ஸஹாபாக்களை குறைகாண முடியுமா?

எழுதியவர்: மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (ஆசிரியா் சத்தியக் குரல் மாத இதழ், இலங்கை)

ஸஹாபாக்கள் என்போர் யார்? ஸஹாபாக்களிடத்தில் குறை காண முடியுமா? ஸஹாபாக்களை குத்திக் காட்டி கேலியாக பேச முடியுமா? என்பதை தெளிவுப் படுத்துவதற்காக இக் கட்டுரை எழுதப்படுகிறது.

சமீப காலமாக ஸஹாபாக்களை மிக மோசமான, தவறான வார்த்தைகளால் பேசப்பட்டு, அப்படி பேசுவது குற்றமில்லை என்றளவிற்கு சா்வசாதாரணமாக ஸஹாபாக்கள் மதிக்கப் படுவதை கண்டு வருகிறோம். ஸஹாபாக்களை எப்படியான வார்த்தைகளால் குத்திக்காட்டி பேசினார்கள் என்று தேவையான இடத்தில் சுட்டிக் காட்டவுள்ளேன்.

ஸஹாபாக்களுடைய செய்திகளை தொகுத்து வழங்குவதற்கு முன், பொதுவாக மனிதா்களைப் பற்றி குறையாகவோ, குத்திக் காட்டியோ, அல்லது மானபங்கப் படுத்துவதைப் போன்ற வார்த்தை ஜாலங்களால் பேச முடியுமா? என்பதை குா்ஆன், மற்றும் ஹதீஸ் வழியில் தெளிவை காண்போம்.

”ஈமான் கொண்ட விசுவாசிகளே ! எண்ணங்களில் பெரும்பாலவற்றை தவிர்ந்து கொள்ளுங்கள். (ஏன் என்றால்) எண்ணத்தில் சில பாவமாகும்….(49-12)

இஸ்லாத்தைப் பொருத்தவரை பல பாவங்களை நேரடியாக எடுத்துக் காட்டி அவைகள் பக்கம் நெருங்க வேண்டாம் என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறது.

அந்த பாவங்களில் மக்கள் தெளிவாக உள்ளனா். ஆனால் தன்னை அறியாமல் பல பாவங்கள் தொடராக செய்யப் படுகின்றன அப்படிப் பட்ட பாவங்களில் மக்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்.

அவைகளில் ஒன்று தான் பிறரை தவறாக நினைப்பதாகும். அதிகமான பாவங்களுக்கு நமது எண்ணம் தான் காரணமாகும். அதனால் தான் எண்ணத்தினால் எழும் தவறான எண்ணங்களை முற்றிலும் தவிர்ந்து கொள்ளும் படி அல்லாஹ் நமக்கு பாடம் நடத்துகிறான்.

விசுவாசிகளே ! என்று அடியார்களை அல்லாஹ் அழைத்து உபதேசம் செய்கிறான்.

சிறு துளி பெரும் வெள்ளம் என்பதை போல சிறு, சிறு தவறான எண்ணங்கள் மக்களுக்கு மத்தியில் பிரிவுகளையும், பிளவுகளையும் ஏற்ப்படுத்தி காலப் போக்கில் அது விருட்சமாக வளா்ந்து அவா்களை நரகில் தள்ளிவிடும் அளவிற்கு போய் விடுகிறது. மேற்ச் சுட்டிக்காட்டிய அதே வசனத்தில் தொடர்ந்து …(பிறருடைய குறைகளை) நீங்கள் துருவி, துருவி விசாரிக்க வேண்டாம்…(49-12) என்று அல்லாஹ் நமக்கு பாடம் நடத்துகிறான். முதல் கூறிய செய்தியான எண்ணங்கள் பாவம் என்பதற்கும்,துருவி, துருவி ஆராயாதீா்கள் என்பதற்கு்ம் நேரடி தொடா்பை நாம் காணலாம்.

