அத்தியாயம் 33 ஆட்சியதிகாரம்

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 33
ஆட்சியதிகாரம்

பாடம் : 1 மக்கள் அனைவரும் (ஆட்சியதிகாரத்தில்) குறைஷியரைப் பின்பற்றுபவர் ஆவர்; இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருந்துவரும்.
3714. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷியரைப் பின்பற்றுபவர் ஆவர்; அவர்களில் முஸ்லிமாயிருப்பவர் குறைஷியரில் முஸ்லிமாயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார். அவர்களில் இறைமறுப்பாளராயிருப்பவர் குறைஷியரில் இறை மறுப்பாளராயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3715. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷியரைப் பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களில் முஸ்லிமாயிருப்பவர் குறைஷியரில் முஸ்லிமாயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார். மக்களில் இறை மறுப்பாளராயிருப்பவர் குறைஷியரில் இறைமறுப்பாளராயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார்.
அத்தியாயம் : 33
3716. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நன்மையிலும் தீமையிலும் (இஸ்லாத்திலும், அறியாமைக்காலத்திலும்) மக்கள் அனைவரும் குறைஷியரைப் பின்பற்றுபவர்கள் ஆவர்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3717. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருந்துவரும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. - இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3718. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் தந்தை (சமுரா -ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "பன்னிரண்டு கலீஃபாக்கள் மக்களை ஆளாதவரை இந்த ஆட்சியதிகாரம் முடிவடையாது" என்று கூறிவிட்டு, பிறகு எனக்குக் கேட்காமல் இரகசியமாக ஏதோ (என் தந்தையிடம்) சொன்னார்கள்.
அப்போது நான் என் தந்தையிடம், "நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு என் தந்தை "அவர்கள் அனைவரும் குறைஷியர் ஆவர் (என்று கூறினார்கள்)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3719. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், "பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் மக்களை ஆளும்வரை இந்த ஆட்சியமைப்பு நீடிக்கும்" என்று சொல்லக் கேட்டேன். பிறகு எனக்குக் கேட்காத விதத்தில் ஏதோ (என் தந்தையிடம்) நபி (ஸல்) அவர்கள் இரகசியமாகக் கூறினார்கள். நான் என் தந்தையிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு "அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், அதில் "இந்த ஆட்சியமைப்பு நீடிக்கும்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33
3720. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இஸ்லாம், பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள்வரை வலிமையானதாக இருந்துவரும்" என்று சொல்லக் கேட்டேன். பிறகு ஏதோ சொன்னார்கள். அதை நான் புரிந்துகொள்ளவில்லை. எனவே, நான் என் தந்தை (சமுரா -ரலி) அவர்களிடம், "என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு என் தந்தை, "அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 33
3721. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "இந்த ஆட்சியதிகாரம் பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள்வரை வலிமையானதாக இருந்துவரும்" என்று கூறிவிட்டுப் பிறகு ஏதோ சொன்னார்கள். அதை நான் புரிந்துகொள்ளவில்லை. எனவே, நான் என் தந்தையிடம், "என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 33
3722. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் தந்தை (சமுரா -ரலி) அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த மார்க்கம், பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வரை வலிமையானதாகவும் பாதுகாப்போடும் இருந்துவரும்" என்று சொல்லக் கேட்டேன். பிறகு ஏதோ சொன்னார்கள். மக்கள் (பேசிக் கொண்டிருந்ததால்) அதைக் கேட்கவிடாமல் என்னைச் செவிடாக்கிவிட்டார்கள். எனவே, நான் என் தந்தையிடம், "நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு "அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று கூறினார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3723. ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, அதை என் அடிமை நாஃபிஉ இடம் கொடுத்தனுப்பினேன். அதில் "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டிருந்தேன். அவர்கள் எனக்குப் பதில் கடிதம் எழுதினார்கள். (அதில் பின்வருமாறு தெரிவித்திருந்தார்கள்:)
ஒரு வெள்ளிக்கிழமை தினத்தன்று மாஇஸ் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் (விபசாரக் குற்றத்திற்காக) கல்லெறிந்து கொல்லப்பட்ட மாலைப் பொழுதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமைநாள் நிகழ்வதற்கு முன் உங்களைப் பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் ஆளும்வரை இந்த மார்க்கம் (வலிமையுடன்) நிலைபெற்றிருக்கும். அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்" என்று கூறினார்கள்.
மேலும், முஸ்லிம்களில் ஒரு சிறு குழுவினர் (பாரசீக மன்னன்) குஸ்ரூவின் அல்லது குஸ்ரூ குடும்பத்தாரின் கோட்டையான வெள்ளை மாளிகையை வெற்றிகொள்வார்கள்.
மேலும், மறுமை நிகழ்வதற்கு முன் பெரும் பெரும் பொய்யர்கள் தோன்றுவார்கள். அவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்.
மேலும், அல்லாஹ் உங்களில் ஒருவருக்குச் செல்வத்தை வழங்கினால் முதலில் தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் செவழிக்கட்டும்! மேலும், நான் உங்களை ("அல் கவ்ஸர்" தடாகத்தின் அருகில்) எதிர்பார்த்துக் காத்திருப்பேன் என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸை எனக்கு அறிவியுங்கள்" என்று கேட்டேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 33
பாடம் : 2 ஆட்சித் தலைவரை நியமிப்பதும் நியமிக்காமல் விடுவதும்.
3724. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (கலீஃபா உமர் (ரலி) அவர்கள்) தாக்கப்பட்டு (படுக்கையில்) இருந்தபோது அவர்கள் அருகில் நான் இருந்தேன். அப்போது அவர்களை மக்கள் பாராட்டிப் பேசினர். மேலும், "அல்லாஹ் உங்களுக்கு நற்பலனை வழங்கட்டும்" என்று கூறினர். அதற்கு என் தந்தை "(என்னைப்) பிடித்தோ பிடிக்காமலோ (பாராட்டுகிறீர்கள்)" என்று கூறினார்கள். அப்போது மக்கள், "நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமியுங்கள்" என்று கூறினர்.
அதற்கு, "நான் உயிரோடு இருக்கும்போதும் இறந்த பிறகும் உங்கள் விவகாரத்திற்குப் பொறுப்பேற்க வேண்டுமா? நான் வகித்த இந்தப் பதவியில் (இறைவனிடம்) எனது பங்கு எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்தால் போதும். நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அதற்கும் முன்மாதிரி உண்டு). ஏனென்றால், (எனக்கு முன்பு) என்னைவிடச் சிறந்தவர் (அதாவது அபூபக்ர் (ரலி) அவர்கள்) அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றார்கள். (ஆட்சித் தலைவரை நியமிக்காமல்) அப்படியே நான் உங்களை விட்டுவிட்டால், (அதற்கும் முன்மாதிரி உண்டு). ஏனெனில், என்னைவிடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறுதான் (உங்களுக்கு யாரையும் நியமிக்காமல்) உங்களை விட்டுச் சென்றார்கள்" என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
என் தந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்தபோது, என் தந்தை யாரையும் தமக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டார்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன்.
அத்தியாயம் : 33
3725. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர், "உனக்குத் தெரியுமா? உன்னுடைய தந்தை தமக்குப் பின் வேறு யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டார்கள்" என்று கூறினார். நான் "அவ்வாறு அவர்கள் செய்துவிடக்கூடாது" என்று கூறினேன். அதற்கு அவர், "(இல்லை) அவ்வாறுதான் செய்வார்கள்" என்றார். நான், "இது தொடர்பாக அவர்களிடம் நான் பேசுவேன்" எனச் சத்தியமிட்டேன்.
பிறகு காலைவரை அமைதியாக இருந்துவிட்டேன். (இது தொடர்பாக) அவர்களிடம் நான் பேசவில்லை. (அது குறித்து அவர்களிடம் பேசுவேன் என நான் சத்தியம் செய்திருந்ததால்) எனது வலக்கையில் ஒரு மலையை நான் சுமந்துகொண்டிருந்ததைப் போன்று எனக்கு இருந்தது. திரும்ப அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் மக்களின் நிலை குறித்து என்னிடம் விசாரித்தார்கள். அதைப் பற்றி அவர்களிடம் நான் தெரிவித்தேன்.
பிறகு அவர்களிடம், "மக்கள் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொள்வதை நான் கேள்விப் பட்டேன். அதைத் தங்களிடம் நான் சொல்வேன் எனச் சத்தியம் செய்துவிட்டேன். தாங்கள் தங்களுக்குப் பிறகு யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டீர்கள் எனப் பேசிக் கொண்டனர். (உங்கள்) ஒட்டகத்தையோ ஆட்டையோ மேய்க்கின்ற ஒருவன் உங்களுக்கு இருந்து அவன் அவற்றை (மேய்க்கப்போன இடத்திலேயே) விட்டுவிட்டு, பின்னர் உங்களிடம் வந்தால், அவன் (அவற்றைப்) பாழாக்கிவிட்டான் என்றே நீங்கள் கருதுவீர்கள். அப்படியானால், மக்களை மேய்ப்பது அதைவிடக் கடினமானது (அல்லவா?)" என்று நான் சொன்னேன்.
அப்போது எனது கருத்துக்கு என் தந்தை உடன்பட்டார்கள். தமது தலையைச் சிறிது நேரம் தாழ்த்திக்கொண்டிருந்தார்கள். பிறகு தலையை என் பக்கமாக உயர்த்தி, "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தனது மார்க்கத்தைப் பாதுகாப்பான். நான் எனக்குப் பின் ஓர் ஆட்சித் தலைவரை நியமிக்காவிட்டால் (அது தவறல்ல); ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கவில்லை. நான் எனக்குப் பின் யாரையேனும் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அதுவும் தவறாகாது. ஏனெனில்,) அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்குப் பின் (என்னை) ஆட்சித் தலைவராக நியமித்தார்கள்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் நினைவு கூர்ந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நிகராக யாரையும் அவர்கள் ஆக்கமாட்டார்கள்; தமக்குப் பின் யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டார்கள் என நான் அறிந்துகொண்டேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 3 பதவியைத் தேடுவதற்கும் அதன் மீது பேராசைப்படுவதற்கும் வந்துள்ள தடை.
3726. அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துர் ரஹ்மானே! ஆட்சிப் பொறுப்பை (நீங்களாக)க் கேட்காதீர்கள். ஏனெனில், நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீங்கள் (தனியாக) விடப்படுவீர்கள். கேட்காமல் அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உங்களுக்கு (அல்லாஹ்வின்) உதவி கிடைக்கும்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3727. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் என் தந்தையின் சகோதரர் புதல்வர்களில் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். அப்போது அவ்விருவரில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தங்களுக்கு அளித்துள்ள பொறுப்புகளில் சிலவற்றுக்கு எங்களை அதிகாரிகளாக நியமியுங்கள்" என்று சொன்னார். மற்றொருவரும் அவ்வாறே கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இந்த ஆட்சியதிகாரத்தைக் கேட்கின்ற ஒருவருக்கோ ஆசைப்படுகின்ற ஒருவருக்கோ நாம் அதை வழங்கமாட்டோம்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3728. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றேன். என்னுடன் (என்) அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த இருவரும் இருந்தனர். அவர்களில் ஒருவர் என் வலப்பக்கத்திலும் மற்றொருவர் என் இடப்பக்கத்திலும் இருந்தனர். அவ்விருவரும் (நபி (ஸல்) அவர்களிடம் அரசாங்கப்) பதவி அளிக்குமாறு கோரினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள்.
நபியவர்கள், "அபூமூசா!" அல்லது "அப்துல்லாஹ் பின் கைஸ்!" நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். நான், "சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! இவர்கள் இருவரும் தமது மனதில் இருந்ததை என்னிடம் தெரிவிக்கவுமில்லை. இவர்கள் பதவி கேட்பார்கள் என்று எனக்குத் தெரியுவும் செய்யாது" என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இதழுக்குக் கீழ் துருத்திக்கொண்டிருந்த பல் துலக்கும் குச்சியை இப்போதும்கூட நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள், "யார் பதவியை விரும்புகிறாரோ, அவருக்கு நாம் பதவியை "ஒருபோதும் கொடுக்கமாட்டோம்" அல்லது "கொடுப்பதில்லை". ஆகவே, "அபூமூசா!" அல்லது "அப்துல்லாஹ் பின் கைஸ்!" நீங்கள் (ஆளுநராகச்) செல்லுங்கள்" என்று கூறி, என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். பிறகு என்னைப் பின்தொடர்ந்து முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள்.
முஆத் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தபோது "வாகனத்திலிருந்து இறங்குங்கள் (இதில் அமருங்கள்)" என்று கூறிவிட்டு, (அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக) அவர்களுக்குத் தலையணை ஒன்றை எடுத்து வைத்தேன்.
அப்போது எனக்கு அருகில் ஒரு மனிதர் கட்டப்பட்டிருப்பதைக் கண்ட முஆத் (ரலி) அவர்கள், "இவர் யார்?" என்று கேட்டார்கள். நான், "இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு (இஸ்லாத்தை விட்டு வெளியேறி) தமது பழைய துன்மார்க்கத்திற்கே திரும்பிச் சென்றுவிட்டார்; யூதராகிவிட்டார்" என்று சொன்னேன்.
அதற்கு முஆத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாதவரை நான் அமரமாட்டேன்" என்று கூறினார்கள். பிறகு மீண்டும் "சரி, அமருங்கள்" என்றேன். முஆத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாத வரை நான் அமரமாட்டேன்" என்று கூறினார்கள்.
இவ்வாறு மூன்று முறை நடந்தது. எனவே, அவருக்கு மரணதண்டனை அளிக்கும்படி நான் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார்.
பிறகு நாங்கள் இருவரும் இரவுத்தொழுகை குறித்துப் பேசிக்கொண்டோம். அப்போது எங்களில் ஒருவர், (அதாவது) முஆத் (ரலி) அவர்கள், "நான் இரவில் சிறிது நேரம் உறங்குகிறேன். சிறிது நேரம் நின்று வணங்குகிறேன். நின்று வணங்குவதற்கு (இறைவனிடம்) நான் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் நான் பிரதிபலனை எதிர்பார்க்கிறேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 4 அவசியமின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத்தக்கதன்று.
3729. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏதேனும் (அரசுப்) பதவி வழங்கக் கூடாதா?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, "அபூதர்! நீர் பலவீனமானவர். அது (பதவி) ஒரு கையடைப் பொருளாகும். அதை முறைப்படி அடைந்து, அதில் தமக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றியவரைத் தவிர மற்றவர்களுக்கு அது (மறுமையில்) இழிவும் துயரமும் ஆகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 33
3730. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "அபூதர்! உம்மை நான் பலவீனமானவராகவே காண்கிறேன். எனக்கு நான் விரும்புவதையே உமக்கும் விரும்புகிறேன். இருவருக்குக்கூட நீர் தலைமை ஏற்காதீர். அநாதையின் சொத்துக்கு நீர் பொறுப்பேற்காதீர்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும், கொடுமைக்கார ஆட்சியாளன் அடையும் தண்டனையும், குடிமக்களிடம் நளினமாக நடந்துகொள்ளுமாறு வந்துள்ள தூண்டுதலும், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்குவதற்கு வந்துள்ள தடையும்.
3731. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நேர்மையான ஆட்சியாளர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளியாலான மேடைகளில் இருப்பார்கள். அவனுடைய இரு கைகளுமே வலக்கரமே (வளமிக்கதே). அவர்கள் தமது நிர்வாகத்திலும், குடும்பத்திலும், தாம் பொறுப்பேற்றுக்கொண்ட (அனைத்)திலும் நியாயமாக நடந்துகொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்).
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3732. அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சில விஷயங்களைப் பற்றிக் கேட்பதற்காக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், "நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?" என்று கேட்டார்கள். நான், "எகிப்தியரில் ஒருவன்" என்று பதிலளித்தேன். அவர்கள், "உங்கள் ஆட்சியாளர் இந்தப் போரில் உங்களிடம் எப்படி நடந்துகொண்டார்?" என்று கேட்டார்கள்.
அதற்கு நான், "வெறுக்கத்தக்க அம்சங்கள் எதையும் நாங்கள் அவரிடம் காணவில்லை. எங்களில் ஒருவரது ஒட்டகம் செத்துவிட்டால், அவருக்கு அவர் ஒட்டகம் வழங்கினார். அடிமை இறந்துவிட்டால், அவருக்கு அடிமை தந்தார். செலவுக்குப் பணம் தேவைப்பட்டால் பணம் தந்தார்" என்று விடையளித்தேன்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "அவர் என் சகோதரர் முஹம்மத் பின் அபீபக்ர் விஷயத்தில் நடந்துகொண்ட விதம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியைக் கூறவிடாமல் என்னைத் தடுக்காது" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, "இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்குவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3733. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆண் (மகன்) தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்" என்று (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என நான் எண்ணுகிறேன்" என்று கூறியதாக அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3734. ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபித்தோழர்) மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அவர்களை(ச் சந்தித்து) உடல்நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியாளர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார்.
அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட (ஹதீஸ்) செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நான் இன்னும் சில நாட்கள் உயிர் வாழ்வேன் என அறிந்திருந்தால் அதை உமக்கு அறிவிக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்துபோனால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்யாமல் இருப்பதில்லை" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் உடல் நலிவுற்றிருந்தபோது (அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக) இப்னு ஸியாத் சென்றார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மேலும், இப்னு ஸியாத் "இதற்கு முன்பு இதை நீங்கள் எனக்கு அறிவிக்கவில்லையே?" என்று கேட்க, மஅகில் (ரலி) அவர்கள் "நான் உமக்கு (காரணத்தோடுதான்) அறிவிக்க வில்லை" அல்லது "உம்மிடம் நான் (காரணத்தோடுதான்) அறிவித்திருக்கவில்லை" என்று பதிலளித்தார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3735. அபுல்மலீஹ் ஆமிர் பின் உசாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர் மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் (இறப்பதற்கு முன்) நோய்வாய்ப்பட்டிருந்த போது, (அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள், "உமக்கு நான் ஒரு ஹதீஸை அறிவிக்கப்போகிறேன். நான் மரணத்தருவாயில் இருந்திராவிட்டால் அதை உமக்கு நான் அறிவிக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஓர் ஆட்சியாளர் முஸ்லிம்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர், அவர்களுக்காக உழைக்காமலும் (அவர்கள்மீது) அக்கறைகாட்டாமலும் இருந்தால், அவர்களுடன் அவர் சொர்க்கத்துக்குச் செல்லவே மாட்டார்" என்று சொல்ல நான் கேட்டேன் எனக் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
அதில், "மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 33
3736. ஹசன் பின் அபில்ஹசன் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள் (அன்றைய பஸ்ராவின் ஆட்சியராயிருந்த) உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் சென்று, "அன்புக் குழந்தாய்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நிர்வாகிகளில் மிகவும் மோசமானவர், இரக்கமற்ற கல்நெஞ்சக்காரர்தாம்" என்று கூறியதை நான் கேட்டேன். அவர்களில் ஒருவராக நீ ஆகிவிட வேண்டாம் என உன்னை நான் எச்சரிக்கிறேன்" என்று கூறினார்கள்.
அதற்கு உபைதுல்லாஹ், "(நீர் போய்) உட்காரும். நீர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களில் மட்டமான ஒருவர்தாம்" என்று கூறினார். அதற்கு ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள், "(நபியின் தோழர்களான) அவர்களில் மட்டமானவர்களும் இருந்தார்களா? அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களிலும் மற்றவர்களிலும்தாம் மட்டமானவர்கள் தோன்றினர்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 6 (போர்ச்செல்வங்கள் உள்ளிட்ட) பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
3737. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று (போர்ச் செல்வங்கள் உள்ளிட்ட) பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் தண்டனை கொடியது என்பதையும் எடுத்துரைத்தார்கள்.
பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.
இவ்வாறே, மறுமை நாளில் கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையைத் தமது கழுத்தில் சுமந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய இயலாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.
இவ்வாறே, மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஆட்டைத் தமது கழுத்தில் சுமந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகிலேயே) சொல்லி விட்டேன்" என்று கூறிவிடுவேன்.
இவ்வாறே, மறுமை நாளில் கத்திக்கொண்டிருக்கும் ஓர் உயிரினத்தைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம். ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்யமுடியாது; உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகிலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.
இவ்வாறே, மறுமை நாளில் (காற்றில்) அசையும் துணிகளைத் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று கூறி (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம்.ஏனெனில், அப்போது நான் "உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய இயலாது. உனக்கு (சொல்ல வேண்டியதை உலகி லேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.
இவ்வாறே, மறுமை நாளில் பொன்னையும் வெள்ளியையும் தமது கழுத்தில் சுமந்து கொண்டுவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்" என்று கூறி (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் யாரையும் நான் காணவேண்டாம்.ஏனெனில், அப்போது நான் "என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகிலேயே) சொல்லிவிட்டேன்" என்று கூறிவிடுவேன்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3738. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போர்ச் செல்வங்கள் உள்ளிட்ட) பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அதன் தண்டனை கொடியது என்பதையும் எடுத்துரைத்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்கு வந்துள்ள தடை.
3739. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்அஸ்த்" குலத்தாரில் ஒருவரை (பனூ சுலைம் குலத்தாரின்) "ஸகாத்"களை வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என அழைக்கப்பட்டார். அவர் ("ஸகாத்"களை வசூலித்துவிட்டு) வந்து (கணக்கு ஒப்படைத்தபோது), "இது உங்களுக்குரியது. இது எனக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது" என்று கூறினார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்துத் திரும்பிவந்து) "இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது" என்று கூறுகிறார். அவர் (மட்டும்) தம் தந்தையின் வீட்டிலோ அல்லது தாயின் வீட்டிலோ உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக! உங்களில் யாரேனும் அ(ந்தப் பொதுச் சொத்)திலிருந்து (முறைகேடாக) எதையேனும் பெற்றால் மறுமை நாளில் அதைத் தமது கழுத்தில் சுமந்துகொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக்கொண்டிருக்கும். மாடாகவோ ஆடாகவோ இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும்" என்று கூறினார்கள்.
பிறகு அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்திவிட்டு, "இறைவா! (உன் கட்டளையை) எடுத்துரைத்துவிட்டேனா?" என்று இரண்டு முறை கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நபி (ஸல்) அவர்கள் "அல்அஸ்த்" குலத்தைச் சேர்ந்த இப்னுல் லுத்பிய்யா என்பவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்து விட்டுத் திரும்பி)வந்து, "இது உங்களுக்குரிய செல்வம். இது எனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு" என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "நீர் உம்முடைய தாய் தந்தையின் வீட்டில் உட்கார்ந்திரும்! உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்ப்போம்" என்று கூறினார்கள். பிறகு எழுந்து நின்று (எங்களுக்கு) உரையாற்றினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. பிறகு மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3740. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் "ஸகாத்"களை வசூலிக்கும் அதிகாரியாக "இப்னுல் உத்பிய்யா" எனப்படும் ஒருவரை நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்துக்கொண்டு) வந்தபோது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அவர், "இது உங்களுக்குரிய செல்வம். இது (எனக்கு வந்த) அன்பளிப்பு" என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உண்மையாளராக இருந்தால், உம்முடைய தந்தை வீட்டில் அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திரும்! உம்மிடம் அன்பளிப்புகள் வருகின்றனவா பார்ப்போம்" என்று கூறினார்கள்.
பிறகு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக்கிய ஒரு பணிக்காக உங்களில் ஒருவரை நான் அதிகாரியாக்கினேன். அவர் (சென்றுவிட்டு) வந்து, "இது உங்களுக்குரிய செல்வம். இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது" என்று சொல்கிறார். அவர் சொல்வது உண்மையாயிருந்தால், அவர் தம் தந்தை வீட்டிலோ அல்லது தாய் வீட்டிலோ உட்கார்ந்திருக்கலாமே! அன்பளிப்புகள் வருகின்றனவா என்று பார்ப்போம்.
அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் எவரும் உரிமையின்றி (முறைகேடாக) எந்த ஒன்றை அடைந்துகொண்டாலும் மறுமை நாளில் அதை (தமது தோளில்) சுமந்தவண்ணமே அல்லாஹ்வை அவர் சந்திப்பார். இந்த வகையில் கனைத்துக்கொண்டிருக்கும் ஒட்டகத்தையோ, அல்லது கத்திக்கொண்டிக்கும் மாட்டையோ ஆட்டையோ (தமது தோளில்) சுமந்துகொண்டு அல்லாஹ்வைச் சந்திக்கும் எவரையும் நான் உறுதியாக அறிவேன்"என்று கூறினார்கள்.
பிறகு, தம் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவுக்குத் தம் இரு கைகளையும் உயர்த்தி, "இறைவா! (உன் கட்டளையை) நான் எடுத்துரைத்துவிட்டேன் அல்லவா?" என்று அவர்கள் கூறியதை என் கண் கண்டது; காது கேட்டது.
அத்தியாயம் : 33
3741. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்தா பின் சுலைமான் மற்றும் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "அவர் (ஸகாத் வசூலித்துவிட்டுத் திரும்பி) வந்தபோது, அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள்" என இடம்பெற்றுள்ளது. அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் மீதாணையாக! என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நிச்சயம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அ(ந்தப் பொதுச்சொத்)திலிருந்து எவரேனும் எதையாவது (முறைகேடாகப்) பெற்றால்..." என்று இடம்பெற்றுள்ளது.
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "என் கண் கண்டது. காதுகள் கேட்டன. வேண்டுமானால் நீங்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். ஏனெனில், அப்போது அவர்களும் என்னுடன் இருந்தார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3742. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஸகாத்"களை வசூலிக்கும் அதிகாரியாக ஒருவரை நியமித்தார்கள். அவர் (ஸகாத்களை வசூலித்துவிட்டு) ஏராளமான செல்வங்களுடன் வந்து, "இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பெற்றது" என்று கூறலானார். பிறகு மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களிடம், "இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாயிலிருந்து என் காதுகள் (நேரடியாகக்) கேட்டன" என்றார்கள்.
அத்தியாயம் : 33
3743. அதீ பின் அமீரா அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்திருந்து, பின்னர் அவர் ஓர் ஊசியையோ அதை விடச் சிறியதையோ நம்மிடம் (கணக்குக் காட்டாமல்) மறைத்துவிட்டால் அது மோசடியாகவே அமையும். அவர் மறுமை நாளில் அந்தப் பொருளுடன் வருவார்" என்று கூறியதை நான் கேட்டேன்.
அப்போது அன்சாரிகளில் ஒரு கறுப்பு நிற மனிதர் எழுந்து, -அவரை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது- "அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தாங்கள் ஒப்படைத்திருந்த பணியை நீங்கள் (திரும்ப) ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். அவர், "தாங்கள் இன்னின்னவாறு கூறியதை நான் கேட்டேன்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இப்போதும் அவ்வாறே கூறுகிறேன். நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்தால், அவர் அதில் கிடைக்கும் சிறியதையும் அதிகத்தையும் (நம்மிடம்) கொண்டுவந்து சேர்க்கட்டும். பிறகு எது அவருக்கு வழங்கப்படுகிறதோ அதை அவர் பெற்றுக்கொள்ளட்டும். எது அவருக்கு மறுக்கப்படுகிறதோ அதிலிருந்து அவர் விலகிக்கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் அமீரா அல்கிந்தீ (ரலி) அவர்களிடமிருந்து மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் அமீரா அல்கிந்தீ (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 8 பாவமற்ற விஷயங்களில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமான செயலில் கட்டுப்படுவது தடை செய்யப்பட்டதாகும்.
3744. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள்; அவனுடைய தூதருக்கும் உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கீழ்ப்படியுங்கள்" (4:59) எனும் இறைவசனம், நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்களை (தளபதியாக்கி) ஒரு படைப்பிரிவினருடன் அனுப்பியபோது அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்து யஅலா பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவித்தார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3745. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். எனக்கு மாறுசெய்தவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவர் ஆவார். (என்னால் நியமிக்கப்பட்ட) தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார்; தலைவருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறு செய்தவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "தலைவருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறுசெய்தவர் ஆவார்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33
3746. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். எனக்கு மாறுசெய்தவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவர் ஆவார். என்னால் நியமிக்கப்பெற்ற தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். என்னால் நியமிக்கப்பெற்ற தலைவருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறுசெய்தவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3747. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர்" என்றே இடம்பெற்றுள்ளது. "என்னால் நியமிக்கப்பெற்ற தலைவருக்கு" என்று இடம்பெறவில்லை. இச்சொல் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலும் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33
3748. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் உம்மைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போதும் (கட்டளையைச்) செவியுற்று (தலைமைக்குக்) கீழ்ப்படிந்து நடப்பீராக!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3749. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் உற்ற தோழர் (நபி -ஸல்) அவர்கள், "தலைவரின் சொல்லைச் செவியுற்றுக் கீழ்ப் படிந்து நடப்பாயாக! அவர் உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும் சரியே!" என எனக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அவர் உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அபிசீனிய (கறுப்பு நிற) அடிமையாக இருந்தாலும் சரியே!" என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அவர் உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும் சரியே" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3750. உம்முல் ஹுஸைன் பின்த் இஸ்ஹாக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது ஆற்றிய உரையில், "அல்லாஹ்வின் வேதப்படி உங்களை வழி நடத்துகின்ற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக்கப் பட்டாலும் அவரது சொல்லையேற்று அவருக்குக் கீழ்ப்படியுங்கள்" என்று கூறியதை நான் கேட்டேன்.
- மேற்கண்ட ஹதீஸ் உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அபிசீனிய அடிமையொருவர் (உங்களுக்குத் தலைவராக்கப்பட்டாலும்)" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அபிசீனிய அடிமையொருவர்" என்று காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட அபிசீனியர்" எனும் குறிப்பு இல்லை. ("அடிமை" என்று மட்டுமே இடம்பெற்றுள்ளது.) மேலும், "மினாவில் அல்லது அரஃபாத்தில் உரையாற்றும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டேன்" எனக் கூடுதல் குறிப்புடன் இடம்பெற்றுள்ளது.
- உம்முல் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
விடைபெறும் ஹஜ்ஜுக்காக நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சென்றேன். அவர்கள் ஏராளமான அறிவுரைகளைக் கூறினார்கள். பிறகு "அல்லாஹ்வின் வேதப்படி உங்களை வழி நடத்துகின்ற, உடலுறுப்புகள் துண்டிக்கப்பட்ட கறுப்பு நிற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக்கப்பட்டாலும் அவரது சொல்லையேற்று அவருக்குக் கீழ்ப்படிந்து நடங்கள்" என்று கூறியதை நான் கேட்டேன்.
அத்தியாயம் : 33
3751. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவனுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்படாதவரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்ட ளையைச்) செவியுறுவதும் (அதற்குக்) கீழ்ப்படிவதும் கடமையாகும். இறைவனுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியுறுவதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3752. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி, அவர்களுக்கு ஒரு மனிதரைத் தளபதியாக்கினார்கள். (ஒரு கட்டத்தில் அவர் படைவீரர்கள் மீது கோபம் கொண்டு) நெருப்பை மூட்டி, அதில் குதிக்கச் சொன்னார். சிலர் அதில் குதிக்க முன்வந்தனர். வேறுசிலர் "(நரக) நெருப்பிலிருந்து (தப்பிக்கத்)தானே நாம் வெருண்டோடி (நபிகளாரிடம்) வந்தோம்" என்றனர்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டபோது, நெருப்பில் குதிக்க முற்பட்டவர்களிடம் "அதில் மட்டும் நீங்கள் குதித்திருந்தால் மறுமை நாள் வரை அதிலேயே நீங்கள் கிடந்திருப்பீர்கள்" என்றும், மற்றவர்களிடம் நல்லபடியாகவும் பேசினார்கள். மேலும் "அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் விஷயத்தில் கீழ்ப்படிதல் கிடையாது. கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3753. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி, அவர்களுக்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி, அவரது கட்டளையைச் செவியுற்றுக் கட்டுப்பட்டு நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஒரு கட்டத்தில்) ஏதோ ஒரு விஷயத்தில் படைவீரர்கள் அவரைக் கோபப்படுத்திவிட்டனர். அப்போது அவர், "விறகைச் சேகரியுங்கள்" என்று கூறினார். அவ்வாறே அவர்கள் விறகைச் சேகரித்ததும் "நெருப்பை மூட்டுங்கள்" என்று உத்தரவிட்டார்.
அவ்வாறே அவர்கள் நெருப்பை மூட்டிய பின், "நீங்கள் எனது சொல்லைச் செவியுற்று, அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்குக் கட்டளையிடவில்லையா?" என்று கேட்டார். படைவீரர்கள், "ஆம்" என்றனர். "அவ்வாறாயின் நெருப்பில் குதியுங்கள்" என்று அவர் உத்தரவிட்டார்.
அப்போது படைவீரர்கள் ஒருவரையொருவர் பார்த்தபடி, "(நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத் தானே நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வெருண்டோடி வந்தோம்!" என்று கூறினர். அவ்வாறே அவர்கள் (சிறிது நேரம்) இருந்துகொண்டிருக்க, அவருடைய கோபம் தணிந்தது; நெருப்பும் அணைந்தது.
பிறகு (மதீனா திரும்பியதும்) நபி (ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தனர். நபி (ஸல்) அவர்கள், "அதில் (மட்டும்) அவர்கள் குதித்திருந்தால் அதிலிருந்து அவர்கள் (ஒருபோதும்) வெளியேறியிருக்கமாட்டார்கள். கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3754. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப் படிந்து நடப்போம் என்றும், அதிகாரத்திலிருப்போருடன் அவருடைய அதிகாரம் தொடர்பாகச் சண்டையிடமாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையே பேசுவோம் என்றும், அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்போரின் பழிப்புக்கு அஞ்சமாட்டோம் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் உறுதிமொழி அளித்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உபாதா பின் அஸ் ஸாமித் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3755. ஜுனாதா பின் அபீஉமய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது நாங்கள் அவர்களிடம் (உடல்நலம் விசாரிக்கச்) சென்றோம். நாங்கள், "அல்லாஹ் உங்களுக்குக் குணமளிக்கட்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்ட ஒரு ஹதீஸை (செய்தியை) எங்களுக்கு அறிவியுங்கள். அதனால் அல்லாஹ் பயன் அளிப்பான்" என்று சொன்னோம்.
அதற்கு உபாதா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். நாங்கள் அவர்களிடம் (சென்று இஸ்லாத்தில் நிலைத்திருப்பதாக) உறுதிமொழி அளித்தோம். எங்களுக்கு விருப்பமான விஷயத்திலும் எங்களுக்கு விருப்பமில்லாத விஷயத்திலும் நாங்கள் சிரமத்திலிருக்கும்போதும் வசதியாயிருக்கும் போதும் எங்களைவிட மற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போதும்கூட (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என்றும், ஆட்சியதிகாரத்தில் இருப்போருடன் அவருடைய அதிகாரம் தொடர்பான விஷயத்தில் நாங்கள் சண்டையிடமாட்டோம் என்றும் உறுதிமொழி அளித்தோம்.
"எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளர்களிடம் நீங்கள் கண்டாலே தவிர" என்று எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.
அத்தியாயம் : 33
பாடம் : 9 ஆட்சித் தலைவர் ஒரு கேடயம்; அவரோடுதான் எதிரிகள் போரிடுகின்றனர்; அவர் மூலமே மக்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.
3756. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆட்சித் தலைவர் ஒரு கேடயமே ஆவார். அவருடன் போரிடப்படுகிறது. அவர் மூலம் பாதுகாப்புப் பெறப்படுகிறது. அவர் (தமது தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறையச்ச உணர்வைக் கைகொள்ளும்படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்துகொண்டால், அவருக்கு அதன் காரணமாக (பெரும்) நற்பலன் உண்டு. அதற்கு மாற்றமாக (தீமையானவற்றை) அவர் கட்டளையிட்டால் அதனால் ஏற்படும் பாவம் அவர்மீது(ம்) சாரும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 10 கலீஃபாக்களில் முதலாவதாக வருபவருக்கே முன்னுரிமை அளித்து உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும்.
