பித்அத் அதன் வகைகள் சட்டங்கள்

பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன?

ஆசிரியர்:
பஃழீலதுஷ் ஷைகு அல்அல்லாமா ஸாலிஹ் இப்னு பவ்ஸான் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ்

தமிழாக்கம்:
முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப்



முன்னுரை

அகிலத்தாரின் அதிபதியான வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், பின்பற்றி வாழ்வதை நமக்கு கட்டளையிட்டிருக்கும் அவன், (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்குவதை நமக்கு தடை செய்திருக்கின்றான். எந்தத் தூதரை பின்பற்றப்படுவதற்காக அவன் அனுப்பி வைத்தானோ, அந்தத் தூதராகிய முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் தோழர்கள், குடும்பத்தவர்கள் மீதும், அன்னாரைப் பின்பற்றி நடந்த ஏனையோர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

பித்அத்தின் வகைகள் பற்றி விளக்கும் இந்நூல், அவைகளைத் தடுப்பதின் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகிறது. இந்நூலின் மூலம் எதிர்ப்பார்ப்பது அல்லாஹ்விற்கு, அவனது வேதத்திற்கு, அவனது தூதருக்கு, முஸ்லிம் தலைவர்களுக்கு, பொதுவாக அனைவருக்கும் நலவை நாடுவதின் அவசியத்தையாகும்.

மொழிப் பெயர்த்தோனின் உரை

இரட்சகனான வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனது சாந்தியும் சமாதானமும் இவ்வையகத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அன்னாரது தோழர்கள், குடும்பத்தவர்கள், அன்னாரது வழியை இறுதிநாள்வரை பின்பற்றும் அனைவர் மீதும் உண்டாவதாக!

உமர் (ரலி) அவர்களிடத்தில் வந்த ஒரு யூதர், “அமீருல் முஃமினீன் அவர்களே! உங்கள் வேதத்தில் ஒரு வசனம் உள்ளது. நமது வேதத்தில் அந்த வசனம் அருளப்பட்டிருக்குமானால் நாம் அந்நாளை பெருநாள் தினமாக கொண்டாடியிருப்போம்” என்றார். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் அது எந்த வசனம் எனக் கேட்டார், அதற்கு அவர் “இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன், மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்” என்ற வசனம் எனக் கூறினார் (5:3). அதற்கு உமர் (ரலி) அவர்கள் அந்த வசனம் அருளப்பட்ட நாளையும் அது எங்கு அருளப்பட்டது என்பதையும் நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரபாவில் இருக்கும்போது ஒரு வெள்ளிக்கிழமை நாளில் அது அருளப்பெற்றது என்றார். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

நான் இந்தச் செய்தியை இங்கு குறிப்பிடுவதன் நோக்கம், ஒரு யூதர் கூட மேற்கூறப்பட்ட வசனத்தின் மகத்துவத்தை விளங்கியிருந்தார். ஏனெனில் மார்க்கம் பரிபூரணமாகி விட்டது என்று சொல்லப்பட்டுவிட்டால் அதில் எந்த ஒன்றையும் கூட்டவோ குறைக்கவோ முடியாது. இதற்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களில் அவர்கள் இடைச்செருகல் செய்ய ஆரம்பித்ததுதான் அவர்கள் வழி கெட்டுச் செல்வதற்கும், அல்லாஹ்வின் கோபத்தை பெறுவதற்கும் காரணமாக அமைந்தது.

நான் ஒரு பரிபூரணப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் இருக்கின்றேன் என்பதில் எந்த ஒரு முஸ்லிமிடமும் கடுகளவும் சந்தேகமில்லை. அப்படி அவன் சந்தேகிப்பானானால் அவன் முஸ்லிம் என்று சொல்வதற்கே தகுதியற்றவனாக ஆகிவிடுகின்றான். ஆனால் பெரும்பாலான முஸ்லிம்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்பொழுது இதை வெறும் கொள்கையாக ஏற்றிருக்கின்றார்கள் போன்றுதான் தோன்றுகிறது. காரணம் அந்த அளவு பித்அத்துகள் அவர்களிடத்தில் மலிந்து காணப்படுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின்போது தனது தோழர்களிடம் கேட்டது “நான் உங்களுக்கு எத்திவைத்து விட்டேனா”? அங்கிருந்தோர் ஆம் என்று கூறியபோது “அல்லாஹ் நீயே இதற்கு சாட்சியாக இரு” என்று மூன்று முறை கூறினார்கள். எவன் ஒருவன் பித்அத்துகளை செய்கின்றானோ அவன் இந்த கூற்று பொய்யானது எனக் கூறிவிட்டுத் தான் அவைகளைச் செய்ய முன்வர வேண்டும்.
قال الإمام مالك رحمه الله: من ابتدع في الإسلام بدعة يراها حسنة فقد زعم أن محمدا خان الرسالة لأن الله يقول “اليوم أكملت لكم دينكم (المائدة: 3)
الإعتصام للشاطبي رحمه الله

இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: எவன் இஸ்லாத்தில் ஒரு பித்அத்தை உருவாக்கி அதை நன்மையாகக் கருதுகின்றானோ, அவன் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது தூதுத்துவப் பணியில் மோசடி செய்துவிட்டதாகத் தான் வாதிடுகின்றான். ஏனெனில் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்: இன்றைய தினம் நான் உங்களது மார்க்கத்தை பூர்த்தியாக்கி விட்டேன்” (அல்மாயிதா: 3). (அல்இஃதிஸாம், ஷாதிபிக்குரியது).

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் கூற்று பித்அத்தின் அபாயத்தை அழகாகப் படம் பிடித்து காட்டியிருக்கும் என நம்புகிறேன்.

உண்மையிலேயே ஒருவன் நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு வைத்திருப்பானானால் நபியவர்கள் காட்டித்தராத எந்த ஒரு செயலையும் ஒருபோதும் செய்வதற்கு அவன் முன்வர மாட்டான். ஆனால் நிலமை தலைகீழாக மாறி இருக்கின்றது. வணக்க வழிபாடுகள், குழந்தை பிறந்தது முதல், ஒரு ஜனாஸாவை கொண்டு போய் அடக்குகின்ற வரை பலவிதமான பித்அத்துகள் முஸ்லிம் உம்மத்தில் ஆதிக்கம் செலுத்தியிருப்பதை பார்க்கின்றோம்.

நாம் ஒவ்வொரு நன்மையான காரியத்தை செய்வதும் நாளை மறுமையில் வெற்றி பெற வேண்டுமென்பதற்கே. ஆனால் அந்த செயல்கள் நபியுடைய சுன்னாவின் நிழலில் செய்யப்படவில்லையானால் தோல்வியைத்தான் பெற்றுத்தரும் என்பதை பின்வரும் செய்தியை நீங்கள் படித்துப் பார்ப்பதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

நாளை மறுமையில் நபியவர்கள் ஹவ்ழிலிருந்து தனது திருக்கரத்தால் தண்ணீரைப் புகட்டிக் கொண்டிருப்பார்கள் “அங்கு அந்தத் தண்ணீரை அருந்தியவருக்கு தாகமே ஏற்படாது” ஆனால் அங்கு வரும் சிலர் வானவர்களால் தடுக்கப்படுவர். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், அவர்களை விடுங்கள் அவர்கள் எனது சமூகத்தினர் என கூறுவார், உங்களுக்குப் பின் இவர்கள் (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கிய புதியவைகளை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று வானவர்கள் கூறுவர். எனக்குப் பின் மார்க்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியவர்களுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும் என்று நபியவர்கள் கூறிவிடுவார்கள்”. (புஹாரி).

நாளை மறுமையில் மிகப்பெரிய ஒரு பாக்கியத்தை இழக்கப் போகின்றவர்கள் மார்க்கத்தின் பெயரால் புதிது புதிதாக உருவாக்கி செய்பவர்களே. எனவே ஒவ்வொருவரும் இதில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஷைத்தானின் மிகப் பெரிய ஒரு சூழ்ச்சியை அல்லாஹ் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்:

“அல்லாஹ் வின் மீது சத்தியமாக, உமக்கு முன்னிருந்த வகுப்பார்களுக்கும் நாம் (தூதர்களை) அனுப்பி வைத்தோம் – ஆனால் ஷைத்தான் அவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்களையே அழகாக்கி வைத்தான் – ஆகவே இன்றைய தினம் அவர்களுக்கும் அவனே உற்ற தோழனாக இருக்கின்றான் – இதனால் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு” (அந்நஹ்ல்: 63).

“அவர்களது தீய செயல்களை ஷைத்தான் அழகாக்கி வைத்தான்” என்பதை அல்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடுகின்றான். இது மிகக் கவனத்துடன் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் அதிகமாக ஷிர்க்கை, பித்அத்தை செய்பவர்களுக்கு ஷைத்தான் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அழகுப்படுத்திக் காட்டியிருக்கின்றான். அதனாலோ அப்படியானவர்களுக்கு குர்ஆன் சுன்னாவின் ஆதாரங்களின் அடிப்படையில் அதன் அபாயங்களை எடுத்துரைக்கும்போது கூட அவ்வாறான செயல்களை விடுவதற்கு முன் வருவதில்லை.

மற்றும் சிலர் புதுமையான விளக்கங்களைச் சொல்கின்றனர்.

உங்கள் கரங்களில் தவளும் இந்நூல் பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள், இஸ்லாத்தில் அதன் சட்டம், நபியவர்கள் தனது ஒவ்வொரு உரையிலும் எச்சரிக்க மறவாத ஒரு விடயம். ஸஹாபாக்கள், மற்றும் இமாம்கள் பித்அத்வாதிகள் விடயத்தில் எந்தளவு கடுமை காட்டியிருக்கின்றார்கள் போன்ற விடயங்களை சுருக்கமாக விளக்குகின்றது.

