அத்தியாயம் 30 நோன்பு

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 30

நோன்பு

அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

ரமலான் நோன்பு கடமையாகுதல்.

அல்லாஹ் கூறினான்:

''இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்களின் மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது; இதன் மூலம் நீங்கள் இறையச்சம் உடையவர்களாக ஆகக் கூடும்!'' (திருக்குர்ஆன் 02:183)

1891. தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

ஒரு கிராமவாசி பரட்டைத் தலையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்; 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என் மீது கடமையாக்கிய தொழுகை எது என்று சொல்லுங்கள்! என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஐந்து நேரத் தொழுகைகள்! அவற்றைத் தவிர! (கடமையான தொழுகை வேறெதுவுமில்லை; உபரியாக) நீயாக விரும்பித் தொழுதால் மட்டுமே உண்டு!'' என்று பதிலளித்தார்கள். அவர் 'அல்லாஹ் என் மீது கடமையாக்கிய ஸகாத் எது என்று எனக்குக் கூறுங்கள்!'' என்றார். நபி(ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை அவருக்குக் கூறினார்கள். அப்போது அவர், 'சத்தியத்தின் வாயிலாக உங்களை கண்ணியப்படுத்திய இறைவன் மேல் ஆணையாக! நான் உபரியாக எதையும் செய்ய மாட்டேன்; அல்லாஹ் என் மீது கடமையாக்கியதில் எதையும் குறைக்கவும் மாட்டேன்!'' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள். 'இவர் கூறுவது உண்மையானால் வெற்றி பெற்றுவிட்டார்!'' என்றோ 'இவர் கூறுவது உண்மையானால் இவர் சொர்க்கத்தில் நுழைவார்!'' என்றோ கூறினார்கள்.

1892. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்) நோன்பு நோற்றார்கள். அதை நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையிட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாகப்பட்டதும் ஆஷூரா நோன்பை (கடமையாகக் கருதி) நோற்பது விடப்பட்டது.

''தம் வேறு நோன்பு (ஏதாவது) அந்நாளில் தற்செயலாக அமைந்தாலே தவிர, இப்னு உமர்(ரலி) ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்க மாட்டார்கள்!'' என்று நாஃபிவு(ரஹ்) கூறினார்.

1893. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

குறைஷிக் குலத்தினர் அறியாமைக் காலத்தில் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்று வந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும் வரை நபி(ஸல்) அவர்களும் ஆஷூரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் '(ஆஷூரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்!விட்டுவிட விரும்புபவர் அதைவிட்டுவிடட்டும்!'' எனக் கூறினார்கள்.

பகுதி 2

நோன்பின் சிறப்பு.

1894. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!'' (என்று அல்லாஹ் கூறினான்)''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 3

நோன்பு குற்றங்களுக்குப் பரிகாரமாகும்.

1895. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.

''ஃபித்னா (சோதனை) பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறிய செய்தியை யார் மனனம் செய்திருக்கிறீர்கள்?' என்று உமர்(ரலி) கேட்டார். 'நான் அதைச் செவியுற்றிருக்கிறேன்! 'ஒருவர் தம் குடும்பத்தினர். தம் செல்வம், மற்றும் அண்டை வீட்டார் விஷயத்தில் சோதனைக்கு ஆளாகும்போது தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவை அதற்குப் பரிகாரமாக அமையும்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்!'' என்றேன். அதற்கு உமர்(ரலி), 'நான் (சோதனை என்னும் பொருளில் அமைந்த) இந்த ஃபித்னாவைப் பற்றிக் கேட்கவில்லை. கடலலை போல் தொடர்ந்து வரக்கூடிய (குழப்பம் என்னும் பொருளிலமைந்த) ஃபித்னாவைப் பற்றியே கேட்கிறேன்!'' என்றார்கள். அதற்கு நான் 'உமக்கும் அதற்கும் இடையே மூடப்பட்ட வாசல் இருக்கிறது!'' என்று கூறினேன். 'அது திறக்கப்படுமா? உடைக்கப்படுமா?' என்று உமர்(ரலி) கேட்டார்கள். நான் 'உடைக்கப்படும்!'' என்று பதிலளித்தேன். 'அப்படியானால் மறுமை நாள் வரை அது மூடப்படாது!'' என்று உமர்(ரலி) கூறினார்.

''அந்த வாசல் யார் என்று உமர்(ரலி) அறிந்திருந்தாரா என்று ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கேளுங்கள்!'' என்று மஸ்ரூக்(ரஹ்) அவர்களிடம் நாங்கள் கூறினோம்! அவ்வாறே அவர் கேட்டார்! அதற்கு ஹுதைஃபா(ரலி) 'ஆம்! நாளை (காலை) வருவதற்கு முன்பு இரவொன்று உள்ளது என்பதை அறிவதைப் போல் அதை அவர் அறிந்திருந்தார்!' என்று பதிலளித்தார்!'' என அறிவிப்பாளர் அபூ வாயில்(ரஹ்) கூறினார்.

பகுதி 4

(சொர்க்கத்திலுள்ள) 'ரய்யான்' எனும் வாசல் நோன்பாளிகளுக்குரியது.

1896. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!''

என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.

1897. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

''ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)' என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் 'ஜிஹாத்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் 'ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் 'சதகா' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க 'ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!'' என்றார்கள்.

பகுதி 5

'ரமளான் என்று கூற வேண்டுமா? ரமளான் மாதம் என்று கூற வேண்டுமா?' என்பதும் 'எப்படியும் கூறலாம்!' என்ற அறிஞர்களின் கருத்தும்.

நபி(ஸல்) அவர்கள் யாரேனும் ரமலானில் நோன்பு நோற்றால் என்றும் ரமலானுக்கு முந்தி என்றும் (ரமலான் மாதம் என்று கூறாமல்) குறிப்பிட்டுள்ளனர்.

1898. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1899. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1900. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள்.''

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பில் 'ரமலான் பிறை'' என்று உள்ளது.

பகுதி 6

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நல்ல எண்ணத்துடனும் நோன்பு நோற்றல்.

''அவர்களின் எண்ணங்களுக்கேற்பவே எழுப்பப்படுவார்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) கூறினார்.

1901. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 7

நபி(ஸல்) அவர்கள் ரமலானில் மாபெரும் வள்ளலாய்த் திகழ்வார்கள்.

1902. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் - ரமலான் முடியும்வரை - நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்.

பகுதி 8

நோன்பு நோற்றும் பொய் மற்றும் தீச்செயல்களை விடாது இருத்தல்.

1903. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 9

ஏசப்படுபவர் 'நான் நோன்பாளி!'' என்று கூறலாமா?

1904. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!'' என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் 'நான் நோன்பாளி!'' என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 10

விபச்சாரத்தை அஞ்சுபவர் நோன்பு நோற்கவேண்டும்.

1905. அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:  நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் நடந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:  நாங்கள் (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், ‘‘யார் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும்; ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.

பகுதி 11

''நீங்கள் பிறையைப் பார்க்கும்போது நோன்பு வையுங்கள்; (மறு) பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்களின் கூற்று.

சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறவர் நபி(ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார் என்று அம்மார்(ரலி) கூறினார்.

1906. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்.''

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

1907. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்.''

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

1908. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(நபி(ஸல்) அவர்கள் இரண்டு கைவிரல்களையும் மூன்று முறை விரித்து) மாதம் என்பது இவ்வளவுதான் என்று கூறினார்கள். மூன்றாம் முறை கட்டை விரலை மடக்கினார்கள்.

1909. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்.''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1910. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் 'ஒரு மாதம் தம் மனைவியருடன் சேர்வதில்லை' என்று சத்தியம் செய்திருந்தார்கள். இருபத்தி ஒன்பது நாள்கள் முடிந்தும் (இல்லம்) திரும்பினார்கள். அவர்களிடம் 'நீங்கள் ஒருமாதம் (வீட்டிற்கு) வரமாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்களே! என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் அமையும்!'' என்றார்கள்.

1911. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தம் மனைவியருடன் சேர்வதில்லை என்று சத்தியம் செய்திருந்தார்கள். அப்போது அவர்களின் கால்(நரம்பு) பிசகியிருந்தது. அவர்கள் ஒரு பரணில் இருபத்தொன்பது நாள்கள் தங்கினார்கள். அப்போது அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஒரு மாதம் என்று சத்தியம் செய்யவில்லையா!' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் அமையும்!'' என்றார்கள்.

பகுதி 12

இரண்டு பெருநாள்களின் மாதங்கள் (சேர்ந்தால்போல்) குறையாது.

''(எண்ணிக்கையில் இருபத்தொன்பது நாள்களாகக்) குறைந்தாலும் (நன்மையில்) அது நிறைவானதாகும்!'' என்று இஸ்ஹாக்(ரஹ்) விளக்கம் தருகிறார்.

''பெருநாள்களின் இரண்டு மாதங்களும் சேர்ந்தாற் போல் இருபத்தொன்பது நாள்களாகக் குறையாது என்று முஹம்மது கூறுகிறார்.

1912. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''துல்ஹஜ், ரமலான் ஆகிய பெருநாள்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல் குறையாது.''

என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 13

நாம் விண் கலையை அறியாதவர்களாகவும் எழுதத் தெரியாதவர்களாகவும் உள்ளோம் என்ற நபி(ஸல்) அவர்கள் கூற்று.

1913. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!''

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 14

ரமளானுக்கு முந்திய நாளும் அதற்கு முந்திய நாளும் நோன்பு நோற்கக் கூடாது.

