அர் ரஹீக் அல் மக்தூம் - பகுதி 8

அடுத்து வருபவை:

இரண்டாவது கட்டம் - புதிய சகாப்தம்
அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கடிதம் எழுதுதல்
1) ஹபஷா மன்னர் நஜ்ஜாஷிக்குக் கடிதம்
2) மிஸ்ரு நாட்டு மன்னருக்குக் கடிதம்
3) பாரசீக மன்னருக்குக் கடிதம்
4) ரோம் நாட்டு மன்னருக்குக் கடிதம்
5) பஹ்ரைன் நாட்டு ஆளுநருக்குக் கடிதம்
6) யமாமா நாட்டு அரசருக்குக் கடிதம்
7) ஸிரியா நாட்டு மன்னருக்குக் கடிதம்
8)ஓமன் நாட்டு அரசருக்குக் கடிதம்
ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் நிகழ்ந்த
தூகரத் (அ) காபா போர்
கைபர் போர்
போருக்கான காரணம்
கைபரை நோக்கி
இஸ்லாமியப் படையின் எண்ணிக்கை
நயவஞ்சகர்கள் யூதர்களுடன் தொடர்பு கொள்ளுதல்
கைபரின் வழியில்
வழியில் நடந்த சில நிகழ்ச்சிகள்
கைபரின் எல்லையில் இஸ்லாமியப் படை
கைபரின் கோட்டைகள்
இஸ்லாமியப் படை முகாமிடுதல்
போருக்குத் தயாராகுதல், வெற்றிக்கான நற்செய்தி கூறுதல்
போர் தொடங்குதல், நாயிம் கோட்டையை வெற்றி கொள்ளுதல்
ஸஅப் கோட்டையை வெற்றி கொள்ளுதல்
ஜுபைர் கோட்டையை வெற்றி கொள்ளுதல்
உபை கோட்டையை வெற்றி கொள்ளுதல்
நஜார் கோட்டையை வெற்றி கொள்ளுதல்
இரண்டாவது பகுதியை வெற்றி கொள்ளுதல்
பேச்சுவார்த்தை
அபூ ஹுகைகின் மகன்களைக் கொல்லுதல்
கனீமத்தை பங்கு வைக்கப்படுதல்
ஜஅஃபர் மற்றும் அஷ்அரி கிளையினர் வருகை
ஸஃபிய்யாவுடன் திருமணம்
நஞ்சு கலந்த உணவு
கைபர் போரில் இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்
ஃபதக்
வாதில் குரா
தைமா
மதீனாவிற்குத் திரும்புதல்
அபான் இப்னு ஸஈத் படைப்பிரிவு
அடுத்தக்கட்ட போர்களும் படைப் பிரிவுகளும்
தாதுர் ரி கா
உம்ராவை நிறைவேற்றப் புறப்படுதல்
முஃதா யுத்தம்
யுத்தத்திற்கான காரணம்
படைத் தளபதிகள்
நபியவர்களின் அறிவுரை
படையை வழியனுப்புதல்
இஸ்லாமியப் படை புறப்படுதலும்
ஆலோசனை சபை
எதிரியைக் களம் காண
யுத்தத்தின் ஆரம்பம்
அல்லாஹ்வின் வாள் கொடியை ஏந்தியது
சண்டை ஓய்கிறது
இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்
யுத்தத்தின் தாக்கம்
தாதுஸ்ஸலாசில் படைப் பிரிவு
அபூகதாதா படைப் பிரிவு
மக்காவை வெற்றி கொள்வது
உடன்படிக்கையை மீறுதல்
அபூ ஸுஃப்யான் ஓடி வருகிறார்
மறைமுகமாகப் போருக்கு ஆயத்தம்
மக்காவை நோக்கி இஸ்லாமியப் படை
மர்ருள் ளஹ்ரானில் இஸ்லாமியப் படை
நபியவர்களுக்கு முன் அபூஸுஃப்யான்
மக்கா நோக்கி இஸ்லாமியப் படை
குறைஷிகளின் அதிர்ச்சி
இஸ்லாமியப் படை 'தூதுவா'வை அடைகிறது
இஸ்லாமியப் படை மக்காவுக்குள் நுழைகிறது
நபியவர்கள் சங்கைமிகு பள்ளிக்குள் நுழைகிறார்கள்
நபியவர்கள் கஅபாவில் தொழுகிறார்கள்
உங்களை எவ்விதத்திலும் பழிக்கப்படாது
கஅபாவின் சாவியை உரியவரிடம் வழங்குதல்
கஅபாவின் மேல் பிலால் அதான் கூறுகிறார்
'ஸலாத்துல் ஃபத்ஹ்' அல்லது 'ஸலாத்துஷ் ஷுக்ர்'
பெருங்குற்றவாளிகளைக் கொல்ல கட்டளையிடுதல்
ஸஃப்வான் இப்னு உமய்யா
நபியவர்களின் சொற்பொழிவு
நபியவர்களைப் பற்றி அன்சாரிகள் அஞ்சுதல்
பைஆ வாங்குதல்
மக்காவில் நபியவர்களின் செயல்பாடுகள்
படைப் பிரிவுகளும் குழுக்களும்

புதிய சகாப்தம்

ஹுதைபிய்யாவின் சமாதான ஒப்பந்தம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஒரு புதிய சகாப்தம் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது.
இஸ்லாமிற்குக் குறைஷிகள்தான் முதல் எதிரி மட்டுமின்றி. அதற்குப் பெரும் தொல்லை தந்து வந்த வம்பர்களாகவும் இருந்தனர். இவர்கள் முஸ்லிம்களுடன் போர் புரிவதிலிருந்து விலகி சமாதானம் மற்றும் அமைதியின் பக்கம் திரும்பி விட்டதால் இஸ்லாமின் மாபெரும் மூன்று எதிரிக் கூட்டங்களின் வலிமை வாய்ந்த ஒரு பகுதி ஒடிந்து விட்டது.
அதாவது குறைஷிகள், கத்ஃபான் கிளையினர், யூதர்கள் ஆகிய இம்மூன்று கூட்டத்தினர் அரேபிய தீபகற்பத்தில் சிலை வழிபாட்டுக்கும், அதில் ஈடுபடுபவர்களுக்கும் தலைவர்களாகவும் அவர்களை வழிநடத்துபவர்களாகவும் இருந்தனர். எனவே, குறைஷிகள் பணிந்து விட்டதால் அரேபிய தீபகற்பத்திலுள்ள சிலை வணங்குபவர்களின் உணர்ச்சிகளும் எதிர்ப்புகளும் பெருமளவு மழுங்கி விட்டன. ஆகவேதான், இந்த ஒப்பந்தத்திற்குப் பின் கத்ஃபான் கிளையினர் பெரிய அளவிற்கு சண்டையில் ஈடுபடவில்லை. யூதர்களின் தூண்டதலினால்தான் அவர்கள் சில சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டார்களே தவிர தாங்களாகவே அதில் ஈடுபட்டதில்லை.
மதீனாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் யூத விஷமிகள் தங்களின் சதித்திட்டங்களைத் தீட்டுவதற்கும், அதை செயல்படுத்துவதற்கும் கைபரைக் கேந்திரமாக ஆக்கிக் கொண்டு தங்களின் நாசவேலைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். மதீனாவைச் சுற்றி பல இடங்களில் பரவியிருந்த கிராம அரபிகளை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிட்டுக் கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் அழிப்பதற்காக அல்லது அவர்களுக்குச் சேதம் உண்டாக்கு வதற்காக பல இரகசிய சதித்திட்டங்களைத் தீட்டினர். இதனால் இந்த ஒப்பந்தத்திற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் எடுத்த முதல் கட்ட நடவடிக்கை, இந்த யூதக் கேந்திரங்களின் மீது தீர்க்கமான போரைத் தொடுப்பதாகும்.
இந்தச் சமாதான ஒப்பந்தத்திற்குப் பின் தொடங்கிய இக்காலகட்டத்தின் ஆரம்பத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணியை பரப்புவதற்கும், அதை மக்கள் முன் வைப்பதற்கும் முஸ்லிம்களுக்கு பெருமளவில் வாய்ப்பு ஏற்பட்டது. பெரும் முயற்சி செய்து போருக்குக் காட்டிய ஆர்வத்தை விட பல மடங்கு ஆர்வத்தை இப்பணியில் ஆர்வம் காட்டினர். ஆகவே, இக்காலக் கட்டத்தை நாம் இரண்டு வகையாக பிரிக்கின்றோம்.
1) அழைப்புப் பணியில் ஆர்வம் காட்டுதல் - அரசர்கள், கவர்னர்களுக்கு கடிதங்கள் எழுதுதல்.
2) போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
அரசர்கள், கவர்னர்களுடன் நபியவர்கள் கொண்ட கடிதத் தொடர்பைப் பற்றி முதலில் கூற விரும்புகிறோம். ஏனெனில், இஸ்லாமிய அழைப்புப் பணிதான் அனைத்திலும் முக்கியமான அடிப்படை நோக்கமாகும். முஸ்லிம்கள் இதுநாள் வரை அனுபவித்தத் துன்பங்கள், சோதனைகள், சந்தித்த போர்கள், கொடுமைகள் ஆகிய அனைத்திலும் இஸ்லாமிய அழைப்புப் பணி ஒன்று மட்டுமே அடிப்படை நோக்கமாக இருந்தது.

அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கடிதம் எழுதுதல்

நபி (ஸல்) அவர்கள் உடன்படிக்கையை முடித்து ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பிய பின் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டின் இறுதியில் பல அரசர்களுக்குக் கடிதம் எழுதி இஸ்லாமின் பக்கம் அவர்களை அழைத்தார்கள்.
நபியவர்கள் அரசர்களுக்குக் கடிதம் எழுத முற்பட்டபோது ‘‘முத்திரை இல்லாத கடிதங்களை அரசர்கள் படிக்க மாட்டார்கள்'' என்று அவர்களிடம் கூறப்பட்டது. ஆகவே, நபியவர்கள் வெள்ளியினாலான மோதிரம் ஒன்றைத் தயார் செய்தார்கள். அதில் ‘முஹம்மது ரஸூலுல்லாஹ்' என்று பதித்தார்கள். அது மூன்று வரிகளாக இருந்தது. முஹம்மது என்று முதல் வயிலும், ரஸூல் என்று அடுத்த வயிலும், அல்லாஹ் என்று அதற்கடுத்த இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. (ஸஹீஹுல் புகாரி)
நபியவர்கள் இப்பணிக்காக தங்களது தோழர்களில் நன்கு அனுபவம் வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைத் தூதுவர்களாக அரசர்களிடம் அனுப்பினார்கள். ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு, முஹர்ரம் மாதம் தொடக்கத்தில், அதாவது கைபர் தாக்குதலுக்குச் சற்று முன்பு இந்தத் தூதுர்களை நபி (ஸல்) அனுப்பினார்கள் என பேராசிரியர் மன்சூர்பூ (ரஹ்) திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.
நபியவர்கள் எழுதிய கடிதங்களின் விவரங்கள் பின்வருமாறு:
1) ஹபஷா மன்னர் நஜ்ஜாஷிக்குக் கடிதம்
இந்த நஜ்ஜாஷியின் பெயர் ‘அஸ்ஹமா இப்னு அல்அப்ஜர்' ஆகும். ஹிஜ்ரி 6ன் கடைசியில் அல்லது ஹிஜ்ரி 7. முஹர்ரம் மாதத்தில் அம்ர் இப்னு உமய்யா ழம் (ரழி) மூலம் இவருக்காக கடிதமொன்றை எழுதி அனுப்பினார்கள். இமாம் தப் அக்கடிதத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் பற்றி கூறியிருக்கிறார்கள். அந்த வாசகங்களை ஆழமாக நாம் ஆராய்ந்து பார்க்கும் போது அக்கடிதம் ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் நபி (ஸல்) எழுதிய கடிதமாக இருக்காது. மாறாக, மக்காவிலிருக்கும் போது, ஜஅஃபரும் மற்ற தோழர்களும் ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்தபோது அவர்களுடன் கொடுத்தனுப்பிய கடிதமாக இருக்கும் என்பது தெரிய வருகிறது. ஏனெனில், அக்கடிதத்தின் இறுதியில் வரும் வாசகத்தில் ‘‘நான் உங்களிடம் எனது தந்தையின் சகோதரன் மகன் ஜஅஃபரை அனுப்பி இருக்கிறேன். அவருடன் முஸ்லிம்களில் ஒரு குழுவும் வருகிறது. அவர் உங்களிடம் வந்தால் அவரையும் அக்குழுவையும் விருந்தாளியாக கவனித்துக் கொள்ளுங்கள். அநியாயம் செய்வதை விட்டுவிடுங்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து இக்கடிதம் மக்காவில் இருக்கும் போது எழுதப்பட்டது என்று விளங்க முடிகிறது.
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) வாயிலாக இமாம் பைஹகி (ரஹ்) அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் நஜ்ஜாஷிக்கு எழுதிய கடிதத்தின் வாசகமாவது:
‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் ‘அஸ்ஹம்' என்ற நஜ்ஜாஷிக்கு எழுதப்படும் கடிதமாகும் இது. நேர்வழியைப் பின்பற்றி அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ அல்லது பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகுக!
நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாமை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்.
‘‘வேதமுடையவர்களே! அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம். அவனுக்கு யாதொன்றையும் இணைவைக்க மாட்டோம். அல்லாஹ்வை விடுத்து நம்மில் சிலர் சிலரைக் கடவுளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்ற நீங்களும் நாமும் ஒத்துக் கொண்ட விஷயத்திற்கு நீங்கள் வந்துவிடுங்கள். நீங்கள் இதைப் புறக்கணித்தால் நாங்கள் ‘முஸ்லிம்கள்' என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருந்துவிடுங்கள்.'' (அல்குர்ஆன் 3:64)
நீ (இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ள) மறுத்துவிட்டால் உனது சமுதாயத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத கிறிஸ்துவர்களின் குற்றமும் உம்மையே சாரும். (தலாயிலுந்நுபுவ்வா, முஸ்தத்ரகுல் ஹாகிம்)
மாபெரும் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹமீதுல்லாஹ்விற்கு சில காலத்திற்கு முன் ஒரு கடிதம் கிடைத்தது. அக்கடிதம் இமாம் இப்னு கய்’‘ (ரஹ்) குறிப்பிட்டிருக்கும் கடிதத்திற்கு முற்றிலும் ஒப்பாக இருக்கிறது. ஆனால். ஒரே ஒரு வார்த்தைதான் வித்தியாசமாக இருந்தது. மேலும், டாக்டர் ஹமீதுல்லாஹ் அவர்கள் அக்கடித்தை ஆராய்ச்சி செய்வதில் தனது பெரும் முயற்சியை செலவழித்ததுடன், அதிலுள்ள விஷயங்களைக் கண்டுபிடிப்பதற்கு பல அதிநவீன கருவிகளையும் பயன்படுத்தினார். அக்கடிதத்தைப் பற்றி தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அதாவது:
‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் நஜ்ஜாஷிக்கு எழுதும் கடிதம். நேர்வழியை பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். நிச்சயமாக நான் உமக்கு முன்பாக அல்லாஹ்வைப் புகழ்கிறேன். அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. அவன்தான் அரசன் அவன் மிகத் தூய்மையானவன் ஈடேற்றம் வழங்குபவன் பாதுகாவலன் கண்காணிப்பவன். நிச்சயமாக மர்யமின் மகன் ஈஸா (அலை) அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட உயிரும், அவனது வார்த்தையுமாக இருக்கிறார். அவன்தான் அவ்வார்த்தையைப் பரிசுத்தமான பத்தினி மர்யமுக்கு அனுப்பினான். அவர் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட உயிலிருந்தும், அவனுடைய ஊதுதலில் இருந்தும் உண்டான ஈஸாவை தனது கர்ப்பத்தில் சுமந்தார். எவ்வாறு அல்லாஹ் ஆதமை தனது கையினால் விஷேசமாக படைத்தானோ அவ்வாறே ஈஸாவையும் படைத்தான்.
தனித்தவனான துணையற்ற அல்லாஹ்வின் பக்கம் உன்னை அழைக்கிறேன். அவனுக்கு வழிப்படுவதிலும் வணங்குவதிலும் நீ எனக்கு இசைந்து என்னை நீ பின்பற்ற வேண்டும் என்று நான் உன்னை அழைக்கிறேன். நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதராவேன். மேலும், உம்மையும் உமது படையினரையும் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். நான் நிச்சயமாக எடுத்துரைத்து விட்டேன். உனக்கு உபதேசம் செய்து விட்டேன். எனது அறிவுரையை ஏற்றுக் கொள். நேர்வழியைப் பின்பற்றியவர்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.'' 
(ஜாதுல் மஆது, ‘‘ரஸூலே அக்ரம் கீ ஸியாஸி ஜிந்தகி - டாக்டர் ஹமீதுல்லாஹ்'')
இக்கடிதத்தை டாக்டர் அவர்கள் குறிப்பிட்டதற்குப் பின் இதுதான் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் நஜ்ஜாஷி மன்னருக்கு நபி (ஸல்) எழுதியனுப்பிய வாசகம் என்று உறுதியுடன் கூறுகிறார்கள். ஆனால், நாம் கூறுவது என்னவெனில், ஆதாரங்களை ஆராய்ந்த பின் இது நபி (ஸல்) அவர்களின் கடிதம்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இது ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்புதான் எழுதப்பட்டது என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. மாறாக, இப்னு இஸ்ஹாக் (ரஹ்) மூலமாக இமாம் பைஹகி அறிவிக்கும் கடிதமே ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் நபி (ஸல்) கிறிஸ்தவ அரசர்களுக்கும், கவர்னர்களுக்கும் எழுதியனுப்பிய கடிதங்களுக்கு ஒப்பாக இருக்கிறது. ஏனெனில், பொதுவாக கிறிஸ்தவர்களுக்கு நபி (ஸல்) எழுதும் கடிதத்தில் ‘‘வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக!... (அல்குர்ஆன் 3:64)
என்ற வசனத்தை குறிப்பிடுவார்கள். அந்த வசனம் இமாம் பைஹகி (ரஹ்) அறிவிக்கும் கடிதத்தில்தான் இடம்பெற்றுள்ளது. மேலும், அக்கடிதத்தில் நஜ்ஜாஷி மன்னன் பெயர் ‘அஸ்ஹமா' என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. டாக்டர் ஹமீதுல்லாஹ் குறிப்பிட்ட கடிதத்தைப் பற்றி ஆராயும் போது, அஸ்ஹமாவின் மரணத்திற்குப் பின் அவருடைய பிரதிநிதியாக பதவியேற்றவருக்கு நபி (ஸல்) எழுதியனுப்பிய கடிதமாக இருக்கலாம் என்பது எனது கருத்து. எனவேதான், நபியவர்கள் இக்கடிதத்தில் பெயரைக் குறிப்பிடவில்லை.
இவ்வாறு நான் விமர்சிப்பதற்கு வெளிப்படையான, உறுதியான ஆதாரம் ஏதும் என்னிடம் இல்லை. என்றாலும் இக்கடிதங்களையும் அதன் கருத்துகளையும் ஆராயும் போது நான் கூறும் இவ்விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாம். இதில் ஓர் ஆச்சரியம் என்னவெனில், டாக்டர் ஹமீதுல்லாஹ் ‘‘இப்னு இஸ்ஹாக் (ரஹ்) மூலமாக இமாம் பைஹகி (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள கடிதத்தை நபியவர்கள் நஜ்ஜாஷி மன்னர் அஸ்ஹமா மரணித்த பின் அவரது பிரதிநிதிக்கு எழுதினார்கள்'' என்று கூறுகிறார். ஆனால், இக்கடிதத்தில் அஸ்ஹமாவின் பெயர் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இவடமுள்ள கடிதத்திலோ அப்பெயர் கூறப்படவில்லை. அல்லாஹ்தான் உண்மையாக நன்கறிந்தவன்.
நபி (ஸல்) அவர்களின் கடிதத்தை அம்ரு இப்னு உமைய்யா, நஜ்ஜாஷியிடம் ஒப்படைத்தார். அதை நஜ்ஜாஷி பெற்று, தனது கண்ணில் ஒத்திக் கொண்டார். தனது சிம்மாசனத்தை விட்டும் கீழே இறங்கி, பூமியில் உட்கார்ந்து, ஜஅஃபர் இப்னு அபூதாலிபின் கையில் இஸ்லாமைத் தழுவினார். பின்பு நபியவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதன் வாசகமாவது:
‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதுக்கு அஸ்ஹமா நஜ்ஜாஷி எழுதுவது. அல்லாஹ்வின் நபியே! அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களுக்கு ஈடேற்றமும், அவனது கருணையும், அருள்களும் உண்டாகட்டும். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை.
அல்லாஹ்வின் தூதரே! ஈஸாவைக் குறித்து தாங்கள் வரைந்த தங்களின் மடல் எனக்குக் கிடைத்தது. வானம், பூமியின் இறைவன் மீது சத்தியமாக! ஈஸாவும் நீங்கள் கூறியதைவிட பேரீத்தம் பழத்தின் நார் அளவுகூட அதிகமாகத் தன்னைப் பற்றிக் கூறியதில்லை. நிச்சயமாக ஈஸா நீங்கள் கூறியவாறுதான் (அல்லாஹ்வின் வார்த்தையால் படைக்கப்பட்டவர்). நீங்கள் எங்களுக்கு அனுப்பிய விஷயங்களை நாங்கள் அறிந்து கொண்டோம். உங்கள் தந்தையின் சகோதரன் மகனுக்கும், உங்களது தோழர்களுக்கும் விருந்தோம்பல் செய்தோம். நிச்சயமாக நீங்கள் உண்மையானவர் உண்மைப்படுத்தப்பட்டவர் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறுகிறேன் நான் உங்களிடமும் உங்களது தந்தையின் சகோதரன் மகனிடமும் சத்திய வாக்குறுதி செய்து கொள்கிறேன் அகிலத்தார்களின் இறைவனுக்கு அடிபணிந்து இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறேன் என்று அவரிடம் வாக்குப் பிரமாணம் செய்து கொடுக்கிறேன்.''
ஜஅஃபர் (ரழி) அவர்களையும் அவர்களுடன் இருக்கும் முஹாஜிர்களையும் தன்னிடம் திரும்ப அனுப்புமாறு நபி (ஸல்) நஜ்ஜாஷியிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர் அம்ர் இப்னு உமய்யா ழம்யுடன் அவர்கள் அனைவரையும் இரு கப்பல்களில் அனுப்பி வைத்தார். அம்ர், அவர்களை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) கைபரில் இருந்தார்கள். (இப்னு ஹிஷாம்)
தபூக் போர் நடைபெற்ற பின் ஹிஜ்ரி 9, ரஜப் மாதத்தில் இந்த நஜ்ஜாஷி மன்னர் இறந்தார். அவர் இறந்த தினத்திலேயே அவன் மரணச் செய்தியை நபி (ஸல்) மக்களுக்கு அறிவித்தார்கள். அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். அவருக்குப் பின் மற்றொரு அரசர் அவரது அயணையில் அமர்ந்தார். அவருக்கும் நபி (ஸல்) மற்றொரு கடிதம் எழுதினார்கள். ஆனால், அவர் இஸ்லாமைத் தழுவினாரா? இல்லையா? என்பது சரிவரத் தெரியவில்லை. (ஸஹீஹ் முஸ்லிம்)
2) மிஸ்ரு நாட்டு மன்னருக்குக் கடிதம்
மிஸ்ரு (எகிப்து) மற்றும் இஸ்கந்தய்யா (அலெக்ஸாண்டியா)வின் மன்னரான ‘முகவ்கிஸ்' என்றழைக்கப்படும் ஜுரைஜ் இப்னு மத்தாவிற்கு நபி (ஸல்) கடிதம் அனுப்பினார்கள்.
(ரஹ்மத்துல் லில் ஆலமீன்)
அக்கடிதத்தில்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, கிப்திகளின் மன்னருக்கு எழுதுவது. நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.
நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. அல்லாஹ் உங்களுக்கு இருமுறை நற்கூலி வழங்குவான். நீங்கள் புறக்கணித்து விட்டால் கிப்தி இனத்தவர்களின் குற்றமும் உங்களையே சாரும்.
(‘‘வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' (என்று கூறுங்கள். நம்பிக்கை யாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள்.) (அல்குர்ஆன் 3:64) (ஜாதுல் மஆது)
இந்தக் கடிதத்தை எடுத்துச் செல்வதற்கு நபியவர்கள் ஹாதிப் இப்னு அபூ பல்தஆவை தேர்வு செய்தார்கள். ஹாதிப் (ரழி) அங்கு சென்றவுடன் அம்மன்னரைப் பார்த்து இவ்வாறு கூறினார்: ‘‘நிச்சயமாக உமக்கு முன் தன்னை மிக உயர்ந்த இறைவன் என்று சொல்லி வந்த ஒருவன் இங்கு இருந்தான். அல்லாஹ் அவனை நிரந்தரத் தண்டனையைக் கொண்டு தண்டித்தான். அல்லாஹ் அவனைக் கொண்டு பிறரையும், பின்பு அவனையும் தண்டித்தான். எனவே, நீ பிறரைக் கொண்டு படிப்பினை பெற்றுக் கொள். பிறர் உன்னைக் கொண்டு படிப்பினை பெறும்படி நடந்து கொள்ளாதே!''
இதைக் கேட்ட முகவ்கிஸ் ‘‘நிச்சயமாக எங்களுக்கென்று ஒரு மார்க்கம் இருக்கிறது. நாங்கள் அம்மார்க்கத்தை விடமாட்டோம். ஆனால், அதைவிட சிறந்த ஒரு மார்க்கம் கிடைத்தால் விட்டு விடுவோம்'' என்று கூறினார். அப்போது ஹாதிப் (ரழி) அதற்கு பின்வரும் பதிலை கூறினார்:
நாங்கள் உம்மை இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைக்கிறோம். இதைத் தவிர மற்ற மார்க்கங்களின் தேவை இனி அறவே இருக்காது. இதுவே அனைத்திற்கும் போதுமான, பரிபூரணமான மார்க்கமாகும். நிச்சயமாக இந்த நபி மக்களுக்கு அழைப்பு கொடுத்தார்கள். அம்மக்களில் குறைஷிகள் அவருடன் மிகக் கடுமையாக நடந்து கொண்டனர். யூதர்கள் அவரைப் பகைத்தனர். கிறிஸ்துவர்கள் அவருடன் நட்பு கொண்டனர்.
சத்தியமிட்டுக் கூறுகிறேன்! நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி நபி மூஸா (அலை) அவர்கள் நற்செய்தி அறிவித்தார்கள். அவ்வாறே நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி நபி ஈஸா (அலை) அவர்கள் நற்செய்தி அறிவித்தார்கள். உம்மை நாங்கள் குர்ஆனின் பக்கம் அழைப்பது நீங்கள் தவ்றாத் வேதமுடையவர்களை இன்ஜீலின் பக்கம் அழைப்பதைப் போன்றுதான். ஒவ்வொரு நபி அனுப்பப்படும் போதும் அவரது காலத்திலுள்ள மக்களெல்லாம் அந்த நபியின் சமுதாயமாகக் கருதப்படுவார்கள். எனவே, அம்மக்கள் அந்த நபிக்கு கீழ்ப்படிந்து நடப்பது கடமையாகும். நீங்கள் இந்த நபி அனுப்பப்பட்ட காலத்தைச் சேர்ந்தவர்கள். (எனவே நீர் அவரை பின்பற்றியாக வேண்டும்) ஈஸாவின் மார்க்கத்தைப் பின்பற்றுவதிலிருந்து நாங்கள் உம்மைத் தடுக்கவில்லை. மாறாக, நாங்களும் உமக்கு அதைத்தான் ஏவுகிறோம்.''
இந்தப் பதிலைக் கேட்ட முகவ்கிஸ், ‘‘இந்த நபியின் விஷயத்தில் நான் சிந்தித்து விட்டேன். அவர் வெறுப்பானவற்றை ஏவவில்லை, அல்லது விருப்பமான ஒன்றை தடுக்கவுமில்லை. வழிகெட்ட சூனியக்காரராகவோ, பொய் சொல்லும் குறிகாரராகவோ நான் அவரைக் கருதவில்லை. மறைவாக பேசப்படும் இரகசியங்களை வெளிப்படுத்தும் நபித்துவத்தின் அடையாளம் அவரிடம் இருக்கக் கண்டேன். இருந்தாலும் நான் மேலும் யோசித்துக் கொள்கிறேன்'' என்று ஹாத்திபுக்கு பதில் கூறினார். பின்பு, நபி (ஸல்) அவர்களின் கடிதத்தை யானை தந்தத்தில் வைத்து மூடி முத்திரையிட்டு தனது அடிமை பெண்களிடம் கொடுத்து பாதுகாத்து வைக்கச் சொன்னார். பின்பு அரபியில் எழுதும் தனது எழுத்தாளரை அழைத்து நபியவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதுமாறு கூறினார்.
‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் எழுதுகிறேன். அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுக்கு கிப்திகளின் அரசர் முகவ்கிஸ் எழுதுவது. உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டுமாக! நான் உங்களது கடிதத்தைப் படித்தேன். அதில் நீங்கள் கூறியிருப்பதையும், நீங்கள் எதன் பக்கம் அழைக்கிறீரோ அதையும் நான் புரிந்து கொண்டேன். ஒரு நபி மீதமிருக்கிறார் என்பது எனக்கு நன்கு தெரியும். அவர் ஷாம் தேசத்திலிருந்து வருவார் என்றுதான் எண்ணியிருந்தேன். நான் உங்களது தூதரைக் கண்ணியப்படுத்தினேன். மதிப்பும் மரியாதையுமிக்க இரண்டு அடிமைப் பெண்களையும் சில ஆடைகளையும் நான் உங்களுக்கு அனுப்பியுள்ளேன். நீங்கள் வாகனிப்பதற்காக ஒரு கோவேறு கழுதையையும் அன்பளிப்பாக அளிக்கிறேன். உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக.''
இக்கடிதத்தில் இவர் வேறு எதையும் குறிப்பிடவில்லை. இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. இரண்டு அடிமைப் பெண்களில் ஒருவர் ‘மாயா', மற்றொருவர் ‘சீரீன்'. கோவேறு கழுதையின் பெயர் ‘துல்துல்' ஆகும். பிற்காலத்தில் வந்த மன்னர் முஆவியா (ரழி) அவர்களின் காலம் வரை துல்துல் உயிருடனிருந்தது. (ஜாதுல் மஆது)
மாயாவை நபி (ஸல்) தனக்காக வைத்துக் கொண்டார்கள். இவர் மூலம் நபியவர்களுக்கு ‘இப்றாஹீம்' என்ற குழந்தை பிறந்தது. சீரீனை நபி (ஸல்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழி) என்ற அன்சாரி தோழருக்கு வழங்கினார்கள்.

