன் பின்த் இஸ்ஹாக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"விடைபெறும்" ஹஜ்ஜின்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்தபடி "ஜம்ரத்துல் அகபா"வின் மீது கல் எறிந்துவிட்டுத் திரும்பிச் சென்றதை நான் கண்டேன். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களும் இருந்தனர். அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஒட்டகத்தைப் பிடித்து இழுத்துச் சென்றார். மற்றொருவர் வெயில் படாமலிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைமீது தமது ஆடையை உயர்த்திப் பிடித்து (நிழலிட்டுக்) கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நிறைய விஷயங்களைக் கூறினார்கள். "அல்லாஹ்வின் வேதத்தின்படி உங்களை வழி நடத்தக்கூடிய, உறுப்புகள் துண்டிக்கப்பட்ட, கறுப்பு நிற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவரது சொல்லைக் கேளுங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்" என்று அவர்கள் கூறியதையும் நான் செவியுற்றேன்.
அத்தியாயம் : 15
2499. உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"விடைபெறும்" ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். உசாமா (ரலி), பிலால் (ரலி) ஆகிய இருவரையும் நான் கண்டேன். அவர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களது ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். மற்றவர் வெயில் படாமலிருக்கத் தமது ஆடையை உயர்த்திப் பிடித்து அவர்களை மறைத்துக்கொண்டிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஜம்ரத்துல் அகபா"வில் கல் எறியும்வரை (இவ்வாறு செய்துகொண்டிருந்தனர்).169
முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் (ஆகிய நான்) கூறுகிறேன்:
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஅப்திர் ரஹீம் (ரஹ்) அவர்களது இயற்பெயர் காலித் பின் அபீயஸீத் என்பதாகும். அவர் முஹம்மத் பின் சலமா (ரஹ்) அவர்களின் தாய்மாமன் ஆவார். அவரிடமிருந்து வகீஉ பின் அல்ஜர்ராஹ் (ரஹ்), ஹஜ்ஜாஜ் அல்அஃவர் (ரஹ்) ஆகி யோர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.
அத்தியாயம் : 15
பாடம் : 52 சுண்டி விளையாடும் கற்கள் அளவிற்குச் சிறுகற்கள் அமைவது விரும்பத் தக்கதாகும்.
2500. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், சுண்டி விளையாடும் கற்கள் அளவிலான சிறிய கற்களையே (ஜம்ராக் களில்) எறிந்ததை நான் கண்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 53 கல்லெறிய உகந்த நேரம்.
2501. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் முற்பகல் நேரத்திலும் அதற்கடுத்த நாட்களில் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் கற்களை எறிந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நபி (ஸல்) அவர்கள் (அவ்வாறு) செய்வார்கள்" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 54 ஜம்ராவில் எறியப்படும் சிறு கற்கள் (எண்ணிக்கை) ஏழு என்பதன் விளக்கம்.
2502. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:
இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின் கற்களால் துப்புரவு செய்வது ஒற்றை எண்ணிக்கை (மூன்று) ஆகும். (ஹஜ்ஜின்போது) கற்களை எறிவதும் ஒற்றை எண்ணிக்கை (ஏழு) ஆகும்; ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே தொங்கோட்டம் ஓடுவதும் ஒற்றை எண்ணிக்கை (ஏழு) ஆகும்; கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதும் ஒற்றை எண்ணிக்கை (ஏழு) ஆகும். உங்களில் ஒருவர் இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின் கற்களால் துப்புரவு செய்யும் போது ஒற்றை எண்ணிக்கையில் துப்புரவு செய்யட்டும்!
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 55 (ஹஜ் கிரியைகளுக்குப் பின்) தலைமுடியைக் குறைப்பதைவிட முழுமையாக மழிப்பதே சிறந்ததாகும்; குறைத்துக்கொள்ளவும் அனுமதி உண்டு.
2503. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ் கிரியைகளுக்குப் பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையை மழித்தார்கள். அவர்களுடைய தோழர்களில் சிலரும் மழித்துக்கொண்டனர். வேறுசிலர் (சிறிதளவு) முடியைக் குறைத்துக்கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மழித்துக்கொள்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!" என்று ஓரிரு முறை பிரார்த்தித்தார்கள். பிறகு "முடியை குறைத்துக்கொண்டவர்களுக்கும் (அருள் புரிவானாக)" என்று பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2504. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறைவா, மழித்துக்கொள்பவர்களுக்கு அருள் புரிவாயாக!" என்று பிரார்த்தித்தபோது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக் கொள்பவர்களுக்கும் (சேர்த்துப் பிரார்த்தியுங்கள்)" என்றனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறைவா! மழித்துக்கொள்பவர்களுக்கு அருள் புரிவாயாக!" என்றார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்பவர்களுக்கும்..." என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (இறைவா, அருள் புரிவாயாக!)" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 15
2505. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மழித்துக்கொள்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!" என்று பிரார்த்தித்ததும் மக்கள், "அல்லாஹ்வின் தூதரே, குறைத்துக் கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்)" என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ், மழித்துக்கொள்பவர்களுக்கு அருள் புரிவானாக!" எனப் பிரார்த்தித்தார்கள். மக்கள் (மீண்டும்), "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்பவர்களுக்கும்..." என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மறுபடியும்) "அல்லாஹ், மழித்துக்கொள்பவர்களுக்கு அருள்புரிவானாக!" எனப் பிரார்த்தித்தார்கள். மக்கள் (திரும்பவும்) "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்வர்களுக்கும்..." என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "குறைத்துக்கொள்பவர்களுக்கும் (அல்லாஹ் அருள் புரிவானாக)" எனப் பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 15
2506. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், நான்காவது தடவையில் "குறைத்துக்கொள்பவர்களுக்கும் (அல்லாஹ் அருள் புரிவானாக)" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள் என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2507. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா, மழித்துக்கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக!" எனப் பிரார்த்தித்ததும் மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! "குறைத்துக் கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்)" என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா, மழித்துக்கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக!" என்று (மீண்டும்) பிரார்த்தித்தார்கள். மக்கள் (மீண்டும்), "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக் கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்)" என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா, மழித்துக்கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். மக்கள் (மறுபடியும்) "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்பவர்களுக்கும்..." என்றதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குறைத்துக்கொள்பவர்களுக்கும் (மன்னிப்பு அளிப்பாயாக)" என்று பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2508. உம்முல் ஹுஸைன் பின்த் இஸ்ஹாக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது தலையை மழித்துக் கொள்பவர்களுக்காக மூன்று முறையும், முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்காக ஒரு முறையும் பிரார்த்தித்ததை நான் செவியுற்றேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் வகீஉ பின் அல்ஜர்ராஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "விடைபெறும் ஹஜ் ஜின்போது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
2509. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜில் (ஹஜ் கிரியைகளை முடித்ததும்) தமது தலையை மழித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 56 துல்ஹஜ் பத்தாவது நாளில் (முதலில்) கல்லெறிவதும் பிறகு அறுத்துப் பலியிடுவதும் பிறகு தலையை மழிப்பதும் நபிவழி (சுன்னா) ஆகும். மழிக்கும் போது தலையின் வலப்பக்கத்திலிருந்து தொடங்குவதும் நபிவழியாகும்.
2510. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("விடைபெறும்" ஹஜ்ஜில்) மினாவிற்குச் சென்ற போது, (முதலில்) ஜம்ர(த்துல் அகப)ôவிற்குச் சென்று கற்களை எறிந்தார்கள். பின்னர் மினாவிலிருந்த தமது கூடாரத்திற்கு வந்து அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு நாவிதரிடம் தமது தலையின் வலப்பக்கத்தையும் பின்னர் இடப்பக்கத்தையும் காட்டி, "எடு" என்றார்கள். பிறகு அந்த முடியை மக்களிடையே விநியோகிக்க (உத்தரவிடலா)னார்கள்.
அத்தியாயம் : 15
2511. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது (தலையின்) வலப்பக்கத்தை நாவிதரிடம் காட்டி "எடு" என்றார்கள். பிறகு அந்த முடியைத் தமக்கு அருகிலிருந்த மக்களிடையே விநியோகிக்கச் செய்தார்கள். பின்னர் தமது (தலையின்) இடப்பக்கத்தை நாவிதரிடம் காட்டினார்கள். அவர் அதை மழித்தார். அந்த முடியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் (தமது தலையின்) வலப்பக்கத்திலிருந்து ஆரம்பித்தார்கள். ஓரிரு முடிகளை மக்களிடையே விநியோகிக்கச் செய்தார்கள். பின்னர் இடப்பக்கத்தைக் காட்டி அவ்வாறே (மழிக்கச்) செய்தார்கள். பிறகு, "அபூதல்ஹா இங்கே இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். (அவர் வந்ததும்) அவரிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள்.
அத்தியாயம் : 15
2512. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாவது நாளில்) "ஜம்ரத்துல் அகபா"வில் கல்லெறிந்துவிட்டுப் பிறகு பலி ஒட்டகத்தை நோக்கிச் சென்று அதை அறுத்தார்கள். நாவிதரும் அங்கே அமர்ந்திருந்தார். அவரி டம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையைக் கையால் சுட்டிக் காட்டினார்கள். வலப் பக்கத்தை அவர் மழித்ததும் முடியைத் தமக்கு அருகிலிருந்தவர்களிடையே விநியோகிக்கச் செய்தார்கள். பிறகு நாவிதரிடம் "மறு பக்கத்தை மழி" என்றார்கள். பின்னர் "அபூதல்ஹா எங்கே?" என்று கேட்டு, (அவர்கள் வந்ததும்) அவர்களிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள்.
அத்தியாயம் : 15
2513. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாவது நாளில்) "ஜம்ரத்துல் அகபா"வில் கற்களை எறிந்து, தமது பலிப்பிராணியை அறுத்துப் பலியிட்டதும் தமது தலையை மழித்தார்கள். நாவிதரிடம் தமது தலையின் வலப்பக்கத்தைக் காட்டியபோது, அவர் அதை மழித்தார். அபூதல்ஹா அல்அன்சாரி (ரலி) அவர்களை அழைத்து, அவர்களிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள். பிறகு நாவிதரிடம் தமது தலையின் இடப்பக்கத்தைக் காட்டி "மழி" என்றார்கள். அவர் மழித்ததும் அதை அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் கொடுத்து "இதை மக்களிடையே விநியோகிப்பீராக!" என்றார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 57 ஒருவர் பலியிடுவதற்கு முன் தலை முடியை மழித்துவிட்டாலோ, கல் எறிவதற்கு முன் பலியிட்டுவிட்டாலோ (குற்றமில்லை).
2514. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது மக்களின் கேள்விகளுக்கு விடையளித்தவாறு மினாவில் நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தெரியாமல் நான் பலியிடுவதற்கு முன்பே தலையை மழித்துவிட்டேன்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குற்றமில்லை. (இப்போது) பலியிடுவீராக!"என்றார்கள். பின்னர் மற்றொரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தெரியாமல் நான் கல்லெறிவதற்கு முன்பே அறுத்துப் பலியிட்டு விட்டேன்" என்றார். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குற்றமில்லை. (இப்போது) கல்லெறிவீராக!"என்றார்கள். அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முந்திச் செய்யப்பட்டது என்றோ, அல்லது பிந்திச்செய்யப்பட்டது என்றோ கேட்கப்பட்ட (இத்தகைய) கேள்விகள் அனைத்திற்கும் "குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்" என்றே விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2515. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("விடைபெறும்" ஹஜ்ஜின்போது) தமது வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களிடம் மக்கள் (சில விளக்கங்களை) கேட்கலாயினர். அவர்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் அறுத்துப் பலியிடுவதற்கு முன் கல்லெறிய வேண்டும் என அறிந்திருக்கவில்லை. எனவே, கல்லெறிவதற்கு முன்பே பலியிட்டுவிட்டேன்"என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குற்றமில்லை. (இப்போது) கல்லெறிவீராக!" என்றார்கள். மற்றொருவர், "தலையை மழிப்பதற்கு முன் பலியிட வேண்டும் என்பதை அறியாமல், நான் பலியிடுவதற்கு முன்பாக தலையை மழித்துவிட்டேன்" என்று கேட்கலானார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குற்றமில்லை. (இப்போது) பலியிடுவீராக!" என்றார்கள்.
அன்றைய தினத்தில் மறதியால், அல்லது அறியாமையால் ஒரு மனிதர் சில கிரியைகளைவிடச் சிலவற்றை முந்திச் செய்துவிட்டதாகக் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "குற்றமில்லை; (இப்போது) அதைச் செய்யுங்கள்" என்று விடையளிப்பதையே நான் செவியுற்றேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2516. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் ஒரு மனிதர் (வந்து) நின்று, "நான் இன்னின்ன கிரியைகளுக்கு முன் இன்னின்ன கிரியைகளைச் செய்ய வேண்டும் என அறிந்திருக்க வில்லை" என்றார். பிறகு மற்றொரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் இன்னின்ன கிரியைகளுக்கு முன் இன்ன கிரியையைச் செய்ய வேண்டும் என (தவறாக) நினைத்துக் கொண்டுவிட்டேன் எனக்கூறி, (கல்லெறிதல், பலிப்பிராணியை அறுத்தல், தலைமுடி களையுதல் ஆகிய) இம்மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டார். அவற்றுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்" என்றே விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2517. மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் பக்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் இடம்பெற்றுள்ள "இம்மூன்று விஷயங்களை" என்பதைத் தவிர மற்ற விவரங்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன; "இம்மூன்று விஷயங்களை" எனும் வாசகம் அவரது அறிவிப்பில் இடம்பெறவில்லை.
யஹ்யா அல்உமவீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் பலியிடுவதற்கு முன் தலையை மழித்துவிட்டேன். கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டுவிட்டேன்" என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
2518. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "நான் அறுத்துப் பலியிடுவதற்கு முன் தலையை மழித்துவிட்டேன்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "குற்றமில்லை; (இப்போது) பலியிடுவீராக!" என்றார்கள். அவர், "நான் கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டு விட்டேன்" என்றார். அதற்கும் "குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2519. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் ஓர் ஒட்டகத்தின் மீதிருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார்" என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 15
2520. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் "ஜம்ரத்துல் அகபா"விற்கு அருகில் நின்றுகொண்டிருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் கல்லெறிவதற்கு முன் தலையை மழித்துவிட்டேன்" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!"என்றார்கள். மற்றொரு மனிதர் வந்து, "நான் கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டுவிட்டேன்" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!" என்றார்கள். இன்னொரு மனிதர் வந்து, "நான் கல்லெறிவதற்கு முன் கஅபாவுக்குத் திரும்பிச் சென்று (தவாஃபுல் இஃபாளா செய்து) விட்டேன்" என்றார். அதற்கு, "குற்றமில்லை; (இப்போது சென்று) கல்லெறிவீராக!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அன்றைய நாளில் அவர்களிடம் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அவர்கள் "குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்"என்றே விடையளித்ததை நான் கண்டேன்.
அத்தியாயம் : 15
2521. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் (துல்ஹஜ் பத்தாவது நாளில் நிறைவேற்ற வேண்டிய கிரியைகளான) பலியிடுதல், தலைமுடியை மழித்தல், கல்லெறிதல் ஆகியவற்றை முன் பின்னாகச் செய்வதைப் பற்றிக் கேட்கப்பட்ட போது "குற்றமில்லை (இப்போது செய்யுங்கள்)" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 58 துல்ஹஜ் பத்தாவது நாளில் "தவாஃபுல் இஃபாளா" செய்வது விரும்பத்தக்கதாகும்.
2522. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் "தவாஃபுல் இஃபாளா"ச் செய்துவிட்டுத் திரும்பிச் சென்று மினாவில் லுஹ்ர் தொழுகையைத் தொழுதார்கள்.
இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்களும் "நஹ்ரு" டைய நாளில் "தவாஃபுல் இஃபாளா"ச் செய்து விட்டுத் திரும்பிச் சென்று மினாவில் லுஹ்ர் தொழுவார்கள். அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களும் செய்தார்கள் என்றும் அவர்கள் குறிப்பிடுவார்கள்.
அத்தியாயம் : 15
2523. அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்த ஏதேனும் ஒரு செய்தியை என்னிடம் கூறுங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தர்வியா”வுடைய (துல்ஹஜ் எட்டாவது) நாளில் எங்கு லுஹ்ர் தொழுதார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மினாவில்" என்று பதிலளித்தார்கள். நான், "(கிரியைகளை முடித்து) மினாவிலிருந்து புறப்படும் (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கு அஸ்ர் தொழுதார்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "அல்அப்தஹ் எனுமிடத்தில்" என்று பதிலளித்துவிட்டு, பிறகு "உன்னுடைய தலைவர்கள் செய்வதைப் போன்று நீயும் செய்து கொள்" என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 59 (மினாவிலிருந்து புறப்படும்) "நஃப்ரு"டைய (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் "அல்முஹஸ்ஸபி"ல் தங்குவதும், அங்கு தொழுவதும் விரும்பத்தக்கதாகும்.
2524. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்அப்தஹ்" எனும் இடத்தில் நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் தங்கக்கூடியவர்களாக இருந்தனர்.
அத்தியாயம் : 15
2525. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் "அல்முஹஸ் ஸப்" என்ற இடத்தில் தங்குவதை நபிவழியாகக் கருதுவார்கள்; "நஃப்ரு"டைய (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் "அல்ஹஸ்பா" வில் (அல்முஹஸ்ஸப்) லுஹ்ர் தொழுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுக்குப் பின் கலீஃபாக்களும் அல்முஹஸ்ஸபில் தங்கினர்.
