அத்தியாயம் 7 ஜும்ஆ

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 7
ஜும்ஆ

பாடம் : 1 வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வோர் ஆண்மீதும் கடமையாகும் என்பதும், அது தொடர்பாக வந்துள்ள கட்டளையின் விவரமும்.
1532. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவுமேடை (மிம்பர்)மீது நின்றபடி "உங்களில் யார் ஜுமுஆவு(டைய தொழுகை)க்கு வருகிறாரோ அவர் குளித்துக் கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1533. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை (பள்ளிவாசலில்) மக்களுக்கு உரையாற்றிக்கொண்டிருந்தபோது, நபித் தோழர்களில் ஒருவர் வந்தார். அவரை உமர் (ரலி) அவர்கள் அழைத்து "இது எந்த நேரம்? (ஏன் தாமதம்?)" என்று கேட்டார்கள். அதற்கு அவர் "நான் அலுவலில் மூழ்கிவிட்டேன். தொழுகை அறிவிப்பைக் கேட்ட பிறகுதான் நான் வீட்டிற்கே திரும்பினேன். உடனே அங்கத் தூய்மை (உளூ) மட்டும் செய்துவிட்டு நான் (விரைந்து) வருகிறேன்" என்று கூறினார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் "வெறும் உளூ மட்டும்தானா? (குளிக்கவில்லையா?) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜுமுஆவிற்காக) குளிக்குமாறு கட்டளையிட்டுவந்ததை நீங்கள் நன்கு அறிவீர்களே!" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 7
1534. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தில் மக்களுக்கு உரையாற்றிக்கொண்டிருந்தபோது,உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் (பள்ளிக்குத் தாமதமாக) வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் "சிலருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்யப்பட்ட பின் தாமதமாக வருகின்றனர்!" என உஸ்மான் (ரலி) அவர்களைக் குறிப்பிட்டுச் சாடையாகக் கேட்டார்கள். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! தொழுகை அறிவிப்பைக் கேட்டவுடன் அங்கத்தூய்மை ("உளூ") மட்டும் செய்துவிட்டுப் புறப்பட்டுவிட்டேன்" என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "வெறும் "உளூ" மட்டும்தானா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களில் ஒருவர் ஜுமுஆவுக்குச் செல்லும்போது குளித்துக்கொள்ளட்டும்" எனக் கூறியதை நீங்கள் செவியுறவில்லையா?" என்று கேட்டார்கள்
அத்தியாயம் : 7

1535. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 7
1536. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் வெள்ளிக்கிழமை அன்று (மதீனாவைச் சுற்றியுள்ள) மேட்டுப்புறக் கிராமங்களிலிருந்த தங்கள் குடியிருப்புகளிலிருந்து முறைவைத்து (தொழுகைக்கு) வந்துகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் நீளங்கி அணிந்து வருவர். அவர்கள்மீது புழுதி படிந்து அவர்களின் உடலிலிருந்து (வியர்வையின்) துர்வாடை வரும். (இந்த நிலையில்) அவர்களில் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தபோது வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இன்றைய நாளுக்காக நீங்கள் தூய்மையுடன் இருக்கக் கூடாதா?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) மக்கள் உழைப்பாளிகளாக இருந்தனர். அவர்களிடம் (அவர்களின் பணிகளைக் கவனிக்க) வேலை யாட்கள் இருக்கவில்லை. எனவே, அவர்கள் மீது (வியர்வையின்) துர்வாடை வீசும். இதனால்தான், "நீங்கள் வெள்ளிக்கிழமை குளித்தால் என்ன?" என்று அவர்களிடம் கூறப்பட்டது.
அத்தியாயம் : 7
பாடம் : 2 ஜுமுஆ நாளில் நறுமணம் பூசுதலும் பல் துலக்கலும்.
1537. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது பருவ மடைந்த ஒவ்வொருவர்மீதும் கடமையாகும்; இன்னும் பல்துலக்குவதும்தான். மேலும்,கிடைக்கின்ற நறுமணத்தைப் பூசிக்கொள்ள வேண்டும்.- இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் புகைர் பின் அல்அஷஜ்ஜு (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பெண்களின் நறுமணப் பொருளாக இருந்தாலும் சரியே"என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 7
1538. தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமைக் குளியல் பற்றிய நபிமொழியை அறிவித்த போது, அவர்களிடம் நான் "ஒருவர் (தம்மிடம் இல்லாவிட்டால்) தம் வீட்டாரிடம் இருக்கும் நறுமணத்தையோ எண்ணெயையோ பூசிக் கொள்ள வேண்டுமா?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இது பற்றி எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1539. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஏழு நாட்களுக்கு ஒரு முறை (வெள்ளிக்கிழமை அன்று) தம் தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது, ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விற்காகச் செய்ய வேண்டிய கடமையாகும்.- இதை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 7
1540. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெருந்துடக்கிற்காகக் குளிப்பதைப் போன்று வெள்ளியன்று குளித்துவிட்டு (நேரத்தோடு பள்ளிவாசலுக்கு)ச் செல்பவர், ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். (அதற்கடுத்த) இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைக் குர்பானி செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (தமது அறையிலிருந்து) வெளியேறி (பள்ளிவாசலுக்குள் வந்து)விட்டால், (பெயர்களைப் பதிவு செய்யும்) வானவர்களும் இமாமின் சொற்பொழிவைச் செவியுற (உள்ளே) வந்துவிடுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 7
பாடம் : 3 வெள்ளிக்கிழமை சொற்பொழிவின் போது மௌனமாக இரு(ந்து காது தாழ்)த்தல்.