3) பாரசீக மன்னருக்குக் கடிதம்
நபி (ஸல்) அவர்கள் பாரசீக மன்னர் ‘கிஸ்ரா'விற்கும் கடிதம் எழுதினார்கள். அந்த கடிதமாவது:
‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பாரசீகர்களின் மன்னர் கிஸ்ராவிற்கு எழுதும் கடிதம். நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும் மனைவியாகவோ பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்!
நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்ட தூதராவேன். உயிருள்ளவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, இறைநிராகரிப் பாளர்களுக்கு அவனது தண்டனையின் வாக்கு உறுதி ஆவதற்காக என்னை அவன் தூதராக அனுப்பியிருக்கிறான். நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள் நீங்கள் மறுத்துவிட்டால் மஜூஸிகளின் (நெருப்பை வணங்குபவர்களின்) குற்றமெல்லாம் உங்களையே சாரும்.''
இக்கடிதத்தை எடுத்துச் செல்வதற்கு ‘அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மி' என்ற தோழரைத் தேர்வு செய்தார்கள். இவர் பஹ்ரைன் நாட்டு மன்னரிடம் இந்தக் கடிதத்தைக் கொடுத்து, அவர் அக்கடிதத்தை தனது ஆள் மூலமாக கிஸ்ராவிடம் அனுப்பினாரா அல்லது அப்துல்லாஹ்வே நேரடியாக கிஸ்ராவிடம் கொடுத்தாரா என்ற விபரம் அறியப்படவில்லை. எதுவாக இருப்பினும், முடிவில் அக்கடிதம் கிஸ்ராவிடம் சென்று அதை அவன் படித்து விட்டு கிழித்தெறிந்தான். பின்பு பெருமையுடன் ‘‘எனது குடிமக்களில் ஒரு கேவலமான அடிமை எனது பெயருக்கு முன் அவரது பெயரை எழுதுவதா?'' என்று கூறினான்.
இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்த போது ‘‘அல்லாஹ் அவனது ஆட்சியை கிழித்தெறியட்டும்'' என்று கூறினார்கள். அவ்வாறே நடக்கவும் செய்தது. இதற்குப் பின் கிஸ்ரா யமன் தேசத்திலுள்ள தனது கவர்னருக்குக் கடிதம் எழுதினான். அதில் ‘‘ஜாஸில் உள்ள இவரிடம் நல்ல துணிச்சலான இரு வீரர்களை அனுப்பி வை. அவர்கள் அவரை என்னிடம் கொண்டு வரட்டும்'' என்று குறிப்பிட்டான். இக்கடிதம் கிடைத்தவுடன் கவர்னர் பாதான் தன்னிடமுள்ள வீரர்களிலிருந்து இருவரைத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தான். மேலும் அவ்விருவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். அதில் ‘‘இக்கடிதம் கிடைத்தவுடன் நபியவர்கள் இந்த இருவருடன் உடனே புறப்பட்டு கிஸ்ராவிடம் செல்ல வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தான்.
வந்த இருவரில் ஒருவன் பெயர் கஹ்ர்மானா பானவய். இவன் கணக்கு மற்றும் ஃபார்சி மொழியை அறிந்தவன். இரண்டாமவன் பெயர் குர்குஸ்ரு.
இவ்விருவரும் மதீனா வந்து நபியவர்களைச் சந்தித்தார்கள். அவ்விருவல் ஒருவன் நபியவர்களிடம் ‘‘அரசர்களுக்கெல்லாம் அரசரான கிஸ்ரா தனது கவர்னர் பாதானுக்கு கடிதம் எழுதினார். அதில் உம்மை அழைத்து வருவதற்காக ஆட்களை உம்மிடம் அனுப்பும்படி ஆணையிட, பாதான் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார். நீர் என்னுடன் புறப்பட வேண்டும்'' என்று கூறியதுடன் நபியவர்களை எச்சரிக்கும்படி பல வார்த்தைகளையும் கூறினான். நபி (ஸல்) அவற்றைப் பொறுமையாக கேட்டு விட்டு, தன்னை நாளை சந்திக்குமாறு அவ்விருவரிடமும் கூறினார்கள்.
இக்காலக் கட்டத்தில் மன்னர் கைசன் படையுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த கிஸ்ராவின் படையினர் கடும் தோல்வியடைந்தனர். இதற்குப் பின் கிஸ்ராவுக்கு எதிராக அவனது குடும்பத்திலிருந்தே பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. கிஸ்ராவின் மகன் ஷீர்வை தகப்பனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இச்சம்பவம் ஹிஜ்ரி 7, ஜுமாதா அல் ஊலா பிறை 10, செவ்வாய் இரவு நடந்தது. அச்சம்பவம் நடந்த அதே நேரத்தில் அதை வஹியின் வாயிலாக நபி (ஸல்) அறிந்து கொண்டார்கள். (ஃபத்ஹுல் பாரி, தாக் இப்னு கல்தூன்)
மறுநாள் இரு தூதர்களும் வந்தபோது நபி (ஸல்) அச்செய்தியை அவர்களுக்குக் கூறினார்கள். அதற்கு அவ்விருவரும் ‘‘நீர் என்ன பேசுகிறாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா? இதற்கு முன் மிக இலகுவான தண்டனையைத்தான் நாம் உம்மிடம் கூறியுள்ளோம். நீர் சொன்ன இச்செய்தியை நாங்கள் எழுதி கவர்னருக்கு அனுப்பலாமா?'' என்று கூறினர். அதற்கு நபியவர்கள் ‘‘ஆம்! அவருக்கு இச்செய்தியை என் சார்பாக அனுப்பி வையுங்கள்.'' என்றும் ‘‘எனது மார்க்கமும், ஆட்சியும் கிஸ்ராவின் ஆட்சி எதுவரை இருக்கிறதோ அதுவரை வந்தடையும். எதுவரை குதிரையும் ஒட்டகமும் செல்ல முடியுமோ அதுவரை சென்றடையும். அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அவரது கட்டுப்பாட்டில் உள்ளதை அவருக்கே சொந்தமாக்கி விடுவேன், அவரது இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவரையே அரசனாக்கி விடுவேன்'' என்றும் சொல்லுங்கள் என்றார்கள்.
அந்த இருவரும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து புறப்பட்டு தங்களது கவர்னர் பாதானிடம் வந்தனர். பிறகு நபி (ஸல்) கூறி அனுப்பிய செய்தியைக் கூறினார்கள். சிறிது நேரத்திற்குள் ஷீர்வையின் கடிதம் ஒன்று அவரிடம் வந்தது. அதில்: ‘‘நான் எனது தந்தையைக் கொன்று விட்டேன். எனது தந்தை தனது கடிதத்தில் குறிப்பிட்ட மனிதர் விஷயத்தில் சற்று பொறு. எனது அடுத்த கட்டளை வரும் வரை அவரை பழித்துப் பேசிவிடாதே'' என்று எழுதப்பட்டிருந்தது. (தாரீகுல் உமமில் இஸ்லாமிய்யா, ஃபத்ஹுல் பாரி)
4) ரோம் நாட்டு மன்னருக்குக் கடிதம்
நபியவர்கள் ரோமின் மன்னர் (ஹெர்குலஸ்) ‘ர்கலுக்கு' எழுதிய கடிதத்தின் வாசகத்தை இமாம் புகாரி (ரஹ்) ஒரு நீண்ட ஹதீஸுக்கு இடையில் குறிப்பிடுகிறார்கள். அது,
‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்,.. அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, ரோமின் மன்னர் ர்கலுக்கு எழுதுவது: நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய் இஸ்லாமை ஏற்றுக்கொள் அல்லாஹ் உனக்கு கூலியை இருமுறை வழங்குவான் நீ புறக்கணித்து விட்டால் உமது கூட்டத்தினர் அனைவரின் குற்றமும் உன்னையே சாரும்.
வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள். (அல்குர்ஆன் 3:64)
இக்கடிதத்தை எடுத்துச் செல்ல திஹ்யா இப்னு கலீஃபா அல்கல்பி என்ற தோழரைத் தேர்வு செய்தார்கள். அவரிடம் ‘‘நீங்கள் இதை புஸ்ராவின் கவர்னரிடம் கொடுங்கள், கவர்னர் அக்கடிதத்தை மன்னர் கைஸரிடம் கொடுக்கட்டும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.
இது தொடர்பாக இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் நீண்ட அறிவிப்பை இங்கு பார்ப்போம்:
அது, அபூ ஸுஃப்யான் மற்றும் குறைஷி காஃபிர்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஹுதை பிய்யாவில் ஒப்பந்தம் செய்திருந்த காலம். அக்காலத்தில் அபூ ஸுஃப்யானும் குறைஷி காஃபிர்களும், வணிகர்களாக ஷாம் (சிரியா) சென்றிருந்தார்கள். அபூ ஸுஃப்யான் தனது சக தோழர்களுடன் இருக்கும் போது அவரிடம் ஹெர்குலிஸ் (ஹிர்கல்) மன்னன், ஒரு தூதுவனை அனுப்பி ரோம் நகரப் பெருந்தலைவர்கள் கூடியிருக்கும் மஸ்ஜிதுல் அக்ஸாவில் தனது அவைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். (ஹிர்கல் ரோமிலிருந்து அங்கு அப்போது வந்திருந்தார்.)
அபூ ஸுஃப்யான் தனது குழுவுடன் அங்கு வரவே அவர்களை ஹிர்கல் வரவேற்று அமரவைத்தார். பிறகு தனது மொழிபெயர்ப்பாளரையும் அவைக்கு வரவழைத்தார். இதற்குப் பின் நாம் நேரடியாக அபூ ஸுஃப்யான் கூறுவதைக் கேட்போம்.
மன்னர்: தன்னை நபி என்று கூறும் அந்த மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?
அபூஸுஃப்யான்: அவர்களுக்கு மிக நெருங்கிய உறவினன் நான்தான்.
மன்னர்: அவரை என்னருகே கொண்டு வாருங்கள் அவருடைய தோழர்களை அவருக்கு பின் பக்கம் இருக்க வையுங்கள்.
(தனது மொழிபெயர்ப்பாளடம்) தன்னை நபியெனக் கூறும் அந்த மனிதரை (நபியை)ப் பற்றி இவ (அபூஸுஃப்யானி)ரிடம் நான் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் (அபூ ஸுஃப்யான் தோழர்களான) நீங்கள் இவர் பொய் கூறுகிறார் என்று தெரிவிக்கவும். இதனை மொழிபெயர்த்து இவர்களிடம் கூறு.
அபூஸுஃப்யான் (மனதிற்குள்): நான் பொய் கூறுவதாக என் நண்பர்கள் சொல்லி விடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் எனக்கு இல்லாவிட்டால் அல்லாஹ்வின் மீதாணையாக! நபியவர்களைப் பற்றி நான் பொய் சொல்லியிருப்பேன்.
மன்னர்: உங்களில் அவரது குடும்பம் எப்படிப்பட்டது?
அபூஸுஃப்யான்: அவர் எங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்.
மன்னர்: இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: ‘‘இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?''.
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா?
அபூஸுஃப்யான்: எளியவர்களே பின்பற்றுகிறார்கள்.
மன்னர்: அவர்கள் அதிகரிக்கின்றனரா? குறைகின்றனரா?
அபூஸுஃப்யான்: இல்லை! அதிகரிக்கின்றனர்.
மன்னர்: அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறுகின்றனரா?
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய் பேசுவார் என சந்தேகப் பட்டதுண்டா?
அபூஸுஃப்யான்: இல்லை.
மன்னர்: அவர் மோசடி செய்ததுண்டா?
அபூஸுஃப்யான்: இல்லை. நாங்கள் அவரிடம் தற்போது ஓர் உடன்படிக்கை செய்திருக் கிறோம். அதன்படி அவர் செயல்படுவாரா அல்லது மாட்டாரா என்பது எங்களுக்குத் தெரியாது. (நபியைப் பற்றி குறை கூற இந்த வாக்கியத்தைத் தவிர வேறு வாக்கியத்தை என் பேச்சின் இடையே சேர்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.)
மன்னர்: அவருடன் போர் செய்துள்ளீர்களா?
அபூஸுஃப்யான்: ஆம்!
மன்னர்: அவருடன் நீங்கள் புரிந்த போர் முடிவு எவ்வாறு இருந்தது?
அபூஸுஃப்யான்: அவருக்கும் நமக்கும் இடையே போர் ஏற்றம் இறக்கமாக, அதாவது சில நேரம் அவர் எங்களை வெல்வார் சிலநேரம் நாங்கள் அவரை வெல்வோம்.
மன்னர்: அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்?
அபூஸுஃப்யான்: அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணை ஆக்காதீர்கள். உங்கள் முன்னோர் கூறியதை விட்டுவிடுங்கள் என்று கூறி தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளைக் கட்டளையிடுகிறார்.
அனைத்தையும் ஆழ்ந்து கேட்ட மன்னர் தனது மொழிபெயர்ப்பாளடம் தான் இனி பேசுவதை மொழிபெயர்த்துக் கூறச் சொன்னார். அதாவது:
உன்னிடம் அவரது குடும்பம் பற்றிக் கேட்டேன். ‘‘அவர் உங்களில் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்'' என்றாய். இவ்வாறுதான் இறைத்தூதர்கள், சமுதாயத்தில் நல்ல குடும்பத்தில் அனுப்பப்படுவார். அடுத்து, உன்னிடம் ‘‘இதற்கு முன்பு (இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லை உங்களில் யாராவது சொல்லியிருக்கின்றனரா?'' எனக் கேட்டேன், ‘‘இல்லை'' என்றாய். இச்சொல்லை இதற்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால் அவரைப் பின்பற்றி இவரும் கேள்விப்பட்டதை கூறுகிறார் என்று சொல்லியிருப்பேன்.
அடுத்து உன்னிடம் ‘‘இவரது முன்னோர்களில் யாராவது அரசராக இருந்தாரா?'' எனக் கேட்டேன். நீ ‘‘இல்லை'' என்றாய். அங்ஙனம் இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால் அவருடைய முன்னோன் அரசாட்சியை ஆசைப்படுகிறார் என்றிருப்பேன். அடுத்து உன்னிடம் ‘‘(இறைவன் ஒருவன். நான் அவனது தூதன் என்ற) இச்சொல்லைச் சொல்வதற்கு முன்பு அவர் பொய்யுரைப்பார் என சந்தேகப்பட்டதுண்டா?'' எனக் கேட்டேன். நீ ‘‘இல்லை'' என்றாய். மக்களிடம் பொய்யுரைக்கத் துணியாதவர் நிச்சயம் அல்லாஹ்வின் மீது பொய்யுரைக்க மாட்டார் என்பதை நன்கு புரிந்துகொண்டேன். அடுத்து அவரை பின்பற்றுபவர்கள் மக்களில் சிறந்தவர்களா அல்லது எளியவர்களா''? என்று உன்னிடம் கேட்டேன் ‘‘அவரை சாதாரண எளிய மக்கள்தான் பின்பற்றுகிறார்கள்'' என்று கூறினாய். (பெரும்பாலும் ஆரம்பத்தில்) அத்தகைய மக்கள்தான் இறைத்தூதர்களைப் பின்பற்றுவார்கள்.
அடுத்து உன்னிடம் ‘‘அவரைப் பின்பற்றுபவர்கள் அதிகரிக்கின்றனரா குறைகின்றனரா'' என்று கேட்டேன். ‘‘அதிகரிக்கின்றனர்'' என்றாய் நீ. அவ்வாறே இறை நம்பிக்கை முழுமை அடையும்வரை அது வளர்ந்து கொண்டே இருக்கும். அடுத்து உன்னிடம் ‘‘அவரது மார்க்கத்தில் இணைந்த பின் யாராவது அம்மார்க்கத்தின் மீது வெறுப்பு கொண்டு மதம் மாறி இருக்கின்றனரா'' என்று கேட்டேன். நீ ‘‘இல்லை'' என்றாய். ஆம்! இறை நம்பிக்கையின் நிலை அவ்வாறுதான் இருக்கும். அதன் தெளிவு உள்ளத்துடன் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டால் எவரும் அதைவிட்டு வெளியேற மாட்டார்கள். அடுத்து உன்னிடம் ‘‘அவர் மோசடி செய்ததுண்டா''? என்று கேட்டேன். நீ ‘‘இல்லை'' என்றாய். அவ்வாறே இறைத்தூதர்கள் மோசடி செய்ய மாட்டார்கள்.
அடுத்து உன்னிடம் அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்? என்று கேட்டேன். ‘‘அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள் என்று கட்டளையிட்டு, சிலை வணக்கத்தை விட்டு உங்களைத் தடுக்கிறார். மேலும் தொழுகை, வாய்மை, கற்பொழுக்கம், உறவைப் பேணுதல் போன்ற நற்பண்புகளை ஏவுகிறார்'' என்று கூறினாய். ‘‘நீ கூறியவை அனைத்தும் உண்மையாக இருந்தால் என்னிரு கால்களுக்குக் கீழுள்ள இவ்விடங்களை அவரே அரசாள்வார். நிச்சயம் அவர் தோன்றுவார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், உறுதியாக அவர் உங்களிலிருந்து வருவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவரைச் சென்றடையும் வழி எனக்குத் தெரிந்திருப்பின் சிரமம் பாராது அவரை சந்திப்பேன். நான் அவரருகில் இருந்தால் அவருடைய கால்களைக் கழுவுவேன்'' என்றார். பின்பு புஸ்ராவின் ஆளுநர் வாயிலாக தனக்காக திஹ்யாவிடம் நபி (ஸல்) கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தன்னிடம் கொடுக்க வேண்டினார். ஆளுநர் அதனை மன்னனிடம் தந்தார். முன்னாள் நாம் கண்ட அக்கடிதத்தை மன்னர் படித்து முடித்தபோது அங்கே மக்களின் சப்தங்கள் உயர்ந்தன. கூச்சல்கள் அதிகமாயின.
அபூ ஸுஃப்யான் கூறுகிறார்: ‘‘எங்களை வெளியேற்றும்படி கூற நாங்கள் வெளியேற்றப் பட்டோம். நாங்கள் வெளியேறும் போது நான் என் தோழர்களிடம் கூறினேன்: ரோமர்களின் மன்னன்கூட அவரைக் கண்டு அஞ்சும் அளவுக்கு அபூ கபிஷாவின்" பேரனுடைய காரியம் உறுதியாகி விட்டது'' என்று அபூஸுஃப்யான் கூறினார்.
அப்போதே அல்லாஹ்வின் தூதர் விஷயத்தில் நிச்சயம் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நான் நம்பிக்கையுடன் இருந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்கு இஸ்லாமை ஏற்க அருள் செய்தான் என்று அபூஸுஃப்யான் கூறினார். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களின் கடிதம் கைஸர் மன்னரிடம் எப்படிப்பட்ட பிரதிபலிப்பை ஏற்படுத்தியது என்பதை அபூஸுஃப்யான் நேரில் பார்த்து புரிந்து கொண்டதையே இவ்வாறு கூறினார்.
மேலும், நபி (ஸல்) அவர்களின் தூதுவர் திஹ்யாவிற்கு மன்னர் கைஸர் பெரும் செல்வத்தையும் உயர்ந்த ஆடைகளையும் கொடுத்து கௌரவித்தார். அந்தளவுக்கு நபி (ஸல்) அவர்களின் கடிதம் அவரிடம் மாறுதலை ஏற்படுத்தியது. திஹ்யா (ரழி) திரும்ப மதீனா நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வழியில் ‘ஸ்மா' என்ற இடத்தில் ஜுதாம் கிளையைச் சேர்ந்த சிலர் அவன் பொருட்கள் அனைத்தையும் வழிப்பறி செய்து கொண்டனர். பின்பு மதீனா வந்து சேர்ந்த திஹ்யா (தனது இல்லம் செல்வதற்கு முன்) நேராக நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து நடந்ததைக் கூறினார். உடனே நபியவர்கள் 500 வீரர்களை ஜைது இப்னு ஹாஸாவின் தலைமையில்ஹிஸ்மாவை நோக்கி அனுப்பினார்கள். இந்த ‘ஸ்மா' என்பது வாதில் குர்ராவை அடுத்துள்ள ஊராகும். அங்கு சென்ற ஜைது (ரழி) அவர்கள் ஜுதாம் கிளையினரைத் தாக்கி அதிகமானவர்களைக் கொன்றார்கள். பின்பு அக்கிளையினரின் கால்நடைகளையும் பெண்களையும் அழைத்துக் கொண்டு மதீனா வந்து சேர்ந்தார்கள். அதில் 1000 ஒட்டகங்களும், 5000 ஆடுகளும், கைதிகளில் பெண்கள் சிறுவர்களென 100 பேர்களும் இருந்தனர்.
ஏற்கனவே ஜுதாம் கிளையினர் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்திருந்தனர். எனவே, இக்கிளையினரின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான ஜைது இப்னு ஃபாஆ நபி (ஸல்) அவர்களிடம் இவ்வழக்கைக் கொண்டு வந்தார். இவரும், இவன் கிளையைச் சேர்ந்த மற்றும் சிலரும் இதற்கு முன்பே இஸ்லாமைத் தழுவியிருந்தனர். இவர்கள் தங்களது ஜுதாம் கிளையினர் திஹ்யாவை வழிப்பறி செய்த போது தங்களால் முடிந்தளவு திஹ்யாவைப் பாதுகாத்தனர். எனவே, நபியவர்கள் இவர்களின் கோரிக்கையை ஏற்று ஜைது இப்னு ஹாஸா கொண்டு வந்திருந்த பொருட்களையும் கைதிகளையும் திரும்பக் கொடுத்து விட்டார்கள்.
போர்களைப் பற்றிக் குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் இந்நிகழ்ச்சியை ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன் நடந்ததாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அது தவறாகும். ஏனெனில், நபியவர்கள் கைஸர் மன்னருக்கு ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்தான் கடிதம் அனுப்பினார்கள். எனவே, ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்தான் இச்சம்பவம் நடந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று இப்னுல் கய்’‘ (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.
5) பஹ்ரைன் நாட்டு ஆளுநருக்குக் கடிதம்
பஹ்ரைன் நாட்டு ஆளுநர் ‘அல்முன்திர் இப்னு ஸாவி' என்பவருக்கு இஸ்லாமின் பக்கம் அழைப்புக் கொடுத்து நபி (ஸல்) கடிதம் எழுதினார்கள். அக்கடிதத்தை அலா இப்னு ஹள்ரமி என்ற தோழர் மூலம் அனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களின் கடிதத்தைப் படித்துப் பார்த்த பின்பு அவர் நபியவர்களுக்குப் பதில் எழுதினார். ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களது கடிதத்தை பஹ்ரைன் நாட்டு மக்களுக்கு முன் நான் படித்துக் காட்டினேன். அவர்களில் சிலர் இஸ்லாமால் கவரப்பட்டு அதை விரும்பி ஏற்றுக் கொண்டனர். எனது நாட்டில் மஜுஸிகளும் யூதர்களும் இருக்கின்றனர். எனவே, நான் என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு நடக்க வேண்டும்? என எனக்குக் கட்டளை பிறப்பியுங்கள்'' என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு நபி (ஸல்) அவர்களும் பின்வரும் பதில் எழுதியனுப்பினார்கள்.
‘‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, முன்திர் இப்னு ஸாவிக்கு எழுதிக் கொள்வது. உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! உங்களுக்கு முன் நான் அல்லாஹ்வைப் புகழ்கிறேன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. முஹம்மது அவனது அடிமையும் அவனது தூதருமாயிருக்கின்றார் என்று நான் சாட்சி கூறுகிறேன். இதற்குப் பின் உங்களுக்கு நான் அல்லாஹ்வை நினைவூட்டுகிறேன். யாரொருவர் நன்மையை நாடுகிறாரோ அந்த நன்மையின் கூலி அவரையே சாரும். யார் நான் அனுப்பும் தூதர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்து, அவர்கள் கூறும் விஷயங்களைப் பின்பற்றுகிறாரோ அவர் எனக்குக் கீழ்ப்படிந்து நடந்தவராவார். யார் அவர்களுக்கு நன்மை செய்கிறாரோ அவர் எனக்கு நன்மை செய்தவராவார். நான் அனுப்பிய தூதர்கள் உங்களைப் பற்றி நல்லதையே கூறினார்கள். நீங்கள் உங்களது கூட்டத்தினருக்குச் செய்த பரிந்துரையை நான் ஏற்றுக் கொள்கிறேன். இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களுக்கு அவர்கள் முஸ்லிமாக மாறும் போது அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும் அப்படியே கொடுத்து விடுங்கள். அவர்களில் குற்றமிழைத்திருந்தவர்களை நான் மன்னித்து விட்டேன். எனவே, நீங்களும் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் சீர்திருத்தம் செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் நாம் உங்களை உங்களது பதவியிலிருந்து அகற்ற மாட்டோம். யார் தனது யூத அல்லது மஜூஸி மதத்தில் நிலையாக இருந்து விடுகிறாரோ அவர் ஜிஸ்யா (வரி) செலுத்த வேண்டும்.'' இவ்வாறு அதில் குறிப்பிட்டார்கள்.
6) யமாமா நாட்டு அரசருக்குக் கடிதம்
இவர் பெயர் ‘ஹவ்தா இப்னு அலீ' ஆகும். நபி (ஸல்) அவர்கள் இவருக்கு எழுதிய கடிதத்தின் வாசகமாவது:
‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹவ்தா இப்னு அலீக்கு எழுதிக் கொள்வது. நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.''
இக்கடிதத்தை அனுப்புவதற்கு நபி (ஸல்) ஸலீத் இப்னு அம்ர் அல் ஆமி (ரழி) அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஸலீத் (ரழி) இந்த முத்திரையிட்ட கடிதத்தை எடுத்துக் கொண்டு ஹவ்தாவிடம் வந்தபோது, அவர் ஸலீதை வரவேற்று தனது விருந்தினராகத் தங்க வைத்தார். ஸலீத் (ரழி) அவருக்கு அக்கடிதத்தைப் படித்துக் காட்டினார். அவர் அதற்குச் சிறிய அளவில் மறுப்பு தெரிவித்து விட்டு பதில் ஒன்றை எழுதினார். அதில், ‘‘நீர் அழைக்கும் விஷயம் எவ்வளவு அழகானது, அற்புதமானது - பொதுவாக அரபிகள் எனக்குப் பயந்து நடக்கிறார்கள். உமது அதிகாரத்தில் எனக்கும் சில பங்கைக் கொடுத்தால் நான் உம்மைப் பின்பற்றுகிறேன்'' என்று கூறினார்.
இக்கடிதத்துடன் ஸலீத்துக்கு வெகுமதிகளையும் அன்பளிப்புகளையும் கொடுத்து ‘ஹஜர்' என்ற இடத்தில் நெய்யப்பட்ட உயர்ந்த ஆடைகளையும் அவருக்கு அணிவித்தார்.
இவையனைத்தையும் எடுத்துக் கொண்டு ஸலீத் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்த செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அக்கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டு ‘‘அவன் பூமியில் சிறுபகுதியைக் கேட்டாலும் கொடுக்க மாட்டேன். அவனும் நாசமாகி விட்டான். அவனது அதிகாரத்திற்கு உட்பட்டதும் நாசமாகி விட்டது'' என்றார்கள். நபியவர்கள் மக்காவை வெற்றி கொண்டு திரும்பிய போது ‘ஹவ்தா' இறந்துவிட்ட செய்தியை ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். அப்போது நபி (ஸல்), ‘‘நிச்சயமாக யமாமாவில் தன்னை நபி என்று கூறும் ஒருவன் உருவாகுவான். அவன் எனது மரணத்துக்குப் பின் கொல்லப்படுவான்'' என்றார்கள். ஒருவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவனை யார் கொல்வார்? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் ‘‘நீரும் உமது தோழர்களும்'' என்றார்கள். பின்னாளில் நபி (ஸல்) கூறியவாறே நடந்தது.
7) ஸிரியா நாட்டு மன்னருக்குக் கடிதம்
இவர் பெயர் ‘ஹாரிஸ் இப்னு அபூ ஷமீர் அல்கஸ்ஸானி' ஆகும். நபி (ஸல்) இவருக்கு எழுதிய கடிதமாவது:
‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர் வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.''
அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு ‘‘என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை. கடுங்கோபம் கொண்ட அவன் கைஸர் மன்னரிடம் நபியவர்கள் மீது போர் தொடுக்க அனுமதி கேட்டான். ஆனால், கைஸர் அவனைத் தடுத்து விட்டார். இதற்குப் பின் கடிதம் கொண்டு வந்த ஷுஜாஃ இப்னு வஹபுக்கு அன்பளிப்பாக ஆடைகளையும் வழிசெலவுகளையும் கொடுத்து அழகிய முறையில் ஹாரிஸ் அனுப்பி வைத்தான்.
8) ஓமன் நாட்டு அரசருக்குக் கடிதம்
நபியவர்கள் ஓமன் நாட்டு அரசர் ‘ஜைஃபர்' மற்றும் அவரது சகோதரர் ‘அப்து'க்குக் கடிதம் அனுப்பினார்கள். அதன் வாசகமாவது:
‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, அல் ஜுலந்தாவின் மகன்களான ஜைஃபர் மற்றும் அப்துக்கு எழுதுவது. நேர்வழியை பின்பற்றுபவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! நான் உங்களிருவருக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுக்கின்றேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள். நான் மக்கள் அனைவருக்கும் அனுப்பப் பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். உயிருடன் இருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்கும், அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு நிச்சயம் வேதனை உண்டு என்பதை அறிவிப்பதற்கும் அல்லாஹ் என்னைத் தூதராக அனுப்பியிருக்கின்றான். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.''
இக்கடிதத்தை அம்ர் இப்னு ஆஸ் (ரழி) கொண்டு சென்றார். இப்போது நாம் இந்த நிகழ்ச்சியை குறித்து அம்ர் (ரழி) கூறுவதைக் கேட்போம்.
‘‘நான் ஓமன் சென்று முதலில் அப்தை சந்தித்தேன். ஏனெனில், அப்துதான் இருவரில் சாந்த குணமும் புத்திசாலித்தனமும் உடையவர். நான் அவரிடம் சென்று, நான் அல்லாஹ்வின் தூதரால் உமக்கும் உமது சகோதரருக்கும் அனுப்பப்பட்ட தூதுவனாவேன்'' என்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். அதற்கவர் ‘‘எனது சகோதரர்தான் வயதிலும் ஆட்சியிலும் என்னைவிட முந்தியவர். எனவே, நான் உன்னை அவரிடம் அனுப்பி வைக்கிறேன். முதலில் அவர் உன் கடிதத்தை படிக்கட்டும் என்று கூறிவிட்டு ‘‘நீ எதன் பக்கம் அழைக்கிறாய்?'' என்றார்.
அம்ர்: நான் உன்னை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர் யாருமில்லை. அவனைத் தவிர வணங்கப்படும் அனைத்தையும் விட்டு நீர் விலகிக் கொள்ள வேண்டும். நிச்சயமாக முஹம்மது, அல்லாஹ்வின் அடிமை, அவனது தூதர் என்று நீர் சாட்சி கூறவேண்டும்.
அப்து: அம்ரே! நிச்சயமாக நீர் உனது கூட்டத்தினரின் தலைவருடைய மகன். உனது தந்தை என்ன செய்தார்? அவர் நாங்கள் பின்பற்றுவதற்குத் தகுதியானவர்தான்.
அம்ர்: முஹம்மதை ஏற்றுக் கொள்ளாமல் அவர் மரணித்து விட்டார். அவர் இஸ்லாமை ஏற்று நபி (ஸல்) அவர்களை உண்மைப்படுத்தியிருக்க வேண்டுமென்று நான் ஆசைப்பட்டேன். (ஆனால் நடக்கவில்லை) நானும் எனது தந்தையின் கொள்கையில்தான் இருந்தேன். இறுதியாக அல்லாஹ் எனக்கு இஸ்லாமிய நேர்வழியைக் காட்டினான்.
அப்து: நீர் எப்போது அவரைப் பின்பற்ற ஆரம்பித்தாய்?
அம்ர்: சமீபத்தில் தான்.
அப்து: நீர் எங்கிருக்கும் போது இஸ்லாமை ஏற்றுக் கொண்டாய்?
அம்ர்: நான் நஜ்ஜாஷியிடமிருக்கும் போது இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன். அவரும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு விட்டார்.
அப்து: அப்போது அவரது கூட்டத்தினர் அவன் ஆட்சிக்கு என்ன செய்தனர்?
அம்ர்: அவரது ஆட்சியை ஏற்று அவரைப் பின்பற்றியே நடந்தனர்.
அப்து: அவைத் தலைவர்களும் பாதிகளுமா அவரைப் பின்பற்றினார்கள்?
அம்ர்: ஆம்!
அப்து: அம்ரே! நீர் சொல்வதை நன்கு யோசித்துச் சொல். ஏனெனில் பொய்யை விட ஒருவனை கேவலப்படுத்தக் கூடிய குணம் எதுவும் இருக்க முடியாது.
அம்ர்: நான் பொய் கூறவுமில்லை. அதை எங்களின் மார்க்கம் ஆகுமானதாக கருதவுமில்லை.
அப்து: அநேகமாக ஹிர்கலுக்கு நஜ்ஜாஷி இஸ்லாமானது தெரிந்திருக்காது.
அம்ர்: இல்லை. ஹிர்கலுக்குத் தெரியும்.
அப்து: அது ஹிர்கலுக்கு தெரியுமென்பதை நீர் எவ்வாறு அறிந்து கொண்டீர்?
அம்ர்: அதாவது, நஜ்ஜாஷி இதற்கு முன் ஹிர்கலுக்குக் கப்பம் கட்டி வந்தார். ஆனால், அவர் எப்போது இஸ்லாமை ஏற்று முஹம்மதை உண்மைப்படுத்தினாரோ அப்போது ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஹிர்கல் என்னிடம் ஒரு திர்ஹமைக் கேட்டாலும் நான் அதைக் கொடுக்க மாட்டேன்'' என்று கூறிவிட்டார். இவ்வார்த்தை ஹிர்கலுக்கு எட்டியபோது அவருடன் இருந்த அவரது சகோதரர் ‘யன்னாக்' என்பவன் ‘‘உமது அடிமை உமக்குக் கப்பம் கட்டாமல் உமது மார்க்கத்தை விட்டு விட்டு வேறொருவரின் புதிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதற்கு நீ விட்டு விடுகிறாயா?'' என்று கேட்டான். அதற்கு ஹிர்கல் ‘‘ஒருவர் ஒரு மார்க்கத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளும்போது அவரை நான் என்ன செய்ய முடியும்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனது ஆட்சியின் மீது எனக்குப் பிரியமில்லையெனில் அவர் செய்தது போன்றுதான் நானும் செய்திருப்பேன்'' என்றார்.
அப்து: அம்ரே! நீர் என்ன சொல்கிறாய் என்பதை நன்கு யோசித்துக் கொள்!
அம்ர்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உம்மிடம் உண்மைதான் சொல்கிறேன்.
அப்து: அவர் எதை செய்யும்படி ஏவுகிறார்? எதை செய்வதிலிருந்து தடுக்கிறார்?
அம்ர்: அல்லாஹ்வுக்கு வழிபடவேண்டுமென ஏவுகிறார். அவனுக்கு மாறு செய்வதிலிருந்து தடுக்கிறார். (பெற்றோருக்கு) உபகாரம் செய்யவும், உறவினர்களைச் சேர்த்து வாழவும் சொல்கிறார். அநியாயம் செய்வது, அத்துமீறுவது, விபசாரம் செய்வது, மது அருந்துவது, கற்கள், சிலைகள், சிலுவைகள் ஆகியவற்றை வணங்குவது போன்ற அனைத்திலிருந்தும் தடுக்கிறார்.
அப்து: ஆஹா! அவர் அழைக்கும் விஷயம் எவ்வளவு நல்லதாக இருக்கிறது. எனது சகோதரர் இவர் விஷயத்தில் எனது பேச்சை ஏற்றுக் கொண்டால் நாங்கள் இருவரும் நேரடியாக முஹம்மதிடம் வந்து அவரை நம்பிக்கை கொண்டு அவரை உண்மைப்படுத்துவோம். ஆனால், எனது சகோதரர் தனது பதவி மீது ஆசை கொண்டவர். அதை அவர் பிறருக்கு விட்டுக் கொடுத்து விட்டு அவருக்கு (கட்டுப்பட்டு) வாலாக இருப்பதை விரும்ப மாட்டார்.
அம்ர்: நிச்சயமாக உமது சகோதரர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அல்லாஹ்வின் தூதர் அவரையே அவரது கூட்டத்தினருக்கு அரசராக நியமித்து விடுவார்கள். மேலும், அந்தக் கூட்டத்தினரின் செல்வந்தர்களிடமிருந்து தர்மத்தைப் பெற்று அக்கூட்டத்தினரின் ஏழைகளுக்கே திரும்ப கொடுத்து விடுவார்கள்.
அப்து: இது மிக அழகிய பண்பாடாயிற்றே. தர்மம் என்றால் என்ன?
அம்ரு: நபியவர்கள் பொருட்களில் இன்னின்னவற்றில் ஏழைவ கொடுக்க வேண்டுமென கடமையாக்கி இருக்கிறார்கள். அதுபோல் ஆடு, மாடு, ஒட்டகங்களிலும்.
அப்து: அம்ரே! இலைதழைகளைத் தின்று தண்ணீரைக் குடித்து வாழும் எங்களது கால்நடைகளிலுமா (தர்மம்) ஏழைவ வசூலிக்கப்படும்?
அம்ர்: ஆம்! அவ்வாறுதான்.
அப்து: எனது கூட்டத்தினர் உங்களை விட்டும் தூரமாக இருக்கிறார்கள். அவர்களிடம் படைபலமும் அதிகமாக உள்ளது. எனவே, அவர்கள் இதற்குக் கட்டுப்படுவார்கள் என்று நான் எண்ணவில்லை.
அம்ர் (ரழி) கூறுகிறார்கள்: நான் அப்துடைய வீட்டில் இவ்வாறு பல நாட்கள் தங்கியிருந்தேன். ஒவ்வொரு நாளும் அவர் தனது சகோதரரிடம் சென்று என்னிடம் கேட்ட செய்தியைக் கூறுவார். பின்பு ஒரு நாள் அப்தின் சகோதரர் என்னை அழைக்க நான் அவரிடம் சென்றேன். அவரது பணியாட்கள் எனது புஜத்தைப் பிடித்தவர்களாக நின்றனர். ‘‘அவரை விட்டு விடுங்கள்'' என்று அவர் கூற, அவர்கள் என்னை விட்டு விட்டனர். அங்கிருந்த இருக்கையில் அமரச் சென்ற போது அந்தப் பணியாட்கள் என்னை உட்கார விடாமல் தடுத்தனர். சரிஎன, நான் அப்தை நோக்கினேன். அவர் என்னிடம் ‘‘உமது தேவை என்னவென்று சொல்'' என்றார்.
நான் அப்தின் சகோதரரிடம் முத்திரையிடப்பட்ட கடிதத்தைக் கொடுத்தேன். அதை வாங்கி முத்திரையைப் பிரித்து இறுதி வரை படித்தார். பின்பு தனது சகோதரரிடம் கொடுக்கவே அவரும் அவ்வாறே படித்துப் பார்த்தார். ஆனால், அவரை விட அவன் சகோதரர் அப்துதான் மிகவும் இரக்கமுள்ளவராக இருந்தார்.
பின்பு அப்தின் சகோதரர் என்னிடம் ‘‘குறைஷிகள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று என்னிடம் சொல்ல மாட்டாயா?'' என்றார். அதற்கு நான் ‘‘குறைஷிகள் அவரைப் பின்பற்றி விட்டனர். மார்க்கத்தில் ஆசையுடன் சிலர் அவரை ஏற்றுக் கொண்டனர். எதிர்த்தவர்கள் வாளினால் அடக்கப்பட்டனர்'' என்றேன். அதற்கவர் ‘‘அவருடன் யார் இருக்கிறார்கள்?'' என்றார். அப்போது நான் மக்களெல்லாம் இஸ்லாமை விரும்பியே ஏற்றிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த நேர்வழியாலும், பகுத்தறிவாலுமே இதுவரை தாங்கள் வழிகேட்டில்தான் இருந்து வந்ததை அறிந்து கொண்டனர்.
‘‘இப்போதுள்ள இந்தச் சிரமமான நிலையில் உன்னைத் தவிர வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நீர் இன்று இஸ்லாமை ஏற்று அவரைப் பின்பற்றவில்லை என்றால் நபி (ஸல்) அவர்களின் வீரர்கள் நாளை ஒரு நாள் உன்னிடம் வந்து சேருவார்கள். உமது ஆட்சியெல்லாம் அழியத்தான் போகிறது. எனவே, நீ இஸ்லாமை ஏற்றுக் கொள்! ஈடேற்றம் அடைவாய்! நபி (ஸல்) உனது கூட்டத்தினருக்கு உன்னையே ஆளுநராக நியமிப்பார்கள். குதிரைகளும் வீரர்களும் உம்மிடம் வரமாட்டார்கள்'' என்று கூறினேன். அப்போது அவர் ‘‘என்னை இன்று விட்டுவிடு நாளை என்னிடம் திரும்ப வா'' என்றார்.
இதற்குப் பின் நான் அப்திடம் சென்றேன். அவர் ‘‘அம்ரே! எனது சகோதரருக்கு ஆட்சி மோகம் இல்லையென்றால் அவர் இஸ்லாமை ஏற்றுக் கொள்வார் என்று நான் ஆதரவு வைக்கிறேன்'' என்று கூறினார். மறுநாள் நான் அப்தின் சகோதரரிடம் சென்றேன். ஆனால், அவர் எனக்கு அனுமதியளிக்க மறுத்து விட்டார். எனவே, நான் திரும்ப அப்திடம் வந்து ‘‘என்னால் உனது சகோதரரிடம் செல்ல முடியவில்லை'' என்றேன். அவர் என்னை அவன் சகோதரரிடம் நேரடியாக அனுப்பி வைத்தார்.
அவர் என்னிடம் ‘‘நீ எனக்குக் கொடுத்த அழைப்பு விஷயமாக யோசித்துப் பார்த்தேன். எனது கையிலுள்ள ஆட்சியை வேறு எவருக்கேனும் நான் கொடுத்து விட்டால் அரபிகளில் மிக பலவீனனாக கருதப்படுவேன். மேலும், அவரது வீரர்கள் இங்கு வரை வந்து சேரவும் முடியாது. அப்படி வந்தாலும் இதுவரை அவர்கள் சந்தித்திராத போரைச் சந்திக்க நேரிடும்'' என்று கூறினான். இதனைக் கேட்டு ‘‘சரி! நாளை நான் இங்கிருந்து புறப்படுகிறேன்'' என்றேன். நான் நாளை நிச்சயமாக புறப்பட்டு விடுவேன் என்பதை தெரிந்து கொண்டவுடன், அப்து தனது சகோதரரிடம் சென்று ‘‘நம்மால் அவரை வெல்ல முடியாது. அவர் யாருக்கெல்லாம் தூதனுப்பினாரோ அவர்கள் அனைவரும் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள். எனவே, நாமும் அவரை ஏற்றுக் கொள்வதுதான் நமக்கு நல்லது'' என்று கூறினார்.
மறுநாள் விடிந்தபோது அப்தின் சகோதரர் என்னை வரவழைத்து அவரும் அவரது சகோதரரும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு, நபி (ஸல்) அவர்களை உண்மையாளராக ஏற்றுக் கொண்டார்கள். அங்கு ஜகாத் (ஏழை வரி) வசூலிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். என்னை எதிர்த்தவர்களை அடக்க எனக்கு உதவியும் செய்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் முன் பின் தொடர்களை நாம் ஆராயும் போது இதுதான் இறுதியாக நபி (ஸல்) அனுப்பிய கடிதமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது. அநேகமாக மக்காவை வெற்றிக் கொண்ட பிறகு இக்கடிதம் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் பல அண்டை நாட்டு மன்னர்களுக்கு இக்கடிதங்களின் மூலம் இஸ்லாமிய அழைப்பை எடுத்து வைத்தார்கள். அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டனர் சிலர் மறுத்து விட்டனர். என்றாலும் நிராகரித்தவர்கள் எப்போதும் நபியவர்களைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தனர். நபியவர்களின் பெயரும் மார்க்கமும் அவர்களுக்கு நன்கு அறிமுகமாகிவிட்டது.

ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் நிகழ்ந்த போர் நடவடிக்கைகள்
தூகரத் (அ) காபா போர்

நபி (ஸல்) அவர்களின் சினையுள்ள ஒட்டகங்களை ஃபஸாரா கிளையினர் கொள்ளை அடித்துச் சென்றனர். அவர்களை விரட்டிப் பிடிப்பதற்காக நபி (ஸல்) புறப்பட்டார்கள்.
ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு நடந்த ஹுதைபிய்யா ஒப்பந்தம், மேலும் ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு நடந்த கைபர் போர் ஆகிய இரண்டிற்குமிடையில் நடந்த சம்பவம்தான் இந்த ‘தூகரத்' என்பது. இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இப்போரைப் பற்றிக் குறிப்பிடும் போது ‘‘கைபர் போருக்கு மூன்று மாதங்களுக்கு முன் இது நடைபெற்றது'' என்று குறிப்பிடுகிறார்கள். இமாம் முஸ்லிமும் (ரஹ்) ‘ஸலமா இப்னு அக்வா'வின் மூலம் அறிவிக்கும் ஹதீஸின் ஆதாரத்துடன் இவ்வாறே குறிப்பிடுகிறார்கள். ஆனால், அதிகமான வரலாற்றாசிரியர்கள், ‘‘இந்தப் போர் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன் நடந்தது'' என்று குறிப்பிடுகிறார்கள். அது சயல்ல! மாறாக, இமாம் புகாயும் இமாம் முஸ்லிமும் கூறியிருப்பதுதான் மிகவும் ஆதாரப்பூர்வமானது.
இப்போரின் முக்கிய வீரரான ஸலமா இப்னு அக்வா (ரழி) அவர்கள் இப்போரைப் பற்றி கூறுவதாவது: நபி (ஸல்) அவர்கள் தங்களுக்குச் சொந்தமான சினை ஒட்டகங்களை மேய்ப் பதற்காக அதன் மேய்ப்பாளருடன் தனது அடிமை ரபாஹாவையும் அனுப்பி வைத்தார்கள். அபூ தல்ஹாவின் குதிரையில் நானும் ரபாஹாவுடன் சென்றேன். மறுநாள் காலையில் ஃபஸாரா கிளையைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் என்பவன் அனைத்து ஒட்டகங்களையும் கொள்ளையடித்துக் கொண்டதுடன், அதனை மேய்த்துக் கொண்டிருந்தவரையும் கொன்று விட்டான்.
இதைப் பார்த்த நான் உடனே, ‘‘இந்தக் குதிரையை அபூ தல்ஹாவிடம் கொடுத்து விட்டு, நபி (ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தியை அறிவித்து விடு'' என்று ரபாஹாவிற்கு கூறினேன். பிறகு அங்கிருந்த ஒரு குன்றின் மீது ஏறி, மதீனாவை நோக்கி ‘யா ஸபாஹா'" என்று மூன்று முறை சப்தமிட்டேன். அதற்குப் பின் அங்கிருந்து கொள்ளையர்களை அம்பால் எறிந்து கொண்டே பின்தொடர்ந்தேன்.
‘‘இந்தா வாங்கிக்கொள்! நான் அக்வயின் மைந்தன்.
இன்று தாய்ப் பால் குடித்தோர் நாள்
அல்லது அற்பர்கள் ஓடும் நாள்.''
என்ற பாடியவாறே அவர்களை நான் தாக்கினேன்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அம்பெறிந்து கொண்டே அவர்களை தப்பித்து முன்னேறுவதிலிருந்து தடுத்துக் கொண்டிருந்தேன். அவர்களில் ஒரு வீரன் என்னை நோக்கி திரும்பி வந்ததால் நான் ஒரு மரத்திற்குப் பின்னால் மறைந்து கொண்டு அம்பெய்து அவனைக் காயப்படுத்துவேன். இதே நிலையில் அவர்கள் மலைகளுக்கிடையில் உள்ள ஒரு நெருக்கமான பாதையில் சென்றார்கள். நான் மலையின் மீது ஏறி அவர்களைக் கற்களால் எறிந்தேன். ஒட்டகங்களை ஒவ்வொன்றாக அனைத்தையும் அவர்கள் விட்டுவிட்டார்கள். மேலும், நான் அவர்களைக் கற்களால் எறிந்து கொண்டே பின்தொடர்ந்தேன். தங்களது சுமைகளின் பலுவை குறைப்பதற்காக முப்பதிற்கும் அதிகமான போர்வைகளையும் ஈட்டிகளையும் கீழே போட்டு விட்டு ஓடினார்கள்.
நான் அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களை ஒன்று சேர்த்து அவற்றின் மீது சில கற்களை வைத்தேன். பிறகு, நபியவர்களும் நபித்தோழர்களும் தெரிந்து கொள்வதற்காக அதில் அடையாளமிட்டு விட்டு, எதிரிகளைப் பின்தொடர்ந்து சென்றேன். அவர்கள் ஒரு மலைக் கணவாயின் குறுகலான இடத்திற்குச் சென்று மதிய உணவு சாப்பிட அமர்ந்தனர். நான் ஒரு மலை உச்சியில் ஏறி நின்று அவர்களைக் கவனித்துக் கொண்டிருக்கையில் அவர்கள் என்னைப் பார்த்து விட்டார்கள்.
அவர்களிலிருந்து நான்கு நபர்கள் என்னைப் பிடிக்க மலை மீதேறி வந்தார்கள். நான் அவர்களைப் பார்த்து ‘‘உங்களுக்கு நான் யாரென்று தெரியுமா? நான்தான் ஸலமா இப்னு அக்வா. நான் உங்களில் ஒருவரைக் கொல்ல நாடினால் நிச்சயம் கொன்றே தீருவேன். ஆனால், உங்களில் எவராலும் என்னைக் கொல்ல முடியாது'' என்று கர்ஜித்தவுடன் அவர்கள் என்னருகே வர துணிவின்றி திரும்பி விட்டனர். இந்நிலையில் உதவிக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்து நபி (ஸல்) அவர்களின் குதிரை வீரர்கள் தோட்டங்களுக்கிடையே பாய்ந்து வருவதை நான் மலையில் இருந்து பார்த்தேன். அவர்களில் முதலாவதாக அக்ரம், அவரைத் தொடர்ந்து அபூ கதாதா, அவரைத் தொடர்ந்து மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஆகியோர் வந்து சேர்ந்தனர்.
முதலில் வந்த அக்ரமுக்கும், எதிரி அப்துர் ரஹ்மானுக்கும் சண்டை மூண்டது. அப்துர் ரஹ்மான் அக்ரமை ஈட்டியால் குத்திக் கொன்று விட்டான். அதிவிரைவில் அங்கு வந்து சேர்ந்த அபூ கதாதா (ரழி), அப்துர் ரஹ்மானை ஈட்டியால் குத்திக் கொலை செய்தார்.
சில வினாடிகளில் நடந்து முடிந்த இக்காட்சியைப் பார்த்து பயந்துபோன எதிரிகள் புறமுதுகுக் காட்டி ஓடினர். நான் அவர்களைப் பின்தொடர்ந்து ஓடலானேன். இறுதியில் சூரியன் மறைவதற்கு சற்று முன் ‘தூகரத்' என்ற தண்ணீருள்ள பள்ளத்தாக்கை நோக்கி தண்ணீர் குடிக்கச் சென்றனர். அவர்கள் மிக தாகித்தவர்களாக இருந்தனர். ஆனால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க விடாமல் நான் அங்கிருந்தும் அவர்களை விரட்டினேன்.
இந்நிலையில் நபியவர்களும், அவர்களது படையும் இஷா நேரத்தில் என்னை வந்தடைந்தனர். நான் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இக்கூட்டத்தினர் மிகுந்த தாகித்தவர்களாக இருக்கின்றனர். என்னுடன் 100 வீரர்களை அனுப்புங்கள். நான் அவர்களிடம் இருக்கும் குதிரைகள் அனைத்தையும் அவற்றின் கடிவாளங்களுடன் பறித்துக் கொண்டு, அவர்களையும் கழுத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து உங்களிடம் நிறுத்துகிறேன்'' என்றேன். அதற்கு நபி (ஸல்), ‘‘அக்வாவின் மகனே! நீ நமது உடைமைகளைப் பெற்றுக் கொண்டாய். எனவே, சற்று கருணைக் காட்டு'' என்று கூறிவிட்டு ‘‘இப்போது அக்கூட்டத்தினர் கத்ஃபான் கிளையினரிடம் விருந்து சாப்பிடுகின்றனர்'' என்று கூறினார்கள்.
நபியவர்கள் இந்நிகழ்ச்சியைப் பற்றி விமர்சிக்கும் போது ‘‘இன்றைய நமது குதிரை வீரர்களில் மிகச் சிறந்தவர் அபூ கதாதா, நமது காலாட்படைகளில் மிகச் சிறந்தவர் ஸலாமா'' என்று கூறினார்கள்.
நபியவர்கள் அக்கூட்டத்தனரிடமிருந்து கிடைத்ததைப் பங்கிடும்போது அதிலிருந்து காலாட்படையைச் சேர்ந்தவருக்குக் கொடுக்கும் பங்கு, குதிரைப் படையைச் சேர்ந்தவருக்கு கொடுக்கும் பங்கு என இரண்டு பங்குகளை எனக்குக் கொடுத்தார்கள். நபி (ஸல்) மதீனாவிற்குத் திரும்பிச் செல்லும் போது தனது ஒட்டகை அழ்பா மீது தன்னுடன் என்னையும் அமரவைத்துக் கொண்டார்கள்.
நபி (ஸல்) மதீனாவிலிருந்து புறப்படும் முன், அப்துல்லாஹ் இப்னு மக்தூம் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். இப்போரின் கொடியை மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள்.
கைபர் போர் (ஹிஜ்ரி 7, முஹர்ரம்)
'கைபர்' என்ற ஊர் மதீனாவிலிருந்து வடக்கில் 80 மைல் தொலைவில் கோட்டைகளும் விவசாய நிலங்களும் அதிகம் உள்ள பெரும் நகரமாக முற்காலத்தில் விளங்கியது. ஆனால், இன்று அது ஒரு கிராமமாக உள்ளது. அங்குள்ள காற்றும், நீரும் உடல் நலத்திற்குச் சற்றும் ஒவ்வாததாக உள்ளது.