1914. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ரமளானுக்கு முதல் நாளும் அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது; அந்நாள்களில் வழக்கமாகத் நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால்அந்நாளில் நோன்பு நோற்கலாம்!''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 15

அல்லாஹ் கூறினான்:

''நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது! அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள்! நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்! அவன் உங்கள் பிழைகளைப் பொறுத்து. உங்களை மன்னித்தான். எனவே, இனி (நோன்புக் கால இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி, அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக் கொள்ளுங்கள்!'' (திருக்குர்ஆன் 02:187)

1915. பராஉ(ரலி) அறிவித்தார்.

(ஆரம்ப காலத்தில்) நபித்தோழர்கள் நோன்பு நோற்று, நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்து, அதற்கு முன்பே உறங்கி விட்டிருந்தால் அன்றைய இரவிலும் (தொடர்ந்து) பகலிலும் மாலை வரை எதையும் உண்ண மாட்டார்கள். (ஒரு முறை) கைஸ் இப்னு ஸிர்மா(ரலி) நோன்பு நோற்றிருந்தார்; நோன்பு நிறைவு செய்யும் நேரம் வந்ததும் தம் மனைவியிடம் வந்து, 'உன்னிடம் உணவு ஏதும் உள்ளதா?' என்று கேட்டார்; அவரின் மனைவி, 'இல்லை! எனினும் நான் சென்று உமக்காக (உணவைத்) தேடி வருகிறேன்!'' என்றார். கைஸ் இப்னு ஸிர்மா(ரலி) அன்றைய தினம் கூலி வேலை செய்துவிட்டு வந்ததால் அவருக்கு உறக்கம் மேலிட்டுவிட்டது. அவரின் மனைவி வந்து அவரைக் கண்டபோது, 'உமக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது' என்றார் நண்பகலானதும் கைஸ்(ரலி) மூர்ச்சையுற்றார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டபோது, 'நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற வசனமும் 'இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் என்ற வசனமும் இறங்கின. இதனால் நபித்தோழர்கள் அதிக மகிழ்ச்சியடைந்தார்கள்.

பகுதி 16

அல்லாஹ் கூறினான்:

''இன்னும் பஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்.'' (திருக்குர்ஆன் 02:187)

இது பற்றி நபி(ஸல்) வழியாக பராவு(ரலி) அறிவித்தார்.

1916. அதீ இப்னு ஹாதிம்(ரலி) அறிவித்தார்.

'கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை' என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டபோது, நான் ஒரு கருப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து தன் தலையணையில் வைத்துக் கொண்டேன்; இரவில் அதைப் பார்க்கலானேன்; எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன்; அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(கருப்புக் கயிறு என்பதின் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதின் கருத்து) விடியலின் வெண்மையும் தான்!'' என்று பதிலளித்தார்கள்.

1917. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

''கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்!'' என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டது! அப்போது அவ்வசனத்தில் 'மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)' என்னும் வாசகம் இருக்கவில்லை! அப்போதெல்லாம் மக்கள் நோன்பு நோற்க நினைத்தால் ஒரு காலில் வெள்ளைக் கயிற்றையும் கட்டிக் கொள்வார்கள். அவ்விரண்டும் கண்ணுக்குத் தெரியும்வரை உண்டு கொண்டே இருப்பார்கள்! பிறகுதான் 'மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)' என்னும் வாசகம் (அவ்வசனத்துடன்) இறங்கியது. 'இரவையும் பகலையுமே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்'' என்று அப்போதுதான் மக்கள் விளங்கினர்!''

(பார்க்க: 590ல் உள்ள02:187ம் எண் இறைவசனத்தின் மொழியாக்கம்)

பகுதி 17

''பிலால் பாங்கு சொல்வது நீங்கள் ஸஹ்ர் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்க வேண்டாம்!'' என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று.

1918/1919. ஆயிஷா(ரலி) இப்னு உமர்(ரலி) ஆகியோர் அறிவித்தார்.

பிலால்(ரலி), (ஃபஜ்ரு நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள்; அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்! ஏனெனில், அவர்தாம் ஃபஜ்ரு (கைவறை) நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்!'' என்று குறிப்பிட்டார்கள்.

''அவர் பாங்கு சொல்லிவிட்டு இறங்குவார்; இவர் பாங்கு சொல்வதற்கு ஏறுவார் என்பதைத் தவிர இரண்டு பாங்குக்குமிடையே பெரிய இடைவெளி இருக்காது!'' என்று காஸிம்(ரஹ்) கூறினார்.

பகுதி 18

ஸஹ்ரை விரைவுபடுத்துதல்.

1920. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

''நான் என் குடும்பத்தாருடன் ஸஹ்ர் செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களுடன் (ஸுப்ஹுத்) தொழுகையை அடைவதற்காக விரைவாகச் செல்வேன்!''

பகுதி 19

ஸஹ்ருக்கும் ஃபஜ்ருத் தொழுகைக்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும்?

1921. அனஸ்(ரலி) அறிவித்தார்.

''நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் தயாராகி விட்டார்கள்!'' என்று ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்; நான் 'பாங்குக்கும் ஸஹ்ருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது?' என்று கேட்டேன். அதற்கவர் 'ஐம்பது வசனங்கள் (ஓதும்) நேரம் இருந்தது!'' என்று பதிலளித்தார்.

பகுதி 20

ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது; ஆனால், அது கட்டாயமில்லை.

நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் தொடர்ந்து நோன்பு வைத்திருக்கிறார்கள்; (அப்படித் தொடர்ந்து நோன்பு நோற்ற காலங்களில்) 'ஸஹ்ர் செய்தார்கள்' என்று கூறப்படவில்லை.

1922. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (நோன்பு திறக்காமல்) தொடர் நோன்பு வைத்தார்கள்; மக்களும் அவ்வாறு தொடர் நோன்பு வைத்தார்கள். இது மக்களுக்குச் சிரமமாக இருந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள், மக்கள் தொடர் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள். நபித்தோழர்கள், 'நீங்கள் (மட்டும்) தொடர் நோன்பு நோற்கிறீர்களே!'' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களைப் போன்றவன் அல்லன்; (இறைவன் தரப்பிலிருந்து) உண்ணவும் பருகவும் எனக்கு வழங்கப்படுகிறது!'' என்று பதிலளித்தார்கள்.

1923. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!''

இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பகுதி 21

நோன்பு நோற்பதாக பகலில் தீர்மானிப்பது.

''அபூ தர்தா(ரலி) என்னிடம் 'உங்களிடம் உணவு ஏதும் இருக்கிறதா?' என்று கேட்பார்கள்; 'இல்லை'யென்று நாங்கள் சொன்னால், 'நான் இன்றைய தினம் நோன்பாளியாக இருந்து கொள்கிறேன்!' என்று கூறுவார்கள்!'' என (அவர்களின் மனைவி) உம்மு தர்தா(ரலி) கூறினார்.

அபூ தல்ஹா(ரலி), அபூ ஹுரைரா(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), ஹுதைஃபா(ரலி) ஆகியோரும் இவ்வாறு செய்துள்ளனர்.

1924. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தில் 'யார் சாப்பிட்டுவிட்டாரோ அவர் (நோன்பாக) இருக்கட்டும்!' என்று ஒருவரை அனுப்பி மக்களுக்கு அறிவிக்கச் செய்தார்கள்.

பகுதி 22

நோன்பு நோற்றவர் குளிப்பு கடமையானவராகக் காலை நேரத்தை அடைதல்.

1925/1926 அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாக ஃபஜ்ரு (அதிகாலை) நேரத்தை அடைவார்கள்; பின்னர் குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்!' என்று ஆயிஷா(ரலி), உம்மு ஸலமா(ரலி) ஆகியோர் அறிவித்ததாக அன்றைய தினம் மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானிடம் என் தந்தை அப்துர் ரஹ்மான் கூறினார். மர்வான், என் தந்தையிடம், 'இதன் வாயிலாக (இதை எடுத்துரைத்து), அபூ ஹுரைராவை நீர் எச்சரிக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்!' என்று கூறினார். பின்னர் நாங்கள் 'துல்ஹுலைஃபா' என்னும் இடத்தில் ஒன்று சேர்வதாக முடிவு செய்யப்பட்டது. அங்கு அபூ ஹுரைரா(ரலி) அவர்களுக்கு ஒரு நிலம் இருந்தது; (நாங்கள் அங்கு சென்றபோது இருந்தார்;) என் தந்தை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம், 'நான் உம்மிடம் ஒரு செய்தியைக் கூறவிருக்கிறேன்: மர்வான், இது தொடர்பாக (உம்மிடம் கூறும்படி) சத்தியம் செய்து என்னை வற்புறுத்தியிருக்காவிட்டால் இதை நான் உம்மிடம் கூறப்போவதில்லை!' என்று கூறிவிட்டு, ஆயிஷா(ரலி), உம்மு ஸலமா(ரலி) ஆகியோர் கூறியதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் கூறினார். அதற்கு அபூ ஹுரைரா(ரலி) 'அது (ஃபஜ்ருக்கு முன்பே குளித்ததாக வேண்டும் என்பது) போல்தான் ஃபள்ல் இப்னு அப்பாஸ்(ரலி) எனக்குக் கூறினார்கள்: (நபியின் மனைவியரான) அவர்கள்தாம் இது பற்றி நன்கு அறிந்தவர்கள்!' என்று பதிலளித்தார்.''