1541. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ "மௌனமாக இரு" என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1542. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளியன்று இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது, உன் அருகிலிருப்பவரிடம் நீ "மௌனமாக இரு" என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
("நீ வீண்பேச்சு பேசியவனாவாய்" என்பதைக் குறிக்க மூலத்தில்) "ஃபகத் லஃகீத்த" எனும் வாக்கியம் ஆளப்பட்டுள்ளது. இது அபூஹுரைரா (ரலி) அவர்களின் மொழிவழக்கு ஆகும். அது "ஃபகத் லஃகவ்த்த" என்றே இருக்க வேண்டும்.
அத்தியாயம் : 7
பாடம் : 4 வெள்ளியன்று (வேண்டுதல் ஏற்கப்படுவதற்கு) உள்ள நேரம்.
1543. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில் "அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அது மிகக் குறைந்த நேரம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 7
1544. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபுல்காசிம் (நபி-ஸல்) அவர்கள், "வெள்ளியன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று ஏதேனும் நன்மையைக் கேட்டால், அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை" என்று கூறினார்கள். அந்த நேரம் மிகவும் குறைவான நேரம் என்பதைத் தமது கையால் சைகை செய்து காட்டினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1545. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளியன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்விடம் ஏதேனும் நன்மையைக் கோரினால், அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை. அது (மிகவும்) குறைவான நேரமாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அது (மிகவும்) குறைவான நேரமாகும்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 7
1546. அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?" என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம்; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அது, இமாம் (சொற்பொழிவு மேடையில்) அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்.- இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
பாடம் : 5 வெள்ளிக்கிழமையின் சிறப்பு.
1547. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அன்றுதான் சொர்க்கத்திற்குள் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அன்றுதான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 7
1548. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 7
பாடம் : 6 வெள்ளிக்கிழமைதான் (வார வழிபாட்டு நாள்) என இந்தச் சமுதாயத்திற்கு அறிவிக்கப் பெற்றது.
1549. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாம்தாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். எனினும், (நமக்கு முன்வந்த) ஒவ்வொரு சமுதாயத்தாரும் (யூத மற்றும் கிறித்தவர்) நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அல்லாஹ் நம்மீது விதியாக்கியுள்ள இந்த (வெள்ளிக்கிழமை) நாளை அல்லாஹ் நமக்காக(த் தேர்ந்தெடுத்து) அறிவித்தான். (வார வழிபாட்டு நாள் தொடர்பாக) மக்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே உள்ளனர். (வெள்ளிக்கிழமை நமது வழிபாட்டு நாள் எனில்) அடுத்த நாள் (சனிக்கிழமை) யூதர்களின் (வழிபாட்டு) நாளாகும். அதற்கடுத்த நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறித்தவர்களின் (வழிபாட்டு) நாளாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றிலும் "நாம் (காலத்தால்) பிந்தியவர்களாவோம்; மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாவோம்" என்றே ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 7
1550. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாமே (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். நாமே சொர்க்கத்தில் முதலில் நுழைவோம். எனினும், (யூதர் மற்றும் கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அவர்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயத்தில் அல்லாஹ் நமக்குச் சத்தியத்திற்கு வழிகாட்டினான். இந்த (ஜுமுஆ) நாள் விஷயத்திலும் (அதை வார வழிபாட்டு நாளாக ஏற்பது தொடர்பாக) அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்துத் தந்தான். (இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடரக்கூடியவர்களே ஆவர்.) இன்று (வெள்ளிக்கிழமை) நமக்குரிய (வழிபாட்டு) நாளாகும். நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரிய நாளாகும். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்குரிய நாளாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1551. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் இந்த ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாமே (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். எனினும், (யூதர் மற்றும் கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்பே நமக்கு வேதம் வழங்கப்பெற்றது. இந்த (வெள்ளி)க்கிழமைதான் அவர்களுக்கும் (வார வழிபாட்டு) நாளாக கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் இ(ந்த நாளைத் தமது வார வழிபாட்டு நாளாக ஏற்றுக்கொள்வ)தில் கருத்து வேறுபாடு கொண்டனர். ஆகவே, அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்தான். இதில் அவர்கள் (அனைவரும்) நம்மைப் பின் தொடர்பவர்களே ஆவர். (எவ்வாறெனில், வெள்ளிக்கிழமை நமது வார வழிபாட்டு நாள் என்றால்) யூதர்களுக்கு நாளை (சனிக்கிழமை)யும் கிறித்தவர்களுக்கு மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமையும் வார வழிபாட்டு நாட்களாகும்).- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 7
1552. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், நமக்கு முந்தைய (யூதர் மற்றும் கிறித்தவ) சமுதாயத்தாரை (வார வழிபாட்டு நாளான) வெள்ளிக்கிழமையிலிருந்து வழிபிறழ விட்டுவிட்டான். எனவே, யூதர்களுக்குச் சனிக்கிழமையும் கிறித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் (வார வழிபாட்டு நாட்களாக) அமைந்தன. பிறகு அல்லாஹ் நம்மைப் படைத்து நமக்கு வெள்ளிக்கிழமையை அறிவித்தான். (வரிசை முறையில்) வெள்ளி, சனி, ஞாயிறு என அமைந்திருப்பதைப் போன்றே மறுமை நாளிலும் அவர்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே இருப்பார்கள். உலக மக்களில் நாமே (காலத்தால்) பிந்தியவர்களாக இருக்கிறோம்; மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் படைப்பினங்களில் அனைவருக்கும் முன் தீர்ப்பளிக்கப் படுபவர்களாகவும் இருப்போம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் ஹுதைஃபா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1553. மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நமக்கு வெள்ளிக்கிழமை (வார வழிபாட்டு நாளாக) அறிவிக்கப்பெற்றது. நமக்கு முன்னிருந்தவர்களை அதிலிருந்து அல்லாஹ் வழி பிறழ விட்டுவிட்டான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.
மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே வேறு வார்த்தைகளில் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 7
பாடம் : 7 வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) நேரத்தோடு செல்வதன் சிறப்பு.
1554. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடைபெறும்) பள்ளி வாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் நின்று கொண்டு, முதன்முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால், வானவர்கள் அந்த (பெயர் பதிவு) ஏடுகளைச் சுருட்டிவைத்துவிட்டு வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகின்றனர். (ஜுமுஆவுக்காக) நேரத்தோடு வருபவரது நிலையானது,ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஓர் ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும், அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றவர்கள் ஆவர்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1555. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(வெள்ளிக்கிழமை வந்துவிட்டால்) பள்ளிவாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் ஒரு வானவர் நின்றுகொண்டு, முதன்முதலாக நுழைபவரையும் அடுத்து முதலில் நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்கிறார்கள்" என்று கூறினார்கள். பிறகு ஜுமுஆவுக்கு வருபவர்களின் நிலையை, இறைச்சி ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார் என்பதிலிருந்து முட்டையை தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார் என்பதுவரை படிப்படியாகக் குறைத்து ஒப்பிட்டுக் கொண்டே போனார்கள். "இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால் பெயர்ப்பதிவேடுகள் சுருட்டப்பட்டுவிடுகின்றன; வானவர்கள் (இமாமின்) உரையில் பங்கேற்கின்றனர்" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 7
பாடம் : 8 (வெள்ளிக்கிழமை) உரையை மௌனமாகச் செவியேற்பவரின் சிறப்பு.
1556. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் (வெள்ளிக்கிழமை அன்று) குளித்துவிட்டு ஜுமுஆத் தொழுகைக்குச் சென்று, அவரது விதியில் எழுதப்பட்டிருந்த அளவு (கூடுதலாகத்) தொழுதார்; பிறகு இமாம் தமது சொற்பொழிவை (குத்பா) முடிக்கும்வரை வாய்மூடி மௌனமாக உரையைக் கேட்டுவிட்டு, அவருடன் சேர்ந்து தொழுகையை நிறைவேற்றுகிறார். இத்தகையவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரையும் மேற்கொண்டு மூன்று நாட்கள்வரையும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 7
1557. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(வெள்ளிக்கிழமை) யார் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதை செம்மையாகவும் செய்து ஜுமுஆவுக்கு வந்து (இமாமின் உரையை) செவிதாழ்த்தி மௌனமாகக் கேட்கிறாரோ அவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆவரைக்கும் மேற்கொண்டு மூன்று நாட்களுக்கும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (யாவும்) மன்னிக்கப்படுகின்றன. யார் (இமாம் உரை நிகழ்த்தும்போது தரையில் கிடக்கும்) சிறு கற்களைத் தொட்டு (விளை யாடி)க்கொண்டிருக்கிறாரோ அவர் வீணான செயலில் ஈடுபட்டுவிட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
பாடம் : 9 சூரியன் (உச்சியிலிருந்து) சாய்கின்ற போது ஜுமுஆத் தொழுவது.
1558. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஜுமுஆ) தொழுவோம்; பிறகு திரும்பிச் சென்று நீர் இறைக்கும் எங்கள் ஒட்டகங்களுக்கு ஓய்வளிப்போம்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹசன் பின் அய்யாஷ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஜஅஃபர் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் "அது எந்த நேரம்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல்) நேரத்தில்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1559. முஹம்மத் பின் அலீ பின் அல்ஹுசைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நேரத்தில் ஜுமுஆ தொழுவார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜுமுஆ) தொழுவித்த பிறகு நாங்கள் எங்களுடைய ஒட்டகங்களிடம் சென்று அவற்றுக்கு ஓய்வளிப்போம்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல்) நேரத்தில் (ஜுமுஆ தொழுவார்கள்)" என்றும், ஒட்டகங்கள் என்பது "நீர் இறைக்கும் ஒட்டகங்களைக் குறிக்கும்" என்றும் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 7
1560. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ‘ஜுமுஆ" தொழுத பிறகுதான் மதிய ஓய்வு மேற்கொள்வோம்; முற்பகல் உணவு உட்கொள்வோம். (அந்த அளவிற்கு நேரத்திலேயே ஜுஆமு தொழுதுவிடுவோம்.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அலீ பின் ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 7
1561. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல்) நேரத்தில் "ஜுமுஆ" தொழுவோம். பிறகு (சுவர்களுக்கு நிழல் படியாததால்) நாங்கள் (ஒதுங்கி நடக்க) நிழல் தேடியவாறே (வீட்டுக்குத்) திரும்புவோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1562. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "ஜுமுஆ" தொழுதுவிட்டு (வீட்டிற்குத்) திரும்புவோம். அப்போது (நண்பகல் நேரமாயிருப்பதால்) நாங்கள் நிழல் பெறும் அளவுக்கு சுவர்களில் நிழல் படிந்திருக்காது.