போருக்கான காரணம்

மூன்று பெரிய எதிரிகளில் மிகப் பெரிய மற்றும் அதிகப் பலம் வாய்ந்த எதிரியான குறைஷிகள் விஷயத்தில் ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கைக்குப் பின் நபியவர்கள் நிம்மதி அடைந்து விட்டார்கள். எனவே, மற்ற இரண்டு எதிரிகளின் கணக்கைத் தீர்க்க நாடினார்கள். அப்போதுதான் அப்பகுதியில் அமைதியும், சாந்தியும், சமாதானமும் முழுமையாக நிலவ முடியும். அத்துடன் இரத்தம் சிந்தும் போர்களிலிருந்து முஸ்லிம்கள் ஓய்வு பெற்று இஸ்லாமிய அழைப்புப் பணியைத் தொடங்க முடியும்.
சதித்திட்டங்கள் தீட்டுவதற்கும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதற்கும் கைபர் நகரம் ஒரு மையமாக விளங்கியதால், நபி (ஸல்) அவர்கள் தங்களது கவனத்தை முதலாவதாக இதன் பக்கம் செலுத்தினார்கள்.
இந்நகரவாசிகள் மேற்கூறிய தன்மையுடையவர்கள் என்பதற்கு சில சான்றுகள்: (1) இவர்கள்தான் முஸ்லிம்களுக்கு எதிராகக் குறைஷிகளையும் மற்ற அரபிகளையும் ஒன்று திரட்டி அகழ் போர் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள். (2) முஸ்லிம்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறும்படி குரைளா யூதர்களை தூண்டி விட்டவர்கள். (3) இஸ்லாமியச் சமூகத்திற்குள் தன்னை மறைத்து வாழும் புல்லுருவிகளான நயவஞ்சகர்களுடன் தொடர்பு கொண்டு குழப்பங்களை ஏற்படுத்தியவர்கள். (4) முஸ்லிம்களின் மூன்றாவது எதிரியான கத்ஃபான் மற்றும் கிராம அரபிகளுடன் தொடர்பு கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களைத் தூண்டி விடுபவர்கள். (5) அவர்களும் முஸ்லிம்களுடன் போர் புரிவதற்கான பல தயாரிப்புகள் செய்து வந்தனர். (இவ்வாறு பல வழிகளில் முஸ்லிம்களைத் தொடர் சிரமங்களுக்கு ஆளாக்கியதுடன்) (6) நபியைக் கொலை செய்வதற்கு ஒரு திட்டத்தையும் தீட்டினர்.
ஆக, இவற்றைச் சமாளிப்பதற்கு நபியவர்கள் பல படைகளை அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்கள்.
மேலும், இந்தச் சதிகாரர்களுக்கு தலையாக விளங்கும் ஸலாம் இப்னு அபுல் ஹுகைக், உஸைர் இப்னு ஜாம் ஆகியோரைக் கொல்வதும் நிர்பந்தமான ஒன்றாயிற்று.
ஆனால், இவை அனைத்தையும் விட பெரிய அளவில் யூதர்களைக் கவனிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. எனினும், அதை உடனடியாக நிறைவேற்ற முடியாமல் போனதற்குக் காரணம் யூதர்களை விட பலமும் பிடிவாதமும், வம்பும் விஷமமும் கொண்ட குறைஷிகள் முஸ்லிம்களை எதிர்த்து வந்தனர். தற்போது சமாதான உடன்படிக்கையால் குறைஷிகளின் எதிர்ப்பும், தாக்குதலும் முடிவுக்கு வந்துவிடவே, யூதர்களின் கணக்கைப் பார்ப்பதற்கான சரியான நேரம் முஸ்லிம்களுக்கு அமைந்தது.
கைபரை நோக்கி...
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: ‘‘நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா ஒப்பந்தம் முடித்துத் திரும்பிய பின், மதீனாவில் துல்ஹஜ் மாதம் முழுதும், முஹர்ரம் மாதத்தில் சில நாட்களும் தங்கி விட்டு கைபரை நோக்கிப் புறப்பட்டார்கள்.''
திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்: ‘‘பின்வரும் இறைவசனத்தின் மூலம் அல்லாஹ் வாக்களித்த ஒன்றுதான் கைபர் போர்.
ஏராளமான பொருட்களை (போல்) நீங்கள் கைப்பற்றுவீர்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்திருந்தான். இதனை உங்களுக்கு அதி சீக்கிரத்திலும் கொடுத்து விட்டான். (அல்குர்ஆன் 48:20)
இதில் கூறப்பட்டுள்ள ‘இதனை' என்பது ஹுதைபிய்யா ஒப்பந்தத்தையும் ‘ஏராளமான பொருட்களை' என்பது கைபரையும் குறிக்கிறது.
இஸ்லாமியப் படையின் எண்ணிக்கை
நயவஞ்சகர்களும் உறுதி குலைந்த நம்பிக்கையாளர்களும் ஹுதைபிய்யாவில் கலந்து கொள்ளாமல் பின்தங்கி விட்டதால் அவர்கள் விஷயமாக அல்லாஹ் நபிக்கு பின்வருமாறு கட்டளை பிறப்பித்தான்.
(நபியே! முன்னர் போருக்கு உங்களுடன் வராது) பின் தங்கிவிட்டவர்கள், போரில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொள்ள நீங்கள் செல்லும் சமயத்தில் (உங்களை நோக்கி) ‘‘நாங்களும் உங்களைப் பின்பற்றி வர எங்களை (அனுமதித்து) விடுங்கள்'' என்று கூறுவார்கள். இவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையை மாற்றி விடவே கருதுகின்றார்கள். ஆகவே, நீங்கள் அவர்களை நோக்கி ‘‘நீங்கள் எங்களைப் பின்பற்றி வரவேண்டாம். இதற்கு முன்னரே அல்லாஹ் இவ்வாறு கூறிவிட்டான்'' என்றும் கூறுங்கள்! அதற்கவர்கள், (ம்அல்லாஹ் ஒன்றும் கூறவில்லை') நீங்கள்தான் நம்மீது பொறாமை கொண்டு (இவ்வாறு கூறுகின்றீர்கள்) என்று கூறுவார்கள். அன்றி, அவர்களில் சிலரைத் தவிர (மற்றெவரும் இதன் கருத்தை) உணர்ந்து கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் 48:15)
ஆகவே, நபி (ஸல்) அவர்கள் கைபருக்குப் புறப்பட்ட போது ‘‘போர் புரிய ஆசையுள்ளவர்கள் மட்டும் புறப்பட வேண்டும்'' என அறிவித்தார்கள். ஆகவே, ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்த 1400 தோழர்கள் மட்டும் இப்போருக்காகப் புறப்பட்டனர்.
நபி (ஸல்) மதீனாவில் ‘சிபா இப்னு உருஃபுதா அல்கிஃபா' (ரழி) என்ற தோழரைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். ஆனால், ‘‘நுமைலா இப்னு அப்துல்லாஹ் அல்லைஸி (ரழி) என்பவரை நபி (ஸல்) பிரதிநிதியாக நியமித்தார்கள்'' என்று இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார். எனினும் ஆய்வாளர்கள், முந்திய கூற்றையே மிகச் சரியானது என்கின்றனர்.
நபியவர்கள் மதீனாவிலிருந்து புறப்பட்ட பின் அபூஹுரைரா (ரழி) இஸ்லாமை ஏற்று மதீனா வந்தார். சிபா உடன் ஸுப்ஹ் தொழுதுவிட்டு (இருவரும் நிலைமைகளை பரிமாறிக் கொண்டவுடன்) போருக்குச் செல்வதற்கான சாதனங்களை அபூ ஹுரைராவுக்கு சிபா (ரழி) தயார் செய்து கொடுத்தார்கள். அதற்குப் பின் அபூஹுரைரா (ரழி) அங்கிருந்து புறப்பட்டு நபியவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது கைபர் போர் முடிவுற்றிருந்தது. நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுடன் ஆலோசித்து அபூஹுரைராவிற்கும் அவருடன் வந்த தோழர்களுக்கும் கனீமத்தில் பங்கு கொடுத்தார்கள்.
நயவஞ்சகர்கள் யூதர்களுடன் தொடர்பு கொள்ளுதல்
மதீனாவிலிருந்த நயவஞ்சகர்கள் யூதர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டனர். நயவஞ்சகர் களின் தலைவன் இப்னு உபை கைபரில் உள்ள யூதர்களுக்குப் பின்வரும் செய்தியை அனுப்பினான். ‘‘முஹம்மது உங்களை நோக்கி வருகிறார் உங்களைத் தற்காத்துக் கொள்ள தயாராக இருங்கள் முஹம்மதைக் கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம் உங்களது எண்ணிக்கையும் ஆயுதங்களும் அதிகமாக இருக்கின்றன் முஹம்மதின் கூட்டத்தினரோ மிக சொற்பமாக இருக்கின்றனர் அவர்களிடம் குறைவாகவே ஆயுதங்கள் உள்ளன.''
இந்தச் செய்தியைத் தெரிந்து கொண்ட கைபர்வாசிகள் கினானா இப்னு அபுல் ஹுகைக், ஹவ்தா இப்னு கைஸ் ஆகிய இருவரையும் கத்ஃபான் கிளையினரிடம் உதவி கேட்டு அனுப்பினர். இந்த கத்ஃபான் கிளையினர் கைபரிலுள்ள யூதர்களின் ஒப்பந்தத் தோழர்களாகவும் முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்பவர்களாகவும் இருந்தனர். மேலும் ‘‘நாங்கள் முஸ்லிம்களை வெற்றி கொண்டால் கைபரின் விளைச்சல்களில் சபாதியைத் தருகிறோம்'' என்று யூதர்கள் கத்ஃபானியர்களுக்கு வாக்குறுதி அளித்தனர்.

கைபரின் வழியில்...

நபியவர்கள் ‘இஸ்ர்' என்ற மலை வழியாக ‘சஹ்பா' சென்று அங்கிருந்து ‘ரஜீஈ' பள்ளத்தாக்கைச் சென்றடைந்தார்கள். அங்கிருந்து கத்ஃபான் கிளையினர் வசிக்குமிடம் ஒரு நாள் பயண தூரத்திலிருந்தது. அப்போது கத்ஃபான் கிளையினர் யூதர்களுக்கு உதவிட ஆயத்தமாகி சென்று கொண்டிருந்தனர். வழியில் அவர்கள் போய்க் கொண்டிருக்கும் போது தங்களது ஊரில் பெரும் ஆரவாரத்தை உணர்ந்தனர். முஸ்லிம்கள்தான் தங்களது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என்று எண்ணி தங்களது ஊருக்குத் திரும்பி விட்டனர். அதற்குப் பிறகு அவர்கள் கைபருக்கு வரவில்லை.
படைக்கு வழிகாட்டிச் சென்று கொண்டிருந்த இரு வழிகாட்டிகளையும் அழைத்து வடக்குப் பக்கமாக கைபருக்குள் நுழைவதற்கு மிகப் பொருத்தமானப் பாதையைக் காட்டுமாறு நபி (ஸல்) கூறினார்கள். அப்போதுதான் ஷாம் தேசத்திற்குத் தப்பித்துச் செல்லாமல் யூதர்களைத் தடுக்க முடியும், கத்ஃபான் கிளையினர் யூதர்களுக்கு உதவிட வருவதையும் தடுக்க முடியும்.
வழிகாட்டிகளில் ஹுஸைல் என்ற பெயருடையவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுக்கு அந்தச் சரியான வழியைக் காட்டுகிறேன்'' என்றுக் கூறி நபியவர்களை அழைத்துச் சென்றார். இறுதியாக பல பாதைகள் பிரியும் ஓடத்தை அடைந்தவுடன் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த எல்லா வழிகளின் மூலமாகவும் நாம் கைபருக்குச் சென்றடையலாம். எந்த வழியில் நான் உங்களை அழைத்துச் செல்ல'' என்று கேட்டார். நபியவர்கள் ‘‘ஒவ்வொரு பாதையின் பெயரையும் எனக்குக் கூறு'' என்றார்கள்.
அதற்கவர் ஒரு பாதையைக் குறிப்பிட்டு அதன் பெயர் ‘ஹஜன்' (சிரமமானது) என்றார். நபியவர்கள் ‘‘அது வேண்டாம்'' என்று மறுத்து விட்டார்கள். அடுத்த பாதையை சுட்டிக்காட்டி அதன் பெயர் ‘ஷாஸ்' (பிந்தது) என்றார். அதையும் வேண்டாமென்று மறுத்து விட்டார்கள். மூன்றாவதாக, ஒரு பாதையைக் காண்பித்து, அதன் பெயர் ‘ஹாதிப்' (விறகு பொறுக்குபவர்) என்றார். அதையும் நபி (ஸல்) புறக்கணித்து விட்டார்கள். நான்காவதாக, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இப்போது நாம் செல்வதற்கு ஒரு வழிதான் மீதம் இருக்கிறது'' என்று ஹுஸைல் கூறினார். நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த உமர் (ரழி) அவர்கள் ‘‘அந்த வழியின் பெயரென்ன'' என்று வினவ, அவர் ‘மர்ஹப்' (சந்தோஷமானது, வரவேற்கத்தக்கது) என்றார். உடனே நபியவர்கள் அப்பாதையில் அழைத்துச் செல்லும்படி கூறினார்கள்.
வழியில் நடந்த சில நிகழ்ச்சிகள்
1) ஸலமா இப்னு அக்வா (ரழி) அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்தோம். ஓர் இரவில் எனது சகோதரர் ஆமிடம் ‘‘எங்களுக்கு உமது கவிதைகளை பாடிக் காட்டலாமே'' என்று ஒருவர் கேட்டார். ஆமிர் நல்ல திறமையான கவிஞராக இருந்தார். உடனே அவர் தனது வாகனத்திலிருந்து கீழிறங்கி கூட்டத்தினரின் வாகனங்களை,
‘‘அல்லாஹ்வே! நீ இன்றி நாம் நேர்வழி பெறோம்.
தர்மம் செய்திலோம் தொழுதிறோம்.
எங்கள் மீது மன அமைதி இறக்குவாயாக!
எதிர்கொள்ளும் போது பாதங்களை நிலைநிறுத்துவாயாக!
இவர்கள் எமக்கு அநீதமிழைக்கின்றார்கள்.
அவர்கள் குழப்ப நினைத்தால் அதற்கு நாம்
அனுமதியோம் அனுமதியோம்''
நபி (ஸல்) ‘‘வாகனங்களை அழைத்துச் செல்லும் இவர் யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு ‘‘ஆமிர் இப்னு அக்வா'' என்று மக்கள் கூறினர். ‘‘அல்லாஹ் அவருக்குக் கருணை காட்டட்டும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். ஒருவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களின் பிரார்த்தனையால் அவருக்கு வீரமரணம் (ஷஹாதத்) கடமையாகி விட்டதே. அவர் இன்னும் சிறிது காலம் வாழ்ந்தால் எங்களுக்குப் பலனாக இருக்குமே!'' என்று கூறினார். அதாவது நபியவர்கள் போன்போது யாருக்காவது குறிப்பிட்டு பிரார்த்தனை செய்தால் அவர் அப்போல் கொல்லப்படுவார் என்பதை மக்கள் அறிந்திருந்தார்கள். அவ்வாறே கைபர் போரிலும் நடந்தது.
2) கைபருக்கு அருகிலுள்ள ‘ஸஹ்பா' என்ற இடத்தில் அஸ்ர் தொழுகை நடத்தினார்கள். தொழுத பிறகு, மக்களிடம் அவர்கள் வைத்திருக்கும் உணவுகளைக் கொண்டுவரச் சொன்னார்கள். மக்களிடம் சத்துமாவைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அந்தச் சத்துமாவை விரிப்பில் பரப்பி வைத்து நபியவர்களும் தோழர்களும் சாப்பிட்டனர். பின்பு மஃரிப் தொழுகைக்காக நபி (ஸல்) தயாரானார்கள். புதிதாக ஒழுச் செய்யாமல் வாய் மட்டும் கொப்பளித்து விட்டு நபி (ஸல்) அவர்களும் மக்களும் மஃரிப் தொழுகையில் ஈடுபட்டனர். பின்பு அந்த இடத்திலேயே இஷா தொழுகையையும் நிறைவேற்றினார்கள்.
3) கைபருக்கு அருகில் சென்றவுடன் தங்களது படையை நிறுத்தி நபி (ஸல்) அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்:
‘‘அல்லாஹ்வே! ஏழு வானங்கள் மற்றும் அதற்குக் கீழ் உள்ளவற்றின் இறைவனே! ஏழு பூமிகள் மற்றும் அவற்றுக்கு மேலுள்ளவற்றின் இறைவனே! ஷைத்தான்கள் மற்றும் அவை வழி கெடுத்தவற்றின் இறைவனே! காற்றுகள் மற்றும் அவை வீசி எறிந்தவற்றின் இறைவனே! நிச்சயமாக நாங்கள் இந்த ஊரிலுள்ள நன்மையையும், இந்த ஊரில் வசிப்பவர்களில் உள்ள நன்மையையும், இந்த ஊரில் இருப்பவற்றில் உள்ள நன்மையையும் உன்னிடம் கேட்கிறோம். நிச்சயமாக இந்த ஊரிலுள்ள தீங்கை விட்டும், இந்த ஊரில் வசிப்பவர்களில் உள்ள தீங்கை விட்டும், இந்த ஊரில் இருப்பவற்றில் உள்ள தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறோம். பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) இந்த ஊருக்குள் நுழைகிறோம்'' என்று கூறினார்கள்.
கைபரின் எல்லையில் இஸ்லாமியப் படை
போருக்கு முந்திய இரவு கைபருக்கு மிக அருகாமையிலேயே முஸ்லிம்கள் இரவைக் கழித்தார்கள். எனினும், யூதர்களால் முஸ்லிம்களின் வருகையைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. பொதுவாக, நபியவர்கள் படையை அழைத்துச் செல்வது இரவு நேரமாக இருந்தால் காலை வரை காத்திருந்து அதிகாலையில் அக்கூட்டத்தினரைத் தாக்குவார்கள். அன்றிரவு ஸுப்ஹு தொழுகையை அதன் நேரம் வந்தவுடன் நல்ல இருட்டாக இருக்கும் போதே நிறைவேற்றிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தார்கள். கைபர்வாசிகள் விவசாயச் சாதனங்களை எடுத்துக் கொண்டு தங்களின் வயல்களுக்குப் புறப்பட்டனர். இஸ்லாமியப் படைகள் வருவது அவர்களுக்குத் தெரியாது. கொஞ்ச தூரம் வந்தவுடன் இஸ்லாமியப் படையை அவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ‘‘ஆ! முஹம்மது வந்துவிட்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதும் அவரது படையும் வந்துவிட்டது'' என்று கூறிக்கொண்டே ஊருக்குள் ஓடினர்.

நபியவர்கள் ‘‘அல்லாஹு அக்பர்! கைபர் நாசமாகி விட்டது. அல்லாஹு அக்பர்! கைபர் நாசமாகிவிட்டது. நாம் ஒரு கூட்டத்தினரின் ஊருக்குச் சென்றால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அக்கூட்டத்தினரின் அந்தப் பொழுது மிகக் கெட்டதாகவே அமையும்'' என்று கூறினார்கள்.

கைபரின் கோட்டைகள்

கைபர் இரண்டு பகுதிகளாக இருந்தது. ஒரு பகுதியில் ஐந்து கோட்டைகள் இருந்தன. மற்றொரு பகுதியில் மூன்று கோட்டைகள் இருந்தன. முதல் ஐந்து கோட்டைகளாவன. 1) நா’‘, 2) ஸஅப் இப்னு முஆது, 3) ஜுபைர், 4) உபை, 5) நிஸார். இந்த ஐந்தில் முதல் மூன்று கோட்டைகள் ‘நிதா' என்ற இடத்தில் இருக்கின்றன. மற்ற இரண்டு கோட்டைகள் ‘ஷக்' என்ற இடத்தில் இருக்கின்றன. கைபரின் மற்றொரு பகுதிக்கு ‘கதீபா' என்று கூறப்படும். அதில் மற்ற மூன்று கோட்டைகளும் இருந்தன. அவை: 1) கமூஸ், 2) வத்தீஹ், 3) சுலாளிம். மேலும் கைபரில் இவையல்லாத பல கோட்டைகளும் இருந்தன. ஆனால், அவைகள் மிகச் சிறியவையே. மேற்கூறப்பட்ட எட்டு கோட்டைகளைப் போன்று அவை மிக பலம் வாய்ந்ததுமில்லை உறுதிமிக்கதுமில்லை.
கைபரின் இரண்டு பகுதிகளில் முந்திய பகுதியில்தான் மிகக் கடுமையான போர் நடந்தது. மூன்று கோட்டைகளைக் கொண்ட இரண்டாவது பகுதியில் போர் வீரர்கள் அதிகமாக இருந்தும் சண்டையின்றியே அவை முஸ்லிம்கள் வசம் வந்தன.

இஸ்லாமியப் படை முகாமிடுதல்

நபி (ஸல்) அவர்கள் படைக்கு முன் சென்று அப்படை முகாமிடுவதற்காக ஓர் இடத்தைத் தேர்வு செய்தார்கள். ஆனால் ‘ஹுபாப் இப்னு அல்முன்திர்' (ரழி) என்ற தோழர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த இடம் அல்லாஹ் உங்களைத் தங்க வைத்த இடமா? அல்லது உங்கள் யோசனைக்கிணங்க தங்கியுள்ளீர்களா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) ‘‘இல்லை! இது எனது யோசனையே'' என்றார்கள்.
அவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாம் தங்கியிருக்கும் இந்த இடம் ‘நத்தா' என்ற கோட்டைக்கு மிக அருகில் உள்ளது. கைபரின் போர் வீரர்கள் அனைவரும் அதில்தான் இருக்கின்றனர். அவர்கள் நமது செயல் திட்டங்களைத் தெரிந்து கொள்வார்கள். நம்மால் அவர்களது நடவடிக்கைகளை அறிந்து கொள்ள முடியாது. போன்போது அவர்களது அம்புகள் நாம் இருக்கும் இடம் வரை வரும். ஆனால், நமது அம்புகள் அவர்களைச் சென்றடையாது. இரவிலும் அவர்கள் நம்மைத் தாக்கக்கூடும். மேலும், இந்த இடம் பேரீச்சம் மரங்களின் மத்தியிலும், தாழ்வாகவும், சதுப்பு நிலமாகவும் உள்ளது. எனவே, எந்தவித இடையூறும் இல்லாத நல்ல இடத்தை நாம் முகாமிடுவதற்கு தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) ‘‘நீங்கள் நல்ல ஆலோசனை கூறினீர்கள்'' என்று கூறிவிட்டு வேறோர் இடத்திற்கு தங்கள் முகாமை மாற்றிக் கொண்டார்கள்.
போருக்குத் தயாராகுதல், வெற்றிக்கான நற்செய்தி கூறுதல்
கைபருக்குள் நுழையுமுன் அன்றிரவு தங்கிய இடத்தில் ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வையும் ரஸுலையும் நேசிக்கும் ஒருவரிடம் நாளை கொடியைக் கொடுப்பேன். அவரை அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்புகிறார்கள். அல்லாஹ் அவரது கையால் வெற்றியளிப்பான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களெல்லாம் காலை விடிந்தவுடன் நபியவர்களிடம் ஒன்று கூடினர். ஒவ்வொருவரும் அந்தக் கொடி தனக்கே கொடுக்கப்பட வேண்டுமென விரும்பினர். ஆனால் நபியவர்கள், ‘‘அலீ இப்னு அபீதாலிப்'' எங்கே என்று கேட்டார்கள்.
மக்கள் ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவருக்குக் கண் வலியாக இருக்கிறது'' என்றனர். நபி (ஸல்) ‘‘அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்'' என்றார்கள். அலீ (ரழி) அழைத்து வரப்பட்ட போது அவன் கண்ணில் தனது உமிழ் நீரைத் தடவி அவருக்காக அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அல்லாஹ்வின் அருளால் முற்றிலும் அவர் குணமடைந்து விட்டார். அவரிடம் கொடியைக் கொடுத்த போது அவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களும் நம்மைப் போன்று ஆகும் வரை நான் போர் புரியட்டுமா?'' என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் ‘‘நீ நிதானத்துடன் சென்று அவர்களது முற்றத்தில் இறங்கு. பின்பு அவர்களுக்கு இஸ்லாமிய அழைப்புக் கொடு. அவர்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமையைப் பற்றி எடுத்துச் சொல். அல்லாஹ்வின் மீதாணையாக! உன் மூலமாக அல்லாஹ் ஒருவருக்கு நேர்வழி காட்டுவது உமக்குச் சிவந்த ஒட்டகங்கள் கிடைப்பதை விட மேலானதாகும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

போர் தொடங்குதல், நாயிம் கோட்டையை வெற்றி கொள்ளுதல்
யூதர்கள் முஸ்லிம்களின் படையைப் பார்த்து விட்டு தங்களது நகரத்துக்குள் ஓடி, கோட்டைக்குள் ஒளிந்து கொண்டனர். எதிரிகளைக் கண்டவுடன் தடுப்பு நடவடிக்கையிலும், போருக்கான ஆயத்தங்களிலும் ஈடுபடுவது இயற்கையே. முஸ்லிம்கள் தாக்குதல் நடத்திய முதல் கோட்டை ‘நாயிம்' என்ற கோட்டையாகும். இது ‘மர்ஹப்' என்ற வீரமிக்க யூத மன்னனின் கோட்டை. ‘‘மர்ஹப் 1000 நபர்களுக்குச் சமமானவன்'' என்று கூறப்பட்டு வந்தது. மேலும் இக்கோட்டையில் ராணுவத்தினர் அதிகமாக இருந்தனர். இது இஸ்லாமியப் படையை எதிர்ப்பதற்கு வசதியானதாக, உறுதியானதாக இருந்தது. எனவே, பல வகையிலும் ஏற்றமானதாக விளங்கிய இவ்விடத்தில் இருந்துகொண்டு தாக்குதல் நடத்த யூதர்கள் முதலில் திட்டமிட்டனர்.
இக்கோட்டைக்கருகில் அலீ (ரழி) முஸ்லிம்களுடன் சென்று யூதர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தார்கள். ஆனால், முஸ்லிம்களின் அழைப்பை யூதர்கள் நிராகரித்துவிட்டு, தங்களது மன்னர் மர்ஹபுடன் சேர்ந்து முஸ்லிம்களை எதிர்க்கப் புறப்பட்டனர். அவன் போர் மைதானத்திற்கு வந்தவுடன் ‘‘தன்னுடன் தனியாக சண்டையிட யாராவது தயாரா?'' என்று கொக்கத்தான்.
ஸலமா இப்னு அக்வா (ரழி) கூறுகிறார்கள்: ‘‘நாங்கள் கைபர் வந்த போது யூதர்களின் அரசன் தனது வாளை ஏந்தியவனாக
நானே மர்ஹப். இது கைபருக்குத் தெரியும்.
போர் உக்கிரமானால் நான் ஆயுதம் ஏந்திய வீர தீரன்.
என்று பாடிக்கொண்டு படைக்கு முன் வந்தான். அப்போது அவனை எதிர்த்துப் போட எனது தந்தையின் சகோதரர் ஆமிர் (ரழி),
நான் ஆமிர். கைபருக்குத் தெரியும்!
நான் ஆயுதம் ஏந்திய அஞ்சாநெஞ்சன்.
என்று பாடிக்கொண்டு முன்வந்தார். இருவரும் சண்டையிட்டதில் மர்ஹபின் வாள் ஆமின் கேடயத்தில் ஆழப்பதிந்து விட்டது. அப்போது ஆமிர் (ரழி) கேடயத்திற்குக் கீழிருந்து அவனை வெட்டுவதற்காக முயன்ற போது அவரது வாள் குட்டையாக இருந்ததால் மர்ஹபின் காலில் வெட்டுவதற்குப் பதிலாக இவரது காலில் வெட்டிவிட்டது. பின்பு அதே காயத்திலேயே அவர் மரணித்து விட்டார். இவரைப் பற்றி நபி (ஸல்) ‘‘தனது இரு விரல்களையும் ஒன்று சேர்த்தவர்களாக இவருக்கு இரு கூலிகள் உண்டு. நிச்சயமாக இவர் உயிரைப் பொருட்படுத்தாத வீரமிக்க தியாகியாவார். இவரைப் போன்ற வீரமிக்கவர் அரபியர்களில் மிகக் குறைவானவரே'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இதற்குப் பின் மர்ஹப் மீண்டும் தன்னுடன் சண்டையிட தனது கவியைப் பாடிக்கொண்டே முஸ்லிம்களை அழைத்தான். அப்போது அவனுடன் சண்டையிட,
‘‘என் அன்னை எனக்கு சிங்கமென பெயர் சூட்டினாள்!
காண அஞ்சும் கானகத்தில் சீறும் சிங்கத்தைப் போன்றவன் நான்!
இன்று மரக்காலுக்குப் பதிலாக ஈட்டியால்
அவர்களுக்கு அளந்து கொடுப்பேன்!''
என்ற பாடியவராக அலீ (ரழி) முன் வந்தார்கள். மர்ஹப் அலீயுடன் மோத, அலீ (ரழி) அவனது தலையைத் துண்டாக்கி விட்டார்கள். பின்பு அவன் மூலமாகவே அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்கினான்.
அலீ (ரழி) அவர்கள் யூதர்களின் கோட்டைக்கு மிக அருகில் சென்றுவிட்ட போது கோட்டையின் மேலிருந்து ஒருவன் ‘‘நீ யார்?'' என்றான். அதற்கு ‘‘நான் அலீ இப்னு அபீதாலிப்'' என்று பதில் கூறினார்கள். அப்போது அந்த யஹுதி ‘‘மூஸாவிற்கு இறக்கப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக! நீங்கள் வெற்றி கொள்வீர்கள்'' என்றான்.
இதற்குப் பின் மர்ஹபின் சகோதரன் யாசிர் ‘‘என்னுடன் சண்டை செய்பவன் யார்?'' என்று கொக்கரித்தவனாக படைக்கு முன் வந்தான். ஜுபைர் (ரழி) அவனை எதிர்க்கத் தயாரானார். அதைப் பார்த்த அன்னாரின் தாயார் ஸஃபியா (ரழி) ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவன் எனது மகனைக் கொன்று விடுவானே'' என்று கலங்கினார். அதற்கு நபி (ஸல்) ‘‘இல்லை உமது மகன் தான் அவனைக் கொல்வார்'' என்று கூறினார்கள். அவ்வாறே ஜுபைர் (ரழி) அவனைக் கொன்றார்கள். இவ்வாறு அன்று முழுவதும் நாயிம் கோட்டையைச் சுற்றிக் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது. யூதர்களின் பல தலைவர்கள் கொல்லப்பட்டதால் அவர்களின் வீரம் குறைந்து துவண்டு விட்டனர். எனினும், போர் மிகக் கடுமையாக பல நாட்கள் நீடித்தது. இறுதியில் முஸ்லிம்களை எதிர்க்க முடியாது என்பதை உறுதியாக அறிந்து கொண்ட யூதர்கள் அந்தக் கோட்டையிலிருந்து இரகசியமாக வெளியேறி ‘ஸஅப்' என்ற கோட்டையில் நுழைந்து கொண்டனர். இறுதியாக, முஸ்லிம்கள் நாயிம் கோட்டையைத் தங்களது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்தார்கள்.

ஸஅப் கோட்டையை வெற்றி கொள்ளுதல்

நாயிம் கோட்டைக்கு அடுத்து இக்கோட்டை மிகவும் பலமுள்ளதாக, வலிமை மிக்கதாக இருந்தது. அல் ஹுபாப் இப்னு அல் முன்திர் அல் அன்ஸா (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் இக்கோட்டையை முஸ்லிம்கள் மூன்று நாட்கள் முற்றுகையிட்டனர். மூன்றாவது நாள் இக்கோட்டையை வெற்றி கொள்வதற்காக நபி (ஸல்) தனிப்பட்ட முறையில் பிரார்த்தனை செய்தார்கள்.
இதைப் பற்றி இப்னு இஸ்ஹாக் (ரஹ்) விவரிக்கிறார்:
அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஸஹ்ம் கிளையினர் நபியவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மிகச் சிரமத்திற்குள்ளாகி விட்டோம். எங்களது கையில் ஒன்றுமே இல்லை'' என்று முறையிட்டார்கள். அதாவது, தங்களது இயலாமையையும், பசியையும் இவ்வாறு நபியவர் களிடம் வெளிப்படுத்தினார்கள். இந்த கிளையினர்தான் கோட்டையை வெற்றி கொள்வதற்காக அனுப்பப்பட்ட படைகளில் முக்கியப் பங்காற்றினார்கள். அவர்களின் இந்த கோரிக்கைக்கிணங்க ‘‘அல்லாஹ்வே! நிச்சயமாக இவர்களின் நிலைமையை நீ நன்கு அறிந்திருக்கிறாய். அவர்களிடம் எவ்வித ஆற்றலும் இல்லையென்பதையும், அவர்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை என்பதையும் நீ நன்கறிந்திருக்கிறாய். எனவே, கைபரின் கோட்டைகளில் அதிக செல்வமும் உணவுப் பொருட்களும் நிறைந்த கோட்டையை வெற்றி கொள்ள இவர்களுக்கு உதவுவாயாக'' என நபி (ஸல்) பிரார்த்தனை புரிந்தார்கள். நபியவர்களின் இப்பிரார்த்தனைக்குப் பின்பு முஸ்லிம்கள் அக்கோட்டையை நோக்கிப் புறப்பட்டனர். கைபரிலுள்ள கோட்டைகளில் ‘ஸஅப்' கோட்டையில்தான் அதிகச் செல்வங்களும் உணவுகளும் இருந்தன.
நபி (ஸல்) இக்கோட்டையின் மீது தாக்குதல் நடத்த முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டி அழைத்துச் சென்றார்கள். இதில் அஸ்லம் கிளையினர், படைக்கு முதல் வரிசையில் இருந்தனர். கோட்டைக்கு வெளியில் யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கடுமையான தாக்குதல் மாலை வரை நீடித்தது. இறுதியாக, சூரியன் மறைவதற்கு சற்று முன் அக்கோட்டையை முஸ்லிம்கள் வெற்றி கொண்டனர். அக்கோட்டையில் இருந்த மின்ஜசனீக்" கருவிகளையும், இக்கால பீரங்கி போன்ற கருவிகளையும் முஸ்லிம்கள் கைப்பற்றினர். இப்போல் ஏற்பட்ட கடுமையான பசியின் காரணமாக படையில் இருந்த சில வீரர்கள் கழுதையை அறுத்து சமைப்பதற்கு அடுப்பை மூட்டினர். இதை அறிந்த நபி (ஸல்) ‘‘நாட்டுக் கழுதைகளை அறுக்க வேண்டாம்'' என தடை விதித்தார்கள்.
ஜுபைர் கோட்டையை வெற்றி கொள்ளுதல்
நாயிம், ஸஅப் ஆகிய கோட்டைகளை வெற்றி கொண்டதற்குப் பின் நதா பகுதியிலிருந்து யூதர்கள் வெளியேறி ஜுபைர் கோட்டைக்குள் புகுந்து கொண்டனர். இக்கோட்டை ஒரு மலை உச்சியில் அமைந்திருந்ததுடன், மிக வலிமை மிக்கதாகவும் இருந்தது. அம்மலை மீது குதிரை வீரர்களோ காலாட் படையினரோ ஏறிச் செல்வது சிரமமாக இருந்தது. எனவே, நபி (ஸல்) அவர்கள் அக்கோட்டையை முற்றுகையிடுவதில் ஈடுபட்டார்கள். இந்த முற்றுகை மூன்று நாட்கள் நீடித்தது.
அப்போது யூதர்களில் ஒருவன் நபியவர்களிடம் வந்து ‘‘ஓ அபுல் காசிமே! நீங்கள் இவ்வாறு ஒரு மாத காலம் இவர்களை முற்றுகையிட்டாலும் இவர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். ஏனெனில், இப்பூமிக்கு கீழ் அவர்கள் குடிப்பதற்குத் தேவையான நீர் ஊற்றுகள் இருக்கின்றன. அவர்கள் இரவில் கோட்டையிலிருந்து வெளியேறி தேவையான நீரை எடுத்துக் கொண்டு மீண்டும் கோட்டைக்குள் சென்று விடுகின்றனர். எனவே, இவர்கள் தண்ணீர் பிடிக்க வருவதை தடுத்தால் தான் மைதானத்தில் உங்களுடன் போர் செய்ய இறங்குவார்கள்'' என்று ஆலோசனைக் கூறினார். அவன் யோசனைக்கிணங்க நபியவர்கள் தண்ணீர் எடுக்க வருவதைத் தடுத்து விட்டார்கள். இதனால் யூதர்கள் கோட்டையிலிருந்து வெளியேறி, முஸ்லிம்களுடன் கடுமையான யுத்தம் புரிந்தார்கள். போரில் சில முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் சுமார் பத்து யூதர்களும் கொல்லப் பட்டனர். இறுதியாக, முஸ்லிம்கள் கோட்டையை வெற்றி கொண்டனர்.
உபை கோட்டையை வெற்றி கொள்ளுதல்
ஜுபைர் கோட்டையை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பின் அங்கிருந்து யூதர்கள் வெளியேறி உபை கோட்டைக்குள் புகுந்து கொண்டனர். முஸ்லிம்கள் அக்கோட்டையை முற்றுகையிட்டனர். இரண்டு யூதர்கள் ஒருவர்பின் ஒருவராக ‘‘தன்னிடம் சண்டை செய்பவர்கள் யார்?'' என்று மைதானத்தில் இறங்கினர். அவ்விருவரையும் முஸ்லிம் வீரர்கள் வெட்டிச் சாய்த்தனர். அதில் இரண்டாவதாக வந்த யஹுதியைச் சிவப்பு தலைப்பாகை உடைய அபூதுஜானா ஸிமாக் இப்னு கரஷா (ரழி) என்ற வீரத்தில் பிரசித்தி பெற்ற நபித்தோழர் வெட்டி வீழ்த்தினார். இரண்டாவது வீரனை வெட்டிய பின் அபூதுஜானா (ரழி) கோட்டைக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டார். அவருடன் முஸ்லிம் வீரர்களும் அதற்காக முயற்சித்தனர். அந்நேரத்தில் கடுமையான போர் நடைபெற்றது. பின்பு அங்கிருந்து யூதர்கள் தப்பித்து ‘நஜார்' கோட்டைக்குச் சென்றனர். பிறகு இந்த உபை கோட்டையும் முஸ்லிம்கள் வசமானது.
நஜார் கோட்டையை வெற்றி கொள்ளுதல்
நத்தா பகுதியிலிருந்த கோட்டைகளில் மிக வலிமையானது இக்கோட்டையே ஆகும். எவ்வளவு முயற்சி செய்தாலும், உயிர் தியாகம் செய்தாலும் முஸ்லிம்களால் இக்கோட்டையை வெற்றி கொள்ள முடியாது என்று யூதர்கள் உறுதியாக நம்பியிருந்தனர். எனவேதான் இக்கோட்டையில் தங்களது மனைவி மக்களை தங்க வைத்திருந்தனர். மேற்கூறிய நான்கு கோட்டைகள் எதிலும் தங்களது மனைவி மக்களைத் தங்க வைக்கவில்லை.
இக்கோட்டையைச் சுற்றி முஸ்லிம்கள் முற்றுகையிட்டு யூதர்களுக்கு மிகக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். இக்கோட்டை உயரமான மலை மீது இருந்ததால் முஸ்லிம்களால் அதற்குள் நுழைய முடியவில்லை. யூதர்கள் கோட்டையிலிருந்து வெளியேறி முஸ்லிம்களுடன் நேருக்கு நேர் மோதுவதற்குத் துணிவு இல்லாமல் கோட்டையை விட்டு வெளியே வராமலிருந்தனர். கோட்டைக்குள் இருந்தவாறே முஸ்லிம்கள் மீது அம்புகளாலும் கற்களாலும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.
இக்கோட்டையை வெற்றி கொள்வது முஸ்லிம்களுக்குச் சிரமமாகி விடவே, மின்ஜனிக் கருவிகளைப் பயன்படுத்தி கற்களை எறிந்து, கோட்டை மதில்களைத் தகர்க்குமாறு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். முஸ்லிம் படையினரும் அவ்வாறே செய்தனர். கோட்டை மதில்களில் ஓட்டைகள் ஏற்பட்டதும் முஸ்லிம்கள் அதன் வழியாக கோட்டைக்குள் நுழைந்து யூதர்களுடன் கடும் போர் புரிந்தார்கள். இதில் யூதர்கள் பெரும் தோல்வியைத் தழுவினார்கள். மற்ற கோட்டைகளிலிருந்து தப்பித்துச் சென்றது போன்று இக்கோட்டையிலிருந்து அவர்களால் தப்பிக்க முடியவில்லை. தங்களது மனைவி மக்களை விட்டுவிட்டு கோட்டையை விட்டு வெருண்டோடினர். இக்கோட்டையும் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கைபரின் முதல் பகுதியிலுள்ள அனைத்து பெரிய கோட்டைகளும் இத்துடன் முழுமையாக முஸ்லிம்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. மற்ற சிறிய கோட்டைகளுக்குள் இருந்த யூதர்களும் அவற்றைக் காலி செய்துவிட்டு ஊரின் இரண்டாவது பகுதிக்கு வெருண்டோடினர்.
இரண்டாவது பகுதியை வெற்றி கொள்ளுதல்
நபியவர்கள் ‘நத்தா' பகுதியிலுள்ள கோட்டைகளை முழுமையாக வெற்றி கொண்டபின் இரண்டாவது பகுதியான ‘கத்தீபா'விற்கு தங்களது படையுடன் வந்தார்கள். அங்கு யூதர்களின் கமூஸ், அபூ ஹுகைக் குடும்பத்தினர் கோட்டை, வத்தீஹ் சுலாலிம் ஆகிய மூன்று கோட்டைகள் இருந்தன. நத்தா பகுதியில் தோல்வியுற்று ஓடிய யூதர்களெல்லாம் இக்கோட்டைகளுக்குள் புகுந்து கொண்டனர்.
நபி (ஸல்) அவர்கள் செய்த போர்களைப் பற்றி குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர்கள் இம்மூன்று கோட்டைகளை வெற்றி கொள்வதில் சண்டை ஏதும் நடந்ததா? இல்லையா? என்பதில் பல கருத்துகள் கூறுகிறார்கள். இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுவதிலிருந்து ‘கமூஸ்' கோட்டையை மட்டும் பேச்சுவார்த்தையின்றி முழுமையாக சண்டையைக் கொண்டே வெற்றி கொள்ளப்பட்டது என்று தெரியவருகிறது.
'அல்வாகிதி' (ரஹ்) என்ற வரலாற்று ஆசிரியர் கூறுவதாவது: இம்மூன்று கோட்டைகளும் பேச்சுவார்த்தைக்குப் பின்தான் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. ‘கமூஸ்' கோட்டையைத் தவிர மற்ற இரண்டு கோட்டைகளும் எவ்வித சண்டையுமின்றி பேச்சுவார்த்தையைக் கொண்டே முஸ்லிம்களிடம் சரணடைந்தன. கமூஸ் கோட்டைக்கு மட்டும் முதலில் சண்டை நடந்தது. அதற்குப் பிறகு பேச்சுவார்த்தை நடந்து கைவசமாகி இருக்கலாம்.
ஆக, கருத்து எதுவாக இருப்பினும் நபி (ஸல்) இப்பகுதியை சுற்றி மட்டும் பதினான்கு நாட்கள் முற்றுகையிட்டிருந்தார்கள். யூதர்கள் கோட்டையை விட்டு வெளியேறவில்லை. இறுதியாக, நபி (ஸல்) அவர்கள் மின்ஜனிக் கருவிகளை நிறுவி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார்கள். இதையறிந்த யூதர்கள் நிச்சயமாக நாம் அழிந்தே தீருவோம் என்பதை அறிந்துகொண்ட பின்புதான் ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்தார்கள்.