'ஃபஜ்ரு நேரத்தில் குளிப்பு கடமையாக இருப்பவர் நோன்பைவிட்டுவிடுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்' என்று அபூ ஹுரைரா(ரலி) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் முந்திய (இந்த நபிமொழியின் தொடக்கத்தில் உள்ள) செய்தியே பலமான அறிவிப்பாளர் வரிசையுடன் உள்ளதாகும்.

பகுதி 23

நோன்பாளி மனைவியை அணைத்துக் கொள்ளுதல்.

''(நோன்பாளிக்கு) உடலுறவு மட்டுமே ஹராமாகும்!'' என்று ஆயிஷா(ரலி) கூறினார்.

1927. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள்! உங்களில் தம்(உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்!''

''ஒருவர் தம் மனைவியை இச்சையுடன் பார்த்து, அதனால் விந்து வெளிப்பட்டால் அவர் நோன்பைத் தொடரலாம்!'' என்று ஜாபிர் இப்னு ஸைத் கூறுகிறார்.

பகுதி 24

நோன்பாளி முத்தமிடல்

1928. உர்வா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தம் மனைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்!'' என்று சொல்லிவிட்டு ஆயிஷா(ரலி) சிரித்தார்கள்.

1929. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

''நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வைக்குள் இருக்கும்பொழுது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. நான் (போர்வையிலிருந்து) நழுவி, மாதவிடாய்க்குரிய ஆடைகளை அணிந்து கொண்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?' என்று கேட்டார்கள்: நான் 'ஆம்!' என்று கூறிவிட்டு, அவர்களுடன் போர்வைக்குள் நுழைந்து கொண்டேன்! நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (இருக்கும் தண்ணீரையள்ளிக்) குளிப்போம்! நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடுவார்கள்!''

பகுதி 25

நோன்பாளி குளிப்பது.

இப்னு உமர்(ரலி) நோன்பு நோற்றிருந்தபோது ஓர் ஆடையை நனைத்துத் தம் மேல் போட்டார்கள்.

ஷஅபி(ரஹ்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தபோது குளியலறைக்குச் சென்றிருக்கிறார்கள்.

''சமையல் பாத்திரத்தில் உள்ளதையோ, வேறெதையுமோ ருசி பார்ப்பதில் தவறில்லை!'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

''நோன்பாளி வாய் கொப்பளிப்பதும் (வெப்பத்தைத் தணித்துக் கொள்வதற்காக) தலையில் தண்ணீர் ஊற்றிக் கொள்வதும் தவறில்லை!'' என்று ஹஸன் பஸாரீ(ரஹ்) கூறினார்.

''உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் காலையில் எண்ணெய் தடவித் தலைவாரிக் கொள்ளட்டும்!'' என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.

''என்னிடம் கல்தொட்டி ஒன்று இருந்தது; நான் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் அதனுள் அமிழ்வேன்!'' என்று அனஸ்(ரலி) கூறினார்.

'நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தபொழுது பல் துலக்கினார்கள்!' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

''பகலின் ஆரம்ப நேரத்திலும் கடைசி நேரத்திலும் நோன்பாளி பல் துலக்கலாம்; எச்சிலை விழுங்கக் கூடாது!'' என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.

''ஒருவர் தம் எச்சிலை விழுங்கினால் அவரின் நோன்பு முறியும் என்று நான் கூற மாட்டேன்!' என்ற அதா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

''ஈரமான குச்சியால் பல் துலக்குவதில் தவறில்லை!'' என்று இப்னு ஸீரீன்(ரஹ்) அவர்கள் கூறியபோது 'அதற்கு ருசி இருக்கிறதே!'' என்று கேட்கப்பட்டது. இப்னு ஸாரீன்(ரஹ்) அவர்கள் 'தண்ணீருக்குக் கூடத்தான் ருசி இருக்கிறது. அதன் மூலம் நீர் வாய்க் கொப்பளிக்கிறீரே?' என்று கேட்டார்கள்.

''நோன்பாளி ஸுர்மா இடுவது தவறில்லை!'' என்று அனஸ்(ரலி) ஹஸன்(ரஹ்), இப்ராஹீம்(ரஹ்) ஆகியோர் கூறுகிறார்கள்.

1930. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாக ஃபஜ்ரு நேரத்தை அடைவார்கள். குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்!''

1931 / 1932 அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்.

''நானும் என் தந்தையும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றோம். ஆயிஷா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாகக் காலை நேரத்தை அடைவார்கள்; பின்னர் நோன்பைத் தொடர்வார்கள!' என்று கூறினார்கள். பிறகு, உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்களும் அவ்வாறே கூறினார்கள்!'

பகுதி 26

நோன்பாளி மறதியாக உண்டால், பருகினால்...?

ஒருவர் மூக்கிற்கு தண்ணீர் செலுத்தும்போது அவரையும் மீறி தொண்டைக்குள் தண்ணீர் சென்றால் அதில் தவறில்லை என்று அதா கூறுகிறார்.

ஒருவரின் தொண்டைக்குள் ஈ நுழைந்துவிட்டால் அதனால் எந்தத் தவறுமில்லை என்று ஹஸன் கூறுகிறார்.

மறதியாக மனைவியுடன் கூடினால் அதில் எந்தத் தவறுமில்லை என்று ஹஸன், முஜாஹித் ஆகியோர் கூறுகின்றனர்.

1933. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப்படுத்தட்டும்; ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்.''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 27

நோன்பாளி ஈரமான மற்றும் காய்ந்த பொருட்களால் பல் துலக்குதல்.

''நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது பல் துலக்குவதை எண்ணிலடங்காத முறை பார்த்திருக்கிறேன்!' என்று ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) கூறினார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

''என்னுடைய சமுதாயத்திற்கு நான் சிரமம் தந்தவனாக ஆகிவிடுவேன் என்ற அச்சம் (எனக்கு) இல்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குமாறு நான் அவர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.

ஜாபிர்(ரலி), ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் வழியாகவும் இது போல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் நோன்பாளிக்கு என்று தனிச்சட்டம் எதுவும் கூறப்படவில்லை.

''பல்துலக்குதல் வாயைத் தூய்மைப்படுத்துவதும் இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தருவதுமாகும்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) கூறினார்.

''பல் துலக்கும்போது எச்சிலை விழுங்கலாம்!'' என்று கத்தாதா(ரஹ்) அதா(ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.

1934. ஹும்ரான் அறிவித்தார்.

உஸ்மான்(ரலி) உளூச் செய்யும்போது தம் கைகளில் மூன்று முறை தண்ணீர் ஊற்றிப் பின்னர் வாய்க் கொப்பளித்து, மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தித் தம் முகத்தை மூன்று முறை கழுவினார். பின்னர் தம் வலக்கையை மூட்டு வரை மூன்று முறை கழுவினார். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார். பிறகு வலது காலை மூன்று முறையும் கழுவினார். 'நான் உளூச் செய்தது போல் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்ததை பார்த்திருக்கிறேன்' என்றும் குறிப்பிட்டார்.

''என்னுடைய உளூவை போல் உளூச் செய்து வேறு எந்த எண்ணத்திற்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகிறவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் குறிப்பிட்டார்.

பகுதி 28

''ஒருவர் உளூச் செய்யும்போது மூக்கிற்குள் தண்ணீர் செலுத்தட்டும்!'' என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று.

இந்தக் கூற்றில் நோன்பாளி, நோன்பு நோற்காதவர் என்றெல்லாம் நபி(ஸல்) அவர்கள் வித்தியாசப்படுத்திக் கூறவில்லை.

'நோன்பாளி, தொண்டைக்குள் செல்லாத வகையில் மூக்கிற்குள் மருந்துச் சொட்டுகளைவிட்டுக் கொள்வதில் தவறில்லை' என்றும் 'அவர் ஸுர்மாவும் இட்டுக் கொள்ளலாம்' என்றும் ஹஸன் பஸாரீ(ரஹ்) கூறினார்.

''ஒருவர் வாய் கொப்பளித்து, வாயிலுள்ள தண்ணீரைத் துப்பிவிட்டால் அதனால் (நோன்பிற்கு) எந்த பாதிப்பும் இல்லை. அவர் எச்சிலையும் வாயில் எஞ்சிய தண்ணீரையும் விழுங்காமல் இருக்க வேண்டும். பிசின் (போன்ற பண்டங்)களை மெல்லக் கூடாது! அதனுடைய எச்சில் கலந்த சாற்றை விழுங்கிவிட்டால் நோன்பு முறியும் என்று நான் கூறமாட்டேன்; எனினும், அ(வ்வாறு விழுங்குவ)து தடுக்கப்படவேண்டும்! மூக்கிற்குள் தண்ணீர் செலுத்தி மூக்கைச் சிந்தும்போது தன்னையும் மீறி தண்ணீர் தொண்டைக்குள் நுழைந்துவிட்டால் அதில் தவறில்லை!'' என்று அதா(ரஹ்) கூறினார்.

பகுதி 29

ரமளானில் (பகலில்) உடலுறவு கொள்ளுதல்.

''ஒருவர் ரமளானில் ஒரு நோன்பை, நோயோ தக்க காரணமோ இன்றி விட்டுவிட்டால் அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) வாயிலாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறே இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும் கூறினார்கள்கள்.