அத்தியாயம் : 7
பாடம் : 10 (ஜுமுஆ) தொழுகைக்கு முன் (இமாம்) இரு உரைகள் நிகழ்த்துவதும் அவ்விரு உரைகளுக்கு இடையே (அவர்) அமர்வதும்.
1563. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை அன்று (முதலில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்துவார்கள். பிறகு உட்கார்ந்துவிட்டு மீண்டும் எழுந்து நிற்பார்கள்; இன்று நீங்கள் செய்வதைப் போன்று.- இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1564. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஜுமுஆவின்போது) குர்ஆன் (வசனங்களை) ஓதி, மக்களுக்கு நினைவூட்டி இரு (குத்பா) உரைகள் நிகழ்த்துவார்கள். அவ்விரு உரைகளுக்கிடையே அமர்வார்கள்.- இதை சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1565. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜுமுஆவின்போது) நின்றவாறே உரையாற்றுவார்கள். பிறகு உட்கார்ந்துவிட்டு (மீண்டும்) எழுந்து நின்றவாறே உரையாற்றுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்கார்ந்தவாறே உரை நிகழ்த்துவார்கள் என்று எவரேனும் உன்னிடம் கூறினால் அவர் பொய்யுரைத்துவிட்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழுகைகளைத் தொழுதிருக்கிறேன்.
இதை சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 7
பாடம் : 11 "அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் உம்மை (அப்படியே) நிற்கவைத்துவிட்டு அவற்றை நோக்கிச் சென்றுவிடுகின்றனர்" எனும் (62:11ஆவது) இறைவசனம்.
1566. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று நின்றவாறு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, ஷாம் (சிரியா) நாட்டிலிருந்து ஓர் ஒட்டகக் கூட்டம் (உணவுப் பொருட்களுடன்) வந்தது. உடனே அதை நோக்கி மக்கள் அனைவரும் கலைந்து சென்று விட்டனர்; பன்னிரண்டு பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். அப்போதுதான் ‘அல்ஜுமுஆ" (62) அத்தியாயத்திலுள்ள "அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் உம்மை நிற்க வைத்துவிட்டு, அவற்றை நோக்கிச் சென்றுவிடுகின்றனர்" எனும் இந்த (11ஆவது) வசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள்" என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. ‘நின்றவாறு" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 7
1567. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு) வெள்ளிக்கிழமை அன்று நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது, (வியாபாரப் பொருட்களுடன்) ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. உடனே அதை நோக்கி மக்கள் அனைவரும் வெளியேறிச் சென்றுவிட்டனர்; பன்னிரண்டு பேர் மட்டுமே எஞ்சினர். அந்தப் பன்னிருவரில் நானும் ஒருவன் ஆவேன். அப்போதுதான் அல்லாஹ் "அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் உம்மை நிற்கவைத்துவிட்டு அவற்றை நோக்கிச் சென்றுவிடுகின்றனர்..." எனும் (62:11ஆவது) வசனத்தை முழுமையாக அருளினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1568. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று நின்றவாறு உரை நிகழ்த்திக்கொண்டிருந்த போது, (ஷாமிலிருந்து) மதீனாவிற்கு ஒட்டகக் கூட்டம் ஒன்று (உணவுப் பொருட்களுடன்) வந்தது. உடனே நபித்தோழர்கள் அனைவரும் அதன் பக்கம் விரைந்தோடினர்; நபியவர்களுடன் பன்னிரண்டு பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். அந்தப் பன்னிருவரில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் அடங்குவர். அப்போதுதான் "அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் உம்மை நிற்கவைத்துவிட்டு, அவற்றை நோக்கிச் சென்றுவிடுகின்றனர்" எனும் இந்த (62:11 ஆவது) வசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1569. அபூஉபைதா ஆமிர் பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் (ஜுமுஆ நாளில்) பள்ளிவாசலுக்குள் நுழைந்தபோது, அப்துர் ரஹ்மான் பின் உம்மில் ஹகம் உட்கார்ந்தபடியே (குத்பா) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். உடனே கஅப் (ரலி) அவர்கள் "(இதோ) இந்த மோசமான ஆளைப் பாருங்கள்: உட்கார்ந்துகொண்டு உரை நிகழ்த்துகிறார். உயர்ந்தோன் அல்லாஹ் "அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் உம்மை நிற்கவைத்துவிட்டு அவற்றை நோக்கிச் சென்றுவிடுகின்றனர்" (62:11) என்று கூறுகின்றான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
பாடம் : 12 ஜுமுஆத் தொழுகையைக் கைவிடுவதற்கு வந்துள்ள கண்டனம்.
1570. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) மற்றும் அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் படிகள்மீது நின்றபடி " மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும்! அல்லது அவர்களின் இதயங்கள்மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்; பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்" என்று கூறியதை நாங்கள் கேட்டோம்.