அதாவது ஒருவருடை மனதில் தப்பான எண்ணம் வந்தால் தான், அவரைப் பற்றி துருவ ஆரம்பிப்பார் எனவே தான் தவறான எண்ணங்களை நமது உள்ளத்திலிருந்து களையப் பட வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு உபதேசம் செய்கிறான்.

ஒருவா் தவறு செய்கிறார் என்றால் அவரை அணுகி இப்படிப் பட்ட தவறை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று எடுத்துக் கூறலாம். அதை விட்டு விட்டு நாளு பேருக்கு மத்தியில் அவரை மானபங்கப் படுத்தும் அளவிற்கு போய்விடக் கூடாது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் பிறரின் குறைகளை தேட ஆரம்பித்தால் அவனை அறியாமல் புறம் பேச ஆரம்பித்து விடுவான் என்பதை அந்த வசனத்தின் இறுதியில் அல்லாஹ் சொல்ல வருகிறான்.

…“உங்களில் ஒருவருக்கு ஒருவர் புறம் பேசி திரியாதீா்கள். இறந்த உங்களின் சகோதரரின் மாமிசத்தை சாப்பிட விரும்புவீா்களா? வெறுப்பீர்கள் அல்லாஹ் கருணையாளன், மன்னிக்கக் கூடியவன். (49 -12) இந்த வசனத்தில் அல்லாஹ் அடுத்தடுத்து தவிர்ந்து கொள்ளப் பட வேண்டிய மூன்று விடயங்களை எடுத்துக் கூறுகிறான்.

ஒரு மனிதனிடம் தவறான எண்ணம் வந்து விட்டால், குறைகளை தேட ஆரம்பிக்கிறான், அதன் பின் புறம் பேச ஆரம்பிக்கிறான். புறம் பேச அடிப்படைக் காரணம் தவறான எண்ணமாகும். புறம் பேசுவது பெரிய பாவமாகும் அதன் முடிவு நரகமாகும்.

புறம்என்றால் என்ன?
நபி (ஸல்) அவா்கள் (ஸஹாபாக்களை நோக்கி) புறம் என்று சொன்னால் என்னவென்று அறிவீா்களா? என்று கேட்டார்கள் அதற்கு ஸஹாபாக்கள் அல்லாஹ்வும், அவனது துாதரும் தான் அறிவார்கள் என்றனா். உனது சகோதரனைப் பற்றி அவன் வெறுக்கக் கூடிய ஒன்றை பேசுவதாகும் என்றார்கள். அதற்கு நபித் தோழர்கள் யா ரஸீலுல்லாஹ் ! நாங்கள் பேசுவது அந்த சகோதரனிடத்தில் இருந்தாலுமா? என்று கேட்டனா். அந்த சகோதரனிடத்தில் இருப்பதை பேசுவது தான் புறமாகும். அவனிடத்தில் இல்லாததை பேசுவது இட்டுக்கட்டியதாகும் என்றார்கள். (ஆதாரம் முஸ்லிம் 5048)

நாம் பேசும் செய்திகள் பிறரிடத்தில் இருந்தாலும் அந்த செய்திகளைப் பற்றி நாம் பேசுவதை அவர் வெறுப்பாரேயானால், அது தான் புறம் என்பதை நபியவர்கள் நமக்கு மிகத் தெளிவாக எச்சரித்துள்ளார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி 6064 முஸ்லிம் 2563

ஆனால் இன்று சர்வசாதாரணமாக பிறரின் குறைகளையும், பிறறை மானபங்கப் படுத்தும் விடயங்களில் பகிரங்கமாக ஈடுபடுகிறார்கள் என்றால் இவர்கள் எந்த அளவிற்கு இம் மார்க்கத்தை கொச்சைப் படுத்துகிறார்கள்?

மார்கத்தைப் படித்த, தஃவா களத்தில் இருப்பவர்களே இப்படி அருவருப்பாக பேசுகிறார்கள் என்றால் இவர்களின் தஃவா எப்படி இருக்கும் என்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்?