3757. அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் ஐந்தாண்டுகள் (தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு கல்வி கற்பதற்காக) அமர்ந்திருந்தேன். (ஒரு முறை) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"பனூ இஸ்ராயீல் மக்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். ஓர் இறைத்தூதர் இறக்கும்போது மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். (ஆனால்,) எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், எனக்குப் பின் கலீஃபாக்கள் (பிரதிநிதிகள்) பலர் தோன்றுவார்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "(அவர்கள் வரும்போது) நாங்கள் என்ன செய்ய வேண்டுமெனத் தாங்கள் உத்தரவிடுகிறீர்கள்?" என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்களில் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (அளிக்க வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறைவேற்றுங்கள்). அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்துவிடுங்கள். ஏனெனில், அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடமே அல்லாஹ் கேட்கவிருக்கின்றான்" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3758. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை அன்சாரிகளிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனக்குப் பின் விரைவில் உங்களைவிடப் பிறருக்கு (ஆட்சியதிகாரம் மற்றும் போர் நிதிகளைப் பங்கிடுதல் ஆகியவற்றில்) முன்னுரிமை வழங்கப்படுதலும் நீங்கள் வெறுக்கின்ற சில நிகழ்வுகளும் நடக்கும்" என்று கூறினார்கள். அன்சாரிகள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் அவற்றைச் சந்திக்கக்கூடியவர் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?" என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஆட்சியாளர்களான) அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்துவிடுங்கள். உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3759. அப்துர் ரஹ்மான் பின் அப்தி ரப்பில் கஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இறையில்லம் கஅபாவுக்குச் சென்றேன். கஅபாவின் நிழலில் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் மக்கள் கூடியிருந்தனர். நான் அங்கு சென்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் அமர்ந்துகொண்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஓர் இடத்தில் இறங்கித் தங்கினோம். எங்களில் சிலர் தம் கூடாரங்களைச் சீரமைத்துக்கொண்டிருந்தனர். வேறுசிலர் அம்பெய்து (பயிற்சி எடுத்துக்)கொண்டிருந்தனர். மேலும் சிலர் தம் கால்நடைகள் மேயுமிடத்தில் இருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர்களில் ஒருவர் "கூட்டுத் தொழுகை நடைபெறப் போகிறது" என அறிவித்தார்.
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒன்றுகூடினோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: எனக்கு முன்னர் வாழ்ந்த ஒவ்வோர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாருக்கு எது நன்மை என்பதை அறிந்திருந்தாரோ அதை அவர்களுக்கு அறிவித்துவிடுவதும் அவர்களுக்கு எது தீமையென்பதை அறிந்திருந்தாரோ அது குறித்து அவர்களை எச்சரிப்பதும் அவர்மீது கடமையாகவே இருந்தது.
உங்களுடைய இந்தச் சமுதாயத்தின் நிம்மதியான வாழ்வு அதன் ஆரம்பக்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சமுதாயத்தில் இறுதியானவர்களுக்குச் சோதனைகளும் நீங்கள் வெறுக்கின்ற பல விஷயங்களும் ஏற்படும். ஒரு குழப்பம் தோன்றும். அது இன்னொரு குழப்பத்தை எளிதானதாகக் காட்டும்.
பிறகு மற்றோரு குழப்பம் தோன்றும். அப்போது இறைநம்பிக்கையாளர், "இதில்தான் என் அழிவு உள்ளது" என்று கூறுவார். பிறகு அந்தக் குழப்பம் விலகிவிடும். பிறகு மற்றொரு குழப்பம் தோன்றும். அப்போது இறைநம்பிக்கையாளர், "இதுதான்; இதுதான்" என்பார்.
ஆகவே, (நரக) நெருப்பிலிருந்து ஒதுக்கப்பட்டு, சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட யார் விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையிலேயே இறப்பு அவரைத் தழுவட்டும். தமக்கு எது கிடைக்க வேண்டும் என்று விரும்புவாரோ அதையே மக்களுக்கும் அவர் விரும்பட்டும். ஓர் ஆட்சித் தலைவருக்கு வாக்குறுதிப் பிரமாணம் (பைஅத்) அளித்தவர், அவருடன் தமது கரத்தை இணைப்பதுடன் உளப்பூர்வமான ஆதரவையும் அவருக்கு வழங்கட்டும்; தம்மால் இயன்ற வரை அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கட்டும். அவரு(டைய ஆட்சி)க்கெதிராக அவருடன் சண்டையிடுவதற்காக மற்றொருவர் வந்தால் அவருடைய கழுத்தை வெட்டிவிடுங்கள்.
இவ்வாறு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதும் நான் அவர்களை நெருங்கி, அல்லாஹ்வின் பெயரால் நான் உங்களிடம் கேட்கிறேன். "இதைத் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் தம் கரங்களால் தம் காதுகளையும் உள்ளத்தையும் நோக்கி சைகை செய்துகாட்டி, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை என் காதுகள் கேட்டன; என் உள்ளம் அதை மனனமிட்டது" என்று கூறினார்கள்.
நான் அவர்களிடம், "இதோ! உங்கள் தந்தையின் சகோதரர் புதல்வர் முஆவியா (ரலி) அவர்கள் (கலீஃபா அலீ (ரலி) அவர்களுக்கெதிராக நிதியும் படையும் திரட்டி) எங்கள் பொருட்களை எங்களுக்கிடையே தவறான முறையில் உண்ணும்படியும் நம்மை நாமே கொலை செய்யும்படியும் எங்களுக்கு உத்தரவிடுகிறார். ஆனால், அல்லாஹ்வோ, "இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களின் பரஸ்பரத் திருப்தியுடன் நடக்கும் வணிகமாக இருந்தால் தவிர, (வேறு வழிகளில்) உங்களுக்கிடையே உங்கள் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். உங்களை நீங்களே கொலை செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களிடம் மிகவும் கருணை உடையவனாக இருக்கின்றான் (4:29) என்று கூறுகின்றானே?" என்று கேட்டேன்.
அதற்கு (பதிலளிக்காமல்) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியும் விஷயத்தில் அவருக்கு நீ கட்டுப்படு! அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் விஷயத்தில் அவருக்கு மாறுசெய்துவிடு" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துர் ரஹ்மான் பின் அப்தி ரப்பில் கஅபா (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3760. மேற்கண்ட ஹதீஸ் அப்துர் ரஹ்மான் பின் அப்தி ரப்பில் கஅபா அஸ்ஸாஇதீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் இறையில்லம் கஅபா அருகில் ஒரு கூட்டத்தைக் கண்டேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 33
பாடம் : 11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் (உரியவர்களை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கும்போதும் பொறுமைகாக்குமாறு வந்துள்ள கட்டளை.
3761. உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தனியாகச் சந்தித்து, "தாங்கள் இன்ன மனிதரை அதிகாரியாக நியமித்ததைப் போன்று என்னையும் அதிகாரியாக நியமிக்கமாட்டீர்களா?" என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அன்சாரிகளே!) எனக்குப் பிறகு (உங்களைவிட) மற்றவர்களுக்கு (ஆட்சியதிகாரத்தில்) முன்னுரிமை வழங்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே, (மறுமையில் எனக்குச் சிறப்புப் பரிசாக வழங்கப்படும் "ஹவ்ளுல் கவ்ஸர்" எனும்) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தனியாகச் சந்தித்து" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33
பாடம் : 12 உரிமைகளைத் தர மறுத்தாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல்.
3762. வாயில் பின் ஹுஜ்ர் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
சலமா பின் யஸீத் அல்ஜுஅஃபீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எங்களை நிர்வகிக்கும் ஆட்சித் தலைவர்கள், அவர்களுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய உரிமைகளைக் கோருகின்றவர்களாகவும், எங்களுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய உரிமைகளை மறுப்பவர்களாகவும் அமைந்துவிட்டால், அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள், கூறுங்கள்?" என்று கேட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலமா (ரலி) அவர்களைவிட்டுத் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.
பிறகு மீண்டும் சலமா (ரலி) அவர்கள் கேட்டபோதும் அவர்களைவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இரண்டாவது தடவையோ அல்லது மூன்றாவது தடவையோ (அவ்வாறு) சலமா (ரலி) அவர்கள் கேட்டபோது,அவர்களை அல்அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் இழுத்தார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,) "நீங்கள் (உங்கள் தலைமையின் கட்டளையைச்) செவியுற்று, (அதற்குக்) கீழ்ப்படியுங்கள். ஏனெனில், அவர்கள்மீது சுமத்தப்பட்டது அவர்களைச் சாரும். உங்கள்மீது சுமத்தப்பட்டது உங்களைச் சாரும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 33
3763. மேற்கண்ட ஹதீஸ் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அல்அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் சலமா (ரலி) அவர்களை இழுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உங்கள் தலைமையின் கட்டளையைச்) செவியுற்று, (அதற்குக்) கீழ்ப்படியுங்கள். ஏனெனில், அவர்கள்மீது சுமத்தப்பட்டது அவர்களைச் சாரும். உங்கள்மீது சுமத்தப்பட்டது உங்களைச் சாரும்" என்று கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 13 (அரசியல்) குழப்பங்கள் தோன்றும்போதும் மற்ற சமயங்களிலும் முஸ்லிம்களின் கூட்டமைப்போடு (ஜமாஅத்) சேர்ந்திருப்பது கடமையாகும்; தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பதும் கூட்டமைப்பிலிருந்து விலகுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும்.
3764. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சியதே காரணம்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும் தீமையிலும் மூழ்கிக்கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம் (இருக்கிறது)" என்று பதிலளித்தார்கள்.
நான், "அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும்" என்று பதிலளித்தார்கள். நான், "அந்தக் கலங்கலான நிலை என்ன?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "ஒரு கூட்டத்தார் எனது வழிமுறை (சுன்னா) அல்லாததைக் கடைப்பிடிப்பார்கள். எனது நேர்வழியல்லாததைக் கொண்டு வழிகாட்டுவார்கள். அவர்களில் நீ நன்மையையும் காண்பாய்; தீமையையும் காண்பாய்" என்று பதிலளித்தார்கள்.
நான், "அந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம். நரகத்தின் வாசல்களில் நின்றுகொண்டு (அங்கு வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவரை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! அவர்க(ளுடைய அடையாளங்)களை எங்களுக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்க,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் நம் (அரபு) இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். நம் மொழிகளையே பேசுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! இத்தகைய கால கட்டத்தை நான் அடைந்தால் என்ன செய்ய வேண்டும் என எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அதன் ஆட்சியாளரையும் பற்றிக்கொள்" என்று பதிலளித்தார்கள்.
அதற்கு நான், "அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஆட்சியாளரோ இல்லை (என்ற நிலையில் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால் (என்ன செய்வது)?" என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கிவிடு. (ஒதுங்கி வாழும் சூழலுக்கு முட்டுக்கட்டையாகப் பல்வேறு சிரமங்கள் நேர்ந்தாலும்) ஒரு மரத்தின் வேர் பாகத்தைப் பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, இறுதியில் அதே நிலையில் நீ இருக்கவே இறப்பு உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் நீ சேர்ந்துவிடாதே)" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 33
3765. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (மாச்சரியங்கள் நிறைந்த அறியாமைக் காலத்) தீமையில் மூழ்கிக்கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். அதில் நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம். இந்த நன்மைக்கு அப்பால் தீமை (அரசியல் குழப்பம்) ஏதும் உண்டா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
நான், "அந்தத் தீமைக்கு அப்பால் நன்மை (நல்லாட்சி) ஏதும் உண்டா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்" என்று விடையளித்தார்கள். நான், "அந்த நன்மைக்கு அப்பால் தீமை (அரசியல் குழப்பம்) ஏதும் உண்டா?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள். நான், "அது எப்படி?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "எனக்குப் பிறகு சில தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்கள் எனது நேர்வழி அல்லாத வழியில் நடப்பார்கள். எனது வழிமுறையை (சுன்னா) கடைப் பிடிக்கமாட்டார்கள். அவர்களிடையே சிலர் தோன்றுவார்கள். அவர்கள் மனித உடலில் ஷைத்தான்களின் உள்ளம் படைத்தவர்களாய் இருப்பார்கள்" என்று கூறினார்கள்.
நான், "அந்தக் கால கட்டத்தை அடைந்தால் நான் என்ன செய்ய வேண்டும், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அதற்கு "அந்த ஆட்சியாளரின் கட்டளையைச் செவியுற்று அவருக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள். நீ முதுகில் தாக்கப்பட்டாலும் சரியே! உன் செல்வங்கள் பறிக்கப்பட்டாலும் சரியே! (அந்த ஆட்சித்தலைவரின் கட்டளையைச்) செவியுற்றுக் கட்டுப்பட்டு நடந்துகொள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 33
3766. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார். ஒருவர் (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌடீகத்தின் கொடிக்குக் கீழே நின்று போரிடுகிறார்; இன மாச்சரியத்திற்காகக் கோபப்படுகிறார். அல்லது இன மாச்சரியத்துக்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன மாச்சரியத்திற்கு உதவி செய்கிறார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டுவிட்டால், அவரது மரணம் அறியாமைக் கால மரணமே ஆகும்.
யார் என் சமுதாயத்தாருக்கெதிராகப் புறப்பட்டு, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவருமில்லை. நான் அவரைச் சேர்ந்தவனுமில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3767. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் (ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல் (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, பின்னர் (அதே நிலையில்) இறந்துபோகிறாரோ அவர் அறியாமைக்கால மரணத்தையே சந்திப்பார். (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌடீகக் கொடிக்குக் கீழே நின்று ஒருவர் போரிட்டு இன மாச்சரியத்திற்காகக் கோபப்படுகிறார்; அல்லது இன மாச்சரியத்திற்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன மாச்சரியத்திற்காகப் போரிடுகிறார் எனில், அவர் என் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அல்லர்.
யார் என் சமுதாயத்திலிருந்து என் சமுதாயத்திற்கெதிராகப் புறப்பட்டு அவர்களில் இறை நம்பிக்கையாளர்கள் என்றுகூடப் பார்க்காமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, அவர்களில் ஒப்பந்தம் செய்தவர்களிடம் அவர்களது ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லையோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" எனும் குறிப்பு இல்லை. முஹம்மத் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3768. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தம் (ஆட்சித்) தலைவரிடம் (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் கண்டு அதை வெறுப்பவர், பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும். ஏனெனில், ஒருவர் (ஒன்றுபட்டக்) கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவுக்குப் பிரிந்து இறந்துபோனாலும் அவர் அறியாமைக் கால மரணத்தையே தழுவுகிறார்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3769. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர், பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுப்படாமல் அவ)ரிடமிருந்து யார் ஒரு சாண் அளவு வெளியேறி, அதே நிலையில் இறந்துபோகிறாரோ, அவர் அறியாமைக் கால மரணத்தையே எய்துவார்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3770. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மௌடீகத்தின் கொடிக்குக் கீழே இன மாச்சரியத்திற்கு அழைப்பு விடுக்கவோ, இன மாச்சரியத்திற்காக ஒத்துழைக்கவோ செய்து அதற்காகக் கொல்லப்படுபவர் அறியாமைக் கால மரணத்தையே சந்திப்பார்.
இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3771. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யஸீத் பின் முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் நடந்த "அல்ஹர்ரா"ப் போரினால் பிரச்சினை ஏற்பட்டபோது, (யஸீத் பின் முஆவியாவின் ஆட்சிக்கெதிராக மக்களைத் திரட்டியிருந்த) அப்துல்லாஹ் பின் முதீஉ அல்குறஷீ (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சென்றார்கள்.
அப்போது அப்துல்லாஹ் பின் முதீஉ (ரலி) அவர்கள் "அபூஅப்திர் ரஹ்மானுக்குத் தலையணையை எடுத்துப் போடுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நான் உட்காருவதற்காக உங்களிடம் வரவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு ஹதீஸை உங்களுக்கு அறிவிப்பதற்காகவே உங்களிடம் நான் வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(தலைமைக்குக்) கட்டுப்படுகின்ற செயலிலிருந்து கையை விலக்கிக்கொண்டவர், தம(து செயல்பாடுகளு)க்கு(ம் அதற்கான சாக்குப் போக்குகளுக்கும்) எந்தச் சான்றும் இல்லாமலேயே மறுமை நாளில் இறைவனைச் சந்திப்பார். தமது கழுத்தில் (தம் ஆட்சியாளரிடம் அளித்திருந்த) உறுதிமொழிப் பிரமாணம் இல்லாத நிலையில் யார் இறக்கிறாரோ, அவர் அறியாமைக் கால மரணத்தையே தழுவுவார்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
- இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ஸல்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 14 முஸ்லிம்களின் (அரசியல்) நிலை (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும் போது, அவர்களிடையே பிளவை ஏற்படுத்துகின்றவருக்குரிய சட்டம்.
3772. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(எனக்குப் பிறகு) விரைவில் குழப்பங்களும் பிரச்சினைகளும் தோன்றும். இந்தச் சமுதாயத்தின் (அரசியல்) நிலை (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது, அவர்களிடையே பிளவை ஏற்படுத்த விரும்புகின்றவரை வாளால் வெட்டிக் கொல்லுங்கள். அவர் யாராக இருந்தாலும் சரியே!
இதை அர்ஃபஜா பின் ஷுரைஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அர்ஃபஜா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஆயினும், இந்த அறிவிப்புகள் அனைத்திலும், "அவரைக் கொல்லுங்கள்" என்றே இடம் பெற்றுள்ளது. (வாளால் வெட்டிக் கொல்லுங்கள்" என்று இடம்பெறவில்லை.)
