இஸ்லாம் கூறும் வியாபாரம்


இஸ்லாமிய சட்டமென்பது, இபாதாத், முஆமலாத், ஜினாயாத், ஹுதூத்முதலாம் மனித் வாழ்வின் சகல துறை சார்ந்த நடவடிக்கைகளையும் விளக்குகின்றது.

இபாதாத் தனி மனிதனோடு தொடர்புள்ளதாகவும் அவற்றினால் ஏற்படும் விளைவுகள் பெரும்பாலும் அவனோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாகவும்  அமைந்துள்ளதைக் காணலாம். ஆனால் முஆமலாத் எனும் வார்த்தையால் குறிக்கப்படும் கொடுக்கல்-வாங்கல், தொழில்சார் நடவ்டிக்கைகளைப் பொறுத்தவரையில், அவை தனிமனிதனுடன் மாத்திரமன்றி அவன் வாழும் சமூகத்துடனும் தொடர்புடையதாக இருக்கின்றன. இந்தவகையில் முஆமலாத் பற்றிய விளக்கம் அதி முக்கியத்துவம் பெற்ற ஒன்று என்பதை எவரும் புரிந்து கொள்ளலாம். 

இஸ்லாத்திலுள்ள வாணிபச் சட்டங்களைஅறியாது வியாபாரத்தில் ஈடுபடுவது ஆபத்தானதாகும். உமர் (ரழி) அவர்கள் சில வேளைகளில் சந்தைக்கு வருகை தந்து தனது சாட்டையினால் சில வியாபாரிகளை அடித்து கீழ் வருமாறு கூறுவாகள். "வர்த்தகச் சட்டங்களைப் பற்றிய விளக்கம் உள்ளவரைத் தவிர மற்றவர்கள் எங்களது சந்தைகளில் வியாபரம் செய்யக்கூடாது; ஏனெனில் அத்தகையோர் விரும்பியோ விரும்பாமலோ வட்டியை உட்கொள்ளவேண்டியிருக்கும்."

உழைப்புக்கான வழிகள் பல. அவற்றுள் இஸ்லாத்தில்வியாபாரத்திற்கு ஒரு தனியிடம் வழங்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், வியாபாரம் பற்றிய விளக்கங்கள் இஸ்லாமிய சட்டத்தில் விரிவாக இடம்பெற்றுள்ளமையை அவதானிக்க முடியும். 

இஸ்லாத்தில் வியாபாரமும் அதன் அடிப்படைகளும்:

வரைவிலக்கணம்;
வியாபாரம் என்பது பண்டமாற்று அடிப்படையிலோ, அல்லது பணத்தைப் பரிவர்த்தனை ஊடகமாகக் கொண்டோ வாங்குவோரும் விற்போரும் பண்டங்களைப் பரிமாற்றிக்கொள்வதைக் குறிக்கும்.

ஷரீஆக் கண்ணோக்கில்:
இஸ்லாமிய சட்ட வழக்கில் வியாபாரமென்பது, வாங்குவோர்-விற்போர் ஆகிய இரு தரப்பினரதும் பரஸ்பர மனத்திருப்தியின் அடிப்படையில் நடைபெறும் பண்டப் பரிவர்த்தனையைக் குறிக்கின்றது. அல்லது அனுமதிக்கப்பட்ட விதத்தில் ஒருவர் பிரதியீட்டைப் பெற்று ஓர் உடைமையை பிறிதொருவருக்குக் கையளிப்பதனைக் குறிக்கும்.

வியாபாரம் இஸ்லாத்தில் பூரண அங்கீகாரத்தைப் பெற்றதாகும்.  "..மேலும் அலாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியத் தடை செய்துள்ளான்." ( 2: 275 ) என அல்குர்-ஆன் குறிப்பிடுகின்றது.

"உழைப்பில் சிறந்தது கைத்தொழிலும், நேர்மையான வியாபாரமுமாகும்." (அஹ்மத்)

நபியவர்கள், ஸஹாபாக்கள், தாபிஈன்கள் காலம் முதல் இன்றுவரை இஜ்மாவின் மூலம் வியாபாரம் செய்யும் உரிமையை முஸ்லிம் உம்மத் பெற்றுள்ளது. வியாபாரத்துக்கு முக்கியத்துவமளிக்கும் இஸ்லாம் அதனை 'ஃபழ்லுழ்ழாஹ்" - இறைவனின் அருள் என வருணிக்கின்றது. பூமியில் வியாபாரத்துக்காக பயணம் செய்வோரை முஜாஹிதீன்களுடன் இணைத்து அல்குர்ஆன் குறிப்பிட்டுள்ளதைக் காண முடிகிறது,