அப்படி பேசாதீர்கள் என்றால் நபியவர்களே பேசியுள்ளார்கள்? நாம் ஏன் பேசக் கூடாது என்று கேட்கிறார்கள்.? இவர்கள் ஹதீஸை தவறாக அணுகியதினால் நபியவர்களே இப்படி பேசியுள்ளார்கள் என்று தங்களது பேச்சுக்களை நியாயப்படுத்துகிறார்கள்.? அவர்கள் தவறாக புரிந்து கொண்ட ஹதீஸை இன்ஷா அல்லாஹ் நாம் தெளிவுப் படுத்த உள்ளோம்.

மேலும் அல்லாஹ் முன்னால் வாழு்ந்து மரணித்த பலரின் குறைகளையும், தவறுகளையும். குற்றங்களையும், குர்ஆனில் எடுத்துக் கூறும் போது நாம் ஏன் மக்களின் குறைகளையும், தவறுகளையும், எடு்துப் பேசக் கூடாது என்று புறம் பேசுவதற்கு ஆதாரம் தேடுகிறார்கள்.?

அப்படியானால் சூரியன் மீதும், சந்திரன் மீதும், நட்சத்திரங்கள் மீதும், காலத்தின் மீதும், இரவின் மீதும், முற்பகல் மீதும், இப்படி தன்னால் படைக்கப் பட்ட படைப்புகள் மீது அல்லாஹ் சத்தியம் செய்துள்ளான். எனவே நாங்களும் இப்படியான படைப்புகள் மீது சத்தியம் செய்யலாம் என்று கூறினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை?

நமக்கு எதை நபியவர்கள் காட்டித் தந்தார்களோ அதை தான் நாம் மார்க்கமாக நடைமுறைப் படுத்த வேண்டுமே தவிர சம்பந்தமில்லாத செய்திகளை நமது தவறான கொள்கைகளுக்கு சார்பாக திரிபுப் படு்த்தக் கூடாது.

குறைகளை மறைத்தல்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பம்ரங்கப்படுத்துகிறவர்களைத் தவிர ஒருவர் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்துவிட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனுடைய பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க, ‘இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்’ என்று அவனே கூறுவது பம்ரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி 6064

தான் செய்த பாவங்களைக் கூட தானே பகிரங்கப் படுத்தக் கூடாது. என்று இஸ்லாம் சொல்லும் போது, பிறரைப் பற்றி பேச முடியுமா?

உலகத்தில் ஓர் அடியானின் குறைகளை ஓர்அடியான் மறைத்தால், மறுமையில் அல்லாஹ் இவனுடைய குறைகளை மறைப்பான். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் முஸ்லிம் 2590, 2699

ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ் அல்மாஸினீ(ரஹ்) அறிவித்தார்
ஒருவர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம், ‘(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?’ என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:
‘உங்களில் ஒருவர் தம் இறைவனை நெருங்குவார். எந்த அளவிற்கென்றால் இறைவன் தன் திரையை அவரின் மீது போட்டு (அவரை மறைத்து) விடுவான். அப்போது இறைவன், ‘நீ (உலகத்தில்) இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?’ என்று கேட்பான். அதற்கு அவர், ‘ஆம்’ என்பார். இறைவன் (மீண்டும்) ‘இன்னின்ன (பாவச்) சயல்களைச் செய்தாயா?’ என்று கேட்பான். அப்போதும் அவர், ‘ஆம்’ என்று கூறி (தம் பாவச்) செயல்களை ஒப்புக் கொள்வார். பிறகு அவன், ‘இவற்றையெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்(திருந்)தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகிறேன்’ என்று கூறுவான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் புகாரி 6070

பிறரின் தவறுகளை, குறைகளை மறைப்பதால். மறுமை நாளில் அல்லாஹ் இவனது தவறுகளை மறைக்கிறான், என்பதை தான் மேற்ச் சுட்டிக் காட்டிய ஹதீஸ் நமக்கு தெளிவுப் படுத்தகிறது.