இதை ஹகம் பின் மீனாஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
பாடம் : 13 (ஜுமுஆ) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல்.
1571. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுவந்தேன். அவர்களது தொழுகையும் உரையும் (நீண்டதாகவும் இல்லாமல் மிகவும் சுருக்கமானதாகவும் இல்லாமல்) நடுத்தரமாகவே அமைந்திருந்தன.
இதை சிமாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1572. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் பல தொழுகைகளைத் தொழுதிருக்கிறேன். அவர்களது தொழுகையும் உரையும் நடுத்தரமாகவே அமைந்திருந்தன.
இதை சிமாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1573. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏதேனும் முக்கிய விஷயம் குறித்து எச்சரிக்கை செய்து) உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்துவிடும்; கோபம் மிகுந்துவிடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப் போவது குறித்து "எதிரிகள் காலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்" என்று கூறி அவர்கள் எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நானும் மறுமை நாளும் இதோ இவ்விரு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பெற்றுள்ளோம்" என்று கூறியவாறு தம்முடைய சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டுவார்கள். மேலும், "அம்மா பஅத் (இறைவாழ்த்துக்குப் பின்!) உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்" என்று கூறுவார்கள். பிறகு "ஒவ்வோர் இறை நம்பிக்கையாளருக்கும் அவரது உயிரைவிட நான் நெருக்கமான (உரிமையுடைய)வன் ஆவேன். (ஆகவே,) எவர் (இறக்கும்போது) ஒரு செல்வத்தை விட்டுச்செல்கிறாரோ அது அவருடைய குடும்பத்தாருக்குரியதாகும். எவர் (இறக்கும்போது) ஒரு கடனை அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச்செல்கின்றாரோ அவர்கள் என்னிடத்தில் வரட்டும். என்மீதே (அவர்களைப் பராமரிப்பதும் அவர்களது கடனை அடைப்பதும்) பொறுப்பாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 7
1574. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை உரையில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்வார்கள். அதைத் தொடர்ந்து தமது குரலை உயர்த்(தி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று உரை நிகழ்த்)துவார்கள்.
அத்தியாயம் : 7
1575. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜுமுஆவில்) மக்களுக்கு உரை நிகழ்த்தும் போது, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ற புகழ்மொழிகள் கூறிப் போற்றிப் புகழ்வார்கள். பிறகு "அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்திவிட்டானோ அவரை எவராலும் வழிகெடுக்க முடியாது. அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவரை எவராலும் நேர்வழியில் சேர்க்க முடியாது. உரையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும்" என்று கூறுவார்கள் என இடம்பெற்றுள்ளது.
மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 7
1576. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அஸ்து ஷனூஆ" எனும் குலத்தைச் சேர்ந்த ளிமாத் பின் ஸஅலபா என்பார் மக்காவுக்கு வந்தார். அவர் காற்றுகறுப்புக்காக ஓதிப்பார்ப்பவராய் இருந்தார். மக்காவைச் சேர்ந்த சில அறிவிலிகள் "முஹம்மத் ஒரு மனநோயாளி" என்று கூறுவதை அவர் செவியுற்றார். "நான் அந்த மனிதரைச் சந்தித்(து ஓதிப்பார்த்)தால் எனது கரத்தால் அவருக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்கக்கூடும்" என்று ளிமாத் சொன்னார். அவ்வாறே அவர் முஹம்மத் (ஸல்) அவர்(களிடம் வந்து அவர்)களைச் சந்தித்தபோது, "முஹம்மதே! காற்றுகறுப்புக்காக நான் ஓதிப்பார்த்துவருகிறேன். எனது கரத்தால் தான் நாடியவர்களுக்கு அல்லாஹ் நிவாரணமளிக்கிறான். உங்களுக்கு நான் ஓதிப்பார்க்கட்டுமா?" என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. நாங்கள் அவனைப் போற்றுகிறோம்; அவனிடமே உதவி கோருகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்திவிட்டானோ அவரை எவராலும் வழிகெடுக்க முடியாது. அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவரை எவராலும் நேர்வழியில் சேர்க்க முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவார் என்றும் நான் உறுதி கூறுகிறேன். இறைவாழ்த்துக்குப் பின்!" என்று கூறினார்கள்.
(இதைக் கேட்ட) ளிமாத், "நீங்கள் (இப்போது) சொன்ன இந்த வார்த்தைகளை மீண்டும் சொல்லுங்கள்" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த வார்த்தைகளை முன்பு போன்றே மூன்று முறை கூறினார்கள். இதைக் கேட்ட ளிமாத், "நான் சோதிடர்கள், சூனியக்காரர்கள், கவிஞர்கள் ஆகியோரின் சொற்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் கூறிய இந்த வார்த்தைகளைப் போன்று நான் கேட்டதேயில்லை. இவ்வார்த்தைகள் ஆழ்கடலையே தொட்டுவிட்டன. உங்களது கரத்தை நீட்டுங்கள்; நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு உங்களிடம் உறுதிமொழி அளிக்கிறேன்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவரிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டார்கள். அப்போது "உம்முடைய சமூக மக்களுக்காகவும் (அவர்கள் சார்பாக) உறுதிமொழி அளிப்பீராக!" என்று கூறினார்கள். அதற்கு ளிமாத் "என் சமூகத்தாருக்காகவும் (உறுதி அளிக்கிறேன்)" என்று கூறினார்.