பேச்சுவார்த்தை

இப்னு அபூஹுகைக் என்ற யூதர் ‘‘நீங்கள் வாருங்கள் நான் உங்களிடம் பேசுகிறேன்'' என்று நபியவர்களிடம் தூதனுப்பவே, அவர்களும் பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டார்கள்.
‘‘கோட்டைக்குள் உள்ள வீரர்களின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் அவர்களது குடும்பத்தார்களை அவர்களுடன் விட்டுவிட வேண்டும் அந்த வீரர்கள் தங்களின் மனைவி மக்களுடன் கைபர் பூமியிலிருந்து வெளியேறி விடுவார்கள் கைபர் பூமியும் அதிலுள்ள செல்வங்களும், பொருட்களும், தங்கங்களும், வெள்ளிகளும், ஆயுதங்களும், கால்நடைகளும் முஸ்லிம்களுக்குச் சொந்தமாகும் தேவையான துணிமணிகளை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்'' என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் அனைத்து அம்சங்களையும் ஒப்புக் கொண்டார்கள்.
‘‘ஒப்பந்தம் செய்து கொடுத்த பின் நீங்கள் ஏதாவதொரு பொருளை மறைத்தால் அல்லாஹ்வும் அவனது தூதரும் கொடுத்த இந்தப் பொறுப்பு நீங்கிவிடும்'' என்று கூறினார்கள். இந்த ஒப்பந்தத்திற்குப் பின் கோட்டைகள் முஸ்லிம்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன.

அபூ ஹுகைகின் மகன்களைக் கொல்லுதல்

மேற்படி ஒப்பந்தத்திற்குப் பிறகும் அபுல் ஹுகைகின் இரண்டு மகன்களும் அதிகமான செல்வங்களை மறைத்து விட்டனர். ஒரு தோல் பையில் நிறைய பொருட்களையும், ஹையிப் இப்னு அக்தப்பிற்கு சொந்தமான நகைகளையும் மறைத்து வைத்திருந்தனர். இந்த ‘ஹை' என்பவர் நளீர் வமிச யூதர்களின் தலைவராவார். நபி (ஸல்) இவரை மதீனாவிலிருந்து நாடு கடத்திய போது அந்த நகைகளுடன் இங்கு வந்து தங்கியிருந்தார்.
இந்நிகழ்ச்சியைப் பற்றி இப்னு இஸ்ஹாக் (ரஹ்) குறிப்பிடுவதாவது: நபியவர்களிடம் ‘கினானா அர்ரபீ' என்பவன் அழைத்து வரப்பட்டான். அவனிடம்தான் நளீர் வமிச யூதர்களுக்குச் சொந்தமான பொக்கிஷங்கள் இருந்தன. நபி (ஸல்) அவனிடம் அதைப் பற்றி விசாரிக்கவே, அவன் ‘‘அந்தப் பொக்கிஷம் உள்ள இடம் எனக்குத் தெரியாது'' என்று பொய்யுரைத்தான். அப்போது மற்றொரு யூதன் நபியவர்களிடம் வந்து ‘‘கினானா ஒவ்வொரு நாள் காலையிலும் இந்த பாழடைந்த வீட்டிற்கு வந்து போவதை நான் பார்த்திருக்கிறேன்'' என்று கூறினான். உடனே நபி (ஸல்) அவர்கள் கினானாவிடம் ‘‘அவர் கூறுவது போன்று அப்பொருள் உம்மிடம் இருந்தால் நான் உன்னை கொன்று விடட்டுமா?'' என்று கேட்க அவன் ‘‘சரி!'' என்றான். நபியவர்களின் கட்டளைக்கிணங்க அந்த பாழடைந்த வீடு தோண்டப்பட்டு அதில் பொக்கிஷங்களின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது. நபி (ஸல்) ‘‘மீதமுள்ள பொக்கிஷங்கள் எங்கே?'' என்று கேட்க, அவன் அதைக் கொடுப்பதற்கு மறுத்து விட்டான். அவனை நபியவர்கள் ஜுபைடம் கொடுத்து ‘‘இவனிடமுள்ள அனைத்தையும் வாங்கும் வரை இவனை வேதனை செய்யுங்கள்'' என்று கூறினார்கள். ஜுபைர் (ரழி) அம்பின் கூய பகுதியால் அவனது நெஞ்சில் குத்தினார்கள். அவனது உயிர் போகும் தருவாயில் அவனை முஹம்மது இப்னு மஸ்லமாவிடம் ஜுபைர் கொடுத்து விட்டார்கள். முஹம்மது இப்னு மஸ்லமாவின் சகோதரர் மஹ்மூத், நா’‘ கோட்டையின் சுவல் நிழலுக்காக அமர்ந்திருந்த போது கோட்டையின் மேலிருந்து திருகைக் கல்லை தள்ளிவிட்டு யூதர்களால் கொல்லப்பட்டார். எனவே, முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) இவனைக் கொலை செய்தார்.
அபுல் ஹுகைகின் இரண்டு மகன்களும் பொருட்களை மறைத்து வைத்திருந்ததால் அவர்களை கொல்லும்படி நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.
புதுமணப் பெண்ணாக இருந்த ஹையின் மகள் ஸஃபிய்யாவை நபியவர்கள் சிறை பிடித்தார்கள். இவரைக் ‘கினானா இப்னு அபூ ஹுகைக்' மணந்திருந்தான்.

கனீமத்தை பங்கு வைக்கப்படுதல்

நபி (ஸல்) யூதர்களைக் கைபரிலிருந்து வெளியேற்றி நாடு கடத்தத் திட்டமிட்டார்கள். ஆனால் அவர்கள், ‘‘முஹம்மதே எங்களை இப்பூமியில் தங்கவிடுங்கள் நாங்கள் இப்பூமியை சீர்படுத்து கிறோம் உங்களைவிட இந்த பூமியைப் பற்றி நாங்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம்.'' என்று கூறினார்கள். நபியவர்களுக்கும், அவர்களது தோழர்களுக்கும் இப்பூமியைச் சீர்செய்வதற்கு அடிமைகள் யாரும் இல்லை. சீர் செய்வதற்கு ஓய்வோ அவகாசமோ இவர்களுக்கும் இல்லை. எனவே, விவசாயத்திலும் தோட்டங்களிலும் மகசூலில் ஒரு பகுதியைத் தர வேண்டும் என்ற நிபந்தனையிலும், நபி (ஸல்) கூறும் காலம் மட்டுமே இங்கு தங்கவேண்டும் என்ற நிபந்தனையிலும் கைபர் பூமியை நபி (ஸல்) யூதர்களிடம் கொடுத்தார்கள். அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) கைபருடைய விளைச்சல்களின் கண்காணிப்பாளராக இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கைபர் பூமியை 36 பங்காகப் பிரித்தார்கள். பின்பு ஒவ்வொரு பங்கையும் 100 பங்காகப் பிரித்தார்கள். ஆக மொத்தம் 3600 பங்குகளாயின. அதிலிருந்து சமப்பாதி பங்கு நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உயதாகும். அதாவது 1800 பங்குககளில் மற்ற முஸ்லிம்களுக்குக் கிடைப்பதைப் போன்றே நபியவர்களுக்கும் ஒரு பங்கு என்று முடிவானது. மீதமுண்டான 1800 பங்குகளைப் பொதுவாக முஸ்லிம்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்காகவும், தேவைகளுக்காகவும் நபி (ஸல்) தனியாக ஒதுக்கி விட்டார்கள். நபி (ஸல்) இதை 1800 பங்குகளாக ஆக்கியிருந்ததற்குக் காரணம்: இந்த கைபரின் வெற்றி அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஹுதைபிய்யாவில் கலந்து கொண்டவர்களுக்காக வழங்கப்பட்டதாகும். அவர்கள் இங்கு இருப்பினும் ச, இல்லை என்றாலும் ச. ஹுதைபிய்யாவில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 1400 நபர்களாவர். இவர்களில் 200 பேர் குதிரை வீரர்கள். ஒவ்வொரு குதிரைக்கும் இரண்டு பங்குகள், குதிரை வீரருக்கு ஒரு பங்கு என மொத்தம் மூன்று பங்குகள் கொடுக்கப்பட்டன. அதாவது 600 பங்குகள் 200 குதிரை வீரர்களுக்கும், 1200 பங்குகள் 1200 காலாட்படை வீரர்களுக்கும் வழங்கப்பட்டன. (ஜாதுல் மஆது)
ஸஹீஹுல் புகாரியில் இடம் பெற்றுள்ள இப்னு உமரின் அறிவிப்பின் மூலம் கைபரில் அதிகம் கனீமத்து பொருட்கள் கிடைக்கப் பெற்றன என்று தெரிய வருகிறது.
இப்னு உமர் (ரழி) கூறினார்கள்: ‘‘கைபரை வெற்றி கொள்ளும் வரை நாங்கள் வயிறாற உண்டதில்லை. கைபர் வெற்றி கொள்ளப்பட்டதற்கு பிறகுதான் நாங்கள் வயிறாற பேரீத்தம் பழம் சாப்பிடுகிறோம்.'' (ஸஹீஹுல் புகாரி)
முஹாஜிர்களுக்குக் கைபரில் பேரீத்த மரங்களும், சொத்துகளும் கிடைத்துவிட்டதால் மதீனா திரும்பியவுடன் அன்சாரிகள், முஹாஜிர்களுக்குக் கொடுத்திருந்த பேரீத்த மரங்களையெல்லாம் அவர்களிடமே நபியவர்கள் திரும்பக் கொடுத்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது)
ஜஅஃபர் மற்றும் அஷ்அரி கிளையினர் வருகை
இப்போர் முடிந்த பின்னர் ஜஅஃபர் (ரழி) அவர்களும், அபூமூஸா அல்அஷ்அரி (ரழி) அவர்களும் தங்கள் தோழர்களுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.
இதைப் பற்றி அபூமூஸா (ரழி) கூறுகிறார்கள்: ‘‘நாங்கள் யமனில் வசித்து வந்தோம். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த செய்தியை நாங்கள் அறிந்தோம். நானும் எனது சகோதரர்களும், 50க்கும் மேற்பட்ட எங்களது கூட்டத்தினரும் நபியவர்களைச் சந்திக்கப் புறப்பட்டோம். ஆனால், எங்களது கப்பல் திசைமாறி ‘ஹபஷா' சென்று விட்டது. அங்கு நஜ்ஜாஷியிடம் ஜஅஃபர் (ரழி) அவர்களும் அவரது தோழர்களும் இருக்கக் கண்டோம். அவர் எங்களை இங்கு தங்குமாறு ‘‘நபி (ஸல்) அனுப்பி இருக்கிறார்கள். எனவே, நீங்களும் எங்களுடன் தங்குங்கள்'' என்று கூறினார். நாங்களும் அவருடன் தங்கியிருந்தோம்.
பிறகு அவர் நபியவர்களை சந்திக்கப் புறப்பட்டபோது நாங்களும் அவருடன் புறப்பட்டோம். நாங்கள் நபியவர்களை சந்திக்க மதீனா வந்தபோது அவர்கள் மதீனாவிலிருந்து கைபருக்கு புறப்பட்டு விட்டார்கள். நாங்களும் கைபர் சென்றோம். கைபர் போரில் கலந்து கொள்ளாத எவருக்கும் கைபரில் கிடைத்த கனீமத்தில் பங்கு கொடுக்கவில்லை. ஆனால், எங்களுக்கும் ஜஅஃபர் மற்றும் அவரது தோழர்களுக்கும் நபி (ஸல்) கைபரின் கனீமத்தில் பங்கு கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)
ஜஅஃபர் (ரழி) வந்தபோது அவரை வரவேற்று அவரது இரு கண்களுக்கிடையில் நபி (ஸல்) அவர்கள் முத்தமிட்டார்கள். பின்பு ‘‘எனது அதிக மகிழ்ச்சிக்கு என்ன காரணம்? கைபரின் வெற்றியா? ஜஅஃபன் வருகையா? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அறியேன்'' என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி, ஜாதுல் மஆது)
குறிப்பு: நபி (ஸல்) அவர்கள் அம்ர் இப்னு உமைய்யா ழம் (ரழி) அவர்களை நஜ்ஜாஷியிடம் அனுப்பி ஜஅஃபரையும் அவரது தோழர்களையும் அழைத்து வருமாறு கூறினார்கள். நஜ்ஜாஷி அவர்களை நபியவர்களிடம் அனுப்பி வைத்தார். அந்நேரத்தில் அவர்கள் மொத்தம் 16 நபர்கள் இருந்தனர். மற்றவர்களெல்லாம் இதற்கு முன்னதாகவே மதீனா வந்து விட்டனர். இந்த சமயத்தில் தான் அபூ மூஸாவும் ஜஅஃபருடன் வந்தார்.

ஸஃபிய்யாவுடன் திருமணம்

இவன் கணவர் கினானா இப்னு அபூ ஹுகைக் மோசடி செய்த குற்றத்தால் கொல்லப்பட்டார். ஆகவே, இவர் கைதியானார். கைதிகள் ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்பட்டனர். திஹ்யா இப்னு கலீஃபா (ரழி) என்ற தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘‘அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் இருந்து எனக்கு ஒரு பெண்ணைத் தாருங்கள்'' என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் ‘‘உனக்கு விருப்பமான ஒரு பெண்ணை அழைத்துச் செல்!'' என்று கூறினார்கள். அவர் கைதிகளிலிருந்த ஸஃபிய்யா பின்த் ஹையை அழைத்துச் சென்றார்.
அதைப் பார்த்த மற்றொரு தோழர் நபியவர்களிடம் வந்து ‘‘அல்லாஹ்வின் தூதரே! குரைளா, நளீர் ஆகிய இரண்டு கிளையினருக்கும் தலைவியான ஸஃபிய்யாவை நீங்கள் திஹ்யாவிற்கு கொடுத்தீர்களா? அப்பெண் உங்களைத் தவிர வேறு யாருக்கும் தகுதியானவரல்ல'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் ‘‘அவரை ஸஃபிய்யாவுடன் அழைத்து வாருங்கள்'' என்றார்கள். திஹ்யா ஸஃபிய்யாவுடன் வரவே நபி (ஸல்) ஸஃபிய்யாவைப் பார்த்தார்கள். பின்பு திஹ்யாவிடம் ‘‘கைதிகளில் வேறொரு பெண்ணை நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அதற்குப் பின் ஸஃபிய்யாவுக்கு இஸ்லாமைப் பற்றி எடுத்துக் கூற, அவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபியவர்கள் ஸஃபிய்யா (ரழி) அவர்களை உரிமைவிட்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவரை உரிமைவிட்டதையே அவருக்குரிய மஹராக" ஆக்கினார்கள்.
நபி (ஸல்) மதீனா திரும்பும் வழியில் ‘ஸத்துஸ்ஸஹ்பா' என்ற இடத்தில் ஸஃபிய்யா (ரழி) துடக்கிலிருந்து தூய்மையடைந்தார்கள். உம்மு ஸுலைம் (ரழி) ஸஃபிய்யாவை அலங்கரித்து இரவில் நபியவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். மறுநாள் பேரீத்தம் பழம், நெய், மற்றும் சத்துமாவினால் செய்யப்பட்ட ஒருவகை பாயாசத்தைக் கொண்டு நபி (ஸல்) வலிமா" விருந்து அளித்தார்கள். மூன்று நாட்கள் ஸஃபிய்யா (ரழி) அவர்களுடன் நபி (ஸல்) தங்கினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது)
நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவுடைய கன்னத்தில் அடியின் வடுவைப் பார்த்து ‘‘இது என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்கள் ஊர் வருவதற்கு முன் முழுநிலா தனது இடத்திலிருந்து விலகி எனது மடியில் விழுவதாகக் கனவு கண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களைப் பற்றிய எவ்விஷயத்தையும் நான் நினைக்கவில்லை. இக்கனவை எனது கணவனிடம் கூறியபோது எனது கன்னத்தில் வேகமாக அறைந்து, மதீனாவில் இருக்கும் அரசரையா நீ ஆசைப்படுகிறாய்? என்றார். அதன் காரணமாக ஏற்பட்ட வடுதான் இது'' என்று கூறினார். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

நஞ்சு கலந்த உணவு

கைபரை முழுமையாக வெற்றி கொண்டு நபி (ஸல்) அவர்கள் முழு நிம்மதி அடைந்தார்கள். அப்போது ஸல்லாம் இப்னு மிஷ்கம் என்பவனின் மனைவி ‘ஜைனப் பின்த் ஹாரிஸ்' என்பவள், நபி (ஸல்) அவர்களுக்கு விருந்து ஒன்று ஏற்பாடு செய்தாள். விருந்தில் ஓர் ஆட்டை விஷத்துடன் சமைத்தாள். குறிப்பாக, நபி (ஸல்) அவர்கள் விரும்பி உண்ணும் பகுதி முன் சப்பை என்பதை தெரிந்து அதிலே அதிக விஷத்தை ஏற்றினாள்.
நபியவர்கள் அதிலிருந்து ஒரு துண்டை எடுத்துக் கடித்தார்கள். ஆனால் அதை விழுங்காமல் துப்பிவிட்டார்கள். ‘‘இந்த எலும்பு தன்னில் விஷமேற்றப்பட்டுள்ளது என்று என்னிடம் கூறுகிறது'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்பு அப்பெண்ணை அழைத்து விசாரிக்கவே அவள் உண்மையை ஒப்புக் கொண்டாள். ‘‘இவ்வாறு செய்ததற்கான காரணம் என்ன?'' என்று நபி (ஸல்) விசாரித்தார்கள். அதற்கு அவள், ‘‘நீங்கள் அரசராக இருந்தால் உங்களைக் கொல்வதில் எங்களுக்கு நிம்மதி கிடைக்கலாம். நீங்கள் தூதராக இருந்தால் உண்மை உங்களுக்கு தெரிந்து விடும். அதனால்தான் அவ்வாறு செய்தேன்'' என்று கூறினாள். நபியவர்கள் அவளை மன்னித்து விட்டு விட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களுடன் பிஷ்ர் இப்னு பரா (ரழி) என்ற தோழரும் சாப்பிட்டார். அவர் அந்த ஆட்டிலிருந்து ஒரு துண்டை முழுமையாகச் சாப்பிட்டதால் அந்த விஷம் அவரது உடலில் கலந்து மரணித்து விட்டார்.
அப்பெண் முற்றிலும் மன்னிக்கப்பட்டாளா? அல்லது கொல்லப்பட்டாளா? என்பதைப் பற்றி பல மாறுபட்ட அறிவிப்புகள் வந்துள்ளன.
இதைப் பற்றி அறிஞர்கள் கூறுவதாவது: நபியவர்கள் ஆரம்பத்தில் அப்பெண்ணை மன்னித்து விட்டார்கள். அடுத்து, அவள் தந்த விஷத்தால் பிஷ்ர் (ரழி) இறந்துவிடவே அவளைக் கொல்லும்படி கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
கைபர் போரில் இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்
இப்போல் முஸ்லிம்களில் பதினாறு நபர்கள் கொல்லப்பட்டார்கள். அதில் நான்கு நபர்கள் குறைஷிகள். ஒருவர் அஷ்ஜாஃ கிளையைச் சேர்ந்தவர் மற்றும் ஒருவர் அஸ்லம் கிளையைச் சேர்ந்தவர், மற்றொருவர் கைபரைச் சேர்ந்தவர். மீதமுள்ள 9 பேர்கள் அன்சாரிகளாவர். சிலர் முஸ்லிம்களில் கொல்லப்பட்டவர்கள் பதினேழு பேர்கள் என்றும் கூறுகின்றனர்.
அறிஞர் மன்சூர்ஃபூ (ரஹ்) கூறுவதாவது: ‘‘ஷஹீதானவர்கள் மொத்தம் பத்தொன்பது நபர்களே. நான் பல மூல நூல்களை ஆராய்ச்சி செய்து பார்த்த போது இப்போல் கொல்லப்பட்டவர்களின் 23 பெயர்களைப் பார்த்தேன். அதாவது, அந்த 23 பெயர்களில் ஒரு பெயர் ‘தப்ரி'யில் மட்டும் இடம் பெற்றுள்ளது. இன்னும் ஒரு பெயர் ‘வாகிதி'யில் மட்டும் இடம் பெற்றுள்ளது. மற்றொருவர் சமைக்கப்பட்ட ஆட்டை சாப்பிட்டு மரணித்தவராவார். மற்றொருவர் பத்ரில் கொல்லப்பட்டாரா? அல்லது கைபரில் கொல்லப்பட்டாரா? என்பது பற்றி இரு கருத்துகள் உள்ளன. ஆனால், அதில் சரியானது அவர் பத்ரில் கொல்லப்பட்டார் என்பதுதான். ஆகவே, முஸ்லிம்களில் 19 நபர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதுவே ஏற்றமானது. யூதர்களில் 93 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.'' (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)

ஃபதக்

நபி (ஸல்) கைபருக்கு வந்தபோது முஹய்ம்ஸா இப்னு மஸ்ஊது (ரழி) என்பவரை ‘ஃபதக்' என்ற இடத்திலுள்ள யூதர்களிடம் அனுப்பி, இஸ்லாமை ஏற்குமாறு அழைத்தார்கள். ஆனால், அவர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதில் தாமதம் காட்டினர். நபியவர்களின் கைபர் வெற்றியைப் பார்த்த இவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் பயத்தை ஏற்படுத்தினான். இதனால் ‘ஃபதக்' யூதர்கள் நபியவர்களிடம் தூது அனுப்பி கைபர்வாசிகளிடம் ஒப்பந்தம் செய்தவாறு தங்களிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு வேண்டினர். அதாவது ஃபதக்கின் விளைச்சலில் சபாதியைத் தர அவர்கள் ஒப்புக் கொண்டனர். அதை நபியவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். ஃபதக் சண்டையின்றி வெற்றி கொள்ளப்பட்டதால் அதன் விளைச்சல் அனைத்தும் நபியவர்களுக்கு மட்டும் சொந்தமாயிற்று. (இப்னு ஹிஷாம்)

வாதில் குரா

நபி (ஸல்) அவர்கள் கைபர் போரை முடித்து அங்கிருந்து ‘வாதில் குரா' என்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு யூதர்களின் ஒரு கூட்டமும், அரபுகளின் ஒரு கூட்டமும் சேர்ந்து கொண்டனர். நபியவர்கள் முஸ்லிம்களுடன் அங்கு சென்ற போது அங்கிருந்த யூதர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்ததால் முஸ்லிம்களை நோக்கி அம்பெறிந்து தாக்குதல் நடத்தினர். இதில் நபியவர்களின் ‘மித்அம்' என்ற அடிமை கொல்லப்பட்டார். அவருக்கு சொர்க்கம் உண்டென மக்கள் நற்செய்தி கூறினர். ஆனால் நபி (ஸல்) ‘‘ஒருக்காலும் அவ்வாறு இல்லை. எனது உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! கைபர் போரின் கனீமத்து பொருட்களை பங்கு வைப்பதற்கு முன் அவர் எடுத்துக்கொண்ட போர்வை இப்போது அவர் மீது நெருப்பாக எரிந்து கொண்டு இருக்கிறது'' என்று கூறினார்கள். நபியவர்களின் இந்த எச்சரிக்கையை கேள்விப் பட்ட மக்கள், தாங்கள் அற்பமாக நினைத்து எடுத்து வைத்திருந்த பொருட்களையெல்லாம் கொண்டு வந்து கொடுத்தனர். ஒருவர் செருப்பிற்குரிய ஒன்று (அல்லது) இரண்டு வார்களை நபியவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார். அதற்கு நபியவர்கள் ‘‘இது நரக நெருப்பின் ஒரு வாராக இருக்கும் அல்லது இரண்டு வாராக இருக்கும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
யூதர்களின் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நபியவர்கள் உடனடியாக தங்களது தோழர்களைப் போருக்கு தயார்படுத்தி அணிவகுப்பை நடத்தினார்கள். மேலும், முழு படைக்குள்ள பெரிய கொடியை ஸஅது இப்னு உபாதாவிடம் கொடுத்தார்கள். அதற்குப் பின் மற்ற சிறிய கொடிகளில் ஒன்றை ஹுபாப் இப்னு முன்திடமும், மற்றொரு கொடியை ஸஹ்ல் இப்னு ஹுனைஃபிடமும், மற்றொரு கொடியை அப்பாத் இப்னு பிஷ்ர் இடமும் கொடுத்தார்கள்.
இதையெடுத்து இஸ்லாமை ஏற்க நபி (ஸல்) யூதர்களை அழைத்தார்கள். ஆனால், அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். அவர்களிலிருந்து ஒருவன் வெளியேறி சண்டைக்கு வந்தான். அவனை ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) கொன்றார். பின்பு மற்றொருவன் சண்டையிட வந்தான். அவனையும் ஜுபைர் (ரழி) கொன்றார். பின்பு மற்றொருவன் வந்தான். அவனை அலீ இப்னு அபீதாலிப் (ரழி) கொன்றார். இவ்வாறு அவர்களில் பதினொரு நபர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒவ்வொருவர் கொல்லப்பட்ட பின்பும் நபியவர்கள் மீதமுள்ளவர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தார்கள்.
இந்நிலையில் தொழுகையுடைய நேரம் வரும்போதெல்லாம் தங்களது தோழர்களுடன் தொழுகையை நிறைவேற்றிவிட்டு, மீண்டும் யூதர்களிடம் வந்து அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துக் கூறி அல்லாஹ்வின் பக்கம் அழைத்தார்கள். இவ்வாறு மாலை வரை சண்டை தொடர்ந்தது. மறுநாள் காலை நபியவர்கள், அவர்களிடம் சென்ற போது சூரியன் உதயமாகி சற்று நேரத்திற்குள்ளாகவே யூதர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடைந்தார்கள். நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏராளமான பொருட்களை அல்லாஹ் வழங்கினான்.
இங்கு நபி (ஸல்) நான்கு நாட்கள் தங்கியிருந்து கிடைத்த பொருட்களை தோழர்களுக்குப் பங்கு வைத்துக் கொடுத்தார்கள். ஆனால், மற்ற நிலங்களையும் பேரீத்தம் தோட்டங்களையும் யூதர்களிடமே கொடுத்து கைபர் யூதர்களிடம் செய்து கொண்டதைப் போன்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். (ஜாதுல் மஆது)

தைமா

கைபர், ஃபதக், வாதில் குரா ஆகிய இடங்களிலிருந்த யூதர்களெல்லாம் பணிந்து விட்டனர் என்ற செய்தி தைமாவிலுள்ள யூதர்களுக்குக் கிடைத்தது. அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக எந்த போர் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. மாறாக, அவர்களே முன் வந்து சமாதானம் செய்து கொள்வதற்கு நபி (ஸல்) அவர்களிடம் தூது அனுப்பினார்கள். நபியவர்களும் அதை ஏற்றுக் கொண்டு அவர்களது சொத்துகளை அவர்களிடமே கொடுத்து விட்டார்கள். (ஜாதுல் மஆது)
நபி (ஸல்) ஓர் உடன்படிக்கை பத்திரத்தையும் அவர்களுக்கு எழுதிக் கொடுத்தார்கள். அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது:
‘‘அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, பனூ ஆதியா என்ற யூதர்களுக்கு எழுதிக் கொடுக்கும் ஒப்பந்தம். இவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு அளிக்கப்படும். இவர்களுக்கு வரி விதிக்கப்படும். இவர்கள் மீது அநீதி இழைக்கப்பட மாட்டாது. இவர்களை நாடு கடத்தப்பட மாட்டாது. இது நிரந்தரமான ஒப்பந்தமாகும்.''
இதை காலித் இப்னு ஸஈது (ரழி) எழுதினார். (இப்னு ஸஅத்)
மதீனாவிற்குத் திரும்புதல்
இதற்குப் பின் நபியவர்கள் மதீனா திரும்பினார்கள். திரும்பும் வழியில் ஒரு பள்ளத்தாக்கை கடந்து சென்ற போது மக்கள் சப்தமிட்டு ‘‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாஇலாஹஇல்லல்லாஹ்'' என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) ‘‘நீங்கள் நிதானத்தைக் கையாளுங்கள். நீங்கள் செவிடனையோ அல்லது மறைவாக இருப்பவனையோ அழைக்க வில்லை. நீங்கள் நன்கு கேட்கும் ஆற்றல் உள்ளவனையும், சமீபத்தில் இருப்பவனையுமே அழைக்கின்றீர்கள்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
மதீனா திரும்பும் வழியில் ஓர் இரவு முற்பகுதியில் பயணித்து விட்டு பிற்பகுதியில் ஓய்வெடுத்தார்கள். ஓய்வெடுப்பதற்கு முன் பிலாலிடம் ‘‘இன்றிரவு தூங்காமல் எங்களுக்கு பாதுகாப்பாய் இருங்கள்'' என்று கூறினார்கள். ஆனால், வாகனத்தில் சாய்ந்தவராக அமர்ந்திருந்த பிலாலுக்குத் தூக்கம் மிகைத்து விட்டது. சூரியன் உதயமாகும் வரை யாரும் விழிக்கவில்லை. முதன்முதலாக நபியவர்களே விழித்தார்கள். அங்கிருந்து புறப்பட்டு வேறோர் இடத்திற்கு வந்து ஃபஜ்ர் தொழுதார்கள். சிலர் இச்சம்பவம் வேறொரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டது என்றும் கூறுகின்றனர். (ஜாதுல் மஆது)

கைபர் போரின் பல நிகழ்வுகளைக் கவனித்துப் பார்க்கும்போது நபி (ஸல்) அவர்கள் ஸஃபர் மாதம் இறுதி அல்லது ரபீஉல் அவ்வல் ஆரம்பத்தில் மதீனாவை நோக்கித் திரும்பியிருக்க வேண்டும் என்றே தெரிய வருகிறது.

அபான் இப்னு ஸஈத் படைப்பிரிவு

சங்கைமிக்க மாதங்கள் முடிந்ததற்குப் பின், வீரர்கள் யாருமின்றி மதீனாவைக் காலியாக வைப்பது முறையல்ல என்பதை ஒரு ராணுவத் தலைவர் அறிந்து வைத்திருப்பதை விட நபி (ஸல்) நன்றாகவே அறிந்திருந்தார்கள். ஏனெனில், மதீனாவைச் சுற்றியிருந்த கிராம அரபிகள், முஸ்லிம்கள் எப்பொழுது அயர்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர். எனவேதான் கைபருக்கு போய்க் கொண்டிருக்கும் வழியிலேயே அபான் இப்னு ஸஈதின் தலைமையின் கீழ் நஜ்தில் உள்ள கிராம அரபிகளை அச்சுறுத்துவதற்காக ஒரு படையை நபி (ஸல்) அனுப்பி விட்டார்கள். நபியவர்கள் கொடுத்த கடமையை நிறைவேற்றிவிட்டு கைபர் நோக்கி அபான் இப்னு ஸஈத் (ரழி) திரும்பினார். அதற்குள் நபியவர்கள் கைபரை வெற்றி கொண்டு விட்டார்கள்.
அநேகமாக இப்படையை ஹிஜ்ரி 7, ஸஃபர் மாதத்தில் அனுப்பியிருக்க வேண்டும். இப்போரைப் பற்றிய சில குறிப்புகள் புகாரியில் இடம் பெற்றுள்ளது. ஆனால், புகாரியின் விரிவுரையாளர் இப்னு ஹஜர் (ரஹ்) ‘‘இப்போரைப் பற்றிய சரியான தகவல் தனக்குத் தெரியவில்லை'' என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள்.(ஸஹீஹுல் புகாரி, ஃபத்ஹுல் பாரி)
அடுத்தக்கட்ட போர்களும் படைப் பிரிவுகளும் (ஹிஜ்ரி 7)