மேலும்
“ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள். (33-58)

அது போல “ எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள். (24:19)

இப்படி பல குர்ஆன் வசனங்கள் மூலமும், பல ஹதீஸ்கள் மூலமும் இஸ்லாம் நமக்கு பகிரங்கமாகவே எச்சரித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு மனிதரை தரைக் குறைவாகவோ, குத்திக் காட்டியோ, அல்லது மானபங்கப் படுத்தும் அளவிற்கு இழிவாக பேசக் கூடாது. மேலும் பிறர் மீது நல்லெண்ணம் வைக்க வேண்டும், ஈமான் கொண்ட மக்களுக்கு மத்தியில் மானக் கேடான விடயங்கள் பரவ வேண்டும் என்று பிரியப்படக் கூடாது, பிறர் குறைகளை துருவி, துருவி ஆராயக் கூடாது போன்ற செய்திகளை குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து எடுத்துக் காட்டி பிறரை இழிவாக பேசாதீர்கள், பிறரை மானபங்கப்படுத்தாதீர்கள் என்று கூறும் போது, பிறரை தாராளமாக மானபங்கப்படுத்திப் பேசலாம், குறைகளை சுட்டிக் காட்டி பேசலாம் என்று பின்வரும் ஹதீஸை ஆதாரமாக காட்டி, நபியவர்களே பிறருக்கு மத்தியில் வைத்து மானபங்கப்படுத்தியுள்ளார்கள் என்றால் நாம் ஏன் பிறரை மானபங்கப்படுத்தக் கூடாது? என்று இவர்கள் கேட்கிறார்கள்?

முதலாவது வழமைப் போன்று இவர்கள் ஹதீஸை தவறாகப் புரிந்து கொண்டார்கள்.

இவர்கள் சுட்டிக் காட்டும் ஹதீஸில் பிறரை குறை பேசவோ, அல்லது மானபங்கப்படுத்தவோ எந்த வழியையும் நபியவர்கள் காட்டித் தரவில்லை.
மக்களை பக்குவப்படுத்த வந்த நபியவர்கள் மக்களுடன் இப்படி தவறாக நடந்துகொள்ளச் சொல்வார்களா?

இவர்கள் தவறாக ஹதீஸ்களை விளங்கிக் கொள்வதினால்தான் பயப்படாமல் ஸஹாபாக்களையும் குறை சொல்லி, குத்திக்காட்டி பேசுகிறார்கள். அந்த செய்திகள் இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் வரும். இவர்கள் தங்களுக்கு சாதகமாக முன்வைக்கும் ஹதீஸ்களை முதலில் அவதானியுங்கள்.

அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் ஸகாத்களை வசூலிக்கும் அதிகாரியாக இப்னுல் உத்பிய்யா எனப்படும் ஒருவரை நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்துக் கொண்டு) வந்த போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அவர், “இது உங்களுக்குரிய செல்வம். இது (எனக்கு வந்த) அன்பளிப்பு” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் உண்மையாளராக இருந்தால், உம்முடைய தந்தை வீட்டில் அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திரும்! உம்மிடம் அன்பளிப்புகள் வருகின்றனவா பார்ப்போம்” என்று கூறினார்கள்.

பிறகு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக்கிய ஒரு பணிக்காக உங்களில் ஒருவரை நான் அதிகாரியாக்கினேன். அவர் (சென்றுவிட்டு) வந்து, “இது உங்களுக்குரிய செல்வம். இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று சொல்கிறார். அவர் சொல்வது உண்மையாயிருந்தால், அவர் தம் தந்தை வீட்டிலோ அல்லது தாய் வீட்டிலோ உட்கார்ந்திருக்கலாமே! அன்பளிப்புகள் வருகின்றனவா என்று பார்ப்போம்.

அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் எவரும் உரிமையின்றி (முறைகேடாக) எந்த ஒன்றை அடைந்துகொண்டாலும் மறுமை நாளில் அதை (தமது தோளில்) சுமந்த வண்ணமே அல்லாஹ்வை அவர் சந்திப்பார். இந்த வகையில் கனைத்துக் கொண்டிருக்கும் ஒட்டகத்தையோ, அல்லது கத்திக்கொண்டிக்கும் மாட்டையோ ஆட்டையோ (தமது தோளில்) சுமந்துகொண்டு அல்லாஹ்வைச் சந்திக்கும் எவரையும் நான் உறுதியாக அறிவேன்” என்று கூறினார்கள்.