"வேறுசிலர் அல்லாஹ்வின் அருளைத்தேடி பூமியில் (பல பாகங்களுக்கும்) செல்லவேண்டியிருக்கும் என்பதனையும் மேலும் சிலர் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்யவேண்டியிருக்கும் என்பதனையும் (அவன் நன்கு அறிவான்.)" ( 73: 20 )

அல்லாஹ் அல்குர்ஆனில் வியாபாரத்துக்குத் தேவையான வழிவகைகளையும் வசதிகளையும் மனிதனுக்குச் செய்து தந்திருப்பதாகக் கூறித்  தன் அருட்கொடைகளை வெளிப்படுத்துகின்றான்.

"இறைவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக கப்பல், நீரைக் கிழித்துக்கொண்டு செல்வதை  காண்கின்றீர்கள். இதற்கு நீங்கள் அலாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்." ( 35: 12 )

முஃமிங்களைப் பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன், 
"பலர் இருக்கின்றனர்; அவர்களுடைய வர்த்தகமும், கொடுக்கல்-வாங்களும் அவர்கள் அல்லாஹ்வை நினைவுபடுத்துவதிலிருந்தும்; தொழுகையை நிலை நாட்டுவதிலிருந்தும்; ஸகாத் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பிவிடாது." ( 24: 37 ) என்றுகூறி வியாபாரிகளாக இருந்தாலும் வணக்க வழிபாடுகளில் ஈடுபாடுடையோராக இருக்க வேண்டுமென வலியுறுத்துகின்றது. 

வியாபாரத்தின் சிறப்புக்கள்:

வியாபாரத்தின் சிறப்புக்கள் பற்றி நபியவர்களும் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம்.

"நாணயமும் வாய்மையும் கொண்ட வியாபாரி மறுமையில் ஷஹீதுகளோடு இருப்பார்." (திர்மிதீ)

"நாணயமும் வாய்மையும் கொண்ட வியாபாரி மறுமையில் நபிமார், ஸித்தீக்குகள், ஷஹீதுகளோடு இருப்பார்." (இப்னு மாஜா)

நபியவர்களும் தனது ஆரம்பகால வாழ்க்கையின்போது வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தமையைக் காணமுடிகிறது. நபித்தோழர்களும் வியாபாரிகளாக இருந்துள்ளார்கள். முஹாஜிர்களில் பெரும்பாலானவர்கள் வியாபாரிகளாகவே இருந்து வந்துள்ளனர். Eg: அப்துர்-ரஹ்மான் இப்னு ஔஃப் (ரழி), அபூபக்ர் (ரழி), உமர், உஸ்மான் (ரழி)

இஸ்லாமிய வியாபாரத்தின் அடிப்படைகள்:

இஸ்லாமிய வியாபாரத்தின் அடிப்படைகள் மூன்றாகும்

1. அல்-ஈஜாப் வல் கபூல் ( அங்கீகாரம்)
அங்கீகாரம் என்பது விற்பவர், தான் குறித்த பொருளை விற்றுவிட்டதனையும் வாங்கியவர் அதனை ஏற்றுக்கொண்டதனையும் வெளிப்படுத்துவதனைக் குறிக்கும். இங்கு விற்போரின் கூற்று அல்-ஈஜாப் என்றும், வாங்குவோரின் கூற்று அல்-கபூல் என்றும் வழங்கப்படுகின்றது. 

ஈஜாபும் கபூலும் வார்த்தைகளிலேயே இடம்பெற வேண்டுமென்பதில்லை. அது மரபில்-வழக்கில் உள்ள வேறு ஓர் அமைப்பிலும் இடம்பெற முடியும். எழுத்து மூலம் நடைபெறும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. வாங்குவோர், விற்போர்
வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வாங்குவோரும் விற்போரும் அதற்குத் தகுதி படைத்தவராக இருத்தல் வேண்டும். இந்தவகையில் பின்வருவோரின் வியாபார நடவடிக்கைகள் செல்லுபடியற்றதாகும். 

Eg:
@ சித்த சுவாதீனமற்றோர்
@ சிறுவர்கள்
@ மந்த புத்தி உடையோர்

நிர்ப்பந்தத்தின் பேரில் இடம்பெறும் வியாபாரமும் செல்லுபடியற்றதாகும். பிரித்தறியும் ஆற்றல் (தம்யீஸ்) உள்ள சிறுவர்களின் வியாபார நடவடிக்கைகள் அங்கீகரிக்கத்தக்கனவாகும்.