அத்தியாயம் : 15
2526. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்அப்தஹ்" எனும் இடத்தில் தங்குவது நபிவழியன்று. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கியதற்குக் காரணம்,அந்த இடம் (மதீனாவிற்குப்) புறப்பட்டுச் செல்வதற்கு வசதியாக அமைந்திருந்ததுதான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2527. சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் "அல்அப்தஹ்" எனும் இடத்தில் தங்கக்கூடியவர்களாக இருந்தனர்.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உர்வா (ரஹ்) அவர்கள் என்னிடம் பின்வருமாறு தெரிவித்தார்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள் அங்கு தங்கமாட்டார்கள். மேலும் அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கியதற்குக் காரணம், அது (மதீனாவிற்குப்) புறப்பட்டுச் செல்ல வசதியான இடமாக அமைந்திருந்ததுதான்" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2528. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்முஹஸ்ஸப்" என்ற இடத்தில் தங்குவது (ஹஜ்ஜின் கிரியைகளில்) எதுவுமில்லை. அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஓய்வெடுப்பதற்காகத்) தங்கிய ஓர் இடம்; அவ்வளவுதான். - இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2529. (நபி (ஸல்) அவர்களின் முன்னாள் அடிமை) அபூராஃபிஉ அஸ்லம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது "அல்அப்தஹ்" எனுமிடத்தில் இறங்கித் தங்குமாறு என்னைப் பணிக்கவில்லை. நானாகச் சென்று அந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கூடாரத்தை அமைத்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அங்கு தங்கினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், குதைபா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அபூராஃபிஉ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பயணச்சாமான்களைக் கொண்டுசென்றார்கள்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2530. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றிக்குப் பின் ஹுனைன் செல்லத் திட்டமிட்டபோது) "அல்லாஹ் நாடினால் நாளை நாம் "பனூ கினானா" பள்ளத்தாக்கில் (அல்முஹஸ்ஸபில்) தங்குவோம். அந்த இடத்தில்தான் குறைஷியர் "நாங்கள் இறைமறுப்பில் நிலைத்திருப்போம்" என்று சூளுரைத்தனர்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2531. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ("விடைபெறும்" ஹஜ்ஜில்) மினாவில் இருந்தபோது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாளை நாம் பனூ கினானா -அதாவது அல்முஹஸ்ஸப்- பள்ளத்தாக்கில் தங்குவோம். அந்த இடத்தில்தான் குறைஷியர் "நாங்கள் இறைமறுப்பில் நிலைத்திருப்போம்" என்று சூளுரைத்தனர்.
அதன் விவரம் வருமாறு: குறைஷியரும் பனூ கினானா குலத்தாரும் பனூ ஹாஷிம் மற்றும் பனுல் முத்தலிப் குலத்தாருக்கெதிராக (அவர்களைச் சமூக பகிஷ்காரம் செய்வதாக) உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அவர்கள் தங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஒப்படைக்காதவரை அவ்விரு குலத்தாருடன் திருமண உறவோ வணிகரீதியான கொடுக்கல் வாங்கலோ வைத்துக்கொள்ளக் கூடாது என்று தீர்மானம் செய்தனர்.
அத்தியாயம் : 15
2532. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் நமக்கு (மக்கா) வெற்றியளித்தால் இன்ஷா அல்லாஹ் (நாளை) நாம் குறைஷியர் "நாங்கள் இறை மறுப்பில் நிலைத்திருப்போம்" என்று சூளுரைத்துக்கொண்ட ("அல்முஹஸ்ஸப்" எனும்) இடத்தில் தங்குவோம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 60 "அய்யாமுத் தஷ்ரீக்" (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயம் ஆகும்; (ஹாஜிகளுக்கு) தண்ணீர் விநியோகிப்போர் அ(ங்கு தங்குவ)தைத் தவிர்க்க அனுமதி உண்டு.
2533. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் விநியோகிப்பதற்காக மினாவுடைய இரவுகளில் மக்காவில் தங்கிக்கொள்ள, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2534. பக்ர் பின் அப்தில்லாஹ் அல்முஸனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இறையில்லம் கஅபா அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, "உங்கள் தந்தையின் சகோதரர் மக்கள், (ஹாஜிகளுக்கு) தேனும் பாலும் விநியோகிக்கின்றனர். நீங்களோ (உலர்ந்த திராட்சைப்) பழரசம் விநியோகிப்பதை நான் காண்கிறேனே, ஏன்? உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விட்டதா, அல்லது கருமித்தனம் செய்கிறீர்களா?" என்று கேட்டார்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. எங்களுக்கு எந்த வறுமையும் ஏற்பட்டுவிடவில்லை; கருமித்தனமும் செய்ய வில்லை. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் (தமது வாகனத்தில்) உசாமா (ரலி) அவர்கள் இருக்க, எங்களிடம் வந்து தண்ணீர் கேட்டார்கள். அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் நாங்கள் பழரசம் கொண்டுவந்(து கொடுத்)தோம். அவர்கள் அதைப் பருகிவிட்டு மீதியை உசாமா (ரலி) அவர்களுக்குப் பருகக் கொடுத்தார்கள். பிறகு, "நன்றே செய்தீர்கள்! நன்றே செய்தீர்கள்! இவ்வாறே செய்துவாருங்கள்!" என்று (எங்களைப் பாராட்டிக்) கூறினார்கள். எனவே,நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (உத்தரவுப்படியே செய்து வருகிறோம். அந்த) உத்தரவிற்கு மாற்றம் செய்ய நாங்கள் விரும்பவில்லை" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 61 (ஹஜ்ஜில் அறுக்கப்படும்) பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல் மற்றும் சேணம் ஆகியவற்றைத் தர்மம் செய்ய வேண்டும்.
2535. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய பலி ஒட்டகங்களை (அறுத்துப் பலியிடும் பொறுப்பை)க் கவனிக்க என்னை நியமித்தார்கள். மேலும், அவற்றின் இறைச்சி, தோல் மற்றும் சேணம் ஆகிய அனைத்தையும் தர்மம் செய்யுமாறும், அவற்றில் எதையும் உரிப்பவருக்கான கூலியாகக் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். உரிப்பவருக்குரிய கூலியை நாமே கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் உரிப்பவருக்குரிய கூலி பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 15
2536. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய பலி ஒட்டகங்களை (அறுத்துப் பலியிடும் பொறுப்பை)க் கவனிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். மேலும் அவற்றின் இறைச்சி, தோல் மற்றும் சேணம் ஆகிய அனைத்தையும் ஏழைகளிடையே பங்கிடுமாறும், உரிப்பதற்கான கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 62 பலிப்பிராணியில் கூட்டுச் சேர்வதும், மாடு மற்றும் ஒட்டகம் ஆகிய ஒவ்வொன்றும் ஏழு நபர்களுக்குப் போதுமாகும் என்பதும்.
2537. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹுதைபியா ஆண்டில் ஏழு பேருக்காக ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறுத்துப் பலியிட்டோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2538. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிக் கொண்டு புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு பலிப்பிராணியில் ஏழு பேர் வீதம் ஒட்டகத்திலும் மாட்டிலும் கூட்டுச் சேர்ந்துகொள்ளுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2539. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்றபோது, ஏழு பேருக்காக ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அறுத்துப் பலியிட்டோம்.
அத்தியாயம் : 15
2540. அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹஜ் மற்றும் உம்ராவில் ஓர் ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் கூட்டுச் சேர்த்தோம்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் ஜாபிர் (ரலி) அவர்களிடம், "இஹ்ராமிற்குப் பிறகு வாங்கப்பட்ட பலிப்பிராணியில் ("அல்ஜஸூர்") கூட்டுச் சேர்ந்துகொள்வதைப் போன்று இஹ்ராமின் போது வாங்கப்பட்ட பலிப்பிராணியில் ("அல்பதனத்") கூட்டுச் சேர்ந்து கொள்ளலாமா?" என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், "அதுவும் பலிப்பிராணிகளில் உள்ளதே!" என்று கூறினார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கையில் பங்கேற்றார்கள். அவர்கள், "நாங்கள் அன்றைய தினத்தில் எழுபது ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டோம். ஓர் ஒட்டகத்தில் தலா ஏழு பேர் கூட்டுச் சேர்ந்துகொண்டோம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2541. அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் ஹஜ் பற்றிக் கூறுகையில், "நபி (ஸல்) அவர்கள், நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது பலிப் பிராணியை அறுத்துப் பலியிடுமாறும், பலிப்பிராணியில் ஒரு குழுவினர் கூட்டுச் சேர்ந்துகொள்ளுமாறும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஹஜ்ஜின் இஹ்ராமைக் களைந்துகொள்ளுமாறு மக்களுக்கு உத்தரவிட்டபோதே இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2542. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உம்ராவிற்கு ("இஹ்ராம்" கட்டி) "தமத்துஉ" செய்தபோது, நாங்கள் ஏழு பேர் கூட்டுச் சேர்ந்து ஒரு மாட்டை அறுத்துப் பலியிட்டோம்.
அத்தியாயம் : 15
2543. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் ஆயிஷா (ரலி) அவர்கள் சார்பாக ஒரு மாட்டை அறுத்துப் பலியிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2544. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜின்போது) தம் துணைவியர் சார்பாக அறுத்துப் பலியிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் பக்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "தமது ஹஜ்ஜின் போது ஆயிஷா (ரலி) அவர்கள் சார்பாக ஒரு மாட்டை (அறுத்துப் பலியிட்டார்கள்)" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 63 ஒட்டகத்தை நிற்கவைத்து, (அதன் இடப்பக்க முன் காலை மடக்கிக்) கட்டிப்போட்டு அறுத்தல்.
2545. ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள், ஒரு மனிதர் தமது ஒட்டகத்தைப் படுக்க வைத்து அறுத்துக் கொண்டிருந்தபோது அவரிடம் சென்று, "இதைக் கிளப்பி (அதன் இடப்பக்க முன் காலை மடக்கிக்) கட்டி, நிற்கவைத்து அறுப்பீராக! அதுவே உங்கள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 64 புனித (ஹரம்) எல்லைக்குத் தாமே செல்லும் எண்ணம் இல்லாதவர், ஹரமுக்குப் பலிப்பிராணியை (மற்றவர்களுடன்) அனுப்பிவைப்பது விரும்பத்தக்கதாகும். பலிப்பிராணியின் கழுத்தில் அடையாள மாலை தொங்கவிடுவதும் அதற்காக மாலைகள் தொடுப்பதும் விரும்பத்தக்கதாகும். அவ்வாறு அனுப்பிவைப்பவர் "இஹ்ராம்" கட்டியவராக ஆகமாட்டார்; அதை முன்னிட்டு அவருக்கு எதுவும் தடை செய்யப்பட்டதாகவும் ஆகாது.
2546. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்தே பலிப்பிராணியை அனுப்பி வைப்பார்கள். எனவே, அவர்களது பலிப் பிராணியின் கழுத்தில் (அது பலிப் பிராணி என்பதற்கு அடையாளமாகத்) தொங்கவிடப்படும் மாலையை நான் திரிப்பேன். (பிலிப் பிராணியை அனுப்பிய) பின்னர் "இஹ்ராம்" கட்டியவர் தவிர்த்துக்கொள்ளும் எதையும் அவர்கள் தவிர்த்துக்கொள்ளமாட்டார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2547. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பலிப்பிராணியின் கழுத்தில் தொங்கவிடப்படும் அடையாள மாலையை நான் திரிப்பதை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2548. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலிப்பிராணிக்குக் கழுத்தில் தொங்க விடப்படும் அடையாள மாலையை என்னுடைய இவ்விரு கைகளால் திரித்துள்ளேன். (பலிப் பிராணியை அனுப்பிய) பின்னர் ("இஹ்ராம்" கட்டியவரைப் போன்று தாம்பத்திய உறவு போன்ற) எதிலிருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விலகியிருக்கவுமில்லை; (தைக்கப்பட்ட ஆடை,நறுமணம் போன்ற) எதையும் அவர்கள் கைவிடவுமில்லை.
அத்தியாயம் : 15
2549. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலி ஒட்டகங்களின் அடையாள மாலைகளை நான் என் கைகளாலேயே திரித்தேன். அந்த மாலைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றின் கழுத்தில் போட்டு, அவற்றுக்கு அடையாளச் சின்னமுமிட்டு, இறையில்லம் கஅபாவிற்கு அவற்றை அனுப்பிவைத்தார்கள். அவர்கள் மதீனாவிலேயே தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த எதுவும் ("இஹ்ராம்" கட்டியவரைப் போன்று) தடை செய்யப்பட்டதாக ஆகவில்லை.
அத்தியாயம் : 15
2550. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலிப்பிராணிகளை (வேறொருவர் மூலம்) அனுப்பி வைப்பார்கள். நான் அவற்றுக்கு என் கைகளாலேயே அடையாள மாலைகளைத் திரி(த்துத் தயாரி)ப்பேன். பின்னர் இஹ்ராம் கட்டாதவர் (தமக்குத்) தடுத்துக்கொள்ளாத எதையும் அல்லாஹ்வின் தூதரும் தடுத்துக்கொண்டதில்லை.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2551. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை (ஆயிஷா (ரலி) அவர்கள்) கூறியதாவது:
நான் அந்தப் பலிப் பிராணிகளின் அடையாள மாலைகளை, எங்களிடமிருந்த கம்பளியால் திரித்(துத் தயாரித்)தேன். (பலிப் பிராணிகளை அனுப்பிய பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராமின் நிலையேதும் இல்லாமல் எங்களிடையே (சாதாரணமாகவே) இருந்தார்கள். "இஹ்ராம் கட்டாதவர் தம் துணைவியிடம் மேற்கொள்ளும்" அல்லது "ஆடவர் தம் துணைவியிடம் மேற்கொள்ளும்" அனைத்தையும் மேற்கொண்டார்கள்.
அத்தியாயம் : 15
2552. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலிப்பிராணியான ஆட்டிற்குரிய அடையாள மாலையைத் திரித்(துத் தயாரித்)தேன். அந்த ஆட்டை (ஹரமிற்கு) அனுப்பிவிட்டு, இஹ்ராமற்ற நிலையிலேயே அவர்கள் எங்களிடையே தங்கியிருந்தார்கள்.
அத்தியாயம் : 15
2553. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலிப்பிராணிகளுக்கான அடையாள மாலைகளைத் திரித்(துத் தயாரித்)ததுண்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றைத் தம் பலிப்பிராணிகளின் கழுத்தில் தொங்கவிட்டு, (ஹரமிற்கு) அனுப்பி வைப்பார்கள். பிறகு "இஹ்ராம்" கட்டியவர் தவிர்த்துக் கொள்ளும் எதையும் தவிர்த்துக் கொள்ளாதவர்களாக (எங்களிடையே) அவர்கள் தங்கியிருப்பார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2554. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முறை இறையில்லம் கஅபாவிற்குப் பலி ஆட்டை அனுப்பிவைத்தபோது, அதன் கழுத்தில் அடையாள மாலையைத் தொங்க விட்டார்கள். - இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2555. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் பலி ஆடுகளின் கழுத்தில் அடையாள மாலைகளைத் தொங்கவிட்டு அவற்றை (ஹரமிற்கு) அனுப்பிவைப்போம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராமற்ற நிலையிலேயே இருந்தார்கள்; ("இஹ்ராம்" கட்டியவரைப் போன்று) அவர்களுக்கு எதுவும் தடை செய்யப்பட்டதாக இருக்கவில்லை.
அத்தியாயம் : 15
2556. அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு ஸியாத் (ஸியாத் பின் அபீசுஃப் யான்) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, "(மக்காவிற்கு) பலிப்பிராணியை அனுப்பி வைக்கின்றவருக்கும் அப்பிராணி அறுக்கப்படும்வரை,ஹாஜிகளுக்குத் தடை செய்யப்பட்டுள்ள அனைத்தும் தடை செய்யப்படும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்களே? நானும் எனது பலிப்பிராணியை (மக்காவிற்கு) அனுப்பியுள்ளேன். எனவே, உங்களது தீர்ப்பை எனக்கு எழுதுங்கள்" என்று கேட்டார்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதைப் போன்றல்ல. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலிப் பிராணியின் அடையாள மாலைகளை, என் கைகளாலேயே திரித்(துத் தயாரித்)தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் அந்த மாலையைப் பலிப்பிராணியின் கழுத்தில் தொங்கவிட்டார்கள். பிறகு (அந்தப்) பிராணியை என் தந்தை (அபூபக்ர்-ரலி) உடன் அனுப்பிவைத்தார்கள். (மக்காவில்) பலிப் பிராணி பலியிடப்படும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்திருந்த எதுவும் தடை செய்யப்படவில்லை" என்று (பதில் கடிதத்தில்) குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2557. மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(பலிப் பிராணியை அனுப்பிவைத்தவரும் "இஹ்ராம்" கட்டியவரைப் போன்றே நடந்துகொள்ள வேண்டுமா என்று நான் கேட்டதற்கு) ஆயிஷா (ரலி) அவர்கள் (ஆச்சரியப்பட்டு) திரைக்குப் பின்னாலிருந்து கை தட்டுவதை நான் செவியுற்றேன். (தொடர்ந்து) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலிப்பிராணிகளின் அடையாள மாலைகளைத் திரி(த்துத் தயாரி)ப்பேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலிப்பிராணிகளை (ஹஜ் காலத்தில் மக்காவிற்கு) அனுப்புவார்கள். "இஹ்ராம்"கட்டியவர் தடுத்துக்கொள்ளக் கூடிய எதையும் - தமது பலிப்பிராணி பலியிடப்படும்வரை - அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமக்காகத்) தடுத்துக்கொள்ளவில்லை" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 65 தேவைப்பட்டால், பலியிடுவதற்காகக் கொண்டுசெல்லப்படும் ஒட்டகத்தில் ஏறிப் பயணம் செய்யலாம்.