எனவே எனது சக்திக்குட்பட்ட வகையில் எளிய தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன். தமிழறிந்த சகோதரர்கள் அனைவரும் இதைப்படித்து பயன்பெறவேண்டுமென அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன். இதை சரிப்பார்த்துத் தந்த மௌலவி ஜமால் மதனி அவர்களுக்கும், மற்றும் ஏனைய சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக! இம்மொழிபெயர்ப்பில் என்னையறியாமல் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருப்பின் அதனை சுட்டிக்காட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தங்களின் இஸ்லாமிய ஊழியன்,
முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப் (ஸீலானி),
இஸ்லாமிய அழைப்பாளன், 
அல்-ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.



பித்அத் என்றால் என்ன?

‘பித்அத்’ என்பது பிதஃ என்ற வார்தையில் இருந்து பிறந்ததாகும், பித்அத் என்பது எந்த முன்மாதிரியும் இன்றி எடுக்கப்பட்ட ஒன்றைக் குறிக்கும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதைப் போன்று: ‘வானங்களையும் பூமியையும் எந்த முன்மாதிரியுமின்றி படைத்தவன்’ (பகரா 2: 117)

மற்றோர் இடத்தில்: ‘(நபியே) கூறுவீராக! நான் தூதர்களில் ஏதும் புதியவன் கிடையாது ‘ (அல் அஹ்காப்ஃ 18: 9). 

அல்லாஹ்விடமிருந்து அடியார்களுக்கு செய்தியைக் கொண்டு வந்தவர்களில் நான் ஏதும் ஆரம்பமானவன் கிடையாது. எனக்கு முன்னரும் பல தூதர்கள் வந்து சென்று விட்டனர்.

அரபியில் : ‘இப்ததஅ புலானுன் பித்அதன்’ என்றால் ஒருவன் புதிதாக ஒன்றை ஆரம்பித்து விட்டான் என்பதாகும்.

பித்அத்தை இரண்டு வகைகளாக பார்க்கலாம்: ஒன்று அன்றாட வாழ்க்கையில் காணப்படும் நவீனங்கள், இது அனுமதிக்கப்பட்டதாகும். 

இரண்டாவது: மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும் பித்அத்துகள் இது தடுக்கப்பட்டதாகும். ஏனெனில் மார்க்கம் என்பது பரிபூரணமானதாகும். ‘எவர் மார்க்கத்தில் நாம் ஏவாத ஒன்றை புதிதாக ஏற்படுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்படும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்.) 

மற்றோர் அறிவிப்பில்: ‘எவர் நாம் கட்டளையிடாத ஒன்றை செய்வாரோ அது நிராகரிக்கப்படும்’ (முஸ்லிம்)

மார்க்கத்தில் இவ்வகையான அனைத்து பித்அத்துகளுக்குரிய சட்டம்

மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் அனைத்து பித்அத்துகளும் வழிகேடும், தடுக்கப்பட்டதுமாகும். ‘நான் உங்களுக்கு புதியவைகளை எச்சரிக்கின்றேன், ஒவ்வொரு புதியவைகளும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ தாவுத் திர்மிதி).

‘எவர் மார்க்கத்தில் நாம் கட்டளையிடாத ஒன்றை புதிதாக ஏற்படுத்துவாரோ அது நிராகரிக்கப்படும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

மற்றொரு அறிவிப்பில்: ‘எவர் நாம் கட்டளையிடாத ஒன்றை செய்வாரோ அது நிராகரிக்கப்படும்’

இந்த ஹதீஸ்கள் மூலம் அறியப்படுவது மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்படும் அனைத்து புதியவைகளும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடும் மறுக்கப்பட வேண்டியதுமாகும், இதிலிருந்து விளங்குவது கொள்கையிலும், வணக்க வழிபாடுகளிலும் பித்அத் என்பது தடுக்கப்பட்டதாகும். பித்அத்தைப் பொறுத்து ஹராத்தில் ஏற்றத் தாழ்வு இருக்கிறது.

அவைகளில் தெளிவாக, குப்ரின் பால் இட்டுச் செல்லக் கூடியவைகள் இருக்கின்றன, உதாரணமாக கப்றுகளை வலம் வருவது அதில் அடக்கப்பட்டிருப்பவரின் நெருக்கத்தைப் பெறுவதற்காக, அவைகளுக்கு நேர்ச்சை செய்வது, அறுத்துப் பலியிடுவது, அவைகளிடம் பிரார்த்திப்பது, உதவி தேடுவதைப் போல. ஜஹ்மிய்யாக்களின், முஃதஸிலாக்களின் வரம்பு மீறிய சிந்தனைப் போக்குகள் போல.

அவைகளில் இன்னும் சில ஷிர்க்கின் பால் இட்டுச் செல்பவைகள் கப்றுகளின் மீது கட்டிடம் எழுப்புவது, அங்கு தொழுகைகளை நிறைவேற்றுவது, பிரார்த்தனைகளில் ஈடுபடுவது.

அவைகளில் மோசமான சிந்தனைகள்: மார்க்கத்தை தவறாகப் புரிந்து கொண்ட கவாரிஜ்கள், கத்ரிய்யாக்கள், முர்ஜியாக்களின் பித்அத்தான சொற்கள் சிந்தனைப்போக்குகளைப் போன்று.

அவைகளில் இன்னும் சில பாவமானவைகள். உலகை முழுமையாகத் துறந்து விடுதலைப் போல, வெயிலில் நின்ற நிலையில் நோன்பு வைப்பதைப் போல, ஆசைகளை முழுமையாகத் துண்டிக்கும் விதமாக காயடித்துக் கொள்வதை போல.

மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது!

பித்அத்தை யாராவது நல்ல பித்அத் கெட்ட பித்அத் என்று பிரிப்பாரானால் அவர் மிகப் பெரிய தவறை செய்தவராவார், இன்னும் நபி (ஸல்) அவர்களின் சொல்லுக்கு மாற்றம் செய்தவராவார். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ‘ஒவ்வொரு பித்அத்தும் வழி கேடாகும்’ எனக்கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களின் தீர்ப்பு ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடு என்பது தான். ஆனால் ஒருவன், ‘ஒவ்வொரு பித்அத்தும் வழி கேடு கிடையாது, நல்ல பித்அத்துகளும் இருக்கின்றன’ என்று கூறுவானானால் இது மிகப்பெரிய தவறாகும்.

ஹாபிழ் இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் ‘ஒவ்வொரு பித்அத்தும் வழி கேடு’ என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று நபியுடைய குறைந்த வார்த்தைகளின் செறிந்த கருத்தை உடையதாகும். இது இஸ்லாத்தின் மகத்தான ஒரு அடிப்படையைச் சொல்கிறது, ‘எவர் மார்க்கத்தில் நாம் ஏவாத ஒன்றை புதிதாக ஏற்படுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்படும்’ என்பதும், அதை இன்னும் தெளிவாகக்காட்டுகிறது. புதிதாக ஏற்படுத்தப்படுபவைகளுக்கு மார்க்கத்தின், முலாம் பூசப்படுகிறது, ஆனால் அவைகளுக்கு மார்க்கத்தின் எந்த அடிப்படையும் கிடையாது, அவைகள் வழிகேடாகும், அதை யார் ஏற்படுத்துகிறார்களோ அது அவர்களின் பாலே மீளக்கூடியதுமாகும். மார்க்கம் அப்படியான செயல்களை விட்டு முழுமையாக நீங்கியதாகும். அவை கொள்கை சார்ந்தவையாக இருக்கலாம், அல்லது செயல்கள் சார்ந்தவையாக இருக்கலாம், அல்லது வெளிப்படையான, மறைவான சொற்கள் சார்ந்தவையாக இருக்கலாம் அனைத்தும் இது உள்ளடக்கும்.

நல்ல பித்அத்துக்கு இவர்களிடம் இருக்கும் ஒரே ஆதாரம். உமர் (ரலி) அவர்களின் தராவீஹ் தொழுகை பற்றிய கூற்றாகும்: (இது ஒரு நல்ல பித்அத்தாகும்). இன்னும் அவர்கள் சொல்வது ஸலபுகள் நிராகரிக்காத மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பல விடயங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஒரே ஏடாக குர்ஆனை ஒன்று சேர்த்தது, ஹதீஸை எழுதியது அதை ஒன்று சேர்க்க ஏற்பாடுகள் செய்தது.

இவைகளுக்கெல்லாம் பதில், இவர்கள் சொல்கின்ற இந்த அனைத்துக்கும் மார்க்கத்தில் ஒரு அடிப்படை உள்ளது, இவைகள் புதியவைகள் அல்ல. உமர் (ரலி) அவர்களின் (இது ஒரு நல்ல பித்அத்தாகும்). என்ற கூற்றைப் பொறுத்த வரையில் அது மொழி ரீதியாக நாடப்பட்ட ஒரு வார்த்தையே தவிர மார்க்க ரீதியாக நாடப்பட்டதல்ல. அதன் பால் மீள்வதற்கு மார்க்கத்தின் எந்த அடிப்படையும் கிடையாது, அது பித்அத் என சொல்லப்படுமானால் மொழி ரீதியானதே தவிர மத ரீதியானது கிடையாது. ஏனெனில் மார்க்கத்தில் எந்த அடிப்படையுமில்லாத ஒன்றைத்தான் பித்அத் எனக் கருதப்படும்.

குர்ஆனை ஒரு ஏடாக ஒன்று சேர்த்ததற்கு மார்க்கத்தில் அடிப்படை இருக்கிறது, ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை எழுதுவதற்கு ஏவினார்கள், அவை பல இடங்களில் எழுதிவைக்கப்பட்டிருந்தன. அவைகளைத் தான் ஸஹாபாக்கள் பாதுகாக்கவேண்டுமெனக் கருதி ஒரே ஏட்டுக்கு ஒன்று சேர்த்தார்கள். 