3. வியாபாரப் பண்டம் அல்லது பொருள்
இப்பகுதி பண்டத்தோடு தொடர்பான ஒரு பகுதியாகும். இது தொடர்பான சட்டதிட்டங்களைப் பின்வருமாறு நோக்கலாம்.

வியாபாரப் பண்டத்தைப் பொறுத்தவரையில் அது பின்வரும் ஆறு நிபந்தனைகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

1. சுத்தமானதாக இருத்தல்:
வியாபாரப் பண்டம் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதிலிருந்து அது அசுத்தமான (நஜீஸ்) பொருட்களை விற்பனை செய்வது கூடாது என்பது தெளிவாகிறது.

"நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது தூதரும் மதுபானம், இறந்த பிராணிகள், பன்றி, சிலைகள் முதலானவற்றை விற்பனை செய்வதனைத் தடை செய்துள்ளார்கள்." (புஹாரீ)

2. பயனுள்ளதாக இருத்தல்:
பிரயோசனமற்ற பூச்சிகள், எலி போன்றவற்றை விற்றல் கூடாது,

3. விற்பவருக்குச் சொந்தமானதாக இருத்தல்:
குறித்த பண்டம் விற்பவருக்குச் சொந்தமானதாகவோ அல்லது சொந்தமானவரின் அனுமதியைப் பெற்றதாகவோ இருத்தல் வேண்டும்.

4. பண்டத்தை, வாங்குபவருக்கு ஒப்படைக்கும் சக்தி இருத்தல்:
விற்பவரால் வாங்குபவருக்கு ஒப்படைக்க முடியாதவையாக வியாபாரப் பண்டம் இருத்தல் கூடாது. Eg: கடலிலுள்ள மீன்

5. பண்டமும் அதன் விலையும் குறிப்பாக அறியப்பட்டிருத்தல்:
இந்த நிபந்தனையின்படி வியாபாரப் பொருளும் அதன் விலையும் தெளிவாக அறியப்பட்டதாக அமைந்திருத்தல் வேண்டும்,

"ஒருவர் ஒரு பொருளைக் கண்களால் பார்க்காமல் வாங்கினால் அதனைப் பார்த்த பின்னர் (ஏற்கவும்,மறுக்கவும்) அவருக்குச் சுதந்திரம் உண்டு." (தார குத்னீ, பைஹக்கீ)

கட்புலனாகாப் பொருட்களாக இருந்து அவற்றைக் காண்பிப்பது சாத்தியமற்றதாக இருந்தால் அவற்றின் பண்புகள் அறியப்பட்டதாக இருப்பின் அவற்றினை விற்பது ஆகுமானதாகும். இந்தவகையில் புட்டிகளில் அடைக்கப்பட்ட உணவு வகைகள், மருந்து வகைகள், ஸிலிண்டர்களில் உள்ள Gas போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

6. கையிருப்பில் உள்ளதாக இருத்தல்:
இந்த நிபந்தனையின்படி ஒரு பொருளை வாங்கி அதனைப் பொறுப்பேற்காதவரை மற்றெவருக்கும் விற்பது கூடாது.

"நீர் ஒரு பொருளை வாங்கினால் அதனைப் பொறுப்பேற்கும் வரை விற்காதீர்"  (அஹ்மத், இப்னு ஹிப்பான்)

வியாபார உடன்படிக்கைகளுக்கு சாட்சிகள் தேவை என அல்குர் ஆன் கூறுகின்றது. 
"நீங்கள் வர்த்தகம் செய்துகொண்டால் அதற்கு சாட்சியை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்." ( 2: 282 )

இக்கட்டளை இது கட்டாயக் கடமை என்பதை உணர்த்தாது. மாறாக வியாபார உடன்படிக்கைக்கு சாட்சிகளை வைத்துக்கொள்வது ஸுன்னாவாகும் என்பதே பெரும்பாலான இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் கருத்தாகும்.  நபியவர்களின் காலம் முதல் ஸஹாபாக்கள், தாபிஈன்கள் காலம் உட்பட பிற்பட்ட காலங்களிலும் சாட்சிகள் இன்றியே கொடுக்கல்-வாங்கள் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்துள்ளமை, சாட்சிகள் இருப்பது கட்டாயக் கடமையல்ல என்பதனையே காட்டுகின்றது.