2558. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் ஒரு பலி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு (நடந்து) செல்வதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவரிடம்), "அதில் ஏறிச் செல்க" என்றார்கள். அவர் "அல்லாஹ்வின் தூதரே! இது, பலி ஒட்டகமாயிற்றே!" என்றார். அதற்கு "அதில் ஏறிச்செல்க" என்று கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரண்டாவது அல்லது மூன்றாவது தடவை "உனக்குக் கேடுதான்" என்று (செல்லமாகக் கண்டித்துச்) சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஒருவர், கழுத்தில் அடையாள மாலை தொங்கவிடப்பட்ட ஒரு பலி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து) சென்றபோது..." என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 15
2559. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒருவர், கழுத்தில் அடையாள மாலை தொங்க விடப்பட்ட ஒரு பலி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து) சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான், அதில் ஏறிச் செல்க" என்றார்கள். அதற்கு அவர், "(இது) பலி ஒட்டகமாயிற்றே, அல்லாஹ்வின் தூதரே?" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான், அதில் ஏறிச்செல்க. உமக்குக் கேடுதான், அதில் ஏறிச்செல்க" என்று (மீண்டும் மீண்டும்) கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2560. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பலி ஒட்டகமொன்றை இழுத்துக்கொண்டு (நடந்து) சென்றுகொண்டிருந்த ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அவரிடம், "அதில் ஏறிச் செல்க" என்றார்கள். அதற்கு அவர், "இது பலி ஒட்டகமாயிற்றே?" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதில் ஏறிச் செல்க" என இரண்டு, அல்லது மூன்று முறை கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2561. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களைக் கடந்து "ஒரு பலி ஒட்டகம்" அல்லது "ஒரு பலிப்பிராணி" கொண்டு செல்லப்பட்டது. அப்போது (அதை இழுத்துக்கொண்டு நடந்து சென்றுகொண்டிருந்த மனிதரிடம்) நபி (ஸல்) அவர்கள், "அதில் ஏறிச்செல்க" என்றார்கள். அவர், "இது "பலி ஒட்டகம்" அல்லது "பலிப்பிராணி" ஆயிற்றே?" என்றார். நபி (ஸல்) அவர்கள், "இருக்கட்டும் (அதில் ஏறிச் செல்க)"என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பலி ஒட்டகம் கொண்டுசெல்லப்பட்டது" என்று (ஐயப்பாடின்றி) ஹதீஸ் ஆரம்பிக்கிறது.
அத்தியாயம் : 15
2562. அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் பலிப்பிராணியில் ஏறிச்செல்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் "நீங்கள் அதில் ஏறிச்செல்ல வேண்டிய நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டால் பயண வாகனம் கிடைக்கும்வரை முறையோடு அதில் ஏறிச்செல்க" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இதை இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2563. அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் பலிப்பிராணியில் ஏறிச் செல்வதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் "பயண வாகனம் கிடைக்கும்வரை அதில் முறையோடு ஏறிச் செல்க" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இதை மஅகில் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 66 செல்லும் வழியில் பலிப்பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
2564. மூசா பின் சலமா அல்ஹுதலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் சினான் பின் சலமா (ரஹ்) அவர்களும் உம்ராவிற்குச் சென்றோம். சினான் தம்முடன் ஒரு பலி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து)வந்தார். அந்த ஒட்டகம் வழியில் களைத்துப்போய் நின்றுவிட்டது. இது (இப்படியே) செல்ல இயலாமல் நின்றுவிட்டால், இதை எப்படி நான் கொண்டுசெல்வேன் என்று தெரியாமல் அவர் விழித்தார். மேலும், அவர் "நான் ஊர் சென்றதும் இதுதொடர்பாக விரிவாகக் கேட்டறிவேன்" என்று சொல்லிக்கொண்டார். இதற்கிடையில் முற்பகல் நேரம் ஆகிவிட்டது. நாங்கள் "அல்பத்ஹா" எனும் இடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது சினான் (ரஹ்) அவர்கள், "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் இதைப்பற்றி நாம் பேசுவோம்" என்று கூறினார்கள். அவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (சென்று) தமது பலி ஒட்டகத்தின் நிலை பற்றிக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: விவரம் தெரிந்தவரிடம்தான் வந்துசேர்ந்திருக்கிறீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதினாறு பலி ஒட்டகங்களுடன் ஒரு மனிதரை (மக்காவிற்கு) அனுப்பி வைத்தார்கள். அவற்றைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்தார்கள். அவர் (சிறிது தூரம்) சென்று விட்டுத் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் தூதரே! பலி ஒட்டகங்களில் ஒன்று களைத்துப் போய் (பயணத்தைத் தொடர முடியாமல்) நின்றுவிட்டால், அதை நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்த இடத்திலேயே) அதை அறுத்துவிடுக; அதன் (கழுத்தில் தொங்கவிடப்பட்டுள்ள) செருப்புகளில் அதன் இரத்தத்தைத் தோய்த்து அதை அதன் விலாப்பகுதியில் பதித்துவிடுக. நீயோ உன் பயணக் குழுவினரில் எவருமோ அதை உண்ண வேண்டாம்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதினெட்டு பலி ஒட்டகங்களுடன் ஒரு மனிதரை அனுப்பிவைத்தார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேற்கண்ட ஹதீஸின் ஆரம்பத்திலுள்ள குறிப்புகள் அவற்றில் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
2565. துஐப் அபூகபீஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலி ஒட்டகங்களுடன் என்னை (மக்காவிற்கு) அனுப்பி வைத்தார்கள். அப்போது, "இவற்றில் ஏதேனும் ஒன்று பாதிப்புக்குள்ளாகி இறந்துவிடுமோ என நீர் அஞ்சினால், உடனே அதை அறுத்துவிடுவீராக! பிறகு அதன் (கழுத்தில் கிடக்கும்) செருப்பில் அதன் இரத்தத்தை நனைத்து, அதன் விலாப் புறத்தில் அ(ந்த அடையாளத்)தைப் பதித்துவிடுவீராக! நீரோ உன் பயணக் குழுவினரில் எவருமோ அதை உண்ணாதீர்" என்று கூறினார்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 67 "விடைபெறும்" தவாஃப் ("தவாஃபுல் வதா") கடமையாகும் என்பதும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்கு அந்தக் கடமையில்லை என்பதும்.
2566. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஹஜ்ஜை முடித்ததும்) மக்கள் பல்வேறு முனைகளில் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஹஜ் செய்த) எவரும் இறையில்லம் கஅபாவை இறுதியாகச் சந்தித்(து தவாஃப் செய்)திடாமல் மக்காவிலிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டாம்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2567. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறையில்லம் கஅபாவைத் தரிசித்(து "தவாஃபுல் வதாஉ" செய்)தலே இறுதிச் செயலாக அமைய வேண்டும் என (ஹஜ்ஜுக்கு வந்த) மக்கள் கட்டளையிடப்பட்டனர். ஆயினும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்கு மட்டும் ("தவாஃபுல் வதா"வை விட்டுவிட) சலுகை அளிக்கப்பட்டது. - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2568. தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், "மாதவிடாய் ஏற்பட்ட பெண் இறுதியாக இறையில்லம் கஅபாவைச் சந்தித்(து "தவாஃபுல் வதா" செய்)திடாமலேயே புறப்பட்டுச் செல்லலாம் என நீங்கள் தீர்ப்பு வழங்குகின்றீர்களா? (இது சரியா?)" என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அவ்வாறில்லை என நீங்கள் கருதினால், இன்ன அன்சாரிப் பெண்ணிடம் (சென்று) இவ்வாறு அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்களா (இல்லையா) எனக் கேளுங்கள்" என்றார்கள். அவ்வாறே ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் (சென்று,கேட்டுவிட்டுத்) திரும்பிவந்து, "நீங்கள் சொன்னது உண்மை என்றே கண்டேன்" என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள்.
அத்தியாயம் : 15
2569. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு, அவர்கள் (துல்ஹஜ் பத்தாவது நாளில்) "தவாஃபுல் இஃபாளா" செய்த பின்பு மாதவிடாய் ஏற்பட்டது. அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் நம்மை (புறப்பட விடாமல்) தடுத்துவிட்டாரா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "அவர் "தவாஃபுல் இஃபாளா" செய்துவிட்டார்,அல்லாஹ்வின் தூதரே!" என்று கூற, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால் (பரவாயில்லை) அவர் புறப்படலாம் ("தவாஃபுல் வதா" செய்ய வேண்டியதில்லை)" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2570. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு, "விடைபெறும்" ஹஜ்ஜின்போது அவர் தூய்மையான நிலையில் "தவாஃபுல் இஃபாளா" செய்த பின்பு மாதவிடாய் ஏற்பட்டது" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது பற்றிக் கூறினேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
2571. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(துல்ஹஜ் பத்தாவது நாளில்) "தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு முன்பு ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிடுமோ என நாங்கள் அஞ்சிக்கொண்டிருந்தோம். அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, "ஸஃபிய்யா நம்மை (புறப்படவிடாமல்) தடுத்துவிட்டாரா?" என்று கேட்டார்கள். நாங்கள், "அவர் "தவாஃபுல் இஃபாளா" செய்துவிட்டார்" என்று கூறினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால் பிரச்சினையில்லை" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 15
2572. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
("விடைபெறும்" ஹஜ்ஜின்போது) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் நம்மை (புறப்பட விடாமல்) தடுத்துவிடுவார் போலிருக்கிறதே! அவர் உங்களுடன் "தவாஃப்" (இஃபாளா) செய்யவில்லையா?"என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம் (செய்துவிட்டார்)" என்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அப்படியானால் நீங்கள் புறப்படுங்கள்!" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 15
2573. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜை முடித்த பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களிடம், ஓர் ஆண் தன் மனைவியிடம் நாடுகின்ற (தாம்பத்தியத்)தை நாடினார்கள். அப்போது, "அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் நம்மை (புறப்பட விடாமல்) தடுத்து விட்டாரா?" என்று கேட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் "தவாஃபுஸ் ஸியாரத்" (தவாஃபுல் இஃபாளா) செய்துவிட்டார்" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின், அவர் உங்களுடன் புறப்படட்டும்!" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 15
2574. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜை முடித்துக்கொண்டு மக்காவிலிருந்து) புறப்பட விரும்பிய போது, ஸஃபிய்யா (ரலி) அவர்கள் (மாதவிடாய் ஏற்பட்டதால்) தமது கூடார வாசலில் கவலை அடைந்தவராகத் துக்கத்துடன் இருந்தார். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் (செல்லமாக), "உன் கழுத்து அறுபட; தொண்டை வலி வர! நீ "நஹ்ரு" டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் "தவாஃபுல் இஃபாளா" செய்தாயா?" என்று கேட்டார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள் "ஆம்" என்று கூற, நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால் நீ புறப்படு" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "கவலை அடைந்தவராகத் துக்கத்துடன் இருந்தார்" எனும் குறிப்பு இடம்பெற வில்லை. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
பாடம் : 68 ஹாஜிகளும் மற்றவர்களும் கஅபாவிற்குள் நுழைவதும், அதனுள் தொழுவதும், அதன் அனைத்துப் பகுதிகளிலும் பிரார்த்திப்பதும் விரும்பத்தக்கவையாகும்.
2575. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்கா வெற்றி நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா அல்ஹஜபீ (ரலி) ஆகியோரும் இறையில்லம் கஅபாவிற்குள் சென்றனர். உஸ்மான் தாழிட்டார். அவர்கள் (நீண்ட நேரம்) உள்ளே இருந்தார்கள். பின்னர் பிலால் (ரலி) அவர்கள் வெளியே வந்தபோது அவர்களிடம் நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உள்ளே) என்ன செய்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "இரண்டு தூண்களைத் தமக்கு இடப்பக்கமும் ஒரு தூணைத் தமக்கு வலப் பக்கமும் மூன்று தூண்களைத் தமக்குப் பின்புறமும் இருக்குமாறு (நின்று) தொழுதார்கள்" என்று விடையளித்தார்கள். அன்று இறையில்லம் கஅபாவில் ஆறு தூண்கள் இருந்தன.
அத்தியாயம் : 15
2576. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் (ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி) வந்து, இறையில்லம் கஅபாவின் முற்றத்தில் இறங்கினார்கள். பிறகு (கஅபாவின் காவலராயிருந்த) உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களிடம் (அவர்களை அழைத்துவரும் படி) ஆளனுப்பினார்கள். உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள் சாவியுடன் வந்து கஅபாவின் கதவைத் திறந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி), உசாமா பின் ஸைத் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் கஅபாவிற்குள் நுழைந்தார்கள். உள்ளே நுழைந்ததும் கதவைத் தாழிடும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட,அவ்வாறே தாழிடப்பட்டது. பின்னர் அவர்கள் நீண்ட நேரம் அதனுள் தங்கியிருந்து விட்டுப் பிறகு கதவைத் திறந்தார்கள்.
(இச்செய்தி அறிந்து) நான் மக்களை முந்திக்கொண்டு (கஅபாவிற்குச்) சென்றேன். கஅபாவிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் எதிர்கொண்டேன். அவர்களுக்குப் பின்னால் பிலால் (ரலி) அவர்கள் வந்தார்கள். உடனே நான் பிலால் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழுதார்களா?" என்று கேட்டேன். அவர்கள் "ஆம்" என்றார்கள். நான் "எந்த இடத்தில்?" என்று கேட்க, அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "இரு தூண்களுக்கிடையே நேராக" என்று கூறினார்கள். நான் பிலால் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்தனை ரக்அத்கள் தொழுதார்கள்" என்று கேட்க மறந்துவிட்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2577. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கா வெற்றி ஆண்டில் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களது ஒட்டகத்தின் மீது (பயணம் செய்து) வந்து, கஅபாவின் முற்றத்தில் தமது ஒட்டகத்தை மண்டியிட்டு அமரச் செய்தார்கள். பிறகு உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களை அழைத்(துவரச் செய்)து, "என்னிடம் கஅபாவின் சாவியைக் கொண்டுவாருங்கள்" என்று கூறினார்கள். (சாவியைப் பெறுவதற்காக) உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள் தம் அன்னையிடம் சென்றபோது, அவர் அதைத் தர மறுத்தார். அப்போது உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் சாவியை என்னிடம் தந்துவிடுங்கள்! இல்லாவிட்டால், என் முதுகந்தண்டிலிருந்து இந்த வாள் வெளியேறும்" என்று கூறினார்கள். பின்னர் அவர் அந்தச் சாவியை உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களிடம் கொடுக்க, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்து அதைக் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் கதவைத் திறந்தார்கள்...
மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
2578. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவெற்றி நாளில்) இறையில்லம் கஅபாவினுள் நுழைந்தார்கள். அப்போது அவர்களுடன் உசாமா (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோர் இருந்தனர். அவர்கள் உள்ளே சென்று,தாழிட்டுக்கொண்டு நீண்ட நேரம் தங்கியிருந்தார்கள். பின்னர் கதவு திறக்கப்பெற்றபோது, நானே முதல் ஆளாக உள்ளே நுழைந்தேன். அப்போது வெளியே வந்துகொண்டிருந்த பிலால் (ரலி) அவர்களைச் சந்தித்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவினுள் எந்த இடத்தில் தொழுதார்கள்?" என்று கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "அவ்விரு முன் தூண்களுக்கிடையே" என்று பதிலுரைத்தார்கள். நான் பிலால் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்தனை (ரக்அத்கள்) தொழுதார்கள்?" என்று கேட்க மறந்துவிட்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2579. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் கஅபாவிற்குப் போய்ச்சேர்ந்தேன். அங்கு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி), உசாமா (ரலி) ஆகியோரும் கஅபாவிற்குள் நுழைந்திருந்தார்கள். உள்ளே சென்றதும் உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள் கஅபாவின் தலைவாயிலை மூடிவிட்டார்கள். பிறகு நீண்ட நேரம் அதனுள் இருந்தார்கள். பின்னர் கதவு திறக்கப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள். நான் படியில் ஏறி கஅபாவிற்குள் நுழைந்தேன். (வெளியே வந்து கொண்டிருந்தவர்களிடம்), "நபி (ஸல்) அவர்கள் எந்த இடத்தில் தொழுதார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "இங்கு தான்" என (ஓர் இடத்தைக் காட்டி)க் கூறினார்கள். நான் அவர்களிடம் "நபி (ஸல்) அவர்கள் எத்தனை ரக்அத்கள் தொழுதார்கள்?" என்று கேட்க மறந்துவிட்டேன்.
அத்தியாயம் : 15
2580. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் இறையில்லம் கஅபாவினுள் நுழைந்து தாழிட்டுக்கொண்டனர். அவர்கள் கதவைத் திறந்ததும் முதல் ஆளாக நானே உள்ளே புகுந்தேன். அப்போது (வெளியே வந்த) பிலால் (ரலி) அவர்களைச் சந்தித்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழுதார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம், வலப்பக்கமிருக்கும் இரு தூண்களுக்கிடையே தொழுதார்கள்" என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2581. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் கஅபாவிற்குள் நுழைவதை நான் கண்டேன். அப்போது அந்த நால்வருடன் வேறெவரும் கஅபாவிற்குள் நுழையவில்லை. பின்னர் தாழிடப்பட்டுவிட்டது.
என்னிடம் "பிலால் (ரலி) அவர்கள்" அல்லது "உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள்", "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நடுவில் வலப்பக்கமிருக்கும் இரு தூண்களுக்கிடையே தொழுதார்கள்" எனக் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2582. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நீங்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரும்படியே உத்தரவிடப்பட்டுள்ளீர்கள்; கஅபாவினுள் நுழையுமாறு உங்களுக்கு உத்தரவிடப்படவில்லை" என்று கூறியதைத் தாங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், கஅபாவிற்குள் நுழைய வேண்டாம் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தடை விதிக்கவில்லை. ஆயினும், அவர்கள் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறினார்கள் எனப் பின்வருமாறு கூறியதைச் செவியுற்றேன்:
நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்ததும் அதன் அனைத்துப் பகுதிகளிலும் பிரார்த்தித்துவிட்டு, உள்ளே தொழாமலேயே வெளியேறிவிட்டார்கள். வெளியே வந்ததும் கஅபாவின் (வாசல்) முன் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் "இதுவே உங்கள் தொழும் திசை (கிப்லா) ஆகும்" என்றும் கூறினார்கள்.