அத்தியாயம் : 33
3773. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதரின் (தலைமையின்) கீழ் உங்கள் (அரசியல்) நிலை ஒன்றுபட்டிருக்கும்போது, உங்கள் ஐக்கியத்தை உடைக்கும் அல்லது உங்கள் கட்டமைப்பைக் குலைக்கும் நோக்கத்தோடு உங்களிடம் யாரேனும் வந்தால் அவரைக் கொன்றுவிடுங்கள்.
இதை அர்ஃபஜா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 15 (அடுத்தடுத்து) இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) அளிக்கப்பட்டால்...
3774. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒருவர் பின் ஒருவராக) இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) அளிக்கப்பட்டால், அவர்களில் இறுதியானவரைக் கொன்றுவிடுங்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது, எதிர்ப்புத் தெரிவிப்பது கடமையாகும். தொழுகை உள்ளிட்ட கடமைகளை அவர்கள் நிறைவேற்றும் வரை அவர்களுடன் போரிடலாகாது.
3775. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(எனக்குப் பின்) சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். யார் (தீமையைத் தெளிவாக) அறிந்துகொண்டாரோ அவர் பிழைத்தார். யார் வெறுத்தாரோ அவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணைபோனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)" என்று கூறினார்கள்.
மக்கள், "அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை; அவர்கள் தொழுகையை நிறைவேற்றும்வரை (வேண்டாம்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 33
3776. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸ) அவர்கள், "உங்களுக்குச் சில ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். தீமையை (மனதால்) வெறுத்தவர் பிழைத்தார்; (மனதால்) மறுத்தவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)" என்று கூறினார்கள்.
மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை. அவர்கள் தொழுகையை நிறைவேற்றும் வரை (வேண்டாம்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3777. மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(தீமையை மனதால்) மறுத்தவர் பிழைத்தார்; வெறுத்தவர் தப்பித்தார்" என்று இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "(இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33
பாடம் : 17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும்.
3778. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள். உங்களை அவர்கள் நேசிப்பார்கள். உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள். அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள்: உங்களை அவர்கள் வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள். அவர்கள் உங்களைச் சபிப்பார்கள்" என்று கூறினார்கள்.
அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கெதிராக நாங்கள் வாள் ஏந்தலாமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேண்டாம்; உங்களிடையே அவர்கள் தொழுகையை நிலைநாட்டும்வரை (வேண்டாம்). உங்கள் ஆட்சியாளர்களிடம் நீங்கள் வெறுக்கும் (மார்க்கத்திற்கு முரணாண செயல்கள்) எதையேனும் கண்டால், அந்த ஆட்சியாளரின் செயல்பாட்டை வெறுப்பீர்களாக! கட்டுப்படுதலில் இருந்து உங்கள் கையை விலக்கிவிடாதீர்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 33
3779. அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை நேசிப்பீர்கள். அவர்களும் உங்களை நேசிப்பார்கள். நீங்கள் அவர்களுக்காகப் பிரார்த்திப்பீர்கள். அவர்களும் உங்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள். அவர்களும் உங்களை வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள் அவர்களும் உங்களைச் சபிப்பார்கள்" என்று கூறினார்கள்.
மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அத்தகைய சூழலில் அ(ந்தத் தலை)வர்களுடன் நாங்கள் போரிடலாமா?" என்று கேட்டார்கள். அதற்கு, "வேண்டாம். உங்களிடையே அவர்கள் தொழுகையை நிலைநாட்டும்வரை (வேண்டாம்). அறிந்துகொள்ளுங்கள். ஒருவர், தம்மை நிர்வாகம் செய்கின்ற ஆட்சியாளரிடம் இறைவனுக்கு மாறுசெய்யும் செயல் எதையேனும் கண்டால், அவர் செயல்படுத்தும் அந்தப் பாவச்செயலை அவர் வெறுக்கட்டும். ஆனால், கட்டுப்படுவதிலிருந்து (தமது) கையை விலக்கிக்கொள்ள வேண்டாம்" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துர் ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை ருஸைக் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தபோது அவர்களிடம் நான், "அபுல்மிக்தாமே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைத் தாம் கேட்டதாக அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள் என முஸ்லிம் பின் கறழா (ரஹ்) அவர்கள் உங்களுக்கு அறிவித்தார்களா?" என்று கேட்டேன்.
உடனே ருஸைக் (ரஹ்) அவர்கள், முழந்தாளிட்டு நின்று கிப்லாத் திசையை முன்னோக்கி, "ஆம், எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஏக இறை)வன் மீதாணை! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைத் தாம் கேட்டதாக அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் சொல்ல நான் செவியுற்றேன்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "பனூ ஃபஸாரா குலத்தாரால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான ருஸைக் (ரஹ்) அவர்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் முஸ்லிம் பின் கறழா (ரஹ்) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 18 ஆட்சித் தலைவர் போருக்குச் செல்ல உத்தேசிக்கும்போது படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது விரும்பத்தக்கதாகும் என்பதும், (நபி (ஸல்) அவர்கள் காலத்தில்) அந்த மரத்தின் கீழ் நடந்த "பைஅத்துர் ரிள்வான்" உறுதிப் பிரமாண நிகழ்ச்சி பற்றிய விவரமும்.
3780. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹுதைபியா உடன்படிக்கை நாளில் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அப்போது அங்கிருந்த ஒரு மரத்தின் கீழ் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபியவர்களின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அது ஒரு கருவேல மரமாகும். நாங்கள் (எந்தச் சூழ்நிலையிலும்) புறமுதுகிட்டு ஓடமாட்டோம் என அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். மரணத்திற்கு (தயாராயிருப்பதாக) நாங்கள் அவர்களிடம் உறுதிமொழி அளிக்கவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3781. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹுதைபியா நாளில்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மரணத்திற்கு(த் தயாராயிருப்பதாக) உறுதிமொழி அளிக்கவில்லை; (எந்த நிலையிலும்) புறமுதுகிட்டு ஓடமாட்டோம் என்றே அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3782. அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் (ரலி) அவர்களிடம், "ஹுதைபியா தினத்தன்று நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "(அன்று) நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அங்கிருந்த ஒரு மரத்தின் கீழ் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். அது ஒரு கருவேல மரமாகும். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது ஜத்து பின் கைஸ் அல்அன்சாரீ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நபியவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். ஜத்து பின் கைஸ் அவர்கள் தமது ஒட்டகத்தின் வயிற்றுக்குக் கீழே ஒளிந்துகொண்டார்.
அத்தியாயம் : 33
3783. அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் உறுதிமொழி வாங்கினார்களா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், "இல்லை. ஆனால், அந்த இடத்தில் தொழுதார்கள். ஹுதைபியாவிலுள்ள மரத்தைத் தவிர வேறெந்த மரத்திற்கு அருகிலும் அவர்கள் உறுதிமொழி வாங்கவில்லை" என்று விடையளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் ஹுதைபியா கிணற்றருகில் (நீர் வளத்துக்காகப்) பிரார்த்தித்தார்கள்" என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
அத்தியாயம் : 33
3784. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது
நாங்கள் ஹுதைபியா தினத்தன்று ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், "பூமியிலிருப்பவர்களில் நீங்களே சிறந்தவர்கள்" என்று கூறினார்கள். இப்போது (மட்டும்) எனக்குக் கண்பார்வை தெரியுமானால் அந்த (ரிள்வான் உறுதிப்பிரமாணம் நடைபெற்ற) மரத்தின் இடத்தைக் காண்பித்திருப்பேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3785. சாலிம் பின் அபில்ஜஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் அந்த மரத்தின் கீழ் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவர்களைப் பற்றி (அவர்கள் எத்தனை பேர் என்று) கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருந்தாலும்கூட (நபியவர்களின் விரல்களுக்கிடையிலிருந்து பொங்கிவந்த நீர்) எங்களுக்குப் போதுமானதாயிருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐநூறு பேர்தாம் இருந்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3786. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றிலும் "நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருந்தாலும் அ(ந்த நீரான)து எங்களுக்குப் போதுமானதாயிருந்திருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐநூறு பேர்தாம் இருந்தோம்" என்றே இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3787. சாலிம் பின் அபில்ஜஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், "அன்றைய தினத்தில் நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்?" என்று கேட்டேன். அவர்கள், "ஆயிரத்து நானூறு பேர்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3788. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அந்த மரத்தின் கீழ் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவர்கள் (சுமார்) ஆயிரத்து முன்னூறு பேர் ஆவர். (இதில்) அஸ்லம் குலத்தார் (மட்டும்) முஹாஜிர்களில் எட்டில் ஒரு பகுதியினராக இருந்தனர்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3789. மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அந்த மரத்தின் கீழ் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிப் பிரமாணம் நடைபெற்ற நாளில் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்டிருந்தபோது, நபி (ஸல்) அவர்களது தலைக்கு மேலிருந்த ஒரு மரக்கிளையை நான் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அவர்களிடம் நாங்கள் மரணத்திற்கு(த் தயாராயிருப்பதாக) உறுதிமொழி அளிக்கவில்லை. மாறாக, (எந்தச் சூழ்நிலையிலும்) நாங்கள் புறமுதுகிட்டு ஓடமாட்டோம்" என்றே உறுதிமொழி அளித்தோம்.
- மேற்கண்ட ஹதீஸ் மஅகில் பின் யசார் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3790. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (முசய்யப் பின் ஹஸன் - ரலி) அவர்கள் அந்த மரத்தின் கீழ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தவர்களில் ஒருவர் ஆவார். என் தந்தை கூறினார்கள்: (உறுதிப் பிரமாணம் நடந்து முடிந்த) மறு ஆண்டு நாங்கள் ஹஜ்ஜுக்குச் சென்றோம். அப்போது அந்த (மரம் இருந்த) இடம் எங்களுக்கு (அடையாளம்) தெரியாமல் போய்விட்டது. அப்படியிருக்க, உங்களுக்கு அந்த இடம் (தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறு உங்களுக்குத்) தெளிவாகத் தெரிந்தால் நீங்களே மெத்தவும் அறிந்தவர்கள்.
அத்தியாயம் : 33
3791. முசய்யப் பின் ஹஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அந்த மரத்தின் (கீழ் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். (உறுதிப் பிரமாணம் நடந்து முடிந்த) மறு ஆண்டில் அந்த இடத்தை நாங்கள் மறந்து விட்டோம்.
அத்தியாயம் : 33
3792. முசய்யப் பின் ஹஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பைஅத்துர் ரிள்வான் எனும் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) அந்த மரத்தை நான் பார்த்திருந்தேன். பின்பு (ஒரு முறை) அங்கு நான் சென்றேன். அப்போது என்னால் அதை அறிய முடியவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3793. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சலமா (ரலி) அவர்களிடம், "ஹுதைபியா தினத்தன்று (நபித்தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(வீர) மரணத்திற்கு(த் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதி மொழியளித்தோம்)" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3794. அப்துல்லாஹ் பின் ஸைத் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
("அல்ஹர்ரா"ப் போரின்போது) என்னிடம் ஒருவர் வந்து, "இதோ அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி) அவர்கள் மக்களிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டிருக்கிறார்" என்று கூறினார். அவரிடம் நான், "எதற்காக அவர் உறுதிமொழி வாங்குகிறார்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "மரணத்தைச் சந்திக்கவும் தயாராயிருக்கும்படி (உறுதிமொழி வாங்குகிறார்)" என்று கூறினார். அதற்கு நான், "இதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (பைஅத்துர் ரிள்வானில் உறுதிமொழி அளித்த) பின்னர் வேறு யாரிடமும் நான் உறுதிமொழி அளிக்கமாட்டேன்" என்று கூறினேன்.
அத்தியாயம் : 33
பாடம் : 19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மறுபடியும் தமது தாயகத்தில் குடியேறுவது தடை செய்யப்பட்டதாகும்.
3795. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை ஹிஜாஸ் மாகாண ஆளுநர்) ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபிடம் சென்றேன். அவர், "இப்னுல் அக்வஉ! நீங்கள் (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின் அங்கிருந்து) உங்கள் குதிகால்களின் வழியே (கிராமத்திற்குத்) திரும்பிச் சென்றதன் மூலம் கிராமவாசியாக மாறி விட்டீர்களா?" என்று கேட்டார். நான், "இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிராமத்தில் வசிக்க எனக்கு (மட்டும்) அனுமதியளித்தார்கள்" என்று சொன்னேன்.
அத்தியாயம் : 33
பாடம் : 20 மக்கா வெற்றிக்குப் பின் இஸ்லாத்தின் படி வாழ்வதாகவும், அறப்போர் புரிவதாகவும், நற்செயல்கள் செய்வதாகவும் ஒருவர் உறுதிமொழி (பைஅத்) அளிப்பதும், "மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது" எனும் நபிமொழியின் விளக்கமும்.
3796. முஜாஷிஉ பின் மஸ்ஊத் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹிஜ்ரத் செய்தவற்கான உறுதிமொழி (பைஅத்) அளிப்பதற்காக நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஹிஜ்ரத், (மக்கா வெற்றிக்கு முன்) அதற்குரியவர்களுக்குக் கடமையாகி (நிறைவேறி) முடிந்துவிட்டது. இனி இஸ்லாத்தின்படி வாழவும், (தேவைப்பட்டால்) அறப்போர் புரியவும், (பிற) நற்செயல்களைச் செய்யவும் (உறுதி மொழி வாங்குவேன்)" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 33
3797. முஜாஷிஉ பின் மஸ்ஊத் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றிக்குப் பின் நான் என் சகோதரர் அபூமஅபத் (முஜாலித் பின் மஸ்ஊத் - ரலி) அவர்களை அழைத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழியை இவரிடமிருந்து பெறுங்கள்" என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹிஜ்ரத் (மக்கா வெற்றிக்கு முன்) அதற்குரியவர்களோடு முடிந்துவிட்டது" என்று கூறினார்கள். நான், "அவ்வாறாயின் (இனி) எதற்காக உறுதிமொழி பெறுவீர்கள்?" என்று கேட்டேன். "இஸ்லாத்தின்படி வாழ்ந்திடவும், (தேவைப்பட்டால்) அறப்போர் புரிந்திடவும், (பிற) நற்செயல்கள் செய்திடவும்தான் (உறுதிமொழி பெறுவேன்)" என்று பதிலளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பின்னர் நான் அபூமஅபத் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, அவர்களிடம் முஜாஷிஉ (ரலி) அவர்கள் சொன்ன செய்தியைத் தெரிவித்தேன். அதற்கு அபூ மஅபத் "முஜாஷிஉ சொன்னது உண்மையே" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் முஜாஷிஉ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், பின்னர் நான் முஜாஷிஉ (ரலி) அவர்களின் சகோதரரைச் சந்தித்(து முஜாஷிஉ சொன்ன செய்தியைத் தெரிவித்)தபோது, "முஜாஷிஉ சொன்னது உண்மையே" என்று அவர் கூறினார் என இடம்பெற்றுள்ளது. அதில் "அபூமஅபத்" எனும் பெயர் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33
3798. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது "(இனி) ஹிஜ்ரத் (மக்காவைத் துறப்பது) என்பது கிடையாது. ஆயினும், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) எண்ணம் கொள்வதும்தான் உள்ளது. நீங்கள் அறப்போருக்குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால், போருக்குப் புறப்படுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3799. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்கா வெற்றியின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் (மக்காவைத் துறப்பது) பற்றிக் கேட்கப்பட்டது. அவர்கள் "மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் (மக்காவைத் துறப்பது) என்பது கிடையாது. ஆயினும், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) எண்ணம் கொள்வதும்தான் உள்ளது. நீங்கள் போருக்குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் புறப்பட்டுச் செல்லுங்கள்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 33
3800. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாடு துறப்பது (ஹிஜ்ரத்) பற்றிக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்கு நாசம்தான்! ஹிஜ்ரத்தின் நிலை மிகவும் கடினமானது. உன்னிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம்" என்று விடையளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவற்றுக்குரிய ஸகாத்தை நீ கொடுத்துவருகிறாயா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம்" என்றார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், நீ பல ஊர்களுக்கு அப்பால் சென்றுகூட வேலை செய்(து வாழலாம்). ஏனெனில், அல்லாஹ் உன் நற்செயல்க(ளின் பிரதி பலன்க)ளிலிருந்து எதையும் குறைக்கமாட்டான்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ் உன் நற்செயல்க(ளின் பிரதிபலன்க)ளிலிருந்து எதையும் குறைக்க மாட்டான்" என்று இடம்பெற்றுள்ளது. ("ஏனெனில்" எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.) மேலும் அந்த அறிவிப்பில், "அவ்வொட்டகங்கள் (நீர்நிலைகளுக்கு) நீரருந்தச் செல்லும் (முறை) நாளில் அவற்றின் பாலைக் கற(ந்து ஏழைகளுக்கு கொடு)க்கிறாயா?" என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் "ஆம்" என்று பதிலளித்தார்" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கிய முறை.
3801. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு) நாடு துறந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தால், பின்வரும் இறைவசனத்துக்கேற்ப அவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும். "நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து, தாம் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்கமாட்டோம்; திருடமாட்டோம்; விபச்சாரம் புரியமாட்டோம்... என்றெல்லாம் உறுதிப் பிரமாணம் அளித்தால், அதை ஏற்று, அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவீராக!" (60:12) என்பதே அந்த வசனமாகும்.
இறைநம்பிக்கை கொண்ட அப்பெண்களில் ("இணை வைக்கமாட்டோம், திருடமாட்டோம், விபச்சாரம் புரியமாட்டோம்"என்ற) இந்த நிபந்தனைகளுக்கு யார் ஒப்புதல் அளிக்கிறாரோ அவர் தேர்வில் வென்றுவிட்டார் என்று முடிவு செய்வார்கள். இந்த உறுதிமொழியை அப்பெண்கள் வாய்மொழியாக ஒப்புக்கொண்டுவிட்டால், அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களிடம் உறுதிப் பிரமாணம் வாங்கிவிட்டேன். நீங்கள் செல்லலாம்" என்று கூறுவார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! (உறுதிப் பிரமாணம் வாங்கும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டதில்லை. வாய் மொழியாகவே அப்பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள்.