பிறகு (ஒரு கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிய படைப் பிரிவொன்று அவருடைய சமூகத்தாரைக் கடந்து சென்றது. அப்போது அப்படையின் தலைவர் தம் வீரர்களிடம், "இதோ இந்த மக்களிடமிருந்து (போர்ச் செல்வமாக) எதையேனும் பெற்றீர்களா?" என்று கேட்டார். படைவீரர்களில் ஒருவர், "(ஆம்) நான் ஒரு தண்ணீர் குவளையை அவர்களிடமிருந்து பெற்றேன்" என்றார். அதற்கு "அதைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்! இவர்கள் ளிமாதின் சமூக மக்கள். (ளிமாத் அளித்துள்ள உறுதிமொழியின் கீழ் இவர்கள் அபயம் பெற்றவர்கள்)" என்று கூறினார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1577. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எங்களுக்கு அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் (ஒரு வெள்ளிக்கிழமை) சுருக்கமாகவும் செறிவுடனும் உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (மேடையிலிருந்து) இறங்கியபோது, "அபுல் யக்ளானே! செறிவுடன் சுருக்கமாகப் பேசினீர்கள். இன்னும் சிறிது நேரம் பேசியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே?" என்று நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குவது ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும். ஆகவே, தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குங்கள். சில சொற்பொழிவுகளில் கவர்ச்சி உள்ளது" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 7
1578. அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கள் அருகில் உரையாற்றினார். அப்போது "யார் அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றாரோ அவர் நேர்வழி அடைந்துவிட்டார். யார் அவர்கள் இருவருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் வழிதவறிவிட்டார்" என்று குறிப்பிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீர் ஒரு மோசமான சொற்பொழிவாளர். "யார் அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் மாறு செய்கின்றாரோ" என்று (பிரித்துக்) கூறுவீராக!" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
‘வழிதவறிவிட்டார்" என்பதைக் குறிக்க ஹதீஸின் மூலத்தில் ஆளப்பட்டுள்ள ‘ஃகவா" எனும் சொல், அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘ஃகவிய" என்று ஆளப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 7
1579. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவுமேடை மீது (உரையாற்றியபோது) "(குற்றவாளிகள் நரகத்தின் காவலரை நோக்கி) ‘யா மாலிக்" (மாலிக்கே!) என்று அழைப்பார்கள்" எனும் (43:77ஆவது) வசனத்தை ஓதுவதை நான் கேட்டிருக்கிறேன்.
இதை ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1580. அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரலி) அவர்களின் சகோதரி கூறியதாவது:
நான் வெள்ளிக்கிழமை அன்று ‘காஃப் வல்குர்ஆனில் மஜீத்" எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து செவியுற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரலி) அவர்களுடைய சகோதரியிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அம்ராவின் சகோதரி அம்ராவைவிட (வயதில்) மூத்தவராயிருந்தார்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 7
1581. ஹாரிஸா பின் நுஅமான் (ரலி) அவர்களின் புதல்வியார் கூறியதாவது:
நான் ‘காஃப்" எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்தே (அவர்களிடமிருந்து நேரடியாகவே) மனனமிட்டேன். அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)வின்போதும் அந்த அத்தியாயத்தை ஓதுவார்கள். நாங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே அடுப்பையே பயன்படுத்திவந்தோம். (அந்த அளவிற்கு அவர்களும் நாங்களும் அக்கம் பக்கத்தில் குடியிருந்தோம்.)
அத்தியாயம் : 7
1582. ஹாரிஸா பின் நுஅமான் (ரலி) அவர்களின் புதல்வியார் உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஓராண்டு அல்லது ஓராண்டும் சில மாதங்களும் ஒரே அடுப்பையே பயன்படுத்திவந்தோம். நான் "காஃப். வல்குர்ஆனில் மஜீத்" எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நாவிலிருந்தே மனனமிட்டேன். அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி மக்களுக்கு உரையாற்றும் போது அந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.
அத்தியாயம் : 7
1583. ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பிஷ்ர் பின் மர்வான் (வெள்ளிக்கிழமை அன்று) மிம்பர்மீது இருந்தபடி கைகளை உயர்த்தி (உரையாற்றி)யதை உமாரா பின் ருஅய்பா (ரலி) அவர்கள் கண்டார்கள். அப்போது உமாரா பின் ருஅய்பா (ரலி) அவர்கள், "இவ்விரு கைகளையும் அல்லாஹ் இழிவுபடுத்துவானாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்துள்ளேன். அவர்கள் (ஜுமுஆ நாளில் மிம்பர்மீது உரையாற்றும்போது) தமது சுட்டு விரலால் இவ்வாறு சைகை செய்வதைத் தவிர, கூடுதலாக வேறெதுவும் செய்ததில்லை" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் பிஷ்ர் பின் மர்வான் வெள்ளிக்கிழமை அன்று தம் கைகளை உயர்த்தி (உரையாற்றி)யதை நான் பார்த்தேன். அப்போது உமாரா பின் ருஅய்பா (ரலி) அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 7
பாடம் : 14 (வெள்ளிக்கிழமை) இமாம் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கையில் "தஹிய்யத்துல் மஸ்ஜித்" தொழுகை தொழுவது.