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "அதன் பகுதிகள் என்பது என்ன? அதன் ஒவ்வொரு மூலையையுமா குறிப்பிடுகிறீர்கள்?"என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இல்லை; இறையில்லத்தின் ஒவ்வொரு திசையிலும் (பிரார்த்தித்தார்கள்)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2583. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்தார்கள். அதனுள் ஆறு தூண்கள் இருந்தன. ஒவ்வொரு தூணுக்கு அருகிலும் நின்று அவர்கள் பிரார்த்தித்தார்கள். ஆனால், தொழவில்லை.
அத்தியாயம் : 15
2584. இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் தமது உம்ர(த்துல் களா)வின்போது இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "இல்லை" என்றார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 69 இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல்.
2585. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஆயிஷா!) உன்னுடைய (குறைஷி) சமுதாயத்தார் இறைமறுப்பிற்கு நெருங்கிய காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லையாயின், கஅபாவை இடித்துவிட்டு இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தின் மீதே நான் அதைக் கட்டியிருப்பேன். ஏனெனில், குறைஷியர் இந்த ஆலயத்தை (புதுப்பித்து)க் கட்டியபோது, அ(தன் அடித்தளத்)தைவிடச் சுருக்கி (சற்று உள்ளடக்கி)க் கட்டிவிட்டனர். மேலும்,அதற்கு ஒரு பின்புற வாசலையும் நான் அமைத்திருப்பேன்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2586. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னுடைய சமுதாயத்தார் கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டியபோது, இப்ராஹீம் (அலை) அவர்கள் இட்ட அடித்தளத்தை (விடச் சற்று)க் குறைத்துவிட்டார்கள் என்பதை நீ அறிவாயா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் இட்ட அடித்தளத்திற்கு அதை நீங்கள் மாற்றிவிடலாமல்லவா?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னுடைய சமுதாயத்தார் இறைமறுப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லையாயின், அவ்வாறே நான் செய்திருப்பேன்" என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
(நான் இந்த ஹதீஸை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (அவர்களிடம் தெரிவித்தபோது) அவர்கள், "ஆயிஷா (ரலி) அவர்கள் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டிருந்தால் அது சரியே! (இறையில்லம் கஅபாவின்) "ஹிஜ்ர்" பகுதியை அடுத்துள்ள இரு (ஷாமிய) மூலைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முத்தமிடாததற்குக் காரணம், இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தின் மீது இறையில்லம் முழுமையாக்கப்படாமல் இருந்ததே ஆகும் என்று நான் கருதுகிறேன்"என்றார்கள்.
அத்தியாயம் : 15
2587. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் சமுதாயத்தார் "அறியாமைக் காலத்திற்கு" அல்லது "இறைமறுப்பிற்கு"நெருக்கமானவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லையாயின், கஅபாவின் கருவூலங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டிருப்பேன். மேலும், "ஹிஜ்ர்" எனும் அரைவட்டப் பகுதியை கஅபாவுடன் இணைத்து,கஅபாவின் தலை வாயிலை (கீழிறக்கி)ப் பூமியோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2588. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆயிஷா! உன் சமுதாயத்தார் இணைவைப்புக்கு நெருக்கமான காலத்தவர்கள் என்பது மட்டும் இல்லையாயின், கஅபாவை நான் இடித்துவிட்டு, (உயர்ந்திருக்கும் அதன் தளத்தைத்) தரையோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன். மேலும், கிழக்கே ஒன்றும் மேற்கே ஒன்றுமாக அதற்கு இரு வாயில்களை அமைத்திருப்பேன். "ஹிஜ்ர்"பகுதியில் ஆறு முழங்களைக் கூடுதலாக்கியிருப்பேன். ஏனெனில், குறைஷியர் கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டியபோது அதைக் குறைத்து (சற்று உள்ளடக்கிக் கட்டி)விட்டனர்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2589. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யஸீத் பின் முஆவியா ஆட்சிக்காலத்தில் ஷாம்வாசிகள் (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக மக்காவை முற்றுகையிட்டு) போர் தொடுத்தபோது, இறையில்லம் கஅபா தீக்கிரையானது. அப்போது நடந்தவை நடந்து முடிந்தன. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், மக்கள் ஹஜ் பருவத்தில் ஒன்றுகூடும் வரை இறையில்லத்தை அதே நிலையிலேயே விட்டு வைத்தார்கள்.(பனூ உமய்யாக்களான) ஷாம்வாசிகளுக்கு எதிராக "மக்களுக்கு எழுச்சியூட்டுவதற்காகவே"அல்லது "அவர்களை ரோஷம்கொள்ளச் செய்வதற்காகவே" அவ்வாறு விட்டுவைத்தார்கள். (ஹஜ்ஜை முடித்து) மக்கள் புறப்பட்டபோது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், "மக்களே! கஅபா விஷயத்தில் எனக்கு ஆலோசனை கூறுங்கள். அதை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டுவதா, அல்லது அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் செப்பனிடுவதா?" என்று கேட்டார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "எனக்கு இது தொடர்பாக ஒரு யோசனை தோன்றுகிறது. அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் நீங்கள் செப்பனிடுங்கள். மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதிருந்த அதே நிலையில் கஅபாவை விட்டுவிடுங்கள்; மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதும், நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பெற்றபோதும் இருந்த நிலையில் அதன் கற்களையும் (விட்டுவிடுங்கள்)" என்றார்கள்.
அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், "உங்களில் ஒருவரது இல்லம் தீக்கிரையானால் அதைப் புதுப்பிக்காத வரை அவரது மனம் திருப்தியடைவதில்லை. இந்நிலையில் இறையில்லத்தின் விஷயத்தில் மட்டும் எப்படி (நீங்கள் இவ்வாறு கூறுவீர் கள்)? நான் (கஅபாவை இடித்துப் புதுப்பிப்பதா, அல்லது பழுதடைந்ததைச் செப்பனிடுவதா எனும் விஷயத்தில்) என் இறைவனிடம் நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்திப்பேன். பிறகு ஒரு முடிவுக்கு வருவேன்" என்றார்கள். நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்தித்தபோது, இடித்துவிட்டுப் புதுப்பிக்கும் முடிவுக்கு வந்தார்கள். அப்போது மக்கள் முதலில் கஅபாவின் மீது ஏறும் மனிதர்மீது வானத்திலிருந்து ஏதேனும் வேதனை இறங்கி விடும் என அச்சம் தெரிவித்தனர். இறுதியாக ஒரு மனிதர் கஅபாவின் மீதேறி அதிலிருந்து ஒரு கல்லை கீழே தள்ளினார். அவருக்கு எதுவும் நேராததைக் கண்ட மக்கள், ஒவ்வொருவராக (இடிக்கும் பணியில்) ஈடுபட்டு அதைத் தரைமட்டமாக்கினர். பின்னர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கட்டடப் பணி நிறைவடையும்வரை (இறையில்லத்திற்குத் தாற்காலிகத்) தூண்கள் அமைத்து அவற்றின்மீது திரையும் தொங்கவிட்டார்கள்.
மேலும், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள் "என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(உன்னுடைய சமுதாய) மக்கள் இறை மறுப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின் - என்னிடம் கஅபாவின் கட்டடத்தை வலுப்படுத்தக்கூடிய அளவு பொருளாதாரம் இல்லை என்பது (ஒருபுறம்) இருக்க - நான் "ஹிஜ்ர்" பகுதியில் ஐந்து முழங்களை கஅபாவுடன் சேர்த்துவிட்டிருப்பேன். பின்னர் மக்கள் நுழைவதற்கு ஒரு வாயிலும் வெளியேறுவதற்கு ஒரு வாயிலுமாக (இரு வாயில்களை) அதற்கு அமைத்திருப்பேன்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். இன்று என்னிடம் பொருளாதாரமிருப்பதைக் காண்கிறேன். மக்களை அஞ்சும் நிலையிலும் நான் இல்லை" என்று கூறி(விட்டு, கஅபாவைப் புதுப்பிக்கலா)னார்கள்.
பின்னர் கஅபாவில் "ஹிஜ்ர்" பகுதியில் ஐந்து முழங்களைக் கூடுதலாக்கினார்கள்; மக்கள் பார்த்துக்கொண்டிருக்கவே (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து) ஓர் அடித்தளத்தை வெளியாக்கினார்கள். அதன் மீதே கஅபாவை எழுப்பினார்கள். (முடிவில்) கஅபாவின் உயரம் பதினெட்டு முழங்களாக இருந்தது. அதன் உயரத்தை அதிகமாக்கிய பின்பும் அது குறைவாகவே பட்டது. எனவே, மேலும் பத்து முழங்களை அதிகமாக்கினார்கள்; அத்துடன் உள்ளே நுழைவதற்கு ஒரு வாயில்; வெளியேறுவதற்கு ஒரு வாயில் என இறையில்லத்திற்கு இரு வாயில்களை அமைத்தார்கள்.
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது, ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் இந்த விவரங்களைத் தெரிவித்து (கலீஃபா) அப்துல் மலிக் பின் மர்வானுக்கு ஒரு கடிதம் வரைந்தார். அதில் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து அங்கிருந்த) ஓர் அடித்தளத்தின் மீது கஅபாவை எழுப்பியுள்ளார்; அதை மக்காவின் நியாயவான்கள் பலரும் பார்த்துள்ளனர்" என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான், "நாம் இப்னுஸ் ஸுபைரை எந்த விஷயத்திலும் களங்கப்படுத்த விரும்பவில்லை, எனவே, அவர் உயர்த்திக்கட்டியதை அப்படியே விட்டுவிடுவீராக! "ஹிஜ்ர்"பகுதியிலிருந்து அவர் அதிகப்படுத்தியதை (மட்டும்) பழையபடியே மாற்றி அமைப்பீராக! அவர் புதிதாகத் திறந்துவிட்ட வாயிலை மூடிவிடுவீராக!" என்று பதில் எழுதினார். எனவே, ஹஜ்ஜாஜ் ("ஹிஜ்ர்" பகுதிச் சுவரை) இடித்து முன்பிருந்த அமைப்பிற்கே மாற்றி அமைத்தார்.
அத்தியாயம் : 15
2590. அப்துல்லாஹ் பின் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல் மலிக் பின் மர்வான் ஆட்சிக் காலத்தில், அவரிடம் ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் பின் அபீரபீஆ (ரஹ்) அவர்கள் ஒரு தூதுக் குழுவில் சென்றார்கள். அப்போது அப்துல் மலிக் பின் மர்வான், "அபூகுபைப் (இப்னுஸ் ஸுபைர்) ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து தாம் கேட்டதாகக் கூறும் செய்தியை, அவர் அவர்களிடமிருந்து கேட்டிருக்கமாட்டார் என்றே நான் எண்ணுகிறேன்" என்றார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், "ஆம் (அபூகுபைப் உண்மையே சொல்கிறார்). இதை நானும் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளேன்" என்றார்கள்.
அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான், "ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதைக் கூறுங்கள்" என்றார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னுடைய சமுதாயத்தார் இறையில்லம் கஅபாவின் கட்டடத்தைச் சுருக்கிவிட்டனர். அவர்கள் இணைவைப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின், அவர்கள் விட்டுவிட்டதை நான் மறுபடியும் இணைத்துக் கட்டியிருப்பேன். எனக்குப் பின் உன் சமுதாயத்தாருக்கு அதை (விரிவாக்கிக்) கட்ட வேண்டுமென்ற எண்ணம் தோன்றினால் (அவ்வாறு செய்யட்டும்!) என் அருகில் வா! அவர்கள் விட்டுவிட்ட (இடத்)தை உனக்கு நான் காட்டித்தருகிறேன்"என்று கூறிவிட்டு, (கஅபா அருகில்) ஏழு முழங்கள் அளவிற்கு இடத்தை எனக்குக் காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல்லாஹ் பின் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பிலேயே மேற்கண்டவாறு இடம்பெற்றுள்ளது.
வலீத் பின் அதாஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு கூடுதலாக இடம் பெற்றுள்ளது:
நபி (ஸல்) அவர்கள் "நான் பூமியோடு ஒட்டினாற்போல் ஒரு கிழக்கு வாசலையும் ஒரு மேற்கு வாசலையும் அதற்கு அமைத்திருப்பேன்" என்று கூறிவிட்டு, "ஏன் உன் சமுதாயத்தார் கஅபாவின் வாசலை (பூமியோடு ஒட்டினாற்போல் அமைக்காமல்) உயர்த்தினார்கள் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் "இல்லை (தெரியாது)" என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், "சுய கௌரவத்திற்காகத்தான்; தாம் விரும்பியவரைத் தவிர வேறெவரும் நுழையக் கூடாது என்பதற்காகவே (அவ்வாறு உயர்த்தினர்). எவரேனும் ஒருவர் அதனுள் நுழைய முற்பட்டால், அதில் ஏறும்வரை அவர்கள் அவரை விட்டுவிடுவார்கள். அவர் (மேலே ஏறி) உள்ளே நுழையப்போகும் போது அவரைப் பிடித்துக் கீழே தள்ளிவிடுவார்கள்" என்றார்கள்.
பிறகு ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் அப்துல் மலிக் பின் மர்வான், "ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் "ஆம்" என்றார்கள். பிறகு அப்துல் மலிக் பின் மர்வான் தம்மிடமிருந்த குச்சியால் தரையைச் சிறிது நேரம் குத்திக் கீறி(யபடி ஆழ்ந்து யோசித்து)விட்டு, "இறையில்லத்தையும் இப்னுஸ் ஸுபைர் மேற்கொண்டதையும் (அதே நிலையில்) விட்டிருக்க வேண்டுமென (இப்போது) விரும்புகிறேன்" என்றார்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2591. அபூகஸஆ சுவைத் பின் ஹுஜைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல் மலிக் பின் மர்வான் இறையில்லம் கஅபாவைச் சுற்றி(தவாஃப்)வந்து கொண்டிருந்த போது, "அல்லாஹ் இப்னுஸ் ஸுபைரை அழிக்கட்டும்! அவர் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை (ஆயிஷா (ரலி) அவர்கள்மீது) பொய்யுரைக்கிறார். ஆயிஷா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ஆயிஷா! உன் சமுதாயத்தார் இறைமறுப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின், நான் இறையில்லம் கஅபாவை இடித்துவிட்டு "ஹிஜ்ர்" பகுதியை அதனுடன் அதிகமாக்கியிருப்பேன். ஏனெனில், உன் சமுதாயத்தார் அதன் கட்டடத்தைச் சுருக்கிவிட்டனர் என்று கூறினார்கள்" என ஆயிஷா (ரலி) அவர்கள் தம்மிடம் கூறியதாக அவர் கூறுகிறார்" என்றார்.
அப்போது ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் பின் அபீரபீஆ (ரஹ்) அவர்கள், "இவ்வாறு கூறாதீர்கள், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ஏனெனில், இறைநம்பிக்கையாளர்களின் அன்னை இப்படிக் கூறியதை நானும் கேட்டுள்ளேன்" என்றார்கள். அப்துல் மலிக் பின் மர்வான், "கஅபாவை இடி(த்துப் புதுப்பி)ப்பதற்கு முன்பே இதை நான் கேட்டிருந்தால், நிச்சயமாக இப்னுஸ் ஸுபைர் கட்டிய அமைப்பிலேயே கஅபாவை நான் விட்டிருப்பேன்" என்றார்.
அத்தியாயம் : 15
பாடம் : 70 கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும்.
2592. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (புனித கஅபாவை ஒட்டியுள்ள ஹிஜ்ர் எனும்) வளைந்த சுவரைப் பற்றி, "இதுவும் கஅபாவில் சேர்ந்ததா?" என்று கேட்டேன். அவர்கள், "ஆம்" என்று விடையளித்தார்கள். நான், "அப்படியானால்,கஅபாவுடன் இதை அவர்கள் ஏன் இணைக்கவில்லை?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உன் (குறைஷி) சமூகத்தாருக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது" என்று பதிலளித்தார்கள். நான், "கஅபாவின் வாயிலை உயரமாக வைத்திருப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தாம் நாடியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும், தாம் நாடியவர்களை உள்ளே செல்லவிடாமல் தடுப்பதற்காகவுமே உன் சமுதாயத்தார் இவ்வாறு செய்தனர். உன் சமூகத்தார் அறியாமைக் காலத்துக்கு நெருக்கமானவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பதால், அவர்களின் மனத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் (மட்டும்) எனக்கு இல்லாதிருந்தால், நான் இந்த வளைந்த சுவரை கஅபாவுடன் இணைத்து அதன் வாயிலை(க் கீழிறக்கி) பூமியுடன் சேர்ந்தாற்போல் ஆக்க முடிவு செய்திருப்பேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 15
2593. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ர் (எனும் வளைந்த சுவரைப்) பற்றிக் கேட்டேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும் அதில், "ஏணி வைக்காமல் ஏற முடியாத அளவிற்குக் கஅபாவின் தலைவாயில் உயரமாக இருக்கக் காரணம் என்ன என்று கேட்டேன்" என்றும் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 71 உடல் ஊனம், முதுமை உள்ளிட்ட காரணங்களால் இயலாதவருக்காகவோ, இறந்து போனவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல்.