அல்லாஹ் ஆணையிட்ட நிபந்தனை (வாசகங்களைத்) தவிர வேறெதையும் அப்பெண்களிடமிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உறுதிமொழியாகப்) பெறவில்லை. (உறுதிமொழி வாங்கியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை, எந்தப் பெண்ணின் கையையும் ஒரு போதும் தொட்டதில்லை. அவர்களிடம் உறுதிமொழி வாங்கியதும் "உங்களிடம் உறுதிப் பிரமாணம் பெற்றுக்கொண்டேன்" என்று வார்த்தையால் மட்டுமே கூறுவார்கள். (பொதுவாக ஆண்களிடம் உறுதிமொழி வாங்கும்போது கரம் பற்றுவதைப் போன்று பெண்களின் கரம் பற்றவில்லை.)
அத்தியாயம் : 33
3802. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களின் உறுதிப் பிரமாணம் (பைஅத்) தொடர்பாகக் கூறினார்கள்:
(பெண்களிடம் உறுதிமொழி வாங்கியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை, எந்தப் பெண்ணையும் ஒருபோதும் தொட்டதில்லை. வாய்மொழியாகவே பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அவ்வாறு உறுதிமொழி வாங்கியதும், "உன்னிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்டேன். நீ செல்லலாம்" என்று கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 22 இயன்றவரை செவியுற்றுக் கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல்.
3803. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவியுற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என உறுதிமொழி அளிக்கும்போது அவர்கள், "என்னால் முடிந்த விஷயங்களில்" என்று (சேர்த்துச் சொல்லுமாறு) கூறுவது வழக்கம்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 23 பருவ வயது எது என்பது பற்றிய விளக்கம்.
3804. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பதினான்கு வயதினனாக இருந்தபோது, உஹுதுடைய நாளில் போருக்காக (ஆட்கள் தேர்வு நடந்த சமயம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் நின்றேன். ஆனால், (போரில் கலந்துகொள்ள) எனக்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை. (அடுத்த ஆண்டு நடந்த) அகழ்ப்போரின் போது, நான் அவர்களுக்கு முன் நின்ற சமயம் நான் பதினைந்து வயதினனாக இருந்தேன். அப்போது (போரில் கலந்துகொள்ள) எனக்கு அனுமதியளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கலீஃபாவாக இருந்தபோது அவர்களிடம் சென்று, (இப்னு உமர் (ரலி) அவர்களின்) இந்த ஹதீஸை அவர்களுக்கு அறிவித்தேன். அவர்கள், "(அப்படியென்றால்) இதுதான் சிறியவருக்கும் பெரியவருக்கும் இடையே (வேறுபடுத்திக் காட்டும்) எல்லைக் கோடாகும்" என்று கூறிவிட்டு, பதினைந்து வயதை அடைந்தவர்களுக்கு (இராணுவப் பணிக்கான ஊதியத் தொகையை) நிர்ணயிக்கும்படியும் அதைவிடக் குறைந்த வயது உடையவர்களைச் சிறுவர்களின் கணக்கில் சேர்த்துவிடும் படியும் தம் ஆளுநர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நான் பதினான்கு வயதினனாக இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சிறுவனாகவே கருதினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 24 இறைமறுப்பாளர்களின் கைகளில் சிக்கி (இழிவுபடுத்தப்பட்டு)விடக்கூடும் என்ற அச்சம் இருக்கும்போது, குர்ஆனை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது.
3805. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
குர்ஆன் பிரதியுடன் எதிரியின் நாட்டுக்குப் பயணம் செய்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
அத்தியாயம் : 33
3806. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
குர்ஆன் பிரதியுடன் எதிரியின் நாட்டுக்குப் பயணம் செய்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். அது எதிரிகளின் கையில் அகப்(பட்டு இழிவுபடுத்தப்)படும் என்ற அச்சமே அதற்குக் காரணம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3807. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆன் பிரதியுடன் (எதிரியின் நாட்டுக்குப்) பயணம் செய்யாதீர்கள். ஏனெனில், அது எதிரிகளின் கையில் அகப்(பட்டு இழிவுபடுத்தப்)படுவதை என்னால் அஞ்சாமல் இருக்க முடியவில்லை.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (அப்படித் தான்) அதை எதிரிகள் எடுத்து வைத்துக்கொண்டு, உங்களுடன் அவர்கள் குதர்க்கவாதம் செய்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், இஸ்மாயீல் பின் உலய்யா மற்றும் அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "அது எதிரிகளின் கையில் அகப்(பட்டு இழிவு படுத்தப்)படுவதை நான் அஞ்சுகிறேன்" என்று இடம்பெற்றுள்ளது.
சுஃப்யான் பின் உயைனா மற்றும் அள்ளஹ்ஹாக் பின் உஸ்மான் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "எதிரிகளின் கையில் அது அகப்(பட்டு இழிவுபடுத்தப்)படும் என்ற அச்சமே இதற்குக் காரணம்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வை(த்துப் பயிற்சியளி)ப்பதும்.
3808. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே "அல்ஹஃப்யா" எனுமிடத்திலிருந்து பந்தயம் வைத்தார்கள். "ஸனிய்யத்துல் வதா" மலைக் குன்றே அதன் பந்தய எல்லையாக இருந்தது. (அவ்வாறே) மெலிய வைக்கப்படாத (பயிற்சியளிக்கப்படாத) குதிரைகளுக்கிடையே "ஸனிய்யத்துல் வதா"விலிருந்து பனூ ஸுரைக் பள்ளிவாசல்வரை பந்தயம் வைத்தார்கள். இந்தப் போட்டியில் கலந்துகொண்டவர்களில் நானும் ஒருவன் ஆவேன்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பதினாறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இஸ்மாயீல் பின் உலய்யா மற்றும் ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "நான் அந்தப் பயணத்தில் முந்தி வந்தேன். அப்போது நானிருந்த குதிரை அந்தப் பள்ளிவாசலைத் தாவிக் குதித்தது" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 26 குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள்வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது.
3809. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள்வரை நன்மை உள்ளது.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஏழு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3810. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குதிரையொன்றின் நெற்றி ரோமத்தைத் தம் விரலால் சுருட்டிவிட்டபடி "குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள்வரை போர்ச் செல்வமும் (மறுமையில் கிடைக்கும்) பிரதிபலன் என்ற நன்மையும் பிணைக்கப் பட்டிருக்கின்றன" என்று கூறியதை நான் கண்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3811. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது. அவை: (அவற்றில் ஏறி அறப்போர் புரிவதால் கிடைக்கும்) போர்ச்செல்வமும் (மறுமையில் கிடைக்கும்) பிரதிபலனும் ஆகும்.
இதை உர்வா பின் அல்ஜஅத் அல்பாரிக்கீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3812. உர்வா அல்பாரிக்கீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குதிரைகளின் நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அது எப்படி?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "(அவற்றில் ஏறி அறப்போர் புரிவதால்) நன்மையும் போர்ச்செல்வமும் மறுமை நாள்வரை கிடைக்குமே!" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் (உர்வா அல்பாரிக்கீ (ரலி) அவர்களின் தந்தை பெயருடன் இணைத்து) உர்வா பின் அல்ஜஅத் (ரலி) என இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உர்வா அல்பாரிக்கீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "(அவற்றில் ஏறி அறப்போர் புரிவதால்) பிரதிபலனும் போர்ச்செல்வமும் கிடைக்குமே!" எனும் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் உர்வா அல்பாரிக்கீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றிலும் "(அவற்றில் ஏறி அறப்போர் புரிவதால்) பிரதிபலனும் போர்ச்செல்வமும் கிடைக்குமே!" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33
3813. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குதிரைகளின் நெற்றிகளில் அருள்வளம் (பரக்கத்) உள்ளது.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 27 குதிரையின் தன்மைகளில் விரும்பத்தகாத அம்சம்.
3814. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரைகளில் "ஷிகால்" வகையை விரும்பாதவர்களாக இருந்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3815. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துர் ரஸ்ஸாக் பின் ஹம்மாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஷிகால் என்பது குதிரையின் வலப்பக்கப் பின் காலிலும் இடப்பக்க முன் காலிலும் வெள்ளை நிறம் இருப்பதாகும். அல்லது வலப்பக்க முன் காலிலும் இடப்பக்கப் பின் காலிலும் வெள்ளை நிறம் காணப்படுவதாகும்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 28 அறப்போர் புரிதல் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதல் ஆகியவற்றின் சிறப்பு.
3816. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் போராடுவதற்காகவும், அவன்மீது கொண்ட நம்பிக்கையாலும் அவனுடைய தூதர்களை மெய்ப்படுத்துவதற்காகவும் என்றே யார் அவனுடைய பாதையில் புறப்படுகிறாரோ அவரைச் சொர்க்கத்தில் நுழைய வைக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான். அல்லது அவர் பெற்ற நன்மையுடன் அல்லது போர்ச்செல்வத்துடன் அவர் புறப்பட்ட வீட்டுக்கே அவரைத் திரும்பக் கொண்டுபோய்ச் சேர்க்க அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்.
முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! அல்லாஹ்வின் வழியில் (அறப்போரில்) காயப்படுத்தப்பட்டவர், அவர் காயப்பட்ட அதே நிலையில் மறுமை நாளில் வருவார். அவரது (விழுப்புண்ணிலிருந்து வழியும் திரவத்தின்) நிறம் இரத்தத்தின் நிறத்திலிருக்கும். அதன் மணமோ கஸ்தூரி மணமாயிருக்கும்.
முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! முஸ்லிம்களுக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற நிலை இல்லையாயின், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய புறப்படும் அனைத்துப் படைப்பிரிவுகளிலும் கலந்து கொள்ளாமல் நான் ஒருபோதும் பின்தங்கமாட்டேன். (ஒன்று விடாமல் அனைத்திலும் கலந்திருப்பேன்.) ஆயினும், அவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்வதற்கு என்னிடமும் வாகன வசதிகள் இல்லை. அவர்களிடமும் வாகன வசதிகள் இல்லை. இந்நிலையில் என்னுடன் வராமல் பின்தங்கிவிடுவது அவர்களுக்கு மனவேதனையை உண்டாக்கும் (ஆகவேதான், அனைத்துப் படைப்பிரிவுகளிலும் நான் கலந்துகொள்ளவில்லை).
முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டுப் பிறகு (உயிர் கொடுக்கப்பட்டு) மீண்டும் போரிட்டுக் கொல்லப்பட்டுப் பிறகு (உயிர்க் கொடுக்கப்பட்டு) மீண்டும் போரிட்டுக் கொல்லப்படுவதையே நான் விரும்புகிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3817. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், தனது பாதையில் அறப்போர் புரியச் சென்றவரைச் சொர்க்கத்தில் நுழைவிப்பேன்; அல்லது (மறுமையின்) நற்பலன் அல்லது அவர் அடைந்துகொண்ட போர்ச் செல்வம் ஆகியவற்றுடன் அவர் புறப்பட்ட அவரது இல்லத்திற்கே அவரைத் திருப்பி அனுப்புவேன் என்று பொறுப்பேற்றுக்கொண்டான். அவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடவும் அவனுடைய வார்த்தையை மெய்ப்பிக்கவுமே புறப்பட்டுச் சென்றிருக்க வேண்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3818. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) காயப்படுத்தப்பட்ட ஒருவர் -தனது பாதையில் காயப்படுத்தப்பட்டவர் யார் என்பதை அல்லாஹ் அறிவான்- தமது (விழுப்புண்ணிலிருந்து) குருதி கொப்புளிக்கின்ற நிலையிலேயே மறுமை நாளில் வருவார். அவரது (காயத்திலிருந்து வழியும் திரவத்தின்) நிறம் இரத்தத்தின் நிறத்திலிருக்கும். அதன் மணமோ கஸ்தூரி மணமாயிருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3819. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் இந்த ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் ஒரு முஸ்லிமுக்கு ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு காயங்களும், தாக்கப்பட்ட நேரத்தில் இருந்ததைப் போன்று குருதி கொப்புளிக்கும் நிலையிலேயே மறுமை நாளில் காணப்படும். (அவரது காயத்திலிருந்து வழியும் திரவத்தின்) நிறம் இரத்தத்தின் நிறத்திலிருக்கும். மணம் கஸ்தூரி மணமாயிருக்கும். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் (மட்டும்) எனக்கில்லையாயின், அல்லாஹ்வின் பாதையில் அறப்போரிட புறப்பட்டுச் செல்லும் அனைத்துப் படைப்பிரிவுகளிலும் கலந்துகொள்ளாமல் நான் அமர்ந்திருக்க மாட்டேன். (ஒன்று விடாமல் அனைத்திலும் கலந்திருப்பேன்).
ஆயினும், அவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்வதற்கு என்னிடமும் வாகன வசதி இல்லை. என்னைப் பின்பற்றி வருவதற்கு அவர்களிடமும் எந்த வசதியும் இல்லை. நான் சென்ற பிறகு போரில் கலந்து கொள்ளாமல் அமர்ந்துகொண்டிருக்க அவர்களது மனமும் இடம் கொடுக்காது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் (மட்டும்) எனக்கில்லையாயின் நான் (அனுப்பிவைக்கும்) எந்தப் படைப்பிரிவிலும் கலந்துகொள்ளாமல் நான் பின்தங்கியிருக்கமாட்டேன்..." என்று இடம்பெற்றுள்ளது.
மேலும், அதில் "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வின் பாதையில் (போரிட்டுக்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்(பட்டு, மீண்டும் மீண்டும் கொல்லப்)பட வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று காணப்படுகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் (மட்டும்) எனக் கில்லையாயின், நான் அனுப்பிவைக்கும் எந்தப் படைப்பிரிவிலும் நானும் கலந்து கொள்ளாமல் பின் தங்கியிருக்கமாட்டேன்..." என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3820. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், தனது பாதையில் புறப்பட்டுச் சென்றவரை (சொர்க்கத்தில் நுழைவிப்பதற்கு, அல்லது மறுமையின் பிரதிபலனுடனோ, போர்ச் செல்வத்துடனோ அவரது இல்லத்திற்குத் திருப்பியனுப்புவதற்கு) அல்லாஹ் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளான்" என்று ஹதீஸ் ஆரம்பமாகி, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய புறப்பட்டுச் செல்லும் எந்தப் படைப்பிரிவிலும் கலந்துகொள்ளாமல் நான் பின்தங்கியிருக்க மாட்டேன்" என்பதோடு முடிவடைகிறது.
அத்தியாயம் : 33
பாடம் : 29 அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) வீரமரணம் அடைவதன் சிறப்பு.
3821. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விடம் நன்மை கிடைக்கும் நிலையில் இறந்துபோகின்ற எவரும் உலகமும் உலகத்திலுள்ள செல்வங்களும் கிடைப்பதாக இருந்தாலும் (மீண்டும்) உலகத்துக்குத் திரும்பிவர விரும்பமாட்டார். (இறைவழியில் கொல்லப்பட்ட) உயிர்த்தியாகியைத் தவிர. அவர் வீரமரணத்திற்குக் கிடைக்கும் மேன்மையைக் கண்டுவிட்ட காரணத்தால் உலகத்துக்கு மீண்டும் வந்து (இறைவழியில் போரிட்டு) கொல்லப்பட வேண்டும் என்றே ஆசைப்படுவார்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3822. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் நுழையும் எவரும் உலகத்திலுள்ள செல்வங்கள் அனைத்தும் அவருக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகத்துக்குத் திரும்பிவர விரும்பமாட்டார். உயிர்த் தியாகியைத் தவிர! அவர் தமக்கு (இறைவனிடத்தில்) கிடைக்கும் கண்ணியத்தைக் கண்டுவிட்ட காரணத்தால் உலகத்துக்குத் திரும்பிவந்து (இறைவழியில் போரிட்டு) பத்து முறைகள் கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3823. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிவதற்கு நிகரான அறச்செயல் எது?" என்று கேட்கப்பட்டது. "அதற்கு நிகரான அறத்தைச் செய்ய நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். முன்பு போன்றே மீண்டும் இரண்டு அல்லது மூன்று முறை (மக்கள்) கேட்டனர். ஒவ்வொரு முறையும் "அதைச் செய்ய நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்" என்றே நபியவர்கள் பதிலளித்தார்கள்.
மூன்றாவது முறை, "அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிகின்றவரின் நிலை, (இடைவிடாது) நோன்பு நோற்று, (இடைவிடாது) நின்று வணங்கி, அல்லாஹ்வின் வசனங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தவரின் நிலையைப் போன்றதாகும். அல்லாஹ்வின் வழியில் அறப்போரில் ஈடுபட்டவர் திரும்பி வருகின்றவரை (இதே நிலையில் உள்ளார்)" என்று கூறினார்கள.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3824. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகில் இருந்தேன். அப்போது ஒரு மனிதர், "நான் இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் எந்த ஒரு நற்செயலையும் செய்யாமலிருப்பதை ஒரு பொருட்டாகவே கருதமாட்டேன்; ஹாஜிகளுக்குக் குடிநீர் வழங்குவதைத் தவிர" என்று கூறினார். மற்றொருவர், "நான் இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் எந்த ஒரு நற்செயலையும் செய்யாமலிருப்பதை ஒரு பொருட்டாகவே நான் கருதமாட்டேன்; "மஸ்ஜிதுல் ஹராம்" (புனிதப்) பள்ளிவாசலை நிர்வகிப்பதை தவிர" என்று சொன்னார். இன்னொருவர், "நீங்கள் சொல்வதையெல்லாம்விட அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிவதே மிகவும் சிறந்ததாகும்" என்று கூறினார்.
அப்போது அவர்கள் மூவரையும் உமர் (ரலி) அவர்கள் கண்டித்தார்கள். "நீங்கள் உங்கள் குரல்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடைக்கு அருகில் உயர்த்தாதீர்கள். இது ஒரு வெள்ளிக்கிழமை தினமாகும். நான் ஜுமுஆ தொழுகையை தொழுததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நீங்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயத்தில் விளக்கம் கேட்பேன்" என்று கூறினார்கள்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "ஹாஜிகளுக்குக் குடிநீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரை அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போன்று கருதுகிறீர்களா?" (9:19) எனும் வசனத்தை இறுதிவரை அருளினான்.