தராவீஹைப் பொறுத்த வரையில் நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு பல இரவுகள் தொழுவித்தார்கள். இறுதியில் அது கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தான் விட்டார்கள். ஸஹாபாக்கள் நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே தனித் தனியாக பிரிந்து அதை நிறைவேற்றிக்கொண்டு தான் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் உமர் (ரலி) அவர்கள், அவர்களை ஒரே இமாமுக்குக் கீழ் ஒன்று படுத்தினார்கள் நபியவர்களுக்குப் பின்னால் இருந்து தொழுததைப் போல, இது மார்க்கத்தில் ஒன்றும் புதியது கிடையாது. 

ஹதீஸ்களை எழுதியதற்கும் மார்க்கத்தில் ஒரு அடிப்படை இருக்கிறது, ஹதீஸ்களை எழுதுவதற்கு சிலர் நபியிடத்திலே அனுமதி கேட்ட பொழுது, ஒரு சிலருக்கு நபியவர்கள் அனுமதி வழங்கினார்கள், ஆனால் நபியுடைய காலத்தில் பொதுவாக ஹதீஸ்களைப் பதிவு செய்வது தடை செய்யப்பட்டிருந்தது, காரணம் அது குர்ஆனுடன் கலந்து விடுமோ என்ற அச்சத்தில் தான். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் இந்த அச்சம் நீங்கி விட்டது ஏனெனில் குர்ஆன் பரிபூரணமாகி விட்டது. அதற்குப் பின் சுன்னாவை பாதுகாக்கும் நோக்கில் முஸ்லிம்கள் அதை ஒன்று திரட்டினர்.

அல்லாஹ்வுடைய வேதத்துக்கும் நபியுடைய சுன்னாவுக்கும் தீயவர்களால் எந்த கலங்கமும் வந்து விடக்கூடாது என்பதற்காக அதை பாதுகாப்பதில் முழு முயற்சி எடுத்துக் கொண்ட அந்த உத்தமர்களுக்கு அல்லாஹ் சிறந்த கூலியை வழங்குவானாக!

முஸ்லிம்களின் வாழ்க்கையில் பித்அத்தின் தாக்கமும், அவைகளுக்குரிய காரணங்களும்

இதன் கீழ் இரண்டு விடயங்கள் ஆய்வு செய்யப்படும்:

முதலாவது: பித்அத்துகள் தோன்ற ஆரம்பித்த காலம்:

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவது போன்று: ‘வணக்க வழிபாடுகளில், கத்ருடைய விடயத்தில், அறிவு சார்ந்த விடயங்களில், மற்றும் ஏனைய விடயங்களில் பித்அத்துகள் தாக்கம் செலுத்த ஆரம்பித்தது குலபாஉர் ராஷிதீன்களின் ஆட்சியின் இறுதிப் பகுதியில் தான். நபி (ஸல்) அவர்களின் கூற்று இங்கு கவனிக்கத்தக்கதாகும். ‘எனக்குப் பின் வாழக்கூடியவர்கள் பல கருத்து முரண்பாடுகளைக் காண்பார்கள், எனது சுன்னாவை பற்றிப்பிடித்துக் கொள்ளுமாறும், எனக்குப் பின்னர் நேர்வழி சென்ற கலீபாக்களின் சுன்னாவை பற்றிப்பிடிக்குமாறும் உங்களுக்கு நான் உபதேசம் செய்து கொள்கின்றேன்.’ (மஜ்மூஉல் பதாவா: 354- 10 ).

முதலாவது உருவாகிய பித்அத்: கதரிய்யா, முர்ஜிஆ, ஷீயா, கவாரிஜ் இவைகள் இரண்டாவது நூற்றாண்டிலே ஸஹாபாக்கள் உயிருடன் இருக்கும் போதே தோன்றிவிட்டன. இவைகளை ஸஹாபாக்கள் கடுமையாக நிராகரித்தனர். அதற்குப் பின் முஃதஸிலாக்களின் பித்அத்துகள் தோன்றின. முஸ்லிம் உம்மாவில் குழப்பங்கள் தோன்ற ஆரம்பித்தன, பல்வேறு பட்ட சிந்தனைகளும் தோன்ற ஆரம்பித்தன. பித்அத்துக்கு, மனோ இச்சைக்கு அடிபணியும் ஒரு மோசமான நிலை தோன்றியது. ஸுபித்துவத்தின் பித்அத்துகள் உருவாகின, சிறப்பான நூற்றாண்டுகளுக்குப் பின் கப்ருகளின் மீது கட்டிடம் எழுப்பும் பித்அத்துகள் உருவாகின. காலப்போக்கில் வித விதமான பித்அத்துகள் தோன்ற ஆரம்பித்தன.

பித்அத்துகள் தோன்றிய இடம்

பித்அத்துகள் முஸ்லிம் நாடுகளில் உருவாகத் தொடங்கியது. இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்படுவது போல: ‘ஸஹாபாக்கள் வாழ்ந்த மிகப் பெரும் நகரங்கள் ஐந்தைக் குறிப்பிடலாம் அவற்றிலிருந்து அறிவின், ஈமானின் ஒளிச்சுடர்கள் வெளிப்பட்டன. அவைகள் இரு புனித பூமிகள், இரண்டு ஈராக்குகள், மற்றும் ஷாமைக் குறிப்பிடலாம். அவைகளிலிருந்து தான் குர்ஆன், ஹதீஸ், பிக்ஹ், இபாதா இவைகளை ஒட்டியுள்ள மார்க்கத்தின் விடயங்கள் ஒளிவீசின. மதீனாவைத் தவிர மேற்குறிப்பிட்ட அதே நகரங்கங்களிலிருந்து தான் பித்அத்தின் வேர்கள் முளைக்க ஆரம்பித்தன. 

கூபாவில் ஷீயாக்கள், முர்ஜியாக்கள் போன்ற வழி கெட்ட பிரிவினர் தோன்றினர், அதற்குப் பின் தான் ஏனைய இடங்களுக்கு அவை பரவ ஆரம்பித்தன. பஸராவில் கதரிய்யாக்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழி கெட்ட பிரிவினர் தோன்றினர். இன்னும் மோசமான வழிபாட்டு முறைகளும் அங்கிருந்து தோன்ற ஆரம்பித்தன. அதற்குப் பின்னர் அவைகள் ஏனைய இடங்களுக்கு பரவ ஆரம்பித்தன. ஷாமில் சிலைகள் தோன்றின, கதரிய்யாக்களின் வழி கெட்ட சிந்தனைகள் அங்கு காணப்பட்டன, குராஸான் பகுதிகளில் ஜஹ்மியாக்களின் வழிகெட்ட சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்தன, இவை மோசமான பித்அத்துகளாகும். நபியவர்கள் வாழ்ந்த ஊரை விட்டு தொலைவிலுள்ள இப்பகுதிகளிலிருந்து, இவ்வாறான வழிகெட்ட பித்அத்துகள் உருவானது குறிப்பிடத்தக்கது. 

உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்குப்பின் ‘ஹரூரிய்யாக்கள்’ எனும் வழிகெட்ட பிரிவினர் தோன்றினர். மதீனாவைப் பொறுத்தவரையில் இந்த அனைத்து வழிகெட்ட பித்அத்துகளை விட்டும் ஈடேற்றம் பெற்றதாகக் காணப்பட்டது. அங்கு ஒரு சிலர் மறைவாக இவைகளுக்கு உட்பட்டிருந்தாலும், கதரிய்யாக்களின் ஏனைய சிந்தனைகளுக்கு உட்பட்டவர்களும் இழிவாகவே பார்க்கப்பட்டனர், மாற்றமாக கூபாவில் காணப்பட்ட ஷீயாக்களின், முர்ஜியாக்களின் சிந்தனைகள், பஸராவில் காணப்பட்ட முஃதஸிலாக்கள், நூதன அனுஷ்டான முறைகள், ஷாமில் காணப்பட்ட சிலைகள் இவைகள் அனைத்தும் பகிரங்கமாவவே பவனி வந்து கொண்டிருந்தன. 

நபி (ஸல்) அவர்களின், மதீனாவைப் பற்றி சொன்ன ஒரு கூற்று இங்கு நினைவு கூரத்தக்கது, தஜ்ஜாலுக்கு மதீனாவுக்குள் நுழைய முடியாது…….. இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் காலம் வரை அங்கு ஈமானும், அறிவும் காணப்பட்டன, அவர்கள் நாலாவது நூற்றாண்டைச் சார்ந்தவர்கள். (மஜ்மூஉல் பதாவா 303- 300/ 20). ஆனால் சிறப்பிற்குரிய மூன்று நூற்றாண்டுகள் என அறியப்பட்ட கால கட்டத்தில் மதீனாவுக்குள் எந்த ஒரு பித்அத்தும் வெளிப்படையாகக் காணப்படவில்லை. ஏனைய இடங்களிலிருந்து வெளிப்பட்டது போல் மார்க்கத்தின் அடிப்படை விடயங்களுள் எந்த ஒரு பித்அத்தும் அங்கிருந்து வெளிப்படவில்லை. 

பித்அத்துகள் தோன்றுவதற்குரிய காரணிகள்

அல்குர்ஆனையும், ஸுன்னாவையும் பற்றிப்பிடித்துக் கொள்ளும்போது ஒருவன் பித்அத்துகளிலிருந்தும் வழிகேடுகளிலிருந்தும் பாதுகாக்கப்டுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுகிறான்: ‘நிச்சயமாக இது எனது நேரான வழியாகும் இதைப் பின்பற்றுங்கள், பல வழிகளைப் பின்பற்றாதீர்கள் அது உங்களை நேரான வழியை விட்டு தூரப்படுத்தி விடும்’ (அல் அன்ஆம்: 6:153).