தாதுர் ரிகா

இஸ்லாமிற்கு எதிரான மூன்று மாபெரும் ராணுவங்களில் பலம் வாய்ந்த இரண்டு ராணுவங்களை முற்றிலும் முறியடித்ததற்குப் பின் மூன்றாவது எதிரியின் பக்கம் தங்களது கவனத்தை முழுமையாகத் திருப்பினார்கள். நஜ்தின் கிராமப்புறங்களில் பரவியிருந்த நாடோடி வம்பர்களான அரபிகளே அந்த மூன்றாவது எதிரிகள். அந்த அரபிகள் சந்தர்ப்பங்களையும் அவகாசங்களையும் எதிர்பார்த்திருந்து அவ்வப்போது மதீனாவின் மீது தாக்குதல் நடத்தி கொள்ளையடிப்பது, வழிப்பறி செய்வது, திருடுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நாடோடிகள் ஒரு குறிப்பிட்ட ஊரிலோ நகரத்திலோ வசிக்கவில்லை. இவர்களது இல்லங்கள் பெரும் கோட்டைகளோ அரண்களோ இல்லை. மாறாக, முகவரியின்றி, பாலை வனங்களிலும் பள்ளத்தாக்குகளிலும் வசித்து வந்த காரணத்தால் இவர்களை அடக்குவதோ, இவர்களின் அட்டூழியத்தை அணைப்பதோ, முந்திய இரு எதிரிகளை அடக்கியதைவிட சற்றுச் சிரமமாகவே இருந்தது. ஆகவே, அவர்களை அச்சுறுத்தும் படி தாக்குதல்கள் நடத்துவது அவசியமாயிற்று. அதைத் தவிர வேறு நடவடிக்கை ஏதும் அவர்களுக்குப் பலனளிப்பதாக இல்லை. அதனால் முஸ்லிம்கள் அவர்கள் மீது பலமுறை திடீர் திடீரென தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த அரபிகளுக்கு பாடம் கற்பிப்பதற்காக நபியவர்கள் எடுத்த ஒரு போர் நடவடிக்கைக்கு ‘‘தாதுர் ரிகா'' என்று சொல்லப்படுகிறது.
பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் இப்போர் நான்காம் ஆண்டு நடந்தது என்று கூறுகின்றனர். ஆனால், இப்போல் அபூ மூஸா அஷ்அரி (ரழி) மற்றும் அபூஹுரைரா (ரழி) கலந்து கொண்டதிலிருந்து இப்போர் கைபர் போருக்கு பின்னர்தான் நடந்தது என்று உறுதியாக சொல்ல முடிகிறது. ஆகவே, ஹிஜ்ரி 7, ரபீஉல் அவ்வல் மாதத்தில்தான் இது நடந்திருக்க வேண்டும்.
இப்போர் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதின் சுருக்கமாவது: கத்ஃபான் கோத்திரத்தைச் சேர்ந்த அன்மார், ஸஅலபா மற்றும் முஹாப் ஆகிய இம்மூன்று கிளையினரும் ஒன்று சேர்ந்து முஸ்லிம்களைத் தாக்கத் தயாராகின்றனர் என்று நபியவர்களுக்குத் தெரிந்தவுடன் 400 அல்லது 700 தோழர்களை அழைத்துக் கொண்டு விரைந்தார்கள். மதீனாவில் அபூதர் அல்லது உஸ்மானைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். தங்களது படையுடன் அவர்களது ஊர்களுக்குள் நீண்ட தூரம் வரை நபி (ஸல்) ஊடுருவிச் சென்றார்கள். மதீனாவிலிருந்து இரண்டு நாட்கள் பிரயாண தூரமுள்ள ‘நக்ல்' என்ற இடத்தை அடைந்தார்கள். அங்குக் கத்ஃபான் கிளையினரின் ஒரு கூட்டத்தினரைச் சந்தித்து ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக ஆகி, ஒருவர் மற்றவரை அச்சுறுத்திக் கொண்டனர். ஆனால், சண்டை ஏதும் நடைபெறவில்லை. எனினும், நபி (ஸல்) அன்றைய பொழுது ‘ஸலாத்துல் கவ்ஃப்'" முறைப்படி அனைத்து தொழுகைகளையும் தொழ வைத்தார்கள்.
ஸஹீஹுல் புகாரியில் வருவதாவது: (படை இரண்டாக பிரிக்கப்பட்டது) தொழுகைக்கு இகாமத் சொல்லப்படவே நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரிவினருக்கு இரண்டு ரக்அத் தொழுகை நடத்தினார்கள். இரண்டு ரக்அத்துகளை முடித்துக் கொண்டு அப்பிவினர் பாதுகாப்பிற்குச் சென்றுவிட, மற்றொரு பிரிவினர் பிந்திய இரண்டு ரக்அத்தில் நபியுடன் சேர்ந்து தொழுதனர். ஆக, நபி (ஸல்) நான்கு ரக்அத்தும், மற்ற இரண்டு பிரிவினரும் இரண்டு இரண்டு ரக்அத்துகள் தொழுதனர் (ஸஹீஹுல் புகாரி)
அபூ மூஸா அஷ்அ (ரழி) அறிவிக்கின்றார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இப்போருக்காக புறப்பட்டோம். ஓர் ஒட்டகத்தில் ஆறு நபர்கள் வீதம் மாறி மாறி சவாரி செய்தோம். இதனால் எங்களது கால்கள் வெடித்து விட்டன. எனது கால்களிலும் வெடிப்பு ஏற்பட்டு நகங்கள் எல்லாம் பெயர்ந்து விட்டன. அதனால் துண்டுத் துணிகளை எடுத்து எங்களது கால்களைச் சுற்றிக் கொண்டோம். எனவேதான் இப்போருக்குப் பெயர் ‘தாதுர் கா' (துண்டுத் துணிகள் உடையது) என்று அழைக்கப்பட்டது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ‘தாத்துர் கா' போருக்கு சென்றிருந்தோம். ஓர் அடர்த்தியான நிழல் தரும் மரத்தருகில் வந்த போது அதில் நபி (ஸல்) ஓய்வு எடுப்பதற்காக ஏற்பாடு செய்தோம். மக்கள் பிரிந்து சென்று ஆங்காங்கிருந்த மற்ற மர நிழல்களில் ஓய்வெடுக்க, நபி (ஸல்) அவர்கள் ஒரு மரநிழலில் தங்கினார்கள். அம்மரத்தில் தனது வாளைத் தொங்க விட்டுவிட்டு அதன் நிழலில் தூங்கினார்கள். நாங்களும் சிறிது தூங்கினோம். ஒரு முஷ்ரிக் அங்கு வந்து நபியின் வாளை உருவிக் கொண்டார். நபி (ஸல்) கண் விழித்து பார்த்தபோது ‘‘நீ எனக்குப் பயப்படுகிறாயா?'' என்று அவர் கேட்டார். நபி (ஸல்) ‘‘இல்லை'' என்றார்கள். அவர் ‘‘யார் உன்னை என்னிடமிருந்து பாதுகாக்க முடியும்!'' என்றார். நபியவர்கள் ‘‘அல்லாஹ்'' என்றார்கள். இதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். நாங்கள் நபியவர்களிடம் சென்ற போது அங்கு கிராமவாசி ஒருவர் உட்கார்ந்திருந்தார். நபியவர்கள் ‘‘நான் தூங்கிக் கொண்டிருந்த போது எனது வாளை இவர் எடுத்துக் கொண்டார். நான் விழித்துப் பார்த்தபோது அது அவரது கையில் உருவப்பட்ட நிலையில் இருந்தது. இவர் ‘‘உன்னை என்னிடமிருந்து யார் பாதுகாப்பார்?'' என்று கேட்டார். ‘‘அல்லாஹ்'' என்று நான் கூறினேன். இதோ... அவர் உட்கார்ந்து இருக்கிறார் என்று நபி (ஸல்) கூறினார்கள். அவரைத் தண்டிக்காமல் விட்டுவிட்டார்கள். (முக்தஸர் ஸீரத்திர்ரஸுல்)
இச்சம்பவத்தைப் பற்றி வரும் மற்றொரு அறிவிப்பில் வருவதாவது, ‘‘அல்லாஹ்'' என்று நபி (ஸல்) பதில் கூறியவுடன் அவரது கையிலிருந்து வாள் வீழ்ந்துவிட்டது. அதை நபி (ஸல்) எடுத்துக் கொண்டு ‘‘என்னிடமிருந்து உன்னை யார் பாதுகாப்பார்?'' என்று கேட்டார்கள். அவர் ‘‘வாளை எடுத்தவர்களில் சிறந்தவராக நீங்கள் இருங்கள்'' என்றார். ‘‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீ சான்று கூறுவாயா?'' என்று நபி (ஸல்) அவரிடம் கேட்டார்கள். அவர் ‘‘நான் உங்களிடம் போர் செய்யவோ, உங்களிடம் போர் புரியும் கூட்டத்தினருடன் சேரவோ மாட்டேன் என்று நான் உங்களிடம் ஒப்பந்தம் செய்கிறேன்'' எனக் கூறினார். நபி (ஸல்) அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார்கள். அவர் தனது கூட்டத்தனரிடம் சென்று ‘‘நான் மக்களில் சிறந்தவடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன்'' என்று கூறினார். (ஃபத்ஹுல் பாரி, முக்தஸர் ஸீரத்திர்ரஸுல்)
‘‘இந்த கிராமவாசியின் பெயர் கவ்ரஸ் இப்னு ஹாரிஸ்'' என்று ஸஹீஹுல் புகாரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிஞர் வாகிதியின் நூலில் ‘‘இந்த கிராமவாசியின் பெயர் துஃஸுர் இவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கருத்து வேற்றுமைக்கு ஸஹீஹுல் புகாரியின் விரிவுரையாளர் இப்னு ஹஜர் ‘‘இரண்டும் வெவ்வேறு நிகழ்ச்சிகளாக இருக்கலாம்'' என்று விளக்கம் அளிக்கிறார். அல்லாஹ்வே மிக அறிந்தவன். (ஃபத்ஹுல் பாரி)
இப்போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த வழியில் இணைவைப்பாளர் ஒருவன் மனைவியை முஸ்லிம்கள் சிறை பிடித்தனர். அவளது கணவன் ‘‘அதற்குப் பகரமாக ஒரு நபித்தோழரைக் கொல்வேன்'' என்று நேர்ச்சை செய்து கொண்டு, இரவில் முஸ்லிம்கள் இருந்த இடம் நோக்கி வந்தான். நபி (ஸல்) முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகவும் எதிரிகளைக் கண்காணிப்பதற்காகவும் அப்பாது இப்னு பிஷ்ர், அம்மார் இப்னு யாஸிர் (ரழி) ஆகிய இரு வீரர்களை நியமித்தார்கள். அப்பாது (ரழி) தொழுகையில் ஈடுபட்டார்கள். (அம்மார் (ரழி) தூங்கி விட்டார்) அப்போது அவன் அப்பாத் (ரழி) அவர்களை நோக்கி அம்பெறிந்தான். அவர் அதை பிடுங்கி எறிந்துவிட்டு தொழுகையை முறிக்காமல் தொடர்ந்தார்கள். இவ்வாறு மூன்று அம்புகள் எறிந்தும் தொழுகையை முறிக்கவில்லை. இறுதியாக ஸலாம் கொடுத்த பின்னர் தனது தோழரை எழுப்பினார். அவர் ‘‘ஸுப்ஹானல்லாஹ்! என்னை நீங்கள் எழுப்பியிருக்கலாமே?'' என்றார். அதற்கு அவர் ‘‘நான் ஒரு சூராவை ஓதிக்கொண்டு இருந்தேன். அதை உடனே முறிப்பதை விரும்பவில்லை'' என்றார். (ஃபத்ஹுல் பாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
வம்பர்களாக இருந்து வந்த கிராமப்புற அரபுகளின் உள்ளங்களில் இப்போர் பெரும் அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியது. இப்போருக்குப் பின் நபி (ஸல்) அனுப்பிய படையெடுப்புகளின் விவரங்களை நாம் அலசிப்பார்க்கும் போது இப்போருக்குப் பின் கத்ஃபான் கிளையினர் முற்றிலும் துணிவை இழந்து, சிறிது சிறிதாகப் பணிந்து, இறுதியில் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பது நமக்குத் தெரியவருகிறது. மேலும், இந்தக் கிராமவாசிகளில் பல குடும்பத்தினர், நபி (ஸல்) அவர்களுடன் மக்காவை வெற்றி கொள்ள வந்தனர். அதற்குப் பிறகு ஹுனைன் போரிலும் கலந்து கொண்டனர். அதன் கனீமத்தும் இவர்களுக்குக் கிடைத்தது. மக்கா வெற்றிக்குப் பின் இவர்களிடம் ஜகாத் வசூல் செய்ய நபி (ஸல்) தங்களது ஆட்களை அனுப்பினார்கள். அவர்களும் ஜகாத்தை நிறைவேற்றினார்கள் என்பதையும் நாம் பார்க்கிறோம்.
ஆகவே, இதன் மூலம் அகழ் போரில் கலந்து கொண்ட மூன்று எதிரி ராணுவங்களையும் நபி (ஸல்) தோற்கடித்து விட்டார்கள். மதீனாவிலும், சுற்றுப்புறங்களிலும் அமைதியும் பாதுகாப்பும் நிலவியது. இதற்குப் பின் சில பகுதிகளில் கோத்திரங்கள் சிலவற்றால் ஏற்பட்டிருந்த பிரச்சனைகளைத் தீர்க்க முஸ்லிம்கள் ஆற்றல் பெற்றனர். உள்ளுக்குள் பிரச்சனைகள் முடிவடைந்து, நிலைமைகள் இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் சாதகமாக மாறுமளவு முன்னேறிவிட்டதால் இப்போருக்குப் பின் பல பெரிய நாடுகளையும், நகரங்களையும் வெற்றி கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர்.
இப்போரிலிருந்து திரும்பிய பின் மதீனாவில் நபி (ஸல்) ஹிஜ்ரி 7, ஷவ்வால் வரை தங்கி இருந்தார்கள். அக்காலக் கட்டத்தில் பல படைப் பிரிவுகளை நபி (ஸல்) பல இடங்களுக்கு அனுப்பினார்கள். அதன் விவரங்கள் பின்வருமாறு:
1) காலிப் இப்னு அப்துல்லாஹ் படைப் பிரிவு
ம்குதைத்' என்ற இடத்தில் வசிக்கும் ‘முலவ்விஹ்' என்ற கூட்டத்தார், பஷீர் இப்னு சுவைத் (ரழி) எனும் நபித்தோழன் அன்பர்களைக் கொன்று விட்டனர். அக்கூட்டத்தாரைப் பழி தீர்க்க ஹிஜ்ரி 7, ஸஃபர் அல்லது ரபிஊல் அவ்வல் மாதத்தில் காலிப் இப்னு அப்துல்லாஹ் (ரழி) தலைமையில் குதைத் நோக்கி ஒரு படையை நபி (ஸல்) அனுப்பினார்கள்.
இப்படை இரவு நேரத்தில் சென்று அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தி, பலரைக் கொன்றுவிட்டு கால்நடைகளை ஓட்டி வந்தனர். விழித்துக் கொண்ட எதிரிகள் பெரும் படையை திரட்டிக் கொண்டு முஸ்லிம்களைத் தாக்கப் பின்தொடர்ந்தனர். மிகச் சமீபத்தில் எதிரிகள் வந்துவிட்ட பொழுது கடுமையான மழை ஒன்றை அல்லாஹ் இறக்கினான். சிறிது நேரத்தில் பயங்கர வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதும் எதிரிகளிடமிருந்து முஸ்லிம்கள் தப்பித்து மதீனா வந்து சேர்ந்தனர்.
2)ஹிஸ்மா படைப் பிரிவு
ஹிஜ்ரி 7, ஜுமாதல் ஆகிராவில் இப்படை அனுப்பப்பட்டது. ‘‘அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கடிதம் எழுதுதல்'' என்ற தலைப்பின் கீழ் இப்படையெடுப்பின் விவரங்கள் கூறப்பட்டு விட்டன.
3) உமர் இப்னு கத்தாப் படைப் பிரிவு
ஹிஜ்ரி 7, ஸஅபான் மாதத்தில் முப்பது நபர்களுடன் உமர் (ரழி) அவர்களை ‘துர்பா' என்ற இடத்துக்கு நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இப்படை இரவில் பயணிப்பதும் பகலில் மறைந்திருப்பதுமாக தங்கள் பயணத்தைத் தொடர்ந்தது. துர்பாவில் வசித்து வந்த ஹவாஸின் கிளையினருக்கு இச்செய்தி எட்டியவுடன் இடங்களைக் காலி செய்து தப்பித்து ஓடிவிட்டனர். உமர் (ரழி) தங்கள் படையுடன் அங்கு சென்று பார்த்த பொழுது யாரும் இல்லாததால் மீண்டும் மதீனாவிற்குத் திரும்பி விட்டார்கள்.
4) பஷீர் இப்னு ஸஅது படைப் பிரிவு
ஹஜ் 7, ஷஅபான் மாதத்தில் பஷீர் (ரழி) அவர்களை முப்பது வீரர்களுடன் நபி (ஸல்) ‘ஃபதக்' மாநிலத்தின் ஓர் எல்லையில் வசிக்கும் முர்ரா கிளையினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு அனுப்பி வைத்தார்கள். இப்படை அங்கு சென்று தாக்குதல் நடத்தி, அவர்களின் கால்நடைகளை எல்லாம் ஓட்டிக் கொண்டு திரும்பினர். இரவு நேரத்தில் எதிரிகள் படையாக வந்து இவர்களுடன் போர் புரிந்தனர். பஷீர் (ரழி) அவர்களும் அவருடைய தோழர்களும் எதிரிகளை அம்பால் எறிந்து தாக்கினர். இவர்களின் அம்புகள் அனைத்தும் தீர்ந்து விட்டன. இறுதியாக நடந்த வாள் சண்டையில் பஷீரைத் தவிர அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். பஷீர் (ரழி) தனக்கு ஏற்பட்ட காயங்களுடன் அங்கிருந்து ஃபதக்குக்குச் சென்றார். காயங்கள் குணமாகும் வரை யூதர்களிடம் தங்கியிருந்து விட்டு மதீனா வந்து சேர்ந்தார்.
5) காலிபு இப்னு அப்துல்லாஹ் படைப் பிரிவு
ஹிஜ்ரி 7, ரமழான் மாதத்தில் 130 வீரர்களுடன் ‘மைஃபஆ' என்ற இடத்திலுள்ள உவால், அப்து இப்னு ஸஅலபா ஆகியோர் மீது தாக்குதல் நடத்த காலிப் இப்னு அப்துல்லாஹ்வுடன் ஒரு படையை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அந்தப் படை எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி எதிர்த்தவர்களைக் கொன்றுவிட்டு கால்நடைகளை ஓட்டி வந்தனர். இப்படையெடுப்பின் போதுதான் ‘நஹ்க் இப்னு மிர்தாஸ்' என்பவர் கலிமாவை மொழிந்தும் உஸாமா இப்னு ஸைது (ரழி) என்ற நபித்தோழரால் கொல்லப்பட்டு விட்டார். படை மதீனா வந்தடைந்ததும் அச்செய்தி நபியவர்களுக்குத் தெரிய வரவே ‘‘லாயிலாஹஇல்லல்லாஹ் என்று கூறிய பின்னரா நீ அவரைக் கொலை செய்தாய்?'' எனக் கோபத்துடன் கேட்டார்கள். அதற்கு, ‘‘தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் அதைக் கூறினார்'' என்று உஸாமா (ரழி) பதிலளிக்க, ‘‘அவர் உண்மையாளரா? பொய்யரா? என நீ அறிய அவரது உள்ளத்தை பிளந்து பார்த்தாயா?'' என்று நபி (ஸல்) வன்மையாகக் கண்டித்தார்கள்.
6) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா படைப் பிரிவு
அஸீர் இப்னு ஜாம் அல்லது பஷீர் இப்னு ஜாம் என்பவர் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த சில கத்ஃபானியரை ஒன்று சேர்க்கிறார் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. இதனால் நபி (ஸல்) ஹிஜ்ரி 7, ஷவ்வால் மாதத்தில் 30 வீரர்களை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) தலைமையில் கைபரை நோக்கி அனுப்பி வைத்தார்கள். இப்படை அஸீடம் வந்து எங்களுடன் ‘‘நீர் உமது தோழர்களுடன் வாரும் நபி (ஸல்) உம்மையே கைபருக்கு ஆளுநராக ஆக்கி விடுவார்கள் என்று ஆசை வார்த்தைக் கூறினர். அவரும் தயாராகவே, அஸீரையும் அவரது 30 தோழர்களையும் அழைத்துக் கொண்டு அப்துல்லாஹ் மதீனா நோக்கிப் புறப்பட்டார். வழியில் ‘கற்கறா நியார்' என்ற இடத்தில் தங்கியிருந்தபோது இரு கூட்டத்தினருக்குமிடையில் பிரச்சனை வரவே, அஸீரையும் அவரது 30 தோழர்களையும் முஸ்லிம்கள் கொன்று விட்டனர். வரலாற்று ஆசிரியரான வாக்கிதி, ‘‘ஹிஜ்ரி 6, ஷவ்வால் மாதம் கைபர் போர் நடப்பதற்கு சில மாதங்கள் முன்னதாக இச்சம்பவம் நடந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

7) பஷீர் இப்னு ஸஅத் படைப் பிரிவு
300 வீரர்களுடன் பஷீர் இப்னு ஸஅதை யமன், ஜபார் என்ற இடங்களுக்கு நபி (ஸல்) அனுப்பினார்கள். இவை கத்ஃபான் கிளையினருக்குச் சொந்தமான இடங்களாகும். சிலர் இந்த இடம் பஜாரா மற்றும் உத்ரா கிளையினருக்குச் சொந்தமான இடம் என்றும் கூறுகின்றனர். பல இடங்களிலிருந்து வந்து ஒன்றுகூடி மதீனாவைத் தாக்க இருந்தவர்களை எதிர்ப்பதற்காக இப்படை புறப்பட்டது. இரவில் பயணித்தும் பகலில் மறைந்திருந்தும் இவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர். பஷீன் வருகையை அறிந்த எதிரிகள், இடங்களைக் காலிசெய்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். பஷீர் (ரழி) அங்கு சென்று எதிரிகளின் ஏராளமான கால்நடைகளை ஓட்டிக் கொண்டு இருவரையும் கைது செய்து மதீனா திரும்பினார். கைதிகள் இருவரும் மதீனா வந்ததும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர்.
8) அபூ ஹத்ரத் படைப் பிரிவு
‘‘ஜுஸம் இப்னு முஆவியா கிளையைச் சேர்ந்த ஒருவன் பெரும் கூட்டத்தை அழைத்துக் கொண்டு ‘காபா' என்ற இடத்திற்கு வந்திருக்கிறான், அங்கிருக்கும் கைஸ் கிளையினருடன் சேர்ந்து முஸ்லிம்களின் மீது போர் தொடுக்க உள்ளான்'' என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அதை விசாரித்து உறுதியான செய்தியை அறிந்து வர, அபூ ஹத்ரதையும் (ரழி) அவருடன் இரண்டு தோழர்களையும் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அபூ ஹத்ரத் (ரழி) சூரியன் மறையும் நேரத்தில் காபா வந்து சேர்ந்தார். அவர் ஊரின் ஓர் ஓரத்தில் மறைந்து கொண்டு மற்ற இரு தோழர்களை மற்றொரு புறத்தில் மறைந்து கொள்ளும்படிக் கூறினார். அன்று கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றிருந்த அக்கூட்டத்தினரின் இடையர் வருவதற்கு தாமதமானது. நன்கு இருட்டிய பின்பு அந்த இடையரைத் தேடி அக்கூட்டத்தின் தலைவர் தனியாகப் புறப்பட்டார். அத்தலைவர் அருகில் வந்த போது அபூ ஹத்ரத் (ரழி) அவரது நெஞ்சை குறிவைத்து அம்பெறிந்தார். அம்பு குறி தவறாது நெஞ்சைத் துளைக்கவே, அவர் எந்தவித சப்தமுமின்றி இறந்து விட்டார்.
அவன் தலையைக் கொய்து, அக்கூட்டத்தினர் தங்கியிருந்த ராணுவ முகாம் அருகே அபூ ஹத்ரத் (ரழி) கட்டித் தொங்க விட்டார். பின்பு பெரும் சப்தத்துடன் தக்பீர் முழங்கினார். அவன் சப்தத்தைக் கேட்ட மற்ற இரு தோழர்களும் உரத்த குரலில் தக்பீர் முழங்கினர். இதனைச் செவிமடுத்து, தொங்கும் தலையையும் பார்த்தவுடன் கூட்டத்தினர் தலை தெறிக்க ஓடினர். இந்த மூன்று முஸ்லிம்கள் அதிகமான ஒட்டகங்களையும் ஆடுகளையும் ஓட்டிக் கொண்டு மதீனா வந்து சேர்ந்தனர். இப்படையெடுப்பு அடுத்துக் கூறப்பட உள்ள ‘‘உம்ரத்துல் கழா''வுக்கு முன்பதாக நடந்தது என்று இப்னுல் கைய்’‘ (ரஹ்) குறிப்பிடுகின்றார். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
உம்ராவை நிறைவேற்றப் புறப்படுதல் (உம்ரத்துல் கழா)
அறிஞர் ஹாகிம் (ரஹ்) கூறுகிறார்: துல்கஅதா பிறை உதயமானதும், ‘‘சென்ற ஆண்டு (ஹுதைபிய்யாவில்) தவறிப்போன உம்ராவை நிறைவேற்ற வேண்டியிருப்பதால், இடைப்பட்ட காலங்களில் (ஷஹீத்) வீரமரணம் அடைந்தவர்களைத் தவிர ஹுதைபிய்யாவில் கலந்து கொண்ட (ஒருவர்கூட பின்தங்கி விடாமல்) அனைவரும் புறப்பட வேண்டும்'' என நபி (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள்.
நபியவர்களின் கட்டளைக்கிணங்க ஹுதைபிய்யாவில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் உம்ராவை நிறைவேற்ற புறப்பட்டனர். இவர்களுடன் உம்ராவில் ஆர்வம் கொண்ட மற்றும் பலரும் புறப்பட்டனர். இவர்களில் பெண்கள், சிறுவர்கள் தவிர ஆண்கள் மட்டும் மொத்தம் இரண்டாயிரம் பேர் இருந்தனர்.'' (ஃபத்ஹுல் பாரி)
மதீனாவில் உவைஃப் இப்னு அழ்பத் அத்தய்லி அல்லது அபூ ரூஹும் அல்கிஃபாயை பிரதிநிதியாக நியமித்துவிட்டு குர்பானிக்காக அறுபது ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு நபி (ஸல்) புறப்பட்டார்கள். இந்த ஒட்டகங்களுக்குப் பொறுப்பாளராக நாஜியா இப்னு ஜுன்துப் அஸ்லமியை நியமித்தார்கள். துல்ஹுலைபா வந்தவுடன் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து கொண்டு தல்பியா கூறினார்கள். முஸ்லிம்களும் நபியவர்களைப் பின்பற்றி தல்பியா கூறலானார்கள். குறைஷிகள் மோசடி செய்யலாம் அல்லது ஒப்பந்தத்தை மீறலாம் என்ற அச்சத்தில் போர் வீரர்கள், ஆயுதங்கள் சகிதம் எதற்கும் ஆயத்தமாகவே நபி (ஸல்) புறப்பட்டார்கள். ‘யஃஜுஜ்' என்ற இடத்தை அடைந்தவுடன் தங்களிடமிருந்த ஈட்டிகள், அம்புகள், கேடயங்கள் அனைத்தையும் அங்கு வைத்துவிட்டு, அவற்றிற்கு அவ்ஸ் இப்னு கவ்லி அன்சாரியை 200 வீரர்களுடன் அதன் பாதுகாப்புக்கு நியமித்தார்கள். ஒரு பயணி வைத்திருக்கும் ஆயுதத்தை மட்டும் அதாவது, உறைம்லிடப்பட்ட வாட்களை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள். (ஃபத்ஹுல் பாரி, ஜாதுல் மஆது)
நபி (ஸல்) தனது கஸ்வா ஒட்டகத்தில் வாகனிக்க, முஸ்லிம்கள் நபியவர்களை சுற்றி படை சூழ வாளேந்தியவர்களாக தல்பியாவையும் முழங்கிக் கொண்டு மக்காவிற்குள் நுழைந்தார்கள். இணைவைப்பாளர்கள் கஅபாவின் வடப் பகுதியில் இருந்த ‘குஐகிஆன்' என்ற மலையின் மீது ஏறி நின்று முஸ்லிம்களை வேடிக்கை பார்க்கலானார்கள். மதீனாவின் காய்ச்சலால் பாதிப்படைந்த ஒரு குழுவினர் இப்போது நம்மிடம் வர இருக்கின்றனர் என்று கிண்டலாக தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இதனைக் கேள்விப்பட்ட நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடம் ‘‘வலது தோள்பட்டை வெளியில் தெரியும்படி இஹ்ராமுடைய ஆடையை அணிந்து கொள்ளுங்கள் தவாஃபுடைய முதல் மூன்று சுற்றுகளில் மட்டும் குதித்து ஓடுங்கள் ஆனால், இரண்டு ருகூன்களுக்கு மத்தியில் சாதாரணமாக நடந்துச் சுற்றுங்கள் மீதமுள்ள நான்கு சுற்றுகள் முழுவதும் சாதாரணமாக நடந்தே சுற்றுங்கள்!'' எனக் கட்டளையிட்டார்கள். தங்களது தோழர்கள் மீதுள்ள கருணையினால் ஏழு சுற்றுகளிலும் தோள்களை உயர்த்தி ஓட வேண்டுமென்று நபி (ஸல்) கூறவில்லை. இணைவைப்பாளர்களுக்குத் தங்களது பலத்தைக் காட்டுவதற்காகவே நபி (ஸல்) இவ்வாறு கட்டளையிட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ஹஜுனுக்கு அருகிலுள்ள மலைக் கணவாயின் வழியாக நபி (ஸல்) மக்காவுக்குள் நுழைந்தார்கள். இணைவைப்பாளர்கள் வரிசையாக நின்று கொண்டு நபியவர்களை வேடிக்கை பார்த்தனர். நபி (ஸல்) தல்பியா கூறிக்கொண்டே பள்ளிக்குள் நுழைந்து தனது தடியால் ஹஜ்ருல் அஸ்வத்தைத் தொட்டுவிட்டு தவாஃபைத் தொடங்க, முஸ்லிம்களும் தங்களது தவாஃபைத் தொடங்கினார்கள். அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) பின்வரும் கவிகளைப் பாடிக்கொண்டு வாளேந்தியவர்களாக நபியவர்களுக்கு முன் சென்று கொண்டிருந்தார்கள்.
‘‘இறைமறுப்போரின் பிள்ளைகளே!அகன்றுபோய் வழிவிடுங்கள்!
இறைத்தூதரிடத்தில் நன்மைகள் அனைத்தும் இருக்கின்றன.
வழிவிடுங்கள்! திட்டவட்டமாக ரஹ்மான் அவன் தன் திருமறையில்...
தனது தூதருக்கு ஓதிக்காட்டப்படும் ஏடுகளில் இறக்கினான்.
இறைவா! அவர் கூற்றை ஏற்கிறேன்.
அவரை ஏற்பதில் உண்மைதனை நிச்சயம் நான் பார்க்கிறேன்.
வெட்டுவதில் சிறந்த வெட்டு இறைப்பாதையில் நிகழ்வதுதான்
இறைமறை கட்டளை; இன்று உங்களை வெட்டுவோம்
அது தலை தனி, முண்டம் தனி ஆக்கிடும் வெட்டு
அது நண்பனை விட்டு நண்பனைப் பிரித்திடும் வெட்டு.
உமர் (ரழி), ‘‘ஏ! ரவாஹாவின் மகனே! அல்லாஹ்வின் தூதருக்கு முன், அதுவும் அல்லாஹ்வின் புனிதப் பள்ளிக்குள் நீ கவிதை பாடுகிறாயா?'' என்று அதட்டினார்கள். அதற்கு நபியவர்கள் ‘‘உமரே! அவரை விட்டுவிடுங்கள். அம்பால் எறிவதைவிட இந்தக் கவிதை குறைஷிகளுக்கு மிக விரைவாக ரோஷத்தை ஊட்டக் கூடியது'' என்று கூறினார்கள். (ஜாமிவுத் திர்மிதி)
நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் முதல் மூன்று சுற்றுகளை (முன் கூறியவாறு) ரமல் செய்தவர்களாகச் சுற்றினார்கள். இதை பார்த்து ஆச்சரியமடைந்த இணைவைப்பாளர்கள் ‘‘என்ன! மதீனாவின் காய்ச்சல் இவர்களை மிகப் பலவீனப்படுத்தி விட்டது என்றல்லவா எண்ணியிருந்தோம். ஆனால், இவர்களோ இவ்வளவு வீரமுள்ளவர்களாக இருக்கிறார்களே'' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் முதலில் தவாஃபை முடித்தார்கள். அதற்குப் பின் ‘ஸஃபா, மர்வா' என்ற இரு மலைகளுக்கு மத்தியில் ‘ஸயீ'" செய்தார்கள். அதற்குப் பின் மர்வா மலைக்கு வந்தார்கள். அங்குதான் நபியவர்களின் ஒட்டகங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நபியவர்கள் ‘‘இந்த இடத்திலும் குர்பானி பிராணியை அறுக்கலாம். மக்காவின் அனைத்து தெருக்களிலும் குர்பானி பிராணியை அறுக்கலாம்'' என்று அனுமதி வழங்கிவிட்டு, தங்களது குர்பானியை மர்வாவில் வைத்து அறுத்தார்கள். அதற்குப் பின் தங்களது தலைமுடியை சிரைத்து (மொட்டை அடித்து)க் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி முஸ்லிம்களும் அவ்வாறே செய்தார்கள். உம்ராவை முடித்த தோழர்களில் சிலரை ஆயுதங்களை வைத்துவிட்டு வந்த ‘யஃஜுஜ்' என்ற இடத்திற்கு அனுப்பிவிட்டு, அங்கிருந்தவர்களை மக்கா வந்து உம்ராவை நிறைவேற்ற அழைத்தார்கள். நபியவர்களின் சொல்லுக்கிணங்க இக்கூட்டத்தினர் அங்குச் சென்று ஆயுதங்களைப் பாதுகாப்பதில் ஈடுபட, அங்கிருந்தவர்கள் மக்கா வந்து உம்ரா செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். குறைஷிகள் நான்காவது நாள் காலையில் அலீயிடம் வந்து, ‘‘தவணை முடிந்துவிட்டது. உமது தோழரை வெளியேறும்படி சொல்'' என்று கூறினர். நபியவர்கள் மக்காவிலிருந்து வெளியேறி ‘ஸஃப்' என்ற இடத்தில் தங்கினார்கள்.
நபியவர்கள் மக்காவிலிருந்து வெளியேறிய போது ஹம்ஜா (ரழி) அவர்களின் மகளார், ‘‘எனது சிறிய தந்தையே! எனது சிறிய தந்தையே!'' என கூவிக்கொண்டு நபியவர்களை நோக்கி ஓடிவந்தார்கள். அவரை அலீ (ரழி) தூக்கி அணைத்துக் கொண்டார்கள். அவரை வளர்ப்பதற்காக அலீ, ஜஅஃபர், ஸைது (ரழி) மூவரும் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டனர். ஆனால், நபியவர்கள் அச்சிறுமியை வளர்க்கும் உரிமையை ஜஅஃபருக்குக் கொடுத்தார்கள். காரணம், இச்சிறுமியின் தாயின் சகோதரியைத்தான் ஜஅஃபர் (ரழி) மணம் முடித்திருந்தார்கள்.
இப்பயணத்தில் நபியவர்கள் மைமூனா பின்த் அல்ஹாரிஸ் அல்ஆமியாவைத் திருமணம் செய்தார்கள். நபியவர்கள் மக்கா நுழையும் முன்பே இது விஷயமாக ஜஅஃபர் இப்னு அபூதாலிபை மைமூனாவிடம் அனுப்பி வைத்தார்கள். மைமூனா (ரழி) இந்த உரிமையைத் தனது சகோதரியின் (உம்முல் ஃபழ்லின்) கணவர் அப்பாஸ் (ரழி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
அப்பாஸ் (ரழி) நபியவர்களின் விருப்பத்தை ஏற்று அவர்களுக்கு மைமூனாவை மணம் முடித்து வைத்தார்கள். நபியவர்கள் உம்ராவை முடித்துவிட்டு மக்காவிலிருந்து வெளியேறியபோது மைமூனாவை அழைத்து வருவதற்காக அபூராஃபியை விட்டு வந்தார்கள். நபி (ஸல்) ஸஃபில் தங்கியிருந்தபோது அபூராபிஃ, மைமூனாவை அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார்கள். (ஜாதுல் மஆது)
இந்த உம்ராவிற்கு ‘உம்ரத்துல் கழா' என்று கூறப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, சென்ற ஆண்டு உம்ராவை நிறைவேற்ற முடியாமல் போனதற்குப் பகரமாக இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டதால் இப்பெயர் வந்தது. இரண்டாவது, ஹுதைபிய்யாவின் போது செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஏற்ப இந்த உம்ரா அமைந்திருந்ததால் இந்தப் பெயர் வந்தது.
மார்க்க அறிஞர்கள் இரண்டாவது காரணமே மிக ஏற்றமானது எனக் கூறுகின்றனர். (ஜாதுல் மஆது, ஃபத்ஹுல் பாரி)
இந்த உம்ராவிற்கு வரலாற்றில் நான்கு பெயர்கள் கூறப்படுகின்றன. 1) உம்ரத்துல் கழா, 2) உம்ரத்துல் கழிய்யா, 3) உம்ரத்துல் கிஸாஸ், 4) உம்ரத்துல் சுல்ஹ். (ஜாதுல் மஆது, ஃபத்ஹுல் பாரி)
இந்த உம்ராவிலிருந்து மதீனாவிற்குத் திரும்பியதற்குப் பின் நபி (ஸல்) பல சிறிய படைகளை அனுப்பி வைத்தார்கள். அதன் விவரங்கள் வருமாறு:
1) இப்னு அபுல் அவ்ஜா படைப் பிரிவு: ஹிஜ்ரி 7, துல்ஹஜ் மாதத்தில் 50 வீரர்களுடன் இவரை இஸ்லாமிய அழைப்பு விடுப்பதற்காக சுலைம் கிளையினரிடம் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் சுலைமனரிடம் சென்று, அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தபோது ‘‘உங்களது அழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய எந்தத் தேவையும் எங்களுக்கு இல்லை'' என்று அவர்கள் மறுத்து விட்டனர். அதனால், இரு சாராருக்குமிடையில் கடுமையான சண்டை நடைபெற்றது. அதில் அபூஅவ்ஜா (ரழி) காயமடைந்தார். இரண்டு எதிரிகள் முஸ்லிம்களால் சிறைபிடிக்கப்பட்டனர்.
2) காலிபு இப்னு அப்துல்லாஹ் படைப் பிரிவு: ‘ஃபதக்' என்ற இடத்திற்கு அனுப்பப்பட்ட பஷீர் இப்னு ஸஅது அன்சாரியின் தோழர்கள் கொல்லப்பட்டனர் அல்லவா, அதற்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காக 200 வீரர்களை காலிபு இப்னு அப்துல்லாஹ் (ரழி) தலைமையில் ஹிஜ்ரி 8, ஸஃபர் மாதத்தில் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அங்கு சென்று ஏராளமானவர்களை கொன்றுவிட்டு அதிகமான கால்நடைகளை ஓட்டி வந்தனர்.
3) கஅபு இப்னு உமைர் அன்சாரி படைப் பிரிவு: ஹிஜ்ரி 7, ரபீஉல் அவ்வல் மாதத்தில் இப்படை அனுப்பப்பட்டது. குழாஆ கிளையினர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த பெருமளவில் கூட்டங்களைச் சேர்க்கின்றனர் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. அதனால் கஅபு இப்னு உமைர் அல்அன்சாரியின் தலைமையில் பதினைந்து தோழர்களை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் எதிரிகளைச் சந்தித்து அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தனர். ஆனால், அவர்கள் ஏற்க மறுத்து முஸ்லிம்களை நோக்கி அம்பெறிந்தனர். இதில் அனைத்து முஸ்லிம்களும் கொல்லப்பட்டு விட்டனர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)
4) ஷுஜா இப்னு வஹபு அல்அசதி படைப் பிரிவு: ‘ஹவாஸின்' என்ற கிளையினர் முஸ்லிம்களின் எதிரிகளுக்குப் பலமுறை உதவி செய்து வந்தனர். இதனால் அவர்களைக் கண்டிப்பதற்காக ஹிஜ்ரி 8, ரபீஉல் அவ்வல் மாதம், 25 வீரர்களுடன் ஷுஜா இப்னு வஹப் என்ற தோhழரை ‘தாத் இர்க்' என்ற இடத்திற்கு நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். முஸ்லிம்கள் எதிரிகளின் ஏராளமான கால்நடைகளை ஓட்டிக் கொண்டு மதீனா வந்து சேர்ந்தனர். அங்கு சண்டை ஏதும் நடக்கவில்லை. (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)

முஃதா யுத்தம்

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் சந்தித்த மிகப் பயங்கரமான போர் இதுவேயாகும். கிறிஸ்துவ நாடுகளையும் நகரங்களையும் முஸ்லிம்கள் வெற்றி கொள்ள இது ஒரு தொடக்கமாக அமைந்தது. இப்போர் ஹிஜ்ரி 8, ஜுமாதா அல்ஊலா, கி.பி. 629 ஆகஸ்ட் அல்லது செப்டம்பல் நடைபெற்றது.
'முஃதா' என்பது ஷாம் நாட்டின் பல்கா மாநிலத்தின் கீழ் பகுதியிலுள்ள ஓர் ஊர். இங்கிருந்து பைத்துல் முகத்தஸ், இரண்டு நாட்கள் நடக்கும் தொலைதூரத்தில் உள்ளது.
யுத்தத்திற்கான காரணம்
நபி (ஸல்) அவர்கள் புஸ்ராவின் மன்னருக்குக் கடிதம் ஒன்றை எழுதி அல்ஹாரிஸ் இப்னு உமைர் அல்அஸ்தி (ரழி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஆனால், போகும் வழியில் பல்கா மாநிலத்தின் கவர்னராக இருந்த ஷுரஹ்பீல் இப்னு அம்ரு அல்கஸ்ஸானி என்பவன் அவரைக் கைது செய்து கொன்று விட்டான்.
தூதர்களைக் கொலை செய்வது அரசியல் குற்றங்களில் மிகக் கடுமையானதாகும். பகிரங்க மாகப் போருக்கு அழைப்பு விடுப்பதைவிட தூதரைக் கொலை செய்வது மிகக் கொடிய ஒன்றாக கருதப்பட்டது. தனது தூதர் கொல்லப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நபி (ஸல்) பெரும் கவலைக் குள்ளானார்கள். 3000 வீரர்கள் கொண்ட பெரும் படை ஒன்றைத் தயார் செய்து அவர்களிடம் சண்டையிட அனுப்பி வைத்தார்கள். (ஜாதுல் மஆது, ஃபத்ஹுல் பாரி)
அஹ்ஸாப் போரைத் தவிர வேறு எந்தப் போரிலும் முஸ்லிம் வீரர்களின் எண்ணிக்கை இந்தளவு அதிகம் இருந்ததில்லை.

படைத் தளபதிகள்

நபி (ஸல்) அவர்கள் இப்படைக்கு முதலாவதாக ஜைது இப்னு ஹாஸாவை (ரழி) தளபதியாக ஆக்கிவிட்டு ‘‘ஜைது கொல்லப்பட்டால் ஜஅஃபர் தளபதியாக இருப்பார் ஜாஃபரும் கொல்லப் பட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா தளபதியாக இருப்பார்'' என்று கூறி வெள்ளை நிறக் கொடியை ஜைது இப்னு ஹாஸா (ரழி) கையில் கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபியவர்களின் அறிவுரை

பின்பு நபி (ஸல்) அவர்கள் தோழர்களுக்கு வழங்கிய அறிவுரையாவது: நீங்கள் அல்ஹாரிஸ் இப்னு உமைர் கொல்லப்பட்ட இடத்திற்குச் சென்று அங்குள்ளவர்களை இஸ்லாமின் பக்கம் அழையுங்கள். அவர்கள் ஏற்றுக் கொண்டால் நல்லது. ஏற்காவிட்டால் அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி தேடி அவர்களுடன் போர் செய்யுங்கள். அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் பெயர் கூறி அல்லாஹ்வை நிராகரித்தவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள். மோசடி செய்யாதீர்கள், பதுக்காதீர்கள், குழந்தை, பெண், வயது முதிர்ந்தவர், சர்ச்சுகளில் இருக்கும் சன்னியாசிகள் ஆகியோரைக் கொல்லாதீர்கள். பேரீத்த மரங்கள் மட்டுமல்ல, வேறு எந்த மரங்களையும் வெட்டாதீர்கள் கட்டடங்களை இடிக்காதீர்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸுனன் அபூதாவூது, ஸுனனத் திர்மிதி, இப்னு மாஜா)
படையை வழியனுப்புதல், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அழுதல்
இஸ்லாமியப் படை புறப்படத் தயாரானபோது அவர்களை வழியனுப்புவதற்காக மக்களெல்லாம் ஒன்று கூடினர். படைக்கும் அதன் தளபதிகளுக்கும் பிரியா விடை கொடுத்து ஸலாம் கூறினர். தளபதிகளில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அழலானார். ‘‘மக்கள் ஏன் அழுகிறீர்?'' என்று கேட்க, ‘‘எனக்கு உலகத்தின் மீதுள்ள ஆசையினாலோ அல்லது உங்கள் மீதுள்ள பாசத்தினாலோ நான் அழவில்லை. எனினும், நரகத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் ஒரு குர்ஆன் வசனத்தை நபி (ஸல்) ஓத, நான் கேட்டிருக்கின்றேன். அந்த வசனமாவது:
அதனைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உங்களது இறைவனிடம் முடிவு கட்டப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும். (அல்குர்ஆன் 19:71)
அந்தப் பாலத்தை கடக்கும் போது எனது நிலைமை என்னவாகுமோ என்று எனக்குத் தெரியவில்லையே!'' என்று அப்துல்லாஹ் (ரழி) பதில் கூறினார். ‘‘அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக! அல்லாஹ் அவனது அருளுடன் உங்களுக்குத் துணையாவானாக! வெற்றி பெற்று நல்ல நிலையில் அல்லாஹ் உங்களை எங்களிடம் திரும்பக் கொண்டு வருவானாக!'' என்று வாழ்த்துகள் கூறி மக்கள் அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள். அதற்கு அப்துல்லாஹ் (ரழி) கூறிய பதிலாவது:
மன்னிப்பு, நுரை தள்ளும் பலத்த அடி
அல்லது இரத்தவெறி கொண்ட
ஒருத்தனின் கையால் குடல்களையும் ஈரலையும்
ஊடுருவிச் செல்லும் குறு ஈட்டியால்
நான் குத்தப்பட ரஹ்மானிடம் கேட்கிறேன்.
என் மண்ணறையருகே நடப்போர்,
'அல்லாஹ் நேர்வழி காட்டிய வீரரே!
நேர்வழி பெற்றவரே!' என்று சொல்ல வேண்டும்.
பின்பு நபியவர்களும் மக்களும் ‘ஸனியத்துல் விதா' என்ற இடம்வரை சென்று படையை வழியனுப்பி விட்டு இல்லம் திரும்பினார்கள். (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)
இஸ்லாமியப் படை புறப்படுதலும் திடுக்கமான சூழ்நிலையும்
ஜாஸின் வடப்புறமாக ஷாம் நாட்டை நோக்கி இஸ்லாமியப் படை புறப்பட்டு ‘மஆன்' என்ற இடத்தை அடைந்தது. ‘‘பல்கா மாநிலத்தின் ‘மாப்' என்ற இடத்தில் ஹிர்கல் ஒரு லட்சம் ரோம் நாட்டு வீரர்களுடன் வந்திருக்கின்றான் லக்ம், ஜுதாம், பல்கய்ன், பஹ்ரா, பலிய் ஆகிய கோத்திரத்தாலிருந்து மேலும் ஒரு லட்சம் வீரர்கள் ரோமர்களுடன் இணைந்து கொண்டார்கள் என்ற ஓர் அதிர்ச்சி தரும் செய்தியை இஸ்லாமியப் படையின் ஒற்றர்கள் அறிந்து வந்தனர்.
ஆலோசனை சபை
இதுபோன்ற பெரும் படையைச் சந்திக்க நேரிடும் என்று முஸ்லிம்கள் ஒருக்காலும் எண்ணவில்லை. 3000 பேர் கொண்ட ஒரு படை இரண்டு இலட்சம் வீரர்கள் கொண்ட படையை எதிர்ப்பது என்பது சாதாரண விஷயமா? முஸ்லிம்கள் திகைத்து பயணத்தைத் தொடரலாமா? வேண்டாமா? என்று எண்ணி நின்றுவிட்டனர். இப்போது என்ன செய்யலாம்? நபி (ஸல்) அவர்களுக்கு கடிதம் எழுதுவோம் நமது எதிரிகளின் எண்ணிக்கையைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்போம் அவர்கள் நமக்கு உதவ மேலும் பல வீரர்களை அனுப்பலாம் அல்லது வேறு யோசனைக் கூறலாம் நாம் அதற்கேற்ப நடந்து கொள்ளலாம் என்று ஆலோசனை செய்தனர். இதே நிலைமையில் இரண்டு நாட்கள் கடந்தன.
ஆனால், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) இந்த யோசனைக்கு மறுப்புத் தெரிவித்து மக்களுக்கு வீரமூட்டி உரையாற்றினார்: ‘‘எனது கூட்டத்தினரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் இப்போது வெறுக்கும் வீரமரணத்தைத் தேடித்தானே மதீனாவிலிருந்து புறப்பட்டீர்கள். நாம் எதிரிகளிடம் போரிடுகிறோம். நமது ஆயுதங்களைக் கொண்டா? அல்லது ஆற்றலைக் கொண்டா? அல்லது எண்ணிக்கையைக் கொண்டா? இவற்றில் எதுவுமில்லை. பின்னர் ஏன் எண்ணிக்கையை வைத்து யோசிக்க வேண்டும். அல்லாஹ் நமக்கு எந்த மார்க்கத்தின் மூலம் கண்ணியம் வழங்கியிருக்கின்றானோ அந்த மார்க்கத்திற்காகவே நாம் அவர்களிடம் போர் புரிகின்றோம். எனவே, தயக்கம் வேண்டாம் புறப்படுங்கள்! இரண்டு பாக்கியங்களில் ஒன்று நிச்சயம் உண்டு. ஒன்று வெற்றி அல்லது வீரமரணம்.''
இப்னு ரவாஹாவின் இந்த வீர உரையை கேட்ட மக்கள் ரோமர்களை எதிர்த்து போரிட முடிவு செய்தனர்.
எதிரியைக் களம் காண இஸ்லாமியப் படை புறப்படுகிறது
‘மஆன்' என்ற இடத்தில் இரண்டு நாட்கள் கழித்த பின் முஸ்லிம்கள் எதிரிகளின் நாட்டை நோக்கிப் புறப்பட்டனர். இறுதியாக, பல்காவின் கிராமங்களில் ஒன்றான ‘மஷாஃப்' என்ற இடத்தில் இரு படைகளும் சந்தித்தன. எதிரிகள் நெருங்கி வர முஸ்லிம்கள் சற்று பின்வாங்கி ‘முஃதா' என்ற இடம் வந்து அங்கு தங்களது முகாம்களை அமைத்துக் கொண்டனர். அங்கிருந்து போருக்கான தயாரிப்புகளை செய்யத் தொடங்கினர். முஸ்லிம்கள், படையின் வலப்பக்கத்திற்கு குத்பா இப்னு கதாதாவை தளபதியாகவும், இடப்பக்கத்திற்கு உபாதா இப்னு மாலிக்கை தளபதியாகவும் ஆக்கினர்.