- மேற்கண்ட ஹதீஸ் நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகில் இருந்தேன்..." என்றே ஹதீஸ் துவங்குகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
அத்தியாயம் : 33
பாடம் : 30 இறைவழியில் (போரிட) காலையிலும் மாலையிலும் செல்வதன் சிறப்பு.
3825. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் காலையில் அல்லது மாலையில் (போர் புரியச்) செல்வதானது, இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும்விடச் சிறந்ததாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3826. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போர் புரியச்) செல்கின்ற காலை நேரம் அல்லது மாலை நேரமானது, இவ்வுலகத்தைவிடவும் அதிலுள்ளவற்றை விடவும் சிறந்ததாகும்.
இதை சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3827. அ. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் காலையில் அல்லது மாலையில் (போர் புரியச்) செல்வதானது, இவ்வுலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.
இதை சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஆ. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் சிலருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் எனக்கில்லையாயின், நான் அனுப்பிவைக்கின்ற எந்தப் படைப்பிரிவிலும் நான் கலந்துகொள்ளாமல் பின்தங்க மாட்டேன். அல்லாஹ்வின் பாதையில் காலையில் அல்லது மாலையில் (போர் புரியச்) செல்வதானது, இவ்வுலகத்தையும் அதிலுள்ளவற்றையும்விடச் சிறந்ததாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3828. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் காலையில் அல்லது மாலையில் (போர் புரியச்) செல்வதானது, சூரியன் எதன் மீது உதித்து மறைகின்றதோ அந்த உலகத்தைவிடச் சிறந்ததாகும்.
இதை அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் அல் அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் தயாரித்து வைத்துள்ள படித்தரங்கள்.
3829. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (என்னிடம்) "அபூசயீத்! அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் எனவும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவருக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது" என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு வியப்படைந்த நான், "மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். (மீண்டும்) அவ்வாறே அவர்கள் சொல்லிவிட்டு, இன்னொன்றும் சொல்கிறேன். சொர்க்கத்தில் ஓர் அடியார் நூறு படித்தரங்களுக்கு உயர்த்தப்படுவார். ஒவ்வோர் இரு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைவு இருக்கும்" என்று கூறினார்கள்.
நான், "அது என்ன (நற்செயலுக்குக் கிடைக்கும் வெகுமதி), அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அதற்கு "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன; கடனைத் தவிர!
3830. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) எங்களிடையே நின்று, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்களிலேயே மிகவும் சிறந்ததாகும்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?" என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் சென்று கொல்லப்பட்டால், (உங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்)" என்று பதிலளித்தார்கள்.
பிறகு (சிறிது நேரம் கழித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எப்படிக் கேட்டீர்கள் (மீண்டும் சொல்லுங்கள்)?" என்று கேட்டார்கள். அந்த மனிதர், "நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?" என்று கேட்டார்.
மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம், நீங்கள் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் செல்லும்போது (கொல்லப்பட்டுவிட்டால் உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.) ஆனால், கடனைத் தவிர! ஏனெனில், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் (இப்போதுதான்) இவ்வாறு கூறினார்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால்...?" என்று கேட்டார் என மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3831. மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஒருவர் மற்றொருவரைவிடக் கூடுதலாக அறிவிக்கிறார். "நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை மீதிருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து மேற்கண்டவாறு கேட்டார்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3832. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அறப்போரில் கொல்லப்பட்ட) உயிர்த்தியாகியின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன; கடனைத் தவிர.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3833. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் வீரமணமடைவது அனைத்துப் பாவங்களையும் அழித்துவிடும்; கடனைத் தவிர.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 33 (அறப்போரில்) வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் சொர்க்கத்தில் உள்ளன. அவர்கள் தம் இறைவனிடம் உயிரோடு உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்.
3834. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், "(நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப் பெறுகின்றனர்" (3:169) எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறைஅரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.
அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, "நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?" என்று கேட்பான். அதற்கு அவர்கள், "நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள்தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!" என்று கூறுவர்.
இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்படமாட்டோம் என்பதை அவர்கள் காணும்போது, "இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒருமுறை கொல்லப்படவேண்டும்" என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும்போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 34 அறப்போர் மற்றும் எல்லையைக் காவல் புரிவதன் சிறப்பு.
3835. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "மக்களில் சிறந்தவர் யார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் பாதையில் தம் பொருளாலும் உயிராலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)" என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், "பிறகு யார்?" என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள், "(குழப்பம், போர் போன்ற சூழல்களில்) மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக்கொண்டு, தம் இறைவனான அல்லாஹ்வை வழிபட்டவாறு தம்மால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்துவருகின்ற இறைநம்பிக்கையாளர்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 33
3836. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! மக்களில் சிறந்தவர் யார்?" என்று கேட்டார். அதற்கு, "அல்லாஹ்வின் பாதையில் தம் உயிராலும் பொருளாலும் போராடுகின்ற இறை நம்பிக்கையாளரே (மக்களில் சிறந்தவர்)" என்று பதிலளித்தார்கள். "பிறகு யார்?" என்று அந்த மனிதர் கேட்டார். அதற்கு, "பிறகு (மக்களில் சிறந்தவர் யாரெனில், குழப்ப நேரங்களில்) மலைக் கணவாய்களில் ஒன்றில் ஒதுங்கி, தம் இறைவனை வழிபட்டவாறு தம்மால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்துவருகின்ற இறைநம்பிக்கையாளர் ஆவார்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 33
3837. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "மேலும் (மக்களில் சிறந்தவர் யாரெனில்)" என்றே இடம்பெற்றுள்ளது. "பிறகு (மக்களில் சிறந்தவர் யாரெனில்)"என்று காணப்படவில்லை.
அத்தியாயம் : 33
3838. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் பாதையில் (செலுத்துவதற்குத் தயாராக) தமது குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தவண்ணம் இருப்பதும் மனித வாழ்வின் நலமான அம்சமேயாகும். அவர் எதிரியின் ஆர்ப்பரிப்பையோ ஆவேசக் குரலையோ செவியுறும்போதெல்லாம், வீரமரணமும் இறப்பும் உள்ள இடங்களைத் தேடி அந்தக் குதிரையில் அமர்ந்து பறப்பார். அல்லது ஒரு மனிதர் (குழப்ப நேரங்களில்) தமது சிறிய ஆட்டு மந்தையுடன் இந்த மலைகளின் உச்சிகளில் ஒன்றில், அல்லது இந்தப் பள்ளத்தாக்குகளில் ஒன்றின் நடுவில் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தை வழங்கி, மரணம் வரும்வரையில் தம் இறைவனை வழிபட்ட வண்ணம் வசித்து வருகிறார். மக்களில் இவரும் நன்மையிலேயே உள்ளார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3839. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ("இந்த மலைகளின் உச்சிகளில் ஒன்றில்" என்பதற்குப் பகரமாக) "இந்த மலைக் கணவாய்களில் ஒன்றில்"என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3840. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றிலும் "மலைக் கணவாய்கள் ஒன்றில்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 35 (அறப்போரில் கலந்துகொண்ட) இருவரில் ஒருவர் மற்றவரைக் கொன்று விடுகிறார். பிறகு அவ்விருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றனர் (அது எவ்வாறு?) என்பது பற்றிய விளக்கம்.
3841. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ், இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றவரைக் கொன்றுவிடுகின்றார். இருவருமே சொர்க்கத்தில் நுழையவும் செய்கின்றனர்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அது எவ்வாறு, அல்லாஹ்வின் தூதரே?" என்று மக்கள் கேட்டனர்.
அதற்கு, "இவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு, வீரமரணம் அடைந்துவிடுகிறார். பிறகு (அவரைக்) கொன்றவர் இஸ்லாத்தை ஏற்று பாவமன்னிப்புக் கோர, அதை ஏற்று அல்லாஹ் அவரை மன்னித்துவிடுகிறான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த்தியாகி ஆகிவிடுகிறார் (எனவே இருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றனர்)" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3842. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் இதுவும் ஒன்றாகும்.
"அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகிறார். அவ்விருவருமே சொர்க்கத்தில் நுழைந்தும் விடுகின்றனர்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "அது எப்படி, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டனர். இவர் (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்படுகிறார்; சொர்க்கத்தில் நுழைந்து விடுகிறார். பின்னர் (அவரைக் கொன்ற) மற்றொருவர் பாவமன்னிப்புக் கோர, அல்லாஹ் அவரை மன்னித்து, இஸ்லாத்திற்கு வழிகாட்டுகிறான். பின்னர் அவர் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்படுகிறார் (சொர்க்கம் செல்கிறார்)" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல்.
3843. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைமறுப்பாளனும் (அறப்போரில்) அவனைக் கொன்ற (இறைநம்பிக்கை கொண்ட) வரும் ஒருபோதும் நரகத்தில் ஒன்றுசேரமாட்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3844. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இரண்டு பேர், ஒருவர் மற்றொருவருக்கு இடையூறு செய்யும் வகையில் நரகத்தில் ஒருபோதும் ஒன்றுசேரமாட்டார்கள்" என்று கூறினார்கள். "அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஓர் இறை நம்பிக்கையாளர் இறைமறுப்பாளனை (அறப்போரில்) கொன்றுவிடுகிறார். பின்னர் அவர் (வழி பிறழ்ந்துவிடாமல் மார்க்கத்தில்) உறுதியோடு நிலைத்திருக்கிறார். (இவரும் இவரால் கொல்லப்பட்ட இறைமறுப்பாளனும் நரகத்தில் ஒருபோதும் இணையமாட்டார்கள்)" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும்.
3845. அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் கடிவாளமிடப்பட்ட ஒட்டகமொன்றைக் கொண்டுவந்து, "இது அல்லாஹ்வின் பாதையில் (தர்மமாகும்)" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமக்கு மறுமை நாளில் இதற்குப் பகரமாக எழுநூறு ஒட்டகங்கள் கிடைக்கும். அவற்றில் ஒவ்வொன்றும் கடிவாளமிடப்பட்டதாக இருக்கும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 38 அல்லாஹ்வின் பாதையில் புறப்படும் அறப்போர் வீரருக்கு வாகனம் உள்ளிட்ட உதவிகள் அளிப்பதன் சிறப்பும் அவர் சென்ற பின் அவரது குடும்பத்தை நல்ல விதமாகக் கவனித்துக்கொள்வதும்.
3846. அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "என் வாகனப்பிராணி மடிந்துவிட்டது. எனவே, நான் ஏறிச்செல்வதற்கு எனக்கு வாகனப்பிராணி தாருங்கள்" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "என்னிடம் (வாகனப்பிராணி) இல்லை" என்று கூறினார்கள். அப்போது மற்றொரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இவரை வாகனத்தில் ஏற்றியனுப்பும் ஒருவரை நான் இவருக்கு அறிவித்துக் கொடுக்கிறேன்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3847. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அஸ்லம்" குலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், "அல்லாஹ்வின் தூதரே! நான் போருக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால், என்னிடம் பயணத்துக்குத் தேவையான எந்த வசதியும் இல்லை" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ இன்ன மனிதரிடம் செல். ஏனெனில், அவர் போருக்குச் செல்வதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். பிறகு அவர் நோய்வாய்ப்பட்டு விட்டார்" என்று கூறினார்கள்.
அவ்வாறே அவரிடம் அந்த இளைஞர் சென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) சொல்கிறார்கள். மேலும், நீங்கள் உங்கள் பயணத்துக்காக ஏற்பாடு செய்திருந்தவற்றை என்னிடம் கொடுக்கும்படி கூறினார்கள்" என்றார். அந்த மனிதர், (தம் வீட்டிலிருந்த பெண்ணிடம்) "இன்ன பெண்ணே! என் பயணத்திற்காக நான் ஏற்பாடு செய்திருந்தவற்றை இவருக்குக் கொடுத்துவிடு. அவற்றில் எதையும் தர மறுக்காதே. அல்லாஹ்வின் மீதாணையாக! அவற்றில் எதையேனும் நீ தர மறுத்தால் அதில் உனக்கு அருள்வளம் (பரக்கத்) அளிக்கப்படாது" என்று கூறினார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3848. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வின் பாதையில் போர்புரியும் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார். யார் அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய வீட்டாரின் நலன் காக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார்.
இதை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3849. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அறப்போர் வீரர் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார். யார் அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய குடும்பத்தாரைக் கவனித்துக் கொள்கிறாரோ, அவரும் அறப்போரில் பங்கு பெற்றுவிட்டார்.
இதை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3850. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹுதைல்" குலத்தாரில் பனூ லஹ்யான் குடும்பத் தாரை நோக்கிப் படைப் பிரிவொன்றை அனுப்பினார்கள். அப்போது, "உங்களில் ஒவ்வோர் இரண்டு பேரில் ஒருவர் (ஒவ்வொரு குலத்தாரிலும் பாதிப்பேர் படைப்பிரிவுக்காகப்) புறப்படட்டும். அவர்கள் இருவருக்கும் (சமமான) நற்பலன் கிடைக்கும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படைப்பிரிவொன்றை அனுப்பினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸின் கருத்துப்படியே வந்துள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3851. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பனூ லஹ்யான்" குலத்தாரை நோக்கிப் படைப் பிரிவொன்றை அனுப்பியபோது, "உங்களில் ஒவ்வோர் இரண்டு பேரிலும் ஒருவர் புறப்படட்டும்" என்று கூறினார்கள். பிறகு, (படைப்பிரிவில் செல்லாமல் ஊரில்) தங்கியவரிடம் "உங்களில் யார் படை வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய குடும்பத்தார் விஷயத்திலும் அவரது செல்வம் விஷயத்திலும் நலம் பேணி நடந்துகொள்கிறாரோ அவருக்கும் புறப்பட்டுச் சென்ற படைவீரருக்குக் கிடைக்கும் நற்பலனில் பாதியளவைப் போன்றது கிடைக்கும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 39 அறப்போர் வீரர்களின் துணைவியருக்குள்ள மதிப்பும் அத்துணைவியர் விஷயத்தில் வீரர்களுக்குத் துரோகமிழைப்பவர் அடையும் தண்டனையும்.
3852. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போருக்குச் செல்லாமல் (ஊரில்) இருப்போர், போருக்குச் சென்ற வீரர்களின் துணைவியரைத் தம் தாயை மதிப்பதைப் போன்று மதிக்க வேண்டும். அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவருடைய குடும்பத்தாரின் நலம் காக்கும் ஒருவர், துணைவியர் விஷயத்தில் அவருக்குத் துரோகமிழைத்தால் அவ்வீரருக்காக அவர் மறுமை நாளில் நிறுத்தப்பட்டே தீருவார். அப்போது அவருடைய நற்செயல்(களின் நன்மை)களில் தாம் நாடிய அளவுக்கு எடுத்துக்கொள்வார். (அப்போது அவருடைய நன்மைகள் அனைத்தையுமே அவர் எடுத்துக் கொள்வதைப் பற்றி) நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் புரைதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3853. மேற்கண்ட ஹதீஸ் புரைதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவ்வீரரிடம், "இவருடைய நற்செயல்களிலிருந்து நீங்கள் விரும்பிய அளவுக்கு எடுத்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லப்படும் என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் திரும்பி, "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" எனக் கேட்டார்கள்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 33
பாடம் : 40 (உடல் ஊனம் போன்ற) தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்ளும் கடமை கிடையாது.
3854. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இறைநம்பிக்கையாளர்களில் (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரும் அல்லாஹ்வின் பாதையில் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாக மாட்டார்" (4:95) எனும் இந்த இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டுவரச் சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் எலும்பைக் கொண்டுவந்து அந்த வசனத்தை எழுதிக் கொண்டார்கள்.
அப்போது (அங்கிருந்த கண் பார்வையற்ற) அப்துல்லாஹ் பின் உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள், தமது (கண் பார்வையற்ற) குறை குறித்து முறையிட்டார்கள். அப்போது, "இறை நம்பிக்கையாளர்களில் தக்க காரணமின்றி (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கி விடுவோரும்..." என்ற (விதிவிலக்குடன் கூடிய) முழு வசனம் அருளப்பெற்றது.
இந்த (4:95ஆவது) வசனம் தொடர்பாக ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களும் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதைப் போன்றே அறிவித்துள்ளார்கள்.
இந்த ஹதீஸ் பராஉ (ரலி) மற்றும் ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோர் வழியாக மொத்தம் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3855. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இறைநம்பிக்கையாளர்களில் (போருக்குச் செல்லாமல் வீட்டில்) தங்கிவிடுவோரும் அல்லாஹ்வின் பாதையில் தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அறப்போர் புரிவோரும் சமமாக மாட்டார்" (4:95) எனும் வசனம் அருளப்பெற்றபோது, அப்துல்லாஹ் பின் உம்மி மக்த்தூம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அது குறித்துப்) பேசினார்கள். அப்போது "தக்க காரணமின்றி" என்பது அருளப்பெற்றது.
அத்தியாயம் : 33
பாடம் : 41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம்.