''அதற்கு பதிலாக, அவர் வேறு ஒரு நாளில் நோன்பு நோற்க வேண்டும்!'' என்று ஹம்மாத், கத்தாதா, இப்ராஹீம், இப்னு ஜுபைர், ஷஅபி, ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ் - அலைஹிம்) ஆகியோர் கூறுகின்றனர்.

1935. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் எரிந்து போய்விட்டேன்!'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'உமக்கு என்ன நேர்ந்தது?' என்றார்கள். அவர், 'ரமளானில் என் மனைவியுடன் கூடிவிட்டேன்!'' என்று பதிலளித்தார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் 'அரக்' என்று கூறப்படும் ஓர் அளவை (நிறைய பேரீச்சம் பழம்) கொண்டு வரப்பட்டது. 'எரிந்து போனவர் எங்கே?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நானே'' என்று அவர் கூறினார். (அந்தப் பேரீச்சம் பழத்தை அந்த மனிதரிடம் கொடுத்து.) 'இதை தர்மம் செய்வீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பகுதி 30

ரமளானில் (பகலில் உடலுறவு கொண்டுவிட்டு, அதற்குக் குற்றப் பரிகாரம் செய்வதற்கு ஏதுமில்லாத நிலையில் ஒருவருக்கு தர்மம் செய்யப்பட்டால் அதையே அவர் பரிகாரமாக வழங்கலாம்.

1936. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்!'' என்றார். நபி(ஸல்) அவர்கள் 'உமக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடிவிட்டேன்!'' என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள், 'விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?' என்று கேட்டார்கள். அவர் 'இல்லை!'' என்றார். 'தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'இல்லை!'' என்றார். 'அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர், 'இல்லை!'' என்றார். நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த 'அரக்' எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் 'கேள்வி கேட்டவர் எங்கே'' என்றார்கள். 'நானே!'' என்று அவர் கூறினார். 'இதைப் பெற்று தர்மம் செய்வீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! என்னை விட ஏழையாக இருப்போருக்கான (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள்: பிறகு 'இதை உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!'' என்றார்கள்.

பகுதி 31

ரம்ளானில் (நோன்பு நேரத்தில்) உடலுறவு கொண்டவர் அதற்குரிய பரிகாரத்தை ஏழைகளாக உள்ள தம் குடும்பத்தினருக்கே வழங்கி விடலாமா?

1937. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

''ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து '(என்னைப் போன்ற) பாமரர் ஒருவர் ரமளானில் தம் மனைவியுடன் கூடிவிட்டால் (பரிகாரம் என்ன?)'' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஓர் அடிமையை உம்மால் விடுதலை செய்ய இயலுமா?' என்று கேட்டார்கள். அவர் 'இயலாது!'' என்றார். 'அறுபது ஏழைகளுக்கு உணவு அளிப்பதற்குரிய பொருள் உம்மிடம் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அவர் 'இல்லை'' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த 'அரக்' எனும் அளவை கொண்டு வரப்பட்டது. 'இதை உம் சார்பாக வழங்குவீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கவர் 'எங்களை விட ஏழைக்கா? மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையே எங்களை விட அதிகத் தேவையுடையோர் வேறு யாரும் இல்லை!'' என்று கூறினார். 'அப்படியானால் உம் குடும்பத்தாருக்கே இதை உண்ணக் கொடுத்து விடுவீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பகுதி 32

நோன்பாளி இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வதும் வாந்தி எடுப்பதும்.

''ஒருவர் வாந்தி எடுத்தால் அவரின் நோன்பு முறியாது; ஏனெனில் அவர் (உணவை) வெளியேற்றியிருக்கிறாரே தவிர உள்ளே செலுத்தவில்லை!'' என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.

'அவரின் நோன்பு முறிந்து விடும்!'' என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கூற்றே சரியானதாகும்.

''(உணவுப் பொருள், பானம் அல்லது நீர் போன்று ஏதும்) உள்ளே நுழைவதால்தான் நோன்பு முறியும்; வெளியேறுவதால் முறியாது!'' என இப்னு அப்பாஸ்(ரலி), இக்ரிமா(ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.

இப்னு உமர்(ரலி) நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் குத்தி எடுத்துக் கொள்பவராக இருந்தார்கள். பின்னர் அதைவிட்டுவிட்டு இரவில் அழுத்தம் குத்தி எடுக்கலானார்கள்.

அபூ மூஸா(ரலி) இரவில் இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வார்கள்.

உம்மு ஸலமா(ரலி), ஸைத் இப்னு அர்கம்(ரலி), ஸஅத்(ரலி) ஆகியோர் நோன்பு நோற்றிருக்கும்போது இரத்தம் குத்தி எடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஆயிஷா(ரலி)வின் முன்னிலையில் இரத்தம் குத்தி எடுப்போம். (அவர்களால்) நாங்கள் தடுக்கப்படவில்லை என்று உம்மு அல்கமா கூறுகிறார்.

''இரத்தம் குத்தி எடுத்தவரும் எடுக்கப்பட்டவரும் நோன்பை முறித்துவிட்டனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனேகர் வழியாக, ஹஸன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஸனிடம், 'நபி(ஸல்) அவர்கள் வழியாகவா நீங்கள் கூறுகிறீர்கள்?' என்று கேட்டபோது, 'ஆம்' என்று கூறிவிட்டு, 'அல்லாஹ்வே மிக அறிந்தவன்' என்று பின்னர் கூறினார்.

1938. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் இரத்தம் குத்தி எடுத்துள்ளனர். நோன்பு நோற்று இருக்கும்போது இரத்தம் குத்தி எடுத்துள்ளனர்.

1939. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது இரத்தம் குத்தி எடுத்தார்கள்.

1940. ஸாபித் அல் புனானீ அறிவித்தார்.

''நோன்பாளி இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வதை நீங்கள் வெறுத்து வந்தீர்களா?' என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, 'இல்லை! ஆயினும், (நாங்கள் அதை வெறுத்தது) பலவீனம் ஏற்படும் என்பதற்காகவே!'' என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்கள் காலத்தில்' என்னும் வாக்கியம் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.

பகுதி 33

பயணத்தில் நோன்பு நோற்பதும் நோன்பை விடுவதும்.

1941. இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், '(வாகனத்திலிருந்து) இறங்கி, (உண்பதற்கேற்ப) மாவை எனக்காகக் கரைப்பீராக!'' என்று கூறினார்கள். அதற்கவர், 'இறைத்தூதர் அவர்களே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே,) சூரியன்!'' என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!'' என்றார்கள். அப்போதும் அம்மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே,) சூரியன்!'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!'' என்று மீண்டும் கூறினார்கள். அவர் இறங்கி மாவைக் கரைத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் அருந்திவிட்டுத் தம் கையால் (கிழக்கே) சுட்டிக் காட்டினார்கள் பிறகு, 'இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதை நீங்கள் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யலாம்! என்றார்கள்.

1942. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஹம்ஸா இப்னு அம்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நான் காலமெல்லாம் நோன்பு நோற்கிறேன்' என்று கூறினார்.

1943. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஹம்ஸா இப்னு அம்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், 'பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?' என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள், 'நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்; நீ விரும்பினால் விட்டுவிடு'' என்றார்கள்.

பகுதி 34

ரமலானில் சில நாள்கள் நோன்பு நோற்றுவிட்டுப் பின்னர் பயணம் செய்தால்...?

1944. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் ரமளானில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்; அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். 'கதீத்' எனும் இடத்தை அடைந்ததும் நோன்பைவிட்டார்கள்; மக்களும் நோன்பைவிட்டனர்!''

''கதீத் என்பது உஸ்ஃபான், குதைத் ஆகிய இடங்களுக்கிடையே உள்ள நீர்ப் பகுதியாகும்!'' என்று அபூ அப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகிறேன்.

பகுதி 35

1945. அபூ தர்தா(ரலி) அறிவித்தார்.

''நாங்கள் நபி(ஸல்) அவர்களின் பயணமொன்றில் வெயில் மிகுந்த ஒரு நாளில் அவர்களுடன் சென்றோம். கடும் வெப்பத்தின் காரணமாக சிலர் தம் கையைத் தம் தலையில் வைத்தனர். அப்பயணத்தில் நபி(ஸல்) அவர்களையும் தவிர எங்களில் வேறு எவரும் நோன்பு நோற்றிருக்கவில்லை!''

பகுதி 36

வெப்பம் கடுமையாகி, நிழலில் தங்கி வைக்கப்பட்ட ஒருவரிடம், 'பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது!'' என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று.

1946. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். 'இவருக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'இவர் நோன்பு நோற்றிருக்கிறார்!'' என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது!'' என்று கூறினார்கள்.

பகுதி 37

பயணத்தில் நோன்பு நோற்பதையும் நோன்பை விடுவதையும் நபித்தோழர்கள் குறை கூறியதில்லை.

1947. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணத்தில் செல்வோம். நோன்பு நோற்றவரை நோற்காதவரும் நேற்காதவரை நோற்றவரும் குறை கூறமாட்டார்கள்.

பகுதி 38

மக்கள் காணும் வகையில் பயணத்தில் நோன்பை முறித்தல்.

1948. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து மக்காவிற்குப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். உஸ்பான் எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் கொண்டுவரச் செய்து, மக்கள் காண்பதற்காகக் கைகளின் நீளத்திற்கு அதை உயர்த்திக் காட்டி நோன்பை முறித்தார்கள். மக்காவை அடையும் வரை நோன்பு நோற்கவில்லை. இது ஒரு ரமளானில் நடந்தது!