நபியவர்களின் கூற்று இங்கு கவனிக்கத்தக்கதாகும். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள்: நபியவர்கள் ஒரு கோட்டை வரைந்து இது அல்லாஹ்வின் வழி எனக்கூறினார்கள், பின்னர் வலது புறத்திலும் இடது புறத்திலும் பல கோடுகளை வரைந்தார்கள், பின்பு இது பல வழிகள் எனக்கூறினார்கள். இந்த ஒவ்வொரு வழிகளிலிருந்தும் ஷைத்தானின் அழைப்பு வந்து கொண்டே இருக்கும், பிறகு பின் வரும் வசனத்தை ஓதினார்கள்: ‘நிச்சயமாக இது எனது நேரான வழியாகும் இதைப் பின்பற்றுங்கள், பல வழிகளைப் பின்பற்றாதீர்கள் அது உங்களை நேரான வழியை விட்டு தூரப்படுத்தி விடும்’ (அல் அன்ஆம்: 6:153).

எவர்கள் குர்ஆனையும், ஸுன்னாவையும் புறக்கணித்து விட்டார்களோ அவர்கள் வழிகேட்டிலும் பித்அத்திலும் விழுவது உறுதியாகும். பித்அத்துகள் உருவாவதற்குரிய காரணங்களை கீழே சுருக்கமாகத் தரப்படுகின்றன: மார்க்க சட்ட திட்டங்களில் அறியாமை, மனோ இச்சையை பின்பற்றல், சில சிந்தனைப் போக்குகளில் பிடிவாதமாக இருத்தல், சில மனிதர்களின் கருத்துக்களில் பிடிவாதமாக இருத்தல், காபிர்களுக்கு ஒப்பாக நடத்தல் அவர்களை கண் மூடித்தனமாக பின்பற்றல்.


இந்த விடயங்கள் விரிவாக ஆராயப்படும்:

முதலாவது காரணி:

மார்க்க சட்ட திட்டங்களில் அறியாமை:
காலப்போக்கில் மனிதர்கள் நபித்துவ வழிகாட்டல்களிலிருந்து தூரமானதுடன், (மார்க்க) அறிவும் குன்றி விட்டது. அறியாமை பரவ ஆரம்பித்தது. நபி (ஸல்) அவர்கள் கூறிச் சென்றது போல, ‘எனக்குப்பின் வாழ்பவர்கள் பல முரண்பாடுகளைக் காண்பார்கள்’ (அபூதாவுத், திர்மிதி)

நபியுடைய மற்றுமொரு கூற்றாவது: ‘அல்லாஹ் அடியார்களிடமிருந்து ஒரே அடியாக அறிவைக் கைபற்றுவதில்லை, அல்லாஹ் அறிஞர்களின் (உயிர்களை) கைப்பற்றுதவதன் மூலம் தான் அறிவைக் கைப்பற்றுவான். எது வரையெனில் எந்த ஒரு அறிஞரும் இல்லை என்ற நிலை வரும் வரை, மக்கள் மௌட்டீகர்களை தலைவர்களாக எடுத்துக்கொள்வர் அவர்களிடம் கேள்விகளை கேட்பர் அவர்கள் அறிவின்றி தீர்ப்பளித்து அவர்களும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெடுத்து விடுவர்’ (ஜாமிஉல் பயானில் இல்மி வபழ்லிஹி எனும் இப்னு அப்துல் பர்ரின் நூலிலிருந்து, 180/1( .
 
இரண்டாவது காரணி:

மனோ இச்சையைப் பின்பற்றல்:
எவன் அல்குர்ஆனையும் ஸுன்னாவையும் புறக்கணித்து விடுகிறானோ அவன் மனோ இச்சைக்கு அடிமைபட்டு விடுகிறான். அல்லாஹ் தனது அருள் மறையில் குறிப்பிடுவது போன்று: ‘நபியே எவர்கள் உமக்கு செவி சாய்க்கவில்லையோ அறிந்து கொள்ளுங்கள் அவர்கள் தான் மனோ இச்சையைப் பின் பற்றக்கூடியோர். அல்லாஹ்வின் நேர் வழியை விட்டு எவர்கள் மனோ இச்சைக்கு அடிமையானார்களோ அவர்கள் வழிகெட்டவர்கள்’ (அல்கஸஸ்: 28:50).

மற்றுமோர் இடத்தில்: நபியே மனோ இச்சையைக் கடவுளாக எடுத்துக் கொண்டவரைப் பார்த்தீரா? அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு, இன்னும் அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்து விட்டான். எனவே அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? (ஜாஸியா: 45: 23). பித்அத்துகள் என்பதே மனோ இச்சைக்கு அடிபணிவது தான்.

மூன்றாவது காரணி:

மனிதர்களின் சிந்தனையில் பிடிவாதமாக இருத்தல்:
ஆதாரங்களைத் தேடுவது, சத்தியத்தை விளங்குவது இவைகளை விட்டு விட்டு மனிதர்களின் சிந்தனைகளில் பிடிவாதமாக இருத்தல். அல்லாஹ் தனது அருள் மறையில் இவ்வாறு கூறுகிறான்: ‘அல்லாஹ் அருளியதை பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், எமது பெற்றோரை எவ்வழியில் கண்டோமோ அவ்வழியையே பின்பற்றுவோம்’ (பகரா 2: 170).

கப்றுகளை வணங்கும், ஸுபியிஸ சிந்தனைகளுக்கு அடிமைப்பட்ட, மத்ஹபுகளில் ஊறிப்போயிருக்கின்ற பிடிவாதக்காரர்களின் இன்றைய நிலை இதுவா கத்தான் இருக்கின்றது. அவர்கள் கொண்டிருக்கும் தவறான கொள்கைகளை புரிய வைப்பதற்கு அல்குர்ஆன், ஸுன்னாவின் பக்கம் அழைக்கப்பட்டால், அவர்களின் மூதாதையர்கள், மத்ஹபுகள், அவர்களது ஷைகுமார்களைக் காட்டி அதில் பிடிவாதமாக இருப்பதைப் பார்க்கலாம்.

நான்காவது காரணி:

இறை நிராகரிப்பாளர்களுக்கு ஒப்பாக நடத்தல்:
பித்அத்துகளில் வீழ்வதில் இது மிக மோசமான நிலையாகும். அபீ வாகிதில்லைதி குறிப்பிடுவது போல், ‘நாம் அல்லாஹ்வின் தூதருடன் ஹுனைன் போருக்குச் சென்றோம். நாம் குப்ரிலிருந்து விடுபட்டு (இஸ்லாத்தில் நுழைந்த புதியவர்களாக இருந்தோம்). முஷ்ரிகீன்கள் தங்கிச் செல்லும், தங்கள் ஆயுதங்களை தொங்கவிடும் ஸித்ர் எனும் மரம் இருந்தது, அதற்கு ‘தாது அன்வாத்’ எனச் சொல்லப்பட்டது.

அந்த இடத்தை கடக்க நேரிட்ட போது அல்லாஹ்வின் தூதரே! முஷ்ரிகீன்களுக்கு தாது அன்வாத் இருப்பது போன்று நமக்கும் ஒரு தாது அன்வாத்தை ஏற்படுத்துங்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்: அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) மூஸாவிடத்தில் பனூ இஸ்ராயீல்கள் கேட்டது போன்றல்லவா நீங்கள் கேட்டீர்கள்: ‘அவர்களுக்கு ஒரு கடவுள் இருப்பது போன்று நமக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக என்று, (அதற்கு மூஸா) கூறினார் நிச்சயமாக நீங்கள் மடமையிலே இருக்கும் ஒரு சமுதாயம்’ (அல்அஃராப் 7: 138). ‘நீங்கள் முன் சென்றவர்களின் வழி முறையைப்பின் பற்றுவீர்கள்’ (திர்மிதி)

இச் செய்தியில் பனூ இஸ்ராயீல்களும், ஒரு சில நபித்தோழர்களும் காபிர்களுக்கு ஒப்பாகும் ஒன்றை, மோசமான ஒன்றை தங்கள் நபியிடம் கேட்டனர். அல்லாஹ்வை விட்டு விட்டு அவர்கள் வணங்கும், அவர்கள் பரக்கத்தை தேடும் ஒன்றை தேடினர், இன்றைய நிலையும் இதுவா கத்தான் இருக்கிறது. பெரும் பாலான முஸ்லிம்கள் பித்அத்திலும் ஷிர்க்கிலும் இறை நிராகரிப்பாளர்களை கண் மூடித்தனமாக பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்.

மௌலிது விழாக்கள் என்றும், நாட்களை, வாரங்களை குறிப்பான வணக்க வழிபாடுகளுக்காக ஒதுக்குவது, மார்க்க சம்பந்தமான விடயங்களை தொடர்பு படுத்தி, மற்றும் நினைவுத்தினங்களை தொடர்பு படுத்தி விழாக்கள் என்றும், சிலைகளை, நினைவுச் சின்னங்களை எழுப்புவது என்றும், இன்ப துன்பங்களில் ஒன்று கூடல்கள் என்றும், ஒரு ஜனாஸா நடந்து விட்டால் அதிலுள்ள பித்அத்துகள் என்றும் கப்றுகளின் மீது கட்டிடம் எழுப்புவது என்றும் இவ்வாறே பட்டியல் நீளுகிறது.

பித்அத் வாதிகளின் விஷயத்தில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு

1) பித்அத் வாதிகளின் விஷயத்தில் இஸ்லாமிய உம்மத்தின் நிலைப்பாடு
2) அவர்களுக்கு மறுப்புக் கொடுப்பதில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் போக்கு

பித்அத் வாதிகளின் விடயத்தில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நிலைப்பாடு:

அஹ்லுஸ் ஸுன்னத் வவ் ஜமாஅத்தினர் எல்லாக் காலங்களிலும் அவர்களின் செயல்களை நிராகரிப்பவர்களாகவும், அவர்களுக்கு மறுப்புக் கொடுப்பவர்களாவும், அவர்களின் செயல்களை தடுப்பவர்களாகவுமே இருந்து வந்துள்ளனர்.