2594. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸ், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் இருந்தபோது, "கஸ்அம்" குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்க வந்தார். ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார்; அப்பெண்ணும் ஃபள்லைப் பார்த்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபள்லின் முகத்தை வேறு பக்கம் திருப்பி விடலானார்கள். அப்பெண், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்களுக்கு விதியாக்கிய ஹஜ் கடமை, முதியவரான என் தந்தைக்கு ஏற்பட்டுள்ளது. அவரால் வாகனத்தில் அமர்ந்து செல்ல இயலாது. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்றார்கள். இது "விடைபெறும்" ஹஜ்ஜின் போது நடைபெற்றது.
அத்தியாயம் : 15
2595. ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"கஸ்அம்" குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை முதியவராக உள்ளார். இந்நிலையில், அவருக்கு அல்லாஹ் விதியாக்கிய ஹஜ் கடமை ஏற்பட்டுள்ளது. அவரால் தமது ஒட்டகத்தின் முதுகில் அமர இயலாது" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர் சார்பாக நீ ஹஜ் செய்யலாம்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 72 சிறுவனின் ஹஜ் செல்லும் என்பதும் அவனை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு என்பதும்.
2596. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "அர்ரவ்ஹா" எனும் இடத்தில் ஒரு பயணக் குழுவினரைச் சந்தித்தார்கள். அப்போது "இக்கூட்டத்தினர் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "முஸ்லிம்கள்" என்றார்கள். அப்போது அக்குழுவினர், "நீங்கள் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர்" என்றார்கள். அப்போது (அக்குழுவிலிருந்த) ஒரு பெண், தன் குழந்தையைத் தூக்கி, "இவனுக்கும் ஹஜ் உண்டா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு" என விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2597. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி தம் குழந்தையை உயர்த்திக்காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! இவனுக்கும் ஹஜ் உண்டா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2598. (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை) குறைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி (தம்) குழந்தையை உயர்த்திக்காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! இவனுக்கும் ஹஜ் உண்டா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு" என விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 73 ஆயுளில் ஒரு முறையே ஹஜ் கடமையாகும்.
2599. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே, ஹஜ் செய்யுங்கள்" என்றார்கள். அப்போது ஒரு மனிதர், "ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்), அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் "ஆம்" என்று சொல்லிவிட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடமையாகிவிடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகிவிடும்" என்று கூறிவிட்டு, "நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம், அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும்தான். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால், அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(ச் செய்யாமல்) விட்டுவிடுங்கள்!" என்றார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 74 ஒரு பெண் (மணமுடிக்கத்தகாத) தன் நெருங்கிய உறவினருடன் ஹஜ் முதலான பயணம் மேற்கொள்ளல்.
2600. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தப் பெண்ணும் (மணமுடிக்கத்தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூன்று நாட்களுக்கு மேல் (பயணம் மேற்கொள்ளக் கூடாது)" என்று இடம்பெற்றுள்ளது. அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்" என்றே இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2601. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட ஒரு பெண், (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று இரவுகள் தொலைவிற்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2602. கஸஆ பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸைச் செவியுற்றேன். அது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. நான், "இதைத் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் கேட்காததையா அவர்கள் கூறியதாகச் சொல்வேன்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர மற்ற இடங்களுக்கு (நன்மையை நாடிப் புனிதப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்" என்று கூறியதையும், "எந்தப் பெண்ணும் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன், அல்லது கணவருடன் தவிர இரண்டு நாள் (தொலைவிற்குப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்" என்று கூறியதையும் நான் கேட்டேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2603. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னை வியப்படையச் செய்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "எந்தப் பெண்ணும் கணவன், அல்லது (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர இரண்டு நாள் பயணத் தொலைவிற்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனத் தடை விதித்தார்கள். தொடர்ந்து எஞ்சிய ஹதீஸையும் கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2604. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தப் பெண்ணும் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2605. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தப் பெண்ணும் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று இரவுகளுக்கு மேல் பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(மணமுடிக்கத்தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்களுக்கு அதிகமாக (பயணம் மேற்கொள்ள வேண்டாம்)" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2606. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிமான எந்தப் பெண்ணும் (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் தன்னுடன் இருந்தே தவிர, ஓரிரவு பயணத் தொலைவிற்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2607. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கைகொண்ட எந்தப் பெண்ணும் (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர ஒரு நாள் பயணத் தொலைவிற்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2608. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒரு பெண், (மணமுடிக்கத் தகாத) தன் நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர ஒரு பகல் ஓர் இரவு பயணத் தொலைவிற்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2609. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தப் பெண்ணும் (மணமுடிக்கத் தகாத) தன் நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2610. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒரு பெண், அவளுடைய தந்தை, அல்லது மகன், அல்லது கணவன்,அல்லது சகோதரன், அல்லது (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்களோ, அதற்கு மேலாகவோ பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி இல்லை.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2611. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்கவேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும்போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்" என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்யப் புறப்பட்டுவிட்டாள். இன்னின்ன போரில் என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்நிலையில் நான் என்ன செய்வது?)" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "நீர் சென்று உம்முடைய மனைவியுடன் ஹஜ் செய்வீராக!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் தவிர" எனும் (ஆரம்பக்) குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
பாடம் : 75 ஹஜ் முதலான பயணத்திற்காக வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய பிரார்த்தனை.
2612. அலீ பின் அப்தில்லாஹ் அல்அஸ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (பின்வரும் பிரார்த்தனையை)க் கற்றுத் தந்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேனும் பயணம் புறப்பட்டால், தமது ஒட்டகத்தில் ஏறி அமர்ந்தவுடன் மூன்று முறை தக்பீர் ("அல்லாஹு அக்பர்") கூறுவார்கள். பிறகு "சுப்ஹானல்லதீ சக்கர லனா ஹாதா, வ மா குன்னா லஹு முக்ரினீன, வ இன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன். அல்லாஹும்ம, இன்னா நஸ்அலுக ஃபீ சஃபரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா, வ மினல் அமலி மா தர்ளா. அல்லாஹும்ம, ஹவ்வின் அலைனா சஃபரனா ஹாதா. வத்வி அன்னா புஅதஹ். அல்லா ஹும்ம அன்த்தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி, வல்ஃகலீஃபத்து ஃபில்அஹ்ல். அல்லாஹும்ம, இன்னீ அஊது பிக்க மின் வஉஸாயிஸ் ஸஃபரி, வ கஆபத்தில் மன்ழரி, வ சூயில் முன்கலபி ஃபில்மாலி வல்அஹ்ல்" என்று கூறுவார்கள்.
(பொருள்: நாங்கள் இ(ந்த வாகனத்)தைக் கையாளும் திறன் பெற்றிராத நிலையில், எங்களுக்கு இதைப் பணியவைத்த (இறை)வன் தூயவன். நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்களாய் உள்ளோம். இறைவா, இப்பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ திருப்தியடையக்கூடிய (நற்)செயல்களையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா,இப்பயணத்தை எங்களுக்கு எளிதாக்குவாயாக! இப்பயணத்தின் தூரத்தைச் சுருக்குவாயாக! இறைவா, நீயே என் பயணத் தோழனாகவும் என் குடும்பத்தின் பிரதிநிதியாகவும் இருப்பாயாக! இறைவா, பயணத்தின் சிரமங்களிலிருந்தும், நிலைகுலையச் செய்யும் துயரக் காட்சியிலிருந்தும், செல்வத்திலும் குடும்பத்திலும் நிகழ்ந்துவிடும் தீய மாற்றங்களிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
திரும்பி வரும்போதும் இவ்வாறே பிரார்த்திப்பார்கள். ஆனால், அவற்றுடன் பின்வரும் வரிகளையும் கூடுதலாக ஓதுவார்கள்: "ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன லி ரப்பினா ஹாமிதூன்" (பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வழிபட்டவர்களாகவும் அவனையே போற்றிப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம்).
அத்தியாயம் : 15
2613. அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் புறப்படும்போது பயணத்தின் சிரமங்களிலிருந்தும், துயரத்தோடு திரும்பி வருவதிலிருந்தும், வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்தும், அநீதிக்குள்ளானவனின் (சாபப்) பிரார்த்தனைக்கு உள்ளாவதிலிருந்தும், குடும்பத்திலும் செல்வத்திலும் தீய மாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதிலிருந்தும் இறைவனிடம் பாதுகாப்புக் கோருவார்கள். (அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் வஉஸாயிஸ் ஸஃபரி, வ கஆபத்தில் முன்கலபி, வல்ஹவ்ரி பஅதல் கவ்னி, வ தஅவத்தில் மழ்லூமி, வ சூயில் மன்ழரி ஃபில்அஹ்லி வல்மால்" என்று கூறுவார்கள்.)
அத்தியாயம் : 15
2614. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துல் வாஹித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "செல்வத்திலும் குடும்பத்திலும் (ஃபில்மாலி வல்அஹ்ல்)..." என்று இடம்பெற்றுள்ளது.
முஹம்மத் பின் காஸிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பயணத்திலிருந்து திரும்பிவரும் போது "குடும்பத்தில்" (ஃபில் அஹ்லி) எனும் சொற்றொடரை முதலில் கூறுவார்கள் என இடம்பெற்றுள்ளது.
மேற்கண்ட இவ்விருவரின் அறிவிப்பிலும் "அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் வஉஸாயிஸ் ஸஃபர்" (இறைவா,பயணத்தின் சிரமங்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்) எனும் வாசகம் இடம்பெற் றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 76 ஹஜ் முதலான பயணங்களிலிருந்து திரும்பும்போது ஓத வேண்டியவை.
2615. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர், அல்லது படை, அல்லது ஹஜ், அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது குன்றுகள் அல்லது மேடுகள்மீது ஏறினால், மூன்று முறை தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறுவார்கள். பிறகு "லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு. லஹுல் முல்க்கு. வ லஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ஆயிபூன,தாயிபூன, ஆபிதூன, சாஜிதூன, லி ரப்பினா ஹாமிதூன. ஸதகல்லாஹு வஅதஹு; வ நஸர அப்தஹு; வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்" என்று கூறுவார்கள். (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வழிபட்டவர்களாகவும், சிரம்பணிந்தவர்களாகவும் அவனையே போற்றிப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்யாக்கிவிட்டான்; தன் அடியாருக்கு வெற்றியளித்தான்; கூட்டுப் படைகளைத் தன்னந்தனியாக அவனே தோற்கடித்தான்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அய்யூப் பின் அபீதமீமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இரண்டு முறை தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறுவார்கள்"என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2616. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஓர் அறப்போரிலிருந்து) திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது (நபி (ஸல்) அவர்களுடன்) நானும் அபூதல்ஹா (ரலி) அவர்களும் இருந்தோம். (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஸஃபிய்யா (ரலி) அவர்கள் நபியவர்களுக்குப் பின்னால் அவர்களது ஒட்டகத்தில் இருந்தார்கள். மதீனாவின் மேற்புறத்தில் நாங்கள் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள், "ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன லி ரப்பினா ஹாமிதூன" (பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வழிபட்டவர்களாகவும், அவனையே போற்றிப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம்) என மதீனாவிற்குள் வரும் வரை சொல்லிக்கொண்டேயிருந்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 77 ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் இறங்கித் தங்குவதும் அங்கு தொழுவதும்.
2617. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து திரும்பும்போது) "துல்ஹுலைஃபா" விலுள்ள "அல்பத்ஹா" எனும் விசாலமான பள்ளத்தாக்கில் தமது ஒட்டகத்தை மண்டியிடவைத்து, அங்கு தொழுதார்கள். நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே செய்வார்கள்.
அத்தியாயம் : 15
2618. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தை மண்டியிடவைத்துத் தொழுது வந்த, "துல்ஹுலைஃபா"விலுள்ள "அல்பத்ஹா" பள்ளத்தாக்கில் இப்னு உமர் (ரலி) அவர்களும் தமது ஒட்டகத்தை மண்டியிடவைப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2619. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது, "துல்ஹுலைஃபா"வில் "அல்பத்ஹா" பள்ளத்தாக்கில் தமது ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்குதான் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்வார்கள்.
அத்தியாயம் : 15
2620. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "துல்ஹுலைஃபா"வில் இரவின் இறுதி நேரத்தில் ஓய்வெடுக்கும் இடத்தில் (உறங்கிக் கொண்டு) இருந்தபோது "வளமிக்க பள்ளத்தாக்கில் நீங்கள் இருக்கிறீர்கள்" என (கனவில்) கூறப்பட்டது.
அத்தியாயம் : 15
2621. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "துல்ஹுலைஃபா"வில் (அல்அகீக்) பள்ளத்தாக்கின் நடுவில் இரவின் இறுதி நேரத்தில் ஓய்வெடுக்கும் இடத்தில் (உறங்கிக்கொண்டு) இருந்தபோது, "வளமிக்க பள்ளத்தாக்கில் நீங்கள் இருக்கிறீர்கள்" என (கனவில்) கூறப்பட்டது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓய்வெடுக்கும் இடத்தைத் தேடியவராக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது ஒட்டகத்தை மண்டியிடவைத்து, ஓய்வெடுக்கும் பள்ளிவாசலுக்கருகில் உள்ள இடத்தில், சாலிம் (ரஹ்) அவர்களும் எங்கள் ஒட்டகங்களை மண்டியிடவைத்தார்கள். அந்த இடம் பள்ளத்தாக்கின் நடுவில் உள்ள பள்ளி வாசலுக்குக் கீழே இருந்தது. பள்ளிவாசலுக்கும் கிப்லாவுக்குமிடையே நடுவில் (நபி (ஸல்) அவர்கள் ஓய்வெடுத்த) அந்த இடம் இருந்தது.
அத்தியாயம் : 15
பாடம் : 78 இணைவைப்பவர் எவரும் இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்யக்கூடாது; நிர்வாணமாக எவரும் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரக்கூடாது என்பதும், "பெரிய ஹஜ் நாள்" பற்றிய விவரமும்.
2622. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"விடைபெறும்" ஹஜ்ஜுக்கு முந்தைய ஹஜ்ஜின்போது, அபூபக்ர் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணக் குழுவிற்குத்) தலைவராக ஆக்கியிருந்தார்கள். அப்போது துல்ஹஜ் பத்தாவது நாளில் (மினாவில் வைத்து) "இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது; இந்த ஆலயத்தை நிர்வாணமாக எவரும் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது" என்று பொது அறிவிப்புச் செய்யும் குழுவினரில் ஒருவனாக என்னையும் அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.220
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அபூஹுரைரா (ரலி) அவர்களின் இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள், "துல் ஹஜ் பத்தாவது நாளே பெரிய ஹஜ் நாளாகும்" எனக் கூறிவந்தார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 79 ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு.
2623. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். "இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?" என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2624. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் உம்ராச் செய்வது, மறு உம்ராவரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (பாவச்செயல் கலவாத) ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்குச் சொர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் எட்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2625. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தீய பேச்சுகள் மற்றும் பாவச்செயல்களில் ஈடுபடாமல் இந்த(க் கஅபா) ஆலயத்திற்கு வந்(து ஹஜ் செய்)தவர், அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "தீய பேச்சுகள் மற்றும் பாவச்செயல்களில் ஈடுபடாமல் ஒருவர் ஹஜ் செய்தால்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 80 ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும்.
2626. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் மக்காவில் தங்கள் (பெரிய தந்தையின்) வீட்டில் தங்குவீர்களா?" என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(என் பெரிய தந்தையின் புதல்வர்) அகீல், குடியிருப்புகள் அல்லது வீடுகளில் எதையேனும் நமக்காக விட்டுவைத்துள்ளாரா, என்ன?" என்று கேட்டார்கள்.
(நபியவர்களின் பெரிய தந்தையான) அபூதாலிபின் சொத்துக்களுக்கு அகீலும் தாலிபும் வாரிசானார்கள். (அபூதாலிபின் மற்ற இரு புதல்வர்களான) ஜஅஃபர் (ரலி) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் முஸ்லிம்களாக இருந்ததால் (தம் தந்தையின் சொத்துக்களில்) எதற்கும் வாரிசாக (முடிய)வில்லை. (அப்போது) அகீலும் தாலிபும் இறைமறுப்பாளர்களாக இருந்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2627. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜின் போது, நாங்கள் மக்காவை நெருங்கிய வேளையில் நான் (நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் நாளை எங்கு தங்குவீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(அபூதாலிபின் மகன்) அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டு வைத்துள்ளாரா?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! இன்ஷா அல்லாஹ் நாளைய தினம் தாங்கள் எங்கு தங்குவீர்கள்?"என்று கேட்டேன். -இது மக்கா வெற்றியின்போது நடந்ததாகும்.- அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டுவைத்துள்ளாரா?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 81 மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்தவர், ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிய பின் மூன்று நாட்களுக்கு மிகாமல் மக்காவில் தங்கியிருக்கலாம்.
2628. அப்துர் ரஹ்மான் பின் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்களிடம் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், (முஹாஜிர் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு, மினாவிலிருந்து திரும்பிய பிறகு) மக்காவில் தங்குவது பற்றி (ஹதீஸ்) எதையேனும் செவியுற்றுள்ளீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு சாயிப் (ரலி) அவர்கள், "முஹாஜிர் (மினாவிலிருந்து) திரும்பிய பிறகு மூன்று இரவுகள் மக்காவில் தங்க அனுமதி உண்டு" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அலாஉ பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். "அதைவிட அதிகமாக்கக் கூடாது" என்று சொன்னதைப் போன்று இருந்தது.