பிறகு, தம் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவுக்குத் தம் இரு கைகளையும் உயர்த்தி, “இறைவா! (உன் கட்டளையை) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா” என்று அவர்கள் கூறியதை என் கண் கண்டது காது கேட்டது. (முஸ்லிம் 3740)

இந்த ஹதீஸில் ஸகாத்தை வசூலித்து விட்டு வந்த தோழரை மையப்படுத்தி ஓர் உபதேசம் செய்கிறார்கள். அதில் குறிப்பாக பொறுப்புகள் கொடுக்கப்பட்டு. அதை யார் தவறாக பயன் படுத்தி, மோசடி செய்கிறார்களோ அவர்களை எச்சரிக்கும் விதமாக தான் நபியவர்கள் அங்கு உரை நிகழ்த்தினார்களே தவிர, அவரை மானபங்கப்படுத்துவதற்காக அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் யாரையாவது மானபங்கப்படுத்துவார்களா ? இவர்கள் தவறாக நடந்து கொள்வதற்கு, நபியவர்களையும் துணைக்கு இழுக்கிறார்கள். அப்ப தான் மக்களிடம் சாட்டு, போக்கு சொல்லி தப்பிக்கலாம்.

இவர்களுயை அணுகுமுறை எப்படி பிழையானது என்பதை முதலில் அவதானியுங்கள். குர்ஆனுக்கு முரண் பட்டால் ஹதீஸ் ஸஹீஹாக இருந்தாலும், அந்த ஹதீஸை நிராகரிக்க வேண்டும் என்பது இவர்களின் அடிப்படை கொள்கையாகும். அதன்படி பார்த்தால் நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்களுக்கு இந்த ஹதீஸ் முரணாகவே உள்ளது.

பிறருடைய குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள். மற்றும் மானக் கேடான விடயத்தை பரப்பாதீர்கள். (49: 12) (24:19) (33:58) போன்ற வசனங்களுக்கு முரணாக உள்ளதால் இவர்களின் வாதப்படியே இந்த ஹதீஸ் ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அது மட்டுமல்ல முதல் பகுதியில் சுட்டிக் காட்டிய அனைத்து ஹதீஸ்களும் பிறர் குறையை மறைக்க வேண்டும், பிறரை இழிவுபடுத்தக் கூடாது, பிறரை மானபங்கப்படுத்தக் கூடாது. போன்ற அனைத்து ஹதீஸ்களும் இவர்கள் (பிழையாக) ஆதாரம் காட்டும் ஹதீஸிற்கு முரணாக உள்ளது. அப்படி பார்த்தாலும் அந்த ஹதீஸ் இவர்களின் வாதப்படி ஒதுக்கப்பட வேண்டியதே! அந்த ஹதீஸை வைத்து இவர்கள் பேச முடியாது.

(அந்த ஹதீஸ் குர்ஆனுக்கோ, ஸஹீஹான ஹதீஸிற்கோ முரணில்லை என்பதை இன்ஷா அல்லாஹ் இறுதியில் அதை நான் விளங்கப்படுத்த உள்ளேன்.) இவர்களுக்கு சாதகமாக இருந்தால் உடனே இது குர்ஆனுக்கு முரண் என்று சொல்லி கண்ணை மூடிக்கொண்டு தட்டிவிடுவார்கள். ஆனால் பாதகமாக இருந்தால் தெரியாதது போல இருந்து விடுவார்கள்.