3856. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), "நான் கொல்லப்பட்டால் எங்கே இருப்பேன், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "சொர்க்கத்தில்" என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர் தமது கையிலிருந்த பேரீச்சங்கனிகளை உடனே தூக்கி எறிந்துவிட்டு (களத்தில் குதித்து), தாம் கொல்லப்படும்வரை போரிட்டார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் சுவைத் பின் சஈத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உஹுதுப் போரின்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (மேற்கண்டவாறு) கேட்டார்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3857. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் "பனுந் நபீத்" எனும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவீர்கள் என நான் உறுதிமொழிகிறேன்" என்று கூறிவிட்டு, (களத்தில்) முன்னேறிச் சென்று கொல்லப்படும்வரை போரிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவர் குறைவாக நற்செயல் புரிந்தார்; நிறைவாக நற்பலன் வழங்கப்பெற்றார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீ ஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பனுந் நபீத் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 33
3858. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிரியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற) அபூ சுஃப்யானின் வணிகக் குழு என்ன ஆயிற்று எனக் கண்டறிய புசைசா பின் அம்ர் அல்அன்சாரீ (ரலி) அவர்களை உளவாளியாக அனுப்பிவைத்தார்கள். அவர் சென்றுவிட்டு (திரும்பி) வந்தபோது, என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் தவிர வேறெவரும் வீட்டில் இருக்கவில்லை. ("அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலரையும் தவிர" என்று கூறினார்களா என எனக்குத் தெரியவில்லை என்று ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் உள்ளது.) அவர் வந்து (அபூசுஃப்யானின் வணிகக் குழு மக்காவை நோக்கிப் புறப்பட்டுவிட்டது" என்ற) தகவலைச் சொன்னார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து (எங்களிடம்) பேசினார்கள். "நமக்கு ஒரு முக்கிய அலுவல் உண்டு. யாரிடம் வாகனம் (ஒட்டகம்) உள்ளதோ அவர் நம்முடன் பயணமாகட்டும்" என்று சொன்னார்கள். உடனே சிலர் மதீனாவின் மேட்டுப் பகுதி கிராமத்துக்குச் சென்று தம் ஒட்டகங்களுடன் வர அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரலாயினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை, (இங்கு) யாரிடம் ஒட்டகம் தயாராக உள்ளதோ அவரைத் தவிர (வேறெவரும் புறப்பட வேண்டாம்)" என்று கூறிவிட்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (சில) நபித்தோழர்களும் புறப்பட்டனர். அவர்கள் இணைவைப்பாளர்களை முந்திக்கொண்டு "பத்ர்" வந்துசேர்ந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நான் முன்னிலை வகிக்காமல் (என்னிடம் கேட்காமல்) உங்களில் யாரும் எதற்காகவும் முந்த வேண்டாம்" என்று கூறினார்கள்.
இணைவைப்பாளர்கள் நெருங்கிவந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கு எழு(ந்து தயாராகு)ங்கள்" என்று கூறினார்கள். உடனே உமைர் பின் அல்ஹுமாம் அல்அன்சாரீ (ரலி) அவர்கள், "வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கமா?" என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று பதிலுரைக்க, "ஆஹா, ஆஹா" என்று உமைர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆஹா, ஆஹா என்று நீர் கூறக் காரணமென்ன?" என்று கேட்டார்கள். உமைர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! வேறொன்றுமில்லை, அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகளில் நானும் ஒருவனாக இருக்கவேண்டும் என்ற ஆசைதான் (அவ்வாறு நான் சொல்லக் காரணம்)" என்றார்.
அதற்கு "சொர்க்கவாசிகளில் நீரும் ஒருவர்தாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உமைர் (ரலி) அவர்கள் தமது அம்புக் கூட்டிலிருந்து பேரீச்சம் பழங்களை எடுத்து, அவற்றில் சிலவற்றை உண்ணத் தொடங்கினார்கள். பிறகு, "இந்தப் பேரீச்சம் பழங்களை உண்டு முடிக்கும்வரை நான் உயிர் வாழ்ந்தால் அது ஒரு நீண்ட நெடிய வாழ்க்கையாகிவிடுமே!" என்று கூறியபடி தம்மிடமிருந்த அந்தப் பேரீச்சம் பழங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, எதிரி(களை நோக்கிச் சென்று அவர்)களுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3859. அபூபக்ர் பின் அப்தில்லாஹ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (அபூமூசா அல்அஷ்அரீ - ரலி) அவர்கள் (ஒரு போரில்) எதிரிகளின் முன்னிலையில் இருந்தார்கள். அப்போது "சொர்க்கத்தின் வாசல்கள் வாட்களின் நிழலுக்குக் கீழே உள்ளன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
உடனே நலிந்த தோற்றத்தில் இருந்த ஒரு மனிதர் எழுந்து, "அபூமூசா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நீர் கேட்டீரா?" என்று வினவினார். அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள் "ஆம்" என்றார்கள். உடனே அந்த மனிதர் தம் தோழர்களிடம் திரும்பிச் சென்று, "உங்களுக்கு நான் என் (இறுதி) சலாமைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார். பிறகு தமது வாள் உறையைக் கிழித்துப் போட்டுவிட்டு, எதிரிகளை நோக்கி நடந்தார். அந்த வாளால் போரிட்டு வீரமணமும் அடைந்தார்.
அத்தியாயம் : 33
3860. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்களில் சிலர் (ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ லஹ்யான் ஆகிய கூட்டத்தார்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "எங்களுக்குக் குர்ஆனையும் "சுன்னா"வையும் கற்பிப்பதற்காக எங்களுடன் சிலரை அனுப்பிவையுங்கள்" என்று கேட்டுக்கொண்டனர். அதற்கிணங்க அன்சாரிகளில் எழுபது பேரை அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். அவர்கள் குர்ஆன் அறிஞர்கள் (அல்குர்ராஉ) எனப்படுவர். அவர்களில் என் தாய்மாமா ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்களும் ஒருவர் ஆவார்.
அவர்கள் (எழுபது பேரும்) இரவில் குர்ஆனை ஓதுவார்கள்; ஒருவருக்கொருவர் கற்றுக் கொடுக்கவும் கற்றுக்கொள்ளவும் செய்வார்கள். பகல் நேரங்களில் (அருந்துவோருக்காகவும், அங்கத்தூய்மை செய்வோருக்காகவும்) தண்ணீர் கொண்டுவந்து (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைப்பார்கள். விறகு சேகரித்து வந்து அதை விற்றுக் காசாக்கி அதன் மூலம் திண்ணைவாசிகளுக்கும் ஏழைகளுக்கும் உணவு வாங்கிக் கொடுப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இவர்களை அனுப்பியபோது, அவர்கள் (குறிப்பிட்ட) அந்த இடத்திற்குப் போய்ச் சேர்வதற்கு முன்பே அவர்களை இடைமறித்து, ("பிஃரு மஊனா" எனும் இடத்தில்) அனைவரையும் அக்கூட்டத்தார் கொன்றுவிட்டனர்.
(இறக்கும் தருவாயில்) அவர்கள், "இறைவா! நாங்கள் உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டோம். உன்னை நாங்கள் உவந்துகொண்டோம்; எங்களை நீயும் உவந்துகொண்டாய் என்று எங்களைப் பற்றி எங்கள் நபியிடம் தெரிவித்துவிடுவாயாக!" என்று கூறினர்.
என் தாய்மாமா ஹராம் (ரலி) அவர்களுக்குப் பின்னால் ஒரு மனிதன் வந்து ஈட்டியால் குத்திவிட்டான். அது அவர்களை ஊடுருவிச் சென்றது. அப்போது ஹராம் (ரலி) அவர்கள், "கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்" என்று கூறினார்கள்.
(இறையறிவிப்பின் மூலம் இது குறித்து அறிந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்களிடம், "உங்கள் சகோதரர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் (இறக்கும் தருவாயில்) "இறைவா! நாங்கள் உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டோம். உன்னை நாங்கள் உவந்து கொண்டோம்; எங்களை நீயும் உவந்துகொண்டாய்" என எங்கள் நபியிடம் தெரிவித்துவிடுவாயாக என்று கூறினர்" எனத் தெரிவித்தார்கள்.
அத்தியாயம் : 33
3861. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு யாருடைய பெயர் சூட்டப்பெற்றுள்ளதோ அந்த என் தந்தையின் சகோதரர் (அனஸ் பின் அந்நள்ர் -ரலி) அவர்கள் பத்ருப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கலந்துகொள்ளவில்லை. அது அவர்களுக்கு மனவேதனையை அளித்தது.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட முதல் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டேனே! இனிவரும் காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் களம் காணும் ஒரு வாய்ப்பை அல்லாஹ் எனக்குத் தந்தால் நான் செய்யப்போவதை (என் வீரத்தையும் தியாகத்தையும்) அல்லாஹ் பார்த்துக்கொள்வான்" என்று கூறினார். (இதைத் தவிர விளக்கமாக வேறெதையும் அவர் கூறவில்லை.) இதைத் தவிர வேறெதையும் சொல்ல அவர் அஞ்சினார். (சொல்லிவிட்டுச் செய்ய முடியாமற் போய்விட்டால் என்னாவது என்ற பயமே அதற்குக் காரணம்.)
பின்னர் அவர் உஹுதுப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கலந்து கொண்டார். (போர்க்களத்தை நோக்கி அவர் சென்றபோது) எதிரில் சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் (பின்வாங்கி) வர(க் கண்டு), "அபூஅம்ரே! எங்கே (செல்கிறீர்)?" என்று கேட்டுவிட்டு, "இதோ! சொர்க்கத்தின் நறுமணத்தை உஹுத் மலையிலிருந்து நான் பெறுகிறேன்" என்று கூறினார்.
பிறகு எதிரிகளுடன் போரிட்டு அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள் வீரமரணமடைந்தார்கள். அவரது உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப் பட்டும் எண்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் காணப்பட்டன. அவர்களுடைய சகோதரியும் என்னுடைய அத்தையுமான ருபய்யிஉ பின்த் அந்நள்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய சகோதரரை, நான் அவருடைய விரல் (நுனி)களை வைத்தே என்னால் அடையாளம் காண முடிந்தது. (அந்த அளவுக்கு அவரது உடல் எதிரிகளால் சிதைக்கப்பட்டிருந்தது.)
"அல்லாஹ்விடம் எதைப் பற்றி உறுதிமொழி எடுத்தார்களோ அதை உண்மைப்படுத்தியோரும் இறைநம்பிக்கை கொண்டோரில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறந்து "வீரமரணம்" எனும்) தமது இலட்சியத்தை அடைந்துவிட்டனர். (அதை) எதிர்பார்த்துக் கொண்டிருப்போரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் சிறிதளவும் (வாக்கை) மாற்றிக்கொள்ளவில்லை" (33:23) எனும் இந்த வசனம் அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள் விஷயத்திலும் அவர்களுடைய தோழர்களின் விஷயத்திலுமே அருளப்பெற்றது என்றே மக்கள் கருதிவந்தனர்.
அத்தியாயம் : 33
பாடம் : 42 அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிட்டவரே அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் ஆவார்.
3862. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் போரில் கிடைக்கும் செல்வங்களுக்காகப் போரிடுகிறார். மற்றொரு மனிதர் புகழப்படுவதற்காகப் போரிடுகிறார். இன்னொரு மனிதர் தமது தகுதியைப் பிறர் பார்க்கட்டும் என்பதற்காகப் போரிடுகிறார் -இவர்களில் யார் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிட்டவரே அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் ஆவார்" என விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3863. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "ஒரு மனிதர் வீரத்தை வெளிக்காட்டப் போரிடுகிறார். மற்றொருவர் இனமாச்சரியத்திற்காகப் போரிடுகிறார். இன்னொருவர் பிறருக்குக் காட்டிக் கொள்வதற்காகப் போரிடுகிறார். -இவர்களில் இறைவழியில் போரிடுகின்றவர் யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிட்டவரே அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல் அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் வீரத்தை வெளிக்காட்டப் போரிடுகிறார்" என்று கேட்டோம் என ஹதீஸ் துவங்குகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 33
3864. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதைப் பற்றிக் கேட்டார். ஒருவர் (தனிப்பட்ட) கோபதாபத்திற்காகப் போரிடுகிறார். மற்றொருவர் இனமாச்சர்யத்துடன் போரிடுகிறார் (இவற்றில் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் போர் எது?)" என்று கேட்டார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கித் தமது தலையை உயர்த்தினார்கள் -அவர் நின்றுகொண்டிருந்ததால்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தினார்கள்-. பிறகு, "அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகின்றவரே அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் ஆவார்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 43 பிறருக்குக் காட்டிக்கொள்வதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் நரகத்திற்கே உரியவர் ஆவார்.
3865. சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எங்களுக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், "ஆம் (தெரிவிக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்:
மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?" என்று இறைவன் கேட்பான். அவர், "(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்" என்று பதிலளிப்பார்.
இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, "மாவீரன்" என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)" என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?" என்று இறைவன் கேட்பான். அவர், "(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்" என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.)"அறிஞர்" என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; "குர்ஆன் அறிஞர்" என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறி விட்டது)" என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?" என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், "நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்" என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய் "இவர் ஒரு புரவலர்" என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)" என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மக்கள் கலைந்து சென்றபோது சிரியா நாட்டைச் சேர்ந்த "நாத்தில் பின் கைஸ்" என்பவர் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்டார்..." என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 33
பாடம் : 44 அறப்போரில் கலந்துகொண்டு போர்ச்செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் அடைந்துகொள்ளும் (மறுமை) நன்மைகளின் அளவு பற்றிய விளக்கம்.
3866. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் போர்புரியச் சென்று, போர்ச்செல்வங்களை அடைந்து கொண்டோர் மறுமையின் நன்மைகளில் மூன்றில் இரண்டு பாகங்களை முன்கூட்டியே (இவ்வுலகிலேயே) பெற்றுக்கொண்டுவிட்டனர். (மீதியுள்ள) மூன்றில் ஒரு பாகமே (மறுமையில்) அவர்களுக்கு எஞ்சியிருக்கும். (அறப்போரில் கலந்துகொண்டு) போர்ச் செல்வம் எதையும் அடைந்துகொள்ளாதோர் முழு நன்மையையும் (மறுமையில்) பெற்றுக் கொள்வர்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3867. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அல்லாஹ்வின் பாதையில்) அறப்போரில் அல்லது படைப்பிரிவில் பங்கேற்றுப் போர் செய்து, போர்ச்செல்வங்களுடனும் உடல் நலத்துடனும் திரும்புவோர், தங்களுடைய மறுமை நன்மைகளில் மூன்றில் இரண்டு பாகத்தை முன்கூட்டியே (இவ்வுலகிலேயே) அடைந்து கொண்டுவிட்டனர். அறப்போரில் அல்லது படைப்பிரிவில் கலந்து, போர் செய்து, போர்ச் செல்வமும் பெறாமல் உடலும் பாதிக்கப்பட்ட நிலையில் திரும்புவோர், (மறுமையில்) முழுமையான நன்மைகளை அடைந்துகொள்வர்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 45 "எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன" எனும் நபிமொழியும், அதில் அறப்போர் உள்ளிட்ட அனைத்து நல்லறங்களும் அடங்கும் என்பதும்.
3868. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே, எவரது ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். எவரது ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும்.
இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் எட்டு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சுஃப்யான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தவாறு இவ்வாறு கூறியதை நான் கேட்டேன்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடையும் வாய்ப்பை வழங்குமாறு வேண்டுவது விரும்பத்தக்கதாகும்.
3869. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்துகொள்வார்; அவரை வீரமரணம் தழுவாவிட்டாலும் சரியே!
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3870. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் உண்மையான மனதுடன் இறைவனிடம் வீரமரணத்தை வேண்டுவாரோ, அவரை உயிர்த் தியாகிகளின் தகுதிகளுக்கு அல்லாஹ் உயர்த்துவான்; அவர் தமது படுக்கையில் (இயற்கை) மரணமடைந்தாலும் சரியே!
இதை சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபுத்தாஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உண்மையான மனதுடன்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33
பாடம் : 47 அறப்போரில் கலந்துகொள்ளாமலும் அது குறித்து மனதில் எந்த விதமான ஆசையும் இல்லாமலும் இறந்துபோனவர் குறித்து வந்துள்ள பழிப்புரை.
3871. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறப்போரில் கலந்துகொள்ளாமலும் அது குறித்து மனதில் எந்த விதமான ஆசையும் இல்லாமல் இறந்துபோனவர் நயவஞ்சகத்தின் ஓர் அம்சத்திலேயே இறந்து போகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த நிலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் இருந்தது என்றே நாம் கருதுகிறோம்.
அத்தியாயம் : 33
பாடம் : 48 நோய் அல்லது வேறு தகுந்த காரணத்தால் போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை கிடைக்கும்.
3872. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஓர் அறப்போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், "மதீனாவில் (நம் தோழர்கள்) சிலர் இருக்கின்றனர். நீங்கள் ஒரு பாதையில் நடக்கும்போதும் ஒரு பள்ளத்தாக்கைக் கடக்கும்போதும் உங்களுடனேயே அவர்களும் இருக்கின்றனர். நோய்தான் அவர்களை (போருக்கு வரவிடாமல்) தடுத்து விட்டது" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நன்மையில் உங்களுடன் அவர்களும் இணைந்துகொள்ளாமல் இருப்பதில்லை" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 49 கடல்வழிப் போரின் சிறப்பு
3873. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள "குபா"வுக்குச் சென்றால், தம் பால்குடி அன்னையான) உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்வதும் அவர்களுக்கு அவர் உணவளிப்பதும் வழக்கம் -அவர் (பிற்காலத்தில்) உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார்- அவ்வாறே ஒரு நாள் (பகலில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்ற போது, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உணவளித்தார். பின்னர் அவர்களுக்கு அவர் பேன் பார்த்துக்கொண்டு உட்கார்ந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள்.
தொடர்ந்து உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அப்போது நான், "ஏன் சிரிக்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் இந்தக் கடல் மேல் பயணம் செய்யும் அறப்போர் வீரர்களாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் "மன்னர்களாக" அல்லது "மன்னர்களைப் போன்று" இருந்தார்கள்" என்று கூறினார்கள். (இவ்விரு வார்த்தைகளில் எந்த வார்த்தையை அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என அறிவிப்பாளர் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் சந்தேகத்துடன் அறிவிக்கிறார்.) உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று சொன்னேன். அப்போது எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
பிறகு (மீண்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையைக் கீழே வைத்து உறங்கிவிட்டுப் பிறகு சிரித்தபடி விழித்தெழுந்தார்கள். அப்போதும் நான், "ஏன் சிரிக்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள்" என்று முன்பு போலவே பதிலளித்தார்கள்.