அத்தியாயம் : 15
2629. அப்துர் ரஹ்மான் பின் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் தம் அவையோரிடம், "(முஹாஜிர், ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு) மக்காவில் தங்குவது பற்றி நீங்கள் என்ன செவியுற்றுள்ளீர்கள்?" என்று கேட்டார்கள். அப்போது (அங்கிருந்த) சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள், "முஹாஜிர் தமது (ஹஜ்) கிரியைகளை நிறைவேற்றிவிட்டு மக்காவில் மூன்று இரவுகள் தங்கலாம்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அலாஉ பின் அல் ஹள்ரமீ (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அத்தியாயம் : 15
2630. அப்துர் ரஹ்மான் பின் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்களிடம் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் (முஹாஜிர் மக்காவில் தங்குவதைப் பற்றிக்) கேட்டார்கள். அதற்கு சாயிப் (ரலி) அவர்கள், "முஹாஜிர் (மினாவிலிருந்து) திரும்பிய பிறகு மூன்று இரவுகள் மக்காவில் தங்கியிருக்கலாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அலாஉ பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2631. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஹாஜிர், (ஹஜ்) கிரியைகளை நிறை வேற்றிய பிறகு மக்காவில் மூன்று இரவுகள் தங்கியிருக்கலாம்.
இதை அலாஉ பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 82 மக்காவும், அதன் வேட்டைப் பிராணிகளும், புற்பூண்டுகளும், மரங்களும், அங்கு கண்டெடுக்கப்படும் பொருளும் -அதை அறிவிப்புச் செய்பவருக்குத் தவிர- என்றென்றும் புனிதமானவை ஆகும்.
2632. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நிகழ்ந்த நாளில், "இனி ஹிஜ்ரத் (மக்காவைத் துறப்பது) என்பது கிடையாது. ஆயினும், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும்தான் உள்ளது. நீங்கள் போருக்குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் போருக்குச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். மேலும் (அதே) மக்காவெற்றி நாளில், "(மக்களே!) அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலாய் இந்த நகரத்தை அவன் புனிதமாக்கியுள்ளான். அல்லாஹ் புனிதமாக்கிய காரணத்தால் இது மறுமை நாள் வரை புனிதமானதாகவே இருக்கும். மேலும், எனக்கு முன்னர் (வாழ்ந்த) யாருக்கும் இங்கு போர் புரிய அனுமதி தரப்படவில்லை. எனக்கும் கூட (இந்த மக்காவெற்றி நாளில்) பகலில் சிறிது நேரம் மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதி வழங்கப்பட்டது. அல்லாஹ் இந்த நகரத்தை புனிதமாக்கியுள்ள காரணத்தால் இது மறுமை நாள்வரை புனிதமானதாகவே திகழும். இங்கு அதன் முட்கள் வெட்டப்படக் கூடாது. அதன் வேட்டைப் பிராணி விரட்டப்படக்கூடாது. இங்கே கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்(து உரியவரிடம் சேர்ப்)பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைப் பறிக்கக் கூடாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உடனே (என் தந்தை) அப்பாஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! "இத்கிர்" புல்லைத் தவிரவா? ஏனெனில், அது அவர்களுடைய உலோகத் தொழிலாளர்களுக்கு (உலை மூட்டவு)ம், அவர்களுடைய வீடுக(ளின் மேல்கூரை)களுக்கும் பயன்படுகிறதே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஆம்) "இத்கிரை"த் தவிர" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலாய்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. "போர் புரிய" என்பதற்குப் பகரமாக "உயிர்ச் சேதம் விளைவிக்க" என்று காணப்படுகிறது. ("இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது" என்பதைக் குறிக்க) "லா யல்தகிது லுக்தத்தஹு இல்லா மன் அர்ரஃபஹா" எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2633. சயீத் பின் அபீசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(யஸீதின் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அம்ர் பின் சயீத், (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக) மக்காவை நோக்கிப் படைப் பிரிவுகளை அனுப்பியபோது, அவரிடம் அபூ ஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: தலைவரே! எனக்கு அனுமதி தாருங்கள்! மக்கா வெற்றிக்கு மறுநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன். என் காதுகள் அதைக் கேட்டிருக்கின்றன. எனது உள்ளம் அதை நினைவில் வைத்துள்ளது. அதை அவர்கள் கூறியபோது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அவ்வுரையின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "அல்லாஹ்வே மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கினான். அதற்குப் புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர்கள் அல்லர். எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் இங்கு (சண்டையிட்டு) இரத்தத்தைச் சிந்துவதற்கோ, இங்குள்ள மரம் செடிகொடிகளை வெட்டுவதற்கோ அனுமதி இல்லை. அல்லாஹ்வின் தூதர் (மக்கா வெற்றி நாளில் ஒரு பகற்பொழுது மட்டும்) இங்கு போரிட்டதால் (அதைக் காரணமாகக் காட்டி) இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால், "அல்லாஹ் தன் தூதருக்கு மட்டும்தான் அனுமதியளித்தான். உங்களுக்கு அவன் அனுமதி வழங்கவில்லை" என்று சொல்லிவிடுங்கள். எனக்குக்கூட (நேற்றைய) பகலில் சிறிது நேரம் மட்டுமே இங்கு (போர் புரிய) அல்லாஹ் அனுமதியளித்தான். இன்று அதன் முந்தைய புனிதத் தன்மைக்கு அது மீண்டு வந்துவிட்டது. (நான் சொன்ன விஷயங்கள் யாவற்றையும் இங்கு) வந்திருப்பவர்கள் வராதவர்களுக்குச் சொல்லிவிடுங்கள்"என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அதற்கு அம்ர் பின் சயீத் என்ன பதிலளித்தார்?" என்று அபூஷுரைஹ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு "அபூஷுரைஹே! உம்மைவிட இதைப் பற்றி நான் நன்கறிவேன். நிச்சயமாக (புனித நகரமான) மக்கா, குற்றவாளிக்கும் மரண தண்டனைக்குப் பயந்து (மக்காவிற்குள்) ஓடிவந்த (கொலைக் குற்றம் புரிந்த)வனுக்கும், திருட்டுக் குற்றம் புரிந்துவிட்டு ஓடிவந்தவனுக்கும் பாதுகாப்பளிக்காது என்று அம்ர் கூறினார்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2634. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு மக்கா நகர வெற்றியை அளித்தபோது, அவர்கள் மக்கள் மத்தியில் நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "அல்லாஹ் மக்காவை (துவம்சம் செய்வதை)விட்டும் யானைப் படையைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) ஓரிறை நம்பிக்கையாளர்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பு எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும்கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் சிறிது நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் ஒருபோதும் அனுமதிக்கப்படாது. ஆகவே, இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் வெட்டப்படக் கூடாது. இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருள், அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. எவர்,கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை பெற்றிருக்கிறாரோ அவர் இரண்டு முடிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஒன்று, (சட்டப்படி) இழப்பீட்டுத் தொகை பெற்றுக்கொள்ளலாம்; அல்லது பழிவாங்கிக்கொள்ளலாம்"என்று கூறினார்கள்.
அப்பாஸ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! (செடிகொடிகள் பிடுங்கப்படாது என்பதில்) "இத்கிர்" புல்லைத் தவிரவா?ஏனெனில், அதை நாங்கள் எங்கள் சவக்குழிகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோமே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இத்கிர் புல்லைத் தவிர" என்று விடையளித்தார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! (இதை) எனக்கு எழுதிக்கொடுங்கள்" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அபூஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள்" என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) வலீத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அவ்ஸாயீ (ரஹ்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள் எனும் அபூஷாஹ் (ரலி) அவர்களது சொல் எதைக் குறிக்கிறது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அவர் கேட்ட இந்த உரையை (எழுதிக் கொடுக்கச் சொன்னதை)யே குறிக்கிறது" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2635. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றி ஆண்டில் "குஸாஆ" குலத்தார், "பனூ லைஸ்" குலத்தாரில் ஒருவரைக் கொலை செய்துவிட்டனர். (அறியாமைக் காலத்தில்) தங்களில் ஒருவரை "பனூ லைஸ்" குலத்தார் கொலை செய்ததற்குப் பதிலாகவே "குஸாஆ" குலத்தார் இதைச் செய்தனர். இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் தமது வாகனத்தின் மீதேறி உரையாற்றினார்கள்:
"வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் இந்த(ப் புனித) மக்கா நகரைவிட்டும் யானைப் படையைத் தடுத்து நிறுத்தினான். மக்காவின் மீது தன் தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் அல்லாஹ் ஆதிக்கம் அளித்தான். எச்சரிக்கை! மக்காவினுள் போர் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை. எனக்குப் பின்னரும் எவருக்கும் ஒருபோதும் அனுமதிக்கப்படப்போவதில்லை. கவனத்தில் கொள்க! எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் போரிடவே அனுமதிக்கப்பட்டது. எச்சரிக்கை! (இங்கு) போர் செய்வது இந்த நிமிடத்திலிருந்து (முற்றாகத்) தடை செய்யப்பட்டுவிட்டது. இங்குள்ள முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதன் மரங்கள் வெட்டப்படக் கூடாது. இங்கே கீழே விழுந்து கிடக்கும் பொருட்களை (அவற்றைப் பற்றி) மக்களுக்கு அறிவிப்புச் செய்பவரைத் தவிர வேறு யாரும் எடுக்கக் கூடாது. ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட்டால், அவருடைய உறவினர்கள் இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய இரண்டு முடிவுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
அப்போது யமன்வாசிகளில் அபூஷாஹ் எனப்படும் ஒருவர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (இந்த உரையை) எனக்கு எழுதித் தரச் சொல்லுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அபூஷாஹிற்கு (என் உரையை) எழுதிக் கொடுங்கள்" என்று சொன்னார்கள்.
அப்போது குறைஷியரில் ஒருவர் (மக்காவின் செடிகொடிகளை வெட்டக்கூடாது என்பதிலிருந்து) "இத்கிர்" புல்லிற்கு விலக்கு அளியுங்கள். ஏனெனில், நாங்கள் அதை எங்கள் வீடுகளி(ன் கூரைகளி)லும் எங்கள் சவக் குழிகளிலும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இத்கிர் புல்லைத் தவிர" என்றார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 83 அவசியமின்றி (புனித) மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்கு வந்துள்ள தடை.
2636. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்காவிற்குள் ஆயுதம் எடுத்துச் செல்வதற்கு உங்களில் எவருக்கும் அனுமதி இல்லை.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 84 "இஹ்ராம்" கட்டாமல் மக்காவிற்குள் நுழையலாம்.
2637. யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் தலையில் இரும்புத் தொப்பியுடன் (இஹ்ராம் கட்டாத நிலையில்) மக்காவினுள் நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒரு மனிதர் வந்து, "இப்னு கத்தல் (அபயம் வேண்டி) கஅபாவின் திரைகளைப் பிடித்துக்கொண்டிருக்கிறான்" என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "அவனைக் கொன்றுவிடுங்கள்" என உத்தரவிட்டார்கள் என அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் தங்களுக்கு அறிவித்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு மாலிக் (ரஹ்) அவர்கள் "ஆம்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2638. ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டாமல் தலையில் கறுப்புத் தலைப்பாகை அணிந்த நிலையில் மக்காவிற்குள் நுழைந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் குதைபா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "மக்கா வெற்றி நாளில் நுழைந்தார்கள்" என்று இடம் பெற்றுள்ளது.
- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் தலையில் கறுப்புத் தலைப்பாகை அணிந்து கொண்டு (மக்காவினுள்) நுழைந்தார்கள்.
அத்தியாயம் : 15
2639. அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில்) தலையில் கறுப்புத் தலைப்பாகை கட்டிய நிலையில் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2640. அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில்) தலையில் கறுப்புத் தலைப்பாகை கட்டி, அதன் இரு ஓரங்களையும் தம் தோள்களுக்குமிடையே தொங்கவிட்டவர்களாகச் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "சொற்பொழிவு மேடை மீதிருந்ததை" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
பாடம் : 85 மதீனா நகரின் சிறப்பும், அந்நகரத்திற்காக வளம் வேண்டி நபி (ஸல்) அவர் கள் பிரார்த்தித்ததும், மதீனாவும் அதன் வேட்டைப் பிராணிகளும் மரங்களும் புனிதமானவை என்பதும், அதன் புனித எல்லைகளின் அளவு பற்றிய விவரமும்.
2641. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்து, மக்காவாசிகளுக்காகப் பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறி வித்ததைப் போன்று நான் மதீனாவைப் புனித நகரமாக அறிவிக்கிறேன். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவாசிகளுக்காகப் பிரார்த்தித்ததைப் போன்று நான் மதீனாவின் (அளவைகளான) "ஸாஉ"மற்றும் "முத்"து ஆகியவற்றில் இரு மடங்கு (வளம் ஏற்படப்) பிரார்த்திக்கிறேன்.
இதை அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2642. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உஹைப் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே "இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவாசிகளுக்காகப் பிரார்த்தித்ததைப் போன்று இரு மடங்கு (வளம் வேண்டி) நான் பிரார்த்திக்கிறேன்" என்று இடம்பெற்றுள்ளது. - சுலைமான் பின் பிலால் (ரஹ்) மற்றும் அப்துல் அஸீஸ் பின் அல்முக்தார் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்ததைப் போன்றே" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2643. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்தார்கள். நான், இதன் (அதாவது மதீனாவின்) இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவிக்கிறேன்.
இதை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2644. நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மர்வான் பின் அல்ஹகம் மக்களிடையே உரையாற்றியபோது மக்காவைப் பற்றியும், மக்காவாசிகள் மற்றும் மக்காவின் புனிதம் பற்றியும் குறிப்பிட்டார். மதீனாவைப் பற்றியோ மதீனாவாசிகள் மற்றும் மதீனாவின் புனிதம் பற்றியோ குறிப்பிடவில்லை. அப்போது ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் மர்வானை அழைத்து, "நீர் மக்காவைப் பற்றியும் மக்காவாசிகள் மற்றும் மக்காவின் புனிதம் பற்றியும் கூறினீர். மதீனாவைப் பற்றியோ மதீனாவாசிகளைப் பற்றியோ மதீனாவின் சிறப்பு பற்றியோ கூறவில்லையே ஏன்? மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புனிதமானதாக அறிவித்துள்ளார்கள். இந்த விஷயம் எங்களிடமுள்ள ஒரு "கவ்லானீ" (குலத்தாரின் மெல்லிய) தோல் ஏட்டில் பதியப்பெற்றுள்ளது. நீர் விரும்பினால் அதை உமக்கு நான் வாசித்துக்காட்டுவேன்" என்று கூறினார்கள். மர்வான் (சிறிது நேரம்) அமைதியாக இருந்தார். பிறகு, "அதில் சிலவற்றை நானும் செவியுற்றுள்ளேன்" என்றார்.
அத்தியாயம் : 15
2645. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்தார்கள். நான் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவிக்கிறேன். அதன் முள்மரங்கள் வெட்டப்படக் கூடாது; அதன் வேட்டைப் பிராணிகள் வேட்டையாடப்படக் கூடாது.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2646. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியின் மரங்களை வெட்டுவது, அதன் வேட்டைப் பிராணிகளைக் கொல்வது ஆகியவற்றுக்கு நான் தடை விதிக்கிறேன். மக்கள் அறிந்துகொள்பவர்களாயிருந்தால் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும். எவரும் அதை வெறுத்து அதை விட்டுச் சென்றால், அவரை விடச் சிறந்தவரை அதில் அல்லாஹ் குடியமர்த்தாமல் இருப்பதில்லை. அங்கு ஏற்படும் பசி பட்டினியையும் கடினமான வாழ்க்கையையும் சகித்துக்கொண்டு அங்கு நிலைத்திருப்பவருக்கு மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவனாக அல்லது சாட்சியம் அளிப்பவனாக இருப்பேன்.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2647. மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "மதீனாவாசிகளுக்குத் தீங்கிழைக்க எவரேனும் விரும்பினால் "நெருப்பில் ஈயம் கரைவதைப் போன்று" அல்லது "தண்ணீரில் உப்பு கரைவதைப் போன்று" அவரை அல்லாஹ் கரைத்துவிடுவான்" என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2648. ஆமிர் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் (மதீனாவிற்கு அருகில்) "அகீக்" எனுமிடத்திலிருந்த தமது பெரிய வீட்டிற்கு வாகனத்தில் புறப்பட்டார்கள். (வழியில்) அடிமையொருவர் "ஒரு மரத்தை வெட்டிக்கொண்டிருப்பதை" அல்லது "இலைகளைப் பறித்துக்கொண்டிருப்பதை"க் கண்டார்கள். உடனே (அவரைப் பிடித்து) அவரது மேலாடையைக் கழற்றிக்கொண்டார்கள். சஅத் (ரலி) அவர்கள் திரும்பிவந்தபோது அவர்களிடம் அந்த அடிமையின் வீட்டார் வந்து தங்கள் அடிமையிடமிருந்து கைப்பற்றியதை "அந்த அடிமையிடம்" அல்லது "தங்களிடம்" திரும்பித் தருமாறு கேட்டார்கள். அப்போது சஅத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு வெகுமதியாக வழங்கிய எதையும் திருப்பித் தருவதிலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்" எனக் கூறி, அவர்களிடம் அதைத் தர மறுத்துவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2649. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், "உங்கள் சிறுவர்களில் ஒரு சிறுவனை எனக்குப் பணிவிடை செய்வதற்காகத் தேடி (அழைத்து)வாருங்கள். (நான் கைபருக்குப் புறப்பட வேண்டும்)" என்று கூறினார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னை வாகனத்தில் தமக்குப் பின்னால் அமரவைத்துக்கொண்டு (கைபரை நோக்கிப்) புறப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வழியில்) தங்கும்போதெல்லாம் அவர்களுக்கு நான் பணிவிடைகள் செய்து வந்தேன்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனா நோக்கி) வந்துகொண்டிருந்தபோது, "உஹுத் மலை" அவர்களுக்குத் தென்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இந்த மலை நம்மை நேசிக்கிறது. நாமும் அதை நேசிக்கிறோம்"என்று சொன்னார்கள். பிறகு பார்வையில் மதீனா பட்டபோது, "இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்ததைப் போன்று, இந்த இரு மலைகளுக்கிடையே உள்ள பகுதியைப் புனித (நகர)மாக நான் அறிவிக்கிறேன். இறைவா! மதீனாவாசிகளின் (அளவைகளான) "முத்"து மற்றும் "ஸாஉ" ஆகியவற்றில் நீ வளத்தை ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், அவற்றில் ("இந்த இரு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை" என்பதற்குப் பதிலாக) "இந்த இரு கருங்கல் மலைகளுக்கிடையே உள்ள பகுதியை" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2650. ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைப் புனித நகரமாக அறிவித்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; இங்கிருந்து இதுவரை (மதீனா புனிதமானது என்று நபியவர்கள் அறிவித்தார்கள். மேலும் சொன்னார்கள்:) அதில் யார் (மார்க்கத்தில் இல்லாத செயல்) ஒன்றைப் புதிதாக உருவாக்குகின்றானோ அவன்மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். (இது ஒரு கடுமையான எச்சரிக்கை) அவன் செய்த கடமையான வழிபாடு மற்றும் கூடுதலான வழிபாடு எதையுமே அல்லாஹ் ஏற்கமாட்டான்" என்று கூறினார்கள் என விடையளித்தார்கள்.
