பெண் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பதின் சிறப்புகள்

بسم الله الرحمن الرحيم


பெண் குழந்தைகள் அல்லாஹுத்தஆலாவின் அருட்கொடைகளில் ஒன்றாகும். எப்போது நாம் அக்குழந்தைகளை வளர்க்கும் போது எம் மீது அல்லாஹ் விதியாக்கிய அடிப்படையில் செயலாற்றுகின்றோமோ அப்போது அவை அல்லாஹ்வின் நன்மதிப்பைப் பெற்ற அருளாக ஆகிவிடுகின்றன.

அறியாமைக் காலத்தில் இவ்வருட்கொடை கணக்கில் கொள்ளப்படாத ஒன்றாக இருந்தது. பெண் குழந்தைகளின் பிறப்பை சகுனமாகக் கருதி செயற்படக்கூடியவர்களாக அக்கால மக்கள் இருந்தனர்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "இன்னும் அவர்களில் ஒருவன் பெண் குழந்தை (பிறந்திருப்பது) கொண்டு நன்மாராயங் கூறப்பட்டால், கோபத்தை அடக்கி விழுங்கியவனாக அவன் இருக்க, அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்ததாக ஆகிவிடுகிறது. எதனைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, அதன் தீமையினால் இழிவுடன் அதை வைத்துக் கொள்வதா? அல்லது அதை மண்ணில் புதைத்து விடுவதா? என்று (கவளைப்பட்டு, மக்கள் முன் வராமல்) சமூகத்தாரை விட்டும் மறைந்து கொள்கிறான்". (அந்நஹ்ல்: 58, 59)

இஸ்லாம் மார்க்கம் வந்த போது இத்தகைய மோசமான நிலையை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எரிந்தது. அதன் படி நபியவர்கள் கூறினார்கள்: "நிச்சமாக அல்லாஹ் உங்கள் மீது தாய்மார்களை நோவினை செய்வதையும், அல்லாஹ் கொடுக்கச் சொன்னதை தடுப்பதையும், தவிர்ந்து கொள்ளச் சொன்னதை கொடுப்பதையும், பெண் பிள்ளைகளை உயிருடன் புதைப்பதையும் ஹராமாக்கியுள்ளான்". (புகாரி)

இத்தகைய தடையுத்தரவைப் பிறப்பித்த இஸ்லாம், அதற்கு மாற்றமாக பெண் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்குமாறும், அவற்றுக்கு நல்லுபகாரம் செய்யுமாறும் பணித்தது. மேலும், நாம் அவற்றைப் பேணி நடக்கும் காலமெல்லாம் பல சிறப்புகளை அடைந்து கொள்ளப் பாத்திரமானவர்களாக ஆகிவிடுவோம் என்றும் கூறத் தவறவில்லை. அந்தவிதத்தில்...

1. நபியவர்களுடன் சுவனத்தில் இணைந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றுத்தரும்.

அந்தவிதத்தில் நபியவர்கள் கூறினார்கள்: "யார் இரு பெண் குழந்தைகளுக்கு அவைகள் பருவ வயதை அடையும் வரை செலவு செய்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இவ்வாறு இருப்போம் என நபியவர்கள் தனது இருவிரல்களை இணைத்துக் காட்டினார்கள்". (முஸ்லிம்)

மேலும், இமாம் இப்னு மாஜாவின் அறிவிப்பில், நபியவர்கள் தனது நடுவிரலையும் அதற்கு அடுத்துள்ள விரலையும் சேர்த்துக் காட்டியதாக இடம்பெற்றுள்ளது.

இச்செய்தி தொடர்பாக இப்னு பத்தால் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும்போது: "இச்செய்தியைச் செவிமடுத்த அனைவர் மீதுமுள்ள கடமை, நபியவர்களுடன் சுவனத்தில் இருப்பதற்காக வேண்டி இதில் கூறப்பட்டுள்ள பிரகாரம் அமல் செய்வதாகும். மேலும், இதனைவிட மிகச் சிறந்ததோர் அந்தஸ்து மறுமை நாளில் இருக்க மாட்டாது" என்றார்கள்.

3. நரகில் இருந்தும் பாதுகாக்கும் திரையாக அவர்கள் இருப்பார்கள்.