சில உதாரணங்களை இங்கே தருகிறோம்:

1- உம்மு தர்தா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: ‘ஒரு முறை அபூ தர்தா என்னிடம் கோபமுற்றவர்களாக வந்தார்கள், நான் அவர்களிடம் ஏன் எனக்கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்: அல்லாஹ்வின் மீது ஆணையாக ‘இவர்கள் அனைவரும்; தொழுகையை நிறைவேற்றுவதைத் தவிர அல்லாஹ்வின் தூதரின் வேறு எந்த விடயத்தையும் இவர்களிடம் நான் காணவில்லை’ (புஹாரி).

2- அம்ரிப்னு யஹ்யா தனது தந்தை அவரது தந்தையிடமிருந்து செவியுற்ற ஒரு செய்தியை தந்தையிடமிருந்து அறிவிக்கின்றார்: ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் வீட்டில் ஸுப்ஹுத்தொழுகைக்கு முன்னர் அமர்ந்திருந்தோம். அவர் வெளியிறங்கினால் அவருடன் பள்ளிக்குச் செல்வதற்காக, அவ்வேளை அங்கு வந்த அபூ மூஸா அல் அஷ்அரி (றழி) அவர்கள், அபூ அப்துர் ரஹ்மான் இன்னும் உங்களிடம் வரவில்லையா? எனக் கேட்டார், நாங்கள் இல்லை என்று கூறினோம், அப்போது அவரும் எம்முடன் அமாந்தார் அபூ அப்துர் ரஹ்மான் வரும்வரை, அவர் வெளியே வந்த போது நாம் அனைவரும் அவரிடம் சென்றோம். அப்போது அபூ மூஸா (றழி) அவர்கள் கூறினார்கள்: அபூ அப்துர் ரஹ்மானே! நான் சிறிது நேரத்துக்கு முன்னர் பள்ளிவாயலில் நான் வெறுத்த ஒரு விடயத்தைக் கண்டேன், ஆனாலும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் நன்மையைத் தவிர வேறு எதுவும் அதில் இருப்பதாக நான் காணவில்லை. அவர் என்ன எனக்கேட்ட போது, அவர் சொன்னார்: ‘நீர் போனால் அதனைக்காண்பீர்’ அல்லாஹ்வினுடைய ஆலயத்தில் தொழுகைகையை எதிர்பார்த்திருக்கும் பல கூட்டங்களைப் பார்த்தேன், அவர்கள் வட்டம் வட்டமாக அமர்ந்து, அவர்களின் கையில் கற்கள் காணப்பட்டன, அவ்வட்டத்தில் இருக்கும் ஒருவர் நூறு தடவை தக்பீர் சொல்லுங்கள் எனச் சொல்கிறார் ஏனையோர் நூறு தடவை தக்பீர் சொல்கின்றனர். நூறு தடவை லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்லுங்கள்; என்று அவர் சொல்லும் போது ஏனையோர் நூறு தடவை லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்கின்றனர், நூறு தடவை ஸுப்ஹானல்லாஹ் சொல்லுங்கள் என்று சொல்லும் போது ஏனையோர் நூறு தடவை ஸுப்ஹானல்லாஹ் சொல்கின்றனர்.

அதை செவியுற்ற அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), நீர் அவர்களுக்கு அவர்களது பாவங்களை மட்டுப்படுத்துமாறு ஏவவில்லையா? அவர்களது நல்லறங்கள் வீணாகாமல் இருப்பதற்கு நீர் பொறுப்பாகவில்லையா? எனக் கேட்டுவிட்டு, அவர்கள் வட்டம் போட்டு அமர்ந்திருக்கும் அந்த இடத்திற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) சென்றார் அவருடன் நாமும் சென்றோம். அந்த கூட்டத்தாரிடம் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்? எனக் கேட்டார் அதற்கு அவர்கள் அபூ அப்துர் ரஹ்மான் அவர்களே! தக்பீர், தஹ்லீல், தஹ்மீத், தஸ்பீஹ் செய்து கொண்டிருக்கின்றோம் என்றனர், நீங்கள் உங்கள் பாவங்களை மட்டுப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் நன்மைகள் வீணாகாமல் இருக்க நான் பொறுப்பாளன் எனக்கூறினார்.

முஹம்மதின் சமுதாயமே! உங்களுக்குக் கேடு ஏன் இவ்வளவு விரைவாக அழிவின் பக்கம் செல்கிறீர்கள்!! அன்னாரின் தோழர்களோ உயிருடன் இருக்கின்றனர், அன்னாரது ஆடைகள் கூட இன்னும் உக்கிப் போகவில்லை, அன்னாரது பாத்திரங்கள் இன்னும் உடைந்து விடவில்லை. எனது ஆத்மா எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக நீங்கள் ஒரு மார்க்கத்தில் இருக்கின்றீர் அது முஹம்மதின் மார்க்கத்தை விட நேர் வழி பெற்றதா? அல்லது வழி கேட்டின் வாயில்களை திறக்கின்றீர்களா?
அதற்கு அவர்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக நாம் நன்மையைத் தவிர வேறெதெனையும் நாடவில்லை என்று கூறினர். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் எத்தனையோ நன்மையை விரும்பக்கூடியவர்கள் அதை அடைந்து கொள்ளவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எமக்குக்கூறினார்கள்: ‘நிச்சயமாக ஒரு கூட்டம் அல்குர்ஆனை ஓதும், ஆனால் அது அவர்களின் தொண்டைக்குழியை தாண்டாது’ அல்லாஹ்வின் மீது ஆணையாக அந்தக்கூட்டத்தில் அதிகமானவர்கள் உங்களிலிருந்தா என்பதை நான் அறியமாட்டேன் எனக்கூறிவட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள். அம்ரிப்னு ஸலமா சொல்கின்றார்: நஹர்வானுடைய நாளில் அவர்கள் கவாரிஜ்களுடன் இணைந்து நமக்கெதிராக இருந்ததைப் பார்த்தோம்’ (திர்மிதி).

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து நான் எங்கிருந்து இஹ்ராம் அணிவது எனக்கேட்டார்? அதற்கு இமாமவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கிருந்து இஹ்ராம் அணியுமாறு பணித்தார்களோ அங்கிருந்து அணிவீராக! என்று சொன்னார். அதற்கு அவர் அதை விட தொலைவிலிருந்து நான் அணிந்தால் என்ன எனக்கேட்டார், நான் அதை சரியாகக்காண வில்லை என இமாம் கூறினார்.

அதற்கு அவர்: அதை நீஙகள் வெறுக்கின்றீரா? எனக்கேட்ட போது நீர் குழப்பத்தில் வீழ்வதை நான் வெறுக்கின்றேன் என இமாம் கூறினார். வந்தவர் நன்மையை அதிகப்படுத்துவதில் என்ன குழப்பம் இருக்கின்றது எனக்கேட்டார்? இமாவர்கள், அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்: ‘எவர் அவருடைய (நபியுடைய) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களைச் சோதனை பிடித் துக்கொள்வதையோ அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்’ (அந்நூர் 24:63).

அல்லாஹ்வின் தூதர் குறிப்பாக்காத ஒன்றை சிறப்பெனக்கருதி நீர் குறிப்பாக்குவதை விட வேறு என்ன மிகப்பெரிய குழப்பம் இருக்கின்றது? எல்லாக்காலங்களிலும் அறிஞர்கள் பித்அத்வாதிகளின் பித்அத்துகளை தடுத்துள்ளனர் என்பதற்கு இவை மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

எல்லாப் புகழும அல்லாஹ்வுக்கே சொந்தம்.

பித்அத்வாதிகளுக்கு மறுப்புத் தெரிவிப்பதில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை என்ன?

இதில் அவர்களின் கொள்கை அல்குர்ஆனின், சுன்னாவின் அடிப்படையில் கட்டியெழுப் பப்பட்டதாகும். பித்அத் வாதிகளின் சந்தேகங்களுக்கும், முரண்பாடுகளுக்கும் தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில், ஒப்புக் கொள்ளத்தக்க விதத்தில் பதில் அளிப்பது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் கொள்கையாகும்.

அல்குர்ஆனையும் ஸுன்னாவையும் பற்றிப்பிடிப்பதற்கும், பித்அத்துகளையும், புதியவைகளையும் முற்றாக நிராகரிப்பதற்கும், அவர்கள் குர்ஆன் ஸுன்னாவிலிருந்து ஆதாரங்களை முன்வைப்பர். இந்தத் தலைப்புகளில் பல நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன, வழிகெட்ட ஷீயாக்களின், கவாரிஜ்களின், ஜஹ்மிய்யாக்களின், முஃதஸிலாக்களின், அஷாயிராக்களின்;, அடிப்படையான நம்பிக்கைகளில், கொள்கைளில் அவர்களது வழிகெட்ட பித்அத்தான சிந்தனைகளுக்கு மறுப்புக் கொடுக்கப் பட்டுள்ளன.

இந்தத் தலைப்புக்களில் குறிப்பாகவே நூற்கள் எழுதப்பட்டுள்ளன, இமாம் அஹ்மத் ஜஹ்மிய்யாக்களுக்கு மறுப்புக் கொடுத்து தொகுத்த நூலைப் போன்று, உஸ்மான் இப்னு ஸயீதுத் தாரமீயைப் போன்று, ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவிற்கு நூற்கள் இருப்பது போன்று அவரது மாணவர் இமாம் இப்னுல் கையூம், ஷைகு முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப் ஏனைய அறிஞர்கள் இந்த வழிகெட்ட பிரிவினர்களுக்கு, கப்று வணங்கிகளுக்கு, ஸுபித்துவ வாதிகளுக்கு கொடுத்த மறுப்புகளை போல. வழி கெட்ட பித்அத் வாதிகளுக்கு மறுப்புக் கொடுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட நூல்கள் ஏராளம். உதாரணத்திற்கு சில நூல்களை கீழே தருகிறோம்.
 