1584. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இன்ன மனிதரே, தொழுதுவிட்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை" என்றார். "எழுந்து, தொழுவீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் (மற்ற பல அறிவிப்புகளில் இடம்பெற்றிருப்பதைப் போன்று) ‘இரண்டு ரக்அத்கள் தொழுவீராக" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 7
1585. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் பள்ளிவாசலுக்குள்ளே வந்(து தொழாமல் அமர்ந்)தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீர் தொழுதுவிட்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் "இல்லை" என்றார். "எழுந்து இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1586. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது (நின்று) உரையாற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரிடம் "இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டீரா?"என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை" என்றார். "அவ்வாறாயின் தொழுவீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1587. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அதில் "வெள்ளிக்கிழமை அன்று இமாம் புறப்பட்டு வந்திருக்க, உங்களில் ஒருவர் (பள்ளிவாசலுக்கு) வந்தால், அவர் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்ளட்டும்!" என்று குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 7
1588. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது உட்கார்ந்துகொண்டிருந்தபோது,சுலைக் அல்ஃகதஃபானீ (ரலி) அவர்கள் வந்து தொழுவதற்கு முன் அமர்ந்துவிட்டார்கள். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டீரா?" என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை" என்றார். "எழுந்து அந்த இரண்டு ரக்அத்களைத் தொழுவீராக" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1589. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை உரையாற்றிக்கொண்டிருக்கையில் சுலைக் அல்ஃகதஃபானீ (ரலி) அவர்கள் வந்து (தொழாமல்) அமர்ந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சுலைக்! எழும்! சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழும்" என்றார்கள். பிறகு "உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது (பள்ளிவாசலுக்கு) வந்தால், அவர் இரண்டு ரக்அத்கள் சுருக்கமாகத் தொழுதுகொள்ளட்டும்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
பாடம் : 15 உரைக்கு இடையே கல்வி போதனை செய்வது.
1590. அபூரிஃபாஆ தமீம் பின் அசத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். நான் "அல்லாஹ்வின் தூதரே! ஒரு வெளியூர்காரர் தமது மார்க்கத்தை தெரிந்து கொள்வதற்காக வந்துள்ளார். அவர் தமது மார்க்கத்தைப் பற்றி அறியாமல் இருக்கிறார்" என்று (என்னைப் பற்றிச்) சொன்னேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உரையை நிறுத்திவிட்டு, என்னை நோக்கி வந்துசேர்ந்தார்கள். ஒரு நாற்காலி கொண்டு வரப்பட்டது. -அதன் கால்கள் இரும்பினால் ஆனவை என்று நான் எண்ணுகிறேன்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நாற்காலியில் அமர்ந்து, அல்லாஹ் தமக்குக் கற்றுத் தந்தவற்றிலிருந்து சிலவற்றை எனக்குப் போதிக்கலானார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது உரையை முழுமையாக்கினார்கள்.
அத்தியாயம் : 7
பாடம் : 16 ஜுமுஆ தொழுகையில் ஓத வேண்டியவை
1591. உபைதுல்லாஹ் பின் அபீராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்களை மதீனாவின் ஆளுநராக நியமித்துவிட்டு மர்வான் பின் ஹகம் மக்காவிற்குச் சென்றார். (இந்தக் காலகட்டத்தில்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு ஜுமுஆத் தொழுகை நடத்தினார்கள். அதில் ‘அல்ஜுமுஆ" எனும் (62ஆவது) அத்தியாயத்தை (முதல் ரக்அத்தில்) ஓதினார்கள். பிறகு இரண்டாவது ரக்அத்தில் "இதா ஜாஅக்கல் முனாஃபிக்கூன்" (என்று தொடங்கும் 63ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். தொழுகை முடிந்ததும் அபூ ஹுரைரா (ரலி) அவர்களைச் சந்தித்து, "நீங்கள் இரண்டு அத்தியாயங்களை ஓதினீர்கள். இவ்விரு அத்தியாயங்களும் அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் கூஃபாவில் இருந்த போது ஓதிவந்தவை" என்றேன். அதற்கு அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் இவ்விரு அத்தியாயங்களையும் ஓத நான் கேட்டுள்ளேன்" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உபைதுல்லாஹ் பின் அபீராஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹா(த்)திம் பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "முதல் ரக்அத்தில் ‘அல்ஜுமுஆ" அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் ‘இதா ஜாஅக்கல் முனாஃபிக்கூன்" அத்தியாயத்தையும் ஓதினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் பின் உபைத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் முந்தைய ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 7
1592. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆவிலும் "சப்பி ஹிஸ்ம ரப்பிகல் அஃலா" (87) மற்றும் ‘ஹல் அத்தாக்க ஹதீஸுல் ஃகாஷியா" (88) ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள்.
பெருநாளும் ஜுமுஆவும் ஒரே நாளில் வந்துவிட்டாலும், இரு தொழுகைகளிலும் அவ்விரு அத்தியாயங்களையே ஓதுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1593. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்உத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ளஹ்ஹாக் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்களுக்கு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் ‘அல்ஜுமுஆ" அத்தியாயம் தவிர வேறு எந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்?” என்று கேட்டு கடிதம் எழுதினார்கள். அதற்கு ‘ஹல் அத்தாக்க ஹதீஸுல் ஃகாஷியா" எனும் (88ஆவது) அத்தியாயத்தை ஓதுவார்கள்" என நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் பதில் எழுதினார்கள்.