"ஒரு முறை ஒரு பெண்மணி தன்னுடன் தனது இரு மகள்களை அழைத்துக் கொண்டு ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டிற்குள் நுழைந்தாள். தனக்கு ஏதாவது உணவு தருமாறு வினவினாள். அப்போது ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தனது வீட்டில் தேடிப்பார்த்ததில் ஓர் ஈச்சம் பழத்தைத் தவிர வேறு எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை. எனவே, அதனை எடுத்து அவருக்குக் கொடுத்துவிட்டார். அப்பெண்மணி அதனை இரண்டாகக் கிழித்து தனக்கென்று ஏதும் வைத்துக் கொள்ளாமல் தனது பிள்ளைகள் இருவருக்கும் வழங்கிவிட்டாள். அப்பெண்மணி வீட்டைவிட்டு புறப்பட்டதும் நபிவர்கள் ஆயிஷா நாயகியின் வீட்டில் பிரவேசித்தார்கள். அப்போது ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் நடந்த சம்பவத்தை அப்படியே கூறினார்கள். அதற்கு நபியவர்கள்: யார் இப்படியான பெண்பிள்ளைகளின் மூலம் ஏதாவது ஒன்றைக் கொண்டு சோதனைக்குள்ளாக்கப்படுகிறாரோ, அத்தகையவருக்கு அப்பெண்பிள்ளைகள் நரகத்தைவிட்டும் பாதுகாக்கும் திரையாக இருப்பார்கள் எனக் கூறினார்கள்". (புகாரி)

மேலும், முஸ்லிம் எனும் கிரந்தத்தில்: "நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு சுவனத்தை வாஜிபாக்கி விட்டான் அல்லது, நரகத்தைவிட்டும் விடுதலை செய்துவிட்டான்" என்றார்கள்.

இன்னும், நபியவர்கள் கூறினார்கள்: "யாருக்கு மூன்று பெண்குழந்தைகள் இருந்து, அவர்கள் விடயத்தில் பொறுமையுடன் செயற்பட்டு, தனது வசதிக்கேற்ப அவர்களுக்கு உண்ணவும், பருகவும், ஆடை அணியவும் கொடுக்கிறாரோ, அத்தகைவருக்கு மறுமைநாளில் நரகத்தில் இருந்தும் பாதுகாக்கும் திரையாக அவர்கள் இருப்பார்கள்". (இப்னுமாஜா)

இத்தகைய மகிமை வெறுமனே பெண்பிள்ளைகளை வளர்க்கக் கூடியவர்களுக்கு மாத்திரமில்லை மாறாக, சகோதரிகள், தாய் தந்தையரின் சகோதரிகள் போன்றோரைப் பொறுப்பேற்று பராமரிப்பவர்களுக்கும் உள்ளது.

நபியவர்கள் கூறினார்கள்: "யாருக்கு மூன்று பெண்குழந்தைகள் அல்லது, சகோதரிகள் அல்லது, இரு பெண்குழந்தைகள் அல்லது, சகோதரிகள் இருந்து, அவர்களுடன் நல்லவிதத்தில் சேர்ந்து பழகி, அவர்கள் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து நடக்கிறாரோ அவருக்கு சுவனம் உள்ளது". (ஸஹீஹுத் தர்கீப்)

மற்றோர் அறிவிப்பில்: "அவர்களை அரவணைத்து, அவர்களுக்கு இரக்கம் காட்டி, அவர்களைப் பொறுப்பேற்று நடக்கிறாரோ அவருக்கு நிச்சயமாக சுவனம் வாஜிபாகிவிட்டது" என்றார்கள். (அஹ்மத்)

பிரிதோர் அறிவிப்பில்: "அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் இருவராக இருந்தாலுமா? எனக் கேட்க, அவர்கள் இருவராக இருந்தாலும் தான் என்றார்கள். நபியவர்களிடத்தில் ஒருவராக இருந்தாலுமா? என்று கேட்கப்பட்டிருந்தால், ஒருவராக இருந்தாலும் சரியே! என்று செல்லியிருப்பார்கள் என்று அங்கு குழுமியிருந்த கூட்டத்தினர் கருதக்கூடியவர்களாக இருந்தார்கள்".