வியாபாரத்தைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் (02:275) வசனத்தில் குறிப்பிடுகிறான்: அல்லாஹ் உங்களுக்கு வியாபாரத்தை அனுமதித்திருக்கிறான். ஆனால் அல்லாஹ் கூறும் வியாபாரத்தில் அளவை நிறுவையில் மோசடி, பொய்யான வாக்குறுதி, பொருள் கலப்படம், குறையுள்ள பொருள் விற்பனை, வாங்குபவரை ஏமாற்றுதல், பொருள் விற்பனைக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்தல், பொருளை பதுக்குதல், கொள்ளையடித்தில், திருடுதல், அல்லாஹ் ஹராமாக்கிய பொருளை விற்பனை செய்தல் அல்லது வாங்குதல், வாங்கிய பொருள் கைக்கு வருவதற்கு முன் விற்பனை செய்தல் போன்ற எண்ணற்ற குறைபாடுகள் கிடையாது. 

ஆனால் இன்றைய வியாபாரத்தில் இவையெல்லாம் வியாபார நுணுக்கங்களாக தலை தூக்கிவிட்டன. பலர் எந்த வியாபாரம் ஹலாலானது, எந்த வியாபாரம் ஹரமானது என்பதை அறியாமலேயே வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால்தான் வியாபாரியாக இருந்து வாழ்க்கையை நடத்தும் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பற்கு இஸ்லாம் சில வரையறைகளை விதிக்கிறது. 

அளவையிலும், நிறுவையிலும் மோசடி கூடாது!:-

“அளவையிலும், நிறுவையிலும் மோசடி” செய்பவர்களைக் குறித்து அல்லாஹ் தன் திருமறையில் 83:1-3 வசனங்களில் கடுமையாக எச்சரிக்கின்றான்:அளவையிலும் நிறுவையிலும் யார் மோசடி செய்கிறார்களோ அவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் இருந்து அளந்து வாங்கினால் நிறைய அளந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும் போது குறைத்து விடுவார்கள். அளவையிலும் நிறுவையிலும் குறைத்து வியாபாரம் செய்வது வியாபார நுணுக்கமாக சில வியாபாரிகள் நினைக்கின்றனர். ஆனால் இது ஒரு மாபெரும் மோசடி. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“(அளவை, நிறுவை என) இரண்டு விஷயங்களில் பொறுப்பேற்றுள்ளீர்கள். இதில்தான் உங்களுக்கு முன் இருந்த சமுதாயத்தினர் அழிந்தனர்” என்று எச்சரித்தார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) – திர்மிதீ).

வியாபாரத்தில் பொய்ச்சத்தியம் கூடாது!:-

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள்.“(வியாபாரத்தில்) சத்தியம் செய்வது, சரக்கை விற்கச் செய்திடும். (ஆனால்) லாபத்தை அழித்துவிடும்” என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம், நஸாயீ, அஹ்மத், அபூதாவூத்).

இவ்வாறு விற்கும் பொருளில் இல்லாததை இருப்பதாக பொய்ச்சத்தியம் செய்து விற்றால் மறுமை நாளில் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.“மறுமை நாளில் மூன்று நபர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான், அவர்களைத் தூய்மைப் படுத்தமாட்டான், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என்று கூறினார்கள். 

அந்த மூவரில் ஒருவன் தனது வியாபாரப் பொருளில் இல்லாததை இருப்பதாக கூறி சத்தியம் செய்தவன்.” (அபூஹுரைரா (ரலி) புஹாரி).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவன் ஒரு சத்தியம் செய்து அதன் காரணமாக மற்றொரு முஸ்லிமுடைய சொத்தைப் பறித்துக் கொண்டு, அதில் அவன் பொய்யனாக இருப்பின், மறுமையில் அவன் மீது கோபமாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அஷ் அஸ் இப்னு கைஸ் (ரலி)புஹாரி, முஸ்லிம்).

இது பற்றி அல்லாஹ் தன் திருமறையில் (2:188) வசனத்தில் குறிப்பிடுகிறான்: உங்களுக்கிடையே (ஒருவருகொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! என்று கூறுகிறான்.

வியாபாரத்தில் போட்டி, பொறாமை கூடாது!:-

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். “ஒரு மூமின் மற்றொரு மூமினின் சகோதரர் ஆவார். தன் சகோதரரின் வியாபாரத்தில் தலையிட்டு வியாபாரம் பேச ஒரு மூமினுக்கு அனுமதியில்லை” என்று கூறினார்கள். (உக்பா இப்னு ஆமிர் (ரலி) இப்னுமாஜா, அஹ்மத்).

இதேபோன்று மற்றொரு ஹதீஸில்“உங்களில் ஒருவர் தன் சகோதரன் செய்யும் வியாபாரத்தில் (குறுக்கீடு செய்து) வியாபாரம் செய்ய வேண்டாம்” என்று கூறினார்கள். (இப்னு உமர் (ரலி) புஹாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸாயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).

(வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்திடும் நோக்கில்) விலையை கூடுதலாக்கிட முயல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். (இப்னு உமர் (ரலி) புஹாரி, முஸ்லிம், நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத்).