நபியவர்கள் பிறரை ஏசினார்கள் அதனால் நாங்களும், பிறரை ஏசுவோம். ஏசலாம் என்கிறார்கள். ஆனால் நபியவர்கள் ஒரு மனிதரை சபித்தாலோ, அல்லது ஏசினாலோ அது சம்பந்தப் பட்டவருக்கு நன்மையாக அமைந்து விடும். நீங்கள் ஒரு மனிதரை சபித்தாலோ, அல்லது ஏசினாலோ அது உங்களுக்கே பாவமாக மாறிவிடும். எந்த அடிப்படையில் அந்த ஹதீஸை ஆதாரமாக எடுக்கிறீர்கள்? இதெல்லாம் ஹதீஸை அணுக தெரியாததினால் வந்த வினையாகும். அது சம்பந்தமான ஹதீஸை கவனியுங்கள்.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “இறைவா! நான் உன்னிடம் ஓர் உறுதிமொழி எடுக்கிறேன். அதற்கு நீ மாறு செய்யமாட்டாய். (அது) நான் ஒரு மனிதனே. ஆகவே, நான் எந்த இறை நம்பிக்கையாளரையாவது (கடிந்து கொண்டு) மனவேதனைப் படுத்தியிருந்தால், ஏசியிருந்தால், சபித் திருந்தால், அடித்திருந்தால், அதையே அவருக்கு அருளாகவும் பாவப் பரிகாரமாகவும் மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாகவும் மாற்றிவிடுவாயாக!” என்று கூறினார்கள். (முஸ்லிம் 5068)

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரண்டு பேர் வந்தார்கள்; நபியவர்களிடம் எதைப் பற்றியோ பேசினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கோபப்படுத்திவிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் சபித்து ஏசிவிட்டார்கள்.

அவர்கள் இருவரும் சென்றதும், நான், “அல்லாஹ்வின் தூதரே! நன்மைகளில் எதையேனும் யார் அடைந்துகொண்டாலும், இவ்விருவர் (மட்டும்) அதை அடையப்போவதில்லை” என்று கூறினேன். அதற்கு “அது எதனால்?” என்று நபியவர்கள் கேட்டார்கள். நான், “அவ்விருவரையும் தாங்கள் சபித்தீர்களே ஏசினீர்களே” என்று பதிலளித்தேன்.  அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் என் இறைவனிடம் நிபந்தனையிட்டுக் கூறியுள்ளதை நீ அறியவில்லையா?

“இறைவா! நான் ஒரு மனிதனே! நான் முஸ்லிம்களில் ஒருவரைச் சபித்திருந்தால், அல்லது ஏசியிருந்தால் அதை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் நன்மை யாகவும் ஆக்கிவிடுவாயாக” என்று கூறியுள்ளேன்” என்றார்கள். (முஸ்லிம் 5066)

இப்படி பல ஹதீஸ்களை நாம் காணலாம். எனவே இந்த ஹதீஸ்களின் படியும் பிறரை ஏசலாம், மானபங்கப்படுத்தலாம் என்ற இவர்கள் காட்டும் ஹதீஸின் வாதம் அடிப்பட்டு போய்விடுகிறது.

எனவே பொது மக்களாகிய நீங்கள் நிதானமாக சிந்தியுங்கள், பிற மனிதர்களை ஏச முடியுமா? குறை பேச முடியுமா? மானபங்கப்படுத்த முடியுமா? ஆனால் இவர்கள் பகிரங்கமாக இதை செய்கிறார்கள் என்றால், இவர்கள் மார்க்கத்தின் பெயரால் தவறாக வழி நடாத்தப் படுகிறார்கள் என்பது மிகத் தெளிவாக விளங்குகிறது.