பழமையான தொகுப்புகளில்:

1- கிதாபுல் இஃதிஸாம், இமாம் ஷாதிபிக்குரியது.

2- கிதாப் (இக்திழாஉஸ் ஸிராதல் முஸ்தகீம்) ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவிற்குரியது. இதில் பெரும் பகுதியே பித்அத் வாதிகளுக்கு மறுப்புக் கொடுக்கப் படுவதற்காக ஒதுக்கப் பட்டுள்ளது.

3- கிதாப் (இன்காருல் ஹவாதிஸ் வல்பிதஃ) இப்னு வழ்ழாஹுக்குரியது.

4- கிதாப் (அல்ஹவாதிஸ் வல்பிதஃ) துர்தூஷிக்குரியது.

5- கிதாப் (அல்பாஇஸ் அலா இன்காரில் பிதஃ வல்ஹவாதிஸ்) அபூஷாமாவுக்குரியது.

6- கிதாப் (மின்ஹாஜுஸ் ஸுன்னதுன் நபவிய்யா பிஃர்ரத்தி அலர் ராபிழா வல்கதரிய்யா). ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவிற்குரியது.

நவீன காலத்து நூற்கள்:

1- கிதாப் (அல் இப்தாஃ பிஃ மழார்ரில் இப்திதாஃ) ஷைகு அலீ மஹ்பூலுக்குரியது.

2- கிதாப் (அஸ்ஸுனன் வல்முப்ததிஆதுல் முதஅல்லிகாத் பில்அத்காரி வஸ்ஸலவாத்). ஷைகு முஹம்மதிப்னு அஹ்மத் அஷ்ஷகீரி அல்ஹவாமிதிக்குரியது.

3- ரிஸாலா (அத்தஹ்தீரு மினல் பிதஃ) அப்துல் அஸீஸ் பின்பாஸுக்குரியது.

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். எல்லாக் காலங்களிலும் முஸ்லிம் அறிஞர்கள் பித்அத்துகளை முற்றிலும் நிராகரிக்கக் கூடியவாகளாகவும், பித்அத்வாதிகளுக்கு பல வழிகளிலும் மறுப்புக்கொடுத்துக் கொண்டும் இருக்கின்றனர். பத்திரிகைகள் மூலமாக, சஞ்சிகைகள் மூலமாக, ஊடகங்களின் மூலமாக, ஜும்ஆ உரைகள், சொற் பொழிவுகள், ஒன்று கூடல்கள் மூலமாக இவ்வாறு பல வழிகளிலும் அவைகளுக்கு மறுப்புக் கொடுப்பது முஸ்லிம் உம்மத் பித்அத்துக்கு எதிராக தெளிவான ஒரு பார்வையை ஏற்படுத்திக் கொள்வதற்கும், பித்அத் வாதிகளின் தீமைகளைப் புரிந்து கொள்வதற்கும் மிகப் பெரும் உறுதுணையாக உள்ளது.

நவீன காலத்தின் சில வழிகெட்ட பித்அத்துகள்

நிகழ் காலத்தில் பித்அத்துகள் பல வகையிலும் அதிகரித்துக் காணப்படுவதின் காரணம், காலத்தால் பிந்தியது, அறிவு குறைந்து காணப்படுவது, பித்அத்தின் பக்கமும், மார்க்கத்துக்கு புறம்பானவைகளின் பக்கமும் அழைப்பவர்கள் அதிகரித்து விட்டார்கள். மறைமுகமாக காபிர்களின் பழக்க வழக்கங்களுக்கும், அவர்களின் மதரீதியான விடயங்களுக்கும் ஒப்பாக நடத்தல்.

நபி (ஸல்) அவர்களின் கூற்றை உண்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்: ‘நீங்கள் உங்களுக்கு முன் சென்றவர்களின் வழி முறையை பின் பற்றுவீர்கள்’ (திர்மிதி).

நவீன கால பித்அத்துகளில் நின்றும் உள்ளவைகள் தான்:

1- நபியின் பெயரால் மௌலிது விழாக்கள் எடுப்பது.

2- பரக்கத்தைப் பெற வேண்டுமென்ற நோக்கில் பழமை வாய்ந்த இடங்கள், தர்ஹாக்களுக்கு, ஏனைய இடங்களுக்குச் செல்வது.

3- அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற வேண்டுமென நோக்கில் வணக்க வழிபாடுகளில் பித்அத்துகளை ஏற்படுத்துவது.

4- ரபீஉல் அவ்வல் மாதத்தில் நபியின் பெயரால் மௌலிது விழாக்கள் கொண்டாடுவது:

நபியுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு இவர்கள் நடாத்தும் இந்த மௌலிதுகள் கிறிஸ்தவர்களுக்கு ஒப்பான செயலாகும். முஸ்லிம்களின் அறியாமையின் காரணத்தால் அல்லது வழி கெடுக்கும் உலமாக்களால் ஒவ்வொரு வருடத்தின் ரபீஉல் அவ்வல் மாதத்திலும் நபி (ஸல்) அவர்களின பிறந்த தினத்தை முன்னிட்டு இவ்வாறான விழாக்கள் கொண்டாடப்படுகின்றது.

இவ்வாறான விழாக்களை பெரியளவில் இறை ஆலயங்களில் நடாத்தப்படுகின்றது, இன்னும் சிலர் வீடுகளில், அல்லது பல இடங்களில் விஷேச ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது, பிரமுகர்கள், பாமரர்கள் என்ற வித்தியாசமின்றி அவ்வாறான நிகழ்வுகளில் கூட்டம் அலை மோதுகிறது.

கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை)க்கு பிறந்த தின விழா கொண்டாடுவதைப் போல் அறியாமை முஸ்லிம்களும் அவர்களுக்கு ஒப்பாக செயல்படுகின்றனர். இந்த விழாக்கள் வழி கெட்ட பித்அத் மாத்திரமின்றி, கிறிஸ்தவர்களுக்கு ஒப்பான ஒரு காரியமும் கூட, அது மட்டுமா? பல ஷிர்க்குகள், இஸ்லாம் நிராகரித்த அனாச்சாரங்களும் அங்கு அரங்கேற்றப்படுவதை காணலாம். அல்லாஹ்விடத்தில் மாத்திரம் கேட்கப்படவேண்டிய பிரார்த்தனை, உதவி தேடல் அனைத்தும் நபியிடத்திலே கேட்கப்பட்டு பாடல்களில் அளவு கடந்து செல்லும் மோசமான காட்சிகள். நபியை புகழும் விடயத்தில் அளவு கடந்து செல்வதை நபியவர்களே தடுத்துள்ளார்கள் எனபதை இவர்கள் மறந்து விட்டார்கள் போலும்.

‘மர்யமின் மகன் ஈஸாவை நஸாறாக்கள் அளவு கடந்து புகழ்வதைப் போன்று என்னைப் புகழாதீர்கள், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியான், (என்னை) அல்லாஹ்வின் அடியார், தூதரென்று மாத்திரமே சொல்லுங்கள்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்). 

அளவு கடந்து புகழ்தல் என்பது ஹதீஸின் மூலமே தடுக்கப்பட்டுள்ளது. நபியவர்கள் அந்த விழாக்களுக்கு வருகை தருகிறார்கள் என்ற மோசமான நம்பிக்கையும் சிலரிடம் உள்ளது. அவைகளில் நடைபெறும் இஸ்லாம் நிராகரித்த செயல்களை பட்டியல் போட முடியும். கூட்டாக பாடல்கள் பாடப்படுகின்றன, மற்றும் சில இடங்களில் இசைகளுடன் கூடியதாக அவை அமைந்திருக்கின்றன, தப்லா அடிக்கப் படுகின்றது, ஸுபித்துவ வாதிகளின் பித்அத்தான திக்ருகள், ஆண் பெண் பாகுபாடின்றி ஒன்றாகக் கலந்து இருத்தல், பல அனாச்சாரங்களின் வாயில்கள் திறக்கப் படுவதற்கு இவை காரணியாகும், ஒரு சில நேரங்களில் விபச்சாரத்தில் வீழ்ந்து விடுவதற்குக்கூட இவை காரணியாக அமைந்து விடுகிறது. 

இந்த எந்த அனாச்சாரங்களும் இல்லாமல், வெறும் ஒரு ஒன்று கூடலுக்கும், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கும், உணவுகளை பங்கிடுவதற்கும் அவர்கள் சுருக்கிக் கொள்வார்களானால் அதுவும் நவீன பித்அத்தாகும். ‘ஒவ்வொரு புதியவையும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழி கேடாகும்’ இன்னும் இவ்வாறான விழாக்கள் ஏனைய விழாக்களில் நடக்கக்கூடாத பாவமான காரியங்கள் நடப்பதற்கு வழிகோலும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நாம் சொல்வது இவைகள் வழி கெட்ட பித்அத்துகளாகும். குர்ஆனிலோ, சுன்னாவிலோ, முன் சென்ற நல்லவர்களின் செயல்பாடுகளிலோ, சிறந்த நூற்றாண்டுகள் என சிலாகித்துக் கூறப்பட்ட காலங்களிலோ எந்த ஆதாரமும் இவைகளுக்கு இல்லை. பிந்திய காலங்களில் ஹிஜ்ரி நான்காவது நூற்றாண்டுக்கும் பிறகுதான் இந்த வழி கெட்ட பித்அத்துகள் தோன்ற ஆரம்பித்தன. பாதிமியூன் என்று சொல்லப்படும் ஷீயாக்கள் தான் இவைகளை உருவாக்கினர்.