பதுக்கல் வியாபாரம் கூடாது!:-

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“தேவையான பொருளைப் பதுக்கி வைக்காமல் உரிய நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தவனாவான். மேலும் அல்லாஹ் அவனுக்கு வாழ்வாதாரங்களையும் வழங்குவான். இன்னும் அவற்றை பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாவான்” என்றுகூறினார்கள். (உமர் (ரலி) இப்னுமாஜா).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பாவியைத்தவிர வேறு யாரும் உணவுப் பொருளைபதுக்கமாட்டார்கள்.” என்று கூறினார்கள். (மஃமர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) முஸ்லிம்).

இந்தப் பதுக்கல்காரனைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தேவையான பண்டங்களைப் பதுக்கி வைப்பவன் எவ்வளவு கெட்டவனாக இருக்கிறான். அல்லாஹ் பொருளின் விலையை மலிவாக்கி விட்டால் இவன் வருத்தப்படுவான். விலை ஏறிவிட்டாலோ மகிழ்ச்சிகொள்கிறான்.” என்று கூறினார்கள். (முஅத் (ரலி) பைஹகீ).

கூட்டு வியாபாரத்தில் சக தோழரை ஏமாற்றுவது கூடாது!:-

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.“வியாபாரம் போன்ற வணிகத்தில், இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாத வரை அவர்களுடன் மூன்றாவது கூட்டாளியாக அல்லாஹ் இருப்பான் ” என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) அபூதாவூத்).

இது பற்றி அல்லாஹ் தன் திருமறையில் (38:24) வசனத்தில் குறிப்பிடுகிறான்: நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிர, உங்களில் கூட்டுச் சேர்வோரில் அதிகமானோர் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்கின்றனர்.

வியாபாரத்தில் ஹலால் – ஹராம் பேணுவதை கைவிடல் கூடாது!:-

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! என்று மூன்று முறை கூறிவிட்டு, நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மீது கொழுப்பை ஹராமாக்கினான். அவர்களோ அதை விற்பனை செய்து அதன் பணத்தில் சாப்பிட்டார்கள். அல்லாஹ் ஒரு சமுதாயத்தின் மீது எதை உண்ண ஹராமாக்கினானோ அதனுடைய பணத்தையும் ஹராமாக்கிவிட்டான்” என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) அபூதாவூத்).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஹராமின் மூலம் வளர்ந்த சதைக்கு நரக நெருப்பே தகுதியானது” என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) தப்ரானீ).

நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்: “ஒரு காலம் வரும். அப்போது மக்கள் தாங்கள் சம்பாதிப்பவை ஹலாலா? ஹராமா? என்பதை பொருட்படுத்தமாட்டார்கள்” என்று கூறினார்கள் (அபூஹுரைரா (ரலி) புஹாரி).

நபி (ஸல்) அவர்கள் கூறிய அந்த காலத்தில்தான் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்று ஒரு மனிதன் தான் எந்த வழியில் சம்பாதிக்கிறோம் என்பதை பார்ப்பதில்லை. அவனுடைய நோக்கம் பணம் மட்டும்தான். பணமென்றால் அனைத்தையும் இழக்கத்தயாராகிவிடுகிறான்.

ஏன் நமது துஆ அங்கீகரிக்கப்படுவதில்லை?:-

சிலருக்கு என்னடா! நாம் அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். ஆனால் நம்முடைய துஆ இதுவரை அல்லாஹ் அங்கீகரிக்கவில்லையே? என்று எண்ணம் தோன்றலாம். அதற்கு என்ன காரணம் தெரியுமா?நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: “ஒருவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது, அவனது துஆ எவ்வாறு அங்கீகரிக்கப்படும்?” என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்).

நாம் ஹராமான முறையில் சம்பாதித்துவிட்டு பிறகு நமது தேவைக்காக அல்லாஹ்விடம் துஆ செய்தால் அந்த துஆவிற்கு பதிலும் இருக்காது, பலனும் இருக்காது.

நேர்மையான வியாபாரிகளின் நிலை என்ன?:-

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உண்மை பேசி, நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர் மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீதுகள் ஆகியோருடன் இருப்பார்” என்று கூறினார்கள். (அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) திர்மிதீ).இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வியாபாரிகளே! ஷைத்தானும் பாவமும் வியாபாரத்தின் போது ஆஜராகி வருவதால், உங்கள் வியாபாரங்களுடன் தர்மத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (பரா பின் ஆஸிப் (ரலி) திர்மிதீ, அபூதாவூத்)
Previous Post Next Post