அத்தியாயம் : 7
பாடம் : 17 வெள்ளிக்கிழமை (ஃபஜ்ர் தொழுகையில்) ஓத வேண்டியவை.
1594. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் "அலிஃப் லாம் மீம் தன்ஸீல்" (எனத் தொடங்கும்) "அஸ்ஸஜ்தா"எனும் (32ஆவது) அத்தியாயத்தையும் "ஹல் அத்தா அலல் இன்சானி ஹீனும் மினத் தஹ்ர்" எனும் (76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையில் "அல்ஜுமுஆ" எனும் (62 ஆவது) அத்தியாயத்தையும் "அல்முனாஃபிகூன்" எனும் (63ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் மற்றும் ஜுமுஆத் தொழுகை ஆகியவற்றில் ஓத வேண்டிய அத்தியாயங்கள் பற்றிய மேற்கண்ட ஹதீஸ், மேலும் ஓர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1595. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் "அலிஃப் லாம் மீம் தன்ஸீல்" ("அஸ்ஸஜ்தா" எனும் 32ஆவது) அத்தியாயத்தையும் ‘ஹல் அத்தா அலல் இன்சான்" எனும் (76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
அத்தியாயம் : 7
1596. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை சுப்ஹுத் தொழுகையின் முதல் ரக்அத்தில் "அலிஃப் லாம் மீம் தன்ஸீல்" ("அஸ்ஸஜ்தா"எனும் 32ஆவது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் ‘ஹல் அத்தா அலல் இன்சானி ஹீனும் மினத் தஹ்ரி லம் யகுன் ஷைஅம் மத்கூரா" எனும் (76ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
அத்தியாயம் : 7
பாடம் : 18 ஜுமுஆவுக்குப் பின் தொழ வேண்டியவை.
1597. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுத பின் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 7
1598. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜுமுஆவுக்குப் பின் நீங்கள் (சுன்னத்) தொழுவதானால் நான்கு ரக்அத்கள் தொழுது கொள்ளுங்கள். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அம்ர் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உமக்கு ஏதேனும் அவசரம் ஏற்பட்டால் பள்ளிவாசலில் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள். (வீட்டுக்குத்) திரும்பியதும் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்" என்று சுஹைல் பின் அபீசாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 7
1599. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரேனும் ஜுமுஆவுக்குப் பின் (சுன்னத்) தொழுவதாக இருந்தால் நான்கு ரக்அத்கள் தொழட்டும்!- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உங்களில்" எனும் சொல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 7
1600. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ஜுமுஆ தொழுதுவிட்டு தமது இல்லத்திற்குச் சென்று, அங்கு இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துவந்ததாகவும் குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1601. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது வந்த கூடுதலான தொழுகைகள் குறித்துக் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுத பின் (வீட்டுக்குத்) திரும்பிச் செல்லாத வரை தொழமாட்டார்கள். (வீட்டுக்குச் சென்றதும்) வீட்டில் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்" என்று குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 7
1602. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுத பின் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.
இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 7
1603. உமர் பின் அதாஉ பின் அபில்குவார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், என்னை சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்களிடம் அனுப்பி "(ஒரு முறை) நீங்கள் முஆவியா (ரலி) அவர்களுடன் ஜுமுஆ தொழுதுவிட்டு, அதே இடத்தில் நின்று (கடமையான தொழுகைக்கும் கூடுதலான தொழுகைக்குமிடையே பிரிக்கக்கூடிய செயல்கள் ஏதும் செய்யாமல்) தொடர்ந்து தொழுதீர்கள். அதைக் கண்ட முஆவியா (ரலி) அவர்கள் என்ன கூறினார்கள்?" என்பது பற்றிக் கேட்கச் சொன்னார்கள்.
(நான் அவ்வாறே கேட்டபோது) சாயிப் (ரலி) அவர்கள், "ஆம், நான் முஆவியா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்த ஒரு (தனி) அறையில் ஜுமுஆ தொழுதேன். இமாம் சலாம் கொடுத்ததும் நான் உடனே அதே இடத்தில் எழுந்து (கூடுதலான தொழுகை) தொழுதேன். முஆவியா (ரலி) அவர்கள் (ஜுமுஆ தொழுததும் எழுந்து) தமது அறைக்குள் நுழைந்து, என்னை அழைத்துவருமாறு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது என்னிடம்) அவர்கள், "இனிமேல் இவ்வாறு செய்யாதீர்! ஜுமுஆ தொழுததும் (ஏதேனும் வெளிப்பேச்சு) பேசாதவரை, அல்லது பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் செல்லாத வரை தொழாதீர்! இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதாவது, (கடமையான) ஒரு தொழுகைக்கும் (கூடுதலான) மற்றொரு தொழுகைக்குமிடையே ஏதேனும் பேச்சுகள் பேசாத வரை, அல்லது (பள்ளிவாசலில் இருந்து) புறப்பட்டுச் செல்லாத வரை அவ்விரு தொழுகைகளையும் (சேர்ந்தாற்போல்) அடுத்தடுத்து தொழக்கூடாது" என்று கூறினார்கள் என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அவர் சலாம் கொடுத்தபோது நான் எழுந்து அதே இடத்தில் நின்று...” என இடம் பெற்றுள்ளது. "இமாம் சலாம் கொடுத்தபோது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

Previous Post Next Post