பெண்பிள்ளைகளுக்கு நல்லுபகாரம் செய்வதென்பது, அவர்களது அத்தியவசியத் தேவைகளுக்கு அதிகமாக வசதிகளைச் செய்து கொடுப்பதாகும். ஆயினும், அவ்வாறு நல்லுபகாரம் செய்தலானது மார்க்க வரையறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

பொதுவாக, பெண்குழந்தைகளுக்காக செலவு செய்தலானது இரு வகைப்படும்.

அவர்களது உடல் சார்ந்த தேவைகளுக்காக செலவு செய்தல்.
அவர்களது ஆத்மா சார்ந்த தேவைகளுக்காக செலவு செய்தல்.
அவர்களது உடல் சார்ந்த தேவைகளுக்காக செலவு செய்வதில் அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் போன்ற வசதிகளைச் செய்து கொடுத்தல் ஆகியன உள்ளடங்குகின்றன. அதேபோன்று, அவர்களுடைய ஆத்மாவுக்குச் செய்கின்ற செலவீனமானது, அவர்களுக்குத் தேவையான மார்க்க அறிவை வழங்குவதும், ஒழுக்கத்தைக் கற்பித்து வழிகாட்டுவதும், நன்மையைக் கொண்டு ஏவுவதும், தீமையை விட்டும் தடுப்பதுமான காரியங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.

அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: "பெண்குழந்தைகளுக்கு நல்லுபாகாரம் செய்தலானது, அவர்களுக்குத் தேவையான போதனைகளை வழங்குவதில் தங்கி நிற்கின்றது. அந்தவிதத்தில், அவர்களுக்கு இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களைக் கற்றுக் கொடுத்தல், சத்தியத்தில் அவர்களை வளரச் செய்வதல், அவர்களது பேணுதல், பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு செயற்படுதல், அவர்கள் விடயத்தில் ரோஷம் கொள்ளுதல், அவர்களை அல்லாஹ் ஹராமாக்கியவற்றை விட்டும் தூரப்படுத்துதல் போன்ற அம்சங்கள் இதனில் உள்ளடக்கியிருக்கின்றன".

உண்மையில், எமது சந்ததியின் காவர்ச்சியானது மார்க்கத்தைக் கொண்டும் நல்லொழுக்கத்தைக் கொண்டுமே பூர்த்தி செய்யப்படுகின்றது.

இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினர்கள்: "யார் தனது பிள்ளைக்குப் பிரயோசனமளிக்கும் கல்வியில் பொடுபோக்காக இருக்கின்றாரோ, மேலும், தனது பிள்ளையை வீணாக விட்டுவிடக் கூடியவராக இருக்கின்றாரோ, அவர் தீங்கிழப்பதில் உச்ச நிலையில் தீங்கிழைத்தவராகக் கருதப்படுவார். இன்னும், அதிகமான பிள்ளைகள் நாசமாகிப் போவது அவர்களுடைய பெற்றோரின் பொடுபோக்குத் தனத்தினாலும், அவர்களின் பிள்ளைகளுக்கு வேண்டிய மார்க்க கடமைகளையும், வழிகாட்டல்களையும் கற்றுக் கொடுக்காமையுமாகும். இதன் காரணமாக, அப்பிள்ளைகள் சிறுபராயத்தில் இருக்கின்ற நிலையில் அவர்களை வீணடித்துவிட்டார்கள். எனவே, அவர்கள் தங்களுக்குத் தாங்களே பிரயோசனத்தைப் பெற்றுக் கொள்ளவுமில்லை. முதிய வயதில் அவர்களின் பெற்றோருக்கு பிரயோசனம் அளிக்கவுமில்லை".

எனவே, அம்பார்ந்த பெற்றோர்களே! இக்கருத்தை நல்ல முறையில் கவனத்தில் கொள்ளுங்கள்! குறிப்பாக, பெண்பிள்ளைகளை வளர்க்கின்ற விடயத்தில் கூடுதல் கரிசனை காட்டுங்கள்! இன்று பெண்கள் சமூகம் கற்பனை பன்னிக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு மாற்றமடைந்துள்ளது. இந்நிலை மீண்டும் அவர்கள் மத்தியில் ஜாஹிலியா கால சமூக அந்தஸ்தை உருவாக்கிவிடுமோ என்று அச்சப்பட வேண்டிய நிலையைத் தேற்றுவித்துள்ளது. அல்லாஹ் எம் சமூகத்தைப் பாதுகாப்பானாக!

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

-    அபூ ஹுனைப் (மதனி)
Previous Post Next Post