''நபி(ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; நோன்பைவிட்டும் இருக்கிறார்கள். (நோன்பு நோற்க) விரும்புபவர் நோன்பு நோற்கலாம்; நோன்பைவிட்டுவிட விரும்புபவர் விட்டு விடவும் செய்யலாம்!''

பகுதி 39

''நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (ஒரு நோன்பிற்கு பதிலாக) ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்!'' என்ற (திருக்குர்ஆன் 02:184) இறை வசனத்தை, 'ரமளான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழியின் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது! எனவே, உங்களில் அம்மாதத்தை அடைகிறவர் அதில் நோன்பு நோற்க வேண்டும்! எனினும், நோயாளியாகவோ, பயணியாகவோ இருக்கிறவர் மற்ற நாள்களில் நோற்றுக் கொள்ளட்டும். நோன்பை குறிப்பிட்ட அந்நாள்களில் நோற்க வேண்டும்! அல்லாஹ் உங்களுக்கு இலகுவை விரும்புகிறானே தவிர, உங்களுக்குச் சிரமத்தை(த்தர) அவன் விரும்பவில்லை! (விடுபட்ட நோன்பு நாள்களின்) எண்ணிக்கையைப் பூர்த்தி செய்யவும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி, நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இப்படிக் கட்டளையிடுகிறான்!)' என்ற (திருக்குர்ஆன் 02:185) இறைவசனம் மாற்றிவிட்டது!'' என இப்னு உமர்(ரலி) ஸலமா வின் அக்வஃ(ரலி) ஆகியோர் கூறுகின்றனர்.

''ரமளான் நோன்பு பற்றிய வசனம் அருளப்பட்டதும் அது நபித்தோழர்களுக்குச் சிரமமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு உணவளிப்பவர் நோன்பிருக்க சக்தியிருந்தும் நோன்பைவிட்டு விடுபவராக இருந்தார். தொடக்கத்தில் இவ்வாறு அவர்களுக்குச் சலுகை வழங்கப்பட்டது. 'நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்குச் சிறந்ததாகும்!'' (திருக்குர்ஆன் 02:184) என்ற வசனம் இச்சலுகையை மாற்றிவிட்டது. நோன்பு நோற்குமாறு இவ்வசனத்தின் மூலம் அவர்கள் கட்டளையிடப்பட்டனர்!'' என்று பல நபித்தோழர்கள் கூறினார்கள் என இப்னு அபீ லைலா(ரஹ்) கூறினார்.

1949. நாஃபிவு(ரஹ்) அறிவித்தார்.

''ரமளான் (நோன்பைவிட்டதற்குப்) பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்!'' என்ற வசனத்தை இப்னு உமர்(ரலி) ஓதிவிட்டு, இந்த வசனம் கூறும் சட்டம் மாற்றப்பட்டுவிட்டது!'' என்று கூறினார்.

பகுதி 40

ரமளானில் விடுபட்ட நோன்பை எப்போது நிறைவேற்றவேண்டும்?

''வேறு நாள்களில் நோற்கலாம் என்று அல்லாஹ் கூறுவதால் விடுபட்ட நோன்புகளைப் பிரித்துப் பிரித்து வைப்பதில் தவறில்லை!'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

''விடுபட்ட ரமளான் நோன்புகளை நிறைவேற்றாமல் (துல்ஹஜ்மாதம்) பத்து நாள்கள் நோன்பு நோற்பது பொருந்தாது!'' என்று ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) கூறினார்.

''ஒருவர் அடுத்த ரமளான் வரும்வரை விடுபட்ட நோன்பை நோற்காதிருந்தால் இரண்டு நோன்புகளையும் அவர் நோற்பார்; அவர் உணவளிக்கத் தேவையில்லை!'' என்று இப்ராஹீம்(ரஹ்) கூறினார்.

''நோன்பைவிட்டவர் (அதற்குப் பரிகாரமாக) ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்!'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் என்றும் அபூ ஹுரைரா(ரலி) கூறினார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுபட்ட நோன்புகளை வேறு நாள்களில் நோற்க வேண்டும் என்றே அல்லாஹ் கூறினான்; உணவளிக்குமாறு கூறவில்லை.

1950. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டு விடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது.

நபி(ஸல்) அவர்களுக்கு ஆயிஷா(ரலி) பணிவிடை செய்ததே இதன் காரணம் என்று யஹ்யா கூறுகிறார்.

பகுதி 41

மாதவிடாய் ஏற்பட்டவள் தொழுகையையும் நோன்பையும் விட வேண்டும்.

ஏராளமான நபிவழிகளும் சரியான முடிவுகளும் மனித யூகங்களுக்க மாற்றமாகவே அமைந்துள்ளன. முஸ்லிம்கள் நபிவழியைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. மாதவிடாய் ஏற்பட்டவள் நோன்பைக் களாச் செய்ய வேண்டும்; தொழுகையைக் களாச் செய்ய வேண்டியதில்லை என்பதும் அவற்றுள் ஒன்றாகும் என்று அபூ ஸினாத் கூறுகிறார்.

1951. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? அதுதான் மார்க்கத்தில் அவளுக்குள்ள குறைபாடாகும்.''

இதை அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

பகுதி 42

களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால்...?

களாவான நோன்பை நிறைவேற்றாமல் இறந்தவருக்காக முப்பது நபர்கள் தலா ஒரு நோன்பு நோற்றால் (அவர் சார்பாக) அது நிறைவேறி விடும் என்று ஹஸன் கூறுகிறார்.

1952. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்பார்.''

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

1953. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது'' என்றார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என் சகோதரி மரணித்துவிட்டார்...' என்று கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில் ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என் தாய் இறந்துவிட்டார்...' என்று கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'நேர்ச்சை நோன்பு என் தாயாருக்குக் கடமையாக இருந்த நிலையில் என் தாய் இறந்துவிட்டார்...' என்று ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில், 'என் தாய் மீது பதினைந்து நோன்புகள் கடமையாக இருந்த நிலையில் இறந்துவிட்டார்' என்று ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.

பகுதி 43

நோன்பாளி எப்போது நோன்பை நிறைவு செய்வார்?

சூரியனின் வட்டம் மறைந்த உடன் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) நோன்பை நிறைவு செய்தார்கள்.

1954. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''சூரியன் மறைந்து, இந்த(கிழக்கு) திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்த (மேற்கு) திசையிலிருந்து பகல் பின்னோக்கி(ப்போ)னால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யவேண்டும்!''

1955. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் கூட்டத்தில் ஒருவரிடம், 'இன்னாரே! எழுந்து நமக்காக மாவு கரைப்பீராக!'' என்றார்கள். அதற்கவர் 'இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக! எனறார்கள். அதற்கவர் 'இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டும்!'' என்றார். நபி(ஸல்) அவர்கள். 'இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!'' என்றார்கள். அதற்கவர், 'இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!'' என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!'' என்று கூறினார்கள். அதற்கவர் 'பகல் (வெளிச்சம்) இன்னும் (எஞ்சி) இருக்கிறதே?' என்று கேட்டதற்கும் நபி(ஸல்) அவர்கள் 'இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!'' என்று கூறினார்கள். உடனே அவர் இறங்கி, அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் அருந்திவிட்டு, 'இரவு இங்கிருந்து (கிழக்கிலிருந்து) முன்னோக்கி வந்துவிட்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!'' என்றார்கள்.

பகுதி 44

ஒருவர் தம்மால் இயன்ற தண்ணீர் மற்றும் அது போன்றவற்றால் நோன்பை நிறைவு செய்தல்.

1956. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் ஒருவரிடம். 'இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!'' என்றார்கள். அதற்கவர், 'இறைத்தூதர் அவர்களே! மாலைநேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!'' என்றார்கள். அதற்கவர், 'பகல் (வெளிச்சம்) இன்னும் எஞ்சியிருக்கிறதே!'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!'' என்றார்கள். அவர் இறங்கி மாவு கரைத்தார். பின்னர், 'நீங்கள் இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!'' என்று தம் விரலால் கிழக்கே சுட்டிக் காட்டிக் கூறினார்கள்.

பகுதி 45

விரைவாக நோன்பை நிறைவு செய்தல்.

1957. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!''

இதை ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

1958. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அவர்கள் நோன்பு நோற்றார்கள். மாலை (முடியத் தொடங்கும்) நேரம் வந்ததும் ஒரு மனிதரிடம், 'இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக!'' என்று கூறினார்கள். அதற்கவர், 'மாலை நேரம் (முழுமையாக) முடிவடையும் வரை காத்திருக்கலாமே!'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக! இரவு இங்கிருந்து முன்னோக்கி வருவதைக் கண்டால், நோன்பாளி நோன்பை நிறைவு செய்யவேண்டும்!'' என்றார்கள்.

பகுதி 46

நோன்பை நிறைவு செய்த பின் சூரியன் உதித்தால்...?

1959. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்த பின்னர் சூரியன் தென்பட்டது.

''அவர்கள் களா செய்யுமாறு கட்டளையிடப்பட்டார்களா?' என்று ஹிஷாம்(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'களா செய்வது அவசியமில்லாமல் போகுமாகு?' என்று கேட்டார். ('களா செய்வது அவசியமாகும்!' என்பது இதன் பொருள்.)

''அவர்கள் களா செய்தார்களா? இல்லையா என்பது எனக்குத் தெரியாது!'' என்று ஹிஷாம்(ரஹ்) கூறினார்கள் என மஃமர் கூறுகிறார்.