இமாம் அபூ ஹப்ஸ் தாஜுத்தீன் பாகிஹானி கூறுகிறார்: ரபீஉல் அவ்வல் மாதத்தில் மக்கள் ஒன்று கூடி நடாத்துகின்ற மௌலிதுகள், ஒன்று கூடல்கள் பற்றி, இதற்கு மார்க்கத்தில் ஏதாவது அடிப்படை இருக்கிறதா என பல தடவை கேட்கப்பட்டு விட்டது. அவர்கள் தெளிவான ஒரு பதிலை விரும்புகின்றனர். நான் சொல்வது, இந்த மௌலிதுகளுக்கு குர்ஆனிலோ சுன்னாவிலோ எந்த அடிப்படையும் கிடையாது, மார்க்கத்தில் முன்மாதிரியாக இருந்த, குர்ஆன் சுன்னாவை பற்றிப்பிடித்த எந்த ஒரு அறிஞரும் இவைகளைச் செய்யவில்லை. இது வழிகெட்டவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பித்அத்தாகும், மனோ இச்சைக்கு அடிமைப்பட்ட சாப்பாட்டு ராமன்களால் உருவாக்கப்பட்டதாகும்’ (ரிஸாலதுல் மௌரித் பீஃ அமலில் மௌலித்).

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும் போது: இந்த பித்அத்தை ஏற்படுத்தியவர்கள் ஒன்றின் கீழ் கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் பிறந்த தினத்தை கொண்டாடுவது போன்று அவர்களுக்கு ஒப்பாகும் நோக்கில், அல்லது நபி (ஸல்) அவர்கள் மீது நேசத்தால் அவரை மகத்துவப் படுத்தும் நோக்கில் நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை கொண்டாடுகின்றனர், நபியவர்களின் பிறந்த தினத்திலே மக்களுக்கு மத்தியில் கருத்து வேறு பாடுகள் உள்ளது. 

இதை முன் சென்றவர்கள் செய்யவில்லை. அது சிறப்பானதாகவும்,நன்மைக்குரியதாகவும் இருந்திருக்குமானால் ஸலபுகள் நம்மை விட அதற்குத் தகுதியானவர்கள், அவர்கள் நபியின் மீது கடும் நேசம் வைத்திருந்தனர், நம்மை விட நபியின் மீது மதிப்பு வைத்திருந்தனர், நம்மை விட நன்மையில் பேரார்வம் கொண்டோர் அவர்கள். நபியை நேசிப்பது அவர் மீது மதிப்பு வைப்பதென் பதெல்லாம், அவருக்கு வழிப்படுவதிலும், அவரது கட்டளைகளை எடுத்து நடப்பதிலும், அவரது வழி முறைகளை உயிர்ப்பிப்பதிலும், உள்ளத்தால், நாவால், கையால் அவைகளுக்கு முயற்ச்சி செய்வதிலுமே தங்கியுள்ளது. இது தான் முன் சென்றவர்களான முஹாஜிரீன்கள், அன்ஸாரிகள் அவர்களைப் பின் பற்றியவர்களின் வழி முறையாகும். (இக்திழாஉஸ் ஸிராதுல் முஸ்தகீம் 2/ 615)

இந்த பித்அத்தை நிராகரித்து பல மறுப்புகள் எல்லாக் காலங்களிலும் கொடுக்கப்பட்டே வந்துள்ளன. ஏனெனில் இந்த பித்அத்தை பொறுத்த வரையில் ஏனைய அவ்லியாக்கள், ஷைகுமார்கள், இன்னும் பலரின் பெயரால் மௌலிதுகளை நடாத்துவதற்கு இது வழி கோலுகிறது, பல தீமையின் வாயில்களை திறந்து விடுகின்றது.

2- குறிப்பிட்ட இடங்கள், மற்றும் பழமை வாய்ந்த இடங்கள், உயிரோடுள்ளவர்கள், மரித்தோர்களின் பரக்கத்தை நாடிச் செல்வது:

‘தபர்ருக் என்றால், பரக்கத்தை தேடுதல், ஒன்றில் நலவிருப்பதாக உறுதிபூண்டு அதை அதிகரிக்க தேடுதல். நலவை ஆதரவு வைத்தல் அதை அதிகரிக்கத் தேடுதல் என்பதெல்லாம் யார் அதற்கு பொறுப்பாளனாகவும், அதற்கு ஆற்றல் பெற்றவனாகவும் இருக்கின்றானோ அவனிட மேயாகும். அந்த ஆற்றலைப் பெற்றவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே. அவன் தான் பரக்கத்தை அருளுகிறான் அதை நிலை பெறச் செய்கின்றான். படைப்பினங்களை பொறுத்த வரையில் பரக்கத்தை ஏற்படுத்துவதற்கோ அதை கொடுப்பதற்கோ, அதை தரிப்படுத்துவதற்கோ அதை நிலை பெறச் செய்வதற்கோ சக்தி பெற மாட்டார்கள்.

குறிப்பிட்ட இடங்கள், அல்லது பழமையான இடங்கள், உயிரோடு உள்ளவர்கள், மரித்தோர்களிடம் பரக்கத்தை நாடிச் செல்வதென்பது தடுக்கப் பட்டதாகும், அவைகளுக்கு அல்லது அவர்களுக்கு அருள் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் ஒருவன் செல்லும் போது அது ஷிர்காகி விடுகின்றது.
அல்லது அவர்களைத் தரிசிப்பது, அந்த இடங்களைப் போய்த் தொடுவது, அல்லாஹ்விடத்தில் அருளைப் பெற்றுத் தருவதற்கு காரணியாக அமையும் என்று நம்புவது ஷிர்கின் பால் வழி கோலுவதாகும். நபித் தோழர்கள் நபியுடைய முடியைக் கொண்டு, அவரது உமிழ் நீரைக் கொண்டு, நபியுடைய உடலிலிருந்து வெளிப்பட்ட இரத்தம் இது பரக்கத்தில் நின்றும் உள்ளது, இது நபியவர்கள் உயிருடன் இருக்கும் போது நபிக்கு மாத்திரம் இருந்த விஷேச சிறப்புத் தன்மையாகும். 

இறை நேசர்களில் மிக உயர்ந்தவராக நபி (ஸல்) அவர்கள் இருந்தும் கூட, அன்னாருடைய மரணத்திற்குப் பின் அவரது கப்றுக்கோ, அல்லது அவரது வீட்டுக்கோ பரக்கத்தை நாடிச் செல்லவில்லை. நபியவர்கள் தொழுத, அவர்கள் அமர்ந்திருந்த இடங்களில்பரக்கத்தை ஸஹாபாக்கள் நாடவில்லை.

ஸஹாபாக்கள் நல்லடியார்களிடம் பரக்கத்தை தேடவில்லை அபூ பக்கர், உமர் (ரலி) போன்ற சிறந்தவர்கள் உயிர் வாழும் போதோ அவர்களது மரணத்திற்குப் பின்போ அவர்களிடம் பரக்கத்தை (அருளை) நாடவில்லை. 

‘ஹிரா’ குகைக்கு தொழுவதற்கோ பிரார்த்திப்பதற்கோ செல்லக் கூடியவர்களாக அந்த உத்தமர்கள் இருக்கவில்லை. அல்லது மூஸா (அலை) அல்லாஹ்வுடன் உரையாடிய தூர் மலைக்கோ, அல்லது நபிமார்கள் இருந்ததாகச் சொல்லப்படும் வேறு மலைகளுக்கோ, நபிமார்கள்இருந்ததாகச் சொல்லப்டும் இடங்களில் கட்டப் பட்டிருக்கும் இடங்களுக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ அந்த நபித்தோழர்கள் தொழுகைக்காவோ பிரார்த்தனைக்காவோ செல்லவில்லை. 

நபியவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் வழமையாக தொழுது வந்த இடத்தை முன் சென்றவர்கள் யாரும் தொடவோ முத்தமிடவோ இல்லை. மக்காவிலோ வேறு இடங்களிலோ அன்னார் தொழுத இடங்களில் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. நபியவர்கள் வழமையாக தொழுத இடங்களில் அன்னாரது சங்கையான பாதங்கள் பட்டிருக்கும் அந்த இடங்களை தொடுவதற்கோ, முத்தமிடுவதற்கோ அவரது உம்மத்தினருக்கு மார்க்கம் அனுமதி யளிக்கவில்லை என்கின்ற போது, மற்றவர்கள் விடயத்தில் அது அவர் தொழுத இடம், தூங்கிய இடம் என்று அதை தொடுவது, முத்தமிடுவது எப்படி அனுமதிக்கப்படும்!! அறிஞர்கள் அதன் பேராபத்தை விளங்கினர். அல்லாஹ்வின் தூதர் கொண்டு வந்த மார்க்கத்தில் இவைகளுக்கு கடுகளவும் அனுமதியில்லை. (இக்திழாஉஸ் ஸிராதுல் முஸ்தகீம் 795- 802/2).


வணக்க வழிபாடுகளில் பித்அத்

அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறும் நோக்கில் வணக்க வழிபாடுகளில் பித்அத்துகளை ஏற்படுத்தல்:

வணக்க வழிபாடுகளில் உருவாக்கப்பட்ட பித்அத்துகளில் இந்தக் காலங்களில் அதிகமான பித்அத்துகள் புகுத்தப்பட்டிருக்கின்றன என்றால் மிகையாகாது. வணக்க வழி பாடுகளை (இபாதத்தை)ப் பொறுத்த வரையில் அதன் அடிப்படை (நிறைவுற்றதாகும்) தடுக்கப்பட்டதாகும். ஆதாரமின்றி எந்த ஒன்றையும் மார்க்கமாக்க முடியாது, எதற்கு ஆதாரமில்லையோ அது பித்அத்தாகும்.