அப்போது மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் "("ஒன்றைப் புதிதாக உருவாக்குகின்றவன்") அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்குப் புகலிடம் அளிக்கின்றவன்" என்று (சேர்த்துக் கொள்ளுமாறு) கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2651. ஆஸிம் பின் சுலைமான் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைப் புனித (நகர)மாக அறிவித்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; அது புனித (நகர)மாகும். அதன் மரங்கள் வெட்டப்படக் கூடாது. யார் அவ்வாறு செய்கிறாரோ அவர்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2652. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! மதீனாவாசிகளின் முகத்தலளவையில் நீ வளத்தை ஏற்படுத்துவாயாக! (குறிப்பாக) அவர்களது (அளவைகளான) "ஸாஉ" மற்றும் "முத்"து ஆகியவற்றில் நீ வளத்தை ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 15
2653. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய வளத்தைப் போன்று இரு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக!" எனப் பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2654. யஸீத் பின் ஷரீக் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் தமது வாளின் உறையில் ஏடு ஒன்றைத் தொங்கவிட்டவர்களாக எங்களிடையே உரையாற்றினார்கள். அவர்கள் (தமது உரையில்) "நம்மிடம் அல்லாஹ்வின் வேதத்தையும் (நபியவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற) இந்த ஏட்டையும் தவிர நாம் ஓதுகின்ற நூலேதும் உள்ளதெனக் கூறுகின்றவர் பொய்யுரைத்து விட்டார்" என்று கூறி (விட்டு, அதை விரித்துக் காட்டலா)னார்கள். அதில், (உயிரீட்டிற்காகவும் ஸகாத்தாகவும் வழங்கப்படும்) ஒட்டகங்களின் வயது விவரங்களும் காயங்களுக்கான தண்டனை குறித்தும் எழுதப்பெற்றிருந்தன. மேலும், அதில் பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் எழுதப்பட்டிருந்தது: மதீனா நகரமானது, (அங்குள்ள) "அய்ர்" மலையிலிருந்து "ஸவ்ர்" (எனும் சிறிய) மலைவரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்துகின்றானோ, அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்கு அடைக்கலம் அளிக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் செய்த கடமையான வழிபாட்டையும் கூடுதலான வழிபாட்டையும் மறுமை நாளில் அவனிடமிருந்து அல்லாஹ் ஏற்கமாட்டான். முஸ்லிம்களில் யார் அடைக்கலம் அளித்தாலும் அது ஒன்றேயாகும். (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்.) அவர்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள்கூட அடைக்கலம் அளிக்க முன்வரலாம். தன் தந்தை அல்லாத ஒருவரைத் தன் தந்தை என வாதிடுபவனுக்கு, அல்லது தன்னை விடுதலை செய்த உரிமையாளர் அல்லாத ஒருவரைத் தன் உரிமையாளர் எனக் கூறுபவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வழிபாடு மற்றும் கூடுதலான வழிபாடு எதையுமே மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) மற்றும் ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "அவர்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள்கூட அடைக்கலம் அளிக்க முன்வரலாம்" என்பதோடு ஹதீஸ் முடிகிறது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம் பெறவில்லை. இவ்விருவரின் அறிவிப்பில் "அந்த ஏடு அலீ (ரலி) அவர்களது வாளில் தொங்கவிடப்பட்டிருந்தது" எனும் குறிப்பும் காணப்படவில்லை.
அத்தியாயம் : 15
2655. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் மேற்கண்ட அறிவிப்பில் உள்ள விவரங்களுடன்,
"ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவன் முறிக்கிறானோ அவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் செய்த கடமையான வழிபாடு மற்றும் கூடுதலான வழிபாடு எதுவுமே ஏற்கப்படாது" என்பதும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
இவற்றில் "தன் தந்தை அல்லாத ஒருவரை" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "மறுமை நாளில்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "தன்னை விடுதலை செய்த உரிமையாளர் அல்லாதவரைத் தன் காப்பாளராக ஆக்கிக்கொள்பவருக்கு..." எனும் சொற்றொடரும், சாபம் பற்றிய குறிப்பும் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
2656. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனா புனித நகரமாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றைப் புகுத்துகின்றானோ, அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்கு அடைக்கலம் அளிக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கூடுதலான வழிபாடு மற்றும் கடமையான வழிபாடு எதையும் மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2657. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "மறுமை நாளில்" எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
மேலும், "முஸ்லிம்களில் யார் அடைக்கலம் அளித்தாலும் அது ஒன்றேயாகும். (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்.) அவர்களில் சாமானிய மக்கள்கூட அடைக்கலம் அளிக்க முன்வரலாம். ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவன் முறிக்கிறானோ அவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் ஏற்படும். அவன் செய்த கூடுதலான வழிபாடு மற்றும் கடமையான வழிபாடு எதையுமே மறுமை நாளில் அல்லாஹ் ஏற்கமாட்டான்" என்பதும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2658. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவில் மான்கள் மேய்ந்துகொண்டிருப்பதை நான் கண்டால் அவற்றை (விரட்டவோ பிடிக்கவோ முயன்று) பீதிக்குள்ளாக்கமாட்டேன். (ஏனெனில்) "மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதி புனிதமானதாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அத்தியாயம் : 15
2659. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவித்தார்கள். ஆகவே, நான் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மான்களைக் கண்டால்,அவற்றைப் பீதிக்குள்ளாக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைச் சுற்றி பன்னிரண்டு மைல் தொலைதூரத்தைப் பாதுகாக்கப்பட்ட (புனித) எல்லையாக அறிவித்தார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2660. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் (பேரீச்சங்கன்றுகளை நட்டு அதில்) முதலாவதாகப் பழுக்கும் கனியைக் காணும்போது, அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவருவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு, "இறைவா! எங்கள் கனிகளில் எங்களுக்கு வளம் அருள்வாயாக! எங்கள் நகரத்தில் வளம் கொழிக்கச் செய்வாயாக! எங்கள் (அளவைகளான) "ஸாஉ" மற்றும் "முத்"து ஆகியவற்றில் வளத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் அடியாரும் உன் உற்ற நண்பரும் உன் தூதரும் ஆவார்கள். நான் உன் அடிமையும் தூதரும் ஆவேன். இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா நகருக்காக உன்னிடம் பிரார்த்தித்ததைப் போன்று நான் மதீனாவிற்காக உன்னிடம் பிரார்த்திக்கிறேன். அவர்கள் மக்காவிற்காகப் பிரார்த்தித்த அளவிற்கு,அல்லது அதனுடன் மற்றொரு மடங்கும் (வளம் வேண்டி) நான் பிரார்த்திக்கிறேன்" என்பார்கள். பிறகு அ(ங்கு கனியைக் கொண்டு வந்த)வரின் சிறு குழந்தையை அழைத்து அதனிடம் அந்தக் கனியைக் கொடுப்பார்கள்.
அத்தியாயம் : 15
2661. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதலாவதாகப் பழுக்கும் கனி கொண்டுவரப் பட்டால், "இறைவா! எங்கள் நகரத்தில் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! எங்கள் கனிகளிலும் எங்கள் (அளவைகளான) "முத்"து மற்றும் "ஸாஉ" ஆகியவற்றிலும் (தற்போதுள்ள) வளத்துடன் மற்றொரு மடங்கு வளத்தை வழங்குவாயாக" என்று பிரார்த்தித்துவிட்டு, அங்கு வந்திருக்கும் குழந்தைகளில் மிகச் சிறிய குழந்தைக்கு அந்தக் கனியைக் கொடுப்பார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 86 மதீனாவில் குடியிருக்குமாறும் அங்கு ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக் கொள்ளுமாறும் வந்துள்ள ஆர்வமூட்டல்.
2662. மஹ்ரீயின் முன்னாள் அடிமையான அபூசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) மதீனாவில் மக்களுக்குப் பஞ்சமும் கஷ்டமும் ஏற்பட்டன. அப்போது நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று "நான் குழந்தை குட்டிகள் அதிகம் உடையவன்; எங்களுக்குக் கடுமை(யான நெருக்கடி) ஏற்பட்டுள்ளது. எனவே, நான் என் குடும்பத்தாருடன் (மதீனாவைவிட்டு) ஏதேனும் ஒரு செழிப்பான ஊருக்கு இடம்பெயர விரும்புகிறேன்" என்று கூறினேன். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், "அவ்வாறு செய்யாதே! மதீனாவையே (உங்கள் இருப்பிடமாக) வைத்துக்கொள்! ஏனெனில், நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டு "உஸ்ஃபான்" எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கு பல இரவுகள் தங்கினோம். அப்போது மக்களில் சிலர், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாம் எந்த (நிம்மதியான) நிலையிலும் இல்லை. நம் குடும்பத்தார் தனிமையில் உள்ளனர். அவர்களைக் குறித்து அச்சமற்ற நிலையில் நாம் இல்லை" என்று கூறினர்.
இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, "நீங்கள் சொன்னதாக எனக்கு எட்டியுள்ள இத்தகவல் என்ன? "நான் எவன்மீது சத்தியம் செய்வேனோ" அல்லது "என் உயிர் எவன் கையிலுள்ளதோ" அவன்மீது சத்தியமாக! "நீங்கள் விரும்பினால்" எனது ஒட்டகத்தில் சேணத்தைப் பூட்டுமாறு கட்டளையிட்டு, அதன் முடிச்சுகள் எதையும் அவிழ்க்காமல் (விரைந்து) நான் மதீனாவிற்குச் செல்ல வேண்டும்; அல்லது (அவ்வாறு செல்ல) "நான் எண்ணுகிறேன்" என்று கூறிவிட்டு, "இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக ஆக்கினார்கள். நான் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக ஆக்கினேன். மதீனாவிற்குள் இரத்தம் சிந்தப்படக் கூடாது. அங்கு போருக்காக ஆயுதம் ஏந்தப்படக்கூடாது. அங்கு தீனிக்காகத் தவிர எந்தத் தாவரமும் வெட்டப்படக் கூடாது. இறைவா! எங்கள் நகரில் எங்களுக்கு வளம் சேர்ப்பாயாக! இறைவா! எங்கள் (பெரிய அளவையான) "ஸாஉ"வில் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! எங்கள் (சிறிய அளவையான) "முத்"துவிலும் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! எங்கள் "ஸாஉ"விலும், எங்கள் "முத்"துவிலும், எங்கள் நகரத்திலும் எங்களுக்கு வளம் சேர்ப்பாயாக! இறைவா! இப்போதுள்ள வளத்துடன் இரு(மடங்கு) வளத்தை ஏற்படுத்துவாயாக!" (என்று பிரார்த்தித்தார்கள். பிறகு) "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! மதீனாவின் அனைத்து கணவாய்களிலும் சாலை முனைகளிலும் இரு வானவர்கள் இருந்து அதைக் காவல் புரிந்து கொண்டேயிருக்கின்றனர்; நீங்கள் மதீனா சென்றடையும் வரை (அவ்வாறு காவல் புரிந்து கொண்டிருக்கின்றனர்)" என்று கூறினார்கள்.
பிறகு மக்களிடம், "புறப்படுங்கள்" என்றார்கள். அவ்வாறே நாங்கள் மதீனா நோக்கிப் புறப்பட்டோம். "நாங்கள் எவன்மீது சத்தியம் செய்வோமோ" அல்லது "எவன்மீது சத்தியம் செய்யப்படுமோ" அவன்மீது ஆணையாக! (இங்கு அறிவிப்பாளர் ஹம்மாம் பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களே ஐயத்துடன் அறிவிக்கிறார்கள்.) நாங்கள் மதீனாவிற்குள் நுழைந்து எங்கள் ஒட்டகங்களிலிருந்து சேணங்களை நாங்கள் இறக்கி வைத்திருக்கவில்லை. அதற்குள் எங்கள்மீது அப்துல்லாஹ் பின் ஃகத்ஃபானின் மக்கள் தாக்குதல் தொடுத்தனர். அதற்கு முன் (தாக்குதல் தொடுக்க) எந்தத் தூண்டுகோலும் அவர்களுக்கு இருக்கவில்லை.
அத்தியாயம் : 15
2663. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறைவா! எங்கள் (அளவைகளான) "ஸாஉ" மற்றும் "முத்"து ஆகியவற்றில் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! இப்போதுள்ள வளத்துடன் இன்னும் இரு (மடங்கு) வளத்தைத் தருவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2664. மஹ்ரீயின் முன்னாள் அடிமையான அபூசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் "அல்ஹர்ரா" (போர் நடந்த) நாட்களில் சென்று, நான் மதீனாவிலிருந்து இடம்பெயர்ந்து செல்வது தொடர்பாக ஆலோசனை கேட்டேன். மேலும், அவர்களிடம் (மதீனாவின்) விலைவாசி (உயர்ந்துள்ளது) பற்றியும், எனது பெரிய குடும்பம் பற்றியும் அவர்களிடம் முறையிட்டேன். மதீனாவின் நெருக்கடியையும் பசி பட்டினியையும் சகித்துக்கொண்டு என்னால் இருக்க முடியாது என்றும் தெரிவித்தேன். அப்போது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், "உமக்குக் கேடுதான். அ(வ்வாறு மதீனாவைவிட்டுச் செல்வ)தற்கு உம்மை நான் அனுமதிக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மதீனாவின் இடர்பாடுகளைச் சகித்துக்கொண்டு இறந்துபோகும் எந்த மனிதருக்கும் மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவனாக, அல்லது சான்றுரைப்பவனாக இருப்பேன்; அவர் முஸ்லிமாக இருந்தால்!" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2665. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்ததைப் போன்று நான் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவிக்கிறேன்.
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதை அறிவிப்பவரான) அப்துர் ரஹ்மான் பின் அபீசயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு (என் தந்தை) அபூசயீத் (ரலி) அவர்கள் எவரது கையிலாவது (மதீனாவின்) பறவை இருக்கக் கண்டால், உடனே அவரது கரத்திலிருந்து அதை விடுவித்துப் பறக்க விட்டுவிடுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2666. சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் மதீனாவைச் சுட்டிக்காட்டி, "இது பாதுகாப்பான புனித நகரம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2667. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மதீனாவிற்கு (நாடு துறந்து) வந்த போது, மதீனாவில் பெருநோய் ஏற்பட்டிருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் நோய்வாய்ப்பட்டனர். தம் தோழர்கள் நோய்வாய்ப்படுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டபோது, "இறைவா! நீ மக்காவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கியதைப் போன்று, அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! மேலும், இந்நகரை ஆரோக்கியமானதாகவும் ஆக்குவாயாக! இதன் (அளவைகளான) "ஸாஉ"மற்றும் "முத்"து ஆகியவற்றில் எங்களுக்கு நீ வளத்தை வழங்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை "ஜுஹ்ஃபா" எனுமிடத்திற்கு இடம்பெயரச் செய்வாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2668. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவின் இடர்பாடுகளைச் சகித்துக்கொண்டவருக்காக மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவனாக, அல்லது சான்றுரைப்பவனாக இருப்பேன்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2669. ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான யுஹன்னஸ் பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களை ஹஜ்ஜாஜின் ராணுவம் முற்றுகையிட்ட) குழப்பமான காலகட்டத்தில் நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் அவர்களுடைய அடிமைப் பெண்களில் ஒருவர் வந்து சலாம் சொல்லிவிட்டு, "அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! நெருக்கடியான ஒரு காலகட்டம் நமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே,நான் (மதீனாவிலிருந்து) வெளியேற விரும்புகிறேன்" என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "பேதைப் பெண்ணே! உட்கார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மதீனாவின் இடர்பாடுகளையும் கஷ்ட நஷ்டங்களையும் சகித்துக்கொள்ளும் எவருக்கும் மறுமைநாளில் நான் சான்றுரைப்பவனாக, அல்லது பரிந்துரைப்பவனாக இருப்பேன்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2670. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அதன் (அதாவது மதீனாவின்) இடர்பாடுகளையும் கஷ்ட நஷ்டங்களையும் சகித்துக் கொண்டவருக்காக மறுமை நாளில் நான் சான்றுரைப்பவனாக, அல்லது பரிந்துரைப்பவனாக இருப்பேன்.- இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2671. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் எவர் மதீனாவின் இடர்பாடுகளையும் கஷ்ட நஷ்டங்களையும் சகித்துக் கொள்கிறாரோ அவருக்காக மறுமைநாளில் பரிந்துரைப்பவனாக, அல்லது சான்றுரைப்பவனாக நான் இருப்பேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 87 கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப் பெற்றுள்ளது.