யுத்தத்தின் ஆரம்பம்

‘முஃதா' என்ற இடத்தில் இரு படைகளும் சண்டையிட்டன. மூவாயிரம் பேர் இரண்டு லட்சம் வீரர்களுக்குச் சமமாக சண்டையில் ஈடுபட்டனர். என்ன ஆச்சரியம்! உலகமே திகைப்புடன் பார்க்க ஆரம்பித்தது. ஆம்! ஈமானியப் புயல் வீச ஆரம்பித்தால் இப்படித்தான் ஆச்சரியங்கள் நடக்கும்.
நபியவர்களின் விருப்பத்திற்குரிய தோழரான ஜைது (ரழி) முதலில் கொடியை ஏந்தி கடுமையான யுத்தம் புரிந்தார். அவர் அன்று காட்டிய வீரத்திற்கு என்ன உதாரணம் சொல்ல முடியும்! அவரைப் போன்ற இஸ்லாமிய வீரனிடமே தவிர வேறு எங்கும் அந்த வீரதீரத்தைப் பார்க்க முடியாது. இறுதியில் எதிரிகளின் ஈட்டிக்கு இரையாகி வீரமரணம் எய்தினார்.
அடுத்து இஸ்லாமியப் படையின் கொடியை ஜஅஃபர் (ரழி) கையில் எடுத்துக் கொண்டு மின்னலாகப் போர் புரிந்தார். போர் உச்சக்கட்டத்தை அடைந்தவுடன் தனது ‘ஷக்ரா' என்ற குதிரையிலிருந்து கீழே இறங்கி, அதை வெட்டி வீழ்த்திவிட்டு, படைக்குள் புகுந்து எதிரிகளின் தலைகளை வாளால் சீவலானார். அவரது வலது கை வெட்டப்பட்டு விட்டது. கொடியை இடது கையில் பிடித்தார். இடது கையும் வெட்டப்படவே புஜத்தால் பிடித்தார். பின்பு எதிரி ஒருவனால் கொல்லப்பட்டு வீரமரணம் எய்தினார். அவரை ரோமைச் சேர்ந்த எதிரி ஒருவன் இரண்டாக பிளந்து விட்டான் என்று வரலாற்றில் கூறப்படுகிறது.
அல்லாஹ் அவர்களுக்கு வெட்டப்பட்ட இரு கரங்களுக்குப் பகரமாக சுவனத்தில் இரண்டு இறக்கைகளை வழங்கினான். அதன் மூலமாக அவர்கள் தாங்கள் நாடிய இடமெல்லாம் சுற்றித் திரிகிறார்கள். இதனை முன்னிட்டே இவர்களுக்கு ‘ஜஅஃபர் அத்தய்யார்' (பறக்கும் ஜஅஃபர்), ‘ஜஅஃபர் துல்ஜனாஹைன்' (இரு இறக்கைகளை உடைய ஜஅஃபர்) என்றும் கூறப்படுகிறது.
இப்னு உமர் (ரழி) அறிவிக்கிறார்கள்: ‘‘வெட்டப்பட்டுக் கிடந்த ஜஅஃபரை நான் பார்த்தேன். அவரது உடம்பில் ஈட்டி மற்றும் வாளின் 50 காயங்கள் இருக்கக் கண்டேன். அதில் எந்தக் காயமும் உடம்பின் பிற்பகுதியில் இல்லை.'' (ஸஹீஹுல் புகாரி)
மற்றொரு அறிவிப்பில் இப்னு உமர் (ரழி) கூறியதாக வருவதாவது: ‘‘நானும் ‘முஃதா' போரில் கலந்து கொண்டேன். போர் முடிந்த பிறகு ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரழி) அவர்களின் உடலைத் தேடினோம். அப்போது கொல்லப்பட்டவர்களில் இருந்த அவர் உடலில் 90க்கும் மேற்பட்ட அம்பு மற்றும் ஈட்டிகளின் காயங்கள் இருந்தன.'' மற்றொரு வழியாக வரும் இதே அறிவிப்பில் ‘‘அந்த அனைத்துக் காயங்களும் அவரது உடலின் முன்பகுதியில்தான் இருந்தன'' என்று வந்துள்ளது. (ஸஹீஹுல் புகாரி)
இவ்வளவு வீரமாக போர் புரிந்து இறுதியில் ஜஅஃபர் (ரழி) வீர மரணமடைந்த பின்னர் கொடியை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) ஏந்தினார். தனது குதிரையின் மீதிருந்து போர்க் களத்தை நோக்கி முன்னேறிய அவர் சிறிது தாமதிக்கலானார். அதற்குப் பின்,
‘‘சத்தியமாக என் உயிரே! விருப்போ வெறுப்போ
போரில் நீ குதித்தே ஆக வேண்டும்!
மக்கள் போருக்கு ஆயத்தமாகி ஈட்டிகளை
ஏந்தி நிற்கும் போது சுவனத்தை நீ வெறுப்பவனாக
உன்னை நான் காணுவதேன்?''
இக்கவிதையை பாடிவிட்டு குதிரையிலிருந்து கீழிறங்கி, போர்க்களத்தை நோக்கி ஓடிய போது அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஓர் இறைச்சித் துண்டை கொண்டு வந்து, ‘‘இதன்மூலம் உங்களது முதுகிற்கு வலுசேர்த்துக் கொள்ளுங்கள் இந்நாட்களில் நீங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி விட்டீர்'' என்று கூறினார். அவரது கையிலிருந்த இறைச்சித் துண்டை வாங்கி ஒரு கடி கடித்துவிட்டு மீதமுள்ளதை வீசி எறிந்து விட்டார். பின்பு தனது வாளை உருவிக் கொண்டு போர்க்களத்தில் குதித்தவர் இறுதிவரை போரிட்டு வீரமரணமடைந்தார்.
அல்லாஹ்வின் வாள் கொடியை ஏந்தியது
அப்துல்லாஹ் (ரழி) வீரமரணமடைந்து கீழே விழும் நேரத்தில் அஜ்லான் கிளையைச் சேர்ந்த ஸாபித் இப்னு அக்ரம் (ரழி) என்ற வீரர் கொடியை ஏந்திக் கொண்டு ‘‘முஸ்லிம்களே! உங்களில் ஒருவரை உடனே தலைவராகத் தேர்ந்தெடுங்கள்'' என்று கூறினார். மக்கள் ‘‘நீர்தான் அவர்'' என்று கூறினர். அதற்கவர் ‘‘அது என்னால் முடியாது'' என்று கூறிவிட்டார். மக்கள் காலித் இப்னு வலீத் (ரழி) அவர்களைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். கொடியைக் கையில் எடுத்த காலித் (ரழி) காஃபிர்களுக்கு எதிராகக் கடுமையானப் போரை நிகழ்த்தினார்.
காலித் (ரழி) கூறுகிறார்: ‘‘முஃதா போரின் போது எனது கையால் ஒன்பது வாட்கள் உடைந்தன. யமன் நாட்டில் செய்யப்பட்ட ஒரு பட்டை வாள் மட்டும் எனது கையில் நிலைத்திருந்தது. (ஸஹீஹுல் புகாரி)
முஃதா போர்க்களச் செய்திகளை அல்லாஹ் வஹியின் மூலமாக நபியவர்களுக்கு உடனுக்குடன் தெரிவித்தான். போரின் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘முதலில் கொடியை ஜைது ஏந்தினார் அவர் கொல்லப்பட்டார் இரண்டாவதாக ஜஅஃபர் ஏந்தினார் அவரும் கொல்லப்பட்டார் மூன்றாவதாக அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ஏந்தினார் அவரும் கொல்லப்பட்டார் -இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போது நபியவர்களின் கண்களிலிருந்து நீர் வழிந்தோடியது- இதற்குப் பின் கொடியை அல்லாஹ்வின் வாள்களில் ஒரு வாள் ஏந்தியது அல்லாஹ் அவர் மூலமாக முஸ்லிம்களுக்கு வெற்றியளித்தான்.'' (ஸஹீஹுல் புகாரி)
சண்டை ஓய்கிறது
முஸ்லிம் வீரர்கள் தங்களது முழு வீரத்தையும், திறமையையும், துணிவையும் வெளிக் கொணர்ந்தாலும் கடல் போன்ற மிகப் பயங்கரமான எதிரிப் படைகளைச் சமாளிப்பது மிகச் சிரமமாகவே இருந்தது. இதையறிந்த காலித் இப்னு அல்வலீது (ரழி) முஸ்லிம்களை ஆபத்திலிருந்து தந்திரமாகப் பாதுகாக்க சரியான திட்டம் ஒன்றைத் தீட்டினார்.
போரின் முடிவைப் பற்றி பலவிதமான கருத்துகள் கூறப்படுகின்றன. அந்த அனைத்து அறிவிப்புகளையும் ஒன்று திரட்டி நாம் ஆய்வு செய்யும்போது நமக்குப் புலப்படுவதாவது: கொடியை ஏந்திய அன்றைய தினம் மாலை வரை ரோம் நாட்டுப் படைக்கு முன்பாக மிகத் துணிச்சலாக காலித் (ரழி) எதிர்த்து நின்றார். முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கு ஒரு போர் தந்திரத்தைக் கையாண்டார். அது ரோமர்களின் உள்ளங்களில் கடுமையான பயத்தை உண்டு பண்ணியது. அதாவது, முஸ்லிம்கள் பின்னோக்கிச் செல்லும்பொழுது ரோமர்கள் விரட்ட ஆரம்பித்தால் அவர்களிடமிருந்து தப்பிப்பதென்பது மிகக் கடினமே என காலித் (ரழி) நன்கு விளங்கியிருந்தார்.
எனவே, மறுநாள் படைக்கு முற்றிலும் ஒரு புதிய தோற்றத்தை உருவாக்கினார். படையின் முற்பகுதியை பிற்பகுதியாகவும், வலப்பக்கத்தில் உள்ளவர்களை இடப்பக்கத்திலும் மாற்றி அமைத்தார். மறுநாள் காலை போர் தொடங்கியபோது முஸ்லிம்களின் புதிய அமைப்பைப் பார்த்த எதிரிகள் தங்களுக்கு முன் நேற்று இல்லாத புதிய படை இருப்பதைப் பார்த்தவுடன் இவர்களுக்கு உதவிப்படை வந்திருக்கின்றது என்று கூற ஆரம்பித்தனர். சிறுகச் சிறுக அவர்களது உள்ளத்தை அச்சம் ஆட்கொண்டது.
சிறிது நேரம் இரு தரப்பினரும் சண்டையிட்டு கொண்டிருக்கும் போதே தனது படையில் எவ்வித மாற்றமும் ஏற்படாத அளவிற்கு முற்றிலும் பாதுகாப்புடன் படையை பின்னோக்கி அழைத்துச் சென்றார். முஸ்லிம்கள் ஏதோ சதி செய்ய நாடுகின்றனர் என்று எண்ணிய ரோம் வீரர்கள் முஸ்லிம்களைப் பின்தொடர்வதை விட்டுவிட்டு அவர்களும் பின்வாங்கினர். இவ்வாறு முஸ்லிம்களை விரட்டும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தங்களது நாடுகளுக்கு எதிரிகள் திரும்பி விட்டனர். இவ்வாறு முஸ்லிம்கள் எவ்வித ஆபத்துமின்றி மதீனா வந்து சேர்ந்தனர். (ஃபத்ஹுல் பாரி, ஜாதுல் மஆது)

இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

12 முஸ்லிம்கள் இப்போரில் வீரமரணம் அடைந்தனர். ரோமர்களில் எத்தனை நபர்கள் கொல்லப்பட்டனர் என்ற விவரம் சரிவரத் தெரியவில்லை. இருந்தாலும் போரின் முழு விவரங்களை ஆய்வு செய்து பார்க்கும்போது அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிகிறது.

யுத்தத்தின் தாக்கம்

எந்தப் பழிவாங்கும் நோக்கத்துக்காக முஸ்லிம்கள் இவ்வளவு பெரிய சிரமங்களைச் சகித்தார்களோ! அந்த நோக்கத்தை முஸ்லிம்கள் இப்போரில் அடைந்து கொள்ளவில்லை என்றாலும், இப்போர் முஸ்லிம்களுக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. அரபியர்களின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றிய பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதுடன், அவர்களை வியப்பிலும் ஆழ்த்தியது. ரோமர்கள் அக்காலத்தில் பேராற்றல் மிக்கவர்களாக இருந்தனர். அவர்களை எதிர்ப்பது தற்கொலைக்குச் சமமானது என அரபிகள் எண்ணியிருந்தனர். 3000 பேர்கள் கொண்ட ஒரு சிறிய படை இரண்டு லட்சம் வீரர்கள் கொண்ட பெரும் படையுடன் மோதுவதும், பின்பு எந்த பெரிய சேதமும் இன்றி நாட்டுக்குத் திரும்புவதென்பதும் மகா ஆச்சரியமான விஷயமாக இருந்தது.
முஸ்லிம்கள் இதுவரை அரபியர்கள் பார்த்திராத ஓர் அமைப்பில் இருக்கின்றனர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது அவர்களது தலைவர் உண்மையில் அல்லாஹ்வின் தூதரே என்பதற்கு இச்சம்பவம் மிகப்பெரிய சான்றாக அமைந்தது. எனவேதான், எப்போதும் முஸ்லிம்களுடன் வம்பு செய்து வந்த பெரும்பாலான அரபு கோத்திரத்தினர், இப்போருக்குப் பின் பணிந்து இஸ்லாமை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். சுலைம், அஷ்ஜஃ, கத்ஃபான், துப்யான், ஃபஜாரா ஆகிய கோத்திரங்களெல்லாம் இஸ்லாமைத் தழுவினர்.
பிற்காலத்தில் ரோமர்களுடன் முஸ்லிம்கள் செய்த போர்களின் தொடக்கமாக இப்போர் இருந்தது. முஸ்லிம்கள் ரோமர்களின் நகரங்களையும் தூரமான நாடுகளையும் வெற்றி கொள்வதற்கு முன்மாதிரியாக இப்போர் அமைந்தது.

தாதுஸ்ஸலாசில் படைப் பிரிவு

ஷாம் நாட்டின் மேற்புறங்களில் வசிக்கும் அரபியர்களின் நிலைப்பாட்டை நபி (ஸல்) அவர்கள் இப்போர் வாயிலாக நன்கு விளங்கிக் கொண்டார்கள். ஏனெனில், இவர்களெல்லாம் ரோமர்களுடன் சேர்ந்து கொண்டு இப்போல் முஸ்லிம்களைத் தாக்கினர். எனவே, ரோமர்களை விட்டு இவர்களைப் பிரித்து முஸ்லிம்களோடு இணக்கமாக்க வேண்டும். அப்போதுதான் மற்றொரு முறை நம்மை எதிர்ப்பதற்கு இது போன்ற பெருங்கூட்டம் ஒன்று திரளாது என்று நபி (ஸல்) முடிவு செய்தார்கள்.
இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நபி (ஸல்) அம்ரு இப்னு ஆஸைத் தேர்வு செய்தார்கள். ஏனெனில், இவரது தந்தையின் தாய் அப்பகுதியில் வசிக்கும் ‘பலிய்' கிளையினரைச் சேர்ந்தவராவார். எனவே, அவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள இவரைத் தேர்ந்தெடுத்து முஃதா போர் முடிந்தவுடனேயே ஹிஜ்ரி 8, ஜுமாதல் ஆகிராவில் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இப்படை அனுப்பப்பட்டதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது: ‘குழாஆ' கிளையினர் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்த ஒன்று திரள்கின்றனர் என்ற செய்தி ஒற்றர்கள் மூலம் நபியவர்களுக்குத் தெரிய வர, அவர்களை எதிர்ப்பதற்காக இப்படையை நபி (ஸல்) அனுப்பினார்கள். ஒரு வேலை இரண்டு காரணங்களை முன்னிட்டும் நபியவர்கள் இப்படையை அனுப்பி இருக்கலாம்.
அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்களுக்கு நபி (ஸல்) வெள்ளை நிறத்தில் ஒரு பெரிய கொடியையும், கருப்பு நிறத்தில் ஒரு சிறிய கொடியையும் வழங்கி 300 முக்கிய வீரர்களுடன் அனுப்பினார்கள். இரவில் பயணிப்பதும் பகலில் பதுங்குவதுமாக அப்படையினர் சென்றனர். எதிரி கூட்டத்தினர் தங்கியிருக்கும் இடத்தை நெருங்கிய போது, அங்கு மிக அதிகமான எண்ணிக்கையில் எதிரிகள் இருக்கிறார்கள் என்ற செய்தி அம்ருக்கு தெரிய வந்தது. உடனே அவர் ராஃபி இப்னு மக்கீஸ் என்பவரை நபியவர்களிடம் உதவி கேட்டு அனுப்பி வைத்தார். நபி (ஸல்) அபூ உபைதாவுக்கு ஒரு கொடியைக் கொடுத்து 200 தோழர்களுடன் அனுப்பினார்கள். இத்தோழர்களில் அபூபக்ர், உமர் (ரழி) மற்றும் முஹாஜிர், அன்சாரிகளில் கீர்த்திமிக்க தோழர்கள் இடம் பெற்றிருந்தனர். அம்ர் (ரழி) அவர்களுடன் அபூ உபைதா (ரழி) வந்து சேர்ந்து கொண்டார்கள். தொழுகை நேரம் வந்த போது அபூ உபைதா (ரழி) மக்களுக்குத் தொழ வைக்க நாடினார். ‘‘நான்தான் அமீர் (படைத் தலைவன். நானே தொழவைப்பேன்) நீர் எங்களுக்கு உதவிக்காகத்தான் வந்திருக்கின்றீர்'' என்று அம்ரு (ரழி) கூற, இதை அபூ உபைதா (ரழி) ஏற்றுக் கொண்டார்கள். அதற்குப் பின் அம்ருதான் மக்களுக்குத் தொழுகை நடத்தி வந்தார்கள். அம்ரு (ரழி) படையை அழைத்துக் கொண்டு ‘குழாஆ' கோத்திரத்தினர் வசிக்கும் பகுதி அனைத்தையும் சுற்றினார்கள்.
இறுதியில், முஸ்லிம்களை எதிர்க்கத் தயாராக இருந்த எதிரிகளின் ஒரு கூட்டத்தினரைக் கண்ட போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தி நாலாபுறமும் அவர்களைச் சிதறடித்தனர்.
எடுத்துக் கொண்ட பணியை வெற்றிகரமாக முடித்து திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் மற்றும் போர்க்கள தகவல்களையும் நபி (ஸல்) அவர்களிடம் கூறும்படி அவ்ஃப் இப்னு மாலிக் அஷ்ஜம்யை அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அனுப்பினார்கள்.
‘தாத்துஸ் ஸலாசில்' என்பது ‘வாதில் குரா' என்ற பகுதிக்குப் பின்னுள்ள இடமாகும். அதற்கும் மதீனாவுக்கும் மத்தியில் பத்து நாட்கள் நடை தூரம் உள்ளது.
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுவதாவது: ஜுதாம் கோத்திரத்தினர் வசிக்கும் இடத்திலுள்ள ஒரு கிணற்றருகில் முஸ்லிம்கள் தங்கினர். அக்கிணற்றின் பெயர் ‘ஸல்சல்' என்பதால் இப்படைக்கு பெயர் ‘தாத்துஸ் ஸலாசில்' என வந்தது. (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

அபூகதாதா படைப் பிரிவு

கத்ஃபான் கிளையினர் ‘கழீரா' என்ற இடத்தில் ஒன்றுகூடி மதீனாவின் மீது தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிடுகின்றனர் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. ‘கழீரா' என்பது நஜ்து மாநிலத்தில் ‘முஹாப்' கோத்திரத்தினர் வசிக்கும் இடம். எனவே, நபி (ஸல்) அவர்கள் 15 வீரர்களுடன் அபூ கதாதாவை அனுப்பி வைத்தார்கள். அங்கு சென்ற அபூகதாதா (ரழி) பல எதிரிகளைக் கொன்று விட்டு சிலரைச் சிறைபிடித்து, கனீமா பொருட்களுடன் மதீனா திரும்பினார்கள். மொத்தம் 15 நாட்கள் இவர்கள் மதீனாவை விட்டு வெளியே இருந்தனர். (தல்கீஹ்)
மக்காவை வெற்றி கொள்வது
அறிஞர் இப்னுல் கைய்’‘ (ரஹ்) கூறுகிறார்: மக்காவின் வெற்றிதான் மிக மகத்தான வெற்றி. இதன் மூலம் அல்லாஹ் அவனது மார்க்கத்திற்கும், தூதருக்கும், நம்பிக்கைக்குரிய அவனது கூட்டத்தினருக்கும், படையினருக்கும் கண்ணியத்தை வழங்கினான். மேலும், தனது ஊரையும் மக்களின் நேர்வழிக்குக் காரணமாகிய தன் வீட்டையும் முஷ்ரிக்குகள் மற்றும் காஃபிர்களின் கையிலிருந்தும் காப்பாற்றினான். இவ்வெற்றியினால் வானத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமா? மக்களெல்லாம் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணைந்தனர். பூமியாவும் இவ்வெற்றியால் பிரகாசமடைந்தது. (ஜாதுல் மஆது)

உடன்படிக்கையை மீறுதல்

ஹுதைபிய்யாவில் நடைபெற்ற ஒப்பந்தங்களில் ஒன்று: ‘‘நபியவர்களுடன் சேர விரும்பியவர்கள் நபியவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் குறைஷிகளுடன் சேர விரும்பியவர்கள் குறைஷிகளுடன் சேர்ந்து கொள்ளலாம். யார் எந்த கூட்டத்தினருடன் சேருகிறார்களோ, அவர் அந்தக் கூட்டத்தினல் ஒருவராகக் கணிக்கப்படுவார். அவர் மீது யாராவது அத்துமீறினால் அது அந்தக் கூட்டத்தினர் மீதே அத்துமீறியதாகும்.'' இந்த விவரத்தை இதற்கு முன்பே நாம் கூறியிருக்கிறோம்.
இந்த ஒப்பந்தத்திற்கு ஏற்ப குஜாஆ கோத்திரத்தினர் நபியவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பக்ர் கோத்திரத்தினர் குறைஷிகளுடன் சேர்ந்து கொண்டனர். அறியாமைக் காலத்திலிருந்தே பரம்பரை பரம்பரையாக இவ்விரு கோத்திரத்தினரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இஸ்லாம் வந்து, இந்த உடன்படிக்கை ஏற்பட்டதற்குப் பின் இரு சாராரும் தங்களுக்குள் சண்டையிடுவதை நிறுத்திக் கொண்டனர்.
சில காலங்கள் இவ்வாறு கழிய, இந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பக்ர் கிளையினர் குஜாஆ கோத்திரத்தாரிடமிருந்து தங்களது பழைய பகைமைக்குப் பழி தீர்த்துக் கொள்ள விரும்பினர்.
ஹிஜ்ரி 8, ஷஅபான் மாதம் பக்ர் கோத்திரத்தினரின் ஒரு கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு ‘நவ்ஃபல் இப்னு முஆவியா அத்தியலி' என்பவன் புறப்பட்டான். அன்று குஜாஆ கிளையினர் ‘அல்வத்தீர்' என்ற கிணற்றுக்கருகில் ஒன்றுகூடியிருந்தனர். நவ்ஃபல், தான் அழைத்து வந்தவர்களைச் சேர்த்துக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினான். குஜாஆ கிளையினரில் சிலர் கொல்லப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களுடன் கடுமையான சண்டை நடந்தது. குறைஷிகள் பக்ரு கிளையினருக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதுடன், அவர்களில் சிலரும் இரவின் இருளை பயன்படுத்திக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினர்.
சண்டைசெய்து கொண்டே குஜாஆ கோத்திரத்தினர் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டனர். அப்போது பக்ர் கிளையினர் ‘‘நவ்ஃபலே! நாம் நிறுத்திக் கொள்வோம். நாம் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டோம். உமது இறைவனைப் பயந்துகொள்! உமது இறைவனை பயந்துகொள்!'' என்று கூறினர். ஆனால், சதிகாரன் நவ்ஃபல் மிகக் கடுமையான வார்த்தையைக் கூறினான். ‘‘பக்ர் இனத்தாரே! இன்றைய தினம் எந்த இறைவனும் இல்லை. உங்களது பழியைத் தீர்த்துக் கொள்ளுங்கள். என்மீது சத்தியமாக! ஹரம் எல்லையில் திருடும் நீங்கள் அதில் ஏன் கொலை செய்யக் கூடாது?'' என்றான். குஜாஆவினர் புதைல் இப்னு வரகா மற்றும் ராபிஃ என்ற தங்களது நண்பர்கள் வீட்டில் சென்று அடைக்கலம் தேடினர்.
குஜாஆவைச் சேர்ந்த அம்ரு இப்னு ஸாலிம் மக்காவிலிருந்து மதீனாவிற்கு விரைந்தார். அங்கிருந்து நபியவர்களின் பள்ளிவாயிலை நோக்கி நடந்த அவர், பள்ளிக்குள் நுழைந்ததும் நபியவர்கள் முன்னிலையில் நின்று கொண்டார். நபியவர்கள் மக்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார்கள். அம்ரு நடந்த துக்கத்தை கவிதைகளில் பாடிக் காட்டினார்.
இறைவா! நான் முஹம்மதிடம் எங்களின் ஒப்பந்தத்தையும்
அவர் தந்தையின் பழமையான ஒப்பந்தத்தையும்
கேட்டு வந்திருக்கின்றேன். நீங்கள் பிள்ளைகள்
நாங்கள் பெற்றோர்கள் பின்பு நாம் முஸ்லிமானோம்
பின்வாங்கவில்லை முழுமையாக உதவுங்கள்
அல்லாஹ் உமக்கு வழிகாட்டுவான்.
அல்லாஹ்வின் அடியார்களை அழை;
உதவிக்கு அவர்களும் வருவார்கள்
அவர்களில் ஆயுதம் ஏந்திய அல்லாஹ்வின்
தூதரும் இருக்கின்றார். அவர் வானில் நீந்தும்
முழு நிலா போல் அழகுள்ளவர்.
அவருக்கு அநீதமிழைத்தால் முகம் மாறிவிடுவார்.
நுரை தள்ளும் கடல்போன்ற படையுடன் வருவார்
குறைஷிகள் உன் வாக்கு மாறினர்.
உன் வலுவான ஒப்பந்தத்தை முறித்து விட்டனர்.
கதாவில் எனக்குப் பதுங்கு குழி வைத்துள்ளனர்.
ஒருவரையும் உதவிக்கு அழையேன்
என நினைத்துக் கொண்டனர். அவர்கள் அற்பர்கள்
சிறுபான்மையினர் வதீல் இரவு எங்களைத் தாக்கினர்.
நாங்கள் இறைவனை... பணிந்து குனிந்து வணங்கிய போது
எங்களை அவர்கள் வெட்டினர்.
அவன் கவிதைகளைக் கேட்ட நபி (ஸல்) ‘‘உனக்கு உதவி செய்யப்படும்'' என்று ஆறுதல் கூறினார்கள். அந்நேரத்தில் வானத்திலிருந்து ஒரு மேகம் அங்கு வந்தது. நபி (ஸல்) அவர்கள் ‘‘இம்மேகம் குஜாஆ கிளையினர் உதவி பெற்று விட்டனர் என்பதற்கு முன் அறிவிப்பு'' என்றார்கள்.
பிறகு ஃபுதைல் இப்னு வரகா அல்குஸாம் தனது கோத்திரத்தினர் சிலரை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களது சமூகம் வந்து, தங்களில் பலர் கொல்லப்பட்டதையும், குறைஷிகள் பலர் தங்களுக்கு எதிராக பக்ரு குலத்தவருக்கு உதவி செய்ததையும் கூறிவிட்டு மக்கா திரும்பினார்.
அபூ ஸுஃப்யான் ஓடி வருகிறார்
குறைஷிகளும், அவர்களது தோழர்களும் செய்தது ஒப்பந்தத்தை முறிக்கும் செயலாகும் மிகப்பெரிய மோசடியாகும். எவ்விதத்திலும் இச்செயலை நியாயப்படுத்த முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தங்களின் இத்தீய செயலுக்குப் பின் அதன் விபரீதத்தை அறிந்து கொண்ட குறைஷிகள் உடனடியாக அவசர ஆலோசனை சபையைக் கூட்டினர். ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்குத் தங்களின் தளபதி அபூஸுஃப்யானை மதீனாவுக்கு அனுப்ப வேண்டுமென்று அதில் முடிவெடுத்தனர்.
‘‘தங்களின் மோசடி செயலுக்குப் பின் குறைஷிகள் என்ன செய்வார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்கு முன்கூட்டியே அறிவித்தார்கள். அநேகமாக ஒப்பந்தத்தை உறுதிசெய்து, அவகாசத்தை நீட்டித் தருவதற்காக அபூ ஸுஃப்யான் உங்களிடம் வருவார்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.
குறைஷிகள் முடிவு செய்தவாறே அபூ ஸுஃப்யான் மக்காவிலிருந்து புறப்பட்டார். வழியில் மதீனாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த புதைல் இப்னு வரகாவை ‘உஸ்ஃபான்' என்ற இடத்தில் சந்தித்து ‘‘புதைலே எங்கு போய் வருகிறீர்?'' என்றார். அவர், ‘‘நான் எனது கோத்திரத்தாருடன் இந்த கடற்கரை மற்றும் இந்தப் பள்ளத்தாக்கை சுற்றிப் பார்க்க வந்தேன்'' என்று கூறினார். அபூ ஸுஃப்யான் ‘‘நீ முஹம்மதிடம் சென்று வரவில்லையா?'' என்று கேட்டார். அவர் ‘‘இல்லையென்று'' கூறிவிட்டார். புதைல் அந்த இடத்தை விட்டு மக்கா நோக்கிப் புறப்பட்டு போன பின்னர் அபூ ஸுஃப்யான், ‘‘புதைல் மதீனாவுக்குச் சென்றிருந்தால் அங்கு தனது ஒட்டகங்களுக்கு தின்பதற்கு பேரீத்தம் கொட்டைகளைக் கொடுத்திருக்க வேண்டும்'' என்று கூறிவிட்டு அவரது ஒட்டகம் படுத்திருந்த இடத்திற்கு வந்து, அதன் சாணத்தைக் கிளறினார். அதில் பேரீத்தங்கொட்டைகளை பார்த்தவுடன், ‘‘நான் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன்! புதைல் முஹம்மதிடம்தான் சென்று வந்திருக்கிறார்'' என்று கூறினார்.

அபூ ஸுஃப்யான் மதீனா வந்தடைந்து தனது மகள் உம்மு ஹபீபாவின் வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்த விரிப்பில் அவர் உட்கார நாடிய போது சட்டென உம்மு ஹபீபா (ரழி) அதைச் சுருட்டி விட்டார். ‘‘என் அருமை மகளே! இந்த விரிப்பில் நான் உட்காருவதற்குத் தகுதி அற்றவனா? அல்லது இந்த விரிப்பு எனக்குத் தகுதியற்றதா?'' எனக் கேட்டார். ‘‘இல்லை! இது நபி (ஸல்) அவர்களின் விரிப்பு; நீர் அல்லாஹ்விற்கு இணைவைக்கும் அசுத்தமானவர்'' என்று உம்மு ஹபீபா (ரழி) பதில் கூறினார்கள். இதைக் கேட்ட அவர் ‘‘என்னிடமிருந்து வந்ததற்குப் பின் உனக்கு ஏதோ தீங்கு நேர்ந்து விட்டது'' எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, தான் வந்த நோக்கத்தைப் பற்றிப் பேசினார். ஆனால் நபி (ஸல்) அவருக்கு எந்த பதிலும் கூறாததால், அங்கிருந்து எழுந்து அபூபக்ரிடம் வந்து நபியவர்களிடம் தன் விஷயமாகப் பேசுமாறு கூறினார். அதற்கு அபூபக்ர், (ரழி) ‘‘அது என்னால் முடியாது'' எனக் கூறிவிட்டார்கள். பின்பு அங்கிருந்து உமரிடம் சென்று நபியவர்களிடம் பேசுமாறு கூறினார். அதற்கு உமர் (ரழி) ‘‘நானா உங்களுக்காக நபியவர்களிடம் சிபாரிசு செய்வேன்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்னிடம் ஒரு சிறு குச்சியைத் தவிர வேறெதுவும் இல்லை என்றாலும் அதைக் கொண்டே உங்களிடம் போர் புவேன்'' என்று கூறினார்கள். பின்பு அவர் அலீ (ரழி) இடம் வந்தார். அங்கு அவருடன் ஃபாத்திமாவும் இருந்தார்கள். அவ்விருவருக்கும் முன்பாக சிறுபிள்ளையாக இருந்த ஹஸன் (ரழி) தவழ்ந்து கொண்டிருந்தார். அவர் ‘‘அலீயே! நீ எனக்கு உறவில் மிக நெருக்கமானவர். ஒரு தேவைக்காக உம்மிடம் வந்திருக்கின்றேன். நான் தோல்வியுற்றவனாக இங்கிருந்து செல்லக் கூடாது. எனவே, எனக்காக முஹம்மதிடம் சிபாரிசு செய்'' என்று கூறினார். அலீ (ரழி) ‘‘உனக்கு நாசம் உண்டாகட்டும்! நபியவர்கள் தீர்க்கமாக முடிவு செய்து விட்டார்கள். அது விஷயமாக நாங்கள் அவர்களுடன் பேச முடியாது'' என்று கூறிவிட்டார்கள். அவர் ஃபாத்திமாவின் பக்கம் திரும்பி ‘‘நீ உனது மகனிடம் சொல்! அவர் மக்களுக்கு மத்தியில் கார்மானமும் பாதுகாப்பும் நிலவ வேண்டுமென்று அறிவிப்புச் செய்யட்டும்! இதனால் காலமெல்லாம் அவர் அரபியர்களின் தலைவராக விளங்குவார்'' என்று கூறினார். ஃபாத்திமா (ரழி), ‘‘அந்தத் தகுதியை எனது மகன் இன்னும் அடையவில்லை நபியவர்கள் இருக்க வேறு எவரும் பாதுகாப்பும் அடைக்கலமும் கொடுக்க முடியாது.'' என்று கூறிவிட்டார்கள்.
இந்தப் பதில்களையெல்லாம் கேட்ட அபூ ஸுஃப்யானின் கண்களுக்கு முன் உலகமே இருண்டு விட்டது. அவர் அலீ (ரழி) அவர்களிடம் அச்சத்துடனும் நடுக்கத்துடனும் கவலை தோய்ந்த தொனியிலும் ‘‘அபுல் ஹஸனே! நிலைமை மோசமாகிவிட்டது. எனக்கு ஏதாவது நல்ல யோசனை கூறுங்கள்'' என்றார். ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உனக்கு பயன் தரும் எந்த விஷயத்தையும் நான் அறியமாட்டேன். எனினும், நீ கினானா கிளையினரின் தலைவனாக இருக்கிறாய். நீ எழுந்து சென்று ‘‘மக்களுக்கு மத்தியில் பாதுகாப்பும் அச்சமற்றத் தன்மையும் நிலவவேண்டும்'' என்று அறிவிப்பு செய்! பிறகு, உனது ஊருக்கு சென்றுவிடு!'' என்று கூறினார்கள். இதைக் கேட்ட அவர் ‘‘இதனால் எனக்கு ஏதேனும் பயனிருக்கிறதா?'' என்று கேட்டார். அதற்கு அலீ (ரழி), ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது பயன் தரும் என்று நான் எண்ணவில்லை என்றாலும் என்னிடம் உனக்காக அதைத் தவிர வேறு யோசனை எதுவுமில்லை'' என்று கூறினார். அபூ ஸுஃப்யான் அங்கிருந்து எழுந்து பள்ளிக்குச் சென்று ‘‘மக்களே! நான் மக்களுக்கு மத்தியில் பாதுகாப்பு நிலவவேண்டும் என்று அறிவிப்பு செய்கிறேன்'' என்று கூறிவிட்டு, தனது ஒட்டகத்தில் ஏறி மக்கா சென்றுவிட்டார்.
அபூ ஸுஃப்யான் குறைஷிகளிடம் வந்து சேர்ந்த போது ‘‘என்ன செய்தியை பெற்று வந்திருக்கிறீர்?'' என்று அவர்கள் கேட்டனர். ‘‘நான் முஹம்மதிடம் சென்று பேசினேன். அவர் எந்த பதிலும் எனக்குக் கூறவில்லை. பின்பு அபூபக்ரிடம் சென்று பேசினேன். அவருடன் பேசியதில் எப்பயனுமில்லை. பின்பு உமரிடம் பேசினேன். அவர் நமக்கு மிகப்பெரிய எதிரியாக விளங்குகிறார். பின்பு அலீயிடம் சென்றேன். அவர் மிக மென்மையுடன் நடந்து கொண்டார். எனக்கு ஓர் ஆலோசனைக் கூறினார். அதன்படி நானும் செய்துவிட்டு வந்துள்ளேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அந்த ஆலோசனை எனக்கு பயனளிக்குமா? அளிக்காதா? என்பது எனக்குத் தெரியாது'' என்றார். ‘‘அவர் உனக்கு என்ன ஆலோசனை கூறினார்?'' என்று குறைஷிகள் கேட்டனர்.
‘‘மக்களுக்கு மத்தியில் நான் பாதுகாப்புத் தருகிறேன். (குறைஷிகளால் உங்களுக்கு இனி எந்த இடையூறும் ஏற்படாது)'' என்று முஸ்லிம்களுக்கு மத்தியில் அறிவிப்புச் செய்யும்படி எனக்குக் கூறினார். நானும் அவ்வாறே செய்தேன். ‘‘அதை முஹம்மது ஏற்றுக் கொண்டாரா?'' என்று குறைஷியர் கேட்டனர். ‘‘இல்லை'' என்று அபூ ஸுஃப்யான் கூறினார். ‘‘உனக்கு நாசம் உண்டாகட்டுமாக! அந்த ஆள் (அலீ) உன்னுடன் நன்றாக விளையாடி விட்டார்'' என்று குறைஷிகள் கூறினர். அதற்கு அபூ ஸுஃப்யான், ‘‘இல்லை! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் கூறியதைத் தவிர வேறு வழி தெரியவில்லை'' என்று கூறினார்.

மறைமுகமாகப் போருக்கு ஆயத்தம்

அறிஞர் தப்ரானியின் அறிவிப்பிலிருந்து நமக்குத் தெரிய வருவதாவது: குறைஷிகள் ஒப்பந்தத்தை மீறிவிட்டனர் என்ற செய்தி தனக்குக் கிடைப்பதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே போருக்கான சாதனங்களைத் தயார் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவிற்கு உத்தர விட்டிருந்தார்கள். இதைப் பற்றி யாருக்கும் தெரியாது. ஒரு தடவை அபூபக்ர் (ரழி), ஆயிஷா (ரழி) வீட்டிற்கு வந்த போது ‘‘எனதருமை மகளே! இது என்ன தயாரிப்பு?'' என்று கேட்டார்கள். ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது'' என்று ஆயிஷா (ரழி) கூறினார்கள். ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது குறைஷிகளிடம் போர் புரிவதற்கான காலமுமில்லையே! நபி (ஸல்) அவர்கள் எங்குதான் செல்லப் போகிறார்கள்?'' என்று அபூபக்ர் (ரழி) கேட்டதற்கு ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அதுபற்றி எனக்கு எந்த அறிவுமில்லை'' என்று ஆயிஷா (ரழி) கூறிவிட்டார்கள். மூன்றாவது நாள் காலையில் ‘குஜாஆ' கோத்திரத்தைச் சேர்ந்த அம்ர் இப்னு சாலிம் என்பவர் நாற்பது நபர்களுடன் நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வருகை தந்து, முன்னால் கூறப்பட்ட அந்தக் கவிகளைப் பாடினார். அப்போதுதான் உடன்படிக்கை மீறப்பட்டு விட்டது என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொண்டனர்.
அம்ர் வந்து சென்றதற்குப் பின் புதைல் சில தோழர்களுடன் நபியவர்களிடம் வந்து, நடந்த நிகழ்ச்சியைப் பற்றி விவரித்தார். புதைல் சென்றதற்குப் பின் அபூ ஸுஃப்யான் மதீனா வந்ததைப் பார்த்த முஸ்லிம்கள் தாங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மை என்பதை அறிந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களைப் போருக்குத் தயாராகும்படி கட்டளையிட்டதுடன், நாம் மக்காவிற்கு செல்ல இருக்கிறோம் என்றும் அறிவித்தார்கள். மேலும் ‘‘அல்லாஹ்வே! நான் குறைஷிகளின் ஊருக்கு அவர்களுக்குத் தெரியாமல் திடீரென நுழையும் வரை எந்தச் செய்தியும் அவர்களுக்குச் சேராமலும், ஒற்றர்கள் அவர்களைச் சென்றடையாமலும் நீ பாதுகாப்பாயாக'' என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள்.
மேலும், தங்களின் படையைப் பற்றிய செய்தியை முழுமையாக மறைப்பதற்காக வேறொரு திசையில் சிறிய படையொன்றை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். ஹிஜ்ரி 8, ரமழான் மாதம் தொடக்கத்தில் மதீனாவிலிருந்து மூன்று பரீதும் தொலைவிலுள்ள தூகஷப், துல்மர்வா என்ற இடங்களுக்கு மத்தியிலுள்ள ‘இழம்' என்ற இடத்திற்கு அபூ கதாதா இப்னு ப்இ (ரழி) அவர்களின் தலைமையில் 8 வீரர்கள் கொண்ட ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அனுப்பினார்கள். நபியவர்களும் ‘இழம்' என்ற இடத்திற்குத்தான் செல்ல இருக்கிறார்கள் என்று மக்கள் எண்ண வேண்டும் இதே செய்தி பரவ வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) இவ்வாறு செய்தார்கள். இப்படை தனது பயணத்தைத் தொடர்ந்து நபி (ஸல்) கூறிய இடத்தை சென்று அடைந்த போது நபியவர்கள் மக்கா நோக்கி பயணமாகி விட்டார்கள் என்ற செய்தி அப்படைக்குக் கிடைத்தது. உடன் அவர்களும் நபியவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டார்கள். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
நபியவர்கள் மக்கா வருகிறார்கள் என்ற செய்தியைத் தெரிவிப்பதற்காக ஹாதிப் இப்னு அபூ பல்தஆ என்ற நபித்தோழர் கடிதம் ஒன்றை எழுதி ஒரு பெண் மூலம் அனுப்பினார். அதற்குக் கூலியும் கொடுத்தார். அப்பெண் அதைத் தலைமுடி சடைக்குள் வைத்துக் கொண்டு புறப்பட்டாள். ஆனால், ஹாதிபின் இச்செயலை அல்லாஹ் வஹியின் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்து விட்டான். உடனே நபியவர்கள் அலீ, மிக்தாத், ஜுபைர், அபூமர்ஸத் கனவி (ரழி) ஆகியோரை அழைத்து ‘‘நீங்கள் ‘காக்' என்ற தோட்டத்திற்குச் செல்லுங்கள் அங்கு ஒரு பெண் பயணி இருப்பாள் அவளிடம் குறைஷிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று இருக்கிறது. அதைக் கைப்பற்றுங்கள்!'' என்று கூறினார்கள்.
அவர்கள் விரைந்து சென்று அவ்விடத்தை அடைந்தார்கள். அங்கு நபி (ஸல்) கூறியபடி அப்பெண் இருக்க, அவளை வாகனத்திலிருந்து இறங்குமாறு கூறி அவளிடம் ‘‘உன்னிடமுள்ள கடிதம் எங்கே? என்று கேட்டார்கள். அவள் ‘‘என்னிடம் எக்கடிதமும் இல்லை'' என்றாள். அவர்கள் அவளது பயணச் சாமான்கள் அனைத்தையும் தேடினர். ஆனால், அதில் ஏதும் கிடைக்கவில்லை.
‘‘அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன். அல்லாஹ்வின் தூதர் பொய் கூற மாட்டார்கள், நாங்களும் பொய் கூறமாட்டோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீயாக அக்கடிதத்தை கொடுத்து விடு அல்லது உனது ஆடையை களைந்து நாங்கள் தேடுவோம்'' என்று அலீ (ரழி) கூறினார்கள். அலீயின் பிடிவாதத்தைப் பார்த்த அப்பெண் ‘‘விலகிக் கொள்'' என்று கூற அலீ (ரழி) விலகிக் கொண்டார்கள். தனது சடையை அவிழ்த்து அதிலிருந்த கடிதத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தாள். அவர்கள் அதை நபியவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
அந்த கடிதத்தில்: ‘‘ஹாதிப் இப்னு அபூ பல்தஆ குறைஷிகளுக்கு எழுதுவது: நபி (ஸல்) உங்களை நோக்கி புறப்பட்டு விட்டார்கள்'' என்று எழுதப்பட்டிருந்தது. நபி (ஸல்) ஹாதிபை அழைத்தார்கள். ‘‘ஹாதிபே! இது என்ன?'' என்று கேட்டார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள் கின்றேன். நான் மதம் மாறவுமில்லை. அதை மாற்றிக் கொள்ளவுமில்லை. நான் குறைஷிகளுடன் சேர்ந்துதான் வாழ்ந்தேனே தவிர நான் குறைஷியல்ல. எனது குடும்பத்தினர்களும், உறவினர்களும் அங்கு இருக்கின்றனர். அவர்களைப் பாதுகாப்பதற்கு அங்கு எனக்கு எந்தக் குறைஷி உறவினரும் இல்லை. உங்களுடன் இருக்கும் மற்றவர்களின் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கு அங்கு அவரது மற்ற உறவினர்கள் இருக்கின்றார்கள். நான் குறைஷிகளுக்கு இந்த உதவியைச் செய்தால், அதனால் அவர்கள் எனது குடும்பத்தைப் பாதுகாப்பார்கள். அதற்காகவே நான் அவர்களுக்கு இந்த உதவியைச் செய்ய ஆசைப்பட்டேன்'' என்று ஹாதிப் (ரழி) பதில் கூறினார். இந்தப் பதிலை கேட்டுக் கொண்டிருந்த உமர் (ரழி), ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவரது கழுத்தைச் சீவ எனக்கு அனுமதி தாருங்கள். அவர் நிச்சயமாக அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார். அவர் நயவஞ்சகராகி விட்டார்'' என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், ‘‘அல்லாஹ் பத்ரில் கலந்து கொண்டவர்களைப் பார்த்து நீங்கள் விரும்பியதை செய்யுங்கள். நான் உங்களின் பாவங்களை நிச்சயமாக மன்னித்து விட்டேன்'' என்று கூறியிருக்கிறான். உமரே! இவர் பத்ரில் கலந்து கொண்டவர் என்பது உனக்குத் தெரியுமா?'' என்று கூறினார்கள். நபியவர்களின் இந்தப் பதிலால் உமரின் கண்களிலிருந்து கண்ணீர் மல்கியது. ‘‘அல்லாஹ்வும் அவனது தூதரும் மிக அறிந்தவர்கள்'' என உமர் (ரழி) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இவ்வாறு ஒற்றர்கள் வழியாக செய்தி கடத்தப்படுவதையும் அல்லாஹ் தடுத்து விட்டான். முஸ்லிம்கள் போருக்குத் தயாராகி வருகிறார்கள் என்ற எந்தவித செய்தியும் குறைஷிகளுக்குக் கிடைக்கவில்லை.