நபியினுடைய கூற்று இங்கு நோக்கத்தக்கதாகும்: 

‘நமது கட்டளை இல்லாத ஒன்றை எவர் செய்வாரோ அது நிராகரிக்கப்படும்’ ஆதாரமின்றி செய்யப்படும் இபாத த்துகள் முற்றிலும் அதிகரித்தே காணப்படுகின்றன.

அவைகளில் நின்றும் உள்ளது தான்:

தொழுகையில் நிய்யத்தை வாயால் மொழிதல், தொழுகையை இவ்வாறு இவ்வாறு அல்லாஹ்வுக்காக என்று நிய்யத்தை வாயால் மொழிவது, இது பித்அத்தாகும், இதற்கு நபியுடைய சுன்னாவில் எந்த ஆதாரமும் இல்லை. அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுகிறான்: ‘நீங்கள் உங்கள் மார்க்க (வழிபாடுகள்) பற்றி அல்லாஹ்வுக்கு அறிவிக்(க விரும்பு)கிறீர்களோ? அல்லாஹ்வோ வானங்களிலு ள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் அன்றியும் அல்லாஹ் எல்லாப் பொருள் களையும் நன்கறிகிறவன் ‘ என்று (நபியே!) நீர் கூறும் (ஹுஜுராத் 49: 16).

நிய்யத்திற்குரிய இடம் உள்ளமாகும், அது உள்ளத்துடன் தொடர்பு பட்ட ஒரு செயலே தவிர நாவுடன் தொடர்பு பட்ட ஒன்றல்ல.

பித்அத்தில் நின்றும் உள்ளது தான்: 

தொழுகைகளுக்குப் பின் கூட்டாக திக்ருகள் செய்தல். ஒவ்வொருவரும் தனித் தனியாக ஆதாரப்பூர்வமான திக்ருகளைக் கூறுவதைத்தான் மார்க்கம் அனுமதித்திருக்கின்றது.

ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும் ‘அல்பாதிஹா’ என உரத்த குரலில் கூறி பாதிஹா ஏனைய சூராக்களை ஓதுவதும் பித்அத்தில் உள்ளதாகும்.

மரணித்தவர்களுக்காக அவர்களது வீட்டில் அனைவரும் கூடி உணவுகளைத் தயாரிப்பது, கூலிக்கு ஆள் பிடித்து குர்ஆன் ஓதுவது, கவலை, சோகத்தை வெளிப்படுத்தும் நோக்கில், அல்லது மரணித்தவருக்கு அது பயனளிக்கும் என்ற நோக்கில், இவைகள் அனைத்தும் பித்அத்தாகும் மார்க் கத்தில் இவைகளுக்கு எந்த அடிப்படையும் கிடையாது. அல்லாஹ் எந்த ஒரு ஆதாரத்தையும் இறக்கிவைக்காத பாவமான நாச காரியங்களாகும்.

இஸ்லாம் கூறி இருக்கின்ற சில முக்கிய நிகழ்வுகளை முன்னிட்டு விழாக்களை கொண்டாடுவது, நபியுடைய மிஃராஜ் பயணம், ஹிஜ்ரத் பயணம் போன்றவைகளை முன்னிட்டு கொண்டாடப் படுவதைப் போல. இவைகளுக்கும் மார்க்கத்தில் எந்த அடிப்படையுமில்லை.

அதே போன்று ரஜப் மாதத்தில் விசேஷமாக உம்றாச் செய்தல், உபரியான தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களை விசேஷமாக நிறைவேற்றல், நோன்பு, தொழுகை, உம்றா, அறுத்துப் பலியிடல் போன்ற வணக்கங்களுக்கு விஷேச எந்த சிறப்பும் இந்த மாதத்தில் வரவில்லை, இந்த விடயங்களில் ரஜபும் ஏனைய மாதங்களைப் போன்று தான்.

பல வகையான ஸுபித்துவ திக்ருகள் இவைகள் அனைத்தும் பித்அத்தாகும், ஷரீஅத் கற்றுத்தந்திருக்கும் திக்ருகளுக்கு இவை முற்றிலும் முரணானவையாகும், அதனுடைய வார்த்தைகள், சொல்லப்படும் நேரங்கள், சொல்லப்படும் விதங்கள் அனைத்தும் பித்அத்தாகும்.

ஷஃபானின் பதினைந்தாவது நாளில் விஷேசமாக நோன்பு நோற்பது அதன் இரவுக் காலங்களில் விஷேச வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது போன்ற அனைத்தும் பித்அத்தாகும். இந்த நாளை வணக்க வழிபாடுகளைக் கொண்டு சிறப்பிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

கப்றுகளின் மீது கட்டிடம் எழுப்புவது, அவைகளை மஸ்ஜித்களாக ஆக்குவது, பரக்கத் கிடைக்க வேண்டுமென்ற நோக்கில் அவைகளுக்கு பயணம் செய்வது, மரணித்தவர்களிடம் பிரார்த் திப்பது இவைகள் போன்ற அனைத்தும் ஷிர்கில் நின்றும் உள்ளவையாகும். பெண்கள் கப்றுகளைத் தரிசித்தல். நபியவர்கள் கப்றுகளைத் தரிசிக்கும் பெண்களுக்கும், கப்றுகளின் மீது மஸ்ஜித்களை எழுப்புவர்களுக்கும், அவைகளில் விளக்குகளை ஏற்றுபவர்களுக்கும் சாபம் உண்டாவதாக என்று கூறியது ஏனோ இவர்களுக்கு மறந்து விட்டது போலும்.


முடிவுரை

நிறைவாக நாம் சொல்லிக் கொள்ள விரும்புவது: 

உண்மையில் பித்அத்துகள் குப்ரின் பால் இட்டுச் செல்வதாகும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மார்க்கமாக்காதவைகளை அதிகப்படுத்துவதாகும். பித்அத் என்பது பெரும் பாவங்களை விட மிகக் கொடியதாகும். பெரும் பாவங்களை ஒருவன் செய்யும் போது ஷைத்தான் மகிழ்ச்சியுறுவதை விட, பித்அத்துகளை செய்யும் போது பன்மடங்கு மகிழ்ச்சி அடைகின்றான்.

பாவங்களில் ஈடுபடுபவன் நான் செய்வது பாவம் என்பதை அறிந்தே செய்கின்றான், அவன் அதிலிருந்து பாவ மீட்சி பெறுதவற்கு வாய்ப்பிருக்கின்றது. ஆனால் பித்அத்தை செய்யும் ஒருவன் அவைகளை மார்க்கமெனக் கருதி, அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறும் நோக்கில் செய்கின்றான், அவன் அதிலிருந்து பாவ மீட்சி பெறுவதற்கு வாய்ப்பில்லை. பித்அத் என்பது சுன்னாவுக்கெதிரானதாகும், சுன்னாவின் மீதும் சுன்னாவை நடைமுறை படுத்துபவர்கள் மீதும் அது வெறுப்பை ஏற்படுத்தும். பித்அத் என்பது ஒருவனை அல்லாஹ்வை விட்டு தூரப்படுத்தும், அல்லாஹ்வின் கோபமும் தண்டனையும் ஏற்படுவதற்கு அவை காரணமாகும். உள்ளங்கள் சத்தியத்தை விட்டு பிரழுவதற்கும், குழப்பங்கள் உருவாவதற்கும் இவை காரணமாகும்.

பித்அத்வாதிகளுடன் எப்படி செயல் படுவது:

பித்அத்வாதிகளைத் தரிசிப்பது, அவர்களுடன் உட்காருவது, அவர்களின் தவறுகளை தடுக்கும் நோக்கில், அவர்களுக்கு நல்லுபதேசம் புரியும் நோக்கில் தவிர இல்லையானால் ஹராமாகும். ஏனெனில் அவர்களுடன் கலந்து இருக்கும் பொழுது அவர்களது தீமைகளால் ஒருவன் தாக்கம் பெற வாய்ப்பிருக்கின்றது. மற்றும் பலருக்கு அதன் தீங்குகள் பரவுவதற்கு வாய்ப்பிருக்கின்றது.
அவர்களின் அந்த பித்அத்துகளை தடுப்பதற்கு சக்தியில்லையெனும் போது, அவர்களின் விஷயத்திலும், அவர்களின் தீமைகள் விஷயத்திலும் மிக எச்சரிக்கையாக இருப்பது ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

அது தவிர முஸ்லிம் அறிஞர்கள், ஆட்சித் தலைவர்கள் பித்அத்துகளைத் தடுப்பது, பித்அத்வாதிகளின் கையைப் பிடித்து அவர்களின் பித்அத்துகளைத் தடுப்பது கடமையாகும். அவர்கள் இஸ்லாத்திற்கு கடும் ஆபத்தானவர்கள. குப்ரியத்தான நாடுகள் பித்அத் வாதிகளின் செயல்களுக்கு ஆர்வமூட்டுகின்றனர், அவை பல வழிகளிலும் பரவுவதற்கு உதவி புரிகின்றனர், ஏனெனில் இஸ்லாத்தின் பெயரை மாசுபடுத்துவதிலும், அதற்கு கலங்கத்தை ஏற்படுத்துவதிலும் அவர்களின் பங்கு மிக முக்கியமானது.

பரிசுத்த கலிமா உயர்வதற்கும், அவனது மார்க்கம் மேலோங்குவதற்கும், அதன் எதிரிகளை அழிப்பதற்கும் நாம் அல்லாஹ்விடமே பிரார்த்திப்போமாக. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவரது தோழர்கள் மீதும், அவரது குடும்பத்தவர்கள் மீதும் அல்லாஹ் அருள் புரிவானாக.
Previous Post Next Post