2672. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவின் நுழைவாயில்களில் வானவர்கள் இருப்பர். மதீனாவிற்குள் கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாது.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2673. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறுதி நாள் நெருங்கும்போது) மஸீஹுத் தஜ்ஜால் கிழக்குத் திசையிலிருந்து மதீனாவைக்குறிவைத்து வந்து, "உஹுத்"மலைக்குப் பின்னால் இறங்குவான். பின்னர் வானவர்கள் அவனது முகத்தை ஷாம் திசை (வடக்கு) நோக்கித் திருப்பிவிடுவார்கள். அங்குதான் அவன் மடிவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 88 மதீனா தன்னிலுள்ள தீயவர்களை அகற்றிவிடும்.
2674. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களுக்கு ஒரு காலம் வரும். அன்று ஒருவர் தம் தந்தையின் சகோதரர் மகனையும் தம் உறவினரையும் "செழிப்பான இடத்திற்கு வா! செழிப்பான இடத்திற்கு வா!" என அழைப்பார். ஆனால், அவர்கள் (உண்மையை) அறிந்திருப்போராயின் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அவர்களில் எவரேனும் மதீனாவை வெறுத்து அதிலிருந்து வெளியேறினால், அவருக்குப் பதிலாக அவரைவிடச் சிறந்தவரை அங்கு அல்லாஹ் அமர்த்தாமல் இருப்பதில்லை. கவனியுங்கள்: மதீனா, (கொல்லனின்) உலையைப் போன்று அசுத்தங்களை அகற்றிவிடும். இரும்பின் துருவை (கொல்லனின்) உலை நீக்கிவிடுவதைப் போன்று, மதீனா தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றாமல் இறுதி நாள் நிகழாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2675. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எல்லா ஊர்களையும் தூக்கிச் சாப்பிடக்கூடிய, "யஸ்ரிப்" என மக்கள் கூறக்கூடிய ஓர் ஊருக்கு (நாடு துறந்து செல்லுமாறு) நான் கட்டளையிடப்பட்டேன். அதுதான் மதீனாவாகும். இரும்பின் துருவை (கொல்லனின்) உலை நீக்கிவிடுவதைப் போன்று மதீனா (தீய) மனிதர்களை வெளியேற்றிவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "உலை, துருவை நீக்கிவிடுவதைப் போன்று" என்று இடம்பெற்றுள்ளது."இரும்பு" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
2676. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக) விசுவாசப் பிரமாணம் செய்தார். (பின்னர்) அந்தக் கிராமவாசிக்கு மதீனாவில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. ஆகவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "முஹம்மதே! என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்துவிடுங்கள்" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதை ஏற்க) மறுத்துவிட்டார்கள். பின்னர் (மீண்டும்) வந்து, "என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்" என்றார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் மறுத்து விட்டார்கள். பிறகு (மீண்டும்) வந்து, "என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்" என்றார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் மறுத்துவிடவே, அந்தக் கிராமவாசி (மதீனாவிலிருந்து) வெளியேறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மதீனா, (கொல்லனின்) உலை போன்றதே ஆகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிடும்; அதிலுள்ள நல்லவர்கள் தூய்மையாவார்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 15
2677. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அது (அதாவது மதீனா) தூயது (தைபா) ஆகும். நெருப்பு, வெள்ளியின் அழுக்கை நீக்குவதைப் போன்று மதீனா தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றும்.
இதை ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2678. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயர்ந்தோன் அல்லாஹ்வே மதீனாவுக்கு "தாபா" (தூயது) எனப் பெயரிட்டான்.
இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 89 மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்து விடுவான்.
2679. அபுல்காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஊர் (அதாவது மதீனா)வாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, நீரில் உப்பு கரைவதைப் போன்று அல்லாஹ் கரைந்துபோகச் செய்துவிடுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2680. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அவ்வூர் (அதாவது மதீனா)வாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, நீரில் உப்பு கரைவதைப் போன்று அல்லாஹ், கரைந்துபோகச் செய்துவிடுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("கேடு" என்பதைக் குறிக்க) "சூஉ" என்பதற்குப் பகரமாக "ஷர்ரு" (தீங்கு) எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2681. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவனை, நீரில் உப்பு கரைவதைப் போன்று அல்லாஹ், கரைந்துபோகச் செய்துவிடுவான்.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் மாலிக் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "அசம்பாவிதம்" அல்லது "கேடு" என (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2682. அபூஹுரைரா (ரலி) மற்றும் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! மதீனாவாசிகளுக்கு (அவர்களது அளவையான) "முத்"துவில் வளம் ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். மேலும், "இவ்வூர்வாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, நீரில் உப்பு கரைவதைப் போன்று அல்லாஹ், கரைந்துபோகச் செய்துவிடுவான்" (என்று கூறினார்கள்).
அத்தியாயம் : 15
பாடம் : 90 (செழிப்பான) நகரங்கள் வெற்றிகொள்ளப்படும் போதும் மதீனாவிலேயே தங்கியிருக்குமாறு வந்துள்ள ஆர்வமூட்டல்.
2683. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஷாம் (சிரியா) நாடு வெற்றி கொள்ளப்படும்; உடனே ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாருடன் வாகனங்களை விரட்டிக்கொண்டு மதீனாவிலிருந்து வெளியேறுவர். ஆயினும், மதீனாவே அவர்களுக்குத் சிறந்ததாகும்; அவர்கள் அறிந்திருந்தால்!
பின்னர் யமன் வெற்றி கொள்ளப்படும்; உடனே ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாருடன் வாகனங்களை விரட்டிக்கொண்டு மதீனாவிலிருந்து வெளியேறுவர். ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும்; அவர்கள் அறிந்திருந்தால்!
பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்; உடனே ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாருடன் வாகனங்களை விரட்டிக்கொண்டு மதீனாவிலிருந்து வெளியேறுவர். ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும்; அவர்கள் அறிந்திருந்தால்!
இதை சுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2684. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யமன் நாடு வெற்றி கொள்ளப்படும்; உடனே ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாரையும் தமது கட்டுப்பாட்டில் உள்ளோரையும் ஏற்றிக்கொண்டு வாகனங்களை விரட்டியவர்களாக மதீனாவிலிருந்து வெளியேறிவிடுவர். ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும்; அவர்கள் அறிந்திருந்தால்! பின்னர் "ஷாம்" (சிரியா) நாடு வெற்றி கொள்ளப்படும்; உடனே ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாரையும் தமது கட்டுப்பாட்டில் உள்ளோரையும் ஏற்றிக்கொண்டு வாகனங்களை விரட்டியவர்களாக மதீனாவிலிருந்து வெளியேறுவர்; ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும்; அவர்கள் அறிந்திருந்தால்! பின்னர் இராக் வெற்றி கொள்ளப்படும்; உடனே ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாரையும் தமது கட்டுப்பாட்டில் உள்ளோரையும் ஏற்றிக்கொண்டு வாகனங்களை விரட்டியவர்களாக மதீனாவிலிருந்து வெளியேறுவர். ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும்; அவர்கள் அறிந்திருந்தால்!
இதை சுஃப்யான் பின் அபீஸுஹைர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 91 மதீனாவாசிகள் மதீனாவை விட்டுச் செல்லும்போது.
2685. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைப் பற்றி (பின்வருமாறு) கூறினார்கள்:
மதீனாவாசிகள், மதீனா சிறந்த நிலையில் இருக்கும்போதே, அதை வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் சரணாலயமாக விட்டுச் செல்வர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் (ஆகிய நான்) கூறுகிறேன்:
(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களின் ஆசிரியரான) இந்த அபூஸஃப்வான் என்பாரின் பெயர் அப்துல்லாஹ் பின் அப்தில் மலிக் என்பதாகும். அநாதையாயிருந்த அவர், இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்களின் பொறுப்பில் பத்து ஆண்டுகள் வளர்ந்தார்.
அத்தியாயம் : 15
2686. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனா சிறந்த நிலையில் இருக்கும்போதே அதைவிட்டு மக்கள் சென்றுவிடுவர். வன விலங்குகளும் பறவைகளும் அதைச் சூழ்ந்து கொண்டிருக்கும். பின்னர் "முஸைனா" குலத்தைச் சேர்ந்த இரு இடையர்கள் தம் ஆடுகளைச் சப்தமிட்டு ஓட்டிக்கொண்டு மதீனாவை நோக்கி வருவர். அங்கு வனவிலங்குகளையே காண்பர். (அல்லது வெறுமையானதாகக் காண்பர்.) அவர்கள் "அல்வதா"மலைக்குன்றை அடைந்ததும் மூர்ச்சையுற்று முகங்குப்புற விழுந்துவிடுவர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 92 (நபியவர்களின்) கப்றுக்கும் மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி, சொர்க்கப் பூஞ்சோலைகளில் ஒரு பூஞ்சோலையாகும்.
2687. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூஞ்சோலைகளில் ஒரு பூஞ்சோலையாகும்.
இதை அப்துல்லாஹ் பின் ஸைத் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2688. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் எனது இல்லத்திற்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூஞ்சோலைகளில் ஒரு பூஞ்சோலையாகும்.
இதை அப்துல்லாஹ் பின் ஸைத் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2689. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூஞசோலைகளில் ஒரு பூஞ்சோலையாகும். எனது சொற்பொழிவு மேடையானது, எனது (அல்கவ்ஸ்ர்) தடாகத்தின் மீது அமைந்துள்ளது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 93 "உஹுத்”” மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம்.
2690. அபூஹுமைத் அப்துர் ரஹ்மான் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் "தபூக்" போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். பிறகு நாங்கள் (போரை முடித்துக்கொண்டு மதீனாவிற்கும் சிரியாவிற்கும் இடையே உள்ள) "வாதில் குரா" எனும் இடத்திற்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் விரைந்து மதீனா செல்லப் போகிறேன். எனவே, உங்களில் விரும்பியவர் என்னுடன் விரைந்து வரலாம். விரும்பியவர் (இங்கேயே) தங்கியிருக்கலாம்" என்று சொன்னார்கள். நாங்கள் புறப்பட்டு மதீனாவை நெருங்கியபோது, "இது "தாபா" (தூய நகரம்) ஆகும்; இது உஹுத் மலை; இது நம்மை நேசிக்கிறது. நாமும் அதை நேசிக்கிறோம்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 15
2691. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உஹுத்" மலை நம்மை நேசிக்கிறது. நாமும் அதை நேசிக்கிறோம்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹுத் மலையைக் கூர்ந்து நோக்கி, "உஹுத் மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 94 மக்கா மற்றும் மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு.
2692. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராம்" பள்ளிவாசலைத் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2693. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராம்" பள்ளிவாசலைத் தவிர!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2694. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராம்" பள்ளிவாசலைத் தவிர! ஏனெனில்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைத்தூதர்களில் இறுதியானவர் ஆவார்கள். அவர்கள் எழுப்பிய பள்ளிவாசல், (இறைத் தூதர் எழுப்பிய) பள்ளிவாசல்களில் இறுதியானதாகும்.
(இதை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) மற்றும் அபூஅப்தில்லாஹ் அல்அஃகர்ரு (ரஹ்) ஆகியோர் கூறினர்:
(பொதுவாக) அபூஹுரைரா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தே (ஹதீஸ்களை) அறிவிப்பார்கள் என்பதில் நாங்கள் ஐயம் கொள்ளவில்லை. அதுவே இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து உறுதிப்படுத்திக்கொள்ள நாங்கள் தவறியதற்குக் காரணமாகும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் இறந்த பிறகு நாங்கள் இந்த ஹதீஸ் குறித்து விவாதித்தோம். அதைப் பற்றி நாம் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் பேசாமலிருந்தது குறித்து எங்களை நாங்களே நொந்து கொண்டோம். அதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றிருந்தால், அதை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்திருப்பார்களே என்று கூறினோம். இந்நிலையில் எங்களிடம் அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் பின் காரிழ் (ரஹ்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். அவர்களிடம் நாங்கள் இந்த ஹதீஸையும் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து நாங்கள் கேட்கத் தவறிய அந்த விஷயத்தையும் தெரிவித்தோம். அப்போது அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் பின் காரிழ் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் இறைத்தூதர்களில் இறுதியானவன் ஆவேன்; எனது பள்ளிவாசல் (இறைத்தூதர்கள் எழுப்பிய பள்ளிவாசல்களில்) இறுதிப் பள்ளிவாசல் ஆகும் என்று கூறினார்கள் என்றே அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2695. யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் தொழுவதன் சிறப்புக் குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதைத் தாங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இல்லை;ஆயினும், அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் பின் காரிழ் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் என என்னிடம் தெரிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலில் தொழுவதானது, மற்ற பள்ளிவாசல்களில் "ஆயிரம் தொழுகைகள் தொழுவதைவிட" அல்லது "ஆயிரம் தொழுகைகள் தொழுவதைப் போன்று" சிறந்ததாகும். (மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராம்" பள்ளிவாசலைத் தவிர!
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2696. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விடச் சிறந்ததாகும். (மக்காவிலுள்ள) "மஸ்ஜிதுல் ஹராம்" பள்ளிவாசலைத் தவிர!
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2697. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் கடுமையாக நோய்வாய்ப்பட்ட போது, "அல்லாஹ் எனக்கு நிவாரணமளித்தால் நிச்சயம் நான் புறப்பட்டுச் சென்று (ஜெரூசலத்திலுள்ள) "பைத்துல் மக்திஸ்" பள்ளிவாசலில் தொழுவேன்" என்று கூறினார். அவருக்கு உடல் நலம் ஏற்பட்டது. பின்னர் அவர் பயணம் செல்ல ஆயத்தமாகி நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்களிடம் சென்று சலாம் சொன்னார்; அ(வர்களிடம் தமது பயணத்திற்கான காரணத்)தைத் தெரிவித்தார். அப்போது மைமூனா (ரலி) அவர்கள் "நீ அமர்ந்து, (பயணத்திற்காக) நீ தயார் செய்து வைத்தவற்றை (இங்கேயே) சாப்பிடு. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்குச் சென்று தொழு. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இ(ந்த மஸ்ஜிதுந் நபவீ ஆலயத்)தில் தொழுவதானது, மற்ற பள்ளிவாசல்களில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதைவிடச் சிறந்ததாகும்; கஅபா (அமைந்துள்ள "மஸ்ஜிதுல் ஹராம்") பள்ளிவாசலைத் தவிர" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 95 மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் மேற்கொள்ளப்படாது.
2698. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (ஜெரூசலத்திலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்து) பயணம் மேற்கொள்ளப்படாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2699. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், அதில் "மூன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே பயணம் மேற்கொள்ளப்படும்" என (நேர்மறை வாசகத்துடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2700. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கஅபா (அமைந்துள்ள) பள்ளிவாசல், எனது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், (ஜெரூலத்திலுள்ள) ஈலியா (அல்அக்ஸா) பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே (அதிக நன்மை நாடி) பயணம் மேற்கொள்ளப்ப(ட வேண்)டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 96 "இறையச்சத்தின் மீது நிறுவப்பெற்ற பள்ளிவாசல்" என்பது, மதீனாவிலுள்ள "மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசல் ஆகும்.
2701. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அப்துர் ரஹ்மான் பின் அபீ சயீத் அல்குத்ரீ (ரஹ்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அவர்களிடம் நான், "இறையச்சத்தின் மீது நிறுவப்பெற்ற பள்ளிவாசல் (என 9:108ஆவது வசனத்தில் கூறப்பெற்றுள்ளது) குறித்து தங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் எவ்வாறு செவியுற்றீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் சயீத் (ரஹ்) அவர்கள், "என் தந்தை (அபூ சயீத் அல்குத்ரீ - ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரது இல்லத்தில் இருந்தபோது அவர்களிடம் நான் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! (மஸ்ஜிதுந் நபவீ மற்றும் மஸ்ஜிதுல் குபா இவ்விரு பள்ளிவாசல்களில் இறையச்சத்தின் மீது நிறுவப்பெற்ற பள்ளிவாசல் (என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளது) எது?" என்று கேட்டேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கைப்பிடி சிறு கற்களை அள்ளி, அதைப் பூமியில் எறிந்தார்கள். பிறகு இதோ உங்களது இந்தப் பள்ளிவாசல்தான் என்று (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலைக் குறிப்பிட்டுச்) சொன்னார்கள்" என்றார்கள். நான் (அப்துர் ரஹ்மான் பின் அபீ சயீத் (ரஹ்) அவர்களிடம்) "தங்கள் தந்தையிடமிருந்து நானும் இவ்வாறே செவியுற்றேன் என நான் உறுதிமொழிகிறேன்" என்று கூறினேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், அப்துர் ரஹ்மான் பின் அபீசயீத் (ரஹ்) அவர்களைப் பற்றிய குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 15
பாடம் : 97 "குபா"ப் பள்ளிவாசலின் சிறப்பும் அதில் தொழுவது மற்றும் அதைத் தரிசிப்பதன் சிறப்பும்.
2702. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்திலும் நடந்தும் "குபா"விற்குச் செல்வார்கள்.
அத்தியாயம் : 15
2703. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்திலும் நடந்தும் "குபா"ப் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் "அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்" எனும் குறிப்பு அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களிடமிருந்து அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2704. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்திலும் நடந்தும் "குபா"விற்குச் செல்வார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2705. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்திலும் நடந்தும் "குபா"விற்குச் செல்வார்கள்.
அத்தியாயம் : 15
2706. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்திலும் நடந்தும் "குபா"விற்குச் செல்வார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2707. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் "குபா"விற்குச் செல்வார்கள். "நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் அங்கு செல்வதை நான் பார்த்தேன்" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.
அத்தியாயம் : 15
2708. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் "குபா"விற்குச் செல்வார்கள். அங்கு வாகனத்திலும் நடந்தும் செல்வார்கள்" என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இவ்வாறே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் செய்துவந்தார்கள்.
அத்தியாயம் : 15
2709. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "ஒவ்வொரு சனிக்கிழமையும்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
Previous Post Next Post