பகுதி 47

சிறுவர்கள் நோன்பு நோற்றல்.

ரமளானில் போதையுடன் இருந்த ஒருவரிடம், 'உனக்குக் கேடு உண்டாகட்டும்! நம்முடைய சிறுவர்களெல்லாம் நோன்பு நோற்றிருக்கிறார்களே!'' என்று உமர்(ரலி) கூறிவிட்டு அவரை அடித்தார்கள்.

1960. ருபைய்யிவு பின்த் முஅவ்வித்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்க ஆளனுப்பி, 'யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!'' என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

பகுதி 48

தொடர் நோன்பு நோற்பதும். 'நோன்பை இரவு வரை முழுமைப்படுத்துங்கள்!'' என்று அல்லாஹ் கூறுவதால் இரவில் நோன்பு கிடையாது என்னும் கூற்றும்.

நபி(ஸல்) அவர்கள் (தாம் தொடர் நோன்பு நோற்றாலும்) மக்களின் மீது இரக்கம் கொண்டும் (அவர்களின் உடல் வலிமை அழிந்து விடாமல்) அவர்களைக் காப்பதற்காகவும் அதைத் தடுத்திருக்கிறார்கள்.

(கடமையாக்கப்படாததைத் தம் மீது கடமைபோலாக்கிக் கொண்டு) வணக்க வழிபாடுகளில் மிதமிஞ்சி மூழ்குவது வெறுக்கப்படுகிறது.

1961. அனஸ்(ரலி) அறிவித்தார்.

''நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, 'நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்), அவர்கள் 'நான் (எல்லா விஷயங்களிலும்) உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன்'' என்றோ 'உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவுப் பொழுதைக் கழிக்கிறேன்'' என்றோ கூறினார்கள்.

1962. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். நபித்தோழர்கள், 'நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?' என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன்'' என்றார்கள்.

1963. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்; உங்களில் யாரேனும் தொடர் நோன்பு நோற்க நாடினால் ஸஹ்ர் வரை அவ்வாறு செய்யட்டும்'' என்று கூறினார்கள். நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே!' என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களைப் போன்றவன் அல்லன்; எனக்கு (ஆன்மீக ரீதியாக) உணவளிக்கவும் பருகத்தரவும் ஒருவன் இருக்கிறான். இந்நிலையில் நான் இரவுப் பொழுதைக் கழிக்கிறேன்'' என்றார்கள்.

1964. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்களின் மீது இரக்கப்பட்டுத் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். நபித்தோழர்கள், 'நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களைப் போன்றவன் அல்லன். என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் வழங்குகிறான்'' என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் மக்களின் மீது இரக்கப்பட்டு என்ற வாசகம் இடம் பெறவில்லை.

பகுதி 49

அதிகமாகத் தொடர் நோன்பிருப்பதற்குக் கண்டனம்.

நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு (தொடர் நோன்பு வைப்பதைக்) கண்டித்திருப்பதாக அனஸ்(ரலி) அறிவித்தார்.

1965. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?' என்று முஸ்லிம்களில் ஒருவர் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்?' என்றார்கள். தொடர் நோன்பிலிருந்து மக்கள் விலகிக் கொள்ள மறுத்தபோது ஒருநாள் அவர்களைத் தொடர் நோன்பு நோற்கச் செய்தார்கள். பிறகு (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (தொடர் நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன்'' என்று மக்கள் தொடர் நோன்பிலிருந்து விலகிக் கொள்ள மறுத்ததைக் கண்டிப்பதைப் போல் கூறினார்கள்.

1966. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

''தொடர் நோன்பு வைப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறினார்கள். 'நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், 'என் இறைவன் எனக்கு உண்ணருவும் பருகவும் தரக்கூடிய நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்; எனவே நீங்கள் அமல்களில் உங்கள் சக்திக்கு உட்பட்டுச் சிரமம் எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று விடையளித்தார்கள்.

பகுதி 50

ஸஹ்ர் வரை தொடர் நோன்பு நோற்றல்.

1967. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

''நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள். அப்படி உங்களில் யாரேனும் தொடர் நோன்பு நோற்பதாக இருந்தால் ஸஹ்ர் வரை நோற்கட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே!?' என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களைப் போன்றவன் அல்லன்; எனக்க உணவளிப்பவனும் புகட்டுபவனும் உள்ள நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்'' என்றனர்.

பகுதி 51

உபரியான நோன்பை விடுமாறு ஒருவர் மற்றவரை வற்புறுத்துதல். இவ்வாறுவிட்டவர் அதைக் களாச் செய்ய வேண்டியதில்லை.

1968. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஸல்மான்(ரலி), அபூ தர்தா(ரலி) இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸல்மான் அபூ தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபூ தர்தாவின் மனைவி) உம்மு தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். 'உமக்கு என்ன நேர்ந்தது?' என்று அவரிடம் ஸல்மான் கேட்டதற்கு உம்மு தர்தா(ரலி), 'உம் சகோதரர் அபூ தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை'' என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபூ தர்தா வந்து ஸல்மானுக்காக உணவு தயாரித்தார். ஸல்மான் அபூ தர்தாவிடம், 'உண்பீராக!' என்று கூறினார். அதற்கு அபூ தர்தா, 'நான் நோன்பு வைத்திருக்கிறேன்' என்றார். ஸல்மான், 'நீர் உண்ணாமல் உண்ணமாட்டேன். என்று கூறியதும் அபூ தர்தாவும் உண்டார். இரவானதும் அபூ தர்தா(ரலி) நின்று வணங்கத் தாயரானார். அப்போது ஸல்மான்(ரலி), 'உறங்குவீராக' என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் ஸல்மான், 'உறங்குவீராக' என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் ஸல்மான்(ரலி), 'இப்போது எழுவீராக!' என்று கூறினார். இருவரும் தொழுதனர். பிறகு அபூ தர்தாவிடம் ஸல்மான்(ரலி), 'நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன் உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன் உம் குடும்பத்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன் அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக'' என்று கூறினார்கள். பறிகு அபூ தர்தா(ரலி), நபி(ஸல) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைத் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஸல்மான் உண்மையையே கூறினார்!'' என்றார்கள்.

பகுதி 52

ஷஅபான் மாதத்தில் நோன்பு நோற்பது.

1969. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

''(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: '(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டுவிடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!''

1970. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில ஆண்டுகளில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். 'உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!'' என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.

பகுதி 53

நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதும் நோன்பைவிட்டதும்.

1971. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறு எந்த மாதமும் முழுமையாக நோன்பு நோற்க மாட்டார்கள். (ரமளான் அல்லாத மாதங்களில்) 'அல்லாஹ்வின் மேல் ஆணையாக! இனிமேல் நோன்பை விட மாட்டார்கள்!'' என்று மக்கள் கூறுமளவுக்கு நோன்பு நோற்பார்கள். 'அல்லாஹ்வின் மேல் ஆணையாக! இனிமேல் நோன்பு நோற்க மாட்டார்கள்!' என்று மக்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டு விடுவார்கள்.

1972. அனஸ்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் இந்த மாதம் நோன்பு நோற்க மாட்டார்கள்'' என்று நாங்கள் கருதுமளவுக்குச் சில மாதங்களில் அவர்கள் நோன்பைவிட்டுவிடுவார்கள்; 'இந்த மாதம் நோன்பை அவர்கள் விடமாட்டார்கள்'' என்று நாங்கள் கருதுமளவுக்கு அவர்கள் (சில மாதங்களில்) நோன்பு நோற்பார்கள்! அவர்களை இரவில் தொழும் நிலையில் நீ காணவிரும்பினால் அவ்வாறே அவர்களைக் காண்பாய்; அவர்களை (இரவில் தூங்கும் நிலையில் நீ காணவிரும்பினால் அவ்வாறே அவர்களைக் காண்பாய்''!

1973. அனஸ்(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்களை ஒரு மாதத்தில் நோன்பாளியாக நான் பார்க்க விரும்பினால் அவ்வாறே அவர்களை நான் பார்ப்பேன். அவர்கள் நோன்பை விட்ட நிலையில் பார்க்க விரும்பனால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்; இரவில் தொழுக கூடியவர்களாக அவர்களைப் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்; அவர்களைத் தூங்குபவர்களாகப் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்! நபி(ஸல்) அவர்களின் கையை விட மிருதுவான எந்தப் பட்டையும் நான் தீண்டியதில்லை; நபி(ஸல்) அவர்களின் நறுமணத்தை விட நல்ல நறுமணத்தை நான் முகர்ந்ததுமில்லை!''

பகுதி 54

நோன்பு நோற்றிருக்கும்போது விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமை.

1974. அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, 'உம்முடைய விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன் உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன!'' என்றார்கள். 'தாவூத் நபி(ஸல்) அவர்களின் நோன்பு எவ்வாறு இருந்தது?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'வருடத்தில் பாதி நாள்கள்!'' என்றார்கள்.

பகுதி 55

நோன்பு நோற்றிருக்கும்போது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமை:

1975. அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!'' என்று கேட்டார்கள். நான் 'ஆம்! இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்கள்) நோன்பு வையும்; (சில நாள்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன் உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன உம் மனைவிக்குச் செய் வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!'' என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! 'இறைத்தூதர் அவர்களே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!'' என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'தாவூத் நபி(அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்!'' என்றார்கள். தாவூத் நபி(அலை)யின் நோன்பு எது? என்று கேட்டேன். 'வருடத்தில் பாதி நாள்கள்!'' என்றார்கள்.

''அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) வயோதிகம் அடைந்த பின் 'நபி(ஸல்) அவர்களின் சலுகைகை நான் ஏற்காமல் போய் விட்டேனே' என்று (வருத்தத்துடன்) கூறுவார்!'' என அபூ ஸலமா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பகுதி 56

ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பது.

'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உயிருடனிருக்கும் வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்குவேன்' என்று நான் கூறிய செய்தி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிந்தது. (இது பற்றி) அவர்கள் என்னிடம் கேட்டபோது) 'என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!'' நான் அவ்வாறு கூறியது உண்மையே!'' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'இது உம்மால் முடியாது! (சில நாள்கள்) நோன்பை விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு வையும்! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்கு நற்கூலி கொடுக்கப்படும்! எனவே, இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்!'' என்றார்கள். நான் 'என்னால் இதைவிட சிறப்பானதைச் செய்யமுடியும்!'' என்று கூறினேன். 'அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள்விட்டுவீடுவீராக! இதுதான் தாவூத் நபியின் நோன்பாகும்! நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்!'' என்றார்கள். நான் 'என்னால் இதைவிட சிறப்பாகச் செய்ய முடியும்?' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் 'இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை!'' என்றார்கள்.

பகுதி 57

நோன்பு வைத்திருக்கும்போது குடும்பத்தினருக்குச் செய்ய வேண்டிய கடமை.

இது பற்றிய நபிவழியை அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்திருக்கிறார்கள்.

1977. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

நான் தொடர்ந்து நோன்பு வைப்பதாகவும் இரவெல்லாம் தொழுவதாகவும் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தது; அவர்கள் என்னை அழைத்து வரச் சொல்லியிருக்க வேண்டும்; அல்லது நானாக அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும்! (அவர்கள் என்னை அழைத்து வரச் சொன்னார்களா? நானாகச் சென்று அவர்களைச் சந்தித்தேனா என்பது எனக்கு நினைவில்லை!) நபி(ஸல்) அவர்கள் 'நீர் விடாமல் நோன்பு நோற்பதாகவும் தூங்காமல் தொழுவதாகவும் என்னிடம் கூறப்படுகிறதே! எனவே, நோன்பு வைப்பீராக! அதைவிட்டுவிடவும் செய்வீராக! (இரவில் எழுந்து நின்று வணங்குவீராக! தூங்கவும் செய்வீராக! ஏனெனில், உம்முடைய கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன் உமக்கும் உம்முடைய குடும்பத்தினருக்கும் நீர் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன!'' என்று கூறினார்கள். நான், 'இதற்கு எனக்கு சக்தி உள்ளது!'' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் 'நீர் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக!'' என்றார்கள். 'அது எவ்வாறு?' என்று கேட்டேன். 'தாவூத் நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்பார்; ஒரு நாள்விட்டுவிடுவார்! மேலும், (போர்க்களத்தில் எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்க மாட்டார்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! இந்த (வீரம் நிறைந்த) பண்புக்கு எனக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்!'' என்றேன்.

''காலமெல்லாம் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்கள் (இந்த சம்பவத்துக்கிடையே) எப்படிக் கூறினார்கள் என்பதை நான் அறியமாட்டேன். என்றாலும் 'காலமெல்லாம் நோன்பு நோற்றவர் நோன்பு நோற்றவரல்லர்!'' என்று நபி(ஸல்) அவர்கள் இருமுறை கூறினார்கள் (என்பது மட்டும் எனக்கு நினைவிருக்கிறது!)'' என்று அதா(ரஹ்) கூறினார்.

பகுதி 58

ஒரு நாள்விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றல்.

1978. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

''ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக!'' என்று என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இதை வட அதிகமாக எனக்குச் சக்தி உள்ளது!'' என்று கூறினேன். முடிவில், ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள்விட்டு விடுவீராக!'' என்று கூறினார்கள். மேலும் 'ஒவ்வொரு மாதமும் (ஒரு முறை) குர்ஆனை (முழுமையாக) ஓதும்!'' என்று கூறினார்கள்.

பகுதி 59

தாவூத் நபியின் நோன்பு

1979. அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல் ஆஸ்(ரலி) அறிவித்தார்.

நீர் காலமெல்லாம் நோன்பு நோற்று. இரவெல்லாம் வணங்குகிறீரோ?' என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான் 'ஆம்!'' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறு நீர் செய்தால், அதன் காரணமாக கண்கள் உள்ளே போய்விடும். (மேலும்) அதனால் உள்ளம் களைந்து (பலவீனமடைந்து) விடும்! காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராக மாட்டார்! (மாதந்தோறும்) மூன்று நாள்கள் நோன்பு நோற்பது காமெல்லாம் நோன்பு நோற்பதாகும்!'' என்றார்கள். அதற்கு 'நான் இதைவிட அதிகமாக (நோற்பதற்கு) சக்தி உள்ளவன்'' என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அப்படியானால் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒரு நாள்விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார்கள். (எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்கவும் மாட்டார்கள்!'' என்று கூறினார்கள்.

1980. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் என்னுடைய நோன்பு பற்றிக் கூறப்பட்டது. உடனே அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக ஈச்ச நார் அடைக்கப்பட்ட தோல் தலையணையை எடுத்துப் போட்டேன். அவர்கள் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே அந்தத் தலையணை கிடந்தது. 'ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (இதைவிட அதிகமாக என்னால் நோன்பு நோற்க இயலும்)” என்றேன்; அவர்கள் ‘‘(மாதத்தில்) ஐந்து நாட்கள்” என்றார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே...!” என்றேன்; ‘‘ஒன்பது நாட்கள்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே...! என்றேன்; ‘‘பதினொன்று நாட்கள்” என்றார்கள். பிறகு, ‘‘தாவூத் (அலை) அவர்களின் நோன்புக்குமேல் (சிறப்புடையதாக) எந்த நோன்பும் இல்லை; அது வருடத்தின் பாதி நாட்களாகும். எனவே, ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்பீராக!” என்றார்கள்.

பகுதி 60

மாதந்தோறும் பதின் மூன்று பதினான்கு, பதினைந்து ஆகிய நிலவு பிரகாசிக்கும் நாள்களில் நோன்பு நோற்றல்.

1981. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

''ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும். 'ளுஹா' நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும். உறங்குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுது விடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் தோழர்(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்!''

பகுதி 61

ஒரு கூட்டத்தினாரிடம் சென்று, அங்கு நோன்பை முறிக்காமல் இருத்தல்.

1982. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு ஸுலைம்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர்கள் பேரீச்சம் பழங்களையும் நெய்யையும் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் நெய்யை அதற்குரிய (தோல்) பாத்திரத்திலேயே ஊற்றுங்கள்; உங்கள் பேரீச்சம் பழங்களை அதற்குரிய பையில் போடுங்கள்; ஏனெனில், நான் நோன்பு நோற்றிருக்கிறேன்!'' என்றார்கள். பிறகு வீட்டின் ஒரு மூலையில் நின்று கடமையல்லாத தொழுகையைத் தொழுதார்கள். உம்மு ஸுலைம்(ரலி) அவர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தித்தார்கள். அப்போது உம்மு ஸுலைம்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! எனக்கு விருப்பமான ஒன்று உள்ளது''! என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அது என்ன?' என்று கேட்டார்கள் 'உங்கள் ஊழியர் அனஸ்தான்!'' என்று உம்மு ஸுலைம்(ரலி) கூறினார். இம்மை மறுமையின் எந்த நன்மையையும்விட்டு விடாமல் (எல்லா நன்மைகளையும்) கேட்டு. எனக்காக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். 'இறைவா! இவருக்குப் பொருட் செல்வத்தையும் குழந்தைச் செல்வத்தையும் வழங்கு! இவருக்கு பரக்கத் செய்!'' என்று பிரார்த்தித்தார்கள். இன்று நான் அன்ஸார்களிலேயே அதிகச் செல்வந்தனாக இருக்கிறேன்! எனக்குப் பிறந்த நூற்றியிருபதுக்கும் அதிகமான பிள்ளைகள் இறந்து, ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் பஸராவுக்கு வந்த காலத்தில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டனர் என்று என் மகள் உமைனா எனக்குக் கூறினார்.

பகுதி 62

மாதத்தின் கடைசியில் நோன்பு நோற்றல்;

1983. முதர்ரிஃப்(ரஹ்) அறிவித்தார்.

இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அவர்களிடமோ, அவர்கள் செவிமடுத்துக் கொண்டிருக்க வேறொருவாரிடமோ நபி(ஸல்) அவர்கள் 'இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா?' என்று கேட்டார்கள். அம்மனிதர் 'இல்லை! இறைத்தூதர் அவர்களே!'' என்றார். நபி(ஸல்) அவர்கள் 'நீர் நோன்பைவிட்டுவிட்டால் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பீராக!'' என்று கூறினார்கள்.

''நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தைக் கருத்தில் கொண்டே. 'இம்மாதம்' என்று சொன்னதாக எனக்கு இதை அறிவித்தவர் (மஹ்தீ இப்னு மைமூன்) கூறினார்கள் என நான் நினைக்கிறேன்!'' என்று அபுந் நுஃமான் கூறுகிறார்.

