ஸலஃபுகளைப் பின்பற்றலாமா?

-எழுதியவர்: மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்-

தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை, நபியவர்களின் வாழ்க்கை வழி முறையாகும். அதாவது குர்ஆனும், ஹதீஸுமாகும். அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட நாம் நபியவர்களை மட்டும் தான் பின்பற்ற வேண்டும். நபியவர்களை விட்டு, விட்டு வேறொருவரை பின் பற்றினால் அது தெளிவான வழிகேடாகும். அதே நேரம் குர்ஆன் வசனத்தை வைத்தோ, அல்லது ஹதீஸை வைத்தோ அறிஞர்கள் தெளிவுகளை தருவார்களேயானால், அந்த தெளிவுகள் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரண்படாமல் இருக்கும் என்றால் தாராளமாக அந்த விளக்கங்களை எடுத்துக்கொள்ளலாம்

அதே நேரம் நல்லது தானே, செய்தால் என்ன தப்பு என்றடிப்படையில் ஆதாரம் இல்லாமல் இஜ்திஹாத் செய்து அது மார்கத்திற்கு முரணாக இருக்கும் என்றால் அந்த விளக்கத்தை எடுக்க கூடாது. அது வழி கேட்டிற்கு கொண்டு போய் விட்டு விடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சமீப காலமாக குர்ஆன், ஹதீஸை பின் பற்றுவோரை இவர்கள் நபியவர்களை விட்டு, விட்டு ஸஹாபாக்களையும், ஸலபுகளையும் பின் பற்றுகிறார்கள் என்று சிலர் பேசி வருகிறார்கள். குறிப்பாக சகோதரர் பி ஜே பேசி வருகிறார். இவர் கூறுவது உண்மை தானா? ஏன் இவர் இப்படி சொல்கிறார் என்பதை தொடர்ந்து அலசுவோம்.

சமீப காலமாக சகோதரர் பிஜேயின் போக்கு மார்கத்திற்கு முரணாக வருவதால் அதிகமான மக்களிடத்தில் மார்க்க ரீதியான அதிருப்தியை பெற்று வருகிறார். அவரின் கொள்கையில் இருந்து அதிகமான மக்கள் அவரின் கொள்கை பிழையானது என்று வெளியேறி வருகிறார்கள். அதனால் மக்களின் கவனத்தை தன் பக்கம் திசை திருப்புவதற்காகவும், தான் சொல்லக் கூடிய விசயங்களை மட்டும் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், இப்படியான தவறான குற்றச் சாட்டுகளை கண் மூடித்தனமாக முன் வைக்கிறார்.?

குர்ஆன், ஹதீஸை பின்பற்றுபவர்கள் நபியவர்களை விட்டு, விட்டு ஸஹாபாக்களையோ, அல்லது ஸலபுகளையோ, பின்பற்றுவது கிடையாது என்பதை அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சில செய்திகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

தொழுகையில் ஸப்பில் (வரிசையில்) நிற்கும் விசயத்தை எடு்த்துக் கொள்வோம். நாம் தொழுவதற்கு வரிசையில் நிற்கும் போது பக்கத்திலுள்ளவர்களின் கால் பாதத்துடன் தமது கால் பாதத்தை சேர்த்தும், பக்கத்திலுள்ளவர்களின் தோள் புஜத்துடன், தமது தோள் புஜத்தையும் சேர்த்து நிற்க வேணடும் என்பதற்கான நேரடியான எந்த ஹதீஸ்களும் கிடையாது. என்றாலும் ஸப்பில் சேர்ந்து, நெருக்கமாக, இடைவெளி விடாமல், முன் பின் முரண்படாமல் நில்லுங்கள் போன்ற பல ஹதீஸ்களை காணலாம். இப்படியான ஹதீஸ்களுக்கு பிறர் கால் பாதத்துடன் தமது கால் பாதத்தையும், பிறர் தோள் புஜத்துடன் தமது தோள் புஜத்தையும் நாங்கள் சேர்த்து வைத்துக் கொள்வோம் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி மிகவும் பொருத்தமாக உள்ளதால் தொழுகையில் அப்படி தான் நிற்க வேண்டும் என்று கூறும் போது பார்த்தீர்களா ! நபி வழியை விட்டு விட்டு ஸஹாபியை பின்பற்றுகிறார்கள் என்று புரியாமல் குற்றம் சுமத்துகிறார்கள்.?