தவறாக பேசும் இவர்களிடம் எப்படி நல்ல பண்புகளை மார்க்கமாக படிக்க முடியும்? பானையில் உள்ளது தானே அகப்பையில் வரும், உள்ளத்தில் தவறான சிந்தனைகள் நிறைந்தவர்களிடம் தவறான பேச்சுகளும், நடவடிக்கைகளும்தான் வெளிவரும். மனிதன் என்ற அடிப்படையில் ஸஹாபாக்களிடத்தில் வார்த்தை ரீதியாகவோ, நடிவடிக்கை ரிதியாகவோ சில தவறுகள் நடக்கும் போது, அது தவறு என்று அல்லாஹ் அதை திருத்திக் கொடுக்கிறான். அதை ஸஹாபாக்களும் ஏற்று திருத்திக் கொள்கிறார்கள். அப்படியான சம்பவங்களை ஒரு நிகழ்வாகத்தான் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு, நபியவர்கள் பேசியுள்ளார்கள் தானே, ஸஹாபாக்கள் பேசியுள்ளார்கள் தானே, என்று நாம் தவறு செய்துவிடக் கூடாது. அல்லாஹ் அவர்களின் தவறுகளை திருத்திக் கொடுத்து, மன்னித்து விட்டான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

பீஜேயால் எந்த அளவிற்கு ஸஹாபாக்கள் கொச்சைப் படுத்தப்படுகிறார்கள் என்பதை அவர் பேசிய வார்த்தைகளையே உங்களுக்கு சுட்டிக்காட்டி ஸஹாபாக்களின் சிறப்பை எடுத்துக் காட்டவுள்ளேன்.

இவர்களை பொருத்தவரை ஸஹாபாக்களின் விளக்கம் தேவை இல்லை, என்பார்கள். ஆனால் ஸஹாபாக்களின் சரிதைகளை மார்க்கமாக பேசுவார்கள். குர்ஆனுக்கு முரண் என்று ஸஹீஹான ஹதீஸையே துாக்கி எறிபவர்கள், சரித்திரங்களை எப்படி ஆதாரம் காட்டி பேச முடியம்? இவர்களுக்கு தேவைப்படாவிட்டால் ஸஹாபாக்களின் விளக்கமோ, சரித்திரங்களோ தேவையில்லை என்பார்கள். தேவைப் பட்டால் பெரிதாக துாக்கி காட்டுவார்கள்.

உதாரணத்திற்கு உம்மு ஹராம் சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம். நபியவர்கள் உம்மு ஹராம் மடியில் படுத்தார்கள் என்று ஹதீஸில் இல்லாத வாசகத்தை பீஜே வேண்டும் என்று சேர்த்து சொல்லி ஸஹீஹான ஹதீஸை மறுப்பதோடு, நபியவர்கள் மீது பொய் சொல்கிறார். நபியவர்களும், உம்முஹராம் அவர்களும் பால்குடி உறவு என்று முஸ்லிம் இமாமின் விரிவுரையிலும், சரித்திரத்திலும் எடுத்துக் காட்டினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாதாம், அதற்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் தேவையாம். ஆனால் இவர்கள் ஸஹாபாக்களை குத்திக் காட்டி குறையாக பேசும் சரித்திரத்திற்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் தேவையில்லையாம். நேரத்திற்கு நேரம் இவர்கள் கொள்கையை மாற்றுவார்கள்.

அம்ருப்னு ஆஸ் (ரலி) அவர்களைப் பற்றி பீஜே பேசும் போது இவர் ஒரு கிரிமினல் என்று இழிவாக பேசுகிறார். இது ஷீஆக்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட சம்பவம் என்பதை பல அறிர்களின் கூற்றுக்களை முன் வைத்தும், இது பலகீனமான சம்பவம் என்பதை தக்க ஆதாரத்துடன் எடுத்துக் காட்டியும், பீஜே இது வரை நான் இப்படி பேசியது தவறு என்று ஏற்றுக் கொள்ள முன் வரவில்லை? இது இவரின் ஆணவத்தின் வெளிப்பாடு?

மாறாக அவர்களின் சகாக்கள் கிரிமினலை கிரிமினல் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது என்று, பீஜேயைப் போல ஸஹாபியை குறையாக குத்திக்காட்டி பேசுகிறார்கள். என்றாலும் இமாம் புகாரி அவர்களின் வரலாற்று நுாலான தாரீஹ் என்ற நுாலில் குறிப்பிடப் பட்டுள்ளதே சரியானது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே பொய்யான தகவலை பீஜேயும், அவர்களின் சகாக்களும் நம்பி ஸஹாபியை ஏசுகிறார்கள். உறுதி செய்யப் பட்ட ஸஹீஹான ஹதீஸை மறுக்கிறார்கள். புனையப் பட்ட செய்தியை நம்புகிறார்கள் என்றால் இவர்களை என்னவென்று சொல்வது நீங்களே சிந்தியுங்கள்.