'நபியவர்கள் ரமளானையே கருத்தில் கொண்டு 'இம்மாதம்' என்று சொன்னதாக நான் நினைக்கிறேன்!'' என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான 'ஸல்த்' என்பவர் கூறவில்லை.

'ஷஅபானின் கடைசி' என்று மற்றோர் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

பகுதி 63

வெள்ளிக் கிழமை நோன்பு நோற்றல்.

வெள்ளிக் கிழமை (மட்டும்) நோன்பு நோற்றால் அதை முறிப்பது அவசியமாகும்.

1984. முஹம்மத் இப்னு அப்பாத் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக் கிழமை நோன்பு வைப்பதைத் தடை செய்தார்களா என்று ஜாபிர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். 'ஆம்' என்றார்.

மற்றோர் அறிவிப்பில் வெள்ளிக் கிழமை மட்டும் தனித்து நோன்பு வைக்க நபி(ஸல்) அவர்கள் தடை செய்ததாகக் கூறப்படுகிறது.

1985. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''உங்களில் எவரும் வெள்ளிக்கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்கவேண்டாம்!''

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1986. ஜுவைரிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், நான் வெள்ளிக் கிழமை நோன்பு வைத்திருந்தபோது என்னிடம் வந்தார்கள். 'நேற்று நோன்பு வைத்தாயா?' என்று கேட்டார்கள். நான் 'இல்லை!'' என்றேன். 'நாளை நோன்பு நோற்க விரும்புகிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கும் 'இல்லை!'' என்றேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் 'அப்படியானால் நோன்பை முறித்து விடு!'' என்றார்கள்.

''நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி நான் நோன்பை முறித்து விட்டேன்'' என்று ஜுவைரிய்யா(ரலி) கூறினார் என அபூ அய்யூப்(ரஹ்) அறிவித்தார்.

பகுதி 64

சில நாள்களை மட்டும் குறிப்பாக தேர்ந்தெடுத்து, அவற்றில் நோன்பு நோற்கலாமா?

1987. அல்கமா(ரஹ்) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில நாள்களை வணக்கத்திற்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்களா?' என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'இல்லை! அவர்களின் அமல் (வணக்கம்) நிரந்தரமானதாக இருக்கும்! நபி(ஸல்) அவர்களால் செய்ய முடிந்த (வணக்கத்)தை உங்களில் யார்தான் செய்ய முடியும்?' என்று கூறினார்கள்.

பகுதி 65

அரஃபா நாளில் நோன்பு நோற்றல்.

1988. உம்முல் ஃபழ்லு பின்த் ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா தினத்தில் நோன்பு வைத்திருக்கிறார்களா?' என்று என்னிடம் சிலர் சர்ச்சை செய்தனர். சிலர் 'அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்கள்' 'அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்கள்' என்று கூறினார்கள். மற்றும் சிலர் 'நோன்பு வைத்திருக்கவில்லை' என்றார்கள். அப்போது ஒட்டகத்தில் அமர்ந்திருந்த நபி(ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பினேன்; அதை அவர்கள் குடித்தார்கள்.

1989. மைமூனா(ரலி) அறிவித்தார்.

அரஃபா நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில் தங்கியிருந்த நபி(ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்தனுப்பினேன். மக்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அதை நபி(ஸல்) அவர்கள் குடித்தார்கள்.

பகுதி 66

நோன்புப் பெருநாள் தினத்தில் நோன்பு நோற்றல்.

1990. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்.

இவ்விரு நாள்களிலும் நோன்பு நோற்க நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தனர். அவை நோன்பை முடித்துப் பெருநாள் கொண்டாடும் தினமும் குர்பானி இறைச்சியை நீங்கள் சாப்பிடும் நாளுமாகும்.

1991 / 1992. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

''நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களில் நோன்பு நோற்பதையும், இரண்டு புஜங்களில் ஒன்றை மட்டும் மறைத்து, மற்றொன்று வெளியே தெரியும் வண்ணம் ஒரு துணியைப் போர்த்திக் கொள்வதையும், ஓர் ஆடையை சுற்றிக் கொண்டு முழங்கால்களைக் கட்டி அமர்வதையும், ஸுப்ஹுக்குப் பிறகும், அஸர் தொழுகைக்குப் பிறகும் தொழுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்!''

பகுதி 67

'ஈதுல் அள்ஹா' தினத்தில் நோன்பு நோற்றல்.

1993. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

''ஈதுல் ஃபித்ரிலும் (நோன்புப் பெருநாளிலும்) ஈதுல் அள்ஹாவிலும் (ஹஜ்ஜுப் பெருநாளிலும்) நோன்பு நோற்பதும் முலாமஸா, முனாபதா என்ற இரண்டு வியாபார முறைகளும் தடை செய்யப்பட்டுள்ளன!''

1994. ஸியாத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.

ஒருவர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் வந்து, 'ஒருவர் ஒரு நாள் நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருக்கிறார்!'' என்று கூறினார்கள். அந்த மனிதர் '(அவர்) திங்கட்கிழமையன்று... (நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருக்கிறார்!)'' என்று கூறினார்கள் என நான் நினைக்கிறேன். அவர் குறிப்பிட்ட அந்த நாள் பெருநாளாக அமைந்துவிட்டது! எனவே, இப்னு உமர்(ரலி) 'நேர்ச்சையை நிறைவேற்றுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நபி(ஸல்) அவர்கள் இந்த தினத்தில் நோன்பு நோற்பதைத் தடை செய்திருக்கிறார்கள்!'' என்று கூறினார்கள்.

1995. நபி(ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு யுத்தங்களில் பங்கெடுத்த அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னைக் கவர்ந்தன. அவை: 'ஒரு பெண் தன்னுடைய கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) இரண்டு நாள்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது! ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா (நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள்) ஆகிய இரண்டு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது! ஸுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வரையும் அஸருக்குப் பிறகு சூரியன் மறையும் வரையும் தொழக் கூடாது! (அதிக நன்மையைப் பெற நாடி) மஸ்ஜிதுல் ஹராம், பைத்துல் முகத்தஸ், என்னுடைய இந்தப் பள்ளி வாசல் (மஸ்ஜிதுந் நபவீ) ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறெதை நோக்கியும் பயணத் மேற்கொள்ளக் கூடாது!''

பகுதி 68

(துல்ஹஜ் மாதம் 11, 12, 13 ஆகிய) தஷ்ரீக் நாள்களில் நோன்பு நோற்றல்.

1996. யஹ்யா இப்னு ஸயீத் அல் கத்தான்(ரஹ்) அறிவித்தார்.

''ஆயிஷா(ரலி) மினாவில் தங்கக் கூடிய (தஷ்ரீக் உடைய) நாள்களில் நோன்பு நோற்பார்கள்'' என்று தம் தந்தை உர்வா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்'' என ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

ஹிஷாமின் தந்தை உர்வா(ரஹ்) அவர்களும் அந்த நாள்களில் நோன்பு நோற்பார்கள். (பார்க்க பின் குறிப்பு)

1997 / 1998 ஆயிஷா(ரலி) இப்னு உமர்(ரலி) ஆகியோர் கூறினார்கள்:

''பலியிடும் பிராணி கிடைக்காதவர் தவிர மற்றவர்கள் தஷ்ரீக்குடைய நாள்களில் நோன்பு நோற்க அனுமதிக்கப்படவில்லை!''

1999. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''தமத்துஉ' எனும் முறையில் இஹ்ராம் அணிந்தவரே அரஃபா நாள் வரை நோன்பு நோற்கலாம்! பலியிடும் பிராணியும் கிடைக்கவில்லை. நோன்பும் நோற்கவில்லையென்றால் மினாவில் தங்கும் நாள்களில் நோன்பு நோற்கலாம்!''

ஆயிஷா(ரலி) அவர்களும் இவ்வாறு கூறினார்கள் என உர்வா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பகுதி 69

ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல்.

2000. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''ஆஷூரா நாளில் விரும்பினால் நோன்பு நோற்கலாம்!''

இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2001. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர் விட்டுவிட்டனர்!''

2002. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ஸல்) அவர்களும் நோற்றனர். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷுரா நோன்பை விட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர் விட்டுவிட்டனர்.

2003. ஹுமைத் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார்.

முஆவியா(ரலி) ஹஜ்ஜுக்குச் சென்ற ஆண்டு ஆஷுரா நாளில் மிம்பரில் நின்றுகொண்டு, 'மதீனா வாசிகளே! உங்கள் அறிஞர்கள் எங்கே? நபி(ஸல்) அவர்கள், இது ஆஷுரா நாளாகும். இதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்குக் கடமையாக்கவில்லை என்று கூறியதை நான் செவியுற்றிருக்கிறேன். நோன்பு நோற்றிருக்கிறேன். விரும்பியவர் நோன்பு நோற்கட்டும்; விரும்பாதவர் விட்டு விடட்டும்' என்று கூறினார்.

2004. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். 'இது என்ன நாள்?' என்று கேட்டார்கள். யூதர்கள் 'இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்'' என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.

2005. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

ஆஷுரா நாளை யூதர்கள் பெருநாளாகக் கொண்டாடி வந்தனர். நபி(ஸல்) அவர்கள், 'அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்!'' என்றார்கள்.

2006. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!''

2007. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, 'இன்று ஆஷுரா நாளாகும்; எனவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்!'' என்று அறிவிக்கச் செய்தார்கள்!


                                                                                 
Previous Post Next Post