அதே நேரம் ஸப்புகள் சம்பந்தமாக சொல்லப்பட்ட ஹதீஸ்களை வைத்து பிறர் கால் பாத்துடன் தன் கால் பாதத்தையோ, தோள் புஜத்தையோ சேர்த்து நிற்க தேவை கிடையாது என்று பிஜே விளக்கம் கூறினால் அது நபிவழியாம்.?

இங்கு கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் சிறு பிள்ளையிலிருந்து நபியவர்களுடன் இருந்து நபியவர்களுடன் தொழுது வந்த அனஸ் (ரலி) அவர்கள் கூறுவது பிழையாம்.? ஆனால் பிஜே சொல்வது சரியாம்.? பக்கச் சார்பில்லாமல், விருப்பு வெறுப்பை ஒரு புறம்வைத்து விட்டு நிதானமாக சிந்தியுங்கள்.! அனஸ் (ரலி) அவர்கள் நபியவர்களுடன் தொழுதார்களா? பிஜே நபியவர்களுடன் தொழுதாரா? யாருடைய விளக்கம் மிகவும் பொருத்தமாக இருக்கும்.? பிஜே மீது உங்களது எல்லை மீறிய நேசம் ஸப்புகள் சம்பந்தமான பல ஹதீஸ்களை அவருடன் சேர்ந்து மறுக்க வைத்து, தவறான விளக்கத்தை கொடுக்க வைக்கிறது என்பதை உங்கள் சிந்தனைக்கு கொண்டு வருகிறேன்.

எது சரி, எது பிழை, என்பதை ஒரு புறம் வைத்து விடுங்கள். இப்போது ஸப்புகள் சம்பந்தமாக அனஸ் (ரலி) அவர்களும் விளக்கம் கொடுத்துள்ளார்கள். அதே ஹதீஸ்களை வைத்து பிஜேயும் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் அனஸ் (ரலி) அவர்களின் விளக்கத்தை எடுத்துக் கொண்டால் நாம் ஸஹாபியை பின் பற்றுகிறோமாம்? பிஜேயின் விளக்கத்தை எடுத்துக் கொண்டால் அது நபி வழியாம்? அப்படியானால் நீங்கள் சொல்வது போல நீங்கள் நபியை விட்டு,விட்டு பிஜேயை பின்றுகிறீர்கள் என்பது தானே மிகவும் பொருத்தமாக உள்ளது.? மாமி உடைத்தால் மண்குடமாம், ஆனால் மருமகள் உடைத்தால் பொன் குடமாம்.? இது வரை சொல்லப் பட்ட எல்லா விளக்கங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள் முன்னால் அறிஞர்களான ஸலபுகளும் விளக்கம் கொடுத்துள்ளார்கள், பிஜேயும் விளக்கம் கொடுத்துள்ளார். இரண்டும் விளக்கங்கள்தான் ஆனால் ஹதீஸின் அடிப்படையில் ஸஹாபி சொன்னதையோ, அல்லது ஸலபுகள் சொன்னதையோ எடுத்தால் நாம் நபியை விட்டு விட்டு ஸலபுகளை பின்பற்றுகிறோம் என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். தனது விளக்கத்தை மட்டும் தான் எடுக்க வேண்டும் என்பதற்காக பிஜே மக்களை எப்படி திசை திருப்புகிறார் என்பதை கவனியுங்கள்.?

அதே போல தாடியைப் பற்றி தெளிவுப் படுத்தும் போது தாடி சம்பந்தமான ஹதீஸ்களையும் இப்னு உமர் அவர்களின் ஹதீஸையும் வைத்து விளக்கம் கொடுத்தால் நாம் ஸலபுகளை பின் பற்றுகிறோமாம்? ஆனால் அதே தாடி சம்பந்தமான ஹதீஸ்களை வைத்து பிஜே விளக்கம் கொடுத்தால் அது நபி வழியாம்? எது சரி? எது பிழை? என்பதை ஒரு புறம் வைய்யுங்கள். இரண்டும் ஹதீஸ்களை வைத்து வெவ்வேறான விளக்கங்கள் தானே, அது எப்படி ஒன்று ஸலபு கொள்கையும், மற்றொன்று நபி வழியுமாகும்.? சிந்தியுங்கள் ! இரண்டும் ஹதீஸ்களை வைத்து தானே விளக்கங்கள் கூறப்படுகிறது? ஏன் மக்களை திசை திருப்புவதற்காக இப்படி ஒரு நாடகம்.? இப்படியே இது வரை சொல்லப் பட்ட அத்தனை சட்டங்களையும் ஒப்பிட்டு பாருங்கள் உண்மை புரிந்து விடும்.?