மக்காவை நோக்கி இஸ்லாமியப் படை

ஹிஜ்ரி 8, ரமழான் மாதம் பிறை 10ல் நபி (ஸல்) 10,000 தோழர்களுடன் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். மதீனாவில் அபூ ருஹ்ம் கிஃபா (ரழி) என்ற தோழரை நபி (ஸல்) தனக்குப் பிரதிநிதியாக நியமித்தார்கள்.
நபியவர்கள் ‘ஜுஹ்ஃபா' என்ற இடத்தில் அல்லது அதைத் தாண்டி ஓரிடத்தில் சென்று கொண்டிருந்த போது, நபியவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபு (ரழி) தனது குடும்பத்தினருடன் அவர்களைச் சந்தித்தார்கள். இவர்கள் இஸ்லாமை ஏற்று நபியவர்களைச் சந்திக்க தனது குடும்பத்தார்களுடன் மக்காவிலிருந்து ஹிஜ்ரா செய்து மதீனா நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். பிறகு நபி (ஸல்) ‘அப்வா' என்ற இடத்தில் தங்கியிருந்த போது, நபியவர்களது பெரிய தந்தையின் மகன் அபூ ஸுஃப்யான் இப்னு ஹாரிஸ் என்பவரும், மாமி மகன் அப்துல்லாஹ் இப்னு அபூ உமையா ஆகிய இருவரும் வந்தனர்.
ஆனால், இவ்விருவரும் நபி (ஸல்) அவர்களை எப்போதும் இகழ்ந்து கொண்டிருந்ததாலும், அதிகம் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்ததாலும் அவர்களைச் சந்திக்க, அவர்களுடன் பேச நபியவர்கள் மறுத்து விட்டார்கள். நபியவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரழி) ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களது பெரிய தந்தையின் மகனும், மாமி மகனும் உங்களின் புறக்கணிப்பால் நற்பேறு அற்றவர்களாக ஆகிவிட வேண்டாம். அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினார். மேலும் அலீ (ரழி), ‘‘நீ நபியவர்களின் முன்பக்கமாக சென்று நபி யூஸுஃப் (அலை) அவர்களின் சகோதரர்கள் யூஸுஃபிடம் கூறியதைப் போன்று (கீழ்காணும் வசனங்களை) நீயும் கூறு, நபி (ஸல்) அவர்கள் பிறரைவிட தான் அதிக நற்பண்புள்ளவராக இருப்பதையே அதிகம் விரும்புவார்கள். (அதாவது, தனக்கு தீங்கிழைத்த தனது சகோதரர்களை நபி யூஸுஃப் (அலை) மன்னித்து விட்டார்கள் அப்படியிருக்க நபி (ஸல்) அவர்களும் நிச்சயம் மன்னிப்பார்கள்'') என்று அபூ ஸுஃப்யானிடம் கூறினார். அவ்வாறே அபூ ஸுஃப்யானும் செய்தார்.
நபி யூஸுஃப் (அலை) அவர்களின் சகோதரர்கள் கூறியதாவது:
‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (உங்களுக்குப் பெரும்) தீங்கிழைத்தோம். ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட உங்களை மேன்மையாக்கி வைத்திருக்கிறான். (எங்களுக்கு நன்மை செய்ய அல்லாஹ் உங்களுக்குச் சந்தர்ப்பமும் அளித்திருக்கிறான்.)'' (அல்குர்ஆன் 12:91)
அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
‘‘இன்றைய தினம் (நான்) உங்கள் மீது எந்த குற்றமும் (சுமத்துவது) இல்லை. அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்.'' (அல்குர்ஆன் 12:92)
என்ற வசனங்களைக் கூறினார்கள். அதன் பிறகு அபூ ஸுஃப்யான் இப்னு ஹாரிஸ்,
‘‘இது சத்தியம்! லாத்துடைய வீரர்கள்"
முஹம்மதின் வீரர்களை" வீழ்த்த வேண்டும் என்பதற்காக,
நான் போர்க்கொடி சுமந்த போது
இருளில் சிக்கித் தவிக்கும் திக்கற்ற பயணிபோல் இருந்தேன்
இது எனக்கு சிறந்த நேரம்
நான் நேர்வழிக்கு அழைக்கப்படுகிறேன்
அதை ஏற்று நானும் நேர்வழி பெறுகிறேன்
என் நேர்வழிக்கு நான் காரணமல்லன்.
நான் ஒவ்வொரு இடத்திலும் விரட்டியடித்தேனே
அவர்தான் எனக்கு நேர்வழி காட்டி
அல்லாஹ்வை காட்டித் தந்தார்.''
என்ற கவிதைகளைப் பாடிக்காட்டினார்.
அதற்கு நபியவர்கள், அவரது நெஞ்சில் அடித்து ‘‘நீதான் என்னை ஒவ்வொரு இடங்களிலும் துரத்திக் கொண்டிருந்தாய்'' என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
மர்ருள் ளஹ்ரானில் இஸ்லாமியப் படை
ரமழான் மாதமாக இருந்ததால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் நோன்பு வைத்திருந்தார்கள். ‘உஸ்ஃபான்' என்ற இடத்திற்கு அருகிலுள்ள ‘குதைத்' என்ற கிணற்றுக்கருகில் இறங்கி அனைவரும் நோன்பு திறந்தனர். (முஸ்னது அஹ்மது, பைஹகி, இப்னு ஹிஷாம்)
அதற்குப் பின் தொடர்ந்து பயணித்து ‘ஃபாத்திமா பள்ளத்தாக்கு' என்று கூறப்படும் ‘மர்ருள் ளஹ்ரான்' என்ற இடத்தில் இறங்கினார்கள். அங்கு நெருப்பு மூட்டும்படி நபி (ஸல்) கட்டளையிட, ஒவ்வொரு நபித்தோழரும் நெருப்பு மூட்டினார். மொத்தம் பத்தாயிரம் நெருப்புக் குண்டங்கள் அங்கு மூட்டப்பட்டன. இரவில் படையின் பாதுகாப்புக்கு உமர் இப்னு கத்தாபை நபி (ஸல்) தலைமை தாங்க வைத்தார்கள்.
நபியவர்களுக்கு முன் அபூஸுஃப்யான்
முஸ்லிம்கள் மர்ருள் ளஹ்ரானில் தங்கியதற்குப் பின் நபியவர்களின் வெள்ளைக் கோவேறு கழுதையில் அப்பாஸ் (ரழி) ஏறி, அங்கிருந்து புறப்பட்டார். விறகு சேகரிக்க வருபவர்கள் அல்லது வேறு யாராவது கிடைப்பார்களா என்று தேடினார். நபி (ஸல்) மக்கா வரும் செய்தியைக் குறைஷிகளுக்கு சொல்லி அனுப்பினால் நபி (ஸல்) மக்காவுக்குள் நுழைவதற்கு முன்பதாக நபியவர்களிடம் வந்து தங்களுக்குரிய பாதுகாப்பை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள் என்பதே அப்பாஸின் நோக்கமாக இருந்தது..
அல்லாஹ் எந்த வகையிலும் குறைஷிகளுக்கு நபியவர்களின் நடவடிக்கை தெரியாமல் மறைத்து விட்டான். அவர்கள் பயத்துடனும், எந்நேரத்திலும் தாங்கள் தாக்கப்படுவோம் என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். மக்காவில் அபூ ஸுஃப்யான் வருவோர் போவோரிடமெல்லாம் நபியவர்களின் செய்தியைப் பற்றி துருவித் துருவி விசாரித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் இரவில் அபூ ஸுஃப்யானும், ஹக்கீம் இப்னு ஸாமும், புதைல் இப்னு வரக்காவும் நிலவரங்களை அறிந்து கொள்வதற்காக விசாரித்துக் கொண்டே மக்காவை விட்டு வெளியேறினார்கள். அன்றிரவுதான் நபியவர்கள் மர்ருள் ளஹ்ரானில் படையுடன் தங்கியிருந்தார்கள்.
அந்த நிகழ்ச்சியைப் பற்றி அப்பாஸ் (ரழி) கூறுவதைக் கேட்போம்:
‘‘நான் நபியவர்களது கோவேறு கழுதையின் மீது இரவின் இருளில் சென்று கொண்டிருந்தேன். அபூஸுஃப்யான் மற்றும் புதைல் ஆகிய இருவரும் பேசிக் கொண்டது காதில் கேட்டது. ‘‘இன்றைய இரவில் எயும் நெருப்பைப் போன்றும், இங்குக் கூடியிருக்கும் படையைப் போன்றும் நான் வேறு எப்போதும் பார்த்ததில்லை’‘ என்று அபூஸுஃயான் புதைலிடம் கூறினார். அதற்கு புதைல் ‘‘இங்கு வந்திருப்பது குஜாஆவின் படையாக இருக்கலாம். போர்தான் இவர்களைத் தீயாக ஆக்கிவிட்டது. நம்மீது போர்தொடுக்க கிளம்பிய இவர்கள் இவ்வாறு நெருப்பு மூட்டியிருக்கின்றனர்'' என்றார். ‘‘இல்லை குஜாஆவின் எண்ணிக்கை மிகக் குறைவு; அவர்கள் வீரமில்லாதவர்கள் இது அவர்களின் நெருப்பாகவோ படையாகவோ இருக்க முடியாது'' என்று அபூஸுஃப்யான் கூறினார்.
நான் அபூஸுஃப்யானின் குரலைப் புரிந்து கொண்டு ‘‘ஹன்ளலாவின் தந்தையே!'' என்று அழைத்தேன். (இது அவரது புனைப் பெயராகும்) அவரும் எனது குரலைப் புரிந்துகொண்டு ‘‘ஃபழ்லின் தந்தையே!'' (இது அப்பாஸின் புனைப் பெயராகும்) என்று அழைத்தார். நான் ‘ஆம்! நான்தான்' என்று கூறினேன். அதற்கவர் (என்ன! இந்நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர் எனும் பொருளில்) ‘‘உங்களுக்கு என்னவாயிற்று. எனது தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும்'' என்று கூறினார். ‘‘இதோ அல்லாஹ்வின் தூதர் மக்களுடன் வந்திருக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! குறைஷிகள் அழிந்தே விட்டனர்'' என்று நான் கூறினேன்.
‘‘தப்பிப்பதற்கு வழி என்ன? எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று அபூ ஸுஃப்யான் கேட்டார். அதற்கு நான் ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபியவர்களிடம் நீ சிக்கினால் உன்னை அவர்கள் கொலை செய்து விடுவார்கள். இந்தக் கோவேறு கழுதையில் என் பின்னே ஏறிக்கொள். நான் உன்னை நபியவர்களிடம் அழைத்துச் சென்று உனக்காக நபி (ஸல்) அவர்களிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று கூறினேன். அவரும் எனக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டார். மற்ற அவரது இரு நண்பர்களும் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டனர்.
நான் அவரை அழைத்து வந்து கொண்டிருந்த போது அங்கிருந்த ஒவ்வொரு நெருப்புக்கு அருகிலும் செல்லும்போதெல்லாம் ‘‘இவன் யார்?'' என விசாரித்துக் கொண்டே வந்தனர். முஸ்லிம்களும் நபியின் கோவேறு கழுதையின் மீது நான் வாகனிப்பதைப் பார்த்து, ‘‘இதோ... இவர்தான் நபியுடைய தந்தையின் சகோதரர் ஆவார். இது நபியின் கோவேறு கழுதையாகும்'' என்று பேசிக் கொண்டார்கள். இவ்வாறே நான் உமர் இப்னு கத்தாப் (ரழி) மூட்டியிருந்த நெருப்புக்கருகில் சென்றபோது ‘‘அவர் இது யாரென்று கேட்டுக் கொண்டே என்னை நோக்கி எழுந்து வந்தார்.'' வாகனத்தின் பின்னால் அபூஸுஃப்யானைப் பார்த்தவுடன் ‘‘இவர்தான் அல்லாஹ்வின் எதிரி அபூ ஸுஃப்யான். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! எவ்வித ஒப்பந்தமும் நமக்கு மத்தியில் இல்லாமல் இருக்கும் இவ்வேளையில் அல்லாஹ் உன்னை என்னிடம் சிக்க வைத்து விட்டான்'' என்று கூறிக்கொண்டே கொல்வதற்கு அனுமதி வேண்டி நபியிடம் விரைந்தார்.
நான் சுதாரித்துக் கொண்டு கழுதையை உதைத்து வேகமாக ஓட்டிக் கொண்டு நபியிடம் சென்றடைந்தேன். கழுதையிலிருந்து இறங்கி நபியின் கூடாரத்திற்குள் செல்லும் போதே உமரும் கூடாரத்திற்குள் நுழைந்து விட்டார். அவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ அபூ ஸுஃப்யான்! எனக்கு அனுமதி தாருங்கள். நான் அவனைக் கொன்று விடுகிறேன்'' என்று கூறினார். ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் இவருக்கு அடைக்கலம் கொடுத்து விட்டேன்'' என்று கூறி நபிக்கருகில் அமர்ந்து கொண்டு அவர்களது தலையை எனது நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன். மேலும் ‘‘இன்றிரவு என்னைத் தவிர வேறு யாரும் நபியிடம் பேச அனுமதிக்க மாட்டேன்'' என்று கூறினேன். ஆனால் உமர் (ரழி) அபூ ஸுஃப்யான் விஷயத்தில் மிகப் பிடிவாதமாக இருந்தார்கள்.
நான் ‘‘உமரே! சற்று பொறுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உமது ‘அதீ' கிளையைச் சேர்ந்தவராக இவர் இருந்திருந்தால் நீ இவ்வாறு கூறமாட்டாய்'' என்று கூறினேன். அதற்கவர் ‘‘அப்பாஸே! நீங்கள் சற்றுப் பொறுங்கள். எனது தந்தை இஸ்லாமை ஏற்றுக் கொள்வதை விட நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதுதான் எனக்கு மிக விருப்பமானதாகும். அதாவது என் தந்தை முஸ்லிமாகுவதை விட நீங்கள் முஸ்லிமாகுவதுதான் எனக்கு அதிக விருப்பமானதாகும், ஏனெனில், என் தந்தை முஸ்லிமானால் நபிக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விட நீங்கள் முஸ்லிமானால் நபிக்கு அதிகம் மகிழ்ச்சி ஏற்படும்'' என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் ‘‘அப்பாஸே! நீர் இவரை அழைத்துச் சென்று உமது கூடாரத்தில் தங்க வைத்து காலையில் அழைத்து வாருங்கள்'' என்று கூறினார்கள். காலையில் நான் அவரை அழைத்துக் கொண்டு நபியிடம் சென்றேன். அவரைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘‘அபூ ஸுஃப்யானே! உனக்கு என்ன கேடு நேர்ந்தது. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று நீ இன்னமும் தெரிந்து கொள்ளவில்லையா?'' எனக் கேட்டார்கள். ‘‘எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் எவ்வளவு பெரிய பொறுமைசாலி; நீங்கள் மிக கண்ணியமிக்கவர்கள் உறவுகளை அதிகம் பேணுகிறீர்கள் அல்லாஹ்வுடன் வேறொரு இறைவன் இருந்திருந்தால் அவர் இன்று எனக்கு ஏதாவது நிச்சயம் பயனளித்திருப்பார்'' என அபூஸுஃப்யான் கூறினார்.
அதற்கு நபியவர்கள் ‘‘அபூ ஸுஃப்யானே! உமக்கு என்ன கேடு நேர்ந்தது. நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீ தெரிந்து கொள்வதற்கு இன்னுமா உனக்கு நேரம் வரவில்லை?'' என்றார்கள். ‘‘எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் எவ்வளவு பெரிய பொறுமைசாலி. நீங்கள் மிக கண்ணியமிக்கவர்கள் உறவுகளை அதிகம் பேணுகிறீர்கள், ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு சற்று சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது'' என்று அபூ ஸுஃபயான் கூறினார். இதைக் கேட்ட அப்பாஸ் (ரழி) ‘‘உனக்கென்ன கேடு! நீ கொல்லப்படுவதற்கு முன் இஸ்லாமை ஏற்றுக்கொள். லாயிலாஹஇல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் என்று சாட்சி சொல்லிவிடு!'' என்று கூறினார். அவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு ஏகத்துவ சாட்சியும் மொழிந்தார்.
மக்கா நோக்கி இஸ்லாமியப் படை
அன்றைய காலைப் பொழுதில், அதாவது ஹிஜ்ரி 8, ரமழான் மாதம் பிறை 17 செவ்வாய்க் கிழமை காலையில் நபி (ஸல்) மர்ருள் ளஹ்ரானிலிருந்து மக்கா நோக்கிப் புறப்படலானார்கள். வழி குறுகலாக உள்ள ‘கத்முல் ஜபல்' என்ற இடத்தில் அபூஸுஃப்யானை நிறுத்தி வை. அல்லாஹ்வின் படை அவரைக் கடந்து செல்வதைப் பார்க்கட்டும் என்று நபி (ஸல்) அப்பாஸுக்கு ஆணை பிறப்பித்தார்கள். அப்பாஸும் அவ்வாறே செய்தார். தங்களிடமுள்ள கொடிகளுடன் ஒவ்வொரு கோத்திரத்தாரும் அபூஸுஃப்யானைக் கடந்து சென்றபோதெல்லாம் இவர்கள் யாரென்று அப்பாஸிடம் விசாரிப்பார். அப்பாஸ் (ரழி) (உதாரணமாக) ‘‘சுலைம்'' என்று கூறுவார். அதற்கு அபூஸுஃப்யான் ‘‘எனக்கும் சுலைம் கோத்திரத்தாருக்கும் என்ன உறவு இருக்கிறது?'' என்று கூறுவார். இவ்வாறே ஒவ்வொரு கோத்திரத்தாரையும் அபூஸுஃப்யான் விசாரிக்க அதற்கு அப்பாஸ் (ரழி) பதில் கூறிக்கொண்டிருந்தார்கள்.
இறுதியாக நபியவர்கள் தனது அடர்ந்த படையில் முஹாஜிர் அன்சாரிகளுடன் சென்றார்கள். நபி (ஸல்) மத்திம்லிருக்க தோழர்கள் நபியைச் சுற்றி ஆயுதமேந்தியிருந்தார்கள். அக்கூட்டத்தில் ஆயுதங்களைத் தவிர வேறொன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை. இக்காட்சியைப் பார்த்த அபூஸுஃப்யான் ஆச்சரியமடைந்து ‘‘ஸுப்ஹானல்லாஹ்! அப்பாஸே! இவர்கள் யார்?'' என்று கேட்டார். ‘‘இக்குழுவில் அல்லாஹ்வின் தூதர் தனது முஹாஜிர் மற்றும் அன்சாரி தோழர்களுடன் செல்கிறார்கள்'' என்று அப்பாஸ் (ரழி) பதிலளித்தார். இதைக் கேட்ட அபூஸுஃப்யான் ‘‘நிச்சயமாக இவர்களை யாராலும் எதிர்க்க முடியாது. ஓ அபுல் ஃபழ்லே! உமது சகோதரர் உடைய மகனின் ஆட்சி இன்று கொடி கட்டிப் பறக்கிறதே!'' என்று கூறினார். அதற்கு அப்பாஸ் (ரழி) ‘‘அபூ ஸுஃப்யானே! இதுதான் நபித்துவமாகும் (சாதாரண அரசாங்கமல்ல)'' என்று கூறினார். ‘‘ஆம்! சதான்'' என்று அபூஸுஃப்யான் (ரழி) கூறினார்.
ஸஅது இப்னு உபாதா (ரழி) அன்சாரிகளின் கொடியை ஏந்தியிருந்தார். அவர் அபூ ஸுஃப்யானுக்கு அருகில் வந்தபோது ‘‘இன்றைய தினம் கடுமையான போராட்ட நாளாகும் இன்றைய தினம் மானமரியாதை எடுக்கப்படும் இன்றைய தினம் அல்லாஹ் குறைஷிகளைக் கேவலப்படுத்தி விட்டான்'' என்று கூறினார். இந்த வார்த்தை அபூஸுஃப்யானுக்குப் பெரும் பயத்தை ஏற்படுத்தியது. அபூஸுஃப்யானுக்கு அருகில் நபி (ஸல்) வந்தபோது ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஸஅது என்ன கூறினார் என்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட வில்லையா?'' என்று கேட்டார். ‘‘அவர் என்ன கூறினார்?'' என்று நபி (ஸல்) கேட்க, ‘‘இன்னின்னதை அவர் பேசினார்'' என அபூ ஸுஃப்யான் (ரழி) விளக்கினார்.
நபியுடன் இருந்த உஸ்மான் மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) ஆகிய இருவரும் ‘‘அல்லாஹ்வின் தூதரே! மேலும், அவர் குறைஷிகளைக் கொன்று குவித்து விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம்'' என்றனர். அதற்கு நபி (ஸல்) அவ்வாறு நடக்காது. இன்றைய தினம் கஅபாவை மகிமைப்படுத்தும் தினமாகும். இன்றைய தினம் அல்லாஹ் குறைஷிகளுக்குக் கண்ணியமளித்த தினமாகும்'' என்று கூறிவிட்டு ஒருவரை ஸஅதிடம் அனுப்பி அவரிடமுள்ள கொடியை வாங்கி அவரது மகன் கைசிடம் கொடுத்து விட்டார்கள். அதாவது, கொடி ஸஅதிடம்தான் இருக்கிறது என்று பொருளாகும். ஆனால் சிலர், அந்தக் கொடியை ஜுபைடம் நபி (ஸல்) கொடுத்தார்கள் என்கின்றனர்.

குறைஷிகளின் அதிர்ச்சி

நபி (ஸல்) அபூஸுஃப்யானைக் கடந்து சென்றவுடன் அப்பாஸ் (ரழி) அபூஸுஃப்யானிடம் ‘‘உடனடியாக நீ உன் கூட்டத்தனரிடம் சென்று அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அறிவிப்புச் செய்!'' எனக் கூறினார். அபூஸுஃப்யான் (ரழி) மக்கா நோக்கி விரைந்து சென்று மக்காவாசிகளிடம் மிக உரக்க சப்தமிட்டு ‘குறைஷிகளே! இதோ... முஹம்மது வந்துவிட்டார். அவர்களை உங்களால் எதிர்க்க முடியாது. எனவே, பாதுகாப்புத் தேடி எனது வீட்டிற்குள் நுழைந்து விடுங்கள். என் வீட்டில் நுழைந்தவர்கள் எல்லாம் பாதுகாப்புப் பெறுவர்' என்று முழக்கமிட்டார். அபூஸுஃப்யானின் இந்நிலையைக் கண்ட அவரது மனைவி அவரது மீசையை பிடித்திழுத்து ‘‘கெண்டைக்கால் கொழுத்த இந்த திமிர் பிடித்தவனைக் கொன்று விடுங்கள்! கூட்டத்திற்குத் தலைவனாக இருப்பதற்கு இவன் தகுதியற்றவன்' என்று கூறினார்.
ஆனால், அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காத அபூஸுஃப்யான் (ரழி) ‘‘மக்களே! உங்களுக்கென்ன கேடு நேர்ந்தது! எனது பேச்சைக் கேளுங்கள்! இவளது பேச்சை கேட்டு நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். உங்களால் அறவே எதிர்க்க முடியாத படையைக் கொண்டு முஹம்மது உங்களிடம் வந்திருக்கிறார். எனது வீட்டுக்குள் வந்துவிடுங்கள். என் வீட்டில் நுழைந்தவர்கள் பாதுகாப்புப் பெறுவர்'' என்று கூறினார். அதற்கு ‘‘அல்லாஹ் உன்னை நாசமாக்குவானாக! எங்களுக்கெல்லாம் உமது ஒரு வீடு எப்படி போதுமாகும்?'' என்று மக்கள் கேட்டனர். ‘‘யார் தனது வீட்டுக்குள் சென்று கதவைத் தாழிட்டு கொள்கிறாரோ அவரும் பாதுகாப்புப் பெறுவார் யார் மஸ்ஜிதுல் ஹராமிற்குள் செல்வாரோ அவரும் பாதுகாப்பு பெறுவார்'' என்று அபூஸுஃப்யான் கூறினார். இதைக் கேட்ட மக்கள் அனைவரும் தங்களது வீடுகளையும், பள்ளிகளையும் நோக்கி ஓடினர்.
ஆனால், அதே சமயத்தில் குறைஷிகள் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு சிலரை ஒன்று சேர்த்து, அவர்களை முஹம்மதுடன் சண்டை செய்ய நாம் அனுப்புவோம். சண்டையில் நமக்கு வெற்றி கிடைத்தால் அதுதான் நமது நோக்கம். சண்டையில் நமக்கு தோல்வி ஏற்பட்டால் இந்த வாலிபர்களின் இழப்புக்காக அவர்களின் குடும்பத்தினர் நம்மிடம் எதைக் கேட்கிறார்களோ அதைக் கொடுத்து விடுவோம் என்று முடிவு செய்தனர்.
இதற்கேற்ப பல கோத்திரத்திலிருந்தும் சில குறைஷி அறிவீனர்கள் இக்மா இப்னு அபூ ஜஹ்ல், ஸஃப்வான் இப்னு உமையா, ஸஹ்ல் இப்னு அம்ர் ஆகியோருடன் ‘கந்தமா' என்ற இடத்தில் ஒன்று சேர்ந்து கொண்டு முஸ்லிம்களை எதிர்க்க ஆயத்தமானார்கள். அப்படையில் மாஷ் இப்னு கைஸ் என்பவனும் இருந்தான். இதற்கு முன் இவன் தனது வீட்டில் எப்போதும் ஆயுதங்களைத் தயார்படுத்திக் கொண்டே இருந்தான். ஒருநாள் அவனது மனைவி அவனிடம் ‘‘எதற்காக நீ இவ்வாறு தயார் செய்கிறாய்'' என்று கேட்டாள். அதற்கவன் ‘‘முஹம்மது மற்றும் அவரது தோழர்களுடன் நான் சண்டை செய்ய இதைத் தயார் செய்கிறேன்'' என்று கூறினான். ‘‘முஹம்மது மற்றும் அவரது தோழர்கள் முன் எதுவும் தாக்குப்பிடிக்காது (அவர்களை எவராலும் எதிர்க்க முடியாது). அவர்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது'' என்று மனைவி கூறினாள். ஆனால் அவன் ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்களின் சிலரைச் சிறைபிடித்து வந்து உனக்கு பணியாளர்களாக நான் அமர்த்துவேன்'' என்று கூறிவிட்டு தன்னைப் பற்றி பெருமையாக கவிதை பாடினான்,
அவர்கள் இன்று முன்வந்தால் நான் எங்ஙனம் விலகுவது
என்னிடம் முழு போராயுதமும் சிறு ஈட்டியும்
குத்தி குலை எடுக்கும் இருபுறம் கூரான வாளும் உள்ளன.
இஸ்லாமியப் படை ‘தூதுவா’வை அடைகிறது
நபி (ஸல்) அவர்கள் படைக்குப் பின்னால் சென்று கொண்டிருந்தார்கள். ‘தூதுவா' என்ற இடம் வந்தவுடன் அல்லாஹ் தனக்களித்த இவ்வெற்றியை எண்ணி அவனுக்குப் பணிந்தவர்களாக தலையைத் தாழ்த்தியும் நுழைந்தார்கள். அவர்களது தாடியின் முடி அவர்கள் அமர்ந்திருந்த கஜவா பெட்டியின் கம்பை தொட்டுக் கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் இவ்விடத்தை அடைந்தவுடன் தங்களது படையை நிறுத்தி அதைப் பல பிரிவுகளாக அமைத்தார்கள். அதாவது, வலப்பக்கம் உள்ள படைக்கு காலிது இப்னு வலீதை (ரழி) தளபதியாக்கினார்கள். இப்படையில் அஸ்லம், சுலைம், கிஃபார், முஸைனா, ஜுஹைனா மற்றும் பல அரபி கோத்திரங்கள் இருந்தனர். உங்களுடன் குறைஷிகளில் எவராவது போர் புரிய வந்தால் அவரை வெட்டி வீசிவிடுங்கள். மக்காவின் கீழ்ப்புறமாகச் சென்று எனது வருகைக்காக ஸஃபா மலையில் எதிர்பார்த்திருங்கள் என்று நபி (ஸல்) கூறியனுப்பினார்கள்.
இடப்பக்கம் உள்ள படைக்கு ஜுபைர் இப்னு அவ்வாமை (ரழி) தளபதியாக்கி அவருக்கு ஒரு கொடியை வழங்கினார்கள். மக்காவின் மேல்புறமுள்ள ‘கதா' என்ற இடத்தின் வழியாக மக்காவுக்குள் நுழைந்து ‘ஹுஜ்ன்' என்ற இடத்தில் கொடியை நாட்டி தங்கள் வருகைக்காக காத்திருக்க வேண்டும் என்று அவருக்கு ஆணையிட்டார்கள்.
கால்நடையாக வந்த வீரர்களுக்கும் ஆயுதமின்றி வந்த வீரர்களுக்கும் அபூ உபைதாவை (ரழி) தளபதியாக்கி ‘பத்னுல் வாதி' வழியாக மக்காவுக்குள் நுழையுமாறு அவருக்கு ஆணையிட்டார்கள்.
இஸ்லாமியப் படை மக்காவுக்குள் நுழைகிறது
நபி (ஸல்) கூறிய வழியில் இஸ்லாமியப் படையின் ஒவ்வொரு பிரிவும் புறப்பட ஆரம்பித்தது. காலித் (ரழி) மற்றும் அவரது படையினரும் தங்களை எதிர்த்த முஷ்ரிக்குகளை வெட்டி வீழ்த்தினர். காலிதின் படையிலிருந்த குர்ஸ் இப்னு ஜாபிர் ஃபிஹ், குனைஸ் இப்னு காலித் இப்னு ரபிஆ (ரழி) ஆகிய இருவரும் படையை விட்டு வழிதவறி வேறொரு வழியில் சென்றனர். இவ்விருவரையும் குறைஷிகள் கொன்று விட்டனர். ‘கன்தமா' என்ற இடத்தில் ஒன்று சேர்ந்திருந்த குறைஷி வீணர்கள் காலிதின் படையை எதிர்த்தனர். ஆனால், முஸ்லிம் வீரர்கள் எதிர்த்துத் தாக்கியதில் பன்னிரெண்டு முஷ்ரிக்குகள் கொல்லப்பட்டனர். இதைப் பார்த்து கதிகலங்கிய முஷ்ரிக்குகள் உயிர் பிழைக்க தப்பித்து ஓடலானார்கள். இவ்வாறு புறமுதுகுக் காட்டி ஓடியவர்களில் முஸ்லிம்களுடன் சண்டை செய்வதற்காக நீண்ட காலமாக ஆயுதத்தைத் தயார் செய்து வைத்திருந்த மாஸ் இப்னு கைஸும் ஒருவனாவான். தப்பித்து ஓடிய இவன் தனது வீட்டினுள் ஒளிந்து கொண்டு ‘‘விரைவாகக் கதவை தாழிட்டுக் கொள்!'' என்று கத்தினான். அவனைப் பார்த்த அவனது மனைவி ‘‘என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தாயே! அந்த வீராப்பெல்லாம் இப்போது எங்கே போய்விட்டது?'' என்று கேட்டார். அதற்கு அவன் பாடிய கவிதைகளாவது:
‘‘ஃகன்தமா போர்க்கள நாளை நீ கண்டிருந்தால்....
நீ என்னைப் பழித்து ஒரு சொல் கூட உதிர்க்க மாட்டாய்.
ஸஃப்வான் ஓட் இக்மாவும் ஓட ஓட,
உருவிய வாள்கள் எங்களை வரவேற்றன
முன் கைகளையும் தலைகளையும் வெட்டி அவை சாய்த்தன
அங்கு வீரர்களின் முழக்கங்கள், கர்ஜனைகள்,
முக்கல் முனகல் இதைத் தவிர வேறெதையும் கேட்க முடியவில்லை......''
காலித் (ரழி) இவ்வாறு மக்காவுக்குள் நுழைந்து ஸஃபா மலையில் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தார்.
இது ஒருபுறமிருக்க ஜுபைர் (ரழி), இன்றைய ‘ஃபத்ஹ்' பள்ளிவாசலுக்கருகில் உள்ள ‘ஹஜுன்' என்ற இடத்தில் நபி (ஸல்) தன்னிடம் கொடுத்த கொடியை நட்டுவிட்டு அவ்விடத்தில் ஒரு கூடாரம் அமைத்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களின் வருகைக்காக அங்கேயே காத்திருந்தார்கள்.
நபியவர்கள் சங்கைமிகு பள்ளிக்குள் நுழைகிறார்கள் சிலைகளை அகற்றுகிறார்கள்
நபி (ஸல்) அங்கிருந்து புறப்பட்டார்கள். அவர்களைச் சுற்றி முன்னும் பின்னும் முஹாஜிர்களும் அன்சாரிகளும் புடைசூழ அணிவகுத்துச் சென்றனர். இந்நிலையில் பள்ளிக்குள் நுழைந்து ஹஜ்ருல் அஸ்வதை நெருங்கிச் சென்று, அதைத் தங்களது கையால் தொட்டு முத்தமிட்டு கஅபாவைத் தவாஃப் செய்தார்கள். தங்களது கையில் இருந்த வில்லால் கஅபாவைச் சுற்றி இருந்த 360 சிலைகளை
‘‘சத்தியம் வந்தது அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்'' (அல்குர்ஆன் 17:81)
என்ற வசனத்தை ஓதியவர்களாகக் குத்திக் கீழே தள்ளினார்கள். சிலைகளெல்லாம் முகம் குப்புற கீழே விழுந்தன. நபியவர்கள் வாகனத்தின் மீது இருந்து கொண்டே தவாஃப் செய்தார்கள். இஹ்ராம் அணியாமல் இருந்ததால் தவாஃப் மட்டுமே செய்தார்கள். தவாiஃப முடித்தவுடன் உஸ்மான் இப்னு தல்ஹா (ரழி) அவர்களை அழைத்து அவரிடம் இருந்து கஅபாவின் சாவியைப் பெற்று அதைத் திறக்கக் கூறினார்கள். நபி (ஸல்) உள்ளே நுழைந்து வரையப்பட்ட பல படங்களைப் பார்த்தார்கள். அப்படங்களில் நபி இப்றாஹீம், நபி இஸ்மாயீல் (அலை) ஆகிய இருவரும் அம்புகளைக் கொண்டு குறி பார்க்கும் வகையில் வரையப்பட்ட படமும் இருந்தது. இதனைக் கண்ட நபி (ஸல்) ‘‘அல்லாஹ் இவ்வாறு வரைந்தவர்களை நாசமாக்குவானாக! இவ்விருவரும் ஒரு காலமும் அம்புகளைக் கொண்டு குறி பார்த்ததே கிடையாது'' என்றார்கள். மேலும், கஅபாவுக்குள் மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெண் புறாவின் உருவம் இருந்தது. அதையும் நபி (ஸல்) தங்களது கைகளால் உடைத்தார்கள். நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க அங்கு வரையப்பட்டிருந்த மற்ற உருவப் படங்களும் அழிக்கப்பட்டன.
நபியவர்கள் கஅபாவில் தொழுகிறார்கள் குறைஷிகளிடம் உரையாற்றுகிறார்கள்!
நபி (ஸல்) கஅபாவுக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டார்கள். நபியுடன் உஸாமா, பிலால் (ரழி) ஆகிய இருவரும் உள்ளே உடனிருந்தனர். கஅபாவின் வாயிலுக்கு நேர் திசையிலுள்ள சுவரை நோக்கி வந்து மூன்று முழங்கள் சுவருக்கும் தனக்குமிடையே இடைவெளி விட்டு நின்று கொண்டார்கள்.
கஅபா அப்போது ஆறு தூண்கள் மீது அமைக்கப்பட்டிருந்தது. நபி (ஸல்) தனது இடப்புறத்தில் இரண்டு தூண்கள், வலப்புறத்தில் ஒரு தூண் தனக்குப் பின் மூன்று தூண்கள் இருக்குமாறு அமைத்து (நின்று) கொண்டு தொழுதார்கள். தொழுத பின் கஅபாவுக்குள் சுற்றி வந்து ஒவ்வொரு மூலையிலும் (லாஇலாஹஇல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்) இறைவனை புகழ்ந்து, மேன்மைப் படுத்தினார்கள். பின்னர் கதவைத் திறந்தார்கள். குறைஷிகள் அனைவரும் பள்ளிக்குள் திரண்டு வரிசையாக நின்று கொண்டு நபி (ஸல்) என்ன செய்யப் போகிறார்கள் என எதிர்பார்த்திருந்தனர்.
நபி (ஸல்) கஅபா வாசலுடைய நிலைப்படியை பிடித்துக் கொண்டு நின்றார்கள். கீழே பள்ளியில் எதிர்பார்த்துக் காத்து நிற்கும் குறைஷிகளை நோக்கி பின்வருமாறு உரை நிகழ்த்தினார்கள். ‘‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு எவ்விதத் துணையுமில்லை. அவன் தனது வாக்கை நிலைநாட்டினான். தன் அடியாருக்கு உதவி செய்தான். அவனே ராணுவங்கள் அனைத்தையும் தனியாகத் தோற்கடித்தான். இதுவரை நடைமுறையில் இருந்து வந்த அல்லாஹ்வின் இந்த இல்லத்தை பராமரிப்பது, ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவது ஆகிய இவ்விரண்டைத் தவிர ஏனைய அனைத்து சிறப்புகளையும் மற்ற பொருள் அல்லது உயிர் சம்பந்தப்பட்ட அனைத்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் எனது இவ்விரண்டு கால்களுக்குக் கீழ் புதைத்து விட்டேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
தவறாகக் கொலை செய்து விடுதல் என்பது ‘ஷிப்ஹுல் அம்தை'ப் போன்றுதான். (சாட்டை அல்லது கைத்தடி போன்ற கொலை செய்யப் பயன்படாத ஆயுதங்களால் தாக்கும் போது ஏற்படும் எதிர்பாராத கொலைக்கு ‘ஷிபஹுல் அம்து' எனப்படும்.) இதற்குக் கடுமையான குற்றப் பரிகாரம் கொடுக்கப்பட வேண்டும். (அதாவது, 100 பெண் ஒட்டகங்கள் கொடுக்க வேண்டும். அதில் 40 சினை ஒட்டகங்களாக இருக்க வேண்டும்.) குறைஷிக் கூட்டமே! அறியாமைக் காலத்தில் நீங்கள் கடைப்பிடித்த மூடத்தனமான பழக்க வழக்கங்களையும் முன்னோர்களைக் கொண்டு பெருமையடித்து வந்ததையும் இப்பொழுது உங்களை விட்டு அல்லாஹ் போக்கி விட்டான் மக்கள் அனைவரும் ஆதமிடமிருந்து வந்தவர்கள் ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவர். பின்பு அடுத்து வரும் திருவசனத்தை ஓதிக் காட்டினார்கள்:
மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின் றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிகக் கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவ னாகவும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 49:13)
உங்களை எவ்விதத்திலும் பழிக்கப்படாது
மேற்கூறிய திருவசனத்தை ஓதிக் காட்டிய பின்பு ‘‘குறைஷிக் கூட்டத்தினரே! நான் உங்களிடம் எவ்விதம் நடந்து கொள்வேன் எனக் கருதுகிறீர்கள்?'' என நபி (ஸல்) கேட்க, ‘‘நல்லமுறையில் நடந்து கொள்வீர்கள். நீங்கள் எங்களுக்குச் சிறந்த சகோதரராகவும், எங்களில் சிறந்த சகோதரன் மகனாகவும் இருக்கின்றீர்கள்'' என பதில் கூறினர். நபி (ஸல்) ‘‘நான் உங்களுக்கு யூஸுஃப் நபி தனது சகோதரருக்குக் கூறியதைப் போன்றுதான் கூறுவேன். உங்களை எவ்விதத்திலும் பழிக்கப்படாது. நீங்கள் மன்னிக்கப்பட்டவர்கள். நீங்கள் செல்லலாம்'' என்று கூறினார்கள்.
கஅபாவின் சாவியை உரியவரிடம் வழங்குதல்
உரைக்குப் பின்பு நபி (ஸல்) கீழிறங்கி வந்து பள்ளியில் அமர்ந்தார்கள். உஸ்மான் இப்னு தல்ஹாவிடமிருந்து கஅபாவின் சாவியை அலீ (ரழி) வாங்கியிருந்தார். அச்சாவியை எடுத்துக் கொண்டு அலீ (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஹாஜிகளுக்கு நீர் புகட்டும் பொறுப்பு எங்களுக்கு இருப்பதுடன் கஅபாவைப் பராமரிக்கும் பொறுப்பையும் எங்களுக்கு வழங்குங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்!'' என்றார்கள். இவ்விஷயத்தைக் கூறியவர் அப்பாஸ் (ரழி) என்றும் ஓர் அறிவிப்பில் வந்துள்ளது. நபி (ஸல்) ‘‘உஸ்மான் இப்னு தல்ஹா எங்கே?'' என்று கேட்டு அவரை அழைத்து வரக் கூறி ‘‘உஸ்மானே! இதோ உனது சாவியைப் பெற்றுக் கொள். இன்றைய தினம் நன்மை மற்றும் நேர்மையின் தினமாகும்'' என்று கூறினார்கள்.
‘தபகாத்' என்ற நூலில் இப்னு ஸஅத் (ரழி) குறிப்பிடுகிறார்: நபி (ஸல்) உஸ்மானிடம் சாவியை வழங்கும்போது, ‘‘இதை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். இது உங்களிடம் காலம் காலமாக இருந்து வரட்டும். அநியாயக்காரனைத் தவிர வேறெவரும் உங்களிடமிருந்து இதனைப் பறிக்க மாட்டான். உஸ்மானே! நிச்சயமாக அல்லாஹ் உங்களை தனது வீட்டிற்கு நம்பிக்கைக்குரிய பொறுப்பாளியாக நியமித்திருக்கின்றான். இந்த கஅபாவின் மூலம் நல்வழியில் உங்களுக்குக் கிடைக்கும் பொருட்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
கஅபாவின் மேல் பிலால் அதான் கூறுகிறார்
தொழுகை நேரம் வந்ததும் பிலாலுக்கு (பாங்கு) அதான் ஒலிக்கும்படி நபி (ஸல்) கட்டளை இட்டார்கள். கஅபாவின் முற்றத்தில் அபூஸுஃப்யான் இப்னு ஹர்ஃப், அத்தாபு இப்னு உஸைது, ஹாரிஸ் இப்னு ஹிஷாம் ஆகிய பெருந்தலைவர்கள் வீற்றிருந்தனர். அதனைக் கேட்ட அத்தாபு ‘‘திண்ணமாக அல்லாஹ் எனது தந்தை உஸைதைக் கண்ணியப்படுத்தி காப்பாற்றி விட்டான். இதுபோன்ற சப்தத்தை அவர் கேட்கவில்லை. அப்படிக் கேட்டிருந்தால் அவர் கடுங்கோபம் கொண்டிருப்பார்'' எனக் கூறினார். அதற்கு ஹாரிஸ், ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த அதானில் சொல்லப்படும் விஷயம் உண்மை என்று நான் அறிந்திருந்தால் அதனைப் பின்பற்றி இருப்பேன்.'' இதனையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அபூஸுஃப்யான் ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இது விஷயமாக நான் ஏதும் பேசமாட்டேன். அப்படி ஏதேனும் நான் பேசிவிட்டால் இந்தப் பொடிக் கற்கள் கூட என்னைப் பற்றிய செய்தியைத் தெரிவித்து விடும்.'' இவர்களின் இவ்வுரையாடலுக்குப் பின் அவர்களிடம் சென்ற நபி (ஸல்) ‘‘நீங்கள் பேசியது எனக்கு நன்கு தெரியும்'' என்று கூறிவிட்டு, அவர்கள் பேசியவற்றை அவர்களிடமே விவரமாகக் கூறினார்கள்.
இதனைக் கேட்ட ஹாஸும் அத்தாபும் (ரழி) ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்களுடன் இருந்த வேறு யாருக்கும் இவ்விஷயம் தெரியவே தெரியாது. அவ்வாறிருக்க யாராவது உங்களுக்கு இதனைப் பற்றி சொல்லியிருக்கலாம் என்று எங்ஙனம் நாங்கள் கூற இயலும்? எனவே நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என சாட்சிக் கூறுகிறோம்'' என்றனர்.
‘ஸலாத்துல் ஃபத்ஹ்’ அல்லது ‘ஸலாத்துஷ் ஷுக்ர்'
அன்றைய தினம் நபி (ஸல்) உம்மு ஹானி பின்த் அபூதாலிப் (ரழி) அவர்களின் வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு எட்டு ரகஅத்துகள் தொழுதார்கள். அல்லாஹ் அவர்களுக்களித்த வெற்றியை முன்னிட்டு நன்றி செலுத்தும் பொருட்டு தொழுத தொழுகை என்பதால் இந்தத் தொழுகையை ‘ஸலாத்துல் ஃபத்ஹ்' (வெற்றிக்கான தொழுகை) அல்லது ‘ஸலாத்துஷ் ஷுக்ர்' (நன்றி தொழுகை) என்று கூறலாம். ஆனால் சிலர், நபி (ஸல்) இத்தொழுகையைத் தொழுத நேரம் ‘ழுஹா' (முற்பகல்) நேரமாக இருந்ததால் இதனை ‘ஸலாத்துழ் ழுஹா' என எண்ணிக் கொள்கின்றனர்.
உம்மு ஹானி (ரழி) தனது கணவன் இரண்டு சகோதரர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு வழங்கியிருந்தார். இவ்விருவரையும் கொன்றுவிட அலீ (ரழி) விரும்பினார்கள். ஆனால், இவ்விருவரையும் வீட்டிற்குள் வைத்துக் கொண்டே உம்மு ஹானி (ரழி) வீட்டைத் தாழிட்டு விட்டார்கள். நபி (ஸல்) வீடு வந்தவுடன் அவ்விருவருக்காக பாதுகாப்புக் கோரினார்கள். அதற்கு நபி (ஸல்) ‘‘உம்மு ஹானியே! நீங்கள் பாதுகாப்புத் தந்தவர்களுக்கு நாமும் பாதுகாப்பை வழங்குகிறோம்'' என்று கூறினார்கள்.
பெருங்குற்றவாளிகளைக் கொல்ல கட்டளையிடுதல்
நபி (ஸல்) இன்றைய தினம் ஒன்பது கொடுங்காஃபிர்களை அவர்கள் கஅபாவின் திரைக்குள் நுழைந்தாலும் கொல்லப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள். அவர்களின் பெயர்கள்: 1) அப்துல் உஜ்ஜா இப்னு கதல், 2) அப்துல்லாஹ் இப்னு ஸஅத் இப்னு அபூ சரஹ், 3) இக்மா இப்னு அபூஜஹ்ல், 4) ஹாரிஸ் இப்னு நுஃபைசல் இப்னு துஹப், 5) மகீஸ் இப்னு சுபாபஹ், 6) ஹபார் இப்னு அல் அஸ்வத், 7), 8) இப்னு கத்தலின் இரண்டு அடிமைப் பாடகிகள், 9) அப்துல் முத்தலிப் வம்சத்திற்குச் சொந்தமான ‘சாரா' எனும் அடிமை. இப்பெண்ணிடம்தான் ஹாதிப் அனுப்பிய ராணுவ இரகசிய கடிதம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களைப் பற்றியுள்ள குறிப்புகள் அடுத்து வருகின்றன.
அப்துல்லாஹ் இப்னு ஸஅதை உஸ்மான் (ரழி) அழைத்து வந்து சிபாரிசு செய்ய நபி (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். எனவே, அவர் உயிர் பாதுகாக்கப்பட்டது. இவர் இதற்கு முன் ஒருமுறை இஸ்லாமை ஏற்று ஹிஜ்ரத் செய்து மதீனா வந்திருந்தார். சில காலங்கள் அங்கு தங்கிய பின் இஸ்லாமை விட்டு வெளியேறி மக்கா வந்துவிட்டார். இவர் நபியின் அவையில் தான் இப்போது முஸ்லிமாகி விடுவதாக அறிவித்தார். ஆனால், தங்களது தோழர்களில் யாராவது ஒருவர் அவரை கொன்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நபி (ஸல்) இருந்ததால் அவரது இஸ்லாமை ஏற்க தயக்கம் காட்டினார்கள். பின்பு சிறிது நேரம் கழித்து அவரது இஸ்லாமை நபி (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். அப்துல் உஜ்ஜா இப்னு கத்தல் கஅபாவின் திரையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டான். நபித்தோழர் ஒருவர் நபியிடம் வந்து ‘‘என்ன செய்வது?'' என்று கேட்டார். ‘‘அவனைக் கொன்று விடவேண்டியதுதான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியவுடன் அவர் அவனைக் கொன்று விட்டார்.
மகீஸ் இப்னு சபாபா- இவன் ஏற்கனவே முஸ்லிமாக இருந்தான். ஓர் அன்சாரித் தோழரை கொன்றுவிட்டு மதம் மாறி முஷ்ரிக்குகளுடன் சேர்ந்து கொண்டான். இவனை நுபைலா இப்னு அப்துல்லாஹ் (ரழி) என்பவர் கொன்றொழித்தார்.
ஹாரிஸ் இப்னு நுஃபைல்- இவன் மக்காவில் நபியவர்களை அதிகம் துன்புறுத்திக் கொண்டிருந்தான். இவனை அலீ (ரழி) கொன்றார்கள்.
ஹப்பார் இப்னு அஸ்வத்- இவர்தான் நபி (ஸல்) அவர்களின் மகள் ஜைனப் (ரழி) ஹிஜ்ரத் செய்து மதீனா சென்றபோது வழிமறித்து தனது ஈட்டியால் குத்தினார் இதனால் அவர்கள் அமர்ந்திருந்த (கஜாவா) ஒட்டகத் தொட்டியிலிருந்து கீழே விழுந்தார்கள் அவர்களது வயிற்றில் காயமேற்பட்டு கரு கலைந்துவிட்டது. இவர் மக்கா வெற்றியின் போது அங்கிருந்து தப்பி ஓடினார் பின்பு சில காலம் கழித்து இஸ்லாமை ஏற்றார்.
மற்ற இப்னு கத்லுடைய இரு அடிமைப் பாடகிகளில் ஒருத்தி கொலையுண்டாள். மற்றவள் முஸ்லிம் ஒருவரால் அடைக்கலம் தரப்பட்டு பின்னர் இஸ்லாமை ஏற்றார். அவ்வாறே ‘சாரா' என்ற அடிமைப் பெண்ணும் அடைக்கலமாகி இஸ்லாமைத் தழுவினார்.
அறிஞர் இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: ஹாரிஸ் இப்னு துலாத்தில் அல்குஸாயீ என்பவனையும் கொல்லும்படி நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். எனவே, அவனை அலீ (ரழி) கொன்றொழித்தார்கள் என அபூ மஃஷக் (ரழி) கூறுகிறார்.
பிரபல கவிஞர் கஅப் இப்னு ஜுஹைரையும் கொல்லும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள். ஆனால், இவர் நபி (ஸல்) அவர்கள் சமூகம் வந்து இஸ்லாமை ஏற்று தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டார். இவரைப் பற்றிய விரிவான செய்தி பின்னால் வரவிருக்கின்றது.
இவ்வாறே ஹம்ஜா (ரழி) அவர்களைக் கொலை செய்த வஹ்ஷியையும் கொன்றுவிட கட்டளையிடப்பட்டது. பின்னர் இஸ்லாமைத் தழுவியதால் மன்னிக்கப்பட்டது. அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பாவும் கொலைப் பட்டியலில் இருந்தார். அவரும் இஸ்லாமை ஏற்றதால் மன்னிக்கப்பட்டார். இப்னு கதலின் அடிமைப் பெண் அர்னப் என்பவளும் கொலையுண்டாள் என இமாம் ஹாகிம் (ரஹ்) குறிப்பிடுகின்றார். கொலையுண்டவர்களில் உம்மு ஸஅத் என்பவரும் உண்டு என இப்னு இஸ்ஹாக் (ரஹ்) குறிப்பிடுகின்றார். இந்த கணக்கின்படி எட்டு ஆண்களும் ஆறு பெண்களும் இப்பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். ஆனால், இங்கு கூறப்பட்ட அர்னப், உம்மு ஸஅத் இருவரும் இப்னு கத்தலின் இரண்டு பாடகிகளாக இருக்கலாம். அவ்விருவருடைய பெயர்கள் அல்லது புனைப் பெயர்களில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் தனித் தனியாகக் கூறப்பட்டிருக்கலாம். (இப்னு ஹஜர் (ரஹ்) கூற்று முடிவுற்றது.) (ஃபத்ஹுல் பாரி)
ஸஃப்வான் இப்னு உமய்யா, ஃபழாலா இப்னு உமைய்யா இஸ்லாமைத் தழுவுதல்
ஸஃப்வான் குறைஷிகளின் பெருந்தலைவர்களில் ஒருவராக இருந்தும் அவரைக் கொல்ல வேண்டுமென்று நபி (ஸல்) கட்டளையிடவில்லை. இருப்பினும் அவர் பயந்து மக்காவிலிருந்து ஓட்டம் பிடித்தார். அவருடைய முன்னாள் நண்பர் உமைர் இப்னு வஹப் அல் ஜும நபியிடம் அவருக்காக (பாதுகாப்பு) அபயம் தேடினார். நபி (ஸல்) அதனை ஏற்று மக்காவுக்குள் வரும் போது தாம் அணிந்திருந்த தலைப்பாகையைக் கொடுத்தனுப்பினார்கள். உமைர் (ரழி) அதனை பெற்றுக் கொண்டு ஸஃப்வானைத் தேடிப் புறப்பட்டார். ‘ஜுத்தா' எனும் கடற்கரையில் யமன் நோக்கிய பயணத்திற்கு ஸஃப்வான் ஆயத்தமான போது உமைர் (ரழி) அவரைச் சந்தித்து நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார். ஸஃப்வான் நபியிடம் தனக்கு இரண்டு மாத கால அவகாசம் வேண்டுமெனக் கோரினார். அதற்கு நபி (ஸல்) நான்கு மாத கால அவகாசம் தருவதாக மொழிந்தார்கள். சில நாட்களுக்கு பின் ஸஃப்வான் இஸ்லாமைத் தழுவினார். இவருடைய மனைவியோ இவருக்கு முன்பே இஸ்லாமை ஏற்றிருந்தார். நபி (ஸல்) இருவரையும் பழைய திருமண உறவைக் கொண்டே சேர்த்து வைத்தார்கள்.
ஃபழாலா- இவர் மிக்க துணிச்சலானவர். நபி (ஸல்) அவர்களைக் கொல்வதற்காகக் கிளம்பினார். நபியவர்களின் அருகில் வந்தவுடன் இவர் என்ன எண்ணத்தில் வந்துள்ளார் என்பதை வெளிச்சமாக்கிக் காட்டினார்கள். இதைச் செவிமடுத்த ஃபழாலா இவர் உண்மையான திருத்தூதர்தான் என விளங்கி இஸ்லாமை ஏற்றார்.

