வெள்ளை ஆடை அணிதல்

கஷ்டங்களை நீக்கும், நல்லவை நடக்கும் வாழ்வில் சுபிட்சத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் எந்த ஒரு ஆடைக்கும் இஸ்லாம் முக்கியத்துவம் வழங்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் சிவப்பு (புகாரி 3551), கருப்பு (முஸ்லிம் 2418), பச்சை (நஸயீ (1554)) போன்ற பல்வேறு நிறங்களில் ஆடை அணிந்துள்ளார்கள்.
மஞ்சள் நிற ஆடை ஒருவருக்கு அழகாக இருந்தது. அதை நபியவர்கள் பாராட்டியுள்ளார்கள்.
(பார்க்க புகாரீ 3071, 5823)

ஒருவன் தான் விரும்பிய நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் வெள்ளை அணிவதை ஆர்வமூட்டியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் வெள்ளை ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். இது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். இன்னும் உங்களில் மரணமடைந்தவர்களுக்கும் வெள்ளையிலேயே கஃபனிடுங்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : திர்மிதி (915)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு வெள்ளை ஆடைகளைப் பற்றி வலியுறுத்துகிறேன். உங்களில் உயிருள்ளவர்கள் அதை அணியட்டும். மரணம் அடைந்தவர்களை அதில் கஃனிடுங்கள். அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும்.
அறிவிப்பவர் : ஸமூரா (ரலி)
நூல் : திர்மிதி (5228)

நபி (ஸல்) அவர்கள் வெள்ளை ஆடையை அதை அணிவதால் மகிமை ஏற்படும் என்ற அடிப்படையில் வலியுறுத்தவில்லை. அதற்குரிய காரணத்தையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளை ஆடையை அணியுங்கள். ஏனென்றால், அது மிகத் தூய்மையானது. மணமிக்கது. அதிலேயே உங்களில் மரணித்தவர்களுக்கும் கஃபனிடுங்கள்.
அறிவிப்பவர் : ஸமூரா (ரலி)
நூல் : திர்மிதி (2734)

நாம் நிறமுள்ள ஆடைகளை அணியும் போது அதில் அழுக்குப் படிந்தாலோ கறைகள் ஏற்பட்டாலோ வெளியே தெரியாது. ஆனால், வெள்ளை ஆடை அப்படிப்பட்டதல்ல. அதில் சிறிதளவு அழுக்குப் படிந்தாலும் வெளியே தெரியும். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் தூய்மையை வலியுறுத்தி வெள்ளை ஆடை அணியும்படி கூறியுள்ளார்கள்.

காவி ஆடை அணிவது கூடாது.

நபி (ஸல்) அவர்கள் காவி நிறமுள்ள ஆடைகளை அணிவதைத் தடை செய்துள்ளார்கள். காவி ஆடை அணிவதால் நமக்குத் துன்பங்கள் ஏற்படும் என்ற அடிப்படையில் அல்ல.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் என் மீது இரண்டு காவி நிற ஆடைகளைப் பார்த்தார்கள். அப்போது அவர்கள் இது இறை மறுப்பாளர்களின் ஆடையாகும். இதை அணியாதே! என்று கூறினார்கள்.
நூல் : புகாரீ (3872)

நபி (ஸல்) அவர்கள் காவி ஆடை அணிவதை ஏன் தடை செய்தார்கள் என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகிறது.
ராசி, பலன் பார்ப்பவர்கள் காஃபிர்களே!
ராகு, கேது ஆகிய கிரகங்கள் நேர்க்கோட்டில் வருவதால் சகோதரிக்கு உதவாத சகோதரனுக்கு கேடு தான் என்பதை ஒருவன் நம்பினால் அவன் இறை மறுப்பாளன் தான். சகோதரர்கள் சகோதரிகளுக்கு உதவி செய்யக் கூடாது என நாம் கூறவில்லை. எல்லோரும் உறவினர்களுக்கு உதவி, ஒத்தாசைகள் புரிந்து தான் வாழ வேண்டும். அதைத் தான் இஸ்லாமும் வலியுறுத்துகிறது.

ஆனால், நட்சத்திரங்கள் இவ்வாறு வருவதால் தான் இது நடக்கின்றது என நம்பிக்கை வைப்பது இறைவனின் அருளை மறுப்பது ஆகும். இறை நிராகரிப்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் உங்கள் இறைவன் கூறியதை நீங்கள் சிந்திக்கவில்லையா? எனக் கேட்டுவிட்டு (பின்வருமாறு கூறினார்கள்)
உங்கள் இறைவன் கூறினான்: நான் என்னுடைய அடியார்களுக்கு எந்த ஒரு அருள் புரிந்தாலும் அவர்களில் ஒரு சாரார் அதன் மூலம் காஃபிர்களாக ஆகிவிடுகிறார்கள். (எந்த ஒரு காரியம் ஏற்பட்டாலும்) இந்த நட்சத்திரம் அல்லது இந்த நட்சத்திரத்தின் காரணத்தினால் தான் (இது நடந்தது) என அவர்கள் கூறுகின்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (105)புகாரியில் 846 வது செய்தியும் இதே கருத்தில் இடம் பெற்றுள்ளது.
எனவே, இது போன்ற நட்சத்திர ராசி பலன்களை நம்புவது, மஞ்கள் நிற சேலையால் துன்பங்கள் நீங்கிவிடும் என நம்பிக்கை வைப்பது போன்ற இணைவைப்புக் காரியங்களை விட்டும் நாம் விலகிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ், அவனுக்கு இணை வைக்காத நன் மக்களாக வாழ்ந்து மரணிக்கக் கூடியவர்களாக நாம் அனைவரையும் ஆக்கியருள் புரிவானாக!
أحدث أقدم