பிஜே தனது கருத்துகள் மேலோங்க வேண்டும் என்பதற்காக தான் ஸஹாபாக்களை குறைக் கண்டு, குறையாக பேசி அவர்களை விட நாம் சிறந்தவர்கள் என்ற தப்பான எண்ணத்தை மக்கள் மனதுகளில் பதிய வைத்து வருகிறார்.? அம்ர் இப்னு ஆஸ் அவர்களை கிரிமினல் என்கிறார்? அன்சாரிகள் முஹாஜிரீன்களை தப்பாக பேசுகிறார்கள் அதாவது நபியவர்கள் மரணித்த சமயத்தில் போனா போகுது என்று சாப்பாட்டைக் கொடுத்தோம், இருக்க இடத்தைக் கொடுத்தோம். இப்ப பதவிக்கும் போட்டி போடுகிறார்கள் விடக் கூடாது என்று அன்சாரிகள் முஹாஜிரீன்களைப் பற்றி பேசினார்களாம்.? அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று நபியவர்களின் மரணத்தை ஸஹாபாக்கள் எதிர்ப் பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.?

இப்படி பல ஸஹாபாக்களை குத்திக் காட்டி அவர்கள் பிழையானவர்கள் என்ற சிந்தனையை ஊட்டி நான் குறையில்லாதவன், நான் சொல்வது மட்டும் தான் உலகிலே சரி என்று தனது ஆதரவாளர்களை வழி நடத்துகிறார்.? பிஜே சொன்னால் வேதவாக்காக நம்புவோர்களும் அவரின் பாணியிலே ஸஹாபாக்களை குத்திக்காட்டி, குறையாக பேசிவருகிறார்கள்.?

ஹதீஸ் ஸஹீஹாக இருந்தாலும் குர்ஆனுக்கு முரண் பட்டால் அல்லது அறிவுக்கு முரண் பட்டால்,அல்லது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்றால் அந்த ஹதீஸ்களை துாக்கி வீச வேண்டும் என்ற தப்பான கொள்கையில் உள்ளவர்களுக்கு பி ஜே ஸஹாபாக்களைப் பற்றி பேசும் சம்பவங்கள் முரணாக தெரிய வில்லையா? ஸஹாபாக்கள் அப்படி தப்பாக பேசுவார்களா? சூழ்ச்சி செய்வார்களா? அப்படியே ஒரு வாதத்திற்கு உண்மை என்று வைத்துக் கொண்டாலும், ஏன் இவற்றை உங்களால் குர்ஆனுக்கு முரணாக உள்ளது, அல்லது ஹதீஸூக்கு முரணாக உள்ளது, அல்லது அறிவுக்கு முரணாக உள்ளது என்று மறுக்க முடிய வில்லை?

ஸஹாபாக்களை குறையாக எடுத்துக் காட்டினால் தான் ஸஹாபாக்கள் ஹதீஸிற்கு கொடுக்கும் விளக்கத்தை லேசாக தட்டி விடலாம் என்று பிஜே தந்திரமாக கையாண்ட வழி முறையாகும்.?

பிஜேயின் விசயங்களை மட்டும் தான் கேட்க வேணடும் என்ற உங்களது தப்பான முடிவுகள் பல ஸஹீஹான ஹதீஸ்களை கண் மூடித்தனமாக மறுக்க வைத்து உங்களை அறியாமல் நீங்கள் துாய மார்க்கத்தை விட்டும் துாரமாகிக் கொண்டீருக்கிறீர்கள்.?

எனவே பிஜேயின் கருத்துகளை வரிக்கு வரி பின் பற்றும் நீங்கள் பிஜேயின் கொள்கையை பின் பற்றுகிறீர்களா? அல்லது நபியின் கொள்கையை பின் பற்றுகிறீர்களா? மேற்ச் சொல்லப் பட்ட விசயங்களை நிதானமாக சிந்தித்துப் பாருங்கள் உங்களுக்கு உண்மை நிலை புரிந்து விடும். அல்லாஹ்வே யாவருக்கும் போதுமானவன்.
Previous Post Next Post