நபியவர்களின் சொற்பொழிவு

மக்கா வெற்றி கொண்ட இரண்டாம் நாள் மக்களுக்கு நபி (ஸல்) சொற்பொழிவாற்றினார்கள். அல்லாஹ்வை அவனுக்குரிய சிறப்புகள், தன்மைகள் ஆகியவற்றால் புகழ்ந்து மேன்மைப்படுத்திய பின் உரை நிகழ்த்தத் தொடங்கினார்கள். ‘‘மக்களே! நிச்சயமாக அல்லாஹ் வானங்கள், பூமியை படைத்த அன்றே மக்காவுக்கு அளப்பெரும் கண்ணியம் வழங்கியிருப்பதால் மறுமை நாள் வரை கண்ணியம் பொருந்தியதாகவே கருதப்பட வேண்டும். அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பிக்கை கொண்டுள்ள யாரும் அங்குக் கொலை புரிவதோ, மரம் செடி கொடிகளை அகற்றுவதோ கூடாது. நபி இங்கு போர் புரிந்தார்கள் என்று முன்னுதாரணம் காட்டினால் நீங்கள் அவருக்குச் சொல்லுங்கள், நிச்சயமாக அல்லாஹ் அவனது தூதருக்குத்தான் இந்த சிறப்புத் தகுதியை வழங்கியிருக்கின்றான் உங்களுக்கு அந்த உரிமையோ தகுதியோ அவன் வழங்க வில்லை மேலும் எனக்குப் பகல்பொழுதின் ஒரு குறிப்பிட்ட குறுகிய நேரத்திற்குத்தான் அனுமதிக்கப்பட்டது. அதன்பின் அதற்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியம் நேற்று அதற்குரிய கண்ணியத்தைப் போன்றே இன்று முதல் மீண்டும் திரும்பிவிட்டது. இங்குள்ளவர்கள் இங்கு வராதவர்களுக்குத் தெரிவித்து விடட்டும்''.
நபி (ஸல்) அவர்களின் உரையைப் பற்றி வரும் மற்றொரு அறிவிப்பில் பின்வரும் அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
‘‘அங்குள்ள முட்களை ஒடிக்கவோ, அங்குள்ள வேட்டைப் பிராணிகளை அங்கிருந்து விரட்டவோ, அங்கு கீழே கிடக்கும் பொருட்களை எடுக்கவோ கூடாது. ஆயினும், அதை உரியவரிடம் சேர்த்து வைக்கவும் மக்களிடம் தெரிவிக்கவும் எடுக்க அனுமதி உண்டு. இங்குள்ள புற்களைக்களையக் கூடாது.'' அப்பொழுது அப்பாஸ் (ரழி) அவர்கள் ‘இத்கிர்' என்ற செடியை களைந்து கொள்ள அனுமதி தாருங்கள். இது எங்கள் கொல்லர்களுக்கும் மற்ற வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது'' எனக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) இத்கிர் செடியை எடுத்து பயன்படுத்த அனுமதி அளித்தார்கள்.
குஜாஆ கிளையினர் மக்கா வெற்றியின் போது லைஸ் கிளையைச் சேர்ந்த ஒருவரைக் கொன்று விட்டனர். இதற்கு முன் அறியாமைக் காலத்தில் லைஸ் கிளையினர் குஜாஆ கிளையினரில் ஒருவரைக் கொன்றிருக்கின்றனர். அதற்குப் பழிவாங்கும் முகமாக இச்சந்தர்ப் பத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். இது தொடர்பாக நபி (ஸல்) இவ்வுரையில் குறிப்பிட்டுக் கூறினார்கள்:
‘‘குஜாஆ சமூகத்தினரே! கொலை புதலைக் கைவிடுங்கள். கொலை புரிவது பயன்தக்கதாக இருந்தால் இதற்கு முன்னர் புரிந்த கொலைகளே உங்களுக்குப் போதும். இதற்குப் பிறகு அந்த மாபாதகச் செயலை செய்யாதீர்கள். நீங்கள் கொன்று விட்டவர்களுக்குரிய தியத்தை (கொலைக்கான நஷ்டஈட்டை) இன்று நான் நிறைவேற்றுகிறேன். இதற்குப் பின் யாராவது கொலை செய்யப்பட்டால் கொலையுண்டவன் உறவினர் இரண்டு வாய்ப்புகளில் ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒன்று, கொலையாளியைப் பழிக்குப் பழி கொல்வது அல்லது அவரிடமிருந்து தியத் வசூல் செய்து கொள்வது.'' யமன் வாசியான ‘அபூ ஷாஹ்' என்பவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதனை எனக்கு எழுதிக் கொடுங்கள்'' என்றார். ‘‘இதனை இவருக்கு எழுதி வழங்குங்கள்'' என நபி (ஸல்) தோழர்களுக்குக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஸுனன் அபூதாவூது, இப்னு ஹிஷாம்)
நபியவர்களைப் பற்றி அன்சாரிகள் அஞ்சுதல்
அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு மக்காவில் வெற்றி அளித்தான். இப்புனித நகரம் அவர்களது சொந்த ஊர் அவர்கள் பிறந்த ஊர் அவர்களுக்கு பிடித்தமான ஊர் என்பது தெரிந்ததே! நபியவர்கள் ஸஃபா மலையில் தங்களது கைகளை உயர்த்தி துஆச் செய்து கொண்டிருந்தார்கள். அந்நேரத்தில் அல்லாஹ் தனது இந்த ஊரை நபியவர்களுக்கு கைவசப் படுத்தித் தந்தான். எனவே, அவர்கள் இங்கேயே தங்கி விடுவார்களோ? என அன்சாரிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
தங்களது பிரார்த்தனையை முடித்த பின்பு ‘‘நீங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?'' என நபி (ஸல்) அன்சாரிகளிடம் வினவினார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஒன்றுமில்லை'' என அவர்கள் கூறினர். நபி (ஸல்) மீண்டும் மீண்டும் கேட்கவே இறுதியில் தங்களிடையே என்ன பேசினோம் என்பதை தெரிவித்தனர். அதற்கு நபி (ஸல்) ‘‘அல்லாஹ் காப்பாற்றுவானாக! நான் வாழ்ந்தால் உங்களுடன் வாழ்வேன். மரணித்தால் உங்களுடனே மரணிப்பேன்'' என்று கூறினார்கள்.

பைஆ வாங்குதல்

அல்லாஹ் இஸ்லாமை ஓங்கச் செய்து, நபியும் முஸ்லிம்களும் மக்காவை வெற்றி கொள்ளும்படி செய்தான். இதைப் பார்த்த மக்காவாசிகள் இஸ்லாமே உண்மை மார்க்கம். வெற்றி பெற இஸ்லாமைத் தவிர வேறு வழியில்லை என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொண்டனர். எனவே, இஸ்லாமை ஏற்று நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்வதற்கு ஒன்று கூடினர். நபி (ஸல்) ஸஃபா மலைக் குன்றுக்கு மேல் அமர்ந்து கொண்டு இதற்காக தயாரானார்கள். கீழே உமர் (ரழி) அமர்ந்து கொண்டார்கள். நபியவர்கள் மக்களிடமிருந்து இஸ்லாமிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். தங்களால் இயன்ற அளவு செவிமடுப்போம் கட்டுப்படுவோம் என மக்கள் பைஆ செய்தனர்.
‘அல்மதாக்' என்ற நூலில் வருவதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆண்களிடம் பைஆ பெற்ற பின்பு பெண்களிடம் வாங்கினார்கள். அப்போது நபி (ஸல்) ஸஃபாவின் மீதும், அதற்குக் கீழே உமரும் அமர்ந்திருந்தனர். நபி (ஸல்) ஒவ்வொரு விஷயமாகக் கூற அதனை உமர் (ரழி) அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். இந்நேரத்தில் அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா நபியவர்களிடம் வந்தார். உஹுத் போரில் வீரமரணம் எய்திய ஹம்ஜாவுடைய உடலைச் சின்னாபின்னமாக்கிய தனது செயலுக்கு நபி (ஸல்) என்ன செய்வார்களோ என்று அஞ்சியதால் தன்னை முழுதும் மறைத்துக் கொண்டு வந்தார். நபி (ஸல்) ‘‘நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டீர்கள் என்று எனக்கு வாக்குத் தர வேண்டும்'' என்று கூற, உமர் (ரழி) பெண்களுக்கு அதை எடுத்துரைத்தார்கள். அடுத்து, ‘‘நீங்கள் திருடக் கூடாது'' என்றார்கள். அதற்கு, ‘‘அபூஸுஃப்யான் ஒரு கஞ்சன். நான் அவருடைய பொருளில் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாமா?'' என ஹிந்த் வினவினார். ‘‘நீ எதனை எடுத்துக் கொண்டாயோ அது உனக்கு ஆகுமானதே'' என்று அபூஸுஃப்யான் கூறினார்.
நபி (ஸல்) இவர்களின் உரையாடலைக் கேட்டு புன்னகை புரிந்து ‘‘கண்டிப்பாக நீ ஹிந்த் தானே'' என்றார்கள். அதற்கவர் ‘‘ஆம்! நான் ஹிந்த்தான். சென்று போன என்னுடைய பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வும் தங்களை பொறுத்தருள்வான்!!'' என்று கூறினார்.
‘‘நீங்கள் விபசாரம் செய்யக் கூடாது'' என்று நபி (ஸல்) கூறினார்கள். ‘‘ஒரு சுதந்திரமானவள் விபச்சாரம் புரிவாளா?'' என ஹிந்த் ஆச்சரியப்பட்டார்.
‘‘உங்களின் பிள்ளைகளை நீங்கள் கொல்லக் கூடாது'' என நபி (ஸல்) கூறினார்கள். அதற்கு ஹிந்து, ‘‘நாங்கள் எங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்த்தோம் அவர்கள் பெரியவர்களானதும் நீங்கள் அவர்களைக் கொன்று குவித்தீர்களே! என்ன நடந்தது என்று உங்களுக்கும் அவர்களுக்கும்தான் தெரியும்'' என்று கூறினார். உமர் (ரழி) சிரிப்பை அடக்க முடியாமல் சித்து சித்து மல்லாந்து விழுந்தார். அதைக் கண்டு நபி (ஸல்) புன்னகைத்தார்கள். ஹிந்த் இவ்வாறு கூறக் காரணம்: பத்ரு படைக்களத்தில் அவருடைய மகன் ஹன்ளலா இப்னு அபூ ஸுஃப்யான் கொல்லப்பட்டிருந்தார். அடுத்து, ‘‘நீங்கள் அவதூறு கூறலாகாது'' என நபி (ஸல்) கூறவே, ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவதூறு கூறுதல் மிகக் கெட்ட பண்பாகும். நீங்கள் நல்லவற்றையும், நற்குணங்களையுமே எங்களுக்கு கூறுகிறீர்கள்!'' என ஹிந்த் பதிலுரைத்தார்.
‘‘நீங்கள் நல்ல விஷயங்களில் எனக்கு மாறு செய்யக் கூடாது'' என நபி (ஸல்) கூறவே, ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! தங்களுக்கு மாறுபுரியும் எண்ணத்தில் நாங்கள் இங்கு அமர்ந்திருக்கவில்லை'' என்று ஹிந்த் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் வீடு திரும்பிய ஹிந்த் வீட்டினுள் வைத்திருந்த சிலைகளைப் பார்த்து ‘‘நாங்கள் இதுவரை உங்களால் ஏமாற்றப்பட்டிருந்தோம்'' எனக் கூறியவாறு அவற்றை உடைத்தெறிந்தார். (மதாக்குத் தன்ஜீல்)
ஹிந்த்தை பற்றி ஸஹீஹுல் புகாரியிலும் ஒரு நிகழ்ச்சி பதியப்பட்டுள்ளது. ‘‘ஹிந்த் நபியவர்களிடம் வந்து ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவ்வுலகில் யாருமே பெற்றிராத கேவலத்தை உங்களைச் சார்ந்தவர்கள் பெற வேண்டும் என நான் ஒரு காலத்தில் பிரியப்பட்டேன். இன்று, இவ்வுலகில் யாருமே கண்டிராத கண்ணியத்தை தாங்கள் அடைய வேண்டும் என மிக ஆசைப்படுகிறேன்'' என்று கூறினார். ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்னும் என்ன சொல்லப் போகிறாய்?'' என்று நபி (ஸல்) கேட்டார்கள். அவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! அபூ ஸுஃப்யான் கஞ்சராக உள்ளார். அவருடைய செல்வத்திலிருந்து என் பிள்ளைகளுக்கு உணவளித்தல் குற்றமாகுமா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) ‘‘அதனை நன்மையாகவே கருதுகிறேன்'' என்று கூறினார்கள்.
மக்காவில் நபியவர்களின் செயல்பாடுகள்
நபி (ஸல்) மக்காவில் 19 நாட்கள் தங்கியிருந்தார்கள். அக்காலக் கட்டத்தில் இஸ்லாமை எடுத்துரைத்தார்கள் அதன் சட்டதிட்டங்களை விவரித்தார்கள் மக்களுக்கு நேர்வழி மற்றும் இறை அச்சத்தை போதித்தார்கள் ஹரமின் எல்லைகளில் அடையாளக் கம்பங்களை புதுபிக்கும் பணியை குஜாஆ வமிசத்தவரான அபூஉஸைதுக்கு வழங்கினார்கள் அவர் நபி (ஸல்) கட்டளைப்படி அவற்றை செய்து முடித்தார். மேலும், இஸ்லாமிய அழைப்புப் பணிக்காகவும், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிலைகளை உடைத்தெறிவதற்காகவும் தோழர்களின் குழுக்களை அனுப்பினார்கள் அவை அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டன. நபியவர்களின் அறிவிப்பாளர், ‘‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் வீடுகளிலுள்ள சிலைகளை உடைத்தெறிய வேண்டும்'' என்று அறிவித்துக் கொண்டிருந்தார்.
படைப் பிரிவுகளும் குழுக்களும்
1) ‘நக்லா' என்ற இடத்தில் ‘உஜ்ஜா' என்ற சிலை இருந்தது. இதுவே குறைஷிகளுடைய சிலைகளில் மகத்துவம் மிக்கதாக இருந்தது. ஷைபான் கிளையினர் அந்தச் சிலையின் பூசாரிகளாக இருந்தனர். மக்காவில் வெற்றிப் பணிகள் முடிந்து முழு அமைதி நிலவிய பின்பு (ஹிஜ்ரி 8 ரமழான் மாதம் முடிய ஐந்து நாட்கள் மீதமிருக்கும், நபி (ஸல்) காலித் இப்னு வலீதை முப்பது வீரர்களுடன் அந்தச் சிலைiயை உடைத்தெறிய அனுப்பினார்கள். அதை உடைத்து வந்த காலிதிடம் ‘‘ஏதாவது அங்கு கண்டீர்களா?'' என்று நபி (ஸல்) கேட்க, அவர் ‘‘நான் எதையும் காணவில்லை'' என்றார். ‘‘அப்படியானால் நீ அதனைச் சரியாக உடைக்கவில்லை. திரும்பச் சென்று அதனை உடைத்து வா!'' என்று அனுப்பி வைத்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் இப்பேச்சைக் கேட்டு வெகுண்டெழுந்த காலித் (ரழி) வாளை உருவியவாறு தனது தோழர்களுடன் உஜ்ஜாவை நோக்கி பறந்தார். அச்சிலையருகே சென்றவுடன் தலைவிரி கோலமாக நிர்வாண நிலையில் கருத்த பெண் உருவம் ஒன்று காலிதை நோக்கி வந்தது. அங்குள்ள பூசாரி உஜ்ஜாவின் பெயரைக் கூறி சப்தமிட்டு அழைத்தான். காலித் (ரழி) தன் முன் தோன்றிய அவ்வுருவத்தை இரண்டாகப் பிளந்தார். பின்பு நபியவர்களிடம் திரும்பி வந்து நடந்த நிகழ்ச்சியை விவரித்தார். ‘‘ஆம்! அதுதான் உஜ்ஜா. இனி, உங்கள் ஊர்களில் யாரும் அதனை வணங்குவதிருந்து நிராசையடைந்து விட்டது'' என நபி (ஸல்) நவின்றார்கள்.
2) மக்காவின் வட கிழக்கே 150 கி.மீ. தொலைவில் ‘ருஹாத்' என்னுமிடத்தில் ஹுதைல் கிளையினர் வணங்கும் ‘சுவா' என்ற சிலை இருந்தது. அதனை உடைக்கும்படி இதே ரமழான் மாதத்தில் அம்ர் இப்னு ஆஸை நபி (ஸல்) அனுப்பினார்கள். அம்ரு சிலையருகே வந்தவுடன் அதன் பூசாரி ‘‘நீ எதற்கு வந்துள்ளாய்?'' என வினவினான். ‘‘இச்சிலையை உடைத்து வர நபி (ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள்'' என அம்ர் பதில் தந்தார். பூசாரி, ‘‘உன்னால் அது முடியாது'' என்று வீராப்பு பேசினான். அம்ரு (ரழி) ‘‘ஏன் முடியாது?'' என்றார். ‘‘உன்னால் அதனை நெருங்கவே முடியாது'' என்றான். ‘‘இன்னுமாடா வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கிறாய்? உனக்கென்ன கேடு? அது கேட்குமா? அதனால் பார்க்கத்தான் முடியுமா?'' என்று கூறியவாறு சிலையருகே வந்து அதனை அம்ருப்னு ஆஸ் (ரழி) உடைத்துத் தள்ளினார். அந்தக் கோயிலையும் அங்குள்ள உண்டியலையும் உடைத்து பார்க்கும்படி தோழர்களுக்குக் கட்டளையிட்டார். ஆயினும் எதுவுமே கிட்டவில்லை. ‘‘இப்பொழுது உன் கருத்து என்ன?'' என பூசாரியிடம் அம்ரு (ரழி) வினவ ‘‘நான் அல்லாஹ்விடம் சரணடைந்தேன். இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன்'' என பூசாரி கூறினார்.
3) ‘குதைத்' என்ற ஊரருகே ‘முஷல்லல்' என்ற இடத்தில் ‘மனாத்' எனும் சிலை இருந்தது. அதனை ‘அவ்ஸ்', ‘கஸ்ரஜ்', ‘கஸ்ஸான்' மற்றும் சில குலத்தவர் வணங்கிக் கொண்டிருந்தனர். அதனை இடித்து வர ஸஅத் இப்னு ஜைத் அஷ்ஹலி (ரழி) என்பவன் தலைமையில் இருபது பேர் கொண்ட படையை இதே மாதத்தில் நபி (ஸல்) அனுப்பினார்கள். ஸஅது (ரழி) அங்கு சென்றபோது அங்குள்ள பூசாரி ‘‘நீ எந்த நோக்கத்தில் வந்திருக்கின்றாய்?'' என்று வினவ ‘‘மனாத்தை உடைக்க வந்துள்ளேன்'' என்று பதிலளித்தார். ‘‘நீ விரும்பியதைச் செய்து கொள்'' என பூசாரி மறுமொழி கூறினார். ஸஅது அச்சிலையருகே வந்தபோது கருநிற பெண்ணொருத்தி தலைவிரி கோலமாக மார்பில் அடித்துக் கொண்டு வெளியேறி வந்தாள். அதைக் கண்ட பூசாரி ‘‘மனாத்தே! நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்! இதோ உனது எதிரிகள் உன்னை ஒழித்துக் கட்ட வந்து விட்டனர்'' எனக் கூக்குரலிட, ஸஅது (ரழி) அச்சிலையை வெட்டிச் சாய்த்தார். அங்கும் உண்டியல்களில் எதுவும் காணப்படவில்லை.
4) உஜ்ஜா சிலையை உடைத்துவிட்டுத் திரும்பிய காலித் (ரழி) அவர்களுக்கு ஜுதைமா சமூகத்தாரை இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைக்கும் மற்றொரு பணியை நபி (ஸல்) வழங்கினார்கள். அதே ஆண்டு ஷவ்வால் மாதம் 350 தோழர்களுடன் புறப்பட்ட அப்படையில் முஹாஜிர்களும், அன்சாரிகளும், ஸுலைம் கூட்டத்தினரும் கலந்திருந்தனர். ஜுதைமா கூட்டத்தாரை அணுகி இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும்படி கூறியதும் அம்மக்கள் இஸ்லாமை ஏற்று ‘‘முஸ்லிமாக மாறினோம்'' என்று கூறத் தெரியாமல், ‘‘மதம் மாறினோம்'' என்று கூறினர். இதனை தவறாகப் புரிந்து கொண்ட காலித் (ரழி) அவர்களில் சிலரைக் கொன்றுவிட்டு மற்றும் சிலரைச் சிறைபிடித்து ஒவ்வொரு கைதிகளையும் படை வீரர்களிடம் ஒப்படைத்தார்கள். அங்கு தங்கியிருக்கும்போது ஒரு நாள் ‘‘ஒவ்வொரு படைவீரரும் தங்களுடைய கைதிகளைக் கொன்று விடுக'' என காலித் (ரழி) கட்டளை பிறப்பித்தார்கள். அப்படையில் பங்கு கொண்ட மூத்த நபித்தோழர்களான இப்னு உமர் (ரழி) போன்றோர் அங்ஙனம் கொலை புரிவதற்கு மறுத்து விட்டனர். இவ்விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. ‘‘அல்லாஹ்வே! காலித் செய்துவிட்ட இக்காரியத்திலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்'' என இருமுறை வருத்தமாகக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
படையில் கலந்திருந்த ஸுலைம் கூட்டத்தார் மட்டும் தளபதி காலிதின் ஆணைக்கிணங்கி கைதிகளைக் கொன்று விட்டனர். கொல்லப்பட்டவர்களின் சொந்தங்களுக்கு தியத் வழங்குவதற்காக நபி (ஸல்) அலீயை அனுப்பி வைத்தார்கள்.
இப்பிரச்சனையில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபுக்கும் காலிதுக்கும் பேச்சு முற்றிப்போய் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்த நபி (ஸல்), ‘‘காலிதே! கொஞ்சம் பொறுங்கள்! எனது தோழர்களை விட்டுவிடுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உஹுத் மலை தங்கமாக மாறி அதனை முழுவதும் அல்லாஹ்வுடைய பாதையில் நீ செலவு செய்தாலும், அவர்கள் ஒரு காலை அல்லது ஒரு மாலை அல்லாஹ்வின் பாதையில் சென்ற நன்மையை உம்மால் அடைய முடியாது'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இதுவே மக்கா வெற்றியின் சுருக்கமான வரலாறு. இப்போர் முஸ்லிம்களுக்கு நிரந்தர வெற்றியை நிர்ணயித்தது மட்டுமல்ல இம்மாபெரும் போராட்டம் இறைநிராகரிப்புடைய கோட்டையை சுவடு தெரியாமல் நிர்மூலமாக்கியது. அரபு தீபகற்பத்தில் இறைநிராகரிப்பின் வாடையே வீசாமல் அழித்தொழித்து விட்டது. முழு அரபுலகமே முஸ்லிம்களுக்கும் முஷ்ரிக்குகளுக்கும் இடையே நடைபெற்று வந்த போர்களின் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. ஏனெனில், ஹரமை நிச்சயமாக சத்தியவாதிகள் (உண்மையாளர்கள்) மட்டுமே கைப்பற்ற முடியும் என்பதை நன்றாக அறிந்திருந்தனர். கஅபாவை அழிப்பதற்கு யானைப் படையுடன் வந்த அப்ரஹாவும் அவனது படையினரும் அடையாளம் தெரியாது சின்னா பின்னமாகி தின்னப்பட்ட வைக்கோல் போன்று ஆன அவர்களின் வீழ்ச்சி வரலாறு, சத்தியத்தில் உள்ளவர் மட்டுமே கஅபாவை வெற்றி கொள்ள முடியும் என்ற உறுதியான நம்பிக்கையை கடந்த ஐம்பது ஆண்டு காலமாக அவர்களின் உள்ளத்தில் வேரூன்றச் செய்திருந்தது.
இது மட்டுமல்ல! இதற்கு முன் ஏற்பட்ட ஹுதைபிய்யா சமாதான ஒப்பந்தம் மகத்தான மக்கா வெற்றியின் தொடக்கமாக அமைந்தது. இந்த ஒப்பந்தத்திற்குப் பின் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து பழைய உறவுகளைப் புதுப்பித்து மெருகேற்றிக் கொண்டனர். இஸ்லாமிய மார்க்கத்தை மற்றவருக்கும் எடுத்து விளக்கிக் கூறினர். அதனைப் பற்றி தங்களிடையேயும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். இந்நாள் வரை மக்காவில் திரைமறைவில் இஸ்லாமிய நெறியைக் கடைபிடித்து வாழ்ந்த முஸ்லிம்கள், இஸ்லாமை ஏற்றுக் கொண்டதை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்திக் கொண்டதுடன் மற்றவர்களையும் மார்க்கத்தின் பக்கம் அழைக்க, பெரும் பாலானவர்கள் இஸ்லாமியப் பூங்காவிற்குள் இன்முகத்துடன் நுழைந்தனர். இதுவரை நடந்த போர்களில் முஸ்லிம் படையினர் எண்ணிக்கை மூவாயிரம், நான்காம்ரத்தைத் தாண்டாத நிலை. ஆனால், ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் நடந்த மக்கா போலோ பத்தாயிரம் வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போர் மக்களின் அறிவுக் கண்களைத் திறந்தது. இஸ்லாமை ஏற்பதற்கு குறுக்கிட்ட தடைக் கல்லைத் தகர்த்தெறிந்தது.
அரபு தீபகற்பத்தில் முழு அளவில் அரபுலகத்தை அரசியல் மற்றும் மார்க்க ரீதியாக தங்களது கட்டுப்பாட்டில் முஸ்லிம்கள் கொண்டு வந்தனர். ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு சாதாகமான சூழ்நிலை இம்மகத்தான வெற்றியால் முழுமை பெற்றது. இதன்பின் ஏற்பட்ட கால நிலைமைகள் அனைத்தும் முஸ்லிம்களுக்கே சாதகமாக அமைந்தன. அங்கு அனைத்தையும் முஸ்லிம்கள் தங்களது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். முஸ்லிம்களின் நற்பண்புகளால் கவரப்பட்ட ஏனைய அரபு வமிசத்தினர், இஸ்லாமில் இணைய ஆர்வம் காட்டினர். அதிலிருந்து தடுத்து வந்த தீய சக்திகளும் அழிந்துவிட்டதால் இஸ்லாமை ஏற்றுக் கொள்வது அவர்களுக்கு இலகுவானது. அவர்களும் நபித்தோழர்களுடன் சேர்ந்து இஸ்லாமைப் பரப்புவதற்காக புறப்பட்டனர். இந்த அழைப்புப் பணிக்காக வரும் ஈராண்டுகளில் அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டது.
Previous Post Next Post