மேலும் நபியவர்கள் மரணித்த போது அன்சாரிகளும், முஹாஜிரீன்களும் பிரச்சனைப் பட்டார்கள் என்ற செய்தியை பிஜே தவறாக சித்தரித்து பேசுகிறார்.

அன்சாரிகள் பேசிக் கொண்டார்களாம் (முஹாஜிரீன்களுக்கு) போனா போகுது என்று சாப்பாட்ட கொடுத்தோம், தங்க இடத்த கோடுத்தோம் இப்ப ஆட்சியை பிடிக்க வாராங்க விடக்கூடாது என்று சொன்னார்களாம். இப்படி அன்சாரிகளை குத்திக் காட்டி குறையாக இவர் பேசுகிறார்.

அன்சாரிகள் இப்படி பேசினார்கள் என்று எந்த ஸஹீஹான நுாலில் பதிவு செய்யப் பட்டுள்ளது? எந்த குா்ஆன் வசனத்தில் அல்லது எந்த ஹதீஸில் உள்ளது? எடுத்துக் காட்ட முடியமா? மக்களை சிரிக்க வைக்க இந்த உன்னத ஸஹாபாக்களா பீஜேக்கு கிடைத்தார்கள்?

ஏன் பேசாத வார்த்தைகளை பேசியதாக பொய் சொல்லி தஃவா செய்ய வேண்டும். ஸஹீஹான ஹதீஸ்களை மட்டும் தான் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று வீராப்பு பேசுபவர்கள், ஏன் நடக்காத விடயங்களை நடந்ததாக ஜோடித்து அன்சாரிகள் மீது பொய் சொல்கிறார்கள்? ஸஹாபாக்களை மட்டம் தட்டி தன்னை உயா்வானவா் என்று காட்ட வேண்டும் என்பதற்காக தான் பீஜே ஸஹாபாக்கள் மீது வேண்டு்ம் என்று பொய் சொல்கிறார்?

மேலும் ஸஹாபக்களில் முர்த்தத்தான ஸஹாபாக்களும் இருக்கிறார்கள். அது மறுமையில் தான் தெரிய வரும் என்று மறுமை நாளில் ஹவ்லுள் கவ்ஸருக்கு அருகிலிருந்து விரட்டப் படுபவர்கள் இந்த முர்தத்தான ஸஹாபக்கள் தான் என்று ஹதீஸை புரிந்து கொள்ள தெரியாமல் பேசுகிறார்.

இப்படி பல செய்திகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஷீஆக்கள் தான் ஸஹாபாக்களை குறை காண்பார்கள். ஆனால் இந்த பீஜே ஏன் ஸஹாபாக்களை குறை காணுகிறார் என்று தெரியவில்லை?

இவா் சுட்டிக் காட்டும் இப்படியான சம்பவங்கள் குா்ஆனுக்கு முரணாக தெரியவில்லையா? அறிவுக்கு முரணாக படவில்லையா? நடைமுறைக்கு சாத்தியமாக தெரியவில்லையா? அதையும் தாண்டி பிறர் குறைகளை பேசாதீர்கள் என்ற குா்ஆனின் வசனங்களும், ஹதீஸ்களும் இந்த பீஜேயின் கண்களுக்கு படவில்லையா?

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்க மாட்டார்கள்; அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும் மாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.
என பராஉ(ரலி) அறிவித்தார். புகாரி 3783

இவர்களைப் பொருத்த வரை இந்த விடயத்தி்ல் பிடிவாதமாக இருப்பார்கள். எனவே இறை விசுவாசிகள் இவர்களின் இப்படியான விடயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Previous Post Next Post