அதைக் கேட்டு நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னையையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் (கடல்வழி அறப்போருக்குச் செல்லும்) முதலாவது குழுவில் ஒருவராக இருப்பீர்கள்" என்று கூறினார்கள்.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தபடியே) உம்மு ஹராம் (ரலி) அவர்கள் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களது காலத்தில் கடற்பயணம் மேற்கொண்டார்கள். பின்பு அவர்கள் கடலிலிருந்து புறப்பட்டு (கரைக்கு) வந்தபோது, தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்துபோனார்கள்.
அத்தியாயம் : 33
3874. அனஸ் (ரலி) அவர்களின் சிற்றன்னை உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, எங்கள் வீட்டில் மதிய ஓய்வு மேற்கொண்டார்கள். பிறகு உறக்கத்திலிருந்து சிரித்தபடியே விழித்தெழுந்தார்கள். அப்போது நான், "என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம்! ஏன் சிரிக்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் கடல் முதுகில் பயணிப்பவர்களாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் மன்னர்களைப் போன்று இருந்தார்கள்" என்று கூறினார்கள். உடனே நான், "என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று சொன்னேன்.
அதற்கு, "நீங்களும் அவர்களில் ஒருவராக இருப்பீர்கள்" என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) உறங்கிவிட்டு மறுபடியும் சிரித்தபடியே விழித்தொழுந்தார்கள். அப்போது நான் (அதற்கான காரணத்தை) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் முன்பு கூறியதைப் போன்றே கூறினார்கள்.
அப்போதும் நான், "என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் (கடல்வழிப்போரில் செல்லும்) முதலாவது குழுவினரில் ஒருவராக இருப்பீர்கள்" என்று கூறினார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
பின்னர் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டபோது, உபாதா (ரலி) அவர்கள் கடலில் பயணம் செய்து அறப்போருக்குச் சென்றார்கள். அப்போது தம்முடன் (தம் துணைவி) உம்மு ஹராம் (ரலி) அவர்களையும் (கப்பலில்) அழைத்துச் சென்றார்கள். (போர் முடிந்து) வந்தபோது, உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கு அருகில் கோவேறு கழுதையொன்று கொண்டுவரப்பட்டது. அதில் அவர்கள் ஏறியபோது, அது கீழே தள்ளிவிட்டது. அதனால் அவர்களது கழுத்து முறிந்துவிட்டது. (அவர்கள் இறந்துவிட்டார்கள்.)
அத்தியாயம் : 33
3875. மேற்கண்ட ஹதீஸ் உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஒரு நாள் (பகலில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் வீட்டிற்கு வந்து) எனக்கு அருகில் உறங்கினார்கள். பிறகு புன்னகைத்தவர்களாக விழித்தெழுந்தார்கள். நான், "ஏன் சிரிக்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அதற்கு, "என் சமுதாயத்தாரில் சிலர் இந்தப் பசுமைக் கடல் மேல் பயணிப்பவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள்..." என்று கூறினார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெறுகின்றன.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் சிற்றன்னை மில்ஹானின் புதல்வி (உம்மு ஹராம் - ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்து, அவர் அருகில் தமது தலையைக் கீழே வைத்து உறங்கினார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 33
பாடம் : 50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு.
3876. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு பகல் ஓர் இரவு (நாட்டின்) எல்லையைக் காக்கும் பணியில் ஈடுபடுவதானது, ஒரு மாதம் (பகலெல்லாம்) நோன்பு நோற்று (இரவெல்லாம்) நின்று வழிபடுவதைவிடச் சிறந்ததாகும். அ(வ்வாறு காவல் காப்ப)வர் இறந்துவிட்டாலும் அவர் செய்துவந்த நற்செயல் (களுக்குரிய நன்மை)கள் (அவரது கணக்கில்) அவருக்குப் போய்க்கொண்டிருக்கும். (இறைவனிடம்) அவர் உணவளிக்கவும்படுகிறார். மேலும், (சவக்குழியில்) வேதனை செய்பவரிடமிருந்து பாதுகாப்பும் பெறுவார்.
இதை சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சல்மானுல் கைர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 51 (பல வகை) உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம்.
3877. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் முட்கிளை ஒன்றைக் கண்டு அதை அப்புறப்படுத்தினார். (அவரது இந்த நற்செயலை) அல்லாஹ் பெருமனதுடன் ஏற்று, அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான். உயிர்த் தியாகிகள் ஐவர் ஆவர்:
1. கொள்ளை நோயால் இறந்தவர் 2. வயிற்றுப்போக்கால் இறந்தவர் 3. வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர் 4.இடிபாடுகளில் சிக்கி இறந்தவர் 5. அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) உயிர்த் தியாகம் செய்தவர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3878. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), "உங்களில் உயிர்த்தியாகி (ஷஹீத்) குறித்து உங்கள் கருத்து என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டவர் உயிர்த்தியாகி ஆவார்" என்று பதிலளித்தனர்.
"அப்படியானால், என் சமுதாயத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்கள் (எண்ணிக்கையில்) குறைந்துவிடுவார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "அவ்வாறாயின், உயிர்த்தியாகிகள் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டவர் உயிர்த்தியாகி ஆவார். அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர் உயிர்த் தியாகி ஆவார். கொள்ளை நோயால் இறந்தவரும் உயிர்த்தியாகி ஆவார். வயிற்றோட்டத்தால் இறந்தவரும் உயிர்த்தியாகி ஆவார்" என்று விடையளித்தார்கள்.
(இந்த ஹதீஸ் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள சுஹைல் பின் அபீசாலிஹ் (ரஹ்) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் வரிசையிலும் வந்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள) உபைதுல்லாஹ் பின் மிக்சம் (ரஹ்) அவர்கள் (தமக்கு இதை அறிவித்த) சுஹைல் (ரஹ்) அவர்களிடம், "இந்த ஹதீஸின் தொடரில் "வெள்ளத்தில் மூழ்கி இறந்தவரும் உயிர்த்தியாகி ஆவார்" என உங்கள் தந்தை (அபூ சாலிஹ் -ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் என நான் உறுதிமொழிகிறேன்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: சுஹைல் பின் அபீசாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (என்னிடம்) உபைதுல்லாஹ் பின் மிக்சம் (ரஹ்) அவர்கள், இந்த ஹதீஸின் தொடரில் உங்கள் தந்தை (அபூசாலிஹ் -ரஹ்) அவர்கள் "வெள்ளத்தில் மூழ்கி இறந்தவரும் உயிர்த்தியாகி ஆவார்" என்று அறிவித்தார் என நான் உறுதிமொழிகிறேன்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் அபூசாலிஹ் (ரஹ்) அவர்கள் "வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர் உயிர்த் தியாகி ஆவார்" என்று கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3879. ஹஃப்ஸா பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் என்னிடம், "(உங்கள் சகோதரர்) யஹ்யா பின் அபீஅம்ரா எதனால் இறந்தார்?" என்று கேட்டார்கள். நான், "கொள்ளை நோயால் இறந்தார்" என்று பதிலளித்தேன். அவர்கள், "கொள்ளை நோய் (மரணம்), ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வீரமரணமாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 52 அம்பெய்வதன் சிறப்பும் அதற்காக ஆர்வமூட்டுவதும் அதைப்பயின்று மறந்து விட்டவர் குறித்து வந்துள்ள பழிப்புரையும்.
3880. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி "நீங்கள் அவர்களுக்கெதிராக உங்களால் இயன்ற அளவுக்குப் பலத்தைத் தயார்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்" (8:60) எனும் இறைவசனத்தை ஓதிவிட்டு, "அறிந்து கொள்க: பலம் என்பது அம்பெய்வதாகும். அறிக! பலம் என்பது அம்பெய்வதாகும். அறிக! பலம் என்பது அம்பெய்வதாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 33
3881. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விரைவில் பல நாடுகள் உங்களால் வெற்றிகொள்ளப்படும். அதற்கு இறைவனே உங்களுக்குப் போதுமானவன். எனவே, உங்களில் ஒருவர் தம் அம்புகளால் விளையாட இயலாமல் போய்விட வேண்டாம்.
இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3882. அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஃபுகைம் அல்லக்மீ என்பவர் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடம் "(முதியவரான) தாங்கள் (அம்பெய்வதற்காக) இவ்விரு இலக்குகளுக்கிடையே உங்களைச் சிரமப்படுத்திக் கொள்கிறீர்களே!" என்று கேட்டார். அதற்கு உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியை நான் செவியுற்றிராவிட்டால் இதற்காக நான் சிரமம் எடுத்துக்கொள்ளமாட்டேன்" என்று பதிலளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான ஹாரிஸ் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா (ரஹ்) அவர்களிடம், "அது என்ன (செய்தி)?" என்று கேட்டேன். அதற்கு அப்துர் ரஹ்மான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யார் அம்பெய்வதைப் பயின்ற பின் அதைக் கைவிட்டுவிடுகிறாரோ அவர் "நம்மைச் சேர்ந்தவர் அல்லர்" அல்லது "(நமக்கு) மாறுசெய்துவிட்டார்" என்று கூறினார்கள்" என விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 53 "என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது" என நபி (ஸல்) அவர்கள் கூறியது.
3883. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் உண்மைக்கு ஆதரவாளர்களாக இருந்துகொண்டே இருப்பார்கள். அவர்களுக்குத் துரோகம் இழைப்பவர்களால் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. இறுதியில் அவர்கள் இதே நிலையில் இருக்கும்போதே இறைக்கட்டளை (மறுமைக்கு நெருக்கமான நிலை) வந்துவிடும்.
இதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் இதே நிலையில் இருக்கும்போதே" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33
3884. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் (உண்மையை மறுக்கும்) மக்களை மிகைத்தவர்களாகவே இருந்துகொண்டிருப்பார்கள். இறுதியில் அவர்கள் மிகைத்தவர்களாக இருக்கும்போதே அவர்களிடம் இறைக்கட்டளை (மறுமைக்கு நெருக்கமான நிலை) வந்துவிடும்.
இதை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3885. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த மார்க்கத்திற்காக முஸ்லிம்களில் ஒரு குழுவினர் போராடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே மறுமை நிகழும். அதுவரை இந்த மார்க்கம் நிலைத்திருக்கும்.
இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3886. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் இறுதி நாள்வரை உண்மைக்கு ஆதரவாகப் போராடிக்கொண்டே இருப்பார்கள்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3887. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் இறைக்கட்டளையை நிலைநாட்டிய வண்ணமே இருப்பார்கள். அவர்களுக்குத் துரோகம் இழைப்பவர்களோ அவர்களை எதிர்ப்பவர்களோ அவர்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்க முடியாது. அவர்கள் (உண்மையை மறுக்கும்) மக்களை மிகைத்தவர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களிடம் இறைக் கட்டளை வரும். -இதை முஆவியா (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 33
3888. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகின்றானோ அவரை மார்க்க (விளக்கமுடைய) அறிஞராக்குகிறான். முஸ்லிம்களில் ஒரு குழுவினர் உண்மைக்கு ஆதரவாகப் போராடிய வண்ணம் தம் எதிரிகளைவிட மேலோங்கியவர்களாகவே யுகமுடிவு நாள்வரை நீடித்திருப்பார்கள்.
இதை முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளரான யஸீத் பின் அல்அஸம்மு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
முஆவியா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்த இந்த ஒரு ஹதீஸை (மட்டுமே) நான் செவியுற்றேன். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இந்த ஹதீஸைத் தவிர வேறெதையும் முஆவியா (ரலி) அவர்கள் மிம்பர் மீதிருந்தபடி குறிப்பிட்டதை நான் கேட்டதில்லை.
அத்தியாயம் : 33
3889. அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா அல்மஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மஸ்லமா பின் முகல்லத் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அங்கு மஸ்லமா (ரலி) அவர்களுக்கு அருகில் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், "படைப்பினங்களிலேயே மிகவும் தீயவர்கள் மீதே யுகமுடிவு நாள் சம்பவிக்கும். அவர்கள் அறியாமைக் கால மக்களைவிட தீயவர்களாக இருப்பர். அவர்கள் அல்லாஹ்விடம் எதை வேண்டினாலும் இறைவன் அதை நிராகரித்துவிடுவான்" என்று சொன்னார்கள்.
இவ்வாறு அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள். அப்போது மஸ்லமா (ரலி) அவர்கள், "உக்பா (ரலி) அவர்களே! அப்துல்லாஹ் சொல்வதைக் கேளுங்கள்" என்றார்கள். அதற்கு உக்பா (ரலி) அவர்கள், "அவரே நன்கறிந்தவர். நானோ, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதைக் கேட்டுள்ளேன் என்றார்கள்:
என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப போராடியவண்ணம் தம் எதிரிகளை அடக்கிவைத்தபடியே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்குத் தீங்கு செய்யமுடியாது. அவர்கள் இவ்வாறு இருந்துகொண்டிருக்கும் நிலையிலேயே யுகமுடிவு நாள் ஏற்படும்.
அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், "ஆம் (நீங்கள் சொன்னதும் சரியே!) பிறகு கஸ்தூரி போன்ற மணமுடைய ஒரு காற்றை அல்லாஹ் அனுப்புவான். அது பட்டு போல மேனியை வருடும். பிறகு எந்த உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை உள்ளதோ அத்தகைய எந்த உயிரையும் அது கைப்பற்றாமல் விடாது. பிறகு மக்களிலேயே மிகவும் தீயவர்களே எஞ்சியிருப்பர். அவர்கள்மீதே யுக முடிவு நாள் ஏற்படும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 33
3890. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மேற்குவாசிகள் (சிரியாவாசிகள்) யுகமுடிவு நாள்வரை உண்மைக்கு ஆதரவாகவே இருந்துகொண்டிருப்பார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் சாலையி(ன் நடுவி)ல் இரவில் இறங்கி ஓய்வெடுப்பதற்கு வந்துள்ள தடையும்.
3891. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால், (பசுமையான) பூமியில் ஒட்டகங்களுக்குரிய பங்கை (மேய்ச்சலை)க் கொடுத்துவிடுங்கள். வறட்சியான காலத்தில் பயணம் செய்தால், ஒட்டகங்களைத் துரிதமாகச் செலுத்துங்கள். நீங்கள் இரவில் இறங்கி ஓய்வெடுத்தால், (போக்குவரத்துச்) சாலையைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், அது இரவில் விஷஜந்துகள் உலவும் இடமாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால், (பசுமையான) பூமியில் ஒட்டகங்களுக்குரிய பங்கை (மேய்ச்சலை)க் கொடுத்துவிடுங்கள். வறட்சியான காலத்தில் பயணம் மேற்கொண்டால், ஒட்டகங்களின் உடலில் எலும்பு மஜ்ஜை (பலம்) இருக்கவே விரைவாகச் சென்றுவிடுங்கள். (பயணத்தில்) நீங்கள் இரவில் இறங்கி ஓய்வெடுத்தால், போக்குவரத்துச் சாலைகளைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில், அவை கால்நடைகளின் பாதைகளும் இரவில் விஷஜந்துகள் உலவும் இடமும் ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 55 பயணம் வேதனையின் ஒரு துண்டாகும். பயணி தம் பணிகளை முடித்த பின் விரைவாகத் தம் வீட்டாரிடம் திரும்பிவிடுவது நல்லதாகும்.
3892. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பயணம் வேதனையின் ஒரு துண்டாகும். உங்கள் தூக்கத்தையும் உணவையும் பானத்தையும் அது தடுத்துவிடுகிறது. ஆகவே, உங்களில் ஒருவர், தாம் நாடிச்சென்ற பயண நோக்கத்தை முடித்துவிட்டால், உடனே அவர் தம் வீட்டாரை நோக்கி விரைந்து செல்லட்டும்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், "இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அபூசாலிஹ் (ரஹ்) அவர்களும், அவரிடமிருந்து சுமய்யு (ரஹ்) அவர்களும் உங்களுக்கு அறிவித்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 56 (நீண்ட) பயணத்திலிருந்து திரும்புகின்றவர் இரவில் (எந்த முன்னறிவிப்புமின்றி) திடீரெனத் தமது வீட்டினுள் நுழைவது (துரூக்) வெறுக்கத்தக்கதாகும்.
3893. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தை முடித்து) இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்லமாட்டார்கள். அவர்களிடம் காலையிலோ அல்லது மாலையிலோ தான் செல்வர்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நுழையமாட்டார்கள்" என்றே இடம்பெற்றுள்ளது. ("திடீரென" எனும் குறிப்பு இல்லை.)
அத்தியாயம் : 33
3894. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு போரில் (தபூக்கில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். பிறகு நாங்கள் மதீனா வந்து (ஊருக்குள்) நுழையப்போனபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நீங்கள் வந்து சேர்ந்துவிட்ட தகவல் வீட்டுப் பெண்களைச் சென்றடைய) இரவாகும்வரை பொறுத்திருங்கள். தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக் கொள்ளட்டும்.(கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப் படுத்தி)க்கொள்ளட்டும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3895. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (வெளியூரிலிருந்து) இரவு நேரத்தில் வந்தால் (எந்த முன்னறிவிப்புமின்றி) திடீரென அவர் தம் வீட்டாரிடம் செல்ல வேண்டாம். (கணவனைப்) பிரிந்திருந்த பெண் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தம்மை ஆயத்தப் படுத்தி)க்கொள்ளும் வரையிலும், தலைவிரி கோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக் கொள்ளும்வரையிலும் (அவர் தாமதிக்கட்டும்!)
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3896. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது
நீண்டநாட்கள் கழித்து ஊர் திரும்புகின்ற ஒருவர் (எந்த முன்னறிவிப்புமின்றி) இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்ல வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3897. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(வெளியூரிலிருந்து திரும்புகின்ற) ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும் (அவ்வாறு செல்வது முறையாகாது).
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள், "வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்" எனும் இந்த வாசகம் ஹதீஸில் உள்ளதா, அல்லது இல்லையா (அறிவிப்பாளர் முஹாரிப் அவர்களின் வாசகமா) என எனக்குத் தெரியவில்லை" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3898. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஒருவர் (பயணத்திலிருந்து திரும்பி) இரவில் திடீரென வீட்டாரிடம் செல்வதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்து வந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
"வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
Previous Post Next Post